Blog

  • படக்கவிதைப் போட்டி 190-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திருமிகு. ஷாமினியின் காமிரா வண்ணத்தில் உருவான இந்தப் படத்தை, வல்லமை ஃபிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கு அளித்திருக்கின்றார் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி உரித்தாகுக!

    ”பாய்ந்துவரும் அலையை எதிர்த்துத் தோணியிலே பயணிக்கும் தம்பி! நெஞ்சுரத்தையும் துணிவையும் துணையாக நம்பிப் புறப்படு! வெல்லுவாய்த் தடைகளை; அள்ளுவாய் மீன்களை, கூடவே வெற்றியையும்!”

    நிழற்படத்துக்கு நிசக்கவிதை எழுதி நம்முளம் வசப்படுத்தக் காத்திருக்கும் கவிஞர்களுக்கு வழிவிட்டு நான் விலகுகின்றேன்!

    *****

    ”அமைதியாய் இருக்கும் அலைகள் எப்போது ஆர்ப்பரிக்கும், சுனாமியாய் மாறுமென்று தெரியாது. எனினும், ஆக்கம் தரும் செயலில் ஊக்கத்தோடு போராடு; முயற்சியில் வென்று முன்னேறு!” என்று இந்த இளைஞனுக்கு நல்வழிகாட்டுகின்றார் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜ். 

    முயற்சி திருவினை ஆகும்

    ஆழ்கடல் அமைதியை அறிந்திட
    எழும் அலைதனைக் கடந்திட முயன்றாயோ
    அலை வந்து அடித்திடும் கரைதனில்
    அலைபாயும் மனம் கொண்டு நின்றிட
    மரம் கொண்டு எழும் அலைதனில் சறுக்கிச்
    சரித்திரம் படைத்திட முயன்றாயோ
    உனக்கென இடம் ஒன்றைப் பிடித்து
    தடம் பதித்திட முயன்றாயோ

    காலங்காலமாய்க் கரையைக் கடக்க முயன்று
    எழுவதும் வீழ்வதுமாய் அலைகள் ஓய்ந்ததில்லை!
    அளவாய் இருக்கும் வரை அழகாய்த் தோன்றும் அலை கூட
    அதிர்ஷ்டம் வந்து சுனாமியாய்க் கரையைக் கடக்க
    வாகை சூடும் வெற்றியில் பலரது வாழ்வை அள்ளிச் சென்றதே!
    நல்நோக்கம் கொண்டு ஆக்கம் தரும் செயலில்
    மனம் தளராமல் முயன்றிடு வெற்றி உனதாகும்
    ஊரே கை கோத்து உன்னைக் கொண்டாடும்
    முயற்சி திருவினை ஆகும்!

    *****

    ”அஞ்சா நெஞ்சமும் அளவிலா முயற்சியும் கொண்ட என்னிடம் அகன்ற பெருங்கடலும் அஞ்சிநடுங்கி என் கால்களின் ஊடே அலையாய் ஓடும் காட்சியைக் காண்மின்!” என்று வீரமுழக்கமிடும் இளைஞனைக் காண்கிறோம் திருமிகு. நாங்குநேரி வாசஸ்ரீயின் கவிதையில். 

    அகன்ற பெருங்கடலும்
    அஞ்சி நடுங்கி என்
    கால்களின் ஊடே
    கடலையாய் ஓடும்
    காட்சியைக் கண்டீரோ
    திண்ணிய எண்ணமும்
    திடமான நோக்கமும்
    தெளிவான பார்வையும்
    தொய்வில்லா உறுதியும்
    அஞ்சா நெஞ்சமும்
    அளவில்லா முயற்சியும்
    எதிர்வரும் இடர்களை
    எதிர்கொண்டு போராடி
    இலக்கை அடைய
    இனிய பாதை வகுக்கும்
    என்பதை உணர்ந்து
    எதிர்வரும் நாளிலாவது
    சமூக அவலங்களை
    சறுக்கிக் களைந்து
    ஒளிமயமான வாழ்விற்கு
    ஒற்றுமையாய் வழிவகுக்க
    விரைந்து வாரீர்
    வீர இளைஞர்களே
    விடியல் நம் கையில்
    சாதனை செய்வோம்
    சரித்திரம் படைப்போம்!

    *****

    ”அல்லலுற்றோர்க்கு வள்ளலாய் வளங்களை அள்ளித்தரும் அலைகடலில் துணிச்சலுடன் தூண்டில்போட்ட தங்கமகன் இவன்!” என்று இவ்விளைஞனைப் போற்றுகிறார் முனைவர் மு.புஷ்பரெஜினா. 

    விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி

    வானகமும் வையகமும் வணங்கிக்கொள்ளும் ஆழிதாமே,
    வாழ்க்கையெனும் ஓடந்தனில் வழியறியா உள்ளங்களை
    வல்லமையுடன் வழிநடத்திடுமே,
    இன்னல்கள் இறுக்கினாலும் இருள் சூழாது
    இதந்தந்து இன்னொளி தான் காட்டிடுமே,
    கலையாத கனவுகளைக் கண்முன்னே காட்சிப்படுத்திடுமே,
    கற்பனைக்கும் எட்டிடா வகையில் கப்பலாக வந்து,
    தத்தளிக்கும் தங்கங்களைத் தம்கரந்தான் ஏந்திடுமே,
    விடையற்ற வினாக்களுடன் வருந்திடும் வறியவனுக்கும்
    வடக்கிருந்து வரும் அலைதான் வாழ்த்துச்செய்தி அனுப்பிடுமே,
    இன்னல்கள் போக்கிடுமே, இன்பந்தான் நல்கிடுமே,
    வருந்திடும் உள்ளத்தார்க்கு வான்புகழ் தான் வழங்கிடுமே,
    அல்லல் தனை அடக்கி அலைகடல் தான்
    அள்ளித்தரும் வளங்களைக் கண்டே
    உள்ளம் துள்ளிக் குதித்திடாதோ
    துன்பக்கடல் துடைத்திடாதோ என்றே தான்
    சமுத்திரம் மீதினிலே சறுக்கிடும் வேளைதனில்
    துணிச்சலுடன் தூண்டில்தான் போட்டானோ
    இத்தங்கமகன்….?!

    செறிவான சிந்தனைகளைத் தம் கவிதைகளில் நிறைவாய்ப் பொதிந்து தந்திருக்கும் கவிஞர்களுக்கு என் வாழ்த்தும் பாராட்டும்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை இனி…

    துணையாய்…

    துணிச்சல் நெஞ்சில் துணையிருந்தால்
    தோணியும் படகும் தேவையில்லை,
    பணியா அலைகள் நிறைந்திருக்கும்
    பரந்த கடலின் மீதினிலும்
    துணையாய்த் துண்டு மரமிருந்தால்
    துடுப்பாய்க் கைகளைக் கொண்டேதான்
    துணிந்து செல்லலாம் தூரதேசம்
    தெரிந்து கொள்வாய் தம்பிநீயே…!

    ”துணிவு துணையிருந்தால் தோணி எதற்கு? துண்டு மரத்திலேறி, கைகளையே துடுப்பாக்கிச் செல்லலாம் தூரதேசம்! வெல்லலாம் உத்தேசம் யாவும்!” என்று தம்பிக்கு நம்பிக்கையூட்டும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. செண்பக ஜெகதீசனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    Share
  • குறளின் கதிர்களாய்…(236)

    வகையறச் சூழா தெழுதல் பகைவரைப்
    பாத்திப் படுப்பதோ ராறு.
    -திருக்குறள் -465(தெரிந்து செயல்வகை)

    புதுக் கவிதையில்…

    பகைவரை அழிக்கும்
    செயல்வகையை நன்கு அறியாமல்
    செயலில் இறங்கினால்,
    அது
    பகைவரை
    நிலைத்து நிலைபெற
    வழிவகுத்துவிடும்…!
    குறும்பாவில்…
    செயல்வகை தெரியாமல் பகையழிக்கும்
    செயலில் இறங்குவது, பகைவர்
    உறுதியாய் நிலைபெற வைத்துவிடும்…!

    மரபுக் கவிதையில்…

    தொடரும் பகையை அழித்திடவே
    தகுந்த செயல்வகை தெரியாமல்
    தொடங்கும் செயலில் பயனில்லை
    தேடித் தராது வெற்றியையே,
    மடமைச் செயலாய் மாறியேயது
    மாற்றான் வெல்ல வழிவகுத்தே
    இடரது நமக்குத் தரும்வகையில்
    எதிரியை நிலைக்க வைத்திடுமே…!

    லிமரைக்கூ..

    தெரிந்து செயல்படு செயலின் வகை
    பகைவரையழிக்க, இல்லையேல் அவர்
    வலிமைபெற்று நிலைத்துவிடும் பகை…!

    கிராமிய பாணியில்…

    செயல்படு செயல்படு
    தெரிஞ்சி செயல்படு,
    எதயும் நல்லாவேத்
    தெரிஞ்சி செயல்படு..
    எதிரிய எப்புடி அழிப்பதுங்கிற
    நடமொற தெரியாமலே
    தொடங்குனா செயல,
    கெடைக்காது எப்பவும் வெற்றி..
    அது
    எதிராளிய செயிக்கவச்சி
    பகய நெரந்தரமா
    நெலைக்கவெச்சிடுமே..
    அதால
    செயல்படு செயல்படு
    தெரிஞ்சி செயல்படு,
    எதயும் நல்லாவேத்
    தெரிஞ்சி செயல்படு…!

    செண்பக ஜெகதீசன்…

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 46

    மனதோடு மனம்விட்டுப் பேசலாமே !

    உங்களோட கொஞ்சம் பேசலாமா? என்று நான் எனது மனதின் அருகில் சற்றே அமர்ந்தேன்., :”‘தாராளமா. உங்களோடு பேசத்தான் பல நாட்களாகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் உங்கள் கூடவே இருந்தாலும் நீங்கள் என்னைக் கவனிப்பதில்லை. நீங்கள் அவ்வளவு பிஸி… ” என்று எனது மனம் நக்கலாக என்னைப் பார்த்துச் சிரித்தது. ‘என்ன செய்வது?பார்த்துப் பேச எத்தனை பேர் இருக்கின்றார்கள்.. எல்லோருக்கும் நேரம் கொடுக்கவே முடியவில்லை…”

    “அது சரி.. ஆனால் நான் உங்களோடு இருப்பவனாயிற்றே.. எனக்குக் கூடவா .நேரமில்லை. சரி. வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்.. ‘ என்று எனது மனம் சொன்னது..

    “எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை..கொஞ்சம் தயக்கமாக உள்ளது…”

    “இதுதான் உங்கள் பிரச்சனையே… எதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. யாருக்கு எவ்வளவு நேரம் கொடுப்பது என்று தெரியவில்லை. எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று தெரியவில்லை.. எங்கே எப்படி பேசுவது என்று தெரியவில்லை. யாரை நம்புவது எதை நம்புவது என்று தெரியவில்லை.. எடுத்ததை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை…”

    ‘சார். கொஞ்சம் நிறுத்துங்க.. ஒரேடியாக என்னை மட்டம் தட்டாதீங்க.. ”

    “நான்.உங்களைக் குறை கூறவில்லையே. உங்களை மட்டம் செய்ய வில்லையே.. உள்ளதை உள்ளபடி சொன்னேன். உங்கள் பிரச்சனையே உள்ளதை உள்ளபடி பார்க்கவும் மாட்டீர்கள்.. உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளவும் மாட்டர்கள்…”

    “நான் உங்களடா பேசவா அல்லது எழுந்து போய்விடவா… ” என்று எனது மனதை கொஞ்சம் அதட்டிக் கேட்டேன்.

    “கோபப்படாதீர்கள். முதலில் கொஞ்சம் அமைதி காக்க முயலுங்கள்.. அவசரமும் கோபமும் படுவதால் நீங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை… சொல்லுங்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?” எனது மனம் என்னிடம் கேட்டது..

    உங்களுக்குத்  தெரியாதா என்ன? எல்லோரும் சொல்லுகின்றார்கள்.. நீங்கள் என்னோடு சரியான தொடர்பு கொள்வதில்லை என்று.. உங்கள் மனம் ஒரு நிலையிலில்லை.. உங்கள் மனம் அழுத்தத்தில் இருக்கின்றது.. அதனால் தான் நீங்கள் ஒரு மன நோயாளிபோல் இருக்கின்றீர்கள் என்று.  ஆகவே எனக்குப் பிரச்சனையே நீங்கள்தான். ”

    இதைக்கேட்ட என் மனம் வாய்விட்டுச் சிரித்தது..

    ” நானா? பிரச்சனையா..? எனக்கென்று ஒரு போக்கு கிடையாதே…. நீங்கள் என்ன செய்யச் சொல்லுகின்றீர்களையோ அதை நான் செய்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கச் சொல்லுகின்றீர்களோ அதைதத்தானே நான் நினைக்கின்றேன். எனக்கென்று ஒரு தனி வாழ்வேது? ” மனம் அலுத்துக்கொண்டது

    “அப்படியென்றால் “மனம் போல் வாழ்வு” என்றும் “மனம் போன போக்கில் போகின்றார்கள்”  என்றும் ஏன் சொல்லுகின்றார்கள்?” அது மட்டுமல்ல.. “உங்களை இன்னும் கேவலமாக மனம் ஒரு குரங்கு. கொஞ்சம் இடம் கொடுத்தால் இங்கிருந்து அங்கு தாவும்’ என்றல்லவா சொல்லுகின்றார்கள்..

    எனது மனம் சிரித்தது.

    “சார். நீங்களாக ஒரு பழமொழி எழுதிக்கொள்வது. அதற்கு ஒரு அர்த்தம் சொல்லிக்கொள்வது.. அதன்பின் பழியை மற்றவர்களிடம் போடுவது… இது வேடிக்கையாக இருக்கின்றதே..  என்னை நீங்கள் ஒரு குதிரை என்று சொல்லியிருந்தால் நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்… என் கடிவாளம் உங்கள் கையில் இருக்கின்றது. என்னை எந்தப்பக்கம் போக வேண்டும். எந்த வேகத்தில் போக வேண்டும்.. எங்கே நிற்க வேண்டும்.. என்றெல்லாம் என்னுடைய கடிவாளத்தைப்  பிடித்துக்கொண்டு சாதிக்க முடியும்.  அதை விட்டுவிட்டு உங்களுக்கு ஏதோ சம்பந்தமே இல்லாதது போலப் பேசுகின்றீர்களே.”

    என்னால் ஏன் மனத்திற்குப் பதில் சொல்ல முடியவில்லை. யோசிக்க ஆரம்பித்தேன். என் மனம் என் கையிலா இருக்கின்றது?.. அதை என்னால் கையாள  முடியுமா?”  யோசிக்க ஆரம்பித்தேன்.

    நமது மனம் நமது எண்ணங்களின் தாக்கத்தில் நமது ஆசைகளின் எதிர்பார்ப்புகளில் நமது உணர்வுகளின் கைப்பொம்மையாகச் செயல்படுகின்றது. எனவே நமது எண்ணங்கள், நமது ஆசைகள் மற்றும் நமது எதிர்பார்ப்புகளை நாம் நன்றாக அலசி ஆராய்ந்து அவைகளின் தேவைகள் அவைகளின் பாதிப்புக்கள் மற்றும் அவைகளின் வளர்ச்சிக்கான உள்ளீடுகள் ஆகியவற்றை நன்றாக அறிந்து புரிந்து வாழவேண்டும். தேவையற்ற ஆசைகள், நிறைவேற முடியாத ஆசைகள், நமது வாழ்வு முறைகளுக்கு அப்பாற்பட்ட ஆசைகள் ஆகியவற்றை தவிர்த்தல் மிக்க அவசியம். இல்லாவிட்டால் இவை அனைத்தும் நமது மனதிற்குள் தேங்கி அவைகள் நிறைவேறும் வரை அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அவைகள் நிறைவேறும் வரை மனதில் பல வித போராட்டங்களை ஏற்படுத்தி நம்மைத் துன்புறுத்தும். அதன் விளைவாக பொறாமை, போட்டிகள், இயலாமை, வெறுப்பு, வெறி போன்ற பல உணர்வுகள் ஏற்பட்டு நமது மனத்தையும் உடலையும் தொடர்ந்து பாதித்துக் கொண்டே இருக்கும்.

    நமது மனதிற்குக்  கடிவாளம் எப்படிப் போடுவது? மிகவும் கடினமான செயல்தான். அதற்க்கு நல்ல பயிற்சி எடுக்க வேண்டும். நல்ல முயற்சிகள் செய்ய வேண்டும். நமது ஆக்கசக்திகளை உணர்ந்து, நமது முன்னேற்றப் பாதையில் உள்ள நன்மை தீமைகளையும் அறிந்து சரியான வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது ஆசைகளும் தேவைகளும் கொடுக்கும் வேக உணர்வுகளை சற்றே கட்டுப்படுத்தி இடம், பொருள் ஏவல் ஆகிய மூன்ருடனும் கைகோர்த்து முன்னே செல்ல முயற்சிக்க வேண்டும்.

    “ஒவ்வொரு மனிதனும் அவனுடைய எண்ணங்களின் உருவகம்” என்று அண்ணல் காந்தி அடிகள்மிக அழகாகக் கூறியுள்ளார். அழகான எண்ணங்கள், நேர்மையான எண்ணங்கள், தூய்மையான எண்ணங்கள், ஆக்கபூர்வமான எண்ணங்கள் ஆகியவை நமது வெற்றிக்கு முதல் படிகள். நமது மனநலத்திற்கும் வாழ்க்கையில் வெளிச்சத்திற்கும் வழிகாட்டிகள். இதை உணர்ந்து செயல் பட வேண்டும். நேர்மறையில்லாத எதிர்மறையான எண்ணங்கள் நமது மனதின் அமைதியை அழித்துவிடுகின்றன.

    மனதோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போமே !!

    தொடரும்..

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 137

    தொழில் நுட்பமா, உறவினரா?

    பொது இடங்களுக்கு மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்துப்போனாலே திண்டாட்டம்தான்.

    அவர்களை எப்படிச் சமாளிப்பது என்றே புரியாது, அவர்களை கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் மிகச்சிலரைவிட, அடியையும், திட்டையும் நம்புகிறவரே அதிகம்.

    பெரியவர்களும் குழந்தைகளுடன் எங்காவது காத்திருக்கையில் இனிமையாகப் பொழுதைக் கழிக்க எத்தனை முறைகள் இல்லை!

    சிறுவனின் விரல்களைப் பிடித்து, `ஒன்று, இரண்டு..,’ என்று எண்களைச் சொல்லிக்கொடுக்கலாம். இல்லாவிட்டால், ஒரு துண்டு காகிதத்தை மடித்து, `படகு’ என்று  அவனிடம் கொடுத்தால், அந்தப் புதிய விளையாட்டுச் சாமான் சிறிது நேரம் ஆர்வமூட்டி அவனை அமைதிப்படுத்தும்.

