Blog

  • வாழ்ந்து பார்க்கலாமே 45

    க. பாலசுப்பிரமணியன்

    கொஞ்ச நேரம்.. உங்கள் மனதோடு..

    அந்த மாலை நேரத்தில் கோவிலைச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். அங்கே அந்த மண்டபத்தின் அருகில் எனக்குப் பழக்கமான ஒரு நண்பர் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தேன். பொதுவாக அவரை அந்தக் கோவில் பக்கம் நான் பார்த்ததில்லை. மிகவும் அவசரமான முற்போக்கான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர் அவர். அவர் எதற்கு அன்று அங்கே வந்துள்ளார் என்பதை அறிய ஆர்வம் தூண்டியது. மெதுவாக அவர் அருகில் சென்று “அய்யா வணக்கம்” என்றேன். “வாங்க தம்பி.. நல்லா இருக்கீங்களா..” என்று ஒரு சோர்ந்த புன்னகையை அள்ளி வீசியவாறு என்னைப் பார்த்தார்.

    “நான் நலம்தான் அய்யா.. நீங்க எங்கே இந்தப் பக்கம்?” என மெதுவான குரலில் கேட்டேன்.

    சிரித்துக்கொண்டே அவர் சொன்னார் “ஒண்ணுமில்ல தம்பி. கொஞ்சம் மனசு சரியில்லாமல் இருந்தது. அதனால் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியாக கோவிலிலே இந்த மண்டபத்திலே ஒரு ஓரமாக அமர்ந்து என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்.”

    அவர் சொன்னது எனக்குப் புதுமையாக இல்லை. “என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்” அவருடைய தனிமையை பாதிக்க விரும்பாமல் நான் “அப்படியா… அப்போ நான் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.. உங்கள் தனிமையை நீங்கள் பாராட்ட வேண்டும்..” என்று விடைகூறி மேலே நகர்ந்தேன்.

    அவருடைய அந்த வார்த்தைகள் என்னை சற்றே உலுக்கிவிட்டன. “மனசு சரியாக இல்லை…” நம்மில் எத்தனை பேர் இந்த மாதிரியான சூழ்நிலைகளை அடிக்கடி சந்திக்கின்றோம். ஏதாவது ஒரு காரணத்திருக்காக இந்த மனசு சரியில்லாமல் போய்விடுகின்றது. என் மனதிடமே நான் கேட்டேன்: “ஏன் அடிக்கடி நீ பேய் பிடித்தாற்போல் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு துன்புறுத்துகின்றாய்?”

    அதைக் கேட்ட என் மனம் சிரித்தது..

    அது சொன்னது:

    1, நான் கேட்டது கிடைக்கவில்லையென்றால் நான் தளர்வடைகின்றேன்.
    2. நான் நினைத்தது நடக்கவில்லையென்றால் நான் துடித்துப் போகின்றேன்
    3.என்னை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றால் தன்மானம் பாதிக்கப்பட்டுச் சோர்வடைகின்றேன்.
    4. நான் சொன்னதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் என் இயலாமையைக் கண்டு வருந்தி களைத்து விடுகின்றேன்றேன்.
    5. என் மனதின் வேகத்திற்கு உடலோ சூழ்நிலைகளோ அல்லது சார்ந்தவர்களோ ஈடு கொடுக்கவில்லையென்றால் வெறுத்துப் பொய் மூலையில் அமர்ந்து விடுகின்றேன்.
    6. நான் செய்த பல நற்செயல்களை சுற்றமும் சூழலும் மறந்து அவைகளை ஏணிப்படிகளாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிவிடும்போது புண்பட்டு நோயாளியாகி விடுகின்றேன்.

    என்ன செய்வது.? அடிக்கடி இப்படி பல பிரச்சனைகள் வந்தவண்ணம் இருக்கின்றேதே! உனக்குத் தெரியாதா என்ன? உன் மனதிலும் நான் இவ்வாறுதானே வேலை செய்கின்றேன்.”

    உண்மைதான்! நம் அனைவருடைய மனமும் பலவித காரணங்களுக்காக புண்பட்டு நோய்வாய்ப்பட்டு அதற்கான சரியான மருந்தைத் தேடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு என்ன மருந்து போடலாம்? எந்த வைத்தியரிடம் நம் மனத்தைக் காட்டி மருந்து கேட்கலாம் ?

    அந்தக் காலத்தில் வீடுகளில் “பாட்டி வைத்தியம்” என்று இருந்தது. இருமலுக்கும், உடம்பு வலிக்கும், மற்றும் சிறிய உபாதைகளுக்கு பாட்டி ஒரு கசாயத்தையோ அல்லது ஒரு லேகியத்தையோ நமக்கு கொடுப்பார்கள். முதலுதவி போல பல நேரங்களில் இவையே நம்முடைய உடல் நோயைக் கட்டுப்படுத்திவிடும். அதுபோல நம்முடைய மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் முதல் வைத்தியம் நமது மனதேதான். அதனிடம் நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் “உனது நோயை நீ எவ்வாறு தீர்த்துக் கொள்ளப்போகின்றாய்? உன் புண்களுக்கு நான் என்ன மருந்து போடுவது?” இதற்கு நாம் நமது மனதோடு பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    உலகத்தில் உள்ள பல மனிதர்களோடு நாம் நித்தம் எத்தேனையோ மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கின்றோம், எப்போதாவது நாம் நம்முடைய மனதோடு பேசியது உண்டா? எப்பொழுதாவது அதை ஒரு பொருட்டாக மதித்ததுண்டா? சற்றே யோசித்துப் பாருங்கள்.

    நம் மனதோடு நாம் பேசுவது என்பது நமது வாழ்க்கையின் ஒரு முக்கியமான நிகழ்வு. அது நமக்கு நம்மையே அடையாளம் காட்ட உதவுகின்றது. நம்முடைய உள்ள நலத்தையும் நம்முடைய சிந்தனைகளின் வளத்தையும் நம்முடைய திறன்களையும் வல்லமைகளையும் மற்றும் இயலாமைகளையும் நமக்கு படம் போட்டுக் காண்பிக்கின்றது. நம்முடைய உறவு முறைகளில் உள்ள சிறப்புக்களையும் அதில் நாம் கையாளும் முறைகளில் உள்ள தவறுகளையும் நமக்கு உணர்த்துகின்றது. “யாரிடமாவது நம்முடைய குறைகளைச் சொல்லி அழமாட்டோமா’ என்று நாம் நினைக்கும்பொழுது நமது மனம் அருகில் அமர்ந்து “நான் இருக்கின்றேன் உன் துன்பங்களைக் கேட்பதற்கு” என்று சொல்லி தோழமையுடன் கேட்க அமர்கின்றது. நமக்கு எது சரியென்று தெரியவில்லையென்றால் அது ஒரு நீதிமானாக அமர்ந்து சரியான வழியைக் காட்டுகின்றது. ஒரு நிகழ்வு இப்படி நடந்துவிட்டதே என்று நாம் வருந்தும் பொழுது “அட போப்பா, இதெல்லாம் வாழ்க்கையில் நடக்கறதுதானப்பா. எழுந்து அடுத்த வேலையைப் பாரு” என்று ஊக்கம் அளிக்கின்றது.!

    “நான் எழுதிய இந்த அருமையான கவிதையைக் கேட்பதற்கு யாருமில்லையே.. என்ன உலகமடா இது” என்று நான் நொந்துபோகும்பொழுது “நண்பா. நானிருக்கின்றேன். உன் கவிதையை நீ எத்தனை முறை வேண்டுமானாலும் படி. திரும்பாத திரும்பப் படித்து ஆனந்தப்படு. நான் உன்னருகில் அமர்ந்து கேட்கின்றேன்” என்று சொல்லி உள்ளே என்னுடைய கவியரங்கத்திற்கான மேடையைத் தயார் செய்து கொடுக்கின்றது !
    இப்படி பல உதவிகளை செய்து ஒரு நண்பனாக, ஒரு ஊழியனாக, ஒரு உறவாக, ஒரு மருத்துவனாக நமக்கு உழைக்கும் மனதுக்கு மரியாதை கொடுத்து தினம் ஒரு சில மணித்துளிகள் அதோடு பேசிக்கொண்டிருந்தால் குறைந்தா போகும்? நாம் ஏன் செய்வதில்லை?

    “தினசரி உங்கள் மனதோடு கொஞ்ச நேரம் பேசுங்கள். அதை போன்ற ஒரு மருத்துவம் உலகில் இல்லை” என்று ஒரு மனநல மருத்துவர் மிக அழகாக எடுத்துரைத்தார்.

    “அய்யா. அதெல்லாம் சரிதான், என் மனதோடு தனியாக உட்கார்ந்து பேசுவதற்கு எங்கு நேரம் இருக்கின்றது?” என்று ஒருவர் குமுறினார். மற்ற அனைத்திற்கும் நேரத்தைத் தேடித்தடி வீணடிக்கின்ற நாம் இதற்கும் சில மணித்துளிகளைத் தேடி அதை ஒரு தினசரி பழக்கமாகக் கொண்டாலென்ன?சற்றே யோசியுங்கள். உங்கள் மனம் உங்களோடு பேசக் காத்துக்கொண்டிருக்கின்றது. என்ன பேசவேண்டும்? எப்படிப் பேசவேண்டும்? அதனால் நமக்கு உடனடிப் பலன்கள் என்ன கிடைக்கும்? – தொடர்ந்து பார்க்கலாமே!

    உங்கள் வாழ்க்கை – உங்கள் கைகளில் .. வாழ்ந்து பார்க்கலாமே !
    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(235)

     

     

     

    உளவரைத் தூக்காத வொப்புர வாண்மை      

    வளவரை வல்லைக் கெடும்.

           -திருக்குறள் -480(வலியறிதல்)

     

    புதுக் கவிதையில்…

     

    அடுத்தவர்க்கு

    உதவிடல் எனிலும்,

    தன் பொருளிருப்பின்

    அளவை ஆய்ந்திடாது

    மேற்கொண்டால்,

    அவன் செல்வ வளம்

    அழியும் விரைவில்…!

     

    குறும்பாவில்…

     

    தன் கைப்பொருளிருப்பை ஆய்ந்திடாது                     

    அடுத்தவர்க்குதவிடும் அருஞ்செயல் மேற்கொண்டாலும்,    

    அழிந்திடும் அவன்செல்வம் விரைவில்…!

     

    மரபுக் கவிதையில்…

     

    அடுத்தவர்க் குதவி செய்கின்ற

         அரிய செயலை மேற்கொளினும்,

    எடுத்துப் பொருளைக் கொடுக்குமுன்னே

         எண்ணிக் கைப்பொருள் இருப்பினையே

    எடுத்திட வேண்டும் ஆய்ந்தறிந்தே,

         எண்ணிச்  செய்யா ஒருவனுக்குக்

    கிடைத்த செல்வம் எல்லாமே

         கூடிய விரைவில் அழிந்திடுமே…!

     

    லிமரைக்கூ..

     

    எடுத்துக்கொடுத்து உதவிட அடுத்தவர்க்கு

    கைப்பொருளிருப்பின் அளவறியாமலே எடுத்தால்,          

    அழிந்துபோகும் செல்வமெலாம் கொடுத்தவர்க்கு…!

     

    கிராமிய பாணியில்…

     

    செயல்படணும் செயல்படணும்

    வலிமயறிஞ்சி செயல்படணும்,

    தன்னோட

    வலிமயறிஞ்சி செயல்படணும்..

     

    அடுத்தவங்களுக்கு ஒதவுற

    நல்ல செயலச் செய்யணுண்ணாலும்,

    கைப்பொருள் இருப்பக் கணக்குப்பாத்துத்தான்

    காரியத்தில எறங்கணும்..

     

    அப்படியில்லாமப் போறவன்

    செல்வமெல்லாம் அழிஞ்சிபோவுமே..

     

    அதால

    செயல்படணும் செயல்படணும்

    வலிமயறிஞ்சி செயல்படணும்,

    தன்னோட

    வலிமயறிஞ்சி செயல்படணும்…!

     

    செண்பக ஜெகதீசன்…

    Share
  • மலையாளப் பனுவலில் சங்ககால வாழ்க்கை

    முனைவர் இரா.வெங்கடேசன்

    “நாம் படிக்கும் புத்தகம், முஷ்டியால் மண்டையோட்டை இடித்து நம்மை விழிக்கச் செய்யாதபட்சத்தில் நாம் ஏன் அதை வாசிக்க வேண்டும். அது நம்மை மகிழ்விக்கிறது என்பதாலா? அட கடவுளே, நாம் புத்தகங்களே இல்லாமல்கூட சந்தோசமாக இருக்க முடியும். நம்மை மகிழ்விக்கும் அப்படியான புத்தகங்களை, தேவைப்பட்டால், நாமே கூட எழுதிக்கொள்ளலாம். ஆனால் ஒரு துரதிர்ஷ்டத்தைப்போல நம்மை வந்தடைகிற, நம்மைவிடவும் நாம் அதிகம் நேசிக்கிற ஒருவரின் மரணத்தைப் போலவோ, தற்கொலையைப் போலவோ ஆழ்ந்த துயரம் விளைவிக்கக்கூடிய புத்தகங்களே நமக்குத் தேவை. நமக்குள் படிந்திருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக் கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும்.” – ஃபிரன்ஸ் காஃப்கா 

    சங்கப் பிரதியை மையமிட்டு விமர்சனங்கள், ஆய்வுகள் தமிழிலும் பிற மொழியிலும் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் புனைவு வெளிக்குள் பதிவு பெற்றவை மிகக் குறைவுதான். தமிழ் நாவல்களில் தமிழுக்குத் தொடர்பில்லாத மகாபாரதத்தை மையமிட்டு ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், தேவகாந்தன், அருணன், பூமணி போன்ற பலரும் எழுதியுள்ளனர். இவர்கள் ஏன் சங்க வாழ்க்கையைப் பதிவு செய்ய முன்வரவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே. இவர்களிடம் கேட்டால் மகாபாரதம் வசீகரமானது. அதனை எழுதுதல் எழுத்தாளனுக்கு மன நிம்மதி அளிக்கும் எனச் சொல்லக்கூடும். மேலும் இவர்கள் இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகின்றனர். சங்ககால வாழ்க்கையைப் புனைவுகளின் வழிக் கடத்தத் தெரியாதவர்கள் வேறு எந்த இலக்கிய வடிவத்தையும் தமிழில் தந்தாலும் அதன்வழி எதையும் கட்டமைத்துவிட முடியாது. தமிழர்கள் புனைவாக எழுதாமல் போய்விட்ட சங்க வாழ்க்கையைக் குறிப்பாகப் பாணர்களின் அலைகுடித்தன வாழ்க்கையை மலையாளத்தில் மனோஜ் குரூர் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலில் புனைவு ஆக்கியுள்ளார். பிறப்பினால் மலையாளியாக இருக்கும் மனோஜ் குரூர் தமிழ்ச் சூழலையும் சங்கச் சூழலையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு எழுதியுள்ளது முக்கியமானதாகும். பாணர்களின் வாழ்க்கையை மையமிட்ட இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட நாவல் போன்று வார்த்திருப்பது கவனத்திற்குரியதாகக் கொள்ளலாம்.

    ஐந்து திணைகள் கொண்ட தமிழ் நிலப்பரப்பைத் தத்தம் இயல் மாறாத நிலம் யாதாயினும் அதில் நிகழும் ஒழுக்கம் பற்றித் திணை வகுப்பது பழைய மரபு. ஒழுக்க இயல் கருதாது நில வகையால் திணை அமைப்பது பிழைபட்ட பிற்கால வழக்கு. இது தொல்காப்பியருக்கு உடன்பாடன்று என்பது இச்சூத்திரத்தால் தெற்றென விளங்கும். (சாம்பசிவனார், 1997:34). ஐந்து திணைகளின் பிரிப்புப் பின்னணியில் உணவும் உணவு சார்ந்த பண்பாடும் மிக முக்கியமாய் அமைகின்றது. மருத நிலம் உணவில் தன்னிறைவு பெற்ற திணையாக உள்ளது. ஏனைய நான்கு நிலங்களிலும் உணவு காலச் சூழலுக்கு ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ கிடைத்துள்ளன. ஐந்து நிலங்களிலும் வாழ்ந்த மன்னர்களும் வள்ளல்களும் தம்மால் இயன்ற அளவு உணவைக் கொடையாக அளித்துள்ளனர். இவர்கள் தவிர இவர்கள் ஆளும் நாட்டில் வாழ்ந்த பல்வேறு நிலங்களைச் சேர்ந்த குடிகள் உணவுகளை அளித்துள்ளனர். சிறுபாணாற்றுப்படையில் வேலூரின் புன்புலப்பகுதிகளில் எயின வேடர் குலப் பெண்கள் புளிச்சோறும் ஆமானின் சுட்ட கறியும் (சிறுபாண்., பக்.175-177) உணவாகத் தந்தார்கள். ஆமூர் என்ற மென்புலப்பகுதியைச் சேர்ந்த உழவர் குடியினர் உலக்கையால் தீட்டிய அரிசியால் வெண்சோறும் நண்டுக் குழம்பும் உண்ணத் தந்தார்கள். (சிறுபாண்., பக்.) பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கினார்கள். பெரும்பாணாற்றுப்படை எயிற்றியர், எயினர், பாலைக்கானவர் குடி, மறக்குடி, கோவலர்குடி, வலைஞர், பார்ப்பனர், உழவர்குடி ஆகியோர் வழங்கிய உணவுகளைப் பற்றி விவரித்துள்ளது. (ராஜ்கௌதமன், 2006:211).

    விளைவித்த, வேட்டையாடிச் சேகரித்த உணவுகளைப் பெறப்பட்ட போதிலும் இந்த உணவுகளை விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தியுள்ளனர். ஒருபக்கம் விருந்து நிகழ்த்திய கூட்டம் இருந்ததென்றால் அதனைப் பெறுவதற்கான கூட்டமொன்று இருந்துள்ளது. அக்கூட்டத்தில் பாணர், விறலியர் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழாமல் அலைகுடி வாழ்க்கையை மேற்கொள்வோராக வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு உணவை யார் தருகிறோர்களோ அவர்களிடம் சென்று பாடி இசை மீட்டி அதற்கு ஈடாக உணவையோ பரிசையோ பெறுகின்றனர். சங்க காலம் என்பது பாணர்களின் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்தின் தொகுதியாகும். பாணர்களின் அலைகுடி வாழ்க்கைத் துயரங்களின் முழுமையைச் சுமந்துகொண்டு திரிந்த வாழ்க்கை. பாணர்களைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாகச் செய்யப்பட்டபோதிலும் நாவல்வழி அதனைச் சொல்லும்பொழுது அலைகுடி வாழ்க்கையின் அவலத்தைச் சொற்களின் வழியே கடத்த முடிகின்றது. ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’ நாவல் பாணர்களின் துன்பியல் நாவலாக மலர்ந்திருக்கின்றது.

    பாணர் வாழ்க்கை என்பதே அலைகுடி வாழ்க்கையாக அமையும்போது அவர்கள் ஓரிடத்திலும் நெடுநாள் தங்கமுடியாத சூழல் ஏற்படுகின்றது. பசி, வறுமை அவர்களை வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்துகின்றது. பாணர்களின் வாழ்க்கை என்பது நிரந்தரமில்லாத3 வாழ்வாகவே அமைகின்றது. வறுமைதான் அவர்களை ஒவ்வொரு இடத்திலும் நிலையாகத் தங்கவிடாமல் செய்கிறது. நாவலில் நாம் எப்போதும் இந்த வறுமையாலயே உழல வேண்டுமா முதலில் நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொருவராகச் சாவதை நாம் பார்க்க நேரிடும். கடந்த நாட்களில் நம்மிடையே இறந்து போனவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள். பட்டினியால்தான் அவர்கள் அனைவரும் இறந்தனர் என்பதை அவர்களின் உற்றார் உறவினர் யாரும் சொல்லவில்லையெனினும் நமக்கே அது தெரியுமில்லையா? (மனோஜ்குரூர் 2016:31) என்ற சிறுபாணனின் கேள்வி உண்மையின் அசலாகும்.

    பசி, வறுமை இரண்டும் உந்தித்தள்ளும்போது அதனை நீக்கப் பாணர் கூட்டம் அலைகின்றது. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணப்படும்போது அந்தப் பயணத்தின் துயரம் சொல்லால் அடங்காதவை. குறிப்பாகப் பசியோடு குழந்தைகள் அலைதலை இந்நாவல் பிரதானப்படுத்துகின்றது. பயணம் ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் தொடர்வதால் குழந்தைகள்4 சோர்வுறுகின்றனர். மீண்டும் மலையேறத் தொடங்கினோம். நீண்டதூரப் பயணத்தில் அனைவரும் சோர்ந்திருந்தோம். தட்டுத் தடுமாறியாவது முன்னேறிச் செல்லாதிருக்க முடியாதென்ற எண்ணமே குழந்தைகளையும் இளைப்பாற விடவில்லை.” (மனோஜ்குரூர் 2016:98) என்று சொல்லும் பாணர்குடி சிறு குழந்தைகளின் அலைதலின் வழி கொடூரமானதாக மாறுகின்றது. பரிசு கொடுப்போரைத் தேடி ஒவ்வொரு மலையாக ஏறி இறங்குவதால் அவர்களால் தொடர்ந்து நடக்கமுடியாத நிலை ஏற்படுகின்றது. எப்படியென்றாலும் இனி நடக்க முடியாது. கால்கள் வீங்கியிருக்கின்றன. உடல் அதன்வழித் திரும்பிவிடுமென்று அறிந்தபோது நான் தரையில் அமர்ந்துவிட்டேன். அத்துடன் சில குழந்தைகளும் பெரியவர்களும் வழியோரங்களில் உள்ள பாறைகள்மீதும் தேற்றாமரங்களின் நிழல்களிலுமாக அமர்ந்துவிட்டனர். (மனோஜ்குரூர் 2016:127)

    பெரியவர்களின் பசியைவிடக் குழந்தைகளின் பசி கொடூரமானது5 அதனை மிக நுட்பமாகவே மனோஜ்குரூர் பதிவு செய்கின்றார். பசியோடு அலைந்து திரியக்கூடிய பாணர்களுக்குக் குறவர்கள் உணவு தருகின்றனர். பாணர்களைத் தங்கள் வீடுகளுக்கு அழைக்கும் குறவர்கள் உணவு தருகிறோம் என்று அழைக்கின்றனர். எங்கள் குடில்களுக்கு வந்துவிட்டுச் செல்லுங்கள். மானிறைச்சியும் உடும்பிறைச்சியும் வீட்டில் இருக்கும். வேகவைத்த மூங்கிலரிசியோடு சேர்த்துக் கொதிக்க வைத்த பாலும் இருக்கும். குழந்தைகள் உண்ணட்டும். (மனோஜ்குரூர் 2016:40) எனக் கூறுவதிலிருந்து பாணர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் மட்டுமே உணவு தரவில்லை. இடைக்குடிகள் பலர் உணவு தந்துள்ளனர்.

    பாட்டுப்பாடி அலைகுடி வாழ்க்கையை வாழ்வதைவிட வேட்டையாடி நம் வறுமையைப் போக்கலாம்6 என்பது பாணர்குடியில் ஒருசிலரது யோசனையாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அலைகுடி வாழ்க்கை என்பது மோசமானதாகவும் சிக்கலானதாகவும் மாறிய சூழலைத்தான் இந்நாவல் பேசியுள்ளது. ஆனாலும் இந்த யோசனையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுதான் பாணர்குடியைச் சிறப்பானதாக ஆக்குகிறது. பாணர்களின் வறுமை மட்டுமே நாவல் பேசவில்லை. உமணர்களின் வறுமையை மிக அழுத்தமாக முன்வைக்கிறது. உப்பு விற்பனைக்காக அடுத்த பட்டணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உமணர்கள் அவர்களின் மனைவியர் ஒரு கையில் குழந்தையையும் மறு கையில் சாட்டையுமாகக் காளைகளை ஓட்டித் தளர்ந்து போயிருந்தனர். அவர்கள் வண்டிகளை வழியோரம் நிறுத்திக் குழந்தைகளை மார்போடு அணைத்துச் சாய்ந்து மயங்கி இருந்தனர். (மனோஜ்குரூர் 2016:41) பாரபட்சமில்லாத இந்த வறுமை அலைகுடி வாழ்க்கையை ஒரு வகையாக ஏற்றுக்கொண்ட உப்பு வணிகர்களையும் விட்டுவைக்கவில்லை. உப்பு வணிகர்களின் அலைகுடி வாழ்க்கையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவையை இந்நாவல் எழுப்புகிறது.

    நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதல் பகுதி தந்தையின் (பாணன்) பார்வையில் கதை சொல்லப்படுகின்றது. உறவுகளோடு அலைந்து திரியக்கூடிய பாணன் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் தன் மகளின் (குழந்தை) பசியைப் பேசுகிறான். மேலும் அவனின் காணாமல்போன மகனைப் பற்றிய துன்பம் பேசப்படுகிறது. இரண்டாம் பகுதி சித்திரை (மகள்) பார்வையில் கதை நடக்கும்போது இறந்துபோன அப்பாவைப் பற்றியும் விதவையான அம்மாவைப் பற்றியும் காதல், ஏமாற்றம், பிரிவு, துயரம், அடைக்கலம் என விரிகிறது. மூன்றாவதாக மகன் (மயிலன்) பார்வையில் கதை விரியும்போது துரோகம், துயரம் விவரிக்கப்படுகிறது. இந்த நாவல் வறுமையையும் ஏமாற்றத்தையும் துயரத்தையும் முதன்மைப்படுத்தி விளிக்கிறது. துன்பவியலை மிகுதியாகப் பேசுகிறது. சங்கக் கதையாடல் என்றாலும் சிறுபாணாற்றுப்படை, கலித்தொகைச் செய்திகள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. நாவலைப் படிக்கும்போது போரின்போது திணை வயல்களைத் தீயிட்டு அழிக்கின்றனர். பசியால் வாடிக்கொண்டிருக்கும் பாணர்கள் அதனைப் பார்க்கின்றனர். உணவு கிடைக்காத சூழலில் வயல்கள் எரிபடுவது பாணர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்குகிறது. இந்தத் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. சங்க காலம் பொற்காலம் என்பதற்கு மாற்றாகச் சங்ககாலம் வறுமைகள் நிறைந்த துயரம் நிறைந்த காலம் என்பதை இந்நாவல் தெளிவாக எடுத்துரைக்கிறது. மலையாள மொழியில் இந்நாவல் எழுதப்பட்டாலும் தமிழ் நிலத்தின் துயரம் நிறைந்த வாழ்க்கையை எதார்த்தமாகப் பதிவு செய்கின்றது. பாணர்கள் என்போர் வறுமையில் உழன்றனர் என்பது எவ்வாறு உண்மையோ அதனைப் போலவே உமணர்கள், வேட்டைச் சமூகங்கள் வறுமையில் வாடினர். அதுகுறித்து விரிவாகப் பேசப்பட வேண்டும். அவையெல்லாம் நாவல் வழியாகப் பதிவு பெறவேண்டும். நுணுக்கமான, அணுக்கமான மொழிபெயர்ப்பு இது. சங்ககால வறுமையின் நிறத்தைப் பதிவு செய்த இந்நாவலைப் போல் சமகால நாவலை எதுவும் சுட்டிக் காட்டமுடியவில்லை என்பதிலிருந்து இந்நாவலின் பெருமையை உணரமுடிகிறது. தமிழில் இதைப் போன்ற முயற்சிகள் மேற்கொண்டால் பழைய வரலாறுகள் இன்றைய தலைமுறையினருக்குப் புதினக் கதையாடல்கள் மூலம் எளிமையாகக் கடத்த முடியும்.

    உசாத்துணை நூல்கள்

    1. ச.சாம்பசிவனார் (பதி.1997 நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி, தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை, வசுமதி பதிப்பகம், சென்னை.
    2. ராஜ்கௌதமன் 2006, பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், தமிழினி, சென்னை.
    3. ஆற்றோரத்திலிருந்து வயல்களுக்கு ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் புறப்பட்ட இடமும் சென்று சேரும் இடமும் நமக்குச் சொந்தமென்று ஆவதில்லையே. பறவைகளுக்கும் சொந்த நாடு இல்லைதானே அப்பா (மனோஜ்குரூர் 2016:73)
    4. மாலை மயங்குவதற்குள் நாங்கள் பறம்புமலையை அடைய வேண்டும். முதல் நாளின் தூக்கமின்மையைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முன்னால் நடக்கின்றனர். எனக்கு எல்லோரிடமும் இரக்கம் தோன்றியது (மனோஜ்குரூர் 2016:96)
    5. குரங்குகளின் கையிலிருந்து தவறி விழுந்து கொண்டிருந்த பலாச்சுளைகளின் தேன் மணம் மூக்கைத் துளைத்து ஏறியது. விருப்பம் மீதூறி நடக்க மறுத்துக் குழந்தைகள் நின்றபோது பெரியவர்கள் அவர்களை இழுத்துக்கொண்டு விரைந்து அகன்றனர்.
    6. இந்தக் காட்டிலேயே வேட்டையாடிக்கிட்டு நாம இருந்திடலாமே பாட்டு பாடுறதவிட அதுதான் நல்லதுன்னு தோணுது (மனோஜ்குரூர் 2016:34)
    7. கே.வி.ஜெயஸ்ரீ 2016 (தமிழில்) மனோஜ்குரூர், நிலம் பூத்து மலர்ந்த நாள், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர்,
    இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

    Share
  • ஓளவையார் புறப்பாடல்களில் உலகியலும் புனைவியலும்

    முனைவர் ப.சு. மூவேந்தன்

    உதவிப்பேராசிரியர்

    தமிழியல்துறை (பணிநிரவல்)

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    அண்ணாமலைநகர்-608002

    முன்னுரை

    உயர்ந்த இலக்கியத் தன்மைகளைப் பெற்று, உயரிய குறிக்கோள் நோக்கில் உலகப் பொதுமைக் கூறுகளை நோக்கமாகக் கொண்டு படைக்கப் பெறுபவை செவ்விலக்கியங்கள் ஆகும். இத்தகு செவ்வியல் தன்மைகளைப் பெற்றவை சங்க இலக்கியங்கள் ஆகும்.

    உலகியலில் நிகழும் மனித வாழ்வின் சாரத்தை, புலவன் தன் படைப்பாக்கத் திறனுக்கு ஏற்றவாறு கற்பனை, உணர்ச்சி, வடிவம் தந்து புனைவாக்குகிறான். உலகியற்பண்புகளும், புனைவியலும் சங்கக் கவிதைகளில் கலந்து நிறகின்றன.

    நவீன திறனாய்வுக் கொள்கைகளில் யதார்த்தவியல் (realism) குறிப்பிடத்தக்க தாகும். உலகியல் நிகழ்வுகள் யதார்த்தத்தின் பாற்படுகின்றன. அது பொதுவுடைமைச் சிந்தனையின் விளக்கக் கொள்கையியல் என்றும் குறிக்கப் பெறுகிறது. புனைவியலை நோக்க உலக இயல்புகளைக் காட்சிப்படுத்தும் யதார்த்தவியல் சமுதாயத்திற்கு வளம் சேர்ப்பதாக அமைகிறது. சங்கப்புலவர்களில் ஓளவையார் தனித்திறம் மிக்கவராகத் திகழ்வதற்கு உலகியல் நிகழ்வுகளே களம் அமைத்துக் கொடுத்துள்ளன. உலகியல் நிகழ்வுகளைச் செய்யுளாக்க மரபுகளோடு இணைத்துக் கட்டமைக்கும் அவரது பாடற்புனைதிறத்தினைக் காட்டுவதாய் இக்கட்டுரை அமைகிறது.

    சங்கக் கவிதைச் சிறப்பு

    கவிதை என்பது நுண்மையும், ஆழமும், வளப்பமும் உடையதாகத் திகழ வேண்டும். மேலும், சொல்லவந்த பொருளை நேரிடையாக, வெளிப்படையாகச் சொல்லாமல் ஆழ்ந்து நோக்கப் பலபொருள்களைத் தரவேண்டும். எழுத்துக்கு எழுத்து, சொல்லுக்குச் சொல், அடிக்கு அடி என அழகுசெய்யப்பட்ட நுண்ணிய வேலைப்பாடு கொண்டமைந்த சிற்பம் போன்றதாகக் கவிதை அமையவேண்டும். பயிலும்தொறும் புதுப்புதுப் பொருள்களைத் தந்துகொண்டே இருக்கவேண்டும். அதுவே தலைசிறந்த கவிதையின் மதிப்பீடாகும். இவ்வகையில அமைந்தவை சங்கக் கவிதைகளாகும். “ஒவ்வொரு சங்கநூற் கவிதையும் ‘வைகல் எண்தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால்’ போன்றமைத்தல் கண்கூடு” என்பார் ப. மருதநாயகம். (39:2000)

    உலகியலும் புனைவியலும்

    தொல்காப்பியம் திணைச்செய்யுள் மரபுகளைப் பற்றிப் பேசுகையில் அவை உலகவழக்கும் செய்யுள்வழக்கும் கலந்து படைக்கப்பெறும் என்று கூறுகிறது. நவீனக் கோட்பாட்டாளர்கள் இதனை புனைவியல் (Romanticism) நடப்பியல் (Realism) என்றுரைப்பர். இது தமிழுக்குப் புதியதன்று. நாடகவழக்கும், உலகியல் வழக்கும் பாடலில் பயின்றுவரும் திறத்தினைத் தொல்காப்பியம்,

    “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும்

    பாடல் சான்ற புலனெறி வழக்கம்”            (தொல்.பொருள். சூ. 999)

    என்று எடுத்துரைக்கிறது. இலக்கிய மரபு என்பதற்குத் தொல்காப்பியர் பயன்படுத்தும் சொல்லாக்கம் புலனெறிவழக்கு என்பதாகும். இதற்கு நச்சினார்க்கினியர் ‘கற்றறிந்தோர் உருவாக்கிப் பின்பற்றிய வழக்கு’ என விளக்கம் தருகின்றார். உலகியல் வழக்கு என்பது திணைச்செய்யுளின் தகுதியுடைய பாடுபொருள்களாக மக்களின் வாழ்க்கை -யையும் நிகழ்ச்சிகளையும் பாடுபொருளாகக் கொண்டமைவதாகும். நாடக வழக்காவது செய்யுளின் அடிப்படைப் பொருளை நயம்படத் தீட்டும் முறையாகும்.

    உலகியல் வழக்கு

    உலகியல் வழக்கு என்பது வாழ்வில் நிகழ்ந்த ஒன்றைச் சொற்களால் காட்டுவதோ, ஒரு நிகழ்ச்சியை விவரிப்பதோ, ஓர் உண்மை நிகழ்ச்சியை மொழிவதோ மட்டும் அன்று. வாழ்வின் பல்வேறு சூழல்களுக்குப் பொருந்தும் வண்ணம் ஒரு செய்யுளைப் படிக்கும் போது அதன் நிகழ்ச்சிகளை இயல்பாக ஏற்றுக்கொள்ளும் பாங்கில் இத்தகைய நிகழ்ச்சி இயல்பானது என்றும் இத்தகைய நிகழ்ச்சி வாழ்வில் நிகழ்ந்திருக்கவும் கூடும் என்னும் நிலையில் படைத்துக் காட்டுவது ஆகும்.

    உலகியலில் செய்யுளுக்குரிய பொருளில் மிகச் சிறந்தது எதுவோ, விழுமியது எதுவோ, மிகுபுகழ் பெற்றது எதுவோ அதுவே பாடலின் பொருளாகத் தேர்ந்து கொள்ளப்படும். சங்க அகப்பாடல்களில் புனைவியல்நெறி மிகுந்தும், புறப்பாடல்களில் நடப்பியல் நெறி மிகுந்தும் படைக்கப்பெறும்.

    புறநானூற்றில் உலகியல்

    புறப்பாடல்கள் வீரம் செறிந்த சங்ககால வாழ்வின் விழுமிய வரலாற்றுப் பதிவுகளாக விளங்குகின்றன. புறப்பாடல்களில் போரையும், போரியல் வாழ்வினையும் சார்ந்த நிகழ்ச்சிகளே பொருளாக அமைந்துள்ளன. ஆதலால் அவற்றில் புனைவியலின் தன்மைகள் குறைந்தும், நடப்பியலின் தன்மைகள் மிகுந்தும் காணப்படுவது இயல்பு.  கற்பனைப் புலப்பாட்டுத் திறனைவிட, உலகியல் உற்றுநோக்கலே பெரும்பான்மையாக அமைந்துள்ளது.

    ஓளவையார் பாடல்களில் உலகியலும் புனைவியலும்

    ஓளவையார் பாடியதாக புறநானூற்றில் முப்பத்துமூன்று பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இப்பாடல்கள் அதியமானோடு அவர் கொண்டிருந்த நட்பின் நிகழ்வுகளை வெளிப்படுத்துவதாகவும் அதன்அடிப்படையில் எழுந்த உணர்வுநிலைப்பாட்டினைக் காட்டுவதாகவும் அமைந்துள்ளன. இவ்உணர்வுக் கூறுகள் அனைத்தும் உலகியல் நிகழ்வுகளின் வெளிப்பாடு ஆகும். இப்பாடல்களைத் தானைமறம், இயன்மொழி வாழ்த்து, அரசவாகை, வாள்மங்கலம், கொற்றவள்ளை, விறலியாற்றுப்படை, பரிசில் துறை, கையறுநிலை, உண்டாட்டு, உவகைக்கலுழ்ச்சி, பாண்பாட்டு, வாழ்த்தியல், கடைநிலை என்னும் துறைகளைச் சார்ந்தவையாக  வகுத்துள்ளனர். இப்பாடல்களை,

    • புலமைச்செருக்கின் வெளிப்பாடு
    • புலப்பாட்டு வெளிப்பாடு
    • உணர்வுநிலை வெளிப்பாடு
    • மறஉணர்வு வெளிப்பாடு
    • வஞ்சின வெளிப்பாடு
    • வீர உணர்வு வெளிப்பாடு
    • நட்பின் இழப்பு வெளிப்பாடு
    • நட்பின் உணர்வு வெளிப்பாடு
    • நன்றியுணர்வு வெளிப்பாடு

    என்ற நிலைகளில் பொருத்திப் பார்க்கலாம்.

    புலமைச்செருக்கின் வெளிப்பாடு

          கல்வியின் காரணமாகத் தறுகண் என்னும் பெருமிதம் தோன்றும் என்கிறார் தொல்காப்பியர். உலக வாழ்வில் கற்றவர்கள் தாம் பெற்ற அறிவின் சிறப்பால் உயர்ந்தே நிற்பர். ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பது உலகியல் வழக்கு. ஔவையார்-அதியமான் அறிமுகப் பகுதி இதுபோன்றதொரு நிலையில் நிகழ்கிறது. அதியமானிடம் பரிசில் பெறுவதற்காகக் காத்திருக்கும் ஓளவையார், அவனது கால நீட்டிப்பினையும், தன்னை வந்து சந்திக்காத அதியனின் செயலையும் அறிந்து, வெகுண்டு வாயிலோனிடம்,

    “வாயிலோயே வாயிலோயே

    ………………………………………….

    கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி

    தன்அறி யலன்கொல்? என்அறியலன் கொல்?”

    என்று மனம்நொந்து கூறி, பின்னர்,

    “அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென

    வறுந்தலை உலகமும் அன்றே;

    ……………………………….

    எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே”           (புறம். 206)

    என்று தன் புலமைக்கு ஏற்பட்ட இழுக்கின் உணர்வால் அவ்விடத்திலிருந்து அகன்ற நிகழ்வினைப் பாடலாக்கியுள்ளார். புலமைக்கு உரிய மதிப்பினைத் தரஇயலாத அதியனின் செயலைக்கடிவதனையும், புலவர்கள் எந்நிலையிலும் புலமைச்செருக்குடன் திகழ்ந்திட வேண்டும் என்ற கருத்தினையும் இதன்வழி வெளிப்படுத்தப்படுத்தக் காணலாம்..

    புலப்பாட்டு வெளிப்பாடு

    உலகியல் நிகழ்வுகளை உள்ளவாறே சொன்னால் அது இலக்கிய வடிவம் பெறாது. உணர்ச்சி, கற்பனை, வடிவம் ஆகிய மூன்றன்கூறும் நுட்பமுறப் படைக்கப் பெற வேண்டும். அப்போதுதான் சிறந்த இலக்கிய வடிவம் பெறும்;. அதியனின் தோற்றத்தை ஓளவையார்,

    “கையது வேலே காலன புனைகழல்

    மெய்யது விடரே மிடற்றது பசும்புண்

    வட்கர் போகிய வளர்இளம் போந்தை

    உச்சிக்கொண்ட ஊசிவெண் தோட்டு

    வெட்சி மாமலர் வேங்கையொடு விரைஇ

    கரிஇரும் பித்தை பொலியச் சூடி

    வரிவயம் பொருத வயக்களிறு போல..”       (பா. 100:1-7)

    என்று புலப்படுத்துவது குறிக்கத்தக்கது. கையில் கூர்மை பொருந்திய வேல். காலில் வீரக்கழல். போருடன்றதால் நேர்ந்த வியர்வை. கழுத்திலே பசுமையான புண். பனம்பூ மாலையுடன் வெட்சிப்பூவும், வேங்கைப் பூவும் சூடியுள்ளான். இவை வீரனைக் காட்சிப்படுத்தும் சங்க நிகழ்வுகள் ‘வரிப்புலியுடன் போரிட்ட யானை, சண்டை முடிந்ததும் சினம் தணியாது நிற்றலைப் போல’ என்ற உவமைப் புனைவு. இடையே உன்னைச் சினங்கொள்ளச் செய்தவர் பிழைக்க மாட்டார் என்ற குறிப்பு. உன் புதல்வனைக் கண்ட பின்னும் உன் கண்கள் பகைவரை நோக்கிய கண்களைப் போலவே சிவந்தே உள்ளனவே! என போருடற்று மீண்டு வந்த அதியமான் தன் புதல்வனைக் காணவந்த நிகழ்வினை புலப்பாட்டு உணர்வு பொங்கப் புனைவுடன் உவமை கலந்து சிறந்த பாடலாக்கியுள்ளார்.

    உணர்வுநிலை வெளிப்பாடு

    வஞ்சின உணர்வு வேட்டைச்சமூகத்தின் மரபுவழி எச்சமாகும். சங்க இலக்கியத்தில் வஞ்சினம் கூறும் பாடல்கள் இத்தன்மையினவே. வஞ்சின உணர்வு போர் வீரர்களுக்கு ஆக்கம் தரும் ஒன்றாகப் புலவர்களால் விதந்துரைக்கப்படுகிறது. வஞ்சினப் பாடல்கள் வீரத்தை மிகுவிக்கத் துணை செய்கின்றன.

    அதியமான் நட்பினரான ஓளவையார் அவன் கொடைப்பண்பையும் வீரத்தையும் நயம்படப் பாராட்டுகிறார். இது நட்பின் உரிமையாக அமைந்துள்ளது. அதியமானின் வீரத்தையும், மனஉறுதியையும் போர்த் திறத்தினையும் பகைவர்களிடம் பெருமைபட எடுத்துக்கூறும் பகுதி நட்பின் உணர்வு வெளிப்பாடாக அமைந்துள்ளது.

    “களம்புகல் ஓம்புமின் தெவ்வீர், போரெதிர்ந்து

    எம்முளும் உளனொரு பொருநன் வைகல்

    எண்தேர் செய்யுந் தச்சன்

    திங்கள் வலித்த காலன் னோனே.”            (புறம். 87)

    பகைவர்களே! நீவிர் போர்க்களம் புகுவதைத் தவிர்ப்பீராக! ஒரு நாளில் எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாதமாகச் செய்த தேரின் சக்கரத்தைப் போன்ற வலிமையும் போராற்றலும் உள்ள உறுதியுமுடையவன் என் தலைவன். என்று அதியனுக்காகத் தான் உரிமைகொண்டு பேசுவது கருதத்தக்கது.

    மறஉணர்வு வெளிப்பாடு

    பகைவர்களே! நீவிர் எப்படிப்பட்டவராயினும் அவனோடு போர் செய்தே தீருவோம் என்று மட்டும் கருதாதீர்! அவன் பேராற்றல் படைத்தவன்; ஒளிவீசும் கூரிய நெடுவேல் படை கொண்ட மழவர்க்குத் தலைவன். விளங்குகின்ற நுண்ணிய பூணணிந்த மார்பினை உடையவன். களவேள்வி செய்து நற்போர் செய்யும் முழவு போன்ற தோளை உடையவன். அவன் எம் தலைவன். அவனை வென்றுவிடலாம் என்று சொல்வது உமக்கு எளிது; ஆயின் செய்வது உமக்கு அரிதே! எனவே நீவிர் போர்க்களம் செல்லாதீர்! என்று தடுத்துக் கூறுவதனை,

    “யாவீர் ஆயினும் கூழைதார் கொண்டு

    யாம்பொருதும் என்றல் ஓம்புமின் ஓங்குதிறல்

    ஒளிறு இலங்கு நெடுவேல் மழவர் பெருமகன்

    கதிர்விடு நுண்பூண் அம்பகட்டு மார்பின்

    விழவு மேம்பட்ட நற்போர்

    முழவுத்தோள் என்னையைக் காணா ஊங்கே.”       (பா. 88)

    என்னும் பாடலில் காணலாம். இவ்விடத்தில் ஓளவையார் சங்க மூதின்மகளிர் வீர உணர்வினை வெளிப்படுத்தி நிற்கக் காணலாம்.

    வஞ்சின வெளிப்பாடு

    பகைவரை நோக்கி, அதியமானை நீங்கள் இளையவன்; எளியவன் என்று நினைத்தால் உங்களால் வெற்றிபெற இயலாது. அவன் யானையைக் கவ்வி இழுக்கும் முதலையைப் போன்ற வலிமையுடையவன்.

    “போற்றுமின் மறவீர் ! சாற்றுமின் நும்மை

    …………………………………………

    ஈர்ப்புடைக் கராஅத்து அன்ன என்னை

    …………………………………………

    இளையவன் என்று இகழின் பெறல்அரிது ஆடே.”          (பா. 104)

    என்று எடுத்துரைக்கின்றார். இதில் அதியனைத் தன் தலைவன் என்று கூறுவதன்வழி அவர் அவன் நாட்டு மக்களில் ஒருவராக நின்று ஒலிப்பதனைக் காண்கிறோம். இவ்விடங்களில் அதியன்மீதான நட்பின் நம்பிக்கையும், அன்பின் ஆழமும் அகலமும் உலகியல் நிகழ்வுகளோடு பொருந்தவருமாறு படைத்துள்ள திறம் வெளிப்படுகிறது.

    வீர உணர்வு வெளிப்பாடு

    வீரயுக வாழ்வில் போர் தவிர்க்க இயலாத ஒன்று என்று உணர்ந்த ஔவையார், உலகியல்புகளை எடுத்துரைத்து அதியனைப் போர்செய்யுமாறு வற்புறுத்துகிறார்.

    “மறப்புலி உடலின் மான்கணம் உளவோ?

    …………………………………….

    பெருமிதப் பகட்டுக்குத் துறையும் உண்டோ?

    …………….……………….

    வழுஇல் வன்கை மழவர் பெரும !

    இருநில மண்கொண்டு சிலைக்கும்

    பொருநரும் உளரோ நீ களம் புகினே”         (புறம். 90)

    வலிமை வாய்ந்த புலியின் முன் மான் கூட்டமானது நிற்கவும் கூடுமோ? மணலிலும் கல்லிலும் பெருமித நடை பயிலும் எருதிற்கு இழுக்கவியலாத துறைதான் உண்டோ? கணைய மரம் போலும் முழந்தாள்வரை நீண்ட கைகளை உடைய வீரர்க்குத் தலைவனே ! நீ களம் புகுந்தால் உனது நாட்டைக் கைக்கொள்ளும் வீரர் தாம் உளரோ! இவற்றில் வீரனுக்கு அறிவுரை கூறிப் போருக்குச் செல்லுமாறு குறிப்பிடும் திறத்தினைக் காணலாம். போரில் ஈடுபடுவது இயல்பான நிகழ்வு. எனினும் உலக நிகழ்வுகளை எடுத்துக்காட்டிப் போருக்குத் தயார்செய்வது புலவரின் திறத்தால் எழுந்த ஒன்றாதலை அறியலாம்.

    நட்பின் இழப்பு வெளிப்பாடு

    பல்காலும் நெருங்கிய நட்பினனாக விளங்கிய அதியன் இறந்ததுகண்டு பெருந்துயருற்ற ஓளவையார் தன் இழப்பினைப் பலவாறு பாடி வெளிப்படுத்துகிறார். ஈமத்தீயில், அதியமான் நெடுமான் அஞ்சியின் உயிரற்ற உடல் உள்ளது. அந்த ஈமத்தீ, அவன் உடலைச் சிதைக்காமல் குறையினும் குறைக! இல்லையேல், குறையாமல் விண்ணளவு முட்டச் சென்று நிறையினும் நிறைக! ஆயினும், திங்களைப்போன்ற வெண்கொற்றக்குடை கொண்ட ஞாயிறு போன்ற அஞ்சியின் புகழோ எந்நாளும் அழியாது என்பதனை,

    “எறிபுனக் குறவன் குறையல் அன்ன

    கரிபுற விறகின் ஈமஒன் அழல்

    குறுகினும் குறுகுக குறுகாது சென்று

    விசும்புற நீளினும் நீள்க பசுங்கதிர்த்

    திங்கள் அன்ன வெண்குடை

    ஞாயிறு அன்னோன் புகழ்மா யலவே.”              (பா. 231)

    என்று பாடிச் சிறப்பிக்கின்றார். இதில் திங்களையும் ஞாயிற்றையும் இணைமுரணாகப் பயன்படுத்திச் செய்யுளைக் கட்டமைக்கும் பாங்கினைக் காணலாம். அதியன் இல்லாத உலகில் வாழ்வது பயனற்றது என்று கருதும் ஓளவையார்.

    “இல்லா கியரோ காலைமாலை

    அல்லா கியர்யான் வாழும் நாளே”            (பா. 232)

    “நோகோ யானே தேய்கமா காலை

    …………………………

    உலகுபுகத் திறந்த வாயிற்

    பலரோடு உண்டன் மரீஇ யோனே.”     (பா. 233)

    எனக் குறிப்பிடும் சொற்கள் அவரது அவலஉணர்வுநிலையின் வெளிப்பாடாக உள்ளன.  பிரிவுத்துயரும் அதனால் எழும் அவல உணர்வும் உலகில்; இயல்பானவை. இதற்கு ஆட்படாதவர் எவருமிலர். இந்நிகழ்வினைப் பாடலாக்கிப் படிப்பவர் உள்ளத்திலும் அவ்வுணர்வு தோன்றுமாறு வடித்துள்ள பாடற்றிறம் எண்ணத்தக்கது.

    நட்பின் உணர்வு வெளிப்பாடு

    ஓளவையார் அதியமானுக்காகத் தொண்டைமானிடம் தூது சென்றது நட்பின் பொருட்டே ஆகும். நட்பின் சிறப்பினைத் திருவள்ளுவர் ‘செயற்கரிய யாவுள நட்பு” என்று சிறப்பித்துக் கூறுவார். இவ்விடத்தில் ஓளவையார் அரசியல் அனுபவம் மிக்கவராகக் காட்சி தருவது கருதத் தக்கது.

    அதியமானின்பொருட்டு ஔவையார், தொண்டைமான்பால் தூது செல்கிறார். நிகழ இருந்த போரினைத் தவிர்ப்பது அவரது நோக்கம். தொண்டைமான் தன்னுடைய படைக்கலப் பெருமையை விளக்க, ஔவையாரைத் தனது படைக்கலக்கொட்டிலுக்கு அழைத்துச் செல்கிறான். நிலைமையை உணர்ந்துகொண்ட புலவர் வெகுண்டு,

    “இவ்வே பீலி அணிந்து மாலைசூட்டிக்

    கண்திரள் நோன்காழ் திருத்தி நெய் அணிந்து

    கடியுடை வியன்நக ரவ்வே அவ்வே

    பகைவர்க் குத்திக் கோடுநுதி சிதைந்து

    கொல்துறைக் குற்றில மாதோ”   (புறம். 95)

    என்று கூறுவது நட்பின் உரிமை கருதியே ஆகும். இதில் தொண்டைமானின் படைக்கலப் பெருமையும், அதியமானின் படைக்கல நிலையும் காட்டப்படுகிறது. தமிழர்க்கே உரிய மானஉணர்ச்சி வெளிப்பாடும், மறப்பண்பும் புலவரை நடப்பியல் நிகழ்வாக்கிப் பாட வைக்கின்றது. இப்பாடலின் தன்மை வீரயுக வாழ்க்கையை வெளிப்படுத்தி நிற்கக் காணலாம்.

    நன்றியுணர்வு வெளிப்பாடு

    பெரியமலைச்சரிவிலே அரியமுயற்சியால் கிடைத்தற்கரிய சிறியஇலைகளைக் கொண்ட இனிய நெல்லிக்கனியை அரியது என்று கருதாமல், அதன் பயன் யாது எனவும் கூறாமல் எனக்கு அளித்த பெருமானே! நீ பால்போன்ற வெள்ளிய பிறை விளங்குகின்ற தலையும் நீலமணி அமைந்த கழுத்தும் கொண்ட இறைவனைப் போல நீயும் நிலைபெற்று வாழ்க! என்று அதியமானை வாழ்த்துகிறார். இது புலவரின் நன்றியுணர்வின் வெளிப்பாடாக அமைகிறது.

