உறைந்த வர்ணம்
இரமேஷ் அர்ஜூன்
1
ஒளியில் கரைந்த நிழல்
உள் வெளி நிறைந்த ஒளி
வார்த்தை தேடும் மௌனம்
மௌனம் பேசும் மொழி
மறித்துப் போன ஆசை
நிலைத்து கிடக்கும் ஏக்கம்
அசைத்துப் பார்க்கும் ஓவியம்
ஆட்டிப் படைக்கும் இசை
நேற்று பெய்த மழை
இன்று பூத்த பசுமை
இவைதான்
முடிந்த வாழ்வில்
முழு நிலவின் ஒளியென
நிழலாடுகிறன
கனவொன்றின் கடைசித் துளியில்…
2
கிழித்தெறியப்பட்ட
அழகிய ஓவியம் ஒன்றில்
உறைந்து கிடக்கிறது
வர்ணம்
சிவப்பு மையில்
எழுதப்பட்டு விட்ட
ஓவியக் கிழிசல்களில்
சொட்டிக்கொண்டிருக்கிறது
வர்ணத்தின் கலவை
வர்ணங்களைக் கடந்து
பார்த்திராத நிறக்குருடர்கள்
நெஞ்சில் எழுதட்டும்
நீரின் வர்ணம்
எது என்ற கேள்வியை…
அய்யா மிக அருமையான மென்மையான வரிகள் தொடர்ந்து எழுதுக