Blog

  • குறளின் கதிர்களாய்…(209)

    -செண்பக ஜெகதீசன்

    செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பா னல்லிடத்துக்
    காக்கிலென் காவாக்கா லென். (திருக்குறள் -301:வெகுளாமை)

     புதுக் கவிதையில்… 

    சினத்தை அடக்குதலென்பது,
    அது
    பலிக்குமிடத்தில்
    பயன்பாடுத்தாதிருப்பதே…

    செல்லாத இடத்தில்
    சினத்தை அடக்கினாலும்,
    அடக்காமல் விட்டாலும்
    எவ்விதப் பலனுமில்லை…! 

    குறும்பாவில்… 

    பண்பிலே சிறந்தது அது-
    பலிக்குமிடத்தில் கோபத்தை அடக்குதல்,
    பலிக்காயிடத்தில் அடக்குதலும் அடக்காததும் ஒன்றே…! 

    மரபுக் கவிதையில் 

    குணமதில் சிறந்தது சினமடக்கல்,
    -கோப மதுவும் பலிக்குமிடம்
    உணர்ந்தே அடங்கிப் போனாலது
    -உண்மையி லுயர்ந்த சினமடக்கல்,
    கணமு மிதனைக் கருத்தில்கொள்
    -கோப மிதுவே பலிக்காத
    பிணக்கு மிக்க யிடத்தினிலே
    -பொறுமை கொள்வதில் பலனிலையே…! 

    லிமரைக்கூ… 

    பலிக்குமிடத்தில் அடக்குதலே அடக்குதல் சினத்தை,
    பலிக்காயிடத்தில் அடக்குதலும் அடக்காததும் ஒன்றுதான்,
    பலனிலாதுபோய்க் கவராது மற்றவர் மனத்தை…! 

    கிராமிய பாணியில்… 

    அடக்கு அடக்கு கோவத்த அடக்கு
    அடுத்தவன்மேலக் கோவத்த அடக்கு…
    கோவம் பலிக்கிற எடத்தில
    கோவத்த அடக்குறதுதான்
    உண்மயிலயே
    கோவத்த அடக்குறது…

    அதுயில்லாம
    ஓங்கோவம் செல்லாத எடத்தில
    நீ கோவத்த
    அடக்குனாயென்ன அடக்காட்டியென்ன,
    ஒரு பயனுமில்ல…

    அதால,
    அடக்கு அடக்கு கோவத்த அடக்கு
    எப்பவும்
    அடுத்தவன்மேலக் கோவத்த அடக்கு…!

     

     

     

    Share
  • சிக்கனப்பிடிக்க

    திருமதி ராதா விஸ்வநாதன்

     

    அம்மா சொன்னது

    டிபன் டப்பா பத்திரம்

    அப்பா சொன்னது

    ஸ்கூல் பீஸ் பத்திரம்

    தோழி சொன்னது

    உன் மனது பத்திரம்

    எதையும் இழந்து விடாதே

    என்றனர் உற்றோரும் உறவினரும்

    இறுக பற்றினேன் அனைத்தையும்

    இதனால் இழந்தேன்

    இறைவனை

    தொலைத்தவனைக் காண

    யாவையும் தொலைக்க….

    அவனே என்னிடம் 

    சிக்குவானோ

    Share
  • நெஞ்சுக்குள் எட்டிப் பார் !

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++++

     

    உள்ளத்தை மூடி விட்டு சற்று

    ஓய்வெடு !

    ஓடும் ஆற்றில் மிதந்து விடு !

    மரிப்ப தில்லை அது ! மரிப்ப தில்லை அது !

    சிந்தனை யாவும் சமர்ப்பணம்

    செய்திடு

    வெட்ட வெளிப்   பாதத்தில் ! 

    ஒளி வீசும் அது !  ஒளி வீசும் அது !

    உள்ளத்திலே காண்பாய்

    உலக வாழ்வின் மெய்ப் பொருளை !

    உன்னுடன் பேசும் அது !  உன்னுடன் பேசும்  அது !

    அன்பு மயமே உலகம்,

    அனைத்தும் அன்பில் தழைக்கும்.

    அறிவே அது  ! அறிவே அது !

    அறியா மையும் ஆத்திரக் குணமும்

    கடந்ததை எண்ணி, எண்ணிக்

    கண்ணீர் விடும் !

    நம்பிக்கை அது !  நம்பிக்கை அது !

    ஆயின் கூர்ந்து நோக்கு உந்தன்

    வண்ணக் கனவுகளை !

    வாழ்வா அது ? வாழ்வா  அது ?

    இறுதிவரைச் சதுரங்க ஆட்டம் ஆடி விட்டு

    பிறவிதனை முடித்து விடு !

    ஆரம்பம் அது !  ஆரம்பம்  அது !

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  -14

    க. பாலசுப்பிரமணியன்

     

    முயற்சிகளுக்கு அப்பால் ..

     

    உழைப்பும் முயற்சியும் இருந்தும் வெற்றிப்படிகளில் ஏற முடியாதவர்களைப்  பார்த்தால் சில நேரகங்களில் நமக்கு வருத்தமாகத்தான் இருக்கின்றது. எவ்வளவு தீவிரமாகவும் கவனமாகவும் இலக்கை நோக்கிப் பயணித்த்தாலும்  வெற்றி நம் கைகளிலிருந்து நழுவிச் செல்கின்றது. உண்மைதான்… சில நேரங்களில் நம்மை விடக் குறைவான தகுதி உள்ளவர்கள் நம்மை ஒதுக்கிவிட்டு வெற்றிப்படிகளில்  ஏறிச்செல்லும் பொழுது நமது மனம் அல்லல் படுகின்றது. இந்த நேரங்களில்தான் நாம் வாழ்வின் உண்மைப் பொருளை அறிந்து அமைதியுடனும் நிதானத்துடனும் செயல்படத்  தெரிந்து கொள்ள வேண்டும்.

    சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்ச்சி.

    சென்னையில் ஒரு பெரிய பொறியியல் கல்லூரியில் கடைசி ஆண்டு படித்துக்கொண்டிருந்த ஒரு இளைஞன். அறிவிலும் ஆற்றலிலும் நல்ல முதிர்ச்சி பெற்றவன். இருந்தாலும் தன்னுடைய வெற்றிக்கு ஒரு இலக்கை நிர்ணயித்துக்கொண்டிருந்தான். கடைசி ஆண்டுக்கு கல்லூரிப் படிப்பில் தன்னுடைய முதலாவது வகுப்பிற்கான மதிப்பெண்கள் பெறத் தவறியதால் மனமொடிந்து கல்லூரிக்கு அருகிலேயே ஒரு இடத்தில் தற்கொலை செய்து கொண்டான். இது போன்று தன்னுடைய இலக்குகள் தவறியதால் தன்னுடைய வாழ்க்கையை அழித்துக்கொண்டவர்கள் எத்தனையோ பேர்கள்.  தனக்கு விரும்பிய வேலை கிடைக்கவில்லை, தனக்கு விரும்பிய பெண் அல்லது கணவர் கிடைக்கவில்லை, தன்னுடைய வியாபாரத்தில் வெற்றி கிடைக்கவில்லை என்று தன்னுடைய வாழ்க்கையையே முடித்துக்கொண்டவர்களைப் பார்க்கும்பொழுது நமது மனம் நொந்து போகின்றது. அப்பொழுது நமது மனதில் எழும் கேள்வி ” ஒரு இலக்கு நமக்கு கிடைக்காவிட்டால் வாழ்க்கையே தோற்று விட்டதா? ” என்பதுதான். இந்த மாதிரி முடிவுகளை எடுப்பவர்கள் மிகவும் உணர்ச்சி பூர்வமாக வாழ்வையும் அதன் பொருளையும் மனதில் கொண்டு முடிவுகளை  எடுப்பவர்கள். அவர்கள், இந்த வாழ்க்கை என்பது சில இலக்குகளையையும் வெற்றிகளையும் கடந்தது என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்.

    தற்பொழுதைய சூழ்நிலையில் சில இளைஞர்கள், பள்ளி மாணவர்கள் சில சிறிய சிறிய ஆசைகள் நிறைவேறாவிட்டால்  கூட தவறான முடிவுகளை எடுத்து விடுகின்றார்கள். இது வாழ்க்கையைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் ஏற்படுகின்ற ஒரு நிலை. வாழ்க்கை ஒரு சில நிகழ்ச்சிகளால் மட்டும் நிர்ணயிக்கப் படுவது அல்ல. நிகழ்வுகளுக்கு அப்பால் நாம் வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    முயற்சிகள் நமது ஆர்வங்களாலும் விருப்பங்களாலும் உந்தப்படுபவை. ஆர்வங்கள் இல்லாத ஒரு பாதையில் மற்றவர்களோடு போட்டிபோட்டுக்கொண்டோ அல்லது மற்றவர்களுடைய விருப்பங்களை முன்னுதாரணமாகக் கொண்டோ நாம் முயற்சிகள் செய்யும் பொழுது அதற்கான முழுப் பலன்கள் நிச்சயமாகக் கிடைப்பதில்லை. நம்முடைய விருப்பங்கள் உள்ள பாதைகளில் முயற்சிகள் செய்யும் பொழுது அதற்கான சரியான வளங்களும் தொலைநோக்கும் இல்லாத பொழுதோ அல்லது நம்முடைய விருப்பங்களுக்கும் உண்மையான நிலைகளுக்கும் உள்ள இடைவெளி அதிகமாக இருக்கும் பொழுதோ நமது முயற்சிகள் வெற்றி பெறுவதிலில்லை. ஆகவே நடைமுறைக்கேற்ற சிந்தனை (Pragmatic thinking) அவசியம் தேவை. அவசரங்களும் தெளிவில்லாத முயற்சிகளும் விருப்பங்களும் மட்டும் நமது வாழ்வை நிர்ணயிப்பதில்லை. என்பதைப் புரிந்து கொண்டு தெளிவான சிந்தனையோடு வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.

    சில தினங்களுக்கு முன்பு நான் சந்தித்த ஒரு இளைஞன் ஒரு நிறுவனத்தில் தூதுவருக்கான (Messenger) வேலையில் ஈடுபட்டிருந்தார். அவருடன் பேச சந்தர்பம் கிடைத்த்தபொழுது அவர் ஒரு பொறியியல் துறையில் பட்டப்படிப்பு படித்தவர் என்று தெரிய வந்தது. “எனக்கு உண்மையில் அதில் எல்லாம் விருப்பம் இல்லை. எங்கள் வீட்டில் என்னை நிர்பந்தமாக அதில் சேர்த்து விட்டார்கள். என்ன செய்வது?” என்று கூறியவர் “நான் இந்த வேலையை மிகவும் விரும்புகிறேன். எனக்கு பயணம் செய்வது என்றால் மிகவும் விருப்பம். இதில் காலையிலும் மாலையிலும் பல இடங்களுக்குச் செல்ல வாய்ய்பு கிடைக்கும் பொழுது நான் வாழ்க்கையை ரசிக்கின்றேன்.” ஒரு விதத்தில் பார்க்கும் பொழுது அவருடைய மனப்பக்குவம் எனக்குப் பிடித்த்திருந்தது.

    “வெற்றி வேண்டுமா , போட்டுப் பாரடா எதிர்நீச்சல்” என்று பாடிய அந்த மாபெரும் கவிஞர்  தான் “கல்தரை மீது கைபோட்டு நீந்தும் மனிதா, காலமிட்ட கட்டளையை மாற்றுவது எளிதா?”  என்றும் பாடினார்.

    வாழ்க்கைக்கு இலக்குகள் தேவை. ஆனால் இலக்குகளால் வாழ்க்கையை கட்டுப்படுத்த முடியாது. வாழ்க்கையில் விருப்பங்கள் தேவை. ஆனால் நிறைவேறாத விருப்பங்களால் வாழ்க்கை முடிவது அல்லது தோற்பது இல்லை. வாழ்க்கை ஒரு  இனிய பயணம். இதில் பல பருவங்கள் உண்டு. வசந்தத்தில் மகிழவேண்டும். வேனில் பருவத்தில் துவளக்கூடாது. இலையுதிர் பருவத்தை இரசிக்கக் கற்றுக்கொள்ளவேண்டும். மொத்தத்தில் வாழ்க்கையை புரிந்துகொள்ளவேண்டும். வெற்றி தோல்விகளுக்கப்பால் நாம் வாழக்கற்றுக்கொள்ள வேண்டும்.

    வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • பழந்தமிழக வரலாறு -4

     

     

                 தமிழக அரசகுடி மரபின் சிறப்பு

                                        கணியன்பாலன்

    பண்டைய தமிழக அரசகுடிகளான சேர, சோழ, பாண்டிய அரச குடிகள் 2000 ஆண்டுகளாக இருந்து வந்துள்ளன. உலகில் வேறு எந்த நாடுகளிலும் எந்த அரச குடியும் 1000 ஆண்டுகள் கூட இருந்ததில்லை. கி.மு. 8ஆம் நூற்றாண்டு தொடங்கி, கி.பி. 12ஆம் நூற்றாண்டு முடியம்வரை தமிழக அரச குடிகள் இருந்தன. பெரும்பாலும் சேர, சோழ, பாண்டிய அரச குடிகளால் தமிழகம் ஆளப்பட்டபோது மட்டுமே தமிழ் மக்களின் ஆட்சியாக அது இருந்தது, இல்லையெனில் அது அந்நிய ஆட்சியாகவே பிறமொழி ஆட்சியாளர்களின் ஆட்சியாகவே அது இருந்தது. தமிழக அரசகுடும்பங்களில் அரச பதவிக்காக ஒருவரை ஒருவர் கொல்வது என்பது இருக்கவில்லை. வேறுபல மேன்மைகளும் இருந்தன. அதற்குப் பண்டைய தமிழக அரசகுடிகள் பின்பற்றிய மரபுவழி சிறப்பு அரசுரிமைமுறைதான் காரணமாகும். பாண்டியர்களை முதுகுடிகள் என்கிறது சங்க இலக்கியம்.

    பண்டைய தமிழக அரசுகளை, அசோகர் தனது கல்வெட்டுகளில் சோழர்கள், பாண்டியர்கள், சதிய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் எனப் பன்மையில்தான் குறிப்பிட்டுள்ளார். சங்ககாலத்தில் மூவேந்தர்கள் ஒவ்வொருவரிலும் பலர் இருந்து ஆண்டு வந்துள்ளனர். அதாவது சேரர்களில் மூன்று நான்கு பேரும், பாண்டியர்களில் மூன்று நான்கு பேரும், சோழர்களில் மூன்று நான்கு பேரும் இருந்து ஆண்டு வந்துள்ளனர். சேரர்கள் வஞ்சி, கரூர், போன்ற இடங்களிலும், பாண்டியர்கள் கொற்கை, மதுரை, போன்ற  இடங்களிலும், சோழர்கள் உறையூர், பூம்புகார், போன்ற  இடங்களிலும் மூன்று நான்கு சேர, சோழ, பாண்டிய அரசர்கள் ஆண்டு வந்துள்ளனர்.

    சான்றாகச் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கிருந்தபோது,  அவனது தம்பி பல்யானைச் செல்குழுகுட்டுவன், அவனது மூத்த மகன் களங்காய்கண்ணி நார்முடிச் சேரல், அவனது நடு மகன் கடற்பிறக்கோட்டிய செங்குட்டுவன், அவனது தாயாதித்தம்பி சேரமான் குடக்கோ நெடுஞ்சேரலாதன், அவனது கிளை வம்சத்தை சேர்ந்த பொறையர் குல அரசர்களான பாலைபாடிய பெருங்கடுங்கோவும், மாந்தரன் பொறையன்  கடுங்கோவும் என ஆறு பேர் ஆண்டு வந்துள்ளனர். ஆனால் பல்யானைச் செல்குழுகுட்டுவன் மட்டுமே வேந்தனாக இருந்துள்ளான். சேரன் செங்குட்டுவன் 9 சோழக்கிளை அரசர்களை வென்றான் என பதிற்றுப்பத்து பதிகம் கூறுகிறது. இதே போன்றுதான் பாண்டிய அரசும் இருந்தது. அதனால்தான் அசோகர் தனது கல்வெட்டுகளில் தமிழக அரசுகளைப் பன்மையில் குறிப்பிட்டுள்ளார். மூவேந்தர் அரசகுலங்கள் ஒவ்வொன்றிலும் ஒரே சமயத்தில் பல அரசர்கள் இருந்த போதிலும், ஒவ்வொரு குலத்திலும் ஒரு சமயத்தில் ஒரு வேந்தர் மட்டுமே இருந்தார். ஆனால் அனைத்துச் சேர, சோழ, பாண்டிய அரசர்களையும் சங்க இலக்கியம் வேந்தர்கள் என்றே அழைத்தது. ஆனால் நாம் வேந்தர்களையும் அரசர்களையும் வேறுபடுத்திப் பார்ப்பது அவசியமாகிறது. இவைகளைப் புரிந்து கொள்ள அன்றைய சேர, சோழ, பாண்டிய அரசுகள் எப்படித் தனது அரசர்களையும், வேந்தர்களையும் உருவாக்கிக் கொண்டன என்பதை அறிவது முக்கியமாகும்.

    தந்தைக்குப் பின் அவனுடைய மூத்த மகன், அவனுக்குப் பின் அவனுடைய மூத்த மகன் என வரும் அரசியல் தாயமுறை(Primogenituro) தமிழ் நாட்டில் இருக்கவில்லை. அதற்குப் பதில் வேறு விதமான ஒரு சிறப்பு முறையைத் தமிழக அரசகுலங்கள் பின்பற்றின. ஒரு அரசனுக்கு இரண்டு மூன்று புதல்வர்கள் இருந்தாலும், அவனுக்குத் தம்பிகள் இருந்தாலும் அவர்கள் அனைவருமே உரிய வயது வந்தபொழுது அரசர்களாக ஆக்கப்பட்டு ஒவ்வொருவரும் ஒவ்வொரு நகர்மைய அரசை ஆள அனுமதிக்கப் பட்டனர். இவர்கள் அனைவரும் அவனுகுக்குக் கீழ்ப்பட்ட அரசர்களாக இருந்தனர். அவன் இறந்தபின் இருக்கும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். பெரும்பாலும் அவனது தம்பி வேந்தன் ஆவான். பின் அவன் இறந்தபின் மீண்டும் அரசர்களில் மூத்தவன் எவனோ அவன் வேந்தனாவான். தமிழரச குலங்களில் இம்முறையே இருந்து வந்தது. ஆனால் அனைவரும் வேந்தர்கள் என்றே அழைக்கப்பட்டனர்.

    வேந்தர்களின் மகன்களும், அரசர்களின் மகன்களும் உரிய வயதில் அரசர்களாக்கப்பட்டு ஏதாவது ஒரு நகர்மைய அரசை ஆட்சிசெய்து வந்தனர். இதன் விளைவாக அரசின் ஒவ்வொரு நகர்மைய அரசும் வேந்தனின் ஏதாவது ஒரு  கிளைஅரசனால் ஆளப்பட்டது. எல்லாருக்கும் மூத்தவன் வேந்தனாக இருந்தான். சான்றாக உதியஞ்சேரலாதன் வேந்தனாக இருந்த பொழுது அவனது இரு மகன்கள் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனும், பல்யானைச் செல்குழு குட்டுவனும் அரசர்களாக இருந்தனர். பின் உதியன் இறந்த பிறகு மூத்தவனான இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் வேந்தன் ஆனான். இவனது தம்பி பல்யானைச் செல்குழு குட்டுவன் அரசனாக ஆனான். இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் இறந்த பிறகு அரசர்களில் மூத்தவனும் இவனது தம்பியுமான பல்யானைச் செல்குழு குட்டுவன் வேந்தன் ஆனான். இமயவரம்பனின் மகன்களான களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரலும், செங்குட்டுவனும் அரசர்களானார்கள். அதன் பின் நார்முடிச் சேரலும், பின் செங்குட்டுவனும், அதன்பின் ஆடுகோட்பாட்டு சேரலாதனும் முறையே ஒருவர் பின் ஒருவராக வேந்தர்களாகினர். இம்முறை  இனக்குழு நிலவிய காலத்தில் இருந்து உருவான ஒரு இரத்த உறவுமுறை வடிவமாகும்.

    இதே முறைதான் பிற சோழ, பாண்டிய அரச குடிகளிலும் பின்பற்றப்பட்டது. பிற்காலச் சோழர்களும் இதே முறையைத்தான் பின்பற்றினர். சான்றாக முதற்பராந்தகனுக்கு  இராசாதித்தன், கண்டராதித்தன், அரிஞ்சயன், உத்தமசீலி என மக்கள் நால்வர் இருந்தனர். அவர்களுள்  இராசாதித்தன், பராந்தகன் இருக்கும்போதே இறந்தான். அதனால் பராந்தகனுக்குப்பின் கண்டராதித்தன் சோழ வேந்தனாய் முடிசூட்டிக் கொண்டான். அவனுக்குப்பின் அரிஞ்சயன் முடிவேந்தனானான். அவனுக்கு முன்பே உத்தமசீலி இறந்து போனான். கண்டராதித்தனுக்கு உத்தம சோழன் என்றொரு மகனும் அரிஞ்சயனுக்குச் சுந்தர சோழன் என்றொரு மகனும் இருந்தனர். அவ்விருவருள், சுந்தரசோழன் மூத்தவனாதலால் முதலில் அவனும், அவனுக்குப் பின் உத்தம சோழனும் முடி வேந்தராயினர். உத்தம சோழனுக்குப்பின் சுந்தர சோழனின் மக்களுள் மூத்தவனான ஆதித்த கரிகாலன் தந்தையிருக்கும்போதே இறந்ததால், இளையோனான முதல் இராசராச சோழன் முடிவேந்தனாய் ஆனான்.

    இந்த முறைதான் பண்டைய தமிழக மூவேந்தர்கள் மரபு வழியாக பின்பற்றிய அரசுரிமை முறையாகும். இம்முறை அரச குடிகளில் இருந்த பல சிக்கல்களைத் தீர்த்தது. ஒரு அரசனின் இழப்பு அல்லது ஏன் ஒரு வேந்தனின் இழப்பு கூட மிக எளிதாகச் சமாளிக்கப்பட்டது. நகர்மைய அரசுகள் இந்த வேந்தர் வழி வந்த அரசர்களால் ஆளப்பட்டதால் அவை சுதந்திரமான தன்னரசுகளாக இருந்ததோடு நன்கு வளர்ச்சி அடைவதற்கான சூழ்நிலை உருவானது. இம்முறையினால் அதிகாரவர்க்கப் படிமுறை என்பது தமிழகத்தில் தடுக்கப்பட்டு அதன் தீமைகள் தவிர்க்கப்பட்டன. இம்முறையின் காரணமாக, பிறநாட்டு அரச குடும்பங்களில் இருந்த கொலைகளும் சூழ்ச்சிகளும் தமிழக அரச குடும்பங்களில் இல்லாது போயின.

    முசிறி, தொண்டி, வஞ்சி, கரூர், நறவு, மாந்தை என்பன சேர வேந்தர்கள் பொறுப்பில் இருந்த சில முக்கிய நகர்மைய அரசுகள் ஆகும்.  இவை ஒவ்வொன்றையும் தனித்தனி சேர அரசர்கள் ஆண்டனர். இந்த அரசமுறையைப் பின்பற்றி தமிழக நகர்மைய அரசுகளும், வேந்தர்களும் இருந்ததால், போர்கள் பல நடந்தாலும், இழப்புகள் பல ஏற்பட்டாலும் சேர, சோழ, பாண்டிய அரச குலம் நீடித்து நிலைத்து இருந்து வந்தது. இந்த அரசமரபு பல தடவை மீறப்பட்டதும் உண்டு. இம்முறையை முழுமையாக கடை பிடிக்காததும்கூட சங்ககால மூவேந்தராட்சி வீழ்ச்சி அடைய ஒரு காரணமாகும். இந்த அரசுரிமை முறையைப் பின்பற்றாததால் வீழ்ந்து போனதற்கு பிற்காலப் பாண்டியராட்சி ஒரு சிறந்த சான்றாகும்.

    ஆதார நூல்:    பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர்வெளியீடு, சூன்-2016, பக்: 270-273..

     

    Share
  • திருவாலங்காடு – இரத்தினசபை

    -சேசாத்திரி சிறீதரன்

    வேலூர் மாவட்டமும் திருவள்ளூர் மாவட்டமும் இணைகின்ற பகுதியில் இரயிலடியில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது தான் திருவாலங்காடு என்னும் சைவத் திருத்தலம்.  ஐந்து சபைகளுள் ஒன்றான இரத்தின சபை இதுவே. இருபுறம் காவல் கொண்ட  இரத்தின சபை வாயில்.

    இது ஒரு பாடல்பெற்ற தலம். இக்கோயில் மிகப் பழமையானது என்றாலும் கூட கடந்த நூற்றாண்டில்  சைவத் திருப்பணி என்ற பெயரில் நகரத்தார் கற்சுவர்களைத் தேய்த்து மெருகேற்றி (polish)  அதன் பழமையை மறைத்து உள்ளார்கள் என்பது எவராலும் உணரமுடியும். இந்த நிகழ்வில் எத்தனை கல்வெட்டுகள் தேய்த்து அழிக்கப்பட்டன என்று தெரியவில்லை. மயிலாடுதுறை மயூரநாதர் கோயிலில் இப்படித்தான் தேய்த்து அழித்துள்ளனர், திருநின்றவூர் இருதயாலீசுவரர் கோயிலிலும் இப்படி மெருகேற்றும் ஒரு பகுதியாகக் கல்வெட்டுகளைத் தேய்த்துக்கரைத்து அழித்துவிட்டனர்.  இரத்தினசபை வாயிலைத் தேய்க்காமல் விட்டுவிட்டதால் அங்கு கல்வெட்டுகள் பார்வைக்குத் தெரிகின்றன. அதேநேரம் அந்த இரத்தினசபை சுவருக்கு நேர் எதிர்ப்புறத்தே அமைந்த வடக்குச் சுவரிலும்  கல்வெட்டுகள் காணப்படுகின்றன. மற்றபடி கோயில் வாயிலின் உட்பகுதியில் இருபுறத்திலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.   (படம் 1)

    கோபுர வாயிலில் மக்களை வரவேற்கும் ஆரணங்குகள். (படம் 2&3)

    கோயில்தூண்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படிப் புடைப்புச் சிற்பங்கள் ஏதும்  இல்லை. இலை, மரம், பூ, தெய்வ வடிவுகள்தாம் உள்ளன. இக்கோயிலிலும் விசயநகர ஆட்சியில் குதிரை மண்டபம் கட்டப்பட்டுள்ளது. அதில் ஒரேயொரு சிற்பம் மட்டும் புராண நிகழ்வைக் குறிக்கிறது. அரக்கர் மதிமயங்கி அமிர்தம் உண்பதை மறந்து மோகினிக்காக ஏங்கித்தவிக்கத் திருமால் மோகினியாக உருவெடுத்து தேவர்களை மட்டும் அமிர்தத்தை உண்ண  அனுமதித்தபோது அவர்களுக்கு மட்டும் ஏன் மதி கிறுகிறுக்கவில்லை? அவர்கள் உணர்வு அற்றவர்களா? என்ற கேள்வி என்னில் பலகாலம் ஒலித்தபடியே உள்ளது. சிலை வடித்த சிற்பியே கிறுகிறுத்துப் போய்தான் சிற்பம் வடித்துள்ளான் என்றால் நேரில் மோகினியைக் கண்ட அரக்கர்கள் மட்டும் அமைதியாகவா இருக்கமுடியும்? நீங்களும் அந்த மோகினியைக் காணுங்களேன் ஒருகணம். அடுத்து மோகினிச் சிற்பம் உள்ள குதிரை மண்டபம்.

         

    தலைக்கோபுரம்

    இரயிலடி 5 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால், அதிலும் அடிக்கடி super fast local விடுவதால் சாதாரணக் கட்டணத்தில் இங்கு வரமுடிகிறது. காலை 5.30 மணிக்கு சென்ட்ரலில் தொடங்கி 6.45மணிக்கே இரயில் திருவாலங்காடு வந்துவிடுவதால் மக்கள் அதிக எண்ணிக்கையில் இக்கோயிலுக்கு சென்னையிலிருந்து வருகிறார்கள். வேலூரில் இருந்தும் வருகிறார்கள்.

    சிவன்கோயில்கள் தோற்றத்திலும், அளவிலும் மாலியக்கோவில்களை விடவும் கம்பீரமாகவுள்ளன. அதிகக் கல்வெட்டுகளையும் பெற்றுள்ளன. பொதுவாகப் பண்டு அரசர்கள், வேந்தர்கள் கோயில்களை ஆறுபாயும் இடங்களில்தான் ஊரமைத்து கோயில் கட்டினார்கள். அந்தவகையில் பார்த்தால் இக்கோவில் உள்ள ஊரில் ஏதேனும் ஓர் ஆறு பாயவேண்டும் ஆனால் என்னவோ கொசத்தலையாறுதான்  சில கிலோ  மீட்டர் தள்ளித்  கிழக்கில் பூண்டி அணைநோக்கி ஓடுகிறது. பண்டு கொசத்தலை இவ்வூர் அருகே ஓடியிருக்க வேண்டும் என்று மட்டும் ஊகிக்க முடிகிறது. ஏனென்றால் எளிய மக்களிடம் காசுப் புழக்கம் இல்லாத பண்டைக் காலத்தில் கோவிலின் தடையற்ற இயக்கத்திற்கும், கோயில் பணியாளர்க்கும்  கூலியாக விளைநிலங்களை ஒதுக்கி அதில் பயிர்செய்து  பிழைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டனர். அவற்றுக்கு நீர்ப்பாசனம் தேவை என்பதால்தான் ஆற்றின் அருகே ஊர் அமைப்பும், கோவில் கட்டுமானமும் மேற்கொள்ளக் காரணம்.  கொசத்தலை ஆறு பாயுமிடங்களில் 12க்கு மேற்பட்ட சிவன் கோயில்கள் அமைந்துள்ளன என்கின்றனர்.

    https://www.google.co.in/maps/place/Kosasthalaiyar+River/@13.2995634,80.1086905,11z/data=!3m1!4b1!4m5!3m4!1s0x3a527956dec6497b:0xb572296a37c13b17!8m2!3d13.2996017!4d80.2487789

    திருவாலங்காட்டில் கோவிலுக்கு அருகில் அரசு கரும்பாலை அமைந்துள்ளது. மற்றபடி இவ்வூரின் முதன்மைத் தொழில் வேளாண்மைதான். சென்னைக்  கோயம்பேடு, வில்லிவாக்கம் சந்தைகளுக்கு இங்கிருந்துதான் அதிக காய்கறிகள் அன்றாடம் செல்கின்றன.

    இவ்வூரில் தமிழரில் வன்னிய ரெட்டியார்களும், முதலியார்களும், தெலுங்கரில் ரெட்டிமார்களும், நாயுடுகளும் மிக அதிகமாக வாழ்கின்றனர். இவர்களுக்குத்தான் இங்கத்து விளைநிலங்களும் சொந்தம். அவ்வளவு ஏன்? வடதமிழ்நாட்டின் இலட்சக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களில் 90% இந்த நான்கு சாதியருக்கு  மட்டுமே சொந்தமாகவுள்ளன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் இதே நிலைதான் என்றாலும் முதலியாருக்குப் பதிலாக வேறு பிற தமிழ்ச் சாதிகள் இடம்பிடிக்கின்றனர். தெலுங்கு சாதிகள் மட்டும் அங்கேயும் இதே சாதிகள்தான்.  தமிழ்நாட்டில் எந்த மன்னர் ஆட்சி போனாலும் எந்தப் புதிய மன்னராட்சி வந்தாலும் அவர்களைத் தமக்கு ஆதரவாக்கிப் பலநூற்றாண்டுகளாக இவ்விளைநிலங்களை இவர்கள் தமக்கு மட்டுமே உரிமையாக வைத்துள்ளனர். மற்ற தமிழ்சாதிகள், ஒடுக்கப்பட்ட  தலித்துகளுக்கு விளைநிலங்களில் உரிமை கிடையாது. இதுதான் இன்று வரை தொடரும் சமூக அநீதி நிலைமை (social  injustice) என்பதை யாவரும் உணரமுடியும். ஆனால் பாருங்கள் வெள்ளையர் ஆட்சியில் ஆங்கிலேயருக்குக் கைகட்டி செய்யும் வேலைகளை அதிகமாக பிராமணர்கள் ஆக்கிரமித்து கொண்டு உள்ளனர் என்று கூக்குரல் கொடுத்த சமூக நீதிப் போராளிகள் என்னவோ இந்தச் சாதிகளில் இருந்துதான் அதிகம் வந்தார்கள். ஆனால் ஏனோ அவர்கள் கருத்திற்கு தம்முன்னோர் விளைநிலங்களைத் தம்  சாதிகளுக்கு மட்டுமே உரிமையாக்கி வைத்திருப்பது ஆக்கிரமிப்பாக, சமூக அநீதியாக  தோன்றவில்லை. இது தமக்கு ஒரு நியாயம் பிறர்க்கு ஒரு நியாயம் என்பதன் பாற்படும்.

