Blog

  • (Peer Reviewed) சித்தர் இலக்கியங்களில் பெண்கள் குறித்த பதிவுகள்

     

    -முனைவர் க. இளமதி ஜானகிராமன்
    பேராசிரியர்,
    சுப்பிரமணிய பாரதியார் தமிழியற்புலம்,
    புதுவைப் பல்கலைக்கழகம், புதுச்சேரி- 605014.

    *******************************************************

    அந்தக் கரணங்கள் நான்கினுள் சித்தத்தை அடக்கி, யோகச் செயல்முறைகட்கு ஆட்படுத்தி, சித்திகளைப்பெற்று சித்தர்களாகி தாம் பெற்ற சித்திகளின் மூலம் சமுதாய மக்களை மேம்படுத்த உயரிய முற்போக்குக் கொள்கைகளைத் தம் பாடல்களில் எழுதி, அனைத்துத் தத்துவங்களின் உண்மைப் பொருள்களையும் புலப்படுத்தி இன்றைக்கும் இம்மண்ணில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் சித்தர்கள். இவர்கள் தங்களின் இலக்கியங்களில் பெண்கள் பற்றிய பல்வேறு செய்திகளைப் பதிவு செய்துள்ளனர். அவற்றை வெளிப்படுத்துவதே இக்கட்டுரையின்  நோக்கமாகும்.

    சக்தியே பெண் ஆவாள்

    பாரதி தம்முடைய பாடலில், ‘பெண் உருக்கொண்டு போந்துநிற்பது தாய் சிவசக்தியாம்’ என்பர். சட்டை முனியும் ‘அகண்ட பரிபூரணமாம் உமையாள் பாதம்’ என்றே தொடங்குவார். தேவருலகத்திலும் மற்றுமுள்ள எவ்வுலகத்திலும் பெண் எனும்  சக்தியைச் சேராதவர்கள் இல்லை. பெண்சக்தியோடு இணையும் பொழுதுதான் மனிதர்களின் வாழ்வும் சிறக்கும். இதனை வெளிக்காட்டவே நீலி, கங்கை எனும் இருவரையும் சிவபெருமான் மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டுள்ளார் என்றும் இப்பூமியில் ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானமாக வாழ்ந்தால்தான் உயர்வினை அடைய முடியும் என்பதை வெளிக்காட்டவே ‘உமாபதி’யாக அர்த்தநாரீசுரராக சிவபிரானும் சக்தியும் வெளிப்பட்டிருக்கின்றார்கள் எனும்  கருத்துக்களைப் புலப்படுத்தும் சித்தர்கள்,

    மாதர்தோள் சேராத தேவர் மாநிலத்தில் இல்லையே
    மாதர்தோள் சேர்ந்தபோது மனிதர்வாழ்வு சிறக்குமே
    மாதராகும் சக்தியொன்று மாட்டிக்கொண்ட தாதலால்
    மாதராகும் நீலிகங்கை மகிழ்ந்துகொண்டான் ஈசனே  (சிவவாக்கியார்பாடல்) என்றும்

    ஆணும் பெண்ணுமாய் அற்புதக் கோலம் நீடி (பட்டினத்தார் பொது) என்றும் பாடித் தெரிவிப்பார்.

    உலகத் தோற்றமும் ஒழுக்கமும்

    இவ்வுலகம் ஆதிபராசக்தி எனும் பெண் சக்தியில் தோன்றிப் பெண்சக்தியிலேயே ஒடுங்குகின்றது என்பதைக் காகபுசுண்டர் தம் காவியத்தில் உரைப்பர். இதனை இராமதேவர் முதலான சித்தர்களும் ஏற்பர். பிரளயங்கள் ஏற்பட்டு அனைத்தும் அடங்கிவிட்ட பிறகு பிரமம் இவ்வுலகத்தைத் தோற்றுவிக்க நினைக்கும்பொழுது காலத்தம்பத்தில்  ஆதிபராசக்தி   தோன்றி சிவன், திருமால்  போன்ற தெய்வங்களை அழைப்பாள். திருமால் தன் உந்திக்கமலத்தில் பிரமனை உருவாக்க அவருள் அடங்கியிருந்த  உயிரினங்களை  வெளிக்கொணர இவ்வுலகம் தோன்றுகிறது. ஒடுக்கக் காலத்தில் அனைத்தும் உருவாகியபடியே ஆதிபராசக்தியில் ஒடுங்கிவிடுகின்றன என்று காகபுசுண்டர் உரைப்பர். (காகபுசுண்டர் காவியம்)

    சித்திகளைத் தருபவள் சக்தியே

    சித்தர்கள் பெண் சக்தியே சித்திகளைத் தருகின்றது என்ற மெய்ம்மைப் பொருண்மையாகக் கொண்டமையால் தங்களது பாடல்களில் அவற்றைப் பதிவு செய்துள்ளனர். சட்டைமுனி, ‘சிவனது இடதுபுறத்தில் நிற்பவள் அட்டமாசித்தியினை அளிப்பவள், புகழ் வாய்ந்த இரத்தின ஆரம் பூண்டவள், இவளது  திருவடிவினைக் காண்பதற்கு நவகோடிதேவர், சித்தர் முதலானோர் நிற்பர். எருதின்மேல் ஏறுகின்ற அப்பன் ஏழை எனவே அவரிடம் சொல்லாமல் இவ்அம்மையின் முன்னே வைத்துக் கேட்டால் நாம் கேட்டதையெல்லாம் அருளிச்செய்வாள். அவளின் வழி அவற்றைப்பெற்று மவுனத்தைப் பெறவேண்டும்’ என்பர். (சட்டைமுனி முன்ஞானம் 100)

    தாயாகிய சக்தியின் செயற்பாடுகள்

    சட்டைமுனி, தாயாகிய சக்தியின் செய்பாடுகள் யோகசாதனைகள் செய்பவரிடத்து வெளிப்படும் என்பதை,

    உன்னிநின்ற மூலமுதலாறும் பார்த்தே
    உருகுகின்ற சுழுமுனையை யறிந்துபின்பு
    மன்னி நின்ற மதிமேல் சாம்பவியைக் கண்டு
    மருவிநின்று மணமுறைந்து சேர்த்து பின்பு
    பன்னிநின்ற இவ்வளவும் யோக மார்க்கம்
    பகலிரவு மற்றவிடம் ஞான மார்க்கம்
    கன்னி நின்ற விடங்கண்டா லவனே ஞானி
    காட்டுவாள் கேசரியைக் காட்டு வாளே ( சட்டை முனி பா:10)

    யோக சாதனைகளில் ஈடுபட்டவர்கள் ஞானமார்க்கத்தை நோக்கிச் செல்லவேண்டும். அவ்விடம் பகலும் இரவும் அற்றதாகும். அது கன்னி எனும் வாலைப்பெண்ணின் இடமாகும் அவ்விடத்தைக் கண்டவனே ஞானியாகும். அவ்வாலைப் பெண்ணே கேசரி எனும் வித்தையைக் காட்டுவாள்.

    காட்டுவாள் கிரிதன்னை மேலே யேற்றிக்
    கைவிட்டால் கிரியைத்தான் கீழே தள்வாள்
    மூட்டுவாள் குளிகைவிட்டால் கணத்துக்குள்ளே
    மூதண்ட புவிகடந்து தெளிவுங் காணும்
    ஆட்டுவாள் அண்டரண்ட மாலை பூண்டாள்
    ஆதிவத்து அனாதிவத்து இரண்டுமொன்றே
    ஊட்டுவாள் நிற்குணத்தின் அமுதவல்லி
    உயர்ந்து நின்ற ஞானசக்தி யுறவு தானே (பா:11)

    வாலைப் பெண்ணானவள் தலையான மலையில் ஏற்றிவிடுவாள். ஏறாவிட்டால் கீழே தள்ளிவிடுவாள். குளிகையை உண்டு ஒருகண நேரத்திற்குள் இப்பெரிய உலகைக் கடந்து செல்வது போல உணர வைப்பாள். அவள் அண்டங்களையும் அவற்றில் வாழ்பவரையும் மாலையாக முடித்து அணிந்தவளாவாள். தகுதிவாய்ந்த அவளைவிட மிகச்சிறந்த உறவுயாருமில்லை எல்லாச் சமயத்தினரையும் திரோதானத்தால் அவள் மாயை செய்து ஆட்டுவிக்கின்றாள்.

    கேசரி யோகம்

    மனத்தின் முடிவு எல்லையில் தேவியின் திருவடி என்பதை கேசரி யோகத்தால் உணரலாம். கேசரி யோகத்தில் உள்ள வாலைத்தாயின் குண்டலித் தீயினது ஒளி கண்ணும் விண்ணும் கொள்ளாதது. கரை காணமுடியாதது. இதனைப் பறை என்றும் விண் படரும் செயல் என்றும் கூறுவர். அவளை மவுனத்தால் உணரவேண்டும். அவளை உருவம் ஒன்றும் இல்லாத மவுனச் செய்கையாகக் கொள்ளலாம். அவள் வான் மீது படரும் சோதியாகும். மவுனமுற்று இருந்தால் லயத்தின் நேர்மையில் உலகிற்கும் அம்மவுனமாகிய ஜோதி தெரியும்.

    கொங்கணரும் இக்கருத்தை உடன்படுவார். தோற்றத்திற்குக் காரணமாக இருக்கும் வாலைப்பெண்தான் ஐந்தெழுத்துமாக நின்றவள்; இவளே ஊமை எழுத்துமாவாள். இவளே ஞானத்தின் வகையாக நிற்பாள் என்பதை,

    ஆதியிலைந் தெழுத் தாயினாள் வாலைப்பெண்
    ஐந்தெழுத் துமென்று பேரானாள்,
    நாதியி னூமை யெழுத் திவள் தானல்ல
    ஞான வகையிவள் தானானாள்  (கொங்கணர்  பா:13)

    எனும் பாடலில் தெரிவிப்பர். இவர் கூறிய ஊமை எழுத்தினை விரிக்கும்பொழுது இவரே ஊமை எழுத்தே உடலாச்சு என்பர்.  இதனைச் சிவவாக்கியரும் தம் பாடலில் ,

    சக்தியாவது உன்னுடல் தயங்குசீவன் உட்சிவம்
    வித்தர்காள் இதற்குமேல் பிதற்றுகின்றது இல்லையே
    சுத்தி ஐந்து கூடம் ஒன்று சொல்லிறந்த தோர்வெளி
    சக்தியும் சிவமும் ஆகிநின்ற தன்மையாவது உண்மையே (சிவ:372)

    என்று உரைப்பர். இப்பாடலில் நமது உடலாக நிற்பது சக்தி; உள்ளிருக்கும் உயிராக இருப்பது சிவன். இவ்விரண்டையும் சுற்றி ஐந்து கோசங்கள் கோட்டைகட்டி உள்ளன. உள்ளே கூடமாக ஒளி நிற்கின்றது. எனவே சக்தியும் சிவமுமாக நிற்பது உண்மையாகும். என்று உரைப்பதால் உயிர்களின் செயற்பாட்டிற்கு முதன்மையாக உடல் விளங்குவதை அறியலாம்.

    மகடூஉ முன்னிலை

    பெண்களை முன்னிலையாக வைத்துப் பாடுவது மகடூஉ முன்னிலை எனப்படும். இந்நிலையில் பட்டினத்தார், கொங்கணர், குதம்பைச்சித்தர், அழுகணிச்சித்தர் முதலானோர் பாடல்களைப் பாடுகின்றனர்.

    முந்தச் செகங்களுண்டானதுவும் முதல்
    தெய்வமுந் தேவருண்டானதுவும்
    விந்தையாய் வாலையுண்டானதுவும் ஞான
    விளக்கம் பாரடி வாலைப் பெண்ணே!  (கொங்கணர் பா.11)

    குதம்பைச்சித்தர்,

    வெட்டவெளி தன்னை மெய்யென்றிருப்போருக்கு
    பட்டயம் ஏதுக்கடி – குதம்பாய்
    பட்டயம் ஏதுக்கடி  (குதம்பை பா : 12) என்றும் பாடுவர்.

    நாயக நாயகி பாவனையில் பாடுதல்

    தன்னைப் பெண்ணாகவும் இறைவனை ஆணாகவும் வைத்துக்கொண்டு பாடுதல் நாயக நாயகி பாவனையாகும். பட்டினத்தார் தன்னைப் பெண்ணாகவே கொண்டு பாடுகிறார்.

    கன்னி அழித்தவனைக் கண்ணாரக் கண்டேன்டி
    என் இயல்பு நானறியேன் ஈதென்ன மாயமடி  என்றும்,

    கண்மாயம் இட்டாண்டி கருத்தையும் இழந்தேன்டி
    உள்மாயம் இட்டவனை உருஅழியக் கண்டேன்டி (பட்டினத்தார் பா:69) என்றும் பாடுவர்.

    பொது நிலையில் பெண்கள்

    சித்தர்கள் தங்களது பாடல்களில் பெண்கள் எவ்வாறு  இருந்தனர் என்பதையும் பதிவு செய்துள்ளனர். பெண்டிர் தம்மை அழகுபடுத்திக் கொள்வதில் விருப்பம் உள்ளவர்களாக இருந்தனர். தங்கத்தாலான அணிகலன்களை அணிந்தனர். வளம் குறைந்தவர்கள் பித்தளையினால் ஆகிய அணிகளை விளக்கி அணிந்தனர். கொம்பு இல்லாத உருண்டை மஞ்சளைத் தேய்த்து எண்ணெயும் கூட்டிமுகத்தில் பூசிக் கொண்டனர். சுட்டெரித்த சாந்தினைப் பூசி முகத்தில் நெட்டெழுத்தினைப் போலப் பொட்டிட்டுக்கொண்டனர். மெட்டி அணிந்தனர். இவர்கள் எதனையும் மனத்தில் வைத்திருக்கும் வன்மையில்லாதவர்கள். மானத்தினைக் காப்பது சேலைக்குமேல் எதுவுமில்லை என்று கருதினர். பத்து மாதங்கள் குழந்தையைச் சுமந்து இறைவனையே தியானித்துத் தொந்தி சரிய அங்கமெல்லாம் நொந்து பிள்ளைகளைப் பெறுவர். பெற்ற பிள்ளை ஆண் பிள்ளை என்று கூறினால் மகிழ்வர். தன் முலைப்பாலினைக் கொடுத்து வட்டிலிலும் தொட்டிலிலும் மார்மேலும் தோள் மேலும் கட்டிலிலும் வைத்து இரவு பகல் என்றில்லாமல் அன்புடன் காப்பர். தேனே, அமிர்தமே, செல்வத்திரவியப் பூவே, மானே என்றழைத்து முகம் மேல் முகம் வைத்து முத்தாடி என்றன் மகனே என்றழைப்பர். குற்றம் குறை போக்கி வளர்ப்பர். தன் மகனுக்கு ஒரு வருத்தம் எனில் சிறிதும் தாங்கார். கணவனோ அன்றிப் பிறரோ இறந்து விட்டால் வீதி வரையில் அழுது கொண்டு வருவர். கணவன், தகப்பன் அண்ணன், தம்பி யாராயினும் பொருள் சம்பாதித்து வருபவர்களையே விரும்புவர். கற்புடைய குலமகளிர் பத்தினிப் பெண்டிர் என்று போற்றப்பெற்றனர்.

