நல்லவை சுமந்து நன்மைகள் ஆற்றின் நாடு போற்றுமடா – நல்லது

அல்லவை சுமந்து அல்லல்கள் வளர்ப்பின் அகிலம் தூற்றுமடா!

 

பிறப்பின் பயனும் பிறர்க்கெனச் சொல்லும் பணியை ஆற்றிடடா – தனிச்

சிறப்பை அதிலும் செலுத்தியும் வாட்டும் சிறுமை தூற்றிடடா!

 

வாழ்வின் பயனும் புகழெனச் சொல்லும் வாழ்வை அமைத்திடடா – மிகத்

தாழ்வுறும் நினைவை அறவே தள்ளியும் தர்மம் சமைத்திடடா!

 

ஏற்றமும் இறக்கமும் இரட்டைப் பிறவிகள் என்பதை அறிந்திடடா – நிலை

மாற்றியும் இயற்கை காட்டுதல் உணர்ந்து மமதை எறிந்திடடா!

 

காற்று என்றும் ஓர்திசை தன்னில் காலமும் வீசாது – நலம்

ஆற்றும் செயலில் நன்மைகள் விளையின் நாடுனை ஏசாது!

 

நல்லவை விதைப்பின் நன்மைகள் விளையும் நினைவில் ஏற்றிடடா – துயரில்

தள்ளிடும் நினைவுகள் தன்னைத் தள்ளும் தர்மம் போற்றிடா!

 

நாடுனைப் போற்றும் வண்ணம் நடந்து நற்பெயர் பெற்றிடடா – பெரும்

கேடன் என்றுனை ஊரார் சாடா கொள்கையில் முற்றிடடா!

 

மகிழ்ச்சி என்பது மனத்துள் உள்ளது மறந்தும் போகாதே – நிகழும்

நிகழ்ச்சிகள் யாவும் ஈசன் செயல்தான் எவரையும் நோகாதே!

 

இறைவன் வழங்கும் கடுகுள் மலையும் இருக்கும் நம்பிடடா – கூர்

அறிவும் காலமும் சமமாய் வழங்கிய அவனருள் கும்பிடடா!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *