Blog

  • குறளின் கதிர்களாய்…(237)

    -செண்பக ஜெகதீசன்

    உற்றநோய் நீக்கி யுறாஅமை முற்காக்கும்
    பெற்றியார்ப் பேணிக் கொளல்.

    -திருக்குறள் -442(பெரியாரைத் துணைக்கோடல்)

    புதுக் கவிதையில்…

    வந்த துன்பத்தைப்
    போகும் வழியில் போக்கி,
    அத்தகு துன்பம்
    அடுத்து வராதவாறு முன்னரே
    அறிந்து தடுத்திடும்
    ஆற்றல்மிக்க பெரியோர் துணையை,
    அவர் விரும்புவன செய்தாவது
    அரசன் பெறவேண்டும்…!
    குறும்பாவில்…
    துன்பமதைப் போக்கி மேலும்வராதவாறதன்
    வழியறிந்து தடுத்திடும் ஆற்றல்மிக்கோர் துணையை
    ஆதரித்துப் பெறவேண்டும் அரசன்…!

    மரபுக் கவிதையில்…

    துன்பம் வந்ததைப் போக்கியேபின்
    தொடர்ந்தது மேலும் வராவகையை
    முன்பே நன்றாய் ஆய்ந்தறிந்தே
    முழுதாய்த் தடுத்திடும் ஆற்றலுள்ளோர்
    என்றும் துணையாய் வேண்டுமென்றே
    எதையவர் விரும்பி வேண்டிடினும்
    நன்றெனக் கொடுத்தே அவர்தமையே
    நற்றுணை யாக்குவர் நல்லரசே…!

    லிமரைக்கூ..

    வந்த துன்பத்தையவன் போக்கிடுவான்
    அது வருமுன் தெரிந்து தடுத்திடுவான்,
    அவனையே துணையாயரசன் ஆக்கிடுவான்…!

    கிராமிய பாணியில்…

    தொணவேணும் தொணவேணும்
    நல்லதான தொணவேணும்,
    நாலுந்தெரிஞ்ச
    பெரியவுங்க தொணவேணும்..
    வந்த துன்பத்த
    ஒடனே போக்கி,
    வரப்போற துன்பத்த
    முன்னதாத் தெரிஞ்சி
    தடுக்கத் தெரிஞ்சவந்தான்
    தொணயா வேணும் ராசாவுக்கு,
    அப்புடிப்பட்டவன
    எப்புடியாவுது தொணயாக்கிடணும்..
    அதால
    தொணவேணும் தொணவேணும்
    நல்லதான தொணவேணும்,
    நாலுந்தெரிஞ்ச
    பெரியவுங்க தொணவேணும்…!

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 115

    -முனைவர் க.சுபாஷிணி

    தமிழர் பாரம்பரிய அருங்காட்சியகம், பினாங்கு, மலேசியா

    மலேசியாவிற்கான தமிழ்மக்கள் புலம்பெயர்வு என்பது நீண்ட வரலாற்றுப் பின்னணி கொண்டது. தமிழகத்திலிருந்து மலேசியாவிற்கு பல்வேறு காலகட்டங்களில் குடிபெயர்ந்த தமிழ்மக்கள் மலேசிய பூர்வகுடி மக்களுடன் அச்சூழலை ஏற்றுக் கொண்டு மலேசியத் தமிழர்கள் என்ற சிறப்புடன் வாழ்ந்து வருகின்றனர். பன்னெடுங்கால தீபகற்ப மலேசியாவிற்கும் தமிழகத்திற்குமான தொடர்பு இன்று அகழ்வாய்வுகளில் கிடைக்கக்கூடிய சான்றுகளின் அடிப்படையில் நிரூபணமாகி இருக்கின்றன. இத்தகைய நீண்ட பண்பாட்டுத்தொடர்ச்சி என்பது ஒருபுறமிருக்க, கடந்த 300 ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து மலேசியாவிற்குக் குடிபெயர்ந்தவர்களின் வரலாற்றை ஆவணப்படுத்தி வைக்கும் வகையில் ஒரு புதிய முயற்சி கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது. அதன் அடிப்படையில் இன்று பினாங்கு அறநிலையத்துறை அலுவலகத்தில் மிக நேர்த்தியாக அமைக்கப்பட்ட தமிழர் பாரம்பரிய அருங்காட்சியகம் காட்சியளிக்கின்றது.

    °

    மலேசியத் தமிழர் ஒருவரது சேகரிப்பில் இருந்த ஆவணங்களை அவர் பொதுமக்கள் நலனுக்காக வழங்கவே, அது பினாங்கு மாநில இந்து அறநிலையத்துறையின் துணையுடன் ஒரு அருங்காட்சியகமாக இன்றுஉருவாக்கப்பட்டுள்ளது. இங்குள்ள ஆவணங்களும் சின்னங்களும் மலேசிய தமிழர் வரலாற்றில் நடந்த சில முக்கிய விஷயங்களை, அதிலும் குறிப்பாக பினாங்கு மாநிலம் தொடர்பான செய்திகளை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கின்றன. அருங்காட்சியக அறையின் சுவர்களிலும் மூலைகளிலும் பகுதி பகுதியாகப் பிரிக்கப்பட்ட வகையில் ஆவணங்கள், பொருட்கள், நூல்கள், விளம்பரங்கள் என பல்வேறு பொருட்கள் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு ஆவணமும் தனித்துவம் வாய்ந்தவை. ஒவ்வொன்றும் மலாயாவில் தமிழர்களின் வாழ்க்கை நிலையை விளக்கும் வகையில் வரலாற்றுச் செய்திகளை விவரிக்கும் வகையில் அமைந்திருக்கின்றன.

    “

    மலாயா சுதந்திரம் பெறுவதற்கு முன், அன்றைய சூழலில் முடி திருத்தும் தொழிலில் அதிகமாக ஈடுபட்டவர்கள் தமிழர்களே. தமிழர்களின் முக்கிய தொழில்களிலொன்றாகிய அத்தகைய ஒரு முடிதிருத்தும் நிலையம் எவ்வாறு இருக்கும் என்பதை அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறது இங்குள்ள ஒரு பகுதி. இதில் வாடிக்கையாளர் அமரும் பகுதி, சுவர் அலங்காரங்கள், மேசை அலங்கரிப்பு என்பன அவை எப்படி அன்னாளில் இருந்தன என்பதை அறியும் வகையில் அமைக்கப்பட்டிருப்பதைக் காணலாம்.

    இங்குள்ள மிக முக்கியமான ஆவணமாகப் பல நமக்குத் தென்பட்டாலும் மிகவும் தனித்துவத்துடன் இருப்பது இங்கு நாம் காணும் தமிழில் உருவாக்கப்பட்ட மலாயா தீபகற்பத்தின் நிலவரைபடமாகும். முழுதும் தமிழில் அமைந்த வகையில் உருவாக்கப்பட்ட ஒரு வரைபடம் இது. இத்தகைய ஒரு வரைபடத்தை இன்று நாம் தேடி கண்டுபிடிப்பது எளிதன்று. மலாயா தீபகற்பம் முழுமையாக, அதன் தென்மேற்கு பகுதியான இந்தோனியாவின் சுமத்ரா தீவு, மலாக்கா ஜலசந்தி, கடல் சூழல் சயாம் குடாபகுதி ஆகியவை தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இந்த வரைபடத்தில் மலேசியாவின் மாநிலங்களின் பெயர்கள், நதிகளின் பெயர்கள், ஊர்களின் பெயர்கள், மலைகளின் பெயர்கள் என அனைத்துமே தமிழில் எழுதப்பட்ட வகையில் மிகச் சிறந்த ஒரு ஆவணமாக இது அமைந்திருக்கின்றது. இதனைக் காணும்போது இன்றைக்கு ஏறக்குறைய அரை நூற்றாண்டிற்கு முன்பு இத்தகைய வரைபடங்கள் உருவாக்கப்பட்டன என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பு அமைகின்ற அதேவேளை, புவியியல் தொடர்பான கல்வி அன்றைய நிலையில் தமிழில் அமைந்திருந்தது என்பதை அறிந்து கொள்ளவும் வாய்ப்பாக இதுஅமைகின்றது. இன்றைக்கு ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு முன்பு கூட இந்திய மலேசியா இந்தோனேசியா ஆகிய நாடுகளில் தமிழ்மொழி முக்கிய மொழியாக இருக்கின்றது என்பதற்கும் இது ஒரு சான்றாகவே அமைகின்றது எனலாம்.

    இவை தவிர மேலும் பல முக்கிய ஆவணங்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழகத்திலிருந்து கப்பலில் பயணம் செய்து வரும் பயணிகள் கொண்டு வரும் பயணத்திற்கான தகரப்பெட்டிகளையும் இங்குக் காணலாம். அவற்றின் உள்ளே ஒட்டப்பட்ட செய்திகள் அடங்கிய காகிதங்கள், அன்றைய தமிழக பயணிகள் கொண்டு வந்த பொருட்கள் என்பன இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மலேயா வந்த அன்றைய தமிழர்கள் பல்வேறு வகை வணிகப் பகுதிகளில் அன்று பணிபுரிந்தார்கள். முக்கியமாக உணவுக்கடைகளைக் குறிப்பிடலாம். இன்றும் கூட மலேசியாவின் பல்வேறு பகுதிகளில் உணவு கடைகளை தமிழர்கள் நிர்மாணிப்பதைக் காணலாம். அந்த வகையில், இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட தேநீர் தயாரிக்கும் பாத்திரம் இன்றும் கூட ஒரு சில கடைகளில் காணக் கூடியதாக உள்ளன. அத்தகைய தேநீர் தயாரிக்கும் பாத்திரங்களும் தேயிலை கொதிக்க வைக்கும் பாத்திரங்களும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியப் பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்கள் இறந்தபோது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் அவருக்கு நடத்தப்பட்ட அஞ்சலிக்கூட்டம் பற்றிய ஒரு துண்டு காகிதம் இந்த ஆவணச் சேகரிப்பில் இருக்கின்றது. ஜப்பானியர் ஆட்சிக் காலத்தில், அதாவது இரண்டாம் உலகப் போர் காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகளை விவரிக்கும் பத்திரிக்கைச் செய்தி ஒன்றும் இந்த சேகரிப்பில் இடம்பெறுகின்றது. தமிழ் மக்கள் பயன்பாட்டில் வீடுகளில் புழங்கப்படும் பொருட்கள், சமையல் உபகரணப் பொருட்கள், ஆடைகள், அலங்காரப் பொருட்கள் ஆகியவையும் இங்குக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    அன்றைய மலாயாவிற்கு வந்த தமிழ் மக்கள் தொழில் புரிவதில் மாத்திரம் தங்கள் கவனத்தைச் செலுத்த வில்லை. மாறாக சமூக செயல்பாடுகளிலும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். அந்த வகையில் கலைகளில் நாட்டம் உடையவர்களாக தம்மை வளர்த்துக் கொண்டு நாடகங்கள், கூத்து, இசை என பல்வேறு துறைகளில் தங்கள் திறனை அவர்கள் வெளிப்படுத்தினர். இத்தகைய செய்திகளை விளக்கும் சில ஆவணங்களும் இங்கு காணப்படுகின்றன. தமிழ் இலக்கியங்களில் ஆர்வம் உள்ள சிலர் இலக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் சில சஞ்சிகைகள் பினாங்கிலிருந்து 20ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் வெளிவந்திருக்கின்றன. நூல்களை எழுதி வெளியிட்ட செய்திகளையும் அறிகின்றோம்.

    இப்படி பல்வேறு தகவல்களை உள்ளடக்கிய வகையில் பினாங்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி அனைத்து மலேசியர்களுக்கும் பெருமை சேர்க்கும் ஒரு முக்கிய இடமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கின்றது. இந்த முயற்சிக்கு உறுதுணையாக இருந்து தமது சேகரிப்புக்களை வழங்கி இந்த அருங்காட்சியகம் தொடங்க தொடக்கப்புள்ளி உருவாக்கிய திரு.பிரகாஷ், திருமதி புனிதா பிரகாஷ் இருவரையும் பாராட்டுவது நமது கடமை. பினாங்கில் தமிழர் வரலாற்றைச் சொல்லும் ஒரு அருங்காட்சியகத்தை அமைக்க வேண்டிய தேவை இருப்பதை உணர்ந்து அதனை வெற்றிகரமாகச் செயல்படுத்தியிருக்கும் பினாங்கு மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் மாண்புமிகு.டாக்டர்.ராமசாமி அவர்களையும் பாராட்டுவதோடு இந்தச் சிந்தனைக்கு உறுதுணையாக இருந்து அலுவலக அறையை ஒதுக்கிக் கொடுத்து இந்த அருங்காட்சியகத்தைப் பாதுகாக்கும் பினாங்கு இந்து அறநிலையத்துறையினருக்கும் உலகத் தமிழர்களின் பாராட்டுக்கள் பொருந்தும்.

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 48

    நேரம் எங்கே இருக்கு? – க. பாலசுப்ரமணியன் 

    “நீங்க சொல்வதெல்லாம் உண்மைதாங்க.. கடந்த காலத்திலும் வருங்காலத்திலும் நினைவுகளை உலா வர விட்டு நிகழ்காலத்தைத் தொலைத்து நிற்கின்றோம். ஆனால் நிகழ்காலம் ஒரு பெரிய போராட்டம். வாழ்வதே மிகவும் கடினமாகி விட்டது.” என்று எனது நண்பர் அங்கலாய்த்தது காதில் விழுந்தது.

    “:என்னங்க.. இந்தக் கேள்விக்கு உங்களுடைய பதில் என்ன?” என்று எனது மனத்திடம் கேட்டேன்.”

    “அப்படியா. இந்த நிகழ்காலச் சோதனைகளுக்கெல்லாம் யார் கரணம்? அவைகள் எங்கிருந்து வந்தன? சற்றே யோசித்துப் பாருங்களேன்” என்று சொன்ன எனது மனம் தொடர்ந்தது.

    ” ஹலோ, ஒரு நிமிடம். என்னைக் கேட்டுவிட்டு அப்புறம் உங்கள் பதிலைச் சொல்லுங்கள். நான் நினைப்பதை உங்களுக்குத் சொல்லாவிட்டால் தலை வெடித்துவிடும் போல இருக்கிறது.” என்றேன்.

    “இதுதானே உங்கள் பிரச்சனையே. பல எண்ணங்களையும் பல கருத்துக்களையும் பல உணர்வுகளையும் தலையில் போட்டுக்கொண்டு எதை முன்னால் செய்வது எதைப் பின்னால் செய்வது என்று தெரியாமல் எல்லாமே உடனடியாக நடக்க வேண்டும் என்று விரும்புவது, ஒரு வேலை நடந்து கொண்டிருக்கும்பொழுது அதை ஒதுக்கிவிட்டு இன்னோர் வேலையைத் தேடிச் செல்லுவது, நம்முடைய வேலையை விட்டுவிட்டு அடுத்தவர் வேலையின் முக்கியத்துவத்தைப் பாராட்டுவது, குறிக்கோள் இல்லாமல் ஏதாவது வேலையைச் செய்துவிட்டு ‘எனது நேரம் வீணாகி விட்டதே’ என்று துயரப்படுவது – இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் யார் காரணம்?”  என் மனத்தின் கேள்விக்கணைகள்    என்னைத் தாக்கின.

    உண்மைதான். பல நேரங்களில் நாம் இதைச் செய்வதா அதைச் செய்வதா என்று தெரியாமல் தலையைப் பிடித்துக்கொண்டு நிற்கின்றோம். கண்களின் முன்னே செய்யவேண்டிய செயல்கள் எல்லாம் ஒவ்வொன்றாக ஊர்வலம் வர மன உளைச்சலுக்கு ஆளாகி கண்கள் ஒளி இழந்து ஏதோ நோய்வாய்ப்பட்டவர் போல ஆகிவிடுகின்றோம்.”எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு வேலை? வேலையே இல்லாமல் எத்தனைபேர் பொழுது போக்கிக்கொண்டிருக்கின்ரார்கள்? பாதிபேர் தண்டத்திற்குச் சம்பளம் வாங்குபவர் போல இருக்கின்றது” என்றும் “நான் தான் இளிச்சவாயன் போலிருக்கின்றது. எல்லாவேலையும் என்தலையிலே கட்டுகின்றார்கள்” என்றெல்லாம் நம்மைப் பற்றி நாமே விமர்சனம் செய்து கொள்ளுகின்றோம். இது தேவைதானா? இந்தக்கேள்விகளுக்கெல்லலாம் எங்கே பதில் தேடுவது?

    மால்கம் கிளாட்வெல் என்று ஒரு சிந்தனை மேதை மனிதர்களின் இந்த மனப்போக்கை நன்கு அலசி ஆராய்ந்து இதற்குக்  காரணம் அவர்கள் தங்களுடைய காலத்தை எவ்வாறு பயன் படுத்துகின்றார்கள் அதை எவ்வாறு நிர்ணயிக்கின்றார்கள், அவர்களின் கால நிர்ணயத்தைப் பற்றிய தவறான ஈடுபாடுகள் என்ன என்பதை நமக்கு எடுத்துக் கூறுகின்றார்.

    “நீங்கள் உங்கள் முன்னால் இருக்கும் அனைத்து வேலைகளின் மீதும் ஒரு கண்ணோட்டம் விடுங்கள். அவைகளைக் கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்கு அவைகளில் ஒரு இருபத்தி ஐந்து விழுக்காடு வேலைகள் தேவையற்றவை என்றும் அவைகளில் ஈடுபாடு உங்களுக்கு நிச்சயமாகத் தேவையில்லை என்பதும் தெரியவரும். இது போன்ற வேலைகளை நம்மில் பலர் தங்கள் அதிகாரப் போக்கினாலோ, ஆணவத்தினாலோ அல்லது தங்களது முட்டாள்தனத்தினாலோ தங்களிடம் வைத்துக்கொள்ளுகின்றனர். அவைகளை உங்கள் பார்வையிலிருந்து விலக்கி விடுங்கள். (DUMP)

    மீதி இருக்கின்ற எழுபத்தி ஐந்து விழுக்காடு வேலையிலே ஒரு இருபத்தி ஐந்து விழுக்காடுகள் நீங்களே செய்ய வேண்டிய அவசியமில்லை. அவைகளை வேறு யார் வேண்டுமானாலும் செய்யலாம். அவைகளை மற்றவர்களின் வேலைத்திறன் அறிந்து அவர்களிடம் ஒதுக்கிவிடுங்கள் . (DELEGATE)

    மீதி இருக்கின்ற ஐம்பது விழுக்காடு வேலைகளில் இருபத்தி ஐந்து விழுக்காடு வேலைகள் இன்றே இப்பொழுதே செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இல்லை. அவைகளே சற்றே தாமதித்து  மற்றவைகளுக்கு முன்னுரிமை அளித்து உங்கள் வேலைகளைத் தொடரலாம். (DELAY)

    கடைசியாக உங்கள்  முன்னால் இருப்பது வெறும் இருபத்தி ஐந்து விழுக்காடு வேலையே. அதில் உங்கள் முழுக்கவனத்தையும் வைத்து  சிறப்பாக செய்து முடியுங்கள் (DO)

    என்னே அருமையான ஆலோசனை! “நேரம் நம்மை நிர்வகிப்பதில்லை. நாம்தான் நேரத்தை நிர்வகிக்கிறோம்”  என்பது அன்றாட வழக்குமொழி.

    சற்றே சிந்தித்து நமது நிகழ்காலத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்தலாமே !

    (தொடரும்)

    Share
  • அப்பர் திருத்தாண்டகத்தில் காஞ்சித் திருக்கோயில் தொன்மங்கள்

    சு. கோப்பெருந்தேவி1*, முனைவர் இரா. மதன் குமார்2*.,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

    ————————————-

    முன்னுரை
    சான்றோர்களால் சிறப்புப்பெற்றது, தொண்டைநாடு. அந்நாட்டின் காஞ்சிநகரமானது, ‘உலகுயிர்கள், பெருமானை வழிபட்டு உய்வதற்குரிய பெருஞ்சிறப்புடையது’ எனக் காஞ்சிப்புராணம் கூறுகின்றது. ‘க’ என்பது, பரம்பொருளாகிய பெருமானைக் குறிக்கும். ‘அஞ்சித்தல்’ என்பது, ‘வழிபடுதல்’ எனப் பொருள் தரும். அதன்வழி, ‘ஆருயிர்கள், பெருமானை வழிபட்டுய்வதற்கு உகந்த திருத்தலம்’ என்கின்ற குறிப்பில், ‘காஞ்சி’ என அந்நகரம் போற்றப்படுகிறது. புறத்திணையில், ‘காஞ்சி’ என்பது, நிலையாமையைக் குறிக்கும். நாம் அனைவரும், உடலின் நிலையாமையை உணர்ந்து, திருவருளாகிய அம்மையின் துணையுடன், பெருமானைப் பற்றி உய்வதற்கு வழிகாட்டுகின்ற அருள்நிலையமாக அந்நகரம் விளங்குகிறது. அந்நகருள், சைவப்பெருநெறிக்கு நிலைக்களமாகிய, திருமுறை பாடல்பெற்ற திருக்கோயில்கள் பல அமைந்துள்ளன. அவற்றுள், திருக்கச்சி ஏகம்பம், திருக்கச்சி மயானம் மற்றும் திருக்கச்சி மேற்றளி ஆகிய திருக்கோயில் தொன்மங்கள், அப்பரடிகளின் திருத்தாண்டகத்தில் சுட்டப்படுள்ளன. அத்தொன்மக் குறிப்புகளின், உள்ளுறையாக திருக்கோயில் வரலாறுகள் அமைந்து, பக்திநெறி உணர்த்தப்படுகின்ற அணுகுமுறையை, இக்கட்டுரை ஆய்ந்துரைக்கிறது.

    திருத்தாண்டகத்தில், காஞ்சித் திருத்தலத் தொன்மங்கள்
    தேவார மூவரின், ஏழு திருமுறைகளாலும் போற்றப்பட்டுள்ள அரிய திருக்கோயில்களில் திருக்கச்சி ஏகம்பமும் ஒன்று. அப்பரடிகள், திருக்கச்சி ஏகம்பத்தை ஏழு திருப்பதிகங்களால் போற்றிப் பாடியுள்ளார். அவற்றுள், இரண்டு திருப்பதிகங்கள், திருத்தாண்டகத்தில் அமைந்துள்ளன. ஏகம்பத்தை இரண்டு திருப்பதிகங்களில் பாடியும் ஆவல் தீராதவராக, அத்திருமுறையில், பல இடங்களிலும் அவர், கச்சிஏகம்பத்தைப் போற்றியுள்ளார். அத்துடன், க்ஷேத்திரக்கோவைத் திருத்தாண்டகத்தில் (6:70:4) கச்சிப் பலதளியும், திருவினாத் திருத்தாண்டகத்தில் திருமேற்றளியும் (6:97:7), திருக்கச்சி மயானமும் (6:97:10) ஆகிய காஞ்சியின் பிற திருக்கோயில் தொன்மங்களும் சுட்டப்பட்டுள்ளன. அக்குறிப்புகள், திருக்கோயில் வரலாறுகளாகக் காஞ்சிப்புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளன.

    அப்பரடிகள் உவந்த திருக்கோயில்
    ‘மாகம்ப மறையோதும் இறையானை மதிற்கச்சி
    ஏகம்ப மேயானை யென்மனத்தே வைத்தேனே’ (4:7:9)
    எனக் கச்சிஏகம்பத்தின் மீது, அப்பரடிகள் பெருவிருப்புடையவராக இருந்தார். அதனால்,

    ‘கலந்தார்தம் மனத்தென்றும் காதலானைக் கச்சியே கம்பனை’ (6:20:4)
    என்று போற்றி, ஏகம்பனைச் சிந்தை மறவாமல் பாடுகின்றார். நடுநாட்டின் திருஅதிகையில் இருந்து வீரட்டானனைப் பாடி மகிழ்ந்த களிப்பில், அங்கிருந்தே தொண்டை நாட்டின் ஏகம்பனையும், அடிகள் பாடி மகிழ்ந்துள்ளார். ‘ஏகம்பத்தைப் பேசாத நாளெல்லாம் பிறவாத நாளே’ என்ற பெருவிருப்பில், அத்திருத்தலத்திற்காகப் பாடிய திருப்பதிகங்களிலும் சுட்டிக்கூறாத ஏகம்பத் திருக்கோயில் வரலாற்றுத் தொன்மத்தை, முன்கூட்டியே அதிகைத் திருப்பதிகத்தில் பாடி மகிழ்ந்திருப்பது, ஏகம்பன், அப்பரடிகளின் சிந்தையில் நீங்காமல் நிலைத்திருந்த பக்திக்குச் சான்றாகும்.

    அதனாலேயே, திருத்தாண்டகத்தால் ஏகம்பத்தைப் பணிந்த நிலையில், ‘ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே’ என்ற தொடரைப் பதிகமகுடமாக அப்பரடிகள், இரண்டு திருப்பதிகங்களிலும் (6:64,65) பதிவுசெய்துள்ளார். தொண்டராக, உழவாரப் படைதாங்கி, சைவத்தை வளர்த்தவராதலின், அப்பெருமகனார், ஏகம்பத்திலிருந்து அறம் வளர்த்த அம்மையை, ‘காமக்கோட்டி’ எனப் போற்றியுள்ளார்.

    காஞ்சிப்புராணத்தில் திருக்காமக்கோட்டம்
    பெருமான், ஊழிக்காலத்தில் ஒடுக்கியருளிய உலகங்களை மீண்டும் படைத்தருளத் திருவுள்ளம் கொண்டான். அதற்கென, வீரம் வெளிப்படுகின்ற பெருஞ்சிரிப்புடன், புனர்உற்பவத் திருக்கூத்தினை ஆடிக் களித்தான்.
    அசைந்தவன்காண் நடமாடிப் பாடல் பேணி
    அழல்வண்ணத் தில்லடியும் முடியுந் தேடப்
    பசைத்தவன்காண்’ (5:64:7)
    என்றவாறு, அண்டமுற நிமிர்ந்தாடிய பெருமான், அருளுருவாகிய சிவலிங்கமாக உலகாணித் தீர்த்தம் எனப்பெறுகின்ற பஞ்சநதிக்கரையில் இடம்கொண்டான். அத்திருமேனி, கொங்கண முனிவர் முதலான பலருக்கும் அருள்பேறுகள் பலவற்றையும் அருளிச்செய்த சிறப்புடன் விளங்கியது. அம்மையும், ‘திருக்காமக்கோட்டி’ என்னும் திருப்பெயருடன் அங்கிருந்து அத்திருவுருவினைப் போற்றி வழிபட்டாள். இன்றளவும், திருக்காஞ்சி நகரத்தில், அம்மை வீற்றிருந்தருள்கின்ற திருக்கோயிலானது, ‘திருக்காமக்கோட்டம்’ என விளங்குகிறது.

    காமம்-விருப்பம்; கோடு-வளைவு; கோட்படுத்துதல்-வளைத்தல். செந்நிறத்தைப் பெற முயன்ற அவளது விருப்பத்தை, பூசையாகிய பெருநெறியை நோக்கிப் பெருமான் வளைத்ததால், அவ்விடமானது, ‘திருக்காமக்கோட்டம்’ எனப் பெயர்க் கொண்டது. மேலும், உறுதிப்பொருள்கள் நான்கனுள், வீடுபேறே இறுதியாக (கோடியாக) அமைவது. அம்மை, உலக உயிர்களுக்கு, இன்பநாட்டமாகிய காமத்தை விளைவித்து, அதன் வழியே வீடுபேற்றையும் அளித்தருள்பவள். அதனால், அவள் வீற்றுள்ள திருக்கோயிலும், ‘திருக்காமக்கோட்டம்’ எனப் பெயர்க் கொண்டதை’ என்பது காஞ்சிப் புராண, வீரட்டாகாசப் படலம் (37) விளக்குகின்றது.

    செம்பவளச் செல்வியாகிய காமக்கோட்டி
    அம்மை, ‘கருநிற மேனி உடையவளாக இருந்த நிலையில், பெருமான் அவளை, ‘காளீ’ என விளித்தான். அதைக் கேட்ட அம்மை, ‘பெருமானே!, நீர் செம்பவள மேனியுடையவராக விளங்குபவர்; அதனால், நானும் அவ்வண்ணத்தைப் பெறுவதற்கு அருள்செய்ய வேண்டும்’ எனப் பெருமானைப் பணிந்தாள். பெருமானும் அதற்கு இயைந்து, பஞ்சநதிக்கரையில் அமைந்த தனது இலிங்கத் திருவுருவினை வழிபட அருளினான். அவ்வண்ணமே, திருமாலும், திருமகளும் இத்திருக்கோயிலிலிருந்து பெருமானை வழிபட்டுச் செம்பவள வண்ணத்தைப் பெற்றதென்பது, காஞ்சிப்புராண வரலாறு.

    ஒத்த வயதும், கல்வியும், செல்வமும், குலமும் தலைமக்களின் அன்புறவுக்கு அடிப்படை என்பது அகப்பொருள் நோக்கு. அவ்வகையிலேயே, பெருமானது அன்பினை, தான் முழுமையாகப் பெற வேண்டி, திருக்காமக்கோட்டத்தில் பூசை முதலான தவம் இயற்றி, பெருமானுக்கு இணையாகச் செந்நிறத்தைப் பெற்ற அம்மையை அப்பரடிகள்,
    எரிகின்ற இளஞாயி றன்ன மேனி
    யிளங்கிழையோர் பாலுண்டோ’ (6:2:1)
    எனக் குறித்தருளியுள்ளார்.

    காமக்கோட்டியின் அருள்விண்ணப்பம்
    ‘ஆருயிர்கள், அப்பனாகிய பெருமானை வணங்கிப் பேரின்பமாகிய வீடுபேற்றினைப் பெறுவதற்கு ஓயாமல் முயலவேண்டும்’ என்பதை விளக்கவே, அம்மை திருக்காமக்கோட்டத்திலிருந்து, செந்நிறம் பெற விழைந்ததாகப் புராணத்தில் குறிக்கப்பட்டுள்ளது. பெருமானின் பேரின்பத்தில், அம்மை கொண்ட விருப்பமே, மன்னுயிர்களும் பேரின்பத்தை விரும்பக் காரணமாகிறது. அவளது பெருவிருப்பே, வீடுபேறாகிய பேரின்பநாட்டத்தை உயிர்களுக்கு ஊட்டுகிறது. மண்ணுலகில் வாழ்கின்ற குடும்ப வாழ்வில், தாயே குழந்தைகளுக்கும், தந்தைக்கும் பாலமாக விளங்குகிறாள். அவள், தந்தை மீது பொழிகின்ற அன்பைக் கண்டு, குழந்தைகளும் தந்தையிடத்தில் நிறைந்த அன்பினைப் பொழிகின்றனர்; தந்தையும், குழந்தைகளுக்கு இனிய வாழ்வைத் தந்து மகிழ்கின்றார்.

    பெருமானிடத்தில், தனக்கென எதையும் வேண்டிடாதவளாகிய அம்மை, திருக்காமக்கோட்டத்தில் நிலைத்தவளாக, அன்பில் குறையாத பூசனையின் வழியாக, ஆருயிர்கள் அனைத்தின் நலனையும், தனது திருவாயினால் பெருமானிடத்தில், பெருவிண்ணப்பமாக ஓயாமல் வேண்டியவண்ணம் இருக்கின்றாள். அவளது அருள்நோக்கத்தை வெளிப்படுத்தி அருள்கின்ற திருவாயினையும் அப்பரடிகள் போற்றுபவராக,
    ‘கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி’ (6:4:10)
    எனக் குறித்துள்ளார்.

    பண்டாசுரனுக்காகக் கச்சி மயானம்
    ஆருயிர்களின் மீது பெருமான் கொண்ட அளவில்லாத கருணையின் வெளிப்பாடே, அவன் ஐந்தொழிலையும் நடத்துகின்ற நிலையாகும். பெருமானின் திருவருள் ஆணையின்வண்ணமே, அவ்வவ் உயிர்களின் வினைக்கேற்பப் பிறப்புகள் அமைகின்றன. உயிருக்கு உடல் கூட்டுவிக்கப்படுவதாகிய பிறப்பு நிலையே, படைத்தல் எனப்படும். ஐந்தொழில்களில் முதலாவதாகிய படைப்பினைச் செய்தருள்கின்ற பெருமானை, அப்பரடிகள், கச்சி ஏகம்பனாகப் போற்றுகின்றார்.

    ‘வியனுலகிற் பல்லுயிரை விதியி னாலே
    தெரித்தவன்காண் சில்லுருவாய்த் தோன்றி யெங்குந்
    திரண்டவன்காண் திரிபுரத்தை வேவ வில்லால்
    எரித்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்அவனென் எண்ணத் தானே’ (6:65:1)

    கச்சிமயானத்தில் நின்ற ஏகம்பன்
    படைத்தல் தொழிலைச் செய்தருள, கச்சிஏகம்பன் செய்த அருளாடலானது, திருக்கச்சி மயானத் திருக்கோயில் வரலாறாகக் காஞ்சிப்புராணத்தில் விளக்கப்படுகிறது.
    பண்டம் – உடம்பு. பண்டன் என்னும் பெயர்க்கொண்ட அசுரன், நான்முகனிடத்தில் வரம்பெற்று, உயிர்களின் உடம்பினுள் இடம்கொண்டு, உடம்பின் பெருவலிமையினையும் உறிஞ்சி, அவை செயல்படாத வகையில், பெருந்துன்பம் விளைவித்தான். அதனால், உயிர்கள் அனைத்தும் வலிமையிழந்து, தசைக்கூடமாகிய வெற்றுடம்பினையே சுமந்திருந்தன. அதனால், ஐந்தொழிலும் பிறழ்கின்றநிலை ஏற்பட்டது. ‘அனைத்து உயிர்களின் உடம்பிலும் அவன் இடம்கொண்டிருந்தவன் ஆகையால், அவனை அழிப்பதற்குப் பெருமானின் பெருந்திறமே துணையாகும்’ என்று மூவர் முதலான தேவர்களும், பெருமானைப் பணிந்தனர். அவனை, அழித்தருளப் பெருமான் அருளுள்ளம் கொண்டான். அதற்கென வேள்வித்தீயை மூட்டி அதனுள், நான்முகன், திருமால் முதலான அனைத்துயிர்களின் உடம்பையும், அவியாகத் தீயிலிட்டான். அந்தந்த உடம்புகளிலும் இடம்கொண்டிருந்த பண்டனும், தீக்கிரையாகி வீழ்ந்தான். பண்டனை அழித்தருள, வேள்வித் தீயாகப் பெருமான் விளங்கிய இடமே, தற்போது, ‘கச்சி மயானம்’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

    ஏகம்பத்தில் பெருமான், படைப்புத் தொழிலைச் செய்தருள வேண்டி, தன்னிலிருந்து, அம்மையை, ‘இலளிதை’ என்னும் பெயருடன் வெளிப்படுத்தினான்; அம்மையும், பெருமானை வணங்கித் துதித்து, படைப்புத் தொழிலை மேற்கொண்டாள். அதன்வழி, உலகுயிர்களைப் படைத்தலாகிய அருந்தொழிலையும் ஆற்றுவதற்கு அருளாணையும் பெற்றுச் சிறந்தாள். அவ்வண்ணமே, மும்மூர்த்திகளையும், பிற உயிர்களையும் அம்மை படைத்தருளினாள். அவ்விடத்தில் அம்மையப்பரைப் பணிந்தெழுத்த மும்மூர்த்திகளும், அவர்கள்பால் பெருவிண்ணப்பம் ஒன்றைப் பணித்தனர்.

    காமக்கண்ணி என்னும் திருப்பெயர்
    ‘பெருமானே! ‘க’ என்னும் திருஎழுத்து, பிரமனையும், ‘ம’ என்னும் திருஎழுத்து, திருமாலையும், ‘உ’ என்னும் திருஎழுத்து, உருத்திரனையும் குறிக்கின்றன. தங்களது அருளாணையின் வண்ணம், எங்கள் மூவரையும், அம்மை தனது திருக்கண்களில் இருந்து தோற்றுவித்தார்கள். அப்பெருந்திறத்தைக் குறிக்கின்ற வகையில், க, ம, உ என்னும் திருஎழுத்துகளின் கூட்டாகிய திருப்பெயராக, ‘காமக்கண்ணி’ என்ற திருப்பெயருடன் அம்மை இத்திருக்கோயிலில் விளங்கியருளவேண்டும்’ என வேண்டினர். பெருமானும் அவ்வண்ணமே திகழ விதித்ததால், அம்மையும், அத்திருப்பெயரினை உவந்தேற்று அருளினாள்.
    இன்றளவும், திருக்காமக்கோட்டத்தில் விளங்குகின்ற அம்மையை, ‘காமாட்சி’ என வழங்குகிறோம்.
    காமம்-விருப்பம். அட்சம்-கண். அம்மை, ‘உயிர்களுக்கு அருள்கின்ற திருக்கண்களுடன், ‘காமாட்சி’யாகக் காஞ்சித் திருத்தலத்தில் வீற்றிருகின்றாள்’ என்பதை அப்பரடிகள் திருக்கச்சி மயானத் திருக்குறிப்பாகப் பாடியுள்ளார்.
    ‘மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி மயானத்தான்’ (மேலது பாடல்)
    என்ற குறிப்பு மொழியில், அம்மையின் அருளேற்றம் சுட்டப்பட்டுள்ளது.

    திருக்கச்சி மயானத்தின்பால் ஆற்றுப்படுத்துதல்
    உயிர்கள், வீடுபேறாகிய பேரின்பத்தைப் பெருமானிடத்தில் பெற்று உய்வதற்குப் புறப்பூசைனையால் இலிங்கத்திருமேனியினை வழிபடத்தொடங்கி, அதனை ஆன்மார்த்த பூசனையாக வளர்த்துக்கொள்ளவேண்டும். அதற்குத் தடையாக விளங்குபவை, உலகியல் மயக்கங்களாகும். உயிரறிவிலிருந்து உலகியல் மயக்கங்கள் நீங்கிப் பெருமானைப் பற்றி உய்வதற்கு, அவன் அருளே கருவியாகும். அம்மையே, அத்திருவருளின் நிலையுடையவள். அவள், ஓயாத பெருவிருப்புடன், பெருமானை நித்தமும் பூசை செய்கிறாள். அப்பூசையின் பயனாகிய திருவருளே, அருவமாகிய பெருமானை, உயிர்களுக்குக் காட்டிஅருள்கிறது. அத்தத்துவத்தை விளக்குவதற்காகவே, ‘திருக்கச்சி மயானத்துப் பெருமானுடன் அம்மை உடன்பிரியாமல் விளங்குகிறாள்’ என அப்பரடிகள் பாடியுள்ளார்.

    மைப்படிந்த கண்ணாளுந் தானுங் கச்சி
    மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
    ஒப்புடையன் அல்லன் ஒருவன் அல்லன்
    ஓரூரன் அல்லன் ஓருவமன் அல்லன்
    அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும் அவனருளே
    கண்ணாகக் காணின் அல்லால்
    இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன்
    என்றெழுதிக் காட்டொ ணாதே’ (6:97:10)
    எனக் குறித்தருளியுள்ளார். மேற்கண்ட பாடலில் சுட்டப்படுகின்ற திருத்தலமானது, திருக்கச்சி ஏகம்பத் திருக்கோயிலின் கொடிமரத்தின் மேற்கே அமைந்துள்ளது.

    எண்ணத்தில் நீங்காத ஏகாம்பரன்
    வடமொழியில், ‘ஆம்ரம்’ என்பது, மாமரமாகும். ‘ஏகாம்பரம்’ என்பது, ‘ஒற்றை மாமரம்’ என்பதாகும். உலகிலுள்ள பிற மாமரங்களைப் போலல்லாமல், இம்மாமரம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்கிறது. இது, வேத மாமரமாக, அரும்பொருளாகிய பெருமான் தங்குகின்ற பேறுபெற்றுள்ளது. அதனால், அது, ‘ஏக் ஆம்ரம்’; அதாவது, ‘ஒற்றை மாமரம்’ என்கின்ற சிறப்புப்பெயர்ப் பெறுகிறது. ஒருவனாகிய பெருமானும், தான் இடம்கொண்ட மாமரத்தின் பெயரால், தனக்கும் சிறப்புப்பெயர் விளங்க அருள்செய்தான். வடமொழியில் அத்திருப்பெயர், ‘ஏகாம்ரநாத:’ என வழங்கப்படும். அதுவே, திருவைந்தெழுத்தாகின்ற சிறப்பினைப் பெருமான், பிரமன் முதலான மூவர்க்கும் உரைத்தருளியதாகக் காஞ்சிப்புராணத் திருவேகம்பப் படலம் (பாடல்:27) போற்றியுரைக்கிறது.
    மேற்கண்ட திருப்பெயர் தமிழில், ‘ஏகாம்பரநாதன்’ எனக் குறிக்கப்படும். அப்பரடிகளின் அருள்மொழியில், ‘ஏகம்பன்’ எனப் பொலிவுறும். அத்திருப்பெயரை, அப்பரடிகளும், திருவைந்தெழுத்தாகவே கருதிப் பணிந்தார் எனலாம். அதன்பொருட்டே, திருத்தாண்டகத்தில் கச்சிஏகம்பத்தைப் பாடிய முதலாவது பதிகத்தில்,
    அஞ்செழுத்து நினைவார்க் கென்றும் மருந்தவன் காண்’ (6:64:9)
    என, ஐந்தெழுத்து மந்திரத்தின் அருள்சிறப்பினை அறிவுறுத்தியுள்ளார். ‘ஏகாம்பரநாதன்’ என்பதே, மேற்குறிக்கப்பட்ட திருவைந்தெழுத்து என்பதைச் சுட்டுபவராக, கச்சிஏகம்பத்தின் இரண்டாம் பதிகத்தில்,

    பேதயேன் வாதையுறு பிணியைத் தீர்க்கும்
    மருந்தவன்காண் மந்திரங்க ளாயி னான்காண்’
    வானவர்கள் தாம்வணங்கும் மாதே வன்காண்
    அருந்தவத்தாள் ஆயிழையாள் உமையாள் பாகம்
    அமர்ந்தவன்காண் அமரர்கள்தாம் அர்ச்சித் தேத்த
    இருந்தவன்காண் எழிலாரும் பொழிலார் கச்சி
    ஏகம்பன் காண்’ (6:65:5)
    எனப் பாடியுள்ளார். மேலும், அவ்வருஞ் சிறப்பினைத் திருமுறைத் திருநெறியாக நமக்கும் அறிவுறுத்த வேண்டியே, கச்சிஏகம்பப் பதிகங்கள் இரண்டுக்கும், ‘ஏகம்பன் காண்; அவன் என் எண்ணத்தானே’ எனப் பதிக மகுடம் சூட்டி மகிழ்ந்துள்ளார்.

    நால்வர்க்கும் தோன்றியருளிய கம்பன்
    பண்டனை அழித்தருளி, மீண்டும் உலக உயிர்களை உடம்புடன் கூட்டுவித்தலாகிய படைப்பினைத் தொடங்கக் கருதிய பெருமான், திருக்கச்சி மயானத்தின் மேற்கில் வேதங்களை, மாமரமாக நிற்கச் செய்தான். மாமரத்தின் மூலத்தில், அழல்பெருஞ் சோதியாகி எழுந்த பெருமான், சிவலிங்க மூர்த்தமாக அமைந்தான். அம்மை, தனது படைத்தல் தொழிலைச் சிறப்புறச் செய்யவேண்டிப் பெருமானை வேண்டினாள். அவளுக்கு அருளவேண்டிப் பெருமான், அச்சிவலிங்க மூர்த்தத்திலிருந்து வெளிப்பட்டருளினான். அவ்வருள்பேறு பெற்றே, இலளிதை அம்மை தனது, திருமுகத்திலிருந்து, பிரமன் முதலான மூவரையும் தோற்றுவித்தருளினாள். அம்மூவரும் தத்தமது தொழிலுக்கான நல்லறிவைப் பெறவேண்டிப் பெருமானைப் பணிந்தனர்.

    ‘பெருமானே! உமது கருணைத்திறத்தால், மூவரும் முத்தொழிலைச் செய்வதற்கான பேறுபெற்றுள்ளோம்; அவற்றை முறையாகச் செய்வதற்குரிய ஞானத்தையும் தாங்களே தந்தருள வேண்டும்!’ என்றனர். பெருமானும், ‘தான் உகந்த திருமேனியாகிய, சிவலிங்கத்திருமேனியைத் தாபித்து, வழிபட்டு அவ்வுயர்ப்பேற்றினைப் பெறுக’ என அறிவுறுத்தி அருளினான். அவ்வகையில், இலளிதையம்மையால் பூசிக்கப்படுவதாகிய மாவடி மூலத்தின் தென்பால், தேவர் மூவரும், இலிங்கத் திருமேனிகளைத் தாபித்து வழிபட்டனர்.

    பிரமன், தெளிந்த சிந்தையுடன் பெருமானைப் பூசித்ததால், ‘வெள்ளைக் கம்பர்’ எனவும் (திருஏகம்பப் படலம்: 86), உயிர்களை மயக்குகின்ற மாயவனாகிய தன்மை வேண்டிப் பூசித்ததால், திருமாலுக்கு, ‘கள்ளக் கம்பர்’ (திருஏகம்பப் படலம்: 87) எனவும், சிவோகம் பாவனையில் சிவத்தோடு ஒன்றிப் பூசைசெய்த உருத்திரருக்கு, ‘நல்ல கம்பர்’ (திருஏகம்பப் படலம்: 88) என்றும் காட்சி தந்தாக காஞ்சிபுராணத்தில் விளக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, அம்மைக்கும், தேவாதி மூவர்க்கும் அருள்செய்த ஏகம்பனை அப்பரடிகள்,

    கடிநாறு பொழிற் கச்சிக் கம்பா வென்றும்
    கற்பகமே யென்றென்று கதறா நில்லே’ (6:31:2)
    எனக் குறித்தருளியுள்ளார்.
    ‘கள்ளக் கம்பனை எங்கள் பிரானைக்
    காணக் கண்ணடி யேன்பெற்றவாறே’ (7:61:10)
    என்ற அருள்மொழி, காஞ்சித்திருத்தலத்தில், இடக்கண் பெற்றுய்ந்து சுந்தரர்பெருமான் அருளியது.

    அம்மையின் திருக்காஞ்சிப் பயணம்
    அம்மை, இமவான் மகளாகி, பெருமானை மணந்து, அளவில்லாத மகிழ்ச்சியில் ஆழ்ந்திருந்தாள். அச்சமயத்தில், ‘பெருமானே, உலகங்களுக்கு ஒளிப்பொருளானவன்’ என்கின்ற பரத்துவத்தை உலகுயிர்கள் உணரவும், மண்ணுலகில் அறம் நிலைக்கவும், அம்மையைக்கொண்டு, பெருமான் அருள்விளையாடல் ஒன்றை நிகழ்த்தத் திருவுள்ளம் கொண்டான். ஒருசமயம், அம்மை, பெருமானின் திருக்கண்களைக் கைகளால் மூடினாள். அதனால், கதிரவனும், தண்நிலவுமாகிய இருசுடர்களும் ஒளியிழந்தன. உலகங்கள் பேரிருளில் ஆழ்ந்தன. அறியாது அம்மை செய்த பிழைக்குக் கழுவாய் தேடும்படியான வாய்ப்பினைப் பெருமான், அவளுக்கு உரைத்தருளினான் (த.கு.படலம்: 25,26). ‘அம்மையே!, பூவுலகில் பூசைக்குப் பயனாகத் திருவடிசேர் முத்தியைத் தந்தருள்கின்ற அருள்நகரங்களுள் முதன்மையாக விளங்குவது, திருக்காஞ்சி நன்னகராகும். அந்நகரம், அறத்தேவதையை, யாம் விடையாக ஏற்றருளிய திருத்தலமாகும்; அங்கு எம்மைப் பூசித்து, ஆருயிர்களும் பூசித்து உய்யக்காட்டிருள்க!’ எனப் பெருமான் அம்மைக்கு அறிவுறுத்தினான். அதைக் கேட்ட அம்மை, ‘பெருமானே! உம்மை முறையாகப் பூசிக்கின்ற நெறிமுறைகளையும் அடியவளுக்கு அறிவுறுத்தி அருள்க!’ என்று பெருமானிடத்தில் வேண்டினாள்.

    பெருமானும் அதற்கு இசைந்து, சரியை முதலான படிநிலைகளையும், தீக்கை வகைகளையும், முத்தி நிலைகளையும், உயிர்கள் மண்ணுலகில் வினைவழியே பிறப்பெய்தி வாழ்கின்ற நிலைகளையும், பிறவாமையாகிய பெருநிலைக்குப் பூசையே கருவியாதலையும், அதற்கு ஏற்ற இடமாகக் காஞ்சி மாநகர் விளங்குவதையும் அம்மைக்கு எடுத்துரைத்தான் (த.கு.படலம்: 35-72). அம்மையும் அதை ஏற்று, வான் வழியே திருக்காஞ்சியை அடையப் புறப்பட்டாள்.

    அம்மையப்பருக்கு, புவனங்கள் அனைத்தும், இல்லமாகும். பிள்ளைகளின் நலம் சிறக்கவேண்டி, கணவனார் கூறுவதை, மனைவியார் செம்மையாகச் செய்துமுடிப்பார். ஆருயிர்களாகிய குழந்தைகளின் நலம் சிறக்கவேண்டி, அம்மையும், அப்பனின் அருஞ்சொல்லை ஏற்றுத் திருக்காஞ்சி நகரை அடைந்தாள்’ என்பதைக் காஞ்சிப் புராணம்,

    களிவரு சிறப்பின் வான்நெறிப் படர்ந்தாள் கணவனார் அருள்வழி நின்றாள்’ (தழு.குழை.பட:121)
    என விரித்துரைக்கும்.

    அறச்சாலை நிறுவிய அம்மை
    காசி முதலான பல தலங்களிலும், இலிங்கத் திருமேனியைத் தாபித்து வணங்கி, ஐப்பசி மாதத் தேய்பிறை ஏகாதசித் திதி அமைந்த பூர நன்னாளில், அம்மை திருக்காஞ்சி நகரை அடைந்தாள். கங்கண தீர்த்தத்தில் நீராடி, கங்கணேசர், கடகேசர் ஆகிய இலிங்கங்களைத் தாபித்து வணங்கினாள். அந்நகரிலிருந்து, தான் இயற்றவுள்ள பூசனைகளாகிய பெருந்தவங்களுக்கு இடையூறு ஏற்படாதவகையில், காப்பும், கடகமும் அணிந்துகொண்டாள். அத்திருக்கோயில்கள், இந்நாளில், ‘கங்கணேச்சரம்’; ‘கடகேச்சரம்’ என வழங்கப்படுகின்றன. அம்மை, அங்கிருந்து உலகாணித் தீர்த்தக் கரையை அடைந்து, அறச்சாலையை நிறுவினாள். ‘வேள்விகள் புரிதல்’ முதலாக, ‘சரணடைந்தாரை பெருவிருப்புடன் தாங்குதல்’ ஈறாக அமைந்த, முப்பத்து இரண்டு அறங்களையும் நிறைவுற வளர்க்கின்ற அறச்செல்வியாகத் திகழந்தாள்.

    பூங்கொடியாள், பூசைக்கு விரைந்தாள்
    மாவடியில் விளங்குகின்ற ஏகம்பனை அன்றாடம் பணிகின்ற பெருவிருப்பு வழிநடத்த, அம்மை அன்றைய நாள் பூசைக்கான பெருவிருப்புடன் விரைத்தாள். விதிகள் பிழையாமல் பூசை செய்கின்ற அவள், பூசைக்குத் தேவையானவற்றைத் திரட்டிய நிகழ்வுகளைக் காஞ்சிப்புராணம் தழுவக் குழைந்த படலத்தில், 318-ஆம் பாடல் முதலாக, 341-ஆம் பாடல் வரையிலும் விரிவாகக் காணலாம். பூசைக்கு வேண்டுவதாகிய உடல் தூய்மைக்குத் தனி தீர்த்தமும், பெருமானைத் திருமுழுக்காட்டுவிக்கத் தனித் தீர்த்தமும் உருவாக்கப்பட்டன என்பதும், தனி நந்தவனத்திலிருந்து சிறந்த மலர்கள் தொகுக்கப்பட்டன என்பதும், திருவமுது படையலுக்காகத் தூயமுறையில் பல்வகை திருவுணவுகளும் படைக்கப்பட்டன என்பதுமான செய்திகள் சிவபூசை விதிகளை அறிய முயல்வோருக்கு அருந்துணையாகும். இவ்வாறு, பூசைக்குத் தேவையானவற்றை முறையாகத் திரட்டிக்கொண்ட பின்னர், கம்பமா நதியில் நீராடி, சிவ அனுட்டானம் முதலான ஒழுக்கங்களை முறையாகக் கடைப்பிடித்து, பூங்கொடி போன்றவராகிய அம்மை, பெருமானைப் பூசிக்க எழுந்தாள்.

    பெருமானைப் பணிந்த பெருந்தவக்கொழுந்து
    திருஏகம்பத் திருவாயிலில், மூத்த பிள்ளையாரையும், இளைய பிள்ளையாரையும் முறையாகத் தொழுது, துவார பாலகரையும் பணிந்து, நந்தி திருவாயிலை அடைந்தாள். ஆராத பெருவிருப்பின் வெளிப்பாடாகக் கண்ணீர் அரும்ப, மெய்யறிவின் பயனாகிய பூசையைத் தொடங்கினாள்; ஆகம விதிப்படி அருள்பூசைக்கு முனைந்தாள். ‘பெருமானே! உமது திருக்கண்களைப் புதைத்து, படைப்பு முதலான ஐந்தொழில்களுக்கும் இடையூறு விளைவிக்க எண்ணிய தீவினைக்குக் கழுவாய் தேடுகின்ற பெருநோக்கில், யான் புரிகின்ற பூசையில் குற்றம் நேராது காத்தருள வேண்டும்!’ எனப் பணிந்தாள். அவ்வேளையில், பெருமான் தனது திருவிளையாடலாக, கம்பைநதி பெருகி வரச் செய்தார். அதைக் கண்டோரின் கண்ணீரும் துணைநதியாகப் பெருகும்படி, பெருவெள்ளம் பாய்ந்தது.

    அம்மை, தனது திருவருள் குறைவினால், பூசைக்கு இத்தகைய இடையூறு ஏற்பட்டதாக எண்ணிக் கலங்கினாள். பெருவெள்ளமானது, பெருமானின் திருமுன்னர் பெருகி வந்து அவரை நலிவிக்கும்’ எனப் பதைத்தாள். உடனே, தனது வலது முழந்தாளைச் சிவலிங்கப் பீடத்தில் ஊன்றி, மேருமலையைப் இருபுறமிருந்தும் படர்கின்ற மல்லிகைக்கொடி போலக் கைகளால் அணைத்துக் காத்தாள். அந்நொடியில், இலிங்கத்திருமேனியிலிருந்து பெருமான், அம்மையின் வளைத்தழும்பும், முலைச்சுவடும் ஏற்றருளிய திருக்காட்சியைக் காட்டியருளினான். இவ்வரலாற்றுத் தொன்மத்தை அப்பரடிகள்,

    ‘கொழும்பவளச் செங்கனிவாய்க் காமக் கோட்டி
    கொங்கையினை அமர்பொருது கோலங் கொண்ட
    தழும்புளவே வரைமார்பில் வெண்ணூலுண்டே
    சாந்தமொடு சந்தனதி னளறு தங்கி
    அழுந்தியசெந் திருவுரு’ (6:4:10)
    எனக் குறித்தருளியுள்ளார்.

    ஏகம்பத்தில் திருமணக்கோலம்
    பெருமானைக் கண்டு அன்புருகி நின்ற அம்மையிடத்தில், ‘நீ வேண்டுகின்ற வரங்களும் யாவை?’ என்றான். ஏகம்பமாகிய இத்திருத்தலத்தில், தீவினைகள், உயிர்களைப் பற்றாமல் இருக்கவும், நல்வினைகள், பலநூறு மடங்காகப் பெருகவும், வீடுபேற்றுக்குக் கருவியாகிய அறம், பொருள், இன்பம் என்னும் உறுதிப்பொருள்கள் நாளும் தழைக்கவும் அருளவேண்டும்’ என வேண்டினாள். பெருமானும், ‘அவ்வண்ணமே ஆகுக!’ என்று அருளினான்.

    அத்துடன், ‘பெருமானே!, எனது கரிய நிறத்தை நீக்கி, பொன்னிறத்தைத் தந்து, திருமண மங்கலப்பேற்றினையும் தந்தருளவேண்டும்’ எனப் பணிந்தாள். அவ்வண்ணமே, இத்திருக்கோயிலில், பங்குனி உத்திர நன்னாளில், திருமணம் நிகழ்ந்தேறவும், அகத்திய மாமுனி முதலான ஆருயிர்கள் அனைத்தும், அத்திருக்காட்சியினைக் கண்டு உய்யவும் அருளினான். செம்மேனிப் பெருமான், தனது இடப்பாகத்தில் அமைந்த பொன்னிறக் கொடியால், தானும் பொன்னிறம் கொண்ட திரு அழகினை,

    செம்பொனாற் செய்தழகு பெய்தாற் போலுஞ்
    செஞ்சடையெம் பெருமானே தெய்வம் நாறும்
    வம்பினாள் மலர்க்கூந்த லுமையாள் காதன்
    மணவாளனே’ (6:4:9)
    என வியந்து போற்றியுள்ளார்.

