கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) விருது, அண்ணா பல்கலை, டிசம்பர் 16, 2018 – காலை 10 மணி. அனைவரும் வருக.
கவிஞர் குலோத்துங்கன் (பேரா. வா. செ. குழந்தைசாமி) விருது, அண்ணா பல்கலை, டிசம்பர் 16, 2018 – காலை 10 மணி. அனைவரும் வருக.
=======================
திருச்சி புலவர் இராமமூர்த்தி
————————————————–
திருவாரூரில் மனுநீதிச் சோழன் மைந்தன் ஏறிச் சென்ற தேர்க்காலில் அடிபட்டு மரணமடைந்த கன்றுக்காக அரசன் மனம் கலங்குகிறான். அப்போது மறையோர் இதற்குப் பிராயச்சித்தம் என்ற கழுவாயை மறைநூலில் சொன்னபடியம், மனுநீதி முறைப்படியும் செய்தால் அரசன் மைந்தன் செய்த தவறுக்குக் கழுவாய் தேடலாம் என்கிறார்கள். மறைநூலையும் மனுநீதியையும் நன்கறிந்த மன்னன், அமைச்சர்களும் வேதியர்களும் கூறியதை ‘ வழக்கு’என்றே ஒத்துக்கொள்ள வில்லை! அதனைச் சழக்கு என்று இகழ்கிறான். ‘’நான் மைந்தனை இழக்கிறேனே என்ற வருத்தத்தால் , எனக்கு நீங்கள் கூறும் வழக்கம், தான் இப்போதுதான் ஈன்ற, மிகவும் இளமையான கன்றினைப் பறிகொடுத்து அதனால் அந்தத் தாய்ப்பசு அடையும் மிகுந்த வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தாகி , அந்நோயைத் தீர்க்குமா?’’ என்று கேட்கிறான். அதனை அடுத்து எக்காலத்துக்கும், எந்நாட்டிற்கும், எப்போதும் பொருந்தும் ஓர் அரச நீதியை வகுத்துக் கூறுகிறான்.
‘’ஒருநாட்டைக் காக்கும் அரசன் அக்காவல் கடமையைச் செய்யும்போது, நாட்டுக்கு, அதாவது நாட்டு மக்களுக்கு வாழ்க்கையில் இடையூறாகி, விளைவிக்கும் மிகப்பெரிய ஐவகை அச்சங்களையும் தீர்த்து அரசாளவேண்டும்’’ என்கிறான். அவை: தன்னால் , தன்பரிசனத்தால், பகைத்திறனால் , கள்வரால், மற்ற கொடிய உயிர்களால் நிகழும் அச்சசங்களாகும். மற்ற நால்வகைகளாலும் வரும் இடையூறுகளை அரசன்தானே தீர்க்க வேண்டும்? ஆனால் அரசன் தன்னால் வரும் இடையூற்றினைத் தானே தீர்க்கும் கடப்பாடு உடையவன் ஆவான். அவனாலேயே வரும் இடையூற்றை யார் தீர்க்க வல்லார்?
ஒருமுறை இராமன் நீராடக் செல்லும் போது , குளக்கரையில் தம் வில்லை நேராகத் தரையில் ஊன்றி நிறுத்தி விட்டு, நீர்நிலையில் நீராடித் திரும்பினான். அப்போது தாம் ஊன்றிய வில்லின் கீழே கொஞ்சம் குருதியைக் கண்டான்! உடனே வில்லை எடுத்துக் கீழே பார்த்தான். அவனது ஊன்றிய வில்லின் கீழே ஒரு தவளை நசுங்கிக் காயத்துடன் இருந்தத்தகு. இராமன் பதறிப்போய் அந்தத் தவளையைக் கையில் ஏந்தித் தடவிக் கொடுத்து காயத்துக்கு மருந்திட்டான். அவன் கரம் பட்டவுடன் தவளையின் அச்சமும் நோயும் நீக்கியது. அவன் தவளையிடம் ‘’ தவளையை நீ குளத்தில் இருந்து கத்தும் ஓசை மிகவும் பெரிதாகவே இருக்குமே? நான் வில்லை ஊன்றிய நேரத்தில் உன்மேல் என் வில்லின் நுனி பட்டு அழுத்திய போது, நீ வலிதாங்காமல் கத்தியிருந்தால், இப்படிக்கு காயம் அடைந்திடிருக்க மாட்டாயே?’’ என்றார். உடனே தவளை வேறெவராலும் எனக்குத் தீங்கு நேர்ந்தால், நான் இராமா, காப்பாற்று! என்று உன்னை வேண்டுவேன். ஆனால் உன்னாலேயே எனக்குத் தீங்கு வந்தால் உன்னைவிடப் பெரிய கடவுளாக யாரையும் நான் அறியேனே!’’ என்றதாம். ஆம்! அரசன் தன்னால் மக்களுக்கு வரும் இடையூற்றைத் தீர்க்க , அந்நாட்டின் அரசனைவிடப் பெரியவர் இல்லாததால் தானே அந்த அச்சத்தை நீக்க வேண்டும். அதனை இந்த வரிசையில் ‘’தன்னால்’’ என்ற சொல்லால் தன்னை முதலில் கூறினான். அரசனால் மக்களுக்கு வரும் இடையூறுகள், அதிக வரியை வசூலித்தல்,அதனையும் வன்முறையால் கவர்தல், மிகுந்த ஏழைக்கு வரிவிலக்கு அளிக்காமல் , அவரிடமும் உள்ளதைப் பிடுங்குதல், மக்களை வருத்தும் தீங்குகளை நீக்காதிருத்தல், மக்கள் காண்பதற்கு அரிய நிலையில்காவலர் நடுவில் இருத்தல், கடுமையான சொற்களைக் கூறுதல், தன்னை இடித்துக் கூறும் நல்லவர் சொல்லை மதித்து ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல், அறநிலையங்களின் சொத்துக்களை அபகரித்தல் ஆகியவை. இவை என்றைக்கும், எந்நாட்டுக்கும், இன்றைக்கும்பொருந்துவன அல்லவா?
அடுத்துத் தன் பரிசனத்தால் என்ற தொடர். அரசனின் பரிசனம் என்பன, அவரால் நியமிக்கப் பெற்றும், அவரது உறவு, நட்பு முதலான சலுகையைப் பெற்றும் , இறுமாப்புடன் அதிகாரம் செலுத்துவோர். இவர்களை புறநானூறு, வயலில் தாமே புகுந்து அழிவுகளை செய்யும் யானைகளை போன்றோர் என்று கூறுகிறது. அவர்களது தகுதி மீறிய அடக்குமுறையையும் சேக்கிழார் குறிக்கிறார். அதிகாரிகளுக்கு சட்டத்தைக் கடைப்பிடிக்கத் தெரியுமே தவிர நியாயத்தை வழங்கத் தெரியாது. சட்டப்படி வெள்ள நிவாரணமோ, பஞ்ச நிவாரணமோ வழங்க இடப்பட்ட ஆணையைச் செயல் படுத்துவார்கள். அது சரியான நிவாரணத்தை அளித்து , நியாயமான முழு உதவியையும் செய்யுமா என்பதை உறுதி செய்ய முடியாது. முழு வீட்டையும் வெள்ளத்தில் இழந்தவர் அரசின் எளிய நிவாரணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?
அடுத்து ஊனமிகு பகைத்திறத்தால் என்ற தொடர். நாட்டை அழித்து வென்று மக்களை துன்புறுத்தும் வேற்று நாட்டுப் பகைவர், உள்நாட்டிலேயே அழிவுச் செயல்கள் செய்து மக்களைத் துன்புறுத்துவோர், அவர்கள் மக்கள் மேய்க்கும் பசுக்களைக் கவர்வர். கொள்ளையிட்டு மக்களின் பொருள்களைக் கவர்வோர். பெண்களைக் கற்பழித்துத் துன்புறுத்திக் கொல்வோர் ஆகியோராவர். இவர்களைத் தலையெடுக்க விடாமல் அடக்கி வைக்கவும், அழிக்கவும் வேண்டும்.
அடுத்து கள்வர். இவர்கள் உள்நாட்டில் வழிப்பறி செய்வோர்.இவர்களை தண்டிக்க வேண்டும்.இழந்தவற்றை மீட்டெடுத்து வழங்க வவேண்டும். அடுத்து உயிர்கள். அவை மக்களைத் துன்புறுத்தி,அடித்து உண்ணும் கொடிய விலங்குகள். இவற்றை வேட்டையாடுவது மன்னன் செயல்.
‘’பயந் தீர்த்துக் காத்தலே காவலன் கடமை என்பதை “இத்தனை காலமு நினது சிலைக்கீழ்த் தங்கி இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம்’’ என்று கண்ணப்பர்புராணத்தில் மக்கள் கூறும் பாதுகாவல் நிலை.இந்நாள் நவீனர் அரசாட்சியிலே நமது நாட்டுக் குற்றத்தீர்வு நீதிச்சட்டமும், குடிகளின் உயிருடம்புகளையும், உடைமைகளையும், காவல்புரிதலையே குறிக்கோளாகக் கொண்டு, உடம்பைப் பொறுத்த குற்றங்கள் – உடைமையைப் பொறுத்த குற்றங்கள் என்று (Offences against perosn & offences against property) இரு பெரும் பிரிவுகளாக வகுத்ததும், அக்குற்றம் செய்தார்க்குத் தண்டம் விதித்ததும், குற்றங்கள் நிகழாமல் குடிகாவல் விதித்ததும், இங்கு வைத்து ஒப்பு நோக்கிக் காணத்தக்கன’’. என்று சம்பந்த சரணாலயர் கூறுகிறார். இனி சேக்கிழார் எழுதிய முழுப்பாடலையும் படிப்போம்.
“மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
தான் அதனுக்கு இடையூறு தன்னால், தன் பரிசனத்தால்,
ஊன மிகு பகைத் திறத்தால், கள்வரால், உயிர்கள் தம்மால்
ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ?”
இந்தப்பாடல் இக்கால மக்களின் அச்சம் போக்கும் அரசின் கடமைகளைப் பொதுவாகக் கூறுகிறது.அக்காலச் சோழரின் முதலமைச்சரான சேக்கிழாரின் தீர்க்க தரிசனம் இதில் தெரிகிறது.
-திருமதி. ப. மாக்கில்மா
இலக்கிய உலகில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய சிற்றிலக்கியங்கள் பொருள் அமைப்பிலும் வடிவ அமைப்பிலும் சங்க இலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைகளாகப் பாட்டியல் நூலார் பாகுபடுத்தியுள்ளனர். அவற்றுள் “அந்தாதி”என்பது சிற்றிலக்கிய வகையினுள் ஒன்றாகும். அந்தாதி இலக்கியங்களுள் தலைமலை கண்ட தேவர் இயற்றிய மருதூர் அந்தாதி என்னும் நூலில் அமைந்துள்ள புராணக் கூறுகளான மார்க்கண்டேய வரலாறு, அடிமுடி தேடுதல், மாலுக்கு சக்கரம் அளித்தல் முப்புரம் எரித்தது, பிரமன் சிரம் கொய்தது, பாம்பை அணியாகக் கொண்டது, அருச்சனனுக்கு அருளியது முதலியன பற்றி ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
புராணம் விளக்கம்
புராணம் என்பது பழங்கதை. மாக்கதை எனப் பெயர் பெறுகிறது.காலம் செல்லச் செல்ல இவையே சமயத்தின் ஊடாடுகிறது. சமயம் புராணத்திற்குக் கருவியாக அமைகிறது. சைவ சமயத்திலும், புராண வரலாறுகள் சமய பக்திக்கும் நல்லொழுக்கத்திற்கும் நடைமுறையில், உயர்ந்த ஞானத்தையும் சாமானியப் புராணக் கதையையும் தழுவி எழுந்தவையே கோயில்கள். கோயில்களில் ஸ்தூலமான பொருள் புராணக் கதைகளேயாகும்.
புராணக்கூறு என்பது இறைவன் செய்துள்ள அற்புதச் செயல்கள்,இறைவன் கொண்ட இல்பலி போன்ற இறைவனின் செயல்கள் பற்றி மருதூர் அந்தாதி மூலம் கீழ்க்கண்டவாறு காணலாம்.
மார்க்கண்டேய வரலாறு
மார்க்கண்டேயரது பெற்றோரின் தவத்தை மெச்சிய இறைவன் அவர்களிடத்து “அறிவும் திறமும் உடைய பதினாறு ஆண்டுகள் ஆயுளையுடைய மகனா? அன்றி அறிவற்ற நீண்ட ஆயுளையுடைய மகனா? யார் வேண்டும்? எனக் கேட்க அவர்கள் அறிவுடைய பதினாறு வயது ஆயுளையுடைய மகனையே வேண்டிப் பெற்றார்” அதன்படி மார்க்கண்டேயனுக்கு பதினாறு வயதில் இறப்பு என்று குறிக்கப்பட்டது. பதினாறாவது வயது முடியும் தருவாயில் அவரது உயிரைக் கொல்லுதற்காக இயமன் வர அந்நிலையில் மார்க்கண்டேயர் இறைவனை விடாது வழிபாடு செய்தார். குறிப்பிட்ட காலம் வந்ததும் இயமன் எங்கு தேடியும் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசி அக்கயிறு சிவலிங்கத்தின் மீதுப்படடது. சினங்கொண்ட சிவபெருமான் இயமனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறாக வயது இருக்குமாறு அருளுகிறார். இப்புராணக் கருத்தை,
“முனியாய மானுடர்க் காவந்
துகனை முனிந்தவனே”1 என்று மருதூரந்தாதி பாடல் வரிகள் விளக்குகின்றன.
அடிமுடி தேடுதல்
படைத்தற் பிரமனும், காத்தற் திருமாலும் தமக்குள் யார் பெரியவர் என்று போட்டி மேற்கொண்டு தம் கருத்தைச் சிவபெருமானிடம் முறையிட்டனர்.”உங்கள் இருவரில் ஒருவர் எனது திருவடியையும் ஒருவர் திருமுடியையும் காணுதல் வேண்டும். கண்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்ளே பெரியவர்கள்”என்று சிவபெருமான் கூறுகிறார். திருமால் பன்றியாக உருவெடுத்து அடியையும், பிரமன் அன்னமாக உருவெடுத்து முடியையும் தேடிச் சென்றனர். சிவபிரான் அவர்கள் காணமுடியாத வண்ணம் சோதி வடிவமாகத் தோற்றமளித்தார். இப்புராணக் கருத்தை,
“யாலை யனங்கம் வருந்தியுந்
தேடற் கரியவன்கை”2 என்ற பாடல் வரிகள் காட்டுகின்றன.
மாலுக்குச் சக்கரம் அளித்தது
சிவபெருமான் உள்ள சக்கராயுதம் “சலந்தாசுரன்”என்ற அசுரனைக் கொன்ற சிறப்புடையது. அவ்வரிய சக்கராயுதத்தைப் பெறுதற்காகத் திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை நாள்தோறும் வழிபட்டார். ஒரு நாள் வழிபாட்டின் போது ஆயிரம் மலர்களில் ஒரு மலர் குறைவது கண்டு, அதற்காக வருந்தாது அம்மலருக்குப் பதில் தான் தன் கண்ணையே மலராக இட்டு வழிபட்டார். மாலின் இவ்வன்பிற்கு இரங்கிச் சிவன் சக்கராயுதத்தை மாலுக்கு வழங்கினார். இப்புராணக் கருத்தினை,
“ ரஞ்சக் கருத்தை யரிக்களித்
தார்மரு தூர ரங்கி”3
என்ற மருதூரந்தாதி பாடல் வரிகள் விளக்குகின்றன.
முப்புரம் எரித்தது
தாருகாட்சன், கமலாடசன், வித்துயுன்மாலி மூவரும் பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகளாக மாறுவதற்குரிய வரத்தினைப் பிரம்மாவிடம் பெற்றனர். அவ்வசுரர்கள் அக்கோட்டைகளோடு பறந்து சென்று தாம் விரும்பிய ஊர்களை அழித்து விட்டு மீண்டும் தம்மிடம் வந்துவிடுவர் இவனது துன்பம் தாங்காது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவ்வசுரர்களை அழிப்பதற்காகப் பூமியைத் தேராக்கி, சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாக்கி, நாள் வேதங்களைக் குதிரையாக்கி, பிரம்மனை தேர்ப்பாகனாக்கி, மேருவை வில்லாக வளைத்தார். வாசுகியை நாணாக்கினார். திருமாலை அம்பாகவும் கொண்டார். இவர்கள் தத்தம் உதவியால் சிவன் முப்புரங்களை அழிக்கப் போகிறார் என எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது சிவபெருமான் இதனைக் கேட்டு சிரிக்க அச்சிரிப்பே முப்புரங்களை எரத்தது. இப்புராணக் கருத்தை,
“ பகைத்த பருப் பதங்கடந் தான்”4 என்ற மருதூரந்தாதிப் பாடல் வரி குறிப்பிடுகிறது.
பிரமன் சிரம் கொய்தது
பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபிரான் கிள்ளி எரிந்ததாகப் பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அந்தாதியில் இடம்பெற்றுள்ளது. பிரமன் சிவபெருமானினும் தான் உயர்ந்தவராக எண்ணிப் பிதற்றியமையால் பெருமான் அவ்வாறு பிதற்றிய தலையைக் கொய்து எறிந்தார்.என்றும் சிவபெருமான் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றும் பிரமன் வரம் கேட்டபோது, அப்பெருமான் இட்ட சாபத்தால் ஐந்தாவது தலை வெடித்து உதிர்ந்தது என்றும் புராணக்கதைகள் பலவாகக் காணப்பெறுகின்றன இதனை,
“கையாலை யனங்கங்கொண் டோன்மரு
தூர னடி வணங்கே”5 ஏன்ற பாடல் வரி குறிப்பிடுகிறது.
பாம்பை அணியாகக் கொண்டது
கருடனும் பாம்பும் ஒரு தந்தையின் இரு மனைவியரின் மக்கள். இவர்களுக்குள் பல காரணங்களால் பகைமை ஏற்பட்டு கருடன், பாம்புகள், கருடனுக்கு அஞ்சி சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்தன. சிவபெருமான் அவற்றைத் தமது அணிகளாக அணிந்து கொண்டார்.இப்புராணக் கருத்தை,
“………………………………உய்ய
வரியர விந்தம் புனைவோன்
சிலம்பி லதர்மனித”6 என்ற பாடல் வரிகளில் குறிப்பிடுகின்றன.
அருச்சனனுக்கு அருளியது
பாண்டவர்களின் இளையவர் அருச்சுனன் தன் பங்கு நாட்டைப் பெறவேண்டும் எனப் பாண்டவர்கள் கவலை கொண்டிருந்தனர். அச்சமயம் இந்திரன் ஒரு முதிய அந்தணன் வடிவில் தோன்றி அருச்சுனனை ஒத்த வீரர் உலகில் இல்லை என்றும் சிவபெருமானை நேரில் கண்டு படைக்கலங்களைப் பெற்று எதிரிகளை வெல்லலாம் என்றும் அறிவுரை வழங்கினார்.அவ் ஆலோசனைப்படி அருச்சுனன் காட்டில் கடுந்தவம் இருந்தார். அப்பொழுது ஒரு பன்றி அவரைக் கொல்ல வருவது போல் நெருங்கி வந்தது. வீரம் மிகுந்துள்ள அருச்சுனன் பூசையை மறந்து வில்லை வளைத்து பன்றியை நோக்கி எய்தார். பன்றி அம்பு பட்டு விழுந்தது. அக்கணையை எய்தவன் ஒரு வேடுவன். இவர்கள் இருவரின் முதலில் எய்தவர் யார் என்ற விவாதம் ஏற்பட்டு அதன் வழி அவர்கட்குள் விற்போரும் நடந்தது. விற்போரில் வெல்ல எண்ணி வேடனின் தாளை அருச்சுனன் பிடித்தார். அங்கு வேடுவனைக் காணவில்லை. அவ்வேடுவன் மிகப்பொலிவு பெற்ற சிவபெருமானாகி உமையுடன் காட்சி அளித்தார். அருச்சுனன் வணங்க அவர் படைக்கலங்களையும் வரங்களையும் அருளினார். இறைவனின் இத்தகைய அற்புதச் செயல்களைப்
“பார்த்ததற்கு வாய்த்த வெற்றி
முலரம்பை யாரஞ் சடையார்”7 என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.
இவ்லாறு ஆசிரியர் மருதூர் அந்தாதி நூலுள் உள்ள புராணக் கூறுகளான மார்க்கண்டேய வரலாறு, அடிமுடி தேடியது, முப்புரம் எரித்தது, பிரமன் சிரம் கொய்தது. பாம்பை அணியாகக் கொண்டது, அருச்சுனனுக்கு அருளியது போன்ற புராணக்கூறுகள் ஆகியவற்றை இம் மருதூரந்தாதி நூலின் மூலம் தெற்றென விளக்கியுள்ளார்.
ஆய்வு முடிவுகள்
புராணம் பற்றிய கருத்துக்கள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இறைவனின் அற்புதச் செயல்களான அருச்சுனனுக்கு அருளியது, பாம்பை அணியாகக் கொண்டது, முப்புரம் எரித்தது போன்ற அற்புத நிகழ்வுகள் எழுந்த சூழல் விளக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருவடியையும் திருமுடியையும் தேடும் பொருட்டாகத் திருமாலும் பிரமனும் தேவியும் காணமுடியாத இறைவன் சோதி வடிவாக எழுந்த சூழல் விளக்கப்பட்டுள்ளது. இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்த நிகழ்வு விளக்கப்பட்டுள்ளது. இறைவன் பிரமனது சிரம் கொய்த நிகழ்வு பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது.
அடிக்குறிப்புகள்
*****
கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்),
வீராச்சிப்பாளையம், சங்ககிரி.
-ர. பரமேஸ்வரி
முன்னுரை:
கொளஞ்சியின் கவிதைகளில் பல்வேறு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெண்கள் சமுதாயத்தில் தன்னுரிமை பெற்றவர்களாகவும் அனைவருக்கும் நிகரான முறையிலும் இடம்பெறுதல் அவசியம். சமுதாயத்தில் பெண்களின் நிலைகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமுதாயத்தில் பெண்களின் நிலைகளாவன:
பெண்களின் நிலைகளை பல்வேறு கவிதைகளில் எடுத்துகூறியுள்ளார். எந்நிலையிலும் பெண்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தப்படுகின்றது.
விதவை நிலை:
ஒரு பெண்ணுடைய வாழ்விற்குத் தாலி வேலியைப் போன்றது. ஒரு பெண் திருமணம் ஆனபிறகு கணவன் இறந்துவிட்டால்; அவளை விதவை என்று அழைக்கின்றனர். திருமணம் ஆகாதவரை கன்னி என்று சமுதாயம் கூறுகின்றது. கணவன் இறந்துவிட்டால் உடனே அந்தப் பெண்ணின் தாலியைக் கழற்றிவிட்டு பூவும், பொட்டும் இல்லாமல் விதவைக் கோலத்தினை அடைகின்றாள்.
உதாரணமாக, ஊட்டியில் மலர்க்கண்காட்சி நடக்கின்றது. அவள் மட்டும் மலரை சூடிக்கொள்ளமுடியாமல் அழுகிறாள் என்பதை,
“ஊட்டியில் மலர்க்கண்காட்சி, எல்லா மலரும்
கண்சிமிட்டி சிரித்தன, அவள் மட்டும்
மலரைச் சூடிக்கொள்ள முடியாமல்
தனியே அழுகிறாள்.” என்ற கவிதை வரிகள் மூலம் பெண்ணின் நெஞ்சுக் குமுறலை எடுத்துக்காட்டுகின்றார். மேலும் கைம்பெண்ணின் அவலநிலையை,
“சிறகு அறுந்து போன வண்ணத்துப் பூச்சு”
என்ற வரிகள் பெண்ணின் மனதை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குகின்றன என்பதை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றார். விதவை இல்லாத, பெண்கள் சமுதாயமாக மாறவேண்டும் என்றும், விதவைப் பெண்ணின் நிலையைப் பற்றியும் பாவேந்தர் எடுத்துக்காட்டுவதாவது,
“பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப்பெண் கேட்கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ”
பூவும் பொட்டும் அணியும், மணியும் தானே போயிற்று. உயிர் உடலின் உணர்ச்சி என்னிடம்தான் இருக்கின்றது என்ற பெண்ணாக இருந்து பேசுகின்றார் பாவேந்தர்.
கைம்பெண் மறுமணம்:
கணவனை இழந்த பெண்கள் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டால் இந்தச் சமுதாயம் நிம்மதியாக வாழவிடுவதில்லை. கணவனை இழந்தவள் கைம்பெண் அல்ல என்ற கருத்தினை உலகிற்கு உணர்த்துதல் வேண்டும். அவளுக்கும் உயிர் உணர்ச்சி மறுமணம், வாழ்வு இவை அனைத்தும் உண்டு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை,
“கணவனை இழந்தவள் கைம்பெண் அல்ல
கருத்தை விலக்குங்கள் அவளுக்கும் உயிருண்டு
அவளுக்கும் உணர்ச்சியுண்டு, அவளுக்கும் மறுமணம் உண்டு
அவளுக்கும் வாழ்வு உண்டு உணர்ந்து பாருங்கள்” என்ற வரி கைம்பெண்ணின் உடைய மறுமணம் பற்றி விவரிக்கிறது. கைம்பெண்ணின் மறுமணம் பற்றி விவரிக்கப்படுகிறது.
மேலும் கைம்பெண்ணை வாழவிடாமல் துன்பத்திற்கு ஆளாக்குகின்ற நிலையினை,
“மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்
மங்கை நல்லாள் என்ன செய்வாள் அவளை நீங்கள்
ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்
அணுவளவும் அடையாமல் சாகச் செய்வீர்” என்ற வரிகளின் வாயிலாகப் பெண்களை வாழவிடாமல் துன்பப்படுத்தும் நிலையினை பாரதிதாசன் எடுத்தியம்பியுள்ளார்.
வரதட்சிணை:
நாட்டின் முதிர்கன்னிகள் பெருகுவதற்கு அடிப்படையான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து பார்த்தால் வரதட்சணைக் கொடுமையே ஆகும். ஆரம்பத்தில் மணமகனுக்கு என்று சில பரிசுப்பொருட்களை பெண் வீட்டாரே விரும்பிக்கொடுத்தனர். நாளடைவில் அப்பரிசுப்பொருளை கேட்டுப்பெறும் நிலையானது ஏற்பட்டு விட்டது.
ஒரு வீட்டில் விடிந்தால் திருமணம் நடக்கஇருக்கின்றது. பெண் வீட்டில் நகைகளை எப்படி போடுவது என்ற கவலை. மாப்பிள்ளை வீட்டில் எப்படி வாங்குவது என்ற கவலை. இதனை கொளஞ்சிக் கவிஞர் அவர்கள்,
“வாழ்க்கை ஒப்பந்தம் விடிந்தால் திருமணம்
பெண் வீட்டிற்குத் திருமணக் கவலை
பாவம் மாப்பிள்ளைக்கோ நகைகள் பற்றிய கவலை
எப்பொழுது ஒழியும் வரதட்சணைக் கொடுமை”
என்ற கவிதை வரிகள் பெண்களின் மனக்குமுறலைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் வரதட்சிணைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது
“திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது சொர்க்கத்தில் அல்ல.
ரொக்கத்தில் தங்கத்தில்….”
என்ற கவிதை வரிகளில் அமைந்த கருத்தினை மாற்றியமைத்திடல் வேண்டும். இதைப்போன்ற நிகழ்வுகள் பெண் இனத்திற்கு நடக்கக்கூடாது என்பது வலியுறுத்திக் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை:
இன்று பாலியல் வன்கொடுமையானது அதிக அளவில் நிகழ்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் இதுபற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் வயிற்றுப் பசிக்காக விலைமகளாக மாறும் நிலையினைக் காணமுடிகிறது. இதனை,
“எனக்கு வயிற்றுப்பசி உனக்கு உடற்பசி
பாய்விரித்தாள் பந்திக்குத் தயாரானாள்
இருள் அப்பிக்கொண்டது”
என்ற வரிகளின் வாயிலாக பெண்களின் சமுதாயமானது துன்ப நிலையினை எய்துகின்றது என்பதை விளக்கியுள்ளார்.
முடிவுரை
விதவையின் நிலை, கைம்பெண் நிலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்கொடுமை, இன்றைய பெண்கள் படும் அவல நிலையினையும் பெண்கள் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களை எல்லாம் கொளஞ்சி தமது கவிதையின் வாயிலாக உலகிற்கு உணர்த்தியுள்ளார் என்பது அறியமுடிகிறது.
அடிக்குறிப்பு:
1.கொளஞ்சிக் கவிதைகளின் தொகுப்பு
2. பாரதிதாசன் கவிதைத்தொகுப்பு பக்க எண் : 40
3. இலக்கிய வரலாறு, மு. வரதராசன், பக்க எண் 28
4. தலித்தியம், சங்க இலக்கியம், பக்க எண் 38.
*****
கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்),
சங்ககிரி, சேலம் மாவட்டம்.
பார்வையினை இழந்தவர்கள் பலபேர்கள் இருக்கின்றார்
வாய்பேச இயலாமல் வகைவகையாய் இருக்கின்றார்
கையிழந்து காலிழந்து பலரிப்போ இருக்கின்றார்
கருத்தளவில் அவர்களெல்லாம் கனதியுடன் வாழுகிறார்
குறைபாடு இல்லாமல் பிறந்தவர்கள் யாவருமே
குறைபாடு உடையாரை குறையுடனே நோக்குகிறார்
குறையுடனே பிறந்துவிட்டோம் எனவெண்ணும் குறையுடையார்
குறைபற்றி நினையாமல் நிறைவுநோக்கி நகர்கின்றார்
வலது குறைந்தவர்கள் எனும்வர்க்கம் இப்போது
மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துமே நிற்கிறது
நிலம்மீது வந்து பிறந்துவிட்ட அனைவருமே
நலம்பற்றி எண்ணிவிட்டால் நல்வாழ்வு அமையுமன்றோ
புலனிழந்து விட்டுவிட்டோம் எனவெண்ணி இருக்காமல்
புலனுடையார் ஆற்றுகின்ற அத்தனையும் ஆற்றுகிறார்
நலந்திகழும் எண்ணமதை நாளுமவர் மனமிருத்தி
குறைவந்து விட்டதென மறைந்துமவர் நிற்காமல்
குறையுடனே துணிந்திறங்கி குவலயத்தில் வாழுகிறார்
குறையில்லா வகையினிலே பிறந்துவிட்ட நிலையினிலும்
கறையுடைய மனத்தினராய் வாழுதலே குறையன்றோ
மாற்றுத் திறனாளிகளாய் மலர்ந்துநிற்கும் மாந்தர்தமை
மாறாத மனமுடைய மாந்தரெலாம் மனமிருத்தி
மாசுநிறை மனமதனில் மாசுதனை அகற்றிநின்றால்
மாற்றமது வந்துநின்று வளங்கொடுக்கும் வாழ்விலென்றும்
மதிப்புரையாளர் – சோம. கிருஷ்ணமூர்த்தி (முனைவர் பட்ட ஆய்வாளர்)
நூலாசிரியர் – முனைவர் த. ஆதித்தன்
வெளியீடு – முக்கடல் பதிப்பகம்
11, முப்பத்து மூன்றாம் தெரு,
பாலாஜி நகர் விரிவு 3
புழுதிவாக்கம்
சென்னை – 600 091
கைப்பேசி : 9444365642
ISBN 978-81-907781-7-7
முதல் பதிப்பு : ஏப்ரல் 2017
பக்கம் : 152 விலை : ரூ. 120
தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கிய, இலக்கண வகைகள் பல்கிப் பெருகியுள்ளன. அதிலும் குறிப்பாக, காப்பியங்கள் மிகப் பெருமை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன முறையே ஐம்பெருங் காப்பியங்களாகவும் நீலகேசி, சூளாமணி, நாககுமார காவியம், உதயண குமார காவியம், யசோதர காவியம் ஆகியன முறையே ஐம்பெருங் காப்பியங்களாகவும் பட்டியலிட்டுள்ளனர்.
ஐம்பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்கப்படுகின்றன. ஏனெனில் கதைத் தொடர்பாலும் காலத் தொடர்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதால் அவ்வாறு வழங்கப்பெறுகின்றது.
மறுபிறப்புக் கொள்கைகளைப் பல்வேறு சமயங்களும் எடுத்துக் கூறுவது போல் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மறுபிறப்பு பற்றியும் முற்பிறவி மாந்தர்களைப் பற்றியும் அவர்களது வரலாறு மற்றும் காப்பியப் போக்கிற்கு எவ்வாறு துணைபுரிகின்றனர் என்பதைப் பற்றியும் நூலாசிரியர் முதல் இயலில் தௌpவுபடுத்தியுள்ளார்.
சிலப்பதிகாரக் காப்பியத்தில் உள்ள கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோர் சமணத் தொடர்புடையவர்களாகவும் அவர்களது மகள் மணிமேகலை பௌத்தத் தொடர்புடையவளாகவும் இருப்பதையும், இந்தத் திடீர் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதனையும் நூலாசிரியர் விளக்கியுள்ள திறம் சிறப்பிற்குரியது.
மணிமேகலையின் சிறப்பிற்கு அமுதசுரபியும் ஒரு காரணமாகும். மணிமேகலைக் காப்பியத்தில் வரும் புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாகவும் அவனிடம்தான் அமுதசுரபி இருந்ததையும் அது எவ்வாறு மணிபல்லவத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கைக்கு வந்தது என்பதையும் பின்னர் மணிமேகலைக்குக் கிடைத்த விதத்தையும் நூலாசிரியர் மிகவும் நிரலாகக் கூறியுள்ளார்.
இல்லறமே நல்லறம் என்பதற்கேற்ப குடும்பவாழ்க்கை என்பது மிகச் சீரிய அமைப்பாகும். தனிமனிதன் குடும்பமாவதும் குடும்பம் சமுதாயமாவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சமுதாயம் நலம் பெற குடும்பச் சூழ்நிலையே அடிப்படை ஆதாரமாகும்.
சிலப்பதிகாரத் துணைநிலை மாந்தர்களில் இல்லற மாந்தர்களாகப் பலர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் மாசாத்துவான் – அவனது மனைவி, மாநாய்கன் – அவனது மனைவி, கார்த்திகை – வார்த்திகன், பாண்டியன் நெடுஞ்செழியன் – கோப்பெருந்தேவி, சேரன் செங்குட்டுவன் – வேண்மாள், மாதரி, ஐயை போன்றோர் இடம் பெற்றிருப்பதனை நூலாசிரியர் மிகத் தௌpவாக இரண்டாம் இயலில் எடுத்தாண்டுள்ளார்.
மணிமேகலைக் காப்பியத்தில் துணைநிலை மாந்தர்களில் இல்லற மாந்தர்களாகச் சுதமதி, கோதமை, ஆதிரை – சாதுவன், பீலிவளை – நெடுமுடிக்கிள்ளி, வயந்தமாலை ஆகியோர் இடம்பெற்றிருப்பதனையும் நூலாசிரியர் அழகாக விளக்கியுள்ளார்.
துறவறம் என்பது குடும்ப வாழ்க்கையை விட்டு விலகுவது அல்ல. மாறாக, உலகப் பொருள்களின் மேலுள்ள பற்றுக்களை விடுதலே துறவறமாகும்.
இரட்டைக் காப்பியங்களில் துணைநிலை மாந்தர்களில் துறவற மாந்தர்கள் பற்றி இவ்வியல் விளக்குவதாக அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் மாடலன் மறையோன், மாங்காட்டு மறையோன், கவுந்தி அடிகள் ஆகியோர் துறவற மாந்தர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். அவர்களுள் மாடலன் மறையோன் சைவத் துறவியாகவும் மாங்காட்டு மறையோன் வைணவத் துறவியாகவும் கவுந்தி அடிகள் சமணத் துறவியாகவும் காட்டப்பட்டுள்ளனர்.
மணிமேகலையில் அறவண அடிகள், விருச்சிக முனிவர் துணைநிலை மாந்தர்களுள் துறவற மாந்தர்களாக இடம்பெற்றுள்ளனர்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”
“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”
“ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்”
என்ற கோட்பாட்டை உடைய சிலப்பதிகாரமும்,
“மனித நேயத்தை” உணர்த்துவதற்காகவே படைக்கப்பட்ட மணிமேகலையும் சிறந்த இரட்டைக் காப்பியங்களாகவும் அந்தக் காப்பிய வளர்ச்சிக்குப் பெருந்துணையாகவும் துணைமை மாந்தர்கள் முதன்மைத் தன்மையுடன் விளங்குவதை நூலாசிரியர் ஆய்வு நோக்கில் கையாண்டுள்ள திறம் மிகவும் போற்றுதலுக்குரியது. இந்நூலானது ஆய்வு மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி நூலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
மதிப்புரையாளர் – சோம. கிருஷ்ணமூர்த்தி (முனைவர் பட்ட ஆய்வாளர்)
தமிழ்த்துறைத் தலைவர்,
பிர்லா பொதுப் பள்ளி,
தோகா, கத்தார்.
—————————————————————————————————————————
–முனைவர் இரா. இராமகுமார்
தீவாகிய மனங்களை
தீபகற்பமாய்
கொள்ளை கொண்ட இந்தியா.
குமரி முதல்
இமயம் வரை
பசுமையை ஆடையாக்கியதால்
கொள்ளையனும்
விரும்பும் இந்தியா.
பசுமையில்
சுமையிருப்பினும்
பார்வையில்
பாவையிருப்பினும்
அயல்நாட்டவரும்
சுற்றுலாவாய்
விரும்பும் இந்தியா.
மூன்றாம் உலகப்போருக்கு
இந்திய வரைபடத்தில்
இடமில்லை.
பசுமைையைப் போருக்கு
அழைப்பதில்
நியாயமில்லை……”
“நஞ்சையும் புஞ்சையும்
தேசத்தின் உடல்.
சமுத்திரங்கள்
சரித்திரத்தின் திடல்.
ஆறுகளும் நதிகளும்
பாரத உடை.
வயல்வெளிகளே
பாமரனின் நடை.
அருவிகள் கூந்தலாயின
சோலைகள்
தங்குமிடமாயின.
காலைநேர பனித்துளி
பசுமை நெற்றிக்கு
திலகமாயின.
வறுமையைப் போக்கிட
பறவைகளும்
இரை தேடின.
வளமையை காட்டிட
காடுகளும்
வகிடு எடுத்தன.
என் இந்தியா என்பது
தலையாக சுய நலம்.
நம் இந்தியா என்பதே
இதயமாய் பெருமிதம்.
விதை நெல்லாய்
மாநிலங்கள்.
விதைப்பவர்களாய்
பாரதப் புதல்வர்கள்.
புண்ணியத்தை
அறுவடையாக்கிட
நாள்தோறும் பசுமை தேசத்தில்
தானங்களும் தர்மங்களும்…..
இயற்கையை
வளப்படுத்திட
நாள்தோறும்
கருணையும் மனிதமும்
எங்கே !
பாரதத்தின்
பசுமையை பகையாக்காதீர்….!
சீற்றங்கள் இயற்கையின்
கோபமல்ல!
மாற்றங்கள் செயற்கைக்கு அழகல்ல!
பழமைக்கு வளம் சேர்ப்போம்
புதுமை இந்தியாவிற்கு
வலிமை சேர்ப்போம்.
முனைவர் இரா. இராமகுமார்,
எம்.ஏ., எம்.எட்., எம்பில்., பி.எச்.டி.,
எம்.ஏ(வரலாறு). அக்ரி(உ)., த.பண்டிட்.,
டி.டி.எட்., நெட்., ஜே.ஆர்.எப்
உதவிப் பேராசிரியர் & நெறியாளர்,
தமிழ் உயராய்வு மையம்,
விவேகானந்தா கல்லூரி, அகஸ்தீஸ்வரம்,
கன்னியாகுமரி மாவட்டம் – 629 701
அலைபேசி 9994054671
மின்னஞ்சல் drrksir121314@gmail.com
-மேகலா இராமமூர்த்தி
திரு. பார்கவ் கேசவனின் இப்புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இருவருக்கும் என் நன்றிகள்.
வளைந்து செல்லும் தார்ச்சாலை ஓரத்தில் வளர்ந்துநிற்கும் தருக்களின் வனப்பும் அவை சிந்தும் வண்ணங்களும் நம் கண்ணுக்கும் கருத்துக்கும் பெருவிருந்தளிக்கின்றன.
இயற்கை அன்னை நமக்களித்த அரிய வரம் இந்த மரங்கள்! வெயில் தணிக்க நிழலும், பயிர் தழைக்க மழையும் தருபவை மரங்களே என்றுணர்ந்து மானுடர் அவற்றை அழியாமல் காக்கும் காலமே இவ்வையத்தின் வசந்த காலம்!
இனி, படத்திற்குப் பொருத்தமாய்ப் பாட்டிசைக்கக் காத்திருக்கும் வித்தகக் கவிஞர்களை வரவேற்போம்!
*****
”இருமருங்கிலும் பசுமையும் இதமான தென்றலும் வருடும் இப்படத்தில் காணுமோர் இன்பப் பாதையா மானுடரின் இலட்சியப் பாதை என வினவுதிராயின் இல்லை என்றே மொழிவேன்; அஃது இருளும் இடையூறும் தடைசெய்யும் துன்பப் பாதையே; எனினும் முயன்றால் அதனையும் கடக்கலாம்; சாதனை படைக்கலாம்” என ஊக்கமூட்டுகிறார் முனைவர் மு. புஷ்பரெஜினா.
இலட்சியப் பாதை
இருமருங்கிலும் பசுமை
இதமான தென்றல்
இனிமையான சூழல்
இளமையின் தேடலுக்கு
இயற்கையின் கொடை
இன்றுதான் பிறந்தோமோவென
இதயங்களைப் பூரிப்பாக்கும்
இன்பக் கனவுகளை
இதழோரம் இசைக்கவைக்கும்
இல்லங்களின் இன்பவுலா
இங்கல்லவோ முழுமையடையும்
இலக்கியங்களின் இயற்கையையும்
இணையற்றதாக்கிடுமே
இலட்சியப் பாதை இத்தகையதோவெனில்
இல்லையென்றே இயம்பிட இயலும்
இருளும் இடர்களும்
இடையூறாக நெருக்கிடினும்
இறை பேராற்றலுடன்
இடையறாது இயன்றால்
இறுதிவரை உறுதியாக
இலட்சியப்பாதை இனித்திடுமே…
*****
”தெவிட்டாத இன்பமூட்டும் தெளிவான இந்தப் படம் கடந்த விடுமுறையில் நண்பர்களோடு கண்டுவந்த மலைப் பாதையின் வண்ணப்படம். எப்போதும் பார்த்து இரசிக்கத் தோதாய்க் கைப்பேசியில் காட்சிதருகின்றது மாட்சியோடு” என்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.
மகிழ்ச்சிப் பாதை
கட்டிடக் காடுகள்
கணிசமாகிப் போன நகரில்
ஆரவாரத்துடன் காலையில்
அவசரமாகக் கிளம்பி
வாகன நெரிசலிலே
வகையாகச் சிக்குண்டு
அலுவலகம் சென்றமர்ந்து
அலுக்காமல் பணி செய்து
மாலை வேளையிலே
மரங்களற்ற சாலையிலே
மாசுபட்ட காற்றால்
மனம் துயர்ப் படும்போது
தெவிட்டாத இன்பமூட்டம்
தெளிவான இப்படம்
நல்ல காற்றை சுவாசிக்க
நானும் நண்பர்களும்
கடந்த வருட விடுமுறையில்
கண்டுவந்த மலைப்பாதை
கைப்பேசியில் இப்போ
காட்சியாய் கண்முன்னே
காலத்தால் அழியாது
கடுகளவும் மாறாது
நிழலாகத் தொடரும்
நிஜமான இப்பாதை.
*****
”காட்டுப் பாதையை விரிவாக்க எண்ணிச் சாலையோரம் நிற்கும் வனப்பான சோலைகளை வெட்டிவீழ்த்த எண்ணமிடாதீர்!” என்று எச்சரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
அழிக்காதீர்…
காட்டுப் பகுதிச் சாலையிதைக்
கண்டு களிப்பீர் மானிடரே,
வேட்டை யாடும் நீங்களிந்த
வனப்பை யழித்திட வேண்டாமே,
காட்டுப் பாதையை விரித்திடவே
கரையில் மரத்தை வெட்டவேண்டாம்,
போட்டது போதும் வனமழித்து
போட வேண்டாம் வறட்சிவழியே…!
*****
”போராட்டமின்றி வாழ்க்கையில்லை; நேரான நெடும்பாதையில் போராடிவெல்லப் புறப்படு!” என்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.
வாழ்க்கைப் போராட்டம்!
நேரான பாதை நெடும்பயண வாழ்க்கையை
போராடி வெல்லப் புறப்படு..! – போராட்டம்
இன்றியே வாழ்க்கையும் இல்லை புரிந்தபின்
என்று மெதுவும் எளிது..!
தன் மற்றொரு கவிதையில், ”பாதையென்றால் பள்ளமும் மேடும் இருக்கவே செய்யும்; கவனத்தோடு சென்றால் வாழ்க்கையில் வெல்லலாம்!” என்று ஊக்கமூட்டுகின்றார்.
பாதை காட்டும் வாழ்வியல்..!
பாதையென் ருந்தாலே பள்ளமும் மேடுமுண்டு
காதையும் தீட்டியே கண்ணையும் பாதைமேல்
வைத்தால்தான் உண்டுநல் வாழ்க்கைப் பயணம்.!
அனுபவத் தால்நீ அறி..!
*****
நல்ல கவிதைகளை வெல்லத் தமிழில் அள்ளித் தந்திருக்கும் கவிஞர்கட்கு என் பாராட்டும் வாழ்த்தும்!
இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…
எங்கே போகிறோம்?
போய்ச்சேரும் இடம் அது தெரியாமல்
சாலை அது சிறப்பாய் இருந்து பயன் இல்லை
நோக்கம் அது இல்லா வாழ்வும் என்றும்
சிறப்பாய் இருக்கச் சாத்தியம் இல்லை
தொலைநோக்கும் பார்வை ஒன்று வேண்டும்
அதை நோக்கிப் பாதை போட வேண்டும்
வழி நடத்திச் செல்ல
யாரையும் எதிர்பார்த்து நீ இருந்தால்
அவர் பாதையில் நீ நடக்க,
கொண்ட நோக்கம் அது மாறிப்போகும்
பகுத்தறிவோடு நீ இருந்து
கொண்ட நோக்கம் தனை நோக்கி
புதிய பாதையை நீ அமைத்திடு!
எழுச்சி ஒன்று நெஞ்சில் வேண்டும்
கனவாய் அது தோன்ற வேண்டும்
இயற்கையோடு கைகோத்து தினம் போராடு!
மரங்களின் நிழல் கூடஒளியாய் உன்னைத் தொடர்ந்திடும் பாரு
புகைப்படத்தில் தோன்றும் பாதையில் கூட
இரு புறம் இருக்கும் மரத்தின் நிழலது
இடைவெளி விட்டுத் தோன்ற ஏணிப்படிகளாய் தோன்றியதே!
முன்னேறும் பாதை இது என்று உணர்த்தி
தடை ஏதும் இன்றி முன்னேறி வர அழைப்பு விடுத்தனவே
பயம் அதை போக்கிடு இன்றோடு!
தைரியமாய் முன்னேறு வெற்றி தொடர்ந்திடும் உன் பின்னோடு!
”தொலைநோக்குப் பார்வையோடும் பகுத்தறிவுச் சிந்தனையோடும் உனக்கான பாதையில் நடைபோடு! அப்போது மரங்களின் நிழல்கூட உனக்கு ஒளியாகும்! நடந்திட ஏணிப் படியாகும்” என்று நம்பிக்கை விதைகளைத் தூவிடும் பாவுக்குச் சொந்தக்காரரான திரு. இராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.
பவள சங்கரி
அன்பிற்கினிய நண்பர்களே!
வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
ஷாமினி எடுத்த இந்தப்படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (08.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
நீ.அகிலாண்டேஸ்வரி
முனைவர் பட்ட ஆய்வாளர்
அரிய கையெழுத்துச் சுவடித் துறை
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர் -10
——————————————–
நாட்டுப்புறவியல் என்பது மக்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். பழக்க வழக்கங்கள் யாவும் காலப்போக்கில் அறிவியல் வளர்ச்சிக் காரணமாகச் சமுதாயத்தில் முன்னேற்றம் ஏற்படும்போது சடங்காக மாறுகின்றன. அறிவியல் வளர்ச்சி எவ்வளவு மாற்றம் அடைந்தாலும் மக்களிடையே பல்வேறு வகையான சடங்குகளும், நம்பிக்கைகளும் ஏதோ ஒரு வகையில் பின்பற்றப் பட்டு வருகின்றன. கதைப்பாடல்களைத் தமிழில் பதிப்பித்து வெளியிடுவதில் மிகவும் ஆவல் கொண்டவராகவும், நாட்டுப்புற இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் உடையவராகவும் திகழ்பவர் சிவ. விவேகானந்தன் அவர்கள். இருபதுக்கும் மேற்பட்ட கதைப்பாடல்களை பதிப்பித்து வெளியிட்டுள்ளார். இவர் பதிப்பித்து வெளியிட்ட கதைப்பாடல்களில் பெண்ணரசு காவியம் மிகவும் குறிப்பிடத்தக்கது ஆகும். இக்காவியத்தில் பல சடங்குகளும் நம்பிக்கைகளும் இடம்பெற்று உள்ளன.
நம்பிக்கை
மக்கள் தம் வாழ்வில் பலவித பழக்கவழக்கங்களை மேற்கொள்கின்றனர். அவையே காலப்போக்கில் நம்பிக்கைகளாக மாறுகின்றன தனது அச்சத்தினைப் போக்குவதற்கு ஒன்றன் மீது மிகுந்த நம்பிக்கைக் கொள்கின்றன. மேலும் தம் அன்றாட வாழ்வில் நிகழும் அனுபவங்களின் வழியும், நம்பிக்கை ஏற்படுகிறது. பெண்ணரசுக் காவியக் கதையில் மரங்கள், மகப்பேறு, சோதிடம் போன்றவற்றின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்.
மரங்கள் பற்றிய நம்பிக்கைகள்
திருமணம் முடிந்து குழந்தை இல்லாத பெண்கள் பல விரதங்களை மேற்கொள்வார்கள். குழந்தை வேண்டி விரதம் மேற்கொள்ளும் பெண்கள் கோயில்களில் உள்ள அரச மரத்தை சுற்றி வழிபடுவர். இதில் அரச மரம் பெண் மரம் எனவும் வேம்பு மற்றும் ஆலமரம் ஆண்மரங்கள் எனவும் நம்பப்படுகின்றன.
“ ஆலரசுசுத்தியல்லோ அருகுவெச்சுப் பூசே சேஞ்சா
ஆக்கியானம் தீந்திடுமோ அதிக வரந்தந்திடுமே”1
என்ற அடிகளால் மக்கள் மரத்தினை தெய்வமாக வழிபாடு செய்கின்றனர். அவ்வாறு வழிபாடு செய்வதினால் இம்மரங்கள் வரந்தந்திடும் என்றும் நம்பப்படுகின்றன. இம்மரம் பற்றிய நபிக்கைகளைப் பெண்ணரசுக் காவியம்குறிப்பிடும் போது, பெண்ணரசித் திருநாட்டிலுள்ள கல்லாற்றில் வாழ்ந்து வந்த ஐந்து தலை நாகமானது பன்னிரண்டு வருடங்களுக்கு ஒருமுறை ஒரு மணியை ஈன்றெடுக்குமாம். அந்தமணி கல்லாற்றின் அக்கறையில் சேர்ந்தால் ஆண்மரமான ஆல மரமும், இக்கரையில் சேர்ந்தால் பெண்மரமான அரச மரமும் முளைத்திடும் என்றும், இம்மரங்கள் ஒன்றை ஒன்று தழுவிக் கொள்ளும் காலகட்டத்தில் பெண்கள் கருவுறுவார்கள் என்று இக்காவியம் குறிப்பிடுகின்றது. இதனை,
“கல்லாறு ஆனதி லேகல்புடையில் வாழுகின்ற
ஐந்தலை நாகம் வருசம் பன்னிரண்டு சென்றால்
பாரமணி ஒன்று ஈனும் அக்கதைக்கே சேர்ந்தமணி ஆலக
முளைத்திடுமாம் இக்கதைக்கே சேர்ந்தமணி அரசாக முளைத்திடுமாம்..”2 என்ற கதைப்பாடல் வரிகள் சுட்டுகின்றன.
மகப்பேறு பற்றிய நம்பிக்கைகள்
நாட்டுப்புறங்களில் திருமணம் நடைபெற்ற வீடுகளில் ஓரிரு மாதங்களில் குளவி கூடு கட்டுவதைக் காணலாம். அக்கூடு கட்டப்பட்டு இருப்பதையும், அங்கு குளவி வந்து போவதையும் பெரியவர்கள் பார்த்து விட்டால் தமது வீட்டில் உள்ள மகளோ அல்லது மருமகளோ கருவுற்று இருப்பதாக முடிவு செய்கின்றன.அக்குளவிக்கூட்டில் ஒரு துவாரம் இருந்தால் பிறக்கும் குழந்தை ஆண் குழந்தைஎனவும், பல துவாரங்கள் இருந்தால் பெண் குழந்தை எனவும், நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கையின் அடிப்படையில் குழந்தைக்காகத் தவம் மேற்கொண்ட பெண்ணரசியின் கனவில் மடிமீது நாகம் படமெடுத்து ஆடுவது போலவும், அரண்மனையில் குளவி(வேட்டவாளி) கூடு கட்டுதல் போன்ற சில சகுனங்கள் கனவில் வந்து சென்றன என்று தோழியர்களிடம் கேட்ட போது அவை நற்சகுனங்களாகும், மேலும் இவை யாவும் நல்ல பிள்ளைக்கான அடையாளங்கள் என்றும் கூறுகின்றன.இதனை,
“மண்ணாக மடிமீதில் பையரவு நின்று ஆடிடவும்
மண்ணாரும் அரண்மனையில் வாழ்குளவி கூடவும்
கூடதுவும் கண்டதினால் குணமோ சொல் தோழியரே
நாடதுவே தோன்றிய நல்ல பிள்ளை என்றனராம்…”3
என்ற பெண்ணரசுக் காவியக் கதைப்பாடல் வரிகள் மூலம் அறியலாம்.
ஈற்றுப்புரை கட்டுதல்
அக்காலத்தில் அதிக அளவு மருத்துவ வசதிகள் இல்லாத போது வீட்டிலே பெண்கள் குழந்தை பெற்றன. அக்குழந்தை பேற்றினை ஊரில் உள்ள வயது முதிர்ந்த நன்கு அனுபவமுள்ள பெண்கள் பார்த்து வந்தனர். குழந்தை பெறப்போகும் பெண்கள் ஒன்பது மாதங்கள் முடிந்தவுடன் வீட்டை விட்டுத் தனியே ஒரு அறையில் தங்க வைக்கப்படுகின்றனர். அவ்வாறு அவர்கள் தங்கி இருக்கும் இடத்தை ஈற்றுப்புறை என்று குறிப்பிடுவர். (இக்காலத்தில் பிரசவ அறை) பெண்ணரசுக் காவியத்தில் பெண்ணரசியின் பேறுகாலம் நெருங்கிய போது ஈற்றுப்புரை கட்டியது பற்றிய செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை,
“ எந்தவகை தாயாரே ஈத்துப்புரை கட்ட
எங்களுக்கு விடைதாரும் என்று பெண்கள் கேட்க
வெற்றியுடன் ஈத்துப்புரை கட்டும் என சொல்லி
விரைவினுடன் பெண்ணரசி வெகுமானம் கொடுத்தாள்….”4
மேலும், ஈற்றுப்புரை கட்டுவதறகாக மரம் வெட்டக் காட்டிற்குச் சென்ற பெண்களைக் காட்டுத் தெய்வங்கள் அச்சுறுத்துகின்றன.இதில் காட்டுத் தெய்வங்களாக வடமலை பூதம், அக்னி மாடன், வன்னிமறவன் , வலுவறுகாளி, வரைதனில் அரசன் முதலிய தெய்வங்களை சுட்டுகின்றனர். இத்தெய்வங்கள் யாவும் அம்மரங்களில் குடி கொண்டு பெண்களைத் துன்புறுத்துகின்றன. இத்துன்பங்களில் இருந்து விடுபட அந்த பெண்கள் காட்டுத் தெய்வங்களுக்குப் பலி கொடுக்கின்றன.
நாட்டுப்புறங்களில் ஒரு செயலினை தொடங்குவதற்கு முன் அச்செயல் நல்ல முறையில் தடங்கல் இன்றி நடைபெற வேண்டும் என்று தெய்வங்களுக்கு பலி கொடுக்கும் வழக்கம் இன்றளவிலும் இருந்து வருவதைக் காணலாம். மேலும் “பலியிடுதல் பழஞ்சமுதாயத்தில் தெய்வத்தை அமைதிப்படுத்தக் கையாண்ட வழிபாட்டு முறையாகும் “5.இது உயிர்பலி, மலர்பலி என இரு வகைப்படும். உயிர்பலி முறையே தொடக்க கால மக்கட் சமுதாயத்திடையே தெய்வத்தின் சீற்றம் போக்கக் கையாண்ட வழிபாட்டு முறை என்பதை,
“ வளநகர் கிலம்பப் பாடிப் பலி கொடுத்து
உருவச் செந்தினை குருதியொடு தூஉய்
முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்…”6.
அகநானூற்றின் பாடல் வரிகள் மூலம் அறியப்படுகின்றன.
குருதியோடு, திணையையும் சேர்த்து வழிபட்டமையை நோக்கும் பொழுது தெய்வத்திற்குப் படைத்தலே முதன்மை பெறுகிறது. அதுபோல, பெண்ணரசுக் காவியத்தில் மரம் வெட்டக் காட்டுக்குச் சென்ற பெண்கள் ஒரு மரத்தின் அடியில் பூஜை செய்து திருப்பலி கொடுத்து பின்னர் அத்தெய்வங்களை வேண்டி மரத்தினை வெட்டிச் சென்று ஈற்றுப்புரை கட்டுவர். இவ்வாறு தெய்வங்களுக்கு பலி கொடுக்கும் வழக்கமானது,
“ அத்தனருள் மறவாத பெண்ணரசி தனக்கு
அழகுடனே ஈத்துப் புரை யானது முடிக்க
சுற்றுமுற்றும் ஓடிவரும் சுடலை மாடனுக்கு
தோகையிள மயிலனையான் துய்ய பிரம்ம சக்தி…”7
என்ற பெண்ணரசு காவியக் கதைப்பாடல் வரிகள் மூலம் அறியலாம்.
சோதிடம் பற்றிய நம்பிக்கைகள்
சோதிடம் பார்க்கும் பழக்கம் நாட்டுப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் இன்றும் உள்ளது. பிறந்த நேரத்தை வைத்து அதன் வருங்காலத்தைச் சொல்வார்கள். கையிலுள்ள ரேகையைப் பார்த்து வருங்காலத்தைப் பற்றிக் கூறுவதும் உண்டு. இதனை ரேகை பார்த்தல் என்பர். விண்ணியல் நிகழ்வுகளே வாழ்வியல் நிகழ்ச்சிகளை நிச்சயிக்கின்றன என்று மக்கள் நம்பத் தொடங்கிய நிலையில் சோதிடம் வளர்ச்சியுற்றது எனலாம். இச்சோதிடம் பற்றி பெண்ணரசுக் காவியத்தில் சில குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.
பெண்ணரசிக்குக் குழந்தை பிறந்து இருபத்தேழு நாட்கள் கழிந்தவுடன் சோதிரியரை வரவழைத்துப் பிறந்த பலன் பற்றி கேட்கின்றனர். அவர் குழந்தையின் பிறந்த ராசியை வைத்து கணித்துப் பலன் கூறுகிறார். அவர்கள் கூறியதாவது இந்தப்பெண் நாட்டை ஒரு குடைக்குள் ஆள்வாள் என்றும், சிவன் அருளால் அரசும் அழித்து, நாடும் இழப்பாள் என்று அவளுடைய வருங்காலத்தைக் கணித்து சொல்கின்றனர்.இதனை,
“ நகரில் ஒரு குடைக்குள் ஆலவும் வேணும்
ஆண்டங் கிருக்கின்ற நாளது தன்னிலே
அழிவு வருங்கானும் ராசாக்களோடு செயித்து
மிக்க சிவலோகம் சேரவும் வேனும் ….”8.
என்ற கதைப்பாடல் வரிகளால் அறிய முடிகிறது.
பெண்ணரசுக் காவியத்தில் நாகம் ஈனும் மணி ஆல், அரசமரமாக முளைக்கும் என்ற மக்களின் நம்பிக்கை விசித்திரமாக உள்ளது எனலாம். வீட்டில் குளவி கூடு கட்டுவது குழந்தைப் பேற்றுக்கான அறிகுறியாக நம்புகின்றன. வனத்திலிருந்து மரங்களைப் பெற வனதெய்வங்களுக்கு பலியிடும் வழக்கத்தினை இக்காவியத்தின் மூலம் அறிய முடிகிறது. மேலும் வருங்காலத்தை அறியலாகும் கலையாக சோதிடம் இன்றுவரையிலும் தொடரும் நம்பிக்கையாக மக்களிடம் இருந்து வருகிறது எனலாம்.
“பழங்காலம் முதல் இன்று வரை மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகளையும் பின்பற்றி வருகின்ற சடங்குகளையும் இலக்கியங்கள் வாயிலாகவே தெளிவாக அறிந்து கொள்ள முடிகின்றது.”9 மனித சமூகம் ஆரம்பகாலம் தொட்டு இன்றுவரை எத்தனையோ மாற்றங்களுக்கு உட்பட்டிருந்தாலும், அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்திருந்தாலும் பண்டைக்காலம் முதல் இன்றுவரை சில பழக்கவழக்கங்களை மக்கள் கடைபிடிக்கத் தவறவில்லை. பழமையில் இருந்து புதுமைக்கு மாறினால் தங்களுடைய வாழ்வில் துன்பங்கள் ஏற்படும் என்று கருதுகின்றன. எனவே சடங்குகள் மனித வாழ்வில் முக்கிய பங்கு வகுக்கின்றன என்றால் அது மிகையாகாது. இத்தகைய சடங்குகளையும், நம்பிக்கைகளையும் மேலும் நுணுகி ஆராய்ந்தால் அக்கால மக்களின் வாழ்வியல், சமுதாயநிலை பண்பாட்டுக் கூறுகளைத் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
————————————-
சான்றெண்விளக்கம்
1.கிருட்டிணசாமி.க, நாட்டுப்புற இலக்கியம் ஓர் ஆய்வு, சீதை பதிப்பகம், சென்னை,முதல் பதிப்பு – ஜூன் 2007, பக்கம் – 16.
2.விவேகானந்தன்.சிவ, பெண்ணரசுக்காவியம், காவ்யா, கோடம்பாக்கம், சென்னை, முதல் பதிப்பு – 2012, பக்கம் – 122.
3.மேலது பக்கம் – 124.
4.மேலது பக்கம் – 128.
5.காந்தி.க, தமிழர் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் பதிப்பு – 1980.
6.அகநானூறு, நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிமிடெட், அம்பத்தூர், சென்னை, ஐந்தாம் பதிப்பு – அக்டோபர் – 2014, பக்கம் – 63, பாடல் எண் – 22.
7.விவேகானந்தன்.சிவ, பெண்ணரசுக் காவியம், காவ்யா, கோடம்பாக்கம், சென்னை, முதல் பதிப்பு – 2012. பக்கம் – 132.
8.மேலது பக்கம் – 135.
9.ஆதித்தன்.த, சங்க இலக்கிய சடங்குகளும் நம்பிக்கைகளும், வல்லமை மன்னிதழ், ஆகஸ்ட் – 2018.
முனைவர் அ.மோகனா
உதவிப் பேராசிரியர்
தமிழ்த் துறை
தியாகராசர் கல்லூரி, மதுரை
பிரதி என்றால் பல்வேறு செய்திகள் போகும் தந்திக் கம்பி எனலாம். வாழ்த்துச் செய்தியும் போகும். மரண அறிவிப்பும் போகும். நாவல் பிரதியாகப் பார்க்கப்படுகையில் அதன் அழகியல் தள்ளிப் போடப்படுகிறது. அழகியலாகப் பார்க்கப்படுகையில் அதன் பிரதியியல் (அதாவது மொழி, வடிவம், செய்தி, உத்தி) என்று எந்திரத்தின் பல பாகங்கள் போல தன்மைத் தள்ளிப் போடப்படுகிறது.
– தமிழவன்
சமகால அரசியலுடன் நெருங்கிய தன்மை கொண்டவை நவீனப் புனைவுகள். வடிவத்திலும் கோட்பாட்டு அளவிலும் அவை புதிய தன்மைகளை உட்செரித்துக் கொண்டிருந்தாலும் பேசும்பொருளில் சமகால யதார்த்தத்தை அவற்றால் தவிர்க்க இயலுவதில்லை. 2017 ஆகஸ்டில் தமிழவனின் ‘ஆடிப்பாவைபோல’ நாவல் வெளியானது. அந்நாவல் குறித்த நிகழ்வுகளும் தொடர்ந்து ஒருங்கிணைக்கப்பட்டன. தற்பொழுது ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு அந்நாவலுடனான பயண அனுபவத்தை நோக்கும்போது இன்றும் இந்நாவலைப் பேச வேண்டிய தேவை இருப்பதனை உணரமுடிகின்றது.
தமிழவனின் ‘ஆடிப்பாவைபோல’ நாவலைப் பிரதியாகக் காணும்போது பெறப்படுகின்ற அனுபவத்திற்கும் அதனை அழகியலாகப் பார்க்கும்போது பெறுகின்ற அனுபவத்திற்குமான ஊடாட்டம் குறிப்பிடத்தக்கது. இவ்விரு நிலைகளிலும் அணுக வேண்டிய தேவை இந்நாவலுக்கு உண்டு. இந்நாவலைப் பிரதியாக அணுகும்போது இரண்டு காலங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஒன்று பிரதியின் காலம் மற்றொன்று கதையின் காலம். பிரதியின் காலத்தைப் பொறுத்தவரை அது நேர்கோட்டுத் தன்மையானது மட்டுமன்றி மாற்றவே முடியாதது. ஒருபடித்தாக அமைந்த இந்தத் தன்மையினால்தான் வாசிப்பவர், வார்த்தை அடுத்து வார்த்தையாக, வாக்கியம் அடுத்து வாக்கியமாக வாசிக்க பழக்கப்பட்டுள்ளனர். (2016:258) இவ்வாறு புனைகதைக்காக வரையறுக்கப்பட்ட வாசிப்பு எல்லைகளைத் தமிழ்ச்சூழலில் உடைக்க முயன்றதாகத் தமிழவனின் ஆடிப்பாவைப்போல நாவல் உள்ளது. இருப்பினும் ஸ்பானிஷ் மொழியிலும் ஆங்கிலத்திலும் இதற்கான முன்னெடுப்புகள் 1963இல் தொடங்கிவிட்டன. அப்புனைவுகள் குறித்துப் பிரம்மராஜனின் பதிவு வருமாறு,
இத்தகைய புனைகதையின் விவரணை எல்லைகளை உடைக்க முயன்ற இரண்டு நாவல்கள் சாமுவெல் பெக்கெட்டின் வாட் மற்றும் கொர்த்தஸாரின் ஹாப்ஸ்காட்ச். அத்தியாயங்களின் ஒழுங்கில் மாறுபாட்டினைச் செய்வதன் மூலம் பிரதியின் ஒருதிசைத் தன்மையை மறுக்கிறார் கொர்த்தஸார். பிரதியின் காலம் தவிர்க்க இயலாதபடி நேர்க்கோட்டுத் தன்மையில் இருப்பதால் நிஜமான கதைக்காலத்தின் பன்முகக் கோட்டுத் தன்மையுடன் ஒன்றிணைய முடியாது. ஒன்றிணைய வேண்டிய கட்டாயத்திலும் அவை இல்லை. (2016:258,259)
ஆடிப்பாவை நாவலில் தமிழவன் மூன்றுவிதமான வாசிப்புகளை வாசகனுக்கு அறிமுகப்படுத்துகின்றார். ஒன்று அகம். அதாவது மொத்தமுள்ள பத்தொன்பது அத்தியாயங்களை 1,3,5 என்று வாசித்து விட்டுப் பின்னர் புறம் 2,4,5 என்று வாசிப்பது. இரண்டாவது வாசிப்பு புறம். முதலில் 2,4,6 என்று புறத்தை வாசித்து விட்டுப் பின்னர் 1,3,5 என்று அகத்தை வாசிப்பது. மூன்றாவது இவற்றை விடுத்து எப்போதும் போல அகப்புறமாக வரிசையாக அத்தியாயங்களை வாசிப்பது. நாவலைப் படிக்கும்போது மூன்று வழிமுறைகளுள் ஏதேனுமொன்றைப் பின்பற்ற வேண்டும். இம் மூன்று முறைகளில் வாசித்தபின்பும் வாசிப்புப் பயணம் முடியவில்லை. ஆடிக்கு முன் பாவையை விடுத்துப் பிறிதொரு ஆடியினை வைப்பதனால் நிகழும் எதிரொளிப்பு முடிவற்ற பிரதிபிம்பங்களாகச் சூழுகின்றன. இத்தன்மை வாசகனுக்கும் பிரதிக்குமான நெருக்கத்தைக் கூட்டுகின்றது. ஆடிப்பாவைபோல நாவலின் பிரதித்தன்மை குறித்த சில விவாதங்களைக் கீழ்க்கண்ட நிலைகளில் பகுக்கலாம்.
– பிரதியின் உருவாக்கமும் ஒத்திசைவும். இந்நாவலின் மொழி, அமைப்பு குறித்த சில புரிதல்கள். வசதிகருதி விக்ரம் சந்திராவின் red earth and pouring rain, ஜூலியோ கொத்தஸாரின் Hopscotch ஆகிய நாவல்கள் குறித்த அறிமுகத்துடன் ஆடிப்பாவை போல நாவலுடனான சில ஒப்புமைகள்.
– பிரதி கூறவந்துள்ள செய்தி. குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காலம் (1964). அக்காலத்தின் சூழல், அரசியல் குறித்த சில பதிவுகள். மூன்று நிலைகளில் இதனைப் புரிந்து கொள்ளலாம். ஒன்று திராவிட இயக்கச் செயல்பாடுகள், இரண்டு இடதுசாரி இயக்கத்தின் நிலைப்பாடு,
– மூன்று இவை குறித்த எந்தப் பிரக்ஞையுமற்ற திருவாளர் வெகுசனங்கள். இவற்றை மையப்படுத்தி நிகழும் கதை.
1996 ஆம் ஆண்டு முதன்முதல் வெளியிடப்படுகின்ற சிறந்த படைப்புக்கான Commonwealth writer பரிசினை விக்ரம் சந்திரா என்கிற மகாராஷ்டிர எழுத்தாளர் பெறுகின்றார். அவருடைய Red earth and Pouring rain (1995) நாவலுக்காக இவ்விருது அளிக்கப்பட்டது. 1985இல் ஏ.கே.இராமானுஜம் எட்டுத்தொகை நூல்களிலிருந்து சில பாடல்களை மொழிபெயர்த்து Love and War என்று வெளியிடுகின்றார். அந்நூலில் இடம்பெற்ற செம்புலப் பெயல்நீராரின் குறுந்தொகைப் பாடலை, What could my mother be/ to yours? what kin in my father/ to yours anyway? and how/ Did you and I meet ever?/ But in love/ our hearts have mingled/ as red earth and pouring rain (Kurunthogai 40) என்றவாறு இராமானுஜன் மொழிபெயர்த்திருக்கின்றார். இப்பாடலின் கடைசி அடியைத்தான் விக்ரம் சந்திரா தன் நாவலுக்கு வைத்திருக்கிறார்.
அமெரிக்காவில் படிக்கின்ற இந்திய மாணவனான அபய் கோடை விடுமுறைக்கு மும்பை வருகின்றான். விளையாட்டாக அவனால் சுடப்படுகின்ற வெள்ளை முகங்கொண்ட குரங்கொன்று தான் உயிர்த்திருக்க கடவுளோடு ஒரு ஒப்பந்தம் செய்துகொள்கின்றது. அதன்படி தினமும் ஒரு கதையினைக் கூறி அபயின் குடும்பத்தினரை அது மகிழ்விக்க வேண்டும். ஒரு அத்தியாயம் குரங்கு சொல்லும் கதையாகவும் இன்னொரு அத்தியாயம் நிகழ்காலமாகவும் நகர்கின்ற கதையமைப்பினைக் கொண்டது இந்நாவல். அரபியநாட்டின் ஆயிரத்தி ஓர் இரவுகளை ஒத்த அமைப்பில் அக்குரங்கு கதை சொல்லத் தொடங்குகின்றது. அக் குரங்கு தன்னை பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரித்தானிய காலனிய ஆதிக்கத்தை எதிர்த்த கவிஞரான சஞ்சய் பராசர் என்கிறது. பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி பத்தொன்பதாம் நூற்றாண்டு வரையிலான சமூகச்சூழல் அக்குரங்கின் மொழியாகப் பயணிக்கின்றது. பல பிராந்தியங்களின் தொகுப்பாக அமைந்த இந்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற முகலாயர்களின் ஆக்கிரமிப்பு, பாரம்பரிய நம்பிக்கை, கடவுளர்கள், தொன்மங்களின் அழிவு மற்றும் தொடர்ச்சியான பண்பாட்டு கலப்பு, பண்பாட்டு சிதைவு, சதி நிகழ்வு, கிறித்தவ மிஷனரிகளின் செயல்பாடு, அமெரிக்க வணிக ஏகாதிபத்தியம் என கதைகளினூடாகப் பரந்து பட்ட அரசியல் செயல்பாடுகள் விரிந்து செல்கின்றன. இடையிடையே அபயின் நிகழ்காலமும் ஊடாடுகின்றது. இறுதியில் அபய் தனது நண்பர்களுடன் இணைந்து அமெரிக்காவின் throwaway pop culture ஐயும் இந்தியாவின் தர்மம், கர்மம் அடிப்படையிலான பண்பாட்டையும் முரண்பொருளாகக் கொண்டு நாடகம் ஒன்றினை இயக்குகிறான்.
இந்த நாவலை ஆடிப்பாவை நாவலோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அதன் தலைப்பு; இரண்டு நாவலின் அமைப்பு. தலைப்பினைப் பொறுத்தவரை முன்னர்க் குறித்தபடி சங்க இலக்கியத்துள் குறுந்தொகைப் பாடலொன்றின் அடியினை விக்ரம் சந்திரா கைக்கொண்டது கவனத்திற்குரியது. இருபத்தியிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிறிதொரு தளத்தில் மீண்டும் சங்க இலக்கியப் பாடலின் அடி தமிழவனால் நாவலின் தலைப்பாகக் கொள்ளப்படுகின்றது. இவ்விரண்டு நாவல்களுமே பிரதியின் காலத்தைப் பேசவில்லை. முந்தைய காலத்தையே பேசுகின்றன.
இரண்டாவதாக நாவலின் அமைப்பு. இரண்டு கதைகள் ஒரே தளத்தில் பயணிப்பது. Red earth and pouring rain நாவலின் உள்ளமைப்பு,
The book of war and ancestors
. . .now. . . 19
The strange passion of Benito de Bojgne 21
. . . now. . . 38
A thin kind of happiness 42
என்றவாறு அமைந்துள்ளது. ஆடிப்பாவை போல நாவலின் உள்ளமைப்பு முன்னர்க் குறித்தபடி அகம், புறம் என்று உள்ளது. விக்ரம் சந்திராவின் படைப்பில் குரங்கின் மூலம் வெளிவருகின்ற கவிஞரின் கதை, அபயின் நிகழ்கால கதை இரண்டையும் தனித்தனி நெடுங்கதைகளாகக் கொள்ளமுடியும். இறுதியில் அவை ஒரு பொருண்மையில் முடிகின்றன. ஆடிப்பாவைபோல நாவலில் அகமும் புறமும் ஒன்றிற்குள் ஒன்று ஊடாடினாலும் தனித்தனியே நகர்ந்து செல்கின்றன. மேலும் ‘செம்புலத்தில் நீர் கலத்தல்’ என்கிற பொருள் இந்தியப் பண்பாட்டின் பொதுத்தன்மையாக விக்ரம் சந்திரா நாவலில் குறியீட்டாக்கம் பெற்றிருக்கின்றது. ஆடிப்பாவைபோல நாவலோ யதார்த்தத்தினைப் பிரத்தியட்சமாகக் காட்டு ஆடி அல்ல. அது அதுபோல் காட்டுவது; பிரதி பலிப்பது. அதாவது அது இப்படியாகவும் இருக்கலாம் என்ற இரட்டைத் தன்மையைக் கூறுவது. இந்த ஆடிஅரசியலின் குறியீடாக இப்பொருள் பயன்பட்டிருக்கிறது. அமைப்பிலும் கதைசொல்லல் தன்மையிலும் தவிர்க்க இயலாத ஒப்புமையை இவ்விரண்டு நாவல்கள் பெற்றிருப்பதைப்போலவே வேறுபட்டும் உள்ளன. இருப்பினும் இந்திய புனைவு மரபில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பெற்ற விக்ரம் சந்திராவின் நாவல் தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவலை வாசிக்கும்போது நினைவிற்கு வருவது தவிர்க்க இயலாததாகின்றது.
அடுத்ததாக ஜூலியத் கொர்த்தஸாரின் Hopscotch. ஸ்பானிஷ் மொழியில் 1963இல் வெளியிடப்பட்ட இந்நாவல் 1966இல் கிரிகோரி ரபாசாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. Hopscotch என்பது குழந்தைகள் கட்டம் போட்டுத் தாண்டி விளையாடுகின்ற ஒரு விளையாட்டினைக் குறிப்பது. இந்நாவலை இத்தகு கட்டங்களால் ஆன விளையாட்டாக கொர்த்தஸார் ஆக்கியிருக்கின்றார். ஆடிப்பாவைபோல நாவல் வெளிவந்த நேரத்தில் முகநூலில் Hopscotch நாவலின் உத்திகள் குறித்துச் சிலாகித்துப் பேசப்பட்டது. எனவே அந்நாவலை முழுமையாக வாசித்து ஆடிப்பாவைபோல நாவலோடு ஒப்பிட்டுப் பார்க்கத் தோன்றியது. ஆனால் அது அவ்வளவு எளிதானதாக அமையவில்லை. Hopscotch ஒரு மூடுண்ட பிரதி. நாவலின் தொடக்கத்தில் தமிழவன் அளித்திருக்கும் முறை போலவே நாவலைப் படிப்பதற்கான வழிமுறைகள் Table of Instruction என்று கொடுக்கப்பட்டுள்ளன. அப்பகுதி வருமாறு,
In its own way, this book consists of many books, but two books above all.
The first can be read in a normal fashion and it ends with chapter 56, at the close of which there are three garish little stars which stand for the word The End. consequently, the reader may ignore what follows with a clean conscience.
The Second should be read by beginning with chapter 73 and then following the sequence indicated at the end of each chapter. In case of confusion or forget fullness, one need only consult the following list:
73-1-2-116-3-84-4…
Each chapter has its number at the top of every right – hand page to facilitate the search.
584 பக்கங்களும் மூன்று பகுதிகளும் கொண்ட இந்நாவலின் கடைசிப் பகுதி நாவலின் பிற்சேர்க்கை போன்றுள்ளது. இவ்வாறான முயற்சிகள் தமிழில் இன்னும் கால்கொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. இந்நாவலின் அமைப்பு குறித்து பிரம்மராஜன் கூறியுள்ள கருத்து வருமாறு,
1-36 அத்தியாயங்கள் பாரிஸ் நகரில் அமைந்திருக்கின்றன. 37-56 அத்தியாயங்கள் அர்ஜன்டீனாவில் அமைக்கப்பட்டிருக்கின்றன. ஹாப்ஸ்காட்சின் முன்னேற்றம் அத்தியாயம் 73இல் ஆரம்பிக்கிறது. இந்த வாசிப்புகளுக்காக ஆசிரியனின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நாவலின் முழுமைக்கும் முன்னும் பின்னுமாகத் தாவித் தாவிக் குதித்துச் செல்ல வேண்டியிருக்கிறது. ஹாப்ஸ்காட்ச் ஒரு திறந்த முனை எதிர்நாவல். பிரதான இரண்டு விவரணைப் பகுதிகளும் மொத்த நாவலின் 349 பக்கங்களை எடுத்துக் கொள்கின்றன. மூன்றாவது விவரணைப் பகுதியான 350 – 564 From Divers Sides தேவையில்லை என்று நினைத்தால் கூட எடுத்துவிடக் கூடிய அத்தியாயங்களால் அமைந்திருக்கிறது.(2016:262)
Hopscotch நாவல் From the other side என்று தொடங்குகிறது. இந்நாவலில் மீனவர்களின் சடங்கு குறித்த லெவிஸ்ட்ராஸின் சிறிய மேற்கோளொன்று எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.(ப.359) நவீன பெண் நாவலாசிரியரான அனைஸ்நின் வின்டருடைய ஆட்டிவிஸ் என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்ட மேற்கோள் ஓர் அத்தியாயமாக (110) உள்ளது. நவீன கனடா நாவலாசிரியரான மால்கம் லவ்ரியின் அண்டர் த வால்கனோ நாவலின் ஒற்றை வரி மேற்கோள் அத்தியாயம் 118 ஆக உள்ளது. இப்பகுதிகளை வாசகர்கள் கழற்றிவிடக்கூடிய அத்தியாயங்களாகக் கருதலாம் என்கிறார் பிரம்மராஜன் (2016:266,267). ஆடிப்பாவைபோல நாவலின் தொடக்கத்திலும் தமிழவன் சுந்தரராமசாமி, ஏ.எஸ்.பன்னீர்செல்வம் ஆகியோரின் எழுத்துகள் பயன்படுத்தியுள்ளேன். அவர்களுக்கு நன்றி என்று குறிப்புப் போட்டுள்ளார். ஆனால் அவ்வெழுத்துகளைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அவை பிரதியின் கதைக்குள் பிணைந்துள்ளன. அவ்விருவரையும் முழுமையாகப் படிக்காத வாசகனால் அவ்வெழுத்துக்களைக் கண்டுபிடிக்க இயலாது. இருப்பினும் ஆய்வு நேர்மையைப் போல ஒரு படைப்பு நேர்மையைத் தமிழவன் கடைபிடித்துள்ளார். இந்தத் தன்மை Hopscotch நாவலுடன் அமைப்பு நிலையில் ஒப்பிட உதவுகிறது.
Hopscotch நாவலின் பிரதான பாத்திரங்கள் ஆலிவேய்ரா – லாமகா. இவ்விருவரின் அகவாழ்ககைச் சிக்கல்கள் நாவல் முழுக்க பரந்து கிடக்கின்றன. பாரிஸ் நகரில் Club de la serpentine என்ற கிளப் ஒன்று செயல்படுகின்றது. அதில் முடிவற்ற விவாதங்களில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறான் ஆலிவேய்ரா. பாரிஸ் நகரம் ஒரு சொர்க்கமாக உருவகிக்கப்பட்ட காலகட்டத்தை இந்நாவல் முன்னிறுத்துகின்றது. இந்தக் கற்பிதத்திற்கு எதிரான கருத்துகளை இந்தக் கிளப் வரையறுககின்றது. ஆலிவேய்ரா தனிமனித விமோசனம், எந்த விசாரம், செயல்படாதிருப்பது பற்றிய குற்ற உணர்வு சுயவெறுபபு ஆகிய பல்வேறுபட்ட உணர்வு நிலைகளால் ஆனவன். அவனை ஒரு மத்தியர வர்க்க அறிவுஜீவியாக மட்டுமன்றி சுயப்ரக்ஞை மிகுந்த நாடோடியாகவும் இனங்காண்கிறார் பிரம்மராஜன் (2016:250). ஆடிப்பாவைபோல நாவலின் அகத்திற்குரிய நாயகன் வின்சென்ட் ராஜாவும் ஏறக்குறைய இதே பண்புகளை ஒத்தவன்தான். இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னிட்டுக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நேரத்தில் அவன் காதலியான காந்திமதியை ஊருக்குப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டிய ‘கடமை’தான் அவனுக்கு இருக்கின்றது. அந்தக் கடமை நிறைவேறும் நேரத்தில் அவனும் ஊருக்குச் சென்றிருந்தான். நாவலின், ‘வெளியில் நடந்து கொண்டிருந்த கலவரங்கள் அவனுக்குள் மெதுவாய் ஒரு பெரும் தீயைக் கிளப்ப ஆரம்பித்தன. தான் புறப்பட்டுப்போய் தன் ஊரை அடையும்போது இருள் தன்னை வரவேற்கும் என்ற நினைப்பு வந்தது. அப்போது கலவரம் நினைவிலிருந்து அகன்றது. இருள் மட்டுமே நினைவில் அகலாமல் நின்றது ’(256) இந்தப் பகுதி வின்சென்ட் குறித்த புரிதலுக்கு உதவுகிறது. இங்கு அவன் மனதில் கிளம்பிய தீ கலவரம் குறித்த ப்ரக்ஞையால் உருவான தீ; காந்திமதி பத்திரமாகப் போய்ச்சேர்ந்திருப்பாளா என்கிற தீ; இரண்டில் எதுவாக இருப்பினும் அந்தத் தீயானது அவன் ஒரு அநாதை என்கிற இருளில் அவிந்துவிட்டது. பிற்காலத்தில் இந்தச் சம்பவத்தை நினைத்து அவன் கொள்ளும் சுயவெறுப்பு, ‘எனக்கு ஆச்சரியமா இருக்கு. நான் இந்தி எதிர்ப்பு சூழ்நிலையில் நடந்துகிட்ட முறைகூட… என் சுயமான உணர்வுகள் சார்ந்து மட்டுமே வாழ்ந்திருக்கிறேன். ஹௌ ஸ்டுப்பிட் ஐ வாய்…’ (388) என்றவாறு வெளிப்படுகின்றது. ஆலிவேய்ரா பாரிஸ் பற்றிய கனவுத் தன்மையான எண்ணங்கள் கரைந்து போவதற்கு முன்னரான தன் நாட்களைக் குற்ற உணர்வு மிகுந்த ஓய்வு நேரங்களால் நிரப்புகின்ற நிலை இத்தருணத்தில் சுட்டத்தக்கது. காந்திமதி குறித்த எந்தக் குழப்பங்களுக்கும் விடைதேடும் முயற்சியில் வின்சென்ட் ஈடுபடவில்லை. ஆலிவேய்ரா தன் காதலியுடன் கொள்கிற மனவிசாரம் இங்குக் கவனத்திற்குரியது. அவன் லாமகாவை ஒரு பைத்தியக்கார ஹாப்ஸ்காட்சாகக் கூறுவது; மனநிலை பிறழ்ந்த நிலையில் லாமகாவின் உண்மை இயல்பினைப் புரிந்து கொள்ளும்போது இறந்து போவது. அல்லது இறக்காமலும் இருக்கலாம் என்கிற வாசப் பிரக்ஞைக்கு விடப்பட்டு பிரதிக்குள் தொலைந்து போவது நிகழ்கிறது. ஆனால் வின்சென்ட் ராஜா ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்த தன் நண்பன் ஆதிக்க சாதியினரால் கொல்லப்பட்ட நிகழ்வை ஏற்றுக் கொள்ள இயலாமல் சமூகப் ப்ரக்ஞை பெற்று அடுத்தகட்டத்தை நோக்கிச் செல்கிறான். இது தமிழ்மரபிற்குரிய ஹீரோயிச மாற்றம். மேற்கொண்டு Hopscotchன் கதை மாந்தர்களோடும் நிகழ்வுகளோடும் ஆடிப்பாவைபோல நாவலை ஒப்பிட அதன்மீதான ஆழ்ந்த வாசிப்பும் பிரெஞ்சு மொழிப் பயிற்சியும் தேவை. ஒரு சிறிய நிலையிலான ஒப்பிடலுடன் மேற்கத்திய புனைவுலக மரபில் உருவான உத்தியொன்றின் அறிமுக நிலையாக மேற்கண்ட செய்திகளைக் கொள்ளலாம்.
அடுத்ததாக ஆடிப்பாவைபோல நாவலின் கதை. மேலும் வெளியீட்டகம் ஆடிப்பாவைபோல நாவல் குறித்துச் சொல்லாட்டம் என்கிற கட்டுரைத் தொகுப்பொன்றினை வெளியிட்டுள்ளது. இத்தொகுப்பினைத் தாண்டி இந்நாவல் குறித்து விவாதிப்பதற்கு ஏதேனும் இடம் இருக்கிறதா எனில் அது கடினம். குறிப்பாக ஜமாலன், துரைச்சீனிச்சாமி, வின்சென்ட் இவர்களுடைய கட்டுரைகளைக் கடந்து பேசுவதற்கு ஏதேனும் கண்ணிகள் உள்ளனவா என்று தேட வேண்டியுள்ளது. இவர்கள் விட்ட இடங்களில் இட்டு நிரப்புகின்ற வேலையை மட்டுமே அடுத்த கட்டத்தில் செய்ய இயலும். முன்னர்க் குறித்தபடி மூன்று நிலைகளில் இக்கதையினை அணுகலாம். ஒன்று திராவிட இயக்கச் செயல்பாடு ஒரு கட்சிசார்ந்த செயல்பாடாக மடைமாற்றம் அடைந்து அது மாணவர், மக்களின் போராட்டத்தை உணர்வு நிலைகளை எப்படிப் பயன்படுத்திக் கொண்டது என்பது. இரண்டாவது இடதுசாரி இயக்கமானது ஒரு பார்ப்பனிய போர்வையில் செயல்படுகின்றது என்கிற குற்றச் சாட்டிற்கு ஆளாவதோடு தொடர்ந்து நக்சல்களாகப் போராளிகள் கருதப்பட்ட நிலையினையும் அவர்களின் கருத்துகள் திருடப்படுவதையும் பேசுவது. மூன்றாவது இது குறித்த எந்த அக்கறையும் அற்ற வெகுசனங்களின் வாழ்வு.
கடவுள் மறுப்பு என்பது புரூனோ எரிக்கப்பட்ட
பிறகு மேற்கத்திய சூழலில் ஓர் அதிர்வாகக் கிளம்பி இரண்டாம் உலகப்போரின் பேரழிவிற்குப் பின்னர் இயக்கமாக உருப்பெற்ற கருத்தாக்கம். இதன் நீட்சியைத் தமிழகத்தில் காணமுடிந்தது. தியோபிகல் சொசைட்டி, சுயாக்கியானிகள் சங்கம் ஆகியன இந்நிலையில் முன்னோடித்தன்மை கொண்டவை. இதற்குப் பின்னர் உருவான பெரியாரின் சுயமரியாதை இயக்கம் (1879 – 1973) அந்த நூற்றாண்டிற்கு உரிய நெளிவு சுழிவுகளை உள்வாங்கிக் கொண்டு ஒரு சனநாயக இயக்கமாக வடிவம் பெற்றது. பொருளதார காரணங்களை ஒதுக்கிவிட்டுப் பண்பாடு சார்ந்த அடையாளங்களைக் கருத்துநிலைகளை இவ்வியக்கம் முதன்மைப்படுத்தித் திராவிட இயக்கமாக மாறியது. மொழி இவ்வியக்கத்தின் பிரதான கருவியாக இருந்தது. இது குறித்த வீ.அரசு அவர்களின் கருத்து வருமாறு,
வெகுசன வெளியில் பேச்சு சார்ந்து உருவாகும் தொடர்பாடல் (Communication) அரசியல் இயக்கங்கள் காலூன்ற அடிப்படையாக அமைகின்றன. வெகுமக்களுக்கும் அரசியல் கட்சித் தலைவர்களுக்குமான உறவு என்பது, அவ்வியக்கம் மக்களிடத்து முன்னெடுக்கும் உரையாடல் மொழியாகப் பேச்சு அமைகிறது. திராவிட இயக்க பேச்சுகள் குறிப்பாக மேடைச் சொற்பொழிவுகள் திராவிட இயக்கச் சனநாயகச் செயல்பாட்டின் சட்டகங்களாக (Paradigm) வடிவம் பெற்றன. இவ்வகையான முறையில் இந்தியாவில் வேறு எந்த இயக்கமும் செயல்பட்டதாகக் கருதமுடியவில்லை. திராவிட இயக்கத்தின் இவ்வகையான செயல்பாடுகளால் வெகுசனப் பரப்பில் தமிழ்மொழி வளமாகப் பரவிய வரலாறு மிக முக்கியமானது. அதுவும் காலப்போக்கில் நீர்த்துப் போனதாகவும் கருதப்படுகிறது. திராவிட இயக்கத்தின் மொழிசார்ந்த இச்சட்டகத்தின் பண்புகளைப் புரிந்து கொள்ளும் தேவை நமக்குண்டு. (உங்கள் நூலகம், 2017)
மொழியைப் பின்புலமாகக் கொண்டு மக்களோடு தவிர்க்க இயலாத பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டது திராவிட இயக்கம். இந்த இயக்கச் செயல்பாடு கட்சிச் செயல்பாடாக நீர்த்த நிலையை ஆடிப்பாவைபோல முன்வைக்கின்றது. உணர்வு நிலையால் உந்தப்பட்ட மக்களின் செயல்பாடுகளையும், மாணவர்களின் போராட்டத்தையும் கட்சியின் செயல்பாடுகளாகக் கட்டமைப்பது. மொழிக்காகத் தீக்குளித்த பள்ளி மாணவன் அவன் முருகானந்தமா இல்லையா என்பது வாசகனின் முடிவு. அவன் தம் கட்சியைச் சேர்ந்தவன் என்பதற்கான ஆதாரத்தினைத் தயார்செய்யும் அளவிற்கு மனிதத்தன்மை கேள்விக்குள்ளானதைக் காணமுடிகின்றது. தொடர்ச்சியாக மனிதர்களையும், விலங்குகளையும் வதைத்துக் கொள்கின்ற வெப்பத்தினூடாகவே கட்சி அரசியல் இந்நாவலில் பயணப்படுகின்றது. ‘இயற்கையில் இருக்கும் வெக்கையுடன் அரசியலில் உள்ள வெக்கையும் அந்த ஹாஸ்டல் மாணவர்களின் மனதில் ஏற்பட்டுவிட்டது’(30) என்ற பதிவு இதனை வெளிப்படையாகக் கூறியுள்ளது.
இடதுசாரி இயக்கம் குறித்து எம்.எஸ்.ராவ் என்கிற பாத்திரத்தின் வழி இப்பிரதி பேசியுள்ள கருத்து, ‘நம்ம கம்யூனிஸ்டுகளைப் பாருங்க. முதலாளித்துவத்தப் புரிஞ்சுக்கல. அதுக்குப் பதிலா இன்று பொருத்தமில்லாத க்ளாஸ் அனாலிசிஸ் ஒன்றைத் தூக்கிக்கிட்டு அலையறாங்க. கம்யூனிஸ்டுகளில் பலர் பிராமின்ஸாக இருப்பதுக்கும் கிளாஸ் அனாலிஸிஸை அவர்கள் தூக்கிப் பிடிப்பதுக்கும் தொடர்பில்லன்னு நினைக்கிறீங்களா? முந்தி சமஸ்கிருதம் இப்போ கம்யூனிஸம்… (326) இடதுசாரி இயக்கத்தின் நீர்த்துப்போன தன்மையினைக் காட்டுகின்றது. இந்த இரண்டு நிலை நீர்த்தலுக்கும் இடையில் உண்மையான சமூகப் பிரக்ஞை கொண்ட ஒரு கணிதப் பேராசிரியராக வலம்வருகிறார் சபாஷ்ராஜ். ஒருபக்கம் தமிழ்ப்பேராசிரியர்கள் தான் மொழிப்பிரச்சனையைக் கிளப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பதிவாகின்றது. இன்னொருபுறம் விடுதியில் மேடைப்பேச்சு பயிற்சி வகுப்பு தமிழாசிரியர் ஒருவரால் ஒருங்கிணைக்கப்படுகிறது. அதேநேரம் சோமன் சட்டர்ஜி என்கிற வேதியியல் பேராசிரியர் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராத் தீவிரவாதியாக வருகிறார்; அர்த்தமுள்ள வார்த்தைகளை மட்டும் பிரயோகித்துப் பேசுகிறார். பாலத்திற்குக் குண்டுவைத்துத் தகர்க்க முயன்றதாகச் சுடப்பட்டு இறக்கவும் செய்கிறார். கட்சி, இயக்கச் செயல்பாடுகளில் கல்லூரிப் பேராசிரியர்களின் பங்களிப்பு ஒரு சரடாக ஊடுருவிச் செல்கின்றது. இறுதியில் ஆளுங்கட்சி, எதிர்கட்சி அரசியல் சமரசமாவதும் கட்சி அரசியலுக்குள் காம்ரேட்களின் முயற்சிகள் காணாமல் போவதும் நடக்கிறது.
இவ்வாறு மக்களின் வாழ்க்கையில் பல மாற்றங்களை அவர்களை மீறித் திணிக்கின்ற அதிகார சூழலில் இதுகுறித்த பிரக்ஞை ஏதுமற்ற மனிதர்களும் உலவிச் செல்கின்றனர். சந்தோஷம், காந்திரமதி, காந்திமதியின் அக்கா விசாலாட்சி, தங்கை அபிராமி, தந்தை விநாயகமூர்தி, ஹெலன், கிருபாநிதி, கிருபாநிதியின் அண்ணன், அண்ணி, அம்மா என்று பெரிய பட்டியல் நீளுகின்றது. இவர்கள்தான் திருவாளர் வெகுசனங்கள். சமூகப் பிரக்ஞை என்ற நிலையில் வின்சென்ட் மட்டும் மடைமாற்றம் பெற்றுவிடுவது கவனிக்கத்தக்கது. அவனது மடைமாற்றம் சந்தோஷத்தின் கொலையோடு சம்பந்தப்பட்டது. ஆதிக்க சாதியினரின் வன்முறைச் செயல்பாடுகளில் காணாமல் போகிறான் சந்தோஷம். தான்சார்ந்த சமூகத்தின் மீதான ஆதிக்க சாதியினரின் காழ்ப்புணர்விற்குப் பயந்து மறைந்து பதுங்கி வாழ்கிறான் சந்தோஷம். இருப்பினும் ஒருகட்டத்தில் ஒளிவதற்கு முடியாமல் இல்லாமல் போக நேர்கின்றது. காந்திமதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து நினைத்துப் பார்ப்பதாக அமைந்த பகுதி,‘ காந்திமதி இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி முழுமையாய்ப் புரிந்து கொள்ளும் ‘வயது’ தனக்கு இல்லை என்று நினைத்தாள். அல்லது தன் சூழலில் அரசியல், போராட்டம் என்ற நினைவுகளுக்கு இடமில்லை என்று நினைத்தாள். பெரும்பான்மை ஆட்களும் தன்னைப் போலத்தானே என்றும் எண்ணினாள். அவள் தங்கியிருந்த பெண்கள் விடுதியில் செய்தித்தாள் வந்தன. யாரும் அந்தத் தாள்களை அதிகம் படிப்பதில்லை. அரசியல், தர்ணா, போராட்டம் என்பவை தங்கள் அண்ணன் தம்பிமார்களின் உலகத்தைச் சார்ந்தது என்றே நினைத்தார்கள். செய்தித்தாள்களில் சினிமா செய்திகள் படிப்பது பெண்களின் செயல். அல்லது வார இதழ்களில் வரும் தொடர்கதைகளைப் படிப்பது பெண்களின் ஒரே காரியமாக இருந்தது’ (327). ஒரு வெகுசனக் கருத்தியலை இதைவிடத் துல்லியமாகக் காட்சிபடுத்திவிடமுடியாது. அதே நேரம் காமாட்சி எம்.எல்.ஏ., மலர்க்கொடி இவர்களின் இருப்பு வெகுசன இருப்பிலிருந்து சற்று மாறுபட்டதாக உள்ளது. வான்மீகநாதனின் அரசியல் வாழ்க்கைக்கு முகவரியாகக் காமாட்சியும் பொன்வண்ணனின் அரசியல் செயல்பாட்டிற்குப் பின்புலமாக மலர்க்கொடியும் அவளுடைய தந்தையும் இருக்கின்றனர்.
தமிழ்ச்சூழலில் பாவிச், சாமுவேல் பக்கெட், ஜூலியஸ் கொத்தசார் ஆகியோரால் முன்னெடுக்கப்பட்ட உத்திகள் இன்னும் முழுதாக உள்வாங்கப்படவில்லை. அதற்கான முன்னெடுப்பாக இந்நாவலைப் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் தமிழவனின் ஆடிப்பாவைபோல நாவல் அறிமுகப்படுத்தியிருக்கும் உத்தி தமிழுக்கு உரியதான புதிய உத்தியாகவே கால்கொண்டுள்ளது. தமிழவனின் ஏற்கனவே சொல்லப்பட்ட மனிதர்கள், ஜி.கே.எழுதிய மர்மநாவல், வார்ஸாவில் ஒரு கடவுள் உள்ளிட்ட நாவல்களின் வரிசையில் பார்க்கும்போது மொழிகனம் இந்நாவலில் குறைவு. ஆனால் பேசியிருக்கும் அரசியல், கைக்கொண்டுள்ள உத்திகள் வாசர்களை அடுத்தகட்ட நகர்வை நோக்கிச் செல்லவைக்கின்றன. பிறமொழி நாவல்களின் உத்திமுறைகளை வாசிக்கத் தூண்டுகின்றன. இந்நாவலுடனான பயணம் வாசகனை முடிவற்ற வெளியில் சேர்க்கின்றது.
———————
உதவிய நூல்கள்
1995 Red earth and pouring rain, Vikram Chandra, Penguin Books, New Delhi
2013 Hopscotch, Julio Cortazar, Random house, U.S.A
2016 இலையுதிராக் காடு, பிரம்மராஜன், எதிர் வெளியீடு, பொள்ளாச்சி
2017 ஆடிப்பாவைபோல, தமிழவன், எதிர்வெளியீடு, பொள்ளாச்சி
போதுமென்ற மனமே..
இளம் வயதினர் எதை எதையோ எட்டிப் பிடிக்க விரும்புவர். அந்த முயற்சியில் என்னென்ன அபாயங்கள் காத்திருக்குமோ என்ற அச்சத்தால் மூத்தவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள்: `போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!’
இந்த அறிவுரையை ஏற்று நடந்தால், இறுதியில் இளைஞர்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்படும்.
விரும்பியதை அடைவது என்றால் பிறருக்குச் சேரவேண்டியதை தட்டிப் பறிப்பதல்ல. இருப்பினும், இன்றைய உலகில் பலரும் பணம், பதவி என்று பேராசையை வளர்த்துகொண்டே போக, எந்தப் பதவியில், ஏதாவது செய்து, அமர்ந்தால் குறுகிய காலத்தில் பெரும் பொருள் திரட்டலாம் என்று மட்டுமே அவர்கள் சிந்தனை போகிறது.
பணம், புகழ், அல்லது சமூக அந்தஸ்து என்று நாடுபவருக்கு அதெல்லாம் கிடைத்தாலும் நிறைவு கிட்டுமா என்பது சந்தேகம்தான்.
அளவுக்கு அதிகமான சொத்தால் நிறைவா?
அரசியல் என்பது மக்களுக்காக என்று யார் கூறினார்கள்? இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்களில் பெரும்பான்மையோர் தம் வாழ்நாட்களில் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு சொத்து சேர்க்கின்றனர். கோடி கோடியாகப் பணம், நகை, கார், பங்களா என்று எவ்வளவு சேர்த்தாலும் மனநிறைவு கிட்டுவதில்லை.
திருப்தி கிடைக்காதபோதுதான் ஆசைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒரு பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான காலணிகள் எதற்கு? நூறு காரட் எடைகொண்ட வைர அட்டிகையை அணியத்தான் முடியுமா? இதையெல்லாம் அவர்கள் யோசிப்பதே கிடையாது.
“தன் சுகத்தையே பெரிதாக எண்ணி வாழ்பவனுக்கு இறுதியில் ஏமாற்றம்தான்!” (ஐன்ஸ்டீன்).
அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க, வெறுமைதான் ஏற்படுகிறது. அந்த வெறுமையைப் போக்க, மேலும் கொள்ளையடித்தாக வேண்டும். சட்டத்தின் பிடிகளில் அகப்பட்டுக்கொண்டால், `என்மேல் எந்தத் தவறும் இல்லை, எல்லாம் எதிரிகளின் சதி!’ என்று சாதிப்பார்கள்!
பாராட்டால் நிறைவா?
`நாம் மிகுந்த செல்வந்தராக ஆனால் எல்லாரும் மதிப்பார்கள். நம் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்,’ என்று கணக்குப்போட்டு, திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர, ஒருவர் பணக்காரராக ஆகலாம். ஆனால், பிறர் பாராட்ட வேண்டும் என்ற இலக்கைக் குறி வைத்தால், அதை அடையும்போது நமக்கும் மகிழ்ச்சி கிட்டும் என்பது என்ன நிச்சயம்?
`பிறர் பாராட்டினால்தான் நம் மனம் குளிரும்’ என்றிருப்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்றே தோன்றுகிறது. எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காதபோது மனம் வெம்பிப்போவார்கள். நம் மகிழ்ச்சிக்கு எப்போதும் பிறரை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.
பிடித்ததைச் செய்
சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள் உயர்நிலைப்பள்ளியில் மேலும் படிக்க கணக்கு, விஞ்ஞானம் என்று பாடங்களை பள்ளியே தேர்ந்தெடுத்துவிடும். குறிப்பிட்ட மாணவருக்கோ மொழி, கலை என்று வேறு எதிலாவதுதான் மனம் லயிக்கும்.
`இதெல்லாமா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகிறது?’ என்று பெற்றோரும் அவநம்பிக்கை அளிப்பார்கள்.
ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் தம் மனம் விரும்பும் பொழுதுபோக்கில் ஈடுபடுவார்கள். அதில் ஈடுபடும்போதே இவ்வளவு மகிழ்வாக இருக்கிறதே என்று எண்ணுபவர்களுக்குத்தான் நிறைவு கிட்டுகிறது. இருப்பினும், தம் மனம் நாடுவதை நோக்கித் துணிச்சலுடன் பயணம் செய்பவர் மிகக் குறைவு.
தம் இலக்கில் குறியாக இருப்பவர்களுக்குத் தானே சரியான பாதை புலப்படும். அவ்வழியில் ஏற்படக்கூடிய தவறுகள், தோல்விகள் ஆகியவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் அறிவார்கள்.
எவ்வளவுதான் திறமையும் ஆர்வமும் இருந்தாலும், வெற்றியும், அதனால் கிடைக்கும் நிறைவும் நீடிக்க வழியில் எழக்கூடும் உயர்வு மனப்பான்மையைத் தவிர்க்கக் கற்க வேண்டும்.
ஆனாலும், பிறருடைய குறைகளில் கவனம் செலுத்தி `நான் அப்படி இல்லை!’ என்ற அற்பதிருப்தி கொள்ளும் மனப்பான்மையை எத்தனை பேரால் தவிர்க்க முடிகிறது!
கதை
நடராஜன் வாத்தியக் கலையில் வல்லுனர். வசதிகுறைந்த பல மாணவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி அளித்தார். அவர்கள் அவரைக் கடவுளாகவே பாவித்ததில் அதிசயமில்லை.
நடராஜனின் செருக்கு மிகுந்தது. `என்னைவிட சிறப்பாக யாரால் வாசிக்க முடியும்!’ என்று நினைக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக, தன்னையொத்த, தன்னைவிட பிரபலமான வாத்தியக்காரர்களைப்பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தார். சிஷ்யர்களும் அக்கதைகளைக் கேட்டுச் சிரிப்பார்கள். குருபக்தியைப் பின் எப்படித்தான் வெளிக்காட்டுவது!
நடராஜன் கூறியதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், பிறர் என்ன தவறு செய்கிறார்கள் என்பதிலேயே கவனம் போயிற்று. கச்சேரியை ஆரம்பிக்குமுன், திமிருடன் சக கலைஞர்களை சண்டைக்கு இழுப்பார்.
நாளடைவில், எவரும் நடராஜனுடன் இணைந்து வாசிக்க முன்வரவில்லை. `எல்லாருடனும் எப்போதும் சண்டை போடுவார்!’ என்று புகார்கள் எழ, அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.
ஒருவர் எப்போது நிறைவடைகிறார்?
பள்ளிச் சிறுவர்களைக் கேட்டால், `பரீட்சை முடிந்து, அதில் திருப்திகரமாக எழுதிவிட்டால்!’ என்பார்கள். மாதக்கணக்கில் உழைத்துப் படித்த களைப்பு அப்போது நினைவில் நிற்காது.
உடல் நோக பல காலம் பயிற்சி செய்துவிட்டு, பார்வையாளர்கள் பாராட்ட தம் திறமையைக் காட்டும்போது விளையாட்டு வீரர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். ஆரம்பத்தில், அவர்களுடைய நோக்கம் பிறர் பாராட்ட வேண்டும் என்பதாக இருந்திருக்காது. தமக்குப் பிடித்த விளையாட்டில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருப்பார்கள். அவ்வளவுதான். அதில் வெற்றியும் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.
சில பிரபலமானவர்கள் இசைக்கச்சேரி செய்யும்போது, அடிக்கடி கைதட்டல் கேட்கும். பாவம் அதிகமிருக்காது. `இவர்கள் ஆத்மார்த்தமாகப் பாடுகிறார்களா, இல்லை, எப்படிப் பாடினால் ரசிகர்களைக் கவரலாம் என்று கணக்குப்போட்டுப் பாடுகிறார்களா?’ என்று இசைஞானம் உள்ளவர்களின் சிந்தனை போகும்.
ஒருவர் தான் பாடுவதில் மனமும் ஒன்றினால்தான் ரசிக்க முடியும். `என் குரலின் இனிமையை வைத்துக்கொண்டே பிறரைக் கவர்ந்துவிடுவேன்!’ என்ற மனப்பான்மை எழுந்தால், அவர் தன் திறமையை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிக்க மாட்டார். இதனால் அவருக்கும் நீடித்த நிறைவு கிட்டப்போவதில்லை.
ஆக்ககரமாக எதைச் செய்ய வேண்டுமானாலும் நம் முழுமையான கவனத்தை அதில் செலுத்தவேண்டும் என்று புரிந்தவர்கள்தாம் நிறைவடைகிறார்கள். எதைத் தேடுகிறோம் என்று புரியாது அலைவது வீண் முயற்சிதான்.
`வெற்றிமேல் வெற்றி அடைபவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். ஏனென்றால், அடுத்து எதில் வெற்றி பெறலாம் என்றே அவர்கள் யோசனை போகும்,’ என்று ஒருவர் கேலியாக எழுதியிருந்தார். வெற்றி என்பது ஒரு முடிவு இல்லை, மனநிறைவு தரும் இன்னொரு முயற்சியின் தொடக்கம் என்று அவருக்குப் புரியவில்லை.
கல்வியால் நிறைவு
நம் திறமையை முழுமையாக வெளிக்கொணர கல்வி ஒரு சாதனம். திறமையை வெளிப்படுத்த முடியாதபோது மனம் குழம்பிவிடுகிறது.
கதை
ரேணுகா அழகிய பெண். அழகிலேயே கவனம் செலுத்தியதில் படிப்பு ஏறவில்லை. அவளுடைய அழகில் மயங்கிய ஒருவனுக்குக் கல்யாணம் செய்துவைத்து விட்டார்கள் — பதின்ம வயதிலேயே.
தன்னையொத்த பெண்கள் சுதந்திரமாக, வேலைக்குப் போவதைப் பார்த்து தான் எதையோ இழந்துவிட்டதுபோல் நினைக்க ஆரம்பித்தாள். தன் வாழ்க்கை இப்படியேதான் கழிந்துவிடும், பெரிதாக எதிர்பார்க்க எதுவுமில்லை என்று எழுந்த எண்ணம் எல்லார்மேலும் கோபமாக மாறியது.
“இவளை எப்படிப் பொறுத்துப்போகிறீர்கள்?” என்று ஓர் உறவினர் கேட்டதற்கு, கணவர் பொறுமையாகப் பதிலளித்தார்: “இவளுக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. புதிதாக எதையும் கற்கும் ஆர்வமும் கிடையாது. எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பதால்தான் அலுப்பு!”
ஓயாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி, தன்னுடன் பிறரையும் வருத்துவானேன்! கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடைந்தாலே போதுமே! ஆக்கபூர்வமாக எதையாவது செய்தால் மனம் அமைதி பெறும், நிறைவாகவும் இருக்கும்.
நன்றியைக்கூட எதிர்பாராது பிறருக்கு உதவுவதே உண்மையான நிறைவை அடையும் வழி.
தொடருவோம்