Blog

  • ஹைக்கூ கவிதைகள்

    வே.மணிகண்டன்

    தமிழ்த்துறை பேராசிரியர்

    விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி

     

    பசும் மர இலைகளில்
    வாய்விட்டுச் சிரிக்கிறது…
    வசந்த காலம்

    பாறை மனம்
    அதில் வந்து அமர்கிறது…
    ஆரவாரமின்றி ஆசை

    இருள் வெளியை கடக்கிறேன்
    ஞானம் வருகிறது…
    மின்மினியின் வெளிச்சத்தில்

    ஆற்றில் கல் எறிந்தேன்
    வளைய வளையமாய்..
    திட்டித்தீர்த்தது

    மழையில் நனைந்த பிறகு
    கரைந்து போனது…
    கல்மனம்

    நீர்குமிழி
    உடைந்து உணர்த்தியது…
    பிரபஞ்ச ரகசியம்

    நிலவுடனும் நிமிர்ந்த மரத்துடனும்
    பேசி முடித்த பிறகு…
    நிம்மதியாக தூங்கிப்போனேன்

    வாய்க்கால் நீர்
    கையில் அள்ளி…
    வானம் பருகினேன்

    மரத்தடியில் வகுப்பு
    அடிக்கடி சொல்லித்தரும்…
    குயில்

    மழைநாள்
    நனைந்து விட்டுச்செல்லும்…
    நினைவுகள்

    தூறல் தொடங்கி
    சாரலாக மாறுவதற்கு முன் கிடைத்தது…
    மழைக்கவிதை

    காக்கை குருவிகள்
    பறந்து செல்லும் வானம்…
    அருகில் தான் இருக்கிறது

    மெய்மறந்து நனைந்து
    கேட்டுக் கொண்டே வந்தேன்…
    மழைப்பேச்சு

    யாருமற்ற மரத்தடி
    என்னோடு பேசும்…
    இலைகள்

    பட்டினி மறந்த
    பரவச நிலை…
    மழை இரசித்த தருணங்கள்

    போதி மரம் எதற்கு
    மழையைப் பருகு வரும்…
    ஞானம்

    மாமதயானை

     

     

    Share
  • நெருப்பின் தாகம்..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

     

     

    நெருப்பின் துணையின்றி உலகம்தான் இயங்குமா?

    ……….நீரும் நெருப்புமின்றி நீடித்துயிர்வாழ முடியுமா.?

    இருட்டறையில் சூழ்ந்துள்ள இருள்தான் விலகுமா?

    ……….உருப்படியான காரிய மெதற்குமதன் ஆசிதேவை.!

    உருவபொம்மை எரிக்கவும் உயிர் போனபின்னால்

    ……….உடலைச் சாம்பலாக்க அக்கினி அவசியம்தான்.!

    பருவத்தில் தோன்றும் தாகத்தைக் காதல்தீர்க்கும்

    ……….பசிநெருப்பின் தாகமோ பாருலகையே யழிக்கும்.!

     

    எண்ணை வளமிகுந்த சிரியாவோர் அரபுநாடாம்

    ……….எல்லோருக்கும் இதன் மேல் பொறாமையுண்டு.!

    பண்ணைக் கால்நடை வளர்ப்பில் முன்னோடியது

    ……….பகலிரவாய் மதயினக் கலவரத்தால் எரியுதின்று.!

    பிண்டம் தேடும் வல்லூறுகளிதை வட்டமிடுகிறது

    ……….பற்றியெரியும் நெருப்பின் தாகமடங்கும் வரை.!

    கண்ணை மூடிக்கொள்ள வைக்கும் கொடுமைக்

    ……….கலவரத்தால் “சிரியா” சிறிய நரகமாகிவிட்டதா.?

     

    அரசனின் மாளிகை..அவனாண்ட நாட்டையுமே

    ……….எரித்து சாம்பலாக்கியது கண்ணகியின் சாபம்.!

    கரத்தாலொடுக்க முடியாக் காட்டுத்தீயில் சிக்கி

    ……….காளையர் கன்னியர் குரங்கணித் தீக்கிரையானர்.!

    அரவணைத்து முத்தம் தந்தனுப்பிய பிஞ்சுகளை

    ……….அரும்பை…பள்ளியிலே எரித்ததன் தாகம்தானே.!

    பரவிய நெருப்பின் தாகத்தைத் தணிக்க முடியாது

    ……….பல்லுயிரும் எரிந்து மடியுதிங்கே காரணமின்றி.!

     

    =========================================================

     

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு:: 17-03-2018

     

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (266)

    அன்பினியவர்களே!
    அன்பான வணக்கங்கள் இதோ அடுத்த மடலில் உங்களைச் சந்திக்க ஆவலாய் விரைந்துள்ளேன். கல்வி என்பது ஒரு மனிதனுக்கு மேம்பட்ட அறிவையளிப்பது. வாழ்வின் பொதுவான சிக்கல்களை எவ்வாறு இலகுவாகச் சமாளிப்பது என்பது மட்டுமின்றி உலகின் பல அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றும் அறிவைக் கல்வி அளிக்கிறது என்பதுவே நிதர்சனமான உண்மை. மனித வாழ்வின் வாழ்க்கை நிலைகள் காலங்களுக்கூடாக மாறி வந்திருக்கிறது. அம்மாற்றங்களின் விளைவாக அவ்வப்போது அவர்களது தேவைகளும் தமது வடிவத்தில் மாற்றமடைந்து வந்திருக்கிறது. இம்மாற்றங்களைச் சமாளிப்பதற்காக, அதற்கான அடித்தளத்தை உள்வாங்கி அம்மாற்றங்களுக்குத் தேவையான அளவு அறிவையளிக்கக் கூடிய வகையில் கல்வியின் வடிவங்களும் மாற்றமடைந்தே வந்திருக்கிறது. இவைகள் நிச்சயமாக சமுதாயத்துக்கு இன்றியமையாத தேவை எனலாம்.

    மனித சமுதாயம் உலகளாவிய ரீதியில் தொடர்ந்து கண்டு வந்த மாற்றங்கள் அனைத்து நாடுகளிலும், அனைத்து சமுதாயங்களிலும் ஏறத்தாழ ஒரே மாதிரியான மாற்றங்களாகவே காணப்படுகின்றன. ஆனால் இம் மாற்றங்களை அவைகள் அடைந்த காலகட்டங்கள் அந்தந்த நாடுகளின் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்ப வேறுபட்டே இருக்கின்றன. மனிதனுடைய வாழக்கையின் மாறுதலில் மிக முக்கியமான மாறுதல்கள் அவன் வாழும் சூழலின், மாற்றங்களும் அவைகளின் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் தன்மையில் தேவைப்பட்ட போக்குவரத்து வசதிகளுமேயாகும். கால்நடையாகப் பயணித்த மனிதனின் வாழ்வின் மாற்றங்கள் அவனைக் கைவண்டி, மாட்டு வண்டி, குதிரை வண்டி, கார், பஸ்,  சைக்கிள், மோட்டார் சைக்கிள், ரெயில், விமானம், ராக்கெட் என பல்வேறு பரிமாணங்களுக்கூடாகப் பயணிக்க வைத்திருக்கிறது.

    இவைகளின் மாற்றங்களுக்குப் பின்னணியில் கண்டுபிடிப்புகளும், அவற்றைக் கையாண்ட விஞ்ஞானிகளும் இருந்திருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் இக்கண்டுபிடிப்புகளைக் கையாளும் திறமையைக் கல்வியே ஈந்திருக்கிறது என்றால் மிகையாகாது. சமுதாயத் தேவைகளுக்கேற்ப கல்விமுறையை விஞ்ஞானம், கலை, சட்டம், மருத்துவம், பொறியியல்,வணிகம் எனப் பல்வேறு கட்டமைப்புகளுக்கூடாகச் சீராக்கினார்கள். எந்தெந்தத் துறையை எவரெவர் தேர்ந்தெடுத்தாலும் அதற்குரிய அடிப்படைக் கல்வியறிவு அவர்களுக்கு இருக்கிறதா என்று சோதித்தே அவர்களை அத்துறைக்கு அனுமதித்தார்கள். இன்றைய காலகட்டத்தில் எந்தத்துறை தமது வாழ்வின் வசதியைப் பெருக்கிக் கொள்ளக்கூடிய வகையில் பொருளீட்ட உதவுகிறதோ அந்தத்துறையயே பெரும்பான்மையோர் தேர்ந்தெடுப்பதை அவதானிக்கலாம். அத்தகைய சூழலில்தான் சமுதாய மாற்றங்களின் தேவைகளின் முன்னிலையாக சிவில் பொறியியல் துறை நிர்வகிக்கப்பட்டது.

    19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பல கண்டுபிடிப்புகளை, பல திறமைகளை கொண்டுவரக்கூடிய அளவில் அவர்களுடைய அறிவுத்திறனை வளர்க்கக்கூடிய அளவுக்கு முன்னேற்றங்கள் நிகழ்ந்திருந்தன. அகிலத்தின் பல பாகங்களையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்து பெரிய பெரித்தானியா எனும் நிலையை அடைந்திருந்த காலகட்டமது. அபோதுதான் 1806ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ஆம் திகதி, இங்கிலாந்தின் ஹாம்ஷையர் பகுதியில் உள்ள போட்ஸ்மவுத் எனும் இடத்தில் பிரெஞ்சு சிவில் பொறியியலாளரான மார்க் இசம்பாட் புரூனெல் என்பவருக்கும் சோபியா கிங்டொம் எனும் ஆங்கிலப் பெண்மணிக்கும் அவதரித்தார் “இசம்பாட் கிங்டொம் புரூனெல்.” இவருக்கு இரண்டு மூத்த சகோதரிகள் இருந்தார்கள். வல்லமை வாய்ந்த பொறியியலாளரான இவரது தந்தை நான்கு வயதிலேயே இவருக்கு வரைதல், மற்றும் கூர்மையான அவதானம் என்பனவற்றுக்கான பயிற்சிகளை அளித்தார் என்பதும், எட்டு வயதில் கட்டிட வரைதல் பயிற்சியும், கட்டிட வரைபடங்களிலுள்ள பிழைகளைக் கண்டறியும் திறமைகளையும் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    14 வயதாயிருக்கும்போதே இளம் புரூனெல் பிரெஞ்சுப் பல்கலைக்கழகத்தில் சேர்க்கப்பட்டார். இவருக்குப் பதினைந்து வயதாக இருக்கும் போது அப்போது 5000பவுண்ட்ஸ் கடனில் மூழ்கிய அவரது தந்தை சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையிலிருந்து விடுதலையாகும் வழி தெரியாது இருந்த அவருக்கு அன்றைய ரஸ்யா அடைக்கலம் கொடுக்க முன்வந்தது. தம்முடைய நாட்டு வல்லமை மிக்க சிவில் பொறியியலாளர் ஒருவரை இழக்க விரும்பாத அன்றைய இங்கிலாந்து அரசு தாமே அவரது கடனை அடைத்து அவரை விடுவித்தது.

    இங்கிலாந்தில் அமைக்கப்பட்ட முதலாவது ஆற்றுக்குக் கீழான சுரங்கப்பாதையை அமைக்கும் பணியில் முக்கிய பொறியியலாளராகவிருந்த இவரது தந்தையுடன் உதவியாளாராக இவர் பணிபுரிந்தார். இப்பணியின்போது ஏற்பட்ட இரண்டு பெரிய விபத்துக்கள் ஒன்றில் புரூனெல் காயமடைந்தார். இவரின் திறமைகளின் சான்றாக இன்றும் நாம் காண்பது “Clifton suspension bridge-கிளிப்டன் தொங்குபாலம்.”  இங்கிலாந்தின் பிறிஸ்டல் நகரில் இது அமைந்துள்ளது. இங்கிலாந்தின் பொற்காலம் என்று சொல்லப்பட்ட “தொழிற்சாலைப் புரட்சி” யில் முக்கிய பாகத்தை வகித்தவர் இவர் என்பதே உண்மை. இங்கிலாந்தின் ரெயில் பாதை அமைப்புக்களில் அவற்றை மிகவும் சிறப்பான முறையில் திட்டங்களைத் தீட்டி நிர்மாணிக்கும் பணியில் இவரே முதலிடம் வகித்திருக்கிறார்.

    இங்கிலாந்தின் முதலாவதாக அமைக்கப்பட்ட மிக நீண்ட ரெயில் பாதையில் ஓடும் “த கிரேட் வெஸ்டேன் ரெயில்வே (The great Western Railway) வரைபடத் திட்டமிடல் தொடங்கி நிர்மாணிப்புக்குக் கொண்டு வந்தவர் இவரே. இந்த ரெயில் சேவையின் ஆரம்பம் 1833ஆம் ஆண்டு பிறிஸ்டல் நகரில் நிகழ்ந்தது. இதன் முதன்மைப் பொறுயியலாளரான புரூனெலின் திட்டம் லண்டனில் டிக்கட் வாங்கும் பயணி அந்தப் பயணச்சீட்டுடன் நியூயோர்க் நகரை சென்றடைய வேண்டும் என்பதே! எப்படி என்கிறீர்களா ? லண்டனில் ” த கிரேட் வெஸ்டேன் ” ரெயில் சேவையில் ஏறும் பயணி பிறிஸ்டலைச் சென்றடைந்து அங்குத் துறைமுகத்தில் ” த கிரேட் வெஸ்டேன் ஸ்டீம்போட் ” எனும் கப்பற்சேவையில் தமது பயணத்தைத் தொடர்ந்து நியூயோர்க் நகரைச் சென்றடைய வேண்டும். அதுவரையும் சாதாரண “கேஜ்”எனும் அளவிலான தண்டவாளத்தைக் கொண்டிருந்த ரெயில் சேவை புரோட் கேஜ் (Broad gauge) எனும் தண்டவாள அமைப்புக்கு மாற்றியவர் எனும் பெருமை இவரையே சாரும்.

    இங்கிலாந்தின் அதிசிறந்த பொறியியலாளர் எனும் பெருமை பெற்ற இவர் அமைத்த பல ரெயில்வே பாலங்கள், சுரங்கப்பாதைகள் இன்றும் இவரது பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. 19ஆம் நூற்றாண்டின் பொறியியல் சிங்கம் எனப்பெயர் பெற்ற இவர் 2002ம் ஆண்டு பிபிஸி நடத்திய பிரித்தானியாவின் பிரபல்யமான 100 பேர்கள் எனும் பொதுமக்கள் கருத்துக்கணிப்பில் புரூனெல் அவர்கள் இரண்டாவதாகத் தெரிவு செய்யப்பட்டார்.

    இவருடைய பெயரால் இயங்கிக் கொண்டிருக்கும் புரூனெல் பல்கலைகழகம் இவரைப் போன்ற திறமையாளர்கள் காலத்தால் அழிக்கப்படாதவர்கள் என்பது யதார்த்தம்.

    தனது 53வது வயதில் காலன் இவரைத் தன்னோடு அழைத்துக் கொண்டு விட்டான். 1859ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி இருதய நோய்க்கு இரையாகினார் புரூனெல். ஏப்பிரல் மாதம் பிறந்த இணையற்ற ஆங்கிலப் பொறியியலாளரான இவரைப் பற்றிய நினைவுகளை உங்களுடன் மீட்டியதில் ஆனந்தமடைகிறேன்.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

     

    Share
  • பலம் தரும் பகுத்தறிவு

    நாகினி 

     

    பணக்கட் டிலெழு துகோல் சொருகி
    .. பணத்தை இழுத்து சுருட்டும் செயலால்
    குணத்தி னுயர்மா னமுஞ்சிந் தனையும்
    … குறுகி பகுத்த றிவுமெல் லழியும்

    அழியும் பகுத்த றிவினால் மனிதர்
    .. அடையா ளமிழந் துநிற்க கயமை
    வழியும் தொடரு தலினால் உறவின்
    .. வலிமை யுமிங்கு நசுங்கு கிறது

    நசுங்கி கனவா கிடவாழ்வு வழிகளில்
    .. நடத்தி டலாகுங் கொடுந்து யரென
    அசுத்த நினைவுகள் தொடரா மழகு
    .. அரணாய்ப் பகுத்த றிவிலு யரலாம்

    உயர வழிவிட் டகலும் வெறுப்பு
    .. உமிழும் கயமை பிணக்கு விடுத்து
    நயமாய் அடங்கும் பகுத்த றிவினில்
    .. நடந்தி டயென்றும் பலப்ப டுமுள்ளம்!

     

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 11

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

     

    சைமனும், மெட்ரீனாவும் தாங்கள் இதுவரையிலும் யாருக்கு உணவும், உடையும், அடைக்கலமும் கொடுத்திருந்தனர் என்று உணர்ந்த போது அளவில்லாத ஆச்சரியமும், மகிழ்ச்சியுமடைந்து கண்ணீர் விட்டனர். மைக்கேல் மேலும் தொடர்ந்து “நான் மனிதனாகித் தனியாகவும் நிர்வாணமாகவும் விடப்பட்டேன். அது வரையிலும் மனிதனுடைய தேவைகளும், பசி பட்டினி, குளிர் ஒன்றும் அறியாதவனாக இருந்தேன். நான் குளிரில் உறைந்து அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து நின்ற போது எதிரில் ஒரு சிறிய தேவாலயத்தைக் கண்டேன். அங்குச் சென்ற போது ஆலயத்தின் கதவுகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆகவே குளிருக்கு ஒதுங்க ஆலயத்தின் பின்பறம் சென்று அமர்ந்தேன். மாலை வேளை நெருங்கிய போது குளிரும், பசியும், உடல் வேதனையும் அதிகரித்தது. அப்போது திடீரென ஒரு மனிதனின் குரல் கேட்டது. அவன் ஒரு சோடிச் செருப்புகளைக் கையில் ஏந்திக் கொண்டு தனிமையிலே பேசிக் கொண்டு சென்றான். நான் மனிதனாக மாறிய பின்பு பார்த்த முதல் மனித முகம் அவனுடையதுதான். அவன் முகம் மிகவும் விகாரமாகக் காணப்பட்டதால் தலையைக் குனிந்து கொண்டேன். இங்கு நான் பசியிலும் குளிரிலும் நடுங்கிக் கொண்டிருந்த போது அவன் குளிர்காலத்தில் எப்படித் தன்னையும் குடும்பத்தையும் காப்பாற்றுவது, போஷிப்பது என்று பேசிக் கொண்டு சென்றான். அவன் முதலில் என்னைப் பார்த்து அறுவெறுப்படைந்து அங்கிருந்து விலகிச் சென்றான். எனக்கு மிகவும் ஏமாற்றமாக இருந்தது. சிறிது நேரத்தில் அவன் திரும்பி வரும் சத்தம் கேட்டது. நான் அவனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை. மரணக்களையாக இருந்த முகம் இப்போது தெளிவாக இருந்தது. இறைவனின் பிரசன்னத்தை அவனில் கண்டேன். அவன் என்னைத் தூக்கி விட்டு ஆடை அணிவித்துத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். வீட்டிற்குள் நுழைந்த போது ஒரு பெண் எங்களைச் சந்தித்தாள். அவள் முகம் அவனுடைய முகத்தை விட விகாரமாக இருந்தது. அவள் வாயிலிருந்து புறப்பட்ட வார்த்தைகளில் மரணத்தின் ஆவி நிறைந்திருந்தது. அவளைச் சுற்றியிருந்த மரணத்தின் வாடையால் எனக்கு மூச்சு விட முடியவில்லை. அவள் என்னைக் குளிருக்குள் துரத்த மனமுடையவளாக இருந்தாள். அவள் அப்படிச் செய்தால் மரணமடைவாளென்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்.

    அந்த நேரத்தில் அவள் கணவன் அவளிடம் இறைவனைப் பற்றி பேசின போது அவள் மனம் மாறியது. அவள் எனக்கு ஆகாரம் கொண்டு வந்து கொடுத்த போது அவள் முகத்தைப் பார்த்தேன். அவளிடமிருந்த மரணக்களை மாறி இறைவன் குடியிருப்பதைக் கண்டேன். அப்போது இறைவன் கேட்டிருந்த முதல் உண்மையைத் தெரிந்து கொண்டேன். “மனிதனுள் வாசம் பண்ணுவது என்ன? “மனிதனினுள் வாசமாயிருப்பது அன்பு”. இறைவன் என்னை மறக்காமல் முதல் உண்மையை வெளிப் படுத்தியுள்ளார் என்று நினைத்து முதல் முறையாகப் புன்னகைத்தேன்.
    நான் உங்களோடு தங்கி ஒரு வருடம் ஆகி விட்டது. ஒரு நாள் ஒரு மனிதன் வந்து தனக்குப் பூட்ஸ்கள் தைக்க வேண்டும், அவை ஒரு வருடம் உருக் குலையாமலும், தையல் பிரியாமலும் இருக்க வேண்டுமென்றான். நான் அவனைப் பார்த்த போது அவன் பின்னால் மரண தூதன் நின்று கொண்டிருந்தான். அவன் என்னுடைய தோழன். வேறு யாரும் அவனைக் காணவில்லை. அன்று மாலைக்குள் அந்த மனிதனின் ஆத்துமாவை எடுத்துச் செல்வான் என்று தெரியும். ஆனால் அது தெரியாமல் அந்த மனிதன் பூட்ஸ்கள் ஒரு ஆண்டு உழைக்க வேண்டுமென்று திட்டமிட்டுக் கொண்டிருந்தான். நான் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது உண்மை “மனிதனுக்கு அருளப்படாதது எது?, மனிதனுக்கு அருளப்படாதது அவனுக்கு எது தேவை என்று தெரிந்து கொள்ள முடியாதுதான்”. என்னுடைய தோழனைப் பார்த்ததாலும், இரண்டாவது உண்மையை அறிந்து கொண்டதாலும் இரண்டாவது தரம் புன்னகைத்தேன்.

    கடைசி உண்மையைத் தெரிந்து கொள்ள உங்களோடு தங்கியிருந்தேன். ஆறு வருடங்கள் சென்று விட்டன. இன்று அந்த இரட்டைச் சிறுமிகள் அந்தப் பெண்ணோடு வந்த போது அவர்களை அடையாளம் கண்டு கொண்டேன். அந்தச் சிறுமிகளின் தாயின் ஆத்துமாவை எடுக்கச் சென்ற போது அவள் தன் ஆத்துமாவை எடுக்க வேண்டாமென்று கெஞ்சி, “ தாயும், தந்தையும் இல்லாமல் குழந்தைகள் வாழ முடியாதென்று” சொன்னதை நான் நம்பினேன். ஆனால் அந்த அன்னியப் பெண் சிறுமிகளைத் தன் குழந்தைகளாகப் பாவித்துப் பாலூட்டி, அன்புசெலுத்தி வளர்த்த விதமும், அவர்களுக்காகக் கண்ணீர் விட்ட போது அவளிடம் உயிருள்ள இறைவன் இருப்பதைக் கண்டு மூன்றாவது உண்மையை “எதனால் மனிதர்கள் வாழ்கிறார்கள்?” என்பதைப் புரிந்து கொண்டேன். இறைவன் என் பாவத்தை மன்னித்து விட்டார் என்று உணர்ந்ததால் மூன்றாம் முறை புன்னகைத்தேன்.

    தொடரும்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180329 – Dialogue with Arjuna – lr -icam -A4

    ”பேடித்தனம் காண வேடிக்கை யாயிருக்கு
    வாடிய அக்கினியே வீரியம்கொள் -சூடிய
    உள்ளத் தளர்ச்சி ஒழிக, நிமிர்ந்தெழு
    கொல்லத் துணிவதே கடன்”….கிரேசி மோகன்….!

    ”you too அருச்சுனா!, யானை அமர்ந்தவர்
    cuteடாக நிற்க கிளியோவா(கிளியோபாட்ரா)! -dutyயாய்
    ஸீஸராய்க் கண்ணனவர் போஸ்கொடுத்து ஆண்டனியை
    ஏஸியபின், கீதை எடுப்பு’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180328 The Listener -DWA -icam

     

    பகவான் உவாச
    ———————-
    ”காரியம் அற்றசோர்வு வீரன் உனக்கெதற்கு
    சூரிகள் விண்ணிடை சேர்ப்பாரோ ! -நாரியாநீ(பெண்ணா நீ)!
    தேரையும் போரையும் தேர்ந்தெடுத்த என்னைக்கேள்(LISTEN)
    நூறை ஒடுக்க நிமிர்”….கிரேசி மோகன்….!

    ”கலக்கம் உறாதே விலக்கொணா கர்மம்
    நிலத்தில் பிறப்பும் இறப்பும் -இலக்கணம்
    பார்க்க இதுகவிதை இல்லைகாண் பார்த்தனே!
    பார்த்தால் புசிக்கும் பகை”….!

    ”விரையற்ற பூக்கள் விரயமாதல் போலே
    உரையற்ற சொற்கள் உதிர்ப்பர் -மறையுற்ற
    வாசகத்தில் மேம்போக்காய் மீதுலாவி கற்றோரைப்
    பேசுவார் கேலி புரிந்து’’…..கிரேசி மோகன்….!

    Share
  • ரமணர்

    திருவா திரைமுன், திருச்சுழி ஊரில்
    கருவாய் அழகம்மை கர்பம் -உருவாய்
    பெருந்தவம் செய்த பகவான் ரமணர்
    பிறந்து துறந்தார் பிறப்பு!….கிரேசி மோகன்….!

    Share
  • சங்ககாலப் பெண்மையைப் போற்றுவோம்!

    -டாக்டர். இராம. மலர்விழி மங்கையர்க்கரசி

     “சமூகம் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் நீண்ட காலமாக ஒன்று சேர்ந்து வாழ்வதற்காக மக்கட்கூட்டமாக ஏற்படுத்திக் கொள்ளும் அமைப்பு. தம் தேவைகளைப் பெறுவதற்காக மக்கள் தங்கள் உறவுகள் இவை என்று முடிவுசெய்து அவை நடைபெற வேண்டிய வழிகளைப் பற்றிய விதிகளை வகுத்துக் கொள்கின்றனர். அவை பொருளாதார அமைப்பு, கல்வி, கலை, சமயம், பொழுதுபோக்கு, சட்டம், சமயச் சடங்குகள், பழக்கவழக்கங்கள் போன்றவற்றில் அமைந்து சமூகத்திற்கு நிலைபேற்றை அளிக்கின்றன”என்ற சமூகப் பார்வையுடன் திணைசார் மக்கள் கூட்டத்தின் தொகுதியாகிய சங்ககால மக்கள் வாழ்வியல் பதிவுகளில் பெண்களின் நிலைப்பாடு சுட்டப்பட்டுள்ள சான்றுகளின் வழி அறியவேண்டியதாகின்றன.கலைக்களஞ்சியம் – தொகுதி 4 – தமிழ்வளர்ச்சிக் கழகம் – சென்னை – பக். 477-47.

    காதலானாலும் சரி, காமம் ஆனாலும் சரி கடைசிக் காலம் வரை ஆண்மகனுக்காகவே பிறந்து அவனுக்காகவே அவன் பொருட்டே வாழ்ந்து அவனுக்குள்ளாகவே அடக்கமாகிய பெண்ணைத் தான் சங்க இலக்கியம் காட்டப் போகிறதோ எனும் ஊகத்தினோடே உங்களை அழைத்துச் செல்கிறேன் நேயர்களே! கணவனுக்காக மட்டுமே தன்னை அலங்காரம் செய்துகொண்டு அவனது நலத்திற்காகவே வழிபட்டுச் சாவதற்கு நான் அஞ்சவில்லை. செத்தால் அடுத்த பிறவியில் வேறு ஒருத்தி பிறந்து உன்னோடு சேரமுடியாது போய்விட்டால் என் காதலனை என்னால் எப்படி மறக்கமுடியும் என்று ஒரே காதல் கணவனுக்காக ஏங்குபவளாகவே காணப்படுகிறாள்.

    இம்மைமாறி  மறுமையாயினும்;
    நீயாகியர்  என்  கணவனே
    யானாகியர் நின்  நெஞ்சுநேர்பவளே”(குறுந்.49)     என்ற குறுந்தொகைப் பாடல்              எத்தனை      பிறவி              எடுத்து வந்தாலும்              உன் மனத்துக்குப் பிறந்தவளாக நான் மட்டுமே இருக்க வேண்டும் என்று பெண்களின் தீராத்தாகத்துடன் திகழ்ந்த மனத்தைக் காட்டுகிறது.

    கணவன்       மறுமணம்   புரிந்தபொழுதும்   அவனை              வாழ்த்தி வரவேற்றிருக்கிறாள். பரத்தமையை அவன் நாடியபோதும் வசை பாடாமல் கடவுள் கற்புத்தன்மையால் ஏற்றுக் கொண்டிருந்திருக்கிறாள். அப்படி இல்லாமல் எதிர்த்துக் கேள்வி கேட்டால் குடும்பப் பெண்ணுக்குத் தகாது என்பதும் அச்செயல் அவர்களுக்கு வறுமையை உருவாக்கும் என மூட நம்பிக்கையால் முடக்கப்பட்டிக்கிறாள். தனக்காகத் தன் காதலனைக் கடிந்துரைப்போரை              அதற்காகவே           தடுத்தும் இருக்கிறாள். தலைவனுக்குப்  பழி     நேராதவாறு             அவனது பரத்தமை ஒழுக்கத்தைப் பிறருக்கு மறைக்க முயல்வதும் அவள் இல்லறக் கடமைகளுள் ஒன்றாகவே மேற்கொள்ளப் பட்டிருக்கிறது. ஐங்குறுநூறு             –  292:2-5;
    குறுந்தொகை–  252ஆம்   பாடல்; அகநானூறு 316-10-117.

    மனைக்கு விளக்கம் மடவாள் என்பதற்கேற்ப சங்ககாலப் பெண்களின் இல்வாழ்க்கை, குடும்ப நலன்முன்னிறுத்தியே செயல்கள் அமைந்திருக்கின்றன.

    ”விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும்
    அரும்பெறல் புதல்வனை முயங்கக் காணவும்
     ஆங்கு அவிந்து ஒழியும் என் புலவி தாங்காது
     அவ்வவ் இடத்தான் அவை அவை காண
    பூங்கண் மகளிர் புனைநலம் சிதைக்கும் மாய மகிழ்நன் பரத்தமை நோவென்     தோழி கடன்நமக்கு எனவே”(கலி.75-27) என்று கலித்தொகைத் தலைவி மேற்சொன்னவை அனைத்தையும் ஆமோதித்துத் தன் தோழியிடம் புலம்பித் தீர்த்திருக்கிறாள் என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. சிறு பருவத்திலேயே பெண்கள் இல்லப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள். வீட்டுக்குத் தேவையான தண்ணீரைக் கிணறு, ஆறு, குளங்களில் எடுத்துவரல், வீட்டுத் தோட்டம் அமைத்தல், உணவுப் பொருள் தொடுத்தல் போன்ற பணிகளைச் செய்துள்ளனர். குறிஞ்சி நிலப்பெண்கள் தினைப்புனக் காவல்புரிந்துள்ளனர். விளைந்த திணையைப் பாதுகாத்துக் காயவைத்துச் சேமித்தும் வைத்தனர். தன் தந்தை தமையன்மார் வேட்டையாடிக் கொண்டுவந்த விலங்குகளின் ஊனினைப் பாதுகாத்து எதிர்காலத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கேற்ப பக்குவப்படுத்தி வைத்தார்கள். இவ்வேலைகளினூடே தம் காதலையும் வளர்த்துக் கொண்டார்கள். நற்றிணை – 134-3-6, குறுந்தொகை – 335-1-2, ஐங்குறுநூறு – 365-1.3.

    முல்லை நிலப்பெண்கள் வீடுகளில் உள்ள கறவைப் பசுக்களிடம் தீம்பால் கறந்து கன்றுகளை அவற்றிற்குரிய தாம்புகளில், கழிகளில் பிணைத்து அவற்றைப் பாதுகாத்திருக்கிறார்கள். மாடுமேய்த்தல் தொழிலையும் செய்திருக்கிறார்கள் என்பதை முல்லைக் கலியில் கலித்தொகைப் பாடல் நமக்குப் படம்பிடித்துக் காட்டுகிறது. கூடுதலாக நாள்தோறும் தயிர்கடைந்து மோராக்கி அதனைப் பிறநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்றுப் பொருளீட்டி வீட்டின் பொருளாதாரத்தை மேம்பாடடையவும் செய்துள்ளனர். (கலித்தொகை – 111, 116).

    மருதநிலப் பெண்கள் விதைத்த போது உடனிருந்து களையெடுத்து விளைந்த கதிர்களைப் பறவைகள் பற்றிச் செல்லாது காத்துப் பின் அறுத்துஇடித்து அரிசியாக்கும் பொறுப்பை ஏற்றிருந்தார்கள் என்று அகநானூறு காட்டுகிறது. பூவிற்ற பெண்களையும் நற்றிணையில் இடம்பெறச் செய்துள்ளனர். அகநானூறு–145-16-19,  நற்றிணை  –  97-6-9.

    நெய்தல் நிலப்பெண்கள் கடல்மேற் சென்றவர் வரும்வரைக் காத்திருத்தல் இரங்குதலாக இருந்தபோதும் ஆடவர் கரைவரும்போது கொண்டு வருகின்ற மீன்களைப் பிற இடங்களுக்கு எடுத்துச் சென்று விற்றல், விற்றதுபோக மீதம் உள்ள மீன்களை உணக்கல், அதாவது உலரவைத்து கருவாடு        தயாரித்தல், உப்புவிளைத்தல்,         விளைந்த உப்பை நெல்லாகப் பண்டமாற்று              வியாபாரம் செய்தல் ஆகியன அவர்களின் முதன்மைப் பணிகளாக விளங்கின.

    நானிலத்தும் வாழ்ந்த பெண்கள் தம் தந்தையர், கணவர், தமையன்மார் ஆகியோருக்குப் பணியின் இடையே உணவுகொண்டு போய்த் தருதலையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். கலித்தொகை – 108-31-32, அகநானூறு – 60-1-6. ஆதரவற்றோருக்  காதரவளித்த செய்தியை,

    “கறை பட்டு  வந்த  நம்  சேரியின்  போகா
    முடமுதிர்  பார்ப்பானைத் தோழி!நீ போற்றுதி என்றி”                        (கலி. 65: 7-9) என்பதாகக் கலித்தொகைப்பாடல் உணர்த்துகிறது.

    உடன்போக்கில் பிரிந்த   மகளை மருமகன் வீட்டில் சென்று காணும் பொறுப்பு தாய்            அல்லது செவிலித்தாய்க்கே இருந்துள்ளது. எனவே பிள்ளைகளின் நடத்தை, திருமணம் முதலானவற்றைக் கவனிக்கும் முழுப்பொறுப்பும் தாய்க்கே இருந்திருக்கிறது. இத்தன்மை தாய்வழித் தலைமையின் ஓர் எச்சமாக விளங்குவதாகக் கொள்ள முடிகிறது.

    முதுமை         அடைந்த       பெண்கள்              இறைவழிபாடு,      விரிச்சிகேட்டல், சகுனம் பார்த்தல்   போன்றவற்றை              நம்பிக்கையுடன் மேற்கொண்டிருந்திருக்கிறார்கள். வீட்டில் உள்ள இளஞ்சிறார்களைப் பாதுகாப்புடன் புறத்தே வழிபாடு போன்றவற்றிற்காக அழைத்துச் சென்றும் வந்துள்ளனர். மதுரைக் காஞ்சி – 460-467. வயது முதிர்ந்த பெண்டிரைப் பாதுகாக்கும் பொறுப்பு அவள் மகனுக்கு உரித்தாகியது என்பதைப் புறநானூறு(159-1) சுட்டிக்காட்டுகிறது. யாரும் இல்லாத போது தம் முயற்சியில் தானே பொருளீட்டியும் வாழ்வு நடத்தியிருக்கிறாள் பெண்.

    “பெரும்  பின்னிட்ட  வால்நரைக்  கூந்தலர்
      நன்னர் நலத்தர்    தொன்முது  பெண்டிர்……   
     தாம் வேண்டு  பண்ணியம்
     கமழ் நறும்பூவோடு மனைமனை மறுக”(மது.கா. 408)

     என மதுரைக் காஞ்சி குறிப்பிட்டுக் காட்டியுள்ளது. “பெண்டிரும் தம் பதம் கொடுக்கும்”(புறம்.151-5) என்று புறநானூறும் குறிப்பிடுகிறது. “அவளை மாறி யாம் வரும் செல்வம் எம் கேள்வன் தருமோ”என எதிர்வாதாடிப் பொருளீட்டிய நிலையும் இருந்துள்ளது. கலித்தொகை – 106, 44-45.

    கள்ளினைக் காய்ச்சித் தயாரிப்பதையும் விற்பதையும் பணியாகக் கொண்டவர்கள் அரியற் பெண்டிர் என அழைக்கப்பட்டனர். கள்ளடு மகளிர் எனப் பெரும்பாணாற்றுப் படையில்(339) குறிப்பு வருகிறது. பிறர் ஆடைகளைத் தூய்மைசெய்யும் பணியையும் பெண்களே மேற்கொண்டிருந்தனர். இவர்கள் புலத்தியர் எனவும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள் தூய்மை செய்த ஆடைக்குக் கஞ்சி போட்ட குறிப்புச் செய்தியும் குறுந்தொகையில் இடம்பெற்றுள்ளது.

    சங்க  காலத்திலேயே    சுயஉதவிக்குழுக்கள்              இருந்துள்ளன.         பிறரை மகிழ்வித்தலை              நோக்கமாகக்          கொண்டு      செயல்படும்              விறலி, பாடினி போன்றவரைத் தொழில் மகளிர் என்றே கூறலாம். இவர்களைத்தாம் பிறபெண்டிர் போல் தனித்துப் பணியாற்றாது குழுவினருடன் இணைந்து வினையாற்றியிருக்கிறார்கள். ஆனால் தலைமைப் பொறுப்பு ஆடவரைச் சார்ந்ததாகவே உள்ளது. மலைபடுகடாம் – 568-570. குற்றேவல் மகளிர் செல்வந்தர் இல்லங்களில் வேலை பார்த்துள்ளனர். அரண்மனைப் பணி, அந்தப்புரக் காவல் இவற்றையும் மகளிரே மேற்கொண்டனர்.

    “பீடு கெழு  சிறப்பிற்  பெருந்தகை  அல்லது
      ஆடவர் குறுகா அருங்கடி வரைப்பின்”(நெடு.வா.106-107).

    என்ற நெடுநல்வாடைப்  பாடல்வரி     அதனை உறுதிப்படுத்தி நிற்கின்றது. சங்கச்    சமூகம்              பெண்மைக்குப்      பல      ஏற்றங்களையும் வழங்கிச் சிறப்பித்துள்ளது.    பெண்             மகவு, பெண்             குழந்தை       மிக்க விருப்பத்துடனேயே              ஏற்றுக்            கொள்ளப்பட்டுள்ளது.      நல்ல வேளையாக கள்ளிப்பால்            சம்பவங்கள்              ஏதும்  நிகழ்ந்ததாக சான்றுகள் இல்லை. சிறுகுடி நல்கூர்ந்தார் செல்வ மகள்”என்றே  கலித்தொகை பெண்பிறப்பைப்  கொண்டாடி மகிழ்ந்துள்ளது.              குறிப்பிட்ட வயது அல்லது பருவம் வரும் வரைப் பெண் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றி ஊஞ்சலாடியும், அம்மானை பாடியும், கழஞ்சாடியும் விருப்பம் போல் ஆடிப்பாடிக் களித்துள்ளனர். நீராடல், மலைவளம், சோலைவளம் காணல் முதலானவற்றில் ஆண்களுக்குச் சமமாக மட்டும் அல்லாமல் இணைந்தும் இன்பம் நுகர்ந்து மகிழ்ந்துள்ளனர். பரிபாடல் – 10,19, கலித்தொகை – 27, புறநானூறு -243, குறுந்தொகை – 3. விரும்பிய பெண்ணை மணப்பதற்குத் தடைகள் வந்த போதிலும் தந்தையுடன் சேவகனாகப் பணிபுரிந்தேனும் அவன் மகளை மணந்து கொள்ள முயன்ற செய்திகள் நகைபட விளங்குகின்றன.

    ஆய்தொடிக் குறுமகள் வேண்டும் பொருளைக் கலம்நிறையக் கொண்டுவந்து உன்வீட்டாரிடம் தந்து மணம் முடிப்பேன். மறுத்தால் நான் என் வீடு, சுற்றம் இவற்றை விட்டு நீங்கி உன் தந்தையுடன் அவன் அளத்தில் உப்பு உழுவேன். பெரிய நீர்க் குட்டத்தில் அவன் கீழ்ப்பணிவேன். அவன் இட்ட பணியைச் செய்தேனும் உன்னைப் பெறுவேன் என்று பெறுவதற்காக ஆண் தன்னைத் தாழ்த்தி இரங்கி வருதலும் ஒரு வகையில் பெண்ணை மதிப்புடைய நிலையில் வைத்திருந்தமையையே காட்டி நிற்கின்றது.

    திருமணச்    சடங்குகளில்            பெண்களே              பங்கேற்றுள்ளனர்.              ஆயினும் புதல்வன் பெற்ற மங்கல மகளிர்க்கு மட்டுமே இச்சடங்கின் போது பங்கேற்கும் உரிமை உண்டு எனும்போது ஒருவகையில் பெண்குழந்தை பெற்றவள் இரண்டாம் நிலையில் தான் வைக்கப்பட்டாள் என்பதையும் காட்டுகிறது. அகநானூறு – 86-7-20.

    பதிற்றுப்பத்தின் பழைய உரையில் ஒரு குறிப்பு இடம் பெறுகிறது. அதாவது சேர மன்னர்களைக் குறிக்கும் போது “ஆன்றோள் கணவ, திருந்திய இயன்மொழித் திருந்திழை கணவ, ஒடுங்கீர் ஓதிக் கொடுங்குழை கணவ”என அவரது உரிமைமகளிராம் தேவியரும் சேர்த்துச் சுட்டப் பெறுகிறார்கள். இவ்வாறு சேர்த்துப் பாடப்பட்டதால் பெண்மை பெருமைப் படுத்திவிட்டார்கள் என எண்ணிவிடவேண்டாம். “மகளிரைச் சார்த்து வகையால் பாடுதலின்றித் தனித்துப் பாடுதல் மரபு அன்று. ஆதலில் இங்கே சேரனொடு சார்த்தி அவன் மாதேவியைச் சிறப்பித்தார்”என்ற குறிப்பு தனித்துப் பாராட்டப் படமாட்டாள் பெண். முழுவதும்    புறக்கணிக்கப்படாமல் உரிமை ஆடவருடன் இணைத்தாவது பாராட்டுப் பெற்ற நிலையை பெண் மதிப்புடனே இருந்துள்ளாள் என்பது விளங்குகிறது. பதிற்றுப்பத்தில் மட்டும் சிறப்பாக ஒரு விளக்கம் காணப்படுகிறது. அதாவது மன்னனைக் குறிப்பிடும்போது சேரமன்னனின் மகன் என்று மட்டும் கூறாது “ஆராத்திருவில் சேரலாதற்கு வேளாவிக் கோமான் பதுமன் தேவி ஈன்றமகன்”(பதிற்.4ம்பத்து, பதிகம்-1-3) எனத் தாயையும் முன்வைத்து அறிமுகம் செய்தலும் பதிவாகியுள்ளது. அரசனை வாழ்த்தும் போது “வேயுறழ் பணைத்தோள் இவளோடு ஆயிரம் வெள்ளம் வாழிய பலவே”(பதிற். 21,37-38)எனவும் அவன் தேவியயோடு இணைந்து வாழ்தலையும் எண்ணியே வாழ்த்தியுள்ளனர். மற்றோர் இடத்து அரசன் தாயை,
    “வயிறு மாசிலியர் அவன் ஈன்றதாயே”(பதிற்.20,27)எனவும் போற்றியுள்ளனர். ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் மீது பதிற்றுப்பத்துள்ஆறாம்பத்து பாடிய காக்கைபாடினியார் நச்சௌ்ளையார் அதற்காக அணிகலனுக்கு என்றுஒன்பது துலாம்பொன்னும் நூறாயிரம் பொற்காசும் பரிசாகப் பெற்றுள்ளார். இச்சம்பவம் பெண்பாற் புலவர்களும் ஆண்பாற் புலவர்களைப்போலவே ஒன்றாகவே பெருமைப்படுத்தப்பட்டிருக்கிறனர். சங்ககாலச்              சமூகப்பெண்கள் நிலையினை சங்க கால              வாழ்வியல் எனும் நூலாசிரியர் ந. சுப்பிரமணியர்பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டியுள்ளார்.

