-செண்பக ஜெகதீசன்…

இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்.

                                             -திருக்குறள் -1044(நல்குரவு)

புதுக் கவிதையில்…

புகழ்ந்து சொல்லத் தகுதிமிக்க
உயர்குடிப் பிறந்தோரிடத்தும்,
இழிசொல் பிறப்பதற்கு
ஏதுவாகிய சோர்வினை
உண்டாக்கிவிடும்
வாழ்வில் வறுமை என்பது…!

குறும்பாவில்…

புகழ்ச்சிக்குரிய உயர்குடிப் பிறந்தோரையும்
இழிசொல் பேசவைக்கும் சோர்வினை
வரவைத்துவிடும் வறுமை…!

மரபுக் கவிதையில்…

வாழ்வில் யாரும் விரும்பாத
வறுமை யென்பது வந்துவிட்டால்,
வாழ்த்திச் சொல்லத் தகுதியுள்ள
வளமிகு உயர்குடிப் பிறந்தோரையும்,
தாழ்ந்தே நிலையில் கீழிறங்கித்
தரமிலா இழிசொல் பேசவைக்கும்
சூழ்நிலை கொணரும் சோர்வினையே
சேர வைத்திடும் வறுமையதே…!

லிமரைக்கூ..

வந்துவிட்டால் வாழ்வில் வறுமை,
வந்துவிடும் வளமிகு உயர்குடிப் பிறந்தோர்க்கும்
வெந்திட இழிசொல்பேசும் சிறுமை…!

கிராமிய பாணியில்…

பொல்லாதது பொல்லாதது
வறும பொல்லாதது,
வாழ்க்கயில வறும பொல்லாதது..

வாழ்த்திப் பேசத் தகுதியுள்ள
ஒசந்த குடும்பத்தில உள்ளவனயும்,
வறுமவந்து சோர்வத் தந்து
வகைக்கு ஒதவாத தரங்கொறஞ்ச
கெட்டவார்த்த பேசுற
கீழ்நெலக்கிக் கொண்டுவந்திடுமே..

அதால
பொல்லாதது பொல்லாதது
வறும பொல்லாதது,
வாழ்க்கயில வறும பொல்லாதது…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *