Blog

  • மதாபிமானமும், சுயமரியாதையும், வாழ்வியலும்: 7

     

    இன்னம்பூரான்

    04 04 2018

    “My feets are tired, but my soul is rested.”

    நடை தளர்ந்தாலும், மனம் அமைதியில் உலவுகிறது.

    இன்று மார்ட்டீன் லூதர் கிங் என்ற கிருத்துவ மத போதகர் மெம்பிஸ் என்ற அமெரிக்க நகரில் இனவெறியர்களால் சுடப்பட்டு அமரரான தினம். அந்த மாமனிதர் சுயமரியாதையை முன்னிறுத்தி மதாபிமானத்தையும் வாழ்வியலையும் விளக்கியதை இன்று நாம் திரும்பிப்பார்ப்போம்.

    “…நாட்டின் பலபகுதிகளிலிருந்து சஹுருதயர்களாகிய நாம் ( ஜெயகாந்தனுக்கு பிடித்த சொல் இது.), விடுதலை விரும்பிகளாகிய நாம், நண்பர்களும், சக ஊழியர்களுமாகிய நாம் கூடியிருக்கிறோம். கிட்டத்தட்ட எட்டாயிரம் பேர் செல்மா: அலபாமாவிலிருந்து நடந்தே வந்திருக்கிறோம். கடுமையான பாலைத்திணையை கடந்து வந்தோம். மலைகள் ஏறி பள்ளத்தாக்குகளில் இறங்கி நடந்தோம். சுற்றி வளைந்த பாதைகளில் நடந்து வந்தோம். பாறைகளில் சாய்ந்து இளைப்பாறினோம். ஆதவனின் வெப்பம் வீசும் கதிர்களால் அயர்ந்து போனோம். கொட்டும் மழையில் நனைந்தோம். சகதியில் உழன்று முன்னேறினோம். களைப்பினால் உடல் வாடியது; நமது பாதங்களில் ஏகப்பட்ட வலி உபாதை. எனினும், நான் உங்கள் கூட்டத்தின் முன் நின்று நாம் நடந்த பெரிய அணிவகுப்பை கண்டு மனமுவந்து பேசுகிறேன். உங்களுக்கு போலார்ட் என்ற சஹோதரியை தெரியுமோ? அவர் வெகு தூரம் நடந்து வந்த போது, பஸ் சவாரி செய்திருக்கக்கூடாதா என்று சிலர் கனிவுடன் கேட்டார்கள். இலக்கணம் அறியாத அந்த மாதரசி கூறிய பொன்வாக்கைக் கேளுங்கள்:

    “என்னுடைய பாதங்கள் (feets) களைத்துப்போய்விட்டன. ஆனால் என் நடை தளர்ந்தாலும், மனம் அமைதியில் உலவுகிறது.” அந்த வசனத்தில் உறையும் வாய்மையை நீங்கள் மெச்சவேண்டும். நாம் இங்கு வந்து சேரமுடியாது என்று அச்சுறுத்தினார்கள். ஆனால், நடந்தது என்ன? உலகமே நாம் இங்கு வந்து குழுமியதை கண்டு வியந்து போனது. யாரும் நம்மை அசைக்க முடியாது (கைத்தட்டல்). செல்மா என்ற இடத்திலிருந்து மாண்ட்கோமரி என்ற இந்த இடத்துக்கு நாம் வந்து சேர்ந்தது நமது சுயமரியாதை வரலாற்றில் ஒரு திருப்பு முனை. பத்து வருடங்கள் முன்னால் இங்கு தான் நீக்ரோ என்ற நசுக்கப்பட்ட இனத்தின் நவீன சுயமரியாதை இயக்கத்துக்கு வித்து இடப்பட்டது.

    இவ்வாறு நீண்ட சொற்பொழிவு நிகழ்த்திய மார்ட்டின் லூதர் கிங் என்ற நீக்ரோ காந்தியின் சுயமரியாதை இலக்கணத்தின் சிறிய முன் பகுதி இது. அவசியம் ஏற்படும் போது மற்றதை மொழியாக்கம் செய்து இங்கு பதிவு செய்வேன். இந்த தொடரில் அவரது சுயமரியாதை இலக்கை தன்மானம் என்று அழைப்பது தான் சரி. அத்தகைய சீரிய போக்கை புறக்கணித்து தமிழ் நாட்டில் உலவி வந்த காழ்ப்புணர்ச்சி சுயமரியாதை இயக்கத்தினால் நாம் தன்மானம் இழந்தோம். அறுபது வருடங்களாக நசுக்கப்பட்ட மக்களை அவர்களில் அரசு ஆணை மூலமாக முன்னேறிய பசை படைத்தவர்களே சாதி, இனம், மதம் ஆகியவற்றை பகடையாக வைத்து, மேலும் நசுக்குவதை காண்கிறோம். நல்ல காரியங்கள் செய்ய சுபமுஹூர்த்தம் பார்க்கத் தேவையில்லை. நமது மக்கள் மஹாத்மா காந்தியின் தண்டி யாத்திரை போன்ற செல்மா – மாண்ட்கோமரி யாத்திரை நடத்தி தன்மானம் காப்பாற்றிய மத போதகர் மார்ட்டின் லூதர் கிங் அவர்களின் நினைவை முன்னிறுத்தி நல்வழி செல்வோம் என்று கனவாவது காண்கிறேன். அத்தருணம் அவரது ‘நான் ஒரு கனா கண்டேன்’ என்ற சொற்பொழிவையும் படிக்குமாறு உங்கள் யாவரையும் கேட்டுக்கொள்கிறேன். நல்லதே நடக்கட்டும்.

    (தொடரும்)

    இன்னம்பூரான்

    http://innamburan.blogspot.co.uk

    http://innamburan.blogspot.de/view/magazine

    www.olitamizh.com

    Share
  • தமிழக அரசின் தமிழறிஞர்கள் விருது பெற்றுள்ள வல்லமையாளர்கள்!

     

    பவள சங்கரி

     

    இன்று தமிழக அரசின் தமிழறிஞர் விருது பெற்றுள்ள நம் வல்லமையின் நலம் விரும்பிகள் – வல்லமையாளர்களுக்கு உளமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

    திரு மறவன்புலவு சச்சிதானந்தம் – மொழிபெயர்ப்பாளர் விருது

    திரு மகாதேவசர்மா – தமிழ் செம்மல் விருது

    முனைவர் சுபாஷிணி – மொழியியல் விருது

    பேரா. பெஞ்சமின் லெபோ – இலக்கண விருது

    கனவு சுப்ரபாரதி மணியன் – தமிழ் செம்மல் விருது

     

    இவர்களின் தமிழ் பணிகள் மென்மேலும் சிறந்து மேலும்  வெற்றி வாகை சூட வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    ஊட்டிக்கே ஆப்பிள்!…ஊட்டிடும் கையால் 1000நாமம் உற்றவர்க்கே நாமம்….!

    ”ஆயர்தம் பாடியில் அன்னை யசோதாதாய்
    மாயன் வடமதுரை மன்னவன் -தூய
    சகஸ்ரனுக்கே(சகஸ்ரநாமனுக்கே நாமம்) இட்டனள் ஸ்ரீசூர்ண நாமம்,
    நிகமாந்த தேசிகர் ‘நா’(வாக்கு)’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    முதலில் புரியவில்லை…..வாசித்து வரையும் ஓவியர் கேசவ்ஜி மஹராஜ் டெலிஃபோன் உபன்யாசத்திற்கு பின் விதவிதமாய் வந்தது வெண்பா…அதில் அவர்(கேசவ்ஜி) அங்கீகரித்த ஒன்றை மட்டும் பகிர்கின்றேன் உங்கள் மேலான பார்வைக்கு…கேசவ்ஜி சொன்னதில் அடியேன் புரிந்து உணர்ந்தது….’’முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்’’….!சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணமஸ்து….!

    பின் -குறிப்பு – கேசவ்ஜி சும்மா வரைவதில்லை…கீதை,தேசிகர் ஸ்லோகங்களை படித்து ஆராய்ந்து சித்திரம் தீட்டுகிறார்….விசித்திர ஓவியர்….!VIA கோவர்த்தன் வைகுண்டம்(ஆன்மா)….!

    180404 – Goverdhana-UddharedAtmanAtmanam (Gita 6:5)-wm -A4- watercolour

    ‘’ஆவை உயர்த்தினார் ஆன்மா அடைந்திட
    போவை குண்டம், புலனடக்கம் -தேவை
    (அல்லது)
    GOவை குண்டமது, கோவர்த்தன்: -தேவை
    முயற்சி மனிதனுக்கோ ,மாட்டுக்கோ , கண்ணன்
    பயிற்சி அளிக்கும் பரம்’’….கிரேசி மோகன்….!Okee yaa Keshav….!

    Share
  • இறையியல் சிந்தனைகள்: ஸ்டீவ் ஜாப்ஸும் வள்ளலாரும்: 10 – சமயம் எனும் உயர் அறிவியல்

    அவ்வை மகள்

    வள்ளலார் பற்றிய நமது இறையியல் சிந்தனைகளில், சமயம் எனும் உயர் அறிவியல் பற்றி பேசுவது வேண்டும். சமயம் என்பது யாது என வரையறை செய்வோமேயானால், சுய அறிவால் கடவுளை உணர்ந்து புரிந்து கொள்வது எனலாம். கடவுள் என்பது யாது என வரையறை செய்வோமேயானால், கடவும் ஆற்றலே கடவுள் எனலாம்.

    இந்நிலையில், அடுத்ததாக எந்த ஆற்றல் அது, அது எதனைக் கடவுகிறது என்கிற இரண்டு வினாக்கள் எழுகின்றன.

    இவற்றிற்கான விடையை அறியும்போது, எந்த ஆற்றல் அதிபகிரண்டமாம் ஆடலியக்கம் நிரம்பிய ஆதிப்பரவெளியை இயக்குகிறதோ அதுவே கடவுள் எனக் கொள்கிறோம். அக்கடவுள் கடவுவது என்ன என உற்றுப் பார்த்தால் ஆதிபரவெளியாம் அதிபகிரண்டத்தில் உள்ள பகிரண்டங்களாம் பல கோடி பரவெளிகளையும், அப்பரவெளிகள் ஒவ்வொன்றிலும் உள்ள கோடானுகோடி நாட்டிய அரங்குகளாம் அண்டங்களில் (காலக்ஸி) அனாயாசமாய்த் தொங்கியபடி நடமாடிக்கொண்டிருக்கிற சூரியன்கள்,நட்சத்திரங்கள், கோள்கள், துணைக்கோள்கள், உடுக்கோள்கள், உள்ளிட்ட மாபெரும் பருப்பொருட்கள் யாவற்றையும் கடவுள் கடவிக்கொண்டிருக்கிறது எனப் புரிகிறது.

    இவ்வாறாக அந்தரத்திலே நடமாடிக்கொண்டிருக்கிற அப்பருப்பொருட்களுக்கிடையே எவ்வித நூலிணைப்பும் இல்லை! நூலின்றியே – வரிசையாய்க் கோர்க்கப்பட்டிருக்கிற சரமாலையாய் – என்றும் வீழாத சரமாலையாய் – தேர்ந்த அணிவகுப்பாய் – பொருண்மையும் ஆற்றலும் ஒன்றிணைந்த சராசரமாய் அவை தொங்கிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்ல – அவை சும்மா தொங்கிக்கொண்டிருக்கவில்லை; ஒவ்வொரு சரத்தில் உள்ள ஒவ்வொவொரு சரமணியும் தொங்கலிட்டபடியே, தனது அச்சில் தானே சுழன்றும், ஒரு மையப் பொருளைக் கவனத்தில் கொண்டபடி அந்த மையப்பொருளைச் சுற்றிச் சுற்றி ஓயாமல் வலம் வந்தபடி நடனமாடுகிறது. ஓவ்வொரு சரமணியும் இவ்வாறு தன்னில் தானே லாவகமாய்ச் சுழன்று மற்றொன்றைச் சுற்றிச் சுற்றி மெய்மறந்தவாறு சுழல் நடனமாய் நாட்டியமாட, ஒரு ஒட்டுமொத்தப் பார்வையாய் அனைத்து சரமணிகளின் நடனத்தையும் ஒருசேரப் பார்த்தால் அது அளப்பரியதான – சொற்களால் விவரிக்க இயலாத மாமாமா பிரம்மாண்டம்! அதுவும் அவை ஏனோ தானோவென்று தான்தோன்றித்தனமாய் நடனமாட வில்லை – அவற்றின் ஆடலில் – அசைவில் – நாட்டிய இயக்கத்தில் ஒழுங்கும், முறைமையும், நியதியும் இருக்கிறது. ஒரு துளி பிசகினாலும் சொல்லொணாப் பேராபத்து என்பதான நிலையில், மிகத்துல்லிய கணக்கீடு அவற்றின் சுழற்சி வேகத்திலும், இடைவெளியிலும், விட்ட அளவிலும், அவற்றின் பொருண்மையிலும், வேகத்திலும் காணப்படுகிறது.

    மேலும், ஒரு பகிரண்டத்தில் நடனமாடும் பருப்பொருட்கள் யாவும் குடும்ப உறவு கொண்டு வசித்து வருகின்றன. இந்த உறவுகளில், துணை மற்றும் பிள்ளைகள் அடங்கிய குடும்பம், உபபெருகுடும்பம், பெருகுடும்பம், மாபெரும் குடும்பம் எனத் தொகுதி-பகுதிகளான உறவு முறைகள் அமைந்திருக்கின்றன. அவை அங்கே குடும்பத்தொகுதிகளாய் ஒருங்கே ஒருமித்துச் சுழல் நடனமிடுகிற காட்சி கற்பனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டதொரு விந்தை. அப்பருப்பொருட்களில் பலவும் பிரமாண்டமான உஷ்ணமும், ஜ்வாலையும், சூறாவளியும் கொண்ட சீற்றத்தோடும் தீட்சணியத்தோடும், தலைவிரிகோலமாய் வெப்பக்கொழுந்துகளை அள்ளிவீசியப்படி அகோரமாய் சுழன்று கொண்டிருக்கின்றன. சில பொருட்கள் தண்மையோடு, ஆரவாரம் இல்லாமல் அமைதியாகவும், மெதுவாகவும் சுழன்று வலம் வந்து கொண்டிருக்கின்றன. சிலபொருட்கள் ஒட்டியாணம் அணிந்து ஒயிலாக விளங்க, சில அணிகலனினின்றி எளிமையாய் ஜொலிக்கின்றன. ஒவ்வொரு பொருளும் ஒவ்வொவொரு நிறம்; ஒவ்வொருபொருளுக்கும் ஒவ்வொவொரு வகை ஒளி. மேலும், சிறிது, பெரிது, மத்திமம் என உருஅளவீட்டில் அவை வெவ்வேறு. இப்பொருட்களில் பெரியவை யாவும் பெரும்பாலும் உருண்டைப்பந்துகள் போன்ற வடிவே என்றாலும், பிறவற்றில் பல உடுக்கை போன்றும், எலும்பு போன்றும், மண்டை ஓடு போன்றும், பிடித்த களிமண் பிடி போன்றும் வெவ்வேறு வடிவங்கள் கொண்டவையாய் இருக்கின்றன.

    ஒரு பகிரண்டத்தில் உள்ள காலக்சி எனப்படும் ஒரு நாட்டிய அரங்கு ஒன்றின் வடிவமைப்பைக் கொஞ்சம் உற்று நோக்குவோம். காலக்சி என்பது சுழல் கொண்ட ஒரு பறக்கும் முறுக்குச் சக்கரம் – எளிமையாகச் சொல்லப்போனால் – அது ஒரு மழுவாயுதம். காலக்சியின் மத்தியில் ஒரு திட்டு போன்ற மேட்டுப் பகுதி உள்ளது. Galactic Bulge என்றழைக்கப்படும் சிவப்பு நிறத்தில் உள்ள இந்தத் திட்டுப்பகுதியில்தான் முதிர்ந்த நட்சத்திரங்கள் செறிந்து காணப்படுகிறன. முதிர்ந்த நட்சத்திரங்கள் சிவப்பு நிறம் என்பதால் இது அழுத்தச் சிவப்பு நிறமாக இருக்கிறது. இந்த சிவப்பு மேட்டுக்கு நடுவிலே அதி உக்கிரமான ஒரு ஓட்டை – அதாவது சுழல் மையம் உள்ளது. இதுதான் காலக்சி மழுவின் – சுழற்சி மூலம். இதனை காலக்சியின் தொண்டை – நெஞ்சுக்குழி என்பது பொருத்தமாக இருக்கும். இந்த நெஞ்சுக்குழிக்கு அளப்பரிய உறிஞ்சுத்தன்மை உண்டு.

    அடுத்து காலக்சியின் கரங்களுக்கு வருவோம். காலக்சியாம் மழுவுக்குக் கரங்கள் இருக்கின்றன. நவீன அறிவியலும் இவற்றைக் கைகள் என்றே அழைக்கிறது. இந்தக்கரங்களின் தன்மை என்னவென்றால் இவற்றிற்கும் சுழலிட்டபடி சுருட்டி இயங்கும் தன்மை உண்டு. மேலும், இக்கரங்கள் பொதுவாக சிவப்புப் பின்னணியில் நீலப்புட்டாக்கள் வைத்தாற் போன்றிருக்கும். காலக்சியின் கரங்களில் புது நட்சத்திரங்கள் ஓயாமல் உருவாக்கிக்கொண்டிருக்கின்றன. புது நட்சத்திரங்கள் பொதுவாக நீல நிறத்தத்தில் இருக்கும் என்பதால் நீல நிறப் புட்டாக்கள். பொதுவாக, ஒரு சுழல் காலக்சிக்கு (Spiral Galaxy) நான்கு பிரதான கரங்கள் உண்டு. நமது காலக்சியான பால்வண்ணப்பாதை எனும் நடன அரங்குக்கு, எட்டு கரங்கள் இருப்பதாக இந்தியாவின் சந்திராயன் வழங்கியுள்ள பதிவுப் படத்திலிருந்து அறிகிறோம். (காண்க: http://chandra.harvard.edu/photo/2006/w3/milkyway_ill.jpg). நமது காலக்சியின் அமைப்பை உற்றுப்பார்த்தால், நடுவில் உள்ள திட்டு போக , தேகம் முழுவதும் சுற்று முறுக்காய் எட்டு கரங்களும் எட்டு திசைகளிலும் சுழன்று வியாபித்திருக்கின்றன.

    நமது பால்வண்ணப் பாதை எனும் நடன அரங்கு, தடுப்பு உள்ள முறுக்குச் சுழல் சக்கரமாகும் (Barred Spiral Galaxy), தடுப்பு என்றால் உண்மையில் தடுப்பு அல்ல; தடுப்பு இருப்பது போன்ற தோற்றம். காலக்சியின் செவ்வுடலுக்கு மேலே ஒரு வெள்ளொளிப் பூச்சு சீராக அமைந்திருக்கிறது. இந்த வெண்பூச்சு காலக்சியின் கரங்களின் மேல் நெடிது ஓடுகிறது. கரங்களின் வியாபமே காலக்சியின் உடலில் பெரும் பகுதி என்பதால், நமது பால் வண்ண காலக்சி என்பது உடல் முழுவதும் வெண்ணீறு பூசப்பட்ட சிவந்த உடலாய் மிக அழாகான தோற்றம் கொண்டு விளங்குகிறது.

    காலக்சியின் கரங்களில் நட்சத்திரங்கள் தொடர்ந்து உருவாகிறது என்றோம். அந்த உருவாக்கத்தில் வாயுக்கள் விளைகின்றன. இவ்வாயுக்களில் பெரும்பகுதி ஹைட்ரஜன் வாயு. ஹைட்ரஜன் என்பது முதல் தனிமம். தனிமங்களின் ஆதி இது தான். அனைத்து வேதிமங்களுக்கும் மூல காரணம் ஹைட்ரஜன் தான். எடுத்துக் காட்டாக, நமது சூரியனில்,ஹைட்ரஜன் அணு உட்கரு சேர்க்கைக்கு உடன்பட, அங்கே இரண்டாம் தனிமமான ஹீலியம் பிறக்கிறது.

    இவ்வாறு தொடர் அணுக்கரு இணைப்பு வினைகள் தொடர்வதால், பிற தனிமங்களும் காலக்சியில் நட்சத்திரங்களின் உருவாக்கலில் விளைகின்றன. இவ்வாறான அணு உட்கரு வினைகள் காலக்சியின் கரங்களில் நிகழும்போது – கரங்கள் (தம் முறுக்குச் சுருள் விசையால்), அங்கு விளையும் வாயுக்களை, காலக்சியின் மையத்தை நோக்கி வாரி வீசுகின்றன. அவ்வாறு வீசப்படும் வாயுக்களை காலக்சியின் மையத்தில் உள்ள தொண்டை உறிஞ்ச முற்படுகிறது; (உரலில் மாவு அரைப்பதாய் கொஞ்சம் நினைவில் கொண்டு வாருங்கள் – மையத்தை நோக்கி வீசுதல் என்றால் என்னவென்று புரியும்). அப்போது, அந்த வாயுக்கள், சுழல் ஓட்டையின் வட்டவிளிம்பில் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு தான், ஒவ்வொரு காலக்சியும் தன் தொண்டையில் வாயுக்களையும், மற்ற தனிம ஆவிகளையும் (vapors of elements) உள்ளிழுத்து நிறுத்துகிறது. (இந்த வாயுக்களுடன், நீராவி கலந்திருக்க பெரும் வாய்ப்பு உள்ளது. காலக்சியின் குளிர்ப்பிரதேங்களில் பனிக்கட்டி நிரவிப்பரவி இருப்பதிலிருந்து இதனை உணரலாம். உடுக்கோள்களுக்குள்ளே நீராவித்துகள்கள் இருப்பதையும் அறிவியல் கூறுகிறது.)

    தன்னுடைய நெஞ்சுக்குழியில், மிடறு விழுங்கி – அதனை முழுங்கிக் கீழே தள்ளாமல் ஒரு மனிதனால் நிறுத்தமுடிவதைப் போல், வாயுக்களை, காலக்சி உள்ளிழுத்து நிறுத்துகிறதால் ஏற்படும் ஆற்றல் இயக்கத்தால், காலக்சியாம் மழு தங்குதடையில்லாமல் சிரஞ்சீவியாய் இயங்கிக்கொண்டே இருக்கிறது. மழுவின் தொண்டை இவ்வாறாக அடர்த்தியான வாயுக்களைத் தொண்டைக்குழியில் இருத்தி வைத்துக் கொள்ளவில்லையென்றால் மழு சரியாக விரைவாக இயங்க வாய்ப்பில்லை. எனவே காலக்சியில், தொண்டைத் தேக்கம் அதாவது மிடறு அடக்குதல் என்பது மழுவின் சுய இயக்கத்த்திற்கு ஒரு இன்றியமையாத தேவையாக இருக்கிறது என்பதை உணர்க. இந்த நுணுக்க அமைப்பை எண்ணுந்தோறும் எண்ணுந்தோறும் நம் மெய் சிலிர்க்கிறது.

    அதுமட்டுமல்ல காலக்சியாம் மழு, கிடைமட்டமாகச் சுற்றவில்லை. அது சரிந்த கோணத்தில் பறக்கிற ஒரு முறுக்குச் சக்கரமாகும். சுருங்கச்சொல்லின், பகிரண்ட நடனத்தில், நடனமிடும் மேடையே சுழல்மேடை! அதுவும் அது சரிந்து சுழல்கிற மேடை!! – அதுவும் அது சும்மா அற்பசொற்பமாய்ச் சுழலவில்லை!!! வேகம் என்றால் பகீரத வேகம். பற்றாக்குறை மிகுந்த நவீன அறிவியலின் பற்றாக்குறை அளவீடுகள் படியும், அதனது பற்றாக்குறை கணக்கீட்டின் படியும், நமது பால்வண்ண காலக்சியும் , அதன் உடனிணைக் குழுவும் (Local Group), ஒரு நொடிக்கு 600 கிலோமீட்டர் வேகத்தில் சுழன்று வலம் வருவதாக அறிகிறோம். அப்படியெனில், நமது காலக்சி மழுவின் இயக்கம் எத்தனை பயங்கரமானதாக இருக்கும் என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளலாம். இது ஊனை-உயிரை ஒடுக்கி நம்மை மயிர்க்கூச்செறியவைக்கும் சர்க்கஸ் காட்சி போன்றது!

    காலக்சி மழுவின் தொண்டைத் தேக்கமும், கர இயக்கமும், அதன் வெண் பூச்சும் மட்டும் சொற்பதம் கடந்த பிரம்மாண்டம் கொண்டவை அல்ல. அதனைச்சுற்றி அமைந்திருக்கிற ஒளிவட்டமும் (Halo) அளப்பிடற்கரியது. ஒளி என்றால் அது பிரத்யேகமான ஒளி என்பதான அரிய ஒளி அது. வெள்ளொளியும் கருமையும் ஒருசேர இருக்கும் புதின ஒளி அது. இந்த ஒளியை அளவிடக் கருவிகள் இல்லை – இந்த ஒளியை வருணிக்க அளபெடைகள் இல்லை.

    காலக்சி மழுவில் உள்ள கரு ஒளி Dark Halo எனப்படுவது; இந்தக் கரு ஒளி, காலக்சி மழுவின் தொண்டையைச்சுற்றித் துவங்குவது போல் இருக்கிறது. அங்கிருந்து அது அப்படியே காலக்சி முழுவதும் இலாவகமாய்ப் பரவி விரிந்து காலக்சியின் வெளி விளிம்பைத் தாண்டி அதன் வெளிவட்டத்தில் உள்ள வெள்ளொளியோடு இரண்டறக்கலந்து நீக்கமற நிறைந்து நிற்கிறது. இந்தக் கரு ஒளியை விளக்க இன்றைய அறிவியல் பெரும்பாடுபட்டு வருகிறது. பொதுவாக இவ்வாறு, ஒரு பொருண்மை ஒளி ஒரு பொருளின் மையப்பகுதியிலிருந்து கிளம்பி உள்ளிருந்து வெளியீடாகச் சென்று, அதன் புறவட்டத்தைக் கடக்கிறது என்றால் அப்பொருளின் வேகம் குறையும். ஆனால், நமது காலக்சியின் வேகம் குறைவதில்லை. இன்றைய அறிவியல், காலக்சியின் கரு ஒளியை விளக்க வழிதெரியாமல் தன கையாலாகாத்தனத்தை இவ்வாறு கூறுகிறது: “நமது பால்வண்ணப் பாதையில் உள்ள கரு ஒளி அதிநுட்ப விசித்திரமாய் இருக்கிறது – இதில் என்ன இருக்கிறது என்று சொல்ல இயலவில்லை; ஏனெனில் அது காட்சிக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது. விளக்க இயலாத ஓரிரு பொருட்கள் கொஞ்சம் தென்படுகின்றன என்று கொள்ளலாம் – அவை வரையறைக்கு உட்படுத்தமுடியாத நட்சத்திரங்களா? புரியவில்லை! ஆனால் இன்னமும் ஏதேதோ – ஏதோதோ இருக்கின்றன என்றே உறுதியாக ஹேஷியம் கூறமுடியும்! ஆனால் அவற்றையும் இக்கரு ஒளியையம் இதுகாறும் நாம் பயன்படுத்தி வந்திருக்கிற – எமக்குத் தெரிந்த ஈர்ப்பு சக்தி தியரியால் (Gravitational Theory) விளக்க வழி இல்லை.” (காண்க, இங்குள்ள முதன்மை ஆய்வுக்கட்டுரைகளை; https://en.wikipedia.org/wiki/Dark_matter_halo)

    பகிரண்டத்தின் இயக்கத்தின் முன்னே அறிவியல், கைகட்டி வாய்பொத்தி, “அவர் தலைவர்!அன்னவர்க்கே சரண் நாங்களே!” என நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து சரணாகதி ஏற்பதைக் காண்கிறோம். தனது பற்றாக்குறை கணக்கின் படி அதிபகிரண்டத்தில் சுமார் 2000 கோடி காலக்சிகள் இருக்கலாம் என்று ஊகிக்கிறது இன்றைய அறிவியல். ஆப்படியெனில் 2000 கோடி காலக்சி மழுக்களின் ஒட்டுமொத்த இயக்கம் எத்தன்மையதாய் இருக்கும் என்று மீண்டும் நீங்களே ஊகித்துக்கொள்ளவேண்டும். அதிலும் 75% காலக்சிகள் முறுக்குச் சுற்று காலக்சிகளே! ஆக்கபூர்வமான இந்த சிருஷ்டிப் பிரளயத்தை எடுத்துச் சொல்ல எந்த மொழிக்கும் எந்த கவிக்கும் திராணி இல்லை.

    ஒரு பகிரண்டத்தில் நடக்கிற நாட்டியதொகுப்பைப் பார்க்கிறபோது, அந்த நடனத்தில், மிகக்கடுமையான கட்டுப்பாடு தெரிகிறது. பிசகில்லா தர்மமும் அங்கே தலை யெடுத்து நிற்கிறது. ஒன்றை ஒன்று சார்ந்தவாறு ஒருங்கிணைந்து, வேகத்தகவமைப்பு செய்து கொண்டு அங்குள்ள பொருட்கள் அதியற்புதமானதோர் கூட்டு நடனம் செய்வதும் தெரிகிறது. அந்த நடனத்தில் தெரிகிற கட்டுப்பாடு மட்டுமின்றி அங்கே உள்ள சகிப்புத்தன்மையும் போற்றுதலுக்கு உரியது.

    பகிரண்டத்தில், ஆக்ரோஷணப் பொருட்கள் அமைதிப்பொருட்களுக்குக் கட்டுப்படுகின்றன. அமைதிப்பொருட்களோ ஆக்ரோஷணப் பொருட்களைக் கண்டு பயந்தொடுங்காமலும், அவற்றை வெறுக்காமலும், அவற்றின் இயல்பைப் பொறுத்துக்கொண்டு, அவற்றுடன் அனுசரித்தும் சமரசம் செய்து கொண்டும் வெகுஇயல்பாய்த் தம் பணியில் முழுக்கவனம் செலுத்தி இயங்குகின்றன. ஒவ்வொரு பொருளின் தனித்துவத் தன்மையும், அனைத்தின் கூட்டுப்பண்பும் சிறப்பு குணாதிசயங்களாகப் புலனாவதுதான் ஒரு பகிரண்டத்தின் அடையாளம். ஒவ்வொரு பொருளும் அதன் ஒளிநிலைக்கு ஏற்றாற்போல் நடனமிடுகிறது என்பதும் மாபெரும் விந்தை.

    ஒட்டுமொத்தமாக சுருங்கச் சொல்லவேண்டுமெனில், பகிரண்டத்தில் உள்ள பொருட்களுக்கு இடையே இருக்கிற வித்தியாசங்கள் மலைக்கும் மடுவுக்கும் போல. இருப்பினும், மாறுபாடுகளை மறந்து அவை ஒற்றுமையாய்க் களிநடம் செய்யும் விதத்தைப் பாக்கிறபோது எவருக்கும் பேரானந்தம் ஏற்படும் எனலாம். “அன்னை- அன்னை ஆடும் கூத்தை நாடச் செய்தாய் என்னை!” என்ற பாரதியின் எளிய வாசகம் காண்க.

    ஒரு பகிரண்டத்தில் நிகழும் நடனத்தைக் கண்ட நாம், இப்போது பகிரண்டங்களின் தொகுப்பான அதிபகிரண்டத்து கூட்டு நடனத்தை – கூத்தைச் சிந்திப்போமென்றால், அது எத்துணை – எத்துணை ஏகாந்தமாய் இருக்கும் என்பதை நாம் உய்த்துள்ள முடியும். எவரோ இசைக்கும் தாள, சுருதி, லய இசைக்குப் பொருத்தமாய் தான் அதிபகிரண்டக் கூத்து – அக்களி நடனம் அடி தப்பாமல் வெகு சிரத்தையோடு செவ்வனே நித்தம் நடைபெறுகிறது என்பதை அறிவுப்பூர்வமாய் உணருவது நமக்கு எளிதாகிறது. அந்த இயக்குனரின் மையத்தலைமையின் இசைத்தல் இல்லையேல் – அசைத்தல் இல்லையேல் – ஆக்கினை இல்லையேல் – எந்த பகிரண்டமும், ஆதி பகிரண்டமும் இசைந்து இயங்க வாய்ப்பில்லை என்பதை நம்முள்ளம் மறுத்து மொழிய வாய்ப்பில்லை.