    கற்பு நிலை திரிந்தபெண்களும் இருந்ததைப் பட்டினத்தார் காட்டுவர்.  சமுதாயத்தில் கற்புடைய பெண்டிர் என்றும் போற்றப்பெற்றனர். சமுதாயத்தில் கற்புடைய பெண்டிர் இருந்ததைப் போன்று விலை மாதர்களும் இருந்தனர். இவர்கள் நாவார வேண்டிய இதம் சொல்வர். தன்னிடம் வந்தவனைப் பிரித்தால் இறப்பதாகக் கூறுவர். வருபவர்களுடன் ஒரு தன்மையாய் அமர்ந்து உண்பர். பொருள் தீர்ந்துவிட்டதெனில் போய் வரச்சொல்லி நடுத்தலையில் குட்டுவர். தினந்தோறும் பொய்யினையே பேசுவர். வம்பு பேசுவதில் சிறந்தவர். இவர்களுக்கென்று தனி வீதிகள் இருந்தன. ஆடவர்கள் பலர் தாங்கள் உழைத்து ஈட்டிய பொருளையெல்லாம் விலைமாதர்களுக்கே தந்து வாழ்ந்தனர். அதனால் நோய்வாய்ப்பட்டவர்களும் உண்டு. பொருள் அற்ற வறியவர்களை இவ்விலைமாதர் தங்களுடன் சேர்ப்பது இல்லை. தங்களை அழகுபடுத்திக் கொண்டு பட்டப்பகலில் வெளி மயக்குச் செய்து திரிவர்.  (க.இளமதி ஜானகிராமன் சித்தர் இலக்கியம் பக்:168-169)) என்று உரைப்பதின் வழி, பெண்கள் பொருளுக்காக ஆண்களை வயப்படுத்தும் நிலை மாறவேண்டும் என்றும் பெண்கள் தங்களுக்கான வாழ்க்கையைத் தாங்களே தேர்வு செய்து முழுமையுமாக  வாழவேண்டும் என்பதையும் புலப்படுத்துவர்.

    சித்தர்கள் பெண்களை வெறுப்பவர்கள் என்றும் அவர்களின் உடல் உறுப்புகளை இழிவாகப் பேசுபவர்கள் என்றும் பட்டினத்தார் பாடல்களைச் சான்று காட்டி உரைப்பவர்களும் உண்டு. பட்டினத்தார் வெளிமயக்கு செய்து ஆண்களிடம் பொருள் பெறும் பெண்களைக் குறித்துத்தான் அவ்விதம் பாடினாரே ஒழிய கற்புடைய பெண்களை அவர் குறைகூறவில்லை. அனைத்துச் சித்தர்களும் பெண்களைச் சக்தியின் உருவமாகவே காண்கின்றனர். கொங்கணர்,

    உந்தன் பத்தினிமார்களைப் பழித்துக்காட்டாத’ (கொங்கணர் பா:64)

    பெண்ணுமில்லாமலே ஆணுமில்லை யிது
    பேணிப் பாராடி வாலைப்பெண்ணே (கொங்கணர் பா.72) என்றும்,

    கற்புடைப் பெண்கள் குலம் வாழ்க – நின்ற
    கற்பை அளித்தவரே வாழ்க (கொங்கணர் பா:46) என்றும் வாழ்த்திப் பாடுவர்.

    முடிவுரை

    இக்கட்டுரையின் வாயிலாக, சித்தர்கள் பெண் சக்தியே இவ்வுலகத் தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணமாகிறது, அனைத்திற்கும் மூலமாக உள்ளது, சித்திகளைத் தருவது, இன்பத்தை அளிப்பது, இறையுடன் ஒன்ற உறுதுணைபுரிவது எனும் நிலைகளில் பெண்மையைப் போற்றியுள்ளமை வெளிப்படுத்தப்படுகின்றது.

    *****

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    சித்தர்கள் என்றாலே இல்லற வாழ்வையும் பெண்டிரையும் பழித்துப் பேசும் இயல்பினர் எனும் பொதுப்பார்வையைத் தகர்க்கும் விதத்தில் சித்தர்கள் பெண்களைச் சக்தியின் வடிவாகப் போற்றியவர்களே; அவர்கள் இழித்தும் பழித்தும், தம் பாடல்களில், பேசியிருப்பது ஆடவரின் பொருளுக்காகத் தம் உடலை விற்கும் விலைமகளிரையே என்று இவ் ஆய்வுக்கட்டுரை சான்றுகளோடு விளக்குகின்றது. ஆயினும் முடிவுரைப் பகுதி கட்டுரையின் மையக்கருத்தை இன்னும் விரிவாகவும் விளக்கமாகவும் தொகுத்துரைத்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். அத்தோடு, கட்டுரைக்குத் துணைசெய்த நூல்களின் பட்டியலும் இதில் விடுபட்டுப் போயிருக்கின்றது. ஆய்விதழ்களுக்குக் கட்டுரை அனுப்புவோர் துணைநூற்பட்டியலையும் இணைத்து அனுப்புவது இன்றியமையாதது என்பதை நினைவிற்கொள்ள வேண்டும்.

    சித்தர் பாடல்களை இன்னும் ஆழமாகவும் அகலமாகவும் ஆராயவேண்டியதன் அவசியத்தை இவ் ஆய்வுக் கட்டுரை உணர்த்துகின்றது. ஆய்வாளர்கள், சிறுகதைகள் நாவல்கள் என்ற எளிமையான இலக்கிய வகைமைகளையே ஆய்வுசெய்து பட்டம்பெறுவதைக் காட்டிலும்,  அறிவியல்வழிசார் ஆன்மிகத்தில் ஆழங்காற்பட்ட,  சித்தர் இலக்கியங்களை ஆய்வுசெய்வதன் வாயிலாக அந்த ஞானிகள் கண்டறிந்த பல்வேறு அரிய உண்மைகளைச் சமூகத்துக்கு அறியத் தந்த பெருமைக்குரியோராகலாம். ஆய்வாளர்கள் சிந்திப்பார்களாக!

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 195-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வல்லமை வாசகர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!

    நீரில் கால்நனைத்து நிற்கும் கருவேழத்தைத் தன் புகைப்படக் கருவிக்குள் அடைத்து வந்திருப்பவர் திரு. ராம்குமார் ராதாகிருஷ்ணன். ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து இவ்வினிய படத்தைத் தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டிக்குத் தந்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் என் நன்றி!

    ”குன்றுகளுக்கு முன்னே மற்றொரு கருங்குன்றென கம்பீரமாய்க் காட்சியளிக்கும் இக்களிற்றைக் காணும்போது, காஞ்சியை ஒரு காலாலும், வடக்கேயுள்ள உச்சயினியை மற்றொரு காலாலும் மிதித்துவிட்டுத் திரும்பி தெற்கேயுள்ள ஈழத்திலும் கால்பதித்து உறையூர் மீளும் கிள்ளியின் வெற்றிக் களிறு இதுவோ?!” என்றோர் ஐயம் மெல்ல என்னுள் எட்டிப் பார்க்கின்றது.

    கச்சி ஒருகால் மிதியா ஒருகாலால்
    தத்துநீர்த் தண்ணுஞ்சை தான்மிதியாப் – பிற்றையும்
    ஈழம் ஒருகால் மிதியா வருமேநங்
    கோழியர்கோக் கிள்ளி களிறு
    . (முத்தொள்ளாயிரம் – 73)

    களிற்றை வைத்துக் கவின்மிகு கவிதைகள் வடிக்கத் துடித்துக்கொண்டிருக்கும் கவிஞர் குழாத்தை வரவேற்று அமைகிறேன் இப்போது!

    *****

    ”களிறு, வேழம், ஒருத்தல், தும்பி என்று எத்தனைப் பெயர்கள் அழகு ஆனையை அழைப்பதற்கு! உரறுதல், முழங்குதல், பூசல் என்று எத்தனை ஒலிகள் அதன் ஓசையைக் குறிப்பதற்கு!” என்று எண்ணி வியக்கிறார் ஆ. செந்தில் குமார்.

    அப்பப்பா… அழகு யானை…

    பிளிறல் சத்தம் செய்வதனால்.. களிறே என்றதை அழைத்தனரோ…!
    வெள்ளைத் தந்தம் உடையதனால்.. வேழம் என்றதை விளித்தனரோ…!
    பருத்த உடலாய் இருப்பதனால்.. ஒருத்தல் என்றதைப் பகன்றனரோ…!
    கருத்த நிறமாய் உள்ளதனால்.. கரியே என்றதைக் கூவினரோ…!
    மிடுக்காய் அதுவும் நடப்பதனால்.. மத்தகயமே என்றனரோ…!
    துதிக்கை ஒன்று நீண்டதனால்.. தும்பி என்றதைப் போற்றினரோ…!
    எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனைப் பெயர்கள் யானைக்கு…!

    துன்பத்தில் ஒலித்தல் புலம்பல்.. அச்சத்தில் ஒலித்தல் கதறல்..
    விரைந்து ஒலித்தல் கம்பலை.. பெருங்குரல் என்பது பூசல்..
    உரறுதல் இயம்புதல் முழங்குதல்.. நரலுதல் சிலைத்தல் இசைத்தல்..
    பயிர்க்குரல் உயிர்க்கும் என்ற.. எழுப்பும் ஓசைகள் பற்பல..
    எத்தனை.. எத்தனை.. எத்தனை.. எத்தனை ஓசைகள் ஆனைக்கு…!
    அப்பப்பா.. ஆனைக்கும் மனிதனுக்கும்.. ஆண்டாண்டாய் ஒரு பிணைப்பு…!
    ஆனையை வியப்பதா…? மொழியை உருசிப்பதா…? புரிந்திடவில்லை எனக்கு…!

    *****

    ”சோற்றுவளம் மிக்க சோழநாட்டில் இப்போது சோற்றுக்குப் பஞ்சம்! அதனால் கவளச் சோற்றுக்காகக் கும்பிடு போடும் அவலம் நேர்ந்தது எம் சோதரர்க்கு. மாக்களை இரக்கமின்றித் துன்புறுத்தும் மக்களே! எமக்கு உதவுங்கள்!” என்று இறைஞ்சும் யானை உருக்கமாகக் காட்சிப்படுத்தியிருக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    சோழன் எங்கே?

    முறை தவறா சோழ நாட்டில்
    மூதாதையர் போர் அடித்தார்
    சோற்றுக்குப் பஞ்சமாமிப்போ
    சோழன் எங்கே? தேடுகிறேன்
    வளமான அந்நாட்டைக் காண
    வனம் விட்டு ஓடி வந்தோம்
    மதப்பேய் பிடித்த சிலர் எம்மை
    மதயானை எனப் பெயர் சூட்டி
    அடித்து அடக்கி அண்ணனை
    ஆலயத்தில் முடக்கி விட்டார்
    கவளச் சோற்றுக்காக அனைவருக்கும்
    கும்பிடு போடுகிறான் தினமும்
    இருகாலில் நின்று வித்தை காட்ட
    இரும்புச் சங்கிலி பிணைப்பு தம்பிக்கு
    தப்பி ஓடி வந்த நான்
    திசை தெரியாமல் நடந்த போது
    கண்டேன் சோழன் அம்பாரியை
    காட்சிப் பொருளாய் பெட்டகத்துள்
    நாட்டின் வளமென
    நான் செய்த கற்பனை
    நிஜ உலகில் இல்லாது
    நிழற்படத்தில் கண்ணுற்றேன்
    வையகம் ஆண்ட சோழன்
    வரலாற்றில் இடம் பிடித்தான்
    ஆற்று நீரைக் கொண்டு
    அருமையாய் உழவு செய்வீர்
    மாக்களைத் துன்புறுத்தம்
    மக்கள் தம்மைத் தண்டித்து
    நீதி வழங்க எம் சோழன் இல்லை
    நீங்களாவது உதவுங்கள்!

    *****

    ”வசிப்பிடங்களாகிவிட்ட எம் வாழ்விடங்கள்; கற்கட்டடங்களாக மாறிப்போன எம் வழித்தடங்கள்; பேராற்றுக்குச் சமாதி கட்டிவிட்டுப் பெருஞ் சிலைக்குத் திறப்புவிழா! பூவுலகு தமக்கே எனும் கேவல மனிதரின் பேராசைத் தாகம் என்று தணியும்? அன்றுதான் தீரும் எம் தாகமும்!” என்று வேதனையுறும் வேழத்தைக் காண்கிறோம் முனைவர். ம. தனப்பிரியாவின் கவிதையில்.

    தாகம் தீர்ந்திடுமோ….???

    எம் இனத்தின் வாழ்விடங்கள் இன்று மனிதனின் வசிப்பிடம்
    கால்சுவடு பதித்திட்ட வழித்தடங்களில்
    கற்சுவர்க் கட்டிடங்கள்..

    பேராற்றுச் சுவடு அழித்திட்டுப் பெருஞ்சிலைக்குத் திறப்புவிழா
    சூழலியலை மறுதலிப்புச் செய்திட்ட சுற்றுலாத்தல உருவாக்கம்…

    வழிதனை இழந்து, வலியுடன் வலம் வரும்
    எம் இனத்திற்கு நீர்த் தாகம் மட்டும் அல்லவே..

    பெருங்காட்டில் பிடியுடனே பிரியாமல்
    அலைந்திட்ட தருணங்கள் கனவாகப்
    பெரும் தொழிற்சாலைக்கு இடமானதென்ற
    தவிப்பின் தாகம்…

    கழைமூங்கில்தனைச் சுவைத்திட்ட தினம் இனிக்க
    வாழைதனை நட்டு வைத்தே மின்சார வேலியிட்டு
    எம் குருதி உறிஞ்சிடும் நிலை குறித்த
    தவிப்பின் தாகம்…

    நறுமலர் வாசனையோடு குளிர்காற்றை சுவாசித்த நாசியின்றோ
    புகைக்காற்றை நுகர்தல் எண்ணிய தவிப்பின் தாகம்..

    அறிவியல் கண்டுபிடிப்பு என்ற அறியாமைக்குள் வீழ்ந்திட்ட
    அறிவிலி மனித இனம்…

    தரணியில் பிற உயிர் வாழத் தடைவிதித்திடில்
    இயற்கைப் பேரிடர்முன் தன் இயலாமை உணரும்…

    பூலோக உயிர்சுழற்சி மறந்து பூவுலகம் தனக்கே என்ற
    பேரவா கொண்ட மனிதனின் தாகம் தீரும் நாள் எந்நாளோ…?
    எம் இனத்தின் தாகம் தீரும் நாளும் அந்நாளே!

    *****

    ”காட்டில் வாட்டமின்றித் திரிந்து பழகிய யானையைப் பிடித்துவந்து கோயிலில் அடைத்து இரந்துவாழப் பழக்க வேண்டாமே!” என்று கோரிக்கை விடுக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அது வேண்டாம்…

    காட்டி லெங்கும் அலைந்தேதான்
    கண்ட யிடத்தில் நீரருந்தி,
    வாட்ட மின்றியே வளர்ந்திருந்த
    வனத்து யானையைப் பிடித்துவந்து,
    கூட்டமாய் மனிதர் சேர்ந்துவரும்
    கோவில் தலங்களில் பழக்கியதை
    ஆட்டம் காட்டுதல் அதுபோதும்,
    அலைந்தே இரந்திட வேண்டாமே…!

    *****

    வேழத்தை வைத்துச் சமூகத்துக்குத் தேவையான நற்சிந்தனைகளைப் பேசியிருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    தனியொருவன்!

    இருபெரு கரு உயர்நீல(ள) வரையின்
    இரு கரைமருங்கிடை விரிதிரை புனல் நதியில்
    கருமை இருள் கலைந்த காலை வேளையில்
    கருமை மெய் கலந்த காட்டரசனின் களிப்புறு குளியல்

    இறைவன் அளித்த இயற்கைச் சீதனங்கள்
    இருபெரும் பொன் வெள்ளித் தந்தங்கள்
    இருப்பதனால் வேழம் அவன் இருந்தாலும்
    இறந்தாலும் இருக்கிறது பொன் ஆயிரம்

    தும்பிக்கைதான் அவன் நம்பிக்கை – அதில்
    தூக்கிச் சுமந்தெறிந்த பாரச்சுமைகள் ஏராளம்
    தன்னந்தனி திரிந்தாலும் நன்னம்பிக்கை என்னும்
    தன்னம்பிக்கையால் தாக்கியழித்த தடைகள் எண்ணிலா

    நிலம் அதிரும் அவன் நடந்தால்
    நீர் சிதறும் அவன் அலைந்தால் – நிழல்வனம்
    நடுங்கும் அவன் சினந்தால் – ஆயினும் பாகனின்
    நில் என்ற சொல்லுக்குப் பணிதலில் மிளிரும் அவன் குணம்

    வம்புடை வன்முறை மானுடம் தான்வாழ யானை
    வழித்தடத்தையும் வாழ்விடத்தையும் வழிமறித்தே
    வாரிச்சுருட்டி வாயிலிட்டுவிட்டு அன்புடையவனை
    வம்பன் கொம்பன் என வசைபாடுது

    நாளைய சந்ததியின் நல்வளங்களைச் சூறையாட
    நாடெல்லாம் திரியும் மணல்கொள்ளை மனிதரால்
    நாதியற்றுப் போன நதிகளின் மரணத்திற்கு
    நீதிகேட்டு வந்த நீ தனியொருவன்!

    ”இருந்தாலும் இறந்தாலும் ஆயிரம் பொன் மதிப்புடைய வேழத்தின் வழித்தடங்களையும் வாழ்விடங்களையும் வாரிச்சுருட்டி வாயில் போட்டுக்கொண்ட மானுடம், நாதியற்றுப்போன நதிகளின் மரணத்துக்கு நீதிகேட்டுவந்த தனியொருவனான அவனை வம்பனென்றும் கொம்பனென்றும் வசைபாடுவது முறையோ?” என்று வேழத்தின் அவலநிலையினை ஆழமாய்ப் பேசும் இக்கவிதையை யாத்த திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • நலம் … நலமறிய ஆவல் (142)

    -நிர்மலா ராகவன்

    குணத்திற்கேற்ற வேலை

    ஒருவர் தாம் அடைந்த சிறப்புகளைப்பற்றிப் பேசினால், `தற்பெருமை!’ என்று முகத்தைச் சுளிப்பார்கள். அதனால், தம் குறைகளை வெளிப்படுத்திக்கொள்வதே அடக்கத்தின் அடையாளம் என்று சிலர் எண்ணிக்கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால், `எனக்குப் பொறுமையே கிடையாது!’ என்று பேட்டியின்போது பெருமையாக அலுத்துக்கொள்பவர் பாலர் பள்ளிக்கோ, பள்ளிக்கூடங்களுக்கோ ஆசிரியராக முடியுமா?

    `உங்கள் பலவீனம் என்ன?’ என்று கேட்கப்படும்போது, `அப்படி எதுவும் கிடையாது!’ என்பது இன்னொரு ரகம்.

    யாராவது நம்புவார்களா, என்ன! முதலில் அவ்வேலையை எந்த விதத்திலும் பாதிக்காத பலவீனங்களை கோடிகாட்டிவிட்டு, பிறகு நம் நல்ல தன்மைகளை எடுத்துச் சொல்லலாம்.

    சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி உண்மையைச் சொல்லலாம் என்றாலும், நம்மால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பது வேண்டாமே! ஆக்ககரமாக ஏதாவது இருக்காதா, என்ன!

    `என்னை நம்பி ஒரு வேலையைக் கொடுத்தால், எப்பாடுபட்டாவது அதை நானே முடித்துவிடுவேன்,’ என்பவர் பிறருக்கும் அவ்வேலையைப் பகிர்ந்து கொடுக்க முடியாத குணத்தை, தம்மையும் அறியாது, ஒத்துக்கொள்கிறார். அப்படியானால், பிறரது கூட்டணியில் இணைந்து வேலை செய்ய எப்படி முடியும்?

    மற்றவருடன் இணைந்து செய்யும் ஒரு காரியம் வெற்றி அடையும்போது, `நான்தான் செய்தேன்!’ என்று புகழைத் தட்டிக்கொண்டுபோகப் பார்ப்பவர்களைப்பற்றி என கூறுவது!

    தலைமைப் பதவியில் இருந்தபோது, தன்கீழ் இருப்பவர்களின் முயற்சியைப் பாராட்டாது, தானே முனைந்து செய்ததுபோல் பாசாங்கு செய்தவரின் கதை இதோ!

    கதை

    என் தலைமை ஆசிரியையாக இருந்த திருமதி ராஜன் தன் கீழ் இருப்பவர்கள் – அவர்கள் ஆசிரியர்களோ, அல்லது மாணவியரோ – தவறே செய்யக்கூடாது என்று உறுதியாக நம்பியவள். நடக்கிற காரியமா!

    அவளுடைய வசவுகளைப் பொறுக்க முடியாது தினமும் யாராவது ஒருவர் அழுதுகொண்டிருப்பார். புதிது புதிதாக விதிகள் வகுத்துக்கொண்டே இருப்பாள்.

    `பைத்தியம் பிடித்துவிடும்போல் இருக்கிறது!’ என்று மூத்த ஆசிரியை ஒருவர் பொதுக்கூட்டத்தில் கூற, எல்லாரும், `நாம் மட்டும் தனியாக இல்லை!’ என்ற நிம்மதியுடன் சிரித்தோம்.

    பள்ளி ஆண்டுவிழாவிற்கு நாட்டிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சீன நடனம் ஆடுகையில் இரு மாணவிகள் அடிக்கடி காலைத் தூக்கவேண்டியிருந்தது. அப்போதெல்லாம், நிதானமின்றி அவர்கள் உடல் தளர்ந்து ஆடியது.

    நான் அதைத் தவிர்க்க, பயிற்சி சமயத்தில் ஒரு வழி கூறினேன்: “உடல் நேராக இருக்கவேண்டும். மூச்சை உள்ளுக்கு இழுத்துக்கொண்டு, அதே சமயம் ஒரு காலைத் தரையில் ஓங்கித் தட்டி, மூச்சை வெளிவிடாது இன்னொரு காலைத் தூக்குங்கள்!” (எல்லாவித நாட்டிய நிகழ்ச்சிகளும் என் பொறுப்பில் இருந்தது).

    நிகழ்ச்சியின்போது வந்திருந்த பிரமுகர், `Such perfect balance!” என்று பாராட்டினார், பக்கத்தில் அமர்ந்திருந்த தலைமை ஆசிரியையிடம்.

    ஏதோ தான்தான் அவர்களை பழக்குவித்ததைப்போல், பெருமையுடன் அவரது புகழ்ச்சியை ஏற்றுக்கொண்டு சிரித்தாள் அவள்.

    அவளுக்கு முன்பு இருந்த தலைமை ஆசிரியை, `எங்கள் நல்ல காலம், சிறந்த ஆசிரியை அமைந்திருக்கிறார்!’ என்று என் பெயரை மட்டும் குறிப்பிட்டுச் சொன்னாள். மேலும் கடுமையாக உழைக்க எனக்கு உற்சாகம் பிறந்தது. (மாணவ மாணவியரின் பெற்றோருக்கும் அறிவுரை கூறியிருக்கிறேன் – அவர்கள் பிள்ளைகளை வளர்க்கவேண்டிய முறை சம்பந்தமாக).

    எங்களில் பத்து சதவிகித்ததினர்தான் எப்பாடு பட்டாவது நம்மை நம்பி வந்திருக்கும் மாணவிகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முனைந்திருந்தோம்.

    `பாடம் போதிப்பதுடன் என் கடமை முடிந்துவிட்டது. நான் வாங்கும் சம்பளத்திற்கு இவ்வளவுதான் செய்ய முடியும்!’ என்று ஒதுங்கும் ஆசிரியர்களே மிகுந்து இருந்தார்கள்.

    கதை

    அரசாங்கம் அளித்த சலுகையால் அயல்நாட்டிற்குப் போய் பட்டப்படிப்பை முடித்துவிட்டு வந்தவள் அஸ்லீனா. (பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவளாததால் கிடைத்தது அது என்று உணரும் அளவுக்கு அவளுக்கு விவேகம் இருக்கவில்லை). பிற ஆசிரியைகளைவிட தான் உயர்த்தி என்பதுபோல் அலட்டிக்கொண்டாள். பெரிய பதவி என்றால் எதுவும் செய்யாது, சுவற்றை வெறித்துக்கொண்டிருப்பதுதான் என்று நினைத்தவர்களில் அவளும் ஒருத்தி.

    ஒரு முறை, “நீங்கள் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறீர்களே! என் பரீட்சைத்தாளைத் திருத்துவதுதானே!” என்று, அதிகாரமாக ஒரு கட்டை என்முன் போட்டாள்.

    என்ன திமிர்!

    நான் மிக மிக நிதானமாக, “நான் எதுவும் செய்யாமல் சும்மா உட்கார்ந்திருக்கிறேன்.  ஏனெனில், என் வேலையை வீட்டிலேயே செய்து முடித்துவிட்டேன். நீயும் உனக்கான வேலையைச் செய் (I suggest you do your own work!)” என்றேன். அடுத்தடுத்து நான்கு வகுப்புகளில் போதித்தபின் நான் சற்று ஓய்வாக இருந்தது அவள் கண்களை உறுத்தியிருக்க வேண்டும்.

    என் கண்டிப்பான பதிலை சற்றும் எதிர்பாராத அவள் அடுத்து என்ன செய்வது என்று புரியாது, என்னையே பார்த்தபடி நின்றாள்.

    “Anything else?” என்று தலையை நிமிர்த்தி மிரட்டலாக நான் கேட்க, விரைந்தோடினாள்.

    இம்மாதிரியாக, `இன்னும் என்ன?’ என்று கேட்பது, `உரையாடல் முடிந்துவிட்டது, நீ தொலை!’ என்பதற்கு ஒரு வழி. எங்கோ படித்தது. நம்மை துச்சமாக நினைப்பவர்களை விரட்ட நல்ல உபாயம்.

    தான் மேலானவள் என்று அஸ்லீனா கருதினாலும், ஒருக்காலும் தலைமைப் பதவிக்கோ, வேறு பொறுப்பான பதவிக்கோ உயரமாட்டாள். ஏனெனில் தன் வேலையைக்கூடச் செய்யப் பிடிக்காத சோம்பேறி அவள். குறித்த காலவரைக்குள் தன் வேலையைச் செய்து முடிக்கும் கட்டொழுங்கும் கிடையாது. தன்னையொத்த பிறரை மதிக்கவும் தெரியவில்லை. அப்படியானால், அவளுக்குக்கீழ் இருப்பவர்களை எப்படி நடத்துவாள்?

    `முடியாது!’ என்று சொன்னால் பிறருக்கு நம்மைப் பிடிக்காமல் போய்விடுமே!’ என்று அஞ்சுபவர்கள் ஒரே சமயத்தில் பல வேலைகளை இழுத்துப் போட்டுக்கொண்டு செய்வார்கள். எல்லாமே அரைகுறைதான்.

    பொறுமையுடன் பிறர் கஷ்டங்களைக் கேட்பது நல்ல குணமாக இருக்கலாம். ஆனால், அதற்கும் எல்லை கிடையாதா?

    ஒரே வேலைப்பளு!

    வேலைப்பளுவால் மன இறுக்கம் அதிகரிக்க, பலருக்கும் பிள்ளைப்பேறு கிட்டாமல் இருக்கிறது என்று ஒரு மருத்துவர் என்னிடம் கூறினார்.

    நிறைய வேலை காத்திருக்கிறதா? எது முக்கியம் என்று எழுதி வைத்துக்கொண்டு, மிக அவசியமானதிலிருந்து ஆரம்பிக்க வேண்டியதுதான். பொழுதுபோக்கிற்காகச் செலவழிக்கும் நேரத்தைக் குறைத்தாலும் காத்திருக்கும் வேலைகளை முடிக்க முடியும். மேலதிகாரி தாக்கினால், அது அவருடைய குறைபாடு என்று எடுத்துக்கொள்ள வேண்டும்.

    ஐயோ பாவம்!

    பலருடன் சேர்ந்து வேலை பார்க்குமிடத்தில் ஒரு சிலர் தம் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்வார்கள். அவைகளை நாமே அனுபவித்ததுபோல் துயரடைந்தால் அவர்களுக்கு ஆறுதல் கிடைக்கலாம். ஆனால் நம் நிம்மதிதான் கெடும். அப்படி ஒரு உணர்திறன் (sensitivity) அநாவசியம். எவ்வகையிலாவது உதவ முடிந்தால் போதுமே! அதுவும் முடியவில்லையா? சும்மா கேட்டுவிட்டுப் போகவேண்டியதுதான்.

    வீடா, வேலையா?

    வேலை நேரத்தில் வீட்டு நினைவே இருந்தாலும் வேலையில் சுணக்கம் ஏற்படாதா! இதற்குத்தான் `நிகழ்காலத்தில் இரு!’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.

    எந்தச் செயலில் ஈடுபடும் முன்னரும், அதிலிருக்கக்கூடிய நன்மை தீமைகளைத் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியம்.

    தீவிரமான விளையாட்டா? உடலின் பல பாகங்களில் பலத்த அடி படலாம். சில நாட்களோ, மாதங்களோ வலியைத் தாங்க வேண்டிய துணிவு வேண்டும். உடல்நிலை சரியாகி, மீண்டும் அதே விளையாட்டில் ஈடுபட ஆயத்தமாகும்போது கிடைக்கும் மகிழ்ச்சியே தனி.

    குணத்திற்கேற்ற உத்தியோகமோ அல்லது பொழுதுபோக்கோ அமைந்தால் வாழ்க்கை இனிக்கும். சலிப்பு ஏன் அண்டுகிறது!

    Share
  • இனிய பொங்கல் வைப்போம்

    சி. ஜெயபாரதன், கனடா

    பொங்கல் வைப்போம்
    புத்தரிசிப்
    பொங்கல் வைப்போம்
    சர்க்கரைப்
    பொங்கல் வைப்போம்
    வீட்டு முற்றத்தில்
    மாட்டுப்
    பொங்கல் வைப்போம்
    முன் வாசலில்
    கோல மிட்டு, பெண்டிர்
    கும்மி அடித்து
    செங்கரும்புப் பந்த லிட்டு
    சீராய்த் தோரணம்
    கட்டிப் பால்
    பொங்கல்வைப்போம் !
    புத்தாடை அணிந்து
    பூரிப்போடு
    பொங்கல் வைப்போம்.
    பொழுது புலர்ந்ததும்
    விடி வெள்ளி விழித்ததும்
    வெண் பொங்கல் வைப்போம்.
    கூட்டாகத் தமிழர்
    கொண்டாடும் அறுவடைத்

    திருவிழா !
    கோலகலமாய்ப்
    பொங்கலோ பொங்கல் என்று
    மங்கையர் ஒன்றாய்

    முழங்கப்
    பொங்கல் வைப்போம்.

    இனிய தைப் பொங்கல்

    வைப்போம்.

     

    Share
  • சேக்கிழார் பா நயம் 20

    – திருச்சி புலவர் இராமமூர்த்தி

    இறைவன் திருவருள் விருப்பத்தால் மாதவம் செய்த தென்திசையில், திருமுனைப்பாடி நாட்டில், திருநாவலூரில்  சடையனார்க்கும் இசைஞானியார்க்கும்  மைந்தராக,  சுந்தரர் திருவவதாரம் செய்தார். அவர் அவதாரம் செய்த நாடு  தனிச் சிறப்புப் பெற்றது. இந்நாட்டில்தான் அப்பரடிகள் அவதரித்தார். இந்நாட்டில்தான் சைவ சமய சந்தானாசாரியார்களாகிய ஸ்ரீ மெய்கண்டாரும் ஸ்ரீ அருள்நந்தி சிவாச்சாரியாரும்  அவதாரம் செய்தனர்!

    இந்தச் சுந்தரர் சிறு குழந்தையாகத் தெருவில் விளையாடிய போது , நகர்வலம் வந்த அரசராகிய நரசிங்க முனையரையர், அக்குழந்தையின் ஒளிபொருந்திய அழகைக் கண்டு , அன்புற்று அவரைத் தம் வளர்ப்பு மைந்தராக ஏற்று மகிழ்ந்தார். ஆனாலும் சிவவேதியர் குடும்பத்தில் பிறந்த அவருக்கு, அவர் பெற்றோர் உரிய முறையில் உபநயனச் சடங்கு செய்தார்கள். பின்னர் உரிய பயிற்சிகள் பெற்று முறையாக வளர்ந்து திருமணத்துக்கு உரிய வயதை அடைந்தார். பின்னர் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார்  திருமகளைக் குலம்,  கோத்திரம், ஆகியவற்றின் பொருத்தம் பார்த்துத் திருமண ஏற்பாடுகள் செய்தனர் . அரசர் வளர்ப்பு மகன் என்பதால் செல்வச்  சிறப்புடன்  அளவில் அவரை அலங்கரித்து யோகப்புரவி மேல் ஏற்றி ஊர்வலம் வந்தனர் .

    திருமணநாளுக்கு  ஏழு நாட்களுக்கு முன் மங்கையர்கள் பன்னிரண்டு சிறுமண் கலயங்களில்  முளைப்பாலிகை எனப்படும் நவதானிய வித்துக்களை இட்டு நீரூற்றினர் . அவை பன்னிரண்டு ஆதித்தர்களைப் போற்றி வழிபாடு செய்து அவர்களின் ஒப்புதல் பெறும் சடங்காகும். அதன் பின் முதல்நாளில் சுந்தரர் திருக்கரத்தில் காப்புக் கயிறு காட்டினார் , திருமணம் நிறைவேறி முழுமையான சடங்குகள் முடிந்து  காப்புக்  கயிற்றை அவிழ்க்கும் வரை எந்த இடையூறும் நேரா வண்ணம் பிரார்த்தித்துக்  கட்டுவதே காப்புக் கயிறாகும்.பின்னர்  அவருக்குத் திருமணத்துக்குரிய மாப்பிள்ளைக் கோலம் புனைவித்தனர்!

    அவர்தம் திருமணக்  கோலம் காண்பதற்கு அனைவரும் அதிகாலையிலேயே திரண்டனர். அப்போது கீழ்த்திசையில் கதிரவன் உதித்தான்! கதிரவன் இயற்கையாக உதிப்பதைச் சேக்கிழார் , ஒரு காரணம் பற்றி உதிப்பதாகத்  தம்  கருத்தை ஏற்றி அழகான  கற்பனை செய்து பாடினார்!    காவியங்களில் கதிரவன் தோற்றத்தைப் பாடுதல் மரபு. சிலப்பதிகாரத்தில் ஞாயிறு போற்றுதும் என்று இளங்கோவடிகள் பாடியுள்ளார்!

    முதல்நாள் இரவெல்லாம் திருமணச் சடங்குகள் வேதியர்கள் மந்திரவிதிப்படி நிகழ்ந்தன. இதனை , ‘’மாமறை விதி வாழாமல் மணத்துறைக்  கடன்கள் ஆற்றி ’’ ,    என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார்! தூய மறையோர் முக்காலமும் வேதம் ஓதும் ஊர் என்பதால்’’ தூமறை மூதூர்’’ என்று சேக்கிழார் குறிப்பிடுகிறார். அவ்வூரில்  நள்ளிரவில்  மங்கலவாழ்த்து நிறைந்து ஒலித்தது! சுந்தரருக்கு திருமணச் சடங்குகளில் தொடர்ந்து மாலைகள் சூட்டினர்! ‘’அத்தகைய மணமாலை அணிந்து தோன்றும் சுந்தரர் என்ற இயல்பான திருப்பெயர் பெற்ற பேரழகரின் திருமணக் கோலத்தில்  தன்  வெளிச்சக் கதிர்களை வீசி, ஒளியூட்டித் தானும் உலகினரும் கண்டு மகிழ்வதற்காகக்  கீழ்த்திசையில் கதிரவன் உதித்து வந்தான்’’, என்று கதிரவன் உதித்தமைக்குத்  தான் விரும்பிய குறிப்பை ஏற்றிச் சேக்கிழார் பாடுகிறார்! இதனை அணியிலக்கணம் ‘’தற்குறிப்பேற்றம்’’ என்று குறிப்பிடும்! இனி முழுப்பாடலையும் படிப்போம்,  

    ‘’மாமறை   விதிவ  ழாமல்  மணத்துறைக்  கடன்கள்  ஆற்றித்

     தூமறை    மூதூர்க்   கங்குல்  மங்கலம்  துன்றி  ஆர்ப்பத்

     தேமரு   தொடையல்  மார்பன்   திருமணக்   கோலம்  காணக்

     காமுறு   மனத்தான்  போலக்  கதிரவன் உதயம் செய்தான்!

    இப்பாடலில் சுந்தரரின் திருமணத்தைச் சிவபிரான் தடுத்து, ஆட்கொள்ளப் போவதால் , ‘’திருமணம்  காண ‘’ என்று பாடாமல் திருமணக் கோலத்தை மட்டும் காண்பதற்கு  என்ற பொருளில் , ‘’திருமணக் கோலம் காண’’ என்று கூறினார். உதித்தான் என்று கூறாமல்  ‘’உதயம் செய்தான் ‘’ என்று கூறியதன் நுட்பம் உணர்ந்து கொள்ளற்ற்கு உரியது!

    கம்பராமாயணத்தில் காட்டில் இராமனும் சீதையும் அண்ணங்களையும், யானையையும் கண்ட காட்சியை,

    ஓதிமம் ஒதுங்க கண்ட உத்தமன் உழையள் ஆகும்
    சீதை-தன் நடையை நோக்கி சிறியது ஓர் முறுவல் செய்தான்
    மாது_அவள்-தானும் ஆண்டு வந்து நீர் உண்டு மீளும்
    போதகம் நடப்ப நோக்கி புதியது ஓர் முறுவல் பூத்தாள்

    என்று பாடுகிறார்!  இப்பாடலில் , சீதையின் நடையைக் கண்டு ஒதுங்கிய அன்னத்தின் நடையைக்  கண்ட   இராமன், சீதையின்  நடை எதனையும் வெல்லும் இயல்புடையதுதானே என்று, அந்த நடையைச் சிறியது என்று நினைத்து, ஒரு  சிறு முறுவலைச் செய்தான்!    ஆனால் குளத்தில் இறங்கி  நீருண்டபின் தாகம் தீர்ந்த நிறைவுடன் கம்பீரமாக நடக்கும்  யானையின் நடையை விடவும் பெருமிதம் கொண்ட இராமனின் நடையைக் கண்ட  சீதை அதில் ஒரு புதுமை இருப்பதை எண்ணி, புதியது ஓர் முறுவல் பூத்தாள். என்கிறார்கம்பர், முறுவல் செய்தமைக்கும்  முறுவல் பூத்தமைக்கும் இடையில் உள்ள வேறுபாடு   அப்பாட்டில் புலனாகின்றது! இங்கே உதயம் செய்தான் என்பதில் கடமை தெரிகிறதே யன்றி, ஆவல் புலப்பட வில்லை. மேலும் காமுறு மனத்தான் போல என்பதில் , காமுறு  மனத்துடன் உதிப்பது போல என்றில்லாமல் , மனத்தான் போல என்பதில் சிறு வேறுபாடு உண்டு. மக்கள் ஆர்வம் கொண்டார்கள் , ஆனால் கதிரவனுக்குக் கைலை நிகழ்ச்சி தெரிந்திருக்கும் என்பதால்  ‘மனத்தான்போல’ என்றும் , ‘ உதயம் செய்தான்’ என்றும் சற்றே வித்தியாசமாக, நயம்படச்  சேக்கிழார் குறிப்பிடுகிறார்!  

    Share
  • படக்கவிதைப் போட்டி – 196

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    ஷாமினி எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (19.01.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • இனிக்கும் பொங்கல்

    இதங்கள் ஆயிரம், விதங்கள் ஆயிரம், பதங்கள் ஆயிரம் உண்டு!
    உதிக்கும் ஞாயிறு, தழைக்கும் தாவரம், செழிக்கும் பூதலம் இன்று!
    துதிக்கும் கோகுலம், அனைத்தும் ஓர்குலம், உயிர்க்கும் மானுடம் இன்று!

    புதுக்கும் திங்களே, வெளுக்கும் கங்குலே, இனிக்கும் பொங்கலே இன்று!அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்!

    Share
  • குறளின் கதிர்களாய்….(240)

    செண்பக ஜெகதீசன்…

    உறுப்பொத்தல் மக்களொப் பன்றால் வெறுத்தக்க

    பண்பொத்த லொப்பதா மொப்பு.

    -திருக்குறள் -993(பண்புடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    உடலுறுப்பால் ஒத்திருத்தல்

    உலகத்து

    மக்களோடு ஒத்திருத்தலன்று..

    பொருந்தத் தக்கது,

    பண்பால் ஒத்திருத்தலே…!

    குறும்பாவில்…

    உறுப்பால் ஒத்திருப்பதன்று

    மக்களோடு ஒத்திருத்தல் என்பது,

    உண்மையிலது பண்பால் ஒத்திருத்தலே…!

     

    மரபுக் கவிதையில்…

     

    உடலி லுள்ள உறுப்புகளால்

    ஒன்றோ டொன்றுபோல் ஒத்திருத்தல்,

    கடல்சூழ் உலக மக்களோடு

    கருதப் படாதே ஒத்திருத்தலாய்,

    நடைமுறை தன்னில் பொருந்துவதாய்

    நல்ல பண்பால் ஒத்திருத்தலே

    தொடரும் உலக வாழ்வினிலே

    தெரிந்த உண்மை ஒத்திருத்தலே…!

     

    லிமரைக்கூ..

    உண்மையில் ஒத்திருத்தலே இல்லை

    உறுப்புகளால் மக்களோடு ஒத்திருத்தலென்பது,

    பண்பால் ஒத்திருத்தலே உண்மையின் எல்லை…!

    கிராமிய பாணியில்…

    பெருசுபெருசு உண்மயில பெருசு

    ஒலகத்திலயே ரெம்பப் பெருசு,

    ஒசந்த பண்புதான்..

    ஒடம்பிலவுள்ள உறுப்புகளால

    மக்களோட ஒத்திருக்கிறது

    உண்மயான ஒத்திருத்தலில்ல,

    ஒசந்த பண்பால

    ஒத்திருக்கதுதான் ஒசத்தி

    அதுதான்

    உண்மயான ஒத்திருத்தலே..

    அதால

    பெருசுபெருசு உண்மயில பெருசு

    ஒலகத்திலயே ரெம்பப் பெருசு,

    ஒசந்த பண்புதான்…!

     

    Share
  • நன்றாகப் பொங்கிடுவோம்

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

    மனங்கவரும் மார்கழியில்
    மகத்தான நாட்கள்வரும்
    இந்துக்கள் கிறீத்தவர்கள்
    எல்லோரும் பங்குகொள்வர்
    வைஷ்ணவமும் சைவமும்
    வாழ்த்திநிற்கும் திருவெம்பா
    மார்கழியின் முக்கியமாய்
    மனமாசை அகற்றிநிற்கும் !

    ஒளிவிழா எனும்பெயரால்
    உத்தமராம் யேசுபிரான்
    வழிநிற்போர் அனைவருமே
    வாழ்த்துக்கூறி நிற்பார்கள்
    பீடுடைய மாதமாய்
    மார்கழியும் அமைந்துதுநின்று
    பெருமகிழ்சி வருவதற்கு
    தைதனக்கு வழிகொடுக்கும் !

    தைபிறந்தால் வழிபிறக்கும்
    என்கின்ற நம்பிக்கை
    தளர்வுநிலை அகன்றுவிட
    தானுரமாய் அமைந்திருக்கு
    பொங்கலென்னும் மங்கலத்தை
    பொறுப்புடனே தருகின்ற
    எங்கள்தையை எல்லோரும்
    இன்பமுடன் வரவேற்போம் !

    புலம்பெயர்ந்த நாட்டினிலும்
    பொங்கலுக்குப் பஞ்சமில்லை
    நிலம்பெயர்ந்து வந்தாலும்
    நீங்கவில்லை பண்பாடு
    நலந்திகழ வேண்டுமென்று
    யாவருமே நினைத்தபடி
    உளம்மகிழப் பொங்கலிட்டு
    உவகையுடன் இருந்திடுவோம் !

    வாசலிலே தோரணங்கள்
    வடிவாகக் கட்டிடுவோம்
    வண்ணப் பொடிகொண்டு
    கோலங்கள் போட்டிடுவோம்
    எண்ணமெலாம் இறைநினைவாய்
    எல்லோரும் இருந்திடுவோம்
    எங்கள்வாழ்வு விடிவுபெற
    இணைந்து நின்றுபொங்கிடுவோம் !

    நிலமெங்கும் சமாதானம்
    நிலைக்கவென்று பொங்கிடுவோம்
    வளம்கொளிக்க வேண்டுமென்று
    வாழ்த்திநின்று பொங்கிடுவோம்
    இளம்மனசில் இறையெண்ணம்
    எழுகவென்று பொங்கிடுவோம்
    எல்லோர்க்கும் நல்வாழ்வு
    இருக்கவென்று பொங்கிடுவோம்

    குறையெல்லாம் அகன்றுவிட
    கூடிநின்று பொங்கிடுவோம்
    மறைவாகப் பேசிவிடும்
    மனமகலப் பொங்கிடுவோம்
    திறமுடனே தமிழரெலாம்
    தலைநிமிரப் பொங்கிடுவோம்
    சீர்சிறப்பு வரவேண்டி
    சிரித்தபடி பொங்கிடுவோம்

    ஆரோக்கியம் ஆனந்தம்
    அனைவருக்கும் வரவெண்ணி
    ஆண்டவனை மனமிருத்தி
    ஆவலுடன் பொங்கிடுவோம்
    வேண்டுகின்ற அத்தனையும்
    விரைவாகக் கிடைத்துவிட
    நாங்களெல்லாம் ஒன்றுசேர்ந்து
    நன்றாகப் பொங்கிடுவோம் !

    Share
  • (Peer Reviewed) தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

    தி.மோகன்ராஜ்

    (முனைவர்ப் பட்ட ஆய்வாளர், இலக்கியத் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்-613 010)

    (கட்டுரையாளர், தொல்காப்பியத் தொடரியல் நோக்கில் ஐங்குறுநூறு என்ற தலைப்பில் முனைவர்ப் பட்ட ஆய்வினை மேற்கொண்டு வருகிறார். இவரது மின் அஞ்சல் : mohr_d12@yahoo.co.in; கைப்பேசி : +91 99947 81727)

    =================================

    தமிழில் வினைப்பெயர்கள் – ஒரு தொடரியல் ஆய்வு

    பெயர்ச்சொற்கள் தோற்றங்கொள்ளும் முறை

    ஒரு மொழியில் பெயர்ச்சொற்கள் நான்கு வகைகளில் புதியனவாக ஆக்கிக் கொள்ளப்படுகின்றன என்று மொழியியலார் குறிப்பிடுகின்றனர்.  இதனைப் பெயராக்கம் (Derivation of nouns) என்று வழங்குவர்.  அவை

    1. பெயரிலிருந்து பெயராக்கம்
    2. வினையிலிருந்து பெயராக்கம்
    3. பெயரடையிலிருந்து பெயராக்கம்
    4. வினையடையிலிருந்து பெயராக்கம்

    என்பனவாம்.

    முருகன், அழகன், தமிழ்க்கல்வி, நூலகம், முருகக்கடவுள் போன்றன பெயரிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள். இந்த வகையை ‘Derivation of nouns from nouns’ என்று அழைப்பர். வளர்பிறை, பொங்கல், கற்றவன், பாடுநர் போன்றன வினையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from verbs’ என்று அழைப்பர்.  நன்னடை, இன்னிசை, நல்லொழுக்கம் போன்றன பெயரடையிலிருந்து உருவாக்கப்பெற்ற பெயர்ச்சொற்கள்.  இந்த வகையை ‘Derivation of nouns from adjectives’ என்று அழைப்பர். தமிழிலும் வேறுபல மொழிகளிலும் வினையடையிலிருந்து பெயர்ச்சொற்கள் உருவாவதில்லை. ஒருசில மொழிகளில் மட்டுமே இந்த வகையில் பெயர்கள் தோற்றம் கொள்கின்றன. இந்த வகையை ‘Derivation of nouns from adverbs’ என்று அழைப்பர்.  இக்கட்டுரை, வினையிலிருந்து தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களைப் (Derivation of nouns from verbs) பற்றித் தொடரியல் நோக்கில் ஆய்கிறது.

    வினையிலிருந்து தோன்றும் பெயர்ச்சொற்கள்

    தமிழ்மொழியில் வினையை உறுப்பாகக் கொண்டு தோற்றங்கொள்ளும் பெயர்ச்சொற்களை ஐந்து பெரும் பிரிவுகளுள் அடக்கலாம்.  அவை

    1. வினையடிப் பெயர்
    2. வினைத்தொகை
    3. ஆக்கப்பெயர்
    4. தொழிற்பெயர்
    5. வினையாலணையும் பெயர்

    ஆகியன.  இவை வினைப்பெயர்கள் (Verbal nouns) எனப்படும்.  இந்த ஐந்து வகையான வினைப்பெயர்களின் தொடரிலக்கண இயல்புகள் ஒவ்வொன்றாக இக்கட்டுரையில் விளக்கப்பெறுகின்றன. (வினையடியின் விகுதி திரிந்து சில வினைகள், பெயரோடு இணைந்து பெயர்ச் சொற்களாக வரும். மண்வெட்டி, மரங்கொத்தி, தொலைபேசி, கடனாளி, தொழிலாளி போன்ற சொற்கள், அவ்வாறு உருவானவையே. இவை ஆக்கப்பெயர்களின்கீழ் அடங்குமெனினும் இக்கட்டுரையின் ஏனைய வகைப்பாட்டுச் சொற்களைப் போன்று சொல்லின் முதலில் நிற்காமல் இறுதியில் நிற்பனவாதலான் இக்கட்டுரையில் ஆராயப் பெறவில்லை.  இக்கட்டுரையின் வகைப்பாட்டில் கொள்ளப்பட்டுள்ள வினைகள் அனைத்தும் சொல்லின் முதலில் நிற்பன மட்டுமேயாம்.)

    1. வினையடிப் பெயர்

    பொதுவாகப் பல மொழிகளில் காணப்படுவதைப் போன்று தமிழிலும் ஒருசில வினையடிகள் பெயராகவும் செயல்படுகின்றன.  அடி, அணி, அருள், உரை, அறை, பூ, காய் ஆகியன வினையடியே பெயராக வந்த பெயர்ச்சொற்களுக்கு எடுத்துக்காட்டுகளாகச் ச.அகத்தியலிங்கம் பட்டியலிடுகிறார் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  இவை போன்று குத்து, கனி, ஆள் ஆகிய வினையடிகளும் பெயர்ச்சொற்களாகச் செயல்படும் தன்மை கொண்டவை.  இவை தமிழ் இலக்கணிகளால் முதனிலைத் தொழிற்பெயர்கள் என்று வழங்கப்படும்.

    அட்டவணை-1: பெயராகவும் வினையாகவும் வரும் வினையடிகளின் எடுத்துக்காட்டுகள்

    வ.எண் பெயராக வினையாக
    1. அடி விழுந்தது நீ அவனை அடி
    2. காதில் உள்ள அணி அழகாக இருக்கிறது இந்த நகையை நீ அணி
    3. அருள்  கிடைத்தது இறைவா! எனக்கு அருள்
    4. ஆற்றிய உரை  சிறப்பாக அமைந்தது நீ பதில் உரை
    5. பூ மணக்கிறது முல்லை மாலையில் பூக்கும்
    6. காய் வாங்கினேன் மாமரம் காய்த்தது
    7. குத்து விட்டான் அவனைக் குத்து
    8. கனி  சுவையாக இருந்தது பழம் நன்றாகக் கனிந்தது
    9. ஓர் ஆள் வருகிறார் நீ இந்த நாட்டை ஆள்

    இவ்வாறு தோன்றும் பெயர்கள், தங்கள் வினைத் தன்மையை இழந்து, முற்றிலும் பெயர்ச்சொல்லின் தன்மையைப் பெறுகின்றன. தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர் (Adjective phrase), பெயரெச்சக் கிளவியம் (Adjective clause), வேற்றுமை உருபுகள் ஆகியவற்றை ஏற்று ஒரு பெயர்ச்சொல்லுக்கான அனைத்துப் பண்புகளையும் பெற்று அமைகின்றன.

    நல்ல அடி                               – பெயரடையை ஏற்றது

    விழுந்த அடி                           – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல பலமான அடி               – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    அவன் அடித்த அடி               – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    அவன் அடியைத் தாங்கிக் கொண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது

    ஓடு, நட, படி, கொடு போன்ற வினையடிகள் பெயர்ச்சொற்களாக அமைவதில்லை.  பூ, உரை, அடி, கனி போன்ற வினையடிகளே பெயர்ச்சொற்கள் ஆகின்றன.  இதன் மூலம் எல்லா வினையடிகளும் பெயராவதில்லை என்பதை அறியலாம் (பொற்கோ, 2011, ப.50).

    1. வினைத் தொகை

    ஒரு வினையடி முதலில் நின்று ஒரு பெயர்ச்சொல்லோடு இணையும்போது வினைத்தொகை அமைப்பில் ஒரு பெயர்ச்சொல் உருவாகிறது. உயர்திணை, வளர்தமிழ், சுடுசோறு, அடுமனை ஆகியன வினைத்தொகைகள்.  வினைத்தொகை மூன்று காலத்தையும் குறிப்பாக உணர்த்தும் என்று இலக்கணவியலார் விளக்குவர்.  ஒரு பொருளின் தன்மையையே வினைத்தொகையின் வினையடி உணர்த்துகிறது என்று மொழியியலார் கருதுகின்றனர் (ச.அகத்தியலிங்கம், 2011, ப.75).  கொல்களிறு என்பது இலக்கணவியலாளர்களால் கொன்ற களிறு, கொல்கின்ற களிறு, கொல்லும் களிறு என்று விளக்கப்படும் நிலையில், மொழியியலார் கொல்லும் பண்பினை உடைய களிறு என்றே விளக்குவர் (செ.வை.சண்முகம், 2008, ப.75).  எவ்வாறு இருப்பினும் வினைத்தொகையாக அமையும் பெயர்ச்சொற்கள், வினையடியே பெயராக அமைந்த பெயர்ச்சொற்களைப் போன்று தமது வினைப் பண்பினை இழந்து பெயர்ச்சொல்லின் பண்பினையே கொண்டுள்ளன.

    சுவையான சுடுசோறு                        – பெயரடையை ஏற்றது.

    கொதித்த சுடுசோறு                            – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல சுவையான சுடுசோறு          – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    அவன் வடித்த சுடுசோறு                  – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    அவன் சுடுசோற்றை உண்டான் – வேற்றுமை உருபை ஏற்றது.

     

    1. ஆக்கப்பெயர்

    வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்ந்து ஆக்கப்பெயர்கள் உருவாகின்றன.  அம், நர், அல், கை, வி, வை என்பன போன்ற பல விகுதிகளைக் கொண்ட ஆக்கப்பெயர்கள் தமிழில் உள்ளன. உயரம், ஓட்டுநர், வறுவல், அழுகை, கல்வி, பார்வை போன்ற ஆக்கப்பெயர்கள், அவ்வாறு உருவானவையே. இவையும் மேற்கண்ட வினையடிப் பெயர்கள் மற்றும் வினைத்தொகைகளைப் போன்று முழுமையாகப் பெயரின் தன்மையையே பெற்றிருக்கின்றன.

    நல்ல கல்வி                                 – பெயரடையை ஏற்றது

    உயர்ந்த கல்வி                        – பெயரெச்சத்தை ஏற்றது

    நல்ல திறமான கல்வி         – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    நான் கற்ற கல்வி                   – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    கல்வியால் உயர்ந்தான்   – வேற்றுமை உருபை ஏற்றது

     

    1. தொழிற்பெயர்

    தொழிற்பெயரும் ஆக்கப்பெயரைப் போன்றே வினையடிகளுடன் ஒருசில விகுதிகள் சேர்வதன் மூலம் உருவாகிறது. தல், அல் போன்ற பல விகுதிகளைக் கொண்ட தொழிற்பெயர்கள் தமிழில் காணப்படுகின்றன. வாழ்தல், ஓடுதல், ஓடல் ஆகியன தொழிற்பெயர்கள் ஆகும். மேற்கண்ட வினையடிப் பெயர்கள், வினைத் தொகைகள், ஆக்கப்பெயர்கள் போன்றல்லாமல் இவை தமது வினைத்தன்மையை முழுதும் இழக்காமலேயே பெயர்களாக அமைந்துள்ளன. அதாவது வேற்றுமை உருபுகளை ஏற்கும் அதே வேளையில் தொடரமைப்பில் இவை பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்காமல் வினைச்சொற்களைப் போன்று வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்று வருகின்றன (நுஃமான், 2013, ப.69).

    அவன் ஓடுதலை விரும்பினான்       – வேற்றுமை உருபை ஏற்றது

    நன்றாக ஓடுதல் (நல்லது)                      – வினையடையை ஏற்றது

    எழுந்து ஓடுதல் (நல்லது)                        –  வினையெச்சத்தை ஏற்றது

    மிகவும் நன்றாக ஓடுதல் (நல்லது)  – வினையெச்சத் தொடரை ஏற்றது

    அவன் சொல்லும்போது ஓடுதல் (நல்லது)  –  வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

    மேலும், வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி வருவதைப் போன்று தொழிற்பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவி, வாக்கியத்தில் இடம் பெறுகின்றன.

    அவனோடு ஓடுதல் (நல்லது)           – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    மைதானத்தில் ஓடுதல் (நல்லது)     – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களை ‘ஓடுதல் அவனோடு நல்லது’ என்றும் ‘ஓடுதல் மைதானத்தில் நல்லது’ என்றும் வேற்றுமை ஏற்ற பெயரின் இடத்தை மாற்றியமைத்தால் பொருள் முழுவதுமாக மாறிவிடும். வேற்றுமையை ஏற்ற பெயர்கள் வினையைத் தழுவுவன போன்று இங்குத் தொழிற்பெயர்களையே தழுவி வந்துள்ளமை இதனால் பெறப்படும். (விகுதி பெற்ற தொழிற்பெயர்கள், விகுதி பெறாத தொழிற்பெயர்கள் என்று தொழிற்பெயர்கள் இருவகைப்படும். இத்தலைப்பின்கீழ் ஆராயப்பட்டுள்ள தொழிற்பெயர்கள் விகுதிபெற்ற தொழிற்பெயர்கள் ஆகும்.  விகுதிபெறாத தொழிற்பெயர்கள் மேலும் இரண்டு வகையாகப் பகுக்கப்படும். அவை முதனிலைத் தொழிற்பெயர், முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.  அவற்றுள் முதனிலைத் தொழிற்பெயர்கள் வினையடி என்ற தலைப்பின் கீழ் இக்கட்டுரையில் ஆராயப்பட்டுள்ளன.  முதனிலை திரிந்த தொழிற்பெயர்கள் முதனிலைத் தொழிற்பெயர்களைப் போன்றே வாக்கியத்தில் செயற்படும் தன்மையன.)

    1. வினையாலணையும் பெயர்

    காலம் (தெரிநிலை, குறிப்பு), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைக் கொண்ட ஒரு வினைமுற்றே பெயராக அமையின் அது வினையாலணையும் பெயர் எனப்படும். பெயர்ச்சொற்களில் ஒன்றாக இதனைத் தொல்காப்பியம் குறிப்பிட்டுள்ளது (தொல்காப்பியம். நூ.70).  இவை மூவிடங்களிலும் வரும் (நன்னூல், நூ. 286).

    செய்தேன் வந்தேன் – தன்மை இறந்தகால வினையாலணையும் பெயர்

    செய்கிறாய் வா         – முன்னிலை நிகழ்கால வினையாலணையும் பெயர்

    செய்வன வந்தன      – படர்க்கை எதிர்கால வினையாலணையும் பெயர்

    படர்க்கையில் ஐம்பாலுக்கும் உரிமையாக வரும்.

    ஓடுபவன் வந்தான்

    ஓடுபவள் வந்தாள்

    ஓடுபவர் வந்தனர்

    ஓடுவது வந்தது

    ஓடுவன வந்தன

    வினையாலணையும் பெயர்கள் காலம் காட்டும் தெரிநிலை வினையிலும் காலம் காட்டாத குறிப்பு வினையிலும் தோன்றும். வந்தவள், வருகிறவள், வருபவள் என்று முக்காலத்திலும் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் வரும்.  நல்லவன், நல்லவள், நல்லவர், நல்லது, நல்லன என்று குறிப்பு வினையாலணையும் பெயர்கள் அமையும்.

    தொடரமைப்பில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள் தொழிற்பெயர்களைப் போன்றே செயற்படுகின்றன. அதாவது, வினையடை, வினையெச்சம், வினையெச்சத்தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றையே ஏற்றுவருகின்றன.

    நன்றாகப்  படிப்பவன் (வருகிறான்) – வினையடையை ஏற்றது
    முனைந்து  படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத்தை ஏற்றது
    எதையும் நன்றாகப் படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சத் தொடரை ஏற்றது
    நான் சொல்லும்போது படிப்பவன் (வருகிறான்) – வினையெச்சக் கிளவியத்தை ஏற்றது

     

    குறிப்பு வினையாலணையும் பெயர்கள், தொடரமைப்பில் வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர்களைப் போன்று பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.  தெரிநிலை வினையாலணையும் பெயர்களுக்கும் குறிப்பு வினையாலணையும் பெயர்களுக்கும் இடையில் தொடரியல் நிலையில் இது முக்கியமான ஒரு வேறுபாடாக அமைகிறது.

    சிறந்த நல்லவன் (வந்தான்)                     – பெயரடையை ஏற்றது

    படித்த நல்லவன் (வந்தான்)                     – பெயரெச்சத்தை ஏற்றது

    மிகவும் சிறந்த நல்லவன் (வந்தான்) – பெயரெச்சத் தொடரை ஏற்றது

    நான் பார்த்த நல்லவன் (வந்தான்)      – பெயரெச்சக் கிளவியத்தை ஏற்றது

    தெரிநிலை மற்றும் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் ஆகிய இரண்டும் தொழிற்பெயர்களைப் போன்று வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருகின்றன.

    தமிழைப் படித்தவன் (வருகிறான்)     – இரண்டாம் வேற்றுமையோடு வந்தது

    தமிழால் உயர்ந்தவன் (வருகிறான்)   – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களில் தெரிநிலை வினையாலணையும் பெயர்கள், வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

    பண்பால் நல்லவன் (வந்தான்)        – மூன்றாம் வேற்றுமையோடு வந்தது

    கையில் வாளினன் (வந்தான்)         – ஏழாம் வேற்றுமையோடு வந்தது

    மேற்கண்ட தொடர்களில் குறிப்பு வினையாலணையும் பெயர்கள் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வந்துள்ளன.

    இவ்விருவகைப் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வருவதோடு மட்டுமன்றி வேற்றுமை உருபுகளையும் ஏற்றுவரும் பெற்றியன.

    படித்தவனைப் பார்த்தேன்  –  தெரிநிலை வினையாலணையும் பெயர்

    வேற்றுமையை ஏற்றது

    நல்லவனைப் பார்த்தேன் –    குறிப்பு வினையாலணையும் பெயர்

    வேற்றுமையை ஏற்றது.

    முடிவுத் தொகுப்பு

    இக்கட்டுரையினால் அறியலாகும் முடிவுகளைக் கீழ்வருமாறு பட்டியலிடலாம்.

    • தமிழில் பெயராக்க வகைகளில் வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் என்ற வகையும் ஒன்றாகும்.
    • வினையிலிருந்து தோன்றும் பெயர்கள் ஐந்து திறத்தன. அவை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப்பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர் என்பனவாகும்.
    • வேற்றுமை உருபுகளை ஏற்றல், இந்த ஐவகைப் பெயர்களுக்கும் பொதுப் பண்பாக உள்ளது.
    • வினையடிப் பெயர்கள், வினைத்தொகை, ஆக்கப் பெயர், குறிப்பு வினையாலணையும் பெயர் ஆகிய நான்கும் தொடரியல் அமைப்பில் பெயரடை, பெயரெச்சம், பெயரெச்சத் தொடர், பெயரெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
    • தொழிற்பெயர்களும் தெரிநிலை வினையாலணையும் பெயர்களும் தொடரியல் அமைப்பில் வினையடை, வினையெச்சம், வினையெச்சத் தொடர், வினையெச்சக் கிளவியம் ஆகியவற்றை ஏற்கின்றன.
    • வினையாலணையும் பெயர் மட்டும் காலம் (தெரிநிலை வினை மட்டும்), திணை, பால், எண், இடம் ஆகியவற்றைப் பெற்றுப் பெயராக அமைகின்றது.
    • வினைகள் வேற்றுமை ஏற்ற பெயரைத் தழுவுவது போன்றே தொழிற் பெயர்களும் வினையாலணையும் பெயர்களும் வேற்றுமை ஏற்ற பெயர்களைத் தழுவி வாக்கியங்களில் அமைகின்றன. இத்தன்மை வினையடிப் பெயர்கள், வினைத்தொகை மற்றும் ஆக்கப்பெயர்களுக்கு இல்லை.

     

    உசாத்துணை

    • அகத்தியலிங்கம், சு., முனைவர், (2011). தமிழ்மொழி அமைப்பியல், சிதம்பரம் : மெய்யப்பன் தமிழாய்வகம்
    • ஆறுமுக நாவலர், (2011). நன்னூல் காண்டிகையுரை, சொல்லதிகாரம், சென்னை : முல்லை நிலையம்
    • நுஃமான், எம். ஏ., (2013). அடிப்படைத் தமிழ் இலக்கணம், கொழும்பு : பூபாலசிங்கம் புத்தகசாலை
    • பொற்கோ, டாக்டர், (2011). இலக்கண உலகில் புதிய பார்வை, தொகுதி 1, சென்னை : நியு செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட்
    • சண்முகம், செ.வை., (2011). தொல்காப்பியத் தொடரியல், சென்னை  : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
    • தொல்காப்பியம், சேனாவரையர் உரை, (2012). சென்னை : சாரதா பதிப்பகம்

    ====================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    தமிழில் வினைப்பெயர்கள் ஒரு தொடரியல் ஆய்வு என்னும் தலைப்பில் அமைந்துள்ள இக்கட்டுரை, சொல்லாக்க அடிப்படை மற்றும் தொடர் அமைப்பு நோக்கில் எழுதப்பட்டுள்ளது. குறிப்பாக வினை வடிவங்கள் பெயர்களாகச் செயல்படும் தன்மையைச் சுட்டிக் காட்டி, அச்சொற்கள் எவ்வாறு தொடர்களில் பயின்று வருகின்றன என்பதைச் சான்றுகளுடன் விளக்கிக் கூறுகிறது. பெயர்ச்சொற்கள் ஆக்கம் பெரும் தன்மையின் நான்கு பகுப்புகள், சொல்லாக்கம் சார்ந்த அடிப்படையில் அமைந்துள்ளன. அவற்றில் ஒன்றான வினையிலிருந்து பெயராக்கம் என்பதன் அடிப்படையில் வினை வடிவங்களின் வகைகள், அவற்றின் மூலம் ஆக்கம் பெறும் பெயர்கள், அவை எவ்வாறு தொடர்களில் பயின்று வந்துள்ளன என்பது குறித்து மிகவும் தெளிவாகவும் படித்தவுடன் புரிந்துகொள்ளும் தன்மையிலும் மிக எளிய நடையில் சுருங்கச்சொல்லி விளங்க வைத்தல் என்னும் உத்தி முறையில் ஆய்வாளர் தனது கட்டுரையை அமைத்துள்ளார். ஆய்வாளர் மேலும் இதுபோன்ற ஆய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வது, தமிழ் ஆய்வுலகிற்கு நலம் பயக்கும். ஆய்வாளருக்கு வாழ்த்துகள்.

    ====================================================

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 2

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்தக் கூட்டத்தின் ஆதிகுடிகள் மலைப்பகுதியை வாழ்விடமாகக் கொண்ட குறிஞ்சிநில மக்களே எனினும் காலப்போக்கில் மக்கட்தொகை பெருகப் பெருக அவர்கள் மெல்ல நகர்ந்து புலம்பெயர்ந்து  மலையை அணித்தேயிருந்த காட்டுப் பகுதிகளில் குடியேறத் தொடங்கினர். இதனையே முல்லைநிலம் என மொழிகின்றது தமிழ். இயற்கையோடு இயைந்து இனிமையாய் வாழ்வதற்கு ஏற்ற சூழலும் மலைப்பகுதியைவிடக் காட்டுப் பகுதியிலேயே மிகுதி. எனவே முல்லைநிலம் மனித நாகரிக வளர்ச்சியில் மகத்தான பங்காற்றியிருக்கின்றது என்பதை மறுக்கவியலாது.

    காட்டுப்பகுதியில் குடியேறி வாழத் தொடங்குவதற்கு முன்னரே மனிதர்கள் விலங்குகளை வளர்க்கப் பழகியிருந்தனர். எனவே முல்லைநிலத்தில் ஆனிரைகளையும், ஆடுகளையும் அதிக எண்ணிக்கையில் மக்கள் வளர்க்கத் தொடங்கினர். ஆதலால், ’ஆயர்கள்’ எனும் பெயர் இந்நிலமக்களைக் குறிக்கும் அடையாளப் பெயராயிற்று.

    மாடுகளை வளர்ப்பது, அவற்றினால் கிடைக்கும் பால்படு பொருள்களைப் பிறருக்கு விற்பது என்று ஆரம்பித்துச் செல்வ வளம் மிக்கதாய் இம்மக்களின் வாழ்க்கை மாறத் தொடங்கியது. ’மாடு’ என்றாலே ’செல்வம்’ என்ற பொருள் இதனால்தான் ஏற்பட்டது. வான்புகழ் வள்ளுவரும்,

    கேடில் விழுச்செல்வம் கல்வி ஒருவற்கு
    ’மாடல்ல மற்றை யவை’
    எனும் குறளில் ’மாடு’ என்பதைச் செல்வத்துக்கான மாற்றுச்சொல்லாய்ப் பயன்படுத்தியிருப்பது ஈண்டு நினையற்பாலது.

    முல்லைநிலத்தின் தலைவனான ஆண்மகன், ’கோன்’ என்று அழைக்கப்பட்டான். பின்னாளில் ’கோன்’ எனும் சொல் நாட்டை ஆண்ட மன்னனுக்கும் ஆகிவந்தது.

    ”வரப்புயர நீர் உயரும்
    நீர் உயர நெல் உயரும்
    நெல் உயரக் குடி உயரும்
    குடி உயரக் கோல் உயரும்
    கோல் உயரக் கோன் உயர்வான்” என்ற பாடலில்  ஔவை, கோன் என்ற சொல்லை மன்னனுக்குப் பயன்படுத்தியிருக்கக் காண்கின்றோம்.

    மந்தைகளை மேய்க்கப் பயன்பட்ட கோலே பின்னாளில் அரசனின் செங்கோலாயிற்று. அத்தோடு சமூகத் தலைமையும் மெல்ல மெல்லப் பெண்கள் கையிலிருந்து ஆண்கள் கைக்கு இடமாறுவதற்கு முல்லைநிலச் செல்வ வாழ்க்கை வழியமைத்துக் கொடுத்தது. பெண்களுக்கு மட்டுமே ’அதிகம்’ வலியுறுத்தப்படும் கற்புக் கோட்பாடு தோற்றம்பெற்றதும் இங்குதான்!

    முல்லை சான்ற கற்பின் மெல்லியள் குறுமகள்” (அகம்-274) என்று முல்லைநிலப் பெண்ணின் கற்பு உயர்த்திப் பேசப்படுவதைச் சங்கப் பாடல்கள் சான்றாய் நின்று விளக்குகின்றன.

    முல்லைநில இளநங்கையொருத்தியை மணங்கொள்ளுதற்கு ஏறு தழுவுதலில் ஓர் ஆடவன் வெற்றிபெற வேண்டும் எனும் நிபந்தனையும் இந்நிலத்தில் விதிக்கப்பட்டதனை முல்லைக்கலி வாயிலாய் அறிகின்றோம்.
    கொல்லேற்றுக் கோடஞ்சு வானை  மறுமையும்
    புல்லாளே ஆயமகள்”
    (கலி-103) என்று ஆயமகளின் வீரவுள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றது முல்லைக்கலிப் பாடல்!

    தலைவன் பொருள்தேடவோ, அரசனுக்குப் பணிசெய்யவோ அல்லது கல்விகற்றிடவோ பிரிந்துசென்றிடும் காலத்தில் ’எப்போ வருவாரோ எந்தன் கலிதீர?” என்று அவனை எதிர்பார்த்து இல்லிலிருந்தபடியே அல்லலுற்று ஆற்றியிருத்தல் தலைவியின் கடனாயிற்று.

    தலைவனின் வரவுக்காகக் காத்திருந்து அவன் வரக்காணோமே என்று ஏங்கித் தவித்துத் தன்னருமைத் தோழியிடம் புலம்பும் முல்லைநிலத் தலைவியின் மனநிலையைக் குறுந்தொகைப் பாடலொன்றில் படம்பிடித்துக்காட்டுகிறார் ’ஒக்கூர் மாசாத்தியார்’ எனும் புலவர்பெருமாட்டி.

    இளமை பாரார் வள நசைஇச் சென்றோர்
    இவணும் வாரார் எவணரோ எனப்
    பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
    தொகுமுகை இலங்கெயிறு ஆக
    நகுமே தோழி நறுந்தண் காரே.” (ஒக்கூர் மாசாத்தியார்: குறுந்-126)

    ”என்னுடைய இளமையை நினையாது பொருளே பெரிதெனச் சென்ற தலைவர் இன்னும் திரும்பி வரவில்லை; அவர் எங்குளார் எனவும் நானறியேன். இதனைக் கண்டு, ”கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவேன்!” என்று வாக்குக்கொடுத்துச் சென்ற உன் தலைவர் பொய்த்துவிட்டார் பார்!” என முல்லை மொட்டுக்களையே தன் ஒளி பொருந்திய பற்களாகக் கொண்டு இக் கார்காலம் என்னை எள்ளி நகையாடுகின்றது” என்கிறாள் தலைவனைப் பிரிந்து தவித்திருக்கும் தலைவி.

    தொலைதூரம் சென்றவர்களோடு தொடர்புகொள்ளுதற்குத் தொலைபேசி வசதியற்ற அந்நாளில் குறித்த காலத்தில் கணவன் மீளவில்லை என்றால் அவன் வரவை எதிர்நோக்கியிருக்கும் மனைவியின் மனம் என்ன பாடுபடும்? எத்துணை அவலமுறும்? என்பதை எண்ணுகையில் தலைவியின் நிலைகண்டு நமக்கும் பெருவேதனை பிறக்கவே செய்கின்றது.

    அல்லில் ஆயினும் விருந்துவரின் உவக்கும்” (நற்-142) இயல்புடைய தமிழ்ப் பெண்டிர், கணவன் இல்லில் இல்லையென்றால் இல்லம் நாடிவரும் அறவோரைப் பேணுதல், அந்தணர் ஓம்புதல் முதலிய நற்செயல்களைச் செய்யும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களாய் இருந்திருக்கின்றனர். சிலம்பின் தலைவியான கண்ணகியின் வாய்மொழிகளால் இக்கருத்து உறுதிப்படுகின்றது.

    அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை… 
    (சிலம்பு – கொலைக்களக் காதை: 71-73)

    (தொடரும்)

    *****

    துணைநூல்கள்:

    1. சிலப்பதிகாரம் மூலமும், ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும்  – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.
    2. கலித்தொகை மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்.
    3. குறுந்தொகை மூலமும் டாக்டர் உ.வே.சாமிநாதையர் உரையும்.
    4. அகநானூறு மூலமும் ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரையும்.
    5. நற்றிணை மூலமும் பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர்     உரையும்.

     

     

    Share
  • (Peer Reviewed) தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை

    -மூ.சிந்து,
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை,
    ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    மலுமிச்சம்பட்டி,
    கோயம்புத்தூர் – 641050.
    மின்னஞ்சல்-sindujasms@gmail.com

    *****

    இன்றைய காலகட்டத்தில் மனிதனின் இயக்க நிலையானது திரும்பிப் பார்க்க நேரமின்றி சுற்றிக் கொண்டிருக்கும் கடிகார முள்ளிற்கு இணையாக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் நிலையினை உணரமுடிகிறது. வேகமான உலகத்திற்கேற்ப மனிதனும் தன்னுடைய செயல்களில் சுருக்கமும் தெளிவும் தேடும் நிலையையும், அதே நேரத்தில் இரசிக்கும் தன்மையுடனும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் கவிதைகளானது இயங்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

    படைப்பாளனின் மன உணர்வின்படி கவிதைகள் எழுதப்பட்டாலும், வாசிப்பாளன் ஏற்கும் மனநிலையில் மட்டுமே அக்கவிதையானது மதிப்பு பெறுகிறது. ஆகவே கவிதைகள் வரலாற்றில் புதுக்கவிதைக்கு என்று ஒரு தனிஇடம் உண்டு.

    காலச் சூழலுக்கு ஏற்ப மனிதன் தன்னை  மாற்றி இயக்கம் கொள்வதுபோல, இலக்கியங்களும் மாற்றம் கொண்ட நிலையினை இன்றைய காலகட்டங்களில் காணமுடிகிறது. சுருங்கக் கூறி விளங்க வைப்பதில் கவிதை இன்றைய சூழலில் முதன்மை பெற்று விளங்குவதைக் காணமுடிகிறது.

    கவிதையின் வளர்ச்சி நிலை

    நாளொரு வண்ணமுமாகப் படைப்பாளன் வளர்ந்து வரும் நிலையில் கவிதையானது வேகமாக வளர்ந்து வரும் நிலையினைக் காணமுடிகிறது. அத்தகைய சூழலில் படைப்பாளனின் படைப்புகளாக நாள்தோறும் புதுப்புது வடிவமாகக் கவிதையானது வடிவம் பெறும் நிலையினைக் கண்கூடாகக் காணலாம். கட்டுப்பாடுகளின்றி கவிதைகள் தோன்றும் இத்தகைய சூழல்களில் கவிதைகளின் தாக்கமானது வாசிப்பாளர்களிடையே பெரிய மாற்றத்தை உண்டாக்கியதையும், உண்டாக்குவதையும் காணமுடிகிறது.

    கவிதைகளின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்திற்கு முக்கிய ஒன்றாக அமைகிறது. படைப்பாளன் எவ்விதமான கட்டுபாடுகளின்றியும் தனித்து சுதந்தரமாகத் தனது பதிவுகளை வெளியிடும் சூழலும் இன்று அமைந்துள்ளதைக் காணலாம். விரிவாகக் கூறிச் செய்திகளை விளங்க வைப்பதைக் காட்டிலும் கவிதைகளின் வாயிலாக சமூகத்தில் எளிமையாகக் கூற வந்தக் கருத்தினைப் பதிவு செய்ய இயலுகிறது.

    சமூகத்தின் நிலை

    இன்றைய சமூகமானது பயனற்ற நிலையில் இயங்குவதும், மக்கள் தன்னிலை உணர்ந்து தனக்கேற்ற நிலையில் வாழாது, மற்றவர்கள் பார்வையில் தான் கொண்ட இடம், பெறும் மதிப்பு இவற்றை அடிப்படையாக் கொண்டு வாழும் சூழல் பெருகி வருவதையும் உணரமுடிகிறது. மனிதன் தன் வாழ்க்கையைப் பயனற்ற போக்கில் கழித்தும், வாழ்க்கையை இயல்பாகக் கொண்டாடாமல் செயற்கையாகக் கொண்டாடும் நிலையே இன்று பெருகி வருகிறது.

                     ‘கூட்டம் கூட்டம் கூட்டம்
                     கூடல் நகரில் கூட்டம்
                     கூட்டம் பார்க்கக் கூட்டம்
                     கூட்டம் கூட்டம்’…1

    என்ற கவிதையில் இன்றைய சமுதாயத்தில் மனித மனமானது எந்தச் செயலிலும் விரைவாக உட்புகுந்து அவற்றை இரசிப்பதில் எளிமையாக  நுழைந்து பயனுள்ளதா பயனற்றதா என்பதை எல்லாம் ஆராயாது இரசிக்கும் நிலையை மட்டுமே வெளிப்படையாகக் காணமுடிகிறது.

    மாணவர்களின் மனநிலை

    இன்றைய சூழலில் மாணவர்களின் மனமானது எந்த ஒரு செயலையும் எளிதாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளக் கூடியதாக விளங்குவதை அறியலாம். நகைச்சுவை என்பது எல்லா இடங்களிலும் தோன்றக் கூடியதில்லை. அவை சொல்லியும் வருவதில்லை. அவை தானாகத் தோன்றக் கூடியதாகும். தோன்றக்கூடிய இடமானது நல்லது, கெட்டது என்றப் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் தோன்றி அருகில் இருப்பவர்களை ஆனந்தமயமாக வைக்க இந்த நகைச்சுவையானது முக்கியப் பங்கு பெறுகிறது.

                     ‘வாத்தியார் மனைவி
                       செத்ததற்கு
                       பள்ளி விடுமுறை
                       மாணவர் வருத்தம்
                       தலைமையாசிரியருக்கு
                       ஒரே ஒரு மனைவி மட்டும் தானா? 2

    என்ற கவிதையைக் கேட்டவுடன் அனைவரும் சிரிக்கும் நிலையில்  அந்த செய்திக்குப் பின்பு உள்ள சோகத்தை மறக்கக்கூடிய நிலையில் மாணவர்களின் நகைச்சுவையானது அமையப் பெறுவதும், இதில் மாணவர் பருவம் விளையாட்டுத்தனமாகவும், சந்தோசமாகவும் கழிக்கக் கூடிய ஒன்று என்பதையும் அப்பருவத்தில்  மாணவர்கள் குழுவாகவும் சந்தோசமாகவும் இன்ப துன்ப எல்லா நேரங்களிலும் ஒரே இயல்பில் தம் இனக்குழுவுடன் செயல்படுவதை உணரமுடிகிறது.

    அரசியல் நிலை

    இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவைக்கும், கேலி, கிண்டல் ஆகிய அனைத்துச் செயல்களுக்கும் முதன்மை இடம் கொடுத்து நிற்பது அரசியலாகும். மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் என்ற நிலை மாறி, மக்களையும், மக்களுடைய குடும்பத்தையும், மக்களின் வாக்குகளையும் தேர்ந்தெடுக்கும் நிலையாக மாறியுள்ளதைக் காணமுடிகிறது.

     அனைத்துப் பதவிகளுக்கும் கல்வி அடிப்படையாக விளங்கும். ஆனால் அரசியலில் மட்டும் எவ்விதமான அடிப்படைத் தகுதிகளுமின்றியும் எளிமையாக பதவியினைப் பெற முடியும் என்பதனை,

                      ‘அது வராவிட்டால் இது
    இது வராவிட்டால் அது
    எதுவும் வராவிட்டால் அரசியல்’ 3

    என்ற தமிழன்பனின் கவிதை வரிகளின் வாயிலாக இன்றைய அரசியல் நிலையைப் படம்பிடித்துக் கண்முன் காட்டுகிறது. மேலும், இன்று தேர்தல் நிலையினையும் அதில் பதிவாகும் வாக்குகள் இவை அனைத்தும் உண்மையா? என்பதனை யோசிக்க வைக்கிறது.

                     ‘ஓட்டுப் போட்டு விட்டு
    திரும்பிய பிணம் திடுக்கிட்டது
                       தனது கல்லறையில்
    வேறொரு பிணம் என்று’…….. 4

    மேற்கூறிய கவிதையின் வாயிலாக இன்றைய அரசியலில் வாக்களிக்கும் முறை என்பது நேர்மையற்ற நிலையில் இயங்கக் கூடியதாகவும், இறந்தவர்கள் கூட நமது அரசியலில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் பொய்வாக்கு தேர்தலில் பதிவாகும்  நிலையினையும் இக்கவிதையானது படம்பிடித்துக் காட்டுகிறது.

    மனைவியின் ஏக்கம்

    மனைவியைப் பிரிந்து தன் குடும்பத்திற்காகக் கணவன் வேறு இடம் சென்று தொழில் மேற்கொள்ளும் நிலையில் கணவன் செல்லக்கூடிய இடம், தொழில், பிரிவு ஆகியவை மனைவிக்குத் துன்பம் தரக்கூடிய நிலையில், பிரிந்து செல்லும் கணவனை மீண்டும் பார்க்கும்வரை மனைவிக்குத் துன்பம் மிகும் என்ற நிலையில் மனைவியின் அன்பு வேண்டுகோளாக அமைவது

                      ‘வழியனுப்ப வந்த மனைவி
                       கண்ணீரோடு சொன்னாள்
                       பணம் அனுப்ப மறந்திடாதீங்க’5
    என்ற தமிழன்பனின் கவிதை வரிகளின் மூலம் இன்றைய காலகட்டத்தில் எல்லா நிகழ்வுக்கும் பணம் இன்றியமையாததாக அமைகிறது என்பதையும், பணம் இன்றி எச்செயலும் நடைபெறாது என்பதையும் உணர்த்துகின்றன.

    குடிமகனின் தவிப்பு

    பாரத திருநாட்டில் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். ஆனால் இன்று நாட்டில் மதுவிற்கு அடிமையாகி மக்கள் குடிமக்களாக இருப்பதைக் காணமுடிகிறது.

     ‘அழுதான் நம்ம அப்பு
    காந்தி சிலையைக் கட்டிப் பிடிச்சு
    போதலையாம் தண்ணி மப்பு’6

    என்ற கவிதையின் வாயிலாக நாட்டு முன்னேற்றத்திற்குத் தூணாக விளங்க வேண்டிய இளைஞர்கள் குடிப்பழக்கத்தினால் தன்னிலை மறந்து நிற்கும் அவல நிலையினை வெளிப்படுத்துகிறது.

    முடிவுரை

    கவிதைகள் மனித வாழ்க்கையோடு ஒன்றியைந்ததாகவும், சமூகத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் எளிதில் புரியும் வகையில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் கருவியாகவும் சுருங்கக் கூறி விளங்க வைப்பதன் மூலமாக அனைவராலும் விரும்பி ஏற்கக்கூடிய ஒன்றாகவும் விளங்கும் நிலையினைக் காணமுடிகிறது.

    *****

    துணை நின்ற நூல்

    தமிழன்பனின் “என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ் செடி” கவிதைத் தொகுப்பு.

    ***********************************************************************

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆய்வாளர், புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரான தமிழன்பன் அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் சமூகநிலை குறித்து இக்கட்டுரையில் ஆய்ந்துள்ளார். மிக எளிமையாகவும் எதார்த்தமாகவும் தமிழகத்தின் சமூக நிலையைக் கவிஞர் தம் கவிதைகளில் பிரதிபலிப்பதை இக்கட்டுரை நமக்கு அறியத் தருகின்றது. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆராய்ந்தால், தமிழன்பனின் “என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ் செடி” கவிதைத் தொகுப்பில் வெளிப்படும் சமூகத்தின் நிலை என்றே தலைப்பு அமையலாம். தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை எனச் சொல்வது பொருந்தாது. கவிஞரின் இதர கவிதைகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருந்தால் இக்கட்டுரை மேலும் வலிமை பெற்றிருக்கும்.

    பொதுவாக, படைப்பிலக்கியங்களின் மீது நிகழ்த்தப்பெறும் பெரும்பான்மையான ஆய்வுகள், உண்மையான ஆய்வுகளாக அமைவதில்லை. பல்வேறு ஆக்கங்களிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து, அவற்றை விளக்குவது, ஆய்வு ஆகாது. குறைந்த உழைப்பைக் கோருகிற, எளிதில் கட்டுரையை நிறைவு செய்கிற வாய்ப்பும் நோக்கமும், இவற்றில் உண்டு. ஆனால், இவற்றால் ஆய்வாளருக்குப் பெருமையோ, ஆய்வுலகிற்குப் புதிய கருத்துகளோ  கிடைப்பதில்லை. இவற்றை உணர்ந்து அசலான ஆய்வுக் கட்டுரைகளை எழுத, ஆய்வாளர்கள் முனைந்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

    ***********************************************************************

    Share
  • இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது!

    -சுரேஜமீ

    இசைக்கவி ரமணன் அவர்களுக்கு ‘வாழும் பாரதி’ விருது! – திருக்குறள் பாசறை, மஸ்கட் வழங்கியது.

    ‘இலக்கியமும் திரையிசையும்’ எனும் தலைப்பில் பேசுவதற்காக மூன்று நாட்கள் பயணமாக மஸ்கட் வந்திருந்தார் இசைக்கவி ரமணன். இனிய பல திரையிசைப் பாடல்களுக்குப் பின்னால் இருந்த தமிழ் இலக்கியங்களின் பெருமைகளை எடுத்துச் சொல்லி மஸ்கட் தமிழர்களின் இதயங்களைக் கட்டிப் போட்டார் என்று சொன்னால் மிகையல்ல.

    எழுந்து போக மனமில்லாமல், இன்னும் கொஞ்சம் தொடராதா என்ற கேள்விதான் நிகழ்ச்சியின் வெற்றி.

    மஸ்கட் மக்களுக்கு இசைக்கவி அண்ணா அவர்கள் பாரதி யார்? எனும் நிகழ்ச்சி மூலம் ஏற்கனவே பரிச்சயம் ஆகி இருந்தாலும், இந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கும், மக்களுக்குமான உறவு இன்னும் பலப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

    பாரதி யார்? எனும் நாடகத்தின் தாக்கத்தில் இருந்து இன்னும் மஸ்கட் மீண்டு வரவில்லை என்பதை, ஒவ்வொரு தமிழரும் அவருடனான உரையாடல்களில் நன்றியோடு பகிர்ந்து கொண்டனர்.

    ‘இலக்கியமும் திரையிசையும்’ நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த திருக்குறள் பாசறை அமைப்பு, ‘வாழும் பாரதி’ எனும் விருதினை ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு அளித்து தனது அன்பை அவருக்குக் காணிக்கையாக்கியது.

    தாய்த் தமிழகத்தில், அன்னாரை ‘வாழும் பாரதி’ எனத் தமிழ்ச் சான்றோர்கள் கொண்டாடினாலும், அதையே விருதாக வழங்கி,

     

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
    வான்புகழ் கொண்டது தமிழ்நாடு! எனும்

    பாரதியின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இந்த விருதை திருக்குறள் பாசறை வழங்கியது மிகவும் பொருத்தமே!

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரளான மக்கள் முன்னிலையில்,

    திருவாளர் குமார் மகாதேவன், இயக்குனர், ஓமான் சபூர்ஜி கம்பெனி அவர்கள்

    ‘வாழும் பாரதி’ என்ற விருதையும், பத்திரத்தையும்

    ஐயா இசைக்கவி ரமணன் அவர்களுக்கு வழங்கிச் சிறப்பித்தார்கள்.

    நிகழ்ச்சி அமைப்பாளர் மற்றும் திருக்குறள் பாசறை நிறுவனர் கவி. சுரேஜமீ அவர்கள் முன்னிலையில், பாரதி யார்? எனும் நாடகத்தில் மஸ்கட்டிலிருந்து தங்கள் பங்களிப்பைச் செய்த அனைத்து நடிகர், நடிகையர், குழந்தைகள் சேர்ந்திருக்க, அன்னாருக்கு இவ்விருது வழங்கப்பட்டது.

    இரண்டு நாட்கள் நிகழ்வும் இனிதே நிறைவேற, இன்பக் கனவுகளுடனும், இனி எப்போது வருவார் எனும் கேள்வியுடனும், மஸ்கட் தமிழர்கள் காத்திருக்கின்றனர்.

    இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்த திருவாளர் சுரேஷ் மற்றும் சேகர் மற்றும் நிகழ்ச்சியின் வெற்றிக்காகத் தன்னை அர்ப்பணித்த அனைத்துத் தன்னார்வத் தொண்டர்களுக்கும் திருக்குறள் பாசறை தன்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொண்டு,

    ஐயா இசைக்கவி ரமணன் அவர்கள் இன்னும் பல விருதுகளைப் பெற வாழ்த்துகிறது!

    – சுரேஜமீ
    12.1.2019

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . (288)

    அன்பினியவர்களே !

    இந்தப் புத்தம் புதிய 2019ம் வருடத்தில் உங்களுடன் கலந்துரையாட விழையும் முதலாவது மடலிது. 2018 அவசரமாக ஓடி தன்னை சரித்திரப் புத்தகத்தில் மூடப்பட்ட அத்தியாயம் ஆக்கிக் கொண்டது. 2019 புதிதாகப் பிறந்ததோர் குழந்தை போன்று எம்மிடையே தவழத் தொடங்கியுள்ளது. 2018 தன்னோடு முடிக்காமல் மூடிக் கொண்ட பல விடுகதைகளுக்கான விடைகளை இந்த 2019ல் கண்டெடுக்கும் ஆவலுடன் நாம் பலரும் மிகவும் முனைப்புடன் இயங்க ஆரம்பித்துள்ளோம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார்கள் எம் முன்னோர்கள். இந்த வழிதான் என்ன ? இதுவரை அப்படிக் கண்டுபிடிக்க முடியாத வழி ஒன்று எமக்குக் கிடைத்து விடுமா? எனும் எண்ணம் எம்மை நோக்கிப் பரிகசிப்பது போலத் தோன்றுகிறது. உண்மையில் இதன் அர்த்தம் தான் என்ன? மிகவும் இலகுவாக நம்பிக்கை என்பது புரிகிறது. ஆம் நம்பிக்கையே ஒவ்வொருவரது வாழ்விலும் முக்கிய திருப்புமுனையாக அமைக்கிறது என்பதனையே எமது முன்னோர்கள் எமக்கு உணர்த்த முயன்றுள்ளார்கள்.

    இதேபோலத்தான் 2018கூட ஒரு புது நம்பிக்கையுடன் தான் எம்மை அதனுள் அழைத்துச் சென்றது ஆனால் அந்த நம்பிக்கை எத்தனைதூரம் வெற்றியளித்துள்ளது என்பது ஒவ்வொருவரைப் பொறுத்தவரையும் வித்தியாசமானதாகவே இருக்கிறது. நாம் எதிர்பார்த்தவைகளில் எத்தனை நிறைவேறியதோ அன்றி எத்தனை ஏமாற்றமாக முடிந்தனவோ என்பது ஒருபுறமிருக்க நாமனைவரும் நம்பிக்கையோடு அடுத்த ஆண்டில் நுழையக்கூடிய வகையில் எமக்கு ஒரு சந்தர்ப்பத்தையளித்துள்ளது என்பதே உண்மையாகிறது. வாழ்க்கை என்பது ஒரு ரயில் பயணம் போன்றதே! நாம் எந்த நிலையத்தில் ஏறுகிறோம் என்பதோ அன்றி இறங்குகிறோம் என்பதே எம்மால் நிர்ணயிக்கப்படமுடியாத விடயமாகிறது. எம்மோடு எத்தனை பேர் பயணம் செய்வார்கள் என்பதோ அன்றி எவ்வளவு தூரம் பயணிப்பார்கள் என்பதும் எமது கைக்களில் இல்லை. எம்முடன் பயணிக்கும் சிலரை மட்டும் தெரிவு செய்யக்கூடிய வல்லமையே எமக்கு உண்டு. இதுதான் வாழ்வின் யதார்த்தம். இந்த வகையில் எம்மோடு பயணித்த சிலரை காலம் இறக்கி விட்டிருக்கலாம், வேரு சிலருடன் பயணிக்கப் பிடிக்காமல் நாமாக இடத்தை மாற்றிக் கொண்டிருக்கலாம், வேறு சிலரை நாமாகத் தேடி எமது பயணத்தில் இணைத்திருக்கலாம் இல்லையானல் அவர்களது பயணத்தில் இணைந்திருக்கலாம். இத்தகைய ஒரு சூழலில் தான் எமது வாழ்க்கைப்பயணத்தின் கூட்டல் கழித்தல்களை நாம் எண்ணிப்பார்க்க ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது.

    நாம் எப்படியான ஒரு உலகில் வாழ வேண்டும் என்று எண்ணுக்கிறோமோ அப்படியான ஒரு உலகத்தை நோக்கியோ அன்ரி அப்பசியான உலகத்தைன் பாதையிலிருந்து விலகியோ செல்லும் வகையிலான நிகழ்வுகளை கடந்த 2018ம் ஆண்டு நிகழ்த்தி விட்டு இலகுவாக தன்னை எம்மிடமிருந்து மறைத்து விட்டது. ஆனால் அவ்வாண்டில் நிகழ்ந்த தாக்கங்களின் விளைவுகளில் இருந்து நாம் எம்மை இலகுவாக விலக்கிக் கொள்ள முடியாது. அதற்கான வழிமுறைகளைத் தேடும் நம்பிக்கையைத் தாங்கியவாறே நாம் இவ்வாண்டினுள் நுழைந்துள்ளோம்.

    சர்வதேச அரங்கில் நிகழ்ந்த பல நிகழ்வுகளின் தாக்கங்கள் உலகை ஒரு சமாதான பூமியாக மாற்றும் வகையில் அல்லாது உலக மக்களிடையே பிரிவினைகளையும், நம்பிக்கையற்ற ஒரு நிலையைத் தோற்றும் வகையிலுமான விளைவுகளைநோக்கியதாக அமைந்துள்ளனவோ எனும் அச்சத்தை பலர் மனங்களிலும் தோற்ருவித்திருக்கிறது என்பது உண்மையே. திடமான ஜனநாயகப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் மேற்குலக நாடுகளின் அரசியல் அரங்குகளில் ஏற்பட்ட, ஏற்பட்டுக் கொண்டிருக்கும் மாற்றங்கள் ஒரு தீவிரவாத போக்கினை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றனவோ எனும் மனக்கிலேசம் அனைவர் மனங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது என்பது கசப்பான உண்மை. தம் நாட்டின் மீது கொண்ட தீவிரமான பற்று எனும் போர்வையில் தீவிர வலதுசாரப் போக்குக்கொண்ட அரசியல் தலைவர்களின் நடவடிக்கைகள் இனத்துவேஷத்துக்கு வழிகோலுக்கின்றதோ எனும் எண்ணம் மேலோங்குகிறது. வெளிநாட்டிலிருந்து மேர்குலகநாடுகளில் குடியேறுவோரின் எண்ணிக்கைக்குக் எதிரான கோஷம் என்பது இனவாத, இனத்துவேஷ வடிவெடுப்பதைத் தவிர்க்கும் வகையிலான நடவடிக்கைகள் துரிதமாக எடுக்கப்பட வேண்டிய தேவை எப்போதுமில்லாத வகையில் இப்போது அவசியமாகிறது.

    இத்தகையதோர் பின்னனியில் நாம் 2019 தமிழர் தைத்திருநாளாம் தைப்பொங்கல் தினத்தை நோக்கி நடைபயில்கிறோம். சேற்றிலே கால் பதித்து உலகோரெல்லோருக்கும் சோறளிக்கும் உழவுத் தோழர்களின் உன்னத சேவையை உணர்த்திடும் வகையில் இத்திருநாளை அனைவரும் சிறப்பிக்க வேண்டும்.கைகளிலே ரும், கண்களில்லே நீருமாக வாழ்வோர் விவசாயிகள் எனும் நிலை மாறி உழைப்போர் கைகள் உயர்ந்தோங்கும் நிலை வரவேண்டுமெனும் சீரிய எண்ணம் கொண்டு தமிழர் திருநாளைக் கொண்டாடுவோம். அனைவரும் எனது தைத்திங்கள் ம்திருநாள் வாழ்த்துக்கள்.

    மீண்டும் அடுத்த மடலில்

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வினைத்தொகையே வாழ்க்கைத்துணையாய்…!!!

    -ஆ.செந்தில் குமார்.

    படர்கொடி நீயாக.. பற்றும் கொழுகொம்பு நானாக…
    சுடரொளி நீயாக.. செல்லும் பரவெளி நானாக…
    அடர்வனம் நீயாக.. தரும் அடைமழை நானாக…
    தொடுதிரை நீயாக.. அதன் உணர்திறன் நானாக…
    எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே…
    என்றென்றும் வளர்பிறையாய் இன்பம் வளர்க..!!

    நடுபயிர் நீயாக.. அதற்கு உழுநிலம் நானாக…
    தொடுவானம் நீயாக.. அதில் விடிவெள்ளி நானாக…
    நிறைகுடம் நீயாக.. தாங்கும் பிரிமனை நானாக…
    உறைபனி நீயாக.. உகந்த சூழ்நிலை நானாக…
    எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே…
    என்றென்றும் தேய்பிறையாய் இன்னல் மறைக..!!

    தாழ்குழல் நீயாக.. சூடும் விரிமலர் நானாக…
    வீழ்புனல் நீயாக.. சேரும் அலைகடல் நானாக…
    இலங்குநூல் நீயாக.. அதில் விளங்குபொருள் நானாக…
    உலவுதென்றல் நீயாக.. உனைப் பாடுகவி நானாக…
    எந்நாளும் நந்நாளாய்.. பூமலராய்.. நம்மிடையே…
    என்றென்றும் நிறைமதியாய் வாழ்வு ஒளிர்க…!!

    Share