(Peer Reviewed) தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை

1

-மூ.சிந்து,
உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை,
ஸ்ரீ நேரு மகா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
மலுமிச்சம்பட்டி,
கோயம்புத்தூர் – 641050.
மின்னஞ்சல்-sindujasms@gmail.com

*****

இன்றைய காலகட்டத்தில் மனிதனின் இயக்க நிலையானது திரும்பிப் பார்க்க நேரமின்றி சுற்றிக் கொண்டிருக்கும் கடிகார முள்ளிற்கு இணையாக ஓய்வின்றி இயங்கிக் கொண்டிருக்கும் நிலையினை உணரமுடிகிறது. வேகமான உலகத்திற்கேற்ப மனிதனும் தன்னுடைய செயல்களில் சுருக்கமும் தெளிவும் தேடும் நிலையையும், அதே நேரத்தில் இரசிக்கும் தன்மையுடனும் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்குள் கவிதைகளானது இயங்கிக் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது.

படைப்பாளனின் மன உணர்வின்படி கவிதைகள் எழுதப்பட்டாலும், வாசிப்பாளன் ஏற்கும் மனநிலையில் மட்டுமே அக்கவிதையானது மதிப்பு பெறுகிறது. ஆகவே கவிதைகள் வரலாற்றில் புதுக்கவிதைக்கு என்று ஒரு தனிஇடம் உண்டு.

காலச் சூழலுக்கு ஏற்ப மனிதன் தன்னை  மாற்றி இயக்கம் கொள்வதுபோல, இலக்கியங்களும் மாற்றம் கொண்ட நிலையினை இன்றைய காலகட்டங்களில் காணமுடிகிறது. சுருங்கக் கூறி விளங்க வைப்பதில் கவிதை இன்றைய சூழலில் முதன்மை பெற்று விளங்குவதைக் காணமுடிகிறது.

கவிதையின் வளர்ச்சி நிலை

நாளொரு வண்ணமுமாகப் படைப்பாளன் வளர்ந்து வரும் நிலையில் கவிதையானது வேகமாக வளர்ந்து வரும் நிலையினைக் காணமுடிகிறது. அத்தகைய சூழலில் படைப்பாளனின் படைப்புகளாக நாள்தோறும் புதுப்புது வடிவமாகக் கவிதையானது வடிவம் பெறும் நிலையினைக் கண்கூடாகக் காணலாம். கட்டுப்பாடுகளின்றி கவிதைகள் தோன்றும் இத்தகைய சூழல்களில் கவிதைகளின் தாக்கமானது வாசிப்பாளர்களிடையே பெரிய மாற்றத்தை உண்டாக்கியதையும், உண்டாக்குவதையும் காணமுடிகிறது.

கவிதைகளின் வளர்ச்சி இன்றைய காலகட்டத்திற்கு முக்கிய ஒன்றாக அமைகிறது. படைப்பாளன் எவ்விதமான கட்டுபாடுகளின்றியும் தனித்து சுதந்தரமாகத் தனது பதிவுகளை வெளியிடும் சூழலும் இன்று அமைந்துள்ளதைக் காணலாம். விரிவாகக் கூறிச் செய்திகளை விளங்க வைப்பதைக் காட்டிலும் கவிதைகளின் வாயிலாக சமூகத்தில் எளிமையாகக் கூற வந்தக் கருத்தினைப் பதிவு செய்ய இயலுகிறது.

சமூகத்தின் நிலை

இன்றைய சமூகமானது பயனற்ற நிலையில் இயங்குவதும், மக்கள் தன்னிலை உணர்ந்து தனக்கேற்ற நிலையில் வாழாது, மற்றவர்கள் பார்வையில் தான் கொண்ட இடம், பெறும் மதிப்பு இவற்றை அடிப்படையாக் கொண்டு வாழும் சூழல் பெருகி வருவதையும் உணரமுடிகிறது. மனிதன் தன் வாழ்க்கையைப் பயனற்ற போக்கில் கழித்தும், வாழ்க்கையை இயல்பாகக் கொண்டாடாமல் செயற்கையாகக் கொண்டாடும் நிலையே இன்று பெருகி வருகிறது.

                 ‘கூட்டம் கூட்டம் கூட்டம்
                 கூடல் நகரில் கூட்டம்
                 கூட்டம் பார்க்கக் கூட்டம்
                 கூட்டம் கூட்டம்’…1

என்ற கவிதையில் இன்றைய சமுதாயத்தில் மனித மனமானது எந்தச் செயலிலும் விரைவாக உட்புகுந்து அவற்றை இரசிப்பதில் எளிமையாக  நுழைந்து பயனுள்ளதா பயனற்றதா என்பதை எல்லாம் ஆராயாது இரசிக்கும் நிலையை மட்டுமே வெளிப்படையாகக் காணமுடிகிறது.

