Blog

  • தோழா கேள்

    – ஏறன் சிவா

    எதிர்பார்த்த உன்வெற்றி
    இடம்மாறிப் போகலாம்!
    புதிதாகத் தோல்விகளும்
    போர்த்தொடுத்து நிற்கலாம்!
    சதியெல்லாம் உனக்கெதிராய்
    சாட்டையைச் சுழற்றலாம்!
    சிதறாதே! சிதையாதே!
    சிறகுண்டு பறந்துபோ!

    நெஞ்சத்தில் உதிப்பதெல்லாம்
    நேராமல் தவறலாம்!
    பஞ்சுபோன்ற உன்னிதயம்
    பாரத்தைச் சுமக்கலாம்!
    நஞ்சுணவை அமிழ்தமென்று
    நம்பினோரே ஊட்டலாம்!
    அஞ்சாதே! துஞ்சாதே!
    அத்தனையும் கடந்துபோ!

    நாளெல்லாம் உன்நிலையோ
    நலிந்துகொண்டே இருக்கலாம்!
    மாளாத துயரத்தில்
    மனம்சிக்கித் தவிக்கலாம்!
    தாளாத உன்மேனி
    தளர்ந்தொருநாள் முடங்கலாம்!
    வீழாதே! தோழா..கேள்
    விடிவுவரும் தொடந்துபோ!

    -06/02/2019

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 8

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 8 – அன்புடைமை

     

    குறள் 71:

    அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ் ஆர்வலர்
    புண்கணீர் பூசல் தரும்

    நேசத்த தாள் போட்டு அடைச்சு வைக்க முடியுமா.  தனக்கு வேண்டப்பட்டவங்களுக்கு துன்பம் வரும்போது அவுங்க கண்ணுலேந்து தானா வடியுத கண்ணீர வச்சு நேசஉள்ளத்த தெரிஞ்சுக்கிடலாம்.

    குறள் 72:

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
    என்பும் உரியர் பிறர்க்கு

    நேசம் இல்லாதவங்க எல்லாப் பொருளும் தனக்கு தான் சொந்தம்னு நெனைப்பாங்க. நேசம் உள்ளவங்களோ பொருள் மட்டுமில்லாம தங்களோட ஒடம்பும் மத்தவங்களுக்குதான் னு நெனைப்பாங்க.

    குறள் 73:

    அன்போ டியைந்த வழக்கென்ப ஆருயிர்க்கு
    என்போ டியைந்த தொடர்பு

    உயிரும் ஒடலும் போல நேசமும் செயலும் சேந்து இருக்குதது தான் ஒசந்த பொருத்தம்.

    குறள் 74:

    அன்பீனும் ஆர்வம் உடைமை அதுஈனும்
    நண்பென்னும் நாடாச் சிறப்பு

    விரும்பி வாழுத தன்மைய கொடுக்குதது நேசம். அது பிறத்தியார் கிட்ட சேக்காளியா இருக்கவும் ஒதவும்.

    குறள் 75:

    அன்புற் றமர்ந்த வழக்கென்ப வையகத்து
    இன்புற்றார் எய்தும் சிறப்பு

    ஒலகத்துல சந்தோசமா வாழுத ஒசத்தியான வாழ்க்கைதான்  நேசத்தோட வாழுத குடும்ப வாழ்க்கையினால வெளையுத லாபம்

    குறள் 76:

    அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
    மறத்திற்கும் அஃதே துணை

    நல்லதுசெய்யுததுக்கு மட்டுந் தான் நேசம் தொணையா நிக்கும் னு புரிஞ்சுகிடாதவங்க சொல்லுவாங்க. வீரத்துக்கும் அது தொணையா நிக்கும்.

    குறள் 77:

    என்பி லதனை வெயில்போலக் காயுமே
    அன்பி லதனை அறம்

    எலும்பு இல்லாத ஒடம்பு உள்ள புழுவ வெயில் எப்டி வாட்டி வதைக்குதோ அது மாதிரி நேசம் இல்லாத உயிர அறக்கடவுள் வாட்டி வதைப்பாரு.

     குறள் 78:

    அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண்
    வற்றல் மரந்தளிர்த் தற்று

    மனசுல நேசமே இல்லாம வாழுத குடும்ப வாழ்க்க பாலைவனத்துல இருக்க பட்டு போன மரம் மறுபடி துளித்து இலை விடுததுக்கு சமம்,.

    குறள் 79:

    புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
    அகத்துறுப் பன்பி லவர்க்கு

    ஒடம்புக்குள்ள இருக்க உறுப்பான நேசம் இல்லாதவங்களுக்கு வெளிய இருக்க அழகான உறுப்புக்களால என்ன பிரயோசனம்.

    குறள் 80:

    அன்பின் வழிய துயிர்நிலை அஃதிலார்க்கு
    என்புதோல் போர்த்த உடம்பு

    நேசமான உள்ளத்தோட இயங்குதது தான் உயிரோட இருக்க இந்த ஒடம்பு.  நேசமில்லாதவங்களோட ஒடம்பு வெறும் எலும்புக்கு மேல தோல போத்தி வச்ச வெறும் ஒடம்பு தான்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • காலம்

    -ஏறன் சிவா

    ஓடும் காலம் ஒருநாளும்
    உனக்காய் மட்டும் நிற்காது!
    தேடித் துன்பம் வரும்முன்னே
    தீர்த்துக் கட்ட முடியாது!
    கூடி நேரம் வருமென்று
    காலம் கடத்தல் கூடாது!
    ஓடி நாளும் தேயாமல்
    உண்மை வழியில் போராடு!

    Share
  • படக்கவிதைப் போட்டி – 199

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    முரளிதரன் வித்யாதரன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (02.02.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • (Peer Reviewed) காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை

    முனைவர் பெ.சுமதி
    உதவிப் பேராசிரியர்,
    ஒப்பிலக்கியத் துறை,
    தமிழியற்புலம்,
    மதுரை காமராசர் பல்கலைக் கழகம்,
    மதுரை -21.

    காப்பியங்களில் சமணம் கட்டமைக்கும் பெண்கள் நிலை

    முன்னுரை

    தமிழ் மொழி, உலகம் போற்றும் தொல் மொழியாம். இவற்றில் எழுந்த இலக்கியங்களும் இலக்கணங்களும் செம்மொழி அந்தஸ்துடன் இன்று, பல்வேறு மொழிகளுக்கு மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்து வருகின்றன. இங்குப் பல்வேறு மதங்கள் உள்ள நிலையில், சமண மதமும் பல்வேறு மன்னர்களாலும் பின்தொடரப்பட்டு கைவிடப்பட்ட மதங்களில் ஒன்றாகும். தென்னிந்தியாவில் சமண மதம் வேரூன்றி இருந்த சமயத்தில் தமிழ் இலக்கியங்களில் அற நூல்களும் இலக்கணங்களும் தோன்றி, நம் மொழிக்குச் சிறப்பினைப் பெற்றுத் தந்தன.

    சமயக் காழ்ப்புணர்வால் சமண மதம் ஒட்டுமொத்தமான வீழ்ச்சிக்கு உட்பட்டது என்பது, நல்ல இலக்கிய நூல்களுக்கு இழப்பேயாம். இந்திய மதங்களில் நிறுவன தெய்வ வழிபாட்டுக் கடவுளர் முறையில் பெண் கடவுளர்களுக்கு உரிய முக்கியத்துவம் இருந்தாலும் பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளும், புறந்தள்ளப்படுதலும் காலம் காலமாகவே இருந்துகொண்டு தான் இருக்கின்றது. அது மதத்தாலும் இருந்திருக்கின்றது. அதற்குச் சமணமும் விதிவிலக்கு இல்லை என்ற கோணத்தில் ஆராய்வதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.

    சமணம் – பொருள்

    சங்கம் மருவிய காலம், அற இலக்கியக் காலமாகக் கருதப்படுகின்றது. தமிழ் இலக்கியத்திற்குச் சமணர்கள் ஆற்றிய பங்களிப்பே இதற்குக் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.

    “சமணர் (ஸ்ர்மணர்) என்றால் துறவிகள் என்பது பொருள். துறவை வற்புறுத்திக் கூறி, துறவு பூண்டோரே வீடு பெறுவர் என்று இந்த மதம் சாற்றுகிறது. எனவே, துறவு எனப் பொருள்படும் சமணம் என்னும் பெயர் இந்த மதத்திற்குச் சிறப்புப் பெயராக வழங்கப்படுகிறது. புலன்களையும் கர்மங்களையும் ஜயித்தவர் (வென்றவர்) ஆகலின் தீர்த்தங்கரர்க்கு ஜினர் என்னும் பெயர் உண்டு. ஜினரைக் கடவுளாக உடைய மதம் ஜைன மதம் எனப்பட்டது. சமண சமயக் கடவுளுக்கு அருகன் என்னும் பெயரும் உண்டு.” (மயிலை.சீனி வேங்கடசாமி.1954.1)

    சிறு உயிர்களுக்கும் தீங்கு விளைவிக்கக் கூடாது என்று நினைக்கின்ற சமணர்கள், கடுமையான துறவு வாழ்க்கை மேற்கொண்டவர்கள். சமணர் என்றால் துறவிகள் என்றும் ஐம்புலன்களையும், உலகப் பற்றையும் வெறுத்தவர்கள் என்றும் கூறுவதிலிருந்து சமணத்தின் பொருளை அறிந்துகொள்ள முடிகின்றது.

    சமண சமயத் தத்துவம்

    சமண சமயத்தின் தத்துவமாக, “உயிர், உயரல்லது, புண்ணியம், பாவம், ஊற்று, செறிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு என்பனவாம். இவற்றை முறையே ஜீவன், அஜீவன், புண்ணியம், பாவம், ஆஸ்ரவம் ஸம்வரை, நிர் ஜரை, பந்தம், மோக்ஷம் என்றும் கூறுவர்.” (மயிலை.சீனி வேங்கடசாமி.1954.9)

    மேற்கூறிய ஒன்பது பொருள்களும் சமண சமயத்தின் தத்துவமாகக் கூறப்படுகின்றன. சமணப் பெண் துறவிகள், சமண சமயத்தில் பெண் பிறப்பு இழிவாகக் கருதப்பட்டது என்பதை, “பெண்பிறவி தாழ்ந்த பிறவி என்பதும், பாவம் செய்தவர் பெண்ணாகப் பிறக்கிறார் என்பதும் சமண சமயக் கொள்கை. பெண்ணாகப் பிறந்தவர், வீடுபேறு (மோட்சம்) அடைய முடியாது என்பதும் சமண மதத் துணிபு ஆகும்.

    அவர்களுள், சுவேதாம்பர சமணர், பெண் பிறவிக்குச் சற்று உரிமை கொடுக்கின்றனர். இல்லறத்தை நீக்கித் துறவு பூண்டு, மனத்தை அடக்கி, உடம்பை வருத்தித் துன்பங்களைப் பொறுக்கும் ஆற்றல் பெண் மகளிர்க்கு இல்லாதபடியினால், அவர்கள் பெண் பிறப்பில் வீடுபேறடைய முடியாதென்றும், ஆனால், அவரும் துறவு பூண்டு மனவுறுதியோடு முயல்வார்களாயின் வீடுபேறடையக் கூடும் என்றும் சுவேதாம்பரச் சமணர் கூறுகின்றனர்.

    ஆனால், திகம்பர் சமணர், பெண் பிறவியில் வீடுபேறடைய முடியாதென்றும், பெண்கள் ஆணாகப் பிறந்து, துறவு பூண்டு நோற்றால் தான் வீடுபேறடைய முடியும் என்றும் கூறுகின்றனர். ஒருவன் யாரையேனும் வஞ்சனை செய்தால், அவன் அடுத்த பிறப்பில் பெண்ணாகப் பிறப்பான் என்பது சமண சமயக் கொள்கை”(மயிலை.சீனி
    வேங்கடசாமி.1954.185) என்று கூறப்படுகின்து.

    ஒரு பெண், பெண்ணாகப் பிறந்த காரணத்தினாலே வீடு பேற்றை அடைய முடியாது என்பதும் ஆணாகப் பிறந்தால் வீடு பேற்றை அடைய முடியும் என்றும் கூறும் சமண சமயம், பெண் பிறப்பை வெறுத்த நிலையை அறிய முடிகின்றது. பெண் பிறப்பை வெறுப்பதற்குக் காரணம், பெண்கள் உலகப் பற்றை விட்டொழிக்க முடியாது என்ற கருத்து முன்வைக்கப்படுகின்றது. இல்லற வாழ்க்கையை நீங்கி, துறவு மேற்கொள்வது பெண்களுக்கு இயலாத செயல் என்பதால் பெண்களுக்குச் சமணத்தில் துறவுக்கு இடமில்லை என்பது குறிப்பிடப்படுகின்றது.

