Blog

  • நலம்…. நலமறிய ஆவல் (145)

    -நிர்மலா ராகவன்

    எதிர்மறைச் சிந்தனைகள்

    ஒருவர் பல துறைகளிலும் வெற்றி பெற்றிருந்தால், `அவருக்குத்தான் தன்னைப்பற்றிய விழிப்புணர்வு எவ்வளவு துல்லியமாக இருக்கிறது!’ என்று வியந்து பாராட்டத் தோன்றுகிறது.

    அவரைப் போன்றவர்கள் சிறு வயதிலேயே, ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்தில் தமக்கு ஏன் ஓர் அசாதாரணமான உணர்வு ஏற்படுகிறது என்று அலசியிருப்பர்.

    மூன்று, நான்கு வயதுக் குழந்தைகள் தாயிடம் பொய்யுரைக்கும்போது கவனித்துப் பாருங்கள். முகம் சுருங்கியிருக்கும். `தர்மசங்கடம்’ என்ற அவர்கள் நினைப்பு புரியும்.

    அப்படி ஒரு முறை, என் மகள் கேட்டாள், “நான் ஏன் மூஞ்சியை இப்படி வெச்சுக்கறேன்?”

    நான் லேசாகச் சிரித்தபடி, “அம்மாகிட்ட பொய் சொல்றோமேன்னு!” என்றேன். எந்த வயதானாலும், குற்ற உணர்ச்சி ஒருவரைப் பாடுபடுத்தும். (குழந்தைகள் பொய் சொல்வது தண்டனையைத் தடுக்கும் வழி. அதைப் பெரிதுபடுத்தாது விட்டுவிட்டால், தானே மாறிவிடுவார்கள்).

    சுயமாகச் சிந்திக்கும் வயதில், எல்லா விஷயங்களிலும் பிறர் எதிர்பார்ப்பின்படி நடப்பது நமக்கே நாம் விலங்கிட்டுக்கொள்வதுபோல்தான். நாம் நினைத்ததை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாமல் போய்விடும். அப்புறம் சுதந்திரமான எண்ணமும் செயலும் ஏது!

    பிறரிடமிருந்து மாறுபட்டிருக்கிறோமே என்றுதான் பலரும் குழம்புவார்கள்.

    அதிலும், உடற்குறையுடன் இருப்பவர்களோ!

    கதை

    பதின்ம வயதான என் உறவினர் மகள் லல்லியை வெளியில் அழைத்துப் போயிருந்தோம்.

    “எல்லாரும் என்னையே பார்க்கிறார்கள்!” என்றாள் மனத்தாங்கலுடன். பிறவி ஊனத்தால், ஒரு வித கைத்தடியின் உதவியுடன்தான் அவளால் நடக்கமுடியும்.

    “நாமும் அவர்களைப் பார்க்கிறோமே! பிறரைப் பார்ப்பதற்குத்தானே வெளியில் வருகிறோம்!” என்று ஏதோ சமாதானம் சொன்னேன்.

    “இல்லை, எனக்குத் தெரியும். அவர்கள் என்னைத்தான் உற்று உற்றுப் பார்க்கிறார்கள்!” என்றாள். இப்படிப்பட்ட எதிர்மறையான சிந்தனைகளே ஒருவரை மேலும் பலகீனமாக ஆக்குகிறது.

    என்னைப் பார்க்காதீர்கள்!

    நீச்சல் குளத்தில் ஒரு தமிழ் மாது நீச்சலுடை அணிந்து வந்திருந்தாள். `இதென்ன, கால், தொடை, முதுகு எல்லாம் தெரிகிறதே!’ என்று அவளுக்குத் தோன்றிப்போயிருக்க வேண்டும். இல்லை, குடும்பத்தில் யாராவது முகத்தைச் சுளித்திருப்பார்கள். ஆடையை தொடைப்பகுதியிலும், பின்புறத்திலும் அடிக்கடி இழுத்து விட்டுக்கொண்டாள்.

    `இழுத்து இழுத்து விட்டுக்குமே..!’ என்று அவளைக்குறித்துப் பிறர் பேசுவதைக் கேட்டிருக்கிறேன். சில நாட்களுக்குப்பின் அவள் வருவது நின்றுபோயிற்று.

    தாம் பருமனாகவோ, வழுக்கையாக இருப்பதையோ கேலி செய்துகொள்பவர்கள், `பிறர் சொல்வதற்குமுன் தாமே சொல்லிவிட்டால், அதன் பாதிப்பு குறையும்!’ என்று நினைப்பவர்களாக இருப்பார்கள்.

    `என்ன நினைப்பார்களோ!’ என்று எந்த சந்தர்ப்பத்திலும் பயந்துகொண்டே இருந்தால், முழுமையான மகிழ்ச்சி கிட்டுவதில்லை. `நான் இப்படித்தான்! உங்களுக்கென்ன!’ என்று தன்னையே ஏற்றுக்கொள்பவருக்கு மனக்குறை இருக்காது.

    `ஏன் இவ்வளவு குண்டாக இருக்கிறாய்?’ என்று ஒரு பெண் தன் நண்பனிடம் கேட்க, `ஆமாம்!’ என்று நொடித்தான் அவன். `இப்போ இதுக்குப்போய் கவலைப்படச் சொல்றியா?’

    எல்லாருக்கும் அவரவர்பற்றிய சிந்தனைதான். நாம் அஞ்சுவதுபோல்தானே அவர்களும் நாம் அவர்களைப்பற்றி என்ன நினைக்கிறோமோ என்று யோசிப்பார்கள்! இது புரிந்தால், அநாவசியமாக குழம்பத் தேவையில்லை.

    தம்மை ஒருவர் வார்த்தைகளால் தாக்குமுன் தாம் முந்திக்கொள்ளலாம் என்று சிலர் பிறரிடம் குற்றம் காண்பார்கள். இவர்கள் தம்மைப்பற்றிச் சிந்திக்க அஞ்சுகிறவர்களாக இருப்பார்கள். அலசினால் மேலே எழும் குறைகளை, அவை உண்டாகக் காரணமாக இருந்த சம்பவங்களை மீண்டும் நினைவுகோர நேருமே! இப்போக்கினால் பலகீனம் அடைவது என்னவோ அவர்கள்தாம்.

    சிறு வயதில் நமக்குப் பிடிக்காதவைகளை நிறைய அனுபவித்திருப்போம். அப்பிராயத்தில் தவறு செய்வதும் இயற்கை. அவைகளையே எண்ணி, எண்ணி மறுகியபடி வாழ்க்கையைக் கழித்தால் நரகம்தான்.

    கதை

    சிவநேசனைப் பொறுத்தவரை, ஆண்குழந்தைகளை அடித்தால்தான் ஒழுங்காக வளர்வார்கள். இந்த நம்பிக்கையுடன், அவரது பிள்ளைகள் வீட்டுக்குள் நடமாடும்போதுகூட, கையில் பிரம்புடன் அவர்களைப் பின்தொடர்வார்.

    இப்படி வளர்ந்த நடராஜனுடன் பயமும் ஆத்திரமும் ஒருங்கே வளர்ந்ததில் ஆச்சரியம் இல்லை. வீட்டில் இருக்கவே பிடிக்காத நிலையில், நண்பர்கள் ஆறுதலாக இருந்தார்கள். `என் நண்பர்களுக்காக உயிரைக்கூடக் கொடுப்பேன்!’ என்பார், அடிக்கடி. அவர்கள் கேட்ட, கேட்காத உதவியைக்கூட வலியப்போய் செய்தார்.

    ஆனால், தன் சக்திக்குமீறி பிறருக்காக உழைத்ததில், வீட்டில் தன் மனைவி மக்களிடம் சிடுசிடுப்பாகத்தான் இருக்க முடிந்தது. சிறுவயதில் அடைந்த இனம்புரியாத அச்சம், தனிமை, வருத்தம் எல்லாம் ஆட்டுவிக்க, தன்னைப்போல் துன்பமும் துயரமும் அனுபவிக்காதவர்களிடம் ஆத்திரப்பட்டார்.

    இவரது போக்கைக் கண்டு வீட்டிலும் அலுவலகத்திலும் உள்ளவர்கள் பயந்து ஒதுங்க, `நான் யாருக்குமே ஒரு பொருட்டில்லை!’ என்று தோன்றிப்போயிற்று. ஒரு சிறு பிழை செய்தாலும், தடுமாற்றம், அவமானம்.

    பிறருக்கு ஓயாது உதவுகிறவர்கள் ஏமாளிகளா?!

    பிறர் தன்னைப்பற்றி அப்படி ஓர் எண்ணம் கொண்டிருப்பது நடராஜனுக்கு முதலில் அதிர்ச்சியாக இருந்தது. அதன்பின், `இப்போது முடியாது!’ என்று பணிவுடன் சொல்லக் கற்றுக்கொண்டார். ஆத்திரம் அவ்வப்போது தலைகாட்டினாலும், வெகுவாகக் குறைந்தது.

    `நான் தவறு செய்தால், இனி யாரும் பரிகசிக்கவோ, தண்டிக்கவோ போவதில்லை. பிறருக்கு உதவி செய்தால் எனக்கு மகிழ்ச்சி என்றாலும், தக்கவர்களுக்கு மட்டும்தான் உதவ வேண்டும்,’ என்று தீர்மானித்து, சிறிது சிறிதாக அதை நடைமுறையில் கொண்டுவந்தால், ஒருவரது ஆத்திரம் மட்டுப்பட வழியிருக்கிறது.

    உணர் திறன் வளர

    தினமும் நம்மைப் பாதித்தவைகளைக் குறித்துவைத்தால், நாளடைவில் நம் உணர்வுகள் புரியவரும். எதையெல்லாம் அடைய விருப்பம் என்பதையும் எழுதலாம். காலப்போக்கில், அப்பட்டியல் மாறிக்கொண்டே போகும்!

    நம்மையே ஆராய்ந்து நமக்குப் பிடித்தபடி மாற்றிக்கொண்டாலோ, அல்லது பிறர் சொல்வதைக் கேட்டாலோ, நன்மை விளையும். எப்படி என்கிறீர்களா? நம் பலம், பலவீனம் ஆகியவைகள் புரிந்துபோக, பலத்தைப் பெருக்கிக்கொள்ள முயற்சிகள் எடுக்கமுடியும்.

    நம்முடன் நன்கு பழகி, புரிந்தவர்களிடம் நம்மை எடைபோடும்படி கேட்கலாம். ஆனால், அவர்கள் சொல்வதையெல்லாம் அப்படியே ஏற்க வேண்டியதில்லை. பிறருக்குத் தவறு என்று படுவது நமக்கு ஏற்புடையதாக இருக்கலாமே! `பிறர் இருக்கிறபடி இருக்கட்டும்!’ என்று விட்டால் இரு தரப்பினருக்கும் நிம்மதி.

    நம்மை நாமே புரிந்துகொள்வது நம் தனித்தன்மையை நமக்கு உணர்த்துவதுடன், பிறரையும் புரிந்துகொள்ள வழி வகுக்கிறது. அவர்கள் நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்றும் புரியும். அதனால் சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி நடக்கலாம்.

    பிறர் நம்மை ஆட்டுவிக்க இடம் கொடுப்பானேன்! நாம் என்ன, பொம்மையா?

    Share
  • பிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள்

    -சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    பிரபஞ்சத்தின் மர்மமான நூறு புதிர்கள்
    பூமியில் அடுத்து வரும் காந்தத் துருவத் திசை மாற்றத்தில் என்ன நிகழலாம் ?

    1. https://youtu.be/HFT7ATLQQx8
    2. https://youtu.be/Ou1BiorYRNU
    3. What will happen when Earth’s north and south poles flip
    4. https://youtu.be/lc93IPEkWWc

     

    8_17_Solar wind normal polarity

     

    பூகோளக் காந்த துருவங்கள்
    புதிராய்த் திசைமாறும் !
    ஆமை வேகத்தில் வட துருவம்
    தென் துருவம் இடம்மாறிக் கொள்ளும் !
    பூமியின் சுழற்சி அப்போது
    எதிர்த்  திசையில் ஓடுமா ?
    பரிதியின்  உதயம்  அப்போது
    கிழக்கா ? மேற்கா ?
    உயிரினம்,  மானிடம்  என்ன வாகும் ?
    பூமி சுழலும் வேகத்தில்
    மானிடர் எறியப் படுவாரா ?
    சூழ்வெளி  மாறி வாயுக்குடை
    பாழ்வெளி ஆகுமா ?
    நீர் மண்டலம் ஆவியாகி
    நிலம் பாலை ஆகுமா ? சூடேறி
    உயிரினங்கள் மரிக்குமா ?
    பயிரினங்கள்
    பசுமை இழக்குமா ?
    அரை மில்லியன் ஆண்டுகட்கு
    ஒருமுறை நேர்ந்திடும்
    துருவத் திருப்பம்,
    பிறகு மீளுமா ?
    இயற்கை  முறை புரியும்
    திருவிளை யாடல் !
    பருவ காலம் தாறுமாறாகி
    வருடப் போக்கு வேறாகுமா ?
    துருவ மாற்றம்
    பிரளய நர்த்தனப் பயிற்சியை
    அரங்கேற்றுமா ?

    +++++++++++++

    துருவம் நகர்வது என்பது புதிய செய்தியில்லை.  1580 ஆண்டு முதல்  லண்டன் நீண்ட காலக் குறிப்பேடுகள், பூகாந்த வட துருவம் தாறுமாறாய் நகர்வதை ஒருசில நூற்றாண்டுகள் பதிவு செய்துள்ளனர்.

    சியாரன் பெக்கான் [Ciaran  Beggan, Geologist, British Geological Survey, WMM UPDATE TEAM]  [1981 STUDY ROYAL SOCIETY REPORT] 

    +++++++++++++

    பூமியின் காந்த துருவங்கள் விரைவில் திசைமாறப் போகின்றனவா ?

    பூமியின் வடதுருவம் இப்போது [ஜனவரி 30, 2019] இடம் தவறி மாறியுள்ளது என்றும்  நான்கு ஆண்டுக்கு அறிவித்த பழைய  பூகோளக் காந்தவெளி மாடலைப் [Geomagnetic Model] புதுப்பிக்க வேண்டும் என்றும் சமீபத்தில் நாசா விஞ்ஞானிகள் குறிப்பிட் டுள்ளார்கள்.  புதியதாய்த்  திருத்தப்பட்ட மாடல் பூகோள காந்தவெளி மாடல்  [World Magnetic Model (WMM)]  என்று பெயரிடப்  பட்டுள்ளது.  அம்மாடல் விரைவில் “இயற்கை”  இதழில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    Image result for brunhes-matuyama reversal

    பூகோளக் காந்த வெளி தாறுமாறாக கனடா ஆர்க்டிக் பகுதியி லிருந்து, ரஷ்யா – சைபீரியா நோக்கி எதிர்பாராதவாறு நகர்ந்து கொண்டிருப்பது, விஞ்ஞானிகளைப் பெரு வியப்பில் ஆழ்த்தியுள்ளது.  நிச்சயம்  வட துருவம் நகர்ந்து கொண்டுள்ளது.

    இப்பதிவுகளில் மெய்யாகக் கவனத்தைக் கவரும் தகவல் என்னவெனில் வட துருவ நகர்ச்சியில் தொடர் வளர்ச்சி [Acceleration in Movement]. 1990 மைய ஆண்டுகளில் வட துருவ நகர்ச்சியில் ஒரு வேகம் மாறியது.  அதாவது வட துருவம் ஆண்டுக்கு 9 மைல் நகர்ச்சியிலிருந்து, 34 மைலாய் [15 கி.மீ –>> 55 கி.மீ] அதிகரித்தது.  விந்தையாக வட துருவம் மேற்கு அரைக்கோளத்திலிருந்து, கிழக்கு அரைக்கோளத்துக்குத் [Eastern Hemisphere] தாவியுள்ளது.

     

    துருவ நகர்ச்சிக்கு நேரும் காரணங்கள் என்ன ?          

    முக்கியக் காரணம் பூமியின் உள்ளே இருக்கும் திரவ இரும்பு வெளிக்கரு [Liquid Iron Outer Core].  அது உட்கருப் போர்வை  [Core Field]  என்று அழைக்கப் படுகிறது.  சிறிய பகுதிகள் சில காந்த ஆற்றல்  தாதுக்கள் உடைய அடிக் கோள் & மேல் கோள் தட்டுகள்  [Magnetic Minerals in the Crust &* Upper Mantle] & கடல்நீர் காந்த தளத்தைச் சுற்றி [Electrical Currents, created by seawater movements through ambient magnetic field]   நகர்ச்சியைப் பாதிக்கும். குறிப்பாக பூமியின் உட்கருப் போர்வை நலிந்து கொண்டு [Core Field is Weakening] வருகிறது.  உட்கருப் போர்வை நலிவது, காந்த துருவம் திசை மாறப் போவதைக் காட்டுகிறது.

    கடந்த பூகோளத் துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்ததாக அறியப் படுகிறது.  41,000 ஆண்டுக்கு முன்பு, துருவங்கள் தற்காலியமாக விரைவில் வலுவிழந்து, திசை மாறாது இருந்துள்ளதை சியாரன் பெக்கான் எடுத்துக் காட்டுகிறார்.  2018 ஆய்வுப் பார்வைகளில், பூகோளக் காந்த வலு மிகவும் குன்றியுள்ளதாக தெரிகிறது.

    துருவ மாற்றத்தால் நேரக் கூடிய பெரும் சேதங்கள், கேடுகள்

    மெதுவான துருவ மாற்றங்களால் குறிப்பாகப் பல எரிமலை வெடிப்புகள், பூகம்பங்கள்,  கடலில் விந்தை ஒலிகள் நேரலாம் என்றும், திடீரென மாறினால் உலகமெங்கும் பிரளயம் நேரும் என்றும் ஒரு சில விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்.  விஞ்ஞானிகள் அவ்விதக் கோர நிகழ்வுகள் 74  [எழுபத்தி நான்கு] நேர்ந்திருப்ப தாகக் கணித்துள்ளார்.  அதற்காக ஆயிரக் கணக்கான மாதிரிப் பனித் துண்டுகளைப் பல்லாயிரம் அடி துருவ ஆழத்தில் எடுத்து ஆய்வுகள் செய்துள்ளார்.

    ஒருதிடீர் துருவ மாற்றம் பூமியின் நிலைப்பாட்டுச் சமன்பாடைத் தகர்த்து விடும். அது பெரும் பூகம்பக் கொல்லிகளை [ Large Lethal Earthquakes], அசுரச் சுனாமிகளை, எரிமலைப் பொழிவுகளை உண்டாக்கலாம். அதனால் புகைத் தூசி மண்டலம் உலகம் எங்கும் பரவி, சூரிய ஒளி மறைக்கப்பட்டு திடீர்ப் பனியுகம் [Ice Age] பிரளயம் போன்ற அழிவு யுகம் தூண்டப்படலாம்.

    Earth's Pole Reversal

    [youtube https://www.youtube.com/watch?v=oYHPVGuQAVw?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    பூமியின் கடந்த காலக் காந்தத் துருவ மாற்றம் எப்போது நேர்ந்தது ?

    புவியின் தொடர்ந்த பூகாந்த மாற்றம் கோளைச் சுற்றிக் கண்ணுக்குப் புலப்படாத விசையாய், சூரியத் தீக்கதிர்த் தாக்குதலைத் தணித்து மனிதரைப் பாதுகாத்து வருகிறது. துருவத் திசை மாற்றம் ஓர் இயற்கை நியதி. கடந்த 20 மில்லியன் ஆண்டுகளாய், துருவத் திசை மாற்றம் 200,000 முதல் 300,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு சீரிய நெறிப்படி நிகழ்ந்து வருகிறது. ஆயினும் கடந்து சென்ற பூகாந்தத் திசைமாற்றம் [Brunhes-Matuyama Reversal] 780,000 ஆண்டுக்கு முன்பு நேர்ந்துள்ளது. இடையே தற்காலியமாக 41,000 ஆண்டுகளுக்கு முன்பு [Laschamp Event] ஒரு திசைமாற்றம் நிகழ்ந்துள்ளது. அந்தத் திசை மாற்றம் சுமார் ஆயிரம் ஆண்டுகள் நீடித்து, மெய்யாகத் துருவங்கள் 250 ஆண்டுகளாய் நிலைத்து வந்துள்ளன.

    Earth magnetic field

    வடதுருவம், தென்துருவம் இடம் மாறிப் பன்னூறு முறைகள் திசை மாற்றங்கள் நமது பூகோள வரலாற்றில் நிகழ்ந்துள்ளன.  அப்போது பூகாந்த விசை  குறைந்து, மிகச் சிக்கல் வடிவம் அடைந்து, துருவங்கள், புவி மையக் கோட்டுப் [Equator] பகுதியில் புலம் பெயர்ந்து, தற்போதைய பூகாந்த விசை வலுவில் 10% தணிந்து விட்டது.  அல்லது, ஒரே தருணத்தில் பன்முக வடதுருவ, தென் துருவ அமைப்புகள் [Multiple Poles] பூகோளத்தில் தோன்றியுள்ளன.

    இம்மாதிரிப் பூகோளத் திசைமாற்றங்கள் [Geomagnetic Reversals]ஒவ்வோர் மில்லியன் ஆண்டுகளில் ஒருசில முறைகள் சராசரியாக நேர்துள்ளன. அப்படி நேர்ந்தாலும்,  திசைமாற்ற இடைவெளிகள் ஒழுங்கற்ற முறையில் தான் நிகழ்ந்திருக்கின்றன.  இடைவெளி பல மில்லியன் ஆண்டுகளாகவும் ஏற்பட்டிருக்கலாம்.  முழுமை பெறாமல் அரைகுறைத் திசைமாற்றங்கள், தற்காலிய நிலைபெறாத, திசைமாற்றங்கள் கூட நேர்திருக்கலாம்.  அந்தச் சமயங்களில் பூகாந்த துருவங்கள் [Magnetic Poles] பூகோளத் துருவ முனை களை [Geographic Poles] விட்டுப் புலம் பெயர்ந்து, புவி மையக் கோட்டைக் [Equator] கடந்து, மீண்டும் பழைய இடங்களுக்கே திரும்பலாம்.

    Image result for brunhes-matuyama reversal

    பிரளயக் கேடுகளை முன்கூறும் வேதியர் [Doomsday Theorists]இந்தப் பூகோளத் திசைமாற்ற நிகழ்ச்சியை எடுத்துக் கொண்டு, இது உலகை அழிக்கப் போகிறது என்று அச்சம் ஊட்டுவார்.  ஆனால் அவ்விதம் பேரழிவுச் சீர்கேடுகள் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு நேருமா ? பயிரினங்களுக்கு நேருமா ?  இவ்வினாக்களுக்கு நாசா கூறும் பதில் என்ன?  பூதளவியல், பூர்வ புதைபடிவப் பதிவுகளிலிருந்து, [Geologic & Fossil Records] கடந்த நூற்றுக் கணக்கான பூகாந்த திசைமாற்ற விளைவுகளை ஆராய்ந்த போது, “சீர்கேடுகள்  இல்லை”  என்பதே தெரிகிறது. பூமியில் பூகாந்தத் திசை மாற்றம் மெதுவாக மாறும் போது,  பூகோளத்தின் சுழற்சி வேகம் [சுமார் : மணிக்கு 1000 மைல்] தளர்ந்து சுழற்சியின் திசை மாறுமா ? அப்போது பூமியில் உயிரினங்களுக்கு என்ன நேரிடும் ?  கிழக்கை விட்டுச் சூரியன் மேற்கே உதிக்குமா ?  இவை போன்ற குதர்க்க வினாக்களுக்குப் பதில் இதுவரைக் கிடைக்கவில்லை !

    இப்போது மெய்யாகத் [2017] துருவம் வடதிசை நோக்கி ஆண்டுக்கு 40 மைல் வேகத்தில் புலம் பெயர்வதாக விஞ்ஞானிகள் மதிப்பிடுகிறார். போன 20 ஆம் நூற்றாண்டின் துவக்க சமயத்தில் ஆண்டுக்கு 10 மைல் வேகத்தில் துருவ வடப் பெயர்ச்சி நேர்ந்திருக்கிறது.  இந்தப் பூகாந்தத் துருவங்கள் திசைமாற்றம் ஜப்பானிய விஞ்ஞானிகள் பெயரில் ” புருனெஸ் -மட்டுயமா திசைமாற்றம் ”  [Brunhes- Matuyama Reversal] என்று குறிப்பிடப் படுகிறது.   இத்திசை மாற்றத்தால் எந்த வித மாறுதல்கள், தீங்குகள் பயிரின- உயிரினப் பிறப்புகளுக்குத் தீவிரமாய் இல்லை என்று பூர்வப் புதைப்படிவப் பதிவுகள் [Fossil Records] மூலம் அறியப்படுகின்றன.

    இந்த ஆண்டுகளில் [2000 – 2016] ஆண்டுகளில் எடுத்துச் சோதித்த ஆழ்கடற் படிவுகள் உள்ளே [Sediments Cores], ஆக்சிஜென் ஏகமூலங்களில் [Oxygen Isotopes ] எந்த வித மாறுதலும் இல்லை.  பூகாந்தத் திசைமாற்றத்தால், புவிச் சுழற்சி அச்சுக்குப் [Earth’s Rotation Axis] பாதிப்பு இல்லை. காரணம் புவி அச்சுச் சரிவு காலப் பருவ நிலை, பனித்திரட்சிக்குப் [Climate & Glaciation] பாதிப்பை உண்டாக்குகிறது.  அவ்விதம் திசை மாற்றத்தால் பனித்திரட்சி பாதிக்கப் பட்டிருந்தால், பதிவுகளில் பதிவாகி யிருக்கும்.

    [youtube https://www.youtube.com/watch?v=B-X-a4sUURM?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    ஆயிரக்கணக்கான ஆண்டு காலத்தில் மெதுவாகப் பூமியில் பூகாந்தத் திசைமாற்றம் நேர்வதால், துருவ இடமாற்றம் ஒரு தாவலில் நேர்வ தில்லை.  கடந்த 3 பில்லியன் ஆண்டுகளில், குறைந்தது நூறு முறை பூகாந்தத் திசைமாற்றம்  நேர்திருப்பதைத் தெரிய வருகிறது.  பூகாந்தத் திசைமாற்றம் ஆழ்கடலடிப் புழுதிப் படிவுகளில் [Sediments] பதிவாகிறது. அவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து சோதனை செய்து வருகிறார்.

    [youtube https://www.youtube.com/watch?v=nHew0n0BUhw?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=U3Mva2a-52k?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    ++++++++++

    “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றிவரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !”

    பிராடு ஸிங்கர், பூதளவியல் பேராசிரியர் விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகம்

    Image result for brunhes-matuyama reversal

    பூகாந்த தளம் திருப்பிக் கொள்ள [Earth’s Magnetic Pole Reversal] 1000 முதல் 10,000 ஆண்டுகள் எடுக்கலாம்.  அந்த திருப்ப இயக்கத்தில் நேரிணைப்பாகும் [Realignment] முன்பு,  காந்த சக்தி மிகவும் தளர்ச்சி அடைகிறது.  அது திடீர்த் திருப்பம் ஆகினும், மெதுவாகவே [Sudden Flip; but a Slow Process] அது நிகழ்கிறது.  அத்தருணத்தில் பூகாந்த சக்தியின் ஆற்றல் பலவீனம் அடைகிறது.   காந்த தளம் சிக்கலாகிச் சில சமயம் இரு துருவங்களுக்கு மேலாகவும் காணப் பட்டு, மீண்டும் காந்த சக்தி வலுவேற்றிக் கொள்கிறது.   அந்த நிலையில் துருவங்கள் எதிராக மாற்றமாகி நேரிணைப்பு [Realigns in the Opposite Direction] செய்து கொள்ளும்.

    மோனிகா கோர்ட்டே  [Scientific Director, Niemegk Geomagnetic Observatory, Germany]

    Iside the Earth

    கடந்த வரலாற்றுப் பதிவுகள் பூமியின் அடுத்த துருவத் திருப்பம் வரப் போவதை வழிமொழிகின்றன.  சராசரியாக 400,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூதளக் காந்த துருவ மாற்றம் நிகழ்கிறது.  அந்தக் கால எண்ணிக்கைத் தாறுமாறாகவும் வேறுபடுகின்றது.  பூமியின் சென்ற துருவத் திருப்பம் சுமார் 800,000 ஆண்டுகளுக்கு முன்பு நேர்ந்திருப்ப தாகப் பூதளவியல் வரலாற்றுப் பதிப்புகள் கூறுகின்றன.  துருவத் திருப்பங்கள் எதிர்பாராத கால வேறுபாடுகளில் தோன்றுபவை.  அந்தத் துருவ மாற்றம் இன்னும் சில நூற்றாண்டுகளில் வரலாம்.  அல்லது சில மில்லியன் ஆண்டுகள் கழிந்தும் ஆகலாம்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    பூமி அடுத்து எப்போது துருவங்களை மாற்றிக் கொள்ளும் ?

    நமது பூகோளத்தின் ஆயுட் காலத்திற்குள் பன்முறைத் துருவ மாற்றங்கள் நேர்ந்துள்ளதாகப் பூதள விஞ்ஞானிகள் கருதுகிறார்.   அப்படிக் கூறுவதற்கு எரிமலை அடுக்குப் பாறைப் பதிவுகளே  தக்க நிரூபணம் தருகின்றன.   முந்தைய பூகாந்த மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகட்கு முன்பு நிகழ்ந்த தாகப் பாறைப் பதிவுகள் மூலம் அறியப் படுகின்றது.   அப்போது தான் கற்கால மனிதன் சிக்கி முக்கிக் கற்களைத் தட்டி  அக்கினி உண்டாக்கும் “கனல் சக்தி” [Fire Power] திறன் கண்டுபிடிக்கப் பட்டது.

    Earth's Coreஅமெரிக்காவின் மேரிலாண்டு பல்கலைக் கழகத்தில் பூகோள உள்ளமைப்பைக் காட்டும்,  உலகிலேயே பெரிய சுழற்சி கோளம் அமைக்கப் பட்டுள்ளது.  துருப்பிடிக்கா இரும்பில் 10 அடி விட்டத்தில் வடிக்கப் பட்டிருக்கிறது.   அதற்குள் சிறு கோளம் ஒன்றும் உள்ளது.  இரு கோளங்களுக்கும் இடையில் 250 டிகிரி F உஷ்ணத்தில் சூடாக்கப் பட்ட , 12 டன் திரவ சோடியம் நிரப்பப் பட்டுள்ளது.  அதுவே திரவ உலோகமுள்ள பூமியின் உள்ளே இருக்கும் மேல் உட்கருவாகக் [Liquid Iron Outer Core] கருதப் படுகிறது.  மிக வேகமாய்ச் சுழலக் கூடிய அந்தக் கோளத்தில் பல்வேறு பூதளப் பௌதிகச் சோதனைகள் செய்து காட்ட முடியும்.   அச்சோதனை களில் ஒன்றுதான் பூதளப் பௌதிக விஞ்ஞானி, டானியல் லாத்திரப் [Geophysicist Daniel Lathrop] முன்னறி விக்க முயலும், அடுத்து எப்போது பூகோளத் துருவமாற்றம்  நிகழப் போகிறது எனப்படுவது.  இந்த முன்னறிப்பை வெளியிட்டது ரஷ்யக் குரல் எனப்படும் “வாய்ஸ் ஆஃப்  ரஷ்யா” [Voice of Russia].   அறிவித்த நாள் :  ஏப்ரல் 29, 2014.

    பூகோளத் துருவ மாற்றத்தால் என்ன கேடுகள் விளையும் என்பது யாருக்கும் தெரியாது.   அடுத்த துருவ மாற்றத்தில் மனித இனத்துக்கு தீங்கு எதுவும் நேராது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்.  சென்ற துருவ மாற்றம் 780,000 ஆண்டுக்கு முன்னர் நேர்ந்திருக்கிறது.   துருவ மாற்றம் மிகவும் மெதுவாக நிகழ்கிறது.  அது முடிய ஆயிரக் கணக்கான ஆண்டுகள் [1000 முதல் 10,000 வரை] ஆகலாம்.  துருவ மாற்றம் நிகழ்ந்தால் பூமியின் சுழற்சி நின்று எதிர்ப்புறம் சுற்றுமா ?  பரிதி உதயமாகும் கிழக்குத் திசை வேறுபடுமா ?  எதிர்பாராத இந்த மாறுபாட்டுகளால் பருவ மாற்றங்கள் நேருமா ?  இவை போன்ற கேள்விகள் எழுகின்றன ! ஆனால் இவற்றுக்குச் செம்மையான பதில் இதுவரை கிடைக்க வில்லை.  அடுத்த பூகோளத் துருவ மாற்றம் 400,000 வருடங்கள் கடந்து நிகழும் என்று அனுமானிக்கப் படுகிறது.

    Fig 1 Polat Shift in Earth

    “பூமியின் காந்தத் தளம் நமக்கும், நமது சூழ்வெளிக்கும் பரிதியின் தீவிரப் புயலிலிருந்து (Solar Wind) கேடுகள் விளையாதபடிக் கவசமாய்ப் பாதுகாப்பாக இருக்கும் ஓர் இயற்கை ஆற்றல்.  பறவை இனத்துக்கும், மனித இனத்துக்கும் கடற் பயண முறைக்குத் திசைகாட்டும் (Navigational Direction) ஓர் அரிய ஆற்றல் அது !  பரிதிப் புயல்கள் தீவிரமாய் அடிக்கும் போது மின்சாரப் பரிமாற்றமும், தொலைத் தொடர்புச் சாதனங்களும் பழுதடைந்து போகும்.”

    ஆன்ரு பிக்கின், நெதர்லாந்து உட்ரெக் (Utrecht) பல்கலைக் கழகம்

    “கடந்த ஆண்டுகளில் சில பறவை இனங்கள் துருவத் திருப்பக் காலங்களில் கடற் பயணம் புரிந்த போது திசை தடுமாறிப் போயுள்ளன !  ஒற்றைச் செல் உயிர் ஜந்துகள் (Single-celled Organisms) சில மேல், கீழ் நிலை அறிய முடியாதபடி அழிந்து போயிருக் கின்றன !  கடந்த காந்த முனை மாற்ற காலங்களில் மனித இனம் பிழைத்து எழுந்திருப்பதாகத் தெரிகிறது.  ஆகவே அடுத்து வரப் போகும் புதியத் துருவத் திருப்பத்தில் மனித இனம் பாதகம் அடையாமல் மீட்சி பெறலாம் !”

    டேவிட் குப்பின்ஸ், லீட்ஸ் பல்கலைக் கழகம், இங்கிலாந்து.

    Fig 1B Magnetic Pole Shift

    “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.”

    பேராசிரியர் பிராடு ஸிங்கர்.

    பூகோள வரலாற்றில் நேர்ந்துள்ள வடதென் துருவ மாற்றங்கள் !

    பூமியின் வடதென் காந்தத் துருவங்கள் எப்போதும் ஒரே திசை நோக்கி இருப்பவை அல்ல !  அவை சிறுகச் சிறுக கோணம் மாறி பல்லாயிரம் [1000 – 10,000] ஆண்டுகள் படிப்படியாக நகர்ந்து பிறகு வடதுருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வடதுருவமா கவும் மாறிவிடுகின்றன !  பூகோளத்தின் துருவங்கள் கடந்த 65 மில்லியன் ஆண்டுகளாக 130 தடவைகள் மாறி வந்துள்ளன என்று பூதளவியல் விஞ்ஞானிகள் (Geologists) கணித்துள்ளார்கள் !  அதாவது சராசரி அரை மில்லியன் ஆண்டுகளுக்கு ஒருமுறை முழுத் துருவ மாற்றம் நேர்ந்திருக் கிறது !  பூமியில் முதன்முதல் பாறைகள் உருவான போது அவை யாவும் வியப்பூட்டும் வண்ணம் அப்போதையப் பூகாந்தத் திசை அமைப்பைப் (Orientation of Earth’s Magnetic Field) பதிவு செய்துள்ளன !

    Fig 1C Structure of Earth

    பூதளவியல் விஞ்ஞானிகள் பல்வேறு யுகத்தில் பல்வேறு இடங்களில் உண்டான பாறை மாதிரிகளைச் சேகரித்து அவ்விதத் துருவ மாற்றங்கள் நிகழ்ந்திருப் பதைக் காட்டியிருப்பது ஆச்சரியமாக உள்ளது !  பூமியில் இப்போதிருக்கும் வடதென் துருவத் திசை அமைப்பு “நேர் அமைப்பு” (Normal Direction) என்றும் அதற்கு எதிரான திசை அமைப்பு “திருப்ப அமைப்பு” (Reversal Direction) என்றும் விஞ்ஞானிகளால் குறிப்பிடப் படுகின்றன !  கடந்த 150 ஆண்டுகளாக (1985 Factual) பூகாந்தத் திசைக் கோணம் ஒரே மட்டக் கோட்டில் (Latitude) (79 டிகிரி) இருந்திருக்கிறது !  அதே சமயத்தில் அதன் நேரியல் கோடு (Longitude) ஆண்டுக்கு 0. 042 டிகிரி கோண வீதத்தில் மாறி வந்துள்ளது !  மேலும் இதற்கு முன்பு பூகாந்தத் துருவத் திசை நீடிப்புக் குறைந்தது 2.6 பில்லியன் ஆண்டுகள் கூட இருந்துள்ளது என்று அறிப் படுகின்றது !

     

    Fig 1E Relative Size of Sunspots

    2004 டிசம்பர் 26 ஆம் தேதி தென்னாசியக் கடற்கரையில் படையெடுத்த அசுரச் சுனாமியை எழச் செய்த கடற் பூகம்பம் எவ்விதம் உண்டானது என்பதற்குப் பூமி அடித்தட்டின் (Earth’s Tectonic Plate Crust) நிலையற்ற தன்மையே என்று ஊகிக்கப் படுகிறது.  அத்தகைய நிலையற்ற கொந்தளிப்புக்குப் பூகாந்தத் திசை மாற்ற நகர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகளால் கருதப்படுகிறது.  சூரியன் 11 ஆண்டுகளுக்கு ஒருமுறைத் தவறாது அதன் “பரிதித் தழும்பு மீட்சி” உச்சத்தில் (Peak Sunspot Cycle) தனது துருவத் திசையை மாற்றுகிறது !  அவ்விதப் “பரிதித் துருவத் திருப்பம்” அடுத்து 2012 ஆம் ஆண்டில் நேரப் போகிறது !  தென்திசை நோக்கிய காந்தத் திரட்சி (Magnetic Flux) மைய ரேகையில் (Solar Equator) செழித்த பரிதித் தழும்புகளி லிருந்து நகர்ந்து வடப்புறம் திரும்புகிறது.  ஆனால் பூமியின் துருவ மாற்றம் பரிதியில் நேர்வது போல் ஒரு சில குறுகிய ஆண்டுகளில் நிகழ்வதில்லை !

    Fig 1 Polat Shift in Earth

    பூமியின் துருவ மாற்றங்கள் எப்படி நிகழ்கின்றன ?

    பூகோளத்தின் துருவ மாற்றங்கள் தாறுமாறான கால இடைவெளிகளில் இதுவரை நேர்ந்துள்ளன.  சமீபத்தில் உண்டான துருவ மாற்றம் 780,000 ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்திருக்கிறது.  ஆயினும் ஏன் அவ்விதம் நேர்கிறது என்று விஞ்ஞானிகள் வியப்புறுகிறார்கள்.  வெப்பக்கனல் திரவ இரும்புள்ள உட்கருவில் கொந்தளிக்கும் மின்னோட்டம் (Electric Current) உண்டாக்கும் பூமியின் பிரதமக் காந்தத் தளம் துருவ முனைத் திசையைத் திருப்புகிறது !  அப்போது ஒரு காந்தத் திசைகாட்டி முள் (Needle of the Magnetic Compass) வட திசைக்குப் பதிலாகத் தென் திசையைக் காட்டும் !  பூமியின் வரலாற்றில் முரணான கால இடை வெளிகளில் அவ்விதத் துருவத் திருப்பம் 100 மேலான தடவைகளில் நிகழ்ந்துள்ளன. “பூர்வ எரிமலைப் பாறை மாதிரிகளைப் புதிதாக ஆராய்ந்த போது இரண்டாவது காந்த மூலச் சேமிப்பு (Secondary Magnetic Source) பிரதம காந்த முனைத் திருப்பம் ஏற்படுத்துமா அல்லது எப்படி நிகழ்த்துகிறது என்று கண்டுபிடிக்க உதவி செய்யும்.  வடதென் துருவங்களை நோக்கும் பிரதமக் காந்தத் தளம் தளர்ச்சியுறும் போது, பூமியின் ஆழமற்ற உட்கருவில் அடித்தட்டுப் பாறைக்குக் கீழாகத் தோன்றி வரும் இரண்டாவது காந்தத் தளம் முக்கியத்துவம் அடைகிறது !” என்று விஸ்கான்சின்-மாடிஸன் பல்கலைக் கழகப் பூதளவியல் பேராசிரியர், பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Earth magnetic field -2

    பிராடு ஸிங்கரும் மேற்கு ஜெர்மனியில் ஆய்வு செய்யும் கென்னத் ஹா·ப்மனும் (Kenneth Hoffman) சேர்ந்து ஹவாயிக்கு அருகில் தாஹிதியின் (Tahiti) பூர்வீக எரிமலைக் குழம்பை 30 ஆண்டுகளாகச் சோதனை செய்து பூமியின் காந்த முனைத் திருப்பின் வழிமுறை களைக் (Patterns) கண்டறிந்தனர்.  வெப்பக் கனலில் திரவமான இரும்பு செழிப்பான உலோகங்களின் காந்த சக்தி திரவம் குளிர்ந்து திடமாகிக் கடினமானதும் உட்கருவில் அடைபட்டு விடுகிறது ! “பூமியின் காந்த தளத்தின் மீது எரிமலைக் குழம்பு குளிர்ந்து படிந்ததும் அப்போதுள்ள புதிய காந்த தளத்தின் பதிவு நினைவு பற்றிக் கொள்கிறது.  அவ்விதம் உண்டான எரிமலைக் குழம்பின் நினைவை அழிப்பது மிகக் கடினம்.  அதுவே பூகாந்தத்தின் பூர்வத் திசை அமைப்பின் (Paleomagnetic Direction) பதிவாகி விடுகிறது.” என்று பிராடு ஸிங்கர் கூறுகிறார்.

    Fig 4 Power of Geodynamo

    பரிதிக் காந்த முனைத் திருப்பத்தால் ஏற்படும் இயற்கைக் கேடுகள்

    2012 டிசம்பர் 21 ஆம் தேதியை ஒரு பயங்கர தினமாக விஞ்ஞானிகள் மக்களுக்கு எச்சரிக்கை செய்கிறார் ! சூரியனில் 11 ஆண்டுகள் கடந்து மீண்டும் வரும் துருவ முனை மாற்றுச் சுற்றியக்கத்தில் வடதென் துருவங்கள் மாற்றம் அடையப் போகின்றன !  பரிதியில் இப்படித் திடீரென்று துருவ நகர்ச்சியும், மாற்றமும் ஏற்படுவது இயற்கை !  அவ்விதத் துருவ மாற்றங்கள் பரிதியின் காந்தத் தளங்களில் நேரிடும் “சீரமைப்பு மீளியக்கங்கள்” (Harmonic Cycles).  துருவ முனைத் திருப்பங்கள் “சூரிய வடுக்கள் அல்லது தழும்புகள்” (Sun Spots or Sun Acnes) காரணமாக இருப்பதால் நிகழ்கின்றன.  அல்லது பரிதியின் காந்த சக்தியால் நேரிடுகின்றன.

    11,500 ஆண்டுகளில் மீண்டும் வரப் போகும் பயங்கரப் பனியுகக் காலத்தின் மையத்தில் புவி மாந்தர் இருப்பதாகப் பூதளவியல் விஞ்ஞானிகள் நினைவூட்டி வருகிறார்.  அந்தச் சுழல் நிகழ்ச்சி ஆரம்பமாகும் போது துருவத் திருப்பமும், பூத எரிமலை வெடிப்புகளும், அசுரப் பூகம்பங்களும், சுனாமிகளும், தீவிர ஹர்ரிக்கேன்களும் மக்களைப் பாடுபடுத்திக் கொந்தளிப்பில் தவிக்க வைக்கலாம் !  2008 ஆம் ஆண்டில் மட்டும் கடந்த 200 ஆண்டுகளில் நேராத மூன்று அசுரப் பூகம்பங்கள் ஏற்பட்டு மக்களைப் பாதித்துள்ளன !  அவற்றைத் தூண்டும் மூல காரணங்களில் ஒன்றாகப் பூகாந்த முனை நகர்ச்சிகள் பங்கு பெறுமா என்பதைப் பூதள விஞ்ஞானிகள்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

    +++++++++++++++++++

    [youtube https://www.youtube.com/watch?v=oYHPVGuQAVw?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=B-X-a4sUURM?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=nHew0n0BUhw?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=U3Mva2a-52k?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [தொடரும்]

    +++++++++++++++++++
    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines, Science Illustrated, Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How Did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. National Geographic – Invaders from Space – Meteorites (Sep 1986)
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world (1998)
    8. Physics for Poets By :  Robert March (1983)
    9. Atlas of the Skies (2005)
    10 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    11 Universe By : Roger Freedman & William Kaufmann III (2002)
    11 (a) Earth Science & The Environment By : Graham Thompson & Jonathan Turk (1993)
    11 Hutchison The Encyclopedia of Earth : Magnetism, Gravity & Heat (1985)
    12 Science Daily : Magnetic Field Reversals Illuminated By Lava Flows Study [September 26, 2008]
    13 Pure Energy System News: Earth’s Magnetic Field Reversal By : Mary-Sue Haliburton

    14 Magnetic Storm Home Page What Drives Earth’s Magnetic Field (Oct 2003)
    15 BBC News : Is The Earth Preparing to Flip ? By : David Whitehouse (March 27, 2003)
    16 Scientific American Magazine – Our Ever Changing Earth – Probing the Geodynamo By : Gary Glatzmaier & Peter Olson (September 26, 2005)
    17 Solar Pole Shift & Pole Reversal in 2012 -2013 (http://newsvote.bbc.co.uk/mpapps/pagetools ) By : Patrich Geryl (May 19, 2009)

    18.http://worldlywise.pbworks.com/w/page/26834992/The%20causes%20and%20effects%20of%20earthquakes%20and%20how%20people%20respond%20to%20them
    19. http://www.livescience.com/18426-earth-magnetic-poles-flip.html [February 10, 2012]
    20. http://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal [June 21, 2015]

    21.http://www.spacedaily.com/reports/When_next_Earths_magnetic_field_reverse_begins_and_what_consequences_for_mankind_will_it_have_999.html  [April 29, 2014]

    22. http://www.sciencedaily.com/releases/2015/07/150707101952.htm  [July 7, 2015]

    23. http://www.spacedaily.com/reports/Improved_age_for_Earths_latest_magnetic_field_reversal_using_radiometric_dating_999.html  [July 8, 2015]

    24.  https://www.ngdc.noaa.gov/geomag/faqgeom.shtml  [Frequently Asked Questions]

    24[a]  http://image.gsfc.nasa.gov/poetry/venus/RevScience.html  [NASA 2003]

    25. https://en.wikipedia.org/wiki/Brunhes%E2%80%93Matuyama_reversal  [December 25, 2016]

    26.  http://www.wow.com/wiki/Brunhes-Matuyama  [December 16, 2016]

    27.  https://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal  [January 30, 2017]

    28.  http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/nasa-earths-last-full-magnetic-pole-reversal-occured-700000-years-ago-are-we-due-the-earths-continuously-changing-ma.html  [February 1, 2017]

    29. https://www.scientificamerican.com/article/earth-s-magnetic-field-flip-could-happen-sooner-than-expected/  [July 9, 2014]

    30.  https://www.livescience.com/48333-magnetic-field-flip-within-100-years.html [October 17, 2014]

    31. https://news.nationalgeographic.com/2018/01/earth-magnetic-field-flip-north-south-poles-science/   [January 31, 2018]

    32.https://en.wikipedia.org/wiki/Geomagnetic_reversal  [January 19, 2019]

    33.   https://www.space.com/43173-earth-magnetic-field-flips-when.html [January 30, 2019]

    34.  ivescience.com/64625-earth-magnetic-field-nearly-disappeared.html  [January 30, 2019]

    35. https://newspunch.com/new-shocking-evidence-points-to-pole-shift/  [February 27, 2016]

    36.  https://phys.org/news/2011-11-magnetic-pole-reversal-geologic.html#nRlv

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]   February 2,  2019  [R-2]

    https://jayabarathan.wordpress.com/

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 6

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம்

    குறள் 51:

    மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்
    வளத்தக்காள் வாழ்க்கைத் துணை

    குடும்பத்துக்கு ஏத்த நல்ல குணவதியா புருசன் சம்பாத்தியத்துக்கு ஏத்தமாறி குடித்தனம் நடத்துதவ தான் நல்ல பொஞ்சாதி. (மனைவி).

    குறள் 52:

    மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை
    எனைமாட்சித் தாயினும் இல்

    குடும்பத்துல நல்ல குணவதியா பொஞ்சாதி இல்லன்னா வாழ்க்கை எவ்வளவு சிறப்பா இருந்துச்சுன்னாலும் பிரயோசனம் இல்ல.

    குறள் 53:

    இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்
    இல்லவள் மாணாக் கடை

    நல்ல குணவதியான பொஞ்சாதி அமைஞ்சா வாழ்க்கையில எல்லாம் இருக்கும். அப்டி அமையலன்னா எதுவுமே இருக்காது.

    குறள் 54:

    பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்
    திண்மைஉண் டாகப் பெறின்

    பொஞ்சாதி கிட்ட கற்பு ங்குத மன திடம் இருந்துச்சுன்னா அவள விட ஒசந்தது வேற என்ன இருக்க முடியும்.

    குறள் 55:

    தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை

    மத்த எந்த கடவுளையும் கும்பிடாம புருசன மட்டுமே கடவுளா நெனக்க பொஞ்சாதி மழைய பெய் அப்டின்னு சொன்னா பெய்யும்.

    குறள் 56:

    தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
    சொற்காத்துச் சோர்விலாள் பெண்

    தன்னைய நல்லபடியா பாத்துக்கிட்டு புருசன நல்ல அக்கறையோட கவனிச்சி குடும்பத்தோட புகழையும் காப்பாத்ததுல திண்ணமா இருக்குதவ தான் பொம்பள. (பெண்)

    குறள் 57:

    சிறைகாக்கும் காப்பெவன் செய்யும் மகளிர்
    நிறைகாக்கும் காப்பே தலை

    பொம்பள பிள்ளைங்கள இப்படித்தான்இருக்கணும் னு காவல் காக்குததுல ஒரு பிரயோசனமுமில்ல. அவங்க தங்கள தாங்களே மனசார அடக்க ஒடுக்கமா காத்துக்கிடதது தான் ஒசத்தி.

    குறள் 58:

    பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
    புத்தேளிர் வாழும் உலகு

    பொம்பளப் பிள்ளைங்களுக்கு நல்ல குணத்தோட புருசன் அமைஞ்சா, குடும்ப வாழ்க்கைல கெடைக்குத சந்தோசம் மேலுலக வாழ்க்கையப் போல சிறப்பா இருக்கும்.

    குறள் 59:

    புகழ்புரிந் தில்லிலோர்க் கில்லை இகழ்வார்முன்
    ஏறுபோல் பீடு நடை

    குடும்பத்தோட புகழக் காக்குத பொஞ்சாதி இல்லாத ஆம்பிளைக்கு தன்னைய இளக்காரம் செய்யுதவங்க முன்ன ஆம்பிள சிங்கம் போல நடக்க ஏலாது.

    குறள் 60:

    மங்கலம் என்ப மனைமாட்சி மற்றதன்
    நன்கலம் நன்மக்கட் பேறு

    குடும்ப வாழ்க்கையில மங்கலம் னு சொல்லுதது பொஞ்சாதியோட நல்ல குணத்த. நல்ல பிள்ளைகள பெத்து வளக்குதது அதுக்கு பூட்டுத நக நட்டுபோல.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 11

    சி. ஜெயபாரதன், கனடா


    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
    [Miss me, But let me go]
    ++++++++++++++

    [36] என் கதை

    எழுதி, எழுதி
    எழுதிக் கொண்டே எழுதி,
    எழுதிய பின்னும்
    எழுதி,
    இன்னும் உருகி எழுதி
    என்றும் எழுதி
    இப்பிறவி பூராவும் எழுதி
    உருகி வந்தாலும்,
    என் எழுத்தாணி அழுதாலும்
    என் துயர் தீராது !
    என்னிதயக் காயம் ஆறாது !
    என் பிணைப்புப்
    பாசம், பாலம் மாறாது !
    என் காயம் இதுபோல்
    உங்கள் காயம் ஆகலாம் !
    என் அதிர்ச்சி
    உங்கள் அதிர்ச்சி ஆகலாம் !
    என் கதை
    உங்கள் கதை ஆகலாம் !

    அப்போது,
    உங்கள் கண்ணீர்
    என் கண்ணீர் ஆகிவிடும் !
    ++++++++++++++++++++

    [37] இரவில் ஓர் அலறல் !

    “அம்மா வுக்கு என்ன
    ஆனது ?”
    இப்படி ஓர் அலறல்
    நள்ளிரவில் கேட்டு மேல்
    மாடியில் தூங்கும்
    என் மூத்த மகள்
    துள்ளி எழுந்து விட்டாள்.
    என் பேத்தியும்
    விழித்துக் கொண்டாள் !
    என் வாயில் எழுந்த
    அக்குரல்
    கீழ் அறையில் தூங்கும்
    என் காதில்
    எனக்கு மட்டும்
    ஏன் கேட்க வில்லை !
    +++++++++

    பிரார்த்தனை தொடர்கிறது.
    சி. ஜெயபாரதன்

    Share
  • அரசியல் அம்மானை – 1

    -வெ.விஜய்

    மூன்று அரசியல்வாதிகள் பேசுகிறார்கள்
    ——————————————————————-

    நாட்டினை ஆள்கின்ற நாம்தானே எப்போதும்
    ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் அம்மானை!
    ஓட்டுக்குப் பணம்தந்(து) உயர்வானோம் யாமாகில்
    வீடில்லா மக்களெல்லாம் வெம்புவரே அம்மானை?
    வீதியிலே அவர்கிடந்து வேகட்டும் அம்மானை(1)

    சாலையெல்லாம் பழுதாகச் சாக்கடையே நீராக
    வேலையேதும் நடத்தாமல் வீற்றிருந்தோம் அம்மானை!
    வேலையேதும் நடத்தாமல் வீற்றிருந்தோம் யாமாகில்
    காலினைப் பிடித்தவர்கள் கத்துவரோ அம்மானை?
    கடைசிவரை அவரெல்லாம் கருவாடே அம்மானை!(2)

    பயணச் சீட்டுகளில் பாதிவிலை ஏற்றிவிட்(டு)
    அயர்ந்து தூங்கிடுவோம் அப்பொழுதே அம்மானை
    அயர்ந்து தூங்குவ(து) அப்பொழுதே யாமாகில்
    துயரம் பிடித்தவர்கள் தொல்லையராய் அம்மானை?
    துப்பாக்கிக் கொண்டவரைத் துளைத்தெடுப்போம் அம்மானை(3)

    கையூட்டு வாங்கியே காலத்தை ஓட்டினோம்!நாம்
    பொய்களைப் பேசாத பொழுதில்லை அம்மானை
    பொய்களைப் பேசாத பொழுதில்லை ஆமாகில்
    மெய்களை எவ்விடத்தில் விற்றுவிட்டோம் அம்மானை?
    விற்பதற்கு நம்மிடத்தில் மெய்யுண்டோ அம்மானை!(4)

    படிப்பில்லை என்றாலும் பதவியில் நாமிருந்து
    நடிப்பதையே கொண்டிருந்தோம் நாளெல்லாம் அம்மானை
    நடிப்பதையே கொண்டிருந்தோர் நாளெல்லாம் ஆமாகில்
    குடிமக்கள் நிலையெல்லாம் கோவணமோ அம்மானை!
    குற்றுயிராய் அவர்கிடந்தால் நமக்கென்ன அம்மானை(5)

    -தொடரும்….

    Share
  • வேண்டுவன

    -கவிஞர் ஏறன் சிவா 

    நூல்பல கற்க வேண்டும்
    நுண்மைகள் அறிய வேண்டும்
    தோள்களில் வலிமை வேண்டும்
    தொய்விலா நிலையும் வேண்டும்
    சூழ்ச்சிகள் உணர வேண்டும்
    சுடர்மிகு அறிவு வேண்டும்
    வேல்விளை யாட்டும் வேண்டும்
    வெற்றியின் நட்பு வேண்டும்!

    கூரிய பார்வை வேண்டும்
    கொள்கையில் தெளிவு வேண்டும்
    சீரிய திறமை வேண்டும்
    செந்தமிழ் துணையாய் வேண்டும்
    நேரிய சிந்தை வேண்டும்
    நெற்றியில் ஒளியும் வேண்டும்
    பாரினை வெல்லும் பாட்டை
    பராசக்தி அருள வேண்டும்!

    -30/01/2019

    ———————————————

    கவிஞரைப் பற்றி

    சிவா செங்கோட்டையன்,
    2/382, கொண்டக்காரனூர்,
    சின்னப்பம்பட்டி(அ),
    ஓமலூர்(வ),
    சேலம்(மா), — 636306

    தொழில் — விசைத்தறி நெசவாளர்
    படிப்பு — இயந்திரவியல் பட்டதாரி
    Share
  • (Peer Reviewed) சிலம்பில் மலர்கள்

    முனைவர் வீ. மீனாட்சி
    உதவிப் பேராசிரியர்,
    முதுகலைத் தமிழாய்வுத் துறை,
    பிஷப் ஹீபர் கல்லூரி,
    திருச்சிராப்பள்ளி – 620 017

    சிலம்பில் மலர்கள்

    பழந்தமிழர் இயற்கையோடு இயைந்த வாழ்வை மேற்கொண்டுள்ளனர். இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த அவர்களது வாழ்வியலைத் தமிழ் இலக்கியங்கள் வழி அறிய இயலுகிறது. ஐந்திணைக் கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த பழந்தமிழரின் இலக்கியங்கள், தமிழ்நாட்டில் வளர்ந்த மரங்கள், செடிகள், கொடிகள் அவற்றில் மலர்ந்த மலர்கள் ஆகியவை பற்றி அறிய உதவுகின்றன. பழந்தமிழர்கள் நிலங்கட்கு அந்நிலங்களில் மலர்ந்த சிறப்பான மலர்களைக் கொண்டும், மரங்களைக் கொண்டும் குறிஞ்சி (மலர்), முல்லை (மலர்), நெய்தல் (மலர்), மருதம் (மரம்), பாலை (மரம்) என்று பெயரிட்டு இருப்பது அவர்கள் இயற்கை மீது கொண்ட ஈடுபாட்டையும் சூழலியல் நோக்கினையும் விளக்குகின்றன. இதனடிப்படையில் பரல்களை மையமிட்டு இயற்றப்பட்ட சிலம்பில் சேர, சோழ, பாண்டிய நாடுகளில் மலர்ந்த மலர்களைப் பற்றி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

    மலர் – விளக்கம்

    மலர் என்பதற்குப் பூ; மலரென்னேவல் ; மலர்ச்சியானது என்றும் மலர்தல் என்பதற்கு எதிர்தல், தோன்றல், நிறைதல், விரிதல், மொட்டவிதழ், அகலுதல், பரத்தல், மனமகிழ்தல், மிகுதல் என்றும் கழகத் தமிழகராதி பொருள் உரைக்கின்றது.

    சிலம்பில் மலர்ந்த மலர்கள்

    பழந்தமிழரின் இலக்கியங்கள் இயற்கையின் பொருண்மையை உற்று நோக்கி உணர்ந்து படைக்கப்பட்டுள்ளன. இதில் தாவரத்தின் ஓர் உறுப்பான மலர்கள், அழகு, குளிர்ச்சி, மகிழ்ச்சி, கற்பு ஆகியவற்றின் குறியீடாக எடுத்தாளப்பட்டுள்ளன. இதில் செவ்வியல் இலக்கியமாகிய சிலப்பதிகாரத்தில் மூவேந்தர்களின் இயற்கை எழில் சூழ்ந்த நாடுகளில் மலர்ந்த மலர்களும் அம்மலர்களின் இன்றைய அறிவியல் பெயர்களும் பின்வருமாறு :

    வேங்கை (Pterocarpus marsupium Roxb.&P.Santalinusl.) ஆத்தி (Bauhiniaracemasa Lam.)  வேம்பு            (Azadirachta indica A.Juss) பனை (Borassus flabellifer L.) கொன்றை (Cassia fistula .L) செந்தாமரை (Nelumbo nucifera Gaertn.)செங்கழுநீர் (Nymphaea pubescens Willd.)  சேதாம்பல் (Nymphaea pubescens Willd.) குவளை (Nymphaea sp.) கருவிளை (Clitoria ternatea L.) செங்கூதாளம் (Ipomoea sepiaria keen) வெட்சி (Ixora coccinea L.) தாழை (Pandanus odoratissimus L.f) ஆம்பல் (Nymphaea pubescens willd)  சேடல் (Jasminum sp) நெய்தல் (Phyllanthus emblica. L.) பூளை (Aerva tomentosa Forssk) மருதம் (Lagerstroemia reginae Roxb) கழுநீர் மலர் (Nymphaea pubescens willd) கருங்குவளை (Nymphaea sp) இலவம் (Bombax ceiba L.)முல்லை (Jasminum auriculatum Vahl) குமிழம் (Gmelina arborea Roxb) காந்தள் (Gloriosa superba L.)  பீர்க்கம்பூ (Luffa cylindrica (L) M. Roemer) காயாம்பூ (Memecylon edule Roxb) அசோகம் (Saraca asoca (Roxb.) De wilde) குரவு            (Tarenna asiatica (L.) kuntze) மகிழம் (Mimusops elengi L.) கோங்கு (Cochlospermum gossypium (L.) Alston)  வேங்கை (Pterocarpus marsupium Roxb. P. Santalinus. L) வெண்கடம்பு (Mitragyna parvifolia (Roxb) korth) சுரபுன்னை (Mammea suriga (Buch-Ham) kost) மஞ்சாடி (Adenanthere pavonina L.) செருந்தி (Ochna obtusata DC) செண்பகம் (Michelia champaca L.) பாதிரி (Stereospermum chelonodies (L.f) DC) குருகத்தி (Hiptage benghalensis (L.) kurz) செம்முல்லை (Iragia plukene Hi.R – sm’)  முசுட்டை (Rivea hypocrateriformis (Desr.) choisy)  மோசி மல்லிகை (Jasminum angustifolium vabl.) நறுந்தாளி (Ipomoea marginata) வெட்பாலை (Wrightia tinetora (Roxb.) R.Br.) பிடவம் (Randia malabarica Lam.) பகன்றை (Operculina turpethum silva moriso) மயிலை (Jasminum sp) இருவாட்சி (Jasminum sp) முள்முருங்கு (Erythrina stricta Roxb.) மல்லிகை (Jasminum sambac (L.) Aiton var. sambae) பித்திகை (Jasminum sp) செங்கழுநீர் (Nymphaea pubescens wild) கத்திகை (Hiptage benghalensis (L.) kurz) எட்டி (Strychnox nux – vomica L.)  வாகை (Albizia odoratissimus (L.f) Benth.) நீலோபற்மலர் (Nymphaea nouchali Burm.F) புன்னை (Calophyllum inophyllum L.) அடம்பம் (Ipomoea pes. caprae (L.) R.Br)  நந்தியாவட்டை (Eravatamia divaricata (L.) Burkill) நரந்தம் (Citrus sp) ஆச்சா (Hardwickia binata Roxb.) சந்தனம் (Santalum album L.)  சேமரம் (Alangium salvifolium (L.F) wang)  மாமரம்  (Mangifera indica L.) புன்கு  (Pongamia pinnta (L.) pierre) குறிஞ்சி (Phlebophyllum kunthianum Ness) காஞ்சி (Trewia polycarpa Benth) மந்தாரம் (Baubinia purpurea L.) தும்பை (Leucas cajan (L.) Mill sp.) வஞ்சி (Thespesia populnea (L.) sol. ex. corr?) பச்சிலை (Garcinia xanthochymus Hook .F) கடம்பம் (Neolamarckia Cadamba (Roxb.) Bosser) எனப் பல வகையான மலர்கள் மலர்ந்து மணம் வீசியிருக்கின்றன.

    இப்பூக்களை இளங்கோவடிகள்

    ‘கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும்
    காட்டிய பூவின்………………’

                            (சிலம்பு. அழற்படுகாதை : 93, 94)

    என்று குறிப்பிடுகின்றார். இங்கு இளங்கோவடிகள் சிலம்பில் எடுத்தாளப்படும் மலர்களை மரத்தின், செடியின் கிளையில் மலர்வதைக் கோட்டுப்பூ என்றும் கொடியில் மலர்வதைக் கொடிப்பூ என்றும் நிலத்தின் புதரில் மலர்வதை நிலப்பூ என்றும் நீரில் மலர்வதை நீர்ப்பூ என்றும் நான்கு வகைப்படுத்தியுள்ளார்.

    இதுபோன்ற பகுப்புமுறையினைச் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கரோலஸ் லின்னேயஸ் (Carl Linnaeus May 23, 1707 – January 10, 1778)  எனும் அறிவியலார் தாவர வகைப்பாட்டியல் (Plant Taxonomy)  என்று உலகிற்கு அளித்துள்ளார். அதற்கு முன்பே கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ என்று பழந்தமிழர் வகைப்பாடு செய்து தாவரக்குடும்பப் பகுப்பை உலகிற்கு அளித்திருப்பது இங்குக் குறிப்பிடத்தக்கதாக அமைகின்றது. இவ்வாறு இளங்கோவடிகள் தான் வகைப்படுத்திய மலர்களைச் சிலம்பில் கையாண்டுள்ள  விதம்பற்றிப் பின்வரும் பகுதி எடுத்துரைக்கின்றது.

    மன்னரும் மலர்களும்

                நாடாளும் மன்னர்கள் தங்களுக்குரிய அடையாளச் சின்னங்களில் மலர்களுக்கு முக்கியத்துவம்  அளித்துள்ளனர். மன்னர்களைக் குறிப்பிடும்போது அவர்கள் சூடியிருந்த மலர்மாலைகள் அடையாளமாகக் காட்டப்படுகின்றன.

                ‘சேர, சோழ, பாண்டியரை மூவேந்தர் என அழைக்கின்றோம். வேந்தர் என்ற சொல்லே வேய்ந்தோர் என்பதன் மரூஉ என்பர். தலையில் முடி வேய்ந்தோர் என்றும் தமக்கெனக் கொண்ட மரபுடன் மலர்வேய்ந்தோர் என்றும் சிந்தித்துப் போற்றும் வகையில் முடியில் மலர் மாலையினை இணைத்துச் சூடியிருக்கின்றனர். பொதுவாக மலர்களை-மலர்மாலைகளை-முடியுடன் இணைத்து வேந்தர்கள் சூடும் பழக்கம் இந்தியப் பெருநாடு முழுவதிலும் இருந்துள்ளது’ (தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, செ.வைத்தியலிங்கன், ப.47.) எனும் கருத்துக்கு ஏற்ப சிலம்பில் மூவேந்தரும் தனக்கென்று தனியாக ஒரு அடையாள மாலை சூடும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதைக் காண இயலுகிறது.

                ‘ஆரங் கண்ணிச் சோழன் ………………..’

                                                                              (சிலம்பு. பதிகம் : 12)

                ‘ஆர்புனை சென்னி அரசற்கு அளித்து’                (சிலம்பு. நடுகல்காதை : 211)

    என்று சோழ மன்னன் ஆத்தி மரத்தில் பூக்கும் பூக்களை மாலையாகச் சூடியிருப்பதை இளங்கோவடிகள் சுட்டியுள்ளார்.

                ‘சினையலர் வேம்பன் தேரானாகிக்’

                                                                             (சிலம்பு. பதிகம் : 28)

                ‘இலைதார் வேந்தன் எழில் வான் எய்தக்’                                                               (சிலம்பு. நீர்ப்படை காதை : 62)

    என்று பாண்டிய மன்னன் வேப்பம் பூ  மாலையினை அணிந்துள்ளதையும் அப்பூவின் பெயரால் வேம்பன் என்று அழைக்கப்படுவதையும் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

                ‘தோடுஆர் போந்தை தும்பையொடு முடித்த’                                                     (சிலம்பு. நீர்படைக்காதை : 112)

                ‘தோடுஆர் போந்தை வேலோன் தன்நிறை’                                                          (சிலம்பு. நீர்படைக்காதை : 173)

    என்று சேரன் செங்குட்டுவன் இதழ்செறிந்த பனம் பூவினை  மாலையாகச் சூடினான் என்பதைச் சிலம்பு காட்டுகிறது.

    நாட்டு வளமும் மலர்களும்

                ஒரு நாட்டின் வளம் என்பது இயற்கை வளத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் மலர்கள் வளத்தின் குறியீடாக அமைகின்றன. இதனால்தான் இன்றும் ஒவ்வொரு நாட்டின் அடையாளச் சின்னங்களில் மலர்கள் இடம்பெறுகின்றன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என்று நான்கு நிலங்களின் வளத்தினை அங்கு மலர்ந்த மலர்களின் மூலம் சிலப்பதிகாரம் காட்சிப்படுத்துவதால் உணரமுடிகிறது. இதில் முல்லையும் குறிஞ்சியும் தம் முறைமையில் திரிந்த நிலையில் உருவாகும் பாலை நிலத்தில் கொற்றவையின் அருளால் அங்குள்ள மரங்களில் மலர்கள் மலர்வதாக இளங்கோவடிகள் காட்டியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

                ‘நாகம் நாறும் நரந்தம் நிரந்தன

                …………………………………………………….

                …………………………………………………….

                திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே’                                                                         (சிலம்பு. வேட்டுவவரி:2-4)

    எனும் அடிகளில் பாலை நிலத்தில் கொற்றவையின் அருளால் சுரபுன்னை, நரந்தை, சேமரம், மாமரம், வேங்கை, இலவம், புன்கு, வெண்கடம்பு, பாதிரி, புன்னை, குரா, கோங்கு ஆகிய மரங்களெல்லாம் மலர்கள் மலர்ந்து மணம் வீசியதாக இளங்கோவடிகள் குறிப்பிடுவது அன்றைய பாலைநிலத்தின் வளத்தினையும் நம் கண்முன் காட்டுகிறது.

    தெய்வங்களும் மலர்களும் 

    சிலப்பதிகாரம் சமணக் காப்பியம் என்று வகைப்படுத்தினாலும் இளங்கோவடிகள் இக்காப்பியத்துள், சிவன், திருமால், முருகன், கொற்றவை, மதுராபதி தெய்வம் எனப் பல்வேறு தெய்வங்களைக் குறிப்பிட்டுள்ளார். இத்தெய்வங்களுக்குரிய குறிப்பிட்ட மலர்களும் சிலம்பில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக,

                ‘…………. மதுரை மூதூர்க்

                கொன்றையஞ் கடைமுடி                                                                                                                  மன்றப்பொதியிலில்’

                                                                         (சிலம்பு. பதிகம் : 40)

    என்று கொன்றை மாலை சூடிய சடைமுடியுடைய சிவபெருமான் என்றும்

                ‘வண்துழாய் மாலையை மாயவன்                                                                                                                    மேல்இட்டு’

                                                   (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை:16)

    எனும் அடிகளில் நப்பினை வளமுடைய துளசி மாலையை மாயவன் கழுத்தில் இட்டாள் என்றும் இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

                ‘………… அலர் கடம்பன் என்றே

                வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக                                                                                                             என்றாள்’

                                                          (சிலம்பு. குன்றக்குரவை :13)

    எனும் அடிகள் முருகனுக்கு உரிய மலர் கடம்பம் என்றும் கடம்பன் என்று பூவின் பெயராலேயே முருகன் அழைக்கப்படுவதையும் உணர்த்துகிறது. கொற்றவை  சிவனுக்கு உரிய கொன்றை மலரையும், திருமாலுக்கு உரிய துளசி மாலையையும் தோளில் போட்டுக்கொண்டு வென்றிக் கூத்து ஆடுவது,

                ‘கொன்றையும் துளவமும் குழுமத் தொடுத்த’                                                             (சிலம்பு. வேட்டுவ வரி : 11)

    என்று சிலம்பு காட்டுகிறது. மேலும் மதுரையில் வாழும் மதுராபதி தெய்வம் இடக்கையில் பொன்னிறமான தாமரை மலரை ஏந்தியுள்ளதை,

                ‘இடக்கை பொலம்பூந் தாமரை ஏந்தினும்’                                                                (சிலம்பு. கட்டுரை காதை : 7)

    எனும் அடிகள் உணர்த்துகின்றது. இவ்வாறு மன்னர்களின் அடையாளமாக மட்டுமல்லாது தெய்வங்களின் அடையாளமாகவும் மலர்கள் விளங்கியுள்ளன என்பதைச் சிலம்பின் வழி அறிய இயலுகிறது.

    பூதங்களும் பூக்களும்

                சிலம்பில் பூத வழிபாடு செய்யப்படுவதாகக் கூறப்படும் இடத்தில் மலர்கள் இடம் பெற்றுள்ளன. மக்கள் நாள் அங்காடிப் பூதத்தை வழிபடும் போது

                ‘பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து’

                   (சிலம்பு. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை:69)

    என்ற அடிகள் மூலம் பூவினை இட்டு வழிபட்டுள்ளனர் என்பதைக் காட்சிப்படுத்தி யுள்ளார்.

                மேலும் அந்தணப் பூதமானது முத்துப் பூண்களுடன் தாமரை, அறுகம்புல், நந்தியாவட்டம் இவற்றைக் கொண்டு புனைந்த தலையினன் என்று காட்சிப்படுத்தப் படுத்தப்பட்டிருப்பதை,

                ‘ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து

                வெண் நிறத் தாமரை, அறுகை, நந்தி என்று

                இன்னனவை முடித்த நல்நிறச் சென்னியன்’                                                  (சிலம்பு. அழல்படு காதை: 18-20)

    எனும் அடிகள் உணர்த்துகின்றன.

                அரச பூதமானது சண்பகம், கருவிளை, செங்கூதாளம் எனும் நீர்ப்பூக்களைக் கொண்ட கண்ணியையும் மாலையையும் அணிந்திருந்ததாக,

                ‘சண்பகம், கருவிளை, செங்கூதாளம்

                தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை

                கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்’                                                     (சிலம்பு. அழல்படு காதை: 40-42)

    என்று இளங்கோவடிகள் காட்டியுள்ளார்.

                வணிக பூதமானது வெட்சி, தாழை, ஆம்பல், சேடல், நெய்தல், பூளை, மருதம் போன்ற பூக்களை முடித்த தலையை உடையதாக இருந்ததை

                ‘வெட்சி, தாழை, கள்கமழ், ஆம்பல்,

                சேடல், நெய்தல், பூளை, மருதம்,

                கூடமுத்த சென்னியன் ; நீடு ஒளிப்’

                                                (சிலம்பு. அழல்படு காதை: 68-70)

    என்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

                வேளாண் பூதமானது கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பு (சிலம்பு. அழல்படு காதை: 93-94) என்ற நான்கு வகைப் பூக்களை இணைந்த மாலையை அணிந்திருப்பதாக இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். இவ்வாறு தெய்வங்களுக்கு மலர் வழிபாடு உள்ளதைப் போல பூதங்களுக்கும் வழிபாட்டில் மலர் இடம் பெற்றுள்ளதைச் சிலப்பதிகாரம் எடுத்தியம்புகிறது.

    சிலம்பில் மலர்கள் வழி கையாளப்படும் உத்திகள்

                இயற்கை சார்ந்த வாழ்வியல் கொண்ட பழந்தமிழர் தம்மைச் சுற்றியுள்ள தாவர வகைகளைத் தம் படைப்பின் கருத்தைத் தெளிவுபடுத்த உத்தியாகவும் பயன்படுத்தியுள்ளனர். சிலம்பில் இத்தகு உத்திகளை உவமை, உள்ளுறை, குறியீடு எனப் பல வகையில் காப்பியப் போக்கில் இளங்கோவடிகள் அமைத்துள்ளார்.

