புத்தாண்டே நீ வருக
புத்துணர்வை நீ தருக
நித்தமும் நாம் மகிழ்ந்திருக்க
நிம்மதியை நீ தருக
சொந்தம் எலாம் சேர்ந்திருக்க
சுப ஆண்டாய் நீவருக
எம்தமிழர் வாழ்வில் என்றும்
இன்பம் பொங்க நீவருக
வாருங்கள் என அழைத்து
வரும் மக்கள் வரவேற்கும்
சீர் நிறைந்த நாட்டிலிப்போ
சீர் அழிந்து நிற்கிறது
யார் வருவார் சீர்திருத்த
எனும் நிலையே இருக்கிறது
நீ வந்து புத்தாண்டே
நிலை திருத்தி வைத்துவிடு
ஆட்சி பீடம் ஏறுகின்றார்
அறம் வெறுத்து ஒதுக்குகிறார்
ஆட்சி பீடம் அமரச்செய்தார்
அல்லல் பட்டே உழலுகிறார்
அறம் வெறுத்து நிற்பவர்கள்
அறம் பற்றி உணர்வதற்கு
திறல் உடைய மருந்துடனே
நீ வருவாய் புத்தாண்டே
மதம் என்னும் பெயராலும்
இனம் என்னும் பெயராலும்
மனித உயிர் மாய்க்கின்ற
மாண்பற்ற செயல் ஆற்றும்
ஈனத் தனம் மிக்கோர்க்கு
இரக்கம் பற்றி உணர்த்துதற்கு
இரண்டு ஆயிரத்து பத்தொன்பதே
எழுந்து வா எழுச்சியுடன்
நல்ல வல்ல தலைவர்கள்
நமை விட்டுச் சென்றுவிட்டார்
நல்ல பல செய்திவந்தும்
நம்மில் பலர் திருந்தவில்லை
சொல்ல வல்ல வாழ்க்கையினை
எல்லோரும் வாழ்ந்து நிற்க
வல்லதொரு ஆண்டாக
மலர்ந்து விடு புத்தாண்டே
பேராதனை பல்கலைகழக தமிழ் சிறப்புப் பட்டதாரி.அத்தோடு, கல்வியியல் துறையில் டிப்ளோமா, சமூகவியல் துறையில் டிப்ளோமா,கற்பித்தல் நுணுக்கத்தில் முதுகலை தத்துவமானி பட்டங்களையும் பெற்றவர்.கல்வித்திணைக்களத்தில் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும்,வட இலங்கை புனித பிரான்சிஸ் சேவியர் செமினறியில் பகுதி நேர தமிழ், இந்துகலாசார விரிவுரையாளராகவும், யாழ்/ பேராதனை பல்கலைக்கழகங்களின் வெளிவாரி பட்டப்படிப்புப்பிரிவில் தமிழ் விரிவுரையாளராகவும்,இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தில் அறிவிப்பாளராகவும், நாடகத்தயாரிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். மாற்றம்,உதயன்,ஈழ நாடு, சிந்தாமணி, உதயசூரியன் இந்துசாதனம், மெல்லினம், உதயம்,பத்திரிகைகளில்.. கவிதை, கட்டுரை,சிறுகதை,விமர்சனம், ஆகியவற்றை எழுதியுள்ளார்.10க்கு மேற்பட்ட நூல்களையும்,100 ஓரங்க நாடகங்களையும்,10க்கு மேற்பட்ட வில்லுப்பாட்டுக்களையும்,20க்கு மேற்பட்ட நாட்டிய நாடகங்களையும், எழுதியுள்ளதோடு.. “முதற்படி” என்னும் குறுந்திரைப்படத்துக்கு கதை வசனம் எழுதி நடித்து 2007ல் அவுஸ்த்திரேலியாவில் மெல்பேண் நகரில் வெளியீடும் செய்யப்பட்டது.ஈழத்தில் பல ஸ்தலங்களுக்கு ஊஞ்ஞல் பாடியுள்ளதோடு.. அண்மையில் மேற்கு அவுஸ்த்திரேலியா பேர்த் மாநகரில் கோவில்கொண்டிருக்கும் பாலமுருகப்பெருமான் மீதும் ஊஞ்ஞல் பாடியுள்ளார்.2008ல் மதுரைமாநகரில் நடைபெற்ற அகில உலக சைவ சித்தாந்த மாநாட்டில் புராணப்பகுதிக்கு தலைவராகவும், ஆய்வுக் கட்டுரையாளராகவும் விளங்கியுள்ளார்.அண்மையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்று அங்கெல்லாம்.. தமிழ்,கலாசாரம், இந்துசமயம்,சம்பந்தமாக விரிவுரைகள் ஆற்றியுள்ளார்.லண்டனில் ஜி.ரி.வி. நிலையத்தார் சமயம்,தமிழர்பண்பாடுசம்பந்தமாக இரண்டு தினங்கள் பேட்டி கண்டு நேரடியாக ஒளிபரப்புச்செய்தனர்.
தற்போது மெல்பேண் தமிழ்ச்சங்கத்தின் ஆலோசகராகவும்,விக்டோரியா இந்து கல்விமையத்தின் ஆலோசகராகவும், தமிழ் அவுஸ்த்திரேலியன் சஞ்சிகையின் இணை ஆசிரியராகவும் விளங்குகிறார்.
பூர்வீகம் தமிழ்நாடு தாராபுரம். வளர்ந்தது, படித்தது, வேலை பார்த்தது, யாவுமே இலங்கையில்..தற்போது குடியுரிமை பெற்றிருப்பது அவுஸ்த்திரேலியாவில்.