    சமணர்களின் அறங்கள்

    சமணர்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் தமிழகம் வந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் கொள்கை, சங்க மருவிய காலத்தில் மக்களிடையே பரவுகின்றது, “கொலை, களவு, காமம், மது, மாமிசம் என்னும் பஞ்சமா பாதகங்களை ஒதுக்கி, உலகம், இளமை, யாக்கை முதலியவற்றின் நிலையாமையைப் போற்றி, தூய்மையாக வாழ்ந்த சமணர், போர், வேட்டை, காதல், கொள்ளை, மது, மாமிசம் என்று வாழ்ந்த தமிழ் மக்களை அற வழியில் இட்டுச் செல்ல, இயன்ற அளவு முயன்றிருப்பர். சங்க மருவிய காலச் சூழ்நிலை அவருக்குச் சாதகமாக அமைந்தது” (ஆ.வேலுப்பிள்ளை, 2011:31) என்று சமணர்களின் அறநெறிச் சிந்தனை கூறப்படுகின்றது.

    மக்களை நல்வழிப்படுத்தும் நோக்கில் அறக் கருத்துகளை எடுத்துக் கூறுகின்ற இலக்கியங்கள், சமணர்களால் படைக்கப்படுகின்றன. சமுதாயத்தைக் கட்டமைப்பிற்குள் வைக்க விரும்பிய சமணர்கள், பெண்களின் பண்புகளை வரையறை செய்கின்றனர்.

    “எறியென் றெதிர்நிற்பாள் கூற்றம், சிறுகாலை
    அட்டில் புகாதாள் அரும்பிணி, – அட்டதனை
    உண்டி யுதவாதாள் இல்வாழ்பேய் – இம்மூவர்
    கொண்டானைக் கொல்லும் படை.”

    (பாலசுந்தரம் பிள்ளை. (உ.ஆ), நாலடியார், 2007:363)

    கணவன் சொல்லைக் கேட்காமல் எதிர்த்துப் பேசுகின்றவள் எமன் போன்றவள், காலையில் எழுந்தவுடன் சமையல் அறைக்குச் செல்லாதவள் போக்க முடியாத அரிய நோய், சமைத்த உணவைத் தன் கணவனுக்குப் படைக்காதவள் வீட்டிலேயே இருக்கும் பிசாசு, இந்த மூவரும், கொண்ட கணவனைக் கொல்லும் கருவிகள் ஆவார் என்று பெண்கள் பண்பைக் கட்டமைக்கின்றனர். கணவனுக்குக் கட்டுப்பட்டு வாழாத பெண்கள், கணவனைக் கொல்லும் கருவி போன்றவர்கள் என்று பெண்களின் இல்லற வாழ்க்கை கட்டமைக்கப்படுகின்றது.

    சிலப்பதிகாரம்

    கண்ணகியின் முன்பிறவி பற்றி மதுராபுரித் தெய்வம் கண்ணகியிடம் கூறுகின்றது.

    “கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள்
    எம்முறு துயரம் செய்தோர் யாவதும்
    தம்முறு துயரம் இற்று ஆகுக! என்றே
    விழுவோள், இட்ட வழுஇல் சாபம்
    பட்டனிர் ஆதலின் கட்டுரை கேள் நீ!”

    (வ.த.இராமசுப்பிரமணியம் (உ.ஆ), சிலப்பதிகாரம், ம.கா.க.கா.2005:166-170)

    இதில் கண்ணகி, தான் சாபம் பெற்ற நிகழ்வை அறிகின்றாள். கலிங்க நாட்டிலுள்ள சிங்கபுரத்தை வசு என்பவனும், கபில புரத்தைக் குமரன் என்பவனும் ஆட்சி செய்து வந்தனர். இருவருக்கும் அடிக்கடி போர் நிகழும். சிங்கபுரத்தைச் சேர்ந்த சங்கமன் என்ற வணிகன், தன் மனைவி நீலியுடன் கபிலபுரத்து வீதிகளில் பொருட்களை விற்றுக்கொண்டிருக்கிறான். உன் கணவனாகிய கோவலன், அப்பிறப்பில் பரதன் என்ற பெயரில் இருந்தான். சங்கமனைப் பார்த்த பரதன், இவன் எதிரி நாட்டு ஒற்றனாக இருக்கலாம் என்று கூறி, அரசனால் கொலைக் களத்தில் வெட்டப்படுகின்றான். இதை அறிந்த சங்கமனின் மனைவி நீலி, அழுது புலம்பி, பதினான்கு நாட்கள் அலைந்து திரிந்து, பின் மலையுச்சியில் ஏறி, விழுந்து உயிர் துறக்கின்றாள். அவள் உயிர் துறக்கும் போது தான் அடைந்த துன்பத்தைத் தனக்குத் துன்பத்தை உண்டாக்கியவனும் அடைவதாக என்று சாபம் கொடுத்தாள் என்று மதுராபுரித் தெய்வம் கூறுகின்றது.

    முனிவர்களும் கற்புடைய பெண்களும் சாபம் கொடுக்கும் ஆற்றல் பெற்றவர்கள் என்று கூறப்படுகின்றது. இங்கு நீலி என்பவள் சாபம் கொடுத்தாள் என்று இளங்கோவடிகள் குறிப்பிடுகின்றார். சாபம் கொடுத்தல் என்பது இவர்களுக்கு எளிமையான செயல். அதில் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்கள், பெண்கள். சாபம் கொடுப்பதற்கு முன்பு, சாபம் பெறக்கூடியவர்களிடம் எந்த விளக்கமும் கேட்கப்படுவதில்லை. சாபத்திற்கான விளக்கம் கேட்கப்படாமலேயே பெண்களுக்குச் சாபம் கொடுத்தல் என்பது, அவர்களின் உரிமைகளை அவர்கள் கேட்டுப் பெற்றுவிடக் கூடாது என்பதையே காட்டுகின்றது. கோவலன் செய்த தவறுக்கு அவன் சாபத்தை அனுபவிக்க வேண்டும். மாறாகக் கண்ணகியும் சேர்ந்து அனுபவிக்க வேண்டிய நிலையை எண்ணும் போது, கணவன் அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவர்களாக வாழ வேண்டிய கட்டாய நிலையை இளங்கோவடிகள் கண்ணகிக்கு உருவாக்கி இருக்கின்றார் என்பது உணர்த்தப்படுகின்றது.

    சீவக சிந்தாமணி

    சீவக சிந்தாமணியில் விசயை துறவு மேற்கொள்ளப் போவதாகத் தன் மகன் சீவகனிடம் கூறுகின்றாள். இதை அறிந்த சீவகனும் இராசமாபுர மக்களும் பெருந்துன்பம் அடைகின்றனர். அந்த நிலையில் சுநந்தையுடன் விசயை தவம் மேற்கொள்வதற்காகப் பம்பை என்பவள் உபதேசம் செய்கின்ற இடத்தை அடைந்து,  பெண்பிறப்பை விட்டொழித்து, இந்திரர்களாய்ப் பிறந்தார்கள் என்பது, சமணத்தில் பெண்பிறப்பிற்கு மோட்சம் இல்லை என்பது தெளிவுபடுத்தப்படுகின்றது.

    முடிவுரை

    சமணர்கள் அறக் கருத்துக்களை சமுதாயத்திற்கு வலியுறுத்தினார்கள் என்று கூறப்படுகின்றது. ஆனால் சமணர்கள் ஆணுக்கு ஓர் அறம், பெண்ணுக்கு ஓர் அறம் என்று பாகுபடுத்தி, அறத்தை வலியுறுத்தியிருக்கின்றார்கள். குறிப்பாக ஆணுக்கொரு நீதி, பெண்ணுக்கொரு நீதியை சமணம் வலியுறுத்தியதாகக் காணப்படுகின்றது. பெண்பிறப்பு, சமணத்தில் இழிபிறப்பாகப் பார்க்கப்பட்டதோடு பெண்ணுக்கு மோட்சம் இல்லை என்ற கருத்தை வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

    துணை நூல்கள்

    1. இராசாராம். துரை(உ.ஆ), சீவக சிந்தாமணி, முல்லை நிலையம், சென்னை, 2001
    2. இராமசுப்பிரமணியம் வ.த(உ.ஆ), சிலப்பதிகாரம், திருமகள் நிலையம், சென்னை, 2005
    3. பாலசுந்தரம் பிள்ளை.தி.சு.(உ.ஆ), நாலடியார், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், திருநெல்வேலி, 2007
    4. சீனி வேங்கடசாமி. மயிலை, சமணமும் தமிழும், தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் லிட், திருநெல்வேலி, 1954
    5. வேலுப்பிள்ளை.ஆ., தமிழர் சமய வரலாறு, குமரன் புத்தக இல்லம், கொழும்பு-சென்னை: 2011

    ========================================================

    ஆய்வறிஞர் கருத்துரை:

    முதற்கண் முனைவர் பெ.சுமதி அவர்களை வாழ்த்தி, இந்த மதிப்பாய்வை வழங்குகிறேன்.

    ஆய்வு என்பது நாம் எடுத்துக்கொண்ட பொருளைப் பல திறக்குகள் மூலம் அவற்றின் முழுப் பொருளையும் உணர்ந்து, ஆய்ந்து, காய்த்தல், உவத்தல் அகற்றி பின், அது இட்டுச் செல்லும் வழியைக் கண்டடைவதாகும். இதைச் சரியாகப் புரிந்து தன் ஆய்வுக் கட்டுரையை ஆக்கியிருக்கிறார். எனினும், இவர் சமண மெய்யியலை முழுதும் உள்வாங்கவில்லை என்பது சிற்சில இடங்களில் தெரிகிறது.

    சமண மெய்யியல், “உயிர்” சார்ந்து அல்லது உயிரைச் சுற்றி எழுந்த மெய்யியல். அது சமணத்தின் தனித்துவமான மற்ற சமய மெய்யியல்களுக்கு அடித்தளமாகவும் அமைந்தது. சமண மெய்யியலின்படி உயிர் அருவமானது, நிறம் அற்றது, பாலினம் இல்லாதது. உயிர் தான் ஏற்ற உடம்பிற்கு ஏற்றவாறு சுருங்கி, விரியக்கூடியது, உயிர் தன் வினைத் துகள்களை முற்றாக விடும்போது மேல்நோக்கிச் செல்லக் கூடியது. இதில் கட்டுரையின் கருவிற்கு உகந்ததான உயிர்க்குப் பாலினம் இல்லை. அதாவது உயிரில், ஆண், பெண், அலி என்ற பாகுபாடு கிடையாது என்பதையும் விளங்கிக்கொண்டு தன் ஆய்வை மேற்கொண்டிருந்தால் இன்னும் சிறந்திருக்கும். சமண மெய்யியலின்படி, உயிரானது பற்றுகளிலிருந்து நீங்கி, நல்வினை, தீவினைகளை அகற்றி, வீடுபேறு பெறல் வேண்டும். ஆயின், பற்றுகள் நீங்க வேண்டுமானால் முற்றும் துறத்தல் என்பது இன்றியமையாதது. முற்றும் துறத்தல் அம்மணம். இது உயிர் ஏற்றுக்கொண்ட உருவம், பெண் உடலாகவிருந்தால் சாத்தியமில்லை என்பதால் சமணத்தில் பெண் உடலை ஏற்ற உயிர்களுக்கு வீடுபேறில்லை என்ற கருத்து உருவானது.

    ========================================================

    Share
  • மீண்டும் போப் பிரான்சிஸின் பெருமை

    நாகேஸ்வரி அண்ணாமலை

    இந்து மதத்தில் பிறந்ததால் மட்டுமே (இந்து மதச் சம்பிரதாயங்கள் எதையும் நான் பின்பற்றுவதில்லை) இந்து என்று கணிக்கப்படும் நான் ஏன் போப் பிரான்சிஸ் பற்றி ஒரு புத்தகம் எழுதினேன் என்று பலர் வியக்கிறார்கள். நான் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிவிட்டேனோ என்றும் பலர் நினைக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஒரு விளக்கம் தரக் கடமைப்பட்டிருக்கிறேன். நான் போப் பிரான்சிஸ் பற்றி எழுதியது, நான் இதுவரை அறிந்திராத ஒரு மதத் தலைவர் அவர் என்பதால்.

    நான் இதுவரை அறிந்திருந்த மதத் தலைவர்கள் (நான் யாரையும் நேரில் சந்தித்ததில்லை) யாரும் இவரைப் போல் பரந்த மனப்பான்மையோடு இருப்பவர்களாகவோ, ஏழைகள், வறியவர்கள், சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டவர்கள் மீது அன்பும் பரிவும் காட்டுபவர்களாகவோ, குற்றம் புரிந்தவர்களையும் மன்னித்துச் சமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களாகவோ, தன் மதம்தான் பெரியது என்று கூறாதவர்களாகவோ, எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரும் கடவுளின் குழந்தைகள் என்று எண்ணுபவர்களாகவோ, மதத்திற்கு அப்பாற்பட்டு உலக அமைதியிலும் பூமியின் சுற்றுச் சூழலிலும் அக்கறை செலுத்தி அடிக்கடி அறிவுரை கூறுபவர்களாகவோ இருக்கவில்லை. அவர்பால் நான் ஈர்க்கப்பட்டதற்கு இவருடைய இந்தக் குணங்களே முக்கிய காரணங்கள்.

    ஐக்கிய அரபு நாடுகளில் ஒன்றாகிய அபுதாபிக்கு விஜயம் செய்திருக்கும் முதல் போப், போப் பிரான்சிஸ். 2016-இல் இவரை வாடிகனில் சந்தித்த அபு தாபியின் இளவரசர் அபு தாபிக்கு வரும்படி இவரை அழைத்திருக்கிறார். அழைப்பை ஏற்றுக்கொண்டு பிரான்சிஸும் இதுவரை எந்தப் போப்பும் விஜயம் செய்திராத, இஸ்லாம் மதத்தின் பிறப்பிடமான அரேபிய தீபகற்பகத்திற்கு வந்திருக்கிறார். அபு தாபி அரசில் சகிப்புத்தன்மைக்கு ஒரு துறை இருக்கிறதாம்! இந்த நாட்டின் இளவரசர் போப்பை தங்கள் நாட்டிற்கு வரும்படி அழைத்ததில் ஒன்றும் ஆச்சரியம் இல்லை. உலகில் வன்முறை ஒழிந்து அமைதி நிலவ வேண்டும் என்று விரும்பும் போப் பிரான்சிஸ், அவருடைய அழைப்பை ஏற்று அங்கு போவதற்கு ஒத்துக்கொண்டதிலும் எந்த ஆச்சரியமும் இல்லை.

    கிளம்புவதற்கு முன்னால் செயின்ட் பீட்டர் சதுக்கத்தில் இருந்தவர்களிடம் போப், “ஏமனில் நிலவும் நிலைமை என்னை மிகவும் வருத்தத்துக்கு உள்ளாக்குகிறது. அங்கு குழந்தைகள் உணவின்றிக் கஷ்டப்படுகிறார்கள். அவர்களுடைய கூக்குரல் கடவுளுக்குக் கேட்கிறது. சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்பினரும் ஏமன் மக்களின் துயரத்தைப் போக்கப் பாடுபட வேண்டும்” என்று கூறினார்.

    ஐக்கிய அரபு நாடுகள் உருவாவதற்கு முன்பே 1965-இல் ஒரு கிறிஸ்தவ தேவாலயம் அபு தாபியில் கட்டப்பட்டது. அதன் பிறகு வேறு எந்தத் தேவாலயமும் கட்டப்பட்டதாகத் தெரியவில்லை. ஏமனில் ஹௌதி போராளிகளை அழிப்பதற்கு சௌதி அரேபியா உதவுவதோடு அபு தாபியும் சௌதி அரேபியாவின் கூட்டாளியாக இருக்கிறது. வாடிகனைச் சேர்ந்தவர்கள் போப் ஏற்கனவே விஜயம் செய்துள்ள ஆறு முஸ்லீம் நாடுகளில் மிகவும் ராஜ தந்திரமாக நடந்துகொண்டார் என்றும் இப்போது அபு தாபியிலும் பொது இடங்களிலாவது வெளிப்படையாக எதையும் கூற மாட்டார் என்றும் கூறினர்.

    ஆனால் போப் பிரான்சிஸோ, அபு தாபியில் நடந்த முதல் கூட்டத்தில், பல மதத் தலைவர்கள் கூடியிருந்த கூட்டத்தில், தன்னுடைய ராஜ தந்திரத்திலிருந்து கொஞ்சம் விலகி ஆணித்தரமாக அங்கு மதத்தின் பெயரால் நடக்கும் வன்முறைகளைக் கண்டித்துப் பேசினார். சாதாரணமாக போப், அவர் விஜயம் செய்யும் நாடுகளின் அரசுகளை அங்கிருக்கும்போதே கண்டித்துப் பேசுவதில்லை. ஆனால் அபு தாபியில் சிறுபான்மையராக இருக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் அவர்களுக்குரிய உரிமைகளை வழங்குமாறு கேட்டுக்கொண்டார். பின்னால் பிரான்சிஸும் எகிப்தைச் சேர்ந்த ஒரு பெரிய மசூதியின் இமாமும் “மனித நேய ஆவணத்தில்” (Document of Human Fraternity) கையெழுத்திட்டனர்.

    பல நூற்றாண்டுகளாக விரோதிகளாக இருந்த முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் மதத்தின் பெயரால் வன்முறை, தீவிரவாதம், மதவெறி ஆகியவற்றை மக்களிடையே பரப்பி கடவுளின் பெயரால் அதை நியாயப்படுத்துவதை நிறுத்தும்படி கேட்டுக்கொள்ளும் ஒரு கொள்கை விளக்க அறிவிப்பைப் போல் இந்த ஆவணம் இருக்கிறது. பிற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களை அழிப்பது, மதங்கள் போதிக்கும் அறிவுரைக்குப் புறம்பானது என்று பிரான்சிஸ் கூறினார். அகதிகளாக வருபவர்கள் எங்கிருந்து வந்தாலும் அவர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது ஒவ்வொரு நாட்டின் கடமையென்றும் அகதிகள் வருவதைத் தடுக்கத் தடைகள் அமைப்பதையும் சுவர் கட்டுவதையும் கண்டிக்கும்படி எல்லா மதத் தலைவர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    அபு தாபி மன்னரின் மாளிகைத் தோட்டத்தினூடே போப்பை அழைத்துச் சென்றபோது அவரைச் சுற்றிப் பெரிய பெரிய விலையுயர்ந்த கார்கள் வந்துகொண்டிருக்க, போப் பிரான்சிஸ் தன்னுடைய சாதாரண சிறிய காரில் பயணம் செய்தார். இவருடைய எளிமைக்கு இது ஓர் உதாரணம். போப் எந்த நாட்டிற்கு விஜயம் செய்தாலும் விலையுயர்ந்த கார்களைத் தவிர்த்துவிட்டுத் தன்னுடைய சிறிய காரில்தான் பயணிப்பார்.

    இறுதியாக மதங்கள் தோன்றிய நாளிலிருந்தே மதத்தலைவர்களைச் சர்ச்சைக்குள்ளாக்கி வரும் ஒரு கேள்வியை பிரான்சிஸ் கேட்டார்: மதங்கள் மனித இனங்களைப் பிரிப்பதற்குப் பதில், மனிதர்களிடையே சகோதரத்துவத்தை வளர்ப்பதற்கு எப்படிப் பாடுபடலாம்?

    அவருடைய பதில்: சகிப்புத் தன்மையோடு எல்லோரும் ஒரே மாதிரியாக மதிக்கப்பட வேண்டும், யாரும் யாருக்கும் மாஸ்டரும் இல்லை, அடிமையும் இல்லை என்னும் புரிதல் எல்லோருக்கும் வேண்டும். மேலும் இந்தப் புரிதல் இருந்தாலொழிய மனித இனத்திற்கு எதிர்காலம் இல்லை என்கிறார் போப் பிரான்சிஸ்.

    இவரைப் போன்ற ஒரு மதத் தலைவரை யாரால் போற்றாமல் இருக்க முடியும்?

    Share
  • சேக்கிழார் பா நயம் – 23

    -திருச்சி புலவர் இரா,இராமமூர்த்தி

    சடையனார் மாதினியர் மைந்தராகத் தோன்றி, நரசிங்க முனையரையர் வளர்ப்பு மகனாகத் திகழ்ந்த சுந்தரர் மணப்பருவம் அடைந்தார். அவர்தம் பெற்றோர் விருப்பத்தின் வண்ணம் புத்தூர் சடங்கவி சிவாச்சாரியார் திருமகளை மணம் பேசினர். அவ்வாறே திருமண ஏற்பாடுகளை அரசரும் செய்தார்!

    முன்பே திருக்கயிலையில் சுந்தரர் இறைவனுக்கு மலர்கள் பறிக்க நந்தவனம் வந்தபோது, அங்கு வந்த அம்மையின் தோழியர் இருவர்பால் மனம்போக்கினார்! அதனால் அவர்களை இறைவன் தென்திசையில் பிறந்து, இல்லற இன்பம் துய்த்து, பின்னர் கைலை வந்தடையுமாறு அருள் புரிந்தார்! திருக்கயிலை மலை வாழ்வை இழந்து , மானுடராகி , மையல் வலைப்பட்டு மயங்காமல் தடுத்தாட் கொள்ள வேண்டும் என்று சுந்தரர் இறைவனை வேண்டினார்! அப்போது அங்கே இறைவன் ‘’அவ்வாறே தடுத்தாள்வோம்!’’ என்று திருவாய் மலர்ந்தார்! வேதங்கள் ஒலிக்கின்ற கயிலைமலையில் செப்பியருளிய வாக்குறுதியைக் காக்க சுந்தரரரைத் தடுத்து வழிவழியாக அடிமைகொண்டு வாழ்விப்பதற்காக சிவபிரான் சுந்தரர் திருமணம் நிகழ்ந்த ஊருக்கு வந்தருளினார்! அவ்வாறு அவர் மணம்வந்த புத்தூருக்கு எழுந்தருளிய தண்மையைச் சேக்கிழார் பெருமான் பாடுகிறார்.

    எப்போதும் வேதத்தின் ஓசையே ஒலித்துக் கொண்டிருக்கும் சூழலை உடையது திருக்கயிலைமலை! இதனைத் திருஞானசம்பந்தர் ,

    தாதார் கொன்றை தயங்கும் முடியர் முயங்கு மடவாளை
    போதார் பாகம் ஆக வைத்த புனிதர் பனி மல்கும்
    மூதார் உலகில் முனிவர் உடனாய் அறம்நான்கு அருள்செய்த
    காதார் குழையர் வேதத் திரளர் கயிலை மலையாரே!

    என்றும் ,

    ‘’சுற்றும் மணி பெற்றது ஒளி செற்றமொடு குற்றம் இலது எற்று என வினாய்
    கற்றவர்கள் சொல் தொகையின் முற்றும் ஒளி பெற்ற கயிலாய மலையே!’’

    என்றும்,

    ‘’ஏதம் இல பூதமொடு கோதை துணை ஆதி முதல் வேத விகிர்தன்
    கீதமொடு நீதிபல ஓதிமற வாதுபயில் நாதன் நகர்தான்
    தாதுபொதி போதுவிட ஊதுசிறை மீதுதுளி கூந்தல் நலிய
    காதல்மிகு சோதிகிளர் மாதுமயில் கோதுகயி லாயமலையே!’’

    என்றும்,

    ‘’நிலைமை சொல்லு நெஞ்சே தவம் என்செய்தாய்
    கலைகள் ஆயவல் லான்கயி லாயநல்
    மலையன் மாமயி லாடுது றையரன்
    தலையின் மேலும் மனத்துளும் தங்கவே!’’

    என்றும் திருமுறைகள் பாடுகின்றன! இத்தகைய வேதவொலி எப்போதும், எங்கும் கயிலை மலையில் கேட்கின்றது! இதனைக் கேட்டுக்கொண்டே இருக்கும் சிவபிரான் அதனையே மீண்டும் கூறுகிறார்! அதனைத் தென்திசைத் தமிழ் மொழியில் ஈசன் வழங்கி மகிழவே, தம் கண்ணாடிப் பிரதிபலிப்பாகிய ஆலால சுந்தரரை அனுப்பினார்! அவரைத் தடுத்தாட்கொண்ட போது,

    ‘’அர்ச்சனை பாட்டேயாகும் ஆதலால் மண்மேல் நம்மைச்
    சொற்றமிழ் பாடுக என்கிறார், தூமறை பாடும் வாயார்!’’

    என்று பணித்தார். இதனையே இங்கு சேக்கிழார் ,

    ‘’ஆலுமறை சூழ்க்கயிலை யின்கண்அருள் செய்த
    சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்!’’

    என்று பாடுகிறார்! அன்று கையிலை மலையின்கண் சுந்தரரைத் தடுத்து ஆட்கொள்வதாக அருள்செய்த மொழியே சாலும் மொழி! அவ்வாறே சுந்தரர் மையல் மானுடமாய் மயங்கி , இறைநெறி நீங்கித் திருமணம் செய்துகொள்ள முயன்றபோது அவரைத்தடுத்து வழி வழியாய் அடிமை கொண்டார்! இதனைத் ‘’தடுத்து வழியடிமை அடிமை கொள்வான்!’’ எனப் பாடினார்! கொள்வான் என்பது கொள்ளும்பொருட்டு, என்ற வான் ஈற்று வினையெச்சமாகவும், கொள்பவனாகிய சிவபெருமான் என்ற வினையால் அணையும் பெயராகவும் விளங்குகிறது! வினைகருதி அணைபவன் தானே சிவபெருமான்?

    அத்தகைய வாக்குத் தவறாத சிவபிரானை அடுத்த அடிகளில் உலகிற்கே அறிமுகம் செய்கிறார்! சிவபிரானை நாம் கண்டு அளந்தறிவோம் என்று திருமாலும் , பிரமனும் முன்வந்தனர்! அப்போது சிவபெருமான் அக்கினி வடிவில் அண்ணாமலையாராக மேலும் கீழும் வளர்ந்தார்! திருமால் சிவபெருமான் திருவடியைக் காணக் கீழ் நோக்கிப் பன்றி வடிவில் தோண்டித்தோண்டிச் சென்றார்; பிரமனோ அவர் முடியைக் காண, அன்னப் பறவை வடிவில் மேலே மேலே பறந்து சென்றார்! ‘’மாலறியா நான்முகனும் காணாமலை ‘’ என்று மாணிக்க வாசகர் பாடினார்! அவரை நம் சேக்கிழார் ,

    ‘’மேலுற எழுந்து மிகு கீழுற அகழ்ந்து
    மாலும் இருவர்க்கும் அரியார் , ஒருவர் வந்தார்!’’

    என்று பாடுகிறார்! படைப்புக் கடவுளான பிரமனும், காக்கும் கடவுளான திருமாலும் இறைவனின் அடி,முடி தேடி மயங்கினர்! இதனை, ‘’மாலும் இருவர்க்கு ‘’ என்கிறார் சேக்கிழார்! மாலும் என்பதற்கு மயக்கம் கொள்ளும் என்பது பொருள்! அவர்களாலேயே அறிந்துகொள்ளுதற்கு அரியவரான ஒருவர்! என்று சேக்கிழார் கூறியதன் நுட்பம் உணர்ந்து மகிழ்தற்கு உரியது! அவர் உருவத்தாலும் பெரியவர் மட்டுமல்ல; காலத்தாலும் முதியவர்! எந்தக் காலத்திலும் இறுதி இல்லாத சிவபெருமானின் காலத்தை மிக எளிதாக அப்பர் சுவாமிகள்,

    ‘’நூறு கோடி பிரமர்கள் நொந்தினார்
    ஆறு கோடி நாராயணர் அங்ஙனே
    ஏறு கங்கை மணல் எண்ணில் இந்திரர்
    ஈறு இல்லாதவன் ஈசன் ஒருவனே !’’

    என்று பாடித் தலைக்கட்டுவார்! அத்தகைய நீளாயுளும் பேருருவமும் படைத்த ஈசனை யாவராலும் அளக்கவியலாது.இதனைத் திருமூலர்,

    ‘’ஆர் அறிவார் எங்கள் அண்ணல் பெருமையை
    ஆர் அறிவார் இந்த அகலமும் நீளமும்
    பேர் அறியாத பெரும் சுடர் ஒன்றதின்
    வேர் அறியாமை விளம்புகின்றேனே!’’

    என்று வியந்து போற்றுகிறார்! இவ்வாறெல்லாம் அளவிட இயலாத பெருமை உடையவன் ஈசன் என்று சேக்கிழார் கூறுவதன் காரணம் அடுத்த நிகழ்வுகளில் புலப்படும்! ஆம், யாருக்கும் அவர் பெருமை புலப்படாத நிலையில், ஓர் ஓலையைக் காட்டிச் சுந்தரர் திருமணத்தைத் தடுத்த செயலால் சிவபெரு மானின் ‘அகடித கடனா’ சாமர்த்தியத்தையும் புரிந்து கொள்ள வியலாமல் புத்தூர் அந்தணர்களே திகைக்கின்றனர்! இவர்களைத் திகைக்க வைத்த ஈசனின் அருள் விளையாடலை அடுத்து நாம் காணப் போகிறோம். இப்போது சேக்கிழாரின் பெரிய புராணப் பாடலை முழுமையாகக் கற்றறிவோம்!

    ஆலுமறை சூழ்க்கயிலை யின்கணருள் செய்த
    சாலுமொழி யால்வழி தடுத்தடிமை கொள்வான்
    மேலுற வெழுந்துமிகு கீழுற வகழ்ந்து
    மாலுமிரு வர்க்குமரி யாரொருவர் வந்தார்!

    இப்பாடலில் ஒருவர் என்ற சொல், ஒப்பற்றவர் என்ற பொருளில் அமைந்து இறைவனின் நிகரற்ற சிறப்பை எடுத்துக் காட்டுகிறது!

    Share
  • படக்கவிதைப் போட்டி 198-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    குடும்பத்துக்கு உணவூட்ட கொல்லைப்புறம் அடுப்புமூட்டிச் சமையல் செய்யும் இப்பெண்மணி நாம் மறந்துபோன பழைய சமையல்முறையை நமக்கு நினைவூட்டுகின்றார்.

    எரிவாயுச் சமையல்முறை வந்தபின்னே காண்பதற்கு அரிதாகிவிட்ட இக்காட்சியைத் தன் புகைப்படத்தில் பதிவுசெய்து வந்திருக்கும் திரு. வெங்கட் சிவாவுக்கும் அவரின் புகைப்படத்தைப் படக்கவிதைப் போட்டி 198க்குத் தெரிவுசெய்து தந்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றியை உரித்தாக்குகின்றேன்.

    சமைப்பதற்கு நேரம் பிடித்தாலும் கோட்டை அடுப்பிலும் குமுட்டி அடுப்பிலும் தயாராகும் உணவுகளின் சுவையே தனிதான்!

    ”தேர்ந்த தமிழ்ச்சொற்களால் கவி பாடுக!” என்று ஆர்வத்தோடு காத்திருக்கும் கவிஞர்களை அழைக்கிறேன் இனி!

    *****

    கோட்டையும் குடிசையும் அருகருகே இருக்கும் தெருவில் குடிசைவீட்டில் குடியிருக்கும் இப்பெண்மணி, ”குடிசையே தன் கோயில்” என்று நிறைவோடு வாழ்வதைத்  தம் கவிதைவழி நமக்குச் சுட்டிக்காட்டுகின்றார் திரு.  சி. ஜெயபாரதன்.

    குடியிருப்பு

    செங்கல்
    கோட்டையும், கீற்றுக்
    குடிசையும்
    எங்க தெருவிலே ஒன்றாய்க்
    குடியிருப்பு!
    செங்கல் வீட்டுக்கு
    அத்திவாரம் ஆழத்தில்!
    குடிசைக்குப் புயலடித்தால்
    இறக்கை முளைத்து விடும்!
    வீட்டு
    வேலைக்காரி நான்!
    மாத வாடகை
    குடிசை இடத்துக்கு
    ஆயிரம் ரூபாய்!
    தென்னங் கீற்று
    என்னது!
    மாதச் சம்பளத்தில்
    பத்து ரூபாய் கொடுப்பேன்!
    என் வாரக் கூலியோ
    நூறு ரூபாய்!
    ஆறு வாய்களுக்கு அதிலே
    சோறு போடணும்!
    இந்தக் கூரை வீடு
    என் கோயில்!
    இது போதும் எனக்கு!

    *****

    ”நாட்டுப்புறத்து நயமிகு வாழ்க்கை ஆட்டம் காட்டிடும் நாகரிகத்தால் அசைக்க முடியாதது” என்று தெம்பாகப் பாட்டிசைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    நிறைவு…

    காட்டில் பொறுக்கிய சுள்ளியுடன்
    கட்டாந் தரையில் அடுப்புவைத்த
    நாட்டுப் புறத்து சமையலிலே
    நிறைந்திடும் வயிறும் மனமும்தான்,
    வாட்டம் வாழ்வில் வந்தாலும்
    வெளியே காட்டிடா நிறைவிதுவே,
    ஆட்டம் காட்டிடும் நாகரிகம்
    அசைக்க முடியா வாழ்விதுவே…!

    *****

    ”குழந்தைப்பேறு வேண்டி வெள்ளிக்கிழமை விடிகாலையில் குலமகள் வைக்கும் பொங்கலிது” என்று இக்காட்சிக்குச் சுவையான விளக்கமளிக்கிறார் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீ.

    பொங்கல்!

    குடிசைக் கோவில் கட்டி
    குழந்தை வேண்டி என் வழிபாடு
    கும்பிடுவோம் வாருங்கள்
    குலசாமி நாகத்தை – என்
    ஓட்டு வீட்டுக்கு முன்னே
    ஓரமாய் பாம்புப் புற்று
    வெள்ளிக்கிழமை தோறும்
    விடிகாலைப் பொங்கலிட்டு
    மணக்கும் பொங்கச்சோற்றை
    மண்தரையில் இட்டு உண்டால்
    மழலைச் செல்வம் வந்து
    மடியில் தவழுமென்று
    சாமியாடி சொன்ன குறியை
    சரிவர நான் செய்கின்றேன்.
    வயல்காட்டை அடுத்த
    வாய்க்கால் அருகே என் வீடு
    வந்துவிட்டுப் போங்களேன்
    வாழை இலையில் விருந்துண்ண
    வாசனைப் பொங்கலுடன்
    வடை சாம்பார் சட்டினியும்
    அவியல் பொறியலுடன்
    அவித்துவைத்த இட்லியையும்
    உண்டு மகிழ்ந்து தமிழச்சி என்னை
    உளமார வாழ்த்துங்கள்
    வெயில் ஏறுமுன்னே
    வேகமாய் வாருங்கள்!

    *****

    ”தென்னங்கீற்றை நேர்த்தியாகப் பின்னி, தானே உருவாக்கிய அருமைக் குடிசையில் வாழ்வதில் கிடைக்கும் நிறைவும் இன்பமும் மாடிவீட்டில் தேடினாலும் கிடைக்காது” என்று உளம் பூரிக்கும் பாவையைக் காண்கிறோம் திரு. ஆ. செந்தில் குமாரின் பாடலில்.  

    நிறைமனம்…

    நல்லநல்லத் தென்னங்கீத்த.. நேத்தியாக நான்பின்னி..
    சீட்டுக்கட்டு அதுமாதிரி.. சேத்துசேத்து அடுக்கிக்கட்டி..
    எனக்காக நான் கட்டுன குடிசயிது..!!

    கழனிக்கு நான்போயி.. கஷ்டப்பட்டு நாள்முழுக்க..
    களையெடுத்து நாத்துநட்டு.. களப்போட வரும்போது..
    ஓஞ்சி சித்த ஒக்கார.. ஒதவிசெய்யும் எங்குடிச..!!

    சுட்டெரிக்கும் வெயிலடிச்சா.. சடசடன்னு மழபெஞ்சா..
    எட்டநின்னு பாதுகாப்பா.. எப்பவுமே எனக்குநல்லா..
    அண்டிக்கிட வசதிதரும்.. அருமையான எங்குடிச..!!

    வசதியாஒரு வாசலுந்தான்.. கடலாட்டம் கெடக்குதுங்க..
    வேணும்போது வெறகுவச்சி.. தீமூட்டிச் சமச்சித்திங்க..
    அம்சமா ஒருஅடுப்பு.. அந்தப்பக்கம் இருக்குதுங்க..!!

    படுத்துத்தூங்க கயித்துக்கட்டில்.. இல்லாட்டி கோரப்பாயி..
    மாடிமேல மாடிகட்டி.. கட்டில்மேல மெத்தபோட்டு..
    படுத்தாகூட கெடைக்காதுங்க இந்த சுகம்..!!

    *****

    குடிசை வீடும், கோட்டை அடுப்பும் நம் கவிஞர்களின் கற்பனைக்கு நல்ல தீனி போட்டிருப்பதை இக்கவிதைகள்வழி உணர்கின்றேன். பாராட்டுக்கள் கவிஞர்களே!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவாகியிருப்பது…

    பழமை மறந்த பாரதம் 

    இருக்க ஓர் இடம் வேண்டும் என்று எண்ணிக் 
    கட்டிடங்கள் கட்டி வைத்தோம் 
    பாதுகாப்பு என்று எண்ணி கதவுகளைப் பூட்டி வைத்தோம்
    அக்கம் பக்கம் எது நடந்தாலும் தட்டிக் கேட்க மறந்தோம் 
    காந்தி சொன்னதைப் போல்  அத்தனையும் மூடியே வளர்ந்தோம்!  
    உடுத்தும் உடையில் காதி மறந்தோம் 
    சமைக்க மறந்து உண்ணும் உணவில் கிடைக்கும் பலனை மறந்தோம் 
    அடுப்பில் எரிவாயு தீர்ந்து போக
    பின்னங்கதவு திறந்து பார்க்கையில்
    கடந்து வந்த பாதை கனவாய்த் தெரிந்ததே 
    மழையோ வெயிலோ ஒதுங்க ஓர் இடமாய் இருந்த குடிசை 
    கால் கடுக்கத் தண்ணீர் கொண்டுவந்த நெகிழிக் குடம்
    சமையல் செய்த மண்சட்டியும் கரண்டியும் 
    உலை கொதிக்க  உதவிய விறகுகளும் மண்அடுப்பும் 
    என் வீட்டுத் தோட்டத்தில் 
    கடற்கரையில் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகளாய்
    மாற்றம் என்ற பெயரில்…
    மறந்துதான் போனோமே! 

    கடற்கரையில் விட்டுச்சென்ற காலடிச் சுவடுகளாய்க் கடந்துவந்த பாதையை, அதை அலங்கரித்த இனிய எளிய விஷயங்களை அசைபோட்டுப் பார்க்கும் வகையில் நனவோடை உத்தியில் (flashback) கவிதை புனைந்திருக்கும் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (298) – ஜார்ஜ் பெர்னாண்டஸ்

     

    ஜார்ஜ் பெர்னாண்டஸ் (George Fernandes (ஜூன் 3, 1930 – ஜனவரி 29, 2019), ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரும் இந்தியாவின் முன்னாள் அமைச்சரும் ஆவார். அவரை இவ்வார வல்லமையாளர் என அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.

    ஜார்ஜ் பெர்னாண்டஸ், 1967 ஆம் ஆண்டில் இந்திய நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற நான்காவது மக்களவைத் தேர்தலில் முதன் முறையாகத் தேர்வானார். அதன் பிறகு, 1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வென்று மொத்தம் ஒன்பது முறை இந்திய நாடாளுமன்ற மக்களவை உறுப்பினராகப் பணியாற்றி உள்ளார்

    வாஜ்பாயி மந்திரிசபையில் இந்தியா அணுகுண்டு செய்யவும், அதன் மிஸைல்ஸ் புரோகிராமுக்கு அப்துல் கலாம் தலைவராக இருக்கும்போதும் வேண்டிய தலைமையை நல்கியவர். 1998-ல் பாரத அணுசோதனை வெற்றி – வாஜ்பாயி, ஜார்ஜ், கலாம், சிதம்பரம் (இந்திய அணுவியல் துறை தலைவர்), காஷ்மீர் பரூக் அப்துல்லா.

    எமெர்ஜென்சி பிரகடனம் இந்திரா காந்தி அறிவித்தபின்னர் இந்தியாவின் பிரதமருக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர். என்றும் ஈழ நாடு அமையத் தமிழர்கள் பக்கம் இருந்தவர்

    1976 ஜூன் 10-ம் தேதி கொல்கத்தாவில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் கைது செய்யப்பட்டார். அவரது கைகளிலும், கால்களிலும் விலங்கு மாட்டி போலீஸார் கொடுமைப்படுத்தினர். நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட போது விலங்கிடப்பட்ட கைகளை உயர்த்தி, “சர்வாதிகார ஆட்சி ஒழிக” என்று துணிச்சலாக முழக்கமிட்டார். இந்த நிலையில் நாடாளுமன்றத்துக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. பிஹார் மாநிலத்தின் முசாபூர் தொகுதியில் போட்டியிட சிறையில் இருந்தே விண்ணப்பித்தார். தொகுதிக்கே செல்ல வாய்ப்பில்லை. ஆனாலும் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜார்ஜ் வெற்றிபெற்றார்.

    இந்திரா காந்தி தோல்வியைத் தழுவினார். மொரார்ஜி தேசாய் பிரதமரானார். அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் பதவி ஜார்ஜை தேடி வந்தது. வழக்கம்போல எளிய பைஜாமா குர்த்தாவில் ரயில்வே அமைச்சராக ரயில் பவனில் நுழைந்தபோது, அங்கிருந்த வாயிற்காவலர், “யார் நீங்கள்? உள்ளே செல்ல அனுமதிச் சீட்டு இருக்கிறதா?” என்று கெடுபிடி காட்டினார். அப்போது, “நான்தான் ரயில்வே அமைச்சர்” என்று சாதாரணமாகப் பதில் சொன்னார்.

    பாஜகவுக்கு அவர் வழங்கிவந்த நிபந்தனையற்ற ஆதரவைப் பார்த்தவர்கள் மதச்சார்பின்மை குறித்து உங்களது நிலைப்பாடு என்னவென்று கேட்டபோது “இந்தியர்களை மதச்சார்பற்றவர்கள், சாதாரணமானவர்கள் என இரண்டாகப் பிரிக்கலாம். நான் சாதாரணமானவர்களின் பிரிவைச் சேர்ந்தவன்” என்றார்.

    Obituary in BBC. இந்திய பிரதமர் மோதியின் ட்வீட்கள் வாசிக்கலாம்,
    https://www.bbc.com/news/world-asia-india-47039190

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 4

    -மேகலா இராமமூர்த்தி

    பரத்தைமை எனும் கூடாவொழுக்கத்தின் பரவலுக்கு நாகரிக மையங்களாக விளங்கிய நகரங்களும் அவற்றை உள்ளடக்கிய மருத நிலமுமே காரணம் என்பதாலேயே நம் தமிழ்ப் புலவர்கள் குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை எனும் ஐந்திணையில் மருதத்துக்கு பரத்தைமை ஒழுக்கத்தால் தலைவன் தலைவியரிடையே நிகழும் ஊடலை உரிப்பொருளாக்கினர்.

    பரத்தையரில் தலைவனுக்கே துணையாகி வாழ்ந்த காமக் கிழத்தியரும் உண்டு. ’கிழத்தி’ என்ற சொல்லே அவள் இல்லக்கிழத்திக்கு நிகரான உரிமையைத் தலைவனிடம் பெற்றிருந்தாள் என்பதை உணர்த்துகின்றது. எனினும் காமக் கிழத்தி மனையோள் ஆகாள் என்பது தெளிவு.

    எப்படியாயினும் ஏற்கனவே ஒரு பெண்ணை மணந்து இல்வாழ்வில் ஈடுபட்டுவிட்ட ஓர் ஆடவனை இன்னொரு பெண் நயப்பதும் அவனோடு உடனுறைவதும் தமிழ்ச் சமூகத்துக்கும், இல்வாழ்வானாகிய தலைவனுக்கும் பீடும் பெருமையும்தரா இழிசெயல்களே என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

    தமிழ் மரபுக்கு இழுக்குத் தேடித் தரும் பரத்தைமையைச் சங்கப் புலவர்கள் எவரும் கடியாது விட்டுவிட, இதற்கு எதிரான கண்டனக் குரலை, கலகக் குரலை முதன்முதலில் எழுப்பியவர் வள்ளுவப் பெருந்தகையே ஆவார்.

    தனிமனித ஒழுக்கமும், நிறையுமின்றிப் பொருளுக்காக உடலை விற்கும் பெண்ணையும் அவளைத் துய்க்க விழையும் ஒழுக்கமற்ற ஆணையும் சேர்த்தே சாடுகின்றார் அவர்.

    பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில்
    ஏதில் பிணந்தழீஇ யற்று.
    (வரைவின் மகளிர் – 913)

    பொருளுக்காக அன்பு பாராட்டும் பொருட்பெண்டிரை முயங்குவது இருட்டறையில் பிணத்தைத் தழுவுவதற்கு ஒப்பாகும் என்று கடியும் பேராசான், பொருளைப் பெறுவதன்பொருட்டு அனைத்து ஆடவருக்கும் பொதுவான துய்ப்புப்பொருளாக இருக்கும் இப்பெண்டிரை மாட்சிமைப்பட்ட அறிவுடையவர் எவரும் விரும்பமாட்டார் எனவும் தெளிவுறுத்துகின்றார்.

    பொதுநலத்தார் புன்னலம் தோயார் மதிநலத்தின்
    மாண்ட அறிவி னவர்.
    (வரைவின் மகளிர் – 915)

    வரைவின் மகளிரையும் அவர்களை நாடும் ஆடவரையும் சாடுவதுபோலவே பிறனில் (பிறன் மனையாள்) விழையும் காமுகரையும் வள்ளுவர் கடுமையாய்ச் சாடுகின்றார்.

    அறன்கடை நின்றாருள் எல்லாம் பிறன்கடை
    நின்றாரிற் பேதையார் இல்”
    (பிறனில் விழையாமை – 142) என்பது பொய்யில் புலவரின் வாய்மொழியாகும்.

    இவ்வாறு வரைவிலாப் பொருட்பெண்டிரை நயவாதீர் என்றும், பிறனில் விழையாதீர் என்றும் தமிழ் ஆடவருக்குத் தெளிவுறுத்திய ஐயன் இன்னும் ஒருபடி மேலேபோய், ”ஒருதார மணத்தை ஓம்புமின்! இல்லற இன்பத்துக்குச் சேதாரம் விளை(வி)க்கும் பலதார மணத்தைக் கடிமின்!!” என்றும் கூறியிருப்பரேல் அவருக்கு நிகர் அவரே! ஏனோ அதை அவர் செய்யவில்லை.

    சங்க காலத்தை அடுத்துவந்தது களப்பிரர்கள் காலம். கி.பி. 250 முதல் 575க்கு இடைப்பட்ட காலத்தைப் பொதுவாக இவர்கள் காலமாகக் குறிப்பது வழக்கம். இவர்கள் யார் என்பது குறித்து ஆய்வாளர்களிடையே பல்வேறு விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

    அவற்றில் ஒருசில…

    தமிழகத்தின் வட எல்லையான வேங்கடத்தையும், அதை ஒட்டியுள்ள பகுதிகளிலும் வாழ்ந்து வந்த கள்வர் அல்லது களவர் இனத்தவரே களப்பிரர் என்பர் வரலாற்று ஆசிரியர்கள் சிலர்.

    முற்காலப் பாண்டியருள் ஒருவனாகிய நெடுஞ்சடையன் பராந்தகன் என்பவனுடைய ஆட்சிக் காலத்தில் (கி.பி. 765 – 790இல்) வெளியிடப்பட்ட வேள்விக்குடிச் செப்பேடு, பல்யாக முதுகுடுமிப் பெருவழுதி என்னும் பாண்டிய அரசனுக்குப் பின்வந்த அளவற்ற பாண்டிய அரசர்களைக் களப்ரன் எனும் கலியரசன் போரில் வென்று பாண்டிய நாட்டைக் கைப்பற்றினான் என்று கூறுகிறது.

    ”அளவரிய அதிராசரை நீக்கி அகலிடத்தைக்
    களப்ரன் எனும் கலியரசன் கைக்கொண்டான்”

     பாண்டிய நாட்டைக் கைப்பற்றிய களப்பிர அரசன் தமிழனல்லன் என்பதாலும் அவன் சமண சமயத்தைச் சேர்ந்தவன் ஆதலானும் அவனைக் கலி அரசன் (கொடிய அரசன்) என வேள்விக்குடிச் செப்பேடு விளம்புகிறது போலும்.

    ’அச்சுதக் களப்பாளன்’ எனும் களப்பிர அரசன் ஒருவனைப் பற்றித் ’தமிழ் நாவலர் சரிதை’ எனும் நூல் பேசுகின்றது. முடியுடை மூவேந்தரையும் சிறைப்படுத்திய இவனைப் பற்றிய குறிப்புகள் யாப்பருங்கலக் காரிகை, யாப்பருங்கல விருத்தி முதலிய இலக்கண நூல்களில் காணக்கிடைக்கின்றன. இவ்விரு நூல்களும் சமணத் துறவியரால் இயற்றப்பட்டவை.

    களப்பிரர் குறித்த மற்றொரு கருத்தை கர்நாடக மாநிலத்தின் பேலுர்க் கல்வெட்டு பின்வருமாறு தெரிவிக்கின்றது.

    ”களபோரா எனும் பெயருள்ள குலமொன்று சாதவாகனரின் வீழ்ச்சிக்குப் பின்னர் எழுச்சியுற்றது. அக்குலத்தினரால் தெற்கே தொண்டை மண்டலத்தை ஆண்டு கொண்டிருந்த பல்லவர்களை வெற்றிகொள்ள இயலவில்லை. ஆகவே அவர்கள் அக்காலத்தில் வலிமை குன்றியிருந்த சோழர்களையும், பாண்டியர்களையும் வென்று அவர்களுடைய நாடுகளைக் கைப்பற்றி ஆண்டனர். இந்தக் களபோரா இனத்தவரே களப்பிரர் என்கிறது.

    களப்பிரர் குறித்த ஆய்வாளர்களின் கருத்துக்களை ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கும்போது களப்பிரர் தமிழர் அல்லர்; தமிழகத்துக்கு வெளியிலிருந்து வந்தவர்கள். சமண மதத்துக்குப் பேராதரவு தந்தவர்கள் என்பது புலப்படுகின்றது. அச்சுதக் களப்பாளன் என்ற களப்பிர அரசன் பௌத்தத்தையும் ஆதரித்திருக்கின்றான் என்று அறிகின்றோம்.

    களப்பிரர் கால இலக்கிய வளர்ச்சி யாது; அதில் பெண்களின் பங்களிப்பு என்னவென்று ஆராய்வோம்.

    சமணப் பற்றாளர்களான களப்பிரர் காலத்தில் சமண நெறிக்குப் புறம்பான தமிழரின் அகத்திணை பேசும் நூல்கள் அரிதாகவே கிட்டுகின்றன. இக்காலகட்டத்தில் எழுந்தவையாகச் சுட்டப்படுபவை பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், சீவக சிந்தாமணி,பெருங்கதை எனுமிரு சமணக் காப்பியங்கள் (சிந்தாமணியைப் பத்தாம் நூற்றாண்டுக் காப்பியம் என்பார் அறிஞர் அ.ச.ஞா. அவர்கள்) மற்றும் சில இலக்கண நூல்கள்.  பதினெண்கீழ்க்கணக்கு நூல்களை நோக்கினால் அவற்றில் பதினொரு நூல்கள் அறநூல்கள்; ஆறு நூல்கள் அகம் சார்ந்தவை. ஒன்று போர் பற்றியது. இவற்றில் சில, களப்பிரர் காலத்துக்கு முன்பு வாழ்ந்த புலவர்களால் இயற்றப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. பட்டியலில் இடம்பெற்றிருக்கும் அகநூல்கள் சில களப்பிரர் ஆட்சிக்கு உட்படாத பகுதிகளைச் சார்ந்த புலவர்களால் எழுதப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு.

    தமிழென்றாலே அஃது அகத்திணையைக் குறிக்கும் என்றெண்ணிச் செம்மாந்திருந்த தமிழ்க்குடியினருக்கு, களப்பிரர் காலம் கருத்துச் செழுமையிலும், சொல் மிடுக்கிலும், கற்பனை நயத்திலும் சங்க நூல்களுக்கு நிகராகா நீதிநூல்களால் நிறைக்கப்பட்டதும், உலகியல் வாழ்வுக்கு ஆதாரமான காதலின்பம் வெறுக்கப்பட்டுத் துறவுநெறி வலியுறுத்தப்பட்டதும் ஏமாற்றத்தைத் தந்திருக்கலாம். ஆதலால் அவர்கள் களப்பிரர் காலத்தை இருண்டகாலம் (Dark Age) என்றழைத்திருக்கக் கூடும் என்று எண்ணத் தோன்றுகிறது.

    இதனினும் பெரிய ஏமாற்றத்தை நமக்களிப்பது இக்காலத்தில் பெண்களின் இலக்கியப் பங்களிப்பு என்று குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்கு ஒன்றுமே இல்லாமற் போனது.  சங்க காலப் பெண்பாற் புலவர்களாக ஏறக்குறைய 40 பேரைச் சுட்டமுடிந்த நம்மால் அதற்கடுத்துவந்த காலங்களில் அவ்வாறு பெருமையாகச் சொல்லமுடியாமற் போய்விட்டது!

    நல்லவேளையாக பெண்புலவர் ஒருவருமே இல்லை எனும் பழிச்சொல் பெண்குலத்துக்கு நேராமல் காத்தவராக, கி.பி. 5/6ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோணாட்டுக் காரைக்காலைப் பிறப்பிடமாகக் கொண்டவரும் புனிதவதி எனும் இயற்பெயர் கொண்டவருமான காரைக்காலம்மையார் திகழ்கின்றார்.

    [தொடரும்]

    *****

    துணைநின்றவை:

    1. திருக்குறள் தெளிவுரை – டாக்டர் மு. வரதராசனார்
    2. தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணம்
    3. http://www.tamilvu.org/ta/courses-degree-a031-a0312-html-a0312110-7048

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 7

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 7 – மக்கட் பேறு

    குறள் 61:

    பெறுமவற்றுள் யாமறிவ தில்லை அறிவறிந்த
    மக்கட்பே றல்ல பிற

    பெத்து வளக்குத புத்திசாலி பிள்ளைங்களத் தவித்து மத்தபடி ஒருத்தன் பெறுத வேற எந்த நன்மையையும் நான் நல்லதா ஒத்துக்கிட மாட்டேன்.

    குறள் 62:

    எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
    பண்புடை மக்கட் பெறின்

    குறை இல்லாத நல்ல குணத்தோட உள்ள பிள்ளைய பெத்தவனுக்கு அவனோட ஏழேழு தலைமுறைங்குத காலத்துக்கு தீமை ங்குத தொயரம் அண்டாது.

    குறள் 63:

    தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
    தந்தம் வினையான் வரும்

    தங்கிட்ட இருக்குத செல்வம் னு சொல்லுதது பெத்த பிள்ளைங்க மட்டும் தான். அவங்க செய்யுத நல்லதுக்கு ஏத்தாப்போல அவங்க கிட்ட செல்வம் (பொருள்) வந்து சேந்துக்கிடும்.

    குறள் 64:

    அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
    சிறுகை அளாவிய கூழ்

    தாம்பெத்த பச்ச பிள்ளைங்க பிஞ்சு வெரலால அளையுத சாப்பாட்டத் தான் பெத்தவங்க அமிழ்தம் னு சொல்லுவாங்க.

    குறள் 65:

    மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றவர்
    சொற்கேட்டல் இன்பம் செவிக்கு

    பச்ச பிள்ளைங்கள தொட்டு கொஞ்சுதது ஒடம்புக்கு இன்பம். அவங்களோட மழலப் பேச்சு கேக்குதது காதுக்கு இன்பம்.

    குறள் 66:

    குழலினி தியாழினி தென்பதம் மக்கள்
    மழலைச்சொல் கேளா தவர்

    தாம் பெத்த பச்ச பிள்ளைங்களோட மழல பேச்சு கேக்காதவங்க புல்லாங்குழலோட இசையையும் , யாழோட இசையையும் நல்லா இருக்குதுன்னு நெனைச்சிக்கிடுவாங்க. .

    குறள் 67:

    தந்தை மகற்காற்றும் நன்றி அவையத்து
    முந்தி இருப்பச் செயல்

    தான் பெத்த பிள்ளைக்கு உதவி செய்யணும்னு ஒரு அப்பன் நெனைச்சாம்னா அவன நல்லா படிக்க வச்சி படிப்பாளிங்க மத்தியில நல்ல பெயர் வாங்க வைக்கிதது தான்.

    குறள் 68:

    தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
    மன்னுயிர்க் கெல்லாம் இனிது

    தன்னைய விட தாம்பெத்த பிள்ளைங்க புத்திசாலியா இருக்குதது தனக்கு மட்டிமில்லாம ஒலகத்துல இருக்க மத்த எல்லாருக்கும் நல்லத கொடுக்கும். .

    குறள் 69:

    ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய்

    உம் மவன் நல்லவன் னு ஊர் உலகம் சொல்லும்போது அவன பெத்த காலத்துல கொண்ட மகிழ்ச்சிய விட அதிகமா மகிழ்ச்சி அடையுவா அவன் ஆத்தா.

    குறள் 70:

    மகன் தந்தைக் காற்றும் உதவி இவன்தந்தை
    என்நோற்றான் கொல்லெனும் சொல்

    இவன பெறுததுக்கு இவனோட அய்யன் என்ன நோன்பு நோத்தானோ என பிறத்தியார் சொல்லுத புகழ்ச்சி தான் அந்த மவன் தன்னோட அய்யனுக்கு செய்யுத கைம்மாறு.

    Share
  • பசியின் வலி

    – ஏறன் சிவா
    பசிக்குப் படையல் படைத்திங்குப்
           பண்பைக் காத்தார் நம்முன்னோர்
    புசிக்கும் சோறும் பொய்யாகப்
           புவியில் மாறிப் போனதன்றோ?
    பசுவும் நெகிழிப் பை..தின்னல்
           பார்க்க நெஞ்சம் பதைக்கிறதே!
    இசையும் மனமும் இருக்கிறதே
          இனியும் பொறுக்க மறுக்கிறதே!
    02/04/2018
    Share
  • குறளின் கதிர்களாய்…(243)

    செண்பக ஜெகதீசன்

     

    பகையென்னும் பண்பி லதனை யொருவ
    னகையேயும் வேண்டற்பாற் றன்று.

    -திருக்குறள் -871(பகைத்திறம் தெரிதல்)

     

    புதுக் கவிதையில்…

    சிரித்து மகிழ்ந்து
    விளையாட்டாகக் கூட
    விரும்பிடவேண்டாம் வாழ்வில்,
    பகையாகிய
    பண்பற்ற ஒன்றை…!

    குறும்பாவில்…

    பகையென்கிற பண்பற்ற ஒன்றை,
    சிரித்து மகிழ்ந்திடும் விளையாட்டாய்க்கூட
    விரும்பிட வேண்டாம்…!

    மரபுக் கவிதையில்…

    அகில வாழ்வில் ஆபத்தாம்
    அடுத்தவ ருடனே பகையென்னும்
    வகைக்கே உதவா ஒன்றாலே
    வருவ தில்லை நற்பயனே,
    அகத்தில் தோன்றி வாழ்வழிக்கும்
    ஆற்றல் மிகுந்த பண்பிலாத
    பகையினை மகிழும் விளையாட்டெனப்
    பார்த்தும் விரும்பிட வேண்டாமே…!

    லிமரைக்கூ..

    பகையென்பது பண்பற்ற ஒன்று,
    அழிக்குமதனை மகிழும் விளையாட்டாய்க்கூட
    விரும்பாமல் தவிர்ப்பதே நன்று…!

    கிராமிய பாணியில்…

    வேண்டாம் வேண்டாம் பகவேண்டாம்
    வெறுத்தே ஒதுக்கும் பகவேண்டாம்,
    வாழ்க்கயில யாரோடும் பகவேண்டாம்..

    பண்பேயில்லாத பகயதால
    கேடுதான்வரும் வாழ்க்கயில,
    அதுனால
    சந்தோசமான வெளயாட்டாக்கூட
    விரும்பிடாத பகயதயே..

    எப்பவும்
    வேண்டாம் வேண்டாம் பகவேண்டாம்
    வெறுத்தே ஒதுக்கும் பகவேண்டாம்,
    வாழ்க்கயில யாரோடும் பகவேண்டாம்…!

     

    Share
  • ஏக்கங்கள்

    விஜய் ப்ரகாஷ்

    பெரியகுளம் பேருந்து நிலையம்…

    மணி ஒன்பது அடித்து நாற்பத்தைந்து நிமிடங்கள் ஆனது.

    கைப்பையுடன் சேகரும், இரண்டரை வயது குழந்தையுடன் அவன் மனைவி காயத்ரியும் நின்றிருந்தார்கள்.

    “அழாத செல்லம், அப்பா ஊருக்கு போய்ட்டு சீக்கிரம் வந்துடுறேன்” என்று அழும் குழந்தையைத் தேற்றிக் கொண்டிருந்தான் சேகர்.

    “ஏம்பா போற?” என்று மழலை அழுது கொண்டே ததும்பும் குரலில் இந்து குட்டி கேட்டாள்.

    “இண்டெர்வியூவுக்கு மா”

    “அப்டீன்னா?”

    “அப்டீன்னா என் இந்து குட்டி டெடி பியர்,சாக்லேட் லாம் கேட்டால்ல, அத வாங்குறதுக்கு டா செல்லம்”

    “அப்பொ சீக்கிரமே வாங்கிட்டு வந்துடணும் சரியாப்பா?”

    “சரி செல்லம்”

    அருகிலிருந்த கடையில் இரண்டு கேட்பெரி டைரிமில்க்கை வாங்கிக் கொடுத்து,

    “இத சாப்டு! அப்ப வர்றப்ப ஒனக்கு நெறைய வாங்கிட்டு வர்றேன்” என்றான்.

    இந்து சோகத்துடன் வாங்கிக் கொண்டாள்.

    காயத்ரியிடம், “நான் கெளம்புறேன்! கொழந்தைய பத்திரமா பாத்துக்க! சேட்ட பண்ணா அடிக்காத! சாக்லேட் கேட்டா வாங்கித்தா! அழ வெக்காத! நீயும் பத்திரமா இரு!” என்றான்.

    அவளும், “சரிங்க! நீங்க பத்திரமா போய்ட்டு வாங்க” என்றாள். அதற்குமேல் அவளால் பேச முடியவில்லை. அவன் பிரிவு அவளைப் பேச முடியாமல் தான் செய்திருக்கிறது. கண்களின் கண்ணீர் தேங்கியது.

    “பஸ் கெளம்பப் போது! செல்லம் அப்பாக்கு முத்தா குடு” என்று கேட்ட சேகருக்கு சாக்லேட் அப்பிய உதடுகளீன் ஈர முத்தம் கிடைத்தது.

    “நீ வீட்டுக்குப் போ. பனி பொழிய ஆரம்பிக்குது. கொழந்தைக்குச் சளி புடிக்கப்போது” என்று காயத்ரியைக் கிளப்பினான்.

    அவளும், “அப்பாவுக்கு டாட்டா காட்டு” என்று இந்து குட்டியை டாட்டா காட்டச் செய்தாள். சின்ன சாக்லேட் கைகள் டாட்டா காட்ட பஸ் புறப்பட்டது.

    “வேலகெடச்சுடனும் கடவுளே! வாங்குற சம்பளத்த வெச்சு இந்து குட்டிக்கு நான் ஆசப்படுற மாதிரி நல்ல வாழ்க்கைய தரணும்” என்று மனப்பிரார்த்தனை செய்துகொண்டே தூங்கப் போனான்.

    வேகமாக சென்றுகொண்டிருந்த பேருந்து ஏதோ ஒரு வேகத்தடை ஏற்றத்தில் ஏறி இறங்கி அசுரனாய்க் குலுங்கியது.