    சமூக அநீதி நிலக்கிழமையால் தான் பேரளவில் நிகழ்ந்தது, நிகழ்கிறது. தமிழக மக்கள்தாம் வரலாற்றில் இந்தச் சமூக அநீதி குறித்த விழிப்பை  அறிந்துகொள்ள வேண்டும். இப்போது சிலர் விகிதாசார அடிப்படையில் அந்த அந்தச்சாதி மக்களுக்கு தேர்தலில், தொகுதி ஒதுக்கீட்டில் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டும் என்று பேசிவருகிறார்கள். ஆனால் விளைநிலம் என்று வரும்போது மட்டும் இந்தச் சாதி விகிதாசார அடிப்படையை அவர்கள் பொருத்திப்பார்க்க மறுக்கிறார்கள். ஏனென்றால் இந்த விகிதாசார அடிப்படை பற்றிப் பேசுபவர்கள் பெரும்பாலும் இந்த நிலக்கிழமை சாதிகளை சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள் என்பதே உண்மைக்கு உண்மையாகும்.  விளைநிலங்கள் அனைத்தும் தனியார் உரிமையிலிருந்து நீங்கிக் கூட்டுறவின் கீழ் கொண்டுவரப்பட்டு வேளாண்மை ஒரு தொழிலாக செய்யப்பட்டு  அதில்  ஒதுக்கீட்டு முறையில் எல்லாச் சாதியாருக்கும் இந்த விளைநிலம் கிட்ட  ஏற்பாடு ஆகின்றவரை இது சமூக அநீதியாகவே தொடர்ந்துகொண்டு இருக்கும்.

    திருவாலங்காடு கல்வெட்டுகளின் படங்கள் 17 முதல் 23 முடிய
    உள்ளவையுடன் 11-ஆம் படத்தையும் படித்ததில் கிடைத்தவை;

    படம்-17

    யுடைய (முழான்)….ராயன்
    ……….ட்டை (ஸ்ரீ) ..க்கோ …… காச்யபன்
    …..திருவாலங்காடு……….(சாவா) மூவாப்

    படம்-18

    …ராயன்   வடுகநாதன் ….நத
    காச்யபன் திருச்சிற்றம்பல பட்ட(னும்)
    சாவா மூவாப்பெரும் பசு (4?)  இ

    படம்-19   – படிக்க இயலவில்லை

    படம்-20

    வரங்கில் அண்டமுற் ந…
    பட்டனும் ஆத்ரேயன்  ச

    படம்-21

    ……கோட்டத்து …
    ண்டமுற்  ந… மாந்த..
    ஆத்ரேயன் சந்த்ரசேகர (பட்டனும்)

    படம்-22

    …பழையனூர் நாட்டு…
    ளிய  நாயநார் திருமு(ன்)
    (ப0ட்டனும் காச்யபன் கா..

    படம்-23

    திருமுன்பு வைத்த சந்(தியா தீபம்)
    கா…பட்டனும்

    விளக்கம்:   கோயிலில் நந்தா தீபம் எரிக்கப் பசுக்கொடை அளித்தது பற்றிய கல்வெட்டு.  கோயிலில் எழுந்தருளிய நாயநார் (இறைவர்) திருமுன்பு (கருவறையில்) நந்தா விளக்கு எரிப்பதற்காக (நான்கு?) பசுக்கள் கொடையளிக்கப்படுகிறது. இப்பசுக்கள் சாவா மூவாப்பெரும்பசுக்கள் என்று குறிக்கப்படுகின்றன. கல்வெட்டுகளில் கொடையாகக் குறிக்கபெறும் ஆடு, பசு ஆகியவற்றைச் ”சாவா மூவா’” என்னும் அடைமொழி கொண்டு குறிப்பது வழக்கம். இந்தக் கால்நடைகள்  இடையர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வளர்வதால் இறப்புகள் நேர்ந்தபின்னும் புதிய கால்நடைகளின் பிறப்பால், அவற்றின் எண்ணிக்கை குறையாதிருக்கும் என்பதால், “சாவா மூவா”  என்னும் குறிப்பு. கொடையாளி,  உயர் அதிகாரிகளில் ஒருவனாக இருக்கவேண்டும். அவனுடைய முழுப்பெயர் கல்வெட்டில் புலப்படவில்லை எனினும், “யுடைய முழான்…. ராயன் வடுகநாதன்    என்னும் துண்டுச் சொற்கள் கொடையாளி ஒரு பெரிய அதிகாரி என்று உணர்த்துகின்றன.

    கொடைப்பொருள்கள், கோயிலின் பூசை உரிமை பெற்ற சிவப் பிராமணர் பொறுப்பில் கொடுக்கப்படுகின்றன. அச் சிவப்பிராமணர்கள், காச்யப கோத்திரத்துத் திருச்சிற்றம்பல பட்டன், ஆத்ரேய கோத்திரத்து சந்திரசேகர பட்டன் முதலியோர் ஆவர்.

    இன்னொருவர் பெயர் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், அவனும் காச்யப கோத்திரத்தான் எனத் தெரிகிறது. திருவாலங்காட்டின் இருப்பிடம் பழையனூர் நாட்டுப்பிரிவு எனத்தெரிகிறது.  (அடுத்த கல்வெட்டுப்படம்-11-இல் இப்பழையனூர் நாட்டுப்பிரிவு, மேல்மலைப் பழையனூர் எனவும், மணவில் கோட்டத்தைச்சேர்ந்தது எனவும் குறிப்பிடப்படுகிறது.

    படம்-11

    1 (மண்ட)லத்து மணவிற்கோட்டத்து மேன்மலைப் பழைய..
    2 (ச)ண்டேசுரப் பெருவிலை ஆகத் திருநாமத்துக்காணி
    3 …கோலாலளந்து கண்ட குழி இருநூற்றுக்கும்
    4 ர  சோழர(ச)…க்கு விற்றுக்குடுத்துக் கைக்கொ(ண்ட)

    விளக்கம்:  மேலே கூறியவாறு, திருவாலங்காடு, மணவில் கோட்டம்,மேல்மலைப் பழையனூர் நாட்டுப்பிரிவில் இருந்த குறிப்பு இக்கல்வெட்டின்முதல் வரியில் காணப்படுகிறது.  கோயிலுக்கு நிலங்களைக் கொடையாக அளிக்கும்போது (சில கல்வெட்டுக் குறிப்புகளில் உள்ளவாறு)  இறைவன் பெயரில் உரிமை பதிவு செய்யப்படும். இவ்வகை நிலங்கள், திருநாமக்காணி என்று வழங்கும். அதாவது, இறைவன் நாமம்; காணி = உரிமை.

    இவ்வாறு, திருநாமத்துக்காணியாக இருந்த கோயில் நிலம் ஒன்று, ஏலத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஏல விற்பனை, சண்டேசுரப்பெருவிலை

    என்று வழங்கப்படும். ஏலத்தின்  மூலம் கிடைக்கப்பெறும் உயர்வான ஒரு விலைப்பணம் கோயிலுக்கு அமுதுபடி, திருப்பணி, திருவிழா ஆகிய செலவினங்களுக்குப் பயன்படும். கல்வெட்டு, இவ்வாறான ஒரு நிலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது. நிலத்தின் அளவு, இருநூறு குழி. நிலம், இருநூறு குழி என்று ஓர் அளவீட்டுக் கோல் மூலம் அளக்கப்படுகிறது. இவ்வகையான அளவீட்டுக் கோல்கள், 12 அடிக்கோல், 16 அடிக்கோல், 18 அடிக்கோல் எனப் பலவகை இருந்தன. இக்கோல்களுக்குப்பெயர்கள் சூட்டப்பட்டன என்றும் அறிகிறோம். சில கோயில்களில், கல்வெட்டுகளுக்கிடையில், கோலின் உருவம் செதுக்கப்பட்டிருப்பதைக் காணலாம். – திரு. சுந்தரம், கோவை. கல்வெட்டை வாசித்துப் பொருள் கூறியவர்.

    பி.கு.: மணவில் இன்று மணவூர் என்ற பெயரில் வழங்குகிறது. https://en.wikipedia.org/wiki/Manavur  இங்குள்ள கோவிலிலும் கல்வெட்டுகள் நிரம்ப உண்டு என்று தெரிகிறது. . https://soki.in/manavoor-tiruvelangadu-thiruvallur.அன்று மணவூரில் திருஆலங்காடு இருந்தது. இன்று திருவாலங்காட்டில் மணவூர் அடங்கிவிட்டது.

    படம் 11 கீழே

     

     

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 101

    நிர்மலா ராகவன்

     

    `விட்டுக்கொடுப்பதும் அதிகாரம் செலுத்துவதும்

    அவனைப் பார்த்தால் இருபத்து நான்கு வயதுபோல் தெரியவில்லையே! சின்னக்குழந்தைமாதிரி அல்லவா நடந்துகொண்டான்?!’

    `பாட்டியிடம் வளர்ந்த பிள்ளை அவன்!’

    `ஓ! மேலே சொல்லாதீர்கள். புரிகிறது’.

    இந்த உரையாடலில் குறிப்பிடப்பட்ட இளைஞன் இந்திரன். அவனது நடத்தையைக் கண்டு அதிசயப்பட்டு என்னிடம் விசாரித்தவர் ஒரு மருத்துவர்.

    பாட்டி, தாத்தாவைவிட எந்தக் குழந்தையும் மிகச் சிறியதுதான். அதற்காக, `பாவம், குழந்தை!’ என்று விட்டுக்கொடுத்துக்கொண்டே இருந்தால் இப்படித்தான் ஆகிவிடுகிறது.

    இந்திரன் தான் தனக்காகச் செய்ய வேண்டிய வேலைகளிலிருந்து தப்புவதற்காக நெளிந்து, குழைவான். பாட்டிக்கு மனம் இளகிவிடும். தானே அதைச் செய்துமுடிப்பாள்.

    அவன் என்ன தவறு செய்தாலும், `சின்னப்பையன்! அவனுக்கு என்ன தெரியும்!’ என்று உடனே மன்னிப்பு கிடைத்துவிடும்.

    இப்படி வளர்ந்தவனுக்கு பிறருடன் பழகத் தெரிநாது போயிற்று. எல்லாரும் அவனுக்கு விட்டுக்கொடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று எதிர்பார்த்தான். பிற சிறுவர்கள் அவனுடன் விளையாட விரும்பாது ஒதுங்கிப்போனார்கள்.

    பதின்ம வயதில், இந்திரன் மனம்போனபடி நடக்க ஆரம்பித்தான். எது சரி, எது தவறு என்று தெரியவில்லை. யாரிடம் எப்படிப் பழகுவது என்று புரியாததால், `மரியாதை தெரியாதவன்!’ என்று பெயரெடுத்தான்.

    அவனைப்போன்ற பிறரிடம் பழகி, தீய நடத்தை கொண்டவனாக மாற, `எவ்வளவு அருமையாக வளர்த்தேன்!’ என்று அவனுடைய பாட்டி வருந்தினாள், அதுதான் தான் செய்த தவறு என்று புரியாது.

    ஒருவன் பெரியவன் ஆனதும் எப்படி நடக்கவேண்டுமோ, அக்குணங்களைச் சிறு வயதிலேயே புகட்டவேண்டியது அவசியம்.

    `நீ இப்படி நடந்தால், அவர்களுக்குப் பிடிக்காது,’ என்று பிறர் வீட்டுக்குப் போகுமுன்னர் அவனை யாரும் எச்சரித்து வளர்க்கவில்லை. `அங்கே உரக்கப் பேசக்கூடாது. அவர்கள் வீட்டுச் சாப்பாடு நன்றாக இல்லையென்றாலும் வாயைத் திறக்காதே! அரைமணிக்கொருமுறை, `காப்பி!’ என்று அதிகாரம் செலுத்தாதே! கோபம் வந்தாலும் வெளியே காட்டாதே! மரியாதையாக இரு!’ என்று பலவாறாக அறிவுரை கூறப்பட்டு வளர்ந்த குழந்தைகளுக்கு இந்தப் பிரச்னை கிடையாது.

    கதை

    ஒரு வயதாக இருந்த பேரனுடன் நான் எங்கோ போயிருந்தபோது, ஒருவர் என்னிடம், “நீங்க செல்லம் குடுத்துக் கெடுக்கறீங்களாக்கும்!” என்றார், விளையாட்டாக. உடனே, நான் தப்பாக நினைத்துக்கொள்ளப்போகிறேனோ என்று, “எங்க வீட்டில அப்படித்தான் நடக்குது!” என்று சேர்த்துக்கொண்டார்.

    நான் சிரித்தபடி, “நானில்லை, என் பெண்தான் அப்படி நடக்கிறாள்,” என்றேன்.

    பக்கத்திலிருந்தவரிடம், “Very strict teacher!’ (மிகவும் கண்டிப்பான ஆசிரியை) என்று சிலாகித்தார்.

    தகுந்த வளர்ப்புமுறை இல்லாததால் எவரிடமும் மரியாதையற்று, அல்லது மிகவும் பயந்த சுபாவமாக ஆகிவிடுகிறார்கள் சிறுவர்கள். ஆசிரியத் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்குத் தம் குழந்தைகளும் பிறர் குறை கூறும்படி அம்மாணவர்கள்போல் ஆகிவிடுவார்களோ என்ற அச்சம் எழுந்துவிடுகிறது. அதனால், அளவுக்கு அதிகமாகவே கண்டிப்பாக இருப்பார்கள்!

    ஆனால், எல்லா ஆசிரியைகளும் இப்படி நடப்பதில்லை.

    `என்னைச் சிறுவயதில் மிகவும் கண்டிப்பாக வளர்த்தார்கள். பெரியவர்கள் முன்னால் நிற்பதற்கே நடுங்குவேன். அதனால், இப்போது என் மகளும் அப்படிக் கஷ்டப்படக்கூடாது என்று அவளை வளர்த்திருக்கிறேன்!’ என்பாள் கமாரியா. இதை அவள் பெருமையுடன் சொல்லவில்லை. ஏனென்றால், கடைசிக்குழந்தையான அவள் மகளுக்கு – அளவுக்கு மீறிய செல்லத்தினால், சுதந்திரத்தினால் — யாருக்கும் மரியாதை கொடுத்து நடக்கத் தெரியவில்லை. எதிர்த்துப் பேசுவாள். சக ஆசிரியைகளிடமிருந்து ஒரே புகார் வர, கமாரியாவுக்கு வருத்தம் மிகுந்தது. பெண்ணை எப்படி அடக்குவதென்றும் தெரியவில்லை.

    குழந்தைகள் ஒழுங்காக வளர சில வழிமுறைகளைச் சிறு வயதிலிருந்தே சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம். அவை:

    1) நிலைமையைப் புரிந்து நடப்பது

    2 )உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது

    3) பிரச்னைகள் எழுந்தால், அவைகளுக்குப் பொருத்தமான தீர்வைக் கண்டுபிடித்து, அதன்படி நடப்பது.

    இக்கட்டில் மாட்டிக்கொள்ளாமல் இருக்க எந்த வயதானாலும், ஒரு புதிய சூழ்நிலையில் பிறருடன் எப்படிப் பழகுவது என்று புரியவேண்டும். இருப்பினும், நம்மை அளவுக்கு மீறி துன்புறுத்துபவர்களின் தொடர்பை அறுத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

    கதை

    நான் ஆசிரியப்பயிற்சி மேற்கொண்டிருந்தபோது, வள்ளி என்பவள், `நான் முதுகலைப்பட்டம் பெற்றிருக்கிறேன், மந்திரி எங்கள் குடும்ப நண்பர்,’ என்றெல்லாம் ஒரேயடியாக அலட்டிக்கொள்வாள். அவளைப்போலவே, சிற்றூரிலிருந்த வந்திருந்த சிலர் அவளைத் தலைவியாக ஏற்றனர். அவள் சொற்படிதான் எல்லாரும் நடக்கவேண்டும் என்று மிரட்டுவது அவள் வழக்கம்.

    அந்த சர்வாதிகாரம் பிடிக்காது, நான் மட்டும் அவளிடமிருந்து விலகிப்போனேன். வள்ளிக்கு ஒரே ஆத்திரம். காரணமின்றி என்னிடம் சண்டை பிடிக்க ஆரம்பித்தாள். இறுதிவரை நான் பொறுமை இழக்காமல் அவளிடம் பேசியது அவளுடைய ஆத்திரத்தை அதிகப்படுத்த, ஒரு சமயம் ஒரேயடியாக இரைந்தாள். வேறொருவர் வந்து அவளை விலக்கும்படி நிலைமை மோசமாக ஆயிற்று!

    மனம்போனபடி எல்லாரையும் நடத்தலாம் என்று எண்ணி நடந்தது வள்ளி செய்த தவறு. உணர்ச்சிகளை அடக்கத் தெரியாததால் வந்த வினை. ஒருவருடைய நட்பு வேண்டுமானால் உதவிக்கரத்தை நீட்டினாலே போதுமே! அதிகாரமும் அலட்டலும் எதற்கு?

    இப்படி நடக்காமலிருக்க, சிறு வயதினரை பலர் கூடும் இடங்களுக்கு அழைத்துச் செல்கையில், `அவர் எப்படி சந்தோஷமா நடக்கிறார், பார்!’ `பொம்மையை அந்தக் குழந்தை எப்படி உற்றுப் பார்க்கிறது, வேறு எந்த நினைப்பும் இல்லாமல்!’ என்று எதிர்ப்பட்டவர்களைக் காட்டி விளக்குவது பிறரது உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள வழிவகுக்கும்.

    “பதின்ம வயதினர் தம் வயதொத்தவர்களுடன்தான் வெளியில் போகப் பிரியப்படுகிறார்கள், அவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டு நடப்பதால்தான் கெட்டுப்போகிறார்கள்!” பெரியவர்களின் புகார்.

    இதைப்பற்றி நான் விசாரித்தபோது, `எங்கள் தந்தையுடன் வெளியில் போனால், அங்கே இங்கே திரும்பாமல், அவர் பின்னாலேயே நடக்கவேண்டும் என்கிறார்! அவரது பின்புறத்தையேதான் பார்த்தாகவேண்டும்!’ என்று அலுத்துக்கொண்டாள் ஒரு மாணவி.

    பிற மாணவ மாணவிகளும் அவளை ஆமோதித்துத் தலையாட்டினார்கள்.

    `நான் சொல்கிறபடியே நட!’ என்று மிரட்டினால், முதலில் பயந்திருப்பவர்கள்கூட ரகசியமாக பெற்றோருக்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வார்கள். அதற்காக தண்டித்தால் விவகாரம் முற்றும். அப்பா கத்த, மகனும் கத்த, செய்யக்கூடாத காரியத்தில் பற்று அதிகமாகிவிடும் அபாயம் உண்டு.

    கதை

    எட்டு வயது மகன் தாயின் சம்மதத்துடன் தன்னுடைய I pad-ஐக் கையில் எடுத்துக்கொண்டு, பெற்றோருடன் காரில் நீண்ட பயணம் செய்யப் புறப்பட்டான்.

    சில நிமிடங்கள் கழித்து, “போதும் விளையாடியது. மூடு,” என்றாள் தாய்.

    மும்முரமாக விளையாடிக்கொண்டிருந்த பையன் காதில் அது விழவில்லை.

    அவளுடைய குரல் ஓங்கிக்கொண்டே போயிற்று. அவனும் எதிர்த்துக் கத்தினான்.

    தாய் ஒரேயடியாக மிரட்ட, “இந்தா!” என்று குரலில் வெறுப்புடன், அவள்மேல் தன் விளையாட்டுச்சாமானைத் தூக்கி எறிந்தான்.

    “ஒனக்கு இருக்கு, வீட்டிலே!” என்று தாய் கறுவினாள். நாங்கள் சிலரும் காரில் இருக்க, பிறர்முன் மகன் தலைகுனிய வைத்துவிட்டானே என்ற அவமானம் அவளுக்கு.

    இந்தச் சூழ்நிலையை எப்படித் தவிர்த்திருக்கலாம்?

    `காரில் போகும்போது, ஆடும். வெகு நேரம் ஒன்றையே உற்றுப் பார்த்தால் தலை வலிக்கும். கண்ணும் கெட்டுவிடும்,” என்று முதலிலேயே எச்சரித்துவிட்டு, `இவ்வளவு நேரம்தான் பார்க்கலாம். நான் சொல்கிறபோது நிறுத்திவிட வேண்டும்,’ என்று ஒரு வரையறை வகுத்திருக்க வேண்டும்.

    அவள் தெளிவாக, கண்டிப்பாக முதலிலேயே விளக்காது, தன்னை மகன் மதிக்கவில்லையே என்று ஆத்திரப்படுவது என்ன நியாயம்?

    ஒரு குறிப்பிட்ட செயலுக்கான தண்டனை எப்போதும் ஒரேமாதிரி இருக்கவேண்டும். சில முறை திட்டுவது, பல முறை அலட்சியம் செய்வது என்பது சிறியவர்களைக் குழப்பத்திற்குத்தான் ஆளாக்கும்.

    உடற்குறையுள்ள குழந்தைகளையும் இதே கண்டிப்புடன் வளர்ப்பதுதான் சரியான முறை. பரிதாபப்பட்டு, அல்லது குற்ற உணர்ச்சியுடன், அவர்கள் என்ன செய்தாலும் வளர்ப்பவர்கள் பொறுத்துப்போகலாம். வளர்ந்தபின், உலகமும் அவர்களை அப்படி நடத்தவேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா?

    Share
  • விண்வெளியில் புதன் கோள்போல் சூடான, திண்ணிய உலோகக் கோளைப் புதியதாய்க் கண்டுபிடித்தார்

     

    Posted on  

    Kepler Telescope Finding an Exostar with Exoplanets 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
     
    +++++++++++++++
     
     
    +++++++++++++++++

    +++++++++++++++++

    ஊழி முதல்வன் உட்கொளும் மூச்சில்
    உப்பிடும் பிரபஞ்சக் குமிழி
    உடைந்து மீளும் !
    விழுங்கிய கருந்துளை வயிற்றில்
    உயிர்த்தெழும் மீன்கள் !
    விண்வெளி  விரிய விண்ணோக்கியின்
    கண்ணொளி நீண்டு செல்லும் !
    நுண்ணோக்கி ஈர்ப்புக் களத்தை
    ஊடுருவிக் காமிரா
    கண்வழிப் புகுந்த
    புதிய பூமிகள் இவை !
    பரிதி மண்டலம் போல்
    வெகு தொலைவில் இயங்கிச்
    சுய ஒளிவீசும்
    விண்மீனைச் சுற்றிவரும்
    மண்ணுலகம் இவை !
    ஈர்ப்பு விண்வெளியில் முதன்முறை
    பூமி போல் வாயுச் சூழ்வெளி
    பூண்ட அண்டக்கோள்  ஒன்றைப்
    கண்டுள்ளது கெப்ளர் விண்ணோக்கி !
    சில்லியின் வானோக்கி மூலம்
    விண்வெளி நிபுணர்
    கண்ட கோள்கள் பற்பல ! ஆயினும்
    இன்னும் சவால் விட்டு
    கண்ணுக்குத் தெரியாது ஒளிந்த வண்ணம்
    தேடிக் கிடைக்கா  கோள்கள்
    கோடிக் கணக்கில் !

    +++++++++++++++

    நாங்கள் 275 புறவெளிக் கோள்களை கெப்ளர் தொலைநோக்கி மூலம் ஆராய்ந்ததில் 149 கோள்கள் மெய்யான விண்வெளிப் புறக்கோள்களாய்த்  தேர்ந்தெடுக்கப் பட்டன.  அவற்றில் 95 புறக் கோள்கள் புதியதாய்க் கண்டுபிடிக்கப் பட்டவை.  இந்த புறக்கோள் ஆய்வுகள் 2014 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகின்றன.
     ஆன்ரூ மாயோ [American Ph.D Student, National Space Institute, Denmark] 

    பூமிபோல் நீர்க்கோள் தேடும் கெப்ளர் விண்ணோக்கி

    2009 ஆம் ஆண்டில் பூமிபோல் புறக்கோள் தேட கெப்ளர் விண்ணோக்கி ஏவப் பட்டது.  ஆனால் 2013 இல் ஓர் யந்திரப் பழுது ஏற்பட்டு விண்ணோக்கி முடங்கி விட்டது.  சாமர்த்தியமாகப் பொறிநுணுக்க வல்லுநர் அதைச் செம்மைப் படுத்தினர்.  அதுவே கே2- திட்டம்  [K2 MISSION] என்று அழைக்கப் பட்டது.

    புறக்கோள்கள் [EXOPLANETS] ஆய்வு சமீபத்தில் விருத்தியான இளமைக் கால  விஞ்ஞானம்.  வெளிப்புறச் சூரியன் ஒன்றைச் சுற்றி வரும் முதல் புறக்கோள் 1995 இல்தான் தொலைநோக்கி மூலம் கண்டுபிடிக்கப் பட்டு முதன்மையாக அறிவிக்கப் பட்டது.  2018 பிப்ரவரி 19 தேதி வரைச் சுமார் 3600 புறக்கோள்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.  அவை பூமியைப் போன்று பாறைக் கோளாகவும், பூதக்கோள் வியாழனைப் போன்ற வாயுக் கோளாவும் இருந்தன.

    கெப்பளர் விண்ணோக்கி எப்படிப் புறக்கோள் சுற்றும்  புறச்சூரிய  அமைப்பைக் கண்டுபிடிக்கிறது ?

    வெகு தூரத்தில் ஒளிவீசும்  புறச்சூரிய அமைப்பு ஒன்றைக் கண்டதும், கெப்ளர் விண்ணோக்கி தொடர்ந்து கண்காணிக்கும் போது, புறச்சூரிய ஒளி மங்கியும், பொங்கியும் வருவதைக் காண்கிறது.  காரணம் புறச்சூரியனை புறக்கோள் ஒன்று சுற்றுகிறது.  புறக்கோள் முன்னால் குறுக்கிடும் போது, சூரிய ஒளி மங்கியும், கடந்தபின் சூரிய ஒளி பொங்கியும், சுற்றி மீளும் புறக்கோள் திரும்பவும் ஒளி மங்கக் குறுக்கீடு செய்கிறது.  அதற்குப் பிறகு புறக்கோள் விளக்கமாக ஆராயப் படுகிறது.

    புதன் கோள் போன்று புதிய புறக்கோள் கண்டுபிடிப்பு

    2018 மார்ச்சு 28 இல் கெப்ளர் விண்ணோக்கி 339 ஒளியாண்டு  [Light-year] தூரத்தில் பிரிட்டன் வார்விக் பல்கலைக் கழகத்து வானியல் விஞ்ஞானிகள் நமது புதன்கோள் போல் சூடான, உலோக முடைய, திண்ணிய புறக்கோள் ஒன்று ஒரு புறச்சூரியனை நெருங்கிச் சுற்றுவதைக் கண்டார்.  அந்தப் புறக்கோள் K2-229b என்று பெயரிடப் பட்டது.  அது பூமியைப் போல் சுமார் 20% பெரியது.  ஆனால் அதன் நிறை இரண்டறைப் பங்கு மிகையானது.  பகலில் அதன் உஷ்ணம் : 2000 C [2330 Kelvin].  புறச்சூரியனுக்கும், புறக்கோளுக்கும் உள்ள இடைத்தூரம் : 0.012 AU [1 AU = நமது சூரிய பூமி இடைவெளி].  அந்த புறக்கோள் புறச்சூரியனை ஒருமுறை சுற்ற 14 மணிநேரம் [பூமி நேரம்] எடுக்கிறது.

     

    [click to Enlarge]
     
     The rocky exoplanet GJ 1132b was first pinpointed in 2015 (Dana Berry)
    ++++++++
     
     பூமிபோல் சூழ்வளியுள்ள நீர்க்கோள் முதன்முறைக் கண்டுபிடிப்பு
     
    2017 ஏப்ரல் 6 ஆம் தேதி ஜெர்மன் மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வக விஞ்ஞானிகள் பூதப்பூமி [Super-Earth GJ 1132b] ஒன்று சூழ்வெளி வாயுவுள்ள நமது பூமிபோல் இருப்பதை முதன்முறைக் கண்டுபிடித்துள்ளதாக அறிவித்துள்ளார்.   வாயு உள்ள குன்றிய நிறை கொண்ட அண்டக்கோள் நமது பூமிபோல் வடிவமும், நிறையும் ஒத்திருப்பதை தெரிவித்துள்ளார். அண்டவெளிக் கோளில் உயிரினம் இருப்பதற்கு இந்த புதிய கண்டுபிடிப்பு முக்கிய எட்டடி வைக்கும் என்று தெரிகிறது.  மாக்ஸ் பிளாங்க் ஆய்வகத்து ஜெர்மன் விஞ்ஞானிகள் இதன் விண்மீன் [GJ 1132] காண தென்னமெரிக்கா, சில்லியில் உள்ள 2.2 மீடர் விண்ணோக்கி [ESO/MPG Telescope] பயன்படுத்தி யுள்ளார்.  புதிய பூதப்பூமியின் நிறை நமது பூமிபோல் 1.6 மடங்கு.  அதன் ஆரம் பூமிபோல் 1.4 மடங்கு. விஞ்ஞானிகளின் தற்போதைய குறிக்கோள் : புதிய பூமியில் உயிரின வளர்ச்சிக்கு உகந்த இரசாயனப் பொருள் கலந்த சூழ்வெளிக் காற்றுள்ளதா, போதிய உயிர்வாயு ஆக்சிஜென் உள்ளதா என்று அறிவதே. புதிய கோள் [GJ 1132b] அதன் செங்குள்ளி விண்மீனை [GJ 1132] சுற்றிவரும் பாதை, நமது பூமியிலிருந்து 39 ஒளியாண்டு தூரத்தில், வேலா தென்னக விண்மீன் மந்தையில் [Southern Constellation Vela] உள்ளது.

    Water vapour in Large Planet

     Gliese 1132 b

     
    EXOPLANET List of exoplanets
    Exoplanet Comparison GJ 1132 b.png
    Size comparison of Gliese 1132 b with Earth.
    PARENT STAR
    Star Gliese 1132
    Right ascension (α) 10h 14m 51.1s
    Declination (δ) −47° 09′ 12″
    Apparent magnitude (mV) 14.7
    Distance 39 ly
    (12 pc)
    Spectral type M3.5D
    ORBITAL ELEMENTS
    Orbital period (P) 1.6 d
    PHYSICAL CHARACTERISTICS
    Mass (m) 1.6 M
    Radius (r) 1.2 R
    Stellar flux (F) 19 
    Temperature (T) 410 K (137 °C; 278 °F) K
    DISCOVERY INFORMATION
    Discovery date May 10, 2015 (announced)[1]November 12, 2015 (confirmed)[2]
    Discoverer(s) MEarth-South Array Team
    Discovery method Transit
    Discovery site Chile
    Discovery status Confirmed
    OTHER DESIGNATIONS
    Gliese 1132 b, Gl 1132 b, GJ 1132 b

    Water vapor discovery

    ஒரு கோள் தனது மூலச் சூரியனைக் கடந்து செல்லும் போது, இப்போது பயன்படுத்திய விதிமுறையைப் [Radial Velocity Technique] பின்பற்றி நீர் ஆவி, மற்றும் வேறு சூழ்வெளிக் கலவைகளையும் உளவிக் கண்டுபிடித்து விடலாம். கோளம் விண்மீனுக்கு வெகு தூரத்தில் இருந்தாலும், படமெடுத்துக் கோளின் சூழ்வெளியை அறிந்து விடலாம்.

    அலெக்ஸாண்டிரா லாக்வுட் [விஞ்ஞானத் தகவல் வெளியீட்டு ஆசிரியர்]

    இப்போதைய பொறிநுணுக்கம் பூமியை ஒத்த கோள்களைக் உளவிக் காண இயலாது. எதிர்கால ஜேம்ஸ் வெப் விண்ணோக்கி [James Webb Space Telescope] & 30 மீடர் விண்ணோக்கி [Thirty Meter Telescope] குளிர்ந்த கோள்களைக் காணவும், அவற்றில் நீர் உள்ளதா வென்று ஆராயவும் உதவும்.

    ஜெஃப்ரி பிளேக் [பேராசிரியர் பிரபஞ்சவியல் இரசாயனம் & அண்டக்கோள் விஞ்ஞானி]

    Water found in exoplanet

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி புதிய புதையல் கோள்கள் கண்டுபிடித்தது

    2014 பிப்ரவரி 26 இல் நாசா தனது கெப்ளர் விண்ணோக்கியில் குறுகிய காலத்தில் பூமியைப் போலுள்ள 715 கோள்களை நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால், வேற்று சூரிய மண்டல விண்வெளிப் புதையலாகக் கண்டுபிடித்துள்ளது. அந்த 715 கோள்கள் தமது தனிப்பட்ட 305 வெவ்வேறு விண்மீன்களைச் சுற்றி வருகின்றன. இதுவரை நாசா 1700 [2014 பிப்ரவரி] கோள்களைக் கண்டுபிடித்துள்ளது. புதுக்கோள்களில் உயிரினம் வாழ நீரும், சூழ்வெளியும் உள்ளதா வென்று இப்போது தெரியாது. அவை குளிர்ந்த கோள்களா, சூட்டுக் கோள்களா வென்றும் தெரியாது. அவற்றில் நான்கு கோள்கள் பூமியை ஒத்த வடிவமும், விண்மீனுகளுக்கு அருகில் உயிரின வசிப்பு அரங்குகளில் [Habitable Zones] இருந்தன. 2009 ஆண்டில் ஏவப்பட்டு முதலிரண்டு ஆண்டுகளில் கெப்ளர் விண்ணோக்கி உளவிக் கண்டுபிடித்த கோள்களே இந்த 715 புதையல் கோள்கள்.

    Hunt for Earth like planets

    சூடான புதிய பூதக்கோளில் நீர் ஆவி இருப்பு முதன்முறை காணப் பட்டது.

    நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இயங்கும் பூதக்கோள் வியாழனைப் போன்ற ஒரு பெருங்கோளில் நீர் ஆவி [Water Vapour]  இருப்பு முதன்முறை கண்டுபிடிக்கப் பட்டது. காலிஃபோர்னி யாவைச் சேர்ந்த கால்டெக் ஆய்வாளார்கள், ஒரு புதுவித பொறி நுணுக்கத்தைப் பின்பற்றி, புற அண்டங்களின் சூழ்வெளி வாயுக்களை ஆராய்ந்து, நீர் இருப்பதை உளவிக் கண்டுபிடித்துள்ளது. இந்த அரிய கண்டுபிடிப்பை வெளியிட்டவர் அலெக்ஸாண்டிரா  லாக்வுட் [Alexandra Lockwood] என்று அழைக்கப்படும் ஒரு பட்டப் படிப்பு மாணவி. இம்முறையப் பயன்படுத்தி அண்டக் கோளில் உள்ள மற்ற சூழ்வெளி வாயுக்களையும் அறியமுடியும்.

    CHIO Observatory, Chile

    “இந்த இரண்டு நீர்க்கோள்கள் நமது பரிதி மண்டலக் கோள்களைப் போன்றவை அல்ல.  அவை கரையில்லாத, முடிவற்ற கடல்களைக் கொண்டவை.    ஆங்கே உயிரினங்கள் இருக்கலாம். ஆனால்  அங்கிருப்போர் மனிதர் போல் பொறியியற் திறமை  உடைய வரா என்பது தெரியாது.   இந்த நீர்க்கோள்களில் உயிரின வாழ்வு, உலோகம், மின்சாரம், நெருப்பு போன்றவை இல்லாது, கடலடியில்தான் நீடிக்க முடியும்.   ஆயினும் அவ்விரண்டு நீல நிறக் கோள்கள், பொன்னிற விண்மீன் ஒன்றைச் சுற்றி வருவதைக் காண்பது வனப்புடன் இருக்கும்.  மேலும் அவற்றில் உயிரின இருப்பைக் கண்டுபிடித்த பொறிநுணுக்க அறிவுத்தரம் நம்மை வியக்க வைக்கும்.”

    லீஸா கால்டநேகர் [இயக்குநர் விஞ்ஞானி மாக்ஸ் பிளாங்க் வானியல் ஆய்வுக்கூடம்]

    கண்டுபிடித்த நீர்க் கோள்கள் கெப்ளர் -62e,  கெப்ளர்-62f [Kepler -62e & Kepler -62f] எனப் பெயரிடப் பட்டுள்ளன.   அவை கெப்ளர் -62 [Kepler -62] என்னும் விண்மீனைச் சுற்றி வருகின்றன.  நீர்க்கோள் கெப்ளர் -62e திரண்ட முகில் வானைக் கொண்டது.  கணனி மாடலின்படித் துருவம் வரை பூராவும் சூடான வெக்கை மயமானது [Warm and Humid].   தூரத்தில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62f கார்பன் டையாக்ஸைடு  வாயுவை மிகுதி யாகக் கொண்டு “கிரீன்ஹௌவுஸ் விளைவால்” சூடேறி நீர்மயத்தை நீடிக்கச் செய்கிறது.   இல்லையென்றால் அதன் நீர்வளம் பனியாகி ஓர் பனிக்கோளாய் மாறிப் போயிருக்கும்.”

    டிமித்தர் ஸஸ்ஸெலாவ் [ஹார்வேர்டு வானியல் வல்லுநர்] [Dimitar Sasselov]

    Two Water Planets“ஆதிகாலத்துப் பூர்வீக உலகங்கள் இன்னும் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து கிடக்கின்றன.”

    ரே வில்லார்டு & அடால்ஃப் ஷாலர் (Ray Villard & Adolf Schaller)

    “இன்னும் பத்தாண்டுகளுக்குள் மற்ற விண்மீன் குடும்பங்களில் நமது பூமியைப் போல் உள்ள கோள்களையும், உயிரினச் சின்னங்கள் இருப்பையும் கூடத் தேடிக் கண்டுபிடித்து விடலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.”

    ரே ஜெயவர்த்தனா (Ray Jayawardhana, Associate Professor of Astronomy, University of Toronto) (2007)

    Kepler -62 System

    நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்களைக் கண்டு பிடித்தது 

    2013 ஜூலை 6 ஆம் தேதி நாசாவின் கெப்ளர் விண்ணோக்கி முதன்முறை இரண்டு நீர்க்கோள்கள் சுற்றிவரும் ஒரு விண்மீனைக் கண்டுபிடித்தது.   அந்த விண்மீனின் பெயர் கெப்ளர் -62 [Kepler -62].  விண்மீன் கெப்ளர் -62 நமது சூரியனை விடச் சிறியது. உஷ்ணமும் தணிந்தது.  அந்த விண்மீனைச் சுற்றும் நீர்க்கோள்களின் பெயர்கள் :  கெப்ளர் -62e, கெப்ளர் -62f  [Kepler -62e and Kepler -62f].   நீர்க்கோள்  கெப்ளர் -62e,  அதன் விண்மீனை ஒருமுறைச் சுற்றும் காலம் 122 நாட்கள்;  நீர்க்கோள் கெப்ளர் -62f விண்மீனைச் சுற்றும் காலம் 267 நாட்கள்.  அவற்றின் விண்மீன் குறுக்கீடு போக்கை நோக்கி அவற்றின் ஒப்புமை அளவுகள் அறிந்து கொள்ளப்படும். நீர்க்கோள் கெப்ளர் -62e, நமது பூமியை விட 60% பெரிதாகவும், நீர்க்கோள் கெப்ளர் -62f  40% பெரிதாகவும் இருப்பதாய்க் கணிக்கப் பட்டுள்ளன.  வானியல் விஞ்ஞானிகள் நீர்க்கோள் இரண்டும் சுற்று வாயு மண்டலமின்றிப் பாறையாலும், நீராலும் உருவானவை என்று ஊகிக்கிறார்.   கெப்ளர் -62 விண்மீனை அருகில் சுற்றும் நீர்க்கோள் கெப்ளர் -62e, சற்று சூடாகவும்,  பூமியை விட மேகம் மூடியிருப்பதாகவும் தெரிகிறது.  தூரத்தில் சுற்றும் நீர்க்கோள்  கெப்ளர் -62f பேரளவு CO2 கரியமில வாயு மிகுந்து, “கிரீன் ஹவுஸ் விளைவால்” சூடேறி, முன்னதை விடத் தணிந்த உஷ்ண நிலையில்  நீர்மயத்தைத் திரவ வடிவில் வைத்துள்ளது.  இல்லையென்றால் அந்த அரங்கில் நீர்க்கோள் ஓர் பனிக்கோள் ஆகியிருக்கும்.

    நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி நீலக்கோள் ஒன்றைக் கண்டுபிடித்தது.

    2013 ஜூலை 11 இல் நாசாவின் ஹப்பிள் விண்ணோக்கி பூமியிலிருந்து 63 ஒளியாண்டு தூரத்தில் உள்ள  அண்டவெளி விண்மீனை ஒன்றைச் சுற்றி வரும் நீல நிற வாயுக் கோளைக் கண்டுபிடித்தது. நீலக்கோளின் பெயர் : HD 189733b.   2005 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப் பட்ட அந்தக் கோளின் மீது நீல நிறம் சிதறுவதாக முதலில் ஊகிக்கப் பட்டது.  2013  ஜூலையில் அதை ஹப்பிள் தெளிவாக மெய்ப்பித்தது.  நீலக் கோள் அதன் தாய்ப் பரிதியி லிருந்து 2.9 மில்லியன் மைல் தூரத்தில் சுற்றி வருகிறது.   மேலும் தனது ஒரு பாதி வடிவை விண்மீனுக்குக் காட்டி, மறு பாதி முகம் இருளில் தெரியாமல், ஈர்ப்பு விசையில் கட்டப் பட்டு [Gravitationally locked], நமது பூமியைச் சுற்றும்  நிலவு போல் காணப்பட்டது. நீலக்கோளின் பகல் நேர உஷ்ணம் பயங்கர மானது : 2000 டிகிரி F.  வாயுக்களின் வேகம் : 4500 mph. நீல நிறக் கோளின் [Cobalt Blue Colour] நீல நிறம் பூமியைப் போல் நீர் மீது ஒளிச் சிதறலால் எதிர்ப்படுவ தில்லை.   அந்தக் கோளின் மேக மண்டலத்தில் கலந்துள்ள சிலிகேட் துகள்களே [Silicate Particles] நீல நிறத்துக்குக் காரணம் என்பது அறிய வருகிறது.  2007 இல் நாசாவின் ஸ்பிட்ஸர் [Spitzer Space Telescope]  விண்ணோக்கி அறிவித்தபடி, நீலக்கோளின் இரவு-பகல் உஷ்ணங்கள் வேறுபாடு 500 டிகிரி F  என்று கணிக்கப் பட்டது.

     

    Einstein Planet

     

    பரிதியைப் போல் தெரியும் விண்மீனான எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் (Epsilon Eridani) வாயுத் தூசித் தட்டு ஒரு கோள் என்பது நிச்சயம்.  ஹப்பிள் மூலம் கண்டதால் அது தோல்வியான விண்மீனில்லை, ஓர் அண்டக்கோள் என்பது உறுதி !  அது பெரிதளவில் இருந்தால், கோளுக்கும் விண்மீன் தூசிக்கும் தொடர்பில்லாத பழுப்புக் குள்ளி (Brown Dwarf) என்று சொல்லி விடலாம்.

    பார்பரா மெக் ஆர்தர் (Barbara McArthur, Project Leader, University of Texas) ”

    பூதக்கோளின் விட்டம் நமது பூமியைப் போல் ஒன்றை மடங்கு [12,000 மைல்].  அந்த கோள் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்திலிருந்து 20 ஒளியாண்டு தூரத்தில் இயங்கிச் சுயவொளி வீசும் மங்கிய கிலீஸ்-581 விண்மீனைச் சுற்றி வருகிறது.  அதன் சராசரி உஷ்ணம் 0 முதல் 40 டிகிரி செல்ஸியஸ் என்று மதிப்பிடுகிறோம். ஆகவே அங்கிருக்கும் தண்ணீர் திரவமாக இருக்கும் என்று கருதப் படுகிறது.  அந்த கோள் பாறைக் குன்றுகளுடனோ அல்லது கடல் நீர் நிரம்பியோ அமைந்திருக்கலாம்.”

    ஸ்டெஃபினி உட்றி [Stephane Udry, Geneva Observatory]

    Hubble Space Telescope

     

    “மற்ற சுயவொளி வீசும் விண்மீன்களின் கோள்களை விட, கண்டுபிடிக்கப்  பட்ட இந்த பூதக்கோள் ஒன்றுதான் உயிரின வளர்ச்சிக்குத் தேவையான அனைத்து உட்பொருட்களும் கொண்டதாகத் தெரிகிறது.  அக்கோள் 20 ஒளியாண்டு தூரத்தில் உள்ளதால், விரைவில் அங்கு செல்லும் திட்டங்களில்லை.  ஆனால் புதிய உந்துசக்திப் பொறிநுணுக்கம் விருத்தியானல், எதிர்காலத்தில் அக்கோளுக்குச் செல்லும் முயற்சிகள் திட்டமிடப் படலாம்.  பேராற்றல் கொண்ட வானோக்கிகளின் மூலமாக அக்கோளைப் பற்றி அறிந்து கொள்ளக் கூடியவற்றை நிச்சயம் ஆய்ந்து கொள்ளப் பயிற்சிகள் செய்வோம்.”

    அலிஸன் பாயில் [Alison Boyle, Curator of Astronomy, London’s Science Museum]

    “அண்டையில் உள்ள சின்னஞ் சிறு சுயவொளி விண்மீன்களைச் சுற்றிவரும் பூமியை ஒத்த அண்டக் கோள்களில் உயிரின வாழ்வுக்கு ஏற்ற பகுதிகள் உள்ளதாக இப்போது அறிகிறோம்.  இச்செய்தி புல்லரிப்பு ஊட்டுகிறது. இப்பணி நாசாவின் அண்டவெளித் தேடல் முயற்சிகளின் முடிவான குறிக்கோளாகும்.”

    டாக்டர் சார்லஸ் பீச்மென்  [Dr. Charles Beichman, Director Caltech’s Michelson Science Center]

     

    “பூதக்கோள் போல பல கோள்களைத் தேடிக் காணப் போகிறோம். பூமியை ஒத்த கோள்களைக் கண்டு அவற்றின் பண்பாடுகளை அறிய விரும்புகிறோம்.  ஆங்கே வாயு மண்டலம் சூழ்ந்துள்ளதா?  அவ்விதம் இருந்தால் எவ்வித வாயுக்கள் கலந்துள்ளன?  அந்த வாயுக் கலவையில் நீர் ஆவி [Water Vapour] உள்ளதா?  அந்த வாயுக்களில் உயிரினத் தோற்றத்தின் மூல இரசாயன மூலக்கூறுகள் கலந்துள்ளனவா?  நிச்சயமாக அந்த கோள் எந்த விதமானச் சூழ்வெளியைக் கொண்டது என்பதையும் கண்டு கொள்ள விழைகிறோம்.”

    டாக்டர் விக்டோரியா மீடோஸ் [Member, Terrestrial Planet Finder, NASA]

    “தற்போது ஒருசில வாரங்களுக்கு ஒருமுறை வியாழக் கோளை ஒத்த புறவெளிக் கோள் ஒன்று கண்டுபிடிக்கப் படுகிறது !  சமீபத்தில் கண்ட புதிய கோள் கிலீஸ் 876 (Gliese 876) விண்மீனைச் சுற்றி வருகிறது !  மிக்க மகத்தானது ஹப்பிள் கண்டுபிடித்துப் படமெடுத்த கோள் இரட்டை விண்மீன்கள் வீசி எறியப்பட்டு 450 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது !  எல்லாவற்றுக்கும் உன்னதமான கோள் இனிமேல்தான் வரப் போகிறது !”

    மிசியோ காக்கு (Michio Kakau, Professor Theoretical Physicist, City College of New York) (2007)

    பூமியைப் போன்ற வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிப்பு !

    250 ஆண்டுகளுக்கு முன்பே விண்கோள் தோற்றத்தைப் பற்றிச் சொல்லும் போது ஜெர்மன் மேதை இம்மானுவல் கென்ட் 1755 இல் அண்டக் கோள்கள் விண்மீனைச் சுற்றும் வாயுத் தூசித் தட்டிலிருந்து உதிக்கின்றன என்று முதன்முதலில் அறிவித்தார் !  இதுவரை [ஜூலை 3, 2008] 307 கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டாலும் ஒரு விண்மீனைச் சுற்றி ஒரே சமயத்தில் கோளையும் வாயுத் தூசித் தட்டையும் சேர்ந்து நோக்கியதில்லை !  தனியாகக் கோளையோ அல்லது தனியாக வாயுத் தூசித் தட்டையோ விஞ்ஞானிகள் கண்டிருக்கிறார்.  இப்போது நாசா & ஈசா (NASA & ESA) விஞ்ஞானிகள் ஹப்பிள் தொலைநோக்கி மூலமாக கென்ட் கூறிய அரிய கருத்தை மெய்யென்று நிரூபித்துள்ளார்.  1991 இல் முதன்முதல் விஞ்ஞானிகள் பரிதி மண்டலத்துக்கு வெளியே உள்ள ஒரு விண்மீனைச் சுற்றும் முதல் கோளைக் கண்டுபிடித்தார்கள்.  அடுத்து பதினாறு ஆண்டு களுக்குள்  [2008] இதுவரை 307 வெளிப்புறக் கோள்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன !  புதிய முதல் கோளின் பெயர் “மெதுசேலா” (Methusela) என்பது.  7200 ஒளியாண்டு தூரத்தில் இருக்கும் அந்தப் புதுக்கோள் பூமியை விட மூன்று மடங்கு வயது கொண்டது !  ஆயினும் பூமியைப் போல் நீர்வளம் மிக்க நீர்க்கோள் ஒன்று இதுவரையில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்க வில்லை !

    2006 நவம்பர் அமெரிக்க வானியல் இதழில் (American Astronomical Journal) பரிதியைப் போன்ற விண்மீன் எப்ஸிலான் எரிடானியை (Epsilon Eridani Star) பத்தரை ஒளியாண்டு தூரத்தில் விஞ்ஞானிகள் கண்டதாக அறிவிக்கப் பட்டது.  சூரிய மண்டலத்தின் கோள்கள் சூரிய வாயுத் தூசித் தட்டில் ஒரே சமயத்தில் உருண்டு திரண்டு உதித்தவை.  4.5 பில்லியன் வயதுடைய நமது பரிதி ஒரு நடு வயது விண்மீன் !  அதனுடைய வாயுத் தூசித் தட்டு பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே கரைந்து மறைந்து விட்டது !  ஆனால் எப்ஸிலான் எரிடானி விண்மீன் இளையது.  அதன் வயது சிறியது – 800 மில்லியன் ஆண்டுகள்தான் !  ஆதலால் அதனுடைய தட்டு இன்னும் வெளிப்படை யாகத் தெரிகிறது !  எப்ஸிலான் எரிடானியைச் சுற்றும் தட்டு பூமத்திய ரேகைக்கு 30 டிகிரி கோணத்தல் சாய்ந்துள்ளது !  அதில் திரண்டு உருவாகும் கோளின் நிறை நமது வியாழக் கோளைப் (Planet Jupiter) போல் ஒன்றரை மடங்கு !  அந்தக் கோளே பூமிக்கு அருகில் உள்ள புறவெளிப் பரிதிக் கோள் (Extra-Solar or Exo-Planet) !  அது ஒருமுறைத் தனது விண்மீனைச் சுற்ற சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன !  ஹப்பிள் தொலை நோக்கி முதலில் அந்த மங்கலான வாயுக் கோளைக் காண முடியா விட்டாலும், 2007 இல் பரிதி ஒளியைப் பிரதிபலித்த போது தெளிவாகப் படமெடுக்க முடிந்தது.

    சூரிய மண்டலத்துக்கு அப்பால் புதியதோர் பூமியைக் கண்டுபிடித்தார்

    ஐரோப்பிய விண்வெளி விஞ்ஞானிகள் இந்த வாரத்தில் (ஏப்ரல் 25, 2007), சூரியனைப் போன்ற ஆனால் வேறான ஒரு சுயவொளி விண்மீனைச் சுற்றிவரும் மனித இனம் வாழத் தகுந்ததும், பூமியை ஒத்ததுமான ஓர் அண்டக்கோளைக் கண்டுபிடித்ததாக அறிவித்தார்கள்.  தென் அமெரிக்காவின் சில்லியில் உள்ள அடாகமா பாலைவனத்து ஈஸோ வானோக்கு ஆய்வகத்தின் [Atacama European Science Observatory, (ESO) La Silla, Chille, South America] 3.6 மீடர் (12 அடி விட்டம்) தொலைநோக்கியில் பிரெஞ்ச், சுவிஸ், போர்ச்சுகீஸ் விஞ்ஞானிகள் கூடிக் கண்டுபிடித்தது.  அந்த ஆய்வகம் கண்ணுக்குத் தெரியாத கோள்களின் ஈர்ப்பாற்றல் விளைவால் ஏற்படும் “முன்-பின் திரிபைத்” [Back-and-Forth Wobble of Stars, caused by the gravitational effect of the unseen Planets] தொலை நோக்கி வழியாக மறைமுகமாக விண்மீனைக் காண்பது.  கண்டுபிடிக்கப்பட்ட கோள் நமது பூமியைப் போல் ஒன்றரை மடங்கு பெரியது;  அதன் விட்டம் 12,000 மைல்.  புதுக்கோளின் எடை நமது பூமியைப் போல் 5 மடங்கு.  அது சுற்றும் சுயவொளி விண்மீனின் பெயர்: கீலீஸ் 581 c [Gliese 581 c].  புதிய கோள், கிலீஸை ஒரு முறைச் சுற்றிவர 13 நாட்கள் எடுக்கிறது. கிலீஸா ஒளிமீன் லிப்ரா நட்சத்திரக் கூட்டத்தி லிருந்து 20.5 ஒளியாண்டு தூரத்தில் உள்ளது.  ஒளியாண்டு என்பது தூர அளவு. ஓர் ஒளியாண்டு என்றால் ஒளிவேகத்தில் [விநாடிக்கு 186,000 மைல் வேகம்] ஓராண்டு காலம் செல்லும் தூரம்.  நாசா விண்வெளித் தேடலின் முடிவான, முக்கியக் குறிக்கோளும் அவ்விதக் கோள்களைக் கண்டு பிடித்து ஆராய்ச்சிகள் புரிவதே!

    Exoplanets 2012

    பரிதி மண்டலத்தைத் தாண்டி இதுவரை [டிசம்பர் 10, 2013] [1051, 797 பரிதிக் குடும்பங்கள்]  வெளிப்புறக் கோள்கள் (Exoplanets) கண்டுபிடிக்கப் பட்டாலும், சமீபத்தில் கண்ட இந்தக் கோள்தான் சிறப்பாக நமது பூமியை ஒத்து உயிரின வாழ்வுக்கு ஏற்ற வெப்ப நிலை கொண்டதாக உள்ளது. மேலும் அந்த உஷ்ண நிலையில் நீர் திரவ வடிவிலிருக்க முடிகிறது.  கிலீஸ் விண்மீனைச் சுற்றிவரும் நெப்டியூன் நிறையுள்ள ஓர் வாயு அண்டக்கோள் ஏற்கனவே அறியப் பட்டுள்ளது.  பூமியைப் போன்று எட்டு மடங்கு நிறையுள்ள மூன்றாவது ஓர் அண்டக் கோள் இருக்க அழுத்தமான சான்றுகள் கிடைத்துள்ளன.  வானோக்கிகள் மூலமாகப் புதிய பூமியின் வாயு மண்டலத்தில் மீதேன் போன்ற வாயுக்கள் உள்ளனவா, நமது பூமியில் தென்படும் ஒளிச் சேர்க்கைக்கு வேண்டிய குளோரோ·பைல் காணப்படுகிறதா என்றும் ஆய்வுகள் மூலம் அறிய முற்படும்.

    மறைமுக நோக்கில் கண்டுபிடிக்கப்பட்ட அண்டக்கோள்கள்

    2005 மார்ச் 17 ஆம் தேதி வார்ஸா பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஆன்டிரி உதல்ஸ்கி [Andrzej Udalski] முதன்முதலாக ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வு முறையில் [Optical Gravitational Lensing Experiment (OGLE)] பூமியிலிருந்து நமது காலாக்ஸியின் மத்தியில் ஆயிரக்கணக்கான ஒளியாண்டு தூரத்தில் உள்ள விண்மீன் ஒன்று, அதற்கும் அப்பாலுள்ள விண்மீன் முன்பாக நகர்வதைத் தொலைநோக்கி வழியாகக் கண்டார்.  ஒரு மாதத்துக்குப் பிறகு அவற்றை நோக்கிய போது விந்தை ஒன்றை விண்வெளி விஞ்ஞானி கண்டார்.  வெகு தொலைவிலிருந்த விண்மீன் வியப்பாக 100 மடங்கு வெளிச்சத்தில் மின்னியது.  அதாவது திடீரென வெளிச்சத் திண்மையில் திரிபு காணப்பட்டது.  அந்த வித விரைவு வெளிச்சத் திரிபு தெரிவிப்பது ஒன்றே ஒன்றுதான்:  அதாவது முன்னிருந்து ஒளித்திரிபை உண்டாக்கிய விண்மீன் ஐயமின்றி ஓர் அண்டக்கோளே!  அந்த வெளிச்சத் திரிபை உண்டாக்கக் காரணமாக இருந்தது அந்த அண்டக்கோளின் ஈர்ப்பாற்றலே!  அதாவது புவி எடைக் கோள் ஒன்று அந்தப் பகுதியில் இருந்தால் நாம் தொலைநோக்கியில் அக்கோளைக் காணலாம்.  சில்லியின் லாஸ் காம்பனாஸ் வானோக்கு ஆய்வுக் கூடத்தின் 1.3 மீடர் [4 அடி விட்டம்] தொலைநோக்கியில் ஆண்டுக்கு 600 மேற்பட்ட நுண்ணோக்கு லென்ஸ் ஆய்வுகள் [Micro-lensing Experiments] நடத்தப் படுகின்றன.

    ஈர்ப்பாற்றல் நோக்கு லென்ஸ் ஆய்வுகள் என்றால் என்ன?

    நாம் வானிலை நூல்களில் பார்க்கும் அழகிய விண்மீன்கள் பெரும்பான்மையானவை ஹப்பிள் தொலைநோக்கி மூலமாகவோ அல்லது மற்ற தொலைநோக்கிகள் வழியாகவோ குறிப்பிட்ட தூரத்தில் [உதாரணமாக 400 ஒளியாண்டு] பார்த்துப் படமெடுக்கப் பட்டவை.  அந்த தூரம் நமது பால்வீதி காலாக்ஸி விட்டத்தின் 1% தூரம்.  மற்ற காலாக்ஸிகள் பில்லியன் ஓளியாண்டுக்கும் அப்பால் உள்ளன.  1936 ஆம் ஆண்டு ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் விண்மீன்களின் ஈர்ப்பாற்றல் தளங்கள், ஒரு கண்ணாடி லென்ஸ் போல ஓளியை வளைக்கின்றன என்று கூறினார்.  ஈர்ப்பாற்றல் லென்ஸின் விளைவுகளுக்கு ஆயிரக்கணக்கான சான்றுகள் இப்போது காணப்படுகின்றன.  அம்முறை மூலமாக வெகு தூரத்தில் உள்ள ஒளிமீன்களைத் தெளிவாகக் காண முடிகிறது.  ஈர்ப்பாற்றல் லென்ஸ் விளைவின் அடிப்படை விளக்கம் இதுதான்:  பூமியின் தொலைநோக்கி மூலமாக இரண்டு விண்மீன் களை நேர் கோட்டில் கொண்டு வந்தால், அண்டையில் உள்ள விண்மீனின் ஈர்ப்பாற்றல் தளம் [லென்ஸ் போன்று] அப்பால் உள்ள விண்மீனின் ஒளியை வளைக்கிறது.  அவ்வளைவு ஒளி ஒரு வட்ட வடிவில் தெரிகிறது.  அதுவே “ஐன்ஸ்டைன் வளையம்” [Einstein Ring] என்று அழைக்கப் படுகிறது.  அந்த நுண்ணோக்கு லென்ஸ் ஈர்ப்பாற்றல் மூலமாகத்தான், புதிய பூமி இப்போது கண்டுபிடிக்கப்பட்டு விஞ்ஞானிகளிடையே மாபெரும் புத்துணர்ச்சியை உண்டாக்கியுள்ளது.

     

    பரிதி மண்டலத்துக்கு அப்பால் கோள்களை நோக்கும் முறைகள்

    நேர்முறையில் நோக்க முடியாது பலவித மறைமுக முறைகளில் புறவெளிப் பரிதிக் கோள்கள் கண்டுபிடிக்கப் படுகின்றன.  தாய் விண்மீனைப் போல் ஒளியின்றி புறவெளிக் கோள்கள் மிக மிக மங்கலாகத் தெரிவதால் அவற்றைக் நோக்கி உளவுவது சிரமமான ஆராய்ச்சி.  மேலும் தாய்க் கோளின் ஒளி எதிரொளி (Glare) வேறு கொடுப்பதால், மங்கலான வெளிச்சமும் வெளுத்துப் போகிறது. புறவெளிக் கோள் கண்டுபிடிப்பு முறைகள் எவை ? வானியல் அளப்பு முறை, ஆரத்தின் வேக முறை, டாப்பிளர் விளைவு முறை, பல்ஸர் கால முறை, கடப்பு முறை, ஈர்ப்பாற்றல் நுட்ப லென்ஸ் முறை, விண்மீன் சுற்றும் தட்டு முறை, இரட்டைத் தடுப்பு முறை, சுற்றுவீதி நிலை முறை, மறைப்பு அளப்பு முறை (Astrometry, Radial Velocity or Doppler Method, Pulsar Timing, Tansit Method, Gravitational Micro-Lensing, Circumsteller Discs, Eclipsing Binary, Orbital Phase, Polarimerty) போன்றவை. ஹப்பிள் விண்வெளி நோக்கு முறையைத் தவிர இதுவரைப் பயன்படுத்தப்பட மற்ற முறைகள் யாவும் பூதள அமைப்புத் தொலைநோக்கிகள் மூலம் (Ground-Based Telescopes)  கண்ட முறைகளே.  அவற்றை விட மேம்பட்ட முறைகள் தொலைநோக்கிகளை அமைதியற்ற வாயு மண்டலத்திற்கு மேலே விண்வெளியில் அனுப்பிக் காணும் முறைகளே.

    1. 2006 டிசம்பரில் புறவெளிக் கோள்களைக் கண்டுபிடிக்க ரஷ்யா அனுப்பிய ஐரோப்பிய கோரட் (COROT) விண்ணோக்கி ஊர்தி. 2. ஐயமின்றி ஹப்பிள் தொலைநோக்கி இதுவரை ஒருசில புறவெளிக் கோள்களைப் படமெடுத்துள்ளது. எதிர்காலத்தில் நாசா & ஈசா திட்டமிட்டுள்ள குறிப்பணிகள் : 3. கெப்ளர் விண்வெளித் தொலைநோக்கி (Kepler Space Telescope) பிப்ரவரி 2009 இல் நாசா அனுப்பத் திட்டமிட்டுள்ளது. 4. புதிய உலகங்கள் தேடும் திட்டம் (New Worlds Mission) ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை. 5. ஈசாவின் திட்டம் : டார்வின் உயிரினக் கோள் தேடும் திட்டம் (ESA’s Darwin Space Mission) (ஏவும் ஆண்டு : 2015) 6. நாசாவின் விண்வெளிக் கோள் திட்டம் (Space Interferomerty Mission) (SIM) (திட்டம் ஆண்டு : 2015 or 2016) 7. விண்வெளிக் கோள் நோக்கி (Terrestrial Planet Finder) (TRF) (ஏவும் தேதி இன்னும் தீர்மானம் ஆகவில்லை.) 8. பேகஸி (பறக்கும் குதிரைத்) திட்டம் (PEGASE) PEGASE is a proposed space mission to build a double-aperture interferometer composed of three free-flying satellites. The goal of the mission is the study of Hot Jupiters (pegasids), brown dwarfs and the interior of protoplanetary disks  The mission would be performed by the Centre National d’tudes Spatiales and is currently being studied for launch around 2010-2012.

    (தொடரும்)

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Are There Other Planets Like The Earth ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)

    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Science – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 Astronomy Magazine – What Secrets Lurk in the Brightest Galaxies ? By Bruce Dorminey (March 2007)

    21 National Geographic Magazine – Discovering the First Galaxies By : Ron Cowen (Feb 2003)

    22 Astronomy Magazine Cosmos – The First Planet By : Ray Villard & Adolf Schaller & Searching for Other Earths By : Ray Jayawardhana [Jan 2007]

    23 Discover Magazine – Unseen Universe Solar System Confidential [Jan 2007]

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40704261&format=html(திண்ணைக் கட்டுரை – பூமியைப் போன்ற புதிய கோளைக் கண்டுபிடித்த விண்வெளி விஞ்ஞானிகள்)

    25 National Geographic Magazine – Searching the Stars for New Earths (Dec 2004)

    26 Scientific American – Does Methane Point to Bacteria on Mars & Titan ? By : Sushil K. Atreya. (May 2007)

    27 News Week Magazine The New Solar System – Our Changing Way of the Universe -(Sep 2006)

    28 Cosmos Magazine – Three-Planet Solar System Detected (May 2006)

    29 Cosmos Magazine – Origin of Planets Confirmed (Oct 2006)

    30 Cosmos Magazine – Earth-Like Planet Await Discovery (Sep 2006)

    31 Cosmos Magazine – Distant Sun Has System of Five Planets (Nov 2007)

    32 Cosmos Magazine – Catalogue of Strange New Worlds (May 2007)

    33 Cosmos Magazine – New Earth-Like Planet May Hold Liquid Water (April 2007)

    34 Astronomy Magazine – Earth-Like Planets May Be Common (Dec 2003)

    35 Omnome Science – Earth -2 How to Find Earth-Like Planets (June 2006)

    36 Extra-Solar Planets By : Wikipedia [31 July 2008]

    36(a)  http://revolutionizingawareness.com/tag/space/  [December 24, 2011]

    36(b)  http://www.kavlifoundation.org/science-spotlights/searching-best-and-brightest  [2011]

    37  http://www.messagetoeagle.com/alienwaterworldskepler.php#.Uem1lo3VCPU  [April 18, 2013]

    38  http://www.dailygalaxy.com/my_weblog/2013/07/two-alien-planets-with-endless-oceans-unlike-anything-in-our-solar-system-.html  [July 11, 2013]

    39  http://www.scientificamerican.com/article.cfm?id=first-distant-planet-be-seen-in-color-blue&print=true  [July 11, 2013]

    40  http://science.gsfc.nasa.gov/sed/index.cfm?fuseAction=home.main&&navOrgCode=667  [NASA Sites for Exoplanets]

    41  http://www.spacedaily.com/reports/Hubble_Finds_a_Cobalt_Blue_Planet_999.html [July 12, 2013]

    42.   https://en.wikipedia.org/wiki/Exoplanet  [December 11, 2013]

    43.  http://exoplanet.eu/ [April 7, 2017]

    44. http://www.dailygalaxy.com/my_weblog/2017/04/first-detection-of-a-super-earth-atmosphere-big-step-toward-detection-of-life-an-an-alien-planet.html  [April 6, 2017]

    45.  https://en.wikipedia.org/wiki/Gliese_1132_b  [April 7, 2017]

    46. https://www.yahoo.com/news/atmosphere-discovered-around-super-earth-planet-gj-1132b-084724920.html  [April 7, 2017]

    47.  https://www.sciencedaily.com/releases/2018/02/180215105756.htm  [February 15, 2018]

    48.  https://www.cnn.com/2017/02/22/world/new-exoplanets-discovery-nasa/index.html [February 22, 2018

    49. https://www.space.com/40131-metal-heavy-exoplanet-earth-size-mercury.html?utm_source=sdc-newsletter&utm_medium=email&utm_campaign=20180330-sdc  [March 29, 2018]

    50  https://www.sciencedaily.com/news/space_time/extrasolar_planets/  March 31, 2018]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  April 1, 2018 (R-2)

    https://jayabarathan.wordpress.com/

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180401 RadheKrishna A4 lr

    ”கண்ணாடி பார்க்கின்றாள், கன்னி இராதைப்பெண்
    முன்னாடி கண்ணன் முதுகிலே -தன்னாடி(தன் ஆடி(கண்ணாடி))
    பிம்பத்தில் கண்ணன் பிரதிபலிக்க ,ஓய்ந்தனள்,
    சம்பத்தாய்(செல்வமாய்) மார்பிலே ஸ்ரீ(மகாலஷ்மி தாயார்)….!

