Blog

  • உள்ளம் என்பதோர் பூனை

    -விவேக்பாரதி

    உள்ள மென்பதோர் பூனையடா – அது
    உரசித் திரிவதே வேலையடா
    உள்ளி ருக்குதோ வெளியி ருக்குதோ
    உணருவார் அதிகம் இல்லையடா!

    நாம் வளர்க்கிறோம் என்பதையே – பல
    நாள் மறந்திடும் பிறவியடா!
    ஆம் நமக்குளே அதுதன் ஆட்சியை
    அமைத்து வாழ்கின்ற பிராணியடா! (உள்ளம்)

    சொகுசுக் காகவே வாழுமடா! – அது
    சுவையி லாததைச் சாடுமடா!
    நகத்தில் கீறலும் கடிகள் நூறுமாய்
    நம்மைக் காயமே செய்யுமடா! (உள்ளம்)

    அந்தப் பூனையைக் கொஞ்சுவதும் – நீ
    ஆவ தில்லையெனத் தள்ளுவதும்
    நந்தம் கைகளில் இல்லை! யாவையும்
    நாயகன் செயும் ஆட்டமடா! (உள்ளம்)

    காலி டுக்கிலே சுற்றுவதும் – ஒரு
    கதையி லாமலே கத்துவதும்
    வாலை ஆட்டியே பற்றுவ தும்நம்
    வாழ்க்கை நாடகத் தங்கமடா! (உள்ளம்)

    காலம் என்கிற வீட்டினிலே – சதி
    காரப் பூனையும் குடித்தனமாம்!
    ஓலம் இட்டாலும் ஓய்வெ டுத்தாலும்
    உள்ளம் இல்லாமல் வெற்றிடமாம்!

    அடப்போடா!
    உள்ளம் என்பதோர் பூனையடா!!

    -19.02.2019

    Share
  • நினைவுகள்

    -கவிஞர் பூராம்

    கண்குளத்தில்  விழுந்து மூச்சடங்கி போனேன்
    இதயபிச்சியில் தேனலைந்து தொலைந்து போனேன்

    பொன்தாள் மண்ணடியில் கிடந்துறங்கும் என்னை
    நினைவிருக்க நியாயமில்லை

    உன் வாசம் போகமறுக்கும்
    நாசியில் புழுக்களோடு கதையாடல்.

    மற என்கிறது நா கூசாமல்
    பட்ட துன்பம் தெரியாது அதற்கு

    புலம்பாதே வாயை மூடு என்கிறது
    கோபத்தில் ஓங்கி அடித்தேன்
    இரத்தக்கறையோடு அது
    அவளாக மாறி

    சிறு புன்னகை வந்துபோனது
    மரணத்தைப்போல.

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 5

    -மேகலா இராமமூர்த்தி

    களப்பிரர் காலத்திலும் அதைத் தொடர்ந்த பக்தி இயக்க காலத்திலும் (இதைப் பல்லவர் காலம் என்றும் குறிக்கலாம்) அறிவுத் துறையில் பெண்களின் பங்களிப்பு அரிதினும் அரிதாகவே காணக் கிடைக்கின்றது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் இக்காலகட்டத்தில் (கி.பி. 5/6ஆம் நூற்றாண்டு) காரைக்கால் அம்மையாரின் தீந்தமிழ்ப் பனுவல்கள் சற்றே நமக்கு ஆறுதலளிக்கின்றன. எனினும் அவரும் அன்றைய பெண்களின் சமூகப் பொருளாதார நிலை குறித்தோ, அவர்களின் எதிர்பார்ப்புகள் குறித்தோ எதனையும் தம் பாடல்களில் பதிவு செய்யவில்லை. மாறாக, அவை அனைத்துமே பக்திச் சுவை நனி சொட்டச் சொட்டப் பாடிய இறைப் பாடல்களாகவே இருக்கின்றன.

    பெண் கவிஞர் என்ற வகையில் அவரை நினைந்து நாம் மகிழும் அதே வேளையில், அவருடைய தனிப்பட்ட வாழ்வைக் குறித்து வருந்தவேண்டியவர்களாய் இருக்கின்றோம். இவரைக் கைப்பிடித்த கணவன் இவரின் இறையாற்றல் கண்டு அஞ்சி அகல்வதும், வேறொரு பெண்ணை மணப்பதும், இவரோ அவனையே நினைந்து உருகுவதும், பின் உறவினர்கள் துணையோடு கணவனைச் சந்திக்கும்போது அவன் தன் இரண்டாம் மனைவியோடும் மகளோடும் இவர் காலில் விழுவதும், கணவனுக்கு உதவாத உடல் எனக்கெதற்கு என்று இவர் பேய்க்கோலம் கொள்வதும் என இவர் குறித்து நாமறியும் செய்திகள் அனைத்துமே ’கணவனன்றிப் பெண்டிர்க்குப் புகலில்லை’ என்ற அன்றைய ஆணாதிக்க மனோநிலையையும், கணவனால் கைவிடப்பட்ட பெண்களின் அவலநிலையையும் வெளிக்காட்டுவனவாகவே  உள்ளன.

    இவரைத் தொடர்ந்து நமக்குக் காணக் கிடைக்கும் மற்றொரு பெண் படைப்பாளி பட்டர்பிரான் கோதையாக அடையாளப்படுத்தப்படும் ஆண்டாள். இவருடைய பாடல்களிலும் அரங்கன் மீதான இவரின் ஒருதலைக்காதலும், அவனோடு சேரமுடியாத விரகமுமே மேலோங்கி நிற்கின்றன. இவரைப் பற்றி இருவேறு விதமான கருத்துக்களும் நிலவுகின்றன.

    சிலர், இவர் பெரியாழ்வாரின் அருமை மகளார்; சூடிக்கொடுத்த சுடர்க்கொடியார் என்று சுட்ட, வேறு சிலரோ பட்டர்பிரான் கோதை என்பது பெரியாழ்வாரே தம்மைப் பெண்பாலராகக் காட்டிக்கொள்வதற்காகப் புனைந்துகொண்ட பெயர் என்ற கருத்துடையோராகவும் இருக்கின்றனர். சக்கரவர்த்தி. இராஜாகோபாலாசாரியார் (இராஜாஜி) போன்ற பழுத்த வைணவர்கள்கூடக் கோதை என்பது பெரியாழ்வாரின் புனைபெயரே என்ற கருத்தையே வெளிப்படுத்தியிருக்கின்றனர். பெரியாழ்வாரின் பாடல்களிலும் ஆண்டாளின் பாடல்களிலும் காணக்கிடைக்கின்ற சிந்தனை ஒருமையும், எடுத்தாளப்பட்டிருக்கும் சொல்லாட்சிகளின் ஒற்றுமையும் இக்கருத்து உண்மைதானோ என்ற ஐயுறவை நமக்கும் ஏற்படுத்தவே செய்கின்றன. எனினும் இக்கருத்தை உறுதிப்படுத்துதற்கோ, புறந்தள்ளுதற்கோ நம்மிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை.

    பெண்களின் படைப்புலகம் இவ்வாறிருக்க, பக்தி இயக்க காலம் தமிழக மக்களைத் தமிழ்மண்ணின் தொன்மைச் சமயங்களான சைவ விண்ணவ சமயங்களின்பால் திருப்புவதில் வெற்றி கண்டது என்றே கூறவேண்டும். இறைத்தொண்டு செய்வதையே தம் வாழ்வின் முதன்மை நோக்கமாகக் கொண்டிருந்த இறையடியார்கள் பலர் இக்காலகட்டத்தில் ஆண்களிலும் பெண்களிலும் இருந்திருக்கின்றனர்; இவர்கள் ’தேவரடியார்’ என்ற பெயரால் குறிக்கப்பட்டிருக்கின்றனர்.

    திருவாசகத்திலுள்ள திருவெம்பாவையில் மணிவாசக அடிகள், ”குற்றமற்ற குடியில் தோன்றிய, சிவன் கோயிலில் பணிசெய்யும் பெண்களே” என்று விளிப்பது தேவரடியாராய்த் தொண்டாற்றிய பெண்டிரையே என்று கொள்ளலாம்.

    கோதில் குலத்தரன்றன் கோயில் பிணாப்பிள்ளைகாள்!” (திருவெம் – 10)

    கோயில்களில் இறைவர்க்கு மட்டுமே தொண்டுசெய்துவந்த நற்குடிப் பெண்களாகவே இவர்களை அடையாளப்படுத்தியுள்ளார் அடிகள் என்பது ஈண்டு நோக்கத்தக்கது.

    பிற்காலச் சோழர்களில் தலைசிறந்தவனான முதலாம் இராசராசன் காலத்தில் கோயிற்பணிகளைக் குறைவறச் செய்வதற்காகப் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நானூறு தேவரடியார்கள் குடியேற்றப்பட்டனர். அவர்களுக்குக் கோயிலை அடுத்து வடக்கிலும் தெற்கிலும் மனைகள் அமைத்துக் கொடுக்கப்பட்டன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வேலி நிலம் நிவந்தம் கொடுக்கப்பட்டது என்று அறிகின்றோம்.

    இப்பெண்களின் பெயர்களின்முன் ’நக்கன்’ என்ற முன்னொட்டு (prefix) சேர்க்கப்பட்டிருக்கின்றது. நக்கன் எடுத்தபாதம், நக்கன் சோழகுல சுந்தரி போன்றோர் தேவரடியார்களில் சிலர். நக்கன் என்ற ’அடை’யோடு இராசராச சோழனின் மனைவியரில் ஒருவரான நக்கன் தில்லை அழகியார், முதலாம் இராசேந்திரனின் மனைவியான ‘நக்கன் கருக்கமர்ந்தாள் பஞ்சவன் மாதேவி’ ஆகியோரும் இருந்திருப்பதைச் சோழர்காலக் கல்வெட்டுகள் அறியத் தருகின்றன.

    அதுபோலவே பழுவூர்க் கல்வெட்டுகளில் காணப்படும்,
    ”இத்தளி தேவனார் மகளார் நக்கன் அக்கார நங்கையார்
    இத்தளி தேவனார் மகளார் நக்கன் மானதிரி மகள் நக்கன் கண்ட பிராட்டி”

    போன்ற தொடர்கள் தளி தேவரான (தளி-கோயில்) இறைவனின் ம(க்)களாகவே நக்கன் எனும் முன்னொட்டோடு விளங்கிய பெண்கள் கருதப்பட்டிருக்கின்றார்கள் என்பதைப் புலப்படுத்துகின்றது. அப்படியாயின் இத்தேவரடியார்கள் எப்போதுமுதல் ஒழுக்கம் தவறிய பொதுமகளிராக மாறிப்போனார்கள் அல்லது மாற்றப்பட்டார்கள் என்னும் வினா எழுகின்றது. 

    மீண்டும் நம் பார்வையைப் படைப்பாளிகள் பக்கம் திருப்புவோம்.

    பத்தாம் நூற்றாண்டு, அதற்கடுத்துவரும் காலங்களில் காணலாகும் படைப்பாளிகளை நோக்கின், கல்வியில் பெரிய கம்பர், கவி ராட்சதர் ஒட்டக்கூத்தர், பெரியபுராணம் யாத்த சேக்கிழார், கலிங்கத்துப் பரணி பாடிய செயங்கொண்டார் என்று ஆண்பாற் படைப்பாளிகள் பலர் வரிசைகட்டி நிற்க, அவர்களுக்கு மத்தியில் ’அத்திபூத்தாற் போல்’ ஔவையார் எனும் புலவர் பெருமாட்டி ஒருவர் காட்சி தருகின்றார்.

    பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்படும் இந்த ஔவையாரும், சங்க கால ஔவையாரும் வேறு வேறானவர்கள் என்பதை நாம் நினைவிற்கொள்ள வேண்டும். இவர் இயற்றியவையாக ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி, மூதுரை போன்ற நீதிநூல்கள் கிடைக்கின்றன. இவையேயன்றித் தனிப்பாடல்கள் சிலவும் இவர் பெயரில் காணப்படுகின்றன. அதில் ஒரு தனிப்பாடல் சுவையான பின்னணியைக் கொண்டதாகயிருக்கின்றது.

    சோழமன்னன் ஒருவன் ஓரிரவுக்குள் நாலு கோடி பாடல்கள் பாடவேண்டும் என்று புலவர்களிடம் கட்டளை இட்டானாம். ஓரிரவுக்குள் நாலு கோடி பாடல்கள் பாடமுடியுமா? என்று அவர்கள் நிலைகலங்கி நின்றிருக்க, அப்போது அங்கு வந்த ஔவை இதனையறிந்து, ”இதற்காகவா கலங்கி நிற்கிறீர்கள்? நான் பாடுகிறேன் நாலுகோடிப் பாடல்; இதனை உங்கள் மன்னனிடம் கொண்டுபோய்க் கொடுங்கள்!” என்று கூறிவிட்டுப் பின்வரும் பாடலைப் பாடினாராம்.

    ”மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று 
    மிதியாமை கோடி பெறும்;
     
    உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
     
    உண்ணாமை கோடி பெறும்;
     
    கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
     
    கூடுதல் கோடி பெறும்;
     
    கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
     
    கோடாமை கோடி பெறும்.”
      (ஔவையார் தனிப்பாடல் – 42)

    ஒவ்வோர் அடியிலும் ‘கோடி’ என்று வருமாறு அமைத்து நாலுகோடி மதிப்புள்ள செய்திகளை நாலடியில் பாடிமுடித்துவிட்ட ஔவையின் புலமையையும் சாமர்த்தியத்தையும் மற்ற புலவர்கள் வியந்து பாராட்டினராம்.

     [தொடரும்]

     துணைநின்றவை:

    1. http://www.tamilvu.org/courses/degree/c012/c0122/html/c012222.htm
    2. http://www.tamilsurangam.in/tamil_world/chola_history/first_rajaraja_8.html
    3. http://www.varalaaru.com/design/article.aspx?ArticleID=358

     

     

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 13

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 13 – அடக்கம் உடைமை

    குறள் 121:

    அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
    ஆரிருள் உய்த்து விடும்

    அடக்கம் ஒருத்தன அவங்காலத்துக்குப் பொறவு தேவர் உலகத்துல கொண்டு சேக்கும். அடங்காம வாழுதது அவனோட வாழ்க்கைய பொல்லாத இருட்டு போல ஆக்கிவிட்டுரும்.

    குறள் 122:

    காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
    அதனினூஉங் கில்லை உயிர்க்கு

    அடக்கத்த செல்வமா எண்ணி காக்கணும். அதக் காட்டிலும் பெரிய செல்வம்னு வேறெதுவும் இல்ல.

    குறள் 123:

    செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்
    தாற்றின் அடங்கப் பெறின்

    அறிஞ்சுக்கிடவேண்டியத அறிஞ்சுகிட்டு நல்ல வழில அடங்கி இருக்குதவங்களோட அடக்க கொணத்த நல்லவங்க உணந்து பாராட்டுவாங்க. ..

    குறள் 124:

    நிலையின் திரியா தடங்கியான் தோற்றம்
    மலையினும் மாணப் பெரிது

     

    தன்னோட நேர்மையான வழிய விட்டுபோட்டு அங்ஙன இங்ஙன  விலகிப் போவாம அடக்கஒடுக்கமா வாழுதவனோட உருவம் பொறத்தியாரு மனசுக்குள்ள மலைய விட ஒசந்ததா இருக்கும்.

    குறள் 125:

    எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும்
    செல்வர்க்கே செல்வம் தகைத்து

     

    பணிவா இருக்குதது எல்லாருக்கும் நல்லது. அதிலயும் செல்வம் இருக்குதவங்களுக்கு அது மேப்படி சேந்த ஒரு செல்வம்.

    குறள் 126:

    ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
    எழுமையும் ஏமாப் புடைத்து

    ஆமை எப்டி நாலுகாலையும் ஒருதலையையும் ஓட்டுக்குள்ளார மறச்சிக்கிடுதோ அப்டி ஒருத்தன் தன்னோட அஞ்சு பொறிகளையும் நியாயத்துக்கு கேடு வரும்போது அடக்கிக்கிடுவாம்னாஅந்த கொணம் அவனுக்கு ஏழேழு பொறப்பிலயும் காவலா நிக்கும்.  

    குறள் 127:

    யாகாவா ராயினும் நாகாக்க காவாக்காற்
    சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு

    ஒருத்தன் எத காக்க முடியலனாலும் நாக்க மட்டுமாச்சும் காக்கணும். இல்லைன்னா அவன் சொன்ன சொல்லே அவனோட துன்பத்துக்கு காரணமாப் போயிடும்.

    குறள் 128:

    ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின்
    நன்றாகா தாகி விடும்

    ஒருத்தன் பேசுத தீய சொல்லால வருத துன்பம் சிறிசா இருந்தாலும் அந்த கொற இருக்கவனுக்கு அவன் பேசுத மத்த நல்ல சொல்லால வருத நல்லதும் கெட்டதாவே மாறிக்கிடும்.

    குறள் 129:

    தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே
    நாவினாற் சுட்ட வடு

    நெருப்பு சுடும்போது ஏற்படுத புண்ணால  ஒடம்புல தடம் இருக்குமே தவித்து உள்ள இருக்க புண் ஆறிக்கிடும். மனசு நோவ கடும் வார்த்தயால வையும்போது நெஞ்சுல ஏற்படுத புண் ஆறவே ஆறாது.

    குறள் 130:

    கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி
    அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து

    நல்லா படிச்சிபோட்டுமனசுக்குள்ள கொவமில்லாம அடக்க ஒடுக்கமா வாழுத கொணம் கொண்டவன எப்பம் அடையுததுனு அறம் நேரத்த எதிர்பாத்து அவன் வழியில காத்துக் கெடக்கும்.

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 25

     திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    சிவபிரான் முதிய அந்தணனாகி ,சுந்தரர் திருமணம் நடந்த  புத்தூர்  நோக்கி  வந்த சிறப்பை முன்பு கண்டோம்!  இங்கே அவர் சுந்தரரைத் தடுத்தாட்கொள்ள ஆடிய அழகிய நாடகத்தின் தொடக்கத்தைக் காண்போம்.  சுந்தரர் புத்தூர் சிவவேதியர் சடங்கவியார் மகளைத் திருமணம் செய்துகொள்ள  வந்த திருமண மண்டபத்தில் எழுந்தருளிய முதிய அந்தணர், ‘’யாவரும் கேளுங்கள்! இங்கே திருமணம் புரிந்துகொள்ளும்  நாவலூரருக்கும் எனக்கும் இடையே ஒருவழக்கு உள்ளது! அதனை முடித்துக்கொண்டு இவர்  திருமணம் புரிந்துகொள்ளட்டும்’’    என்றார்! இதைக்கேட்ட அந்தமண்டபத்தில்  கூடியிருந்த சான்றோர்கள் மிகவும் வியப்படைந்தனர். ‘’அந்தணர்  குலத்திருமகன்! அரசரின் வளர்ப்புப்பிள்ளை! அவருடன் இவர்க்கு எப்படி வழக்கு இருக்கக்கூடும்?  இதென்ன புதிய இடையூறு!’’  என்று எண்ணினர்.

    முறைப்படி அந்த  மூத்த அந்தணரை வரவேற்று , ‘’உங்கள்வரவு எங்கள் தவப்பயன்! நீங்கள் உங்கள்கருத்தைக்  கூறுங்கள் ‘’ என்றுஒப்புதல்அளித்தனர். பழங்கால முறைப்படி அந்த  அவையினரிடம் ஒப்புதல் பெற்ற மூத்த அந்தணர்,

    கூறிய வாசகம் கேட்ட  சபையினர்  மிகவும் வியந்தனர்!  சுந்தரர் சிரித்தார் முதியஅந்தணரிடம்  ‘’எனக்கும்  உங்களுக்கும்  இடையில் உள்ள  வழக்கை முடித்தபின்னரே, திருமணம்புரிந்துகொள்வேன்! ‘’ என்றார் .

    அவையில் தம்மை இகழ்ந்து சிரித்த சுந்தரரிடம், தம் உத்தரியத்தைத் தோளில் அணிந்தபடி சென்று’’ அந்தக் காலத்தில் உன்தந்தைக்குத் தந்தையாகிய பாட்டனார்   உங்கள்   பரம்பரைக்கே எழுதிக்  கொடுத்த அடிமைச்சாசனம் இது!’’

    இதனைக் கண்டு,  அடே  , சிறுவா! சிரித்தது ஏனடா?’’ என்றார்! அவையினர்  அதிர்ச்சியடைந்தனர் சுந்தரரோ, ‘’அந்தணர்  இன்னோர் அந்தணருக்கு  அடிமையாதல் உண்டோ? இக்கிழவன் பித்தனோ?  ‘’ என்றனர்!

    உடனே மூத்தஅந்தணர்,  ‘’ நீ எத்தகைய தீச்சொற்களையும் அபவாதத்தையும் சொன்னால்,  அதற்கெல்லாம் யான்   வெட்கமடைய மாட்டேன்! அந்தஅளவுக்குப் பெரியனாகிய நீ என்னை  நன்றாக அறிந்துகொண்டிருந்தால்,  இப்படி அறிந்தவன்போல்  என்னெதிரில்  நின்று அறிவுவாசகம் பேசவேண்டா!  நீ எனக்கு  இப்போதே  அடிமைப்பணி  செய்ய வேண்டும்!’’ என்றார்!

    இதனை  அந்த அந்தணர் கூறும்போது,’’நீ என்னை நன்றாக அறிந்துகொள்ளவில்லை ! ‘’ என்றுகூறித் தம்  உத்தரியத்தைத் தோளில்  அணிந்துகொள்வது போல், தம் நஞ்சுண்ட  கண்டத்தைக் காட்டினார்! அந்தஅளவுக்கு நீ  இந்த இளம்பெண்மேல் மையல் கொள்ளும் மானுடமாய், மயங்கி,  என்னை நோக்கி, இழிந்த  சொல்லாகிய ‘’பித்தன்’’ என்றாய்! அவ்வாறே நான்  பித்தனும், பேயனும் ஆகிறேன்!  இப்போது உன்  பழைய  நினைவு வந்து என்னை அறிந்து கொள்ள வில்லை! ஆதலால் வித்தகம்பேசுகிறாய்!’’ என்றார் .  சுந்தரர் தம் அரசவாழ்வு,  அந்தணப் பெருமை இவற்றால் உயர்வு மனப்பான்மை   மயக்கத்தில், தம்நிலை அறியாமல் இருந்தார்! ‘’உடனே, எனக்கு அடிமைப்பணி செய்!’’ என்று  ஆணையிட்டார்! இவற்றையெல்லாம் விளக்கும் வகையில் சேக்கிழார் பெருந்தகை ,

    “பித்தனும் ஆகப் பின்னும் பேயனும் ஆக நீ இன்று
    எத்தனை தீங்கு சொன்னால் யாது மற்று அவற்றால் நாணேன்
    அத்தனைக்கு என்னை ஒன்றும் அறிந்திலை ஆகில் நின்று
    வித்தகம் பேச வேண்டாம் பணி செய வேண்டும்” என்றார் 

    என்று பாடியுள்ளார்! உள்ளாழ்ந்த   பெருந்தன்மையும் ,  பெருமையும்   சற்றே மோதிக்  கொண்ட  அரிய நிகழ்ச்சிஇது!  தொடர்ச்சியை மேலும்காண்போம்!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (300) – ‘கின்னரக் கலைஞர்’ சீர்காழி இராமு

    இந்த வார வல்லமையாளர் எனக் ‘கின்னரக் கலைஞர்’ சீகாழி ராமுவை அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது. கின்னரம் என்பது தமிழரின் மிகப் பழைய நரம்பிசைக் கருவி. தமிழ்நாட்டில் இக்கருவியை வில்லகம் (violin’s bow) கொண்டு மீட்டும் தமிழிசை மரபு அழிந்தொழிந்தது. கின்னரத்தின் இன்றைய பெயர் ‘கொட்டாங்கச்சி வயலின்’. இந்த அரிய கலையைக் கற்று, தமிழ்நாட்டில் மேடைகளிலும், பிளாட்பாரங்களிலும் இசைத்த சீர்காழி ராமு அண்மையில் மறைந்துவிட்டார். அவரது நினைவைப் போற்றும் வகையில் அவரது கின்னர வாசிப்புகள் தேடப்பெற்று காணொளிகளும், கேட்பொலிகளும் (ஆடியோ) இணையத்தில் வலையேற வேண்டும். அவரது 8 மக்களிடமோ, நண்பரிடமோ ராமுவின் கின்னர இசைப் பதிவுகள் கட்டாயமாய் இருக்கும். 10 பேராவது ஒவ்வொரு பழைய முழவு, துளை, நரம்பு, கஞ்சம் என்னும் சங்கீதக் கருவிகளைக் கற்று வாசிக்கும் திறன் பெறவேண்டும். சீகாழி தமிழிசையின் தலைமை ஸ்தானம். சம்பந்தர் பிறந்த ஊர். கர்நாடக மூவருக்கும் முன்பிருந்த தமிழிசை மூவர்களும் வாழ்ந்த ஊர். அவர்களில் மூத்தவர் 16ஆம் நூற்றாண்டினர் ஆகிய முத்துத்தாண்டவர் என்னும் இசைவேளாளர். அவர்தான் தில்லைக் கூத்தபிரானை முதன்முதலில் கீர்த்தனை என்னும் வடிவை அமைத்துப் பாடித் தொழுதவர் (ஆதாரம்: மு. அருணாசலம், திருச்சிற்றம்பலம் (மயிலாடுதுறை) எழுதிய நூல்கள்). ராமு என்ற இசைவாணரின் எளிய வாழ்வினைப் பற்றி அவரது நண்பர் எழுதிய ‘தீக்கதிர்’ கட்டுரையை முழுமையாகத் தருகிறேன். பலரும் அறிந்துகொள்ள வேண்டியவர், குடும்பத்தாருக்கும் உதவலாம். கின்னரத்தை ராவணஹஸ்தம் என்றும் அழைப்பதுண்டு. ராவணன் கின்னரம் தன் நரம்பால் செய்து மீட்டியதைத் தேவாரம் பாடும். கின்னரம் வாசிக்கும் இராவணனைக் காளமேகப் புலவர் பூசணிக்கும், சிவலிங்கத்துக்குமான சிலேடை  வெண்பாவில்
    அழகுறப் பாடியுள்ளார் [1].

    ஜோயப் போர் (Dr. Joep Bor) போன்ற இசையியல் அறிஞர்கள் நரம்பிசைக் கருவிகளைத தேய்த்து வாசிக்கும் வில்நாண் உடைய ‘வில்லகம்’ பற்றி இன்னும் சரியாக ஆராயவில்லை என்றே தோன்றுகிறது. அவர் போன்றவர்கள் இந்த வில்லகக்கருவி கி.பி. 10-ஆம் நூற்றாண்டின் முன் கிடைக்கவில்லை என்கின்றனர். ஆனால் தமிழகத்தின் சிவாலயங்களில் – குடைவரைகள், கட்டுமானக் கோவில்கள் இன்னும் பார்க்கவில்லை. திருச்சி டாக்டர் இரா. கலைக்கோவன், அவரது மாணவி அர. அகிலா எழுதிய கட்டுரைகளில் சிரட்டைக் கின்னரி கொண்ட சிற்பங்களைப் பற்றி நிறைய 20 ஆண்டு முன்னரே எழுதியுள்ளனர். நடேசப் பெருமானின் கீழே கின்னரம் வாசிக்கும் சிவ கணங்கள் உள்ள முக்கியக் குடைவரையாக திருமலைப்புரம் என்னும் 7-ஆம் நூற்றாண்டின் பாண்டியர் குடைவரையைக் குறிப்பிடலாம். 8-ஆம் நூற்றாண்டிலே காஞ்சிபுரத்தில் இராஜசிம்மேசுவரம் என்னும் முதல் கற்றளியில் உள்ள கின்னரம் வாசிக்கும் பூத கணங்கள் இரண்டு இடங்களில் இருப்பது சிறப்பு. சோழர் காலப் படைப்புகள் என்று பார்த்தால் சுமார் 30 சிரட்டைக் கின்னரங்கள் தேறும் எனலாம். திருமலாபுரம், காஞ்சியில் உள்ள மூன்றுமே வில்லால் மீட்டும் சிரட்டைக் கின்னரி தான். சிரட்டை என்பது கொட்டாங்கச்சி. இதற்கு பதிலாகக் கச்சம் என்ற ‘நட்சத்திர ஆமை’ ஓட்டையும் பயன்படுத்தல் உண்டு. அந்தவகை நரப்பிசைக் கருவி கச்சபி என்றும், சரஸ்வதி கையில் உள்ளது இந்தக் கச்சக் கின்னரி என்றும் இந்திய சங்கீத நூல்கள் குறிப்பிடுகின்றன. பிற்காலத்தில் எல்லாவகை வீணைகளும் இந்தக் கின்னரத்தின்றும் பிறந்ததே. கூர்மவீணை என்றும், கூர்மி என்றும் குறிப்பிடும் ஆமையாழ் தோன்றி மத்திய கிழக்கு நாடுகளுக்கு ரபாப்/ரெபெக் என்ற பெயரில் இந்தியாவில் இருந்து பரவிற்று. இதே போல, தும்புரு யாழ் என்பதும் பரவியது. ரபாப்/ரெபெக் மத்திய கிழக்கில் இருந்து இத்தாலி சென்று ஐரோப்பாவின் வயலினாக உருவெடுத்தது. பாலுஸ்வாமி தீட்சிதரும், தஞ்சை நால்வரில் வடிவேலுவும் திரும்பவும் கர்னாடக சங்கீதத்திற்கு வயலினை பிரிட்டிஷார் காலத்தில் மீளறிமுகம் செய்கின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சியும், சரஸ்வதி வீணையைவிடச் சிறிதானதாகவும் இருப்பதால் கச்சேரிகளில் வயலின் சிலமாற்றங்களுடன் இடம்பெறலாயிற்று.

    சிரட்டைக் கின்னரி (கொட்டாங்கச்சி வயலின்):
    https://www.youtube.com/watch?v=BQQ2lSbdotY
    https://www.youtube.com/watch?v=5Sa_SStKP40
    https://www.youtube.com/watch?v=D52s7LlJwiA
    https://www.youtube.com/watch?v=NOfUoSOqHnU
    https://www.youtube.com/watch?v=48TR0tBPAxk
    https://www.youtube.com/watch?v=zfoF_WAQEkw
    https://www.youtube.com/watch?v=gJFRKZ-Q2Uc

    திருக்கோவில்களில் தேவாரம் கின்னரம் கொண்டு இசைக்கப்பட்டதாகத் தெரிகிறது. கின்னரி என்னும் இந்த Pre-violin நரம்புக் கருவிக்குச் சங்க இலக்கியத்தில் இருந்து மூன்று எடுத்துக்காட்டுகள் தருகிறேன். இவை இல்லாமல்தான் மேலையாசிரியர் இந்திய இசைக்கருவிகள் பற்றி இதுகாறும் ஆய்ந்துளர்.

    (1) பெரும்பாணாற்றுப்படை 493-495:
    இன்சீர்க்
    கின்னரம் முரலும் அணங்குடைச் சாரல்
    மஞ்ஞை ஆலும் மரம்பயில் இறும்பின். – பெரும்பாணாற்றுப்படை 493-495.

    கின்னரம் வாசிக்கும் ஆந்தை ஜோடிகளை நிறைய அர்ஜுனன் தபசு சிற்பத்தில் மாமல்லையில் காணலாகும். பல்லவர் காலச் சிற்பங்கள். அதற்கு முன்னரே வரும் சங்கச் சான்று மேலே காணும் பெரும்பாண் வரிகள். இனிய தாளத்துடன் கின்னர மிதுனங்கள் கின்னரியாழை மீட்ட, அதற்கேற்றபற்றபடி மரங்கள் அடர்ந்த சோலையில் மயில்கள் நடமாடும். ஆங்கே அச்சுறுத்தும் அணங்கு என்னும் தெய்வங்கள் வாழும். கின்னரம் வில்லகவிரல் என்னும் நாணுடை வில்லாலோ, பாணன் கையின் விரலாலோ மீட்டலாம்.

    (2) பெரும்பாணாற்றுப்படை 180-182
    குமிழின் புழற் கோட்டுத் தொடுத்த மரல் புரிநரம்பின்
    வில்யாழ் இசைக்கும் விரல் எறி குறிஞ்சி – பெரும்பாண்.

    மரல் கயிறாகிய விரலாலே தெறித்து வாசிக்கும் (நச்சினார்க்கினியர் உரை). இங்கே விரல் என்பது அதன் தொழிலால் கயிறுக்கு ஆகி வந்த உவமையாகு பெயர்.

    பெரும்பாணாற்றுப் படையின் பழைய உரையில் கை விரலால் மீட்டுதற்குப் பதிலாக வில்லில் பொருத்திய மரல்கயிறு ஆகிய விரலாலே தெறித்து வாசிப்பது என்பதால் கின்னரத்தை வில்லால் மீட்டினர் என்பது அறியலாகும். கின்னரம் வயலின் போல இருப்பதும், மிகப் பழையதான ஒரு வில்லிசைக் கருவி. வில்லிசைக் கருவிகளே (Bowed Chordophones) உலகத்திற்கு  இந்தியாவின் கொடை. அதில் கின்னரம் பற்றி முவ்விடங்களில் (முத்தமிழ் போல!) சங்கப் புலவர்கள் பதிவு செய்திருப்பதும், தமிழகத்தின் சிற்பக்கலை தோன்றுகிறபோதே கின்னரம் சிவகணங்கள் கையில் காட்டுவதும் அருமையிலும் அருமை. எங்கே பார்த்தாலும், காரைக்கால் அம்மை கைத்தாளத்துடன் இருப்பார். அபூர்வமாக, திருப்புகலூரில் சிரட்டைக் கின்னரியுடன் இருப்பதை முனைவர் இரா. கலைக்கோவன் தம் ஆய்வேட்டில் எழுதியுள்ளார்.

    இதனைப் பாண்டியர், பல்லவர் சிற்பங்களில், சிவகணங்களில் காட்டியுள்ளனர் என்பது வயலின் வரலாற்றின் மேலையுலக ஆய்வாளர்கள் இன்னும் அறியாத செய்தி ஆகும். இந்த இடத்தில் செங்கோட்டியாழ், கருங்கோட்டியாழ் என்பன பற்றிச் சில சொற்கள் குறிப்பிடல் பொருந்தும். செங்கோடு என்பது வளைவில்லாத வீணாதண்டம். இதனை stick zither என்பர் இசையியலார். கருங்கோடு என்பது எருமையின் கொம்பு எனச் சங்க இலக்கியம் காட்டும். எருமைக் கொம்பைப் போல் வளைந்த கோடு உடைய யாழ் என்பது கருங்கோட்டியாழ். வில் போன்று வளைந்த தண்டம் உடையது கருங்கோட்டியாழ் (வில்யாழ்). விபுலானந்தர் காட்டிய மகரயாழ், சகோட யாழ் போன்றவை காண்க. இவை harp எனப்படுபவை.

    பெரும்பாணாற்றுப்படையிலே “விரல்” என்பது ஓர் இசைநுட்பக் கலைச்சொல். இதனைக் குறுந்தொகை 370 கொண்டும் வில்லகவிரல் என்பது Violin’s bow-with-cord என்பது அறியலாம்.

    (3) குறுந்தொகை 370

    (“பரத்தை தலைவனைப் புறம்போகாவாறு பிணித்துக் கொண்டாள்” என்று தலைவி கூறியதாக அறிந்த பரத்தை அவட்குப் பாங்காயினார் கேட்ப, “தலைவன் ஈண்டு இருப்பின் அவனோடு பொருந்தியும் அவன் பிரியின் யாம் தனித்தும் இருப்பேம்” என்று கூறியது.)

    பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை
    வண்டுவாய் திறக்குந் தண்டுறை ஊரனொடு
    இருப்பின் இருமருங் கினமே கிடப்பின்
    வில்லக விரலிற் பொருந்தியவன்
    நல்லகஞ் சேரி னொருமருங் கினமே.
    – வில்லக விரலினார்.

    வில்லின் நாணினால் வாசிக்கும் கின்னரக் கருவியைப் பற்றிய அரிய பாடல் இது. முதலில் ஒன்று சொல்லவேண்டும்: அண்மைக்கால உரையாசிரியர்கள் இதனைப் பகைவனொடு உடற்றும் போரில் அம்பு எய்து கொல்லும் வில் என்று எடுத்த உரை செய்துள்ளனர். அது புறத்துறை ஆதலின், அகப்பாடலுக்கு போர்வில் உவமையாக வாராது என்பது திண்ணம்.

    மிகச் சிறிய பாட்டாக தமிழிசையின் உலகப் பங்களிப்பைத் தருகிறார் இந்தச் சங்கச் சான்றோர். Red Earth and Pouring Rain என்ற ஏ. கே. ராமாநுஜனின் புகழ்பெற்ற மொழிபெயர்ப்பு வரியால் செம்புலப்பெயல் நீரார் பாடல் உலகமெல்லாம் பரவியது. வட இந்தியரான விக்ரம் சந்திரா இத்தலைப்பில் நாவல் செய்தார். தமிழில் உவமையால் பெயர்பெற்ற புலவர்கள் பலர். “வில்லக விரலினார்” என்பது சீகாழி ராமு போன்றோர் இசைத்த கின்னரக் கருவியின் வில்லின் நாணால் பெற்ற பெயர் ஆகும். பழைய தமிழிசைக் கருவி என்பதால் இவ்வரிய பாடலைச் சங்கத் தொகைப்பாட்டாகத் தெரிந்தெடுத்துச் சேர்த்துள்ளனர். நச்சினார்க்கினியர், பரிமேலழகர் போன்றவர்களின் உரை குறுந்தொகைக்குக் கிட்டியிருந்தால் கின்னரம் என்னும் செங்கோட்டியாழ், அதை மீட்டும் வில்லகம் என விளக்கியிருப்பர். ஆனால், குறுந்தொகைக்குப் பண்டைய உரை ஏதும் கிடைக்கவில்லை.

    தமிழிசைக் கருவி உவமையாகப் பயன்படுத்துவதால், முன்னுரையே இசையின் தொடர்பாக அமைத்துள்ளார் சங்கக் கவிஞர். ஆம்பல் மலர் எங்கும் போவதில்லை. வண்டு தான் ஆம்பலைத் தேடி வருகிறது. அதுபோல், பரத்தை தன் நல்லகத்தில் தான் இருக்கிறாள். அவளைத் தேடி வந்து துய்க்கிறான் தலைவன் என்பது உள்ளுறை உவமம். ஆம்பல் என்பது மருதத் திணையின் பண். தற்காலச் சுத்த தன்யாசி ராகம். சீகாமரம் (ஸ்ரீகாமரம்) என்பது தேவார காலப் பண்ணின் பெயர். ‘காமரு தும்பி காமரம் செப்பும்’ (சிறுபாண். 77). ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி (சிலம்பு). ‘ஆபெயர் கோவலர் ஆம்பலொடு அளைஇ’ (அகம்).

    பாண்வாய் வண்டு நேர்திறம் பாடக்
    காண்வரு குவளை கண்மலர் விழிப்ப (சிலம்பு)

    பொய்கையிலே உள்ள ஆம்பலினது அழகிய நிறத்தையுடைய கொழுவிய அரும்பில் வண்டுகள் இதழைத் திறக்கும் தண்ணிய நீர்த்துறைகளை உடைய ஊருக்கு உரியனாகிய தலைவனோடு நாம் இருந்தால் இரண்டு உடலையுடையேம்; இது பகல் வேளையிலே எனலாம். அவரோடு துயின்றால் எம் இல்லத்தில் கின்னரத்தின் செங்கோட்டுடன் இணையும் வில்லக-விரல் ( violin’s bowstring) போல ஓர் உடலை யுடையேம்.

    முடிபு: ஊரனொடு ஊரார் இருப்பின் இருமருங்கினம்; இரவில் கிடப்பின் பொருந்தி ஒரு மருங்கினம். இப்பாடலில் தமிழிசையின் மூத்த கருவிகளில் ஒன்றாகிய கின்னரம் என்னும் நரப்பிசைக்கருவி சொல்லப்பட்டுள்ளது. வில்லகவிரல் என்பது ஒரு இசைத்துறைக் கலைச்சொல் (technical vocabulary). வில்லகவிரல் = Kinnari’s bow-string. கையினால் மீட்டும்போது அது கையக விரல். இதனைப் பாரதியார் “வீணையடி நீயெனக்கு, மேவும் விரல் நானுனக்கு” என்று சரசுவதி வீணை வாசிப்பைப் பேசுகிறார். 2000 ஆண்டுக்கு முன் இருந்த வில்லகவிரலினார் கின்னரத்தை மீட்டும் வில்நாணை (=வில்லக விரல்) உவமையாகச் சொல்லியுள்ளார். வில்லகவிரல் என்பது உவமையாகுபெயராய் வில்நாணைக் குறிப்பது. இதனை பெரும்பாணாற்றுப்படையின் பண்டை உரையினால் அறிக. அற்புதமான தமிழிசை வரலாறு காட்டும் சங்கச் செய்யுள் இஃது. வில்லகவிரலால் கின்னரம் மீட்டும் பாணனின் 1810-ஆம் ஆண்டு ஓவியம் இணைத்துள்ளேன்.

    நா. கணேசன்
    [1] கின்னரம் ~ ராவணஹஸ்தம் (Pre-Violin History) https://groups.google.com/d/msg/santhavasantham/aMK2Pa10Wvc/50g4ci83CQAJ

    https://theekkathir.in/2018/12/03/ஒரு-கொட்டாங்கச்சி-வயலின்/
    ஒரு கொட்டாங்கச்சி வயலின் கண்ணீர் வடிக்கிறது…!
    ===ந.காவியன்=== இசையால் புகழ்பெற்ற நகரம் சீர்காழி… இதுதான், சைவத் திருமுறை 12 ல் மூன்று திருமுறைகளைத் தன் தேவாரப் பதிகங்களால் நிறைவு செய்த திருஞான சம்பந்தரும், தமிழிசை மூவரும், இசைமாமணி சீர்காழி கோவிந்த ராஜனும் இன்னும் பல நாதஸ்வரக் கலைஞர்களும் தவில் கலைஞர்களும் இசைக் கலைஞர்களும் தோன்றிய இன்னிசை பூமி. இங்குதான் 72 ஆண்டுகளுக்கு முன்பு ராமு பிறந்தான். பின்நாளில் இவன்தான் கொட்டாங்கச்சி வயலின் சீர்காழி இ.எம்.ராமுவாகப் பரிணாமம் பெற்றவன்.

    சீர்காழி நகரையொட்டிய ஊழியக்காரன் தோப்புப் பகுதியில் பூந்தோட்டம் தெருவில், ஒரு தலித்துக்குரிய வீடு எப்படி இருக்க வேண்டுமோ அப்படிப்பட்ட ஒரு குடிசையில் தான் ராமு பிறந்தான். கல்வி, தொடக்கப் பள்ளியைத் தாண்ட வில்லை. அப்பா கூலி வேலை செய்பவர். ராமுவும் படிப்பை விட்டுவிட்டு, அப்பாவோடு விறகு வெட்டுதல், செருப்புத் தைத்தல் போன்ற வேலைகளைச் செய்து வந்தான்…

    கர்நாடகாவில் அறிமுகமான வயலின்
    அப்போது, கர்நாடகா கோலார் தங்கச் சுரங்கத்திலும் மற்ற பகுதிகளிலும் தமிழகத்திலிருந்து பலர் வேலை பார்க்கச் சென்றனர். ராமுவும் அங்கு சென்று கிடைத்த வேலைகளைப் பார்த்து வந்தான். வாரத்தில் ஒருநாள் பக்கத்து ஊரில் சந்தை கூடும். அப்படி ராமு சென்றபோது, ஒருவன், கொட்டாங்கச்சி வயலின்களை வைத்துக் கொண்டு, ஒரு வயலினில் மிக இனிமையாக ஒரு ராகத்தை வாசித்துக்கொண்டிருந்தான். வேடிக்கை பார்த்த ராமு, அந்த இசையில் மயங்கிப் போய், காசு கொடுத்து ஒரு கொட்டாங்கச்சி வயலினை வாங்கிக் கொண்டு, தான் தங்கியிருந்த பகுதியில் ஆசையோடு அந்த வயலினை வாசிக்க ஆரம்பித்தான்.

    ராகமும் வரவில்லை, எந்த சப்தமும் வரவில்லை. அடுத்த வாரம் அந்தச் சந்தைக்குச் சென்று, வயலின் விற்பவனைப் பார்த்து, ‘‘நீ மட்டும் இசை வாசிக்கிறாய், என்னுடைய வயலினில் எதுவும் வரவில்லையே’’ என்று சொன்னதற்கு, ‘‘இதில் பல வாரங்கள் பழக வேண்டும், ஒரு வித்வானிடம் போய் வாசிக்கக் கற்றுக் கொள்’’ என்றான் வயலின் விற்பவன்.

    வயலின் வசப்பட்டது
    எப்படியோ ஒரு வயலின் வித்வானைக் கண்டுபிடித்து, அந்தக் கொட்டாங்கச்சி வயலினக் கொடுத்து, கற்றுக் கொடுக்கச் சொன்னான் ராமு. அவருக்கோ அதை வாசிக்கத் தெரியாது. இருந்தாலும், தனது வயலின் அனுபவத்தில் நரம்பில் எப்படி விரல்களை வைப்பது, வாசிப்பது எனச் சொல்லி, சில ராகக் குறிப்புகளையும் கொடுத்தார் வித்வான். அவ்வளவுதான், எல்லாவற்றையும் மறந்து, இரவும் பகலுமாக அந்தக் கொட்டாங்கச்சி வயலினோடு போராடிக் கொஞ்சம் கொஞ்சமாக அதில் ராகம் வாசிக்கக் கற்றுக் கொண்டான் ராமு.

    அப்போது ராமுவுக்குக் கர்நாடகாவில் இருப்புக் கொள்ளவில்லை. தான் கொட்டாங்கச்சி வயலினில் பாட்டுகள் வாசிப்பதைத் தன் ஊரில், தன் நண்பர்களுக் கெல்லாம் காட்ட வேண்டும் என்று சீர்காழிக்கு வந்தான் ராமு. சில நாட்களில் தந்தையும் இறந்து விட்டார்.

    சோறுபோட்ட கொட்டாங்கச்சி வயலின்
    கூலி வேலை செய்வதில் அவனுக்கு நாட்டமில்லை. சாப்பாட்டுக்கு வழி? சீர்காழி சந்தைப்பேட்டையில் ஒரு முஸ்லிம் பக்கிர்சா, தப்(ஸ்) அடித்துக் கொண்டு, கெளரவமாகக் காசுகள் சேர்ப்பதைப் பார்த்து, அவரோடு ஒரு சிறுமியும் உடன் இருப்பதைக் கண்டு அவள் அவரின் மகள் என்பதைத் தெரிந்து கொண்டான். அவனும் தனது வயலினை எடுத்துக் கொண்டு வந்து, சீர்காழி சந்தையில் வாசித்தான். உணவுக்குக் காசுகள் சேர்ந்தன.

    அவ்வளவுதான், சீர்காழி சந்தை, பேருந்து நிலையம், ரயில்வே நிலையம் என்று வாசிக்க ஆரம்பித்தான், அந்த பக்கிர்சா, ராமுவிடம் ஒரு யோசனை கூறினார், ‘‘இப்படி நாம் தனித் தனியாக வாசிப்பதைவிட, நீ வயலின் வாசிக்க நான் தப்ஸ் வாசித்தால் இன்னும் கூட்டம் கூடும் இல்லையா?’’ என்றார். நல்ல யோசனையாக இருக்கிறதே என்று சம்மதித்த ராமு, அதுமுதல் இருவரும் சேர்ந்து வாசிக்கத் தொடங்கினார்கள். இந்த இசைப் பயணம் பக்கத்து ஊர்களுக்கும் செல்ல ஆரம்பித்தது.

    மும்தாஜோடு பயணம்
    ஒருநாள், சீர்காழி பேருந்து நிலையத்தில் அந்த பக்கிர்சா ராமுவிடம் கூறினார், ‘‘தம்பி, நான் அறிந்தவரை நீ நல்ல பையனாக இருக்கிறாய். இந்தப் பெண் மும்தாஜ் என்னுடைய மகள், தாய் இறந்துவிட்டாள். எனக்கு இப்போது இவள் கவலையாகத்தான் இருக்கிறது. நான் இன்னும் எத்தனை நாள் இருப்பேன் என்று தெரியாது. இதோ, என் மகளை உன்னிடம் ஒப்படைக்கிறேன். நீ வாழ வை’’ என்று கூறி விட்டு, ஒரு பேருந்தில் ஏறிச் சென்றவர்தான், அதற்குப் பின் அவர் வரவே இல்லை.

    14 வயதுடைய பெண்னை அழைத்துக் கொண்டு, ராமு, கர்நாடகா சென்றான், பிறகு பம்பாய் சென்றான். பம்பாய் ரயில்வே ஜங்ஷன் பெஞ்சில் இருவரும் அமர்ந்திருக்கும் போது, பெஞ்சில் ரத்தச் சிவப்பைப் பார்த்து அதிர்ந்து போய்,பின்னர், மும்தாஜ் வயதுக்கு வந்து விட்டதைப் புரிந்து கொண்டு, பைப்பில் தண்ணீர் கொண்டுவந்து பெஞ்சைக் கழுவி, மும்தாஜையும் குளிப்பாட்டி வைத்துவிட்டு, வெளியே ஓடிப்போய் புதிய உடைகள் வாங்கி வந்தான்.

    மும்தாஜூடன் இருப்பதைக் காலிகள் ஒரு மாதிரியாகப் பார்ப்பதை உணர்ந்து, பெண்ணுடன் ரயிலேறி தில்லிக்குச் சென்றான், ராமுவுக்கு இந்தியில் அப்போது பிரபலமான ஆராதனா, பாபி, நாகின் திரைப்படப் பாடல்களின் மெட்டுகள் நன்கு தெரியும். தில்லி மாநகரில் இந்திப் பாடல்களின் மெட்டுகளை அற்புதமாக வாசித்துக் கொஞ்ச காலம் வாழ்க்கையை ஓட்டினான். இனியும் அங்கிருந்தால் பாதுகாப்பில்லை என்பதால், தமிழகத்திற்கு வந்து, பின் தனது ஊரான சீர்காழிக்கு வந்தான்.

    கலை இலக்கிய இரவு – கண்டெடுத்த கலைஞன்
    மும்தாஜ் ‘விஜயா’ என்று மாற்றப்பட்டாள். தொடர்ந்து ராமு, சந்தைகளிலும் மக்கள் கூடும் இடங்களிலும் வயலின் வாசித்துக் காசுகள் சேர்த்துத் தன் மனைவியோடு வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி வருகையில், குழந்தைகள் பிறந்தனர். ராமுவிற்கு 5 பெண்கள், 3 ஆண்கள்.
    அப்பொழுது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளராக நாகைமாலி இருந்தார். 1996-ஆம் ஆண்டு, கீழ்வேளூரில் கலை இலக்கிய இரவு நடைபெற்றது. சந்தைப் பேட்டைகளிலும், பேருந்து நிலையங்களிலும் ராமு என்ற கலைஞர்
    கொட்டாங்கச்சி வயலின் வாசித்து வருகிறார். அந்த வீதிக் கலைஞனை நம் கலை இலக்கிய இரவில் அறிமுகப்படுத்தினால் என்ன? என ஒரு தோழர் சொல்ல, உடனே, நாகைமாலி ராமுவைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து கீழ்வேளூர் கலை இலக்கிய இரவில் மேடையில் ஏற்றினார்.

    தமிழகமெங்கும்
    அதன்பின், தமிழகமெங்கும் நடைபெறும் கலை இலக்கிய இரவுகளில் மேடையேறிய ராமுவிற்குப் புகழ் பெருகியது. சீர்காழி ராமு இல்லாமல் கலை இலக்கிய இரவுகள் இல்லை என்னும் நிலை ஏற்பட்டது. இப்படி, வீதிகளில் தன் இசையை விற்று ஒரு இரவலராக வாழ்ந்த ராமுவைத் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கெளரவமான ஒரு மேடைக் கலைஞராக மாற்றியது.

    கலைஞனும் வறுமையும்
    ஆண்டு முழுவதும் கலை இலக்கிய இரவுகளும் நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. 7 பிள்ளைகள், மனைவி… சோறு போடவேண்டும். மீண்டும் வெட்கம் பாராது, மக்கள் கூடும் இடங்களில் ராமு வயலின் வாசிக்க ஆரம்பித்தார்.
    கோயில் நிகழ்ச்சிகள் மற்றும் பல இல்ல விழா நிகழ்ச்சிகளுக்கு ராமுவை வரவழைத்து, வாசிக்க வைத்த பின் சீர்காழிக்குப் போக்குவரத்துச் செலவுக்கு மட்டும் பணம் கொடுத்து அனுப்பிய கொடுமைகளும் நடந்தன.

    மனைவி விஜயாளுக்கு (மும்தாஜ்)க் கொஞ்சம் கொஞ்சமாகக் கண்பார்வை பறிபோனது. சிகிச்சை செய்யக்கூடப் பணம் இல்லை. ராமுவும் அடிக்கடி நோய்வாய்ப் பட்டார். பார்வை இழந்த மனைவியோடு பிற ஊர்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் சென்று வந்தார்.

    கலைஞனுக்குக் கிடைத்த கைத்தட்டல்கள்
    நாகைக் கலை இலக்கிய இரவில் நான் தொகுப்புரையாற்றுவேன், ராமு மேடை ஏறும்போது, பெரிய கைத்தட்டல்கள் கிடைக்கும். சில பாடல்களை மிக அற்புதமாக வாசிப்பார். அப்படிப்பட்ட பாடல்களாகக் கூறி வாசிக்கச் சொல்லுவேன். ‘‘மச்சானப் பாத்தீங்களா?’’ ‘‘கொட்டப் பாக்கும்’’, ‘‘உன் கண்ணில் நீர் வழிந்தால்…’’ ‘‘சிந்து நதியின் மிசை நிலவினிலே’’ போன்ற பாடல்களைத் துவக்கும் போதே, ஆர்வலர்கள் பலத்த கைத்தட்டல்களை வழங்கி உற்சாகமூட்டுவார்கள்.

    ஈடில்லாக் கலைஞன்
    ஈடு இணையற்ற அந்த இசைக் கலைஞனுக்கு திடீரென மூளையில் கட்டி ஏற்பட்டுப் பேசமுடியாமல் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார். இரண்டு ஆண்டுகளாக கலை இலக்கிய இரவிற்கு ராமுவை அழைக்க முடிய வில்லை. ஆர்வலர்கள் ‘ஏன் சீர்காழி ராமு வரவில்லை?’ என்று கேட்க ஆரம்பித்தார்கள். அடிக்கடி, சீர்காழி தமுஎகச தோழர்கள் அவர் வீட்டுக்குச் சென்று பார்த்து வருவார்கள்.

    அப்படி ‘நன்னானே’ சு.ரமேஷ் பார்த்துப் படுக்கையில் அவரைப் படம் பிடித்து வந்து எனக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பினார். அதைப் பார்க்கச் சகிக்கவில்லை. எப்படிப் பட்ட கலைஞன்! மேடையேறி தனது கொட்டாங்கச்சி வயலினை எடுத்துக் கம்பீரமாக நின்று இசையமுதைக் கொட்டியவர்…

    இறுதிப் பயணம்
    உடல்நிலை மிகவும் மோசமாகி சென்னை மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டார். திடீரென எங்களுக்கு அதிர்ச்சியான செய்தி வந்தது. டிசம்பர்-2, ஞாயிற்றுக்கிழமை காலை சென்னை மருத்துவமனையிலேயே ராமு இறந்து விட்டார்.. அவரது உடல் சீர்காழிக்குக் கொண்டு வரப்படுகிறது என்று…

    டிசம்பர்-3 அன்று, பிற்பகலில் சீர்காழி பூந்தோட்டம் தெருவில் உள்ள ராமுவின் இல்லத்திலிருந்து இறுதிப் பயணம் புறப்பட்டது. பிள்ளைகள், ‘‘அப்பா அப்பா’’ என்று கதறினார்கள்; ‘‘ஐயோ! ஐயோ!’’ என்று கண் இழந்த மனைவி கதறினார்; ‘‘ராமு! ராமு!’’ என்று தோழர்கள் புலம்பினார்கள்.. ஆனால், வீட்டின் உள்ளே ஒரு மேஜையில் வைக்கப்பட்டிருந்த அந்தக் கொட்டாங்கச்சி வயலின் மட்டும் மெளனமாகக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தது.

    **********************************

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், naa.ganesan@gmail.com, vallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் – http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன?

    நிர்மலா ராகவன்

    நலம், நலமறிய ஆவல் – 146

    வாழ்க்கைப் பாதையில் கல்வி, உத்தியோகம், திருமணம், குழந்தைகள் என்று படிப்படியாகக் கடந்தபின், `இனி என்ன இருக்கிறது வாழ்வில்!’ என்ற விரக்தி பிறக்கிறது பலருக்கும். அவர்களின் போக்கிற்கு நிச்சயம் வயது மட்டும் காரணமாக இருக்க முடியாது. உடல் முதுமை அடைவதற்கு முன்பே மனம் தளர்ந்துவிட, நடப்பதே ஒரு பெரிய காரியம் என்பதுபோல் இருப்பவர்களைப் பார்த்தால், `நாமும் ஒரு வயதுக்குமேல் அப்படி ஆகிவிடுவோமோ!’ என்ற அச்சம் ஏற்படுகிறது.

    `அவள் எவ்வளவு தைரியசாலி!’ என்று வெகு சிலரைப் பார்த்து மலைப்பு எழுகிறது. அந்த பெண்மணிக்கு அச்சமே கிடையாது என்று அர்த்தமில்லை. அவ்வப்போது எழுந்த அச்சங்களை எதிர்கொண்டவள் என்றுதான் சொல்லவேண்டும்.

    எந்த வயதிலும் உத்வேகத்துடன் செயல்பட வேண்டுமானால், அச்சத்தை விலக்குவது அவசியம். `அனுதினமும் உன்னை அச்சப்படுத்தும் ஒரு காரியத்தைச் செய்!’ என்கிறார் ஓர் அனுபவசாலி.

    ஏன் அச்சம்?

    ஒரு புதிய காரியத்தைத் தொடங்கும்போது மலைப்பு எழலாம் – இதை எப்படித்தான் முடிக்கப் போகிறோமோ என்று. ஓரிடத்திலிருந்து இன்னொன்றுக்குச் செல்வதற்கு ஒரு காலை மற்றொன்றின் முன்னே வைத்து, ஒவ்வோர் அடியாகத்தான் எடுத்து வைக்கிறோம். இதோ, நீங்கள் படிப்பதைக்கூட ஒவ்வோர் எழுத்தாகத்தான் எழுதினேன் — `பிறர் என்ன நினைப்பார்களோ!’ என்ற அச்சத்தை ஒதுக்கிவிட்டு.

    `இந்த காரியத்தைச் செய்தால் பணமோ, புகழோ கிடைக்கப் போகிறதா!’ என்ற அவநம்பிக்கையோடு எதிலும் ஈடுபட்டால் முன்னேறுவது எப்படி? எந்த ஒரு (நல்ல) காரியம் செய்தாலும், அதன்வழி கிடைக்கும் அனுபவத்தால் தன்னம்பிக்கை மட்டுமல்ல, தைரியமும் எழும். இது புரிந்தால், புதியதாக எதிலாவது ஈடுபடத் தயங்கமாட்டோம் – அது எவ்வளவு அற்பமாகத் தோன்றினாலும்.

    பல துறைகளில் ஈடுபாடா?

    ஒரே நேரத்தில் பலவித உணவுகளை அதன்முன் வைத்தால், நாய் எல்லாவற்றையும் நக்கிவிட்டு, எதையும் முழுமையாகச் சாப்பிடாது வீணடித்துவிட்டுப் போய்விடும். அதேபோல், பேராசையாகப் பல காரியங்களைச் செய்ய முயன்றால், எல்லாமே அரைகுறையாகிவிடும். ஒரே சமயத்தில் வெவ்வேறு காரியங்களைச் செய்ய நாம் அனைவரும் அஷ்டாவதானிகளா, என்ன?

    காலையில் படிப்பு, மாலையில் பாட்டு, விளையாட்டு என்ற முறையைப் படிக்கும் வயதில் கடைப்பிடித்திருப்போம். அது போலவே, ஒரு தினத்தை இரண்டு, மூன்று பகுதிகளாகப் பிரித்து, ஒவ்வொன்றிலும் ஒரு காரியத்தைச் செய்யலாம். எடுத்துக்கொண்ட ஒன்றில் முழு மனத்துடன் ஈடுபட்டு, ஓரளவு செய்து முடித்தபின், இன்னொன்றில் கைவைக்கலாமே!

    சிதறாத கவனம்

    பாலர் பள்ளியில் பயிலும் குழந்தைகளுக்கு எளிதில் கவனம் சிதறும். அதைக் கட்டுப்படுத்த ஓர் ஆசிரியை கண்டிப்புடன் அவர்களிடம் சொன்னது: “உங்கள் பக்கத்தில் டைனசோர் வந்து நின்றாலும், அணுகுண்டு வெடித்தாலும் திரும்பிப் பார்க்கக் கூடாது!”

    அக்குழந்தைகள் அறியவில்லை, அணுகுண்டு வெடித்தால் அதைப் பார்த்து வியக்கவோ, ரசிக்கவோ அவர்கள் இருக்க மாட்டார்கள் என்பது. தற்காலத்தில் டைனசோர் ஏது! இருந்தால் மட்டும் வகுப்பறைக்குள் நுழைந்துவிடுமா? ஆனாலும், ஆசிரியையின் திட்டம் பலித்தது. செய்யும் காரியத்தில் முனைப்பாக இருக்கும் பழக்கம் அவர்களுக்கு வந்தது.

    தோல்வி எழுந்தால்

    ஒரு காரியத்தைச் செய்துகொண்டிருக்கும்போது,  எதிர்பாராத விதமாக நமக்குப் பிடிக்காத விளைவுகளும் ஏற்படக்கூடும். தோல்விகளைப் பொறுக்க முடியாது, `இப்படித்தான் நிம்மதியும் இன்பமும் கிடைக்குமோ?’ என்ற அற்ப ஆசையுடன் தீய வழிகளில் ஈடுபட்டால் சலிப்புதான் அதிகரிக்குமே தவிர, நிம்மதி கிடைக்காது. நமக்குப் பிடித்த, பிறருக்கும் உபயோகமானவற்றில் ஈடுபடுவதுதான் புத்துணர்ச்சியைத் திரும்பப் பெறும் வழி.

    இலக்கு வேண்டும்

    `அடுத்து என்ன செய்யலாம்?’ என்ற தூரநோக்கு இருக்கும்வரை வாழ்க்கை பயனுள்ளதாகத்தான் தென்படும். தள்ளாடியபடி நடக்கும் பெண்மணிகள்கூட கூட்டுக் குடும்பத்தில் சமையல் வேலையை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டிருப்பதன் ரகசியம் இதுதான்.

    “கடைகண்ணிக்குப்போய் சாமான்கள் வாங்கி வருவது என் மாமனார்! சமையல் பூராவும் என் மாமியார்தான். இருவரும், `எங்கள் ஆட்சி இது!’ என்பதுபோல் விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்!” நாற்பது வயதை எட்டிக்கொண்டிருந்த ஒரு மருமகளின் புலம்பல் இது.

    தனக்கு எந்தப் பொறுப்பும் இல்லாமல் போய்விட்டதே என்பது அவள் வருத்தம். மூத்தவர்கள் செய்துவந்தது, அதிகாரத்திற்காக மட்டுமில்லை, அவர்களுக்கென்று சில வேலைகள் இல்லாவிட்டால், வாழ்க்கையில் பிடிப்பே இல்லாது போய்விடும் என்பது அவளுக்குப் புரியவில்லை. ஆனால் அவர்கள் புரிந்து வைத்திருந்தார்கள்.

    எந்த விஷயத்திலும் பற்றும் ஆர்வமும் இருந்தால், வாழ்வில் பிடிப்பு குறையாது – எத்தனை வயதானாலும்.

    கதை

    என் தோழியின் தந்தைக்கு தொண்ணூற்றிரண்டு வயதாக இருந்தபோது, நான் அவ்விருவருடனும் பயணம் செய்தேன்.

    வழியில், ஆறு வயதுக் குழந்தைக்கான விளையாட்டுச் சாமான் ஒன்றை வாங்கினேன். தாத்தா அதை சுவாரசியத்துடன் பார்த்ததைக் கண்டு, அவரிடம் நீட்டினேன்.

    ஆவலுடன் அதைப் பெற்றுக்கொண்டவர், சாவி கொடுத்தால் ஒரு குரங்கு தாவித் தாவி சிறிய பிளாஸ்டிக் மரத்தின்மேல் ஏறுவதைப் பார்த்துக் குதூலித்தார். அவருள் இருந்த குழந்தை, அப்போதும் இருந்தது. கூலியாளாக நாடுவிட்டு நாடு வந்தவர் பெரிய முதலாளியானதன் ரகசியம் புரிந்தது. உடல் வலுவிழந்திருந்தாலும், தன்னைச் சுற்றி நடப்பதில் ஆர்வம் குன்றாமல், ஆரோக்கியமான மனத்துடன் வாழ்ந்தவர்!

    `இனி என்ன இருக்கிறது!’ என்ற விரக்தியே ஒருவரை நடைப்பிணமாக ஆக்கிவிடும்.

    கதை

    “இருபத்து மூன்று வருடங்களாக இந்த வேலையைச் செய்கிறேன்!” என்று அடிக்கடி பெருமையாகச் சொல்லிக்கொண்ட பணிப்பெண் நோர்மாவைப் பார்த்து எனக்கு பிரமிப்பாக இருந்தது. காலை, மத்தியானம் இரு வேளைகளிலும் இரண்டு வீடுகளைச் சுத்தம் செய்வது, அவள் வேலை. ஒரு நாளைக்கு பத்து மணிநேரம் கடுமையாக உழைப்பாள்! வாரத்தில் ஐந்து நாட்கள் இப்படித்தான் கழியும். (கர்மவீரனுக்குப் பெண்பால் என்ன?)

    “கடினமாகவோ, அலுப்பாகவோ இல்லையா?” என்று அவளைக் கேட்டேன்.

    “எனக்குப் பள்ளியில் படிக்கும் மகனைத் தவிர, இந்தோனீசியாவில் நூறு வயதான அம்மா இருக்கிறாள். நடக்க முடியாத அக்காவும் இருக்கிறாள். நான் என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டாமா?” என்ற பதில் வந்தது.

    படிப்பறிவில்லாத அப்பெண்மணியிடமிருந்து கற்க வேண்டிய பாடம்: நம் பொறுப்புகளை வேண்டாவெறுப்பாக ஏற்றால் அவை பாரமாகப் படும். மனமுவந்து செய்தால், உடலும் ஒத்துழைக்கும். சலிப்பும் கிடையாது.

    சிலருக்கு மாற்றம் என்றாலே அச்சம்.

    ஒரு முறை கருவேப்பிலையின் அடிப்பாகத்தில் கெட்டியாக ஏதோ இருந்தது கண்டு, அருவருப்பாக இருந்தது. பிறகுதான் புரிந்தது, அது கூட்டுப்புழு என்று. வெகு அழகான வண்ணத்துப்பூச்சியாக மாறுமுன், பல மாறுதல்களைக் கடந்து வரவேண்டிய நிலை அதற்கு.

    மாற்றத்தைக் கண்டு அஞ்சாது துணிந்து நடந்தால், நாமும் – அழகாக மாறாவிட்டாலும் — நல்லவிதமாக மாற வாய்ப்பு கிடைக்கலாமே!

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2

    – மீனாட்சி பாலகணேஷ்  

    குழவி மருங்கினும் கிழவதாகும் – 7.2

                                       (7. அம்புலிப் பருவம்)

    இத்துணை கூறியும் எதற்கும் அசைந்து கொடாத சந்திரனிடம் சலிப்போடு,”பார் அம்புலியே! இவன், என் குழந்தையாகிய இச்சிறுவன், கையில் சங்கு சக்கரம் ஏந்தியவன். அவனுக்கு உறக்கம் வருகின்றது. கொட்டாவி விடுகின்றதைக் கண்டாயா? இவன் உறங்காவிடில் இவனருந்திய தாய்ப்பால் செரிக்காது. ஆகவே நீ விரைந்தோடி வா!” எனக் கூறுகிறாள் தாய்.

    ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார் இதற்கு அருமையான விளக்கம் தருகிறார்; ‘கையில் கதை, சங்கு, சக்கரம், வில் ஆகியவற்றுடன் இருக்கும் இந்த அழகனை வந்து தரிசித்து வணங்கிப் போ! இவற்றின் பராக்கிரமத்திற்கு இலக்காகி முடிந்து போகாதே!’ எனச் சந்திரனை மறைமுகமாக எச்சரிக்கிறாளாம் தாய்!

    இதனை பேத உபாயம் என எண்ண இடமுள்ளது. மனத்தில் வேறுபாட்டை (பேதத்தை, கலக்கத்தை) உண்டுபண்ணி, பணியச் செய்தல்.

                தண்டொடு சக்கரம் சார்ங்கமேந்தும் தடக்கையன்

              கண்துயில் கொள்ளக்கருதிக் கொட்டாவி கொள்கின்றான்

              உண்ட முலைப்பா லறாகண்டாய் உறங்காவிடில்

              விண்தனில் மன்னிய மாமதீ விரைந் தோடிவா.

                                                                (பெரியாழ்வார் திருமொழி – 5)

    இளவரசி மீனாட்சியின் தாயும் சேடியரும் அவளுடன் விளையாட வராத நிலவினை, “நீ என்ன இழிசெயல்களையெல்லாம் செய்துள்ளாய், பாண்டியர் குலக் கொழுந்தாகிய மீனாட்சி இவளைக் கண்டு, மகிழ்ந்து வாழாமல், உணவையும் உடையையும் இழந்து, சிறுமிகள், எளிய மண்பாத்திரத்தில் சமைக்கும் கூழாகிய புதுமையான உணவினை இரந்து உண்டு களங்கம் உண்டாக்கினாய். இதுவும் போதாமல், உன்னுடன் ஒளி நிறைந்த வான்வெளியில் திகழும் உனக்கு ஒப்பானவனான சூரியன் எனும் ஒருவன் தன் கைகளால் வாரியுண்ட மிச்சிலை, மிச்சத்தை, யாரும் காணாமல் நள்ளிரவில் வாரியுண்டு அவன்பின் ஓடுகிறாய், என்ன இழிவு இது!” எனக் கூறிப் பழிக்கின்றனர். தங்கள் செல்வியுடன் வந்து விளையாடாமல் இவ்வாறெல்லாம் இழிசெயல்கள் செய்யும் சந்திரனிடம் அவர்களுக்குச் சினம் ஏற்படுகின்றது.

                ………………………………. வாழாமல் உண்ணமுது

                                 கலையொடும் இழந்து வெறுமட்

              கலத்திடு புதுக்கூ ழினுக்கிரவுபூண்டொரு

                                 களங்கம்வைத் தாயி துவலால்

              ஒளி தூங்கு தெளிவிசும்பினினின்னொ டொத்தவன்

                                 ஒருத்தன் கரத்தின் வாரி

              உண்டொதுக் கியமிச்சில்நள்ளிருளில் அள்ளியுண்

                                 டோடுகின் றாயென் செய்தாய்….

    தாயின் அன்பு மற்ற எந்த சமாதானத்தையும் ஏற்பதில்லை;  தன் குழந்தையே முதன்மை. அனைவரும் அவளுக்குப் பணிசெய்தல் வேண்டும் எனும் எண்ணமே மேலோங்கி நிற்கின்றது. தற்காலத்தும் சில தாய்மார்கள், “வந்து என் குழந்தையுடன் சிறிது நேரம் விளையாடினால் நீ குறைந்தா போய்விடுவாய்?” என மற்ற சிறுவர்களைக் கேட்பதனைக் கண்டுள்ளோம் அல்லவா? அதுபோன்றதே இதுவுமாகும்.

    பேரூர் பச்சைநாயகியம்மையின் தோழியரும் செவிலித் தாயரும் அம்புலியிடம், “நீ இவளுக்கு சமமானவள் எனக் கருதி இவள் உன்னை விளையாட அழைக்கிறாள்; ஆயினும் உங்கள் இருவருக்கும் பல வேற்றுமைகள் உண்டு: நீ மாதம் ஒருநாள் மட்டுமே முழுமையான உருவை உடையவன்; இவளோ பரிபூரணனான சிவபிரான் தனது நெஞ்சில் இடையறாது எண்ணிக்கொண்டிருக்கும் நிறைந்த பெருமை பொருந்தியவள்.”

                மாதம் ஒருநாள் புரணம் ஆதல் உற, மிக்க பிர

                       மாதம் உளை நீ; இவள் அருள்

                       மன்னு பரிபூரணன் உள் உன்னும் விரிகாரண மெய்

                       மாட்சி நிறை காட்சி உடையாள்;

    குற்றம் பொருந்திய உனது அமுத கிரணங்களை, காம மிகுதியால் பெண்களின் குற்றேவல் புரியும் மாந்தர்களே விரும்புவார்கள். ஆனால் இவளுடைய கண்களின் அருட்கிரணங்களான நோக்கம் பட்டவர்கள் (அடியார்கள்) மிகுந்த உயர்வான வீடாகிய வீடுபேற்றினை அடையவல்லோராவர்.

                        கோதமையும் உனது சுதை கொண்டவர்கள் ஒண்தொடியர்

                       குற்றேவலாளர்; இவள்கண்

                       கொண்டபேர் தம்கண் எதிர்கண்ட பேர்க்கு உயர்வீடு

                       கொள்ளைகொள நல்கவல்லோர்;

    குளிர்ச்சி பொருந்திய உடற்பகுதிகளை ஆதவனிடமிருந்து மாதத்தில் அமாவாசை எனப்படும் ஒரு நாளில் ஏற்கமுடியாத சிறுமை படைத்தவன் நீ; இவளோ தனது பெருமை வாய்ந்த காதணியால் ஒரே நாளில் கோடி நிலவுகளை உண்டு பண்ணிவிடும் திறன் வாய்ந்தவள்: (ஈண்டு அபிராமி பட்டருக்கு அன்னை தன் காதணியை வானிலெறிந்து அமாவாசையன்று முழுநிலவைக் காட்டிய கதை கூறப்பட்டுள்ளது).

                        சீதள இயல்கலைகள் ஆதவனிடத்து ஒரு

                       தினத்து அதிகம் ஏற்கமுடியாச்

                       சிறியை நீ; தாயிவள் தன் நறிய காதணிகோடி

                       திங்கள் ஓர்தினத்து ஆக்குமால்..

    “ஆயினும் இவள் தன்னுடைய கருணையால் உன்னைத் தனக்குச் சமமானவனாகப் பாவித்து விளையாட அழைக்கிறாள்: வந்துவிடுவாய்,” எனக் கூவி அழைக்கின்றனராம்.

    இவ்வாறு உங்கள் இருவருக்குள்ளும் பேதங்கள், வேற்றுமைகள் இருந்தாலும், அதனைப் பொருட்படுத்தாது குழந்தை விளையாட அழைக்கிறாள் எனும் நயம் மிகவும் இரசிக்கத்தக்கதாம். இதனைப் பேத உபாயம் என்பர்.

                                                                *********

    சேடியரும் செவிலியரும் இவ்வாறெல்லாம் வேண்டியும் வராத சந்திரனைக் கடைசியாகப் பயமுறுத்தியாவது வரவழைக்க முயல்கின்றனர்.

    “சிங்கக்குட்டியான எனது இந்தக் குழந்தையை இவன் சிறுவன், என எண்ணி விடாதே அப்பா! சிறுவன் என்பதற்குப் பொருள் மகாபலியிடம் (மாவலி) சென்று கேட்டுணர்ந்து கொள்வாயாக! சிறு வாமனனாக, மாணிக்குறளனாக வந்து மூவுலகையும் ஈரடியால் அளந்து கொண்டான் தெரியுமா? நிறைமதியே! இவன் உன்னை விரைவாக வருமாறு அழைக்கிறான். உன் பிழையை- இவன் சிறியவன் என நீ எண்ணுவதை- உணர்ந்தால் நீ வந்து இவனுக்குத் தொண்டு செய்யும் உரிமையைப் பெறலாம் அல்லவோ?” என அறிவுரை கூறுகிறாளாம் தாய். இதனையும் பேதம் அல்லது தண்ட உபாயம் எனக் கருதலாம்.

               சிறியனென் றுஎன்னிளஞ் சிங்கத்தை இகழேல்கண்டாய்

              சிறுமையின் வார்த்தையை மாவலியிடைச் சென்றுகேள்

              சிறுமைப் பிழைகொள்ளில் நீயும்உன் தேவைக்குரியைகாண்

              நிறைம தீநெடு மால்விரைந்து உன்னைக் கூவுகின்றான்.

                                                                            (பெரியாழ்வர் திருமொழி-5)

    சந்திரன் எதற்குமே மசியவில்லை! தாய்க்குச் சினம் கட்டுமீறுகின்றது! கூறுவாள்: “தனது பெரிய கைகளால் வெண்ணெய்த் தாழியிலிருந்து வாரி வாரி அமுது செய்ததனால் பெருவயிறு உடைய எங்கள் கண்ணன் உன்னை அழைக்கிறான் பார்! நீ வரவில்லையானால் உன்கதி அதோகதி தான்! சக்கராயுதத்தினால் உன் தலையைச் சீவி விடுவான் என்பதில் எனக்கு ஐயமேயில்லை. உயிர் மீது உனக்கு ஆசையுண்டானால், மகிழ்ந்தோடி எம் ஐயனோடு விளையாட வா,” என அச்சம் காட்டி அழைக்கிறாள். இது தண்ட உபாயம்!

                தாழியில் வெண்ணெய் தடங்கையார விழுங்கி

              பேழை வயிற்றெம் பிரான்கண்டாய்உன்னைக் கூவுகின்றான்

              ஆழிகொண் டுஉன்னையெறியும் ஐயுற வில்லைகாண்

              வாழ வுறுதியேல் மாமதீ மகிழ்ந்தோடிவா.

                                                                (பெரியாழ்வர் திருமொழி – 5)

    அம்புலிமாமா அசைந்து கொடுத்ததோ இல்லையோ அருமையான இலக்கிய நயம் பொங்கும் ஆழ்வார் பாசுரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. பொருளுணர்ந்து படித்து மகிழலாமே!

    தண்டனை கொடுப்போம் என்றுகூறி அம்புலியை மிரட்டுகிறார்கள் பெண்கள்!

    ஒருத்தி சொல்கிறாள்: “ஏ அம்புலியே! தான் கூப்பிட்ட உடனே நீ ஏன் வரவில்லை என்று மீனாட்சி அம்மை எங்களைக் கேட்டாள். அவள் உன் மேல் மிகுந்த கோபம் கொண்டிருந்தாள். நாங்கள் என்ன சொன்னோம் தெரியுமா? ‘அம்மா, உன் ஒளி பொருந்திய முக அழகின் முன் தோற்று ஒதுங்கியதால் அவன்  உன் எதிரில் வர நாணம் கொண்டான் போலுள்ளது; அல்லது சிவபிரானின் முடியிலுள்ள பாம்புகள் அவன் பின் வந்து துன்பம் விளைவிக்கும் என அஞ்சியே வராமல் காலம் தாழ்த்துகிறான் போலும்,’ எனவெல்லாம் ஒருவாறாகச் சொன்னோம். நாங்கள் தான் உன்னை அவளுடைய சினத்துக்கு ஆளாகாமல் இவ்வாறு காத்தோம். அவள் சினம் கொண்டால் நீ பிழைக்க இனி ஒருவழியும் இல்லை! செல்ல வேறு இடமும் இல்லை என்று தெரிந்து கொள்!

                       ‘மழைக் கொந்தளக்கோதை வம்மினென்றளவில் நீ

                                 வந்திலை எனக் கடுகலும்…………

                       …………………………..யாம்

                       இத்துணையும் ஒருவாறு தப்புவித்தோம் வெகுளில்

                                 இனியொரு பிழைப்பில்லை காண்…’ என்று சொல்லி, “எங்கள் அம்மையைக் காண இது நல்ல சமயம்,” என இந்த நகரின் பெருமதில்களே உன்னை உரக்கக் கூவி அழைக்கின்றன பார்! மரியாதையாக எங்கள் மதுரைக்கரசியுடன் விளையாட வந்து விடு; உன் நன்மைக்காகத் தான் இதைச் சொன்னேன்!” என்று எச்சரிக்கிறாள்.

    “ஆக்கல், அளித்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்ற ஐந்து தொழில்களையும் செய்து நடனமாடும் சிவபிரானால் தெய்வ நதியாகிய கங்கையுடன் அவர் முடியில் வைத்துக்கொள்ளப்பட்டாய். எதனால் தெரியுமா? வேதத்தின் முடியில் அரசு செலுத்தும் இவளுடைய சிறந்த அடிகள் உன் இதய பீடத்திலும் பொலிந்து திகழ வேண்டும் என்று அவர் பெரிய மனது பண்ணி இவ்வாறு செய்திருக்கிறார். உனக்கு இதை விடப் பெரிய பேறு எக்காலத்திலும் கிடைக்கப் போவதில்லை,” என்கிறாள் செவிலித்தாய் வாருணி.

                ‘ஏடகத் தெழுதாத வேதச் சிரத்தர

                       சிருக்குமிவள் சீறடிகள்நின்

                  இதயத் தடத்தும் பொலிந்தவா திருவுளத்து

                       எண்ணியன்றே கபடமா

              நாடகத் தைந்தொழில் நடிக்கும் பிரான்தெய்வ

                       நதியொடு முடித்தல் பெற்றாய்;

                  நங்கையிவள் திருவுள மகிழ்ச்சி பெறில் இது போலொர்

                                 நற்றவப் பேறில்லை காண்’

    “இவள் அரசாளும் மதுரையின் பெருமைகளை, அம்புலியே நீ அறிவாயோ? அங்கே நிலாமுற்றத்தில் பார்! அழகிய பெண்கள் மகரயாழில் இசையை எழுப்புகின்றனர். இந்த இன்னிசையின் நயத்திற்குப் பரிசு அளித்துப் பொன்னாடை போர்த்துவது போலக் குங்கும மரங்கள் மலர்களை அளித்து உதிர்க்கின்றன. செழித்த கோங்கமரங்கள் அசைகின்ற ஆடகப் பொற்கிழி போன்ற மலர்களை வழங்கி இசையைச் சிறப்பிக்கின்றன. இத்தகைய இசைவளம் பொருந்திய மதுரையின் அரசியாகிய இத்திருமகளுடன் விளையாட அம்புலியே, நீ கொடுத்து வைத்திருக்க வேண்டும். இனி உனக்கு என்னதான் சொல்ல முடியும்? எங்கள் மதுரைத் திருமகளுடன் விளையாட விரைந்து வா,” என்கிறாள் செவிலித்தாய்.

    முத்தமிழ் வளர்த்த மதுரையில் இசைக்கு வழங்கப்படும் சிறப்பைப் பாடலின் இப்பகுதியில் அருமையாக விளக்கியுள்ளார் குமரகுருபர அடிகளார்.

                    ‘மகரயாழ் மழலைக்கு மரவங்கள் நுண்துகில்

                       வழங்கக் கொழும் கோங்குதூங்கு

              ஆடகப் பொற்கிழி அவிழ்க்கும் மதுரைத்திருவொடு

                       அம்புலீ ஆடவாவே’

    இவ்வாறெல்லாம் கூப்பிட்ட பின்னும் அம்புலி வாராதிருந்தால் இழப்பு அம்புலிக்குத் தான்- குழந்தை மீனாட்சியோடு களித்தாடும் வாய்ப்பு எல்லாருக்கும் எளிதில் அமைந்து விடுமா? முன்னைத் தவப்பயனல்லவா அது? நமக்குப் புரிகிறது; அம்புலிக்கும் புரிந்தால் சரி!!

    மதிக்கு மதி (புத்தி) கெட்டு விட்டதோ என வினவி, மதி எனும் சொல்லைப் பன்முறை கையாண்டு சொல்பின்வருநிலையணியாக அமைத்துப் புலவனார் நடேச கவுண்டர் இயற்றிய எட்டிக்குடி முருகன் பிள்ளைத்தமிழ்ப் பாடல் ஒன்று. சந்த நயமும் அணிநயமும் பொருள் நயமும் பொங்கி வழியும் இனிய தமிழின் இணையற்ற ஒரு செய்யுள். வாய்விட்டுப் படித்தால் தமிழின் இனிமையில் நாவெல்லாம் தித்திக்கின்றது!

    ‘யாரையும் நான் மதியேன்’ எனச் செருக்குடையவனாக நீ எண்ணிக் கொண்டிருந்தால் உன்னுடைய அந்தச் சிறுமை வாய்ந்த மதியினை நாங்கள் என்னவென்று கூறுவது? நிலை பெற்ற பெரியாரை (முருகனை) மதிக்காதவனை உலகில் எவரும் மதிக்க மாட்டார்கள்.

    ‘மதியும் (சந்திரனாகிய நீயும்), ஆதவனும் (சூரியனும்), சிவனைத் தன் தீமதியால் மதிக்காது அவமதித்த தக்கனுடைய வேள்வியில் தமது அறிவு பிறழுமாறு உடல் தேய்வுற்றனர். சந்திரன் வீரபத்திரரது திருவடியால் தேய்க்கப்பட்டான்; சூரியன் கண்ணும் பல்லும் (அலர்விழி, வாள் நகை) இழந்தான்.

    ‘கடலைக் கடைந்தெடுத்த கொடிய விடத்தினை அருந்தியவனும் பிறையணிந்த சடையினை உடையவனுமாகிய இறைவன் பெரிதும் மதிக்கும்  அறிவாளி இம்முருகனாவான் (தந்தைக்கு உபதேசம் செய்த குருநாதன் இவன்). இவனை நீ மதிக்கவில்லையெனில், அதன் காரணமாக இவன் சினமுற்றால் உனது பெருவாழ்வு குலைந்து நாசமாகி விடும்.

    ‘நீ நன்மதி / நல்ல அறிவு உடையவன் எனில் இந்த முருகையனோடு ஆடுவதற்கு வா வா அம்புலியே! வளரும் எட்டிக்குடி முருகனோடு விளையாடிட வா வா அம்புலியே!’ என அச்சுறுத்தி அழைக்கின்றனராம்!

                மதியே மென்று நினைத்தனை யேலுன் மதியினை என்சொல்கேம்

                       மன்னும் பெரியரை மதியா தவனை மதிப்பவ ராருலகில்

              மதியா தவர்மதி யாதவன் வேள்வி மதித்துறு தீமதியால்

                       மதிமாழ் குறவுடல் தேய்வுற் றலர்விழி வாணகை போயினராலி

              மதிதீ விடநுகர் மதிசேர் சடையிறை வன்மதி மதியனிவன்

                       மதியில் சினமுறின் மதியே உன்பெரு வாழ்வு குலைந்திடுமே

              மதியா யெனின்முரு கையனோ டாடிட வாவா அம்புலியே

                       வளரெட் டிக்குடிமுருக னொடாடிட வாவா அம்புலியே.

    வான்மதியின் பதினாறு கலைகளையும் அறிவிப்பதே போன்று மதி எனும் சொல் இப்பாடலில் பதினாறு முறை வருவது மெய்சிலிர்க்க வைக்கின்றது.

    இத்தகைய நயங்கள் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களைப் படிக்கப் படிக்க, அவை தெவிட்டாத தமிழின்பம் தருவன என உணரலாம்.

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(245)

     – செண்பக ஜெகதீசன்

    உள்ளற்க வுள்ளஞ் சிறுகுவ கொள்ளற்க

    அல்லற்க ணாற்றறுப்பார் நட்பு

    (குறள் – 798) (நட்பாராய்தல்)

     

    புதுக் கவிதையில்…

     

    ஊக்கம் குறையவைக்கும்

    செயல் பற்றி

    உள்ளுதலே வேண்டாம்..

    அதுபோல

    துன்பம் வரும்போது

    துணை வராமல் கைவிட்டு,

    தூர விலகிடுவார்

    நட்பையும்

    ஏற்றிடவே வேண்டாம்…!

     

    குறும்பாவில்…

     

    ஊக்கம் குறைக்கும் செயலையென்றும் நினைக்காதே,

    உறுதுணையாயின்றி துன்பம் வரும்போது விட்டுச்செல்லும்

    நட்பினை ஏற்காமல் தவிர்த்திடுக…!

     

    மரபுக் கவிதையில்…

     

    ஊக்கம் குறைய வகைசெய்யும்

    உதவாச் செயலது வாழ்வினிலே

    ஆக்கம் எதையும் தருவதில்லை

    அதனால் வேண்டாம் அதன்நினைவே,

    தாக்கும் துன்பம் வரும்போது

    துணையாய் நின்றே உதவாமல்

    போக்குக் காட்டியே ஓடிவிடும்

    புல்லர் நட்பினை ஏற்காதே…!

     

    லிமரைக்கூ..

     

    வேண்டாம் ஊக்கந்தரா செயலின் எண்ணம்,

    ஏற்றிடாதே துன்பத்தில்நமைக் கைவிட்டோர் நட்பை,

    இனியுமவர் நமைத்தொடரா வண்ணம்…!

     

    கிராமிய பாணியில்…

     

    நட்புகொள்ளு நட்புகொள்ளு

    நல்லவனாப் பாத்து நட்புகொள்ளு,

    நல்லா ஆராஞ்சி நட்புகொள்ளு..

     

    நெனைக்கவேண்டாம் நெனைக்கவேண்டாம்

    நமக்கு ஊக்கந்தராத செயலெதயும்

    நெனைக்கவேண்டாம் நெனைக்கவேவேண்டாம்..

     

    அதுபோல

    துன்பத்தில தொணநிக்காம

    கைவுட்டுப் போறவன் நட்ப

    கடுகளவும் ஏத்துக்காத,

    கண்டிப்பா ஏத்துக்காத..

     

    அதால,

    நட்புகொள்ளு நட்புகொள்ளு

    நல்லவனாப் பாத்து நட்புகொள்ளு,

    நல்லா ஆராஞ்சி நட்புகொள்ளு…!

     

     

    Share
  • (Peer Reviewed) ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை

    முனைவர் இரா.வீரபத்திரன்
    உதவிப் பேராசிரியர்,
    தமிழ்த் துறை,
    கற்பகம் உயர்கல்வி கலைக் கழகம்,
    கோவை.

    ஆயரினக்குடி மரபில் குரவையாடுதல் – ஒரு பார்வை

    அன்று தொட்டு இன்றுவரை அழியாத நாகரிகத்தையும் பண்பாட்டையும் உடைய நன்மக்கள், நம் தமிழ் மக்களே. இந்தப் பரந்த உலகிற்கே நாகரிகத்தையும் பண்பாட்டையும் கற்றுத் தந்த பெருமை, நம் முன்னோர்களையே சாரும். தமிழ்ப் பாரம்பரியத்தில் உதித்த மரபு வழிப்பட்ட நெறிமுறைகள், இன்று நமது வாழ்க்கைப் பாடமாகவும் ஒரு படிப்பினையாகவும் விளங்குவதை நாம் அறிய முடிகிறது.  அதில் கலையின் ஒரு கூறாகக் குரவைக் கூத்து இடம் பெறுகிறது. அக்கூத்து ஆயர் குடியில் எவ்வாறு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது என்பதை இக்கட்டுரை ஆராய முற்படுகிறது.

    குரவைக் கூத்து

    தமிழ்ப் பாரம்பரியக் கலையாக்கங்களுள் கூத்துக் கலையும் ஒன்று. அத்தகைய கூத்துக் கலைகளுள் குரவைக் கூத்தென்பது முல்லை அல்லது குறிஞ்சி நில மகளிர் தம்முட் கைகோர்த்தாடும் கூத்து என்றும், மகளிர் விழாக் காலங்களில் நாவால் குழறி இடும் மகிழ்ச்சியொலி என்றும் குறிப்பிடப்படுகின்றது.1 குறிஞ்சி நில மக்கள் ஆடும் கூத்து குன்றக் குரவை என்றும் முல்லைநில மக்கள் ஆடும் கூத்து ஆய்ச்சியர்க் குரவை என்றும் சிலப்பதிகாரம் தனித் தனிக் காதைகளில் குறிப்பிடுகின்றது. மேலும் குரவைக் கூத்தென்பது எழுவர் மங்கையர் கைகோர்த்து ஆடும் ஆட்டமாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.2

    குரவை என்பது, காமம் அல்லது வெற்றி தொடர்பாக ஆடப் பெற்றது. குரவைக் கூத்தென்பது பண்டைய சமுதாயத்தில் விளங்கிய பொழுதுபோக்கு விளையாட்டுகளுள் ஒன்றாகும். குரவை என்பதற்குத் தெற்றியாடல் என்ற ஒரு பெயர் பிற்காலத்தில் வழங்கப்பட்டதாக ஆய்வாளர்கள் குறிப்பிடுவர்.

    குரவை தழூஉதல்

    குரவையில் பங்கு கொள்வோர் ஒருவரையொருவா் தழுவிக் கொள்ளுதல், குரவைக் கூத்தின் தலையாய நெறிமுறையாகும். இதன் பொருட்டே குரவையாடுதலைக் குறிப்பிடும் பொழுது பெரும்பாலான இலக்கியங்களில் குரவைத்தழூஉதல் என்று குறிக்கப்பட்டுள்ளது. தழுவுதலைப் பற்றியே “தழூஉ” என்றே குரவை குறிக்கப்பட்டது.

    “தாதெரு மன்றத் தயவர் தழூஉ” 3

    என்று முல்லைக்கலி குறிப்பிடுகின்றது.

    தலைக்கை தருதல்

    குரவைக் கூத்துகளில் தலைதருதல் அல்லது தலைக்கை தருதல் என்ற வழக்கம் இருந்தது. முதன்முதலில் ஆண்பாலரோ பெண்பாலரோ தழுவி ஆடும்முறை இருந்திருக்க வேண்டும். இருபாலரும் இணைந்து ஆடும் நிலையில் தலைக்கை தரும் வழக்கம் வழக்கில் வந்திருக்க வேண்டும். ஆடவரும் பெண்டிரும் இணைந்து குரவை நிகழ்த்தும் வேளை, தழுவுதல் வேண்டி இரண்டிரண்டு பேராகத் தழுவி ஆடுவர். ஆடிய வண்ணமே தழுவும் தமது இணையை மாற்றுவர். ஒரே பிணையோடு இறுதிவரை ஆடுவதில்லை. இவ்வாறு பிறரைச் சேர்த்து ஆரத் தழுவி ஆடும் குரவையில், ஒருவர் முதன்முதலில் பிணைவேண்டிய வண்ணம் கையினைத் தருதலே தலைக்கை தருதல் எனப்பட்டிருத்தல் வேண்டும். இத்தழுவுதல் பல பிணையாக முறைப்படி நிகழும் வேளை, குரவை காண்போருக்கு ஒரு கண்கொள்ளாக் காட்சியாக இருந்திருக்கும்.

    ‘தலைக்கை தருதல்’ என்னும் கைகோர்த்தலில் கற்கடக்கை (நடுவிரல்) விரலும், அணிவிரலும், முன்னே நின்று மடித்து மற்றை விரல்கள் மண்டலித்து நின்றாட வேண்டும் என்ற நெறி வலியுறுத்தப்படுவதனை,

    “செந்நிலை மண்டிலத்தால் கற்கடகக் கைகோஒத்து

     அந்நிலையே யாடல் ஆராய்ந்துளார்” 4

    என்னும் சிலப்பதிகார அடிகள் சுட்டுகின்றன.

    அரசர்களுள் ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மகளிர்க்குத் தலைக்கை தந்து ஆடியதாக,

    “தழூஉப் பணை ஆக

    சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்து”5

    என்று பதிற்றுப்பத்துக் குறிப்பிடுகிறது.

    குரவைக் கூத்தானது கள்ளுண்ட மயக்கத்தில் ஆடப்பட்ட நிலையினை,

    “வாங்கு அமைப் பழனிய தேறல் மாக்கள்

    வேங்கை முன்றில் குரவை அயரும்”6

    “நறவு நாட்செய்த குறவர் தம் பெண்டிரொடு

    …………………. அயரும் குரவை”7

    என்ற சங்கப் பாடல்கள் விளக்குகின்றன.

    குரவைக் கூத்தின் சமுதாயப் பயன்

    சமூக உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்திற்காகவே கூத்து முதலிய கலைகள் உருவாயின. சமூக உறவு என்பது ஒரு மனிதனுக்கும் மற்றொரு மனிதனுக்கும் உள்ள உறவு. ஒரு ஊருக்கும் இன்னொரு ஊருக்கும் உள்ள உறவு. ஒரு குடும்பத்திற்கும் இன்னொரு குடும்பத்திற்கும் உள்ள உறவு என்று அத்துணை உறவுகளையும் ஒருங்கிணைக்கும் சொல்லாட்சியாகும். சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்த இத்தகைய நிகழ்த்து கலைகளே ஊடகங்களாகச்  செயல்பட்டன.

    மேலும் ஊசல், அலவனாட்டு, பொய்தலாடல் முதலிய மகளிர் விளையாட்டுகளைப் போலவே குரவைக் கூத்தும் சிறந்த பொழுது போக்காக விளங்கியது என்று பாக்கியமேரி குறிப்பிடுவார்.8

    குரவை, பழந்தமிழர் இசைக்கலை வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது. சிறுபறை, தொண்டகப் பறை, ஆம்பற் குழல், தண்ணுமை என்று பலவித இசைக்கருவிகள் குரவையில் பயன்பட்டன.

    முல்லைக்கலியில் குரவைக் கூத்து

    ஏறு தழுவுதல் நடந்து முடிந்தபின் ஊர்மன்றத்தில் குரவைக் கூத்து நடைபெறும். முல்லைக் கலியில் ஊர் மன்றமாவது சிறுகுடி என்றும் தாதெரு மன்ற என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. குரவைக் கூத்தாடும் மகளிர், ஏறுகளைத் தழுவியடக்கிய ஆயர்குல இளைஞர்கள் அணிந்துள்ள மாலை, அவர்களின் தோளாற்றல், ஏறுகளை அடக்கிய அவர்தம் ஆண்மைச் செயல், அவ்வீரர்களுக்கு மனைவியராகப் போகும் மங்கையரின் புன்முறுவல் தவழும் இன்முகங்கள், அவர்தம் மென்மையான தோள்கள் முதலியவற்றைச் சிறப்பித்துப் பாடுவர். அதனை,

    “பாடுகம் வம்மின் பொதுவன் கொலையேற்றுக்

    கோடு குறிசெய்த மார்பு”9

    என்றும்,

    “பண்ணமை யின்சீர்க் குரவையுள் தென்கண்ணித்

    திண்டோள்திறலொளி மாயப்போர் மாமேனி

    அந்துவ ராடைப்பொதுவனோ டாய்ந்த

    முறுவலாள் மென்றோன்பா ராட்டிச்சிறுகுடி

    மன்றம் பரந்த துரை”10

    என்றும் முல்லைக் கலிப்பாடல்கள் உணர்த்துகின்றன.

    தம்மை விரும்பும் ஆயர்குல இளைஞர் ஏறுதழுவித் தம்மை மணக்க முயலாது காலம் தாழ்த்துவதை அறிந்த ஆயர்குல மங்கையர், அவர்கள் விரைவில் ஏறுதழுவித் தம்மை மணக்க முன்வர வேண்டும் என்னும் கருத்தமைய பாடிக் குரவையாடுவதும் உண்டு.

    மேலும் குரவைக் கூத்தாடுங்கால் தம் குலக் கடவுளாகிய திருமாலையும் அவர் உறையும் கானகத்தையும், தாம் வாழும் நாட்டை ஆட்சி செய்யும் மன்னனை வாழ்த்திப் பாடுவதையும் ஆய மகளிர் தம் குலமரபாகக் கொண்டிருந்தனர்.

    இதனை,

    “குரவை தழீஇயாம் மரபுளி பாடித்

    தேயா விழுப்புகழ்த் தெய்வம் பரவுதும்

    மாசில்வான் முந்நீர் பரந்த தொன்னிலம்

    ஆளும் கிழமையொடு புணர்ந்த

    எங்கோ வாழியரிம் மலர்தலை யுலகே”11        

    என்ற முல்லைக்கலியடிகள் புலப்படுத்துகின்றன.

    சிலப்பதிகாரத்தில் கோவலன் கொலை செய்யப்பட்ட பின்னர் ஆயர்சேரியில் நேர்ந்த தீய நிமித்தங்களால் துன்பம்  நேரப் போவதை உணர்ந்து, ஆயர்குல மக்களுக்கும் ஆநிரைகளுக்கும் ஏற்பட்ட துயரத்தை நீக்குவதற்குத் தம் குலதெய்வமான திருமாலை வேண்டி குரவைக் கூத்தாடினா் என்பதை,

    “…….. ….ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன்

    தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல்

    நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை ஆடுதும்

    யாம்என்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே”12

    என்ற பாடலடிகளால் அறிய முடிகின்றது.

    ஏறுதழுவி வென்ற இளைஞர்களும், அவரை மணக்கப் போகும் மங்கையரும் கைகோர்த்துக் குரவைக் கூத்தாடி மகிழ்வதுமுண்டு.

    “பயிலிதழ் மலருண்கண்

    மாதர் மகளிரும் மைந்தரு மைந்துற்றுத்

    தாதெரு மன்றத் தயர்வர் தழூஉ”13 

    திருமணத்திற்குப் பின் மனைவியர் தம் கணவன்மாரின் கையொடு கைகோர்த்து ஆடி மகிழ்வதும் உண்டு.

    “தம்புல ஏறு பரந்தர உய்த்ததம்

    அன்புறு காதலர் கைபிணைந் தாய்ச்சியர்

    இன்புற் றயர்வர் தழூஉ”14

    ஆயமகளிர் ஏறுகளை அடக்கிய தம் கணவன்மாரின் பெருமைகளை ஊரார் புகழ்ந்து பேச, அதைத் தாம் கேட்டு இன்புற வேண்டும் எனவும் பாடிக் குரவைக் கூத்தாடுவர். இதனை,

    “கொல்லேறு கொண்டான் இவள்கேள்வன் என்றூரார்

    சொல்லுஞ்சொற் கேளா அணைமாறியாம் வருஞ்

    செல்வமெங் கேள்வன் தருமோவெங் கேளே”15

    என்ற அடிகளால் உணரலாம்.

    பழந்தமிழர்கள் இறைவனை வழிபடுவதற்காகவும், பொழுது போக்கிற்காகவும் கூத்துகளை நிகழ்த்தி வந்தனர். குரவைக் கூத்து, துணங்கைக் கூத்து, பிணைக் கூத்து போன்ற கூத்துகளை நிகழ்த்தினர் என்பதைச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. குரவைக் கூத்தானது பொழுதுபோக்கிற்காக நடத்தப்பட்டதாக இருப்பினும், அன்றைய இளைஞர்களின் ஆண்மைச் செயலை வெளிப்படுத்தும் நோக்கத்திற்காக அக்கால மங்கையர்கள், தம்மை விரைவில் மணந்து கொள்ள வேண்டும் என்று மறைமுகமாக தூது விடுத்துக் குரவைக் கூத்தாடினர். ஏறு தழுவிய வீரம் நிறைந்த ஆண்களை மணப்பதே பெண்களுக்குப் பெருமையாக இருந்தது. ஊரார் தம் கணவரைப் புகழ்ந்து பேசுவதையே விருப்பமாகக் கொண்டு குரவைக் கூத்தாடினர் என்பது அறியலாகிறது.

    இன்றைய காலக் கட்டத்தில் கூத்தென்பதை அம்மன் கோவில் விழாக்களில் மட்டுமே காண முடிகின்றது. அக்கூத்திலும் பழைய புராணக் கதைகளைக் கதைக் களமாக்கி கூத்தாடி வருகின்றனர். இன்றைய சூழலுக்கு ஏற்ப இயற்கையைப் பாதுகாத்தல், உலக வெப்பமயமாதலைத் தடுத்தல், பிளாஸ்டிக் பொருட்களைத் தவிர்த்தல், வனவிலங்குகளைப் பாதுகாத்தல், மனித நேயத்தை வளர்த்தல் போன்ற கருதுகோள்களை மையமாக வைத்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினால் கூத்துக் கலையும் அழியாமல் வளரும். நமது சமுதாயமும் மேன்மை அடையும்.

    குறிப்புகள்

    1. தமிழ்ப் பேகராதி தொகுதி -2 ப. 1012.
    2. ஆ.சிங்காரவேலு முதலியார், அபிதான சந்தாமணி, ப. 579.
    3. முல்லைக்கலி 103:03
    4. ஜெ.ஸ்ரீசந்திரன், சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, 65-66.
    5. பதிற்றுப்பத்து, 52:4-5.
    6. புறம். 129:2-3.
    7. மலைபடுகடாம், 320- 323.
    8. காலந்தோரும் தமிழர் கலைகள், முனைவர் பாக்கியமேரி, ப. 69.
    9. முல்லைக்கலி, 104:63-64.
    10. மேலது, 120:35-39.
    11. மேலது, 103:75-79.
    12. ஜெ.ஸ்ரீசந்திரன், சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, 22-25.
    13. மேலது, 103:60-61.
    14. மேலது, 106:32-33.
    15. மேலது, 106: 43-45.

    துணைநூற்பட்டியல்

    1. ஆலிஸ். அ முனைவர் (உரை), பதிற்றுப்பத்து, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர், சென்னை -98, மூன்றாம் பதிப்பு – பிப்ரவரி 2007.
    1. கதிர்முருகு டாக்டர்,  பத்துப்பாட்டு, சாரதா பதிப்பகம், ராயப்பேட்டை, சென்னை -14, முதற் பதிப்பு -ஜுன் 2009.
    1. சிங்காரவேலு முதலியார் ஆ., அபிதான சிந்தாமணி, சாரதா பதிப்பகம்,  திருவல்லிக்கேணி, சென்னை, முதற் பதிப்பு – 2004

          4 . நச்சினார்க்கினியர்  (உரை), கலித்தொகை, கழக வெளியீடு, மூன்றாம் பதிப்பு–1999

    1. பாக்கியமேரி, எஃப். முனைவர்., காலந்தோறும் தமிழர் கலைகள், வேந்தன் பதிப்பகம்,  சென்னை, முதற் பதிப்பு – 2005.
    1. ஸ்ரீசந்திரன் .ஜெ, சிலப்பதிகாரம், வர்த்தமானன் பதிப்பகம், 141, உஸ்மான் சாலை, தி.நகர், ஒன்பதாம் பதிப்பு- ஆகஸ்டு 2001.

    ———————————————————————————————————-

    ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

    ஆயர் குடியில் குரவைக்கூத்து ஆடும் முறை மற்றும் தேவைகள் குறித்துக் கட்டுரையாளர், சங்க இலக்கியப் பாடல்கள் வழி விளக்க முயன்றுள்ளார். சங்க இலக்கியம், சிலப்பதிகாரம் போன்ற தொன்மையான இலக்கியங்களில் குரவைக் கூத்திற்கான பதிவுகளை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழர் பண்பாட்டில் குரவைக் கூத்தின் முக்கியத்துவம் பற்றி ஆய்வில் விளக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆயர்களின் வாழ்வியல் நிகழ்வுகளுடன் குரவைக் கூத்து எங்ஙனம் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை ஆய்வாளர் நல்ல முறையில் பதிவு செய்துள்ளார். சம காலத்தில் குரவைக் கூத்தை விழிப்புணர்வு சார்ந்து பயன்படுத்தினால் கலையும் வாழும் மக்களுக்கும் பயன் கிடைக்கும் என்ற ஆய்வு முடிவு நன்று. மேலும் இதுபோன்ற ஆய்வுகளை மேற்கொள்ளும் பொழுது, கலைக்கும் சமூகத்திற்குமான தொடர்புகள் குறித்து விவாதிப்பது தேவையான ஒன்று. இதையும் ஆய்வாளர்கள் மனத்தில் கொள்ள வேண்டும்.

    ———————————————————————————————————-

    Share
  • நெல்லைத் தமிழில் திருக்குறள் விளக்கம் – 12

    -நாங்குநேரி வாசஸ்ரீ

    நெல்லைத் தமிழில் திருக்குறள் – அதிகாரம் 12 – நடுவுநிலைமை

     

    குறள் 111:

    தகுதி யெனவொன்று நன்றே பகுதியாற்
    பாற்பட் டொழுகப் பெறின்

    சண்டக்காரங்க, அல்லசல் மனுசங்க, சேக்காளிங்க னு பிரிச்சி பாத்து பார பட்சம் பாக்காம நியாயமா இருக்குதது தான் நல்லது செய்யுத நடுவுநிலைமங்குத தகுதி.

    குறள் 112:

    செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி
    எச்சத்திற் கேமாப் புடைத்து

    நடுவுநிலைமை உள்ளவனோட செல்வத்துக்கு அழிவுங்கது கெடையாது. அது அவனோட அடுத்தடுத்த தல முறைக்கும் நன்மைய செய்யும். .

    குறள் 113:

    நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
    அன்றே யொழிய விடல்

    நல்லதையெ தருததா இருந்தாலும் நியாயங்கெட்ட வழில வருத லாபத்த அப்பமே விட்டுபோட்டு போயிடணும்.

    குறள் 114:

    தக்கார் தகவிலர் என்ப தவரவர்
    எச்சத்தாற் காணப் படும்

    இவர் நியாயமான மனுசனா,  நியாயங்கெட்டவரா ங்குத வித்தியாசத்த அவருக்கு பின்னால இருக்கப் போகுத செல்வம், புகழ், பெத்த பிள்ளைங்களோட ஒழுக்கம் இத வச்சி தெரிஞ்சிக்கிடலாம்.

    குறள் 115:

    கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக்
    கோடாமை சான்றோர்க் கணி

    வாழ்க்கைல நல்லதும் கெட்டதும் இருக்குதது இயற்கை. அந்த ரெண்டு நிலைமலேயும் நியாயமா நடந்துகிடது தான் பெரிய மனுசங்களுக்கு அழகு.

    குறள் 116:

    கெடுவல்யான் என்ப தறிகதன் நெஞ்சம்
    நடுவொரீஇ அல்ல செயின்

    நெஞ்சுக்குள்ள நியாயங்கெட்ட நெனைப்பு வந்து தப்பு செய்யணும்னு தோண ஆரம்பிச்சிடுச்சின்னா கெட்டழியப் போகுதேன்னு அவன் தன்னத்தானே தெரிஞ்சிக்கிடணும்.

    குறள் 117:

    கெடுவாக வையா துலகம் நடுவாக
    நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

    நியாயந் தவறாம அற வழில வாழுத ஒருத்தருக்கு அதனால பணம் சேராம வறுமைல வாடினாலும் அவர ஒலகம் ஏழைன்னு நெனைக்காது.

    குறள் 118:

    சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபாற்
    கோடாமை சான்றோர்க் கணி

    முன்ன சமமா நின்னு பொறவு பொருள சீர்தூக்கி பாக்க ஒதவுத தராசுமுள் போல ஒருபக்கம் சாயாம நியாயமா நடந்துகிடதுதான் படிச்ச பெருமக்களுக்கு அழகு.

    குறள் 119:

    சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
    உட்கோட்டம் இன்மை பெறின்

    நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருத்தருக்கு இருந்திச்சின்னா அவரோட சொல்லுல நீதியும் நியாயமும் இருக்கும். அதுக்குப் பேருதான் நடுவுநிலைமை.

    குறள் 120:

    வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
    பிறவும் தமபோல் செயின்

    மத்தவங்களோட பொருளயும் தன்னோட பொருளா நெனச்சி பாதுகாத்து நேர்மையா விக்குததுதான், வியாபாரம் செய்யுதவங்களுக்கு நல்ல வியாபார முறையா இருக்கும். ..

    ______________________________________

    கட்டுரையாளரைப் பற்றி

    இயற்பெயர் –  பத்மா ஸ்ரீதர்
    புனைப் பெயர் – நாங்குநேரி வாசஸ்ரீ
    தமிழார்வம் கொண்ட இல்லத்தரசி. முன்னாள் ஆசிரியை.
    கதைகள், கவிதைகள் எழுதுவதில் விருப்பம் அதிகம்.
    இதுவரை எழுதிய தளங்கள் : சிறுகதைகள்.காம், எழுத்து.காம், ப்ரதிலிபி.காம்

    Share
  • காதல் எனும் கனியமுது !

    மகாதேவஐயர் ஜெயராமசர்மா ….. மெல்பேண் .. அவுஸ்திரேலியா

    இளமையிலும் காதல் வரும்
    முதுமையிலும் காதல் வரும்
    எக்காதல் இனிமை என்று
    எல்லோரும் எண்ணி நிற்பர்
    இளமையிலே வரும் காதல்
    முதுமையிலும் தொடர்ந்துவரின்
    இனிமைநிறை காதலென
    எல்லோரும் மனதில் வைப்போம்

    காதலுக்குக் கண்ணும் இல்லை
    காதலுக்குப் பேதம் இல்லை
    காதல் என்னும் உணர்வுதனைக்
    கடவுள் தந்தார் பரிசெனவே!
    காதலிலே மோதல் வரும்
    காதலிலே பிரிவும் வரும்
    என்றாலும் காதல் எனில்
    எல்லோரும் விரும்பி நிற்பார்!

    காதல் என்று சொன்னவுடன்
    கவலை எல்லாம் ஓடிவிடும்
    கனவுபல தோன்றி வந்து
    கண்ணுக்குள் புகுந்து நிற்கும்
    கற்பனையில் உலா வந்து
    களிப்புடனே நாம் இருப்போம்
    காதல் என்னும் உணர்வில்லார்
    கல்லினுக்கே சமம் ஆவார்

    காவியத்தில் காதல் வரும்
    ஓவியத்தில் காதல் வரும்
    கல்வியிலும் காதல் வரும்
    காசினிலும் காதல் வரும்
    அக்காதல் கொள்ள மனம்
    ஆசை பட்டு நின்றாலும்
    அழகு மங்கை தரும்காதல்
    அனைவருக்கும் பிடிக்கும் அன்றோ

    மனித குலம் முழுவதற்கும்
    மகிழ்வு எனும் மருந்தாக
    வரமாகக் காதல் அது
    வந்து அமைந்து இருக்கிறது
    புவிமீது நாம் வாழப்
    பொலிவு தரும் அமிர்தமென
    காதல் எனும் கனியமுதைக்
    கடவுள் எமக்களித்துள்ளார்!

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 13

    சி. ஜெயபாரதன், கனடா

    என் இழப்பை நினை, ஆனால் போக விடு எனை !
    [Miss me, But let me go]
    ++++++++++++++

    [41] மீளாப் புரிக்கு !

    என்னுள்ளத்தின் சுவர்களில்
    ஒவ்வோர் அறையிலும்
    நான் காண விழைவது
    துணைவி படம் ஒன்றைத்தான் !
    நான் கேட்க
    விரும்புவது துணைவி
    இனிய குரல்
    ஒன்றைத் தான் !
    ஓவ்வோர் அறைத் தளத்திலும்
    என் காதில்
    விழ வேண்டுவது
    துணைவி தடவைப்பு
    எதிரொலி
    ஒன்றைத்தான் !
    ஒவ்வோர் சுவர்ப் படத்திலும்
    அவளது கண்கள்
    உற்று நோக்க வேண்டுவது
    எனது கண்களைத் தான் !
    எண்ணற்ற அவளது
    படங்களைத் தேடி எடுத்து
    பலகையில் ஒட்டிப்
    பலர் பார்க்க வைத்தேன்,
    ஈமச் சடங்கிலே !
    யாரை நான் இழந்தேன் என்று
    ஊராரும், உற்றாரும்
    பார்க்க வேண்டும் அன்று !
    உடலையும் உயிரையும்
    பிடித்து வைக்க முடிய வில்லை !
    படங்களை யாவது
    தினம், தினம்
    பார்த்துப் பார்த்து
    துணைவியை நினைக்கலாம் !
    திரைப் படங்களில் அவள்
    உயிரோடு
    நடமாடி இருந்ததைக்
    காணலாம்
    மீண்டும், மீண்டும் !
    என்னை விட்டுத் துணைவி
    பிரிந்து விட்டாள்
    நிரந்தரமாய் !
    எனது இல்லத்தில் இனிமேல்
    வாழத் தேவை யில்லை
    என்று ஆயுள்
    அத்தமனம் ஆனது !
    ஒருபோக்குப் பாதையில்
    திரும்பிப் பாராது,
    புலம் பெயர்ந்து விட்டாள்
    மீளாப் புரிக்கு !

    +++++++++++++++
    [42] உயிரா ? உடலா ?

    உயிர் என்னும் மாய விசை
    இல்லையேல்,
    உடம்பெனும் யந்திரம்
    ஓடாது இப்புவியில் !
    உடம்பு என்றோர்
    பம்பரம் இல்லை யெனின்
    உயிருக்கு வேலை
    உண்டோ ?
    தனித்து வாழ முடியாத
    இரண்டும்
    பிணைந்து வாழ வேண்டும்,
    பிறப்புருவில்.
    அல்லது
    முறிந்து வீழ வேண்டும்,
    என்பது ஊழ்விதி !
    முதன் முதல்
    உயிர் நீங்க வில்லை
    துணைவிக்கு !
    முறிந்து,
    முடங்கியது முதலில்
    உடம்பு !
    உயிருக்கு ஆயுள் நீட்சி
    இருப்பினும்
    நோயுற்ற கூண்டிலே
    குடியிருக்க
    முடிய வில்லை,
    உயிர்ப் புறா !
    இறுதியிலே
    பூரண
    ஓய்வெடுத்தது உயிரும்
    உடம்பும் !

    +++++++++++++++++
    பிரார்த்தனை தொடர்கிறது.
    சி. ஜெயபாரதன்
    ++++++++++++++

    Share
  • வரைந்த ஓவியத்தில் ஒளிந்துகொண்ட கோடுகள்

    -கவிஞர் பூராம்

    கடந்து சென்ற பாா்வையில்
    காற்றோடு உறவாடி காலம்காணா
    வானோடு நிலைத்திருந்து
    கண்களைக் கேட்டேன்
    காட்டு அவனது இதயத்தை என்று!

    காணும் பொருளெல்லாம் காணாமல்போக
    காணாத பொருளைக் கண்டேன்
    அவனெனும் இதயத்துள் – மாயை
    மனதுக்குத் தெரியவில்லை காற்றாய்
    கண்ணாமூச்சி ஆடுகிறது என்னோடு!

    அவனுக்கும் தெரிந்துதான் இருக்கும்
    என் தேவை, ஏற்க மறுக்கும் பாா்வையோடு
    நகர்ந்து செல்லும் பயத்தோடு அவன்!

    மரணத்தின் வாசனை சில நுகர்தல்
    அவனோடு அலைவதைக்கண்டு
    சொல்லாமல் கடந்து சென்ற அன்பு
    பாறையின் ஓவியமாக
    ஒவ்வொரு சந்திப்பிலும் அழகோடு அபிநயத்தது!

    பத்தாண்டு கோடை கழிந்து
    முதல் மழையில் பேருந்து நிறுத்தத்தில்
    எதிரெதிர் திசையில் ….

    அதே பாா்வையோடு அவன் சொன்ன
    முதல் வாா்த்தை முட்டியது உதட்டில்
    வழிந்த கண்ணீர்த்தூளியில் அவன்
    அழ மறுக்கும் கண்களில் நான்
    கொடுரமானது சமூகம்.

    Share
  • படக்கவிதைப் போட்டி 199-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. முரளிதரன் வித்யாதரன் தன் புகைப்படக் கருவிக்குள் அடைத்து வந்திருக்கும் ஆரவாரிக்கும் கடலைப் படக்கவிதைப் போட்டி 199க்கு, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து, தேர்ந்தெடுத்துத் தந்திருக்கின்றார்  திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றியை உரித்தாக்கிக் கொள்கின்றேன்.

    அடடா! வெண்ணுரையாய்ப் பொங்கும் கடலலையின் அழகைக் கண்விரியக் காண்கிறோம் நாம்! இயற்கையின் பேரெழில் செயற்கையாய்ப் புனைய இயலாதது!

    இக்கவின்மிகு காட்சியைப் பார்த்தால் மட்டும் போதுமா? சொல்லோவியங்களாகத் தீட்டினால் அல்லவோ காட்சியின் மாட்சி கூடும். அப்பணியைச் செய்ய கவிஞர்கள் ஐவர் காதலுடன் காத்திருக்கின்றார்கள். அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    *****

    ”உவரிக்குக் கோபம் வந்தால் உலகையே வீழ்த்திடும்; ஆதலால் அலைகடலே! உன் எழிற்கோலத்தை மாற்றாதே! அவல அலங்கோலங்களை நிகழ்த்தாதே!” என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    தொடரட்டும் அழகு…

    கடலில் அலைகள் ஓய்வதில்லை
    காணும் அழகும் குறைவதில்லை,
    உடையாய் உலகை மறைத்திருக்கும்
    உவரி தனக்கும் வரும்கோபம்,
    அடங்கி யிருக்கும் அலைக்கரத்தால்
    அடித்தே நொறுக்கிடும் அகிலத்தையே,
    தொடர்க கடலே உனதழகை
    தொடர வேண்டாம் அவலங்களே…!

    *****

    சமூக ஊடகங்களில் சறுக்கிவிழுகின்ற தலைமுறை, சிறுத்துப்போன உள்ளங்கள், சமுதாயத்தைச் சீரழிக்கும் சிற்றின்ப விளம்பரங்கள் இவைகண்டு சீற்றம் கொண்டு ஆர்ப்பரிப்பது மனித மனங்கள் மட்டுமல்ல; மா கடலுந்தான்!” என்பது இப்படம் குறித்த திரு. ஆ. செந்தில் குமாரின் பார்வை.

    கொந்தளிக்கும் அலைகடல்..

    பரப்புரை செயவேண்டியதைப்
    பெட்டிக்குள் அடைத்தும்..
    பெட்டிச் செய்திகளைப்
    பெரிது படுத்தியும்..
    பதிவிடும் ஊடகங்கள்..!!

    ஆயிரம் நல்லவை
    அவனியில் நிறைந்திருந்தும்..
    அந்தவொரு அவசியமற்றதைப்பற்றி
    அதிகமாய் அங்கலாய்க்கும்..
    அறிவில் குறைபாடுள்ள சமுதாயம்..!!

    சமூக ஊடகங்களில்
    சறுக்கிவிழுகின்ற தலைமுறை..
    சிறுத்துப்போன உள்ளங்கள்..
    சமுதாயத்தைச் சீரழிக்கும்
    சிற்றின்ப விளம்பரங்கள்..!!

    பொருள் தேடலில்
    பொலிவிழந்த வாழ்க்கை..
    பணத்தைக் கொண்டாடும் உலகில்
    பதவிச்சண்டைகள் பெருத்து..
    பண்பு பரிதவிக்கும் அவலம்..!!

    இவற்றையெல்லாம் நினைந்து..
    இன்னலுற்றது சிலரின்
    இதயங்கள் மட்டுமல்ல..
    சிலநேரங்களில் அலைகடலும் ஆழிப்பேரலையாய்..
    சீற்றங்கொண்டு கொந்தளிக்கிறது..!!

    *****

    வெண்ணிலவுப் பெண்ணாளைக் கண்டு காதல் கொண்ட கடலரசனின் விந்தைச் செயல்களை விளம்பியிருக்கின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ்.

    கடலுக்கு வந்த காதல்

    அமைதியாய்ப் பகலெல்லாம் ஓயாமல் அலைபாய
    அந்தி சாய்ந்ததும் நீ பொங்கி எழுந்தது ஏனோ
    அழகான வெண்ணிலா வானில் உலா வர
    ஆனந்தத்தில் பொங்கி எழுந்தாயோ?
    விண்மீன்கள் சூழ வந்த வெண்ணிலவைக் காண
    கரையில் வந்து நின்ற மானுடர்களின்
    கால்களைக் கழுவி அழைத்தாயோ?
    தொடர்ந்து வரும் அலையாய்க்
    கரையில் விழுந்து சப்தம் எழுப்பி
    கவனத்தை ஈர்க்க முயன்றாயோ?
    வந்து நின்ற வெண்ணிலவைக் கண்டு
    நிலை கொள்ள இயலாமல்
    நித்தம் அலைகளாய் இயங்கினாயோ?
    காதல் வந்து நெஞ்சுக்குள் நிலவை வைத்திட
    ஆழ்கடல் அமைதியாய் மாறியதோ?
    கலங்காது இருந்த கரையை ஓயாமல் அலையடித்து
    வன்முறை செய்வது ஏனோ?
    இரவென்று உறங்க முயன்ற கரையை அலையடித்து எழுப்பி
    உன் காதல் கதையைச் சொல்ல முயன்றாயோ?
    விடியல் வந்து இரவை விரட்டிட
    விலகிச் சென்ற வெண்ணிலவை கண்டு
    நெஞ்சில் புயல் ஒன்று உருவானதோ?
    அமைதியாய்ப் பாயும் அலையும்
    பொங்கிச் சீற்றத்துடன் பாய்ந்து
    தன் இயலாமையை வெளிப்படுத்தியதோ?
    இரவெல்லாம் உறங்காமல் வெண்ணிலவை எண்ணி ஓடிட
    உனக்கும் மன அழுத்தம் வந்ததோ
    சற்றே ஓய்வெடு அமைதியாய் அலை வீசிடு!
    சூரியன் மேற்கில் சென்று ஒளியும் வரை
    மீண்டும் உன் அருகில் வந்து உதித்திடுவாள்
    உன் ஆசை வெண்ணிலவு!

    *****

    ”இங்கே காதலில் ஈடுபட்டிருப்பது கரையும் நீரும் மட்டுமல்ல; காற்றும் கூடத்தான்” என்றொரு முக்கோணக் காதல் கதையைச் சொல்லிச் செல்கின்றார் முனைவா் ம. இராமச்சந்திரன். 

    ஓயப்போவதில்லை என்று ஆா்ப்பரித்தாலும்
    விடப்போவதில்லை என்று மோதினாலும்
    பார்ப்பவர்க்குத்தான் வியப்பு
    காற்றுக்கில்லை!
    காதலிப்பது கரையும் நீரூம் மட்டுமல்ல
    காற்றும்தான்!
    உண்மைபோல
    காற்றும் உறுதியானது.

    *****

    நுரைபொங்கும் கடற்காட்சியைத் தத்தம் கோணத்தில் கவனித்துக் கவி முத்துக்களை அள்ளிச் சொரிந்திருக்கும் கவிஞர்களுக்கு நம் பாராட்டுக்களைப் பகிர்வோம்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தெரிவாகியிருப்பது…

    காப்பாயே…கடல் தாயே!

    துள்ளி வரும் வெள்ளலையே தூங்காக்
    கடல்தாயின் வெண்புனல் குருதி நீதானோ?
    விடிவெள்ளிதனை விளக்காக்கி மடிவலையில்
    மீன்பிடிக்கும் மீனவர்க்குத் துணை நீயாமோ?

    திரைகடலின் உயிர்த்துடிப்பே கரை என்ற
    சிறைக்குள்ளே உன்னைக் கட்டி வைத்தது யாரோ?
    விரைந்து வரும் உன் வேகம்
    கரையவளின் கைஅணைப்பில் அடங்குவதென்ன மாயம்?

    எங்கும் திறந்தே கிடக்கும் நெடுங்கரைக்குப்
    பொங்கிவரும் வெண்ணுரையால் போர்த்த,
    புத்தம் புதுப் போர்வை நித்தமும் நெய்யும்
    ஓய்விலா இயற்கை நெசவாளன் நீ!

    உப்புக் காற்றோடு ஊடல் கொண்டால் நீ
    தப்புத் தப்பான உயரத்தில் தாவி வருகிறாய்!
    இப்புவியின் நிலப்பரப்பை இடைவிடாது தாலாட்டும் நீ
    அவ்வப்போது ஆழிப் பேரலையாகி எங்களை அழவைக்கின்றாய்!

    எம்மாந்தர் மனம்போலே ஒரு நிலை இல்லாமல்
    எழும் வீழும் உன் எழில்கண்டு களிப்புறும் வேளையிலே
    எச்சரிக்கை ஏதும் இல்லாமல் எமை அள்ளிச் செல்லும்
    எமனாகப் பொங்கிவந்து அழிப்பது ஏனோ?

    வெப்பம் தின்று குளிரூட்டும் நீ எங்கள்
    தப்புத் தவற்றை பொறுத்தருளக் கூடாதோ?
    இப்புவியின் சூழல்காக்க இன்னும் ஓர்வாய்ப்பு
    எப்படியாயினும் தந்திட வேண்டும் கடல் தாயே… காப்பாயே!

    ”துள்ளிவரும் வெள்ளலையே! நெடுங்கரைக்குப் போர்த்துதற்கு வெண்ணுரையால் போர்வை செய்யும் நீ ஒரு நெசவாளனோ? நிலையிலா மாந்தர் மனம்போல் எழும் வீழும் நீ, எங்கள் தவறுகளைப் பொறுத்தருளக் கூடாதோ?” என்று மாந்தர் தவற்றை மன்னிக்கக் கோரும் கவிதையைக்  கடலன்னைக்குக் காணிக்கையாக்கியிருக்கும் திரு. யாழ் பாஸ்கரனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் என்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

     

    Share