    மேற்கண்ட அலசலின் இறுதியில், நாம் உணர்வது யாதெனில், சத்தியமாம் – நித்தியமாம் – பகிரண்டக் கூத்தின் சீர்மையை உணருங்கால், அச்சீர்மையைத் தொழுதும் போற்றியும் குதூகலிக்கும் பக்திப் பரவசம் எவருக்கும் பிறக்கும் என்பதே.

    சிந்தித்துப் பாருங்கள் – குடியரசு நாளன்று நடக்கும் இராணுவ அணிவகுப்பைப் பார்க்கும்போதே நமக்கு உடல் புல்லரிக்கிறது என்றால். பகிரண்டத்தின் அணிவகுப்பு தரும் உணர்வை, பக்தியை, பரவசத்தை என்னெற்றுரைப்பது?

    “ஐயா!” என ஓங்கிப் புலம்பி, ஆழ்ந்தகன்று உணர்ந்து, “ஏகாந்தம்! ஏகாந்தம்! ஏகாந்தம்!” என்று ஊனும், உள்ளும் நைந்து கரைந்து, அதிபகிரண்டமாம் இந்த ஏகாந்தத்தை உருவாக்கியது யார்? இந்த ஏகாந்தத்தை வழிநடத்துவது யார்? இந்த ஏகாந்தத்தை நெறிபிறழாமல் காப்பது யார்? என்று வினாத்தொடர் கொப்புளிக்க ஆங்கு அதிபகிரண்டத்தில் நிகழும் ஒருங்கிணைந்த ஆற்றல் எழுச்சியின் பால் உயர் மரியாதை உணர்வையும், உள்ளார்ந்த பணிவையும், அச்சத்தையும் கொண்டவராகிறோம்.

    நம்முள் அதிபகிரண்டத்தின் துவக்கம் எது, எவர் அதைத் தொடக்கி வைத்தது, என்ற வினாக்கள் முளைத்து விட்டதென்றால் நமக்கு ஏற்கனவே ஒரு புரிதல் ஏற்பட்டுவிட்டது என்று பொருள்: அதாவது, தொடர் இயக்கத்தில் உள்ள அதீதப் பருப்பொருட்களை நிலைநிறுத்த ஒரு ஆற்றல்மிக்க மூலப்பொருள் நிச்சயம் அவசியம். அந்த முலமே, ஆதிப்பரவெளியாம் அதிபகிரண்டத்தில் உள்ள பகிரண்டமாம் பரவெளிநிலைகளில் காணப்படும் அனைத்து ஆற்றல்களின், அனைத்துப் பருப்பொருட்களின் துவக்கமாய் – ஆதியாய் – அமைந்திருக்க முடியும் என்பதும் உறுதியாகிறது. ஏனெனில் ஆதி இல்லாமல் எதுவும் உற்பத்தி ஆகமுடியாது. தலைமை ஆற்றல் இல்லாமல் எதுவும் இயங்கவும் வாய்ப்பில்லையே.

    மேலும், பகிரண்டத்தில் உள்ள இயக்கங்கள் யாவும் தொடர் இயக்கங்கள் – அதுவும் அவை நிலைத்ததான, சிரஞ்சீவியான உறுதித் தொடர் இயக்கங்கள் என்பதால் – இவற்றின் உற்பத்தித் தானமான அந்த பரஆற்றலாம் ஆதிமூலம் என்றும் சிரஞ்சிவியாய் நின்று அழிவற்றதன்மையுடன் அனைத்து ஆற்றல்களையும் தொடர்ந்து கண்காணித்து இயக்கும் வல்லமை உடையதானதொரு இயங்கு சக்தியாய் இருந்தாகவேண்டும் என்பதும் அவசியம். அத்தகையதான அந்த ஆதிமூலம், ஒரே க்ஷணத்தில் பொருண்மைக்குப் பொருண்மையாகவும் ஆற்றலுக்கு ஆற்றலாகவும் விளங்குவதாக ஒப்பற்ற துவிய (dual) பரம்பொருளாய் – உருவாய், அருவாய், அருஉருவாய் அமையப்பெற்றிருக்க வேண்டும் என்பதும் உறுதி.

    இப்போது, கீழ்வரும், அப்பர் அருளிய தேவாரப் பாடலைக் கொஞ்சம் உங்கள் சிந்தனைக்கு கொண்டு வாருங்கள்:

    குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்,

    பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும்,
    இனித்தம் உடைய எடுத்த பொன்பாதமும் காணப் பெற்றால்
    மனி(த்)தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மா நிலத்தே!

    இப்போது, சமயம் என்பது எத்தனை உயர் அறிவியல் என்பது விளங்கும்.

    மேலும் பேசுவோம்

     

    Share
  • பசும் தெய்வம்

    பாஸ்கர்

     

    மரங்கள் அலறுவதில்லை மரணம் கண்டு 

    இல்லை எனக்கென அது ஓர் நாளும் புலம்பாது 

    பக்கத்தில் கதை பேசி பல்லிளித்து நில்லாது

    கால் வலி கை வலி என ஓர் நாளும் சொல்லாது 

    அள்ளி வழங்க அது ஓர் நாளும் தயங்காது 

    இல்லை என சொல்லாது நிழல் பூமி தந்தருளும் 

    கிடக்குமது தெருவோரம் அலட்சியமாய் தனை மறந்து 

    கனி கொடுக்க கேட்காது காசும் பணமும் 

    மண் வாசம் வீச நோக்காது நாளும் கிழமையும் 

    வாய் விட்டு கேட்காது நீரூற்றி போ என்று 

    பசும் தெய்வம் இதுவன்றோ தெருக்கோயில் – தினம் வணங்க

    Share
  • நாட்டுப்புறப் பாடல்…

    ஆ. செந்தில் குமார்

     

    சிங்கப்பூரு சீமபோயி… மச்சான்

    சட்டுபுட்டுன்னு சம்பாரிச்சி…

    செட்டிகுளம் கூட்டுரோட்டுல…

    பெட்டிக்கட ஒன்னு போடலாமுங்க..

     

    சிங்கப்பூரு சீமபோயி… புள்ள

    சிக்கித் தவிக்க வேணுமாடி…

    சிக்கனமாக வாழ்ந்தோமுன்னா…

    சொர்கம்தானே நம்ம ஊருமே…

     

    மேலத்தெருவு மணிகண்டனும்… மச்சான்

    மச்சி வீடு கட்டுறாருங்க…

    மஸ்கட்டு போயி சம்பாரிச்சி…

    மணிமணியா வாழுறாருங்க…

     

    மச்சிவீடெல்லாம் வேணாம் புள்ள… நம்ம

    மண்குடிசைக்கு கொறவு ஏதுடி…

    மாடுகன்னு வாங்கிக்கலான்டி… புள்ள

    மணிமணியா வாழலான்டி…

     

    புள்ளகுட்டி பொறந்ததுன்னா… மச்சான்

    பத்தாதுங்க இந்த வீடு…

    இத்துப்போன கூரையிலே… மச்சான்

    பொத்துக்கிட்டு மழ கொட்டுதுங்க…

     

    புதுசா கூரை வேஞ்சுக்கலான்டி… புள்ள

    இதுக்குப்போயி வருத்தம் ஏனடி…

    கருத்தா நாம வாழ்க்கை நடத்துனா…

    கண்டகனவெல்லாம் பலிக்கும் பாரடி…

     

    கெணத்த கொஞ்சம் ஆழப்படுத்துவோம்… புள்ள

    நெலத்த நல்லா உழுதுப்போடுவோம்…

    ஆடி மாசம் மழ பெய்யுமே..

    தேடி வெதச்சி பயிர்பண்ணலாம்…

     

    ஊரு எல்லாம் பசுமையாகுமே… நம்ம

    உறவு எல்லாம் கூட இருக்குமே…

    தன்னா தனனானா தன்னனானா…

    தன்னா தனனானா தன்னனானா…

    Share
  • அக்கரையும் இக்கரையும்

    திருமதி ராதா விஸ்வநாதன்

     

    இலக்கை காட்டி

    வளர்த்தேன் உன்னை

    தனிமரமாக நின்று

     

    இலட்சியத்தோடு

    வளர்ந்தாய் நீயும்

     

    ஈன்ற பொழுதினும்

    பெரிதுவந்தேன்

     

    இறுதி வரை

    இருப்பாய் என்னுடன்

    என்றே இருந்தேன்

    இறுமாப்புடன்

     

    அக்கரையில் தான்

    உன் எதிர்காலமென

    உதறிச் சென்றாய்

    உறவுகள் அத்தனையும்

     

    எண்ணிக் கழிக்கிறேன்

    என் எதிர்காலத்தை

    ஒவ்வொரு இரவின்

    இருட்டின் துணையோடு

    Share
  • நந்திக்கலம்பகத்தில் மெய்ப்பாடுகள்

    க.கவின்பிரியா, முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக் கல்லூரி , (தன்னாட்சி), சேலம்-7

    முன்னுரை

    தமிழ்மொழி வரலாற்றில் தொன்மையான நூல் எனப் போற்றப்படும் தொல்காப்பியம் மிகச்சிறந்த இலக்கிய, இலக்கண நூலாகத் திகழ்கிறது. பண்டைத் தமிழின் இயல்புகளை இயம்புவதோடு, இன்றைத் தமிழையும் இனிதே வழிநடத்திச் செல்கிறது. தொல்காப்பிய இலக்கணக் கூறுகளுள் ஒன்றான மெய்ப்பாடுகளை, சிற்றிலக்கிய கலம்பக நூல்களுள், காலத்தால் முற்பட்ட இலக்கியமான நந்திக்கலம்பகத்தில் ஆராயும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

    மெய்ப்பாடு

    உள்ளத்தில் தோன்றும் அக உணாச்சிகள் புறத்தில் உள்ள உடல் உறுப்புகளால் வெளிப்படுத்துவது மெய்ப்பாடாகும். தொல்காப்பியர் எண்வகை மெய்ப்பாடுகளை பின்வரும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்..

    நகையே அழுகை இளிவரல் மருட்கை

    அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று

    அப்பால் எட்டே மெய்ப்பாடென்ப (தொல்.மெய்.247)

    நகை, அழுகை முதலிய எண்வகை மெய்ப்பாடுகளையும், அதன் நிலைக்களன்களையும் மட்டுமே இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    நகை

    நகை என்னும் மெய்ப்பாடு பின்வரும் நான்கு பொருண்மைகளில் தோன்றுவதாக தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

    எள்ளல் இளமை பேதைமை மடனென்று

    உள்ளப்பட்ட நகைநான்கென்ப   (தொல்.மெய்.248)

    நந்திக்கலம்பகத்தில் நகை என்னும் மெய்ப்பாடு எள்ளல், பேதைமை, மடன் என்னும் பொருண்மைகளில் இடம்பெற்றுள்ளது.

     

     

    எள்ளல்

    பரத்தையிற் பிரிந்த தலைவன் பாணனைத் தலைவியிடம் தூதாக அனுப்புகிறான். பாணன் தலைவனை வரவேற்குமாறு தலைவியிடம் வேண்ட, தலைவி பாணனை இகழ்ந்து கூறும் பின்வரும் பாடல் எள்ளல் எனும் பொருண்மையில் இடம்பெற்றுள்ளது.

    ஈட்டு புகழ்நந்தி பாண! நீ எங்கையாதம்

    வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்

    பேயென்றாள் அன்னை பிறா நாரியென்றனா தோழி

    நாயென்றாள் நீ என்றேன் நான்(நந்தி.பா.101)

    பாணனே, என் தங்கையாரின் வீட்டிலிருந்து விடியும்வரை பாடும் ஓசை கேட்டு, என் அன்னை காட்டில் அழுகின்ற பேயின் குரல் என்றாள். பிறா நாரி ஊளையிடும் குரல் என்றாள். தோழி நாயின் குரைப்பொலி என்றாள், நானோ நீ பாடுகின்ற பாட்டின் குரல் என்று கூறினேன் எனத் தலைவி கூறுவதாக அமைந்த இப்பாடல் நகைச்சுவை ததும்ப பாணனை எள்ளி நகைப்பதாக அமைந்துள்ளது. இதே பொருண்மையில் பின்வரும் அகநானூற்றுப்பாடல் வரிகளும் பாணனை இகழ்ந்து நகைக்கும் வகையில் அமைந்துள்ளது.

    நகையாகின்றே தோழி நெருநல்

    மணிகண்டன்ன துணிகயந்துளங்க   (அகம்.பா.56)

    பரத்தை மனைக்குச் செல்லும் வழியில் கன்றீன்ற பசு தன்னை நோக்கிப் பாய்ந்ததால் எதிர்பாராமல் தலைவியின் மனைக்குத் திடீரெனப் புகுந்த பாணனை எள்ளி நகைப்பதாக இப்பாடல் வரிகள் அமைந்துள்ளன.

    பேதைமை

    தலைவியின் உடல் மெலிவைக் கண்டு, வெறியாட்டு நிகழ்த்த எண்ணிய செவிலியிடம் வெறிவிலக்குமாறு கூறிய பின்வரும் பாடல் பேதைமை எனும் பொருண்மையில் நகை எனும் மெய்ப்பாட்டில் இடம்பெற்றுள்ளது.

    மாட்டாதே இத்தனை நாள் மால்நந்தி வரன்வரைத்தோள்

    பாட்டாதே மல்லையாகோன் பாரியானைப் பாரிச்சுவடு

    காட்டாதே கைதைப் பொழிலுலவும் காவிரிநீர்

    ஆட்டாதே வைத்தென்னை ஆயிரமும் செய்தீரே(நந்தி.பா.46)

    வேலனின் குறையெனக் கருதி, வெறியாட்டு நிகழ்த்துவதை விடுத்து, தலைவனின் புகழைப் பாடச் செய்தும், அவன் உலா வந்த யானையின் காலடித்தடத்தை காண்பித்தும், காவிரி நீரைக் கொண்டு வந்துஎன்னை முழுக்காட்டவும் செய்திருந்தால் என் நோய் தீர்ந்து இன்படைந்திருப்பேன் எனத் தலைவி தமாரின் அறியாமையைக் கூறும் இப்பாடல் நகை எனும் மெய்ப்பாடு தோன்ற அமைந்துள்ளது.

    மடன்

    தலைவியின் பேரழகை நினைந்து தலைவன் தன் நெஞ்சோடு கூறுவதாக கீழ்வரும் பாடல் மடன் எனும் பொருண்மையில் இடம்பெற்றுள்ளது.

    மாதா இவரோடுறுகின்றாய் வாழி மற்றென்மட நெஞ்சே(நந்தி.பா.10)

    தலைவியை எண்ணி அவளது நினைவாகவே இருக்கும் அறியாமை உடைய மனமே என்று தலைவன் தன்நெஞ்சிற்கு கூறுவதாக அமைந்த பாடல் மடன் எனும் பொருண்மையில் இடம் பெற்றுள்ளது.

    அழுகை

    அழுகை எனும் மெய்ப்பாடு இழிவு, இழவு, அசைவு, வறுமை எனும் நான்கு நிலைகளில் தோன்றும் என கீழ்வரும் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

    இழிவு இழவே அசைவே வறுமையென

    விளிவில் கொள்கை அழுகை நான்கே(தெல்.மெய்.249)

    இழவு

    உயிரானும், பொருளானும் இழக்கும்போது அழுகை எனும் மெய்ப்பாடு தோன்றும். நந்திவர்மன் இறந்தபின்பு பாடப்பட்ட கையறுநிலைப்பாடல் அழுகைச்சுவையில் இடம்பெற்றுள்ளது.

    வானுறு மதியை அடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி

    (நந்தி.பா.108)

    நந்தி மன்னனின் குளிர்ந்த முகம் நிலவிலும், அவனது பெருமை அலைகடலிலும், வீரம் புலியிடமும், கொடைக்கரங்கள் கற்பக மரத்தையும் சோந்தன. இனி நானும் என் வறுமையும் எங்கு செல்வோம் என்று மனமுருகிப் பாடப்பட்ட இப்பாடல் அழுகைச் சுவையில் இடம்பெற்றுள்ளது.

    அசைவு

    தலைவனின் பிரிவை நினைத்து, உடல் மெலிந்து, கூந்தல் சடை திரண்டு, அழுது அழுது கண்ணீரினால் ஆடை நனைந்து தலைவி வருந்திய நிலை பின்வரும் பாடல் உணர்த்துகின்றது.

    வனைவர்குழல் வேணியும் வாடை கணீர்

    நனைவர் துகிலும்இவை நாளும் இரா

    வினைவர்கழல் நந்தி விடேல்விடுகின்

    கனையா முரசொத்தது கார்அதிர்வே(நந்தி.பா.13)

    இப்பாடலில் அசைவு எனும் பொருண்மையில் அழுகை எனும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது.

    குறித்த கால எல்லை வந்துவிட்டதையறிந்து தலைவன் தேர்ப்பாகனிடம், தலைவி கண்ணீருடன் உடல் மெலிந்து, தெருவில் நின்று நம் தேர் வரவை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பாள். ஆகவே விரைவாகத் தேரைச் செலுத்து என்று கூறுவதாகப் பின்வரும் பாடல் வரிகள் அழுகை  என்னும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளன.

    மொழியார் தொண்டைப் பன்மலா முற்றும் தெருவந்து

    விழியாள் என்றும் மேனி வெளுத்துற மெலிவாளே(நந்தி.பா.43)

    இக்கருத்தொடொப்ப, பின்வரும் நற்றிணைப்பாடலில் தலைவன் தோப்பாகனுக்குக் கூறுவதாக அமைந்துள்ளது.

    கல்சுடா சேருங் கதிர்மாய் மாலைப்

    புல்லென் வறுமனை நோக்கி மெல்ல(நற்.பா.32)

    இளிவரல்

    இளிவரல் எனும் மெய்ப்பாடு மூப்பு, பிணி, வருத்தம், மென்மை எனும் நான்கு நிலைக்களன்களில் தோன்றும் என்று தொல்காப்பியர் பின்வரும் நூற்பாவில் குறிப்பிட்டுள்ளார்.

    மூப்பே பிணியே வருத்த மென்மையொடு

    யாப்புற வந்த இளிவரல் நான்கே(தொல்.மெய்.250)

    மூப்பு

    பகைவேந்தன் ஒரு தூதுவனை அனுப்பி தனக்குப் பெண் கொடுக்குமாறு கேட்டதற்கு, ஒரு வீரன் எனது வில் ஒடிந்து தேய்ந்துள்ளது எனக்கருதியும், நான் மூப்பில் தளர்ந்து போயிருக்கின்றேன் எனவும் கருதி, என் மகளை மணம் பேசவந்தாய் என்று வெகுண்டு, தன் தலைவன் நந்திவர்மனின் வீரத்தைக் கூறுவதாக பின்வரும் பாடல்வரி அமைந்துள்ளது.

    அம்பொன்று வில்லொடிதல் நாண்அறுதல் நான்கிழவன் அசைந்தேன்

    (நந்தி.பா.77)

    இப்பாடல்வரி மூப்பின் காரணமாக இளிவரல் எனும் மெய்ப்பாடு தோன்றியதை உணர்த்துகின்றது.

    வருத்தம்

    தலைவனின் பிரிவால் வருந்திய தலைவி, தனது ஆற்றாமையை குருகிடம் கூறி தூது விடுப்பதாகப் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    பொழுது கண்டாய் அதிர்கின்றது போகநம் பொய்யற்கென்றும்

    தொழுது கொண்டேன் என்று சொல்லு(நந்தி.பா.3)

    தலைவன் கூறிய பொய்மொழிகள், அவன் தகுதிக்கு குற்றமாகும் எனக் கூறி குருகை தூது விடுப்பதாக அமைந்த இப்பாடல் வருத்தம் எனும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

    மருட்கை

    புதுமை, பெருமை, சிறுமை, ஆக்கம் எனும் நான்கு பொருண்மைகளில் மருட்கை எனும் மெய்ப்பாடு பிறக்கும் என்பதை கீழ்க்காணும் நூற்பாவில் தொல்காப்பியர் குறிப்பிட்டுள்ளார்.

    புதுமை பெருமை சிறுமை ஆக்கமொடு

    மதிமை சாலா மருட்கை நான்கே(தொல்.மெய்.251)

    புதுமை

    தலைவனின் அருளையும், நிலவொளியையும் ஒப்பிட்டு தலைவி கூறுவதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    படக்குடை ஏந்திய பல்லவன் தன்னொடும் பாரறியத்

    துடக்குடையாரையல்லால் சுடுமோ இச்சுடாப்பிறையே(நந்தி.பா.65)

    தன்னைத் தவிர மற்ற அனைவருக்கும் அருள் செய்யும் தலைவனைப்போல, இப்பிறை நிலவும் வெப்பத்தைக் கொடுக்குமோ? என்று தலைவி வியந்து வருந்துவதாக புதுமை எனும் பொருண்மையில், மருட்கை எனும் மெய்ப்பாட்டில்  இப்பாடல் அமைந்துள்ளது.

