நூல் மதிப்புரை – இரட்டைக் காப்பியங்களில் துணைநிலை மாந்தர்
மதிப்புரையாளர் – சோம. கிருஷ்ணமூர்த்தி (முனைவர் பட்ட ஆய்வாளர்)
நூலாசிரியர் – முனைவர் த. ஆதித்தன்
வெளியீடு – முக்கடல் பதிப்பகம்
11, முப்பத்து மூன்றாம் தெரு,
பாலாஜி நகர் விரிவு 3
புழுதிவாக்கம்
சென்னை – 600 091
கைப்பேசி : 9444365642
ISBN 978-81-907781-7-7
முதல் பதிப்பு : ஏப்ரல் 2017
பக்கம் : 152 விலை : ரூ. 120
தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கிய, இலக்கண வகைகள் பல்கிப் பெருகியுள்ளன. அதிலும் குறிப்பாக, காப்பியங்கள் மிகப் பெருமை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் என வகைப்படுத்தப் பட்டுள்ளன.
சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன முறையே ஐம்பெருங் காப்பியங்களாகவும் நீலகேசி, சூளாமணி, நாககுமார காவியம், உதயண குமார காவியம், யசோதர காவியம் ஆகியன முறையே ஐம்பெருங் காப்பியங்களாகவும் பட்டியலிட்டுள்ளனர்.
ஐம்பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்கப்படுகின்றன. ஏனெனில் கதைத் தொடர்பாலும் காலத் தொடர்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதால் அவ்வாறு வழங்கப்பெறுகின்றது.
மறுபிறப்புக் கொள்கைகளைப் பல்வேறு சமயங்களும் எடுத்துக் கூறுவது போல் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மறுபிறப்பு பற்றியும் முற்பிறவி மாந்தர்களைப் பற்றியும் அவர்களது வரலாறு மற்றும் காப்பியப் போக்கிற்கு எவ்வாறு துணைபுரிகின்றனர் என்பதைப் பற்றியும் நூலாசிரியர் முதல் இயலில் தௌpவுபடுத்தியுள்ளார்.
சிலப்பதிகாரக் காப்பியத்தில் உள்ள கோவலன், கண்ணகி, மாதவி ஆகியோர் சமணத் தொடர்புடையவர்களாகவும் அவர்களது மகள் மணிமேகலை பௌத்தத் தொடர்புடையவளாகவும் இருப்பதையும், இந்தத் திடீர் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதனையும் நூலாசிரியர் விளக்கியுள்ள திறம் சிறப்பிற்குரியது.
மணிமேகலையின் சிறப்பிற்கு அமுதசுரபியும் ஒரு காரணமாகும். மணிமேகலைக் காப்பியத்தில் வரும் புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாகவும் அவனிடம்தான் அமுதசுரபி இருந்ததையும் அது எவ்வாறு மணிபல்லவத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கைக்கு வந்தது என்பதையும் பின்னர் மணிமேகலைக்குக் கிடைத்த விதத்தையும் நூலாசிரியர் மிகவும் நிரலாகக் கூறியுள்ளார்.
இல்லறமே நல்லறம் என்பதற்கேற்ப குடும்பவாழ்க்கை என்பது மிகச் சீரிய அமைப்பாகும். தனிமனிதன் குடும்பமாவதும் குடும்பம் சமுதாயமாவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சமுதாயம் நலம் பெற குடும்பச் சூழ்நிலையே அடிப்படை ஆதாரமாகும்.
சிலப்பதிகாரத் துணைநிலை மாந்தர்களில் இல்லற மாந்தர்களாகப் பலர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் மாசாத்துவான் – அவனது மனைவி, மாநாய்கன் – அவனது மனைவி, கார்த்திகை – வார்த்திகன், பாண்டியன் நெடுஞ்செழியன் – கோப்பெருந்தேவி, சேரன் செங்குட்டுவன் – வேண்மாள், மாதரி, ஐயை போன்றோர் இடம் பெற்றிருப்பதனை நூலாசிரியர் மிகத் தௌpவாக இரண்டாம் இயலில் எடுத்தாண்டுள்ளார்.
மணிமேகலைக் காப்பியத்தில் துணைநிலை மாந்தர்களில் இல்லற மாந்தர்களாகச் சுதமதி, கோதமை, ஆதிரை – சாதுவன், பீலிவளை – நெடுமுடிக்கிள்ளி, வயந்தமாலை ஆகியோர் இடம்பெற்றிருப்பதனையும் நூலாசிரியர் அழகாக விளக்கியுள்ளார்.
துறவறம் என்பது குடும்ப வாழ்க்கையை விட்டு விலகுவது அல்ல. மாறாக, உலகப் பொருள்களின் மேலுள்ள பற்றுக்களை விடுதலே துறவறமாகும்.
இரட்டைக் காப்பியங்களில் துணைநிலை மாந்தர்களில் துறவற மாந்தர்கள் பற்றி இவ்வியல் விளக்குவதாக அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் மாடலன் மறையோன், மாங்காட்டு மறையோன், கவுந்தி அடிகள் ஆகியோர் துறவற மாந்தர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். அவர்களுள் மாடலன் மறையோன் சைவத் துறவியாகவும் மாங்காட்டு மறையோன் வைணவத் துறவியாகவும் கவுந்தி அடிகள் சமணத் துறவியாகவும் காட்டப்பட்டுள்ளனர்.
மணிமேகலையில் அறவண அடிகள், விருச்சிக முனிவர் துணைநிலை மாந்தர்களுள் துறவற மாந்தர்களாக இடம்பெற்றுள்ளனர்.
“அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”
“உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”
“ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்”
என்ற கோட்பாட்டை உடைய சிலப்பதிகாரமும்,
“மனித நேயத்தை” உணர்த்துவதற்காகவே படைக்கப்பட்ட மணிமேகலையும் சிறந்த இரட்டைக் காப்பியங்களாகவும் அந்தக் காப்பிய வளர்ச்சிக்குப் பெருந்துணையாகவும் துணைமை மாந்தர்கள் முதன்மைத் தன்மையுடன் விளங்குவதை நூலாசிரியர் ஆய்வு நோக்கில் கையாண்டுள்ள திறம் மிகவும் போற்றுதலுக்குரியது. இந்நூலானது ஆய்வு மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி நூலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.
மதிப்புரையாளர் – சோம. கிருஷ்ணமூர்த்தி (முனைவர் பட்ட ஆய்வாளர்)
தமிழ்த்துறைத் தலைவர்,
பிர்லா பொதுப் பள்ளி,
தோகா, கத்தார்.
—————————————————————————————————————————
சிறப்பான நூல் மதிப்புரை, நூலின்
மதிப்பைக் காட்டுகிறது
Thankalin nool mathipurai nandraka ullathu.