Blog

  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2
    (ஊசற்பருவம்) 

        

    ‘ஊசல்’ என்பது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றான ஒரு சிற்றிலக்கியமாக விளங்குவது. எடுத்துக்காட்டுகளாக, பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிவைத்துள்ள சீரங்க நாயகர் ஊசலையும், அன்னாரின் பெயரரான கோனேரியப்பன் ஐயங்கார் பாடியுள்ள சீரங்க நாயகியார் ஊசலையும் காணலாம். பாடல்கள் ஆசிரிய விருத்தம் அல்லது கலித்தாழிசையால் அமைந்து ‘ஆடிரூசல்’, ‘ஆடாமோ ஊசல்’, ‘ஆடுக ஊசல்’ என ஒன்றால் முடிவுறும்.

    இறைவனை அல்லது இறைவியை அலங்கரித்த ஊசலில் அமர்த்தி, ஆட்டி, பாடித் துதிப்பது நமது ஊசலாடும் உலக வாழ்க்கையிலிருந்து விடுபடவே எனும் கருத்திலமைந்த அழகான பாடல்களை இவ்விலக்கியங்களில் காணலாம்.

    ‘உலகமெனும் பந்தலில் பாசம் என்பதே விட்டத்தைத் தாங்கும் நான்கு கால்களாகவும், அறிவே ஊசற் சங்கிலியை மாட்டுவதற்கான உத்தரமாகவும், இந்திரியங்களே சங்கிலிகளாகவும், எடுத்தபிறவி ஊசற்பலகை ஆகவும், இருவினைகளே ஊசலை ஆட்டுபவராகவும், நரகம், சுவர்க்கம், பூமி ஆகிய இடங்களில் இறங்கி, ஏறி, நிலைபெறுதல் எனச்செய்து தடுமாறி அலைந்து துன்பம் அனுபவிக்கும் இவ்வாழ்வெனும் ஊசலாட்டம் நீங்கும்படி தொண்டர்களுக்கு, அவர்கள் உய்யுமாறு அழகிய மணவாளதாசரும் அவர் பெயரரான கோனேரியப்பன் ஐயங்காரும் சேர்ந்து இந்த திருவரங்கத்து ஊசல் எனும் பிரபந்தத்தினைத் தொகுத்திட்டார்கள்,’ என ஒரு தனியன் உரைக்கின்றது.

    அண்டப் பந்தரில் பற்றுக் கால்களாக
    அறிவு விட்டம் கரணம் சங்கிலிகளாகக்
    கொண்ட பிறப்பே பலகை வினையசைப்போர்
    ……………………………………..
    தொண்டர்க்கா மணவாளர் பேரர்கூடித்
    தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசலானே 1.

    திருவரங்கத்து நாயகியார் ஊசலில் இருந்து ஒரு இனிய பாடல், தாயாரின் திருக்கோலம் கண்ட திருவரங்க மணவாளரின் நிலைமையை உரைக்கின்றது.

    ‘கருமுகில் வண்ணனான திருவரங்க மணவாளனுக்கு, கண்கள் களிக்குமாறும், அறிவு சோர்ந்து போகவும், புன்னகை விரியவும், புயங்கள் பூரிக்கவும், முகம் மலர்ந்து காதலினால் உடல் குழைந்து மோகம் மிகவும், சீரங்க நாயகியே, நீ ஊசலாடுக!’ எனப்பாடல் அமைந்துள்ளது நயக்கத்தக்கதாம்.

    காரனைய திருவரங்க மணவாளர்க்குக்
    கண்களிப்ப மனமுருக அறிவுசோர
    மூரலெழப்புள கமுறப்புயம் பூரிப்ப
    முகமலர மெய்குழைய மோகமேற
    ……………………………………………..
    சீரங்கநாயகி யாராடி ரூசல் 2.

    மேலும் ஊசலாடும்போது என்னவெல்லாம் அணிகள் அசைந்தாடினவென்றும், குடக்கூத்தாடி, கோளராவின் படத்தின்மீதாடி விளையாடும் அப்பரமனைப் பற்றியும், அவனாட்டத்தைப் பற்றியும் அழகுறச் சித்தரிக்கும் பாடல்களும் இதன்கண் உள.

    இத்தகைய சுவையும் இனிமையும் இணைந்தவொரு சிற்றிலக்கியம் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது அருமையானவொரு செய்தியாகும். தாலாட்டு, அம்மானை ஆகிய பிரபந்த வகைகளும் பிள்ளைத்தமிழின் ஒரு பருவமாக அமைந்துள்ளமை பற்றி அவ்வப் பிள்ளைப்பருவம் பற்றிய செய்திகளில் கண்டோம்.

    ஆக, ஊசலாடுவதென்பது, மகளிரின் பொழுதுபோக்காகவும், வளரும் பெண்மக்களின் விளையாட்டாகவும், இறைவன் இறைவியரைப் போற்றுமொரு வழிபாட்டுக் கூறாகவும் அமைந்து தமிழ்மக்களின் வாழ்வில் இன்றியமையாததொரு இடத்தினைப் பெற்றுள்ளதனை இதன்மூலம் அறியலாம். 

    பிள்ளைத்தமிழ் பாடல்கள் தெரிவிக்கும் செய்திகளைக் காண்போம்.

    ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று உலகதிலுள்ள பலவிதமான மக்களும் வாழுமாறு வடிவம்மையைப் பொன்னூசலாட வேண்டுவது மிகுந்த பொருட்சுவையுடனும் உட்பொதிந்த கருத்துக்களுடனும் விளங்குகின்றது. 

    ‘சொற்களால் கூறப்படும் அறநெறிகள் நிலைத்து வாழவும், அந்தணர்கள் தமது ஆறு தொழில்களை (ஓதல், ஓடுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன) வழுவாமல் செய்யுமாறும், தோல்வியடையாத தொண்டர்களும் வணிகர்களும் வாழுமாறும், உழவர்கள் தமது தொழிலை நன்குசெய்து வாழவும், 

    ‘ஏனைய பற்பல குலத்தோரும் வாழ, அறுசமயங்கள் செழித்தோங்க,  மற்ற சமயத்தோர்களும் பக்தி மார்க்கத்தே பதிந்து இனிது வாழவும், 

    ‘உன்னைப்பற்றிய உயர்ந்த எண்ணங்களில் நில்லாது மாறுபடும் அறிவிலிகள் கூட்டமும், கணங்களும் பகைமையும் பொறாமையும் நீங்கி ஒருவரோடொருவர் அன்புகொண்டு வாழவும் (பல மாறுபட்ட மதக்கருத்துக்களை உடைய மக்கள், தமக்குள் சச்சரவின்றி வாழ அன்னையை வேண்டுகிறார் புலவனார்), உனது திருவிழா நாட்களில் பணிவிடைகள் பொலிவாக என்றும் (வாழ) நடக்குமாறும், 

    ‘வடிவுடையம்மையே, பூலோக கயிலாயநாதரான சிவபெருமானுடன் ஒன்றாகக் கலந்த பெண்மணியே, பொன்னூசலாடியருளுக!’

    சொற்பயிலு மறநெறிகள் வாழவந் தணராறு
    தொழிலினொடு வாழவெற்றித்
    தோலாத வரையர்வணி கர்கள்வாழ வுழவுமிகு
    சூத்திரர்கள் வாழவேனை
    ………………………………………….
    காதலொடு வாழநின் றிருவிழாப் பணிவிடை
    கவின்கொண்டு நாளும் வாழ..
    ………………………பூலோக கயிலாயர் பாலேக
    மானபெண் பொன்னூச லாடியருளே3.

    அம்மையின் ஊசலாடலில் அனைத்துலகின் வாழ்வும் இனிதாக அசைந்தாடுகின்றது எனும் அரிய கற்பனை இது!

    அளகாபுரி உமையாம்பிகை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இன்னொருவிதமான கற்பனையை விரிக்கின்றது. பிறப்பு, இறப்பு எனும் ஊசலில் ஆடியாடி அலைவுற்று, நடுக்கமுற்றுத் தவிக்கும் மானிடர் அந்த நடுக்கம் தவிர்த்து களித்து ஆடித்திளைக்கும்படி உனது கடைக்கணில் பிறக்கும் அருள்வெள்ளப்பெருக்கெனும் அலைகளில் உணவு வகைகளைக் குறையாது அளிக்கும் உமையாம்பிகையே, அரமாதர் வரிசையாக நின்று கரங்களில் வளையொலிக்கக் கவரிவீசவும், தேன்கொண்ட மலர்களால் நாத்தழும்பேற நின்று வாழ்த்தவும், நீ பொன்னூசலாடியருளுக,’ என வேண்டிடும் பாடல்.

    …………….செந்நாத்தழும்ப வாழ்த்திச்
    சிந்திக்கு மன்பர்கள் பிறப்பிறப்பெனு மூசல்
    சேர்ந்தாடி யலைவுற்றதா
    லானகம்பந் தவிர்ந்த் தாடித் திளைக்க….
    ……………………………..
    போனகங்குறையா தளிக்குமளகைச் செல்வி
    பொன்னூசலாடி யருளே 4.

    அளகை என்பது அளகாபுரி ஆகிய தஞ்சாவூர் ஆகும். தஞ்சை நெல்வளம் கொழிக்கும் பூமியாதலின் ‘போனகம் குறையாது அளிக்கும் அளகைச்செல்வி’ என அன்னை போற்றப்படுகிறாள்.

    திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலில் வேறொரு நயமான கருத்தினைக் காணலாம். அம்மையப்பனின் மாதொருகூறாய வடிவினைப் போற்றுகிறார் புலவர். ஊசலில் ஆடுகின்ற அன்னையின் தோற்றம், குளிர்ந்த இளம்பிறையினைச் சூடி, மும்மலத்தை அழிக்கும் சூலத்தைக் கையிலேந்தி, படங்கொண்ட நச்சரவம் பூண்டு, செல்வங்களனைத்தையும் தரும் திருநீறு அணிந்து, பண்களால் இசைக்கப்பெறும் பழம்பாடல்கள் எனப்படும் வேதங்கள் புகழ்கின்ற கழலணிந்த திருவடிகள், சிவந்த பவளமேனி,  ஆகியவற்றை ஒருபுறம் கொண்டு சிவபெருமானுடைய வடிவிலும், மலர்களணிந்த நறுங்குழல், உற்பலம் எனப்படும் நீலோற்பலமலரை ஏந்திய கை, செம்பொன்னாலான அணிகலன்கள், மணங்கமழும் சாந்து, இனிய ஒலியெழுப்பும் காற்சிலம்பு, பச்சைவண்ணத் திருமேனி ஆகியவை மற்றொருபுறம் என (அம்மையை அர்த்தநாரீசுவர வடிவாகக் கண்டு) அடியார்கள் தொழுதிடும்வண்ணம் அரன் எனப்படும் சிவபிரானிடத்தே தெய்வத்தன்மை வாய்ந்து மலர்ந்து கொடிபோன்று விளங்கும் அன்னையே! உனது இத்தகைய வடிவம் எத்துணை அருமையான காட்சி தாயே!  நீ பொன்னூசலாடுக!’ என வேண்டுகிறார்.

    ‘தண்ணிய விளம்பிறை யணிந்தசடை யொருபுறந்
    தகுமலர்க் குழலொருபுறஞ்
    சாற்றறிய மும்மலந் தெறுசூல மொருபுறஞ்
    சந்தவுற் பலமொருபுறம்
    ……………………………………………………..
    பவளமொருபுறம் பச்சைநிற மொருபுறம்
    பார்த்தன்பர் தொழ5……..,’ என்பன பாடல் வரிகள். 

    அம்மையையும் அத்தனையும் ஒன்றாகக் கண்டு புலவர்கள் மகிழ்ந்தனரெனில், சிவபிரானை மட்டும் வழுத்திப் பிள்ளைத்தமிழ் பாடவியலாத குறையை (பிறப்பிலிப் பெருமானான சிவபிரான்மீது பிள்ளைத்தமிழ் பாடப்படாதென்பது இலக்கண மரபு) அவனுடைய பல செயல்களையும் அன்னைமீதேற்றிக் கூறியோ, அல்லது அவனுடைய நடனத்தை விவரித்து அதற்கொப்பக் குழந்தையான அம்மையோ முருகனோ சப்பாணி கொட்டுவதனையும் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் சித்தரிக்கின்றன.

    கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழில் இத்தகையதொரு நயத்தைக் காணலாம். 

    கரிய மிடற்றில் ஆலகால விடம் துளும்புமாறும், திரிசூலமும் கபாலமும் கரத்தில் அசையவும், கழுத்தில் கிடக்கும் பாம்பானது ஆட்டத்தின் வேகத்தில் நெட்டுயிர்க்குமாறும், சடையில் தங்கியுள்ள கங்கைநதியானது பொங்கிவழிந்திடவும், காலில் சிறிய கிண்கிணிக் கல் எனக்கிடக்கும் அருமறை வேதங்கள் ஒலியெழுப்பவும், பிரபஞ்சத்துள்ள அத்துணை கடவுளர்களும் முடிவுற்றாலும் தான் மட்டும் ஒரு முடிவே இல்லாது ஆனந்த நடமிடுபவன் சிவபிரான். அவனுடைய சிலம்பணிந்த  தாமரைத் திருவடிகளில் அடியார்கள் பணிந்துதொழ, அவர்களுக்கருளும் அச்சிவபிரான் மணமாலை சூட்டும் கற்பகமே! பூங்காமவல்லியே! கல்யாணசுந்தரவல்லியே! பொன்னூசலாடியருளுக!’ எனும் பாடல் சிவபிரானின் நடனத் தோற்றத்தை நயம்பட எடுத்துரைக்கின்றதனைக் காணலாம்.

    ‘கருமிடற்று ஆலந் துளும்பதிரி சூலம்
    கபாலம் கரத்தில் அசைய
    காகோதரபட்ட நெட்டுயிர்ப்பச் சடைக்
    கங்கைநதி பொங்கிவழிய
    ………………………………………………
    அளவற்ற கடவுளர் தம்முடிவினும் ஓர்முடிவின்றி
    ஆனந்த நடம் இயற்றும்6..’ என்பன பாடல் வரிகள்.

    குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்ப்பாடலொன்று உமையன்னையை மக்களின் இருவினைகளைக் களைந்து இன்பமளிப்பவளாக விளக்குகிறது:

    ‘சுத்தம் அசுத்தம் எனப்படும் இரு கொடிய மாயைகளைத் தூண்களாகக்கொண்டு, இருள்போன்ற ஆணவ அகந்தையை விட்டமென அமைத்திட்டு, நாம் செய்த கருமங்களே ஊசற்பலகையைத் தாங்கும் வடங்களாகவும், மாயையே அப்பலகையாகவும், வான்வெளியே ஊசலாடும் இடமாகவும் கொண்டு ஆருயிர்களை பிறப்பு, இறப்பு, நோய் என்னும் மணிகள் இழைத்த அவ்வூசலில் வைத்தாட்டி, தலைவாயிலில் முடங்கிக் கிடக்காது எடுத்து, அணைத்து, பேரறிவினை அளித்து, பின் பரமுத்தியளித்து, ஆனந்தமெனும் அமிழ்தத்தினை அருந்துவித்து உண்மையான தாய்போன்று வளர்க்கும் அன்னைநீ பொன்னூசலாடுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடலிதுவே.

    சுத்தமு மசுத்தமு மெனப்படுங் கொடுமாயை
    தூணாக விருளாணவந்
    தொடுத்தநெடு விட்டமாக் கருமப் பெரும்பகுதி
    தூக்கிய வடங்களாக
    ………………………………………….
    …………………….பரமுத்தி வீடுய்த்து
    மூவாத வானந்தமாம்
    புத்தமிழ் தருத்திமெய்த் தாயாய் வளர்ப்பவள்
    பொன்னூச லாடியருளே 7…..

    சைவசமயக் கருத்துக்கள், தத்துவ, வேதாந்த விளக்கங்கள் அனைத்தும் இப்பாடல்களில் இழைந்தோடுவதனைக் காண்கிறோம். 

    பிள்ளைத்தமிழ் நூல்கள் விவரிக்கும் பருவங்கள் பத்துப்பத்துப் பாடல்களாக அமைக்கப்படுகின்றன. இவை ஒரு அருமையான இலக்கிய அமைப்பின் பாற்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக ஊசற்பருவத்தினையே எடுத்துக் கொண்டால், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் ஊசலின் அமைப்பு, அழகு பற்றியும், அதிலமர்ந்து ஆடும் அன்னையின் சிறப்பு, வடிவு பற்றியும் இருக்கும். அடுத்த சில பாடல்கள் அம்மையின் செயல்கள் பற்றிய தொன்மங்களைக் கூறி மகிழும். பின்வரும் மூன்று முதல் நான்கு பாடல்கள் சந்தநயம் பொருந்தி இருக்கும்; அல்லது குழந்தையாக உருவகிக்கப்படும் அன்னையின் தெய்வத்தன்மையை, அவளுடைய காக்கும் திறத்தை, அருளும் தகைமையை அழகுற விவரிக்கும். அவளைப் போற்றி மகிழும்.

    இவை பேரழகு வாய்ந்து கருத்தைக் கவரும் இலக்கியச்சித்திரம் என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்! இதுபோன்ற பாடல்களை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பரவலாகக் கண்டு இரசிக்கலாம். குமரகுருபரரின் கவிதைப் புலமையைக் கண்டு மகிழலாம்.

    பல பிள்ளைத்தமிழ் நூல்கள்; பல அழகிய பாடல்கள்; பல நயங்கள்; இன்னும் ஒன்றினைக் கண்டுபின் இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.

    சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழின் ஊசற்பருவத்து ஈற்றயல் பாடலில் புலவர் அன்னையின் அனைத்து அடியார்களையும் போற்றி அமைத்துள்ள பாடல் மிகுந்த நயமும் சுவையும் வாய்ந்ததாகும்.

    ‘கரிய இருள் படர்ந்தது எம் பிறவி; அது பிறவிக் கடலைக் கடந்து கரையேற யான் இறுகப் பிடித்த புணை உன் திருவடிகள்; இனிய ஒலியெழுப்பும் கிண்கிணி, சிலம்பு ஆகியவற்றை அணிந்துள்ள அத்திருவடிகளைப் போற்றி, சம்பந்த மாமுனிவன், நீர் நிறைந்த  அலைகடலில் கல்லையே தோணியாகக் கொண்ட நாவுக்கரசர், திருநாவலூரன் ஆகிய சுந்தரர், ஐயன்மீது கொண்ட அன்பினால் இன்பம் எய்திய மாணிக்கவாசகர் முதலாக அருள்மொழி கூறிய பல அறிஞர்கள் ஆகியோர் உரைத்த செம்மைவாய்ந்த தமிழ் மறைகள், ராகமிட்டுப் பாடப்படும் சிவபத்தர்களின் இசை, தெய்வமறை எனப்படும் லலிதா ஆயிரநாமம், அரியாகிய சிம்மத்தின்மீது ஏறிப் பகைவர்களை அழித்த தேவியின் வரலாறான தேவி மாகாத்மியம் முதலானவையும், ‘பொம்பொம்’ என முழங்கும் மங்கலச் சங்கின் ஒலி எங்கும் முழங்கிடவும் நீ பொன்னூசல் ஆடுக!’ என அன்னையை வேண்டுவதாக அமைந்து அன்னையின் அடியார்களைப் போற்றிம்வண்ணம் அமைந்துள்ளது.

    எம்பம் பிருட்பிறவி யலையாழி யேறயான்
    இறுகப் பிடித்த புணையாம்
    இன்குரற் கிண்கிணி சிலம்பலம் பும்பதத்
    திணையில் சம்பந்த முனிவன்
    …………………………………………………
    செம்பம்பு தென்றமிழ்த் திருமுறைகள் பண்ணோடு
    சிவபத்த ரோது மிசையும்
    தெய்வமறை லலிதையா ய்ரநாமம் அரியேறு
    தேவிமான் மியமுதலவும்
    ………………………………………………….
    பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச்செல்வியே
    பொன்னூச லாடியருளே 9!

    இது போன்ற இன்னும் பல நயமான பாடல்களைப் பல பிள்ளைத்தமிழ் நூல்களில் காணலாம். படித்தும் மகிழலாம்.

    ******************

    பார்வை நூல்கள்:

    1. திருவரங்கத்து ஊசல்- அழகிய மணவாளதாசர். 
    2. திருவரங்கத்து நாயகியார் ஊசல்- கோனேரியப்பன் ஐயங்கார்.
    3. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- வித்துவான் கனகசபைத் தம்பிரான்.
    4. அளகாபுரி உமையாம்பிகை பிள்ளைத்தமிழ்- சி. தியாகராச செட்டியார்
    5. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்.
    6. கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய திருச்சிற்றம்பல தேசிகர்.
    7. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்- சிவஞான சுவாமிகள்
    8. சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- கு. நடேச கவுண்டர்.

    _

    Share
  • கொண்டு செலுத்திடுவேன்

    கொண்டு செலுத்திடுவேன்

    அண்ணாகண்ணன்

    கொண்டு செலுத்திடுவேன் அம்மா கொண்டு செலுத்திடுவேன்
    நின்று செலுத்திடுவேன் அம்மா நின்று செலுத்திடுவேன்
    நன்று செலுத்திடுவேன் அம்மா நன்று செலுத்திடுவேன்
    இன்று செலுத்திடுவேன் அம்மா இன்று செலுத்திடுவேன்!

    சென்று முடித்திடுவேன் ஐயா சென்று முடித்திடுவேன்
    குன்று பெயர்த்திடுவேன் ஐயா குன்று பெயர்த்திடுவேன்
    வென்று களித்திடுவேன் ஐயா வென்று களித்திடுவேன்
    ஒன்று நடத்திடுவேன் ஐயா ஒன்று நடத்திடுவேன்!

    உண்டு பெருங்காலம் நமக்கு உண்டு பெருங்காலம்
    உண்டு வருங்காலம் யார்க்கும் உண்டு வருங்காலம்
    கண்டு நிறைந்திருப்போம் அன்பே கண்டு நிறைந்திருப்போம்
    கட்டி அணைத்திருப்போம் அன்பே கட்டி அணைத்திருப்போம்!

    Share
  • பகை முறித்து அமைதி உடன்படிக்கை

    பகை முறித்து அமைதி உடன்படிக்கை

    -சேஷாத்ரி ஶ்ரீதரன்

    பண்டை நாளில் வழங்கிய முடியாட்சி என்பது ஒரு அப்பட்டமான குடும்ப ஆட்சி என்பதைத் தான் கல்வெட்டுகள் விளம்புகின்றன. இதனால் தமது குடும்ப ஆட்சியை தக்கவைக்க எல்லா வகையான வழிகளையும் அரசகுடும்பத்தார் கைக்கொண்டனர். தம்பி, பிள்ளை, பேரன், மருமகன், மைத்துனன் என பலரும் இதற்காகத் தம் இன்னுயிரை ஈந்துள்ளனர்.  இதைத் தான் வேந்தன், மன்னன், அரையன், கிழான் உள்ளிட்ட நான்கு அடுக்கு அதிகாரப் பிரிவு குடும்பத்தாரும் செய்தனர்.

    ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இந்த வரலாற்று உண்மை மறைக்கப்பட்டு தனிமனிதனான ஒரு அரசகுரு திரைக்குப் பின்னால் இருந்து ஆட்சி செய்துவிட்டான் என்று சொல்லி பகுத்தறிவின் பெயரால் தமிழ் மக்களின்அறிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை நீங்களே இதில் உள்ள விளக்கப் பகுதியை படித்து தெளியலாம்.

    தமது ஆட்சி அதிகாரத்தை நிலைபெறச் செய்ய மக்கள் விரும்பாத போரை மக்களை மீது திணித்து மக்களை வருத்தி வெற்றி கண்டவர்கள் தமது இயலாமையின் போது போர் ஒழித்து அமைதி உடன்படிக்கை கண்டும் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மக்களுக்காக அல்ல அரசகுடும்பம் அழிவில் இருந்து தப்பவே இந்த அமைதி உடன்படிக்கை என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கோவில்களில் இவ்வகை அமைதி உடன்பாட்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றை இனி படித்து அறிந்துகொள்வோம்.

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குன்னாண்டார்கோயில் பர்வதகிரீசுவரர் கோவிலின் கிழக்கு திருச்சுற்றில் குறுக்கு சுவரில் உள்ள 9 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வாஸ்திஸ்ரீ  கோச்சடை பன்ம திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தே
    2. வற்க்கு யாண்டு 12 காத்திகை மாதம் ஜெயசிங்க குலகால வளநாட்டு  வடபன
    3. ங்காட்டு நாட்டு உடையார் திருக்குன்றாக்குடி உடைய நாயனார் கோஇல் தானத்து முத
    4. லிகளுக்கு இன்னாட்டு இரண்டு மலை நாட்டு அரையகளோம் எங்களில் இசைந்து
    5. பிடிபாடு பண்ணிக் குடுத்த பரிசாவது நாங்கள் பகை கொண்டு எய்யுமிடத்து எங்கள் காவல்
    6. ஆன ஊர்கள் வழிநடைக் குடிமக்கள், இடை குடிமக்கள் இவர்களை அழுவு செய்
    7. யக்கடவோ மல்லவாகவும். ஒருவன் அழிவு செய்யில் நூறுபணம் தெண்டம்
    8. வைக்கவும். ஒரு ஊராக அழிவுசெய்யில் அஞ்நூறு பணம் வைக்கவும் கடவதாகவும்
    9. இப்படி செய்யும் இடத்து வெட்டியும் குத்தியும் செத்து நோக்க கடவர்களாகவும்.

    தானத்து முதலி- கோவில் பொறுப்பாண்மைத் தலைவர்; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines; எய்யுமிடத்து – அம்பு எய்தி போர் நிகழ்த்து; பரிசாவது – முறை, விதம், வகைமை யாதெனில்; அழிவுசெய்யில் – அழித்தால்; தண்டம் – குற்றத் தொகை.

    விளக்கம்: 13-14 –ம் நூற்றாண்டில் ஜடவர்ம சுந்தரபாண்டியனின் 12-ம் ஆட்சிஆண்டில் கார்த்திகை மாதம் செயசிங்க குலகால வளநாட்டு வடபனங்காட்டு நாட்டு திருக்குன்றாக்குடி இறைவர் கோவிலில் அதன் பொறுப்பாண்மைத் தலைவருக்கு வடபனங்காட்டு இரண்டு மலைநாட்டு அரையர்களும் இசைந்து இனி நடந்து கொள்வதற்கான வழிகாட்டுநெறி என்று தாம் நடந்துகொள்ளப்போகும் முறையை பற்றி சொல்கிறார்கள். பகையால் அம்பு எய்யும் போது எங்கள் காவலுக்கு உட்பட்ட ஊர்களில் வழிநடையில் வாழும் மக்கள், ஊர் இடையே வாழும் மக்கள் ஆகியோருக்கு இனி எந்த அழிவையும் செய்ய மாட்டோம் என்று உறுதி மேற்கொள்கின்றனர். அவ்வாறு எவரையாவது ஒருவரை கொன்று விட்டால் 100 பணத்தை தண்டத் தொகையாக கட்டுவோம். அதே நேரம் ஊரையே அழித்தால் 500 பணத்தை தண்டத் தொகையாகக் கட்டுவோம். இப்படி ஆவதற்கு காரணமானவரை வெட்டியும் குத்தியும் செத்துப் போகச்செய்வோம் என்று உறுதி கூறுகின்றனர்.

    இக் கல்வெட்டு பொதுவாகப் போரின் போது வழிநடையில் வாழ்வோர், ஊர்நடுவே வாழ்வோர் போர்செய்யும் படைகளால் வெறித்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்படுவதை மறைமுகமாகச் சுட்டுகின்றது. இந்த உடன்படிக்கையில் அத்தகு தாக்குதலை இனி தவிர்ப்பதாக இருதரப்பு அரையர்களும் ஒப்புக் கொள்கின்றனர். நாம் பொதுவாக இந்நாள் போரில் தான் போரின் போது நாடே போரில் ஈடுபடுவதாகவும் அதனால் நாட்டின் எப்பகுதியும் தாக்கப்படும் என்று எண்ணுகின்றோம். ஆனால் பண்டைய போர் முறையில் எங்கேனும் ஆறு, ஏரிக் கரை ஒரங்களில் தான் போர் நடக்கும் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். இக்கல்வெட்டு இக்கருத்தை உடைத்து பொய் என்றாக்கிவிட்டது. போர் இரு தரப்பாரிடையே மூண்டால் பொது மக்களும் தாக்கப்பட்டு அவரும் அவர் உடைமையும் அழிவிற்கு ஆளாவதை தெளிவாக விளக்குகின்றது.  அப்படி என்றால் போரில் நாடே பங்கு பெற்றதாகத் தானே பொருள். கோவிலை ஆட்சியாளர் தம் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதால் தான் மலைநாட்டு அரையர்கள் இருவரும் கோவில் பொறுப்பு தலைவர் முன்னிலையில் போர்நெறி உடன்படிக்கையில் ஈடுபடுகின்றனர். இப்படி கோவில் பொறுப்பாளர் முன்னிலை நேர்ந்த உடன்படிக்கை என்பதால் இந்த வரலாற்று நிகழ்வு கோவிலில் ஒரு கல்வெட்டாக இடம்பெற்றது. இல்லாவிட்டால் இது நம் அறிவிற்கு எட்டி இருக்காது.

    முன்னம் போர்க் காலத்தில் ஒன்றும் அறியா அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது முன்னோர்களே காரணம் என்று இந்நாளிலே தம்மை ஆண்ட பரம்பரையர், ஆளப் பிறந்தவர், அடக்கி ஆண்டவர், மண்ணாண்டவர், பாரண்டவர் என்று மார்தட்டுவோர் பொறுப்பேற்பார்களா? ஏன் பொறுப்பு ஏற்க கூடாது என்பதே கேள்வி?

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 330.

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நாங்குபட்டி எனும் மடத்துக்கோவில் அம்பாள் சன்னதி மேற்கு அடித்தளத்தில் வெட்டிய 8 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீமந் மகாமண்டலீசுரன் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ வீர இராயண்ண உடையார் திருஇராச்சியம் பண்ணி அருளாநின்ற விகாரி வருஷம் ஆனி மாதம் 25 நாள். பேராம்பூர் [வரந்]தரு [தேவ]ன் அழகியார் ஆன நரசிஞ்க தேவர் உள்ளிட்டாரோம்
    2. கீழைக்குறிச்சி ஊரவற்குப் பகை ஒருக்கம் தீந்து கல்வெட்டிக் குடுத்தபடி முன்பே எங்கள் பேர[னார்] சேமநரசிஞ்கத் தேவர் நாள் முதல் அடைக்கலங்காத்தார் நரசிஞ்கதேவர் நாள்அளவாக உற்று நிலை அற்ற வினோதப் பகையாய் அங்கும் இஞ்கும் நால்பது நூறு
    3. மனிதரும் பட்டு சிறைமாடும் பிடித்து ஆறாப் பகையாக கிடக்கையில் அடைக்கலங்காத்தார் நரசிஞ்கத்தேவர் நாளிலே இவரும் மேற்படி சேமரும் மேற்படி குமு[த]ய நாயநாரும் நாங்களும் எங்களில் பொருந்தி கீழைக்குறிச்சி
    4. ஊரவரை அழைத்து விட்டு உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு உற்று நிலை அற்ற பகைக்கு விபரீதமாய் இருக்க வேண்டுவதில்லை என்றும் அங்குப்பட்டது அறுதியாக மேல்பட்டு பேராம்பூர் கீழைக்குறிச்சியும் கீழைக்குறிச்சி பேராம்பூருமாக ஒன்றுபட
    5. நடத்திப் போதக்கடவோம் என்று நாங்கள் அரன்குளவர் சன்னதியிலே அறுதி பண்ணிக்குடுத்து அந்த அறுதிபடியிலே இற்றை வரையும் நடத்தி போதுகையில் இற்றை நாள் தென்மலை நாட்டாரும் _ _ _ னூர் புதுவயல் ஊரவரும் முதுசொற்குடி நாட்டாரும்
    6. முன்பாக கல்வெட்டிக் குடுக்கையில் இன்னாள் முதல் சந்திரஆதித்தவரையும் பேராம்பூர் அரசு வெறுத்த இடம் கீழைகுறிச்சி வெறுத்தும் கீழைகுறிச்சி வெறித்த இடம் பேராம்பூர் அரசு வெறுத்தும் இரண்டு நினையாமல் நடத்தப் போதக் கடவோமாகவும்
    7. இரண்டு நினைத்தோமாகில் எங்கள் வழிபடு தெய்வமான நாயனார் திருப்பெருமானாண்டார் சீபாதம் தப்பினோம் ஆவதாகவும். இப்படிக்கு நரசிஞ்க தேவர் எழுத்து. இப்படி அறிவோம் தென் மலைநாட்டவரோம். இப்படி அறிவோம் கீரனூர் புதுவயல் ஊரவரோம்
    8. இம்மரியாதி ஒழுந்து கீழைகுறிச்சி ஊரவர் இரண்டு நினைத்தோம் ஆகில் நாயனார் உடைய நாயனார் சீபாதம் தப்பினோம் ஆவதாகவும். இப்படிக்கு ஊற்கு சமைந்து இவ்வூர் கணக்கு உடையான் ஒடுவாய் நாட்டு வேளான் எழுத்து.

    தீந்து – முடித்து வைத்து; உற்றுநிலை – உண்மைக் காரணம்; அங்குபட்டது –அவ்வாறு தோன்றிய எண்ணம்; அறுதி – வரையறை, முடிவு; ஒன்றுபட – ஒற்றுமையாக; இரண்டு நினையாமல் – மாற்று கருத்து கருதாமல், second thought; சிறீபாதம் தப்பினோம் – திருப்பாதம் விலகினோம்; வெறுத்த – விரும்பாத; மரியாதி – ஏற்று, மதித்து நடக்கும் வழக்கம்

    விளக்கம்: 1419 பொ. ஊ. விகாரி ஆண்டு ஆனி 25-ம் நாள் (சூன் 21) விசயநகர வேந்தர் இராயண்ண உடையார் ஆட்சிக் காலம். பேராம்பூர் வரந்தரு தேவன், அழகியார் ஆன நரசிங்க தேவர் உள்ளிட்டார் கீழைக்குறிச்சி ஊராரோடு பகை உணர்வை முடித்து வைத்த வகைமை யாதெனில் முன்பே இவர்களது பேரன் சேமநரசிங்கத் தேவர் தொடங்கி அடைக்கலங்காத்த நரசிங்கதேவர் வரை உண்மைக் காரணம் இல்லாத பகையாக அங்கும் இங்கும் 40 பேர் 100 பேர் இறந்தும் மாடுகளை சிறைபிடித்தும் நீங்காத பகை ஏற்பட்டு இருந்தது. அடைக்கலங்காத்தார் நரசிங்க தேவர் காலத்தில் அவரும் மேலே குறிப்பிட்ட சேமரும் மேற்படி குமுதய நாயநாரும் பேராம்பூராரும் நரசிங்க தேவருடன் கூடி  கீழைக்குறிச்சி ஊராரை அழைத்து வந்து உங்களுக்கும் எங்களுக்கும் உண்மையான பகைக்கு காரணம் இல்லாத போது நமக்குள் இனி பகை வேண்டாம் என்றும் முடிவாகி அதன்மேற்பட்டு பேராம்பூர்  கீழைக்குறிச்சியாகவும் அவ்வண்ணமே கீழைக்குறிச்சி பேராம்பூராகவும்  ஆகி ஒற்றுமையாய் நடந்துகொள்வோமாக இறைவன் அரனகுளவர் திருமுன்பாக முடிவு செய்து அந்த முடிவுப்படியே இன்றுவரை நடந்துவருகின்றனர். இப்போது தென்மலை நாட்டார், புதுவயல் ஊரார், முதுசொற்குடி நாட்டார் முன்பாகவும் அந்த முடிவைக் கல்வெட்டிக் கொடுக்கும் இந்நேரத்தில் இன்று முதல் ஞாயிறும் நிலவும் உள்ள நாள் வரையில் பேராம்பூர் அரசு கீழைக்குறிச்சியை விரும்பாமல் பகை கொண்டது என்றும் அதே போல் கீழைக்குறிச்சி விரும்பாமல் பகை கொண்ட இடம் பேராம்பூர் அரசு என்ற இரண்டாம் கருத்து, மாற்று கருத்து கருதாமல் நடந்து கொள்வோம். அவ்வாறு மாற்று கருத்து கருதினால் நாங்கள் வழிபடும் தெய்வமான திருப்பெருமானாண்டார் திருப்பாதத்தை விலகினோம் என்றாவதாகும் என்று தென்மலைநாடு, புதுவயல் ஆகிய ஊரார் முன்னிலையிலும் நரசிங்க தேவர் மீண்டும் உறுதி ஏற்கின்றார்.  இந்த உறுதியை ஏற்று, மதித்து நடக்கும் வழக்கத்தை விட்டு கீழைகுறிச்சி ஊரார் மாற்று கருத்து கொண்டால்  அவரது இறைவனான உடைய நாயனாரின் திருப்பாதத்தை விட்டு விலகியவர் என்று ஆகிவிடுவார் என்று ஊரின் விருப்பிற்கு இசைந்து கீழைக்குறிச்சி கணக்கு உடையவனான ஒடுவாய்நாட்டு வேளான் எழுதி கையொப்பமிட்டான்.   

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 318-319.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஹரதீர்தீசுவரர் கோவில்  முதல் திருச்சுற்றில் உள்ள பழைய மடைபள்ளியின் மேற்கு சுவரில் வெட்டிய 20 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறு பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்
    2. க்கு யாண்டு 29 வது காத்திகை 29 ள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டு உடையா
    3. ர் திருவரகுளமுடைய நாயநார் திருக்கொயில் தானத்தார்க்கும் ஊரார்க்கு
    4. ம் பூவரசகுழி அரைய மக்களில் சூரியன் தொண்டைமானு மக்கள் மருமக்களும் சோழி
    5. யன் உலக மாணிக்கப் பரையனும் மக்களும் பாணித் தேவரான ஈழத்தரை
    6. யர் மகன் வீரமூவன் விசையர் தேவனும் வீரமூவன் ஈழத்தரையுனும் தம்பி[யெ]
    7. க்கனும் கல்வெட்டி குடுத்த பரிசாவது அடியார்க்கு நல்லான் துண்டராயரை சு[ந்]
    8. தன் நாரசிங்க தேவந் குத்துகையில் இந்த பகையை நோக்கி இன்பன் உலக மா
    9. ணிக்கப் பரையனும் பாணித்தேவரான ஈழத்தரையரும் வாழ்வனாந
    10. ஈழத்தரையனும் சுந்தந் நாரசிங்க தேவரையும் சோழன் உலக மா
    11. ணிக்கப் பரையனையும் குத்துகையில் இந்தப் பகையென்று சொ
    12. ல்லக் கடவதல்ல என்று சந்திராயித்தவரைக்கு சூரியன் தொண்
    13. டைமாநாரும் இவர் மக்களும் தொண்டைமாநாரும் மருமக்களான சேர
    14. சோழ கோனும் அரங்குத்தானும் புத்தனும் சோழன் அரங்குளவ நாட்டாரை
    15. யனும் உடப்பாண்டானும் உள்ளிட்டாரும் ஆக இவ்வநைவரும் இந்தப
    16. கை என்று சொல்லக் கடவோமல்ல என்று பகை ஒருங்க திரு
    17. மலையில் கல்வெட்டிக் குடுத்தோம். இந்த இரண்டு வகையில்
    18. மனித்தரும் இந்தப் பகையை நோக்கி வரும் நலந்[தீ]ங்கு
    19. ஒருத்தர்க்கு வந்தது அனைவர்க்கும் என்று அனுபவி
    20. க்க கடவோமாகவு _ _ _ _

    விளக்கம்: 1325 பொ.ஊ. வீரபாண்டியனின் 29 ஆம் ஆட்சி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 29-ம் நாள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டின் திருவரங்குளமுடைய இறைவர் கோயில் பொறுப்பாளருக்கும் ஊராருக்கும் பூவரசகுழியைச் சேர்ந்த அரையர்கள் சூரிய தொண்டைமான் பிள்ளைகளும் மருமக்களும் சோழன் உலக மாணிக்கப் பரையனும் அவன் பிள்ளைகளும் ஈழத்தரையன் வீரமூவ விசைய தேவன் அவன் தம்பி இயக்கன் ஆகியோர் சேர்ந்து கல்வெட்டைவெட்டிக் கொடுத்த விதமாவது அடியார்க்கு நல்லான் துண்டராயனை சுந்தன் நாரசிங்க தேவன் குத்தியதால் ஏற்பட்ட பகையை வைத்து இன்பன் உலகமாணிக்கப் பரையனும் பாணித்தேவரான ஈழத்தரையனும் வாழ்வனான ஈழத்தரையனும் சுந்தன் நரசிங்க தேவனையும் சோழன் உலகமாணிக்கப் பரையனையும் குத்தினர். இது பகை என்று சொல்லக் கடவதல்ல என்று ஞாயிறும்நிலவும் நீடிக்கும் காலம் வரை சூரியன் தொண்டமானும் இவனுடைய பிள்ளைகளும் மருமக்களான சேரசோழ கோனும் அரங்குத்தானும் புத்தனும் சோழன் அரங்குளவ நாட்டரையனும் உடப்பாண்டானும் ஆகிய இவ்வனைவரும் இந்த பகையை பகை என்று கருதாமல் பகை ஒடுங்க திருமலையில் கல்வெட்டுவித்தோம். இந்த இரண்டு பிரிவு மனிதரும் இந்த பகையால் வரும் நல்லது தீது எது வந்தாலும் ஒருவருக்கு வரும் துன்பம் மற்றவருக்கும் எல்லாருக்கும் ஏற்பட்டதாக அனுபவிப்போம் ஆக.

     இக்கல்வெட்டு அரையர் குடும்பத்தார் எல்லோரையும் இந்த உடன்படிக்கைக்கு இணங்க வைத்ததை பார்க்கும் போது ஒவ்வொரு அரையர் குடும்பமும் அதன் தலைமை அரையனை கம்பளிப் பூச்சி போல சூழ்ந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. அப்படியானால் அந்த குடும்பமே ஆட்சி செய்ததாக ஆன்றோ பொருள். பின் எப்படி இவர்களை எல்லாம் மீறி ஒரு அரசகுருவால் ஆட்சி செலுத்த முடியும்?

     பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 288-289.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஹரதீர்தீசுவரர் கோவில்  முதல் திருச்சுற்றில் உள்ள பைரவ மண்டபசுவரில் வெட்டிய 18 வரிக் கல்வெட்டு.

    1. கா[ல]யுத்த வருஷம் புரட்டாதி மாதம் 18 நாள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டு பூ[வரச]குழி அரை _ _ _ ல் கெ_ _ _ நாரசிங்க தேவனை
    2. _ _ _ ண்டராயரும் தம்பிமாரும் மக்கள் மருமக்களும் கு[த்து]கையில் இந்தப் பகையிலே [நா]டு இரண்டு வரிசையும் பட்டும் கெட்டும்
    3. _ _ கையில் தெற்காட்டூர் வாணாதராயர் வ[கை] [யறு]த்தபடி கொ[ப்ப]ணன் நாரசிங்க தேவன் பழிக்கு இன்பன்
    4. _ _ ட்டது பழி ஆகக்கடவதாகவும் வாழவன் துண்டராயற்கும் தம்பிமாற்கும் மருமக்களுக்கும் [மச்சினனாற்கும்]
    5. _ _ வதரையன் படுகையில். இவன் பட்டதும்_ _  _ _ வன் துண்டராயன் தம்பித் தமையன்மாரிலும் மக்கள் மருமக்களிலும்
    6. பெண்டாட்டி இன்பர் பட்டதும் மிகுதிக்க _ _ _ பலநாளும் ப(ல்)ல நாட்டிலும் _ _  வகையிலுமிலட்டூர்
    7. _ _ _ _ _ ளும் பகுதிக்காறர் சொம்மாய் அழிந்த முதல்களும் வாழவன் துண்டராயரும் தம்பிமாரும் மருமக்களும் பொரு
    8. _ _ _ _ வாகவும் வாழவன் துண்டராயர் மகன் இராகுத்தனும் எழு_ _ம் புதனுக்[கு]த் தானும்_ _ _ 
    9. _ _ _ வாழவன் துண்டராயரும் தம்பிமாரும் மக்களும் மருமக்களும் உடன் இந்தப்பகைக்கு _ _ _ _சேர_ _லக்கடலுக்கு _ _
    10. _ _ _ _ _ கொப்பணன் நாரசிங்கதேவன் மகன் [அடி]யாற்கு நல்லானுக்கும் மருமக்களுக்கும் _ _ _ இன்னும் [வாழ]வன்தானுக்கும்_ _ _ _ _ _
    11. _ _ _ _ _ _ _ சொம்மாய_ _ மாகவும் அடியாற்கு நல்லானும் கொப்பணன் [மருமக்களும்] _ _ _ ல்லக் கடவ_ _ _ _
    12. _ _ இப்படி பகைத்து _ _ _ _ _ இடுகையில் இம்மரியாதி நிற்கு செய்வர்களாகவும் இம்ம[ரியாதி]ல்லாமல் இருக்கிற_ _  _
    13. _ _ _ உடையார் திருவரன்குளமுடைய நாயனார் திருக்கோயில் தான[த்தாரும்] _ _ _ [ண்டாரும்]_ _ _
    14. _ _ க் கடவர்களாகவும் கேட்கு _ _ ன்பது_ _க் கொண்டா_ _ _ பத்து பணமும்_ _ _
    15. _ _  இருபது பணமும் உதிரத்த _ _ தால_ _[செய்]த பாண்டியற்கு [ஈ]ழத்தரை_ _ __
    16. _ _ லத்தால் திருமேனியும் சமைத்துத் திரண _ _ _ _  _ _ _    ___
    17. _ _ _ வாகவும் இப்படிக்கு இரண்டும்_ _ _ நிலைகா_ _ காட்டுராயர் _ _ _ _
    18. _ _ _ நாட்டுக்கு ஆவுடைநாடன் எழுத்து.

    இரண்டுவரிசை –இரண்டு பிரிவு, இரண்டு அணி; கெட்டும் – அழிந்தும்; 

    விளக்கம்: 1318 பொ.ஊ ஆகுமோ? என்று தொல்லியலாளர் குறித்துள்ளனர். இதில் உள்ள மாந்தரின் பெயர் பிற கல்வெட்டுகளில் இடம் பெறுவதை வைத்து ஒரு ஒப்பீட்டில் இந்த ஆண்டை சுட்டினர் போலும். கல்வெட்டில் வேந்தர் பெயர் இல்லை. காலயுத்த ஆண்டு புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் இந்த அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது. இராசராச வளநாட்டு வல்லநாட்டு பூவரசகுழி அரைசரில்  கோப்பண்ண  நரசிங்க தேவனை துண்டராயனும் அவன் தம்பிமார், பிள்ளைகள், மருமக்கள் ஆகியோர் குத்தி ஏற்பட்ட பகையில் நாடு இரண்டு பிரிவாகி அழிந்தது போகையில் தெற்காட்டூர் வாணாதராயர் வகையறுத்தபடி கோப்பண்ண நாரசிங்க தேவன் கொலைகப் பழிக்கு இன்பன் இறந்தது பழிக்கு ஈடு ஆக்கப்பட்டுவிட்டதாகவும்; அப்படியே வாழவன் துண்டராயற்கும் தம்பி தமையன்மார் பிள்ளைகளும் மருமகன்களும் மைத்துனர்களுக்கும் துண்டராயர் இறந்ததையும் துண்ட ராயன் அவன் தம்பி தமையன் மருமக்களிலும் பெண்டாட்டி இன்பர் இறந்ததும் பலநாள்களாக  பல நாட்டிலும் பேசப்பட்டது. இதனால் கோப்பண்ணன் நரசிங்கதேவன் மகன் அடியார்க்கு  நல்லானுக்கும் துண்டராயன் மகன் இராகுத்தனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு அதை மதித்து நடக்க வேண்டும் என்றும் திருவரன்குள கோவில் பொறுப்பாளர்களும் இதை கவனித்து வருவராக என்றும் கூறப்பட்டுள்ளது. பத்து பணம், இருபது பணம் என்பதுதண்டத் தொகையா?

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 282.

    Share
  • வழித்துணை

    வழித்துணை

    -கவிஞர் விப்ரநாராயணன் திருமலை 

    அரைகுறை அறிவு அழிவைத் தருமே
    ஆழ்ந்த புலமை நிறைகுட மாமே
    நிறைந்த மனமே நிம்மதி தருமே
    நேர்மை நாணயம் உறவின் உயிரே
    திருமறை கற்றல் தெளிவு தருமே
    தருமம் வாழ்வில் உயர்வைத் தருமே
    பிறருக் குதவுதல் பிறப்பின் பயனே
    பரமன் நாமமே வழித்துணை யாமே

    அலைகள் அரவம் கடலின் அழகு
    ஆனந்த மனமே பிறப்பின் அழகு
    கலைகள் யாவும் இயற்கை யழகு
    கவிதை நயமே காப்பிய அழகு
    உலையில் அரிசி துடிப்ப தழகு
    உதய சூரியன் விசும்பி னழகு
    மலைகள் நதிகள் யாவும் அழகு
    மலையும் நதியும் வழித்துணை யாமே

    பகையை மறத்தல் மனிதனின் பண்பு
    பணிவே கல்வி கற்றலின் பயனே
    மிகைபடப் பேசுதல் நன்மை தாரா
    வரம்பு மீறல் தீமை பயக்கும்
    நகைச்சுவைப் பண்பு உடல்நலம் காக்கும்
    நல்வழி நடத்தல் நம்மை உயர்த்தும்
    தொகையில் ஊறி மகிழ்தல் ஊறே
    தகைசால் நட்பே வழித்துணை யாமே.

    புலன்வழி செல்லல் தீமை தருமே
    பொய்யும் புரட்டும் பூசலைத் தருமே
    நிலவளம் நீர்வளம் நன்மை நல்குமே
    நாடு செழிக்க இவையும் தேவையே
    குளங்கள் ஏரிகள் நிரம்ப வேண்டுமே
    கழனிகள் யாவும் பயிர்க்க வேண்டுமே
    கொலைகள் கொள்ளைகள் ஒழிய வேண்டுமே
    கண்ணன் பாதையே வழித்துணை யாமே

    கதைகள் மூலம் கற்பனை வளருமே
    கவிதைகள் மூலம் ரசனை வளருமே
    மதங்கள் மூலம் நல்வழி தெரியுமே
    மனித மாண்புகள் என்றும் மிளிருமே
    எதையும் எதிர்க்க உறுதி வேண்டுமே
    எங்கும் எதிலும் பணிவு வேண்டுமே
    குதலை மொழியில் மகிழ வேண்டுமே
    குழந்தை மனமே வழித்துணை யாமே

    நாட்டு நலனே நம்மிலக் காகும்
    நன்மைகள் செய்வதே நம்மூச் சாகும்
    ஆடல் பாடல் ஆனந்தம் தருமே
    அவற்றை வளர்த்தல் நம்பணி யாகும்
    ஆட்டு மந்தைபோ லணிசே ராது
    அகத்தில் தெளிவு பெறுதல் வேண்டும்
    நாட்டுப்பற் றின் பொருளை உணர்ந்தால்
    நம்பண் பாடு வழித்துணை யாமே

    ஆன்ம நேய வொருமை வேண்டும்
    அனைவரும் ஒன்றென் றெண்ண வேண்டும்
    மான்விழி மாதரை மதிக்க வேண்டும்
    மனதை யாளக் கற்றல் வேண்டும்
    தேன்சுவை போல்நாம் பேச வேண்டும்
    தேச நலனி லக்கரை வேண்டும்
    நானெனு மகந்தை அழிய வேண்டும்
    நாதன் நாமமே வழித்துணை யாமே

    கல்வியும் கேள்வியும் சிறப்பைத் தருமே
    காத லுணர்வும் கல்வி யாகுமே
    நல்லதை நாடிச் செல்லல் வேண்டும்
    நல்லோ ருறவு நாளும் வேண்டும்
    சொல்லில் பொருளும் தெளிவும் வேண்டும்
    சொல்லால் சுடுவதைத் தவிர்க்க வேண்டும்
    பன்மதம் பல்லின மெல்லாம் ஒன்றே
    பண்பட் டமனமே வழித்துணை யாமே

    கண்ணனும் ஏசுவும் அல்லா வுமொன்றே
    கீதை கூறும் கருத்து மிதுவே
    எண்ணம் சொல்செயல் மூன்றும் ஒன்றாய்
    இணைந்தி யங்கிட முயல வேண்டும்
    வண்ண வண்ண ஆடைக ளணியலாம்
    மனிதப் பண்பதில் மிளிர வேண்டும்
    திண்ணமாய் தன்னல மறவே வேண்டாம்
    தன்னல மின்மையே வழித்துணை யாமே

    கவிதை ரசனை மனநல மளிக்கும்
    காப்பிய போதனை அகவிருள் நீக்கும்
    புவியைப் படைத்த பரம்பொருள் தானே
    பலவுயி ரையும்நம் மையும்படைத் தானே
    நவவித ரசனையை யளித்து நம்மை
    நல்மனி தனாக வாழச் செய்தான்
    எவ்விதக் கவலையு மின்றி வாழ
    எம்பிரான் திருவருள் வழித்துணை யாமே1

    Share
  • பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

    பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

    முனைவர்  க. மங்கையர்க்கரசி
    உதவிப் பேராசிரியர்
    A M ஜெயின் கல்லூரி
    மீனம்பாக்கம்
    சென்னை – 600 114

    முன்னுரை

    நமது நாட்டில் பேச்சு வழக்கில் பல்வேறு பழமொழிகள் இடம்பெற்று வருகின்றன. சில பழமொழிகளை நேரம், இடம், சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப நாம் பேசி வருகின்றோம். சில பழமொழிகளுக்குரிய சரியான விளக்கங்களையே நாம் பேசுகின்றோமா எனில் இல்லை என்றே கூறலாம். சில பழமொழிகளின் உண்மையான விளக்கங்களை நாம் தெரிந்து பயன்படுத்துவோம்.

    1. சிவ பூஜையில் கரடி

    வீட்டிற்குள் தேவையற்ற நேரத்தில் ஒரு நபர் வந்து விட்டால் அவர்களை குறிக்கவே இந்தப் பழமொழி என்பது பொருள் அல்ல.

    “சிவபூஜையில் கரடிகை” என்பதே சரியானதாகும்.

    சிவபூஜையின் போது முக்கியமாக பயன்படுத்தப்பட்ட ஓர் இசைக் கருவிதான் கரடிகை. பழங்காலத்தில் தெய்வவழிபாட்டின் போது, பல்வேறு இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. அவற்றில் கரடிகை ஒன்று. கரடி கத்துவது போல ஓசை எழுப்பக்கூடிய கருவி என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மிருதங்கத்தைப் போல மரம், தோலால் செய்யப்பட்ட கருவி இது. தாள இசைக் கருவியாகப் பயன்பட்டது. கம்பராமாயணத்தில் (8445) என்ற பாடலிலும் அருணகிரிநாதர் பிள்ளைத்தமிழிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சிவபூஜையில் கரடிகை என்பதே சரியான பொருளாகும்.

    1. விதையொன்று இட்டால் சுரையொன்றா முளைக்கும்

    ஒரு பயிரினுடைய விதையைப் போட்டால் வேறொரு பயிர் முளைக்காது. அதே பயிர்தான் முளைக்கும் என்பது ஏதோ ஒரு செடி வளர்க்கும் முறை பற்றியது என்பது பொருள் அல்ல.

    இது மனிதனின் விந்தணுக்களில் உள்ள கூறுபாடுகளைக் குறிக்கும். ஒருவன் உடலில் உள்ள ஜீன்களின் எண்ணிக்கை, குணாதிசயங்கள் ஏழு மூதாதையர்களின் அந்தந்தக் கூறுபாடுகளின் எண்ணிக்கைபடி அமைந்திருக்கும் என்பதே சரியான பொருளாகும்.

    1. குமரியை வெல்ல குமரியை உண்க

    ஒரு குமரியை வெல்ல வேண்டுமானாலும் அந்தக் குமரியை உண்ண வேண்டும் என்பது பொருள் அல்ல.

    இதில் இரண்டாவது வரும் குமரி என்பது சோற்றுக்கற்றாழை. உடலுக்கு இளமையும், வனப்பும், நிம்மதியான தூக்கத்தையும் கொடுக்க வல்லது ஆகும். இதைத் தினமும் உட்கொண்டால் குமரிப்பெண்களை வெல்லும் ஆற்றல் கிடைக்குமாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

    யானை உடல் வலிமை மிக்கது. அதற்கு ஒரு காலம் வந்தால், உடல் வலிமை குறைந்த பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பது பொருள் அல்ல.

    “ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்”

    ‘ஆ’ நெய் என்பது பசுவின் (ஆ – பசு) நெய், அதை இளமைக் காலங்களில் உண்டு வர உடலுக்கு நன்மை தரும். உடனடியாக உடலுக்கு அழகும், ஆரோக்கியமும் கிடைக்கும். ‘பூ’ நெய் என்றால் தேன் (பூவிலிருந்து கிடைப்பதால், அதை முதுமைக் காலங்களில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதத் தீங்குகளும் ஏற்படாமல் பாதுகாக்கும் என்பதே சரியான பொருளாகும்.

    1. பொன்னுக்கு வெள்ளி கால் மாத்து

    தங்கத்தின் மதிப்பிற்கு ஈடாக, இணையாக, வெள்ளியை அளிக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.

    தில்லை சிதம்பரத்திற்கு ‘பொன்னம்பலம்’ என்று பெயர். மதுரைக்கு ‘வெள்ளியம்பலம்’ என்று பெயர். பொன்னம்பலத்தில் தனது இடக்காலைத் தூக்கி ஆடுகின்ற சிவபெருமான், வெள்ளியம்பலத்தில் வலக்காலைத் தூக்கி ஆனந்த நடனம் ( காலைமாற்றி) ஆடுகின்றார் என்ற கருத்தைத் தெரிவிக்க எழுந்ததே என்பதே சரியான பொருளாகும்.

    1. பத்துக்கு மேல் பத்தினி இல்லை

    இரவு பத்து மணிக்கு மேல் யாரும் பத்தினி இல்லை என்பது பொருள் அல்ல. நமது புராணத்தில் சொல்லப்படுகின்ற அருந்ததி, அநசூயை, அகலிகை, சீதை, சாவித்திரி, சந்திரமதி, தமயந்தி, நளாயினி, கண்ணகி, மண்டோதரி போன்ற பத்துப் பேரைத் தவிரப் பத்தினித் தெய்வங்கள் வேறு இல்லை என்பதே பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்பதாகும். இதுவே சரியான பொருளாகும்.

    1. நொறுங்கல் தின்றால் நூறு வயசு

    நொறுங்கல் என்பது ஸ்நேக்ஸ் என்றோ, கண்டதை எல்லாம் தின்றால் நூறு வயது வரை வாழலாம் என்பதோ பொருள் அல்ல.

    நாம் சாப்பிடும் உணவை வாயில் போட்டவுடன் விழுங்கி விடாமல், நிதானமாகப் பற்களுக்கு இடையில் நன்குமென்று, அரைத்துக் கூழாக்கி மென்று தின்றால், நூறு வயது வரை நோயின்றி வாழலாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. சேலை கட்டிய மாதரை நம்பாதே

    சேலை கட்டிய பெண்ணை நம்பாதே; அப்படியானால் சுடிதார் மாட்டிய மாதரை நம்பு என்பது பொருள் அல்ல.

    ‘சேல்’ என்றால் ‘கண்’ தன் கணவனுடன் இருக்கும் போது, கண்களை அகட்டி, வேறு ஓர் ஆடவனைப் பார்க்கும் பெண்களை நம்பாதே, கண்களின் நோக்கம் (பார்வையில் தவறான எண்ணத்தில் ஆடவனை பார்க்கும் தவறான பெண்களை (விலைமாதரை) நம்பாதே. அவர்கள் பின்சென்றால் சொல்ல முடியாத துன்பமும், துயரமும், நோயும் வரும் என்பதே சரியான பொருளாகும்.

    1. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே

    மண்ணால் செய்யப்பட்ட குதிரை தண்ணீரில் கரைந்துவிடும். அதை நம்பிக் கரையைக் கடக்க இயலாது என்பது பொருள் அல்ல. ஏமாற்றம் அடையாதே என்பது அல்ல. நம்பக்கூடாததை நம்பி, நம்ப முடியாததை நம்பாதே என்பது பொருள் அல்ல.

    ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால் உள்ளே பதியும், நாம் கீழே விழுந்து விடவோ, உள்ளேயே புகுந்துவிடவோ ஏதுவாகும். எனவே இந்த மண் (குதிர் ஐ) குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

    நல்லது எதுவும் நடந்தாலும் அது பெண்ணால் தான் வரும் என்றும், அழிவு வந்தாலும் அது பெண்ணால் தான் வரும் என்பது பொருள் அல்ல.

    நல்லவை ஆவதும் பெண்ணாலே, தீயவை அனைத்தும் அழிவதும் பெண்ணாலே என்று பொருள்

    அரக்கர்கள் பெரும்பாலும் இறைவனை வேண்டி தவமிருந்து வரம் பல பெற்றபோது, தமக்கு இறப்பே வரக்கூடாது என்றும் இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்றும் வேண்டுவர். உதாரணமாகக் காஞ்சிபுர காமாட்சி அவதாரம்.

    1. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

    ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும் என்பது பொருள் அல்ல.

    சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மையும் பறந்து போய்விடும். நோயின் தன்மையும் குறைந்து, இல்லாமல் போய்விடும் என்பதே சரியான பொருளாகும்.

    1. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து

    திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே முதல் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால், அனைத்து உணவு வகைகளும் கிடைக்கும். தாமதமாகச் சென்றால், சில உணவு வகைகள் காலியாகிவிடும், எனவே பந்திக்கு முதலில் செல். படை, போர் என்று வந்தால் தாமதமாகச் செல் முதலில் போர் செய்து பலர் இறந்துவிடுவர். போரும் முடிவுக்கு வந்துவிடும். இறுதியில் சென்றால் உயிர்க்குப் பிரச்சனை ஏற்படாது என்பது பொருள் அல்ல.

    பந்திக்கு முந்து என்றால் நாம் சாப்பிடப்போகும் போது வலக்கை முன்னோக்கிச் செல்கிறது. முற்காலத்தில் போர் என்றால் வில்லே முதன்மையான போர்க்கருவியாகும். எவ்வளவு தூரம் வலக்கை வில்லின் நாணைப் பிடித்து பின்னால் இழுக்கிறதோ,அந்த அளவுக்கு அம்பு வேகமாகப் பாய்ந்து இலக்கைத் தீர்க்கும் என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆத்தில் போட்டாலும் அளந்து தான் போடணும்

    எந்தப் பொருளை ஆற்றில் கொண்டு போய் போட்டாலும் அளந்து பின்பே போடணும் என்பது பொருள் அல்ல.

    அகத்தில் அதாவது வயிற்றில் சாப்பிடும் சாப்பாட்டை நேரம், காலம், அளவு என்று அறிந்து தான் போட வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    ஏதாவது ஒரு பிரச்சனைக் குறித்து மனத்தில் (அகத்தில் போட்டாலும், தேவையான சிந்தனையை மட்டுமே போட வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதே சரியான பொருளாகும்.

    1. விருந்தும் மருந்தும் மூணு நாள்

    விருந்துக்கென ஒரு வீட்டிற்குச் சென்றாலும் 3 நாள் மட்டுமே. மருந்து சாப்பிட்டாலும் 3 நாள் மட்டுமே என்பது பொருள் அல்ல.

    ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உணவைக் குறைவாய் உட்கொண்டு மருந்துபோல் உண்ண வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

    1. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டது போல

    நாடாளும் அரசனை நம்பி, தாலி கட்டிய புருசனைக் கைவிட்டது போல என்பது பொருள் அல்ல.

    அரசனை என்பது அரச மரத்தைக் குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தைச் சுற்றுவார்கள். கட்டிய கணவனைக் கவனிக்காமல், வெறும் அரச மரத்தைச் சுற்றுவது பயன் தராது என்பது சரியான பொருளாகும்.

    1. கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆகலாம்

    ஒருவன் கண்டதை எல்லாம் படித்தால், பண்டிதன் ஆகலாம் என்பது பொருள் அல்ல.

    எதை கற்க வேண்டும் என்று கண்டு, அதைக் தெளிவாகக் கற்றால் பண்டிதன் ஆகலாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. பெண் புத்தி பின் புத்தி

    பெண்ணின் புத்தி எதையும் யோசிக்காமல் செய்துவிட்டு, பின் அதைப் பற்றி யோசிக்கும் என்பது பொருள் அல்ல.

    பெண்ணின் புத்திசாலித்தனம், பின்னால் வருவனவற்றை முன் கூட்டியே அறிந்து, அதைச் சரிசெய்துவிடும் அளவிற்கு கூர்மையானது  (பின் – pin) போன்றது என்பது சரியான பொருளாகும்.

    1. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

    ஒருவன் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால், அரசன் போல் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், ஆண்டியாகி வறுமைநிலையை அடைவான் என்பது பொருள் அல்ல.

    ஆடம்பரமாய் வாழும் தாய், பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன், ஒழுக்கம் தவறும் மனைவி, துரோகம் செய்யும் உடன்பிறப்பு, பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள் இந்த ஐந்தும் கொண்ட எந்தக்குடும்பமும் முன்னேறாது என்பது சரியான பொருளாகும்.

    1. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க

    பதினாறு குழந்தைகளைப் பெற்று பெரிய குடும்பமாக வாழ்க, என்பது பொருள் அல்ல.

    அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியில், ஒரு மனிதன் வாழ்வில் நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் வாழத் தேவையானது என்று, பதினாறு கிடைத்தற்கரிய பேறுகளைக் குறிப்பிட்டு இறைவனிடம் தர வேண்டும் என்று மன்றாடி வேண்டுவார். அவர் வேண்டிய பதினாறு வகையான பேறுகளாக உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாப்புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள், எடுத்த காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி) மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வாழ்வதே வாழ்வு என்கிறார். இதுவே சரியான பொருளாகும்.

    1. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

    சட்டியில் சாப்பாடு இருந்தால், அகப்பையில் வரும். என்பது பொருள் அல்ல.

    குழந்தை இல்லாத பெண்கள், கந்தசஷ்டி விழா ஆறு நாட்களும் விரதம் இருந்து, முருகனை வழிபட்டால், அவர்களுடைய அகப்பையாகிய கருப்பப்பையில் குழந்தைப்பேறு கிடைக்கும். என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

    ஒரு மருத்துவர் தன்னுடைய தொழிலில் ஆயிரம் பேரைக்கொன்றால் தான்/ அவர் அரை வைத்தியன் (பாதி) என்பது பொருள் அல்ல.

    நமது நாட்டில் சித்த வைத்தியமே ஒரு காலத்தில் சிறப்பாக இருந்து வந்துள்ளது. மருத்துவர்கள் பல்வேறு மூலிகைகளை, அதன் வேர்களைக் கொன்று, அதாவது அரைத்து அவற்றின் பயன்களை நன்கு தெரிந்து, மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வந்தனர். அப்படிக் குறைந்தது ஆயிரம் மூலிகைகளின் வேர்களை, அவற்றின் பயன்களைத் தெரிந்து, வைத்தியம் செய்பவரையே அரை வைத்தியர் என்று நம் முன்னோர் கூறினர் என்பதே சரியான பொருளாகும்.

    1. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை – வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

    வேலையே கிடைக்காதவனுக்கு போலீஸ் வேலை, வக்கற்றவன் வறுமை நிலையில் உள்ளவனுக்கு வாத்தியார் வேலை என்பது பொருள் அல்ல.

    போக்குக் கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை. போலீஸ் வேலையில் சேர்பவனுக்கு வலுவான உடலமைப்பு, மிடுக்கான நடை, அதாவது லெப்ட், ரைட் என்று காலைத் தூக்கி வைத்து, போவதும் வருவதும் ஆகிய நடைப்போக்கினைக் கற்றவன். திருடனை அவனுடைய போக்கிலேயே விட்டு, பின் தொடர்ந்து சென்று, மொத்தக் கூட்டத்தையே பிடிப்பது. ஆசிரியராக இருப்போர் தாம் கற்றுத் தேர்ந்து பேசுகின்ற வாக்குச் சாமர்த்தியத்தில், மாணவர்களை ஈர்க்கும் திறம் உடையவராய் இருத்தல் வேண்டும். இவைகளை உணர்ந்தே போக்கு கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதே சரியான பொருளாகும்.

    1. களவும் கற்று மற

    திருட்டுத்தொழிலையும் கற்று மறந்து விடு என்பது பொருள் அல்ல.

    திருவள்ளுவர் தம் குறளில் இன்பத்துப்பாலை களவியல், கற்பியல் என்று இரண்டாகக் கூறி கற்பியல் மட்டுமே தெரிந்து வாழ்க்கை நடத்தினால் போதாது, களவியலையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த வந்ததே இப்பழமொழி. இதுவே சரியான பொருளாகும்.

    1. கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

    நாயைக் கண்டால் கல்லைக் காணோம். தெருவில் கல் கிடக்கிறது. அதை எடுத்து நாயை அடிக்கலாம் என்று பார்த்தால், நாயைக் காணவில்லை. நாயைப் பார்க்கும் போது, அதை அடிக்க வேண்டும் என்று எண்ணினால் கல்லைக் காணவில்லை என்பது பொருள் அல்ல.

    கல்லில் செய்த ஒரு நாயின் உருவம் சிற்பக்கலை, கட்டடக்கலை நிபுணர்கள் காணும்போது /அந்த நாய் கருங்கல்லில் ஆனதா, பளிங்குக்கல்லா, சலவைக்கல்லா என்று அந்த எண்ணத்தில் காண்பர். அவர்கள் கண்களில் அந்த நாய் உருவம் தோன்றுவதில்லை. கல் சிற்பமாகவே தோன்றுகிறது. கல் என்று காணும் போது நாய் என்பது புலப்படவில்லை. அது சாதாரணக் கண்களால் பார்க்கும்போது நாய் என்று புலப்படுகிறது. (நாயின் வாலை நிமிர்த்தி நிற்கும் அதன் எடுப்பானத் தோற்றம்)

        கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்
    நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்

    ஒரு கல்லில் (சிற்பத்தில் அழகிய, எடுப்பான கம்பீரமான நாயகனைக் காணும் போது, அது எவ்வகையானக் கல் என்று தோன்றாது எவ்வகை கல் என்று காணும் போது, நாயகன் நம் கண்களுக்குப் புலப்படாது. இதுவே சரியான பொருளாகும்.

    1. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

    இவ்வுலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். ஆறு வயதானால் என்ன, நூறு வயதானால் என்ன என்பது பொருள் அல்ல.

    மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி, பாண்டவர்களுடன் கர்ணனைச் சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்த்து ஆறாவதாக வந்தாலும், கௌரவர்களுடன்  சேர்த்து நூறாவதாக வந்தாலும், (துரியோதனனுக்கு உடன் பிறந்தோர்கள் 99 ஆண், 1 பெண் ) தனக்குச் சாவுதான் என்பதே சரியான பொருளாகும்.

    1. உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு

    குறைவாகச் சாப்பிட்டு, உடலை அழகாக, ஆரோக்கியமாக வைத்திருத்தல் பெண்டிற்கு அழகு என்பது பொருள் அல்ல.

    உண்டி என்பது சாப்பாடு. அதைச் செய்வதற்கான நேரம் அதிகமாகும் போது, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்ற விசயங்களில், பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலைக் குறுகிய நேரத்திற்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு என்பதே சரியான பொருளாகும்.

    1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்

    அடுத்த வீட்டுக்குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளை தானே வளரும் என்பது பொருள் அல்ல.

    ஒருவனுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும்போது (என்ன தான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னோருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டால், அவளுடைய வயிற்றில் வளரும் தன் பிள்ளை தானாகவே வளரும், என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்

    ஒரு திருமணம் நடக்க வேண்டுமென்றால், ஆயிரம் பொய்கூடச் சொல்லலாம் என்பது பொருள் அல்ல.

    ஆயிரம் பேருக்குப் போய்ச் சொல்லி (அழைப்பிதழ்) தந்து திருமணத்தை நடத்தலாம். மாப்பிள்ளை பெண் எப்படி என்ற விபரமும் தெரியவரும். ஆயிரம் பேரின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

    ஆயிரம் தடவை போய் சொல்லி (அந்த காலத்தில் தொலைத்தொடர்பு, வாகனங்கள் ஏதும் இல்லாத நிலையில்) ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உரிய நேரம் எது, என்பதை ஒவ்வொன்றாகப் போய்ச்சொல்லியே திருமணத்தை நடத்தலாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. சோழியன் குடுமி சும்மா ஆடுமா

    சோழியன் குடுமி சும்மா ஆடாது, காசு கொடுத்தால் தான் ஆடும் என்பது பொருள் அல்ல.

    தலையில் ஒரு பொருளை வைத்துத் தூக்கிச் செல்ல, துணியை வட்டமாகச் சுற்றி சும்மாடு செய்வர். அதன்மேல் பொருளை வைத்து, தலைச் சுமையாகச் சுமந்து செல்வர். ’சோழியன் தலையில் உள்ள வட்டமான குடுமி சும்மாடு ஆகுமா?’ ஆகாது என்பதே சரியான பொருளாகும்.

    1. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    கழுதைக்கு முன்னால் கற்பூரத்தைக் காட்டினாலும் அதனுடைய நல்ல வாசனை கழுதைக்குத் தெரியாது என்பது பொருள் அல்ல.

    கழு என்பது ஒரு வகை புல், அதைப்பயன்படுத்தி, படுக்கும் பாய் செய்வர். அதிலிருந்து கற்பூர வாசனை தெரியும். ‘கழு’ என்ற புல்லைப் பறித்த போதும், பாயாகச் செய்து தைத்தபோதும், படுக்கும்போதும் அவர்களுக்கே தெரியுமாம். கற்பூர வாசனை என்பதே சரியான பொருளாகும்.

    1. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

    விவசாயம் செய்பவர்கள் அறுவடை முடிந்தபின் நல்ல நெல்லுடன் சாவி நெல்லும் கலந்திருக்கும். நல்ல நெல்லைப் பிரித்தெடுக்க, நெல்லை முறத்தில் இட்டு, காற்று அடிக்கும் திசையின் எதிர்த்திசையில் நின்று தூற்றுவர். அப்போது, நல்ல நெல் கீழே விழும்; சாவி நெல் காற்றில் பறந்து போகும். அப்படிச் செய்ய காற்று தேவைப்படும். எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது பொருள் அல்ல.

    நாம் உயிருடன் இருக்கும் (காற்றுடன்) இருக்கும் போதே நல்ல விசயங்களைச் செய்துகொள்ள வேண்டும். இனி ஒரு பிறவி வராத அளவுக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்பதே இதன் சரியான பொருளாகும்.

    1. ஐயம் இட்டார் கெட்டார்

    ஐயம் என்றால் பிச்சை. ஔவையாரும் ‘ஐயம் இட்டு உண்’ என்கிறார். தர்மம் செய்தால் கெட்டுப்போவான் என்பது பொருள் அல்ல.

    தர்மம் செய்தால் யாரும் கெட்டுவிடமாட்டார்கள். மாறாக புகழோடு நன்றாக வாழ்வார்கள் என்று வலியுறுத்தும் வகையில் ஐயம் இட்டு யார் கெட்டார்; கெடமாட்டார்கள் என்பதே சரியான பொருளாகும்.

    1. காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் காக்கா பிடி

    நாம் விரும்பிய காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் காக்கா பிடி என்பது பொருள் அல்ல.

    நாம் விரும்பிய காரியத்தைச் சாதிக்க வேண்டுமெனில் கால், கையைப் பிடித்தாவது கெஞ்சி வேண்டியபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

    1. தண்ணியைச் சாப்பிடு, சாப்பாட்டைக் குடி

    தண்ணீர் குடிப்பதைக் கூட சாப்பாட்டு அளவுக்கு சாப்பிடு, சாப்பாட்டை கூழ் பதத்தில் குடி என்பது பொருள் அல்ல.

    தண்ணீரைக் கடகடவென வேகமாகக் குடிக்காமல் (வேகமாகக் குடித்தால் சில நேரங்களில் புரை ஏறிவிடும்) திடப்பொருளைப் போல் மெதுவாக, மென்று விழுங்க வேண்டும் என்றும், திட உணவைப் பற்களிலேயே நன்றாக அரைத்துக் கூழாக்கிக் குடிக்க வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

    ஏனென்றால் உமிழ்நீரில் தான் உணவைச் சீரணமாக்கும் தன்மை உள்ளது. பாதி வேலை பற்களில் முடிந்து விடுவதால் இரைப்பைக்கு, குறைவான வேலையே கொடுக்கப்படுகிறது. இது நீடித்த உடல் இயக்கத்திற்கும், நீண்டநாள் வாழ்விற்கும் வழிசெய்கிறது.

    முடிவுரை

    பழமொழிகளின் சரியான விளக்கங்களைத் தெரிந்து, பொருத்தமான பழமொழிகளைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடைவோம்.

    *****

    துணைநூற் பட்டியல்

    1. சிவபாரதி, ஆன்றோர்கள் கண்ட அறிவியல், ப்ரீமியர் பதிப்பகம்
      தஞ்சாவூர்.
    2. மெய்யப்பன், தமிழ்ப் பழமொழிகளில் அறிவியல், வானதி         பதிப்பகம், சென்னை.

     

     

     

     

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 221-இன் முடிவுகள்

    படக்கவிதைப் போட்டி 221-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    சாந்தி மாரியப்பன் எடுத்திருக்கும் இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கின்றது வல்லமை இதழ்.

    வீதிக்கு வந்துவிட்ட நைந்த பஞ்சணையும் அதில் முகம்புதைத்துத் தூங்கும் ஞமலியும் நமக்கு நவிலும் செய்தி என்ன என்று கண்டுபிடித்துச்சொல்லும் பொறுப்பை நம் வித்தகக் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்.

    *****

    ”வாழ்க்கையே சகடம்போன்று சுழல்வதுதான்; அதில் உச்சத்தில் இருந்தவனும் ஒருநாள் ஆய்விடுவான் துச்சமாய்; ஆகவே நிதானமாய் வாழ்ந்திடு!” என்றுரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நிதானமாய்…

    வாழ்க்கை யென்பது சக்கரம்தான்
    வந்து போகும் மேல்கீழாய்,
    வாழ்ந்து வந்தவன் உச்சத்தில்
    வந்து விடுகிறான் துச்சமாய்,
    பாழ்படும் பகட்டு வாழ்வதுவும்
    பஞ்சு மெத்தையும் பன்றிநாய்க்கே,
    வாழ்ந்திடு கொஞ்சம் நிதானமாயே
    வராது பெரிதாய் அடியதுவே…!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

    அடடே! வயது முதிர்வு கொண்டதனால் வீதி…
    இளமையில் நீ தந்த அன்பும் அடைக்கலமும் முதுமையில் நீ பெறுவாய் என நினைத்தாயோ…?
    வீதிவரை வந்தும் இன்னமும் பிடிபடவில்லையா? மடையனே!
    சுயநலமே சூழ்ந்து வாழும் நிலையில் பெற்றவராயினும் அந்நியரே…
    முதுமை உணர்த்தும் உனக்கு ரூபாயின் மதிப்பை ஊட்டி வளர்த்ததால் வந்த வினை என்று…
    நீயும் இந்தப் பஞ்சுமெத்தை போலத்தான்…
    உழைப்பைச் சுரண்டிவிட்டு..
    உதவாத போது வீதி வரத்தான் வேண்டும்…!

    பொருள் புதிதாய் இருக்கும் வரையில் பயன்படுத்தும் மக்கள், அது சற்றே பாழ்பட்டாலும் கழித்துக்கட்டி விடுவர். அதுபோல், இளமையும் வளமையும் இருக்கும்வரை மனிதனைக் கொண்டாடும் சுற்றமும் நட்பும், அவனுக்கு முதுமையும் வறுமையும் வந்துவிட்டால் அவனைத் தெருவில் திண்டாட வைத்துவிடும் என்ற எதார்த்த உண்மையைத் தன் கவிதையில் பேசியிருக்கும் திரு.  செல்வபாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 222

    படக்கவிதைப் போட்டி – 222

    அன்பிற்கினிய நண்பர்களே!

    கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் திங்கட்கிழமை (02.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

      (ஊசற்பருவம்) 

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது ஊசல் பருவம். வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த விளையாட்டுகள், ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களுக்கு மிகவும் விருப்பமானவை. ஊசலில் உட்கார்ந்து கொண்டு, தோழியர் உந்தி விட, காலால் தரையை எம்பி உதைத்து , உயரே உயரே எழுந்து வீசியாடுவது ஊசற் பருவம். இப்பருவம் ஐந்தாண்டிலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை நிகழ்வதாகக் கூறப்படும். ஊசலாடி மகிழ்வது பெண்பிள்ளைகளுக்கே உரித்தான ஒரு விளையாட்டு அனுபவம். வளரும் பெண்மக்களுக்கு இது ஆரோக்கியமான உடற்பயிற்சியுமாகும்.

    மயில்கள் தோகைவிரித்து நடனமாடும், குயில்கள் கீதமிசைக்கும் அழகானதொரு மலர்ச்சோலையில் மயில்போன்ற பெண்கள் சிலரும் தமது குயில் குரலில் பாடியவாறு ஊஞ்சல்கட்டி இன்பமாக ஆடுகின்றார்கள். புங்கமரம் ஒன்றின் தாழ்வான கிளையில் வலுவான கொடிகளைக் கொண்டு கட்டிய அழகான ஊ(ஞ்)சல். அதில் அன்றலர்ந்த தாமரை போல அமர்ந்து கால்களால் உதைத்து எழும்பி வீசியாடுகிறாள் ஒரு சிறுபெண். கொடி போன்ற உடலும், நீண்ட கூந்தலும் ஆடைகளும் அணிகலன்களும் உடன்வீசி இயைந்து ஆடுகின்றன. 

    இந்த  இளம்பெண்கள் தமது அரசனைப்பற்றி பெருமையாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடுவது ஊசல்வரி; இது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தீட்டும் காட்சி: 

    ஐந்துபேர் பஞ்ச பாண்டவர்கள்; நூற்றுவரான கௌரவர்கள்; இவர்கள் தமக்குள் பகைகொண்டு பெரும்போர்செய்தபோது, அந்தப்போரில் இருவருடைய படைகளுக்கும் அள்ள அள்ளக்குறையாது உண்பதற்குச் சோற்றினைக் கொடுத்தவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் சேரமன்னனாவான். அவனுக்கு ‘பொறையன்’, ‘மலையன்’ எனும் பெயர்களும் உண்டு. “அவனுடைய பெயர்களைக் கூறி, அவன் புகழினைப்பாடி நாம் ஊசலாடலாமா?” என்று ஒருத்தி தோழிகளைக் கேட்கிறாள். “நமது கருமுகில் போன்ற குழல் காற்றில் அலைந்தாட, அந்தக் கடம்ப நாட்டினை வெற்றிகொண்ட அவனுடைய புகழைப்பாடி ஊசல் ஆடலாமே,” என அடுத்தவள் மறுமொழி கூறுகிறாள். 

    ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த

    போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

    சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்

    கார்செய் குழலாட ஆடாமோ வூசல்

    கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ வூசல்1

    இவ்வாறு தங்கள் அரசனான சேரனையும் அவன் பரம்பரையையும் போற்றிப்பாடி மகிழ்ச்சியாகப் பெண்கள் ஊசலாடுகின்றனர். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவிலெடுத்த திருவிழாவில் இவர்கள் இவ்வாறு பாடி ஆடுகிறார்கள்! 

    மனம்மகிழ்ந்து உவகை ஊற்றெடுக்கும்போது, எண்ணங்கள் சிறகடித்து வானில் பறக்கும்போது, ஊசலில் அமர்ந்தாடினால் அது உயரே ஆகாயத்தின் அருகே கொண்டுபோவது போல ஒரு ஆனந்தமான அனுபவம் உண்டாகும். விண்ணை எட்டிவிட்டது போன்றதொரு மயக்கத் தோற்றம்.

    ஊசலைப்போலாடும் தொட்டிலிலோ தூளியிலோ உறங்கவைத்தால் குழந்தை ஆனந்தமாக, அமைதியாக உறங்குகிறது. சிறார்களுக்கு ஊசலாடி விளையாடுவது இன்பகரமான ஒரு அனுபவம். இளம்பெண்களுக்கும் ஊசலாடும்போழ்தில் தங்கள் கனவுகளும், காதல், மணவாழ்வு பற்றிய இனிமையான எண்ணங்களும் உருப்பெற்று, வலுப்பெற்று, நனவாகும் 

    சங்ககால மகளிர் ஆலமரம், வேங்கைமரம், புங்கமரக்கிளைகளில் ஊசல்கட்டி ஆடினார்கள். தினைப்புனம் காக்கும் பெண்கள் தாம் இருக்கும் பரண்மீதே ஊசல்கட்டி விளையாடினார்கள். அவர்கள் காதலர்களும் ஊசலை ஆட்டிவிடுவதற்கென அருகில்வந்து நின்றார்கள். 

    பெண்கள் மரங்கள் இல்லாதபோது இரு வேல்களை நாட்டி, அவற்றிடையே ஒரு கயிற்றைக்கட்டியும் ஊசலாடினார்கள்!

    இவ்வாறு காதல் விளையாட்டுகளிலும், மற்ற திருவிழாக் கொண்டாட்டங்களிலும் பெரும்பங்கு வகித்த ஊஞ்சல் விளையாட்டுகளில் பெண்கள் இறைவன் புகழைப் பாடி மகிழவும் வகைசெய்தவர் மாணிக்கவாசகர். 

    “நாராயணனும் கண்டறியாத இறைவனின் திருப்பாதங்களை எமக்கு அந்த ஈசன் மிக எளிதாகக் காட்டியருளினான். வேல்போன்ற கண்களையுடைய பெண்களே! அந்த உத்தரகோசமங்கை இறைவனின் புகழைப்பாடி பொன்னூசலில் அமர்ந்தாடுவீர்களாக,” என அன்போடும் ஆவலோடும் வேண்டுகிறார். 

    அவருடைய விருப்பப்படியே அவர்களும், “தோழிகளே! ஈசனின் புகழினைப் பாடுகிறோமல்லவா? அப்போது நாம் ஆடும் ஊசலும் அழகு மிகுந்ததாகவும், சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும். ஆகவே, பவளத்தூண்களைக் கால்களாக நடுவோம்; பருத்த முத்துக்களை இணைத்துக் கோர்த்துக் கயிறாக்கிப் பயன்படுத்துவோம்,” எனத் தோழிகளிடம் கூறுகிறார்கள். ஒருபெண் பொற்பலகை ஒன்றினை அதில் இணைக்க, ஒவ்வொருவராக அதில் ஏறியமர்ந்து பலவிதமாக ஈசன் புகழைப்பாடியாடி மெய்சிலிர்க்கிறார்கள். 

    இந்தத் தத்துவம் மிக எளிதாகப் புரிவது. கோவிலில் தெய்வத்தை வணங்கச் செல்லும்போதும், அரசனைக் காணச்செல்லும்போதும் நல்ல அணிமணிகள், பட்டாடைகளை அணிந்துகொண்டு செல்வதுண்டல்லவா? அதேபோல, இறைவன் பெருமைகளைப் பாடுவோரும் அழகாக உடையணிந்து, அழகான ஊசலில் அமர்ந்து அவனைப் பாடவேண்டும் எனும் ஆவல் இதிலும் விளங்குகிறது. பாடகர்கள் கச்சேரிகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடைகளில் கண்கவரும் ஆடைகள் அணிந்து அமர்ந்து பாடுகிறார்களல்லவா? அலங்கரிக்கப்பட்ட திருப்பொன்னூசலில் அமர்ந்து இறைவன் புகழைப் பாடுவதும் அப்படிப்பட்டதே!

    சீரார் பவளக்கால் முத்தம் கயிறாக

    ஏராரும் பொன்பலகை ஏறி இனிதமர்ந்து

    நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய் அடியேற்கு

    ஊராகத் தந்தருளும் உத்தரகோச மங்கை

    ஆராவமுதின் அருள்தாள் இணைபாடி 

    போரார்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ2.

    திருப்பேரூரில் எழுந்தருளியுள்ள பட்டீசுவரப் பெருமானைக் கண்டு போற்றித் துதித்துவிட்டு வரும் பெண்கள் வழியிலுள்ள ஒரு மலர்ச்சோலையில் விளையாட நுழைகின்றார்கள். வழக்கமாக அவர்கள் ஆடும் ஊசல்கள் அங்கே மரக்கிளைகளிலிருந்து தொங்குகின்றன. சிலர் அவற்றிலேறி வீசியாட முற்படுகிறார்கள். ஆடும் வேகத்தில் அள்ளிமுடித்த நறுங்குழல் அவிழ்ந்து அலைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த முத்துமாலைகளும் பொன்னணிகளும் ஆடுகின்றன; மலர்ச்சோலையல்லவா? இவர்கள் ஊசலாடும் வேகத்தில் மலர்களில் தேனுண்ணும் வண்டுகளும் எழுந்தும் தாழ்ந்தும் ஆடுவனபோல் காட்சியளிக்கின்றன! விசையாக ஆடுவதால், பிறைபோன்ற நெற்றியில் வியர்வை அரும்பிப் படர்கிறது; தொங்கும் துளைச்செவியானதும் ஆடுகின்றது (அக்காலத்து மகளிர் காதில் பாம்படம் போன்ற பெரிய  அணிகளை அணிவதற்காக, காதுத்துளைகளை நீளமாகத் தக்கை முதலியனவற்றால் வளர்த்துக்கொண்டு அழகு செய்துகொள்வார்கள்; இதனை ‘வடிகாது’ என்பார்கள்). அக்காதிலணிந்த குழைகளும் கூடவே ஆடுகின்றன. கொடியிடையும், கைவளைகளும் ஆடிட, கோலமயில் போலும் பெண்களே நீங்கள் ஊசலாடுவீர்களாக! முத்தைப்பழிக்கும் புன்னகை கொண்டவர்களே! பால்போலும் இனிய சொல் பேசுபவர்களே! பட்டீசர் புகழைப் பாடி ஆடுவீராக!” எனப்பாடிய வண்ணம் ஒருவரை ஒருவர் ஊசலில் ஊக்கியபடி இவர்கள் ஊசலாடும் அழகு நமது கண்முன் காட்சியாகத்தோன்றி மகிழ்விக்கிறது. இறைவனின் அல்லது அரசனின் புகழைப்பாடும் ஒருவகைச் சிற்றிலக்கியம், பலவிதமான பாடல்வகைகளைக்கொண்டு, கலம்பகம் எனப்பெயர் பெற்றது. நடேசகவுண்டர் இயற்றியுள்ள திருப்பேரூர்க் கலம்பகத்தில் உள்ளதுதான் இந்த அழகான ஊசற்பாடல்:

    ஏலநறுங் குழலாட மாலை யாட

    இமிர்ந்தினவண் டாடமதி நுதல்வே ராடச்

    சாலவடி காதாடக் குழைக ளாடத்

    தளர்ந்துகொடி யிடையாட வளைக ளாடக்

    கோலமட மயிலனையீ ராடீ ரூசல்

    குளிர்முத்த மணிநகையீ ராடீ ரூசல்

    பாலனைய மொழிமடவீ ராடீ ரூசல்

    பட்டீசர் பேர்பாடி யாடீ ரூசல்3.

    இதில் ஊசலாடும்போது உண்டாகும் இன்பமும்,  இன்னும் என்னவெல்லாம் பெண்களுடன் ஊசலாடும், எனவும் அழகுற விளக்கப்பட்டுள்ளன.  அழகான இளம்பெண்கள் ஊசலில் ஆடுவதைக் கண்ட கவிஞர்கள் அன்னை தெய்வத்தின் மீதான பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஊசல்பருவத்தை இணைத்துப்பாடி மகிழ்ந்தனர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இலக்கியச்சுவையும், பக்திரசமும் ததும்ப, அன்னை ஊசலில் ஆடுவதனாலேயே உலகங்கள் இயங்குகின்றன எனும் பிரபஞ்ச இயக்கத் தத்துவத்தினைக் குமரகுருபரனார் ஊஞ்சல் விளையாட்டுடன் இணைத்துக்கூறும் நயம் மிக அருமையானது:

    ‘மீனாட்சியாகிய இளமங்கை சுவைமிகுந்த பாடல்களை அமுதம் ஒழுகப் பாடியபடி பொன்னூசலில் ஆடுகின்றாள். அதனைக் கேட்ட சிவபிரான் மகிழ்ந்து தனது திருமுடியை அசைக்கின்றார்; அவருடைய முடிமீது பாம்புகளுக்கெல்லாம் அரசனான ஆதிசேடன் உள்ளான்; உலகங்களையெல்லாம் தாங்கும் அவனுடைய தலையும்  இதனால் அசைகின்றது. தலையசைந்தால் தலைமீதுள்ள உலகங்களும் அசைய வேண்டியதுதானே! அகில சராசரங்களும் அசைந்தாடுகின்றன; சொக்கநாதரின் திருவழகிற்கு இணையான கொடிபோன்ற இவள் ஊசலில் அசைந்தாடுவதனால் அண்டமும் அண்டபகிரண்டமும் ஆடுவதைப் போலத் தோன்றுகிறது,’ எனும் பாடல் நம்மை நெகிழ வைக்கிறது. 

    ‘சேர்க்குஞ் சுவைப்பாடல் அமுதொழுக ஒழுகுபொன் 

                திருவூசல் பாடியாடச் 

    சிவபிரான் திருமுடிஅசைப்ப 

          ……………………. தம்மனையசைந் 

     தாடலால் அண்டமும் அகண்டபகி ரண்டமும் 

      அசைந்தாடு கின்றதேய்ப்ப4

    தாம் எப்போதும் அகக் கண்ணில் கண்டு மகிழும் அன்னை மீனாட்சியின் திருவூசல் காட்சியில்  குமரகுருபரருக்கு இந்த அண்ட சராசரமே அசைந்து ஆடுவது போலத் தோன்றுகிறது; அருள் பெற்ற தமது தெய்வவாக்கினால் இதனை அழகுற விவரிக்கின்றார்: 

    அரசியின் ஊஞ்சலல்லவா? அதன் கால்கள் சிறந்த ஒளியுடைய பவளத்தால் செய்தவையாம்; பொங்கிப் பெருகி ஒழுகும் ஒளியையுடைய வைரங்களால் விட்டம் அமைந்துள்ளதாம்;  குளிர்ச்சி பொருந்திய செழித்த நிலவொளி பெருகி விழுந்தது போன்ற ஒளி பொருந்திய முத்து வடங்களைக் கட்டியுள்ளனர். ‘தண்’ணென்ற பௌர்ணமி இரவில் சந்திரனின் கிரணங்கள் ஊடுருவி அழகு செய்வது போல அவை தோன்றுகின்றன. மாணிக்கப் பலகையால் செய்த இருக்கையும் ஒளி வீசுகின்றது; எத்தனை அள்ளினாலும் திரும்பவும் பெருகி  நிறைந்து வழிந்து ஒளி பொங்குகின்ற அருண ரத்தினப் பலகையாம் அது!

    ‘ஒள்ளொளிய பவளக் கொழுங்கால் மிசைப்பொங்கும்

    ஒழுகொளிய வயிர விட்டத்து

    ஊற்றும் செழுந்தண் நிலாக்கால் விழுந்தனைய

    ஒண்தரள வடம் வீக்கியே5‘ என்கிறார்.

    ‘இத்தகைய அற்புதமான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகின்ற உன் தோற்றம் தாயே, அந்தச் சூரிய மண்டலத்தில் வளர்கின்ற அரிய பெரிய சுடர் ஆகிய ஒளியை ஒத்திருக்கிறதே!’ என நெகிழ வைக்கிறார் புலவர்.

    ‘தன்’னை வென்று பரம்பொருளில் ஆழ்ந்து விட்ட பெரியோருக்கு அனைத்தும் இறை மயமாகத்தான் தெரியும்! ஆதி சங்கரரும் ‘உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்6,’ என்று மீனாட்சியின் ஒளிமயமான தோற்றத்தைப் போற்றியுள்ளார். உதிக்கின்ற ஆயிரம் கோடி சூரியர்களின் காந்தி பொருந்தியவளாம் அண்ட சராசரங்களுக்கும் முதல்வியான நம் அம்மை! இவள் குடியிருக்குமிடம் எதுவென்று தாம் உணர்ந்ததை எளியவர்களாகிய நமக்கும் விளக்குகிறார் குமர குருபரர். 

    உள்ளத்தில் திருவருள் நிரம்பியதால் அடியார்கள் ஆனந்தச் செருக்கு நிறைந்து விளங்குகின்றனராம்! தெய்வப் பேரருளை உணர்ந்தமையால், அதனால் விளைந்த பரமானந்த அலைகள் பொங்கும் கடலில் அவர்கள் மூழ்கித் திளைக்கின்றனர். ‘தெள்ளு சுவையமுதம் கனிந்த ஆனந்தத் திரைக்கடல் மடுத்து உழக்கும் செல்வச் செருக்கர்கள்7,’ என இத்தகைய அடியார்களைப் பெருமைப் படுத்துகின்றார். திருவருள் செல்வத்தினால் மெய்யடியார்களுக்கும் செருக்குண்டாகுமாம்! 

    ‘இறுமாந்திருப்பன் கொலோ, ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச் 

    சிறு மான் ஏந்தி (சிவபிரான்) தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு 

    இறுமாந்திருப்பன் கொலோ8,’ என திருநாவுக்கரசரும் இறைவனடியில் பணிந்து பெற்ற பேரருள் செல்வத்தால் தாம் இறுமாப்பு அடைந்ததைப் பாடியுள்ளார்.

    இத்தகைய அடியார்களின் மனத்தாமரையில் நெகிழ்ந்த  பூம்பஞ்சணையில் குடியிருக்கிறாள் மீனாட்சியன்னை. இங்ஙனம் இவள் இங்கு குடியிருப்பதனை உலகத்தினருக்கு அறிவிப்பது போல, அவர்கள் ஓதுகின்ற வேதம் எனப்படும் பறவைகள் ஒலியெழுப்புகின்றன. அன்னையும் அத்தனும் வேதத்தின் உட்பொருள்; ஆகவே, ஆகமப் பொருளாகி நிற்பவள் இவள் என்கிறார் குமரகுருபர அடிகளார்.

    இதனை முற்றுணர்ந்தவர்களாக, ‘பழ வேதமாய் அதன் முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்9,’ என்று மகாகவி பாரதியார் கூறுகிறார்.

    ‘நானாயோகி முனீந்த்ர ஹ்ருந்நிவஸதீம்10 (யோகிகளும் முனிவர்களும் ஆகியோரின் நெஞ்சத் தாமரையில் உறைபவள்)’ என ஆதி சங்கரரும் கூறியுள்ளார்.

    ‘இவ்வாறு அடியார்களின் மனமாகிய தாமரையில் உறைபவளே, சுந்தரவல்லியே, பொன்னூசலில் ஆடியருளுக! 

    ‘…………………….பழையபாடல்

    புள்ளொலியெழக் குடிபுகுந்த சுந்தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே11.!’ என்பது பாடல்.

    பொன்னூஞ்சலில் அமர்ந்துள்ள தடாதகையின் திருக்கோலத்தை மனக்கண்ணில் கண்டு மேலும் பாடுகிறார் புலவர்: “தேரிலேறிய போர்க் கோலத்தில் உன்னைக் கண்ட சிவபிரானின் உள்ளத்தில் முதலில் சினம் பொங்கியெழுந்தது! ஆனால் உனது அழகுத் திருக்கோலத்தைக் கண்டு சினத்தீ தணிந்து உள்ளத்தில் பற்றி எரியும் காமக்கனல் வளர்ந்து எழுந்தது! அந்தத் தீயின் கொழுந்து போன்றது அவரது சிவந்த சடை. உன்மேல் கொண்ட காதலால் அவர் உள்ளம் உருகியது போலவே, அவர் கையிலிருந்த வில்லான பொன்மேருவும் உருகியோடியது! (வில் அவர் கையை விட்டு நீங்கியது). அவர் முடியிலிருக்கும் சந்திரனும், அவர் ஏறும் காளைவாகனத்தின் மணி ஓசையும் அவர் கொண்ட காதல் நோயால் அவருக்கு மிகுந்த துன்பத்தைத் தந்தன!” என்கிறார்.

    இன்னும் கூறுகிறார்: “அழகான மேகத்தின் நீலமும் கருநிறமும் பொருந்திய கழுத்தை உடைய அப்பெருமான், உன்னைப்  போரில் எதிர்த்து வருந்தினார் அம்மையே! நீ அவர் மேல் கண்களாகிய அம்புகளைக் கரிய புருவங்களாகிய வில்லிலிருந்து செலுத்தினாய்; ஒரு கையில் போருக்கு வில்லையும் வளைத்து ஏந்தி நின்ற உந்தன் அழகுக் கோலத்தில் ஐயன் மயங்கினார்; அந்தப் போர்க்கோலமே உனக்கு திருமணக் கோலமான பெண்ணே, பொன்னூசலாடியருளுக,” என்கிறார்.

    ‘கண்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு

    கைவில் குனித்து நின்ற

    போர்க்கோலமே திருமணக் கோலமான பெண் 

    பொன்னூசல் ஆடியருளே,’ என்பன பாடல் வரிகளாகும்.

    அன்னை ஊசலாடும்போது சுற்றும் புடை சூழ நிற்கும் இனிய தோழியரில் சிலர் பாடல்களை இசைக்கின்றனர்; இன்னும் சிலர் பரிகாசச் சொற்களைப் பேசி கேலி செய்கின்றனர். உயிர்த் தோழியான திருமகள், தரையைக் காலால் உந்தி உயர்ந்தெழும் ஊஞ்சலில் அமர்ந்துள்ள மீனாட்சியின் தாமரைத் திருவடிகளைப் பார்க்கிறாள்; வளைந்த பிறைத் தழும்பு அதில் தெரிகிறது. “வாணி, இதைப் பாரடி! என்ன இது இவள் மலரடியில், வலம்புரிச் சங்க ரேகையோ?” என்று கூவிப் பரிகசித்து முத்துப்பல் தோன்றச் சிரிக்கின்றாள்; ஊடல் காலத்தில் சிவபெருமானின் திருமுடியிலுள்ள பிறைநிலா அழுந்தியதால் வந்த தழும்பல்லவா அது? தோழியர் முகங்களில் குறும்புப் புன்னகை விகசிக்கின்றது! மீனாட்சிக்கு நாணம் மிகுகிறது. வணங்காத அவள் முடிக்கு அப்போது அந்த நாணம் ஒரு வணக்கத்தை வழங்குகின்றதாம்.

     ‘……………………மலர்மகள் அம்மை 

    உள்ளடிக் கூன்பிறை தழீஇ 

    மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்றிது கொல் 

    வாணி என்று அசதியாடி 

    மணிமுறுவல் கோட்ட12 என்பன பாடல் வரிகள். அசதியாடல் என்றால் பரிகசித்தல் எனப் பொருள். 

    குமரகுருபர அடிகளாரின் கவிநயமும் பொருள் நயமும் மிகுந்த பாடல், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற செந்தமிழ்ச் சொல்லோவியத்தின் நிறைவுப் பாடலாக அமைந்துள்ள பாடல், ஊசற் பருவத்தின் பத்தாவது பாடல், அன்னையின் பாதாதி கேச வர்ணனைப் பாடலாக அமைந்துள்ளது. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற தெய்வச் சிற்றிலக்கியத்திற்குத் திலகம் போன்று இப்பாடல் திகழ்கிறது.

    இரு திருவடிகளிலும் அணிந்துள்ள மென்மையான ஒலி எழுப்புகின்ற கிண்கிணியான சதங்கையும், முறையீடு செய்வது போன்று ஒலிக்கின்ற பரல்களையுடைய சிலம்புகளும் அணிந்த அம்மையின் மென்மையான மலர் போலும் திருவடிகளில் தேவரும் மூவரும் பணிந்து கிடக்கின்றனர். இவர்களுடைய முடிகளிலுள்ள கிரீடங்கள் அவர்கள் பணியும் போது அன்னையின் மெல்லிய திருவடிகளை அழுத்தி வருத்துகின்றன. இதனால் தான் திருவடிகளின் சார்பாகச் சிலம்புகள் வருத்தத்தை வெளியிட்டு முறையீடு செய்கின்றனவோ?

    ‘இருபதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு

    இரைத்திடும் சுரிச்சிலம்பும்13′

    காப்பிட்டு, செங்கீரையாடி, தாலாட்டி, சப்பாணி கொட்டி, முத்தம் தந்து, குறுநடை நடந்து, அம்புலியோடு ஆடி, அம்மானை விளையாடி, வைகை நீரிலாடி மகிழ்ந்து, அழகு பொங்க வளர்ந்து இன்று பொன்னூஞ்சலில் ஆடி நிற்கும் அன்னையின் திருவழகைக்கண்டு உள்ளம் பூரிக்கின்றது.

    ‘தடாதகையின் மென்மையான கொடி போன்ற இடையானது இற்றுப் போகுமே என்று அவ்விடையில் அணியப்பட்டுள்ள மேகலை இரங்கிப் புலம்புகின்றது. பொற்சரிகையால் சித்தரிக்கப்பட்ட பட்டாடை இவளுடைய சிறந்த மெல்லிடையை அலங்கரிக்கின்றது. மேலாடையும் ஒட்டியாணமும் அணிந்து சிவந்த கையில் பசுங்கிளியை ஏந்தி இருக்கிறாள்! இவளது அழகிய மார்பகங்களை முத்தாலாகிய மேலாடை அலங்கரிக்கின்றது. ஈசன் அணிவித்த மங்கலத் திருநாண் அதன் மீது திகழ்கின்றது. அழகு பொங்க நின்று அருளைப் பொழியும் நிலவு போன்ற திருமுகம்; முகமாகிய மதியினின்று  நிலவின் நீண்ட கிரணங்கள் போல அரும்பி வரும் புன்சிரிப்பும் கொண்டவள் இப்பெண்மணி,’ எனப் படிக்கும்பொழுதில் நமது கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது.

    இன்னும் மேலே போய் ‘சொல்லும் பொருளும் என நடமாடும் இறைவருடன் புல்லும் பூங்கொடி’யான அம்மை மீனாட்சியை வர்ணிக்கிறார் குமரகுருபர அடிகளார். ‘ஞானமாகிய ஆனந்தம் என்னும் கடலில் மூழ்கியவள் இவள்,’ என்கிறார் . அதாவது ஞானமே வடிவாகிய சிவபிரானுடன் இரண்டறக் கலந்தவள் என்பது பொருள். காளிதாசர் ‘ரகுவம்ச’த்தில், ‘வாகர்த்தா இவ சம்ப்ரக்தௌ14 எனச் சொல்லையும் பொருளையும் போலப் பார்வதியும் பரமேஸ்வரனும் இணைபிரியாதவர்கள் என்பார்.

      ‘இத்தகைய பெருமை பொருந்திய தாயே! காதிலணிந்துள்ள மகரக் குழைகளுடன் கயல்மீன்களாகிய கண்கள் போர்செய்கின்ற ஒப்பற்ற அழகு பூத்த சுந்தரவல்லியே! பொன்னூசல் ஆடியருளுக; புனுகு எனப்படும் நறுமண நெய் பூசியிருக்கும் சொக்கநாதரின் திருவடிவிற்குப் பொருத்தமான கொடி போன்ற பெண்ணே! பொன்னூசல் ஆடியருளுகவே,’ எனப் பாடி வாழ்த்தி நூலை நிறைவு செய்கின்றார்.

    ‘……………………ஞான

    ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொடு

    அமராடும் ஓடரிக்கண்

    பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே16.

    அடுத்த பகுதியில் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் காட்டும் நயங்களைக் கண்டு மகிழலாம்.

