வியப்பு தோன்றும்!

கவிஞர் இடக்கரத்தான்

வான்நிலவும் கடலிறங்கி நீந்தக் கூடும்
   வஞ்சியரும் நெடும்தாடி வளர்க்கக் கூடும்
தேன்சிந்தும் மலர்க்கூட்டம் பறக்கக் கூடும்
   தேரினையும் எறும்புகளும் இழுக்கக் கூடும்
மீன்கூட்டம் மணல்மேட்டில் வாழக் கூடும்
   மின்வெட்டும் நிரந்தரமாய் மறையக் கூடும்
வீண்வார்த்தை அரசியலும் பேசி வாழ்வோர்
   வாய்மைதனில் நடந்திடுங்கால் வியக்கத் தோன்றும்!

புயலதுவும் தென்றல்போல் தழுவக் கூடும்
   புலிபோலும் எலிகளுமே பாயக் கூடும்
மயில்களெலாம் குயில்களென இசைக்கக் கூடும்
   மதுவும்தான் உயிர்காக்கும் பொருளாய் மாறும்
அயல்மொழியும் தமிழின்முன் மண்டி இட்டு
   அடிமைபோல் ஏவல்களும் செய்யக் கூடும்
செயல்தனிலும் தூய்மைதனைக் காக்கும் நல்ல
   சீர்கொண்ட அரசியலால் வியப்பு தோன்றும்!

– 09.12.2018

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *