Blog

  • வாழ்ந்து பார்க்கலாமே 47 – க. பாலசுப்ரமணியன்

    காலங்களில் நிகழ்காலமே வசந்தம்.

    ” என்னங்க… கொஞ்சமாவது ஓய்வு எடுத்தீங்களா….” என் மனம் என்னைத் தட்டி எழுப்பியது.

    “ம்ம்ம் ….” சற்றே முனகிக்கொண்டே எழுந்தேன்…” தூக்கம் சரியாக இல்லை.. தூங்கும் போதுகூட நீங்க தொடர்ந்து எதையாவது செய்து கொண்டிருந்தீர்களானால் நான் எப்படி நிம்மதியாகத் தூங்குவது..”  என்  மனத்தைச் சற்றே சாடினேன்.

    “எனக்குத்தான் நீங்கள் பிறந்ததிலிருந்து உங்கள் கடைசி நேரம் வரை ஓய்வே கிடையாதே… நான் ஓய்வெடுக்க ஆரம்பித்துவிட்டால் உங்கள் கதி என்னாவது?”  என் மனம் நக்கலாகச் சிரித்தது.

    உண்மைதான். நாம் தூங்கும்பொழுது கூட நமது மனம் எதையாவது சிந்தித்துக்கொண்டே இருக்கின்றது. நமது பழைய செயல்கள், நமது கடந்தகாலத் துன்பங்கள், நமது நிறைவேறாத ஆசைகள், நம்முடைய தோல்விகளின் நினைவுச் சிதறல்கள் உள்ளிருந்து நமக்கு மகிழ்ச்சியைத் தந்தவண்ணமோ அல்லது துன்பங்களைத் தந்த வண்ணமோ இருக்கின்றன.  இதை நம்மால் நிறுத்த முடியுமா? இதிலிருந்து விடுபட்டு நாம் வாழ முடியுமா?

    “முடிந்து போன காலம் ஒரு சரித்திரம். வருங்காலம் ஒரு மாயை. நிகழ்காலம் ஒரு அன்பளிப்பு.” என்ற வார்த்தைகளை உணர்வது மிகவும் அவசியம். பல பேர்கள் வாழ்க்கையில் பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும் பல சாதனைகளைப் படைத்திருந்தாலும் தங்களுடைய பழைய காலத்திலேயே வாழ்ந்துகொண்டிருப்பவர்களாக இருக்கின்றார்கள். முடிந்தவைகளை முடிந்தவைகளாகக் கருதாமல் அவைகளின் சரித்திரத்தை பொன்னேடுகளில் போற்றி நித்தம் ஒரு முறை வழிபட்டுக்கொண்டு வருகின்றார்கள். ஒவ்வொரு சிறிய துன்பம் வரும் பொழுதும்  தங்களுடைய பழைய சரித்திரத்தை மீண்டும் மீண்டும் படித்து அந்தத் துன்பங்களின் நாளேடுகளில் தங்கள் பதிவுகள் எத்தனை முறை வந்திருக்கின்றன என்பதை நினைவுகூர்ந்து தங்களுடய நேரத்தை வீணடிப்பது மட்டுமின்றி தங்களுடைய புதிய எண்ணங்களுக்கும் முயற்சிகளுக்கும் தடைக்கற்களைத் தொடர்ந்து வைத்துக்கொண்டு வருகின்றார்கள். இவ்வாறு பழமையில் பொழுதைக் கழிப்பவர்கள் தங்கள் தோல்விகளுக்குத் தாங்களே முகாந்திரமாக இருந்து வருகின்றனர்.

    நான் எனது மனத்திடம் கேட்டேன் “ஏன் நீ பழைய நினைவுகளை பிடித்துக்கொண்டு கட்டி அழுகின்றாய்? அவைகளை உதறி எறிய மாட்டாயா?”  என் மனம் என்னைக் கூர்ந்து நோக்கியது.

    “என்ன சொன்னீங்க?  நான் பிடித்துக் கொண்டு விடமாட்டேன் என்று சொல்கின்றேனா? சற்றே யோசித்துப்  பாருங்கள்.நீங்கள் தான் அவைகளைக் கட்டி அணைத்து உங்களையே வதைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். அன்றே சொன்னேனே. எனது கடிவாளம் உங்கள் கையில் இருக்கின்றதென்று.”

    நான் சற்றே யோசித்தேன். அது மீண்டும் தொடர்ந்தது.  “நீங்கள் ஒரு பலமான யானையைப் போல. உங்களிடம் எவ்வளவு சக்தி இருக்கின்றதென்று உங்களுக்கே தெரியாது. ஆனால் எப்படி ஒரு யானை ஒரு சிறிய கயிற்றினால் தூணில் கட்டப்பட்டிருக்கின்றதோ அதுபோல் நீங்களும் உங்கள்  பழங்காலத்தோடு கட்டப்பட்டிருக்கின்றீர்கள். அதை அறுத்து எறிந்துவிட்டு ஒரு சுதந்திரனாக மாறுங்கள். உங்கள் பழமையின் வலியும் தெரியாது. அதன் நினைவுகளும் வாட்டாது.”

    என்னுடைய மனதின் வாதம் எனக்குச் சரியாகப் புரிந்தது.

    நம்முடைய பழைய காலம் நமக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்துள்ளது. அதை நிச்சயமாக மனதில் கொள்ளுதல் அவசியமே. ஆனால் அந்தப் பாடங்களுக்கு அப்பால் முடங்கிக்கிடக்கின்ற சிறிய தகவல்கள், அனுபவங்கள், உணர்வு சார்ந்த நிகழ்ச்சிகள், அதனுடன் சம்பந்தப்பட்ட மனிதர்கள், அவர்களுடைய உறவுகள் போன்ற பல நமக்கு வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தேவையற்றவை..எனவே அவைகளுடைய பாரத்தை நாம் சுமக்காக் கூடாது. அவை நம்மைப் பின்னோக்குப் பாதைக்குத் தள்ளிவிடும்.

    தற்போதைய நிலையில் பல வெற்றிகளை சாதித்துக் கொண்டிருப்பவர்களும், சாதனைகளை படைத்துகொண்டிருப்பவர்கள், விழிப்புணர்ச்சியுடன் வருங்காலத்தை எதிர்நோக்கிக் கொண்டிருப்பவர்களும் தன்னுடைய நிகழ்காலத்தின் பொன்னான நேரங்களை வருங்கால எதிர்பார்ப்புகளுக்கு  அடமானம் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

    வருங்காலத்திற்கான விழிப்புணர்ச்சி மிகவும்  தேவை. அதற்குத்  தேவையான அடித்தளங்களை உருவாக்குவதும் நிகழ்காலத்தின் ஓர் முக்கிய கடமை.

    ஆனால்  நிகழ்காலத்தின் கடமைகளையும், அனுபவங்களையும், அதிசயங்களையும் நாம் வருங்காலத்திற்கான எதிர்பார்ப்புக்களுக்காக அடமானம் வைக்கக்கூடாது.

    நிகழ்காலம் நம்மிடமிருந்து செயலை எதிர்பார்க்கின்றது. நிகழ்காலம் நமக்குக் கொடுக்கும் நேரத்தை புத்திசாலித்தனமாகவும் திறனுடனும் உற்பத்திப் போக்குடனும் செயல்படுத்த விழைகின்றது;. எனவே அதை உணர்ந்து நாம் செயல் பட வேண்டும்.

    வருங்காலம் பல பேருக்கு ஒரு பயத்தை ஏற்படுத்துகின்றது. வருங்காலம் பலருக்கு ஒரு இருள்படர்ந்த காடாகத் தென்படுகின்றது. வருங்காலம் பலருக்கு அச்சத்தோடு கலந்த ஒரு நிலையாமையை க்குறிக்கின்றது. இந்த அச்ச உணர்வுகள், நமது நிகழ்காலத்தின் விழிகளை மருள வைத்து அதன் பார்வையிலிருந்து நிகழ்காலக் கடமைகளை மறைத்து விடுகின்றது. அந்த அச்ச உணர்வு நிகழ்காலத்தில் நமது நடையில் தளர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

    எனவே வருங்காலத்தை சற்றே அமைதியாகக் காத்திருக்கும்படிச் செய்துவிட்டு நாம் நிகழ்காலத்தை நல்ல முறையில் அமைப்பதை கருத்தில் கொள்ளுதல் மிக அவசியம்.

    “நான் கேட்டுக்கொண்டுதானிருக்கின்றேன். ” என் மனது எனக்கு தைரியம் சொன்னது.

    நீங்களும் உங்கள் மனத்தைக் கேட்டுப்பாருங்களேன்..

    நிகழ்காலத்தில் நல்ல முறையில் வாழ்ந்து பார்க்கலாமே.. !

    (தொடரும்)

    Share
  • திகைக்கச் செய்தார்!

    -கவிஞர் இடக்கரத்தான்

    மாவீரன் சிவாஜிபெரும் கோட்டை கட்டும்
    மகத்தான பணிதனையும் தொடரும் வேளை
    காவியுடை தரித்தங்கு வந்து நின்ற
    குருவான ராமதாஸர் தம்மை வணங்கி
    ஆவலுடன் அகந்தையுமே மிகுந்து கொள்ள
    ”அங்குபணி ஆற்றிவரும் அனைவ ருக்கும்
    மாவீரன் நானன்றோ உணவு மற்றும்
    மற்றவற்றை வழங்குவதாய்” கூறி நின்றான்!

    குருநாதர் இதுதனையும் கேட்ட பின்னர்
    குறுநகையும் தனைஒன்றை உதிர்த்து விட்டு
    அருகினிலும் கிடந்தஒரு கல்லைக் காட்டி
    ”அதுதனையும் நீபிளப்பாய்” என்று சொன்னார்!
    உருவியதன் வாள்கொண்டு கல்லை ரெண்டாய்
    உடைக்கத்தான் அதிலிருந்து தேரை தோன்ற
    ”சிறுஉயிரும் இதற்கும்உன் உணவு தானா?
    சிந்திப்பாய்” எனக்கூறித் திருந்தச் செய்தார்!

    கவிஞர் இடக்கரத்தான்

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 3

    அமர கீதங்கள்

    சி. ஜெயபாரதன், கனடா

    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

    [Miss me, But let me go]

    ++++++++++++++

    என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்

    தோற்றம் :  அக்டோபர்  24, 1934

    மறைவு : நவம்பர் 18, 2018

    ++++++++++++++++++

    [18] 

    இறுதிப் பயணம் 

    முப்பதாவது நாளின்று !

    போன மாதம்

    இதே நேரம், இதே நாளில்,

    ஓடும் காரில்

    பேரதிர்ச்சியில் அவள்

    இரத்தக் குமிழ் உடைந்து

    உரத்த குரல்

    எழுந்தது என்னருகே !

    ஃபோனில்

    911 எண்ணை அடித்தேன் !

    அபாய மருத்துவ

    வாகனம் அலறி வந்தது

    உடனே !

    காலன் துணைவியைத் 

    தூக்க கால நேரம் குறித்தான் !

    ஏக்கத்தில் தவிப்பது நான் !

    நவம்பர் 9 ஆம் நாள்,

    இதுவுமோர் 9/11 ஆபத்துதான் 

    மாலை மணி 6 !

    நடுத்தெரு நாடக மாகி,

    சிறுகதை யாகி

    பெருங்கதை யாகி,

    இறைவன்

    திருவிளை யாடல்    

    துவங்கும் !

     

    ++++++++++++++

    [19]

     

    [டிசம்பர் 9 ஆம் நாள்]

     

    அந்த வெள்ளிக் கிழமை

     

    அற்றைத் திங்கள்

    அந்த வெள்ளிக் கிழமை

    எந்தன் துணைவியும் இருந்தாள் !

    அவளோடு அருகில்

    நானும் இருந்தேன்.

    வீட்டு விளக்கு வாடிக்கையாய்

    வெளிச்சம் தந்தது !

    இற்றைத் திங்கள்

    இந்த வெள்ளிக் கிழமை  

    என் துணைவியும் இல்லை !

    தனியனாய் நானும்,

    பிரிவு நாள் அது.

    பெரிய துக்க நாள் அது !

     

    +++++++++++++++++++

    என் இழப்பை நினை !

    ஆனால் போகவிடு எனை !

     

    ஆங்கில மூலம் : ராபின் ரான்ட்சிமன்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.

     

     

    பயண முடிவுக்கு நான் வந்த பிறகு

    பரிதி எனக்கு அத்தமித்த பிறகு,

    கருமாதி எதற்கு துக்க அறையில்,

    கதறல் எதற்கு விடுபடுது ஆத்மா ?

     

    என்னை இழப்பது சிறிது காலம், ஆனால்

    இழப்பை நீடிக்காதே உன் சிரம் தாழ்த்தி,

    நினைவில் உள்ளதா நம் நேசிப்பின் பங்கு,

    இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.

     

    இப்பயணமே நாமெலாம் எடுக்க வேண்டும்,

    இப்படி ஒருவர் தனியாகவே போக வேண்டும்,

    ஊழித் தளபதி இடும் திட்டம் இவையெலாம்.

    ஓர் எட்டு வைப்பிவை நம் இல்லப் பாதை மீது.

     

    தனித்து நீ தவிப்பில் இதயம் நோகும் போது

    உனக்குத் தெரிந்த நண்பரிடம் நீ சென்று,

    உன் துயர்களைப் புதை, நல்வினை புரிந்து.

    என் இழப்பை நினை, ஆனால் போகவிடு எனை.

    +++++++++++

    ஆங்கில மூலக் கவிதை

     

     

    ++++++++++++++++++

     

    பிரார்த்தனை தொடர்கிறது.

    சி. ஜெயபாரதன், கனடா    

    Share
  • தித்திக்கும் தீந்தமிழ்

    -பா.அனுராதா

    அகத்திய முனியின் அருட் தோன்றல்
    பொதிகை மலைதனில் பிறந்து
    மதுரையில் முச்சங்கம் அமைத்து
    முப்பாலை அரங்கேற்றம் செய்த தமிழே!

    தொல்காப்பியனின் மூன்றாம் அதிகாரத்தால்
    முதுமக்களையும் முத்தெடுக்க வைத்த தமிழே!
    சைவத்தை வளர்த்த அடியாரை ஆட்கொண்ட தமிழே!
    நாலாயிர பிரபந்தத்;தை நான்காக பகுத்த தமிழே!

    ஔவையின் இசையால் அறுபடை வீடுகளையும்
    அகிலமெங்கும் ஆர்ப்பரித்து ஆண்ட தமிழே!
    பாரதியின் நாவில் அனுதினம் பயணித்து
    பாமரனை பண்பாளனாக வடித்த தமிழே!

    கணவனை இழந்த காப்பியத் தலைவிக்கு
    நீதி கேட்டு வாதிட்ட தமிழே!
    குறுக தரித்த ஈற்றடி குறட்பாவால்
    வள்ளுவனை ஈன்ற செம்மொழியே!

    ஏட்டிலும் ஏர்உழும் வயற்காட்டிலும் தவழ்ந்த
    தித்திக்கும் தெவிட்டாத தீந்தமிழே!
    அன்னையரின் நாவினை அரசாண்ட தமிழே!
    முத்தமிழால் முத்தெடுக்க வைத்த தமிழே!

    எழுத துடிக்கும் கரங்களுக்கு
    அமுத சுரபியாய் வந்தவளே!
    ஆயுளுக்கும் உதவி வெற்றிக்கு வித்திடும் தமிழே!
    சீரிளமை குன்றாத செந்தமிழே!

    பா.அனுராதா,
    உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை,
    பான்செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    தஞ்சாவுர்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    அன்பான வணக்கங்கள். இங்கிலாந்தின் அரசியல் மேடையில் தினமொரு நாடகம் அரங்கேறிக் கொண்டிருக்கும் இவ்வாரத்தில் உங்களுடன் கருத்தாட விழைகிறேன். கடந்த சுமார் இரண்டரை வருடங்களாக பலதடவைகள் உங்களுடன் ப்றெக்ஸிட் எனும் நிகழ்வைப் பற்றிக் கருத்தாடியிருக்கிறேன். இந்நிகழ்வு மெதுவாக உருண்டு. உருண்டு இன்று இங்கிலாந்தின் அரசியல் சதுரங்கப்பலகையில் மிகவும் முக்கியமான ஒரு கட்டத்துக்குள் நுழைந்திருக்கின்றது. இங்கிலாந்தின் எதிர்கால சுபீட்சத்தையே நிர்ணயிக்கும் ஒரு முக்கிய கேந்திர நிலையை வந்தடைந்திருக்கின்றது. இங்கிலாந்துப் பிரதமரான தெரேசா மே அவர்களின் ரசியல் வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி வைத்து விடுமோ எனும் நிலை ஏற்பட்டுள்ளது.

    கடந்த இரண்டரை வருடங்களுக்கு முன்னர் நடந்த சர்வஜன வாக்கெடுப்பில் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோரிக்கை பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேறியிருந்தது. அதைத்தொடர்ந்து இங்கிலாந்து அரசாங்கம் உத்தியோகபூர்வமாக தாம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக விரும்புவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் 50வது ஷரத்தை நடைமுறைபடுத்தினார்கள். அதன் பிரகாரம் 2019ம் ஆண்டு மார்ச் மாதம் 29ம் திகதி இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதை இங்கிலாந்து பாராளுமன்றத்தில் சட்டமூலமாக்கினார்கள் அதன் பிரகாரம் இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் அவகாசம் தானிருக்கிறது. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும்போது எதுவிதமான வர்த்தக மற்றும் ஜரோப்பிய ஒன்றியத்துடனான தொடரப் போகும் உறவு முறையை நிர்ணயிக்காது வெளியேறுவது இங்கிலாந்தின் பொருளாதாரப் பின்னடைவுக்கு காரணமாகும் என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது.

    இதற்கான இணக்கப்பாட்டை எட்டுவதற்காக கடந்த இரண்டரை வருடங்களாக இங்கிலாந்தும், ஜரோப்பிய ஒன்றியமும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்தன. அப்பேச்சுக்களின் நிமித்தம் இருசாராருக்கும் ஒப்புதலான ஒரு விலகும் விதிகளமைந்த இணக்கப்பாட்டை எட்டுமிடத்து மார்ச் 29 2019 ஜ அடுத்த இரண்டு வருடங்கள் ஒரு பொதுவான காலப்பகுதியில் இருவருக்குமிடையிலான வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொள்வதென்று முடிவாகியது. இவ்விணக்கப்பாட்டை நடைமுறைபடுத்துவதற்கு இங்கிலாந்துக்கும், ஜாரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஒரு விலகல் ஒப்பந்தத்தை ஏற்படுத்துவது அவசியமானது. அங்கேதான் ஒரு சிக்கல் ஏற்பட்டது அயர்லாந்து இங்கிலாந்ஹை அண்டிய ஒரு தீவாகும் அது இரண்டாகப் பிரிந்து தென் அயர்லாந்து ஒரு தனி நாடாகவும், வட அயர்லாந்து ஜக்கிய இராச்சியத்தின் ஒரு அங்கமாகவும் இருப்பது அனைவரும் அறிந்ததே. தென் அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாகும் ஆனால் வட அயர்லாந்தோ ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகும் போது அதனோடு சேர்ந்து விலகும் ஒரு பகுதியாகிறது

    கடந்த இரு அயர்லாந்துகளுக்குமிடையில் நடந்து வந்த ரசியல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர டோனி பிளேயரின் பதவிக்காலத்தில் சமரச ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. அவ்வொப்பந்தம் ஒரு சர்வதேச ஒப்பந்தமாக வரையப்பட்டது. அதன் நிமித்தம் இரண்சு அயர்லாந்துகளுக்குமிடையில் ஒரு எல்லைக்கோடு வரையப்படமாட்டாது என்பது ஒரு நிலந்தனையாக்கப்பட்டது. இப்போது தென் அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் அங்க நாடாகவும். வட அயர்லாந்து ஜரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியேயும் இருந்தால் அங்கு எல்லைக்கோடு அமைக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்நிலையைச் சமாளிப்பதற்காக தெரேசா மே அவர்கள் ஏற்படுத்துய ஒப்பந்தத்தில் ஒரு தீர்மானம் திணிக்கப்பட்டது. 2019 மார்ச் 29 ஜ அடுத்து வரும் இரண்டு வருட காலப்பகுதியில் இங்கிலாந்துக்கும், ஜரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் ஒரு வர்த்தக உடன்படிக்கை ஏற்படாத பட்சத்தில் இங்கிலாந்தும் அதனோடு சேர்ந்த வட அயர்லாந்தும் தொடர்ந்து ஜரோப்பிய ஒன்றியத்தின் விதிகளுக்குள் வர்த்தக உடன்படிக்கை ஏற்படும் வரை உட்பட்டிருக்க வேண்டும். இதிலிருந்து வெளியேறுவது ஒருதலைப்பட்சமான முடிவினால் நிகழ முடியாது என்பதே அத்தீர்மானம்.

    ஏற்பட்டது ஒரு பெரிய பிரளயம் இங்கிலாந்துப் பாராளுமன்றத்தில் பிரதமர் தெரேசாவினால் முன்வைக்கப்பட்ட இவ்வுடன்படிக்கையை அனைத்துத் தரப்பினரும் எதிர்க்கத் தலைப்பட்டனர். அவரது கட்சிக்குள்ளேயே பெரிய பிளவு தோன்றியது. இவ்வுடன்படிக்கையை டிசம்பர் 11ம் திகதி மாலை பாராளுமன்றத்தில் வாக்கெடுப்புக்காக விடப்போவதாக அறிவித்த பிரதமர் டிசம்பர் 11ம் திகதி இவ்வுடன்படிக்கைக்கான வாக்கெடுப்பைத் தள்ளி வைப்பதாக அறிவித்தார். இதற்கான காரணமாக பலதரப்பு வாதங்களையும் செவிமடுத்தபின் அயர்லாந்துக்கான தீர்மானமே அனைத்து தரப்பினருக்கும் பிரச்சனையாக உள்ளது அதனால் அதனை சிறிது சீர்படுத்துவதற்காக மீண்டும் ஜரோப்பிய ஒன்றியத்துடன் தான் பேச்சுவார்த்தை நடத்தப் போவதைச் சுட்டிக்காட்டினார்.

    பலவிதமான சர்ச்சைகள் பலமுனைகளிலும் கிளம்பின. பிரதமர் பாராளுமன்றத்தில் தனது அரசாங்கத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து விட்டார் என்று எதிர்க்கட்சிகள் துள்ளிக் குதிக்கின்றன. பிரதமரின் கட்சிக்குள்ளேயே ப்ரு போராட்டம் ஆரம்பித்து, தமது கட்சித் தலைவரின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரத் தேவையான 15 வீதமான 48 பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது அதிருப்தியை கடித மூலம் தெரிவித்திருக்கிறார்கள்.

    விளைவாக இன்று அதாவது டிசம்பர் 12ம் திகதி மாலை 6 மணியிலிருந்து 8 மணிவரை பிரதமர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற அங்கத்தினர்களினால் நடத்தப்படப் போகிறது. முடிவு இரவு 10 மணிக்குள் அறிவிக்கப்படும். பிரதமரின் அரசியல் எதிர்காலம் மட்டுமல்ல ஜக்கிய இராச்சியத்தின் பொருளாதார எதிர்காலமும் இவ்வாக்கெடுப்பிலேயே தங்கியிருக்கிறது என்பது அரசியல் அவதானிகளின் கருத்து. இன்று டிசம்பர் 12 காலை 8.45 மணியளவில் இன்றைய தன்மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானம் பற்றி நாட்டுக்கு ஆற்றிய சிறிய உரையில் இத்தகைய ஒரு நெருக்கடியான சிக்கலுக்குத் தீர்வாக பிரதமரை மாற்றுவது அமையாது எனவும் இத்தீர்மானத்தை தான் தன் முழுசக்தியுடனும் எதிர்த்துப் போராடுவேன் என்றும் சூளுரைத்தார். இந்நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமருக்கே வெற்றி கிடைக்கும் என்பது பொதுவான அபிப்பிராயம் ஆனால் எத்தகைய வாக்கு வொத்தியாசத்தில் அவர் வெற்றி பெறுவார் என்பதிலேயே அவரது அரசாங்கத்தின் மீதான ஆதிக்கம் நிலைபெறும் என்பதே உண்மையாகிறது.

    இன்றைய இரவு வெளியாகப்போகும் முடிவை நாடு முழுவதும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறது

    இன்று இரவு கடைசியாகக் கிடைத்த செய்திகளின்படி சற்று நேரத்துக்கு முன்பாக பிரதமர் தெரேசா மே அவர்கள் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் பிரதமர் 200க்கு 117 எனும் வாக்குகளின்படி வெற்றியீட்டியுள்ளார். ஆனால் இவ்வெற்றி அவருக்கு பிறெக்ஸிட் உடன்படிக்கையில் வெற்றியீட்டித் தருமா? என்பது கேள்விக்குறியே !

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • எழுகுளிறு மிதித்த ஒரு பழம் போல- பாடங்களும் பாடபேதங்களும்

    முனைவர் ச.கண்ணதாசன்,
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை (சுயநிதிப் பிரிவு)
    மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி,
    பசுமலை, மதுரை- 625004
    அலைபேசி – 9600484338 ,
    மின்னஞ்சல் – sendoordasan@gmail.com

    ———————————————-
    ஆய்வுக் கட்டுரைச் சுருக்கம் (Abstract)

    பரணரால் இயற்றப்பட்ட “கருங்கால் வேம்பின் ஒண்பூ யாணர்” எனத் தொடங்கும் குறுந்தொகையின் இருபத்து நான்காம் பாடலின் நான்காம் அடி “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல” என்பது. இவ்வடியில் இடம்பெற்றுள்ள ‘எழுகுளிறு’ என்பதே இவ்வாய்வின் மையப்பொருள். குறுந்தொகையைப் பதிப்பித்த, உரைஎழுதிய ஒவ்வொருவரும் இச்சொல்லுக்கு ஒவ்வொரு விதமாகப் பாடம் கொண்டுள்ளனர். சௌரிப்பெருமாள் அரங்கன், மு.சண்முகம்பிள்ளை, உ.வே.சாமிநாதையர், எஸ்.வையாபுரிப்பிள்ளை, பொ.வே. சோமசுந்தரனார், இரா.இராகவையங்கார் ஆகியோர் முறையே ‘எழுகளிறு’, ‘எழுக்களிறு’ , ‘எழுகுளிறு’, ‘எழுக்குளிறு’, ‘எழுகுளிர்’ என அவரவருக்கு ஏற்புடையதை மூலபாடமாகவும், பிறவற்றைப் பாடபேதமாகவும் எடுத்தாண்டுள்ளனர். இவர்களுள் சிலர் பாட பேதத்தைச் சுட்டிக் காட்டியுள்ளனர். பொ.வே.சோமசுந்தரனார், மு.சண்முகம்பிள்ளை, இரா. இராகவையங்கார் ஆகியோர் தாங்கள் கொண்டதே சரியான பாடம் என்பதற்கு விளக்கம் தந்து பிறர் கொண்ட பாடம் பொருந்தாது என எடுத்துரைத்துக்கின்றனர். இவ்வாறு மேற்சுட்டிய ஒவ்வொருவரும் கொண்ட பாடங்களுள் ‘களிறு’, ‘ குளிறு’, ‘குளிர்’ இவற்றுள் எது பொருத்தமானதாக அமைகிறது என்பதைத் தக்க சான்றுகளுடன் இக்கட்டுரை ஆராய்கிறது.

    ——————————————————
    முன்னுரை

    பழந்தமிழ்ப் பதிப்பாசிரியர்கள் ஒரு நூலைப் பதிப்பிக்க முற்படும் பொழுது அந்நூலின் சுவடியானது தங்கள் கையில் இருந்தாலும், செம்பதிப்பாக அதை வெளிக்கொணரப் பல்வேறு இடங்களுக்குச் சென்று சுவடிகளைச் சேகரித்து, சேகரித்த சுவடிகளுள் பதிப்பிக்க இருக்கும் நூலின் சுவடிகளைத் தொகுத்து ஒன்றோடொன்று ஒப்புநோக்கி அவர்களுக்கு ஏற்பெனப்பட்டதை முதன்மைச் சுவடியாகவும் பிறவற்றைத் துணைமையாகவும் கொள்வதையே மரபாகக் கொண்டிருந்தனர். பதிப்பிக்கபோகும் ஒரு நூல் முன்பே இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒப்புநோக்கி செந்தரப்படுத்துவது பழம்பதிப்பாசிரியர்களிடையே காணப்பட்ட பொதுத்தன்மை.

    முதற்பதிப்பு கண்ட ஒரு நூலை பின்னாளில் மற்றொருவர் பதிப்பிக்கும் பொழுது,
    “ முன்னோர் நூலின் முடிபொருங்கு ஒத்துப்
    பின்னோன் வேண்டும் விகற்பம் கூறி…..”1
    எனும் வழிநூலுக்குரிய இலக்கணம், நூலைப் பதிப்பிப்போருக்கும் உரியதாக விளங்குகிறது. இதன் விளைவே பாடபேதம். பாடம் இன்னதென்பதைக் காட்டி, பாடபேதம் இன்னின்ன என்று கூறுவதே பதிப்பியல் நேர்மை. முற்;பதிப்பாசிரியர் பாடமாகக் காட்டியவை பிற்காலப் பதிப்பாசிரியருக்குப் பாடமாகவும் அமையும். அதாவது பாடம் பாடபேதமாகவும், பாடபேதம் பாடமாகவும் அமைவது மூலபாட ஆய்வில் இயற்கையே. அவ்வாறு அமைவதே ஆய்வுக்கான திறவுகோலாகவும் அமைகிறது. இத்தகைய தன்மையில் தான் குறுந்தொகையின் இருபத்து நான்காம் பாடல் இங்கு ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

    “கருங்கால் வேம்பி னொண்பூ யாணர்
    என்னை யின்றியும் கழிவது கொல்லோ
    ஆற்றய லெழுந்த வெண்கோட் டதவத்
    தெழுகுளிறு மிதித்த வொருபழம் போலக்
    குழையக் கொடியோர் நாவே
    காதல ரகலக் கல்லென் றவ்வே” (குறுந்தொகை.பா.24)

    (இங்கு கொடுக்கப்பட்டது உ.வே.சாமிநாதையரின் பதிப்பிலிருந்து எடுத்தாளப்பட்டது). பரணரால் பாலைத்திணையில் அமைந்ததாகப் பாடப்பெற்ற இப்பாடல் தலைவியின் கூற்றாக எழுந்தது; பருவங்கண்டு ஆற்றாலாகிய கிழத்தி உரைத்தது எனும் துறையில் அமைந்தது. இப்பாடலில் நான்காம் அடியாக அமைந்த “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”எனும் அடியே இங்கு மையப்பொருள். இவ்வடியில் இடம்பெற்றுள்ள ‘எழுகுளிறு’ என்பதே ஆய்வுப்பொருள்.

    குறுந்தொகையின் முதற் பதிப்பாசிரியரான சௌரிப்பெருமாள் அரங்கன், விரிவான உரை கண்ட உ.வே.சாமிநாதையர், கழக உரையாசிரியர் பொ.வே.சோமசுந்தரனார், விளக்கவுரை கண்ட ரா. இராகவையங்கார், செம்பதிப்பென மூலத்தை வெளியிட்ட எஸ்.வையாபுரிப்பிள்ளை, பல்வேறு சுவடிகளை ஒப்புநோக்கி ஆய்வுப் பதிப்பாக வெளியிட்ட மு.சண்முகம் பிள்ளை ஆகியோரின் பதிப்புகளை ஒப்புநோக்கி இப்பாடலின் நான்காம் அடி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. மேற்கூறிய அறுவரின் பதிப்புகளும் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பதிப்புகள். இவர்கள் இவ்வடியை கையாண்டுள்ள விதம் கீழ்க்காணுமாறு அமைந்துள்ளது.

    “எழுகளிறு மிதித்த ஒருபழம் போல”2 – சௌரிப்பெருமாள்
    “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”3 – உ.வே.சாமிநாதையர் “எழுகளிறு மிதித்த ஒருபழம் போல” 4- மு.சண்முகம்பிள்ளை
    “எழுகுளிர் மிதித்த ஒருபழம் போல”5 – பொ.வே.சோமசுந்தரனார்
    “எழுகுளிறு மிதித்த ஒருபழம் போல”6 – எஸ்.வையாபுரிப்பிள்ளை
    “எழுகுளிர் மிதித்த ஒருபழம் போல”7 – ரா.இராகவையங்கார்

    இவர்களைத் தவிர மு.சண்முகம்பிள்ளை தன்னுடைய பதிப்பில் பின்னிணைப்பாகத் தந்துள்ள “பாடவேறுபாட்டு ஒப்புநோக்கு அட்டவணை, இலண்டனிலிருந்து பெறப்பட்ட தாள் சுவடியில் ‘எழுக்குளிறு’ என்றும், பூண்டியப்பரின் சுவடியில் ‘எழுகுளிர்’ என்றும், அடிகளாசிரியரிடமிருந்து பெறப்பட்ட தாள்சுவடியில் ‘எழுகுளிறு’ என்றும், கலாநிலையம் மற்றும் அருணாசலதேசிகரின் சுவடிகளில் ‘எழுகளிறு’ என்றும் பாடங்கள் இருப்பதை எடுத்துக்காட்டுகின்றது”.8

    இவர்களுள் சாமிநாதையர் ‘எழுகளிறு’ என்பதை மட்டும் பாடபேதமாகவும், சண்முகம்பிள்ளை ‘எழுகுளிறு’ என்பதைப் பாட பேதமாகவும், இராகவையங்கார் ‘எழுகளிறு, ‘எழுகுளிறு, ‘எழுக்குளிறு’ ஆகிய மூன்றையும் பாடபேதங்களாகவும் காட்டிள்ளனர்.

    மேற்கூறியவற்றைத் தொகுத்துப் பார்க்கும் பொழுது இப்பாடலுக்கு மொத்தம் ‘எழுகுளிறு, ‘எழுக்குளிறு, ‘எழுகளிறு, ‘எழுக்குளிறு, ‘எழுகுளிர்’ என மொத்தம் ஐந்து பாடங்கள் காணப்படுகின்றன. இவ்வாறு இவ்வார்த்தைக்கு மட்டுமல்ல இப்பாடலிலேயே அதிகமான பாட வேறுபாடுகள் காணப்படுகின்றன. அதற்குக் காரணம் குறுந்தொகையின் பயன்பாட்டுத்தன்மையே.

    “ஏனைய தொகை நூல்களைக் காட்டிலும் குறுந்தொகையே உரையாசிரியர்களால் மிகுதியாக மேற்கோளாக எடுத்தாளப்படுகின்றது. இதனால் இத்தொகைநூற் செய்யுட்களில் உரையாசிரியர்கள் கருத்துக்கள் பெரிதும் ஈடுபட்டிருந்தன வென்று தெரிகின்றது. இந்நூலுள் இப்பொழுது தெரிந்த வரையில் 165 செய்யுட்களே பிறநூலுரையில் மேற்கோளாகக் காட்டப்பெறாதவை”9

    என்ற உ.சே.சா.வின் கூற்றின் மூலம் குறுந்தொகையைப் பலரும் பயின்றுவந்துள்ளனர் என்பது புலப்படுகின்றது. இக்காரணத்தினால் அதைப் படியெடுப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக இருந்திருக்கும் என்று கூறலாம்.

    “கரிய தாளினை உடைய வேப்ப மரத்தினது ஒள்ளிய பூவின் புது வருவாயானது என்னுடைய தலைவன் இல்லாமலும் செல்வதோ. அயலாராகிய கொடிய மகளிருடைய நாக்கள் என் காதலன் என்னை நீங்கிச் செல்ல, ஆற்றங்கரையில் வளர்ந்த வெள்ளிய கொம்புகளை உடைய அத்திமரத்தினது உண்ண விரும்பிய ஏழு நண்டுகளால் மிதிக்கப்பட்ட ஒற்றைப் பழம் குழைவது போல நான் வருந்தும்படி கூறி கல்லென்று முழங்கின”10 என்பது இப்பாடலுக்கு உ.வே.சாமிநாதையர் தரும் விளக்கம். ‘எழுகுளிறு மிதித்த’ என்று பாடம்கொண்டு உரை எழுதியுள்ளார் அவர்.

    ‘எழுகுளிர்’ எனப் பாடம்கொண்ட பொ.வே.சோமசுந்தரனாரும், இராகவையங்காரும் இன்னும் சற்று நுட்பமாக “ஏழு நண்டுகள் பற்றிக் குழைத்த”11 எனப் பொருள்கண்டுள்ளனர். இவர்களுக்கும்; நண்டுகள் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை, ஆனால் ‘குளிறு’ என்பது ‘குளிர்’ என்று கொள்ளப்பட்டுள்ளது.

    ‘களிறு’ எனப் பாடங்கொண்டவர்களுள் சௌரிப்பெருமாள் அரங்கன் “ஆற்றில் மூழ்கி எழுந்த களிறு மிதித்திட்ட ஒரு பழம் போல”12 என்றும், சண்முகம்பிள்ளை “ஆண்யானையின் காலால் மிதித்து உழக்கப்;பெற்ற”13 என்றும் பொருள் கூறியுள்ளனர். மேலும் இவர்கள் ‘எழு’ என்பதை ஏழு என்னும் எண்ணுப்பெயராகக் கொள்ளாமல் எழுகின்ற எனும் வினையாக மாற்றியுள்ளனர். களிறு உருவத்தில் பெரியது என்பதால் ஏழு எனப்; பொருள் கொள்வதில் இடர்பாடு ஏற்படுகின்றது.

    ‘எழுகளிறு’ பாடமாகுமா?

    ‘எழுகளிறு’ அல்லது ‘எழுக்களிறு’ என்ற பாடம் பொருந்துமா என்பதை ஆராயவேண்டும். பாடலின் சூழல் ஊரார் அலர் தூற்றுவதால் மனதளவில் மிகுந்த துன்பத்தை அனுபவிக்கும் தலைவியின் புலம்பலை வெளிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. தலைவியின் மனமானது பதறுகிறுது; கவலைகொள்கிறது; வருந்துகிறது. அதனால் மனம் வண்டுகளால் உருட்டப்பட்ட அத்திப்பழம் போல அங்கும் இங்கும் அலைபாய்கிறது என்று கொள்வது பொருத்தமாகும். அல்லது வண்டுகளால் அத்திப்பழம் உருட்டப்படுவதைப் போல அவள் மனமும் உடலும் தலைவனின் நினைவுகளால் பந்தாடப்படுகிறது என்பதும் பொருத்தமாக அமையும்.

    யானை ஆற்றிலிருந்து எழுந்து வந்து வேண்டுமென்றெ அத்திப் பழத்தை மிதிப்பதில்லை. பெரிய உருவம் கொண்ட அது தெரியாமல் கூட பழத்தை மிதித்திருக்கும். அலர் கூறுபவர்கள் தலைவியின் காதில் படவேண்டும் என்று வேண்டுமென்றே தெரிந்தும் தெரியாததுபோல் அவள் மனம் புண்படும்படி கூறுவர் என்பதே இயல்பு. யானை மிதித்தால் அத்திப் பழம் சிதையுமே தவிர குழையாது. ஒட்டுமொத்தமாக அழிவதை விட மெள்ள மெள்ளச் சிதைதல் என்பது கொடியது. துன்பத்தை அதிகரிக்கச் செய்வது. நண்டுகள் உருட்டுவதால் பழம் படும் பாட்டை நண்டுகள் அறியாதது போல் அலர் தூற்றுவதால் என் மனம் படும்பாட்டை இவ்வூரார் அறியார் எனத் தலைவி எண்ணுவதாலேயே “குழையக் கொடியோர் நாவே” என்று கூறுகிறாள் என்றும் கூறலாம். எனவே ‘நண்டு’ என்று பொருள் கொள்வதே சரியானதாக அமையும்.

    “உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்”14 என்பது தொல்காப்பிய விதி. இவற்றின் அடிப்படையில் பார்த்தாலும் ‘களிறு’ எனப் பாடங்கொள்ளுதலும், அதற்குக் கொடுக்கப்பட்ட விளக்கங்களும் பொருத்தமுடையனவாக இல்லை. “ ‘எழுகளிறு’ எனப்பாடம் கொண்டு ஏழு யானைகள் என்பாரும் உளர். ஏழு யானைகள் மிதிப்புழிப் பழம் உருத்தெரியாமல் சிதைந்தழியுமாயின் குழைந்தது எனப் பொருந்தாதல் உணர்க15 என்ற பொ.வே.சோமசுந்தரனாரின் கூற்றும் ஒப்புநோக்கத்தக்கது. எனவே ‘எழுகளிறு’ என்னும் பாடம் பொருத்தமாக அமையவில்லை. இதனால் ‘எழுக்களிறு’ என்பதும் இங்கே ஏற்புடைத்தாகாது.

    ‘எழுகளிறு’என்பதை ‘ஏழுகளிறு’ எனப்பொருள் கொண்டும் பொருள் எழுதப்பட்டுள்ளதை பொ.வே.சோ.வின் உரை குறிப்பிடுகின்றது.

    ‘எழுகுளிறு’ அல்லது ‘எழுகுளிர்’ ?

    ‘களிறு’ என்பது பொருந்தாப் பாடமாக அமையும் பொழுது, ‘குளிறு’ அல்லது குளிர் இவற்றுள் எது பொருத்தாமான பாடமாக அமையும் என்பதை ஆராய வேண்டும். ‘ஏழுகுளிறு’ எனப் பாடம் கொண்ட உ.வே.சா. நண்டு அத்திப்பழத்தை விரும்புவதற்கு வழக்கம் போல் தன்னுடைய ஒப்புமைப் பகுதியில் அதற்கான பிற இலக்கிய மேற்கோள்களை எடுத்துக்காட்டிள்ளார். ‘நண்டு’ எனப் பொருள் கொள்வதில் உ.வே.சா., பொ.வே.சோ., வையாபுரிப்பிள்ளை, இராகவையங்கார் ஆகியோருக்கு மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் குளிறா? குளிரா? என்பதில் தான் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முன்னோர் ‘குளிறு’ என்றும் பின்னோர் ‘குளிர்’ என்றும் எடுத்தாண்டுள்ளனர்.

    “ ‘குளிர் – நண்டு என்பது,
    “களவன் குளிர் நெண்டு கற்கடக மட்டை
    செளுகங் கறையான் சிதல் (உரிச்சொனிகண்டு,விலங்கு, 26),
    குளீர – கற்கடக என்பது அமரகோசம், இவற்றால் குளிறு என்பது நண்டின் பெயரன்மை
    உணரலாம்”16
    என்று விளக்கம் கூறி ‘குளிர்’ எனக் கொள்வதே சரியான பாடம் என்று சொல்லாமல் சொல்லுகிறார். பொ.வே.சோ. ‘களிறு’ என்பதற்கே மறுப்புரை எழுதியுள்ளாரே தவிர ‘குளிறு’ என்பதற்கு எழுதவில்லை.

    மேல் இராகவையங்கார் சுட்டிக்காட்டியதைப் போலப் பிற நிகண்டுகளிலும் உள்ள கருத்துக்களை ஆராய வேண்டியுள்ளது. ஏனெனில் அகராதிகளும், சொல்லடைவுகளும் வருவதற்கு முன்பாக நிகண்டுகளே முதன்மையான பொருள்விளக்கிகளாக இருந்துள்ளன.

    குளிர் என்பதற்குச் சூடாமணி நிகண்டு,
    “ஞெண்டின் பெயர் – களவன், குளிரம், நள்ளி, கவைத்தாள், கர்க்கடகம்”17 என்று பொருள் தருகின்றது. சேந்தன் திவாகரம்,
    “அலவன், நள்ளி,குளிர், ஞெண்டு, ஆர்மதி
    களவன் என்றிவை கர்க்கடகப் பெயரே”18
    என்று நண்டிற்குரிய வேறு பெயர்களை எடுத்தியம்புகின்றன. மேல் காணப்பட்ட இரண்டிலுமே ‘குளிரம், குளிர்’ ஆகிய சொற்கள் இடம்பெற்றுள்ளன. ‘குளிறு’ எனும் சொல் இடம்பெறவில்லை.

    அடுத்ததாக அகராதியுள் சிறந்ததாகச் சொல்லப்படும் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகர முதலி,
    “ குளிர் – நண்டு (பிங்கலம்), குளிர் – வெண்குடை, மீனொழுங்கு (சூடாமணி),குளிர் – கர்க்கடகராசி (திவாகரம்)”19, “குளிறு – ஒளி(சூடாமணி)”20 என்று குளிர், குளிறு ஆகிய பொருள்களுக்குரிய பொருள்களை எடுத்துரைக்கின்றது.

    இங்குக் கூறப்பட்டுள்ள அனைத்து நிகண்டுகளும் ‘குளிர்’ என்பதே நண்டு எனும் பொருளுடையது என்று கூறுவதைப் பார்க்கும் பொழுது ‘குளிறு’ என்பதைப் பாடம் கொள்வதில் குழப்பம் ஏற்படுகிறது.

    உ.வே.சா.விற்கு நிகண்டுகளில் நல்ல புலமை உண்டு என்பதை அவருடைய என் சரித்திரத்தின் வாயிலாக அறியமுடியும். ஆனால் அவ்வாறு நிகண்டுகளில் பரிட்சயம் பெற்றிருந்தும் அவர் ‘குளிர்’ எனக் கொள்ளாமல் ‘குளிறு’ எனப் பொருள் கொண்டுள்ளது கேள்விக்குறியாக அமைகிறது. இக்கருத்து செந்தமிழ்ச் சொற்பிறப்பியலைப் பதிப்பித்த வையாபுரிப்பிள்ளைக்கும் பொருந்தும். அவர் பதிப்பித்த அகரமுதலியில் ஒரு இடத்தில் கூட ‘குளிறு’ என்பதற்கு ‘நண்டு’ என்று பொருள் குறிக்கப்படவில்லை என்பதும் நினைவிற் கொள்ளத்தக்கது.

    நிகண்களுக்குப் பின்னால் வந்த தமிழ்-தமிழ் அகரமுதலி, சங்க இலக்கியச் சொல்லடைவு, கழக அகராதி, சங்க இலக்கியச் சொல்லகராதி போன்றவற்றில்தான் ‘குளிறு’என்பதற்கு ‘நண்டு’ எனப் பொருள் கொள்ளப்பட்டுள்ளது.

    ஆனால் சண்முகம் பிள்ளையால் உருவாக்கப்பட்ட தமிழ் – தமிழ் அகரமுதலி “குளிறு – ஒலி”21 என்றே பொருள் தருகின்றது.

    சங்க இலக்கியச் சொல்லடைவு “குளிறு – குறுந்.: 2-4;22 என்று குறிப்பிட்டிருப்பதைப் பார்க்கும் பொழுது ‘குளிறு’ எனும் சொல் குறுந்தொகையைத் தவிர பிற சங்க இலக்கியங்களில் இடம்பெறவில்லை. இதனால் உ.வே.சா.வும் வையாபுரிப்பிள்ளையும் ‘குளிறு’ என்று பொருள் கொண்டு பதிப்பித்ததற்குப் பின்பே இச்சொல் அகராதிகளுள் ஏறியுள்ளது.

    இக்கருத்துக்களை எல்லாம் வைத்துப் பார்க்கும் பொழுது எழுகுளிர் என்று உ.வே.சா.வும், வையாபுரிப்பிள்ளையும் கொண்டுள்ள ‘எழுகுளிறு’ எனும் பாடம் ஏற்புடையதாக அமையவில்லை. பொ.வே.சோ.வும் இராகவையங்காரும் கொண்ட ‘எழுகுளிர்’ என்பதே பொருத்தமாக அமைகிறது.

    முடிபுகள்

    பதிப்பாசிரியர் மற்றும் உரையாசிரியர்களிடையே பாடவேறுபாடு ஏற்படுவது இயற்கையானதே. ஆனால் அவ்வாறு அவர்கள் கொண்டுள்ள பாடம் பொருத்தமானதா என்பதை ஆராயும் நோக்கில் குறுந்தொகையின் இருபத்திநான்காம் பாடலின் நான்காம் அடியில் இடம்பெற்றுள்ள ‘எழுகுளிறு’ எனும் வார்த்தை ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

    ‘எழுகளிறு’, ‘எழுக்களிறு’ , ‘எழுகுளிறு’, ‘எழுக்குளிறு’, ‘எழுகுளிர்’ என ஒவ்வொருவரும் அவரவருக்கு ஏற்பெனப்பட்டதைப் பாடமாகக் கொண்டாலும், பாடபேதமாகக் கொண்டவற்றையும் சுட்டிக்காட்டியுள்ளதே பின்னாளில் வரும் ஆய்வாளர்களுக்கு ஆய்வுக்களமாக அமைகிறது.

    ‘எழுகளிறு’ என சௌரிப்பெருமாள் அரங்கனும், மு.சண்முகம் பிள்ளையும் கொண்ட பாடம் (உவமை) பாடலின் கருத்தைத் தெளிவுபடுத்துவதற்குப் பொருத்தமாக அமையவில்லை.

    ‘எழுகுளிறு, ‘எழுகுளிர்’ என்பவற்றுள் நிகண்டுகளின் துணைகொண்டு பார்க்கும் பொழுது ‘குளிர்’ என்பதே ‘நண்டு’ எனும் பொருண்மையில் அமைவதால், உ.வே.சா., மற்றும் வையாபுரிப்பிள்ளை ஆகியோர் எடுத்தாண்ட ‘எழுகுளிறு’ எனும் பாடம் ஏற்புடையதன்று என்பதை அறியமுடிகிறது.

    குறிப்புகள்

    1. நன்னூல் எழுத்து, பொதுப்பாயிரம், நூ.7;1-2
    2. சௌரிப்பெருமாள் அரங்கன் (உ.ஆ), நா. சந்திரசேகரன்,
    (ப.ஆ),குறுந்தொகை உரையுடன், ப.42
    3. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), குறுந்தொகை, ப.63
    4. மு.சண்முகம் பிள்ளை (உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும், ப.27
    5. பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ), குறுந்தொகை மூலமும் உரையும், ப.62
    6. எஸ்.வையாபுரிப்பிள்ளை(ப.ஆ), சங்க இலக்கியம் முழுவதும்
    (பாட்டும் தொகையும்), இரண்டாம் தொகுதி, ப.708
    7. இரா.இராகவையங்கார் (உ.ஆ), குறுந்தொகை விளக்கம்,ப.65
    8. மு.சண்முகம் பிள்ளை (உ.ஆ), முன்னூல், ப.374
    9. உ.வே.சாமிநாதையர் (உ.ஆ), குறுந்தொகை, முகவுரை,ப.6
    10. மேலது,ப.63
    11. பொ.வே.சோமசுந்தரனார்(உ.ஆ), முன்னூல், ப.63 &
    இரா.இராகவையங்கார் (உ.ஆ), முன்னூல்,ப. 66
    12. சௌரிப்பெருமாள் அரங்கன் (உ.ஆ), நா. சந்திரசேகரன்,
    (ப.ஆ),முன்னூல், ப.42
    13. மு.சண்முகம் பிள்ளை (உ.ஆ), முன்னூல், ப.27
    14. தொல்காப்பியம்,பொருளதிகாரம், உவமவியல்,நூ.8
    15. பொ.வே.சோமசுந்தரனார் (உ.ஆ),முன்னூல்,ப.63
    16. இரா.இராகவையங்கார் (உ.ஆ), முன்னூல்,ப.66
    17. tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்), சூடாமணி நிகண்டு,ப.79
    18. tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்), சேந்தன் திவாகரம்,ப.73
    19. tamilvu.org (தமிழ் இணையக் கல்விக் கழகம்), செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்
    பேரகரமுதலி,ப.1041
    20. மேலது,ப.1042
    21. tamilvu.org (( தமிழ் இணையக் கல்விக் கழகம்), தமிழ் – தமிழ் அகரமுதலி ,ப.359
    22. tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்), சங்கஇலக்கியச் சொல்லடைவு,ப.542

    துணைநின்ற நூல்கள் மற்றும் இணையத்தளம்

    1.இராகவையங்கார்,ரா.,(உ.ஆ) – குறுந்தொகை விளக்கம்
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    முதற்பதிப்பு – 1993
    2.இளம்பூரணர் (உ.ஆ) – தொல்காப்பியம் மூலமும் உரையும் –
    பொருளதிகாரம் (மூன்றாம் பகுதி)
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம்,
    சென்னை – 600018, பதிப்பு – 2004
    3.கழகப் புலவர்குழு – தமிழ் அகராதி,
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ
    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
    சென்னை. மூன்றாம் பதிப்பு, 1974.

    4.கழகப் புலவர்குழு – நன்னூல் காண்டிகையுரை – எழுத்ததிகாரம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
    சென்னை. பதிப்பு, 2002

    5.சண்முகம் பிள்ளை,மு., (ப.ஆ) – குறுந்தொகை மூலமும் உரையும்
    தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு – 1994

    6.சாமிநாதையர், உ.வே., (உ.ஆ) – குறுந்தொகை
    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
    (திருப்பனந்தாள் காசிமட நிதிய வெளியீடு)
    முதற்பதிப்பு – 1983

    7.சோமசுந்தரனார், பொ.வே., – குறுந்தொகை மூலமும் உரையும்,
    (உ.ஆ.) திருநெல்வேலி தென்னிந்திய சைவ
    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமிடெட்,
    522, டி.டி.கே. சாலை, சென்னை. மறுபதிப்பு,2007

    8.சௌரிப்பெருமாள் – குறுந்தொகை விளக்கம்
    அரங்கன்,(உ.ஆ),& முல்லைநிலையம்,
    சந்திரசேகரன், நா., (ப.ஆ) 9, பாரதிநகர் முதல்தெரு,
    தி.நகர், சென்னை-600017
    மறுபதிப்பு,2008

    9.வையாபுரிப் பிள்ளை,எஸ்..,(ப.ஆ) – சங்க இலக்கியம் முழுவதும் ( பாட்டும்
    தொகையும்), இரண்டாம் தொகுதி,
    முல்லைநிலையம்,9, பாரதிநகர் முதல்தெரு,
    தி.நகர், சென்னை-600017,மறுபதிப்பு,2010

    10. இணையத்தளம் – tamilvu.org ( தமிழ் இணையக் கல்விக் கழகம்)
    (நிகண்டுகள், சொல்லடைவு, அகரமுதலி
    ஆகியவற்றின் பார்வைக்கு மட்டும்)

    Share
  • செல்லுகையில் செல்பேச்சு

    போய்ச் சேர்ந்த பிறகு
    பேசியிருந்தால்
    போய்ச் சேராதிருந்திருக்கலாம்!

    போய்ச் சேரும் முன்னே
    பேசியதால்
    போய்ச் சேர்ந்துவிட்டார்!

    Share
  • இராமநாதபுரம் மாவட்ட வைகை ஆற்றுப் படுகையில் நுண்கற்காலத் தடயங்கள்

           முனைவர் ஆ.ராஜா

            அருங்காட்சியகக் காப்பாளர்

            அருங்காட்சியகத் துறை

            தமிழ்ப் பல்கலைக்கழகம்

            தஞ்சாவூர்

    ———————————————

    மனிதனின் ஆரம்பகால வரலாற்றை அறிவதற்குப் பெரிதும் துணை நிற்பது தொல்லியலாகும். தமிழக வரலாற்றை பல அறிஞர்கள் ஆய்வு செய்தும் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் பல மேற்கொண்டதன் வாயிலாகவும் கிடைக்கப்பெற்ற தொல்லியல் சான்றுகளைக் கொண்டு வரலாற்றை எழுதியும் மீள் உருவாக்குமும் செய்துள்ளனர். அந்தவகையில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் ஒன்றான இராமாநாதபுரம் மாவட்டத்தில் கள ஆய்வுகள் மேற்கொண்டதன் வாயிலாக கண்டறியப்பட்ட நுண்கற்காலக் கருவிகளைப் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.

    இராமநாதபுரம் வட்டாரப் பகுதியில் இதற்கு முன்னர் பல தொல்லியல் ஆய்வாளர்கள் கள ஆய்வுகள் மற்றும் அகழாய்வுகள் மேற்கொண்டபோது பெரும்பான்மையாக இரும்புக்காலம், வரலாற்றுத் தொடக்க காலம் மற்றும் இடைக்காலச் சான்றுகளே அதிகம் வெளிக்கொணரப்பட்டுள்ளன. கா.இராசன், வேதாச்சலம், எஸ்.சாந்தலிங்கம், பா.ஜெயக்குமார், ந.அதியமான், வீ.செல்வகுமார், ஆ.ராஜா, பா.பாலமுருகன் போன்ற பல தொல்லியல் ஆய்வாளர்களால் வைகை ஆற்றுப் படுகையின் இரு புறங்களிலும் மேற்கொள்ளப்பட்ட கள ஆய்வின் மூலம் மேற்குறிப்பிட்ட காலங்களின் பண்பாட்டுத் தடயங்கள் கண்டறியப்பட்டு வெளியிட்டுள்ளன. இருப்பினும் மேற்சுட்டிய பண்பாடுகளுக்கு முன் வரக்கூடிய பழங்கற்காலம் மற்றும் நுண்கற்காலச் தொல்லியல் சான்றுகள் இப்பகுதியில் பெருமளவில் கண்டறியப்படவில்லை என்ற தாக்கம் இருந்தது. வீ.செல்வகுமார் அவர்கள் சில இடங்களில் மட்டும் நுண்கற்கால எச்சங்களைக் கண்டறிந்துள்ளார். அதனைத் தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றுப் படுகையில் தொடர் மேற்பரப்பாய்வுகள் செய்ததன் வாயிலாகப் பல நுண்கற்கால தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டு, நுண்கற்கருவிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. இப்புதியக் கண்டுபிடிப்பானது அப்பகுதியின் வரலாற்றைப் பின்நோக்கி எடுத்துச் செல்வதற்கு வலுசேர்க்கும் என்பதில் ஐயமில்லை.

    முன்னாய்வும் ஒப்பாய்வும்

    இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள தேரிருவேலி என்ற இடத்தில் தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையினர் 1999-2000ஆம் ஆண்டுகளில் அகழாய்வினை மேற்கொண்டனர். இவ்வகழாய்வில் இரும்புக்காலப் பண்பாட்டுத் தடயங்கள் கிடைக்கின்ற மண்ணடுக்கிற்குக் கீழ் வருகின்ற மண்ணடுக்கில் குவார்ட்ஸ் வகை நுண்கற்காலக் கருவிகள் மற்றும் செதில் கண்டறியப்பட்டுள்ளன.1 இதைத் தொடர்ந்து இம்மாவட்டப் பகுதியில் மண்டபச்சாலை, கமுதி, நீராவி, தமிழ்ப்பாடி, திருச்சுழி, காரேந்தல், மேலேந்தல், நாகுடி, மறையூர், சாத்திச்சேரி, புத்தூர், நெல்மடியூர், செய்யமங்கலம் மற்றும் காஞ்சிரங்கம் ஆகிய இடங்களில் வீ.செல்வகுமார் நுண்கற்காலக் கருவிகள் மற்றும் செதில்களை கண்டறிந்துள்ளார். இக்கருவிகள் வண்டல் மண் மற்றும் செம்மண் படிவுகளிலும் அல்லது செம்மண் படிவுகளுக்குக் கீழ் காணப்படுகிற சரளைக்கல் படிவுகளில் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.2

    நுண்கற்காலப் பண்பாட்டின் நிலவியல் தன்மையை ஒப்பிட்டுப் பார்க்கும்போது அவை இதற்குமுன்பு இம்மாவட்டத்தில் கமுதி, முதுகுளத்தூர் வட்டங்களில் வீ.செல்வகுமார் கண்டறிந்த நுண்கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களை ஒத்துள்ளன. அதாவது நுண்கற்காலப் பண்பாட்டுக் கருவிகள் செம்மண் படிவுகளிலும், வண்டல் மண்படிவுகளிலும், தேரிப்படிவுகளிலும் காணப்படுகின்றன. இராமநாதபுரம் மாவட்டத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மேற்பரப்பாய்வுகளில் தெற்குத்தரவை என்ற ஊரில் காணப்பட்ட செம்மண் தேரிப்பகுதியில் மூன்று மீட்டர் ஆழத்திற்கு மண் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. அத்தகைய ஆழத்தில் நுண்கற்காலக் குவார்ட்ஸ் செதில்கள் மற்றும் செர்ட்குவார்ட்ஸ் வகை செதில்கள் பரவலாகக் காணப்படுவதை அடையாளம் காண முடிந்தது.

    பொதுவாக நுண்கற்காலத்தைச் சார்ந்த கருவிகள், செதில்கள், துகள்கள் மற்றும் கருவிகள் செய்யப் பயன்படுத்தப்பட்ட மூலக்கற்கள் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் கிடைக்கின்றன. மேற்குறிப்பிட்ட காலத்தைச் சார்ந்த கருவிகள் வண்டல் மண் படிவுகளிலும், செம்மண் படிவுகளிலும், செம்மண்ணுடன்கூடிய செம்பாறங்கற் படிவுகளிலும் (Laterite) அதிகளவில் கிடைக்கின்றன.3 ஆனால் புதுக்கோட்டை பகுதியிலுள்ள நுண்கற்காலத் தொல்லியல் இடங்கள் செம்மண்ணுடன்கூடிய சரளைக்கல் படிவுகளிலும், வெப்பத்தின் தன்மை அதிகம் காணப்பட்டதால் நிலப்பரப்பில் எற்பட்ட வேதியியல் மாற்றங்களால் மாற்றம் பெற்ற செம்பாறங்கற் படிவுகளிலும், ஆலங்குடி பகுதியில் வண்டல் மண் படுவுகளிலும்4 அதிகளவில் கிடைத்துள்ளன.

    (இராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றுப் படுகையில் கண்டறியப்பட்ட நுண்கற்கால இடங்களைக் காட்டும் படம்)

    இதேபோன்று தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டியில் 2009 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் இரும்பு செறிவுள்ள சரளைக்கற்கள் (Like Ferricrete) செம்மண்ணுடன் கலந்து காணப்படுகிற மண்ணடுக்கில் நுண்கற்காலச் செதில்கள், கூர்முனைக்கருவிகள், துளையிடும் கருவிகள், சுரண்டிகள், பிறைவடிவக்கருவிகள், அம்புமுனைக்கருவிகள் மற்றும் மூலக்கற்கள் காணப்பட்டன.5 இதேபோன்று நாகபட்டினம் மாவட்டத்தில் இரும்புக்கல் போன்ற சரளைக்கற் படிவுகளில் நுண்கற்கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன.6 மேலும், சேலம், நாமக்கல், கரூர், திருச்சி மற்றும் மத்திய காவேரிப் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும் நூண்கற்காலக் கருவிகள் கிடைக்கின்றன. இவற்றில் காவேரி ஆற்றுக் கரையோரங்களின் இரு புறங்களிலும் கண்டறியப்பட்ட நுண்கற்காலப் பண்பாட்டிடங்களில் வெள்ளை நிற குவார்ட்ஸ் வகை கற்களால் உருவாக்கப்பட்ட கருவிகள் அதிகளவில் கிடைத்துள்ளன. இதேபோன்று இராமநாதபுரம் மாவட்டப் பகுதிகளில் கள ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ள நுண்கற்காலப் பண்பாட்டுக் கருவிகள் வண்டல் மண் படிவுகளிலும், செம்மண்படிவுகளிலும், செம்மண் தேரிகளிலும் வேலைப்பாடுகளுடன் கூடிய நுண்கற்காலக் கருவிகள் காணப்படுகின்றன. இவ்விடங்கள் நுண்கற்கால மக்களின் தாயமாக இருந்திருக்க வேண்டும்.7

    வைகை ஆற்றுப் படுகையில் கண்டறியப்பட்ட  நுண்கற்கால இடங்கள்

    இராமநாதபுரம் வட்டாரப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டதில் இராமநாதபுரம், முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடனை ஆகிய வட்டங்களிலுள்ள செலுவை, அம்மன்கோயில், தெற்குத்தரவை, பிரப்புகளூர், களரி, வண்ணாங்குண்டு, பழையனக்கோட்டை, தெற்குத்தரவை, சிறுவயல், தென்னவனூர், தேவிப்பட்டினம், பழஞ்சிறை, கோனேரி8 போன்ற ஊர்களில் நுண்கற்காலப் பண்பாட்டைச் சார்ந்த தொல்லியல் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்குறிப்பிட்ட இடங்களில் கண்டறியப்பட்ட நுண்கற்காலக் கருவிகள் கீழ்கண்டவாறு வகைப்படுத்தப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.

    நுண்கற்கருவிகள்

              நுண்கற்கால மக்கள் பளிங்கு கல்லில் இருந்தும், புகைபடிந்த பளிங்குக் கல்லில் இருந்தும் குவார்ட்ஸ் வகைக் கற்களிலிருந்தும் கருவிகளை உருவாக்கியுள்ளனர். மேற்குறிப்பிட்ட மூலக்கற்கலில் இருந்து கூர்முனைக்கருவிகள் (Points), துளையிடும் கருவிகள் (Borers), செதுக்குக்கருவிகள் (Burins), கிழிப்பான்கள் (Blades), பிறைவடிவக்கருவிகள் (Lunates) மற்றும் சுரண்டுக்கருவிகள் (Scrapers) போன்ற கருவிகளை நுண்கற்கால மக்கள் உருவாக்கி பயன்படுத்தியுள்ளனர். மேலும், மூலக்கற்கள் 12, நுண்கற்கருவிகள் 17, முழுமையடைந்த செதில்கள் 56, மருவேலைப்பாடு செய்யப்பட்ட செதில்கள் 24 போன்றவைகள் கள ஆய்வின் வாயிலாகக் கண்டறியப்பட்டுள்ளன.

    நுண்கற்கால மக்களின் நுட்பம்

    நுண்கற்காலத் தொல்லியல் இடங்களில் கிடைத்த நுண்கற்கருவிகள் மற்றும் செதில்களை ஒப்புநோக்கும்போது அவை புதுக்கோட்டை பகுதிகளில் கிடைக்கின்ற கருவிகளை ஒத்தவையாகக் காணப்படுகின்றன. தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி அகழாய்வில் கிடைத்த கூர்முனைக் கருவிகள் மற்றும் அம்புமுனைக் கருவிகளைப்போல் இராமநாதபுரம் பகுதியில் தெற்குத்தரவை, கோனேரி, அம்மன்கோயில் ஆகிய இடங்களில் கிடைத்துள்ள கருவிகளும் ஒத்தவையாகக் காணப்படுகின்றன.

    இக்காலத்திய மனிதர்கள் நுண்திறனுடன் கருவிகளை நேர்த்தியாகவும் செம்மையாகவும் உருவாக்கியுள்ளனர். நாடோடிகளாகத் திரிந்த இவர்கள் தங்களின் உணவுத் தேவைகளுக்குப் பல இடங்களுக்கு நடந்து சென்று உணவை சேகரிக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் கருவிகள் உருவாக்குவதற்கு தேவையான மூலக்கற்களைக் கிடைக்குமிடத்திலேயே சேகரித்து, இவர்கள் செல்லும் இடத்திற்கு எடுத்துச் சென்று கருவிகளை உருவாக்க முற்படுகின்றனர். அவ்வாறாக இராமநாதபுரம் மாவட்டம் வைகை ஆற்றுப் படுகைப் பகுதிகளில் கிடைத்த கருவிகளைச் செய்வதற்கு அருகாமையிலுள்ள சிவகங்கை மற்றும் புதுக்கோட்டை மாவட்டப் பகுதிகளில் கிடைக்கும் மூலக்கற்களைக் கொண்டு கருவிகள் உருவாக்கிப் பயன்படுத்தியிருக்க வேண்டும். ஏனென்றால் இராமநாதபுரம் மாவட்டம் கடலோரப் பகுதிகள் நிறைந்த மாவட்டம் என்பதால் இங்கு கருவிகள் உருவாக்குவதற்கு மூலக்கூறுகள் கிடைப்பதில் சிக்கல்கள் நிறைந்துள்ளன. இங்கு கிடைத்த நுண்கால எச்சங்களை உற்றுநோக்கும்போது மூலக்கற்களில் இருந்து உடைக்கும்போது அழுத்தத்தினால் ஏற்படக்கூடிய குமிழ்கள் உருவாகியிருப்பதை மூலக்கற்களிலும் செதில்களிலும் காணமுடிகிறது. அதேபோன்று மூலக்கற்களிலிருந்து வெளிவரும் செதில்களை மறுவேலைப்பாடு செய்து பல சிறிய கருவிகள் பலவற்றையும் உருவாக்கியுள்ளனர். இத்தகைய கூறுகளையுடைய செதில்களை களரி, அரசனூர், சிறுவயல், தெற்குத்தரவை, கோனேரி, தென்னவனூர், பழஞ்சிறை ஆகிய இடங்களில் சேகரிப்பட்ட கருவிகளின் வாயிலாக அறியமுடிகிறது.

    அதேபோன்று கருவிகளை உருவாக்கும்பொழுது அம்புமுனைக்கருவிகள், கூர்முனைக்கருவிகள், பிறைவடிவக்கருவிகள் போன்றவற்றை நுண்கற்கால மக்கள் நுணுக்கமான நுட்பத்திறனுடன் மூலக்கற்களிலிருந்து ஒரு முழுமையான கருவியை உருவாக்கியுள்ளனர். கருவியை மூலக்கற்களில் இருந்து உருவாக்கும்பொழுது மூலக்கற்களில் இருந்து வெளிவரும் செதில்கள் வாயிலாகச் சிறிய கருவிகளையும் உருவாக்கியுள்ளார்கள். இதற்கு உதாரணமாகப் பழயனக்கோட்டை, பிரபுக்களூர், தெற்குத்தரவை ஆகிய இடங்களில் கிடைத்த கருவிகளைக் குறிப்பிடலாம்.

    நிறைவுரை

    இராமநாதபுரம் மாவட்டத்தில் கண்டறியப்பட்ட நுண்கற்கால எச்சங்களில் கருவிகள் உருவாக்கும்பொழுது மூலக்கற்களில் இருந்து வெளிவரும் பயன்பாடற்ற செதில்களாக 73.35%, மறுவேலைப்பாடு செய்யப்பட்ட செதில்கள் 12.70%, கருவிகள் 9.01%, மூலக்கற்கள் 4.91% ஆகும். இப்பகுதியிலிருந்த நுண்கற்கால மக்கள் குவார்ட்ஸ் வகை கற்களையே அதிகம் பயன்படுத்தியுள்ளனர். மேலும், தமிழகத்தின் ஏனைய மாவட்டங்களில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள் கிடைப்பதைப் போன்று இராமநாதபுரம் மாவடத்திலும் கிடைப்பது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாய்வின் மூலம் இப்பகுதியில் சுமார் 15000ஆண்டுகளுக்கு முன்பே நுண்கற்கால மக்களின் செயல்பாடுகள் இருந்திருக்கிறது என்பதைக் கிடைத்தச் சான்றுகளின் வாயிலாக அறியமுடிகிறது. இவர்கள் பழங்கற்கால மக்களைக்காட்டிலும் மேம்பட்ட கருவிகளை உருவாக்கும் திறம் பெற்றவர்களாக இருந்துள்ளனர். கரடுமுரடான கற்களைத் தவிர்த்து சிறுகற்களைத் தேர்வு செய்து கருவிகளை உருவாக்கும் நுட்பத்தைப் பெற்றிருந்தார்கள் என்றால் அது மிகையாகாது.

    ——————————————

    சான்றெண் விளக்கம்

    1. தி.ஸ்ரீதர், தேரிருவேலி அகழாய்வு, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை, தரமணி, சென்னை, 2005.
    2. வீ.செல்வகுமார், பிள்ளையார்பட்டி அகழாய்வுகள், ஆவணம் இதழ்-22, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2011, பக்.116-117.
    3. ஆ.ராஜா, புதுக்கோட்டை பகுதியில் நுண்கற்காலப் பண்பாட்டிடங்கள், ஆவணம் இதழ் -22, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2011, பக்.185-186.
    4. ஆ.ராஜா, ஆலங்குடி வட்டாரத்தில் நுண்கற்காலப் பண்பாட்டுத் தடயங்கள், மரபுத் தமிழ் (தமிழ் மரபுகளை ஆவணப்படுத்துதல் பன்னாட்டுக் கருத்தரங்க ஆய்வுக்கோவை), சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி, திருநெல்வேலி மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை, ஜெர்மனி, 2016 பக்.78-82.
    5. வீ.செல்வகுமார், தென் தமிழகத்தில் புதிய நுண்கற்கால இடங்கள், ஆவணம் இதழ்-21, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2010, பக்.155-157.
    6. வீ.செல்வகுமார், பிள்ளையார்பட்டி அகழாய்வு 2011, இதழ்-22, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2011, பக்.164-166.
    7. இந்திய விவரச்சுவடி, இராமநாதபுரம் மாவட்டம், தமிழநாடு அரசு வெளியீடு, ப.73
    8. Raja, Cultural contours of History and Archaeology, vol.I, Krishna Naik.K, Siva Nagi Reddy (Eds), B.R. publishing Delhi, 2015, pp.43-45.

    Share
  • துணைதான் யாரோ?

    -கவிஞர் இடக்கரத்தான்

    வானுக்குக் துணைசெய்யும் நிலவின் தோற்றம்
       வயலுக்குத் துணைதானே வரப்பின் ஏற்றம்
    ஆணுக்குத் துணைசெய்வாள் அழகுப் பாவை
       அரசுக்குத் துணைஆற்றும் நல்லோர் சேவை
    மானுக்குத் துணைசெய்யும் குட்டைக் கால்கள்
       மாந்தர்தம் துணையன்றோ நீதி நூல்கள்
    தேனுக்காய் அலையும்சிறு வண்டி னுக்கோ
       தேன்சிந்தும் மலர்க்கூட்டம் துணையே ஆகும்!

    ஊருக்குத் துணைசெய்யும் நதியின் ஓட்டம்
       உயர்வுக்குத் துணைசெய்வார் நல்லோர் கூட்டம்
    நாருக்குத் துணைசெய்யும் மலரின் வாசம்
       நன்மைக்குத் துணையாற்றும் நல்லோர் நேசம்
    வேருக்கு வலுசேர்க்கும் மண்ணின் ஈரம்
       வெற்றிக்குத் துணையாற்றும் நெஞ்சின் வீரம்
    யாருக்கும் பயனில்லா உயிரும் ஓர்நாள்
       யமனுலகு போகையிலும் துணைதான் யாரோ?

    10.12.2018

    Share
  • பெரும் பேறாய் போற்றுகின்றோம் !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண்… அவுஸ்திரேலியா

    முண்டாசுக்   கவிஞனே   நீ
    மூச்சுவிட்டால் கவிதை வரும்
    தமிழ் வண்டாக நீயிருந்து
    தமிழ் பரப்பி நின்றாயே
    அமிழ் துண்டாலே வருகின்ற
    அத்தனையும் வரும் என்று
    தமிழ் உண்டுமே பார்க்கும்படி
    தரணிக்கே உரைத்து நின்றாய்

    ஏழ்மையிலே நீ   இருந்தும்
    இன் தமிழை முதலாக்கி
    தோள் வலிமை காட்டிநின்று
    துணிவுடனே உலவி வந்தாய்
    வாய்மை கொண்டு  நீயுரைத்த
    வரமான வார்த்தை எல்லாம்
    மக்களது  மனம் உறையின்
    வாழ்வு வளம் ஆகிடுமே

    அடிமை  எனும்  மனப்பாங்கை
    அழித்துவிட  வேண்டும் என்றாய்
    அல்லல்  தரும்  சாதியினை
    தொல்லையென  நீ  மொழிந்தாய்
    பெண்மைதனை  சக்தி  என்று
    பெருங்குரலில் நீ  மொழிந்தாய்
    பெரும் புலவா உனையென்றும்
    பெரும்  பேறாய் போற்றுகின்றோம்

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (291)

    எந்தவொரு பெரும் முயற்சிக்கும் அதனைச் செயலாக்க இயன்ற தோள்கள் தேவை. தோள்கள் இல்லாமல் மூளை என்ன சிந்தித்தாலும் அது வெறும் கனவுகளாகவும் சிந்தனைகளாகவும் மட்டுமே நின்றுவிடும். ஒரு குழு, ஓர் அமைப்பு, ஒரு கழகம் என்று எடுத்துக் கொண்டால் அந்தக் குழுக்களின் தீர்மானங்களை வெற்றிகரமாக நிறைவேற்றச் செயல் வீரர்கள் தேவை. அப்படிப்பட்ட ஒரு செயல் வீரர் திரு. விட்டல் நாராயணன் அவர்கள்.

    சென்ற வாரம் வானவில் பண்பாட்டு மையம் நடத்திய “வீர சுதந்திரம்” என்ற தலைப்பிலான மாபெரும் கலைக்காட்சி தமிழக அரசின் உதவியுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப் பட்டது. பெரும் பொருட்செலவும், பல உழைப்பாளிகளின் மனம் மற்றும் உடல் உழைப்பால் உருவாகி, வானளாவிய பாரத மாதா திருவுருவத்துடன் நின்றது கலைக்காட்சி. உள்ளே பல நவீனத்துவம் வாய்ந்த கண்காட்சி அமைப்புகள். ஒளிவில்லைக் காட்சிகள்(Slide show), ஒளி ஒலிக் காட்சிகள் (Sound and Light), பரிமாணக் காட்சிகள் (Infographics) மேலும் பாரதி திரையரங்கம் என்று கண் காணும் காட்சிகள் மூலம் கற்றுத்தரும் நிறைய சிறப்பம்சங்கள் அங்கே திகழ்ந்திருந்தன. பல திசைகளில் இருந்து தமிழக மக்கள் அந்தக் கண்காட்சியைப் பார்த்து ரசித்தனர்.

    அத்தகு கலைக்காட்சியின் மொத்த செயல் திட்ட வடிவத்தையும் பல ஆலோசனைக் குழுக்களோடு நடைமுறைப் படுத்தியவர் விட்டல் நாராயணன் அவர்கள். தேச பக்தராகவும், பாரதி பக்தராகவும், தமிழ்க் காதலராகவும் விளங்கி வரும் திரு விட்டல் நாராயணன், வடிவமைப்பு இயக்குநர் (Creative director), திரைக்கதாசிரியர் (Script writer) என்று பன்முகத் திறமைகளைக் கொண்டவர். வானவில் பண்பாட்டு மையம் நடத்தி வருகின்ற பாரதி திருவிழாவின் செயல் வீரர்.

    மக்கள் கண்டு களிக்க அற்புதமாக கலைக்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்த வானவில் பண்பாட்டு மையத்தையும், தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையையும் வல்லமை சார்பில் மனமாரப் பாராட்டுகிறேன்! “வீர சுதந்திரம்” கலைக்காட்சியோடு சேர்த்து முழு பாரதி திருவிழா ஏற்பாடுகளையும் செவ்வணே செய்த திரு விட்டல் நாராயணன் அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பில், வல்லமையாளர் விருது வழங்குவதில் பேருவகை கொள்கிறோம்.

    தோளென நின்று தொலைந்த கதையனைத்தும்
    நாளிரண்டில் ஊர்காண நல்லதொரு காட்சிதனை
    வெல்லும் விதம்வைத்த விட்டல்நா ராயணன்
    வல்லமை யாளரென வாழ்த்து!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?cat=955

    Share
  • சேக்கிழார் பா நயம் – 15 

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    முன்னர் ‘வளவ நின் புதல்வன் ‘ என்ற பாடலில் கொலைக் குற்றம் செய்தவனுக்கு ஆதரவான நீதி மன்ற வாதங்களை எடுத்துரைத்த அமைச்சரின் தொகுப்புரையைக் கண்டோம். அதனைப் போலவே கொலை செய்யப்பட்ட ஆன்கன்றுக்கு ஆதரவாக அரசன் கூறிய சட்டம் மற்றும் நீதி சான்ற நுட்பம் மிக்க வாதங்களைச் சேக்கிழார் பாடிய சிறப்பை இக்கட்டுரையில் காணலாம்.

    மனுநீதிச் சோழன் அமர்ந்திருந்த அறைக்குள் எந்த  அவலவோசையும், இதுவரை கேட்டதில்லை. புதிதாக அரசன் செவியில் விழுந்த ஆராய்ச்சிமணி யோசை அரசனை, திடுக்கிடச் செய்தது. இந்த ஓசை, அரசனுக்குப் பழி உண்டாயிற்று என்ற அறிவிப்போ, அவன் முன்னோர் செய்த பாவத்தின் அறிவிப்போ மரணத்தை உண்டாக்கும் கூற்றுவன் ஏறிவரும் எருமையின் கழுத்து மணியின் ஆரவாரமோ என்று எண்ணி வருந்தினான். ஆகவே ஏதோவொரு மரணத்தினை முன்னாள் உணர்ந்து கொண்டான்.  மணியோசை கேட்ட அரசன் தானே அரியணையிலிருந்து இறங்கி வாயிலுக்கு ஓடி வந்தான்! அங்கிருந்த ஏவலர்கள் முன்னே வந்து அங்கிருந்த பசுவைக் காட்டினர். ‘இப்பசு இங்கிருந்த மணியை அசைத்தது!’ என்றனர்!  நாட்டில் என்ன நடந்தாலும் அதன் காரணத்தை அறிந்து கூறும் கடமை அமைச்சர்களுக்கு உண்டு. ஒரு பசு இப்படித் தானாக மணியை அசைத்து அடிக்குமா? என்ற ஐயத்துடன் அமைச்சர்களை அரசன் நோக்கினான். அவர்களுள் அறிவில் மிக்க அமைச்சர், இளங்கன்று தேர்க்காலில் புகுந்து இறந்த செய்தியைப் பக்குவமாக உரைத்தார்.

    அதனைக் கேட்ட அரசன் உடனே அந்தப் பசு அடைந்த துன்பத்தை அடைந்தான். இது மிகச்சிறந்த  மனித இயல்பாகும். மேலும் தன் மகவை இழந்த தாய்ப்பசுபோல் வருந்தினான்; எல்லையற்ற துன்பம் அடைந்தான். ஏங்கினான்; மனக்கலக்கம் கொண்டான். இப்பசுவின் துன்பத்தை எவ்வாறு நீக்குவது என்று எண்ணினான்; இதனை நான் செய்யவில்லை, வேறு யார் செய்தனரோ?’’ என்று எண்ணினான். உலகத்து உயிர்கள் அனைத்தின் நல்வாழ்வுக்கும் உத்தரவாதம் அளிக்கும் தன் ஆட்சியில் ஒரு தாய்ப்பசு துன்புற்றதே என்று எண்ணி வருந்தினான்.  என்ன செய்தால் இத்துன்பம் தீரும்? என்றெண்ணி அப்பசுவை நோக்கி, மிகவும் சோர்வடைந்தான்!

    அரசன் துன்புறுவதைக் கண்ட அமைச்சர்கள் பதறிப்போய், அரசனுக்கு ஆறுதல் கூறினர்.  கொலை பலவகையானது. போர்வீரன் தன்னைக் கொல்ல  வந்த எதிரியைக் கொல்வது ஒருவகை; பெருங்குற்றவாளியை மற்றவரிடமிருந்து பாதுகாக்க அரசன் கொல்வது ஒருவகை; எளியோரைக் காக்கக் கொடிய விலங்கைக் கொல்லுதல் ஒருவகை; ஊரை அழிக்கும் பூச்சிகளைக் கொல்லுதல் ஒருவகை; இவற்றையே தன்னால், தன்பரிசனத்தால்,பகைத்திறத்தால்,கள்வரால், உயிர்களால் வரும்  பேராபத்தினை நீக்கும் அரசன் செயல்களாக மன்னனே கூறுகிறான். இவ்வாறன்றி எதிர்பாராமல் ஒரு கொலை நடந்தால், கொலையுண்ட உயிரின் பெருமை, சிறுமைகளுக்கேற்ப அவ்வுயிர்க்கொலைக்கு உரிய கழுவாய் தேட, முன்னோர் கூறிய முறையில் நடக்கலாம்! அதிலும் மற்றோர் உயிரைக்  கொன்று கழுவாய் தேடல் தவறு! ஓருயிரைக் கொன்றால் அத்தகைய உயிர்களைப் பலவகையில் காத்தலும் கழுவாயே! ‘’இவ்வகையில் பசு என்கிற, மிக நல்ல விலங்கைக் கொன்ற பாவத்துக்குக் கழுவாய் இன்னது என முன்னோர் வகுத்துள்ள வழியில் நடந்து கொள்ளலாம்!’’ என்று அமைச்சர்கள் கூறினர். அவ்வாறு செய்யுங்கால் பாவத்தைப் போக்கும் வேள்வி முதலாயின செய்யலாம்! என்றனர். இவ்வாறு செய்வதால் மந்திரங்கள் கூறி மன்றாடி இறைவனிடம் வேண்டி வழிபடுதல் நன்று என்றாலும், இங்கே அதனை, வழக்கன்று, சழக்கு என்கிறான் மன்னன். உண்மையான அறநெறி இத்தகைய வேள்விமுறைகளை ஏற்றுக் கொள்ளாது. என்பது அரசனின் வாதம்.

    ‘’அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
    உயிர்செகுத்து உண்ணாமை நன்று!’’ என்பது வள்ளுவம்.

    ‘’கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
     களைகட் டதனோடு  நேர்!’’ என்பதும்  திருக்குறளே! அதனால் அரசன் தன் மைந்தனைத் தேர்க்காலில் இட்டுக் கொன்று,  இழந்து விடுவானோ? என்றெண்ணி அமைச்சர்கள் கூறிய கழுவாய் முறையைச் சழக்கு என்று மறுக்கிறான்!

    ‘‘வழக்கென்று நீர் மொழிந்தால் மற்றதுதான் வலிப்பட்டுக்
    குழக்கன்றை இழந்தலறும் கோ உறு நோய் மருந்தாமோ?’’ என்கிறான்.  ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம் எவர்க்கும் இல்லை.  அவ்வுயிரும் ‘’திருவாரூர்ப் பிறக்க முத்தி‘’ என்ற உரைப்படி முத்திக்கு உரிய உயிராகும். அத்தகைய ஓர் உயிரைக் கொல்லும் அதிகாரம் எவர்க்கும் இல்லை. கன்றின் உயிரின் சிறப்பு அத்தகையது! அவ்வாறு கொன்றால், கொன்றவரைக் கொல்லுதலே அரச நீதி! ஆதலால் நான் என் மைந்தனைத் தேர்க்காலில் இட விரும்புகிறேன் என்று தன்  அமைச்சன் ஒருவனை அவ்வாறு செய்யுமாறு ஏவினான்!

    அரசனிட்ட கட்டளையை மறுக்க வியலாத அமைச்சன், திருவாரூரில்  பிறந்த இளவரசனின் உயிரைக் கொல்வது அரசநிந்தனையும், கொள்கைக் குற்றமும் ஆதலால், தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டான்!

    ‘’தன்னுயிர்  நீப்பினும் செய்யற்க  தான்பிறிது
    இன்னுயிர் நீக்கும் வினை!’’ குறள் நெறியின் படியும்,

    ‘’அறிவினால் ஆகுவதுண்டோ  பிறிதின் நோய்
    தன்னோய்போற் போற்றாக்  கடை!’’ என்ற குறள் நெறியின் படியும் அமைச்சன்  செய்தது தன்மானம் காத்தல், கொள்கை காத்தல் என்ற தூய அறநெறியின் பாற்பட்டதாகும். இதனைக் கேள்வியுற்ற அரசன், தன்  எண்ணமே அமைச்சனையும் கொன்றது என்று பெரிதும் வருந்தினான். இங்கே வள்ளுவர் கூறிய குறட்பாக்களில் , பிறர் என்று கூறாமல் பிறிது , பிறிதின் நோய் என்று, அஃறிணை உயிர்களையும் கருதிய ஆன்மநேய உயிரிரக்கம் புலப்படுகிறது.  அந்த நெறியே மன்னனின் ஆன்மநேய உயிரிரக்கத்தைத் தூண்டியது. அதனாலும், யாரும் அறியாத வகையில் தேரினிடையே புகுந்த அந்தக் கன்றின் செயல் தெய்வத் தன்மை வாய்ந் தாகவும், கன்றை இழந்த பசுவின் கதறலும், கொம்பால் மணிக்கயிற்றை அசைத்து நீதிகேட்ட செயல், விலங்குத் தன்மைக்கு அப்பாற்பட்ட தெய்வச்  செயலாகவும் கருதிய மன்னனின் உய்த்துணர்திறம், இங்கே உற்று நோக்கத்தக்கது. ஆகவே, ஒரு பறவையின் பசி போக்கத் தானேதன் தசையை அரிந்து கொடுத்த வளவனின் பரம்பரை உயிரிரக்கம் கன்றையும் உயர்ந்த உயிராகக் கருதத் தூண்டியது.  அதனால்தான் அமைச்சர்களிடம்,‘’எந்தக் காலத்தில், எந்தப் பசு, இப்படி ஆராய்ச்சி மணியை அசைத்து நீதி கேட்டது?’’ என்று வியந்து கேட்டான். இதனைச் சேக்கிழார், 

    “எவ்வுலகில் எப்பெற்றம் இப்பெற்றித் தாம்இடரால்
    வெவ்வுயிர்த்துக் கதறிமணி எறிந்து விழுந்தது? விளம்பீர்!” எனக் கேட்டதாக எழுதினர்! ஆகவே பசுவையும் கன்றையும் மேம்பட்ட உயிராகக் கருதித் தன்  மரபுக்கே உரிய ஒரே  மகனை இழக்கக் கருதிய செயல், அறத்தின் பாற்பட்டதே ஆகும். அதனால்தான் ,’’இச்சழக்கு இன்று நான் இயைந்தால் தருமந்தான் சலியாதோ?’’ என்று மிக நுட்பமாக அரசன் கேட்டான்! இவையனைத்தும் குற்றம் செய்த இளவரசனுக்கு எதிரான நியாயமான  வாதங்களாகவே அமைந்து நம் உள்ளத்திற்கு நிறைவு தருகின்றன! அன்று அரசனே நீதி வழங்கும் நிலையில் இருந்தமையால், குற்றம்செய்த மகனை உறவென்று கருதாமல் நீதி வழங்கிய சிறப்பு  புலப்படுகிறது!  இத்தகைய அரசாட்சி எங்கும் காணுதற்கரிது! இதனை முழுவதுமாக விளக்கும் சேக்கிழாரின் பாடலைக் காண்போம்!

    ‘’ஒருமைந்தன்  தங்குலத்துக்கு  உள்ளான்என்  பதும்உணரான்
    ‘தருமம்தன்  வழிச்செல்கை  கடன்’என்று   தன்மைந்தன்
     மருமம்தன்  தேராழி   உறவூர்ந்தான்   மனுவேந்தன்
     அருமந்த   அரசாட்சி அரிதோ? மற்  றெளிதோதான்!

    இப்பாடலில் வழக்குத் தொடுப்பதற்கும், வழக்கை மறுப்பதற்கும் உரிய இருவகை வாதங்களும்  அமைந்து, நம்மை வியக்க வைக்கின்றன!

    Share
  • சங்ககால சமுதாய ஆதிக்கப் போக்கும்….சித்தரிப்பும்…..

    முனைவர் செ. பொன்மலர், உதவிப்பேராசிரியர், விவேகானந்தா கல்லூரி, அகஸ்திஸ்வரம்,

    அறிமுகம்

    “பெண்மையிலும் மென்மையுண்டு

    மென்மையிலும் மேன்மையுண்டு

    கண்டிடுவார் யாரோ

    கண்கலங்க வைப்பது கண்ணீரோ….”

    மாதர் தம்மை  இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என்று முழங்கினார் நம் தேசக்கவி பாரதியார். பெண்ணுக்கு உரிமைகள் தரப்பட வேண்டும் என்ற குரலை ஓங்கி ஒலிக்கச் செய்தார் பெரியார். பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற் கொம்பே என்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். மங்கையராய் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா என்று பெண்பிறப்பின் மகத்துவம் பேசினார் கவிமணி. இன்னும் பலரும் பெண்ணின் பெருமை குறித்துப் பேசியுள்ளனர். நாகரிகம் தோன்றிய காலத்தில் பெண்கள்  உரிமையோடு வாழ்ந்துள்ளனர். ஆனால் காலப்போக்கில் பெண்களின் இயங்குதளம் விரிவடையும் போது பெண் அடிமைத்தனமும் பெருகி வந்துள்ளது. பெண் சார்ந்த சிக்கல்களும் அதிகப்படியான நிலையில் வளர்ந்து விட்டன. எனவே பண்டைய இலக்கியத்தில் ஆணாதிக்க போக்குடன் கூடிய சமுதாய சித்தரிப்பு இருந்துள்ளமையை இக்கட்டுரை விளக்க முற்படுகிறது.

    பெண் ஒடுக்குமுறை

    பெண்ணை ஒடுக்குமுறைக்கு உட்படுத்த ஆணாதிக்க சமூகம் எடுத்துக் கொண்ட ஆயுதம் அவர்களுக்கு இயற்கையாக நிகழும் உடலியல் மாற்றங்களான உபாதைகள் ஆகும். உடலியல் மாற்றத்தால் நிகழ்கின்ற பெண் பூப்படைதல் நிகழ்வு முற்காலத்தில் எல்லா இனக்குழு மக்களின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சிக்குரிய சடங்காகவே இருந்து வந்துள்ளது. ஆனால் கால மாற்றத்தால் ஆணாதிக்கச் சமூகத்தினால் பூப்பு என்பது தீட்டு, விலக்கு, தீண்டத்தகாதது என்று கூறி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே பெண்கள் வீட்டிற்கு வெளியே தனியாக அமர்த்தப்படுகின்றனர். இதனை “மனைச் செறிந்தனளே வாணுதல்”  (புறம், 337: 6௧2) என்ற புறப்பாடல் சான்றுபகர்கின்றது. ஆரிய இனப்பண்பாட்டின் தாக்கத்தினாலும் வைதீக ஆண் சமுதாயம் பெண்ணை அடிமைப்படுத்த முனைந்த காலத்திலும் தான் பூப்பு என்ற செயல் தீட்டாக மாறியுள்ளது. இதன் காரணமாக தற்போது பூப்புச் சடங்கினை மிக விமரிசையாக்க் கொண்டாடும் வழக்கம் குறைந்து கொண்டே வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

    பெண்களுக்கு மாதந்தோறும் வருகின்ற இயற்கை உபாதைகளில் மாதவிடாய் நிகழ்வும் ஒன்று. இக்காலங்களில் பெண்களைத் தீட்டு என்று ஆணாதிக்க சமூகம் கூறி ஒதுக்கியுள்ளது. இதனால் அந்தக் காலங்களில் வீட்டில் சமைக்கும் பாத்திரங்களைத் தொடக்கூடாது கோவிலுக்குச் செல்லக்கூடாது எனவும் சங்க சமூகம் புறந்தள்ளியுள்ளது. இதனை,

    “தண்ணடை மன்னர் தாருடைப் புரவி

    அணங்குஉடை முருகன் கோட்டத்துக்

    லன்தொடா மகளிரின் இகழ்ந்துநின் றவ்வே”  – (புறம் . 299)

    என்ற பாடல் தெளிவுறுத்துகின்றது. நெய்யிட்ட உணவை உண்ட பகை மன்னரின் குதிரைகள் எல்லாம், முருகன் கோயிலிலே புகுந்த தூய்மையற்றார், கலம் தொடுவதற்கு அஞ்சினராக ஒதுங்கி நிற்றலைப்போல அஞ்சி ஒதுங்கி நின்றன காணீர், என்று பெண்ணை உவமையாக கூறியுள்ளமையைக் காணமுடிகின்றது.

    ஆணாதிக்கம்

    தந்தைவழி சமூக உருவாக்கத்தின் காரணமாக பெண்களை இழிவுப்படுத்தியும் அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டும், ஆண்கள் தங்களின் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். குழந்தை பிறப்பு என்பது மகிழ்ச்சிக்குரிய நிகழ்வு ஆகும். ஆனால் சங்ககாலத்தில் பெண் குழந்தையின் பிறப்பு ஆண் குழந்தையின் பிறப்பைப் போல் மகிழ்ச்சி கொடுப்பதாக இல்லை. தாயினை அழைக்கும் போது கூட புதல்வனின் தாயே என்றே அழைத்துள்ளனர். ஆண் குழந்தையின் பிறப்பு மூலமே பெண் பெருமையடைவதை,

    “புதல்வற் பயந்த புகழ்மிகு சிறப்பின்

    நன்ன ராட்டிக்கு அன்றியும்”        – (அகம்.184)

    என்ற அகநானூற்றுப் பாடல் சான்றுபகர்கின்றது. பெண் பத்துமாதம் சுமந்து ஆண் குழந்தையினை இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்துகிறாள் ஆனால் அந்த குழந்தை பிறந்ததினால் தான் பெண்ணுக்குச் சிறப்பு என்று வரையறைச் செய்யப்பட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்.

    சங்ககாலத்தில் பெண்களுக்குப் போரில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் ஆணாதிக்க வெளிப்பாட்டின் காரணமாக போரில் எவ்வித பங்கும் பெறாத பெண்கள் துன்பத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். நன்னன் என்ற மன்னன் போரில் தோல்வியுற்ற தன் பகையரசனின் உரிமை பெண்களை அழைத்து வந்து, அவர் தம் தலைக் கூந்தலை மழித்து, அந்த கூந்தலைக் கயிறாகத் திரித்து, அந்த கயிற்றால் பகை மன்னனின் யானைகளைக் கட்டியுள்ளான். இதனை,

    “……………………………. நன்னன்

    கூந்தன் முரற்சியிற் கொடிதே

    மறப்பன் மாதோ நின்விறற் தகைமையே”  -(நற். 270.)

    என்ற பாடல் மூலம் அறியலாம். ஆணாதிக்கத்தின் வெளிப்பாடக பெண்ணின் தலை மயிர் மழிக்கப்பட்டு அவர்கள் அவமானப்படுத்தப்பட்டுள்ளமை பெண்ணிய சிக்கல்களின் உச்சமாகக் கருதலாம்.

    ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டில் பெண் கொலைச் செய்யப்பட்ட நிகழ்வும் சங்கப்பாடல்களில் காணமுடிகின்றது. நன்னன் என்ற மன்னனின் தோட்டத்திலுள்ள ஒரு மரத்திலிருந்து காயொன்று அருகில் உள்ள ஆற்றில் தானே வீழ்ந்து மிதந்து வர, அதனை ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த அந்நாட்டுப் பெண்ணொருத்தி எடுத்து உண்டாள். அதனைக் கண்ட நன்னனின் காவலர்கள் அவளை மன்னன் முன் அழைத்துச் சென்று நிறுத்த, அவன் தன்னுடைய காவல் மரக்காயை உண்டதினால் அவளுக்குக் கொலைத் தண்டனை வழங்கினான். தண்டனையை அறிந்த அவளுடைய தந்தை அவளின் நிறைக்கு (எடைக்கு) ஒத்த பொன் பாவையும், 81 யானைகளையும் தண்டமாக தருவதாகக் கூறிய நிலையிலும் மன்னன் நன்னன் அவளைக் கொலைச் செய்வதில் உறுதியாக இருந்தான். இதனை,

    “மண்ணிய சென்ற வொண்ணுதல் அரிவை

    புனற்தரு பசுங்காய் தின்றதன் தப்பற்

    கொன்பதிற் றொன்பது களிற்றொ டவணிறை

    பொன்செய் பாவை கொடுப்பவும் கொள்ளான்

    பெண்கொலை புரிந்த நன்னன் போல”       –   ( குறு.292)

    என்ற பாடல் வரிகள் வெளிப்படுத்துகின்றன. பெண் அறியாமல் செய்த சிறிய செயலுக்காகக் கொலைச் செய்யப்பட்ட்டுள்ளமை ஆணாதிக்கத்தின் வெளிப்பாட்டினைக் காட்டுகின்றது.

    இல்லறம்

    மானுடச் சமூகமானது குடும்பம் என்ற அமைப்பினுள் கட்டுண்டு காணப்படுகின்றது. இதனுள் திருமணம், பாலுறவு, குழந்தைப்பேறு முதலிய முக்கிய செயல்பாடுகள் நடைபெறுகின்றன. இதில் பெண் இல்லத்தரசியாக விளங்குகின்றாள். இல்லத்தில் ஆணும், பெண்ணும் இணைந்து வாழ்ந்தாலும் இல்லத்திற்குரியவளாகப் பெண் மட்டுமே சுட்டப்படுகிறாள். இல்லத்தரசி என்று கூறினாலும் கணவன், மகன், தந்தை முதலியோர்க்குப் பணிச்செய்வதே இவருடைய பணியாக இருக்கின்றது.

    குழந்தைப் பேறு

    சங்க இலக்கியத்தில் பெண், குடும்பத்தில் ஆணைச் சார்ந்தே வாழ வேண்டிய நிலை. எனவே பெண் குடும்பம், வீடு என்று குறுகிய பரப்பினுள் தங்களின் புழக்கத்தை அமைத்து கொள்ள வேண்டிய சூழல். இப்பரப்பினுள் குழந்தையைப் பெறுதல் என்பது முக்கிய செயலாக கருதப்பட்டது. அவ்வாறு குழந்தையைப் பெறும் போது ஆண் குழந்தையைப் பெற்றெடுப்பதே சிறப்பாகக் கருதப்பட்டுள்ளது. பொன் முடியார் என்ற பெண்பாற் புலவர் பெண்களின் கடமைகளாக,

    “ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே

    சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே

    வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே

    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே

    ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கி

    களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே”  – (புறம். 312)

    என்ற பாடல்வழி உணர்த்துகின்றார். இதில் மகனைப் பெற்றெடுத்தல் மட்டும் தாயின் கடமையில்லை. அவனைச் சமுதாயத்திலுள்ள சிக்கல்களை எதிர்கொள்ளுகின்ற வகையில் உடல்வலிமையும், மனவலிமையும் உடையவனாக வளர்த்து, சமுதாயத்திற்கு வழங்குவதும் அவளுடைய கடமையாகும். இப்பாடலின் ஆசிரியர் பெண்பாற் புலவராக இருப்பதால் என் தலைக்கடனே என்கிறார். எனவே மறக்குடியில் பிறந்த பெண்கள் அனைவரும் சமூகக் கடமையுள்ளவர்களாக சித்தரிக்கப்பட்டுள்ளமை காணலாம். இங்கு பெண், ஆண் குழந்தைகளைப் பெற்றுத் தருகின்ற இயந்திரமாக கருதப்பட்டுள்ளமைப் புலனாகிறது.

    ஆண் குழந்தையினைப் பெற்றவர்கள் இவ்வுலகில் புகழோடும்,மறுஜென்மத்தில் வாழ்கின்ற பாக்கியத்தையும் பெறுவார்கள் என்ற நம்பிக்கை சங்க கால மக்களிடம் இருந்துள்ளது. இதனை,

    “இம்மை உலகத்து இசையொடும் விளங்கி

    மறுமை உலகமும் மறுஇன்று எய்துப

    செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்

    சிறுவர்ப் பயந்த செம்மலோர்”

    என்ற பாடல் சான்று பகர்கின்றது. பகைவர்கள் விரும்பும் குற்றமற்றஅழகினையுடைய ஆண் குழந்தைகளை உடையோர், இவ்வுலகத்தே புகழோடும்விளங்குவர். அதோடு மறுமை உலக வாழ்வினையும் குற்றமின்றி எய்துவர் என்று கோசிகன் கண்ணனார் என்ற கவிஞர் பாடியுள்ளார். இதிலிருந்து ஆண் குழந்தைப்பேறு கிடைப்பதைப் பாக்கியமாக பெண்கள் கருதும் அளவிற்கு ஆணாதிக்கச் சமூகம் நம்பிக்கையினை விதைத்துள்ளமையைக் காணமுடிகிறது.

    குழந்தைப்பேறு சில பெண்களுக்கு மறுக்கப்பட்டுள்ளமையினை சங்க இலக்கியங்கள் பாறைச்சாற்றுகின்றன. பரத்தையர் ஒழுக்கம் என்ற பண்பாடு சங்ககாலத்தில் இருந்துள்ளது. இத்தகைய பரத்தையர் சமூக பெண்களுக்குக் குழந்தை பெற்றுத்தரும் தகுதியில்லை என்று ஆணாதிக்கச் சமூகம் வரையரை வகுத்துள்ளது. ஆனால் பரத்தையும் ஒரு பெண் தான் அவளுக்கும் எல்லா விதமான உணர்வுகளும் உண்டு. ஆணாதிக்கச் சமூதாயம் பரத்தையரை தங்களின் தேவைக்கான நுகர்பொருளாகவே, அடிமையாகவே இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய வரைமுறையினை உருவாக்கியுள்ளனர். பரத்தையும் தலைவியைப் போன்று குழந்தையின் மீது தீரா ஆசையுடையவளாக இருந்துள்ளாள். எனவே தலைவனின் புதல்வனைக் கண்ட போது அவனை அணைத்து இள்புறுகிறாள். இதனை,

    “யாவரும் விழையும் பொலந்தொடிப் புதல்வனைத்

    தேர்வழக்கு தெருவில் தமியோற் கண்டே

    கூர்எயிற்று அரிவை குறுகினள்; யாவரும்

    காணுநர் இன்மையின் செத்தனள் பேணிப்

    பொலங்கலம் சுமந்த பூண்தாங்கு இளமுலை

    வருகமாள, என்உயிர் எனப் பெரிது உவந்து”     – (அகம். 16)

    என்ற காகலாசனார் பாடல் மூலம் அறியமுடிகிறது. எல்லோரும் விரும்புகின்ற பொற்றொடி அணிந்த புதல்வனைச், சிறுதேர் ஓட்டி விளையாடுகின்ற தெருவிலே நின்றதைக் கண்ட காதல் பரத்தையானவள், இவன் காண்பதற்குத் தலைவனைப் போலவே இருக்கிறான் என்று போற்றினாள். எவரும் காண்பதற்கு இல்லாமையினால் துணிந்து அவனருகே சென்றாள். மிகுந்த மகிழ்ச்சியுடன் என் உயிரே என்னிடம் வருவாயாக என்று மார்போடு தழுவிக் கொண்டாள். பெண்களுக்கே உரிய தாய்மைப் பேற்றைப் பரத்தையர் சமூக மக்கள் ஆணாதிக்கச் சமூதாயத்தால் இழந்து தவிக்கின்ற ஆழ்மன ஓட்டத்தை இப்பாடல் சுட்டிக்காட்டுகின்றது. ஒரு பெண் தாய்மையடையும் போதுதான் முழுமை பெறுகிறாள். தாய்மையடைவது மறுக்கப்படும் போது பெண்ணிய சிக்கலாக மாறிவிடுகிறது.

    விருந்தோம்பலும் சிக்கலும்

    பழந்தமிழரின் பண்பாட்டில் விருந்தோம்பல் சிறப்பிடம் பெறுகின்றது. இவ்விருந்தோம்பலைப் பெண்களே செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. பெண்களைப் புற வெளியில் இயங்க விடாமல் வீட்டுக்குள்ளே அடக்கி வைப்பதற்கு அவர்களுக்கென்று சில பணிகளை வரையறை செய்தனர். இல்லத்தரசியின் கடமைகளாகத் தொல்காப்பியர்

    “விருந்து புறந்தருதலும் சுற்றம் ஒம்பலும்”  ( தொல்.கற்பு.1098:3)

    என்கிறார்.  சங்ககால  குலமகளிர் தங்களின் வீட்டிற்கு வருகின்ற விருந்தினருக்கு அமிழ்தம் போன்ற உணவினை மகிழ்ந்து வழங்கியுள்ளனர்.

    “அமிழ்து அட்டு ஆனாக் கமழ்குய் அடிசில்

    வருநர்க்கு வரையா வசையில் வாழ்க்கைமகளிர்”  -(புறம் )

    என்ற பாடலின் முலம் மகளிரின் விருந்தோம்புகின்ற இயல்பினை அறியலாம். மேலும் சங்க மகளிர் தன்னுடைய இல்லத்திற்கு வருகின்ற விருந்தினரை மிகவும் முகமலர்ச்சியோடு உபசரித்துள்ளனர். தம்மிடம் உணவுப் பொருட்கள் இல்லாத வேளையில் விதைப்பதற்கு வைத்திருந்த தினையினை உரலில் இட்டு குத்தி உணவுத் தயார் செய்து உபசரித்துள்ளனர். இதனை

    “வரகும் தினையும் உள்ளவை எல்லாம்

    ரவல் மாக்கள் உணக்கொளத் தீர்ந்தெனக்

    குறுத்துமாறு எதிர்ப்பை பெற அமையின்

    குரல்உணங்கு விதைத்தினை உரல்வாய்ப் பெய்து

    சிறிது புறப்பட்டன்றோ விலள்”                  – (புறம். 333 )

    என்ற பாடல் சான்றுரைக்கின்றது. இன்றும் தமிழ்ச் சமூகத்தில் பெண்களிடம் இத்தகைய விருந்தோம்பல் பண்பாடு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

    நிறைவுரை

    ஆதிக்கம் நிலைத்தால்

    சாதிக்க முடியுமா!

    சித்தரிப்புகள் வலையானால்

    வாழத்தான் முடியுமா…!

    காதலும், வீரமும் இரு கண்களெனக் கருதப்பட்ட காலம் சங்ககாலம். ஆணாதிக்க சமூகத்தின் உருவாக்கமே பெண்ணடிமைத்தனத்தின் தொடக்கம் என்று கூறலாம். சங்க காலத்தில் சமுதாய அமைப்பு போற்றதக்கதாய் இருந்தாலும் பெண்களின் நிலை சிக்கலுக்குரியதாகவே இருந்துள்ளது என்பதை சங்கப் பாடல்கள் மூலம் அறிய முடிகிறது.

    துணைநூற் பட்டியல்

    1. செயபால்.இரா ,    அகநானூறு ,  நியூசெஞ்சுரிபுக்ஹவுஸ்(பி)லிட்  அம்பத்தூர்                    சென்னை 98,          முதற் பதிப்பு – 2004
    2. சோமசுந்தரனார், பொ.வே குறுந்தொகை திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிமி, திருநெல்வேலி – 6      சென்னை 1,                    முதற் பதிப்பு – 1965
    3. சோமசுந்தரனார், பொ.வே நற்றிணை,              திருநெல்வேலித் தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் .திருநெல்வேலி – 6, சென்னை, 1   முதற் பதிப்பு – 1961
    4. புலியூர்க் கேசிகன் புறநானூறு பாரி நிலையம்              184, பிராட்வே.; சென்னை – 600 108      முதற் பதிப்பு –      2011
    Share
  • படக்கவிதைப் போட்டி – 191

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (15.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • து.கோ. வைணவக் கல்லூரியின் செந்தமிழ்க் கூடல்

    சென்னை, அரும்பாக்கம், து.கோ. வைணவக் கல்லூரியின் செந்தமிழ்க் கூடலில் 12.12.2018 புதன்கிழமை அன்று, வல்லமை நிறுவனர், முனைவர் அண்ணாகண்ணன் சிறப்புரை ஆற்றுகிறார். வாய்ப்புள்ளோர் வருக.

    Share