    கைப்பையில் தயாராக வைத்திருக்கும் துண்டுக் காகிதத்தை எடுத்து, அதில் அவனுக்குப் பிடித்த எதையாவது வரைந்தால், பூரிப்புடன் அமர்வான். அடுத்த முறை, அவனிடமே காகிதத்தையும் பேனாவையும் கொடுத்தால், உருண்டையாக எதையாவது போட்டுவிட்டு, பெருமையுடன் தாயிடம் காட்டுவான். பக்கத்திலிருப்பவர் `என்ன இது?’ என்று கேட்டால், `புலி!’ என்று ஆணித்தரமாக பதில் வரும். அடுத்த முறை, அதுவே கோழியாக மாறினாலும் மாறும்!

    சிறுவர் புத்தகத்திலிருந்து மிருகங்களின் பெயர்களை வாசித்துக் காட்டுவது நல்ல பொழுதுபோக்கு. பல முறை காட்டினாலும் குழந்தைகளுக்கு அலுக்காது. (சற்றுப் பெரியவர்களானதும், அவர்களே படிக்கும் புத்தகங்களை செல்லும் இடத்திற்கெல்லாம் எடுத்துவந்தால் படிப்பில் ஆர்வம் பெருகும். நேரத்தையும் வீணாகக் கழிக்கமாட்டார்கள்).

    இந்த எல்லா வழிகளிலும் தாயின் ஈடுபாடும் இருப்பதால் அவளுக்குக் குழந்தையுடன் அதிக நெருக்கம் ஏற்படும்.

    இந்த முறைகளெல்லாம் பழமையாகிவிட்டன. அதனாலேயே பலருக்கு அலுப்பைத் தருகிறது.

    `ஏனடா விடுமுறை வருகிறது என்றிருக்கிறது! என் மூன்று வயது மகன் ஓயாது கேள்விகள் கேட்கிறான்!’ என்று என் சக ஆசிரியைகள் அலுத்துக்கொள்வார்கள்.

    `அதுதான் மிக சுவாரசியமான பருவம்! அவர்கள் கேட்பது நமக்குச் சிரிப்பை வரவழைக்கும்!’ என்று நான் கூறியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். (உதாரணம்: `நான் ஒன் வயத்திலேருந்து வந்தேனா! ஏம்மா என்னை முழுங்கினே?’)

    கதை

    வங்கி ஒன்றில், கனகா மகன் ராஜனையும் உடன் அழைத்து வந்திருந்தாள். அவன் ஓரிடத்தில் அமராது, குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டிருந்தான்.

    தத்தம் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றவர்கள் முகம் சுளித்தார்கள். அவமானம் தாங்காது, தாய் சிறுவன் முதுகில் இரண்டு அறைவிட்டாள். நிலைமை மோசமாகியது. அலறிக்கொண்டே ஓட ஆரம்பித்தான் அவன்.

    வேறு வழி புலப்படாது, தன் கைப்பையைத் திறந்து, ஒரு பொருளைக் காட்டினாள் தாய். ராஜன் ஓடோடி வந்தான்.

    அப்பொருள்: கைத்தொலைபேசி.

    அடுத்த பல நிமிடங்களுக்கு அவன் நகரவேயில்லை. தானே அச்சாதனத்தை இயக்கி, ஏதேதோ விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தான். கண்ணுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டான், உற்சாகம் அதிகமாக, அதிகமாக.

    தாயும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவனை அமைதிப்படுத்த வீட்டில் அவள் கையாண்ட வழி அது. முதலிலேயே தோன்றாது போய்விட்டதே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

    தற்காலத்தில், குழந்தைகளுக்கு விதவிதமான விளையாட்டுச் சாமான்கள்– தொழில் நுட்பத்துடன் கூடியவை – கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒலியுடன் திரையில் பார்க்க முடிவதால் எதையும் விளக்க வேண்டியதில்லை. பெற்றோரின் குரலைக் கேட்கவேண்டிய நேரத்தில் ஒரே தொனியில் ஒலிக்கும் அந்த இயந்திரக்குரல். (பிறந்த குழந்தைக்குக்கூடத் தாயின் குரல் புரியும். இந்த இயங்திரக் குரலைக் கேட்டே வளரும் குழந்தைகளோ குரலில் ஏற்ற இறக்கமில்லாமல் அதுபோலவே பேச முற்படுகிறார்கள்).

    இன்றைய குடும்பங்களில், அப்பா கணினியின் எதிரே காலத்தைக் கழிப்பார். அம்மா – தொலைகாட்சி அல்லது தொலைபேசி. மகனோ..!

    உறவினர் வீட்டுக்குப் போனால், தன் கணினி விளையாட்டு முடியும்வரை பையன் நாம் வந்திருப்பதைக் கண்டுகொள்ள மாட்டான். ஒரே ஊரிலிருக்கும் நெருங்கிய உறவினர்களைவிட கண்காணாத நாட்டில் வசிக்கும் நண்பர்களுடன் அரட்டை (chat) அடிப்பதில்தான் அவனுக்கு ஆர்வம். பரீட்சைக்குப் படிக்கும்போதும் தன் கையிலேயே  தொலைபேசியை வைத்துக்கொண்டிருப்பான், அவனுடைய ஓர் அங்கம்போல. அடிக்கடி அதில் கவனம் போவதில் படிப்பது மனதில் நிலைக்காது.

    உருப்போடுவதும், உருப்படாத பொழுதுபோக்குகளும்

    விஞ்ஞானம் போன்ற சில பாடங்களில் மனனம் செய்வது மாணவர்களுக்கு இயலாத ஒன்றாகிவிடுகிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். (இரண்டு மூன்று முறை உரக்கப் படித்துவிட்டு, அதையே எழுதிப் பார்ப்பது சரியான முறை. என்றும் மனதைவிட்டு அகலாது).

    கதை

    முன்காலத்தில், `மனக்கணக்கு’ என்று பள்ளிகளில் குழந்தைகளைத் தயார் செய்வார்கள். ஒன்று, இரண்டு என்று வரிசையாகச் சொல்வது, அல்லது கூட்டல், கழித்தல் போன்றவை. எழுதுகோல் உதவியின்றி, மூளை ஒன்றே கருவியாக, இந்தக் கணக்குகளைப் போடவேண்டும்.

    நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கையில், எங்கள் ஆசிரியை அல்ஜீப்ராவை நின்ற நிலையில் பதினைந்து, இருபது படிகளை வரிசையாகச் சொல்லிக்கொண்டே போவார். நிறையப் படிக்கும் பழக்கமுள்ள ஓரிரு மாணவிகளுக்கு மட்டும்தான் புரியும்.

    வேறு மாநில ஆரம்பப் பள்ளியில் மனக்கணக்கு போதிக்கப்பட்டிருந்ததால் ஆசிரியை கையாண்ட முறையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மற்றவர்கள் `புரியவில்லை!’ என்று ஓரிரு முறை சொல்லிவிட்டு, திட்டு வாங்கியபின் வாயே திறக்க மாட்டார்கள்.

    வகுப்பு முடிந்து ஆசிரியை வெளியே போனதும், `Take over, Nirmala!’ என்று கத்துவார்கள். நான் கரும்பலகையில் எழுதி விளக்குவேன். அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது. (அண்மையில், `எந்த வயதில் நீ ஆசிரியையாக ஆனாய்?’ என்று யாரோ கேட்டபோதுதான் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது).

    ஏன் மனக்கணக்கு?

    மூளையை விரைவாகச் செயல்பட வைக்கும். அடிக்கடி இம்முறையைப் பின்பற்றினால், மூளையிலுள்ள தசைகள் வலுவடைகின்றன.

    அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுகிறது. உதாரணமாக, 30% தள்ளுபடி என்று ஏதாவது கடைவாசலில் அறிவித்திருந்தால், நாம் எவ்வளவு மிச்சப்படுத்த முடியும் என்பதற்கு கால்குலேட்டரையோ, பேனா, காகிதத்தையோ தேடவேண்டியதில்லை. உடனடியாக விடையைக் கண்டுபிடித்துவிட முடியும்.

    இப்போதெல்லாம் கரும்பலகையில் இரண்டு ஆப்பிள் + இரண்டு ஆப்பிள் என்று வரைந்தால்தான் குழந்தைகளுக்குப் புரிகிறது. Abstract thinking குறைந்துவிட்டது – மூளை பாதிக்கப்படுவதால்.

    ஒரு பாலர் பள்ளியில், குழந்தைகளுக்கு மனக்கணக்கு என்பது இயலாத  காரியமாக இருந்தது. பள்ளியிலிருந்து பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்: `உங்கள் குழந்தையை ஒரு நாளைக்கு இருபது நிமிடங்களுக்குமேல் தொலைகாட்சியைப் பார்க்க விடாதீர்கள்!”

    சில மாதங்களிலேயே குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரிந்தது.

    புத்தகங்கள் படிப்பதும் கணினியும்

    படிக்கும்போது மூளைக்கு வேலை கொடுக்கிறோம். அதனால் எத்தனை வயதானாலும் அது நன்கு இயங்குகிறது.

    கதைப்புத்தகங்களைப் படிக்கையில், கதை மாந்தர்களின் பெயர்கள் மட்டுமின்றி, அவர்களிடையே உள்ள தொடர்பு, அவர்களுடைய பின்னணி என்று பல சமாசாரங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமே! அதனால் நினைவாற்றல் பெருகுகிறது. `நீங்க யாரு? எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே!’ என்று நம் நெருங்கிய உறவினர்களைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படாது.

    கணினியை இயக்கியபடியே தொலைபேசி, பக்கத்தில் இருப்பவருடன் அரட்டை என்று பொழுதைப் போக்கும்போது கவனம் சிதறிப்போகிறது. ஆனால், ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால், முழுமையான கவனம் அதிலேயே செலுத்தப்படுவதால் மனம் அமைதி காண்கிறது.

    திரையை வெறிப்பதைவிட நல்ல புத்தகங்களைப் படித்தால் மூளையாவது வளருமே!

     தொடருவோம்

    Share
  • வியப்பு தோன்றும்!

    கவிஞர் இடக்கரத்தான்

    வான்நிலவும் கடலிறங்கி நீந்தக் கூடும்
       வஞ்சியரும் நெடும்தாடி வளர்க்கக் கூடும்
    தேன்சிந்தும் மலர்க்கூட்டம் பறக்கக் கூடும்
       தேரினையும் எறும்புகளும் இழுக்கக் கூடும்
    மீன்கூட்டம் மணல்மேட்டில் வாழக் கூடும்
       மின்வெட்டும் நிரந்தரமாய் மறையக் கூடும்
    வீண்வார்த்தை அரசியலும் பேசி வாழ்வோர்
       வாய்மைதனில் நடந்திடுங்கால் வியக்கத் தோன்றும்!

    புயலதுவும் தென்றல்போல் தழுவக் கூடும்
       புலிபோலும் எலிகளுமே பாயக் கூடும்
    மயில்களெலாம் குயில்களென இசைக்கக் கூடும்
       மதுவும்தான் உயிர்காக்கும் பொருளாய் மாறும்
    அயல்மொழியும் தமிழின்முன் மண்டி இட்டு
       அடிமைபோல் ஏவல்களும் செய்யக் கூடும்
    செயல்தனிலும் தூய்மைதனைக் காக்கும் நல்ல
       சீர்கொண்ட அரசியலால் வியப்பு தோன்றும்!

    – 09.12.2018

    Share
  • துணைவியின் இறுதிப் பயணம் – 2

    -சி. ஜெயபாரதன், கனடா

    அமர கீதங்கள்

    என் இழப்பை உணர், ஆனால் போக விடு என்னை !
    [Miss me, But let me go]

    என்னருமை மனைவி  தசரதி ஜெயபாரதன்
    தோற்றம் :  அக்டோபர்  24, 1934
    மறைவு : நவம்பர் 18, 2018

    [13]

    உயிர்த்தெழுவாள் !

    விழித்தெழுக என் தேசம்
    என்னும்
    கவிதை நூல்
    எழுதி வெளியிட்டேன்.
    ஆனால்
    என் துணைவி,
    அறுவை சிகிட்சையில்
    விழிதெழ வில்லையே என
    வேதனைப் பட்டேன்.
    இந்துவாய் வாழ்ந்து
    பைபிள் பயின்று
    கிறித்துவை நம்பும்
    உன் துணைவி
    உயிர்த் தெழுவாள் என்று
    ஓர் அசரீரிக் குரல்
    ஒலித்தது உடனே
    வெளி வானில் !

    [14]

    படமாகி !

    நேற்று
    ஒளிகாட்டி
    நடமாடிய தீபம்
    புயல்
    காற்றில் அணைந்து,\
    வீட்டுச் சுவரில்
    படமாகித்
    தொங்குகிறது
    இன்று
    மாலையோடு !

    [15]

    பெருங் காயம் !

    உயிர்மெய்க் காயம்
    பொய்யாம் !
    மண்ணிலே தோன்றிய
    பெண்மணிக்கு
    எத்தனை,
    எத்தனை அணிகள் !
    ஜரிகைப் பட்டு
    ஆடைகள் !
    ஒப்பனைச் சாதனம் !
    அனைத்தையும்
    விட்டுப்
    போனது துணைப் புறா,
    இப்போது
    துருப்பிடிக் காத
    ஒரு கும்பா வுக்குள்
    எரி சாம்பலாய்,
    அவள் நீடித்த
    குடியிருப்பு !

    [16]

    தொட்ட இடம் !

    இவ்வுலகில்
    முப்பத்தாறு ஆண்டுகள்
    மூச்சிழுத்த
    இல்லத்தைப் பூட்டி விட்டுப்
    போனவள்,
    மீண்டும் திறக்க இங்கு
    வரவில்லை !
    வீட்டில்
    தொட்ட இடம், துடைத்த இடம்
    தூய்மை இழந்தன !
    சுட்ட சட்டி, அறைத்த
    அம்மி
    விம்மி, விம்மி
    அழுதன !
    துவைத்த உடை காயாமல்
    ஈரமாய் உள்ளது !
    பண்ணிய வடை
    இனித் தின்பாரற்று
    ஊசிப் போகுது !
    மண்ணாகி
    மீளாத் துயிலில்
    அவள்
    தூங்கும் இடம் இப்போது
    விண்ணாகிப்
    போனது !

    [17]

    ஆபரணங்கள்

    பெண்ணுக்குப்
    பொன்னாசை உள்ளது !
    உயிர் உள்ளவரை மேனியில்
    அணிகள் ஒளிவீசும் !
    உயிர் போன பிறகு
    எதுகை, மோனை
    எதற்கு ?
    உபமானம், உபமேயம்
    எதற்கு ?
    உடை யில்லாத
    உயிர்மெய்
    சொல்லுக்கே
    வல்லமை அதிகம் !
    உயிர்மெய்
    உலகை விட்டுப் போன
    பிறகு
    உன் சோக வரலாறு
    சொல்ல
    இலக்கணம் எதற்கு ?
    தலைக் கனம்
    போதும்.

    பிரார்த்தனை தொடர்கிறது.
    சி. ஜெயபாரதன்.

     

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 1

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்தர்கள் வேட்டைச் சமூகமாய் அலைந்து திரிந்த காலத்தில் சமூகத் தலைமை பெண்ணிடமே இருந்தது. அவளே வேட்டைத் தலைமையும் வீட்டுத் தலைமையும் கொண்டவளாய்த் திகழ்ந்தாள். சுருங்கச் சொல்வதாயின் அன்றைய சமூகம் தாய்வழிச் சமூகமாகவே (Matriarchal society) இருந்தது.

    இந்திப் பயண இலக்கியத்தின் தந்தையும் (Father of Hindi Travelogue), பன்மொழி அறிஞரும், மார்க்ஸியச் சிந்தனையாளருமான இராகுல் சங்கிருத்தியாயனின் (Rahul Sankrityayanவால்கா முதல் கங்கை வரை(A journey from the Volga to the Ganges) எனும் மாந்த வாழ்வியலை மையமாகக் கொண்ட வரலாற்றுப் புனைகதைகள் கிமு 6000 தொடங்கி கிபி 1942 வரையிலான காலகட்டங்களில் நிகழ்ந்த மானுடச் சமூக மாற்றங்களை மிக அழகாக விவரிக்கின்றன. அதில் தொல்குடிச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த பெண்டிர் காலப்போக்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண்கள் தலைமையின்கீழ் ஆட்பட்ட வரலாறு மிக  நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கக் காணலாம்.

    நம் சங்க இலக்கியங்களை ஆய்ந்தால்கூட அதில் வேட்டைக்குடியினரின் தெய்வமாய் வணங்கப்படுபவள் கொற்றவையே ஆவாள். இவ்வழிபாடு தாய்வழிச் சமூகமரபின் எச்சமே எனலாம்.

    நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் ’வேட்டுவ வரி’ப் பாடல்கள் கொற்றவையின் பெற்றியை நற்றமிழில் நவிலும் அழகைக் காண்மின்!

    ….துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
    கரியின் உரிவை போர்த்தணங் காகிய
    அரியின் உரிவை மேகலை யாட்டி
    சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
    வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
    இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
    தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
    அமரி குமரி கவுரி சமரி
    சூலி நீலி மாலவற் கிளங்கிளை
    ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
    பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
    ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை…”
    (சிலம்பு – வேட்டுவ வரி)

    இவ்வரிகளில் தம்குல முதல்வியும் வெற்றிச்செல்வியுமாகிய கொற்றவையின் தோற்றத்தையும் திறலையும் பாடிப் பரவுகின்றனர் வேட்டுவக் குடியினர்.

    அற்றைய கல்விநிலையைக் கண்ணுற்றாலும், ஆண்களுக்கு நிகராய்ப் பெண்களும் கல்வியிற் சிறந்திருந்தமைக்குப் பல சங்கப் பெண்புலவர்கள் சான்றாய்த் திகழ்கின்றனர். ஏறக்குறைய 40 பெண்பாற் புலவர்களின் சங்கப் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவை நமக்குக் கிட்டியுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலான கணக்கே. இவையேயன்றிப் பனையோலைகளில் கறையானுக்கு இரையானவை, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் எறியப்பட்டவை, ஆகுதி வேள்வியில் போகுதி என்று விட்டவை இவையும் கிடைத்திருந்தால் நம் இலக்கிய வளம் இன்னும் செறிவாகவும் செம்மையாகவும் இருந்திருக்கும். இன்னும்பல பெண்புலவோரின் பாடல்களும் நமக்குக் கிட்டியிருக்கக் கூடும். நம் போகூழ் வலிதாயிருத்தலின் அவை நமக்குக் கிடைத்தில.

    இந்நல்லிசைப் புலமை மெல்லியலார் வரிசையில் விறலியான ஔவை, ஆடுகள மகளான ஆதிமந்தி, அரசமாதேவியான பெருங்கோப்பெண்டு, அரண்மனைக் காவற்பெண்டு என்று அனைவர்க்கும் இடமுண்டு. அம்மட்டோ? குறத்தியரும் (குறமகள் இளவெயினி/குறியெயினி) குயத்தியரும்கூட (வெண்ணிக் குயத்தியார்) அருமையாய்ப் பாப்புனைந்திருக்கக் காண்கின்றோம். இதன்வாயிலாய் நாமறிவது, அற்றைக் கல்வியானது சாதி, இன, நில, திணை வேறுபாடின்றி அனைவர்க்கும் பொதுவாய்க் கிடைத்திருக்கின்றது என்பதே!

