Blog

  • படக்கவிதைப் போட்டி 193-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    பொய்ம்மைமிகு புவிவாழ்வு நீங்கி, அலைக்கழிக்கும் பிறவிச்சுழல் நீந்தி, பரிநிர்வாணமெனும் உயர்நிலை அடையக் கண்மூடிக் காத்திருக்கும் புத்தரைக் காண்கின்றோம் படத்தில். இந்த நிழற்படத்துக்குச் சொந்தக்காரர் திருமதி. ராமலக்ஷ்மி. வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து இப்படத்தைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 193க்கு அளித்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். பெண்மணிகள் இருவருக்கும் என் நன்றிகள்!

    சாதி மத பேதமற்ற அன்புநெறியை அகிலத்துக்கு போதித்த உத்தமர் புத்தரைத் தம் கவிதைகளில் எப்படியெல்லாம் நம் கவிஞர்கள் காட்சிப்படுத்தப் போகின்றார்கள் என்பதை அறிய, வல்லமை வாசகர்களாகிய உங்களைப் போலவே, நானும்  ஆவலாயிருக்கிறேன்.

    *****

    ”புத்தனே! ஆளப்பிறந்திருந்தும் ஆட்சியைத் துறந்து ஞானம் தேடியவன் நீ! இங்கோ இலவசம் தந்து ஆட்சியை வசப்படுத்த ஆலாய்ப் பறக்கும் கூட்டமும், உறவுகளைத் தொலைத்து இணையத்தில் இரைதேடும் நாட்டமுமே காணக்கிடைக்கின்றன; இவர்களை மாற்ற என் செய்வது எனத் தலைசாய்த்து யோசிக்கிறாயோ?” என்று வினவுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

    புதிய புத்தன்!

    அத்தனையும் துறந்தால் முக்தி கிட்டும்
    என வாழ்க்கை நெறியை வாழும் முறையை
    புத்தனே நீ சொன்னாய்
    வள்ளுவன் காலம் முதலே பலர்
    பலன் தரும் வழி முறைகளைப் பல சொல்லியும்
    கேட்காத கூட்டம் இங்கே
    ஆளப்பிறந்தவனாய் இருந்தும் அத்தனையும் துறந்து
    ஞானம் தேடி சென்றவன் நீ ……… இங்கே
    ஆட்சிக்கு ஆசைப்பட்டு இலவசங்களை அள்ளிக் கொடுத்து
    சோம்பல் கூட்டமாய் மாற்றி
    ஆட்சியை பிடிக்க முயலும் கூட்டம் இங்கே
    செக்கில் சிக்கிய மாடாய்ப் பலர்
    யாருக்காகவோ ஓடி ஓடி உழைத்து மனஅழுத்தத்தில் விழுந்து
    தங்களைத் தொலைத்துவிட்டு எதையோ தேடுகின்ற கூட்டம் இங்கே
    உறக்கம் துறந்து இணையத்தில் இரவெல்லாம் இரைதேடி
    அலையும் மிருகம் போல் அலைபாயும் மனதோடு
    அலைந்திடும் கூட்டம் இங்கே
    சுலபமாய் அத்தனையும் கிடைத்திட
    போராட்டம் என்பதே பகல் கனவாய் ஆகிட
    விழித்திருந்தும் எழ மறுத்து இறுக்கமாய் மாறிப்போன
    இதயங்கள் நிறைந்த கூட்டம் இங்கே
    போதி மரத்தடியில் அமர்ந்து ஞானம் பெற்றவனாய்
    உன்னை அறிந்த எமக்கு
    இவர்களை மாற்றிட என்ன செய்யலாம் என்று
    தலை சாய்ந்து யோசிக்கும்
    புதிய புத்தனாய் இங்கு நீ வந்தாயோ?!

    *****

    ”அரண்மனை எனும் மாயச்சுவர் கடந்து போதி அடியில் ஞானமடைந்தான்; அன்பெனும் ஆயுதத்தால் மக்களை வசமாக்கினான்; அந்த அன்பின் பேராற்றலே அரண்மனைச் சித்தார்த்தனை அவனிபோற்றும் புத்தனாக்கியது!” என்று ஒரு மனிதன் மகானான அரிய கதையை விளம்புகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    ஒரு மனிதன் மகானான கதை..!!

    வறுமைத் துன்பம் எதுவும் இல்லா..
    வசதிகள் அனைத்துக்கும் குறைவே இல்லா..
    செல்வத்தில் திளைத்த அரச குடும்பத்தில்..
    சித்தார்த்தன் பிறந்து வளர்ந்தானே..!!

    அரண்மனைச் சுவரெனும் மாயத் திரையை..
    அகற்றி எறிந்து அகண்ட உலகைப்..
    பார்க்கும் பொருட்டு காவலைத் தாண்டி..
    புயலெனப் புறப்பட்டான் சித்தார்த்தன்…!!

    மூப்பு பிணி மரணம் அமைதி..
    முதன்முறையாகக் காண நேர்ந்தது..
    துன்பத்தின் காரணம் அறிய எண்ணி..
    துறவறம் பூண்டான் சித்தார்த்தன்..!!

    இன்னல்கள் அனைத்துக்கும் ஆசையே காரணம்..
    இயற்கை அவனுக்கு உணர்த்தியது..
    போதி மரத்தின் அடியில் அமர்ந்து..
    பொழுதுகள் மறக்க தவத்திலாழ்ந்தான்..

    தவத்தின் பயனாய் கிடைத்தது ஞானம்..
    தான் அறிந்த உண்மையை உரைக்க..
    உலக மக்களின் துன்பம் போக்க..
    உயரிய பாதைகள் வகுத்தளித்தான்..!!

    அன்பெனும் ஆயுதத்தைக் கையில் எடுத்தான்..
    அனைவரும் அவன் வசம் ஆயினரே..
    சக்திகள் பலவும் கொண்ட அன்பால்..
    சித்தார்த்தன் ஆனான் புத்தனாக..

    *****

    ”பாரத தேசத்து போதிமர ஞானி ஈழத்தில் நடக்கும் அளவற்ற அவலம் கண்டும் எழாது துயிலுவதேன்?! விழித்தெழுவீர் புத்தரே! மீள்வீர் போதிமரத்துக்கு!” என்று புத்தரை வேண்டுகின்றார் திரு. சி. ஜெயபாரதன்.

    புத்தர் தூங்கி விட்டார்!

    உத்தமராய் உருவான
    பாரத தேசத்தின்
    போதி மரத்து ஞானி
    புத்தர் ஈழத்தில்
    தூங்கிக் கொண்டுள்ளார் !
    கால் நூற்றாண்டு
    நடந்தது
    உள் நாட்டுப் போர் !
    ஈழத்தமிழர்
    சுதந்திரமாய்த் தம் நாட்டில்
    வாழப் போரிட்டு
    இருநூறா யிரம் பேர்
    உயிர் கொடுத்துத் தோற்ற
    உரிமைப் போர் !
    கண் இழந்தோர் எத்தனை !
    கால், கை, சிரம்
    இழந்தோர் எத்தனை !
    தந்தை, கணவன், அண்ணன்
    தம்பி இழந்தோர் எத்தனை !
    மான பங்கமாகி
    முலை அறுபட்ட பெண்டிர்
    எத்தனை !
    விழித்தெழுவீர் புத்தரே !
    போதி மரத்துக்கு
    மீள்வீர் புத்தரே !

    *****

    புத்தரின் வாழ்க்கையை, அவர் மீண்டும் உயிர்த்தெழ வேண்டியதன் அவசியத்தை அருமையாய்த் தம் கவிதைகளில் படைத்தளித்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

     இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதை நம் பார்வைக்கு…        

     உண்மை புத்தன்!

    சுத்தோதன் மாயா பெற்றெடுத்த சித்தார்த்தன்
    சுபயோக வாழ்வை விட்டொழித்த எதார்த்தன்
    சுழல் பிறவிக்கடல் கடந்த சாக்கியன்
    சுமையான ஆசையை சுட்டெரித்த கதிரவன்

    இதழிடை இணைபிரியாப் புன்னகை
    இமைமூடித் திறந்தும் திறவா இறைநிலை
    இன்பத்தின் இனிமை கண்ட உயர்நிலை
    இன்னலுக்கு விடையளித்த பொதுநிலை

    பற்றிப்படர் கொடியில் படுத்துறங்கும்
    பற்றற்றான்- இவனைப் பற்றிவிட்டால்
    பற்றிய பேராசை பேரும் பாவம் எல்லாம்
    பற்றியெரியும் பெரும் தீயில் வீழ்ந்த சருகாய்ப் பட்டுவிடும்

    எண்ணம்,கருத்து, பேச்சு, செயல்
    எளிய வாழ்க்கை, முயற்சி, சித்தம், தவம் என நேரான
    எண்வகைப் பாதை கண்டான் இதில்
    எப்பாதை வழி நீ சென்றாலும் நேர்மை வேண்டும் என்றான்

    முழுமதி நன்னாளில் மூவுலகும் இன்பமுற
    முகிழ்த்த ஞான முதல்வன்- இருள்
    மூழ்கிய இன்னல் சூழ் உலகுக்கு
    முழுமுதல் அருள் போதித்த அன்பின் தலைவன்

    அன்பு விதை தூவிய வித்தகன்
    அமைதிப் பயிர் வளர்த்த போதிச் சத்துவன்
    ஆசை துறந்த சிந்தனைச் சித்தன்
    ஆன்மத்தை வென்ற உண்மை புத்தன்!

    ”அன்பு விதை தூவிய வித்தகனை, அமைதிப் பயிர் வளர்த்த போதிச் சத்துவனை,
    ஆசை துறந்த சிந்தனைச் சித்தனை, ஆன்மத்தை வென்ற புத்தனை, பற்றிப்படர் கொடியில் அறிதுயில்கொண்டிருக்கும் இப்பற்றற்றவனைப் பற்றினால் பேராசையும் பாவமும் நீங்கும்; நற்பண்புகள் ஓங்கும்” என்று புத்தர் குறித்துச் சத்தான கருத்துக்களைத் தன் கவிதையில் பகர்ந்திருக்கும் திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்து மகிழ்கின்றேன்.  

     

     

    Share
  • வருக 2019

    வாழ்வுக்கு அர்த்தம் சேர்க்க
    மனத்துக்கு இனிமை சேர்க்க
    சூழ்வானில் குளிர்ச்சி ஏற
    துள்ளாட்ட மகிழ்ச்சி ஊற
    தாழ்யாவும் விலக, மேவும்
    தடையாவும் உடைய, பாடும்
    ஏழ்வண்ணக் கிளியே, இந்தக்
    கீழ்வானைக் கிழித்து வாராய்!

    வல்லமை அன்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

    ஓவியம்: நித்திலா

    Share
  • முனைவர் இர. மணிமேகலை கவிதைகள்

    1. அபகரிப்பு

    வெயிலற்ற மழைக்காலப் பொழுதுகளில்
    தனித்துத் திரிகிறேன்
    வாயு வெளிகளினூடாகப் பறக்கும் பறவையொன்று
    உணவின் திரளைப் பறித்துக்கொண்டது
    அதன் சகாக்களுடன் விருந்து
    தலைசாய்ந்து இறுமாந்து நோக்கிய அதன் ஆணவம்
    அறிவுஜீவிகளின் அவையில்
    அலைகளின் நுரையெனக் கரைந்தது
    கருந்திராட்சைக் கூந்தலில் சூடிவிட்டார்கள்
    சொற்களின் மகுடத்தை
    தாழம்பூ மணந்து கிடக்கிறது வீடுவரை

    2. சட்டகம்

    சூரிய விரல்கள் அள்ளித் தெளித்திருக்கும்
    வெள்ளிக் காசுகள் தரையில்
    அதில் லயித்தவன் தன் சொற்களைத் தொடுக்கிறான்
    அம்மா உன்னக் கல்யாணம் பண்ணிக்கிறேன்
    நான் அவனை அணைத்துக்கொண்டேன்
    மழலை என்னைச் சுற்றி வளைத்தது
    புள்ளியாகிப் போவதா
    எங்கும் பரவிக் கிடப்பதா
    பறத்தலின் சுகமா
    எது பிம்பம்
    அகப்படவில்லை அன்பின் வடிவு
    உனக்கு என்னைப் போலொரு பெண்
    நீங்களிருவரும் தாமரையும் நாயகனும் அல்ல
    ஆற்றல்களின் இணை என்றேன்
    அவன் ஒரு பெயரைத் தேட ஆரம்பித்திருந்தான்.

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 49

    மகிழ்ச்சியை எங்கே தேடுவது? – க. பாலசுப்ரமணியன்

    “என்னங்க, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிற மாதிரித் தெரியுதே ” என் மனம் என்னைப் பார்த்துக் கேட்டது.

    “அப்படியா… உங்கள் கண்ணுக்கு வேண்டுமானால் நான் மகிழ்ச்சியாக இருப்பதுபோலத் தெரியலாம். எனக்குத் தானே தெரியும் என் துயரம்…” நான் சற்றே முனகினேன்.

    பல நேரங்களில் நமக்கு நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா அல்லது துயரத்தில் இருக்கின்றோமா என்று கூடாது தெரியாமல் இருக்கின்றோம். எது நமக்கு உண்மையான மகிழ்ச்சியைத் தருகின்றது எது துயரத்தைத் தருகின்றது என்றுகூட அறியாமல் தவிக்கின்றோம்.

    “அப்படியில்லீங்க.. நல்ல பசித்த வேளையில் அருமையான சுவையான சாப்பாடு கிடைத்தது, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது” என்கிறார் ஒருவர்.

    “சார். ரொம்ப நாள் கழித்து நான் எதிர்பார்த்த பதவி உயர்வு எனக்கு கிடைத்தது. மகிழ்ச்சியாக உள்ளது.” என்கிறார் இன்னொருவர்.

    “சாதித்துவிட்டேன் சார். என்னிடம் இதைச் செய்ய முடியாது என்று சவால் விட்டவர்கள் முகத்தில் கரிபூசிய மாதிரி நான் சாதித்துவிட்டேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கின்றது. ” இது இன்னொரு நண்பர்.

    இப்படி பல பேர்கள் நடுவில் “அந்தப் பையன் படிக்க ரொம்ப கஷ்டப்படுகின்றான். அவனை சரியாக ஆதரிக்க யாருமில்லை. ஏதோ என்னால் முடிந்தது அவனுக்கு ஒரு வருட கல்லூரிப் படிப்புக்கான பணத்தை நான் கட்டினேன். ரொம்ப மகிழ்வாகவும் நிறைவாகவும் இருக்கிறது” என்று சொல்லும் இன்னொருவர்.

    தங்கள் மகிழ்ச்சிக்கான காரணங்களை பரிமாறிக்கொள்ளும் உலகில் உண்மையான மகிழ்ச்சி எங்கே இருக்கின்றது என்ற கேள்வி நம்முன்னே எப்பொழுதும் கேள்விக்குறியாகவே நிற்கின்றது.

    மகிழ்ச்சியின் பரிமாணங்களை அர்ச்சுனனுக்கு விளக்கும் கண்ணன் பகவத் கீதையில் மகிழ்வின் மூன்று பரிமாணங்களை விளக்குகின்றார். முதலாவதாக புலன்களால் கிடைக்கும் மகிழ்ச்சி. உணவு, தூக்கம், சிற்றின்பம் போன்ற பல அனுபவங்களால் ஒருவருக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. ஐம்பொறிகளின் பசியினால் தூண்டப்பட்டு நாம் செய்யும் பல செயல்களினால் நமக்கு கிடைக்கின்றது. இது சிறிய நேரத்திற்கு மட்டும் கிடைக்கக் கூடியது. இந்த அனுபவங்களால் கிடைக்கும் உணர்வுகள் காலாவதியாகும் பொழுது இதன் தேவைகளும் தாக்கங்களும் மீண்டும் மீண்டும் நம்மை வாட்டிவதைக்கும். இது ஒரு தீராப் பசி.

    இரண்டாவதாக பதவி, புகழ், மரியாதை, மற்றும் நம்முடைய தொழில் சாதனைகளால் நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி. இது முந்தியத்தைக் காட்டிலும் சற்றே உயர்வானது. இருந்தாலும் இவைகளும் காலத்தால் கட்டுப்பட்டவை. தொடர்ந்து புகழும், பதவியும், மரியாதையும் கிடைக்கும்வரை மனம் ஒருவிதமான பெருமையையும் நிறைவையும் அனுபவித்துக்கொண்டிருக்கும். அவை நீங்கியவுடன் அவைகள் இல்லாத தாக்கத்தில் மனம் வேதனையில் துவண்டு விடும். அவை ஒரு மனிதனின் உண்மை நிலையை மறைத்து மனதில் ஒருவித மாயையை உருவாக்கிக்கொண்டிருக்கும்.

    மூன்றாவதாகக் கிடைக்கின்ற மகிழ்ச்சி நம்முடையது என்று நாம் நினைக்கின்றவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பொழுதும், தனித்துவத்தை விட்டு விலகி இந்த உலகிற்கு நம்மை அர்பணித்துக் கொள்ளும்பொழுதும், சேவை மனப்பான்மையுடன் செயல் படும்பொழுதும், தியாக மனப்பான்மையுடன் செயல்படும்பொழுதும் கிடைக்கின்ற ஒரு நிறைவே ஆகும். இதுவே உண்மையான மகிழ்ச்சி.