    பெருமை

    நேற்று, கிழிந்த கந்தல் ஆடையை இடுப்பில் சுற்றி, பல வீடுகளுக்குச் சென்று யாசகம் வேண்டியலைந்த பாணன் இன்று நல்ல மணமிக்க மாலை அணிந்து கொன்றை மரத்தின் புதுமலரைப் போன்ற பொன்னாலான பொன்னாடையும், அணிகலன்களும் அணிந்துகொண்டு யானை மீதேறி வருகிறான். சொல்ல முடியாத புகழுடைய நந்திவர்மனின் வேலின் சிறப்பினை பாடியிருப்பானோ என்னவோ என்று கண்டோர் வியந்து கூறுவதாக பின்வரும் பாடல் வர்ரிகள் அமைந்துள்ளது.

    மாவௌளாற்று மேவலாக்கடந்த

    செருவேல் உயாவு பாடினன் கொல்லோ(நந்தி.பா.23)

    இப்பாடலில் பெருமை காரணமாக மருட்கை எனும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது.

    அச்சம்

    அணங்கு, விலங்கு, கள்வர், தம் இறை எனும் நான்கு நிலைகளில் அச்சம் தோன்றும்.

    இறை

    இறை எனும் பொருண்மையில், நந்திவர்மனின் தோள்கள் வெற்றியுடைய வேந்தர்களின் மனதை அஞ்சச் செய்வன என்று அச்சம் எனும் மெய்ப்பாட்டில் பின்வரும் பாடல் இடம்பெற்றுள்ளது.

    மறமத காரிதிசை நிறுவின மணிநகை யவர்மனம் நகுவன

    விறலரசாகள் மனம் நெகிழ்வன(நந்தி.பா.7)

    விலங்கு அச்சம்

    அச்சம் தரத்தக்க விலங்குகளைக் காணும்போதும் அச்சம் எனும் மெய்ப்பாடு தோன்றும்.

    சென்றஞ்சி மேற்செங்கண்வேழம் சிவப்பச் சிலாதிகைப்ப

    அன்றும் சினத்தார் இனமறுத்தார் போலும் அஃதஃதே

    குன்றஞ்செய்தோள் நந்தி நாட்டம்குறிக் குருக்கோட்டையின்மேல்

    சென்றஞ்சப்பட்டதெல்லாம்படும் மாற்றலா திண்பதியே

    (நந்தி.பா.16)

    குருக்கோட்டை எனுமிடத்தில் நந்தியின் போர் யானைகள்  சினந்து தாக்க மக்களும்,அரசர்களும் அஞ்சியோடினர். நந்திவர்மனின் சினத்திற்கு ஆளாகி அஞ்சியொடுங்கி அடிபணிந்து நின்றவர் நிலை போலவே பகைமன்னர்களின் நிலையும் இருக்கும் என்று கூறுவதாக அமைந்த இப்பாடல் அச்சம் என்னும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

    பெருமிதம்

    கல்வி, தறுகண், புகழ், கொடை என்ற நான்கு பொருண்மைகளில் பெருமிதம் தோன்றும்.

    கல்வி, தறுகண், புகழ், கொடையெனச்

    சொல்லப்பட்ட பெருமிதம் நான்கே(தொல்.மெய்.253)

    கல்வி

    நந்திவர்மன் பழமையான இலக்கிய நூல்களின் எல்லைகளை முழுமையாக அறிந்தவன் எனும் பொருளில் பெருமிதம் எனும் மெய்ப்பாட்டில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    தொல்லை நூல்வரம்பு முழுது கண்டான் நந்தி(நந்தி.பா.3)

     

    தறுகண்

    விண்தொடுதிண் கிரியளவும் வீரம் சொல்லும்

    விடேல்விடுகு நீ கடவும் வீதிதொறும்

    திண்தறுகண் மாத்தொழுத பாவைமாக்கு (நந்தி.பா.74)

    வானளவு உயாந்துள்ள வலிமைமிக்க வடவேங்கட எல்லையளவும் தன் வீரச் சிறப்புச் செல்ல ஆள்கின்ற நந்திவர்மன் என்று இப்பாடல் வரிகள் இடம்பெற்றுள்ளதால் தறுகண் எனும் பொருண்மையில் பெருமிதம் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளன.

    கொடை

    சேர, சோழ, பாண்டியர்களாகிய மூவேந்தர்களும், வடநாட்டு மன்னர்களும், கப்பப்பொருளாக கொடுத்த யானைகள், குதிரைகள், போன்றவற்றை இரவலாக்கு கொடுத்த கொடையின் பொருட்டு பெருமிதம் எனும் மெய்ப்பாடு கீழ்வரும் பாடல் வரிகளில் அமைந்துள்ளது.

    சேர சோழரும் தென்னரும் வடபுலத்தரசரும் திறைதந்த

    வீரமதகாரியிவை பாரியிவை இரவலா கவர்வரே(நந்தி.பா.27)

    வெகுளி

    உறுப்பறை, குடிகோள், அலை, கொலை என நான்கின் அடிப்படையில் வெகுளி எனும் மெய்ப்பாடு தோன்றும்.

    உறுப்பறை குடிகோள் அலை கொலை என்றன

    வெறுப்ப வந்த வெகுளி நான்கே(தொல்.மெய்.254)

    உறுப்பறை

    பாண்டியமன்னனின் கோட்டைக்குள் நுழைந்து வாட்போரில் வல்ல பகைவர்கள் உடல்கள் துண்டு துண்டாக வெட்டி இருப்பிடம் சென்ற தொண்டைவேந்தன் எனக் கூறும் கீழ்வரும் பாடலில் உறுப்பறை பொருட்டு வெகுளி எனும் மெய்ப்பாடு இடம்பெற்றுள்ளது.

    சுரிகைவிஞைப் பகைஞர்உடல் துண்டம்ஆகத்

    துயிலுணர்ந்த வல்லாண்மைத் தொண்டை வேந்தே(நந்தி.பா.எ.4)

    குடிகோள்

    குடிகோள் என்பது கீழ்வர்ழ்வோரை நலிதலாகும். இம்மண்ணுலகில் எங்கும் அரசாட்சி முறையே, ஆகையால் திறைப்பொருளை செலுத்தி, நந்தியின் திருவடிகளில் அடைக்கலம் புகுவதைத் தவிர, வேறுவழியில்லை என்று நந்திவர்மனின் வீரன் ஒருவன் பகைவர்களை நோக்கி வஞ்சினமொழி கூறவதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    துறைவிடுமின் அன்றி உறைபதியகன்று

    தொழுமின் அலதுய்ந்தல் அரிதே(நந்தி.பா.எ.4)

     

    உவகை

    செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு எனும் நான்கு நிலைகளில் உவகை எனும் மெய்ப்பாடு தோன்றும்.

    செல்வம் புலன் புணாவு விளையாட்டென

    அல்லல் நீத்த உவகை நான்கே(தொல்.மெய்.255)

    புலன்

    தலைவன் தலைவியின் நலம் புனைந்துரைப்பதாக பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    மறிந்துளதே பவளவாய் மருங்கில் ஆகும்

    வல்லியிடை மணிமுறுவல் முத்துச் சால(நந்தி.பா.60)

    பவளவாய், முத்துப்பற்கள், குவளை போன்ற நெடிய கண்கள், மூங்கில் போன்ற தோல்கள், வில் போன்ற புருவங்கள் என்று தலைவன் தலைவியின் அழகை மகிழ்ந்து புகழ்தலால் உவகை எனும் மெய்ப்பாடாகும்.

    விளையாட்டு

    மகளிர் தலைவனைப் புகழ்ந்து பாடி ஊசல் ஆடும் வகையில் பின்வரும் பாடல் அமைந்துள்ளது.

    ஓடரிக்கண் மடநல்லீர் ஆடாமோ ஊசல்

    ஊத்தரியப்பட்டாட ஆடாமோ ஊசல்(நந்தி.பா.29)

    விளையாட்டு எனும் பொருண்மையில் உவகை எனும் மெய்ப்பாட்டில் அமைந்துள்ளது.

    முடிவுரை

    உள்ளத்து உணர்ச்சிகளை மெய்யின்கண் வெளிப்படுத்துவதே மெய்ப்பாடு என்றும், நந்திக் கலம்பகத்தில் எண்வகை மெய்ப்பாடுகளும், அதன் பொருண்மைகளோடு இடம்பெற்றுள்ளதையும் இக்கட்டுரையின் வழி அறியமுடிகிறது.

    துணைநின்ற நூல்கள்

    1.நந்திக்கலம்பகம் – பு.சி.புன்னைவனநாத முதலியார் உரை

    2.தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணர் உரை

    3.அகநானூறு  வே.சிவசுப்பிரமணியன், உ.வே.சா நூல்நிலையம், சென்னை-90

    4.நற்றிணை மூலமும் விளக்கவுரையும், ஓளவை சு.துரைசாமிப்பிள்ளை, அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.

    5.திருவருணைக்கலம்பகம், சோம.இளவரசு(உ.ஆ), மணிவாசகர் நூலகம், சிதம்பரம்.

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    கண்ணன் உள்ளம் கவர் கள்வன் Thief Of HEARTS ….

    180403 -Makhan chor-gouache -A4 -lr

    “மத்யானம் ஆய்ச்சியர் மல்லாந்த வேளையில்
    தத்யோனம் வெண்ணை திருடுமிவன் -உத்தியோகம்,
    இன்னாரென்(று) இல்லாது இல்லம் புகுந்தெடுப்பான்;
    மன்னார்AND COCHOR மனது”….
    மன்னாரண்ட் கோசோர் மனது”….

    ”மந்திமனம் எம்பியெம்பி முட்டுது எட்டெழுத்தை(ஓம்நமோநாராயணாய)
    பந்தி திருட்டினில் பங்குபெற -சந்திர
    வம்ஸ சிசுபாலர், வானரத்தைக் கேட்கின்றார்,
    ’கம்ஸன் அனுப்பினானா கூறு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (267)

    இவ்வார வல்லமையாளராக நாட்டுப்புற பாடல் கலைஞர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களை அறிவிப்பதில் வல்லமை மகிழ்ச்சி அடைகிறது

    இன்று ஜனாதிபதி கையால் பத்மஸ்ரீ விருது பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்துள்ளார் அம்மா விஜயலட்சுமி அவர்கள்

    விஜயலட்சுமி பிறந்த ஊர் இராஜபாளையம் அருகில் உள்ள சின்னசுரைக்காயமப்பட்டி ஆகும். தந்தை பொன்னுசாமி, தாய் மூக்கம்மாள்; எம்.ஏ. முனைவர் பட்டப்படிப்பு படித்துள்ளார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கலை வரலாறு, அழகியல் நுண்கலைத் துறையின் நாட்டுப்புற கலை மையத்தின் பேராசிரியையாகப் பணிபுரிந்தார். இவரது கணவர் முனைவர் நவநீதகிருஷ்ணணும் இதே துறையில் பேராசிரியர்.

    மறைந்துவரும் மரபார்ந்த நாட்டார் மக்களின், பழைமையான இசை, ஆடல், கூத்து உள்ளிட்ட கலைவடிவங்களை கண்டறிந்து ஆய்வு செய்யும் முயற்சியில் 1979 முதல் ஈடுபட்டு வந்தார். ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். காட்டாக இராமாயண ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம், என ஒரே கதையில் பல கலைவடிவங்களைத் தொகுத்து, கிராமிய இராமாயணம் எனும் படைப்பை அரங்கேற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த ‘சூழ்நிலை பாரதம்’ என்ற தெருக்கூத்தை உருவாக்கினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ‘பச்சைக்கோயில்’ என்ற ஒலிப்பேழையை வெளியிட்டார். கடந்த பல பத்தாண்டுகளாகப் பல்வேறு கிராமங்களில் நிகழ்ந்துவரும் கோயில் திருவிழாக்கள், வழிபாடுகள், சடங்குகள், நாட்டார் தெய்வங்களின் சிற்ப அமைப்புகள், நிகழ்த்துக் கலைகள், பாடல்கள், பழைமையான இசைக்கருவிகள். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், இசைக் குழுக்களின் கலாச்சாரங்கள், ஆகியவற்றை உற்றுநோக்கி 5000 ஒலி நாடாக்களும், 300 காணொளி நாடாக்களும் பதிவு செய்து பாதுகாத்து வருகிறார்.

    தமிழ் நாட்டுப்புறகலைகளுக்கு அளிக்கபட்ட சிறப்பாக வல்லமை இவரது விருதை கருதுகிறது. இவரை போல நம் மக்களின் கலைகளை பாதுகாப்பதில் அனைவரும் ஊக்கமுடம் செயல்பட வல்லமை விரும்புகிறது

    வல்லமையாளர் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் அவர்களுக்கு நம் நல்வாழ்த்துகள்.

    Thanks:

    Tamil wikipedia

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி 154-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    நெடிதுயர்ந்து நிற்கும் மரங்களையும் கீழே வீழ்ந்திருக்கும் அவற்றின் வரிநிழலையும் அழகாய்ப் படமெடுத்து வந்திருக்கிறார் திரு. ஆய்மன் பின் முபாரக்.  இப்படத்தை இவ்வாரக் கவிதைப் போட்டிக்காகத் தெரிவுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் என் நன்றியறிதலுக்கு உரியோர்.

    வரிசையாய் வானளாவி நிற்கும் இம்மரங்களின் தண்டுப்பகுதியும் கிளைகளுமே பார்வைக்குக் கிடைக்கின்றன. அவற்றின் இலைகள் துல்லியமாய்த் தெரியவில்லை. எனினும் பக்கவாட்டில் காணப்படும் இலைகளின் தோற்றம் வேங்கையை ஒத்திருப்பதால் மேலிருந்து புலிகள் சில கீழே பாயக் காத்திருப்பது போன்றதோர் தோற்றமும் கிடைக்கிறது.

    வேங்கை மரம் (Pterocarpus marsupium) என்றொரு மரம் நம் பண்டைத் தமிழ்நிலத்தில் பிரசித்தம். பொன்வண்ண மலர்களைச் சுமந்திருக்கும் அம்மரங்கள் பார்ப்பதற்கு உண்மையான வேங்கையைப் போலவே தோற்றம் காட்டும் என்பதைச் சங்க இலக்கியங்கள் நமக்கு அறியத்தருகின்றன. வேங்கை மலர்களால் தொடுத்த அசைகின்ற மாலைபோலக் கிடக்கும் புலிக்குட்டிகளை ஈன்று பசித்திருந்த தாய்ப்புலியை நற்றிணைப் பாடலொன்று நமக்கு அடையாளம் காட்டுகின்றது.

    கல்அயல் கலித்த கருங்கால் வேங்கை
    அலங்கல்அம் தொடலை அன்ன குருளை
    வயப்புனிற்று இரும்பிணப் பசித்தென வயப்புலி… (நற்: 383)

    தம் கற்பனை ஊற்றைக் கவிதையாய்ப் பாய்ச்சக் கவிஞர்கள் வரலாம் இனி…!

    *****

    கவின்மிகு காடுகளை அழித்ததால் மழை பொய்த்தது; நிலம் வறண்டது; விலங்குகள் அழிந்தன; புவிவெப்பம் உயர்ந்தது. இனியேனும் இயற்கையைக் காத்து, காற்றையும் வருங்காலத்தில் விலைகொடுத்து வாங்கும் அவலத்தைத் தடுப்போம் என்கிறார் திரு. ஆ. செந்தில் குமார். 

    இயற்கைவளங்களைக் காப்போம்… !

    கிளைகள் படர்ந்த மரங்களடர்ந்த சோலை…
    சோலை நடுவேயொரு செம்மண் சாலை…
    காலங் காலமாய் இருந்த இந்நிலை…
    காலத்தின் கோலத்தால் அழிவதேநம் கவலை…

    கிளைகள் படர்ந்தது…மரங்க ளடர்ந்தது…
    சோலை விரிந்தது… நிழலைத் தந்தது…
    தென்றல் வந்தது… இதமாய் இருந்தது…
    தண்ணென் றிருந்தது.. உள்ளம் மகிழ்ந்தது…

    காடுகள் அழித்தோம்… மழையினளவு குறைந்தது…
    காடுகள் அழித்தோம்… நிலமனைத்தும் வறண்டது…
    காடுகள் அழித்தோம்… வளமிகுஇயற்கை சிதைந்தது…
    காடுகள் அழித்தோம்… உலகின்வெப்பம் உயர்ந்தது…

    காடுகள் அழித்தோம்… விலங்குகள்பலவும் அழிந்தன…
    காடுகள் அழித்தோம்… நீர்நிலைகள்பலவும் வற்றின…
    காடுகள் அழித்தோம்… காற்றில்நச்சுக்கள் மிகுந்தன…
    காடுகள் அழித்தோம்… பருவநிலைகளும் மாறின…

    இன்றைய தலைமுறை மனிதர் நாம்…
    தண்ணீரை விலைகொடுத்து வாங்குகின்றோம்…
    இனிவரும் தலைமுறை மக்கள் தமக்கு…
    இனிய காற்றுக்கும் விலைதரும் நிலைவருமே…

    இனியேனும் விழித் தெழுவோம்…
    இயற்கை வளங்களைக் காத்திடுவோம்…
    இனிவரும் தலைமுறை மக்களுக்கு…
    இயற்கையைச் சிதைக்காது விட்டுச்செல்வோம்…

    *****

    விரிந்திருக்கும் மரக்கிளைகள் தேர்ந்த ஆடலரசியின் அபிநய முத்திரைகளாய்க் காட்சியளிக்கின்றனவே என வியக்கிறார் திருமிகு. திலகவதி.

    பரதத்தின் பாவனைகளா
    வாழ்நாள் முழுவதும் 
    இதன் விரல்களில்….
    ஆடலரசியா…
    இவள்…
    அபிநயம் பிடிக்கிறாள்…

    *****

    மரங்களை வெட்டி ஈட்டும் பணம் நிம்மதி தாராத தனம்; அதுதவிர்த்துச் சாலையெங்கும் நிழல்தரு மரங்களை வளர்ப்போம்; நீண்ட ஆயுளைப் பெறுவோம் என்கிறார் திருமிகு. நாகினி.

    போற்றப்படும் மண்வாழ்வு

    நின்றுநி ழல்தொட ரும்பாதை யென்றொரு
    .. நிம்மதி இல்லாமல் சேருந்த னம்
    அன்றாட வேலையென் றாகிம ரம்வெட்டி
    .. ஆயிர மாயிரம் ஈட்டும்ப ணம்

    சங்கடம் நீக்கலா மென்றெண்ணி டும்மாந்தர்
    .. சாலையில் சூடுதாங் காமல்வீழ் தல்
    இங்கிவர் பாடுக ளென்றாகி டுந்துயர்
    ..  இற்றிட காவலா கும்மரம் நல்

    வீரிய மாகிவ ளர்கின்ற நல்வித்து
    .. விண்ணையும் முட்டிட ஆரோக்கி யம்
    ஊரிலுள் ளோரெவர்க் குந்தரும்
    .. உற்றவோர் தூணாகி மாசிலா தம்

    காற்றுட னாடிடுஞ் சோலையின் மென்மையில்
    .. காலமெல் லாம்வாழ சாலையெங் கும்
    ஊற்றாய்ம ரம்வளர்க் கும்மனி தர்பணி
    .. உன்னத ஆயுளை ஏற்றமாக் கும்

    ஆற்றலும் நல்மனதின் பேரறி வும்பெறுவோர்
    .. அன்றாடம் நிற்கநி ழல்தரும் பேர்
    நாற்றென ஓங்கும ரம்வளர்ந் தால்நிதம்
    .. போற்றுத லானவாழ் வாகுமண் வேர்! 
     
    *****

    ”சாலையை விரிவுபடுத்துகிறோமென்று சோலையை அழித்து நாட்டைப் பாலையாக்காதீர்!” என்று இயற்கையைக் காக்கமறந்த மனிதரை எச்சரிக்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    வெட்டாதே…

    சோலை வனத்திலே
    சொகுசாய்ச் செல்லத்தான்,
    பாதை வகுத்தனர்
    நம் முன்னோர்..

    முன்னேறிவிட்டதாகச் சொல்லும்
    மனிதா நீ,
    சாலை விரிவுபடுத்துகிறோமென்று
    சாகடித்துவிடுகிறாயே
    சாலையோர மரங்களை..

    முன்னோரெல்லாம்
    மரம் நட்டனர்,
    வெட்டுகிறாயே நீ..

    நிழலை அழித்துவிட்டு
    வெயிலில் செல்கிறாயே,
    வேகமாய்ச் செல்கிறாயே-
    அழிவுப் பாதையில்..

    வேண்டாம் இந்த
    விபரீத விளையாட்டு,
    வெட்டாதே மரத்தை..

    வெட்டுவது தேவையெனில்,
    நட்டுவிடு புதிதாய்-
    வெட்டுமுன்னே..

    மரம் வளர்ப்போம்,
    மண்ணைக் காப்போம்…!

    *****

    ”காவிரி தந்த நீர்வளமும் நிலவளமும் கானலானது!  மீதமிருக்கும் காடுகளையும் கழனிகளையும் அழித்து எண்ணெயும் எரிவாயுவும் எடுக்கின்றார். எல்லா வளங்களும் சேதமாகித் தமிழ்த்தேசமே பாலையானதே” என்று வருந்துகின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    காவிரி தந்த பூவெழில் சோலை..!
    அன்று….
    தலைக்காவிரியில் தோன்றிய சிறுதுளியே பின்
    ……….தமிழகத்தைப் பெரு வளமாக்கியதாக வரலாறு *
    கலையுலகில் காவிரிக்கு என்றுமே சிறப்புண்டு
    ……….காரணப்பெயராம் பொன்னி யெனும் புகழுமுண்டு*
    குலைதள்ளும் வாழையும் வயலுமே செழிக்க
    ……….கருங்கயல் விளையாடிய காவிரியே காரணம் *
    “மலைத்தலைய கடற்காவிரியென” பட்டினப்
    ……….பாலையுமதன் மகத்துவத்தை எடுத்துரைக்கும் *

    மூன்று போகம் விளைந்தெங்கள் பூமிமுழுதும்
    ……….முத்தாகத் தவழ்ந்து வருமெங்கள் காவிரியாம் *
    அன்றெவரோர் வயல் வெளியை ஆராய்ந்தார்
    ……….அகழ்ந்துதோண்டி மண்ணை ஆய்வு செய்தார் *
    கொன்றழிக்கும் மீத்தேன் கிடைக்கும் என்றார்
    ……….கழனியும் காடுமழிக்கக் களத்தினில் இறங்கினார் *
    இன்று வற்றிய நீர்வளமும் வறண்டநிலமுமே
    ……….ஈன்றதின்று வெறும் வாயுவையும் எண்ணெயும்*

    இரைக்கும் பெருங்கடல் சூழ்ந்த நம்நாடுதான்
    ……….இறையன்புக்கு எடுத்துக் காட்டாய் விளங்கும் *
    நிறை நெஞ்சம்கொண்ட பாவலரும் புலவருமே
    ……….நிம்மதியாகப் பாவிசைக்கத் தகுந்த இடம்தான் *
    உரைக்கும்படி சொல்வேன் யாவர்க்கு முகந்த
    ……….உயர்ந்தநம் நாட்டிற்கிணை இல்லை! ஆனால்
    தரையிலின்று தன்குகின்ற தண்ணீர் இல்லை *
    ……….கரைபுரண்டு நீரோடிய ஆற்றில் மணலில்லை

    *****

    ”தலைவன் ஒருவன் தடம்பதித்து நடப்பதற்காகப் பாதைவகுத்து, மரக்குடை விரித்துக் காத்திருக்கின்றது இயற்கை. அவன் தடம்பதித்தால் பூக்கள் மாரியாய்ச் சொரிந்து அவனை வாழ்த்தும்” என்று தன் கற்பனைச் சிறகைக் கவிதையில் விரித்திருக்கின்றார் திருமிகு. சக்திப்ரபா.

    தலைவனின் தடம்

    இன்றைக்கேனும்
    ஒரு மாமனிதன்
    நடந்துவிட மாட்டானாவென
    மணல் மெத்தையிட்டு
    மரக்குடை விரித்து
    காத்திருக்கும் பாதை.

    கால்கள் பாவாத அரிய வழியிதென
    கண்டுணரும் தலைவன்,
    கோடியில் ஒருவன்,
    தடம் புரளாத எளியன்,
    தடம் பதிக்கும் தருணம்,
    பூக்களும் மலர்ந்து
    வாழ்த்துக்கள் சொரியும்.

    *****

    கனியும் நிழலும் தந்து எம்மைக் காக்கும் மரங்களே! நீங்கள் வாழவேண்டும்! நீங்கள் வீழ்ந்தாலும் மீண்டும் விதைபோட்டு உம்மை வளர்ப்போம்! மண்ணைக் காப்போம்!” என்று சூளுரைக்கிறார் திரு. சி. ஜெயபாரதன்.

    மரங்களை வளர்ப்போம்

    பச்சை மரங்களே !
    பழங்கள் தரும் மரங்களே !
    நிழல்தரும் மரங்களே !
    இளநீர் தரும் மரங்களே !
    நீரின்றிக்
    காய்ந்த மரங்களே !
    வேரறுந்து
    விழுந்த மரங்களே !
    முதிர்ந்து
    மூப்படைந்த மரங்களே !
    எரிந்துபோன
    பரிதாப மரங்களே !
    எங்கள் வீட்டு ஓடுகளைத்
    தாங்கும் மரங்களே !
    நீங்கள் வாழ வேண்டும் !
    உங்களை வெட்டினாலும்
    வீட்டுத் தூணுக்கு
    வேண்டும்!
    மீண்டும் மரம் விதைப்போம்,
    ஒன்றல்ல !
    ஆயிரம், ஆயிரம் மரங்கள்
    தாய் மண்ணிலே
    தழைக்கும் ! தழைக்கும் !
    தழைக்கும் !

    *****

    மரம் இயற்கை நமக்களித்த வரம்! மரங்களைக் கொன்றழித்ததால் நாம் சந்திக்கும் சீரழிவுகளைச் சிறப்பாகத் தம் கவிதைகளில் பதிவுசெய்திருக்கிறார்கள் கவிஞர்கள். அவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…

    புலியின் வரிகள் கிளை நிழலே! நெருங்கித் தருக்கள் தீட்டும் வரைபடமே!
    புலியும் தருவும் பிணையென்றே இறைமை இயற்கை காட்டுதுவே!
    புலிஉண்டாமால் தருஉண்டாமால் என வலிமரமும் வேங்கையானதுவே!
    புலி இல்லாமால் தரு இல்லாமால் இன்று புவித்தரமும் வீழல் கொண்டதுவே!

    புலியே நாட்டின் சின்னமென்பர்; புலியோ அழிந்துபடுதென்பர்
    புலியே அழிந்துபடுமென்றால் நாட்டின் பீடும் சரியுது எனலாமா?
    புலிகள் வாழக் காடில்லை; புலிகள் வழக்காடவில்லை; மறை
    புலிகள் மறைந்தது அவையாலில்லை; இவரேயவற்றின் நமனானார்!

    புலிவழிப் பாடும் புலிவழக்கோடு எம்மூதையர் வாழ்ந்த எம் தாரணியில்
    புலியின் வீரம் இலக்கியமாம்! புலியே இறைவர் வாகனமாம்!
    புலியின் தோல் நகம் புனிதமென்றே போற்றிப் பொருத்தியவர் மகிழ்ந்தனராம்!
    புலிக்காடும் நரநாடும் வேறென்றே வரையறைபோட்டும் அவர் வாழ்ந்தனராம்!

    புலிகள் ஒதுங்கா தக்கை மரம்! தேவதாருவும் தேக்கும், சந்தனமும்
    சேர்ந்தாலங்கே புலியொதுங்கும்!
    புலிகள் பிறப்பு நூதனமே! இறைவன் படைப்பிலவை உன்னதமே! காட்டில்
    மட்டும்

    புலி பிறக்கும்! கூட்டில் பிறக்கா மூடர்களே! மாக்காடில்லா புவியதனில்
    புலி வாழேனென்றே முடிவெடுத்து கருமூடி மரணித்துப் போனதுவே!

    புலியைப்படத்தில் கண்டபடி புலியைக்கதையில் கேட்டபடி போகும் போக்கு
    முற்போக்கு?
    புலியை ஒழித்து காட்டை அழித்து சுயம் வாழ்ந்திடும் வாழ்வு பகுத்தறிவு?
    புலியின் படம் உயர் சுவர் நிறையாய் உள்ளமெல்லாம் சுயவுரிமைகளாய்
    புலிப்பிழையாய் பெருத்த பிழைசெய்து ஓட்டும் உம் வாழ்க்கை வீழ்வதெப்போ?

    நான் முன்னுரையில் குறிப்பிட்டதுபோல் புலியை ஒத்த தோற்றம் காட்டும் வேங்கை மரங்களை நம் தமிழ்ப் புலவர்கள் தம் சங்கப் பாடல்கள் பலவற்றில் சுவைபட விளக்கியுள்ளனர். வேங்கை பூத்தால், பெண்கள், ”புலி…புலி!” என்று ஆரவாரித்து அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடியுள்ளனர். வேங்கை மரத்தைக் கொண்டாடிக் குதூகலித்த தமிழ்ச் சமூகம், வேங்கை இனத்தையும் போற்றிப் புரந்தது.  அன்று காடுகள் மிக்கிருந்தன; அதனால் புலிகளின் எண்ணிக்கையும் குறையாமலிருந்தது. இன்றோ…காடுகொன்று நாடாக்கினோம்…இல்லை…சுடுகாடாக்கினோம்! அதனால் கம்பீரத்துக்கு இலக்கணம் வகுத்த புலியினமும் அழிவின் விளிம்பில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது.

    மரங்களை அழியாமல் காத்தால் மட்டுமே காட்டு விலங்குகளையும் நாம் அழியாமல் காக்கமுடியும் எனும் உண்மையைத் தன் கவிதையில் கவனத்தோடு பதிவுசெய்திருக்கும் திருமிகு. அவ்வைமகள் இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தேர்வாகிறார். அவருக்கு என் பாராட்டு!

     

     

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    180402 Vatsalya A4 -lr

    ’’குட்டிப் பசுங்கன்றுக் குட்டியிடம், யாதவக்
    குட்டனவன் ராதையைக் காண்கிறான்: -சுட்டிப்
    பயலவர்க்கு எல்லாமே, பைங்கிளி ராதா:
    வயலிவர் ராதைநீர் வீச்சு’’….கிரேசி மோகன்….!

    Share
  • என்ன கொடுமை இது?

    பவள சங்கரி

     

    1 உரூபாய் முதல் 25 இலட்சம் வரை வங்கியில் கடன் பெற்று திருப்பிச் செலுத்தாதவர்கள் பட்டியலில் தமிழ் நாடு கடைசியிடத்தில்தான் உள்ளது. அதாவது மற்ற மாநிலங்களைவிட மிகக் குறைந்த அளவான 1 கோடி உரூபாய் மட்டும்தான் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமாக ரிசர்வ் வங்கியிலிருந்து அறியப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிர மாநிலம் வருடத்திற்கு 4,000 கோடி வரை கடன் பெற்று அதைத் திருப்பிச் செலுத்தப்படாமல் உள்ளது. 2014 லிலிருந்து கணக்குப் பார்க்கும்போது இது பன்மடங்கு அதிகரித்துள்ளது. வங்கிகளிலேயே பஞ்சாப் தேசிய வங்கி மிக அதிகமாகக் கடன் அளித்து வசூல் செய்யாமல் உள்ளதாகவும் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. இது பஞ்சாப் தேசிய வங்கியின் நிர்வாக சீர்கேடாகவே பார்க்கப்படுகிறது. மத்திய ரிசர்வ் வங்கியும், மத்திய அரசின் வங்கித் துறையும் இதற்கு என்ன நடவடிக்கை எடுக்கப்போகின்றன. இது அவ்வளவும் பொது மக்களின் இரத்தமும், வேர்வையும் என்று நினைத்துப் பார்க்கிறார்களா என்றும் தெரியவில்லை? மக்களுக்கு மென்மேலும் வெறுப்பேற்றும் செயல்களாகவே இது உள்ளது.

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (155)

     

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

     

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    வெங்கட் சிவா எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (07.04.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share