    “…………………………தொல்நிலைப்

    பெருமலை விடகரத்து அருமிசைக் கொண்ட

    சிறியிலை நெல்லித் தீம்கனி குறியாது

    சாதல் நீங்க எமக்கு ஈந்தனையே.”            (பா. 91)

    உலகானுபவமும் படைப்பாக்கமும்

    ஒரு கலைப்படைப்பில் புறவய உண்மை மட்டுமே முக்கியமல்ல. அது கலைஞர்மீது ஏற்படுத்துகிற தாக்கமும் முக்கியமானதாகும். குறிப்பிட்ட கலைஞனைப் பொறுத்த அளவில் இந்தப் பண்பு அழகியல் உண்மையாக எதிர்வினைபெற வேண்டும். அப்போதுதான் அது கலைப்படைப்பாக உருப்பெறும். புறவய உண்மையானது அழகியல் உண்மையாக உருப்பெறுகிறபோது அது, அதனைச் சார்ந்ததாக மட்டுமல்லாமல் அவனைச் சார்ந்ததாக அமைகிறது. இத்தகு சிறப்புக் கூறுகளைச் சங்க இலக்கியத்தில் இனம்காண முடியும் என்பதற்கு ஓளவையாரின் பாடல்கள் சான்றாக அமைந்துள்ளன.

    புறப்பாடல்களில் சங்கச் சமூகத்தில் வாழ்ந்த ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வீரர்களே பொருளாகியுள்ளனர். ஏனைய செவ்வியல் இலக்கியங்களைப் போன்ற புராண, மீவியல்பு மாந்தர்கள் இடம்பெறவது இல்லை. அவர்கள் குறிக்கோள் கொண்ட மாந்தர்களாகவும், கூற்றை முன்னெடுத்துச் சொல்லும் மாந்தர்களாகவும் படைக்கப்பட்டுள்ளனர்.

    பண்டைத்தமிழர்களின் வீரநிலையை உலகியல் நிகழ்வுகளே காட்டுகின்றன. “இதில் அரசர்களின் புகழ்பாடுவதும், வீரத்தைப் புலவர்கள் கூறுவதும் உண்மை நிலையைக் காட்டுமா? என்ற ஐயம் சிலருக்குத் தோன்றலாம். அரசர்களாயும். புலவர்களாயும் விளங்கிய பூதப்பாண்டியன், நெடுஞ்செழியன், சோழன் நலங்கிள்ளி ஆகியோர் வெஞ்சினங் கொண்டு பாடிய வஞ்சினப் பாடல்கள் வீரநிலைக்காலப் பண்பாட்டினை விளக்கும் வாயில்களாக உள்ளன. ஏனெனில் மனிதன் சினங்கொள்ளும் போது விலங்கு நிலையை அடைகின்றான். சாதாரண மனிதர்கள் சினங்கொண்டால் எதையும் செய்யத் துணிவார்கள். செய்யத் தகாதன வெகுளியால் செய்தபின் வருந்துவர். ஆனால், இதில் சினங்கொண்டு வஞ்சினம் கூறும்போதும் பழந்தமிழர் உண்மையான மனநிலையை நாம் அறிகிறோம்” (கதிர். மகாதேவன். 127:1980)

    சங்கக் கவிதை மரபு தனிச்சிறப்பு வாய்ந்த ஒன்று. அவற்றில் உலகியல் நிகழ்வுகள் புலவர்தம் படைப்பாற்றலால் செய்யுள் மரபினைப் பெற்றுச் சிறந்துள்ளன. நவீன படைப்பாக்கக் கொள்கைகளில் ஒன்றாகத் திகழும் யதார்த்தவியல், சங்கப் பாடல்களில் உலகியல்புகளாக வெளிப்பட்டுள்ளன.

    புறப்பாடல்களில் உலகியலுக்கும், அகப்பாடல்களில் புனைவியலுக்கும் புலவர்கள் முதன்மைதந்து படைத்துள்ளனர். ஓளவையார் படைத்துள்ள புறப்பாடல்கள் தமிழக வரலாற்று ஆவணங்கள் ஆகும். உலகியல் நிகழ்வுகளைத் தம் மன உணர்வுக்கு ஏற்றவாறு பொருளாக்கி, நட்பின் சிறப்பினைத் தமது பாடல்களின்வழி காட்டியுள்ள திறம் எண்ணி வியக்கத்தக்கது.

    ஓளவையார் சங்க இலக்கியத்தில் ஆளுமைத்திறன் மிகுந்த படைப்பாளராகத் திகழ்வதற்கு அவர் எடுத்துக்கொண்ட உலகியல்புகளே களமாக அமைந்துள்ளன. அதியமான் நெடுமான்அஞ்சியுடன் பெருநட்புப் பூண்டிருந்ததோடு, அவன் காலத்து வீரயுகவாழ்வியல் கூறுகளை வரலாற்றுப் பதிவுகளாக எடுத்துரைத்துள்ள திறம் தமிழர் வீரப்பண்பாட்டிற்குச் சான்றாக அமைந்திருக்கிறது.

    கருவிநூல்கள் :

    1. இளம்பூரணர், (உ.ஆ.), தொல்காப்பியம், பொருளதிகாரம், கழக வெளியீடு, சென்னை. 1988
    2. உ.வே.சாமிநாதையர், (ப.ஆ.), புறநானூறு மூலமும் பழைய உரையும், கபீர் அச்சுக்கூடம், சென்னை, 1967
    3. கதிர். மகாதேவன், பழந்தமிழர் வீரப்பண்பாடு-ஒப்பிலக்கியக் கணிப்பு, ஏரக வெளியீடு, மதுரை, 1980

    ———-

    Share
  • கொள்வோம் பங்கு!

    விட்டலாச் சாரியாரின் படமும் – பெரும் விந்தைசெய்ய மாறுதுதான் தடமும் – ரத்தம் சொட்டுகின்ற பேய்பிசாசு செய்மாயா ஜாலங்கள் அன்று – கிராபிக்ஸ் – இன்று!
    ஆந்திரரை கொல்டிகளும் என்று – அன்று அங்கலாய்த்த தமிழினமும் இன்று – கை ஏந்தவந்த கிராஃபிக்ஸை ஏற்றுவக்கும் செயல்சகிக்க வில்லை – ரசிகர் – தொல்லை!
    அறிவியலின் நுட்பங்கள் கொண்டு – காட்சி அதிரடியாய் மாறுவதைக் கண்டு – ரசிகர் அறிவின்றிக் கரம்தட்டி ஆரவாரம் செய்கின்றார் மிகுந்து – அரங்கு – புகுந்து!
    அறிவைமிக விழுங்குதுதான் நுட்பம் – மேலும் ஆழமாகும் நடிகர்ரசிகர் நட்பும் – நன்கு புரிந்துகொண்ட இயக்குனர்கள் புத்தியற்ற ரசிகர்கண்டு சிரிப்பார் – கயிறு – திரிப்பார்!
    தூக்கிவிடும் ஊடகங்கள் தாங்கும் – மகிழ்ந்து தருகின்ற பணத்திற்காய் ஏங்கும் – நாட்டை சீக்காளி ஆக்கும்துயர் சீர்கெட்ட செயலாற்றிப் பிழைக்கும் – தவறு – இழைக்கும்!
    தமிழ்த்திரையின் வளர்ச்சிஉச்ச கட்டம் – என்று தம்பட்டம் அடித்தலுமே மட்டம் – கடலுள் அமிழும்கலம் தன்னைவிட்டு அகலாது அழியும்ரசிகர் கூட்டம் – கொள்வார் – வாட்டம்!
    என்றைக்குத் தணியும்திரை மோகம்? – மேலும் இதுவளரின் நாடுமிகச் சாகும் – நன்கு கொன்றிதனைப் புதைப்பதற்குக் கொள்கைதனை யார்வகுப்பார் இங்கு? – கொள்வோம் – பங்கு!

    கவிஞர் இடக்கரத்தான்

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    140221 Dialogue with Arjuna -wcol 24×32 -with Choodamani – icam

    இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
    பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
    போகாதே அஞ்சிப் பரிமுகம் பார்த்தனே
    யோகமாம் கீதை எடு….கிரேசி மோகன்….!

    Share
  • அன்புள்ள அப்பா

     

    அன்புள்ள அப்பா அமுதசுரபி கட்டுரை தங்கள் மேலான பார்வைக்கு…..!

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம்

     

    சி. ஜெயபாரதன், கனடா

    அமர கீதங்கள்

    என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை !

    [Miss me, But let me go]

    ++++++++++++++

     

    என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்

    தோற்றம் : அக்டோபர் 24, 1934

    மறைவு : நவம்பர் 18, 2018

    ++++++++++++++++++

    தமிழ்வலை உலக நண்பர்களே,

    எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு

    எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.

    உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

    என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன்

    பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.

    +++++++++++++

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும்

    தெய்வத்துள் வைக்கப் படும்.

    மனைக்கு விளக்கு மடவாள்.

    நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்

    பெருமை உடைத்திவ் வுலகு.

    [வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]

    +++++++++++

    [1]

    நடமாடும் தீபம் புயலில்

    அணைந்து போய்,

    சுவரில்

    படமாகித் தொங்கும் !

    வசிப்பு

    இடம் மாறிப் போகும்

    பூமித்

    தடம் மாறி நோகும் !

    விட்டு

    விடுதலை யாய் ஏகும் !

    +++++++++++

    [2]

    பூவோடு போனாள் !

    நெற்றிப்

    பொட்டோடு போனாள் !

    மங்கலத்

    தாலியுடன் போனாள் !

    என்னைத்

    தவிக்க விட்டுப் போனாள்.

    தங்க ரதத்தின்

    பயணம் நிறுத்தம்

    ஆனது !

    செல்லும் போது

    சொல்லாமல் போனாள்.

    +++++++++++

    [3]

    துணைப் பறவை போனது

    துடிப்போடு !

    தனிப் பறவை நான்

    தனியாய்க் குமுறி

    தவிக்க விட்டுப் போனது !

    இனி வீட்டில்

    காத்திருக்க எனக்கு

    எனது இல்லத்தரசி ஏது ?

    உணவு ஊட்டும்

    வளைக் கரங்கள் ஏது ?

    கண்ணோடு

    கண் இணை நோக்கிக்

    காதல் கொள்ளும்

    பெண் ஏது ?

    +++++++++++

    [4]

    துடி துடித்துப் போனதே என்

    துணைப் புறா !

    என் நெஞ்சில்

    அடி அடித்துப் போனதே என்

    ஆசைப் புறா !

    இடி இடித்துப் போனதே என்

    இல்வாழ்வில் !

    நொடிப் பொழுதில்

    முடிந்து போகும் அவள்

    தொடர் கதை !

    கண் திறந்து நோக்கி

    கடைசியில்

    கை பிடித்துப் பிரிந்ததே என்

    கவின் புறா !

    +++++++++++

    [5]

    இதய வீணை கை தவறி

    உடைந்த பிறகு

    இணைக்க முடியுமா ?

    புதிய கீதம் இனி அதிலே

    பொங்கியே எழுமா ?

    உதய சூரியன் எனக்கினி மேல்

    ஒளியும் வீசுமா ?

    விதி எழுதி முடித்த கதை

    இனியும் தொடருமா ?

    +++++++++++++++

    [6]

    கண்முன் உலவும்
    நிஜத் திரைக்காட்சி
    உனக்கு
    நேரில் தெரியாது !
    உடனுள்ள உயிர்ப் பிறவி
    ஒன்று உலவி
    உன்னருகில் உதவி வருவது
    உனக்குத் தெரியாது !
    அதன்
    உன்னதம் தெரியாது !
    உயிர் பிரிந்து
    போய் விட்ட பின்
    அதன் இழப்பு தான்,
    உனது
    ஊனை உருக்கு தப்பா !
    உடலை முடக்கு தப்பா !
    உயிரைக் கசக்கு தப்பா !

    +++++++++++++

    [7]

    எனக்காகப் பிறந்தாள்,
    எனக்காக வளர்ந்தாள்,
    எனக்காகப் பூத்தாள்,
    என்னையே மணந்தாள்,
    என் இல்லத் தீபம்
    ஏற்றினாள்
    ஐம்பத் தாறு ஆண்டுகள் !
    ஆனால் அன்று
    நின்றதவள்
    கைக் கடிகாரம்.

    +++++++++++++++

    [8]

    ஒருவரி

    ஒருவரி எழுதினால்
    எழுதென
    ஒன்பது வரிகள்
    வாசலில்
    வரிசையாய் காத்திருக்கும்,
    கண்ணீரோடு !
    புண்பட்ட வரிகள் !
    வரிசை கலைந்து
    முதலில்
    என்னை எழுது,
    என்னை எழுது என்று
    கெஞ்சும் !
    என் டைரியில்
    உன் கையெழுத்தை இடுவென
    முந்தும் !
    எழுதி, எழுதி, எழுதி
    என் மனம் தினம்
    அழுதால்,
    ஆறுதல் கிடைக்கும்
    எனக்கு
    நூறாண்டுக்குப்
    பிறகு !

    +++++++++++++

    [9]
    கால வெடி
    [Time Bomb]

    காத்திருந்தான் காலன் !
    வேர்த்து நின்றான்
    கதவருகில் !
    கயிறை மாட்ட வந்தான்
    எமதர்மன் !
    பற்ற வைத்துப் புகையும்
    கால வெடி
    படாரென வெடித்தது !
    காலவெளியில்
    நேர்ந்த
    பெரு வெடிப்பு அது !
    இரத்தக் குழல்
    குமிழ் கிழிந்து குருதி
    கொட்டும் !
    குருதி கொட்டும் !
    கொட்டி
    ஆறாய் ஓடும் !
    மருத்துவர்
    இரத்தம் கொடுத்தார்
    பை, பையாக
    கை கடுக்க, கால் கடுக்க
    மெய் கடுக்க !
    தெய்வீகப் பெருமக்கள்
    வாழ்க ! வாழ்க !
    நீடு வாழ்க !
    அறுவை முறை
    வெற்றியே !
    ஆனால்
    அவள் கைக் கடிகார
    முள் அசைவு
    நின்றது !

    +++++++++++++

    எழுதப் பட்டிருக்கிறது !

    எப்படித் துவங்கும் அவள்
    இறுதிப் பயணம் ?
    எப்போது
    எச்சரிக்கை மணி
    அடிக்கும் ?
    எப்படி அவள் கதை முடியும்
    என்றெனக்குத்
    தெரியாது !
    ஆனால்
    அது முன்பே
    எழுதப் பட்டுள்ளது !
    காலன் விடும்
    ஓலம் வரும் முன்னே !
    எமன் சவுக்கடி
    மின்னல் வரும் பின்னே !
    அவள் ஆத்மா
    இப்படித் தான் பிரியும்,
    தனித்து நான்
    இப்படித் தான் குமுறித்
    தவிப்பேன் என,
    எழுதப் பட்டுள்ளது !

    ++++++++++++++++

    கண்ணீர்த் துளிகள்

    என் கண்ணீர்
    உங்கள் கண்ணீர் ஆனது !
    உங்கள் கண்கள்
    சிந்தும்
    வெந்நீர்த் துளிகள்
    என் கண்ணீர்
    ஆனது !
    எங்கள் வீட்டுக் குழாயும்
    கசிந்து
    கண்ணீர் சொட்டும்
    எனக்கு !
    ஓருயிரின் இழப்பு பெரும்
    பாரமாய்க் கனத்து
    காலவெளி,
    மதம், இனம், தேசம்
    கடக்கிறது !

    +++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.

    சி. ஜெயபாரதன்.

    Share
  • துடித்துப் பிரிந்த துணைப் பறவை – 4 &5

     

    ஒருவரி

    ஒருவரி எழுதினால்
    எழுதென
    ஒன்பது வரிகள்
    வாசலில்
    வரிசையாய் காத்திருக்கும்,
    கண்ணீரோடு !
    புண்பட்ட வரிகள் !
    வரிசை கலைந்து
    முதலில்
    என்னை எழுது,
    என்னை எழுது என்று
    கெஞ்சும் !
    என் டைரியில்
    உன் கையெழுத்தை இடுவென
    முந்தும் !
    எழுதி, எழுதி, எழுதி
    என் மனம் தினம்
    அழுதால்,
    ஆறுதல் கிடைக்கும்
    எனக்கு
    நூறாண்டுக்குப்
    பிறகு !

    +++++++++++++

    கால வெடி
    [Time Bomb]

    காத்திருந்தான் காலன் !
    வேர்த்து நின்றான்
    கதவருகில் !
    கயிறை மாட்ட வந்தான்
    எமதர்மன் !
    பற்ற வைத்துப் புகையும்
    கால வெடி
    படாரென வெடித்தது !
    காலவெளியில்
    நேர்ந்த
    பெரு வெடிப்பு அது !
    இரத்தக் குழல்
    குமிழ் கிழிந்து குருதி
    கொட்டும் !
    குருதி கொட்டும் !
    கொட்டி
    ஆறாய் ஓடும் !
    மருத்துவர்
    இரத்தம் கொடுத்தார்
    பை, பையாக
    கை கடுக்க, கால் கடுக்க
    மெய் கடுக்க !
    தெய்வீகப் பெருமக்கள்
    வாழ்க ! வாழ்க !
    நீடு வாழ்க !
    அறுவை முறை
    வெற்றியே !
    ஆனால்
    அவள் கைக் கடிகார
    முள் அசைவு
    நின்றது !

    +++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.

    எழுதப் பட்டிருக்கிறது !

    எப்படித் துவங்கும் அவள்
    இறுதிப் பயணம் ?
    எப்போது
    எச்சரிக்கை மணி
    அடிக்கும் ?
    எப்படி அவள் கதை முடியும்
    என்றெனக்குத்
    தெரியாது !
    ஆனால்
    அது முன்பே
    எழுதப் பட்டுள்ளது !
    காலன் விடும்
    ஓலம் வரும் முன்னே !
    எமன் சவுக்கடி
    மின்னல் வரும் பின்னே !
    அவள் ஆத்மா
    இப்படித் தான் பிரியும்,
    தனித்து நான்
    இப்படித் தான் குமுறித்
    தவிப்பேன் என,
    எழுதப் பட்டுள்ளது !

    ++++++++++++++++

    கண்ணீர்த் துளிகள்

    என் கண்ணீர்
    உங்கள் கண்ணீர் ஆனது !
    உங்கள் கண்கள்
    சிந்தும்
    வெந்நீர்த் துளிகள்
    என் கண்ணீர்
    ஆனது !
    எங்கள் வீட்டுக் குழாயும்
    கசிந்து
    கண்ணீர் சொட்டும்
    எனக்கு !
    ஓருயிரின் இழப்பு பெரும்
    பாரமாய்க் கனத்து
    காலவெளி,
    மதம், இனம், தேசம்
    கடக்கிறது !

    +++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    011201_Nimiththa matram-DWA -24×32 canson 200gsm Indian ink, watercolour, (Arjuna, O great archer, you are but an instrument) icam

     

    ”பிள்ளைப் பிராயத்தை, துள்ளும் இளமையை,
    கொள்ளிக்குக் காத்திருக்கும் கோலத்தை, -உள்ளிருக்கும்
    ஆன்மா அசையாது காண்பதுபோல் காணும்காண்
    மேன்மேலும் மாற்றிடும் மெய்’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (290)

    -விவேக்பாரதி

     


    வேறெந்த மொழிகளுக்கும் இல்லாத பல தனிச்சிறப்புகளை நம் தமிழ்மொழி தன்னகத்தே கொண்டுள்ளது. அதில் ஒன்று நமது யாப்பிலக்கண அமைப்பு. மக்கள் பேசும் இயல்பான ஒலிகளுக்கும் சொற்களுக்கும் உள்ளே இருக்கின்ற இசையைக் கணக்கிட்டு அறிந்து, செவிகளுக்கு இனிமை பயக்கும் செய்யுள்கள் இயற்றி, அதற்கொரு இலக்கணம் வகுத்தது நம் தமிழ் முன்னோர்களின் சிறப்பான திறன். பொதுவாகவே உயிரைக் கிள்ளி ஒருகணத்தில் நம்மை ஆட்டுவிக்கின்ற சக்தி கவிதைகளுக்கு உண்டு. இன்றைய காலத்தில், வசன நடைக்கவிதைகளும், உரை வீச்சுக் கவிதைகளும், ஐக்கூ, சென்றியு போன்ற வேற்று மொழிக் கவிதை வடிவங்களும் பரிமளித்துக் கொண்டிருக்கும் நவீன காலமாக விளங்குகிறது நமது தமிழ்க் கவிதைச் சமூகம். இத்தகைய நிலையில், அதுவும் நவீனக் கவிதைகள் மிகுந்து குவிந்து கிடக்கும் நம் இணைய வெளிகளில் நமது பாரம்பரிய மரபு செய்யுள் எழுதும் கலையை, அதற்கான இலக்கணங்களைச் சொல்லிக் கொடுத்து, பல தரமான கவிஞர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது ஒரு முகநூல் குழு.

    மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் யாப்பியல் சிந்தனைகளை மீட்டுருவாக்கவும், யாப்புக் கவிதைகளின் இலக்கணங்களைப் பாடமாக்கிப் பயிற்றுவிக்கவும் உருவாக்கப்பட்ட ஒரு முகநூல் குழு, “பைந்தமிழ்ச் சோலை.” நல்ல கவிதை ஊற்றத்துடன் முகநூலில் எழுதிக் கொண்டிருந்த கவிஞர்களை, யாப்புக் கவிதைகள் கற்றுக் கொண்டு எழுத ஆர்வமாக இருந்த பாவலர்களை இனம் கண்டுகொண்டு அவர்களுக்கு இலக்கணங்களை எளிமையான பாடங்களாக வழங்கி, வருட நிறைவில் “பாவலர் பட்டத் தேர்வு” வைத்து, வெவ்வேறு நிலைகளில் தேர்ச்சிபெறும் கவிஞர்களுக்கு அவர்களது மதிப்பெண்களுக்கு ஏற்றாற்போல் பட்டம் வழங்கியும் வருகிறது இந்த முகநூல் குழு. இவை அனைத்துமே ஒரு தனிமனிதர் எடுத்துவரும் பெரும் முயற்சி என்றால் அது வியப்பு. ஆம், இந்த முகநூல் குழுவை நிறுவி, ஐயங்களைக் களைந்து, பாடங்கள் மூலம் பயிற்றுவித்து, பட்டம் வழங்கித் தாயுள்ளத்தைப் போல இன்பம் கொள்ளும் அந்தத் தனிமனிதர் மரபுமாமணி பாவலர் மா வரதராசன் அவர்கள்.