    தூங்கிக் கொண்டிருந்தவர்கள், வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் என அனைவரும் பாரபட்சமின்றி முன் கம்பியில் முட்டிக் கொண்டனர்.

    சிலர் இடித்த இடத்தில் வீங்கிவிடாமல் இருக்கத் தடவிக் கொண்டிருக்க, சிலர் கடவுளைத் துணைக்கழைக்க, சிலரது தகாத வார்த்தைக் கசையடிகள் ஓட்டுநரைப் பாய்ந்தன.

    சேகருக்கும் தூக்கம் கலைந்தது. பல நிமிட முயற்சிக்குப் பின் தூக்கம் வராமல் உட்கார்ந்தான். சுற்றிலும் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தனர். அவன் எழுந்து முன்னே சென்றான். ஓட்டுநரும் நடத்துநரும் பேசிக்கொண்டிருந்தனர்.

    “என்னாச்சு தம்பி? என்றார் நடத்துநர்.

    “ஒன்னும் இல்லைங்க! தூக்கம் வரல அதான்! முன்னாடி வந்து ஒட்காரலாமா?”

    “ஒக்காருங்க தம்பி! எம்பேரு முருகன். இவரு கந்தசாமி.”

    “நா சேகர் ணே! சென்னைக்கு வேல விஷயமா போறேன்”

    ஓ… அப்டியா! நல்லது”

    “எத்தன வருஷமா ணே நீங்க வண்டி ஓட்றீங்க?”

    “நாங்க பத்து வர்ஷமா இந்த ரூட்டு தான் தம்பி. நீங்க சென்னைல எங்க வேல பாக்குறீங்க?”

    “இல்ல, வேலைக்கு இண்டர்வியூவைக்கிறாங்க! அதுக்கு போறேன்!”

    “ஓ! இப்ப என்ன பண்ணிட்டிருந்தீங்க?”

    “அப்பாவோட சேர்ந்து வெவசாயம் பார்த்துட்டு இருந்தேன்! வெளச்சல் பெருசா இல்ல, கடன் தான் அதிகமாச்சு, கல்யாணம் ஆகி குழந்த வேற இருக்கு. அவளுக்கு நான் ஆசப்பட்ட மாதிரி நல்ல வாழ்க்கைய அமச்சு தரணும், அதுக்கு நெறைய சம்பாதிக்கணும். அதான் சென்னைக்கு போறேன் ணே”

    நம்மூர்லையே நெறைய வேல இருக்கே தம்பி! நீங்க ஏன் சென்னைக்குப் போகணும்?”

    வேல கெடச்சுது ணே! ஆனா வந்த சம்பளம் குடும்ப செலவுக்கே போய்டுச்சு! கைல பத்து காசு நிக்கல. அதான் சென்னைக்கு போறேன்”

    “அப்ப, வேல கெடச்சா குடும்பத்த சென்னைக்கு கூப்ட்டு போய்டுவீங்க போல?”

    “அவங்களுக்கு வர ஆச தான் ணே! ஆனா அப்பா அம்மாவுக்கு நான் போறதே புடிக்கல. அவங்கள அனுப்ப மாட்டாங்க. வேல கெடச்சா மாசம் ஒருவாட்டி வந்து பாத்துட்டு போக வேண்டியது தான். எல்லாம் எம்பொன்னுக்காக ணே!”

    “பொன்னு மேல ரொம்ப அன்பா இருக்கீங்க”

    “எம் பொன்னுதாங்க எனக்கு எல்லாம். அவன்னா எனக்கு உசுரு”

    பேச்சு சுவாரஸ்யத்தில் நொடிகளை விட நிமிடங்கள் வேகமாகக் கரைந்தன.

    சில மணி நேரங்களுக்குப் பின் பஸ் ஒரு உணவகத்திற்கு முன் நின்றது.

    “பஸ்ஸு பத்தி நிமிஷம் நிக்கும்.. டீ, காஃபி, டிஃபன் சாப்டுறவங்க சாப்ட்டுக்கோங்க. வேற எங்கெயும் இனி நிக்காது” என்று நடத்துநர் அனைவரையும் எழுப்பிவிடக் கத்தினார்.

    “வாங்க தம்பி டீ சாப்டலாம்” என்று சேகரை ஓட்டுநர் அழைத்தார்.

    இளையராஜா பாட்டு கேட்டுக்கொண்டே,டீ அருந்திக்கொண்டு சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்தான் சேகர். சில பேருந்துகள் வந்து நின்றன, சில கிளம்பின. உணவகம் நிறைந்து வழிந்துகொண்டே இருந்தது. குழந்தைகளில் சிலர் ஓடி பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர். அருந்திய டீக்கு காசு கொடுத்துவிட்டு சேகரும் ஓட்டுநரும் பேருந்தில் ஏறிக் கொண்டார்கள்.

    நடத்துநர் அதன்பின் வந்து ஏறி, “எல்லாரும் பக்கத்து சீட்டுல இருந்த ஆளு இருந்தாங்களான்னு பாத்துக்கங்க” என்றார். “இருக்காங்க, இருக்காங்க” என்று ஆங்காங்கே பதில்களும் தலையாடல்களும் நிகழ்ந்தன.

    “நாளைக்கு காலைல இண்டர்வியூ இருக்கு! நா கொஞ்ச நேரம் தூங்குறேன் ணே” என்று நடத்துநரிடம் விடைபெற்றுச் சென்றான் சேகர். இந்தமுறை எந்தத் தொந்தரவும் இன்றி கொஞ்ச நேரம் நிம்மதியாகக் கண்ணயர்ந்தான்.

    “தம்பி கோயம்பேடு வந்திருச்சுப்பா” என்று சற்றைக்கெல்லாம் நடத்துநர் சேகரை உசுப்பினார். சேகர் பையை எடுத்துக்கொண்டு இறங்க முற்பட்டபோது, “தம்பி ஒரு நிமிஷம் நில்லுங்க!” என்று ஓட்டுநரின் குரல் அவனை நிறுத்தியது.

    “என்ன ணே”

    “சொல்றேன்னு தப்பா நெனைக்காதீங்க. ராத்திரி நீங்க சென்னைக்கு வேல தேடி வந்ததே அதிக சம்பளங் கெடைக்கும். அதவெச்சு ஒங்க பொன்னுக்கு நல்ல வாழ்க்க தரணும்னு சொன்னீங்க. வேல கெடச்சா நீங்க இங்க இருப்பீங்க! ஒங்க குடும்பம் ஊர்ல இருக்கும். இப்ப தான் ஒங்க பொன்னு வளர ஆரம்பிச்சிருக்கா! இப்ப தான் நீங்க அவளோட இருக்க முடியும். இருக்கணும். ஒங்களோட அன்பு அவளுக்குத் தேவ. இப்ப தான் அவ ஒலக்த்த புரிஞ்சிக்க ஆரம்பிச்சிருப்பா. அவள வழி நடத்த நீங்க அவ கூட தான் தம்பி இருக்கணும். இத நான் ஏன் சொல்றேன்னா, எனக்கும் பதினேழு வயசுல ஒரு பொன்னு இருக்கா. அவள நான் நல்லா பாத்துக்கணும்னு ராப்பகலா வேல செய்யுறேன். நான் வீட்டுக்குப் போறப்ப அவ தூங்கிருப்பா! தீபாவளி, பொங்கலப்பலாம் கூட அவ கூட கொண்டாடுனது கம்மி தான். அவளுக்காக இவ்வளவு கஷ்டப்பட்டேன். ஆனா அவகிட்ட இருந்து அவளோட சந்தோஷத்தப் பகிர்ந்துக்கவும், துக்கத்துல ஆறுதல் சொல்லவும் என்னால முடியல. என்ன மாதிரி நீங்களும் கஷ்ட்டப்படக் கூடாதுன்னு தான் சொல்றேன் தம்பி! தப்பா நெனச்சுக்காதீங்க” என்று வழிந்த கண்ணீரைத் துடைத்தபடி சென்றார் ஓட்டுநர்.

    அவன் நெஞ்சை ஊசிகள் தைத்தன. கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியே வந்தான். பொம்மைக் கடையைத் தேடினான்.

    அவனது இந்து குட்டிக்கு “டெடி பியர்” வாங்குவதற்கு….

    Share
  • (Peer Reviewed) ஆகமம்

    முனைவர் ஹெப்ஸி ரோஸ் மேரி, அ.
    உதவிப் பேராசிரியர், தமிழ்த் துறை
    கேரளப் பல்கலைக்கழகம்
    திருவனந்தபுரம்

    ஆகமம்

             எழுத்துக்கள் தம்முள் புணர்வதைத் தமிழில் புணர்ச்சி என்றும் வடமொழியில் சந்தி என்றும் அழைப்பர்.  சந்தியை அகச்சந்தி (Internal Sandhi) என்றும் புறச்சந்தி (External Sandhi) என்றும் இருவகைப்படுத்துவர்.  ஒரு சொல்லின் இரு கூறுகளுக்கிடையே நிகழும் சந்தியை அகச்சந்தி என்றும் (வந்தான், அங்கு), இரண்டு சொற்களுக்கிடையே நிகழும் சந்தியைப் புறச்சந்தி என்றும் கூறுவர்.  இவ்வகைப் புணர்ச்சியில் தோன்றல், திரிதல், கெடுதல் என்னும் மூன்று விகாரங்கள் நிகழும். தோன்றல் விகாரத்தை வடமொழியில் ஆகமம் என்பர்.  இக்கட்டுரை தொல்காப்பியம் லீலாதிலகம் கூறும் தோன்றல் விகாரத்தை விளக்க முயல்கிறது.

    புணர்ச்சி விதிகள் தோன்றக் காரணம்

          தமிழ் எழுத்திலக்கணத்தின் உயிர்ப்பகுதி புணரியல் தான்.  அதனாலேயே எழுத்ததிகாரத்தின் பெரும்பகுதியையும் புணரியல் பற்றிக்கொண்டு இருக்கிறது என்று குறிப்பிடுகிறார் தமிழ் வரலாற்றிலக்கண ஆசிரியர் ஆ. வேலுப்பிள்ளை. புலமையும் வித்துவத் தன்மையும் காட்டுவதே முக்கியம் என்ற கருத்து நிலவிய காலத்தில் தோன்றிய உரைநடையிலும் செய்யுளிலும் கடின சந்தி விகாரங்களை அமைத்துக் கடின நடையில் தமிழறிஞர் எழுதிவந்தனர்.  கருத்துத் தெளிவே முக்கியம் கருத்தைப் புலப்படுத்த மொழி ஒரு கருவியே என்ற கருத்து இன்று நிலவுவதால் இன்றைய தமிழ் நடையில் சந்தி விகாரங்கள் பெரும்பாலும் அவசியமான இடங்களிலேயே இடம்பெறுகின்றன என்று கூறுகின்றார்.  இன்றைய நிலையில் விரிவான அளவில் புணர்ச்சி முறைகள் நமது மொழிக்கு வேண்டியதில்லை என்னும் கருத்தினை அவர் வலியுறுத்துகிறார்.  ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் விரிவான முறையில் புணர்ச்சி விதிகள் பற்றித் தமிழ் இலக்கண நூலால் கூறவேண்டிய தேவையிருந்தது.  சொற்களுக்கு இடையே இடைவெளியிட்டு எழுதும் வழக்கம் அச்சு இயந்திர வரவாலும் ஆங்கிலமொழிச் செல்வாக்காலும் ஏற்பட்டது அதற்கு முன்னர் எழுதுகருவிகள்  காரணமாக எவ்வளவு தூரம் எல்லாச் சொற்களையும் தொடுத்து எழுத முடியுமோ அவ்வளவுக்கு எழுது முயற்சியும் சிக்கனப்படுத்தப்பட்டன. இத்தகைய சிக்கன முயற்சிக்குப் புணர்ச்சி விதிகள் பெருமளவும் உதவின என்று சண்முகதாஸ் குறிப்பிடுகிறார்(2008:82).

              அன்றைய வழக்கில் இருந்த செய்யுள் வடிவமும் பெரும்பாலான புணர்ச்சி விதிகள் செய்யுள் நோக்கில்  அமைக்கக் காரணமாயின.  இக்கருத்தினைச் சொல்லிலக்கணத்தில் யாப்பின் செல்வாக்குப் பற்றி எழுதிய பண்டிதர் க.வீரகக்தியின் கருத்துக்கள் இதற்கு வலுசேர்க்கும்.  அவர் வெவ்வேறு ஓசையின் ஒழுங்கான வரையறைகளே யாப்பிலக்கணமாகி இலக்கணத் துறைகளில் ஒன்றாக விரிவும் தெளிவும் பெற்றுள்ளது.   நேர்சீராயில்லாத சீரமைப்பும் தளைப்பிணிப்பும் பாவின் நீரோசையைச் சிதைத்து அதனை உரைநடைக்குள் தள்ளிவைக்கும்.  “எழுத்திற்கு மாத்திரை கோடலும் அசைத்தலும் சீர்செய்தலும் தளையறுத்தலும் ஓசை பற்றி அல்லது எழுத்துப் பற்றியன்று” என்று கூறும் சிவஞான முனிவரின் விளக்கம் ஓசைக்குள் செல்வாக்கைத் தெளிவாகத் தெரிய வைக்கின்றது.  ஓசை மாசுபடாதிருப்பதற்காக எழுத்தும் சொல்லும் சொற்றொடரும் வேண்டிய இடங்களில் யாப்புக் கட்டுக்கோப்புக் கருதித் தம் இயல்பான அமைதி நிலையிழந்து ஓசை ஓட்டத்திற்குப் பாதை திறந்துவிடுதல் வேண்டும்.  அன்றி ஓசை இவற்றிற்கு விலகிக் கொடுக்காது. விலகின் யாப்பு யாப்பற்றதாய் விடும்.  யாப்பின் செல்வாக்கு இன்றேல் எழுத்திலக்கணம் இத்துணை விரிவடைய இடமில்லை.  சார்பெழுத்துக்களின் விரிவு பல்வகைப்பட்ட விகாரங்கள் எல்லாம் யாப்பின் தாக்கமே(2008:116) என்ற பண்டிதர் க.வீரகத்தியின் கருத்து இங்கு எண்ணத்தக்கது. இதிலிருந்து தமிழ் இலக்கணங்களில் ஏன் பெருந்தொகையான புணர்ச்சி விதிகள் அமைக்கப்பட்டன என்பதற்குரிய காரணத்தினை ஓரளவு ஊகிக்கலாம்.

    தொல்காப்பியமும் புணர்ச்சி விதிகளும்

              தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஆறு இயல்களில் புணர்ச்சி பற்றிக் கூறுகிறது.  புணர்ச்சி பற்றிய பொதுவான கருத்துக்களெல்லாம் புணரியல் என்னும் இயலிலேயே வகைப்படுத்துகிறார்.  முதல் நூற்பாவில் புணர்ச்சி நடைபெறக்கூடிய இடமும் அதனுடன் தொடர்புடைய எழுத்துக்களும் கூறப்படுகின்றன. மொழிக்கு முதலாக வருமென்று கூறிய எழுத்துக்கள் முதனிலையிலும் மொழிக்கு ஈறாக வருமென்று முன்னர் கூறிய எழுத்துக்கள் ஈற்று நிலையிலும் வரும் என்பதை,

                 “எல்லா மொழிக்கும் இறுதியும் முதலும்

                   மெய்யெ யுயிரென்று ஆயிரியல” ( தொல். 104)

    என்று குறிப்பிடுகிறார்.

    புணர்ச்சிக்குரிய மொழிகளினியல்பு அடுத்து கூறப்படுகின்றது. இரண்டு சொற்களினெல்லைகளில் புணர்ச்சி நடைபெறும். அவ்வாறான சொற்களில் புணர்ச்சிக்குரிய ஈற்றினை  நிறுத்தச்சொல் (நிலைமொழி) என்றும் முதனிலையுடையதைக் குறித்தசொல் (வருமொழி) என்றும் கூறுவார். அவ்விருசொற்களின் ஈறும்முதலும் வரும்மாற்றினை,

          “உயிரிறு சொல்முன் உயிவரு வழியும்

            உயிரிறு சொல்முன் மெய்வரு வழியும்”

    தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். அவ்விருவகைப்பட்ட சொற்களும் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதைத் தொல்காப்பியர் பின்வருமாறு வகைப்படுத்துகிறார். பெயர் + பெயர், பெயர் + தொழில் (வினை), தொழில் + பெயர், தொழில் + தொழில் என்பனவாகும்.  புணர்ச்சி காரணமாக ஏற்படும் மாற்றங்கள் மூன்று வகைப்படும். அவை,

              “மெய்பிறிதாதல் மிகுதல் குன்றலென்று

             இவ்வெனமொழிப திரியுமாறே”  ( தொல். 110)

    மெய்வேறுபடுதல் (திரிதல்) மிகுதல், குன்றல் என்பனவாகும்.   திரிதல் பண்பு மெய்யெழுத்துக்கு மட்டும் உரியது.  மிகுதலும் குன்றுதலும் உயிருக்கும் மெய்யுக்கும் பொதுவானவை. இவ்வாறு நடைபெறும் புணர்ச்சியினைத் தொல்காப்பியர் வேற்றுமைப்  புணர்ச்சி என்றும் அல்வழிப்புணர்ச்சி என்றும் இருவகையாகப் பாகுபாடு செய்வர்.  உருபுகள், சாரியைகள் புணர்ச்சியிலே எவ்வாறு இடம்பெறுகின்றன என்றும்  புணர்ச்சி காரணமாகப் பொருள் வேறுபடுதலையும் புணரியலில் எடுத்துரைக்கிறார்.

    ஆனால் லீலாதிலகம் புணர்ச்சி விதிகளை விரிவாகவும் விளக்கமாகவும் கூறவில்லை.  தமிழ்ப்புணர்ச்சி விதிகளையே பின்பற்றியுள்ளதாகக் கே. என். எழுத்தச்சன் குறிப்பிடுகிறார்.  லீலா திலகம் புணர்ச்சிக்கு 28 விதிகள் தான் கூறியுள்ளது.  அவர் கூறும் விதிகள் உயிர்முன் உயிர், உயிர்முன் மெய், மெய்முன் மெய் என்ற மூன்று அமைப்பில் காணப்படுகிறது.  மெய்முன் உயிர் என்ற அமைப்பில் இடம்பெறவில்லை.  பெரும்பாலும் பெயர் + பெயர் அமைப்பிற்கே விதிகள் கூறுகின்றது..

    ஆகமம்

    புணர்ச்சி நடைபெறுமிடத்து மூன்று வகையான மாற்றங்கள் நிகழுமெனத் தமிழ் இலக்கண நூலார் குறிப்பிடுகின்றனர்.   அம்மாற்றங்களாவன தோன்றல், திரிதல், கெடுதலாகும். தோன்றல் புனர்ச்சியை வடமொழியாளர் ஆகம சந்தி என்பர். தோன்றல் புணர்ச்சி காரணமாகச் சில இடங்களில் எழுத்துக்களோ சாரியைகளோ தோன்றுவது பற்றித் தொல்காப்பியர் விதியமைத்துள்ளார். பொதுவாக இரண்டு உயிரெழுத்துக்கள் புணரும்போது அவற்றை ஒன்று சேர்ப்பதற்கு அல்லது அவ்விடத்து விட்டிசைத்தலைத் தடுக்க யகர வகரம் உடம்படு மெய்யாக வரும்.  தொல்காப்பியர் உடம்படு மெய்யின் உருபுகொளல் வரையார் (தொல். எழுத்து. 141) எனப் பொதுவாகக் கூறுகிறாரே ஒழிய  இன்னின்ன மெய்கள் உடம்படுமெய்களாக வரும் என்றும் இன்ன உயிர்முன் இன்ன உயிர் வருமென்று குறிப்பிடவில்லை.   லீலாதிலகம் இரண்டு உயிர்களுக்கு இடையில் யகரம் தோன்றும் என்றும் தனித்து நிற்கும் அ, இ ஆகியவற்றின் முன் உயிர் வரின் வகரம் தோன்றும்.  சிலயிடத்து இரட்டித்து வரும் என்று குறிப்பிடுகிறது.

    எ.டு

            ஆன + அது                  =             ஆனயது

            காண்மூ + அது          =             காண்மூவது

           அ + அழகு                     =             அவழகு

           இ  + அழகு                    =             இவழகு

    லீலாதிலகம்  நன்னூலைப்  பின்பற்றவில்லை என்பது இங்கு தெளிவாகிறது.  நன்னூலார் “இ ஈ ஐ வழி யவ்வும் ஏனைய உயிர்வரின் வவ்வும்” என்று குறிப்பிடுகிறார். ‘இ’ யின் முன் உயிர் வரின் வகரம் வரும் என்று கூறுவதிலிருந்து இதனை அறியலாம். “ய வ முன் வரினே வகர ஒற்றும்’’ (தொல்.உயிர்மயங். 4) இந்த தொல்காப்பிய நூற்பாவை ஒட்டியே “தஸ்ய  தித்வம் வ சிலயிடத்து இரட்டும்” என்று லீலாதிலகம் குறிப்பிடுகிது.

    எ.டு

            அ + அழகு     =             அவ்வழகு

           இ + அழகு     =             இவ்வழகு

    பொதுவாகத் திராவிட மொழிகள் எல்லாவற்றிலும் இரண்டு உயிர்களுக்கிடையே உண்டாகும் இடைவெளி ‘வ’கர அல்லது ‘ய’கர உடம்படுமெய் நுழைவால் தடுக்கப்பெறும் என்று கால்டுவெல் கூறுவார்.  திராவிட மொழிக் குடும்பத்தின் அடிப்படை என்று இதனைக் கூறலாம்.

             “சுட்டின் முன்னர் ஞ ந மத் தோன்றின்

            ஒட்டிய ஒற்றிடை மிகுதல் வேண்டும்” ( தொல். எழுத்து. 206)

    இதனை அடியொற்றி லீலாதிலகம் “கேவலாஞ்ஞானமவா நாம் ச”  வினாப்பொருளில் வருகின்ற எகரத் தனிச் சொல்லின்முன் வரும் ஞ ந ம வ ஆகிய எழுத்துக்கள் இரட்டும் என்று குறிப்பிடுகிறது.

    எ.டு

           எ + ஞாண்  = எஞ்ஞாண், எந்நூல், எம்மரம்

    தொகைச் சொற்களிலும் ஒ, ந, ம வக்கள் அல்லாத மெய்கள் இரட்டும்.

    எ.டு

          ஆன  + காடு = ஆனக்காடு ( யானைகள் வாழும் இடம்)

    ய ர ல ழ ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும் (லீ.தி. 56) என்ற லீலாதிலகம் கூறுவது ‘ரகார இறுதி யகார இயற்றே’ (தொல். 363) என்ற தொல்காப்பிய நூற்பாவை அடியொற்றியாகும்.

    எ.டு

           பொய் + குதிர =        பொய்க்குதிர

           நீ + கோழி      =   நீர்க்கோழி

    ‘அளவும் நிறையும் வேற்றுமையியல ( தொல். 32) என்ற நூற்பாவைப் பின்பற்றி மகர ஈற்றுப் பெயரின்  முன் வல்லினம் வரின் இரட்டும் என்று லீலாதிலகம் குறிப்பிடுகிறது.

    எ.டு

           வட்டம்   +  பலக      = வட்டப்பலக

          சதுரம்  + கிணறு  = சதுரக்கிணறு

    ‘யரழளப்ய : கசதபனம த்வித்வம்’(லீ.தி. 388)  ய, ர, ல, ழ, ள ஆகியவற்றின் முன்வரும் கசதபக்கள் இரட்டும்.

    எ.டு

           வால் + கிண்டி          = வால்க்கிண்டி

           முள்   + கொம்பு       = முள்க்கொம்பு

    இவ்வாறு சொற்கள் இரண்டினை இணைத்து ஒரு சொற்றொடராக மாற்றுவதற்குப் புணர்ச்சியில் தோன்றல் விகாரம் பயன்படுகிறது.  உச்சரிப்பினை இலகுவாக்குவதற்கு மொழியில் பல இடங்களில் தோன்றல் விகாரம் நடைபெறுகின்றது.  பிற்கால மலையாள இலக்கண ஆசிரியர்கள் லீலாதிலகம் அமைத்த ஆகம சந்தி மலையாளத்துக்குரியது என்று கூறுவர். ஆனால் லீலாதிலகம் ஆகமசந்திக்குக் கூறும் விதிகள் அனைத்தும் தொல்காப்பியத்தைப் பின்பற்றி அமைந்தவையாகும்.

    பயன்பட்ட நூல்கள்

    1. இளையபெருமாள், மா., லீலாதிலகம், கேரளப் பல்கலைக்கழக வெளியீடு.
    2. இளம்பூரணர், தொல்காப்பியம், கழக வெளியீடு, சென்னை.
    3. சண்முகதாஸ், தமிழ் மொழி இயல்பு, பாவை வெளியீடு, 2008.

     ========================================

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review)

    லீலா திலகம், மணிப்பிரவாள மொழிநடையை விளக்குவதற்காக எழுந்த இலக்கணம். இக்கட்டுரையில் தொல்காப்பியம் கூறும் தோன்றல் புணர்ச்சி விதியை லீலா திலகத்தின் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதியோடு ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார் கட்டுரையாளர். அதன் விளைவாகத் தொல்காப்பியத்தின் தோன்றல் புணர்ச்சி விதி தான் லீலா திலகத்தில் கூறப்பட்டிருக்கும் ஆகம சந்தி என்னும் புணர்ச்சி விதி என்று இக்கட்டுரையின் மூலம் நிறுவுகிறார். கட்டுரையில் பயன்படுத்திய நூல்களின் விவரங்கள், அவற்றின் பதிப்பு ஆண்டுகள் ஆகியவற்றை ஆய்வாளர் கட்டாயம்  பதிவு செய்ய வேண்டும்.

    ========================================

    Share