    பாட்டரசி ஔவை மட்டுமே அகமும் புறமுமாக அறுபது பாடல்கள் பாடியிருக்கின்றார். நானிலத்தையும் தன் பாட்டில் வைத்துத் தக்கதோர் உலகியல் உண்மையை அப்புலவர் பெருந்தகை உணர்த்தியிருக்கின்றார். அப்பாடல்…

    நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே!
    (புறம் – 187)
     

    ”நிலமே! நீ ஓரிடத்தில் நாடாகவும் (மருதம்), வேறிடத்தில் காடாகவும் (முல்லை), மற்றோரிடத்தில் பள்ளமாகவும் (நெய்தல்), பிறிதோரிடத்தில் மலையாகவும் (குறிஞ்சி) திகழ்கின்றாய். ஆனால் நின் நலமும் சிறப்பும் நில அமைப்பினால் வருவதன்று! எந்நிலத்து ஆடவர் நல்லவரோ அந்நிலத்திலே நீ சிறக்கின்றாய் என்கிறார் நச்சென்று!” அன்றும் இன்றும் ஏன்…என்றும் பொருந்தக்கூடிய உண்மைதானே இது?

    தஞ்சைக்கு அருகிலுள்ள வெண்ணி எனும் பகுதியைச் சேர்ந்தவர் குயத்தியார் எனும் பெண்புலவர். அவரின் துணிச்சலுக்கும் அஞ்சாநெஞ்சுக்கும் சாட்சியாய் ஒருபாடல் புறநானூற்றிலே காட்சியளிக்கின்றது.

    வெண்ணிக்குப் புறத்தேயிருந்த வெண்ணிப் பறந்தலையில் கரிகாலனுக்கும் அவனை எதிர்த்து ’மெகா கூட்டணி’ அமைத்திருந்த சேரமன்னன் பெருஞ்சேரலாதன், பாண்டியன், மற்றும் பதினொரு வேளிர்க்கும் இடையே பெரும்போர் நடந்தது. அப்போது கரிகாலனின் வேலானது சேரலாதனின் மார்பைத் துளைத்து முதுகுவழியே வெளியே வந்துவிட்டது. இதனால் முதுகிலும் புண்பட்டுப் புறப்புண் பட்டது போன்றொரு தோற்றத்தைச் சேரனுக்கு ஏற்படுத்திவிட, வேதனையுற்றான் அவன். இனியும் உயிர்வாழ்தல் வீரனுக்கு அழகன்று என்றெண்ணிய அவன் வடக்கிருந்து உயிர்துறந்தான். கரிகாலன் அப்போரில் பெருவெற்றி பெற்றான்.

    இச்சம்பவங்களையெல்லாம் அப்பகுதிவாசியான குயத்தியார் நன்கு அறிந்திருந்தார். எனவே போருக்குப் பின் ஒருநாள் கரிகாலனைக் காணச்சென்றவர், தம் மன்னனின் வென்றியைப் போற்றினார்; அத்தோடு நின்றாரில்லை. அவனினும் நல்ல(வ)ன் தன் வீரர்களோடு வாள் வடக்கிருந்து உயிர்நீத்து மிகப்புகழ் உலகமெய்திய சேரலாதன் என்று துணிந்துரைத்தார் அப்பெருமாட்டி.

    நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
    களியியல் யானைக் கரிகால் வளவ
    சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
    வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
    மிகப்புகழ் உலகம் எய்திப்
    புறப்புண் நாணி வடக்கிருந் தோனே.
       (புறம் – 66)

    அன்று பெண்டிர்க்கிருந்த பேச்சுரிமைக்கும் கருத்துச் சுதந்தரத்துக்கும் இப்பாடல் சிறந்த சான்றாகும்.

    காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனும் புலவர் பெருமாட்டி, பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழ்ந்து பாடி, ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரங் காணமும் பரிசிலாய்ப் பெற்று அவன் பக்கத்தில் வீற்றிருக்கும் சிறப்பும் பெற்றார் என்றறிகின்றோம்.

    இவையெல்லாம் அன்றைய பெண்டிரின் கல்விப் புலமையை, கவிபாடுந் திறமையைப் பெருமிதத்தோடு நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. புறநானூறு மூலமும், ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை உரையும் –  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

    2. https://en.wikipedia.org/wiki/Rahul_Sankrityayan

    3. சிலப்பதிகாரம் மூலமும், ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

     

    Share
  • சிலப்பதிகாரத்தில் விகுதிவழிச் சொல்லாக்கம்

    -முனைவர் தி.அ. இரமேஷ்

    ஒரு மொழியில் சொற்களின் வளர்ச்சி பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்து வருகின்றது. அச்சொற்களை ஆக்கிப் பயன்படுத்தும் முறை சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து ஆக்கத்தன்மையுடன் வழக்கில் உள்ளது. தற்காலத்தில் சொற்களை ஆக்கிப் பயன்படுத்துதல் என்பது தனித்ததொரு துறையாகச் ‘சொல்லாக்கம்’ எனும் பெயரில் வளர்ச்சி பெற்றுள்ளது.

    சொல்லாக்கம் பல்வேறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு ஆராய்ந்து வகைப் படுத்தப்பட்டாலும், சங்க காலத்தில் திரிபு, ஆக்கப்பாடு (மொழியியல், சொல்லியல், பெயரியல், பக். 22-23) ஆகிய இரு பிரிவுகளில் சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றது. இதில் திரிபு என்பது இலக்கண அடிப்படையில் உருவாவது. ஆக்கப்பாடு பொருள் மாற்ற அடிப்படையில் நிகழ்வது. சங்க இலக்கியத்தில் கூட்டுச்சொற்கள், பிறமொழிச் சொற்கள், விகுதிவழிச் சொற்கள் என்னும் மூன்று நிலைகளைக் காணமுடிகிறது. இவை மூன்றும் ஆக்கப்பாடு என்ற வகையில் அடங்கும். விகுதிவழிச் சொற்கள் என்ற வகையில் சிலப்பதிகாரத்தில் நிகழ்ந்துள்ள சொல்லாக்கச் சொற்களைத் தொகுத்துநோக்கி, அவை சிலப்பதிகார காலச் சொற்பெருக்கத்திற்கான சான்றாகவும் தற்காலத்தில் வளர்ச்சிபெற்றுள்ள விகுதிவழிச் சொல்லாக்கத்திற்கு (பின்னொட்டாக்கம்) முன்னோடியாக அமைந்துள்ளன என்பதையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

    ஆக்க விகுதிகள்

    பெயர், பெயரடி, வினை, வினையடிகளுடன் விகுதிகள் சேர்ந்து சொற்கள் உருவாக்கம் பெறுகின்றன. அவற்றின் அடிப்படையில் சொல்லாக்கச் சிந்தனையில் ஈடுபட்ட ச. அகத்தியலிங்கம் அவர்கள் ஆக்க விகுதிகளாக அருவத்தை, ஐ, அகம், அம், அல், அவு, இ, உள், கை, க்கை, சி, ச்சில், ச்சி, தி, பு, ப்பு, ம், மை, வை, வல், வி, வு, அர், அரை, ஆர், காடு, ட்டம், ட்டு, டு, டை, ப்பை, வாய் எனும் 33 விகுதிகளைச் சங்க இலக்கியங்களில் ஆக்க ஒட்டுக்களாக இடம்பெற்றுள்ளதாகச் சுட்டுகிறார் (மொழியியல், சொல்லியல், பெயரியல், பக்.145-148). இவ்விகுதிகள்வழிச் சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம் பரவலாக நடைபெற்றுள்ளது. அவற்றைப் பின்தொடர்ந்து எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் நிகழ்ந்துள்ள விகுதிவழிச் சொற்களைக் காணலாம்.

    மேற்காணும் விகுதிகளைக் கொண்டு சிலப்பதிகாரத்தில் நிகழ்ந்துள்ள விகுதிவழிச் சொற்களை நோக்கும்பொழுது இருபதுக்கும் மேற்பட்ட  விகுதிகள் சொல்லாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இவ்விகுதிகளை இரு பிரிவுகளில் பகுத்துக்காண முடிகிறது. அவை பெயர்ச்சொற்களுடன் சேரும் விகுதிகள், வினையடியுடன் சேரும் விகுதிகள் என்பன.

    பெயர்ச்சொற்களுடன் சேரும் விகுதிகள்

    அகம், அம், அர், அல், அன், ஆள், ஆளர், இ, இர், இயல், கு, ச்சி, ஞர், ஞை, தி, த்தி, ப்பு, மார், மை, வி, வு, வை ஆகிய இருபத்திரண்டு விகுதிகள் பெயருடன் சேர்ந்து சொற்கள் ஆக்கம் பெருவதற்குத் துணைநிற்கின்றன.

    அகம் விகுதி

    அகம் என்பதற்கு வீடு, மனம், ஞானம், உள் எனப் பல பொருள்கள் உள்ளன. ஆனால் இச்சொல் ஒரு சொல்லின் முன் அல்லது பின் என்னும் இருநிலைகளில் சொல்லாக்கத்தில் இணைந்து செயல்படுகிறது. முன்னொட்டாக விளைவாக்கம் இல்லை. ஆனால் பின்னொட்டாக அதிக விளைவாக்கம் பெற்றுள்ளது. இடம் என்ற பொதுப்பொருளில் அதிகப் பயன்பாடு உடையது குறிப்பிடத்தக்கது. அகம் ஒரு முழு சொல்லாக இருப்பினும் மீண்டும் மீண்டும் விகுதிபோல் செயல்பட்டு புதிய சொற்களை உருவாக்கப் பயன்படுகிறது என்று இ. மறைமலை குறிப்பிடுகின்றார்.

    சிலப்பதிகாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட சொற்கள் அகம் விகுதி பெற்று ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

    சிறை+ அகம் > சிறையகம் (அடைத்து வைக்கும் இடம்)

    பிருட்டு+அகம் > பிருட்டகம் (அங்கக் கிரியை 16இல் ஒன்று)

    அரி+அகம் > அரியகம் (காற்சிலம்பு)

    கன்+அகம் > கன்னகம் (அகழ் கருவி)

    பேடு+அகம்> பேடகம் (துகில்)

    என்பது போன்று சொற்கள் ஆக்கம் பெற்று சிலப்பதிகாரத்தில் அகம் ஆக்கப் பெயர் விகுதியாகச் செயல்பட்டுள்ளதைக் காணமுடிகிறது

    அம் விகுதி

    ‘அம்’ என்னும் விகுதி குறித்துத் தொல்காப்பியரும் (தொல்.சொல்.204) நன்னூலாரும் (நன்.140) குறிப்பிட்டுள்ளனர். ‘அம்’ விகுதி பெற்று ஆக்கம் பெற்ற சொற்களை இரண்டு வகையான இயல்பு கொண்டவையாகப் பார்க்கலாம். அவை வினை, பெயரடிகளுடன் சேர்ந்து புதிய சொற்களை உருவாக்குதல், பொருள் மாற்றம் இல்லாமல் ‘அம்’ விகுதி பெற்று வருவன (பகுதிப் பொருள் ஏற்பவை) என்பன.

    சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களைத் தொகுத்து ஆராயும் பொழுது பகுதிப்பொருள் ஏற்கும் ஆக்கமே ‘அம்’ விகுதி சேர்க்கையால் நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    அகல்+அம் >அகலம்(மார்பு)

    குன்று+அம் > குன்றம்(மலை)

    அவை+அம் >அவையம்(சபை)

    முரசு + அம் > முரசம் (முரசு)

    நறவு + அம் >  நறவம் (தேன்)

    ஆகிய சொற்களும் பொருள்மாற்றம் இன்றிப் பகுதியின் பொருளையே உணர்த்தி நிற்கின்றன. செய்யுளின் யாப்பமைதி குன்றாவண்ணம் அவ்வகை ஆக்கம் நிகழலாம் என ஒருவாறு ஊகிக்க இடமளிக்கின்றது. சிலப்பதிகாரத்தில் அதிக விளைவாக்கம் கொண்ட விகுதி அம் என்பது குறிப்பிடத்தக்கது. சமகாலத்தில் நிதி+அம்> நிதியம் (வருவாய்), மதி+அம்> மதியம் (நண்பகல்) போன்ற சொற்களில் பொருள்மாற்றம் பெற்று சொல்லாக்கத்தில் ‘அம்’ விகுதி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அர் விகுதி

    தொல்காப்பியரும் (தொல்.சொல்.208) நன்னூலாரும் (நன்.140) ‘அர்’ என்பதைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று ஈறு என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், சொல்லாக்க விகுதியாகச் சிலப்பதிகாரத்தில்,

    அரசு + அர் > அரசர் (தலைவன்)

    இடைச்சி + அர் > இடைச்சியர் (ஆடு மேய்க்கும் பெண்கள்)

    உழவு+அர் > உழவர் (உழவுத்தொழில் செய்யும் மக்கள்)

    ஆகிய சொற்கள் ‘அர்’ விகுதி சேர்ந்து ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. இதேபோல் கடவுளர், நுளைச்சியர் போன்ற சொற்களும் ஆக்கம் பெற்றுள்ளன.

    அல் விகுதி

    தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றாக நன்னூலார் ‘அல்’ விகுதியைக் குறிப்பிடுகின்றார். சொல்லாக்க விகுதியாகப் பத்துப்பாட்டில் 22 இடங்களில் பயின்று வந்துள்ளது என்று தி.அ. இரமேஷ் குறிப்பிடுகின்றார் (சங்க இலக்கியச் சொல்லாக்க நெறிமுறைகள் (பத்துப்பாட்டு) ப.114). அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை நோக்கும்பொழுது பத்துச்சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளன.

    அதிர் +அல்> அதிரல் (காட்டு மல்லிகை)

    பிணை + அல் > பிணையல் (இரட்டைக் கை)

    விரி + அல் > விரியல் (மலர்ச்சி)

    புதை + அல் > புதையல் (புதைபொருள்)

    தொடை + அல் > தொடையல் (மாலை)

    அதிர் என்னும் வினையடியுடன் அல் சேர்ந்து காட்டு மல்லிகை என்னும் பொருளில் ஆக்கம் பெற்றுள்ளது. இதேபோல்தான் கீழ் உள்ள சொற்களும் ஆக்கம் பெற்றுள்ளன. தொடையல் என்பது மட்டும் பெயருடன் அல் சேர்ந்து பொருள் மாற்றம் இன்றி மாலை என்னும் பொருளையே தந்து நிற்கின்றது.

    அன் விகுதி

    இலக்கண நூல்களில் விகுதியாக இடம்பெறும் ‘அன்’ விகுதிக்கும் சொல்லாக்கத்தில் இடம்பெறும் ‘அன்’ விகுதிக்கும் வேறுபாடு உள்ளது. இலக்கண நூல்களில் வருவது திரிபு நிலையில் சொற்களை ஆக்கிப் பொருள் மாற்றம் இன்றி இலக்கண அமைப்பில் மாற்றம் செய்வதாகும். ஆனால் சொல்லாக்கத்தில் பயன்படும் ‘அன்’ விகுதி பொருள் மாற்றத்துடன் சொற்களை ஆக்கும் பெயராக்க விகுதி எனலாம். இதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களைத் தொகுத்து நோக்கும்

    பொழுது,

    காதல் +அன்> காதலன்  (தலைமகன்)

    இருள் + அன் > இருளன் (ஒரு சாதிப் பிரிவினர்)

    என்பது போன்று சில சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளது.

    ஆளர் / ஆள் விகுதி

    இலக்கண நூல்கள் ஆள், ஆளன், ஆளர் ஆகியவற்றை விகுதிகளாகக் குறிப்பிடவில்லை. ஆனால், சொல்லாக்கச் சிந்தனையாளர்களில் இ. மறைமலை, ச. இராசேந்திரன், சு.சக்திவேல் ஆகியோர் மட்டும் குறிப்பிட்டுள்ளனர். நன்னூலார் விகுதிகள் பற்றிக் கூறுமிடத்து ‘பிறவும்’ என்று குறிப்பிட்டுச் சென்றுள்ளதன் மூலம் இவ்விகுதிகளைக் காலமாற்றத்திற்கு ஏற்ப வளர்ச்சி பெற்ற விகுதிகளாகக் கருதலாம். இவ்விகுதிகளைக் கருத்தா விகுதி என்று வே.சீதாலட்சுமி குறிப்பிடுகின்றார். அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை நோக்கும் பொழுது,

          இருபிறப்பு +ஆளர் >இருபிறப்பாளர் (அந்தணர்கள்)

    ஏவல் + ஆளர் > ஏவலாளர் (பணி செய்வர்)

    கண்ணுள் + ஆளர் > கண்ணுளாளர் (மதங்கர்)

    கண்ணெழுத்து + ஆளர் > கண்ணெழுத்தாளர் (திருமுகம் எழுதுவோர்)

    போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.மேலும் காற்றூதாளர், காவலாளர், வேளாளர் ஆகிய சொற்களும் ஆக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால், சமகாலத்தில் அதிக விளைவாக்கம் கொண்ட விகுதியாகச் சொல்லாக்கத்தில் ஆளன் விகுதி இடம்பெறுகின்றது.சான்றாக, காவலாளன், நிதியாளர், பதிவாளர், காசாளர் போன்ற சொற்களை எடுத்துக்காட்டலாம்.

    ஆள் என்னும் விகுதி பெற்று இரண்டு சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளன. அவை ஆட்டுவாள், மாற்றாள் என்னும் சொற்கள் ஆகும். இவை முறையே தாய், வேறொருத்தி என்னும் பொருளைத்தந்து நிற்கின்றன.

    ஆளர் பலர்பால் அடிப்படையில் வந்துள்ளது. ஆண்பாலுக்கு ஆளன் பெண்பாலுக்கு ஆட்டி என்பது விகுதியாக இடம்பெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் குலப்பிறப்பாட்டி என்ற சொல் மட்டும் ஆக்கம்பெற்றுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

    இ விகுதி

    ‘இ’ என்பதை விகுதியாகத் தொல்காப்பியரும் (தொல்.சொல்.225) நன்னூலாரும் (நன்.140) குறிப்பிடுகின்றனர். தொல்காப்பியர் முன்னிலை ஒருமை வினைமுற்று ஈறாகவும் நன்னூலார் பெயரினும் சில என்று கூறுமிடத்தும் ‘இ’ விகுதியாக வழங்கப்பட்டுள்ளது.

    இ. மறைமலை அவர்கள் “பொற்கோ குறிப்பிடும் மூடி, கொள்ளி, நொண்டி ஆகிய சொற்களைப் போல வினையடியும் இகர விகுதியும் சேர்ந்து உருவாகிய சொற்கள் ஆட்சித்துறைச் சொல்லாக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன (இ.மறைமலை, சொல்லாக்கம்,ப.60)’’ என்பார் என்று சுட்டுகின்றார். இதன் அடிப்படையில் நோக்கும் பொழுது சிலப்பதிகாரத்தில் இதுபோன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    காதல், சமர், நகர், மாதர் ஆகிய சொற்களுடன் இ விகுதி சேர்ந்து முறையே காதலி, சமரி, நகரி, மாதரி சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளதைச் சிலம்பில் காணமுடிகிறது.

    இயல் விகுதி

    நன்னூலார் இவ்விகுதியைத் தெரிநிலை வினையெச்ச விகுதி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிற்கால விகுதி வளர்ச்சியில் இது ஆக்க விகுதியாக இடம்பெற்றுள்ளது.  இதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் பார்க்கும் பொழுது,

    அணி +இயல்> அணியியல்

    அரசு + இயல் > அரசியல்

    உலகு + இயல் > உலகியல்

    பொது + இயல் > பொதுவியல்

    வேந்து + இயல் > வேத்தியல்

    போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. இவ்விகுதி இக்காலத்தில் அதிக விளைவாக்கம் உள்ள ஒரு விகுதி எனலாம் .சான்றாக, உளவியல், களவியல், வணிகவியல், தொழில்நுட்பவியல் போன்ற சொற்களை எடுத்துக்காட்டலாம்.

    ஞர் விகுதி

    இவ்விகுதி சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை பயன்பாட்டில் உள்ள ஒரு விகுதியாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்துப்பாட்டில் இவ்விகுதி பயன்பாடு குறித்து சங்க இலக்கிய சொல்லாக்க நெறிமுறைகள் (பத்துப்பாட்டு) என்னும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் சொல்லாக்க அறிஞர்கள் இவ்விகுதிகுறித்து சிறப்பாகக் கூறியுள்ளனர்.அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் கிளைஞர், இளைஞர், வினைஞர் ஆகிய மூன்று சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    மார் விகுதி

    இவ்விகுதி சங்க காலத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒன்று. ஆனால் சிலப்பதிகாரத்தில் மார் விகுதி இணைவால் சில சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. அவை ஐயன்மார், காண்மார், தாய்மார், பாட்டிமார் ஆகிய சொற்கள் ஆகும். இதில் காண்மார் என்பது சங்க இலக்கியத்தில் காண்மர் என வந்துள்ளது. இதில் மார் என்பதன் குறுகல் விகாரமாக மர் என வந்துள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்தில் காண்மார் என்றே வந்துள்ளது. இக்காலத்தில் தோழிமார், அத்தைமார், மாமன்மார் என்பது போன்று சொற்கள் ஆக்கம்பெற்று வழக்கில் உள்ளதைக் காணமுடிகிறது.

    மை விகுதி

    பண்புப்பெயர் விகுதிகளில் ஒன்றாக இலக்கண நிலையில் பயின்றுவரும் ‘மை’ விகுதி சொல்லாக்க நிலையில் பெயராக்க விகுதியாகவும் செயல்பட்டு வருவதை அறிந்துகொள்ள முடிகின்றது. இவ்விகுதி பற்றி இ. மறைமலை, ச. அகத்தியலிங்கம், சூ.இன்னாசி, பொற்கோ போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

    இத்தன்மையின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களைத் தொகுத்து நோக்கும்பொழுது ஒரு சில சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

    நெடு + மை>நெடுமை (உயர்வு)

    படி + மை > படிமை (தெய்வ வடிவு)

    நேர் + மை > நேர்மை (நல்வழி)

    நெடு, படி, நேர் ஆகியபெயரடிகளுடன் மை விகுதி சேர்ந்து பண்பு என்ற பொருளை உணர்த்தும் நெடுமை, படிமை, நேர்மை எனும் சொற்களாக உருவாக்கம் பெற்றுள்ளன.

    தி / த்தி விகுதி

    தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றாக நன்னூலார் குறிப்பிடுவதாக ஆறுமுக நாவலர் தம் உரையில் சுட்டியுள்ளார். இவ்விகுதியை ஆக்கப்பெயர் விகுதியாகச் சொல்லாக்க அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக  ‘மறதி’ என்பது போன்ற சொற்களை எடுத்துக்காட்டியுள்ளனர். இவ்விகுதி பரிபாடலில் ஓரிடத்தில் மட்டும் பெயராக்க விகுதியாகச் செயல்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

    ஊர்+தி > ஊர்தி (வாகனம்)

    பெயருடன் ‘தி’ விகுதி சேர்தல் என்னும் வாய்ப்பாடு அடிப்படையில் இச்சொல் ஆக்கம்பெற்றுள்ளது. இதேபோல் அமைதி என்னும் சொல்லும் ஆக்கம் பெற்றுள்ளது. மேலும் சிலப்பதிகாரத்தில் ‘த்தி’ என்னும் விகுதிபெற்று உழத்தி, காட்டாளத்தி, தனித்தி, திறவாளத்தி, பொய்த்தி போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    வினையடியுடன் சேரும் விகுதிகள்

    நர் விகுதி

    இலக்கண நூல்களில் ‘நர்’ விகுதி வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் விகுதி வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் நன்னூலார் குறிப்பிட்ட விகுதிகளை வகைப்படுத்திக் கூறிவிட்டு, காலமாற்றத்திற்கு ஏற்ப விகுதிகளின் வளர்ச்சி மாறும் என்பதால் பிறவும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், ‘நர்’ விகுதி சங்க இலக்கியங்களிலேயே பரவலாக்கம் பெற்ற ஒன்றாக இருக்கையில் ஏன் பவணந்தியார்; உள்ளிட்ட இலக்கணிகள் அதை விகுதியாகப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி மேலோங்குகிறது.

    ‘நர்’ விகுதி பற்றி இ.மறைமலை ச.இராசேந்திரன், பொற்கோ போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்விகுதி வினையடிகளுடன் மட்டும் சேர்ந்து பெயர்ச்சொற்களை உருவாக்குகின்றது. இக்கருத்துக்களின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை நோக்கும்பொழுது, இயங்கு, ஆடு, பகரு, ஓசு, வாழ், பொரு, செய்கு, வதி, கொழு, தேரூர் முதலிய வினையடிகளுடன் ‘நர்’ விகுதி சேர்ந்து சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

    இயங்குநர்(செயல்படுபவர்)

    ஆடுநர்(ஆடுவோர்)

    பொருநர்(போர்க்களம் பாடுவோர்)

    வாழ்நர்(உயிர் வாழ்வோர்)

    வதியுநர்(வாழ்வோர்)

    முதலிய சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. இக்காலத்தில் ஓட்டுநர், நடத்துநர், இயக்குநர் போன்ற சொற்கள் ‘நர்’ விகுதி சேர்ந்து ஆக்கம்பெற்று மக்கள் வழக்கில் இடம்பெற்றுள்ளதை இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.

    ப்பு விகுதி

    தொழிற்பெயர் விகுதியாகவும் தெரிநிலை வினையெச்ச விகுதியாகவும் ‘ப்பு’ பயின்று வரும் என்பது நன்னூலார் கருத்து. ஆனால், ஆக்கப் பெயர் விகுதியாக ச. அகத்தியலிங்கம், ச. இராசேந்திரன், ஆ. வேலுப்பிள்ளை, எச்.சித்திரபுத்திரன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

    இவர்களின் விகுதிப் பகுப்பு அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களை அணுகும்பொழுது சில சொற்கள் இவ்விகுதியின் துணையுடன் ஆக்கம் பெற்றுள்ளன. அவை அதிர்ப்பு, ஆர்ப்பு, இடிப்பு, தொடுப்பு, பிணிப்பு, முரிப்பு, வாசிப்பு ஆகியவை வினை நிகழ்வினை வெளிப்படுத்தும் சொற்களாக ஆக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    வை/வி/வு விகுதிகள்

    ’வை’ என்பதைத் தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றாக நன்னூலார் குறிப்பிடுகின்றார். சொல்லாக்க முறையில் இவ்விகுதி ஆக்க விகுதியாகப் பயன்பாட்டில் உள்ளதைப் பல அறிஞர்கள் சுட்டியுள்ளனர். அவர்கள் கருத்துப்படி சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களை அணுகும்பொழுது தேய்வை, நடுவை, புடைவை, போர்வை, மடவை போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    அதேபோல் வி விகுதி பெற்று இறைவி, ஆற்றுவி, கேள்வி போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. வு விகுதி பெற்றும் சில சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. அவை வரைவு, வியர்வு மகவு போன்றவை ஆகும். இதில் மகவு என்பது மட்டும் பெயரடியுடன் வு விகுதி இணைந்து ஆக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெயர் மற்றும் வினையுடன் சேர்ந்து வரும் விகுதிகள்

    ச்சி விகுதி

    இலக்கண நூலாசிரியர்கள் ச்சி என்பதை விகுதியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும் நன்னூலார் பிறவும் என்று விகுதிகள் பற்றிக் கூறுமிடத்து குறிப்பிட்டுச் சென்றுள்ளதால் ச்சி என்பதை ஆக்கப்பெயர் விகுதியா சொல்லாக்கச் சிந்தனையாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களை ஆராயும் பொழுது பத்துக்கும் மேற்பட்ட சொற்கள் ச்சி விகுதி இணைவால் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

    அடை, இகழ், இடை, புணர், நுளை, நெல்லி, இறை, பொய், வாரி, விழை போன்ற சொற்களுடன் ச்சி விகுதி இணைந்து அடைச்சி, இகழ்ச்சி, இடைச்சி, புணர்ச்சி, நுளைச்சி, நெல்லிச்சி, இறைச்சி, பொய்ச்சி, வாரிச்சி, விழைச்சி ஆகிய சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    மதிப்புரை

    சமகாலத்தில் விகுதிகளின் துணைகொண்டு துறைகள்தோறும் பல்வேறு சொற்கள் ஆக்கப்பெறுகின்றன. அவற்றிற்கு காப்பியங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் உள்ள சொல்லாக்க விகுதிகள் முன்னோடியாக இடம்பெற்றுள்ளன என்பதை இச்சிறு ஆய்வின்மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஆக்க விகுதிகளைப் பெயருடன் சேர்ந்துவரும் விகுதிகள் வினையடியுடன் சேர்ந்து வரும் விகுதிகள் பெயர் மற்றும் வினையுடன் இணைந்து வரும் விகுதிகள் என்னும் மூன்றுநிலைகளில் காணமுடிகின்றது.அதேபோல சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலச்சூழலில் சொற்களின் பயன்பாடு எவ்வாறு இருந்துள்ளதை என்பதையும் சொற்களின் வளர்ச்சி பற்றிய தெளிவையும் காணமுடிகிறது.

    பார்வை நூல்கள்

    • அகத்தியலிங்கம்,ச., மொழியியல், சொல்லியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1971.
    • அன்பழகன், க., சங்க இலக்கிய ஒருபொருட் பல சொல்லாக்கத்தில் விகுதிகள், தொல்காப்பியம் சங்கத் தமிழ் ஒரு புதிய பார்வை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 2006.
    • இரமேஷ், தி.அ.,சங்க இலக்கியச் சொல்லாக்க நெறிமுறைகள்(பத்துப்பாட்டு), சென்னைப் பல்கலைக்கழகம், 2013.
    • தொல்காப்பியர், தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
    • பொற்கோ, இலக்கண உலகில் புதிய பார்வை, தமிழ் நிலையம், சென்னை, 1985.
    • பவணந்தி முனிவர், நன்னூல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004
    • சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத மற்றும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2008.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை, தூய நெஞ்சக்  கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர்.

    Share
  • வெண்ணிலை: பாலியல் சிக்கலும் பெண்களின் நிலையும்

    -பேரா.ம. பரிமளா தேவி

    முன்னுரை

    பெண்ணின் ஆளுமை இதுவரை பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டு வந்த நியாயங்கள், உருவாக்கப்பட்டு வந்த மதிப்புகள், கற்பிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட புனிதங்கள், என்பனவற்றை அடையாளம் கண்டு விளக்குவது, பெண்ணின் சுயமான விருப்பங்கள், உணா்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இவற்றின் முறிவுகள் முதலியவை புனைவுகளில் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்வது. புனைகதை கால சிருஷ்டியே எனினும் சமுதாய மாற்றத்தை மாறும் சமுதாயத்தின் நிலையைக் காட்டும் வரலாற்றுச் சான்றாகவும் விளங்குகிறது. சிறப்பான கதைக்களங்கள் சமகாலச் சான்றாக வரலாற்றாசிரியராலும் சமூகவியலாளர்களாலும் போற்றப்படுகின்றது என்கிறார் கா.சிவத்தம்பி (நாவலும் வாழ்க்கையும், கா.சிவத்தம்பி. ப.20)

    வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெண்களை மையப்படுத்தி எழுதியுள்ள தீராக்குறை, கிடந்த கோலம், தாய்மை, பாரம் சுமக்கிறவள், உள்ளிருந்து உடற்றும் பசி, வயிற்றுப்புருசன், வெண்ணிலை, பேரிளம் பெண், பேதை, கொடிகொம்பு, தொப்புள்கொடி முதலிய கதைகளில் பாலியல் சிக்கலும் பெண்களின் நிலையும் எவ்வாறு இடம்பெற்றுள்ளது  என்பதை பெண்ணிய நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பெண்ணடிமை

    தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும்போது குடும்பத்தைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்திக்  கொண்டு செல்ல வழியுண்டு. படித்த பெண்களை வீட்டிற்குள்ளே பூட்டிவைக்க தேவையில்லை என்கிற கருத்து நிலவி வருகின்றது. அவர்களின் உழைப்பிற்கு மதிப்பூதியம் அளிக்கப்படாமல் சம்பளம் இல்லாத வேலைக்காரியாகப் பெண்கள் இருந்தது அந்தக்காலத்தில். ஆனால் தற்போது பெண்களும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வேலைக்குச் செல்கின்றனா். ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்கின்ற குடும்பத்தில் இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் கணவன் மனைவியிடம் அதிகாரம் செலுத்துபவனாகவே இருக்கின்றான். ஆண் வீட்டு வேலைகளைச் செய்வது கேவலமானது, மற்றவர்களால் நகைப்பிற்குரியச் செயலாகப் பார்க்கப்படும் என்கிற எண்ணமானது அவனுடைய பொதுபுத்தியில் ஆழமாக பதிந்துள்ளது. மேலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் வீட்டில் வெளியில் வேலைகளைச் செய்வதற்கும் குழந்தைகளைப் பராமரிப்பது அவர்களுடைய வேலை என்றும் அவர்களின் அனுமதி இல்லாமலும் பாலுறவு வைத்து கொள்ளலாம் என்கிற எண்ணமும் தன்னை எதிர்த்து பேசக்கூடாதவளாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்ற நிதர்சன உலகத்தை அப்படியே கிடந்த கோலம் கதையில் காட்சிகளாக்கியுள்ளார்.

    “கிடந்த கோலம்” என்கிற கதையில் பெருமாள், வனிதா இருவரும் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள்.  இருவருக்கும் வார விடுமுறை நாள் எவ்வாறு இருக்கின்றது என்பதை இக்கதையானது சித்திரிக்கின்றது.   திருமால் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பதுபோல் படுத்துக்கொண்டு ஆனந்த விகடனைப் புரட்டிக் கொண்டிருக்கின்றான் பெருமாள். சிலிண்டா் தெருவில் இருக்கு, தூக்கி கொண்டு வந்து உள்ள வைய்யி என்கிறாள்.  எப்பப் பார்த்தாலும் நய்யி நய்யின்னு சொல்லிக்கொண்டிருப்பியா, தூக்கி உள்ள வைச்சா வைய்யி இல்லைன்னா பேசாம கெட என்கிறான்.  அரைமுடி தேங்காயாவது வாங்கிக்கொண்டு வந்துகொடு என்கிறாள். சமைக்கும்போது குழாயில் தண்ணீா் வந்துவிடுகின்றது. குடத்தைக் கொண்டு போய் வரிசையில் வை என்கிறாள். தண்ணீா் பிடிக்கிறது, துணி துவைக்கிறது, கடைக்குப் போவது, பாத்திரம் துலக்குவது, சமைப்பது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, அடுத்த நாள் வகுப்பிற்கான பாடத்திட்டத்தை எழுதுவது என ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றாள் வனிதா.

    தமிழ்ச் சமூகத்தில் குடும்ப அமைப்பானது பெண்கள் இல்லற பந்தத்திலிருந்து எளிதாக வெளிவர முடியாத குடும்பச்சிறையாக உள்ளது.  எந்தவொரு முடிவையும் பெண்ணால் எடுக்க இயலாத சூழலே உள்ளது. ஓர் ஆண் தன்னை எளிதில் இல்லற வாழ்விலிருந்து விடுவித்துக்கொள்ள அத்தனை நியாங்களையும் அவனுக்கான இடத்தையும் சுதந்தரத்தையும் வழங்கியுள்ளது. பெண் கட்டுப்பாடுகளுடன் வளா்க்கப்பட்டவள். அவளுடைய சிந்தனையும் குடும்பம், குழந்தை, சமூகம் என அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஈடுசெய்பவளாகவே இருக்கின்றாள் என்பதையும் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.

    “கல்யாணம் செய்யாமலே இருந்து இருக்கலாம். ஏதோ சம்பாதிக்கிறோம் பிழைக்கிறோம் என்று வாழ்க்கையை ஓட்டியிருக்கலாம். யார் அழுதார்கள் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமென்று புலம்புகின்றாள்”. (பக்க எண் 75  ) குழந்தைகளை நினைத்தும் அப்பா அம்மாவை நினைத்தும் உடன் பணியாற்றுபவர்கள் தன்னைத் தவறாக நினைத்து விடக்கூடாது என்றும் அவள் துன்பங்களை அடிமனதில் போட்டு அமுக்கிவிடுகின்றாள்.

    எதிர்ப்பு:

    தன்னுடைய எல்லாம் துயரங்களையும் அடக்கிக்கொண்டு அவனோடு வாழ்ந்து வரும்போது இருக்கிற தலைவலியில இன்னும் தலைவலி எதுக்குன்னு அவனுடைய  கட்டாயப் பாலியல் உறவுக்குத் தயாராகின்றாள். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தினால் காண்டம் வாங்குவதிலும் கணவன் ஆர்வம் காட்டுவதில்லை.  இவள் கடைக்குச் சென்று காண்டம் வாங்கிவருகின்றாள் மிகவும் வருத்தத்துடன். சில சமயம் உருப்படியாகப் பல சமயம் சொதப்பலாக உறவுகொள்கின்றதைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரிக்கின்றாள். இறுதியாக “இதுக்கு மட்டும் தான் நீயா ” (பக்க எண் 77 ) என்று அவனைப் பார்த்துக் கேட்பதாக முடிகின்றது. பெண்ணை உடல் உறவினால் மட்டும் மகிழ்ச்சியா வாழ வைக்கமுடியும் என்கிற பிம்பத்தை உடைகின்றார். பெண்கள் பாலியல் உறவில் மட்டும் மகிழ்ச்சியை அடைவதில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைத் புரிந்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தினால் மட்டும் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும் என்கிற கருத்தை உணர்த்துகின்றார்.

    ஒருதலைக் காதல்

    சங்கீதா ஒன்பதாவது படிக்கும் போதே செபாஸ்டின் அவளைப் பின்தொடா்ந்து போயிட்டு இருந்தான்.  அவள் காதலைச் சொல்லவில்லை.   நீ இல்லன்னா நான் செத்துருவேன். சங்கீதாவைக் காதலிக்கிறன்னு சொன்ன இன்னொரு பையனை அடித்து உதைக்கிறான்.  அவள் நினைவாவே ஊா்ல சுற்றிக்கொண்டு இருக்கின்றான். ஒரு முறை இரத்தத்தில் காதல் கடிதம் எழுதிக்கொடுக்கின்றான்.  நாலு வருசமா அவள் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருந்தவன். அவளுக்கு என்னைய பிடிக்கலைன்னாலும் பரவால்ல. நான் அவளக் காதலிக்கிறேன்னு பிடிவாதமாக இருந்தவன். ஒருநாள் வேன் ஓட்டிட்டு போகும்போது மரத்தில் மோதி அடிபட்டு இறந்து போக   அவனுடைய நண்பர்கள் “ஆணவக்காரியால் உன் உயிர் உதிர்ந்தது.  நண்பர்களிடம் உன் நினைவுகள் என்றும் மலர்ந்தபடி இருக்கும்” என்னும் வால்போஸ்டர் அடிக்கின்றனா்.  அதைப்பார்த்து கண்ணீர் விடுகின்றாள்.

    ஒருதலையாகக் காதலித்து கையைப் பிளேடால அறுத்து, இரத்தத்தில் கடிதம் எழுதியது, நீ இல்லையின்னா செத்துருவேன் என்று பயமுறுத்தியது, அடிதடி, சண்டை இது தான் சங்கீதா வாழ்க்கையையில நடந்தது.  பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது படிக்கின்ற பெண்ணைத் துரத்தித் துரத்தி காதலிப்பது என்பது பொருத்தமில்லாத ஒன்று.  பெண்ணின் மனம் காதலிக்கும் பக்குவத்தை அடையும் வயது என்பது வேறு.  மேலும் தான் காதலைச் சொல்லாத காரணத்தினால் தன் நினைவினால் தான் வண்டியை ஓட்டி இறந்துவிட்டான் என்று நம்புவது. ஆண் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலை.  செபாஸ்டின் நண்பர்கள் அடித்த வால்போஸ்டா் பெண்ணை அடிமையாய் பார்க்கும் ஆண்களின் பொதுப்புத்தியைக் காட்டுகிறது. சமூக அமைப்பானது தான் செய்யாத தவறுக்கும் குற்றவுணா்ச்சிக்கும் எவ்வாறு ஆளாக்குகிறது என்பதனை அறியமுடிகின்றது.

    உள்ளிருந்து உடற்றும் பசி

    இக்கதையானது வாசகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒன்று.  அண்ணன் தங்கைகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளான் என்று கதையில் வருகின்றது.  அண்ணன் தங்கை பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பது இக்காலக்கட்டத்தில் பொருந்தாக் காமமாகப் பார்க்கப்படுகின்றது. இக்கதையில் ஆசிரியர் அண்ணனின் பாலியல் உறவு குறித்து எந்த இடத்திலும் கண்டிக்கவில்லை. ஆதரித்தும் பேசவில்லை. மிக இயல்பான ஒன்றாக எழுதிச்செல்கின்றார். எப்படி மழையானது பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் உலகில் உள்ள உயிர்களை வருத்துமோ அதுபோல இவ்வுலகத்தில் உள்ளவா்களுக்கு உடல்பசி வருத்தும் என்பதைத் தெரிவித்து இருக்கின்றார். ஆறுமுகம் இரண்டு தங்கைகளைத் திருமணம் செய்துகொடுத்துவிட்டுத் தன் இளமைக்காலம் கழிந்த பின்பு மூன்றாவது தங்கையுடன் நள்ளிரவில் அவள் தொடை மீது படுத்து இயங்க ஆரம்பிக்கின்றான். இருட்டில் அவன் தங்கை பயத்துடன் மிகுந்த பேரதிர்ச்சிக்கு உள்ளாகின்றாள்.   அவன் மிகுந்த முனகலோடு அக்கா அவுங்க ஓங்கிட்ட வேற ஒன்னும் சொல்லலையா என்கிறான்.

    ஆறுமுகத்தின் தந்தை நான்கு குழந்தைகள் பிறந்த பின்பு மற்றொருவன் பொண்டாட்டியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றான்.  அந்த துயரத்திலே அவன் அம்மா இறந்து விடுகின்றாள்.  சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து இரு தங்கைகளைத் திருமணம் செய்து வைக்கின்றான்.  அதற்குள் அவனுக்கு திருமண வயது தாண்டிவிட்டதன் காரணத்தினால் யாரும் பெண்கொடுக்கவில்லை.  மலர் தனக்குத்  திருமணம் வேண்டாம் என்றும் தன் அண்ணாவை தன்னை விட்டால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கும் பெண்.  தன் அண்ணனினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்ற தங்கைகள் என்பதாக முடிகின்றது.

    மேலும் பெண்களுக்கு எப்பவும் உழைப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும்.   “கோடிஸ்வரன் வீட்டுக்குப் போனாலும் பொம்பளைக உழைச்சாதேன் கௌரி கஞ்சி”(பக்க எண் 129) என்கிறாள் மலா்.  பெண் உழைப்பைச் சுரண்டுதல், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தும் அவலத்தைக் இக்கதையில் காணமுடிகின்றது.

    வெண்ணிலை

    இந்த உலகினில் கைவிடப்பட்ட பெண்களின் சான்றாக வெண்ணிலையின் நாயகி இருக்கின்றாள். வேலைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல் வல்லுறவில் ஈடுபடுதல் என்பது மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கின்றது என்பதைப் பார்க்க முடிகின்றது.   பெண் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளாள்.  அவள் பேச்சை இந்தச் சமூகம் காதுகொடுத்து கேட்பதே இல்லை.  முள் மீது சேலை விழுந்தாலும் சேலைமீது முள் விழுந்தாலும் சேலைக்குத் தான் நஷ்டம் என்னும் தொடா் நினைவுக்கு வருகின்றது. பெண்ணும் அப்படிப்பட்டவள் தான்.  வெண்ணிலை என்றால் தமிழ் அகராதி அளிக்கும் பொருள் ஈடுகாட்டாது வாங்கும் கடன் என்கிறது. ஆனால் ஆசிரியர் கையறு நிலையில் வெண்ணிலையைப் பயன்படுத்துகின்றார். பதினைந்து வயது பெண் ஜெராக்ஸ் கடையில் வேலைபார்க்கின்றாள். தன் அண்ணன் கைவிட்ட நிலையில் ஊா்விட்டு ஊா் வந்து தன் தாய் தந்தையைக் காப்பாற்ற நினைத்து வேலைக்குச் செல்கின்றாள்.  கடையில் தன் தந்தையின் வயதையொத்த முதலாளி கையைப் பிடித்து இழுத்ததும் அந்த வேலையை விட்டுவிடுகின்றாள். ஆஸ்துமாவினால் இறந்த தந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு போக பணம் இல்லாமல் நடு ரோட்டில் உதவிக்காக காத்திருக்கின்ற அவலம்.

    பேரிளம் பெண்

    நாற்பது வயதைக் கடந்த ஆண் தன்னை இளமையாகக் காட்டிக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் தன்னை மாற்றிக்கொள்ள நினைத்தால் அது தவறாகப் பார்க்கப்படும். மேலும் வயது ஏற ஏற தன் இளமை போய்கொண்டிருப்பதை எந்த பெண்ணும் இயல்பாகக் கடந்துவிடுவாள் என்ற பொதுபுத்தி உள்ளது.   ஆனால் ஈஸ்வரி தன்னை அலங்காரம் செய்து கொள்வது குறித்து ஆசிரியருக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் தன்னை அலங்காரம் செய்து கொள்வதினால் தன்னிடம் உள்ள நல்ல குணங்களும் மாறிப்போனதாகக் காட்டுகின்றார். பேறு காலத்திற்கு வந்திருக்கும் மூத்த மகளை திட்டுவதாக எழுதியிருப்பது, தன்னை அலங்காரம் செய்து கொள்வதினால் பெண்ணின் இரக்ககுணமும் மாறிவிடுமா என்கிற கேள்வியை உண்டாகுகின்றது.  தன் மூத்த மகளின் பேறுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஈஸ்வரி பக்கத்து வீட்டில் நடக்கின்ற நலங்கு நிகழ்ச்சிக்குச் செல்கின்றாள். அப்படிச் செல்லும்போது தன்னை எப்படி அலங்காரம் செய்து கொள்கின்றாள். நலங்கு வீட்டில் எதையெல்லாம் தனக்கு வேண்டும் என்று ஆசை கொள்வதாக கதையானது நகர்கின்றது. நாலு விரல் அளவு கை வைத்த சட்டை தன்கிட்ட இல்லயே.  தைக்க கொடுக்கணும்.  நெஞ்சுத் தெரிய இடுப்பு ஒடுக்கித் தைத்த சுடிதார் இல்லையே. சின்ன மகளின் சுடிதாரை எடுத்து ஒரு நாளேனும் போட வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். மேலும் பின் முதுகு தாழ்ந்து தெரியும் படி வைத்த சட்டை, கருப்பு பாடி நலங்குக்கு எடுத்து வைக்கின்றாள். கண்ணாடி முன் நின்று சரிந்த மார்பகங்களை இரு உள்ளங்கைகளால் தூக்கிப் பார்த்து வருத்தப்படுகின்றாள்.  மகளுடைய புதிய ஜட்டியை எடுத்து போட்டு கொள்ள ஆசை.  வெளியில் போகும்போது மட்டும் அணியும் உயர்குதிச்செருப்பு எடுத்து வைக்கின்றாள். ஆனால் தன்னால் நிகழ்ச்சிக்குப் போக முடியாது என்று தெரிந்தவுடன் தன் மகளைத் திட்டுவதாக முடிகின்றது.  தன் இளமைகாலம் தீர்ந்து போய்க்கொண்டிருக்கும் போது தன் இளமையை மீட்டெடுக்கத் துடிக்கும் பெண்ணாகப் பேரிளம்பெண் இருகின்றாள்.

    கொடிகொம்பு

    கணவன் தன் குறையை மறைப்பதற்காகத் தினமும் குடித்துவிட்டு வருகிறான். மனைவியை மலடி என்று திட்டித்தீர்க்கின்றான். வாணி தன் குடிகாரக் கணவனால் தன் வாழ்க்கையே சீரழிந்தும் அவனோடு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றாள். விஜயனிடம் பல முறை சொல்லியிருக்கின்றாள். எல்லோர் முன்னாடியும் என்ன திட்டாதன்னு. ஆனால் அவன் கேட்பதாக இல்லை. அவளுக்குத் தான் மலடி இல்லை என்பதை நீருபிக்கத் தோன்றும். ஆனால் தாய் தந்தைக்காக தன்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்கின்றாள். பிரியத்தோடு தொட்டால் தூக்கம் வருது, நாளைக்கு என்பான், பயந்தாங்கொள்ளி… நாலாவது நாள் தாண்டினால் சாக்கு சொல்வான் வயிறு வலிப்பதாக… இல்லையென்றால் வீட்டிற்குள் நுழையும் போதே சண்டையிழுப்பான் குடிப்போதையில். எழமாட்டாத பயன்.  பம்முவதற்குத்தானோ இந்தக் குடி என்று நினைக்கின்றாள்.

    தன்னுடைய இயலாமை வெளிக்காட்டாமல் மனைவியை மலடி என்று குற்றம் சுமத்தும் கணவன். கெட்ட வார்த்தையில் திட்டுவது அவமானப்படுத்துவது எனத் தொடர்ந்து செய்கின்றான். இறுதியில் தன் மாமனார் குளித்துக்கொண்டிருக்கும் போது தெரியாமல் குளியலறையின்  உள்ளே நுழைந்து விடுகின்றாள். அப்போது அவள் உடனே வெளியேறாமல் அவர் மீது தண்ணீர் அடித்து விளையாடுகின்றாள் என்று கதையானது முடிகின்றது. தன்னை நீருபிக்க அவள் எடுக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

    தொப்புள்கொடி

    மனநலம் பாதிக்கப்பட்ட கார்த்திகா ஊரில் சுற்றிக்கொண்டிருக்கின்றாள்.  ஒரு நாள் குழந்தையை பெற்றெடுக்கின்றாள்.  ஊரில் உள்ளவர்கள் அனைவரும் வருத்தம் அடைகின்றனா்.  இந்த பயித்தியத்தக் கூட விட்டு வைக்கவில்லையே என்று.கார்த்திக்காவுக்குக் குழந்தைக்குப் பால்கொடுக்க தெரியவில்லை. குழந்தை இறந்துவிடுகின்றது. கார்த்திகா இறந்த குழந்தையை  கையில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி வருகின்றாள். ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இழிவாகப் பேசுகின்றனா்.  இறுதியில் கார்த்திகாவின் பெற்றோரே அவளை விஷம் வைத்து கொல்கின்றனா். கார்த்திகா பிறக்கும்போது தரணி ஆளப்பிறந்தவள் என்று தாய் மகிழ்ச்சியடைகின்றாள். இறுதியல் மகளை விஷம் வைத்து கொள்கின்றனா்.

    முடிவுரை

    வெண்ணிலைத் சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெண்கள் அனைவரும் கைவிடப்பட்டவர்களாகத் துயரம் நிறைந்தவர்களாகப் பிறரிடம் உதவியை எதிப்பார்க்கின்றவர்களாகவும் அடிமைப்படுத்தப்பட்டும் கிடக்கின்றனா். பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சிக்கல் பாலியல் சார்ந்ததாகவே இருக்கின்றது. கிடந்த கோலம் கதையில் அவள் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் அவன் இரவு படுக்கும்போது திரும்பிக்கொள்ளக்கூடாது என்று நினைக்கின்றாள். அதற்காகவே காண்டம் வாங்கிவருகின்றாள். கடமைக்கு பாலியல் இச்சைக்கு உறவுக்கொள்ளும் அவனைப் பார்த்து சிரிப்பதன் மூலம் பாலியல் உறவின் மூலம் என்றும் அடிமைப்படுத்திவிட முடியாது என்பதையும் அறியமுடிகின்றது. உள்ளிருந்து உடற்றும் பசி மிக முக்கியமான சிக்கல் அண்ணனுக்கும் தங்கைகளுக்குமான பாலியல் உறவு. வெண்ணிலை கதையிலும் தன் மகளை ஒத்த வயதுடைய பெண்ணிடம் முதலாளி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது. பேரிளம் பெண் கதையில் தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு செல்லும் ஈஸ்வரி மற்ற ஆடவர்களை நினைக்கின்றாள். மேலும் தன் கணவனையே மயக்க வேண்டும் என்று நினைக்கின்றாள். அதன் மூலம் தான் ஆசைப்பட்டதையெல்லாம் அடைய முடியும் என்று நம்புகின்றாள். கொடிகொம்பு கதையில் தன் கணவனிடம் குறையை வெறுத்து தன் மாமனாரின் மேல் ஆசைப்படுவதாக கதையை முடிகின்றார். தொப்புள்கொடியில் பெண் பயித்தியமாக இருந்தாலும் போகப் பொருளாக பார்க்கப்படுகின்றாள் என்பதைக் குறிப்பிடுகின்றார். மேற்குறிப்பிட்ட கதைகளில் பெண் உடல் சார்ந்து எவ்வாறு அடிமைப் படுத்தப்பட்டிருக்கின்றாள் என்பதை அறிய முடிகின்றது.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியா்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி,
    திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.

     

     

    Share
  • தடமாறும் சொற்கள்

    முனைவர் வே. சுமதி

    தொப்புள் கொடியில்
    முளைவிட்ட
    சொற்பிளம்புகள்
    அறுக்கப்பட்டு
    ஆனந்தஜோதியாய்
    ருத்ரதாண்டவமாடுகிறது….
    பல நேரங்களில்
    உக்கிரமாகவே
    பிரசவமாகி,
    தலைவிரிகோலாமாய்
    தாண்டவமாடுகிறது…
    வலிகளான சொற்கள்
    மௌனத்தின்
    பாதைகளில்
    விழிகளை நோக்கி
    ஒற்றைக்காலில்
    கூத்தாடுகிறது….
    எண்ணங்களின்
    எண்ணற்ற வடிவங்களும்
    நல்லநேரம் பார்த்தே
    நிதானமாய்
    பிரயோகிக்கப்படுகிறது
    கானல்நீராய்…
    யுகயுகமாய் காத்திருந்த
    ஆயுதங்களின்
    கூர்முனைகள்
    நெம்புகோலால்
    பழுதுபார்க்கப்படுகிறது
    புழுக்களிடம்…..

    முனைவர் வே. சுமதி,
    உதவிப்பேராசிரியர்,
    தமிழ்த்துறை,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

    Share
  • கன்னியர் எழுவர் வழிபாடு

    அ.அன்புவேல் எம்.ஏ.,எம்..ஃபில்.,பி.எட்.,(பி.எச்டி)

    தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,

    விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி(மகளிர்)

    சங்ககிரி. சேலம் மாவட்டம்.

    அலைப்பேசி: 96004 13310.

    மின்னஞ்சல்-:anbuvelm@gmail.com

    —————————–

    அறிமுகம்

    ஏழு கன்னிமார் என்பவை சகோதரத்துவ உறவுடைய தெய்வீக சக்திகளான ஏழு கன்னிமார்களின் தொகுதியாகும் இந்த ஏழு என்ற எண்ணிக்கையிலான பெண் குழுத்தெய்வங்கள் பல்வேறு சமூகங்களில் வழிபடப்பட்டு வருகின்றன. இனக் குழு மரபுகளிலும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட தமிழ் மக்களின் மரபுகளிலும் கன்னடம், தெலுங்கு, போன்ற மொழிகள் பேசும் மக்கள் சமய மரபுகளிலும், வடமொழி மரபுகளிலும் ஏழு பெண் தெய்வங்கள் பற்றிய நம்பிக்கைகளும் வழிபாடுகளும் காணப்படுகின்றன.

    தமிழகத்தில் கன்னியர் எழுவர்

    மாதாக்கள் வழிபாடு தமிழகத்தில் பரவலாக இடம் பெற்றிருப்பதாகும் ஏழு கன்னிகளைப் போல தமிழ்நாட்டு வட்டாரத் தன்மைகளைக் கொண்டிராத இந்த சப்தமாதாக்கள்,தம்முடைய பெயர்கள், புராணங்கள், குணவியல்புகள் போன்ற இதர கூறுகள் அடிப்படையில் வடமொழி மரபுக்குரியனவாக விளங்குகின்றன. சைவ சமய சார்புடையவனவாகத் திகழ்கின்றன. குளக்கரை, காடு, மற்றும் வெட்டவெளிகளிலும் தனிக்கோயில் கொண்டிருக்கும் சப்தமாதக்கள், சிவன் கோயில்களின் பிரகாரங்களையும் அலங்கரிக்கின்றன. இங்கெல்லாம் அவை துணைத் தெய்வங்களாகவே உள்ளன. ஏனைய துணைத் தெய்வங்களுக்குப் பூசை செய்யப்படுவது போலவே இவற்றுக்கும் பூசை செய்யப்படுகிறது. சப்தமாதாக்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனிப் பெயர்களும், விசேடமான இயல்புகளும் புராணக்கதைகளும் நூல்களில் பதிவாகியுள்ளன. அபிராமி, மகேசுவரி, கௌமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, காளி ஆகியவையே சப்தமாதாக்கள். சிவன் கோயில் பிரகாரங்கள் தனிக்கோயில்களில் இடம் பெற்றிருக்கும் சப்தமாதாக்களின் சிலைகள் தத்தமது உருவ இயல்பைச் சித்தரிக்கும் வகையில் அமைந்துள்ளன. இவை பெரும்பாலும் மரத்தடியில் வெட்டவெளியில் இருப்பதால் இவற்றிற்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதில்லை. இன்றைய சூழ்நிலையில் ஏனைய பலதெய்வங்கள் பெற்றிருந்த செல்வாக்கை இவை இழந்துவிட்டன எனலாம். ஆனால் புராணசமய வழிபாட்டைவிட நாட்டுப்புற சமய வழிபாடு வேறுபட்டது.

    நாட்டுப்புறசமயத்தில் தமிழகத்தின்; தென்மாவட்ட கிராமங்களில் மாரியம்மன், காளியம்மன், பத்ரகாளியம்மன், அரியநாச்சியம்மன் காந்தாரியம்மன், வண்டிமலைச்சியம்மன், உமையம்மாள் ஆகிய எழுவரை வழிபடுகின்றனர் 1

    என்று டாக்டர் துளசிராமசாமி குறிப்பிடுவதிலிருந்து தென்தமிழகத்தில். கன்னியர் எழுவருக்கும் வழங்கியப் பெயர்களை அறியமுடிகிறது.

    ஆந்திரம் மற்றும் கருநாடகத்தில் கன்னியர் எழுவர்

                கர்நாடகத்திலும் ஏழுசகோதரிகள் பற்றிய குறிப்பு இருக்கிறது. வொய்ட்கெட் என்பவர் தமது நூலில் எழுமாரித் தெய்வங்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.

    அன்னம்மா, சந்தேஸ்வரம்மா, மாயேஸ்வரம்மா, மரம்மா, உடலம்மா, கொக்கலம்மா, சுகஜம்மா ஆகியவை அந்த ஏழுதெய்வங்களாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாக முனிஸ்வரர் என்ற ஆண் தெய்வம் இருக்கிறது.2

    ஆந்திராவில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் கண்டுகுறு வட்டத்தில் பொதுவாக கீழ்க்  கண்டவாறு ஏழு சகோதிரிகள் பற்றி அழைக்கிறார்கள்.

    போலேரம்மா, அங்கம்மா, முத்தியாலம்மா, தில்லி, பொலசி, பங்காரம்மா, மாதம்மா ஆகியனவாகும், பாலேரம்மா என்பது அம்மை நோய் கடவுளாகும். இது நம் மாரியம்மன் போன்ற தெய்வமாகும். இந்த ஏழு தெய்வங்களுக்கும் துணைத்தெய்வமாக போத்திராஜ் என்ற ஆண் தெய்வம் இருக்கிறது.3

    ஆந்திரா, கர்நாடகம் போன்ற மாநிலங்களிலுள்ள ஏழு சகோதிரிகளும் வீட்டுத் தெய்வமாகவும், ஊர்த்தெய்வமாகவும் வழிபடப்படுகின்றனர் . இதுபோன்று தான் தமிழகத்திலும் வழிபடுகிறார்கள்.

    புராணசமயத்தில்; கன்னியர் எழுவர்

    காஸ்யப முனிவருக்கு இரண்டு ஆண்குழந்தைகள் உள்ளனர். ஒருவன் ஹிரண்யாசன் மற்றொருவன் ஹிரண்யகசிபு ஆகியோராவர். திருமால் வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாசனையும், நரசிம்மஅவதரம் எடுத்து  ஹிரண்யகசிபுவையும் கொன்று விடுகிறார். ஹிரண்யாசனின் மகன் திருமால் பக்தனாக மாறி அரச வாழ்வை துறந்தான். அவனுக்குப்பின் ஆட்சி செய்த அந்தகாசூரன் தமது ஆழ்ந்த தவத்தின் பயனாக பிரம்மாவிடமிருந்து பலவித வரங்களைப் பெற்றான். அதன் காரணமாக அகங்காரமடைந்த அந்தகாசூரன் தேவர்களைத் துன்புறுத்தினான். தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவன் அவர்களின் புகார்களை கேட்டுக்கொண்டிருக்கும் போதே அந்தகாசூரன் பார்வதியை தூக்கிச் செல்வதற்காக கைலாய மலைக்கு வந்துவிட்டான். சிவன் மிகவும் கோபமுற்றார் அந்தகாசூரனை அழிப்பதற்கு பூதகணங்களுடன் முற்பட்டார். திருமால் மற்றும் கடவுள்கள் அனைவரும் புறமுதுகிட்டோடினர். சிவன் மட்டும் தனித்து நின்று அசுரன் மீது அம்பு மாறிகளை பொழிந்தார்.  அம்புகள் அசுரன் மீதுபாய்ந்து உடலை துளைத்தன.  இரத்தம் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.  இரத்தத்தின் ஒவ்வொரு துளியும் மண்ணில் விழ விழ  பல அந்தகாசூரர்கள் தோன்றினர். சிவன் தமது திரிசூலத்தால் உண்மை அந்தகாசூரனைக் கொன்றார்.

    திருமால் சக்கராயுதத்தால் பிற அந்தகாசூரர்களைக் கொன்றுறொழித்தார்.  அந்தகாசூரர்களின் உடலில் இருந்து பீறிட்டு எழுந்த இரத்தம் மண்ணில் விழுவதைத் தடுப்பதற்காக சிவன் தமது வாயிலிருந்து எழும் தீயிலிருந்து யோகேஸ்வரி எனும் சக்தியை உருவாக்கினார்.  அதே காரணத்துக்காக இந்திரன் முதலானோர்களும் தங்களது சக்திகளை மனைவிகளை அனுப்பினர்.  அவர்களே பிராமணி, மகேஸ்வரி, கௌமாரி, வைஸ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டா ஆகியோர் ஆவர்.  இவர்கள் முறையே பிரம்மன், மகேஸ்வரர், குமரன், விஸ்ணு, வராகர், இந்திரன், எமன் ஆகியோரின் மனைவிகள் ஆவர் என்று புராணங்கள் குறிப்பிடுகிறது.  ஆனால் வராக புராணம் மட்டும் தாய்மார்கள் எண்மர் என்று குறிப்பிடுகிறது.  சிவன் தோற்றுவித்த யோகேஸ்வரியையும் இது சேர்க்கிறது.  தாய்மார் எண்மர் கொண்டசிற்பம் ஒன்று திருவையாறு ஐயாரப்பர் கோயிலில் உள்ளது.   இச்சிற்;பம் ‘அஸ்டமாத்திரிகா’ என்று அழைக்கப்படுகிறது இவர்கள் எண்மரும் எட்டுவகையான குணநலன்களை சித்தரிக்கின்றனர்.  அவை முறையே யோகேஸ்வரி காமத்தையும், பிராமண தற்பெருமையும்,  மகேஸ்வரி குரோதத்தையும், கௌமாரி மாகத்தையும், வைஸ்ணவி லோபத்தையும், வாராகி அசூயையும், இந்திராணி மாத்சார்யத்தையும், சாமுண்டா பொய்மையையும் குறிப்பிடுவதாக சொல்லப்படுகிறது.

    “சும்ப–நிசும்ப என்ற அரக்கர்களை அம்பிகை அழிக்கப் போர் புரியும்போது அவளுக்கு உதவியாக இத்தேவிகளை உற்பவித்தனர் என்று மார்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. மேலும் காளிதாசரின் குமாரசம்பவம் எனும் காவியததில் சப்தகன்னியர் சிவபெருமானின் பணிப்பெண்டிர் என்ற குறிப்பும் காணப்படுகிறது”4.

                            கன்னியர் எழுவர் பற்றி மற்றொரு புராணகதையில் மகிசாசூரன் கருவில் உருவாகாத பெண்ணால் மட்டுமே அழிவு உண்டாக வேண்டும் என வரம் பெற்றிருந்தான். அதனால் தேவர்களும், முனிவர்களும் மகிசாசூரனால் துன்பமடைந்தனர். அனைவரும் சிவபெருமானிடம் சென்று தங்களை காத்தருளுமாறு வேண்டினர். உமையம்மையிடம் அனைவரையும் காத்தருளுமாறு வேணடினார் சிவபெருமான் அதனால் உமையம்மை தன்னிலிருந்து சப்தகன்னியர்களை தோற்றுவித்து மகிசாசூரனை அழித்தார். மகிசாசூரன் கொல்லப்பட்டதால் சப்தகன்னியர்களை கொலைப்பாவம் சூழ்ந்தது. அதனை நீக்கவேண்டி சிவபெருமானிடம் சப்தகன்னியர்கள் வேணடினர் சிவபெருமான் கோலியனூர் எனும் தலத்தில் தன்னை வழிபட்டுவருமாறு கூறினார். சப்தகன்னியர்களை பாதுகாக்க தன்னுடைய அம்சமான வீரபத்ரனை உடன் அனுப்பி வைத்தார். இத்தலத்தில் சப்தகன்னியர்களுக்கு தட்சணாமூர்த்தியாக அமர்ந்து உபதேசம் செய்து கொலைப் பாவத்தைநீக்கினார் என்றும் கூறப்படுகிறது.

    இவ்வெழுவர் உருவங்களும் பத்மாசனத்தில் அமர்ந்த நிலையில் நான்கு கரங்கள் கொண்டு காணப்படும்;  மேலிருகரங்களி;ல் அவைகளுக்குரிய படைக்கலன் களையும் கீழிருக்கைகள் அபயவரத நிலையையும் கொண்டிருக்கும்.  இடகாலை மடக்கி ஆசனத்தி;ன் மீது வைத்து வலக்காலை கீழே தொங்க விட்டநிலையில் காணப்படுவர்.  எழுவர் உருவங்களோடு சிவனது உருவம் யோகேஸ்வரராக அல்லது வீரபத்ரராகவும் இதனோடு விநாயகரது உருவமும் காணப்படும். தாய்மார் எழுவரும் அமர்ந்துயிருக்க அவர்களின் வலப்பக்கம் கடைசியில் வீரபத்ரரும் இடபக்கம் கடைசியில் விநாயகரும் அமர்ந்திருப்பர். அமர்ந்த நிலையில் காணப்படும் தாய்மார்கள் உருவங்கள் சில இடங்களில் நின்ற நிலையிலும் காணப்படுகின்றன.  நான்கு கரங்கள் மூன்று தலைகள் எனப் பலவாறு பல இடங்களில் வைத்து வழிபாடு செய்கின்றனர்.  ஆயுதங்கள் ஏந்தியும் படைகலன்களைக் கொண்டும், வாகனங்களைக் கொண்டும் காட்சியளிக்கின்றனர். பாட்னா அருங்காட்சியகத்தில் உள்ள அன்னையர் எழுவர் சிற்பங்களில் அவைகளின் இடது தொடைகளின் மேல் குழந்தைகள் காணப்படுகின்றன. இவை கி.பி 12 ஆம் நூற்றாண்டுச் சார்ந்தவை எனக் கருதப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரையில் குழந்தைகள் வைத்திருப்பது போன்ற சிலைகள் எங்கும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை தமிழகத்தில் சப்தகன்னிகளாகத்தான் (மணமாகாதப் பெண்களாக) வழிபட்டிருக்கிறார்கள் என எண்ணுவதற்கு இடம் ஏற்படுகிறது.

    தமிழ் இலக்கியங்களில் சிலப்பதிகாரம் கலிங்கத்துப்பரணி, தக்கையாபரணி, திருமந்திரம் போன்ற இலக்கியங்களில் தாய்மார் எழுவர் பற்றியக் குறிப்புகள் காணப்படுகிறது.  மேலும் ரிக் வேதத்திலும் தாய்மார் எழுவர் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறது.

    கோயில்களில் கன்னியர் எழுவர்

     சிவன் திருமால் கோயில்களிலும் ஐயனார், செல்லியம்மன் போன்ற சிறுதெய்வ வழிபாட்டுக் கோயில்களிலும் கன்னியர் எழுவர், கன்னிமார் எனவும் வைத்து வழிபட்டு வருகின்றனர். ஏழு கன்னிமார் வழிபாடு கிராமகோயில்களில் தொன்று தொட்டு மிக முக்கியமான வழிபாட்டுச் சடங்காகவே வழக்கிலிருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  கன்னிக்கோயில், கன்னிமார்கோயில், கன்னிமாரம்மன் கோயில் என்று சுட்டப்படும் கன்னிமார்க்கென்றே அமைந்த தனிக்கோயில்களில் மட்டுமின்றி இருபத்தொரு பந்தி தெய்வங்களில் இடம்பெறும் கோயில்களிலும் கன்னிமார் சிலைகள் இடம் பெறுகின்றன. ஏழு கற்கள் வைத்து வழிபடும் வழக்கம். இன்றும் கிராமப்புற பகுதிகளில் காணப்படுகின்றது.  காடுறை தெய்வக் கோயில்களிலும், மலைப் பகுதிகளிலும் கன்னியர் எழுவரின் சிலைகள் வைத்து வணங்கப்படுகின்றது. சான்றாக சின்னக்கல்வராயன் மலைப் பகுதியில் கல்லூர் என்ற கிராமத்தில் கன்னிமார்களுக்கென்று தனி வழிபாட்டிடம் அடர்ந்த சோலைக்குள் இன்றும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் கன்னிமார்க் கோயில்கள் நீர்நிலைகள் ஒட்டியே அமைந்துள்ளன. இன்றும் சில இடங்களில் கன்னிமார் ஆறு, கன்னிமார் ஓடை, கன்னிமார்ஏரி, கன்னிமார்க்;குளம் என்று நீர்நிலைகளுக்குப் பெயர் சூட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய காலகட்டங்களிலும் கிராமப்புற மக்கள் மலைகளிலும், காடுகளிலும், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களிலும் மாலை நேரங்களில் கன்னிமார்கள்  நடமாடுவதாக நம்புகின்றனர்.

    நிறைவாக

    தமிழகத்தில் தாய்மார் எழுவர் வழிபாடு பல்லவர் காலம் தொட்டு இன்றுவரை தொடர்ந்து இருந்து வருகிறது.  தாய்மார் எழுவரின் உருவ அமைப்புகள் சில காலகட்டங்களில் சில வித மாறுதல்களும் பெற்றிருக்கின்றன. இதனால் கன்னியர் எழுவர் வழிபாட்டு முறையானது பெருந்தெய்வ வழிபாட்டு முறையிலும், சிறுதெய்வ வழிபாட்டு முறையிலும் இன்றியமையாத ஒரு இடம் வகிக்கிறது என்பதை அறியமுடிகிறது. சோழர் காலத்திய கோயில்கள் அதற்கு முந்தையகால கோயில்களிலும் கன்னியர் எழுவர் சிற்றாலயங்கள் தமிழகத்தில் காணப்படுகின்றன. அதற்குப் பிற்காலத்தில் கன்னியர் எழுவர் வழிபாடு அருகிவிட்டது. கன்னியர் எழுவர் வழிபாடு இந்தியா முழுவதிலும் இருந்ததற்குச் சிற்ப ஓவிய செப்புப் படிமத் தடயங்கள் பல உண்டு. ஆனால் இவர்களுக்குத் தனிச் சிற்றாலயங்கள் எழுப்பும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமே உண்டு.

    ————————————–

    அடிக்குறிப்புகள்

    1. 1. டாக்டர் துளசிராமசாமி, நாட்டுப்புறத்தெய்வங்கள்- பக்கஎண் – 48
    2. இந்திரன் (தொ.ஆ) வேரும் விழுதும; – பக்கஎண் – 20
    3. மேலது, பக்கஎண் – 21
    4. சப்தகன்னியர் வரலாறும் வழிபாடும் தினமலர் நாளிதழ்;சிறபபுத் தொகுப்பு டிசம்பர் – 2016

    துணைநூற் பட்டியல்

    1. இந்திரன் (தொ.ஆ) வேரும் விழுதும்;

    அலைகள் வெளியீடு

    கோடம்பாக்கம் சென்னை– 17

    முதற்பதிப்பு – 2000

    1. இராமசாமி துளசி. முனைவர் நாட்டுப்புறத்தெய்வங்கள்

    விழிகள் பதிப்பகம்

    வேளச்சேரிசென்னை– 42

    முதற்பதிப்பு– 2000

    இதழ்

    1. சப்தகன்னியர் வரலாறும் வழிபாடும் தினமலர் நாளிதழ்

    சிறப்புத் தொகுப்பு

    சென்னைபதிப்பு – 2016

     

     

     

     

    Share
  • திருஞான சம்பந்தர் பாடல்களில் இராவணன் குறித்த தொன்மங்கள்

    ர.சுரேஷ்
    உதவிப்பேராசிரியர்
    கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம்
    கோயம்பத்தூர்

    ————————————–

    மதங்களையும், தொன்மங்களையும் சமூகவியல் அடிப்படையில் பல்வேறு அறிஞா்கள் விளக்கியிருக்கின்றனா். எமிலிதா்கைம், மாலினோஸ்கி, லெவிஸ்ட்ராஸ், பிராப் போன்றவா்கள் மதத்தையும் தொன்மத்தையும் சமூக ஒத்திசைவைக் கட்டமைக்கும் நடத்தை வடிவங்களாகக் கண்டனா். சமயம், தொன்மம் என்பவை சமூகத்தோடு கொண்டுள்ள உறவில் ஏற்படும் முரண்அம்சங்களைக் கவனத்தில் எடுத்தவா் மார்க்ஸ் ஆவா். அதேபோல தனிமனித உளவியலில் அடிப்படையாகக் கொண்டு மதத்தையும், தொன்மத்தையும் விளக்கியவா் ப்ராய்ட் ஆவா். இவா்கள் இருவரும் அதுவரையிருந்த மதக்கண்ணோட்டங்களிலிருந்து விலகி மாறுபட்ட சிந்தனைகளை வளா்த்தெடுத்தனா்.
    மார்க்ஸிய வழியில் அதனை மேலும் பல புதிய கருத்தாக்கத் தளங்களுக்குக் கொண்டு சென்றவா்களில் கிராம்சி குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெறுகிறார். கிராம்சி மதம், தொன்மம் இரண்டையும் குடிமைச் சமூகக் கருத்தியல் வடிவங்களாகக் காண்கிறார். அரசு நேரடியான வன்முறைகளின் மூலம் சமூகத்தைக் கட்டுப்படுத்தும். குடிமைச் சமூகத்தில் நிலவுகின்ற மதம், இலக்கியம், தத்துவங்கள் போன்றவை மறைமுகமாக ஆளும் வா்க்கத்திற்குச் சாதகமான, பொது மனோபாவத்தை உருவாக்கித் தரும். இதன்மூலம் ஆளும் வா்க்கம், குடிமைச் சமூகத்தின்வழி தனது கருத்தியல் மேலாதிக்கத்தை நிறுவிக் கொள்கிறது என்கிறார் கிராம்சி. எனவே கிராம்சியின் கருத்துப்படி, அரசு மற்றும் குடிமைச் சமூகக் கருத்தியல் நிறுவனங்கள் இவை இரண்டுமே ஒன்றையொன்று தொடா்புடைய ஆதிக்க வடிவங்கள் ஆகும். ஒரு வா்க்கம் ஆளும் வா்க்கமாக ஆவதற்கும் இவை இரண்டுமே அவசியமானதாகும்.
    பதினைந்தாம் நூற்றாண்டு இத்தாலியச் சிந்தனையாளா் நிக்கோலோ மாக்கிய வெல்லியின் இளவரசன் என்ற நூலில், கிரேக்கத் தொன்மத்தில் இடம்பெறும் சென்டார் எனும் தொன்மம் உருவகமாய்ப் பயன்படுத்தப்பட்டிருப்பதைக் கிராம்சி சுட்டிக்காட்டியுள்ளார். மனிதத் தலையும் குதிரை உடலும் கொண்ட ‘சென்டார்‘ அரச அதிகாரத்தின் இரட்டைப் பண்புக்கான உருவகம் என விளக்கம் கூறுகிறார்1. அதாவது பலவந்தம் சம்மதம் வன்முறை நாகரிகம் திருஞானசம்பந்தா் பாடல்களில் இத்தகைய இரட்டைப் பண்புடைய தொன்மங்கள் பெருமளவில் பயின்று வந்துள்ளன. அடக்குதல்-ஆட்கொள்ளுதல் எனும் வகையில் இத்தொன்மங்களை இனம் காண முடியும். சிவப்பரம்பொருளை எதிர்ப்பவா்கள் அவரால் தண்டிக்கப்படுதலும், அடிபணிபவா்கள் அவரால் அருளப்படுதலும் பெரும்பாலான தொன்மங்களில் வெளிப்படுகின்றன. பலவந்தம் சம்மதம் என்ற இருவடிவங்களில் ஆளும் வா்க்கக் கருத்துருவங்கள் செயல்படுவதை இவை குறியீட்டு நிலையில் உணா்த்துவதாகக் கொள்ளலாம். இவ்விரு வடிவங்களிலும் தொன்மங்கள் எடுத்துரைக்கப்பட்டு மேலாண்மைக்கான ஒப்புதல் வலியுறுத்தப்படுவதைத் திருஞானசம்பந்தா் பாடல்களில் காணலாம்.
    திருஞானசம்பந்தா்பாடல்களில் இராவணன் பற்றிய தொன்மம்:
    தமிழகமெங்கும் தலயாத்திரை மேற்கொண்ட நாயன்மார்களுள் முதன்மையானவா் திருஞானசம்பந்தா் ஆவார். திருஞானசம்பந்தரின் பாடல்களின் பதிக அமைப்பும் அதன் பொருளமைப்பும் ஏனைய நாயன்மார் பாடல்களில் இருந்து தனித்துக் காணப்படுகிறது. ஒவ்வொரு பதிகத்திலும் இடம்பெறும் பாடல்களின் அமைப்பு நன்கு திட்டமிடப்பட்டதாக, பிரச்சாரத் தன்மையிலானதாக இருக்கிறது. சம்பந்தா் பாடல்கள் ஒவ்வொன்றிலும், பெரும்பாலும் இரண்டு வரிகள் இயற்கை வா்ணனையாகவும் இரண்டு வரிகள் இறைவனைப் பற்றியதாகவும் அமைகின்றன. அவ்வமைப்பு, பிரதேச மாந்தன் வட்டார உணா்ச்சிகளைத் தூண்டி அவா்களை மகிழ்வித்து தன்வயப்படுத்தும் நோக்கத்தோடே அமைக்கப்பட்டிருப்பதை உணரலாம். அதோடு தல இறைவனை அத்தலத்திற்கே உரியவனாகப் புகழும் பகுதிகள், தம் ஊரை, தம் இறைவணக்கத்தைத்தான் பாடுகிறார் எனும் பெருமித உணா;வையும் மக்கள் மனங்களில் கிளா;த்தி, தன்பக்கம் இழுக்கும் நோக்கத்தைக் கொண்டதாக உள்ளது.
    அதற்கடுத்தபடியாக ஏனைய பாடல்கள் இறைவனின் அருட்கோலத்தைப் பாடி, அவனின் அருளும் தன்மையைப், பராக்கிரமத்தைப் பாடி சிவனே யாவனும் மேலான தனிப்பெருங்கடவுள் என விளக்கி, இறுதியாக சமண பௌத்த எதிர்ப்புணா்வை வெளிப்படுத்துவதாக உள்ளது. இவையெல்லாம் சம்பந்தரின் திட்டமிடப்பட்ட பரப்புரை நோக்கத்தை உணா்த்துகின்றன. தலங்கள்தோறும் தம் மேலாண்மையை நிறுவுவதற்கும் தமக்குச் சாதகமாக மக்களின் பொது மனோபாவத்தை உருவாக்குவதற்கும் இப்பரப்புரை நடவடிக்கைகள் பெரிதும் பயன்பட்டிருக்கின்றன எனலாம்
    சம்பந்தா் பதிகம் ஒவ்வொன்றிலும் எட்டாம் பாட்டில் இராவணனைப் பற்றிய குறிப்பு வருகிறது. இத்தொன்மச் செய்தி இடம்பெறுவதற்கான காரணங்களாக ஆ.வேலுப்பிள்ளை கீழ்க்கண்டவாறு கூறுகிறார்.
    “தீயவா் எவருமே இறைவனை நினைத்து வழிபட்டால் அவன் அருளைப் பெறலாம் என்பதே சம்பந்தா் கருத்து என்பதே இதுவரை இப்பகுதிக்குத் தரப்படும் விளக்கம். சம்பந்தா் கருத்து இதுவேயானால், வேறுவகை கூறாது, இராவணன் கதையைத் தெரிந்தெடுத்தற்குக் காரணம் என்ன என்று நாம் சிந்திக்க வேண்டும். இராமாயணம், பாரதம் என்னும் இதிகாசங்கள் சங்ககாலத்திலிருந்தும், வைதீக சமயப் புராணக் கதைகள் சங்கம் மருவிய காலத்திலிருந்தும் தமிழ்நாட்டில் வழங்கி வந்திருக்கின்றன என அக்கால இலக்கியங்களிலிருந்து கூறலாம். இராவணன் வௌ்ளிங்கிரியெடுத்து அதன்கீழ் நசியுண்டது தவிர வேறு ஒரு இதிகாசப் பகுதியை அல்லது ஒரு புராணக் கதையைச் சம்பந்தா் இவ்விடத்தில் பயன்படுத்தாமைக் கவனிக்கப்பட வேண்டியது. தீயோரும் சிவனை வணங்கி அருள் பெறலாம் என்பதை வேறு ஒரு கதைப் பகுதியும் நன்கு விளக்கமாட்டாது என்று சிலா் ஒரு சமாதானம் கூறலாம். அப்படியானால், பிற்காலங்களில் வாழ்ந்த சுந்தரா், மாணிக்கவாசகா், குமரகுருபரா், இராமலிங்க சுவாமிகள் முதலியவா்கள் இராவணன் பற்றிய இக்கதைப் பகுதியைத் தங்கள்பக்திப் பாடல்களில் குறியாமைக் குறிப்பிடத்தக்கது.
    சமகாலத்தில் வாழ்ந்த அப்பரும் இராவணனைப் பற்றிய அக்கதைப் பகுதியைக் குறிக்கிறார். இவா்கள் இருவரும் இச்செய்தியைப் பயன்படுத்துவதற்கு அக்காலச் சூழ்நிலை காரணமாக இருந்திருக்கலாம் போல் தெரிகிறது. இராவணன் ஒரு பேரரசன், சிவனை மதியாதவன், சிவன் வாழ்விடத்தையே அப்புறப்படுத்தப் பார்த்தான் அவன். அதன் பயனாகச் சிவனால் நசியுண்டான் சிவனருள் பெற்றமையினாலேயே, அவன் பின்பு உயா்வடைந்தான். அப்பரும் சம்பந்தரும் இக்கதைப் பகுதியைத் தங்கள் காலத்திலாண்ட மன்னா்களுக்கு எச்சரிக்கையாகப் பயன்படுத்துகிறார்கள் என்று கருதுவதற்கு இடமிருக்கிறது”2 என்று கூறுகிறார்.
    மேற்கண்ட கூற்று அரச ஆதரவைப் பெறுவதில் இத்தொன்மம் பலவந்தம் -சம்மதம் எனும் இருநிலைப்பட்ட எதிர்வுக் கருத்தியலைக் கொண்டு செயலாற்றியிருப்பதை உணரலாம். மேலும் இவை குடிமைச் சமூகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பல்லவ-பாண்டியா் காலத்தில் மன்னா்கள் மட்டுமின்றி பெருவாரியான மக்களும் சமண-பௌத்த மதத்திற்கு மாறியிருப்பதை அறியமுடிகிறது. இவ்வாறு மாறியவா்களில் முன்னா் சைவராயிருந்தவா்களுள் பெரும்பகுதி அடங்குவா். தீவிர சிவபக்தனான இராவணன் சிவனை எதிர்ப்பதால் அவனால் தண்டிக்கப்படுவதும் மீண்டும் சிவனையே சரணடைவதால் அவனால் அருளப்படுவதும் இத்தொன்மத்தின் வாயிலாக எடுத்துரைக்கப்படுகிறது. எனவே சமண-பௌத்த மதங்களுக்கு மாறிய சைவப் பெருமக்களை மீண்டும் சைவ மதத்திற்கே வந்து சேரும்படியான கருத்தும் இத்தொன்மத்தின் வாயிலாக உணா்த்தப்படுகிறது. எனவே பலவந்தம்-ஒப்புதல் என்ற நிலையில் தம் மேலாண்மைக் கருத்தியலை நிறுவ இத்தொன்மத்தை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவது குறிப்பிடத்தக்கது.
    பச்சமும் வலியும் கருதிய அரக்கன்
    பருவரை எடுத்த திண்தோள்களை அடா்வித்து,
    அச்சமும் அருளும் கொடுத்த எம் அடிகள்”3
    “ஆவா! என அரக்கன் அலற அடா்த்திட்டு
    தேவா! என, அருள் ஆர் செல்வம் கொடுத்திட்ட
    கோவே! எருக்கத்தம் புலியூர் மிகு கோயில்
    தேவே!4
    எனப் பல பாடல்கள் இறைவன் இராவணனை அடா்த்திட்டு பின்பு அருள் செய்வதை உணா்த்துகிறது. இத்தொன்மத்தின் வாயிலாகவே திருஞானசம்பந்தா் வேதத்தையும் முதன்மைப்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.
    தீது இரா மலை எடுத்த(வ்) அரக்கன்
    நீதியால் வேத கீதங்கள் பாட5
    அந்தரத்தில்-தோ் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப
    சுந்தரா்தன் திருவிரலால் ஊன்றி, அவன் உடல் நொpத்து
    மந்திரத்த மறைபாட, வாள் அவனுக்கு ஈந்தானும்6
    என்றும் பல பாடல்கள் பயின்று வந்துள்ளன. இராவணன் கயிலை மலையைப் பெயா்க்க முற்பட்டபோது அவனை தன்கால்விரலால் நரித்துப் பின் அவன் வேதங்களை ஓதக்கேட்டு மகிழ்ந்து அவனுக்கு அருள் செய்தான் எனும் கருத்து மேற்கண்ட பாடல்களில் வெளிப்படுகின்றன.
    இராவணன் பற்றிய தொன்மங்களில் இறைப்பேரதிகாரத்தின் தன்மைகளான அச்சம்-அருள் எனும் இரண்டு குணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அதிகார அமைப்புகளின் நிலைத்திருப்புக்கு இவை இரண்டுமே அத்தியாவசியமானதாகும். அதிகாரத்தை எதிர்ப்பவா்கள் அவ்வதிகாரத்தைக் கொண்டு தண்டிக்கப்படுபவா் என்பதும், அதிகாரத்திற்கு ஆட்படுவோர் அவ்வதிகாரத்தைக் கொண்டே அருளப்படுவா் என்பதும் ஆளப்படுபவரை ஆளும் அவ்வதிகாரத்திற்குக் கட்டுப்பட்டவா்களாக இருக்க வைக்கிறது.
    அரசு மேற்கொள்ளும் அதே நடவடிக்கைகளை இங்கு மதத்தின் பெயரால் திருஞானசம்பந்தரும் மேற்கொண்டிருக்கிறார். பக்தனுக்கும் இறைவனுக்கும் இடையிலான முரண் ஆளுவோர்க்கும் ஆளப்படுபவா்களுக்கும் இடையிலான முரணாகக் கருத முடிகிறது. பக்தனுக்கும் இறைவனுக்குமான முரண் பக்தன் வேதத்தைப் பாடுவதால் சமரச நிலையை எட்டுகிறது.
    வேதம் பாடக் கேட்டு சிவன் அருளிய தென்பது வேத மந்திரங்களுக்குரிய சிறப்புத் தகுதியை உணா்த்துவதோடு மக்களிடம் சிவனை முன்னிருத்தி வேத அங்கீகாரத்தைக் கோருவதாகவும் உள்ளது. இத்தொன்மம் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதால் அது மக்களின் பொதுமனோபாவமாக மாறி அவா்களின் பொதுப்புத்திக்குள் படிந்துவிடும்படி செய்யப்படுகிறது. அரசதிகாரத்தை வென்றெடுக்கவும் அதனைக் குடிமைச் சமூகத்தில் தொடா்ந்து பேணிக் கொள்ளவும் ஆளும் வா்க்கத் தலைமைக்கு இத்தொன்மக்கதைகள் மிகவும் பயன்பட்டிருக்கின்றன.

    அடிக்குறிப்புகள்
    1. எஸ்.வி. ராஜதுரை, வ.கீதா, கிராம்சி புரட்சியின் இலக்கணம், ப.399.
    2. ஆ. வேலுப்பிள்ளை, தமிழா் சமய வரலாறு, பக.70-71.
    3. சம்பந்தா் தேவாரம் முதல் திருமுறை, திருஅச்சிருபாக்கம், பா.77.8.
    4. மேலது., திருஎருக்கத்தம் புலியூர்,பா.89.8
    5. மேலது., திருமார்பேறு, 114:8.
    6. மேலது., திருகோளிலி, 62:8.

    ——————————–

    துணைநூற்பட்டியல்

    1.ராஜதுரை எஸ்.வி., கீதா வ., – கிராம்சி புரட்சியின் இலக்கணம்,
    விடியல் பதிப்பகம்,
    கோயம்புத்தூர்.
    2010.
    2.வேலுப்பிள்ளை ஆ., – தமிழா் சமய வரலாறு,
    குமரன் புத்தக இல்லம்,
    கொழும்புஇசென்னை.
    2011.

    3.கோபாலையா் டி.வி., (ப.ஆ.) – ஞானசம்பந்தா் தேவாரம்,
    (பண்முறைத் தொகுப்பு),
    பிரெஞ்சு ஆய்வுநிறுவன வெளியீடு,
    புதுச்சேரி. 1984.

    Share
  • இரட்டைக் காப்பியங்களில் தூது

     

    சி. திருமலைச்செல்வி

    முனைவர்பட்ட ஆய்வாளர்

    (பதிவு எண். 9156)

    ஸ்ரீபராசக்தி மகளிர் கல்லூரி

    குற்றாலம் – 627 802

    மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்

    திருநெல்வேலி – 627 012.

    —————————————————

    ஒரு மொழியின் சிறப்பினையும் வளத்தினையும் அறிய அம்மொழியில் எழுந்துள்ள காப்பியங்களே பெரிதும் துணைநிற்கின்றன. இக்காப்பியங்களை இலக்கண நூல்கள் தொடர்நிலைச் செய்யுள் என்று குறிப்பிடுகின்றன.

    தமிழில் தோற்றம் பெற்ற காப்பியங்கள், காப்பியங்களின் பொருள், தமிழின் இரட்டைக் காப்பியங்களில் இடம்பெறும் தூதுப் பொருண்மைகள், வளர்ச்சிநிலை ஆகியன குறித்து இக்கட்டுரையில் ஆராயப்படுகின்றது.

    காப்பியம் – பொருள் விளக்கம்                                                                           

    ‘காப்பியம்’ என்ற சொல் உணர்த்தும் பொருள் குறித்தும், காப்பியம் என்ற சொல்லின் மொழியாக்கம் குறித்தும் பல்வேறு கருத்து நிலைகள் ஆய்வாளர்களிடையே நிலவுகின்றன.

    ‘காப்பியம்’ என்ற சொல் ‘காவ்யம்’ என்ற வடசொல்லின் திரிபு என்பதைப் பேராசிரியர் எஸ். வையாபுரிப்பிள்ளை, கி.வா. ஜெகந்நாதன், நா. பார்த்தசாரதி முதலானோர் குறிப்பிடுகின்றனர்.

    கலைக்களஞ்சியம் காப்பியம் என்பதற்கு, ‘காவ்யம் என்பதன் திரிபு’ (கலைக்களஞ்சியம், தொகுதி – 6, ப. 247) என்றே குறிப்பிடுகின்றது.  ஆயினும், அ. சிதம்பரனார், துடிசைக்கிழார் முதலானோர் காப்பியம் என்பதனைக் காப்பு + இயம் = காப்பியம் எனக் கொண்டு அது தமிழிச்சொல்லே என நிறுவுகின்றனர்  (சோம. இளவரசு, காப்பியத்திறன், ப. 17).

    தமிழிக் காப்பியங்கள்

    தமிழில் தொன்மைக் காலத்திலேயே காப்பியங்கள் இருந்திருக்க வேண்டும் என்றாலும் இலக்கிய வரலாற்று ஆசிரியர்கள், கிடைத்துள்ள காப்பியங்களை வகுத்தும் தொகுத்தும் அவற்றைப் பாகுபாடு செய்துள்ளனர்.

    தமிழின் தொன்மையான இலக்கிய வடிவங்களில் காப்பியங்களும் ஒன்று என்பதனையும், அவை அளவால், பொருளால் பகுக்கப்பட்ட திறத்தினையும், ‘‘கி.மு. 2ஆம் நூற்றாண்டளவில் தமிழ்மொழி காப்பிய நிலத்தில் அடியெடுத்து வைத்தது. சிலப்பதிகாரம் தோன்றியது.  இதுவே தமிழின் முதல் காப்பியம். இதனைத் தொடர்ந்து மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலான நூல்கள் இயற்றப்பட்டன.  இவை ஐந்தும் ஐம்பெரும் காப்பியங்கள் எனப் பெயர்பெற்றன. இவை பெருங்காப்பியம் என்று பிரிக்கப்பட்டமையால் வேறு ஐந்து நூல்கள் ஐஞ்சிறு சிறுகாப்பியம் என அழைக்கப்பெற்றன.  அவை உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், சூளாமணி, நீலகேசி என்பனவாகும்” (சோம. இளவரசு, தமிழ் இலக்கிய வரலாறு, ப. 58)  என்று சோம. இளவரசு குறிப்பிடுகிறார்.

    தமிழில் இரட்டைக் காப்பியங்கள்

    சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்களாகப் போற்றப் பெறுகின்றன.  காரணம், ‘இளங்கோ பாட சாத்தனார் கேட்டார்’ என்ற பதிகச் செய்தி இதற்குக் காரணமாகலாம்.  அதோடு மட்டுமல்லாது சிலப்பதிகாரம் முன்கதை; அதன் தொடர்ச்சியான பின்கதையாக மணிமேகலை அமைவதாகும். இரண்டு காப்பயிங்களும் முப்பது காதைகளைக் கொண்டமைந்தவை. இவ்வாறான தொடர்பு காரணமாகவே இரட்டைக்காப்பியம் என்ற கருத்தாக்கம் தோன்றியது.  சிலப்பதிகாரப் பதிகமும் அதற்கு அடியார்க்கு நல்லார் எழுதிய உரையுமே இதற்குச் சான்றுகளாகச் சொல்லப்படுகின்றன.

    கோவலன், கண்ணகி கதையுடன் மணிமேகலையின் தாய் மாதவிக்கு நீக்கமுடியாத தொடர்பிருத்தலும், கோவலனுக்கு அம்மாதவியிடம் பிறந்த மணிமேகலையைப் பற்றியதே காப்பியம் ஆதலும், மணிமேகலைக் காப்பிய நிகழ்ச்சிகள் பலவற்றிற்குக் காரணங்கள் சிலப்பதிகாரக்கதையில் உள்ளவாறு காட்டப்படுதலும், சிலப்பதிகார நிகழ்ச்சிகள் சிலவற்றிற்கு மணிமேகலை விளக்கம் போன்றிருத்தலும் இவை இரண்டும் இரட்டைக் காப்பியங்கள் என்ற கருத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமைந்துள்ளன.

    ‘‘உரையிடை யிட்ட பாட்டுடைச் செய்யுள்

    உரைசாலடிகள் அருள மதுரைக்

    கூலவாணிகள் சாத்தன் கேட்டான்”

    (சிலப்பதிகாரம், பதிகம். 87-88)

    எனக் குறிப்பிடுவதும்,

     

    ‘‘இளங்கோ வேந்தன் அருளிக்கேட்ப

    வளங்கெழு கூலவாணிகன் சாத்தன்

    மரவண் தமிழ்த்திறம் மணிமேகலை துறவு

    ஆறைம் பாட்டினுள் அறிய வைத்தனென்”

    (சிலப்பதிகாரம், பதிகம். 95-96)

    எனக் குறிப்பிடுவதும்.

    ‘‘மணிமேகலைமேல் உரைப்பொருள் முற்றிய

    சிலப்பதிகாரம் முற்றும்”     (மேலது, பதிகம். 17-18)

    எனச் சிலப்பதிகாரக் கதை மணிமேகலையில் முற்றுப் பெற்றுள்ளது எனக் கூறுவதும் இதற்குச் சான்றுகளாகும்.

    சிலப்பதிகாரத்தில் தூது

    சிலப்பதிகாரத்தில் அகப்பொருள் மரபுகளை இளங்கோவடிகள் காப்பியக் கட்டமைப்புக்கு ஏற்றவகையில் சிறப்புறப்படைத்துள்ளார்.  இதனைக் கானல்வரியில் அமைந்தள்ள பாடல்களில் காணமுடிகிறது.  இவற்றோடு அகப்பொருள் துறைகளில் ஒன்றாகத் தூதுரைக்கும் பாங்கினையும் கதையோட்டத்தில் பொருத்திக் காட்டியுள்ளார்.

    கானல்வரிக் காதையில், தலைமக்கள் தூதுவிடுக்கும் குறிப்போடு தன்னிடத்து மிகுந்து எழுந்த காதல் உணர்வை வெளிப்படுத்தும் புலம்பல்களாக வரும் பாடல்கள் தூதுப் பொருளில் அமைந்துள்ளன.

    ‘‘நேர்ந்ததன் காதலர் நேவி நெடுந்திண்டேர்

    ஊர்ந்த வழிசிதைய ஊர்கின்ற ஓதமே

    பூந்தண் பொழிலே புணர்ந்தாடும் அன்னமே

    ஈர்ந்தண் துறையே இதுதகா தென்னீரே”

    (சிலப்பதிகாரம், கானல்வரி, பா. 75)

    எனவரும் அடிகளில் தலைவன் தேர்ச்சுவட்டை அழித்த கடல் ஓசையையும், குளிர்ச்சி பொருந்திய பொழிலையும், ஆணும் பெண்ணுமாகப் புணர்ந்தாடும் அன்னங்களையும், ஈரச்செறிவுடன் கூடிய கடற்துறையையும் தலைவி அழைத்து, தலைவன் தன்னை மறந்திருக்கும் செயல் தகாது என்று உரைக்குமாறு வேண்டி நிற்பதனைக் கூறும் பாங்கினைக் காணலாம்.  அஃறிணைப் பொருள்களை அழைத்துத் தன் துயர்தீர்க்க உதவுமாறு உரைக்கும் தூதுப் பொருண்மை இப்பகுதியில் புலப்படுகிறது.

    கானல்வரியில் அமைந்த மற்றொரு பாடலில், தலைவி குருகு ஒன்றை அழைத்து, தன்னுடைய  நாட்டில் படர்ந்த கானற்பகுதியை அடையாமல் தலைவன் நாட்டில் நிறைந்த கானற்பகுதிக்குச்
    சென்று அங்குள்ள தலைவனிடம் தன் துன்பத்தை உரைக்குமாறு வேண்டுவதனை,

    ‘‘அடையல் குருகே யடையலெங் கானல்

    அடையல் குருகே யடையலெங் கானல்

    உடைதிரைநீர்ச் சேர்ப்பற் குறுநோ யுரையாய்

    அடையல் குருகே யடையலெங் கானல்”

    (சிலப்பதிகாரம், பா. 46)

    என்னும் பாடற்பகுதி உணர்த்துகின்றது. இதில் குருகினைத் தூதாக விடுப்பதனைக் காணலாம். மேலும் இதில் ‘குருகே’ என்பதில் தூது விடுக்கும் பொருளும், ‘உடைநீர்ச் சேர்ப்பன்’ என்பதில் தூது விடுக்கப்படும் தலைவனும், ‘உறுநோய் உரையாய்’ என்பதில் தூதுரைக்க வேண்டிய செய்தியும் பொருந்த வந்துள்ளதனைக் காணலாம்.

     

    சிலம்பில் காமமிக்க கழிபடர்கிளவி

    சிலப்பதிகாரத்தில் காமம் மீதூர்ந்த நிலையில் கானலிடத்தில் சென்று ஆங்கு நிறைந்திருக்கும் பல்வேறு அஃறிணைப் பொருட்களை அழைத்துப் புலம்பும் காமமிக்க கழிபடர்கிளவித் துறைப் பாடல்களைக் காணலாம். இவ்வாறு தூதாக விடுக்கப்படும் பொருள்களில் அன்னம், மாலைப்பொழுது ஆகியன இடம்பெற்றுள்ளன.

    ‘‘சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்

    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்

    ஊர்திரை நீர்வேலி உழக்கித் திரிவாள்பின்

    சேரல் மடஅன்னம் சேரல் நடைஒவ்வாய்” 

    (சிலப்பதிகாரம், பா. 23)

    என்னும் பாடற்பகுதியில் அன்னத்தை விளிப்பதையும்,

    ‘‘பையுள்நோய் கூரப் பகல்செய்வான் போய்வீழ

    வையமோ கண்புதைப்ப வந்தாய் மருள்மாலை

    மாலைநீ ஆயின் மணந்தார் அவர்ஆயின்

    ஞாலமோ நல்கூர்ந் ததுவாழி மாலை

    தீத்துழை வந்தஇச் செல்லல் மருள்மாலை

    தூக்காது துணிந்தஇத் துயர்எஞ்சு களிவியால்”

    (சிலப்பதிகாரம், பா. 49-50)

    என்னும் பாடலில் மாலையை விளிப்பதனையும் காணலாம்.

    இளங்கோவடிகள் காப்பிய நிலையில் தூதினை ஓர் இலக்கிய உத்தியாகவே பயன்படுத்தியுள்ளார்.  மாதவி தன்னை விட்டுப் பிரிந்த கோவலனைக் காண வயந்தமாலை என்னும் தோழியிடத்தில் மலர்க்கடிதம் வரைந்து அனுப்பியதும், வெளியிடம் சென்று கோவலனைக் கண்டு பேசக் கோசிகமாணியைத் தூதாக விடுத்ததும் தூதுப் பொருண்மை உடைய பகுதிகளாகும்.

    காப்பியக் காலத்தில் தூதுவிடுத்த முறை பற்றிய செய்திகள் மாதவி, வசந்தமாலையைத் தூதாக அனுப்பும் நிலைப்பாட்டிலிருந்து தெளிவாகிறது.  மாதவி, கோவலனுக்குத் தூது அனுப்பிய நிலையினை இளங்கோவடிகள்,

    ‘‘சண்பகம் மாதவி தமாலம் கருமுகை

    வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த

    அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை

    எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த

    முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு

    விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட

    ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்

    ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்

    திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,

    ……………..  ……………….. ……………..

    தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து

    விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,

    பசந்த மேனியள் படர்உறு மாலையின்

    வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்

    தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்”

    (சிலப்பதிகாரம், ஊர் அலர் எடுத்த காதை, பா. 1-9)

    என்று எடுத்துரைக்கின்றார். மேலும் இக்காப்பியத்தில் காதல் செய்தியைக் கூறப் பெண் ஒருத்தியைத் தூதாகப் பயன்படுத்துதலும், தலைவனைத் தன்னிலும் உயர்ந்தவனாக எண்ணிய நிலையில் கோசிகமாணியைப் போன்ற தவசியைத் தூதுவராகப் பயன்படுத்துதலும் அக்காலப் பண்பாட்டையும், மாதவியின் உயர்சிறப்பையும் காட்டுவனவாக அமைந்துள்ளன. மேலும், நகருக்குள்ளாகத் தூது செல்லும் நிலை மட்டுமே பெண்ணுக்கு உரியது என்பதும், வெளியிடங்களுக்குத் தூதாகச் செல்வது ஆடவர்க்குரியது என்பதும் இதனால் தெளிவாகின்றது. மேலும் தூதுச் செய்தியை வாய்மொழியாகக் கூறுவதேயன்றிக் கடிதம் மூலமாகவும் கொடுத்தனுப்புவது உண்டு என்பது இதனால் தெளிவாகின்றது.

    இவை மட்டுமன்றி வேறு சில இடங்களிலும் சிலப்பதிகாரத்தில் தூது பற்றிய குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன.

    பொதிய மலையிடத்தில் உள்ள அகத்திய முனிவன் பெற்ற தென்றல் என்ற தூதன் இளவேனில் வருகையைக் குயிலுக்கு உரைத்தான் என்று குறிப்பிடும் பகுதியில்,

    ‘‘பொதியில் மாமுனி பயந்த இளங்கால் தூதன்”

    (அ. ஆனந்தநடராசன், தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி, ப. 56)

    என்று தூது பற்றிய குறிப்பினைக் காணலாம். இதில் இளவேனில் வருகையைக் குயிலோனுக்கு உரைத்தல் என்ற தூதுச் செய்தியும், தூதன் என்ற குறிப்பால் இச்செய்தியை ஆடவரே உணர்ந்தனர் என்ற செய்தியும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    கால்கோட் காதையில் தூதர்கள் அரசியலில் பெற்றிருந்த சிறப்பினை இளங்கோவடிகள்,

    ‘‘காற்றூ தாளரைப் போற்றிக் காமின்”13

    என்று குறிப்பிடுகின்றார். நடுகற்காதையில் கடைக்கண்ணின் நோக்கத்தைத் தூது என்னும் பெயரால் அகப்பொருள் மரபுநிலைக்கேற்ப,

    ‘‘சிதாரிபரந்த செழுங்கதைத் தூதும்”14

    என்று குறிப்பிடுதலைக் காணமுடிகின்றது. தன் இரண்டடியால் மூவுலகும் இருள்தீர நடந்த திருமால், தன் அடியால் பாண்டவர்க்குத் தூதாகவும் சென்றார் என்ற குறிப்பையும்,

    ‘‘பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி”15

    என்று சிலப்பதிகாரத்தில் காணமுடிகின்றது. இவ்வாறாகச் சிலப்பதிகாரத்தில் தூது பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளதனைக் காணமுடிகின்றது.

    மணிமேகலையில் தூதுக் குறிப்புகள்

    மணிமேகலையில் தூது குறித்த செய்திகள் வெளிப்படையாக எவ்விடத்திலும் இடம்பெறவில்லை. எனினும் குறிப்பால் தூதுப் பொருண்மையை உணர்த்தும் பகுதிகள் உள்ளன.

    சித்ராபதி வயந்தமாலையை மாதவியிடம் ஊரலர் எடுத்துரைக்கச் சொல்லி அனுப்புவதும், தன்னிலைமையைச் சித்திராபதிக்கும், தோழிமார்க்கும் எடுத்துக்கூறி சொல்லி, வயந்தமாலையையே மாதவி அனுப்புவதும் தூதுப் பொருண்மையுடையன. இதனை,

    ‘‘நாவல் ஓங்கிய மாபெருந் தீவினுள்

    காவல் தெய்வம் தேவர்கோற்கு எடுத்த

    தீவகச் சாந்திசெய்தரு நல்நாள்

    மணிமேகலையொடு மாதவி வாராத்

    தணியாத் துன்பம் தலைத்தலை மேல்வர்

    சித்திராபதி தான் செல்லல் உற்று இரங்கல்

    தத்துஅரி நெடுங்கண் தன்மகள் தோழி

    வயந்தமாலையை வருக எனக்கூஉய்

    பயன்கெழு மாநகர் அலர் எடுத்து உரை என”16

    என்னும் பகுதியால் அறியலாம்.

    ‘‘மணிமேகலையை மணிபல்லவத் தீவில் வைத்துள்ள செய்தியை மாதவியிடம் கூறச்சொல்லி சுதமதியிடம் தெய்வம் கூறுவதும், அச்செய்தியைச் சுதமதி கூறுவதும் தூதுக் கூறுகளை வெளிப்படுத்தவல்லனவாகும். ஆனால் தூது என்ற சொல்லே மணிமேகலையில் வெளிப்படையாக இடம் பெறவில்லை என்பது நோக்கத்தக்கது”17 என்று அ. ஆனந்தநடராசன் தூது என்ற சொல் மணிமேகலையில் இடம்பெறாது இருப்பதைச் சுட்டியுள்ளார்.

    மணிமேகலை தூதுப் பொருண்மையுடன் இடம்பெற்றிருப்பினும் அதில் தூது என்பது வெளிப்படையாக அமையவில்லை எனத் தெளியலாம்.

    முடிவுரை

    இரட்டைக் காப்பியங்களில் சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆகிய இரண்டும் காப்பியத் தன்மை மிகுந்து தமிழின்பம் நல்கும் நூல்களாக அமைந்துள்ளன. இவற்றில் தூது பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளமை  அறியமுடிகின்றது.

    சிலப்பதிகாரத்தின் கானல்வரியில் தூது பற்றிய செய்திகள் விளக்கமாக இடம்பெற்றுள்ளன.  மாதவி தன் ஆற்றாமையைத் தீர்த்து வைக்குமாறு குருகு, அன்னம் மாலைப்பொழுது போன்றவற்றைத் தூது விடுப்பதாகப் பாடல்கள் அமைந்துள்ளன.  இவை காமமிக்க கழிபடர் கிளவித்துறை சார்ந்தனவாகவும், தூது இலக்கியத் தன்மையைக் கொண்டவையாகவும் அமைந்துள்ளன.

    சித்திராபதியின் தூதுவராக வயந்தமாலை மாதவியிடம் சென்றுள்ளதை மணிமேகலை வழி அறியமுடிகிறது. மணிமேகலையில் தூது என்ற சொல் இடம்பெறவில்லை.

    இரட்டைக் காப்பியங்களிலும் தூது ஓர் காப்பிய அங்கமாகவே இடம்பெற்றுள்ளதையும், அவை கதையோட்ட்த்திற்குப் பெருந்துணை புரிந்துள்ளதையும் இவ்ஆய்வு கட்டுரையால் அறியமுடிகிறது.

    துணைநூற்பட்டியல்

    1. அடியார்க்கு நல்லார் (உ.ஆ) சிலப்பதிகாரம்

    தமிழ்ப் பல்கலைக்கழகம்

    தஞ்சாவூர்

    முதற்பதிப்பு – 1990.

     

    1. கலைக்களஞ்சியம் தொகுதி – 6

    தமிழ் வளர்ச்சிக்கழகம்

    சென்னை

    முதற்பதிப்பு – 1955.

     

    1. இளவரசு, சோம., இலக்கிய வரலாறு

    மணிவாசகர் பதிப்பகம்

    சென்னை

    ஐந்தாம் பதிப்பு – 2002.

     

    1. ஆனந்த நடராசன், அ., தமிழில் தூது இலக்கிய வளர்ச்சி

    அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

    அண்ணாமலை நகர்

    முதற்பதிப்பு – 1997.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    இலைஇலை(இல்லை)நீர் ஏற்பேன், தலைவணங்கி பார்த்தா
    நிலையாமை சொல்லி நிமிர* -கலையாகும்,
    கீதை கொடுத்திடுவேன் குந்திமக னேகேளாய்
    பாதை வகுத்தோன் பகிர்வு…கிரேசி மோகன்….!

    * -எடுத்தது கண்டனர், இற்றது கேட்டனர் -ராமர்….!
    -கொடுத்தது கண்டனர், கீதையைக் கேட்டனர் -கண்ணன்….!

    Share
  • வாகை அள்ளு!

    கவிஞர் இடக்கரத்தான்

    எப்படியோ போகட்டும் நாடு – என்று எகத்தாளம் பேசுவதும் கேடு – தொடர்ந்து தப்புமிக நடப்பதனை துணிச்சலுடன் எதிர்க்கும் மனம் கொள்ளு – தீங்கு – கிள்ளு!
    எப்படியோ போகட்டும் என்று – உன்னுள் இருக்கின்ற மனசாட்சி கொன்று – பெரும் தப்படியில் செல்வாரை தடுக்கமனம் இல்லாமை குற்றம் – அவலம் – முற்றும்!
    தன்னலத்தார் முகத்திரையும் கிழியனும் – அவர் தலைக்கனமும் முற்றிலுமே அழியனும் – என்றும் பன்னலமும் காக்குமுயர் பண்புள்ளம் கொண்டோரின் உறவு – நல்ல – வரவு!
    நாட்டுநலம் தனைமுற்றும் மறப்பார் – குள்ள நரித்தனங்கள் செய்துவந்து பறப்பார் – பெரும் வேட்டையிட்டு நாடுதனை வேதனையில் தள்வாரை விரட்டு – சக்தி – திரட்டு!
    உன்னாலும் முடியுமடா தம்பி – நாடு உன்னையுமே இருக்குமிக நம்பி – நாளும் முன்நோக்கிச் செல்வதுதான் முழுவெற்றி கொணருமென்று முழக்கு – வெளுக்கும் – கிழக்கு!
    சொன்னதைச் செய்திடலாம் நம்பு – இந்த செகத்தைநம்பு கோலாலும் நெம்பு – வான் மின்னலெனச் செயல்பட்டு மேன்மைமிக நாடடைய வைப்பாய் – செயலில் – மெய்ப்பாய்!
    பத்துவிரல் மூலதனம் இருக்கு – என்று பயமின்றி மீசைதனை முறுக்கு – சிறு சத்தமின்றி வெற்றியுனை சங்கமித்து ஆற்றல்பறை சாற்றும் – ஊர் – போற்றும்!
    தன்னம்பிக் கைதனையும் பெருக்கு – உயர்வை தடுத்துவரும் எதிர்ப்புதனை உருக்கு – என்றும் உன்னைப்புறம் தள்ளும்குறு உணர்வுகளை வேருடனே கிள்ளு – வாகை – அள்ளு!

    கவிஞர் இடக்கரத்தான் – 03.12.2018

    Share