அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (05.01.2019) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி – 194

  1. எண்ணத் தூரிகையால் தன் வாழ்வில்
    வண்ணம் தீட்ட வேண்டிய மழலைகளின்
    கைச்சிறகாம் தோள்களில்
    புத்தகப் பொதிமூட்டையின் வடுக்களை ஏற்றி
    சுயகற்றலுக்கு விடுப்பு கொடுத்து
    விடுப்பு நாட்களிலும் வகுப்பு நடத்தும்
    நவீனசமூகத்தின் நாகரீக அவலம்…

    கண்முன் காணும் பச்சிலையைத்
    தானே அருந்தத் தெரிந்திருந்தும்
    கயிற்றால் கட்டுண்டு
    தரும் கரம் பார்த்தே ஏங்கி நிற்கும் வெள்ளாடாக…

    தானாய் வாழப் பிறந்திருந்தும்
    தரமான கல்வி வழங்குவதாய்க்
    கட்புலனாகாச் சங்கிலியால்
    கண்டுண்டே வாழ்கின்ற மழலைகள் காண்…

    பொருள் தேடும் ஓட்டத்தில்
    பெற்றோர் கொடுத்திட்ட தனிமையில்
    “ப்ளூவேல்” விளையாட்டுடன்
    புறவுலகினை மறந்திடும் குழந்தைகளும்…

    தொடர்பு எல்லைக்கு அப்பால் அரவணைப்பு…
    தொடுதிரை ஒன்றே துணையிருப்பு என
    மனசிதைவுடன் வளரும் குழந்தைகளும்..

    பலி கொடுக்க வளர்க்கப்படும் வெள்ளாடுகளே….
    முனைவர்.ம.தனப்பிரியா,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்க்கல்லூரி,
    பேரூர், கோவை.

  2. தவறவிட்ட நினைவுகளாய்….
    அந்திமப் பொழுதின்
    பசுமையும், பால்யமும்
    விக்கித்துத் தொண்டைக் குழியை அடைக்கிறது.

    ஓட்டைச் சராய்களுக்கு
    ஊதுகுழனாய் மாறியிருந்த
    சினேகிதனுக்கு இரண்டு குழந்தைகளாம்….

    அன்றைக்குத் தெரியாது போயிருந்தது
    இனி இவை எங்களுக்கில்லை என்று…
    எங்களுக்கே இல்லை என்றபின்
    எங்கிருந்து எம் பிள்ளைகளுக்கு?

    உரித்துத் தொங்கவிடப் பட்டிருக்கும் ஞாயிறுகளில்
    எச்சில் சொட்ட சப்புக் கொட்டும்
    நாக்குகளுக்குக்
    காட்சிப்பிழையாய் மாறிவிட்டன இவை…

    ஆட்டுரோமத்தின்
    வாசனை நாசிக்குள்ளும்
    இளஞ்சூட்டுப் பாலின் வரிகள்
    உதட்டோரத்திலும்
    பிந்தைய சாமத்தில்
    தேடியலைந்த மண்மிதிச் சுவடுகளும்
    எங்கோ விட்டுவிட்ட
    நினைவுகளுக்குள் சொப்பன ரூபமாகிவிட்டது…

    இப்படியாக இழுத்துவிடும்
    ஒரு பெருமூச்சில் தெரிந்துவிடும்
    பால்யகாலத்து அந்திமப்பொழுதின்
    தவறவிட்ட நினைவுகள்….

    திரு.பஃறொடையான்,
    தமிழாசிரியர்,
    ஈரோடு,
    9944336007.

  3. மனதிடம் கேட்டுப்பார்ப்போம்…!!
    ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
    -ஆ. செந்தில் குமார்.

    ஆர்க்கும் வண்டுகள் அமர்ந்த பூந்தோட்டம்..
    பார்க்கும் இடமெலாம் பச்சை வயல்வெளி..
    ஈர்க்கும் விதமாய் அமைந்த பனைமரங்கள்..
    ஊருக்கே வழிகாட்டும் பெரியோர் சொல்வதை..
    ஏற்கும் சிறாரிவற்றையெலாம் காண்பதினி எக்காலம்..?

    சேற்று வயலாடி புழுதியில் புரண்டு..
    ஆற்றினில் நீந்தி வருடியத் தென்றல்..
    காற்றின் இன்பம் பருகியொரு கவளம்..
    சோற்றை உண்டபோது இருந்த நிறைவு..
    எற்றைக்குக் கிட்டுமோ இக்கால குழந்தைகட்கு..?

    எட்டாத உயரமெலாம் தன் ஆற்றலால்..
    எட்டிவிட எண்ணி தோற்றுப்போய் இன்று..
    கட்டளையிட்டு பெற்றோர் அனைவரும் அவர்தம்..
    பட்டுப்போன்ற பிள்ளைகளை வதைத்து அச்சிகரத்தைத்..
    தொட்டுவிடு என்றிடும் நிலைமாறுவ தெப்போதோ..?

    வயதுக்கேற்ற இயல்போ டிருக்கும் குழந்தைகள்..
    அயர்ச்சியே சற்றும் இல்லாத முகங்கள்..
    இயற்கையோடு இயைந்த ஓர் வாழ்வு..
    உயர்ச்சியென்பது சேர்க்கும் செல்வத்தில் அல்ல..
    முயன்று இவற்றையெல்லாம் உணருங்காலம் எப்போதோ..?

  4. என் ஆட்டு நண்பா…
    ____________________

    அப்பா உரம் வாங்க
    அடுத்த ஊருக்குப் போனதால்
    அழைத்து வந்தேன் புல்மேய
    அவரின் ஆணைப்படி
    ஆட்டு நண்பா இன்று
    அனைவருக்கும் விடுமுறை
    அடுத்த தெருவில் எம் நண்பர்
    அனைவரும் விளையாடுகிறார்
    அனுதினமும் பள்ளிக்கூடம்
    அந்திப்பொழுதில் வீட்டுப்பாடம்
    அலுக்காமல் ஓடியாட
    ஆசைதான் எங்களுக்கும்
    அம்மாவுக்குத் தெரியாமல்
    அத்தை வாங்கிக் கொடுத்த
    அண்ணாச்சிக் கடை கோலிக்காய்
    ஆசையாய் அழைக்கிறது
    அத்தான்களுடன் ஒரு
    ஆட்டம் போட்டுவிட்டு
    அழைத்துப் போகிறேன் மேய
    அதுவரை சத்தமில்லாமல்
    அமைதியாய் உண்ணு இதை
    அடங்காத உன் தம்பி கயிற்றை
    அறுத்துவிட்டு ஓடுகிறான்
    அவனையும் பிடித்து வரேன்
    அறிவுரை சொல்லி
    அருகே வைத்துப் பார்த்துக்கொள்.

  5. புதிய கல்வி
    ——————————————————————————————–
    பள்ளி கூட பாட ஏட்டுப் பாரச் சுமைகளை
    தள்ளிவைத்து விட்டு துள்ளி விளையாட
    கள்ளிக் காட்டு கரிசல் பூமிப் பக்கம் கலார வந்த
    பிள்ளை நிலாக்களின் பட்டறிவு உலா

    காற்று நுழைய கூட கணம் தயங்கும்
    வெற்று கட்டிடக் கல்விக்கூட சிறைகளில்
    பெற்றுக் கொண்ட பாராயாண படிப்புகளை விட்டு
    கற்றுக் கொள்ள களத்துமேடு வந்த பிஞ்சுகளின் திருவிழா

    வீட்டை விட்டு விடுதலையாகி சிட்டு குருவியாக சிறகுவிறி
    நாட்டை நாளை ஆளப்போகும் நீ பக்குவமாய் படி
    காட்டை ஆளும் பாட்டாளிகளின் பாட்டை- இது
    ஏட்டை தாண்டிய விலையில்லா விளையாட்டுக் கல்வி

    உணர்வுகளை கொன்று உயிர்களை
    உண்ணத் தலை கொய்யும் உலகத்தினரிடை-ஆடு
    உண்ணத் தழை கொடுக்கும் சின்னத்தம்பி
    உண்மை அன்பில் நீ ஆனாய் தங்க(த)ம்பி

    வெட்டி விடுதலை கொடு கட்டுண்டு
    வெட்டுபட போகும் அந்த ஆடுகளின்
    கட்டு தளைகளை விடை பெறட்டும்
    விடைகளின் (ஆடுகளின்) அடிமை வாழ்வு முறை

    மரத்துப் போன மனுட மனங்களில்
    மறவாமல் ஊன்றிடுவோம் மலர்ச்சி விதைகளை
    நட்பு மரங்களை நலபடி நட்டு வளர்த்திடுவோம்
    நாமும் நாளைய உலகும் நலமுடன் வாழ

    யாழ். பாஸ்கரன்
    ஓலப்பாளையம்
    கரூர்- 639136
    9789739679
    basgee@gmail.com
    http://noyyal.blogspot.in

  6. பிள்ளை மனது…

    ஆடும் பிள்ளைகள் விடுமுறையில்
    ஆட்டம் போடுவர் காட்டினிலே,
    ஆடுகள் வந்தால் மேய்ச்சலுக்கு
    ஆட்டம் பாதியில் நின்றுவிடும்,
    தேடும் இரைக்குத் துணையாகி
    தேடித் தழைகள் கொண்டுவந்தே
    கூடிக் கொடுப்பர் ஆடுகட்கே,
    குழந்தை உளமிது வாழியவே…!

    செண்பக ஜெகதீசன்…

  7. புரியாத புரிதல்
    _______________

    புரியாத விடயங்களை
    புதிய முறை படம் காட்டி
    புவி வாழ் மாந்தர் இயற்கைக்கு
    புரியும் தீமை தனை
    புகலும் கதைகளை
    புத்திசாலி மாணவர் எமக்கு
    புரியச் சொன்னாள் ஆசிரியை
    புரிதல் இல்லோர்க்கு
    புரியாமை நிரந்தரமே என
    புலம்பி சோர்ந்திடாமல்
    பூ உலகந்தனில் நாம்
    புன்னகையோடு வாழ
    புத்தகப் படிப்புடன் யாம்
    புவி வளங்களையும் காப்போம்
    புரிந்து நடக்க மனமின்றி
    புத்திகெட்ட மாந்தர்
    புறம் வீசும் நெகிழிகளை
    புலன்களாலும் தொடாதே
    புதிய மணத்துடன் பசுமை
    பூசிக் குளித்துள்ள இப்
    புல்லையும், தழைகளையும்
    புசித்துவாழக் கற்றுக்கொள்
    புரிந்ததை உம் கூட்டத்திற்கு
    புரியம்படி எடுத்துச் சொல்
    புறப்படுகிறோம் இப்போ
    புரிந்தது போல் நடிக்கும்
    புரியாதவருக்கு புரியவைக்க.

  8. தொலைந்து போன அதிசயம் 

    நிலவை காட்டி சோறு ஊட்டிய காலம் போய்
    கைபேசியில் காணொளி காட்டி ஊட்டும் தாய் 
    வெட்ட வயிலில் விளையாட மறந்து
    கணணியும் கைபேசியுமாய் பள்ளி செல்லும் பிள்ளைகள் 
    ஆடம் பிடிக்க கூடாதென குழந்தைகளை
    கைபேசிக்கும் கணனிக்கு அடிமை ஆக்கும் அவலம் 
    அதனை தவறையும் நாம் செய்துவிட்டு
    பிள்ளைகளை கடிந்து கொள்ளும் பெற்றோர்கள்
    புகைப்படம் என்றாலும்
    சுத்தமான காற்றை சுவாசிக்கும் மழலைகள் 
    கட்டுண்ட ஆடாய் இருந்தும்
    அன்பாய் உண்ண தழை கொடுக்கும் பாசக்கார நண்பன் 
    தன் பெயரை சொல்லி மொட்டை அடித்து காத்து குத்தி
    ஆடு அடித்து உற்றார் உறவினருக்கு அன்னதானம்
    என்றெண்ணி கலங்கும் மழலை உள்ளம் இங்கே  
    இது தொன்று தொட்டு வரும் பழக்கம்
    கலங்காதே என்று சமாதானம் சொல்லும் நண்பர் கூட்டம் 
    கற்பனைதான் என்றாலும்
    புகைப்படத்தை கண்டு மகிழும் மனம் சொல்லும் 
    தொலைந்து போன அதிசயம் இது என்று 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *