Blog

  • (Peer Reviewed) பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்

    முனைவர் ப.திருஞானசம்பந்தம்
    முதுமுனைவர் பட்ட ஆய்வாளர்
    தமிழியற் புலம்
    மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
    மதுரை – 21

    பதினெண்கீழ்க்கணக்கு : தமிழ் இலக்கிய வரலாற்று நூற்பதிவுகள்

    மேனாட்டாரின் சிந்தனைகள், கல்வி மரபுகள் தமிழ் மொழியைக் கற்பதிலும் அது குறித்துச் சிந்திப்பதிலும் பல புதிய அணுகுமுறைகளை ஏற்படுத்தித் தந்தன. இலக்கிய வரலாறு என்ற துறை, அத்தகைய புதிய பயில்துறைகளுள் ஒன்றாகத் திகழ்கின்றது. 1930 தொடங்கித் தமிழில் எண்ணற்ற இலக்கிய வரலாறுகள் எழுதப்பட்டுள்ளன. இன்றும் எழுதப்பட்டு வருகின்றன. தமிழ் இலக்கிய வரலாறுகள் இலக்கியங்களின் கால அடிப்படையிலும், இலக்கிய வகைமைகளின் அடிப்படையிலும், பாட நோக்கிலும் எழுதி வெளியிடப்பட்டுள்ளன.

    இந்த வரிசையில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நிலையில் இலக்கிய வரலாற்று நூல்களை எழுதியவர்கள்: பி.டி.சீனிவாச ஐயங்கார், கா.சுப்பிரமணிய பிள்ளை, தி.வை.சதாசிவ பண்டாரத்தார், மது.ச.விமலானந்தம், மு.அருணாசலம், ச.வையாபுரிப்பிள்ளை, மா.இராசமாணிக்கனார், மு.வரதராசனார், ஹெப்சிபா ஜேசுதாசு, தமிழண்ணல், கார்த்திகேசு சிவத்தம்பி, பாக்கியமேரி, அ.கா.பெருமாள், க.பஞ்சாங்கம் முதலியோர். இலக்கிய வரலாற்று நூல்களில் தமிழின் தொன்மை இலக்கணமான தொல்காப்பியம் முதல் இருபதாம் நூற்றாண்டின் இலக்கியங்கள் வரை பதிவு செய்யப்பட்டுள்ளன. இவ்விலக்கிய வரலாற்றில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் தொகுப்பு, நூற்பெயர்கள் குறித்த ஆய்வுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் காணப்படும் பதினெண்கீழ்க்கணக்குக் குறித்த பதிவுகளை இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது.

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்துச் செவ்விலக்கியப் பதிப்பு மரபிலும் ஆராய்ச்சி மரபிலும் பெரும் விவாதங்கள் நடைபெற்றுள்ளன. பதினெண் கீழ்க்கணக்கில் பதினெட்டாவதாக அமையும் நூல், ‘கைந்நிலை’ என்பது தொகுப்பு வழியும் ஆராய்ச்சியாளர்களாலும் இ.வை.அனந்தராமையரின் கைந்நிலை (1931) பதிப்பினாலும் தெளிவுபெற்றது. 1930களுக்கு முன்னர்க் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலையா? இன்னிலையா? என்ற விவாதம் பெருமளவில் முன்னெடுக்கப்பட்டது. 1915இல் வ.உ.சிதம்பரம் பிள்ளை இன்னிலையைப் பதிப்பித்த பிறகு, கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலைதான் என்று ஒரு சாரார் கருதினர். மற்றொரு புறம் இன்னிலை பொய் நூல், போலி நூல், கற்பித நூல் என்ற கருத்துகள் வலுப்பெற்றன. இறுதியாகக் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் கைந்நிலை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. பாடல்களின் எண்ணிக்கை அடிப்படையில் கைந்நிலையும் இன்னிலையும் கீழ்க்கணக்கைச் சாராத நூல்கள். திணைமாலை என்னும் பெயரிலான நூல்தான் கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்ற கருத்தும் மற்றொரு புறம் முன்வைக்கப்பட்டது. இவ்வகையான கருத்து நிலைகள், எவ்வாறு இலக்கிய வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதைக் குறித்து நுட்பமாக ஆராய வேண்டியுள்ளது.

    தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளைக் கீழ்க்கண்ட நிலைகளில் தொகுத்துக் கொள்ளலாம்.

    –           பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை

    –           பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தவை கைந்நிலையும் இன்னிலையும்

    –           பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது கைந்நிலை

    பி.டி. சீனிவாச ஐயங்கார் ஆங்கிலத்தில் எழுதிய History of the Tamils from the earliest times to the Tamils (1929) என்னும் நூல், பி.இராமநாதன் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு, தமிழர் வரலாறு (கி.பி.600 வரை) என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது. இந்நூலின் மொழிபெயர்ப்பாசிரியர் இராமநாதன் களப்பிரர் காலத்தில் தோன்றிய நூல்களாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் குறித்துள்ளார். “பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் அனைத்தும் கி.பி.500 – கி.பி.800 காலத்தவை என்பர்” (பி.இராமநாதன்: மொழிபெயர்ப்பு:2007:68). ஆனால் பி.டி.சீனிவாச ஐயங்கார் கி.பி.6-8 நூற்றாண்டில் தோன்றியனவாகக் கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடுகின்றார்.

    கி.பி.8ஆம் நூற்றாண்டு சார்ந்த முத்தரையரைக் குறித்து, நாலடியார் பாடல்கள் இரண்டு குறிப்பிடுகின்றன. களவழி நாற்பது, சோழன் செங்கணான் மீது பாடிய புறப்பாடல். ஐந்து நூல்கள் அகப்பொருள் சார்ந்தவை. களவழி நாற்பதும், இவ்வைந்து நூல்களும் பழைய புறம், அகப்பாடல் மரபின் தேய்ந்து போன கடைசிப் படைப்புகள். 12 நூல்கள் அற நூல்களாகும்; இவை அக்காலத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த சமஸ்கிருத நீதி நூல் பார்த்துப் பாடப்பட்டவை; தென் இந்தியாவில் ஆரியப் பண்பாடு நிலை பெற்றுவிட்டதைக் காட்டுகின்றன. இந்நூல்களில் பெரும்பாலானவை, யாப்பில் உள்ளனவேயொழிய கவிநயம் அற்றவை. ஆனால் அறக் கருத்துகளை நினைவிற் கொள்ளும் வகையில் மனப்பாடம் செய்ய எளிதானவை. உயர்ந்த ஒழுக்கத்தைப் புகட்டும் இவ்வறக் கருத்துகளை விஞ்சியவை வேறு எந்த நாட்டின் படைப்பிலும் இல்லை.

    (பி.டி.சீனிவாச ஐயங்கார்: பி.இராமநாதன்: மொழிபெயர்ப்பு: 2007: 236, 237)

    கீழ்க்கணக்கில் பன்னிரண்டு அற நூல்கள் உள்ளன என்று கூறும் பி.டி.சீனிவாச ஐயங்கார், அந்நூல்கள் எவை என்பதைக் கூறவில்லை. மற்றவர்களைப் போல் இவரும் பன்னிரண்டாவது நூலாக இன்னிலையைக் கருதித் தமது கருத்தை முன்வைத்துள்ளார் என்று எண்ணத் தோன்றுகின்றது.

    பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்தது இன்னிலை என்ற கருத்தை வலிறுத்தித் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் எழுதியவர்கள் கா.சுப்பிரமணிய பிள்ளை (1930), மு.வரதராசன் (1972) உள்ளிட்டவர்கள். இவர்கள் சமயச் சார்பின் அடிப்படையில் தமது கருத்துகளைப் பதிவு செய்திருக்க வேண்டும்.

    கா.சுப்பிரமணிய பிள்ளை 1930இல் இலக்கிய வரலாறு என்ற நூலை எழுதியுள்ளார். இவருக்கு முன் ஆங்கிலத்தில் எம்.எஸ்.பூரணலிங்கம் பிள்ளையாலும், பி.டி.சீனிவாச ஐயங்காராலும் இலக்கிய வரலாறு சுருக்கமாக எழுதப்பட்டுள்ளது. தமிழில் சுன்னாகம் குமாரசுவாமிப் புலவரின் புலவர் சரித்திரமும் சபாபதி நாவலரின் திராவிடப் பிரகாசிகையும் எழுதப்பட்டுள்ளது. குமாரசுவாமிப் புலவர் எழுதிய நூலில் இடம் பெற்றுள்ள புலவர் சரித்திரம் காலமுறைக்கேற்ப எழுதப்படவில்லை; அதுபோல் சபாபதி நாவலர் சில இலக்கியங்களின் இயல்புகளை மட்டுமே தமது நூலில் குறிப்பிட்டுள்ளார். இக்காரணத்தினால் தமிழில் இலக்கிய வரலாற்று நூலை முதலில் எழுதியதாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை முன்னுரையில் பதிவு செய்கின்றார். மேலும் இதன்கண் குறைபாடுகள் பல உள்ளன. அவற்றை ஆராய்ந்து திருத்தமான கொள்கைகளை வெளியிடுவதற்கு வாயிலாக இந்நூலை உருவாக்கியதாகக் குறித்துள்ளார். இந்நூலில் கடைச்சங்க காலத்தில் தோன்றிய நூல்களாகப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை இவர் அடையாளப்படுத்துகின்றார். (2007:முன்னுரை)

    பதினெண்கீழ்க்கணக்குள் ஒன்றான திருக்குறளின் காலம், திருவள்ளுவரின் காலம், திருவள்ளுவரின் வரலாறு, திருக்குறளின் சிறப்பு, திருக்குறளின் அமைப்பு, திருக்குறள் முன்வைக்கும் கருத்துகள், பரிமேலழகரின் உரை நயம், ஆகியவற்றை விரிவாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை விளக்குகின்றார். அடுத்து முப்பால் என்பது திருக்குறளைக் குறிக்காது என்ற சி.வை.தாமேதரம் பிள்ளை முதலிய அறிஞர்கள் கருதுகின்றனர்; ஆனால் முப்பால் என்பது திருக்குறள் எனப் பலரும் குறிப்பிடுகின்றனர். திருவள்ளுவ மாலையில் ‘வள்ளுவர் முப்பால்’ என்ற தொடர் இடம்பெறுகின்றது. நல்லந்துவனார், கீரந்தையார் முதலியோரும் முப்பால் என்ற தொடரைத் தனித்தனியே தமது நூல்களில் பயன்படுத்தியுள்ளனர். முப்பால் என்ற பெயரில் வேறு நூல்கள் காணப்படாமையால், திருவள்ளுவர் நூலே முப்பால் எனக் கொள்ளத்தக்கது என்கிறார் கா.சுப்பிரமணிய பிள்ளை.

    பிற கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் எதையும் குறிப்பிடாத கா.சுப்பிரமணிய பிள்ளை, சில நூல்களின் பெயர்களை மட்டுமே குறிப்பிட்டுச் செல்கின்றார்.

    ஏனைக் கீழ்க்கணக்கு நூல்களாவன, நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார்நாற்பது, ஐந்திணையைப் பற்றிய திணைமொழியைம்பது, திணையெழுபது என்ற நான்கு நூல்கள். திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், இன்னிலை, முதுமொழிக் காஞ்சி, ஏலாதி என்பன. (2007:197)

    கா.சுப்பிரமணிய பிள்ளையின் தமிழ் இலக்கிய வரலாறு எழுதப்பட்ட காலத்தில், பல பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் பதிப்பிக்கப்பட்டு, புழக்கத்தில் இருந்துள்ளன. சில நூல்கள் மட்டுமே பரவலான பதிப்பாக்கத்தைப் பெறவில்லை. இவ்வாறு இருக்க, கா.சுப்பிரமணிய பிள்ளை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளைக் குறித்த கருத்துகளை மட்டுமே விரிவாகப் பதிவு செய்திருக்கின்றார். பதினெண்கீழ்க்கணக்கு என்றாலே அனைவரின் கவனத்தை ஈர்க்கக்கூடிய நூல் திருக்குறள்தான். எனவே கீழ்க்கணக்கு நூல்களில் திருக்குறளின் சிறப்புகளைக் கூறினால், மற்ற நூல்களின் சிறப்புகளைக் குறித்ததற்குச் சமம் எனக் கா.சுப்பிரமணிய பிள்ளை கருதியிருக்க வேண்டும். இக்காரணத்தால் தமது இலக்கிய வரலாற்றில் திருக்குறளின் சிறப்புகளை மட்டும் விரிவாகக் கா.சுப்பிரமணிய பிள்ளை பேசியிருக்கின்றார் எனலாம்.

    தமிழில் உள்ள முற்கால, இடைக்கால, தற்கால இலக்கியங்களின் வரலாற்றை ஆராய்ந்து விளக்குவதாக மு.வரதராசனின் தமிழ் இலக்கிய வரலாறு (1972) என்னும் நூல் உள்ளது. இந்நூல் சாகித்திய அகாதெமியின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நூலில் மு.வரதராசன், கி.பி.1ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.5ஆம் நூற்றாண்டு வரையிலான காலகட்டத்தில் தோன்றிய நூல்களைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்று குறிப்பிடுகின்றனர். கீழ்க்கணக்கு என்பதற்கு அடிகள் குறைந்த செய்யுட்களால் ஆகிய நூல்கள் என்கிறார். பதினெட்டு நூல்களில் பன்னிரண்டு நீதி நூல்கள் என்றும் ஐந்து நூல்கள் காதல் பற்றியது என்றும் ஒரு நூல் போர் பற்றியது என்றும் மூன்றாகப் பகுக்கின்றார். கீழ்க்கணக்கு நூல்களுள் திருக்குறளையும் நாலடியாரையும் மட்டும் விரிவாகப் பேசுகின்ற மு.வரதராசன், மற்றைய நூல்களின் அமைப்பைச் சுருக்கமாகக் குறிப்பிட்டுச் செல்கின்றார். இவற்றுள் பன்னிரண்டாவது நீதி நூலாக இன்னிலையை இவர் குறிப்பிடுகின்றார்.

    நான்மணிக்கடிகை, சிறுபஞ்சமூலம், திரிகடுகம் என்பவை நூறு நூறு செய்யுள் கொண்ட நீதி நூல்கள். ஏலாதி என்பதும் நூறு செய்யுள் உடையதே. இனியவை நாற்பது, இன்னா நாற்பது ஆகியவை நாற்பது நாற்பது செய்யுள் உடைய நீதி நூல்கள்.

    பழமொழி நானூறு என்பது நாலடியார் போல், நானூறு செய்யுள் கொண்டது. ஒவ்வொரு செய்யுளின் இறுதியிலும் அது கூறும் நீதிக்கு ஏற்ற பழமொழி ஒன்று உள்ளது. ஆகவே, இந்த நூலால் நீதிகளை உணர்வது மட்டும் அல்லாமல், அந்தக் காலத்தில் வழங்கிய நானூறு பழமொழிகளையும் அறிய முடிகிறது.

    ஆசாரக் கோவை அந்தக் காலத்தில் போற்றப்பட்டிருந்த ஒழுக்க விதிகள் பலவற்றை ஓதுகின்றது. முதுமொழிக் காஞ்சி, திட்பமான சிறு சிறு தொடர்களில் நீதிகள் பலவற்றை உணர்த்துகின்றது. மற்றுமொரு நீதி நூல், நாற்பத்தைந்து செய்யுள்களால் நீதிகளை உணர்த்தும் இன்னிலை என்பது.

    (மு.வரதராசன்:2001:80)

    பன்னிரண்டாவது நீதி நூலாக இன்னிலையைச் சேர்த்துக் கூறும் மு.வரதராசன், காதலைக் குறித்துப் பேசும் அக நூல்களைக் கூறும்போது கைந்நிலையைச் சேர்த்துக் குறிப்பிட்டுள்ளார்.

    கார் நாற்பது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, ஐந்திணை எழுபது என்பவை காதல் பற்றிய பாட்டுகள் கொண்ட நூல்கள். கைந்நிலை என்ற நூலையும் அவற்றோடு சேர்த்து எண்ணுதல் உண்டு. (மு.வரதராசன்:2001:80)

    என்று குறித்துள்ளார். இக்கருத்துகளை வைத்துப் பார்க்கும்போது இவர் இன்னிலை, கைந்நிலை இரண்டையும் கீழ்க்கணக்கு நூலாகக் கருதுகின்றார் என்பது புலப்படுகின்றது. ஆனால் பதினெட்டு என்ற கணக்கிட்டு இவர் காட்டும் நூல்களின் எண்ணிக்கை பொருந்திச் சென்றாலும், கீழ்க்கணக்கைச் சார்ந்த ஐந்திணை ஐம்பது என்ற நூலின் பெயரையும், இந்நூல் அகப்பொருள் பற்றிப் பாடப்பட்டது என்ற குறிப்பினையும் மு.வரதராசன் குறிப்பிடவில்லை. இது அச்சுப் பிழையால் நேர்ந்ததா? அல்லது அவர் இந்நூலைக் கூறாமல் விட்டுவிட்டாரா? என்பது குறித்து மேலும் சிந்திப்பதற்கு வாய்ப்பு உள்ளது.

    மது.ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம் என்னும் தலைப்பில் இரு தொகுதிகளை (1987) வெளியிட்டுள்ளார். போட்டித் தேர்வு உள்ளிட்டவற்றிற்குப் பயன்படக் கூடிய கருவி நூலாக இந்நூல் அமைந்திருப்பது இதன் தனிச்சிறப்பு. பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்தும் அவற்றின் எண்ணிக்கை குறித்தும் விரிவான நடைபெற்ற விவாதங்களை உள்வாங்கிய நிலையில் மது.ச.விமலானந்தம் அவர்களின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பதிவுகள் அமைந்துள்ளன. இவற்றைப் பின்வருமாறு தொகுத்துரைக்கலாம்.

    • பன்னிரு பாட்டியல் உரை குறிப்பு, தொல்காப்பியரின் அம்மை என்னும் வனப்பிற்குச் சான்றாகப் பதினெண்கீழ்க்கணக்கு அமைகின்றமை, மயிலைநாதர், பேராசிரியர் உரைகளில் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் பெயராட்சி இடம்பெற்றுள்ளமை முதலிய செய்திகள் முதன்மை நிலையில் உள்ளன.
    • கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் பழம்பெரும் வெண்பாவை எடுத்துக்காட்டி, பதினெட்டு நூல்கள் குறித்து நிகழ்ந்த விவாதத்தை முன்வைக்கின்றார். இப்பழம்பாடலில் இடம்பெறும் ‘முப்பால்’ என்பது திருக்குறளைக் குறிக்காது என்னும் கருத்துடைய சி.வை.தாமோதரம் பிள்ளை, கே.என்.சிவராசப் பிள்ளை ஆகியோரின் கருத்துகளையும் தொகுத்துத் தருகின்றார்.
    • முப்பால் என்பது திருக்குறளே என்று கூறும் கா.சுப்பிரமணிய பிள்ளையின் கருத்தையும் எடுத்துரைக்கிறார்.
    • கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல், கைந்நிலையா? இன்னிலையா? என இருவேறுபட்ட கருத்துகள் இருந்ததைச் சுட்டி, பலரும் கைந்நிலை என்று கூறுகின்றனர் என்கிறார். பிரபந்த தீபிகை கீழ்க்கணக்கின் பதினெட்டு நூல்கள் எவை என்ற பட்டியலைத் தருகிறது என்று சுட்டுகின்றார். அதில் கைந்நிலை இடம்பெற்றுள்ளது.
    • கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டினுள் ஒன்று இன்னிலையா, கைந்நிலையா என்ற தமது கருத்தை இவர் வெளிப்படையாக முன்வைக்கவில்லை. பதினெட்டு நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகையில் கைந்நிலையின் அமைப்பையே விளக்கியுள்ளார். ஐந்திணை அறுபது (ப.60) என்ற சிறப்புப் பெயர் இந்நூலுக்கு உண்டு என்று பதிவு செய்கிறார். இதன்வழிப் பதினெண் கீழ்க்கணக்கில் கைந்நிலையைத்தான் இவர் சுட்டுகின்றார் என்ற முடிவுக்கு நாம் வர முடிகின்றது. (மது.ச.விமலானந்தம்: 1987: 103 – 104, 108)

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதங்களைத் தொகுத்து தமது இலக்கிய வரலாற்றில் பதிவு செய்யும் மது.ச.விமலானந்தம், இன்னிலை, கைந்நிலை ஆகிய இரு நூல்களின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார். ஆனால் பதினெட்டு நூல்கள் குறித்து அறிமுகப்படுத்துகையில் கைந்நிலை நூலைக் குறித்த கருத்துகளை மட்டுமே பதிவு செய்கின்றார். பதினெட்டாவது நூல் கைந்நிலை என்ற தெளிவு இவருக்கு இருப்பினும் பதினெட்டு நூல்களைத் தொகுத்துச் சொல்லுமிடத்து இன்னிலையினைச் சேர்ந்துக் குறிப்பிடுகின்றார். மற்ற இலக்கிய வரலாற்று ஆசிரியர்களுக்கு இருக்கின்ற பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த பொதுவான கருத்தே இவரிடமும் வெளிப்படுகின்றது.

    தமிழண்ணல் புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலை 1986இல் வெளியிட்டுள்ளார். இந்நூல் இலக்கிய நோக்கில் புதிய நோக்கு, தமிழக வரலாற்றுப் பின்புலம், வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்ற முப்பெருந்தலைப்புகளில் அமைந்துள்ளது. இந்நூல், பல்வகை இலக்கியங்கள், இலக்கணம், தத்துவம், உரை வகை உள்ளிட்ட பல உட்தலைப்புகளில் தமிழ் இலக்கிய வரலாற்றினை விரிவாக விளக்கிச் செல்கின்றது. இதில் பதினெண்மேற்கணக்கு, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் வகைத் தொகைகளைப் பற்றிக் குறிப்பிடுகின்றார். அதன்பின்னர், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் பழம்பாடலைத் தருகிறார் தமிழண்ணல். இப்பாடல்வழிப் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நீதி நூல்களின் எண்ணிக்கையைப் பன்னிரண்டு என்கிறார். இவர்தம் கருத்து பின்வருமாறு:

    இவற்றுள் நானாற்பது, நாலைந்திணை என்பன எட்டு நூல்களைக் குறிக்கும். இன்னிலை என்ற அறநூலை ஏற்பர் சிலர்; கைந்நிலை என்ற அறநூலை ஏற்பர் சிலர். இவற்றுள் இன்னிலை அடங்கிய நீதி நூல்கள் வருமாறு:

    1) திருக்குறள்

    2) நாலடியார்

    3) நான்மணிக்கடிகை

    4) இனியவை நாற்பது

    5) இன்னா நாற்பது

    6) திரிகடுகம்

    7) ஆசாரக் கோவை

    8) பழமொழி நானூறு

    9) சிறுபஞ்சமூலம்

     10) முதுமொழிக் காஞ்சி

    11) ஏலாதி

    12) இன்னிலை

    (தமிழண்ணல் :2011:153)

    பதினெட்டு நூல்கள் எவை என்பதை வரையறுப்பதில் தமிழண்ணல் அவர்களுக்கும் சிக்கல் இருந்துள்ளது. எனவே, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் கைந்நிலை, இன்னிலை என்னும் இரண்டு நூல்களையும் சேர்த்தே இவர் குறிப்பிடுகின்றார். பத்தொன்பது நூல்கள் குறித்தும் தனித்தனியே அறிமுகத்தைத் தருகின்றார். இதில் சங்கத் தொகை நூல்களுக்குப் பிறகு திணையிலக்கிய வளர்ச்சியினைப் பதினெண் கீழ்க்கணக்கில் காணப்படும் அகம், புறம் பற்றிய நூல்களின் மூலம் புரிந்துகொள்ள முடியும் என்ற கருத்தையும் தமிழண்ணல் முன்வைத்துள்ளார். இவ்விடத்தில் பதினெண் கீழ்க்கணக்கின் புற, அக நூல்களினைக் குறித்த அறிமுகத்தைத் தரும்போது கைந்நிலையின் சிறப்பினைக் குறிப்பிட்டுள்ளார். அப்பகுதி பின்வருமாறு:

    கைந்நிலை

    திணைக்குப் பன்னிரண்டு வெண்பாக்களாலான அறுபது பாடல்களையுடையது. இந்நூல் வெண்பாக்கள் பல சிதைந்துள்ளன. இதன் ஆசிரியர் மாறோக்கத்து முள்ளி நாட்டு நல்லூர்க் காவிதியார் மகனார் புல்லங்காடனார் ஆவார். ‘‘இவர் காலம் கி.பி.5 ஆம் நூற்றாண்டு; இந்நூலில் பாசம், ஆசை, இரசம், கேசம், இடபம், உத்தரம் ஆகிய வடசொற்கள் வந்துள. தென்பாண்டி நாட்டில் கொற்கைக்கு அண்மையில் இவர் வாழ்ந்தாராதல் வேண்டும்’’ (தி.வை.சதாசிவ பண்டாரத்தார், தமிழ் இலக்கிய வரலாறு (கி.பி.250 – 600), 1955, ப.87) எனப் பேராசிரியர் தி.வை.சதாசிவ பண்டாரத்தார் இவரைப் பற்றிக் கூறியுள்ளார்.

                                                                   (தமிழண்ணல்:2011:146, 147)

    கைந்நிலையில் இடம்பெற்றுள்ள பாடல்களின் எண்ணிக்கை, நூலாசிரியர் பெயர் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, இந்நூலாசிரியர் வாழ்ந்த இடம் குறித்த சி.சதாசிவபண்டாரத்தின் கருத்தைச் சுட்டிக் காட்டுகின்றார். இக்கருத்தில் இவருக்கும் உடன்பாடு என்ற தெரிய வருகின்றது. இதற்கடுத்து இன்னிலை நூல் குறித்த அறிமுகத்தைத் தமிழண்ணல் தருகின்றார்.

    இன்னிலை

    பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் ‘கைந்நிலை’ ஒன்றென ஏலாதவர் இன்னிலை என்ற அறநூலை ஏற்பர். வ.உ.சி. அவர்கள் இன்னிலையை உரையெழுதிப் பதிப்பித்துள்ளார். இது பொய்கையார் எழுதியது. கடவுள் வாழ்த்துடன் 46 வெண்பாக்கள் உள்ளன. அறம், பொருள், இன்பம், வீடென நான்கும் பற்றி இது பேசுகிறது. இவர் ‘ஆக்கியளித்து அழிக்குக் கந்தழியின் பேருருவே’ (30) என்று சிவனைக் குறிப்பதால் இவரைச் சிவநெறியினர் என்பர் கா.சு.பிள்ளை அவர்கள். இவர் களவழி பாடிய பொய்கையாருக்குப் பிற்பட்டவர் என்று கூறுகிறார் (கா.சு.பிள்ளை, இலக்கிய வரலாறு, 1956, ப.285).

    திரிகடுகம், பெண்ணுக்கு இலக்கணம் கூறுவதுபோல, இன்னிலையும் கூறுகிறது.

    ஒத்த உரிமையளா ஊடற்கு இனியளாக்

    குற்றம் ஒரூஉம் குணத்தளாக் – கற்றறிஞர்ப்

    பேணும் தகையளாக் கொண்கன் குறிப்பறிந்து

    பேணும் தகையினாள் பெண்.

    பெண் ஒத்த உரிமை உடையனாதல் வேண்டும் என்ற கருத்து முதலில் வைக்கப்பட்டுள்ளமை சிந்திக்கத்தக்கது.

    (தமிழண்ணல்:2011:.171, 172)

    இவ்வாறு தமிழண்ணல் கைந்நிலை, இன்னிலை என்ற இரு நூல்களையும் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல்கள் என்று குறிப்பிடுகின்றார். இன்னிலையினை வ.உ.சிதம்பரம் பிள்ளை, கா.சுப்பிரமணியப் பிள்ளை ஆகிய இருவரும் குறிப்பிடுவதன் காரணமாகத் தானும் இவற்றைக் குறிப்பிடுவதாகச் சுட்டுகின்றார்.

    தமிழண்ணல், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி.500 வரை) என்ற தலைப்பில் ஒரு நூலை 2004இல் வெளியிட்டுள்ளார். இந்நூலில் அவர் கைந்நிலையைப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த நூல் என்கிறார்.

    பதினெண்கீழ்க்கணக்கு எனும் பெயர், பிற்கால உரை நூல்களில் காணப்படுகிறது. சங்க காலத்தில் ‘கணக்காயர்’ எனும் பெயர், மொழி கற்பிக்கும் ஆசிரியரைக் குறித்தது. கணக்கு – இலக்கிய இலக்கண நூல் எனப் பொருள்பட்டது. நெடுங்கணக்கு என அகரவரிசை குறிக்கப்பட்டதும் காண்க. பத்துப் பாட்டையும் எட்டுத் தொகையையும் காலத்தால் முற்பட்டவை எனும் பொருளில் பதினெண்மேற்கணக்கு எனக் கொண்டு, இவை ‘பதினெண்கீழ்க்கணக்கு’ எனப்பட்டன. இவ்வாறு தொகுத்துப் பெயரிட்டது. கி.பி.5ஆம் நூற்றாண்டினதாகிய, வச்சிரநந்தி என்ற சமண முனிவரின், தமிழ்ச் சங்கத்தில் நடந்திருக்கலாம் என்பர்… கார்நாற்பது, ஐந்திணை ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமொழி ஐம்பது, திணைமாலை நூற்றைம்பது, கைந்நிலை என்பன அகம் பற்றியன.

    (தமிழண்ணல் :2004:163,164)

    இதன் பின்னர், கைந்நிலையை ஏற்காதவர்கள் இன்னிலையைச் சேர்த்துக் குறிப்பிடுவர் என்கிறார். இக்கருத்தைத் தமது இலக்கிய வரலாற்று நூல்களில் தொடர்ந்து தமிழண்ணல் பதிவு செய்திருக்கின்றார்.

    புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, உலகத் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் இரு நூல்களிலும் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு குறித்த தமிழண்ணல் அவர்களின் கருத்துகளைத் தொகுத்து பார்க்கையில், கைந்நிலை, இன்னிலை என்னும் இரு நூல்களையும் சேர்த்தே இவர் குறிப்பிட்டிருப்பதைப் பார்க்க முடிகின்றது. கைந்நிலை, இன்னிலை இவற்றில் தான் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்ததாக எதைக் கருதுகின்றேன் என்று குறிப்பிடாமல் பொதுவாக அனைவரும் இவ்விரு நூல்களைக் குறிப்பிடுகின்றனர் என்ற நிலையிலேயே இவரின் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் அமைந்திருக்கின்றன.

                அ.கா.பெருமாள் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் 2000ஆம் ஆண்டு முதன் முதல் வெளிவந்தது. பல பதிப்புகளைப் பெற்றுள்ள இந்நூல் முழுவதும் திருத்தப்பட்ட பதிப்பாக 2014ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இப்பதிப்பில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த பதிவுகள் இங்கு விவாதத்திற்கு உட்படுத்தப்படுகின்றன.

                சங்க காலத்திற்கு அடுத்த காலக்கட்டம், களப்பிரரின் இடையீட்டுக் காலமாக வரலாற்று அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். இக்காலத்தில் பொதுவான மக்களின் ஒழுக்கங்களும் அழகுணர்ச்சியும் வழக்காற்றில் இருந்து மறைக்கப்பட வேண்டிய சூழல் இருந்தது. இக்காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த சமண, பௌத்த, மதங்கள் பொதுவான ஒழுக்கத்தைக் கட்டாயமாக வற்புறுத்தின. இவ்வொழுக்கங்கள் இக்காலத்தில் தோன்றிய நீதி நூல்களுள் பிரதிபலித்தன. களப்பிரர் காலத்தில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றின என்பர் திறனாய்வாளர்கள். இக்கருத்துகளை முதன்மையாகக் கொண்டு பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த தமது கருத்தை முன்வைக்கின்றார் அ.கா.பெருமாள். இக்கருத்துகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துரைக்கலாம்.

    • பதினெண்கீழ்க்கணக்கு என்னும் சொல்லாட்சியினைச் சுட்டுகின்ற நன்னூலின் முதல் உரையாசிரியரான மயிலைநாதரின் உரைக் குறிப்பு, தொல்காப்பியப் பேராசிரியர் உரைக் குறிப்பு ஆகியவற்றை எடுத்துக் குறிப்பிடுகின்றார். இதன் மூலம் கி.பி.13-14ஆம் நூற்றாண்டளவில் பதினெண்கீழ்க்கணக்கு என்னும் சொல் வழக்கில் இருந்ததை அறிய முடிகின்றது.
    • மேற்கணக்கு, கீழ்க்கணக்கு என்னும் வழக்கைப் பன்னிரு பாட்டியல் தான் முதன்முதல் முன்வைக்கின்றது. அதற்குப் பிறகான பாட்டியல் நூல்கள் இப்பாகுபாட்டைச் சுட்டவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
    • பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த விவாதம் 1885இல் முடிவு பெறவில்லை என்று சுட்டியுள்ளார். ஆனால் இந்நூல்கள் குறித்த விவாதத்தை 1887இல் தமது கலித்தொகைப் பதிப்பின் மூலம் சி.வை.தாமோதரம் பிள்ளை தொடங்கினார் என்று குறிப்பிட்டுள்ளார். தொல்காப்பிய உரையாசிரியர்கள் அம்மை என்ற வனப்பினுள் கீழ்க்கணக்கு நூல்களை அடக்கியுள்ளனர்.
    • அ.கா.பெருமாள், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை இரு நிலைகளில் பகுத்துக் காட்டுகின்றார். பதினோர் அற நூல்களை ஒரு பகுதியாகவும், ஐந்து அக நூல்கள், ஒரு புற நூலை மற்றொரு பகுதியாகவும் குறிப்பிடுகின்றார். ஐந்து அக நூல்களுள் ஒன்றாகக் கைந்நிலையைச் சுட்டி ‘ஐந்திணை அறுபது’ என்று இந்நூலுக்கு வழங்கும் சிறப்புப் பெயரினையும் குறிப்பிடுகின்றார்.
    • கைந்நிலையின் ஆசிரியர் பெயர், ஐந்து திணைக்குப் பன்னிரண்டு பாடல்கள் வீதம் அறுபது பாடல்கள் இந்நூலில் உள்ளன என்று குறிப்பிடும் அ.கா.பெருமாள், குறிஞ்சித் திணைப்பாடல்கள் சுவையாகவும் மரபான உவமை நயத்துடனும் விளங்குகின்றது என்கிறார்.

                 (அ.கா.பெருமாள்:2012:102)

                பாடத்திட்ட நோக்கில் பல இலக்கிய வரலாற்று நூல்கள் தற்காலத்தில் தோன்றி வருகின்றன. அவை குறிப்புகளாகவும்  வணிக நோக்கிலும் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலைப் பாக்யமேரி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தின் மூலம் 2008இல் வெளியிட்டுள்ளார். இதில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்தும், கைந்நிலையைக் கீழ்க்கணக்குள் ஒன்றாகச் சேர்ப்பதைக் குறித்தும் குறிப்பிட்டுள்ள கருத்துகளைப் பின்வருமாறு தொகுத்து உரைக்கலாம்.

    • பதின்மேல், பதின்கீழ் என்ற இச்சொற்கள் குறித்த விளக்கம், இந்நூல்களின் பாடல் எண்ணிக்கை, நுவல் பொருள்கள் ஆகியவற்றைப் பன்னிரு பாட்டியல் வழி எடுத்துரைக்கின்றார்.
    • தொல்காப்பியம் அம்மை என்ற வனப்பிற்கு இந்நூல்களைச் சான்றுகாட்டிச் சென்றுள்ளமையும் இவர் பதிவு செய்துள்ளார். (ப.151)
    • பதினெட்டு நூல்களுள் கைந்நிலை ஒன்றா? இன்னிலை ஒன்றா? என்று வினா எழுப்பி, கைந்நிலைதான் பதினெட்டில் ஒன்று என்று தெளிவாகச் சுட்டுகிறார் ஆசிரியர். இதற்கு மு.வை.அரவிந்தனின் கருத்தை மேற்கோள் காட்டித் தானும் அக்கருத்திற்கு உடன்படுகின்றேன் என்று உரைக்கின்றார். மேலும் இன்னிலையைப் போலி நூல் என்று குறிப்பிடுகின்றார். (பக்.161, 162)
    • ஐந்திணை அறுபது என்ற பெயரையும் சுட்டுகிறார். (ப.161)
    • பதினெட்டு நூல்களுள் கைந்நிலை அடங்கும் என்று தெளிவுபடுத்திய பின்னரும் இன்னிலை குறித்த விவரங்களை இவர் தருகிறார். (ப.162)

                தமிழகத்தின் நடுப்பகுதியில் இயங்கும் கல்லூரியின் பாடத்திட்ட நோக்கில் எழுதப்பட்ட தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களைச் சு.ஆனந்தன், ஈஸ்வர், ஸ்ரீசந்திரன் ஆகியோர் தனித்தனியே எழுதியுள்ளனர். இதில் குறிப்பிடப்பட்டுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகள் வருமாறு:

                சு.ஆனந்தன் தமது தமிழ் இலக்கிய வரலாறு (2002) நூலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைக் குறிப்பிடும் பழைய வெண்பாவைச் சுட்டி, பேராசிரியரின் செய்யுளியல் உரைக் குறிப்பு, மயிலைநாதர் உரைக் குறிப்பு, கீழ்க்கணக்கு என்பதற்குப் பன்னிரு பாட்டியல் தரும் விளக்கம் ஆகியவற்றையும் எடுத்துத் தருகின்றார். மேலும் பதினெட்டு நூல்களின் பெயர், ஆசிரியர் ஆகியவற்றை இவர் அட்டவணைப்படுத்தித் தந்துள்ளார். இதில் இவர் கைந்நிலையினைப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகவே குறித்துள்ளார். பதினெட்டு நூல்களைக் குறித்த தரவுகளைத் துல்லியமாகச் சேகரித்தும் தந்துள்ளார். கைந்நிலையினைக் குறித்துக் குறிப்பிடுகையில் இந்நூலின் ஆசிரியர் பெயர், இவரது ஊர்ப் பெயர், நூலினுள் உள்ள பாடல்களின் எண்ணிக்கை, பாடல் எண்ணிக்கையின் அடிப்படையில் கைந்நிலைக்கு அமைந்த ‘ஐந்திணை அறுபது’ என்ற சிறப்புப் பெயருக்கான காரணம் ஆகியவற்றையும் இவர் பதிவுசெய்திருக்கின்றார். இறுதியாக மற்ற தமிழ் இலக்கிய வரலாற்று நூல் ஆசிரியர்களுக்கு ஏற்படுகின்ற ஐயத்தை இவரும் எழுப்பி, தாம் கைந்நிலையினைக் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகக் குறிப்பிடுவதற்கான காரணத்தைத் தெளிவாக முன்வைத்துள்ளார்.

    பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெறுவது கைந்நிலையா, இன்னிலையா எனும் ஐயம் உளது. பெரும்பாலோர் கைந்நிலையைக் குறிப்பர். பதினெட்டு நூல்களைக் குறிக்கும் வெண்பாவை ஆராயின், கைந்நிலையே சரியானது என்பது விளங்கும்.

    (சு.ஆனந்தன் : 2003 : 64)

    இவ்வாறு கைந்நிலையைப் பதினெட்டு நூல்களுள் ஒன்றாகச் சேர்த்ததற்கான காரணத்தைத் தெளிவாய்த் தந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கருத்துகளை ஜெ.ஸ்ரீசந்திரன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு, ஈஸ்வரன் எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு ஆகிய நூல்களிலும் காண முடிகின்றது.

    பாடத்திட்ட நோக்கில் எழுதப்பட்ட மற்றொரு நூல் மு.அருணாசலம், இராஜா வரதராஜா இருவரும் இணைந்து எழுதிய நூல், தமிழ் இலக்கிய வரலாறு. இந்நூலைத் திருச்சியில் உள்ள அருண் பதிப்பகம் 2012இல் வெளியிட்டுள்ளது. இந்நூலில் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்து இடம்பெற்றுள்ள கருத்துகள் வருமாறு:

    சங்க காலத்தை அடுத்துத் தோன்றிய நூல்களை வகைப்படுத்தச் ‘சங்க மருவிய கால இலக்கியங்கள்’ என்னும் பெயர் வழங்கப்படுகின்றது. இவற்றைப் பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என்றும் அழைப்பர். அடி அளவால் சிறிய பாடல்களை உடைய பதினெட்டு நூல்களின் தொகுப்பு இதுவாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சுட்டும் வெண்பா வருமாறு:

    “நாலடி நான்மணி நானாற்பது ஐந்திணைமுப்

    பால்கடுகம் கோவை பழமொழி மாமூலம்

    இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே

    கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு.”

    மேற்கூறிய வெண்பாவில் கைந்நிலைக்கு மாற்றாக இன்னிலை என்னும் நூல் இடம்பெற்றதாக ஒரு கருத்தும் உண்டு. சங்க மருவிய கால இலக்கியங்களில், பதினொரு நூல்கள் நீதி நெறிகளைப் போதிப்பதால், இக்காலத்தை நீதி நூல்களின் காலம் என்றழைப்பது பொருத்தமாகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களின் பெயர்ப் பட்டியல்:

    நீதி நூல்கள்

    1. திருக்குறள்                              திருவள்ளுவர்
    2. நாலடியார்                                சமண முனிவர்கள்
    3. நான்மணிக்கடிகை          விளம்பிநாகனார்
    4. இன்னா நாற்பது                  கபிலர்
    5. இனியவை நாற்பது           பூதஞ்சேந்தனார்
    6. திரிகடுகம்                                நல்லாதனார்
    7. ஆசாரக்கோவை                  பெருவாயின் முள்ளியார்
    8. பழமொழி                                  முன்றுறையரையனார்
    9. சிறுபஞ்சமூலம்                     காரியாசான்
    10. முதுமொழிக்காஞ்சி          கூடலூர் கிழார்
    11. ஏலாதி                                           கணிமேதாவியார்

    அக நூல்கள்

    1. கார்நாற்பது                             மதுரை கண்ணன் கூத்தனார்
    2. திணைமாலை                       மேதாவியார்
    3. ஐந்திணை                                 எழுபது மூவாதியார்
    4. ஐந்திணை ஐம்பது              மாறன் பொறையனார்
    5. திணைமொழி ஐம்பது     கண்ணன் சேந்தனார்
    6. கைந்நிலை                               புல்லங்காடனார்

    புறநூல்

    1. களவழி நாற்பது                    பொய்கையார்

    நீதி நூல்

    1. இன்னிலை                                பொய்கையார்

    (மு.அருணாசலம், இராஜா வரதராஜா : 2004 : 80, 81)

    தமிழ் இலக்கிய வரலாறு எழுதும் ஆசிரியர்கள் பலரும் இன்னிலைக்கு மாற்றாகக் கைந்நிலையைக் கொள்வர் என்று குறிப்பிடுவார்கள். ஆனால் இவ்விலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் இருவரும் கைந்நிலைக்கு மாற்றாக இன்னிலையைக் கொள்வர் என்று குறிப்பிடுகின்றனர். பதினெட்டு நூல்கள் என்ற வரையறை, சங்க மருவிய கால இலக்கியங்கள் பதினெட்டு என்று குறிப்பிட்டுவிட்டு கீழ்ப்பகுதியில் 19 நூல்களின் பெயர்களையும் ஆசிரியர் பெயர்களையும் பதிவு செய்கின்றனர். ஆனால் இன்னிலையை மட்டும் தனிப் பிரிவில் அதாவது நீதி நூல் என்ற மற்றொரு தலைப்பின்கீழ்க் குறிப்பிடுகின்றனர். மேலே கூறிய கருத்திற்கு முன்னுக்குப் பின் முரணாக இவ்விலக்கிய வரலாற்றாசிரியர்கள் கருத்துரைக்கின்றனர். கைந்நிலை, இன்னிலை இரு நூல்கள் குறித்தும் குறிப்பிட்டுள்ள கருத்துகள் பின்வருமாறு:

    கைந்நிலை

    அகப்பொருள் ஒழுக்கம் பற்றிய நூல். குறிஞ்சி, பாலை, முல்லை, மருதம், நெய்தல் என்னும் வைப்பு முறை உடையது. இந்நூலில் மொத்தம் 60 பாடல்கள் இருந்து (திணைக்கு 12) 18 சிதைந்து, இப்போது 43 வெண்பாக்கள் மட்டும் கிடைக்கின்றன. இந்நூலின் ஆசிரியர் புல்லங்காடனார்.

    இன்னிலை

    மனிதர்கள் இனிமையான வாழ்வினை அடைய வழிவகை கூறும் இன்னிலை. இதன் ஆசிரியர், பொய்கையார். 45 வெண்பாக்களை உடைய இந்நூலில், சிவபெருமான் பற்றிய குறிப்புகள் வருகின்றன. 1915இல் வ.உ.சி. இந்நூலினைப் பதிப்பித்தார்.

    (மு.அருணாசலம், இராஜா வரதராஜா : 2004 :  87, 88)

    பாடத்திட்ட நோக்கில் எழுதப்படுகின்ற தமிழ் இலக்கிய வரலாறு அனைத்தும் இது போன்ற குழப்பங்களை முன்வைத்துச் செல்கின்றன. இத்தகைய இலக்கிய வரலாற்று நூல்களை வாசிக்கின்ற மாணவர்களுக்குப் பதினெண் கீழ்க்கணக்கைச் சார்ந்த பதினெட்டாவது நூல் கைந்நிலையா? இன்னிலையா? என்ற தெளிவு கிடைக்காமலேயே போய்விடுகின்றது.

    தொகுப்பாக

    தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில் இடம்பெற்றுள்ள பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த கருத்துகளை மூன்று நிலைகளில் புரிந்துகொள்ள முடிகின்றது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களைச் சார்ந்த பதினெட்டாவது நூல் இன்னிலைதான் என்ற ஒரு சார் கருத்து. மற்றொன்று கைந்நிலைதான் கீழ்க்கணக்கைச் சார்ந்தது என்பது. இன்னொரு கருத்து, இவ்விரு நூல்களும் கீழ்க்கணக்கைச் சார்ந்தவை என்பது. இன்னிலை, பதினெண் கீழ்க்கணக்கில் ஒன்றாகப் பதிப்பிக்கப்பட்ட காரணத்தினாலேயே இன்றுவரை ஒரு போலி நூல், இலக்கிய வரலாற்றுத் தரவினுள் இடம்பெறுவது கேள்விக்குரியது. முடிவான நிலைப்பாடு இது என இனிவரும் காலங்களில் இலக்கிய வரலாற்றினை எழுதும் ஆசிரியர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

    பாடத்திட்ட நோக்கில் எழுதப்படும் இலக்கிய வரலாற்று நூல்கள், இத்தவறான கருத்தினை மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகின்றன. இனிவரும் காலங்களில் எழுதப்படுகின்ற இலக்கிய வரலாற்று நூல்களை எழுதுகின்ற ஆசிரியர்கள் உண்மைத் தன்மையை உரிய வகையில் ஆராய்ந்து உரிய கருத்துகளை மட்டுமே இலக்கிய வரலாற்றில் பதிவு செய்ய வேண்டும் என்பதையே இக்கட்டுரை வலியுறுத்துகின்றது.

    சான்றாதார நூல்கள்

    1972    மு.வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதெமி, புதுதில்லி.

    1998    ஜெ ஸ்ரீசந்திரன், தமிழ் இலக்கிய வரலாறு, சென்னை.

    2000    வி.செல்வநாயகம், தமிழ் இலக்கிய வரலாறு, குமரன் பதிப்பகம், முதல் பதிப்பு        1951, சென்னை – இலங்கை.

    2003    சு.ஆனந்தன், தமிழ் இலக்கிய வரலாறு, கண்மணி பதிப்பகம், திருச்சி, திருத்திய     பதிப்பு, முதல் பதிப்பு 2002.

    2004    கா.சுப்பிரமணிய பிள்ளை, தமிழ் இலக்கிய வரலாறு, காவ்ய பதிப்பகம், முதல்        பதிப்பு 1930, சென்னை.

    2004    தமிழண்ணல், உலகத் தமிழிலக்கிய வரலாறு (தொன்மை முதல் கி.பி. 50 வரை),    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, முதல் பதிப்பு.

    2005    மது.ச.விமலானந்தம், தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம், முதல் தொகுதி,      ஐந்திணைப் பதிப்பகம், சென்னை.

    2007    பி.டி.சீனிவாச ஐயங்கார், தமிழர் வரலாறு (கி.பி.600 வரை), தமிழாக்கம் :   பி.இராமநாதன், தமிழ்மண், சென்னை (முதல் பதிப்பு 1929).

    2008    பாக்யமேரி, வகைமை நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, நியூ செஞ்சுரி புக்          ஹவுஸ், சென்னை.

    2011    தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக   நிலையம், மதுரை.

    2012    அ.கா.பெருமாள், தமிழ் இலக்கிய வரலாறு, சுதர்சன் புக்ஸ், நாகர்கோவில்.

    2012    மு.அருணாசலம், இராஜா வரதராஜா, தமிழ் இலக்கிய வரலாறு, அருண் பதிப்பகம்,            திருச்சி.

    –           ஈஸ்வரின், தமிழ் இலக்கிய வரலாறு, பாவை பதிப்பகம், மதுரை (பதிப்பாண்டு       இல்லை).

    ===========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    இலக்கிய வரலாறு குறித்த ஆய்வுகள் அதிகம் முன்னெடுக்காத சூழலில் ஆய்வாளர் தம் முயற்சியை மேற்கொண்டுள்ளார். பதினெண்கீழ்க்கணக்குத் தொகுப்பு நெறியில் உள்ள சிக்கல்களைக் குறிப்பிட்ட சில இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் மூலமாகத் தெளிவை முன்வைக்கும் தன்மையில் தம் கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். இலக்கிய வரலாற்று எழுதுநெறியில் ஈடுபட்ட ஆசிரியர்களின் மெத்தனப் போக்கை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளார். இன்னிலை மற்றும் கைந்நிலை நூல்கள் குறித்து மூன்று விதமான புரிதல்களை இலக்கிய வரலாற்று நூல்கள் பதிவு செய்துள்ளமையை விவாதத்திற்கு உட்படுத்தியுள்ளார். வணிக நோக்கில் தரமற்ற இலக்கிய வரலாறு எழுதுவதை ஒரு பெரும் குறையாகக் குறிப்பிட்டுள்ளார். தொடக்க கால இலக்கிய வரலாற்று ஆசிரியர்களின் எழுதுநெறிக்கும் தற்கால இலக்கிய வராற்று ஆசிரியர்களின் எழுதுநெறிக்கும் உள்ள முரண்களை ஆய்வாளர் சுட்டிக் காட்டியுள்ளார். ஆய்வாளர் மயிலை. சீனியின் பத்தொன்பதாம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு என்னும் நூலினையும் ஆய்வுக்கு உட்படுத்தி இருப்பின் ஆய்வு மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். எனினும், இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்.

    ===========================================

     

    Share
  • உறைந்த வர்ணம்

    இரமேஷ் அர்ஜூன்
    1
    ஒளியில் கரைந்த நிழல்
    உள் வெளி நிறைந்த ஒளி
    வார்த்தை தேடும் மௌனம்
    மௌனம் பேசும் மொழி
    மறித்துப் போன ஆசை
    நிலைத்து கிடக்கும் ஏக்கம்
    அசைத்துப் பார்க்கும் ஓவியம்
    ஆட்டிப் படைக்கும் இசை
    நேற்று பெய்த மழை
    இன்று பூத்த பசுமை
    இவைதான்
    முடிந்த வாழ்வில்
    முழு நிலவின் ஒளியென
    நிழலாடுகிறன
    கனவொன்றின் கடைசித் துளியில்…

    2
    கிழித்தெறியப்பட்ட
    அழகிய ஓவியம் ஒன்றில்
    உறைந்து கிடக்கிறது
    வர்ணம்

    சிவப்பு மையில்
    எழுதப்பட்டு விட்ட
    ஓவியக் கிழிசல்களில்
    சொட்டிக்கொண்டிருக்கிறது
    வர்ணத்தின் கலவை

    வர்ணங்களைக் கடந்து
    பார்த்திராத நிறக்குருடர்கள்
    நெஞ்சில் எழுதட்டும்
    நீரின் வர்ணம்
    எது என்ற கேள்வியை…

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 2

    நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 2 – வான் சிறப்பு

    குறள் 11:

    வானின் றுலகம் வழங்கி வருதலால்
    தானமிழ்தம் என்றுணரற் பாற்று

    நாம இருக்க இந்த ஒலகத்த வாழ வெக்கதால மழைய அமிழ்தம் னு சொல்லுதோம்.

    குறள் 12:

    துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
    துப்பாய தூஉம் மழை

    வயக்காட்டுல வெளைச்சலுக்கு உதவுத மழைத் தண்ணி , பொறவு வெளஞ்சத வச்சி தின்னும்போதும் தாகத்துக்கு குடிக்கவும் ஒதவுது.

    குறள் 13:

    விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
    உள்நின் றுடற்றும் பசி

    ஒலகத்த சுத்தி கடல் தண்ணி இருந்துச்சினாலும், மழ பெய்யலேனா வெள்ளாம பாக்க முடியாம வயித்து பசி மனுசன வாட்டி வதைக்கும்.

    குறள் 14:

    ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
    வாரி வளங்குன்றிக் கால்

    மழை ங்குத வருமானம் இல்லைன்னா வெவசாயி வெள்ளாம பாக்க மாட்டான்.

    குறள் 15:

    கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
    எடுப்பதூஉம் எல்லாம் மழை

    பொழியாம சனத்த நோகடிக்குத மழை பொறவு பொழிஞ்சு அவுகளுக்கு ஆதரவா நல்லதும் செய்யும்.

    குறள் 16:

    விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
    பசும்புல் தலைகாண் பரிது

    வானம் பாத்த பூமியில மழத்துளி விழலேன்னா புல்லோட தலையக் கூட காங்க முடியாது.

    குறள் 17:

    நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
    தான்நல்கா தாகி விடின்

    மேகம் கடல்லேந்து மோந்த தண்ணிய திரும்ப மழையா பொழியாம உட்டிச்சிதுன்னா கடல் தண்ணியும் வத்தி போவும்.

    குறள் 18:

    சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
    வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு

    மழ பெய்யாம போச்சுன்னா சாமிக்கு தினமும் பூசையும் நடக்காது, வானவர்க்கு நடக்க திருவிழாவும் நடக்காது.

    குறள் 19:

    தானம் தவமிரண்டும் தங்கா வியனுலகம்
    இனம் வழங்கா தெனின்

    மழை பெய்யாமப் போச்சுதுன்னா மத்தவனுக்கு தானமும் செய்ய இயலாம , தான் நோம்பு இருக்கவும் மாட்டாம மனுசனுக்கு தடங்கலா வந்து முடியும்.

    குறள் 20:

    நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும்
    வானின் றமையா தொழுக்கு

    எத்தாம்பெரிய மனுசனாலயும் தண்ணி இல்லாம இருக்க முடியாது. அந்த தண்ணிய கொடுக்குத மழை பெய்யாம போச்சுதுன்னா ஒலகம் ஒழுக்கங் கெட்டுச் சீரளியும் னு உணந்து நடக்கணும்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • சேக்கிழார் பா நயம் -21

    திருச்சி புலவர் இரா. இராமமூர்த்தி

    சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருமணத்துக்குப் புறப்பட்ட காட்சியை, சேக்கிழார் மிகவும் நயம்படப் பாடுகிறார்! சுந்தரர் அந்தணர் குலத்தில் அவதரித்தாலும், அரசரின் வளர்ப்பு மகனாக வளர்ந்தார்! அவருக்கு அந்தணர்குல வழக்கப்படி, ஜாதகரணம், நாமகரணம், உபநயனம் ஆகிய சடங்குகளை அவர் பெற்றோர் நிறைவேற்றினர். அதன் பின் அவர் திருமணத்துக்கு ஏற்ற பருவம் அடைந்த பின் அவருக்கு உரிய மணமகளாக புத்தூர்ச் சடங்கவி சிவாச்சாரியாரின் மகளைக் குலம், கோத்திரம் ஆகியவற்றை ஆராய்ந்து பொருத்தம் பார்த்து, இருவருக்கும் பொருந்திய மணநாள், முகூர்த்த நேரம், இவற்றைக் குறித்தனர். அரசரின் வளர்ப்பு மகனாதலால் பலநாட்டினருக்கும், மணவோலை அனுப்பினர்! இறைவன் சுந்தரரைத் தடுத்து ஆட்கொள்வதை அனைவரும் காண வேண்டும் என்ற நுட்பமான கருத்து இதில் புலப்படும்!

    சுந்தரருக்குத் திருமஞ்சனம் ஆட்டி, அவருக்கு இருவகையான அலங்காரங்கள் செய்தனர்! அரசரின் வளர்ப்புமகன் ஆதலால், அரசர் பெருங்கோலமும், அந்தணர் மைந்தன் ஆதலால் வைதிகப் பெருங்கோலமும் செய்தனர்! அதாவது தமக்கு உரியதல்லாத மன்னவர் திருவுக்கேற்ப, வைதிக முறையில் ‘’தூய நறிய பச்சைக் கர்ப்பூரச் சுண்ணத்துடன் அழகிய பூக்களிலிருந்து ஆகிய தண் பனிநீர் கூட்டிச் செய்த சந்தனக் குழம்பைப் பூசி, கத்தூரி சேர்ந்த கலவைச் சாந்தையும் அணிவித்து; அதன்பின் விதிப்படி அணியும் பூணூலை மார்பிலும் பவித்திரத்தைக் கையிலும் விளங்கவைக்க, அவ்வாறு பவித்திரங்கொண்ட கையினராய் வைதிகத் திரு வுடையர் ஆனார்!.. அடுத்து அரசத் திருவாகிய தூய மலர்களால் ஆகிய பிணையல் – மாலை – கண்ணி – கோதை – தாமம் என்ற பலவகை மலர்மாலைகளையும் சாத்த அணிந்து, ஒளி மிகுந்த மணிகளிழைத்த தூய பொன் மணி மாலைகளையும் சாத்த அணிந்து கொண்டார்! இதனைச் சேக்கிழார்,

    ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க ‘’

    என்று பாடுகிறார்! இதைக்கண்ட அவ்வூர் மக்கள் திருவிழாவாகக் கொண்டாடினர்! அப்போது நம்பி ஆரூரர், தம்மைக் கைலாயத்திலிருந்து அனுப்பிய சிவபெருமானின் திருவடிகளை, உள்ளத்துள் எழுந்தருள வைத்துக் கொண்டு, அந்த உரிமையைக் காட்டத் தக்க திருநீற்றை முறையாக அணிந்து கொண்டார்! மேலும் இவர் கைலையில் இறைவனுக்குத் திருநீறு ஏந்தி அணைவார் என்பது குறிப்பு.

    அப்போது பொன்னாலாகிய அணிகளைப் பூண்ட அடியார்கள், சுந்தரராகிய மணமகனை, அக்கால முறைப்படி ஓர் உயர்ந்த குதிரையை அலங்கரித்து, அதன் மேலேற்றி ஊர்வலமாக வந்தனர்! இதனைச் சேக்கிழார்,

    ‘’பொன்னணி மணியார் யோகப் புரவி மேற்கொண்டு போந்தார்!’’

    என்று பாடுகிறார்! இங்கே சுந்தரர் ஏறிவந்த குதிரை, ‘’யோகப்புரவி ‘’ என்று குறிக்கப் பெறுகிறது. நம் உயிர், மிகுந்த தியானம் செய்தால் யோகசாதனை என்ற இறைமையின் இணைப்பைப் பெறலாம்! மணமகனும், மணமகளும் இல்வாழ்வில் இணையும் இன்பநிலையுடன், இறைவனை அணுகும் யோகமுறையை இங்கே குறிப்பிடக் காரணம் உண்டு! கம்பராமாயணத்தில், இராமனும் சீதையும் திருமணம் புரிந்து கொண்ட நிகழ்ச்சியை,

    ‘’மன்றலின் வந்து மண தவிசு ஏறி
    வென்றி நெடும் தகை வீரனும் ஆர்வத்து
    இன் துணை அன்னமும் எய்தி இருந்தார்
    ஒன்றிய போகமும் யோகமும் ஒத்தார்!’’

    என்று கம்பர் பாடுகிறார்! இராமனை வென்றி நெடுந்தகை வீரனும் என்று கம்பர் கூறுகிறார்! தன் ஆற்றல் புலப்பட, வில்லை வளைத்து , ஒடித்து சீதையை போகம் கருதி மணந்து கொண்டமையால் இராமன் அவ்வாறு கூறப்பெற்றான். ஆனால் சீதையைக் கம்பர், ‘’ஆர்வத்து இன்துணை அன்னமும்‘’ என்று பாடுகிறார். சீதை இராமன் என்னும் ஆன்ம நாயகனுடன் என்றுமே இணைந்து வாழும் தன்மை உடையவள்! சீதையை அன்னம் என்று கம்பர் கூறியது இராமனிடம் மானுடத் தன்மையால் நிகழும் பிழையை நீக்கி, பாலில் சேர்ந்த நீரைப் பிரித்து நீக்கும் அன்னப்பறவை போல, தியானத்தால் இராமனின் குறையை நீக்கி இறைவனாகிய தலைவனுடன் இணையும் யோகத்தை அவள் பெறுவாள், என்பதை குறிப்பிடவே! அதுகருதியே ‘’தேவியைப் பிரிந்த போதெல்லாம் இராமன் திகைத்தான்! ஆகவே, இவர்கள் திருமணம் புரிந்து கொண்டதைக் கம்பர் ‘’ஒன்றிய யோகமும் போகமும் ஓத்தார்!’’ என்று பாடினார்! அவ்வாறே சுந்தரர் சடங்கவி மகளை மணந்து கொள்ளாமல் , யோக நிலையில் இறைவனுக்குத் தோழராய் சைவத் திருமுறையாகிய பாடலைப் பாடி இணைந்து கொள்ளப் போகும் சிறப்பை இங்கே முன்நிகழ்ச்சியாய்க் குறிப்பிடுகிறார்! சுந்தரர் ஏறிய யோகப் புரவி, பின்னரும் பரவையார், சங்கிலியார் இருவருடனும் இறைப்பணியாகிய, தியான யோகம் செய்து மீண்டும் கைலாயம் சென்று வாழப் போவதையும் குறித்தது! இனி முழுப் பாடலையும் பாடி மகிழ்வோம்!

    ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க
    நன்னகர் விழவு கொள்ள நம்பிஆ ரூரர் நாதன்
    தன்னடி மனத்துள் கொண்டு தகும்திரு நீறு சாத்திப்
    பொன்னணி மாமியார் யோகப் புரவிமேற் கொண்டு போந்தார்!’’

    இப்பாடலின் நயம் மிக்க தொடர்கள் நமக்குச் சமயத் தெளிவை உணர்த்துகின்றன !

    Share
  • படக்கவிதைப்போட்டி 196-இன் முடிவுகள்

    மேகலா இராமமூர்த்தி

    புள்ளிக்கோலம் போடும் இந்தப் பாவையைப் புகைப்படமெடுத்தோர் வரிசையில் தாமும் ஒருவராய்த் திகழ்ந்து படமெடுத்துவந்திருப்பவர் திருமிகு. ஷாமினி. இப்படத்துக்குப் படக்கவிதைப் போட்டியில் இடம்தந்தவர் திருமதி. சாந்தி மாரியப்பன். படம்தந்தவர், போட்டியில் அதற்கு இடம்தந்தவர் இருவருக்கும் உரித்தாகின்றது என் நன்றி!

    வீட்டை மிளிரவைக்கும் அழகுக் கலைகளில் ஒன்று கோலம். கோலம் என்றாலே அழகு என்றுதானே பொருள்? கோலமிடுவது இல்லத்துக்கு அழகூட்டுவதோடு மட்டுமல்லாமல் கரங்களுக்கு நல்ல பயிற்சியாகவும், ஊற்றெடுக்கும் புதிய கற்பனைகளை வெளிப்படுத்தும் முயற்சிக்கு உற்றதோர் வாய்ப்பாகவும் அமைகின்றது. அனைத்திற்கும் மேலாய் அரிசி மாவினால் கோலமிட்டால் சிறு பூச்சிகளும் எறும்புகளும் அதனை உண்ணும். அதிகாலையிலேயே உயிர்களுக்கு உணவிட்ட மனமகிழ்வும் நமக்குக் கிட்டும்.

    இனி, இப்படம் குறித்துத் தம் கருத்துரைக்கக் காத்திருக்கும் அருமைக் கவிஞர்களைக் கனிவோடு வரவேற்போம்! அவர்தம் கவிமொழி கேட்போம்!

    *****

    மார்கழிப் பனியில் நனைந்தபடி இனிய கோலமிடும் நங்கையர்க்குப் போட்டி வைத்து, பரிசளிப்பதற்காகக் கோலத்தைப் படமெடுக்கும் ஆர்வலர்களை மனப்பூர்வமாக வாழ்த்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வாழ்த்துவோம்…

    மார்கழிப் பனியில் நனைந்தேதான்
    மங்கைய ரெல்லாம் தெருவிலொன்றாய்ச்
    சேர்ந்தே காலையில் கோலமிட்ட
    சீரிய காலம் மாறிடினும்,
    தேர்வுகள் வைத்தே அவற்றிற்குத்
    திறமை சார்ந்த பரிசளித்தும்
    ஆர்வ மோடு படம்பிடிக்கும்
    ஆர்வ முள்ளோர் வாழியவே…!

    *****

    ”அழகுக்கோலமிடும் முகங்காட்டாச் சோதரியே! ஒளிக்கோலங்களின் ஒவ்வாமை மொழிகளால் உன் விழிக்கோளங்களில் வெம்மை நீர்வீழ்ச்சிகள் உருவாகக்கூடும். வேலியற்ற இணையவெளியில் உலவும் காலிகளால் இலைமறை காயாய் இருந்தனவெல்லாம் இப்போது இலவசங்கள் ஆயின. ஆகவே குனிந்தது போதும்; நிமிர்தல் செய்!” என்று கோலமிடும் பெண்ணை அன்போடு எச்சரிக்கின்றார் திரு. யாழ் பாஸ்கரன்.

    நிமிர்தல் செய்

    முற்றுப்புள்ளிகளை முழுமையாக்கி அழகுக் கோலமிடும்
    முகம் காட்டா சகோதரியே முழுக்க மூழ்கியது போதும்
    முதுகுப்பக்கம் கொஞ்சம் முகம் திருப்பு- உன்னை முற்றுகையிட்டுள்ள
    மூன்றாம் கண்ணின் பார்வைகள் முற்றுப் பெறட்டும்

    மாக்கோலம் தவறானால் மலர்க்கோலம் தீட்டிடலாம்
    பூக்கோலம் சிதறிவிட்டால் புதுக்கோலம் போட்டிலாம்
    நிலக்கோலமிட்டது போதும் நிமிர்தல் செய் சற்றே இல்லையேல்
    வாழ்கைக் கோலம் அலங்கோலம் ஆகிவிட்டும்

    காட்சிப்பிழைகளையே ஆட்சியில் ஏற்றும்
    மாட்சிமை மறந்த பூகோள மானுட சமூகத்தின்
    காட்சி ஊடகக் கலிகாலம் இதில் சிறுகவனச் சிதைவும்
    சாட்சியாகிச் சங்கடங்கள் பல தந்துவிடும்

    பழுதடைந்த பார்வை விழிமூடர்களின்
    பாலின வன்முறை வெறியாட்டங்களினால்
    பலாத்காரமாய்ச் சீரழிக்கப்பட்டுப் பாவம் பெண்மையே
    பலியாடுகளாய் எப்போதும் வெட்டுப்படுகிறது

    ஒளிக்கோலங்களின் ஒவ்வாமை மொழிகளால் உன்
    விழிக்கோளங்களில் வெம்மை நீர்வீழ்ச்சிகள் உருவாகலாம்
    வேலியற்ற இணைய வெளியின் வழிகளில் முட்களாய்
    போலிக் கலைக்காலிகள் பசுத்தோல் போர்த்தியபடி

    இலைமறைகாயாய் இருந்தன எல்லாம்
    இலவசமாய் இங்கு பதிவிறக்கக் கிட(டை)க்கிறது
    இளந்தாரிகளின் இலக்கற்ற விடுதலை உரிமைக்கும்
    இலக்குவன் கோடுகள் சில இங்கே தேவையாகிறது

    *****

    வெவ்வேறு கோணங்களில் இப்படத்தை அணுகிப் புதிய புதிய சிந்தனைகளை நமக்குத் தந்திருக்கும் கவிஞர்களைப் பாராட்டுவோம்!

    அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிதை நம் கவனத்துக்கு…

    வாழ்க்கைக் கோலம்!

    நெளிந்து கொடுக்கக் கற்றால்
    நேராகும் நம் வாழ்வு என
    வாழ்க்கைப் பாதையை
    விளக்கும் பாதைக் கோலம்
    அழகான இடைப்புள்ளி
    அன்றைய உன் துன்பங்கள்
    வரிசையாக உன் இடர்களை
    வகையான புள்ளிகளாய் இட்டு
    நெளி வலைக்குள் சிறையாக்கு
    நிஜ வாழ்வின் சோகங்களை
    கண்டவர் படமெடுக்க விழையும்
    கண்கவர் காட்சியாய்
    அழகாக மாறும் வாழ்வு
    அருமையான நெளிக்கோலமாய்
    முகம் காட்டா நங்கை சொல்லும்
    முத்தான பாடமிது
    இடர்களைச் சிறையாக்கி
    இயன்றவரை வளைந்து கொடு
    மீண்டும் அசைபோடாது
    மீளாத் துயரத்தில் வீழாது
    வெளிவந்த பின்னே வாழ்க்கை
    வெளிச்சமாகும் வசந்தமாகும்!

    ”கோலத்தின் இடைப்புள்ளிகளே உன் துன்பங்கள்; அவற்றைப் பிறரறியாது சிறைப்படுத்து! நெளிந்துசெல்லும் கோடுகளாய் இயன்றவரை வளைந்துகொடுத்து வாழ்வை முறைப்படுத்து. பளிச்சென வெளிச்சமாகும் உன் வாழ்க்கை!” எனச் சிக்குக் கோலத்தை வைத்து வாழ்வின் சிக்கலெடுக்கும் வித்தையை விளம்பியிருக்கும் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (297) – ப்ராஞ்சல் கச்சோலியா

    -விவேக்பாரதி

    இல்லங்கள் என்பன அன்பின் ஆதாரங்கள். நமக்கு நாமே சேர்த்துக் கொள்ளும் வரங்கள். “எலிவளை ஆனாலும் தனிவலை வேண்டும்” என்று பழமொழி சொல்கிறது அல்லவா! அத்தகைய சிறப்பினை நமது சமூகத்தில் எப்போதும் இடம்பிடித்து இருப்பன வீடுகள் தாம். சின்னச் சின்ன வீடுகளில் தொடங்கி பெரிய பங்களாக்களும், அரண்மனைகளும், அடுக்கடுக்காய் பல மாடிகளைக் கொண்ட அடுக்ககங்களும் சூழ்ந்த நாடு நம் நாடு. இத்தகைய நவீன இல்லங்களை சமூகத்தினர் தற்போது அலங்காரப் படுத்துவதில் காட்டும் அக்கரையும் நேர்த்திகளும் பார்ப்பவர் கண்களையும் சிந்தனையையும் சேர்த்துக் கவர்ந்திழுக்கும் வல்லமை பொருந்தியவை. பல கலவையில் கண்களைச் சுண்டி இழுக்கும் வண்ணங்கள், அழகான வேலைப்பாடுகள், அம்சமான விதான அமைப்புகள். மக்கள் தங்கள் கலைநயத்தைக் குடியிருக்கும் வீடுகளில் காட்டி மகிழ்வதும் மகிழ்விப்பதும் எந்தக் காலத்திலும் மாறாத ஒன்று. நிற்க! என் பணி இங்கே வல்லமையாளரை அறிமுகம் செய்வது, அதனை விடுத்து ஏன் இல்லங்களின் அழகினை விவரித்துக் கொண்டிருக்கிறேன் என்ற எண்ணம் உங்களுக்குள் இந்நேரம் எழுந்திருக்குமாயின் அதற்கான விடையை இங்கே தருகிறேன்.

    இந்த வார வல்லமையாளர் நமது இல்லங்களைப் புதுவிதமாக மேம்படுத்தும் உத்தியைக் கண்டு கொண்டவர். ஆம்! அலங்காரங்கள் பெறுகின்ற வீடுகள் அதற்கடுத்து பெறப்போவது அறிவை. இன்றைய கணினி மயமான வாழ்க்கை மனிதர் சௌகர்யத்தை எப்படியெல்லாம் உயர்த்துகின்றது பாருங்கள்! இன்றைக்கு எல்லாரது வீடுகளையும் மின்சாரம் ஆள்கின்றது. மின்சாரம் இல்லாத / பயன்படுத்தாத வீடுகளைச் சுட்டிக் காடுதல் அரிது. இவ்வளவில், மின்சாரச் சிக்கனம் குறித்தும் சேமிப்பு குறித்தும் மக்களிடை பரவலாக விழிப்புணர்வுகளும் நிகழ்ந்த வண்ணம் உள்ளது. மின்சாரத்தைச் சேமிப்பது மூலம், நம் பங்கிற்குச் செலவைக் குறைக்கும், சமுதாயத்தில் மின்சாரம் எட்டும் தொலைவில் இல்லாத ஊர்களையும் சென்றடையும். இந்தக் கோட்பாட்டை நாம் எளிமையாகச் செய்ய தேவைக்கு மீறி இயங்கும் மின் சாதனங்களை நிறுத்தி வைப்பதொன்றே போதும்.

    கை தட்டினால் இயங்கும் மின் விளக்குகள், ஆள் நடமாட்டத்தை அறிந்து இயங்கும் குளிர்சாதனங்கள் என்று இன்றைய அறிவியல் உலகம் இந்த மின் சேமிப்பை இன்னும் எளிமைப் படுத்தித்தான் இருக்கிறது. அந்த வகையில், சாதனை புரிந்து வல்லமையை நிரூபிக்கிறார் இந்த இளம் விஞ்ஞானி. ஸ்மார்ட் ஃபோன் மயமாகிப் போன நமது வாழ்க்கையில் மின் சாதனங்களையும் ஓர் செல்ஃபோன் செயலி மூலம் இயக்குகின்ற உபகரணங்களைக் கண்டுபிடித்துள்ளார் ஐஐடி டில்லியைச் சேர்ந்த மாணவர் ப்ராஞ்சல் கச்சோலியா. மிகவும் எளிய முறையில் வீட்டின் எந்தவொரு மின் சாதனத்தையோ மாற்றாமல் அப்படியே இருக்கும் மின் கம்பிகளுக்கு ஊடே சாதாரணமாக ஒரு செயற்கருவியைப் பொருத்தலின் மூலம் உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் நமது வீட்டில் இருக்கும் மின் சாதனங்களை இயக்கும் செயலியை இவர் உருவாக்கியுள்ளார், இதனை ஈடன் ஸ்மார்ட் ஹோம்ஸ் என்ற நிறுவனம் முழுவுதவி செய்து உலகச் சந்தைகளுக்குக் கொண்டு சேர்க்கின்றது.

    அதன் விளம்பரக் காணொலி,

    மாணவராகவும் அறிவியல் மூலம் அன்றாட வாழ்வியலில் மாற்றம் கொணர விரும்பிய விஞ்ஞானியாகவும் பரிமளித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவர் திரு ப்ராஞ்சல் கச்சோலியா அவர்களை இந்த வாரத்தின் வல்லமையாளர் என்று அறிவிப்பதில் பேருவகை எய்துகிறோம். வல்லமை மின்னிதழ் குழுமம் இன்னும் பல அத்யாவசியமான படைப்புகளை இவர் உலகத்திற்கு வெளிக்கொணர வாழ்த்துகிறோம்.

    சிக்கனம் அதனைச் சிறுவயதில்
    சிறப்புடன் செய்ய! மின்சார
    மக்களெல் லாரும் வாழ்வினிலே
    மதித்திடும் வண்ணம் கண்டெடுப்பைப்
    பக்கமாய்ப் பலமாய்ச் செய்தவரும்
    ப்ராஞ்சல் கச்சோலியா அவர்கள்
    மிக்கவே இன்னும் கண்டெடுக்க
    வல்லமை யாளர் உயர்விருதே!!

    (“வல்லமையாளர்” என்று நீங்கள் பரிந்துரைக்க விரும்பும் நபர்களைப் பற்றி வல்லமை ஆசியர் குழுவிற்குத் தெரியப்படுத்த tamiludanvivekbharathi@gmail.com அல்லது vallamaieditor@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பவும்)

    இதுவரை விருது பெற்றிருப்போர் பட்டியலைக் காணக் கீழே சொடுக்கவும்.
    http://www.vallamai.com/?p=43179

    Share
  • பம்பரச் சாட்டை

    -விவேக்பாரதி

    ஆடு கின்றதோர் பம்பரம் நாமெலாம்
    ஆட்டு விப்பவன் யாரெனக் கூறடா
    பாடு பட்டவர் பாட்டினில் வாழ்ந்தவன்,
    பாரின் சுற்றினில் பற்றிடா துள்ளவன்,
    நாடு மத்தனை ஆசையும் எண்ணமும்
    நண்ணி டாத்தொலை வெட்டியி ருப்பவன்,
    காடு மேடுகள் சுற்றுமெய்ஞ் ஞானியர்
    காணும் சக்தியாங் கைதொழ வேண்டிடும்,

    கோவில் எங்கிலும் உள்ளுறை தெய்வதம்,
    கொள்கை கொண்டுவாழ் போகியர் நெஞ்சினில்
    ஆவ லாகவும் வாழ்ந்திடும் உத்தமன்,
    ஆண்டி யாயொரு கானிடை தங்குவார்
    நாவில் ஞானமாய் நின்றிடும் உள்ளொளி,
    நாட்டில் அற்புதம் தோன்றிடப் பாடிடும்
    பாவ லர்க்கெலாம் பாதரும் சற்குரு,
    பார்க்கும் வையமி யக்கிடும் ஆற்றலான்,

    கிள்ளை நாரைகி ளர்ந்திடுங் கான்குயில்
    கீழ்வி ழும்மழைக் காடிடும் மஞ்ஞைகள்
    புள்ளி னந்தரும் ஓசையில் பச்சையாய்ப்
    புன்செய் தந்திடும் நாற்றினில் ஆற்றினில்
    கள்ள ருந்திடும் வண்டினப் போதையில்
    காற்றில் சேர்ந்திடுஞ் சாகர வாடையில்
    உள்ளி ருந்துல காட்டிடும் நாயகன்
    உண்மை யானவன் பொய்ம்மையும் தேர்ந்தவன்!

    நம்பு வார்தம தன்பினில் ரூபமாய்
    நாடு முற்றிலும் காத்திட வேலியில்
    கம்பும் கையுமாய் நிற்குநம் வீரரின்
    கண்ணில் வீரமாய் இல்லறஞ் சேர்த்திடும்
    தெம்பு மிக்கபெண் டிர்மிசை பெண்மையாய்
    சின்ன பாலகர் புன்னகை அம்சமாய்
    நம்பி டாதவர் வாக்கினில் பொய்ம்மையாய்
    நாலு திக்கிலும் நின்றுநி றைந்தவன்

    பேர்கள் மாறலாம் பெற்றிடும் சேதியால்
    பெருமை மாறலாம் ஆயினும் நாமெலாம்
    ஓரி றைவனின் சாட்டையில் சுற்றிடும்
    ஓய்வி லாததோர் பம்பரம்! நாமிடும்
    காரி யங்களும் ஆட்டமும் ஓய்ந்திடும்
    கணம்நெ ருங்கிடில் ஞானமெ னும்புதுத்
    தேரி லேறிநம் கண்முனம் தோன்றுவான்
    தெய்வ மென்றறி தேர்ச்சிகொள் நெஞ்சமே!!

    -20.01.2019

    Share
  • குறளின் கதிர்களாய்…(241)

    -செண்பக ஜெகதீசன்

    ஓன்றெய்தி நூறிழக்குஞ் சூதர்க்கு முண்டாங்கொல்
    நன்றெய்தி வாழ்வதோ ராறு.
    -திருக்குறள் -932(சூது)

    புதுக் கவிதையில்…

    வெற்றி வரவாய்
    ஒன்றினைப் பெற்று,
    தோல்வியில்
    நூறு மடங்கு இழக்கும்
    சூதாடுபவர்க்கு,
    அப்பொருளால் வாழ்வில்
    அறமும் இன்பமும் பெற்று
    வாழ்வதாகிய நல்வழி
    என்றுமே இல்லை…!

    குறும்பாவில்…

    வென்று ஒன்று பெற்று, தோல்வியில்
    நூறிழக்கும் சூதாடுபவர்க்கு என்றுமுண்டோ
    நன்மைபெற்று வாழும் வழி…!

    மரபுக் கவிதையில்…

    வரவாய் வெற்றியில் ஒன்றுபெற்று,
    வந்திடும் தொடர்ந்த தோல்வியது
    தருமே யிழப்பாய் நூறாகத்
    தீயதாம் சூதினை ஆடுபவர்க்கே,
    தரமிலாச் செயலிதால் வருகின்ற
    தனமது யென்றும் இவர்தமக்குத்
    தருவதே யில்லை வாழ்வினிலே
    தீதே யில்லா நல்வழியே…!

    லிமரைக்கூ..

    வரவொன்று, தோல்வியில் நூறு
    இழப்புதரும் சூதாட்டம் ஆடுவோர்க்கு உண்டோ
    நலவாழ்வுக்கு நல்லவழி வேறு…!

    கிராமிய பாணியில்…

    ஆடாதே ஆடதே சூதாட்டம் ஆடாதே
    எப்பவுமே ஆடாதே,
    வாழ்க்கயில கேடுதரும் சூதாட்டம் ஆடாதே..
    ஒருமடங்கு செயிச்சா சூதாட்டத்
    தோல்வியில நூறுமடங்காப் போயிடுமே..
    இதால சூதாடுறவனுக்கு
    நல்ல வாழ்க்கைக்கே
    வழியில்லாமப் போயிடுமே..

    அதால,
    ஆடாதே ஆடதே சூதாட்டம் ஆடாதே
    எப்பவுமே ஆடாதே,
    வாழ்க்கயில கேடுதரும் சூதாட்டம் ஆடாதே…!

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 1

    நாங்குநேரி வாசஸ்ரீ

    வாசகர்களுக்கு வணக்கம்,

    இதை நான் எழுதுவதற்கு, எங்கள் ஊரில் (நாங்குநேரி) கத்தரிக்காய் விற்று வந்த இசக்கித்தாய் என்ற பாம்பட ஆச்சி தான் காரணம்.  திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிக்காக நாங்கள் பயிலும்போது, ஒவ்வொரு முறையும் திருவள்ளுவரைக் காண்பித்து, இந்தச் சாமி யாரு? இவுங்க சொன்னத தமிழ்ல சொல்லு தாயி. நானும் கேட்டுக்கிடுவேன் இல்ல என்பாள்.  அவளைப் பொறுத்தவரை அவள் பேசுவதுதான் தமிழ்.  இறை எய்திவிட்ட அவள் எங்கிருந்தோ இருந்து கேட்டுக்கொண்டிருப்பாள் என நினைத்து, பல ஆண்டுகளுக்குப் பின் எழுதும் உரை இது. தனைச் சான்றோர்கள் வாசிக்க வேண்டும் என்ற  சிறிய அவாவுடன் வல்லமை இதழுக்கு அனுப்புகிறேன். பிழை இருந்தால் மன்னிக்கவும். – நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 1 – கடவுள் வாழ்த்து

    குறள் 1:

    அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு.

    எல்லா எழுத்தும் ‘அ’ ல தான் தொடங்குது. (அது போல) நாம நிக்க, திங்குத, தூங்குத இந்த ஒலகத்தோட தொடக்கம் கடவுள்.

    குறள் 2:

    கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்

    எல்லாத்தையும் அறிஞ்ச கடவுள கும்பிடலேன்னா நீ படிச்ச படிப்பால என்ன பிரயோசனம்..

    குறள் 3:

    மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
    நிலமிசை நீடுவாழ் வார்

    பூ போல உள்ள மனசுக்குள்ள குடியிருக்க கடவுள நெனக்கவன் சந்தோசமா இந்த உலகத்துல நெறைய நாள் வாழுவான்.

    குறள் 4:

    வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
    யாண்டும் இடும்பை இல

    வேணும் வேண்டாம் னு நெனப்பே இல்லாத கடவுளோட திருவடிய கும்பிடுதவனுக்கு ஒருநாளும் தொயரம் அண்டாது.

    குறள் 5:

    இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
    பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு

    கடவுளோட உண்மையான புகழ விரும்பி அறிஞ்சவனோட புத்திக்கு நல்லதும் கெட்டதும் ஒண்ணு போலத் தோணும்.

    குறள் 6:

    பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
    நெறிநின்றார் நீடுவாழ் வார்

    கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பு ங்கற அஞ்சு பொறி லேந்தும் பிறக்குத கெட்ட ஆசைய அவிச்சு ஒழிச்சு இருக்க கடவுளோட பொய்யில்லாத ஒழுக்கத்த கடைபிடிச்சாம்னா அவன் நெறைய நாள் வாழுவான்.

    குறள் 7:

    தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    மனக்கவலை மாற்றல் அரிது

    தனக்கு ஒப்பும சொல்ல ஏலாத கடவுளோட காலப் புடிச்சவன தவிர மத்தவனோட மனத் தொயரத்த மாத்துதது சுளுவான காரியம் இல்ல.

    குறள் 8:

    அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
    பிறவாழி நீந்தல் அரிது

    அறக்கடலா இருக்க கடவுள நெனயாதவன் மாறி மாறி பொறந்தும் செத்தும் பல சென்மம் எடுத்து பெறவி கடல்ல நீந்த முடியாம கெடந்து சீரளியுவான்.

    குறள் 9:

    கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
    தாளை வணங்காத் தலை

    சோலி பாக்காத கண்ணு, காது, மூக்கு, வாய், ஒடம்பால எவ்ளோ செரையோ அது போல தான் கடவுள வணங்காதவனோட தலயும்.

    குறள் 10:

    பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவன் அடிசேரா தார்

    கடவுள கும்பிடுதவனால மட்டுந்தான் பிறப்புங்குத கடலுக்குள்ள நீந்தி கரைய கடக்க முடியும். மத்தவனுக்கு சிரமந்தான்.

    ******************************

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • நலம்…நலமறிய ஆவல் 143

    -நிர்மலா ராகவன்

    குறையொன்றும் இல்லை

    `நம்மைப் பிறரால்தான் புரிந்துகொள்ள முடியவில்லை. நாமாவது புரிந்துகொள்ளப் பார்ப்போமே!’ திருமணத்திற்குப்பின் எனக்கு இந்த ஞானோதயம் பிறந்தது.

    உளவியல் அறிஞர்கள் வகுத்திருந்த கேள்விகளுக்குப் பதில் எழுதி, நானே என்னைப் பரீட்சித்துக்கொண்டேன்.

    விடைகள் எனக்கு அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஒருங்கே அளித்தன.

    பின்னே? `முதிர்ச்சி இல்லாதவர் நீங்கள்!’ என்று வந்திருந்தால்?

    எனக்கு ஆத்திரம் வரவில்லை. அயர்ச்சியாக இருந்தது. எனது ஒவ்வொரு எதிர்மறையான பதிலையும் மாற்றும் நடத்தையை முயன்று பயின்றேன்.

    `You are very sane!’ என்று சிலர் வியக்க, அப்பயிற்சிகளை எடுத்துக்கொண்டதை ஒத்துக்கொண்டேன்.

    `உன்னிடம் குறைகள் இருப்பதை நீ ஒத்துக்கொண்டதே உனது நேர்மையைக் காட்டுகிறது!’ என்று ஒரு கவுன்சிலர் பாராட்டினார்.

    நகைச்சுவை அற்ற பெண்கள்

    `பெண்கள் தம்மைத்தாமே பார்த்துச் சிரிக்கமாட்டார்கள். அதனால்தான் வெகு சிலரே நகைச்சுவை நடிகைகளாக இருக்கிறார்கள்!’ என்று அமெரிக்க நடிகைகளைப்பற்றி ஒரு விமர்சகர் எழுதியிருந்தார். அதையே சவாலாக ஏற்று, அதைப் பொய்ப்பிக்கும் முயற்சியிலும் இறங்கினேன்.

    நம்மை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கும் நிகழ்ச்சிகளை பிறருக்குத் தெரியாதிருக்க மறைப்பானேன்! அவர்களுக்கு மட்டும் அப்படி எதுவும் நிகழ்ந்திருக்காதா, என்ன!

    கதை

    நான் இடைநிலைப்பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது, தையலும் ஒரு பாடமாக இருந்தது. ஆசிரியை மிஸஸ் ஜோன் வகுப்புக்கு வந்ததுடன் சரி. எதையும் கற்றுக்கொடுக்கவில்லை. நாங்கள்பாட்டில் அரட்டை அடித்துக்கொண்டிருப்போம்.

    முழுப்பரீட்சைக்கு வகுப்பினுள் ஆசிரியை எதிரே ஒரு சட்டை தைக்க வேண்டும் என்று அறிவித்தார் மிஸஸ் ஜோன். பெருமையாக, ஒரு கஜம் வெள்ளைத்துணியை எடுத்துப்போனேன்.

    துணியைப் பாதியாக மடித்து, கைக்கு வேண்டியதை வெட்டினால் ஒரே மாதிரி இருக்கும். இது புரியாது, நான் ஒன்று மாற்றி ஒன்று வெட்ட, பூனை ரொட்டியைப் பங்கிட்டக் கதையாக ஆயிற்று. ஒரு கை இன்னொன்றைவிட மிகச்சிறியதாக இருந்தது!

    எப்போதும்போல், “வீட்டில் தைத்துக்கொண்டு வாருங்கள்!” என்று ஆசிரியை பணித்திருக்கக் கூடாதா! அம்மாவிடம் கெஞ்சி, தைத்து வாங்கிக்கொண்டு போயிருப்பேனே! (அப்படிச் செய்தபோதும் நல்ல மதிப்பெண்களே கிடைக்கவில்லை என்பது வேறு விஷயம்).

    என் தோழி வீட்டுக்குப் போயிருந்தபோது, அவளுடைய சித்திமார்கள், “இது என்ன, உங்கள் தையல் ஆசிரியை இவ்வளவு மோசமாக இருக்கிறாள்! நாங்கள் எவ்வளவு அழகாக துணியில் பூவேலை செய்துகொடுத்தாலும், நூற்றுக்கு நாற்பதுதான் கொடுக்கிறாள்!” என்று கோபமாகக் கேட்டார்கள்.

    என் சிநேகிதி, `அதையெல்லாம் சொல்லாதீர்கள்!’ என்று பதைப்புடன் சமிக்ஞை செய்ததை அவர்கள் பொருட்படுத்தவேயில்லை.

    நான் அவளிடம் தனிமையில் கூறினேன், “எதற்கு அவ்வளவு பயப்பட்டாய்? எனக்குப் போட்டுக்கொடுப்பதும் என் அம்மாதான்!”

    என் தாயார் தையல் வேலைகளில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். தேசிய ரீதியில் பரிசு வாங்கியவர். இருந்தாலும், ஆசிரியை மிஸஸ் ஜோனுக்கு எங்கள் லட்சணம் தெரியாதா! அதனால்தான், தானே முயன்று, சற்றுக் கோணல்மாணலாக தைத்த மாணவிக்கு எங்களைவிட மிக அதிகமான மதிப்பெண்கள்!

    இக்கதையை நான் விவரிக்கையில், என் குடும்பத்தினர் சிரிப்பார்கள். (வாசகரே, நீங்கள் சிரித்தீர்களா, இல்லை, `வெட்கமில்லாமல் இதையெல்லாம் சொல்கிறாளே!’ என்று நினைத்தீர்களா? பள்ளி இறுதியாண்டுக்குப்பின் துணியில் பூவேலைப்பாடு செய்வதை அம்மாவிடமே கற்றுத் தேர்ந்தேன்).

    பலத்துடன் பலவீனமும் உண்டு

    நம் பலம், பலவீனம் இரண்டையும் ஒத்துக்கொண்டால், அதற்கு ஏற்றபடி நடக்க முடியும்.

    நம் உணர்ச்சிகள் எதனால் எழுகின்றன என்று புரிந்தால், நம்மை நாமே புரிந்துகொள்ள முடியும். உண்மையை ஒத்துக்கொள்ளும் மனோபலம் சிலருக்கு (பலருக்கு?) இருப்பதில்லை. இப்படிப்பட்டவர்களுக்குப் பொதுவான சில குணங்கள் உண்டு.

    உண்மையை மறுத்தால் அவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். தம்மைப்பற்றிய குறைகளை நினைப்பதற்கே அஞ்சுவதால் இப்படி ஆகிவிடுகிறது.

    அவர்களுடைய குறை என்று நினைக்கும் எதையாவது இன்னொருவர் சுட்டிக்காட்டும்போது, அதைப் பொறுக்காது, பேச்சை மாற்றுவார்கள்; அந்த இடத்தைவிட்டு நழுவுவார்கள், இல்லை, சண்டை பிடிப்பார்கள். (`நீ மட்டும் தவறே செய்வதில்லையோ?’).

    உன்னால் நான் கெட்டேன்

    ஒரு சிலர், `அவனால்தான் நான் இப்படி ஆகிவிட்டேன்!’ என்று எவர்மேலாவது பழி போடுவார்கள். இது சிறுபிள்ளைத்தனம். சிறுகுழந்தைகள்தாம், அம்மாவின் முத்துமாலையை அறுப்பது, குங்குமத்தைக் கொட்டுவது என்று ஏதாவது விஷமம் செய்துவிட்டு, அண்ணன் அல்லது அக்காள்தான் செய்தார்கள் என்று சாதிக்கும். அவர்கள் அப்போது வீட்டிலேயே இருந்திருக்க மாட்டார்கள்!

    குடும்பத்தில் அதிகாரம்

    கூட்டுக்குடும்பங்களில் அனைத்து அதிகாரமும் யாராவது ஒருவர் கையில்தான் இருக்கும். இருக்கவேண்டும்.

    நாடு என்று ஒன்று இருந்தால், எல்லா மக்களும் தம் விருப்பப்படி நடந்தால் என்ன ஆகும்? அதைச் செவ்வனே நிர்வகிக்கத்தான் தலைவர்கள் இருக்கிறார்கள். (அவர்கள் அப்படி நடக்கிறார்களா என்பது வேறு விஷயம்).

    அதேபோல்தான் குடும்பமும். அக்குடையின் கீழிருக்கும் ஒவ்வொருவரும் மனம்போனபடி நடக்க முடியுமா? அப்படிப்பட்ட குடும்பங்களில் ஒற்றுமையும் இருக்காது, தம் திறமையை எவரும் பூரணமாகப் பயன்படுத்தவும் முடியாது.

    குடும்பத்தலைவி பலருடைய நலனையும் மனதில் கொண்டு, அன்பும் கண்டிப்புமாக அவரவர் குணத்திற்கும் தேவைகளுக்கும் ஏற்றபடி விதிமுறைகளை அமைத்து, குடும்பத்தை நல்லபடியாக நடத்திக்கொண்டு போனால் அனைவரும் பயனடைவார்கள். அப்படிப்பட்டவருக்கு குடும்பத்தினரின் மரியாதையும் மதிப்பும் கிடைப்பதில் ஆச்சரியம் என்ன?

    பிறரது தன்மை, தேவை எல்லாவற்றையும் புரிந்துகொள்ளும் உணர்திறன் பெண்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. எதை, எப்படி, எந்த தருணத்தில் கூறுவது என்று முதலிலேயே யோசித்துவைப்பார்கள். இப்போக்கினால் பிறர் மனம் நோகாது.

    சிலர், `நான் சொல்கிறபடி கேளுங்கள்!’ என்று அதிகாரம் செலுத்த முனையலாம். பயந்தோ, அல்லது மரியாதை கருதியோ அப்படி நடந்தால், யார்தான் சுயமாகச் சிந்திக்க முடியும்? (அதிகாரமாக நடக்கும் ஆசிரியர்களும் இதே தவற்றைச் செய்துவிட்டு, `இக்காலத்து மாணவர்களுக்கு அறிவுத்திறன் குறைவு!’ என்ற முடிவுக்கு வருகிறார்கள்).

    சிறுவர்கள் அவர்கள் வயதுக்கு ஏற்றபடிதான் எந்தக் காரியத்தையும் செய்வார்கள். ஓயாது நச்சரிக்காமல், `பிறராலும் நாம் செய்வதைச் செய்யமுடியும்,’ என்று நம்பி, அவர்கள் போக்கில் விட்டால் அவர்கள் தன்னம்பிக்கை தகர்க்கப்படாது. மரியாதை குன்றாது நடப்பார்கள்.

    புகழ் மட்டும்தான் வேண்டுமா!

    `நீ நல்ல அம்மா!’ என்று மனமகிழ்ந்து பாராட்டும் சிறுமி, `நீ எப்பவும் திட்டறே! பிடிக்கலே!’ என்று வேறோரு சமயம் கூறுகிறாளா?

    புகழ்ச்சியைக் கேட்க உவப்பாக இருக்கும். அதேபோல், கண்டனத்தையும் கேட்டு, அதில் உண்மை இருக்கிறதா என்று ஆராய்ந்தால், அதை எப்படித் திருத்திக்கொள்ளலாம் என்று யோசிக்கலாம்.

    `எனக்குப் பொறுமையே கிடையாது. அதற்கு என்ன செய்வது!’ என்று நம்மை நாமே மன்னித்துக்கொள்வதால் என்ன பயன்?

    நம் குறைகளை உணர்ந்து, கூடியவரை அவற்றை மாற்ற முயற்சி செய்யவேண்டாமா?

    அப்படிச் செய்தால், நமக்கும் பிறருக்கும் பெரும் உதவி செய்வதுபோலாகுமே!

    Share
  • (Peer Reviewed) குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு

    ஸ்ரீ.நடராஜன் , முனைவர் ரெ.சந்திரமோகன்

    முதுஅறிவியல் மற்றும் ஆய்வு இயற்பியல் துறை
    ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரி, தேவகோட்டை
    மின்னஞ்சல்: natarajangravity@gmail.com, rathinam.chandramohan@gmail.com

    ====================================================

    குதித்தெழும் பிரபஞ்சம் ஒப்புரு

    பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும் , பிரபஞ்சத்தின் மூலநிலை மற்றும் அதன் இயக்கத்தைப் பற்றியும், பெருவெடிப்புத் தத்துவத்தில் மாற்றங்களையும் இக்கட்டுரை வாயிலாகக் காணலாம். மேலும் பிரபஞ்சமானது குதித்தெழும் ஒப்புருவாக ஆய்வு செய்யப்படுவதையும் இக்கட்டுரையில் காண்போம். பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றிக் கணித முறையில் விளக்குவதற்குப் பல்வேறு ஒப்புருக்கள் இருந்தாலும், இயற்பியல் ரீதியிலான பெருவெடிப்புத் தத்துவமானது வெற்றிகரமான ஒப்புருவாக உள்ளது. பெருவெடிப்புத் தத்துவமானது, சமீபத்திய ஆய்வு முடிவுகள் மூலம் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

    விரிவடையும் பிரபஞ்ச அமைப்பு, பிரபஞ்சப் பின்புல வெப்பநிலை ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு ஆதாரமாக அமைகின்றன. இப்பெருவெடிப்பு தத்துவத்தைப் பற்றிச் சற்று சுருக்கமாகக் காண்போம். இதன் வாயிலாகப் பெருவெடிப்புத் தத்துவமானது, எங்ஙனம் சிக்கல்களைச் சந்திக்கிறது என்பதையும் புரிந்துகொள்ள முடியும். பெருவெடிப்புத் தத்துவத்தின் உருவாக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து தொடங்குகிறது. காமோவ் மற்றும் அவர்களது குழுவினரால்[1] இத்தத்துவம் முதன்முதலில் உருவாக்கப்பட்டது.

    பெருவெடிப்புத் தத்துவத்தின்படி பிரபஞ்சமானது, ஒரு சிறு புள்ளியில் இருந்து உருவாக ஆரம்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. இது மூலநிலைப்புள்ளி(singularity) என்று அழைக்கப்படுகிறது. இம்மூலநிலைப் புள்ளியானது மிகுந்த அடர்த்தியுடனும், மிகுந்த அழுத்தத்துடனும், அதிக வெப்பத்துடனும் இருக்கும் என வரையறுக்கப்படுகிறது. இப்புள்ளியிலிருந்து பிரபஞ்சமானது விரிவடைந்து, குளிர்ந்து, தற்போது நாம் காணும் பரந்து விரிந்த பிரபஞ்சமாகத் தோற்றம் அளிக்கிறது என்பதைப் பெருவெடிப்புத் தத்துவம் முன்வைக்கிறது[2].

    இவ்வாறாக பிரபஞ்சமானது விரிவடையும் போது, வெப்பநிலை குறைவதால் அடிப்படைத் துகள்கள், அணுக்கள் மற்றும் அணுக் கூட்டங்கள் என்ற தொடர்ச்சியான மாற்றங்கள் உருவாகின்றன[3]. இச்செயல்பாடே தற்போதைய இயற்பியலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்புருவுக்குச் சிறந்ததொரு ஆதாரமாக விளங்குகிறது. பிரபஞ்சம் விரிவடைவது மற்றும் அதன் வெப்பநிலை குறைவதுமான இரு பெரும் தத்துவங்கள் தற்போதும் நிரூபிக்கப்பட முடியும். வகை IA சூப்பர் நோவா தரவுகள்[4] மற்றும் பிரபஞ்சத்தின் பின்புல வெப்பநிலைத் தரவுகள்[5] ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு மாபெரும் வெற்றியைத் தருகின்றன. பிரபஞ்சம் விரிந்து கொண்டே இருப்பதை சூப்பர்நோவா தரவுகள் நிரூபிக்கின்றன. பிரபஞ்சம் குளிர்ந்து கொண்டே வருவதை பின்புல வெப்பநிலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வகையான பிரபஞ்சம் ஃப்ரீட்மேன் பிரபஞ்சம் என அழைக்கப்படுகிறது.

    இதுபோன்ற ஒரு சமன்பாடு ஐன்ஸ்டைனின் பிரபஞ்ச ஆய்வில் தெரிவிக்கப்பட்டது[6].
    ஐன்ஸ்டைனின் பிரபஞ்ச ஒப்புருவில் பிரபஞ்சம் விரிவடைவதைப் பிரபஞ்ச மாறிலி என்னும் சமன்பாட்டு நேரமைவின் மூலம் அவர் புகுத்தினார். பின்னர் வந்த அமெரிக்க வானியல் ஆய்வாளரான ஹப்பிள், பிரபஞ்சம் விரிவடைவதை நிரூபித்தவுடன்[7] ஐன்ஸ்டைன் தனது ஒப்புருவில் சேர்க்கப்பட்ட மாறிலியானது பிழை என்று அறிவித்தார்.

    இச்சமன்பாடுகள் செயலாக்கப்பட்ட அதே சமயம், இயற்பியலில் மணிமகுடமாகத் திகழும் குவாண்டம் இயற்பியலின் சமன்பாடுகள் வரையறுக்கப்பட்டும் வந்தன. குவாண்டம் இயற்பியலானது நுண்ணிய அளவிலான அடிப்படைத் துகள்கள், அலைகள் மற்றும் புலங்கள் ஆகியவற்றில் இயக்கத்தை வரையறுத்தது. மேலும் தொன்மை அளவில் சாத்தியமில்லாத சில மாறுபட்ட கருத்துகளையும் நிரூபித்தது. எடுத்துக்காட்டாக குவாண்டம் உட்புகுதல், துகள் – அலை இரட்டைக் கோட்பாடு மற்றும் நிலையில்லாக் கோட்பாடு ஆகியவை தொன்மை அளவில் சாத்தியமில்லாத அல்லது நிரூபிக்க முடியாத கோட்பாடுகளாகும். அவை குவாண்டம் அளவில் அதிகாரத்தில் உள்ளன[8].

    குவாண்டம் இயற்பியலின் குவாண்டமாக்கல் செயல்முறை அடிப்படை நிலையில், துகள்கள் மற்றும் அலைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதற்கான விளக்கத்தைத் தந்தது. உதாரணமாக மின்காந்த அலைகளைக் குவாண்டமாக்கல் என்னும் பகுப்பாய்வு செய்யும் போது அவை போட்டான்கள் எனும், சிறு சிறு ஆற்றல் சிப்பங்களாக அல்லது குவாண்டம் துகள்களாக இருப்பது தெரியவந்தது. இவ்வகையில் பிரபஞ்சத்தின் மூல நிலையும் குவாண்டமாக்கல் கணக்கீடுகளுக்குள் உட்புகுத்த முடியும் என்பதாக அறிவியல் அறிஞர்கள் ஆராயத் தொடங்கினர்.

    நீண்ட காலமாகப் பிரபஞ்சத்தின் மூல நிலையைப் பற்றிய கருத்துகள் வெளிவந்தாலும் எவற்றாலும் அங்கு உள்ள ஈர்ப்பு விசை பற்றியோ அல்லது காலவெளியின் நிலையைப் பற்றியோ தெளிவாக விளக்க முடியவில்லை. ஈர்ப்புவிசையைக் குவாண்டமாக்கும் பல்வேறு கருதுகோள் முயற்சிகளும்  இறுதியில் மூலப் புள்ளியில் குவாண்ட அமைப்புகளை விளக்க முடியாமல் நின்று விட்டன[9].

    மூலநிலைப் புள்ளியை அவ்வளவு சீக்கிரமாக குவாண்டமாக்கல் செயல்முறைக்கு உட்படுத்த முடியாததற்குக் காரணம், அங்கு அதிகமான கால வெளியின் வளைவுகள் இருப்பதும் மற்றும் பிரபஞ்சத்தின் பருமன் சுழியம் ஆவதும் ஆகும். மேலும் அங்கு குவாண்டம் விளைவுகள், மிக அதிகமாகவே இருக்கும். இதன் காரணமாகவே மூலநிலையைத் தெளிவுறக் குவாண்டமாக்க முடியாததும் மேலும் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்க முடியாததுமான சிக்கலை இயற்பியலுக்குத் தந்தது. மேலும் ஈர்ப்பு விசையைக் குவாண்டமாக்கும் செயல்முறைகளில் பின்புலக் காலவெளியின் ஆதிக்கத்தைத் தவிர்த்ததான சமன்பாட்டினை உருவாக்குவது என்பது சாத்தியம் இல்லாததாகவே இருந்து வந்தது. மேலும் மூலப் புள்ளியைத் தவிர்த்த பிரபஞ்ச ஒப்புருவை உருவாக்குவதும் சாத்தியமில்லாததாகவே இருந்தது.

    இவ்வாறான சிக்கலைத் தவிர்க்கவே வளையக் குவாண்டம் பிரபஞ்ச ஒப்புரு[10] என்னும் ஒப்புருவானது முன்வைக்கப்படுகிறது. இவ்வொப்புருவில் காலவெளியானது சுழல் வலைப்பின்னல் அமைப்புகளால் கட்டமைக்கப்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் ஒவ்வொரு குவாண்டம் பரப்பும் குவாண்டம் அளவில் ஒரே மாதிரியான தொகுப்பைக் கொண்டிருக்கும் எனவும் வரையறுக்கப்படுகிறது. இவ்வாறாக பிரபஞ்சத்தின் காலவெளியானது குவாண்டமாக்கப்படுகிறது. அதாவது குவாண்டம் அளவில் பிரபஞ்சமானது தொடர்ச்சியாக இல்லாமல் சிறு சிறு குவாண்டம் பகுதிகளாக இருப்பதாக அறியமுடிகிறது.

    இத்தகைய கணிதவியல் அளவீடுகள் மூலம், மூலநிலைப் புள்ளியையும் எளிமையாக குவாண்டமாக்க முடியும். அதாவது மூலநிலைப் புள்ளியில் கொள்ளளவு என்பது சுழியமாக அமையாமலும், மேலும் காலவெளியின் வளைவுகள் குறிப்பிட்ட பெரும அளவுகளுக்குள் அமைவதையும் புரிந்துகொள்ள முடியும். ஆகையால் தொன்மை இயற்பியல் அளவில் விவரிக்க இயலாத பிரபஞ்ச மூலநிலைப் புள்ளியை குவாண்டம் அளவில் வளையக் குவாண்டம் பிரபஞ்ச ஒப்புரு மூலம் தெளிவாக விளக்க முடியும். மேலும் மூல நிலைப் புள்ளிக்குச் சற்று முன்னதான மற்றும் சற்றுப் பின்னதான சூழலிலிருந்து பிரபஞ்சம் எவ்வாறு பரிணமித்திருக்கும் என்பதையும் இக்கணித வரையறைகள் மூலம் சொல்ல முடியும்.

    இம்மூலநிலைப் புள்ளியில் பிரபஞ்சமானது வித்தியாசமான இயக்கவியலைப் பெற்றுள்ளது. தொன்மை இயக்கவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சமானது மூலநிலைப் புள்ளியில் இருந்து வெகு வேகமாகப் பரிமாற்றம் அடைந்து தற்போதுள்ள பிரபஞ்சம் வரையில் விரிந்து வந்ததாகச் சொல்லப்பட்டாலும், வளையக் குவாண்டம் பிரபஞ்சவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது, மூல நிலைப் புள்ளியைப் பொறுத்து, குதித்தெழும் பிரபஞ்சமாக[11] ஒப்புமைப் படுத்தப்படுகிறது.

    அதாவது மூலநிலைப் புள்ளியை நோக்கி வரும் பிரபஞ்சம் மூல நிலைப் புள்ளிக்கு அருகில் மாறுநிலை அடர்த்தியை எய்தும். அப்போது பிரபஞ்சமானது குதித்தெழும் தன்மையுடன் மீண்டும் விரிந்து செல்லும். மேலும் இச்சூழ்நிலையில் ஈர்ப்பு விசையானது தள்ளும் இசையாக அல்லது விலக்கு விசையாகச் செயல்படுவதையும் இக்கருத்துருவாக்கம் முன்வைக்கிறது. ஆகவே பிரபஞ்சமானது குதித்தெழும் பிரபஞ்சமாக, குவாண்டம் இயக்கவியல் மூலம் கணித முறையில் வரையறுக்கப்பட முடியும். இவ்வாறான பிரபஞ்ச ஒப்புரு, பல்வேறு மூலநிலைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    மேற்கோள்கள்
    1. Gamow, G. (1982). by G. Gamow, Phys. Rev. 70,572 . Unity Of Forces In The Universe (In 2 Volumes), 1, 459,1946.
    2. Linder, E. V. (2003). Exploring the expansion history of the universe. Physical Review Letters, 90(9), 091301.
    3. Wagoner, R. V. (1973). Big-bang nucleosynthesis revisited. The Astrophysical Journal, 179, 343-360.
    4. Riess, A. G., Strolger, L. G., Casertano, S., Ferguson, H. C., Mobasher, B., Gold, B., … & Tonry, J. (2007). New Hubble space telescope discoveries of type Ia supernovae at z≥ 1: narrowing constraints on the early behavior of dark energy. The Astrophysical Journal, 659(1), 98.
    5. Schlegel, D. J., Finkbeiner, D. P., & Davis, M. (1998). Maps of dust infrared emission for use in estimation of reddening and cosmic microwave background radiation foregrounds. The Astrophysical Journal, 500(2), 525.
    6. Winberg, S. (1972). Gravitation and cosmology. ed. John Wiley and Sons, New York.
    7. Hubble, E. (1929). A relation between distance and radial velocity among extra-galactic nebulae. Proceedings of the National Academy of Sciences, 15(3), 168-173.
    8. Sakurai, J. J., & Commins, E. D. (1995). Modern quantum mechanics, revised edition.
    9. DeWitt, B. S. (1967). Quantum theory of gravity. I. The canonical theory. Physical Review, 160(5), 1113.
    10. Bojowald, M. (2008). Loop quantum cosmology. Living Reviews in Relativity, 11(1), 4.
    11. Wilson-Ewing, E. (2013). The matter bounce scenario in loop quantum cosmology. Journal of Cosmology and Astroparticle Physics, 2013(03), 026.

    ===================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    பிரபஞ்சத்தின் தோற்றத்தைப் பற்றியும், பிரபஞ்சத்தின் மூலநிலை மற்றும் அதன் இயக்கத்தைப் பற்றியும், பெருவெடிப்புத் தத்துவத்தில் மாற்றங்களையும் இக்கட்டுரை வாயிலாகக் காண முடிகிறது. மேலும் பிரபஞ்சமானது இக்கட்டுரையில் குதித்தெழும் ஒப்புருவாக ஆய்வு செய்யப்படுகிறது. பிரபஞ்சத்தின் இயக்கத்தைப் பற்றிக் கணித முறையில் விளக்குவதற்குப் பல்வேறு ஒப்புருக்கள் இருந்தாலும், இயற்பியல் ரீதியிலான பெருவெடிப்புத் தத்துவமானது வெற்றிகரமான ஒப்புருவாக உள்ளது. பெருவெடிப்புத் தத்துவமானது, சமீபத்திய ஆய்வு முடிவுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விரிவடையும் பிரபஞ்ச அமைப்பு, பிரபஞ்சப் பின்புல வெப்பநிலை ஆகியவை பெருவெடிப்புத் தத்துவத்திற்கு ஆதாரமாக அமைகின்றன.

    தொன்மை இயக்கவியலைப் பொறுத்தவரையில் பிரபஞ்சமானது மூலநிலைப் புள்ளியில் இருந்து வெகு வேகமாகப் பரிமாற்றம் அடைந்து, தற்போதுள்ள பிரபஞ்சம் வரையில் விரிந்து வந்ததாகச் சொல்லப்பட்டாலும், வளையக் குவாண்டம் பிரபஞ்சவியலைப் பொறுத்தவரை பிரபஞ்சமானது, மூல நிலைப் புள்ளியைப் பொறுத்துக் குதித்தெழும் பிரபஞ்சமாக ஒப்புமைப்படுத்தப்படுகிறது. அதாவது மூலநிலைப் புள்ளியை நோக்கி வரும் பிரபஞ்சம், மூல நிலைப் புள்ளிக்கு அருகில் மாறுநிலை அடர்த்தியை எய்தும். அப்போது பிரபஞ்சமானது குதித்தெழும் தன்மையுடன் மீண்டும் விரிந்து செல்லும். மேலும் இச்சூழ்நிலையில் ஈர்ப்பு விசையானது தள்ளும் விசையாக அல்லது விலக்கு விசையாக செயல்படுவதையும் இக்கருத்துருவாக்கம் முன்வைக்கிறது. ஆகவே பிரபஞ்சமானது குதித்தெழும் பிரபஞ்சமாக, குவாண்டம் இயக்கவியல் மூலம் கணித முறையில் வரையறுக்கப்பட முடியும். இவ்வாறான பிரபஞ்ச ஒப்புரு, பல்வேறு மூலநிலைச் சிக்கல்களுக்குத் தீர்வாக அமையும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    பெரும் பாய்ச்சலில் பிரபஞ்சம் தோன்றி இருக்கலாம் என்று குறிப்பிடும் ஆய்வாளர்கள், தமது கோட்பாட்டைப் பெருவெடிப்பு நியதியோடு ஒப்பிட்டு இன்னும் தெளிவாக விளக்க வேண்டும். ஆரம்பத்தில் ஒரு சுருக்கவுரை பிறகு விரிவுரை, இறுதியில் முடிவுரை என்ற அமைப்பில் பிரபஞ்சத் தோற்றக் கோட்பாடுகளைப் படத்துடன் ஆய்வுக் கருத்துரையாக அமைத்துக் காட்ட வேண்டும்.

    ஆய்வாளர்கள், இந்தக் கட்டுரையையும் கவனித்திருக்கலாம்: http://www.vallamai.com/?p=82254

    ===================================================

    Share
  • 2024ஆம் ஆண்டுக்குள் நமது நிலவைச் சுற்றிவரும் நாசாவின் விண்வெளி நுழைவுப் பீடம் அமைப்பு

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    1. https://youtu.be/Uiy67s8zqHU
    2. https://youtu.be/Xp_ZODcQcx8
    3. https://youtu.be/5f6fMI5DiOA

    எனது தேடல் வேட்கை நிலவன்று. நிலவு வெறும் மண் திரட்டு ப் பந்து என்பது என் கருத்து.  ஆனால் முதலில் நிலவில் ஆய்வுக்  கூடம் எப்படி அமைப்ப தென்று பயிற்சி பெறாமல், நாம்  செவ்வாய்க் கோளில் ஆய்வு தளம் கட்ட முடியாது.  நிலவுதான் செவ்வாய்க் கோளை ஆராய ஒரு தளப்படமாய்ப் பயன்படும்.

    கிரிஸ் மெக்கே [ ஆசிரியர், புதிய விண்வெளி இதழ் ]

    +++++++++++++++++ 

    https://www.space.com/43018-lunar-orbital-platform-gateway.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190116-sdc

    Lunar Orbital Platform Gateway

    [Click to Enlarge]

    https://smd-prod.s3.amazonaws.com/science-red/s3fs-public/atoms/files/7_Spann_Gateway_20180406.pdf

     

    https://youtu.be/Uiy67s8zqHU

    https://youtu.be/Xp_ZODcQcx8

    https://youtu.be/5f6fMI5DiOA

    Lunar Orbital Platform Gateway

    [Click to Enlarge]

    நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்
    கால் வைத்து
    நாற்பது ஆண்டுகள் கடந்து
    நாசா, ஈசா மீண்டும்
    விண்ணிலவுப் பயணத் திட்டம் !
    குடியேற்றக் காலனி ! 
    பனிக்கட்டி நீர் உள்ளது ! 
    உயிர் வாயு, எரிவாயு  பெறலாம் !
    பயிர் விளைவிக் கலாம்.
    கூடிய வெப்பம், துருவப் பகுதியில் 
    நீடித்த சூரிய ஒளி !
    நீர், மின்சக்தி சேமிக்க வழி. 
    தளத்தின் கீழே வெப்பம்.
    தரைக்கீழ் இல்லம், வாழ்வு !  
    மண்ணுளவு செய்யக் கருவிகள்  !
    வெண்ணிலவில் குடியேறத்
    திட்டமிடும் நாசா,  ரஷ்யா, சைனா  !
    ஓய்வெடுக்க நிலவைச்
    சுற்றும் விண்வெளி நிலையம்   !
    செவ்வாய்க் கோள்
    தவ்வும் விமானி கட்கு அங்கும்
    தங்கக் குடில்  அமைத்து 
    மீண்டும் புவிக்கு மீள, நிலவுக்கு  ஏக
    நீண்ட பயணத் திட்டம் !

    ++++++++++++

     

    http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village

    ******************

    நிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம்.

    நாசா அடுத்துச் செவ்வாய்க் கோளில் குடியேற முதற்படித் திட்டங்களை நிலவிலே அமைக்க திட்டமிடுகிறது.  நிலவில் விண் வெளிப் பயணிகள் ஓய்வெடுக்கவோ, தங்கவோ, எரிவாயுக்கள் நிரப்பிக் கொள்ளவோ, விண்கப்பல்களைப் செப்பணிடவோ, முதலில் நிலவுக் குடியிருப்புக் கூடங்கள் அமைப்பு.  அப்பணிகள் நிறைவேற நிலவில் விண்வெளி வினைகள் நிகழும் போது,  நாசா நிலவைச் சுற்றும் விண்வெளி நுழைவுப் பீடம் [Lunar Orbital Platform – Gateway] [நிலையம்] ஒன்றைக் கட்டி முடிக்கத் திட்டம் இடுகிறது.  பூமியைச் சுற்றிவரும் அகில் நாட்டு விண்வெளி நிலையம் போன்று, நிலவைச் சுற்றும் நாசா விண்வெளி நுழைவு நிலையமும் தணிந்த சுற்றுப் பாதையில்தான் இயங்கி வரும். நாசாவுக்கு  இந்த கருத்தோட்டம்  2017 ஆண்டு முதலே உருவாகி, அமெரிக்க அரசாங்கமோடு பன்முறை நாசா உரையாடி உள்ளது.

    2018 ஆண்டு மைய மாதங்களில் நிலவுக்குப் பயணம் செய்ய ஏவுகணைகள் தயாரிப்புக்கும், நான்கு பேர் தங்கும் விண்சிமிழ் தயாரிப்புக்கும்  டிசைன் ஏற்பாடுகள் நடந்து வந்தன.  பூமியைச் சுற்றும் அகில நாட்டு விண்வெளி நிலையம் போல், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்தில் எப்போதும் விமானிகள் இருக்க மாட்டார்.  அது புறக்கட்டுப்பாட்டு முறையில் சுய இயக்கம் உள்ளதாக நிலவைச் சுற்றிவரும்.  2018 ஆகஸ்டில் அமெரிக்கத் துணை அதிபதி மைக் பென்ஸ் 2024 ஆண்டுக்குள், நிலவைச் சுற்றும் விண்வெளி நிலையத்துக்கு விமானிகள் பயணம் செய்ய முடியும் என்று அறிவித்துள்ளார்.  அதற்கு ஆகும் செலவு 1960 ஆண்டுகளில் நிலவுக்குச் சென்ற அப்பொல்லோ [Apollo Missions] செலவு திட்டத்தில் 0.5% பங்கே இருக்கும் என்றும் தெரிவித்திருந்தார்.

     

    நிலவு ஆய்வுக்கூடச் சாதனங்கள்

    2022 ஆண்டுக்குள் 10 பில்லியன் டாலர் செலவில் நிலவிலே நாசாவின் குடியிருப்பு அமைப்பு.

    கடந்த 12 மாதங்களாக நாசா விஞ்ஞானிகள் செந்நிறக் கோள் செவ்வாயிக்குப் போகும் பயணத்தைப் பற்றிக் கருத்தூன்றிக் குறிக்கோளுடன் இருந்துள்ளார்.  முடிவில் நாசாவின் உன்னத விஞ்ஞானிகள் உட்பட  மற்றும் சில விண்வெளி நிபுணர் குழு ஒன்றும்  சேர்ந்து, இன்னும் அடுத்த  ஏழு ஆண்டுகளுக்குள் [2023] நிலவிலே ஒரு மனிதக் குடியிருப்பை நிறுவ வேண்டும் என்று ஒரு சிறப்பு விஞ்ஞான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

    இச்சிறப்பு வெளியீடு புவிக்கு அப்பால் நிலவை நோக்கிக்  குறி வைத்தாலும், அடுத்து அங்கிருந்து செவ்வாய்க் கோளுக்கும் பிற கோளுக்கும் பயணம் செய்ய முதற்படி அதுவே.  2014 ஆண்டில் உன்னத விஞ்ஞானிகள் கூடி ஒரு கருத்தரங்கம்  நடந்து நிலவுக் குடியிருப்பு அமைப்பது பற்றி நிதிச் செலவு கணிக்கப்பட்டது.  நாசா 2016 ஆண்டு முழுவதற்கும் 19.3 பில்லியன் டாலர் நிதி ஒதுக்கி, நிலவுக் குடியிருப்புக்குத் திட்டம் வகுத்துள்ளது.  நாசாவின் விஞ்ஞானிகள் அலெக்ஸான்ரா ஹால், சார்லஸ் மில்லர் இன்னும் 5 அல்லது 7 ஆண்டுகளில் 10 பில்லியன் [+ or – 30%] டாலர் செலவில் நிலவில் குடியிருப்பு அமைக்க முடியும் என்ற உறுதியோடு உள்ளார்.

    [youtube https://www.youtube.com/watch?v=TNrhADcTNBk?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=xHqqNTBW8ho?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=VbG9LcJC7i0?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=_Jio0YyKK9g?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    esa-moon-village-4

    நமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம்.  சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன.  ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும்  உதவி செய்யும்.

    ஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே.  வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய  மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யான் வொர்னர் [Jan Worner, Director, European Space Agency (ESA)]

    esa-moon-village-5

    நிலவிலே பயண  நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ?  ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது.  அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது.  அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது.  நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.

    நாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில்  மன ஊக்கம் அடைய வேண்டும்.  நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான்.  ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும்.  மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது.  பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.

    இயான் கிராஃபோர்டு [Professor, Planetary Science, University of London]

    esa-moon-village-3

    செவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம்.  1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில  நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை;  பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.

    காத்ரீன் ஜாய் [Lunar Scientist, Manchester University]

    அடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்

    ஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு,  அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.

    esa-moon-village-6

    ‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.

    ஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம்.  மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம்.  அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண  வசதிகளை ஏற்படுத்தலாம்.

    Moon Russian Colony

    2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது.  நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும்.  மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும்,  நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப்  பயண முயற்சி செய்யவும்,  நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.

    டெமிட்ரி  ரோகோஸின்,  ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர்.  [ஏப்ரல் 11, 2014]

    அண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony].   ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது.  ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது.  நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.

    ஐவன்  மோய்செயவ் [Chief Scientist, Institute of Space Policy]

    Moon Colony Extension

    Moon Research Colony

    நிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார்  கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது.   அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள்  தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.

    ஆன்ரே  லொலின் [Russian Academy of Cosmonautics Member]  

    நிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள் 

    1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து  அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன.  1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ்  என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை”   [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார்.  ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.

    Moon Camp ground

     

    இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி,  1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லியிருக்கிறார்.  1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது.   அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன.   பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்பதாகப் புனைகதை வடித்துள்ளார்.  ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார்.  1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.

    Moon Colony Model -1

    Moon Control centre

    நிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன.  1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன.  2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார்.   அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது.   ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

    “நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன.  ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது.  நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”

    டாட் மே (Todd May, Manager Lunar Presursor Robotic Program)

    Proposed timeline

    Year Vehicle assembly objective Mission name Launch vehicle Human/robotic elements
    September 2022 Start of the Lunar Orbital Platform-Gateway assembly by launching the Power and Propulsion Element (PPE)[41] TBD Commercial launch vehicle[29][42] Uncrewed
    2024 ESPRIT and the U.S. Utilization Module launch and are mated to PPE in a L2 Southern Near Rectilinear Halo Orbit (NRHO)[31] EM-3 Space Launch System, Block 1B Crewed
    No Earlier Than 2024 Delivery of International Partner Habitat[31] EM-4 Space Launch System, Block 1B Crewed
    No Earlier Than 2025 Delivery of U.S. Habitat[31] EM-5 Space Launch System, Block 1B Crewed
    No Earlier Than 2024 Delivery of the first logistics module and the robotic arm[31] EM-6 Space Launch System, Block 1B Crewed
    2026 Orion capsule (crew 4) delivers the Airlock Module to the Gateway EM-7 Space Launch System, Block 1B Crewed
    2027 Deep Space Transport (DST) to the Lunar Gateway[43] EM-8 Space Launch System, Block 1B Uncrewed
    2027 DST checkout mission[43] EM-9 Space Launch System, Block 1B Crewed
    2028 DST Cargo logistics and refuelling[43] EM-10 Space Launch System, Block 1B Uncrewed
    2029 DST one-year cruise test (shakedown cruise) in cislunar space[43] EM-11 Space Launch System, Block 2 Crewed
    2030 Cargo DST logistics and refuelling mission[43] EM-12 Space Launch System, Block 2 Uncrewed
    2033 DST cruise for injection into Mars orbit[43] EM-13 Space Launch System, Block 2 Crewed

    Picture Credits: NASA, JPL; Time Magazine.

    1. Returning to the Moon By: Jeffrey Kluger Time Magazine [March 20, 2006]
    2. Apollo Missions (11-17) First Man on the Moon [www.panoramas.dk/]
    3. (a) http://www.thinnai.com/science/sc0505022.html [Authors Article on First Moon Landing (May 5, 2002)]
    4. Return to the Moon Frequently Asked Questions [www.space-frontier.org/projects/moon]
    5. NASA How We will Get Back to the Moon [www.nasa.gov./mission_pages/exploration/spacecraft/]
    6. BBC Science News: Space Agencies Take New Look at Moon [July 27, 2002]
    7. The Space Review- Return to the Moon By: Anthony Young [Jan 3 2006]
    8. Moon -Astronomical Data [www.amastro.org/at/mo/mod.html] [May 15, 2001]
    9 Space & Earth Explorations : NASA Details Plans for Lunar Exploration Robotic Missions (May 22, 2009)
    10 Rocket Launches NEW U.S. Moon Probes By Tariq Malik (June 18, 2009)
    11 BBC News – Lift off for NASA’s Lunar Probes By Paul Rincon (June 18, 2009)
    12 NASA Lunar Reconnaissance Orbiter Fact Sheets LRO & LCROSS Space Probes (2009)
    13 U.S. Lunar Probes Lift off on Mission to Scout Water, Landing Sites (June 22, 2009)

    14 http://en.wikipedia.org/wiki/Colonization_of_the_Moon [May 6, 2014]

    15. http://www.bbc.com/future/story/20150712-should-we-build-a-village-on-the-moon  [July 13, 2015]

    16.http://www.moondaily.com/reports/Russia_to_begin_Moon_colonization_in_2030_999.html [May 12, 2014]

    17. http://www.space.com/32375-international-moon-village-is-way-to-go-according-to-european-space-agency-video.html

    18. http://player.ooyala.com/iframe.js#pbid=91ac0f6dcbdf466c84659dbc54039487&ec=9yYzljMjE68_r5ghjcAQDsQh3aXKR-Ue

    19. http://www.news.com.au/technology/science/space/europe-to-build-moon-town-by-2030-in-bid-to-discover-alien-life/news-story/fe74f5e1f00c6730c0c5a4dcb5946395  [January 4, 2016]

    20. http://www.space.com/32695-moon-colony-european-space-agency.html  [April 24, 2016]

    21.  http://www.sciencealert.com/europe-plans-to-build-a-moon-village-by-2030-space-agency-announces [January 5, 2016]

    22.  http://www.spacedaily.com/reports/NASA_JAXA_Joint_Statement_on_Space_Exploration_999.html  [January 30, 2018]

    23. http://www.spacedaily.com/reports/Soon_humans_will_travel_out_beyond_the_Moon_999.html  [February 2, 2018]

    24. http://aero-news.net/index.cfm?do=main.textpost&id=cafe83d3-1124-43a5-9b63-7332bee73d06  [February 2, 2018]

    25.  http://www.spacedaily.com/reports/NASA_Wants_Ideas_from_University_Teams_for_Future_Human_Space_Missions_999.html  [February 22, 2018]

    26. https://www.sciencealert.com/nasa-scientists-say-we-could-colonise-the-moon-by-2022-for-just-10-billion  [March 22, 2016]

    27. https://sputniknews.com/science/201804191063717119-moon-colonzation-what-technologies-we-have/  [April 19, 2018]

    28. https://en.wikipedia.org/wiki/Colonization_of_the_Moon  [April 19, 2018]

    29.  https://sputniknews.com/science/201804191063717119-moon-colonzation-what-technologies-we-have/ %5BApril 19, 2018]

    30. https://www.nasaspaceflight.com/2018/09/nasa-lunar-gateway-plans/  [September 11, 2018]

    31.  http://spaceq.ca/canada-preparing-the-way-for-lunar-orbital-platform-gateway-contribution/   [November 23, 2018]

    32.  https://www.space.com/41763-nasa-lunar-orbiting-platform-gateway-basics.html [September 10, 2018]

    33.  https://www.nasa.gov/feature/nasa-s-lunar-outpost-will-extend-human-presence-in-deep-space [May 2, 2018]

    34.  https://www.nasa.gov/topics/moon-to-mars/lunar-outpost [July 2, 2018]

    35.   https://en.wikipedia.org/wiki/Lunar_Orbital_Platform-Gateway [January 5, 2019]

    36.  https://www.space.com/43018-lunar-orbital-platform-gateway.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20190116-sdc [January 15, 2018]

    37.  https://www.nasa.gov/feature/nasa-s-campaign-to-return-to-the-moon-with-global-partners  [January 19, 2019]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  January 20, 2018 [R-5]

    htts://jayabarathan.wordpress.com/

    Share
  • இந்த வார வல்லமையாளர் (296) – டி குகேஷ்

    -விவேக்பாரதி

    முன்னரே நிறுவி வைத்திருக்கும் இலக்கினைக் காலம் ஒவ்வொரு திறனாளிகளைக் கொடுத்து உடைத்துப் பார்க்கின்றது. எளிமையாக நமது எண்ணங்களை மற்றொரு எண்ணம் வெல்வது என்பதில் தொடங்கி சர்வதேச அளவில் இந்த இலக்கை முறியடித்து சாதனை படைப்பதும் வெற்றி வாகை தரிப்பதும் ஒரு உலகியல் நியதி. நாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த வினை விளையாட்டு சம்பந்தமான துறையில் நிறையவே காணப்படுகிறது. ஏற்கனவே சாதனையாளராக ஒரு விளையாட்டு வீரர் தன் திறத்தால் தாம் சேர்ந்த துறையில் பதித்து வைக்கின்ற இலக்குக் கல்லை மற்றொரு சாதனையாளர் தம் திறத்தால் இடம்பெயர்த்து உயர்த்தி வைக்கிறார் என்பதி விளையாட்டுத் துறையில் எளிதில் நமக்குப் புலப்படும் ஓர் ஆரோக்யமான போட்டி.

    இந்த வார வல்லமையாளர் அப்படிப் பட்டவரே! ஆனால் இங்கே சாதனைக்கு உள்ளானது விளையாட்டு வீரர்களின் வயது! ஆம்! மிகவும் சிறு வயதிலேயே இந்தியாவின் கிராண்ட் மாஸ்டராகவும், உலக ளவில் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகவும் சென்னையைச் சேர்ந்த குகேஷ் என்னும் 12 வயது நிரம்பிய மாணவர் சாதனை படைத்துள்ளார். அவரே இந்த வாரத்து வல்லமையாளர்.

    டில்லியில் நடந்த சர்வதேச ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டியில் தினேஷ் சர்மா என்னும் வீரரை 9 ஆவது சுற்றில் வீழ்த்தி குகேஷ் இந்தப் பட்டத்தை வென்றிருக்கிறார். இதற்கு முன்னதாக 12 வயது 10 மாதங்கள் 13 நாட்களில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்ற பிரக்னாநந்தா என்பவர் நிறுத்தி வைத்திருந்த இலக்கைத் தான் குகேஷ் முறியடித்து 12 ஆண்டு 7 மாதங்கள் 13 நாட்களில் இந்தியாவின் மிகக்குறைந்த வயது கிராண்ட் மாஸ்டராக வலம் வருகிறார்.

    அவரது தந்தை மற்றும் தாயின் தளராத ஊக்கத்தாலும், 5 வயதிலிருந்தே அவர் மேற்கொண்டு வரும் செஸ் விளையாட்டின் பயிற்சி மற்றும் ஆர்வத்தினாலும் இந்த வெற்றிப் பதக்கத்தைத் தோளில் சுமந்துள்ளார். மார்ச் மாதம் சர்வதேச செஸ் மாஸ்டர், பாங்காக் ஓபன் போட்டியில் 3 ஆம் இடம், ஆர்பிஸ் போட்டிகளில் 2 ஆம் இடம் ஆகிவற்றை வென்றதன் நீட்சியாகவே இப்போது உலகத்திந் இரண்டாவது இளம் கிராண்ட் மாஸ்டராகப் பரிமளிக்கிறார்.

    இவர்தம் வல்லமையை மெச்சி, இன்னும் பல விருதுகளும் பல திறமைகளும் வாய்க்கப்பெற வல்லமை மின்னிதழ் குழுமம் டி குகேஷ் அவர்களுக்கு வல்லமையாளர் என்ற விருதினைப் பெருமையுடன் வழங்கி மகிழ்கின்றது.

    சதுரங்க ஆட்டத்தில் காய் நகர்த்தும்
    சமர்த்தாலே உலகிலிளம் கிராண்ட் மாஸ்டர்
    மதிப்பதனை வென்றகுகேஷ் வல்ல மைக்காய்
    வல்லமையாளர் விருதை வழங்குகின்றோம்!

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் (290)

    -சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்களுடன் இவ்வார மடலுடன் உங்களிடையே மனந்திறக்கிறேன். நாளொரு மேடை பொழுதொரு வண்ணமாக இங்கிலாந்து அரசியல் மேடையில் பல நிகழ்வுகள் நாள்தோறும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவ்வரசியல் நிகழ்வுகளில் பார்வையாளர்களாக மர்ந்திருக்கும் மக்களின் வாழ்வில் இவைகள் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தப் போகின்றன என்பதை அனைவரும் புரிந்து கொண்டிருக்கிறார்களா? என்பது கேள்விக்குறியே! நடைபெறும் நிகழ்வுகள் அதனால் ஏற்படப் போகும் தாக்கங்கள் இங்கிலாந்தின் அரசியல் வரலாற்றுப் புத்தகத்தில் சரித்திர முக்கியத்துவம் நிறைந்த அத்தியாயமாக எழுதப்படப் போகிறது என்பதுவே உண்மை.

    ஜக்கிய இராச்சியம் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று 17.2 மில்லியன் மக்கள் ஆணையிட்டார்கள். அதுவே பெரும்பான்மை முடிவாக இருந்த போதும் வெளியேறக்கூடாது என்று வாக்களித்த 16 மில்லியன் மக்களை மறந்து விட்டார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. 2016ம் ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு ஜரோப்பிய ஒன்றியத்தில் இருப்பதா? இல்லையா? எனும் பிரச்சனைக்கு முடிவு கட்டியதோ இல்லையோ நாட்டில் புதுவகையான பிரிவினையை உருவாக்கி விட்டது என்பது உண்மை. ஜக்கிய இராச்சியத்தின் வெளியேற்றத்தை விரும்பியவர்களில் பலர் ஜக்கிய இராச்சியம் அன்றொரு காலத்தில் வகித்த உலகின் முக்கியத்துவத்தை மீண்டும் அடையும் எனும் ஒரு கனவில் இருப்பதாகவே தோன்றுகிறது.

    அன்றைய உலகிற்கும் இன்றைய உலகிற்கும் இருக்கும் வித்தியாசத்தை அவர்கள் உணர்ந்துள்ளதாகத் தெரியவில்லை. வெளிநாட்டவரின் அளவுக்குமீறிய குடியேற்றம் ஜக்கிய இராச்சியத்தில் ஒரு பாரிய பிரச்சனையாக இருப்பது உண்மையே ஆனால் ஜக்கிய இஆராச்சியத்தின் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் நிகழ்வு அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் எனும் கருத்து எந்தவகையில் யதார்த்தம் என்று தெரியவில்லை. பொருளாதார நெருக்கடிகள் சர்வதேச அளவில் அனைத்து நாடுகளினாலும் எதிர்கொள்ளப்பட்ட நிகழ்வு அதன் தாக்கமாக நாட்டில் மக்களின் சேவைகளுக்கு ஏற்பட்ட நெருக்கடிகளுக்கு ஒரே காரணம் வெளிநாட்டவர் ஜக்கிய இராச்சியத்தில் குடியுரிமை பெற்றுக் கொள்வது எனும் வாதம் முற்றிலும் உண்மையாகாது.

    இத்தகைய வாதங்களே இங்கிலாந்தை இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சிக்கலை நோக்கி இழுத்துச் சென்றது என்பதுவே உண்மை. சர்வஜன வாக்கெடுப்பின் போது தமது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்வதற்காக அரசியல்வாதிகள் செய்த வன்மையான பிரச்சாரங்களினால் அவர்கள் அந்த ஒரு சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றியடைந்திருந்தாலும் அதனால் சமுதாயத்தில் மக்களுக்கிடையே ஏற்பட்ட பிரிவினைகளின் தாக்கங்கள் பலருக்கு வாழ்வில் பல அச்சங்களை ஏற்படுத்தியிருப்பது உண்மை.

    ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து அவர்களுடன் எதுவிதமான உடன்பாடும் இல்லாமல் வெளியேறுவதை பெரும்பான்மையான இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பவில்லை. பிரதமர் தேரேசா மே கடந்த இரண்டரை வருடங்களாக ஜரோப்பிய ஒன்றியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் முடிவாக ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்தினார். நேற்று அதாவது ஜனவரி 15ம் திகதி அவ்வுடன்படிக்கை இங்கிலாந்து பாராளுமன்றத்தினால் 202 க்கு 432 எனும் வாக்கு வித்தியாசத்தினால் தோற்கடிக்கப்பட்டது. முன்னைய பாராளுமன்ற ச்ட்டப்பிரகாரம் இங்கிலாந்து மார்ச் மாதம் 29ம் திகதி ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும். இந்நிலையில் எதுவிதமான உடன்படிக்கையும் இன்றி வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோமா? எனும் அச்சம் பலரின் மனதிலும் ஏற்பட்டிருக்கிறது.

    இந்நிலையில் இன்று அதாவது 16ம் திகதி இங்கிலாந்து அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை இங்கிலாந்துப் பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்தார். அதற்கான வாக்கெடுப்பு இன்று இரவு 7 மணிக்கு நடந்தேறியது. இந்நம்பிக்கையில்லாத்தீர்மானம் அரசுக்கு ஆத்ரவாக 325 வாக்குகள் எதிராக 306 வாக்குகள் எனும் வித்தியாசத்தினால் தோற்கடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் தெரேசா மே இந்த இக்கட்டான நிலையில் இருந்து வெளியேறுவதற்காக தான் பாராளுமன்றத்திலிருக்கும் அனைத்துக் கட்சிகளினதும் தலைவர்களைத் தனித்தனியாக சந்தித்து உரையாடி எவ்விதமான் உடன்படிக்கையை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று அறிந்து அடுத்த கட்ட நடவடிக்கையை திட்டமிடப்போவதாக அறிவித்துள்ளார்.

    இங்கிலாந்தின் பொருளாதார நிபுணர்கள், வியாபார முகவர்கள் ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து உடன்படிக்கையின்றி வெளியேறுவதின் எதிர்மறையான தாக்கங்களை மிகவும் விளக்கமாக எடுத்துக்கூறுகிறார்கள். ஆனால் இஅக்கிய இராச்சியத்தின் பண்டைய பெருமைகளின் வகை கனவுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஒன்றியத்திலிருந்து வெளியேற வேண்டும் எனும் கோஷமெழுப்புவர்களின் செவிகளில் அவை விழுந்ததாகத் தெரியவில்லை.

    சரி அடுத்த கட்டத் தெரிவுகள் பிரதமரின் முன்னால் இருப்பவை எவை?

    தோல்வியடைந்த உடன்படிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி மீண்டும் வாக்கெடுப்புக்கு விடுவது

    எதுவிதமான உடன்படிக்கையும் இன்றி வெளியேறுவது

    மக்களின் தீர்ப்புக்காக இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்புக்கு விடுவது

    இதில் எந்த முடிவை பிரதமர் எடுக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

    இன்றைய பிரதமரின் மற்றைய கட்சிகளைக் கலந்தாலோசிப்பது எனும் முடிவை இரண்டரை வருடங்களின் முன்னரே எடுத்திருந்தால் . . . . . . .

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 9

    -சி. ஜெயபாரதன், கனடா

    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !

    [Miss me, But let me go]
    ++++++++++++++

    [32] மானுடப் பிணைப்பு [Human Bondage]

    “மானுடம் பூத்தது
    வாழ்வதற்கு!
    மன்மத ராகங்கள்
    காதலுக்கு!” என்று
    கனடா கவிஞர் புகாரி
    கவிதை
    எழுதி வைத்தார்.
    முன்புறம்
    ஒரு கதவு மூடினால்
    பின்புறம்
    மறு கதவு திறக்கிறது!
    இறுதியில்
    பிரிந்து செல்லும் கை
    பிடித்தது
    என் இடது கையை!
    உடனே அடுத்து நான் வாழப்
    பிணைக்கும்
    இருகரங்கள் பற்றி
    இழுத்துக் கொள்ளும் என்னைத்
    தன்வசம்!
    இன்னும் ஆயுள் நீடிக்கும்
    உனக்கு!
    வாழ நினைப்பாய்.
    உதவ முனைவாய்,
    இன்னும் முடிக்க வேண்டிய
    வினைகள் பல
    உள்ளன உனக்கு!
    பயணம் முடிய வில்லை
    உனக்கு!

    +++++++++++++++++++++

    [33] சிலுவை

    ஒவ்வோர் மனிதனும்
    தன் முதுகிலே
    தனது சிலுவைச்
    சுமந்து கொண்டு தான்
    சுற்றி வருகிறான் உலகை
    செக்கு மாடுபோல்,
    தெரிந்தோ
    தெரியாமலோ!
    மதுபானம் சிலருக்கு!
    மரிவானா சிலருக்கு!
    மடிவெடி சிலருக்கு!
    புற்று நோய் சிலருக்கு!
    பட்டென வெடித்துக் கொல்லும்
    இரத்தக் குழல் வீக்கம்
    சிலருக்கு!
    பயண முடிவிலே சிலுவையில்
    யார் உன்னை அடிப்பது
    ஆணியில்?
    ஊழிக் காலன் தான்!

    ++++++++++++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.
    சி. ஜெயபாரதன்

    Share