    எனவே மகிழ்ச்சியின் பல நிலைகளை நாம் புரிந்துகொண்டு செயல்படும் பொழுது நமக்கு அதன் உண்மையான பொருளும் அதனுடன் சேர்ந்த உயரிய உணர்வுகளும் தெளிவாகின்றன.

    “மனித வாழ்க்கையின் அடிப்படை ஆதாரமே மகிழ்ச்சிதான்” என்று பகவான் ரமண மகரிஷி கூறுகின்றார். “மகிழ்ச்சியைத் தேடுவது தவறல்ல. ஆனால் அதை உன்னுள்ளே தேடவேண்டும். வெளியே தேடுவதால் பயனில்லை.” இதே கருத்தை பிரதிபலிக்கும் வண்ணம் பல அறிஞர்கள் “துயரம் நம்மைத் தேடி வருவதில்லை. நாம்தான் துயரத்தைத் தேடித் செல்லுகின்றோம்” என்ற கருத்தை முன்வைக்கின்றனர். “மகிழ்ச்சியே வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளும் பொருளுமாகும்.” என்று பேரறிஞர் அரிஸ்டாட்டில் விளக்குகின்றார்.

    ஆங்கில மொழியின் மிகச் சிறந்த கவிஞராக விளங்கிய மில்டன் தனது பாரடைஸ் லாஸ்ட் என்ற கவித்தொகுப்பில் “மனம் அது இருக்கும் இடத்தில தான் இருக்கின்றது. அதை சொர்கமாகவோ அல்லது நரகமாகவோ ஆக்குவது நமது கையில்தான் இருக்கின்றது.” (“The mind is its own place, and in itself can make a heaven of hell, a hell of heaven..”)என்று எளிதாக எடுத்துரைக்கின்றார்.

    “அதுசரிங்க… இந்த மகிழ்ச்சியை அடைய என்னதான் வழி?” தூரத்திலிருந்து ஒருவரின் கேள்வி எனது காதில் விழத்தான் செய்கின்றது.

    கெளதம புத்தர் இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கூறுகின்றார்.
    “மகிழ்ச்சிக்கு வழியென்று எதுவும் கிடையாது. மகிழ்ச்சியேதான் வழி.”(There is no path to Happiness: Happiness is the path” ) என்ன அருமையான வார்த்தைகள் !

    எப்பொழுது மகிழ்ச்சியை நமது உள்ளுணர்வாக ஏற்றுக்கொள்ளுகின்றோமோ அப்பொழுது நாம் செய்யும் எல்லாச் செயல்களிலும் மகிழ்ச்சியைக் காண முடியும். செய்யும் செயல்களின் பலன்களில் கிடைக்கும் மகிழ்வைவிட அதைச் செய்யும் செயல்பாடுகளிலும் அந்த நோக்கத்திலும் அந்த முயற்சியிலும் நமக்கு அளவற்ற மகிழ்ச்சி கிடைக்கின்றது.

    இதை நன்கு உணர்ந்து வாழும் பொழுது வாழ்க்கையில் ஒவ்வொரு நாளிலும் மகிழ்ச்சியின் முத்திரை பதிந்திருக்கும்.

    இனிய புத்தாண்டில் ஒவ்வொரு நாளும் அனைவரும் மகிழ்வோடும் அமைதியோடும் வாழ இறைவன் அருள்புரியட்டும். நல்வாழ்த்துக்கள். !

    Share
  • தமிழர் உணவுப் பண்பாடு: இலக்கியப் பதிவுகளும் வாசிப்பு அரசியலும்

    கண்ணியம் அ. சதீஷ்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த்துறை
    ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை, அறிவியல் கல்லூரி
    மயிலம் – 604 304

    பண்டைக் காலத்தில் தோன்றிய மூலப் பனுவலுக்குப் பல நூற்றாண்டுகள் கழித்து உரைகள் தோன்றின. உரைகள் தோன்றிய பல நூற்றாண்டுகள் கழித்து நாம் உரைகளின் ஊடாக மூலப் பனுவலை வாசிக்கின்றோம். அவ்வாறு வாசிக்கும் போது உரைகளின் மீதும் மூலப் பனுவல் மீதும் சமகாலக் கோட்பாடுகளின் ஊடான பார்வை தொழிற்படுவது இயல்பே. இப்படியான பின்புலத்தில் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் பதிவாகியுள்ள தமிழர் உணவுப் பொருட்கள் குறித்தும் இலக்கண நூல்கள் கருப்பொருட்களில் ஒன்றாக உணவைக் குறிப்பிட்டு நில அமைப்பின் அடிப்படையில் ஒவ்வொரு திணைக்குமான உணவு வகைகள் எவையெவை என்பதைக் குறிப்பிட்டுள்ளமை குறித்தும், இவற்றின்மீது இடைக்கால மற்றும் பிற்கால இலக்கண ஆசிரியர்களும், உரையாசிரியர்களும் நிகழ்த்திய வாசிப்பு அரசியல் குறித்தும் விவாதிப்பதாக இக்கட்டுரை அமைகிறது.

    பண்டைத் தமிழரின் வாழ்வியல் நிலம் சார்ந்த திணை ஒழுக்கவியல் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டது என்பதைத் தொல்காப்பியமும்  சங்கச் செய்யுட்களும் காட்டி நிற்கின்றன. அகம், புறம் என இரண்டு நிலைகளில் அவர்களின் வாழ்வியல் தொழிற்பட்டிருந்தது.

    அக வாழ்வியல் எழு திணைகளின் (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, கைக்கிளை, பெருந்திணை) அடிப்படையிலும் முப்பொருள்களின் (முதல், கரு, உரி)  அடிப்படையிலும் வகுத்துரைக்கப்பட்டது. முப்பொருட்களில் நிலமும் பொழுதுமாகிய முதற்பொருளும் தெய்வம், உணவு முதலிய கருப்பொருட்களும் அகவாழ்வியலே அன்றிப் புற வாழ்வியலுக்கும் அடிப்படையாக அமைந்தன. ‘வெட்சிதானே குறிஞ்சியது புறனே’  (தொல்.பொருள்.புறத்.நூ.2) முதலிய தொல்காப்பியப் புறத்திணை நூற்பாக்களே இதற்குச்      சான்றாக  அமைவதைக் காணலாம். தொல்காப்பியம்,

    தெய்வம் உணாவே மாமரம் புள்பறை
    செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ
    அவ்வகை பிறவும் கருவென மொழிப       (தொல்.பொருள்.அகத்.நூ.17)

    என்ற நூற்பாவின் வாயிலாகத் தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, இசைக் கருவிகள், தொழில், பண் ஆகியனவற்றைக் கருப்பொருட்களாகக் கூறிப் பிறவும் என்று சுட்டியுள்ளது. இந்நூற்பாவிற்கு உரை எழுதிய இளம்பூரணர்,

    முல்லை:  உணவு  –  வரகும்  முதிரையும்…  குறிஞ்சி:  உணவு  தினையும், ஐவனமும்வெதிர் நெல்லும்… பாலை: உணவு – ஆறலைத்தலான் வரும் பொருள்…மருதம்:உணவு- நெல்…நெய்தல்:        உணவு – உப்புவிலையும் மீன் விலையும் (தொல்.பொருள்.அகத்.நூ.17இளம்.உரை)

    என்று ஒவ்வொரு திணைக்குமான உணவுகளைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார்.

    மற்றோர் உரையாசிரியரான நச்சினார்க்கினியர்,

    முல்லைக்கு உணா, வரகுஞ் சாமையும் முதிரையும்…குறிஞ்சிக்கு உணா, ஐவனநெல்லுந் தினையும் மூங்கிலரிசியும்… மருதத்திற்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும்… நெய்தற்கு உணா,  மீன்  விலையும் உப்பு விலையும்… பாலைக்கு உணா, ஆறலைத்தனவுஞ் சூறைகொண்டனவும் (தொல்.பொருள். அகத்.நூ.17நச்சர்.உரை)

    என்று இளம்பூரணரைப் போன்றே நச்சினார்க்கினியரும் திணை அடிப்படையிலேயே உணவுப் பொருட்களைக் சுட்டிக் காட்டியுள்ளார். இவ்விருவர் உரையிலும் புலால் உணவுப் பொருட்கள் இடம்பெறாமைக் குறிப்பிடத்தக்கதாகும்.

    மேலும் தொல்காப்பியப் பொருளதிகார மரபியலில் நால்வருணத்தார் பற்றிய பகுதியில்  வணிகர்களுக்கு எட்டு வகையான உணவுப்பொருட்களை  உருவாக்கும் தொழில் உரியது என்பதைக் குறிக்கும்,

    மெய்தெரி வகையின் எண்வகை உணவின்
    செய்தியும் வரையார் அப்பா லான                 (தொல்.பொருள்.மர.நூ.79)

    என்ற நூற்பா உள்ளது. இந்நூற்பாவிற்கு இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்க்கினியர் ஆகியோரது உரைகள் உள்ளன. இளம்பூரணர் ‘எண்வகை உணவாவன நெல்லு, காணம், வரகு, இறுங்கு, தினை, சாமை, புல்லு, போதும்பை இவையிற்றை உண்டாக்குகின்ற உழவு தொழிலும் வாணிகர்க்கு வரையா தென்றவாறு (தொல்.பொருள்.மர.நூ.79இளம்.உரை)’   என்றும், பேராசிரியர், ‘எண்வகை யுணவென்பன  பயறும் உழுந்தும்  கடுகும்  கடலையும்  எள்ளும் கொள்ளும் அவரையும் துவரையுமாம் (தொல்.பொருள். மர.நூ.78பேரா.உரை)’ என்றும், நச்சினார்க்கினியர், ‘நெல், காணம் (கேப்பை), வரகு, இறுங்கு, தினை, சாமை, புல், போதுமை (தொல்.பொருள்.மர.நூ.79பேரா.உரை)’ என்றும் உரையெழுதி யுள்ளனர். மூவரில் இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையும் ஒரே வகையான உணவுப் பொருட்களையும் பேராசிரியர் முன்னை இருவர் கூறுவனவற்றிலிருந்து வேறுபட்ட உணவுப் பொருட்களையும் குறிப்பிடுகின்றனர். இந்நூற்பாவிற்கு வடமொழி சார்ந்த விளக்கங்களும் காணப்படுகின்றமையை,

    வடமொழி செவ்வியல் இலக்கியங்கள் தானியவகை, பருப்புவகை, காய்கறி, பழங்கள், மணப்பயிர், பால்தயிர், ஊன், போதை ஏற்றும் குடி வகை என எட்டுவகை உணவுகளைக் குறிப்பிடுகின்றன. தொல்காப்பியர் குறித்த எட்டும் இவையாக  இருக்கலாமோ  என்ற  ஐயமும்  ஆய்வாளரிடத்தே உள்ளது.

    (சங்கத் தமிழரின் உணவு மரபு – விவேகானந்தன் பொன்னையா, தாய்வீடு (கனடா) இதழில் வெளியான கட்டுரை, ஜுலை2014)

    என்ற கருத்துரை காட்டி நிற்கின்றது. உணவு பற்றி இரண்டு நூற்பாக்களில் குறிப்பிடும் தொல்காப்பியம் உணவு என்ற பொதுச் சொல்லை மட்டுமே பயன்படுத்தியுள்ளது. அவ்வுணவு வகைகள் எவையெவை என்பதைத் தொல்காப்பிய உரைகளின் வாயிலாகத்தான் தெரிந்துகொள்ள முடிகிறது. தொல்காப்பிய உரையாசிரியர்கள் குறிப்பிடும் உணவு வகைகளில் புலால் பொருட்கள் இல்லை. ஆனால் சங்க இலக்கியத்தில் புலால் உணவுகள் பற்றிய குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன.

    • சில நூற்றாண்டுகள் இடைவெளி
    • நாடோடி – இனக்குழு – இனக்குழு தலைவன்- குறுநிலமன்னன் -மூவேந்தர்கள் என்ற பல வளர்ச்சிப் படிநிலைகள்,
    • நிலவுடைமைச் சமூகம் சார்ந்த தொகுப்பாக்கங்கள்

    ஆகியவற்றைப் பின்புலமாகக் கொண்டமைந்தவை சங்க இலக்கியங்கள். இச்சங்கச் செய்யுட்களில் தொல்காப்பியக் காலத்திற்கு முந்தைய பாடல்களும் உண்டு. தொல்காப்பியக் காலப் பாடல்களும் உண்டு, தொல்காப்பியக் காலத்திற்குப் பிந்தைய பாடல்களும் உண்டு.

    மூங்கில் அரிசி, தினை, சாமை, வரகு, இறுங்கு முதலிய அரிசி வகைகளும், எள்,  உழுந்து,  கொள்ளு  முதலிய  தானிய  வகைகளும், மா,  பலா,  வாழை,  காரை, துடரி, நாவல் முதலிய கனி வகைகளும், வேளை, வள்ளை, முஞ்ஞை முதலிய கீரை வகைகளும், அணில்வரி கொடுங்காய், நெல்லிக்காய், பாகற்காய் முதலிய காய் வகைகளும், வல்லிக் கிழங்கு முதலிய கிழங்கு வகைகளும், தேன் முதலியனவும் சங்ககால மக்களால் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதைச் சங்கச் செய்யுட்கள் காட்டி நிற்கின்றன. இவை அனைத்தும் நிலத்தில் விளையக்கூடியனவும், இயற்கையாகக் கிடைக்கக் கூடியனவுமாகிய பொருட்களாகும்.

    இயற்கை விளைபொருட்கள் அன்றி இறைச்சிப் பொருட்களையும் சங்ககால மக்கள் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தியுள்ளனர் என்பதையும் சங்கச் செய்யுட்களின் வழி தெரிந்துகொள்ள முடிகிறது. பல்வேறு புலால் உணவுப் பொருட்களையும், அவற்றைக் கொண்டு வந்த முறைகளும், அவற்றை உணவாகச் செய்த முறைகளும், அவற்றை   உண்ட முறைகளும் விரிவான நிலையில் சங்க இலக்கியப் பாடல்கள் பலவற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    புலால் உணவுகள் சங்க இலக்கியங்களில் ஊன், புலால், புலவு, கொழுங்குறை (பொருநர்.105), பைந்தடி (புறம்.14 12), பைந்துணி (புறம்.44 17), உணங்கல் போன்ற பல்வேறு பெயர்களில் சுட்டப் பெற்றுள்ளன. விலங்குகளும் பறவைகளும் மீன்களும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

    வேட்டையாடுதலும் மீன்பிடித்தலும் பண்டைத் தமிழரின் முக்கியத் தொழில்களாக இருந்தன. சங்க இலக்கியத்தில் உணவுக்காக வேட்டையாடியமை குறித்தும், மீன் பிடித்தமை குறித்தும் மிகுதியான அளவில் பதிவுகள் காணக் கிடைகின்றன.

    உடும்பு கொளீஇ வரிநுணல் அகழ்ந்து
    நெடுங்கோட்டுப் புற்றத்து ஈயல்
    கொண்டி எல்லுமுயல் எறிந்த வேட்டுவன்                (நற்.59)

    என்னும் நற்றிணைப் பாடலடிகளில் உடும்பு, நுணல், ஈயல், முயல் ஆகியவற்றை வேட்டையாடி வரும் வேட்டுவனின் செயல் பதிவு செய்யப்பட்டுள்ளது. விலங்குகளில் ஆட்டிறைச்சி (பொருநர்.103-140, புறம்.366:18-20, புறம்.261:8-9), ஆமான் என்றழைக்கபடும் காட்டுப்பசு இறைச்சி (சிறுபாண்.175-177), எலி இறைச்சி (நற்.83:4-9), பன்றி இறைச்சி (நற்.336:1-6, புறம்.374:8-10), முயல் இறைச்சி (புறம்.319:6-9), முளவு மா என்னும் முள்ளுடைய பன்றி இறைச்சி (ஐங்.364:1-2, புறம்.177:13-15, மலை.175-177), யானை இறைச்சி (அகம்.106:12, அகம்.169:3-7), மான் (இரலை, உழா, கடமா, நவ்வி, மரையான்) இறைச்சி (புறம்.150:5-15,  புறம்.152:25-27,  மலை.175-185,  அகம்.107:5-10)  ஆமை  (பட்.64, புறம்.42, புறம்.176), உடும்பு இறைச்சி (புறம்.325, புறம்.326, பெரும்பாண்.131-133, மலை.175-177) போன்றன உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பெற்றுள்ளன.

    பறவைகளுள் அளகின் வாட்டு (கோழி) இறைச்சி (பெரும்பாண்.255-256), இதல் (கௌதாரி) இறைச்சி (புறம்.319:6-9), குறும்பூழ் (காடை) இறைச்சி (குறுந்.389:1-2), புறா இறைச்சி (புறம்.319:6-9) போன்றனவும், மீன் வகைகளுள் அயிலை மீன் (அகம்.70:2-4), ஆரல் மீன் (புறம்.212:3-4), இறால் மீன் (குறுந்.320:1-4, பட்.63-64), கெடிற்று மீன் (புறம்.384:8-9), சுறா மீன் (பட்.86-87, அகம்.10:10-12, நற்.103:9-11), வரால் மீன் (நற்.60: 3-6, அகம்.216:2-4), வாளை மீன் (புறம்.61:4-6, அகம்.320:1-4)போன்றனவும் உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப் பெற்றுள்ளன.

    மேலும் நண்டு (அளவன், கள்வன், ஞெண்டு) (சிறுபாண்.194-195), ஈயல் (அகம்.394) போன்றவற்றையும் சங்ககால மக்கள் உணவாகப் பயன்படுத்தியுள்ளனர். இறைச்சியையும் மீன் வகைகளையும் பதப்படுத்தி வைத்திருந்து உணவாக உண்ட நிலையையும் (அகம்.20:2,   பெரும்பாண்.100-104)   சங்கச்   செய்யுட்களில்   காணமுடிகிறது.

    புலால் உணவுகளைப் பச்சையாகவும், சுட்டும், வேகவைத்தும், சோறு சேர்த்தும், குழம்பு  வைத்தும்,  புலவு  செய்தும்  எனப்  பல  நிலைகளில்  உண்டனர் என்பதற்கான குறிப்புகள் சங்கச் செய்யுட்களில் காணப்படுகின்றன. படிநிலை சார்ந்த நாகரீக வளர்ச்சியின் பின்புலத்தில் இவற்றைப் புரிந்துகொள்ளுதல் வேண்டும். சோற்றோடு ஆட்டின் இறைச்சியைச் சேர்த்து உண்ட முறையை,

    எயிற்றியர் அட்ட இன்புளி வெஞ்சோறு
    தேமா மேனிச் சில்விளை யாயமொடு
    ஆமான் சூட்டின் அமைவரப் பெறுகுவர்            (சிறுபாண்.113)

    என்னும் பாடல் அடிகளாலும், வெண்சோறோடு நண்டு கலந்து உண்ட செய்தியை,

    அவைப்புமாண் அரிசி அமலை வெண்சோறு
    கவைத்தாள் அலவன் கலவையோடு பெறுகுவீர் (சிறுபாண்.194-195)

    என்னும் பாடல் அடிகளாலும், ஈயலை வைத்துப் புளிக்குழம்பு செய்த நிலையை,

    ஈயல்பெய் தட்ட இன்புளி வெஞ்சோறு             (புறம்.119 3)

    என்ற பாடலடியாலும் அறிந்துகொள்ள முடிகிறது.

    நீண்ட  காலப்  பரப்பையும்,  வெவ்வேறு  நிலவியல்  அமைப்பையும்,  நாகரீக வளர்ச்சிசார் படிநிலைகளையும் தன்னகத்தே கொண்டனவாகக் காணப்படும் சங்கச் செய்யுட்கள்,  அனைத்து  நிலப்  பரப்புகளிலும்  நாடோடி  முதல் மூவேந்தர் வரையிலான அனைத்து வகை மக்களும் இயற்கை உணவுப் பொருட்களே அன்றி இறைச்சிப் பொருட்களையும் உணவாக உண்டனர் என்பதைக் காட்டி நிற்கின்றன. ஐவகை நிலங்களுள்,

    • குறிஞ்சி நிலத்தில் மூங்கிலரிசிச் சோறு, உடும்பின் இறைச்சி, கடமான் இறைச்சி, பன்றியின் இறைச்சி,  நெற்கள்,  பலாக்  கொட்டை, மோர், நெய், தேன், கிழங்கு வகைகள் ஆகியனவும்,
    • முல்லை நிலத்தில் தினையரிசிச் சோறு,  ஆட்டு இறைச்சி, மான் இறைச்சி, முயல் இறைச்சி, வான்கோழி இறைச்சி, பால், தயிர், மோர், நெய், கும்மாயம், புளியங்கூழ் ஆகியனவும்,
    • மருத நிலத்தில் செந்நெல் சோறு, வெண்ணெல்  சோறு,  கோழி  இறைச்சி, ஆமை இறைச்சி, மான் இறைச்சி, பலாப்பழம், இளநீர், வாழைப்பழம், நுங்கு, வள்ளிக்கிழங்கு ஆகியனவும்,
    • நெய்தல் நிலத்தில் கொழியலரிக் கூழ், மீனுணவு, பன்றி இறைச்சி, புளித்த கள், பனங்கள், நெற்கள் ஆகினயவும்,
    • பாலை நிலத்தில் வெண்சோறு, நிணச்சோறு, புல்லரிசிச்சோறு, பன்றியின் இறைச்சி, காட்டுமான் இறைச்சி, உடும்பின் பொரியல் ஆகியனவும்,

    உணவுப் பொருட்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றுள் இயற்கை உணவுப் பொருட்களே அன்றிப் புலால் உணவுப் பொருள்களும் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். ஒவ்வொரு நிலத்திலும் எவையெவை உணவுப்பொருட்களாகப் பயன்படுத்தப்பெற்றன என்பதைத் தே.நமசிவாயம் தமது நூலில் விரிவாகப் பட்டியலிட்டுள்ளமையும் (தமிழர் உணவு, 2003:22) இங்குக் குறிப்பிடத்தக்கதாகும்.

    சங்க இலக்கியங்களில் பதிவாகியுள்ள உணவு வகைகள் குறித்தும் அவை சமைத்த முறைமைகள் குறித்தும், சமையல் கருவிகள் குறித்தும், உணவு உண்ட முறைமைகள் குறித்தும் பக்தவத்சல பாரதி (தமிழர் உணவு), சு. அரங்கநாதன் (முல்லை நில உணவு முறைகள்), மா.இராசமாணிக்கனார் (சங்க காலத்து உணவும் உடையும்), அ.தட்சிணாமூர்த்தி (தமிழர் நாகரிகமும் பண்பாடும் – பண்டைய தமிழரின் உணவு), சி.சேதுராமன் (பண்டைத் தமிழர் உணவுகள்), சே. நமசிவாயம் (தமிழர் உணவு), பி.சரசு (தமிழ் இலக்கியத்தில் உணவியல்) ஆகியோர் விரிவான அளவில் தத்தம் நூல்களில் பதிவு செய்துள்ளனர். இவர்கள் தமது நூல்களில் சங்க இலக்கியங்களில் காணலாகும் புலால் உணவுகள் குறித்தும் விரிவான   நிலையில்   பதிவு செய்துள்ளனர்  என்பது குறிப்பிடத்தக்கது.

    இளம்பூரணர், பேராசிரியர், நச்சினார்கினியர் ஆகிய தொல்காப்பிய உரையாசிரியர்கள் சங்கச் செய்யுட்கள் மீதான தங்களின் ஆழ்ந்த வாசிப்பின் ஊடாகப் பல்வேறு சங்கப் பாடல்களை   உரைகளில்   மேற்கோள்களாகக்   காட்டியுள்ளனர்.

    தொல்காப்பியர் பொருளதிகாரத்தில் இரண்டு இடங்களில் உணவைப் பற்றிப் பொதுமையில் சுட்டிச்செல்ல அவற்றை விவரிப்பவை இவர்களின் உரைகளே. மரபியலில் வரும் நூற்பாவிற்கு இம்மூவர் உரைகளும் உள்ளன. அகத்திணையியலில் வரும் கருப்பொருட்கள் குறித்த நூற்பாவிற்குப் பேராசிரியர் உரை கிடைக்கவில்லை. இரண்டு நூற்பாக்களுக்கான உரைகளிலும் புலால் உணவுப் பொருட்கள் பற்றிய எவ்வித குறிப்பும் காணப்படவில்லை. சங்கச் செய்யுட்களில் இருவகை உணவுகளும் பரவலாகக் காணப்பட அவற்றில் ஆழ்ந்த புலமையுடைய உரையாசிரியர்கள் உணவு குறித்த  நூற்பாக்களுக்கான  உரைப்பகுதியில் இயற்கையான விளைபொருள் சார்ந்த உணவுப் பொருட்களையே பட்டியலிடுகின்றனர்.

    மரபியல் நூற்பாவிற்கு இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் ஒரே வகையான உணவுப் பொருட்களையே சுட்டியுள்ளனர். பேராசிரியர் இவ்விருவர் கூறும் பொருட்களினும் வேறான உணவுப் பொருட்களைச் சுட்டிச் செல்கிறார். இளம்பூரணரும் நச்சினார்க்கினியரும் குறிப்பிடும் கோதுமை என்னும் உணவுப் பொருள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில்  காணப்படாமையும், பேராசிரியர் வேறுபட்டு உரை எழுதியுள்ளமையும் தனித்த விவாதத்திற்கு உரியனவாகும்.

    தொல்காப்பியம் அன்பின் ஐந்திணைக்கும் உரிய கருப்பொருட்களுள் ஒன்றாகச் சுட்டிய  உணவுப் பொருட்கள்  குறிஞ்சி  முதலாய  ஒவ்வொரு  திணைக்கும் எவையெவை என்பதை இளம்பூரணர் உரையும் நச்சினார்க்கினியர் உரையுமே விவரிக்கின்றன. நிலத்தில் விளையும் தானியங்கள், பருப்பு வகைகள், கிழங்கு வகைகள், இயல்பாகக் கிடைக்கும் தேன், பண்டமாற்றால் வரும் பொருட்கள், திருடுவதால் வரும் பொருள்கள் ஆகியன உணவுப் பொருட்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. புலால் உணவுகள் பற்றிய குறிப்பு இருவர் உரைகளிலும் இல்லை. மீன் விற்று அதன் மூலம் வரும் பொருளை  உணவுப் பொருளாகக் குறிப்பிடும் உரையாசிரியர்கள் மீனை  உணவுப்  பொருளாகக்  குறிப்பிடவில்லை.

    உரையாசிரியர்களின் பார்வையில் தொல்காப்பியத்தை வாசிக்கின்ற பொழுது தொல்காப்பியம் குறிப்பிடும் உணவு வகைகளில் புலால் உணவுப் பொருட்கள் இல்லை என்றே பொருள்கொள்ள வேண்டியுள்ளது. ஆனால் தொல்காப்பிய இலக்கணத்திற்கு  இலக்கியமாகவும் அதன் காலத்தோடு ஒத்தியலும் இலக்கியமாகவும் விளங்கும் சங்க   இலக்கியத்தில் புலால் உணவுகள் பற்றிய குறிப்புகள் நிரம்பக் காணக் கிடைக்கின்றன.

    தொல்காப்பிய அகப்புற வாழ்வியல் சார்ந்த இலக்கண வரையறைகளுக்குச் சங்கச் செய்யுட்களை அடிப்படை ஆதாரங்களாகக் கொண்டு தங்களின் உரையை எழுதிச் செல்லும் உரையாசிரியர்கள் உணவுகள் பற்றிய வரையறைகளில்  சங்கச் செய்யுட்களில் பரவலாகக்   காணப்படும்  புலால் உணவுகளைக் குறிப்பிடாமல் சென்றதற்கான காரணங்களாக,

    • இயற்கை உணவுப் பொருட்களை மட்டுமே எடுத்துக்காட்டல்
    • சேமித்து வைத்துப் பயன்படுத்தும் பொருட்களை மட்டுமே எடுத்துக்காட்டல்

    போன்றனவற்றைக் கூறி மிக எளிமையாக அவ்வுரைகளைக் கடந்து போக முடியாது. இளம்பூரணரும்  நச்சினார்க்கினியரும்  இவ்வாறு  உரையெழுதியதற்கான பின்புலத்தை,

    • தொல்காப்பிய மூல நூலுக்கும் உரையாசிரியர்களின் காலத்திற்குமான கால இடைவெளி
    • அக்கால இடைவெளியில் நிகழ்ந்த – தோற்றம் பெற்ற சமூக – அரசியல் – சமய மாற்றங்கள்
    • இடைப்பட்ட காலப்பரப்பில் தோன்றிய இலக்கண நூல்களின் கருத்தாக்கங்கள்
    • உரையாசிரியர்களின் சமகால சமூக – சமயச் சார்பு

    ஆகியனவற்றின் அடிப்படையில் ஆராயப்பட வேண்டும். அவ்வகையில் தொல்காப்பிய – சங்க இலக்கியக் காலத்தை அடுத்ததான சங்க மருவிய காலத்தில் எழுச்சி பெற்ற சமண, பௌத்த சமய எழுச்சி, குறிப்பாகச் சமண சமய எழுச்சி, தமிழ்ச் சூழலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியது. புலால் உண்ணுதலும் கள்குடித்தலும் குற்றங்களாக வரையறை பெற்றன. உயிர்க் கொலை கண்டிக்கப்பட்டது. இவற்றை அடிப்படையாகக் கொண்ட அற இலக்கியங்கள் உருப்பெற்றன. சங்க கால அக வாழ்வியல் மாற்றம் பெற்றது. ஐந்தாம் நூற்றாண்டளவில் எழுச்சி பெற்ற வைதீகச் சமயங்களான சைவமும் வைணமும் சமண, பௌத்த சமயங்களை எதிர்த்தன. இருப்பினும் புலால் உண்ணாமையை இச்சமயங்களும் ஏற்றன. சைவத்தில் புலால் உணவு ஏற்றுக்கொள்ளப்பெற்றதற்கான குறிப்புகள் (கண்ணப்ப நாயனார் வரலாறு முதலியன) காணப்படினும் அவை விதி விலக்குகள் போன்றவை. அதன் தொடர்ச்சி இன்றுவரை சிறு தெய்வ வழிபாட்டில் தொடர்வதைக் காணலாம்.

    உயிர்கொலை  மறுப்பு,  புலால்  உண்ணாமை  போன்றவற்றை  வலியுறுத்திப் பேசிய அவைதீக, வைதீக சமய இலக்கியங்களில் ‘யானை வேட்டுவன் யானையோடு வருதலும் உண்டு, குறும்பூழ் (காடை) வேட்டுவன் வெறுங்கையோடு வருதலும் உண்டு’ என்பன போன்ற கருத்துகள் காணப்படுகின்றன. இவை வேட்டைத் தொழில் குறித்த செயல்பாடுகளை அறக் கருத்தாக்கங்களை உருவாக்க எடுத்துக் கொண்டமையைக் காட்டுவனவாக அமைந்துள்ளன.

    தொல்காப்பிய மூல நூலுக்கும் உரையாசிரியர்களின் காலத்திற்கும் இடையில் அகப்பொருள் தொடர்பாகத் தமிழில் இறையனார் அகப்பொருள், தமிழ்நெறி விளக்கம், நம்பியகப் பொருள் போன்ற நூல்கள் தோன்றின. இறையனார் அகப்பொருள் மூல நூலில்  கருப்பொருட்களின்  பட்டியல்  இல்லை.  அதன்  பிறகு தோன்றிய   தமிழ்நெறி  விளக்கம்   என்னும் நூலில் கருப் பொருட்களின் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதோடு ஒவ்வொரு திணைக்குமான பொருட்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. உணவு பற்றி,

    தினையே தருப்பண முதிரை செந்நெல்
    விலைகோ ளினையன மேவிய வுணவே          (தமிழ்நெறி.10)

    என்ற  நூற்பா  காணப்படுகிறது. இதில்  ஒவ்வொரு திணைக்குமான உணவுப் பொருட்கள் வரிசையாகக் கூறப்பட்டுள்ளன. இந்நூலுக்குப் பிறகு இறையனார் அகப்பொருள் நூலுக்குத் தோன்றிய நக்கீரர் உரையில்,

    குறிஞ்சிக்கு உணா, ஐவன நெல்லும் தினையும்… நெய்தற்கு உணா மீன் விலையும் உப்பு விலையும்… பாலைக்கு உணா ஆறலைத்தனவும் ஊரெறிந்தனவும்… முல்லைக்கு உணா வரகும் சாமையும்… மருதத்துக்கு உணா, செந்நெல்லும் வெண்ணெல்லும் (இறையனார் களவியல் உரை, ப.22-24)

    என ஒவ்வொரு திணைக்குமான உணவுப் பொருட்கள் குறிப்பிடப்பெற்றுள்ளன. இறையனார் களவியல் என்னும் நூலும் அந்நூலுக்கான உரையும் சைவ சமயம் சார்ந்தவை. இறையனார் களவியல் உரைக்குப் பிறகு நம்பியகப்பொருள் தோன்றியது இந்நூல் ஒவ்வொரு திணைக்குமான கருப்பொருட்களை விரிவான நிலையில் நூற்பாக்களாக வரையறுத்துக் காட்டியது.

     குறிஞ்சி    –  வேரல் ஐவனந் தோரை ஏனல் (நூ.20)

     பாலை      –  வழங்குகதிக் கொண்டன செழும்பதிக் கவர்ந்தன (நூ.21)

     முல்லை    –  தாற்றுக்கதிர் வரகொடு சாமை முதிரை (நூ.22)

     மருதம்    –  செந்நெல் வெண்ணெல் அந்நெல் அரிக்கிணை (நூ.23)

     நெய்தல்    –   புலவு மீனுப்பு விலைகளிற் பெற்றன (நூ.24)

    என்பன அந்நூலில் உள்ள ஒவ்வொரு திணைக்குமான கருப்பொருள் பற்றிய நூற்பாக்களுள் இடம்பெற்ற உணவு குறித்த அடிகளாகும். இந்நூல் வைணவச் சமயச் சார்பு கொண்டது.

    மேற்கண்ட வைதீக, அவைதீக சமயங்களின் கொள்கைப் பரலாக்கமும், தொல்காப்பியத்திற்குப் பிந்தைய தம் காலத்திற்கு முந்தைய இலக்கண நூல்களில் உள்ள வரையறைகளும் இளம்பூரணருக்குப் பின்புலமாக அமைந்தன எனலாம். இளம்பூரணர் காலத்திற்குப் பிந்தைய காலக்கட்டத்தில் உரையெழுதிய நச்சினார்க்கினியருக்கு இளம்பூரணர் உரையும் கூடுதலான பின்புலமாக அமைந்தது. இவற்றோடு உரையாசிரியர்கள் இருவரின் சம காலத்திய சமயப் பின்னணியும் கவனத்தில் கொள்ள வேண்டும். இளம்பூரணருக்குச் சமணச் சமயப் பின்னணியும் நச்சினார்க்கினியருக்கு வைதீகச் சமயப் பின்னணியும் இருந்தன. வீரசோழியம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம் முதலிய ஐந்திலக்கண நூல்களும், மாறன் அகப்பொருள் என்னும் நூலும் முந்தைய நூல்கள், உரைகளின் கருத்துகளையே முன்னோர் மொழிப்பொருளாக அப்படியே ஏற்றுக் கொண்டன.

    கால இடைவெளி, நிறுவனமயமாக்கப் பட்ட சமயப் பின்புலம், முந்தைய இலக்கண ஆக்கங்கள், உரையாசிரியர்களின் சமகால அரசியல், சமய – சமூகப் பின்னணி போன்றவற்றின் அடிப்படையிலேயே தொல்காப்பிய உரையாசிரியர்கள் உணவு வகைகளில்  புலால்  உணவுப்  பொருட்களைச்  சுட்டாமல்  விடுத்தமையைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    துணைநூற்பட்டியல்

    1. கோவிந்தராஜ முதலியார்  கா.ர.  (பதிப்பு),  களவியல்  என்னும்  இறையனார் அகப்பொருள் மூலமும் நக்கீரனார் உரையும், பவானந்தர் கழகம், சென்னை, 1939
    2. தட்சிணாமூர்த்தி அ., தமிழர் நாகரிகமும் பண்பாடும், ஐந்திணைப் பதிப்பகம், சென்னை, 2011
    3. தொல்காப்பியர், தொல்காப்பியம் பொருளதிகாரம் உரைவளம், அகத்திணையியல், ஆ.சிவலிங்கனார் பதிப்பு,உலகத்தமிழாராய்ச்சிநிறுவனம், சென்னை, 1991
    4. நமசிவாயம் சே., தமிழர்உணவு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,  சென்னை, 1981
    5. நாற்கவிராச நம்பி,  அகப்பொருள்  விளக்கம்  மூலமும்  உரையும்,  வித்துவான் சிவாநந்தையர் பதிப்பு, சோதிட பிரகாச யந்திரசாலை, 1097
    6. பக்தவச்சலபாரதி,பண்பாட்டுமானிடவியல், மணிவாசகர்  பதிப்பகம், கோவை, 1990
    7. வையாபுரிப்பிள்ளை ச. (பதிப்பு), சங்க இலக்கியம் பாட்டும் தொகையும், பாரி நிலையம், சென்னை, 1940.
    Share
  • வாத்தியார்

    பேராசிரியர் ம. பரிமளா தேவி

    ஒப்பதவாடி ஒன்றியத்துல இருக்குற நடுநிலைப்பள்ளிக்கு டிரான்ஸ்சர் வாங்கிட்டு வரும்போது அவ்ளோ சந்தோசம் ஜானகி டீச்சருக்கு. எவ்ளோ பெரிய வேலையிலிருந்தாலும் உள்ளூருல வேலைப்பாத்தா மரியாதை இல்லைன்னு சொல்வாங்க.  ஆனா பல வருச கனவு தான் படித்த பள்ளியில வேலைப்பாக்கனும்னு. அந்த ஆசை இப்போதான் நிறைவேறியது.

    வண்டியில போனா பத்து நிமிச்சத்துல போயிரலாம். அப்படி போகாம நடந்து போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. சின்ன வயசுல தான் நடந்து போகும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கும். வழியில போகும் போது பூத்திருக்குற ஊமத்தப் பூ குவளைப்பூ எல்லாம் பறிச்சு கையில வைச்சுக்கிட்டு போயிருக்கேன்.  முதல் முதல்ல பள்ளிக்கூடம் போனபோது என்னோட பிறந்த தேதியை வாத்தியார் கேட்டாங்க.

    ஏனோ அம்மாவுக்கு ஞாபகத்துல இல்லை. ஏன் எழுதி வைக்கலையான்னு கேட்டத்துக்கு எரவானத்துல எழுதி வைச்சிருந்தேன் எங்கயோ காணாமப் போயிடுச்சு என்றாள். ஜப்பசி மாசம் நல்ல மழைபெய்ஞ்சுட்டு இருந்துச்சு. அப்போ தான் இவ பொறந்தா சார்ன்னு அம்மா சொன்னாங்க. வாத்தியார் சிரிச்சிட்டு அவரா நவம்பர் பதினாலுன்னு எழுதிட்டாரு. அது போலத்தான் என் வீட்ல இருந்து படிக்கப்போன எல்லாத்துக்கும் வாத்தியார் எழுதினதுதான் பிறந்த தேதி. ஓடை வழியாத்தான் பள்ளிக்கூடத்துக்கு போகனும். மழைக்காலங்களில் நிறைய ஊமத்தப் பூ பூத்திருக்கும்.

    வெள்ளையா நிமிர்ந்து பீப்பீ போல அழகா இருக்கும். அத பார்த்துட்டே போனா அவ்ளோ சந்தோசமா இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு சீக்கரமா போய் பசங்க எல்லாம் கிரவுண்டல வாத்தியார் வர வரைக்கும் விளையாடிட்டு இருப்போம். விளையாட்டு ஆக்கபூர்வமாக எல்லாம் இருக்காது. ஆலமர விழுதை பிடிச்சுத் தொங்கிட்டு இருக்குறது. பச்சை குதிர தாண்டுறது. பட்டாட்டம், கில்லி ஆடுறது, கோலி, பம்பரம்னு விளையாடிட்டு இருப்போம். வாத்தியார் வந்ததும் முதல்ல வேலைக் குடுப்பாரு. எல்லாரும் வாங்க.

     

    கிரவுண்டல இருக்குற குப்பையை எடுக்கன்னு சொல்வாரு. பொம்பள பிள்ளைகள வகுப்பறையை கூட்ட சொல்வாங்க. ஆயம்மா இல்லாத பள்ளிக்கூடம். எங்க வேலைகளை நாங்களே பாத்துகுவோம். மஞ்சுமில் போத்திய கூரையிலும் மரத்தடியிலும் படிச்சோம். இப்போ பள்ளிக்கூடத்துக்கு கட்டிடம் சுற்றுச்சுவர் எல்லாம் வந்துருச்சு. பள்ளிக்டம் எவ்ளோ மாறிபோச்சு.

    டீச்சா் …சத்தீஷ் என்ன கிள்ளிட்டான்

    பாலு பொய் சொல்றான் டீச்சா்.

    சத்தீஷ் பொய் சொல்றான் டீச்சா்.

    டேய்.. வாங்க ரெண்டு பேரும். போடுங்க தோப்புக்கரணம் ஐம்பது வரைக்கும்.

    இனி இப்படி செய்யமாட்டோம்னு சொல்லிட்டே போடுங்க. ஆறாம் வகுப்பில் நடந்துக்கொண்டிருந்த கூத்தைப் பாத்துட்டே ஏழாம் வகுப்புக்குச் சென்றாள்.

    குட்மானிங் டிச்சா்….

    குட்மானிங்.

    எல்லாரும் அட்டனன்ஸ் சொல்லுங்க.. என்று வருகைப் பதிவு நோட்டை எடுத்து ஒவ்வொரு பெயர்களாக அழைத்தாள்.

    கார்த்திகா.

    உள்ளேன் டீச்சா்.

    தனுஷ்.

    உள்ளேன் டீச்சர்.

    திருப்பதி.

    உள்ளேன் டீச்சா்.

    ராஜா.. ராஜா…

    உள்ளேன் டீச்சா்.

    “அட்டனென்ஸ் சொல்லாம என்ன பண்ணிட்டு இருக்க.. டீச்சா் இவன் என்ன கருப்பான்னு கூப்பிடுறான் டீச்சா்”. “திரு இங்க வா இனி யாரையும் இப்படி கூப்பிடக் கூடாது பேர் சொல்லித்தான் கூப்பிடணும் சரியா”

    ராஜா “டீச்சர் நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதிங்க இளைய தளபதி விஜய் கருப்புத்தான் எனக்கு ஒன்னும் பிராப்பளம் இல்ல” என்றான். எனக்கு சிரிப்பா வந்தது. சினிமா சின்னக்குழந்தைக்கு எப்படி போய்ச் சோ்ந்திருக்குன்னு. இந்தக் காலத்து பசங்க ரொம்ப மாறிட்டாங்கன்னு தெரியுது. அப்போ மூக்கின்னு கூப்பிட்டத்துக்காக மாசக்கணக்கில பேசாம இருந்தது ஞாபத்துக்கு வந்தது. கருப்பி, முட்டக்கண்ணி, குள்ளச்சி, ஓட்டப்பள்ளன், சின்னக்குஞ்சி, மூத்திரவண்டி இப்படி எல்லாம் பேர் சொல்லி கூப்பிட்டு இருக்கோம்.

    இப்ப போல எல்லாம் மாணவர்கள் தப்பு பண்ணா கண்டிக்காம தண்டனை குடுக்காம அப்போ இருந்ததில்லை. சமூக அறிவியல் வாத்தியாருன்னா வகுப்புலே ஒன்னுக்கு போயிருவோம் அவ்ளோ பயம். வகுப்புல சாக்பீஸ் எடுத்து சின்ன வட்டத்தை போட்டுவிடுவார். அந்த வட்டத்துகுள்ள நிக்க சொல்வார். யார் வீட்டுப்பாடத்தை செய்யலையோ அவங்கள வட்டத்துக்குள்ள நிக்கவைச்சு அவங்க கையை தன் கையில பிடிச்சிட்டு சூத்தாம்பட்டையில அடிப்பார். வட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது.  அப்படி அடிக்கும்போது வெளியே வந்துட்டா இன்னும் பலமாக விழும். அவர் வகுப்புல மட்டும் மூணு நாலு மூங்கில் குச்சி உடையும்.  கிளாஸ் லீடா் வீட்ல இருந்து வரும்போது தினமும் மூங்கில் குச்சி கொண்டு வரணும். இல்லைன்னா முதல்ல அவனுக்கு விழும்.  எல்லா டீச்சரும் கையிலத்தான் அடிப்பாங்க. கணக்கு டீச்சர் மேரி மட்டும் ஸ்கேல் வைச்சு கையைத் திருப்ப சொல்லி முட்டில அடிப்பாங்க. இரண்டு மூணு நாளைக்கு கையைத் தூக்கி எந்த வேலையும் செய்ய முடியாது.

    வாத்தியார் எவ்ளோ அடிச்சாலும் ஒருத்தங்களும் வீட்டுக்கு போய் சொல்ல மாட்டோம். பள்ளிக்கூடத்துக்கு பின்னாடி இருந்த டோரியா பூந்தோட்டத்துல எல்லாரும் போய் கூட்டம் போட்டு வாத்தியார் தப்பு பண்ணா நம்மள அடிக்கிறாரு. மத்தப்படி நம்மள எவ்ளோ நல்லா பாத்துகிறாரு. தினமும் மத்தியானம் என்ன நடக்குது தெரியாதா உனக்கு. வகுப்புல உக்காந்து சாப்பிடற எல்லா வாத்தியாரோட டிபன் பாக்சையும் பிள்ளைகளை கழுவச் சொல்றாங்க. அவங்க பையை தூக்கிட்டு போறது. அவங்க வீட்டுக்கு போய் வேலை செய்ய சொல்றது, இத எல்லாம் செஞ்சிட்டு இருந்தோம். அப்ப அவர்தான மத்த டீச்சருங்கிட்ட நமக்காக சண்டைப் போட்டாரு.  மாணவர்கள் உங்க வீட்டு வேலைக்காரர்கள் இல்லை அவங்க படிக்கத் தான் வந்திருக்காங்கன்னு சொல்லி.. கூட்டம் முடிந்தது.

    ஊர்ல டீவியெல்லாம் இல்லை.  பஞ்சாயத்தில மட்டும் தான் இருந்தது. செய்தி மட்டும் போட்டுட்டு நிறுத்திருவாங்க. படம் எல்லாம் பாத்ததே இல்லை. கூலி வேலை பாக்கற அப்பா அம்மா வாழ்க்கையை நடத்துறத்துக்கு ரொம்ப கஷ்டபட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை படத்துக்கு கூட்டிட்டு போகணும்னு ஆணை வந்திருந்தது. எல்லா பிள்ளைகளையும் தன் சொந்த செலவுல வாத்தியார் கூட்டிட்டு போனாங்க.

    அப்போ பார்த்த படங்கள் தான் அனகோண்டா, ஜீராசிக் பார்க், டைட்டானிக் படம் எல்லாம். அவர் இல்லாட்டி சினிமா எப்படி இருக்கும்னு கூட தெரியாம போயிருக்கும். அறிவியல் கண்காட்சி, கலைவிழான்னு எல்லா ஊருக்கும் கூட்டிட்டு அலைஞ்சி திரிஞ்சவர். மதியம் சாப்பிட போகும்போது   ஒரு திருக்குறள் சொல்லிட்ட தான் சாப்பிடனும். வாத்தியார் எங்ககூடவே நின்னுட்டு இருப்பார். ரொம்ப அன்பாக நடந்து கொண்டு இருந்தார். என்னவோ தெரியல பள்ளிக்கூடத்துக்கு வாத்தியார் வரல. என்ன நடந்ததுன்னு தெரியல. மத்தவங்கள கேட்கவும் பயமா இருந்தது. எல்லா வாத்தியாரும் அவரப் பத்தி தப்பா பேசிட்டு இருந்தாங்க.

    பள்ளிக்கூடத்துல இருந்து விட்டு வந்த இந்த பதினைஞ்சு வருசத்துல ஒரு முறைக்கூட வாத்தியார பாக்கல. ஆனா அடிக்கடி நினைச்சுட்டு இருப்பேன். ஏனோ ஒரு தயக்கம் என்னன்னு சொல்லத் தெரியல. அவரைப் பாக்கும் போது எப்பவும் வாத்தியாரா நான் பாத்ததே இல்லை. நல்ல தந்தையைப் போல் என் படிப்பில் அவ்வளவு அக்கறையோடு இருந்தவர். முகம் வாடி இருந்தா அவருக்கு தாங்கிக்கவே முடியாது.

    என்ன ஆச்சு ஜானகி உடம்புக்கு முடியலையா. மாத்திரை வாங்கிவரவான்னு கேட்பார். நோட்ஸ் வாங்க வீட்டுல பணம் கொடுக்கலங்கற தெரிஞ்சதும் அவரோட நோட்ஸ் எடுத்துக் கொடுத்திட்டாரு. பரிட்சை வரை படிச்சிட்டு திரும்ப கொடுத்திருன்னு சொன்னதும் நானும் வாங்கிப் படிச்சசேன். கல்லூரியில என்னத்துறை எனனோட எதிர்காலத்திற்கு நல்லா இருக்குன்னு அப்பாவிடம் சொல்லிட்டு போனதா பின்னாடித்தான் எனக்கே தெரிஞ்சது.

    என் வாழ்க்கையில என் வாழ்க்கையில முக்கியமான தருணங்களில் அவர் தான் முடிவு பண்ணியிருக்காருங்கறதும் எனக்கு தெரியில. ஒரு நாள் திடீா்ன்னு என் மொபைல்க்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. “அம்மா ஜானகி நல்லா இருக்கியாமா?.. ம்ம்.. நீங்க யாருன்னு…. நான் தாம்மா வாத்தியாரு மறந்துட்டியா? சந்தையில அப்பாவ பாத்தேன் மா. அவருகிட்ட உன் நம்பர வாங்கினேன். நேரம் கிடைச்சா பேசுமான்னு வைச்சிட்டாரு..” எனக்கு கொஞ்ச நேரம் தலைக்கால் புரியல. இத்தனை வருசம் கழிச்சும் என்ன ஞாபகத்துல வைச்சி இருக்காருன்னு.

    வாத்தியார் எங்க அப்பா கிட்ட பொன்னு நல்லா படிக்கறா ஏன் அவள இங்கலீஸ் மீடீயத்துல போடக்ககூடாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. எங்க அப்பா மேயுற மாடு எங்க மேய்ஞ்சா என்ன சார்ன்னு சொல்லிட்டாரு. எங்க அப்பா மேல கோப கோபமா வந்துச்சு . நம்மள வாத்தியாரு முன்னாடி மாடுன்னு சொல்லிட்டாரேன்னு.

    அன்பரசு என் கூட படிச்ச பையன். இன்னிக்கு பெரிய வேலையில இருக்கறதுக்கு என் வாத்தியார் தான் காரணம். ஒரு வாரமா பள்ளிக்கூடத்துக்கு வராத அன்பரச தேடிட்டு வாத்தியார் அவன் வீட்டுக்கே போயிட்டாரு. அங்க போன அப்ப தான் அவன் நிலைமை என்னனு வாத்தியாருக்கு தெரிஞ்சது. நார்மில்லுக்கு வேலைக்கு போயிட்டு வரும்போது வேகமா வந்த கார் மோதி விபத்துல அவனோட அப்பா இறந்துப்போனது தெரி்ந்தது.

    அவங்க அம்மா இனி எப்படி இவன பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியும். எனக்கு இருந்த ஓரே ஆதரவு இவங்க அப்பா தான். மூணு பிள்ளைகளை நான் ஒருத்தி எப்படி கரையேத்த முடியும்னு அழுதாங்க. வாத்தியாருதான் அவங்கள சமாதானப்படுத்தி அன்பரச தன் வீட்ல இருந்து படிக்க வைச்சு பெரிய ஆளாக்கிவிட்டார். இன்னிக்கு அன்பரசு அரசாங்க வேலையில இருக்கறதுக்கு அவர்தான் காரணம்.

    பள்ளிக்கூடத்துல யாராச்சும் சாப்பிடாம இருந்தா தன் சாப்பாட்ட அப்படியே எடுத்துக் கொடுத்துடுவார். டீ.வி.எஸ். பிப்டில தான் பள்ளிக்கூடத்துக்கு வருவார். வண்டில வரும்போதும் போகும்போதும் இரண்டு மூணு பிள்ளைங்க கூட்டிட்டு போய் அவங்க வீட்ல விட்டுத்தான் போவார்.

    வாத்தியாருக்கு கல்யாணம் ஆகி பதினைஞ்சு வருசமாகியும் குழந்தையே இல்லை. அவர் வகுப்பில் இருக்கிற அத்தனை குழந்தைகளையும் தன் குழந்தையாகவே பாத்துக்கொண்டவர். பள்ளிக்கூடத்துல ஜானகியை வகுப்புல மாணவர்கள் முன்பு கன்னத்தை கிள்ளி செல்லமா உன்னோட பிறந்த நாளுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கன்னு மகிழ்ச்சியா பேசிட்டு இருந்தத.. மேரி டீச்சா் பாத்துட்டு போய் தலைமையாசிரியிடம் ஆசிரியர் மேல் பாலியல் ரீதியா புகார் சொன்னதும் அதனால மனம் உடைஞ்சு வாத்தியார் வேலையை விட்டு நின்னது யாருக்கும் தெரியாமல் போனது.

    Share
  • நலம்… நலமறிய ஆவல் – 140

    நிர்மலா ராகவன்

    அனுபவங்கள்

    தான் பட்ட கஷ்டங்களையும், அதனால் அனுபவித்த துயரத்தையும்பற்றிப் பேசினால், பிறர் அனுதாபப்படுவார்கள் என்று எண்ணுகிறவர்கள் நம்மில் பலர். இவர்கள் ஒன்றை மறக்கிறார்கள். `கஷ்டங்கள்’ என்றால் அனுபவம் பெறுவது. இன்னொருமுறை அதே தவற்றைச் செய்யாது, அதே பாதையில் நடக்காமல் இருக்கத் தூண்டும் விவேகத்தை அளிப்பது. இது புரியாது, என்றோ பட்ட அவதிகளால் எந்தப் பாடத்தையும் கற்காமல் இருப்பவன் மீண்டும் மீண்டும் அதே தவற்றைச் செய்கிறான். துன்பங்களையே அடுக்கடுக்காக அனுபவிக்கிறான்.

    நாம் எவ்வளவோ கஷ்டப்பட்டிருப்போம். ஆனால், இன்றைய நிலையை அடைய படிப்படியாக ஒவ்வொன்றையும் தாண்டி வந்திருக்கிறோம். சிறு வயதில் பெற்றோரும், ஆசிரியர்களும் திட்டியபோது அவர்கள்மீது ஆத்திரமும், நம்மீதே பரிதாபமும் கொண்டிருப்போம். தன்னிரக்கம் முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டைதான். யோசித்தால், நாம் இப்படித்தான் நல்வழிபடுத்தப்பட்டோம் என்று புரியும். கசப்பை மறந்துவிடுவோம்.

    அனுபவம் ஒன்று, பாடம் வெவ்வேறு

    சந்திரா, கலா இருவரும் பதின்ம வயதாக இருந்தபோதும், ஆண்-பெண் உறவைப்பற்றி நினைத்தாலே பாவம் என்பது போல் வளர்க்கப்பட்டிருந்தார்கள். கருத்தரிப்பு போன்ற `கெட்ட’ வார்த்தைகளை அவர்களால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியாது. அதனாலேயே, தகாத நடத்தை கொண்ட உறவினன் ஒருவனால் இருவரும் பாதிப்படைந்தார்கள். சில காலம்தான். ஆனால், அதன் விளைவோ..!

    முதலில் எந்த ஆணைப் பார்த்தும் பயம் எழுந்தாலும், காலப்போக்கில், நடந்ததில் தன் தப்பு ஏதுமில்லை என்று தெளிந்தாள் மூத்தவள் சந்திரா. பத்து சதவிகிதத்திற்கும் குறைந்தவர்கள் செய்யும் அடாத காரியங்களால் மீதி இருப்பவர்களையும் நோவது என்ன நியாயம் என்ற கேள்வி எழ, ஆண்கள் எல்லாருமே தீயவர்கள் இல்லை என்று நிச்சயித்தாள். கேடுகெட்டவர்களைப் பார்த்தவுடனேயே அவர்கள் குணம் புரிந்து, விலகவும், எதிர்க்கவும் முடிந்தது. மோசமான அனுபவம் ஒன்றால் நல்ல பாடம் கிடைத்தது. ஆண்களுடன் சரளமாகப் பழக முடிந்தது.

    தங்கை கலாவோ, நடந்தது வெளியில் தெரிந்தால், தன்மீதுதான் பழி விழும் என்று பயந்தாள். (அவள் பயமும் ஒரு விதத்தில் நியாயமானதுதான். `நீ முதலில் என்ன செய்தாய்?’ என்று வதைப்பட்ட பெண்களைக் கேட்பதுதானே உலக வழக்கு!). `எல்லா ஆண்களுமே மோசக்காரர்கள்!’ என்று உறுதியாக நம்ப ஆரம்பித்தாள்.

    `அழகாக, இளமைத் தோற்றத்துடன் இருந்தால்தானே ஆண்கள் தகாத இச்சையுடன் அருகில் வருவார்கள்!’ என்று யோசனை போக, தன் தோற்றத்தில் அக்கறை செலுத்த மறுத்தாள். உடல் பருமனாகியது. ஓயாத மனக்குழப்பத்தில் என்னென்னவோ நோய்கள் வந்தன. வயது முதிர்ந்த பின்னரும் ஆண்களைப் பற்றிய அவளது அவநம்பிக்கை மாறவில்லை என்பது பரிதாபத்திற்குரிய விஷயம்.

    ஒரே மாதிரியான அனுபவங்கள் இருந்தாலும், வாழ்வில் நிகழும் எதிர்பாராதவைகளை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைப் பொறுத்தே ஒருவரது குணாதிசயம் அமைகிறது. மனதைச் சஞ்சலப்படுத்திய நிகழ்வுகள் நடந்து முடிந்தபின் சற்று நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதியை அனுபவிக்காமல், வருத்தத்தையே கெட்டியாகப் பிடித்துக்கொண்டிருப்பதால் எப்படி!

    நடந்து முடிந்ததை `வேண்டாத அனுபவம்!’ என்று ஒதுக்கி, அதிலிருந்து சரியான பாடத்தைக் கற்றிருந்தால், கலாவும் தைரியசாலியாக ஆகியிருப்பாள். நிம்மதியை இழந்திருக்கமாட்டாள். என்ன செய்வது! மனோதிடம் சொல்லிக்கொடுத்து வருவதில்லையே!

    `தவறு நிகழ்ந்துவிடுமோ!’ என்ற பயத்திலேயே மூழ்கியிருந்தால், புதியதாக எதையும் செய்யத் துணிவில்லாது போகிறது. இன்பத்தை அனுபவிக்க அதற்கு நேர்மாறான நிலையையும் உணர வேண்டாமா? வெயிலில் நிழலின் அருமையை உணர்வதுபோல்தான். சுயமாக அனுபவிக்க விடுங்கள்!

    சில பெற்றோர் குழந்தை கீழே விழுந்தால் துடிதுடித்துப்போவார்கள். அவர்களுடைய பரிதவிப்பில் குழந்தையும் தன்னிரக்கத்துடன் பெரிதாக அழும். இதற்காக குழந்தை நடக்க விடாமலே தடுத்துவிட முடியுமா? மீண்டும் எழுந்து, நடக்கத் துணிந்தால்தானே நடை பழகும்?

    வாழ்க்கையும் இதுபோல்தான். தவறு நிகழ்ந்துவிட்டதே என்று கலங்குவது வீண். கசப்பான அனுபவங்களும், தவறான முடிவுகளும், அவைகளால் ஏற்படும் தோல்வியும்தான் நல்ல பாடங்களைப் புகட்டும். கடந்த காலத்திலேயே வாழ்ந்துகொண்டு, ஓயாது அதைப்பற்றிப் பேசினால்மட்டும் அவை மாறிவிடப்போவதில்லை.

    தவறுகளைத் தவிர், கவனம்!

    செய்யும் காரியத்தால் வரக்கூடிய துன்பங்களை, தவறுகளை, எப்படித் தவிர்ப்பது என்ற கவனம் அவசியம். ஒன்றரை வயதான குழந்தையிடம், `இந்தப் பாத்திரம் சூடு! தொடாதே!’ என்றால் அதற்குப் புரியாது. மிக லேசான சூடாக இருக்கும் ஒன்றில் அதன் கையை வைத்து, “ஊ..!” என்று பயமுறுத்தினால், கையை உடனே பின்னுக்கு இழுத்துக்கொண்டு, தானும் அதே ஓசையை எழுப்பும். அதன்பின், ஊசிமுனை போன்ற அபாயமான எதையும் அப்படியே சொல்லிக்காட்டலாம். இம்முறையால், வலியை அளிப்பவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று புரிந்துவிடுகிறது. குழந்தையின் அனுபவமும் வளர்கிறது. அனுபவங்கள் என்றால் பிறர் அனுபவித்ததிலிருந்து கற்பதும்தான்.

    நான் அஜந்தா குகைகளைப் பார்க்கப் போனபோது, வெள்ளைக்காரப் பெண்மணிகள் முன்னெச்சரிக்கையாக காலுறை அணிந்து வந்திருந்தார்கள். நானோ, வெறுங்காலுடன்! தரைச் சூட்டில் பாதம் புண்ணாகி, ரத்தம் வடிய ஆரம்பித்தது. சில நாட்கள் அவதி. பாதம் சரியானவுடன், ஆரம்பப் பள்ளிப் பாட புத்தகங்களில் பார்த்தவைகளை நேரில் அனுபவித்த ஆனந்தம் தான் நிலைத்து நிற்கிறது. வலி மறந்துவிட்டது. அங்கு செல்ல விரும்பும் பிற உறவினர்களுக்கு என் அனுபவம் பாடமாக அமைகிறது. இருப்பினும், ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவமும், அதனால் அவர் அடைந்த உணர்ச்சிகளும் பிறருக்கும் அதே விளைவை அளிக்கும் என்று கூறமுடியாது.

    `எதிர்வீட்டு குண்டு மாமி கைத்தடி பிடித்துக்கொண்டு நடந்துதான் வழுக்கி விழுந்துவிட்டாள். அதனால் நான் என்னுடையதை உபயோகிக்கவே இல்லை!’ காலில் அறுவை சிகிச்சை நடந்தபின் மருத்துவமனையில் கொடுத்த கருவியை உறையிலிருந்தே பிரிக்காது வைத்ததை ஒரு மாது என்னிடம் பகிர, எனக்கு வேடிக்கையாக இருந்தது. அவசியம் என்று கருதிதானே கொடுத்திருப்பார்கள்? யாருடைய வேண்டாத அனுபவத்தையோ பின்பற்றினால், கால் குணமாக இன்னும் அதிக நாட்களாகாதா?

    புதிய அனுபவங்களா! எதற்கு?

    நம் வாழ்க்கையை நாமே அமைத்துக்கொள்ளும் துணிவுடன் நடந்துகொண்டால் இப்படி ஆகுமா?

    `புதிய அனுபவங்களால் என்னென்ன வருமோ! நான் இருக்கிறபடியே மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறேன்!’ என்று ஒரே வட்டத்தில் சுழன்றுகொண்டிருந்தால் சலிப்புதான் மிகும்.

    `சிலருக்குத்தான் வாழ்க்கை நன்றாக அமைகிறது!’ என்று பொருமுவதால் என்ன பயன்? நம் வாழ்க்கையைத் நாமே அமைத்துக்கொள்ளும் துணிவுடன் நடந்துகொண்டால் இப்படி ஆகுமா?

    `புதிய இடங்களுக்கு உல்லாசப் பயணம் போவதா! வீண் அலைச்சல்! அங்கு உணவு ஒத்துக்கொள்ளுமோ, என்னவோ! ஏதாவது உடல் உபாதை வந்துவிட்டால்?’ என்ற அச்சமே சிலரைப் பயணங்கள் என்றாலே தயங்க வைக்கிறது. அஜீரணம், காய்ச்சல், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமைக்காக என்று பலவகையான மருந்துகளை முன்னெச்சரிக்கையாக எடுத்துப்போனால் கவலையே இல்லை.

    சீனர்களின் வழக்கு

    `அவள் சொல்வதைக் கேள்! நீ அரிசி சாப்பிட்டதை விட அதிகமாக உப்பு சாப்பிட்டிருக்கிறாள்!’ வயதில் மூத்தவர் சொல்லைக் கேட்கவேண்டும் என்று வலியுறுத்த சீனர்கள் இப்படிச் சொல்கிறார்கள்.

    சில சந்தேகங்கள் எழுகின்றன: வயது முதிர்ந்துவிட்டதால் மட்டும் ஒருவரை அறிவிலும் சிறந்தவர் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? அவரது நேரத்தை, அனுபவங்களை, அவர் எப்படிப் பயன்படுத்தியிருக்கிறார் என்பதும் முக்கியமில்லையா?

    திறமையும் சோதனைகளும்

    திறமையால், அதனால் வரும் வெற்றிகளால் மகிழ்ச்சி, கர்வம் என்று ஏதேதோ கிடைக்கலாம். ஆனால் சோதனையால்தான் சீரிய பாடங்களைக் கற்க முடியும். ஒருவரது குணமும் புடம் போடப்படுகிறது.

    Share
  • அவனருள் கும்பிடடா!

    நல்லவை சுமந்து நன்மைகள் ஆற்றின் நாடு போற்றுமடா – நல்லது

    அல்லவை சுமந்து அல்லல்கள் வளர்ப்பின் அகிலம் தூற்றுமடா!

     

    பிறப்பின் பயனும் பிறர்க்கெனச் சொல்லும் பணியை ஆற்றிடடா – தனிச்

    சிறப்பை அதிலும் செலுத்தியும் வாட்டும் சிறுமை தூற்றிடடா!

     

    வாழ்வின் பயனும் புகழெனச் சொல்லும் வாழ்வை அமைத்திடடா – மிகத்

    தாழ்வுறும் நினைவை அறவே தள்ளியும் தர்மம் சமைத்திடடா!

     

    ஏற்றமும் இறக்கமும் இரட்டைப் பிறவிகள் என்பதை அறிந்திடடா – நிலை

    மாற்றியும் இயற்கை காட்டுதல் உணர்ந்து மமதை எறிந்திடடா!

     

    காற்று என்றும் ஓர்திசை தன்னில் காலமும் வீசாது – நலம்

    ஆற்றும் செயலில் நன்மைகள் விளையின் நாடுனை ஏசாது!

     

    நல்லவை விதைப்பின் நன்மைகள் விளையும் நினைவில் ஏற்றிடடா – துயரில்

    தள்ளிடும் நினைவுகள் தன்னைத் தள்ளும் தர்மம் போற்றிடா!

     

    நாடுனைப் போற்றும் வண்ணம் நடந்து நற்பெயர் பெற்றிடடா – பெரும்

    கேடன் என்றுனை ஊரார் சாடா கொள்கையில் முற்றிடடா!

     

    மகிழ்ச்சி என்பது மனத்துள் உள்ளது மறந்தும் போகாதே – நிகழும்

    நிகழ்ச்சிகள் யாவும் ஈசன் செயல்தான் எவரையும் நோகாதே!

     

    இறைவன் வழங்கும் கடுகுள் மலையும் இருக்கும் நம்பிடடா – கூர்

    அறிவும் காலமும் சமமாய் வழங்கிய அவனருள் கும்பிடடா!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 193

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராமலக்ஷ்மி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (29.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர் (293): சுகந்தி நாடார்

    முத்தமிழ் என்றழைக்கப்பட்ட நம் தமிழ்மொழி இப்போது நாற்றமிழாக அதனுடன் “கணினித் தமிழை”யும் இணைத்துக் கொண்டுள்ளது. இணையம் ஒரு பக்கம் உயர்ந்து கொண்டே இருக்கையில் அதன் மூலமாகவும் தமிழை இளைய, இணைய தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது என்பது தமிழ் ஆர்வலர்களது இடையறாத பணியாக இன்றளவில் இயங்கி வருகிறது. இப்படிப் பட்ட பொழுதில் முழுக்க முழுக்க இணைய தலைமுறைக்கு இனிய தமிழைக் கொண்டு சேர்க்க வேண்டியே உழைக்கும் ஒரு குழு இருக்கின்றது என்பதும், அவர்கள் எண்ணற்ற எளிமையான பாடத் திட்டங்கள் மூலமான பிற தேசங்களில் வாழும் தமிழர்களுக்கும் மிகவும் பயனாகுமாறு செய்து வருகின்ற பணி, மிகவும் பாராட்டத் தக்கது.

    “தமிழ் அநிதம்” என்ற ஒரு தன்னார்வ நிறுவனம் நமது தமிழ் மொழியின் சிறப்பை இணையத்தில் மூலம் பல மூலைகளுக்கு எடுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற உன்னதமான பணியை ஆற்றி வருகின்றது. தமிழ் அநிதம் தனது நோக்கமாகச் சொல்லுவது யாதெனின்,

    “அநிதம் என்றால் தமிழில் “அளவற்ற தன்மை” (Unlimited) என்று பொருள். தமிழ் அநிதம் இரு மொழிகளைப் பிரதானமாகக் கொண்டு தமிழ் வழிக் கற்றலைப் பரப்பும் நோக்கில் செயல்படுகின்ற ஒரு மின்னூடகம் ஆகும்.”

    இத்தகைய உயர்ந்த நோக்கத்துடன் இதனை இயக்கி வருபவர் திருமதி சுகந்தி நாடார். அமெரிக்காவில் வாழும் தமிழ் ஆர்வலரான திருமதி சுகந்தி நாடார், இணையத்தின் வழியே தமிழ் கற்றலை ஊக்குவிக்கும் பெரும்பணியை ஆற்றி வருகின்றார். அவருடன் இந்த முயற்சிக்குச் செயலராக விளங்குகின்ற பேராசிரியர் திரு காமாட்சி அழகர்சாமி அவர்களும் இணைந்து பல இடங்களுக்குச் சென்று இணைய வழி தமிழ் கற்றல் தொடங்கி பல அவசியமான தலைப்புகளில் உரையாற்றி வருகின்றனர். இதன் அடிப்படையில் சென்ற வாரம் தமிழகத்தின் பல கல்லூரிகளுக்குச் சென்று பயிலரங்கங்கள் நிகழ்த்தி, மாணவர்களுக்கு அறிவுசால் ஊக்கம் வழங்கியும் இருக்கிறார்.

    தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறை, தேனித் தமிழ்ச்சங்கம், கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறை, போன்ற தமிழ் வளர்க்கும் பல துறைகளுடன் தமிழ் அநிதம் இணைந்து, தேனி, தஞ்சை, திருச்சி, சிவகாசி, திருவனந்தபுரம் போன்ற பற்பல ஊர்களில் இருக்கும் கல்லூரிகளுக்குச் சென்று E Media in Tamil learning and teaching (தமிழ் இணைய ஊடகம், கற்றலும் கற்பித்தலும்), இணையத் தமிழின் பயன்பாடுகள், கணினித் தொழில்நுட்பம் மூலமே தமிழின் சிறப்பு அடுத்த தலைமுறைக்கு, தமிழ் மொழியும், அதன் இணையப் பயன்பாடும், மின்வழித் தமிழ் – கற்றல் கற்பித்தல் போன்ற தலைப்புகளில் பயிலரங்குகள் நடத்தியிருக்கிறார்கள்.

    “எதிர்ப்புகளும் பொறாமையும் நிறைந்த இவ்வுலகில், ஏறத்தாழ 220 பங்கேற்பாளர்கள் (தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல், கல்வியியல் மாணவ மாணவிகள், பல்வேறு துறையைச் சார்ந்த பல பேராசிரியர்கள் மற்றும் கோயம்புத்தூர், திருச்சி போன்ற ஊர்களிலிருந்து வந்து கலந்துகொண்ட மாணவ மாணவிகள் உட்பட) மிகமிக ஆர்வமுடன் கலந்துகொண்டு வெகு சிறப்பாக நேற்று நடைபெற்ற ‘கல்வியியலில் மொழித் தொழில்நுட்பத்தின் பங்கு என்ற தலைப்பில் இனிதே நடந்தேறிய ஒரு நாள் பன்னாட்டுப் பயிலரங்கின் நிகழ்வுகளில் ஒருசில. தமிழ் அநிதத்தோடு தமிழ்ப் பல்கலைக்கழக மொழியியல் துறையும் கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறையும் இணைந்து நடத்தியது மட்டற்ற மகிழ்ச்சி.”

    என்று பேராசிரியர் காமாட்சி அவர்கள் பதிவிட்டிருந்த முகநூல் பதிவில் இருந்தே அவர்கள் இந்தத் தொண்டை எத்தனை மனநிறைவுடனும் தடைகளைத் தாண்டியும் வெற்றிகரமாக நிகழ்த்தி வருகின்றார் என்பது புலனாகிறது. ஓய்வுபெற்ற பேராசிரியர் அ. காமாட்சி அவர்களுடன் இணைந்து இந்த அருந்தொண்டை ஆற்றி வருகின்ற தமிழ் அநிதத்தின் நிறுவனர் திருமதி சுகந்தி நாடார் அவர்களை இந்த வார வல்லமையாளராகத் தேர்ந்தெடுத்து மனமாரப் பாராட்டுவதில் வல்லமைக் குழுமம் மகிழ்ச்சி அடைகிறது.

    இணையேதும் இல்லாத இனிதான தமிழை
    இருக்கின்ற மக்களெலாம் பயன்படுத்தும் வண்ணம்
    இணையத்தில் வளர்க்கின்ற தமிழநிதம் செய்யும்
    ஈடில்லாப் பணிக்கிங்கே யாம்சொல்லும் வாழ்த்தே!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • உண்டா! இல்லையா!

    -முனைவர் கீதா ரமணன்

    மனிதன் காட்டில் மட்டும் நாகரிகமற்று வாழ்ந்தபோதும் சரி, காடு கடந்து நாடு கண்டு, உலகளந்ததோடு நிற்காமல் விண்மீன் கூட்டங்களின் தன்மைகளைப் பகுக்கும்போதும் சரி, ஓர் ஐயப்பாடு மட்டும் அவனை விடுவதாக இல்லை! “கடவுள் உண்டா! இல்லையா!” உலகத்தோர் அனைவரும் ஒருசேர ஒப்பும்படி இதற்கான எந்த விளக்கத்தையும் எவராலும் இன்றுவரை கொடுக்கவியலவில்லை! கருத்துவேறுபாடுகள் நிறைந்த மனிதகுல அறிவு இதில் என்றும் ஒன்றுபட மறுத்தே தீரும். அனைவரும் ஓரணியில் நின்று உண்டென்றோ, இல்லையென்றோ தீர்மானம் காணப்போவதில்லை! இதில் இரண்டுங்கெட்ட நிலையிலாவது பெரும்பான்மையர் இருப்பரேயொழிய ஓரணியில் திரளப்போவதில்லை! வடிவம் புலன்களால் உணரப்படுவது, ஆனால் உணர்வுக்கு வடிவங்களில்லை! கடவுளை உணர்ந்ததாகவோ உணராததாகவோ கூறுவதோடு அனைவரும் நின்றுவிடுகிறோம்! இதனால் உண்டென்பதும் இல்லையென்பதும் கருத்துப்போர்களுக்கு மட்டுமே வழிவகுத்து, முடிவற்ற போராட்ட நிலையே தொடர்ந்து வரும். ஒருதலையாக நின்று உணர்ந்ததைக் கூறாமல், பொதுவாக நின்று நாம் காண்பதைக் கூறத் தலைப்படுவோம். உண்டென்பார், இல்லையென்பார் இருவரில் எவரையும் பெருமை அல்லது சிறுமை செய்யும் நோக்கம் நமக்கு எள்ளளவும் வேண்டாம்! எவர் நம்பிக்கையையும் நாம் ஏற்றதாகக் கொள்ளாமல் பொதுவாகச் சிந்திப்போமா!

    எத்தனை விதமான கோட்பாடுகள், எத்தனையெத்தனை கற்பனைகள், எத்தனை சமயங்கள், அவற்றுள்ளும் எத்தனை உட்பிரிவுகள்! மாமனிதர்கனாக உலகெங்கும் பல்வேறு காலங்களில் தோன்றிய பலரும் பல அறிவுரைகளால் மனிதனை ஒன்றுபடுத்த விழைந்தும் ஏதும் பயனுண்டோ! அவர்கள் பெயராலேயே மனிதர்கள் பிரிவுகள், பிளவுகளை ஏற்படுத்தி அடித்துக் கொண்டு செத்தனர் முன்பு! அறிவியலால் வளர்ந்த நிலையில் தற்போது பேரழிவுக் கருவிகளால் தாக்கிக் கொள்கின்றனர்! கடவுள் எதற்கும் துணை போனதாகவோ அல்லது தடுக்க முயன்றதாகவோ எவராலும் உறுதியாகக் கூறமுடியவில்லை! பொதுவான கெடுதிகள் எத்தனையோ நடக்கின்றன. இயற்கைச்சீற்ற அழிவுகளை விட்டு விடுவோம், ஆறறிவுள்ளதாகக் கூறிக் கொள்ளும் மனிதனால் அவனுக்கும், பிறவுயிர்களுக்கும், பரந்த இயற்கைக்கும் நேரிடும் அழிவுகள் உலகெங்கும் அதிகரித்து வருகின்றன! இவை தடுக்கப்படவோ குறைக்கப்படவோ இளகிய மனத்தாலும் மனிதநேயத்தாலும் கனிந்தோர் ஏங்குகின்றனர்!

    நமக்குரிய தனிக் கொள்கை எதுவாகவும் இருக்கட்டும், பொதுவான எதிர்பார்ப்புக் கொள்கை,”கடவுள் மிக நல்லவராகவே இருப்பார், நல்லவை மற்றும் நல்லவரை வாழவைப்பார், தீயவை மற்றும் தீயவரை அழிப்பார்” என்பதுதானே! இது நடந்து நாம் பார்த்துள்ளோமா! கதைகள் வேண்டாம், வரலாற்றுப் பதிவுகள் வேண்டாம், எங்கோ ஒன்றென்று கேள்விப்பட்டவை வேண்டாம்! நடைமுறையில் நம் வாழ்வில் நம் கண்ணெதிரே நடந்தவற்றை மட்டும் ஆய்வு செய்வோம்! நான் பார்த்தவரை நல்லவர்கள் உயர்ந்தது நூற்றில் ஒன்றாகவும், தீயவர் அல்லது தகாதவர் உயர்ந்தது நுற்றில் தொண்ணூற்றொன்பதாகவுமே இருந்துள்ளது! என்னிடம் உண்மையுடனிருக்கும் உறவினரும் நண்பர் பலரும் இவ்வாறே கூறுகின்றனர்! “தீயவர்கள் தண்டிக்கப் பட்டாலும், பல நல்லவர்களை அழித்த பின்பே தண்டிக்கப்பட்டனர்! பயனென்ன!” என்றார் அறிவும் அகவையும் முதிர்ந்த பெரியவரொருவர். அவர் கடவுள் நம்பிக்கையைக் கடுகளவும் விடாதவர்! விதி, ஊழ், வினை, பிறவிப்பயன் போன்றவற்றை நன்மை தீமைகளுக்கு அளவுகோல்களாகப் பயன் படுத்தி நம்மை நாமே ஆற்றுப்படுத்துகிறோம். அவையனைத்தும் உறுதிப் பாடான தீர்வுகளல்ல! கண்ணுக்கும் கருத்துக்கும் புலனாகாமல், உணர்வுக்கு மட்டுமே புலனாகக்கூடிய கடவுளின் செயல்கள் சரியாகத்தானிருக்கின்றன என்று நம்புவதற்கு விதி, ஊழ், வினை, பிறவிப்பயன் போன்ற மேலும் கண்ணுக்கும் கருத்துக்கும் புலனாகாத பலவற்றை நாம் துணையாக அழைப்பதாகவே தோன்றுகிறது. கடவுளை நம்பாத நிலையில் நாமிருக்கையில், நமக்கென்று துன்பம் வந்தால் “ஓருவேளை நாம் நம்பிக்கை இழந்ததால் இதெல்லாம் நடக்கிறதோ!” என்று மயங்குகிறோம்! இந்த மயக்கத்தைப் பயன்படுத்திக்கொண்டு கடவுளின் பெயராலும் கண்ணுக்குப் புலனாகாத பிற கோட்பாடுகளைக் கொண்டும் உலகெங்கும் பலர் நம்பிக்கையாளர்களை எத்திக் கொழுக்கின்றனர்.

    இதைவட விந்தையாக உண்டு, இல்லை என்ற உறுதியான நிலைகள் மட்டுமல்லாது இரண்டுங்கெட்டான் நிலையிலும் நம்மில் பலர் தவிக்கிறோம்! இந்நிலை மிகவும் இழிவானதாகிறது! இந்நிலையில் நமதறிவை நாமே குறைத்து மதிப்பிட வேண்டியதாகிறது! சமயங்களை மாற்றிப் பார்ப்பதும், கடவுளைப் பல வடிவங்களில் மாற்றிப் பார்ப்பதும், வழிபாட்டு முறைகள், வழிபடுமிடங்களை மாற்றிக்கொள்வதும் கொடுமை! நம் வழிபாட்டால் நமக்கு நல்லது மட்டுமே நடந்து, நமக்குப்பிடிக்காதவர்களுக்கெல்லாம் தீயது மட்டுமே நடக்கவேண்டுமென நினைத்து வழிபட்டுக் கடவுளை நம்மிலும் கீழாக இறக்கிவிடுகிறோம்! நாம் வழிபடும் உருவம் அல்லது கொண்ட கொள்கை மட்டும் கடவுள், மற்றவர் வழிபடுவதெல்லாம் கடவுளில்லை என்றும் அடம் பிடிக்கிறோம், அல்லலுற மோதிக்கொள்கிறோம்! கடவுள் இல்லை என்று சொல்லும்போதும் பிறரை நோகவிட்டாவது நம் கொள்கையை முன்னிருத்தி இன்பமடைவதையே முதன்மையாக்குகிறோம்! இவையா அறிவுள்ளோர் செயல்கள்!

    நாம் கண்டதையெல்லாம் மேலோட்டமாக இதுவரை அசைபோட்டுவிட்டோம். இதனாலென்ன பயன்! தீர்மானம் என்று ஒன்றில்லாவிட்டால் வெட்டிப் பேச்செதற்கு! இதுவரை நாம் அசை போட்டவற்றைச் செரிமானப் படுத்தவேண்டாமா! முயற்சி செய்வோமா! வெற்றி பெறுவோமென்று நம்பி முயற்சி செய்வோம்!

    நமக்குள் மூன்று பிரிவுகள் மட்டுமே அடிப்படைப் பொதுப்பிரிவுகள்! நம்மில் உறுதியுடன் கடவுளை மதிப்பவர் சிறுபான்மை, விட்டவரும் சிறுபான்மை! இரண்டுங் கெட்டானாகி நமது விளையாட்டுப் பொருளாகக் கடவுள் கொள்கையைப் பயன்படுத்துவோரே பெரும்பான்மை! இவ்வாறு மூன்று பிரிவினராகிறோம்! இம்மூன்று பிரிவுகளுள் பற்பல உட்பிரிவுகளாகவும் பிரிந்து வேறுபடுகிறோம்! இத்தனை பிரிவுகளாக வேறுபட்ட நாம் சாதி, மொழி, இனம், நாடு போன்ற பல பிரிவுகளால் மேலும் கணக்கற்ற பிரிவுகளால் இயக்கப் படுகிறோம்! நம் அனைவரையும் இணைக்கக் கூடிய மேன்மை அன்புவழி ஒன்றுதான் என்று அருளாளரான மாமனிதர்கள் சொன்னதெல்லாம் நமக்குப் புலப்படவில்லை!

    நாம் அனைவரும் புலன்கள், அறிவு, பயன்பாடு, உள்ளுணர்வு போன்றவற்றால் ஒருங்கே பகுத்துணரவும் உணர்ந்துணரவும் கூடியதாக ஒன்று உள்ளது! அதுதான் இயற்கை நமக்களித்த இருப்பிடமான உலகம்! நம் கண்ணெதிரே அழிகிறது! நாம்தான் அழிக்கிறோம்! அழிந்தாலும் அது தன்னைப்புதுப்பித்துக் கொள்ளக்கூடியதென அறிவியலால் அறிகிறோம்! நாம்தான் மீளாதழிய வாய்ப்புண்டென்றும் அறிந்து அஞ்சுகிறோம். நாம் அழியாதிருக்க இயற்கையைப் போற்றிக் காப்பதில் மட்டுமாவது ஒன்றுபட முயல்வோம்! இன்றைய மிகப்பெரிய ஐயப்பாடு எதிர் காலத்தில் நம் மனித இனம் ‘உண்டா, இல்லையா!’ என்பதே! கடவுளைக் குறித்ததல்ல! இதுதான் தீர்மானம்!

    -++++++++-

    Share
  • சேக்கிழார் பா நயம் – 17

    -திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி
    =======================

    திருவாரூரில் தேவஆஸ்ரய மண்டபம் எனப்படும் தேவாசிரிய மண்டபம் உள்ளது.இறைவனை ஆஸ்ரயித்த அடியார்கள் நிறைந்த மண்டபம் ஒன்றுண்டு!அந்த மண்டபத்து அடியார்களின் அருளைப் பெற, சுந்தரர் விரும்பினார்!அதன் திருவாயிலில் தேவர்களும் முனிவர்களும் அடியார்களை வழிபடக் காத்திருப்பார்கள்!அங்கேதான் சுந்தரர் திருத்தொண்டத்தொகை என்ற,பெரியபுராணத்தின் வழிநூலைப் பாடினார்! அங்குள்ள அடியார்களின் சிறப்பினை சேக்கிழார் ஆறு திருப்பாடல்களால் விளக்குகிறார்.

    இறைவனே விரும்பி யழைத்துப் பெருமைப் படுத்திய சிறப்பும்,சரியை நிலையில் இறைவனுக்குத் திருத்தொண்டு செய்யும் சிறப்பும் பெற்றவர். தம் திருநீறு பூசியே திருமேனியின் ஒளியால் எண்டிசையையும் விளங்கச் செய்பவர்! ஐம்பூதங்களும் தம் நிலையில் கலங்கினாலும், இறைவன் மலர்ப்பாதத்தை மறவாதவர்  உலகினர் பொருட் செல்வத்தை மிகமுயன்று அடைவார்கள் அச்செல்வம் நன்மைக்கும் தீமைக்கும் பயன்படும்! செல்வங்களைத் திருவள்ளுவர் பல வகைகளாகப்பிரிப்பார். கல்விச்செல்வம், கேள்விச்செல்வம், ஊக்கச் செல்வம், அருட்செல்வம், பொருட்செல்வம் என்பன அவை. இவற்றுள் கேடில் விழுச்செல்வம் கல்வி, செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம், அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் என்ற தொடர்களால் வள்ளுவர் கூறுகிறார்! சேக்கிழார் சிவனடியார்கள் பெற்ற அருட்செல்வத்தை “கேடும் ஆக்கமும் கெட்ட திரு” என்கிறார். உலகத்தின் பொருட் செல்வம் விரைவில் குறைவு படும், அழியும்; அதுவே மிகுதிப்படும்! ஆனால் குறைவு,மிகுதி ஆகிய இரண்டையும் அடையாமல் ஒரே சீராக நிலைத்து நிற்பது அருட்செல்வம்மட்டுமே!இந்தஅருட்செல்வம், பொருட்செல்வம் பெற்றவருக்கு உரிய செருக்கு,பெறாதவருக்குரிய அவலம் ஆகிய இரண்டும் இல்லாதது! இந்த அருட்செல்வத்திற்கு வளர்ச்சியும் இல்லை கெடும் இல்லை! அதனால் அச்செல்வத்தைப் பெற்ற அடியாரைக்‘கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்’ என்பார்! ஈஸ்வரனின் அருளாகிய செல்வமே ஐசுவரியம் என்று கூறப்பெறும்! இதனைத் திருஞானசம்பந்தர்,

    “செல்வ நெடுமாடம் சென்று சேணோக்கிச்
    செல்வ மதி தோயச் செல்வம் வளர்கின்ற
    செல்வர் வாழ்தில்லைச் சிற்றம்பலம் மேய
    செல்வன் கழலேத்தும் செல்வம், செல்வமே!”

    என்று பாடுகிறார்! இச்செல்வத்தைப் பெற்ற அடியார்கள் ஓடேந்திப் பிச்சை பெற்று வாழும் வறிய நிலையையும்,பொன்னை மிகுதியாகப் பெற்ற செல்வநிலையையும் ஒரே நிலையில் வைத்து எண்ணுவர்!அவர்கள் கண்முன்னே உடைந்த பானை ஓடும், பொன் முதலான மணிகளும் தென்பட்டாலும் அவற்றை ஒரே தன்மையில் நோக்குவர்! இதனைச் சேக்கிழார்,”ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்” என்று போற்றுகிறார்! அப்பரடிகள் அருள் வரலாற்றில், அவர் திருப்புகலூர் திருமுற்றத்தில் உழவாரப் பணி புரிந்த போது, நிலத்தில் கிடந்த பொன்னையும் மணிகளையும் ஒன்றாகவே மதித்து நீக்கிக் குளத்தில் எறிந்தார் என்று கூறுவர்! அத்தகைய அடியார்கள் சிவபெருமான் திருவருளைப் பெற்று, இறைவனுடன் ஒன்றி நின்று கும்பிட்டு வாழும் பிறப்பினை விரும்பிப் பிறவாநிலையாகிய வீடுபேறு கிட்டினாலும் அதனைச் சற்றும் விரும்பாத உள்ளச் செருக்கு உடையவராவார்!இங்கே சுந்தரமூர்த்தி சுவாமிகள் கைலையில் இறைவனைக் கூடிவணங்கி வாழ்ந்தபின், திளைத்த திருநடனத்தை “வணங்கி மண்ணிலே வந்த பிறவியே எனக்கு வாலிதாம் இன்பம்” என்று பாடியது நினைந்து மகிழத்த தக்கது. இனி சேக்கிழார் பெருமானின் முழுப்பாடலையும் பயில்வோம்!

    “கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
    ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவார்
    கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
    வீடும் வேண்டா விறலின் விளங்கினார்!

    சோழ நாட்டையும் அதன் பின்னர் அதனுடைய திருவாரூர்த் திருநகரத்தையும் அதன் பின்னர் அந்நகரத்திலுள்ள பூங்கோயிலையும் முறையே காட்டி நம்மைத் தரிசிக்கச் – செய்தார் ஆசிரியர். பின்னர்த் தேவாசிரியனையும் காட்டி அதற்கு அப்பெயர் போந்த காரணத்தை அறிவிக்கும் வகையாலே அந்த முறையிலே திருவாயிலில் காத்திருக்கும் தேவர்களைக் காட்டி உள்ளே அழைத்துச் சென்று அங்கு எழுந்தருளி யிருக்கும் அடியார்களுடைய தன்மையையும் ஆசிரியர் அறிவித்து அவர்களை நாம் வணங்கும்படி செய்கின்ற முறையையும் காண்க. மேலும் இந்திரன் முதலியோரது பதவிகளை எல்லாம் வெறுத்து ஒதுக்கியவர்கள் இங்கு  உள்ளே. கூடியிருக்கும் அடியார்கள் என்று அவர்களுடைய இயல்பினை முகவுரை ஆக அறிவித்தபடியுமாம். ‘வீடும் வேண்டா விறலின் விளங்கினார்’ என்று பின்னர் முடித்துக் காட்டியதையுங் காண்க. ‘’ என்று சிவக்கவிமணி அவர்கள் எழுதியுள்ளார். மேலும்  கழுத்தில் உத்திராக்க மணியணிந்து , கந்தையாடை புனைந்து ஈசன் பணியாகிய திருத்தொண்டு புரிவோரின் வீரம் பெரிது! என்றும், சேக்கிழார் கூறுகிறார்!

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 5

    சி. ஜெயபாரதன், கனடா

    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

    [Miss me, But let me go]

    ++++++++++++++

    என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்

    தோற்றம் : அக்டோபர் 24, 1934

    மறைவு : நவம்பர் 18, 2018

    ++++++++++++++++++

     [22] எழுதிச் சென்ற ஊழியின் கை !

    முடிந்தது

    அவள் ஆயுள் என

    விதி

    மொழிந்தால் நான்

    ஏற்க மாட்டேன் !

    முடிந்தது

    அவள் வினைகள் எல்லாம்

    என் வீட்டில் எனக்

    காலன்

    ஓலமிட்டால் நான்

    காதில்

    கேட்க மாட்டேன் !

    முடிந்தது

    அவள் கடமை யாவும்

    இந்த உலகில் என

    விதியின் கை

    எழுதி இருந்தால்,

    ஊழிடம்

    ஒரே ஒரு வினா மட்டும்

    கேட்பேன் !

    அறுவை முறையை

    மருத்துவர் சரியாகச் செய்து

    ஒன்பது நாள்

    உயிர் கொடுத்தாயே ! ஏன்

    ஒன்பதாம் நாள்

    சுவாச மூச்சை நிறுத்தினாய் ?

    சொல் ! சொல் ! சொல் !

     

    ++++++++++++++++

    [23] ஊழியின் எழுத்தாணி

     

    எழுதிச் செல்லும்

    ஊழியின் எழுத்தாணி

    எழுதி, எழுதி மேற்செல்லும் !

    அழுதாலும், தொழுதாலும்

    வழி மாறாது !

    விதி மாறாது !

    நழுவிச் செல்லும்,

    உந்தன்

    அழுகை காணாது !

    காலன் வந்து

    வீட்டு வாசலில் நின்று

    சிவப்பு மாவில்

    கோலமிட்டுக்

    குறி வைத்துப் போவான் !

    எமனின் நீள் கயிறு

    அவளைக் கட்டி

    இழுத்துச் செல்லும் !

    அவளது இறுதிச்

    சடங்கு

    ஓலைச் சுவடியில்

    ஜோதிடரால்

    எழுதப்பட வில்லை, அவளது

    மூளைச் சுவரில்

    எழுதி வைத்துள்ளது

    ஊழ்விதி !

     

    +++++++++++++

    [24]  அன்னமிட்ட கைகள்.

    எனக்கு

    அன்ன மிட்ட கைகள்,

    ஆக்கி வைத்த

    கரங்கள் மூன்று !

    முதலாக

    முலைப் பால் ஊட்டிய

    என் அன்னை !

    இருபத்தி யெட்டு வயது வரை

    கண்ணும், கருத்துமாய்

    உண்ண வைத்து

    ஊட்டி வளர்த்த தாய் !

    தாயிக்குப் பின்

    தாரம் !

    ஐம்பத்தி யாறு ஆண்டுகள்

    தம்பதிகளாய்க்

    கைப்பற்றி

    இல்லறத்தில் வாழ்ந்து

    முடிந்த கதை !

    மருத்துவ மனையில்

    பிரியும் ஆத்மா

    பிணைத்தது ஒரு கையை !

    என் இடது கையை !

    இணையத் துடித்த

    ஆத்மாவோ

    இரு கரம் பற்றி

    என்னைத்

    தன்வசம் இழுத்தது !

    முன்பு தனியாக வாழ்ந்த

    சமயத்தில்

    அரிசிச் சாதம் கிட்டாத

    அந்தக் காலத்தில்

    முகம் சுழிக்காது

    புன்னகையுடன்

    பன்முறை விருந்தளித்த

    பெண்மாது !

    உண்டி கொடுத்தோர் வாழ்வில்

    உயிர் கொடுத்தோர்.

     

    ++++++++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.

    சி. ஜெயபாரதன்.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 192-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. பார்க்கவ் கேசவனின் இந்நிழற்படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். பார்க்கவுக்கும், சாந்திக்கும் என் நன்றிகள் உரித்தாகுக!

    எதிர்காலம் குறித்த கவலையும், அத்தனைக்கும் ஆசைப்படும் கட்டுப்பாடற்ற உள்ளமும் இன்மையே இக்கனிமழலை நிம்மதியாய்க் கண்வளர்வதன் இரகசியமாய் இருக்குமோ?

    நம் கவிஞர்கள் இதுகுறித்து என்ன சொல்கிறார்கள் தம் பாட்டில் எனக் கேட்டு வருவோம்!

    *****
    ”அள்ளக் குறையாத செல்வமில்லை; உள்ளத்தில் சூதில்லை வாதுமில்லை; வெள்ளந்தி மனமன்றி வேறொன்றில்லை. அதனால் அல்லவோ உறங்குகிறேன் கவலையற்று!” என்று நுவலும் பச்சிளங் குழந்தையைத் தன் கவிதையில் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    பச்சிளங் குழந்தையின் பால் மனது

    எள்ளளவும் அச்சமில்லை.. எனக்கு
    எதிரியென்று எவருமில்லை..
    அள்ள அள்ளக் குறையாத..
    அளவற்ற செல்வமில்லை..
    உள்ளத்தில் சூது வாது..
    உள்ளநிலை எனக்கில்லை..

    நல்லது நடக்க வேண்டும்.. என்றெப்போதும்
    நான் ஏங்கவில்லை..
    அடுத்தவர் வாழ்வு போன்று..
    வாழுமெண்ணம் எனக்கில்லை..
    அடுத்தவேளை உணவைப்பற்றி..
    ஒருபோதும் நான் நினைத்ததில்லை..
    கடுகடுத்த முகம் இல்லை..
    சிடுசிடுத்த மொழி இல்லை..
    எனக்கே வேண்டு மென்று..
    எதையும்நான் கொள்வதில்லை..
    முதன்மையாய் இருக்க வேண்டும்..
    என்ற எண்ணம் எனக்கில்லை..
    வெள்ளந்தி மனதைத் தவிர..
    வேறொன்றும் என்னிட மில்லை..
    ஆதலால் நிம்மதியாய் உறங்குகின்றேன்..
    எதைப்பற்றியும் எனக்கு கவலையில்லை..

    *****

    ”உண்மையை மறைத்து உலகத்தோர் செய்யும் உருப்படாதவைகளைக் கண்ணால் காணாது நீ நிம்மதியாய்க் கண்ணுறங்கு பிள்ளாய்!” என்று குழந்தையிடம் கூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கண்ணுறங்கு…

    கண்ணுறங்கு கண்ணுறங்கு கண்ணுநீ யுறங்கு
    காணவேண்டாம் காசினியோர் செயலை யெல்லாம்,
    உண்மைதனை மறைத்துவைத்தே மண்ணில் மாந்தர்
    உருப்படாத தவறையெல்லாம் செய்கின் றாரே,
    பண்பதனை மறந்தேதான் பற்பல குற்றம்
    பயமிலாமல் செய்தேதான் அழிகின் றாரே,
    கண்ணதிலே நீயுமதைக் காண வேண்டாம்
    கண்ணுறங்கு கண்ணுறங்கு பிள்ளைநீ யுறங்கு…!

    *****

    வெள்ளை மனங்கொண்ட மழலையைப் போற்றிப் பிள்ளைத்தமிழ் பாடியிருக்கும் பாவலர்க்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    உறங்கிடு என் செல்லமே!

    உறங்கிடு என் செல்லமே!
    கனவு காணுங்கள் எனக் கலாம் அவர்கள் சொன்னதைக் கேட்டு
    கண்கள் மூடிக் கனவுகள் காண உறங்கிடு என் செல்லமே!
    கல்வி என்னும் பெயரில் கழுதைகளாய்ப் புத்தக மூட்டை சுமந்து
    வளைந்த முதுகுகளோடு வலம் வரும் பிள்ளைகள் இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
    காலுன்றும் காலம் வரும் முன்னே நெஞ்சில் காதல் வேரூன்ற…
    கிடைக்காத காதலுக்கு இவர் உயிரை இழந்து விடும் விடலைப் பூக்கள் இங்கே!
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!
    வேலை கிடைக்காமல் பசி போக்கும் பாதி வயிற்றுக் கஞ்சிக்காக
    அன்னாடம் காச்சிகளாய்ப் பெருகிவரும் பட்டதாரிக் கூட்டம் இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!
    விட்டுக்கொடுக்க மனம் பிடிக்காமல்
    விவாகரத்து வாங்கித் திசை மாறிச் செல்லும் உறவுகள் இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!
    வழி நடத்தத் தெரியாத தலைவர்களைத் தவறாய்த் தேர்ந்தெடுக்க
    விழி பிதுங்க அவதிப்படும் மாந்தர்கள் இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!
    அன்பாய் ஆதரவாய் இருந்த பெற்றோர்கள் ஆசிரமங்களில் அடைக்கலம் தேடப்
    பெற்றோரை விட்டுச் செல்லும் பிள்ளைகள் நிறைய இங்கே
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே
    இந்தியாவின் வருங்காலத் தூண் நீ அத்தனையும் மாற்றி எழுதும் காலம் வரும்
    அப்போது விழித்திடு வீறுகொண்டு எழுந்திடு அதுவரை
    விழித்திடாதே இன்னும் கொஞ்சம் உறங்கிடு என் செல்லமே!

    கல்வி எனும் பெயரால் கழுதைபோல் பொதிசுமக்கும் பள்ளிப் பிள்ளைகள், கஞ்சிக்கு என்செய்வது என்று அஞ்சிவாழும் இளையோர் கூட்டம், விட்டுக்கொடுத்து வாழும் சகிப்புத்தன்மையின்றி வெட்டிக்கொண்டு செல்லும் இணையர் என்று வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் போராட்டத்தைச் சந்திக்கும் மானுடத்தைத் தன் கவிதையில் சிறப்பாய்க் கவனப்படுத்தியிருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்றறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • புகையை அறிந்தவன், அக்னியை அறிந்தவனா?

    -தி.இரா.மீனா

    ஆத்மாவிற்கும் தனிப்பட்ட மனிதர் மற்றும் பொருட்களுக்கும் இடையிலான அன்பின் முக்கியத்துவத்தைச் செவ்வியலாக விரித்துரைக்கும் மிக உயர்ந்த நிலை கொண்டதாக பிரஹதாரண்ய உபநிடதத்தில் யாக்ஞவல்கியருக்கும் மைத்ரேயிக்கும் இடையில் நடக்கும் உரையாடல் அமைகிறது. இதை ’பிரம்மத்தை ‘அறிவதான உரையாடல்’ என்று வேத உலகமும் அறிவுசார் ஆராய்ச்சியாளர்களும் காலந்தோறும் போற்றி வருகின்றனர்.

    வைசம்பாயனரின் மாணவரான யாக்ஞவல்க்கியர் வேதங்கள் சாஸ்திரங்கள் ஆகியவற்றில் ஆழமான அறிவுடையவர். யஜுர் வேதத்தில் தன் குரு புகுத்திய சில திருத்தங்களை எதிர்த்ததால் குருவுக்கும் மாணவருக்கும் கடும் விவாதம் ஏற்படுகிறது. கோபம் அடைந்த குரு தான் கற்றுத் தந்த வேதங்கள், அதன் பின்னணியிலான அறிவு அனைத்தையும் திருப்பித் தர ஆணையிடுகிறார். குருவின் கட்டளைப்படி கற்றது அனைத்தையும் செரித்த உணவாக யாக்ஞவல்க்கியர் உமிழ்கிறார். பிறகு சூரியக் கடவுளிடம் இருந்து யஜுர் வேதம் அறிகிறார். இதனால் யஜூர்வேதம் கிருட்டிண யஜுர் வேதம், சுக்கில யஜுர் வேதம் என இரண்டாகப் பிரிந்தது என்பது ஆராய்ச்சியாளர் செய்தி. இவர் சதபத் பிரமாணம், பிரஹதாரண்ய உபநிடதம் போன்ற நூல்களை எழுதியவர்.