    கனிச்சுவை ராதை கமலஇதழ் கவ்வி
    துணிச்சலுடன் முத்தம் திணித்து -அனிச்ச
    மலராள் அலறும்முன் மன்னிப்பு கேட்பான்
    தளரான் எதற்கும் துணிந்து….கிரேசி மோகன்….!

    Share
  • படமும், பாடலும்….!

     

    கிரேசி மோகன்…..!

    1984 என்று நினைக்கிறேன்….கிரேசி குழுவினருக்கு ‘பாம்பே ஷண்முகானந்தா’ சபையில் நாடகம் போடும் வாய்ப்பு கிட்டியது….அன்நாளில் பாம்பேயில் நாடகம் போடுவதென்றால் மதராஸ் குழுக்களுக்கு அமரிக்காவில் போட அழைப்பு கிடைத்த அளவுக்கு பிரசித்தம்….அவர்கள் மேஜர் சுந்தர்ராஜன் போன்ற மேஜர் குழுக்களைத்தான் கூப்பிடுவார்கள்….மைனர் குழு எங்களுக்கு கிடைத்தது தெய்வாதீனமே….அந்த சமயம் பார்த்து எங்கள் லேடி-ஆர்டிஸ்ட் திருமணம் செய்து கொண்டு விலக, புதிதாக வேறு ஒரு நாயகி….சுந்தரத் தெலுங்கி….பார்க்க சுந்தரம்(அழகு)….பேச்சு அவந்தரம்….அவளுக்கு வீடியோ பிரமாதம்….ஆடியோ அபத்தம்….

    நாடகத்திற்கு 2 நாட்கள் முன்பு அவளுக்கு தமிழ் வசனம் ரிகர்சல்….கடைசி வரை மாதுவை தாய் பாஷையில் லேது என்றுதான் கூவிக் கொண்டிருந்தாள்….3000 பேர் அமரும் ஷண்முகானந்தாவில் ஒரு சிறுவன் மட்டும் அமர்ந்து எங்கள் ரிகர்ஸலை ரசித்துக் கொண்டிருந்தான்….குறிப்பாக அவன் குஷியாகி சிரித்தது , அந்த நாயகியின் ‘மாது-லேது’ மாற்றத்திற்குத்தான்….அந்தச் சிறுவனின் தாய் பாஷை தெலுங்காம்…அதனால்தானோ ‘லேது மாது’ பன்னை(PUN) வெகுவாக ரசித்தான்….சாயங்காலம் தினமும் சூறாவளி கச்சேரி செய்து கொண்டிருந்த அந்தச் சிறுவனின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரத்யேகமாக(கிருஷ்ணருக்கு கீதை சொல்ல ஒரே ஒரு அர்ச்சுனன் கிடைத்தது போல) மேடை அலங்காரம் செய்து எங்கள் ‘மேரேஜ் மேட் இன் சலூன்’’ நாடகத்தைப் போட்டு அந்தக் குழந்தையை மகிழ்ச்சியில் ஆழ்த்தினோம்….”குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’….ஒருவேளை அந்தக் குழந்தையைக் கொண்டாடி, அதன் ஆசீர்வாதத்தைப் பெற்றதாலோ என்னவோ இன்று எங்கள் குழு தெய்வத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறது (சாக்லேட் கிருஷ்ணா)….அந்த தெய்வக் குழந்தை யார் என்பதை ‘கேசவ்’ சித்திரத்தில் காட்டியுள்ளார்….பார்க்க….கிரேசி மோகன்….

    படமும், பாடலும்….!

    —————————————————-

    ‘MANDOLIN கேட்க மகாவிஷ்ணு வுக்காசை
    ஆண்டவன் கட்டளை ஆதலால் -மாண்டலின்(அமரராகி)
    ஆனாரே, வாசிக்கப் போனாரே வைகுண்டம்,
    ‘ஈநாடுக்(கு) இங்கே இழப்பு’….கிரேசி மோகன்….

    ‘மலரும் மாண்டலின் நினைவுகள்’…..

    ‘வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார் மாண்டலின் ஸ்ரீனிவாசன்’….வைகுந்தத்தில் வாசித்து அவர் ஆத்மாவும் சாந்தி அடையும், அந்தப் பரமாத்மாவும் சாந்தி அடைவார்….

    பின்குறிப்பு -எங்கள் ‘ஜுராஸிக் பேபி நாடகத்தில், பிறந்த குழந்தை ‘நர்ஸரி ரைம்’ பாடும்….அப்போது குழந்தையின் தந்தை மாது- என்ன ! அச்சப்பன் குழந்தை பாடறது….!

    அச்சப்பன் -அவனுக்கு ‘மாண்டலின்’ கத்துக் கொடுங்கோ….யார் கண்டா பிற்காலத்துல ‘ஸ்ரீனிவாசன்’ மாதிரி ‘பிராடிஜியா’ பிரபலம் ஆகலாம்….(பலத்த கைத்தட்டலோடு நாடகம் நிறைவு பெறும்)…..

     

    ———————————————————————————————————————–

    Share
  • SRI AUROBINDO or THE ADVENTURE OF CONSCIOUSNESS -SATPREM….!

     

    ”ABOVE was an ardent WHITE TRANQUILLITY….!
    ————————————————————————————-

    “வெண்மை நிறத்தில் விதான விவேகமாய்
    உண்மை உணர்த்தும் உபயோகச் -சின்மயத்தில்,
    உள்ளது வேத உணர்வதன், விக்ஞானம்
    சுள்ளெனத் தைக்கும்ரோ ஜா(சா) “….கிரேசி மோகன் ….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    “வாஸ்த்தாவார்(வாஸ்து ஆவார்) வந்த விரஜநிலம் வாழ்ந்திட ,-
    தோஸ்த் தாவார் பார்த்தனுக்கு தோள்கொடுத்து , -ஆஸ்த்தான –
    ஆவுக்கு ஞானம் அடிநீட் டியளிப்பார்-
    பூவைத்து வைப்பார்செம் பொன் “….கிரேசி மோகன் …

    Share
  • பங்குனி உத்திரம்….!

    ’’சங்கர சாம்பசிவம்,சங்கெழில் மோகினியை
    பம்பையில் முங்கிப் பிணைந்திட -பங்குனி
    உத்திரத்தில் தோன்றிய உற்சவ அய்யனை
    நித்திரைக்கு முன்பு நினை ‘’….கிரேசி மோகன்….!

    பங்குனி உத்திரத்தன்று எழுதியது….!
    ———————————————-

    ’’பங்குனி உத்திரா! பந்தளப் புத்திரா!
    செங்கட் திருமால் சுமந்தவா! -இங்குநீ
    தோன்றிய இந்நாளில் தோத்திரம் செய்வோர்க்கு
    ஊன்றிடும் கோலுன் உறவு’’….!

    ’’பிணிகொண்டு கூற்றின் படிவாசல் நிற்போர்
    மணிகண்டன் நாமம் முழங்க -இனிகண்டம்
    இல்லையென்(று) ஆகிடும் ஈரொன் பதாம்படிமுன்
    தொல்லையாம் தேங்காய் தெறித்து’’….!

    ’’மீனாள் திருமணத்தில் மாலோன் அழகுகண்டு
    மான்மழு வாளன் மயங்கினான் -கானில்
    அபரிமித மோஹினியை ஆலிங் கனித்திட
    சபரிகிரி வாசன் ஜனிப்பு’’….!

    ”சங்குதிரி சூலத்தை சேரப் பிறந்தவன்,
    பங்குனி உத்திரன்முன், பம்பையில் -முங்கி
    சரணம் விளிப்போர்க்கு சாதகங்கள் இன்றி
    மரண ஜனனம் முடிவு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180330 -Adharasudha- Ananya series- wm -A4

    ‘யாரிது சின்னப்பொண் ! பாரதி கண்ணம்மா!
    பாரதம் செய்த பகவானே ! -தேரிதை
    ஊரதில் ஓடவிட்ட ஓவியா(கேசவ்) கண்டுகொண்டேன்,
    தேரதன்கா லில்காம தேனு’’…..!கிரேசி மோகன்….!

     

    Share
  • கொரிய நாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக்

     

    பவள சங்கரி

     

    கொரிய நாட்டின் குறிப்பிடத்தக்க உன்னதமான கவிஞர்களில் திருமிகு கிம் யாங்-ஷிக் முக்கிய இடத்தில் உள்ளவர். இவர்தம் மனித நேயம், மனித வாழ்க்கை குறித்த ஆழ்ந்த உள்ளுணர்வு போன்றவை இவருடைய படைப்புகளை இவர்தம் சமகாலக்  கலைஞர்களின் படைப்புகளிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகின்றன என்றால் அது மிகைக்கூற்றல்ல. இவர்தம் எழுத்துகள் இவர் கொரிய நாட்டின் மீது மட்டுமின்றி அனைத்துலக மனிதர்களின் மீதும் மிக நெருங்கிய நேசம் கொண்டவர் என்பதை வெளிப்படுத்துகின்றன. மனித வாழ்க்கை குறித்த ஆழ்ந்த புரிதலை வெளிப்படுத்தக்கூடியவை இவர்தம் கவிதைகள். மெய்யியலும், ஆன்மீகவியலும் ஒருசேர இணைந்த கவின்மிகு படைப்புக்களாக உள்ளன.

    இந்திய அரசிடமிருந்து பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள கவிஞர் கிம் யாங் – ஷிக் அவர்கள் கொரிய நாட்டின் சியோல் நகரில் 1931 ஆம் ஆண்டில் பிறந்தவர். ஆங்கில இலக்கியத்தை ஈஹா பல்கலைக்கழகத்தில் பயின்று,  இந்தியத் தத்துவங்கள் குறித்த முதுநிலை பட்டப்படிப்பை சியோல் நகரின் டோங்குக் (Dongkuk) பல்கலைக்கழகத்தில் பயின்றவர். 1998இல் Academy of International Congress of Poets மூலமாக H.Phd. Lit, என்ற உயரிய பட்டம் பெற்றவர். கிம் யாங் – ஷிக் கொரிய மொழியில் பல இலக்கியப் படைப்புகளை வெளியிட்டுள்ள மிகச்சிறந்த கொரிய கவிஞரும், தற்போதைய, கொரியாவின் தாகூர் சங்கத் தலைவரும், இந்தியக் கலை அருங்காட்சியக இயக்குநரும் ஆவார். சியோல், சர்வதேசக் கொரிய எழுத்து மையத்தின் (The International Pen-Korean Centre) உறுப்பினர், ஈஹா இலக்கிய எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர், கொரிய பெண் எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் ஆலோசகர் என்பன போன்ற பல சமூக, இலக்கியப் பொறுப்புகளில் இவர் ஆர்வமுடன் செயல்படுபவர்.

    இவர் பெற்றுள்ள விருதுகளுள் The current Literature of korea ’69/’Mse’ of World Poetry – 2nd World Congress of Poets in Taipei, ‘Diploma Aureun Honoris Causa’ – 3rd World Congress of Poets in Baltimore, USA, பத்மஸ்ரீ விருது, ‘PEN Literary Award’ போன்ற விருதுகள் குறிப்பிடத்தக்கன. இவர்தம் அற்புதமான கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்ப்பதில் பெருமிதம் கொள்கிறேன். அம்மையார் கிம் யாங் ஷிக் அன்புகூர்ந்து தாம் கையொப்பமிட்டத் தமது கவிதை நூலை தென் கொரியாவிலிருந்து எனக்கு அனுப்பியிருந்ததை நன்றியுடன் வாசகர்களுடன்  பகிர்ந்துகொள்வதோடு அதை அவர் எனக்களித்த கௌரவமாகவும் கருதுகின்றேன்.

    சில ஆண்டுகளாகக் கொரிய – தமிழ் மொழித்தொடர்பு, பண்பாடு, கலாச்சாரம், பாரம்பரியப் பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் ஏற்பட்ட ஆர்வம் காரணமாகப் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட கொரிய மொழி இலக்கியங்களைப் பயிலவும், சிலவற்றை ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழில் மொழிமாற்றம் செய்யவும் முனைந்துள்ளேன். சமீபத்தில் கொரிய-தமிழ் கலாச்சார உறவுகள் தொடர்பான, ‘சாம்குக்யுசா’ என்ற கொரிய நாட்டுத் தொன்மத்தின் அடிப்படையிலான, “கடைச்சங்கத்தில் கொங்கு கலாச்சாரம்” என்ற நூல் வெளியிட்டுள்ளேன். இவற்றின் மூலம் சில கொரிய நண்பர்களைப் பெறும் நல்வாய்ப்பும் அமையப்பெற்றேன். அந்த வகையில் பண்டைய கொரிய மொழி  தமிழ் மொழி ஆகியவற்றிற்கு இடையே உள்ள பண்பாட்டுப் பரிமாற்றம்  குறித்த ஆய்வுகளை  மேற்கொண்டுவரும் திரு யங் கிமுன் அவர்களின் மூலம் அறிமுகமான கொரிய கவிஞர் கிம் யாங்-ஷிக் அவர்களின் கவிதை நூலைத் தமிழில் மொழிபெயர்க்கும் வாய்ப்பு கிடைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன்.

    1981ஆம் ஆண்டு நிறுவப்பட்டு முழுமையாக இந்தியாவிற்கும், இந்தியர்களுக்காகவும் அர்ப்பணிக்கப்பட்ட, கொரிய தாகூர் சங்கத்தின் நிறுவனரும், தலைவருமான திருமிகு கிம் யாங்-ஷிக் இந்திய நாட்டின் பெருங்கவி இரபீந்திரநாத் தாகூர் மற்றும் தன்னிகரில்லாத் தலைவரும் சுதந்திரப்போராட்ட வீரருமான காந்தியடிகள் ஆகியோர் மீது மிகுந்த மரியாதை கொண்டிருப்பவர்.  தாகூர் சங்கத்தின் நிழற்குடையின் கீழ் இந்திய ஓவியங்கள், பரதக்கலை, நாடகம், இலக்கியம், மதங்கள், தத்துவங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பெறுகின்றன. முதன்முதலில் இந்தி மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட கொரியக் கவிதைகளை இயற்றிய கவிஞர் என்ற பெரும்பேறும் இவர் பெற்றுள்ளார். இந்தியத் திருநாட்டிற்கு 30 முறைகளுக்கும் மேல் வருகைபுரிந்துள்ள மீப்பெரும் கொரிய இலக்கிய ஆளுமை கொண்டவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தம்முடைய இளம் வயதிலிருந்தே தாகூரின் கவிதைகளைத் தொடர்ந்து வாசித்து வருவதோடு அவர்தம் கவிதைகள் மீது அதீத ஈடுபாடு கொண்டிருப்பவர் என்பதை அவருடைய சொந்தக் கவிதைகள் மூலம் அறிய முடிகின்றது. மனிதர்களின் துன்பங்களைக் கண்டு ஆழ்ந்த இரக்கம் மேலிட, வாசகர்களின் உள்ளத்தை உருகச்செய்யும் படைப்புகள் மூலம் அதை வெளிப்படுத்துவதிலும் வல்லவர் .

    தாகூரின் கவிதைகளின் தாக்கம் இவர்தம் படைப்புகளிலும் மிளிர்வதையும், நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை கொண்ட பாரதி கண்ட புதுமைப் பெண்ணாக இருக்கின்றார் என்ற எண்ணத்தையும் இவர்தம் படைப்புக்கள் நமக்குள் விதைக்கத்தான் செய்கின்றன! மெல்லிய மலர் இதழ்களால் வருடுவது போன்ற இதமானதோர் உணர்வை படிப்போர் உள்ளத்தில் ஊடுருவச் செய்யும் இவர்தம் கவிதைகள் தாகூரின் படைப்புகளை நினைவூட்டத் தவறுவதில்லை. சகோதரர், அன்னை, அன்புக்கணவர் என மனித உறவுகளை உயிராக மதிக்கும் இவர்தம் இளகிய அன்பு மனத்தை இவருடைய படைப்புகளின் மூலம் நாம் உணர முடிகின்றது. கவிஞர் கண்ணதாசன் தமக்குத்தாமே இரங்கல் கவிதை எழுதிக்கொண்டதை நினைவூட்டும் விதமாக கவிஞர் கிம் அவர்களின், ‘புனையா ஓவியம்’ எனும் கவிதையைக் குறிப்பிடலாம். இப்படி பல்வேறு நிலைகளில் படிப்போர் உள்ளத்தில் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தும் கவிதைகளாக  விதி, இரங்கற்பா, இலையுதிர் காலம் எனும் தலைப்பில் அமைந்த கவிதைகளைக் குறிப்பிடலாம். இவர்தம் இயற்கைக் காதலை வெளிப்படுத்தும்வண்ணம் இவர் படைப்புகளில்  மலர், பசும்புல்,  பனித்துளி, மேகம், வானம், மரங்கள், பறவைகள் தொடர்பான காட்சிப் படிமங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. இயற்கையின் உன்னத படைப்பான மனிதர்களின் மீது அதீத அன்பு கொண்ட இக்கவியுள்ளம் மனிதர்களின் இன்ப துன்பங்களை அழகுறப் படம்பிடித்துக் காட்டுவதோடு, வேதனையில் வாடும் உள்ளங்களுக்கு நம்பிக்கை விதைகளையும் விதைக்கத் தவறவில்லை.

    தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இவரது பனுவல்களை உள்ளடக்கிய இத்தொகுப்பு கொரிய மக்களின் கலாச்சாரம், பண்பாடு, மனித நேயம் என அனைத்தையும் ஒருசேர படம் பிடித்துக் காட்டுகின்றது. இந்தியாவைப் பற்றிய இவர்தம் கவிதைகள் அனைத்தும் நம் நாட்டின் மீதும் நம் நாட்டு மக்களின் மீதும் இவர் கொண்டுள்ள அதீத அன்பையும், பாசத்தையும் வெளிப்படுத்துகின்றன. இந்திய மக்களின் மீது, குறிப்பாக இந்தியச் சிறார்களின் மீது அவர் கொண்டுள்ள அக்கறையையும், பாசத்தையும் வெளிப்படுத்துவதாகவே இத்தொகுப்பின் சில கவிதைகள் அமைந்துள்ளன.

    தெற்காசிய நாடுகளின் கொரிய மொழிக்கல்வித் திட்டங்களுக்குத் தமது சிறப்பான பங்களிப்பையும் இவர் அளித்து வருவது வரவேற்பிற்குரியது. கொரிய – இந்திய அறிவு சார்ந்த, பண்பாட்டு கலாச்சார உறவுகளை வலுப்படுத்துவதில் இவருடைய பங்களிப்பு அளப்பரியது. தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மீது தனிப்பட்ட அன்பு கொண்டவரான இக்கவிஞர், அங்கு கொரிய கல்வித் திட்டங்களை வலுப்படுத்தி ஊக்குவிக்கும் முகமாக தமது உதவிக்கரங்களை நீட்டியுள்ளது பெருமைக்குரியது. ஆயிரக்கணக்கான கொரிய மற்றும் உலக இலக்கியங்களின் மிகச்சிறந்த நூல்களையும், இதழ்களையும் மனமுவந்து அளித்துள்ளதோடு, ‘கிம் யாங் – ஷிக் ஊக்கத்தொகை’  என்ற பெயரில் நிதி நல்கையும் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர் இந்தியாவின் கலாச்சாரத் தொன்மை மட்டுமன்றி, தத்துவம், சமூகம், படைப்பாற்றல் மற்றும் அழகியல் பரிமாணங்கள் போன்ற அனைத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதை இவர்தம் படைப்புகள் மூலம் உணர்ந்துகொள்ள முடிகின்றது. இவருடைய பல படைப்புகள் ஆங்கிலம், சீனம், ஜப்பானியம், உருசிய மொழி, போலிஷ், இந்தி போன்ற பல மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இந்திய எழுத்தாளர்கள், கவிஞர்கள், கொரிய – இந்திய உறவில் நாட்டம் கொண்ட நல்லுள்ளங்கள் சார்பில் திருமிகு கிம் யாங்-ஷிக்  அம்மையார் அவர்களை, இன்னும் பல்லாண்டு இலக்கிய உலகில் திறம்பட வலம்வந்து,  இந்திய நாட்டின்மீது ஆழமான அன்புடன், நீண்ட ஆயுளும், நிறைவான உடல் நலமும் பெற்று வாழ  உளமார வாழ்த்தி வணங்குகிறேன்.

    கொரியநாட்டுக் கவிக்குயில் கிம் யாங் – ஷிக் கவிதைகள் – தமிழாக்கம் – பவள சங்கரி , நூல் வெளியீடு மார்ச் 10, 2018 அன்று தமிழக அரசின் மாண்புமிகு திரு க. பாண்டியராஜன், தமிழ் வளர்ச்சி, தமிழர் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது. முனைவர் வி.ஜி.சந்தோசம் அவர்கள் முதற்படியைப் பெற்றார். கொரிய குடியரசுத் தூதர் திரு.ஹியூங் டே கிம் அவர்கள் வாழ்த்துரை வழங்கி சிறப்பித்தார். 87 அகவை நிரம்பிய, கொரிய தாகூர் சங்கம் மற்றும் இந்தியக் கலைக்காட்சியகம் நிறுவனர், சியோல், தென் கொரியா, முனைவர் கிம் யாங்-ஷிக் அவர்கள் நேரில் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஏற்புரை வழங்கி சிறப்பித்தார். இந்த நிகழ்வில் மாண்புமிகு அமைச்சர் க.பாண்டியராஜன் அவர்களின் அற்புதமான உரை இது.

    தமிழ்ப் புலமை மிக்க கொரிய அறிஞர்கள் இன்று உருவாகும் காலம் என்றே தோன்றுகிறது. கொரிய – தமிழ் கலாச்சார உறவு குறித்து பரவலாகப் பேசப்படும் இக்காலகட்டத்தில் தமிழ் அறிஞர்கள் கொரிய மொழி கற்கவும், கொரிய மொழி அறிஞர்கள் தமிழ் மொழி கற்கவும் ஆர்வம் காட்டுவது இயல்பானதே. கொரிய நாட்டு அறிஞர்களோடு இணைந்து தமிழ் கொரிய மொழி ஒப்பாய்வில் ஈடுபடுவதற்கான தக்க தருணம் இது என்றே கொள்ளமுடிகிறது.  இத்துறையில் குறிப்பிடத்தக்க நல்ல ஆய்வுகள் தோன்றவேண்டும். கொரியா என்றால் மின்னணுப் பொருள்கள் (Electronics) மற்றும் கார் உற்பத்தி என்ற அளவில் மட்டும் நினைத்துக் கொண்டிருந்த தமிழர்களுக்குக் கொரிய மொழியின் நீண்ட நெடும் வரலாற்றுப் பின்னணியினையும் அத்தகைய வரலாற்றுப் பின்னணியுடைய கொரிய மொழியுடன் தமிழ் மொழி பின்னிப் பிணைந்துள்ள நிலையினையும் கொரியப் பண்பாட்டுப் பெருமையினையும், கலைத்துறையில் அந்நாடு ஏற்படுத்தியுள்ள சாதனைகளையும் தெரிந்து கொள்ளவும், கொரிய தமிழ் இந்தியா உறவும், கொரிய தமிழ்நாட்டுத் தொடர்பில் உருவாகும் நட்புறவும் பெருகி வளரவும் நற்காலம் கனிந்துள்ளதாகவே எண்ணமுடிகிறது. அந்த வகையில் கொரிய மொழி அறிஞரும், கவிஞரும், கட்டுரையாளரும், இந்தியக் கவிஞர் தாகூர் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவரும், தாகூர் சங்கத் தலைவரும், இந்தியா மீதும், இந்திய மக்கள் மீதும் தனிப்பட்ட ஆர்வமும், அன்பும், அக்கறையும் கொண்ட திருமிகு கிம் யாங் – ஷிக் அவர்களின் படைப்புகள் தற்கால ஆசிய இலக்கிய உலகில் ஒரு புதிய பரிமாணத்திற்கு வழி கோலியுள்ளது என்றால் அது மிகையல்ல.

    கொரிய மொழியில் மட்டுமன்றி, ஆங்கிலத்திலும் பல படைப்புகளை வெளியிட்டுள்ள அம்மையாரின் பல படைப்புகள் பல்வேறு மொழிகளில் பெயர்க்கப்பட்டுள்ளதும் சிறப்பு.

     

    இவரது சில கொரிய படைப்புகளின் பட்டியல்:

     

    கவிதைத் தொகுப்புகள் – Legend of Chongup – Fusa, Cho-ee collection ’74, Bird’s Sunrise 86, Sparrows in Seocho Village ’90, To be Grass Flowers, Grass Leaves ’92, A collection of poetry in English and Korean, They are Never Lonely ’98, A Book Of Long Epic Poetry, Hymn Of Elegy On The Tomb Of An Arm ’99, The whole collection of Kim Yang-Shik’s Poetry, Brightness of Sunset ’02, As Tree Limbs Turn Towards Winter ’05, A Floating Cloud In The Distant Sky ’09.

    நூல்களும் கட்டுரைகளும் : An Encounter with Foreign Poets ’78, Along the stream of Ganges ’90, Spring, Summer, Autumn and winter ’00.

    மொழிபெயர்ப்புகள் – கொரிய மொழியில்: R. Tagore’s Books Of Poetry Gitanjali ’82, Modern Indian Literature ’82, by K.Kripalani, Tagore: A Life ’82, by Kripalani, Tagore’s Last Poems ’83, R. Tagore’s Bhuddism ’96, Crescent Moon ’92, Tagore’s Essays Sadhana ’93, Tagore’s Drama selected Seven works; Sanyasi, King and Queen, Chitrangada, Post Office, Cycle of Spring, Kingdom of Card, Chandarica ’13, Bird’s Wedding ’97, Poetry by D.Ramesh, Silk Empress ’07, Novel by N.Parthasarathi, A book of Poetry in English and Korean Gitanjali.

    அம்மையார் கலந்துகொண்ட பல்வேறு நாட்டின் கருத்தரங்கங்கள், மகாநாடுகள், வாங்கிய விருதுகள், பாராட்டுப் பத்திரங்கள் போன்றவை ஏராளம். இவரைக் கொரிய நாட்டைச் சேர்ந்தவர் என்று மட்டும் அடையாளம் காண்பது உண்மையில் நியாயமற்ற செயலாகும். இவர்தம் மனிதநேயப் பண்புகள், பரந்த மனப்பான்மை, சக மனிதர்களிடம் கொண்டுள்ள ஆழ்ந்த அன்பும், அக்கறையும் எத்தகைய அரசியல் எல்லைகளையும் உடைத்து நொறுக்கிவிடும் வல்லமை பெற்றது. இவரை உண்மையில்  இந்த பிரபஞ்சத்தின் சொத்தாகவே அடையாளம் காணமுடிகிறது. பெரும்பாலான ஏனைய கொரிய எழுத்தாளர்கள் போலவே அம்மையாரும் இயற்கை காதலராகவே இருக்கிறார். போர், தீவிரவாதம், கொடுஞ்செயல்கள் புரிவோர் போன்றவற்றில் மிகுந்த வெறுப்பும், வருத்தமும் கொண்டுள்ளதை இவர்தம் படைப்புகள் மூலம் அறியமுடிகிறது.

    வாழ்க்கையைச் சரிவரப் புரிதல் என்பது மனிதராகப் பிறந்தோருக்கு கிடைத்தற்கரிய வரம். அத்தகைய வரம் அருமையாக அமையப்பெற்றவர் இக்கவிஞர் என்பதற்கு ஆதாரம் இவருடைய படைப்புகளே சான்று. இவருடைய கவிதைகள் இலக்கியச் சுவை மட்டுமன்றி பக்தியோடு, முரண்பாடற்ற ஒத்திசைவோடு கூடிய எளிமையும், சிறிதளவு உலகாயதமும் கலந்த அற்புதமான படைப்புகளாக மிளிர்வதைக் காணமுடிகிறது. ஆன்மீகமும், இயற்கை வாதமும் கலந்த வித்தியாசமான இப்படைப்புகள் வாசகர்களுக்கு நல்ல அனுபவங்களை வழங்கக்கூடியது.

    இந்திய மக்களின் அடித்தட்டு வாழ்க்கையின் இரணங்களை உளப்பூர்வமாக உணர்ந்ததன் பாதிப்பு அவருடைய படைப்புகளில் வெளிப்படுகிறது. இந்திய மண்ணின் வளத்தோடு சேர்த்து அதன் ஏழ்மையையும், எளிமையையும் கூட மிக இயல்பாக வெளியிட்டுள்ள விதம் அவருடைய யதார்த்தமான மனித நேயப் பண்பிற்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டு எனலாம். தாகூரின் படைப்புகள் ஏற்படுத்திய பாதிப்பில் எழுந்த கவிதைகள் அனைத்தும் தாகூரின் படைப்புகள் போன்றே காலங்கடந்து பல நூறு ஆயிரம் ஆண்டுகளுக்கு மக்கள் மனதில் சிம்மாசனமிட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை.

    இவர்தம் படைப்புகளில் நவீன பிரபலமான கொரிய கவிஞர்களான மன்ஹே ஹேன் யாங் -யுன் மற்றும் மிடாங் சோ சோங்-சூ ஆகியோரின் செல்வாக்கு உள்ளதைக் காணமுடிகின்றது. பிரபஞ்சம் முழுவதையும் குறித்து அவர் எழுதித்தீர்வது என்று கங்கணம் கட்டிக்கொண்டவராக இருந்தாலும் அடிப்படையில் அவருடைய படைப்புகள் அனைத்தும் கொரிய மண்ணின் அனுபவங்கள் சார்ந்ததாக உள்ளதென்பதே நிதர்சனம்.

    கொரிய கவிஞர் மிடாங் சோ சோங்-சூ  கவிஞரின் படைப்புகள் குறித்து கீழ்கண்டவாறு குறிப்பிடுவது ஒரு நேர்மையான திறனாய்வாக அமைகின்றது.

    “அவர் கவிதைகள் தமது புத்திசாலித்தனமான அறிவுக்கூர்மையின் முடிவற்ற கன்னிமை கொண்டவை. ஒரு நாளும் அவர் தம் பணிகளின் இயக்கத்தை நிறுத்தவோ, அல்லது முடிவற்று முன்னேறிக்கொண்டிருக்கும் தமது ஆன்மாவிற்கு ஓய்வு கொடுக்கவோ முனைந்ததில்லை. ஓய்விற்கும், பணிக்கும் இடையில் வேறுபாடுகள் ஏதுமில்லை என்பதை நன்கு உணர்ந்திருப்பவர் அவர். என்னைப் பொறுத்தவரை, சாத்தானும், தேவதையும் கூட நெருங்க முடியாத அந்த அதிசயமான உள்ளுணர்வு நிலையை எப்படி அடைவது என்றே தெரியவில்லை. வெற்றிகண்ட அவருடைய சிந்தைகள் அவருடைய யதார்த்தமான கண்ணிற்குப் புலப்படாத சக்தியின் அழகிற்குள் பொறிக்கப்படலாம்” (பங்கஜ். என். மோகன், உதவி பேராசிரியர், கொரிய கல்வி, சிட்னி பல்கலைக்கழகம்)

    உணர்வுகளின் குவியலாக மட்டும் இல்லாமல் அவர்தம் கவிதைகள் தெளிந்த நீரோடையாக, அமைதியின் அங்கமாக, குறுகிய சொற்களில் பெரும் தத்துவங்களை விளங்கச் செய்வன.

     

    Beyond Time & Space-Kim Yang Shik

    Share