Blog

  • பொங்கல் வாழ்த்து

    -சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம்

    https://www.vikatan.com/news/album/festival/4035-97897-.album

    மாதவனை வணங்கிய
    மார்கழி முடிந்ததும்
    ஆதவனை வணங்கிட
    தைப் பொங்கல் வருகுது .

    போகட்டும் துன்பமென
    போகியோடு துவங்குது
    பொங்கட்டும் இன்பமென
    பொங்கல் தொடருது .
    உழவுக்கு உதவி செய்யும்
    மாட்டுக்கு நன்றி சொல்ல
    மாட்டுப்பொங்கல்
    மறுநாள் வருகுது .
    உறவுகளைப் புதுப்பித்து
    உற்சாகம் கண்டிடவே
    காணும் பொங்கல்
    மூன்றாம்நாள் வருகுது ..

    உணவுத்தரும் தொழிலுக்கும்
    உணர்வில் கலந்த தமிழுக்கும்
    ஒருசேர விழா எடுக்கும்
    உயரியவிழா பொங்கலன்றோ .

    வியர்வை சிந்தி உழைக்கும்
    விவசாயி பிழைத்திடவும்
    விவசாயம் தழைத்திடவும்
    விலை நன்கு கிடைத்திடவும்
    வேண்டிடுவோம் இந்நாளில் .

    தமிழர் திருநாளாய் -இந்தத்
    தரணி போற்றும் நன்னாளில்
    தமிழன்னை புகழ் பாடி
    தமிழினத்தை உயர்த்திடுவோம்.

    திருவள்ளுவர் தினத்தில்
    திருக்குறளை முற்றோதி
    குறள் வழி வாழ்ந்து இந்தக்
    குவலயத்தில் உயர்ந்திடுவோம் .

    உழவன் வாழ்க , உயிரினங்கள் வாழ்க ,வாழ்க
    தமிழ் வாழ்க , தமிழினம் வாழ்க .,வாழ்க
    வள்ளுவம் வாழ்க ,இவ்வையகம் வாழ்க, வாழ்க .
    பொங்கலோ பொங்கலென பொங்குக இன்பமெங்கும் .

     

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 8

    -சி. ஜெயபாரதன், கனடா


    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை
    [Miss me, But let me go]
    ++++++++++++++

    [27] தீ வைப்பு

    ஈழத்தில் இட்டதீ சீதைக்கு ! எழில்மதுரை
    சூழத்தீ இட்டது கண்ணகிக்கு ! – காலவெடி
    மாய்த்த துணைவிக்கு கானடா தீவைப்பாம் !
    ஆயுள் முடிந்த கதை.

    +++++++++++++++

    [28] தனிமை

    கொடிது கொடிது இளமையில்
    வறுமை !
    அதனினும் கொடிது
    நடுமையில்
    ஊழிய வருவாய் இன்மை !
    அதனினும் கொடிது
    முதுமையில் நோய்மை !
    அதனினும் கொடுமை
    மண விலக்கு,
    இல்லற உடைப்பு,
    புறக்கணிப்பு !
    அனைத்திலும் பெரும் கொடுமை
    மனத்துக் கினிய
    மனைவியோ, கணவனோ
    சட்டெனத் தவறி
    மனிதப் பிறவி நொந்திடும்
    தனிமை ! தவிக்கும்
    தனிமை.

    ++++++++++++++++

    [29]இட்ட கட்டளை

    முதலில் கண் மூடுவது
    தானோ அல்லது
    நானோ என்று துணைவி
    நாள்தோறும்
    எட்டிப் பார்ப்பாள் என்னை
    அடிக்கடி,
    அடுத்த அறையில் நான்
    எழுதும் போது !
    இரவு பதினொரு மணி !
    இனிமேல்
    எழுத வேண்டாம்.
    எனக்கிடுவாள் கட்டளை !
    எதுவும் நேர்ந்தால்
    எனக்குத் தெரியாது.
    என்னால் உதவ முடியாது

    +++++++++++

    [30] துணைவியின் கொடை

    கண்ணும் கருத்துமாய்
    வளர்த்த
    பெண்டிர் இருவர்.
    மூத்தவள்
    மருத்துவப் பணி.
    இளையவள்
    பொறியியல் பணி.
    தக்கார் தகவிலர் என்பது
    மக்கட் திறனால்
    தெரியுமாம்.
    இல்லறப் பயன்பாடு
    என்பது
    பிள்ளைகள் செயற்பாடு.

    31] பொங்கலோ பொங்கல்

    ஒவ்வோர் ஆண்டும்

    தவறாது

    ஒவ்வோர் தை மாதமும்

    மறவாது,

    குளிர்நாடு கானடாவில்

    எங்கள் இல்லத்தில்

    கமகமவென மணக்கும் பால்

    பொங்கல் வைப்பாள்

    என்னருமைத் துணைவி.

    தித்திக்கும்

    சர்க்கரைப் பொங்கல் !

    சாம்பார்

    வெண் பொங்கல் !

    இரட்டைப் பொங்கல் !

    இவ்வாண்டு தைத் திங்கள்,

    பொழுது புலர்ந்தது,

    பொங்கல் பானை,

    புத்தரிசி,

    சர்க்கரை, கரும்பு, பால்

    அக்கரையுடன்

    காத்திருக்கும் வாசல்

    முற்றத்தில் !

    எங்கே துணைவி

    பொங்கல் வைக்க வருவாளா

    எங்கள் இல்லத்தில் ?

    ++++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.
    சி. ஜெயபாரதன்

    Share
  • மகாகவி பாசாவின் ’பிரதிமா’ நாடகக் களன்

    தி.இரா.மீனா

    வடமொழி இலக்கிய உலகில் நாடகம் என்ற சொல்லைக் கேட்ட அளவில் நினைவில் நிற்கும் பாசாவின் பதிமூன்று நாடகங்கள் இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில்  கேரளத்தைச் சேர்ந்த கணபதி சாஸ்திரியால் கண்டு பிடிக்கப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டன. பாசாவின் காலத்தைப் பற்றிய கணிப்புகள் பலவாக இருந்தாலும் சாகுந்தல காளி தாசனுக்கு முற்பட்டவர் என்பதில் இரண்டாவது கருத்து  கிடையாது. மாளவிகாகினி மித்திரத்தில்“ பாசா, கவிபுத்ரா போன்ற மிகச் சிறந்தவர்களைக் குறிப்பிடாமல் இருக்க முடியுமா” என்று காளிதாசன் எழுதியுள்ள குறிப்பு, இதை உறுதி செய்கிறது. காளிதாசன் தன் படைப்புகளில் பாசாவின் உத்திகளைப் பயன்படுத்தி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

    சிறந்த ஓவியங்களையும், சிற்பங்களையும்  பார்க்கும் போது படைத்த கலைஞனை விட அவன் படைப்புகளே  சாஸ்வதமாகி  நிற்கின்றன. இந்தியச் சிந்தனையைப் பொறுத்தவரை  படைப்பாளியின்  சுயவரலாறு முக்கிய இடம் பெறாததால் கடந்த கால மனிதர்களின் வரலாறு எவ்விதத் தேடல்களுக்கும்  சிக்காமல் போய் விடுகிறது. பாசாவும் இதற்கு விதி விலக்கல்ல. மகாபாரத, இராமாயணக் கதைகளே இவருடைய படைப்புகளின் கரு. இதில் 6 நாடகங்கள், மகாபாரதப் பின்புலம் கொண்டவை. நாட்டிய சாஸ்திரம் என்ற இலக்கண நூலின் விதிகளுக்குப்  புறம்பான  வகையில் முதலில் அவல முடிவுகளை படைப்புகளில்  வெளிப்படுத்தியவர். அவ்வகையில் உறுபங்கம், கர்ணபாரம்  என்ற இரண்டு நாடகங்களும் அளவில் சிறியவையாக அமைந்து, அவலச் சுவை முடிவு  கொண்டவை. நவீன நாடக   உலகினராலும் பேசப்பட்டும், இயக்கப்பட்டும் வருபவை.

    இராமாயணத்தின் அயோத்தியா, ஆரண்யா காண்டங்களைப் பின்னணியாகக் கொண்டு சமஸ்கிருத நாடக ஆசிரியரான பாஸனின் ’பிரதிமா’ நாடகக் களன் அமைகிறது. இந்நாடகத்தின் மூன்றாவது அங்கத்தில் இடம் பெறும் சிலையை நாடகத்திற்கு மூலமாக பாஸன்    கருதியதால் ’பிரதிமா’[ பிரதிமம்–உருவம்] என்பது நாடகப் பெயராகிறது. சிலை பற்றிய சிந்தனை, ஆசிரியனின் முழுக் கற்பனையாக அமைந்து நாடகத்தின் பெயருக்கும் கருவுக்கும் வலுவூட்டுகிறது.

    இராமனின் முடிசூட்டு விழாவை தசரதன் அறிவிப்பதான நிலையில் இந்நாடகத்தின் முதல் அங்கம்  தொடங்குகிறது.  இந்த அறிவிப்பு எங்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்த, தொடர்ந்து மங்கல முழக்கங்கள் கேட்கின்றன. தன் தோழியர் கூட்டத்தோடு மிக இயல்பாக பேசிக் கொண்டிருக்கும் சீதைக்கு இச்செய்தி ஆச்சர்யமாக உள்ளது. சீதையின் பல நல்லியல்புகளை அவர்கள் சொல்லிக் கொண்டிருக்கும் வேளையில் அவத்திகா என்னும் பணிப்பெண் கையில் மரவுரி ஒன்றை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருக்கிறாள். அதைப் பார்த்த சீதை தான் அணிந்தால் அது தனக்கு  அழகாக இருக்குமா எனக் கேட்கிறாள். ஆசையில் உடனடியாக அதை  அணிந்தும் பார்க்கிறாள். அவள் அணிந்த பிறகு மரவுரி  பொன்போல மாறி விட்டதென பெண்கள் சொல்லிச் சிரிக்கின்றனர். முடிசூட்டு விழா நின்றுவிட்டதாக திடீரெனப் பேச்சு எழுகிறது. அது தடைப்பட்டதற்கான காரணத்தை அறியாமல் இராமன், சீதை இருக்குமிடம் வருகிறான். கைகேயி தன் தந்தைக்குத் தசரதன் தந்த வரத்தை நினைவூட்ட, பரதனுக்கு நாடாளும் உரிமை கிடைத்ததாக, கூடியுள்ள அனைவரும் அப்போது பேசுவதைக் கேட்கிறான். இது இராமன், சீதை இருவருக்குமே வருத்தம் தரவில்லை. தசரதன், கைகேயி  இருவரும் வனவாசம் போகும்படி தன்னிடம் சொல்லாதபோதும் இராமன் புறப்படுகிறான். மங்கல ஒலியும் அடங்குகிறது. வனவாசத்திற்குப் புறப்படும் இராம இலக்குவரோடு சீதையும் புறப்படுகிறாள். கைகேயின் இரண்டு வரங்களையும் பாஸன் குறிப்பாகக் கூட இந்த இடத்தில் சுட்டிக் காட்டவில்லை. இந்தக் காட்சி தசரதனையும், கைகேயியையும் பழியிலிருந்து காக்க, ஆசிரியர் செய்யும் முயற்சிதான். கைகேயியை அயோத்தி பழிக்கக் கூடாது என்ற முறையிலேயே இராமனின் வனவாசச் செயல்பாடு அமைகிறது. இராமன் அரண்மனைக்கு வந்தபோது  சீதை மரவுரியை அணிந்து பார்த்ததும் இதே மாதியான மற்றொரு நயமான பாஸனின் சிந்தனை அடையாளம். சீதை விளையாட்டாக அணிந்த தவ ஆடை, கைகேயி வரம் நடைமுறையாவதற்கு முன்பே இயல்பாக அமைந்தது என்ற சிந்தனை வெளிப்பாடு குறிப்பிடத்தக்கது. இந்த அங்கத்தில் மிக முக்கியமான பாத்திரங்களாக அமையும் தசரதன், கைகேயி, மந்தரை ஆகிய மூவரும் மேடையில் பங்கு பெறாததும் குறிப்பிடத்தக்கது.

    இரண்டாவது அங்கத்தில் இராமன் தம்பியோடும், சீதையோடும் வனவாசம் சென்றது தந்தைக்கு அளவில்லாத துயரம் தருகிறது. புலம்பியும் வருந்தியும் தவித்தும், இறந்து போகிறான். இப்பகுதியில் மூலக் கதையிலிருந்து எவ்வித பெரிய மாற்றத்தையும் பாஸன் செய்யவில்லை. நீண்ட காலமாகவே பாட்டன் குடும்பத்தோடிருந்த பரதனுக்கு தந்தையின் மரணச் செய்தி அறிவிக்கப்படவில்லை. அயோத்தி திரும்ப ஆணை மட்டுமே பிறப்பிக்கப்படுகிறது.

    மூன்றாவது அங்கத்தில் ஆசிரியரின் அணுகுமுறை மிகப் பெரிய அளவில் மாறுகிறது. ’பிரதிமா நாடகம்’ என நாடகத்திற்குப் பெயர் தரும் பெருமை இந்த அங்கத்திற்கு உரியதாகும். பாட்டன் வீட்டில் இருக்கும் பரதனுக்குத் தந்தையின் இறப்பு தெரிவிக்கப்படவில்லை. தசரதனுக்கு உடல் நலமில்லையாதலால் பரதன் உடனடியாக வரவேண்டும் என்ற வேண்டுகோளோடு தேரோட்டி பரதனை அழைத்து வருகிறான். வரும் வழியில் தந்தையின் உடல் நலம் குறித்துப் பரதன் விசாரிக்கிறான்.

    பரதன்                  :    இப்பொழுது தந்தை எப்படி இருக்கிறார்?

    தேரோட்டி           :    சித்திரவதைப்பட்டுத்தான்.

    பரதன்                  :    மருத்துவர் என்ன சொல்கிறார்?

    தேரோட்டி            :   அவர்களால் இப்போது எதுவும் செய்ய முடியாது.

    பரதன்                  :   சாப்பிடுவது, தூங்குவது எல்லாம்…?

    தேரோட்டி            :  எதுவும் சாப்பிடாமல் தரையில்தான் படுத்திருக்கிறார்.

    பரதன்                   : என்ன செய்வது?

    தேரோட்டி            :  கடவுள்தான்..

    என்ற உரையாடலில் மறைமுகமாக தசரதனின் நிலையைத்  தேரோட்டி  சொல்வது போலக் காட்சி அமைகிறது. ஆழமாகவும் மிகத் தெளிவாகவும் அமைந்த உரையாடலை உற்று ஆராய்ந்தால் உள்ளமைப்பு புரியும் என்பதான  நாடக ஆசிரியன் பார்வை இங்கு வெளியாகிறது. பேசியபடியே அயோத்தியை நெருங்குகின்றனர். நல்ல நேரம் பார்த்துத் தான் அரண்மனைக்குள் வர வேண்டும் என அப்போது  ஊர்ப்பெரியவர்கள் சொல்கின்றனர். பரதன் அதைக் கேட்டு ஊருக்கு வெளியே இருக்கிறான். மிக அழகான கோயில் போன்ற அமைப்பில் அங்கிருந்த ஓரிடத்தின் அமைதி, சூழல், மணம் ஆகியவை  அவனைக் கவர்கின்றன. உள்ளே சென்று பார்த்து வரப் போகிறான். வரிசையாகச் சிலைகள் உள்ளன. இறந்து போன அரசர்களின் சிலைகள் அவை. அங்குள்ள பாதுகாப்பாளர் அந்தச் சிலைகளின் பெயர்களைச் சொல்கிறார். இறந்தவர்களுக்கு மட்டுமே அங்கு சிலைகள் இருக்கும் என அவர் விளக்கமும் தருகிறார். சிலைகளாக உள்ளவர்கள் தன் தந்தையின் வம்சம் என்று அறிந்து கொண்டு ஒவ்வொன்றாகப் பார்த்து வருகிறான். அப்போது அவர் அவன் பரதன் என்பதை அறிந்துகொண்டு ‘கைகேயின் மகன்’ எனச்சொல்லி  அவன் தாய், கேட்ட வரத்தால் தான் இராமன் காட்டுக்குப் போனான் என்கிறார். அதே நேரத்தில் வரிசையில் உள்ள  கடைசிச் சிலையைப் பார்த்த பரதன், அதிர்ச்சி அடைகிறான். அது தசரதனின் சிலை. வார்தைகளின்றி மயங்கி விழுகிறான். தெளிந்த போது கோசலை, கைகேயி, சுமித்திரை என்று தாயர் மூவரும் நிற்கின்றனர். சிலைகள் உள்ள இடம் என்பதால் பிரதிமாகிருகம்’ என்ற இடம் [ பிரதிமா-சிலை. கிருகம்-இடம்] நாடகத் தலைப்பாவது இங்கு குறிப்பிடத் தக்கது.  விவரமறிந்து கைகேயியைப் பலவாறு இகழ்ந்து பேசுகிறான். அவள் தன் தாயாக முடியாது என்கிறான். தான் பட்டத்துக்கு வர எந்த நாளிலும் தயாராக இல்லை எனவும் காட்டிற்குச் சென்று இராமனை அழைத்து வரப் போவதாகவும் சொல்கிறான். பரதன் தன் தாயைவிட இராமனிடம் அதிக அன்பு வைத்திருந்தாகக் காட்சியின் போக்கு அமைகிறது. தவிர இந்த பிரதிமா கிருகம் என்ற இட அறிமுகமும், காட்சி நிலையும் இயல்பான சூழலாக ஒருங்கிணைந்து அமைந்துள்ளது. பார்வையாளனாலும் எந்தத் தயக்கமும் இன்றி இதை மிக இயல்பாக உணர முடிவதும் நாடக ஆசிரியனின் கலை வெளிப்பாட்டுத் திறமையாகிறது. இந்த அங்கத்தில் தந்தை சிலையைப் பார்த்ததன் மூலமாக இறப்புச் செய்தியை பரதன் அறிகிறான் என்பதும், தாய் கைகேயியின் மூலம் அது சொல்லப் படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்க செய்தியாகும். பிரதிமாகிருகக் காட்சி, நாடக அமைப்பிலும் மேடைச் சூழலிலும் தனித்துவம் பெற்றதொரு காட்சியாகிறது, என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

    நான்காம் அங்கம் இராமனும் பரதனும் சந்தித்துப் பேசுவதான சூழலாகும். இருவரும் பெற்றோரிடம் கொண்டிருந்த அன்பையும், சகோதரர்கள் தமக்குள் கொண்டிருந்த நெருக்கத்தையும் இக்காட்சி வெளிப்படுத்துகிறது. காட்டு வாழ்க்கையை விட்டுவிட்டுத் தன்னோடு அயோத்தி திரும்ப வேண்டும் என இராமனை அன்பாகவும் பணிவாகவும் பரதன் வேண்டுகிறான். ஆனால் இதை மறுக்கும் இராமன் தாய் கைகேயியின் விருப்பப்படி 14 ஆண்டுகள் கழித்து அயோத்தி வருவதாக உறுதியளிக்கிறான். இராமனின் பிரதிநிதியாகவே தான் நாட்டை ஆள்வதாக பரதன் சொல்கிறான். பரதனைக் குற்றமற்றவனாகக் காட்டும் வகையில் இராமனின் காலணிகளை அரச பொறுப்பில் பரதன் போற்றுவதான உறுதி மொழியும் நாடகத்தில் ஆசிரியரால் வெளிப்படுத்தப்படுகிறது.

    இராமனும் இராவணனும்  போருக்கு முன்னர்ச் சந்திப்பதான நிலையில் ஐந்தாம் அங்கத்தை அமைத்திருப்பது பாஸனின் காட்சி அமைப்பிற்கும், படைப்புத் திறத்திற்கும் சான்றாகும். இராவணன் ஒரு சந்நியாசியைப் போல  இராமன் குடிலுக்கு வருகிறான். தன் குடில் வரும் இராவணனை இராமன் வணங்குவது போலக் காட்சி அமைகிறது. அது இராமன் வனவாசத்தின் இறுதி ஆண்டான 14ஆம் ஆண்டாகும். அடுத்த நாளில்தான் செய்ய வேண்டிய தந்தையின்  திதி குறித்து அப்போது சீதையோடு இராமன் பேசிக்கொண்டிருக்கிறான். திதி சாத்திரங்களில் சிறந்தவனான இராவணன் பேச்சால் இராமனை தன் வயப்படுத்துகிறான். இமய மலையில் மிக அபூர்வமாகக் காணப்படும் பொன்நிறம் கொண்ட உடலுடைய மானின் தோலில் தர்ப்பணம் செய்வது மிகப் புண்ணியமானது என்கிறான். ஆனால் அவ்வகையான பொன்மான் கிடைப்பது அபூர்வம் எனவும் இராவணன் சொல்கிறான். தந்தைக்குத் தர்ப்பணம் செய்வது சிறப்பாக அமைய வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் இராமனுக்கு எப்படியாவது அந்தச் செயலைச் செய்துவிட வேண்டும் என்ற துடிப்பு எழுகிறது.  அந்த நேரத்தில் சந்நியாசி சொன்ன அடையாளத்தோடான ஒரு பொன்மான் வருகிறது.  அதைப் பிடித்து விட வேண்டும் என்ற ஒரு சிந்தனை மட்டுமே அப்போது இராமன் நெஞ்சில் நிற்கிறது. மானைப் பின் தொடர்ந்து புறப்படும் அவன் சீதையிடம் விடை பெறுகிறான். செல்லுமுன், எப்போதும் உடன் இருக்கும் இலக்குவனை அழைக்கிறான். திதி தொடர்பான குருவை அழைத்து வரப் போயிருக்கிறான் எனச் சீதை இராமனுக்கு தம்பி இல்லாததை நினைவூட்டுகிறாள். இலக்குவனைத் தான் அனுப்பி வைத்ததை மறக்கும் அளவுக்கு அவன் மனத்தில் தந்தையின் திதிச் செயல் பதிந்திருக்கிறது.  சந்நியாசிக்கு வேண்டியதைச் செய்து அவரை அனுப்பி  வைக்கும்படி சீதையிடம் சொல்லி  விட்டு  மானைப் பிடிக்கப் போகிறான். இங்கு எவ்விதச் சந்தேகங்களுக்கும் இடம் தராத வகையில் தன் உரையாடலை திதியோடு தொடர்புபடுத்தி இராவணன் பேசுவதால் அவர்கள் இடையே நடக்கும் உரையாடல்  மிக இயல்பாக இருக்கிறது. இலக்குவனும் வேறு பணி காரணமாகச் சென்றிருக்கிறான் என்ற செய்தி சீதையை இராவணன் கவர சிறந்த  சந்தர்ப்பமாகிவிடுகிறது. வில்லோடு இராமன் சென்று விட்டதைப் பார்த்து மகிழும் இராவணன் தான் யார் என்பதைச் சீதைக்கு அறிவித்து விட்டு அவளைக் கவர்ந்து போகிறான். மான் வேண்டும் என மனைவி கேட்க அவள் விருப்பத்தை  நிறைவேற்ற இராமன் சென்றதாக மூல கதை அமைகிறது. ஆனால் இங்கு தந்தையின் ஆத்ம சாந்திக்கும் திதிக்கும் மிகச் சிறந்தது பொன்மான் தோல் எனச் சந்நியாசி சொன்ன  செய்திதான், அவன் மானைத் தொடர்ந்து போகக் காரணமானது என்று நாடக ஆசிரியனின்  அணுகுமுறை அமைகிறது. இதுவும் பாத்திரப் படைப்பின் உன்னதம்தான். மானைப் பிடித்துத் தரும்படி சீதை வேண்ட  அதை நிறைவேற்றும் வகையில் இராமன் மானைப் பின் தொடர்ந்தான் என்ற சாதாரண வாழ்வுப் பின்னணியில் மனைவி ஆசை, அதை நிறைவேற்ற கணவன் துடிப்பு போன்ற  செயல்கள் இங்கில்லை இராமனின் பாத்திர உயர்வு இப்படித்தான் பாஸனிடமிருந்து வெளிப்படுகிறது.

    ஆறாம் அங்கத்தில் இராமன் காட்டிற்குச் சென்ற பழிக்கு தானே காரணம் என்று கைகேயி  ஒப்புக் கொள்வதான சூழலை பாஸன் காட்டுகிறான். வேட்டைக்குச் சென்ற தசரதன், குளத்தில் யானை தண்ணீர் குடிப்பது போன்ற ஒலியைக் கேட்கிறான். யானை என்று நினைத்து அவன் விட்ட அம்பு  பார்வையற்ற தந்தைக்காக  தண்ணீர் எடுக்க வந்த மகனைக் கொன்று விடுகிறது. தன்னைப் போலவே தசரதனும் புத்திர சோகத்தை அனுபவிக்க வேண்டும் என்ற  சாபம், முதிய தந்தையால் தரப் படுகிறது. இது அறியாமல் செய்த பிழையேயாயினும் விதிவலிமை காட்டுவதாகிறது. இதிலிருந்து தசரத னும் இராமனும் விடுபட வேண்டுமென்றால் இராமன் உயிருக்கு எந்தத் தீங்கும் ஏற்படக் கூடாது எனக் கைகேயி நினைக்கிறாள். அதன் எதிரொலிதான்  இராமனைத் தசரதனிடமிருந்து பிரித்துக் காட்டுக்கு அனுப்பும் செயலாகிறது. இதை,

    கைகேயி  :    அரச பதவி மீது வெறி கொண்டு இராமனைக் காட்டுக்கு   அனுப்பவில்லை. இராமன் வனவாசம் சென்றால் ஒழிய இந்தத்  தவிர்க்க முடியாத சாபத்திலிருந்து மீள  முடியாது.  இதனால்   தான் என் மீது பழி விழுந்தது.

    பரதன்   : மகனின் வனவாசம் அப்படி அவசியமானது என்றால் என்னை  அனுப்பி இருக்கலாமே..?

    கைகேயி  : முதலில் இருந்தே நீ தாய்மாமனோடு  இருந்ததால் அந்த  வாழ்க்கை வனவாசம்  போலப்  பிரிந்து இருப்பதுதான்.

    பரதன்      :    பின்பு ஏன்  14 ஆண்டுகள் என்று நிர்ணயித்தீர்கள்  ?

    கைகேயி   : 14  நாட்கள் என்று சொல்ல வந்தது மனக்குழப்பத்தில் 14    ஆண்டுகள் என்று  மாறிவிட்டது.

    பரதன் :    ‘விவேகம்’ என்பது நிதானமாக இருப்பது என்பது. இது  பெரியவர்களுக்குத் தெரியாதா?

    என்ற தாய்-மகன் இடையேயான உரையாடல் பொருள் செறிவும் பாத்திர உயர்வும்  உடையதாகிறது. மகனின் பிரிவு தாங்காமல் தசரதன் இறந்து போகிறான். இந்த உண்மை வசிட்டர், வாமதேவன், சுமந்திரன் ஆகியோருக்குத் தெரியும் என்று கைகேயி பரதனுக்கு விளக்குகிறாள். இராமனிடம் பேரன்பு கொண்டவளாக கைகேயி இருப்பதால்தான் அவனுக்குரிய சாவைத் தவிர்த்து தந்தையிடமிருந்து பிரித்துக் காட்டுக்கு அனுப்பினாள் என்பது பாஸனின் அணுகுமுறையாகும். மகன் பரதனுக்கு ஆட்சியைக் கொடுப்பது அவள் எண்ணமல்ல என்பது அவர் வெளிப்படையாகச் சொல்ல வரும் செய்தியாகும். பரதன் உண்மையை உணர்ந்து தாயிடம் மன்னிப்பு கேட்கிறான். இராமனுக்குப் போர் உதவி செய்யப் போகிறான்.

    ஏழாவது அங்கம், இராமன் போரில் இராவணனை அழித்துவிட்டு வீடணனுக்குப் பட்டம் சூட்டுவதான நிலையில் தொடங்குகிறது. சீதையுடன் இராமன்  மகிழ்ச்சியாக பரத்வாச முனிவரின் ஆசிரமத்திற்கு வருகிறான். கரடி, குரங்குகள், ஆகியவையும் அவனோடு ஆசிரமம் வருவதாக நாடகம் மகிழ்ச்சிப் பின்னணியில் முடிகிறது.

    இராவணன்-இராமன் போர் விரிவாக பாஸனால் காட்டப்படவில்லை. இராவணன் அழிவு பொதுவாகச் சொல்லப்படுகிறதே தவிர தனிக் காட்சிகளாக அவை இடம் பெறவில்லை. மூல கதையில் இடம் பெறும் முக்கிய பாத்திரங்களான அனுமன்,  இந்திரஜித் போன்ற பாத்திரங்கள் இங்கு இடம் பெறவில்லை. வீடணன் பாத்திரம் முடிசூட்டுதல்  என்ற நிலையில் குறிப்பிடப்படுகிறதே தவிர தனியான பாத்திர முக்கியத்துவம் இல்லை. நாடகக் கதை முடிந்ததென்றாலும் பார்வையாளனுக்கு  இராமனைப் பற்றிய முழுக் கதை தெரிந்ததான திருப்தி  இல்லை என்பதைப் பாஸன் உணர்ந்திருக்க வேண்டும். அதனால்தான் இக்கதையின் தொடர்ச்சியாக ’அபிஷேக நாடகம்’ என்ற அடுத்த நாடகம் உருவாகியிருக்கிறது என்பதில் இரண்டாவது அபிப்ராயம் இல்லை.

    ———————–

    படத்துக்கு நன்றி: https://www.exoticindiaart.com/book/details/pratimanataka-of-mahakavi-bhasa-NZB287/

    Share
  • படக்கவிதைப் போட்டி 194-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 194க்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். நிழற்படக் கலைஞர், தேர்வாளர் இருவருக்கும் என் நன்றி!

    பிஞ்சுக்குழந்தைகளின் அருகில் கயிற்றால் கட்டுண்டு நின்றிருக்கும் இந்த ஆட்டுக்குட்டி “கட்டுண்டோம் பொறுத்திருப்போம் காலம் மாறும்!” எனும் மாகவியின் வரிகளை மனத்தில் அசைபோட்டபடி உண்ணத் தழைதரும் சிறுவனை ஊன்றி நோக்குகின்றதோ? 

    இனி, கவிமழை பொழியக் காத்திருக்கும் கவிஞர்களை வாழ்த்தி வரவேற்போம்! 

    *****

    ஆட்டுரோமத்தின் வாசனை நாசிக்குள்ளும், இளஞ்சூட்டுப் பாலின் வரிகள் உதட்டோரத்திலுமாய் எங்கோ விட்டுவிட்ட நினைவுகளுக்குள் சொப்பன ரூபமாகிவிட்ட பால்ய காலத்தின் அந்திமப் பொழுதில் தவறவிட்ட ஒரு காட்சியாய் இப்படத்தை நினைவுகூர்கின்றார் திரு. பஃறொடையான். 

    தவறவிட்ட நினைவுகளாய்….
    அந்திமப் பொழுதின்
    பசுமையும், பால்யமும்
    விக்கித்துத் தொண்டைக் குழியை அடைக்கிறது.

    ஓட்டைச் சராய்களுக்கு
    ஊதுகுழலாய் மாறியிருந்த
    சினேகிதனுக்கு இரண்டு குழந்தைகளாம்….

    அன்றைக்குத் தெரியாது போயிருந்தது
    இனி இவை எங்களுக்கில்லை என்று…
    எங்களுக்கே இல்லை என்றபின்
    எங்கிருந்து எம் பிள்ளைகளுக்கு?

    உரித்துத் தொங்கவிடப் பட்டிருக்கும் ஞாயிறுகளில்
    எச்சில் சொட்டச் சப்புக் கொட்டும்
    நாக்குகளுக்குக்
    காட்சிப்பிழையாய் மாறிவிட்டன இவை…

    ஆட்டுரோமத்தின்
    வாசனை நாசிக்குள்ளும்
    இளஞ்சூட்டுப் பாலின் வரிகள்
    உதட்டோரத்திலும்
    பிந்தைய சாமத்தில்
    தேடியலைந்த மண்மிதிச் சுவடுகளும்
    எங்கோ விட்டுவிட்ட
    நினைவுகளுக்குள் சொப்பன ரூபமாகிவிட்டது…

    இப்படியாக இழுத்துவிடும்
    ஒரு பெருமூச்சில் தெரிந்துவிடும்
    பால்யகாலத்து அந்திமப்பொழுதின்
    தவறவிட்ட நினைவுகள்….

    *****

    சேற்று வயலாடிப் புழுதியில் புரண்டு ஆற்றினில் நீந்தி வருடிய தென்றல் காற்றின் இன்பம் பருகியொரு கவளம் சோற்றை உண்டபோது இருந்த நிறைவு எற்றைக்குக் கிட்டுமோ இக்காலக் குழந்தைகட்கு? என்று மனத்திடம் வினவுகின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    மனதிடம் கேட்டுப்பார்ப்போம்…!!

    ஆர்க்கும் வண்டுகள் அமர்ந்த பூந்தோட்டம்..
    பார்க்கும் இடமெலாம் பச்சை வயல்வெளி..
    ஈர்க்கும் விதமாய் அமைந்த பனைமரங்கள்..
    ஊருக்கே வழிகாட்டும் பெரியோர் சொல்வதை..
    ஏற்கும் சிறாரிவற்றையெலாம் காண்பதினி எக்காலம்..?

    சேற்று வயலாடி புழுதியில் புரண்டு..
    ஆற்றினில் நீந்தி வருடிய தென்றல்..
    காற்றின் இன்பம் பருகியொரு கவளம்..
    சோற்றை உண்டபோது இருந்த நிறைவு..
    எற்றைக்குக் கிட்டுமோ இக்கால குழந்தைகட்கு..?

    எட்டாத உயரமெலாம் தன் ஆற்றலால்..
    எட்டிவிட எண்ணித் தோற்றுப்போய் இன்று..
    கட்டளையிட்டு பெற்றோர் அனைவரும் அவர்தம்..
    பட்டுப்போன்ற பிள்ளைகளை வதைத்து அச்சிகரத்தைத்..
    தொட்டுவிடு என்றிடும் நிலைமாறுவ தெப்போதோ..?

    வயதுக்கேற்ற இயல்போ டிருக்கும் குழந்தைகள்..
    அயர்ச்சியே சற்றும் இல்லாத முகங்கள்..
    இயற்கையோடு இயைந்த ஓர் வாழ்வு..
    உயர்ச்சியென்பது சேர்க்கும் செல்வத்தில் அல்ல..
    முயன்று இவற்றையெல்லாம் உணருங்காலம் எப்போதோ..?

    *****

    அப்பா அயலூர் சென்றதால் ஆடுமேய்க்க வந்த சிறுவன், ஆட்டிடம் கூறும் சுவையான செய்திகளை திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயின் பாட்டில் காண்கிறோம். 

    என் ஆட்டு நண்பா…

    அப்பா உரம் வாங்க
    அடுத்த ஊருக்குப் போனதால்
    அழைத்து வந்தேன் புல்மேய
    அவரின் ஆணைப்படி
    ஆட்டு நண்பா இன்று
    அனைவருக்கும் விடுமுறை
    அடுத்த தெருவில் எம் நண்பர்
    அனைவரும் விளையாடுகிறார்
    அனுதினமும் பள்ளிக்கூடம்
    அந்திப்பொழுதில் வீட்டுப்பாடம்
    அலுக்காமல் ஓடியாட
    ஆசைதான் எங்களுக்கும்
    அம்மாவுக்குத் தெரியாமல்
    அத்தை வாங்கிக் கொடுத்த
    அண்ணாச்சிக் கடை கோலிக்காய்
    ஆசையாய் அழைக்கிறது
    அத்தான்களுடன் ஒரு
    ஆட்டம் போட்டுவிட்டு
    அழைத்துப் போகிறேன் மேய
    அதுவரை சத்தமில்லாமல்
    அமைதியாய் உண்ணு இதை
    அடங்காத உன் தம்பி கயிற்றை
    அறுத்துவிட்டு ஓடுகிறான்
    அவனையும் பிடித்து வரேன்
    அறிவுரை சொல்லி
    அருகே வைத்துப் பார்த்துக்கொள்.

    இவரே தன்னுடைய மற்றொரு கவிதையில் ”புத்திகெட்ட மாந்தர்
    புறம்வீசும் நெகிழிகளைப் புலன்களாலும் தொடாதே; புதிய மணத்துடன் பசுமைபூசிக் குளித்துள்ள புல்லையும், தழைகளையும் புசித்துவாழக் கற்றுக்கொள்!” என்று ஆட்டிடம் நல்லுரை நவிலக் காண்கின்றோம்.

    புரியாத புரிதல்

    புரியாத விடயங்களை
    புதிய முறை படம் காட்டி
    புவி வாழ் மாந்தர் இயற்கைக்கு
    புரியும் தீமை தனை
    புகலும் கதைகளை
    புத்திசாலி மாணவர் எமக்கு
    புரியச் சொன்னாள் ஆசிரியை
    புரிதல் இல்லோர்க்கு
    புரியாமை நிரந்தரமே என
    புலம்பி சோர்ந்திடாமல்
    பூ உலகந்தனில் நாம்
    புன்னகையோடு வாழ
    புத்தகப் படிப்புடன் யாம்
    புவி வளங்களையும் காப்போம்
    புரிந்து நடக்க மனமின்றி
    புத்திகெட்ட மாந்தர்
    புறம் வீசும் நெகிழிகளை
    புலன்களாலும் தொடாதே
    புதிய மணத்துடன் பசுமை
    பூசிக் குளித்துள்ள இப்
    புல்லையும், தழைகளையும்
    புசித்துவாழக் கற்றுக்கொள்
    புரிந்ததை உம் கூட்டத்திற்கு
    புரியம்படி எடுத்துச் சொல்
    புறப்படுகிறோம் இப்போ
    புரிந்தது போல் நடிக்கும்
    புரியாதவருக்கு புரியவைக்க.

    *****

    ”உண்ணத் தலைகொய்யும் உலகத்தினரிடையே ஆடு
    உண்ணத் தழைகொடுக்கும் சின்னத்தம்பி! உண்மை அன்பில் நீ ஆனாய் தங்கக்கம்பி!” என்று சிறுவனைப் பாராட்டும் திரு. யாழ். பாஸ்கரன், “வெட்டி விடுதலை கொடு! கட்டுண்டு வெட்டுப்படப் போகும் ஆடுகளின் கட்டுத்தளைகள் விடைபெறட்டும்!” என்று அருள்மொழி கூறுகின்றார் சிறுவனிடம்!

    புதிய கல்வி

    பள்ளிக்கூடப் பாட ஏட்டுப் பாரச் சுமைகளை
    தள்ளிவைத்து விட்டுத் துள்ளி விளையாட
    கள்ளிக் காட்டு கரிசல் பூமிப் பக்கம் காலாற வந்த
    பிள்ளை நிலாக்களின் பட்டறிவு உலா

    காற்று நுழையக் கூடக் கணம் தயங்கும்
    வெற்றுக் கட்டிடக் கல்விக்கூடச் சிறைகளில்
    பெற்றுக் கொண்ட பாராயாணப் படிப்புகளை விட்டு
    கற்றுக் கொள்ள களத்துமேடு வந்த பிஞ்சுகளின் திருவிழா

    வீட்டை விட்டு விடுதலையாகிச் சிட்டுக் குருவியாகச் சிறகுவிரி
    நாட்டை நாளை ஆளப்போகும் நீ பக்குவமாய்ப் படி
    காட்டை ஆளும் பாட்டாளிகளின் பாட்டை- இது
    ஏட்டைத் தாண்டிய விலையில்லா விளையாட்டுக் கல்வி

    உணர்வுகளைக் கொன்று உயிர்களை
    உண்ணத் தலைகொய்யும் உலகத்தினரிடை-ஆடு
    உண்ணத் தழை கொடுக்கும் சின்னத்தம்பி
    உண்மை அன்பில் நீ ஆனாய் தங்கக(த)ம்பி

    வெட்டி விடுதலை கொடு கட்டுண்டு
    வெட்டுப்பட போகும் அந்த ஆடுகளின்
    கட்டுத் தளைகள் விடை பெறட்டும்
    விடைகளின் (ஆடுகளின்) அடிமை வாழ்வு முறை

    மரத்துப் போன மானுட மனங்களில்
    மறவாமல் ஊன்றிடுவோம் மலர்ச்சி விதைகளை
    நட்பு மரங்களை நல்லபடி நட்டு வளர்த்திடுவோம்
    நாமும் நாளைய உலகும் நலமுடன் வாழ!

    *****
    ஆடுகட்குத் தேடித் தழைகொய்து தரும் பிள்ளை மனத்தை வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    பிள்ளை மனது…

    ஆடும் பிள்ளைகள் விடுமுறையில்
    ஆட்டம் போடுவர் காட்டினிலே,
    ஆடுகள் வந்தால் மேய்ச்சலுக்கு
    ஆட்டம் பாதியில் நின்றுவிடும்,
    தேடும் இரைக்குத் துணையாகி
    தேடித் தழைகள் கொண்டுவந்தே
    கூடிக் கொடுப்பர் ஆடுகட்கே,
    குழந்தை உளமிது வாழியவே…!

    *****

    ”நிலவை காட்டிச் சோறு ஊட்டிய காலம்போய், கைப்பேசியில் காணொளி காட்டி ஊட்டும் தாய்மார்கள் நிறைந்துவிட்ட இக்காலத்தில், சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் இம்மழலைகளையும், கட்டுண்ட ஆட்டுக்கு அன்பாய்த் தழை கொடுக்கும் பாசக்கார நண்பனையும் காட்டும் இப்புகைப்படம் தொலைந்துபோன ஓர் அதிசயமே!” என்று வியக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    தொலைந்து போன அதிசயம் 

    நிலவை காட்டிச் சோறு ஊட்டிய காலம்போய்
    கைப்பேசியில் காணொளி காட்டி ஊட்டும் தாய் 
    வெட்ட வெளியில் விளையாட மறந்து
    கணினியும் கைப்பேசியுமாய் பள்ளி செல்லும் பிள்ளைகள் 
    அடம்பிடிக்கக் கூடாதெனக் குழந்தைகளைக்
    கைப்பேசிக்கும் கணனிக்கும் அடிமை ஆக்கும் அவலம் 
    அத்தனைத் தவறையும் தாம் செய்துவிட்டுப்
    பிள்ளைகளைக் கடிந்து கொள்ளும் பெற்றோர்கள்!
    புகைப்படம் என்றாலும்
    சுத்தமான காற்றைச் சுவாசிக்கும் மழலைகள் 
    கட்டுண்ட ஆடாய் இருந்தும்
    அன்பாய் உண்ணத் தழை கொடுக்கும் பாசக்கார நண்பன் 
    தன் பெயரைச் சொல்லி மொட்டை அடித்துக் காத்து குத்தி
    ஆடு அடித்து உற்றார் உறவினருக்கு அன்னதானம்
    என்றெண்ணிக் கலங்கும் மழலை உள்ளம் இங்கே  
    இது தொன்றுதொட்டு வரும் பழக்கம்
    கலங்காதே என்று சமாதானம் சொல்லும் நண்பர் கூட்டம் 
    கற்பனைதான் என்றாலும்
    புகைப்படத்தை கண்டு மகிழும் மனம் சொல்லும் 
    தொலைந்து போன அதிசயம் இது என்று.

    *****

    சொல்லிலும் சுவையிலும் புதுமைகூட்டிச் சோதிமிக்க நவகவிதைகளைப் படைத்தளித்திருக்கும் வித்தகக் கவிஞர்களுக்கு என்  வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    எண்ணத் தூரிகையால் தன் வாழ்வில்
    வண்ணம் தீட்ட வேண்டிய மழலைகளின்
    கைச்சிறகாம் தோள்களில்
    புத்தகப் பொதிமூட்டையின் வடுக்களை ஏற்றி
    சுயகற்றலுக்கு விடுப்புக் கொடுத்து
    விடுப்பு நாட்களிலும் வகுப்பு நடத்தும்
    நவீன சமூகத்தின் நாகரிக அவலம்…

    கண்முன் காணும் பச்சிலையைத்
    தானே அருந்தத் தெரிந்திருந்தும்
    கயிற்றால் கட்டுண்டு
    தரும் கரம்பார்த்தே ஏங்கி நிற்கும் வெள்ளாடாக…

    தானாய் வாழப் பிறந்திருந்தும்
    தரமான கல்வி வழங்குவதாய்க்
    கட்புலனாகாச் சங்கிலியால்
    கண்டுண்டே வாழ்கின்ற மழலைகள் காண்!

    பொருள்தேடும் ஓட்டத்தில்
    பெற்றோர் கொடுத்திட்ட தனிமையில்
    “ப்ளூவேல்” விளையாட்டுடன்
    புறவுலகினை மறந்திடும் குழந்தைகளும்…

    ”தொடர்பு எல்லைக்கு அப்பால் அரவணைப்பு…
    தொடுதிரை ஒன்றே துணையிருப்பு” என
    மனச்சிதைவுடன் வளரும் குழந்தைகளும்..

    பலி கொடுக்க வளர்க்கப்படும் வெள்ளாடுகளே….!

    ”எண்ணத் தூரிகையால் தம் வாழ்வில் வண்ணம் தீட்ட வேண்டிய மழலைகளின் கைச்சிறகாகிய தோள்களில் புத்தகப் பொதிமூட்டையின் வடுக்களை ஏற்றும் சமூகத்தாலும், தொடர்பு எல்லைக்கு அப்பால் அரவணைப்பு, தொடுதிரை ஒன்றே துணையிருப்பு எனும் அவலத்துக்கு ஆளாக்கும் பெற்றோராலும் பலி கொடுக்கப்படும் வெள்ளாடுகள் இன்றைய மழலைகள்!” என்று பொட்டில் அடித்ததுபோல் உண்மையைப் போட்டுடைத்திருக்கும் இக்கவிதையின் ஆசிரியர் முனைவர். ம. தனப்பிரியாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம் (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    (Peer Reviewed) ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பு மீட்டுருவாக்கம்

    (நற்றிணை 11-ஆவது பாடலை முன்வைத்து)

    முனைவர். வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைப்பேசி            : 9488264166

    முன்னுரை

    மூலபாடம் என்பது ஒரு நூலின் மூல நூலாசிரியர் எழுதிய வடிவம் அல்லது அதை ஒத்த பாடம் ஆகும். இதை முன்னோர் சுத்த பாடம் என்று வழங்குவர். ஒரு நூல் சுவடிகளிலிருந்தும் காகிதப் பிரதிகளிலிருந்தும் பதிப்பு நூலாக வெளிவரும் பொழுது பல்வேறு மாற்றங்களைப் பெறுகின்றது. குறிப்பாகச் சுவடிகளிலும் தொடக்க காலக் காகிதப் பிரதிகளிலும் குறில் நெடில், மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து ஆகியவை ஒன்று போலவே தோன்றுகின்றன. அதனால் ஒரு நூல் ஏட்டுப் படிகளாகவோ அச்சுப் படிகளாகவோ வெளிவரும் பொழுது பல திரிபுகளுடன் அமைகின்றது. சுவடிகள், காகிதப் பிரதிகள், அச்சுப் பதிப்புகள் முதலியவற்றில் காணப்படும் பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் தொகுத்து, உண்மையான பாடத்தைக் கண்டறிய முயல்வது மூலபாடத் திறனாய்வு ஆகும்.

    ஏவா வில்தன் (EVA WILDEN), நற்றிணைக்குரிய சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவற்றைத் தொகுத்து, ஆராய்ந்து நற்றிணைக்குச் செம்பதிப்பைக் (2008) கொண்டுவந்துள்ளார். இவரது பதிப்பு, நற்றிணைக்கு இதுவரை வெளிவந்த பதிப்புகளில் காணப் பெறாத வகையில், ஏடுகளில் உள்ள பாடங்களைத் தொகுத்து, அறிவியல் அடிப்படையில் மூலபாடத்தைத் தெரிவுசெய்யும் விதமாக அமைகிறது. இச்செம்பதிப்பிலும் சில விடுபாடுகள் உள்ளன. அவற்றை இக்கட்டுரை ஆராய்கிறது.

    நற்றிணை 11-ஆவது பாடலில் விடுபட்டுள்ள பாடங்களையும், பாட வேறுபாடுகளையும் இலக்கணம், அகராதிப் பொருள், உரைகள், ஒப்புமைப் பகுதிகள் ஆகியவற்றைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்துவது இந்த ஆய்வுக் கட்டுரையின் கருதுகோளாக அமைகிறது. இதில் மூலபாட ஆய்வு அணுகுமுறை பின்பற்றப்படுகிறது.

    நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியவை ஆய்வின் கருதுகோளை நிறுவுவதற்கான முதன்மை ஆதாரங்களாக அமைகின்றன. மேலும்,

    S.M. Katre – Introduction to Indian Textual Criticism, அ.விநாயகமூர்த்தி – மூலபாடஆய்வியல் (1978), த.கோ.பரமசிவம்(ப.ஆ.) – சுவடிப் பதிப்பு நெறிமுறைகள் (1989), வெ.பழனியப்பன் – தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள் (1990),மூ. இராமகிருட்டிணன் – பிரதிபேத ஆராய்ச்சி, வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு (ஆய்வேடு, 2012), ம.சா.அறிவுடைநம்பி – சுவடி ஆய்வு நெறிமுறைகள்(2013),Eva Maria Wilden – Studies in manuscript Cultures (2014), வெ. பிரகாஷ் – பாட ஆய்வியல் கையேடு (2014) முதலியோர்களின் நூல்கள், துணைமை ஆதாரங்களாக அமைகின்றன.

    நற்றிணை 11-ஆவது செய்யுள்

    ஏவா வில்தன் பதிப்பு :       

    பெய்யாது வைகிய கோதை போல

    மெய்சாயி னையவர் செய்குறி பிழைப்ப

    வுள்ளி நொதுமலர் நேர்புரை தெள்ளிதின்

    வாரா ரென்னும் புலவி யுட்கொள

    லொழிக மாளநின் னெஞ்சத் தானே

    புணரி பொருத பூமண லடைகரை

    யாழி மருங்கி னலவ னோம்பி

    வலவன் வள்பாய்ந் தூர

    நிலவு விரிந்தன்றாற் கான லானே”.

    மூலபாடத்தைத் தெரிவு செய்வதற்குப் பாடலின் சூழல், பொருண்மை போன்றவை துணை நிற்கும். அவ்வகையில் நற்றிணை 11-ஆவது பாடலுக்கான சூழல், பொருள் விளக்கம்.

    கூற்று                         –           தோழி கூற்று (தோழி, தலைவிக்குச் சொல்லியது)

    துறை                          –

    காப்பு மிகுதிக்கண் இடையீடு பட்டு ஆற்றாளாய தலைமகட்குத் தலைமகன் சிறைப்புறத்தானாகத் தோழி சொல்லியது.

    துறை விளக்கம் –

    காவல் மிகுதியாலே தலைவனைக் தலைவனைக் கூடப்பெறாமல் ஆற்றாது வருந்திய தலைவியைத் தோழி நோக்கி நீ வருந்தாதேகொள், நிலவு விரிந்ததனால் அவர் இன்னே வருவரெனக் கூறுவோள் போன்று, காவல் மிகுதியால் இரவுக்குறி பிறழ்ந்ததும், அதனாலே தலைவி படுந்துன்பமும் சிறைப்புறத்திருந்த தலைவன் கேட்டு வரைவொடு புகுமாறு கூறுவது (நாரா.).

    செய்யுள் பொருள் விளக்கம்

    அவர் செய்த குறி இடையீடுபட்டு தவறுபட்டதனால், சூடாது கிடந்த பூமாலையைப் போல உடல் இளைத்தனை. அயலவர் பேசுகின்ற பழிச்சொல்லை நினைத்து, தெளிவாக வராமாட்டார் என்கின்ற ஐயத்தை உன் மனத்தின்கண் நினைக்காது விட்டொழிவாயாக. அலைகள் வந்து மோதியதால் நுண்மணலாக உள்ள கடற்கரையில், நண்டுகளின் மேல் தேர்ச்சக்கரங்கள் படாதவாறு பாதுகாத்து, தேர்ப்பாகன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்த, கடற்கரைச் சோலையிலே நிலவு விரிந்தது. சுருங்கக் கூறின்,

    ‘அலவனுக்குத் (நண்டு) தீங்கு செய்யாது தேர் செலுத்த வேண்டும் என்று உரைக்கும் தலைவன், நீ பழிச்சொல்லால் வருந்தாதபடி வரைந்து இல்லறம் நிகழ்த்துவான்’ என்றவாறு.

    செய்யுளில் உள்ள பாடவேறுபாடுகள்

                                                              (அட்டவணை)

     

    ஏவா வில்தன் கொண்ட பாடம் ஏவா வில்தன் கொண்ட பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும் ஏவா வில்தன் கொண்ட பாடங்களிலிருந்து வேறுபடும் பாடங்களும் அவை இடம்பெற்ற பிரதிகளும்
    பெய்யாது பெய்யாது- G3, EN, VP, ER, EV, ET பெய்யாத       – C1, G1, G2

    பொய்யாது    – ETv

    நொதுமலர் நேர்புரை நொதுமலர் நேர்புரை- VP, ER, EV நொதுமல் ஏர்புரை- C1, C2, G1, G2,G3, EN

    நொதுமலர் ஏர்புரை  – ET

    நொதுமல் ஓருரை      – ETv

    யுட்கொளல் யுட்கொளல் –

    C1, C2, G1, G2,G3, EN, VP, ER, EV, ET

    யுட்கொளாஅல்- ETv
    நிலவுவிரிந்தன்றால் நிலவுவிரிந்தன்றால்- G1, ER, EV நிலவுவிரிந்தன்றால் – G2, EN, ET, VP

    நிலவுவிரிந்தன்றே   – ETv

    குறிப்பு

    C1                 உ.வே.சா. நூலகப் பிரதி (ஓலை)

    C2                உ.வே.சா. நூலகப் பிரதி (காகிதம்)

    G1, G2, G3 அரசு கீழ்த்திசைச் சுவடிகள் நூலகப்பிரதி (காகிதம்)

    VP                எஸ். வையாபுரிப்பிள்ளை

    EVA             ஏவா.    ஏவா வில்தன்

    EN               அ. நாராயணசாமி ஐயர்

    ER                மர்ரே. எஸ்.ராஜம்

    ET                 ஔவை சு. துரைசாமிப் பிள்ளை

    EV                 ஹச். வேங்கடராமன்

    ETv               ஔவை சு. துரைசாமிப் பிள்ளைப் பாடவேறுபாடு

     

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடம்:’வளவன்

    ) வலவன்வளவன்

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில்  ‘வலவன்வள்பாய்ந்தூர’ (11:8) என்ற அடியில் இடம்பெறும் ‘வலவன்’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில்‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் (காண்க – அட்டவணை) சுட்டிக் காட்டும் ஏவா வில்தன்,C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடவேறுபாட்டினைப் பதிவு செய்யாது விட்டுள்ளார்.

    மேலும் செம்பதிப்பு முன்னுரையில் உச்சரிப்பு வேறுபாடுகள் எனும் தலைப்பில் ‘‘ஒள / அவ், ள்/ல, ர/ற கெளவை / கவ்வை ஆகியவை பொருள் மாறுபாடு செய்யாவிடினும் வட்டார (அல்லது ஏடெழுதும் தனிப்பட்ட ஒருவரின்) வழக்காறுகளைத் தெரிந்துகொள்ள உதவுமாதலால் இவை பதிப்புரையில் குறிப்பிடப்படுகின்றன” (ப.34) என்று பதிவு செய்துள்ளார். ஒலி வேறுபாட்டு அடிப்படையில் பாடல்களில் (36:8., 128:11., 295) உள்ள ஒலி வேறுபாட்டுச் சொற்களைச் (கெளவை / கவ்வை.,ஆகின்றியா / ஆகின்ரியா.,வ்வை / ஒளவை) சுட்டிக் காட்டும் இவர், ‘வலவன்’, ‘வளவன்’ என்ற பாடங்களிலுள்ள லகர ளகர ஒலி வேறுபாட்டினைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் சுட்டிக்காட்டவில்லை. இவ்வாறான முரண்பாடுகள், நற்றிணைச் செம்பதிப்பு என்ற கருத்தாக்கத்தைக் கேள்விக்குள்ளாகின்றன.

    (குறிப்பு: ஒப்புநோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), நற்றிணைக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    நற்றிணைச் செம்பதிப்பு 11-ஆவது பாடலில் உள்ள ‘வலவன்’ என்ற பாடத்திற்கும், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்திற்கும் பொருள் மாறுபாடுகள் உண்டு.

    வலவன்என்ற சொல் தேர்ப்பாகன்’ என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில் (நற்றிணை, 11:8, 78:10, குறுந்தொகை, 311:2, அகநானூறு, 20:15, 104:3, 190:12, 340:4, 354:8, 400:12, புறநானூறு, 27:8) வந்துள்ளது. வளவன்என்ற சொல் சோழமன்னன் கிள்ளிவளவன் என்ற பொருளில் சங்க இலக்கியத்தில் ஏழு இடங்களில்  (புறநானூறு, 34:16, 60:10-11, 174:14-15, 226:6, 227:9, 393:24, 397:22-23) வந்துள்ளதைக் காண முடிகிறது.

    இருப்பினும் நற்றிணை 11-ஆவது பாடலில் இடம்பெற்ற ‘வலவன் வள்பாய்ந்தூர’ என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘தேர்ப்பாகன் (குதிரையின்) கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என உரை எழுதியுள்ளனர். ஆனால் ஏவா வில்தனின் செம்பதிப்பில் விடுபட்ட பாடமான ‘வளவன்’ என்ற பாடத்தினை உரையாசிரியர்கள் எவரும் உரையிலும் பாடவேறுபாட்டுப் பகுதியிலும் குறிப்பிடவில்லை.

    காரணம் பாடலின் பொருண்மையை நோக்குகையில் குதிரையின் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்துச் செலுத்துகின்ற தேர்ப்பாகனைக் குறிக்கும் பாடமாக ‘வலவன்’ என்பது பொருத்தமாக உள்ளது. இவ்வாறன்றி C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றி ‘வளவன் வள்பாய்ந்தூர’ எனப் பதிப்பித்து உரை எழுதினால்,  ‘சோழ மன்னனான கிள்ளிவளவன் கடிவாள வாரினைக் கவனமாகப் பிடித்து செலுத்த’ என்று உரைகொள்ள நேரிடும். ஆகவே பாடலின் பொருண்மைக்குத் தேர்ப்பாகனைக் குறித்து வரும் ‘வலவன்’ என்ற பாடமே ஏற்புடையதாகும்.

    வன் / வவன் என்ற இருபாடவேறுபாடுகள் பிரதிகளில் காணப்படுகின்றன. அப்பிரதிகளில் ல/ள ஒலி வேறுபாடு பொருள் வேறுபாட்டுத் தன்மையில் அமைந்திருப்பினும் C1, G1, G2 ஆகிய பிரதிகளை எழுதினோர், அவ்வொலி வேறுபாட்டினை உணராது ‘வளவன்’ என்ற பாடத்தைப் பின்பற்றியுள்ளனர். எனவே இலக்கண அடிப்படையில் ஒலி வேறுபாடு உணர்த்தும் பொருண்மையில் ‘வலவன்’ என்ற பாடம் ஏற்புடையது.

    ஏவா வில்தன் பதிப்பில் விடுபட்ட பாடவேறுபாடு

    ) உலோச்சனார்கயமனார்

    பாடலுக்குள் இருக்கின்ற பாடவேறுபாடுகள் மட்டுமின்றி புலவர் பெயர்களில் காணப்படும் பாடவேறுபாடுகளையும் ஏவா வில்தன் தன்னுடைய பதிப்பில் குறிப்பிடுகிறார். சான்றாக

    பாலத்தனார் (G1+2: பாலாத்தனார்) (52),

    பெருங்கவுசிகனார் (EN, ER: கெளசிகனார், ET: கோசிகனார்) (139)

    ஆனால் இவர் ஒரு பாடலுக்குரிய புலவர் பெயர் முழுவதும் மாறுபடும் இடங்களைப் பாடவேறுபாட்டுப் பகுதியில் குறிப்பிடாமல் விட்டுள்ளார். காட்டாக, ஒளவை.சு. துரைசாமிப்பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் “இங்கே உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது” (ப.56) என அடிக்குறிப்பில் குறிப்பிடுவதைக் காண முடிகிறது.

    துரைசாமிப்பிள்ளை (1966) பாடவேறுபாட்டுப் பகுதியில் இடம்பெற்ற செய்தி

    மேலும் சில பாடல்களில் புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    நற்றிணைச் சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள் ஆகியனவற்றில் நல்விளக்கனார் (85), சல்லியங்குமரனார் (141), பராயனார் (155) ஆகிய புலவர்களின் பெயர்கள் எவ்வித மாறுபாடுகளுமின்றி காணப்படுகின்றன. ஆனால் துரைசாமிப் பிள்ளையின் நற்றிணைப் பதிப்பில் அப்புலவர்களின் பெயர்கள் முறையே நல்விளக்குன்றனார் (85), அரிசிலங்குமரனார் (141), பாரதாயனார் (155) என்று முற்றிலும் மாறுபட்டு உள்ளன.

    மேலும் நற்றிணை 64-ஆவது பாடலை உலோச்சனார் பாடியுள்ளதாக அனைத்துப் பிரதிகளிலும் காணப்படுகிறது.  ஆனால் துரைசாமிப் பிள்ளை, 64-ஆவது பாடலை உரோடகத்தனார் பாடியதாகவே குறிப்பிட்டு, குறிப்புப் பகுதியில் ‘‘ஏடுகளில் உரோடகத்தனார் பெயரே உள்ளது. முன்பாட்டை எழுதிய நினைவால் இப்பாட்டையும் உலோச்சனார் பாடியதாக ஏடெழுதினோர் தவறியிருக்கலாம்” (ப.254) என்று குறிப்பிடுகிறார். ஆகவே ஏவா வில்தன், புலவர்களின் பெயர்கள் முற்றிலும் மாறுபட்டுக் காணப்படுவதை தமது நற்றிணைச் செம்பதிப்பில் குறிப்பிடவில்லை. ஒளவை சு.துரைசாமிப் பிள்ளையின் பாடலுக்குள் காணப்படும் பாடவேறுபாடுகள், புலவர் பெயர்களுக்குள் உள்ள பாடவேறுபாடுகள் ஆகியனவற்றைக் குறிப்பிடும் ஏவா வில்தன், இப்புலவர் பெயர் மாறுபாட்டைச் சுட்டிக் காட்டாதது, நற்றிணையின் செம்பதிப்பு முறையியலைக் கேள்விக்குள்ளாக்குகிறது.

    நற்றிணை 11- ஆவது பாடலில் மூலபாடத் தெரிவுகள்

    ) பெய்யாதுபெய்யாதபொய்யாது

    ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடியில் உள்ள ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. துரைசாமிப்பிள்ளை பதிப்பில் காணப்படும் பாடவேறுபாட்டுப் (ETv) பகுதியில் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது.

    சங்க இலக்கியத்தில் ‘பெய்யாது’ என்ற பாடம் ‘சூடாது’, ‘பெய்யாது’ ஆகிய பொருள்களில் நான்கு இடங்களில் (நற்றிணை 11:1, 365:6. புறநானூறு.105:4, 266:1) வந்துள்ளது. ‘பெய்யாத’ என்ற பாடம் சங்க இலக்கியத்தில் இல்லை. துரைசாமிப் பிள்ளை பதிப்பு, பாடவேறுபாட்டுப் பகுதியில் காணப்படும் ‘பொய்யாது’ என்பது சங்க இலக்கியத்தில் ‘பொய்த்துப் போதல்’, ‘பொய்’, ‘உண்மைக்குப் புறம்பானது’ என்ற பொருளில் நான்கு (நற்றிணை 38:1, 2. ஐங்குறுநூறு. 66:1, 80:1) இடங்களில் வந்துள்ளது.

    ‘பெய்யாது வைகிய கோதை போல’ (11:1) என்ற பாடலடிக்கு உரையாசிரியர்கள் ‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரை தருகின்றனர். ஆனால் பெய்யாது என்ற பாடத்திற்கு மாற்றாக C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘பெய்யாத’ என்ற பாடம் உள்ளது. இப்பாடத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பெய்யாத வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு உரைகொண்டால் ‘சூடாத கிடந்த பூமாலை’ என்று பொருள்படும். ‘பெய்யாத’ என்ற பாடம், சங்க இலக்கியத்தில் இல்லை. இதனடிப்படையில் நோக்கினோமானால் உரையாசிரியர்கள் இதை மூலபாடமாகத் தெரிந்தெடுக்கவில்லை என்பதை உய்த்துணர முடிகிறது.

    துரைசாமிப் பிள்ளை பதிப்பின் பாடவேறுபாட்டுப் பகுதியில் ‘பெய்யாது’ என்ற பாடத்திற்கு ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாடு காணப்படுகிறது. இப்பாடவேறுபாட்டின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்று பதிப்பு அமையும். இவ்விடத்து பொய்யாது என்பதற்கு ‘பொய்’ ‘பொய்த்துப்போதல்’ ஆகிய பொருள்கள் உள்ளன. இப்பொருள்களின் அடிப்படையில் ‘பொய்யாது வைகிய கோதை போல’ என்ற பாடலடிக்கு, ‘பொய்கூறாது கிடந்த பூமாலையைப் போல’ என்று உரைகொள்ள நேரிடும். இவ்வுரை பாடலின் பொருண்மைக்குப் பொருத்தமின்றி அமைவதால் ‘பொய்யாது’ என்ற பாடவேறுபாட்டை நீக்கி, G3, EN, VP, ER, EV, ET ஆகிய பிரதிகளில் உள்ள பாடமான ‘பெய்யாது’ என்பது பாடலின் பொருண்மைக்கு (‘சூடாது கிடந்த பூமாலையைப் போல’) ஏற்புடையதாக உள்ளதால் உரையாசிரியர்கள் இதனை மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    ) நொதுமல் ஏர்புரைநொதுமலர் ஏர்புரைநொதுமலர் நேர்புரைநொதுமல் ஓருரை

    C1, C2, G1, G2,G3, EN ஆகிய பிரதிகளில் ‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடமும் ET பிரதியில் ‘நொதுமலர் ஏர்புரை’ என்ற பாடமும் அதே பிரதியில் ‘நொதுமல் ஓருரை’ (ETv) என்ற பாடவேறுபாடும் இருக்க, ஏவா வில்தன் VP, ER, EV ஆகிய பிரதிகளில் உள்ள ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தையே மூலபாடமாகத் தெரிவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அப்பாடத்தை உறுதிப்படுத்துவதில் உள்ள சிக்கலைக் குறிப்பிடுகையில் ‘‘here the ER reading looks very much like an conjecture supposed to make sence of a number of unsatisfactory variants. As so Aften, we are not in a position to find out whether there were sources supporting such a reading’’ (ராஜம் பதிப்பில் காணப்படும் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடமே இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இப்பாடம்   திருப்தியற்ற பல மாறுபாடுகளைக் (நொதுமல் ஏர்புரை – நொதுமலர் ஏர்புரை – நொதுமலர் நேர்புரை – நொதுமல் ஓருரை) கொண்டுள்ளது.  ராஜம் பதிப்பில் கொடுக்கப்பட்டுள்ள பாடம் ‘நொதுமலர் நேர்புரை’ என்பது, அனுமானத்தால் கொடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இதை   உறுதிப்படுத்த ஆதாரங்கள் உள்ளனவா என்பதை ஆராயும் நிலையில் தான் இல்லை) என்று 11-ஆவது பாடலின் அடிக்குறிப்பில் குறிப்பிடுகிறார் ஏவா வில்தன்.

    இருப்பினும் இப்பாடங்களுக்கு யாப்பு முறைகளின்படியும், உலோச்சனாரின் நற்றிணைப் பாடல்களைத் தவிர ஏனைய பாடல்களை ஆராய்வதன் அடிப்படையிலும், உரையாசிரியர்கள் தரும் பொருண்மைகளின் அடிப்படையிலும் சரியான பாடத்தைத் தேர்வு செய்ய இயலும்.

    யாப்பு அடிப்படையில் -‘நொதுமல் ஏர்புரைநொதுமலர் நேர்புரை

    உரையாசிரியர்கள் ‘நொதுமல் ஏர்புரை’, ‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களுக்குத் தரும் பொருண்மைகளின் அடிப்படையில் எவ்வித மாறுபாடும் இல்லை. ஆனால் சொல் அடிப்படையிலும் யாப்பு அடிப்படையிலும் வேறுபாடுகள் உள.

    •         நொது / மல்                ஏர் / புரை           மா முன் நேர் = நேரொன்றாசிரியத் தளை

                       நிரை   / நேர்              நேர் / நிரை

    • அ. நொது / மலர்             ஏர் / புரை            விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

                       நிரை     நிரை           நேர் / நிரை

    • ஆ. நொது / மலர்            நேர் / புரை

                       நிரை   நிரை             நேர் / நிரை         விளம் முன் நேர் = இயற்சீர் வெண்டளை

    யாப்பு முறைப்படி 1)‘நொதுமல் ஏர்புரை’ என்ற பாடத்தைப் பிரித்தால் நேரொன்றாசிரியத் தளை வருகிறது. அதே நேரத்தில் 2) அ.‘நொதுமலர் ஏர்புரை’ மற்றும் ஆ.‘நொதுமலர் நேர்புரை’ ஆகிய பாடங்களைப் பிரித்தால் இயற்சீர் வெண்டளை வருகிறது. ஆகவே ஆசிரியப்பாவில் இயற்சீர் வெண்டளையும் விரவி வரலாம் என்பதால் பாடத்தைத் தெரிவு செய்வதில் மேலும் சிக்கல் ஏற்படுகிறது.

    அகநானூற்று உலோச்சனார் பாடலில் -‘நொதுமலர்

    ஒரு புலவர் பாடிய பாடலில் பாடவேறுபாடுகள் இருப்பின், அப்புலவர் பாடிய ஏனைய பாடல்களை ஆராய்ந்து, அதில் உள்ள பாடங்களைக் கொண்டு மூலபாடத்தை உறுதிப்படுத்தலாம். அவ்வகையில் உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் அகநானூற்றில் ‘நொதுமலர் போல பிரியின் கதுமென’(300:11) என்ற அடியில் ‘நொதுமலர்’ என்ற பாடம் வந்துள்ளது.

    C2 (சுவடி)

    C3(சுவடி)

    C5(காகிதம்)

    C6(காகிதம்)

     

    C9 (காகிதம்)

    (C2, C3, C5, C6, C9 – உ.வே.சா. நூல் நிலையப் பிரதிகள்)

    ராஜகோபாலார்யன் (1933)

    வையாபுரிப்பிள்ளை (1940)

    பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன் செட்டியார் (வெளியீடு, 1946)

    (குறிப்பு: ஒப்பு நோக்கி ஆய, பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம்(EFEO), அகநானூற்றுக்குச் சுவடி, காகிதப் பிரதிகளைத் தந்துதவியது.)

    மேற்குறிப்பிட்ட உலோச்சனார் பாடிய அகநானூற்றுப் பாடலைச் சுவடிகள் (C2,C3), காகிதப் பிரதிகள் (C5, C6, C9) பதிப்பு நூல்கள் (ராஜகோபாலார்யன், பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசி விசுவநாதன் செட்டியார், வையாபுரிப்பிள்ளை) ஆகியனவற்றைக் கொண்டு ஆராய்கையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் உள்ளதை அறிய முடிகிறது. மேலும் இப்பாடத்திற்கு வேறான பாடவேறுபாடுகள் எதுவும் இல்லை என்பதைத் தரவுகளின் வழியாக உறுதியிட முடிகிறது. ஆகவே உலோச்சனார் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத்தான் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக ஊகிக்க முடிகிறது.

    உரையாசிரியர்கள் தரும் பொருள் –’ஏர்புரை‘, ‘நேர்புரை

    வையாபுரிப்பிள்ளை (VP) பதிப்பில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடம் முதன் முதலில் காணப்படுகிறது. அப்பாடமே மர்ரே ராஜத்தின் (ER) சந்தி பிரித்த நற்றிணைப் பதிப்பிலும் உள்ளது. இவ்விரு பதிப்புகளும் உரையில்லாத மூலப் பதிப்புகள். அடுத்தடுத்த பதிப்புகளாக (உரையுடன்) வந்துள்ள வேங்கடராமன் (EV) மற்றும் ஏவா வில்தன் (EVA) ஆகியோர் தமது பதிப்புகளில் மேற்கண்ட பாடத்தையே மூலமாகக் கொண்டு ‘அயலவர் பழிச்சொல்’ என்று உரை கொள்கின்றனர்.

    பொ.வே.சோமசுந்தரனாரின் (நாராயணசாமி ஐயர் உரையுடன், இலக்கணக் குறிப்பும் ஆய்வுரையும் கொண்ட நற்றிணை உரை) இலக்கண ஆய்வுரையில் ‘நொதுமலர் நேர்புரை’ என்ற பாடத்தைப் பாடவேறுபாடாகக் கொண்டு ‘அயலோர் வாய் நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்று குறிப்புப் பகுதியில் குறிப்பிடுகிறார். அவற்றைக் கொண்டு நோக்குகையில் ‘நேர்புரை’ என்பதற்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருள் கிடைக்கிறது. இப்பொருள் வேங்கடராமன் பதிப்பிலும் ஏவா வில்தனின் பதிப்பிலும் இல்லை. ஆகவே பாடலின் பொருண்மைக்கு ‘நேர்ந்து கூறும் பழிச்சொல்’ என்ற பொருளைத் தருகின்ற ‘நேர்புரை’ என்ற பாடத்தைக் கொள்ளாமல், ‘எழுதலையுடைய பழிச்சொல்’ (EN), ‘எடுத்துரைக்கும் அலருரை’ (ET) ஆகிய பொருள்களைத் தருகின்ற ‘ஏர்புரை’ என்ற பாடத்தையே ஏற்புடைய பாடமாகக் கொள்ளலாம்.

    முடிவுகள்

    • ஏவா வில்தன், நற்றிணைக்குக் கிடைத்துள்ள சுவடி, காகிதப் பிரதிகள், பதிப்பு நூல்கள், தொல்காப்பிய உரை மேற்கோளில் காணப்படும் நற்றிணைப் பாடல்கள் ஆகியனவற்றைத் தொகுத்து, பாடவேறுபாடுகளைப் பட்டியலிட்டு ஆராய்ந்து, நற்றிணைக்குச் செம்பதிப்பைக் கொண்டுவந்துள்ளார். இதுவரை வந்த நற்றிணைப் பதிப்புகளில் காணப்பெறாத வகையில், மூலபாடத்தை நிறுவும் முயற்சியை இவரது பதிப்பில் காணலாம். மேலும் நற்றிணைக்குக் கிடைத்துள்ள பிரதிகளில் காணப்படும் பாடங்களைத் தொகுத்துப் பட்டியலிடும் அதே நேரத்தில் பாடலுக்குள் காணப்படும் பாடங்களையும் பாடல் எழுதிய புலவர் பெயர்களில் காணப்படும் மாறுபாடுகளையும் குறிப்பிடாமல் விட்டுள்ளார்.
    • ‘வலவன்’ (11:8) என்ற பாடத்திற்கு C1, G1, G2 ஆகிய பிரதிகளில் ‘வளவன்’ என்ற பாடம் உள்ளது. இப்பிரதிகளில் உள்ள பிற பாடவேறுபாடுகளைச் சுட்டிக் காட்டும் ஏவா வில்தன், C1, G1, G2 ஆகிய பிரதிகளில் காணப்படுகின்ற ‘வளவன்’ என்ற பாடத்தினைச் சுட்டிக் காட்டவில்லை. அதே போல உலோச்சனார் என்ற பெயரோடு கயமனார் என்ற பெயரும் ஓர் ஏட்டில் காணப்படுகிறது என்ற துரைசாமிப் பிள்ளையின் அடிகுறிப்புச் செய்தியும் இவரது பதிப்பில் விடுபட்டுள்ளது.
    • நற்றிணை 11- ஆவது பாடலில் ‘பெய்யாது’(11:1) என்ற பாடத்திற்கு  ‘பெய்யாத’ , ‘பொய்யாது’ ஆகிய பாடவேறுபாடுகள் உள்ளன. அப்பாடவேறுபாடுகளுள் பாடலின் பொருண்மைக்கு ‘பெய்யாது’ என்ற பாடமே மிக அணுக்கமாக உள்ளது.
    • உலோச்சனாரின் பாடல்கள், நற்றிணையில் மட்டுமின்றி குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் உள்ளன. அவற்றினைக் கொண்டு ஒப்பிடுகையில் ‘நொதுமலர்’ என்ற பாடம் அகநானூற்றில் மட்டும் வந்துள்ளதால் நற்றிணையிலும் ‘நொதுமலர்’ என்ற பாடத்தைத் தான் உலோச்சனார் கையாண்டிருப்பார் என்பதைத் தரவுகளின் வழியாக அறிய முடிகிறது.
    • ‘நேர்புரை’, ‘ஏர்புரை’ ஆகிய பாடங்களில் உரையாசிரியர்கள் பொருள்கொள்ளும் அடிப்படையில் நோக்கும் பொழுது ‘ஏர்புரை’ என்ற பாடம் பொருத்தமுள்ளதாகத் தோன்றுகிறது.
    • ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் இடர்ப்பாடுகளும் காணப்படுவதால் அவரது நற்றிணைச் செம்பதிப்பு என்பது கேள்விக்குள்ளதாக அமைகிறது. ஆக, ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பில் (2008) உள்ள ஏனைய பாடல்களையும் மூலபாடவியல், பதிப்பியல் நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்தினால் மேலும் சில விடுபட்ட பாடங்களும் மூலபாடத் தெரிவில் உள்ள மாறுபாடுகளும் தெரிய வருவதற்கு வாய்ப்புகள் உண்டு. ஆகவே ஏவா வில்தனின் நற்றிணைச் செம்பதிப்பினை மீட்டுருவாக்கம் செய்தால், நற்றிணைச் செம்பதிப்பு என்பது சீர்மை பெறும்.

    துணைநூற்பட்டியல்

    • அறிவுடைநம்பி. ம.சா., சுவடி ஆய்வு நெறிமுறைகள், கருமணி பதிப்பகம், 27, சுப்பிரமணியர் கோயில் குறுக்குத்தெரு, இலாசுப்பேட்டை, புதுச்சேரி. சனவரி 2013.
    • இராமகிருட்டிணன். மூ., பிரதிபேத ஆராய்ச்சி, வேங்கடாசலபுரம், (வழி) தேனி, மதுரை. (ஆண்டு குறிப்பிடவில்லை).
    • ஏவா வில்தன் (ப.ஆ.)., நற்றிணை, சங்க இலக்கியங்கள் – செம்பதிப்பு வரிசை – 1.1., பிரெஞ்ச் ஆசியவியல் நிறுவனம் (EFEO) – 2008, தமிழ்மண்பதிப்பகம்.
    • வேங்கடசாமிநாட்டார். திரு. நாவலர் ந.மு. & வேங்கடாசலம் பிள்ளை. கரந்தைக் கவியரசு R. (பதவுரை, விளக்கவுரை), எட்டுத் தொகையுள் ஒன்றான அகநானூறு – மணிமிடை பவளம் (பாகனேரி வெ. பெரி. பழ. மு. காசிவிசுவநாதன்செட்டியார் அவர்களால் வெளியிடப்பெற்றது) திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் லிமிடெட், திருநெல்வேலி.ஜனவரி1946.
    • சுப்பிரமணியன். ச.வே., தொல்காப்பியம் தெளிவுரை, மணிவாசகர் பதிப்பகம், 31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை – 600 108. மார்ச்.2013.
    • சோமசுந்தரனார். பெருமழைப்புலவர் பொ.வே., (இலக்கணக்குறிப்பும் ஆய்வுரையும்) –           எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை நானூறு (பின்னத்தூர் அ.நாராயணசாமி ஐயர் எழுதிய உரையும் விளக்கமும்), திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம், லிமிடெட், திருநெல்வேலி – 6, நான்காம் பதிப்பு1967.
    • துரைசாமிப்பிள்ளை.சு (உ.ஆ) ., நற்றிணை, அருணா பப்ளிகேஷன்ஸ், உஸ்மான் ரோடு, தியாகராய நகரம், சென்னை – நவம்பர்.1966& 1968.
    • நாராயணசாமி ஐயர். பின்னத்தூர் அ (உரையாசிரியர்)., எட்டுத் தொகையுள் ஒன்றாகிய நற்றிணை, சைவ வித்தியாநு பாலன யந்திரசாலை, சென்னை.1915.
    • பரமசிவம். த.கோ.(பதிப்பாசிரியர்)., சுவடிப்பதிப்பு நெறிமுறைகள் (கருத்தரங்கக்கட்டுரைகள்), தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர்.மார்ச்1989.
    • பாலசுப்பிரமணியன்.கு.வெ(உரையாசிரியர்)., சங்க இலக்கியம் –நற்றிணை மூலமும் உரையும், நியூ செஞ்சுரிபுக் ஹவுஸ்(பி) லிட், அம்பத்தூர், சென்னை – 600 098. ஐந்தாம் பதிப்பு. அக்டோபர் 2014.
    • பழனியப்பன்.வெ., தமிழ் நூல்களில் பாடவேறுபாடுகள், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், சிதம்பரம்.1990.
    • பாகனேரி. வெ. பெரி. பழ. மு., திருநெல்வேலி, தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், (வெளியீடு) லிமிடெட், திருநெல்வேலி.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல் கையேடு, அடையாளம், 1205/1 கருப்பூர் சாலை, புத்தா நத்தம், திருச்சி. 2014.
    • பிரகாஷ். வெ., பாட ஆய்வியல்: புறநானூறு பாடம், வடிவம் குறித்த ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வேடு, சென்னைப் பல்கலைக்கழகம், 2012,
    • ராஜகோபாலார்யன் (ப.ஆ)., அகநானூறு மூலமும் பழைய உரையும், கம்பர் புஸ்தகாலயம், கம்பர் விலாசம், மயிலாப்பூர்.
    • விநாயகமூர்த்தி.அ., மூலபாட ஆய்வியல், பாலமுருகன் பதிப்பகம், 90, பாரதியார் தெரு, சுப்பிரமணியபுரம், மதுரை – 625 011.
    • வெள்ளை வாரணன். க (ப.ஆ) ., தொல்காப்பியம் செய்யுளியல் – உரைவளம், பதிப்புத் துறை, காமராஜர் பல்கலைக்கழகம், மதுரை – 625 021. 1989.
    • வேங்கடராமன்.ஹச்(உ.ஆ)., டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம், 2, அருண்டேல், கடற்கரைச் சாலை, பெசண்ட் நகர், சென்னை – 600 098.
    • வையாபுரிப்பிள்ளை. எஸ்(ப.ஆ.)., சங்க இலக்கியம், எட்டுத் தொகையும் பத்துப் பாட்டும், சைவ சித்தாந்தம் மகா சமாஜம், மயிலாப்பூர், சென்னை. 1940.
    • Eva Mariya wilden., Studies in Manuscript Cultures, 204 Walter de Gruyter Gmbh & KG Berlin / Munchen / Bosten in Germany.
    • S.M. Katre., Introduction to Indian Textual Criticism, Karanatak Publishing House.
    • தமிழ் லெக்ஸிகன்., சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை.
    • நிகண்டுகள்., சாந்தி சாதனா, 125 சேமியர்ஸ் சாலை, சென்னை – 600 028.
    • மணியன்.,சங்க இலக்கிய வினை வடிவங்கள், திராவிட மொழியியல் கழகம், திருவனந்தபுரம் – 86.
    • மாதையன்.பெ., சங்க இலக்கியச் சொல்லடைவு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 613 310. 2007.
    • பாண்டியராஜா.சு., சங்க இலக்கியத் தொடரடைவு, sangamconcordance.com
    • தமிழிணையக் கல்விக் கழகம்(tamilvu.org)

    ஆய்வுக் கட்டுரையாளர்களின் தன் விவரக் குறிப்பு

    முனைவர். வேல்முருகன்

    தலைவர் & பேராசிரியர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம்

    திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: pdrvelmurugan@gmail.com; செல்பேசி    : 9488264166

    இவர் தமிழ் இலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பி.எட்., பிஎச்.டி. பட்டங்களும் வரலாறு, தகவல் தொடர்பியல், மொழியியல் ஆகிய பாடங்களில் எம்.ஏ. பட்டங்களும் பெற்றுள்ளார். கணினி அறிவியல், ஹிந்தி மொழி, காந்தியச் சிந்தனை ஆகியவற்றில் சான்றிதழ் பயின்றுள்ளார். அடிப்படை மலையாள மொழியறிவு உடையவர்.

    இவர் சங்க இலக்கியம், இலக்கணம், மொழியியல், தொல்லியல், தகவல் தொடர்பியல், கவிதையியல் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு உடையவர். இப்பொருண்மைகளில் ஐந்து நூல்களை எழுதிய இவர் `எழுத்திலக்கண மாற்றம்’, `தமிழ் மரபிலக்கணங்களில் இடைச்சொற்கள்ஆகிய நூல்களுக்காக, இந்தியக் குடியரசுத் தலைவரின் செம்மொழித் தமிழ் இளம் அறிஞர் விருதும்,  `இலக்கண மரபும் இலக்கியப் பதிவும்என்ற நூலினுக்காகத் தமிழக முதல்வர் வழங்கும் சிறந்த நூலாசிரியர் விருதும் பெற்றுள்ளார். இவருடைய ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு பொருண்மைகளில் அறுபதிற்கும் மேலான எண்ணிக்கையில் வெளிவந்துள்ளன.

    இவர், பதினாறு ஆண்டுகள், ஆசிரியர் பணி அனுபவம் மிக்கவர்; தற்பொழுது திருவாரூரில் தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்  தமிழ்த் துறைத் தலைவராகப் பேராசிரியர் நிலையில் பணி புரிந்து வருகிறார்.

    இர. ஆனந்தகுமார்

    முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த் துறை

    தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம், திருவாரூர் – 610 005.

    மின்னஞ்சல்: anadhakumar001@gmail.com; கைபேசி        : 9488264166

    இவர் ஆசிரியர் பயிற்சியும், தமிழிலக்கியத்தில் எம்.ஏ., எம்.பில்., பட்டமும் பெற்றவர். மேலும் தமிழ் மொழியியலில் முதுகலைப் பட்டமும், மலையாள மொழியில் சான்றிதழ்ப் பட்டமும் (Certificate Course) பெற்றுள்ளார். தற்பொழுது திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறையில், முனைவர் பட்ட ஆய்வாளராக “நற்றிணைப் பாக்கள்: மொழியியல், இலக்கியவியல், கிளை மொழியியல், மூலபாடவியல் ஆய்வு” (உலோச்சனார் முதலியோரின் 133 பாக்கள் – சொல்லடைவுடன்) எனும் தலைப்பில் ஆய்வு செய்து வருகிறார். இவர், பன்னாட்டு ஆய்விதழ்களில் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.

    ===========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பழந்தமிழ் இலக்கியங்களின் உண்மைத் தன்மையை அறிய, அவற்றின் மூலம் கண்டடைதல் என்பது, தேவையான ஒன்று. அந்த வகையில் ஏவா வில்தன் முன்னெடுத்த செம்பதிப்புப் பணி பாராட்டத்தக்கது. இவர் பதிப்பில் உள்ள சில குறைபாடுகளைச் சுட்டிக் காட்டும் விதமாகவும் பதிப்புப் பணியில் ஈடுபடும் பதிப்பாசிரியர்கள் நினைவில் கொள்ளக் கூடிய பதிப்பு அடிப்படைகளையும் நற்றிணைப் பதிப்பில் உள்ள பாடவேறுபாடுகள் குறித்தும் விளக்கும் தன்மையில் கட்டுரை அமைந்துள்ளது. இது வரவேற்கத்தக்க ஒன்று. ஆனால் ஆய்வாளர்கள், பதிப்பாசிரியரின் வலவன், பெய்யாது, நொதுமலர் போன்ற மூலபாடத் தெரிவின் முயற்சிகளைச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். மேலும் ஏர்புரை என்பது பொருத்தமான பாடமாகத் தோன்றுகிறது என்று யூகத்தின் அடிப்படையில் கூறுதல் பொருத்தமற்றது. ஆய்விற்குப் பொருத்தமான ஆதாரங்களை முன்வைத்து, பதிப்பாசிரியரின் தவறுகளைச் சுட்டிக் காட்டுதல் நலம் பயக்கும். மேலும், ஆய்வாளர்கள் பிறர் கருத்தை மறுக்கும் பொழுது, தன்மையான முறையில் மறுக்க வேண்டும். ஆய்வாளர்களின் ஆய்வு முடிவுகள், இத்தகைய செம்பதிப்புப் பணியில் ஈடுபடுபவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் அமைய வேண்டும். மாறாக, அவர்களின் பணியைப் புறந்தள்ளும் தொனி வந்துவிடக் கூடாது. எனினும், ஆய்வாளர்கள் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழுக்கு ஆக்கம் நல்கும்.

    ===========================================================

    Share
  • புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்

    துக்கை ஆண்டான்

    மீன்பிடி வலையரான முத்தரையர்களின் தீண்டாமை விலக்கு நிகழ்வுகளை பழங்காலச் சமூக வரலாற்று நோக்கில் காண்டிட, உள்ளது உள்ளபடி காட்டும் காலக் கண்ணாடியாக இருப்பவை இதில் இடம்பெறும் சில புதுக்கோட்டை சமஸ்தான கல்வெட்டுகள்.

    பிறப்பு சார்ந்த சாதீயத் தீண்டாமை என்பது கண்ணிற்கு புலனாகாத வேலியும் சுவரும் போன்ற ஒரு திறந்தவெளிச் சிறைக் கட்டமைப்பு ஆகும் என்பது புரிதல். இந்தத் தீண்டாமை தமிழ்நாட்டில் எப்போது? எந்த வடிவில்? அறிமுகமானது. இதற்கு தாக்குண்ட சமூகங்கள் யாவை? என்பதை பார்ப்போமானால் இக்காலத்தே பலராலும் பரவலாக மேடையிலும், எழுத்திலும் விவரிக்கப்படுவது போல் ஊருள் நுழையவிடாமை, பொதுக் குளத்தில் நீர் மொள்ளத் தடை, எச்சில் துப்பத் தடை, வேட்டியை குறிப்பிட்ட முறையில் கட்டத் தடை போன்றதாக இருந்திட வில்லை. மாறாக, தொழில் சார்ந்து பிணம் தீண்டாமை என்ற வகையில் தான் அது முதன்முதலில் 15/16 ஆம் நூற்றாண்டில் தான் அறிமுகமாகின்றது. அதே நேரம் சாதீயத் தீண்டாமை இன்னும் பிற்பட்ட காலத்தில் 17/18 நூற்றாண்டுகளில் தான் அறிமுகமாகி இருக்க வேண்டும் என்ற ஊகக் கருத்திற்கு தக்கவாறு தான் தமிழ்நாட்டில் பறையர்கள் ஊருள் குடியிருக்க சுதந்திர உரிமை பெற்றிருந்ததையும், உயர் அரசு பதிவிகளில் இருந்ததையும்  புதுக்கோட்டை கல்வெட்டுகள் நமக்கு இயம்புகின்றன. சாதீயத் தீண்டாமைக்கு எடுகோளாக அம்பேத்கர் மனுதர்மத்தில் இருந்து வைக்கும் குறிப்புகள் பிணத் தீண்டாமையைப் பற்றி தான் பேசுகின்றனவேயன்றி சாதீய தீண்டாமை பற்றி பேசவில்லை.

    X  50 குறிப்பை எடுத்துவிட்டதால் இது பிணம் கையாள்வோரை பற்றியது என்பது படிப்பவருக்கு தெரியவராது

    //Ambedkar > Manu smriti says:

    1. 50. Near well-known trees and burial-grounds, on mountains and in groves, let these (tribes) dwell, known (by certain marks), and subsisting by their peculiar occupations.
    2. 51. But the dwellings of the Chandalas and the Shvapakas shall be outside the village, they must be made Apapatras and their wealth (shall be) dogs and donkeys.
    3. 52. Their dress (shall be) the garments of the dead,(they shall eat) their food from broken dishes, black iron (shall be) their ornaments and they must always wander from place to place.
    4. 53. A man who fulfils a religious duty, shall not seek intercourse with them; their transactions (shall be) among themselves and their marriages with their equals.
    5. 54. Their food shall be given to them by others (than an Aryan giver) in a broken dish; at night they shall not walk about in village and in towns.
    6. 55. By day they may go about for the purpose of their work, distinguished by marks at king’s command, and they shall carry out the corpses(of persons) who have no relatives; that is a settled rule.
    7. 56. By the King’s order they shall always execute the criminals, in accordance with the law, and they shall take for themselves the clothes, the beds, and the ornaments of (such) criminals. . (தூக்கில் இட்டால்  அங்கே குற்றவாளிகளின் பிணம்தான் விழும்) //

    X  50 குறிப்பை நீங்கிவிட்டால் இது பிணம் கையாள்வோரை பற்றியது என்பது படிப்பவருக்கு தெரியவராது.

    இக்கால் இந்தியாவில் 1108 சாதிகள் ஒடுக்கப்பட்ட அட்டவணை சாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்றுகூட மனுதர்மத்தால் சுட்டப்படவில்லை. மாறாக, பிணங்களை கையாளும் வெட்டியான் சாதியான சண்டாளர் பற்றி தான் குறிப்பு உள்ளது. இந்தியாவில் அத்தனை ஒடுக்கப்பட்ட சாதியரும் பிணத்தை கையாள்வதில்லை என்பது ஈண்டு கருதற்பாலது. ஆனால் கடந்த 125 ஆண்டுகளாக மேலை வரலாற்று ஆசிரியர் முதல் இக்கால தலித்திய இயக்கங்கள் வரை எல்லோரும் பிணம் கையாளும் வெட்டியான்களுக்கான இந்த மனு தர்மக் கருத்தை அத்தனை ஒடுக்கப்பட்ட சாதிகள் மீதும் திணித்துத் தவறாகக் காட்டி சாதீயத் தீண்டாமைக்கான உண்மையான மூல காரணத்தை, காரணகரை பிறர் அறியவிடாமல் செய்துவிட்டனர், செய்தும் வருகின்றனர். நெய்தல், குறிஞ்சி, முல்லை நில மக்களில் சாதீய தீண்டாமை அறவே இல்லாமல் இருக்க வயல் சார்ந்த மருத நிலத்தில் மட்டுமே இந்த 1,108 சாதிகள் இருக்கக் காரணம் என்ன? என்று இதுவரை எவரும் சிந்திக்கவில்லை. சிந்தித்தால் உண்மையான காரணகர் பிடிபட்டு விடுவார்கள். பின் மதமோ, பிராமணரோ, மனுதர்மமோ அதற்கு காரணம் அல்ல என்பது விளங்கிவிடும். கீழ்காணும் கல்வெட்டுகள் இதற்கு வலுவான சான்றுகளாக உள்ளன. ஊன்றிப் படிப்பவருக்கு இதில் அறிவுவெளிச்சம் கிட்டும்

    இனி புதுக்கோட்டை கல்வெட்டுகள்

    எண் 847. 21 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், புல்வயல், ஈசுவரன் கோவிலில் சுவாமி கோவிலின் மேற்புரச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    _ _ த்து சாகாத _ _ _ _ மேல் செ / ல்லாநின்ற  விக்கிறம வருசம் சித்திரை / 1445_ [4] நாள் வயலகநாட்டு புல்வயல் / ம _ _ ம ஊர் ஆக இசைந்து ஊரவ / ரோம் இவ்வூர் வலையரில் கடை _ / த _ _ ற்றில் கடம்பராய முத்தரைய / ர் [எ]ழுந்தராமை வென்ற முத்தரைய _ / பனையன் உள்ளிட்டாற்கும் உலகப்ப _ / யன் உள்ளிட்டாற்கும் நடுவிற்கூளபெ _ / ந[ச]ரதிருவன் உள்ளிட்டாற்கும் சயிரன் / உள்ளிட்டாற்கும் மேலைக்கூவ தேவே / ந்திர முத்திரையன் வகை  மணவாளர் / காத்தான் உள்[ளி]ட்டாற்கும் வள்ளி பெரி / யான் உள்ளிட்டாற்கும் ஆக இந்த மூன்று / வலையற்கும் கல்வெட்டிக்குடுத்தப / டி இவர்கள் திம்மைக்குச் செய்யுந் தொழில்பாடுகளில் நம்முடைய ஊற் / குள் பெண்டுகள் அல்லவானால் வலைச்சி முக்காட்டு இட்டுச்சவத்துக்கு மு / க்காட்டு இட்டு சவத்துக்கு முன்னே வயானத்துக்குக் கூட்டிப்போகிறதும் சவம் / அடிக்கினால் மற்றா நாள் தண்ணீர் சொரிஞ்சு காடு ஆற்றுகிறதும் இந்த இரண் / டு தொழிலுங் (தொழிலுங்) கழித்து குடுத்தமைக்கு ஊரவ / ர் சொற்படிக்கு தென்னவதரையர் எழுத்து.

    வயானம் – இடுகாடு; அடிக்கி – அடக்கம்; கழித்து – ஒதுக்கி; தின்மை –அமங்கல சடங்கு: வலைச்சி – மீனவத்தி.

    விளக்கம்: சக ஆண்டு 1445 (1523 AD) வயலக நாட்டு புல்வயல் ஊர் சபையோர். இவ்வூர் வலையரில் கடம்பராய முத்தரையர், எழுந்தராமை வென்ற முத்தரையர், பனையன் உள்ளிட்டார்,  உலகப்பனையன், நடுவிற்கூள திருவன், சயிரன், மேலக் கூவ தேவேந்திர முத்திரையன், மணவாளர் காத்தான், வள்ளி பெரியான் உள்ளிட்ட இம்மூன்று வலையர் மக்களுக்கும் கல்லில் வெட்டிக் கொடுத்த உரிமை யாதெனில் அமங்கல தொழில்பாடுகளில் நம்முடைய ஊரில் பெண்டுகள் இல்லாது போனால் வலைச்சியர் முக்காடு இட்டுக் கொண்டு பிணத்திற்கு முக்காடு இட்டு  பிணத்திற்கு முன்னே சென்று இடுகாட்டிற்கு எடுத்துச் செல்லவும், அடக்கம் செய்த மறுநாள் தண்ணீர் தெளித்து தோட்டம் ஏற்படுத்துவதுமான இரு தொழிலையும் ஒதுக்கிக் கொடுத்த ஊர்ச் சபையோரின் சொல்லை ஏற்று ஆமோதித்த தென்னவதரையர் எழுத்து.

    இக்கல்வெட்டு மூலம் ஈமத்தொழில் வலையர்க்கு ஒதுக்கப்பட்டிருக்கின்றது என்பது தெளிவு. விளைவுகள் இதன் பின் தான் தெரியவரும்.

    எண் 926. 11 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    ஸுபமஸ்து மன்மத ஆண்டு ஆனி மாதம் 8 நாள் நயினார் குடுமியார் நயினார் ஸ்ரீ பண்டாரக் காரியத்துக்குக் கடவார் / விசலூர் கோனாட்டு முத்திரையன் செலிந்திவன முத்திரைன் உட்பட்டாற்கு கல்வெட்டிக் குடுத்த / படி இவர்கள் பட்டடை காத்தும் பிணத்தின் முன்னே முக்காடு இட்டும் நடந்தபடியினாலே இவர்களை / பிறவூர் வலையர் சாதி நீக்கி இனம் பண்ணினபடியினாலே இவர்கள் குடி போயிருக்கையில் மல்லப்ப / னாயக்கர் பல்லவராயர் பண்டார உத்தாரமாக பட்டடை காவலும் முக்காடு இடவும் வேண்டாம் என் / று  கட்டளையிட்டபடியினாலே இந்தபடி இ சந்திராதித்தவரையும்  நடத்தக் கடவோமாகவும் இது காரியத்துக்கு / யாதாம் ஒருத்தர் அகுதம் பண்ணினால் கெங்கைக்கரையிலே கராம் பசுவைக் கொன்ற பாவத்திலே போக / கடவதாகவும் இப்படிக்கு தானத்தார் பரமேசுரர் பட்டர் எழுத்து. சைவ[ப்]பிறகாச பட்டர் எழுத்து / சீகாரியஞ் செய்வார் எழுத்து. கோயில் கணக்கு கோனாட்டு வேளார் எழுத்து. மல்லப்ப / னாயக்கப் பல்லவராயர் காரியத்து இ கடவார் தையலாபிள்ளை எழுத்து. விசலூர் வெள்ள எழுத்து. / மருங்கூ,ர் சேவகமுத்தரையன் பிடாரன் எழுத்து.

    பண்டாரம் – கோயில் நிர்வாகம்; உத்தாரம் – துணையாக, ஆதராவாக.

    விளக்கம்: 1415 AD மற்றும் 1475 AD இல் நிகழ்ந்த மன்மத ஆண்டுகளில் ஒன்றில் ஆனி மதம் 8 நாள் இக் கல்வெட்டு வெட்டப்பட்டிருக்க வேண்டும். கோவில் பணிக்குச் செல்லும் விசலூர் கோனாட்டு முத்திரையன், சிலந்திவன முத்திரையன் உட்பட்டாருக்கு கல்வெட்டு மூலம் தெரிவிப்பதாவது இவர்கள் பட்டடை காத்தும் பிணத்தின் முன் முக்காடு இட்டு நடந்து சென்றதால் பிறவூர்  வலையர்கள் இவர்களை சாதி நீங்கி ஈனம் செய்துவிட்டனர். அதனால் இவர்கள் குடிபோன இடத்தில் மல்லப்ப நாயக்கரான பல்லவராயர் கோவில் உத்தாரமாக இவர்கள் பட்டடை காவலும் முக்காடும் இடுவதற்கு தடைபோட்டார். இதாவது, கோவில் பணியை அனுமதித்து பிணப் பணியை தடை செய்துவிட்டார். அதன்படியே சந்திராதித்தர் வரை நடந்துகொள்ள வேண்டும் என்றும் இந்தக் கட்டளையை எவரேனும் மீறினால் அவர் கங்கைக் கரையில் கரவை மாட்டைக் கொன்ற குற்றத்தை சம்பாதித்தவர் ஆகுவார் என கோவில் ஸ்தானத்தார் (பொறுப்பாளர்) பரமேசுவர பட்டர், சைவப்பிரகாச பட்டர், திருப்பணி செய்வார், கோயில் கணக்கு கோனாட்டு வேளார், பல்லவராயர் பணியாளர் தையலாப் பிள்ளை, விசலூர் வெள்ளாளர், விசலூர் சேவக முத்திரையன் பிடாரன் ஆகியோர் கையெழுத்து இட்டனர்.

    இதன் மூலம் பிணத் தீண்டாமை சாதி விலக்கு பரவி பிணம் தீண்டலுக்கு எதிரான சமூக எதிர்வினை ஏற்பட்டதை அறிந்து கொள்ள முடிகின்றது.

    எண் 906. 17 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    விக்கிறம ஆண்டு வைசாக மாதம் 25 நாள் குடுமியார்மலை நயினார் ஸ்ரீ பண்டார / திருவாசல் காரியத்துக்கு கடவர் தானத்தாரோம் மேற்படியூர் / வலைக்குன்[று] சூழ்நாட்டு முத்திரையன் கோனாட்டு முத்தி[ரை]யந் உள்ளிட்டாற்கு பிடிபாடு பண்ணிக் குடுத்தபடி பின்னுக்கு யி / ந்த ஊரிலே சாவு செத்தால் கட்டையும்மிட்டு முக்காட்டுமிட்டுத் தீ / ச் சட்டியுங் கொண்டு சுளுந்துங் கொளுத்தப் போய் சவங்காத்து / நின்று சுட்டு நடக்[கை]யில் யிக்காரியம் [செ]ய்ய யின வகையாது என்று / (கும்) போய்யிருக்கையில் யிந்தக்காரியம் மட்டும் வேண்டாம் என்று[ங்] /  கட்டளையிடுகையில் மற்றபடி[க்]கு நன்மைக்கு பந்தல் சுளுந்து கழங்க / யிலை  தகறற்றுஞ் செய்ய[வு]ம் குறைவறுப்பஞ் செயவும் நன்மைக்கு உண் / டான முறைமை எல்லா[ஞ் செ]ய்யவும் கொளம் ஏரி கரும்ப யிறையம் / யிராசகரமட்[ட]ம்மைப்பாடும்(ப்) பண்ணி தானத்தா(த்து)ற்கும் ஊராற்கும் / உள்ள காட்சி பல சு[வ]ந்தரமுண்டான சுவந்தரமுஞ் செய்து சுகத்திலே யிரு[க்]க கடவராகவும் யிற்படிக்கு / அதிகாரம் சிவந்தெழுந்தார் எழுத்து. பரமேசுவரபட்டர் எழுத்து. /  சிபப்பிறகாச பட்டர் எழுத்து. சிகாரிய[ஞ்] செய்வார் எழுத்து. கோயில் கண(கு)க்கு குடுமிகோநாட்டு வேளாந் எழுத்து.

    கட்டை – ஈம விறகு, உயிற்ற உடல்; சுளுந்து – தீப்பந்தம்; பண்டாரம் – கோயில் மேலாண்மைக் குழு; நன்மை – மங்கல நிகழ்ச்சி.

    விளக்கம்: மேலேகண்ட கல்வெட்டு எண் 847 இல் தந்த பிணத்தொழில் உரிமைக்கு ஏற்பட்ட எதிர்வினை இது. 1523 AD வைகாசி மாதம் 25 ஆம் நாள் வெட்டி கல்வெட்டு. குடுமியான் மலை சிகாநாதர் கோவில் திருவாசல் பணிசெய்யும் பொறுப்பாளர்கள். குடுமியான்மலை வலைக்குன்று சூழ்நாட்டு முத்திரையன், கோனாட்டு முத்திரையன் உள்ளிட்டார்க்கு பிடிபாடு (behavioural guidelines) வழங்கியதாவது. இனி இந்த ஊரில் சாவு விழுந்தால் பிணத்தை பாடையில் வைத்து, முக்காடு இட்டு, தீச்சட்டியை ஏந்தி சுளுந்து கொளுத்தி, பிணம் காத்தும் எரித்தும் வந்த வேலையை இனியும் செய்ய வகையில்லை என்பதால் இந்த அமங்கல வேலையை கைவிட்டு நன்மையான மங்கல வேலைகளான பந்தல் இடுதல், சுளுந்து (தீப்பந்தம்), கழங்கஇலை, இப்படி எல்லா வகை மங்கல வேலைகளையும்; குளம், ஏரி, கரும்பஇறை வேலை ஆகியன மட்டும் செய்து கோவில் பொறுப்பாளர்க்கும் ஊர் சபையோருக்கும் இடர் இல்லாமல் காணும்வண்ணம் உரிமையோடு செய்து ஊர்த்தடை இன்றி உரிமையுடன் சுகமாக வாழ்ந்துவர வேண்டும் என்று, இப்படிக்கு அதிகாரம் சிவந்தெழுந்தார், பரமேசுவர பட்டர், சிவப்பிரகாச பட்டர், ஸ்ரீகாரியம் செய்வார், கோயில் கணக்கு குடுமிகோநாட்டு வேளான் ஆகியோர் ஓலையில் கையெழுத்திட்டனர்.

    எண் 945. 7 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், திருவேங்கவாசல், வியாக்ரபுரீசுவரர் கோவிலில் மடப்பள்ளிக்கு வடபுறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    பிலவங்க ஆண்டு புரட்டாதி மாதம் 8 அந்தியது ஆவு / டைய பல்வராயர் திருவேங்கைவாசல் / வலையற்கு வரக்காட்டின காரியம் தாங்கள் / கோயில் சூலம்  போட்டபடியினாலே போiன / [னா]ர்கள் சூளக்காறர். சொன்னார்கள் எங்களுக்கு / சூலமும் வேண்டாம்மென்று. கட்டளையிட்டு கல் / லு வெட்டிப்  போடுகிறோம், தாங்கள் ____

    சூலக்காரர் – சூலம் பொறித்தோர்.

    விளக்கம்: பல்லவரான பல்லவராயர் புதுக்கோட்டையை ஆண்ட பின் மறைந்து அழிந்தபடியால் தொண்டைமான்கள் இராமநாதபுரம் சேதுபதி இசைவுடன் அங்கு அரசு பொறுப்பிற்கு வந்தனர், 17 ஆம் நூற்றாண்டில். தமிழ்வேந்தர் ஆட்சி இழப்பிற்கு பின்னும் நாயக்கர் ஆட்சிக்கு முன்னுமான இடைப்பட்ட காலத்தில் நிகழ்ந்த 1427 AD மற்றும் 1487 AD பிலவங்க ஆண்டுளில் ஏதோ ஒன்றில் புரட்டாசி மாதம் 8 ம் தேதி இக்கல்வெட்டு வெட்டப்பட்டது. கிழமை குறித்திருந்தால் நல்ல தெளிவு ஏற்பட்டிருக்கும்.

    ஆவுடை பல்லவராயர் திருவேங்கைவாசல் வலையரை வரவழைத்து எடுத்துக் கூறிய செயலாவது நீங்கள் கோயில் சூலம் இட்டபடியால் அந்த சூலக்காரர் சினந்து சொன்னார்கள் எங்ளுக்கு சூலமும் வேண்டாம் பிறிதும் வேண்டாம் என்று போய்விட்டார்கள். அதனால் கட்டளையிட்டு  கல்வெட்டிப் போடுகிறோம், இனி நீங்கள் என்று செய்தி முற்றுப் பெறாமல் விடுபட்டுள்ளது. பிற கல்வெட்டுச் செய்திகளை ஒப்பிட்டால் இவர்கள் பிணத் தொழிலை கைவிட வேண்டும் என்பதாகவே இருக்கும் என்று மட்டும் ஊகிக்க முடிகின்றது. 

    எண் 948. 3 வரி கல்வெட்டு. திருமெய்யம் வட்டம், தேக்காட்டூர், அகத்தீசுவரர் கோவிலில் தர்மசமர்த்தினி அம்மன் கோவிலின் கீழ்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    1. சவுமிய வருஷம் ஆடி மாதம் 26 நாள் கானனாட்டுத் தெற்காட்டுர் ஊர்கமைந்த ஊரவரோம் மேற்படியூர் புறஞ்சேரியிலிருக்கும் பறையற்குப் பிடிபாடு பண்ணிக்குடுத்தபடி, இவர்கள் முன்னுக்கு களஞ் செதுக்குகையில் இப்போ களஞ்செதுக்க_ _ _ _ _ ங்களு
    2. க்கு ஆற்றாதென்கையில் பின்பு ஊராகக் கூடிப் பறையரைக் களஞ் செதுக்க வேண்டாமென்று கட்டளையிட்டுக் குடுத்த (யிட்டுக் குடுத்த) படியிலே சந்திறாதித்தவரை செல்ல முன்னுண்டான சுவந்திரமும் பற்றி ஊருலே குடியிருக்கவும் கல்லிலுஞ் செம்பிலும் வெட்டி
    3. க் கொள்ளக்கடவாராகவும் _ _ _  வாணாதராயர் எழுத்து. தெற்காட்டூர் வேளார் எழுத்து. சொல்லி ஆடுவார் எழுத்து நாட்டுக் கணக்குத் தென்னவரையன் எழுத்து. இந்த _ _ _ _ மந்திருமே _ _ _ _ ம்பான் மூளி பெரியான் உள்ளி[ட்]டாரு.

    பிடிபாடு – வழிகாட்டு நெறி (Behavioral guidelines): களம் – வயல்;

    விளக்கம்: விசயநகர ஆட்சி உண்டான பின் 60 ஆண்டு குறிப்பு தமிழ்க் கல்வெட்டுகளில் இடம் பெற்றது. நாயக்கர் ஆட்சி என்றால் வேந்தர் பெயர், ஆட்சி ஆண்டு தமிழ்வேந்தர் காலத்தில் இருந்தது போலவே குறிக்கப்பட்டிருக்கும். அவ்வாறு அல்லாமல் இக்கல்வெட்டு சௌமிய ஆண்டு ஆடி 26 ஆம் நாள் என்று வெட்டப்பட்டுள்ளது. எனவே இது கம்பண்ணர் படையெடுப்பிற்கு பின்னான நிகழ்வு எனக் கொண்டால் 1429 AD அல்லது 1489 AD இல் வெட்டப்பட்டிருக்க வேண்டும். இதில் கிழமைக் குறிப்பு இருந்திருந்தால் சரியான ஆண்டை நம்மால் குறிக்க வியலும். அப்படி இதில் கிழமை ஏதும் குறிக்க இல்லை.

    கான நாட்டின் தெற்காட்டூர் ஊரூக்கு அமைந்த ஊர் சபையோர் இவ்வூரின் கண் உள்ள புறச்சேரியில் வாழும் பறையர் குல மக்களுக்கு பிடிபாடு (behavioural guidelines) ஏற்படுத்துகின்றனர். இவ்வூரில் முன் போல வயல்களை செதுக்க இயலாது என்று பறையர் கூறிவிட்டபடியால் ஊரார் ஒன்றுகூடி இனி பறையருக்கு வயல் செதுக்கும் பணியைத்தரக் கூடாது என்று முடிவெடுத்து கட்டளையிட்டபடி சந்திராதித்தர் வரை நடைமுறைப்பட வேண்டும். அதே வேளையில் முன்பிருந்த உரிமை போலவே (சுதந்திரம்) இப்போதும் இவர்கள் ஊருள்ளே குடிஇருப்பதற்கு கல்லிலும் செப்பேட்டிலும் எழுத்திலும் வடிக்கும் உரிமையை தந்தனர். அதை அரசர் வாணாதராயர் உள்ளிட்ட ஆட்சிப் பொறுப்பாளர்கள் ஆதரித்து கெயெழுத்திட்டனர்.

    ஊருக்குள் முன்னைப் போல் உரிமையோடு குடிபுக உரிமை இருப்பதை இக் கல்வெட்டு காட்டுவதால், குறிப்பாக தீண்டாமை நடைமுறைகளான காலில் செருப்பு அணியாமை, ஊர் குளத்தில் தண்ணீர் மொள்ளாமை, ஊருள் சில தெருக்களில் நடந்து போகாமை, வேட்டியை இந்த முறையில் தான் கட்ட வேண்டும், எச்சில் துப்பக் கூடாது என்பன போன்ற செயல்கள் இல்லாமையை காட்டுவதால் 15 ஆம் நூற்றாண்டும் அதற்கு முன்பும் தமிழகத்தில் சாதி தீண்டாமை ஒடுக்குமுறை இருந்ததே இல்லை என்பதற்கான பொன்னான சான்றாகும் இக்கல்வெட்டு.   

    எண் 956. 3 வரி கல்வெட்டு. திருமெய்யம் வட்டம், தேக்காட்டூர், அகத்தீசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் தென்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    1. ஆனந்த ஆண்டு ஆவணி மாதம் 5 நாள் தெற்காட்டூராக அ[மை]ந்த ஊரவரோம் [மேற்படி] யூர் பள்ளற்கும் பறைய[ற்கும்] _ _ _ _ _ _ பள்ளற்கு தவிலும் முரோசும் சேமக்கல  
    2. மும் நன்மை தின்மை பெருவினைக்குங் கொட்டி போக கடவராகவும். பறையர் அஞ்சு கா _ _ _ _ _ கடவ _ _ _ _ _ _ சந்திராதித்தவரை செல்ல[வு]ம் வீராண
    3. இந்தப்படி நடக்க கடவராகவு இற்படிக்கு வாணாதராயர் எழுத்து. வேளார் எ.ழுத்து. _ _ _ _ _ _ _ ழுத்து.

    விளக்கம்: 15 ஆம் நூற்றாண்டில் 1434 AD மற்றும் 1494 AD ஆகிய ஆண்டுகளில் ஆனந்த ஆண்டு நிகழ்கின்றது. அதில் கிழமை குறிப்பிடாத ஆவணி மாதம் 5 ஆம் நாள் தெற்காட்டூர் ஊர் சபையோர் அவ்வூரின் கண் வாழும் பள்ளர் பறையர்க்கு இடையே எழுந்த உரிமைப் போரில் மங்கல அமங்கல பெருவினைகளில் பள்ளர் தவிலும், முரசும் கொட்டிக் கொள்ளவும் சேமக்கலசம் கொண்டு செல்லவும் உரிமை வழங்கப்படுகின்றது. பறையருக்கான உரிமை பற்றிய கல்வெட்டு பகுதி சிதைந்துள்ளதால் அறியமுடியாமல் போய்விட்டது. இதை வாணாதராயர் உள்ளிட்ட சில அரச அதிகாரிகள் கட்டளையாக கையெழுத்திட்டு ஒப்புகின்றனர்.

    எண் 198. 32 வரி கல்வெட்டு. _ _ _ _ வட்டம், கீரனூர், உத்தமநாதசுவாமி கோவிலின் சுவாமி கோவில் வடபுறச்சுவர் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ இராச இராச தேவற்க்கு யாண்டு 28 ஆவதின் எதிராமாண்டு இரட்டைபாடி கொண்ட சோழவளநாட்டு உற[த்]தூர் கூற்றத்து

    ஊராய் இசைந்த ஊரோம் என நீண்டு நீர், நிலம், வயல், குளம் குறித்துக் குறப்பிடும் இக்கல்வெட்டில் பல அரையர்கள் இணைந்து இறைவருக்கு திருநாமத்துக்காணி, நாச்சியாருக்கு அமுதுபடி ஆகியவற்றுக்கு கல்வெட்டுப் பிரமாணம் கொடுத்தனர். பூசையும் திருப்பணியும் செய்ய கல்வெட்டிக் குடுத்தோம் என்று சில அரையர்கள் கூறுமிடத்து 26 ஆம் வரி தொடர்ச்சி

    1. வான் எழுத்து அஞ்ஞூற்று பரையன் எழுத்து தொண்டமனாடாழ்வன் எழுத்து. இராசாக்கியரையன் எழுத்து.எதிரிலிச் சோழன் நாடாழ்வான் எழுத்து. கொல்லத்தரையன் எழுத்து.
    2. மாணிக்கராயன் எழுத்து. கிடாரங் கொண்ட பரையன் எழுத்து. காங்கை நாடாழ்வான் எழுத்து. செம்பிய நாடாழ்வான் எழுத்து. உப்பிலிக் குடியில் ஈழங் கொண்டு நாடாழ்

    என்று 32 வரியில் அரையரும் பிறரும் கையொப்பமிட இக் கல்வெட்டு முற்றுகிறது.

    விளக்கம்: மூன்றாம் இராசராசனின் 28 ஆம் ஆட்சி ஆண்டிற்கு அடுத்து வந்த ஆண்டில் (1245 AD) வெட்டப்பட்ட கல்வெட்டு இது. இறைவர்க்கு திருநாமத்துக் காணியும் இறைவிக்கு அமுதுபடியும் குறித்து விவரம் தந்த பின் இதற்கு கையொப்பமிட்ட அதிகாரப் பொறுப்பில் இருந்த பறையர் அரசர், நாட்டுக் கிழான் பதவிகளில் இருந்தது பற்றி குறிக்கின்றது இக் கல்வெட்டு. அடுத்து வரும் கல்வெட்டுகள் அதற்கு மேலும் வலுச்சேர்க்கின்றன.

    எண் 421. 15 வரி கல்வெட்டு. திருமய்யம் வட்டம், விராச்சிலை பில்வவனேசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் வடபுரச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீமத்கி[தி](தி)க்குமேல் கோச்சடை(ச்சடை)பன்மரான  த்ரிபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவற்கு யாண்டு நாலாவது கும்ப நாயற்று பூர்வபக்ஷத்துத் துதிகையும் வியாழக்கிழமையும் பெற்ற மிருஹஸீர்ஷத்து நாள் காநாடான விருதராஜ பயங்கர வளநாட்டுக் கானாட்டுப் படைப்பற்று விரையாச்சிலை ஊராக இசைந்த ஊரோம்

    அடுத்து நிலம், வயல், குளம், திசை போன்ற செய்தி உடைய வரிகள். 14 ஆம் வரி தொடர்ச்சி

    1. _ _ _ டயான் மக்கணாயன் தற்குறியும், கண்டன் பொருளன் தற்குறியும், அரசர் மக்களின் பரிமன விளா _ _ _ இராசாங்க நாடாழ்வார் தற்குறியும் இப்படிக்கு பிள்ளான் இராசநான இராசிங்க தேவன் எழுத்து. இப்படி[க்]கு பிறந்தான் சேவகநான கானாட்டுக் பரையன் எழுத்து. இப்படி[க்]கு வளத்தானான அரசர் மீகாமப் பரையன் எழுத்து. இப்படிக்கு நம்பி அஞ்நூற்றுவப் பேரரயன் தற்குறியும் அவையன் உலகுடையா
    2. ற்குறியும் வெள்ளூர் பெரயன் பொப்பாண்டான் தற்குறியும் அழகன் _ _ [ம்]பாண்டன் தற்குறியும் இந்த அனையர் தற்குறியும் இட்டு _ _ _ _ பிரமாணம் எழுதினேன் இவ்வூர் கணக்கு _ _ _ _ _ பெருமாள் எழுத்து. இப்படிக்கு இக்கோயில் சிவப்பிராமணரில் துக்கைபட்டர் சொக்கபட்டன் தற்குறியும் இட்டு சிவபாதகயார் வில்லியார் எழுத்து  _ _ _ _ _ மறமாணிக்கலயினார் எழுத்து. 

    விளக்கம்: சுந்தரபாண்டியனின் 4 ஆம் ஆட்சி ஆண்டு (1280 AD மே 2). கானாட்டு விரையாச்சிலை ஊராக அமைந்த ஊரின் ஊர்ச்சபையோர் கோவிலுக்கு நிலம் வழங்குதல் பற்றி கூறும் செய்திகளில் ஈறாக நாட்டுக் கிழான், அரையன் பதிவிகளில் இருந்த பறையர்கள் சான்று ஒப்பம் இடுகின்றனர். இதன் மூலம் பறையர் உயர் அதிகாரப் பொறுப்பில் இருந்ததை அறிய முடிகின்றது. இதாவது, பிற்பட்ட காலத்தில் ஒடுக்கப்பட்டோர் முற்பட்ட ஒரு காலத்தில் ஒடுக்குதலுக்கு ஆட்படாமல் வாழ்ந்தது உண்மை என்பதற்கு இக் கல்வெட்டு ஒரு சான்று. அப்படியானால் மதமும், பிராமணரும், மனுஸ்மிருதியும் இவர்களை ஒடுக்கி இருக்கவில்லை என்று தானே பொருள். உண்மையில், பின்னாளில் இவர்களை ஒடுக்கியது அரசியல் அதிகார அமைப்பு என்று தானே கொள்ள முடிகின்றது.

    எண் 393. 18 வரி கல்வெட்டு. திருமய்யம் வட்டம், விராச்சிலை பில்வவனேசுவரர் கோவிலில் சுவாமி கோவிலின் மேற்புரச் சுவரில் உள்ள கல்வெட்டு. எண் 393.

    1. ஸ்ரீ மேற்க்கித்தி[க்]குமேல் கோமாறுபன்மரான  திரிபுவனச் சக்கரவத்திகள் எம்மண்ட[லமுங் கொண்ட]ருளிய ஸ்ரீ குலசேகர தேவற்கு யாண்டு 15 வதின் எதிராமாண்டு கற்கடகநாயற்று பூர்வபக்ஷத்து வா_ஸியும் புதன்கிழமையும்
    2. பெற்ற மூலத்துநாள் கேரளசிங்கவளநாட்டு மட்டியூரான நிருபசேகர_ _ _ மங்கலத்து வரகுணீஸ்வரமுடைய நாயனார் திருமடைவிளாகத்துப் பெரிய திருக்கூட்டதுத்  தவணை முதலியார் மாணிக்க வாசகர் ஆளை

    இதன் பின் நிலம், வரி செய்திகள் இடம் பெறுகின்றன. இனி 15 ஆம் வரி தொடர்ச்சி

    1. படி சந்திராதித்தவற் செல்வதாக இன்னாயனார் திருக்கோயில் திருக் க[ற்]றளியிலே கல்வெட்டிக் குடுத்தோம் கோயில் வாசகப்பிச்ச முதலியாற்கு அரசு மக்களும் மறமுதலிகளும் இ[வ்வ]னைவோமும் இப்படிக்கு நாட்டான் கொண்டன் எழுத்
    2. து மங்கலநாடாழ்வான் எழுத்து. உய்யவந்த தேவன் எழுத்து. அஞ்நூற்றுவ தேவன் எழுத்து. கொண்டன் நாட்டான் எழுத்து வீரசிங்கப் பெரையன் எழுத்து. அஞ்நூற்று பரையன் எழுத்து. இராசசிங்க நாடாழ்வானும் பெருந்துறை
    3. ப் பெரையனும், பொற்கள் நெருங்கிப் பெரையனும், அரசமீகாமப் பெரையனும், நிலமை அழகியநாடாழ்வானும், கொண்டானும் இவர்கள் கைந்தர[யு]ம் இட்டு இவர்க[ள்] சொல்ல இப்ரமாணம் எழுதினேன் இவ்வூற் கணக்கு வயஸகமுடை
    4. யான், உய்யவந்தான் உலகுடையான் எழுத்து. இது பன்மாஹேஸ்வர் ரக்ஷை.

    விளக்கம்: குலசேகர பாண்டியனின் 15 ஆம் ஆட்சி ஆண்டிற்கு அடுத்து வந்த ஆண்டில் (1283 AD சூலை 7) இல் வெட்டப்பட்ட கல்வெட்டு இது.  வரகுண ஈசுவரருக்கு நிலக்கொடை வழங்குவது பற்றிய விவரத்தை கூறி, அதற்கு அடுத்து உயர் அதிகாரப் பதவிகளான அரையன், நாட்டுக் கிழான், படைத் தலைவர் பதவிகளில் இருந்த பறையர்கள் சான்று ஒப்பமிடுகின்றனர். கல்வெட்டு எண் 421 இல் இடம் பெறும் சில பெயர்கள் இதிலும் இடம் பெறுகின்றன. எனவே தீண்டாமை இவர்களை தமிழ்வேந்தர் ஆட்சியில் அண்டவேயில்லை, மாறாக இவர்களால் அயல்மொழியர்க்கு பயன் எதும் இல்லை என்று ஆகிவிட்ட 16/17 ஆம் நாற்றாண்டில் தான் அயல் மொழியர் ஆட்சியில் தான் இந்த ஒடுக்குமுறை ஏற்பட்டிருக்கலாம். ஆட்சி அதிகார மாற்றம் இவர்களுக்கு இந்த தாழ்ந்த நிலைமையை ஏற்படுத்தி இருக்க பின் ஏன் தேவையின்றி மனுஸ்மிருதி, பிராமணர், சைவ வைணவ மதங்களை இந்த இழுக்கிற்காக சாட வேண்டும்? இது அடுத்த தலைமுறையை, வருங்கால சமூகத்தை தவறாக வழிநடத்துவது அன்றோ?

    எண் 960. 44 வரி கல்வெட்டு. குளத்தூர் வட்டம், குடுமியாமலை, சிகாநாத சுவாமி கோவிலில் இரண்டாம் கோபுர வாசலில் வலப்புறச் சுவரில் உள்ள கல்வெட்டு.

    நள வருஷம் ஆவணி மாதம் 12 தி கோனாடான கடலடையாதிலங்கை கொண்ட சோழவள / நாட்டு குன்றுசூழ் நாட்டுப் பரம்பை [ஊர்] செருந்தா நம்புசெய்வாரும் பாண்டியனார் மகன் வன்னி / யர் உள்ளிட்டாரும் திருச்சிராப்ப[ள்]ளி  உடையார் அங்கிஷத்துக்கு கடவ உதை[யப் பெருமாளும்] / இன்மூவர் உள்ளிட்டாரோம் இன்னாட்டுப்ப[கை]த் தலைப்பாடி காவலான கீழைக்குறச்சி ஊராளிகளில் / வழித்துணையான மாவலிவாணாதராயன் உள்ளிட்டாரும் சோழகோன் பரையர் மகன் சூறாண்டாற்கும் பகை தீ / ந்து காவமுறி குடு[த்]த பரிசாவது மு[ன்]னாளிலே செய்யான் மாவலிவாணாதராயன் பள்ளர் பசகள் ஓடிப்போ நெருஞ்சிக் / குடியீலே இருக்கையில் இவர்க[ளூர்] மாடும் அ[ழி]த்து இந்த பள்ளரையும் பிடித்துக் கொண்டு வருகச்சிதே இந்த / நெருஞ்சிக்குடி ஊரார் பரம்பை ஊருலே கூப்பிட்டு வரு[கை]யில் கூப்பி[ட்]டு படைக்கச் சென்று சிற்றண்ணல்வாசலில் / செங்குளத்திலே சென்று முட்டி செய்யான் மாவலிவாணாத[ராயன்] உடனே படையாய் நம்புசெய்வார் மகனார் பண்டியனா / ர் படுகைஇல் இப்பழி கேட்பதாக சிற்றம்பலவரான நம்புசெய்[வா]ர் [இரண்]டு கரைநா[ட்டை] யுங்குவித்து ஒருமை மு[றி]யும் இட் / டு இவனை எழச் செய்வதாக இவன் வாசலிலே படையாய் பொரு[கச்சே] சிற்றம்பலவரான நம்புசெய்வாரும் இவர் மகனா _ _ _ _ ருச்சி / ராப்பள்ளி உடையாரும் பட்டு இ

    Share
  • சேக்கிழார் பா நயம் -19

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி

    கைலை மலையிலிருந்து தமிழகத்துக்கு இறைவனால் அனுப்பப் பெற்ற சுந்தரர், அவதாரம் செய்த திருமுனைப்பாடி நாட்டினைப்பற்றி கடந்த கட்டுரையில் பார்த்தோம். இப்போது அவர் திருஅவதாரம் செய்த சிறப்பைக் குறித்துக் காண்போம்! தமிழ்நாட்டின் வேதியர் குலத்தின் வகைகள் உண்டு! நால்வேதங்களையும் ஓதி அவை கூறும் நன்னெறியில் வாழ்ந்து வரும் வேதியர் ஒருவகை!

    வேதம் வேதியர்கள் பிரமனது முகத்தில் தோன்றியவர்கள் என்று கூறுகிறது! அவ்வகையில் பிரமன் முகத்திலும், தோளிலும், வயிற்றிலும், தொடையிலும் வேதியர், அரசர், வணிகர், வேளாளர் ஆகியோர் தோன்றினர். இவை பிறந்த இடத்தினால் உயர்வோ, தாழ்வோ பெறவில்லை. முகம் அறிவைக் குறித்து அதனை வழங்கும் ஆசிரியர்களாகிய வேதியரையும், தோள், வீரத்தைக் குறித்து வலிமையால் போர் செய்யும் அரசரையும், வயிறு உணவுப்பொருளை சேமித்து வழங்கும் வணிகர்களையும், கால்கள் வயலில் நடந்து உழவுத்தொழில் புரியும் வேளாளர்களையும் குறித்தது! இவையே உயர்வு தாழ்வற்ற நாள் வருணம்! பிறந்த மனிதன்இளமையில் பெற்றோர் ஆசிரியர் ஆதரவில் ஞான நூல்களைக் கற்றுக்கொள்ளும் போது பிரம்மச்சாரியாகவும், இளைஞனாய்த் திருமணம் புரிந்து கொண்டு குடும்பம் நடத்தும்போது கிரகஸ்தனாகவும், இல்லற இச்சை தீர்ந்தபின் காடுநோக்கி மனைவியுடன் சென்று பிறர்க்குதவி வாழும் வானப்பிரஸ்தனாகவும், முற்றத் துறந்தபின் பற்றே இல்லாமல் வாழும் சன்யாசியாகவும் வாழும் நிலைகளை ஆசிரமங்கள் என்பர். இவை அனைத்திலும் எல்லார் வாழ்க்கையும் அமையும்! இந்த வருணங்களும், ஆசிரமங்களும் வர்ணாசிரமம் என்று கூறப்படும்! இவை உலகியல் வாழ்க்கையாகும்!

    ஆன்மவியல் வாழ்க்கையில் சிவ வேதியர் என்போர், சிவபெருமானின் ஐந்து திருமுகங்களிலிருந்தும் அதிகரித்து வந்து, ஆகமம் முதலியவற்றால் சிவபெருமானை அர்ச்சிக்க உள்ள உரிமை பெற்றவர் ஆவர்! அந்தணர் வேறு, சிவவேதியர் வேறு! இவர்கள் முப்போதும் பெருமானைத் திருமேனி தீண்டி வழிபாடு செய்வர்; மேலும் இவர்கள் பரம்பரை பரம்பரையாய் சிவபிரானுக்கு அணுக்கமாய்த் தொண்டு செய்வதால்சேக்கிழார் இவர்களை ‘வழி வழியடிமை செய்யும் வேதியர்’ என்றார். ‘’இவர்கள் கௌசிகர், காசிபர், அகத்தியர், பரத்துவாசர், கௌதமர் என்ற ஐவரின் கோத்திரங் கொண்ட வர்கள்; இவ்வைவரும் இப்பேர்கொண்ட பிரம புத்திரர்கள் அல்லர்.இவர்கள் சிவமரபினர், இவர்களுக்கு வேதபாரம்மிய மில்லை என்பாரை நோக்கி மறுக்கும்வகையில் வேதியர்குலம் என்றார் .பிரமதேவர் முகத்தினின்று தோன்றிய வேதியர்வேறு; சிவவேதியர்வேறு.!

    பிரமன் வழித் தோன்றியவரே, தக்கயாகத்தில் வீரபத்திரரால் தண்டிக்கப்பட்டும், தாருகாவனத்து இருடிகள் வழிவழிவந்து இறைவனால் தண்டிக்கப்பட்டும், ததீசி முனிவரால் சபிக்கப்பெற்றும் இவ்வழியே உலகில் அதிகரித்து வருபவர்கள். இவர்களது வரலாறு கந்தபுராணம் முதலியவற்றுட் காண்க. சிவவேதியர்களாகிய இவர்கள் முன் சொல்லிய எவ்விதச் சிவாபராதங்களுக்கும் உட்படாதவர்களாய்ச் சிவபெருமானை எப்போதும் ஆன்மார்த்தம் – பரார்த்தம் என்ற இருநிலையிலும் வழிபட்டுச் சிவநெறித் தலைவர்களாய் உள்ளவர்கள்.இக்காலத்தில் இவர்கள் தம் பெருமையை உணராமல் தாழ்வு மனப்பான்மை கொண்டு வாழ்க்கை நடத்துகின்றன!’’ என்று சிவக்கவிமணி கூறுகிறார்! இவர்களையே சிவபிராமணர் என்பர்,

    ‘வழி வழி யடிமை செய்வோர்’ என்ற தொடரில் வழி வழி என இருமுறை கூறியது, இவர்கள் தந்தை வழி முன்னோர், தாய்வழி முன்னோர் என்ற இருவகையாலும், சிவபிரானுக்கு அடிமைத்தொண்டு புரிந்த மரபினர் என்பதைக் குறிக்கும்.

    ‘’சிவமறையோர் திருக்குலத்தார் அருவி வரை வில்லாளிக்கு அகத்தடிமை யாமதனுக்கு ஒருவர் தமை நிகரில்லார்!’’ என்று பின்னர் சேக்கிழார் கூறுவார்! இனி அவர் இயற்றிய பாடலைக் காண்போம்!

    ‘’மாதொரு பாக னார்க்கு வழிவழி யடிமை செய்யும்
    வேதியர் குலத்துட் டோன்றி மேம்படு சடைய னாருக்
    கேதமில் கற்பின் வாழ்க்கை மனையிசை ஞானி யார்பால்
    தீதகன்று உலகம் உய்யத் திருவவ தாரம் செய்தார்!’’

    இப்பாடலில் வேதியர் குலத்துள் தோன்றி என்று இறந்த காலத்தாலும், மேம்படு சடையனாருக்கு என்று எதிர்காலத்தாலும் கூறிய சேக்கிழாரின் சொல்லாட்சி மகிழ்தற்குரியது. சடையனார் தோன்றியது சிவவேதியர் குலம். அவர் சுந்தரரைப் பெறுவதால் இனி அவர் குலம் மேம்படப் போகிறது, என இருகாலத்தாலும் குறிப்பிட்டுள்ளார்!

    ‘சடையனார் ‘ என்பது சுந்தரர் தந்தையார் பெயர்.இது சிவபெருமானுக்கே உரிய சிறப்பான பெயர். அதனை மகனுக்கு இட்டு வழங்குவது சிவவேதியர் வழக்கம்; கடவுட் பெயர்களையும் , பெரியோர் பெயர்களையும் மக்களுக்கு இட்டு வழங்குதல் உலக வழக்கம் ஆகும். அவ்வகையில் சுந்தரர் தந்தையாரைச் சடையனார் என்றும், தாயாரை இசைஞானியார் என்று வழங்கினர்! சடையனார் தம் தந்தையாரின் திருப்பெயராகிய ‘ஆரூரர் ‘’ என்பதைச் சுந்தரருக்கு இட்டு வழங்கினார். இதனைச் சுந்தரரே தம் தேவாரத்தில் ,

    ‘’நண்பு உடைய நன்சடையன் இசைஞானி சிறுவன்
    நாவலர்கோன் ஆரூரன் நாவின்நயந் துரைசெய்’’

    என்று தம்மைப்பற்றிக் குறிக்கிறார்! மேலும்,

    .“இசைஞானி யம்மையார் (திருவாரூர்) கமலாபுரத்திலே சிவகோதம கோத்திரத்திலே ஞான சிவாசாரியார் குடும்பத்தில் அவதரித்த மகாளவார் என்பது கல்வெட்டுக்களாற் கிடைக்கும்செய்தி!’’

    சுந்தரர் தம் அருள்மொழிகளால் சைவம் தழைக்கச் செய்தார், என்பதைக் குறிக்க ‘’ தீதகன்று , உலகம் உய்ய ‘’ என்ற தொடரால் புலப்படுத்தினார். மேலும் அவர் பிறந்தமையால் மற்றையோரும் தீமை நீங்கி உய்ந்தனர் என்பதைக் குறிக்க, ‘’ திருவவதாரம் செய்தார் ‘’ என்று சேக்கிழார் கூறினார்! இவ்வாறு திருக்கையிலையிலிருந்து தென்திசையில் சுந்தரர் தோன்றிய சிறப்பை, சொல்லாட்சி சிறப்புடன் சேக்கிழார் கூறியமை உணர்ந்து மகிழத்த தக்கதாகும்!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி – 195

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (12.01.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • இந்த வார வல்லமையாளர் (295) – குக்கூ குழந்தைகள் வெளி

    உலகறியாத சிறுவர்க்குள் தான்
    உலகம் சுழல்கிறது!
    ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு ரகமாய்
    உயர்ந்து விரிகிறது!
    கலகம் அறியாப் பிள்ளை நெஞ்சுள்
    கடவுள் வாழ்கிறது!
    கணமொரு வடிவாய்ப் புதிதினும் புதிதாய்க்
    கனவாய் வளர்கிறது!

    என்ற வரிகள் இதயத்தில் உதயமாகின்றன. இவை இந்நேரம் தோன்றக் காரணம் என்ன? அதற்குக் காரணமானவர்களே இந்த வாரத்தின் வல்லமையாளர். விதையை யார் தான் எழும்ப வைக்கிறார்? இந்தக் கேள்விக்கு என்னவாயிருக்கும் பதில்? அப்படி சிறிய விதைகளாய் விளங்கும் குழந்தைகளைச் சமுதாய நெறியின்படி நல்ல நடத்தையுடன் எழுப்பும் ஒரு சுவாரஸ்யமான முயற்சியைச் சுலபமாக மேற்கொண்டுக் கொண்டிருக்கின்ற குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினர் அனைவருமே இந்த வாரத்து வல்லமையாளர்கள் தாம்.

    குக்கூ குழந்தைகள் வெளி என்ற அமைப்பினர், http://cuckoochildren.in என்றொரு இணையதளம் மூலம் தங்களது அன்றாட சேவைகளை உலகின் பார்வைக்குப் பதிவுசெய்கிறார்கள். அந்த வலைதளத்தில் அவர்களைப் பற்றி குறிப்பிடும் பகுதியில்,

    Forgive my grimy hands. I’m just back from the forest.
    There is a stream there.
    On its banks is a rock that’s shaped like an elephant.
    I was sitting on it with my friends all morning.
    We played a lot of games.
    We made animals and birds with clay from the bank and released them into the forest.
    We drew clouds on the ground using red earth, we also drew the sun.
    We wrote a story in which the moon goes for a swim one night.
    We collected seeds which we will plant near our homes.
    We read a book under a tree when it drizzled.
    And when the sun came out we danced for a song we wrote.
    We then…oh my, we’re late.
    The seeds! We have to plant them right away.
    See those grey clouds floating towards us?
    They hold precious water drops that will give life to the seeds.
    We have to go now, there’s so much to do.
    Good-bye.
    No, wait, do you want to come along?

    என்று ஒரு அற்புதமான கவிதை வழியாகத் தாங்கள் வித்யாசமானவர்கள் என்று நிறுவுகிறார்கள்.

    நண்பர்கள் சிலர் கூடி 2004 ஆம் ஆண்டு தொடங்கப் பட்ட தன்னார்வ அமைப்பான குக்கூ குழந்தைகள் வெளி, ஊர்ப்புற சிறார்களுக்கு உள்ளே அமிழ்ந்திருக்கும் ஆற்றல் மிகுந்த படைப்பாளிகளையும், திறமைசாலிகளையும் எளிதில், இயற்கையோடு இயைந்த வாழ்வியல் முறையில் கண்டெடுத்துப் பயிற்சி அளிக்கும் செயலினைத் தொண்டாகச் செய்து வருகிறது.

    Our objective — letting children discover themselves. We mostly work with little ones from rural Tamilnadu, who lack the opportunities that children from urban environments take for granted. We introduce them to Nature, good books and movies. We tell them stories, play with them, draw and paint with them, introduce them to the colorful world of photography, traditional folk arts, music, martial arts, theatre, and also engage them in exciting discussions on socio-political and environmental issues. We wish to bring out the inherent spark in every child. And more than anything, we want to learn from them, for their world is the most beautiful place on earth.

    என்ற அவர்களின் தன்விவரக் குறிப்பு நமக்கு அவர்களின் தன்மையை விளக்கும்.

    கலாச்சாரம் மற்றும் பண்பாடு ரீதியாகக் கலைநயத்துடன் புது நயத்தையும் சேர்த்துக் குழந்தைகளை உயர்த்தும் இந்த குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினரின் சாதனைகளை அவர்களது முகநூல் பக்கத்தில் காணும்பொழுது மெய் சிலிர்த்துப் போகிறது. சிறிய, எளிய, இதுவரை யாரும் யோசிக்காத விஷயங்களை மிகவும் சாதாரணமாக நிகழ்த்தியிருக்கிறார்கள். அந்தப் புதிய பார்வை மிகவும் பாராட்டத் தக்கது. அதிலும் குறிப்பாக இந்த வாரம், பனை ஓலைகளை வைத்து விளையாடப் பழக்கியிருக்கும் இவர்களது முயற்சி மிகவும் புதுமையாகவும், கேட்கவே சுவாரஸ்யமானதாகவும் விளங்குகிறது என்பது படிக்கும் உங்களுக்கும் பிடிபடும்.

    அவர்களின் பதிவு,

    பனை ஓலையில் பொம்மைகள் செய்யக் கற்றுத்தரும் குழந்தைகள் பயில்முகாம் இனிதே நிகழ்ந்துமுடிந்தது குக்கூ காட்டுப்பள்ளியில்… பனை ஓலையின் வாசத்தை நாசியில் ஏற்றி ஓலையை மடித்தும் நுழைத்தும் சின்னச்சின்ன பறவைகளாகவும், விலங்குருவங்களாகவும் செய்து இவ்வெட்டவெளியில் மிதக்கவிட்டனர். மகிழ்வின் நிறைவின் புகைப்படங்கள் உங்கள் விழிகளுக்காக… ஒளிப்படங்கள் : அய்யலு குமரன், திருமலைவாசு

    பொதுவாகவே ஒரு விருதளிப்பது என்பது இன்னும் திறம்படச் செயலாக்க அவர்களை ஊக்கும் சக்தியாக விளங்கும். அந்த வகையில் குக்கூ குழந்தைகள் வெளி அமைப்பினருக்கு வல்லமையாளர் என்ற விருதினை வழங்கி மனப்பூர்வமாக வாழ்த்துகிறோம். நாளைய சமுதாய பூக்களை சரியாக வகையில் பயிரிட்டு அடை காக்கின்ற குக்கூ குழந்தைகள் வெளி போல பல அமைப்புகள் இன்றைய சூழலில் நாளைக்காகவும் உழைக்க வேண்டும் என்ற வேண்டுதல்களை இறைவன் முன்னம் வைத்து வாழ்த்துகிறோம்.

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • ‘ஜோக்கர்’ இயக்குநருக்கு மனமார்ந்த பாராட்டுகள்

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    சர்கார் படத்தைப் பார்த்து மிகவும் ஏமாற்றமடைந்திருந்த எனக்கு சுமார் இரண்டரை ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ‘ஜோக்கர்’படம் மிகுந்த மன நிறைவைத் தந்தது. அதன் விமர்சனத்தைப் படித்திருந்த எனக்கு அதைப் பார்க்கும் வாய்ப்பு இப்போதுதான் – அதாவது சர்கார் படத்தைப் பார்த்த பிறகுதான்– கிடைத்தது. இந்தப் படம் அமெரிக்காவில் திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன். எல்லா வகையிலும் சர்கார் படத்திற்கு நேர் மாறு ஜோக்கர் படம்.

    முதலில் விஜய்யின் சண்டை போடும் திறனையும் exercise dance ஆடும் திறமையையும் நம்பி சர்கார் படத்தை எடுத்திருக்கிறார்கள். எப்படியும் படம் சோடை போகாது, செலவழித்த பணம் கண்டிப்பாகத் திரும்பக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதை எடுத்திருக்கிறார்கள். ஆனால் ஜோக்கர் படத்தில் எந்த ஸ்டார் வேல்யூவும் இல்லை. எல்லோரும் இந்தப் படத்தில்தான் அறிமுகம் ஆகிறார்கள். இதுவரை ரசிகர்களுக்குத் தெரியாத நடிகர்களை வைத்துப் படம் எடுப்பதற்கு எவ்வளவு தன்னம்பிக்கை வேண்டும்! ஜோக்கரின் பட்ஜெட் மூன்று கோடியாம்! பிரபல நடிகர்களை வைத்து எடுத்தஇன்னொரு படத்தின் (சர்கார் என்றுதான் நினைக்கிறேன்) பட்ஜெட் முன்னூறு கோடி!

    சர்கார் யதார்த்தத்திற்கு நேர்விரோதம் என்றால் ஜோக்கார் முழுக்க முழுக்க யதார்த்தமான படம். கழிப்பறை இல்லாத ஒவ்வொரு வீட்டிற்கும் கழிப்பறை கட்டிக் கொடுப்பதாக அரசியல்வாதிகள் வாக்களித்துவிட்டு எவ்வளவு ஊழல் புரிகிறார்கள் என்று காட்டுவதில் எத்தனை யதார்த்தம்! ‘இதுவரை வாழ்றதுக்குத்தான் வழியில்லாமல் இருந்தது. இப்போது பேள்றதுக்கும் வழியில்லாமல் போய்விட்டது’ என்ற வசனத்தில் எத்தனை உண்மை இருக்கிறது!

    சர்கார் படத்தில் கதாநாயகன் அமெரிக்காவிலிருந்து தன் ‘படைகளோடு’ வந்து அரசியல்வாதிகளோடு சண்டை போட்டு அரசியலைச் சுத்தப்படுத்தப் பார்க்கிறாராம். ஜோக்கர் படத்தில் ஒவ்வொரு குடிமகனின் கையாலாகாத்தனமும் அப்பட்டமாக வெளிப்படுகிறது. வீட்டில் கழிப்பறை இல்லாதால் தன்னை மணக்க மறுத்த பெண் பின் மனம் மாறித் தன்னை மணந்துகொண்டதும் அகமகிழ்ந்து போகிறான் கதாநாயகன். ஆனால் அரைகுறையாகக் கட்டப்பட்ட கழிப்பறையே அவன் மனைவிக்கு எமனாக வாய்த்துவிட்டதும் பின் அவளுக்கு உரிய காலத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போனபோது மனம் பேதலித்துப் போனதும் மிகவும் இயற்கை. தன்னைத்தானே நாட்டின் ஜனாதிபதியாகக் கற்பனை செய்துகொண்டு மக்களுக்கு உதவுவதும் அல்லது உதவ முயற்சிப்பதும் அருமை. மனைவியைக் கருணைக்கொலை செய்வதற்கு அவர் அரசிடம் அனுமதி பெறுவதற்குத் திண்டாடுவதும் அவருடைய வழக்கு உச்சநீதிமன்றம் வரை போவதும் இந்தியாவில் ஏழைகள் படும் பாட்டை வெளிச்சமிட்டுக் காட்டுகின்றன. ஒவ்வொரு இந்தியனும் படும்பாட்டையும் அவனுடைய கஷ்டங்களுக்குப் பரிகாரமே இல்லாமல் இருப்பதும் யதார்த்தமாகக் காட்டப்பட்டிருக்கின்றன. மக்களுக்கு நன்மைகள் கிடைக்க கதாநாயகன் செய்யும் காரியங்கள் எல்லாம் வீணாகப் போகின்றன. எதுவும் செய்ய முடியாமல் தவித்துக் கடைசியில் தன் உயிரையும் பலி கொடுக்கிறான் கதாநாயகன். கதாநாயகன் தோற்பது தமிழ் சினிமாவுக்குப் புதிது. அவனுக்கு உதவியாக இருந்த சமூக செயற்பாட்டாளர் கடைசியில் கூறுவதுபோல் அரசியல்வாதிகளைத் திருத்தப் பாடுபடும் அவர்கள் பைத்தியக்காரர்களாகக் கருதப்படுகிறார்கள். நாட்டில் ஊழல் தொடர்கிறது; நாட்டு மக்கள் தொடர்ந்து துன்பத்துக்கு ஆளாகிறார்கள். இந்த நிலையை மாற்ற முயற்சிக்கும் செயற்பாட்டாளர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. இதை மிகவும் அழகாக எடுத்துச் சொல்கிறது படம்.

    முப்பது மைல் பிரயாணம் செய்து பத்து டாலர் செலவழித்து சர்கார் படத்தைப் பார்த்துவிட்டு வந்தபோது மனமெல்லாம் ஏமாற்றம் நிறைந்திருந்தது. என்ன சொல்ல வருகிறார்கள் என்ற ஆயாசம். இப்படித்தான் அரசியலைச் சுத்தப்படுத்த முடியுமா என்ற வேதனை. ஆனால் பணம் எதுவும் செலவழிக்காமல் தொலைக்காட்சியில் வீட்டிலிருந்துகொண்டே பார்த்த ஜோக்கர் படம் இந்தியாவில் மக்களின் நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கிறதே என்பதை நினைத்து மனதில் ஒருவித மனச்சோர்வை ஏற்படுத்தினாலும், ஒரு நல்ல படம் பார்த்தோம் என்ற மனநிறைவைத் தந்தது. முன்னூறு கோடி ரூபாய் செலவழித்து எடுத்த படம் கொடுக்காத மனநிறவை மூன்று கோடி செலவழித்து எடுத்த படம் கொடுத்தது. தமிழக மக்கள் இம்மாதிரிப் படங்களுக்கு நல்ல ஆதரவு கொடுத்திருந்தால் இம்மாதிரிப் படங்கள் இன்னும் நிறைய வந்திருக்கலாம். தமிழ்நாட்டிற்கு இன்னும் விடிவு காலம் வரவில்லையென்றே சொல்ல வேண்டும்.

    Share
  • யாரும் யாருக்காகவுமில்லை!

    -முனைவர் ஏ. கோதண்டராமன்

    துன்பம் சூழுலகில்
    கைவிடப்பட்டதாகக்
    கைவிடப்பட்டவர்கள் எந்தக்
    கேள்விகளாலும்
    வேள்வி செய்யாதீர்…

    புறக்கணிக்கப்பட்டதாய்
    புலம்பிப்புலம்பி
    நடந்த அவமானங்களையே
    நஞ்சாய்
    நினைந்து வருந்தாதீர்…

    இறுகப்பூட்டிய மனங்கள்
    திறக்க வேண்டி
    காத்திருக்காதீர்கள்..
    அடைக்கப்பட்ட மனங்களின்பின்னே
    பெருங்கதையிருக்கலாம்..

    துன்பங்களால்
    ரணப்பட்டுக்கிடக்கும்
    மனிதர்களே
    காலமெனும் அருமருந்தேந்தி
    வரங்களால்
    வாழ்க்கையை வானவில்லாக்குங்கள்..

    பேரன்பென்ற
    பெருங்கானகத்தீயில்
    யாரையும் தேடாதீர்கள்…

    இனி
    உன்னிடம் வரப்போவதில்லையென
    வாக்குமூலத்தால்
    கண்ணீர்த்ததும்ப
    நீயின்றி நானில்லையென
    வேதாந்தம் பேசி
    வாழ்க்கையைத் தொலைத்து
    வீழ்ந்தே பழகாமல்
    எழுந்து பழக்கப்படு!
    யாரும் யாருக்காகவுமில்லை..

    பெயர்: முனைவர் ஏ. கோதண்டராமன்
    உதவிப்பேராசிரியர்-தமிழ்த்துறை,
    அ. மா. ஜெயின் கல்லூரி,
    மீனம்பாக்கம்,
    சென்னை – 600 114.
    Email: ekraman36@gmail.com.

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 7

    -சி. ஜெயபாரதன், கனடா

    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

    [ Miss me, But let me go]

    ++++++++++++++

     

    [25]

    தங்க ரதம்

    தங்க ரதம் போல்
    வீட்டில் தினம்
    உலாவி வருவாள் !
    மங்கா ஒளி முகத்தோடு
    வீட்டில் தினம்
    விளக்கை ஏற்றுவாள்.
    தகதகக்கும் அந்தத்
    தங்க மேனியாளை
    திருமணத்தில் கைப் பற்றிய நான்,
    இறுதியாக
    என்னிரு கைகளால்
    எரியும் நெருப்பிலே
    தள்ளினேனே! நான்
    தள்ளினேனே!
    +++++++++

    [26]

    மரணம்

    மானுட இனத்துக்கு
    மரணம் என்பது
    புதிதல்ல !
    மரணத்தின் கூரிய பற்கள்
    பொல்லாதவை!
    மரணம் என்பது
    விதியல்ல என்று நீ
    சொல்லாதே !
    மதியால் நீ விதியை
    வெல்லலாம் என்று
    சொல்லிக் கொள்ளலாம்!
    ஆனால்
    மரணத்தை வெல்ல
    முடியுமா !
    பிறப்பும், இறப்பும்
    உயிரின வாழ்க்கையின்
    இருதுருவங்கள்.
    பிறந்தவர்
    ஒருநாள் இறப்பவர் தான்!
    இறப்பவர் மீண்டும்
    பிறப்பர்
    என்பது தெரியாது!
    மரணம் புதிதல்ல என்று
    உரைத் தெனக்கு
    ஆறுதல் கூற வராதீர்!
    மரணம் விதியல்ல என்று
    இறையிடம்
    முறையிடுவேன்!
    மரணம்
    அரக்கர் தொழில் !
    மானிடப் படைப்பைச் சீராய்
    உருவாக்கிய பிறகு
    ஊனுருகப் பறிப்பது தான்
    உன் அறுவடையா ?
    அல்லது
    அறநெறியா ?

    +++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது….
    சி. ஜெயபாரதன்

    Share
  • நலம்….நலமறிய ஆவல் 141

    -நிர்மலா ராகவன்

    கனவுகள் நனவாக

    சிலருடைய கனவுகள்தாம் நனவாகின்றன. அவர்களிடம் அப்படி என்ன சிறப்பு என்று ஆராய்ந்தால், அவர்கள் தோல்வியைக் கண்டு அஞ்சுவதில்லை என்பது புலனாகும்.

    “தோல்வி என்பது புத்திசாலித்தனத்தை மீண்டும் முயன்று பெற ஒரு வாய்ப்பு,” என்று கூறுகிறார் அந்த அனுபவமுள்ள ஒரு புத்திசாலி.

    தோல்வி வர தவறுகள் மட்டும் காரணமில்லை. அது நிரந்தரமும் இல்லை. இதனால்தான் முயற்சி திருவினையாக்கும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    எண்ணித் துணிக கருமம்

    ஒரு காரியத்தை ஆரம்பிக்குமுன்னரே, `என்னால் முடியுமோ?’ என்ற சந்தேகம் எழுந்தால் நம்மை நாமே பலவீனப்படுத்திக்கொள்கிறோம்.

    `செய்துதான் பார்ப்போமே! வெற்றி கிடைத்தால் மகிழ்ச்சி. இல்லையேல், அதிலிருந்து ஏதாவது பாடம் கற்கலாம்!’ என்ற துணிவு இருந்தால் சிறக்கலாம்.

    விளையாட்டு வீரர்கள் ஒவ்வொரு பயந்தயத்திற்கு முன்பும், `இன்று என் கட்சி ஜெயிக்க முடியுமோ?’ என்று ஐயம் கொள்வது கிடையாது. உடல் வலி இருந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல.

    தோல்வியினால் யாராவது இறந்திருக்கிறார்களா? தோல்வியைக் கண்டு அஞ்சி, எடுத்த முயற்சியைக் கைவிட்டுவிட்டு, மனச்சோர்வுடன் வாழ்வதே இறப்பிற்குச் சமானம்தான்.

    திறமை, உழைப்பு ஆகியவைகளுடன் விடாமுயற்சியும் இருந்தால், தோல்விகூட படிப்பினை ஆகிவிடுகிறது.

    கர்வமே தோல்விக்கு முதல் படி

    எத்தனையோ வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், `எனக்கு நிகர் யாருமில்லை. எவரால் என்னை வெல்ல முடியும்!’ என்ற திமிரே அவர்களை அடக்கிவிடும் என்று புரிந்துவைத்திருப்பவர்கள்தாம் அடுத்தடுத்து வெற்றி பெறுகிறார்கள். வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாகவே பாவிப்பதால், எப்போதாவது தோல்வி கிடைத்தால் இவர்கள் மனமுடைந்து போய்விடுவதில்லை, வெற்றி கிடைக்கும்போது பிறரை அலட்சியமாகக் கருதுவதும் கிடையாது.

    `வெற்றிதான் கிடைத்துவிட்டதே!’ என்று மெத்தனமாக இருந்தால், தோல்வி அடையும் நாள் நெருங்கிவிட்டது என்று கொள்ளலாம்.

    நடிப்புத் தொழிலையே கனவாகக்கொண்டு, அதில் பெரும் வெற்றியும் பெற்ற ஒரு நடிகரைக் கேட்டார்கள், “நீங்கள்தான் உலகிலேயே தலைசிறந்த நடிகர். ஒப்புக்கொள்வீர்களா?”

    “அப்படி நான் நினைத்தால், அன்றே இறந்துவிடுவது மேல்!”

    நீயே காரணம்

    வெற்றி, தோல்வி இரண்டுமே நம்மால் வருவதுதான். தான் அடைந்த தோல்விக்குப் பிறரைக் குற்றம் சாட்டுபவன் தோல்விமேல் தோல்விதான் அடைய நேரிடும். அவனுடைய எந்தக் கனவும் பலிப்பதில்லை.

    கதை

    “என் மகன் பிரதாப் நீங்கள் கற்பிக்கப்போகும் எல்லாப் பாடங்களிலும் தொண்ணூறுக்குமேல் மதிப்பெண்கள் வாங்குவான் என்று நீங்கள் உறுதி அளிக்க முடியுமா?” அரசாங்கத்தில் உயர்ந்த உத்தியோகத்தில் இருந்த தந்தை என்னிடம் சவால் விட்டார்.

    “உள்ளீடு (input) இருக்கும் வெளியீட்டைப்பற்றி நான் எப்படி உறுதி கூற முடியும்?” என்று நான் எதிர்க்கேள்வி கேட்டபோது, “அவன் என் மகன்! அதே ஜீன்ஸ்!’ என்று பெருமையாகப் பேசினார்.

    அவர் நம்பிக்கை பொய்த்தது.

    நடிகர் ஜாக்கி சான் தன் சுயசரிதையில், `நான் ஒரு தந்தையாகத் தோல்வி அடைந்துவிட்டேன்!’ என்று புலம்பி இருக்கிறார்.

    உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்றபின் தம் கடந்தகால வாழ்க்கையின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்கும்போது, சில ஆண்களுக்குப் நிறைவைவிட ஏமாற்றமே அதிகமாக இருப்பதைக் காணலாம்.

    ஏதாவது குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சிறுபிள்ளைகள் அவர்களிடம் வந்தபோது, அவர்களுக்கு அவகாசமோ, `என்ன பிரச்னை?’ என்று கேட்கும் பொறுமையோ இருந்திருக்காது. சிலர் வன்முறையைப் பிரயோகித்திருப்பார்கள். (நாள் தவறாது அடித்தால்தான் ஆண்பிள்ளை உருப்படுவான் என்று எண்ணும் பெற்றோர் அச்செய்கையால் அவர்கள் கெட்டுப்போக வழிவகுக்கிறோம், அல்லது தம்மைவிட்டு விலகிப்போகிறார்கள் என்பதை உணர்வதில்லை).

    நாளடைவில், தந்தையிடமோ, தாயிடமோ தம் அச்சங்களையும் குழப்பங்களையும் பெற்றோருடன் பகிர்ந்துகொள்ள பிள்ளைகள் முன்வர மாட்டார்கள். அவ்வளவு அவநம்பிக்கை! அவர்களைப்போன்றே குழப்பத்தில் இருக்கும் நண்பர்களை நாடுவது இயற்கை.

    அப்பிள்ளைகள் தவறான பாதையில் பயணிக்கும்போது, காலங்கடந்து, `நாம் எங்கு தவறிழைத்தோம்?’ என்று எண்ணம் போகிறது பெற்றோருக்கு. நண்பர்களின் பிள்ளைகள் நல்ல நிலைக்கு உயர்ந்திருப்பதைக் கண்டு ஆற்றாமை ஏற்படுகிறது.

    பிறரது வெற்றி உன் தோல்வியல்ல

    கதை 1

    கணவன், குழந்தைகள் என்று மகிழ்ச்சியாக இருப்பவர்களைப் பார்த்து, என் அயல்நாட்டுத் தோழி ஏஞ்சலா ஆழ்ந்த வருத்தம் கொண்டிருந்தாள். ஏனெனில், அவள் விவாகரத்து ஆனவள்.

    தன் மனநிலையை வெளிப்படையாக ஒத்துக்கொள்ள விரும்பாது, அவளது நிலைமையிலிருந்த இன்னொருத்தியைப்பற்றிப் பேசினாள்: “மேரி, பாவம். இல்லை? அவளைவிட இன்னொரு பெண்தான் உயர்த்தி என்று அவள் கணவன் போய்விட்டானே! மேரியின் மனம் எவ்வளவு நொந்துபோயிருக்கும்!”

    மேரி இளம்பெண். அழகாக இருந்தாள். நாட்டியம் போதிப்பவள். (கண்ணையும் கழுத்தையும் எப்படி அசைப்பது என்று ஆர்வத்துடன் என்னிடம் கேட்டுக் கற்றுக்கொண்டாள்). நான் பழகியவரை நல்லவளாகத்தான் தெரிந்தாள்.

    “இவளுடைய அருமை புரியாதவன் மடையன் என்று விட்டுத்கொள்ள வேண்டியதுதான்!” என்று நான் பதிலளித்தபோது, ஏஞ்சலா தன்னைப்பற்றித்தான் கேட்டாள் என்பது எனக்குப் புரியவில்லை.

    இன்னொரு முறை, “வீட்டில் ஆண் ஒருவர் இருந்தால், எல்லா வேலையும் நானே செய்ய வேண்டியிருக்காதே என்றிருக்கும்,” என்றாள்.

    “Relaionships have their own problems!” என்றேன் பெருமூச்சுடன். எந்த நெருக்கமான உறவில்தான் பிரச்னைகள் இல்லை?

    ஏஞ்சலா, மேரி இருவருமே தத்தம் கணவன்மார்களைவிட உயர்ந்த நிலையில் இருந்தார்கள். அதைப் பொறுக்க முடியாது, என்றுமே தம்மை மிஞ்ச முடியாத பெண்ணாகப் பார்த்துத் தேடிப்போயிருக்கிறார்கள் அந்த ஆண்கள். விளைவு: விவாகரத்து.

    திருமணம் செய்துகொள்ளும்போது எல்லாருமே இன்பக்கனவுகளுடன்தான் இல்லறத்தில் காலை வைக்கிறார்கள். நினைப்பதெல்லாம் நடந்துவிடுமா?

    மணமுறிவு தோல்வியல்ல. ஒரு பகுதி முடிய, புதியதொரு வாழ்க்கையின் தொடக்கம் என்று எடுத்துக்கொண்டால்தான் மனம் நிம்மதி அடையும்.

    கதை 2

    ஒரு நாட்டிய வகுப்பில் சில ஆண்டுகளே பயிற்சி பெற்ற பெண்கள் இருவர் உயர்கல்விக்கென தாற்காலிகமாக விலகிப்போனார்கள். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் வந்தபோது, முன்பு சிறுமிகளாக இருந்தவர்கள் நாட்டியத்தில் இப்போது தம்மைவிட மிகச் சிறந்துவிட்டதைக் கண்டு ஆயாசம் ஏற்பட்டது. தம் தோல்வி என்ற வருத்தம் மிக, வகுப்பிலிருந்து நின்றுகொண்டார்கள்.

    சில காலம் கடுமையாக முயன்றிருந்தால், மீண்டும் நன்கு ஆட முடிந்திருக்கும். ஆனால், பிறருடன் தம்மை ஒப்பிட்டுக்கொண்டு, தாம் தோல்வியுற்றதாக அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டார்கள்.

    தோல்வி அடைந்துவிட்டவர்களை `முட்டாள்,’ `பிழைக்கத் தெரியாதவன்!’ என்றெல்லாம் ஏளனமாகக் கருதுபவர்கள்தாமே இவ்வுலகில் அதிகம்! அதனாலோ என்னவோ, வெற்றி பெற்ற பலர் தம் தோல்விகளைக் குறித்துவைப்பது கிடையாது.

    கனவு ஒரு பக்கமிருந்தாலும், மிகுந்த பிரயாசைக்குப்பின் கிடைக்கும் வெற்றியே இனிமையானது.

    கதை

    1897-இல் பிறந்த எமிலியா இயர்ஹார்ட் (Amelia Earhart) உலகிலேயே தன்னந்தனியாக விமானத்தை ஓட்டிய முதல் அமெரிக்கப் பெண்மணி.

    தான் செய்துவந்தது அபாயகரமானது என்று புரிந்தும் அயராது, வெற்றி பெறும் திறமை தனக்கிருக்கிறது என்ற துணிவுடன் ஈடுபட்டார். கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டதன் பலனாக பல வாகைகள் சூடினார். முதன் முறையாக அட்லாண்டிக் சமுத்திரத்தைக் கடந்தவர் என்ற பெருமைக்குரியவர் எமிலியா. இறுதியில் ஒரு விமானத்தை ஓட்டிப்போகும்போது மரணத்தைத் தழுவினார். அதை யாரும் குறைவாகச் சொல்வதில்லை. அவரது சாதனைகள்தாம் நிலைத்து நிற்கின்றன.
    தோல்வி அடையாதவர் யார்?

    கல்விக்கூடங்களில் பயில்கிறவர்கள் அனைவருமே சிறந்த தேர்ச்சி பெறுகிறார்களா? அவர்களது நாட்டம் வேறு திசையில் இருக்கலாம்.

    பாடுவதிலோ, ஆடுவதிலோ, சித்திரம் வரைவதிலோ நாட்டம் கொண்ட ஆண்குழந்தைகளை பல பெற்றோர் ஏற்காது கடுமையாகத் தண்டிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை, கல்லூரியில் படித்து, பெரிய உத்தியோகத்திற்குப் போனால்தான் சமூகத்தில் மதிப்பு.

    பெற்றோரின் கணிப்பை ஏற்று, `எனக்கு எல்லாவற்றிலும் தோல்விதான்!’ என்று பிள்ளைகள் தம்மைத்தாமே மட்டமாக எண்ணி, குன்றிப்போவார்கள். தமக்கு வேறு துறைகளில் திறமை இருப்பது அவர்களுக்கே தெரிந்திருந்தாலும், அதை வெளிக்காட்ட வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. கனவுகள் கனவாகவே ஆகிவிடும் கொடுமை இதனால்தான்.

    அவரவருக்குப் பிடித்த துறையில் ஊக்கம் காட்டியிருந்தால், அதில் முழுமனதுடன் ஈடுபட்டு, பெரும் வெற்றி கண்டிருப்பார்களே!

    Share
  • குறளின் கதிர்களாய்…(239)

    -செண்பக ஜெகதீசன்…

    சுழன்றுமேர்ப் பின்ன துலக மதனா
    லுழந்து முழவே தலை.

    -திருக்குறள் -1031(உழவு)

    புதுக் கவிதையில்…

    உழவில் வரும்
    உடலுழைப்பின் வருத்தம் கண்டு,
    வேறுபல தொழில்கள் செய்து
    வீணாய் அலைந்தாலும்,
    முடிவில்
    உழவின் பின்னதாகிறது உலகம்..
    அதனால்,
    அலைந்து வருந்தினாலும்
    உயர்வானது உழவே…!
    குறும்பாவில்…
    உழவைவிட்டு வேறுதொழில் செய்தலைந்தாலும்,
    உழவின் பின்னதாகும் உலகமென்பதால்
    அலைந்திடரிலும் உயர்வானது உழவே…!

    மரபுக் கவிதையில்…

    உடலு ழைப்பின் துன்பமதால்
    உழவை விட்டு வேறுதொழில்
    தொடர்ந்த லைந்தும் தரணியது
    தொடருமே உழவதன் பின்னேதான்,
    இடரதில் அலைந்திட வைத்தாலும்
    இவ்வுல கதிலே மிகவுயர்ந்த
    இடமதி லென்றும் இருந்திடுமே
    இணையிலா உழவுத் தொழிலதுவே…!

    லிமரைக்கூ..

    வேறுதொழில் பார்த்தாலும் உழவினை விட்டு,
    உலகம் செல்வது உழவதன் பின்னேயென்பதால்
    உழவே வென்றிடும் உயர்நிலையைத் தொட்டு…!

    கிராமிய பாணியில்…

    ஒசந்தது ஒசந்தது
    ஒலகத்தில ஒசந்தது,
    ஒழவுத்தொழிலே ஒசந்தது..
    ஒடம்பு நோவுதுண்ணு
    ஒழவுத்தொழில வுட்டு
    வேற தொழிலத் தேடுனாலும்,
    ஒலகம் போறது
    ஒழவுத்தொழில் பின்னாலதான்..
    அதுனால
    அலஞ்சி திரிஞ்சி பாத்தாலும்
    ஒலகத்துல மிக ஒசந்தது
    ஒழவுத்தொழிலு தானே..
    எப்பவுமே
    ஒசந்தது ஒசந்தது
    ஒலகத்தில ஒசந்தது,
    ஒழவுத்தொழிலே ஒசந்தது…!

    Share
  • தேமாவில் ஆன திருமாலை

    -முனைவர் அ.மோகனா

    பச்சைமா மலைபோல் மேனி பவளவாய் கமலச் செங்கண்
    அச்சுதா வமரரேறே யாயர்தங் கொழுந்தே யென்னு
    மிச்சுவை தவிர யான்போய் யிந்திர லோக மாளுளு
    அச்சுவை பெறினும் வேண்டே னரங்கமா நகரு ளானே

    – தொண்டரடிப் பொடியாழ்வார்

    மார்கழி! திருமாலுக்கும் சிவபெருமானுக்கும் உகந்த மாதமாகக் கருதப்படுவது. திருப்பாவையும், திருவெம்பாவையும் தெருக்கள் தோறும் முழங்கக் கூடிய மாதமிது. மாதங்களில் சிறந்த மாதமாகக் கருதப்படுவதும் மார்கழிதான். இம்மாதத்தின் கேட்டை நட்சத்திர நாளில் (ஜனவரி.4 வெள்ளிக்கிழமை) அவதரித்தவர் விப்ரநாராயணன் என்ற இயற்பெயர் கொண்ட தொண்டரடிப் பொடியாழ்வார்.

    பக்தி இயக்கத்தின் தோற்றமானது அக்கால மக்கட் சமூகத்தின் வாழ்நிலையில் மட்டுமன்றி இலக்கிய வகைமைகளுககுள்ளும் பல புது மாற்றங்களை ஏற்படுத்திய எனில் அது மிகையாகாது. யாப்பியல் நோக்கில் பல்வேறு புதுமுயற்சிகளைப் பக்தி இலக்கியங்களில் காணமுடியும். குறிப்பாக ஆழ்வார்களின் பாசுரங்கள். திருமாலோடு தாங்கள் பெற்ற அனுபவங்களின் நேரடி பதிவாகவே ஆழ்வார்களின் பாசுரங்கள் அமைந்துள்ளன. உள்ளத்தில் உருக்கத்தையும் நெகிழ்வையும் ஏற்படுத்துபவை இப்பாசுரங்கள். ‘ஆழ்வார்’ என்பதற்கு, “இறைவனுடைய கல்யாண குணங்களாகிய அமுத வெள்ளத்தில் ஆழ்ந்து ஈடுபடுவோர் என்றும், இறைவனுடைய வடிவழகில் ஈடுபட்டு அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும், மக்கள் படும் துன்பத்தைக் கண்டு பொறாமல் அத்துக்கத்தில் அழுந்தினவர்களாதலின் ஆழ்வார்கள் எனப்பட்டனர் என்றும் பல வகையான பொருட்களைச் சான்றுகளோடு விளக்கிச் செல்கின்றார் ம.பெ.சீனிவாசன் (2017:6). தமிழ்இலக்கிய வரலாற்றில் தவிர்க்க இயலாத வகிபாகத்தைப் பெற்றமைபவை பக்தி இலக்கியங்கள். அவற்றுள் திருமாலின் தொண்டர்களுக்குத் தன்னை அர்ப்பணித்துக்கொண்டு தொண்டர்களின் அடிப்பொடியாக வாழ்ந்த விப்ரநாராயணனின் பாடல்கள் தன்னிகரற்ற பாடல்களாக ஒளிர்பவை.

    சோழ நாட்டில் திருமண்டங்குடி என்னும் ஊரில் பிரபவ வருடம் மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர் இவர். ஆழ்வார்களின் வரிசையில் பத்தாமவராக இடம்பெற்றவர். திருமாலின் வனமாலை அம்சமாகப் பிறந்தவர். திருவரங்கத்திலேயே வாழ்ந்திருந்து அத்தல இறைவனாகிய அரங்கனுக்குப் பூமாலை சாற்றுவதை வாழ்நாள் பணியாகச் செய்தவர். பூமாலை மட்டுமன்றிப் பாமாலையாலும் அரங்கனைப் பூஜித்தவர். தெளிந்த நீரோடையாகச் சென்று கொண்டிருந்த இவர்தம் பக்திப் பெருமித வாழ்வில் சோழ நாட்டுக் கணிகையான தேவதேவியின் இடையீடு ஏற்பட்டது. அனைத்தையும் அரங்கனின் வடிவமாகக் கண்ட விப்ரநாராயணன் தேவ தேவியின் மீதான காதலில் மெய்ம்மறந்து செல்வங்களை இழந்தார். இவரைச் சோதிக்க கருதிய திருமால் சிறுவனின் வேடமிட்டுத் தன் கோயிலின் பொன்வட்டிலைத் தேவதேவியிடம் கொடுக்க பழி விப்ரநாராயணனின் மேல் விழுகின்றது. முடிவில் அரங்கனால் உலகத்திற்கு உண்மை அறிவிக்கப்பட்டு இறுதிவரை அரங்கனுக்காக தம்மை அடிமை பூண்டார். மேலும் அரங்கனின் அடியார்களுக்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் விப்ரநாராயணன். அன்றுமுதல் தொண்டரடிப் பொடியாழ்வாரானார்.

    இவர் அரங்கனின் மீது பாடிய திருமாலை, திருப்பள்ளி எழுச்சி ஆகிய பாசுரங்கள் முதல் ஆயிரத்தில் இடம்பெற்றுள்ளன. மாலை, பள்ளி எழுச்சி ஆகிய ப்ரபந்த இலக்கிய வகைமைகளுக்கு இவர்தம் பாடல்களை முன்னோடியாகக் கருதமுடியும். முன்னர்க் குறித்தபடி ஆழ்வார்கள் தங்களுக்குத் திருமாலோடு ஏற்பட்ட அனுபவப் பதிவுகளையே பாசுரங்களாக உள்ளம் உருகப் பாடியுள்ளனர். இந்தப் பின்புலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலை அவர் திருமாலுக்குச் செய்துவந்த கைங்கரியத்தின் விளைவாக எழுந்தது. பூமாலையோடு சேர்த்து அவரால் அளிக்கப்பட்ட பாமாலைதான் திருமாலை. அவ்வாறே பெண்மயக்கமான இருளில் விழுந்து திருமாலின் அருளால் மீண்டு ஒளியை அடைந்த அவர் உறங்கும் திருமாலை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சியினைப் பாடியுள்ளார். அதன்மூலம் இருள்கடந்து ஒளிபெற்ற தம் நிலையினையும் ஊடுபொருளாக்கியுள்ளார். இவருடைய பாடல்கள் பொருண்மையில் மட்டுமன்றி வடிவத்திலும் சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன.

    தமிழ் யாப்பியல் மரபில் சீர்களை தேமா, புளிமா உள்ளிட்ட வாய்பாட்டு அலகுகளால் குறிப்பர். தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலைப் பாசுரப் பாடல்கள் யாவும் தேமாச் சீரினால் முடிகின்ற அடிகளைப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. ஈரசைச் சீர்களாலான பாடலடிகள் ஓசை நயமும், பொருட்செறிவும் கொண்டவைகளாக அமைந்து பாடுவதற்கு இன்பம் அளிப்பவை. தொண்டரடிப் பொடியாழ்வாரின் பாடல்களும் இத்தன்மைத்தாகவே அமைந்துள்ளன. திருமாலைக் கண்முன் காட்சிப்படுத்துகின்ற ‘பச்சைமா மலைபோல் மேனி…’ என்று தொடங்கும் திருமாலைப் பாடல் ஒலிக்காத வைணவத் தலங்களைக் காணமுடியாது. இப்பாடலின் அமைப்பினை நோக்கும்போது அவை ஒரு விளச்சீரினைத் தொடர்ந்து மாச் சீர் மற்றும் தேமாச் சீரினைக் கொண்டமைகின்றன. பாசுரத்தில் உள்ள நாற்பத்தைந்து பாடல்களும் இவ்வமைப்பு மாறாமல் பாடப்பட்டுள்ளமை தனிச்சிறப்பு.

    பெண்டிராற் சுகங்க ளுய்ப்பான் பெரியதோ ரிடும்பை பூண்டு
    உண்டிராக் கிடக்கும்போ துடலுக்கே கரைந்து நைந்து
    தண்டுழாய் மாலை மார்பன் றமர்களாய்ப் பாடி யாடித்
    தொண்டுபூண் டமுத முண்ணாத் தொழும்பர்சோ றுகக்கு மாறே (1:876)

    தம் சுய அனுபவத்தையே இப்பாடலில் கூறியுள்ளார் தொண்டரடிப் பொடியாழ்வார். இவ்வாறு உள்ளத்திலிருந்து ஊற்றெடுத்துவரும் உணர்வுகளை வார்த்தைகளாக்கும் அதே நேரத்தில் அவை குறிப்பிட்ட வடிவத்தோடும் வடிக்கப்படுகின்றன. இது தமிழ்ப் பக்தி இலக்கியங்களின் தனிச்சிறப்பு. இவ்வடிவத்தின் இலக்கணத்தைப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய தி.வீரபத்திர முதலியாரின் ‘விருத்தப்பாவியல்’ கீழ்க்கண்டவாறு விளக்கியுள்ளது.

    ‘சீர்வளர் கமலச் செவ்வி திகழ்தரு வதனக் கொண்மூக்
    கார்வள மலிந்த கூந்தற் கன்னலுங் கசக்கு மின்சொ
    லேரிளங் கொங்கை மின்னே ரிடையெழிற் கொடியம் பேதாய்
    சீர்விள மாச்சீர் தேமாச் சீரிணைந் திரட்டு மீங்கே’ (வி.பா.முதற்படலம்:1)

    பிற்காலத்தில் இந்த அறுசீர் ஆசிரிய விருத்த வடிவம் மிகப்பெரிய செல்வாக்கு பெற்றது. கம்பராமாயணம், பெரியபுராணம் உள்ளிட்ட காப்பியங்களில் இவ்வடிவம் பெரிதும் பயன்படுத்தப் பெற்றுள்ளது. பெரும்பாலான விருத்த வடிவங்களுக்கு இலக்கணம் வகுத்த நூலாக விருத்தப்பாவியல் உள்ளது. இருப்பினும் இதில் இலக்கணம் பெறாத வடிவங்களும் பக்தி இலக்கியங்களில் உள்ளன. இவர்தம் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் மூன்றுவிளச்சீர்களைத் தொடர்ந்த மாச்சீரினால் முடியும் அமைப்பினைப் பெற்றுள்ளன. சம்பந்தர், சுந்தரர் தேவாரப் பாடல்களில் இவ்வமைப்பிலான பாடல்களைக் காணமுடியும்.

    கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன விவையோ
    கதிரவன் கனைகடன் முளைத்தன னிவனோ
    துடியிடை யார்சுரி குழல்பிழிந் துதறித்
    துகிலுடுத் தேறினர் சூழ்புன லரங்கா
    தொடையொத்த துளவமுங் கூடையும் பொலிந்து
    தோன்றிய தோட்டொண்ட ரடிப்பொடி யென்னு
    மடியனை யளியனென் றருளியுன் னடியார்க்
    காட்படுத் தாய்பள்ளி யெழுந்தரு ளாயே (1:926)

    தொடர்கின்ற விளச்சீர்கள் பாடல்களுக்குச் சந்த ஓசையினைத்தரக் கூடியவை. தொண்டரடிப் பொடியாழ்வாரின் இப்பாடல்களைப் பாடித்திருமாலின் அருளினைப் பெறுவதோடு இதன் இலக்கிய வடிவச் சிறப்பினையும் கவனித்து இன்புற வேண்டியது அவசியம்.

    துணை நின்ற நூல்கள்

    1. ஆழ்வார்கள் அருளிச் செயல் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் (ஆய்வுப் பதிப்பு), சீனிவாசன், ம.பெ., (ப.ஆ.), தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 2017.
    2. Viruttappaviyal or The Prosody of Tamil viruttams, T.Viabadura mudaliar. 1938

    கட்டுரையாளர்

    முனைவர் அ.மோகனா
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி, மதுரை

    Share