Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181130 Yogakshema. Dialogue with Arjuna A4 Canson 200gsm 600dpi wcolour

    பாலுக்கும் காவல்க பாலத்திற்க் கும்மோட்ஷம்
    மாலவர் ஆலவாய் மாப்பிள்ளை(மதுரை சொக்கேஸர்) -போலக்க
    பாலத்தை ஏந்துகிறார், படைத்தகேசவ் சொல்வது,
    பாலமிது கண்ணபா லம்(ராமர் பாலம் போல்)….!

    ”இல்லாமல் நாமிருவர் என்றும் இருந்ததில்லை
    இல்லா திருப்பதே இங்குண்மை ! -வல்லானென்
    வேத மிதையுணர்ந்தால் வேதனைகள் இல்லைகாண்
    பாதமதைப் போரில் பதி”….!

    சாந்த வதனமும் சரப சயனமும்
    நீந்தும் சரோருக நாபியும் -ஏந்தும்
    கரங்கள் நான்கும் கருத்த வடிவும்
    வரங்க(ள்) அளித்திடும் வஸ்து….கிரேசி மோகன்….!

    Share
  • நீர்க்குமிழ்

    நீர்க்குமிழி போல்அழகு காட்டும் பாங்கு நிரந்தரமாய் ஜொலிக்குமென நம்பிக் கொண்டு யார்க்கும்தான் அடங்காது பாயும் வேகம் நட்டாற்றில் மூழ்குமொரு படகின் சோகம்!

    போர்க்களமாம் வாழ்க்கைதனில் போரா டித்தான் பெரும்வெற்றி தனைநாமும் குவிக்க வேண்டும் பேருக்கு வீரரென நடித்துக் கொண்டு போய்வேடம் போட்டுவரின் தவிக்க நேரும்!

    எல்லாமும் எல்லார்க்கும் வாய்க்கும் என்னும் எதிர்பார்ப்பு சோகத்தில் முடிவில் தள்ளும் வல்லாராய்ப் பொய்வேடம் புனைந்து கொண்டு வாழ்ந்திடுவார் வருந்திடுவார் தோல்வி கண்டு!

    நல்லோராய் வாழுவதில் தவறு இல்லை நிச்சயமாய் அதுதொல்லை தாரா துண்மை வல்லூறு போல்பிறரை பறிக்கும் வாழ்வு வீழ்ந்துவிடின் துடிக்கத்தான் விரட்டும் தாழ்வு்!

    நெஞ்சத்தில் உயர்நினைவை நிரப்ப வேண்டும் நாளெல்லாம் நல்லுரையைப் பரப்ப வேண்டும் பஞ்சத்தில் வீழ்ந்திடினும் சோர்வு தன்னில் பணிந்துபிறர் பொருளேற்றல் தவிர்த்தல் வேண்டும்!

    மஞ்சத்தில் புரளுமுயர் வாழ்வு வாய்ப்பின் மனம்தன்னை பஞ்சாக்கிப் பணிந்து பிறர் அஞ்சத்தான் வாழும்வகை கோணா மல்தான் அன்புமழை மிதமாகப் பொழிதல் வேண்டும்!

    வானைப்போல் மனம்தன்னை விசாலம் ஆக்கி மானுடத்தை காக்கும்பணி ஆற்றல் வேண்டும் மானைப்போல் உயிராக மானம் தன்னை மனிதமெலாம் உயர்வாகப் போற்றல் வேண்டும்!

    தேனைப்போல் இனிக்கும்மொழி பேசல் வேண்டும் தென்றலென மென்காற்றை வீசல் வேண்டும் வீணையென இசைமழையைப் பொழிதல் வேண்டும் விண்நிகர்த்த புகழ்நிலையில் வழிய வேண்டும்!

    கவிஞர் இடக்கரத்தான்

    30.11.2018

    Share
  • திரு ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நான் இப்போதெல்லாம் சினிமாவுக்குப் போவதே இல்லை.  இதற்கு வயது ஒரு காரணம்.  இப்போதைய விருப்பங்கள், ஆசைகள் வேறு விதமாக இருக்கின்றன.  நடிக, நடிகைகள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்துப் பரவசப்பட்டது ஒரு காலம்.  இப்போது அவை எல்லாம் அறியாமையில் செய்த காரியங்கள் என்று புரிகிறது.  மேலும் வருஷத்தில் ஒன்பது மாதங்களை அமெரிக்காவில் கழிக்க ஆரம்பித்த பிறகு ரசிப்பதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிகிறது.

    இருந்தாலும் தமிழக அரசியலில் இன்னும் ஆர்வம் இருப்பதால் ‘சர்கார்’ திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டதும் அதைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன்.  பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு சினிமாவுக்குப் போக வேண்டும் என்ற ஆசை என்னுள் முளைவிட்டது. அமெரிக்காவில் அந்தப் படம் திரையிடப்பட்ட இடங்களில் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து மிக அருகில் இருந்தது, சுமார் முப்பது மைல் தொலைவில்.  ஒரு படம் பார்க்க முப்பது மைல் போவதா என்ற எண்ணம் எழுந்தாலும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலீட்டால் போவதென்று முடிவுசெய்தோம்.

    படம் ஆரம்பித்தவுடனேயே தன்னுடைய ஓட்டுரிமையை நிறைவேற்றுவதற்காக ஒரு பெரிய கம்பெனியின் தலைமை அதிகாரி அமெரிக்காவிலிருந்து தன் ‘படைகளோடு’ தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்பதைப் பார்த்தபோது கொஞ்சம் நெருடியது.  சரி இருக்கட்டும், போகப் போக உருப்படியாக ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்.  ஆனாலும் பின்னால் வந்த காட்சிகள் இந்த அபத்தமான ஆரம்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.  கதாநாயகன் விஜய் ஒற்றை ஆளாக எந்தவித ஆயுதமும் இல்லாமல் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களோடு வரும்  இருபது பேரோடு சண்டை போட்டு ஜெயிக்கிறார்.  இப்படி அவர் செய்வது ஒரு முறையல்ல; மூன்று முறை.  கணினி கம்பெனியின் தலைமை அதிகாரிக்கு மூளை பலத்தோடு உடல்பலமும் இருக்கும் என்றே வைத்துக்கொண்டாலும் இத்தனை முறை, இத்தனை குண்டர்களோடு சண்டையிட்டு எந்தவித உடல் சேதாரமுமின்றி வர முடியும் என்று தமிழ் ரசிகர்கள் எப்படி நம்புகிறார்கள் என்று நம்ப முடியவில்லை.

    சாக்கடையாகி இருக்கும் தமிழக அரசியலைச் சுத்தப்படுத்த, தன் ஓட்டைப் பதிவுசெய்ய வந்த இடத்தில் ஒரு பெரிய கம்பெனியின் தலைமை அதிகாரி முயல்கிறார் என்று விமர்சனங்களின் மூலம் தெரிந்துவைத்திருந்த நான்  இப்படி ஒரு ஏமாற்றம் காத்திருக்கும் என்று நினைக்கவில்லை.  கடந்த ஐம்பது வருடங்களாகத் திராவிடக் கட்சிகள் மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்ததை நினைத்து மனம் குமுறிக்கொண்டிருந்த எனக்கு யாராவது, ஏதாவது சொரு வகையில் கடந்த ஐம்பது வருட தமிழக அரசியலைப் பற்றிக் கொஞ்சம் விமர்சித்தாலே கொஞ்சம் நன்றாக இருக்கும்.  இது பற்றி ஒரு சினிமாப் படமே வந்திருக்கிறது என்று நினைத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது. இது ஒரு அரசியல் அங்கதம் (Political satire) என்று எண்ணி மிகுந்த ஆசையுடன் வந்த எனக்கு இது வெறும் மசாலாப் படம் என்று தெரிந்ததும் மிகுந்த வேதனையாகிவிட்டது.

    ‘ஓம், ஒபாமா’ என்று ஒரு படத்தை மூன்று வருடங்களுக்கு முன்னால் சிகாகோ பல்கலைக்கழக வளாகத்திலேயே (எங்கள் வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில்) காட்டினார்கள்.  இறந்த அம்மையாரின் அமைச்சர்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் அவ்வளவு அழகாகக் கிண்டல் செய்திருந்தார்கள்.  தமிழ்நாட்டில் அது தடைசெய்யப்படலாம் என்பதற்காகவே அது அங்கு திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன்.  இது பற்றிய விமர்சனத்தை அடுத்து வரும் URL-இல் பார்க்கலாம். http://sambarchutney.blogspot.com/2011/07/blog-post_2253.html

    விஜய்யை வைத்து எத்தனை மசாலாப் படங்கள் வேண்டுமானாலும் எடுங்கள்.  அது பெரிய வெற்றிப் படமாக அமைந்து உங்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுக்கலாம்.  ஆனால் தமிழக அரசியலை நல்ல திசையில் திருப்புவதாகக் கூறிக்கொண்டு இம்மாதிரிப் படங்களை எடுத்தால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் உங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடலாம்.  அவர்கள் ஒரு மாதிரி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்; நீங்கள் இன்னொரு மாதிரி ஏமாற்றுகிறீர்கள்.  அவர்களும் உங்களுக்குப் பணத்தைக் கொட்டுகிறார்கள்.

    ஏமாற்றத்துடன்,

    நாகேஸ்வரி

    Share
  • துடித்துப் பிரிந்த துணைப் பறவை – 3, சி. ஜெயபாரதன், கனடா

     

    கண்முன் உலவும் நிஜத்
    திரைக்காட்சி
    தெரியாது !
    உடனுள்ள பொக்கிசம் உன்
    பையினில் இருக்க,
    அதன்
    உன்னதம் தெரியாது !
    உயிர் பிரிந்து
    போன பின்
    அதன் இழப்பு உன்
    ஊனை உருக்கு தப்பா !

    +++++++++++++

    எனக்காகப் பிறந்தாள்,
    எனக்காக வளர்ந்தாள்,
    எனக்காகப் பூத்தாள்,
    என்னையே மணந்தாள்,
    என் இல்லத் தீபம்
    ஏற்றினாள்
    ஐம்பத் தாறு ஆண்டுகள் !
    ஆனால் அன்று
    நின்றதவள்
    கைக் கடிகாரம்.

    +++++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.

    சி. ஜெயபாரதன்.

    Share
  • தற்காலப் புதுக்கவிதைகளில் தொடரமைப்புகள்

    முனைவா்.பா. உமாராணி

    இணைப்பேராசிரியா்

    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்

    கோயம்புத்தூா் -21.

     

                சொற்கள் தொடா்ந்து அமையும் அமைப்பினைத் தொடரமைப்பு எனலாம். தொடா்கள் தான் ஒரு படைப்பின் முழுப்பொருண்மையும் விளக்கவல்லன. தொடா்களின் செயல்பாட்டினால்தான் பொருள் வேறுபாட்டுத் தன்மையினை முழுமையாக உணா்ந்துகொள்ள முடியும். அவ்வகையில் இன்றைய புதுக்கவிதைகளின் தொடரமைப்பினை ஆய்வது பயனுடையதாக இருக்கும். இக்கட்டுரைக்கான தரவுகள் 2001-ஆம் ஆண்டு தொடங்கி 2010-ஆம் ஆண்டு வரையிலான 15 கவிதைத் தொகுதிகளை அடிப்படையாகக் கொண்டு அமைந்துள்ளது.

    பெயா்த்தொடா்

                பெயா்த்தொடரில் ஒரு பெயா்ச்சொல் கருவாகவும், பலவித அடைச்சொற்களுடனும், சுட்டுசொற்களும் இடம்பெறலாம். புதுக்கவிதையில் பெயரெச்ச வடிவான சுட்டு சொற்கள் இடம்பெற்றள்ளன.

    1. சுட்டுப்பெயா்

                அந்த ஊமையன்       (குறுவாளால் எழுதியவன், ப.84)

                இந்த நோய்க்காரன் (பூபாளத்திற்கொரு புல்லாங்குழல், ப.95)

                இந்தப் பூனை                        (அபத்தங்களின் சிம்பொனி, ப.38)

    1. அளவை அடைப்பெயா்கள்

                பெரிய மனிதா்

                சில ஆண்டுகள்

                ரூபாய் நாணயம்

                பல நாள்

    போன்ற பல அளவை அடைப்பெயா்கள் தற்காலப் புதுக்கவிதைகளில் இடம் பெற்றுள்ளன.

    1. எண்ணிக்கை அடை

                ஆயிரத்தித் தொள்ளாயிரத்தித் தொண்ணூத்தி மூன்று ஆண்டுகள்

                                                                                                    (குறுவாளால்எழுதியவன், ப.67)

                நூறு புறாக்கள்

                ஒரு ரூபாய் நோட்டு,  ஏழுகதவு                   (மேலது, ப.74)

    போன்றவை எண்ணிக்கை அடைப்பெயா்களாக இடம் பெற்றுள்ளன.

    1. குண அடை

                நரிக் குணம்

                கனிவான பேச்சு

                அமுதத் தமிழ்

                தீந்தமிழ்

    போன்ற குண அடைகள் தற்காலப் புதுக்கவிதைகளில் பலவிடத்தும் இடம்பெற்றுள்ளன.

    1. வேற்றுமை உருபுதாங்கிய அடை

                எமது நாடு

                உன்னுடைய வாழ்க்கை

                உன்னால் என் பெயா்

                உன்னோடு மந்திரவாதி

    போன்ற வேற்றுமை உருபுதாங்கிய அடைச்சொற்கள் புதுக்கவிதையில் தன் கருத்தை வலியுறுத்தல் பொருட்டு இடம்பெற்றுள்ளன.

    1. பெயரெச்ச அடை

                உயிரற்ற மனிதன்

                வற்றாத புகழ்

                நீங்காத மணம்

                உயா்ந்த மலைச் சிகரம்

    போன்றவை பெயரெச்ச அடைகளாக வருகின்றன. பெயா்த்தொடா் இல்லாத வாக்கியங்களில் பெயா்த்தொடா் பதிலிகள் மட்டுமே பயின்று வருகின்றன.

                பலவித அடைகளைத் தாங்கிய பெயா்த்தொடா்கள் புதுக்கவிதையில் பயின்று வரும்போது அவை வருணனைப் போக்கில் அமைந்த தொடா்களாகவே அமைந்துள்ளன என்பது சிறப்பு.

    வினைத் தொடா்

                வினைச் சொற்கள் தனிவினைச் சொற்களாகவோ, துணைவினைச் சொற்களாகவோ சிலபொழுது பயின்றுவரும். வினைச் சொற்களில் காலம், எண், பால்காட்டும் ‘Aspectual’ கூறுகள் இடம்பெற்றிருக்கும். வினையில் காணப்படும் பால், எண், இடம் காட்டும் விகுதிகள் எழுவாயின் இணக்க நிலையினைக் காட்டுவனவாக அமைகின்றன.

    1. வினையடைகள்

                வேகமாய் ஓடினான்

                மூச்சடிக்கிப் படுத்தான்

                மெதுவாகச் சொன்னான்

                சிரமப்பட்டு இடக்கினான்,  உறுதிபூண்டான்

    போன்றவை வினையடைகளாகப் புதுக்கவிதையில் பயின்று வருகின்றன.

    1. கால வினையடைகள்

                அந்த நேரம் நான் வந்தேன்

                இப்பொழுது பசிக்கவில்லை

                முன்பே நடந்து விட்டது

                எப்பொழுதோ நடந்ததிது

    போன்றவை காலம் காட்டும் வினையடைகளாகப் பயின்று வருகின்றன.

    1. வேற்றுமை வினையடை

                வறுமை ஒழிந்தது

                என்னுடன் நடந்தான்

                மழையால் நனைந்தேன்

                பச்சை மலையில் ஏறினார்கள்

                இறைவனின் பார்வை

    போன்ற வேற்றுமை வினையடைச் சொற்கள் புதுக்கவிதையில் பலவிடத்தும் இடம் பெற்றுள்ளன.

    1. வினைத் தொடா்கள்

                வாரா மழை காரணமாக வாடின

                தீரா நினைவு அலைவுற்று நிலை கண்டு  (அபத்தங்களின் சிம்பொனி, ப.29)

                நடவாப் பயல்                        (நழுவும்நினைவுகள், ப.19)

    போன்ற வினையெச்சத் தொடா்கள் கருத்தை வலியுறுத்தல் பொருட்டுப் புதுக்கவிதையில் பயின்று வருகின்றன.

    1. வழுத் தொடா்கள்

                வழுத் தொடா்கள் என்பது இயல்பான முறையில் சொற்கள் அமைவு பெறாமல் வழக்கிற்கு மாறாக இணைந்து காணப்படும் நிலையாகும். இம்முறை தற்காலப் புதுக்கவிதைகளில் பலவிடத்தும் காணப்படுகின்றன.

                ”மனக் கடலுக்குள் இறங்கு

                உன் கனவுகளை வலை வீசு”          (கிளைநிலா, ப.53)

                ”ஊமைப் பாடல்”                               (விரும்பியதெல்லாம், ப.76)

                ”கண்களால் படம் பிடித்திருப்பேன்”          (மேலது, ப.52)

                ”சீறிச்சிலிர்த்த மனசு”                       (நிலாப்பெண்ணேஇ ப.15)

                ”அவள் காணப் பறக்கிற விழிகளே……”   (அன்றில்இ ப.22)

                ”சாகஸ சபாரிக்கள்

                மின்மினி மேடைகள்!”                      (கல்மரம், ப.22)

                ”இவா்கள் தரையில் பூத்த

                தாமரை மலா்கள்……..”                   (மேலது, ப.41)

                ”வயோதிகம் அடைந்த

                வாலிபா்கள்”                          (மேலது, ப.61)

                ”மலையைச் சுமக்கும்

                மண் புழுக்கள்”                                  (மேலது, ப.110)

                ”வறுமைச் சிலுவை”              (மேலது,  ப.114)

                ”குப்பைத் தொட்டியிலிருந்து

                ஒருகடிதம்………………”                 (கிளைநிலா, ப.67)

                ”பெற்ற கடன்”                                   (மேலது)

                ”சாதிகள் பறக்கும்பார்”                    (கல்மரம், ப.12)

                ”வாழ்க்கை முழுவதும்

                வறுமையில் மிதந்தது”                     (கந்தா்வன் கவிதைகள், ப.104)

    போன்ற வழுத்தொடா்ள் புதுக்கவிதையின் இடம்பெற்றுள்ளன.

     

     

    வாக்கியங்கள்

                இன்றைய புதுக்கவிதைகளில் பெயா்த்தொடா் வினைத்தொடா் போன்றவையும், கருவாக்கியங்களும் இடம்பெற்றுள்ளன. கருவாக்கியங்கள் வினை மற்றும் பிற கூறுகளின் அடிப்படையில் தோற்றம் பெறுகின்றன. உடன்பாடு,  எதிர்மறை, ஏவல், வினா, இணைப்பு என்னும் பல நிலைகளில் தற்காலப் புதுக்கவிதைகளில் வாக்கிய அமைப்பு இடம் பெற்றள்ளன.

    தன்வினை வாக்கியம்

                செயப்படு பொருள் குன்றியவினைத் தோற்றம் பெறும் போது தன்வினை வாக்கியங்கள் தோன்றுகின்றன.  சான்று,

                ”நாய் ஓடியது”            (…ம், ப.46)

    பிறவினை வாக்கியம்

                செயப்படு பொருள் குன்றாவினை நடைபெறும் போது பிறவினை வாக்கியங்கள் தோன்றுகின்றன.  சான்று,

                ” அவள் ஓடினாள்”                 (குறுவாளால் எழுதியவன்,  ப.54)

    செய்வினை வாக்கியம்

                பயனிலையாகச் செய்வினைகள் தோன்றும் போது செய்வினை வாக்கியங்கள் தோற்றம் பெறுகின்றன.  சான்றாக,

                ”யானை அவனைக்

                கொன்றது”   (மேலது, ப.42)

                ”பெண்ணை பேதமை

                என்று கூறிக்

                கொன்றனா்”  (தென்றலோடு சில தினங்கள்,  ப.64)

    ஏவல் வாக்கியம்

                ஏவல் வாக்கியத்தில் எழுவாய் முன்னிலைப் பெயா் தன்மை பெறும்.

                ”வாருங்கள்! இன்றைய இந்தியாவை

                உருவாக்க……..”                  (கல்மரம், ப.59)

                ”ஏண்டா உனக்காகத்தான்

                நான் காத்துக் கிடக்கிறேன்”           (பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்,  ப.53)

                ”புறப்படு! மீண்டும் சுதந்திரப் போரைத்

                தொடங்குவதற்கு”                (கல்மரம், ப.130)

    வியங்கோள் வாக்கியம்

                ‘க’ என்பதை இறுதியில் பெற்று வாழ்க,  ஒழிக போன்று அமைந்து வருவனவாய் புதுக்கவிதையில் வியங்கோள் வாக்கியங்கள் இடம்பெற்றுள்ளன.

                ”வாழ்க இந்தியா!”                 (கிளைநிலா,  ப.14)

                ”வாழ்ய தமிழன்னை”           (மேலது)

    போன்றவை சிறந்த சான்றுகளாகும்.

    எதிர்மறை வாக்கியம்

                வினையை எதிர்மறையாக மாற்றுவதற்கு இல்லை, அல்ல, முடியாது போன்ற துணை வினைகளைத் தமிழில் பயன்படுத்தக் காணலாம்.

                ”இழப்பதற்கு ஒன்றுமில்லை

                இனி உன்னிடம்”                  (குறுவாளால் எழுதியவன், ப.19)

                ”நாம் ஒன்றும்

                ஆதா்ச தம்பதியா் அல்லா்”   (மேலது, ப.45)

    வினா வாக்கியம்

                வினாவாக்கியங்கள் ஆ,  ஏ என்னும் வினாக் கூறுகளை உள்ளடக்கியதாக அமைந்து வரும்.

                ”மானுடத்தின் பசியாற்றிய

                மணிமேகலைக்குப் பசிக்காதா என்ன?”    (குறுவாளால் எழுதியவன், ப.56)

                இந்த உலகத்தை

                ஆள்பவா்கள்

                யார் யார் தெரியுமா?”                      (மேலது, ப.57)

                ”தோசை சுடுவதைப் பற்றித்

                தெரியுமா உங்களுக்கு”                    (மேலது,  ப.187)

    வாக்கிய வகைகள்

                தற்காலப்       புதுக்கவிதையில் இடம்பெற்றுள்ள வாக்கியங்களைத் தனிவாக்கியம்,  கலவை வாக்கியம்,  கட்டளை வாக்கியம் என்ற நிலையில் ஆராயலாம்.

    தனிவாக்கியம்

                ஒருபயனிலையைக்கொண்டுமுற்றுவாக்கியமாகஅமைவதுதனிவாக்கியமாகும்.

                ”அவனுக்குத்தேவைஒருதீக்குச்சி”               (தனிமைகவிந்தஅறை.இ ப.26)

    கலவை வாக்கியம்

                ஒரு வாக்கியத்தின் அக அமைப்பில் பிறிதொரு வாக்கியம் தோன்றுவதன் மூலமாக வரும் கடின வாக்கியங்களைக் கலவை வாக்கியம் என்பா். கலவை வாக்கியத்தில் ஓா் அகப்படுத்தும் வாக்கியமும் பல அகப்படும் வாக்கியங்களும் காணப்படும்.

                ”தூணில் ஒய்யாரமாகச் சாய்ந்த படி

                குமார் சாருடன்

                பேசிக் கொண்டிருக்கிறாள்

                மணிமேகலை

                அவா் ஏதோ ஜோக்கடிக்க

                இவள் அதற்கு விழுந்து விழுந்துசிரிக்க

                குழம்பு கொதித்துக் கொண்டிருக்கிறது

                காமராஜருக்குப் பசிபொறுக்க முடியவில்லை

                அழுது அழுது தூங்கிவிட்டார் எம்.ஜி.ஆா்

                ……………………………………

                உதயகுமாரனும் விடுவதாயில்லை”                       (குறுவாளால் எழுதியவன், ப.57)

    என்று வாக்கியம் நீண்டு கொண்டே செல்கிறது.

    கட்டளை வாக்கியம்

                ஒரு வினையைச் செய்துமுடிக்க வேண்டும் என்ற நோக்கில் கட்டளையிடுவது போன்று அமைவது கட்டளை வாக்கியம்.

                ”ஆயா……. சோத்தபோடு முதல்ல”            (மேலது, ப.58)

                ”நில்லடா மின்வெட்டுக் குரல்”                    (மூடுபனி, ப.78)

     

    விளி வாக்கியம்

                ஒரு நபரையோ அல்லது பொருளையோ விளிக்கும் தன்மையில் முன்னிலைப் பொருளில் அமையும் வாக்கியம் விளிவாக்கியம்.

                ”மலையுச்சியோ

                இன்னும் எங்களை

                ‘வாவா’ வென் அழைத்துக் கொண்டுதான் உள்ளது”

                                                                            (குறுவாளால் எழுதியவன், ப.14)

    போன்ற வாக்கிய அமைப்புகள் தற்காலப் புதுக்கவிதையில் இடம்பெற்றுள்ளன.

                தற்காலப் புதுக்கவிதைகள் அதன் அமைப்புத் தன்மையில் குறுகியும், நீண்டும் இருப்பதன் காரணமாக பலவித மொழிக் கூறுகளைப் பயன்படுத்துவது தவிர்க்க இயலாததாகியது. நீண்ட கவிதைகள் வருணணைப் போக்கில் பயன்படுத்தப்படுவதன் காரணமாக பலவித மொழியமைப்புகளை இயல்பாகப் பெற்று விடுகின்றன. ஒரு மொழியின் படைப்பை அதன் தொடரமைப்புகளே தீர்மானிக்கின்றன. இவைகாலம், இடம், சூழல், பால் என்னும் அடைப்படையில் அமைந்து பொருளைச் சிறப்பிப்பதோடு அல்லாமல் அதன் ஒலியன், உருபன், தொடரன் அமைப்புகளிலும் சிறந்து விளங்குவதை காணமுடிகிறது.

    பயன்பட்ட நூற்கள்

    1. அய்யாறு ச. புகழேந்தி, முதற்பதிப்பு -2002, கிளைநிலா, தஞ்சை, காந்திப்பதிப்பகம்
    2. அன்பாதவன், முதற்பதிப்பு -2006, தனிமை கவிந்த அறை, சென்னை, அன்னை       இராஜேஸ்வரி பதிப்பகம்.
    3. வெ. இறையன்பு, முதற்பதிப்பு -2006, பூபாளத்திற்கொரு புல்லாங்குழல்,       சென்னை, நியூசெஞ்சுரி புக்கவுஸ்.
    4. ச. இலக்குமிபதி, முதற்பதிப்பு -2003, கல்மரம், வேலூர், பேகன் பதிப்பகம்.
    5. கந்தா்வன், முதற்பதிப்பு -2004, கந்தா்வன் கவிதைகள், சென்னை, பாரதி புத்தகாலயம்.
    6. கரிகாலன், முதற்பதிப்பு -2004, அபத்தங்களின் சிம்பொனி, சென்னை, புதுமைப்பித்தன் பதிப்பகம்.
    7. கெளரிலிங்கா், முதற்பதிப்பு -2006, அன்றில், சென்னை, வம்சி பதிப்பகம்.
    8. நா. சாந்திபிரேம்குமார், முதற்பதிப்பு -2004, நிலாப்பெண்ணே, மதுரை, அம்பை                  பதிப்பம்.
    9. சிற்பி, முதற்பதிப்பு -2003, மூடுபனி, சென்னை, கவிதா பப்ளிகேஷன்.
    10. சோமலிங்கம், முதற்பதிப்பு -2001, மனித மரங்கள், சென்னை, மணிமேகலை பிரசுரம்.
    11. தபசி, முதற்பதிப்பு -2004, குறுவாளால் எழுதியவன், சென்னை, புதுமைப்பித்தன் பதிப்பகம்.
    12. தேவதேவன், முதற்பதிப்பு -2002, விரும்பியதெல்லாம், சென்னை, தமிழினி பதிப்பகம்.
    13. வைகறைசிவா, முதற்பதிப்பு -2005, நழுவும் நினைவுகள், சென்னை, திருமகள்          நிலையம்
    14. முகில், முதற்பதிப்பு -2004, …ம், தூத்துக்குடி, துடிப்புகள் பதிப்பகம்.
    15. நெல்லை ஜெயந்தா, முதற்பதிப்பு -2005, தென்றலோடு சில தினங்கள், சென்னை,   குமரன் பதிப்பகம்.

    Share
  • சாப்பாடு இலவசம் !!

    க. பாலசுப்ரமணியன்

    அந்தக் கட்டிடத்தைச் சுற்றி சுமார் நூறுபேர் நின்று கொண்டிருந்தார்கள். அந்தக் கட்டிடத்தின் வாயிலில் இருந்த ஒரு பலகையில் “சாப்பாடு இலவசம்” என்று எழுதப்பட்டிருந்தது. அதன் கீழே சாப்பாட்டு நேரம் மதியம் 1 மணி முதல் 2.30 வரை’ என்றும் எழுதப்பட்டிருந்தது. பக்கத்தில் போவோர் வருவோர் தங்கள் கடிகாரங்களை ஒரு முறை பார்த்துக்கொண்டிருந்தார்கள். “இன்னும் சற்று நேரம் கழித்து வரலாமே’ என்று சொல்லிக்கொண்டே ஒருவர் அங்கிருந்து நகர்ந்தார்.பகல் ஒரு மணிக்கு அந்தக் கட்டிடத்தின் வெளிவாயில் மூடப்பட்டு அருகே உள்ளே ஒரு சிறிய வாயில் அருகே இரண்டு பேர்கள் நாற்காலி மேஜை போட்டுக்கொண்டு அமர்ந்தனர். ஒருவர் உள்ளே நுழைய முயன்ற போது அவரை நிறுத்தி “எங்கே போறீங்க” என்றனர். “சாப்பாட்டுக்காக உள்ளே ” என்றார் அவர்.

    “நுழைவுக் கட்டணம் இருபது ரூபாய் செலுத்திவிட்டு உள்ளே போங்கள்” என்கிறார். “சாப்பாடு இலவசம் தாங்க” ஆனால் அந்த இலவசச் சாப்பாட்டு மண்டபத்திற்குள் செல்ல அனுமதிக் கட்டணம் இருபது ரூபாய்.”

    சற்றே வியந்த அந்த மனிதர் நினைத்தார் “என்ன அநியாயமாக இருக்கு” என்று முனகிக்கொண்டே நினைத்தார் “சரி போனால் போகுது. வெளியிலே ஹோட்டல்லே சாப்பிட்டால் எண்பது ரூபாய் ஆகுது. இங்கே இருபதோடு முடியுதே.”. தன் மனதைத் தேற்றிக்கொண்டு அனுமதிச் சீட்டை வாங்கிக்கொண்டு உள்ளே சென்றார்.

    அந்த மண்டபத்தில் இரண்டு வரிசைகள் அமர்வதற்காக நாற்காலிகளும் மேசைகளும் போடப்பட்டிருந்தன. அருகில் இரண்டு வரிசைகள் கீழே அமர்ந்து உண்பதற்காக பாய்கள் விரிக்கப்பட்டிருந்தன அதைத் தொடர்ந்து இரண்டு வரிசைகள் பாய்கள் போடப்படாமல் அமர்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்தது. உள்ளே நுழைந்தவர் ஒரு நாற்காலியில் அமர முயன்றபோது அங்கிருந்த ஒரு சிப்பந்தி “அய்யா. டிக்கெட் வாங்கிட்டீங்களா” என்று கேட்டார். ” வாங்கிட்டேனே ” என்று சொன்னவாறு தனது அனுமதிச் சீட்டைக் காண்பித்தார். ” இது இல்லீங்க..” நாற்காலியில் உட்கார்ந்து சாப்பிட டிக்கெட் வாங்கிட்டிங்களா” எனக் கேட்டார். ” நாற்காலிக்கு டிக்கெட்டா ” என்று என்று திகைத்தவாறே வினவினார். உடனே அந்த சிப்பந்தி ‘ஆமாங்க…நாற்காலிக்கு பத்து ரூபாய் டிக்கெட். பாய்க்கு ஐந்து ரூபாய் டிக்கெட். தரையில் உட்கார்ந்து சாப்பிட இரண்டு ரூபாய் டிக்கெட்..”

    “என்னங்க இது. வெளியிலே சாப்பாடு இலவசம்னு போட்டிருக்கு.. நீங்கள் உள்ளே நுழைய டிக்கெட் வாங்குறீங்க . உட்காருகின்ற இடத்துக்கு டிக்கெட் வாங்குகிறீங்க” எனச் சிறிது கோபத்துடன் கேட்டார்.. “ஆமாங்க சாப்பாடு உண்மையிலேயே இலவசம் தாங்க. மத்தது எல்லாத்துக்கும் கட்டணம் உண்டு. முணுமுணுத்துக்கொண்டே தன்னுடைய பையிலிருந்து ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து அந்த மேசை மீது வைத்துவிட்டு அமர்ந்தார்.

    சிறிது நேரத்தில் இன்னொரு சிப்பந்தி இவரை அணுகி “அய்யா இலை வேணுங்களா? ” எனக் கேட்டார். “பின்னே எப்படி.. இலையில்லாமல் எப்படி சாப்பிடறது?” என்றவுடன் ” அய்யா.. இலை ஐந்து ரூபாய்.”

    உள்ளே நுழைந்த அன்பரால் என்ன செய்வதென்றே புரியவில்லை. வேண்டா வெறுப்பாக ஒரு ஐந்து ரூபாய் கொடுத்து இலையைக் கையில் வாங்கிக் கொண்டார். அதைத் தொடர்ந்து வந்து சிப்பந்தி “அய்யா. தண்ணி வேணுங்களா.” எனக்கேட்க அவரிடம் வேறு ஏதும் கேட்காமல் “இது எவ்வளவு” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டே கேட்டார். “பாட்டில் தண்ணி இருபது ரூபாய். டம்ளரிலே தண்ணி வேணுமென்றால் டம்ளர் ரெண்டு ரூபாய் .. தண்ணி மூணு ரூபாய். ” அவர் பையில் இருந்த பணம் கரைந்து கொண்டிருந்தது. தான் தவறு செய்து விட்டோமோ என்ற எண்ணம் மனதை உறுத்தியது.

    உடனே இலவசச் சாப்பாடு இலையில் விழுந்தது. அதுவும் அளவுச் சாப்பாடுதான். “சார், ரெண்டாவது தடவை பொரியல் கூட்டு என்று கேட்கக்கூடாது. ஒரு முறைதான் போடுவோம்” என்று சொல்லிக்கொண்டே அந்த சிப்பந்தி பந்தியில் முன்னேறினார்.

    பந்தியில் இருந்த இன்னொரு நபர் “என்னங்க… சாம்பாரில் உப்பே இல்லீங்களே” என்கிறார். அதைப் பரிமாறிக் கொண்டிருந்தவர் “எங்களுக்கு எப்படீங்க உங்களுக்கு உப்பு வேணுமா வேண்டாமா என்று தெரியும். வேணுமென்றால் ரெண்டு ரூபாய் கொடுத்து உப்பு வாங்கிப் போட்டுக்கொள்ளுங்கள்.:”என்றார்

    உடனே அந்தப் பந்தியில் இருந்தவர்கள் அனைவருக்கும் அடக்க முடியாத கோபம் வந்தது. அவர்கள் எழுந்து நின்று கூச்சல் போட ஆரம்பித்து விட்டனர். “என்ன ஏமாற்று வேலை இது.. வெளியிலே இலவசச் சாப்பிடு எனப் பலகை வைத்துவிட்டு ஒவ்வொன்றிற்கும் காசு வாங்குகின்றனர். மொத்தத்தில் கூட்டிப் பாரத்தால் வெளியே ஒரு நல்ல உணவகத்தில் சாப்பிடும் கட்டணத்தை விட இது அதிகமாக இருக்கிறதே.” கொந்தளிப்பு அதிகமானது.. உடனே வண்ண உடைகளுடன்  டையும் அணிந்திருந்த மேலதிகாரி அங்கே வந்தார்.

    “அமைதி… அமைதி.. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாங்கள் எதுவும் தவறாகச் செய்யவில்லையே.. சாப்பாடு இலவசம் என்று எழுத்து மூலமாக அறிவித்தோம். அதை நாங்கள் நிறைவேற்றுகின்றோம். சட்டப்படி நாங்கள் செய்தது உண்மையானது. நேர்மையானது…”

    “அய்யா.. நான் சாப்பிட அமரவே இல்லை. எனக்கு சாப்பாடு வேண்டாம். நான் கட்டிய பணத்தை மட்டும் திருப்பிக் கொடுங்கள்”

    “தாராளமாக. ஆனால் ஒரு முறை டிக்கெட் வாங்கிவிட்டால் அதில் தொண்ணுறு விழுக்காடு சேவைக் கட்டணமாக கழித்துக்கொண்டு மீதியைத் தான் தருவோம்.”

    அந்த அன்பர் மயங்கி விழுந்தார்..

    கூட்டம் சற்றே கலைந்து வரும் தருவாயில் ஒருவர் வாசலில் இருந்த சிப்பந்தியிடம் சொன்னார். “நல்ல வியாபாராமய்யா .. இலவசமென்று சொல்லிவிட்டு மக்களை ஏமாற்றும் வேலை.. எங்கேதான் கத்துக்கிட்டாங்களோ.”

    வெளியே அமர்ந்து வசூலித்துக்கொண்டிருந்தவர் சொன்னார். “அய்யா.. இந்த அமைப்பை நடத்தக்கூடிய ஆறு பேர் போன மாதம் வரைக்கும் ஒரு விமானக் கம்பெனியில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அங்கே ஆட்குறைப்பு ஏற்பட்டு வெளியே வந்தவுடன் அதே வழிமுறைகளை வைத்து இந்த வியாபாரத்தை ஆரம்பித்து விட்டார்கள்…”

    காதில் விழுந்ததைச் சரியாகக் கேட்க முடியாதவர்க்கு மேலே சென்று கொண்டிருந்த ஒரு நீல வண்ண விமானத்தின் சத்தம் காதை அடைத்தது. தலையை உயர்த்தி விமானத்தை நோக்கியவாறு “அய்யோ.. வேணாமப்பா.. அதை பார்ப்பதற்கு வேறே காசு வசூலிக்கப் போறாங்க…” என்று சொல்லிக்கொண்டே மேலே நடந்தார்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (287)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் அடுத்தொரு வாரத்தில் மற்றொரு மடலுடன் அன்பு வாசகர்களுடன் கருத்தாட விழைகிறேன். காலம் காற்றாகக் கரைந்து 2018ஆம் ஆண்டு இறுதியை நோக்கி அவசரமாய் ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்து முழுமையாகத் தன்னை “ப்ரெக்ஸிட்” எனும் புதை சேற்றுக்குள் புதைத்துக் கொண்டு செல்கிறது. இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சொல்லின் பின்னால் இங்கிலாந்து நாட்டில் ஏற்படப்போகும் சிக்கல்களின் ஆழத்தை”ப்ரெக்ஸிட்” தேவை என்று வாக்களித்த மக்கள் முழுமையாக அறிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது சந்தேகமே!

    2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி ஐக்கிய இராச்சியம் உத்தியோகபூர்வமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது தவிர்க்கப்படமுடியாத உண்மை. மிக விரைவாக அக்காலக்கெடுவை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் இங்கிலாந்தின் முன்னால் இருந்த முக்கியமான தேவை இவ்வெளியேற்றம் எவ்வகையில் இங்கிலாந்தின் மீதான பாதிப்புகளை மிதப்படுத்தும் வகையில் அமையப்போகிறது என்பதை நிர்ணயிப்பதே. அவ்வகையிலான நிர்ணயிப்பின் வெற்றி அவ்வெளியேற்ற உடன்படிக்கையை ஐரோப்பிய ஒன்றியத்தின் புரிந்துணர்வுடன் செயல்படுத்துவதிலேயே தங்கியுள்ளது.

    இவ்வெளியேற்ற உடன்படிக்கையின் முக்கிய அம்சங்கள் இங்கிலாந்தைப் பொறுத்தவரையில் பின்வருவனவற்றை முக்கியமாக உள்ளடக்கியிருக்க வேண்டும் என்பதே.

    1. இங்கிலாந்துக்கும்,ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளுக்குமிடையிலான மக்களின் போக்குவரத்தைக் கட்டுப்படுத்துவது அதாவது ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகளின் பிரஜைகள் இலகுவாக விசா இன்றி இங்கிலாந்துக்குள் வந்து பணிபுரியலாம் எனும் நிலையைக் கட்டுப்படுத்துவது.
    2. ஒவ்வொரு வருடமும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதிக்காக இங்கிலாந்து செலுத்தும் பலகோடி ஸ்டேலிங் பவுண்ஸ்-ஐ நிறுத்துவது.
    3. ஐரோப்பிய நீதிமன்றம் இங்கிலாந்து நீதிமன்றத் தீர்ப்புக்களில் செலுத்தும் ஆதிக்கத்தை நிறுத்துவது.
    4. பொது விவசாயத் திட்டம்,மற்றும் பொது மீன்பிடித் திட்டம் ஆகியவற்றில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது
    5. இங்கிலாந்து சுயாதீனமாக மற்றைய ஐரோப்பிய ஒன்றியத்தைத் தவிர்ந்த உலகநாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைகளை மேற்கொள்வது.
    6. தனிநாடான தெற்கு அயர்லாந்து ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவ நாடாகும்; ஆனால் அதே சமயம் வடஅயர்லாந்து ஐக்கிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும்.ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியத்தின் வெளியேற்றத்தின்போது இவ்விரு பகுதிகளுக்குமிடையில் ஒரு நிரந்தரமான எல்லைக்கோட்டைத் தவிர்ப்பது.

    மேற்கூறியவைகளை முக்கிய இலக்காகக் கொண்டிருந்தாலும் வேறு சில விடயங்களும் சர்ச்சைக்குரியதாக இருந்தன. இதற்கான பேச்சுவார்த்தை ஐக்கிய இராச்சியத்துக்கும், ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஏறக்குறைய கடந்த இரண்டரை வருடங்களாக நடந்து வந்தது. பல விடயங்களில் உடன்பாட்டை எட்டினாலும் அயர்லாந்து எல்லைப்பிரச்சனையே இழுபறியாக இருந்தது. வெளியேறும் காலக்கெடு அவசரமாக நெருங்கிக் கொண்டிருந்த நிலையில் இருவாரங்களின் முன் பிரதமர் தெரேசா மேயும், இந்த ப்ரெக்ஸிட்டுக்கான அமைச்சரும் உடன்பாட்டை முழுமையாக எட்டி விட்டதாகக் கூறினார்கள். அதைத் தொடர்ந்து அவ்வுடன்படிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பித்துவிட்டு அதற்குப் பொறுப்பாக இருந்த அமைச்சர் தனக்கு அவ்வுடன்படிக்கையில் திருப்தி இல்லையெனக்கூறி தனது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார். அவரோடு இணைந்து மற்றொரு அமைச்சரும் இராஜினாமா செய்தார்.

    பிரதமரின் நிலை மோசமாகி விட்டது. பிரதமர் பதவியிலிருப்பாரா? மாட்டாரா? எனும் விவாதம் காரசாரமாக ஊடகங்கள் மத்தியிலும், அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் எழுந்தன. ஆனால் பிரதமர் மிரளவில்லை. நான் எது செய்தாலும் அது எனது பதவியை முன்னிறுத்துவதற்காக அல்ல. நாட்டின் நன்மையைக் கருதியே செய்வேன் என்பதே அவரது வாதமாக இருந்தது. பிரதமரின் இவ்வுடன்படிக்கைக்கு நாலாபக்கமும் இருந்து எதிர்ப்பலைகள் கிளம்பின. அவரது கட்சியைச் சார்ந்த பல பாராளுமன்ற உறுப்பினர்களே பகிரங்கமாக பிரதமரின் உடன்படிக்கையை எதிர்த்தனர். பிரதமரின் கட்சியைச் சேர்ந்த 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர் மீது நம்ப்பிக்கையில்லை என்று கட்சி மேலிடத்துக்குத் தெரிவித்தால் அவர் மீது நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்படும். அப்படியோர் நிலை வருமென பலராலும் கூறப்பட்டது. ஆனால் அவருக்கெதிராக 48 பேர் முன்வரவேயில்லை.

    சகல எதிர்ப்புக்களுக்கும் முகம் கொடுத்த பிரதமர் தனது உடன்படிக்கையை முதல்கட்டமாக ஐரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் ஒப்புதலைப் பெறும் கைச்சாத்துப் பெறும் முயற்சியில் இறங்கினார். அடுத்தடுத்து ஜரோப்பிய ஒன்றியத்துக்கு விஜயம் செய்து பல கூட்டங்களை நடத்தினார். விளைவாக கடந்த 25ஆம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்தலைவர்களின் ஏகமனதான ஒப்புதலை பிரதமர் தெரேசா மேயின் உடன்படிக்கை பெற்றது. ஆனால் இவ்வுடன்படிக்கைக்கு எதிராக இங்கிலாந்தில் ஒலிக்கும் கோஷங்களின் தீவிரம் குறைந்தபாடில்லை. சரி இனி அடுத்தகட்டம் என்ன ?

    டிசம்பர் மாதம் வரும் கிறீஸ்துமஸ் பண்டிகைக்கு முன்னதாக இவ்வுடன்படிக்கை இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் அதன் அங்கத்தினர்களின் ஒப்புதலுக்கு வாக்கெடுப்புக்கு விடப்படும். தற்போதைய கணிப்புகளின்படி இவ்வுடன்படிக்கை பாராளுமன்றத்தில் தோற்கடிக்கப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பிரதமரோ மக்களுக்கும், அம்மக்களை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற அங்கத்தினர்களுக்கும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். அதாவது தனது உடன்படிக்கை தோல்வியடைந்தால் அதன் விளைவுகள் பாரதூரமாகவே இருக்கும் என்பதே அது. விளைவாக இங்கிலாந்து எதுவிதமான உடன்படிக்கையும் இல்லாமல் வெளியேறுவது அன்றி மக்களின் விருப்பத்துக்கமைவாக ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது முடியாமல் போவது எனும் இரண்டு முடிவுகளை நோக்கித் தள்ளுவதாகவே இருக்கும் என்கிறார்.

    அருமையான ஒரு பாடல் நினைவுக்கு வருகிறது.

    “நதியினில் வெள்ளம்
    கரையினில் நெருப்பு
    இரண்டுக்கும் நடுவே
    இறைவனின் சிரிப்பு
    ஏனிந்தச் சிரிப்பு?“

    பிரதமர் தெரேசா மே அவர்களுக்குத் தமிழ் தெரிந்தால் இப்பாடலைத் திரும்பத் திரும்பக் கேட்பாரோ ? பொறுத்திருந்து பார்ப்போம்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181129 -DWA 7 14 (Mameva yae Prapadyanthe mayametam taranti thaey )A4 160gsm -72dpi Lores wcol -wm

    கிருஷ்கெயில் உவாச…..!
    ————————————————–

    ‘’BATடை ஆட்டினர் BALLபார்த்தன் BOUNDRYக்கு
    சாட்டையால் ஆடிட சிக்ஸராம் -நாட்டினை
    ஆளவந்தோய் அர்ஜுனா அய்யன்சொல் கேட்டுBOWL
    BALLஎறிய கப்(CUP)புனக்கு பார்’’….கிரேசி மோகன்….!

    Share
  • துடித்துப் பிரிந்த துணைப் பறவை

    தமிழ்வலை உலக நண்பர்களே,

    எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.

    உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

    என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்ர்து கொள்ள விழைகிறேன்.

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்.

    மனைக்கு விளக்கு மடவாள்.

    நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்
    பெருமை உடைத்திவ் வுலகு.

    [வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]

    +++++++++++

    நடமாடும் தீபம் புயலில்
    அணைந்து போய்,
    சுவரில்
    படமாகித் தொங்கும் !
    வசிப்பு
    இடம் மாறிப் போகும்
    பூமித்
    தடம் மாறி நோகும் !
    விட்டு
    விடுதலை யாய் ஏகும் !

    +++++++++++

    பூவோடு போனாள் !
    நெற்றிப்
    பொட்டோடு போனாள் !
    தங்கத்
    தாலியுடன் போனாள் !
    என்னைத்
    தவிக்க விட்டுப் போனாள்.

    +++++++++++

    துணைப் புறா போனது
    துடிப்போடு !
    தனிப் புறா நான்
    தவிக்கப் போனது.
    இனி வீட்டில் காத்திருக்க
    எனக்கு
    இல்லத்தரசி இல்லை !
    செல்லும் போது
    சொல்லாமல் போனது !

    +++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.

    சி. ஜெயபாரதன்.

    +++++++++++++++++

    துடி துடித்துப் போனதே என்
    துணைப் புறா !
    நெஞ்சில்
    அடி அடித்துப் போனதே என்
    ஆசைப் புறா !
    இடி இடித்துப் போனதே என்
    இணைப் புறா !
    கண் திறந்து நோக்கி
    கை பிடித்துப் பிரிந்ததே என்
    கலைப் புறா !

    +++++++++++

    இதய வீணை கை தவறி
    உடைந்த பிறகு
    இணைக்க முடியுமா ?
    புதிய கீதம் இனி அதிலே
    பொங்கியே எழுமா ?
    உதய சூரியன் எனக்கினி மேல்
    ஒளியும் வீசுமா ?
    விதி எழுதி முடித்த கதை
    இனியும் தொடருமா ?

    +++++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.

    சி. ஜெயபாரதன்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181128_DWA wcol Canson A4 200gsm 600dpi Chanchalam hi manah Krishna Gita 6|34

    காற்றினும் கஷ்டம் கவரிமனம் மானிடா!
    ஊற்றெடுத்து ஓடும் உபத்திரவம்! -சாற்றிடு
    கண்ணாநீர் கீதையைக் காதினில்: நான்செய்த
    பண்ணாத பாவமும் போச்சு….!

    மூப்பிழைய, மூச்சடைக்க, சாப்பாடே நஞ்சாக
    கூப்பிடாத காலன் கரம்குலுக்க -ஆப்பழியும்(உடல் அழியும்)
    அந்திம நாளேனும் அய்யோ மனமேநீ
    நந்த குமாரனை நம்பு….கிரேசி மோகன்….

    Share
  • ஹஸ்தாமலக கீதம்….!

     

    ——————————————————————————–
    நொச்சூர் ஸ்ரீவெங்கடராம ஸ்வாமிகளின் ஆங்கில உரையைப்
    படித்த பாதிப்பில், தமிழில் வெண்பாக்களாகச் செய்துள்ளேன்….
    ….மொழிபெயர்ப்பில் மூலமும் என்மூலம் வந்த கற்பனையும்
    இணைந்துள்ளது(ஸ்ரீ பகவான் ரமண உபயம்)….!
    ————————————————————————————-
    (காப்பு)
    ———
    ‘’அருணா சலர்க்குப்பின், ஆதிசங் கரர்பின்
    கருணா கரர்காம கோடி -உருவாய்
    அரனா கவந்து அரணாக நின்றோய்
    வரனாய்யென் வெண்பாவில் வா’’….கிரேசி மோகன்….!
    —————————————————————————————–
    ‘’ஆத்திலொரு கால்வைத்து ஆன்மப்போ ராட்டமாய்
    சேத்திலொரு கால்வைத்த ஜீவனவன் -காத்திருக்கான்
    காணா(து) ஒளிந்திடும், காணும் அனைத்திலும்
    நானார் உணர்வை நினைத்து’’….கிரேசி மோகன்….!
    —————————————————————————————
    முன்கதை சுருக்கம்
    ————————–

    “பித்தான, பேசாத பிள்ளைமுன் அத்வைத
    சொத்தான சங்கரர்வி சாரிக்க , -அத்தா
    மலகனவன் வாக்கில் மலர்ந்தது கீதம்;
    உலககுரு கொண்டார் உவப்பு”…..கிரேசி மோகன்….!

    ஆதிசங்கரர் கேள்வி….
    ————————–

    “யார்நீ!, உனக்கிங்(கு) எவர்சொந்தம்!, போவதெங்கே!
    பேரென்ன பிள்ளாய் பதிலெனக்கு, -கூறென்று
    வித்தை வினவ , விருட்ஷமாய் எழுந்தது
    அத்தா மலக அமுது”…..(1)….!

    அத்தாமலகர் பதில்…..
    —————————-
    “பால்வடியும் பிள்ளை பதிலாதி புங்கவர்க்கு,
    “நால்வர்ணம், யக்ஷசுர மேல்வர்ணம், -போல்எவரும்
    நானல்ல, இல்லறமோ நைஷ்டிகமோ ஞானியோ
    நானல்ல, நானுணர்வே நான்”….(2)….!

    “காரியமாய் பூமியைக் காத்திடும் காரண
    சூரியன்போல், ஐம்பொறிக்கு சுத்தாத்ம-வீரியமே,
    அன்னவரே நானதற்கு ஆகாயம் தானுவமை,
    எண்ணவரு வோர்க்கு இருப்பு (OR ) எழுத்து”….!
    (OR)
    எண்ணவரு வோர்க்கது ஏய்ப்பு”….!
    எண்ணவரும் ஏகாந்த மே”….(3)….!

    “கனலும் கொதிப்புமாய் கட்டிக் கலந்தாற்போல்,
    உணர்வுடன் ஆத்துமா ஒன்றி;-புணர்ந்திடும்,
    சேதஅ சேதனங்கள் சார்ந்திருக்கும் அவ்வான்ம
    நாதனே, என்றுமுள நான்”….(4)….!

    “ஆடியில் பிம்பமது ஆளுள்ள மட்டுமே
    ஜோடியாய் சேர்ந்தாலும் ஜீவனவன், -நாடிக்
    கிடப்ப(து) உணர்வின் கிளரொளியை நம்பி,
    தொடர்ந்தொளிர்அவ் வான்மாநான் தான்”….(5)….!

    “முன்னாடி பார்த்த முகம்மட் டுமிருக்கும் –
    கண்ணாடி பிம்பங்கள் காட்சிப்பொய் -உன்னாடை –
    மேனி ,தனித்தன்மை ,மாயை அதுபோல –
    ஞானி உணர்வான்மன் ஞான் “….(6)….!

    “எண்ணும் மனதை இயக்கும் மனம்யார் ! –
    கண்ணுக்குப் பின்னிருந்து காண்கின்ற -கண்ணன்யார் !-
    கண்மனம் காணாத கம்பீ ரவுணர்வாம்,
    நன்மையா னந்தமே நான்’’ ….(7)….!

    “கணக்கற்ற பிம்பம் குடநீரில், ஆனால்,
    உனக்குற்ற சூரியனோ ஒன்று; -மனக்குற்றம்,
    ஒன்றைப் பலவாய் உடைத்தல், உணர்விலே,
    நின்றென்றும் நீங்காதோன் நான்”….(8)….!

    ’’அருக்கன் இருக்க அனைத்தும் தெரியும்,
    கருக்கல் வருங்கால் காணா(து) -இருக்கும்காண்,
    சூரியர்க்கும், கண்ணுக்கும் ஜோதி கொடுக்கும்நான்,
    பேரியக்க ஆன்மவொளி பார்’’….(9)….!

    ’’காட்சியொரே காலத்தில் காண்போர் அனைவர்க்கும்,
    தீட்ஷண்ய மாக்கும் திவாகரனின் -மாட்சிமைபோல்,
    பட்டுப் பலர்புத்தி பேரொளி வீசிடும்
    நிட்டைப் பரபிருமம் நான்’’….(10)….!

    ”ஏகபிம்ப பானு எழுச்சியிலாத் தண்ணீரில்,
    ஏகமாய் பிம்பங்கள் ஏற்றிடும் -வேகநீர்,
    ஆசையின் வேகத்தில் அவ்வான்மா ஜீவன்கள்,
    வாசனை நீங்கவொளி வீச்சு’’….(11)….!

    ”மார்த்தாண்டன் சூரியனை மேக அறியாமை
    போர்த்தாண்டு கொள்ளும் படுபாவி, -தீர்த்தாண்ட
    வர்க்கு ஒளியாய் வெளிவரும் ஆன்மனாய்
    நிற்கும் நிரந்தரம் நான்’’….(12)….!

    ’’யாதுமாய் நின்றாலும், ஏதும் அதைத்தொடாது,
    ஆதவனே ஒட்டாத ஆகாசமாய், -ஈதுணர்ந்து,
    எப்போதும் ஆன்மனாய் எங்கும் நிலைத்தபடி
    நிற்போனே நிர்மல நான்’’….(13)….!

    “செய்யும் முறையதால் ஸ்படிக நிறம்மாறும்,
    அய்யவுன் புத்தியும் அஃதேபோல், -பெய்யும்,
    மதிபிம்பம் ஆடும் நதிநீரில், ஆன்மப்
    ப்ரதிம்பம் உன்னாட்டம் போல்”….(14)….கிரேசி மோகன்….!
    (சுபம்)
    (முடிவு)
    (மங்களம்)
    ——————————————————————————————————————-

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 114

    தேயிலைத் தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம், இலங்கை

     

    முனைவர். க.சுபாஷிணி

     

    தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம் இருப்பது ராமன்துறை தோட்டமாகும். இது நுவரலியாவிலிருந்து நியூ பீக்கோக் எஸ்டேட் செல்லும் பகுதியில் சோகம் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் மத்திய மாகாண கண்டி பகுதியில் அமைந்துள்ளது.

    அருங்காட்சியகத்தின் வாசலில் சிறிய பூந்தோட்டம் ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு பகுதியில் தமிழிலும், சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் அருங்காட்சியகத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, உள்ளே நுழையும் பொழுது முதலில் நமக்கு தென்படுவது ஒரு சிறிய குடில். இந்தக் குடில் இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையக பகுதிக்குத் தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் மக்களின் வாழ்விட கட்டுமாணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

    ஒரு குடில்; அதில் ஒரு அறை மட்டுமே. அறை என்ற பிரிவு இல்லாமல் முழு பகுதியும் வெவ்வேறு மூலைகளில் அதன் பொருட்கள் வைக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன. சிறிய சமையல் பகுதியில் விறகை வைத்துக் கொள்ளும் பகுதி, பானைகளை அடுக்கி வைக்கும் பகுதி, சமையல் பாத்திரங்களை, அம்மி குழவி போன்றவற்றை வைக்கும் பகுதி, என சிறு பகுதியும், படுத்து உறங்கும் பகுதியாக ஒரு பகுதியும் காட்சியளிக்கின்றன. மற்றொரு பகுதியில் துணிகளை உலர்த்தும் மூலை தென்படுகின்றது. சுவற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் புகைப்படங்கள் உள்ளன. பண்டித ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றோரின் புகைப்படங்கள் சுவற்றில் தென்படுகின்றன. இவை இம்மக்கள் இந்தியாவின் சமகால நிலையை இலங்கையிலும் பிரதிபலித்தமையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த குடிசைவீட்டின் உள்ளே அருங்காட்சியக நிர்வாகம் காட்சிப்படுத்தியிருக்கும் பொருள்கள் 1820-களில் தமிழ் மக்கள் பயன்படுத்திய சமையலறைப் பொருட்கள் ஆகும்.

    காப்பித் தோட்டத்தில் பணிபுரிய 1820 வாக்கில் தொடங்கி தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு வந்தவர்கள் தற்காலிகமாக தங்கி கொள்வதற்காக கூரைவேய்ந்த இத்தகைய குடிசைகளை அமைத்து அவற்றில் தங்கியிருந்தனர். ஆறு மாதங்கள் காபித் தோட்டங்களில் அவர்கள் பணிபுரிவார்கள். பின்னர் காபி செடிகள் வளரும் பருவத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூலியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு அதாவது தமிழகத்திற்கு திரும்பிவிடுவார்கள். இக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து மலையகப்பகுதிக்கு வந்தவர்களில் ஆண்களே அதிகமாக இருந்தனர்.தோட்டத்தில் 1880 வாக்கில் காப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக காப்பி விளைச்சல் நிறுத்தப்படவே தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. தேயிலைத் தோட்டப்பணி வருடம் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழில் ஆகையால் 1860 தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு ஆண்களும் பெண்களுமாக குடும்பம் குடும்பமாக பயணித்து வந்து தோட்டங்களில் தொழிலாளர்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

    மலையகப் பகுதியில் காபி தோட்டங்களில் கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரிய வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். முறையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை இரண்டு ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து ஆனால் ஒரு ரூபாய் சம்பளம் கிடைப்பது கூட சிரமமாக அமைந்த நிகழ்வுகளும் உண்டு தினக்கூலி என்பது இல்லாமல் வருடத்திற்கு மூன்று முறை மாத்திரம் சம்பளம் என்ற வகையிலும் சிலவேளைகளில் சம்பளம் கிடைக்காத சூழலும் கூட ஏற்பட்டு மலையக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் மலையகத்தில் பணிபுரிய வந்த தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும் அதன் பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கிய பின்னர் இந்த பிரச்சினைகள் குறைந்தாலும் தமிழ் மலையக கங்காணிகள் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது பெருவாரியாகத் ஆகவே தொடர்ந்தது.

    இலங்கையின் தோட்டங்களில் பணி புரிவதற்காக கி.பி.1800களின் ஆரம்பங்களில் இருந்து தமிழக மக்கள் தூத்துக்குடியிலிருந்து கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து கொழும்புவிற்கும் தமிழகத்தின் வடக்கு பகுதியின் பல்வேறு நகர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து மன்னார் தலைமன்னார் போன்ற பகுதிகளுக்கு வந்து கால்நடையாகவே ஏறக்குறைய 140 மைல் தூரம் நடந்து பயணித்து இலங்கையின் மத்திய பகுதியான மலையகப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். தோட்டங்களில் பணிபுரிய வருகின்றோம் என்று ஆவலுடன் வந்த மக்கள் இங்கு முதலில் காடுகளையே காணக் கூடிய நிலை இருந்தது. மிக அடர்ந்த காடுகள் அவை. அந்தக் காடுகளில் பயணிக்கும் போது பல்வேறு விலங்குகளாலும் பூச்சிகளினாலும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளினாலும் தாக்கப்பட்டு உயிர் இழந்தோர் மிகப் பலர். பயணிக்கும் போதே கொசுக்கடி ஏற்பட்டு தொடர்ந்து பெய்து வரும் அடை மழையில் நனைந்து மலேரியா நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களும் அதிகம். இப்படி பல துன்பங்களைக் கடந்து வந்த மக்கள் கடுமையான உழைப்பைச் செலுத்தி காடுகளை தூய்மைப்படுத்தி காப்பி தோட்டங்களையும் கொக்கோ பயிர்களையும் தேயிலை தோட்டங்களையும் உருவாக்கினார்கள்.

    மலையக மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பணி மிக முக்கியமானது. மலையக சமூக நல ஆர்வலர்கள் உழைப்பால் சில தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. மலையகத்தில் மாத்தளை, ஹட்டன், நுவரெலியா, கண்டி, பேராதனை போன்ற பகுதிகளிலும் மற்றும் ஏனைய மலையக பகுதிகளிலும் தொழிற்சங்கங்களின் சமூக நலன் நடவடிக்கைகள் தொடங்கின. அதில் குறிப்பிடத்தக்கவர்களாக பத்திரிகையாளரும் தொழிற்சங்கவாதியுமாகிய கோ.நடேசய்யர் மற்றும் அவரது துணைவியார் மீனாட்சியம்மா போன்றோரைக் குறிப்பிடலாம். ஆங்கிலேயர்கள் அறிய விரும்பாத பல பிரச்சினைகளை மக்கள் மத்தியில் நேரில் சென்று அப்பிரச்சினைகளைக் கேட்டு அவற்றிற்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை இத்தகையோர் செயல்படுத்தினர். பத்திரிகைகள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் பெற உதவும் வகையிலான நடவடிக்கைகளை தொழிற்சங்க தலைவர்கள் அக்காலகட்டத்தில் செயல்படுத்தினர். பிரச்சாரங்கள் மட்டுமன்றி பாடல்கள், நாடகங்கள், கூத்துகள் வழியாகவும் எளிய மலையக தமிழ் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் உணர்ந்துகொள்ள தொழிற்சங்க தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் முன்னெடுத்தனர். அத்தகைய தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்களும் குறிப்பிடத்தக்க ஆவணங்களும் இந்த அருங்காட்சியத்தில் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    1948ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிட்டியது. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் தொடர் முன்னெடுப்புக்களினால் இலங்கைக்குப் பணியாற்ற வந்த தமிழக மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட சட்ட வரையறைகளின்படி, மலையக பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடத்தக்க பெரிய எண்ணிக்கையில் நாடற்றவர்களாக ஆகும் நிலை உருவானது. அதன்பின்னர் தொடர்ச்சியான பல முயற்சிகள், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் என்பன இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நிகழ்ந்தாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமிழ் மக்களுக்கு சரியான, முறையான குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டே வந்தது. 1924ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி ஏறக்குறைய ஐந்தரை லட்சம் தமிழ் மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், ஏறக்குறைய மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை குடியுரிமை பெறுவார்கள் என்றும், ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நாடற்றவர்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டார்கள். இப்படி வகைப்படுத்தப்பட்ட பின்னரும்கூட அனைத்து மக்களுமே பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.

    இலங்கையில் வாழ்ந்த தமிழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2003ஆம் ஆண்டு வரை தங்கள் குடியுரிமை பிரச்சினைகளில் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்களும் தமிழகத்திற்குத் திரும்பியபின் தாங்கள் விட்டுச் சென்ற காணிகளை இழந்து, சொத்துக்களை இழந்து, பொருளாதார பிரச்சினைகளைப் பெருவாரியாகச் சந்தித்து தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.. இவ்வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் பல்வேறு கையெழுத்து ஆவணங்கள் இந்த மலையக தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு கடந்த 200 ஆண்டுகளாக மிகுந்த பொருள் வளத்தை தரும் ஒரு துறையாக இருப்பது தேயிலைத் தோட்டங்கள். இலங்கைக்கு பெரும் வளத்தை உருவாக்கித் தந்ததோடு, உலக அளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லா உயர்தர தங்கும் விடுதிகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக முக்கிய பானமாக கருதி பயன்பாட்டில் இருக்கின்றது இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலை. இலங்கையின் மலையகப் பகுதிக்கு இன்று நாம் செல்லும்போது நாம் காணும் காட்சி இயற்கை அழகின் எல்லை இல்லா பேரழகு. இது சுவர்க்கலோகம் என்று இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் எண்ணும் வகையில் மலையகத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் காட்சியளிக்கின்றன. இதனை உருவாக்கிய மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையோ இன்றளவும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் வகையிலேயே தொடர்கின்றது.

    முறையான சுகாதார நலன் இன்றி இம்மக்களின் அன்றாட வாழ்க்கைத் தொடர்கின்றது. கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களிலும் இம்மக்களுக்கு மேம்பாடு தேவைப்படுகின்றது. குடியிருக்க சொந்த வீடுகள் இன்றியும், தேயிலைத் தோட்டங்களிலேயே அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமற்ற ஒரு வாழ்க்கையாகவே முடிந்து விடும் அவலமும் தொடர்கிறது. இத்தகைய செய்திகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சியின்வெளிப்பாடாக நியூ பீக்கோக் எஸ்டேட் அருகாமையிலிருக்கும் ராமன்துறை தோட்ட ”மலையக மக்கள் அருங்காட்சியகம்” இன்று நமக்குக் காட்சி அளிக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற அருங்காட்சியக அதிகாரி திரு.சந்தனம் சத்தியநாதன் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் பதிகின்றோம்.

    Share
  • முளைப்பாரி: சக்தியின் மூலப்படிமக் குறியீடு

    -முனைவா். ரா.மூர்த்தி

    தாய்த்தெய்வ வழிபாடு மனிதன் அச்சமுறும் காலத்திலிருந்து அச்சத்ததைப் போக்கிக் கொள்வதற்காகக் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட தற்காப்புச் செயல்பாடு ஆகும். இது தமிழ்ச்சமூகத்தில் கண்ணகி வழிபாட்டின் தொடர் விரிவு எனவும் தற்கால நிலைப்பாட்டில் மாரியம்மன் வழிபாடாக மாறியதையும் நாட்டுப்புற ஆய்வாளர்களால் இனங்காண முடிகின்றது.

    தாய்த்தெய்வ வழிபாடு ஆக்ரோசத்தோடு ஆவேச நிலையில் தெய்வமாக்கப்பட்டதை “காளி அசுரனைக் கொன்றமை, கண்ணகி அரசனின் கொடூர முடிவுக்குட்பட்டமை” கற்பின் சந்தேகத்தினால் கொடூர மாற்றம் நிகழ்ந்து பின் வழிபாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறது. வெறிச்சூழலை ‘சந்து செய்வித்தலால்’ கொடூரத் தோற்றம் ஒரு நிலைப்படுத்தப்பட்டு சாற்றுவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு பெரும்பாலும் தாய்த்தெய்வமான சக்திக்கே அதிகம் நிகழ்த்தப்படுகிறது.

    தாய்த்தெய்வ வழிபாட்டோடு பண்பாட்டில் வெளிப்படும் தெய்வங்களின் ஆக்ரோசத் தன்மையைக் குறைக்க அமைப்பாக்கத்தில் ஒரு பெண் மூலம் மற்றொரு பெண்ணுக்குத் தேவையான சடங்குகளை சாமி ஆடுபவர்கள், மருளாடிகளுக்கு நிறைவேற்றப்படுகிறது. இத்தன்மை ஒரே தளத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதில்லை. அதன் தளங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். மாறுபடும் சூழலில் மூலப்படிமத்தின் பெயரும் மாற்றமுறுவதோடு, பொருளின் தன்மை மக்களின் வழக்காற்று வார்த்தைகள், செய்விக்கப்படும் படையல்கள், பொருட்களின் தன்மையும் மாறுபடக் கூடும். இவ்விரண்டு சாய்மையினால் இடம், பொருள் மாறுபட்டாலும் மூலப்படிமத்தின் குறியீடு ஒரே நிலையிலேயே சொற்பொருண்மை கொண்டு செயலாக்கம் பெறுகிறது.

    இந்நிலைப்பாடு தமிழர்களின் வாழ்வில் காலங்காலமாகச் சக்தி தெய்வத்திற்கு மங்களம், வளமை, பசுமை, மறுபிறப்பு, செழிப்பு எனக் குறியீட்டு வடிவத்தை  நிறைத்துச் சமய வழிபாட்டை நகர்த்திச் செல்வதில் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. அதில் தொல்தமிழர்களின் முளைப்பாரியும் அடங்கும். பிற இனத்தவர்கள் தெய்வத்தினை அணுக முற்படாத நிலையில் அத்தெய்வத்திற்கு படைக்கப்படும் பொருட்களைக் கொண்டும் வழிபடும் மக்களைக் கொண்டும் இன்ன தெய்வங்கள் என்று அறிந்துகொள்ள நேர்கிறது. சிலர் இது சக்தியின் வெளிப்பாடு உருவாக்கம் என்று எளிதில் இனங்காணமுடிகிறது.

    முளைப்பாரி தமிழ்ச்சமூகத்தில் வழிபாட்டின் போது எந்நிலையில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான காரணம், தோற்றத்தொன்மம், சமூக அடையாளமாக மாறக் காரணம்? தற்காலச் சூழலில் அவற்றின் போக்கு எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது அதனையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

    முளைப்பாரி விளக்கம்

    முளைப்பாலிகை என்பதை பேச்சு வழக்கில் முளைப்பாரியாக மாரியது. முளைப்பாலிகை என்பதற்கு “நவ தானியங்கள் முளைக்கும் முளைத்தாழி” என்று கூறுகின்றனர். தாழி என்பது மண் சட்டியைக் குறிக்கும். “விரித்த பாலிகை முளைக்குட நிரையினர்” என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது. கோவலன் கண்ணகி திருமணத்தின்போது தானியங்கள் முளைக்கும் பானைகளை ஏந்திக்கொண்டு சென்றதைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது.

    முளைப்பாரி என்பது வித்தினின்று வெளிவருவது. முளைப்பது; பாரி என்பதற்கு ‘கள்’ என்று தமிழகராதி பொருளிடுகிறது. முளைப்பாரி என்பதை உருவாக்குதல் என்று பொருளிட்டால் ‘விதை’ மண்ணில் முளைப்பது என்றால் ஒரு நிலையில் இயல்பாக பறவைகளின் ஊடாக நிகழக்கூடும். மற்றொன்று இறந்தவர்களின் நினைவாக வேண்டுதல் பொருட்டும், விருப்பத்தின் பேரில் நடவு செய்யப்பட்டு அதன் வழி நிகழக்கூடும். பெண்கள் உழவுத்தொழில், பயிர்த்தொழில் இனங்கண்ட நாள் முதல் முளைத்தல், வெளிவருதல் இவை அனைத்தும் பெண்மையின் வளர்சிதை பெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. ‘கள்’ என்ற நிலையில் பார்த்தால் தமிழர்களின் தொல்நிலையிலிருந்தே ஒன்றிணைந்து வருகிறது. இதுவும் இறந்தவர்களுக்கே நடுகல், கல்லறை இவற்றின் அருகில் ஒரு சடங்காக நிகழ்த்தப்பட்டு வருகிறதைக் காணலாம். இழப்பின்மூலம் மீண்டும் புதுமையை எய்த முடிவதோடு இறப்பிற்குச் சரிகட்டலாம் என்ற எண்ணப்போக்கு தமிழ்ப் பண்பாட்டில் தொன்றுதொட்டு காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது.

    முளைபாரி உருவாக்கும் விதம்

    முளைப்பாரியை உருவாக்குவதில் புழங்கு பொருட்களில் கலப்பு நிகழ்வது போல தானியங்களிலும் கலப்பு மாற்றம் இருக்கும் ‘தென்மாவட்டங்களில் பறையர்கள் முளைப்பாரிக்கு கம்பு, சோளம்,  கேப்பை இதனையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மாறாக பள்ளர்கள் பயறுகளைப் பயன்படுத்துகின்றனர். முளைப்பாரியை உருவாக்கும் போது பாடக் கூடிய பாடல்

    “நல்ல தண்ணீர் எடுத்து வந்து
    நாங்கள் முளை போட்டோம்
    சிவபாலரெல்லாம் போட்டோம்
    போட்ட முளை பழுதில்லாமல்
    போங்கி நல்லா வளர”
    என்று பாட்டுப் பாடி தொடங்குகின்றனர்.

    ஊர்க்கு ஒதுக்குப்புறத்திலும், அல்லது ஊர்ச்சாவடி, கோயில் ஆகிய இடங்களில் அகலமான உயரமான குத்துச்சட்டி, மண்பானையைக் கொண்டு பயன்படுத்துகின்றனர். பறையர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் காப்புக் கட்டிக்கொண்டு அவர்களது இல்லத்திலே முளைப்பாரியை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பறையர்களுக்கு நாடார் இனத்தைச் சேர்ந்தவர்கள் முளைப்பாரி போட்டு திருவிழா அன்று வழங்குகிறார்கள் (இடம்: வத்திராயிருப்பு). முளைப்பாரிக்குத் தேவையாக வைக்கோல், சோளத்தட்டை இரண்டையும் மூன்று அடி உயரம் நறுக்கி அதில் வைக்கோலைக் கொண்டு சுற்றி கால்படாத களிமண்ணைக்கொண்டு நல்ல தண்ணீர் ஊற்றி அதனைக் குழப்பிக் குத்துசட்டியின் நடுவில் சோளத்தட்டையை வைத்து அதில் மணல் பரப்பி களிமண் கொண்டு மெழுகி அதன் மீது கம்பு, சோளம், போன்ற தானியங்களை ஊறவைத்து தடவி விடுவது வழக்கம் ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்களுக்கு காற்று புகாமல் மறைவாக மறைத்து வைத்து பிறகு திருவிழா அன்று அதனை வெளிக்கொண்டுவருவார். இவ்வாரு செய்வது பறையர்களின் தொல்கால நிலையாகும்.

    முளைப்பாரிக்குத் தேவையான பொருட்களைக் கையில் எடுத்துக்கொண்டு வழிபடும் போது

    “சோளத்தட்ட ரெண்டெடுத்து
    சோக சோகயாக உருச்சுவச்சு
    கம்மந்தட்ட ரெண்டெடுத்து
    கணுகணுவா ஒடுச்சி வச்சு
    பருத்தி குச்சி ரெண்டெடுத்து
    பளபளன்னு பாவி வச்சு”
      என்று பாடி ஆரம்பிக்கின்றனர்.

    பானை, சட்டி, சோளத்தட்டை இவற்றின் மூலத்தை நோக்கும்போது இரு கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. பானை –  பெண்மையின் குறியீடு என்றும், சோளத்தட்டை – ஆண்மையின் குறியீடு என்றும் எடுத்துக்கொண்டு  பண்பாட்டோடு அணுகும் போது பானை(பெண்) – சோளத்தட்டை(ஆண்) இரண்டையும் உருவாக்குபவள் பெண்மையே. ஓர் உயிரியின் உருவாக்குதல் – அழித்தல் இரண்டும் பெண்ணே முன்னின்று செயல்படுகிறாள். பயிர்த்தொழில், தானியங்களின் உற்பத்தியைப் பெருக்குதல், அறுவடை போன்ற செயல்பாடு பெண்மையின் வெளிப்பாடே. இதனைச் சிறுதெய்வ வழிபாடுகளில் நம்மால் இனங்காணமுடியும். பெண்தெய்வங்கள் முக்கோண வடிவில், தாமரை வடிவில், நாற்சதுர வடிவில் தோன்றும். அதன் நடுப்புறத்தில் அல்லது அதன் மேல்தளத்தில் ஆண் உருவங்கள் காணப்படும். சிவனின் லிங்கத்தோற்றத்தில் கூட மேல்நோக்கி நின்ற நிலையில் லிங்கமும், அதனைத் தாங்கிக் கொண்டு யோனி போன்று வடிவம் காணப்படும். இக்கட்டுமான அமைப்பினைக் கொண்டு முளைப்பாரியின் தோற்ற வடிவத்தினை அணுகினால் நம்மால் ஓர் அனுமானத்தை இனங்காண முடியும்.

    முளைப்பாரிக்கான தானியங்கள், புழங்கு பொருட்கள் சமூகத்திற்குச் சமூகம் மாறுபட்டாலும் நிறத்தின் சாயல் பசுமை – பச்சைத் தன்மையிலே வளமையாகக் காணப்படுகிறது. அதற்கு மாறாகச் சிவப்பு கோபத்தின் வெளிப்பாடாகவும் பலியிடுதலின் நிலையாகவும் இருந்து வருகின்றது.

    தமிழ்ச்சமூகமும் முளைப்பாரியும்

    தமிழ்சமூகத்தோடு முளைப்பாரியை இனங்காணும் தன்மையில் மருதநிலம் தோற்றமுற்றதே உழவு, விவசாயத்தை மையமிட்டு, ஏனென்றால் இயற்கைச் சூழல், தட்பவெப்ப நிலை, பருவகால மாற்றம் இதனைக் கருத்தில் கொண்டு தமிழர்கள் வாழ்வை நிகழ்த்தி வந்தனர். “தென்னிந்தியச் சடங்கு வரிசையில் பொங்கலிடுதல் உழத்தொழிலின் ஒரு மூலப்படிவக் குறியீடு  என்பதோடு மங்களத்தின் வெளிப்பாடு என்று பிரந்தா பெக் (1969:556) கூறுவதாக பக்தவத்சல பாரதி கூறுகிறார். பொங்கல் வளமை என்று எண்ணத் தோன்றும் போது முளைப்பாரி அதற்கு வித்தாகப் பசுமையின் குறியீடாகக் கொள்ள நேர்கிறது.

    தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்களுக்கு  திருவிழா(கொடை)வின் போது தமிழர்களால் நிகழ்த்தப்படக்கூடிய மூலப்படிவ சடங்காகும். இச்சடங்கு செய்வதால் அம்மனுக்குக் குளிர்ச்சி ஏற்பட்டு குழந்தைப்பேறின்மை, திருமணம் ஆகாத் தன்மை, குடும்பச் செழிப்பின்மை, நோய், நீத்தல் போன்ற தன்மைகள் மாறி செழிப்பு ஏற்படும் என்ற எண்ணப் போக்கு தமிழர்கள் மத்தியில் நிகழ்ந்து வருகிறது. சிறுதெய்வ வழிபாடுகள் அனைத்தும் தாய்த்தெய்வத்தின் வெளிப்புறத்தோற்றமாக இருப்பதால் அதனது வேண்டுதலை நிவர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் கோவில் வழிபாட்டின் போது பெண்களால் இச்சடங்குகள் செய்விக்கப்படுகிறது.

    முளைப்பாரி இடுவது தமிழ்ச்சமூகத்தில் அனைத்து ஊர்களிலும் தெருக்களிலும் நிகழ்ந்தாலும் அதனை உருவாக்குவதற்குத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே தேவையாக இருப்பதைக் காணலாம். பெரும்பான்மையான சிறுதெய்வங்களின் தோற்றத் தொன்மத்தினை ஆராய்ந்து நோக்கியோர் உயிர் இழப்பு ஏற்பட்ட சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களே அத்தெய்வங்களை உடல் ரீதியாகவும், உணவு ரீதியாகவும் ஆதரித்தனர் என்று தொன்மக்கதைகள் கூறுகிறது. “ விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஆண்டுதோறும் முத்தாலம்மன் தேர்த்திருவிழா நடைபெறும். திருவிழாவில் பதினெட்டுப்பட்டி கிராமங்களைச் சார்ந்த பல இனமக்கள் கலந்து கொள்வதோடு அனைவரும் வணங்கும் பொதுத்தெய்வமாகவும் முத்தாலம்மன் இருந்து வருகிறது. இருந்தாலும் திருவிழாவில் பறைகொட்டுதல், முளைப்பாரி எடுத்தல் நிலையினைப் பறையர் இனமக்களே செய்கின்றனர். “அன்றே பிறந்து அன்றே அழியக்கூடிய தெய்வமாக” முத்தாலம்மன் தெய்வம் இருந்து வருகிறது.  முளைப்பாரி உருவாக்குதல், அழித்தல் தெய்வம் முதலாகப் பறையர்களே செய்கின்றனர். இது அனைத்து சிறு பெண்தெய்வங்களுக்கும் பொருந்தும். தெய்வங்கள் அழியக்கூடிய நாட்களில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருட்களும் அழிக்கப்படுகிறது.

    இத்தெய்வங்களின் மூலவடிவம் தோற்றமுற்ற நிலம் அதே இடத்திலே குடிகொள்ளும் அதன் நினைவாக ஆண்டுதோறும் உருவாக்கப்படும் எடுப்பு தெய்வங்கள், படையல்கள் அதன் குறித்த காலங்களில் அழிக்கப்படுகிறது. இதில் தொடர்தலைமுறை வணக்கம் மரபு ஒரு வகையிலும் அதனைச் சந்து செய்விப்பதற்காகப் படைக்கப்படும் செயல்பாடுகளும் வெளிப்படுகிறது.

    முடிவுகள்

    தமிழ்ச்சமூகத்தில் விவசாயத்தோடு இரண்டறக் கலந்த முளைப்பாரி தமிழர்களின் அடையாளத்தை தொடர்ச்சியாகத் தாங்கிக் கொண்டு வருகிறது. தெய்வத்திற்கு மட்டும் பயன்பட்டுவந்த முளைப்பாரிகள் இன்று பல்வேறு நிகழ்வுகளுக்குப் பயன்பட்டு வருகிறது. தலைவர், தலைவிகளின் மாநாடுகள், பொதுக்கூட்ட வருகை, நினைவஞ்சலி செலுத்தும் இடங்கள், பொதுநிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முளைப்பாரி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை மாற்றத்தினால் தொல்படிவ மூலம் மாற்றமுறாமல் இருந்தாலும் அதன் வெளிப்பாடு தெய்வ நிலையிலிருந்து சற்று மாற்றமுற்று காணப்படுவதை இனங்காண முடிகிறது.

    துணை நின்ற நூல்கள்

    1.பக்தவத்சல பாரதி – பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன்

    பதிப்பகம், 53,புதுத்தெரு, சிதம்பரம் -001
    2.பக்தவத்சல பாரதி – தமிழர் மானிடவியல், அடையாளம் வெளியீடு,  புத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2002.

    1. பக்தவத்சலபாரதி – மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் வெளியீடு,

      புத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2005.

    *****

     கட்டுரையாளர் –  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி
    பெரியநாயக்கன் பாளையம்
    கோயம்புத்தூர்- 20

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 13  

    திருச்சி புலவர்.இராமமூர்த்தி

    ========================

    அடுத்து, திருவாரூரில் ஆண்ட மனுநீதிச் சோழனின் சிறப்பு கூறப்படுகிறது! திருவாரூர் நகர்ச் சிறப்பு  பெரியபுராணத்துக்கு எவ்வாறு துணை புரிகிறது என்பதைச் சில அகச்சான்றுகளால் விளங்கிக்  கொள்ளலாம்!  திருவாரூரின்  பெருமைக்கு   முதற்காரணம். அந்நகருக்குத்  திருமகளே வந்து சிவபெருமானை வழிபாடு செய்தருளினாள்  என்பதாம். அதற்கு ஆதாரம் திருவாரூரில் பெரிய திருக்கோயிலின்  பெயரே கமலாலயம் என்பதாம்!  இதனைச் சேக்கிழார்,

    ‘’சொன்ன நாட்டிடைத்  தொன்மையின்  மிக்கது

    மன்னு  மாமல  ராள்வழி  பட்டது ‘’

    என்று பாடுகிறார்!  மேலும் தியாகேசப் பெருமான் பலகாலம்  பாற்கடலில் மகாவிஷ்ணுவின் இதயத்திலும், பின்னர் பலகாலம் தேவருலகிலும், பின்னர் திருவாரூரிலும்  எழுந்தருளிய சிறப்புடையது.  மேலும் அந்த நகரில்தான், கைலாயத்தில் சுந்தரரை விரும்பிய இருசேடியருள் ஒருத்தியாகிய கமலினி, பரவை நாச்சியாராக வந்துஅவதாரம் செய்த மாளிகை உள்ளது! தொண்டர்கள் தேடும் சிவபிரான், தாமே சுந்தரரைத்  தேடிப்போய்,  சுந்தரருக்காகப் பரவை நாச்சியாரிடம்  இருமுறை தூதுவராக நடந்தருளிய பாதத் தாமரையின் நறுமணம் கமழும் திருவீதி உடையது. இதனைச் சேக்கிழார்,

    “இடந்த  ஏனமும்  அன்னமும்  தேடுவார்

    தொடர்ந்து கொண்டவன்  தொண்டர்க்குத்  தூதுபோய்

    நடந்த  செந்தா  மறையடி  நாறுமால் ‘’

    எனப்பாடுகிறார்! இவ்வூரில்தான், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட்கொண்ட சிவபெருமான், ‘’தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்’’ என்று அடி எடுத்துக் கொடுத்தார். அவ்வகையில் உருவான திருத்தொண்டர் புராணத்துக்குப்  பொருளாகிய அடியார் திருக்கூட்டமும் எழுந்தருளிய ஊர்  திருவாரூராகும். இத்தனைச் சிறப்புக்களும் அமைந்த ஊர் திருவாரூராகும். இவ்வூரில்   சோழர்களின் மரபு வழியில், சேக்கிழாரை ஆதரித்த அநபாயச்  சோழன் மரபின் முன்னோனாகிய  மனுநீதிச் சோழன் ஆட்சி புரிந்தான்! அவன் அறநெறி தவறாமல் ஆட்சி செய்ததோடு, வேள்விகள் பல புரிந்து , திருக்கோயி லுக்கான நிபந்தங்களையும் வழங்கினான். அவனுக்கு உலகோர் போற்றத்தக்க முறையில் அருமையான ஆண்மகவு பிறந்தது! அந்த ஆண்மகன் வளரும்போதே  போர்க்கலை ஆட்சிக்கலை, ஆன்மிகம் ஆகியவற்றைப் பயின்றான்

    ஒருநாள்  அவன் இளவரசர் பலரும், நாள் வகைப் படையினரும்  நாற்புறமும் சூழ்ந்து வர, அரசவீதியில் மணிகள் ஒலிக்கும் தேரில் ஏறிச்  சென்றான். அப்போது எவரும் அறிந்து கொள்ளாத நிலையில் ஓர்  இளைய ஆன் கன்று இளவரசன் சென்ற தேரின் சக்கரங்களுக்கிடையில் சிக்கி மாண்டது! உடனே இளவரசன், தான் செய்த  பிழையை நீக்கிக் கொள்ளும் கழுவாயை,   தம் நாட்டு மன்னனாகிய தந்தை அதனை அறியும் முன்னரே அந்தணர்களிடம் சென்று  கேட்டான்!  இந்தச் செய்தி பரவியது. அப்போதே தன் அருமைக்  கன்றை இழந்த தாய்ப்பசு, அரண்மனை வாசலில் இருந்த ஆராய்ச்சி மணியைக்  கொம்பால்  முட்டி அசைத்து ஒலிக்கச் செய்தது! அந்த மணியோசை அரசன் செவியில் ஒலித்தது. இதுவரை ஆராய்ச்சி மணியோசையைக் கேட்டறியாத அரசன் விரைந்து வெளியே வந்தான். காவலர்கள் ஒரு பசுமாடு மணியை அசைத்தது. என்று கூறினார். அரசன் அமைச்சர்களைப் பார்த்தான். அவர்களுள் அறிவால் மிக்க ஓர் அமைச்சர், அரசனின் பாதங்களை வணங்கிப் பேசலானார்.

    ‘’சோழ மன்னனே!  நீங்கள் பெற்ற  புதல்வனாகிய இளவரசன், பலவகை மணிகள் பெரிதாய் ஒலிக்கும் , மிகவுயர்ந்த தேரின்  மேலேஉள்ள தேர்த்தட்டில்  ஏறி,எண்ணிக்கையற்ற தேர்கள் சூழ்ந்துவர, அரசர்கள் மட்டுமே சென்று பழகும் பெரிய வீதியில் நகர் வளம் செய்யும்போது, மிகவும் இளைய பசுங்கன்று ஓன்று எங்கிருந்தோ யாரும் அறிந்து கொள்ள இயலாத வகையில் தானாகச் சென்று, மிகவும் கீழேயுள்ள தேர்ச்  சக்கரங்களின் இடையே எப்படியோ புகுந்து இறந்தது. அதனால் மனத்தளர்ச்சியுற்ற தாய்ப்பசு, மணியோசையை உண்டாக்கியது!” என்றார்.

    இப்பாடலில் புலப்படும்  அமைச்சரின் நுண்ணறிவு நம்மை வியப்புக்கு ஆளாக்குகிறது. முதலில்  ‘வளவ!’ என்று மன்னனை அழைக்கிறார்! குழப்பத்துடன்  இருந்த மன்னன் மனத்தில் அவன்  நாட்டை ஆளும் மிகப்பெரிய சோழர்  பரம்பரையினன் என்பதை  ‘வளவன்’  என்ற சொல்லால்  விளக்குகிறார்!

    அடுத்து, அத்தகைய பெருமைமிக்க அரசனாகிய ‘நின்’ புதல்வன் என்கிறார்! ஆதலால் பெருமை மிக்க நின் மகன்  சிறுமை  செய்பவனல்லன்  என்கிறார்! புதல்வன் என்ற சொல்லாட்சி அவன்   குலத்துக்கே  நீத்தார் கடன் புரிவதற்குரிய ஒரே புதல்வன் என்பதைக் குறிக்கிறது. ‘’அங்கு ஓர் மணி நெடுந்தேரில் ஏறி’’ என்று கூறுகிறார். ஆங்கு என்ற சொல், அவனுக்கே உரிய இடத்தில் என்ற பொருளை உடையது. ‘ஓர்’ என்பது ஒப்பற்ற என்ற பொருளில் உடன் வரும் பல தேர்களுள்  இத்தேர் சிறப்பு வாய்ந்தது என்பதைப் புலப்படுத்துகிறது.அதனால் இளவரசன் பற்பல தேர்களின் இடையே தனித்த சிற்ப்புடைய தேரில் ஏறி வருகிறான் என்பதைக் குறிக்கிறது. அதனால் பசுங்கன்று இவற்றைத் தாண்டி உள்ளே நுழைந்தது நடவாத செயல் என்ற ஐயத்தை உருவாக்குகிறது!  ‘மணி’ என்ற சொல் அத்தேரில் ஆரவாரத்துடன் ஒலித்த மணிகளின் ஓசையைக் குறிக்கிறது.அந்த ஆரவார ஓசை இளங்கன்றை அச்சுறுத்தி விலகியோடச் செய்திருக்குமே, என்று கருத வைக்கிறது. ‘’நெடுந்தேரில்’’ என்ற தொடர் மிகவுயர்ந்த தேர் அது, என்பதைக் காட்டுகிறது.அவ்வாறு உயர்ந்த தேரிலிருந்து சக்கர பகுதி கண்ணில் புலப்படாது என்ற கருத்தைப் புலப்படுத்துகிறது. ‘ஏறி’ என்ற சொல் தேர்த்தட்டின் உயரத்தைக் குறிக்கிறது. அவ்வாறு ஏறி வருபவன் பார்வை வழியைப் பார்த்துச் செலுத்தும் வாய்ப்பில்லாமையைக் காட்டுகிறது.   ‘அளவில் தேர்த்  தானை சூழ ‘ என்ற தொடர் எண்ணிக்கை அளவைக் கடந்த தேர்களுக்கிடையில் இளவரசன் ஏறிவந்த நெடுந்தேர் சென்றது என்பதைப் புலப்படுத்தி எல்லாவற்றுக்கும் இடையில் வரும் இளவரசன் தேரை யாராலும் நெருங்க வியலாது என்ற நுணுக்கமான விளக்கத்தால் ஆன்கன்று இந்தத்    தேரின் கீழே செல்லும் வாய்ப்பே  இல்லை என்று வலியுறுத்துகிறது. அவன் தேரேறிச் செல்லும் தெரு, அரசகுடும்பத்தினர் மட்டுமே செல்வதற்குரிய மேன்மை மிக்க தெரு என்பதை விளக்குகிறது. அங்கே எளிய மனிதரோ, விலங்கோ செல்வது அரச நிந்தனை என்ற குற்றத்துக்கு உரிய செயல் என்பதை நிலைநாட்டுகிறது. ‘போங்கால்’ இளவரசன் எந்த நோக்கமும் இல்லாமல் மகிழ்ச்சி உலாவை மேற்கொண்டு  சென்றான் என்பதைப் புலப்படுத்தி, அவனுக்கு அந்த ஆன்கன்றைக்  கொல்லும் நோக்கமில்லை என்பதையும் குறிக்கிறது. அடுத்து  ‘இளைய ஆன்கன்று ‘ என்று அமைச்சர் கூறுகிறார்.மிகவும் இளையது அக்கன்று, ஆதலால் தானாக அக்கன்று தேரின் கீழே செல்லாது என்பதையும், ‘இளங்கன்று பயமறியாது!’ என்ற பழமொழிக்கேற்ப அக்கன்று  அறிவும் அச்சமும் அற்றது என்பதையும் அத்தொடர் குறிக்கிறது. அடுத்து ‘’தேர்க்கால் இடைப்புகுந்து ‘’ என்கிறார் அமைச்சர். முன்சக்கரத்தில் புகுந்தால் அது தேரை ஓட்டுபவனின் கவனமின்மையைக் குறிக்கும். ஆனால் பல சக்கரங்களை உடைய பெருந்தேரின்  இடையில் புகுந்தது என்பதால், இளவரசன் அதனை நேரில்  காணாத நிலையை அனுமானிக்க வைக்கிறது. அனுமானம் குற்றத்தை நிரூபிக்காது. கன்று இறந்ததை யாரும் அறிந்து கொள்வதற்குள், அதனை ஒரு பசு அறிந்து கொண்டது என்பது நடவாத செயல். அப்பசுவின் தளர்ச்சியால் எவ்வாறு  அறிவுடன் ஆராய்ச்சி மணியை அசைத்தது என்பதைப்  புரிந்துகொள்வது? என்ற ஐயமும் தோன்றுகிறது!

    இந்தக்  கொலைவழக்கு விசாரணைக்கு  வந்தால், குற்றத்தின் பின்னணி, குற்றச்செயலின் தன்மை ,குற்றம்  நடந்த சூழ்நிலை, கொலை நோக்கம்,  கொலை செய்யப்பட்ட கன்றின் அறிவு, இவை அனைத்தும் இக்கால இந்தியக் குடியாட்சியின் குற்றவியல், தண்டனைச் சட்டத்தின் பிரிவுகளில் எந்த வகை யினுள்ளும்   அடங்காது. ஆகையால் அக்கால முடியாட்சிச் சட்டங்கள் பற்றி நாம் எந்த முடிவுக்கும் வருதல் இயலாது. சட்டமும் நீதியும், எல்லாக் காலத்துக்கும்  உரியனவே! என்பதையும், இந்தக் குற்றத்தை அன்றைய அமைச்சர் அணுகிய விதம் எக்காலச் சட்டத்துக்கும் இசைவாகவே உள்ளது என்பதையும் நாம் சிந்தித்தால் சேக்கிழார் பெருந்தகையின் சட்ட நுணுக்க அறிவும் , அவர் அக்காலத்திலேயே சோழமன்னனின்  முதலமைச்சராக விளங்கிய பெருமையும் ஒருங்கே புலப்படுகின்றன! கொலைக்குற்றம் சாட்டப் பட்டவரின் சார்பில் வைக்கப்படும் வாதங்கள் எவ்வாறிருக்க வேண்டும் என்பதை இப்பாடல் விளக்குகிறது. இனி நாம் பாடல் முழுவதையும் படித்து இப்பாடலின்  சொல்லாட்சிச் சிறப்பைப் புரிந்து கொள்வோம்!

    “வளவ! நின் புதல்வன் ஆங்கோர் மணி நெடுந் தேர்மேல் ஏறி
    அளவில் தேர்த்தானை சூழ அரசுலாந் தெருவில் போங்கால்
    இளையஆன் கன்று தேர்க்கால் இடைப் புகுந்து இறந்ததாகத்
    தளர்வுறும் இத்தாய் வந்து விளைத்ததித் தன்மை” என்றான்”

    இந்த வழக்கின் பின்புலத்தை மிகவும் நுட்பமாக விளக்கும் வகையிலும், பின்நிகழ்ச்சியை முன்னதாகவே உணர்த்தும் உத்தியாகவும், திருவாரூர் பற்றிய அறிமுகப் பாடலில்,

    “பல்லி  யங்கள் பரந்த வொலியுடன்

     செல்வ  வீதிச்  செழுமணித்  தேரொலி

     மல்லல் யானை  ஒலியுடன்  மாவொலி

     எல்லை  இன்றி  எழுந்துள  எங்கணும்” 

    என்று சேக்கிழார் பாடி வைத்த நுட்பம், எண்ணி யெண்ணி மகிழ்தற்குரியது!

    ============================================================

     

     

     

    Share