    தமிழ் இலக்கியங்களில் மீதும் மரபு இலக்கணத்தின் மீதும் தீராத பற்றுடையவராய்த் தனது இளம் வயதுமுதல் கவிதை புனையும் ஆற்றலுடன் விளங்கிய மா வரதராசன் அவர்கள், முகநூலில் நுழைந்த ஒரு வருடத்தில் அதிலே நிரம்பிக் கிடக்கின்ற வசன நடை உரைவீச்சுக் கவிதைகளைக் கண்டு, மரபு இலக்கணத்திற்கும் மறுவாழ்வு கொடுக்கும் எண்ணம் கொண்டதாகச் சொல்லியே அந்தக் குழுவைத் தொடங்கியிருக்கிறார். பலரது ஏச்சுக்கும், வசைகளுக்கும் ஆளாகிப் பின்னாளில் இன்றும் முகநூலில் நிறைய யாப்பியல் அறிந்த பாவலர்களை உருவாக்கி வருகிறார் என்பதிலிருந்தே தமிழன்னை மீது அவர் கொண்டிருக்கும் தீராத பக்தியும் காதலும் புலனாகிறது.

    பைந்தமிழ்ச் சோலை என்ற மின்தளம் உருவாக்கி, பல பாவினங்களுக்கு எளிமையான வடிவில் இலக்கணங்களை அளித்து, இணையத்தில் எங்கு தேடினாலும் கிடைக்கும்படி அரிய பணி செய்திருக்கும் மா வரதராசன் அவர்கள், இந்தத் திங்கள் முதல் முழுக்க முழுக்க தமிழ் மாதங்களின் பெயரிலேயே வெளியாகும் “தமிழ்க்குதிர்” என்கிற மாதாந்திர மின்னிதழையும் உருவாக்கித் தமிழ்த் தொண்டாற்றி வருகிறார் என்பது பாராட்டத் தக்கது.

    அவருக்கே இந்த வார “வல்லமையாளர்” விருதை வல்லமை மின்னிதழ் சார்பில் அறிவிப்பதில் அவரது மாணவனாகப் பயின்ற யான் மிகவும் பேருவகை எய்துகிறேன்.

    சொல்லரும் தமிழர் யாப்பின்
       சுவையினை இணையம் கற்க,  
    வெல்லமாந் தமிழத் தாயும்
       வெல்லவே உழைப்பை நல்கிப்
    பல்கலைக் குழுவைச் செய்த
       பாவலர் வரத ராசன்
    வல்லமை யாளர் என்று  
       வழங்குதல் பொருத்த மாமே!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?cat=955

     

     

    Share
  • இருட்டடிப்பு ஏன்?

    முனைவர் த.ராதிகா லட்சுமி
                      
    இருட்டடிப்பு ஏன்?
    புகைப்படங்களாக
    மகிழ்ச்சியின் தருணங்கள்…
    நாட்குறிப்பாக
    நட்பின் நினைவுகள்…
    தேகத்தழும்பாக
    விளையாட்டின் சுவடுகள்…
    இவை இனிமையைப் பறைசாற்;ற
    துயரம் தந்த வலிகள்
    மட்டும்
    இருட்டடிப்பு
    செய்யப்பட்டது
    மனதில் வடுவாக…
    Share
  • பாடம் தரும் நிலவு

    மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா…. மெல்பேண் .. அவுஸ்திரேலியா 

    வானமீதில் நீந்தியோடும் வண்ணநிலாவே – உன்
    வடிவழகைப் பாடாத கவிஞரில்லையே
    நானுமுன்னைப் பாடவெண்ணும் ஆசையினாலே  – இங்கு
    பாடுகிறேன் பால்நிலவே நின்றுகேட்டிடு !

    உண்ணமறுக்கும் குழந்தைக் கெல்லாம் உன்னைக்காட்டியே – இங்கு
    உணவையூட்டி உளம்மகிழ்வார் உலகில்பலருமே
    விண்ணில்நீயும் ஓடியோடி விந்தை காட்டுவாய் – அதை
    வியந்துவியந்து பிள்ளைபார்த்து விரும்பி மகிழ்ந்திடும் !

    பூரணையாய் வந்துநீயும் பொலிந்து விளங்குவாய் – அதை
    பூரிப்போடு பலரும்பார்த்து உளம் மகிழுவார்
    காதலர்க்குக் களிப்பையூட்ட களத்தில் இறங்குவாய் – அதை
    கவிதையிலே பலகவிஞர் கண்டு வாழ்த்துவார் !

    உன்வரவை ஆவலோடு உலகம் நோக்கிடும் – இங்கு
    உன்வரவால் பலரும்வாழ்வில் உளம் மகிழுவார்
    மின்மினிகள் வானில்சூழ விரைந்து ஓடுவாய் – நாளும்
    உன்னொளியால் உலகைநாளும் உவகை யூட்டுவாய் !

    இறைவனது தலையின் மீது இருக்கிறாயென – இங்கு
    இந்துமதம் சொல்லியுன்னை உயர்த்தி நிற்குது
    குறையுடைய நிலவேயுன்னை நிறைவு படுத்தவே – நாளும்
    இறைவன் உன்னை தன்னிடத்து ஏற்றுக்கொண்டனன் !

    மதியைப்பற்றி பலகதைகள் மதங்கள் சொல்லிடும் – ஆனால்
    மதியைப்பற்றி யோசித்தால் நம்மதி தெளிந்திடும்
    பாதிநாளில் மதியின்வாழ்வு இருண்டு போயிடும் – ஆனால்
    மீதிநாளை வெளிச்சமாக்கி மதி கொணர்ந்திடும் !

    உயர்வுதாழ்வு உலகவாழ்வில் இயற்கை என்பதை – இங்கு
    உணர்த்திநிற்கும் செயலைநிலவே தெளிவாய் காட்டுது
    வெளிச்சம் கொடுக்கநாளும் நிலவு விண்ணில்வருகுது – ஆனால்
    வெளியில் குறையைக் காட்டிக்கொள்ள நிலவும்விரும்புது !

    கூடுகின்ற காதலர்க்கு குளிர்ச்சி  கொடுக்குது    – இங்கு
    வாடுகின்ற காதலர்க்கு வரட்சி காட்டுது
    நிலவுஅது வானமீது தவழ்ந்து போகுது – ஆனால்
    மனிதமனம் விதம்விதமாய் மாய்ந்து போகுது !

    மனதில்மகிழ்ச்சி மலரும்போது நிலைவை வாழ்த்துவோம்  – இங்கு
    மனமகிழ்ச்சி தொலையும்போது நிலைவைத் தூற்றுவோம்
    நிலவுஎன்றும் வான்வழியாய் தவழ்ந்து போகுமே – அது
    கவலைகொண்டு போவதைநாம் காணமுடியுமா !

    துன்பமின்ப மெல்லாமே சுழலும் சக்கரம் – அதை
    இன்பமுடன் ஏற்றுக்கொண்டால் எமக்கு இன்பமே
    தேய்ந்து வளர்கின்றபாதை நிலவின் பாதையே – அதை
    ஆய்ந்து பார்த்தால் மனிதவாழ்வில் அமைதிதோன்றுமே !

    இருட்டும்வரும்  வெளிச்சம்வரும் எனவுணர்த்திட – இங்கு
    எல்லோர்க்கு பாடமதை நிலவு நடத்துது
    மனிதரெலாம்  நிலவைப்பார்த்து மதியைத்தீட்டுவோம் – இங்கு
    நிலவின் பாடம் நிதமெமக்கு வழியைக்காட்டிடும் !

     

    Share
  • புவிசார் விஞ்ஞானிகளின் எச்சரிக்கை!

    பவள சங்கரி

    இமாலயப் பிரதேசத்தில் 8.5 ரிக்டர் அளவிலும், அதற்கு மேலும் பூகம்பம் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளனர். இதன் பாதிப்பு தெற்கு நேபாளம், வடக்கு இமாலயப் பகுதிகளிலும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று பங்களூரு நேரு புவியியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளனர். நமது இசுரோ விண்வெளி ஆய்வுக்கோள் அனுப்பியுள்ள புகைப்படங்களிலிருந்து ஆய்வு செய்து இதனை அறிவித்துள்ளனர். சுமார் 600/700 ஆண்டுகளாக இதுவரை எந்தவிதமான பாதிப்புகளும் இந்தப்பகுதிகளில் ஏற்பட்டதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பிரச்சனை இது என்றும் இதன் பாதிப்பு வெகு விரைவில் தெரியும் என்றும் இந்த பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. வருமுன் காப்பதற்கான நடவடிக்கைகள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதைப் பொறுத்தே இதன் பின் விளைவுகளை நாம் சந்திக்க வேண்டும். இதன் பாதிப்புகள் சத்தீசுகர்,பீகார், தில்லி, இமாச்சலப் பிரதேசம்,நேபால்,மேற்கு வங்கம் வரை பாதிப்பு ஏற்படலாம் என்கிறார்கள்.

    Share
  • ரோஜா முத்தையா நூலகச் சொற்பொழிவு (15 டிசம்பர் 2018)

    சங்க காலத்தின் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளிலும், சிந்து சமவெளி நாகரீகத்தில் திராவிட மொழியினர் மேன்மைநிலையில் இருந்தமையும் பற்றிய ஆய்வுகளில் தனிமுத்திரை படைத்தவர் ஐராவதம் மகாதேவன் ஆவார். http://www.vallamai.com/?p=88261 . அண்மையில் இயற்கை எய்திய ஐராவதத்திற்கு மலரஞ்சலியாக ரோஜா முத்தையா ஆய்வு நூலகத்தில் என் சொற்பொழிவு அமையும். 15 டிசம்பர் 2018-ம் தேதி, மாலை 5:30 pm மணிக்கு நிகழ உள்ள இந்த ஆய்வுரைக்குத் தாங்கள் வந்திருந்து சிறப்பிக்கக் கேட்டுக்கொள்கிறோம்.

     

    About the talk

    Given the large area that covers the classical Indus valley civilization, many languages must have been spoken there. However, the Indus script, due to its consistency in symbols, was likely to have been created by a single linguistic community. Since Fish and Crocodile played major role in the Indus astronomy, culture and religion, they got represented in the Indus script. Harappans likely called these signs as mīṉ and mokara/makara in their language. The word śiṁśumāra, first referring to Gangetic dolphin by similarity with the gharial crocodile, is analyzed with the suggestion of a Proto-Dravidian root. Many such examples where word-initial k- gets transformed into ś- in Vedic Sanskrit are included. Words connected with asterisms, kāla‘Time’, nimiṣa ‘second’ and, Agricultural terms such as ‘timira‘ from the hump of a Zebu bull, puccha ‘tail’, indu ‘drop, seed’ and aṇḍa ‘egg’ are explained as heritage terms from Indus farming economy.

    Share