தமிழ்வலை உலக நண்பர்களே,

எண்ணற்ற வலை உலகத் தமிழ் நண்பர்கள் அன்புடன், ஆழ்ந்து, கனிவோடு எழுதி அனுப்பிய இரங்கல் மடல்கள் என்னை நெகிழச் செய்தன.

உங்கள் அனைவருக்கும் என் கனிவான நன்றிகள்.

என் அருமை மனைவியின் இறுதிப் பயணத்தை நான் உங்களுடன் பகிர்ந்ர்து கொள்ள விழைகிறேன்.

வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவர், வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

மனைக்கு விளக்கு மடவாள்.

நெருநல் உள ஒருத்தி இன்றில்லை என்னும்
பெருமை உடைத்திவ் வுலகு.

[வள்ளுவப் பெருமான் என்னை மன்னிப்பாராக]

+++++++++++

நடமாடும் தீபம் புயலில்
அணைந்து போய்,
சுவரில்
படமாகித் தொங்கும் !
வசிப்பு
இடம் மாறிப் போகும்
பூமித்
தடம் மாறி நோகும் !
விட்டு
விடுதலை யாய் ஏகும் !

+++++++++++

பூவோடு போனாள் !
நெற்றிப்
பொட்டோடு போனாள் !
தங்கத்
தாலியுடன் போனாள் !
என்னைத்
தவிக்க விட்டுப் போனாள்.

+++++++++++

துணைப் புறா போனது
துடிப்போடு !
தனிப் புறா நான்
தவிக்கப் போனது.
இனி வீட்டில் காத்திருக்க
எனக்கு
இல்லத்தரசி இல்லை !
செல்லும் போது
சொல்லாமல் போனது !

+++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

+++++++++++++++++

துடி துடித்துப் போனதே என்
துணைப் புறா !
நெஞ்சில்
அடி அடித்துப் போனதே என்
ஆசைப் புறா !
இடி இடித்துப் போனதே என்
இணைப் புறா !
கண் திறந்து நோக்கி
கை பிடித்துப் பிரிந்ததே என்
கலைப் புறா !

+++++++++++

இதய வீணை கை தவறி
உடைந்த பிறகு
இணைக்க முடியுமா ?
புதிய கீதம் இனி அதிலே
பொங்கியே எழுமா ?
உதய சூரியன் எனக்கினி மேல்
ஒளியும் வீசுமா ?
விதி எழுதி முடித்த கதை
இனியும் தொடருமா ?

+++++++++++++++

பிரார்த்தனை தொடர்கிறது.

சி. ஜெயபாரதன்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.