மாணவர்களின் மனநிலை

இன்றைய சூழலில் மாணவர்களின் மனமானது எந்த ஒரு செயலையும் எளிதாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொள்ளக் கூடியதாக விளங்குவதை அறியலாம். நகைச்சுவை என்பது எல்லா இடங்களிலும் தோன்றக் கூடியதில்லை. அவை சொல்லியும் வருவதில்லை. அவை தானாகத் தோன்றக் கூடியதாகும். தோன்றக்கூடிய இடமானது நல்லது, கெட்டது என்றப் பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் தோன்றி அருகில் இருப்பவர்களை ஆனந்தமயமாக வைக்க இந்த நகைச்சுவையானது முக்கியப் பங்கு பெறுகிறது.

                 ‘வாத்தியார் மனைவி
                   செத்ததற்கு
                   பள்ளி விடுமுறை
                   மாணவர் வருத்தம்
                   தலைமையாசிரியருக்கு
                   ஒரே ஒரு மனைவி மட்டும் தானா? 2

என்ற கவிதையைக் கேட்டவுடன் அனைவரும் சிரிக்கும் நிலையில்  அந்த செய்திக்குப் பின்பு உள்ள சோகத்தை மறக்கக்கூடிய நிலையில் மாணவர்களின் நகைச்சுவையானது அமையப் பெறுவதும், இதில் மாணவர் பருவம் விளையாட்டுத்தனமாகவும், சந்தோசமாகவும் கழிக்கக் கூடிய ஒன்று என்பதையும் அப்பருவத்தில்  மாணவர்கள் குழுவாகவும் சந்தோசமாகவும் இன்ப துன்ப எல்லா நேரங்களிலும் ஒரே இயல்பில் தம் இனக்குழுவுடன் செயல்படுவதை உணரமுடிகிறது.

அரசியல் நிலை

இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவைக்கும், கேலி, கிண்டல் ஆகிய அனைத்துச் செயல்களுக்கும் முதன்மை இடம் கொடுத்து நிற்பது அரசியலாகும். மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுக்கும் என்ற நிலை மாறி, மக்களையும், மக்களுடைய குடும்பத்தையும், மக்களின் வாக்குகளையும் தேர்ந்தெடுக்கும் நிலையாக மாறியுள்ளதைக் காணமுடிகிறது.

 அனைத்துப் பதவிகளுக்கும் கல்வி அடிப்படையாக விளங்கும். ஆனால் அரசியலில் மட்டும் எவ்விதமான அடிப்படைத் தகுதிகளுமின்றியும் எளிமையாக பதவியினைப் பெற முடியும் என்பதனை,

                  ‘அது வராவிட்டால் இது
இது வராவிட்டால் அது
எதுவும் வராவிட்டால் அரசியல்’ 3

என்ற தமிழன்பனின் கவிதை வரிகளின் வாயிலாக இன்றைய அரசியல் நிலையைப் படம்பிடித்துக் கண்முன் காட்டுகிறது. மேலும், இன்று தேர்தல் நிலையினையும் அதில் பதிவாகும் வாக்குகள் இவை அனைத்தும் உண்மையா? என்பதனை யோசிக்க வைக்கிறது.

                 ‘ஓட்டுப் போட்டு விட்டு
திரும்பிய பிணம் திடுக்கிட்டது
                   தனது கல்லறையில்
வேறொரு பிணம் என்று’…….. 4

மேற்கூறிய கவிதையின் வாயிலாக இன்றைய அரசியலில் வாக்களிக்கும் முறை என்பது நேர்மையற்ற நிலையில் இயங்கக் கூடியதாகவும், இறந்தவர்கள் கூட நமது அரசியலில் வாக்களிக்க முடியும் என்ற நிலையில் பொய்வாக்கு தேர்தலில் பதிவாகும்  நிலையினையும் இக்கவிதையானது படம்பிடித்துக் காட்டுகிறது.

மனைவியின் ஏக்கம்

மனைவியைப் பிரிந்து தன் குடும்பத்திற்காகக் கணவன் வேறு இடம் சென்று தொழில் மேற்கொள்ளும் நிலையில் கணவன் செல்லக்கூடிய இடம், தொழில், பிரிவு ஆகியவை மனைவிக்குத் துன்பம் தரக்கூடிய நிலையில், பிரிந்து செல்லும் கணவனை மீண்டும் பார்க்கும்வரை மனைவிக்குத் துன்பம் மிகும் என்ற நிலையில் மனைவியின் அன்பு வேண்டுகோளாக அமைவது

                  ‘வழியனுப்ப வந்த மனைவி
                   கண்ணீரோடு சொன்னாள்
                   பணம் அனுப்ப மறந்திடாதீங்க’5
என்ற தமிழன்பனின் கவிதை வரிகளின் மூலம் இன்றைய காலகட்டத்தில் எல்லா நிகழ்வுக்கும் பணம் இன்றியமையாததாக அமைகிறது என்பதையும், பணம் இன்றி எச்செயலும் நடைபெறாது என்பதையும் உணர்த்துகின்றன.

