Blog

  • வாழ்ந்து பார்க்கலாமே 50

    வாழ்க்கை – நமக்கு நாமே கொடுத்துக்கொள்ளும் ஒரு பரிசு

    வாழ்க்கையின் குறிக்கோளே மகிழ்ச்சியாக வாழ்வதுதான் என்ற சொற்கள் காதுக்குக் கேட்க இனிமையாக இருக்கின்றது. ஆனால் நம்மால் அப்படி வாழ முடிகின்றதா? நமக்கு எது மகிழ்வைத் தருகின்றது? பணம், புகழ் , பதவி, உறவுகள், ஆளுமை போன்ற பலவற்றை நாம் வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டும் மகிழ்ச்சியை நாம் தொடர்ந்து நிலை நாட்டிக்கொள்ள முடியவில்லையே!  மகிழ்ச்சி என்பது மிகச் சிறிய காலக் கட்டங்களில் வந்து மின்னலைப் போல ஒளிர்ந்துவிட்டு மறையக்கூடியதா அல்லது நீலவானில் குளிர்ந்து ஒளிவிட்டு நிற்கும் முழுநிலவைப்போன்றதா?  அது சரி, நாம் மகிழ்ச்சியாக இருந்தாலும் உள்ளத்தில் அமைதியோடு இருக்கின்றோமா? உள்ளத்தில் அமைதியைக் கொடுப்பது மகிழ்ச்சியா, நிறைவா அல்லது ஆளுமையா? நிறைவாக இருக்கும் நேரத்தில் நாம் மகிழ்ச்சியாக இருக்கின்றோமா? பல கேள்விகள் நம் முன்னே தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன? இந்தக் கேள்விகள் புதிதல்ல. நம்முடைய புராண காலத்துக் கதைகளை படிக்கும் பொழுது நமக்குத் தெரியும் இது போன்ற கேள்விகளைத் தான் நசிகேதன் எமனின் அரண்மனை வாசலில் நின்றுகொண்டு எமனிடம் கேட்டான்.

    இதற்கு பதிலளிக்கும் வகையில் அவனுக்கு பதில் கொடுத்த கூற்றுவன்-ஐம்பொறிகளால் கிடைக்கின்ற மகிழ்வுகளும் மற்றும் நாம் விரும்பும் தேவைகளின் நிறைவில் கிடைக்கின்ற மகிழ்வும் ‘பிரேயஸ்” என்று அழைக்கப்படும். இவைகள் நிரந்தரமல்ல. சிற்றின்பங்கள். அதே நேரத்தில் வாழ்க்கையின் முழுமையை நன்கு அறிந்து எல்லாமே நமக்குச் சொந்தம் என்ற எண்ணத்திலும் எதுவுமே நமக்குச் சொந்தமில்லை என்ற எண்ணத்திலும் பற்றற்ற பற்றை நாம் உணர்ந்து தாமரையிலைத் தண்ணீர்போல் வாழ்ந்தால் வாழ்வின் துயரங்கள் நம்மைத் தாக்காது என்ற ஒரு உண்மையை எடுத்துரைக்கின்றான்.

    அப்படியென்றால் நாம் மனத்தைக் கட்டுப்படுத்தவேண்டுமா? அல்லது நமது மனதில் ஏற்படும் ஆசைகளையும் உணர்வுகளையும் ஓரங்கட்டி ஒதுக்கிவிடவேண்டுமா ? இரண்டுமே மிகவும் கடினமான செயல்கள்தான்? பல துறவிகளால் கூட இந்த நிலையை அடையமுடியவில்லையே!! இதைப்பற்றி அலசி ஆராய்ந்த நமது முன்னோர்கள் மனதை ‘நிலைப்படுத்திடுவது’ மனதை ‘ஒருமுகமாக்குவது’ பற்றிய பல அறிய தத்துவங்களை நம் முன் வைத்தார்கள்.

    இதன் முதல் படியே மனதின் வேகத்தைக் கட்டுப்படுத்தி அங்கே ஏற்படும் சபலங்களையும் சஞ்சலங்களை சூறாவளியில் பறந்துசெல்லும் ஒரு இலையைப் போல் பறக்கவிடாமல் உண்மையை அறிந்து அமைதியாக இருக்கப்  பழக்கப்படுத்துவதான். இதையே யோகதத்துவங்களை விளக்கிக்கூறும் பதஞ்சலி முனிவர் தன்னுடைய முதல் பாடமாகக் கூறுகின்றார். ‘சித்தத்தை ஒருமுகப்படுத்துவதுதான் யோகநிலையென்று’.

    இப்படிப்பட்ட தத்துவங்களெல்லாம் எனக்குப் புரியாது. நடைமுறைக்கு உதவுவதுமாதிரி சொல்லுங்கள் என்கிறார் என் நண்பர். வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு என்ன வழி?

    1. வாழ்க்கை இனிமையானது. ஆனால் அந்தப் பாதையில் துயரங்களும் நமக்காகக் காத்திருக்கும். அதை நாம் இன்பத்திற்குச் சமமாக ஏற்றுக்கொள்ளவேண்டும்.
    2. நாம் இருக்கும் இடத்தில் நின்றுகொண்டிருந்தால் மகிழ்ச்சி நம்மைத் தேடி வராது. முயற்சிக்க வேண்டும் வாழ்ந்து பார்க்கவேண்டும். முயற்சி திருவினையாக்கும் .
    3. நமது வாழ்க்கை நமக்கு மட்டும் சொந்தமானது. இதை மற்றவர்களின் வாழ்க்கையோடு ஒப்பிட்டு நம்முடைய தரத்தையோ தனித்தன்மையையோ குறைத்துக்கொள்ளவோ மாற்றிக்கொள்ளவோ முயற்சி செய்வது தவறானது. நமது வாழ்க்கையை நாம் வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.
    4. தனிமரம் தோப்பாகாது. ஒரு சமுதாயத்தில் நாம் சேர்ந்து வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். எனவே மற்றவர்கள் துயரப்படும்பொழுது நாம் மட்டும் மகிழ்வோடு இருக்கமுடியாது. நமது வாழ்வின் மகிழ்வே நாம் மற்றவர்களுக்கு எவ்வாறு உபயோகமுள்ளவர்களாக இருக்கின்றோம் என்பதை பொறுத்ததுதான். கூடிவாழ்ந்தால் கோடி நம்மை.
    5. உண்மையான மகிழ்வு பொருட்களையோ அல்லது செல்வத்தையோ சேர்ப்பது அல்ல. “பொருட் செல்வம் ” எவ்வளவுக்கெவ்வளவு தேவையோ அதுபோல ‘அருட் செல்வம்” தேவை. எனவே இறையுணர்வோடு வாழ்ந்து எல்லா உயிர்களிலும் இறைவனின் பிரதிபலிப்பை உணர்ந்து செயல்படுதல் அவசியம்.
    6. வாழ்க்கை ஒரு குதிரைப் பந்தயம் அல்ல. வேகம் தேவையில்லை. நிதானம் தேவை. இறைவனாலும் இயற்கையினாலும் நமக்குக் கொடுக்கப்பட்ட நேரத்தையும் காலத்தையும் சிறப்பாகப் பயன்படுத்தத் தெரிந்து கொள்ளவேண்டும். காலம் பொன்னானது. “உலகத்தில் உன்னை யார் வேண்டுமானாலும் மன்னித்து விடலாம். ஆனால் நீ நழுவவிட்ட நேரம் உன்னை என்றும் மன்னிக்காது.” என ஆங்கிலக் கவிஞர் உருட்யார்ட் கிப்ளிங் (Rudyard Kipling) என்பவர் கூறுகின்றார்.
    7. இருப்பதில் நிறைவு இல்லாமல் இல்லாததையோ அல்லது தேவையில்லாதையோ அல்லது நமது சக்திக்கும் முயற்சிக்கும் அப்பாற்பட்டதையோ தேடுதல் அறிவின்மைக்கு அறிகுறி. “நிறைவு” அமைதியான வாழ்க்கைக்கு முதல் படி.
    8. அறிவுக்கண்கள் எப்பபோழுதும் திறந்திருக்க வேண்டும். “கற்றல்” -தொட்டில் முதல் கடைசி மூச்சுவரை நடக்கக் கூடிய ஒரு இயல்பான செயல். கற்றலின் மூலமாக நமது வாழ்வை வளப்படுத்திக்கொள்ள வேண்டும். என்று நமது கற்றலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ அன்றே நமது வாழ்க்கையின் துடிப்புக்கள் அடங்க ஆரம்பித்துவிடும். கற்க மறுக்கின்ற ஒருவன் ஒரு நடைப்பிணத்திற்கு சமமானவன் என்று அறிஞர்கள் கூறுகின்றார்கள்.
    9. “வெற்றி-தோல்விகள்” வாழ்வில் ஏற்படும் சில நிகழ்வுகள். அவைகள் நம்மை பாதிக்கக்கூடாது. வாழ்வில் என்றும் “மேன்மை” (Excellence)யைத் தேடவேண்டும். “மேன்மையைத்” தேடும் பாதையில் பல வெற்றிகளும் சில தோல்விகளும் நமக்குக் கிடைக்கலாம். ஆனால் மேன்மை (Excellence) என்ற இலக்கு மிகச் சிறப்பானது.
    10. சிறப்பாக வாழ நமது வாழ்க்கைப் பாதைக்குச் சில ஒழுக்கங்களும் கட்டுப்பாடுகளும் தேவை. இவைகளை நமக்கு நாமே கொடுத்துக்கொள்ள வேண்டும். நமக்கு மற்றவர்களால் கொடுக்கப்படும் கட்டுப்பாடுகளும் ஒழுங்குமுறைகளும் நம்முடைய கட்டுப்பாடற்ற சிந்தனைக்கு உதாரணங்கள். நமக்கு நாமே முன்னுதாரணமாக இருத்தல் சிறப்பானது.
    11. தன்னம்பிக்கை வாழ்வின் வளர்ச்சிக்கு நாம் இடும் உரம். தன்னம்பிக்கை இல்லாத செயல்களும் தன்னம்பிக்கை இல்லாத ஈடுபாடுகளும் தன்னம்பிக்கையில்லாத முயற்சிகளும் விழலுக்கிறைத்த நீர்போல் காலப்போக்கில் தோல்விகளையே தரும்.
    12. மற்றவர்களைப் பாராட்டக் கற்றுக்கொள்ள வேண்டும். மற்றவர்களை நாம் மனம் திறந்து பாராட்டும் பொழுது நம்முடைய ஆணவம் அடிபட்டுப் போகின்றது. ஆணவமற்ற பணிவுடன் கூடிய அறிவும் திறனும் எல்லோராலும் போற்றப்படும்.
    13. உடல் நலம், மன நலம் ஆகிய இரண்டையும் பேண வேண்டும். நலமில்லாத உடலும், நலமில்லாத மனமும் முரண்பாடுகள். ஆகவே சிறப்பாகவும், மகிழ்வோடும் வாழ்வதற்கு இந்த இரண்டையும் இணைந்து போற்றினால்தான் முழுமையான வாழ்வுக்கும் வளர்ச்சிக்குமான பலன் கிட்டும்.
    14. எப்பொழுதும் ஆக்கபூர்வமான நேர்மறை எண்ணங்களோடு (Positive Thinking) வாழவேண்டும். நேர்மறையான எண்ணங்கள் கொண்டவர்களின் சூழலில் இருத்தல் அவசியம். எதிர்மறையான எண்ணங்களும் அப்படிப்பட்ட சிந்தனைகளில் வாழ்பவர்களும், கூடஇருந்தே நமது தோல்விக்கு வித்திட்டுக் கொண்டிருப்பார்கள். எதிர்மறை எண்ணங்கள் நம்மை பின்னோக்கித் தள்ளும்.
    15. “நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் வாழ்க்கை என்றும் இன்பமில்லை.” எதிர்பார்க்காத, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத சந்திப்புக்கள் வாழ்க்கையில் நம்முடைய திறன்களைக் காட்டக் கிடைக்கும் வாய்ப்புக்கள். அவைகளை சந்தித்து முன்னேறக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    வாழ்க்கை வாழ்வதற்கே !  வாழ்ந்து பார்க்கலாமே !!

    (நிறைவு)

    Share
  • (Peer Reviewed) பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா? – இயற்பியல் ஆய்வு

    நடராஜன் ஸ்ரீதர், சந்திரமோகன் இரத்தினம்

    முது அறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை, ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி , தேவகோட்டை

     natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com

    ===========================================

    இயற்பியல் ஆய்வுகள், அவ்வப்போது பல வியத்தகு முடிவுகளை தருகின்றன. இயற்பியல் ஆய்வுகளில் கணித அளவீடுகளின் தாக்கம் பல புதுமையான விளக்கங்களை, தீர்க்கமுடியாத சிக்கல்களுக்கு வழங்குகின்றன. இயற்பியலின் மிகப் பெரிய கேள்வி இப்பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்பதாகும். பிரபஞ்ச இயக்கவியலுக்குப் பல்வேறு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. அவற்றில் ஒரு வியத்தகு மாதிரியான, ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து பிரபஞ்சம் எனும் கோட்பாட்டினைப் பற்றி இவ்வாய்வுக் குறிப்பில் காணலாம்.

    பெருவெடிப்புத் தத்துவம்

    பிரபஞ்சம் எவ்வாறு உருவானது என்று கேள்வியின் பதிலாகப் பல்வேறு அமைப்புகள் முன்வைக்கப்பட்டாலும், அவற்றில் முன்னதாக நிற்பது பெருவெடிப்புத் தத்துவமே ஆகும். இயற்பியல் ரீதியிலும், கணிதவியல் ரீதியிலும் பெருவெடிப்புத் தத்துவம், சிறந்த முடிவுகளையே தருகிறது. மேலும் சமீபத்தில் எடுக்கப்பட்ட தரவுகள் கூட பெருவெடிப்புத் தத்துவத்தையே முன்மொழிகின்றன. உதாரணமாக பிரபஞ்சத்தில் பின்புல வெப்பநிலைத் தரவு [1] மற்றும் சூப்பர் நோவா தரவு [2]ஆகியவை பிரபஞ்சம் ஒரு சிறு புள்ளியில் இருந்து உருவாகி இருக்கும் என்பதை வலியுறுத்துகின்றன.

    இத்தத்துவத்தின் படி சுமார் 13 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பிரபஞ்சமானது ஒரு சிறு புள்ளியில் அழுத்தப்பட்டு, அதிக வெப்பநிலையில், மீயழுத்தத்தில், மீயடர்த்தியில் உறங்கிய நிலையில் இருந்தது. பின்னர் சிறு சிறு துணுக்க அதிர்வுகளிற்குப் பிறகு, இந்தப் பிரபஞ்சமானது விரிவடைய ஆரம்பித்தது. இவ்விரிவடைதல் நிகழ்வு, மிக வேகமாக வீங்குதல் [3] நிகழ்வாக நடந்தது. நிகழும்போது வெப்பநிலையும் அழுத்தமும் குறையக் குறைய அடிப்படைத் துகள்கள், அணுக்கள்,  அணுக்கூட்டங்கள், வாயுக்கள், நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள் என உருவாக்கின. இவ்வாறு உருவான இந்தப் பெரும் நாடகம் இன்றைய பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது. இன்றைய பிரபஞ்சமானது குளிர்ந்த வெப்ப நிலையிலும் மேலும் விரிவடைந்து செல்லக்கூடிய நிலை கொண்டதாகவும் மிகப் பெரிய பரப்பளவில் தட்டையானதாகவும் அனைத்துத் திசைகளிலும் ஒரே மாதிரியான அமைப்புகளைக் கொண்டதாகவும் காணப்படுகின்றது.

    இத்தத்துவத்தின்படி, விரிவடையும் பிரபஞ்சம் ஒரு குறிப்பிட்ட அடர்த்தி வரும்வரை விரிவடையும். அவ்வாறான மாறுநிலை அடர்த்தி நிலைக்குப் பிரபஞ்சம் வரும்போது இப்பிரபஞ்சமானது, தனது விரிவடைதலை நிறுத்திக்கொள்கிறது. பிறகு  இப்பிரபஞ்சமானது சுருங்க ஆரம்பிக்கிறது. அவ்வாறான சுருங்குதல் மீண்டும் முந்தைய மூல நிலைக்குப் பிரபஞ்சத்தை எடுத்து வருகிறது. இதை பெருஞ்சுருக்கம் என அறிவியலாளர்கள்அழைக்கின்றனர்.

    இந்தப் பெரும் சுருக்கத்தின் இறுதியாகப் பிரபஞ்சம், மூலப் புள்ளியில் வந்து சுருங்குகிறது. மூல நிலையில் இருந்த மீயடர்த்தி , மீயழுத்த, மீவெப்ப நிலைக்குப் பிரபஞ்சம் செல்கிறது. இது பெருவெடிப்புக் கோட்பாடு என அழைக்கப்படுகிறது.

    சுழற்சிப் பிரபஞ்சம்

    பிரபஞ்சமானது ஒரு சிறு புள்ளியில் ஆரம்பித்துப் பெரிதாக விரிந்து மீண்டும் ஒரு புள்ளியில் வந்து முடிவடைகிறது. இந்த நிகழ்வில் பிரபஞ்சத்தில் உருவாகும் தோற்றப் பொருட்கள், இறுதியாக மூல நிலையில் வந்து முடிவடைகிறது. இது ஒரு பிரபஞ்சத்தின் வாழும் காலம் என அழைக்கப்படுகிறது. இத்துடன் பிரபஞ்சமே முடிவடைந்துவிட்டதா என்றால், இல்லை. அதற்கு மாற்றாகச் சில கணித முடிவுகளும் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அம்முடிவுகளின்படி மூல நிலையிலிருந்து உருவாகி வளர்ந்து மீண்டும் மூல நிலையை அடையும் பிரபஞ்சம் ஒரு சுழற்சி நிகழ்வு எனப்படுகிறது. இந்நிகழ்ச்சியானது இத்தோடு நிற்பதில்லை. மீண்டும் துவக்க முறைகளுக்கு உட்பட்டு மற்றுமொரு பிரபஞ்ச இயக்கத்தை உருவாக்குகின்றன என்று கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இக்கோட்பாடு, சுழற்சிப் பிரபஞ்சக் கோட்பாடு [4] என அழைக்கப்படுகிறது.

    சுழற்சிப் பிரபஞ்சக் கோட்பாட்டின் படி, பிரபஞ்சமானது தொடர்ச்சியாக உருவாவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கும். அதாவது ஒரு சுழற்சியின் முடிவானது மற்றொரு சுழற்சியின் ஆரம்பமாக இருக்கும். மேலும் இக்கோட்பாடு எல்லா இயற்பியல் விதிகளுக்கும் உட்பட்டு பிரபஞ்சத்தின் இயக்கத்தை தெரிவிக்கிறது. நிரூபிக்கப்பட்ட கணிதவியல் முறைகளும் இக்கோட்பாடு எல்லா விதத்திலும் சரியாக இருப்பதையே உறுதிப்படுத்துகிறது.

    துணுக்கப் பிரபஞ்சம்

    இவ்விரண்டு கோட்பாடுகளிலும் பிரபஞ்சத்தின் மூல நிலை அல்லது பிரபஞ்சத்தின் முடிவு நிலையைப் பற்றி ஆய்வு செய்வதற்குத் துணுக்க இயற்பியலானது தேவைப்படுகிறது. ஏனெனில் மிக நுண்ணிய அளவில் பிரபஞ்சம் சுருங்கி விட்ட பிறகு, தொன்மை இயற்பியல் சமன்பாடுகளால் அங்கு எழும் சிக்கல்களைத் தீர்க்க இயலாது. எனவே அங்கு துணுக்க இயற்பியல் இயக்கங்களின் ஆதிக்கம் பேரளவில் இருக்கும். பிரபஞ்சமானது துணுக்க நிலையில் மிகவும் வேறுபாடாக பரிணமிக்கிறது. துணுக்க முறையில் ஆய்வு செய்யும்போது இந்தப் பிரபஞ்சமே ஒரு வலையமைப்பாக ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஒன்றிணைக்கப்பட்டு இருப்பதாக அறிய முடியும்[17]

    இப்பிரபஞ்சத்தின் மூல நிலை மற்றும் இறுதி நிலையை நுணுகி ஆராயும் போது, வியத்தகு முடிவுகள் கிடைக்கின்றன. பிரபஞ்சம் முற்றிலுமாகச் சுருங்கி விடும் போது அங்கு வெற்றிடம் மட்டுமே ஏற்படுகிறது. இந்த வெற்றிடம், பகுதி அளவே அல்லது சிறிது நேரத்திற்கே நீடித்துப் பின் இன்னொரு புதுப் பிரபஞ்சத்தின் துவக்கத்தை நோக்கி இப்பிரபஞ்சம் மாற ஆரம்பிக்கிறது. ஒரு பிரபஞ்சத்தில் முடிவில் மற்றும் மற்றொரு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தில் ஒரு வெற்றிடமானது காணப்படுகிறது. இந்த வெற்றிடமானது அதீத அதிர்வுகளைக் கொண்டதாகவும் இருக்கிறது[5].

    வெற்றிடத்தில் இருந்து பிரபஞ்சம்

    அப்படியாயின் அடுத்த ஒரு கேள்வி வரலாம். எவ்வாறு ஒரு பிரபஞ்சத்தின் முடிவு, இன்னொரு பிரபஞ்சத்தின் ஆரம்பத்தைப் தீர்மானிக்கிறது என்று. ஒருவாறாக முடிந்த பிரபஞ்சம் இறுதியாக வெற்றிடத்தைச் சந்திக்கிறது. இந்த வெற்றிடம் அடிப்படையில் வரைகணித அளவில் தட்டையான அமைப்புடையதாக இருக்கிறது. முழுப் பிரபஞ்சமும் துணுக்க அளவிலாக நிலைபெற்று அலைவுற்று நிற்கிறது.  மேலும் புது பிரபஞ்சத்தின் மூல நிலையும் இதே போன்ற துணுக்க வெற்றிட அளவிலேயே தொடங்குகிறது. முடிந்த பிரபஞ்சம் மற்றும் தொடக்க பிரபஞ்சம் எவ்வாறு இணைக்கப்படுகிறது என்பதற்கான நிகழ்தகவைத் துணுக்க உட்குடைதல் தீர்மானிக்கிறது[6]. துணுக்கஉட்குடைதல் என்பது தொன்மை இயற்பியல் அளவில் சாத்தியமில்லாத வழிமுறைகளை உறுதி செய்கிறது.

    இந்நிகழ்வு, தொன்மை இயற்பியல் முறையில் நிச்சயமாக தாவிக் குதித்துச் சென்றிருக்கக்கூடிய பாதைகளை ஊடுருவி உட்புகுந்து கடப்பதன் நிகழ்தகவை வெளிப்படுத்துகிறது. அதாவது தொன்மை முறையில் சாத்தியமே இல்லாத இயக்கத்தின் பாதைகளையும் துணுக்க முறையில் கடக்கும் நிகழ்வானது இயற்கையின் அதிசயமாகவே பார்க்கப்படுகிறது[7].

    இவ்வாறான துணுக்கக் குடைதல் பிரபஞ்சமானது, வெற்றிடத்திலிருந்து உருவாவதையும் தெரிவிக்கிறது. ஒரு பிரபஞ்சத்தின் முடிவிலிருந்து வெற்றிடம் வாயிலாக மற்றொரு பிரபஞ்சத்தின் துவக்கம் அமைகிறது. எவ்வாறு ஒரு கதிரியக்கத் தனிமத்திலிருந்து கதிரியக்கம் வெளிப்படுகிறதோ, அதற்கு எந்த ஒரு காரணமும் தேவைப்படுவதில்லையோ அதே போலவே பிரபஞ்சமானது வெற்றிடத்திலிருந்து உருவாவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்[8].

    இவ்வாறு வெற்றிடத்தில் இருந்து உருவாகும் பிரபஞ்சம் மிக அதிகமான விரிவடைந்தது பிற்கால அளவில் பெரியதாக ஒரு மாறுகிறது. இந்தச் சுழற்சி முறை தொடர்ச்சியாக நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. பிரபஞ்சமானது வெற்றிடத்தில் இருந்து உருவாகும் என நிறுவப்படுகிறது.

    இவ்வாறான அறிவியல் ஆய்வு முடிவை தமிழ் இலக்கியங்களில் ஒப்பு நோக்கவும் முடியும். பிரபஞ்சத்தின் மூல நிலை வெற்றிடம் என்று தமிழ்க்  குறிப்புகளும் பல்வேறு இடங்களில் காணக் கிடைக்கிறது. திருமூலர்[9], மாணிக்கவாசகர்[10], அருணகிரிநாதர் [11], பாரதியார்[12], வேதாத்திரி மகரிஷி[13], வள்ளலார்[14], அப்பர் [15], மெய்கண்டதேவர் [16] என பலரும் பிரபஞ்சத்தின் மூல நிலை வெற்றிடமாக இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர். தமிழ் இலக்கியங்களில் ஆழ ஆய்வு செய்யும்போது பல்வேறு குறிப்புகள் காணக் கிடைக்கின்றன. அவற்றைக் கணித ரீதியிலோ அல்லது இயற்பியல் விதிகளிலோ ஆய்வு செய்யும்போது வியத்தகு விளக்கங்கள் கிடைக்கின்றன. பிரபஞ்சம் தோன்றிய விதங்களைப் பற்றிய குறிப்புகள், தமிழ் இலக்கியங்களில் காணக் கிடைக்கலாம் என்று கூட வரையறுக்கப்பட முடிகிறது. மேலும் பிரபஞ்சமானது வெற்றிடத்தில் இருந்து உருவாக்கியிருக்க முடியும் எனவும் நம்மால் உறுதி செய்துகொள்ள முடிகிறது.

    மேற்கோள்கள்

    1. Schlegel, D. J., Finkbeiner, D. P., & Davis, M. (1998). Maps of dust infrared emission for use in estimation of reddening and cosmic microwave background radiation foregrounds. The Astrophysical Journal, 500(2), 525.
    2. Riess, A. G., Strolger, L. G., Casertano, S., Ferguson, H. C., Mobasher, B., Gold, B., … &Tonry, J. (2007). New Hubble space telescope discoveries of type Ia supernovae at z≥ 1: narrowing constraints on the early behavior of dark energy. The Astrophysical Journal, 659(1), 98.
    3. Guth, A. H. (1981). Inflationary universe: A possible solution to the horizon and flatness problems. Physical Review D, 23(2), 347.
    4. Lehners, J. L. (2008). Ekpyrotic and cyclic cosmology. Physics Reports, 465(6), 223-263.
    5. Tryon, E. P. (1973). Is the universe a vacuum fluctuation?. Nature, 246(5433), 396.
    6. Vilenkin, A. (1984). Quantum creation of universes. Physical Review D, 30(2), 509.
    7. Caldeira, A. O., & Leggett, A. J. (1981). Influence of dissipation on quantum tunneling in macroscopic systems. Physical Review Letters, 46(4), 211.
    8. Vilenkin, A. (1982). Creation of universes from nothing. Physics Letters B, 117(1-2), 25-28.
    9. திருமூலர், திருமந்திரம் ,387,385
    10. மாணிக்க வாசகர். திருவாசகம், சிவபுராணம், திருவண்டப்பகுதி
    11. அருணகிரிநாதர், கந்தரலங்காரம்.
    12. பாரதியார், பரசிவ வெள்ளம்
    13. வேதாத்திரி மகரிஷி, ஞானக்களஞ்சியம் -2, வேதாத்திரிபதிப்பகம்
    14. வள்ளலார், திருவருட்பா
    15. ஜகந்நாதன். கி.வா. அப்பர் தேவார அமுது, பூரவிபதிப்பகம்
    16. மெய்கண்டதேவர் ,சிவஞானபோதம்
    17. நடராஜன்.ஸ்ரீ, சந்திரமோகன். இர.(2017) தீதும்நன்றும்பிறர்தரவாரா – இயற்பியலாளரின் பார்வையில். மின்தமிழ்மேடை (11). 180-186. தமிழ் மரபு அறக்கட்டளை

    கலைச்சொற்கள் மேற்கோள் நூல்

    ஜெ. கோட்டாளம், அறிவியல் தொழில்நுட்ப இலக்கியங்களைத் தமிழாக்குவற்கான ஒரு கையேடு. https://drive.google.com/file/d/0BzwpbxABzaV5SzVpQ24tY0NGVXc

    இக்கட்டுரையில் கீழ்க்காணும் கலைச்சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    துணுக்கம் – Quantum

    துணுக்க உட்குடைதல் – quantum tunneling

    =================================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பிரபஞ்சம் ஒன்றுமில்லாத ஒன்றிலிருந்து உருவானதா என்ற வினாத் தலைப்பில் இரட்டை ஆய்வாளர்கள், நடராஜன் ஶ்ரீதர் & சந்திரமோகன் இரத்தினம் ஆகியோர், இதுவரை பிரபஞ்சத் தோற்றம் எப்படி உருவானது என்று  விஞ்ஞானிகள் சிலர் யூகித்த ஒரு கோட்பாட்டை உதாரணங்களுடன் விளக்குகின்றனர். இக்கோட்பாடு, இதுவரை [2018]  பெரும்பான்மை விஞ்ஞானிகளால் ஒப்புக்கொள்ளப்பட்டவையுள் ஒன்றே. வல்லமை வலையிதழில் வெளியிடத் தகுதியுள்ள ஆய்வுக் கட்டுரை. தமது கோட்பாட்டுக்குச் சில தமிழ் இலக்கிய நூல்களையும் சான்றாகக் காட்டியுள்ளனர். அவற்றின் வரிகளையும் ஆசிரியர்கள் குறிப்பிட்டிருக்கலாம்.  இதனுடன் தொடர்புடைய இந்தக் கட்டுரையை ஆய்வாளர்கள் கவனித்திருக்கலாம்: http://www.vallamai.com/?p=83914 

    =================================================================

    Share
  • இந்த வார வல்லமையாளர் (294) – டாக்டர் சுதா சேஷய்யன்

    தமிழில் ஆர்வம் கொண்டு செயல்பட்டு அதன் மேம்பாட்டிற்கும் தமிழ் மக்களின் நல்வாழ்விற்கும் உழைக்கும் அறிஞர்களும் சான்றோர்களும் அதிக பட்சம் பிற துறைகளிலும் சாதித்தவர்களாக இருக்கிறார்கள். இந்த வார வல்லமையாளரும் அப்படிப் பட்டவர் தான்.

    “பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
    இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்”

    என்பார் பாரதியார். அப்படி உலகமெங்கும் வியக்கும் பல மருத்துவக் கருத்துகளைத் தமிழ்மொழியிலும் தந்து, தமிழின் மீதும் ஆன்மீகச் சிந்தனைகளின் மீதும் தீராத காதலாகி, அவை இரண்டையும் தமதிரு கண்களாகவே போற்றி வாழ்ந்து வரும் டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள்.

    பல இதழ்களில் ஆன்மீக சிந்தனைகளை எழுதியும், பல மேடைகளில் தமிழர் தெய்வீகத்தை உரையாற்றியும் வருகின்ற டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளராகப் பணியாற்றி, மருத்துவம் தொடர்பான நிறைய கட்டுரைகளைத் தமிழில் எழுதிச் சிறப்பு சேர்த்தவர். அந்தப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக இருந்த திருமதி கீதா லட்சுமி ஓய்வு பெற்றதும், அதற்கடுத்த இரண்டே நாட்களில், மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்களால் அதே மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவர், மருத்துவப் பேராசிரியர், ஆன்மீகவாதி, சொற்பொழிவாளர், எழுத்தாளர் என்ற பல பரிமாணங்களைத் தாங்கி நிற்கும் சுதா சேஷய்யன் அவர்கள் இப்போது துணைவேந்தர் என்ற உயரிய பதவியையும் தமது திறத்தால் அடைந்து உயர்ந்துள்ளார் என்பது பாராட்டுதலுக்கு உரியது.

    மனித உடற்கூறியல் துறையில் மிகவும் பிரபலமான Gray’s anatomy என்கின்ற புத்தகத்தை எழுதி வெளியிட்ட சர்வதேச ஆசிரியர் குழுவில் ஓர் அங்கமாக இவர் செயல்பட்டார். ஆன்மீகம் மற்றும் மருத்துவம் தொடர்பாக இவர் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறார். பல அரசு விழாக்களின் சிறப்பு தொகுப்பாளராகவும் டாக்டர் சுதா சேஷய்யன் இருந்து வருகிறார் என்பதெல்லாம் இவரது இடையறாத உழைப்பையும் திறனையும் மேற்கோளிட்டுக் காட்டும் பதிவுகள்.

    சென்ற வாரம், தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் புதிய துணை வேந்தராக நியமிக்கப்பட்டுள்ள டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பில் “வல்லமையாளர்” விருது அளிப்பதில் கௌரவம் கொள்கிறோம்.

    டாக்டர் சுதா சேஷய்யன் அவர்களைப் பற்றி தி இந்து வெளியிட்டிருக்கும் செய்தி
    https://www.thehindu.com/features/friday-review/art/balancing-act/article2011893.ece

    மருத்துவத்தோடு மலர்த்தமிழ்த் தொண்டும்
    பொருத்தமாய்ச் செய்து புவியில் – அருத்தமுடைச்
    சொல்லொடு வாழும் சுதா சேஷயனுக்கு
    வல்லமை யாளர் விருது!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.2 (வருகைப்பருவம்)

    – மீனாட்சி பாலகணேஷ்


    குழந்தை முருகனுக்குப் பலவிதமான அலங்காரங்களைச் செய்துபார்க்கும் தாய், ஒரு கட்டத்தில் அவனே முதலும் முடிவுமான பரம்பொருள் எனத்தெளிந்து, மொழிகுழற அவன்புகழைப்பாடி அழைப்பதாக, திருவேரகம் சுவாமிநாதன் பிள்ளைத்தமிழிலிருந்து கவிதை நயம் பெருகும் ஒரு பாடல்: ‘வா‘ எனும் சொல் பலவிதமான பொருட்களில் பலமுறை பயின்று வரும் நயமிகுந்த பாடல்.

    ‘அன்ன வாகனனாகிய பிரமனின் நாலுமுகங்களும் தொங்கிப்போகும்படி (பிரணவ மந்திரத்தின் பொருளை உணர்ந்து உரைக்காததனால்) அவனை அறைந்தவனே! தேவர்கள் துன்பம் நீங்கிட வாவியான சரவணப்பொய்கையில் மகவானவனே! கார்த்திகைப்பெண்டிர் அறுவர் முலைப்பாலைப் பருகியவனே!

    ‘மின்னல் போலும் பெண்ணான உமை விரும்பும் சடாமுடியன் சிவபிரானின் குருவானவனே! அரக்கர் குலத்தைத் தடிந்தவனே! வலிய வேடர்களின் மகளான வள்ளிமீது மையல் கொண்டலைந்தவனே! உன் பெயரைச் சொல்பவர்கள் மீது குறையாது அருளை வழங்குபவனே!

    ‘முதல்வனே! அனைத்துக்கும் முடிவானவனே! சித்திக்கும் முத்திக்கும் முதலானவனே! முருகா வா வா என மொழிகுழற உருகி வேண்டுவோர் முன்பு வாராதிருப்பது உன் பெருமைக்குத் தகுமோ?’

    ‘பொன்கொழிக்கும் ஆறான பொன்னி எனும் காவிரிநீர் பாயும் வளநாட்டை உடையவனே! வருக! தேவர்கள் அதிபதி இந்திரனும், திருமாலும் அயனும் விருப்பொடு சலாமிட்டு வணங்கும் சுவாமிமலை முருகனே வருகவே!’ என நெகிழ்ந்துருகி உளம்கசியும் பாடலிது.

    ‘அன்னவா கனனாலு முகநாலு முகமா
    அறைந்தவா அமரர் துன்பம்
    அகலவா வியினில் மகவானவா உடுமகளிர்
    அறுவர்முலை அமுதுண்டவா
    மின்னவா வியசடையர் குருவான வாஅசுரர்
    வேரைத் தடிந்தவா வல்
    வேடர்மகள் மால்கொண்ட லைந்தவா சொல்லுவார்
    மீதிலருள் குறையாதவா
    முன்னவா யாவைக்கு முடிவான வாசித்தி
    முத்திக்கு முதலானவா
    முருகவா வாவென்று மொழிகுழற ஓதுவோர்
    முன்னர்வா ராமைதகவா
    சொன்னவா றானநீர்ப் பொன்னிபாய் வளநாட
    சுப்ரமண் யாவருகவே…’

    தெய்வங்களை வழிபடும்போது பாதாதிகேச வருணனை எனப் பெண்தெய்வங்களையும், கேசாதிபாத வருணனை என ஆண்தெய்வங்களையும் போற்றி வழிபடுவது மரபு.

    இதற்கேற்ப ஆதிசங்கரர் இயற்றிய சௌந்தர்யலகரியில் அன்னையின் திருப்பாதங்களை வருணிக்கும் ஸ்லோகம் மிக இலக்கிய நயம் வாய்ந்தது. சௌந்தர்யலஹரியினை வீரை கவிராஜ பண்டிதர் என்பவர் சுவைகுன்றாது தமிழில் மொழிபெயர்த்து வழங்கியுள்ளார். இதன் 87-வது பாடல் திருமண காலத்தில் ஐயன் அன்னையின் திருப்பதத்தை அம்மி மீது ஏற்றிவைத்த செயலைக் கூறுகிறது.
    “அன்னையே! உன் பாதங்கள் பஞ்சின்மேல் வைத்தாலும் வாடுகின்ற மென்மையான தன்மையுடையவை; சிவந்த தாமரை மலர் போன்றவை; இவ்வாறு அவற்றைப் போற்றாது சிலர் இதனை ஆமையின் மேல் ஓட்டிற்கு உவமை கூறி வீணாக வியப்பார்கள். கருநிற மிடற்றரானவரும் உனது கையை மணநாளில் பற்றுபவருமான (வரர்= வரிப்பவர், வரைந்து கொள்பவர்) பெருமான் மென்மையான உனது பாதத்தினை அம்மிக்கல் மீதும் ஏற்றி வைப்பாராம். இந்த நிகழ்ச்சியைக் கண்ணுற்றோருக்கு வஞ்சகக் கொடியநெஞ்சை உடையவர் அவர் எனவே எண்ணத் தோன்றும். ஆயினும் சிறிது எண்ணிப் பார்த்தால் அவர் அவ்வாறானவர் அல்ல, உன்பால் மெத்த அன்பு கொண்ட ஆண்டகையான் என்பது தெற்றென விளங்கும்,” என்கிறார் புலவனார்.

    ‘பஞ்சு அழுத்தினும் வாடு நின்பத
    பங்கயத்து இணை ஒப்பெனா
    விஞ்சை கற்றவர் வன்புஅக் கம்
    டத்தை வீணில் வியப்பராம்
    அஞ்சனப் புயல் அங்கை நின்வரர்
    அம்மி மீதிலும் வைப்பராம்
    வஞ்சகக் கொடு நெஞ்சர் அத்தனை
    வல்லர் அல்லர் நினைக்கினே.’

    இதே கருத்தினில் அம்மையின் திருப்பாதங்களைப் பற்றிய ஒரு பாடலை திருவுத்தரகோச மங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் நூலில் காணலாம். ஆனால் அது வருகைப்பருவத்தில் அமையாது ஊசற் பருவத்தில் காணப்படுகிறது. இருப்பினும் பாடலின் நயத்திற்காகவும், பாடுபொருளின் சிறப்பிற்காகவும் இங்கு அது கூறப்பட்டது.

    பார்வதி பரமேசுவரர்களின் தெய்வத்திருமணம், வைதிக முறையில் நிகழ்கின்றது. இத்திருமணத்தைக் காண மறைகள் அனைத்தையும் உணர்ந்தவனான பிரமதேவன், முகுந்தன் எனப்படும் திருமால், குலிசம் எனும் வச்சிராயுதத்தைக் கையில் ஏந்திய தேவர்கள் தலைவனான இந்திரன், எனும் இவர்களைத்தவிர இன்னும் முப்பத்து முக்கோடி தேவர்களுடன் எண்ணற்ற புலவோரும் சித்தர்களும் திரண்டெழுந்துள்ளனர். அவர்கள், “இத்தெய்வத் திருமணத்தைக் காண நமக்கு இதுவென்ன பாக்கியம்?” என உள்ளம் நெகிழ்ந்து உருகுகின்றனராம்.

    சித்திரைத் திங்களில் பல திருக்கோவில்களிலும் ஐயன், அம்மையின் திருமண விழா நடைபெறும். அதுதான் இங்கு கூறப்படுகிறது.
    பக்தியினால் உருகும் அன்பர்கள் உள்ளம் பச்சாதாபத்தினாலும் உருகுகிறதாம். எதனால் என்று பார்ப்போமா?

    நமது வைதிகமுறைத் திருமணத்தில் ‘அம்மி மிதித்தல்,’ என ஒரு சடங்கு உண்டு. அதானது, மணப்பெண்ணின் இடது பாதத்தின் பெருவிரலை மணமகன் தனது வலக்கரத்தால் பிடித்தெடுத்து, ஒரு அம்மிக்கல்லின் மீதேற்றி வைப்பதாகும். இதன் பொருள் என்னவென்றால், “இந்தக் கல்லினைப்போல் கடினசித்தம் கொண்டவளாகி, மன உறுதியோடும், வலிமையோடும் வாழ்வில் என்னுடன் இணைந்து இன்பதுன்பங்களில் பங்குகொள்வாயாக,” எனக் கூறுவதாகும். இதற்கான மந்திரங்களை மணமகன் அப்போது உச்சரிப்பது வழக்கம்.

    சிவனுக்கும் பார்வதிக்கும் நடைபெற்ற திருமணத்திலும் இச்சடங்கினை மணமகனாகிய சிவபிரான் செய்தார். அன்பர்களால் புகழ்ந்து துதிக்கப்பட்ட (துதி மணக்கின்ற) அம்பிகையின் பாதங்களிலொன்றை எந்தையாகிய பிரான் எடுத்து அம்மிமேல் வைத்ததால், கடினமான அம்மிக்கல்லில் பட்டுச் சிவந்துபோன அப்பாதத்தைக்கண்டு அடியார்கள் மனம்வருந்தி உருகுகிறார்களாம். பாதத்தைக் கண்டு உருகியது ஒருபுறம்; இவ்வாறு ஐயன் அம்மையின் மலர்ப்பாதத்தைக் கல்லின்மீது வைக்கும் தொழிலைக் கண்டும் உள்ளம் உருகுகிறார்களாம்.

    ஏனெனில் ஒரு பெரியமனிதரை எந்த ஒரு சிறு செயலையும் செய்ய அவருடைய அடியார்களும், அன்பர்களும் விடமாட்டார்கள். அவர் செய்துவிட்டால் பொறுக்கவும் மாட்டார்கள்! சிவபிரான் என்ன சாமானிய மனிதரா?அந்தம் ஆதி அற்ற உயர்வானவனல்லவா? ஆனால் இந்தச் செயலை, சடங்கினை, அவனன்றி அவனுடைய திருமணத்தில் யாராலும் செய்ய இயலாதே! அதுமட்டுமல்ல; இப்போது அன்னையே அத்தன் செய்த அத்தொழிலுக்காக உருகுகிறாளாம்.

    தனது பாதத்தினை அவருடைய திருக்கரத்தாற் தூக்கி அம்மிமேல் இட்ட செய்கை மென்மையான அவளுடைய இதயத்தை உருக்கிவிட்டது. ஏன்? அவளை மணம் புரிந்து கொள்பவன் அகில சராசரங்களுக்கும் நாயகன். அகிலநாயகியான அவளுமே செயற்கரிய தவங்களைச் செய்தே அவனை அடைந்திருக்கிறாள். மற்றும் அவன் காலால் இட்ட பணியைத் தலையால் செய்ய தேவரும் மற்றோரும் காத்திருக்கிறார்கள். அவனோ தனது தகுதிக்கேற்றவண்ணம் பெருமிதம் கொண்டு நில்லாது, ‘இது நம் திருமணம்; இது ஒரு புனிதமான முதன்மையான சடங்கு,’ என்று உள்ளத்தில் கொண்டு, அம்மையின் பூம்பாதத்தைத் தன் திருக்கரத்தால் பற்றி, அதனை எடுத்து மென்மையாக அம்மிமேல் வைக்கிறான்.

    அந்த மெல்லிய பூப்போன்ற பாதத்தை அம்மிமேல் தூக்கிவைக்க அவனுடைய மனமும் ஒப்பியிருக்காதுதான். ஆயினும் ஐயன் செய்வதனை உலகமே பார்த்தபடி உள்ளது. உலகத்தோர் நன்னெறிகளைக் கடைப்பிடிக்க ஐயன் தானே முன்னுதாரணமாகி நிற்கிறான். ‘ரோல் மாடல்’ எனக் கூறுவதுண்டல்லவா? அதுதான் இதுவும்.

    திருமண வைபவத்தைக்கண்டு களித்துருகிய அடியார்கள் ‘அன்னையின் அடி நோகுமே’ என மனமுருக, ‘உலகிற்கே முதல்வன் தன்னடியைப் பற்றி தூக்கினாரே’ என அன்னை உருக, படிக்கும் நம்முள்ளத்தையும் உருக்கும் அழகிய பாடலிது.

    இது திருவுத்தரகோசமங்கை மங்களேசுவரி பிள்ளைத்தமிழ் எனும் நூலில் காணப்படும் ஊசற்பருவப் பாடல். இயற்றியவர் பெயர் அறியக் கிடைக்கவில்லை. தமிழ்நயம், சொல்நயம், சந்தநயம் எனப் பல அழகுகளும் கொண்டு பொலியும் நூலாகும் இது. பாடலடிகளைக் காண்போமே!

    ‘பாக்கியம் நமக்கிதென்னப்
    பார்த்துருக வும்சித்தி ரைத்திங்க ளென்னப்
    பதித்திடு மணச்சடங்கில்
    துதிமணக் கின்றநின் பதம் அம்மி மேலெந்தை
    தூக்கிவைத் துச்சிவந்த
    தொழில்கண்டு பின்னுருக நீயுமவர் கையினால்
    தூக்கிய தொழிற்குருகவும்
    …………………………….’

    அடியார்கள் மனதில் முளத்தெழும் எண்ணற்ற கற்பனைகள், வண்ண ஓவியங்களாகத் தீட்டப்பெற்றும், பட்டை தீட்டிய வைரங்களாகவும் ஒளிர்கின்ற அழகை பிள்ளைத்தமிழ் நூல்களில் பலவிடங்களில் கண்டு களிக்கலாம்; இறும்பூதெய்தலாம்.
    தளர்நடை பயிலத்துவங்கியுள்ளாள் குழந்தை. இதனையே, ‘கண்டோர் பவத் துன்பு காணார்களாய்ப் பருங்களி ஆர்கலிக் கண்மூழ்கி,’ என்கிறார் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள். தத்தித் தத்தி மயில்போல நடந்து வரும் குழந்தையைக்கண்டு பரவசத்தில் உள்ளம் பறிகொடுத்து, தாயின் நிலையிலும், அடியாரின் நிலையிலும் இருவிதமாகவும் நின்று, அவளைப் பலவிதமாக வருணிக்கிறார் அவர். தெய்வக்குழந்தையல்லவா இந்த மங்களாம்பிகை? ‘இவளைக் கண்ணால் கண்டாலே பிறவிக்கடலில் மூழ்கிப் படும் துயரமெல்லாம் பறந்தோடும்; பேரானந்தம் கொண்டு உள்ளம் கடல்போல ஆரவாரிக்கும்,’ என்பது பொருள்!

    சிவபிரானின் பெருமைகள் அனைத்தும் அன்னை மங்களவல்லிக்கே உரித்தாக்கப்படுகின்றன. சிவனும் சக்தியும் இணைபிரியாதவர்களல்லவா? அயனும் திருமாலும் அன்னமாகவும், வராகமாகவும் உருவெடுத்து ஐயனின் அடிமுடி காணப்புகுந்த வரலாறு இது. தீயோர்களை நாசம்செய்யும் சுதரிசனம் எனும் சக்கரப்படையை ஏந்தியவன் திருமால். அவன் ஒரு விலங்காக (பன்றி, வராகம்) வடிவெடுத்து தேவர்களுக்கெல்லாம் தலைவனான சிவபெருமானின் இரண்டு திருப்பாதங்களைத் தேடிக்காணமுயன்றான். பூமியின் அடிவரை சென்று தேடியும் காணஇயலாமையால் மனமும் உடலும் துவண்டு மீன்கள் நிறைந்த கடலில் (இங்கு பாற்கடலில் எனப் பொருள்கொள்ள வேண்டும்) விழுந்து இளைப்பாறுகிறான்.

    அடுத்து பிரமன் அன்னப்பறவை வடிவெடுத்து சிவனின் முடிதேடியதனை அழகுற விளக்குகிறார். உயர உயரப்பறந்து தேடியும், முடியைக் காண இயலவில்லை. இனி எங்குபோய்த் தேடுவது எனச் சிந்திப்பவனுக்கு ஒரு எண்ணம் உதிக்கின்றதாம். அவன் தேடிய சிவபிரானின் முடியானது ஊடல்கொண்ட அன்னையின் சின்னஞ்சிறு பாதங்களின்மேல் வைக்கப்பெற்றுள்ளது. ஆகவே, பிரமன் தான் தேடும் சிவபிரானின் முடியைக்காண ‘அன்னையின் பாதங்களை நாடினாலே போதுமே; ஆகவே, அதனைச் செய்வோம்,’ என எண்ணுகிறான். இனிய அரிய கற்பனை.

    குறுக்குவழியில் இலக்கை அடைவது பற்றிய சிந்தனை புராணகாலம் தொட்டு இருந்துள்ளது போலும்!! யாருக்கும் எட்டாத பரம்பொருளின் திவ்விய வடிவை, முடியை, எளிதிலடைந்து விட முடியுமா? முடியாதுதான். அண்ணல் சிவபிரானின் முடி அயன் கண்களுக்கெட்டாத கற்பகக்கனியாகி விட்டது.

    இனி என் செய்வான்? அன்னம் ஆகி (ஓதிமம்) வருந்திக் களைத்து நின்ற அவன் கருத்து குழந்தையாகி நடைபயிலும் அன்னையின் தேன்நிறைந்த மலர்போன்ற திருவடிகளில் பதிகின்றது. அது பயிலும் மென்னடையில் அவன் சிந்தையும் கருத்தும் பதிகின்றது; அயன் தேடிவந்ததென்னவோ, சிவபிரான் திருமுடிக்காட்சியைத்தான். ஆனால், அது எட்டாக்கனியாகிவிட்ட நிலையில், அன்னையின் நடையழகு அவன் கருத்தைக் கவர்ந்துகொண்டுவிட்டது. மற்ற அன்னங்கள் இவள் நடையைக் கற்க ஆவல்மிகுந்து அவளைப் பின் தொடர்கின்றன. தாமரைமலரில் வீற்றிருக்கும் இந்த (பிரம்மா) அன்னமும் அவைகளுடன் அன்னையைப் பின் தொடர்கின்றதாம்.
    இவ்வாறு அன்னங்கள் பின்தொடருமாறு தளர்நடை பயில்பவள், வானளாவ உயர்ந்த இமயமலையில் பிறந்த வனிதையாகிய மங்களவல்லி. இவள் தங்குமிடமோ வேதியர்கள் ஓதும் மறைவாழ்த்தொலி விண்ணளாவ முழங்கும் திருக்குடந்தை நகராகும். அம்மடந்தையை வருக வருகவே எனத் தாயர் அழைப்பதாகப் புலவர் கற்பனை விருந்து படைக்கிறார்.

    ‘ஊன்தோய் சுதரி சனப்படையா னொருமா
    வுருக்கொண்டு உம்பர்பிரான்
    உபய பதமும் காண்பான் புக்கு ஒன்றும்
    காணாது உழிதந்து
    மீன்தோய் பரவைப் புடைவிழுந்தான் விரும்பி
    யிவள்சிற் றடிதொடரின்மேற்
    விழைந்து முயன்ற முடிகாணன் மேவு
    மேவா விடினும் இவள்
    தேன்தோய் மலர்த்தாள் தொடர்பு ஒன்றே திருந்தும்
    …………………………………’

    சிந்தை களிகூர அன்னையின் கால்வண்ணம் கண்டோம். குழந்தையைக் காண்பதே மகிழ்ச்சிதரும். அதுவும், அணிமணி புனைந்து அலங்காரம் செய்விக்கப்பட்ட குழந்தையைக்காண ஆசை இன்னும் பெருகுமல்லவோ? தாயுள்ளத்தின் தாபமும் அன்பும் நிறைந்து ததும்பும் அழகிய கருத்துக்கொண்ட பாடல்கள் இன்னும் பலவுண்டு.

    சிவஞான முனிவர் இயற்றியுள்ள பிள்ளையார் மீதான கலைசை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இருகைகளை ஊன்றித் தவழ்ந்து வரும் சிறு குழந்தை விநாயகனை, அவன் உருவிற்கேற்ப, ஒரு சிறு களிறு செய்யும் செயல்களால் வருணித்து மகிழ்கிறது.
    ‘இளமை பொருந்திய ஏறு எனத் தவழ்ந்து வரும்போழ்தில், தூண்போன்ற தும்பிக்கையால், பெருமூச்செறிந்தபடி நிலத்தைத் தோண்டியும், ஊழித்தீ போல பெருக்கெடுக்கும் செவியின் அசைப்பினால் உண்டான காற்று ஆகாயத்தைப் பிளந்தபடியும் அசைந்தாடி வரும் பீடும் பொருந்தி வரும் சிறு களிறு போன்று வருக,’ என விநாயகனை மழகளிறாகவே கண்டு மகிழ்கிறார்.

    இருகை யூன்றித் தவழ்ந்துமழ ஏற்றின் வருந்தோ றாங்காங்கே
    எறுழ்வன் புழைக்கை நெட்டுயிர்ப்பா னிருமா நிலத்தைக் குழிப்பதுவும்
    பெருகும் கடைக்கால் செயுஞ்செவிவான் பிளப்ப தேய்ப்பப் பல்காலும்
    பெயர்ந்து மடங்கி அசைந்தாடும் பீடும் தத்தம் பொறிதமக்கு
    மருவும் புலைன அவற்றிடமா மண்ணை அகழ்ந்தும் வெளிப்பரப்பை
    வளைத்தும் கவவிக் கொடுத்துதவும் வண்மை காட்ட அசைந்தசைந்து
    முருகுவிரியும் தொடைப்புயத்து முதல்வா வருக வருகவே
    மூரிக் கலைசைச் செங்கழுநீர் முனியே வருக வருகவே.

    இலக்கணப்படி வருகைப்பருவத்தின் பாடுபொருள், குழந்தையின் சிறுபாதங்களும் கால்களுமே ஆகும்.  திருமால் குழந்தையாகக் கால்களால் செய்த செயல்கள் பலவாம்: காளிங்கன் எனும் நச்சுப்பாம்பின் தலைமீது ஏறி நடம் புரிந்து அவன் ஆணவத்தை அடக்கியது, பின் வாமன அவதாரத்தில் மூவுலகும் ஈரடிகளால் முறைதிறம்பா வகையில் அளந்தது, மாயச்சகடத்தைக் காலால் உதைத்து, இறுத்து அரக்கனை அழித்தது எனப் பெரியாழ்வார் அனைத்தையுமே அழகுறப் பாடியுள்ளார்.

    உந்திபறத்தல் எனும் விளையாட்டை சிறுமியர் ஆடிப்பாடுவதாக அமைந்ததொரு அழகிய பெரியாழ்வார் பாசுரம்; இதிலும் கிருஷ்ணனின் திருவடித் தாமரைகள் போற்றப்படுகின்றன. ஸ்ரீராமனாகவும், கிருஷ்ணனாகவும் அவதரித்து, அவன் திருவடிகளால் செய்த கால்வண்ணங்களைப் பாடிப்பாடி மகிழ்கின்றனர் சிறுமியர். இதுவும் அரசனின் வீரச் செயல்களைப் புகழ்ந்துரைப்பது போன்றதே.
    ‘திருமுடி தாங்கி மூன்று உலகங்களையும் ஆண்டு எமக்கு அருள் செய்வாயாக,’ எனக் கானகம் சென்ற காகுத்தனைத் தொடர்ந்து சென்று வேண்டி நின்றான் அவன் தம்பி பரதன். ராமபிரானோவெனில் அவனுக்குத் தனது திருவடி நிலைகளை (பாதுகைகளை)க் கொடுத்து அருளினான்; அவனைப் பாடிப்பரவி உந்தீபற,’ என உந்திபறக்கின்றனர் சிறுமியர்.

    ‘முடியொன்றி மூவுலகங்களும் ஆண்டு,உன்
    அடியேற் கருளென்று அவன்பின் தொடர்ந்த
    படியில் குணத்துப் பரதநம் பிக்கு,அன்று
    அடிநிலை ஈந்தானைப் பாடிப்பற
    அயோத்தியர் கோமானைப் பாடிப்பற.
    (பெரியாழ்வார் பாசுரம்- உந்தி பறத்தல்)

    ஸ்ரீ மகரக் குழைக்காதர் பிள்ளைத்தமிழின் புலவரும் அக்கால்களின் பெருமை வாய்ந்த செயல்களைப் பாடி மகிழ்கிறார்.
    ‘ஆலிலையில், திருவரங்கத்தில், பாற்கடலில் கண்வளரும் பச்சைநிறத்தவனே! நாகரத்தினத்தைத் தலையில் கொண்ட பாம்பான காளிங்கனின் கண்கள் பிதுங்குமாறு உனது சிவந்த தாமரைப்பாதங்களால் மிதித்துத் தள்ளி, அவன் வாலைப்பிடித்துச் சுழற்றி, இடையர்களைக் காக்க அவன் தலைமீது நடம்புரிந்த தலைவனே!’ என அவன் பெருமைகளைப் பேசுகிறார்.

    ‘பண்டா லிலையில்அரங் கத்துப்
    பாதாழியில் கண்துயில் கூரும்
    பச்சைப் புயலே பணா மகுடப் படப்
    பாந்தளின் கண்பிதுங்க நறும்
    தண்தாமரைச் செஞ்சரண் பெயர்த்துத்
    தள்ளிக் கடைவால் பிடித்து நெறி
    தழைக்கும் படிக்கு நடம்புரிந்த
    தலைவா ………………..’

    எனப் போற்றுகிறார்.

    இறையனுபவத்தையும் மழலையின்பத்தையும் ஒருசேரக் காட்டும் சிறப்பினைக் கொண்டமைந்தவை அருமையான இப்பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் எனலாம்.

    (இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

    (பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

    Share
  • ஏர்க்களக் காட்சி

    -முனைவர் ந.இரகுதேவன்

    புள்ளினங்கள் துயிலெழுந்து பாடித் துதிக்கும் புலர்காலைப் பொழுதில் – எம்
    நல்லுழவன் தோளேறிப் பயணித்த கலப்பை
    நுகத்தடி ஏற்று
    எருதுகளின் வல்லிசைவில் முன்னிழுத்து நடக்க
    மண்பிளந்துடைந்து விதைகளை ஏற்றது
    நிலம்
    மாடுகளின் குழம்புக் கால்பட்டு
    சீராக கரைபிரித்து நடக்கிறது ஏர்
    ஏர்க்கொழு பட்டுப் பிளந்த மண்ணில்
    சிற்றுயிரைக் கொத்திப் பொருக்க
    அண்டை உறவுகளென்று ஏர்க்காலின் பின்னோடுகிறது
    பறவைகள் அச்சமின்றி
    உழவோட
    உழக்கிழத்தி இரவடுப்பில் கிண்டிமூட்ட களியுருண்டைச்
    சிறுபுளிப்பும் – அம்மிக்கல்
    ‘நேக்கு நேக்கென்று’ சத்தமிட
    அரைத்தெடுத்த புளித்துவையலும் உழக்கிழவனுக்குணவாக
    உழத்தியின் தலையேறிய கூடைச்சோற்றுக் –
    காலைப் பழங்களியும்
    வழிநெடுக மணம் கசிந்த பயணித்தது
    நல்லுழத்தி வரவறிந்து பெருநடையைக் குறைத்தன
    மாடுகள் – ஆதிப்பசியழிக்கும்
    இவன் பசிக்கு சிறு ஓய்வு
    ஓய்வில்
    அரைபடாத தீவனத்தை
    சிறு உறக்கத் தவத்தோடு அரைத்தன
    நுரை ததும்ப
    சிறுநீற்றைக் கழித்தபடி நுகத்தடி விடைகள்
    இச்சிறுபொழுதில்
    முதுகமர்ந்த காக்கைக் குருவியெல்லாம்
    கடந்த பருவத்து நட்பைப் புதுப்பித்தன
    ‘அன்புடை நெஞ்சம் தாம் கலந்து’
    உலகூட்டும்

    Share
  • அந்த வருடம், புதிய வருடம்

    சத்தியமணி

    வருவது யாரோ??…புது வருடமா!!
    தருவது தானோ ?? இனிய வரமா!!
    முகங்களைப் பார்த்து முறுவல் பெறுமா?
    உறவுகள் கூடி விருந்து தருமா?

    எந்நேரமும் வாட்ஸ்அப் வாட்ஸ்அப் வாட்ஸ்அப்
    எப்போதுமே ஃபேஸ்புக் ஃபேஸ்புக் ஃபேஸ்புக்
    இல்லையென்றால் ச்சேட்டிங் ச்சேட்டிங் ச்சேட்டிங்
    மிச்சமெல்லாம் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங் ஸ்லிப்பிங்
    தங்க நேரம் வீணாகிக் கழிகின்றதே
    வாழ்வு வெறும் வயதாகி வளர்கின்றதே… (வருவது யாரோ?)

    தாயுடன் பாட நேரமில்லையா?
    தந்தையுடன் பேச வார்த்தையில்லையா?
    உறவுகள் ஒன்றாய்க் கூடவில்லையே?
    நனவுகள் நட்டம் பார்க்கவில்லையே?
    இந்த வருத்தம் நீக்கிடுமோ
    அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?)

    அறிவினில் பெற்றது அதையும் மறந்தோம்
    பிரிவினில் விட்டது எதையும் தொலைத்தோம்
    அனுபவம் கொடுத்ததை எங்கு நினைத்தோம்
    அதற்கும் மேலே தனித்துத் தவிர்த்தோம்
    இந்த வருத்தம் நீக்கிடுமோ
    அந்த வருடம் புதிய வருடம் (வருவது யாரோ?)

    Share
  • கவிஞர் இரமேஷ் அர்ஜுன் கவிதைகள்

    -இரமேஷ் அர்ஜுன்

    1
    விடியல்அறியா இரவொன்றில்
    தொடங்குகிறது வாழ்க்கை

    உறக்கத்தின் ஊடே
    இடைப்பிறவரல் என்பதாய்
    கனவொன்றில்
    ஆழ்மனத் தேடலின் அசைவுகள்

    காட்சித் தெளிவில்லாது
    கரைந்து போகும் கனவில்
    காமத்தின் நிறைவேறா
    புணர்தலின் அவஸ்தைகளாக
    கடந்து போகிறது வாழ்க்கை
    விடிவதற்குள்ளாகவே.

    2
    ஏழுநாட்கள் என்றார்கள்
    இறந்துபோனது
    இரண்டுநாட்கள்.

    பிறகு
    ஐந்துநாட்கள் என்றார்கள்
    அதுவும்அந்நியப்பட்டுப் போக
    மூன்று என்கிறார்கள்.

    மூன்றும் இல்லாது
    முதல் நாளுக்கே
    எட்டிப்பார்க்காது வற்றிப் போகிறது
    அவளுக்கான ஜீவநதி.

    3
    கரைபுரண்டுஓடும்நீரில்
    நிலம்தேடும்கால்கள்
    நிலையைஉணரத் துடிக்கும் கைகள்
    ஏனோ
    கண்கள் மட்டும்
    விண்ணைநோக்கி
    நிலையறியா பொழுதொன்றில்

    4
    யோனிக்குள்
    உமிழப்படும் எச்சிலின்
    ஒற்றைப்புள்ளியில்
    உருக்கொள்ளும் உலகம்
    உணர்வதே இல்லை

    ஊற்றுக்காலில் வழிந்தோடும்
    புனித தீர்த்தத்தில்
    தள்ளிவிடப்பட்ட
    தாழம்பூ அணியாத்தலைவன்
    வந்தேறிகளின் வாசல்
    திறவுகோல் என்று…

    5
    என் எழுத்துக்களில்
    சிதறிக் கிடக்கும் கவித்துவத்தை
    அழகு படுத்தும்
    ஆன்மாவின் நாதமென
    இசைத்துக் கொண்டிருக்கிறது
    எனக்கான உள்வெளியின்
    நிழல் முற்றத்தில்
    அவளின் நினைவுகள்.

     

    Share
  • புத்தாண்டு வாழ்த்துக்கள்

    – சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

    புத்தாண்டு வருகின்றது .
    புத்துணர்வு வருகின்றது.
    புது வாழ்வு மலருமென்று
    புது நம்பிக்கை தருகின்றது .

    இவ்வாண்டு கவலைகள்
    இத்தோடு முடியட்டும்
    வருமாண்டு நம்வாழ்க்கை
    வளமாக இருக்கட்டும் .

    விழுகின்ற மழைநீரால்
    விவசாயம் செழிக்கட்டும் .
    அழுகின்ற நிலைமாறி
    ஆனந்தம் கொழிக்கட்டும்..

    அரசியல்வாதிகள் இனி
    அறவழிக்குத் திரும்பட்டும்.
    அவர்களைத் தேர்ந்தெடுப்போர்
    அறிவோடு நடக்கட்டும் .

    தூய சக்திகள் நம்மைத்
    துடிப்போடு ஆளட்டும்
    தீய சக்திகள் இனிமேல்
    தீயில் பொசுங்கட்டும் .

    மக்களிடையே பிரிவினைகள்
    மண்ணோடு போகட்டும்
    ஒற்றுமை மனநிலை
    ஓங்கி வளரட்டும் .

    பாமரர் நிலைமாறி
    படிப்பறிவில் சிறக்கட்டும்
    பாரதம் வல்லரசாய்
    பார்போற்ற வளரட்டும் ..

     

    Share
  • வல்லதொரு ஆண்டாக மலர்ந்துவிடு புத்தாண்டே!

    -மகாதேவஐயர் ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

    புத்தாண்டே நீ வருக
    புத்துணர்வை நீ தருக
    நித்தமும் நாம் மகிழ்ந்திருக்க
    நிம்மதியை நீ தருக
    சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
    சுப ஆண்டாய் நீவருக
    எம்தமிழர் வாழ்வில் என்றும்
    இன்பம் பொங்க நீவருக

    வாருங்கள் என அழைத்து
    வரும் மக்கள் வரவேற்கும்
    சீர் நிறைந்த நாட்டிலிப்போ
    சீர் அழிந்து நிற்கிறது
    யார் வருவார் சீர்திருத்த
    எனும் நிலையே இருக்கிறது
    நீ வந்து புத்தாண்டே
    நிலை திருத்தி வைத்துவிடு

    ஆட்சி பீடம் ஏறுகின்றார்
    அறம் வெறுத்து ஒதுக்குகிறார்
    ஆட்சி பீடம் அமரச்செய்தார்
    அல்லல் பட்டே உழலுகிறார்
    அறம் வெறுத்து நிற்பவர்கள்
    அறம் பற்றி உணர்வதற்கு
    திறல் உடைய மருந்துடனே
    நீ வருவாய் புத்தாண்டே

    மதம் என்னும் பெயராலும்
    இனம் என்னும் பெயராலும்
    மனித உயிர் மாய்க்கின்ற
    மாண்பற்ற செயல் ஆற்றும்
    ஈனத் தனம் மிக்கோர்க்கு
    இரக்கம் பற்றி உணர்த்துதற்கு
    இரண்டு ஆயிரத்து பத்தொன்பதே
    எழுந்து வா எழுச்சியுடன்

    நல்ல வல்ல தலைவர்கள்
    நமை விட்டுச் சென்றுவிட்டார்
    நல்ல பல செய்திவந்தும்
    நம்மில் பலர் திருந்தவில்லை
    சொல்ல வல்ல வாழ்க்கையினை
    எல்லோரும் வாழ்ந்து நிற்க
    வல்லதொரு ஆண்டாக
    மலர்ந்து விடு புத்தாண்டே

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 6

    -சி. ஜெயபாரதன், கனடா

    என் இழப்பை நினை; ஆனால் போகவிடு எனை
    [Miss me, But let me go]
    ++++++++++++++

    என்னருமை மனைவி தசரதி ஜெயபாரதன்
    தோற்றம் : அக்டோபர் 24, 1934.
    மறைவு : நவம்பர் 18, 2018
    ++++++++++++++++++

    [25]

    [ஆயுள் சான்றிதழ்]
    [Life Certificate]

    ஓய்வு ஊதியம் பெறுவதற்கு
    ஓவ்வோர் ஆண்டும்
    ஆயுள் நீடிப்புச் சான்றிதழ்
    அவசியம்.
    இந்திய அரசாங்க ஆணையர்
    நவம்பர் மாதம்
    முதல் வாரம் அளிப்பார்
    முத்திரை குத்தி !
    தம்பதிகள் புறப்பட்டோம்.
    இறுதிப் பயணம்.
    பாதி வழியில்
    இருளும் மாலை நேரத்தில்,
    திடீரெனத் துணைவி
    இரத்தக் குழல் குமிழி கிழிந்து
    நேரும் பெரு வெடிப்பு !
    உடம்பில் பூகம்பம் !
    நாள் காட்டியில்
    காலன் என்றோ குறித்து வைத்த
    நவம்பர் ஒன்பதாம் நாள் !
    அடுத்தோர் 9/11
    அபாய மரண நிகழ்ச்சி
    நேரும்
    ஓருயிருக்கு !
    முடிவில் நடந்தது என்ன ?
    எனக்குக் கிடைத்தது
    அரசாங்கத்தின்
    ஆயுள் சான்றிதழ்.
    என்னருமைத் துணைவிக்கு
    எமனின்
    மரணச் சான்றிதழ் !

    ++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.

     

    Share
  • புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

    -ஆ. செந்தில் குமார்.

    நல்லதோர் அரசு அமைய… புத்தாண்டே வருக! வருக..!
    நல்லோர் நட்பு நிலைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    பொல்லாதோர் விலகி ஓட… புத்தாண்டே வருக! வருக..!
    இல்லாத நிலை மாற… புத்தாண்டே வருக! வருக..!

    தொட்ட தெல்லாம் துலங்க… புத்தாண்டே வருக! வருக..!
    நட்ட தெல்லாம் தழைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    பட்ட தெல்லாம் மறக்க… புத்தாண்டே வருக! வருக..!
    கெட்ட தெல்லாம் விலக… புத்தாண்டே வருக! வருக..!

    பருவமழை பொய்க்காது பொழிய… புத்தாண்டே வருக! வருக..!
    துருவப்பனி உருகாது இருக்க… புத்தாண்டே வருக! வருக..!
    இருப்பதைக் கொண்டு மகிழ… புத்தாண்டே வருக! வருக..!
    தரணியெங்கும் அமைதி நிலவ… புத்தாண்டே வருக! வருக..!

    முத்தான வாழ்வு கிடைக்க… புத்தாண்டே வருக! வருக..!
    எத்திசையும் தமிழ் ஒலிக்க… புத்தாண்டே வருக! வருக..!
    புத்துணர்ச்சி பெற்று விழிக்க… புத்தாண்டே வருக! வருக..!
    புத்தாண்டே வருக! வருக…! புதுவாழ்வு தருக! தருக…!

    Share
  • குறளின் கதிர்களாய்…(238)

    -செண்பக ஜெகதீசன்…

    இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
    சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

                                                 -திருக்குறள் -1044(நல்குரவு)

    புதுக் கவிதையில்…

    புகழ்ந்து சொல்லத் தகுதிமிக்க
    உயர்குடிப் பிறந்தோரிடத்தும்,
    இழிசொல் பிறப்பதற்கு
    ஏதுவாகிய சோர்வினை
    உண்டாக்கிவிடும்
    வாழ்வில் வறுமை என்பது…!

    குறும்பாவில்…

    புகழ்ச்சிக்குரிய உயர்குடிப் பிறந்தோரையும்
    இழிசொல் பேசவைக்கும் சோர்வினை
    வரவைத்துவிடும் வறுமை…!

    மரபுக் கவிதையில்…

    வாழ்வில் யாரும் விரும்பாத
    வறுமை யென்பது வந்துவிட்டால்,
    வாழ்த்திச் சொல்லத் தகுதியுள்ள
    வளமிகு உயர்குடிப் பிறந்தோரையும்,
    தாழ்ந்தே நிலையில் கீழிறங்கித்
    தரமிலா இழிசொல் பேசவைக்கும்
    சூழ்நிலை கொணரும் சோர்வினையே
    சேர வைத்திடும் வறுமையதே…!

    லிமரைக்கூ..

    வந்துவிட்டால் வாழ்வில் வறுமை,
    வந்துவிடும் வளமிகு உயர்குடிப் பிறந்தோர்க்கும்
    வெந்திட இழிசொல்பேசும் சிறுமை…!

    கிராமிய பாணியில்…

    பொல்லாதது பொல்லாதது
    வறும பொல்லாதது,
    வாழ்க்கயில வறும பொல்லாதது..

    வாழ்த்திப் பேசத் தகுதியுள்ள
    ஒசந்த குடும்பத்தில உள்ளவனயும்,
    வறுமவந்து சோர்வத் தந்து
    வகைக்கு ஒதவாத தரங்கொறஞ்ச
    கெட்டவார்த்த பேசுற
    கீழ்நெலக்கிக் கொண்டுவந்திடுமே..

    அதால
    பொல்லாதது பொல்லாதது
    வறும பொல்லாதது,
    வாழ்க்கயில வறும பொல்லாதது…!

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 6.1 (வருகைப்பருவம்)

    -மீனாட்சி பாலகணேஷ் 

    ‘ஓடிவருகையிலே கண்ணம்மா உள்ளம் குளிருதடீ
    ஆடித் திரிதல் கண்டால் உன்னைப்போய் ஆவி தழுவுதடீ,’ என்றார் பாரதியார்.

    சின்னஞ்சிறு குழந்தை நடக்கக் கற்றுக்கொள்வதனைக் காண்பது, அதனை ஊக்குவித்து உற்சாகப்படுத்தி, உவகைகொள்வது என்பது ஒரு தெய்வீக அனுபவம். சிவந்த தாமரைமலர் போலும் சின்னஞ்சிறு பாதங்கள் தத்தித்தத்தி நடந்துவரும் அழகை, தான் கீழே விழுந்து விடுவோமே எனும் அச்சமேயின்றி ஓடிவரும் இனிய செயலைக் காண ஆயிரம் கண்களும் போதாதுதான்!

    வரிசைக்கிரமமாக அமைந்த பிள்ளைத்தமிழின் ஆறாவது பருவம் வருகை அல்லது வாரானைப் பருவம் எனப்படும். குழந்தையின் பன்னிரண்டாவது மாதத்தில் இது நிகழ்வதாகக் கொள்ளப்படும்.

    நம் மனதுக்கினியவர்களின் நடையும், அதன் அழகும், அதுவே குழந்தையானால் அதன் கால் சதங்கை, சிலம்பு, இவற்றின் ஒலியும் மானிடர் அனைவருக்குமே மிகுந்த உற்சாகத்தைத் தருவதாகும்.

    தத்தித்தத்தித் தளர்நடை பயிலும் குழந்தையை அருகில் நின்று பார்க்கும் தாயின் உள்ளம் பாசத்தில் விம்முகின்றது. அந்தக்கால்களால் அவன் என்ன செயலெல்லாம் செய்யப்போகிறான், எங்கெல்லாம் செல்லப்போகிறான், அதை எவ்வாறெல்லாம் அழகுபடுத்திப் பார்க்கலாம் என்றெல்லாம் அவள் எண்ணங்கள் சிறகடிக்கின்றன. தன் குட்டனை, குழந்தையை, அழகுநடை பயிலும் மயிலாக, அசைந்து நடந்து வரும் அழகு யானைக்குட்டியாக, துள்ளிவரும் மானாக, எனவெல்லாம் பார்க்கிறாள்.

    ‘சின்னஞ்சிறு பதங்கள் சிலம்பொலித்திடுமே அதை
    செவிமடுத்து எந்தன் மனம் களித்திடுமே,’

    எனும் ஊத்துக்காடு வேங்கட சுப்பைய்யரின் பாடல் வரிகள், கண்ணனின் காற்சதங்கை ஒலியை மனதில் நிரப்பி மகிழ்விக்கின்றன.
    ‘நன்னுபாலிம்ப நடசி வச்சிதிவோ?’ என, (என்னைக் காக்கவேண்டி நீ நடந்து வந்தனையோ?) தியாகராஜரும் தமது கீர்த்தனை ஒன்றில் ஸ்ரீராமனைக் கேட்டு உருகுகிறார். ‘உயர்வான பரம்பொருளாகிய நீ ஏழை அடியேனுக்காக, தேரிலன்றி, குதிரை மீதிலன்றி, வெறும் கால்களால் நடந்து வந்தனையோ?’ எனும்போது உள்ளம் ஆனந்தத்திலும், பச்சாதாபத்திலும் விம்முகிறது அவருக்கு.

    இதனைப் பெரியாழ்வாரும் தமது பாசுரங்களில் பாடி மகிழ்ந்துள்ளதனைக் காணலாம். கண்ணன் நடப்பது சிறிய யானை மெல்ல அசைந்து நடப்பது போலிருக்குமாம். யானை தனது மதங்களைப் பெருக விட்டுக்கொண்டும், தனது காலில் இடப்பட்டுள்ள சங்கிலி ‘சலார்பிலார்’ என ஒலி எழுப்பும்படியும் தன் உடலின் இருபுறங்களிலும் தொங்கும் மணிகள் ஒலிக்குமாறும் நடப்பதுபோலக் கண்ணன் நடக்க வேண்டும் எனும் தாயின் ஏக்கத்தைப் பாடுகிறார்.

    ‘தொடர்சங் கிலிகை சலார்பிலார் என்னத்
    தூங்கு பொன்மணி ஒலிப்ப
    படுமும் மதப்புனல் சோர வாரணம்
    பைய நின்று ஊர்வது போல்…’

    திருவடிச் சதங்கைகள் ஓசை எழுப்ப, அரைச்சதங்கையின் மணிகள் ஒலிக்க, என் சார்ங்கபாணி தளர்நடை நடவானோ! என ஆவலாக வேண்டுகிறார்.

    அன்னையின் ஆவலை, ஏக்கத்தை, எதிர்பார்ப்பை அழகுறச் சித்தரிக்கும் இப்பாசுரம், அவளுடைய பெருகியோடும் எல்லையற்ற அன்பின் உயர்வை எடுத்துக் காட்டுகிறது.

    ஆயினும் இவ்வாறெல்லாம் தான் போற்றிப் பெருமிதம் கொள்ளும் சிறுகுழந்தை, தான் வழிபடும் திருமாலே சிறு கிருஷ்ணனாக வந்த வடிவம் என அவருக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துள்ளது. ஆகவே அடுத்த பாடலில் அந்தக் குழந்தையான இறைவடிவே வந்து தன் வீடெங்கும், வீதியெங்கும் தன் பிஞ்சுப்பாதங்களின் முத்திரையைப் பதிக்க வேண்டுவது மற்றொரு சிலிர்க்க வைக்கும் அழகு.

    ‘ஒருகாலில் சங்கு ஒருகாலில் சக்கரம்
    உள்ளடி பொறித்து அமைந்த
    இருகாலும் கொண்டு, அங்கங்கு எழுதினாற்போல்
    இலச்சினை படநடந்து….’

    எனப் பெரியாழ்வாரின் தாயுள்ளம் விழைகின்றது.

    பிள்ளைத்தமிழ் நூல்களின் பாடல்கள் அனைத்துமே தாய், செவிலித்தாய் மற்றும் உறவினர்கள் ஆகியோரின் கூற்றாக அமைவது அதன் தனிச்சிறப்பாகும். அடியார்கள் தம்மை இத்தகைய நிலைகளில் இருத்திக்கொண்டு தாம் விரும்பும் இறைவடிவங்களைப் பாடிப்பரவுகின்றனர்.

    கிருஷ்ணனுடைய பாதங்களின் சிறப்பில் ஆழ்ந்துவிட்ட லீலாசுகர் எனுமடியார்ஆனந்த பரவசமாகி அவற்றை வர்ணிப்பது படிக்கின்ற நமக்கும் களிப்பைத் தருகின்றது:

    ‘வேறு புகல் இல்லாதவர்களுக்கு இத்திருவடிகள் ஒன்றே புகலிடமாக (அசரண-சரணாப்யாம்) உள்ளன. குழலூதியபடி கிருஷ்ணன் இத்திருவடிகளால் நடந்து வருகிறான் (ஆயாதி),’ என நெகிழ்கிறார் அடியார்.

    கிருஷ்ணனின் கல்யாண குணங்களில் ஆழ்ந்துவிட்ட நாராயண பட்டத்ரி, நாராயணீயத்தின் ஈற்றயல் ஸ்லோகத்தில் கிருஷ்ணனின் திருவடிகளை வழுத்தி, ஆத்மார்ப்பண லயிப்பில் உருகிக் கரைந்து தன்னையே இழந்து விடுகிறார்.

    ‘உனது சரீரத்திலேயே யோகிகளால் மிகவும் விரும்பப்படுவன உனது திருவடிகளே! ஆதரவற்றவர்களுக்கு அவையே புகலிடம். அடியார்களுக்கு அவை வேண்டியன அனைத்தையும் தரும் கற்பகத்தரு. கிருஷ்ணா! குருவாயூரில் உறைபவனே! (பவனபுரபதே) கருணைக்கடலே! இந்த உனது திருவடிகள் எனது இதயத்தில் எப்போதும் பதிந்து நின்று, எனது துயரங்களை விடுவித்து என்னை மிக உயர்வான பேரின்பச் செல்வத்தில் ஆழ்த்தட்டும்.’

    ‘வேண்டிக்கொள்ள வேண்டிய’வற்றின் உச்சநிலை வேண்டுதல் இது!  பி. லீலா எனவொரு பாடகி இருந்தார். அவருடைய இனிய குரலில், உள்ளத்தை உருக்கும் இந்த ஸ்லோகத்தினைக் கேட்கும்போது பட்டத்ரியின் தேடுதலை, ஆனந்த லயிப்பை ஒருவாறு புரிந்துகொள்ள இயலும். ‘ஒருவாறு’ என்றதன் காரணம், நாமே அந்த நிலைக்குச் சென்றால் தான் துல்லியமாக உணர இயலும். நாமெங்கே, பட்டத்ரி எங்கே?

    ‘யோகீந்த்ராணாம் த்வதங்கேஷ்வதிக ஸுமதுரம் முக்திபாஜாம் நிவாஸோ,’ என்பன ஸ்லோக வரிகள்.

    பிள்ளைத்தமிழுக்குத் திரும்பலாம்!!

    முருகப்பெருமானை, கதிர்காமத்திலுறையும் கந்தவேளை, தளர்நடை பயிலும் குழந்தையாக்கி, தாமே அன்னையாகி, தம்மிடம் நடந்து வருமாறு கைகளை நீட்டி வேண்டுகிறார் இதனை இயற்றிய சிவங். கருணாலயப் பாண்டியப் புலவர்.  தெய்வத்தன்மையினால் முருகனுக்குப் பட்டால் செய்த சிறு ஆடை இயல்பாகவே அமைந்ததாம்; அது நூலால் நூற்கப்படாமலும், ஊசியால் தைக்கப்படாமலும் விளங்குவது. அது நோன்பிருந்து நின்னையே நினைந்துருகும் அடியாரின் உள்ளம்போல அசைந்தாடுகிறது என்றார் புலவர்.

    ‘நூலாத நூலாடை ஊசியொடு குயிலாத
    நொய்யசின் மெய்யுறையது
    நோன்பிற்ற ழும்பிநின் னுள்ளுமுள மெனவாட…’

    மிகவும் உயர்வானவையே தன் தெய்வக்குழந்தைக்குப் பொருந்தும் என எண்ணும் தாயுள்ளத்தின் அன்பு இதில் புலப்படுகின்றது. இன்னும் கூறுவார்: அழகான பூச்செண்டு முடிக்கப்பட்ட கொண்டை ஆடுகிறது; (அவனருளால்) பூமியில் அறம் வழுவாமல் நடமாடுகிறது; உணவே அருந்தாது தவம் செய்வோர் உள்ளம் இறை எண்ணத்தில் அசைந்தாடுகின்றது; தளர்நடை நடக்கும் குழந்தையின் உடலும் தள்ளாடுகிறதாம். எட்டுக்கரங்களையும், நான்கு முகங்களையும் கொண்ட பிரமனின் பெருமிதம் சிதைந்தோட, தேவர்கள் சிறைநீங்கி ஓட, அசுரர்கள் படை தோற்று ஓடிடுமாறு செய்து, நாய்போன்ற எமது அவலம் தெறித்தோடுமாறும், உன்மீது அன்புகொண்டு நாங்கள் மெழுகுபோல உள்ளம் கசிந்து என்புருகிக் கண்களில் மழைநீர் போலக் கண்ணீர் பெருகி ஓடுமாறும் நீ எம்முன்பு நடைபயின்று வரவேண்டும்,’ எனும் வேண்டுதல்.

    தளர்நடை நடக்கும் குழந்தை ஆடி அசைந்து வருவதும் ஒரு தனியழகு.
    அதைக்கண்டு உள்ளம் மகிழ்வது அன்னையின் இயல்பு;
    கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகப் பாடுவது அடியார் மரபு!
    ‘மாலாகி யாம் அழல் மெழுகின் நெக்கென்புருகி
    மழையோடவே வருகவே.’

    பிள்ளைத்தமிழ்ப் பாடல்களின் சிறப்பு தெய்வத்தின் பெருமையை குழந்தைப்பருவங்களுக்கான செயல்களில் வைத்துப் போற்றுவது. குழந்தையின் தெய்வத்தன்மையை உணராத அடியார் இல்லை! ஆகவே தாம் போற்றும் குழந்தையை, தெய்வத்தின் சிறப்புகளைக்கூறித் தம்முன் வருமாறு வேண்டுதல் இன்னொரு அழகு. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் தடாதகைப்பிராட்டியாகிய சிறு பெண்மகவை, குமரகுருபரனார் ‘வருக’வென அழைக்கும் பாடல்கள் நமது உள்ளத்தைக் கசிய வைப்பனவாகும்.
    ‘தேன்சிந்தும் மலர்கள் பொருந்திய நறுமணம் மிகுந்த கூந்தலை உடைய பெண்யானையே! வருக! முழுமையான ஞானவெள்ளமே வருக! பிறைசூடிய பெருமானின் மூன்று கண்களுக்கும் விருந்தாக அமைந்தவளே வருக!  ‘பிரம்மா, திருமால், சிவன் ஆகிய மூவருக்கும் மூலமாக விளங்கும் சத்தியே வருக! விதை இல்லாமலே விளைகின்ற பரமானந்தம் எனும் தெய்வீக விளைவே வருக!
    ‘பழமையான மறைகள் எனும் வேதங்களின் இளந்தளிரே வருக! அருள் பழுத்துக் கனிந்துள்ள கொம்பாயுள்ளவளே வருக! நின் அழகான கடைக்கண்ணின் கோடியில் பெருகிய அருள்வெள்ளத்தில் மூழ்கியுள்ள அடியார்களின் பிறவியாகிய நோய்க்கு மருந்தாக விளங்குபவளே வருக! இனிய பசிய குதலைமொழி பேசும் கிளியே வருக! மலயத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே!’

    ‘பெருந்தேன் இறைக்கும் நறைகூந்தற்
    பிடியே வருக முழுஞானப்
    பெருக்கே வருக பிறைமௌலிப்
    பெம்மன் முக்கண் சுடர்க்கிடுநல்
    விருந்தே வருக…..’ என்பது பாடல்.

    தான் வழிபடும் அன்னை தெய்வத்தை ஒரு சிறு பெண்மகவாக்கி, தாமே தாயாகி, அவளுடைய அருமைபெருமைகளையெல்லாம் பாடி, அவளை ‘வருக’வென அழைத்துச் சீராட்டும் அடியாரின் உள்ளம் எப்படிப்பட்ட பேரானந்தத்தில் மூழ்கித் திளைக்கின்றதென்பதனைப் பிறிதொரு பாடலிலும் காணலாம்.

    ‘தொடுக்கும் கடவுள் பழம்பாடல்
    தொடையின் பயனே நறைபழுத்த
    துறைத்தீந் தமிழின் ஒழுகுநறும்
    சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து
    எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு
    ஏற்றும் விளக்கே வளர்சிமய
    இமயப் பொருப்பில் விளையாடும்
    இளமென் பிடியே எறிதரங்கம்
    உடுக்கும் புவனம் கடந்துநின்ற
    ஒருவன் திருவுள்ளத்தில் அழ
    கொழுக எழுதிப் பார்த்திருக்கும்
    உயிரோ வியமே மதுகரம்வாய்
    மடுக்கும் குழற்கா டேந்தும் இள
    வஞ்சிக் கொடியே வருகவே..’

    என்றார். இதில் ‘அகந்தையெனும் ஆழ்ந்த வேரோடிய ஆணவக் கிழங்கை, அகழ்ந்து எடுத்து எறிந்து விடும் ஞானிகளின் உள்ளத்தில் ஏற்றிவைக்கப்படும் ஒளிவிளக்காக இருப்பவளே,’ என அன்னையின் பெருமையை உணர்த்தியது எண்ணவொண்ணாததொரு நயம் ஆகும். மேலும், ‘சிவபெருமான் தன் உள்ளத்தில் அழகாக எழுதிவைத்துக் கண்டு களிகொள்ளும் உயிரோவியமானவளே மீனாட்சியன்னை,’ என்றும் உரைக்கிறார். இப்பாடலுக்கு இன்னொரு சிறப்புமுண்டு. இளம் வயதிலேயே பெரும் ஞானியான குமரகுருபரனார் அன்னை மீனாட்சி மீது இப்பிள்ளைத்தமிழ் நூலை யாத்தனர். அன்னை மீனாட்சியம்மை மன்னர் திருமலை நாயக்கர் கனவில் தோன்றித் தன் திருமுன்பு அதனை அரங்கேற்றப் பணித்தாள். அவ்வாறே அரங்கேற்றமும் அம்மையின் திருக்கோயிலில் அவள் சந்நிதியில் நிகழ்ந்தது. மேற்காணும் இப்பாடலுக்குக் குமரகுருபரனார் பொருளுரைக்கும் போது அன்னையே அருச்சகரின் ஐந்தாறு வயது மகள் போலத் தோன்றி அரசர் திருமலை நாயக்கரின் மடியிலமர்ந்து இப்பாடலைக் கேட்டு ரசித்தாள். பாடல் முடிந்ததும் அரசர் கழுத்திலிருந்த முத்துவடத்தைக் கழற்றிக் குமரகுருபரர் கழுத்திலிட்டு மறைந்தனள். ஆகவே, அன்னையின் ஆமோதிப்பைப் பெற்றதொரு பிள்ளைத்தமிழ் நூலும் இதுவே எனப் பெருமை கொள்ளலாம். அன்னை தெய்வம் மீதான பிள்ளைத்தமிழ் நூல்களை இயற்றிய அடியார் பலரும் சக்தி உபாசகர்களாகவும் இருந்துள்ளனர். தஞ்சை சரசுவதி மகால் நூல்நிலையத்தினர் சிவயோக நாயகி பிள்ளைத்தமிழ் எனவொரு நூலை வெளியிட்டுள்ளனர். இயற்றியவர் பெயர் தெரியவில்லை. இவர் ஐயத்திற்கிடமின்றி சக்தி உபாசகர். ஏனெனில், வாரானைப் பருவத்துப் பாடலொன்றில் ஸ்ரீசக்கரத்தில் உறையும் அம்பிகையான அவளைப் போற்றுகிறார். அம்பிகையின் ஸ்ரீ சக்கர வருணனை விரிவாகத் தரப் பட்டுள்ளது.

    ‘முச்சதுர மூவட்டம் ஈரெட்டும் ஓரெட்டு
    முளரியிதழ் சூழ்ந்ததற்குள்
    முகனையிற் பதினான்கு பத்துடன் பத்தெட்டு
    முக்கோண நடுவிந்துவாய்…..’ என ஸ்ரீ சக்கரத்தின் அமைப்பை விவரித்து,

    ‘சச்சபுட முதலான தாளங்கள் தாள்பொரச்
    சதகோடி திருமாதரார்
    சந்ததம் நடம்புரியும் நாற்பத்து முக்கோண
    சக்கர நாயகி வருகவே’ எனப்போற்றுகிறது.

    இவையனைத்தும் சக்தி உபாசகர்களின் துதிகள் தாமே? இது கிடக்க, வேறொரு இனியகாட்சியைக் காணச் செல்லலாமா?
    பிடிவாதம் செய்யும் ஒரு சிறு பெண்குழந்தை. அதனிடம் பொய்யாகச் சினம்கொண்டுபேசும் தாய்! இனிமையான காட்சி!
    “வா கண்ணே! முகம்கழுவி, உன்னைச் சிங்காரிக்கிறேன்,” என ஆசையாகத் தாய் அழைக்கிறாள். குழந்தைக்கோ விளையாட்டு மும்முரம். சிறு செப்புகளில் மண்சோறு சமைக்கிறாள். இலைகளைப் பறித்துப் பொரியல்செய்கிறாள். “அம்மா வா, நான் சமைத்த சோற்றைச்சாப்பிடு,” என்று மழலையில் அன்னைக்கும் கொஞ்சம் தருகிறாள்.

    கையில் பட்டுப்பாவாடை, கழுத்திற்கான அணிகலன்கள், மை, திலகம் முதலானவற்றை ஏந்தியபடி தாயின் அருகில் பணிப்பெண் நிற்கிறாள். குழந்தையின் புழுதிபடிந்த உடைகளையும் கைகால்களையும் கண்ட தாய் சலித்துக்கொள்கிறாள்.
    “நான் அழைக்கஅழைக்க நீ வராமலே இருந்தால், நான் இங்கிருந்து போய்விடுவேன். உனக்கு முகம், கைகால் கழுவி, உனது அழகான வேல்போலும் விழிகளுக்கு மைதீட்டமாட்டேன். பிறைமதிபோன்ற நெற்றியில் அழகிய திலகத்தையும் எழுதமாட்டேன். அழகான மணிகளால் செய்யப்பட்ட இந்த ஆபரணத்தை உனக்கு அணிவிக்கமாட்டேன்.”

    குழந்தைக்கு அலங்காரம் செய்துகொள்ள ஆசை; பெண்குழந்தையல்லவா? அலங்காரப்பிரியை அவள்! தனது விளையாட்டை விட்டுவிட்டுவர மனமில்லாமல் தாயை ஏக்கத்தோடு பார்க்கிறாள். இதுதான் வாய்ப்பெனத் தாய் தனது அச்சுறுத்தல்களைத் தொடர்கிறாள்.  “உன்னிடம் அன்பாகப் பேசவும் மாட்டேன் குழந்தாய்! புழுதிபடிந்த உன் முகத்தையும் ஏறெடுத்துப் பார்க்கமாட்டேன் போ! அலங்காரம் செய்தபின் எனது முலைப்பாலையும் ஊட்டமாட்டேன். ஆசையாக எனது இடுப்பில் உன்னைத் தூக்கிவைத்துக்கொண்டு தேரோடும் வீதியில் சென்று நித்தமும் வேடிக்கை காட்டுவேனல்லவா? அதையும் செய்யமாட்டேனடி பெண்ணே!” குழந்தைக்குத் தாளவில்லை! இவையனைத்தும் அன்னையிடம் அவளுக்குண்டான தினசரி சலுகைகள். எப்படி அவற்றை இழக்கமுடியும்? குழப்பத்துடன் அன்னையைப் பார்க்கிறாள். அன்னையோ விடுவதாயில்லை! விரலால் எச்சரித்தபடி, “உனது சிவந்த கனிவாயில் முத்தமிட்டு உன்னைக் கொஞ்சமாட்டேனடி பார்த்துக்கொள்! அழகான மணிகள் குலுங்கும் தொட்டிலில் படுக்கவைத்து, உன்னை உறங்கவைக்கப் பாராட்டிச் சீராட்டித் தாலாட்டும் பாடமாட்டேன் தெரியுமா?” என்கிறாள். இதற்குமேல் குழந்தைக்குத் தாங்கவில்லை. தனது சிறுசோற்றுச் செப்புக்களை வீசியெறிந்து விட்டு உதடுகள்நெளிய அழுகைபொங்கிவர ஓடோடிவந்து தாயின் சேலையில் முகம் புதைத்துக்கொண்டு அவளை அணைத்துக்கொள்கிறாள். தாயும் தனது பொய்க்கோபத்தினை விட்டொழித்து, குழந்தையை இறுக அணைத்துக்கொள்கிறாள். பார்க்கும் நம் முகங்களில் புன்னகை அரும்புகிறது இல்லையா?
    இவள் இமவானின் அகன்றமார்பில் (விசாலமான இமயமலையில்) தவழும் குழந்தையல்லவோ? இவளையா கோபிப்பது?
    ‘வருக வருக என் குழந்தையே! சாலிப்பதி எனப்படும் நெல்லையில் வாழ்கின்ற காந்திமதித்தாயே, விரைந்து வருகவே!’ என நாமும் பாடியவாறே குழந்தையை எண்ணத்தில் அணைத்துக் கொள்கிறோம்.

    ‘வாரா திருந்தா லினிநானுன் வடிவேல்
    விழிக்கு மையெழுதேன்
    மதிவாள் நுதற்குத் திலகமிடேன் மணியால்
    இழைத்த பணிபுனையேன்
    …………………………………………….
    தேரார் வீதி வளங்காட்டேன் செய்ய
    கனிவாய் முத்தமிடேன்
    திகழு மணித்தொட் டிலிலேற்றித் திருக்கண்
    வளரச் சீராட்டேன்…..’

    பேராதரம்- மிகுந்த அன்பு; ஒக்கலை- இடை.
    (நெல்லை காந்திமதியம்மை பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்
    வித்துவான் அழகிய சொக்கநாதப்பிள்ளை)

    அன்னைத் தெய்வத்தைக் குழந்தையாக்கி இவ்வாறு வருந்தியும், வேண்டியும், உரிமையுடன் கோபித்தும், பின் கொஞ்சியும் அழைத்தால் அவள் வந்து அருள்செய்யாமல் இருப்பாளா?
    திருச்செந்தூர் பிள்ளைத்தமிழில் பகழிக்கூத்தரும் இதுபோன்றே தாய் குழந்தை முருகனிடம் பொய்யாகச் சினம் கொள்வதாகப் பாடியுள்ளார். ‘உன் அரைஞாண் இறுக்கமாக உள்ளது. அதனை வாகாக தளர்த்திப் பூட்ட மாட்டேன். இலங்கும் மகர குண்டலத்தை எடுத்துக் குழைமீது அணிவிக்க மாட்டேன்; நெற்றியில் திலகம் தீட்ட மாட்டேன்,’ எனவெல்லாம் தாயின் பலவிதமான பொய்யானஅச்சுறுத்தல்கள்! இது போன்றே பழனி முருகனின் தாய்மாரும் பலவிதமாகக் கூறிக் கொஞ்சி அவனை வருமாறு அழைக்கின்றனர். சீர்காழி கோவிந்தராஜனின் இனிய தெய்வீகக் குரலில் இப்பாடலைக்கேட்டு ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

    ‘பொன்னே வருக பொன்னரைஞாண் பூட்ட வருக சிறுசதங்கை
    புனைய வருக மணிப்பதக்கம் பூண வருக
    ………………………………………………..
    முத்த மிடற்கு வருகஎதிர் மொழிகள் மழலை சொலவருக
    தன்னே ரில்லா நுதல்திலகம் தரிக்க வருக விழியினில்மை
    சாத்த வருக ……………………………….
    வளஞ்சேர் பழனிச் சிவகிரிவாழ் வடிவேல் முருகா வருகவே!’
    (பழனிப்பிள்ளைத்தமிழ்- வருகைப்பருவம்- சின்னப்ப நாயக்கர்)

    இங்கு புலவர் முருகனின் தெய்வத்தன்மையைப் பாடுகிறார்; ஆயினும் அவனுடைய குழந்தை வடிவிற்கு அலங்காரம் செய்து, பொன்னும் மணியும் புனைவித்து, முகத்தோடணைத்துச் சீராட்டி மகிழ விரும்பும் தாயினது பேராவலையும் பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு அணிகலனாகத் தன் குழந்தைக்கு அணிவித்து அழகுபார்க்க விழையும் தாயுள்ளத்தின் பேராவலையும் அன்பையும் இப்பாடல்கள் பதிவு செய்துள்ளன. இங்கு மெய்யடியார்களின் ஒரு அருமையான சிந்தனைத்துளியை எண்ணிப்பார்க்கலாம். தன் பிரியத்துக்குரிய தெய்வக்குழந்தை காலில் தண்டையும் சதங்கையும் கொஞ்ச அருகே வந்தால் எவ்வாறிருக்கும் எனும் எண்ணமே அவர்களைத் தாயன்பில் இன்புறுத்துகிறது. பக்தியில் நெகிழவைத்தும் அன்பில் மகிழ வைத்தும் சிலிர்ப்பூட்டுகின்றது.

    ‘தண்டையணி வெண்டையம் கிண்கிணிச தங்கையும்
    தண்கழல்சி லம்புடன் கொஞ்சவே…’

    எனும் அருணகிரிநாதரின் திருப்புகழின் சந்தநயத்தில் மகிழாதவர்கள் இல்லை.  ‘அந்தகன் வரும் தினம்’ எனும் மற்றொரு திருப்புகழில் அருணகிரிநாதர், முருகனை அழைப்பதும் மிகவழகான சந்தநயமும் கருத்துச் செறிவும் கொண்ட பாடல். தாயான உமையவளின் உள்ளம் மகிழுமாறு கால்களில் சின்னஞ்சிறு சதங்கைகள் கொஞ்சிட குழந்தை முருகன் ஓடோடி வருகிறான். அன்னையின் அன்புள்ளம், அவன் தன்னிடம் வந்து அளிக்கப்போகும் ஆசை முத்தத்திற்காக- ‘சங்கரி மனம் குழைந்துருக முத்தம்தர வரும் சரவணனுக்காக’- ஆவலாக எதிர்பார்த்துக்கொண்டுள்ளது என்பதனைக் கூறும் வரிகள் சிறப்பானவை.

    ‘தந்தன தனந்தனந் தனவெனச்
    செஞ்சிறு சதங்கைகொஞ் சிடமணித்
    தண்டைகள் கலின்கலின் கலின்எனத் திருவான
    சங்கரி மனங்குழைந் துருகமுத்
    தம்தர வரும்செழுந் தளர்நடைச்
    சந்ததி சகந்தொழும் சரவணப் பெருமாளே,’

    என்பன பாடலின் ஈற்றடிகள்.
    இதே போன்று முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழிலும் குழந்தை முருகனை, ‘பொன்னால் செய்தபெரிய கழல்கள் பாதச்சிலம்புகளோடு சேர்ந்து கலின் கலின் எனும் ஒலியினை எழுப்பவும், திருவரையில் உடைமணி கிணின் கிணின் என ஒலிக்கவும், மற்றும் பலவாபரணங்கள் பொலியவும் எம்மிடம் வருவாயாக!’ எனத்தாய் வேண்டும் பாடல் காணப்படுகிறது.

    ‘செம்பொற் கருங்குழல் அரிக்குரல் கிண்கிணி
    சிலம்பொடு கலின்கலினெனத்
    திருவரையில் அரைமணி கிணின்கிணின் எனப்பொலந்
    திண்டோளின் வளைகலிப்ப…’

    கேட்டவரம் தர ஒடிவரும் குழந்தை தெய்வம், கிண்கிணி சதங்கையொலிக்க ஆடியசைந்து வரும் குழந்தை எனக் கொஞ்சி, சிறுகுழந்தைத் தெய்வங்களை வாரியணைத்து உச்சிமுகர்ந்து கொண்டாட அன்னைமார் போன்று அடியார்களுக்கும் ஆவல் மிகுகிறது. தமது பக்திப்பெருக்கினையும் கவிதைச் சிறப்பினையும் சொற்களில் குழைத்தெடுத்துப் பாடல்களைப் புனைந்து வைத்துள்ளனர்.
    (இந்தத்தொடர் முனைவர், பேராசிரியர் திரு. கோ. ந. முத்துக்குமாரசுவாமி ஐயா (மேனாள் முதல்வர், தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி, பேரூர், கோயம்புத்தூர்) அவர்கள் தமிழ் ஹிந்து இணையதளத்தில் எழுதி வந்ததன் தொடர்ச்சியாகும். பேராசிரியர் ஐயா முதல் ஐந்து பகுதிகளுடன் நிறுத்திக்கொண்டு இதனைத் தொடர்ந்து எழுதுமாறு என்னைப் பணித்துள்ளார். அன்னார் துவங்கிவைத்த அற்புதமான இத்தொடரை, பேராசிரியர் ஐயாவின் ஆசிகளுடன் எழுதுகிறேன்).

    (பிள்ளைத்தமிழ் பெருகி வளரும்)

    Share
  • சேக்கிழார் பா நயம் – 18

    -திருச்சி புலவர் இரா இராமமூர்த்தி

    கைலையில் இறைவன் சுந்தரமூர்த்தி சுவாமிகளை, அவர் மாதர்களுடன் கலந்து வாழும் பொருட்டுத் தென்பாரதத்தை நோக்கிச் செல் என்று ஆணையிட்டார்! அவ்வகையில் சுந்தரர் திருமுனைப்பாடி நாட்டில் அவதரித்தார்!அந்த நாட்டின் சிறப்பை சேக்கிழார் பெருந்தகை பாடுகிறார்! சிவபிரான் தம் முடிமேல் கங்கை, பிறை, பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றைத் தாங்கியவர்!

    இத்தொடரால் சிவபெருமானின் அருஞ்செயல்கள் கூறப்பெறுகின்றன! வானிலிருந்து விரைந்து ஓடிப்பாய்ந்த கங்கையின் வேகத்தைத் தடுத்துத் தம் சடையின் சிறுபகுதியில் தாங்கி,வழிந்து நாடெங்கும்ஓட விட்டார்! இது குறிப்பாக கைலை மலையிலிருந்து கீழிறங்கித் தமிழ் நாடெங்கும் சென்று திருவருட் பாடல்களஅருளிச் செய்த சுந்தரரின் அருள் வரலாற்றைப் புலப்படுத்து கிறது! அடுத்து இயல்பாகவே முரண்பட்ட மதியையும் பாம்பையும் அருகருகே இருத்திய செயல், குறிப்பாக சுந்தரர் காரணமாகத் தமக்குள் முரண்பட்ட பரவை நாச்சியாரையும், சங்கிலியாரையும் ஊடல் தீர்த்து அவருடன் வாழச் செய்த அருள் வரலாற்றைக் குறிக்கிறது! அடுத்துக் கொன்றை மாலையைத் தலைமேல் சூடிய செயல் குறிப்பாக நிறமும், மணமும் நிறைந்த கொன்றை மலரை யாரும் சூடாமல் ஒதுக்கிய போதும், சிவபிரான் தானே விரும்பித் தலைமேலணிந்து சிறப்புச் செய்தது போல் மையல் மானுடமாய் மயங்கிக் காதல் வயப்பட்ட சுந்தரரை, அவர் பாடலின் பக்திமணம் பாரெங்கும் பரவச் செய்யும் பொருட்டுத் தம் தோழராய் ஏற்றுக்கொண்ட பெருமையைப் புலப்படுத்துகிறது! அதுமட்டுமல்ல, பிரணவ சொரூபம் படைத்த கொன்றை மாலை போன்று, இறைவர் சிறப்பை உணர்த்தும் திருத்தொண்டத்தொகை, தேவாரம் போன்ற பாடல்களை ஏற்று மகிழ்ந்த அழகைக் காட்டுகிறது. இவற்றையே சேக்கிழார்,

    ‘’கங்கையும் மதியும் பாம்பும் கடுகையும் முடிமேல் வைத்த அங்கணர் ‘’ என்ற தொடரால் குறிப்பிட்டார்! முன்பு கைலையில் சுந்தரரைத் தென்திசையில் மெல்லியலாருடன் காதல் இன்பம் கலந்து அணைவாய் என்று போக்கிய போது,

    ‘’செய்ய சேவடி நீங்கும் சிறுமையேன்
    மையல் மானுட மாய்மயங் கும்வழி
    ஐய னேதடுத் தாண்டருள் செய் என
    அங்க ணாளன் அதற்கருள் செய்தபின் ‘’

    என்ற பாடலில் அங்கணாளன் என்று சிவபிரானை நினைவுடன் குறித்தார்! இத்தகைய சிவபெருமான், திருமுனைப்பாடி நாட்டில், திருவெண்ணை நல்லூரில் சுந்தரரை ஆள்ஓலை காட்டித் தடுத்தாட்கொண்டார்! அந்த ஆண்டவர் எழுந்தருளிய நாடே திருமுனைப்பாடி நாடு! என்று பாடுகிறார்!

    அந்தத் திருமுனைப்பாடி நாட்டின் பெண்களைப் பற்றியும் சேக்கிழார் பாடுகிறார்! அம்மங்கையரின் குளிர்ந்த நிலவு போன்ற திருமுகத்தில், செங்கயல்களாகத் திகழும் விழிகள் இருமருங்கிலும் உள்ள செவிகளில் அசையும் குழைகளை நாடிப் பாய்கின்றன! என்பதை.,

    ‘’அங்கணர் ஓலை காட்டி ஆண்டவர் தமக்கு நாடு
    மங்கையர் வதன சீத மதியிரு மருங்கும் நாடிச்
    செங்கயல் குழைகள் நாடும் திருமுனைப் பாடிநாடு!’’

    என்று பாடுகிறார்! இத்தொடரில் , மங்கையர் கண்களின் சிறப்பைச் சேக்கிழார் பாடுகிறார்! கம்பரும் கோசல நாட்டை வருணிக்கும் போது,

    ‘’ஆச லம்புரி ஐம்பொறி வாளியும்
    காசலம்பு முலையவர் கண்எனும்
    பூசல் அம்பும் நெறியின் புறம் செலாக்
    கோசலம்!’’

    என்று பாடுகிறார்!அந்நாட்டின் பெண்களின் கண்கள் நன்னெறிக்கு மாறான வழியில் செல்லாவாம்! அவ்வாறே இந்தத் திருமுனைப்பாடி நாட்டின் மங்கையர் கண்களும் உள்ளன! உலகினர் கண்ணால் காண்பதை விசாரித்துச் செவியால் கேட்டபின் உறுதிப் படுத்திக்கொள்வார்கள்! அவ்வாறே அவ்வூரினர், சுந்தரர் சிவபெருமானின் அடியார் என்று செவியால் கேட்டதை , மூல ஓலையைக் கண்ணால் கண்டு உறுதிப்படுத்திய வரலாற்றை இது வேறுவகையில் கூறுகிறது! இதற்கு மேலும் விளக்கமாக ,

    ‘’இப்பகுதியிலே பின்னர்ச் சரித நிகழ்ச்சியிற் பரவையார் ஆரூர் நம்பிகளைப் “பண்டைவிதி கடைகூட்டக்“ கண்களாற் கண்டபின் “எதிர் வந்தவர் யார்?“ என்று சேடியை வினவி, அவள் சொல்லத் தமது காதுகள் மூலம் அறிந்துகொண்டாராகும். காட்சித் துறையிலே கண்ணால் தலைவனைக் கண்ட தலைவி, பின்னர் அவனை இன்னார் என்று காதாற்கேட்டறிந்துய்வள். ஆதலின் கண்கள் காதுகளை நாடிற்று என்ற குறிப்பை இச்சரித நிகழ்ச்சியிற் காண்போம்’’ என்று சிவக்கவிமணி கூறுகிறார்!

    இப்பாடலில்தான் சுந்தரர் அவதரித்த நாடாகிய திருமுனைப்பாடி நாடும், குறிப்பாக அந்நாட்டை ஆண்ட அரசராகிய நரசிங்க முனையரையர் திருப்பெயரும் கூறப்பெற்றன! இனி முழுப்பாடலையும் பயில்வோம்!

    ‘’கங்கையின் மதியும் பாம்பும்
    கடுக்கையும் முடிமேல் வைத்த
    அங்கணர் ஓலை காட்டி
    ஆண்டவர் தமக்கு நாடு
    மங்கையர் வதன சீத
    மதியிரு மருங்கும் ஓடிச்
    செங்கயல் குழைக்கள் நாடும்
    திருமுனைப் பாடி நாடு!’’

    சிவபிரானின் பெருமை, சுந்தரர் வரலாற்றுச் சிறப்பு, பெண்களின் பெருமை, நாட்டின் அறிமுகம் ஆகிய அனைத்தையும் புலப்படுத்தும் சேக்கிழார் திருப் பாடலின் சிறப்பே சிறப்பு!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 194

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.01.2019) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share