கொளஞ்சியின் கவிதைகளில் பெண்களின் நிலை
-ர. பரமேஸ்வரி
முன்னுரை:
கொளஞ்சியின் கவிதைகளில் பல்வேறு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெண்கள் சமுதாயத்தில் தன்னுரிமை பெற்றவர்களாகவும் அனைவருக்கும் நிகரான முறையிலும் இடம்பெறுதல் அவசியம். சமுதாயத்தில் பெண்களின் நிலைகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
சமுதாயத்தில் பெண்களின் நிலைகளாவன:
பெண்களின் நிலைகளை பல்வேறு கவிதைகளில் எடுத்துகூறியுள்ளார். எந்நிலையிலும் பெண்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தப்படுகின்றது.
- விதவை நிலை
- கைம்பெண் மறுமணம்
- வரதட்சணை
- பாலியல் வன்கொடுமை
- பெண்சிசுக் கொலை
விதவை நிலை:
ஒரு பெண்ணுடைய வாழ்விற்குத் தாலி வேலியைப் போன்றது. ஒரு பெண் திருமணம் ஆனபிறகு கணவன் இறந்துவிட்டால்; அவளை விதவை என்று அழைக்கின்றனர். திருமணம் ஆகாதவரை கன்னி என்று சமுதாயம் கூறுகின்றது. கணவன் இறந்துவிட்டால் உடனே அந்தப் பெண்ணின் தாலியைக் கழற்றிவிட்டு பூவும், பொட்டும் இல்லாமல் விதவைக் கோலத்தினை அடைகின்றாள்.
உதாரணமாக, ஊட்டியில் மலர்க்கண்காட்சி நடக்கின்றது. அவள் மட்டும் மலரை சூடிக்கொள்ளமுடியாமல் அழுகிறாள் என்பதை,
“ஊட்டியில் மலர்க்கண்காட்சி, எல்லா மலரும்
கண்சிமிட்டி சிரித்தன, அவள் மட்டும்
மலரைச் சூடிக்கொள்ள முடியாமல்
தனியே அழுகிறாள்.” என்ற கவிதை வரிகள் மூலம் பெண்ணின் நெஞ்சுக் குமுறலை எடுத்துக்காட்டுகின்றார். மேலும் கைம்பெண்ணின் அவலநிலையை,
“சிறகு அறுந்து போன வண்ணத்துப் பூச்சு”
என்ற வரிகள் பெண்ணின் மனதை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குகின்றன என்பதை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றார். விதவை இல்லாத, பெண்கள் சமுதாயமாக மாறவேண்டும் என்றும், விதவைப் பெண்ணின் நிலையைப் பற்றியும் பாவேந்தர் எடுத்துக்காட்டுவதாவது,
“பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால்
பெருங்கிழவன் காதல் செயப்பெண் கேட்கின்றான்
வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ”
பூவும் பொட்டும் அணியும், மணியும் தானே போயிற்று. உயிர் உடலின் உணர்ச்சி என்னிடம்தான் இருக்கின்றது என்ற பெண்ணாக இருந்து பேசுகின்றார் பாவேந்தர்.
கைம்பெண் மறுமணம்:
கணவனை இழந்த பெண்கள் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டால் இந்தச் சமுதாயம் நிம்மதியாக வாழவிடுவதில்லை. கணவனை இழந்தவள் கைம்பெண் அல்ல என்ற கருத்தினை உலகிற்கு உணர்த்துதல் வேண்டும். அவளுக்கும் உயிர் உணர்ச்சி மறுமணம், வாழ்வு இவை அனைத்தும் உண்டு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை,
“கணவனை இழந்தவள் கைம்பெண் அல்ல
கருத்தை விலக்குங்கள் அவளுக்கும் உயிருண்டு
அவளுக்கும் உணர்ச்சியுண்டு, அவளுக்கும் மறுமணம் உண்டு
அவளுக்கும் வாழ்வு உண்டு உணர்ந்து பாருங்கள்” என்ற வரி கைம்பெண்ணின் உடைய மறுமணம் பற்றி விவரிக்கிறது. கைம்பெண்ணின் மறுமணம் பற்றி விவரிக்கப்படுகிறது.
மேலும் கைம்பெண்ணை வாழவிடாமல் துன்பத்திற்கு ஆளாக்குகின்ற நிலையினை,
“மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்
மங்கை நல்லாள் என்ன செய்வாள் அவளை நீங்கள்
ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்
அணுவளவும் அடையாமல் சாகச் செய்வீர்” என்ற வரிகளின் வாயிலாகப் பெண்களை வாழவிடாமல் துன்பப்படுத்தும் நிலையினை பாரதிதாசன் எடுத்தியம்பியுள்ளார்.
வரதட்சிணை:
நாட்டின் முதிர்கன்னிகள் பெருகுவதற்கு அடிப்படையான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து பார்த்தால் வரதட்சணைக் கொடுமையே ஆகும். ஆரம்பத்தில் மணமகனுக்கு என்று சில பரிசுப்பொருட்களை பெண் வீட்டாரே விரும்பிக்கொடுத்தனர். நாளடைவில் அப்பரிசுப்பொருளை கேட்டுப்பெறும் நிலையானது ஏற்பட்டு விட்டது.
ஒரு வீட்டில் விடிந்தால் திருமணம் நடக்கஇருக்கின்றது. பெண் வீட்டில் நகைகளை எப்படி போடுவது என்ற கவலை. மாப்பிள்ளை வீட்டில் எப்படி வாங்குவது என்ற கவலை. இதனை கொளஞ்சிக் கவிஞர் அவர்கள்,
“வாழ்க்கை ஒப்பந்தம் விடிந்தால் திருமணம்
பெண் வீட்டிற்குத் திருமணக் கவலை
பாவம் மாப்பிள்ளைக்கோ நகைகள் பற்றிய கவலை
எப்பொழுது ஒழியும் வரதட்சணைக் கொடுமை”
என்ற கவிதை வரிகள் பெண்களின் மனக்குமுறலைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் வரதட்சிணைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது
“திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது சொர்க்கத்தில் அல்ல.
ரொக்கத்தில் தங்கத்தில்….”
என்ற கவிதை வரிகளில் அமைந்த கருத்தினை மாற்றியமைத்திடல் வேண்டும். இதைப்போன்ற நிகழ்வுகள் பெண் இனத்திற்கு நடக்கக்கூடாது என்பது வலியுறுத்திக் கூறப்படுகிறது.
பாலியல் வன்கொடுமை:
இன்று பாலியல் வன்கொடுமையானது அதிக அளவில் நிகழ்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை வெளியில் அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் இதுபற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் வயிற்றுப் பசிக்காக விலைமகளாக மாறும் நிலையினைக் காணமுடிகிறது. இதனை,
“எனக்கு வயிற்றுப்பசி உனக்கு உடற்பசி
பாய்விரித்தாள் பந்திக்குத் தயாரானாள்
இருள் அப்பிக்கொண்டது”
என்ற வரிகளின் வாயிலாக பெண்களின் சமுதாயமானது துன்ப நிலையினை எய்துகின்றது என்பதை விளக்கியுள்ளார்.
முடிவுரை
விதவையின் நிலை, கைம்பெண் நிலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்கொடுமை, இன்றைய பெண்கள் படும் அவல நிலையினையும் பெண்கள் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களை எல்லாம் கொளஞ்சி தமது கவிதையின் வாயிலாக உலகிற்கு உணர்த்தியுள்ளார் என்பது அறியமுடிகிறது.
அடிக்குறிப்பு:
1.கொளஞ்சிக் கவிதைகளின் தொகுப்பு
2. பாரதிதாசன் கவிதைத்தொகுப்பு பக்க எண் : 40
3. இலக்கிய வரலாறு, மு. வரதராசன், பக்க எண் 28
4. தலித்தியம், சங்க இலக்கியம், பக்க எண் 38.
*****
கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்),
சங்ககிரி, சேலம் மாவட்டம்.