    உவமை உத்தி

                கவிஞன் தன் கருத்தின் அழகை வெளிப்படுத்தக் கையாளும் உத்திகளில் உவமை என்பது ஒரு பொருளின் சிறப்பு, அதன் நலன், அதன்மேல் கொண்டுள்ள பேரன்பு, அதன் வலிமை, இவைகள் உணர்த்தப் பயன்படுகிறது. இத்தகைய உவமைப்பொருள் என்பது உயர்ந்ததாக இருக்க வேண்டும். இதனை,

                ‘உயர்ந்தன மேற்றே உள்ளுங் காலை’                                                                                     (தொல்.உவமவியல் : 1224)

    என்று தொல்காப்பியர் சுட்டுகிறார். இந்நிலையில் சிலம்பு பல்வேறு மலர்களை உவமைப்பொருளாகக் காட்டியிருப்பது மலர்கள் பழந்தமிழர் வாழ்வில் பெற்ற உயரிய இடத்தை இனம் காட்டுகிறது. இம்மலர்களின் மணம், மென்மை, வண்ணம், தூய்மை, தன்மை, சுவை, ஒளி, எழில், கவர்ச்சி, மங்கலம் எனும் பத்துத் தன்மைகளின் அடிப்படையில் உவமப்பொருளாகப் பயன்படுத்தப்படுகின்றன.

    கண்மலர்கள்

                முகத்திற்கு அழகு மட்டுமல்லாது உள்ளத்தின் தெளிவை, கருத்தைக் காட்டுவன கண்களே. இத்தகைய அழகிய கண்கள் சிலம்பில் விதவிதமான மலர்களாகத் தோற்றமளிக்கின்றன.

                ‘கயமலர்க் கண்ணி…………….’ (சிலம்பு. மனையறம்படுத்த காதை : 11)

    என்று கண்ணகி பெரிய மலர்போலும் கண்ணையுடையவள் என்றும்

                ‘மாமலர் நெடுந்கண் மாதவி……………..’

                                               (சிலம்பு. அரங்கேற்று காதை : 170)

    என்று பெரிய மலர்போன்ற நீண்ட கண்களையுடைய மாதவி என்றும்

                ‘………………. கழுநீர் போலக் கண்ணகி கரும்                                                                                                                    கணும்’

      (சிலம்பு. இந்திரவிழவு ஊர் எடுத்த காதை : 236, 251)

                கழுநீர் மலர் போன்ற கண்ணகியின் கரும் கண் என்றும் சிலம்பில் இரு மலர்களாக மலர்ந்த கண்ணகி, மாதவி இருவரின் கண்களுக்கும் மலர்களை இளங்கோவடிகள் உவமைப்படுத்தியுள்ளார்.

                ‘தாமரை செங்கண் தழல் நிறக் கொள்ள’ (சிலம்பு. நடுகல்காதை : 110)

    எனும் அடிகளில் சேரனின் இயல்பானத் தாமரை போன்ற சிவந்த கண்கள் நெருப்பு நிறத்தைக் கொண்டன என உவமைப்படுத்தியுள்ளார்.

    முகத்துறுப்புகளும் மலர்களும்

                கண்கள் மட்டுமல்லாது பிற முகத்துறுப்புகளுக்கும் மலர்கள் உவமையாகச் சொல்லப்பட்டுள்ளன என்பதைப் பின்வரும் அடிகளால் அறிய முடிகிறது.

                ‘எரிநிறத்து இலவமும் முல்லையும் அன்றியும்

                கருநெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு

                உள்வரிக் கோலத்து உறுதுணை தேடிக்

                கள்ளக் கமலம் திரிதலும் உண்டுகொல்’

       (சிலம்பு. இந்திர விழவு ஊர் எடுத்த காதை : 214-217)

    எனும் அடிகளில் தாமரை போன்ற முகத்தில் ஒளிபொருந்திய இலவம் பூப்போன்ற இதழ்களையும், முல்லை மொக்குப் போன்ற பற்களையும், குமிழம் பூ போன்ற மூக்கையும் உடைய பெண்கள் எனக் கூறி முகத்துறுப்புகள் அனைத்தையும் மலர்களாக அமைத்துள்ளார்.

    மலர்க் கைகள்

                கோவலன், கண்ணகியின் உறுப்பு நலனைப் புகழும் போது,

                ‘………… நின்மலர்க்கையின் நீங்காது’

                                (சிலம்பு. மனையறம்படுத்த காதை : 60)

    என்று கண்ணகியின் மலர்ப்போன்ற கையினின்றும் பைங்கிளிகள் நீங்காது தங்கியிருக்கின்றன என உரைக்கின்றான்.

                ‘காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து’

                                                      (சிலம்பு. கடல் ஆடு காதை : 98)

    எனும் அடிகளில் மாதவி தன்னுடைய காந்தள் மலர் போன்ற மென்மையான விரல்களில்  பல்வேறு வகையான மோதிரங்கள் அணிந்திருந்ததாக இளங்கோவடிகள் சுட்டியுள்ளார். இவ்வாறு பெண்களின் கைகளுக்கு மலர்கள் ஒப்புமைப்படுத்தப் பட்டுள்ளன.

    மலரடிகள்

                இறைவனது பாதங்களை மலர்களுடன் ஒப்பிடுதல் பழந்தமிழர் மரபு. இதனடிப்படையில் திருமாலின் பாதங்களை,

                ‘திரண்டு அமரர் தொழுது ஏத்தும் திருமால்!

                                                                                    நின்செங்கமல

                இரண்டு அடியான் மூவுலகமும் இருள்தீர                                                                                              நடந்தனையே’

                                                  (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை :34)

    எனும் அடிகளில் தேவர்கள் அனைவரும் திரண்டு வந்து போற்றும் திருமாலே உனது சிவந்த தாமரை போன்ற இரண்டு பாதங்களால் இந்த மேல், நடு, கீழ் எனும் மூன்று உலகங்களின் துன்பம் நீங்க நடந்தாயே என்று திருமாலின் பாதங்களைத் தாமரை மலருடன் உவமைப்படுத்தியுள்ளார்.

                ‘……………………. மலையர் தம் மகளார்

                செயலைய மலர்புரை திருவடி தொழுதோம்’                                                            (சிலம்பு. குன்றக்குரவை : 16)

    என்று மலை நாட்டினர் மகளாகிய வள்ளியினது அசோக மலர் போன்ற திருவடிகளைத் தொழுதோம் என்று வள்ளியின் பாதங்களுக்கு அசோக மலர் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

                இறைவனின் திருவடிகள் மட்டுமல்லாது கண்ணகியின் பாதங்களுக்கும் மலர் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளது. கண்ணகியின் சிறப்பைச் சாலினி உரைக்குமிடத்தில்

                ‘இணை மலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக்’

                                                               (சிலம்பு. வேட்டுவ வரி : 45)

    எனக் கண்ணகி தாமரை இணை மலர்கள் போன்ற சிறிய அடிகளை உடையவள் என்பதைச் சிலம்பு எடுத்துரைக்கிறது.

    உந்திக் கமலம்

                திருமால் தாமரை மலர் போன்ற உந்தியை உடையவன் என்பதை

                ‘மலர்க்கமல உந்தியாய் மாயமோ                                                                                                                     மருட்கைத்தே’

                                                  (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 32)

    என்றும்

                ‘பெரியவனை, மாயவனைப் பேர்உலகம்                                                                                                                 எல்லாம்

                விரிகமல உந்தியுடை விண்ணவனைக்,                                                                                                                  கண்ணும்’

                                                 (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 36)

    எனும் அடிகளில் திருமால் இந்தப் பெரிய உலகத்தை எல்லாம் அடக்கியுள்ள விரிந்த தாமரைப் போன்ற உந்தியை உடையவன் என்றும் உவமிக்கின்றார்.

                இவ்வாறு தெய்வங்கள், மனிதர்கள் ஆகியோரின் உடலுறுப்புகளுக்கு மலர்களை ஒப்புமைப்படுத்தி உவமை உத்தியினை இளங்கோவடிகள் வெளிப்படுத்தியுள்ளார்.

    வண்ணமும் மலர்களும்

                வண்ணம் நிறைந்த மலர்களைக் காணும்போது மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும். வண்ணம் பற்றிய சிந்தனை என்பது மனிதனுக்கு இயற்கை பொருள்களிடம் இருந்து கற்றுக் கொண்டதுதான். அதிலும் குறிப்பாக மலர்கள் வண்ணத்தாலும் மணத்தாலும் வேறுபாட்டைக் கொண்டவை. ஒவ்வொரு மலரும் தனக்கு எனக் குறிப்பிட்ட வண்ணத்தையும் மணத்தையும் கொண்டுள்ளன. இத்தகு மலர்களின் வண்ணமானது சிலம்பில் பல்வேறு இடங்களில் உவமைக்காக இளங்கோவடிகள் கையாளுகின்றார்.

                ‘மாரிப் பீரத்து அலர் வண்ணம் மடவாள்

                 கொள்ளக்  கடவுள் வரைந்து

                ஆர்இக் கொடுமை செய்தார்? என்று

                அன்னை  அறியின்  என் செய்கோ’

                                                                      (சிலம்பு. கானல்வரி : 36)

    எனும் அடிகளில் தலைவியானவள் மழைக்காலத்தில் மலரும் பீர்க்கம்பூ போன்ற மஞ்சள்நிற மேனியளாய் நிற வேறுபாடு கொள்ள, இக்கொடுமையைச் செய்தவர் யார் என்று அன்னை அறிந்தாள் நான் என் செய்வேன்? என்று தோழிக் கூறுவதாக அமைத்துள்ளார். இங்கு தலைவியின் மேனி வண்ண மாறுபாட்டிற்குப் பீர்க்கம்பூ உவமையாகக் கூறப்பட்டுள்ளது.

                ‘தூநிற வெள்ளை அடத்தாற்கு உரியள், இப்

                பூவைப் புது மலராள்’

                                                  (சிலம்பு. ஆய்ச்சியர் குரவை : 12)

    தூய்மையான வெள்ளைக் காளையின் வலிமையை அடக்கியவனுக்கு உரியவள் இந்தப் காயாம்பூ போன்ற வண்ணத்தினை உடையவள் என்றும்

                ‘ஆயர்பாடியின் அசோதை பெற்றெடுத்த

                பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ’

                                     (சிலம்பு. கொலைகளக் காதை : 46-47)

    ஆயர்பாடியில் அசோதை பெற்றெடுத்தக் காயாம்பூப்போலும் வண்ணமுடைய கண்ணன் என்றும்

                ‘மாயம்செய் வாள்அவுணர் வீழ, நங்கை                                                                                                       மரக்கால் மேல்

               வாள்அமலை ஆடும் ஆயின்

              காயா மலர்மேனி ஏத்தி, வானோர்

              கைமெய்மலர் மாரி   காட்டும் போலும்’

                                                                   (சிலம்பு. வேட்டுவ வரி : 12)

    அசுரர்கள் வீழ்ச்சியடைய, கொற்றவை மரக்கால் அணிந்து வாள் கூத்தை ஆடுவாள் ஆயின், காயாம் பூப் போலும் மேனியுடைய அவளைப் புகழ்ந்து தேவர்கள் மலர் மழையைச் சொரிவார்கள் என்றும் இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார்.

                இங்கு கண்ணன், கொற்றவை எனும் தெய்வங்கள் அடர் நீல வண்ணம் உடையவை என்பதைக் குறிக்கவும் இடையர் குலப்பெண் கருமை வண்ணம் உடையவள் என்பதைச் சுட்டவும் காயாம் பூவினை இளங்கோவடிகள் உவமையாக எடுத்துரைக்கின்றார்.

    குறிப்பு உத்தி

                கவிதையில் ஒரு பொருளைக் குறிப்பிட்டு அதன் வாயிலாக, வேறொரு செய்தியை அறிவுறுத்துதல் குறிப்பு. இதனை, ‘ஒரு பொருளானது (Object) ஒரு சார்பாண்மைப்படுத்தலின் மூலம் ஒரு செய்தியை ஒரு பெறுநருக்குத் தெரிவிக்கிறது’ (குறியியல் – ஒரு சங்கப்பார்வை முனைவர் மொ.இளம்பரிதி ப.10) இளங்கோவடிகள் இதனை மிகச் சிறந்ததொரு உத்தியாக உருவாக்கியுள்ளார். பின்வரக்கூடிய நிகழ்ச்சிகளை முன்பு மறைமுகமாகக் குறிப்பால் உணர்த்த மலர்களைக் குறியீடாகக் காட்டியுள்ளார்.

                மங்கல வாழ்த்துப் பாடலில் மணமக்களை மலர்தூவி வாழ்த்தினர் என்று உரைக்காது மலருக்கு அடைமொழியாகச் சின்மலர் என்பதை,

                ‘காதலன் பிரியாமல், கவவுக்கை நெகிழாமல்

                தீது அறுக! எனஏத்தி சின்மலர் கொடுதூவி’

                                                            (சிலம்பு. மங்கலவாழ்த்து : 61-62)

    என்று குறிப்பிடுகிறார். இது பின்வரும் நாளில் கண்ணகிக்கு ஏற்பட இருக்கும் சிறுமையைக் குறிப்பிடுவதாக அமைகின்றது.

                இதே போன்று கவுந்தியடிகள், மாதரியிடம் கண்ணகியை அடைக்கலம் கொடுக்குமிடத்தில்,

                ‘மங்கல மடந்தையை நல்நீர் ஆட்டிச்

                செங்கயல் நெடும்கண் அஞ்சனம் தீட்டி

                தேமென் கூந்தல் சின்மலர் பெய்து’

                                    (சிலம்பு. அடைக்கலக்காதை : 131-133)

    எனக் குறிப்பிட்டுக் கண்ணகிக்கு வர இருக்கும் தீமையை முன்பே உணர்த்துவது போல் அவள் கூந்தலில் சின்மலர் பெய்து என உரைக்கின்றார்.

                ‘தாதுசேர் கழுநீர் தண்பூம் பிணையல்

                போதுசேர் பூங்குழல் பொருந்தாது ஒழியவும்’

                        (சிலம்பு. புறம் சேரி இறுத்த காதை : 21-22)

    எனும் அடிகளில் மண்மகள் கண்ணகியின் துயர்கொண்டு வருந்தும் நிலையில் மகரந்தப் பொடியுடன் கூடிய குளிர்ச்சி பொருந்திய கழுநீர் மாலை முல்லை மலர் சேர்ந்த மென்மையான கூந்தலில் சூடாது நீங்கவும் என உரைத்துக் கண்ணகிக்கு வர இருக்கும் தீங்கைச் சுட்டுவதாக அமைத்துள்ளார். கோவலன் தான் கண்ட கனவினை உரைக்கும்போது,

                ‘மாமலர்வாளி வறுநிலத்து எறிந்து’

                                             (சிலம்பு. அடைக்கலக்காதை : 101)

    என்று மன்மதன் மலர் அம்புகளை வறண்ட நிலத்தில் எறிந்துவிட்டு செயலற்று நிற்பதாக காட்டுவது பின்னாளில் கோவலன் கண்ணகி வாழ்வில் ஏற்படப் போகும் நிரந்தரப் பிரிவைக் காட்டுகிறது.

                வையை ஆறானது தன் இரு கரைகளிலும் நிறைந்த மரம், செடி, கொடிகளின் பூக்களைச் சுமந்து வரும் காட்சியில் குறிப்புப்பொருளை இளங்கோவடிகள் கையாண்டுள்ளார்.

                ‘குரவமும், வகுளமும், கோங்கமும், வேங்கையும்

                ……………………………………………………………………………………

                ……………………………………………………………………………………

                கண்நிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்’

                      (சிலம்பு. புறஞ்சேரி இறுத்த காதை : 151-173)

    எனும் அடிகளில் வையை ஆறானது குரவும், மகிழும், கோங்கும், வேங்கையும், வெண்கடம்பும், சுரபுன்னையும், மஞ்சாடி மரமும், மருதும் உச்சிச் செலுந்திலும் செருந்தியும், செண்பகமும், பாதிரியும், குருகத்தி, செம்முல்லை, முசுட்டை, மோசி மல்லிகை, நறுந்தாளி, வெட்பாலை, பிடவம், பகன்றை, மயிலை, இருவாட்சி, முள்முருங்கு, முல்லை, போன்ற மலர்களைப் பூந்துகிலாகக் கொண்டு கண்ணகிக்கு மதுரையில் ஏற்படப்போகும் துன்பங்களை உணர்ந்தவள் போல் நறுமலர்களாகிய ஆடையினை முழுவதும் போர்த்திக் கொண்டு, அடக்க முடியாத கண்ணீரை மறைத்து அடக்கிக்கொண்டு, புனல் ஆறு அன்று பூம்புனல் ஆறு எனக் கருதும் நிலையில் இருந்ததாகக் காட்சிப்படுத்தியுள்ளார். மேலும்,

                ‘கடுநெடும் குவளையும், ஆம்பலும், கமலமும்

                …………………………………………………………………………….

                …………………………………………………………………………….

                கண்ணீர் கொண்டு கால் உற நடுங்கப்’                                     (சிலம்பு. புறஞ்சேரி இறுத்த காதை : 184-188)

    என்று கரிய நீண்ட குவளை மலரும், ஆம்பலும், தாமரை மலரும் கண்ணகிக்கும் கோவலனுக்கும் நிகழப்போகும் துன்பத்தை முன்னரே அறிந்து கொண்டன போல் வண்டுகள் ஒலி அழுகை ஒலிபோல் விளங்க அம்மலர்கள் காற்றில் அசைவது, காலால் நடுங்கி கண்ணீர் விடுவது போல் இருப்பதாகக் காட்டியிருப்பது மலர்களைக் கொண்டு இளங்கோ உருவாக்கிய குறிப்பு உத்தியை உணர்த்துகிறது.

     உள்ளுறை உத்தி

                உள்ளுறை என்பது உள்ளொன்று வைத்து அதற்கு இணையான புறம் ஒன்றைக் கூறுவதாகும். இவ்வுத்தி முறையினைக் கானல்வரி பாடல்களில் பல்வேறு இடங்களில் காண முடிகிறது.

                ‘மறையின் மணந்தாரை வன்பரதர் பாக்கத்து மடவார்

                                                                                                    செங்கை

                …………………………………………………………………………………..

                …………………………………………………………………………………..

                பொறைமலி பூம்கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர்’

                                                                      (சிலம்பு. கானல் வரி : 27)

    எனும் அடிகளில் பிறர் அறியாமல் மறைவாக மணந்தவர்களை, வன்மையான பரதர் வாழ் பாக்கத்தில் உள்ள பெண்களின் சிவந்த முன் கைகளில் அணியப்பெற்ற வளையல்கள், தலைவன் பிரிவால் தலைவி மெலிய வீழ்தன. பிறர் அறிய அவள் செயலைத் தூற்றுகின்றன. இதை ஏழையாகிய யாம் எங்ஙனம் அறியாதிருப்போம். அறிவோம் ஐயனே எங்கள் புகார் நகர வண்டுகள் நெருக்கிய கிளைகளையுடைய மிகுதியாகப் பூத்த புன்னைமரக் கிளையில் அன்னப்பறவை ஏற, அன்னத்தை முழுமதியாகவும், புன்னைப் பூக்களை விண்மீன்களாகவும் கருதி, ஆம்பல் மலர்கள் மலர ஒலிக்கும் புகார் எங்கள் ஊர். இவ்வாறு செயற்கையைப் பார்த்து இயற்கை என நினைத்து ஏமாறும் ஊர் எங்கள் ஊர். அது போன்று எம் தலைவியும் உமது பேச்சை உண்மை என நம்பி ஏமாறுகிறாள் என்று தோழி உரைப்பதாக இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். இங்கு ஆம்பல் மலரின் மலர்ச்சியில் உள்ளுறைப் பொருள் உணர்த்தப்படுகிறது.

    மலர்கள் பயன்பாடு

                மனிதரின் மனதிற்கு மகிழ்வினைத் தரும் மலர்கள் பொதுவாக ஆண் பெண் இருவரும் தங்களை அலங்கரிக்க மாலையாகச் சூடுதல் என்ற நிலையில் மட்டுமல்லாமல் அவர்கள் வாழ்வில் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தியுள்ளனர்.

    மடலும் மலர்களும்

                மாதவி, கோவலனுக்கு எழுதிய மடலில் தாழையின் வெண்மையான இதழை மடல் ஏடாகக் கொண்டு இருபக்கங்களிலும் சண்பகம், மாதவி, பச்சிலை, பித்திகை, மல்லிகை, இவைகளை வெட்டிவேரால் மிடைந்து செங்கழுநீர் மலர் இதழ்கள், கத்திகை இதழ்களுடன் சேர்த்துக் கட்டியது என்று வேனில் காதையில் (45-50) உரைப்பதும், அன்றைய மலர் பயன்பாட்டை எடுத்தியம்புகிறது.

    பட்டங்களும் மலர்களும்

                மன்னர்கள் சிறந்த வணிகர்களுக்கு எட்டி என்ற பட்டத்தை வழங்கினர். பட்டத்தின் சின்னமாக எட்டிமரத்தின் பூங்கொத்துப் போன்று பொன்னால் செய்து வழங்கினர். இந்த எட்டிப் பட்டம் பெற்ற சாயலன் பற்றிய குறிப்பு அடைக்கலக் காதையில் (163) இடம் பெற்றுள்ளது. இதேபோல் காவிதி என்பதும் ஒரு மலர். இப்பூவின் பெயரால் பொற்பூவானது அமைச்சர், கணக்கர், வேளாளர் ஆகியோருக்குக் காவிதிப் பட்டத்திற்குப் பரிசளிக்கப்பட்டுள்ளது. இக்காவிதிப் பட்டம் பெற்றவர்கள் பாண்டியன் அவையில் இருந்ததை,

                ‘காவிதி, மந்திரக் கணக்கர் – தம்மொடு’ (சிலம்பு. அழற்படு காதை : 9)

    என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகிறார்.

    பரிசும் மலரும் 

                சேரன் செங்குட்டுவன் போரில் வெற்றி பெற்ற வீரர்களை வருக என அழைத்து பொன்னாலாகிய வாகை மலரினைப் பரிசாக அளித்தான் என்பதை,

                ‘வருக தாம் என வாகைப் பொலம்தோடு’  (சிலம்பு. நீர்ப்படைகாதை : 43)

    எனும் அடிகள் எடுத்தியம்புகிறது.

    யாழ், வாள், வெண்கொற்றக்கொடைக்கு மாலை சூட்டுதல்

                மாதவி யாழுக்குக் கோட்டுப்பூ சூடியதை,

                ‘சித்திரப் படத்துள் புக்கு செழும்கோட்டின் மலர்புனைந்து’

                                                                         (சிலம்பு. கானல்வரி : 1)

    என்றும்

                சேரன் தன் வாளுக்கு வஞ்சி பூ மாலை சூட்டியதை,

                ‘வாய் வாள் மலைத்த வஞ்சி சூடுதும்’ (சிலம்பு.காட்சிக்காதை : 149)

    என்றும்

                சேரன் வெண்கொற்றக்கொடைக்குப் பூமாலை அணியப் பெற்றதை,

                ‘மறம்மிகு வாளும், மாலை வெண்குடையும்’  (சிலம்பு.கால்கோள் காதை : 44)

    என்றும் சிலம்பில் காணமுடிகிறது.

    பூந்தெப்பம்

                பெண்கள் பூக்கள் பொருந்திய தெப்பத்தில் ஏறிச்சென்று புனல் விளையாட்டில் மகிழ்ந்ததை,

                ‘பூம்புணை தழீஇப் புனல் ஓட்டு அமர்ந்து’  (சிலம்பு. ஊர் காண் காதை : 75)

    எனும் அடிகள் உணர்த்துகின்றன. இவ்வாறு பழந்தமிழரின் வாழ்வில் மலர்கள் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளன.

    தென்றலும் மலர்களும்

                கோவலனும், கண்ணகியும் ஏழுநிலை மாடத்தில் இருக்கும்போது தென்றலானது

                ‘கழுநீர், ஆம்பல், முழுநெறிக்குவளை

                ………………………………………………………………

                ……………………………………………………………..

                தாது தேர்ந்து உண்டு ; மாதவர் வாண் முகத்து’

                                                                (சிலம்பு. மனையறம்படுத்தக் காதை : 14-19)

    என்று செங்கழுநீர்ப் பூ, சோதாம்பல் பூ, இதழ் ஒடியாத முழுவதும் விரிந்த குவளைப்பூ, தாமரை, வயல்களில் உள்ள நீர்ப்பூக்கள், தாழை மடலில் விரிந்த வெண்நிறப்பூக்கள், மாலை போல் மலர்ந்து தொங்கும் மாதவிப் பூ, சண்பகப் பூ போன்ற பல்வேறு மலர்களின் மணங்களையும் கொண்டு வந்ததாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் சிலம்பில் இளவேனிற் வருணனை, சோலைகள் வருணனை, கடற்கரை தோற்றம் வருணனை, மருவூர்பாக்க அங்காடிகளில் பூக்கள் விற்பனை என்று பல்வேறு இடங்களில் இளங்கோவடிகள் மலர்கள் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.