    திருமேற்றளி
    ‘உருத்திரப் பல்கணத்தார்’ என்போர் சிவவேடம் தரித்து, உள்ளன்புடன் பெருமானை வழிபடுவோராவர். அச்சிவனடியார்கள், நூறு பேராவர். அவர்களும், சிறப்புடைய அடியார் பிறரும் திருக்காஞ்சி நகரத்திலிருந்து பெருமானை, இலிங்கத்திருமேனியால் வழிபட்டுய்ந்த நூற்றுப்பதினெட்டுத் திருக்கோயில்கள், ‘கச்சிப்பல தளி’ எனப் போற்றப்பெறுகின்றன. இத்திருக்கோயில்கள், பதமுத்திகளைத் தந்தருள வல்லன. சரியை முதலான நாற்படி நிலைகளும், முறையே, சாலோகம், சாமீபம், சாரூபம் மற்றும் சாயுச்சியம் ஆகிய நால்வகைப் பதமுத்திகளைத் தரவல்லன. அவற்றுள், சாலோகம் என்பது, சிவலோகமாகிய திருக்கயிலையில் உறைகின்ற பேறு என்பது, காஞ்சிப்புராண உரை விளக்கம்.
    கச்சிப் பலதளியும் ஏகம்பத்தும்
    கயிலாய நாதனையே காணலாமே’ (6:70:4)
    எனச் சாலோகப் பேறு முதலாகிய பதமுத்திகளுக்கு அப்பரடிகள் வழிநடத்துகின்றார். சாரூபம் என்பது, இறைவனின் திருவடிவத்தைப் பெறுதலாகிய பேறாகும். கச்சிப்பல தளி என்றமைந்த பல திருக்கோயில்களிலும், சாரூப முத்தி தரவல்லது ‘திரு மேற்றளி’ திருக்கோயிலாகும். திருமால், சாரூபப் பேறு வேண்டித் திருக்காஞ்சி நகரத்தில், இலிங்கத்திருமேனியைத் தாபித்துப் பெருமானைப் பலகாலம் வழிபட்டுவந்தார். கலியுகத்தில், திருஞானசம்பந்தப் பிள்ளையின் திருப்பதிகப் பாடல் கேட்டு, உள்ளம் உருகி, சாரூபப் பேற்றினைப் பெற்றுய்க!’ என்று பெருமானும் அருளினார். திருமாலும், அன்றாடப் பூசைநியமங்கள் தவறாமல், திருமேற்றளி நாதரை வழிபட்டுவந்த நாளில், பிள்ளையாரின் திருப்பாடலுக்கு உள்ளம் உருகித் தன்னை மறந்தான். ‘ஓதஉருகீசர்’ என்ற திருப்பெயருடன், பெருமானின் திருமுன்பில் இலிங்கத் திருமேனி பெற்றுய்ந்தார் (திருமேற்றளிப் படலம்: 11).

    திருமுறைநெறி விளங்குகின்ற திருமேற்றளி
    அன்றாடம், நாம் செய்கின்ற பூசைகளால், உடலும் உள்ளமும் ஒருசேரப் பண்படும். உண்மையன்புடன் ஒவ்வொரு நாளும் பூசைநெறியைக் கடைப்பிடிக்கத் தொடங்கினால், சில நாளில் பூசை நடைமுறைகள், வெறும் பயிற்சிகளாக அல்லாமல், உடலும் உள்ளமும் ஒருசேர உருகி, பெருமானை உணர்ந்து இன்புறுகின்ற பேற்றினைத் தந்தருளும். அவ்வாறு, ஊனினை உருக்கி, உள்ளொளி பெருக்கி, உலப்பிலாத பேரின்பத்தை அருள்கின்ற பெருநெறியாக, ‘திருமுறைத் திருநெறி’ விளங்கவல்லது. இதனை உணர்த்த வேண்டியே பெருமான், சுந்தரருக்கு,

    ‘நமக்கு மன்பிற்
    பெருகிய சிறப்பின் மிக்க
    அற்சனை பாட்டே யாகும்
    ஆதலான் மண்மேல் நம்மைச்
    சொற்றமிழ் பாடு கென்றார்
    தூமறை பாடும் வாயார்’ (தடுத்தாட்கொண்ட புராணம்: 216)
    என அருளாணை வழங்கினார்.

    அப்பரடிகள், ஞானப்பிள்ளையாரைச் சிவிகையில் சுமந்தவர்; அவர்மீது பெருகியஅன்பில், நாளும் அவரைப் பணிந்தவர்; தூயஅன்புக்கும், பணிவுக்கும் பரிசாக, ‘அப்பரே!’ என்று அவரால் அழைக்கப்பட்டவர். மண்ணில் திருமுறைநெறி வாழச் சிவஞானக் கன்றாக வந்துதித்தவர், திருஞானசம்பந்தப் பிள்ளையார். அவர் முதலாகத் தழைக்கின்ற திருமுறைநெறியை, நமக்கு வாழ்வியல் நெறியாக உணர்த்தவேண்டியே அப்பரடிகள் திருமேற்றளியைப் போற்றிப் பாடினார்’ எனலாம்.
    அத்திருக்கோயிலை அப்பரடிகள்,
    பலிக்கோடித் திரிவார்கைப் பாம்பு கண்டேன்
    பழனம் புகுவாரைப் பகலே கண்டேன்
    கலிக்கச்சி மேற்றளியே யிருக்கக் கண்டேன்’ (6:97:7)
    எனக் குறித்தருளியுள்ளார்.

    பாரூர் பல்லவனூர் மதிற்கச்சி மாநகர்வாய்ச்
    சீரூ ரும் புறவில் திருமேற் றளி’ (7:21:10)
    என்பது, சுந்தரர் பெருமானின் அருள்குறிப்பு.

    மேற்கண்ட அருள்நோக்கத்திலேயே, காஞ்சிப்புராணமும், ‘திருமால் சாரூபப் பேறு பெறப் பிள்ளையாரின் திருமுறைகள் கருவியானது’ எனத் திருமேற்றளி வரலாற்றை விவரித்துள்ளது. இத்தகைய அருள்வரலாற்றினைப் போற்றுகின்றவகையில், ‘திருமேற்றளி’ அமைந்துள்ள திருவீதியின் கிழக்குத்திசையில், திருஞானசம்பந்தப் பிள்ளையாரின் திருக்கோயில் விளங்குகிறது. அத்துடன், ஞானப்பிள்ளையாரின் பெயரால், ‘பிள்ளையார்பாளையம்’ என்ற திருவூரும் வழங்கிவருகிறது.

    முடிவுரை

    திருமுறையாசிரியர்கள், தொன்மக்கூறுகளைத் திருப்பாடல்களில் கையாண்டுள்ளதைத் திறனாய்வாளர்கள், ‘தொன்மவியல் படைப்பாக்க உத்தி’ எனக் குறிப்பிடுவர். திருமுறைகளிலும், சாத்திரங்களிலும், பெருமானது பரத்துவமும், உயிர்களது தற்சுதந்திரமின்மையும், உலகியலின் நிலையாமையாகிய உண்மைகளும் மையப்பொருளாகின்றன. அவற்றை, எளிதில் உணர்த்தவேண்டியே ஞானாசிரியர்கள், தமது திருப்பாடல்களில் சிவபுராணத் தொன்மங்களைக் கையாண்டனர். அவை, கதைப்போக்கில், அரிய தத்துவங்களையும் எளிமையாக விளக்குகின்றன. திருமுறை ஆசிரியர்கள் கையாண்ட, திருத்தலத்தொன்மங்கள், பின்னாளில் தல புராணங்களாக விரிந்தன. அவ்வகையில், திருத்தாண்டகத்திலுள்ள, காஞ்சிநகரத் திருக்கோயில் தொன்மக் குறிப்புகள், காஞ்சிப்புராணத்தில் தனிப்படலங்களாக மேலும் விரிந்து பக்திநெறியை விளக்குகின்றன. எனவே, திருமுறைகளில் இடம்பெறுகின்ற தொன்மக்கூறுகளை, ‘பயனற்ற கதைக்கூறுகள்’ என ஒதுக்குதல், சிறந்த இலக்கியப் பயிற்சியாகாது. அத்துடன், திருமுறைத்தொன்மங்களைப் பலமுறையும் நுண்ணுணர்வுடன் பயில்வது, திருமுறைத் திருத்தலங்களை, இம்மைப் பயன்களுக்காக மட்டுமேயல்லாமல், மெய்யறிவுத்தேடலுடனும் அணுக வழிகாட்டும்.

    ——————————————

    ஆய்வுத் துணை நூல்களும், இணையமும்
    1. ஆறாம் திருமுறை,
    பன்னிரு திருமுறை ஆய்வுமையம்,
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழக வெளியீடு, கோயம்புத்தூர்- 21.
    பதிப்பு ஆண்டு: அக்டோபர், 2015.

    2. தேவாரத் திருப்பதிகங்கள் (அடங்கன்முறை),
    பேராசிரியர் அ.ச. ஞானசம்பந்தனார் (பதிப்பாசிரியர்),
    கங்கை புத்தக நிலைய வெளியீடு, ஐந்தாம் பதிப்பு: சனவரி, 2005.

    3. சிவஞான சுவாமிகள் அருளிய காஞ்சிப்புராணம், www.tamilvulibrary.org

    4. www.thevaaram.org

    —————————————————

    கட்டுரையாளர்கள்:

    சு. கோப்பெருந்தேவி1* – முனைவர் பட்ட ஆய்வாளர்,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

    முனைவர் இரா. மதன் குமார்2* – இணைப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்-21.

    Share
  • நலம்… நலமறிய ஆவல் – 139

    -நிர்மலா ராகவன்

     

    நல்லதொரு முடிவு

    `இன்று என்ன சமையல் செய்யலாம்?’

    `மழை வரும்போல இருக்கிறதே! துணியை வெளியில் உலர்த்தலாமா, வேண்டாமா?’

    அன்றாட வாழ்க்கையில், இப்படி ஏதாவது முடிவு எடுத்துக்கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இவைகளால் பெரிய விளைவுகள் எதுவும் ஏற்படப்போவதில்லை. ஆனால், நாம் வருத்தத்திலோ, ஆத்திரத்திலோ மூழ்கி இருக்கையில் எடுக்கும் முடிவுகள் அப்படியில்லை.

    `எனக்கு வந்த கோபத்திலே, என்ன செய்யறோம்னு புரியாம செஞ்சுட்டேன்!’ என்று எத்தனை குற்றவாளிகள் தம் குற்றங்களை நியாயப்படுத்தி இருக்கிறார்கள்!

    காதல் வயப்பட்டு இருக்கும் தருணங்களிலும் முடிவு எடுக்கக்கூடாது என்கிறார், இதோ ஓர் அனுபவசாலி.

    கதை

    தன்னுடன் படித்த மேகலாவை மணக்க விரும்பினான் மதன். அவனுடைய பெற்றோர் சம்மதிக்கவில்லை.

    காரணம்: வெகு காலமாக போரில் ஈடுபட்டிருக்கும் நாட்டிலிருந்து வந்த பெண் அவள்!

    பிடிவாதமாக தன் காதலியையே மணந்தவர், “எதுக்கெடுத்தாலும் சண்டை போடறா. நான் குறுகிப்போகிறமாதிரி பேசறா!” என்று என்னிடம் சலித்துக்கொண்டார்.

    தாய்நாட்டில் வளர்ந்தபோது, அண்டை அயலில் உள்ளவர்களில் யாராவது அடிக்கடி போருக்குப் பலியாகிக்கொண்டு இருந்ததைப் பார்த்தே வளர்ந்தவள் மேகலா. அதனாலோ, என்னவோ, இனம்புரியாத கோபம் அவளை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தது. முதலில் அதைப் பெரிதாக நினைக்கவில்லை மதன்.

    ஈராண்டுக்குள், “எங்கப்பா, அம்மா சொன்னதைக் கேட்டிருக்க வேண்டும்! கேக்காம போனது என் தப்பு!” என்று பலமுறை புலம்பினார். “எந்த விஷயத்திலும் என் மனம் நோகும்படி பேசிவிடுகிறாள்! நீங்கள் அவளுக்குப் புத்தி சொல்லுங்களேன்!” என்று என்னிடம் வேண்டுகோள் விடுத்தார்.

    மதனின் பெற்றோருக்கு எப்படித் தெரியும் இத்தம்பதிகள் மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்கள் என்று?

    “வாழ்க்கையில் அனுபவப்பட்டவர்கள், இல்லையா?” என்ற பதில் வந்தது. “நான்தான் அவசரப்பட்டுட்டேன்!”

    சரியான முடிவுகள் அனுபவத்திலிருந்து வருகின்றன என்றால், தவறான முடிவுகளிலிருந்து அனுபவம் வருகிறது. மனைவியை அடிக்கடி மாற்ற முடியுமா? எப்படியோ பொறுத்துப்போக வேண்டியதுதான்.

    மதனின் பொறுமையால், மனைவியும் மாறிப்போனாள்.

    நான் அப்போது அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிட விரும்பவில்லை. பத்து ஆண்டுகளுக்குப்பின், மேகலா வெகுவாக மாறியிருந்தாள். “எனக்குச் சண்டையே பிடிக்காது!” என்றாள். அவளை வார்த்தையால் தாக்கியவர்களிடமிருந்து ஒதுங்கிப்போனாள். இதனால் உத்தியோகத்தில் மேலும் பல சங்கடங்கள்.

    “அடுத்த தடவை, எப்படி நன்னா சண்டை போடறதுன்னு நான் சொல்லித்தரேன்!” என்று நான் தொலைபேசியில் எங்கள் உரையாடலை முடிக்கும் தருணத்தில் கூற, பெரிதாகச் சிரித்தாள்.

    சரியான முடிவுகளை எடுப்பவர்கள் வெகு சிலரே. இவர்கள் அவசரப்பட மாட்டார்கள். தம் இலக்கு எது என்ற தெளிவு உண்டு. அதை அடைய வேண்டிய முயற்சிகளை எடுப்பார்கள். வழியில் எந்த இடர் வந்தாலும், துணிந்து நாற்பார்கள்.

    முடிவும் மீடியாவும்

    `நான் திரைத்துறையில் சாதிக்கப்போகிறேன்!’ என்று இங்கு எனக்குத் தெரிந்த ஒருவர் தான் பார்த்த நல்ல உத்தியோகத்திலிருந்து விலகினார். வெளிநாட்டிற்குச் சென்று, திரைப்படக் கல்லூரியில் பயிற்சியும் பெற்றார். ஆனால், அத்துறை அவர் நினைத்தமாதிரி இருக்கவில்லை. நிறைய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஏமாற்றத்தில் பிறருடன் சண்டை போட ஆரம்பித்தார். வாழ்க்கையே வெறுத்துப்போயிற்று.

    கதை

    செல்வந்தர் வீட்டில் பிறந்திருந்த அழகி கன்னிகா. பதினைந்து வயதிலேயே `என் துறை இதுதான்!’ என்று `மாடலிங்’ செய்வதைத் தேர்ந்தெடுத்திருந்தாள். பெற்றோரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. படிப்பை அப்போதே அரைகுறையாக நிறுத்தினாள். நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அவைகளைப் பெற எப்படி நடந்துகொண்டாலும் தவறில்லை என்று முடிவெடுத்தாள்.

    கடினமான, சவாலாக அமையும் ஒன்றைச் செய்வது என்று முடிவெடுத்தால் பல இடர்கள் விளையத்தான் செய்யும். மாற்றத்தால் சிலவற்றை இழக்க நேரலாம். ஆனால், மேலும் சிலவற்றை அடையலாம் என்று சமாதானம் அடைந்தாள்.

    முடிவு சரியோ, தவறோ, தளர்ச்சி அடைவதால் பயன் ஏதுமில்லை. தவறாக இருந்தாலும், அதை எப்படிச் சரியாக்கலாம் என்று யோசித்து நடந்தால் மனம் தெளிவடையும்.

    `பிறர் என்ன சொல்வார்களோ! எல்லாரும் செய்கிறார்களே!’ என்று ஒருவர் எடுக்கும் முடிவு அவருக்கு நன்மையோ, நிம்மதியோ பயப்பதாக இருக்கும் என்று கூற முடியாது.

    கதை

    மலேசியாவுக்குப் போய் வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற முடிவெடுத்து வந்தார் மகாலிங்கம். அங்கு கைநிறையப் பொருள் ஈட்டி, தன்னைவிட அதிக அந்தஸ்துள்ள பெண்ணை மணக்கலாம் என்று கனவு கண்டார்.

    தான் நினைத்தபடி புதிய வாழ்க்கை சொர்க்கமில்லை என்று விரைவிலேயே உணர்ந்து, அதிர்ச்சியும் வருத்தமும் ஒருங்கே அடைந்தார். கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகமாக இருந்ததால், எதிர்பார்த்தபடி நிறைய சேமிக்க இயலவில்லை. தன்னையொத்த பலருடன் ஒரே அறையில் படுக்க வேண்டிய சூழ்நிலை. உறவினர்களைப் பிரிந்து தனிமையில் வாடியதுடன், கலாசார வேறுபாடுகள் வேறு!

    எல்லாவற்றையும் ஏற்று, `பிறர் நம்மைப் பலவந்தப்படுத்தவில்லையே! நாமேதானே வந்தோம்!’ என்று தன்னம்பிக்கையுடன் மனதைத் திடப்படுத்திக்கொண்டார்.

    சில வருடங்களுக்குப்பின், அவர் நினைத்தமாதிரியே திருமணமும் அமைந்தது. அவர் எதிர்பாராதது: பிழைப்புக்காக மனைவியை விட்டுப் பிரிய நேர்ந்ததுதான். மூன்று வருடங்களுக்கு ஒருமுறையே அவளுடன் இருக்க முடிந்தது.

    அவசர முடிவு

    மலேசியாவில் ஆண்டுதோறும் நடக்கும் தீபாவளிச் சந்தையைப்பற்றி விசாரித்தார் காஞ்சிபுரத்தில் இருந்த தறிக்காரர்.

    “பட்டுடன் எதையாவது கலந்து, `இது நல்ல பட்டு!’ என்று சாதித்து, அதிக விலையில் விற்கிறார்கள் அந்தச் சமயத்தில். `மாணிக்கக் கற்கள் பதித்தது!’ என்று பிளாஸ்டிக்கில் செய்த மணிகளைப் பதித்த வளையல்களை விற்கிறார்கள்,” என்று நான் ஏமாந்த கதைகளைக் கூற, “நாங்க அப்படியெல்லாம் ஏமாத்திப் பிழைக்க வேண்டாம்!” என்று ஆத்திரத்துடன் கூறி, நல்லதொரு முடிவெடுத்தார் அந்த அபூர்வமான யோக்கியர்.

    சில கடைகளில் தரமான, எந்தக் கலப்புமில்லாத பட்டுப்புடவைகளை விற்றார்கள். அதனால் விலை அதிகமாக இருப்பதைத் தவிர்க்க முடியாது.

    இது புரியாத பாமர மக்கள் ஏமாந்து, `முதல் கடையில் மலிவாக இருக்கிறது!’ என்று வாங்கிப்போக, தரமான பொருளை விற்றவருக்கு வியாபாரம் ஆகவில்லை.

    அடுத்த ஆண்டு, தரமான அந்தக் கடை வராததைக் கவனித்தேன். எதிர்பார்த்தபடி, பிறர் சிலாகித்தபடி, லாபம் கிடைக்காதிருந்திருக்கலாம்.

    இன்னொரு அவசர முடிவு. முதலிலேயே சரியாக விசாரிக்காததால் வந்த வினை.

    மணக்க அவசரம்

    `நான் காதலித்தவளை மணந்திருந்தால், வாழ்க்கை இன்பகரமாக இருந்திருக்கும்!’ பெற்றோரின் மிரட்டலுக்கு அடிபணிந்தோ, அல்லது உயர்ந்த நிலைக்கு ஆசைப்பட்டோ, தன் தகுதிக்கு மீறி மணந்தவரின் புலம்பல் இது.

    இவர் என்ன செய்திருக்க வேண்டும்? முதலிலேயே நன்றாக யோசித்திருக்க வேண்டும்: என்னைவிட அதிகம் படித்தவளை மணந்தால், என் பொருளாதார நிலைமை உயரலாம். ஆனால், மனைவி என்னை மதிப்பாளா?

    அதற்குமுன், நானே அவளை மிரட்டிவிட்டால்? என்று யோசனை போகிறது.

    ஆரம்பத்திலேயே இவ்வளவு குழப்பம் எழுந்தால், இல்லற வாழ்க்கை இனிக்குமா? ஓயாத போட்டியும், பொறாமையும்தான் எழும்.

    எடுப்பார் கைப்பிள்ளை

    `பத்து வருஷங்களுக்கு முன்னாலேயே இப்படிச் செய்திருந்தால், எத்தனையோ பணத்தை மிச்சமாக்கியிருக்கலாம்!’ மது, சிகரெட் பழக்கத்தை விடும் முயற்சியில் இறங்கியிருப்பவர்.

    அதுதான் படத்திற்குப் படம் இவைகளால் ஏற்படும் அபாயங்களைப்பற்றி எச்சரிக்கிறார்களே! விளையாட்டாய், நண்பர்களின் சவாலை ஏற்று ஆழந்தெரியாமல் கால் விட்டுவிட்டு, ஆரோக்கியக்குறைவு, குடும்பத்தில் பூசல் என்று காலங்கடந்து வருந்துவானேன்!

    யார் நம் நலனை விரும்பி, நல்ல யோசனைகளைக் கூறுகிறார்கள் என்று ஆராய்ந்து நடந்தால், இப்படி வருந்த நேரிடுமா?

    Share
  • வல்லமை ஆசிரியர் குழுவில் இணைய ஒரு வாய்ப்பு

    பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் அங்கீகாரம் பெற்ற வல்லமை மின்னிதழ், ஒன்பதாம் ஆண்டில் நடை போடுகிறது. 2019 மே மாதத்தில் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்க உள்ளது. தரமான ஆய்வுக் கட்டுரைகளை அவற்றின் தகுதியை மட்டுமே பரிசீலித்து வெளியிட்டு வருகிறோம். இந்த ஒன்பது ஆண்டுக் காலத்தில் இதுவரை 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இவை 13 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன.

    அருஞ்செயல் புரிந்த ஒருவருக்கு வாரந்தோறும் வல்லமையாளர் விருதினை வழங்கி வருகிறோம். வாரந்தோறும் படக்கவிதைப் போட்டியும் நடத்தி வருகிறோம். இதுவரை சிறுகதை, கட்டுரை, கவிதை, கடித இலக்கியம், நூல் விமர்சனம்… எனப் பல திறன்களை ஊக்குவிக்கும் வகையில், போட்டிகளை நடத்தியுள்ளோம்.

    வல்லமை, கருத்துச் சுதந்திரத்தை ஊக்குவிக்கும் வகையில் கூகுள், ஃபேஸ்புக், ஃபிளிக்கர், வாட்ஸப் ஆகியவற்றில் குழுமங்களை நடத்தி வருகிறது. கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பல்வேறு பயிலரங்குகளை நடத்தி வருகிறது.

    வல்லமையை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் மேலும் பல திட்டங்களை முன்னெடுக்கும் வகையிலும் ஆசிரியர் குழுவினை விரிவுபடுத்த உள்ளோம்.

    *தமிழ் மொழியறிவும் கூர்மையான ஆய்வுக் கண்ணோட்டமும் இதழியல் ஆர்வமும் கொண்டவர்கள், உதவி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    *கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பயிற்சி இதழாளர்களாகப் பணியாற்றலாம்.

    *ஆய்வுக் கட்டுரைகளை நடுநிலையுடன் மதிப்பாய்வு செய்வதில் திறம் வாய்ந்த பேராசிரியர்களும் அறிஞர்களும் தங்கள் விருப்பத்தைத் தெரிவிக்கலாம்.

    *இணையத்தள வடிவமைப்பிலும் வேர்ட்பிரஸ் தொழில்நுட்பத்திலும் ஆண்டிராய்டு செயலி உருவாக்கத்திலும் அனுபவம் வாய்ந்தவர்கள், வல்லமைக்குத் தொழில்நுட்ப ரீதியில் உதவலாம்.

    • விண்ணப்பிக்க விரும்புவோர், தமிழில் பிழையின்றி எழுதவும் கணினியில் தட்டச்சு செய்யவும் கற்றவர்களாக இருக்க வேண்டும்.
    • படைப்புகளில் உள்ள பிழைகளைக் கண்டறிந்து திருத்தும் திறன் பெற்றவர்களாக இருத்தல் வேண்டும்.
    • சொந்தமாகக் கணிப்பொறியும் இணைய இணைப்பும் கொண்டிருக்க வேண்டும்.
    • நாள்தோறும் ஓரிரு மணி நேரம், வல்லமைக்காகச் செலவிடக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
    • வலைப்பதிவு வைத்திருப்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    • குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிய வேண்டும்.
    • வல்லமை, இலாப நோக்கில்லாத அமைப்பு என்பதால், எம்மால் ஊதியம் வழங்க இயலாது. ஆயினும், வல்லமை சார்பில் சான்றிதழ் வழங்கப்படும்.
    • தமிழ்த் துறை மட்டுமின்றி, எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் இல்லத்தரசிகளும் மாணவர்களும் கூட, உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு கிடையாது.
    • விருப்பம் உள்ளோர், உங்கள் சுயவிவரக் குறிப்புடன் கூடிய விண்ணப்பத்தை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள்.

    சிந்தனை, செயல், முன்னேற்றம் என்பது நம் இலக்கு. வாருங்கள் இணைந்து சிந்திப்போம், செயல்படுவோம், முன்னேறுவோம்.

    Share
  • கங்கை கண்ட கவி

    -விவேக்பாரதி

    ஸ்ரீதர ஐயாவாள் கதை

    காப்பு

    கட்டளை யிட்டுக் கவியெழு தென்ற கவிஞரிடம்
    தட்டா துடனே தனதொரு தந்தம் தனையுடைத்து
    விட்ட யிடத்தை விரைவி லெழுது விநாயகனே
    குட்டிக் கவிஞன் குறிக்கும் கதையில் குறையகற்றே!

    கதை

    திருவிசை நல்லூர் திருநக ரில்பொற் றிருச்சடையர்
    உருவரு வாகும் உடையவர் மீதே உளமுருகித்
    தெருவினில் பாடல் திரட்டு படைக்குந் திறமையுடை
    ஒருவ ரிருந்தார் உயர்ஶ்ரீ தரனெனும் உண்மையரே! (1)

    சிவன்புகழ் பாடும் தொழிலுடை யார்!பசிச் சீற்றமெனும்
    அவமது நீக்க அடுப்பெறிப் பார்!வரும் அன்பருக்குச்
    செவியும் வயிற்றையும் சேர்த்து நிறைக்கும் திருத்தொழிலே
    சிவத்தொழி லென்று செலுத்திவந் தார்தன் சிரத்தையையே! (2)

    ஊரார் புகழ உலகோர் புகழ உறுதியுடன்
    பேரார்ந் திருந்த பெரியவர் செல்வம் பெரிதிழைத்துத்
    தாரா ளமெனத் தணித்தார் பசிப்பிணி! தம்செயலால்
    நேரா யிறையவன் நெஞ்ச மடைந்தார் நிகழ்வினிலே! (3)

    ஐயர் பொறுமைக் களவையும் பக்தியின் ஆழத்தையும்
    மெய்யாய்க் கணிக்க மெலிதாய் யொருசிறு நாடகத்தை
    உய்வாய் எனச்சிவன் உள்ளத் தொருநினை வூன்றியதும்
    செய்வோம் எனப்பொழு தங்கே யிறங்கித் திகழ்ந்ததுவே (4)

    அதன்படி அன்றோர் அதிகா லைதனில் அரும்புதல்வர்
    முதற்கட னாகிய முன்னவர்க் காற்றும் முழுக்கருமம்
    விதிப்படி செய்யும் விசேஷத் திருநாள் விளைந்ததுவே
    அதுபொருட் டையரும் ஆறடைந் தாருடல் ஆடிடவே (5)

    மாமியும் போகும் வழியினில் நாமம் மடுத்துவிட்டால்
    சாமியென் றங்கே ஜகம்மறக் காதீர் சிரார்தமுண்டு
    தாமதம் வேண்டா தெளிநீர் குளித்துச் சிரத்தையுடன்
    நாமிதுச் செய்வோம் நலமென அன்பில் நவின்றனளே! (6)

    சரிசரி யென்றநம் ஸ்ரீதரர் ஆற்றில் திகழ்ந்திடும்போழ்
    தரசிவ என்னும் அரவம் ஒலிக்க அகம்மறந்தார்
    உரியநன் நேரம் உருண்டிட புத்தி உதித்தவராய்
    விரைந்து குளித்து விசுக்கெனச் சென்றனர் வீட்டினுக்கே! (7)

    சிந்தனை எங்கும் சிவன்புகழ் மட்டும் ஜனித்திருக்க
    வந்திருந் தங்கு வழங்கினர் பிண்டம் வழங்கியதும்
    முந்தி உணவிட முன்வந் தெழுந்த முதியவர்தாம்
    அந்தணர் தம்மை அகன்றுண விட்டார் அடுத்தவர்க்கே! (8)

    பித்துரு தோஷம் பிழையெனச் சொல்லிப் பிழையகற்ற
    சுத்தமே வேண்டும் சுடர்விடும் கங்கைச் சுனையினிலே
    இத்தரு ணம்நீர் இதன்பழி நீங்க இனிமுயல்வீர்
    சித்தம் சினந்து திகழ்ந்தவர் அந்தணர் செப்பினரே! (9)

    தங்கைப் பொருளால் தரணியோர் கொண்ட தணற்பசியை
    மங்க இயற்றிய மாதவம் செய்து வளமையெலாம்
    அங்கே இரைத்தவர் அன்றுதங் கைபொருள் அற்றமையால்
    கங்கைக் கரைதனைக் காணா நிலையாற் கலங்கினரே! (10)

    தன்னிலை மாறிச் சிவநினை வாலே திதிமறந்து
    முன்னிலை தீர்ந்த முதியவர் ஏங்கி முனகினராய்த்
    துன்ப முழன்று துயருடன் வீழ்ந்து துடிதுடித்து
    அன்பரின் அன்பரை ஆதியை எண்ணி அழுதனரே! (11)

    கிணற்றுக் கருகே கிடந்து சுருதிக் கிளரிசையும்
    உணர்ந்து படித்தே உயர்த்திய பாட்டும் உணர்ச்சியுமாய்
    மணத்தை இழந்த மலர்த்தா ரெனவவர் மண்விழுந்தார்
    அணங்கும் தலைவரும் அந்நிலை கண்டே அறிந்தனரே! (12)

    பக்தியின் ஆழமும் பாசமும் கண்ட பரசிவனார்
    அக்கணம் அங்கே அடியினில் தண்ணீர் அமைகிணற்றில்
    சக்தியின் ஆற்றல் சடுதியில் பாய்ச்சச் சரசரென
    அக்கிண றான தமுதகங் கையென ஆர்ப்பரித்தே! (13)

    நேசமும் நெஞ்சினில் நேர்மையும் தங்கி நிலைத்துவிட்டால்
    வாசலில் மாயம் வழங்கும் இறைவன் வருவனெனப்
    பூசைகள் ஆகமம் புண்ணிய நூல்கள் புகன்றமெய்யை
    ஈசனின் ஆடலை யிங்குகண் டாருணர்ந் தேத்தினரே! (14)

    ஸ்ரீதரர் ஈசன் சிறப்பை உணர்ந்து சிலிர்த்ததுபோல்
    கீத விரும்பிகள் கேட்கச் சிலிர்ப்பு கிடைத்திடவும்
    நாதன் இருக்கும் நலமுடைப் பாடல் நமக்களித்தார்!
    ஆதலி னால்நம் அருஞ்செயல் ஈசன் அருட்தடமே!! (15)

    -விவேக்பாரதி
    05.11.2018

    Share
  • ஒப்பியல் நோக்கில் தமிழ் – மலையாளச் சிறுகதைகள் (நாஞ்சில்நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)

    – முனைவர் நா. தீபா சரவணன்

    ஒப்பீட்டாய்வு, இலக்கியங்களை வளமைப்படுத்தும் என்பதும், தமிழ் இலக்கியத்திற்கு ஒப்பாய்வு இன்றியமையாதது என்பதும் அறிஞர்களின் கருத்து. இக்கருத்திற்கேற்ப எனது ஆய்வேடு ஒப்பீட்டு முறையில் அமைந்துள்ளது. நாஞ்சில்நாடன், சி.வி. பாலகிருஷ்ணன் ஆகிய இரு ஆசிரியர்களும் தமிழ், மலையாளம் எனும் இருவேறு மொழிப் பண்பாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள். இருவரும் மொழியாலும், வாழ்வியல் முறையாலும் மாறுபட்டவர்களாக இருப்பினும் அவரவர் பண்பாட்டுப் பின்புலத்தை நன்கு விளக்குகின்றனர். ஒரு எழுத்தாளனின் வாழ்வியல் சூழலும் அனுபவங்களும் அவருடைய எழுத்துலகப் பாதையில் அடிப்படைப் பங்கு வகிக்கின்றன என்பதை இவர்களின் படைப்புகள் வழி அறிய முடிகிறது. கதையின் பின்புலத்தை வெளிக்கொணரும்போது இருவரும் தான் வாழும் சமுதாயச் சூழலை மையமாக வைத்துப் பெரும்பான்மையான கதைகளையும், பிற சமூகப் பின்னல்களை மையமாக வைத்துச் சில கதைகளையும் படைத்துள்ளனர்.

    பண்பாடு சார்ந்த பின்புலங்களால் இரு படைப்பாளர்களையும் இரு வேறுபட்ட மொழிகள் பேசும் மக்களின் பழக்க வழக்கங்களையும் அறிய முடிகிறது. உணவு முறை, தொழில், நம்பிக்கைகள், சடங்குகள், கலைகள், விளையாட்டுகள் போன்றவை பின்புலமாக அமைவதால் மரபு சார்ந்த பண்பாடு அழியாமல் பாதுகாக்கும் விதம் அறிய முடிகிறது. தேர்ந்தெடுத்த கதைக் கருவைக் கதையாக விவரித்துக் கூறும் போது கதையின் நோக்கம் முழுமையடையும் விதமாக ஏராளமான உத்திகளை இரு ஆசிரியர்களும் பயன்படுத்தியுள்ளனர். பண்பாடு, கலாச்சாரம், மொழி, நாடு போன்றவற்றில் வேறுபாடுகள் காணப்பட்டாலும் மனித வாழ்வின் அடிப்படைத் தேவைகளும், சிக்கல்களும் ஒரே போலத்தான் இருக்கின்றன என்பது எனது ஆய்வேட்டில் கண்டறியப்பட்ட முடிவாக உள்ளது. இரு வேறுபட்ட மொழியில் அமைந்த இலக்கிய வகைகளின் அமைப்பும் சிக்கல்களும் பெரும்பாலும் ஒரே போலவே இருக்கின்றன. அவை வெளிக்காட்டும் விதத்தில் சிறுசிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.

    இருவேறு நாட்டைச் சார்ந்த இருவேறு மொழியைச் சார்ந்த படைப்பாளர்களின் படைப்புகளை ஒப்பியல் ஆய்வு செய்வதால் அவரவர் சமூகத்தின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகள் போன்றவை உணர்த்தப் படுவதோடு அவரவர் நாட்டின் கலைகள் வளர்க்கப்படும் விதம், பாதுகாக்கப்படும் விதம் குறித்தும் அறிய முடிகிறது. அழிவை நோக்கிச் செல்லும் சில கூறுகளின் வரலாற்று ஆவணங்களாகவும், மாற்றத்தை நோக்கிச் செல்லும் சில தூண்டல்களின் விடியலாகவும் ஒப்பாய்வு அமைகிறது.

    சி.வி. பாலகிருஷ்ணனின் மலையாளச் சிறுகதை ஒன்றைத் தமிழில் இங்கே மொழிபெயர்த்து வழங்கியுள்ளேன் – http://www.vallamai.com/?p=89725

    ********

    கட்டுரையாளர்

    முனைவர்.நா. தீபா சரவணன்
    உதவிப் பேராசிரியர்
    ஸ்ரீ இராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி,
    கோவை.

    Share
  • மகனின் பிம்பம் – சிறுகதை

    -முனைவர் நா. தீபா சரவணன்

    மூலம்: சி.வி.பாலகிருஷ்ணன்
    மொழி : மலையாளம்
    தமிழில்: முனைவர் நா. தீபா சரவணன்

    மகனின் பிம்பம்

    தன்னைக் காத்து நிற்கும் மகனுக்கு முன்னால் மிக வேக இரயிலிலிருந்து பாதி பகலிற்கும் ஒரு முழு இரவிற்கும் பின் விடியற்காலையில் பிளாட்ஃபாமில் வந்திறங்கினார் பெரியவர். இரயில்வே அறிவிப்புகளில் கேட்டது போலவே இரயில் சரியான நேரத்திற்கு வந்தது. பையை நானே தூக்கிக் கொள்கிறேன் என்று சொன்ன போதும் மகன் ஒத்துக்கொள்ளவில்லை. அவருடைய இரண்டு ஜோடி துணிகளும் வடுமாங்காய் ஊறுகாயும் பலாக்காய் வறுத்ததும் பையில் இருந்தன. அதிகமான பாரம் ஒன்றுமில்லை.

    மகன் அம்மாவின் உடல் நலம் விசாரித்தான். எப்பொழுதும் உள்ள தலைச்சுற்றல் இப்போதும் அடிக்கடி தொந்தரவு செய்கிறது என்பதைத் தவிர அம்மாவுக்கு வேறு பிரச்சனை ஒன்றுமில்லை. ஒரு பசுமாடு இருக்கிறது. அதற்கு உணவு கொடுப்பது, நேரம் தவறாமல் பால் கறப்பது. இரண்டு டம்ளர் பால் பக்கத்து வீட்டுக்கு விலைக்குக் கொடுக்கப்படுகிறது. மாலை கோயிலுக்குப் போகும் பழக்கமும் தொடர்கிறது. மகன் வேறு ஏதாவது விசேஷம் இருக்கிறதா எனக் கேட்கவில்லை. பிளாட்ஃபோமில் நெரிசல் வழியாக அவனும் அப்பாவும் வெளியில் நிற்கும் காருக்கு அருகில் நடந்தனர்.

    புதுமை மணம் மாறாத கார். எப்படி இருக்குன்னு மகன் கேட்டான். அப்பாவுக்கு வண்டிகளைப் பற்றி அவ்வளவு தெரியாது இருந்தாலும் முழுவதுமாக ஒருமுறை பார்த்துவிட்டுச் சொன்னார்.

    “நல்லா இருக்கு”

    “இது புதிய மாடல்…”

    டோர் திறப்பதற்கும், கண்ணாடிகளைத் தாழ்த்துவதற்கும் ரிமோட் கன்ட்ரோலில் விரல்அமர்த்தினால் போதும். என்ன வில இருக்குமென்று அவர் கேட்கவில்லை. மகன் காரை ஸ்டார்ட் செய்தான். பார்க் செய்யப்பட்ட பல வண்டிகளிலிருந்து அது பெருமையோடு வெளியிலிறங்கியது.

    சிறிய மதில்களும் கம்பீரமான நுழைவு வாயிலும் சல்யூட் செய்கின்ற இளைஞனும் உள்ள வசிப்பிடத்தின் முன்னால் பயணம் முடிவடைந்தது.

    இதை விடக் கொஞ்சம் வசதியான ஒரு ஃபிளாட்டிற்கு இருப்பிடத்தை மாற்றப் போகிறேன் என்று மகன் ஃபோனில் கூறியிருந்தான். அப்பாவிற்கு அந்த ஞாபகம் வந்தது. மகன் தனியாக இல்லை. ஒரு நண்பனும் உடன் இருந்தான்.

    ஃபிளாட்டில் எயர்கண்டிஷன் இருக்கு. தரை முழுவதும் இத்தாலியன் மார்பிளின் வெண்மை. சாக்லெட் நிறத்தில் உள்ள இருக்கைகள் பெரிய டெலிவிஷன் செட். இலைகள் படர்ந்த இன்டோர் செடிகள். நீல நிறத் திரைச் சீலைகள்.

    “வாடகை கொஞ்சம் அதிகமாக இருந்தாலும் நல்ல கம்ஃபர்ட்டபள். அப்பாவுக்கு என்ன தோணுது!” மகன் கேட்டான்.

    அவருக்குக் குளிரத் தொடங்கியிருந்தது.

    ஒரு படுக்கையறையின் கதவு சாத்தியிருந்தது. நண்பன் தூங்கிக் கொண்டிருந்தான். அறிமுகப்படுத்துவதை அப்பறம் பாக்கலாம். இனியும் நேரமிருக்கே.

    “உனக்கு இன்னக்கி வேலக்குப் போகணுமா?”. கைகால் கழுவி வந்து மகனிடம் கேட்டார்.

    “வேண்டாம் லீவு சொல்லிருக்கேன். நாம சிட்டி முழுக்க ஒண்ணு சுத்திப் பாக்கலாம்”

    அவர் மகனின் கருத்தை வரவேற்றார். காலை டிபன், பயணம், மதிய உணவு, ஓய்வு.
    மாலை இரண்டு கிலோமீட்டர் தூரமுள்ள பிரசித்தமான பீச்சிற்கு, வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த காட்சிகளுக்கிடையில் நடைப்பயணம். மணல் வீடுகள் கட்டி விளையாடும் குழந்தைகள். கடற்காற்றின் பயங்கர ஓசை. நெடு நீளமாக பரந்து கிடக்கும் அலைகள். அந்தி மேகங்கள்.

    “டின்னர் முடிச்சிட்டுப் போலாம்” மகன் வழியில் வைத்துக் கூறினான். சாதாரணமாக இரவு உணவு, கஞ்சிதான். சேர்த்துச் சாப்பிடப் புதினாவும் மல்லியும் சேர்த்து அரைத்த தேங்காய்த் துவையல். பிரஷருக்குத் தினமும் மாத்திரை சாப்பிடுவதால் குறைந்த அளவு உப்பு போட்ட கூட்டு ஏதாவது இருக்கும்.

    அவர் மகனுடன் ஒரு ஸ்டார் ஹோட்டலின் ரெஸ்டாரண்டில் உட்கார்ந்திருந்தார். அம்மாவுக்குத் தெரிய வேண்டாம். மகன் அவனுக்காக விஸ்கி ஆர்டர் செய்திருந்தான். அவனுக்குக் குளிர்ந்த பீரும், மெனுகார்ட் பார்த்து எவையெல்லாம் வேண்டுமென்று வெயிட்டரிடம் அவன் தான் கூறினான்.

    “எதுக்கு இதெல்லாம்?” …………….. அவர் சந்தேகப்பட்டார்.

    “அப்பாவ கொஞ்சம் கவனிக்க வாய்ப்பு கெடத்ச்சுதே” மகன் பீர் டம்ளரை உயர்த்திக் கொண்டு சொன்னான்.

    அனேகம் அனேகம் பெரிய விளக்குகள் எரியும் நகரம். காரில் அவற்றிற்கிடையில் கடந்து போகவே மகனைப் பார்த்தார். காரின் ஸ்டீரியோவிலிருந்து மென்மையாக ஒலிக்கும் பாடலுக்கேற்றவாறு அவனுடைய கைவிரல்கள் ஸ்டியரிங் வீலின் மீது தாளம் போடுவதை அவர் பார்த்தார்.

    சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயம் இருக்கு. வந்ததே அதற்குத்தான். இப்போது வேண்டாம் என்று நினைத்தார்.

    நாளைக்குப் பேசலாம்.

    அவர் காரினுள் நிலவும் மிதமான குளிரை அனுபவித்தார். கண் இமைகள் பாரமாகத் தெரிந்தன.

    “அரேயார்…………? அப்பா எதுக்கு வந்திருக்கார்?” மகன் நண்பனின் படுக்கை அறையிலிருந்தான். பக்கத்து அறையில் அவர் தூங்கிக் கொண்டிருந்தார்.

    “எம்.பி.ஏ படிச்சது பாங்கிலிருநது மூணு லட்சம் ரூபா லோன் போட்டுத் தானே! மேனேஜர் கேட்டிருப்பாரு. வேல கெடச்சு நாலஞ்சு மாசமாச்சில்லே?”

    “அப்புறம்? அப்பா இன்னக்கு அத ஞாபகப்படுத்தினாரா?”

    “இல்ல அத நெனக்கவே அப்பாவுக்கு நான் இடந்தரல.”

    “நாளைக்கும் இப்படி தானிருக்கும்.”

    “திரும்பிப் போகும் போதோ”

    “அம்மா கேப்பாங்க. அப்பா அத மறந்திட்டேன்னு சொல்லுவாரு”

    “பேங்க் ஜாம்யம் போட்ட வங்ககிட்டருந்து வசூலிக்க நடவடிக்கை எடுக்காதா?”

    “சந்தேகமே இல்லை கண்டிப்பா எடுப்பாங்க”

    “யார் அந்த துரதிர்ஷ்டசாலி”

    “அப்பாவே தான்”

    “பாப்ரே…”

    *******

    மொழிபெயர்ப்பாளர், பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரியில் முனைவர் இரா.மணிமேகலை அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தனது முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். தமிழில் சாகித்ய அகாதமி விருது பெற்ற படைப்பாளர் நாஞ்சில் நாடன் அவர்களின் சிறுகதைகள் 100, மலையாளத்தில் கேரள அரசின் சாகித்ய அகாதமி விருதுபெற்ற படைப்பாளர் சி.வி.பாலகிருஷ்ணன் அவர்களின் 100 சிறுகதைகள் ஆகியவற்றை ஆய்வு எல்லையாகக் கொண்டு ஆய்வு செய்தவர்.

    “ஒப்பியல் நோக்கில் தமிழ் மலையாள சிறுகதைகள் (நாஞ்சில் நாடன், சி.வி.பாலகிருஷ்ணன்)” என்னும் தலைப்பிலான இவரது ஆய்வின் அறிமுகத்தைக் காண இங்கே சொடுக்குங்கள் – http://www.vallamai.com/?p=89703

    Share
  • நலம்.. நலமறிய ஆவல் – 138

     

    திரையால் பாதிப்பு

    இரவெல்லாம் கண்விழித்து கணினி விளையாட்டில் ஈடுபட்டிருப்பவருக்கு நேரத்துடன் அலுவலகத்திற்குச் செல்ல முடியவில்லை. எழுந்தபின்பும், `எப்போதடா மீண்டும் கணினிமுன் உட்காருவோம்!’ என்ற ஏக்கம். கார் ஓட்டிப்போகும்போது ஏதோ நினைவுடன் ஓட்டுவதில் விபத்துகள். மந்தமாகிவிட்டான்.

    பிறரது உணர்வுகளை திரையில் பார்த்து ரசிப்பதும் போதைதான்.

    கவனக்குறைவு, தூக்கமின்மை, ஒரு மந்தமான மனநிலை (mood), அதிகம் யோசியாது ஒரு காரியத்தில் இறங்குவது (impulsive), நடத்தையில் மாற்றம் – எல்லாமே திரை தரும் போதையால்தான்.

    கதை

    அண்மையில் மலேசியாவில் பதினாறு வயதுச் சிறுவன் ஒருவனுக்கு அவனது கைத்தொலைபேசியே யமனாக ஆகியது.

    அக்கருவியை `சார்ஜில்’ போட்டுவிட்டு, அதனுடன் இணைக்கப்பட்ட கம்பிவழி இசையைச் செவிமடுத்தபடி இருந்தவன் பகலிலேயே தூங்கிப்போனான். மதிய உணவிற்கென்று அவனை எழுப்ப வந்த தாய் மகனது உடல் சில்லிட்டிருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். காதிலிருந்து ரத்தம் வடிந்துகொண்டிருந்தது.

    பிரிட்டனில் வீடியோ விளையாட்டுகளைக் காரணமாகக் காட்டி, இருநூறு தம்பதியர் விவாகரத்து கோரியுள்ளனராம்!

    பன்னிரண்டு மணி நேரத்தைக் கணினியின்முன் கழித்த மாணவன் ஒருவன் வகுப்பில் தூங்கிவிடுகிறானாம். படிப்பிலும் சோடையாகிவிட்டான்.

    `இன்றைய கலாசாரம்!’ என்று அலட்சியமாக விட்டுவிட முடியுமா?

    டோபமீன் (dopamine) என்ற ரசாயனப் பொருள் நம் மூளையிலுள்ள நியூரான்களில் (நரம்புகளில்) சுரக்கின்றன. அது சுகமான உணர்வை எழச் செய்யும். அடிக்கடி இப்படி உணர்ந்தால் ஆனந்தமாக இருக்குமே என்ற கிறக்கம் எழ, அதுவே போதையாகிறது.

    மது, சூதாட்டம், கஞ்சா, ஹெரோயின் போதைப் பொருட்கள் அனைத்துமே ஒருவரை அடிமைப்படுத்துவது இந்த டோபமீனைச் சுரக்க வைப்பதால்தான்.

    குழந்தைகள் இருபது நிமிடங்களுக்குமேல் திரையை உற்றுப் பார்க்கும்போது, கண்கள் கிறங்க, போதை நிலைக்கு ஆளாகிறார்கள். அதனால்தான் அந்தச் செயலிலிருந்து விலக எளிதில் சம்மதிக்க மாட்டார்கள். கைகால்களை உதைத்துக்கொண்டு அழும் குழந்தையின் காதைப் பிடித்து அறைக்கு வெளியே கொண்டுவிட நேரிடும். (பெரியவர்களின் எல்லை நாற்பது நிமிடங்கள். இருபது வினாடிகள் கண்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டுத் தொடரலாம்).

    மிகச் சிறு வயதில் திரையையே நோக்குவதால் மூளையின் முன்பகுதி பாதிக்கப்படுகிறது. இதனால் திட்டமிடல், எது முக்கியம் என்று தீர்மானிப்பது குறைந்துவிடுகிறது. பிறரது துயரங்களை உணர்ந்து கருணையுடன் நடப்பது இயலாத காரியமாகிவிடுகிறது. இதனால் உறவுகளின் நெருக்கமும் குறையும். தனிமையும், அதனால் எழக்கூடும்; மன இறுக்கமும் தொடரும்.

    வீடியோ விளையாட்டுகளில் ஜெயிக்கும்போது அளவுக்கு அதிகமாக குதூகலிப்பவன் தோற்கையில் – என்னமோ உலகமே இடிந்துவிட்டதுபோல் – அலறுவான். ஆனால், அவனுடைய அன்றாட வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட தகவலை எப்படிச் செயல்படுத்துவது என்று புரியாது.

    வளர்ந்த பின்னர், ஒரு சிலருக்கு மணிக்கட்டில் பொறுக்க முடியாத வலி. David Price என்ற பந்தாட்டக்காரர் ஒருவருக்கு அப்படி ஏற்பட்ட வலியால், முக்கியமான போட்டி ஒன்றிலிருந்து விலக நேரிட்டது. பல மாணவர்களுக்கு பரீட்சையில் எழுதக்கூட முடியாத நிலை.

    சில கணினி விளையாட்டுகளை இலவசமாகப் பெற முடியும் என்றாலும், அவற்றுக்கான கருவிகளைத் தனித்தனியாக வாங்கிக்கொள்ள வேண்டும். விளையாட்டில் விரைவாக முந்த, பெற்றோரின் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி விடுகிறார்கள் மாணவர்கள். சில சமயம், என்ன வாங்குகிறோம் என்றே புரியாது வாங்கிவிடுகிறார்கள்.

    கதை

    மலேசியாவில், வக்கீல் படிப்பு படித்துக்கொண்டிருந்த ஒரு மாணவன் இப்படித்தான் தன் பெற்றோருக்குப் பல்லாயிரம் ரிங்கிட் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டான். கடனை அடைக்க அவர்கள் சொத்தை விற்கும்படி நேர்ந்தது. போதாக்குறைக்கு, கல்லூரியிலிருந்தும் விலக்கப்பட்டான். காலங்கடந்து, அழுகிறான். `இந்தக் கொடும் போதைக்கு அடிமை ஆகாதீர்கள்!’ என்று ஊடகங்கள்வழி வேண்டுகோள் விடுக்கிறான்.

    கடந்த காலத்தில் `அடிமைகள்’ தமக்குச் சுதந்திரம் கிடையாது என்ற உண்மை நிலையை உணர்ந்திருந்தார்கள். இன்றோ, கணினிக்கு அடிமையானவர்களுக்குத் தம் நிலை புரிவதில்லை.

    தனிமையில்தான் நம் பிரச்னைகளை அலசி, நம்மைப்பற்றி உணரவும் முடியும். எல்லாவற்றிற்கும் கைத்தொலைபேசியையும், கணினியையும் நாடினால், நமக்கென்று சிறிது நேரத்தைக்கூட ஒதுக்க முடியாது போய்விடுகிறதே!

    போதைப் பழக்கத்தை ஒழிக்க

    மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு இருப்பதுபோல், திரை போதைக்கு அடிமையான மாணவர்களுக்கான மறுவாழ்வு மையங்கள் சில நாடுகளில் உள்ளன. அங்கே போதைக்குக் காரணமான தொழில்நுட்பம் சார்ந்த கருவிகள் கிடையாது. சத்து நிறைந்த உணவு, தூக்கம் தவிர குழுக்களில் கலந்துரையாடி (“நான் ஒரு போதைப்பித்தன்!”) சிகிச்சை பெறும் வசதியும் உண்டு.

    பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் வீடியோ விளையாட்டுகளில் ஈடுபடுவதைப் பெற்றோர் கட்டுப்படுத்த வேண்டியது மிக அவசியம் என்று பரிந்துரைக்கிறார் இவர்களுக்கு அறிவுரை வழங்கும் ஒருவர்.

    “முன்பெல்லாம் தனிமையில் ஒருவன் சிரித்துபடி இருந்தால், அவனைப் பைத்தியம் என்போம் – கைத்தொலைபேசி கண்டுபிடித்தபின் அந்நிலை மாறிவிட்டது” (ஒரு தத்துவஞானி).

    இந்த ஆண்டுமுதல், கணினி விளையாட்டுகளால் வரும் நோய்களுக்கான சிகிச்சைக்கு காப்பீடு செய்யலாம்!

    “ரோபாட் மனிதனைப்போல் உணர்ச்சிகளுடன் மாறிக்கொண்டிருக்கிறது. மனிதனோ, இயந்திரமாக மாறிக்கொண்டிருக்கிறான்!” என்கிறார் ஒருவர்.

    `பிறர் குழந்தைகள் எப்படியோ தொலையட்டும்! கண்காணிக்க வேண்டியது அவர்கள் பெற்றோரின் பாடு!’ என்று விட்டேற்றியாக, `சிலிகான் பள்ளத்தாக்கின் ஜாம்பவான்கள்’ தாம் கோடி கோடியாகப் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.

    `நம் குழந்தைகளும் பாதிக்கப்படுவார்களோ!’ என்ற கவலை அவர்களுக்குக் கிஞ்சித்தும் கிடையாது. அவர்களுடைய குழந்தைகளைத்தாம் தொழில்நுட்பக் கருவிகளே இல்லாத உயர்தர பள்ளிக்கூடங்களுக்கு அனுப்புகிறார்களே!

    ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு பேட்டியில் கூறியது: “குழந்தைகள் தொழில்நுட்பக் கருவிகளுக்காக அதிக நேரத்தைச் செலவிடுவதை எங்கள் வீட்டில் அனுமதிப்பதில்லை!”

    Share
  • பெண் வசனக்காரர்கள்

    தி.இரா.மீனா

    பெண் வசனக்காரர்கள் :  நான் நான்  என்பதே  ஆன்மாவின்   மறுப்புதானே?

    சாதிகளற்ற சமுதாயம், வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் இருபாலாரும் சமம் என்ற கருத்து நிலைப்பாடு பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவ சாரணர்களின் விருப்பமாக இருந்து அது செயல்படுத்தவும்பட்டது என்பதற்குச் சான்றாக பெண் வசனக் காரர்களின் பங்கையும் வெளிப்பாட்டையும் காட்ட முடியும். சமுதாய நலன் மற்றும் வேதாந்த நிலைகளில் பெண் தன் சிறப்பை வெளிப்படுத்த முடிந்தது பெண் வசனக்காரர்களின் மிகப் பெரிய வெற்றியாகும்.

    கன்னட இலக்கிய, பக்தியுலகில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவந்த ’வசனக்காரர்கள்’ என்ற அடைமொழிக்குரியவர்கள் வீர சைவர்களாக அமைந்து ’வசனங்கள் ’மூலம் புதிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டனர். வீரசைவ நெறியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள் தமக்குள் சாதி, குலம் போன்ற பாகுபாடுகளைப் பார்க்கக் கூடாது என்பது வீரசைவத்தின் அடிப்படையான கொள்கையாகும். ஒருமுறை வீரசைவரான பிறகு அவர்கள் எல்லோரும் சமம். அதனால் பக்திக்கு முதலிடம் தந்து  அறிவையும் தொழிலையும் வீரசைவம்  பின்னிறுத்தியது. சாதி, பொருளாதார வேறுபாடுகள் இல்லாத தன்மை, பெண்ணை மாயையாக விரட்டாத உயர்வு, அவர்களுக்குச் சம மதிப்புத் தந்து போற்றிய தன்மை ஆகியவை வீர சைவத்தின் தலைசிறந்த இயல்புகளில் முக்கியமானவையாகும்.

    வசனக்காரர்கள் சொல்லவந்த  கருத்துகளை வசனங்கள் என்ற வடிவில் வெளிப்படுத்தினர். வசனம் என்பது உரைநடை மற்றும் பாடல் என்ற இரண்டிற்கும் இடைப்பட்ட நடைகொண்டது. கருத்துகளைச் சுருக்கமாகவும், எளிமையாகவும் நேரடியாகவும் கூறுவதான முறையிலமைந்தது. அறிவை வளர்க்கும் முயற்சியை விட, மனத்தை அறியும் முயற்சியை வெளிப்படுத்துவதுதான் அவற்றின் சிறப்பாகும். முற்போக்கான சிந்தனை வெளிப்பாட்டு நிலையில் பெரும்பாலான வசனங்கள் இருப்பதும் அவை நடைமுறை வாழ்க்கைக்குப் பொருந்துவதும் குறிப்பிடத்தக்கது.

    பசவேசருக்கு முன்னாலேயே இந்த இலக்கிய வகை இருந்தாலும் அவரே இது வளரக் காரண கர்த்தாவாக இருந்தார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சாதி வேறுபாடுகளால்தான் சமுதாயம் சீரழிகிறது என்ற கருத்தில் அவர் உறுதியாக இருந்ததால், எல்லாத் தரப்பு மக்களையும் பக்தி என்ற அடிப்படையில் ஒன்று சேர்ப்பதன் மூலம் மனிதர்களிடையேயான வேறுபாடுகளை நீக்க முடியும் என்று நம்பினார். அதனால் அனுபவ மண்டபம் [திருச்சபை] என்ற அமைப்பு அவரால் உருவாக்கப்பட்டது. அதில் விறகுவெட்டி, படகோட்டி,  விவசாயி, மருத்துவன், மாடு மேய்ப்பவன் என்று அனைவரும் உறுப்பினர்களாக இருந்தனர். பல்வேறு வகையான தொழில்களைச் செய்பவர்களாக இருந்தாலும் எந்தப் பாகுபாடும் அவர்களிடையே இல்லை. ’செய்யும் தொழிலே தெய்வம்’’ [காயகவே கைலாசா] என்ற அடிப்படையில் எல்லாப் பணியும் சமமானதாகக் கருதப்பட்டதும் வீர சைவத்தின் சிறப்பம்சமாகும்.

    தவிர ஒடுக்குமுறைக்கும் அடக்குமுறைக்கும் ஆளாக்கப்பட்டிருந்த பெண்ணின் தன்மையைப் பசவேசரும் பிற வசனக்காரர்களும் தம்முடைய அணுகுமுறையால் மாற்றினர். “பெண் மாயையல்ல. பார்ப்பதற்கு இரு கண்கள் தேவையானதைப் போல வாழ்வதற்கு ஆண்-பெண் என்ற இருவரும் வேண்டும். அவர்களிடம் காணப்படும் வேறுபாடு என்பது புறத் தோற்றத்தில் மட்டும்தான்’ என்று வலியுறுத்தி தம் அனுபவ மண்டபத்தில் பெண்களைப் பங்கேற்கச் செய்தனர். பல்வேறு வகையான தொழில்களைச் செய்பவர்களாக இருந்தாலும் திருச்சபை ஒருவரையொருவர் விமரிசிக்கவும் குறைகளை வெளிப்படையாகச் சொல்லி மனிதர்கள் தம்மை மாற்றிக்கொள்ளவும் வழி வகுத்தது.

    அனுபவ மண்டபக் கூட்டங்களில் கலந்து கொள்வது என்பதாக மட்டுமில்லாமல் விவாதங்களில் பங்கேற்பது, பணிகளில் உதவுவது, வாழ்வனுபவங்களை வசனமாகப் படைப்பது என்று பெண்களின் பங்கு மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. ஏறக்குறைய முப்பத்து மூன்று பெண்கள், வசனக்காரர்கள் என்ற அடையாளத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வசனங்களைப் படைத்துள்ளனர். அக்கமாதேவி, முக்தாயக்கா, பொந்தாதேவி, லக்கம்மாள், மூலிகே மகாதேவி, லிங்கம்மா, துக்களே,  சத்யக்கா, காளவ்வெ என்று ஒரு பெரிய பட்டியலை பெண் வசனக்காரர்களுக்குச் சானறாகக் காட்ட முடியும். இவர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு முத்திரையுண்டு.

    பெண் வசனக்காரர்களில் அக்கமாதேவி, மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும் சிறந்த ஞானியாகவும் சிவபக்தியின் அடையாளமாகவும் இருந்தார். விருப்பமின்றித் திருமண வாழ்வில் ஈடுபடுத்தப்பட்ட அவர், ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு வெளியேறி அல்லமபிரபு, பசவேசர் ஆகியவர்களோடு சேர்ந்து அனுபவ மண்டபத்தில் பங்கேற்றுச் சிவனின் மீது தனக்குள்ள அன்பை வெளிப்படுத்தி, இறைவனோடு கலந்தார். இளம் பெண்ணாக இருக்கும் அவரை அல்லமாபிரபு, அனுபவ மண்டபத்தில் சேர்த்துக் கொள்ளும் போது இருவருக்கும் இடையே நடக்கும் உரையாடல், அக்கம்மாவின் பேச்சுத் திறனுக்கும், சிந்தனை ஆற்றலுக்கும்  சான்றாகும்.

    உருவமற்ற ஒருவனோடு உருவமான ஒன்று எப்படிச் சேரமுடியும் என்ற பிரபுவின் கேள்விக்கு, ”சந்தன மரம் துண்டு துண்டாக வெட்டப்படும் போது அதன் வாசனை குறையுமா? தங்கத்தை அறுத்துச் சுடும்போது அது அதன் பொலிவை இழக்குமா? கரும்பு சக்கையாகப் பிழியப்பட்டு சுடப்படும் போது அதன் சுவை குறையுமா? பாம்பின் விஷப் பல்லைப் பிடுங்கிய பிறகு யாரும் அதோடு விளையாடலாம். சதையோடு இருக்கும் தொடர்பு சரியாகப் புரிந்துகொள்ளப்படுமென்றால் அது சரியானது தான். தாய் அரக்கியாக மாறினால் அவளுடலின் உணர்ச்சிகளும் அரக்கத் தன்மை உடையதாகிவிடும். விருப்பப்படுகிறவனுக்கு உடல் உண்டென்று நினைக்கக் கூடாது. கடந்து போனவற்றைச் சொல்லி என் முகத்தில் அறைந்தாலும் இழப்பு உங்களுக்குத் தான். என்னைக் கொன்றாலும் அவன் மீது அன்பு காட்டுவதை நிறுத்த மாட்டேன். அவன் இளமையானவன், உருவற்றவன், இறப்பில்லாதவன், அளக்க இயலாதவனாகிய சென்ன மல்லிகார்ச்சுனன், என் கணவன்”  என்று சொல்லிக் கடவுளோடு  தனக்குள்ள உறவை வெளிப்படுத்துகிறாள். எளிமையான உவமைகள் கொண்டு வாழ்வின் தன்மையையும் வாழ்வின் பொருளையும்

    “மலையில் வீடுகட்டும்போது
    காட்டு விலங்குகளைப் பார்த்து பயப்படுதல் கூடாது
    கடற்கரையில் வீடு கட்டும்போது
    அச்சம்தரும் அலைகளைப் பார்த்து பயப்படக் கூடாது
    சந்தையருகே வீடுகட்டும்போது  சத்தம் கேட்டு பயப்படக் கூடாது
    சென்னமல்லிகார்ச்சுனா
    உலகத்தில் பிறந்த பிறகு
    புகழுக்காகவோ, குறைகளுக்காவோ  அமைதியை இழக்கக் கூடாது”

    என்று ஒரு வசனத்தில் வெளிப்படுத்துகிறாள்.

    அஜகணன் என்னும் சிவயோகியின் தங்கை முக்தாயக்கா. இளம் வயதில் பெற்றோர் இறந்துவிட அஜகண்ணன் அவளுக்குத் தந்தையாகவும் குருவாகவும் இருக்கிறான். திடீரென்று அவன் இறந்துவிட, அந்தச் சோகம் அவளை வாட்டுகிறது. எதிலும் விருப்பமின்றி எந்த நேரமும் வருந்திக்கொண்டிருக்கும் அவளை வசனக்கார மும்மூர்த்திகளில் ஒருவரான அல்லமபிரபு பார்க்கிறார். ஒருவரின் முயற்சியாலும் பயிற்சியாலும்தான் மெய்யுணர்வு பெற முடியும் என்று தொடர்ந்து அறிவுறுத்துகிறார்.

    மனம் குழம்பிக் கிடக்கும் அந்த நேரத்திலும் அவள் அல்லமபிரபுவுடன்  வாதம் செய்வது குறிப்பிடத்தக்கதாகும். சரியான பயிற்சி செய்ய ஒருவருக்குக் கண்டிப்பாக ஒரு குரு தேவை என்கிறாள். வழிநடத்திய  தனது ஆசானும் அண்ணனும் இல்லாத வருத்தத்தை வாதமாக்குகிறாள். சிறிது கால கட்டத்திற்குப் பிறகு ஓரளவு ஆறுதலடைந்து வீரசைவப் பணிகளில் ஈடுபடுவதாக அவள் வரலாறு அமைகிறது. வேதாந்தமும் அதோடு மனித மனநிலையும் பொருத்தப்படுவதாக அவள் வசனங்கள் அமைந்துள்ளன. வாழ்வின் மிக உயர்ந்த தத்துவத்தை எளிமையாக அவள் சொல்லிய விதம் கீழ்வரும் வசனத்தில்:

     “நான் பேசமாட்டேன் என்னும்போதே
    அதில் பேச்சிருக்கிறது
    நான் செயல்படமாட்டேன் என்னும்போதே
    அதில் செயலிருக்கிறது
    நான் சிந்திக்கமாட்டேன் என்னும்போதே
    அதில் சிந்தனையிருக்கிறது
    எனக்குத் தெரிந்தது மறந்துபோனது என்னும்போதே
    அதில் அறிவும் மறதியும் தெரிகிறது
    உடலைத் துறந்தேன் என்னும்போது
    உடலோடான நெருக்கம் அதிகமாகிறது
    நான் நான் என்னும்போதே
    அது ஆன்மாவிற்கு மறுப்பாகிறது.
    ஓ..அஜகண்ணா! “

    என்ற வசனம் மேலோட்டமாக மிகச் சாதாரண சொற்களைக் கொண்டு அமைந்துள்ளது போலத் தோன்றினாலும் அறிவுத் தெளிவும் ஆழ்ந்த பார்வையும் வெளிப்படுகிறது. இன்னொரு வசனத்தில் அறிவுப் பயிற்சிதான் அனைத்துக்கும் தூண்டுகோல் என்று உளவியல் இன்று சொல்வதை அன்றே வசனமாக்கியிருக்கிறார்.

    “தீய சொற்களைப் பேசக் கூடாது;
    தீய வழிகளில் நடக்கக் கூடாது.
    பேசினால் என்ன ஆகும், பேசாவிட்டால் என்ன ஆகும்?
    உறுதிமொழியை மீறாமல் செயல்படுவதே
    அறிவின் பயிற்சியில்தான்
    ஓ..அஜகண்ணா!“

    ஒருமை அவர் சார்ந்த வாழ்வு. அந்தச் சிந்தனையில் இன்னொரு வசனம்

    “இருமையை ஒழித்துவிட்டோம்
    ஒருமையை நிறுவியிருக்கிறோம் என்று சொல்பவர்கள்
    கனவு காணும் குழந்தைதான்
    அவர்கள் அதைப்பற்றிப் பேசும்வரை
    இருமையாளர்கள் அன்றி வேறென்ன?”

    என்று அமையும் வசனமும் எல்லாக் காலத்திற்கும் எல்லா மனிதர்களுக்கும் பொருந்துவதாகும். பெண்கள் அத்வைத தத்துவார்த்தம் சார்ந்திருப்பது என்பது மிகச் சிறிய அளவில் என்றிருந்த காலக்கட்டத்தில், முக்தாயக்கா அவ்வழி வாழ்ந்தது குறிப்பிடத்தக்கது.

    ஆய்தக்கி மாரையன்  என்பவனின் மனைவி, லக்கம்மாள். அவன் பசவேசரின் வீட்டில் வீரசைவர்களுக்கு அரிசியைப் படியாலளந்து கொடுக்கும்போது கீழே சிந்தும் அரிசியைத் திரட்டிச் சுத்தம்செய்து வீட்டுக்குக் கொண்டுவருவான். அதுவே அவர்களது உணவு. ஒரு நாள் அவன் தங்களுக்குத் தேவையானதற்கு அதிகமாக அரிசியை வீட்டிற்குக் கொண்டு வந்தபோது லக்கமாள் சிவத் தொண்டர்களுக்கு பற்று இருக்கக் கூடாதென்று சொல்லி அதை மீண்டும் கொண்டு போய்வைத்துவிட்டு வரச்சொல்கிறாள். அவனும் உடன்படுகிறான். நிகழ்காலமே வாழ்க்கை என்பதும், சொர்க்கம் என்பது உழைப்புத் தான் என்பதையும் உணர்த்தும் அவள் கருத்து ஒரு வசனமாகிறது.

    “செய்யும் வேலையும் சேவையும்
    சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்
    என்று நினைக்கிறாயா?
    உன்னுடைய கூலி மோட்சமென்று நினைக்கிறாயா
    உழைப்பில் கவனம் வேண்டும்
    எதிர்காலக் கனவு வேண்டாம்
    இறந்தகால நினைவு வேண்டாம்
    மாரய்யாபிரியா அமலேஸ்வரலிங்கா
    எங்கிருக்கிறானோ அதுவே சொர்க்கம் “

    என்ற மிக எளிமையான வசனம் மூலம் நிகழ்கால வாழ்வின் முக்கியத்துவம் வெளிப்படுத்தப்படுகிறது. இது காலங்கள் கடந்தும் நிற்கும் வசனமாகும்.

    வெற்றிலை— பாக்கு விற்கும் ஹடபதா அப்பண்ணாவின் மனைவியான லிங்கம்மா, அடிப்படைக் கல்வி இல்லாத போதும் தத்துவார்த்தமும் தெளிவும் உடையவள். தன் சம காலத்து வசனக்காரர்கள் போற்றுமளவிற்கு அவள் வசனங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. பொருள் நிறைந்ததும் தெளிவானதாகவும் உள்ள ஒரு வசனம் இங்கே.

    “நிலையற்ற மனிதர்களே உங்கள் மனத்தைப்
    புனிதப்படுத்திவிட்டதாகச் சொல்கிறீர்கள்
    ஆனால் உடலை உருக்கியும்
    மனத்தைத் துன்புறுத்தியும்
    உங்கள் வழியறியாமல்..
    சந்தேகத்தில் குழம்புகிறீர்கள் .
    மனத்தை எப்படிப் புனிதப்படுத்துவது
    என்று சொல்கிறேன் கேளுங்கள்
    தண்ணீர் காற்றால் குலையாததைப் போல
    சூரியன் மேகத்தால் மூடப்படாததைப்போல
    கண்ணாடி உரசி சுத்தம் செய்யப்பட்டது போல
    மனம் சுத்தம் செய்யப்படாத வரை
    கடவுளைக் காண முடியாது
    அப்பண்ணாபிரியா சென்னபசவண்ணா”

    என்பது அவ்வசனமாகும்.

    காஷ்மீர் அரச பரம்பரையைச் சேர்ந்த மாரய்யா- மொலிகே மகாதேவி தம்பதி பசவேசரின் சித்தாந்தத்தால் கவரப்பட்டனர். தங்கள் வசதியான வாழ்க்கையைத் துறந்துவிட்டுக் கல்யாண் வந்தனர். பசவேசரைச் சந்தித்தனர். மரச் சாமான்கள் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு தங்களால் இயன்ற வரை சிவசாரணர்களுக்கு உணவு படைத்து, அன்பு காட்டி வாழ்ந்தனர். மொலிகே மகாதேவி, அறுபதுக்கும் மேலான வசனங்களைப் படைத்துள்ளார்.

    “பூமியின் ஆதரவின்றி தண்ணீர் இருக்குமா?
    மண்ணின் அடிப்படையின்றி விதை முளைவிடுமா?
    முயற்சியின்றித் திறன் பெறமுடியுமா?
    அறிவாற்றலின்றி அறிவுபெற முடியுமா?
    செயல்படுதலும் அறிவும் இணையானவை
    இதுதான் கட்டமைப்பின் அடிப்படை
    என்னையப்பிரியா இம்மாடி நிக்கலங்க மல்லிகார்ஜுனா”

    என்று அறிவும் அதன் பின்னணியிலான செயலும் குறித்த சிந்தனாவாதத்தைப் புரிய வைக்கிறார்.

    காமீரில் உள்ள மண்டாவ்பூர் அரச பரம்பரையில் வந்த பொந்தாதேவியின் இயற்பெயர் நிஜாதேவி. இளம் வயதிலிருந்தே சிவபக்தையான அவள் கல்யாண் வந்தாள். அவளுடைய பக்தியால் கவரப்பட்ட சிவன், உள்ளம் மகிழ்ந்து அவருக்கு ஒரு  போர்வை [பொந்தே] தந்ததாகவும் அது முதல் அவர் பொந்தாதேவி என அழைக்கப்பட்டதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது. மனிதர்களிடையே சமத்துவம் வேண்டும் என்பது அவருடைய விருப்பம். அதைக் காட்டும் ஒரு வசனம் கீழே. எல்லா இடங்களிலும் அலைந்து திரிபவன் என்ற பொருளில் ’பிடாடி’ என்பது இவர் முத்திரையாகும்.

    ’வெற்றிடம் என்பது கிராமத்திற்குள் இருக்கிறதா?
    வெற்றிடம் என்பது கிராமத்திற்கு வெளியில் இருக்கிறதா?
    அந்தணர்பகுதி ஒரு கிராமத்திற்குள்ளா?
    தாழ்ந்தவர்பகுதி கிராமத்திற்கு வெளியிலா?
    எங்கே நீங்கள் போனாலும் வெற்றிடம் என்பது அதேதான்
    சுவரைப் பிரிப்பதால்தான்
    உள்வெற்றிடமும் வெளிவெற்றிடமும்
    எங்கிருந்து பார்த்தாலும்
    உங்கள் அழைப்புக்குச் செவிகொடுப்பது பிடாடிதான்”

    என்பது அவ்வசனம். இன்றும் கன்னட மக்களால் அடிக்கடி மேற்கோளாகக் காட்டப்படும் வசனம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

    தங்கள் ஆன்மாவின் வெளிப்பாடு என்ற நிலையில்தான் அவர்களால் வசனங்கள் படைக்கப்பட்டுள்ளன. நவீன சிந்தனையாளர்கள் சொல்லும் கருத்துகளையும் கூட அந்தக் காலக்கட்டத்திலேயே வசனங்கள் வெளிப்படுத்தியிருப்பது, அவர்களின் சிந்தனை ஆளுமையைக் காட்டுகிறது.

                         ——————————–

    Share
  • படக்கவிதைப் போட்டி – 192

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்க்கவ் கேசவன் எடுத்த இந்தப் படத்தை திருமதி சாந்தி மாரியப்பன் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து போட்டிக்காகத் தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (22.12.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்

    Share
  • சேக்கிழார் பா நயம் – 16 (அந்நிலையே)

    -திருச்சி புலவர் இரா.இராமமூர்த்தி

    உலகில் நிகழும் இயல்பான நிகழ்ச்சிக்கு மாறுபட்ட நிகழ்ச்சி திருவாரூரில் நிகழ்ந்தது! தொடக்கம் இயல்பான உலகியலாக இருந்தாலும் தொடர்ச்சி இயல்புக்கு மாறுபட்டதாக நிகழ்ந்து , இறையருள் நிகழ்ச்சியாக நிறைகிறது. ஆரூர்  மன்னன் வாழ்வில் கண்ட அதிசயம், அவனுக்கும் நமக்கும் இறையருளின் விளக்கமாக அமைந்தது என்பதை அடுத்து நிகழ்ந்த அதிசய நிகழ்ச்சி வழியே அறிந்து கொள்கிறோம்! ஆம், தேர்ச்சக்கரத்தில் அடிபட்டு இறந்த கன்று உயிர் பெற்று எழுகிறது! அப்போதே மன்னன் தேர்க்காலால் ஊரப்பட்ட   மகனும் உயிர்த்து எழுகின்றான்! தொடர்ந்து அமைச்சனும் உயிர் பெற்று எழுகிறான்!

    இதனை உணர்த்தும் வகையில் மன்னன் தானே தன் மகனைத் தேர்க்காலில் இட்டுக்  கொன்ற அதே நேரத்தில்  சிவபிரான் அருட்காட்சி தருகிறார்!  சிவபிரான் திருச்சடையில் இளம்பிறை நிலவும், திருநுதலில் மூன்றாம் கண்ணும் பொலிய அவர் தோன்றுகிறார்! நிலவு செய்த  பிழையைமன்னித்து அதனைச் சடையில் ஏற்றுக்கொண்டு பெருவாழ்வு தந்த கருணையைச் சடை காட்டுகிறது. முருகப்பிரான் என்ற குமாரனை ஈன்ற நெற்றிக்கண் இறைவனின் தனிச்சிறப்பையும் காட்டுகிறது!அக்குமரனின் தாயாகி அரவணைத்த பார்வதி தேவி இடப்பக்கத்தில் இணைந்து நிற்கிறாள்! அங்கும் சிவபூத கணங்கள் தோன்றி நிற்பதைக்கண்ட அரசன் சிவ பிரானைப் போற்றுகின்றான்! அப்போது தமக்கே உரிய காளைமேல் இறைவன் தோன்றுகிறார்! சடையில் பிறையைத் தாங்கும் பிரானை, விடை தாங்குகிறது! சடையும் விடையும் ஆதாரமாகவும் ஆதேயமாகவும் விளங்கும் காட்சி அது.  சடைக்கு சிவன் ஆதாரம்,விடைக்கு சிவன் ஆதேயம்! இக்காட்சி மிகச்சிறந்த அடியார்கட்கே கிட்டும். இக்காட்சி நல்கும் இறைவனை ‘சோமாஸ்கந்தமூர்த்தி’ என்பர்! குடும்பத்துடன் காட்சிதருபவர் என்பது பொருள்.

    அரசனும் , மகனும் ஈடுபட்ட நிகழ்ச்சி என்பதால் குடும்பத்துடனும், அமைச்சனும் ஈடுபட்டதால் பூதகணங்களுடனும் இறைவன் காட்சி நல்கினார்! அப்போது ஆன்கன்று , இளவரசன், அமைச்சன் ஆகியோர் உயிர் பெற்று எழுந்தனர்! இதனைச் சேக்கிழார் பெருந்தகை,

    ‘’அந்நிலையே  உயிர்பிரிந்த  ஆன்கன்றும் அவ்வரசன்
      மன்னுரிமைத் தனிக்கன்றும் மந்திரியும் உடன்எழலும்
      இன்னபரி சானான்என்று  அறிந்திலன்  வேந்தனும் யார்க்கும்
      முன்னவனே முன்னின்றால் முடியாத  பொருள் உளதோ?’’

    என்று பாடுகிறார்!  இப்பாடலில் முறைப்படி முதலில் இறந்த ஆன்கன்று உயிர் பெற்று எழுகின்றது! அதனைக் கண்ட அப்பசு மகிழ்கிறது! அக்கன்று உயிர்த்து எழுந்ததைக்  கண்ட பசு மகிழ்ந்தமையால் அரசன் மகிழ்ந்தான்! அதற்கிடையில் இளவரசனைத் தேர்க்காலில் இட்டுக்  கொல்ல அஞ்சித்தன் உயிரை நீத்த அமைச்சன் உயிர்பெற்று எழுந்தான்! இதனையும் அரசன் கண்டு மகிழ்ந்தான்! பின்னர்அரசனின் மைந்தன் உயிர்பெற்று எழுந்தான்! இதனை , ‘’மன்னுரிமைத் தனிக்கன்றும் ‘’ என்று பாடுகிறார் புலவர்! ஆன்கன்று அரசன் கன்று என்ற சொல்லாட்சி உயிர்கள் அனைத்தும் ஒருதன்மையனவே, என்பதைப் புலப்படுத்தும் ! இரண்டு கன்றுகள் எழுந்தபின் அமைச்சன் எழுந்தான் என்பதில் முறைமாற்றம் செய்கின்றார் சேக்கிழார்! மந்திரி இறந்தபின்னரே  இளவரசன் மரணமடைகிறான். அப்படியானால் மந்திரி எழுந்தபின் தானே இளவரசன் எழவேண்டும்?   இளவரசன் உயிரிழப்பானோ என்ற அச்சத்துடன் இறந்த அமைச்சரின் அச்சத்தை நீக்கும் பொருட்டு அவன் எழுமுன் இளவரசன் எழுந்தான் என்று கூறியது நுட்பம் வாய்ந்தது! இவை அனைத்தையும் கண்ட அரசனின் மனோநிலை எத்தகையது என்று யாராலும் உணரவியலாது! இதனை ‘’இன்ன பரிசானான் என்று அறிந்திலன் வேந்தனும் ‘’ என்ற தொடரால் சேக்கிழார் கூறுகிறார்! எப்போதும், எங்கும் ,எல்லாவுயிரினுள்ளும் இருக்கும் இறைவனே,சாட்சியாய் நின்று, இவைஅனைத்தையும்நிகழ்த்துகிறார் என்பதை,

    ‘’யார்க்கும் முன்னவனே முன்னின்றால் முடியாத  பொருள் உளதோ?’’

    என்று சேக்கிழார் கூறுவது இறைவனின் இலக்கணத்தையும்  காட்டுகிறது! எனவே திருவாரூரில் நிகழ்ந்த நிகழ்ச்சியின் நிறைவில் அனைவர்க்கும் இன்பமே உண்டாயிற்று!  உயிர்களைப் படைத்தல், காத்தல், மறைத்தல், அருளால், அழித்தல் ஆகியவற்றை ஆற்றும் இறைவனின் முதன்மையை, முழுமையை  இப்பாடலில் சேக்கிழார் காட்ட முனைந்துள்ளார்!

    Share
  • படக்கவிதைப் போட்டி 191-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. நித்தி ஆனந்த் எடுத்திருக்கும் இந்தப் புகைப்படத்தை வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்துப் படக்கவிதைப் போட்டி 191க்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி!

    வண்ணக்குடைக்குள் வீற்றிருக்கும் இந்தச் சின்னமலரின் வனப்பு நம் உள்ளத்துக்கு அள்ளித்தருகின்றது உவப்பு!

    இந்தப் பிஞ்சுத் தளிரைக் கொஞ்சுதமிழில் கவிபாடக் கவிஞர்களை அழைக்கின்றேன் கனிவோடு!

    *****

    ”குழந்தை குடையெடுத்தால் மழையும் வெயிலும் விரும்பி வந்திடும் அதன் மழலைமொழி கேட்க!” என்று செப்புகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    ஒரே வழி…

    மழைவெயி லில்லா வேளையிலும்
    மழலை கையில் குடையெடுத்தால்,
    மழையும் வெயிலும் வந்திடுமே
    மழலைப் பேச்சை ரசித்திடுமே,
    அழைத்திட ஆயிரம் வேள்வியிலும்
    அன்புக் குழந்தையின் குரல்பெரிதே,
    மழலை உள்ளம் நிலைத்திடட்டும்
    மானிடம் செழிக்க இதுவழியே…!

    *****

    ”குட்டிப் பாப்பா என்று என்னைக் குறைத்து மதிப்பிடாதீர்; ஆளுயரம் ஆனபின்னே நானும் தலைவியாவேன்; தரணிக்கு நன்மை செய்வேன்” என்று சூளுரைக்கும் சுட்டிக் குழந்தையைக் காண்கிறோம் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயின் கவிதையில்.

    பேசப் பிடிக்கும் பாப்பாவுக்கு!

    வீட்டில் யாருமில்லை
    விரும்பி நான் அமரவில்லை
    அடுத்தடுத்து வேலைக்குப் போன
    அம்மா அப்பா அறிவுரைப்படி
    அழாமல் இருக்க அமர்ந்துள்ளேன்
    எனதருமை நண்பன்
    என் வண்ணக்குடையுடன்
    விழி திறக்கும் முன்னே
    விறுவிறுவென்று பல்துலக்கி
    அதட்டலுடன் பாலூட்டி
    அவசரமாய்க் குளிப்பாட்டி
    அருமைப் பெற்றோர் சென்றவுடன்
    காலை உணவு இட்லிகளை
    காகத்துடன் பகிர்ந்ததால்
    கடுங்கோபமுற்ற அண்ணன்
    கைகட்டி அமரச் செய்தான் வெளியே
    குட்டி பாப்பா என
    குறைத்து மதிப்பிடாதீர்
    அம்மா போல்
    ஆளுயரம் ஆன பின்னே
    தலைவியாக நானும்
    தரணிக்கு நன்மை செய்வேன்
    போய்வாருங்கள் இப்போ
    பேசிக்கொண்டே இருப்பேன் நான்.

    *****

    குடைக்குள் மழையாய்வந்த மழலையின் விழிபேசும் மௌனமொழியும், வாய்பேசும் மழலைமொழியும் கேட்காமல் எந்திரமாய் ஓடும் மனிதர்களின் அறியாமைக்கு வருந்துகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

    மழலை மொழி

    குடைக்குள் மழையென வந்த
    மழலை உன்னை கண்டு
    மனம் இங்கே நனைந்ததடி
    கைகட்டி அமர்ந்திங்கு
    உனைக் கண்டவர் மனம்தனை
    கட்டி போட்டாயே நீ
    உன் விழி பேசும் மௌன மொழியும்
    வாய் பேசும் மழலை மொழியும் கேட்காமல்
    இயந்திரமாய் எதையோ தேடி
    ஓடும் மனிதர்கள் இங்கே
    சிரிக்க மறந்து
    சிந்திக்கக் கூட மறந்து
    மாயாலோகத்தில் எத்தனையோ இழந்து
    கடமைக்காக வாழ்ந்திடும் மனிதர்கள் இங்கே
    ஓடும் இவர்களை நிற்கச்சொல்லி
    மருந்தாய் வந்ததே
    உனதழகும் சிரிப்புமாய்க் கலந்து
    வந்த உன் மழலை மொழி!

    *****

    ”மழையில் நனையாமல் தன்னைக் காத்துக்கொள்ள மழலை பழகும் பயிற்சி இது” என்பது திரு. அ. இராஜகோபாலனின் கருத்து.

    மழைக்கு மறைவாய்
    குடைக்குள் அடங்கவும்,
    வெள்ளத் தண்ணீர்

    வீட்டிற்குள் வந்தால்
    தளிர் பாதம் நனையாமல்
    உயரக் கட்டிலில்
    உட்காரவும்
    குழந்தை இவள்
    பழகும் பயிற்சி.

    *****

    ”கந்தக பூமிதனைக் களிப்பூட்ட வந்த கற்பகமே! தாய் வரவுக்காய்க் காத்திருக்கும் கனிச்சாறே! கண்முன்னே வாராயோ…என் கலிதீர்க்க வாராயோ” என்று பாச மகளை நேசத்தோடு அழைக்கும் தாய் நமக்குக் காட்சிதருகின்றார் முனைவர் மு. புஷ்பரெஜினாவின் கவிதையில்.

    மழைக்கால மேகமாய் மனதினிலே நனையவிட்டு,
    அற்புத வானவில்லாய் என்னை வளைய வந்து,
    பள்ளிக்கூட மேசையிலே பக்கம் பாராது முகந்திருப்பி
    செல்லக் கோபத்துடன் செல்லச் சண்டைக்காய்
    சிரிப்புடன் காத்திருக்கும் என் செல்லமே….
    தாய் வரவுக்காய் காத்திருக்கும் கனிச்சாறே
    கந்தக பூமிதனைக் களிப்பூட்ட வந்த கற்பகமே
    கடைப்பார்வையால் கட்டிளங்காளையரைக்
    கட்டி இழுத்து வரும் கண்ணே, காவியமே,,
    விரித்த குடையடியில் விரிந்த விழியுடனே
    விரக்தியுடன் நோக்குவதேன் விந்தைமகளே…
    கனவாகிடாதே கண்முன்னே வாராயோ
    கர்ப்பத்தில் வந்துதித்து கலிதீர்க்க வாராயோ

    *****

    பிள்ளைக் கனியமுதைக் சுந்தரத் தமிழ்க்கவியால் போற்றிப் புகழ்ந்திருக்கும் கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    அடுத்து வருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலாவே..?

    செங்கோல் பிறழாது ஆண்ட மன்னர்களின்..
    வெண்கொற்றக் குடை நிழலில் நாடு..
    எங்கும் மும்மாரிப் பொழிந்து வளம்
    பொங்க குடிமக்கள் மனம் எல்லாம்
    தேன்மாரிப் பூமாரி பொழிந்தாற் போல்
    இன்பமாய் வாழ்ந்த காலமென்று நீ
    நினைத்தாயோ என் வண்ண நிலாவே..??

    தன்னலமாய் வாழ்கின்ற ம(மா)க்கள் கூட்டத்தால்
    இந்நாட்டில் தகுதியற்றோர் தலைமையில் ஆட்சி..
    எந்நாளும் துன்பமே நிலை கொண்ட
    அன்றாடங் காய்ச்சியாய் வாழ்கின்ற அவலம்..
    வான் மழையும் பொய்த்துப் போய்..
    காணுகின்ற இடமெங்கும் வறட்சி நிலவ
    வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலாவே..?

    ”செங்கோல் மன்னரின் வெண்கொற்றக் குடைநிழலில் மக்கள் மகிழ்ந்திருந்த காலம்போய், தகுதியற்றோரின் தன்னல ஆட்சியில் எந்நாளும் மக்களுக்குத் துன்பமே எனும் அவலநிலை உருவாகிவிட்ட இன்றைய சூழலில் வண்ணக்குடை விரித்துப் பயனென்ன வண்ணநிலவே?” என்று நாட்டுநிலையைக் குழந்தையிடம் சொல்வதுபோல் பாட்டியற்றியிருக்கும் திரு. ஆ. செந்தில்குமாரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share
  • இந்த வார வல்லமையாளர் (292)

     

    அன்ன சத்திரம் ஆயிரம் நாட்டல்
    ஆலயம் பதினாயிரம் வைத்தல்
    இன்னருங்கனிச் சோலைகள் செய்தல்
    இனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்
    பின்னருள்ள தருமங்கள் யாவும்
    பெயர் விளங்க ஒளிர நிறுத்தல்
    அன்ன யாவினும் புண்ணியம் கோடி
    ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

    இது பாரதியார் வாசகம். இதனைக் கணந்தோறும் நிரூபனம் ஆக்கிக் கொண்டிருக்கும் ஓர் உன்னதமான அமைப்பு, சேவாலயா. தேச பக்தி நிறைந்த மாணவர்களை மகாத்மா காந்தியடிகள், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகாகவி பாரதியாரின் வாக்குப் படியும் வாழ்க்கைப் படியும் வளர்க்கும் அரும்பணியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறப்பாக நடத்தி வருகிறது சேவாலயா. கசுவாய் என்னும் கிராமத்தில் அமைந்திருக்கும் தங்களது கல்வி வளாகத்துக்கு உள்ளேயே இயற்கை விவசாயம், முதியோர் இல்லம், உயர்நிலைக் கல்வி வரையில் பள்ளிகள், தொழில்வழிக் கல்விச்சாலைகள், மருத்துவமனை, கோசாலை என்று எண்ணற்ற கட்டமைப்புகளை ஏற்படுத்தி, அங்கிருக்கும் மக்களுக்குச் சிறந்த வாழ்வாதாரத்தை அமைத்து வருகிறார், இந்த நிறுவனத்தை முன்னின்று மிகுந்த அக்கறையோடும் திட்டங்களோடும் உழைத்து முன்னேற்றும் திரு முரளிதரன்அவர்கள்.

    பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகளைக் கொண்டும், பல உற்சாகம் மிக்க ஆர்வலர் பட்டாளத்தைக் கொண்டும் சத்தமே போடாமல் ஒரு சத்தான உலகைப் படைக்கக் கடமையெனக் கருதி வித்திட்டுக் கொண்டிருக்கும் சேவாலயா நிறுவனம், சென்றவாரம் உண்மையிலேயே உலகம் பசுமையுடன் வாழ நாம் அனைவரும் செய்ய வேண்டிய கடமையான மரக்கன்று நடுதலைச் செய்திருக்கிறது. வருடத்திற்கு 30,000 மரக்கன்றுகள் நடுவதாகத் திட்டமிட்டுக் கிட்டத்தட்ட 1200 மரக்கன்றுகளுக்கு மேல் நட்டிருக்கின்றனர் அவரது பள்ளி மாணவர்கள். சென்ற வாரம் ஞாயிற்றுக் கிழமை இவர்களால் 300 மரக்கன்றுகள் நடப்பட்டன. அதன் புகைப்படங்கள் கீழே,

     

     

     

    நமது நாடு, நமது மண் என்ற மரியாதை உணர்வைப் பிஞ்சிலேயே கருவாக்கும் திரு சேவாலயா முரளி அவர்களின் அரும்பணி மிகவும் பாராட்டுதலுக்கு உரியது. அவர்களது இந்த உன்னதமான இயற்கை வழிபாட்டை மெச்சி வல்லமை மின்னிதழின் சார்பாக வல்லமையாளர் என்னும் விருதினை அறிவித்து மகிழ்ச்சியடைகிறோம்.

    Share