குடிமகனின் தவிப்பு

பாரத திருநாட்டில் நல்ல குடிமகனாக இருக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்க்கும் ஒன்றாகும். ஆனால் இன்று நாட்டில் மதுவிற்கு அடிமையாகி மக்கள் குடிமக்களாக இருப்பதைக் காணமுடிகிறது.

 ‘அழுதான் நம்ம அப்பு
காந்தி சிலையைக் கட்டிப் பிடிச்சு
போதலையாம் தண்ணி மப்பு’6

என்ற கவிதையின் வாயிலாக நாட்டு முன்னேற்றத்திற்குத் தூணாக விளங்க வேண்டிய இளைஞர்கள் குடிப்பழக்கத்தினால் தன்னிலை மறந்து நிற்கும் அவல நிலையினை வெளிப்படுத்துகிறது.

முடிவுரை

கவிதைகள் மனித வாழ்க்கையோடு ஒன்றியைந்ததாகவும், சமூகத்தில் நிகழும் அனைத்து நிகழ்வுகளையும் எளிதில் புரியும் வகையில் மக்களிடையே கொண்டு சேர்க்கும் கருவியாகவும் சுருங்கக் கூறி விளங்க வைப்பதன் மூலமாக அனைவராலும் விரும்பி ஏற்கக்கூடிய ஒன்றாகவும் விளங்கும் நிலையினைக் காணமுடிகிறது.

*****

துணை நின்ற நூல்

தமிழன்பனின் “என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ் செடி” கவிதைத் தொகுப்பு.

***********************************************************************

ஆய்வறிஞர் கருத்துரை (Peer Review):

ஆய்வாளர், புகழ்பெற்ற தமிழ்க் கவிஞரான தமிழன்பன் அவர்களின் கவிதைகளில் வெளிப்படும் சமூகநிலை குறித்து இக்கட்டுரையில் ஆய்ந்துள்ளார். மிக எளிமையாகவும் எதார்த்தமாகவும் தமிழகத்தின் சமூக நிலையைக் கவிஞர் தம் கவிதைகளில் பிரதிபலிப்பதை இக்கட்டுரை நமக்கு அறியத் தருகின்றது. ஒரே ஒரு கவிதைத் தொகுப்பை முன்னிறுத்தி ஆராய்ந்தால், தமிழன்பனின் “என் வீட்டு எதிரே ஓர் எருக்கஞ் செடி” கவிதைத் தொகுப்பில் வெளிப்படும் சமூகத்தின் நிலை என்றே தலைப்பு அமையலாம். தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை எனச் சொல்வது பொருந்தாது. கவிஞரின் இதர கவிதைகளையும் ஆய்வுக்கு எடுத்துக்கொண்டிருந்தால் இக்கட்டுரை மேலும் வலிமை பெற்றிருக்கும்.

பொதுவாக, படைப்பிலக்கியங்களின் மீது நிகழ்த்தப்பெறும் பெரும்பான்மையான ஆய்வுகள், உண்மையான ஆய்வுகளாக அமைவதில்லை. பல்வேறு ஆக்கங்களிலிருந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வரிகளை எடுத்து, அவற்றை விளக்குவது, ஆய்வு ஆகாது. குறைந்த உழைப்பைக் கோருகிற, எளிதில் கட்டுரையை நிறைவு செய்கிற வாய்ப்பும் நோக்கமும், இவற்றில் உண்டு. ஆனால், இவற்றால் ஆய்வாளருக்குப் பெருமையோ, ஆய்வுலகிற்குப் புதிய கருத்துகளோ  கிடைப்பதில்லை. இவற்றை உணர்ந்து அசலான ஆய்வுக் கட்டுரைகளை எழுத, ஆய்வாளர்கள் முனைந்திட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

***********************************************************************

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “(Peer Reviewed) தமிழன்பன் கவிதைகளின் வெளிப்பாட்டில் சமூகத்தின் நிலை

  1. வணக்கம்! கட்டுரையின முதல் தொடரே பிழையாக அமைநதிருக்கிறது என்பது பெரிதும் வருத்தத்திற்குரியது. ‘இயக்க நிலையானது’ எனத் தொடங்கி இயங்கிக்கொண்டிருக்கும் என்றால் தொடரில் எது எழுவாய் என்பதே கட்டுரையாளருக்குத் தெரியவில்லை. முன் மதிப்பீடு இன்னும் கடுமையாக இருந்திருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *