பேராசிரியர் ம. பரிமளா தேவி

ஒப்பதவாடி ஒன்றியத்துல இருக்குற நடுநிலைப்பள்ளிக்கு டிரான்ஸ்சர் வாங்கிட்டு வரும்போது அவ்ளோ சந்தோசம் ஜானகி டீச்சருக்கு. எவ்ளோ பெரிய வேலையிலிருந்தாலும் உள்ளூருல வேலைப்பாத்தா மரியாதை இல்லைன்னு சொல்வாங்க.  ஆனா பல வருச கனவு தான் படித்த பள்ளியில வேலைப்பாக்கனும்னு. அந்த ஆசை இப்போதான் நிறைவேறியது.

வண்டியில போனா பத்து நிமிச்சத்துல போயிரலாம். அப்படி போகாம நடந்து போய்க் கொண்டிருந்தாள் ஜானகி. சின்ன வயசுல தான் நடந்து போகும்போது அவ்ளோ சந்தோசமா இருக்கும். வழியில போகும் போது பூத்திருக்குற ஊமத்தப் பூ குவளைப்பூ எல்லாம் பறிச்சு கையில வைச்சுக்கிட்டு போயிருக்கேன்.  முதல் முதல்ல பள்ளிக்கூடம் போனபோது என்னோட பிறந்த தேதியை வாத்தியார் கேட்டாங்க.

ஏனோ அம்மாவுக்கு ஞாபகத்துல இல்லை. ஏன் எழுதி வைக்கலையான்னு கேட்டத்துக்கு எரவானத்துல எழுதி வைச்சிருந்தேன் எங்கயோ காணாமப் போயிடுச்சு என்றாள். ஜப்பசி மாசம் நல்ல மழைபெய்ஞ்சுட்டு இருந்துச்சு. அப்போ தான் இவ பொறந்தா சார்ன்னு அம்மா சொன்னாங்க. வாத்தியார் சிரிச்சிட்டு அவரா நவம்பர் பதினாலுன்னு எழுதிட்டாரு. அது போலத்தான் என் வீட்ல இருந்து படிக்கப்போன எல்லாத்துக்கும் வாத்தியார் எழுதினதுதான் பிறந்த தேதி. ஓடை வழியாத்தான் பள்ளிக்கூடத்துக்கு போகனும். மழைக்காலங்களில் நிறைய ஊமத்தப் பூ பூத்திருக்கும்.

வெள்ளையா நிமிர்ந்து பீப்பீ போல அழகா இருக்கும். அத பார்த்துட்டே போனா அவ்ளோ சந்தோசமா இருக்கும். பள்ளிக்கூடத்துக்கு சீக்கரமா போய் பசங்க எல்லாம் கிரவுண்டல வாத்தியார் வர வரைக்கும் விளையாடிட்டு இருப்போம். விளையாட்டு ஆக்கபூர்வமாக எல்லாம் இருக்காது. ஆலமர விழுதை பிடிச்சுத் தொங்கிட்டு இருக்குறது. பச்சை குதிர தாண்டுறது. பட்டாட்டம், கில்லி ஆடுறது, கோலி, பம்பரம்னு விளையாடிட்டு இருப்போம். வாத்தியார் வந்ததும் முதல்ல வேலைக் குடுப்பாரு. எல்லாரும் வாங்க.

 

கிரவுண்டல இருக்குற குப்பையை எடுக்கன்னு சொல்வாரு. பொம்பள பிள்ளைகள வகுப்பறையை கூட்ட சொல்வாங்க. ஆயம்மா இல்லாத பள்ளிக்கூடம். எங்க வேலைகளை நாங்களே பாத்துகுவோம். மஞ்சுமில் போத்திய கூரையிலும் மரத்தடியிலும் படிச்சோம். இப்போ பள்ளிக்கூடத்துக்கு கட்டிடம் சுற்றுச்சுவர் எல்லாம் வந்துருச்சு. பள்ளிக்டம் எவ்ளோ மாறிபோச்சு.

டீச்சா் …சத்தீஷ் என்ன கிள்ளிட்டான்

பாலு பொய் சொல்றான் டீச்சா்.

சத்தீஷ் பொய் சொல்றான் டீச்சா்.

டேய்.. வாங்க ரெண்டு பேரும். போடுங்க தோப்புக்கரணம் ஐம்பது வரைக்கும்.

இனி இப்படி செய்யமாட்டோம்னு சொல்லிட்டே போடுங்க. ஆறாம் வகுப்பில் நடந்துக்கொண்டிருந்த கூத்தைப் பாத்துட்டே ஏழாம் வகுப்புக்குச் சென்றாள்.

குட்மானிங் டிச்சா்….

குட்மானிங்.

எல்லாரும் அட்டனன்ஸ் சொல்லுங்க.. என்று வருகைப் பதிவு நோட்டை எடுத்து ஒவ்வொரு பெயர்களாக அழைத்தாள்.

கார்த்திகா.

உள்ளேன் டீச்சா்.

தனுஷ்.

உள்ளேன் டீச்சர்.

திருப்பதி.

உள்ளேன் டீச்சா்.

ராஜா.. ராஜா…

உள்ளேன் டீச்சா்.

“அட்டனென்ஸ் சொல்லாம என்ன பண்ணிட்டு இருக்க.. டீச்சா் இவன் என்ன கருப்பான்னு கூப்பிடுறான் டீச்சா்”. “திரு இங்க வா இனி யாரையும் இப்படி கூப்பிடக் கூடாது பேர் சொல்லித்தான் கூப்பிடணும் சரியா”

ராஜா “டீச்சர் நீங்க ஒன்னும் ஃபீல் பண்ணாதிங்க இளைய தளபதி விஜய் கருப்புத்தான் எனக்கு ஒன்னும் பிராப்பளம் இல்ல” என்றான். எனக்கு சிரிப்பா வந்தது. சினிமா சின்னக்குழந்தைக்கு எப்படி போய்ச் சோ்ந்திருக்குன்னு. இந்தக் காலத்து பசங்க ரொம்ப மாறிட்டாங்கன்னு தெரியுது. அப்போ மூக்கின்னு கூப்பிட்டத்துக்காக மாசக்கணக்கில பேசாம இருந்தது ஞாபத்துக்கு வந்தது. கருப்பி, முட்டக்கண்ணி, குள்ளச்சி, ஓட்டப்பள்ளன், சின்னக்குஞ்சி, மூத்திரவண்டி இப்படி எல்லாம் பேர் சொல்லி கூப்பிட்டு இருக்கோம்.

இப்ப போல எல்லாம் மாணவர்கள் தப்பு பண்ணா கண்டிக்காம தண்டனை குடுக்காம அப்போ இருந்ததில்லை. சமூக அறிவியல் வாத்தியாருன்னா வகுப்புலே ஒன்னுக்கு போயிருவோம் அவ்ளோ பயம். வகுப்புல சாக்பீஸ் எடுத்து சின்ன வட்டத்தை போட்டுவிடுவார். அந்த வட்டத்துகுள்ள நிக்க சொல்வார். யார் வீட்டுப்பாடத்தை செய்யலையோ அவங்கள வட்டத்துக்குள்ள நிக்கவைச்சு அவங்க கையை தன் கையில பிடிச்சிட்டு சூத்தாம்பட்டையில அடிப்பார். வட்டத்தை விட்டு வெளியே வரக்கூடாது.  அப்படி அடிக்கும்போது வெளியே வந்துட்டா இன்னும் பலமாக விழும். அவர் வகுப்புல மட்டும் மூணு நாலு மூங்கில் குச்சி உடையும்.  கிளாஸ் லீடா் வீட்ல இருந்து வரும்போது தினமும் மூங்கில் குச்சி கொண்டு வரணும். இல்லைன்னா முதல்ல அவனுக்கு விழும்.  எல்லா டீச்சரும் கையிலத்தான் அடிப்பாங்க. கணக்கு டீச்சர் மேரி மட்டும் ஸ்கேல் வைச்சு கையைத் திருப்ப சொல்லி முட்டில அடிப்பாங்க. இரண்டு மூணு நாளைக்கு கையைத் தூக்கி எந்த வேலையும் செய்ய முடியாது.

வாத்தியார் எவ்ளோ அடிச்சாலும் ஒருத்தங்களும் வீட்டுக்கு போய் சொல்ல மாட்டோம். பள்ளிக்கூடத்துக்கு பின்னாடி இருந்த டோரியா பூந்தோட்டத்துல எல்லாரும் போய் கூட்டம் போட்டு வாத்தியார் தப்பு பண்ணா நம்மள அடிக்கிறாரு. மத்தப்படி நம்மள எவ்ளோ நல்லா பாத்துகிறாரு. தினமும் மத்தியானம் என்ன நடக்குது தெரியாதா உனக்கு. வகுப்புல உக்காந்து சாப்பிடற எல்லா வாத்தியாரோட டிபன் பாக்சையும் பிள்ளைகளை கழுவச் சொல்றாங்க. அவங்க பையை தூக்கிட்டு போறது. அவங்க வீட்டுக்கு போய் வேலை செய்ய சொல்றது, இத எல்லாம் செஞ்சிட்டு இருந்தோம். அப்ப அவர்தான மத்த டீச்சருங்கிட்ட நமக்காக சண்டைப் போட்டாரு.  மாணவர்கள் உங்க வீட்டு வேலைக்காரர்கள் இல்லை அவங்க படிக்கத் தான் வந்திருக்காங்கன்னு சொல்லி.. கூட்டம் முடிந்தது.

ஊர்ல டீவியெல்லாம் இல்லை.  பஞ்சாயத்தில மட்டும் தான் இருந்தது. செய்தி மட்டும் போட்டுட்டு நிறுத்திருவாங்க. படம் எல்லாம் பாத்ததே இல்லை. கூலி வேலை பாக்கற அப்பா அம்மா வாழ்க்கையை நடத்துறத்துக்கு ரொம்ப கஷ்டபட்டாங்க. பள்ளிக்கூடத்துக்கு மாணவர்களை படத்துக்கு கூட்டிட்டு போகணும்னு ஆணை வந்திருந்தது. எல்லா பிள்ளைகளையும் தன் சொந்த செலவுல வாத்தியார் கூட்டிட்டு போனாங்க.

அப்போ பார்த்த படங்கள் தான் அனகோண்டா, ஜீராசிக் பார்க், டைட்டானிக் படம் எல்லாம். அவர் இல்லாட்டி சினிமா எப்படி இருக்கும்னு கூட தெரியாம போயிருக்கும். அறிவியல் கண்காட்சி, கலைவிழான்னு எல்லா ஊருக்கும் கூட்டிட்டு அலைஞ்சி திரிஞ்சவர். மதியம் சாப்பிட போகும்போது   ஒரு திருக்குறள் சொல்லிட்ட தான் சாப்பிடனும். வாத்தியார் எங்ககூடவே நின்னுட்டு இருப்பார். ரொம்ப அன்பாக நடந்து கொண்டு இருந்தார். என்னவோ தெரியல பள்ளிக்கூடத்துக்கு வாத்தியார் வரல. என்ன நடந்ததுன்னு தெரியல. மத்தவங்கள கேட்கவும் பயமா இருந்தது. எல்லா வாத்தியாரும் அவரப் பத்தி தப்பா பேசிட்டு இருந்தாங்க.

பள்ளிக்கூடத்துல இருந்து விட்டு வந்த இந்த பதினைஞ்சு வருசத்துல ஒரு முறைக்கூட வாத்தியார பாக்கல. ஆனா அடிக்கடி நினைச்சுட்டு இருப்பேன். ஏனோ ஒரு தயக்கம் என்னன்னு சொல்லத் தெரியல. அவரைப் பாக்கும் போது எப்பவும் வாத்தியாரா நான் பாத்ததே இல்லை. நல்ல தந்தையைப் போல் என் படிப்பில் அவ்வளவு அக்கறையோடு இருந்தவர். முகம் வாடி இருந்தா அவருக்கு தாங்கிக்கவே முடியாது.

என்ன ஆச்சு ஜானகி உடம்புக்கு முடியலையா. மாத்திரை வாங்கிவரவான்னு கேட்பார். நோட்ஸ் வாங்க வீட்டுல பணம் கொடுக்கலங்கற தெரிஞ்சதும் அவரோட நோட்ஸ் எடுத்துக் கொடுத்திட்டாரு. பரிட்சை வரை படிச்சிட்டு திரும்ப கொடுத்திருன்னு சொன்னதும் நானும் வாங்கிப் படிச்சசேன். கல்லூரியில என்னத்துறை எனனோட எதிர்காலத்திற்கு நல்லா இருக்குன்னு அப்பாவிடம் சொல்லிட்டு போனதா பின்னாடித்தான் எனக்கே தெரிஞ்சது.

என் வாழ்க்கையில என் வாழ்க்கையில முக்கியமான தருணங்களில் அவர் தான் முடிவு பண்ணியிருக்காருங்கறதும் எனக்கு தெரியில. ஒரு நாள் திடீா்ன்னு என் மொபைல்க்கு தெரியாத எண்ணில் இருந்து ஒரு அழைப்பு வந்தது. “அம்மா ஜானகி நல்லா இருக்கியாமா?.. ம்ம்.. நீங்க யாருன்னு…. நான் தாம்மா வாத்தியாரு மறந்துட்டியா? சந்தையில அப்பாவ பாத்தேன் மா. அவருகிட்ட உன் நம்பர வாங்கினேன். நேரம் கிடைச்சா பேசுமான்னு வைச்சிட்டாரு..” எனக்கு கொஞ்ச நேரம் தலைக்கால் புரியல. இத்தனை வருசம் கழிச்சும் என்ன ஞாபகத்துல வைச்சி இருக்காருன்னு.

வாத்தியார் எங்க அப்பா கிட்ட பொன்னு நல்லா படிக்கறா ஏன் அவள இங்கலீஸ் மீடீயத்துல போடக்ககூடாதுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பாரு. எங்க அப்பா மேயுற மாடு எங்க மேய்ஞ்சா என்ன சார்ன்னு சொல்லிட்டாரு. எங்க அப்பா மேல கோப கோபமா வந்துச்சு . நம்மள வாத்தியாரு முன்னாடி மாடுன்னு சொல்லிட்டாரேன்னு.

அன்பரசு என் கூட படிச்ச பையன். இன்னிக்கு பெரிய வேலையில இருக்கறதுக்கு என் வாத்தியார் தான் காரணம். ஒரு வாரமா பள்ளிக்கூடத்துக்கு வராத அன்பரச தேடிட்டு வாத்தியார் அவன் வீட்டுக்கே போயிட்டாரு. அங்க போன அப்ப தான் அவன் நிலைமை என்னனு வாத்தியாருக்கு தெரிஞ்சது. நார்மில்லுக்கு வேலைக்கு போயிட்டு வரும்போது வேகமா வந்த கார் மோதி விபத்துல அவனோட அப்பா இறந்துப்போனது தெரி்ந்தது.

அவங்க அம்மா இனி எப்படி இவன பள்ளிக்கூடத்துக்கு அனுப்ப முடியும். எனக்கு இருந்த ஓரே ஆதரவு இவங்க அப்பா தான். மூணு பிள்ளைகளை நான் ஒருத்தி எப்படி கரையேத்த முடியும்னு அழுதாங்க. வாத்தியாருதான் அவங்கள சமாதானப்படுத்தி அன்பரச தன் வீட்ல இருந்து படிக்க வைச்சு பெரிய ஆளாக்கிவிட்டார். இன்னிக்கு அன்பரசு அரசாங்க வேலையில இருக்கறதுக்கு அவர்தான் காரணம்.

பள்ளிக்கூடத்துல யாராச்சும் சாப்பிடாம இருந்தா தன் சாப்பாட்ட அப்படியே எடுத்துக் கொடுத்துடுவார். டீ.வி.எஸ். பிப்டில தான் பள்ளிக்கூடத்துக்கு வருவார். வண்டில வரும்போதும் போகும்போதும் இரண்டு மூணு பிள்ளைங்க கூட்டிட்டு போய் அவங்க வீட்ல விட்டுத்தான் போவார்.

வாத்தியாருக்கு கல்யாணம் ஆகி பதினைஞ்சு வருசமாகியும் குழந்தையே இல்லை. அவர் வகுப்பில் இருக்கிற அத்தனை குழந்தைகளையும் தன் குழந்தையாகவே பாத்துக்கொண்டவர். பள்ளிக்கூடத்துல ஜானகியை வகுப்புல மாணவர்கள் முன்பு கன்னத்தை கிள்ளி செல்லமா உன்னோட பிறந்த நாளுக்கு என்ன வாங்கிட்டு வந்திருக்கன்னு மகிழ்ச்சியா பேசிட்டு இருந்தத.. மேரி டீச்சா் பாத்துட்டு போய் தலைமையாசிரியிடம் ஆசிரியர் மேல் பாலியல் ரீதியா புகார் சொன்னதும் அதனால மனம் உடைஞ்சு வாத்தியார் வேலையை விட்டு நின்னது யாருக்கும் தெரியாமல் போனது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *