Blog

  • வரவேற்போம் வாருங்கள் !

    எம் . ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

             தைபிறந்தால் வழிபிறக்கும்

                   தானென்று நாம்நினைப்போம்

            தைமகளும் சேர்ந்துநின்று

                   சித்திரையை வரவேற்பாள்

             பொங்கலொடு கிளம்பிவரும்

                    புதுவாழ்வு தொடங்குதற்கு

             மங்கலமாய் சித்திரையும்

                     வந்துநிற்கும் வாசலிலே  !

     

             சித்திரை என்றவுடன்

                    அத்தனைபேர் மனங்களிலும்

             புத்துணர்வு பொங்கிவரும்

                    புதுத்தெம்பு கூடவரும்

             எத்தனையோ மங்கலங்கள்

                     எங்கள்வீட்டில் நிகழுமென

              மொத்தமாய் அனைவருமே

                       முழுமனதாய் எண்ணிடுவார் !

     

               உழவரெலாம் மகிழுதற்கு

                        உதவிடட்டும் சித்திரையும்

                உழைப்பவர்க்கு மனநிறைவை

                         ஊட்டிடட்டும் சித்திரையும்

                 நாட்டினிலே அமைதிவர

                          நல்வரவாய் இருந்திடட்டும்

                 நமையெல்லாம் மகிழ்விக்க

                          சித்திரையை வரவேற்போம் !

     

                   ஈழத்தில் சித்திரையும்

                           இனிப்பாக இருக்கட்டும்

                   இந்தியாவில் சித்திரையால்

                            எல்லோரும் சிறக்கட்டும்

                    வாழவந்த நாட்டினிலும்

                              மனங்குளிரச் செய்யட்டும்

                     வாழ்த்திநின்று சித்திரையை

                               வரவேற்போம் வாருங்கள் !

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180404 – Achyuta -Dialogue with Arjuna -lr-graphite and watercolour A4

    ”சங்குளார் கைகளில் சவ்யசாசி அர்ஜுனர்
    தொங்கிட கீதாவ தாரம்காண்: -செங்கண்மால்
    சொல்லிட சவ்யசாசி வில்லாளி கூறினன்,
    கொல்லுவேன் நூறினைக் காண்’’…..கிரேசி மோகன்….!

    சவ்யசாசி -இரண்டு கைகளாலும் வில்விடும் தேர்ச்சி பெற்றவன் பார்த்தன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி 155-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நீரில் துள்ளும் மீனைப் பிடிக்கும் ஆவலில் துணியைப் பிடித்திருக்கும் இந்தச் சிறார்களின் முகத்தில் மகிழ்ச்சி துள்ளிவிளையாடக் காண்கிறேன்!

    கிராமத்துச் சிறுவர்களின் இயல்பான இச்செயலை வெகு நளினத்தோடு படம்பிடித்துவந்திருக்கும் திரு. வெங்கட் சிவாவுக்கும், இந்தப் படத்தைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்த, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர், திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி!

    தூண்டில்போட்டுப் பிடித்தால்தான் மீன் சிக்குமா? இல்லை…எம்போல் துணிபோட்டுப் பிடித்தாலும் அது சிக்கும் என்று நமக்குச் சொல்லித்தருகிறார்கள் இச்சிறுவர்கள்!

    இனி, இப்படத்திற்குக் கனித்தமிழில் கவிபாட கவிஞர்களை அன்போடு அழைக்கிறேன்!

    *****

    ஐப்பசி மாத அடைமழையில் குட்டையில் துள்ளும் குட்டிமீன்களைத் துணிபோட்டுப் பிடிக்கக் காத்திருக்கும் சிறுவர்களை நமக்கும் காட்டிக் குதூகலிக்கிறார் திரு. ஆ. செந்தில்குமார்.

    சிறு வயதில்…
    ஐப்பசி மாசம் அடமழ…
    அப்பவும் குட்ட நெரம்பல…
    முட்டியளவு தண்ணிக்குள்ளே…
    குட்டி குட்டி மீனுங்க…
    கொசகொசன்னு மேயுது…
    கொண்டு வாடா துண்டத்தான்…
    கொஞ்சமாச்சும் பிடிக்கலாம்…
    அஞ்சு நாளு பள்ளிக்கூடம்…
    அதுக்கு பெறகு லீவுடா…
    அப்ப அங்க போகலாம்…
    அத பாஞ்சிபாஞ்சி பிடிக்கலாம்…
    ஒன்னு ரெண்டு மூனுடா…
    சொல்லி துண்ட வீசுடா…
    கெண்ட சிக்கும் பாருடா…
    கெண்ட ரெண்டு சிக்கிகிச்சு…
    கெட்டியாக பிடிச்சுக்கோ…
    நமக்கு கெடச்ச ரெண்டுமே…
    நழுவி ஓடப் பாக்குது…
    கொண்டு போயி சேக்கனும்…
    கொழம்பு வச்சி திங்கணும்…!

    *****

    கண்ணி வலையில் சிக்காத சின்னஞ்சிறு மீன்களைத் தலைகட்டும் துணியில்  பிடிக்கும் சிறுவர்களின் சாமர்த்தியத்தை வியக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    கிராமத்திலே…

    வலையைப் போட்டு மீன்பிடிக்க
    வசதி யில்லா வேளையிலே,
    தலையில் கட்டும் துண்டெடுத்துத்
    துணிவாய் நீரில் அரிக்கின்றார்,
    கலைந்து செல்லும் சிறுமீன்கள்
    கண்ணி வலையில் சிக்காதே,
    நிலையை யுணர்ந்த செயல்பாட்டை
    நீங்களும் பார்க்கலாம் கிராமத்திலே…!

    *****

    ”சேலைத் தூண்டிலில் பிடித்த மீன், குழம்பில் கொதித்தபோது உணர்ந்தேன் சேலை வாசம்; ஆயினும் என் தொண்டைக் குழிக்குள் மாட்டியதே முள்!”  என்று மீனைக்கொன்று சமைத்த உணவு தந்த குற்றவுணர்வை அழகாய் விவரிக்கிறார் திருமிகு. சக்திப்ரபா.

     மீனும் நானும்

    கொஞ்சம் கொஞ்சமாய்
    மெல்ல அடங்கியது மூச்சு
    முதலில் துள்ளி
    பின் துவண்டு விழுந்தது
    உயிர் துறந்தும்
    எமக்குணவாகியது
    குழம்பில் தக்கையாய்க்
    கொதித்த போதும்
    அதன் உடலெங்கும் சேலை வாசம்
    ஏனோ
    என் தொண்டைக் குழியில் தான்
    மாட்டிக் கொண்டது முள்!

    *****

    இரண்டாக நாலாக மடித்த  துணியை மீன்பிடிக்கும் வலையாக மட்டுமல்லாது, நீரைத் தூய குடிநீராக்கும் வடிகட்டியாகவும் பயன்படுத்தலாம் எனும் எளிய அறிவியல் வழிமுறையை இனிய பாடலில் விளக்குகிறார் திருமிகு. அவ்வைமகள்.

    பருத்திச்சேலைத்துண்டோ தாவணியோ வேட்டித் துண்டோ போதுமே!
    ஏரித்தண்ணி – கொளத்துத்துத் தண்ணிய குடிநீராக்க உதவுமே!
    எங்க பாட்டன்தாத்தான் சொல்லிப்போன தூய்மைப்பாட்டு சேதியை
    அகிலமெங்கும் சொல்லிச் சொல்லி நம்மைப் போற்றுறாங்க பாருங்க!

    ஒசத்தியான வடிகட்டிங்க! செலவில்லாத வடிகட்டிங்க! – ஓஹோ!
    வாட்டமான வடிகட்டிங்க! சுலபமான வடிகட்டிங்க!
    காலராக்கிருமி முதல் பாசி, முட்டைப்புழு பூச்சி வரை
    எல்லாம் தள்ளிப் போக்குத்துங்க! எல்லாம் தள்ளிப்போகுதுங்க!

    ஒத்தயாப்போடாதீங்க ரெட்டையா-நாலாப் போட்டிடுங்க!
    மடிச்சிமடிச்சிப் போடும்போது சல்லிக்கண்ணு சிறுத்திடுதே!
    ரெண்டுன்னா நாப்பது நாலுன்னா இருபது! மைக்ரான் அளவு அப்படி!
    சேலைக்கொண்டு வடிகட்டினா நீரை அப்படியே குடிக்கலாம்!

    அமெரிக்காவின் பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச் சேலை வடிகட்டி!
    ஐரோப்பா பள்ளிப்பாடத்திலே நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
    கீழைநாட்டுப் பாடத்திலயும் நம்மூர் பருத்திச்சேலை வடிகட்டி!
    செய்து பார்த்து வியக்குறாங்க! வாழ்த்தி வாழ்த்தி வணங்குறாங்க!

    எங்க பள்ளிக்கூடப் பாடத்துக்கு நிரூபணம் பண்ணறோங்க – நாங்க
    நிரூபணம் பண்ணறோங்க! ஏரிக்குள்ள வடிகட்டிய கசண்டு
    கொண்டு காட்டணுங்க! கசண்டுக்குள்ள கிருமியோட்டம் காட்டணுங்க!
    பளிங்கு போல தண்ணி ஜோரா வடியுதே! நீங்க பார்த்திடுங்க!

    *****

    துணியில் மீன்பிடிக்கும் சிறுவரின் செயல் மிகவும் பாதுகாப்பானது. ஆனால் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர் நிலையோ ஒவ்வொரு நாளும் துயரம்! அவர்கள் துயர்களைந்து உயர்வாழ்வளிக்கும் வழிவகை காணவேண்டும் என்ற நியாயமான ஆசையைத் தன் பாடலில் பதிவுசெய்துள்ளார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    வாழ்வுக்கும் தொழிலுக்கும் வகையாயொரு யோசனை..!
    உப்புநீரில் மீன்பிடிக்க ஓராயிரம் வழியுண்டு
    ……….ஓரளவு தேர்ச்சிபெற்றால் மட்டுமே சாத்தியம் *
    கப்பலிலே சென்று மீன்பிடிக்கும் வகையால்
    ……….கரைசேராமல் தவிக்கும் அபாயம் அதிலுண்டு *
    தப்பாமல் கரைதிரும்பி வந்து விடுவாரெனத்
    ……….தகுந்த பதிலொன்றும் சொல்வ தற்கில்லையே *
    அப்பாவை எதிர்பார்த்து அவர் குழந்தைகள்
    ……….அலைகடலை நோக்கி நாளும் காத்திருக்கும் *

    வெப்பம்மழை சூறாவளி சுழலும் பேரலையிவ்
    ……….விதுவெலாம் இவர்களுக் கொரு பொருட்டல்ல *
    சிப்பாய்கள் சீருடையில் சிட்டாகப் பறந்துவந்து
    ……….சிறை யெடுப்பார்!தானியங்கித் துப்பாக்கியுடன் *
    முப்போதும் விழித்து மீன்பிடிக்கும் தொழிலில்
    ……….முதலில் கரைசேருவதுதன் அதிலே முக்கியம் *
    இப்போதும் கரைதிரும்பாத எண்ணற்ற பலர்
    ……….இருந்தும்..யாரும் கண்டுகொள்ளா நிலைதான் *

    ஒப்பாரி வைத்தழுதால்கூட இங்கு ஒருவருமே
    ……….உதவிக்கு வரமாட்டார் ஒதுங்கியே நிற்பாரவர் *
    எப்போதுமிருக்கும் ஆபத்தைப் புரிந்து கொண்டு
    ……….இதற்கொரு வழியும் மீன்வளமும் தேடவேணும் *
    இப்பவும் நாம் பார்க்கின்றோம்…கிராமத்தில்
    ……….இருகையால் வலைவீசி மீன்பிடிப்பதை!அதிலும்*
    துப்பட்டாவை விரித்து மீன்பிடிக்கும் சிறுவர்
    ……….செயலே சிறந்ததுபோல் சிலசமயம் தோன்றும் *

    *****

    மீன்பிடிக்கும் சிறாரின் செயல், கவிஞர் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு கோணத்தில் சிந்திக்க வைத்திருப்பது சிறப்பு! அதன்பயனாய் எமக்குக் கிடைத்திருக்கும் கவிதைகளோ வனப்பு! பாராட்டுக்கள் கவிஞர்களே!

    இனி இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தெரிவுபெற்றிருப்பது…

    இழந்த வாய்ப்பு… 

    கொடியில் காய்ந்த சேலை
    கோடை வெயிலிலும்
    குளம் குட்டைகளில் நட்புடன்
    கூடி மீன்பிடிக்கும் வேலை

    செய்யவோ களைப்பில்லாத கலை
    சேர்ந்து விளையாடி
    நிற்காமல் துள்ளும் மீன்பிடிக்க
    நீரில் போடும் வலை

    எழிலான கிராமத்தில் இருந்து
    ஏக்கம் இல்லாமல்
    துள்ளித் திரிந்து தோழருடன்
    தூண்டில் போட்ட விருந்து 

    அகப்பட்ட துணியுடன் சென்று
    ஆறு குளங்களில்
    வலைவீசி மீன்பிடிக்க
    வாய்ப்புகள் இல்லாமல் இன்று 

    கிராமங்கள் நகரமாகி நிற்குதே!
    கீழிறங்கும் வெயிலால்
    மழையின்றி ஆறுகுளம் வற்றி
    மாசுடன் குடிநீரும் விற்குதே! 

    கிராமத்துக் குழந்தைகளுக்குக் கிடைக்கும் பல்வகையான வாழ்வியல் அனுபவங்கள் நகரத்துக் குழந்தைகட்கு வாய்ப்பதில்லை. அதில் ஒன்று…குளம் குட்டைகளில் இறங்கி இன்பமாய் மீன்பிடிப்பது!

    அன்று மழைக்குப் பஞ்சமில்லை; அதனால் தண்ணீர்ப் பஞ்சமில்லை. இன்றோ காடுகளைக் கொன்றழித்தோம்! ஏரி குளங்களைத் தூர்த்து வீடு கட்டினோம்! அதனால் வான் மழையுமில்லை; அப்படியே மழைபெய்தாலும் அதனைத் தேக்கிவைக்க ஏரி குளங்களும் இல்லை!

    விளைவு? குடிநீரையும் காசுகொடுத்து வாங்கும் அவலம்! இதே நிலை நீடித்தால் மாசில்லாத காற்றையும் நாம் காசுகொடுத்து வாங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை!

    இயற்கையைப் பேணாத மானுட வாழ்வின் இன்றைய இழிநிலையை, சிறார்களின் அன்றைய இனிய வாழ்வோடு ஒப்பிட்டுக் கவி வடித்திருக்கும் திருமிகு. நாகினியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180409 -Brahma mohanam -Krishna Leela -watercolour- lr A4

     

    ’’அயனவர் அன்னமாய் ’ஆ’போல் (திருவடியில்)அடி,ச்சின்
    மயக்கைமேல் தாங்கிட மாட்டை : -வியனுலகில்
    தத்தகுரு போல்கண்ண தாமோ தரர்காட்சி,
    சித்தமொரு மித்தவரைச் சேர்….கிரேசி மோகன்….!

    Share
  • பழந்தமிழக வரலாறு – 5

     

     

             தமிழக வரலாற்றில் நகர்மைய அரசுகள்

     

                                         -கணியன்பாலன்

    மனித இன நடவடிக்கைகள் குறித்தக் காலவரிசைப் படியான வரலாற்றுத்தரவுகளின் தொகுப்பே வரலாறு ஆகும். மொழிக்கு எழுத்து உருவான காலம் முதல் வரலாறு தொடங்குவதாகக் கருதப்படுகிறது. நமது பழந்தமிழகத்தை எடுத்துக்கொண்டால், அதன் வரலாறு சங்க காலத்திலிருந்து(கி.மு.750-50). தொடங்குகிறது. சங்ககால இலக்கியங்கள், மதச் சார்பான பல பாடல்களைக் கொண்டிருந்த போதிலும், பெரும்பாலான பாடல்களில் பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்கள் உள்ளன. சங்ககாலத்திலும், சங்க காலத்திற்கு முன்பும் பாடப்பட்ட பல பொருள் முதல்வாத மெய்யியல் கருத்துக்களைக் கொண்ட பாடல்கள் சங்க இலக்கியத் தொகுப்புகளில் இடம்பெறவில்லை. சங்ககாலத்தில் இருந்த வளர்ச்சிபெற்ற தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திறன், உலகளாவிய வணிகம், தமிழர்கள் வணிகத்துக்காகப் பிறநாடுகளில் சென்று தங்கியது, அவர்களிடம் இருந்த மிகப்பரவலான கல்வியறிவு, எழுத்தறிவு போன்ற பல தரவுகள் சங்க இலக்கியத்தில் இடம்பெறவில்லை. தொல்லியல், நாணயவியல், கல்வெட்டியல், மொழியியல், மனித இனவியல் போன்றவற்றில் நடைபெற்று வரும் தற்போதைய ஆய்வுகள் அதனை உறுதிப்படுத்துகின்றன.

    அரசு உருவாக்கமும் நகர உருவாக்கமும்:

    ஆரம்பகால அரசு உருவாக்கம் என்பது நகர உருவாக்கத்தோடு தொடர்பு உடையதாகும். வேளாண்மையை அறிந்தபின் மனிதன் ஓரிடத்தில் தங்கி வாழத் தொடங்கினான். வேளாண்மையில் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும், பேரூர்களையும் தோற்றுவித்தது. வேளாண்மையில் கிடைத்த உபரி உற்பத்தியோ, கைத்தொழில், பட்டறைத்தொழில், வணிகம் முதலியவற்றை வளர்த்தெடுத்தது. சொத்துடமை வர்க்கம் உருவாகி வளரத் தொடங்கியது. சொத்துடமை ஆணாதிக்கத்தைக் கொண்டு வந்தது. ஆணாதிக்கம் இன்றையக் குடும்ப முறையைக் கொண்டு வந்தது. குடும்பத்தில் பெண் ஆணுக்கு அடிமையாக்கப்பட்டாள். பெண்ணின் கற்பு புனிதமாக மாற்றப்பட்டது. கைத்தொழில்களிலும், பட்டறைத்தொழில்களிலும், வணிகத்திலும் ஏற்பட்ட வளர்ச்சி சிற்றூர்களையும் பேரூர்களையும் சிறு நகரங்களாகவும், பெரு நகரங்களாகவும் மாற்றத்தொடங்கின. நாளடைவில் நகரத்தில் இருந்த சொத்துடமை வர்க்கம் ஒன்றினைந்து தன்னையும், தனது சொத்துக்களையும் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒட்டுமொத்த நகரத்தையே பாதுகாப்பவனாகவும் பராமரிப்பவனாகவும் தன்னை நியமித்துக் கொள்கிறது. இதன் காரணமாக நகர மக்களுக்கு மேம்பட்ட ஒன்று உருவாக்கப்பட்டு, அது அரசாக வடிவமெடுக்க வழிவகை செய்யப்படுகிறது. இவ்விதமாக நகர அரசுகள் உருவாகி நிலைபெறத்தொடங்கின எனலாம்.

    தொடக்கத்தில் உலகெங்கும் அரசு உருவாக்கம் நகரங்களில்தான் தொடங்கியது. உலக வரைபடத்தில் ஆரம்பத்தில் உருவான அனைத்து நாகரிகங்களிலும் முதலில் நகர அரசுகள் உருவாவதை நாம் காண முடிகிறது. கிரேக்கத்தில், உரோமில், கார்த்தேஜில் முதலில் நகர அரசுகளே தோன்றின. மெசபடோமியாப் பகுதியில் உருவான சுமேரியா நாகரிகமும், பிற நாகரிகங்களும் முதலில் நகர அரசுகளையே தோற்றுவித்தன. சுமேரியா நாகரிகம் என்பது உண்மையில் நகர அரசுகளின் நாகரிகமே. அங்கு இன்றைக்கு கி.மு 3500 வாக்கில் ‘ஊர்’ என்ற நகர அரசு உருவாகியிருந்தது. அது ஒரு மிகப் புகழ்பெற்ற நகர அரசாக இருந்தது. சுமேரியர்களின் வீழ்ச்சிக்குப்பின் பாபிலோனிய நகர அரசு அங்கு முக்கியத்துவம் பெற்றது.  பின் இந்த நகர அரசு பிற நகர அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவாகியது. எகிப்திலும் கி.மு. 3000 வாக்கில் சிறு சிறு நகர அரசுகளே தோன்றின-(1). பின் அவை ஒன்று சேர்ந்து எகிப்தியப் பேரரசு உருவாகியது.

    நமது சிந்துவெளி நாகரிகத்திலும் முதலில் நகர அரசுகளே தோன்றின. அந்நாகரிகம் பல நகர அரசுகளின் நாகரிகமே. ஆரிய வருகைக்குப் பின் உருவான வட இந்திய நாகரிகத்தில் கூட முதலில் 16 ஜனபதங்கள் எனப்படும் நகர்மைய அரசுகளே தோன்றின. இந்த நகர்மைய அரசுகளிடையே ஏற்பட்ட போட்டிகளாலும், போர்களாலும் கி.மு. 6ம் 5ம் நூற்றாண்டு வாக்கில் மகத அரசு பிற நகர்மைய அரசுகளை வென்று ஒரு பேரரசாக உருவெடுத்தது. எனவே உலகெங்கும் ஆரம்பகால நகர உருவாக்கம் என்பது அரசு உருவாக்கத்தின் தொடக்கமாக இருந்துள்ளது. அதன்பின் இந்த நகர அரசுகள் பிற நகர அரசுகளை வென்று பெரிய அரசுகளாக, பேரரசுகளாக உருவாகின.

    சங்ககாலத்தில் அரசு உருவாக்கம்:

    பழந்தமிழகத்தில் கி.மு. 1500 வாக்கிலேயே சிறு சிறு நகரங்களும், நகர்மையங்களும் உருவாகத்துவங்கி, பின் அவை நாளடைவில் நகர்மைய அரசுகளாகப் பரிணமித்தன. கி.மு 8ஆம் நூற்றாண்டு வாக்கில் சேர, சோழ, பாண்டிய நகர அரசுகள் வலிமை பெற்று இந்த நகர்மைய அரசுகள் பலவற்றை வென்று ஒன்று சேர்ந்துப் பெரிய அரசுகளாக உருவெடுத்தன. அதன் பின்னரும் சேர, சோழ, பாண்டிய அரசுகளின் உறவினர்களால் இந்த நகர்மைய அரசுகள் ஒவ்வொன்றும் தனித்தனியாகவே ஆளப்பட்டு வந்தன. “ஐந்து பாண்டியர்களால் ஆளப்பட்ட ஐந்து பாண்டிய அரசுகள் இருந்தன” என்பது ஒரு தொன்மக்கருத்தாகும். பாண்டியர்கள் பலர் பல நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர் என்பதை இக்கருத்து உறுதிப்படுத்துகிறது. பாண்டியர்களைப் போன்றே சேர சோழ அரசுகளும் பல நகர்மைய அரசுகளைக் கொண்டிருந்தன.

    சேர, சோழ, பாண்டிய அரசுகள் போக பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் பல சிறு சிறு நகர்மைய அரசுகளை ஆண்டு வந்தனர். அவர்கள் அந்தந்தச் சிறு சிறு நகர்மைய அரசுகளின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்தனர். பாழிநகர் நன்னன், வியலூர் நன்னன், போஓர் பழையன், மோகூர் பழையன், எயில் ஊர் ஆந்தை, நீடூர்த் தலைவன் எவ்வி, உறையூர் தித்தன், காமூர்த் தலைவன் கழுவுள், இருப்பையூர் வீரான், ஊனூர் தழும்பன், ஆர்க்காட்டு அழிசி எனப் பல குறுநில மன்னர்களும், வேளிர்களும் அவரவர்களின் நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளனர்.          சேர, சோழ, பாண்டியர்கள் கூட தொண்டி அரசன், கொற்கைப் பாண்டியன், புகார்த்தலைவன் என நகரங்களைக் கொண்டே அழைக்கப்பட்டு வந்துள்ளதைக் காணமுடிகிறது. ஆக நகரங்கள் அன்று அரசின் மிக மிக முக்கிய அங்கமாக இருந்தன என்பதை இவை தெரிவிக்கின்றன. மூவேந்தர்கள் தவிர அதியன், நன்னன் போன்ற அரச பரம்பரைகளும் ஒருசில நகர்மைய அரசுகளை வென்று, பெரிய அரசுகளாக ஆக முயன்றுள்ளன. ஆனால் அம்முயற்சி மூவேந்தர்களால் முறியடிக்கப்பட்டது. மூவேந்தர்கள் உருவாகிய பின்னரும், நகர்மைய அரசுகள் முழுச் சுதந்திரத்தோடு தனி அரசுகளாகவே செயல்பட்டு வந்துள்ளன. வேந்தன் ஒரு பெரிய நகர்மைய அரசை ஆண்டான் எனில், அவனது கிளை உறவினர்கள் பிற நகர்மைய அரசுகளை ஆண்டனர். இவைபோக குறுநில மன்னர்களும், வேளிர்களும் இருந்தனர். எனவே தமிழகமெங்கும் நகரங்கள் பல ஊர்களைக் கொண்ட தனித்தனி அரசுகளாக இயங்கி, தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டன.

    அரசும் எழுத்தும் :

    கி.மு. 6ஆம் நூற்றாண்டில் உரோம் நகர அரசு உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் இலத்தின் மொழிக்கு எழுத்து உருவானது. எகிப்து, சுமேரியா போன்ற இடங்களிலும் நகர அரசுகள் உருவாகி நிலை பெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின. சீனாவில் அரசு உருவாகியபின் கி.மு 15ஆம் நூற்றண்டு வாக்கில் எழுத்து உருவானது. இந்தியாவில்  அசோகர் ஆட்சியில்தான் அசோகன் பிராமி எழுத்து பயன்படுத்தப்பட்டது(2). எனவே எழுத்து உருவாகிவிட்டது எனில் அங்கு அரசு உருவாகி நிலைபெற்றுவிட்டது என்பதுதான் உலகெங்கும் இருந்த நிலையாகும். கிரீட்(CRETE) தீவின் மினோன்(MMIMINOAN) எழுத்துக்களைக் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் (MMYCENAEANS) நகர அரசுகள் கி.மு. 13ஆம்  நூற்றண்டு வரை பயன்படுத்தினர். அதன் பின் கிரேக்கத்தில் இருந்த மைசீனியர்களின் நகர நாகரிகம் அழிந்து போனதால் அவர்கள் எழுத்தும் இல்லாது போயிற்று. அதன் பிந்தைய மூன்று, நான்கு நூற்றாண்டுகள் கிரேக்க வரலாற்றில் இருண்ட காலமாகும். கி.மு. 8ஆம் நூற்றாண்டில், மீண்டும் கிரேக்க நகர அரசுகள் உருவாகி நிலைபெற்ற பொழுதுதான் பொனிசியன்(PHOENICIAN) எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்ட கிரேக்க எழுத்து முறை உருவாகியது(3).

    ஆகவே அரசுகள் உருவாகி நிலைபெற்ற பின்னர்தான் எழுத்துக்கள் உருவாகின்றன என்பதற்கு கிரேக்க வரலாறே ஒரு சான்றாகத் திகழ்கிறது எனலாம். தமிழகத்தில் தமிழி எழுத்தின் காலம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு. கி.மு. 1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழர்கள் குறியீடுகளை எழுத்துக்களாகப் பயன்படுத்தினர். ஆதலால் கி.மு.1500 முதல் கி.மு. 1000 வரையான காலகட்டத்தில் தமிழகத்தில் சிறு சிறு நகர அரசுகள் உருவாகி இருந்தன. சங்ககாலத்திற்கு முன், கி.மு. 8ஆம் நூற்றாண்டு வாக்கில் அவை வளர்ந்து, நிலைபெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

    தமிழகத்தின் வளர்ச்சி:

    தமிழகச் சேர சோழ பாண்டிய அரசுகளின் ஆட்சிக்கும், வட இந்திய மகதப் பேரரசின் ஆட்சிக்கும் பல வேறுபாடுகள் இருந்தன. மிகப்பெரிய, பரந்து விரிந்த பேரரசுகளின் நகரங்களை பேரரசின் மண்டல அதிகாரிகளே ஆட்சி செய்து வந்தனர். பேரரசுகளில் படிப்படியான அதிகாரவர்க்க நிர்வாகமுறை இருந்து வந்தது. அதனால் பேரரசின் நகரங்களும் பிற பிரதேசங்களும் போதிய சுதந்திரம் இல்லாதவைகளாக இருந்தன. பேரரசரால் மண்டல அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்படவும் வாய்ப்பிருந்தது. இந்நிலைமை பாரசீகப் பேரரசிலும், இந்தியாவில் மகதப் பேரரசிலும் இருந்தது. ஆனால் தமிழக நகர்மைய அரசுகள் பெரும்பாலும் மூவேந்தர்களின் கிளை அரசர்களால் ஆளப்பட்டன. அல்லது குறுநில மன்னர்களாலும், வேளிர்களாலும் ஆளப்பட்டன. அவை அனைத்துமே தங்கள் நகர்மைய அரசுகளை நிர்வகிப்பதில் முழு சுதந்திரம் உடையவைகளாகவும், தனித்தனி அரசர்களால் ஆளப்பட்டவைகளாகவும் இருந்தன. மிக நீண்ட காலமாக ஆளப்பட்டு வந்தன. மக்கள் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப்பட்டு ஆளப்பட்டன. இவைகளின் காரணமாக தமிழகத்தின் பண்டைய நகர அரசுகள் பலவிதங்களிலும் நன்கு வளர்ச்சி அடைந்தவனாக உருவாகின.

    தமிழ் அரசுகள் மக்களின் பிரதிநிதிகளால் கட்டுப்படுத்தப் பட்டவைகளாக இருந்தன என கிரேக்கப்பயணி மெகத்தனிசு அவர்கள் கூறியுள்ளார் என்கிறார் சவகர்லால் நேரு அவர்கள். “அரசியல் துறையில் தென்னாட்டு சனப்பிரதிநிதி சபைகள் அரசர்களின் அதிகாரத்தை ஒரு கட்டுக்கு உட்படுத்தி வைத்திருந்தன என கிரேக்க யாத்திரிகரான மெகத்தனிசு கூறுகிறார்” என அவர் குறிப்பிட்டுள்ளார்(4). ஐம்பெருங்குழு, எண்பேராயம் போன்ற வேளிர்கள் அல்லது பிரபுக்கள் குழுக்களும் இன்னபிற மக்கள் பிரதிநிதிக்குழுக்களும் அரசை கட்டுப்படுத்தி வந்திருக்கவேண்டும். அதன் காரணமாக அரசனின் அதிகாரம் வரம்பற்றதாக இல்லாமல் கட்டுப்படுத்தப் பட்டதாக இருந்தது. அதனைத்தான் மெகத்தனிசு தனது குறிப்பில் கொடுத்துள்ளார். இவை தமிழக நகரங்களின் வளர்ச்சிக்கு ஒரு மிக முக்கியக் காரணமாக இருந்தது எனலாம்.

    சங்ககாலத்தில் இருந்த அளவு எழுத்தறிவும், கல்வியறிவும் வடஇந்தியாவில் இருக்கவில்லை. பிற தொழில்நுட்பமும், உற்பத்தித்திறனும், வணிகமும்கூட பழந்தமிழகத்தில் இருந்த அளவு வட இந்தியாவில் இருக்கவில்லை. பழந்தமிழகத்தில் இருந்து உலகம் முழுவதும் பெரிய அளவில் வணிகம் நடைபெற்றது. இவ்வளர்ச்சிகளால்தான் கி.மு. 3ம் நுற்றாண்டின் தொடக்கத்தில் தமிழக அரசுகளின் ஐக்கியக் கூட்டணி மௌரியப் பேரரசைத் தோற்கடிக்க முடிந்தது. சங்க இலக்கியம் போன்ற செவ்வியல் இலக்கியங்களை உருவாக்க முடிந்தது. மகதப் பேரரசு காலத்தில் வட இந்தியாவில் செவ்வியல் இலக்கியம் எதுவும் உருவாகவில்லை என டி. டி. கோசாம்பி குறிப்பிடுகிறார். உலக அளவில் நடந்த பண்டைய இந்திய வணிகம் பெருமளவு தமிழகம் வழியேதான் நடந்தது என்பதைப் பல்வேறு ஆய்வுகள் இன்று உறுதி செய்துள்ளன. சங்ககாலத் தமிழ் மக்கள் மிக அதிக அளவில் எழுத்தறிவு கொண்டிருந்தனர் என ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார். ஆகவே மிக நீண்டகாலத்திற்கு முன்னரே தமிழகத்தில் நகர அரசுகள் உருவாகி அவை ஒப்பீட்டளவில் பண்டைய கிரேக்க, உரோம நகர அரசுகளைப் போன்ற வளர்ச்சி பெற்ற நகர அரசுகளாக ஆகியிருந்தன.

    பார்வை:

    1. The World Book Encyclopedia, 1988 USA. vol-4, pages : 578-580

    2.விக்கிபீடியா: Greek_alphabet,  Latin_alphabet  & ’இன்றைய இந்திய இலக்கியம்’ சாகித்திய அக்காதெமி வெளியீடு, பக்; 87, 185;

    3.The World Book Encyclopedia, 1988 USA.  vol-8, pages : 396

    4.சவகர்லால் நேரு,  ‘உலக சரித்திரம்’  தமிழாக்கம்- ஓ.வி. அளகேசன், 3ஆம் பதிப்பு, அக்டோபர்- 2006, பக்: 153.

    ஆதார நூல்:

    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 261-269

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

     

    Share
  • சிக்மண்ட் ஃபிராய்டின் ஆளுமைக் கோட்பாடுகள்

    -ர.நித்யா

     

    முன்னுரை

    உளவியல் வரலாற்றில் தனிமனித ஆளுமை பற்றிய தத்துவங்களும், கோட்பாடுகளும்  மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளன. ஆளுமை என்பதே நடத்தையியலைப் பற்றி விளக்குவதாகவே அமைந்துள்ளது. இது ஒரு விளக்க முறைக் கோட்பாடு ஆகும். நடத்தைக்கான காரணிகளைக் கண்டறியும் போக்கில் ஆளுமை உளவியல் தோன்றிற்று. ஆளுமை உளவியல் வரலாறும் , உளவியல் வரலாறும் இணைநிலையானவை. அறிவியலின் தொடக்கமானது கிரேக்கத் தத்துவத்திலிருந்து உருவானது போலவே உளவியலும் மனித உள மெய்ம்மைகளைக் கண்டறிய மூன்று வழிகளை மேற்கொண்டது. அவையாவன,

    1.தத்துவம்
    2.உடலியல்
    3.மருத்துவம் ஆகியவைகளாகும்.

    இந்த ஆளுமை உளவியல் மனிதனின் குறிப்பிட்ட செயல்பாடுகள் மற்றும் நடவடிக்கைகள் போன்றவற்றைக் கொண்டு உள்ளத்தை தகவமைத்துக் கொண்டன. நடத்தையியலில் சமூக உறவுகளைப் படப்பிடித்துக் காட்டும் சமூக உளவியல் முக்கிய பங்கு வகித்தது. நடத்தை என்பது மனிதன் சமூகத்தில் எப்படிஞ்ள்ளாமல் நோய்வாய்ப்பட்ட மனிதர்களின் நடத்தைகளும் மருத்துவ உளவியலில் ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நோயாளிகளின் உள இயல்புகளைப் புரிந்துக்கொண்டு மருத்துவம் செய்வது மருத்துவ உளவியலின் முக்கியத்துவமாகும். மருத்துவ உலகிலிருந்து உளவியலை அறிவியல் உலகிற்கு மாற்றியவர்களுள் சார்கோ,பிச்னர், ஃபிராய்ட் போன்றோர் முன்னோடிகளாவர். தத்துவ உலகில் கிரேக்கத் தத்துவஞானி ஹெராகுலிடஸ் என்பவர் “மனித ஆளுமை எல்லையற்றது” என்கிறார். இவரிடமிருந்து துவங்கிய தத்துவார்த்த உளவியல் கோட்பாடுகள் அதன் பின் பரிணாம வளர்ச்சியடைந்தது. ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில் , ஹாப்பிஸ், ஜான் லான், நீட்சே போன்றோர்  தமது கருத்துக்களைத் தத்துவ முறை உளவியலுக்குக் கொடையாக வழங்கினர். இதிலிருந்து உளவியல் வரலாறு போல ஆளுமை வரலாறும் கிரேக்கர்களிடமிருந்தே துவங்கியது என்பதை அறியலாம்.

    ஆளுமை விளக்கம்

    ”PERSONARE’ என்கிற இலத்தீன் சொல் அக்காலத்தில் நடிகர்கள் தாங்கள் இன்னார் என்பதைப் பிறர் இனங்கண்டு கொள்ளாமல் இருக்கப் பயன்படுத்திய முகத்திரையைக் குறித்தது. அதுவே நாளடைவில் நடத்தைகளோடு தொடர்புடைய ஆளுமைக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆளுமை என்பது வண்ணம் போன்றது. ஏனெனில் அனைத்துப் பொருள்களும் ஒரு குறிப்பிட்ட வண்ணத்தைப் பெற்றிருப்பதைப் போல, ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட ஆளுமைப் பண்புகளைப் பெற்றுள்ளான். வெகுளி, அச்சம், கோவக்காரன், திமிர், பயந்தாங்கொள்ளி, நாணம் போன்ற சொற்கள் நடைமுறையில் பயன்படுத்துவதைக் காணலாம். இவை அனைத்தும் குறிப்பிட்ட மனிதர்களின் பண்புகளைப் விவரிக்கும் ஆளுமைக்கான குணநலன்களாகும். ஆளுமை வளர்ச்சி என்பது மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை வளரும் தன்மையுடையது.

    சிக்மண்ட் ஃபிராய்டு(1856-1939)  ஆளுமைக் கோட்பாடுகள்

    ஃபிராய்ட் அவர்களின் கருத்துப்படி ஆளுமை என்பது மூன்று செயல்களின் கூட்டமைப்பே. அவை.

    1.இட்
    2.ஈகோ
    3.சூப்பர் ஈகோ  போன்றவையாகும்.

    இவர் இயக்க ஆற்றல் உளவியலின் தந்தை எனப் போற்றப்படுபவர். மனிதனின் வாழ்வுணர்ச்சியினையும், சாவுணர்ச்சியினையும் அடிப்படையாகக்  கொண்டு புதிய சமன்பாட்டை உருவாக்கினார். அவை B= f(LD). அதாவது நடத்தை(Behavior) என்பது இரண்டு உணர்வுகளின் (வாழ்வு மற்றும் சாவுணர்ச்சி) கூட்டமைப்பாகும் என்கிறார்.. இவர் தனது ஆளுமைக் கோட்பாடுகளை மருத்துவ தரவுகள் அடிப்படையில் அளிக்கிறார். நனவிலியே மனித ஆளுமையைத் தீர்மானிக்கிறது என்பதே இவரின் கருத்து. மேலும் குழந்தைப் பருவ அனுபவங்கள் மனித ஆளுமையில் பெரும்பங்கு வகிக்கிறது என்கிறார்.  தனியார் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு ஃபிராய்ட் உளப்பகுப்பாய்வு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒருவரின் உள்ளம் எப்படி இருக்குமோ அப்படித்தான் அவரது ஆளுமையும் அமைந்திருக்கும். உள்ளம் என்பது பிறப்பிலிருந்தே வளர்வதாகும். மனிதனின் அனுபவங்களும், வாழ்க்கை முறைகளும் வேறுபட்டு இருப்பதால் உள்ளத்தின் கட்டமைப்பு மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது.

    ஃபிராய்டின் இருமைவாதம்

    ஃபிராய்டின் ஆளுமைக்கோட்பாட்டில் மிகவும் இன்றியமையாதது இருமைவாதம் ஆகும். இருவேறுப்பட்ட ஆளுமைப் பண்புகளை விளக்குவதாகும். நனவுமனம் என்று பிளவுபடுகிறதோ அன்று இரு வேறுப்பட்ட ஆளுமைகள் ஒருவரிடத்தில் உருவாகிறது. ஒவ்வொரு மனிதனுக்கும் இரட்டை ஆளுமைப் பண்புகள் இருக்கும் என்கிறார். இரு வேறுபட்ட நடத்தைகளே இரட்டை ஆளுமைக்கான உதாரணமாகும்.

    நனவிற்கும் , நனவிலிக்கும் தனித்த இயல்புகள் இருப்பதால் முரண்பாடு மற்றும் போரட்டம் ஆகிய அகநிலை சிந்தனைகளிலிருந்து மனித மனம் தப்பிக்க இயலாமல் ஒரு பிறழ்ந்த நிலை உருவாகும். ஃபிராய்டின் ஆளுமைக் கோட்பாட்டிற்கு இந்த இரட்டை ஆளுமையே அடித்தளமாக அமைகிறது. இவரது உளப்பகுப்பாய்வு முழுவதும் ஆளுமைக் கோட்பாடாக அமைகிறது. இவர் தனது ஆளுமைக் கோட்பாட்டில் உந்தல்கள், இறுக்கக் குறைப்பு மற்றும் உள்ளுணர்ச்சி ஆகிய மூன்று உளக்கூறுகளை முன்வைக்கிறார். ஃபிராய்டின் ஆளுமை வளர்ச்சி கோட்பாடு உள இயக்காற்றல் கோட்பாட்டின் சாராம்சமாகும். ஆளுமைக் கட்டமைப்பு செய்வினை மற்றும் படுவினை ஆகிய இரண்டு வழிகளின் கூட்டமைப்பாகும். அதே சமயம் அகச்சார்புடையதாகவும் , புறச்சார்புடையதாகவும் அமையப் பெறும். உளப்பகுப்பாய்விற்கு குழந்தைப் பாலினமே பிரதானமாகும்.

    முடிவுரை

    அறிவியல் முறை உளவியலின் முன்னோடியாகக் கருதப்படுபவர். ஜெர்மானிய உளவியாளர்களின் உளவியல் துறையில் பெரும் புரட்சி உண்டாக்கியவர். இவர் கண்டறிந்த ஆழத்து உளவியல் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவரது மருத்துவ ஆய்வு முறையே அனைத்து ஆய்வு முறைகளுக்கும் உறுதுணையாக இருந்தது. நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதைப் போன்று , உள நோயாளிகளுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும் என்கிறார். மனிதனின் நடைமுறை வாழ்வில் உண்டாகும் சிக்கல்களினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் உளக் குறைகளைக் குணப்படுத்துவது மனநல உளவியல் (Mental Health) ஆகும். இதற்கு நோயாளியின் மீது தனிக் கவனம் செலுத்த வேண்டும். ஃபிராய்டுக்கு முன்னிருந்த உளவியலாளர்கள் அனைவரும் நரம்பு நோய் ஆய்வில் நனவு நிலைக்கு (conscious) மட்டுமே முக்கியத்துவம் அளித்தனர். ஆனால் இவரது உளவியல் பார்வை முற்றிலும் வேறுப்பட்டு நனவிலி மனதிற்கு (unconscious) நிலைக்கு முக்கியத்துவம் அளித்தார் ஃபிராய்ட் அவர்களின் ஆய்வின்படி குழந்தைப் பருவ அனுபவங்கள் பெரும்பாலும் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதற்குத் தற்காப்புணர்ச்சி முக்கியக் காரணியாகும். ஆனால் குழந்தைகள் தங்கள் தேவைகளைச் செய்வினையில் நிறைவு செய்து கொள்ள முடியாது. ஆதலால் படுவினையில் பூர்த்திசெய்து கொள்ள விரும்புகிறது. இந்த தேவைகள் முழுவதும் உடலோடு தொடர்புடையவையாகும். ஈகோவின் வளர்ச்சியைப் புறப் புலனறிவுகள் கட்டமைக்கத் தொடங்குகின்றன. குழந்தைகளின் ஈகோ வளர்ச்சி லிபிடோவின் மேலாண்மைக்கு உட்பட்டதாகும். இந்நிலையைப் படிம வளர்ச்சியாகக் கண்ட ஃபிராய்ட் லிபிடோ நிலைக்கேற்ப பாலுணர்ச்சிகளின் குறித்த குறிக்கோள், குறித்த புறநிலை, குறித்த ஆதாரம் ஆகியவை மாற்றத்திற்கு உள்ளாவதை ஈகோ வளர்ச்சியின் திருப்புமுனையாகக் காண்கிறார்.

    பார்வை நூல்கள்

    1.சிக்மண்ட் பிராய்ட் உளப்பகுப்பாய்வு அறிவியல்
    தி.கு.இரவிச்சந்திரன் , அலைகள் பதிப்பகம்
    சென்னை-24

    2.உளப்போராட்டம்
    சண்முகம். டி.இ.,கலைகளஞ்சியம்,தொகுதி-10
    தமிழ் வளர்ச்சிக் கழகம்
    சென்னை.

    3. உளவியல் பன்முகப்பார்வை
    பாரதியார் நூலரங்கம், எண்-7,ஆர்.கே நகர்
    நாவாவூர் பிரிவு மருதமலை சாலை
    கோவை-46

    *****

    கட்டுரையாளர்
    முனைவர் பட்ட ஆய்வாளர்
    அரசு கலைக் கல்லூரி
    கோவை.

     

     

     

    Share
  • கலிங்கத்துப் பரணியில் சோழர் வரலாறு

    -முனைவர் அரங்க.மணிமாறன்

    வாழ்வின் உறுதிப்பொருட்கள் நான்கு. அவை அறம் பொருள் இன்பம்  வீடு ஆகியவை. இவை இலக்கியங்களுக்கும் பொருந்தும். அந்நான்கு உறுதிப்பொருட்களும் பெற்றவை பேரிலக்கியங்கள் என்றும் ஒன்றிரண்டு குறைந்து வருபவை சிற்றிலக்கியங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.தொண்ணூற்றாறு வகையான சிற்றிலக்கியங்கள் தமிழ்மொழியில் அணிசெய்கின்றன. அவற்றுள் பரணி என்பதும் ஒன்று.

    ஆனை ஆயிரம் அமரிடை வென்ற
    மானவனுக்கு வகுப்பது பரணி’1 என்று இலக்கண விளக்கம் பரணிக்கு விளக்கம் அளிக்கிறது.

    தொல்காப்பியம் குறிப்பிடும் வாண்மங்கலம், களவேள்வி துறைகளின் வளர்ச்சியே இச்சிற்றிலக்கியம் மலர ஏதுவாகிறது.

    போர்க்களத்தில் ஆயிரம் யானைகளை வென்ற வீரனைப் பாடுவது பரணி எனும் புறத்திணைச் சிற்றிலக்கியம் ஆகும். எண்ணிறந்த பரணி நூல்கள் தமிழில் அணிவகுத்தாலும் அவற்றுள் கலிங்கத்துப்பரணி முதன்மையானதாகவும் சிறப்புடையதாகவும் விளங்குகிறது. இதன் பெருமை கருதியே இதனை இயற்றிய செயங்கொண்டாரின் சமகாலத்தவரான ஒட்டக்கூத்தர் ‘தென்தமிழ்த் தெய்வப்பரணி’ என்று சிறப்பித்தார். ‘பரணிக்கோர் செயங்கொண்டார்’எனவும் புலவர் சிறப்பிக்கப்படுகிறார்.

    கலிங்கத்துப்பரணி:

    முதற்குலோத்துங்கனின் படைத்தளபதியான கருணாகரத் தொண்டைமான் கலிங்கம் (ஒரிசா) மீது படையெடுத்துச் சென்று அனந்தவர்மனை வென்றதைக் கலித்தாழிசையில் செயங்கொண்டார் பாடியுள்ளார்.பரணி நூல்கள் பத்து உறுப்புகளைக் கொண்டிருக்கும். கலிங்கத்துப்பரணி பதின்மூன்று உறுப்புகளைக்கொண்டுள்ளது.

    அவதாரம் இந்திரசாலம் இராசபாரம்பரியம் என்பவை இதில் தனித்தவை.பேரறிஞர் அண்ணாவை மிகவும் கவர்ந்த இதில் இராசபாரம்பரியம் பகுதியில் முதற்குலோத்துங்கனின் பாரம்பரியச் சிறப்பு கூறப்படுகிறது. அதனை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கம்.

    நாரதர் சொன்ன நயமான வரலாறு:

    ‘குலவிச்சைக் கல்லாமல் பாகம் படும்’எனும் பழமொழிக்கு விளக்கமாக விளங்கியவன் கரிகாற்சோழன். தாயின் வயிற்றிலேயே அரசுரிமை பெற்றவன். நரைமுடித்து உரைமுடிபு கண்டவன். அக்கரிகால்பெருவளத்தான் வடக்கே இமயம் வரைசென்று பகைவென்று அதன் உச்சியில் தமது புலிக்கொடியைப் பறக்கச்செய்தவன். பொருநராற்றுப்படையும் பட்டினப்பாலையும் இவன் பெருமைகூறும் இலக்கியச்சான்றுகள்.

    முக்கால ஞானியாகிய நாரதர் தோன்றி மகாபாரதத்தின் திருமாலும் நீயும் ஒன்றேயாகும் எனப் பூவைநிலையில் புகழ்ந்தார். ‘உமது சோழப்பரம்பரையின் வீர வரலாற்றை யான்கூறுவேன்.  அதனை இமய உச்சியில் உலகறிய நீ எழுதுவாயாக!’ என்று வாழ்த்தி உரைத்ததாக, தொன்மமாக கலிங்கத்துப்பரணி இராசபாரம்பரியத்தில் விளக்குகிறார் செயங்கொண்டார்.

    சோழப்பரம்பரையின் முன்னோர்கள்:

    திருமாலின் உந்தித்தாமரையில் பூத்தவன் நான்முகன். அவனிடமிருந்து மரீசி உண்டானான். மரீசி மூலம் உருவானவன் காசிபன். அவனுக்கு சூரியனும் அவனிடமிருந்து மனுவும் அவனுக்கு மகனாக இக்குவாகுப் பிறந்தான். இக்குவாகுவின் மகன் காகுத்தன். அவனுக்குப்பின் முசுகுந்தன்.தேவருக்கு அமிர்தத்தை தந்த பிருதுலாட்சன் தோன்றினான். அப்பரம்பரையில் சிபிச்சக்கரவர்த்தி தோன்றினான்.

    முதல் தோன்றல்:

    இவர்கள் அனைவருக்கும் முன் சுராதிராசன் என்பவனே சோழப் பரம்பரையின் முதல் தோன்றலாகும். அவனுக்குப்பின் இராசகேசரி-பரகேசரி எனும் இருவர் உலகம் முழுதும் புலிக்கொடி ஏற்றி ஆண்டனர்.சோழன் கிள்ளிவளவன் காவிரியை சோழ நாடு கொணர்ந்த சுவேரன் எமனிடம் நீதிகேட்ட மிருத்யுசித்  கடலில் கால்வாய் வெட்டிய சமுத்திரசித் நீர்வேட்கைகொண்ட ஐந்து இயக்கர்களுக்கு தனது இரத்தநாளங்களை அறுத்து குருதிதந்த பஞ்சபன் வானத்தின் அசைந்த மூன்று கோட்டை அமைத்து பலவகைத்தீமைகளைச் செய்த அசுரரை அழித்த ‘தூங்கெழில் எறிந்த தொடித்தோட் செம்பியன்’  பாரதப் போரில் உணவளித்த பெருஞ்சோற்றுதியன் ஆகிய இவர்களே உம் பரம்பரையை விளங்க வைத்தவர்கள் என்றார் நாரதர்.

    வரலாற்று அடிப்படையில்:   

    கோசரின் பாழியை அழித்த ‘செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி’ சங்க கால முதல் மன்னன். வெண்ணிப்பறந்தலைப் போரில் வென்ற கரிகாலன், கோச்செங்கணான் போன்றோர் சங்க காலத்தவர். பிற்காலத்தில் விசயாலயச்சோழன், முதலாம் பராந்தகன்,  தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக்கட்டிய இராஜராஜன்,  கங்கைகொண்ட சோழேச்சுரம் உருவாக்கிய முதலாம் இராஜேந்திரன், சோழபேரரசின் கடைசி மன்னனாகிய மூன்றாம் ராஜேந்திரன் ஆகியோர் வரலாற்று அடிப்படையில் அறியப்படுகின்றனர்.

    சிபிச்சக்கரவர்த்தி:

    வேடன் எய்த அம்பினால் பட்டு   தன்காலடியில் வீழ்ந்த புறாவைக் காத்து அதனையதன் தசைக்காக உரிமை கோரிய வேடனுக்கு அதன் தசைக்கு ஈடாக தன் தொடைத்தசையை அரிந்து ஈந்த வீரக்கொடையாளன் சிபிச்சக்கரவர்த்தி.

    இதை முடிகெழு வேந்தர் மூவர்க்கும் உரிய காப்பியமான சிலம்பில் இளங்கோவடிகள் கண்ணகி தன் குடும்ப பாரம்பரியத்தை பாண்டிய மன்னனுக்கு கூறும் முகமாக, 

    எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்ப
    புள்ளுறு புன்கண் தீர்த்தோன்’2

    என்று விளக்குகிறார்.

    இதைக் கலிங்கத்துப்பரணியில்,

    உடல் கலக்கு அற அரிந்து தசையிட்டும் ஒருவன்
    ஒருதுலைப் புறவோடு ஒக்க நிறைபுக்க புகழும்’  3(191)

    என்று செயங்கொண்டார் விளக்குகிறார்.

    தனிநீதி கண்ட  மனுநீதிச்சோழன்:

    பிள்ளைப்பேறின்றி வருந்தி  இறையருளால் பெறற்கரிய மகனாகப் பிறந்தவன் வீதிவிடங்கன். விளையாட்டாய்த் தேரைச்செலுத்தி ஒரு பசுவின் கன்றை அறியாது கொன்றான். தன் கன்றை இழந்த பசு வருந்தி மனுநீதிச்சோழனின் ஆராய்ச்சி மணியை அடித்தது. வாயற்ற ஜீவனாக இருந்தாலும் அதன் மாற்ற இயலாத துயரை நீக்க தன் ஒரே மகனையும் நீதியை நிலைநாட்டும்பொருட்டு தனது தேர்க்காலில் இட்டுக் கொன்றான்.

    இதைச்  சிலப்பதிகாரம்,

    வாயின் கடைமணி நடுநாநடுங்க
    ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத்
    தான்தன் அரும்பெறல் புதல்வனை ஆழியின் மடித்தோன்’4
    என்று கூறுகிறது.

    இதனைச் செயங்கொண்டார்,

    அரிய காதலனை ஆவினது கன்றுநிகர் என்று
    எவ்வருக்கமும் வியப்ப முறைசெய்த கதையும்’5 (188)
    என்று பாடுவதன் வழி அறிய முடிகிறது.

    கங்கைகொண்டான்:

    தன்னுடைய யானைப் படைகள் கங்கை ஆற்றுநீர் உண்டு களிக்கும்படி கங்கைக்கரை வரையிலும் படையெடுத்துச்சென்று பகைவரை வென்றவன் முதலாம் பராந்தக சோழன்.இவனே ‘கங்கைகொண்ட சோழன்’ எனப்படுகிறான்.

    களிறு கங்கைநீர்  உண்ண மண்ணையில்
    காய்சினத்தோடே கலவு செம்பியன்
    குளிறு தெண்திரைக் குரை கடாரமும்
    கொண்டு மண்டலம் குடையுள் வைத்ததும்’6(203)

    என்று பாடுகிறார்.

    ஒட்டக்கூத்தர் தனது மூவருலாவில்,

    கங்காநதியும் கடாரமும் கைவர
    சிங்காதனத்திருந்ந செம்பியர்கோன்’7

    என்று குறிப்பிடுகிறார். விசயாலய சோழன் பாண்டியர்களை வென்றவன்.இலங்கையை வென்றவன்.தனது உடலில் தொண்ணூற்றாறு விழுப்புண்களைப்பெற்றவன்.

    சீறும்செருவில் திருமார்பில்
    தொண்ணூறும் ஆறும் படுதழும்பின் ஆகத்தோன்’8

    என்று ஒட்டக்கூத்தர் குறிப்பிடுகிறார். திருமுறைகளைத் தொகுத்தளித்த இராஜராஜசோழன் தஞ்சைப் பெருவுடையார் கோயிலைக் கட்டியவன்.

    பாட்டுடைத்தலைவன் முதற்குலோத்துங்கன்:

    இராசேந்திர சோழன் பேரனும் இராசராசனின் மகனுமாகிய முதற்குலோத்துங்கன் இக்கலிங்கத்துப்பரணியின் பாட்டுடைத் தலைவன். கலிங்கம் வென்றதனால் ‘திரிபுவனச்சக்கரவர்த்தி’என்றும் சுங்க வரியை நீக்கியதால் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’எனவும் சிதம்பரம் கோயிலுக்குப் பொற்கூரை வேய்ந்ததால் ‘பொன்வேய்ந்த சோழன்’ எனவும் புகழப்பட்டவன். முதுபேய் இப்பெருமைகளைக் காளிதேவியிடம் கூறியது. காளி‘பூவுலகை எல்லாம் காக்கும் பெருமை பெறுவான்’என வாழ்த்தினள்.

    உலகை எலாம் கவிக்கின்ற ஒரு கவிகை
    சயதுங்கன் மரபின் கீர்த்தி
    அலகை எலாம் காக்கின்ற அம்மை பூ
    தலம் காப்பான் அவனே என்ன’ 9 (212)

    பூமகளும் அவனைப் பெற்ற நாளினும் அவன் குலப்பெருமையும் புகழும் கேட்ட இந்நாளில் ஆனந்தப்படுகிறேன் என வாழ்த்தினாள். 

    முடிவுரை:

    சோழர் பெருமை சொல்லில் அடங்காதது. கேட்டவை கேட்டு உரைத்தவை  ஒரு பானைச்சோற்றுக்கு ஒரு பதச்சோறு. நம் முன்னோர் மரபும் பெருமையும் நம்மை ஊக்கப்படுத்தும் என்பது திண்ணம்.

    அடிக்குறிப்பு:

    1.இலக்கண விளக்கம் – வைத்தியநாத தேசிகர் நூற்பா .839
    2.சிலப்பதிகாரம் (வழக்குரை காதை) 51-52(தென்னிந்திய நூற்பதிப்புக் கழகம் சென்னை)
    3.கலிங்கத்துப் பரணி – இராச பாரம்பரியம் பாடல் வரி 191(உமா பதிப்பகம் மண்ணடி-சென்னை)
    4.சிலப்பதிகாரம் வழக்குரை காதை 53-55
    5.கலிங்கத்துப் பரணி 188
    6.மே.கு.நூல் 203
    7.மூவருலா -ஒட்டக்கூத்தர் 34 (சிட்டு நூலகம் சென்னை 17)
    8.மே.கு.நூல் 50
    9.கலிங்கத்துப் பரணி 212.

    *****

    கட்டுரையாளர்
    முதுகலைத் தமிழாசிரியர்
    அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி
    செங்கம்-606701
    திருவண்ணாமலை  மாவட்டம்
    பேசி: 99430 -67963.

     

     

     

     

     

    Share
  • பரிபாடல் – கடல்சார் பதிவுகள்

     

     

     

     

    கா.பெரிய கருப்பன்

    முனைவர் பட்ட ஆய்வாளர்

    தமிழ்த்துறை

    தியாகராசர் கல்லூரி,

    மதுரை-09

     

    முன்னுரை

    மிகப்பழமையும், தொன்மையும் வாய்ந்த நம் தமிழ்மொழியின் அடையாளங்களுள் குறிப்பாக விளங்குவன சங்கஇலக்கியங்கள். அச்சங்க இலக்கியத் தொகை நூல்களுள் ஐந்தாவது நூலான பரிபாடலில் இடம்பெறும் கடல்சார் பதிவுகளை இக்கட்டுரை ஆராயவிருக்கிறது.

    பரிபாடல் விளக்கமும் சிறப்பும்

    திருமாற்கு இரு நான்கு செவ்வேட்கு முப்பத்

                  தொருபாட்டு@ காடுகாட்டு ஒன்று மருவினிய

                  வையை இருபத்தாறு மாமதுரை நான்கு என்ப                    

                 செய்ய பரிபாடல் திறம்”                    (பரிபாடல், அணிந்துரை,பொ.வே.சோ.உரை, ப.13)

    எனும் செய்யுளால் சுட்டப்பெறும் பரிபாடலின் கண்ணும் தற்போது கிடைத்துள்ளதாக தமிழ்ச் சான்றோர்களால் சுட்டப்பெறும் இருபத்திரண்டு பாடல்கள் வழியும் ஆய்வுபோக்கு அமைகிறது. பரிபாடல் என்பது பா வகைகளுள் ஒன்றெனக் குறிக்கின்றனர். இதன் இயல்பை “நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கம் கலியே பரிபாட்டு ஆயிருபாவினும்”(தொல்காப்பியம், அகத்.சூத்-56, ப-70) தொல்காப்பியம் கூறுகிறது. “இது உறுதிப்பொருள் நான்கனுள் (அறம், பொருள், இன்பம், வீடுபேறு) இன்பத்தை மட்டுமே முதன்மையாகக் கொண்டு பாடப்பெற்றுள்ளது என்று பேராசிரியர் விளக்கம் அளித்துள்ளார்” (தொல்காப்பியம், இளம்பூரணர் உரை)

    அதனோடமையாது, ‘ஓங்கு பரிபாடல்’ என்றும் ‘துங்கமலி கடலுள் அரிதின் எழுந்த பரிபாட்டமுதம்’ என்றும் தமிழ்ச் சான்றோர்களால் குறிக்கப்பட்டுள்ளது.

    கடல்-நூல்கள் தரும் விளக்கம்

    கடல் பற்றி பல்வேறு நூல்களும் அகராதிகளும் விளக்கம் தந்துள்ளன. அவற்றுள்,

    “உவர்நீர், நன்னீர், பால், தயிர், நெய், கருப்பஞ்சாறு கொண்ட நீர்நிலையே” (அபிதான சிந்தாமணி ப.385,ஆகஸ்ட் 2010)   கடல் என்கிறது அபிதான சிந்தாமணி.

    “புவியின் மேற்பரப்பில் 71% உப்பு நீர்ப்பரப்பிலானது. இந்நீர்ப்பரப்பின் பகுதிகள் கடலெனப்படுகிறது” (அபிதான சிந்தாமணி ப.385,ஆகஸ்ட் 2010)

    “இதன் ஆழமானது 14,00,00,000 (பதினான்கு கோடி சதுரமைல்கள் கொண்டது” (அபிதான சிந்தாமணி ப.386,ஆகஸ்ட் 2010) என்றும் தொடர்ந்த விளக்கங்களை அந்நூல் குறிப்பிடுகின்றது.

    கலைக்களஞ்சியமோ, உலகைச் சூழ்ந்த நீர்ப்பரப்பு. இது பெரும்பாலும் உப்புநீர் கொண்டது. அவ்வாறு இருப்பதற்குப் பல காரணங்கள் கூறுகின்றனர். உலகம் முதலில் அக்னி கோளமாகவும் இருந்தது. அது வரவரக் குளிர்ந்து பூமியாக, அதிலுள்ள உப்புச் சேர்ந்த பொருள் கரைந்து கலப்புற்றதெனவும் மலை, மரம் பூமிகளுடன் இயற்கையில் சேர்ந்துள்ள உப்புகள் நெடுங்காலமாக ஆற்றினால் கொண்டு சேர்க்கப்படுவதாலும் உப்புநீராகக் கடல் உள்ளது (கலைக்களஞ்சியம், தொகுதி மூன்று,ப.49)

    மொழிப் பயன்பாட்டு வழி கடல்சார் பதிவுகள்

    இலக்கியத்தில் மொழிப்பயன்பாடு என்பது இன்றியமையாதது. அம்மொழிப்பயன்பாட்டு நிலையில் கடல்சார் பதிவுகள் காணலாகிறது.

    உவமப்பொருள் – கடல்

    அதனை,

    அகரு வளழ ஞெமை ஆரம் இணையத்

                தகரமும் ஞாலமுந் தாரமுந் தாங்கி

                நளி கடல் முன்னியது போலுந் தீநீர்

                வளிவரல் வையை வரவு (பரிபாடல் (12/5-8) வையை)

    என்ற பரிபாடலின் வழி

    அகிலும், சுரபுன்னையும், ஞெமை மரமும், சந்தன மரமும் வருந்தும்படி செய்து தகரமரம், ஞாழல்மரம், தேவதாமரம் எனும் இவற்றைச் சாய்த்து ஏந்திக் கொண்டு காற்றுப்போல விரைந்து வருகின்ற வைகை ஒரு பெருங்கடலை ஒக்கும் என்று நல்வழுதியார் எனும் ஆசிரியர் வையை ஆற்றைக் கடலோடு ஒப்பிட்டுக் கூறிச் சென்றுள்ளதன் வழி பரிபாட்டுப் புலவரின் கற்பனை நயம் வியக்கத்தக்கதே

    காட்சிப்பொருள்

    மொழிப் பயன்பாட்டு நிலையில் காட்சிப்பொருள் என்பது புலவர்களிடம் இன்றியமையாக் களனாக கைக்கொண்டுள்ளனர் என்பதை,

    மன்றல் கலந்த மணிமுரசி னார்ப்பெழக்

                 காலொடு மயங்கிய கலிழ் கடலென

                 மால்கடல் குடிக்கும் மழைக் குரலென

                 ஏறு அதிர்க்கும் இந்திரன் இரும் உருமென

                 மன்றல் அதிரஅதிர மாறுமாறு அதிர்க்கும்நின்

                 குன்றம் குமுறிய உரை   (பரிபாடல், (8/30-32) செவ்வேள்)

    என்ற பாடலின் வழி அறியமுடிகிறது.

    அதாவது,

    மதுரையில் திருமண விழாவில் முரசு முழங்கியது எனவும், அம்முழக்கம் கடலிலே காற்று வீச எழுகின்ற அலைகளின் ஊடே உண்டாகும் ஓசை போலவும், நீரை முகக்கும் மேகமுழக்கம் போலவும், இந்திரனது இடியேற்றின் அதிர்ச்சி போலவும் இருந்தது. ஆனால் பரங்குன்றில்; முழங்கிய முழக்கம் அதற்கு மாறாக இருந்தது என்று கூறுமிடத்து, கடலை பல நிகழ்வுகளோடு சேர்த்து ஒரு காட்சிப் பொருளாகக் கூறிச் சென்றுள்ளார். அங்ஙனம் புலவர் நல்லந்துவனார் கடல் எனும் நெய்தல் நில முதற்பொருளை மருதநிலத்து நிகழ்வோடு கூறும் முகத்தான் கடலை ஒரு காட்சிப் பொருளாகக் கொண்டு சென்றுள்ளதன் வழி புலவரின் மொழிப்;பயன்பாட்டுத் திறன் வெளிப்படை என்றே கூறலாம்.

    மரபு வழிப்பயன்பாடு கடற்சார் பதிவுகள்

    கடலின் தன்மை

    மரபுச் செய்திகள் இலக்கியத்தில் புலவர்களால் அவ்வப்போது குறிப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன.

    மலைவரை மாலை அழிபெயல் காலைச்

                 செலவரை காணாக் கடல் அறைக்கூட

                 நிலவரை அல்லல் நிகழ்த்த விரிந்த

                 பலவுறு ‘போர்வைப் பருமணல் மூஉய்” (பரிபாடல், (10/1-4) வையை)

     

    என்ற பரிபாடலின் வழி விளக்குகிறார் கரும்பிள்ளைப்பூதனார்.

    அதாவது ஆறு என்றால் அது தோன்றி மறையும் இடம் என்று ஒன்று வேண்டுமல்லவா? அம்மரபுப்படி வையை ஆறானது மலையிடத்தே பெய்த பெருமழையின் காரணமாக காலைப்பொழுதிலே கடலோடு கலக்கும் காட்சியைப் புலவர் மரபு வழுவின்றி எடுத்துரைத்துள்ள பாங்கு வெளிப்படை

    இதன்வழி       ஓர் ஆறானது தோன்றி வரும் வழிகளில் வளம் கொழிக்கச் செய்து பின் கடலிலே கலப்பது தான் மரபு என்ற செய்தி பரிபாடலில் சுட்டப்பட்டுள்ளதை அறியமுடிகிறது.

    மலைப்பொழிவும் – கடலும்

    பரிபாடலில் மழைப்பொழிவு எவ்வாறு உண்டாக வேண்டும் அதற்குக் நிலைக்களனாவன எவை? எவை? என்பதை மரபின்வழி நின்று விளக்கும் முகத்தான்,

    காலைக் கடல்படிந்து காய்கதிரோன் போயவழி

                மாலை மலை மணந்து மண் துயின்ற கங்குலான்

                வானாற்று மழைதலைஇ மரனாற்று மலர் நாற்றம்

    தேனாற்று மலர்நாற்றஞ் செறுவயல் உறுகாலை (பரிபாடல், (20/6-9) வையை) என்ற பரிபாடல் வரிகளின் மூலம்

     

    ‘மேகமானது காலைப் பொழுதிலே கடலிலே படிந்து அக்கடல் நீர் குறைவுபட முகந்து சுடாது நின்று ஞாயிறு போன வழியே. மேற்கு திசைபோய் மாலைப்பொழுதிலே மலையை அடைந்து இம்மண்ணுலகத்து வாழும் உயிர்களை எல்லாம் உறங்கா நின்று இராப்பொழுதெல்லாம் தானுறங்காதே வழங்கி மழை பெய்தலானே’ என்று மழை பெய்யும் மரபினைச் சுட்டுமிடத்து அம்மலைக்கு நீரை அளிப்பது கடல் என்று ஆசிரியர் நல்லந்துவனார் சுட்டிச் செல்கிறார். இக்கருத்தை வலியுறுத்தும் விதமாக பிறிதோரிடத்தில்

     

    நிறைகடன் முகந்துராய் நிறைந்துநீர் துளும்புந்தம்

                பொறை தவிர் பகைவிடப் பொழிந்தன்று வானம்

               நிலமறை வதுபோன் மலர்புன றலைத்தலைஇ (பரிபாடல், (6/1-3) வையை)

     

    என்ற வரிகளில்

    மேகங்கள் நீர் நிறைந்த கடலின் கண் உள்ள நீரை முகந்து கொண்டு வானத்தின் கண் எங்கும் பரவி நீர் நிறைதலாலே தம்பாறம் தீர்ந்து இளைப்பாறுதற் பொருட்டுப் பெய்வது போல  என்ற இடத்தில்

    மழைபெய்யும் நிகழ்வினை மரபு மாறாது கூறிச்செல்லும் கணம் மழை பெய்வதற்குக் கடலின் இன்றியமையாத் தேவையை மறைமுகமாகச் சுட்டிச் சென்றுள்ளார் என்றே கூற வேண்டும்.

    தொன்மைக்கு சான்றாகும் கடல்

    மக்களுடைய வாழ்க்கை நிலையை அறிய தொன்மைச் செய்திகள் சான்றாகிறது. அத்தொன்மைச் செய்திகளை அறிய இலக்கியங்களும் சான்றாக அமைகின்றன.

    அங்ஙனம், செவ்வேள், திருமால், வையை குறித்தப் பரிபாடலில் கடல் எனும் நெய்தல் நில முதற்பொருளை அப்பாடல் செய்த புலவர்கள் உவமை தோன்றக் கூறியுள்ளனர். அதில்,

    பாயிரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்குச்

                சேயுயர் பிணிமுகம் ஊர்ந்தம ருழக்கித்

                தீயழல் துவைப்பத் திரியவிட் டெறிந்து

                நோயுடை நுணங்கு சூர் மாமுதல் தடிந்து (பரிபாடல், (5/1-4) செவ்வேள்)

    என்கிற பரிபாட்டு வரிகளில், தீய குணம் கொண்ட சூரபன்மனாகிய கொடியவனை முருகப்பெருமான் பிணிமுகம் என்றும் யானை ஏறிக் கொன்ற தொன்மைச் செய்தியைக் கூறுமுகத்தான் ஆசிரியர் கருவனிளவெயினனார் கடலில் அதன் குளிர்ந்த தன்மை கொண்ட பாறைகள் நொறுங்குவதாகவும் கூறிச்செல்கிறார். இதன்கண் செவ்வேள் குறித்தப் பதிவுகளில் கடல் பற்றிய பதிவுகள் கிடைப்பதைக் காணமுடிகிறது.

    மற்றொரு இடத்தில் ஆசிரியர் நல்லந்துவனார்,

    ஒய்யப் போவாளை யுறழ்ந் தோளிவ் வானுதல்

    வையை மடுத்தாற் கடல் எனத் தெய்ய

    நெறிமண னேடினார் செல்லச் சொல் லேற்று

    செறிநிறைப்பெண் வல்லுறழ் பியாது தொடர்பென்ன (பரிபாடல், (20/40-44) வையை)

    என்கிற வரிகளை உடைய பாடலில்,

    தோழியர் கூட்டம் தலைவனைப் பற்றி உரையாடவும், அது கேட்ட பரத்தை அத்தோழியர் கூட்டத்தினூடே சென்று மறைந்து கொண்ட செய்தியைக் கூறுமிடத்து வையையை பரத்தைக்கும், கடலை மகளிர் திரளுக்கும் உவமை தோன்றக் கூறிச் சென்றுள்ளார் நல்லந்துவனார்.

    இதன்வழி ஆசிரியர் நல்லந்துவனார் கடலை உவமை தோன்றக் குறிப்பிட்டுச் சென்றுள்ளமை வெளிப்படை. மேலும் வையை ஆறானது கடலிலே சென்று புகுந்தாற்போன்று எனக் குறிப்பிட்டுள்ளமையால் வையை ஆறானது பரிபாடல் செய்யப்பட்ட காலத்தில் கடலில் கலந்த தொன்மைச் செய்தியை நல்லந்துவனார் வழி நாம் அறியமுடிகிறது.

    இவ்வாறு பரிபாடலிலும் தொன்மைச் செய்திகள் குறித்தப் பதிவுகளில் கடல் என்னும் நெய்தல் நில முதற்பொருள் சுட்டப்பெற்றுள்ளது.

    திருமால்

    திகழ்பெழ வாங்கித் தஞ்சீர்ச்சிரத் தேற்றி

                மகர மறிகடல் வைத்து நிறுத்துப்

                புகழ்சால் சிறப்பின் இடுதிறத் தோர்க்கும்

                அமுது கடைய.. இருவயினாணாகி (பரிபாடல், (23/65-68) திருமால்)

    என்ற பரிபாடல் வரிகளில் காணமுடிகிறது.

    அதாவது திருமால் அமிழ்தம் கடைய வேண்டி மந்தரமலையை ஆமை உருக்கொண்டு கடைந்த தொன்மை நிகழ்வினை உறுதிபடுத்தும் விதமாக தொல்காப்பியச் செய்யுளியலில் உரையாசிரியர் நச்சினார்க்கினியர் மேற்கோளாகக் காட்டிச் சென்றுள்ள பரிபாடல் வரிகளில் கடல் குறித்தப் பதிவுகள் காணப்படுகின்றன.

    இவ்வாறாக கடல்சார் பதிவுகள் பரிபாடல் எனும் சங்க இலக்கிய நூலில் ஆங்காங்கே காணக்கிடைக்கின்றன. அது மொழிப்பயன்பாட்டு திறத்தின் கண்ணும்,  மரபுச்செய்திகள் வழியும் தொன்மைச் செய்தியை நிறுவும் முகத்தானும் நமக்கு என்றும் துணைநிற்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

    முடிவுரை     

    1. கடல் குறித்த விளக்கத்தை நோக்குமிடத்து ஆறு (6) வகையான பொருட்கள் கலந்த நீர்நிலையே கடல் என்பதும் இங்கு தெளியப்பெறுகிறது.
    2. மொழிப்பயன்பாட்டு நிலைகளை ஆராயும்போது கடலினை உவமப் பொருளாகவும், காட்சிப்பொருளாகவும் சுட்டிச் சென்றுள்ளமையை பரிபாடல் புலவர்கள் வழி அறியமுடிகிறது.
    3. பரிபாடலில் மரபு வழிச் செய்திகளை ஆராயுமிடத்து கடல் குறித்த பதிவுகள் காணலாகிறது.
    4. வையை கடலில் கலக்கும் செய்தியை நல்லந்துவனார் வழி நம்மால் அறியமுடிகிறது.
    5. ஆறானது தோன்றி வரும் வழியெங்கும் வளம் கொழிக்கச் செய்வதே அதன் மரபு என்பது கரும்பிள்ளைப்பூதனார் வழி இங்கு எடுத்தியம்பப்பட்டுள்ளது.
    6. மழைப்பொழிவிற்கு அடிப்படை ஆதாரமாக இருக்கும் கருவிகளுள் கடல் என்பது இன்றியமையா இடத்தைப் பெற்றுள்ளது என்பதுஉம் திண்ணம்.
    7. தொன்மை நிகழ்வுகளை கூறுமிடத்து பரிபாடற் செய்த புலவர்கள் கடல் என்ற நெய்தல் நிலமுதற்பொருளை உவமை தோன்ற எடுத்துக் கையாண்டுள்ளனர் என்றே கூறவேண்டும்.
    8. செவ்வேள் குறித்தப் பதிவுகளில் சூரபன்மனை அழித்த தொன்மை நிகழ்வைச் சுட்டுமிடத்து உவமப் பொருளாக கடலை ஆசிரியர் சுட்டிச்சென்றுள்ளமை வெளிப்படை.
    9. திருமால் குறித்தப் பதிவுகளில், திருமால் அமிழ்தம் வேண்டி மந்தரமலையை கடைந்த தொன்மை நிகழ்வுகளை எடுத்து இயம்புமிடத்து கடல் குறித்தப் பதிவுகள் காணக்கிடக்கின்றன.
    Share
  • படக்கவிதைப் போட்டி (156)

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    பார்கவ் கேஷவ் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • ஆப்பிள் தோப்புக்குப் போவோமா ?

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++

     

     

     

     

     

     

     

     

     

    உன்னைக் கூட்டிச் செல்லவா ?

    ஆப்பிள் தோப்புக்கு போகிறேன்.

    எதுவும் மெய்யல்ல !

    எதையும் பற்றித் தொங்காதே !

    ஆப்பிள் தோப்பிலே  நீ

    எப்போதும் கிடக்காதே !

    விழிகளை மூடிக் கொண்டு

    வாழ்வது எளிது !

     

    பார்ப்ப தெல்லாம் புரியாது

    திரிக்கப் படுகிறது !

    அடுத்தவன் உடலுக்குள் புகுந்து

    நடிப்பது கடினம் !

    எல்லாம் நடக்குது எப்படியோ !

    எனக்கொரு கவலையும்

    இல்லை  !

    இருவரும் ஆப்பிள் தோப்புக்கு

    ஏகுவோம் !  வா !

    எதுவும் மெய்யல்ல !

    எதையும் பற்றித் தொங்காதே !

     

    ஆப்பிள் தோப்பு என்றும்  உனக்கு

    வாழும் இடமில்லை !

    எனக்குத் தெரியும்  நன்றாய்

    ஆப்பிள்

    பூப்பதில்லை  என்றும்

    என் மரத்தில் !

    மேலிருக் கலாம், அன்றி

    கீழிருக் கலாம்  எனக் கூறுவாய் !

    உனக்குத் தெரியுமா ?

    ஆப்பிள் தோப்புக்கு போவோம்.

    எதுவும் மெய்யல்ல !

    எதையும் பற்றித் தொங்காதே !

    Share
  • இரை தேடும் பறவை..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

     

    வரைமுறை ஏதுமிலையெல்லாம் வல்ல இறைவனுக்கு

    ……….வகையாய் அனைத்தையும் படைத்தே ஆளுகிறான் *

    கரையிலாக் கடல்போல் பரந்த(அ)வன் படைப்பிலே

    ……….காணுகின்ற அற்புதத்தில் ஒன்றுதான் பறவையினம் *

    இரைதேடவே வாழ்வில் பெரும்பகுதி கழிந்துவிடும்

    ……….இதற்கொரு ஈடிணையான படைப்பிலை யெனலாம் *

    வரைவியலோடு நாமிதை ஆராய்ந்தால்? நமக்குமே

    ……….வரும் பொறாமை! வாழ்விலது வாராதிருக்கவேணும் *

     

     

    மண்டலத்தில் உலவு முயிரினத்தில் பறவையுமொன்று

    ……….ஒவ்வொன்றுக்கும் ஒப்பிலாத தனித் திறமையுண்டு *

    உண்டழிவென்று தெரிந்தாயிவை? ஓராயிரம் மைல்

    ……….நீண்டதூரம் ஓய்வின்றிப் பறக்கிறது! வியப்புதானே *

    கண்டம்விட்டுக் கண்டம் தாண்டியும் பறக்குமாமது

    ……….கொண்ட கொள்கையால் சேருமிடம் சென்றுவிடும் *

    பண்டைக் காலமுதலே பறவையதன் குணமறிந்து

    ……….படைப்பின் பயனையறிந்து கொண்டார் பாமரரும் *

     

     

    புரையோடிக் கிடக்கும் லஞ்சஊழல் உலகினில்

    ……….புரிந்துகொள்ள வேண்டிய தென ஏராளமுண்டாம் *

    வரையிலாமல் படித்தது வாழ்வில்செய்த பிழையா?

    ……….வளர்த்த தகுதிக்கு தகும்வேலை தரணியிலில்லை *

    அரைப்படிப்பு படித்து அரங்கத்தில் அமர்ந்தவரோ

    ……….ஆயிரம் கேள்விகேட்பார் வேலையென வந்தால் *

    நரைமுடியும் தோன்றி ரத்தநாளமும் சுருங்கியது

    ……….இரைதேடும் பறவைபோல இன்றும் அலைகிறேன் *

    ============================================================

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 26 March’2018

    படம் நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • தமிழில் புலி

    அவ்வைமகள்

     

    புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது என்பது நமக்கெல்லாம் பரிச்சயமான பழமொழி. இதனை, இதன் சரியான பொருள் தெரியாமல் பயன்படுத்தி வந்திருக்கிறோம் என்ற நிலையில் நம் சிந்தனையைக் கொஞ்சம் தமிழில் புலியின் பால் செலுத்துவது நல்லது.

    (புல் + இ = புலி) புலி எனும் வனவிலங்கு வாழ, புல் இன்றியமையாத ஒன்று. புல் இன்றி வாழாப்புலி என்பதே புலியின் இலக்கணம். புல்வெளிகளும், புதர்களும், பெரிதான நீர்வளம் கொண்ட அடர்வனங்களும் நிறைந்து இருக்கும் சூரிய ஒளி மிகுந்த, விஸ்தாரமான, பூகோளப்பகுதியிலே மட்டும் புலிவாழும்.

    புல்லையும், இலைதழைகளையும் உண்டு வாழும் மான்களும், காட்டுமாடுகளும், இலைதழைக்ளோடு, கிழங்குகளையும் பெயர்த்து உண்ணும் காட்டுப்பன்றிகளும், புலியின் பிரதான உணவு என்பதால் புல்லின்றிப் புலி இல்லை என்பதே உண்மை. அதுமட்டுமல்ல, புலியும் கூடப் புல்லை உண்ணும். புலி புல்லை உண்பதற்கு மூன்று காரணங்கள் உண்டு: (1) உண்ணும் உணவு – செரிக்க, (2) செரிமானக்கோளாறுகள் நீங்க, (3) விரதமிருந்து செரிமானமண்டலத்தைத் தூய்மைப்படுத்த.

    பசிக்காக ஒரு மிருகத்தை வேட்டையாடி உண்ணும் புலி – தனது ஒவ்வொரு சாப்பாட்டிற்குப் பின்னும் புல்வெளியில், புல்மெத்தையில் சாவதானமாய்ப் படுத்து அடிவயிறு புல்லில் நன்கு ஸ்பரிசுக்குமாறு உடலை லாவகம் செய்து மசாஜ் செய்தபடி, அங்குள்ள புல்லையும் பிடுங்கி உண்ணுகிறது. புல் மசாஜ் வெளிப்புறத் தூண்டுதலை உண்டாக்குகிறது, உள்ளே சென்ற புல்லோ, உண்ட உணவு செரிமானம் அடையவும் – கூடுதல் ஊட்டச்சத்துக்கள் உணவோடு சேரவும் உதவுகிறது; கால்சியம், மெக்னீசியம், மற்றும், உப்பு புலிக்குப் புல்லின் நன்கொடை.

    அதுமட்டுமல்ல, செரிமானக்கோளாறு எப்போதெல்லாம் ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் புல்லை உண்பது புலியின் வாடிக்கை. இன்னொரு ஆச்சரியமான நிகழ்வு என்னவென்றால் புலி வகையறாக்கள், மாதத்தில் ஒருநாள் வேறெதையும் உண்ணாது புல்மட்டுமே உண்டு விரதமிருக்கும். வளர்பிறையில் பதினோராம் நாளான ஏகாதசியன்று பூனைகள் அருகம்புல்லும் கற்பூரவல்லியும் மட்டும் உண்டு விரதம் இருப்பதை நாமறிவோம். தங்கள் செரிமான மண்டலத்தைப் பூனைகள் இவ்வாறு தாமே சுத்தம் செய்து கொள்ளும். புல்லை அரைத்து மெல்லும்போது சுரக்கும் உமிழ்நீர் வளப்பமும், அரைத்து மென்ற புல்லின் கொரகொரப்பும் சக்கையும் சேர்ந்து, பூனைகளின் இரைப்பையையும் குடலையும் “பிரஷ்” போட்டுத் தூய்மை செய்வதுபோல் தூய்மை செய்துவிடும். ஆனால், புல்லை பிரதானமான உணவாக உண்ணும் செரிமான மண்டலம் புலிக்கு இல்லை. எனவே புல் என்பது புலியின் உணவல்ல – அது ஒரு உணவு உதவிப்பொருள் மட்டுமே – ஒரு சுத்திகரிப்புச் சாதனம் மட்டுமே என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

    புல்லை உண்ணும், ஆடு, மாடு போன்ற கால்நடைகளை அசைபோடும் பிராணிகள் என்கிறோம். அவை முதலில் உணவை அவசர அவசரமாய் விழுங்கி – இரைப்பையில் முதல்தளப் பதனத்தை ஏற்படுத்திவிடுகின்றன; அடுத்து, அவ்வாறு இரைப்பையில் பதனமான உணவை மீண்டு வாய்க்குள் கொண்டுவந்து – சாவதானமாய் அசைபோட்டு அரைத்து, மீண்டும் இரைப்பைக்குள் செலுத்தி செரிக்கும் நுட்பமான செரிமான மண்டல அமைப்பைக் கொண்டவையாக அவை இருக்கின்றன. (அவற்றின் இரைப்பையில், டீசல் எஞ்சினில் இருப்பதுபோல் நான்கு அறைகள் உண்டு). ஆனால், புலியின் செரிமான மண்டலமோ மிகவும் எளிமையானது. எனவே அதற்கு, உணவை செரிக்க, கூடுதல் உதவி தேவைப்படுகிறது. எனவே, உணவின் மேலீடாக, புல்லையும் உடன் உண்ணவேண்டிய அவசியம் புலிக்கு உள்ளது. ஆக, புல்லின் துணையின்றி புலியால் வாழ இயலாது என்பது தெளிவு. புலி மட்டுமல்ல – பற்பல விலங்குகளுக்கும் – உணவின் மேலீடாக புல்லையும் இன்னபிற இலைதழைகளையும், (ஏன் கல்லையும் மண்ணையும் கூட) உண்ணவேண்டிய அவசியமும் – பரிணாம வழக்கும் உள்ளது.

    உணவு மேலீடாக மட்டுமில்லாமல் காயங்களை ஆற்றிக்கொள்ளவும் கூட புல் உள்ளிட்ட இலைதழைகளை மிருகங்கள் நாடுகின்றன. இவ்வகையில் வல்லாரைக்கொடி, புலியின் உற்ற தோழன். வேட்டையிடும்போதும், வலிய மிருகத்தின் அழுத்தமான மாமிசத்தை எலும்புகளிலிருந்து இழுத்தும் கிழித்தும் உண்ணவேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாலும் புலிக்கு ஓயாமல் காயங்கள் ஏற்படும். இந்தக் காயங்களை, வல்லாரையின் மீது புரண்டும், அதன் இலை-தண்டுகளைக் கசக்கிக் காயத்தின் மேல் இட்டும் புலி தனக்குத் தானே சிகிச்சை செய்துகொள்ளுகிறது. இவ்வாறு, புலியின் ஆத்மார்த்த மருந்தாய் வல்லாரை விளங்குவதால் அதனை, “புலிப்புல்” என்றே தமிழுலகம் வழங்குகிறது. அதே போல, புலிக்கு, சமிக்ஞைகள் தருவதில் ஒரு குருவிக்கு பிரத்யேக அக்கறை இருக்கிறது. அக்குருவியை, “புலி வானம்பாடி” என்றே அழைக்கிறார்கள். அக்குருவியின் சிறகு கூட ஏறக்குறைய புலி வண்ணத்தில் கோடுகளுடன் காணப்படும். இவ்வாறு விலங்குகள் தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்வதை, இன்றைய அறிவியல், “Zoopharmacognosy” என்று பெயரிட்டு, அதனை, ஒரு தனித்துறையாக வைத்து ஆய்வு செய்து ருசிகரமான தகவல்களை அறிந்து அறிவித்து வருகிறது.

    ஆக, சாப்பாட்டிற்குப் பிறகு தாம்பூலம் என்கிற கதையாய், புல்லை உண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் புலி இருக்க, “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்று பழமொழி வருகிறதே என்ற எண்ணம் எவருக்கும் ஏற்படுவது இயல்பே. இப்பழமொழியின் உண்மையான பொருளை அறிந்து கொள்ளவேண்டுமென்றால், “புலி ” என்னும் சொல் தமிழில் எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது என்பதை நாம் அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

    பார்க்கப்போனால், “புலி” எனும் தமிழ் வழக்காடல் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்தும் சுகானுபவத்தை அள்ளிஅள்ளித் தருகிறது . இதோ காணுங்கள் கவி ரசம் சொட்டும் ஓர் அற்புத புலிக் கவிதையை (தனிப்பாடற்றிரட்டு: இரண்டாம்பாகம்; திரட்டியவர்: கா இராமசாமி நாயுடு; வித்தியாரத்நாகர அச்சுக்கூடம், 1914; இந்நூலை சென்னைப் பல்கலைக்கழக நூலகத்தில் நான் வாசித்திருக்கிறேன்; பெயர் தெரியாத கவிகள் பலர் இயற்றிய பாடல்கள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன).

    புலியைக்கொடுத்து பசுவாங்கியோர் புலிப் பூங்குழலாள்
    புலியைப்பசுத்தின்னவிட்டுப் புலியைத்தினாதகற்றிப்
    புலியையரைத்துப் பலகாரஞ்செய்து பொருந்துமுகப்
    புலியைக்களிப்புடன் சாறுவைத்தாடன் புருஷனுக்கே

    புலி = பொன் ; புலி = புலி மலராம் வேங்கை மலர் ; புலி = நெல்லின் வைக்கோல்; புலி = சோளக்கதிர் ; புலி = துவரை-உளுந்து ; புலி = வடை

    இப்பாடலின் பொருள் யாதெனில்: பொன்னைக் கொடுத்து ஒரு பசுவை வாங்கியவளான, வேங்கை மலரைக்குழலில் செருகியிருந்த ஒரு பெண், நெல்லின் வைக்கோலை அப்பசு உண்ணுமாறு செய்து, சோளக்கதிரை அப்பசு தின்னாதவாறு அதனை அகற்றி விட்டு, உளுந்தையும் துவரையையும் அரைத்துப் பலகாரம் செய்து – பொரித்ததால், பொருந்திய முகத்தை உடைத்தான வடையை நன்கு புளித்த மோராலான குழம்பிலிட்டு வைத்தாள் தனது புருஷனுக்காக.

    ஆக, புலி என்பதற்கு பல பொருட்கள் உண்டு என்பது வெளிப்படை. இதுமட்டுமல்ல;

    இதேபோல், புல் எனும் சொல் பசும்புல் என்பதைத்தவிர இன்னபிற பயன்பாடுகளையும், தமிழ் வழக்கில் கொண்டுள்ளதைக் காண்கிறோம். எடுத்துக்காட்டாக: புல்லர் (வேடர்), புல்லியர் (கீழோர்), புல்லார் (பகைவர்), புல்லல் (அணைத்தல்), புல்லிது (பாழ்பட்ட அல்லது பாவம் சோர்ந்த); புல் (களை) எனப் பல பயன்பாடுகள். புலி எனும் ஒற்றைச் சொல்லின் பயன்பாட்டையும்; புல் எனும் ஒற்றைச் சொல்லின் பயன்பாட்டையும் வைத்துப் பார்த்தால், தமிழை, மொழிகளில் புலி என்று சொல்வது தானே பொருத்தமாக இருக்கும்!

    இது நிற்க.

    இப்போது பழமொழிக்கு மீண்டும் வருவோம்: “புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது” என்கிற பழமொழியில் “புல்” என்பது பச்சைப்புல்லைக் குறிப்பதாகக் கொண்டால் – புல்லைத்தின்னும் பழக்கமுள்ள புலி என்ன பசித்தாலும், புல்லை, புலால் உண்ட பின் உணவு மேலீடாக மட்டும் உண்ணுமே தவிர ஆடுமாடுகள் போல் புல்லை, பிரதான உணவாகக் கொண்டு புல்மேய்ந்து வாழாது என்பதாகக் கொள்ளலாம்.

    எனினும், தமிழ் தர்மமாகப் பார்த்தால், இப்பழமொழியில், புல் என்பதை பசும்புல் எனக்கொள்ளாமல், “தரம் தாழ்ந்த உணவு” என்று கொள்வது தான் பொருத்தம்.

    என்னதான் பசித்தாலும் – அளவில் பெரிய – வலிய மிருகங்களை மட்டுமே புலி தானே வேட்டையாடி உண்ணுமே தவிர அற்பசொற்பமான மிருகங்களான – முயல் – எலி – பறவைகள் – பாம்பு போன்றவற்றை ஒருக்காலும் சீண்டாது. மேலும், புலியானது, என்னதான் பசித்தாலும், ஒருக்காலும் பிறர் வாய்வைத்த உணவை உண்ணவே உண்ணாது. அது மட்டுமோ? அதன் உணவை அதுவும் அதன் குடும்பமும் சுயமாக வேட்டையாடி வென்று உண்ணவேண்டும் என்பது கட்டளை. அதுவும், அது வேட்டையாடிய உணவை, அதுவும் அதன் குடும்பம் மட்டுமே முதலில் உண்ண வேண்டும் என்பது புலிக்கு மிகவும் முக்கியம். குறிப்பாக, குழந்தைகளும், பெண்ணும் உண்டபின்பே ஆண் புலி உண்ணும். வேறு ஏதாவது மிருகம் அவர்கள் உண்ணும்போது வந்து, உணவில் வாயை வைத்துவிட்டால் கடுமையான சண்டை ஏற்படும். பிறர் வாய் வைத்த அந்த உணவை அப்படியே துறந்துவிட்டுப் போகவும் புலி தயங்காது.

    இதுமட்டுமல்லாது- புல்லைத் தாண்டி, சில கூடுதல் செய்திகளையும் இங்கு தெரிந்து கொள்வது நல்லது. புலிக்கும், புல்வெளிக்கும், காடுகளுக்கும், வலிய மரங்களுக்கும்-காடுகளுக்கும் அதிநெருங்கியத் தொடர்புண்டு. முதன்மையாக, அடர்க்காடுகளும் அடர்ந்த புல்புதர்களும் புலிக்கு, உருமறைவுக்கு (Camouflage) உதவுகின்றன. (படம் காண்க: https://www.asiangeo.com/gallery/tiger-tiger-burning-bright/). ( பல உயிரிகளின் வாழ்வாதாரத்திற்ககு உருமறைவு இன்றியமையாதது என்பதை நாமறிவோம். அல்லவா?)


    அடுத்து, மரக்கிளைகளில் அமர்ந்து கால்களை ஹாயாகத் தொங்கவிட்டபடி இளைப்பாறுவது என்பது புலிகளுக்கு மிகவும் பிடித்த பொழுது போக்கு (படம் காண்க: dreamstime.com).

    மரத்தின் மேல் இளைப்பாறும்போது தனது எல்லைவரையறையும் சுற்றுப்புறசூழலும் சரியாக இருக்கின்றனவா என்பதை புலி சரிபார்த்துக்கொள்ளும். தனது எல்லை வரையறையை, பிற புலிக்குடும்பம் ஏதாவது திருடிக்கொள்ள முயன்றால் அங்கே ரணகளம் ஆகிவிடும் உயிர்ச்சேதம் தடுக்கவியலாது. மேலும், மேலேறிப் பார்க்கும்போது அடுத்து தன வேட்டையை எங்கு துவக்கலாம் என்பதையும் புலி தனக்குள் தீர்மானித்துக்கொள்ளும்.

    பொதுவாக, ஒரு புலிக்குடும்பம் தனக்கென்று விஸ்தாரமான பிரதேசத்தை வரையறுத்துக் கொள்கிறது; குறுகிய இடங்களில் புலியால் வாழ முடியாது. ஆடியும், சாடியும், ஒடியும், உடலுறவு கொள்ளவும், தன் குழந்தைகளுக்குப் பயிற்சி தரவும், என நிறைய இடம் தேவைப்படுகிறது ஒரு புலிக்குடும்பத்திற்கு. அதுவும் பெண் புலி, பிரசவத்திற்காக, தராளமான இடத்தை விரும்புகிறது. பிறந்த குட்டிகளை பெரிதாகும் வரை, மரங்களுக்கு கீழே – புதர்களில் குட்டிகளை மறைத்து வைப்பது புலியின் வழக்கம்.

    புலிகளின் பரிணாம வளர்ச்சியிலேயே அவை காட்டின் அவதாரமாகவே – சூழ்நிலையின் பிள்ளைகளாகவே படைக்கப்பட்டிருக்கின்றன. புலித்தோலின் மேலுள்ள வரிச் சித்திரம் நெருங்கிய மரகிளைகளையே குறிக்கிறது. இதன் காரணமாகவே, நெருங்கிய காட்டுப்பகுதிகளை – (புலியே இல்லையென்றாலும் கூட) அவற்றைப் புலிக்காடுகள் – புலிப்புதர்கள் என்றே அழைப்பதுண்டு (படம் காண்க: https://en.wikipedia.org/wiki/Tiger_bush)

    இறுதியாக, ஒன்றை நினைவிலூட்டிக்கொள்ளுவது நல்லது: வனங்களை நேசிக்கும் புலிகளுக்கு மனிதர்களைப் பிடிக்காது. மனிதர்களை விடுத்து வெகுதூரத்தில் வசிக்கவே அவை ஆசைப்படுகின்றன.+

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – (102)

    நிர்மலா ராகவன்

    உதவினால் உற்சாகம் வரும்

    `வயதாகிவிட்டதா! ஒரே மறதி!’ பலரும் அலுத்துக்கொள்வதைக் கேட்டிருப்பீர்கள்.

    ஓர் அறைக்குள் சென்று, அல்லது ஐஸ்பெட்டி அருகே போய் நின்று, அங்கே எதற்காக வந்தோம் என்று மறந்து நிற்பது வயோதிகர்களுக்கு சகஜம். இது ஒன்றும் பெரிய வியாதி இல்லை.

    நாற்பது வயதுகூட ஆகாத சிலர்கூட ஒரே இடத்தில் ஒன்றும் செய்யாது உட்கார்ந்திருந்தால் ஏதோ பெரிய பதவியிலிருப்பதுபோல் எண்ணிக்கொள்வார்கள். மூளையும் மந்தமாகிக்கொண்டே போகும். மூளைக்கு வேலை கொடுத்துக்கொண்டே இருந்தால்தானே அது சுறுசுறுப்பாக இயங்கும்?

    வேலை என்றால் கையால், காலால் செய்வது மட்டுமில்லை. கையால் ஒரு சாமானை எடுக்க வேண்டும் என்றால், மூளைதானே அதற்கு அந்தக் கட்டளையை இடுகிறது? ஐம்புலன்களுக்கும் பயிற்சி கொடுத்துக்கொண்டே இருப்பது மூளைக்குப் பயிற்சி கொடுத்ததுபோல்தான்.

    சில கலாசாரங்களில், எந்த நற்காரியத்தையும் வலது கையால்தான் செய்யவேண்டும் என்று சிறு வயதிலிருந்தே பழக்கியிருப்பார்கள். ஒரு பூட்டையோ, கதவையோ திறக்க அவ்வப்போது இடதுகையையும் பழக்கினால், அதுவே மூளைக்கு ஓர் உந்துதலாக ஆகிறது.

    கதை

    `நான் வலது கையை மட்டும்தான் உபயோகிப்பேன்! ஒரு கோப்பையைக்கூட இடக்கையால் தூக்க முடியாது’ என்று சிறு வயதில் நான் பெருமை கொண்டிருந்தேன். எல்லாம் வலக்கரத்தின் மகிமையைப் பிறர் சொல்லக் கேட்டதால்தான்!

    ஆனால், நீந்தக் கற்கும்போது அப்பழக்கத்தால் அனர்த்தம் விளைந்தது. உடல் ஒரு பக்கமாகச் சாய்ந்தது. மிகவும் பிரயாசைப்பட்டு இடது கையைச் சுழற்ற வேண்டியிருந்தது. சில நாட்களிலேயே, `நீந்தினால் சுறுசுறுப்பு வருகிறதே!’ என்ற ஆச்சரியம் எழுந்தது. மூளைக்குப் பயிற்சி கொடுக்கிறோம் என்பது அப்போது புரியவில்லை.

    நீச்சல் மட்டுமின்றி, நடைப்பயிற்சியும் மூளையைச் சுறுசுறுப்பாக்கும்.

    வயோதிகர்கள் பூங்காவிலோ, கோயிலிலோ, கடைவீதிகளிலோ தம்மை ஒத்த பிறருடன் உரக்கப் பேசி மகிழ்வதைப் பார்க்கலாம்.

    `சாயந்திரம் ஆனா, எங்க வீட்டுக்காரர் ஒரு கைத்தடியோட வாக்கிங் போயிடுவார்!’ என்று ஏளனமாக ஒரு மூதாட்டி சொன்னார். நடப்பது, பிறருடன் பேசுவது இரண்டுமே மன இறுக்கத்தைக் குறைக்கும் என்று அவருக்குப் புரியவில்லை.

    உடல் உபாதைகளைப்பற்றியோ, `இனி என்ன இருக்கிறது! நம் காலம் முடிந்துவிட்டது!’ என்றோ நினைத்து வருந்தாது, ஆக்ககரமாக நடக்கிறாரே என்று மகிழ்ச்சிகொண்டிருக்கலாமே!

    உட்கார்ந்த நிலையில் காலை ஆட்டுவது

    படிக்கவோ, கணினிமுன் உட்கார்ந்து விளையாடவோ ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் சிறுவர்கள் காலை ஆட்டியபடி தம் வேலையைக் கவனிப்பார்கள்.

    `இது என்ன கெட்ட பழக்கம்?’ என்று திட்டு வாங்கினாலும், அவர்கள் அப்படியே செய்துகொண்டிருப்பார்கள்.

    இயல்பாகவே அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, புத்தகம் படிப்பது, காலுக்குப் பயிற்சி கொடுப்பது அனைத்துமே மூளையை அயராது வேலை செய்ய வைக்குமென்று. இப்பழக்கத்தால் ஞாபகசக்தி பெருக வாய்ப்பிருக்கிறது.

    குறிப்பிட்ட இடத்துக்கு அனுதினமும் ஒரே வழியில் நடக்காது, வெவ்வேறு வழிகளில் நடக்க முயற்சித்தால், சிறிது யோசிக்க வேண்டியிருக்கும், அல்லவா? அதுவும் கற்பனை சக்தியையும், பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் ஆற்றலையும் பெருக்குகிறது.

    `உங்கள் நாட்டிலிருந்து வரும் நகைகள் எப்படி அவ்வளவு துல்லியமான வேலைப்பாடுடன் அமைந்திருக்கிறது? என்று நான் கேட்டபோது, என் கொரிய நண்பர் தெரிவித்த செய்தி:

    சாப்பிடும்போது, ஓரிரு அங்குல நீளமே கொண்ட மிகச் சிறிய “சாப் ஸ்டிக்” பயன்படுத்துவார்களாம் அந்நாட்டவர்கள். அதனால் அவர்கள் நுண்ணிய கைவேலைகளில் சிறந்திருப்பார்கள்.

    கை, கால், கண் ஆகியவை மூளையை சுறுசுறுப்பாகவே வைத்திருக்க வழி செய்கின்றன. சரி, பிற புலன்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது?

    `மூக்கிற்கும், நாக்கிற்கும் பயிற்சியா!’ என்று அயர வேண்டாம். கண்ணை மூடிக்கொண்டு, இன்னொருவரை உங்கள் மூக்கின் அருகே ஒரு சாமானை, அல்லது உணவை கொண்டுவரச் சொல்லுங்கள். அது என்னவென்று கண்டுபிடிக்க முடிகிறதா? (பள்ளியில், விஞ்ஞான பாடத்தின்போது இந்தப் பரிசோதனையைச் செய்யச் சொல்வதுண்டு).

    எல்லாப் பள்ளிக்கூடங்களிலும் தேகப்பயிற்சி ஒரு பாடமாக அமைந்திருக்கிறது. காலையில், அன்றைய தினப் பாடங்கள் ஆரம்பிக்குமுன்னர் யோகா கற்றுக்கொடுப்பதும் உண்டு. மூளை சுறுசுறுப்பாக, எவ்வித இறுக்கமுமின்றி இயங்க, மாணவர்கள் தூங்கி வழியாமல் இருக்கத்தான் இப்பயிற்சிகள். இதன் முக்கியத்துவம் புரியாது, பலரும் அரைமனதுடன் ஈடுபடுவார்கள்!

    “நான் ஒரு பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியராக இருந்தபோது, மாணவர்கள் ஒளிந்துகொண்டு விடுவார்கள். அவர்களைத் தேடிக் கண்டுபிடிக்கவே நேரம் போய்விடும்!” என்று என் சக ஆசிரியர் ஒருவர் அயர்ச்சியுடன் கூற, எல்லாரும் சிரித்தோம்.

    வயது முதிர்ச்சியால் உபாதைகள்

    அறுபது வயதுக்குமேல், பெண்மணிகளுக்கு ஆர்தரைடிஸ் வருகிறது. இடுப்பு, முழங்கால், பாதம் எல்லாவற்றிலும் வலி உயிர் போகும். `நான் குண்டாகக்கூட இல்லை. இருந்தாலும் காலில் பொறுக்க முடியாத வலி!’ என்று புலம்பிப் பயனில்லை.

    நாம் அதிகம் பயன்படுத்தாத, அல்லது மிகையாகப் பயன்படுத்தும் எந்தப் பாகமும் விரைவில் வலுவிழந்துபோகும். இள வயதினர்களாக இருந்தாலும், கணினிமுன் நீண்ட நேரத்தைக் கழிப்பவர்களுக்கு தோள் மற்றும் மணிக்கட்டில் பொறுக்க முடியாத வலி ஏற்படுகிறது. அந்தந்த பாகங்களுக்கு உரிய பயிற்சி உண்டு.

    `பள்ளி நாட்களிலேயே நான் உடற்பயிற்சி என்றால் ஓடி ஒளிவேன். இப்போது யார் செய்வார்கள்!’ என்பவர்களுக்கு விமோசனமே கிடையாது.

    வலியால் மன இறுக்கம் அதிகரிக்க, வலியை மறக்க, தங்களுக்குக் கீழ் இருக்கும் அபாக்கியவான்களை ஓயாமல் சாடுவது என்ன நியாயம்?

    இசையைச் செவிமடுப்பதன்மூலம் அமைதியை நாடலாம். நம்மைச் சிரிக்கவைக்கும் திரைப்படங்கள், புத்தகங்கள் ஆகியவைகளும் அமைதியை அளிக்கவல்லன.

    தனிமையில் இனிமை காண முடியாதவர்கள் பிறருடன் கலந்து பழக, வாழ்க்கையில் பிடிப்பு வரும்.

    சமீபத்தில் ஒருவர் தினசரியில் எழுதியிருந்தது: `நான் மன இறுக்கத்தால் அவதிப்பட்டேன். பிறருக்கு உதவி செய்தால், அது குறைந்துவிடுகிறது. `நம்மாலும் பிறருக்கு உதவி புரிய முடிகிறதே!’ என்று உணரும்போது, மனம் உற்சாகமாகிவிடுகிறது’.

    உடற்பயிற்சியா, உதவியா?

    இரண்டுமே அவசியம்தான். உடல் திடகாத்திரமாக இருந்தால்தானே பிறருக்கு உபத்திரவம் அளிக்காது, உதவியாக இருக்க முடியும்?

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 15

    க. பாலசுப்பிரமணியன்

     

    நலமான வாழ்க்கைக்கு ஒரு நடைப்பயணம் !

    வாழ்க்கையில் பல சாதனையாளர்களை நாம் சந்தித்திருக்கின்றோம். இவர்கள் அனைவருக்கும் உள்ள சில அடிப்படை ஒற்றுமைகள் என்ன? – வாழ்க்கைக்கு ஒரு இலக்கு, தெளிவான சிந்தனை, பயணத்திற்கேற்ற பாதை, முயற்சி, கடின உழைப்பு, பொறுமை, தோல்விகளை ஏற்றுக்கொண்டு சந்திக்கும் மனப்பான்மை, மாற்றங்களை ஏற்றுக்கொள்ளுவதற்கான துணிச்சல் மற்றும் வாழ்க்கையை ரசிக்க வேண்டும் என்ற ஒரு விருப்பம்….

    இத்தனையும் இருந்தாலும் ஒருவருக்கு உடல் நலமும் மனநலமும் இல்லையென்றால் வெற்றிப்பாதையில் முன்னேறுவதற்கான பல தடைகள் வந்துகொண்டே இருக்கும். இவற்றையும் ஏற்று சந்தித்து வெற்றி பெற்றவர்கள் ஏராளம்.. ஏராளம்…

    உலகில் பாதியை தன் வீரத்தால் வென்ற ரோமாபுரி அரசன் ஜூலியஸ் சீசர் வலிப்பு நோயால் பாதிக்கப் பெற்றவர். இந்த நோய் அவருடைய வீரத்தையும் இலக்கினையும் வீழ்த்தவில்லை…தன்னுடைய திறமையினால் உலகை வியக்க வைத்த பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் சற்றே உயரம் குறைவாக இருந்ததால் சிறிது தாழ்வு மனப்பான்மைக்கு அடிமையானதாக சரித்திரம் கூறுகின்றது… ஆனால் அதுவே அவனுக்கு  உழைப்பாலும் முயற்சியாலும் வெற்றிக்கனியை பறித்திட வழி வகுத்தது. ஏழு முறை ஆஸ்கார் பரிசுகள் வென்ற விருது பெற்ற ரிச்சர்ட் பர்டன் என்பவர் வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர். பல நேரங்களில் படப்பிடிப்பின் போது மயங்கி கீழே விழுந்தவர்.. தடைகள் அவர் முன்னேற்றத்திற்கு தடையிடவில்லை.

    உலகப் பிரசித்தி பெற்ற பீத்தோவன் என்ற இசைமேதைக்கு சரியாக காது கேட்கவில்லை. பல நேரங்களில் மேடைகளில் கிடைத்த கர ஒலிகளைக்கூட அவரால் கேட்கமுடியவில்லை… ஆனால் இசையில் உலக சாதனை படைத்தவர்… தொலைபேசியைக் கண்டுபிடித்த கிரகாம் பெல் என்பவருக்கு சரியாகக் காது கேட்கவில்லை. ஆனால்  உலகில் ஒருவர் பேசுவதை மற்றவர் தூரத்தில் இருந்தே கேட்பதற்கான நுண்கலையைத் தந்தவர்…பைரன் என்ற மிகச் சிறந்த கவிஞருக்கு மூளையில் நரம்புக்கோளாறு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தான் எழுதிய படைப்புகளையே அவர் மறந்தார்.ஆனால் அவர் படைப்புத் திறன் குறையவில்லை. புகழ் பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கென்ஸ் என்பவர் மனநோயால் பாதிக்கப்பட்டு மனநலக் காப்பகத்தில் மூன்று முறை வைக்கப்பட்டிருந்தார். ஒவ்வொரு முறை திரும்பி வந்ததும் ஒரு புதிய பதிப்பைத் தந்தார்..

    இது போன்ற பல சாதனையாளர்களின் சரித்திரங்கள் நமக்கு முன்னோடியாக இருந்தாலும் ஒரு சாதாரண மனிதனைப் பொறுத்த வரை வாழ்வில் அன்றாட வாழ்க்கையை சமாளித்து வெற்றிநடை போடுபவர்க்குத் தேவையானவை – உடல் நலமும் மன நலமும்.

    “சுவரிருந்தால் தானே சித்திரம் எழுத?” என்பது வழக்கு மொழி. “உன்னுடைய உடலைப் பாதுகாத்துக்கொள். உன் வாழ்க்கை அதற்குள்தான் அடங்கியிருக்கின்றது.” என்று உலகளாவிய தத்துவ மேதைகளும் அறிவியல் வாதிகளும் மருத்துவர்களும் கூறிவருகின்றனர். இந்த உடல் என்பது இறைவன் நமக்குக் கொடுத்த ஒரு மிகப் பெரிய பரிசு. எத்தனை எலும்புகள்.. எத்தனை நரம்புகள்.. எத்தனை வேதியல் பொருட்கள்.. எத்தனை விதமான அசைவுகள்…வியப்பைத்தரக்கூடிய மனித மூளை… பல நூறு கணினிகள் சேர்ந்தாலும் ஒரு மூளை செயல்படுத்தும் சாதாரணச் செயல்களைக் கூட ஈடுபடுத்த முடியாத விந்தை… இந்த மூளையின் படைப்புத்திறன்… அதனுடன் சேர்ந்த உணர்வுகள்.. ஆசைகள்.. விருப்பங்கள்.. கனவுகள்… எண்ணங்கள்.. கருத்துக்கள்… அறுசுவையை ரசிக்கின்ற நாக்கு.. எத்தனை விதமான உணவுகளை செரிக்கின்ற திறன்… இது ஒரு மிகப்பெரிய பரிசல்லவா? இதை நாம் போற்றிப் பாதுகாக்க வேண்டாமா…?

    ஆனால் நாம் என்ன செய்கின்றோம்? இதைப் பற்றி நாம் சிறிது கூட கவலைப்படுவதில்லை. இந்த உடலில் சில உபாதைகளும் நோய்களும் வந்து நம்மைத் தாக்கும் பொழுதுதான் இதற்குத் தேவையான மரியாதை கிடைக்கின்றது..

    பணத்துக்கும் பதவிக்கும் உறவுக்கும் புகழுக்கும் கொடுக்கின்ற கவனத்தை நாம் நம்முடைய உடலுக்கு ஏன் கொடுப்பதில்லை? இந்த உடல் நலமாக  இல்லையென்றால் மீதி அத்தனைக்கும் மதிப்பு ஏது? உடல் நலம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வாழ்கின்ற அனைவரும் தான் மரணத்தை எய்தும் முன் ஒரு நோய் நொடியின்றி படுக்காமல் போக வேண்டும் என்றுதானே நினைக்கின்றார்கள்? எனவே, வாழ்க்கையின் வெற்றிக்கும் மிக அத்தியாவசியத் தேவை உடல் நலம்.

    உடல் நலத்திற்கும் மூளைத் திறன்களும் உள்ள நெருங்கிய உறவு பற்றிய பல ஆராய்ச்சிகள் நம்மை வியப்படையச் செய்கின்றன. வளர்ச்சி உயிரியல் (Developmental Biologists) பற்றிய ஆராய்ச்சியாளர்கள் மற்ற உயிரினங்களைவிட மனித இனத்தின் மூளை சிறப்பாக இருப்பதற்கான காரணம் மனிதர்களின் வளர்ச்சியில் உடல் பயிற்சியும் உடல் உழைப்புமே என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார்கள். ஒரு காலத்தில் ஒரு மனிதன் சராசரியாக ஒரு நாளில் பன்னிரண்டு மைல்கள் நடைப்பயணம் செய்ததாகவும் அதற்கான பலனே திறன் வாய்ந்த மூளை என்றும்  கூறுகின்றனர். உடற் பயிற்சியும் உடல் உழைப்பும் பல நோய்களிருந்து நம்மைக் காப்பாற்றுகின்றது.

    மூளையின் நியதிகள் (Brain Rules)   என்ற ஒரு புத்தகத்தில் எழுதியுள்ள ஜான் மெடினா (John Medina)  என்ற மூளை-நரம்பியல் அறிவியல் நிபுணர் கூறுகின்றார்

    உடற் பயிற்சி ஒரு மனிதனுடைய உடலைக் கோப்பாகவும், பாதுகாப்பாகவும், அழகாகவும் வைப்பது மட்டுமின்றி, அவனுடைய மூளையின் வலிமை, சிந்திக்கும் திறன், நினைவுத் திறன், படைப்பாற்றல் ஆகிய பலவற்றை  வளர்க்கவும், வலுப்படுத்தவும் காரணமாக அமைகின்றது.”

    எனவே, வளரும் பருவத்தில் குழந்தைகளுக்கு விளையாடுவதற்குப் போதுமான நேரம் ஒதுக்குவது மட்டுமல்லாது பல விதமான உடற்பயிற்சிகளைச் செய்ய வைப்பதும் அவர்களுடைய பிற்காலத்தின் வளத்திற்கு கொடுக்கப்படும் உரம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் உடற்பயிற்சி குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் மட்டுமே என்ற எண்ணம் கொள்ளாது அனைத்து வயதுகளைச் சார்ந்தோருக்கும், அனைத்துப் பாலினங்களுக்கும் பொதுவானது என்பதை மனதில் கொள்ளுதல் அவசியம்.

    வாழ்க்கை என்றும் சிறப்பாகவும் புத்தொளியுடனும் இருக்க நாம் உடல் நலத்தில் சற்றே  அதிக கவனம்  செலுத்தினால் என்ன?

    வாழ்வதை சிறப்பாக வாழ்ந்து பார்க்கலாமே !

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(210)

     

     

     

    மனத்தொடு வாய்மை மொழியின் தவத்தொடு                                                                      

    தானஞ் செய்வாரின் தலை.

           -திருக்குறள் -295(வாய்மை)

     

    புதுக் கவிதையில்…

     

    மனத்தோடு பொருந்த

    மெய் பேசும் ஒருவன்,

    தானம்

    தவம் செய்வோரைவிட

    உயர்ந்தவனாகிறான்…!

     

    குறும்பாவில்…

     

    தானமும் தவமும் செய்வோரைவிட 

    தன் மனமிசைய உண்மையே பேசுபவன்,  

    உயர்நிலை பெறுகிறான்…!

     

    மரபுக் கவிதையில்

     

    மண்ணில் மனித வாழ்வினிலே

         மனமது பொருந்த உண்மையதைக்

    கண்ணிய மாகப் பேசுவதைக்

         கடமை யாகக் கொண்டவன்தான்,

    புண்ணியச் செயல்களில் உயர்ந்தவராம்

         பிறர்க்குத் தானம் கொடுப்போனையும்

    உண்மைத் தவமது செய்வோனையும்

        விடவும் சிறப்பில் உயர்ந்தவனே…!

     

    லிமரைக்கூ..

     

    மனம்பொருந்த மெய்பேசுதல் அரிது, 

    தானம் தவம்செய்வோன் சிறப்பைவிட இதுபோல்     

    மெய்பேசுவோன் சிறப்பே பெரிது…!

     

    கிராமிய பாணியில்…

     

    பேசு பேசு உண்மபேசு,

    எப்பவும் உண்மயே பேசு..

     

    தானதர்மம் செய்யிறவனயும்

    தவஞ்செய்யிறவனயும் விட,

    தன்மனம் பொருந்த

    எப்பவுமே

    உண்ம பேசறவந்தான்

    ஒசந்தவன்

    உண்மயிலே ஒசந்தவன்..

     

    அதால

    பேசு பேசு உண்மபேசு,

    எப்பவும் உண்மயே பேசு…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share