Blog

  • காழிப்பிள்ளைக்கு சேக்கிழார் பாடிய பிள்ளைத்தமிழ்!

    மீனாட்சி பாலகணேஷ்

                ‘தவம் பெருக்கும் சண்பையிலே தாவில்சரா சரங்களெல்லாம்

              சிவம்பெருக்கும் பிள்ளையார் திருஅவதா ரஞ்செய்தார்,’ என்பது ஆளுடைப்பிள்ளையாராகிய திருஞானசம்பந்தப் பெருமானின் அவதாரம் பற்றி சேக்கிழார் பெருமான் இயற்றியருளிய பெரியபுராணப் பாடல். பெரியபுராணத்தினூடே இழைந்திலங்கும் பிள்ளைத்தமிழ் போன்ற ஓரமைப்பையும் சேக்கிழார் பெருமான் படைத்திருக்கிறார்! அதனை ஒரு சிறிய பிள்ளைத்தமிழாகவே நாம் கருதவும் இடமிருக்கிறது.

    காப்பியத்துக்குள் ஒரு சிற்றிலக்கியம்!

                                                                *****

                அந்த இளங்காலைப் பொழுதில் சண்பை (சீர்காழி) எனப்படும் அவ்வூரில் பல நற்சகுனங்கள் தென்பட்டன. சிலுசிலுவென்ற இளங்காற்று வீசி, மரங்களிலிருந்து மலர்கள் தெருவெங்கும் உதிர்ந்தன. வீடுகளின் வாயிலில் பவழமல்லிகை மலர்கள் அங்கு வசிப்பவர்களை ஆசிர்வதிப்பதுபோலச் சொரிந்தன. பறவைகள் இனிமையாகப் பாடின; இனிய நறுமணம் எங்கும் கமழ்ந்தது. தோணியப்பர் திருக்கோவில் மணி கணீரென முழங்கியது. மங்கல வாத்தியங்களின் ஒலி எங்கணும் பரந்து எழுந்து திசைகளனைத்தையும் நிறைத்தது. சிவபாத இருதயரின் வீட்டை நோக்கிப் பெண்டிர் விரைந்தனர்.

                சிவபாத இருதயர், தமது வீட்டின் திண்ணையிலமர்ந்து சிவநாமத்தில் ஆழ்ந்திருந்தார். கண்களை மூடிக்கொண்டு நிட்டையில் ஆழ்ந்திருந்தார் அவர்.

                சிறிதுநேரத்தில் பிறந்த பச்சிளம் மகவின் இனிய குரலொலி வீட்டின் உள்ளிருந்து கேட்டது. கோவில் கோபுரத்தை நோக்கி அவரின் கரங்கள் தானாகவே தலைக்குமேல் குவிந்தன. அவர் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

                “சைவம் தழைக்க ஒரு திருமகன் அவதரித்துள்ளான்; அம்மையப்பன் என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்து விட்டான்,” என மனதில் எண்ணிக் கொண்ட அவரின் உடலும் உள்ளமும் ஒருசேரச் சிலிர்த்தது. இக்குழந்தை வளர்ந்து எவ்வாறு சைவத்தொண்டு செய்வான் என அவர் சிறிதும் அறிந்திருக்கவில்லை; அதற்காகக் கவலைப்படவுமில்லை. இறைவன் அருள் புரிவான், வழிநடத்துவான் எனும் அசையாத நம்பிக்கை!

                                                                *****

                அடுத்த பத்து தினங்களும் குழந்தை பிறந்ததும் அந்தணர் வீடுகளில் செய்யப்படும் நற்சடங்குகளில் கழிந்தன. உலகம் நன்மை பெறுவதற்காக இத்தகைய மகவைப் பெற்ற சிவபாதஇருதயர் தம் திருமாளிகையாகிய பவனத்தின் முன்றிலில் பலவிதமான அலங்காரங்களைச் செய்வித்தார்.

                ‘இரும்புவனம் இத்தகைமை எய்தஅவர் தம்மைத்

              தரும்குல மறைத்தலைவர் தம்பவன முன்றில்

              பெருங்களி வியப்பொடு பிரான்அருளி னாலே

              அருந்திரு மகப்பெற அணைந்தஅணி செய்வார்,’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.

                அவர் மகப்பேற்றின் பின்பு ஏற்படும் ‘தீட்டு’ முதலானவை நீங்க எண்ணெய் பூசி நீராடும் நெய்யாட்டு விழாவினைச் செய்து மகிழ்ந்தார்; இதனை ‘மங்கல ஸ்நானம்’ என்பது வடமொழி வழக்கு. மங்கல ஓசைகள் முழங்கும் சமயத்தில் சாதகன்மம் முதலான பல சடங்குகளையும் அந்தணர்கள் குலதருமப்படி செய்தார் அவர். ஆண்குழந்தை பிறந்தால் 16 விதமான சடங்குகளைச் செய்வர். இதனுள் குழந்தை பிறந்த நாள், கோள்களின் நிலை பற்றிய குறிப்பைப் பதிந்து வைத்தலை சாதகம் (ஜாதகம்) என்பர்.

                ‘சாதக முறைப்பல சடங்குவினை செய்வர்.’

                வாராது வந்த மாமணியன்றோ இம்மகவு? உறவினப் பெண்டிர் அனைவரும் குழுமி பல மங்கலச் செயல்களைச் செய்து மகிழ்ந்தனர். அவை என்னென்ன தெரியுமா?

                மயில்போலும் சாயல்கொண்ட அம்மகளிர், தூமணி விளக்கொடு தாம் அணிந்துள்ள அணிமணிகளும் சுடர்க்குழைகளும் மின்னி ஒளிவீச அழகான மாளிகையை மேலும் அழகு செய்தனர்.

                வாசனைப்பொடியாகிய சுண்ணத்தை எங்கும் தூவினர்;

              முளைப்பாலிகைகளை மேடைகள் தோறும் வைத்தார்கள்.

              மணமுடைய புண்ணிய நீர் நிரப்பப்பட்ட பொற்குடங்களை வரிசையாக மேடைகள்தோறும் வைத்தனர்.

                குழந்தை பிறந்ததும் பொன் முதலான பொருட்களை தானம் வழங்கி மகிழ்கிறார் தந்தை. அதுமட்டுமல்ல; சிவநேசச் செல்வரான அவர் சிவனடியார்களுக்கு இடையறாது அமுது செய்வித்த வண்ணம் இருந்தார். மற்றும் உடனிருந்தோர் அழகான மலர்மாலைகளை அவற்றில் மொய்க்கும் வண்டுகளுடன் சேர்த்துக் கட்டி ஆங்காங்கே தொங்கவிட்டனராம். பச்சிளம் மகவு பிறந்திருக்கும் இல்லத்திற்குக் காப்பாக வேம்பின் இலைகளை மாளிகையின் பகுதிகளில் ஆங்காங்கே செருகுவார்கள் சிலர். இதனை,

                ‘செம்பொன்முத லானபல தானவினை செய்வார்

              நம்பரடி யாரமுது செய்யநல முய்ப்பார்

              வம்பலர் நறுந்தொடையல் வண்டொடு தொடுப்பார்

              நிம்பமுத லானகடி நீடுவினை செய்வார்’ என்கிறார் புலவர்.

                வெண்கடுகு முதலான பண்டங்கள் சேர்த்துச் செய்யும் புகைகொண்டும், நெய், அகில் இவற்றின் புகையினைச் சேர்த்தும், பல வேள்விகள் செய்வதனால் எழும் புகையாலும் தெய்வமணம் கமழும் செயல்களைச் செய்கின்றனர். பின் மறைவிதிப்படி அக்குழந்தைக்கு ‘ஆளுடைய பிள்ளையார்’ எனத் திருநாமம் சூட்டி தொட்டிலில் இடும் சடங்கினைச் செய்தனர்.

                இவ்வாறு பத்துநாள் சடங்குகளை வருணித்து மற்றவைகளை நயத்துடன் சேக்கிழார் கூறும் அழகே அழகு. சிவபிரானின் திருவடிகளில் தாம் கொண்ட அன்பே அன்னை  பகவதியாரின் திருக்கொங்கைகளில் பாலாகச் சுரந்திட அதனைத் தன் திருக்குமாரனுக்கு அவர் உண்பித்தாராம்.

                பிறந்த குழந்தை வளர்வதனை இனி வரும் பாடல்களில் சேக்கிழார் உரைக்கிறார். பிள்ளைத்தமிழ்ப் பருவங்களனைத்தும் அழகுற வரிசைப்படுத்தப்பட்டு, சிலசொற்களோ, வரிகளோ, பாடல்களோ ஆயினும் கற்பனைநயம் மிகக் கூறப்படுகின்றன.

                சிவபிரான் திருவருளால் உதித்த குழந்தையாதலால், பலவிதமான காப்புகள் மிகையாகும், அவை தேவையில்லை எனக்கருதி அவை எதையும் விரும்பாது, குழந்தையின் நெற்றியில் திருநீற்றைப் பூசிக் காப்புச் சடங்கினைச் செய்தனர். “மந்திரமாவது நீறு,” எனப் புகழ்ந்து பாடப்போகும் ஞானக் குழந்தையல்லவா இவர்? இதனைவிடத் தகுதியான காப்பு வேறுண்டோ? இதனால் முதல்மாதத்தில் பாடப்படும் காப்புப்பருவம் கூறப்பட்டது.

                தமிழுடன் சைவமும் சிறப்புப்பெற வந்துதித்தவர் காழிப்பிள்ளையார் பெருமான். ஆகவே, அவரைப் பெரிதும் போற்றும்வண்ணம் தாயார் தன் மடித்தலத்தும், மணித்தவிசிலும், தூய்மையான விரிப்பைக் கொண்ட தொட்டிலிலும், மலர்ச் சயனத்திலும் கண்வளர்த்தி நாயகனைத் தாலாட்டி நலம்பல பாராட்டினார். ஏழாம் மாதத்தில் பாடப்படும் தாலப்பருவம் இவ்வாறு கூறப்பட்டது.

                ஆளுடைய பிள்ளையார் தவழத்துவங்கி, தமது தலையை மேலெடுத்து முகத்தை அசைத்துச் செங்கீரை ஆடினார். இதனைச் சேக்கிழார் பெருமான் அருமையான தமது கற்பனையை ஏற்றி, தற்குறிப்பேற்றமாகப் பொருள் நயத்துடன் பாடியுள்ளமை சுவைபட உள்ளது. இதனைத் தன்மையணி என்பர்.

                ‘வருமுறைமைப் பருவத்தில் வளர்புகலிப் பிள்ளையார்

              அருமறைக டலையெடுப்ப ஆண்டதிரு முடியெடுத்துப்

              பெருமழுவர் தொண்டல்லால் பிறிதிசையோ மென்பார்போல்

              திருமுகமண் டலமசையச் செங்கீரை ஆடினார்,’ என்கிறார்.

                வரிசையாக வரும் பிள்ளைப்பருவங்களுக்கு உரியவாறு வளர்ந்துவரும் ஆளுடைப் பிள்ளையார், ஐந்துமுதல் ஏழுமாத அளவில் செய்யும் குழந்தைகள் செய்யும் செங்கீரையாடலைச் செய்தார் என்பது நிகழ்வு. தலையை உயர்த்தி நோக்கிக் குழந்தைகள் தவழும்; காழிப்பிள்ளையார் சைவம் தழைத்தோங்க அவதரித்தவர். ஆகவே அவர் தலையெடுத்து நிமிர்ந்தது ‘அரிய வேதங்கள் தலை எடுக்கும்படிச் செய்யவே தலையணையிற் பதிந்த திருமுடியை மேலெடுத்தார்’ என்பது போன்றிருந்தது என்றார் சேக்கிழார். மேலும், தவழும் குழந்தை முகத்தைப் பக்கவாட்டிலும், மேலும் கீழும் அசைக்கும்; அது, ‘சிவபிரானுடைய தொண்டைத்தவிர பிறிதொன்றினையும் செய்யோம்’ என்பது போல இருந்தது என்கிறார்.

                அற்புதமான, பொருத்தமான கற்பனை!

                ஒன்பதாம் மாதம் ஆளுடைப் பிள்ளையார் சப்பாணி கொட்டுவதனைப் புலவர்பெருமான் பாடுகிறார். சப்பாணிப்பருவத்துப் பாடுபொருள் குழந்தையின் கைகள்தாம். “நாம் சைவமன்றி மற்ற பரசமயங்களை அறியமாட்டோம். ஆதலின் எம்மருகே வாராது தொலைவில் சென்றுவிடுங்கள்,” என்று கூறுவதுபோன்று சிறுகைகளை இணைத்துச் சப்பாணி கொட்டினாராம். “அளவுமீறி எம்மருகே வந்து தீங்கு விளைக்காமல், தூரத்தே சென்று விடுங்கள்,” எனக்கூறுவது போன்றிருந்ததாம். மேலும் கைகளைச் சேர்த்து ஒத்தியெடுத்துச் சப்பாணி கொட்டியது சிவபெருமானிடத்துப் பிற்காலத்தில் கைத்தாளம்பெற வேண்டியதனைப் போலும் இருந்ததாம்!

                ‘நாமறியோம் பரசமயம் உலகிலெதிர் நாடாது

              …………………………………………. புனிதன்பால்

              காமருதா ளம்பெறுதற் கொத்துவதும் காட்டுவபோல்

              தாமரைச் செங்கைகளினால் சப்பாணி கொட்டினார்.’ என்பது சேக்கிழார் பாடல்.

                இவையனைத்தும் சைவம் தழைக்க வந்துதித்த பிள்ளையாருக்கு சேக்கிழார் பெருமானின் பக்தியில் உதித்தெழுந்த கவியுக்தி செறிந்த கற்பனைகள்.

                தொடர்ந்து காழிப்பிள்ளையார் தவழ்தலைக் கூறியவர், அடுத்து வருகைப் பருவத்தைக் குறித்துப் பாடுகிறார். தவழும் குழந்தை எழுந்து தளர்நடை நடக்க விழைந்து தாயும் தந்தையும் மற்றோரும் வேண்டுவதனை அடுத்த பாடலில் விளக்கியருளுகிறார்.

                மறைக்குலத்தைச் சார்ந்த பெண்டிரும், தாதிமார்களும் பலவிதமாகக் குழந்தையை ‘எம்மிடம் வருக’வென அழைக்கின்றனர். “சீர்காழி நகர்வாழ் மக்களுக்கு சிறப்புச்செய்ய உதித்த செல்வமே!” என்றும், “கவுணிய குலத்தோரின் கற்பகமே!” என்றும் விளித்தனர். இவ்வாறு அழைத்தவர்களின் முகத்தை நிமிர்ந்து நோக்குகின்றார் காழிப்பிள்ளையார். அவருடைய திருமுகத்தில் குறுநகை மலர்ந்து பொலிகின்றது. காண்போர் உள்ளங்களும் பெரும்களி கொள்கின்றன.

                அது மட்டுமா?

                பத்துப் பதினொன்று மாதங்கள் நிரம்பிய சிறு மகவான பிள்ளையார், ஓடோடி வந்து தம் தாய் பகவதி அம்மையைத் தழுவிக் கொள்கின்றார்; புறம் புல்குகின்றார்; இறுக அணைத்துக் கொள்கின்றார். தாயின் உள்ளமும் உடலும் சோர, உணர்வு உருகிக் கரைய, பேரின்பம் பெருக்கெடுக்கின்றது. தம் பால் வந்த மகவினை அன்னையும் மற்றவரும் இவ்வாறெல்லாம் போற்றுகின்றனர்.

                ‘திருநகையா லழைத்தவர்தம் செழுமுகம்கண் மலர்வித்தும்

              வருமகிழ்வு தலைசிறப்ப மற்றவர்மேல் செலவுகைத்தும்

              உருகிமனம் கரைந்தலைய உடனணைந்து தழுவியும் முன்

              பெருகிய இன்புறவளித்தார் …………….’ என்கிறார் சேக்கிழார் பெருமான்.

                இங்ஙனம் குழந்தை செய்யும் செய்கைகளால் தாயும் மற்றோரும் எவ்வாறு இன்புற்றனர் எனச் சிறப்பாகக் கூறியுள்ளார்.

                பெரியாழ்வார் ஒருவரால் மட்டுமே பாடப்பட்ட பருவமான தளர்நடை நடப்பதையும் புலவர் பாடியுள்ளார். சைவம் தழைக்க வந்துதித்த பிள்ளையாரின் சிறப்பை ஒவ்வொரு பாடலிலும் சிறப்பாக எடுத்துரைத்துள்ளதொன்றே சுவையாக உள்ளது. கிளரும் ஒலியினைக் கால்களில் அணிந்த கிண்கிணிகள்  எழுப்புமாறு ‘கீழ்நெறிகளைக் காட்டும் சமயங்கள் தள்ளாடி நீங்கும்படி’, தனது திருமேனி அசையும் தோறும் தனது சுருண்ட குஞ்சியும் நெற்றியில் அலைய, தாமும் தளர்நடையிட்டு அருளினார் என்கின்றார்.

                வளர்ந்து வரும் குழந்தையைப் பாடும்போதில், ஆண்பால் பிள்ளைத்தமிழின் கடைசிப் பருவங்களான சிறுதேர், சிற்றில் ஆகியனவற்றையும் கூறாமல் இருக்க இயலுமா?

                அழகான சிறுதேரைப் பற்றிக் கொண்டு பிள்ளையார் உருட்டிச் செல்கிறார். மணலைக் கொழித்து, சிற்றில் எனும் சிறுவீடுகளை இழைத்து விளையாடும் பேதைச்சிறுமியர் இருக்குமிடங்கள்தோறும் ஓடியும் நடந்தும் சென்று அவற்றைக் காலால் தொடர்ந்து அழித்து விளையாடினார். இவ்வாறு விளையாடியதனால் மேனி முழுதும் வியர்வைத்துளிகள் அரும்பின. அதனுடன் திருநீற்றைப் பூசிய கோலமும் ஒருசேர வீதிமுழுதும் திருவொளி பரப்ப வளர்ந்து வந்தார் எனக்கூறி, ஆளுடைய பிள்ளையாரின் மழலைப் பருவத்தினை அழகுறப் பாடியருளியுள்ளார் சேக்கிழார் பெருமான்.

                ‘சிறுமணிதேர் தொடர்ந்துருட்டிச் செழுமணல் சிற்றில்களிழைக்கும்

              நறுநுதற்பே தையர்மருங்கு நடந்தோடி அடர்ந்தழித்தும்,

              குறுவியர்ப்புத் துளியரும்பக் கொழுப்பொடியா டியகோல

              மறுகிடைப்பே ரொளிபரப்ப வந்து வளர்ந்தருளும்……’ என்பது பாடல்.

                பிள்ளைத்தமிழின் இனிமையை, சுவையைக் கொண்டிலங்குகின்றன இப்பாடல்கள் என்பது மிகையேயில்லை!

    ————————-

                பிள்ளையைத் தமிழால் பாடுவது எனும் பொருளில் அமைந்தது பிள்ளைத்தமிழ் என்னும் தனித்தன்மை வாய்ந்த ஒப்பற்றதொரு சிற்றிலக்கியம். இறைவி, இறைவன், பெரியோராகிய இறையடியார்கள், வள்ளல்கள், அரசர்கள், ஆசிரியர்கள் ஆகியோருள் ஒருவரைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டு கற்பனை பலவற்றை அமைத்து இச்சிற்றிலக்கியம் பாடப்படும். இவர்களின் அரும்பெரும் செயல்களை காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுதேர், சிறுபறை எனும் ஆண்பால் பிள்ளைத்தமிழின் பத்துப் பருவங்களில் நயமாக இணைத்துப்பாடி மகிழ்ந்தனர் புலவர்கள்.

                ‘குழவி மருங்கினும் கிழவதாகும்,’ எனத் தொல்காப்பியம் இதற்கு இலக்கணம் வகுக்கின்றது. தொல்காப்பியத்திற்குப் பின் 1000 ஆண்டுகள் கழித்து, 9-ம் நூற்றாண்டின் முற்பகுதியில் பெரியாழ்வார், கிருஷ்ணனைக் குழந்தையாக்கி ‘திருமொழி’ பாடினார். மேற்கூறிய பருவங்களுள் பல இதில் நயமுறப் பாடப்பட்டுள்ளன. இதுவே பிற்காலத்துப் பிள்ளைத்தமிழ் நூல்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்தது எனலாம்.

                இருப்பினும் இடைப்பட்ட காலத்தில், 6- 11ம் நூற்றாண்டுகளில் பெரும்வளர்ச்சியடைந்த சைவ, வைணவ சமயநூல்களிலும் அக்கடவுள்களின் மீதோ அல்லது அரசர்கள்மீதோ, தனிப்பட்ட பிள்ளைத்தமிழ் நூல்கள் பாடப்படவில்லை. சைவம் சிவபிரானையே முழுமுதற் கடவுள் எனப்போற்றினாலும், அவன் ஒரு தாய் வயிற்றிற் பிறவாத பிறப்பிலிப் பெருமான் ஆதலால் அவன்மீது பிள்ளைத்தமிழ் பாடலாகாதென்பது நியதி; ஆகவே சைவசமயக் குரவர்கள் எவரும் பிள்ளைத்தமிழ் பாடவில்லை.

                இக்காலத்தையடுத்து முதன்முதலாக ஒரு பிள்ளைத்தமிழ் நூல் மன்னன் அநபாயசோழன் எனும் இரண்டாம் குலோத்துங்கன் மீது ஒட்டக்கூத்தரால் பாடப்பட்டுள்ளது. இவர்கள் காலம் 12-ம் நூற்றாண்டின் முற்பகுதியாகும். குலோத்துங்கனின் அவையை அலங்கரித்த அவனுடைய அமைச்சரும், சைவ அடியாருமான சேக்கிழாரால் இதே காலகட்டத்தில் பெரியபுராணம் இயற்றப்பெற்றுப் பெரும்புகழையும் சிறப்பையும் அடைந்தது.

                ஒட்டக்கூத்தர் எனும் பெரும்புலவரின் ‘குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ்’ எனும் நூலின் நயத்தில் ஆழ்ந்ததனாலோ என்னவோ, சேக்கிழார் பெருமானும் தாமியற்றிய திருத்தொண்டர் புராணமெனும் பெரியபுராணத்தில் திருஞானசம்பந்தர் வரலாற்றைப் பாடும்போது அதில் சம்பந்தர் எனும் குழந்தை அவதரித்து பிள்ளைத்தமிழின் பருவங்களுக்கேற்ப அழகாக நன்கு வளர்ந்ததனை 27 பாடல்களில் மிக அழகாக வருணனை செய்துள்ளார். அதுவே நாம் மேற்கண்ட செய்திகளாகும்.

                இங்கு ஒரு கருத்தைச் சிறிது ஆழ்ந்து நோக்க வேண்டும். சேக்கிழார் பெருமான் ஒட்டக்கூத்தர் காலத்தவர். அதே அரசவையில் அமைச்சராக இருந்தவர். ஒட்டக்கூத்தர் குலோத்துங்கனின்மீது இயற்றிய பிள்ளைத்தமிழின் தாக்கம், அச்சிற்றிலக்கியத்தின் பல கூறுகள் ஆகியன காழிப்பிள்ளையாரின் வளர்ப்பினை விவரிக்கும் பகுதியிலும் காணப்படுவது அருமையான ஒற்றுமை எனலாம். முறையாக எழுந்த முதல் பிள்ளைத்தமிழ் நூல் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழே. தம் காலத்துச் சக புலவர் ஒருவரைப் போற்றும் விதமாகவும் அவர் பாடிய முதல் சிற்றிலக்கிய நூலொன்றின் கூறுகளைத் தாமியற்றிய காப்பியத்திலும் இணைத்தது சேக்கிழார் எனும் புலவர்பெருமானின் பெருந்தன்மையைச் சுட்டுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. திருஞானசம்பந்த நாயனார் புராணத்தில் நிகண்டுகள் வகைப்படுத்தும் பிள்ளைத்தமிழின் பருவங்களான, காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, வருகை, சிற்றில், சிறுதேர் இவற்றுடன் இடையே விரவி வரும் சில பருவங்களான அன்னையை அணைத்துக் கொள்ளுதல், புறம் புல்குதல், தளர்நடை நடத்தல் ஆகிய பருவங்களும் காணப்படுகின்றன. இப்பருவங்கள் ஒன்பதாம் நூற்றண்டுக் காலத்தவரான பெரியாழ்வார் ஒருவரால் மட்டுமே பாடப்பட்ட பருவங்களாகும் (இவை நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் உள்ளவை). ஆகவே சேக்கிழாருக்கு வைணவ இலக்கியங்களிலும் பரிச்சயம் இருந்தது எனக் கொள்ளலாமா?

                எது எவ்வாறாயினும், நாம் ஆன்மீகம் சார்ந்த இலக்கியங்களைப் படிக்கும்போழ்து அவற்றின் பொருட்சுவை, பக்திச்சுவை, கற்பனைவளம், சமகாலப் புலவர்களின் தாக்கம் ஆகியனவற்றை வியந்து பாராட்டாமல் இருக்கவியலாது. சேக்கிழார் பெருமானின் காப்பியத்துள் திகழும் சிற்றிலக்கியக் கூறுகள் இவை. இறையருள் ஒன்றினாலேயே இத்தகு புலமை கைகூடும் என்பது கண்கூடு!

                இதுதவிர, ஞானசம்பந்தப்பெருமான் மீது பிற்காலத்தில் ஐந்து பிள்ளைத்தமிழ் நூல்கள் இயற்றப்பட்டுள்ளன என அறிகிறோம்.

    1. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்- திருவாவடுதுறை ஆதீனத்து மகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ

                     மாசிலாமணித் தேசிக சுவாமிகள்- 17ம் நூற்றாண்டு.

    1. நால்வர் பிள்ளைத்தமிழ்- காரைக்குடி ராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்
    2. திருஞானசம்பந்தர் பிள்ளைத்தமிழ்- தணிகைமணி செங்கல்வராய பிள்ளை.

    மற்ற இரண்டினைப் பற்றிய செய்திகள் கிட்டவில்லை.

                பிள்ளைத்தமிழின் கூறுகளைக் கொண்டமைந்த சேக்கிழார் பெருமானின் இப்பெரியபுராணப் பாடல்கள் பிற்காலப் பிள்ளைத்தமிழ் நூல்களில் காணும் சொல்நயம், கருத்துவளம், கற்பனை அனைத்திலும் சிறந்து விளங்குகின்றன எனக் கண்டோம்; மகிழ்ந்தோம்.

                தென்னாடுடைய சிவனே போற்றி!

                எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!

                                                    ————–

    ஆய்வுக்கு உதவிய நூல்கள்:

                பன்னிரு திருமுறைகள்: பெரிய புராணம்- வர்த்தமானன் பதிப்பகம், சென்னை. 1998.

    Share
  • பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பு உருவாக்கம் – பரவல் – பதிப்பரசியல்

    முனைவர் ப.திருஞானசம்பந்தம்

    முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்

    தமிழியற் புலம்

    மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை – 21

                பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே நிறுவனம், திருநெல்வேலி சைவ சிந்தாந்த நூற் பதிப்புக் கழகம் ஆகியன தனிநபர் சார்ந்து, பதிப்புக்குழுவை உருவாக்கிப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை வெளியிட்டன. இருபதாம் நூற்றாண்டின் இறுதித் தொடங்கி இருபத்தோராம் நூற்றாண்டின் முற்பகுதிகளில் பாட நூல்கள் சார்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்டன. இவை பெரிதும் வணிக நோக்கத்தினை முதன்மையாகக் கொண்டிருந்தது. மேலும் எளிமைப்படுத்துதல் என்ற தன்மையில் சுருக்கமான உரைகளைக் கொண்ட பல பதிப்புகள் வெளிவந்திருக்கின்றன. இன்றும் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறு வெளிவரக் கூடிய கீழ்க்கணக்குப் பதிப்புகள் குறித்துத் தனியொரு சூழலில் விவாதிக்க வாய்ப்புண்டு. இரத்தின நாயகர் சன்ஸ், மர்ரே, கழகம் ஆகியவற்றின் மூலம் முன்னெடுக்கப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்புச் செயல்பாடுகள், பதினெண்கீழ்க்கணக்கின் தொகுப்பு முறைகள், பதினெட்டு நூல்களின் எண்ணிக்கை குறித்த வரையறைகள் மட்டும் இங்குக் கவனப்படுத்தப்படுகின்றன.

                இரங்கசாமி நாயக்கர் 1870இல் சென்னைத் துறைமுகம் அருகே உள்ள கந்தகோட்டத்தில் ஒரு புத்தகக் கடையைத் தொடங்கினார். இது 1920இல் பி.இரத்தின நாயக்கர் ஸன்ஸ் பதிப்பகமாக உயர்வு பெற்றது. இப்பதிப்பகத்தின் மூலம் ஆத்திசூடி, சித்தர் ஞானக்கோவை, தனிப்பாடற்றிரட்டுகள், சித்த மருத்துவம் தொடர்பான நூல்கள் வெளியிடப்பட்டன. 1838ஆம் ஆண்டு திருத்தணிகை சரவணப் பெருமாள் ஐயர், திருக்குறளின் பரிமேலழகர் உரையைத் தழுவி, பதவுரையும் கருத்துரையும் விசேடவுரையும் எழுதிப் பதிப்பித்துள்ளார். இப்பதிப்பினைக் களத்தூர் வேதகிரி முதலியார் மீள்பதிப்பாகப் பி.இரத்தின நாயக்கர் சன்ஸ் பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டதாக ஒரு குறிப்பு கிடைக்கின்றது. புத்தகங்களில் இடம்பெற்றிருந்த சிறிய எழுத்துகள் வாசிப்பதற்கு ஏற்றதாக இல்லாத காரணத்தால் எழுத்துக்கள் பெரியதாக இடம்பெறும் வகையில், பெரிய எழுத்து கருட புராணம் பெரிய எழுத்து மகாபாரதம் என்று அட்டைகளில் அச்சிட்டு புத்தகங்களை வெளியிட்டனர். இதனைப் பிற பதிப்பகங்களும் பின்பற்றியுள்ளன. மேலும் கர்ண மோட்சம், அர்ச்சுனன் தபசு உள்ளிட்ட தெருக்கூத்து நாடகப் பிரிதிகளையும் இப்பதிப்பகம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 1934இல் இரத்தின நாயகர் ஸன்ஸ் நிறுவனம் திருமகள் விலாச அச்சியந்திரசாலையின் மூலம் நாலடியார் மூலத்தையும் களத்தூர் வேதகிரி முதலியார் இயற்றிய உரையையும் சேர்த்து வெளியிட்டுள்ளது. இந்நூலின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடல்,  பன்னிரு பாட்டியல் கூறும் கீழ்க்கணக்கு என்பதற்கான விளக்கம் ஆகியன இடம்பெற்றுள்ளன.

    நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்

    பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்

    இன்னிலைய காஞ்சியோ(டு) ஏலாதி யென்பவே

    கைந்நிலையொ டாங்கீழ்க் கணக்கு.

    இப்பாடலின் பின்னிரண்டு அடிகள், முந்தைய பதிப்பாசிரியர்கள் கொண்ட அடிகளில் இருந்து மாறுபட்டுள்ளன. ஆனால் பொருண்மை கொள்ளல் முறையில் மாற்றமில்லை. பதினெட்டு நூல்களின் பெயர்களை வேதகிரி முதலியார் தமது நாலடியார் பதிப்பில் தந்ததோடு, அவற்றுள் ஒன்றாகக் கைந்நிலையினைக் குறிப்பிடுகின்றார். இன்னிலையினைக் குறிப்பிடவில்லை.

    பதினெண் கீழ்க்கணக்கின் நூல்களாவன:-

    1. நாலடியார் 9. திணைமொழி ஐம்பது
    2. நாண்மணிக்கடிகை 10. திணைமாலை நூற்றைம்பது

                            நால் நாற்பது                         11. முப்பால்

    1. இனியவை நாற்பது 12. திரிகடுகம்
    2. இன்னா நாற்பது 13. கோவை ‘ஆசாரக்கோவை’
    3. கார்நாற்பது 14. பழமொழி
    4. களவழி நாற்பறது 15. மாமூலம் ‘சிறுபஞ்சமூலம்’

                நால் ஐந்திணை                    16. காஞ்சி ஷமுதுமொழிக்காஞ்சி|

    1. ஐந்திணை ஐம்பது 17. ஏலாதி
    2. ஐந்திணை எழுபது 18. கைந்நிலை என்பன.

     (களத்தூர் வேதகிரி முதலியார்: 1934 : 4).

    கீழ்க்கணக்கின் பெயர்களைச் சுட்டும் பழம் பாடலில் உள்ள கோவை, முப்பால் ஐந்தொகை என்ற தொடர்களுக்குரிய பொருள் கொள்ளல் முறையைக் குறித்தும் வேதகிரி முதலியார் தெளிவாக விளக்கியுள்ளார். கோவை, காஞ்சி என்பதற்குப் பொருள் – திருக்கோவையார், மதுரைக்காஞ்சி. முப்பாலுக்குத் திருக்குறள் அல்லாது வேறு நூல். ஐந்திணை என்பதற்கு ஐந்தொகை எனப் பாடங்கொண்டு வேறு ஐந்து நூல்கள் என இவர் காலத்து வழக்கிலிருந்த தொகை முடிபுகளை வேதகிரி முதலியார் மறுத்துரைக்கின்றார்.

                வேதகிரி முதலியாருக்குக் கீழ்க்கணக்கைச் சார்ந்து கைந்நிலை என்ற தெளிவான கருத்திருந்ததை மேற்கண்ட கூற்றின் மூலம் அறிந்து கொள்ளமுடிகின்றது.

                மர்ரே ராஜம் ஆங்கிலேயர்கள் நடத்தி வந்த ஏல நிறுவனத்தில் கணக்களாராகப் பணியாற்றினார். பின்னர் அந்நிறுவனத்தை ஏற்று நடத்தினார். ஏலத் தொழிலின் மூலம் பல்வேறு அறச்செயல்களைச் செய்து வந்த இவருக்குச் ச.வையாபுரிப்பிள்ளையோடு 1940இல் தொடர்பு ஏற்பட்டது. பல்வேறு அறச்செயல்களைச் செய்வதுபோல் நூல்களை அச்சிட்டு வழங்குவதும் அறக்கொடை எனச் ச.வையாபுரிப்பிள்ளை ராஜத்திடம் கூறுகின்றார். தமிழ்மொழி மீது ஈடுபாடு கொண்ட இவர் தமிழ்நூல்களைப் பதிப்பிக்கும் பொறுப்பைச் ச.வையாபுரிப்பிள்ளை அவர்களிடமே கொடுக்கின்றார். இதன்மூலம் தமிழ் இலக்கியங்கள் பல சந்தி பிரித்து எளிமையாக வாசிப்பதற்கு ஏற்றவாறு அச்சிட்டு வெளியிடப்பட்டன. திவ்ய பிரபந்தம், திருவாசகம், சிலப்பதிகாரம், மணிமேகலை, அட்டபிரபந்தம், கல்லாடம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பாட்டும் தொகையும், கம்பராமாயணம், பதினெண்கீழ்க்கணக்கு, வில்லிபாரதம் உள்ளிட்ட நூல்களை மர்ரே நிறுவனம் சந்தி பிரித்த பதிப்பாக வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவற்றுள் பதினெண்கீழ்க்கணக்கு நூற் பதிப்பு முயற்சி குறித்தும், பதினெட்டு நூல்கள் எவை என்பது குறித்தும் முன்வைக்கப்பட்ட கருத்துகள் இங்கு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

                செவ்விலக்கிய நூல்களையும் பிற நூல்களையும் தனித்தனி நூல்களாக வெளியிட்ட மர்ரே நிறுவனம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை ஒரே தொகுதியாகப் பதிப்பித்தது. இப்பதிப்புப் பணியில் மே.வீ.வேணுகோபாலப் பிள்ளை, வி.மு.சுப்பிரமணியம், மு.சண்முகம் மூவரும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்கி ஆராய்ந்து பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிப்பை உருவாக்கினர். இப்பதிப்பிற்குரிய ஆலோசனைகளைப் பெ.நா.அப்புஸ்வாமி, ரா.பி.சேதுப்பிள்ளை, தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வேங்கடராஜுலு ரெட்டியார். கி.வா.ஜாகநாதன், அ.ச.ஞானசம்பந்தன், சா.கணேசன் ஆகியோர் வழங்கியுள்ளனர். இப்பதிப்பின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு என்ற சொல்லுக்கான விளக்கம், பதினெட்டு நூல்கள் குறித்த விவாதங்கள், பதினெட்டு நூல்களிலுள்ள பாடல்களின் எண்ணிக்கை, ஆழ்வார் திருநகரியின் ஏட்டுப் பிரதிக் குறிப்பு, பதினெட்டு நூல்களின் காலம், பதினெட்டு நூல்களின் பொருண்மை அடிப்படையிலான பகுப்பு மற்றும் விளக்கம் உள்ளிட்ட பல செய்திகளை விரிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. பதினெட்டு நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலையையே மர்ரே பதிப்பு கொண்டுள்ளது. இதற்குக் காரணம் மர்ரே பதிப்பு முயற்சியில் முன்னோடி நிலையில் செயல்பட்டவர் ச.வையாபுரிப்பிள்ளை. இப்பின்புலத்திலேயே மர்ரே பதிப்பு கைந்நிலையைப் பதினெண்கீழ்க்கணக்கின் ஒன்றாகச் சேர்த்து, இன்னிலையைச் சேர்க்கவில்லை.

                பதினெண்கீழ்க்கணக்கின் பல்வேறு பிரதிகளை ஒப்புநோக்க உதவி மூவருள் ஒருவரான மு.சண்முகம் பிள்ளை பிற்காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்குப் பதவுரை எழுதிய வெளியிடும்போது இன்னிலையைச் சேர்த்து வெளியிட்டுள்ளார். இது இங்குக் கவனத்திற் கொள்ளத்தக்கது.

                இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் தமிழின் பல்வேறு பொருண்மை சார்ந்த நூல்களை உரைகளோடு வெளியிட்டது. அவற்றுள் பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்பும் ஒன்று. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுக்கு ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.பாலசுந்தனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர் உள்ளிட்ட அறிஞர்கள் உரையெழுதியுள்ளனர். அவ்வுரைகளின் முன்னுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைப் பதிவுசெய்துள்ளனர். இதில் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் கைந்நிலையா? இன்னிலையா? என்பது குறித்த விரிவாய் விவாதித்துள்ளனர். அவற்றைப் பின்வருமாறு தொகுத்துக் கொள்ளலாம்.

    • இன்னிலையை ஏற்பவர்கள் – ந.மு.வேங்கடசாமி நாட்டார், தி.சு.பாலசுந்தரனார் (இளவழகனார்)
    • கைந்நிலையை ஏற்பவர் – சி.புன்னைவனநாத முதலியார்
    • இன்னிலை, கைந்நிலை இரண்டையும் குறிப்பிட்டு இதில் எதை ஏற்பது என்ற தெளிவில்லாதவர் – சங்குப் புலவர்
    • திணைமாலை – மணி.திருநாவுக்கரசு

                பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்த பதினெட்டு நூல்கள் எவையெவை என்பது குறித்த தெளிவு கிடைத்த பிறகும் 20ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் வெளிவந்த கழகப் பதிப்புகள் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்தின. திருநெல்வேலி சைவசிந்தாந்த நூற்பதிப்புக் கழகம்வழி வெளிவந்துள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூற்பதிப்புகளில் ஒன்றாக இன்னிலை தொகுக்கப்படவில்லை (பக்.345). இக்குறிப்பை நெ.சுப்பையா பிள்ளை ‘பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள்| என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிற்காலங்களில் வெளிவந்த பதினெண்கீழ்க்கணக்குப் பதிப்புகளில் இன்னிலை, கைந்நிலை இரண்டும் சேர்த்து பதிப்பிக்கப்பட்டுள்ளன. கழகப் பதிப்புகளை உருவாக்கிய பதிப்பாசிரியர்கள் சிலர், தொடக்ககால பதிப்பாசிரியர்கள் முன்னெடுத்த பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதங்களைத் தொடர்ந்துள்ளனர். இதன்மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த சில குழப்பமான முடிவுகளைத் தங்களது பதிப்புகளில் முன்வைத்துள்ளனர் என்பதை அறிய முடிகின்றது. இதில் குறிப்பிடத்தக்கவர்கள் ந.மு.வேங்கடசாமி நாட்டார், பு.சி.புன்னைவனநாத முதலியார், வா.மகாதேவ முதலியார், அ.நடராசப் பிள்ளை ஆகியோர்.

                ந.மு.வேங்கடசாமி நாட்டார் கீழ்க்கணக்கின் கார்நாற்பது (1925), களவழி நாற்பது (1924, 1935), இன்னா நாற்பது (1935), இனியவை நாற்பது (1936) என்னும் நான்கு நூல்களுக்கு உரை எழுதியுள்ளார். இவற்றை ‘நானாற்பது மூலமும் உரையும்| என்று ஒரே தொகுப்பாக்கி கழகம் வெளியிட்டுள்ளது. இவற்றின் முகவுரைகளில் பதினெட்டு நூல்களுள் ஒன்றாக இவர் இன்னிலையினைச் சுட்டுகின்றார். கைந்நிலையினை ஏற்கவில்லை. ஆனால் இவர் கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பதைக் குறிப்பிடும் பழம்பெரும் வெண்பாவைக் காட்டி அதற்குக் கீழ் நால், ஐந்திணை, என்ற தொடரின் அடிப்படையில் எழுந்த விவாதங்களையும் சேர்த்து பதிவு செய்கின்றார்.

                நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஏலாதி ஆகிய நூல்களுக்குத் தி.பாலசுந்தரனார் இயற்றிய உரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இதில் நான்மணிக்கடிகையின் பதிப்புரையில் கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டாவன எவை என்று கூறும்போது இவர் இன்னிலையினைச் சேர்த்து குறிப்பிட்டுள்ளார். கைந்நிலையினைக் குறிப்பிடவில்லை (தி.சு.பாலசுந்தரம்: 2007: iii). பிற நூல்களின் பதிப்புரையில் அந்நூல்கள் குறித்த செய்திகளை மட்டுமே சுட்டியிருக்கின்றார். பாலசுந்தரனார் கீழ்க்கணக்கு நூல்களுக்கு  உரை எழுதிய காலத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் இன்னிலை பதிப்பு பரவலாகப் புழக்கத்தில் இருந்தது. இக்காரணத்தினால் இன்னிலையை இவர் கீழ்க்கணக்கில் ஒன்றாகக் குறித்திருக்க வேண்டும்.

                திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஆசாரக்கோவை, ஐந்திணையைம்பது, ஐந்திணையெழுபது, திணைமாலை நூற்றைம்பது முதலிய நூல்களுக்குச் சி.புன்னைவனநாத முதலியார் இயற்றிய விருத்தியுரையோடு கழகம் வெளியிட்டுள்ளது. இப்பதிப்புகளின் முகவுரையில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை என்பது குறித்த தமது கருத்துகளைச் சி.புன்னைவனநாத முதலியார் முன்வைத்துள்ளார். குறிப்பாகத் திரிகடுகம், சிறுபஞ்சமூலம், ஐந்திணையைம்பது ஆகிய நூல்களின் முகவுரைகளில் கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இன்னிலையினை இவர் குறிப்பிடவில்லை. பிற நூற்பதிப்புகளின் முகவுரையில் இவ்வெண்ணிக்கைப் பற்றிய கருத்து எதையும் கூறாமல் அந்நூற்களின் அமைப்பு, பாடல்களின் சிறப்பு ஆகியவற்றை மட்டுமே விளக்கிச் சென்றுள்ளார். பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் எவை எவை என்பதைப் பட்டியலிட்டுக் காட்டும்போது கைந்நிலையினைக் குறிப்பிட்டாலும், கழக உரையாசிரியர்களில் மற்றவர்களுக்கு இருந்த கருத்துத் தெளிவு சி.புன்னைவனநாத முதலியாருக்கும் இல்லை. (2007: xvv). இக்கருத்தையே சிறுபஞ்சமூலத்தின் நூன்முகத்திலும் (2007:v) இவர் குறிப்பிட்டுள்ளார்.

                கழகத்தார் இன்னிலை, கைந்நிலை இரு நூல்களுக்கும் சங்குப்புலவரை உரையெழுதச் சொல்லி இரு நூல்களையும் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளனர். அவற்றின் பதிப்புரையில் இவற்றில் எதை நீக்கி எதைக் கொள்ளுவது என்ற மயக்கம் கழகத்திற்கு ஏற்பட்டதாகச் சங்குப்புலவர் குறிப்பிடுகின்றார். ‘‘பதினேழு நூல்களைக் காண்பீர்கள்: பதினெட்டாவது நூல் இன்னது எனத் துணிவின்றிப் புலவருலகம் மயங்குகிறது. ‘நாலடி நான்மணி’ என்ற வெண்பாவின் பாடவேறுபாடு இம்மயக்கத்திற்குக் காரணமாம். இதனை இந்நூலின் முன்னுரையிற் காண்க. துணிவாக ஒன்றைத் தேர்ந்தெடுத்த பின்னர் உரையெழுதி வெளியிடக் கருதிக் காலந் தாழ்த்திருந்தும் பயனின்றாய் முடிந்தது. இன்னிலையும், கைந்நிலையும், பதினெட்டாம் நூல் எனப் புலவருலகம் எண்ண ஏட்டிலிருந்து கொண்டுவந்து காட்டிப் பதித்து வெளியிட்டனர் இருசான்றோர். எதனைக் கொள்ளுவது எதனைத் தள்ளுவது என மயங்கி நிற்கும் காலம் இது” (இன்னிலை – கைந்நிலை, பதிப்புரை, ப.3). அடுத்து ‘கைந்நிலை வரலாறு’ என்ற தலைப்பில் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலை பதிப்பு முயற்சிகள், கிடைக்கும் கைந்நிலை ஏட்டுச் சுவடியில் உள்ள பாடல்களின் சிதைவு நிலை, ரா.இராகவையங்காரின் ஆலோசனை மற்றும் அவரிடம் இருந்து பெற்ற கைந்நிலை ஏட்டுச் சுவடியினை ஒப்புநோக்கிப் பதிப்பித்த இ.வை.அனந்தராமையாரின் கருத்து விளக்கம் ஆகியவற்றை விரிவாக எடுத்துக்காட்டுகின்றார். மேலும் கைந்நிலையின் பாடல்கள் இளம்பூரணர், நச்சினார்க்கினியர், நாற்கவிராச நம்பி ஆகிய உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளமையினை எடுத்துக்காட்டி கைந்நிலையினைப் பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்று நிறுவ முயல்கின்றார். ஆனால் இறுதியாக இன்னிலை, கைந்நிலை இரு நூல்களில் எது பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்ற தெளிவினைச் சங்குப்புலவர் கூறவில்லை. மாறாக இதைத் தமிழ்ப்புலவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டுச் செல்கின்றார்.

    “இன்னிலை, கைந்நிலை என்ற இரு நூல்களிற் பதினெண்கீழ்க்கணக்கின் இறுதியாக நிற்கத்தக்க நூலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வது இனித் தமிழ் மொழிப் புலவர் கடமையாம்; இவ்விரு நூல்களுக்கும் விளக்கவுரை வரைவித்து அச்சிற்பதித்து வெளியிடுவது நம் கடமையாம் எனக் கழகத்தார் கருதினர். இவ்விரு நூல்களுக்கும் உரையெழுதும் கடமை எனக்குரிய தாயிற்று. கழகப் பணியாளர்களில் ஒருவனாதலின் மறுத்தற்கு வழியின்றி ஏற்று என் சிற்றறிவிற் கெட்டியவாறு உரை வரைந்து தந்தேன்”

    (சங்குப் புலவர், 2007: 9, 10).

    கழகத்தாரின் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இரு நூல்களுக்கும் சங்குப்புலவர் உரையெழுதியதை மேற்சுட்டிய கருத்தின் வழிப் புரிந்துகொள்ள முடிகின்றது.

                மணி.திருநாவுக்கரசு முதலியார் ‘நாலடி நான்மணி’ என்று தொடக்கும் வெண்பாவில் ‘மெய்ந்நிலைய காஞ்சியோடு ஏலாதி என்பவே’ என்ற பாடத்தைக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தொடர்பான விவாதத்தினை முன்னெடுக்கின்றார். பதினெட்டு நூல்களுள் இன்னிலையை ஒரு சாராரும், கைந்நிலையை ஒரு சாராரும், திணைமாலையை ஒரு சாராரும் உடன்படுகின்றனர் என்று குறிப்பிடுகின்றார். இவர் ஒரு சாரார் கருத்தை மட்டும்; பதிவுசெய்வது இங்குக் கவனத்திற்குரியது. “இனியொரு சாரார் மேலே சுறியவாறு ஐந்து திணை நூல்களையும் உடன்பட்டு, அதனோடு ‘இன்னிலை’, ‘கைந்நிலை’ என்னும் இரு நூல்களையும் கூட்டிக் கீழ்க்கணக்கு நூல்கள் இன்னின்னவெனக் கூறும் வெண்பாவின்கண் தொகை வரையறை காணப்படாமையின், பதினெட்டுக்குமேலும் இருபது நூல்கள் கீழ்க்கணக்கைச் சார்ந்தனவெனக் கொள்ளுதற் கண் வரக் கடவதாய இழுக்கென்னை என்பர். அது பொருந்தாமை மேலே காட்டிய பேராசிரியர் உரையான் இனிது உணரப்படும். அதனுள் அவர் பதினெண்கீழ்க்கணக்கெனத் தெளிவுறக் கூறியிருத்தல் காண்க” (மணி. திருநாவுக்கரசு முதலியார்: 2007: 5). திணைமாலை என்ற பெயரிலான நூலை ஐந்திணை நூல்களோடு சேர்த்து இவர் கணக்கிட்டு கொள்கின்றார். இன்னிலை, கைந்நிலை ஆகிய இரண்டு நூல்களையும் சேர்க்க இருபது நூல்கள் பதினெண்கீழ்க்கணக்கைச் சேர்ந்தது என்று கருத்து இருந்தது இதன்மூலம் புலனாகின்றது.

    தொகுப்பாக

                இரத்தின நாயகர் ஸன்ஸ், மர்ரே நிறுவனப் பதிப்புகளில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் எண்ணிக்கை குறித்த தெளிவாகக் கருத்துகள் இருந்ததைப் பார்க்க முடிகின்றது. திருநேல்வேலி சைவ சித்தாந்த நூற் பதிப்பு கழகப் பதிப்புகள் சைவ சமயப் பற்றினை வெளிப்படுத்தும் வகையில் உரையினை எழுதிய ந.மு.வேங்கடசாமி நாட்டார், இளவழகனார், சி.புன்னைவனநாத முதலியார், சங்குப் புலவர், மணி.திருநாவுக்கரசு முதலியார் ஆகியோர் இன்னிலையினைக் கீழ்க்கணக்கினைச் சேர்ந்த நூல் என்று அடையாளப்படுத்த முயன்றுள்ளனர். இன்னிலை ஒரு போலி நூல், கற்பித நூல் என்று தெளிவான முடிபுகள் கண்ட பிறகும் இவ்வாறு இவர்கள் செயல்பட்டது மிகுந்த ஆச்சரியத்தைத் தருகின்றது.

                பதினெண்கீழ்க்கணக்கு என்ற எண்ணிக்கை வரையறையில் உள்ள குழப்பமான முடிவுகளுக்குத் தெளிவுகள் காணப்பட்ட பின்பும், மீண்டும் தெளிவைத் தேடிக் குழப்பங்கள் உருப்பெற்று வருகின்றன. இவ்வகையான குழப்பங்களுக்கு வெகுசனத் தளத்தில் பதினெண்கீழ்க்கணக்கின் பதிப்புகளைக் கொண்டு சென்ற பதிப்பு நிறுவனங்களே காரணமாக அமைகின்றன. இவை தொடக்க காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைத் தனித்தனியே பெரும் புலவர்களைக் கொண்டு உரையெழுதச் செய்து பதிப்பித்தன. பின்னர்ப் பொருண்மை வாரியாக இவற்றைத் தொகுத்துப் பதிப்பித்தன. அதன் பின்னர் ஒட்டுமொத்தமாக உரையோடு கூடிய பதிப்பு, மூலப் பதிப்பு எனப் பல நிலைப்பட்ட பதிப்பாக்க முயற்சியில் ஈடுபட்டன. இத்தகைய செயல்பாடுகளின் மூலம் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை மக்களிடையே பரவலாகக் கொண்டு சேர்த்தனர். இதுபோல் கல்வி நிறுவனங்களில் பயிலும் பாடமாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் தொடக்க காலம் முதல் இடம் பெற்றிருந்தன. எளிய உரை நோக்கிய மாணவர்களின் செயல்களால் பதிப்பு நிறுவனங்கள் பலரையும் உரையெழுதச் செய்து அதை அச்சிட்டு வழங்கலாயின. இம்முயற்சிகளே பதினெண்கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் எவை என்பதை மறுவாசிப்பு செய்யக் காரணமாயின. இந்த வாசிப்பினால் தொடக்க காலப் பதிப்பாசிரியர்களும் ஆராய்ச்சியாளர்களும் முன்வைத்த கருத்துகளை இவர்கள் மீண்டும் புதியனவாகத் தாங்கள் முன்வைப்பதைப்போல் முன்வைத்து ஒரு மாயத் தோற்றத்தினைக் கட்டமைக்க முயன்றிருக்கின்றனர். இவ்வகையான முயற்சிகளில் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? திணைமாலையா? என்ற குழப்பம் மீண்டும் தலைத்தூக்கியது.

    சான்றாதார நூல்கள்

    1925    ந.மு.வேங்கடசாமி நாட்டார், நானாற்பது மூலமும் உரையும் (கார்நாற்பது, களவழி   நாற்பது, இன்னா நாற்பது, இனியவை நாற்பது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ          சித்தாந்த நூற்             பதிப்புக் கழகம், சென்னை.

    1934    சமண முனிவர்கள் இயற்றிய நாலடியார் மூலமும் வேதகிரி முதலியார் இயற்றிய உரையும்,             பி.இரத்தின நாயகர் ஸன்ஸ், திருமகள் விலாச அச்சியந்திரசாலை, சென்னை.

    1956    பதினெண்கீழ்க்கணக்கு – காஞ்ச யேலாதி கோவை பதவுரை விளக்கங்களுடன்,     திருநெல்வேலி  தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற் பதிப்புக் கழகம், சென்னை

    1981    பதினெண்கீழ்க்கணக்கு, பதிப்பு – ஆசிரியக் குழுவினரால் பல பிரதிகளை ஒப்புநோக்கி           வெளியிடப்பட்டது, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, இரண்டாம் பதிப்பு.

    1982    வேம்பத்தூர் முத்துவேங்கடசுப்ப பாரதியார், பிரபந்த தீபிகை, பதிப்பாசிரியர்கள்:             ச.வே.சுப்பிரமணியன், அன்னிதாமசு, உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.

    2007    பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (திரிகடுகம், நான்மணிக்கடிகை,         சிறுபஞ்சமூலம்),           திருநெல்வேலி            தென்னிந்திய சைவ சித்தாந்தாந்த நூற்          பதிப்புக்கழகம், சென்னை.

    2007    பதினெண்கீழ்க்கணக்கு மூலமும் உரையும் (இன்னா நாற்பது, இனியவை நாற்பது,           கார்நாற்பது, களவழி நாற்பது), கழக வெளியீடு, சென்னை.

    2007    பதினெண்கீழ்க்கணக்கு (ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது,           திணைமாலை நூற்றைம்பது, இன்னிலை – கைந்நிலை), கழக வெளியீடு, சென்னை.a

    Share
  • தொல்தமிழரின் சகுன நம்பிக்கைச் சுவடுகள்

    முனைவர் ம. தமிழ்வாணன்

    முதுநிலை ஆய்வு வல்லுநர்

    செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்

    தரமணி, சென்னை – 113

     

    பொதுவாகச் சகுனம் அல்லது நிமித்தம் என்பது மக்களின் வாழ்வியல் மரபுகளில் ஒன்றாக விளங்குகிறது. பண்டைத் தமிழக மக்களிடையே மரபாகச் சில நம்பிக்கைகள் நிலவி வந்திருக்கின்றன. நம்பிக்கை என்பது நம் நாட்டில் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாட்டிலும் பன்னெடுங்காலமாக வேரூன்றிக் கிடக்கின்றது. அவ்வகையில், தமிழர்களின் பண்பாடு சார்ந்த நம்பிக்கைகளைச் சங்க இலக்கியங்கள் பதிவு செய்திருக்கின்றன. உலகில் வாழும் எல்லா இன மக்களுக்கும் அவர்கள் சமயம் சார்ந்த நம்பிக்கைகள் இருப்பது இயல்பு. பழந்தமிழர்கள் தங்கள் வாழ்வில் பின்பற்றிய நம்பிக்கைகள் பலவிதமானவையாகும். அவற்றில் சிலவற்றை இன்றும் வழக்கொழியாமல் பாதுகாத்து பின்பற்றி வருகின்றனர். தங்களது எண்ணத்திற்குத் தக்கபடி ஏற்படுகின்ற குறிப்பிற்குத் தக்கவாறு நம்பிக்கையைக் கொண்டிருந்தனர். அக்குறிப்புகள் நன்மை சார்ந்ததாகவோ அல்லது தீமை சார்ந்ததாகவோ இருப்பதாகப் பழந்தமிழர்கள் கருதியும் வந்துள்ளனர். தமிழர்களது இலக்கியங்களான செவ்விலக்கியத்தில் காணக்கிடைக்கின்றன. இவை பற்றிச் சுருக்கமாக ஆராய்வோம்.

    சகுனம்(நிமித்தம்)

    சகுனம் அல்லது நிமித்தம் என்ற சொல்லுக்குக் காரணம், சகுனம், அடையாளம், பொருட்டு ஆகிய பொருள்கள் உள்ளன. சகுனம் என்பது இயற்கையின் மொழி! ஒரு வழிகாட்டலாக இயற்கை எவ்வாறு பேசுகிறது, தாவரங்கள், விலங்குகள் எவ்வாறு பேசுகின்றன என்பதைக் கொண்டு எதிர்வரும் பலன் அறிவதாகும். மனிதன் எவ்வளவோ நவீன  வாழ்க்கை முறைகளுக்கு போயிருந்தாலும் தவிர்க்க முடியாதவைகளாக சில விடயங்கள் இருக்கவே செய்கின்றன. அவற்றில் சகுனங்கள் மற்றும் நிமித்தங்களுக்கு நிச்சயம் இடம் உண்டு. மூட நம்பிக்கை என்று பலவற்றையும் ஒதுக்குபவர்கள் கூடச் சகுனங்கள், நிமித்தங்கள் ஆகியவற்றில் தங்களை அறியாமலே நம்பிக்கை வைத்திருப்பார்கள். நிமித்தங்கள் என்பவை நாம் எதிர்பாராமல் சுற்றுப்புறத்தில் நடப்பவை, நம்மை எதிர் நோக்கி இருப்பவை, கேட்கக்கூடிய சப்தங்கள் ஆகியவையாகும். இவற்றை இரண்டாகப் பகுப்பர் அவை, 1. சுபசகுனங்கள் 2. அசுப சகுனங்கள் ஆகும்.

    சுபசகுனங்கள்

    மக்களால் சுபசகுனமாகக் கருதப்படுவது வீணை, புல்லாங்குழல், மேளம், சங்கு, இவைகளைப் பார்ப்பதும், இவைகளின் ஒலிகளைக்கேட்பதும் ஆகும்.  அழகிய பெண்கள், நாட்டியப் பெண்கள், தயிர், மஞ்சள் கலந்த அரிசி(அட்சதை) கரும்பு, அருகம்புல், நீர் நிரம்பிய குடம், பூக்கள், மாலைகள், கன்னிப் பெண்கள், கருடன், ஆலயமணி ஓசை, விளக்கு, தாமரைப்பூ, நாய் தன் உடலைச் சிலிர்ப்பது, பிணம் எதிரே வருவது, பசு மாடுகள் போன்றவைகளாகும்.

    அசுப சகுனங்கள்

    மக்களால் அசுபசகுனமாகக் கருதப்படுவது அணையும் விளக்கு, தண்ணீர் பாத்திரம் சாய்ந்து நீர் வெளியேறுவது, உடுத்திய ஆடை கிழிவது, செருப்பு அறுந்து போதல், அமங்கல வார்த்தை,   ஒற்றைத் தும்மல், சத்தமான வார்த்தைகள், வீட்டில் மரம் முறிதல், பல்லி இடப்புறம் கத்துவது, பன்றி, பாம்பு, குதிரையைக் காண்பது, சத்தமிடல், எண்ணெய்க் குடம், விளக்குமாற்றை கையில் வைத்திருப்பது, தன் நட்சத்திரத்துக்கு உரிய பட்சி இடமிருந்து வலமாகச் செல்வது, விருட்சம் சாய்வது, மிருகம் இறந்து விட்டதாகக் கேட்பது, எருமை மாடு ஆகியவையாகும்.

    சகுனங்களாகக் கருதப்படுபவை எப்படிப்பட்டதாக இருந்தாலும், சென்ற காரியத்தில் வெற்றி கிடைத்தால், அதை நாம் நினைப்பதில்லை. தோல்வியில் முடியும்போதுதான் இந்த ஆராய்ச்சியில் இறங்குகிறோம். சகுனங்களால் எந்தச் செயலும் கெடுவதில்லை. வெற்றியோ தோல்வியோ அவற்றின் அறிகுறிதான் சகுனம் என்கிறார்கள். நிமித்தம் என்ற சொல்லானது தொல்காப்பியத்தில் காரணம், நிமித்தம், கூட்டம் ஆகிய பொருட்களில் பயின்று வந்துள்ளது. சங்க இலக்கியத்தில் இச்சொல்லாட்சி வழங்கப்படவில்லை. ஆனால் புள்(பறவை) என்ற சொல் நிமித்தம் என்ற பொருளில் பலவிடங்களில் சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அக்காலத்தில் புள் பெரும்பான்மையும் நிமித்தத்திற்கு உரிய பொருளாகக் கருதப்பட்டிருக்க வேண்டும். இதற்கேற்பவே பறவை புள் நிமித்தமாக தொல்காப்பியத்தில் சுட்டப்பட்டுள்ளது. [தொல்காப்பியம் பொருளதிகாரம் 88:16-17] சிலப்பதிகாரத்தில் நிமித்தம் என்ற தற்காலப் பொருளில் இச்சொல் பயின்று வந்துள்ளது.[ சிலப்பதிகாரம் 16-165-169]

    செவ்விலக்கியத்தில் சகுனச் செய்திகள்

    அங்கத்துடிப்புகள்

    தமிழிலக்கண நூலான தொல்காப்பியத்தில்,

    ஆவொடுபட்ட நிமித்தம் கூறலும்.

    செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும்” (தொல்.கற்பு.36:3-4)

     என்று தொல்காப்பியர் பதிவிட்டுள்ளார். தலைவன் வெளியூருக்குப் போக இருக்கிறான். அந்தச் செய்தி கிடைக்கும் நேரம் பசு ஒன்று பால் நிறைய(மிகுதியாக) கறந்திருக்கிறது என்ற செய்தியும் கிடைக்கிறது. அதனால் தலைவனுக்கு நல்லது நடக்கும் என்று கருதி மகிழ்வுடன் விடை கொடுத்து தலைவி அனுப்பி வைத்தாள் என்பதை அடிகள் சுட்டக்காணலாம்.

    இரவு நேரங்களில் நிமித்தங்கள் (சகுனங்கள்) வெளிப்படத் தெரியாது. அதனால் பிறர் பேசும் வார்த்தைகள், பறவைகளின் ஒலி போன்றவற்றைக் கேட்டு சுபமா? அசுபமா? என அறிந்து பலனைக்  கண்டறிந்துள்ளனர். இதனை,

    படை இயங்கு அரவம் பாக்கத்து விரிச்சி” (தொல்.புறத்.3:1)

    என்னும் தொல்காப்பிய அடி வெளிப்படுத்துகின்றன. ஆண்களுக்கு வலதுபுறமும் பெண்களுக்கு இடது புறமும் கண், புருவம், தோள் முதலியன துடித்தல் நல்ல சகுனமாகும்.

    பொலந் துடிக்கு அமை மருங்குல்போல், கண்களும், புருவமும், பொன்-தோளும்,

    வலம் துடித்தன; மாதிரம் துடித்தன; தடித்து இன்றி, நெடு வானம்

    கலந்து இடித்தன; வெடித்தன, பூரண மங்கல கலசங்கள்.” (கம்ப,சுந்தரகாண்டம்.202:2-4)

    மற்றொரு பாட்டில் பெண்களுக்கு இடக்கண்ணும் ஆண்களுக்கு வலக்கண்ணும் துடித்தால் நன்மை என இன்றும் நம் தமிழர்களின் வழக்குகளில் இருப்பதைக் காண்கிறோம். சிலப்பதிகாரம் இதற்குச் சான்று தருகின்றது.

     “கள்ளுக நடுங்குங் கழுநீர் போலக்

    கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்

    உண்ணிறை கரந்தகத் தொளித்துநீர் உகுத்தன

    எண்ணுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன

    விண்ணவர் கோமான் விழவுநா ளதன்” (சிலம்பு. இந்திரவிழா ஊரெடுத்த காதை 236-240)

    இதில், கண்ணகி கோவலனைப் பிரிந்து வருத்தமுற்றிருந்தபோது, இந்திர விழாவில் கோவலனும் மாதவியும் கலந்து இன்புற்றிருக்கின்ற அவ்வேளையில், கண்ணகிக்கு வலக்கண்ணும் அதே நேரத்தில் மாதவிக்கு இடக்கண்ணும் துடித்தன என இளங்காவடிகள் கூற்றின் மூலம் பழந்தமிழர் வாழ்வில் நீண்ட பழக்கத்தில் இருந்திருத்தல் வேண்டும். எனினும் ஏனைய செவ்வியல் நூல்களில் இதனைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கச் செய்தியாகும்.

    கனவும் விளைவும்

    பொதுவாகக் கனவு என்பது குறிப்பிட்ட ஒரு நிகழ்வினை உணர்த்துவதாக இருக்கின்றன என இலக்கியங்களின் வாயிலாக நாம் பல்வேறு இடங்களில் காணலாம். புறநானூற்றிலும் கனவினால் ஏற்பட்ட ஓர் அச்சத்தைப் பற்றிப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    எயிறுநிலத்து வீழவும் எண்ணெய் ஆடவும்

    களிறுமேல் கொள்ளவும் காழகம் நீப்பவும்

    வெள்ளி நோன்படை கட்டிலொடு கவிழவும்    

    கனவின் அரியன காணா நனவின்” (புறம்.41:8-11)

    இப்பாடலால் சோழன் கிள்ளிவளவனின் பகைவர்களுக்கு வற்றிய மரம் தீப்பிடித்து எரிவது போலவும் எரிகொல்லி விழுவது போலவும் யாரோ ஒருவர் தன் தலையில் எண்ணெய் வார்ப்பது போலவும் தன் படையானது முழுமையாக வீழ்ந்தன போலவும் கனவு கண்டதாக புலவர் கோவூர் கிழார் பதிவு செய்திருத்தலின் மூலம் கனவில் நிகழ்ந்த நிகழ்வு அவர்களது எதிர்கால வினைகளுக்குக் குறிப்புணர்வாக அமைந்திருப்பதனை இங்கே காணமுடிகிறது. மேலும் கனவு நிகழ்வின் மீதும் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தனர் என்பது விளக்கப்பட்டுள்ளது.

    சிலப்பதிகாரத்தில் கோவலனின் கனவில் கட்டிய ஆடையை பறிக்கொடுத்தல் மற்றும் கோட்டுமா உண்தல் ஆகிய நிகழ்வல்லாத செயல்களும் (சிலம்பு.15:97-98) கோப்பெருந்தேவியின் கனவில் இயற்கைக்கு ஒவ்வாத செயல் நிகழ்வுகளும் (சிலம்பு.20:1-7) தீய நிமித்த குறிகளாக காட்டப்பட்டுள்ளன. இராமாயணத்தில் சீதைக்கு இடம் துடித்ததினால் ஏற்படப்போகும் நன்மையை திரிசடை வாயிலாகக் கூறும் பாடல்வரிகள் கொண்டும் அறியலாம். பொன்வண்டு ஒன்று செவியினிடத்தில் இன்னிசையைப் பாடிச் சென்றதன் வாயிலாகவும் சிங்கம் கூட்டத்தோடு வந்து சீதையை அழைத்துச் செல்வது போல் கண்ட கனவின் வாயிலாகவும் சீதைக்கு நன்மை ஏற்படப்போகிறது என்பதனைத் திரிசடை உணர்த்துவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. திரிசடையின் கனவில் தனது பத்துத்தலைகளிலும் இராவணன் எண்ணெய்த்தேய்த்துக் கொண்டு கழுதையும் பேயும் பூட்டியத் தேரின் மீதேறி இரத்த ஆடையுடன் தென் திசை நோக்கி செல்வது போல் கண்ட நிகழ்ச்சிகள் தீ நிமித்தக்குறியாக சொல்லப்பட்டுள்ளது.

    கணியரும் கணித்தலும்

    தொல்தமிழ் மக்கள் நாள், கிழமைப் பார்த்து தங்களது செயலினைத் தொடங்கியுள்ளனர். செவ்வியல் நூலில் போர் தொடங்குவதற்குமுன் நல்ல நாள் பார்த்தனர் என்றும் அதற்கென அரண்மனை கணியர் என அழைக்கப்படும் கணியர் நாளைக் கணித்துக் கூறினர் என்றும் புறநானூற்றுப் பாடல் சொல்கின்றது.

    புலவர்களும் மன்னர்களைப் பாடிப் பரிசில் பெறவேண்டி, நாளையும் கோளையும் பார்த்துச் சென்றனர் என புறநானூறு மூலம் நாம் அறியலாம்.

    நாளன்று போடிப், புள்ளிடைத் தட்பப்

    பதனன்று புக்குத், திறனன்று மொழியினும்,” (புறம்.124:1-2)

    இதற்கு தொல்காப்பிய நூலிலும் சான்று உள்ளது. “குடையும் வாளும் நாள்கோள்”(தொல்.பொருள்.புறத்.11:1) என கூறுவதன் மூலம், போர் தொடுத்து செல்ல வேண்டிய திசையை நோக்கி, நல்ல நாளில் தன் வலிமையான வாளினை வலம் வரச் செய்தனர் என்றும் அறிந்து கொள்ள முடிகிறது. நல்ல வேளையை முழுத்தும் என அழைத்தனர். அதுவே தற்போது சுபமுகூர்த்தம் என அழைக்கப்படுவதைக் காணலாம்.

    குடைநாட் கோள்

    மறவர் எல்லாரும் நற்சகுனம் பார்த்துப் போர்க்கெனப் புறப்படுதல் என்பது இயலாதது. ஆதலின், குடை, வாள், முரசு ஆகியவற்றை நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் புறவீடு செய்வதென்ற வழக்கம் வந்தது. அவ்வழக்கம் பற்றிக் குடையைப் புறவீடு செய்த இந்நிகழ்வு குடைநாட் கோள் என்பதாயிற்று.

    சென்று அடையார் மதில் கருதிக்

    கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று.” (புற.வெண்பா.6:96)

    (அடையார் = பகைவர்)

    வாள்நாட் கோள்

    முன்பு கூறியது போலவே நல்ல நாளில் நல்ல முழுத்தத்தில் வாளினைப் புறவீடு செய்தலின் வாள்நாட் கோள் எனப் பெற்றது.

    கலந்துஅடையார் மதில்கருதி

    வலம்தருவாள் நாட்கொண்டன்று” (புற.வெண்பா.6:97)

    (வலம் = வெற்றி)

    தொல்தமிழர்கள் தங்கள் இல்லத்தில் நடைபெறும் திருமணங்களைத் திங்களும் உரோகினியும் கூடிய நாளில் நடத்தி வைத்துள்ளனர்.

    கனையிருள் அகன்ற கவின்பெறு காலை

    கோல்களால் நீங்கிய கொடு வெண்டிங்கள்

    கேடில் விழுப்புகழ் நாடலை வந்தென” (அகம்.86:5-7)

    நல்லாவூர் கிழார் பாடிய இவ்வடிகளில்  “வெண்டிங்கள் (திங்கள்) மற்றும் கேடில் விழுப்புகழ் (உரோகினி) நாடலை” என்னும் சொற்கள் உணர்த்தும் பொருளின் வழி அறிந்து கொள்ளலாம். மற்றொரு அகப்பாடலிலும் விற்றூற்று மூதெயினனார் பதிவு செய்துள்ளமை சுட்டத்தக்கது.

    இருவிசும்பு விளங்கத் திங்கள்

    சகடம் மண்டிய துகள்தீர் கூட்டத்துக்

    கடிநகர் புனைந்து கடவுட் பேணி

    படுமண முழவோடு பரூஉப்பணை இமிழ” (அகம்.136:4-7)

    மக்கள் திங்களும் உரோகினியும் கூடிய நாளை குற்றமற்ற நன்னாள் என்ற நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் என்றும் அத்தகைய நாளிலேயே பெரும்பாலான திருமணங்கள் நடைபெற்றன என்பதைத் தெளிவுபடுத்துகிறது. (திங்கள் சகடம் மண்டிய துகள் தீர் – திங்களை உரோகினி கூடிய நன்னாள்).

    வெள்ளியும் பிறவும்

    தூமகேது (கரந்துறை கோள் எனவும் கூறுவர்) என்னும் கோளின் தோற்றம் உலகிற்கு பெருந்தீங்கு என்பர். மைம்மீன் ஆனது சனிக்கோளைக் குறிப்பதாகும். புறநானூற்றில் பாரி மன்னனின் பண்புகளைப் பாடுகின்றபோது, ‘சனிமீன் புகையினும்’ – எல்லா திசையிலும் புகை தோன்றி, வெள்ளி தெற்கே நோக்கி ஓடினால் உன் நாட்டில் மழை தவறாது பொழியும் என்று புலவர் கபிலர் போற்றிக் கூறியுள்ளதன் மூலம் இத்தகைய நம்பிக்கை இருந்துள்ளது என அறிவிக்கின்றன.

                    “மைம்மீன் புகையினும் தூமந் தோன்றினும்

                    தென்திசை மறுங்கின் வெள்ளி ஓடினும்” (புறம்.117:1-2)

    செவ்விலக்கியத்தில் ஒன்றான முத்தமிழ்க் காப்பியமான சிலப்பதிகாரத்திலும் இளங்கோவடிகள் மேற்கூறிய கருத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

    கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

    விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்” (சிலம்பு.நாடுகாண்.102-103)

    இதனால் இந்நம்பிக்கையானது வாழ்வியலில் தொடர்ந்து வந்துள்ளதை அறிய முடிகிறது.

    புள்ளின ஒலிகள்

    ஓர் தனிமனிதப் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் காலப்போக்கில் மாற்றம் பெறலாம். ஆனால் ஒரு சமுதாயத்தின் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் என்றும் மாற்றம் பெறாது. நற்றிணை முல்லைத்திணைப் பாடலொன்றில் பறவை நிமித்தத்தைக் கூறும் தலைவன் நம் வருகையைக் காக்கை முதலிய புள்ளினங்கள் அவருக்கு அறிவுறுத்தினவோ என்று கூறுவதாக அமைந்துள்ளது.

                “தோள்வழி யாப்ப ஈண்டுநம் வரவினைப்

              புள்அறி வுறீஇயின கொல்லோ”  (நற்.161:8-9)

    அக்காலத்தில் தன்னுடைய இல்லத்தருகிலே காகம் கரைந்தால் விருந்தினர் வருவர் என்ற நம்பிக்கை இருந்தது இதனைக் காக்கை பாடினியார் நச்செள்ளையார் பாட்டில் காணலாம். இன்றும் கிராமப்புறங்களில் அந்த நம்பிக்கை நீங்கா இடம்பெற்று விளங்குவதைக் காணமுடியும்.

    பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு       

    விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.”    (குறுந்.210:5-6)

    தலைவியைப் பிரிந்து சென்ற தலைவன் விரைவில் வந்து சேருவான் என முன்னமையே தெரிவிக்கும் செயலாகக் குயில் கூவுதல் பார்க்கப்படுகிறது. இதில் குயில் கூவுதல் நல்ல சகுனமாகக் கருதப்படுகிறது. இதனை நற்றிணைப் பாடலில் காப்பியஞ்சேந்தனார் குறிப்பிடுகிறார்.

                    “மனைமா நொச்சி மீமிசை மாச்சினை

                    வினைமான் இருங்குயில்; பயிற்றலும் பயிற்றும்” (நற்.246:3-4)

    வீரர்கள் போருக்குச் செல்லும்போது சில பறவைகளின் ஒலியைக் கேட்டும் சகுனம் பார்த்தார்கள். அவை வீரர்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளன. இதனைக் கபிலர் பாட்டிலும் கழைதின் யானையார் பாட்டிலும் காணலாம்.

                    “புள்ளிடைத் தட்ப” (புறம்.124:1)

                    “புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை” (புறம்.204:10)

    பதிற்றுப்பத்து பாடல் கரிக்குருவியின் ஒலி அழிவுக்கு அறிகுறியாகக் கருதப்பட்டதைக் காட்டுகின்றது. ஆந்தையின் அலறலை தீய சகுனம் என நம்பினர்.

                    “கருங்கண் பேய்மகள் கைபுடையூஉ நடுங்க

                    நேய்த்தோர் தூஉயநிறை மகிழ் இரும்பலி

                    எறும்பும் மூலசா இறும்பூது மரபின்

                    கருங்கண் காக்கையொடு பருந்து இருந்துஆர

                    ஓடாப் புட்கை ஒண்பொறிக் கழல்கால்” (பதிற்.30:36-40)

    முரசுக் கடவுளுக்கு பலிகொடுத்து அவற்றை காக்கையும் பருந்தும் உண்டால் பெரும் வெற்றி கிட்டும் எனவும், மேலும் பேய் பற்றிய நம்பிக்கையைக் கொண்டிருந்தனர் எனவும் “கருங்கண் பேய் மகள் கைபுடைய” எனும் வரியின் மூலம் நாம் அறியலாம்.

    குறிகூறும் கட்டுவிச்சி

    கட்டுவிச்சியிடம் குறி கேட்கும் வழக்கம் தொல்தமிழ்  மக்களிடம்  இருந்து இன்று வரை வழக்கில்  இருக்கின்றது. குறி சொல்கின்றவர்கள் தெய்வத்தின் உதவியினால் உண்மையை அறிந்து உரைக்கின்றனர் என நம்பினார்கள். குறி சொல்லும்போது  குலதெய்வத்தை வழிபட்டுக் சொல்கின்ற முறை  இருந்திருக்கிறது. குறுந்தொகைப் பாட்டில் குறி சொல்கின்ற பெண்டிரைக் கட்டுவிச்சி என்று அழைத்தமையை ஒளவையார் விளக்குகிறார்.

    அகவன் மகளே! அகவன் மகளே!

    மனக் கோப்பு  அன்ன நல்நெடுங் கூந்தல்

    அகவன் மகளே! பாடுக பாட்டே”     (குறுந்.23:1-3)

    இப்பாட்டில் தெய்வத்தை அழைத்துப் பாடுகின்ற கட்டுவிச்சி என்ற கருத்து அழகாகச் சுட்டப்பட்டுள்ளது.

    பல்லியின் ஒலிபலன்

    பல்லி எழுப்பும் ஒலியை நற்சகுனமாகக் கருதுவது வழக்கமான ஒன்றாகவே கருதப்படுகிறது. செவிலக்கியத்தில் தலைவனைப் பிரிந்து வாடும் தலைவி தலைவன் வரும் நாளை ஆவலோடு எதிர்பார்த்து நல்ல பலனை எதிர்நோக்கும்போது பல்லியும் ஓசை எழுப்பி அதற்கு இணக்கமான நல்ல நிமித்தத்தை அறிவித்ததாம்.

         “முன்னியது முடித்தனம் ஆயின் நன்னுதல்

         வருவம் என்னும் பருவரல் தீரப்

         படும்கொல் வாழி நெடுஞ்சுவர்ப் பல்லி” (நற்.169:1-3)

    பன்றியும் பல்லி சகுனம் பார்த்துத் தனக்கு இடையூறு நேரும் என்று குகையில் பதுங்குவதை அகநானூற்றில் 9, 88, 151, 289, 351 ஆகிய பாடல்களும் நற்றிணையில் 98ஆம் பாடலும் 169, 246 ஆகிய பாடல்களும் சகுனத்தை உணர்த்தி நிற்கின்றன. ஆண் பல்லி ஒன்று தன் துணையை அழைக்க ஒலி எழுப்பிய செய்தியையும் குறிப்பிடப்படுகின்றது. இதனை,

         “உகிர்நுதி புரட்டும் ஓசை போல

         செங்காற் பல்லி தன்துணை பயிரும்

         அம்காற் கள்ளி அம்காடு இறந்தோரே”  (குறுந்.16:3-5)

    என்று புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ பாடியுள்ளார். பல்லியின் ஒலியைக் கேட்டு சகுனம் பார்த்தல், இன்றும் நம்மிடையே தொடர்ந்து வருகிறது. தற்காலத்தில் அதற்கென பஞ்சாங்க நூல்கள் கூட விற்கப்படுகின்றன. அவற்றில் மேனியில் பல்லி விழுகின்ற இடத்தினைப் பொறுத்து பஞ்சாங்கத்தில் அதன் பலன்கள் விளக்கப்பட்டுள்ளன. அகநானூற்றின் 389ஆம் பாடல் பல்லியின் சொல் கேட்டு தன் பயணத்தைச் சிறிது நிறுத்தி பின்னர் பயணத்தைத் தொடர்ந்தனர் எனவும் தெரியவருகின்றது.

    விரிச்சியும் உன்னமும்

    ஒரு குறிக்கோளை அடையும் பொருட்டு ஒரு செயலை தொடங்குகின்ற பொழுது பிறர் கூறும் சொற்களையே சகுனமாகக் கொள்வதாகும். இவ்வழக்கம் தொல்தமிழரின் வாழ்வியலில் இருந்துள்ளமையை அறிந்துகொள்ள முடிகிறது. விரிச்சி என்பதன் பொருள் நற்சொல் கூறுதல் என்பதே ஆகும்.

    நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்

    செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா” (புறம்.280:6-7)

    மற்றொரு செவ்வியல் நூலான முல்லைப்பாட்டிலும் இதற்கான சான்று காணப்படுகின்றன.

                    “நாழி கொண்ட நறுவீ முல்லை

                    அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது

                    பெருமுது பெண்டிர் விரிச்சி நிற்ப” (முல்.9-11)

    தற்காலத்திலும் தமிழர் இல்ல நிகழ்ச்சிகளில் முதலில் வாழ்த்துபவர்களாக முதுமை, வயதான பெண்களே ஆவர். ஒரு செயலைத் தொடங்கும் முன் பெரியோர்களிடம் ஆசிபெறுதல் இதனுடன் தொடர்புடையதாகும். இம்முறை இன்றும் வழக்கத்தில் இருந்துவருவது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

    உன்னம் என்பது ஒருவகை மரம் ஆகும். இம்மரம் தழைத்து வளர்ந்திருக்குமாயின் தாங்கள் தொடங்க இருக்கின்ற செயல் வெற்றி பெறும் எனவும் வாடி இருக்குமாயின் தீய செயலில் முடியக்கூடும் எனவும் குறிப்பு உணர்த்துவதாக நம்பப்பட்டது.

                    “பொன்னி னன்ன பூவிற் சிறியிலைப்

                    புன்கால் உன்னத்துப் பகைவன் எம்கோ” (பதிற்.61:5-6)

    மேற்குறிப்பிட்ட செய்திகளின் வாயிலாகத் தொல்தமிழ் மக்களிடத்தே சகுனம் பார்க்கும் வழக்கம் வாழ்வியலோடு இணைந்து பிரிக்க முடியாத அங்கமாக இருந்ததை நன்கு தெளிவுபடுத்துகிறது. மேலும் தொல்தமிழர்களின் நம்பிக்கைகளிலிருந்து அவர்கள் வானியல் சார்ந்த அறிவியலிலும் சிறந்து விளங்கியிருந்தனர் என்பதற்குக் கோள்களைக் கொண்டு ஆராய்ந்தறியும் திறனையும் பெற்றிருந்தனர் என்பதையும் நம்மால் மறுத்துவிடமுடியாது. எனவே தொல்தமிழரின் நம்பிக்கைகள் பல நம்மையும் அறியாமலேயே நம்முடன் தற்போதும் தொடர்ந்து வருகின்றன. அவற்றிற்குச் சான்றாகச் செவ்வியல் நூல்களின் வாயிலாக நம்பத்தகுந்த சான்றுகளின் மூலம் நாம் அறிந்தும் அவற்றினை அனுபவ ரீதியிலும் காண்கிறோம். இப்பழக்கங்கள் பன்னெடுங்காலமாக தமிழர்களின் வாழ்விலும் தொடர்ந்து வருபவை என இங்கே அறியவும் முடிகிறது. எனினும் எதற்கெடுத்தாலும் சகுனம் பார்த்து நேரத்தைக் கழிப்பதை விட தான் மேற்கொள்ளும் செயலில் ஈடுபாடும் ஆர்வமும் இருந்தால் மட்டுமே வெற்றிக்கனி கிட்டும். நல்ல குணத்துக்கு சகுனம் ஒரு பொருட்டல்ல. “தீதும் நன்றும் பிறர்தர வாரா”(புறம்.192:2), “இடரிலும் தளரினும்” (தேவாரம்.ஆவடுதுறைப் பதிகம்.10) சகுனமானது அதை நம்பக் கூடியவனையும் அதற்குப் பயப்படக் கூடியவனையும் தான் பாதிக்கும். ஆனால் யார் அதனை ஒரு பொருட்டாகவே கருதவில்லையோ அவனை ஒரு பொழுதும் பாதிக்காது.

    துணைநூற்கள்

    1. வையாபுரிப்பிள்ளை, ச., சங்க இலக்கியம் (பாட்டும் தொகையும்), பாரி நிலையம், சென்னை வெளியீடு, முதற் பதிப்பு 1940
    2. இராமநாதன், லெ.ப.கரு, சங்ககாலத் தமிழர் வாழ்வு,. வெள்ளையன் பதிப்புக் கழகம்,. இராமநாதபுரம்,. 2ஆம் பதிப்பு,. 1958
    3. சுப்பிரமணியன்.ச.வே.(ப.ஆ.), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும், மணிவாசகர் பதிப்பகம், பாரிமுனை சென்னை. 2008
    4. தட்சிணாமூர்த்தி, அ., தமிழர் நாகரிகமும் பண்பாடும். ஐந்திணைப் பதிப்பகம், சென்னை
    Share
  • சமூக மேம்பாட்டுச் சிந்தனைகளை எடுத்துரைக்கும் கு.நா. கவின் முருகுவின் சுவரெழுத்து

    முனைவர். சு. செல்வகுமாரன்

      தமிழ் உதவிப் பேராசிாியர்,

        அரசு கலைக்கல்லுாாி ,

    பரமக்குடி – 623701

         யாப்பின் “பா” வகைகளை அடியொற்றி எழுதப்பட்டு வந்த தமிழ்க்கவிதை பாரதிக்குப்பின் வசனக்கவிதை என்றும், புதுக்கவிதை என்றும் ஒருவித உரைநடைச் சாயலில் வெளிவரத் துவங்கின. இக்கவிதைகள் புதிய பாடு பொருட்களில் சமூக அவலங்களை எடுத்துரைப்பினும் தனது கவிதைத் தன்மையினை இழந்து விட்டன என்றே சொல்ல வேண்டும். “தடி எடுத்தவன் எல்லாம் தண்டல் காரன் என்பது போல” எனும் பழமொழிக்கிணங்க இன்று நாம் எல்லோரும் கவிஞர்களாகி விட்டோம். ஆம் கவிதைக்கான அழகியலற்ற உரைநடைக் கவிதையின் கவிஞர்களாகி விட்டோம். காலம் மரபுக் கவிதைகள் /கவிதையினை மறுத்து இன்னொரு தளத்தில் வேகமாக ஓடத் தொடங்கியிருக்கிறது. ஆனால் கவிஞர் கு.நா. கவின் முருகு இன்றும் மாறவில்லை. தமிழ்க் கவிதையின் தடம் மாறாமல்  நின்று தமது கவிதைகளை பெரிதும் ஆசிரிய விருத்தப்பாவினால் யாத்து தந்துள்ளார்.  இயல்பாகவே மிக எளிய இசை வடிவத்தோடு எளிய மக்களையும் கவிதையை வாசிக்கத்தூண்டும் ஒரு வடிவமாகும் இது. இன்னும் சொல்லப் போனால் மொழியின் அழகியல் தன்மையினையும் இவரது கவிதைகள் நிரம்பக் கொண்டுள்ளன.

        “சொற்களிலும் சொற்றொடர்களிலும் மேலும் சற்று விரிவான பகர்வுகளிலும் செய்யப்படுகின்ற அல்லது நிகழ்கின்ற வித்தியாசப் படுத்தல்கள் மொழியை அழகுறுத்திக் கலையாக ஆக்கி விடுகின்றன. உவமம், உருவகம், எச்சம், குறிப்பு, உள்ளுறை, இறைச்சி முதலியவை மொழியின் இயல்பு வழக்குகளைக் கலையியல் வழக்குகளாக மாற்றுபவை. இலக்கியம் என்ற மொழிசார் கலை, மொழியின் பிரத்தியேகப் பண்புகளை இயன்ற மட்டும் தனக்குரியதாக்கிக் கொள்கின்றது. இலக்கியத்திற்கு இது ஒரு விசேடத் தன்மையைத் தந்து விடுகிறது. இத்தகைய தன்மைதான் கவிதைத்தனம் அல்லது இலக்கியத் தனம் (Poeticalness / Literariness) என்று பேசப்படுகிறது. இதனால் மொழி சார்ந்த பொருள், மொழி சார்ந்த கலையாகி விடுகின்றது” (தமிழ் அழகியல், பக் – 25,26)

    என்று தி.சு. நடராசன் சொல்வது போல ஒரு குறிப்பிட்ட நிலையில் கவின்முருகுவின் கவிதைகள் அழகியல்நிரம்பிய கவிதையாக மாற்றம் பெறுகின்றது. எல்லா படைப்புகளும் அழகியல்ரீதியில் முழுமை பெறுவதில்லை என்பதும் இங்கு கவனத்திற்குரியது.   தனது முதல் கவிதையிலேயே அம்மா, அப்பா, ஆசானை எப்படி மறப்பேன் என கேள்வி எழுப்பும் கவின்முருகு அவர்களை மறக்கப்படக் கூடியவர்கள் அல்ல என்பதை சுட்டுவதோடு, அவர் மறக்கவில்லை என்பதும் நாமும் இவர்களை மறக்கக் கூடாது என்ற அறிவுறுத்தலையும் தருகின்றன. ஆக கவிதை முழுமையும் கலைத்துவத்தை அழகியலை மீறி சீர்கெட்டு போகும் இன்றைய சமூகத் தேவையைப் பூர்த்தி செய்யும் அரிய கருத்துக்களின் பெட்டகமாக விளங்குகின்றன.

        ‘தந்தை சொல்லை மந்திரமாய் கொள்வேன் யானே’ என்று தந்தைக்கு கட்டுப்படும் மகனின் கூற்றாகவும், ‘அழுக்காடை நானுடுத்த மனந்தாளாதாள்’ என்னும் அம்மாவின் பாசத்தை யதார்த்தப்படுத்தும் ஒரு பிள்ளையின் குரலாகவும்,

         “பொல்லாங்கும் அழுக்காறும் இல்லாக் கல்வி

              பூத்திடவெ கற்பிக்கும் ஆசான்…”   (சுவரெழுத்து, ப – 21)

    என்பதோடு

         “வல்லமையை நாட்டிடவே எழுதும் பாட்டில்

              வந்தமர்ந்து சொல்தருவார் புனைய நற்பா” (சுவரெழுத்து, ப – 21)

    என ஆசானின், ஆசிரியரின் பெருமையை ஆற்றலை எடுத்துரைக்கும் நல் மாணவனின் சொல்லாகவும் விளங்குகிறது சுவரெழுத்து. மேலும் அழியாத, அழியக் கூடாத கல்வெட்டெழுத்தாகவும், மக்கள் மனதில் பதிய வேண்டிய சுவரில் சித்திரப்படுத்தப்பட்ட விளம்பர எழுத்தாகவும் சுவரெழுத்து விளங்குகின்றது என்றால் மிகையல்ல.

         நூலில் தமிழ் வணக்கம் துவங்கி தமிழுக்கென்றே சில கவிதைகளை படைத்தளித்துள்ளார். இவை கவிஞரின் தமிழ்ப்பற்றை, தமிழ் ஈடுபாட்டை வெளிக்காட்டி நிற்கின்றன. மட்டுமல்லாது இறைத்துதியாய் சிவத்துதியை அமைத்திருப்பதும் அவர்தம் இறை நம்பிக்கையை அடையாளப்படுத்தும் இடமாய் அமைகின்றது. “தனித்தமிழ் வாழ்க” எனும் கவிதை தனித்தமிழின் தேவையை, தாய் மொழியின் முக்கியத்துவத்தை புலப்படுத்தும் முதன்மையான கவிதையாக உள்ளது.

         “தனித்தமிழின் ஆட்சியிங்கு வேண்டும், எல்லாம்

             தமிழென்ப தாகிடவே வேண்டும், இன்பம்!

         இனித்தமிழ்த்தாய் பேசிடவே தமிழும் ஓங்கும்

             இன்பமாகித் திளைத்திடவே இனிது காப்போம்!

         தனியாட்சி செய்திடவே மொழியும் உண்டு!

             தமிழின்றி நமக்கென்று என்ன உண்டு!

         கனியாகப் பகிர்ந்திடுவோம் அலைகள் தாண்டி

             கருநமக்கே அடையாளம் தமிழே என்போம்!”  (சுவரெழுத்து, ப – 72)

         மேலும் இக்கவிதையின் தொடர்ச்சியாய் நம் தேசம் தமிழ் தேசம் மறக்க வேண்டாம் என்பதும், தமிழ் மட்டுமே நம் சொத்து அதனை இழக்க வேண்டாம் என்பதாகவும் வலியுறுத்தி பேசுகின்றார். அத்தோடு “பைந்தமிழே”, “தமிழைக் காப்போம்” போன்ற கவிதைகளின் வழி தமிழை உயரத்தில் ஏற்றிவிடும் ஏணியாகவும், உலகத்தின் ஒளி நல்கும் பொருளாகவும் பார்ப்பதும், தமிழை தாய் போல காத்திடவே உயிரும் ஈவோம். தமிழ் மணக்கும் சாம்பலாவோம் உயிரையேயீந்து என்று குறிப்பிடுவதும், கு.நா. கவின் முருகுவின் அடர்த்தியான தமிழ்ப்பற்றை உணர்த்தி நிற்கிறது. இதன் நீட்சியாகவே “தனி மாநிலம் தமிழ் மாநிலம்” கவிதையும் ஒலிப்பதைக் காண முடிகிறது.

         “பேசிடவே  தமிழென்ற மொழியின் பாலே

               பெருமையுண்டாம் நாட்டிற்கும் தமிழ் நாடென்றால்

          தேசியத்தில் தனித்து நிற்கத் தமிழ் நாடென்று

               தீவிரமாய் தனி மாநிலமாகச் செய்ய

          மாசில்லாத் தலைவர்கள் ஈந்த நாளாம்

               மகிழ்கின்றோம் இந்நாளில் தமிழனென்று

          பேசிடவும் வாழ்ந்திடவும் தமிழேயென்போம்

               பிரிவினைகள் இல்லாத நிலையில் நின்று” (சுவரெழுத்து, ப -90)

    மட்டுமின்றி வணக்கம் தமிழே, இனிமைத் தமிழே, ஈடில்லாத் தமிழ் மொழி, தமிழுக்கு ஏற்றமுண்டு, தமிழே ஆளும், செந்தமிழால் வாழ்வு என்பதாய் பொருள்பட “தமிழே நம் ஆளுமை” என்பதாய் பதிவாகியுள்ள கவிதையும் தமிழ் மொழி – இனம் – நாடு என்ற நிலையில் மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றன.

         “எந்தாயின் தமிழ்ப்பாலால் வாழும் நாங்கள்

               ஈடில்லா எம்மொழியால் உலகாள்வோரும்”  (சுவரெழுத்து, ப -56)

         மேற்சுட்டிய நிலையில் தமிழ், தமிழனின் மேம்பாட்டிற்காய் அரண் அமைக்கும் சுவரெழுத்து அத்தோடு நின்று விடவில்லை. மாறாகத் தமிழ்ச்சமூகம் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ச்சிகாண சாதி மத வேறுபாட்டை களையவும், அகிம்சையை, அறத்தை நிலை நிறுத்தவும், தீது கண்டால் ரௌத்திரம் கொள்ளவும், நாளையப்பொழுதை நமதுபொழுதாய் மாற்றவும் கவிதைவழி முயற்சிக்கின்றது.

         கவிஞர் தமிழின் சிறப்பை கற்பிப்பது போலவே சாதியின் அவலங்களை எதிர்த்தும்  அயராது குரல் கொடுக்கின்றார். தம் சுயச்சிந்தனையை சாதி எதிர்ப்புக்காய் முன்னெடுப்பதோடு, பாரதி போன்ற போராளிகளின் செயலினையும், சொல்லையும் தம் துணைக்கு அழைக்கின்றார். இனியொரு பிறவி வேண்டாம் எனும் கவிதையில்

         “இழி குலத்தில் பிறப்பெடுக்கும் பிறவி வேண்டாம்

               இன்னல்கள் தேற்றிடும் சாதி வேண்டாம்

          அழிகின்ற உடல் தானே என்றும் ஈதாம்

               அதிலென்ன சாதியென்றும் மதங்களென்றும்

          பழிசொல்லக் கீழ்சாதி மட்டுமென்ன

               பரத்தையரை வன்புணர நீங்கள் யாரோ

          ஒழித்திடவே நினைக்கின்ற எண்ணம் உண்டேல்

               உறித்தெறிய ஆணவமும் உடைகள் தானே” (சுவரெழுத்து, ப – 31)

    என்று சாதிஒழிப்பு குறித்த கருத்தியலை முன்னெடுக்கின்றார். இங்கு ஒழித்திடவே நினைக்கின்ற எண்ணம் உண்டேல் உரித்தெறிய ஆணவமும் உடைகள்தானே என அடையாளப்படுத்துவதன் மூலம் மனமிருந்தால் மார்க்கம்உண்டு என்பதையும் நினைவுபடுத்துகின்றார். ஆனால் இங்கு துரதிருஷ்டவசமாய் சாதியை ஒழிக்கின்ற மனம்தான் யாரிடமும் இல்லை என்பதை கவிதை நிறுவுகிறது.

         “தீமையை எரித்திடு” எனும் கவிதையில் தீயோர்களை நாட்டுக்கு கிடைத்த சாபப் பொருளாகப் பார்ப்பதும், ஆயுதமில்லாத தேசம் காண அன்பு அடிப்படைத் தேவையாக இருப்பதையும் அதற்கு ஆலயங்கள் சென்று வழிபட்டால் போதுமென்பதும், அவரின் நம்பிக்கை, அனுபவங்கள் சார்ந்ததாக மிளிர்கிறது. மேலும் மரங்களின் சிறப்பை பேசும் கவிதை, சமூகத்தின் அவலங்களை எடுத்துரைக்கும் “முற்றுப்புள்ளி” உள்ளிட்ட பல கவிதைகள் கவிஞரின் சமூக ஈடுபாட்டை கவிதை வழி மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.

         இன்றைய நவீன வாழ்வில் மனிதனின் வாழிடம், வாழ்க்கை முறை, கலை, கலாச்சாரம், பண்பாடு, நம்பிக்கை, சடங்கு என எல்லாமே மாறிப் போயுள்ளன. குறிப்பாக மக்கள் இன்று பெரிய அளவில் பணத்தின் மீது ஆசை கொண்டவர்களாக புதிய நுகர்வுப் பொருட்களின் மீது அசை உள்ளவர்களாக விளங்குகின்றனர். உண்மையான மனமகிழ்வை விட்டு போலிகளை நாடிச் சென்று தம் வாழ்வை தொலைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதனை பதிவு செய்யும் கவிதை,

         “யாரிடந்தான் தேடுவதோ நேர்மை தன்னை

              யாரைத்தான் நம்புவதோ ஞாலந்தன்னில் ”

    என்பதும்

         “நீதி சொல்லும் நிலையுமற்றுப் போனாரிங்கே

              நியாயங்கள் சவக்கிடங்குகள் பிணமாய்த் தூங்க”

         “வன்புணர்வு களவு கொலை கொள்ளை யென்றே

              வகையற்றுப் போகின்றார் மனிதரிங்கே”  (சுவரெழுத்து, ப -54)

    என்பதாகக் கூறி மனம் வருந்துகின்றார். மேலும் நிலமழித்து நிலம் விற்று மனைகள் கட்டி. நேர்த்தியான மாளிகைகள் வானுயரக்கட்டி கலங்களின்றி குவித்து விட்ட நெல் மணிகளின்றி உழவுத் தொழில் அழிந்து போகும் அவலத்தை புலப்படுத்துகின்றார்.

         கவிதையில் சாதிமத பேதங்களை கடுமையாகச் சாடும் அவர் ஓதி வைத்த மதநெறிகள் மறந்ததேனோ என மதநெறிகளின் மீது நம்பிக்கை கொள்வதும், கடவுள் வாழ்த்திற்காக சிவத்துதியை அமைத்திருப்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கதாகும். மேலும் தன்மானம் அற்ற மக்கள் உலகையாள இவர்களுக்கென சரித்திரம் எழுத என்ன இருக்கிறது என்பதாக சிந்திப்பதும், நிகழும் தவறினை சுட்டி என்னவென்று கேட்க யாருமில்லாத நிலையில் ஏமாற்றும் பித்தர்களே நலமாக வாழ்வதனையும் பேசும் கவிதை தன்மானம் காத்திட இந்த சமூகம் முடிவெடுத்து தரணியில் இவைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிறது.

         ஆக மேற்சுட்டியவாறு மனிதம் அவலமாகிப் போயுள்ளதை பேசும் சூழலில் விதைக்க  மறந்த மனித நேயம் என்றே ஒரு கவிதையில் என் தேசம் எங்கே போகிறது என கேள்வி கேட்கும் அவர் இழிநிலை நோக்கி போகத்தான் மனிதம் போல என தனக்குத் தாமே பதிலை இயலாமையாகத் தருகின்றார். கல்வி சந்தையாக்கப்பட்டு திருட்டுக் கொள்ளைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதை உணாத்துகின்றார். மேலும் சாதி மதம் குறித்து விவாதிக்கின்ற போது இனி உதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி பார்த்துத் தான் தோன்றும் போல என ஐயுறுகின்றார். இறுதியாக அடுக்கடுக்காக மனித அவலங்களை வரிசைப்படுத்தும் கவி இறுதியாக மானமற்றுக் கேவலமாய் உலகில் வாழ மக்களாகிப் போனவர்கள் தான் இன்றைய மக்கள் என்பதாக உரைப்பது காலரீதியில் குறிப்பிடத்தக்கப் பதிவாகும்.

         வள்ளுவரின் அறத்துப்பாலை போதிக்கையில் கொன்றார்க்கும் உய்வில்லை செய்த நன்றி கோமகற்கும் அதுவேயாகும் மாற்றம் இல்லை என்பதும், அகிம்சையை கற்பிக்கையில்

         “வாய்மையது வீழ்வதில்லை என்றும் எங்கும்

              வந்தனையும் செய்வார்கள் யாரோ நம்மில்

          மாய்ந்திடினும் மறவாமல் காக்க வேண்டும்

              மனிதருக்குள் அகிம்சை என்றும் உயிராய் மேவும்” (சுவரெழுத்து, ப -69)

    என்றும், மேலும் வாழ்வில் நம்பிக்கை பயக்கும் விதமாகவும், சிந்தனையோடு வழங்கியிருப்பதையும் பார்க்கமுடிகிறது.

         “எட்டிவிடும் தூரம்தான் வானம் என்றால்

              இனியென்ன மிச்சங்கள் இருக்குதிங்கே!

          இட்டுவிடு உச்சத்தில் கனவை வான

              எல்லைக்கே அப்பாலும் இல்லை உலகு

          தொட்டுவிடு நினைவாகும் கனவை உன்னுள்

              தொடரட்டும் செயலாக்கம்  வெல்லும் நினைவு” (சுவரெழுத்து, ப -82)

         தொகுப்பின் இறுதியாக “அவளென்பா” எனும் அருமையான ஒரு சிறுகாதல் காவியத்தையும் தந்துள்ளார். பாரதிபோல், பாரதிதாசன் போல் அதில் பயின்று வரும் மொழியின் அழகோ அழகு. தமிழ்ப் பண்பாட்டு மரபுக்குள் நின்று அவர் கவிதையில் கொண்டு சேர்க்கும் சொற்கள் மிக இனிமை. ஒரு ஆண் காதலில் ஒரு பெண்ணிடம் தோற்றுப் போகும் இடத்தை சுட்டும் வரிகள் வாசிக்கின்ற போது ஒரு ஆண்மகனை திரும்பி பார்த்து அசை போட வைக்கின்ற இடமாகிறது.

         “விழி தொடுக்கும் அம்புகளே போர்வாள் என்றால்

               வீழ்ந்திடுவேன் உன் மடியில் தோற்ற பின்னே

          மொழி தொடுத்தே இனிதாக்கி செப்பியாங்கு

               மோசத்தை விளைத்திட்ட விந்தை யாது

           பழித்தாலும் என் செய்வேன் பருவச் சீற்றம்

                பந்தியிட்டு முன்வருதே காதல் சொல்ல

          அழித்தாலும் அழியாது எழுதி வைத்த

                அன்பிற்கினிய காதல் என்று மென்னுள்” (சுவரெழுத்து, ப – 93)

         தொடர்ந்து வாடையிலே வீசுதுங்க குளிர்ந்த காற்று வசமாக வந்து சேர்ந்தா மாமன் பொண்ணு. சாடையிலே பேசுறாளே சமஞ்சபொண்ணு. கொசுவத்த இடுப்போடு செருகிவச்சா. ஓடையிலே தப்பி வந்த மீன் போல ஓசையற்று துள்ளுறேனே என்ன செய்ய என காதல் தன்னை ஆட்கொண்டுள்ள இயல்பை விவரிக்கின்றார். மட்டுமின்றி காதலின் அன்பையும், அதற்கு எழும் எதிர்ப்பையும் பதிவு செய்யும் அவர் உரிய நேரத்தில் ஓலை வைச்சி ஊருக்கு சொல்லிவிடுவேன் பரிசம் போட என்கிறார்.

         “யாருக்குச் சொல்வாயோ கனிந்த அன்பை

              யார் யாரும் சுடுவாரே தீஞ்சொல் கொண்டு

          போருக்கு எழுவாரே கொன்று வீழ்த்த

              பூவுக்கும் வேரறுக்க அஞ்சிடாரே

          தேருக்கு வடங்கட்டி இழுக்க யாரோ

              தேவதைக்கே அத்தை மகள் நானே தானே

          ஊருக்குச் சொல்லி விட நேரம் வந்தா

              ஓலை வச்சி சொல்லி விடுவேன் பரிசம் போட” (சுவரெழுத்து, ப -94)

    இவ்வாறாக பல்வேறு வர்ணனைகளோடு தொடரும் காவியத்தில் இறுதியாக இடைவளைய செங்கமம் எய்த அம்பாய் இன்மனத்தில் இன்னல்கள் தந்த பெண்ணாய் குடை விரிந்த வானமென மழையாய் பெய்து குணவதியாய் பூத்தாளே மனதில் நின்று என்பதாய் நிறைவடையச் செய்கிறார்.

         ஆக சுவரெழுத்து முற்றிலும் சமூகமேம்பாடு சார்ந்தும் இயற்கை, காதல், தமிழ், இறை சார்ந்தும் போலித்தன்மையற்ற கோட்பாட்டு கொண்டாட்டங்களற்ற தமிழ்மொழி, இலக்கியம், பண்பாட்டு, வாழ்வியல் மரபுக்குட்பட்ட நல்ல பல கவிதைகளை ஆக்கித் தந்துள்ளார். இதனை அவரது தமிழ்ச்சமூக கரிசனத்தின் வெளிப்பாடு என கொண்டாடலாம்.

    துணை நூற்பட்டியல்

    1. கு.நா. கவின்முருகு – சுவரெழுத்து, பூவரசி, முதல் பதிப்பு – 2017
    2. தி.சு. நடராசன் – தமிழ் அழகியல், காலச்சுவடு பதிப்பகம், முதல் பதிப்பு – 2012
    3. சாந்தன் – இருபதாம் நூற்றாண்டு உலக இலக்கியம், மூன்றாவது மனிதன், முதல் பதிப்பு – 2015
    4. மிலிட்டரி பொன்னுசாமி (தமிழில்) – கலையின் அவசியம், பாரதி புத்தகாலயம், முதல் பதிப்பு – 2014.
    5. தி.சு. நடராசன், க.பஞ்சாங்கம் – தமிழில் திறனாய்வு பனுவல்கள், முதல் பதிப்பு – 2014.

    Share
  • நீண்ட ஆயுளைப் பெறும் வழிகள்

        முனைவர்.த.பாலமுருன்

      உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துறை

        ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய

        கலை அறிவியல் கல்லூரி

                            கோயம்புத்தூர்-20

                    மனித உடலில் இரத்தம் ஓட்டம் இருந்து கொண்டே இருக்கும். அவ்வொட்டம் சீராகவும் மாறியும் ஓடும். இவ்வாறு ஓடும் ஓட்டத்தினை கருதல் அளவையால் ஆராய்ந்து கணக்கிடும் முறைக்கு நாடி எனலாம். நாடிகளின் செயலால் உடல் இயக்கம் நடைறுகிறது. மனித உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் உள்ளன எனச் சித்தர்கள் குறிப்பிடுகின்றனர். மூலாதாரத்திலிருந்து எழுபத்து இரண்டாயிரம் நாடிகள் கிளம்பி உடல் முழுவதும் பரவி,பெருக்கின்றன.

                    நாடிகள் 72000 என்றும் அவற்றுள் முக்கியமானவை 500 என்றும் அவற்றுள் சிறந்தவை 10 என்றும்  அவற்றுள் மிகச் சிறந்தவை மூன்று எனத் திருமூலர் கூறுகிறார். இதனை,

                                    “கால்- அது ஐந்நூற்று ஒருபத்து மூன்றையும்

                                    கால்- அது எண்மடி கொண்ட இவ்வாறே1”

    என்னும் பாடலின் மூலம் அறியலாம்.

    சிவயோகச் சாரம் ஒவ்வொரு மனிதர்களுக்கும் நாடிகள் எழுபத்திராயிரம் இருக்கின்றன என்று கூறுகிறது.2  அவற்றுள் முக்கியமானது இருப்பது நான்கு. இந்நாடிகள் எப்பொழுதும் உறங்கிக் கொண்டே இருக்கின்றன. குண்டலி என்னும் சக்திக்கு நடுவில் பத்து நாடிகள் மேலாகவும், பத்து நாடிகள் கீழ்ழாகவும் இரண்டு நாடிகள் ஒரு பக்கத்திலும் இரண்டு நாடிகள் மற்றொரு பக்கத்திலும் இருக்கின்றன. இந்த இருபத்து நான்கு நாடிகளுள் பத்து  நாடிகளை முக்கியமானதாகக் கூறுகின்றது.

                    மனித உடலில் எழுபத்து ஈராயிரம் நாடிகள் இருப்பதாகவும் அவற்றில் பத்து நாடிகள் மட்டும் சிறந்தவை எனத் திருமூலர் கூறுகின்றனர். இதனை,

                                    “எற்றியே எண்ணிடில் எழுபத்து ஈராயிரம்

                                    மற்றதில் பத்து வளமான நாடியே.3”

    என்னும் பாடலால்அறியலாம்.

    அவை, 1. இடகலை  2. பிங்கலை  3. சுழுமுனை  4. புருடன்  5. காந்தாரி  6. அத்தி  7. அலம்புருடன்  8. சங்குனி 9. சிங்குவை  10. குரு  என்பனவாகும். இந்த பத்து நாடிகளுள் மூன்று நாடிகளைச் சியோகச்சாரம் முக்கியமானதாகவும் கருதுகின்றது.4  அவை, இடகலை, பிங்கலை, சுழுமுனை என்பனவாகும்.

    மூவகை நாடிகளின் தோற்றம்

                    திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600 என்னும் நூலில் மூவகை நாடிகள் பற்றிய குறிப்புக் காணப்படுகிறது. இதனை,

                    “பாரும் இடைகலை பின்கலை மாறியே

                    தாரும் பெருவிரல் காலொடு தானேறி

                    காரும் கழுத்தில் கபாலம் வரை நின்று

                    வாரும் இடமாய் வலக்கரம் சாருமே5”

    என்னும் பாடலால் அறியலாம்.

    • இடக்கலை நாடி வலது கால் பெருவிரலிலிருந்து மேல் எழுப்பி மூலாதாரம் வழியாய் இதயத்துக்கு இடப்பக்கமாய் ஓடிகத்திரிக்கோலைப் போல் மாறித் தலையின் இடது பக்கமாய் நின்று, பின் இடது கையில் நிற்கும்.
    • பிங்கலை நாடி இடது கால் பெருவிரலிலிருந்து மேல் எழும்பி மூலாதாரத்தின் வழியாக இதயத்துக்கு வலப்பக்கமாய் ஓடிகத்தரிக்கோலைப் போல் மாறிக் தலையின் வலது பக்கமாய் நின்று, வலது கையில் நிற்கும்.
    • சுழுமுனை நாடியானது முதுகெலும்புத் தண்டுவடத்தின் வழியாக மூலாதாரத்திலிருந்து தலையின் உச்சி வரை பாய்ந்து நிற்கும். இதனை,

                    “வலக்கரம் தன்னில் வளமான பின்கலை

                    நிலைத்த இடக்கரம் நின்றது இடைகலை

                    துலக்க நடுமையச் சுழிமுனை ஓடிடும்

                    பிலக்க இவை மூன்றால் பிறந்தது தாதுவே6”

    என்னும் பாடலின் வாயிலாக அறியமுடிகிறது.

    மேற்கண்ட பாடலின் மூலம் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூவகை நாடிகளின் இருப்பிடத்தை அறியமுடிகிறது.

    மூன்று நாடிகள்

                    நாடிகள் இயக்கத்தினால் ஒருவனின் வாழ்நாள் அதிகமாகவும் குறையவும் செய்யும். அதனால் அந்நாடிகளின் இயக்கத்தை ஒழுங்குப்படுத்துவதற்கு மூச்சை சீராக இயக்க வேண்டும். நாடிகளின் இயக்கம், வாயுக்களைப் பொறுத்தே அமையும் எனலாம்.

    • பத்து நாடிகளில் இடகலை, பிங்கலை, சுழுமுனை ஆகிய மூன்றும் சிறந்த நாடிகள். இவற்றின் வழியாய் மூச்சு (சுவாசம்) ஓடுகிறது.
    • இடகலை என்பது இடது மூக்கு வழியாக ஓடும் மூச்சு ஆகும். இதனைச் சந்திரக்கலை என்பர்.
    • பிங்கலை என்பது வலது பக்க மூக்கில் வரும் மூச்சு ஆகும். இதனைச் சூரியக்கலை என்பர்.
    • சுழுமுனை என்பது நடுநாடியாகும். இதனை அக்கினிக் கலை எனக்கூறுவர். இது இரண்டு நாசியிலும் பரவியோடும்.

                    இடகலை என்னும் சந்திரக்கலையைப் பெண் எனக் குறிப்பிடுவர். இதன் நிறம் கருமையாகும். பிங்கலை என்று சொல்லப்படும் சூரியக்கலையை ஆணாகக் கூறுவர். இதன் நிறம் வெண்மை ஆகும். சுழுமுனை எனப்படும் நாடியை அலி நாடி எனவும் கூறுவர்.

    இடகலை

                    இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் இருக்கும். இடகலையில் சுவாசம் சரிவர நடந்தால் உடல் நலத்துடன் இருக்கலாம்; இடகலையில் சுவாசம் நடக்கும் பொழுது, தாகம் நீர்விருத்தி, தீர்மானம் செய்தல், வேலை செய்தல், நகை செய்தல், நகை அணிந்து கொள்ளுதல், கோயில் கட்டுதல், தருமம் செய்தல், புதிய வீட்டிற்குக் குடிப்போகுதல் போன்ற செயல்களைச் செய்யும் பொழுது பயன்களைப் பெறலாம்.

    பிங்கலை

                    பிங்கலை என்பது வலப்பக்க நாசி, இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் செய்யும். இந்நாடியில் சுவாசம் வரவும் போகவும் இருக்கும் பொழுது செய்யத்தக்கவையாக ஞானச்சர நூல் பின்வருவனவற்றைக் குறிப்பிடுகிறது.7

                    குருவின் உபதேசம் பெறல், ஒருவரை வணங்குதல், எதிரியின் படையைத் துரத்தல், பயிர் விளைவித்தல், வியாபாரம் செய்தல், திருடல், தோடல், சவாரிப் போதல், சங்கீதம் பாடல் போன்ற செயல்களைச் செய்தால் நன்மை விளையும். இடகலை அல்லது பிங்கலையில் செல்லும் மூச்சின் அளவைப் பொறுத்து ஒருவரின் ஆயுள் நீளவோ அல்லது குறையவோ செய்கிறது. திருமூலர் கூறும் இச்செய்தியினைத்  தெளிவாக அறியலாம்.8

               இடகலை அல்லது பிங்கலை

             வழி இயங்கும் மூச்சின் அளவு                                        ஆயுள்

    1. 4 விரல் கட்டை அளவு                                 உயிர் இறைவனாகும் (ஆயுளை

                                                                                                                       நிர்ணயிக்க இயலாது)

    1. 5 விரல் கட்டை அளவு    100 ஆண்டு
    2. 6 விரல் கட்டை அளவு   80 ஆண்டு
    3. 7 விரல் கட்டை அளவு   60 ஆண்டு
    4. 8 விரல் கட்டை அளவு   50 ஆண்டு
    5. 9 விரல் கட்டை அளவு 33 ஆண்டு
    6. 10 விரல் கட்டை அளவு 28 ஆண்டு
    7. 15 விரல் கட்டை அளவு 25 ஆண்டு

    சுழுமுனை

                    சுழுமுனை நாடி என்பது இரண்டு நாசியிலும் வரும் சுவாசம், இதனை அக்கினிக் கலை என்றும் குறிப்பிடுவர். இதனின் நிறம் சிவப்பு. இந்நாடியை அஃறிணைப்பால் அல்லது அலி எனக் குறிப்பிடுவர். இந்த நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது சுவாசத்தைக் கட்டினால் (அளவு குறைந்தால்) மனத்திற்கும் உடலுக்கும் இன்பம் உண்டாகும். இந்நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது சமாதி யோகம் செய்தால் நன்மை நடக்கும், எனச் ஞானச்சார நூல் குறிப்பிடுகின்றது.9

                    சிவவாக்கியர் நாடிகள் பற்றிக் குறிப்பிடும் பொழுது இடகலை, பிங்கலை சுழுமுனை என்னும் மூன்று நாடிகளுக்குள் இடகலை பிங்கலை என்னும் நாடிகள் மட்டும் நாகப் பிணையில் போலப் பின்னிக் கிடக்கும் என்றும் இவற்றின் நடுவே சுழுமுனை நாடி செல்லும் எனவும் கூறுகின்றார். இடகலை, பிங்கலை நாடிகள் சங்கின் ஒசைப் போலவும் சுழுமுனை நாடி தாரை போலவும் நீளமாக இருக்கும் எனவும் கூறுகின்றார். இதனை,

                                    “சங்கு இரண்டு தாரையென்று சன்ன பின்னல் ஆகையால்

                                    மங்கிமாளு தேஉலகில் மானிடங்கள் எத்தனை

                                    சங்கு இரண்டை யும்தவிர்த்து தாரையூத வல்லிரேல்

                                    கொங்கை மங்கை பங்கரோடு கூடிவாழ்லா குமே10”

    இடகலை, பிங்கலை நாடிகளைத் தவிர்த்து சுழுமுனை நாடி வழியாகச் சுவாசத்தை வரவும் போகவும் செய்தால் சிவனுடன் அதாவது இறைநிலையை அடையலாம் எனவும் கூறுகிறார்.  இடகலை, பிங்கலை என்றும் இரண்டு நாடிகளையும் தவிர்த்து சுழுமுனை நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது இறைவனைக் காணலாம் எனத் திருமூலரும்  குறிப்பிடுகிறார்.

    சுழுமுனை நாடியின் பயன்

                    சுழுமுனை நாடியில் சுவாசம் நடக்கும் பொழுது ஓர் ஒளித் தோன்றும். அந்த ஒளியை நான்கு நாழிகை நேரம் உள்ளே நிறுத்தினால் முதியவர்களும் இளையவர் ஆவர். அப்பொழுது இறைவனைக் காணலாம். இது உண்மை உண்மை எனச் சிவவாக்கியர் வலியுறுத்திக் கூறுகிறார். அதனை,

                                    “மூலநாடி தன்னிலே முளைத்தெழுந்த சோதியை

                                    நாலுநாழி உம்முளே நாடியே யிருந்தபின்

                                    பாலனாகி வாழலாம் பரப்பிரமம் ஆகலாம்

    ஆலமுண்ட கண்டராணை யம்மை யாணை யுண்மையே11”

    என்னும் பாடலால் அறியலாம்.

    நீண்ட நாள் உயிர் வாழ பன்னிரு அங்குலக் கனம் உள்ள மூச்சுக்காற்றை அடக்கி இடகலை என்னும் சந்திரக்கலையின் அமுதத்தை உண்ணக் கூடியவர் உடல், அழியாமல் நீண்ட காலம் இருக்கும் எனத் திருமூலர் கூறுகின்றார்.  எனவே, அந்நாடிகளை அறிந்து அந்நாடிகள் வழியாக மூச்சுக் காற்றினைச் செலுத்தினால் நீண்ட ஆயுளைப் பெறலாம். ஆறு விரற்கடை அளவு மூச்சுக் காற்று வெளியேறினால் எண்பது ஆண்டு ஆயுள் அமையும். ஏழு விரற்கடை மூச்சுக் காற்று வெளியேறினால் அறுபதாண்டு வாழலாம். இதனை,

    “ஏறிய ஆறினில் எண்பது சென்றிடும்

                                    தெறிய ஏழில் சிறக்கும் வகை எண்ணில்

                                    ஆறு ஒரு பத்தாய் அமர்ந்த இரண்டையும்

                                    தெறியே நின்று தெளி இவ்வகையே12”

    என்னும் பாடலின் வழி அறியலாம்.

    எனவே,  நாடிகளை அறிந்து அந்நாடிகள் வழியாகச் சுவாசத்தைச் செலுத்தினால் நீண்ட ஆயுளைப் பெறலாம். சுழுமுனை நாடி வழியாகச் சுவாசம் இயங்கினால் ஏற்படும் விளைவுகளைக் காணலாம்.

       சுழுமுனை இயங்கும்

       நாட்கள்                                                 பயன்கள்

    1. 2 நாள்                          அபானனும், சந்திரனும் உயிருக்கு உதவும்
    2. 3 நாள்                           விந்து செயம் உண்டாகி ஆயுள் நீளும்
    3. 4 நாள்                            நாதம், சிவம், விந்து, சக்தி, ஆகிய

         நான்கும் அருவமாக உடல் தோன்றும்

    1. 5 நாள்                            சதாசிவம், பரசிவம், பராசத்தி காணலாம்
    2. 10 நாள்                            பராசத்தியுடன்,பரசிவத்தையும்

                                                                         தரிசிக்கலாம்

    1. 15 நாள்                            ஏகசிவத்தைக் காணலாம்
    2. 20 நாள்                           சகஸ்காரத்தையும், ஆறு

               ஆதாரங்களையும் காணலாம்

    1. 25 நாள்                            மூலாதாரம், சுவாதிட்டானம் என்ற

         இரண்டையும் கடந்து  பிறவற்றில்

                                                                               அனுபவம் பெறலாம்

    1. 26 நாள்                            விசுத்தி, ஆக்ஞை என்ற இரண்டின்

                                                                         அனுபவம் எய்தும்.

    1. 27 நாள்                           சிவத்தைப் பிறருக்குக் காட்டலாம்
    2. 28 நாள்                            ஆன்மா, சிவத்தோடு கலந்திருக்கப்

               பிறருக்கு உணர்த்தலாம்.

    நாடியும் கிழமையும்

                    ஒருவனுக்குச் சுவாசத்தின் இயக்கத்தைப் பொருத்து ஆயுள் வரையறை செய்யப்படும். அதனால் சுவாசத்தை ஒழுங்குப்படுத்தி எந்நாளுக்கு எந்நாடியில் சுவாசத்தின் இயக்கம் இருக்க வேண்டும் என அறிந்து, அந்நாட்களுக்குத் தகுந்த சுவாசத்தின் இயக்கம் இருந்தால் ஆயுள் நீளுவதுடன் இறைவனையும் அடைய வழி கிடைக்கும்.

    • இடகலை நாடியின் சுவாசம் வெள்ளி, திங்கள், புதன் ஆகிய கிழமைகளில் இருக்க வேண்டும்.
    • பிங்கலை நாடியின் சுவாசம் சனி, ஞாயிறு, செவ்வாய் ஆகிய கிழமைகளில் இருக்க வேண்டும்.
    • வளர்பிறை வியாழனில் இடகலையிலும் தேய்பிறை வியாழனில் பிங்கலையிலும் சுவாசத்தை இயக்க வேண்டும்.

    மேற்குறித்த நாட்களில்  நாடிகளின் சுவாச இயக்கம் இருந்தால் நன்மைகள் பெறலாம் என்பது வெளிப்படை.

      அடிக்குறிப்பு

    1. திருமந்திரம், பா. 687.
    2. பெரிய ஞானக் கோவை, சிவயோகச்சாரம், ப.267.
    3. திருமந்திரம், பா.890.
    4. பெரிய ஞானக் கோவை, சிவயோகச் சாரம், ப. 268.
    5. திருமூலர் கருக்கிடை வயித்தியம் 600, பா. 20.
    6. மேலது. பா. 21.
    7. பெரிய ஞானக் கோவை, ஞானச்சர நூல், ப. 36.
    8. திருமந்திரம், பா.658.
    9. பெரிய ஞானக் கோவை, ஞானச்சர நூல், ப. 369.
    10. சிவவாக்கியர், பா. 21.
    11. பெரிய ஞானக் கோவை, சிவவாக்கியர், பா. 70.
    12. மேலது. பா. 767.

    Share
  • பண்புப் பெயர்ச்சொற்களில் கலைச் சொல்லாக்கத்தின் பங்கு

    முனைவர். நா.ஜானகிராமன்,

    தமிழ்த்துறைத்தலைவர்,

    பாரதிதாசன் பல்கலைக்கழகக்கல்லூரி,

    பெரம்பலூர்

     

    முன்னுரை

    உலக மக்களுள், தமிழர் தலைசிறந்த நாகரிகமுடையவர் என்பதை அவருடைய மொழியமைப்பும் கருத்துமே காட்டும் என்று ஞா. தேவநேயப்பாவாணர் சுட்டுகிறார். இத்தகைய சிறப்புவாய்ந்த நம் மொழியில் கலைச்சொல் பல உள்ளன. மொழியும் இலக்கணமும் , ஒன்றுடன்ஒன்று தொடர்புடையவை. இக்கட்டுரை சில பண்புப்பெயர் சார்ந்த கலைச் சொற்களை விளக்குகின்றது.

    கலைச்சொல்

    கலைச்சொல் என்பது technical term எனும் ஆங்கிலச் சொல்லின் மொழிப்பெயர்ப்பாகும். Technic  என்னும் ஆங்கிலச் சொல் Technicus எனும் இலத்தின் மொழியிலிருந்து பிறந்ததாகும். இந்த இலத்தின் சொல்லுக்குக் கலை என்று பொருள்.

    குறிப்பிட்ட அறிவுத்துறையில் இடம்பெறும் கருத்தமைவுகளை விளக்கும் சொற்கள் கலைச் சொற்களாகும்,  அவை அத்துறைக்குரிய சொற்களாகக் கருதப்பெறும். அவற்றைச் சிறப்புச்சொற்கள் (specialized vocabulary)  என அழைப்பர்.

    கலைச்சொல் என்பது சாதாரணச் சொல்லாக மட்டுமின்றி ஒரு குறிப்பிட்ட தன்மையையோ, நிகழ்வையோ, கருத்தமைவையோ, செயல்பாட்டையோ குறித்து நிற்பது. மேலும் கலைச்சொல் சிறப்புப் பொருள் தாங்கித் துறைசார்ந்து அமையும்.

    ஒருதுறையில் குறிப்பிட்ட கருத்துச் செறிவினை விளக்கப் பயன்படும் சொல் கலைச்சொல் எனப்படும். இது ஒவ்வொரு துறையிலும் தனித்தன்மைகள் பெற்று விளங்கும்.

    கலைச்சொல்லின்அமைப்பு

    ஒரு கலைச் சொல்லுக்கு ஒரு பொருள் என்ற நிலை இருக்க வேண்டும். இச்சொல் தனிச்சொல்லாகவும், தொகைச்சொல்லாகவும் அமைவதுண்டு. சமயம், தத்துவம், அறிவியல் போன்ற பலதுறைக் கருத்துக்கள் பிறமொழி பேசும் சமுதாயத்திலிருந்து மற்றொன்றிற்குப் புகும்போது கலைச்சொற்கள் உருவாகின்றன. இக்கலைச்சொற்கள் துறைச்சொல் என்றும் வழங்கப்படுகின்றன.

    குறிப்பிட்ட கருத்தினை மட்டும் உணர்த்தும் குறிப்பிட்ட ஒரு துறையைச் சார்ந்த மொழிக் கூறாகக் கலைச்சொல் அமைந்திருக்கும். சுருக்கமாகவும் தெளிவாகவும் இருக்கவல்லது செறிவுடன் விளங்குவது கலைச்சொல்லின் தேவை குறிக்கப்படும் ஒரு பத்தியிலோ, பக்கஅளவிலோஎழுதவேண்டிய கருத்தை ஒரே சொல்லில் கூறமுனையும் சுருங்கச் சொல்லி விளங்கவைக்கும் அனைவருக்கும் புரியக்கூடிய வகையில்இருக்கும் புதியகருத்துக்கள் அறிய உறுதுணையாகிறது. புதிய தொழிநுட்பவியல் மற்றும் அறிவியல் சொற்களைமக்கள் தெரிந்து கொள்ள உதவுகிறது. புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளை மக்கள் அறிய உதவும். வெளிநாடுகளில் உள்ள தயாரிப்புகள், கண்டுபிடிப்புகள் பற்றித் தெரிந்து கொள்ளவும், அவற்றை நம் நாட்டில் செயல்படுத்தி நாடு வளர்ச்சி அடையவும் பயன்படுகிறது.

    பண்புப்பெயர்கள்

    தமிழ்மொழிபெயர்களைஆறுவகைகளாகப்பகுத்துக்கொண்டுள்ளது.

    1. பொருட்பெயர்
    2. இடப்பெயர்
    3. காலப்பெயர்
    4. சினைப்பெயர்
    5. பண்புப்பெயர்
    6. தொழிற்பெயர்

    ஒரு பொருளின் பண்பை உணர்த்தும் பெயர் பண்புப்பெயராகும். நிறம், சுவை, அளவு, வடிவம் ஆகியன குறித்து வரும் சொற்கள் பண்புப்பெயர்களாகும். செம்மை, சிறுமை, சேய்மை, நன்மை, இளமை, புதுமை போல் வனவும் இவற்றிற்குரிய எதிர்ச்சொற்களும் இவை போன்ற பிறவும் மையீற்றுப் பண்புப்பெயர்கள் எனப்படும்.

    கருங்கண் = கண்ணேறு (திருஷ்டிதோஷம்)

    கருங்கந்து= நெற்களத்தில்பொலிக்குஅடுத்துவிழும்பதர்

    கருங்கறி = வளமானசதை

    கருங்காடு = சுடுகாடு

    கருங்காய் = இளம்பாக்கு, கொஞ்சங்குறையமுற்றியகாய்

    கருங்குணம் = தீக்குணம்

    கருங்கூத்து = இழிதரக்கூத்து, அநாகரிககூத்து

    கருங்கை = வேலையில்அடிபட்டுகருத்தகை, வலியகை, கொல்லுங்கை

    கருஞ்சருக்கு = கூலம், (தானியம்), சாறாயம்

    கருஞ்சார் = இடுப்புப்பொருத்து(Hip Joint)

    கருஞ்செய் = நன்செய்

    செங்களம் = போர்க்களம்

    செங்காய் = பழுக்கும்பருவக்காய்

    செங்காய்ப்புண் = பழுக்காதபுண்

    செங்குணக்கு = நேர்கிழக்கு

    செங்குத்து = நேர்க்குத்து

    செங்கை = கொடைக்கை

    செங்கோடு = செங்குத்தானமலை

    செங்கோல் = நேர்மையானஆட்சி, நேரானகோல்

    செஞ்ச, செஞ்சேவே = நேராகமுழுதும்,

    செஞ்சம், செஞ்சு = (நேர்மை), சரிமை (correctness) முழுமை

    செஞ்செல் = நேர்மையானசெயல்

    செஞ்செவியர் = செல்வர்

    செஞ்செழிப்பு = பெருஞ்செழிப்பு, ஏராளம்.

    செஞ்சொல் = திருந்தியசொல் , வெளிப்படைச்சொல்

    செஞ்சோறு = அரசன் தன் பொருட்டுப் போரில் இறக்க கருதிய வீரனுக்குக் காலமெல்லாம் அளிக்கும் சோறு

    செஞ்ஞானி = சிறந்தஞானி

    செந்தட்டு = அந்தரத்தட்டு, தன்மேல் விழும் அடியைத் தடுக்கை, ஏவின காரியத்தைத் தட்டுகை.

    செந்தமிழ் = இலக்கணத்தமிழ், தூயதமிழ்

    செந்தவிப்பு = செழிப்பு

    செந்தூக்கு = நேராகத்தூக்குகை.

    செந்தொடை = மோனையெதுகையில்லாதயாப்பு

    செந்நடை = செவ்வியநடை

    செந்நெறி = செவ்வியவழி , நன்னெறி

    செந்நிலம் = போக்களம்

    செந்நிறுவுதல் = நன்னெறியில்நிறுத்துதல்

    செம்பத்தி = உண்மையானஅன்பு

    செம்பாகம், செம்பாதி, செம்பால் = நேர்பாதி

    செம்புண் = ஆறும்நிலையிலுள்ளபுண்

    செம்பொருள் = நேர்பொருள், உண்மைப் பொருள், சிறந்த பொருள் , கடவுள் அறம்

    செம்மல் = தலைமை , வலிமை, தலைவன், இறைவன்

    செம்மாத்தல் = இறுமாத்தல், மிகமகிழ்தல்

    செம்மொழி = நற்சொல், திருந்தியமொழி.

    நீலம்

    நீலன் = கொடியன்

    நீலி = கொடியவள்

    பசுமை = இளமை,ஈரம், குளிர்ச்சி, அழகு, இனிமை, புதுமை

    பச்சுடம்புபச்சையுடம்பு = பிள்ளைப்பேற்றால்இளந்தவுடம்பு

    பச்சை = இடக்கர், வெளிப்படை

    பச்சைக்கள்ளன் = பெருந்திருடன்

    பச்சைக்குறவன் = பெரும்பாசாங்குக்காரன்

    பச்சைக்கொல்லண் = வேலைத்திறமையற்றகொல்லன்

    பச்சைப்பதம் = கூலத்தின்முற்றாப்பருவம், நன்றாய்வேகாதநிலை

    பச்சைப்புண்பசும்புண் = ஆறியிராதபுண், புதுப்புண்

    பச்சைப்புளுகன் = பெரும்பொய்யன்

    பச்சைப்பூ = பால்குடிக்கிறகுழந்தை

    பச்சைப்பேச்சு = இடக்கர்ப்பேச்சு, மறையாப்பேச்சு

    பச்சைப்பொய் = முழுப்பொய்

    பச்சைப்பசும்பொய் = பெருமுழுப்பொய்

    பச்சைமண் = இளங்குழந்தை

    பச்சைவெட்டு= பக்குவம்செய்யப்படாதநிலை, பழுக்காதநிலை

    பச்சைவெட்டுக்கல் = சுடாதகல்

    பசுங்குடி = யோக்கியமானகுடி, உழவன்

    பசுந்தமிழ், பைந்தமிழ் = இனியதமிழ்

    பசும்பை = வணிகர்தோளில்மாட்டிக்கொள்ளும்நீண்டபை

    பைங்கூழ் = இளம்பயிர்

    பைஞ்சோறு = சாணம்

    பொன்மை = பொலிவு, அழகு, விளக்கம்

    பொற்ப = பொலிவுபெற

    வெண்மை = வெறுமை, வெளிப்படை, அறிவின்மை, கள்ளமின்மை, உள்ளீடின்மை

    வெண்கடன் , வெண்ணிலைக்கடன் = ஈடுகாட்டாதுவாங்குங்கடன்

    வெண்காவல் =வெறுங்காவல்

    வெண்கை = தொழில்செய்துபழகாதகை

    வெண்சோரு = வெறுஞ்சோறு

    வெண்டேர் = கானல் (Mirage)

    வெண்ணிலம் = வெறுந்தரை, மணல்தரை

    வெண்ணோவு , வெண்ணோக்காடு = பிள்ளைப்பேற்றிற்குமுன்உண்டாகும்வெறுவேதனை.

    வெண்பதம்= இளஞ்சூட்டுப்பதம்

    வெண்பாட்டம் = முன்பணமின்றிவிடுங்குத்தகை

    வெண்புழுக்கல், வெண்புழுக்கு, வெண்புழுங்கல் = இளம்புழுக்கல், இளம்புழுங்கலரிசி

    வெண்மட்டக்கருத்து = மேலெழுதவாரித்தீர்மானம்

    வெண்மட்டம் = மேலெழுந்தவாரி , நுணுக்கமின்மை

    வெண்மட்டவேலை = நுணுக்கமில்லாத வேலை, மேலெழுந்தவாரியாகச்செய்யும்

    வேலை

    வெள்வீச்சு = ஆடம்பரப்பேச்சு

    வெள்வெடி = குண்டு இல்லாத தோட்டா

    வெள்ளந்தி = கள்ளங்கபடற்றவன்

    வெள்ளடி = சாதாரணம்

    வெள்ளடிவெருட்டு = பெட்டைமிரட்டு

    வெள்ளவெளி = பரவெளி

    வெள்ளறிவு = அவிவேகம்

    வெள்ளிடி = கோடையில் மழை பெய்யாது இடிக்கும் இடி எதிர்பாராது திடுமெனவரும் துன்பம்

    வெள்ளிடை , வெள்ளிடைமலை = மிகத்தெளிவாகயிருப்பது

    வெள்ளிது = வெளிப்படையானது

    வெள்ளிலை = வெற்றிலை

    வெள்ளுயிர் = தூயஆன்மா

    வெள்ளுருட்டு = வெற்றச்சுறுத்தம்
    வெள்ளுழவு = சிறிதுஈரமுள்ளநிலத்தில்உழும்உழவு

    வெள்ளெழுத்து = எழுத்து விளக்கமாய்த் தெரியாமைக்கான பார்வைக் குறை

    வெள்ளென = அதிகாலையில் , இருட்டுமுன், குறித்த காலத்திற்கு முன்பே

    வெள்ளேடு =வெற்றேடு

    வெள்ளேறன் = பழுதானஇரும்பு

    வெள்ளை = கள்ளமற்றவன்

    வெள்ளைக்கவி = பொருட்செறிவில்லாத பாட்டு

    வெள்ளைக்கோட்டி = பயனில் பேச்சு, பயனிலபேசும் அறிவிலார் கூட்டம்

    வெள்ளைச்சொல் = எளிய சொல், திருந்தாச்சொல்

    வெள்ளைத் தமிழ் = எளிய நடைத்தமிழ்

    வெள்ளைத்தனம் = கள்ளமின்மை

    வெள்ளைநோக்கு = கள்ளமற்றப் பார்வை

    வெள்ளைப்புண் = ஊன் வெளுத்து எளிதில் ஆறாத புண்

    வெள்ளைப் பூச்சு = தவற்றை மறைத்தல்

    வெள்ளைப் பேச்சு = வெளிப்படையானப் பேச்சு, கள்ளமற்ற பேச்சு

    வெள்ளைப் பூசுதல் = தவற்றை மறைத்தல்

    வெள்ளை மகன் = மூடன்

    வெள்ளை மதி = அறியாமை, அறிவுக் குறைவு

    வெள்ளை மழை = சிறுமழை

    வெள்ளை மனம் = கவடற்ற மனம்

    வெள்ளொக்கல் = குற்றமற்ற இனம், செல்வமுள்ள கிளைஞர்

    வெள்ளோக்காளம் = உமிழ்நீரை மட்டும் வெளியேற்றும் குமட்டல்.

    வெள்ளோட்டம் = புதுத்தேரை முதன்முதலாக ஓட்டிப் பார்த்தல், பயன்படுத்துவதற்கு

    முந்திய ஓட்டம். (பரீட்சை)

    வெள்ளோலை = எழுதப்படாதஓலை

    தொகைமொழியின் வகை

                           “வேற்றுமைத்தொகையே உவமத்தொகையே

                            வினையின் தொகையே பண்பின் தொகையே

                            உம்மைத் தொகையே அன்மொழித் தொகையென்று

                            அவ்வா றென்ப தொகைமொழி நிலையே” (தொல் சொல் நூ. 406)

    தொகை மொழிகள் ஆறு வகைப்படும் அவை,

    1. வேற்றுமைத்தொகை
    2. உவமத்தொகை
    3. வினைத்தொகை
    4. பண்பின் தொகை
    5. உம்மைத்தொகை

    6.அன்மொழித்தொகை

    பண்புத்தொகை

    வண்ணத்தின் வடிவின் அளவிற் சுவையினென்

                              நன்ன பிறவும் அதன்குணம் நுதலி

                              இன்ன திதுவென வரு உம் இயற்கை

                              என்ன கிளவியும் பண்பின் தொகையே (தொல் சொல் .நூ. 410)

    வண்ணம், வடிவு, அளவு, சுவை என்பனவற்றினும் , அத்தன்மைய பிறவினுமாகிய , ஒரு பொருளினது குணத்தைக் கருதி இன்னது இது என ஒன்றையொன்று விசேடித்து வரும் இயல்பினை உடைய எல்லாச் சொல்லும் பண்புத்தொகையாம்.

    பண்புத்தொகை என்பது பண்புப்பெயரைச் சேர்ந்து (தொகுத்து ) வரும் பெயர்ச்சொல். ஒரு பண்பைக் குறிப்பது பண்புப்பெயர்.

    1. நிறத்தைக் குறிக்கும் பண்புப் பெயர்ச் சொற்கள்

    செம்மை, பசுமை, வெண்மை, கருமை

    1. வடிவத்தைக் குறிக்கும் சொற்கள் – வட்டம் ,சதுரம்
    2. சுவையைக் குறிக்கும் சொற்கள் – இனிமை, கசப்பு
    3. குணத்தைக் குறிக்கும் சொற்கள் –நன்மை, தீமை
    4. எண்ணிக்கையைக் குறிக்கும் சொற்கள் – ஒன்று, இரண்டு, பத்து என்று பல்வேறு வகையான பண்புப்பெயருடன் சேர்ந்து வரும் பெயர்ச்சொல் பண்புத்தொகை எனப்படும்.

    (எ.கா)

    வெண்கரடி  =வெண்மை+கரடி

    வட்டக்கோடு = வட்டமான கோடு

    புளிச்சோறு = புளிக்கும் சோறு

    பெருங்கடல் = பெருமை (பெரிய) +கடல்

    மூவேந்தர் = மூன்று + வேந்தர்

    இரு பெயரொட்டுப்பண்புத்தொகை

    பண்புப் பெயர்ச் சொற்களுடன் வேறு பெயர்ச்சொல் சேர்த்து வருமாயின் அவை பண்புத்தொகை எனப்படும். அதுபோல இரண்டு சொற்கள் கொண்ட ஒரு பண்புத்தொகையில் முதலில் வரும் சொல் சிறப்புப்பெயர்ச்சொல்லாகவும் இரண்டாவது வரும் பெயர்ச்சொல் பொதுப்பெயர்ச்சொல்லாகவும் இருப்பின் அது இரு பெயரொட்டுப்பண்புத்தொகை எனப்படும்.

    (எ.கா)

    கைத்தலம், பலாமரம், மடித்தலம், இந்தியநாடு, வெண்தயிர், கருஞ்சிலை,  ஒண்டொடி, விற்படை, நாற்படை.

    பண்புப்பகுதிகள்விகாரப்படுதல்:

    ஈறுபோதல்இடைஉகரம்இய்யாதல்

    ஆதிநீடல்அடிஅகரம்ஐயாதல்

    தன்னொற்றிரட்டல்முன்னின்றமெய்திரிதல்

    இனமிகல் , இனையவும்பண்பிற்கியல்பே(நன்னூல் 136)

    எடுத்துக்காட்டு :

    பண்புத்தொகை விரி விளக்கம் விதி
    நல்லன், சிறுபொருள் நன்மை+அன், சிறுமை+பொருள் மையிறுதிகெட்டது. ஈறு போதல்
    கரியன், சிறியிலை கருமை+ அன், சிறுமை+ இலை விகுதி போய் உகரம் இகரம் ஆயிற்று இடை உகரம் [இ] ஆதல்
    பாசி, மூதூர் பசுமை+ ஊர். முதுமை+ ஊர் விகுதி போய் ஆதி நீண்டது ஆதி நீடல்
    பைந்தார் பசுமை+ தார் மைவிகுதிகெட்டுபசு’ என நின்றதில் ‘சு’ என்பதில் உகரம் இகரம் ஆயிற்று. அடி அகரம் ஐ ஆதல்
    குற்றி, நட்டாறு குறுமை+ ஆறுநடுமை+ ஆறு விகுதி போய் இறுதி எழுத்தின் தன் ஒற்று இரட்டியது தன் ஒற்று இரட்டல்
    செய்யன், செம்மை + அன் விகுதி போய் முன் நின்ற மெய் திரிந்தது முன் நின்ற மெய் திரிதல்

    மேலும்சில (,கா)

    அருமை + உயிர்  = ஆருயிர்

    அருமை +வினை = அருவினை

    அருமை+பொருள் = அரும்பொருள்

    இளமை+ அரசு = இளவரசு

    இனிமை +நகை= இன்னகை

    இனிமை+ நிழல் = இந்நிழல்

    கடுமை+கதிர் = கடுங்கதிர்

    கடுமை+ தவம் = கடுந்தவம்

    சிறுமை+ இல் = சிற்றில்

    சிறுமை+ பொழுது = சிறுபொழுது

    சிறுமை + ஊர் = சிற்றூர்

    செம்மை+ கதிர்= செங்கதிர்

    செம்மை+கை = செங்கை

    செம்மை+ தாமரை =செந்தாமரை

    செம்மை + நெல் = செந்நெல்

    செம்மை+கோலம் = செக்கோலம்

    செழுமை + குரங்கு= செழுங்குரங்கு

    தண்மை+ தார் =தண்டார் (தார் – மாலை)

    தண்மை+ தாமரை= தண்டாமரை (தன்மை – குளிர்ச்சி)

    தண்மை +தேன் = தண்டேன்

    தீமை+ தண்டம் = தீத்தண்டம்

    தொன்மை+ நிறம் = தொன்னிறம்

    நன்மை + ஆசிரியர் = நல்லாசிரியர்

    நன்மை+ ஆறு =நல்லாறு

    நன்மை+ கருமம் = நற்கருமம்

    நன்மை+ மரம் =  நன்மரம்

    நன்மை+ மருந்து = நன்மருந்து

    நெடுமை + கிரி = நெடுங்கிரி

    நெடுமை + புயல் = நெடும்புயல்

    பசுமை + கிளி = பைங்கிளி

    பசுமை+ சோலை = பசுஞ்சோலை

    பசுமை+ தலை = பைந்தலை

    பசுமை + தமிழ் = பைந்தமிழ், பசுந்தமிழ்

    பசுமை+ கொடி= பைந்தொடி

    பசுமை + தரு = பழந்தரு (தரு – மரம்)

    பெருமை+ அறிவாளன் = பேரறிவாளன்

    பெருமை+ அழகு = பேரழகு

    பெருமை+ கடல் = பெருங்கடல்

    மூன்று+ நீர் = முந்நீர்

    மும்மை + தமிழ் = முத்தமிழ்

    வளமை+ அரசு = வளவரசு

    வன்மை+ திறன் = வன்றிறல்

    வெண்மை+ குடை = வெண்குடை

    வெறுமை +கை = வெறுங்கை

    வெறுமை+ தேர் = வெறுந்தேர்

    வெறுமை + இடம் = வெற்றிடம்

    வெறுமை+ இலை = வெற்றிலை

    மேலும்சிலபண்புப்பெயர்ப்பகுதிகள்:

    செம்மை, சிறுமை, சேய்மை, தீமை, வெம்மை, புதுமை, மென்மை, மேன்மை, திண்மை, உண்மை, நுண்மை, வெண்மை, கருமை, பசுமை, பொன்மை, பெருமை, அண்மை, நன்மை, பருமை, இளமை, முதுமை, எளிமை, அருமை, குறுமை, நெடுமை, மடமை, புலமை, வெறுமை, நடுமை,முதலியனபண்புப்பெயர்பகுதிகளாகும்.

    முடிவுரை

    தமிழ்கலைச் சொற்கள் எனப்படுபவை துறைசார் தகவல்களை துல்லியமாக பகிர்வதற்காகப் பயன்படுத்தப்படும் சிறப்புத் தமிழ் சொற்கள் ஆகும்.  கலைச் சொல் ஆக்கமும், பயன்பாடும் தமிழ் மொழியில் தொன்று தொட்டு நடைபெற்று வரும் ஒரு செயற்பாடே எனினும் கடந்த சில நூற்றாண்டுகளில் அறிவியல் மற்றும் தகவல் புரட்சிகளில் காரணமாக கலைச் சொற்களின் தேவையும் பயன்பாடும் பல வழிகளில் வளர்ச்சி பெற்றுள்ளன.

    துணைநூற்பட்டியல்

    1. தொல்காப்பியம் (சொல்லதிகாரம்)
    2. உயர்தரக்கட்டுரைஇலக்கணம் ( 2)

    மொழிஞாயிறு ஞா. தேவநேயப்பாவாணர் பதிப்பாசிரியர் புலவர் அ. நக்கீரன்

    பதிப்பாளர் கோ. இளவழகன்.

    1. அறிவியலும் தமிழும் (கட்டுரை தொகுப்பு)

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181124 Dialogue with Arjuna Icam Canson 200gsm A4 (Lord is present in every heart. The mind pays obeisance to him in the form of the cow) wm

    ‘கன்றது கைநெல்லி,நின்றனுமன் கும்பிட,
    வென்றிட வேறென்ன வேண்டுமோ! -இன்றுனது
    உள்ளத்தின் சோர்வதனை கிள்ளியெறி, கீதைகேள்
    உள்ளங்கை நெல்லி உனக்கு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181123_Lotus leaf – DWA Canson 200gsm A4 icam wm

    இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
    பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
    அஞ்சின் அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
    பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு(நெருப்பு)….கிரேசி மோகன்….!

    Share
  • கல்வியை  நவிலும் அறவிலக்கியங்கள்

      -முனைவர் இரா. இராமகுமார்                              

    அறிமுகம்

                “ மாற்றம் பெறச்செய்யும் விடையாய்
    ஏமாற்றம்
    இல்லாத கொடையாய்
    காலமறிந்து
    பயிர்செய்யின் உயிராய்
    காலனையும்
    உய்த்து உணர்வாய்
                 கண்ணிமைக்குள் கல்வி காதலியானால்
    காதலிப்பதும்
    முப்பொழுதும் சுகமே
    காலமெல்லாம்
    எப்பொழுதுமில்லை சோகமே……..! ”

    மனிதன்  வாழ்க்கை முழுவதும்கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றது. படிப்புக் கல்வி முதல் பட்டறிவுக் கல்வி வரை மானுட குலத்தின்  சமூகக் கற்றல் தொடர்கின்றது.  பிறப்பு முதல் இறப்பு வரை இடைவிடாது கற்றாலும் ஒருவனால் கல்வியில் முழுமையினை அடைய முடியாது. எனவேதான் ‘கற்றது கைம்மண் அளவு; கல்லாதது உலகளவு’ என்னும் தொடர் மக்களிடையே நிலவுகிறது. நம்மிடம் இருக்கும் அறியாமையைப் போக்கி அறிவை விரிவாக்குவதில் கல்விக்குத் தனிப்பங்குண்டு. நம்மிடம் இருந்த அறியாமை விலகி அறிவு விரிவாகும் போது கல்வியில் இன்பம் தோன்றுகிறது. இன்றைய உலகில் கல்வி இன்றியமையாத ஒன்றாகத் திகழ்கிறது என்பதினை மறுப்பாரிலர். எந்தவொரு சமூகத்தினரும் கல்வியைக் கற்பதிலிருந்து விலகிச் செல்வது இன்றைய நவீன உலகில் மிகவும் அரிதாக காணப்படுகிறது. ஏனெனில் கல்வியின் சிறப்பை அனைத்துச் சமூகங்களும் புரிந்துள்ளன. கல்வி கற்றவன் எந்த இடத்திற்குச் சென்றாலும் அவன் பிற சமூகத்தால் மதிக்கப்படுகின்றான். இதற்குக் காரணம் அவன் கற்ற கல்வியே ஆகும். கல்வி கற்றவன் ஒருவன் தான் மரணிக்கும் வரை கல்வி கற்காமல் இருந்து தனது காலத்தை கழிப்பது என்பது மிகவும் சிரமமானதாகும். பண்டைய அறவிலக்கியங்கள் கல்வியின் மேன்மையினைச் சிறப்பாக எடுத்தியம்பியுள்ளன.

    அறவிலக்கியங்கள்

    சங்க காலத்திற்குப் பின்னர் சங்கம் மருவிய காலம் சமணசமயச் செல்வாக்கு மிக்கிருந்த காலமாக இருந்துள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்  இந்தக் காலப் பகுதியில் பாடப்பட்டுள்ளன. தொல்காப்பியர் இவ்வகை அறநூல்களை எண்வகை வனப்புகளில் ஒன்றான அம்மை என்பதாக வரையறை செய்துள்ளார்.

               “சின்மென் மொழியால் தாய பனுவலோடு
    அம்மை
    தானே அடிநிமிர்பின்றே” ( தொல்.செய்யுளியல். 235)

    தொல்காப்பியம் மற்றும் உரையாசிரியர்களின் விளக்கங்களினை முதன்மையாக வைத்துப் பிற்கால இலக்கண நூலார்,

                “அடிநிமிர் பில்லாச் செய்யுட் தொகுதி
    அறம்
    பொருள் இன்பம் அடுக்கி யவ்வகைத்
                  திறம்பட வுரைப்பது கீழ்க்கணக் காகும்  (பன்னிரு பாட்டியல் 542)

    என்று இலக்கணம் வகுத்தனர். சங்க இலக்கியங்களான பத்துப்பாட்டு, எட்டுத்தொகை இவைகளைப் பதினெண் மேல்கணக்கு என்றும், பின்னர்த் தோன்றிய  பதினெட்டு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கு என்றும் குறிப்பிடும் மரபு இலக்கிய வரலாற்றில் உண்டு. சங்க காலத்திற்குப் பிறகு கி.பி.மூன்றாம் நூற்றாண்டு முதல் ஆறாம் நூற்றாண்டு வரை அறத்தினை  வலியுறுத்தும் வகையில் நீதி நூல்கள் பல்கிப் பெருகின.  தமிழ் இலக்கிய வரலாற்றில் களப்பிரர் காலம்  இருண்ட காலம் என்று கருதப்படுகிறது. இக்காலத்தில் சங்க காலத்தில் போற்றப்பட்டக் காதலும் வீரமும் பின் தள்ளப்பட்டு அறமும், நீதியும் பெரிதும் போற்றப்பட்டன.

                                 ” நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணை முப்
                                   பால் கடுகம் கோவை பழமொழி மா மூலம்
                                   இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
                                   கைந்நிலையும் ஆம்கீழ்க் கணக்கு.”

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டில் நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, திருக்குறள் , திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம்,  முதுமொழிக் காஞ்சி, ஏலாதி,   ஆகிய பதினொரு அற நூல்களிலும் கல்வியின் சிறப்புத் தன்மைகள்  எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

    நாலடியார்

    உள்ளத்தால் நல்லவர்களால் வாழும் வாழ்க்கை வழி நெறி தவறாத வழிச் செலுத்தும் கல்வியே ஒருவருக்குச் சிறந்த அழகு சேர்க்கும் அணிகலனாகும். உடல், கூந்தல், ஆடை, ஒப்பனை, அணிகலன் போன்றவை ஒருவருக்கு உண்மையில் அழகு தருவன ஆகாது. கல்வியே அழகு தரும் என்பதனை நாலடியார் நவின்றுள்ளது.

                               “ குஞ்சி அழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
                                  மஞ்சள் அழகும் அழகல்லநெஞ்சத்து
                                 நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
                                 கல்வி அழகே அழகு”  (நாலடி – 131)

       நான்மணிக் கடிகை

    ஒருவன் கற்க வேண்டிய நூல்களைக் கசடறக் கற்றால் அவன் அறியாமையானது குறையும், அறியாமை குறைந்தால் புல்லறிவு நீங்கி இவ்வுலக இயற்கையை அறிவான். இவ்வாறு அறிந்தால் மெய்ந்நெறியாகிய ஞானநெறியில் செல்வதற்குரிய நிலைபெறுவான். அவ்வாறு செல்லின் இவ்வுலகில் பெற வேண்டிய புகழை நிலைநிறுத்தி மறுமையில் வீட்டுலகம் புகுவான் என்று நான்மணிக் கடிகை விளம்பியுள்ளது.

                     கற்பக் கழிமடம் அஃகும் மடம் அஃகப்
    புற்கந்தீர்ந்து
    இவ்வுலகின் கோளுணரும்
    கோளுணர்ந்தால்
    தத்துவ
    மான நெறிபடரும் அந்நெறி
    இப்பால்
    உலகின் இசைநிறீஇஉப்பால்
    உயர்ந்த
    உலகம் புகும்.” (கடிகை. 30 )

    இன்னா நாற்பது

    1.கற்றவர் சொல்லுக்கும் செயலுக்கும் தனி மதிப்பு உண்டு. கல்லாதவர் எத்துணைப் பெரிய செல்வராயிருந்தாலும் அவர்கள் கூறும் செயல்கள் நன்மை தராது. 2.நற்குடியிற் பிறந்தவன் கல்லாமல் இருப்பது துன்பம் தரும். 3.கல்வியால் நிறைந்து அடங்கிய பெரியோர் நடுவே அறிவில்லாதவன் துன்பம் படுவான். 4.அடக்கம் கல்வியுடையோரிடம் இருக்க வேண்டும் என்றும் அப்படி இல்லையென்றால் அவர்கள் துன்பம் அடைவார்கள் என்பதினை   இன்னா நாற்பது எடுத்துரைத்துள்ளன.

          கல்லார் உரைக்கும் கருமப்பொருள் இன்னா(இன். நாற். – 15)
    குலத்துப் பிறந்தவன் கல்லாமை யின்னா”  (இன்.நா.20:1)
    ஆன்றவிந்த சான்றோட் பேதை புகலின்னா”  (இன்.நா.18:1)
    ஆங்கின்னா அடக்க அடக்காதார் சொல்(இன்.நா.41)

    இன்னியவை நாற்பது

    1.பிச்சையெடுத்தாவது கற்பது இனிது. 2.குற்றங்களில் ஈடுபடாமல் கற்றல் மிக இனிதாகும். 3.சான்றோர்கள் சபையில் அஞ்சாதவனுடைய கல்வி இனிது. 4.கற்றவர்களின் முன் தான் பெற்ற கல்வியை உணர்த்துதல் இனிது. 5.அறிவுடையாருடைய வாய்மொழிச் சொற்களைப் போற்றுதல் இனியது. 6. பல நாட்களுக்கு நன்மையைச் சொல்லும் நூல்களைக் கற்பதைப்போல இனிதான செயல் வேறு ஒன்று இல்லை என்று கல்வியின் மேன்மையினை இன்னியவை நாற்பது புலப்படுத்தியுள்ளன.

     “பிச்சை புக்குஆயினும் கற்றல் மிக இனிதே(இனி. நா. 1)
    நாளும் நவை போகான் கற்றல் மிக இனிதே (இனி. நா.3)
    கழறும் அவை அஞ்சான் கல்வி இனிதே; “(இனி. நா.12)
    கற்றார் முன் கல்வி உரைத்தல் மிக இனிதே( இனி. நா.16)
    புலவர்தம் வாய்மொழி போற்றல் இனிதே( இனி. நா. 20)
    கற்றலின் காழ் இனியது இல்( இனி. நா.40)


    திருக்குறள்

    குறள் நவிலும் கல்வி அதிகாரத்தில்  ஒருவருக்குத் தம் வாழ் நாளில் கல்வியானது எவ்வகையினில் எல்லாம் பெருமையினைத் தரும் என்பதினை வள்ளுவர் பத்துக் குறட்பாக்களில் நயம்படத் தெரிவித்துள்ளார். பிழை இல்லாதவற்றைத் தனது குறைகள் நீங்குமளவுக்குக் கற்றுக்கொள்ள வேண்டும். கற்ற பிறகு அதன்படி நடக்கவேண்டும்.எனவே எண்ணும் எழுத்தும் எனப்படும் அறிவுக் கண்களைப் பெற்றவர்களே, உயிர் வாழ்வோர் எனக் கருதப்படுவார்கள்.

                 “கற்க கசடறக் கற்பவை கற்றபின்
    நிற்க
    அதற்குத் தக” (குறள் 391)

                  “எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
    கண்ணென்ப
    வாழும் உயிர்க்கு” (குறள் 392)

    என்கிறார். கண்ணில்லாவிடினும் அவர் கற்றவராக இருப்பின் கண்ணுடையவராகவே கருதப்படுவார். கல்லாதவருக்குக் கண் இருப்பினும் அது புண் என்றே கருதப்படும். ஆகவேகல்வி கற்றவரே உயர்ந்தவர்; கல்லாதவர் இழிந்தவர்.

                   “கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டு
    புண்ணுடையர்
    கல்லா தவர்(குறள் 393)

                  “உடையார்முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
    கடையரே
    கல்லா தவர்(குறள் 395)

    மகிழ்ச்சி பொங்கிடச் சேர்ந்து பழகுவதும், பிரிந்திட நேரும் போது மனங்கலங்குவதும் அறிவினில் சிறந்தோர் செயலாகும். தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிடவே விரும்புவார்கள். கற்றவனுக்கு எல்லா நாடும் சொந்த நாடாகும்; எல்லா ஊரும் சொந்த ஊராகும். இதனைத் தெரிந்தும் ஒருவன் இறக்கும் வரை கூடப் படிக்காமல் இருப்பது ஏன் என்னும் வினா சமுதாயத்தில் புரையோடி கிடந்த அறியாமை கருத்தில் கொண்டு தொடுக்கப்பட்டதாக உள்ளது.

                  “உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
    அனைத்தே
    புலவர் தொழில்.(குறள் 394)

                   “தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
    காமுறுவர்
    கற்றறிந் தார்(குறள் 399)

                  “யாதானும் நாடாமால் ஊராமால் என்னொருவன்
    சாந்துணையுங்
    கல்லாத வாறு(குறள் 397)

    கல்வி ஒன்றே அழிவற்ற செல்வமாகும். அதற்கொப்பான சிறந்த செல்வம் வேறு எதுவும் இல்லை என்பதால் ,மணலில் தோண்டிய அளவு சிறு குளத்தில் நீர் ஊறும்; மக்கள் கற்ற அளவே அறிவும் வளரும் என்பதோடு,ஒரு தலைமுறையில் பெறும் கல்வி அறிவானது, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையப் பெற்றுவிடும்; இது தெய்வப்புலவரின் தெய்வீக வாக்காக உள்ளது.

                  ”கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
    மாடல்ல
    மற்றை யவை(குறள் 400)

                 “தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
    கற்றனைத்
    தூறும் அறிவு(குறள் 396)

                  “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும்
    ஏமாப் புடைத்து(குறள் 398)

    திரிகடுகம்

    விளக்கில் எரியும் திரி எப்படி வெளிச்சத்தைத் தருகிறதோ அதேபோல் மனித வாழ்க்கைக்குக் கல்வி வெளிச்சம் தரும். கல்விக் கற்பிக்கும் ஆசிரியர் இல்லாத ஊரில் வாழ்தல் கூடாது என்பதினையும்,

        “கணக்காயர் இல்லாத ஊரும் பிணக்கறுக்கும்( திரி.10)

    நூல்களை ஆராய்ந்து நுட்பமான பொருள்களைக் கொள்ளுதலும், நூல்களுக்கு ஒவ்வாத சொற்களை பலர் விரும்பினாலும் சொல்லாதிருத்தலும், நல்ல சொற்களைக் கீழ்க்குலம் ஆகாதவரிடத்துச் சொல்லுதலும் ஆகிய இம்மூன்றும் கற்றறிந்தார் மேற்கொள்ள வேண்டிய செயல்களாகும் என்பதினை,

              நுண்மொழி நோக்கிப் பொருள் கொளலும், நூற்கு ஏலா
                              வெண் மொழி வேண்டினும் சொல்லாமை, நல்
    மொழியைச்
                              சிற்றினம் அல்லார்கண் சொல்லலும்இம்
    மூன்றும்
                              கற்றறிந்தார் பூண்ட கடன். ”  ( திரி.32)

    என்னும் பாடல் விளக்கியுள்ளது.

    ஆசாரக்கோவை

    ஆசிரியர்க்குக் காணிக்கையைத் தருதல், யாகம் செய்தல், தவம் இயற்றல், கல்வி கற்றல் என்ற நான்கினையும் மனம், மொழி, மெய் என்ற மூன்றும் மாறுபடாது விளங்குமாறு பாதுகாத்துச் செய்தல் வெண்டும். இல்லாவிடில் மாறுபட்டு விளங்கின எக்காலத்திலும் எவ்வுலகத்திலும் இவை  தனக்குப் பயன்படாமல் போகும் என்கிறது  ஆசாரக்கோவை.

             “ தக்கிணை வேள்வி தவம்கல்வி இந்நான்கும்
                                      முப்பால் ஒழுக்கினால் காத்துய்க்க
    உய்யாக்கால்
                                       எப்பாலும் ஆகா கெடும்.  ”(  ஆசா. 3 )

    பழமொழி

    கற்றவர்க்குச் சென்றவிடமெல்லாம் சிறப்பு உண்டு. அறிவுடையவரின் புகழ் நான்கு திசைகளிலும் சென்று பரவும். எனவே அறிவுடையவர்க்கு எந்த நாடும் அயல்நாடாகாது. அவர் சொந்த நாடேயாகும். தன் சொந்த ஊரில் இருப்பது போல இருக்க முடியும். ஆதலால் வழியில் உண்பதற்கு உணவு கொண்டு செல்ல வேண்டியதில்லை.

        ஆற்றுணா வேண்டுவது இல்“( பழ. 4)

    பல நூல்களைக் கற்றுணர்ந்தவர்கள் அடக்கம் உடையவராய் இருப்பர். தம்மைப் புகழ்ந்து பேசமாட்டார்கள்.

          “நிறைகுடம் நீர்தளும்பல் இல் “(பழ.9)

    அறிவாகிய பெருமை ஒருவனுக்கு ஆடை போன்றது. அறிவாகிய பெருமை இல்லாதவன் செல்வத்தைப் பெற்றதனால் பெருமை அடையமாட்டான்.

          “அணியெல்லாம் ஆடையின் பின் “(பழ. 26)

    என்பன கல்வியைச் சிறப்பிக்க வந்த பழமொழிகளாகும்.

    சிறுபஞ்சமூலம்

    அறிவுடைய நூல்களைக் கற்றவர்கள் தேவர்களுக்கு ஒப்பாவர்கள் அத்தகைய நூல்களைக் கற்காதவர்கள் பூத பிசாசுகளுக்கு ஒப்பாவர்.

            “தேவரே கற்றவர் கல்லாதார் தேருங்கால்(சிறு.மூ. 20)

    எல்லாவற்றையும் அறிந்தவனும் யாதொன்றும் அழியாதவனும் நற்குணமே இல்லாதவனும், குற்றமே இல்லாதவனும், எல்லா நூல் தொகுதிகளையும் முழுமையாகக் கற்றவர் இவ்வுலகில் இல்லை என்கிறது   சிறுபஞ்சமூலம்

       “ சத்தமெய்ஞ் ஞானம் தருக்கம் சமயமே”  (சிறு.மூ. 86 )

    இலக்கண நூல், அறிவுநூல், அளவை நூல், சமய நூல், அறிவின் மிக்கோர் இயற்றிய வீடுபேறு பற்றிய நூல் என்ற இவ்வைந்தையும் அறிபவன் மக்களுன் மேலானவனாவான்.

          குணனடங்கக் குற்றமில் லானாம் ஒருவன்”  (சிறு.மூ. 31 )

    முதுமொழிக்காஞ்சி

    கற்றலின் கற்றாரை வழிபடுதல் சிறந்தன்று” – சிறந்த பத்து

    கற்றது உடைமை காட்சியின் அறிய” – அறிவுப் பத்து

    நேராமல் கற்றது கல்வி யன்று” – அல்ல பத்து

    அரிய உண்மைகளைக் கற்றலை விடக் கற்றறிந்த பெரியோரைப் போற்றியொழுதுதல் மேலானது. கற்ற கல்வியுடைமையை அறிவினால் அளந்தறிவர். கற்பிக்கும் ஆசிரியனுக்கு ஒன்றையும் கொடாமல் கற்பது கல்வியாகாது. ஆகலின் ஆசிரியனுக்கு உற்றுழி உதவவேண்டும் என்பதுமுதுமொழிக்காஞ்சி எடுத்துரைக்கும் அறக் கல்வியாக உள்ளது .

     ஏலாதி

    எண்ணும் எழுத்துமாகிய  நூல்களை மாண்போடு கேட்டு எழுதி, படித்து, வாழ்வாருக்கு உணவு ,உடை,எழுத்தாணி, புத்தகம், புத்தகம் வைக்கும் பெட்டி ஆகியவற்றை இப்பிறவியில் கொடுத்து நூல்களை எழுதவைத்து வாழ்வாங்கு வாழும் சான்றோர் விரிந்த புகழினைப் பெறுவர்.

                  “ஊணொடு கூறை யெழுத்தாணி புத்தகம்
    பேணொடு
    மெண்ணு மெழுத்திவைமாணொடு
    கேட்டெழுதி
    யோதிவாழ் வார்க்கீய்ந்தா ரிம்மையான்
    வேட்டெழுத
    வாழ்வார் விரிந்து.”( ஏலா. 63 )

    நிறைவுரை

                         “முயற்சி செய்து பார்
    பயிற்சி
    பெற முயல்க
    தளர்ச்சியை
    நீக்கிப் பார்
    தாழ்வுமனப்பான்மையை
    ஒதுக்குக
    உன்னால்
    விடியல் மலரும்
    கல்வியால்
    மட்டுமே முடியும்……”

    கல்விக் கற்றவர்கள், தாம் கற்றவற்றை வாழ்வில் பயன்படுத்த வேண்டும். கல்வியின் வாயிலாகத் தாம் கற்ற அறநெறிகளை வாழ்க்கையில் பின்பற்ற வேண்டும். பின்பற்றினால் மட்டுமே கற்ற கல்வியால் பயன் உண்டு. கற்றதன்படி அறநெறிகளைப் பின்பற்றி வாழாதவர் பிறருக்கு அறநெறிகளை எடுத்துக் கூறும் தகுதியினை இழந்து விடுவர். ஆக்கல் மிகுந்த கல்வியில் அழிக்க முயல்வது அறிவியல் கண்டுபிடிப்புகள் அழிவினை நோக்கிச் செல்வதற்கு ஒப்பானதாகும். மறம் செல்வாக்குடன் திகழ்ந்த காலத்தில் அறம் உரைக்க வேண்டிய தேவை எழுந்ததன் விளைவு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் அற நூல்கள் மிகுதியாகத் தோற்றம் பெற்றுள்ளன. அக்காலம் முதல் இன்று வரை கல்வியின் மேன்மைத்தன்மைகளை எடுத்துரைக்கவும்,  வலியுறுத்தவும் அற நூல்கள் துணைபுரிந்துள்ளன. காகிதமாய்க் கல்வி கானகம் செல்லாமல் காவியமாய் கல்வி எந்நாளும் நல்லறமாகிடுதல் வேண்டும்.

    துணைநின்ற நூல்கள்

    1. அறவாணன், க.ப; (2008), ” அற இலக்கியக் களஞ்சியம் ” , தமிழ்க்கோட்டம், சென்னை- 29.
    2. சுப்பிரமணியன், ச.வே; (2008), தமிழ்ச் செவ்வியல் நூல்கள் மூலம் முழுவதும்” மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 108.
    3. சிற்பி பால சுப்பிரமணியம், நீலபத்மநாபன்;( 2013), சாகித்திய அகாதெமி, புது தில்லி – 1

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர் & நெறியாளர்,
    தமிழ் உயராய்வு மையம், விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்,   கன்னியாகுமரி மாவட்டம் – 629 701

     

    Share
  • குருவை நிந்தித்த இந்திரனின் துயரம்

    -முனைவர் த. ராதிகா லட்சுமி     

    பழங்காலத்தில் மாணவர்கள் குருவின் இல்லத்தில் தங்கி குருவிற்குப் பணிவிடை செய்து கல்வியை, வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தனர். தற்கால மாணவர்கள் குருவைக் கடமையைச் செய்பவராக கருதி கீழ்ப்படியாமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படுபவராக விளங்குகின்றனர்.

    ‘பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய
    சுருக்கத்து வேண்டும் உயர்வு:’

    என்ற வள்ளுவத்தின்படி பணிவின்மையால் குருவை நிந்தித்த இந்திரன் உயர்ந்த பதவியை இழந்து பிரமக்கொலை, பிரமகத்தி தோஷம் அடைந்து துன்புற்று ஓடி ஒளிந்தான். தேவருலகத் தலைவன் இந்திரன் தன் குருவான வியாழபகவானைப் பொருட்படுத்தாததன் விளைவைத் திருவிளையாடற்புராணத்தின் வழி அறியலாம்.

    அலட்சியப்போக்கு:

    முன்னர் கிருத யுகத்தில் தேவேந்திரன் தேவமகளிரின் அமுதம் போன்ற பாடலிலும், ஆடலிலும் மனம் திளைத்து மகிழ்ச்சி எனும் மதுக்கடலில் மூழ்கி இருந்தான். அப்போது இந்திரன் தன் குருவான சிவனையொத்த வியாழபகவானின் வருகையை உணராது, வழிபாடற்று வாளா இருந்தான். மகளிரின் மயக்கத்தில் வீழ்ந்தவர்களுக்கு நல்வாழ்வும் சாத்தியமோ? இதனை நன்குணர்ந்த  வியாழபகவான் அவ்விடம் விட்டு நீங்க, இந்திரனின் செல்வம் பொலிவில்லாமல் சிறிது சிறிதாகக் குறையத் தொடங்கியது. இது குருத்துரோகத்தால் ஏற்பட்ட கேடு என்பதைத் தெளிந்துணர்ந்த இந்திரன் தன் குருவைத் தேடிச் சென்றான். எங்குத் தேடியும் காணாதவனாய் அச்சத்துடன் நான்முகனை அடைந்து நடந்த நிகழ்வை எடுத்துரைத்தான். குருவை மதிக்காமல் நிந்தித்ததால் பாவம் கொழுந்துவிட்டு எரிவதையறிந்த நான்முகன் சூழ்ச்சியுடன் ‘உன் பழைய குருவைக் காணும் வரையில் துவட்டாவின் மகன் மூன்று தலைகளையுடைய அசுரர் குலத் தோன்றல் விச்சுவ உருவனைக் குருவாக கொள்க’ எனக் கூற  இந்திரனும் உடன்பட்டான்.

     இந்திரன் தேவர்களுக்கு நன்மை உண்டாக வேள்வி செய்யுமாறு புதிய குருவிடம் உரைக்க, விச்சுவனோ அசுரர்களுக்கு நன்மை புரியும்வகையில் வேள்வியைத் தொடங்கினான். இந்திரன் தன் ஞான திருஷ்டியால் விச்சுவனின் செயலில் வேறுபாட்டை அறிந்து வச்சிராயுதப் படையால் மோதி மூன்று தலைகளையும் தனித்தனியே பிளந்தான். அவை காடை, ஊர்க்குருவி, கிச்சிலியாக மாறிப் பறந்தன. அதன் ஊனுடன் கூடிய குருதியைப் பேய்களின் வாயில் புகட்ட இந்திரனுக்குப்  பிரமக்கொலை பாவம் வந்து சேர்ந்தது.

    பிரமக்கொலைப் பாவம்:

    தேவர்கள் இப்பாவத்தை நீர், மண், பெண்டிர், மரம் போன்றவற்றின் மேல் கூறு செய்து சுமத்தினார்கள். அவர்கள் இப்பாவம் நீங்க வழி யாது? என வினவினர். அதற்கு ‘நீரில் நுரையாகியும், நிலத்தில் உவர்ப்பாகியும், பெண்ணில் பூப்பாகியும், மரத்தில் பிசினாகியும் நீங்குக’ என்றுரைத்தனர். அதற்குப் பின்னும் ‘இப்பழி சுமந்ததற்கு உண்டான பயன் யாது?’ என வினவினர். நீர் இறைக்குந்தோறும் சுரந்து பொலிவடையும், மண்தோண்டிய குழியும் மண்ணினாலேயே வடுவொழிந்து நிரம்பும், சூலுற்ற பெண் கருவுயிர்க்கும் வரை கணவனுடன் வாழ்வர், மரம் வெட்டப்படினும் மீண்டும் தழைக்கும் என நீங்காத பலனை அளித்தார்கள். இதனால் இந்திரன் பிரமக்கொலை பாவத்தினின்று நீங்கினான். ஆனால் துவட்டா தன் மகன் விச்சுவனைக் கொன்ற இந்திரனைப் பழிவாங்குவதற்காக கொடும் வேள்வியினைச் செய்தான். இவ்வேள்விக் குண்டத்தினின்று ஆலகால விஷம் போன்ற தோற்றத்தைக் கொண்ட கையில் வெற்றிமிக்க வாட்படையினையுடைய விருத்திராசுரன் தோன்றினான். துவட்டா ‘தேவேந்திரனின் உயிரைப் போர் செய்து வாங்கி வா’ என  விருத்திராசுரனிடம் ஆணையிட்டான்.

    வலுவிழந்த வச்சிரப்படை:

    அறமும், பாவமும் போர் செய்தலைப் போன்ற யுத்தத்தில் இந்திரன் விருத்திராசுரனின் மேல் வச்சிரப்படையை வீசினான். விருத்திராசுரன் இரும்பு உலக்கையை எடுத்து இந்திரனின் புயத்தில் அடிக்க மூர்ச்சையுற்றான். சிறிதுநேரத்தில் தெளிந்த இந்திரன் ‘இப்பகைவனுக்கு எதிர்நின்று யான் போர்புரியும் வலிமைபெற்றவன் அல்லேன்’ எனக் கருதியவனாய் நான்முகனை அடைந்தான். பின்பு நான்முகனோடு சென்று திருமாலை வணங்க அவர் விருத்திராசுரனை அழிக்கும் வழியை எடுத்துரைத்தார். ‘உன் வச்சிரப்படை மிகவும் பழையதாகியதால் பகைவரின் உயிரை உண்ணும் வலிமையை இழந்துவிட்டது. அதனால் வேறு புதிய படைவேண்டும். நான் பாற்கடலைக் கடையும் நேரத்தில் அசுரர்களும், தேவர்களும் கொடிய படைக்கலன்கனோடு வருவது குற்றமென உரைத்து அவ்வாயுதங்களை ததீசி முனிவரிடம் சேர்ப்பித்தோம். பலவாண்டுகளாகியும் அசுரர்களும், தேவர்களும் ஆயுதங்களைக் கேட்காததால் ததீசி முனிவர் அவற்றை விழுங்கி விட்டார். அப்படைக்கலன்கள் அனைத்தும் திரண்டு முதுகெலும்பாய் பொருந்தி வச்சிரப்படையாயிற்று. நீ ததீசி முனிவரைக்கேட்டால் கருணைவடிவமான அவர் அதனை உனக்குத் தருவார் என்று கூறினார். ததீசி முனிவரிடம் சென்ற இந்திரன் நிகழ்ந்தவற்றைக் உரைத்து தேவர்களைக் காக்கவல்ல பொருள் நும் உடலில் உள்ள வச்சிரப்படையே’ என்று பகர்ந்தான்.

    என் உடலை வழங்கி அறமும், புகழும் பெறுவேன் எனில் இவ்வுடம்பினால் பெறும் பயனும் வேறுண்டோ? என்ற ததீசி முனிவர் சிவயோக சமாதியில் நின்று கபாலத்தைக் கிழித்து சிவவுலகை அடைந்தார். தேவதச்சன் அவ்வள்ளலின் முதுகெலும்பை வலிமைமிக்க வச்சிரப்படையாக்கி இந்திரனின் கையில் வழங்கப் போர் தொடங்கியது.

    பிரமகத்தி தோஷம்:

    தேவர், அசுரர்களுக்கிடையிலான இப்போரில் பூமியை மூடிய பிணக்குவியல் மலை போன்ற அண்டத்தைச் சிதைவுப்படுத்தியது.  இந்திரனின் கணைகளுக்கு எதிர்க் கணையை விடுக்கவியலாத விருத்திராசுரன் அஞ்சிக் கடலினுள் சென்று மறைந்தான். சினத்துடன் கடலினுள் சென்ற இந்திரனால் அசுரனைத் தேடிப்பிடிக்க இயலவில்லை. இந்திரன் மீண்டும் நான்முகனை நாட அவர் விந்தியமலையை அடக்கிய அகத்தியரைச் சென்று கண்டால் உபாயம் கிடைக்கும் என்று வழிப்படுத்தினார். அகத்தியரும் இந்திரனின் துயர் துடைக்க சிவனைத் தியானித்து விருத்திராசுரன் மறைந்திருந்த கடலை உளுந்தின் அளவாகக் குறுக்கி அதனைக் குடித்தார். நீரற்ற கடலில் தவம் புரியும் அசுரனைக் கண்ட இந்திரன் அவன் தலையை வெட்டியெறிந்தான். இந்திரனைப் பிரமகத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. இதனால் அச்சமுற்ற இந்திரன் ஒரு குளத்தில் இருந்த தாமரைத் தண்டின் நூலுள் மறைந்தான்.

    பெண்வேட்கை:

    தலைவன் இல்லாத இந்திரலோகம் பொலிவிழக்க தேவர்கள் அசுவமேதயாகம் புரிந்த நகுடனைத் தங்கள் தலைவராக ஏற்றுக் கொண்டனர். இந்திரப்பதவியேற்ற நகுடன் இந்திராணியை அழைத்து வருமாறு பணிக்க அவள் வியாழபகவானைப் பணிந்தாள். இந்திரனை விடுத்து வேறொருவனைத் துணையாகக் கொள்ளுதல் அறமோ? என வினவினாள்.  வியாழபகவானும், ‘அகத்தியன் முதலான ஏழுமுனிவரும் தாங்க மாமணிச் சிவிகையில் வருபவனே தேவர்களைக் காக்கும் தலைவன். அவனே உன் கணவன்’  என உரைக்க இந்திராணியும் உடன்பட்டாள். இந்திராணியின் தூதை அறிந்த நகுடன் பெண்வேட்கையால் பின்வரும் இடரினை நினையாது, சிவிகையைச்  சுமந்து வரும் முனிவர்களின் பெருமையை அறியாது விரைந்து செல்லுங்கள் எனும் பொருள் கொண்ட ‘சர்ப்ப’ என்று கூறினான். அகத்தியரும் அவன் சர்ப்பம் என்று கூறியதால் ‘சர்ப்பமாகவே மாறக் கடவாய்’ என சாபமிட்டார்.

    ஆற்றுப்படுத்திய குரு:

     பின்பு தேவர்கள் தங்கள் குருவான வியாழ பகவானைப் பணிந்து ‘மன்னன் இல்லாத இடரினைத் தீர்க்க வல்லீர்’ என வேண்டினார். குருவும் குளத்தில் மறைந்திருந்து இந்திரனை அழைத்து வந்தார். கொடிய பெரும்பாவத்தில் மூழ்கிய இந்திரன் வியாழபகவானைப் பணிந்து வணங்கி, ‘குருவே! என் பாவம் நீங்கும் வழி யாது?’ என வினவினான். வியாழபகவானும் கடம்பவன சிவனை வணங்கி பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை தன் மாணவனுக்கு எடுத்துரைத்தார்.

    இறைவனுக்குச் செய்த குற்றத்தை ஆசிரியரே ஆராய்ந்து தீர்க்கவல்லவர். ஆனால் ஆசிரியருக்குச் செய்த குற்றத்தை அவ்வாசிரியரே நீக்குதலின்றி வேறு எவராலும் நீக்கிடமுடியாது.

    ‘ ஈசனுக் கிழைத்த குற்றந் தேசிகன் எண்ணித் தீர்க்குந்
    தேசிகற் கிழைத்த குற்றங் குரவனே தீர்ப்பதன்றிப்
    பேசுவ தெவனோ தன்பாற் பிழைத்த காரணத்தால் வந்த
    வாசவன் பழியைத் தீர்ப்பான் குரவனே வழியுங் கூற ‘

    தன்னிடம் தவறு செய்தமையால் வந்த பழியை இந்திரன் தீர்ப்பதற்கு வியாழபகவானாகிய அக்குரவனே வழியையும் வகுத்துரைத்தான்.

    குருவிடம் செய்த தவற்றினால் இந்திரன் விச்சுவனை அழித்து துவட்டாவின் பகையை ஈட்டினான். துவட்டாவினால் விருத்திராசுரனுக்கு அஞ்சும் நிலை ஏற்பட்டது. ததீசி முனிவர், அகத்திய முனிவர்களின் உதவியால் விருத்திராசுரனை அழித்த நிலையிலும் நிம்மதி கிட்டாமல் பிரமகத்தி தோஷமே பிடித்தது. இப்பாவத்திற்கு அஞ்சிய இந்திரன் தாமரையில் ஒளிய  இந்திராணியை நகுடன் கைக்கொள்ள நினைக்கிறான். இவ்வாறு இந்திரன் பல்வேறு துன்பங்களை அடைய குருவான வியாழபகவானே பிரமகத்தி தோஷம் நீங்கும் வழியை வகுத்துரைக்கிறார். இப்புராணத்தின் வாயிலாகக் குருவை நிந்திப்பவன் துன்பம் அடைவது உறுதி என்பது புலனாகின்றது.

    குறிப்புகள்

    1. திருவிளையாடற்புராணம்; (இந்திரன் பழி தீர்த்த படலம்) – உரையாசிரியர் பி.ரா.நடராஐன்
    2. தமிழ்ச்சமூகத்தில் அறமும் ஆற்றலும் – ராஜ்கௌதமன்
    3. குறள்நெறி அறம் – புலவர் கே.ஏ.ராஜீ

    *****

      கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியர்,  தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

     

    Share
  • அர்த்தமே இல்லையே !

     

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா

    கோடி கோடியாய் பணம் இருந்தாலும்
    மாடி மாடியாய் மனை குவிந்தாலும்
    வாடி நிற்பவர் மனம் அறியாதவர்
    வாழும் வாழ்விலே அர்த்தமே இல்லையே

    கோவில் கோவிலாய் சென்றுமே வணங்கினும்
    குடம் குடமாய் பாலினைக் கொடுக்கினும்
    வாய் இல்லாத சீவனை வதைப்பவர்
    வாழும் வாழ்வினை மனதுதான் ஏற்குமா

    வாதம் வாதமாய் மன்றிலே நிகழ்த்தியே
    வழக்கை பணத்துக்காய் நீட்டியே நிற்பவர்
    நீதி தேவனின் நெஞ்சிலே மிதிப்பவர்
    நிம்மதி என்பது வாழ்வினில் நிலைக்குமா

    பட்டம் பட்டமாய் பெற்றுமே நிற்பவர்
    பதவி பெற்றுமே உயர்நிலை வகிப்பவர்
    பெற்ற தாய்தந்தை பேணிடா நின்றிடின்
    கற்ற கல்வியும் காறி உமுழுமே

    Share
  • “கன்னி”யும் “கஜா”வும்

     

    வாய் பேச வன்மத்தில்

    பெண் பொறுமைக்காரி!

    நிலம் இயங்கு தன்மையில்

    உழவுக் காரி…..

    நிலமும் பெண்ணும் போர் புரிந்தால்

    கன்னியும் கஜாவாகும்…….

     

    நான்கு நாட்களுக்கு முன்

    வேதாரண்யத்தில் வேசமிட்டு

    பட்டுக்கோட்டையில் கஜவாக மாறி

    காடு மேடுகளை புரட்டி

    கானகப் பயிர்களை வளைத்து

    வாழை,தென்னையை ஒடித்து,

    வானுயர கம்பங்களில்

    ஊஞ்சல் கட்டி மகிழ்ந்து

    இரவு நேரங்களில் கறுமை சூழ்ந்து

    காரணத்தோடு சுற்றித் திரிந்தேன்

    கஜா வெனும் பெயரோடு…..

     

     

    கன்னியின் சாபம் காதுகளுக்கு

    செவிமடுத்ததோ – இல்லை

    தீட்டுப்பட்ட கன்னியைத் திடுக்கிடச்செய்து

    திட்டத்தை நிறைவேற்றினேன்

    கண்ணியமான கஜவாக…..

     

    எனது தோற்றம் எது வென்றால்?

    அணைக்காடு கிராமத்தில்

    ஆறிரண்டு வயதில்

    ஏழாவது படிக்கையில் – எனது

    தீட்டு இனம் கண்டு

    வீட்டு வெளியே

    சாதியக் குடிசை அமைத்து

    தனிக் தெருவில்லா இடத்தில் அமா்த்தப் பட்டேன்

    தீட்டுக் கன்னியாக……..

     

    கன்னியின் சாபம்

    கருணை மறம் மாறாமல்

    கலகக் குறல் எழுப்பி

    கானகத்திற்கு எல்லாம் தூதனுப்பி

    இருள் சூழ்ந்த இரண்டு மணியில்

    பேயாட்டத்தைக் காட்டி கஜாவாகப் பறந்தேன்…..

     

    எனது பயம் பேரிடியாய்

    மரங்களுக்கும் மாசு கழிய மங்கைக்கும் கேட்டிட

    அவள் அலறல் அவளுக்கு மட்டுமே

    தீட்டு தீண்டாமைக்கு உட்பட்டது. இதனைக் கண்டு

    தென்னையும் பேசியது

    வாழையும் பேசியது

    வாய் பேச சீவராசிகளும் பேசியது

    தீட்டு எங்களுக்குப் பிடிக்கும்

    வா! கஜாவோடு கண்ணியமாகலாம்…..

     

    கன்னியும் கஜாவும் பிரியவில்லை

    தீட்டும் கன்னியும் பிரியவில்லை

    மரங்களும் கானகமும் பிரியவில்லை

    மனித இனம் பிரிக்கிறது.

    மரங்களுக்கு இடையே மாண்ட

    கன்னியும் கஜாவையும்

    மீண்டும் பேசுவேன்

    காடுகள் எல்லாம் வீடானபின்பு

    இந்த இடம் கன்னி மாண்டதென்று………

     

    முனைவா். இரா. மூர்த்தி,

    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,

      ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய

         கலை அறிவியல் கல்லூரி,

      கோயம்புத்தூர் -20

        E-Mail: ramvini2009@gmail.com    

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    181122 -DWA indian ink wcol- Canson A4 200gsm 100 dpi – (the tortoise /horse indicates the withdrawing of the senses) – lr
    ஆமையாச்சு அசுவம்,சதுரங்கம்(CHESS) ஆச்சு புதிர் ரங்கன் பாரதம்….!
    ‘’பூபாரம் போக்கவன்று பாரதப் போர்முடித்த
     கோபாலக் கண்ணனே
     ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ‘’கடல்கடைந்த போதன்று வடவரையை வழுவிடாது
     உடல்சுமந்த ஆமையே
     ஏக தெய்வம் ஜனார்த்தனம்’’….!
    ”வாட்டிடும் இன்பத்தைக், கூட்டிடும் பேதத்தை,
     போட்டிட நெஞ்சத் தராசினில், -காட்டிடும்,
     வேண்டியதைப் பார்த்திடும், வீரன் அவனழியான்
     காண்டீபம் தானுன் களிப்பு”….கிரேசி மோகன்….!
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    181121 -DWA -wcol Indian ink wm
    Canson A4 200 gsm 72dpi
    “Divyam dadami thaey Chakshuh” BG 11:8

    ‘’ஸ்ரீ பகவான் உவாச:….
    ——————————————-

    ஞானக்கண் தந்தேன்நான் நாற்புரமும் பார்பார்த்தா
    வானத்தில் ருத்திர(அனுமன் ருத்திராம்ஸம்) வானரம் -சேணத்தில்
    நானுள்ளேன்,கீதையாம் நூலினைத் தந்துவிட்டேன்
    வானுள்ள வெற்றியை வாங்கு….!

    ”ஆரத் தழுவி அருச்சுன காமத்தை(பேதத்தை-அதுவும் காமத்தில் சேர்த்தி)
    வேரறுத்துச் சொன்னார் , விஜயரே! , -பாருச்சி,
    தேருச் சியில்காக்கும் தேவன் அனுமனுள்ளார்,
    நூறைச் சிதைக்க நிமிர்’’….!

    ”நூறைநீ வென்றிட ஈரே(ழு) உலகாள்வாய்
    மாரில் கணைதைத்து மாளுங்கால் -வீராநீ
    சொர்கம் புகுவாய் சுதாரித்(து) எழுசேயே
    தர்கம் புரிதல் தவிர்”….கிரேசி மோகன்….!

    Share
  • கலந்துநிற்கும் காலத்தோடு அவளும்

     

    கவிஞா் பூராம் (முனைவா் ம.இராமச்சந்திரன்)

     

    வாசல் வகுப்பறையில்
    கரைதலின் பாடத்தில்
    மயங்கிய மனம்
    புரிதலற்று நான்!

    உணர்வுகள் பேசுகையில்
    மொழிகள் அர்த்தமிழக்கும்
    பறவைகளின் ஓசையில்
    தேடி அலையும் மனித மனமும்
    பேரமைதியில் உட்புதையும்
    சூழலும்!

    காலங்களைக் கரைத்துக்கொண்டு
    ஓடிய திசுக்களில்
    எதனைத் தேடி என்னை
    அடைய!

    முறைகள் ஆயிரம்
    அறிவின் புரிதல்கள்
    அவள் பொழுதுகளில்
    பொருளற்று விடுகின்றன!

    என்னுள் மறைந்திருக்கும்
    பெண் இருத்தலில்
    யாா் யாரோ வந்து சென்றாலும்
    இடம் இன்னும்
    இருக்கிறது காலியாகவே!

    மீதமிருக்கும் வாழ்க்கை
    புன்னகைக்கிறது பூனையைப் போல்!

    Share