    மிதிலை மன்னர் ஜனகரின் அமைச்சரான மித்திரர் வேதங்களில் தேர்ந்தவர் அவருடைய மகளான மைத்ரேயி சாத்திரங்கள், வேதங்கள் ஆகியவற்றில் ஈடுபாடு உள்ளவள். அவளு டைய அத்தையான கார்க்கி வேத சாஸ்திரங்களில் மைத்ரேயி ஓரளவு பயிற்சி பெற உதவு கிறாள். மிதிலை நாட்டு மன்னன் ஜனகன் நடத்தும் யக்ஞத்திற்கு கார்க்கி தன்னுடன் மைத்ரேயியை அழைத்துப் போகிறாள். அந்த யக்ஞத்தில் பங்கு பெற யாக்ஞவல்க்கியரும் வருகிறார். அவர் ஜனகனின் குருவும் கூட. அந்த யக்ஞத்தின் போது பிரம்மத்தின் வியாப கத்தைப் பற்றி, பிரம்ம தத்துவத்தைப் பற்றி யாக்ஞவல்கியர் விவரித்ததையும், அங்கிருந்த வர்கள் கேட்ட எல்லாவற்றிற்கும் அவர் விரிவான விளக்கம் தந்ததையும் கவனித்து மைத் ரேயி வியப்பு அடைகிறாள். இயல்பாகவே வேதப் பின்னணியுள்ள மைத்ரேயி பிரம்ம ஞானத்தைப் அவரிடமிருந்து பெற விரும்புகிறாள். கன்னிப் பருவத்தில் இருக்கிற ஒரு பெண்ணுக்கு குருவாக அவர் அமைவதில் உள்ள சிக்கல்களை நினைத்துப் பார்க்கிறாள். அவருக்கு மனைவியாக இருந்து தான் விரும்பியவற்றைக் கற்பதைத் தவிர வேறு வழியே இல்லை என்ற எண்ணம் ஏற்படுகிறது.எனவே அவருடைய முதல் மனைவியான காத்யாய னியி டம் சென்று தன் விருப்பத்தைத் தெரிவிக்கிறாள்.மைத்ரேயியின் உண்மையான ஆர்வத்தைப் புரிந்து கொண்டு காத்யாயனி தன் கணவனிடம் தானே பேசி அவர்கள் திருமணத்திற்கு உதவுகிறாள்.மைத்ரேயி அறிவு நிறைந்த மனைவியாய் வேதங்களில் தேர்ச்சி பெறுகிறாள் .குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு யாக்ஞவல்கியர் தான் சந்நியாச வாழ்க்கையை மேற் கொள்ளப் போவதாகச் சொல்கிறார்.உலக நியதிப்படி தான் செல் வதற்கு முன்னால் தன்னிடம் உள்ள செல்வத்தை இரு மனைவிகளுக்கும் பகிர்ந்து கொடுக்க விரும்புகிறார். அவ்வாறு அவர் முடிவு செய்த பிறகு மைத்ரேயியை அழைத்துப் பேசுகிறார். அப்போது அவருக்கும் மைத்ரேயிக்கும் நடந்த உரையாடல் பகுதி இது.உலக வாழ்வின் நிலையில்லாத தன்மையை உணர்ந்து கொண்ட அறிவு நிறைந்த பெண்ணின் மன வெளிப்பாடாக வினாக்கள் அமைகின்றன.

    யாக்ஞ: “ மைத்ரேயி! நான் இந்த வாழ்க்கையில் இருந்து விடை பெறப் போகிறேன். வாழ்க்கையின் நான்காவது படியான சந்நியாசத்தில் அடி எடுத்து வைக்கப் போகிறேன். போவதற்கு முன்னால் என் செல்வத்தை உனக்கும் காத்தியாயினிக்கும் பிரித்துத் தருவது என முடிவு செய்திருக்கிறேன்.”

    மைத்: “ சுவாமி ! நீங்கள் வாழ்க்கையின் நான்காவது கட்டத்தில் அடி எடுத்து வைக்கப் போவதால் ,அது உங்களுக்கு முற்றிலும் புதியதான பார்வையைத் தரப் போகிறது. உங்களுடைய செல்வத்தை எங்கள் இருவருக்கும் தரப் போவதாகச் சொல்கிறீர்கள். அதை வைத்துக் கொண்டு நாங்கள் வசதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முடியும் என்கிறீர் கள்.அந்தச் செல்வத்தை வைத்துக் கொண்டு நாங்கள் நிரந்தரமாக மகிழ்ச்சியாக இருப்ப தற்கான சாத்தியம் இருக்கிறதா? இந்தப் பெரிய உலகில் செல்வம் உடையவளாக நான் இருந்தால் ,எனக்கு நிரந்தரமான மகிழ்ச்சி கிடைக்குமா? அழிவில்லாத வாழ்வு இருக்குமா? அல்லது வேறு ஏதாவது என் மகிழ்ச்சியில் குறுக்கிட முடியுமா?”

    யாக்ஞ : “இல்லை மைத்ரேயி. நீ மகிழ்ச்சியாக இருக்க முடியாது. செல்வம் அதிகம் உடை யவர்களின் வாழ்க்கை எப்படி இருக்குமோ அது போல உன் வாழ்க்கையும் வசதியாகத் தான் இருக்கும்.ஆனால் மற்ற விதங்களில் நீ அதே நிலையில்தான் இருப்பாய். அது தான் சமுதாயத்தில் உயர்ந்த இடங்களில் இருப்பவர்களின் நிலை.மரணம் இல்லாத பெருவாழ்வை செல்வத்தால் ஒரு நாளும் தர முடியாது. மரணமில்லாத பெரு வாழ்க்கை முற்றிலும் வேறானது.”

    மைத்: “ அப்படியானால் நீங்கள் பிரித்துத் தரும் இந்தச் செல்வத்தால் என்ன பயன்? இறப்பு ஒருநாள் என்னை அழித்துவிடும் என்றால், உலகின் நிலையாமை என்னை அச்சுறுத்தும் என்றால் ,எதுவுமே பாதுகாப்பற்றது என்றால்… எதுவும் எவ்வளவு காலம் பயன் தரக் கூடியது என்பதற்கான உறுதியை என்னால் அறிய முடியவில்லை என்றால் …நீங்கள் எனக்குத் தரும் இந்தச் செல்வம் எப்படி நல்லது என்று சொல்ல முடியும்? எங்க ளுக்கு நல்லதைத் தர முடியும் ? மதிப்புடையதாக இருக்க முடியும்? திருப்தியையும், நிரந்தர மகிழ்ச்சியையும் தராத ஒன்றை வைத்துக் கொண்டு நான் என்ன செய்வது? சுவாமி ! குழப்பமாக இருக்கிறது இது தொடர்பாக உங்களுக்கு என்னவெல்லாம் தெரியுமோ அதை எனக்குச் சொல்லுங்கள். என் மனதில் உள்ள சந்தேகம் என்னும் நோயை நான் தீர்த்துக் கொள்கிறேன். நிரந்தரமான மகிழ்ச்சியை அடைய நான் என்ன செய்ய வேண் டும்? எப்படிச் செயல் படவேண்டும் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டும். பிறகு எதனிடம் இருந்தும் எனக்கு அச்சம் ஏற்படாது. இது சாத்தியமா? எப்படி நான் நிலைத்த திருப்தியைப் பெறுவது?”

    யாக்ஞ: “மிக அருமையான கேள்வி மைத்ரேயி. நீ எப்போதும் எனக்கு அருமையான வளாகவே இருந்து வந்திருக்கிறாய். இதோ, இப்போதும் அப்படித்தான். அளவற்ற செல்வத்தை உன்னிடம் ஒப்படைத்து விட்டுப் போகும் போது இப்படி ஒரு கேள்வியை நீ கேட்பாய் என்று நான் நினைக்கவில்லை.இப்போது இது தொடர்பான எல்லா ரகசியத் தையும் உனக்குச் சொல்கிறேன். நான் சொல்வதை கவனமாகக் கேள். என் முன்னால் நீ வைத்துள்ள மிகப் பெரிய சிக்கலுக்கான ரகசியத்தைச் சொல்கிறேன். நீ கேட்ட கேள்வி மிக அர்த்தம் உடையது. செல்வத்தை வைத்திருப்பதன் மூலம் மக்கள் நிரந்தர மகிழ்ச்சியை அடைய முடியாது. கணவனுக்காக கணவன் மீது மனைவி அன்பு காட்டுவதில்லை. அவனுடைய ஆத்மாவை விரும்புவதால் அவள் கணவனை விரும்புகிறாள்.அது போலத் தான் கணவன் மனைவியை நேசிப்பதும். குழந்தைகளுக்காக யாரும் குழந்தைகளை விரும் புவதில்லை. ஆத்மாவை விரும்புவதால் குழந்தைகளை விரும்பும் தன்மை தான் அது. எனவே மைத்ரேயி நாம் காண வேண்டியது ஆத்மாவைத்தான் .உன் சிந்தனைகளும் ,தியா ன மும் நிலத்திருக்க வேண்டியது ஆத்மாவின் மீதுதான்.இந்த ஆத்மா, கேட்கப் படுவ தும்,காரணப்படுத்தப்படுவதும், தியானிப்பதும் ஆகும். ஒவ்வொரு முறையும் ஒரு பொருளைக் ’குறிப்புப் ’ படுத்துகிறோம்.அதைத் தன்னிடம் இருந்து வேறு படுத்துகிறோம். நான் ஒரு பெண்ணைக் காதலிக்க முயற்சிக்கிறேன்.அந்தப் பெண் என்ற குறிப்பு வந்த வுடன் ஆத்மா என்பதிலிருந்து அவள் விலகிவிடுகிறாள். அவளுக்கான என் காதல் அது. அது சோகத்தில் முடிகிறது. ஆனால் அந்தப் பெண்ணை நான் ஆத்மாவாகப் பார்க்கும் போது அந்தக் காதல் பூரணமாகிறது. துன்பம் எதுவும் அடைவது இல்லை.ஆத்மாவை விட்டு மற்றவற்றை விரும்பினால் உலகில் துன்பமும், வருத்தமும்தான். ஆத்மாவில் இருந்து எல்லாம் வேறுபட்டது என்று மனிதன் நினைக்கும் போது அவனை எல்லாம் கை விட்டு விடுகின்றன.ஆத்மாவை உணர்வதுதான் பேரானந்தம். இந்த நிலைக்குள் எப்படி வருவது? உலகம் எல்லையற்றது.ஆத்மாவை அறியாமல் எப்படி ஒவ்வொன்றிற்கும் உள்ள ஆத்மாவை அறிவது ?ஒரு முரசு இசைக்கப்படும்போது நாம் தொலைவில் இருந்தால் அந்த ஓசையைக் கேட்க முடியாது. அருகில் வந்து நம் கைகளை அதன் மீது வைத்தால் ஓசையை அனுபவிக்க முடியும்.இனிமையை உணர முடியும். சங்கு முழங்கும் போது அருகில் இல்லாதவரை அதன் முழக்கம் கேட்காது. அருகே வந்து தொடும் போது அதை உணர முடிகிறது. வீணை நாதத்தை உணர்வதும் இப்படித்தான். மற்ற பொருட்க ளில் பரம்பொருள் உள்ளூர உறைந்து இருப்பதை அறிந்து அதன் வழியாகவே அதனை அடைய முடியும். இதுதான் பரம் பொருளை அறியும் வழியாகும். ஈற வி்றகைப் பற்ற வைத்தால் அதனிடம் இருந்து எழும் புகை மேலே செல்வது போல பரம்பொருளில் இருந்துதான் வேதங்களும், ஸ்மிருதிகளும் உருவாயின. புகையை அறிந்தவன் அக்னியை அறிந்தவனாவான் என்று சொல்ல முடியாது.வேதங்களை அறிந்தால் மட்டும் போதாது. விறகு எரியும்போதுதான் அக்னியைக் காண முடிவது போல ஞானம் ஏற்படும் போதுதான் பரம்பொருளை காண முடியும்.எந்தத் தண்ணீருக்கும் கடலை அடைவதுதான் குறி. எல்லாத் தொடு உணர்ச்சிக்கும் தோல்தான் மூலம் .எல்லா நுகர்வுகளுக்கும் மூக்கு தான் மையம்.எல்லா சுவைகளுக்கும் நாக்குதான் அடிப்படை.எல்லா வடிவங்களுக்கும் கண் தான் மூலம்.எல்லா ஓசைகளுக்கும் காதுதான் அடையாளம். எல்லாச் செயல்களுக்கும் கைதான் மூலம் எல்லா எண்ணங்களுக்கும் மனம்தான் அடிப்படை. உப்பு தண்ணீரில் கரைந்த பிறகு முன்னிருந்த வடிவத்தில் இருக்காது . ஆனால் எங்கு தண்ணீரைச் சுவைத்தாலும் உப்புதான் மைத்ரேயி ! பரமாத்மா எல்லையற்றது. எந்தச் சேர்க்கையில் உருவம் படைத்தது போல இருந்ததோ அந்த பஞ்ச பூதங்களில் இருந்து பிரிந்து மீண்டும் விஞ்ஞான கனத்தில் அதிலேயே மறைந்து போகிறது.மரணத்தின் பின் உணர்வு நிலையில்லை.அறிவு இல்லை. ஆத்மா பரமாத்மாவை அடைந்த பிறகு தனித்து நிற்கும் உலகம் ஏது ? தான் ஏது? இதுதான் நான் உனக்குச் சொல்வது !”

    மைத்: “மறைந்த பிறகு அறிவு இல்லை,உணர்வு இல்லை என்று நீங்கள் சொல்வது எனக்கு குழப்பத்தை தருகிறதே!”

    யாக்ஞ: “நான் உன்னைக் குழப்பவில்லை மைத்ரேயி !ஞானம் அடைய ,உண்மை அறிவைப் பெற இது போதும் என்கிறேன். இருமை [இரண்டு என்ற நிலை] இருக்கும் போது ஒன்று மற்றொன்றைப் பார்க்கலாம். மற்றொன்றைக் கேட்கலாம். மற்றொன்றை நினைக்கலாம். ஆனால் எல்லாம் ஆத்மாவாய் இருக்கும் போது ,காணும் போது,உணரும் போது எதைப் பார்க்க முடியும்? அறிய முடியும் ? கேட்க முடியும்?எல்லாமும் யாரால் அறியப்படுகிறதோ அதனை எதனால் அறியமுடியும்?அறிவோனை எதைக் கொண்டு அறியமுடியும்?ஆத்மா தன்னையே வேறு ஒரு பொருள் போலக் காண முடியாது. அறிப வனும்,அறியப்படுபவனும் ஒன்றேயான பிறகு அறிதல் எப்படி நிகழ முடியும்? ஆத்மா ஒன்றை மட்டும் அறிந்து விட்டால் உலகில் அறிய வேண்டியது எதுவும் இல்லை.உலகமே ஆத்ம வடிவம்தான்.ஆத்மாவின் பொருட்டே அனைத்தும் பிரியத்துக்கு உரியதாகிறது. கண்ணெதிரில் காணக் கூடிய எல்லாமும் அழியக் கூடியது. ஆத்மா அழிவற்றது. அதை அறிவதே மோட்சம். மைத்ரேயி ! மரணத்தை வெல்வதற்கான வழி ஆத்மாவை ஆராய்ந்து அறிவதுதான்” என்று மனைவிக்கு யாக்ஞவல்கியர் சொன்னதாக பிரஹதாரண்ய உபநிடத்தில் ஒரு சிறு பகுதி அமைகிறது.
    இதை அடுத்து யாக்ஞவல்கியர் சந்நியாசத்தை மேற்கொள்கிறார். வாழ்வின் உண்மையை அறிந்து கொண்ட மைத்ரேயி தானும் தவ வாழ்க்கையில் ஈடுபட்டதாக வரலாறு அமைகிறது.

    image.png

    வேதாந்தினியான மைத்ரேயி தன்னுடைய வேத ஞானத்தால் ’ரிக் வேதத்தில் ’பத்து பாடல்களைச் சொல்லிய பெருமைக்கு உரியவள் என்ற கருத்து உண்டு. ’மைத்ரேயி உபநிடதம்” என்ற உபநிடதத்தை உருவாக்கியவள் ,கார்க்கி மைத்ரேயி, போன்றவர்கள் ’ பிரம்மவாதினிகள்என்று அழைக்கப் பட்டிருக் கின்றனர். [பரம்பொருளை அறிய விரும்பியவர்கள் , வேத வியாக்கியானம் செய்தவர்கள்,: கற்றவர் சபைகளில் கலந்து கொண்டவர்கள் என்று இதற்கு விளக்கம் தரப்பட்டுள்ளது.]

    வேத காலத்திலேயே ,வேதாந்த அறிவுப் பசியில் வாழ விரும்பிய ஒரு பெண்ணுக்கு அவள் விரும்பிய வகையில் இடம் தந்து, அவள் விருப்பத்தை நிறைவேற்றியதற்கான சூழலில் இதைப் பெண் சிந்தனை உயர்வு, தன்னைப் பெண் உணர்ந்த விதம் என்று வகைக்குள் அடக்கி வேதகாலப் பெண் உயர்வை உணரலாம்.
    ————————–

    Share