    ***************

    பார்வை நூல்கள்

    1. சிலப்பதிகாரம்- ஊசல்வரி- இளங்கோவடிகள்
    2. திருவாசகம்- திருப்பொன்னூசல்- மாணிக்கவாசகர்
    3. திருப்பேரூர்க் கலம்பகம்- கு. நடேச கவுண்டர்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    6. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    7. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    8. தேவாரம்- திருநாவுக்கரசர்.
    9. பாரதியார் பாடல்கள்- சுப்ரமணிய பாரதியார்
    10. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    11. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    12. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    13. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    14. ரகுவம்சம்- காளிதாசன்
    15. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

     

     

     

    _

     

    Share
  • சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1

    சொர்க்கத்துக்குப் போய் வந்தேன் – 1

    -நிர்மலா ராகவன் 

    “நீங்கள் கண்டிப்பாக சொர்க்கத்திற்குப் போயிருப்பீர்கள்!” அமெரிக்காவில் பலரும் என்னை இதையே கேள்வியாகக் கேட்டார்கள்.

    `என்னைப் பார்த்தால் செத்துப் பிழைத்தவள் மாதிரியா இருக்கிறது!’ என்று விழித்துப் போனேன்.

    தென்கிழக்காசிய நாடாகிய மலேசியாவிலிருந்து வந்தவள் என்பதால்தான் அக்கேள்வி பிறந்தது என்று பின்புதான் புரிந்தது. இரு நாடுகளுக்குமிடையே விமானப் பயணம் மூன்று மணிக்கும் குறைவுதான்.

    அவர்களைப் பொறுத்தவரை, இந்தோனீசியாவிலுள்ள பாலித் தீவுதான் சொர்க்கம்.

    “பாலியில் அப்படி என்ன இருக்கிறது?” என்று அவநம்பிக்கையுடன் என்னைக் கேட்டார் அங்கேயே பிறந்து வளர்ந்த ஒருவர்.

    இயற்கை எழிலும், கலை நயமும் ஒருபுறமிருக்க, வேறு ஏதோ யுகத்திலிருந்து வந்தவர்கள் போன்று, நம்பவே முடியாத அளவுக்கு மனிதாபிமானம் நிறைந்த மனிதர்கள்தாம் இதற்குக் காரணம் என்று ஓரிரு நாட்களிலேயே தோன்றிப் போகிறது.

    மலேசியாவில் பணிபுரியும் இந்தோனீசியர்களிடம், `நான் இந்தோனீசியா போயிருக்கிறேன்’, என்றால் ஜாவா அல்லது சுமத்ராவைத்தான் குறிப்பிடுவதாக எடுத்துக்கொள்வார்கள். ஏனெனில், இந்த இரண்டு தீவுகளிலும் இஸ்லாம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. பாலியின் வடக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் மட்டும் சிறுபான்மை முஸ்லிம்கள்.

    “நாங்கள் இந்துக்கள். ஆனால், எங்கள் இந்து மதம் வித்தியாசமானது!” என்கிறார் வழிகாட்டி தேவா.

    130 X 90 கிலோமீட்டர் பரப்புகொண்ட சிறிய தீவு பாலி. அதனுள் 300 கிராமங்கள்.

    ஒரு கிராமத்திலுள்ள அனைவரும் ஒரு குறிப்பிட்ட தொழிலையே செய்கிறார்கள். தச்சு வேலை, சித்திரம் வரைவது, சிமெண்டுப் பலகைகளில் பூ வேலைப்பாடு (சுவரிலோ, தரையிலோ பதிப்பது), பெரிய காத்தாடிகள் செய்வது, வெள்ளி நகைகள் செய்வது என்று பல. கைத்திறன் கொண்டு செய்வது.

    மரத்தாலான சிலைகள் செய்யுமிடத்திற்குப் போனேன். `இச்சிலைகளுக்குப் பயன்படுவது இந்தச் செம்பருத்தி மரம்’ என்று அங்கே இருந்த ஒன்றைக் காட்டினார்கள். மரத்தின் இலை மெல்லியதாக, கிட்டத்தட்ட செம்பருத்தி போல்தான் இருந்தது.

    மிக அழகான வேலைப்பாட்டுடன், ஒன்றரையடி உயரமுள்ள சரஸ்வதி சிலை ஒன்றை ஆசையுடன் கையில் எடுத்தேன். அதன் விலையைக் கேட்டதும் மூச்சு நின்றுவிடும்போல் ஆகிவிட்டது. 3,000 அமெரிக்க டாலர்கள்!

    மன்னிப்பு கேட்கும் தோரணையில், அசடு வழியச் சிரித்தேன். பலரும் அப்படித்தான் செய்திருப்பார்கள் போலும்! கடை விற்பனையாளரான பெண் என் சங்கடம் புரிந்து, தலையாட்டினாள்.

    இப்படிப்பட்ட ஒன்றைப் படைக்க, அனுபவமும் தேர்ச்சியும் மிக்க ஸ்தபதி ஒருவர் ஒரு மரத்தைத் தேர்ந்தெடுத்து, மூன்று மாத காலம் தியானம் செய்வாராம். அப்போது, `இந்த மரத்தால் எந்த கடவுளின் உருவை நான் செய்ய வேண்டும்?’ என்று கேட்டுக்கொள்வார். இடைவெளி விட்டு விட்டு இப்படி ஒரு சிலையைச் செய்ய மூன்று மாத காலம் ஆகிறதாம்.

    மரத்தின்மேல் அனுமானமாக சித்திரம் வரைந்து கொள்வதெல்லாம் கிடையாது. ஒருவித மோன நிலையில் கை தன்பாட்டில் வேலை செய்யும். ஒரு சிறு தவறு நிகழ்ந்தால்கூட அதற்குப்பின் மரம் பிரயோசனப்படாது.

    எங்கும் தெய்வீக மணம்

    எல்லா முச்சந்திகளிலும் இருபதடி உயரச் சிலைகள். சரஸ்வதி, ராமர், அவர் எதிரே அனுமன் — இப்படி. பணக்கார வீடுகளின் வெளிச்சுவர் பண்டைக் கால அரண்மனையில் இருப்பதுபோல் கலைநயத்துடன் மிளிர்கின்றன.

    “ஒவ்வொறு கிராமத்திலும் ஒரு `சிறிய’ கோயில் இருக்கிறது,” என்று தேவா தெரிவிக்க, `இதையா சிறியது என்கிறார்!’ என்று எனக்கு ஆச்சரியம் எழும் வகையில் அமைந்திருந்தன அவை.

    பனை ஓலையில் செய்யப்பட்ட தொன்னையில் பற்பல வண்ணங்களைக் கொண்ட மலர்கள் பூஜைக்காக வைக்கப்படுகின்றன. இவற்றை எங்கும் காணலாம். பேரங்காடி கல்லாவின்மேல், ஹோட்டலில் வழி நெடுக, மற்றும் தரையில், ஒவ்வோர் அறைக்கும் முன்னால் என்று காணும் இடமெல்லாம் பூக்கள் இறைந்து கிடக்கின்றன. பெரும்பாலும், காசித்தும்பை பயன்படுத்தப்படுகிறது. தினந்தோறும் காலையில் செய்யும் பூஜைக்கெனவே பெரிய நிலப்பரப்புகளில் இதனைப் பயிரிடுகிறார்கள்.

    பிரம்மாவிற்குச் சிவப்பு வண்ண மலர்கள், சிவனுக்கு மஞ்சள் அல்லது வெள்ளை, விஷ்ணுவிற்கு நீலம் என்ற முறை இருக்கிறது. அவற்றைக் குறிப்பிட்ட திசையில்தான் வைக்க வேண்டுமாம்.

    கலைகளில் மிகுந்த ஈடுபாடு இருப்பதால் சரஸ்வதியைக் கொண்டாடுகிறார்கள். அண்மையில்தான் `கணேஷா’ என்று பிள்ளையார் சிலைகளைச் செய்கிறார்களாம். (அங்கேயே வசிக்கும் வேற்று நாட்டுக்காரரின் கணிப்பு).

    `இந்தியாவில் பிரம்மாவுக்கு நிறைய கோயில்கள் கிடையாதாமே! ஏன்?’ என்று அதிசயப்பட்டார் தேவா.

    -தொடரும். 

    Share
  • ஐயப்பன் காவியம் – 4

    ஐயப்பன் காவியம் – 4

    -கவிமாமணி இலந்தை சு. இராமசாமி 

    நகரப்படலம்

    கடல்கோளுக்கு முன்னிருந்த தென்மதுரை

    காய், காய், காய், காய் மா, தேமா- அறுசீர் விருத்தம்

    அம்மைதிரு மீனாக்ஷி அரசாண்ட தென்மதுரை அகில மீதில்
    செம்மைநகர் எனப்புகழைச் சேர்த்தநகர் சிறந்தநகர், தினமு மங்கே
    பொம்மெனவே புதுப்புதிதாய் மக்கள்வந்து பொலியுந கர், புனித மாகச்
    செம்மொழியாம் செந்தமிழின் முதலரங்கம் அந்நகரில் திகழ்ந்த வன்றே! 33

    தமிழ்வளர்க்கும் பஃறுளியும் தழைத்தோங்கப் புதுவெள்ளம் தாவிப் பாயும்
    அமிழ்தமெனும் அதன்நீரைப் பருகுவதால் உடல்நலத்தில் அந்நாள் மக்கள்
    நிமிர்ந்திருந்தார், இளங்காலை புலர்கையிலே மக்களெலாம் நேரே சென்று
    குமிழியிடும் அந்நதியில் குளித்திடுவார் மீனாட்சி கோவில் செல்வார் 34

    தொழிலறிந்தே உழைத்தவர்கள் இருந்ததனால் சோம்பேறிக் கூட்ட மில்லை
    உழவர்களின் ஏர்முனையின் கீறல்களால் ஊர்ப்புறத்தே நஞ்சை புஞ்சை
    செழுமைபெறும், பயிர்செழிக்கும், உணவிற்குச் சிறிதேனும் பஞ்ச மில்லை
    விழவெடுக்கும் திருநகரில் எந்நாளும் விழாக்கோலம் விளங்கு மன்றே! 35

    சோறடுவோர் தெருவினிலே விட்டகஞ்சி சூழ்ந்தெங்கும் கூடி வந்தே
    ஆறெனவே ஓடிவரும் அதில்நடக்கும் யானைகளின் அடிவ ழுக்கும்
    வீறுடைய மல்லர்களின் போட்டிகளும் விறல்களத்தில் மிகவும் உண்டு
    கூறுபுகழ் அறிஞர்களின் விவாதங்கொள் கொலுமேடை நிறைய உண்டே 36

    நாட்டியங்கள் பயில்வோர்கள் இதமாக நடமாட நடன மேடை
    பாட்டியற்றும் புலவர்கட்கும் பாட்டெழுத உதவுகிற பயிற்சி மேடை
    தீட்டுகிற ஓவியங்கள் கற்போர்க்குச் சித்திரங்கள் தீட்டும் மேடை
    நாட்டமுடன் இசைக்கலையைப் பயில்வோர்க்கு நல்லபல நாத மேடை 37

    நல்லபடி விலைகூறி நியாயமுடன் விற்கின்ற நாளங் காடி
    அல்லினிலும் பசியாற்றும் உணவகங்கள் நிறைந்திருக்கும் அல்லங் காடி
    சொல்வலர்கள் நூல்களினை அரங்கேற்றம் செய்கின்ற சூழ ரங்கம்
    வில்முதலாம் போர்க்கலையில் பயிற்சி பெற அங்கங்கே வீர மேடை 38

    மாலைகளைக் கட்டுபவர் கிள்ளியங்கே போட்டமலர் மலையாய்ச் சேரும்
    காலையிலே கோவிலுக்குப் போகிறவர் திருக்கூட்டம் கருத்தை ஈர்க்கும்
    மாலையிலே சோலைகளில் மலர்வாசம் நுகர்ந்திருக்கும் மக்கள் கூட்டம்
    ஓலையிலே எழுதுபவர் இலக்கியங்கள் படியெடுப்பர் ஒதுக்க மாக! 39

    மழைபொழியும் நீர்வீணாய்ப் போகாமல் வழித்தடாகம் வந்து சேரும்
    வழிகிறநீர் வாய்க்காலில் ஓடியங்கே பஃறுளியில் வந்து கூடும்
    பொழில்நிறைந்த ஊருக்குள் பூவாசம் மூக்குகளில் புளகம் ஏற்றும்
    விழிதிறந்து காதலர்கள் பேசிடுவர் களவுநெறி விதிக்குள் செல்லும் 40

    பசியென்ப தங்கில்லை, பட்டினியாய் இருப்பவர்கள் இன்மை யானே
    நசித்தவர்கள் அங்கில்லை நகரெங்கும் வறுமையென்ப தின்மை யானே!
    வசித்தவர்கள் அங்கில்லை வீடின்றி வாழ்ந்தவர்கள் இன்மையானே
    நிசிப்பயமே அங்கில்லை நெஞ்சத்தில் பயமறிந்தார் இன்மை யானே! 41

    கற்றவர்கள் அங்கில்லை, கல்லாதார் இல்லாத கார ணத்தால்
    அற்றவர்கள் அங்கில்லை ஆனவர்கள் ஆயிருந்த கார ணத்தால்
    உற்றவர்கள் அங்கில்லை எவருமங்கே உறவான கார ணத்தால்
    இற்றவர்கள் அங்கில்லை எல்லோர்க்கும் எல்லாமாம் கார ணத்தால். 42

    Share
  • மழை வரும் நேரமடா

    மழை வரும் நேரமடா

    -கவிஞர் வெ.விஜய்

    பட்டம் பறந்திடும் வானத்திலே – எனைப்
    பார்த்துச் சிரிக்குது வட்டநிலா
    கட்டி யிழுத்திடத் தோனுதடா – இந்தக்
    காலம் மழைவரும் காலமடா

    கொட்டும் மழைவரும் நேரத்திலே – அட
    கோடி இசைவரும் வானத்திலே
    சட்டச் சடசட சத்தத்திலே – மனச்
    சாவி கிடைத்திடும் மொத்தத்திலே! (பட்டம்)

    மண்ணின் மனம்வரும் காற்றினிலே – கரு
    வானம் கிடந்திடும் ஊற்றினிலே
    பெண்ணின் சலங்கையைப் போலவொலி – உடன்
    பேசிச் சிரிப்பதாய்க் கொட்டும்மழை! (பட்டம்)

    மின்னல் விழுந்திடும் வானத்திலே – அதை
    மேகம் தழுவிடும் காதலிலே
    சன்னல் கதவுகள் வெட்கத்திலே – தனைச்
    சாத்தி இணைந்திடும் சொர்க்கத்திலே! (பட்டம்)

    கொட்டும் இடியெனும் மேளமடா – உடன்
    கோடி மழைத்துளித் தாளமடா
    கட்டி யணைத்திடும் தென்றலுடன் – மரம்
    காதல் புரிந்திடும் காலமடா! (பட்டம்)

    மோன நிலையினில் வானமடா – அதை
    மோதிக் கிழிப்பது மேகமடா
    தான தருமமும் போதுமடா – மழைத்
    தண்ணீர்க் கிணையெது வாகுமடா! (பட்டம்)

    மாரி பொழிந்திடும் நேரமெலாம் – உடல்
    மையல் புரிந்திடத் தோனுமடா
    யாரும் இதையறி யாமலில்லை – இந்த
    அண்டம் அதற்குளே ஓடுதடா! (பட்டம்)

    29-08-2019

    Share
  • சிக்கெனப் பிடிப்போம் வாரீர்

    சிக்கெனப் பிடிப்போம் வாரீர்

    -மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    கந்தனை நினைத்தால் நெஞ்சில்
    கவலைகள் பறந்தே போகும்
    வந்திடும் வினைகள் யாவும்
    வழியிலே மறைந்தே போகும்
    அந்தமில் இன்பம் வந்து
    ஆனந்தம் தந்தே நிற்கும்
    கந்தவேள் பாதம் தன்னை
    கட்டியே அணைத்து நிற்போம் !

    சூரர்கள் போல எம்மை
    சூழ்ந்திடும் பகைமை எல்லாம்
    வேலவன் பெயரைக் கேட்டால்
    விரைவிலே ஒழிந்து போகும்
    வாழ்விலே வசந்தம் வீச
    வள்ளி மணாளன் தன்னை
    நாளெலாம் தொழுது நிற்போம்
    நம்வாழ்வு உய்யும் அன்றோ!

    சேவலாய் மயிலும் ஆக்கி
    சிந்தையை திருத்த வைத்த
    வேலவன் முகத்தைக் கண்டால்
    விரைவிலே திருத்தம் காண்போம்
    காலனும் நாட மாட்டான்
    கடுநோயும் அணுக மாட்டா
    சீலமாம் கந்தன் பாதம்
    சிக்கெனப் பிடிப்போம் வாரீர்!

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 44

    சேக்கிழார்   பா நயம் – 44

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    ——————————————-

    திருவாரூரில்  இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக  வணங்கியபின், சுந்தரர் இறைவனைப் போற்றி  ஒரு பதிகம் பாடினார். அப்பொழுதே  அவர் கேட்க, திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட  பெருமான் வாக்காக ஒரு வானொலி எழுந்தது! அவ்வொலி,  ‘’சுந்தரனே! யாம் நம்மை உனக்கு நெருக்கமான தோழனாகத்  தந்தோம்.‘’ என்ற நற்செய்தியைக் கூறியது! அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய்  நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! , அப்போது நீ கொண்ட  திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக! இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை  அடைந்து விளையாடுக! ‘’ என்று இறைவன் கூறினார்!    

    இப்பாடல்  ‘வாழிய’ என்றசொல்லால் தொடங்குகிறது!  இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள் கொள்ள வேண்டும்! ‘’மாமறைப் புற்று இடம் கொள்’’ என்ற தொடர்  ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட‘’ என்று  பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது, ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த  புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங் கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற  திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும்  இதற்கு இருவகைப் பொருள் கூறலாம்! ‘’வாழிய மாமறை’’ என்ற தொடரில் உலகம் உய்தி பெரும்பொருட்டு , வேதத்துள் மறைந்து தோன்றுபவர்  என்றும் பொருள் கொள்ளலாம்! 

    இறைவனின் சிறப்பினை உணர்த்தும் அளவைகளாகிய பிரமாணங்கள் ஆட்சி,  ஆவணம், காட்சி ஆகியவை என்பர். ‘’இந்தப் பிரமாணங்களின் தேவையின்றி தாமே பிரமாணமாக உள்ளார்‘’   என்பதைக்காட்டும் .தமக்குமேற் பிரமாணமில்லாமல் 

    தமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது. வேதங்களாகிய புற்று. என்பர் பெரியோர்!  உள்ளிருக்கும் பொருளை மறைத்துப் பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்றார். 

    “வேதம் ஓதிலென்? சாத்திரங் கேட்கில்என்?
    நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
    ஓதி அங்கம்ஓர் ஆறும் உணர்த்தின்என்?
    ஈசனை  யுள்கு   வார்க்கன்றி  இல்லையே!’’

    என்ற  அப்பர் தேவாரம்  இங்கே சிந்திக்கத் தக்கது. இறைவனாகிய மன்னவனார் இதனை அருளினார்!  சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார்! அவர்,

    ‘’ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்’’  என்றும், ‘’என்றனையாள் தோழனை’’ என்றும், ‘’தோழமை அருளித் தொண்டனேன்   செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை’’ என்றும் சுந்தரர் பாடியுள்ளார்! இக்காரணத்தாலேயே சுந்தரர்   ’’தம்பிரான் தோழர்’’ என்று போற்றப் பெற்றார். சைவ நெறிகளாகிய அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி, ஞானநெறி ஆகியவற்றுள் சுந்தரரைத் தோழமை நெறியை விளக்க வந்தவர் என்பர்! 

    இங்கே ‘’நம்மைத் தந்தனம்!’’என்ற  தொடருக்கு  ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி’ என்றும், ‘தந்ததுன் றன்னை’ என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை; ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.’’ என்றுவிளக்கம்கூறுவர்!  

    எவ்வுயிர்க்கும் ஈசன் தோழனாய் உடனிருப்பார்; ஆயினும், “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்“ என்றபடி உயிர்கள் அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன் தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின் பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார் ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற் கூட்டம் முதலிய அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர் செயலேயாதலுமாம். இனி,  இப்பாடலை  முழுமையாகப்  படித்துப் பயில்வோம்! 

    ‘’வாழிய  மாமறைப் புற்றிடங்கொள்
    மன்னவனார்  அருளால் ஓர் வாக்கு
    ‘’தோழமையாக   உனக்கு நம்மைத்
       தந்தனம் .  நாம்முன்பு தொண்டுகொண்ட
    வேள்வியில்  அன்றுநீ கொண்ட கோலம் 

    என்றும் புனைந்துநின்  வேட்கைதீர
    வாழிமண்  மேல்விளை யாடுவாய்’’என்று
       ஆரூரர் கேட்க எழுந்த தன்றே ‘’

    என்ற  இப்பாடலில், முன்பு சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட திருமண வேள்வியில், அக்காலத்தில் அவ்வூரில் ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க“க் கொண்ட திருமணக் கோலம். என்பதை  ‘’அன்றுநீ கொண்டகோலம்’’ என்றார்.

    அதனை இனி  வருங்காலத்தில்‘’என்றும் புனைந்து நின் வேட்கை தீர  வாழி ‘’ என்று இறைவன் அருளினார் ! அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது!    பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து  கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார்! ‘’விளையாடு ‘’ என்ற சொல், பயனைக் கருதாத பக்தியைக் குறித்து சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகின்றது!   

    Share
  • குறளின் கதிர்களாய்…(264)

    குறளின் கதிர்களாய்…(264)

    -செண்பக ஜெகதீசன் 

    நிலைமக்கள் சால வுடைத்தெனினுந் தானை
    தலைமக்க ளில்வழி யில்.

    திருக்குறள் -770(படைமாட்சி)

    புதுக் கவிதையில்…

    களத்தில் உறுதியாய் நின்று
    போரிடும்
    வல்லமை மிகு வீரர்கள்
    பலர் இருப்பினும்,
    முன்னின்று வழிநடத்தும்
    தகுதி வாய்ந்த
    தலைவன் இல்லாதபோது
    படைக்குப் பெருமையில்லை
    நிலைத்தும் நிற்காது…!

    குறும்பாவில்…

    நிலையான வீரர்கள் பலரிருப்பினும்,
    வழிநடத்தும் தலைவனில்லாத படைக்குப்
    பெருமையில்லை நிலைக்காது…!

    மரபுக் கவிதையில்…

    நிலையாய்க் களத்தினில் நின்றேதான்
    நன்றாய்ப் போரிடும் படைவீரர்
    பலரும் படையி லிருந்தாலும்,
    போரில் வெல்ல முன்னின்று
    தலைமை யேற்றுப் படைநடத்தத்
    தக்க தலைவன் இல்லையெனில்,
    நிலைமை மிகவும் மோசமாகி
    நிலைப்ப தில்லை படைச்சிறப்பே…!

    லிமரைக்கூ..

    போரிடுவோர் நிலையாய் நின்று
    வீரர் பலரிருப்பினும், தலைவனில்லாப் படையின்
    பெருமை நிலைக்காது வென்று…!

    கிராமிய பாணியில்…

    படவேணும் படவேணும்
    போருல ஜெயிக்கணுண்ணா
    நல்ல படவேணும்..

    போர்க்களத்தில நெலயா நின்னு
    தெறமயா சண்டபோடுற வீரனுங்க
    நெறய இருந்தாலும்,
    மொறயா முன்னால நின்னு
    படநடத்துற தலைவன் இல்லண்ணா,
    படைக்கு வராது பெரும
    போருல ஜெயிச்சி..

    அதால
    படவேணும் படவேணும்
    போருல ஜெயிக்கணுண்ணா
    நல்ல படவேணும்…!

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

    இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (299

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களைத் தாங்கி வருகிறது எந்தன் அடுத்த மடல்உள்ளத்தின் கதவுகளைத் திறந்து வெள்ளமாய் இருக்கும் எண்ணங்களின் சிலதுகள்களை அள்ளித் தெளிப்பதில் ஆனந்தமடைகிறேன்.

    கடுகதி வேகத்தில் காற்றைப்போல் பறந்து செல்கிறது காலம்இந்தக் காலக் காற்றினுள் அகப்பட்ட சருகுகளாக அடித்துச் செலப்பட்டுக் கொண்டிருக்கிறோம்ஆனால் அத்தகைய சூறாவளிக்குள் சிக்கப்பட்ட நிலையிலும், வசதியான ஒரு வாழ்வைத் தக்க வைத்துக் கொள்வதற்காக உலகின் ஒரு பக்க மக்களும்அன்றாடத் தேவைகளையே தீர்க்க முடியாமல் அல்லலுறும் உலகின் மற்றொரு பகுதி மக்களும் வாழ்கின்ற நிலை.

    இந்நிலையில் இவ்விரு வகையான மக்களின் வாழ்க்கையையும் நிர்ணயிக்கின்ற பொறுப்புகளில் அந்நதந்தப் பகுதிகளில் அரசியல் நடத்தும் தலைவர்களும் அவர்கள் வழி வந்தவர்களும் தங்கள் கொள்கைகளை நியாயப்படுத்தும் வகையில் தம்பக்க பிரச்சாரங்களுக்குள் மக்களை மூழ்கடிக்கும் நோக்கத்தோடு செயலாற்றும் நிலை.

    பசிபஞ்சம்பட்டினிமரணம் என்பன எப்படி ஜாதிமதஇனநிற வேறுபாடு காட்டுவதில்லையோ அதேபோல செல்வம் மகிழ்ச்சி,வாழ்வுஆடம்பரம் என்பனவும் இவ்வேறுபாடுகளைக் காட்டுவதில்லைஇருப்பினும் இன்றைய உலகில் இப்படிபஞ்சம்பட்டினி அகால மரணங்கள்தேவையற்ற யுத்தங்கள் என்பன வசதி குறைந்தபொருளாதாரச் சிக்கல்கள் நிறைந்த Developing countries அதாவது முன்னேற்றமடைந்து வரும் நாடுகள் என்று அழகாகக் குறிப்பிடப்படும் நாடுகளிலேயே நிகழ்கின்றன.

    முன்னேற்றமடைந்துவரும் நாடுகளின் முன்னேற்றத்துக்கு உதவுகிறோம் என்று அதற்கொரு கொள்கையையும்,அக்கொள்கையைச் செயற்படுத்துவதற்கென்று அமைச்சர்களையும்வாரியத்தையும் நியமித்து செயற்படுகிறது தம்மை முன்னேற்றமடைந்து விட்ட நாடுகள் கூறும் மேற்குலக வல்லரசு நாடுகள்ஆயினும் இவர்களின் முன்னேற்றமடையாத நாடுகளுக்கான உதவிகளின் அடிப்படையில் தான் இவர்களது பொருளாதர வீரியம் தங்கியுள்ளது என்பது உண்மையேஎந்தநாடும் தமது நாட்டின் நன்மையை கருத்திற் கொண்டுதான் எந்தவொரு திட்டத்தையும் நடைமுறைப்படுத்தும்அதுவே அந்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பும்யதார்த்தமும் கூடஆனால் அனைத்துக்கும் பின்னால் மறைந்து நிற்கும் அரசியல் லாபங்களின் உண்மை வடிவங்கள் சாதாரண மக்களுக்கு காட்டப்படுவதில்லை.

    வசதி குறைந்த நாடுகளுக்கு உதவுவது மனித தர்மமே ஆனால் உதவி எனும் பெயரில் தமது ஆதிக்கத்தைதாம் எவ்வழியில் அந்நாடு போகவேண்டும் என்று எண்ணும் வழியில் அந்நாடு நடக்கவேண்டும் என்று எண்ணி அந்நாட்டிற்கு ஏற்புடையதல்லாத வழியில் போகவைக்க எத்தனிப்பது உண்மையான உதவியாகுமாஎன்பது இன்றைய உலகின் ஒரு முக்கியமான கேள்வியாகிறது.

    இத்தகைய வழியில் ஒரு வல்லமை கூடிய நாடு உதவி எனும் பெயரில் மற்றொரு நாட்டினை மறைமுக ஆதிக்கத்துக்கு உள்ளாக்குவதற்கு அவ்வல்லமை மிக்க நாடு மட்டும்தான் காரணமாஇல்லை அவர்களிடம் உதவியை ஏற்றுக் கொள்ளும் அவ்வசதி குறைந்த நாட்டினை வழி நடத்துகிறோம் என்றுகூறி அதிகாரத்திலிருக்கும் அரசியல் தலமைகளின் சுயநலமான மனப்போக்கே காரணமாகிறதுமுன்னேற்றம் அடைந்துவரும் நாடுகளை முன்னேற்றமடையவிடாத நிலையில் வைத்திருப்பதனால் தமக்கு இலாபம் எனும் கணக்கீட்டினால் அரசியல் வியாபாரகி விட்ட ஒரு சூழலே இதற்கு மூலகாரணமாகிறது.

    இத்தகைய மக்களின் வாழ்வோடு விளையாடும் அரசியல் நடத்துவோரால்தான் இன்று இனவிரோத மனப்பான்மையை நியாயப்படுத்தி அதனைப் பாப்பியூலசிம் எனும் உணர்ச்சி மிக்க தீவிரவாத அரசியல் நிலைப்பாடாகக் காட்டும் அரசியல் தலைவர்களுக்கான ஆதரவு மேற்குலக நாடுகளில் பெருகி வருவதைக் காண்கிறோம்சோசலிஸம்கப்பிட்டிலஸம்கம்யூனிசம் எனும் வகை அரசியல் முறைகளைப் பல்வேறு நாடுகள் கடைப்பிடித்து வந்தனஅவற்றில் பல அவ்வகை அரசியலினால் தமது பொருளாதார வளத்தைப் பெருக்கிக் கொண்டனசுற்றிவரும் ராட்டினத்தில் மேலிருக்கும் பகுதி கீழே வருவதும்கீழிருக்கும் பகுதி மேலே போவதும் சகஜம்அதேபோல் இப்பொருளாதார மேம்பாடு கண்டவர்களின் வாழ்வாதாரத்தில் வீழ்ச்சி ஏற்பட்டதும் அதற்குக் காரணமாக இலகுவாக கண்முன்னே தோன்றுவது வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறிவவர்களேஅதுவும் அவர்கள் வேற்றினத்து,வேறு நிறத்துடையவரானால் அது இன்னும் வெளிப்படையாகத் தோன்றும்இப்பொருளாதார வீழ்ச்சிக்கு இனவாதத் துவேஷங்களை விளக்கமாக்கும் யுக்தியைக் கையாளுவதே பல அரசியல்வாதிகளுக்கு இலகுவான காரியமாகத் தென்பட்டது.

    விளைவு !

    இன்றைய மேற்குலக நாடுகளில்அதாவது வெள்ளை இனத்தவரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடுகளில்வேற்றினத்து குறிப்பாகக் கறுப்பின மக்களின் மீதான வெறுப்புணர்வின் பலத்தில் தமது அரசியல்கோட்டைகளைக் கட்டிக்கொள்ளப் பலர் முனைவதைக் காண்கிறோம்இதற்கு பற்பல காரணங்களுக்காக புலம்பெயர்ந்து வாழும் மக்களின் நடவடிக்கைகளும் துணை போகின்றன என்பதும் மறுக்க முடியாத உண்மையே நாம் புலம்பெயர்ந்து வந்தபோது எம்மை அரவணைத்துஎமக்கான வாழ்வொன்றை ஏற்படுத்திக் கொடுத்த நாட்டை வாடகை வீடு போன்றும்எந்தநாட்டில் வாழமுடியாமல் விட்டு ஓடி வந்தோமோ அந்நாட்டினைச் சொந்த வீடு போன்றும் கருதும் மனப்பான்மையினால் கூறப்படும் கருத்துக்கள்செயற்படுத்தும் நடவடிக்கைகள் எமக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் மனதில் ஆறாத வடுக்களை ஏற்படுத்துவது சகஜமே !

    புலம்பெயர்ந்த நாடுகளின் அமைப்புகளில் அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டு அதன் அங்கங்களாகச் செயற்படும் பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களை அவர் இனத்தினைச் சேர்ந்தவர்களே எதோ தமது இனத்துக்கு துரோகம் செய்வோர்கள் என்பது போன்ற மனப்பான்மையில் பார்ப்பது கூட சில இடங்களில் நடப்பதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.இங்கேதான் தாய்நாடு” , “தாய்மொழி” என்பதன் அர்த்தங்களின் புரிதல்களின் வித்தியாசங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள் புலனாகின்றனஅந்நியமொழியைக் கற்று அதனில் புலமை பெறுவதென்பது தாய்மொழி“யை மறப்பதன்று எனும் உண்மை பலருக்குக் கசப்பாக இருக்கிறது என்பது வியப்புக்குரியதொன்றாக இருக்கிறதுஅவ்வகையில் தாம் அந்நியமொழியில் பெற்ற புலமையின் பலத்தால் தன்னை ஈன்றெடுத்த தாய் பேசும் மொழியின் சிறப்பான இலக்கியங்களை மொழிமாற்றம் செய்து தமதுதாய்மொழியின் சிறப்பினை அந்நியமொழி பேசுவோருக்கும் புலப்படுத்துவது கூட ஒரு சிறப்பான தாய்மொழிப் பற்று என்பதனை மறந்து விடுக்கிறோம்.

    மதம் என்பது ஒரு மனிதனின் அணிகலனே அன்றி ஆடையாகாதுஅம்மதத்தின் மூலம் நாம் கற்றுக் கொண்ட நல்வாழ்வுக்குரிய நற்பண்புகளை வளர்த்துக் கொள்வது தவறாகாதுஆனால் மதத்தின் மீது கொண்ட பற்று எனும் காரணம் நாம் மனிதனாக வாழ்வில் முன்னேறும் படிகளில் தடைக்கற்களாக்கிக் கொள்வது தவறுஇன்றைய பிரிட்டன்  பல்லினமக்களைக் கொண்ட  பலகலாச்சார நாடாகும்மத வேறுபாடுகளைக் கடந்துநிற வேறுபாடுகளைக் கடந்து மனிதரென்னும் அடிப்படையில் அடுத்தவரின் உரிமைகளை மதிப்பது ஒன்றே இந்நாட்டின் அமைதியான வாழ்வுக்கு அடிப்படையாகும்.

    இன்றைய பிரிட்டன் அமைச்சரவையில் கிறீஸ்தவர்யூதர்இந்துஇஸ்லாம் என பல்வேறு மதப்பின்னணிகளைக் கொண்டவர்கள் அமைச்சர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்இவர்களில் முக்கிய அமைச்சர்கள் இருவர் ஆசியப் பின்னணியைக் கொண்டவர்கள்இவர்கள் வெறும் ஆசியர்கள் எனும் காரணத்தினால் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பல்வேறு காரணங்களுக்காக இன்றைய பிரதமரையும்அரசினையும் எதிர்க்கும் வெள்ளை இனத்தவர் மட்டுமல்ல பல ஆசியர்களுமே ஆங்காங்கே முனகுவதைக் காண்கிறேன்.

    மக்களே உங்கள் முன்னால் வைக்கப்பட வேண்டிய முக்கிய கேள்வி இதுதான்இவைகள் எல்லாவற்றையும் கடந்து ஏன் அவர்கள்,அவர்களின் திறமையின் அடிப்படியில் நியமிக்கப்பட்டிருக்கக் கூடாதுபுலம் பெயர்ந்து வந்து இம்மண்ணிலே தமது திறமையை நிலைநாட்டியவர்கள்அவர்கள் என்பதில்நாமும் புலம் பெயர்ந்தவர்கள் எனும் அடிப்படியில் நாம் பெருமை கொள்ளக்கூடாதா?பதவியலமர்த்தப்பட்டு சில தினங்களே ஆகிறது அதுக்குள்ளாகவே நாம் அவர்களின் செயற்பாடுகளின் நீதிபதிகளாவது முறையாகுமா?

    ஒரே கேள்வி ஒரே கேள்வி என் நெஞ்சிலே

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்

    சக்தி சக்திதாசன்

    Share