    சின்மலரும் – பூமழையும்

    இயற்கை வாழ்த்துடன் தொடங்கப்படும் சிலப்பதிகார மங்கல வாழ்த்துப் பாடலில் சின்மலர் தூவி வாழ்த்துப் பெற்ற கண்ணகி,

                ‘……………. வானவரும் நெடுமாரி மலர் பொழிந்து

                குன்றவரும் கண்டு நிற்பக்கொழுநனொடு கொண்டு

                போயினார்’ (சிலம்பு. குன்றக்குரவை : 8)

    என இறுதியில் தேவர்கள், பூக்களை மழைபோல் சொரிந்து, கண்ணகியைக் கோவலனோடு அழைத்துச் செல்வதாகக் காட்சிப்படுத்தியிருப்பது சிலம்பில் இளங்கோவடிகள் மலர்களுக்குக் கொடுத்த முக்கியத்துவத்தையும் இயற்கை சார்ந்த பழந்தமிழர் வாழ்வினையும் நன்கு உணர்த்துகிறது.

                மேற்சுட்டிய கருத்துகளின் வழி ‘இயற்கையோடு (Nature) உள்ளுணர்வை (Psychology) இணைத்துப் பார்க்கும் முறை அறிவியல் வளர்ந்தபின் தோன்றியதன்று மிகப் பிற்காலத்தது. ஆனால் (சங்க காலத் தமிழர் இயற்கை நிகழ்ச்சிகள், செய்திகள் (Natural Phenomenon) எல்லாவற்றையும் நுண்ணிய உள்ளுணர்வோடு இணைத்துப் பார்த்திருக்கின்றனர்’ சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், பி.எல்.சாமி ப.40, 41) எனும் கருத்துக் காப்பியக் காலத் தமிழர்களுக்கும் பொருந்தியிருப்பதை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    தொகுப்புரை

    ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தில் மலர்ந்த மலர்கள் வழி இக்கட்டுரையானது

    • இளங்கோவின் கோட்டுப்பூ, கொடிப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ எனும் தாவர வகைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.
    • சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் அடையாளச் சின்னமாக மலர்கள் இருந்ததையும், பழந்தமிழர் தெய்வ வழிபாடு, பூத வழிபாட்டில் மலர்களைப் பயன்படுத்தியுள்ளதை இனம் காட்டுகிறது.
    • இளங்கோவடிகள் மலர்களை உவமை, குறிப்பு, உள்ளுறை எனக் காப்பிய உள்ளடக்கத்தைச் சொல்லும் உத்தி முறைகளில் கையாண்டுள்ளதை எடுத்துரைக்கிறது.
    • மேலும் பழந்தமிழர் வாழ்வில் மலர்களைப் பல்வேறு நிலைகளில் பயன்படுத்தியிருப்பதையும் எடுத்தியம்புகிறது.

    துணைநூற்பட்டியல்

    • பி.எல்.சாமி, சங்க இலக்கியத்தில் செடி கொடி விளக்கம், திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்பு கழகம், 1967, சென்னை-1.
    • பி.எல்.சாமி, இலக்கியத்தில் அறிவியல், சேகர் பதிப்பகம், 1982, சென்னை-78.
    • கோவை இளஞ்சேரன், இலக்கியம் ஒரு பூக்காடு, இராக்போர்ட்டு பப்ளிகேசன், 1982, சென்னை-2.
    • கு.வி.கிருஷ்ணமூர்த்தி, தமிழரும் தாவரமும், பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2009, திருச்சி-24.
    • மொ.இளம்பரிதி, குறியியல் ஒரு சங்கப் பார்வை, காவ்யா பதிப்பகம், 2006, சென்னை-24.
    • ந.மு.வேங்கடசாமி நாட்டார் உரை, சிலப்பதிகாரம், ராமையா பதிப்பகம், 2013, சென்னை – 14.
    • செ.வைத்தியலிங்கம், தமிழ்ப் பண்பாட்டு வரலாறு, அண்ணாமலைப் பல்கலைக்கழக வெளியீடு, 1996, சிதம்பரம்-01.

     ========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சிலப்பதிகாரத்தில் மக்களின் வாழ்க்கையோடு  மலர்கள் பிரித்தறியா வண்ணம் இணைந்து காணப்படுவதை ஆய்வாளர் பல இடங்களில் சான்று காட்டி விளக்கியுள்ளார். குறிப்பாக, பழந்தமிழர் வாழ்க்கை முறைகள், மலர்களுக்கும் மன்னருக்குமான தொடர்புகள், உவமை உத்திகள் என்று பன்முகங்களில் அடிப்படைக் கருத்துகளை முன்னிலைப்படுத்தியுள்ளார்.

    ஆய்வின் முடிவாக மேலைநாட்டார் பதினெட்டாம் நூற்றாண்டில் மரம், செடி கொடி, நீர் ஆகியவற்றில் பூக்கும் பூக்கள் பற்றிய வகைப்பாட்டைக் கூறியுள்ளனர். ஆனால் இளங்கோவடிகள் இப்படியான பாகுபாட்டை கி.பி. 2ஆம் நூற்றாண்டிலேயே சிலப்பதிகாரத்தில் பதிவு செய்துள்ளார் என்பதையும் மக்களின் பண்பாட்டில் மலர்களின் பங்களிப்பு எவ்வளவு முக்கியத்துவம் பெற்றிருக்கிறது என்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.

    குறுகச் சொல்லப்பட்ட இக்கருத்துகளை விரிவாக, ஒவ்வோர் உப தலைப்பும் ஓர் அத்தியாயமாக எடுத்துச் செல்லும் அளவு சிலம்பில் கருத்துகள் குவிந்து கிடக்கின்றன. மலர்கள் பற்றிய எந்தவொரு கருத்தும் விடுபட்டுப் போகக் கூடாது என்ற முனைப்புடன் ஆய்ந்தெழுதிய கட்டுரை ஆசிரியருக்குப் பாராட்டுகள்!

    மேலும் ஆய்வாளர் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள மலர்களுக்கான தாவரவியல் பெயர்களைப் பதிவு செய்துள்ளதால் மலர்களின் மருத்துவக் குணங்கள் சார்ந்த பதிவுகள் குறித்தும் பார்த்திருக்கலாம்.

    ===========================================

    Share
  • படக்கவிதைப் போட்டி – 198

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 5

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 5 – இல் வாழ்க்கை

     

    குறள் 41:

    இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
    நல்லாற்றின் நின்ற துணை

    வாழ்க்கைல பெத்தவங்க, பிள்ளைங்க, பொஞ்சாதி எல்லாருக்கும் நல்லது செய்து தொணையா இருக்கவன் தான் நல்ல படியா குடும்பம்  நடத்துதவன் .

     

    குறள் 42:

    துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
    இல்வாழ்வான் என்பான் துணை

    எல்லாத்திலயும் ஆசைய விட்டவனுக்கும், தங்கிட்ட இல்லன்னு கேக்குதவனுக்கும், ஏழைக்கும் குடும்பத்தோட வாழுதவன் தொணையா இருக்கணும்.

     

    குறள் 43:

    தென்புலத்தார் தெய்வம் விரு ந்தொக்கல் தானென்றாங்கு
    ஐம்புலத்தா றோம்பல் தலை

    தனக்கு,, சொந்தக்காரங்களுக்கு, விருந்தாளிக்கு, தேவர்களுக்கு, இறந்தவங்களுக்கு செய்ய வேண்டியத சிறப்பா செய்யணும்.

     

    குறள் 44:

    பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
    வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல

    வாழ்க்கையோட ஒழுக்கங்கறது பழி பாவத்துக்கு அஞ்சி பொருள் சேக்குததும், சேத்தத பங்குபோட்டு குடுத்து வாழுததுலயும் இருக்கு.

     

    குறள் 45:

    அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது

    குடும்ப வாழ்க்க பண்பும் பயனும் உள்ளதா இருக்கதுக்கு அன்பான மனசோட நல்ல செயல செய்யணும்.

     

    குறள் 46:

    அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றில்
    போஒய்ப் பெறுவ தெவன்

    நல்ல தனமா குடும்பம் நடத்துதவனுக்கு கெடக்குத பயன் வேறவழில கெடைக்குமா? கெடைக்காது.

    குறள் 47:

    இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
    முயல்வாருள் எல்லாம் தலை

    குடும்பத்தோட நல்ல வாழ்க்கை வாழுதவனால மட்டுந்தான் கடவுள பத்தி  அறிஞ்சிக்கிட்டு அவர அடைய முடியும்.

     

    குறள் 48:

    ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
    நோற்பாரின் நோன்மை உடைத்து

    பிறத்தியார நல்லா வாழ வச்சி தானும் நல்லபடியா குடும்பத்தோட வாழுதவனோட வாழ்க்க துறவிங்க கடைபிடிக்க நோன்ப விட ஒசந்தது.

     

    குறள் 49:

    அறன்எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
    பிறன்பழிப்ப தில்லாயின் நன்று

    குடும்பத்தோட வாழுத  வாழ்க்கையத் தான் ஒசந்த அறம் னு சொல்லுதாங்க. அதுவும் மத்தவங்க குத்தம் குறை சொல்ல முடியாததா இருந்துச்சுன்னா நல்லது.

     

    குறள் 50:

    வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
    தெய்வத்துள் வைக்கப் படும்

     

    குடும்பத்தோட வாழுத ஒருத்தன் பூமியில இருந்தாலும் அவன மேலோகத்துல  வாழுத தேவர்கள் ல ஒருத்தனப் போல தான் மதிப்பாங்க.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • ஜார்ஜ் பெர்னாண்டஸ் (1930-2019)

    -மறவன்புலவு க. சச்சிதானந்தன்

    இலங்கை வல்வெட்டித்துறையில் 1989 ஆகத்து 2, 3 நாள்களில் இந்தியப் படையின் தாக்குதலில் 64 தமிழ்ப் பொது மக்கள் இறந்தனர். வியத்நாமில் மைலாய் நகரில் 1968 மார்ச்சு 16இல் அமெரிக்கப் படைகள் தாக்குதலில் 300-500 வியத்நாமியப் பொதுமக்கள் இறந்தனர். வியத்நாமில் அமெரிக்கப் படைகள் செய்ததையே வல்வெட்டித்துறையில் இந்தியப் படைகள் செய்ததாகக் குற்றம் சாட்டிய ஜார்ஜ் பெர்னாண்டஸ், வல்வெட்டித்துறையை இந்தியாவின் மைலாய் என அறிவித்தார்.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ், கொங்கணக் கத்தோலிக்கர். மேற்குக் கடற்கரையோர மங்களூரில் 1930இல் பிறந்தவர். பாதிரியாரகப் பயிற்சிக்கு பங்களூர் போனவர் இடை நிறுத்தி மும்பை சென்று தொழிற் சங்கவாதி ஆனவர்.

    சமதருமக் கோட்பாடுகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர். எளிமையானவர், இனிமையானவர், அடித்தள மக்களின் மேம்பாட்டுக்கு அச்சாணியானவர். 1967இல் நாடாளுமன்ற உறுப்பினரானவர்.1994இல் சமதாக் கட்சியைத் தொடங்கியவர். பிகாரின் இன்றைய முதலமைச்சர் நிதிஷ்குமார், சமதாக் கட்சியில் இருந்து வளர்ந்தவர்.

    வங்கத்துக் கவிஞர், நேரு அமைச்சரவையில் அமைச்சர் உமாயூன் கபீரின் மகள் இலைலாவை விரும்பி மணந்தவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். சீன் அவர்களின் ஒரே மகன்.

    1983க்குப்பின் இந்திய மனித உரிமை இயக்கங்கள் இலங்கைத் தமிழர் மீதான சிங்களவரின் தாக்குதல்களையும் தமது நிகழ்ச்சி நிரலில் ஆர்வத்துடன் சேர்த்துக்கொண்டன.

    சென்னையில் ஊடகவியலார் தி என் கோபாலன் மிகுந்த ஆர்வம் காட்டினார். வி ஆர் கிருஷ்ண ஐயர், ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற தமிழரல்லாத மனித உரிமை ஆர்வலர்களை, சமதரும ஈடுபாட்டாளரைச் சென்னைக்கு அழைத்து இலங்கைத் தமிழர் அழிப்புத் தொடர்பான மாநாடுகளை நடாத்தி வந்தார்.

    அக்காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் தமிழகத்தில் பலருக்கு இலங்கைத் தமிழர் ஆதரவாளராக அறிமுகமானார். அதற்குப்பின்னர் வாழ்நாள் முழுவதும் அவர் அந்தக் கொள்கையில் இருந்து பின்வாங்கவில்லை.

    இலங்கைத் தமிழருக்காக மட்டுமன்றி, மியன்மார், வங்கதேசம், நேபாளம் என அவரின் இரக்கக் கண்கள் பரந்து பார்த்தன, அடக்கியோரை எதிர்த்து விரைந்து குரல் கொடுத்தன.

    இந்திராவின் நெருக்கடி நிலைக் காலத்தில் ஜார்ஜ் பெர்னாண்டஸுக்கு அடைக்கலம் கொடுத்தவர் கருணாநிதி. ஆனாலும் இலங்கைத் தமிழர் ஆதரவு நிலையில் தமிழகத்தில் பழ.நெடுமாறன், வைகோ, கி. வீரமணி மூவரும் ஜார்ஜ் பெர்னாண்டஸுடன் நெருக்கமாகப் பணிபுரிந்தவர்கள்.

    விடுதலையை வேரறுக்க முடியாது. அதற்கான போராட்டங்கைளையும் நசுக்க முடியாது. தமது நாட்டில் விடுதலைக் குரல்களை ஒடுக்கியோர், பிறிதொரு நாட்டில் விடுதலைக்கு ஆதரிப்பது இரட்டை வேடமே. மனதார ஆதரிக்கார். ஒப்புக்காக ஆதரிப்பார். இதனாலன்றோ உரத்த ஒலியுடன் குரல் எழுப்பியிருந்தாலும் இந்திரா காந்தியின் தமிழர் போராட்ட ஆதரவுக் கொள்கை தோல்வி கண்டது. எம்ஜியாரும் எதையும் செய்யமுடியவில்லை. ஆனாலும் அடக்கி ஆள்வோர் நடுவே எம்ஜியார் விடுதலைக்காகக் குரல் கொடுத்ததால் தனித்து ஒளிர்கிறார் என ஜார்ஜ் பெர்னாண்டஸ் எழுதினார் (பக். 61, மனித உரிமைகள், 1998).

    இந்தியப் படைகளை மீளழைக்க வேண்டும் என்ற தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் குரல் 1989 ஆனியில் ஓங்கி ஒலித்த நாள்களில், விடுதலைப் புலிகளின் ஆலோசகர் அண்டன் பாலசிங்கம், ஜார்ஜ் பெர்னாண்டசுடன் தொடர்பு கெண்டார். இந்தியப் படைகள் விலகினால் விடுதலைப் புலிகளைப் பிரேமதாசா அழித்துவிடுவார் எனக் கூறினார். பாலசிங்கத்தை ஜார்ஜ் பெர்னாண்டஸ் கமுக்கமாகச் சந்தித்ததாகவும் செய்தி உண்டு. இந்தியாவுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இணக்கத்தை ஏற்படுத்தக் கேட்டுக்கொண்டார்.

    இந்தியப் பிரதமரிடம் எடுத்துச் சொல்லும் நிலையில் தான் இல்லை எனப் பதிலளித்த ஜார்ஜ் பெர்னாண்டஸ், குடியரசுத் தலைவர் வேங்கடராமனுக்குக் கடிதம் எழுதினார். ஜார்ஜ் பெர்னாண்டஸிடம் மேலும் தகவல்களைக் கோரிப் பெற்ற வேங்கடராமன், பிரதமருக்கு அவை யாவற்றையும் அனுப்பினார். (இந்தியா டுடே, யூலை 31, 1989 இதழ்)

    1997 பெப்ருவரியில் ஜார்ஜ் பெர்னாண்டஸைத் தில்லியில் முதன்முதலாகச் சந்தித்தேன். என்னுடன் வந்தவர் திருமதி மாலினி இராசநாயகம். இலங்கைத் தமிழர் ஆதரவு நிலைக்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம்.

    1998 தொடக்கம் 2001 வரை ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பாதுகாப்பு அமைச்சர். முந்தைய அரசு, இலங்கைக்குக் கடலோரப் பாதுகாப்புக் கப்பல்களைக் கொடுத்திருந்தது. ஒரு கப்பலை அனுப்பியபின் மற்றக் கப்பல் அனுப்பும் நிலையில் ஜார்ஜ் பெர்னாண்டஸ், இந்தியப் பாதுகாப்பு அமைச்சரானார். பழ் நெடுமாறனின் வேண்டுகோளை ஏற்ற ஜார்ஜ் பெர்னாண்டஸ் இரண்டாவது கப்பலை இலங்கைக்கு அனுப்ப மறுத்தார்.

    2000ஆம் ஆண்டு யூன் 3ஆம் நாள். சென்னையில் மாபெரும் பொதுக்கூட்டம். முதலமைச்சர் கருணாநிதியின் 77ஆவது பிறந்த நாள் விழா.

    இரத்தம் சிந்தாமல் ஒரே நாடு பிரிந்தது. செக் நாடும் சுலோவாக் நாடும் உருவாகின. அதே போல இலங்கைத் தீவில் தமிழர் தாயகம் தனியாகவும் சிங்களவர் தாயகம் தனியாகவும் பிரிந்து தமிழருக்குத் தனி நாடு அமைய வேண்டும். கருணாநிதி தன் உரையில் இவ்வாறு கூறினார்.

    வாஜ்பாய் பிரதமர். திமுகவும் அரசில் கூட்டணி. மாறன் அமைச்சர். ஜார்ஜ் பெர்னாண்டஸ் பாதுகாப்பு அமைச்சர்.

    முதலமைச்சர் கருணாநிதியின் பேச்சு இந்திய அரசின் கொள்கையா? இந்திய எதிர்க் கட்சிகள் கூவின. இலங்கையில் சிங்களவர் கூச்சலிட்டனர். மேற்கத்தைய நாடுகளும் குரலெழுப்பின.

    வாஜ்பாயின் பதிலை ஜார்ஜ் பெர்னாண்டஸ் கூறினார். ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர் விரும்பும் தீர்வே இந்தியக் கொள்கை என்றார். ஜார்ஜ் பெர்னாண்டஸ் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர் என்பதால் வாஜ்பாய் அவர் வழி கூறினார். அதே நாளில் இந்திய வெளியுறவு அமைச்சர் யஸ்வந்த் சிங் கொழும்பில் நின்றார்.

    2000 யூலை 1, 2 நாள்கள். இடம் ஈரோடு. வைகோ தலைமையிலான மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் “தமிழக மீளெழுச்சி மாநாடு”. உள்துறை அமைச்சர் அத்வானி, பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், மின்சக்தி அமைச்சர் அரங்கராசன் குமாரமங்கலம், முதலமைச்சர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி மருத்துவர் இராமதாசர் எனப் பலர் பங்குபற்றிய மாநாடு.

    அந்த மாநாட்டிலும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் பேசினார். 1987-1988இல் இந்திய அரசின் தவறான கொள்கையைப் பிரதமர் வாஜ்பாய் பின்பற்றமாட்டார் எனக் கூறிய அவர், தமிழரும் சிங்களவரும் இணைந்து கேட்டாலே இந்திய அரசு தலையிடும் எனக் கூறினார்.

    2008 வைகாசியில் தில்லியில் மீண்டும் ஜார்ஜ் பெர்னாண்டஸைச் சந்தித்தேன். குணபாலசிங்கம், பத்மநாதன் ஆகிய இருவருடனும் தில்லி சென்றிருந்தேன். இலண்டனில் அவர்கள் இருவரும் சார்ந்த அமைப்பு நடத்த இருந்த இலங்கைக் தமிழர் ஆதரவு மாநாட்டிற்காக ஜார்ஜ் பெர்னாண்டஸை அழைக்கச் சென்றிருந்தோம்.

    இலண்டன் மாநாட்டிற்காக, ஜார்ஜ் பெர்னாண்டஸை அனுப்ப உதவினேன். தென் ஆபிரிக்க அமைச்சர் என் நண்பர் படையாட்சியையும் அனுப்ப உதவினேன். தில்லியில் இருந்து இந்திய வெளியுறவுத் தூதரக அநுபவம் நிறைந்த என் நண்பர்களையும் அனுப்ப உதவினேன்.

    மற்றொரு முறை தில்லி சென்ற பொழுது, ஜார்ஜ் பெர்னாண்டஸ் வாழ்ந்த கிருஷ்ண மேனன் மார்க் இல்லம் சென்றேன். அவர் மருத்துமனையில் இருப்பதாகக் கூறினர்.

    2019 ஜனவரி 29 அன்று அவர் காலமானார் என்ற செய்தி அறிந்து கலங்கினேன். இலங்கைத் தமிழரின் உணர்வுபூர்வமான நண்பர். அடித்தட்டு மக்களின் இதயத் துடிப்பு. விடுதலை இயக்கங்களுக்கு நீரூட்டி வளர்ப்பவர். அவரின் மறைவு இந்தியாவுக்கு மட்டுமன்று, மனித நேயர்களுக்குப் பேரிழப்பு.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 22

    -திருச்சி புலவர். இரா. இராமமூர்த்தி

    சுந்தரருக்குத் திருமணக்கோலம் புனைவித்து, உயர்ந்த குதிரையின் மேலேற்றி ஊர்வலம் வந்தார்கள்! அந்த ஊர்வலத்தில் உறவினரும், நட்பினராகிய அரசரைச் சார்ந்தோரும் தொடர்ந்து வந்தனர்! அவ்வாறு வந்தோர் தத்தமக்கு உரிய தேர், யானை, குதிரை முதலிய வாகனங்க ளிலும், வண்டிகளிலும் வந்தார்கள்!

    சிறந்த திருமணக் கோலத்துடன் திருமணம், நிகழும் புத்தூரை நோக்கி அனைவரும் வந்தனர்! புத்தூர், மணமகளின் தந்தை சடங்கவி சிவாசாரியாரின் ஊர் ஆதலால் அங்கேதான் திருமணம் புரிவித்தனர்! இங்கே சேக்கிழார் ஒருகுறிப்பைத் தருகிறார்! அன்றுமுதல் புத்தூரின் பெயர்’’மணம் வந்த புத்தூர் ‘’ எனப்பட்டது, என்று எழுதுகிறார்! சுந்தரர் திருமணத்தின் அடையாளமாக எஞ்சப்போவது, அந்தப் பெயரே ஆதலால் அவ்வாறு கூறினார்! ஆனால் காலப்போக்கில் அவ்வூர் ‘’மணம் தவிர்ந்த புத்தூர் ‘’ என்று மாறியது!

    அவ்வூர் நோக்கி வந்த சுந்தரர் சுற்றத்தினரை பூரண கும்பம் கொடுத்துப் புத்தூர் அந்தணர்கள் வரவேற்றனர்! அவ்வாறு ஊர்வலத்தில்வந்த சுந்தரரைக் குறித்தும் , திருமணப் பெண் குறித்தும், தம்மைக் குறித்தும் பெண்கள் உரையாடியதை அடுத்த பாடலில் நயம்படக் கூறுகிறார்!

    திருமணத்தில் பேரழகர் சுந்தரரின் அலங்காரத் தோற்றத்தைக் கண்ட ஊர்வலப் பெண்டிர், ‘’ கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண ‘’ என்றார்கள்! சுந்தரரைக் ‘’காளை’’என்று கூறிய சேக்கிழாரின் சொல்லாட்சி தனித் தன்மை வாய்ந்தது! திருமண நங்கை சடங்கவி பேதை!அவளுடன் காளையை இணைப்பது சற்றுத் தயக்கம் தருகிறது! திருமணத்துக்கு மணம்பேசிய அளவில் திருமணத்தகுதி வந்துவிட்டது என்றாலும் , அவர்கள் திருமணத்தைப் பெருமான் தடுத்தாட்கொண்டார்! ஆதலால் கண்கள் எண்ணில்லாத வேண்டும் என்று சுந்தரரரைக் காண விரும்பியவர்கள், நங்கையாகிய சடங்கவி திருமகளின் அழகு குறித்து ஏதும் கூறாமல், ‘’பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை! என்பார்!’’ என்று சேக்கிழார் கூறுகிறார்! சுந்தரர் என்னும் சிவனடியாருடன் திருமணம் என்ற அளவிலேயே சடங்கவி மகள் சிவலோகப் பேறு பெற்றாள். ஆதலால் ‘’பெண்களில் சிவலோகப்பேறு பெற்று உயர நோற்றாள், சடங்கவி பேதை ‘’ என்று சேக்கிழார் பாடுகிறார் ‘சடங்கவி பேதை’ என்ற தொடர் அவர்தம் அஞ்ஞானம் விளைத்த ஞானத்தை உணர்த்துகிறது! அதனால்தான் சிவலோகப்பேறு பெரும் தகுதியுள்ள பேதைப்பெண்ணின் மேனியழகின் வருணனையைச் சேக்கிழார் பாடவில்லை.

    சுந்தரர் சிவபெருமானால் தடுத்தாட்கொள்ளப் பெற்றார். ஆனால் அவரைக் கணவனாக நினைத்த சடங்கவியார் திருமகள் என்ன ஆனார்? என்றார் வினாவுக்கு விடை தருவது போல் சேக்கிழார்,

    ‘’அயலோர் தவம் முயல்வார் பிறர் அன்றே மணம் அழியும்
    செயலால் நிகழ் புத்தூர் வரு சிவ வேதியன் மகளும்
    உயர் நாவலர் தனி நாதனை ஒழியாது உணர் வழியில்
    பெயராது உயர் சிவலோகமும் எளிதாம் வகை பெற்றாள்.’’

    என்று அப்பேதையும் சிவலோகம் பெற்றதைக் கூறுகிறார்! இவ்விடத்தில் சிவப்பேறு பெறத்தக்க காரைக்காலம்மை வரலாற்றில் அவருக்கும் பரமதத்தனுக்கும் நிகழ்ந்த திருமணத்தை ,

    தளிரடிமென் னகைமயிலைத் தாதவிழ்தார்க் காளைக்குக்
    களிமகிழ்சுற் றம்போற்றக் கலியாணஞ் செய்தார்கள்.

    என்று சேக்கிழார் பாடியதை இங்கே நினைவில் கொண்டு வருதல் வேண்டும்! காளையும் மயிலும் திருமணப் பொருத்தத்தில் பகையாகும்.

    இங்கே முறையான திருமணத்தில் இணைந்த இராமன்-சீதை திருமணம் குறித்த கம்பன் பாடல்கள் படித்துச் சுவைக்கத் தக்கன! அங்கே மகளிர்,

    “நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேண்டும்!
    கொம்பினைக் காணும்தோறும் குரிசிற்கும் அன்னதேயாம்!’’

    என்று ஒருவரை ஒருவர் விஞ்சிய அழகைக் காட்டுகிறார்! இதனை நன்கறிந்த சேக்கிழார், சற்றே மாற்றிப் பாடிய நயம் போற்றுதற்கு உரியது! இனிச் சேக்கிழார் பாடலை மீண்டும் காண்போம்!

    ‘’கண்கள் எண்ணிலாத வேண்டும் காளையைக் காண என்பார்
    பெண்களில் உயர நோற்றாள் சடங்கவி பேதை என்பார்
    மண் களி கூர வந்த மணம் கண்டு வாழ்ந்தோம் என்பார் ‘’‘.

    இப்பாடலில் ஈற்றடியில் இந்த மண்ணில் மட்டும் மகிழ்ச்சி தரும் திருமணமத்தைக் காணுமுன் வாழ்ந்தோம் என்று கூறிய பெண்களின் கூற்று நயம் மிக்கதாகும்.

    Share
  • (Peer Reviewed) கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்

    முனைவர் ஆ.ராஜா
    அருங்காட்சியகத் துறை
    தமிழ்ப் பல்கலைக்கழகம்
    தஞ்சாவூர்-10

    கொடுமணல் அகழாய்வுகளும் தொல்பொருட்களும்
    (தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகச் சான்றுகளின் அடிப்படையில்)

    கொடுமணல் என்ற ஊர், ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்தில் காவிரியாற்றின் கிளை ஆறான நொய்யல் ஆற்றின் வடகரையில் சென்னிமலைக்கு மேற்கே 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. சங்க இலக்கியமான பதிற்றுப்பத்து, இவ்வூரைக் ‘‘கொடுமணம்’’ என்று குறிப்பிடுகிறது. இத்தகைய சங்க கால இலக்கியங்களில் சிறப்பாகக் குறிப்பிடப்படும் கொடுமணலில் 1985-1986ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினரால் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. அத்தகைய அகழாய்வில் கண்டறியப்பட்ட பெருங்கற்காலத்தைச் சார்ந்த  தடயங்கள் பற்றியும், குறிப்பாகத் தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் உள்ள கொடுமணல் அகழாய்வுத் தடயங்கள் குறித்தும்  இக்கட்டுரை விளக்குகிறது.

    சங்க காலத்தில் அரிய கற்களைக் கொண்டு அணிகலன்களை உருவாக்கக்கூடிய தொழிற்கூடமாகக் கொடுமணல் விளங்கியிருந்தமையைக் ‘‘கொடுமணம் பட்ட வினை மான் அருங்கலம்’’ என (பதிற்றுப்பத்து 74) அரிசில்கிழாரும், ‘கொடுமணம் பட்ட நன்கலம்’ (பதிற்றுப்பத்து 64) எனச் சங்கப் புலவர் கபிலரும் குறிப்பிடுவதன் வாயிலாக அறிய முடிகிறது. இவ்வூர், சேரரின் தலைநகரமாக விளங்கிய கரூவூரையும், கேரளத்திலுள்ள துறைமுகப் பட்டினமான முசிறிப்பட்டினத்தையும் இணைக்கும் பெருவழியில் அமைந்துள்ளது.

    தொல்பொருட்கள்

    கொடுமணலிலுள்ள வாழ்விடப் பகுதியில் அகழாய்வு மேற்கொண்ட போது, அகழாய்வுக் குழிகளின் பல நிலைகளில் சுவரின் அடிப் பகுதிகள், வீட்டுத் தரை எச்சங்கள், செங்கற்கள், கூரை ஓடுகள், மரத்தூண் ஊன்றப்பட்ட குழிகள், அடுப்புப் பகுதிகள் ஆகியவற்றோடு கொல்லர் உலைகளும் (இரும்பு உருக்கு உலைகள்) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வகழாய்வில் பல உலைகள், வட்ட வடிவில் அமைந்திருந்ததோடு, உலைகளின் கழிவு அல்லது கசடு அதிகளவில் காணப்பட்டன. இவ்வுலைகளில் சில, செம்பு உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். மேலும், கொடுமணல், ரோமானிய நாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டிருந்தமைக்கான பல சான்றுகள் இங்கே கிடைத்துள்ளன. குறிப்பாக, மேற்பரப்பில் கிடைத்த ரோமானியக் காசும், அகழாய்வுக் குழிகளில் கிடைத்த ரோமன் வகை ‘ரூலெடட் மண்கல’ச் (Rouletted Pottery) சில்லுகளைக் குறிப்பிடலாம்.

    படம் : 1 & படம் : 2
    கொடுமணல்: குறியீடுகள் பொறித்த கறுப்பு-சிவப்பு கிண்ணம் மற்றும் சிவப்பு பானை ஓடு
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    மேலும், இரும்பாலான கூர்முனைகள், கத்திகள், அரிவாள்1, செம்புப் பொருட்கள், கார்னீலியன் மணிகள், பச்சைக்கல் (Beryl), நீலம் (sapphire), வைடூரியம் (lapis lazuli), ஜாஸ்பர் (Jasper), அகேட் (agate), கார்னட் (carnet) ஆகிய அரிய கல்மணிகளும் கிடைத்துள்ளன. சங்கு அறுக்கும் தொழில் நடைபெற்றதற்கான தடயங்களான சங்கு வளையல் துண்டுகளும் (படம்:5) கிடைத்துள்ளன. இவ்வகழாய்வில் ஏராளமான சூதுபவள மணிகள் கிடைத்துள்ளன. அம்மணிகளில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த அரிய வகை சூதுபவள மணிகளைப் பெருங்கற்கால மக்கள் உருவாக்கியதற்கான தொழிற்கூடம் கொடுமணலில் இருந்துள்ளது என்பதை இங்கே கிடைக்கக்கூடிய மிகுதியான மணிகளின் வாயிலாக அறிய முடிகிறது. இத்தொழிற்கூடத்தில் உருவாக்கப்பட்ட மணிகள், முசிறிப் பட்டினத்தின் வழியாக மேலை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதன் வாயிலாகப் பண்டைய மக்கள் கடல்கடந்த வணிகத்தை அறிந்தவர்களாக இருந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

    படம் : 5
    சங்கு வளையல் துண்டுகள்
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக இங்கு விலையுயர்ந்த கற்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கல்மணிகள் செய்யும் தொழிற்கூடமும், செம்பு, இரும்பு மற்றும் எஃகு உருவாக்கப்பட்டதற்கான தொழிற்கூடங்களும் இருந்தமைக்கான தடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இத்தொழிற்கூடங்கள் சுமார் 500 ஆண்டுகள் நின்று நிலைத்துள்ளன எனக் கா.ராஜன் கருதுகிறார். கொடுமணலில் உருவாக்கப்பட்ட அணிகலன்களை வாங்குவதற்கு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து வணிகர்கள் வந்துள்ளனர். குறிப்பாக உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து வணிகர்களும் கைவினைஞர்களும் இங்கு வந்துள்ளதைத் தமிழ் மயமாக்கப்பட்ட பிராகிருத மொழி கலந்த ஆட்பெயர்களும், வணிகர் பெயர்களும் உறுதிப்படுத்துகின்றன.

    எல்லாவற்றிற்கும் மேலாகக் கங்கைச் சமவெளிப் பகுதியின் பண்பாட்டிற்கே உரித்தான வடக்கத்திய கறுப்பு நிற மட்பாண்டங்கள் இங்கு கிடைத்துள்ளதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். இத்தகைய மட்பாண்டங்கள், கங்கைச் சமவெளிப் பகுதியில் கி.மு 6ஆம் நூற்றாண்டிற்கும், கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கும் இடைப்பட்ட பகுதியில் கிடைக்கின்றன. கொடுமணலில் கிடைத்த இம்மட்பாண்டம், கி.மு. 3ஆம் நூற்றாண்டின் முற்பகுதியைச் சார்ந்ததாகும்2. மேலும், புலிப்பொம்மை சிவப்பு, ஊதாக்கல் பதிக்கப்பட்டு அழகாகச் செய்யப்பட்டுள்ளது. சில விலங்குகளின் எலும்புகளும் பறவைகளின் எலும்புகளும் கிடைத்துள்ளமையால் இம்மக்கள் புலால் உணவை அருந்தியமை தெரிகிறது.3

    மேலும், ஈமக் காட்டில் உள்ள பெருங்கற்படைச் சின்னங்கள், நீத்தோர் நினைவாக உருவாக்கப்பட்ட கல்லறைகளாகும். இவற்றில் ஒரு சிலவே மண்ணால் செய்யப்பட்ட தாழிகளாகும். இப்பெருங்கற்படைச் சின்னங்கள் பெரிய கற்பலகைகளைக் கொண்டு, நீள்சதுரம் அல்லது சதுர வடிவில் நிலத்துக்கடியில் அமைக்கப்பட்டன. இக்கற்பலகைகள் ஒரு டன் முதல் ஆறு டன் வரை எடையுள்ளவையாகக் காணப்பட்டன. தென்னிந்தியாவில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் குறிப்பாகக் கல்லறைகளில் மிகப் பெரியவை கொடுமணலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    இக்கல்லறைகளில் இடுதுளைகள் (Porthole) இருந்தன. கல்லறைக்குள்ளும் வெளியிலும் நீத்தோர் நினைவாகப் படைக்கப்பட்ட மட்பாண்டங்கள், இரும்பு, செம்புப் பொருள்கள், மணிகள் (Beads) ஆகியவற்றையும், வெண்மை நிறப் படிகக் கற்கள் (Quartz pieces) ஆகியவை கொண்டும் நிரப்பப்பட்டன. மேலும், கறுப்புநிறத் தாங்கிகள் (Ring stand), மூடிகள் (Lids),  கறுப்பு சிவப்பு நிறக் கிண்ணங்கள் (Bowls), குறியீடுகள் மற்றும் தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள், மெருகூட்டப்பட்ட கறுப்புசிவப்பு, சிவப்பு வகை மண்கலங்கள், நான்கு கால்களுடன்கூடிய சிவப்பு நிறச் சாடிகள் (Jars:படம்.4), தட்டுகள், சிறிய பெரிய இரும்பு வாள்கள் (Small and big swards), கத்திகள், அம்பு நுனிகள், ஈட்டி நுனிகள், கடப்பாரை, உளி, கம்பி, ஆணி, அரிவாள், புலிப் பொம்மை, வாணலி போன்ற வடிகட்டி, கரண்டி, ஊசி, ஊதுகுழாய், கம்பி, மோதிரம், ஒலிமணி, செம்பு மற்றும் வெண்கலப் பொருள்கள் ஆகியவை, அகழாய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளன.

    படம் : 4
    நான்கு கால்களுடன் கூடிய சாடிகள்
    (நன்றி: அருங்காட்சியகம், தமிழ்ப் பல்கலைக்கழகம்)

    இங்கு கண்டறியப்பட்ட பொருட்களில் சில, தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன என்பது சிறப்புக்குரியதாகும். இவ்வூரில் மிகப் பரந்த அளவில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருட்கள், உலக அளவில் பேசப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

    குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும்

    குறியீடுகள் என்பவை, பானையின் உட்புறத்திலோ அல்லது வெளிப்புறத்திலோ காணப்படும். இந்தியாவில் பானைகளில் கீறப்பட்டுள்ள குறியீடுகள் பற்றிய ஆய்வினை, 1881இல் பிரான்பில் என்ற அறிஞர் தொடங்கினார். அதன் விளைவாக இ.எச்.ஹண்ட், ஜி.யஜ்தானி, பி.கே.தாபர், பி.பி.லால் போன்ற ஆய்வாளர்கள் தோற்றம், வளர்ச்சி மற்றும் குறியீடுகளுக்கு இடையிலான தொடர்பு ஆகியவற்றை அகழாய்வுகளில் கிடைத்த பானைப் பொறிப்புகள், காசுப் பொறிப்புகள், முத்திரைகள் முதலியவற்றிலிருந்து ஆராய்ந்துள்ளனர்.4

    கொடுமணலில் தமிழ்ப் பல்கலைக்கழகம், புதுச்சேரிப் பல்கலைக்கழகம், மத்திய தொல்பொருள் அளவீட்டுத் துறை ஆகிய நிறுவனங்கள் மேற்கொண்ட அகழாய்வுகளில் கண்டறியப்பட்ட மட்பாண்ட ஓடுகள் பலவற்றில் கீறல் குறியீடுகளும் எழுத்துப் பொறிப்புகளும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், கரூர், திருக்காம்புலியூர், உறையூர், அழகன் குளம், வல்லம் போன்ற ஊர்களிலும் குறியீடுகள் கிடைத்துள்ளன. அதே போன்று தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அதிகமான குறியீடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குறியீடுகள், பொறிப்பு பெற்ற பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் கொடுமணலில் கிடைத்த குறியீடுகள் 1456இல் 58 குறியீடுகள் தனிக் குறியீடுகளாவும், 24 அடிப்படைக் குறியீடுகளாகவும் கண்டறியப்பட்டுள்ளன5.

    இக்குறியீடுகள் ஏதோ ஒருவகையான தகவல்களை வெளிப்படுத்தக் கூடியவையாக இருந்திருக்க வேண்டும். எழுத்துகள் உருவாவதற்கு முன், மக்கள் தங்களின் எண்ணங்களையும் செயல்களையும், அவர்களைப் பற்றிய பதிவுகளையும் குறியீடுகள் வாயிலாக வெளிப்படுத்தியிருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது.

    தமிழ் – பிராமி எழுத்துகள்

    ஆரம்ப காலத்தில், குறியீடுகள் மற்றும் ஓவியங்கள் வாயிலாக மனிதர்கள், தங்களின் எண்ணங்களையும் கருத்துகளையும் செயல்பாடுகளையும் வெளிப்படுத்தி வந்தனர். அதன் பின் சிந்திக்கத் தொடங்கிய மனிதர்கள் குறியீடுகளிலிருந்து வளர்ச்சி பெற்று எழுத்துகளைக் கண்டறிந்து உருவாக்க முற்பட்டனர். பண்டைத் தமிழர்கள், கி.மு.500 வாக்கில் எழுத்துகளின் பயனை அறிந்தவர்களாக இருந்துள்ளனர். பொதுவாக இக்காலக்கட்டத்திலுள்ள எழுத்துகளைத் தமிழி அல்லது தமிழ்பிராமி என்பர். இவ்வகையான எழுத்துகள், கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளின் வாயிலாக 500க்கும் மிகுதியாகக் கிடைத்துள்ளன6. சங்க இலக்கியங்களில் வருகின்ற பெயர்கள் இங்கு கிடைத்த பானை ஓடுகளில் காணப்படுகின்றன. குறிப்பாகச் சாம்பன் ஸீமநன்(படம்.3), கூல அந்தைய் சாம்பன் அகல், கண்ணன் ஆதன், பண்ணன், குவிரன் அதன், அந்தவன் அதன், விஸாகீ, விஸகன், அதன்7,  போன்ற எழுத்துப் பொறிப்பு பெற்ற பானை ஓடுகளைக் குறிப்பிடலாம்.

    படம் :3, கொடுமணல்: ‘சாம்பன் ஸீமநன்’ எழுத்துப் பொறித்த பானை
    (நன்றி: பேரா.கா.இராஜன்)

    இலங்கையில் யாழ்ப்பாணத் தீபகற்பத்தில் அணைக்கோட்டை என்ற இடத்தில் பெருங்கற்படைச் சின்னம் அகழ்ந்தபோது கிடைத்த முத்திரை ஒன்றில் ‘கோவேதா’ என்ற பிராமி எழுத்து உள்ளது. ஐராவதம் மகாதேவன் அவர்களால் கேரளாவிலுள்ள எடக்கல் என்ற இடத்தில் கண்டறியப்பட்ட கல்வெட்டின் இறுதியில் ‘கடும்மி புத சேர’ என்ற சொல், தமிழ்-பிராமியில் உள்ளது நோக்கத்தக்கது.8

    இதே போன்று இலங்கையின் மிகத் தொன்மை வாய்ந்த ஊர்களுள் ஒன்றாகக் கருதப்படும் அநுராதபுரம் என்ற இடத்தில் தெரிணியகலா மற்றும் ராபின் கோனிங்காம் தலைமையில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வகழாய்வில்  பிராகிருதம் தாங்கிய பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்கள் குறிப்பிட்ட மண்ணடுக்குகளில் கிடைத்தன. இம்மண்ணடுக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் காலக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்டன. அவற்றின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டதால் அம்மண்ணடுக்குகளில் கிடைத்த பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களின் காலமும் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்கு கொண்டுச் செல்லப்பட்டன.

    ஆயினும், பெளத்த மதம் அசோகரால் இலங்கையில் புகுத்தப்பட்ட போதுதான் பிராமி வடிவமும் அங்குப் புகுத்தப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இக்காலத்தை ஏற்றுக்கொள்வதில் அறிஞர்கள் தயக்கம் கொண்டனர். இருப்பினும், இக்கால வரையறை இதுவரை பிராமி எழுத்துகளின் காலம் தொடர்பாகக் கொண்டிருந்த கருத்தை உரசிப் பார்த்தது.

    இந்நிலையில், பொருந்தல் மற்றும் கொடுமணல் அகழாய்வுகளில் வெளிக்கொணரப்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புப் பெற்ற மட்பாண்டங்களும் தமிழ்-பிராமி எழுத்துகளின் காலம் குறித்து முக்கியச் செய்திகளை நமக்கு வழங்கின. அதன் விளைவாக அறிவியல் முறைப்படி கரிமக் காலக் கணிப்பு முறையில் பொருந்தல், கொடுமணல் அகழாய்வில் கிடைத்த பொருட்கள் காலக் கணிப்பு செய்யப்பட்டன. இதன் வாயிலாக தமிழ்-பிராமியின் காலம் கி.மு. 6ஆம் நூற்றாண்டிற்குப் பின் நோக்கித் தள்ளப்பட்டது என்கிறார் கா.இராசன்.9

    காலக் கணிப்பு

    தொடக்க காலத்தில், எழுத்துகளின் வரிவடிவத்தின் அடிப்படையிலும், மண்ணடுக்கில் கிடைக்கின்ற பானை ஓடுகளின் அடிப்படையிலும், குகைத் தலங்களில் கிடைத்த கல்வெட்டுகளின் அடிப்படையிலும் காலக் கணக்கீடு செய்யப்பட்டது. காலப்போக்கில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியின் தாக்கத்தால் கரிமக் காலக் கணிப்பு முறையின் வாயிலாகக் காலம் கணக்கீடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் கா.இராசன் அவர்கள் 2012 மற்றும் 2013ஆம் ஆண்டுகளில் கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுகளில் காலக் கணிப்புக்கு மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, அவை அமெரிக்காவில் உள்ள பீட்டா அனலிடிக் ஆய்வுக் கூடத்திற்கும், அரிசோனா பல்கலைக்கழக ஆய்வுக் கூடத்திற்கும் அனுப்பப்பட்டன. அவை கி.மு 408 என்ற காலக் கணிப்பை வழங்கின.

    பொருந்தல் அகழாய்வில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலத்திற்கு ஏற்பக் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துகளின் காலமும் கி.மு.5ஆம் நூற்றாண்டுக்குப் பின்னோக்கித் தள்ளப்பட்டது. இக்காலக் கணிப்பு இங்குக் கிடைத்த ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்-பிராமி எழுத்துப் பொறிப்புகளாலும் உறுதிப்படுத்தப்பட்டன. அந்த வகையில் கொடுமணலில் கிடைத்த தமிழ்-பிராமியின் காலத்தைக் கி.மு. 5 ம் நூற்றாண்டு என கா.இராசன் குறிப்பிடுகிறார்.10

    கொடுமணலில் முதன்முதலில் தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையினர் மேற்கொண்ட  அகழாய்வுகளில் கிடைத்த தமிழ்-பிராமி எழுத்துப் பொறித்த பானை ஓடுகளின் காலத்தை, புதுச்சேரிப் பல்கலைக்கழக வரலாற்றுத் துறையினர் 2012 மற்றும் 2013களில் மேற்கொண்ட அகழாய்வுகளில் அகழப்பட்ட குழிகளின் மண்ணடுக்கில் கிடைத்த தழிழ்-பிராமி எழுத்துகளின் அடிப்படையிலும், மேற்குறிப்பிட்ட கரிமக் கணிப்பின்படியும் கி.மு.500 எனக் கருதலாம். இவ்வகையான அறிவியல் முறைப்படியான ஆய்வுக்கு முன், கொடுமணலின் காலம் எழுத்துகளின் வடிவத்தின் அடிப்படையில் கி.மு.300 எனக் கணக்கீடு செய்யப்பட்டு வந்தது.

    எனவே, கொடுமணல் பெருங்கற்காலத்தில் பெரும் நகரமாகவும், உள்நாடு மற்றும் மேலை நாடுகளுடன் வணிகத் தொடர்பினைக் கொண்டிருந்த செழித்த ஊராகவும் திகழ்ந்திருக்கிறது என்பதை அகழாய்வுகளில் கிடைத்த பல்வேறு வகையான சான்றுகளின் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், கொடுமணலில் கண்டறியப்பட்ட எழுத்துப் பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளை அறிவியல் முறைப்படி காலக் கணிப்பு செய்ததில் இதன் காலம் கி.மு.500க்கு பின்நோக்கி எடுத்துச் சென்றுள்ளது சிறப்புக்குரியது. இதன் வாயிலாகத் தமிழகத்தில் குறிப்பாகக் கொடுமணலில் பெருங்கற்கால மக்கள் 2500 ஆண்டுகளுக்கு முன்பே செழிப்புற்றிருந்தார்கள் என்பதனை அறிய முடிகிறது.

    சான்றெண் விளக்கம்

    1. Rajan, Archaeological Gazetteer of Tamil Nadu, ManooPathippakam, Thanjavur, 1997, P.89.
    2. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    3. வாழ்வியற் களஞ்சியம் தொகுதி எட்டு, தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், 1988, பக்.72-74.
    4. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
    5. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    6. மேலது.
    7. எ.சுப்பராயலு, மண்கல தமிழ்பிராமி எழுத்துப் பொறிப்புகள், ஆவணம் இதழ்-19, தமிழகத் தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2008, பக்.189-221.
    8. கா.இராஜன், குறியீடுகளும் எழுத்துகளும், வரலாற்றுக் கலம்பகம், மனோ பதிப்பகம், தஞ்சாவூர், 1998, பக்-1-8.
    9. கா.இராஜன், தமிழ்-பிராமியின் காலம் சிக்கல்களும் தீர்வுகளும், ஆவணம் இதழ்-28, தொல்லியல் கழகம், தஞ்சாவூர், 2018, பக்.255-272.
    10. மேலது.

    துணை நின்ற நூல்கள் மற்றும் இதழ்கள்

    • சு.இராசவேலு மற்றும் கோ.திருமூர்த்தி, தமிழ் நாட்டுத் தொல்லியல் அகழாய்வுகள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 1995.
    • Subbarayalu, “Vallam Excavations”, Tamiḻ Civilization, vol.2, no.4, 1985, pp.30-42.
    • Rajan, “Kodumanal Excavations – A Report”, K.V.Ramesh (ed.), Gauravam B.K.Gururajarao Felicitation Volume, Harman Publishing Company, New Delhi, 1996, pp.72-86.
    • Rajan and Osmund Bopearachchi, “Graffiti Marks of Kodumanal (India and Ridiyagama (Sri Lanka)”, Man and Environment, vol. 27, no.2, 2002, pp.97-106

    =====================================================

    ஆய்வறிஞர் கருத்துரை:

    தமிழகத் தொல்லிடங்கள், பொதுவாக கி.மு 3 ஆம் நூற்றாண்டு அளவே கால மூதெல்லையாக வைக்கப்பட்டிருந்தன. இதற்கு பிராமி எழுத்தின் காலம் கி.மு 3 ஆம் நூற்றாண்டு எனக் கொள்ளப்பட்டதே முதன்மைக் காரணம். கரிம ஆய்வின்படி கொடுமணல் பிராமி எழுந்துள்ள பானை ஓடுகள், எழுந்துள்ள பானையில் இருந்த பொருள்கள் கி.மு.5 ஆம் நூற்றாண்டு வரை நீளுவதால் பிராமி எழுத்தின் காலம் மட்டுமல்ல, கொடுமணல் நாகரிகக் காலமும் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது என நிறுவப்பட்டுள்ளதைக் கட்டுரை தெளிவாக விளக்குகிறது. வைடூரியம் < lapis lazuli என்பது தவறு. அது ஒரு நீல நிறப் பாறைக்கல். மற்றபடி, கட்டுரை நன்று.

    =====================================================

    Share
  • வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    சேசாத்திரி

    வலங்கை இடங்கை குறிக்கும் கல்வெட்டு

    தமிழ்நாட்டின் நடுநாடாம் பெரம்பலூர் வட்டம் அசூர் ஊரில் உள்ள அருள்மிகு சொக்கநாதசுவாமி கோவில் முன்மண்டபம் தெற்கு அதிட்டாணம் ஜகதி. 6 வரி கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ ஸகாப்தம்1350 இதன்மேல் செல்லா நின்ற சௌம்ய வருஷம் மார்கழி மாதம் 27 நாள் த்ரயோதஸியும் சனிக்கிழமையும் பெற்ற மூலத்து நாள் திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆன வன்னாட்டு வெண்பாற் நாட்டில் அசுகூரில் வலங்கை தொண்ணூற்று எட்டும் இடங்கை தொண்ணூற்று எட்டும்
    2. நிறைவற நிறைந்து குறைவறக் கூடி உடையார் சொக்கநாத நயினார் கோயிலில் திருக் கட்டளையில் கல்வெட்டினபடி இந்த நாட்டுக்கு பூறுவம் மற்ற மரியாதி பயிர்வழி கடமை இறுக்கும் இடத்து நன்செய்க்கு பாழ், சாவி கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு அன்பது பணமும் புன்செய் வரகு கேழ்வரகுக்கு பாழ் சாவி கழித்து பயிர் கூடின நிலத்திலே
    3. பத்தில்லொன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் இளவரிசை ஆன பல பயிருக்கும் இளவரிசைத் துண்டம் கால்வாசி கழித்து பயிர் கூடின நிலத்திலே பத்தில் ஒன்று கழித்து பயிர் கூடின நிலத்துக்கு வேலி ஒன்றுக்கு இருபத்து அஞ்சு பணமும் வான்பயிர் ஆன செங்கழுநீர் கரும்பு கொழுந்துக்கு நூறு குழிக்கு
    4. அஞ்சு பணமும் வாழை மஞ்சள் இஞ்சிக்கு நூறு குழிக்கு இரண்டரைப் பணமும் கமுகு தென்ன மரத்துக்கு தலை கூடின முதலிலே மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் ஆட்டைக்  காணிக்கைக்கு இருநூற்று இருபது பொன்னும் மகமை தலையாரிக்கத்துக்கு எண்பது பொன்னும் பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வா
    5. ணியர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர் குடிமக்கள் பறையர் பேற்கு பேர் ஒன்றுக்கு இரண்டு பணமும்  புன்பயிற் செய்தால் புனத்துக்கு  ஒரு பணமும்  இம்மரியாதி இம்முதல் குடுக்க கடவோமாகவும் இது ஒழித்து வேறு புறமுதல் புதுவரி என்று குடுக்க கடவோம் அல்லவாகவும்
    6. இப்படிக்கு இந்த கல்வெட்டுப்படி செய்யாமல் இருந்தோர்க்கு உடன்பட்டு கல்வெட்டை அழித்து செய்வார்கள் உண்டானால் அவர்களைத் தீர விளங்கி மேற்படக் குத்தி கீழ்ப்பட இழுத்துப்போடக் கடவோம் ஆகவும் இந்த கல்வெட்டை அழித்தவர்கள் கெங்கைக் கரையிலே கபிலையைப் கொன்ற பாபத்திலே போகக் கடவர்கள் ஆகவும் ஸுபமஸ்து.

    விளக்கம்:

    விஜயநகரம் இரண்டாம் தேவராயர் ஆட்சிக் காலத்தில் கி.பி. 1428 இல் வெட்டிய கல்வெட்டு. திருச்சிராப்பள்ளி உசாவடியில் கரிகால கன்ன வளநாடு ஆள வன்னாட்டு வெண்பாற் நாட்டில் உள்ள அசுகூரான அசூரில் உள்ள சொக்கநாத சுவாமி கோயிலில் கூடிய வலங்கை 98 சாதிகளும், இடங்கை 98 சாதிகளும் குறைவின்றி நிறைவே நிறைந்தவராய் தாம் அரசுக்கு செலுத்த வேண்டிய பயிர்க் கடமை(வரி), பல இனத்தார் செலுத்த வேண்டிய பல வரிகள் குறித்து இக் கல்வெட்டு கூறுகிறது.

    நன்செய் பயிரில் பாழும் உமி மட்டும் உள்ள சாவியைத் தவிர்த்து வளர்ந்த பயிரில் வேலி ஒன்றுக்கு ஐம்பது பணமும், வரகு கேழ்வரகு விளையும் புன்செய் பயிரில் வீணாகிய பாழ், உமி ஆகிய சாவி தவிர்த்து வளர்ந்த பயிரில் பத்தில் ஒன்று 1/10 கழித்து வேலி ஒன்றுக்கு 25 பணமும் இவற்றுக்குக் கீழான இளவரிசை துண்டில் 4 ல் 1 பங்கான கால்வாசி கழித்து, மேலும் 10 ல் 1 பகுதி கழித்து, வேலி ஒன்றுக்கு 25 பணமும் வானாவாரி பயிருக்கு 100 குழிக்கு 5 பணமும், வாழை மஞ்சள் இஞ்சி க்கு 100 குழிக்கு 2-1/2 பணமும், முதல் குருத்து விட்ட கமுகு, தென்னை மரங்களுக்கு மரம் ஒன்றுக்கு அரைக்கால் பணமும் தரவேண்டும். ஆண்டு காணிக்கைக்கு 220 பொன்னும், மகமை என்னும் கோவில் வரி, தலையாரிக் காவல் வரிக்கு 80 பொன்னும் தரவேண்டும். பட்டடைக் குடிஆன செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர் ஒருவர்க்கு இரண்டரைப் பணமும் இடையர், வலையர், கண்மாளர், பறையர் ஒருவர்க்கு இரண்டு பணமும் புன்செய் பயிர் செய்தால் புனத்து 1 பணமும் தரவேண்டும். இவை தவிர்த்து வேறு எந்தப் புது வரியும் செலுத்த வேண்டாம்.

    இந்த ஏற்பாட்டிற்கு உடன்படாமல் கல்வெட்டை அழிப்பவர்களை நன்றாக வாட்டி வதைத்து, தலையில் குத்தி, கீழே இழுத்துப் போடுவோம் என்று எச்சரிக்கின்றனர். வலங்கை இடங்கையில் இடம்பெறாமல் இருப்பதால் தான் செட்டிகள், கைக்கோளர், சேனை கடையார், வாணியர், இடையர், வலையர், கண்மாளர், பறையர் என்போர் தனித்துக் காட்டப்பட்டார்களோ அல்லது இவர்கள் ஊழியத் தொழில் ஆற்றுவோர் என்பதால் இவர்கள் குறைவான வரி செலுத்தினால் போதும் என்று தனியே காட்டப்பட்டார்களா?

    மொத்தத்தில் இக்கல்வெட்டில் பறையர் பிற சாதிமாரோடு சரிநிகராக வைக்கப் படுவது, 15 ஆம் நூற்றாண்டில். இவர்கள் தாழ்த்தப்படவோ, ஒடுக்கப்படவோ இல்லை. தீண்டாமைக்கு ஆட்படவும் இல்லை எனத் தெரிகின்றது.

    பார்வை நூல்:

    தமிழ்நாட்டுக் கல்வெட்டுகள், தொகுதி III பக்கம் 15, 2010, தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு

    Share
  • படக்கவிதைப் போட்டி 197-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    வரிசைகட்டி நிற்கும் நெகிழிப் புட்டிகளின் அருகே முறுவலோடு மலர்க்கரம் நீட்டி நமை மயக்கும் சுட்டிக் குழந்தைகளைப் புகைப்படம் எடுத்திருப்பவர் திரு. அண்ணாகண்ணன். படக்கவிதைப் போட்டிக்கு ஏற்றது இப்படம் என்றிதனை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து தந்திருப்பவர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    மகிழ்வோடு நாம் பயன்படுத்திய நெகிழிப் பொருள்கள் நம் மண்ணுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குபயக்கும் தன்மையன; மக்காத் தன்மை கொண்ட இவற்றை அழித்தலும் இயலாது என்றுணர்ந்த பின்னும் அவற்றைப் பயன்படுத்துதல் அறிவுடைமை ஆகாதென்னும் விழிப்புணர்வை மாந்தரிடம் ஏற்படுத்தி அவற்றுக்கு விடைகொடுத்தனுப்புவதே நம் கடமையாகும்.

    இனி, இந்நிழற்படத்துக்குப் பொருத்தமான கவிதைகள் வடிக்கக் காத்திருக்கும் கவிஞர்களை அழைப்போம்! அவர்தம் நன்மொழி கேட்போம்!

    *****

    ”மழைக்காக வானம் பார்த்து வாழும் கூட்டம் ஒருபுறம்; குடிநீருக்கு(ம்) கேடு வந்ததால் அதனைக் காசுகொடுத்து வாங்கிடும் கூட்டம் இன்னொருபுறம்; வயிறுபுடைக்க உண்டதனால் நீர் குடிக்க இடமின்றி அதனை வீணடிக்கும் கூட்டம் மறுபுறம் என்று விதவிதமான மனிதர்கள் மத்தியில் தாகம் தணித்திடும் நீர்ப்புட்டிகளை வேண்டுவோருக்கு வழங்கக் காத்திருக்கும் குழந்தைகள் இவை!” என வியக்கிறார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    ஈரம் கொண்ட பிஞ்சு மனம்

    மாதம் மும்மாரிப் பொழிந்த
    காலம் போய்
    வானம் பார்த்து வாழும் ஒரு கூட்டம்
    கால் கடுக்க வெகு தூரம் நடந்து சென்று
    கால்வாய்களில் கொண்டு வந்த தண்ணீர்
    கால் வயிற்றுக் கஞ்சி காய்ச்சிட
    காலியாகிப் போனதே
    நீரைத் தேடி மீண்டும் கால்கள் நடந்ததே
    மீளாத துயரம் இன்றும் தொடர்ந்ததே
    நிலத்தடி நீரை உறிஞ்சி குளித்துக்
    குடிக்கும் நீரைக் காசு கொடுத்து வாங்கி
    வாழும் ஒரு மக்கள் கூட்டம்
    அன்போடு தேவை அறிந்து பரிமாற நேரமின்றி
    ஆடம்பரத்திற்கு அடிமையாகி
    அடைத்து வைத்த தண்ணீரைக்
    கட்டாயமாய் வழங்கிடும் ஒரு கூட்டம்
    அதிகம் உண்டு நீர் குடிக்க இடம் இன்றி
    தாகம் தீர்க்கும் தண்ணீரை
    செய்வது அறியாது வீணாக்கிடும் ஒரு கூட்டம்
    முழுதும் முடியாத கட்டிடத்தில்
    அதிகம் வளராத பிள்ளைகள்
    வியக்க வைக்கும் சிந்தனையுடன்
    வீணாகும் நீரைச் சேமித்து
    சிலரது தீராத தாகத்தைத் தணித்திட
    புன்னகையோடு வழிகாட்டி நின்றனரே!

    *****

    ”நெகிழிக் குடுவையே போய் வா; நீர் வளம் இங்கு பெருகட்டும்” என்கிறார் திருமிகு. லட்சுமி.

    நீர் வளம் பெருகிடவே
    நிறைந்த மனதாய்
    நெகிழி குடுவையே!
    போய் வருவாயோ!

    பந்தி முடிந்தபின்பும் அகலாது குந்தியிருந்த குப்பிகளை வைத்துத் தொடர்வண்டி செய்த சிறுமியர், தாங்கிநிற்கும் மேசையையே அதற்குத் தண்டவாளம் ஆக்கிவிட்டனர் என்று கற்பனைச் சுவை மிளிரக் கவியெழுதியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில் குமார்.

    உணவுப் பந்தியில் உதித்த சிறுமியரின் தொடர்வண்டி…
    தொடர்வண்டி செய்திடுவோம்.. தோழி..
    தொடர்வண்டி செய்திடுவோம்..
    அழகழகுக் குப்பிகளை.. தோழி..
    அருகருகே நிற்கவைத்து.. (தொடர்வண்டி…)

    பந்தி முடிந்த பின்னாலே.. தோழி..
    பல குப்பிகளைச் சேகரித்து..
    பந்திமேசை அதன்மீது.. தோழி..
    பாங்குடனே அடுக்கிவைத்து.. (தொடர்வண்டி…)

    இழுவையொன்று செய்திடவே.. தோழி..
    இயன்றவழியைச் சொல்வாயா..?
    இங்கிருக்கும் பொருளொன்றை.. தோழி..
    இழுவையாக நாம்மாற்றி.. (தொடர்வண்டி…)

    தொடர்வண்டி செய்தாச்சு.. தோழி..
    தண்டவாளம் என்னாச்சு..?
    தாங்கிநிற்கும் மேசையிதையே.. தோழி..
    தண்டவாளமாய்க் கொள்வோமே.. (தொடர்வண்டி…)

    நாம் செய்த தொடர்வண்டி.. தோழி
    நீண்டதொலைவு சென்றிடுமே..
    நாமிருவரும் அதிலேறி.. தோழி
    நினைத்தபடியே செல்வோமே.. (தொடர்வண்டி…)

    *****

    ”ஆறுகளையும் குளங்களையும் மனிதன் கூறுபோட்டதனால் நீர்வளம் குன்றிப்போய் குப்பிகளில் குடியேறியது குடிநீர் ” என்று வருந்துகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    மாற்றம்…

    ஆறு குளமும் கேணியென
    அத்தனை வகையாய் நீர்நிலைகள்,
    ஊறும் நீரின் வளத்தாலே
    உலகம் வாழ்ந்ததே யந்நாளில்,
    கூறு போடும் மனிதராலே
    குன்றிப் போனது நீர்வளமும்,
    ஆறாய்ப் போன நீர்மறந்தே
    அடைத்ததைக் குப்பியில் காண்கிறோமே…!

    *****

    ”கெட்டவரையும் புண்படுத்தாது பண்படுத்தும் இயல்புடைய தமிழராகிய நாம், மக்காது புவிவாழ் மக்களையும் மாக்களையும் வதைக்கும் நெகிழிகளுக்கும் ஒரு நினைவுதினம் நடத்துவோம் வாரீர்!”  என்றழைக்கின்றார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    நினைவு தினம்!

    வாரீர் எம் தமிழர்களே
    வழியனுப்பு விழாவிற்கு!
    நெகிழிப்பை பயன்படுத்த
    நாளை முதல் தடையாம்
    பிறந்தது முதல் தொட்டிலாய்
    பாலுண்ணும் குமிழியாய்
    பகிர்ந்து உண்ணும் தட்டாய்
    பருக உதவிய குவளையாய்
    விளையாட்டுப் பொம்மையாய்
    விரும்பி ஆடும் ஊஞ்சலாய்
    குளிக்கும் வாளியாய்
    பல வருடம் வித விதமாய்
    பவனி வந்த நெகிழி பற்றி
    புரிந்து கொண்டோம்
    நாளை முதல் ஒவ்வொன்றாக
    நன்மை கருதிப் புறந்தள்ளுவோம்
    உருக்கி வடிவுமாற்றி மீண்டும்
    உபயோகிக்க முடிந்தவை தவிர
    மக்கிப் போகாது இப்புவிவாழ்
    மக்களையும் மாக்களையும்
    வாட்டி வதைக்கும் நெகிழிகளுக்கு
    வழியனுப்பு விழா இன்று!
    புவிவளம் காக்க அவைகளை
    புறம் ஒதுக்க விழைந்தாலும்
    கெட்டவரையும் புண்படுத்தாத
    குணம் கொண்ட தமிழர் யாம்
    நிறைவு பெறாக் கட்டிடத்தில்
    நிறை மனதோடு கொண்டாடுவோம்
    நெகிழிப் பைக்கொரு நினைவுதினம்!

    *****

    ”மட்பாண்டக் குவளைகள் எல்லாம் மரியாதையுடன் மனையேறட்டும்; மக்காத நெகிழி நச்சுகளெல்லாம் மலையேறி வெளியேறட்டும்” என்று மாற வேண்டியதையும் நாம் மாற்ற வேண்டியதையும்  அழகாய்த் தன் கவிதையில் பதிவுசெய்துள்ளார் திரு. யாழ் பாஸ்கரன்.

    மாறுவோமே மாற்றுவோமே!

    பச்சைத் தலைப்பாகட்டி பளபளக்க வரிசையிலே
    பச்சைத் தண்ணீர் நெகிழிப் போத்தல்கள் – நாம்
    எச்சிலாக்கி எறிந்தபின் மக்கி நெகிழாமல்
    பசுமைத் தாய்நிலத்தின் நலம் சாய்க்கும் பகைவர்கள்

    வழக்கம் மாறினால் வானமே எல்லை நெகுநெகு நெகிழிகளை
    வழியனுப்பி வைப்போம் பிள்ளைகள் நாங்கள்
    வாழும் பூமிக்கோளம் மாசின்றி மலர்ச்சியுற
    வையகம் வாழ வழிமுறை காண்போம்

    மடமடவென மண்பானைத் தண்ணீரைக் குடித்துவிட்டு
    மளமளவென மண்வெட்டியால் நிலம் கொத்திய
    முப்பாட்டன் காலத்தின் சூழல் நோக்கி முழுமனதுடன்
    முதல் அடியை எடுத்து வைப்போம்

    மண்பாண்டக் குவளைகள் எல்லாம்
    மரியாதை பெற்றே மனையேறட்டும்
    மக்காத மாசான நச்சுக் குப்பைகள் எல்லாம்
    மனம் மாறி மலையேறி வெளியேறட்டும்

    மாசில்லா உலகே மகிழ்வான சுவனம்
    மக்காத பொருளாலே நிகழுமே உயிர்களின் மரணம்
    மனம் நெகிழ்ந்தே நெகிழிகளை ஒழிப்போம்
    மண்ணுயிர்க்கு வாழ்வளித்து மகிழ்வோம்

    மனிதனின் தேவைக்குத் தாயாகும் இயற்கை
    மாறாத அவன் பேராசைக்குப் பாலியாகுது இது செயற்கை
    மாறுவோமே மாற்றுவோமே இனி மண் சிரித்துப் பொன்னாகும்
    மரம் வளர்ப்போம் உலகு அழகாகும்!

    *****

    சிந்தனைக்கு விருந்தான சீரிய கவிதைகளைப் படைத்திருக்கும் புலவர் தோழர்களுக்கு என் பாராட்டும் நன்றியும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    நெகிழிப் பொருட்களைத் தவிர்த்திடுவோம்…மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!

    நெகிழிக் குப்பிகள் ஒவ்வொன்றாய்..நெருக்கமாய் அடுக்கி வரிசையாக்கி..
    நெஞ்சம் மகிழ விளையாடும்.. நெருங்கியத் தோழிகள் இருவருக்கும்..
    நெருக்கடிச் சூழலை உணர்த்துகிறேன்.. சிரத்தையாய் அதற்குச் செவிமடுப்பீர்..!!

    நெடுங்கழுத்து உள்ள நாரைகளும்.. நெடுந்தூரம் செல்லும் பறவைகளும்..
    நெடுங்கடல் வாழும் உயிரினமும்.. நெகிழிப் பொருட்களை விழுங்குவதால்..
    நெடுதுயில் கொள்வதை உணர்வீரா..? இவற்றின் துன்பம்போக்க முனைவீரா..?

    நெடுஞ்சாலை நீர்நிலை எங்கெங்கும்.. நெகிழிக் குப்பைகள் நிறைந்திருக்கு..
    நெடுகிலும் குவியும் குப்பைகளால்.. நெருப்பாய்த் தகிக்குது நம்பூமி..
    நெஞ்சம் பதறுது அதையெண்ணி.. உணர்வீர் செல்லக் குழந்தைகளே..!!

    நெல்லைத் தந்திடும் பூமியெங்கும்.. நெருஞ்சில் தைத்த வலியாக..
    நெகிழிக் குப்பைகள் படிவதனால்.. நெடிதுய்க்கும் மண் வளங்கள்..
    நெஞ்சம் பதறிடக் குன்றிடுதே.. நெடுங்கதையாய் இது தொடர்கிறதே..!!

    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நிலத்தடி நீரின் குறைபாடு..!!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நாட்டின் தூய்மைக்கு இடர்ப்பாடு..!!
    நெகிழிப் பொருட்களின் பயன்பாடு.. நம் சுற்றுச்சூழலின் சீர்கேடு..!!

    மனதில் இவற்றை இருத்திடுவோம்.. மண்ணின் வளத்தைக் காத்திடுவோம்..!!
    மக்கா நெகிழிக் குப்பைகளை.. மண்ணில் எறிவதைத் தவிர்த்திடுவோம்..!!
    நெகிழிப் பைகளைத் தவிர்ப்போமே.. நெய்த துணிப்பைகளைக் கொள்வோமே..!!

    ”நெகிழிப் பொருட்களின் பயன்பாடு, நிலத்தடி நீரின் குறைபாடு; நெகிழிப் பொருட்களின் பயன்பாடு, நாட்டின் தூய்மைக்கு இடர்ப்பாடு” என்று நெகிழிப் பொருள்களால் விளையும் தீமைகளைச் செல்லக் குழந்தைகளுக்குத் தன் பாட்டில் அழகாய்ப் பட்டியலிட்டு விளக்கும் திரு. ஆ. செந்தில் குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • (Peer Reviewed) புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    முனைவா் பா. உமாராணி
    இணைப் பேராசிரியர்,
    கற்பகம் உயா்கல்வி கலைக்கழகம்,
    கோயம்புத்தூா்

    புறநானூற்றில் பாடாண் திணை சுட்டும் தோற்றார் நிலை

    ஒரு படைப்பு தான் தோன்றிய சமூகத்தின் ஆகச் சிறந்த கூறுகளைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் என்பது இயல்பான ஒன்று. இதுவரை தோன்றிய இலக்கியங்களும், அவை சார்ந்த பின்னூட்டங்களும் நமக்கு இதையே மொழிகின்றன. ஒரு சமூகத்தின்  சிறந்த பண்பாட்டுக் கூறுகளை மட்டும் ஒரு இலக்கியம் தக்கவைத்துக் கொள்வதில்லை. அச்சமூகத்தில் மறைமுகமாகவும் எதிரிடையாகவும் தோன்றிய கருத்துகளையும் செயல்களையும் அவை பதிவு செய்து வருகின்றன என்பது அனைவரும் அறிந்த உண்மையே.

    சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இலக்கியங்கள் வரை எல்லா இலக்கிய வகைமைக்குள்ளும் மேற்சொன்ன நிகழ்வுகள் பொருத்திப் பார்க்கப்பட்டுள்ளன. அங்ஙனம் பொருத்திப் பார்ப்பது படைப்பிலக்கியத்திற்கு மேலும் வளமையைக் கூட்டுகிறது. அத்துடன் இத்தன்மை. இலக்கியத்தை சமுதாயம் நோக்கி நகா்த்துவதற்கும் உதவுகின்றது. இத்தகையதொரு பார்வையில் சங்க இலக்கியம் பதிவு செய்துள்ள தோற்ற மன்னா்களின் நிலையை வெளிக்கொணரும் விதமாக இக்கட்டுரை அமைந்துள்ளது.

    தோற்ற அரசா்கள் குறித்தான பதிவுகள் அல்லது எதிர்நிலைத் தன்மை குறித்தான பதிவுகள் ஒரு சமூகத்தை அதன் ஆழத்திலிருந்து புரிந்துகொள்ள உதவுவதுடன், அச்சமுதாயம் கொண்டிருக்கும் ஆழ்மட்ட பண்பாட்டுக் கூறுகளையும் கண்டறிய உதவுகின்றது. சங்க இலக்கியத்திலும் இத்தகைய பதிவுக் கூறுகள் ஆங்காங்கே விரிந்த நிலையிலும், சிலபோது குறிப்பாகவும் வெளிப்படக் காண முடிகிறது.

    பாடாண் திணை சுட்டும் தோற்றோர் பின்னணி

    பாடாண் திணை என்பது பாடப்படும் ஆண்மகனின் வீரம், கொடை முதலிய சிறப்புகளை எடுத்தோதும் திணையாகும். புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன. அதில் செவியறிவுறூஉத் துறையில் 8  பாடல்களும், இயன்மொழித் துறையில் 54 பாடல்களும், வாழ்த்தியல் துறையில் 9 பாடல்களும், பரிசில் கடாத் துறையில் 15 பாடல்களும்,  கடைநிலைத் துறையில் 10  பாடல்களும், பரிசில் துறையில் 8 பாடல்களும்,  பாணாற்றுப்படை துறையில் 6 பாடல்களும், பரிசில் விடைத் துறையில் 6 பாடல்களும், விறலியாற்றுப்படைத் துறையில் 4 பாடல்களும், பூவைநிலைத் துறையில் 3  பாடல்களும், புலவராற்றுப்படைத் துறையில் 2 பாடல்களும், உடனிலைத் துறையில் ஒன்றும், குடைமங்கலம் துறையில் ஒன்றும், வாயில் மங்கலம் துறையில் ஒன்றுமாக மொத்தம் பதினான்கு துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    செவியறிவுறூஉ

    செவியறிவுறூஉ என்னும் துறை, பாடாண் திணைகளுள் ஒன்றாகும். பகைமையும் கெடுதலுமற்ற வலிய எண்ணங்களை அரசனுக்கு எடுத்துரைத்தல், இத்துறையின் சிறப்பியல்பு. “மறம் திரிவு இல்லா மன்பெரும் சூழ்ச்சி, அறம்தெரி கோலாற்கு அறிய உரைத்தன்று” என இத்துறைக்குப் புறப்பொருள் வெண்பாமாலை விளக்கம் கூறுகிறது.

    செவியறிவுறூஉ துறையில் அமைந்த பாடலில் பாண்டியன் கருங்கை ஒள்வாட் பெரும்பெயா் வழுதியினைப் பகைத்த பகையரசா்களின் நிலையானது,

                “துன்அருந் திறல், கமழ் கடாஅத்து

                எயிறு படையாக எயிற் கதவு இடாஅ

                கயிறு பிணிக்கொண்ட கவிழ்மணி மருங்கின்

                பெருங்கை யானை இரும்பிடா்த் தலை இருந்து

                மருந்து இல் கூற்றத்து அருந்தொழில் சாயா”     (புறம். 3)

    என்று முற்றும் அழிந்துபட்ட நிலையே என்பதனைச் சுட்டுகிறார் இரும்பிடத்தலையார். பாண்டியனின் பட்டத்து யானை பகைநாட்டின் படைக்கலன்களை அழிக்கும் திறனையும், கொலைத் தொழிலுக்கும் அஞ்சாத பாண்டியனின் தன்மையையும் எடுத்தோதும் நிலையில் பகைநாட்டவா் அடைந்த நிலையைத் தெற்றென விளங்க வைக்கிறார் ஆசிரியா்.

    முதுகுடுமியின் வலிமையைக் கூறும் முகத்தான், ஆசிரியா் பகையரசா்களின் நிலையையும், அவா்கள் நாட்டில் விளையும் தீங்குகளையும் சுட்டிக் காட்டுகின்றார் காரிக்கிழார். குடுமியைப் பகைத்து வாழும் மன்னின் நிலையானது,

                “செய்வினைக்கு எதிர்ந்த தெவ்வா் தேஎத்து

                கடல்படை குளிப்ப மண்டி, அடா் புகா்ச்

                சிறுகண் யானை செவ்விதின் ஏவி,

                பாசவல் படப்பை ஆா் எயில் பல தந்து

                அவ்வெயில்  கொண்ட செய்வுறு நன்கலம்

                பரிசில் மாக்கட்கு வரிசையின் நல்கி”         (புறம். 6)

    என்று குறிப்பிடுகிறார். அதாவது, போர்செய்ய எதிர்த்த பகைவருடைய நாடுகளில் கடல்போன்ற படையை உட்புகுந்து அழித்தும், அவா்களின் விளை நிலங்களை யானையை விட்டு அழிக்கச் செய்வதுடன் அவா்களுடைய அரண்களையும் அழிக்கும் முறையை எடுத்தோதுகின்றார். அத்துடன் அப்பகை நாட்டினரின் செல்வங்களைப் பரிசிலருக்கு அளிக்கும் நிலையும் சுட்டப்படுகிறது. மேலும்,

                “வாடுக இறைவ! நின் கண்ணி – ஒன்னார்

                நாடுசுடு கமழ் புகை எறித்தலானே!

                செலியா் அத்தை, நின் வெகுளி”     (மேலது)

    என்று குறிப்பிடுகிறார் ஆசிரியா். குடுமியின் போரின் தன்மையானது பகைவா் நாட்டை எரித்து அழிக்கும்  இயல்பினை உடையது என்பதை இவ்வடிகள் சுட்டுகின்றன. மேலும் அத்தகைய அழிவினை அவன் மேலும் அந்நாட்டிற்குச் செய்யத் துணியும் கோபத்துடனே இருப்பான் என்றும் குறிப்பிடுகிறார். இரு அரசுகளுக்கு இடையிலான போரில் மக்களின் விளை நிலங்கள் அழிக்கப்படுவதும், அம்மக்களிடம் இருந்து பெற்ற பொருளைப் பரிசிலாகக் கொடுத்து பெருமை கொள்ளும் நிலையும் வருந்தத் தக்கதே. குடுமியின் புகழ் பாடப்பட்டபோதும் மறைமுகமாக அன்றைய அரசுகளின் செயல்பாட்டைச் சுட்டுவதாகவே இப்பாடல் அமைந்துள்ளது.

    புறநானூற்றின் 40ஆவது பாடல்,  பகை மன்னா்களின் நிலையை எடுத்தோதுகின்றது. மதிப்பிற்குரிய பொன்னாலான பகைவரின் மணிமுடியினை அவமதித்தல் போன்றும், அவா்களை அடிமைப்படுத்தல் போன்றும் அதைத் தம் காலில் அணிகின்ற தன்மையினை,

                “நீயே, பிறா்ஓம்புறு மறமன் எயில்

                ஓம்பாது கடந்தட்டு, அவா்

                முடி புனைந்த பசும்பொன் நின்

                அடிபொலியக் கழல் தைஇய வல்லாளனை”        (புறம். 40)

    எனக் காண முடிகிறது. இப்பாடலில் வெற்றி பெற்றோரின் வீரமும், பகையில்லாத அவன் நாட்டின் சிறப்பும் கூறப்பட்டதெனினும் தோற்ற அரசன் அடைந்த இழிநிலையினையும் இப்பாடல் பதிவு செய்துள்ளது. செவியறிவுறூஉ துறையில் அமைந்த எட்டு பாடல்களில் மூன்று பாடல்கள் மட்டுமே தோற்றோரின் நிலையைப் பேசுகின்றது.

    இயன்மொழி

    தலைவனுடைய இயல்பினைக் கூறுதலும், அவன் முன்னோர் செயல்களைப் பாராட்டிக் கூறலும்  இயன்மொழித் துறையின்பாற்படும். தமிழ் மன்னா்களிடம் போர் அறம் இருந்தது. அதன் வழிநின்றே போர் செய்தனா் என்ற செய்தியைப் புறநானூற்றுப் பாடல் வழி அறியலாம். நெட்டிமையார் முதுகுடுமிப் பெருவழுதியைப் புகழுமிடத்து தமிழா்களின் போர் அறத்தினைத் தெற்றென விளக்கிறார்.

                “ஆவும் ஆன்இயற் பார்ப்பன மாக்களும்”  ( புறம். 9)

    என்ற பாடலானது போருக்கான அறத்தைத் தமிழா் எங்ஙனம் போற்றினா் என்று விரித்துக் கூறுகின்றது. எனினும் போரின் பின் நிகழும் துயா்கள் எண்ணிலடங்காதவை என்பதை இயன்மொழித் துறையில் அமைந்துள்ள பாடல்கள் தெளிவாகச் சுட்டுகின்றன.

    தோற்ற அரசா்களின் காவல் மரத்தை முறித்து பகைவா்களை அவமதிக்கும் செய்தியினை,

                “கடுங் கண்ண கொல் களிற்றால்

                காப்பு உடைய எழு முருக்கிப்

                பொன் இயல் புனை தோட்டியால்”            ( புறம். 14)

    என்று கபிலா் குறிப்பிடுகிறார். செல்வக்கடுங்கோ வாழியாதன் பகை மன்னனின் வலிமையை அழித்தலின் குறியீடாகக் கணையமரத்தை அழித்தான் என்னும் செய்தி இங்குச் சுட்டப்படுவதுடன் பகையரசனின் நிலையும் எடுத்துரைக்கப்படுகிறது.

    முதுகுடுமி பெருவழுதி பகைவா் நாட்டினை அழித்துச் சிதைக்கும் காட்சியினைச் சுட்டவரும் நெட்டிமையார் பகை மன்னனின் நிலம் அடைந்த அவல நிலையை முன்வைக்கிறார். இதில் பகை மன்னா்களின் நிலமானது

                “கடுந்தோ் குழித்த ஞெள்ளல் ஆங்கண்,

                வெள்வாய்க் கழுதைப் புல் இனம் பூட்டி

                பாழ் செய்தனை, அவா் நனந்தலை நல் எயில்,

                புள்ளினம் இமிழும் புகழ்சால் விளை வயல்,

                வெள் உளைக் கலிமான் கவிகுளம்பு உகளத்

                ………………………………..

                நசைதர வந்தோர் நசை பிறக்கு ஒழிய,

                வசைபட வாழ்ந்தோர் பலர்கொல்?”          (புறம்.15)

    என அழிந்துபட்டதைக் கூறுகின்றார். இங்கு வென்ற பகையரசா்களின் நாட்டைக் கழுதைகள் பூட்டி உழுதலும், விளைவயல்களை அழித்தலும், நீர்த்துறைகளைக் கலக்குதலும், மக்கள் வாழும் இடங்களை எரியூட்டலும் செய்து பகையரசா்கள் அவமதிக்கும் நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதை இப்பாடல் புலப்படுத்துகின்றது. இதே கருத்தினைக் கடைநிலைத் துறையில் புறம் 392ஆவது பாடலும் முன்வைத்துள்ளது. பொகுட்டெழினி தான் போர்செய்யும் பகைநிலத்தை கழுதைகள் பூட்டி உழுதும், மதில்களை அழித்தும் போர்செய்தான் என்பதை ஔவையார் சுட்டியுள்ளார்.

    கிள்ளிவளவன் வலிமைமிக்க சேரனை அழித்த செய்தியினை கூறுமிடத்து நப்பசலையார் பகைவனின் பெருமையைத் தெளிவாக விளக்குகிறார். இங்கு பகைவன் மிக வலிமையுடையவன் என்பதை,

                “……………………..ஓங்கிய

                வரை அளந்து அறியாப் பொன் படு நெடுங்கோட்டு

                இமயம் சூட்டிய ஏம விற்பொறி

                மாண்வினை நெடுந்தேர் வானவன் தொலைய

                வாடா வஞ்சி வாட்டும் நின்

                பீடுகெழு நோன் தாள் பாடுங்காலே?”       (புறம். 39)

    என்று சேரனின் பெருமையினையும், இமயம் வரை சென்று தன் ஆட்சியை நிலைநிறுத்தியவன் என்றும் அவனைப் புகழ்கின்றார். அவனை வென்றான் வளவன் என்னும் சிறப்புப்பட, இப்பாடல் அமைந்ததாயினும் பகையரசனின் வலிமையும் இங்குச் சுட்டப்பட்டுள்ளது.

    பகைவா் நாட்டில் உள்ள மக்கள் தம் நாட்டைத் துறந்து செல்லும் அவலத்தைப் புறப்பாடல் பதிவு செய்துள்ளது. பொகுட்டெழினியைப் பகைக்கும் பகைவா் நாட்டில் உள்ள மக்கள், இனி இந்நாடு வாழுதற்கு உரிய இடம் அன்று என்று தம் இடத்தைத் துறந்து செல்வதை,

                “விழவின்று ஆயினும், படுபதம் பிழையாது

                மை ஊன் மொசித்த ஒக்கலொடு, துறைநீா்க்

                கைமான் கொள்ளுமோ என

                உறையுள் முனியும் அவன் செல்லும் ஊரே”         (புறம். 96)

    என்று குறிப்பிடுகிறது. இப்பாடலுக்கு “அவன் படையெடுத்துச் செல்லும் ஊரில் விழா இல்லையாயினும் உண்டாக்கப்படும் உணவுடன் தவறாது செம்மறியாட்டுத் தசைகளையும் சுற்றத்தார் தின்பா். அந்தச் சுற்றத்தார் யாவருடனும் ஆறு, குளம் முதலிய நீா்த்துறைகளில் படிந்து அவனுடைய யானைகள் நீருண்ணும் எனும் அச்சத்தால் அவ்வவ்வூரில் மக்கள் தங்குதலை வெறுத்தனா். இவ்வெறுப்பினால் ஒரு பகை நோ்ந்தது” என்று விளக்கம் அளித்துள்ளனா் உரைக்காரர்கள்.

    அதியமான் அஞ்சியைப் பகைத்த மன்னா்களின் நாடானது அழிந்துபடும் என்றும், அப்பகைவா்களுடன் போரிட்டதால் அதியனின் படைக்கலக் கருவிகள் தம் இயல்பினை இழந்தன என்றும் கூறுமுகத்தான் பகையரசா்களின் நிலையினைத் (புறம். 97) தெளிவுபடுத்துகிறார் ஔவையார். புறநானூறு 130ஆவது பாடலில் ஆய் அரசன் தம் படைகொண்டு கொங்கரை விரட்டினான் என்ற செய்தி இடம்பெற்றுள்ளது. இங்கு கொங்கன் புறமுதுகிட்டு ஓடினமையும், அவனை அழிக்க ஆய் செய்த போரின் வலிமையும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. புறமுதுகிட்டு ஓடும் மன்னனைத் தொடர்ந்து செல்லாத தன்மை, தமிழரிடம் இருந்ததைப் புறம் 389ஆவது பாடலும், தோற்ற அரசா்கள் வெற்றிபெற்ற அரசனுக்குத் திறை செலுத்தி வாழவேண்டிய நிலையில் இருப்பதனைப புறம் 156ஆவது பாடலும் விளக்குகின்றன.

    சோழன் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி, வடுகரை அழித்து விரட்டிய செய்தியைப் புறம் 378ஆவது பாடல் பதிவு செய்துள்ளது. இதில் இளஞ்சேட் சென்னியின் வள்ளன்மையைப் புகழும் பொருட்டே இச்செய்தி இடம்பெற்றுள்ளது. இயன்மொழித் துறையில் அமைந்த பாடல்களில் 11 பாடல்களில் மட்டுமே தோற்றோர் பற்றிய செய்தி இடம்பெற்றுள்ளது. அவற்றில் அரசனின் வெற்றிச் சிறப்பும் கொடைச் சிறப்பும் மிகுதியும் கூறப்பட்டுள்ளது. தோற்ற மன்னா்களின் நிலையை வெற்றி பெற்ற அரசா்களின் புகழின் பின்னணியிலேயே உணா்ந்துகொள்ள வேண்டிய நிலையும், சில இடங்களில் பகையரசனின் வலிமையும் விதந்தோதப்பட்டுள்ளது.

    விறலியாற்றுப்படை

    அரசனுடைய புகழைப் பாடும் விறலியை வழிப்படுத்துதல் விறலியாற்றுப்படை எனப்படும். தொல்காப்பியம் இதனை,

                கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்

                ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்

                பெற்ற பெருவளம் பெறாஅா்க்கு அறிவுறீஇச்

                சென்றுபயன் எதிரச் சொன்ன பக்கமும்”   (தொல். புறம். 88)

    என்று விளக்குகிறது.

    பகைவரின் பெருஞ் செல்வங்களைக் கொணா்தல்  என்பது போரின் ஒரு பகுதியாக நிகழ்ந்தது என்பதைச் சுட்டுவது போன்று புறம் 64ஆவது பாடல் அமைந்துள்ளது.  முதுகுடுமி போர்செய்யும் பகை நாடுகளில் வீரா்கள் இறந்து கிடக்கும் காட்சியானது விண்ணைத் தொடுமாறு அமைந்துள்ளது என்பதை,

                ”விசும்பு ஆடு எருவை பசுந்தடி தடுப்ப

                பகைப்புலம் மரீஇய தகைப் பெருஞ் சிறப்பின்”    (புறம். 64)

    என்ற வரிகள் மூலம் உணா்த்துகின்றார் நெடும்பல்லியத்தனார். இங்கு வீரா்கள் இறந்து கிடந்தமை, கழுகுகள் செல்லும் பாதையை மறைத்தது என்றும், அந்நாட்டு மக்களின் செல்வத்தினைப் பெற்று தங்களுக்குப் பரிசில் வழங்கினான் என்றும் பதிவு செய்யப்பட்டுள்ளதன் வழி, தோற்ற நாட்டினரின் நிலை தெளிவாக உணா்த்தப்படுகிறது. மேலும் தோற்ற நாட்டினை எரியூட்டி அழித்தல் என்பது போர் மரபுகளில் ஒன்றாக இருந்தது என்பதை,

                “முனைசுட எழுந்த மங்குல் மாப் புகை

                மலைசூழ் மஞ்சின், மழ களிறு அணியும்

                பகைப் புலத்தோனே பல்வேல் அஞ்சி”      ( புறம்.103)

    என்ற ஔவையாரின் பாடல், பதிவு செய்துள்ளது. ஒரு நாட்டினை வெற்றி கொள்வது என்பது வெறுமனே மனிதா்களுக்கு இடையேயான நிகழ்வாக அல்லாமல் இயற்கையை அழித்தல் என்னும் நிலையை அடைந்துள்ள அவலத்தை இப்பாடல் பதிவு செய்துள்ளது.

    வாள் மங்கலம்

    மன்னவனின் வாள் முதலான படைக்கருவிகளின் சிறப்பைக் கூறுதல், வாள் மங்கலம் எனப்படும். இத்துறையில் புறம் 95ஆவது பாடல் அமைந்துள்ளது. தொண்டைமானிடம் அதியமானின் படைக்கலங்களைக் குறித்து பழித்துக் கூறி அவன் புகழை மறைமுகமாகப் புகழ்கிறார் ஔவையார். போரைத் தவிர்க்கும் முகமாக இப்பாடல் பாடப்பட்டதெனினும் இரு அரசுகளின் போர் உணா்ச்சியை மறைமுகமாக இப்பாடல் முன்வைத்துள்ளது.

    பரிசில் துறை

    அரசன் முன்னே பரிசிலா் தாம் பெறக் கருதிய பொருள் இதுவெனச் சொல்லுதல் பரிசில் துறையாகும். பகையரசனது யானையின் நெற்றிப் பட்டத்தில் இருக்கும் பொன்னைப் பாணா்களுக்கு அளித்தும், அதை அவா்கள் தலையில் பொலியும்படியும் செய்யும் வல்லமை வாய்ந்தவன் என்று பகையரசனின் நாட்டின் வளம் சூறையாடப்பட்டதை,

                “ஒன்னார் யானை ஓடைப் பொன் கொண்டு

                பாணா் சென்னி பொலியத் தைஇ”             (புறம்.126)

    என்று புறம் 126ஆவது பாடல் முன்வைக்கிறது.

    பரிசில் விடை

    பரிசில் பெற்று விடை பெறுவான் பாடுவது, பரிசில் விடை எனப்படும். பெருந்தலைச் சாத்தனார், குமணனைக் குறித்துப் பாடிய பாடல், தோற்ற அரசனின் புகழைப் பாடுவதாக அமைந்துள்ளது. குமணன் நாடு இழந்தனன் ஆயினும் ஈகை இழந்தான் இல்லை என்றுபட புறம் 165ஆவது பாடல் இடம்பெற்றுள்ளது.

                ”பாடுபெறு பரிசிலன் வாடினன் பெயா்தல் என்

                நாடு இழந்ததனினும் நனி இன்னாது என

                வாள் தந்தனனே தலை எனக்கு ஈய”          (புறம். 165)

    என்று தோற்ற குமணனை இப்பாடல் புகழ்ந்து பாடுகிறது.

    வாழ்த்தியல்

    பாட்டுடைத் தலைவனின் சிறப்பைப் புகழ்ந்து வாழ்த்துரைத்தல், இத்துறையின்பாற்படும். செல்வக்கடுங்கோ வாழியாதனின் பரிசில் வழங்கும் பண்பை வாழ்த்தும் முகமாக அமைந்த புறம் 387ஆவது பாடலில் பகையரசா்களின் வீரம் வெளிப்பட்டு நிற்கின்றது. பகை மன்னா்களின் மதில்களானது யாரும் உடைத்தலைச் செய்ய முடியாத அளவு வலிமையுடையது என்றும், அவ்வேந்தா்களின் காவற்காட்டில் இருக்கும் யானைகள் மிக்க வலிமையுடையவை என்றும் கூறி, அதனை அழித்தவன் வாழியாதன் என்று புகழ்கிறார் குண்டுகட் காலியாதன்.

    தோல்வி குறித்த பதிவுகள்

    சங்க இலக்கியத்தில் அரசா்கள், வேந்தர்கள், குறுநில மன்னா்கள், நிலக்கிழார்கள், வள்ளல்கள் போன்றோரின் தோல்விகள் குறித்துப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பதிவுகளின் வாயிலாகப் பகையரசா்களின் அல்லது தோற்றோரின் வலிமையை, போர்த்திறனை உணா்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் இத்தகைய பதிவுகள் பெரும்பான்மையும் வெற்றி பெற்றோரின் வீரத்தினையும் கொடைச் சிறப்பினையும் வள்ளன்மையினையும் வெளிக்கொணரும் வண்ணமே அமைந்துள்ளன. புறநானூற்றில் பாடாண் திணையில் 120 பாடல்கள் இடம் பெற்றிருப்பினும் தோற்றோர் நிலையை 20 பாடல்கள் மட்டுமே முன்வைத்துள்ளன.

    மிகச் சில அரசா்கள் மற்றும் வள்ளல்கள் போன்றோரின் தோல்வியும் விதந்தோதப்பட்டுள்ளன. அவை அவ்வரசா்களின் கொடைத் திறனைக் கூறும் பொருட்டும், அவா்களின் பண்பினை உயா்த்திக் கூறுதற் பொருட்டும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு, தோல்வியும் வெற்றியின் தன்மையில் வைத்து எண்ணப்படுகின்ற நிலையினைக் காண முடிவதுடன், தோற்றோரின் வீரச் சிறப்பினை விதந்து கூறுகின்ற பண்பையும் கவனத்திற் கொள்ளுதற்கு உரியது. இதன் சமூக, அரசியல் பின்னணியினை ஆழ்ந்து நோக்கும் போதுதான் இத்தகைய பதிவிற்கான தேவையினை உணர முடியும்.

    பார்வை நூல்கள்

    1. புறநானூறு, முதற்பதிப்பு -2004, நியுசெஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை.
    2. தொல்காப்பியம், பதிப்பு -1984, கழக வெளியீடு, சென்னை.
    3. செ.வை.சண்முகம், தொல்காப்பியத் தொடரியல், முதற்பதிப்பு-2004, உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், சென்னை.
    4. ஐயனாரிதனார், புறப்பொருள் வெண்பாமாலை, பதிப்பு-2012, அமுதா நிலையம், சென்னை.

    குறிப்பு

    புறநானூற்றில் பாடாண் திணையில் மொத்தம்  120 பாடல்கள் அமைந்துள்ளன.

    செவியறிவுறூஉத் துறையில்  – 8 (2,3, 5,6,35,40,55,184)

    இயன்மொழித்துறையில் – 54(8,9,10,12,14,15,30,32,34,38,39,50,67,92,96, 97,102, 105,106,107,108,122,123,124,128,129,130,131,132,134,137,142,149,150,151153,157,171,172,173,175,176,177,215, 376, 378, 380, 381,383, 388, 389, 390, 400)

    வாழ்த்தியல் துறையில் – 9 (13,19,158-பரிசில் கடாஅ நிலை, 367,375,377,385,386,387)

    பரிசில் கடாஅத் துறையில் -15(11,101,136,139,159,160,164,169,196,197,198, 199,266)

     கடைநிலைத் துறையில் – 10 (127,382,391,392, 393,394,395,396,397,398)

     பரிசில் துறையில் – 8 (126,135,148,154, 161, 168-அரசவாகை,200,379)

    பாணாற்றுப்படைத் துறையில் – 6 (68,69,70,138,141,158)

     பரிசில் விடைத் துறையில் – 6 (140,152,162,163,165,399)

    விறலியாற்றுப்படைத் துறையில் – 4 (64,103, 105,133)

    பூவைநிலைத் துறையில்  -3 (56,59,374)

    புலவராற்றுப்படைத் துறையில்  – 2 (48,49)

    உடனிலைத் துறையில்  -1 (58),

    குடைமங்கலம் துறையில் – (60),

    வாயில்மங்கலம் துறையில் – (95)

    மொத்தம்  -14 துறைகளில் பாடாண் திணை பாடப்பட்டுள்ளது.

    =======================================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    சங்க இலக்கியங்களில் புறம் சார்ந்து எழுதப்பட்ட நூல்களில் புறநானூறு, குறிப்பிடத்தக்க ஒரு நூல். அதில் பெரும்பான்மையும், வெற்றி பெற்ற மன்னர்களின் வீரம், புகழ், கொடை சார்ந்தும் சிறுபான்மை சமூகப் பொது நிலைகள் சார்ந்தும் பாடப்பட்டுள்ளமை நாம் அறிந்த ஒன்றே. அதில் பொதுவாக வெற்றி பெற்ற மன்னர்களின் சிறப்புகளை ஆய்வுக்கு உட்படுத்தி வரலாற்றுப் பின்புலத்தை அறிதல் என்பது பெரும்பான்மை ஆய்வு நடைமுறையில் இயல்பாக உள்ளது. ஆனால் இக்கட்டுரையை ஆய்வாளர் சற்று மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  வெற்றி பெற்ற மன்னர்கள் பற்றிப் பேசும் பாடாண் திணைப் பாடல்களில் தோற்ற அரசர்களின் நிலைகளை உற்றுநோக்கிச் சில அடிப்படையான செய்திகளைப் பதிவு செய்துள்ளார்.

    குறிப்பாக, போர் இரு மன்னர்களுக்கு இடையே மட்டும் நடைபெறுவதில்லை. இரு நாட்டு மக்கள், இயற்கை ஆகியவற்றோடு நடைபெறுவது. அதனால் இயற்கைச் சீரழிவு, மக்கள் கொல்லப்படுதல் என்ற கோணத்தில் தனது சிந்தனையைச் செலுத்தியுள்ளார். தோற்ற மன்னர்களின் நிலைப்பாடுகள் பற்றியும் பேசியுள்ளார். அதே போல் பாடாண் திணையின் துறைகளின் அடிப்படையில் இச்செய்திகளை விளக்கியமை சிறப்பு. மேலும் தொல்காப்பியம் மற்றும் புறப்பொருள் வெண்பா மாலையில் இடம்பெற்றுள்ள பாடாண் திணையின் செய்திகளைக் கட்டுரையில்  பயின்று வந்துள்ள துறைகளில் பதிவு செய்திருப்பின் கட்டுரை மேலும் சிறப்பாக அமைந்திருக்கும். ஆய்வாளருக்குப் பாராட்டுகள்.

    =======================================================

    Share