    “அக்காலத்துச் சமுதாயம் பெண்ணுக்கு எவ்வளவு கவுரவமும் பெருமையும் தர உடன்பட்டதோ அதற்கு உட்பட்டுப் பெண் ஆணின் உடைமையாகவே கருதப்பட்டாள்”என்ற அவரின் கூற்று சிந்தனைக்குரியது. திருமணத்திற்கு முன் தழையுடை அணிவதில் பெண்கள் காட்டும் விருப்பம் திருமணத்திற்குப் பின் இல்லை.(நற்றிணை – 123, 3.5) தந்தையில்லாவிட்டால் தமையன்மார் பொறுப்பில் விடப்பட்டு வாழ்ந்துள்ளனர். பொழுது போக்குதல் எனத் தனியே இல்லாது தொழிலும் இணைந்தே இடம்பெற்றிருக்கின்றது.(அகநானூறு – 320, குறுந்தொகை– 335) சமூகம்         தமக்கு            விதித்த கட்டுப்பாடுகளை விரும்பிஏற்றுக் கொண்டுள்ளனர் என்பதை      “கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும் புல்லாளே     ஆயமகள்”என்றுதான்              கூறிய வரிகளால் மெய்ப்பிக்கிறாள். மணம் புரிவதற்கும், மாலையிடுவதற்கும், மாட்டை ஏர் பிடித்துக் காட்ட வேண்டும் என்மனத்தில் இடம் பிடித்திடல் போதாதா? என எதிர்கேள்வி கேட்டதாக சுவடே இல்லை.(கலித்தொகை – 103,63-64) கருத்து வேறுபாடு காரணமாகப் பெண்கள் கணவனால் புறக்கணிக்கப்பட்டுப் பெற்றோரிடம் திரும்பியிருக்கலாமே என்று தோன்றும் வகையில் மருதத்திணைப் பாடல் அமைந்துள்ளது.

    ”தணந்தனை ஆயின் எம்இல்    உய்த்துக் கொடுமோ”(குறுந். 354)என்று தோழி தலைவனிடம் கூறுகிறாள். தலைவியைப் பிரிய நினைத்தால் எம்மை எங்கள் பிறந்த வீட்டிற்கு அழைத்துச் சென்று விடுவாயாக எனப் பரத்தையற்பிரிவின் போது கூறியதாக கயத்தூர் கிழான் எனும் புலவர் பாடல் பாடியிருக்கிறார். பிறந்த குழந்தைக்குப் பெயர் சூட்டுவதில் வேறுபாடு காணப்படுகிறது. முன்னோர் பெயரைப் புதல்வன் மட்டுமே பெறுகிறான். புதல்விக்கு இச்சிறப்பு வழங்கப்பட்டதாக யாண்டும் காணப்படவில்லை. முன்னோரிலும்      மிகுதியும்     தந்தைபெயரே “மேதக்க       எந்தை பெயரால்”(கலி.81:-35)என்று  கலித்தொகையில் போற்றப்படுகின்றதேயன்றித் தாய்க்கு              அவ்வுரிமையோபெருமையோ இருந்ததாகத் தெரியவில்லை.

    ஆண்பெண் இருவரும் கருத்தொருமித்துக் காதல் வயப்பட்டு மறைவொழுக்கம் கொள்கையில் பிறர் அறிய நேரிடுகிறது. அவ்வாறு நிகழ்ந்தால் அது அலராகி, அம்பலமாகிப் பெண்ணுக்கு மதிப்புக் குறைவைத் தருகிறது. இற்செறிக்கப்படுகிறாள். தண்டனைக்கு உட்படுத்தப்படுகிறாள். அன்னையிடம் அடிவாங்கும் துன்பமும் அவளுக்கு நேர்கிறது.    ஆனால் ஆணுக்கு அலரினால்இத்தகைய    இடர்பாடுகள் இல்லை கூறப்போனால் அவனுக்கு எவ்விதப் பாதிப்பும் இருப்பதாக ஓரிடத்தும் அறிய முடியவில்லை.(கலி. 105:61-69) (குறுந். 373, 1.3)

    தன்னை        விரும்பாத    பெண்ணை            வலிந்து பற்றிக்கொண்டாலும் ஆடவர்க்கு   அது    இழுக்காக    இல்லை. உற்றாரும் ஊரும் ஏதும் கூறுவதில்லை. இதனைப் போலவே பெண்ணை விரும்பியவனும் பெற்றவனும் பெண்ணின் கருத்து என்ன என்பதனைக் கூட அறியாது அவள் கருத்திற்கு இடந்தராது தம்முள் பகை பாராட்டித் திரிந்தும் உள்ளனர். புறநானூறு அதனைப் பதிவு செய்துள்ளது. அப்பாட்டில் தாய் மகளை அழகுடையவளாக வளர்த்தது அறமற்றசெயல் என்று அவளைப் பெற்ற தாய்க்கும் வசைபாட்டு பாடப்படுவது விந்தையே! (நற். 149: 1-5) (புறம். 336).

    தன்னை விரும்பாத பெண்ணின் படத்தை வரைந்து பனைமடலால் குதிரை செய்து அதில் ஊர்ந்து கொடியேற்றி ஊரறியச் செய்து வேறு வழியில்லாமல் ஒரு பெண்ணின் அன்பைக் கட்டாயத்தின் பேரில் வேறுவழியே இன்றி வலுக்கட்டாயமாகப் பெறுதலையும் ஆண்கள் செய்திருக்கிறார்கள்.(கலி. 138:8-13, குறுந். 173). களவுக் காலத்தில் இத்தகைய செயல்பாடுகள். கற்புக் காலத்திலோ இன்னுங் கூடுதல்தான். பெண்களுக்கு கற்பொழுக்கம் வலியுறுத்தப்பட்டது. கற்பென்றால் தலைவியின் மனநிறை-மனத்திண்மை,       தலைவன்மீதுகொள்ளும் அன்பு, விருந்தோம்பல், தலைவனின் பரத்தையர் ஒழுக்கத்தைக் கடிந்து அவனைத் திருத்தி ஏற்றுக்கொண்டு குடும்பக்கட்டுக்கோப்பு கலையாமல் காத்தல் என்றெல்லாம் விளக்கங்கள் தரப்பட்டுள்ளன.

    மேற்சொன்ன விளக்கங்களால் கற்பெனும் சொல் சமூக அறத்தை வலியுறுத்த எழுந்ததே என அறிய முடிகிறது. இத்தகைய கற்பு வாழ்வு வாழ்வதையே சங்கத் தலைவியர் விரும்பினர் என்று வேறு ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து பதிவு செய்கிறார்கள்.

    சங்கப் பெண்ணின் உள்ளம் என்னபாடுபட்டு இருக்கும் என்பதை தற்போதைய உளவியல் வல்லுநரும் கணித்துச் சொல்லமுடியாத ஒரு கட்டம். தலைவன் பரத்தையர் ஒழுக்கம் மேற்கொண்டிருப்பானாம்,“தலைவி பூப்பின் புறப்பாடு நாட்களை    முடித்துவிட்டாள்.              அவள் புதல்வனைப்
    பெறுதற்குத் தயாராக செவ்வணி அணிந்துள்ளான், புதல்வனைப் பெறுதற்குத் தயாராக உள்ளாள்”(பரி. 9: 20-22)என்று ஏவல் மகளிர் செவ்வணியாடை அணிவகுப்பு நடத்துகிறார்கள். இது பெண்மையை மதிப்பிடுதலா மதிப்புக் குறைத்தலா என்பது ஆழமாக நோக்கத்தக்கது. இந்நிகழ்வு சங்கச் சமூகத்தில் பெண்கள் ஆண்களுக்கு வாரிசுகளைப்பெற்றுத்தரும் கருவியாகக் கருதப்பட்டார்களோ என்ற எண்ணத்தை எழுப்புகிறது.(பொரு. 85-89).

    ஆனாலும், இந்த ஒரு சான்று தவிர வேறு சங்கப் பாடல்களில் இந்நிகழ்வு மீளவும் சுட்டப் படாமையால் இவ்வழக்கம் அக்காலத்திலேயே கடியப் பட்டிருக்கவேண்டும் என்ற உறுதியையும் கூடவே தருகிறது.

    பெண்கள் ஆண்களின் போகப் பொருளாகவே பெரிதும் கருதப்பட்டார்களோ என்ற ஐயம் எழுகிறது. புலவர் தனக்குப் பொருள் வழங்கிய புரவலரை வாழ்த்தும் போது,

    “விலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
     மணம் கமழ் தேறல் மடுப்ப நாளும்
     மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
    விரைந்து நீ  பெற்ற நல்லூழியையே”(மது.கா.778-781)

    என்று வாழ்த்தியிருப்பது மிகவும் சிந்தனைக்கு உரியது. ஆடவரின் களியாட்டிற்குப் பெண் கள்ளெடுத்துஉதவுதல் இயல்பான ஒன்றாகவே காட்டப்பட்டுள்ளது. ஆங்காங்கே காணப்படுகிற பெண்ணைப் பற்றிய எல்லை மீறிய வருணனைகளும் அதனை உறுதிப்படுத்துகின்றன.(பொரு. 6-8,       35-41).

    ஆணின் பலதார மணத்தைச் சமூகம் பாராட்டி ஏற்றுக் கொண்டுள்ளது. அவ்வாறு அவனது வாழ்வில் நுழைந்த பெண்களுக்கு இல்லக் கிழத்தி, காமக்கிழத்தி என்று பட்டங்கள் வேறு வழங்கியுள்ளனர். ஆனால் கொண்ட கணவனால் புறக்கணிக்கப்பட்ட மகளிர் நீர் அருந்தியபின் வீசியெறியப்பட்ட பனை ஓலைக் குடையாக, சூடிய பின் கழிக்கப்பட்ட பூவாக இழித்துரைக்கப்படுவது எண்ணத்தக்கது.(கலித். 23: 8-15).

    ’கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல்’ என்ற கூற்றிற்கேற்ப நல்ல உணவுகூட அவள் கண்ணில் காட்டப்படுவதில்லை. சுவையற்ற மிக எளிய உணவை நேரம் தவறிய நேரத்திலேயே அவள் உண்டிருக்கிறாள்.(புறம். 248). “சிறிய வெண்மையான ஆம்பல் செடியின் முன்பு நாம் இளமையுடன் இருக்கும் காலத்தில் தழையாடையாய் இருந்து உதவின. இப்பொழுது பெரியசெல்வத்தை உடைய கணவன் இறந்தபிறகு உண்ணும் வேளை தவறித் துன்பந்தரும் உறங்கும் வேளையில் உண்பதற்கு அவை தம் அல்லியிடத்து உண்டான புல்லரிசியைத் தந்து உதவின”என்று ஒக்கூர் மாசாத்தனார் எனும் புலவர் தம்பாடலில் பதிவு செய்துள்ள தாபதநிலையைப் புறநானூறு குறிப்பிடுகிறது.

    மேலும் கூந்தல்களைந்து, பரல்பொதிந்த இடத்தில்              பாயின்றித்தூங்கும்         துன்பநிலையைக் கண்டு கணவனோடு  தீக்குள்           மாய்த்தாள் என்று பூதப்பாண்டியன்  தேவி  பெருங்கோப் பெண்டு              பற்றிய           ஆனந்தப் பையுள் துறைப்பாடல்              பகர்கின்றது.

    கணவனோடு தீயுள் மாயத்துடிக்கும் பெண்களுக்குக் கைம்மை நோயின் கொடூரம் அவர்களைத் தூண்டி தீயும் பொய்கையும் ஒன்று என்பதைப் போல எண்ணுவராம். “ஓடும் செம்பொன்னும் ஒக்கவேநோக்குவர்”என்று இறையடியார்களின் பற்றற்ற தன்மையைப் பெரியபுராணம் எடுத்துக்கூறியது. தீயும் பொய்மையும் ஒன்றாகவே என்னும்,பரிதாபத் தன்மையை “நன்னீர்ப்பொய்கையின் நளியெரி புகுவர்”என்று மணிமேகலையும் எடுத்து இயம்புகின்றது.(மணி. 2:45).

    கணவனை இழந்தோர் அத்தனை பேரும் தீயுள் மாய்ந்திருப்பது சாத்தியக் கூறுதானா? அப்படி மாயாத பெண்கள் என்ன செய்திருப்பர்? என்ற              வினாக்கள் எழுவது           இயல்பே.              கைம்பெண்டிர்       நூல்நூற்றுக் கழித்துள்ளனர். இக்கட்டாய வாழ்க்கை முறையால் பருத்திப் பெண்டாகின்றனர்.(புறம். 326) (பருத்திப் பெண்டு – பஞ்சினால் நூல் நூற்கும்     பெண்டு)பாதுகாக்க   ஆரும் இல்லாதபோது ஆளில்பெண்டு ஆகின்றாள்.(நற்.353:1-2) இவர்களுக்கு இறந்துபட்ட கணவனே இறந்தபின்பும் வழிபாட்டிற்குரிய துணையாகின்றான். சிறிய இடத்தை மெழுகித் தருப்பைப்புல் பரப்பி அதன்மேல் பிண்டம் வைத்து இறந்தோரை வழிபடும் மரபினை, வேள் எவ்வி இறந்து பின்பு அவன் மனைவி பிண்டமிடக்கண்டு வருந்திப் பாடிய கையறு நிலைப் பாடல் புறநானூற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.(புறம். 234).

    பகைவரை அவமதித்த பல்வேறு செயல்பாடுகளில் அவரைப் பெண்ணாக உருவகித்தலும் நிகழ்ந்துள்ளது. இச்செயல் பெண் என்றால் இழிபொருள் அல்லது ஆணிற்கு அடுத்த இரண்டாம் நிலை உடையவள் என்பதையே சுட்டிநிற்கின்றது.

    போரிடலுக்கு மகளிர் ஏற்புடையவர்கள் அல்லர். வினையே ஆடவர்க்கு உயிரே; மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிரே என்றுதான் சங்க கால வாழ்வியல் அமைந்திருக்கிறது. என்றாலும் கூட அதற்குப் பெண்ணை இரண்டாம் நிலைப்படுத்துதல் மட்டும் காரணமா? வேறு ஏதேனும் இருக்கக் கூடுமா என்று எண்ணவும் தோன்றுகிறது. அதற்கு இந்தியப் பண்பாடும் தமிழரும் என்ற தன் நூலில் எஸ் இராமகிருஷ்ணன் அவர்களின் கருத்துரை ஏற்புடையதாக அமைகின்றது.

    “போர்  வீரத்தைப்  போற்றும்  சமுதாயத்தில்  மகளிர்  களம்  புகுந்து  விந்தைநிகழ்த்தும்   உரம்  உடையவரே ஆயினும் போர்களில் பெண்கள்அழிந்தால் வம்சம் விளங்குவதற்கு வாய்ப்புக் குன்றும்         என்பதை மறப்பதற்கில்லை.ஆடவர்பலர் களத்தில்              உயிரிழந்தார் ஆயினும் பலதாரமான முறையினால் அனைத்துப் பெண்களும் இல்லறம் ஓம்பி மக்கட் செல்வத்தை அடைவது சாத்தியம். பெண்களே களம்புகுந்து பல்லாயிரக்கணக்கானோர் மாண்டனர் எனில் மக்கட்செல்வப்பெருக்கத்துக்கு வழியில்லாது போகும்”என்ற கூற்று பொதுவாக நகையைத் தருவது போலிருப்பினும் ஆழ்ந்து சிந்தித்தற்குரியது.

    சங்ககாலச் சமுதாயத்தில் கல்வியின் பெருமை உணரப்பட்டிருந்தது. சங்க இலக்கியப் புலவர் கூட்டத்துள் முப்பது பெண்பாற் புலவர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் ஒளவையார்தான் அதிகமாக ஐம்பத்து ஒன்பது பாடல்களைப் பாடியவர். பூதப்பாண்டியனின் பெருங்கோப்பெண்டு முதலாக வெண்ணிக் குயத்தியார், குறமகள் இளவெயினி வரையார், அரசகுலமகளிர் தொடங்கி        சாதாரணக்              குடிமக்கள்   ஈறாக அமைந்திருப்பது              குறிப்பிடத்தக்கது. ஔவையார் ஆண்களுக்கு இணையான இடத்தையும் சிறப்பையும் பெற்றிருக்கிறார். தாயுடன் இணைத்த மகளாக அஞ்சியத்தை மகள் நாகையார் என்று ஒரு பெண்பாற் புலவர் பெயர் பெற்றிருப்பதும் கவனத்தைக் கவர்கிறது  ஈர்க்கிறது. சங்ககாலச்              சமுதாய வழக்கங்களில் பரந்து காணப்பட்டதொரு குறையாக எதிர்மதிப்புடைய பரத்தமை அமைந்துள்ளது. பரத்தமை காரணமாக தலைவன் வாயில் நேர்தலும் தலைவி அவள் பொருட்டுத் தோழி வாயில் மறுத்தலும் நிகழ்ந்ததைக் காணும் போது பரத்தையர் என்ற தொழில் முறைப் பெண்கள் இருந்துள்ளனர் என உறுதிப்படுகிறது.

    பலதாரமணம் உள்ள தமிழர் சமுதாயத்தில் ஒருவனுக்கு ஒருத்தி எனும் கற்புசார் கோட்பாடு புகுத்தப்பட்டபோது உடனடியாக அதனை ஏற்க இயலாத அல்லது விரும்பாத சூழல் நிலவியிருக்கக்கூடும். அதனைப் போலவே ஒருத்திக்கு ஒருவன் என்ற விதிக்குள் அடைபட விரும்பாத மகளிரைப் பிறரிடமிருந்து வேறுபடுத்திக் காட்டப் பரத்தை என்று அழைத்தும் இருக்கலாம்.

    காலப்போக்கில் அவர்களும் அல்லது அவர்தம் வாரிசுப் பெண்களும் குலமகளிர் போன்று வாழ விரும்பிய நிலையில் தன்னை விரும்பி ஏற்றுக் கொண்ட ஆடவனுடன் மட்டும் வாழ்க்கை நடத்திக் “காமக்கிழத்தியர்”என்ற தகுதியைப் பெற்றிருக்கக் கூடும். இத்தகையோரை ஆண்கள் மணம் செய்து கொண்ட செய்தியினையும் கலித்தொகை (82:9-24) காட்டி நிற்கின்றது. பரத்தமை மறை ஒழுக்கமாக அன்றிப் பலரறிந்த வினையாக நிகழ்ந்துள்ளது. போரில் ஆடவர் மிகுதியும் மடியவே திருமணம் செய்துகொள்ள வாய்ப்பு இல்லாத மகளிர் பரத்தையராக மாறும் நிலை உண்டாகியிருக்கக் கூடும் என்று செ. பழனிச்சாமி என்பவர் புறநானூற்றில் தமிழர் பண்பாடு எனும் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

    சமூகத்தில் பொருளாதாரத்தில் உயர்வு பெற்றவராக அரசமகளிர் திகழ்ந்துள்ளனர். பொது நிலையில் பிற பெண்களின் நிலைபோலவே இவர்கள் இருப்பதாகக் காட்டப் பட்டிருப்பினும் சில தனித்த மதிப்பிழத்தல் நிகழ்வுகள் இவர்களுக்கு மட்டுமே நிகழந்துள்ளன. அரசன் போரில் தோல்வியடைந்தால் வென்றவர்களால் அரசமகளிரே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அப்பெண்டிரது கூந்தலைக் கொய்து அதில் கயிறு திரித்து, அதனால் யானைகளைக் கட்டியிழுத்து அவமதிக்கப்பட்டனர் என்று பதிற்றுப்பத்து (5-15-17) பதிவு செய்துள்ளது.

    கொண்டி மகளிராக சிறைப்பிடிக்கப்பட்டு அடிமைகளாக வெற்றி பெற்றோர் நாட்டுக்கு வலிய அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு ஊர்ப் பொதுமன்றத்தில், கோயில்களில் விளக்கேற்றுதல் முதலான பணிகளைச் செய்யவும் ஏவல் மகளிராக மாற்றப்பட்டனர். இவையே அரசமகளிரை உடன்கட்டை ஏறத் தூண்டியிருக்க வேண்டும். (பட்டி. 246-249).

    எக்காலச் சமூகத்திலும் ஒரு போக்குத் தன்மை, விதிகள் கடைப்பிடிக்கப் பட்டாலும் விலகிச் செல்லுதலும் விதிமீறல்களும் நிகழ்ந்துதான் இருக்கும். அவற்றால் சில விவகாரமாயும் சில விறுவிறுப்பானதாயும் அமைந்து விளங்குவன. அவ்வகையில் பார்த்தோமேயானால், சங்க கால மகளிர் தம் உள்ளம் கவர்ந்தவனைப் பிறர் அறியக் கூறுவது இல்லை; கூறக்கூடாது என்பது விதி. ஆனால் இச்சூழலில் பெருங்கோழி நாய்கன்மகள்              நக்கண்ணையார் தம் மனம்     கொண்டவன் சோழன் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி என வெளிப்படுத்தியிருக்கும் துணிவு வியக்கத்தக்கது.(புறம். 84-86) கோசர்,           தன்     வயலில்          பசு      மேய்ந்தது              என்பதற்காக           அப்பசுவின் உரிமையாளரான அன்னிமிஞிலியின் தந்தையின் கண்களைப் பறித்து விடுகின்றனர். தன் தந்தையின் கண்களைப் பறித்த கோசரை அப்பெண் பழிவாங்கியதைச் சங்கப்பாடல் பாராட்டுகிறது. இச்சம்பவம் ஆணுக்குப் பெண் ஆணவத்துக்கு ஆட்படாத அடங்காமையைக் காட்டுகிறது.(அகம். 216:8-11).

    வெள்ளிவீதியார் சுரம்பல கடந்து தன் காதலரைத் தேடிச் சென்றுள்ளார். தன் துணைவன் ஆட்டனத்தியைத் தேடித் தேடி அலைந்து கண்டுபிடித்த ஆதிமந்தியை ஒன்றுக்க மேற்பட்ட பாடல்கள் காட்டுகின்றன. ஆதிமந்தியிடம் ஆட்டனத்தியைக் கண்டு ஒப்படைத்த பெண் மருதியென்றும், அதன்பின் அவள் தன்னைக் கடலுள் புகுந்து மாய்த்துக்கொண்டாள்          என்றும்              அகநானூற்றுவழி (222:5-15) அறியமுடிகிறது. ஆதிமந்தியின் இக்கடும் முயற்சி அரிதாக நிகழக் கூடியது என்ற வகையில் சிறப்புப் பெற்றுள்ளது. இக்கதையே பின்னாளில் மன்னாதி மன்னன் எனும் திரைப்படமாக உருவானது என்பது தமிழ்கூறு நல்லுலகம் நன்கு அறிந்ததே. (அகம். 236 : 14-20, குறுந். 31).

    தொகுத்துப் பார்ப்பின் சங்ககாலப் பெண்கள் மென்மையானவர்கள்; ஆணின் அன்புக்கு உரியவர்கள்; அறியாமை கொண்டவர்கள்; பொறுமை மிகுந்தவர்;     மக்கட்     பேற்றிற்கு     உரியவர்கள்     என்ற     வகைகளில் ஆண்களால்  பாதுகாக்கப்  படவேண்டியவர்களாகவே  பெண்கள்  விளங்கினர். எனவே   அன்பாலும்,   பரிவாலும்   பெண்டிரை   ஆண்கள்   தம் ஆளுகைக்குஉட்படுத்தினர். கட்டுப்பாடுகளையும், கடமைகளையும் வரையறுத்தனர். இதற்குப் பெண்களிடையே எதிர்ப்புக் குரல் எழவேயில்லை. எனவே இந்த அன்பும் பரிவும் சிறுகச் சிறுக ஆணவம் ஆதிக்கமுமாக மாறிப் பெண்ணை அடிமைப் படுத்தும் ஆணாதிக்கப்போக்கு வளர்வதற்குச் சங்கச் சமூகம் அடித்தளம் அமைத்துக் கொடுத்தது என்பது தெளிவு.

    *****

    கட்டுரையாளர்
    இணைப்பேராசிரியர்  (ம)  துறைத்தலைவர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி
    மதுரை-625009

     

    Share
  • தற்கொலை செய்யும் கனவுகள்..!

    பெருவை பார்த்தசாரதி

     

     

     

     

     

     

     

    கனவுகள் இரண்டும் தோழியாம்…அதிலொன்று

    …….கண்ணான மற்றொன்றிடம் “வீண்சவால்” விட்டதாம்..!

    கனவு பொய்த்தால் தற்கொலை செய்வேன்! யார்

    …….கனவிலுமினி வரவே மாட்டேனென சபதமிமிட்டதாம்.!

    அனவரதம் சபதம் வேண்டாம்! சகதோழியுரைத்தது

    …….ஆனமட்டும் சொல்லியும் அத்தோழி கேட்கவில்லை.!

    மனதிற்கிட்ட கட்டளைக் குட்பட்டு..மீண்டுமொரு

    …….சனனமெடுக்க வழியில்லாக் கனவையே கண்டதாம்.!

     

     

    அண்டத்தில் நிறைந்திருக்கும் ஊழல் அனைத்தும்

    …….அருகிவந்து முற்றிலும் அழிந்தொழிந்து விட்டதாம்.!

    பண்டத்தின் விலை யனைத்தும் குறைந்ததாலின்று

    …….பரந்துதிரிந்த பரதேசிகளும் பாருலகில் இல்லையாம்.!

    அண்டை அயலார் நாடுகளெல்லாம் ஒன்றுகூடியே

    …….ஓருலகம் ஓருயிர் ஓரினமென்றே கொண்டாடியதாம்.!

    துண்டுவேட்டி கரையிலாத தூயவெண்மை ஆடை

    …….தரித்திவ் வுலகனைத்தும் நிரம்பியதோர்க் கூட்டமாம்.!

     

     

    துண்டாக்கும் எல்லைக்கோடு பூகோளத்தில் இல்லை

    …….தொண்டாற்றும் மனமுடையீர் மட்டுமே நிறைத்ததாம்.!

    உண்டாக்கி அழிக்கும் அணுவாயுதமில்லை! இதுபோல

    …….கண்ட கனவெலாம் மெய்யாகாமல் பொய்யானதாம்.!

    கண்டகனவால் கொண்ட தென்னவோ சோகம்தான்

    …….கனவுக்கே பொறுக்கவில்லை! வாக்கும் தவறவில்லை.!

    கொண்டசவாலை மனதாரயேற்று தற்கொலை செய்து

    …….கொண்டதிலதன் தோழிக்கு மிகுந்த தாளாத்துயரமே.!

     

    =============================================================

    நன்றி தினமணி வெளியீடு:: 11 th March’2018

     

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • பெண்ணே…

    திருமதி ராதா விஸ்வநாதன்
     

     

    மறந்து விடுகின்றனர்

    உனக்குமொரு மனமுண்டு

    மரம் என்றே நினைக்கின்றனர்

    உறங்கி கிடக்கும் உன்

    உணர்வுகள் மலர்கிறது

    மணம் வீசும் மலராக

    உன் சாதனைப் படியில்

    ஏற மறுக்கும் சிலர்

    வெட்டிச் சாய்க்க துணியும் போது

    அவருக்கே தெரிவதில்லை

    உன் வேர் வேறு என்று

    கண் கலங்காதே

    கவலை எதற்கு

    உன் விழுதே

    வேராக இருக்கையில்

    உன்னை வெட்டிச் சாய்ப்பது எப்படி

    Share
  • எம் மனது ஏங்குகிறது !

    எம். ஜெயராமசர்மா … மெல்பேண் … அவுஸ்திரேலியா

     

    நாயொன்று நாம் வளர்த்தோம்

    நம்காலைச் சுற்றி வரும்

    நோயென்று நாம் படுத்தால்

    நூறுமுறை நக்கி நிற்கும்

     

    கதவருகே நாம் சென்றால்

    காத்திருக்கும் திறக்கும் வரை

    திறந்த உடன் பாய்ந்தோடி

    திரும்பிநின்று எமைப் பார்க்கும்

     

    கார் கதவு திறந்தவுடன்

    கடுகதியாய் ஏறி நிற்கும்

    பார்க்க நாம் வேண்டுமென்று

    பரபரத்து எமை நோக்கும்

     

    குழந்தை பக்கம் இருந்தாலும்

    குழைந்தபடி பார்த்து நிற்கும்

    குழந்தை அங்கே அழுதுவிடின்

    குனிந்து நின்று முகம்பார்க்கும்

     

    அழுகை நீக்க தன்வாலை

    ஆட்டியாட்டி அது காட்டும்

    அப்போது பொக்கை வாயால்

    எங்குழந்தை சிரித்து நிற்கும்

     

    மனைவி மக்கள் யாவருமே

    வழி நெடுகக் கதைத்தாலும்

    விழி பிதுங்கி நாயங்கே

    வியப்புடனே பார்த்து நிற்கும்

     

    என் மகனின் விளையாட்டு

    எப்போதும் நாயுடன் தான்

    நாய் நிற்கும் இடமெல்லாம்

    நாடிடுவான் என் மகனும்

     

    அவன் என்ன செய்தாலும்

    அது ஒன்றும் செய்யாது

    அது என்ன செய்தாலும்

    அவன் மகிழ்ந்து அணைத்திடுவான்

     

    தம்பிமகன் அன்று வந்தான்

    என்மகனும் இணைந்து கொண்டான்

    இருவருமே நாயை வைத்து

    எத்தனையோ செய்து நின்றார்

     

    கதவு எல்லாம் திறந்திருக்க

    கண்டபடி ஓடி நின்றார்

    அவரோடி நிற்கு முன்னே

    நாயங்கே ஓடி நிற்கும்

     

    வீட்டிக்கும் தெரு வினுக்கும்

    விரவாக ஓடி நின்றார்

    வீட்டில் உள்ளார் சொல்லுவதை

    காதில் அவர் கேட்கவில்லை

     

    விரிச் சென்ற சப்தமுடன்

    கார் ஒன்று பிரேக்போட

    வாலாட்டும் நாய் அங்கே

    வால் சிதறிக் கிடந்ததுவே

     

    சந்தோசம் ஒரு நொடியில்

    எமை விட்டு ஓடியதே

    சகலதையும் மறந்து நாம்

    சந்தித்தோம் ஓர்  இழப்பை

     

    வாலாட்டும் நாய் நினைக்க

    மனம் எல்லாம் துடிக்கிறது

    ஏன் வளர்த்தோம் நாமென்று

    எம் மனது ஏங்குகிறது !

    Share
  • தமிழ் எழுத்தின் பழமை-2

    கணியன்பாலன்

     

    கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழி-கா.இராசன்:

    20 வருடங்களாக ஏழு தடவை கொடுமணலில் அகழாய்வு நடந்துள்ளது என்கிறார் தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயலு அவர்கள். அந்த 20 வருட அகழாய்வுகளில் கிடைத்த 500க்கும் மேற்பட்ட தமிழி(தமிழ் பிராமி) எழுத்துப்பொறிப்புகளை விரிவாக ஆய்வு செய்த கா.இராசன் அவர்கள் அவற்றின் காலம் கி.மு. 2ஆம் நூற்றாண்டு முதல் கி.மு. 6ஆம் நூற்றாண்டு  வரை எனவும் அவை மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால் அதன் தொடக்க காலம் இதற்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கலாம் எனவும்  தனது ‘பண்டைய எழுத்துமுறை, குறியீடுகளில் இருந்து பிராமிக்கு ஒரு பயணம்’(EARLY WRITING SYSTEM, A Journey from graffiti to Brahmi) என்ற ஆங்கில நூலில் தெரிவித்துள்ளார். அந்த நூலில் கொடுமணலில் கிடைத்த 500க்கு மேற்பட்ட தமிழி எழுத்துப்பொறிப்புகள் குறித்தும், கிட்டத்தட்ட 600 குறியீடுகள் குறித்தும் விரிவான விளக்கங்களும், வரைபடங்களும், புகைப்படங்களும், தரப்பட்டுள்ளன. இவைகளைப்பற்றிய ஆய்வுகளில் இருந்து, கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாகத் தமிழி எழுத்தின் தொடக்க காலம் இருக்கலாம் என முனைவர் கா.இராசன் அவர்கள் கூறுகிறார்(17). ஆகவே தமிழி எழுத்தின் தொடக்க காலத்தைக் கி.மு.8ஆம் நூற்றாண்டு என உறுதிபடக்கூறலாம். கொடுமணலில் நடந்த இவ்வாய்வு குறித்தச் சிறுவிளக்கத்தைக்காண்போம்.

    கொடுமணலில் 2012, 2013ஆம் ஆண்டுகளில் 5 அகழாய்வுகள் முறையே 15செ.மீ, 60செ.மீ, 65செ.மீ, 85செ.மீ, 120செ.மீ ஆகிய ஆழங்களில் நடத்தப்பட்டன. அந்த ஆழங்களில் கிடைத்தத் தமிழி எழுத்துப்பொறிப்புகளைக்கொண்ட பண்பாட்டு பொருட்களின் பழையமுறையிலான ஆண்டுகளும்(UNCALIBRATED), முறையாகக் கணிக்கப்பட்ட ஆண்டுகளும்(CALIBRATED) கண்டறியப்பட்டன. அவை முறையே கி.மு.200-408 வரையிலும், கி.மு.200-480 வரையிலும் இருந்தன. அதாவது 120செ.மீ ஆழத்தில் இருந்த எழுத்துப்பொறிப்புகளின் பழைய முறையிலான ஆண்டு கி.மு.408 ஆகவும், கணிக்கப்பட்ட ஆண்டு கி.மு. 480 ஆகவும் இருந்தது. ஆனால் அதற்குப்பின்னரும் 65செ.மீ ஆழம்வரை, அதாவது 185செ.மீ ஆழம் வரையில் மொத்தம் 500க்கு மேற்பட்ட தமிழி எழுத்துப்பொறிப்புப் பொருட்கள் கிடைத்துள்ளன. இப்பகுதியில் கிடைத்த தமிழி எழுத்துப்பொறிப்புப் பொருட்களுக்கு சராசரியாக ஒரு செ.மீ ஆழத்திற்கு 2ஆண்டுகள் கணக்கிடலாம் எனக்கொண்டு 65செ.மீ ஆழத்திற்கு 130 ஆண்டுகள் எனக்கணக்கிடப்பட்டது. அதன்படி, 120செ.மீ ஆழத்திற்கு கி.மு.408 ஆண்டுகள் எனில், 185 செ.மீ ஆழத்திற்கு கி.மு. 6ஆம் நூற்றாண்டின் இடைக்காலம் எனக்கணக்கிடலாம் எனக்குறிப்பிட்டுள்ளார் முனைவர் கா.இராசன் அவர்கள். முறையாகக் கணிக்கப்பட்ட ஆண்டுகளை(CALIBRATED) அவர் கணக்கில் கொள்ளவில்லை. அதனைக்கணக்கில்கொண்டால் கி.மு. 480 என்பது கி.மு.610 என ஆகி 7ஆம் நூற்றாண்டின் தொடக்ககாலம்வரை என இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் கணிக்கலாம். எனினும் இவை அனைத்தையும் கொண்டு இந்தத் தமிழி எழுத்துக்களின் காலத்தைக் குறைந்தபட்சம் கி.மு. 6ஆம் நூற்றாண்டு என உறுதிபடக்கூறலாம். இந்த 6ஆம் நூற்றாண்டு தமிழி எழுத்துக்கள் மிகவும் நன்கு வளர்ந்த நிலையில் இருப்பதால், தமிழி எழுத்துக்களின் தொடக்க காலம் என்பது கி.மு. 6ஆம் நூற்றாண்டுக்குச் சில நூற்றாண்டுகள் முந்தையதாக இருக்கவேண்டும் எனவும் கா.இராசன் அவர்கள் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, தமிழி எழுத்தின் தொடக்ககாலம் குறைந்தபட்சம் கி.மு. 8ஆம் நூற்றாண்டு என்பது உறுதியாகிறது.

    கொடுமணலில் இவைபோக 1456 குறியீடு(GRAFFITI) பொறித்தப் பொருட்களும் கிடைத்துள்ளன. இதில் 858 குறியீடு பொறித்த பொருட்களில் உள்ள குறியீடுகள் முழுமையற்றுப் புரிந்துகொள்ளமுடியாத நிலையில் இருக்கிறது. ஆகவே 598 குறியீடு பொறித்தப் பொருட்களை மட்டுமே கணக்கில் கொள்ளமுடியும். ஆக 500க்கும்மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புகளும், கிட்டத்தட்ட 600 குறியீடு பொறிப்புகளும் கொடுமணலில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஒரு விழுக்காட்டு ஆய்வில் கிடைத்துள்ளன(18). “தமிழ் பிராமி (தமிழி) வரி வடிவம் தமிழகத்தில் பயன்பாட்டிற்கு வருவதற்கு முன்பாக இக்குறியீடுகள் சங்ககால மக்களின் எண்ணங்கள் அல்லது கருத்துப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்பட்ட ஒருவகை வரிவடிவமே என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது” என முனைவர் கா.இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளதை முன்பே சொல்லியுள்ளோம். இக்குறியீடுகள் அக்கருத்தை வலியுறுத்துவதாக இருக்கின்றன எனலாம்

    கொடுமணல் பகுதியில் உள்ள தமிழி எழுத்துக்களில் பிராகிருதச் சொற்களும் இருக்கின்றன என கா. இராசன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவை பெயர்சொற்கள் மட்டுமே எனவும், அதுவும் அவைகள் தமிழாக்கம் செய்யப்பட்டவை எனவும், இப்பெயர்ச் சொற்கள் தமிழ், பிராகிருதம் ஆகிய இரண்டும் இணைந்து உருவான புதுமுறையிலான சொற்களாக(HYBRID FORM) உள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்(19). அவைகளைக்கொண்டு பிராகிருதத்தின் செல்வாக்கு தமிழ் மொழியில் இருந்தது என்று கூற முடியாது. ஒரு மொழியின் இலக்கணத்தில் பிறமொழியின் செல்வாக்கால் ஏற்படும் மாற்றத்தைத்தான் அம்மொழியின் செல்வாக்கு எனலாம். பெயர்சொற்கள் இருப்பதைக்கொண்டு அதைப் பிற மொழியின் செல்வாக்கால் ஏற்பட்டது எனக்கூற முடியாது. ‘இது போன்ற பெயர்சொற்கள், நிறுவனப்பெயர்கள், மதச்சொற்கள் முதலியன இருப்பதைக்கொண்டு அவை ஒரு மொழியின் எழுத்தை முடிவு செய்யும் எனக்கொள்ள முடியாது” என திரு இரங்கன் என்பவர் 2004இல் சொல்லியிருப்பதை இராசன் அவர்கள் குறிப்பிட்டதோடு, குகைக் கல்வெட்டுகளில்கூட தமிழி எழுத்துக்கள் வினைச்சொற்கள், பண்புப்பெயர்கள்  முதலியனவற்றைக் கடன் வாங்கவில்லை எனக் கூறியுள்ளார்(20). அங்கும் வடபெயர்சொற்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆகவே பிராகிருதத்தின் செல்வாக்கு தமிழியில் இருக்கவில்லை எனலாம். முக்கியமாகக் கொடுமணல் தமிழி எழுத்துக்களில் பிராகிருதத்தின் செல்வாக்கு இருக்கவில்லை என்பதே இவைகளில் இருந்து நாம் பெரும் முடிவாகும். இருந்த போதிலும் இந்தப் பிராகிருதப் பெயர்ச்சொற்கள் கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தே கொடுமணல் தமிழி எழுத்துக்களில் இருப்பதற்கான காரணத்தை நாம் கண்டறிந்தாக வேண்டும்.

    வட இந்திய வணிகர்கள் வணிகத்துக்காகக் கொடுமணலில் வந்து பல ஆண்டுகள் தங்கி வணிகம் செய்து வந்ததன் விளவாகவும், அவர்களின்பெயர்கள் பிராகிருதத்தில் இருப்பதாலும் அவர்களைக்குறிப்பிட இந்தப் பிராகிருதப் பெயர்ச்சொற்கள் தமிழி எழுத்துக்களில் பயன்படுத்தப் பட்டிருக்கிறது எனலாம். கி.மு. ஆறாம் நூற்றாண்டுகாலத் தமிழி எழுத்திலேயே பிராகிருதச்சொற்கள் இருப்பதால் அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வட வணிகர்கள் தமிழகத்தில் வந்து தங்கி வணிகம் செய்து வந்திருக்கவேண்டும் எனலாம். இவை குறித்துத் தொடர்ந்து செய்யப்படும் ஆய்வுகளே இவ்விடயங்கள் குறித்தத் தெளிவை வழங்கும். அதேசமயம் வட இந்தியாவிற்கும் தமிழகத்திற்கும் மிக நீண்டகாலமாக வணிகத் தொடர்பு இருந்துள்ளது என்பதை இச்செய்திகள் உறுதிப்படுத்துகின்றன எனலாம்.

    தொல்லியல் ஆய்வாளர் சுப்புராயலு அவர்கள், வட இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான அகழாய்வுகள் பல நடந்த பின்னரும் கூட, இன்றைய பாக்கிசுத்தானின் வடமேற்குப்பகுதியில் இருந்த அராமிக்(ARAMAIC) எழுத்துக்களைத்தவிர வேறு எந்த எழுத்துக்களும் அசோகன்பிராமிக்கு முன்பு வட இந்தியாவில் இருக்கவில்லை எனக்குறிப்பிட்டுள்ளார்(21). அதாவது கி.மு. 3ஆம் நூற்றாண்டுக்கு முன்பு பிராமி எழுத்து வட இந்தியாவில் இருக்கவில்லை என்பதை அவர் இதன் மூலம் உறுதிப்படுத்துகிறார். ஆனால் தமிழகத்தில் கி.மு. 6ஆம் நூற்றாண்டு அளவிலேயே தமிழி எழுத்து(தமிழ் பிராமி) இருந்துள்ளது என்பதும் இதன் தொடக்ககாலம் அதற்குச் சில நூற்றாண்டுகள் முந்தையது என்பதும் முனைவர் கா.இராசன் அவர்களின் ஆய்வுகள் உறுதிப் படுத்துகின்றன.

    இவ்விரண்டு செய்திகளின் மூலம் அசோகன் பிராமியில் இருந்து தமிழி எழுத்து உருவாகவில்லை என்பது உறுதியாகிறது. அதேசமயம் தமிழியில் இருந்து அசோகன் பிராமி உருவாகியிருக்க வாய்ப்புள்ளது. சமற்கிருதத்துக்கான கிரந்த எழுத்துக்கள், தமிழகத்தில், தமிழி எழுத்தில் இருந்துதான் உருவாகியது. இவ்விடயத்தை பெஞ்சமின் கை பாயிங்டன் என்பவர் கி.பி. 1830வாக்கிலேயே சொல்லியுள்ளார்(22). ஆதலால் அசோகன் பிராமியும்(பிராகிருத பிராமி) தமிழியில் இருந்து உருவாகியிருக்க வாய்ப்புள்ளது எனலாம். முதலில் பிராகிருதப் பெயர் சொற்களுக்கு தமிழி எழுத்து கொண்டு எழுதப்பட்டது. அதன் பின் அந்நிலை வளர்ந்து சமற்கிருதத்துக்கான கிரந்த எழுத்து தமிழி எழுத்தில் இருந்து உருவாகியது போல, பிராகிருத மொழிக்குத் தமிழியில் இருந்து அசோகன் பிராமி எழுத்து உருவாகியது எனலாம்.

     

    மயிலாடுதுறை கைக்கோடாலி :

    மயிலாடுதுறையில் உள்ள செம்பியன் கண்டியூர் (SEMBIAN KANDIYUR)  என்னும் இடத்தில், கல்லால் ஆன புதிய கற்காலத்தைச் சார்ந்த கைக்கோடாலி ஒன்று கிடைத்துள்ளது. அதில் நான்கு குறியீடுகள் உள்ளன. அந்த நான்கு குறியீடுகளும் சிந்துவெளிக் குறியீடுகளுக்கு ஒப்புமை உடையனவாக உள்ளன. தொல்பொருள் ஆய்வாளர் ஐராவதம் மகாதேவன் அவர்கள், அக்குறியீடுகளை நன்கு ஆய்வு செய்து ‘முருகன்’ எனப் படித்தறிந்துள்ளார். மேலும் அவர், இக்குறியீடுகள் சிந்துவெளி குறியீட்டு எண்கள் 48, 342, 367, 301 ஆகியவற்றோடு முழுமையாக ஒப்புமை கொண்டுள்ளன எனவும், இதன் காலம் கி.மு.1500 முதல் கி.மு.2000 எனவும் நிர்ணயித்துள்ளார். இந்தக் கல்கோடாலி தமிழகப் பகுதியில் உள்ள கல்வகையினைச் சார்ந்தது எனவும், அதனால் இந்தக் கல்கோடாலி வட இந்தியாவிலிருந்து வந்திருக்க முடியாது எனவும் குறிப்பிடுகிறார். மேற்கண்ட காரணங்களால் தமிழக மக்களும் சிந்துவெளி மக்களும் ஒரே மொழியைப் பயன் படுத்தியவர்களே எனச் சொல்லும் அவர், இதனை இந்த நூற்றாண்டுக்கான மிகச் சிறந்த கண்டுபிடிப்பு என்கிறார்-(23).

    மயிலாடுதுறை கைக்கோடாலி குறித்த ஐராவதம் மகாதேவன் அவர்களின் கருத்தையும், கா.இராசன், பவுன்துரை ஆகியவர்களின் குறியீடுகள் குறித்த கருத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது கீழ்கண்ட முடிவுக்கு நாம் வந்து சேரமுடியும். அதாவது, கி.மு.1500 வாக்கில், தமிழர்கள், குறியீடுகளைக் கருத்துப் பரிமாற்றத்திற்கான ஒரு வகை வரிவடிவமாக, ஒரு வகை எழுத்தாகப் பயன்படுத்தத் தொடங்கினர்  எனவும், சில நூற்றாண்டு களுக்குப் பின், கி.மு.1000 வாக்கில் அக்குறியீடுகளைப் பயன்படுத்தும் நிலை, பரவலாகத் தமிழகமெங்கும் பரவியிருந்துள்ளது எனவும் கருதலாம். தமிழர்கள் குறியீடுகளை ஒரு எழுத்து வடிவமாகக் கி.மு. 1000 வாக்கில்  பரவலாகப் பயன்படுத்திக் கொண்டிருந்ததால், தமிழ் இலக்கியத்தின் தொடக்ககாலம் கி.மு. 750இல் தொடங்கிவிட்டது எனலாம். சங்ககால மக்கள் வாழ்ந்த இடங்களில் எல்லாம் குறியீடுகள் கிடைப்பதால், ஆய்வாளர்கள் இவைகளைச் சேகரித்துப் பதிவு செய்வதும், அவைகளைப் படித்தறிந்து பொருள் காண்பதும் அவசியமாகிறது. அதன்மூலம் பண்டைய தமிழர்களின் வாழ்க்கையை மேலும் நன்கு புரிந்து  கொள்ள முடியும் என்பதோடு, தமிழர்களின் வரலாற்றைப் பல நூற்றாண்டுகள் மேலும் பின்னோக்கிக் கொண்டு செல்லமுடியும். குறைந்தபட்சம் கி.மு. 1000 வரை  கொண்டுசெல்ல முடியும் எனலாம்.

    தமிழகமும் அகழாய்வும்:

    சங்ககால நூலான பதிற்றுப்பத்துக் குறிப்பிடும் கொடுமணல் குறித்துப் பல தரவுகள் வெளிவந்துள்ளது.   கொடுமணம்(கொடுமணல்) அகழாய்வில் இருநூற்றிற்கும் மேற்பட்ட எழுத்துப்பொறிப்புப் பெற்ற பானை ஓடுகளும், வெள்ளி முத்திரை நாணயங்களும், இரும்பு, எஃகு செய்வதற்கான உலைக்கலங்களும், இரும்பு ஆயுதங்களும், வைடூரியம், சூதுபவளம், பளிங்கு, நீலக்கல், பச்சைக்கல் போன்ற அரியமணிக்கற்களில் செய்யப்பட்ட ஏராளமான மணிகளும், குறியீடுகளும், நெய்யப்பட்ட துணியும், அவை நெய்வதற்கு பயன்படுத்தப்பட்ட தக்களிகளும் என ஏராளமானத் தரவுகள் வெளிக்கொணரப் பட்டுள்ளன. கொடுமணலில் உள்ள 70 ஏக்கர் பரப்பில் ஒரு ஏக்கருக்கும் குறைவான பகுதியில் மட்டுமே அகழாய்வு செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள நூற்றுக்கணக்கான பெருங்கற்படைச் சின்னங்களில் 13 மட்டுமே தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறையால் அகழ் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த அகழாய்வின்அளவு என்பது ஒரு விழுக்காட்டிற்கும் குறைவானது.

    ஒரு விழுக்காட்டு அகழாய்வில் மேலே குறிப்பிட்ட பல்வேறு வகையான தரவுகள் அதிக அளவில் கிடைக்கின்றன எனில் மீதமுள்ள 99 விழுக்காட்டுப் பகுதிகளை அகழாய்வு செய்யும்பொழுது மேலும் பன்மடங்கு செய்திகள் அல்லது தொல்பொருட்கள் வெளிவரும் என்பது உறுதி.  சங்ககாலப் புலவர்களால் பெரிதும் பேசப்படாத சங்ககால ஊரான கொடுமணலில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விழுக்காடு அகழாய்வில் மட்டுமே இவ்வளவு தொல்பொருட்கள் கிடைக்கின்றன எனில் சங்க இலக்கியங்களில் வியந்து பேசப்படுகின்ற மதுரை, கொற்கை, பூம்புகார், முசிறி,  கரூர், உறையூர் போன்ற இடங்களில் அகழாய்வு செய்யப்படும் பொழுது மிக அதிக அளவு தொல்பொருட்களும் தரவுகளும் வெளிவரும் என்பதை நினைக்கும் பொழுது அது  பெருவியப்பைத் தோற்றுவிக்கிறது எனலாம்.

    தமிழகத்தில் 10 மாவட்டங்களில் மேற்கொண்ட கள ஆய்வில் மட்டும் 2000க்கும் மேற்பட்ட சங்ககால எச்சங்கள் கொண்ட ஊர்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் மீதமுள்ள மாவட்டங்களில் கள ஆய்வு செய்யப்படும்பொழுது இந்த எண்ணிக்கை அதிகளவு பெருகும் எனவும், இந்த ஊர்கள் அனைத்தையும் முழுமையாக அகழாய்வு செய்யப்படும்பொழுது மட்டுமே சங்ககாலத் தமிழர்களின் பண்பாட்டை முழுமையாக அறியவும், அவர்கள் குறித்த ஒரு தெளிவான  முடிவுக்கு வரவும் முடியும் என்கிறார் முனைவர் கா.இராசன்-(24).

    மனிதனின் கடந்த காலத்தைப்பற்றி எழுதப்பட்ட ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு அமைவது வரலாறு. ஆனால் தொல்லியல் என்பது எழுதப்பட்ட ஆவணங்களின் தரவுகளை உறுதிப்படுத்தவும் நெறிப்படுத்தவும் பயன்படும் என்பதோடு, எழுதப்பட்ட வரலாற்றுக் காலத்தையும் தாண்டி, வரலாற்றிற்கு முந்தைய காலத்தைப் பற்றியும் இருப்பதை இருப்பது போலவே அறிவிப்பதாகும். இவை பற்றி கார்டன் சைல்டு(Gordon Childe) என்கிற அறிஞர், “புவியின் வரலாற்றில் எழுதப்பட்ட ஆவணங்களால் நிரப்பப்படும் வரலாற்றைவிட தொல்லியல் சான்றுகளால் நிரப்பப்படும் வரலாறு நூறு மடங்கு அதிகமாகும்” என்கிறார். இன்னொரு அறிஞரோ, “வரலாற்றில் ஒரு சதவிகிதத்தைபற்றி மட்டுமே எழுதப்பட்ட ஆவணங்களின் மூலம் அறிய இயலும். ஆனால் மீதமுள்ள தொன்னூற்று ஒன்பது சதவிகித வரலாற்றை அறிய தொல்லியல் மட்டுமே உதவுகிறது” என்கிறார்-(25). ஆகவே நமது அகழாய்வுகளை அதிகப்படுத்தி, விரைவுபடுத்தி செயல்படுத்துவதன் மூலமும், வெளிக்கொண்டுவரப்படும் தரவுகளை முறையாக ஆவணப் படுத்துவதன் மூலமும் மட்டுமே நமது வரலாற்றை நன்கு அறிந்து கொள்ள இயலும். 99 விழுக்காட்டு வரலாற்றை அகழாய்வின் மூலம் மட்டுமே அறிய முடியும் என்பது தமிழகத்தின் வரலாற்றுக்கு மிகமிக பொருந்தும் எனலாம்.

    தம்பப்பண்ணி:

    தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தில், தமிழகத்திலிருந்து ஆதிகால இரும்புப் பண்பாடு இலங்கையின் வடமேற்குப் பகுதியில் பரவத்தொடங்கி, அங்கு தம்பப்பண்ணி  என்ற இரும்புக்காலப் பண்பாட்டுக் குடியிருப்பு உருவாகியது. அதன் இடத்தில்தான் இன்றைய பொம்பரிப்பு என்கிற அகழ்வாராய்ச்சி இடம் உள்ளது. பொம்பரிப்புப் பகுதியில் இருந்து தான் இந்த இரும்புக்காலப் பண்பாடு அநுராதபுரத்திற்கு பரவியது. ஆதலால் பொம்பரிப்புக் குடியிருப்பின் காலம் அநுராதபுரக் குடியிருப்புக்கு ஓரிரு நூற்றாண்டுகள் முந்தியது எனக் கணிக்கப்பட்டுள்ளது. அநுராதபுரக் குடியிருப்பின் காலம் முதலில் கி.மு.900 என கரிமப் பகுப்பாய்வுப்படி கணிக்கப்பட்டது. அதனைப் பிரித்தானியத் தொல்லியல் குழுவும் உறுதிப்படுத்தியது. அதற்குப் பிந்தைய கணிப்புகளின் படி அதன் காலம் ஏறத்தாழ கி.மு.1000 என இலங்கைத் தொல்லியல் ஆய்வாளர் சிரான் தரணியகல(DERANIYAGALA) கருதுகிறார்(26).

    ஆகவே பொம்பரிப்புக் குடியிருப்பின் காலம் கி.மு. 1200 வரை இருக்கலாம் எனலாம். தம்பப்பண்ணி கி.மு. 500 வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக  இருந்தது எனவும் தமிழகத்துப் பாண்டியர்(பண்டு) வழி வந்தவர்கள் அதை ஆண்டனர் எனவும் பாலி நூல்கள் தெரிவிக்கின்றன. கி.மு. 500க்குப் பின் ஆதி இரும்புக்காலம் முடிவடைந்த கட்டத்தில் தம்பப்பண்ணியில் இருந்த அதிகார பீடம் உள்நாட்டில் உள்ள அநுராதபுரத்திற்கு மாற்றப்பட்டது. அதன்பின் எழுச்சி பெற்ற அநுராதபுர நகரம், கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கில் ஒரு புகழ் பெற்ற நகராக ஆகியது. பாலி நூல்களின் மரபுக் கதைகளின்படி அநுராதபுரம் எழுச்சி பெறுவதற்குமுன் தம்பப்பண்ணி ஒரு துறைமுக நகராகவும் ஓர் ஆட்சிபீடமாகவும் இருந்துள்ளது. இந்தத் தம்பப்பண்ணியின் சமற்கிருதப் பெயர் தாம்ரபர்ணி ஆகும். ஆகவே தமிழகத்தில் உள்ள (இலங்கையின் எதிர்க்கரையில் அமைந்துள்ள) தாமிரபரணி ஆற்றின் பெயரால் தான் இந்நருக்கு இப்பெயர் வந்தது எனலாம்.  ஆகவே அன்று தம்பப்பண்ணி நகரம் தமிழர்களின் நகராகவும், வட இலங்கையின் ஆட்சிப் பகுதியாகவும் இருந்துள்ளது-(27).

    தமிழகத்தில் ஓடும் தாமிரபரணி ஆறுதான், தம்பப்பண்ணி என்கிற பெயர் இலங்கையின் வடமேற்கு நகரத்துக்கு வரக் காரணம் என முன்பே குறிப்பிட்டோம். பொம்பரிப்பு என்கிற இந்தத் தம்பப்பண்ணி நகருக்கு அருகிலுள்ள அகழாய்வு இடம் தாமிரபரணி ஆற்றின் எதிர்பக்கத்தில்தான் அமைந்துள்ளது. இந்தப் பொம்பரிப்புக் கால இரும்புப் பண்பாடு குறித்துத் தென் இந்தியாவிலும், இலங்கையிலும் ஆய்வுகளை மேற்கொண்ட சுதர்சன் செனவிரத்னே (SENEVIRATNE) அதன் முக்கியக் கூறுகளைப் பின்வருமாறு பட்டியலிட்டுள்ளார், “அடிப்படை உலோகத்தொழில்நுட்பம், இரும்பின் உபயோகம், மட்பாண்டச்செய்கை உபகரணங்கள், நெற்பயிர்ச்செய்கை உபகரணங்கள், நீர்ப்பாசன முறைகள், சிறுகைத்தொழில், புதிய நிலையான குடியிருப்புகள், பண்டமாற்று வர்த்தகமையங்கள், குறுநிலஅரசுகளின் தோற்றம், குதிரையின் அறிமுகம், புதிய சவஅடக்க முறை என்பனவாகும்” -(28). இந்த பொம்பரிப்புக் கால இரும்புப் பண்பாடு என்பது தமிழகத்தில் இருந்து பரவிய தமிழர்களின் பெருங்கற்காலப் பண்பாடாகும்.

    இந்தப் பொம்பரிப்புக் குடியிருப்புத் தோன்றுவதற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் ஆதிகால இரும்புப் பண்பாட்டுக் குடியிருப்புகள் தோன்றி இருக்கவேண்டும். ஆதிச்சநல்லூர் அத்தகைய குடியிருப்புகளில் ஒன்றாகும். இந்த ஆதிச்சநல்லூர், தாமிரபரணி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இதுவரையான ஆய்வுகள் அதன் காலத்தை கி.மு. 2000 வரை என உறுதிப்படுத்தியுள்ளது-(29). இலங்கையில் நடைபெற்ற அகழாய்வு கி.மு 1200க்கு வெகுகாலம் முன்பே தமிழகத்தில் இரும்புக்காலப்பண்பாடு வேரூன்றி விட்டது என்பதை உறுதிப் படுத்துகிறது. முனைவர் கா.இராசன் அவர்களின் ஆய்வு முடிவை இந்திரபாலா, சுதர்சன செனவரத்னே ஆகியவர்கள் தரும் தகவல்கள் மேலும் வலுப்படுத்துகின்றன. மேலும் தமிழகத்தில் இருந்த மதுரை, கொற்கை, உறையூர், புகார், வஞ்சி, முசிறி போன்ற நகரங்களும், இலங்கையில் இருந்த தம்பப்பண்ணி என்ற நகரமும் கி.மு 5ஆம் நூற்றாண்டு அளவில் பண்டையத் தமிழர்களின் நன்கு வளர்ச்சி பெற்ற பெருநகரங்களாக இருந்திருக்க வேண்டும் எனலாம்.

    தமிழ் மொழியின் ஆரம்பகால எழுத்தானத் தமிழியின்(தமிழ் பிராமி) தொடக்க காலம் சுமார் கி.மு. 8ஆம் நூற்றாண்டு எனவும், தமிழகத்தில் சுமார் கி.மு. 1500 வாக்கிலேயே இரும்புப் பண்பாடு தொடங்கிவிட்டது எனவும், தமிழி எழுத்துக்கு முன்பு தமிழர்கள் குறியீடுகளை ஒருவகை எழுத்து வடிவமாக கி.மு. 1500 வாக்கிலேயே பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர் எனவும், கி.மு. 1000 வாக்கில் தமிழர்கள் குறியீடுகளை கருத்துப் பரிமாற்றத்திற்கான எழுத்து வடிவமாகப் பரவலாகப் பயன் படுத்தினர் எனவும், தமிழ் இலக்கியத்தின் தொடக்க காலம் கி.மு. 750 எனவும், தமிழகத்தில் அகழாய்வுகள் ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே நடந்துள்ளது எனவும், தமிழகத்தில் இருந்துதான் இலங்கைக்கு இரும்புப் பண்பாடு பரவியது எனவும், அது தமிழர்களின் பண்பாடாகவே இருந்தது எனவும் இதுவரை பார்த்தோம். தமிழ் சமுதாயத்தின் பழமை கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை இவைகள் உறுதிப்படுத்துகின்றன.

    குமரி நிலப்பரப்பு: மதிரை நகர்:    

    இறையனார் அகப்பொருள் உரையிலும், இலங்கையின் பாலி வரலாற்று நூலாகிய மகாவம்சத்திலும் மதுரை நகரம் குறித்த சில தகவல்கள் உள்ளன. அதன்படி பாண்டியருடைய ஆட்சிபீடமான மதிரை நகரம் கடலருகே இருந்ததாகவும், கடல்கோளால் அந்நகரம் அழிந்து போனதால், அதன்பின் கபாடபுரம்(பெருவாயில் உடைய நகரம்) என்ற சமற்கிருத பெயர் பெற்ற கடலருகே இருந்த இன்னொரு நகரத்திற்கு தங்கள் ஆட்சிபீடத்தை பாண்டியர்கள் மாற்றிக்கொண்டனர் எனவும் தகவல்கள் உள்ளன. சமற்கிருத நூல்களாகிய மகாபாரதமும், அர்த்த சாத்திரமும் இக்கபாடபுரம் குறித்த குறிப்புகளைக் கொண்டுள்ளன. இந்த இரண்டாவது நகரமும் கடல் கோளால் அழிந்துபோன பின், பாண்டியர்கள் உள்நாட்டில் வைகை நதியில் உள்ள மதிரை என்ற நகரத்தைத் தங்கள் தலைநகராக ஆக்கிக்கொண்டனர். மறைந்துபோன முதலாவது மதிரை நகரை அவர்கள் “தென்மதிரை” என அழைத்தனர். பாலி மரபுக் கதைகளில் இந்நகர் ‘தக்கிண மதுரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது-(30)

    குமரி நிலம்:

    வால்மீகி இராமாயணத்தில் பாண்டியர்களின் தலைநகர் கபாடபுரம் எனவும், வியாசரின் மகாபாரதத்தில் கபாடா எனவும் சொல்லப்பட்டுள்ளது. கி.பி. 6ஆம் நூற்றாண்டில் தொகுக்கப்பட்ட ஆகமங்கள் குமரி நிலப்பரப்பு குறித்து விரிவாகப் பேசுகின்றன. கிரான ஆகமம் ஞானபாதத்தில் எட்டாம் இயலில், 69-74 வரையிலுள்ள பாடல் அடிகளும், சுப்ரபேத ஆகமம் ஞானபாதத்தில் மூன்றாம் இயலில் 125-135 வரையிலுள்ள பாடல் அடிகளும், மிருகேந்திர ஆகமம் ஞானபாதத்தில் பதிமூன்றாம் இயலில் 93-97 வரையிலுள்ள பாடல் அடிகளும் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகின்றன. ஆனால் சந்திர ஞான ஆகமம் தனது 14ஆவது இயலில், 165-272 வரையிலுள்ள பாடல் அடிகளில் புவனத்துவ பாலா என்கிற தலைப்பில் குமரி நிலப்பரப்பு குறித்து விரிவாகப் பேசுகிறது. 28 முதன்மை ஆகமங்களில் சந்திர ஞான ஆகமம் 19ஆவது ஆகமம் ஆகும். அதன் 14ஆவது இயல் மொத்தம் 298 பாடல் அடிகளைக்கொண்டது ஆகும். அதில் 108 பாடல் அடிகள் குமரி நிலப்பரப்பு குறித்துப் பேசுகின்றன.

    குமரி நிலம், குப்சா, கேதா, கார்வதா, பட்டணா என்கிற நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. குப்சா பகுதியின் தெற்கே குமரி ஆறும், வடக்கே பஃறுளி ஆறும் ஓடிக்கொண்டிருந்தன. தென்கிழக்கே குமரிக்கடலின் அலைகள் குமரி மலை அடிவாரத்தைத் தழுவிச் செல்லும் இடத்தில் தலைநகர் கபாடபுரம் அமைந்திருந்தது. அங்கே ஒரு துறைமுகமும் மறைவான போர்க்கருவிகள் வைக்கப்பட்டிருந்த நீர்க்கோட்டையும் இருந்தன. விண்ணைத்தொடும் குமரிமலையின் உச்சியில் சிகரக்கோட்டையும், பள்ளத்தாக்கில் துரோனிக்கோட்டையும், தெற்குச்சரிவில் கடகக் கோட்டையும் இருந்தன. கேதாப்பிரிவில், சப்த நாளிகா, சப்த தளா, சப்த கைரிகா, சப்த மதுரா, சப்த பூர்வசாலா, சப்த அபாரசாலா, சப்த பிரசித்திரா  ஆகிய ஏழு நகரங்கள் இருந்தன. குப்சா பிரிவின் மேற்கில் கார்வதா பிரிவும், குமரி நிலப்பரப்பின் வடக்கில் பட்டணா பிரிவும் இருந்தன. கேதாப்பிரிவின் நடுவில் மேற்கு நோக்கிக் கந்தன் கோயிலும், கார்வதாப் பிரிவின் நடுவில் கிழக்கு நோக்கித் திருமால் கோயிலும் கட்டப்பட்டிருந்தது. இவை அனைத்தும் சந்திர ஞான ஆகமத்தில் சொல்லப்பட்ட தகவல்களாகும். இக்குமரி நிலத்தில் இருந்த நகர அமைப்புகள் குறித்தும் இந்த ஆகமம் விரிவாகப் பேசுகிறது-(31).

    சங்க இலக்கியத்தில் முதுகுடுமிப் பெருவழுதி குறித்துப்பாடிய நெட்டிமையார், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்கிற நெடியோன் குறித்தும் அவனது நாட்டில் இருந்த பஃறுளி ஆறு குறித்தும் பாடியுள்ளார்(புறம்-9). இந்தப் பாண்டியன் நெடியோன் குறித்து 2ஆம் பதிற்றுப்பத்தில் குமட்டூர் கண்ணனாரும், மதுரைக் காஞ்சியில் மாங்குடி மருதனாரும் பாடியுள்ளனர். சங்ககால ஆதார இலக்கிய நூல்களில் இவைகளைத்தவிர வேறு தரவுகள் இல்லை. பஃறுளி ஆறும், குமரி மலைத்தொடரும் கடலில் மூழ்கியது குறித்துச் சிலப்பதிகாரம் குறிப்பிட்டுள்ளது.

    சா. குருமூர்த்தி அவர்கள் நிலவியல் அறிவியலாளர்கள் கருத்துப்படி கி.மு. 9500, கி.மு. 3000, கி.மு. 1500 ஆகிய மூன்று காலகட்டங்களில் கடற்கோள் பேரழிவுகள் நடந்துள்ளன என்கிறார். இடோப்பா(ETOPO) செயற்கைக்கோள், குமரி நிலப்பரப்பானது தமிழகத்தின் தென் பகுதியில் கி.மு. 15000 வாக்கில் சுமார் 25000 ச.கி.மீ பரப்பும், கி.மு. 8000 வாக்கில் சுமார் 5000 ச.கி.மீ பரப்பும் கி.மு. 2000 வாக்கில் சுமார் 1000 ச.கி.மீ பரப்பும் கொண்டதாக இருந்துள்ளது எனக்காட்டுகிறது. ஆதலால் சா.குருமூர்த்தி அவர்களின் நிலவியல் அறிவியலாளர்கள் கருத்தையும், நவீன இடோப்பா(ETOPO) செயற்கைக்கோள் கணக்கீட்டையும், இறையனார் அகப்பொருள் உரையையும் ஒருங்கிணைத்து, கி.மு. 3000 வாக்கில் தென்மதுரையும், அதன்பின் கி.மு. 1500 வாக்கில் கபாடபுரமும் கடற்கோள்களால் அழிந்து போயின எனக் கருதலாம் என்கிறார் முனைவர் இராமசாமி அவர்கள்(32).

    இன்றைய தமிழகத்தின் பரப்பு 1,30,000 ச.கி.மீ, பண்டைய தமிழகத்தின் பரப்போ இதைவிட மூன்று மடங்கு அதிகம்(4,00,000 ச.கி.மீ). ஆனால் தென்மதுரை கடற்கோளால் அழியும்முன் கி.மு. 3000 வரை, 5000 ச.கி.மீ. பரப்பு குமரி நிலப்பரப்பாக இருந்துள்ளது. கி.மு. 3000க்குப்பின் அது 1000 ச.கி.மீ. பரப்பாகக் குறைந்து போயுள்ளது. கிரீசு வாழ்ந்த வரலாறு என்கிற தனது நூலில், பண்டைய ஏதென்சு நகர அரசின் பரப்பளவு என்பது சுமார் 1000 ச,கி.மீ. தான் என்கிறார் வெ. சாமிநாத சர்மா அவர்கள். ஆதலால் கடல்கோள்களால் அழிந்துபோன பகுதி மிகச்சிறிய பரப்புதான் எனினும் அங்கு தென்மதுரை, கபாடபுரம் போன்ற தலைநகரங்களும், பிற முக்கிய நகரங்களும் இருந்து நாகரிக வளர்ச்சியும் அங்கு அதிகமாக இருந்ததால் அவைகளின் இழப்பு பெரிதுபடுத்தப் பட்டிருக்கவேண்டும். கடற்கோள்களால் பாண்டிய வேந்தன் தென்மதுரையில் இருந்து கபாடபுரத்திற்கும், கபாடபுரத்திலிருந்து மதுரைக்கும் தனது வேந்தர் ஆட்சியை மாற்றிகொண்டு வந்திருக்கவேண்டும். ஆனால் ஆரம்ப காலத்தில் இருந்தே மதுரை, கொற்கை முதலியன பிற பாண்டியக் கிளை அரசுகளால் ஆளப்பட்டு வந்திருக்க வேண்டும். இவை குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

    தமிழ்ச் சமூகத்தின், தமிழ் மொழியின் பழமை குறித்து இறுதியாகச் சங்கப்பாடல்களில் இருந்து இரு சான்றினை வழங்க விரும்புகிறேன். கி.மு. 3ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்த ஒல்லையூர் தந்தப் பூதப்பாண்டியன் ஒரு பாண்டியக் கிளை அரசன் ஆவான். அவன் தனது புறம் 71ஆம் பாடலில் தனது பாண்டியர்குடியை நீண்டகாலமாக இருந்துவரும் குடி என்று பாடுகிறான். அது போன்றே  கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சங்ககாலச் சோழர்பகுதிப் புலவனான காவிரிப்பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார் என்பவர் தனது புறம் 58ஆம் பாடலில் சோழ, பாண்டிய வேந்தர்கள் ஒன்றாக இருந்த அவையில் பாண்டியர் குடியை “நல்லிசை முதுகுடி”  எனப் பாடியுள்ளார். ஆகவே 2000 வருடங்களுக்கு முந்தைய சங்க காலத்திலேயே பாண்டியர் குடி ஒரு முதுகுடியாக, ஒரு மிகப்பழமையான புகழ்பெற்ற குடியாகத் தமிழ் மக்களால் கருதப்பட்டு வந்துள்ளது. பாண்டியர்குடியின் பழமை என்பது தமிழ்ச் சமூகத்தின், தமிழ் மொழியின் பழமையைச் சுட்டிக்காட்டுகிறது.

     

    பார்வை:

    17.EARLY WRITING SYSTEM, A Journey from graffiti to Brahmi, K.RAJAN, PANDYA NADU CENTRE FOR HISTORICAL RESEARCH,  MADURAI-10,  2015.   PAGE: 405.

    1. “                              “             PAGE: 87.
    2.  “                                                                               “                                    PAGE: 421
    3. “                                                                             “                                      PAGE: 422
    4. “                                                                             “                                      PAGE: FOREWORD, VI.
    5. Benjamin Guy Baprngton(1830),An account of the sculptures and inscriptions at Mahamalaipur. TRANSACTIONS OF THE ROYAL ASIATIC SOCIETY. VOL 2.(paper  read on 12.07.1828) & உலக அறிஞர்கள் பார்வையில் தமிழ்-பி.இராமநாதன். பக்: 8, 9.
    6. “Significance of Mayilaaduthurai Find” and “Discovery of a century” in Tamil Nadu, THE HINDU    Newspaper Dated 1.5.2006 and 21.5.2008 24.முனைவர் கா. இராசன் அவர்கள், ‘தொல்லியல் நோக்கில் சங்ககாலம்’ உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், 2010, பக்: 16, 17.

    25.தொல்லியல், முனைவர் நா. மாரிசாமி, ஜூன்-2010, பக்: 43.

    26.இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, குமரன் புத்தக இல்லம், அக்டோபர் 2006, பக்:113

    1. “ “ பக்:121, 126, 127.

    28.இலங்கையில் தமிழர்-ஒரு முழுமையான வரலாறு(கி.மு. 300-கி.பி. 2000), கலாநிதி முருகர் குணசிங்கம், எம்.வி வெளியீடு, 2008, பக்: 34.

    29.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்: 61, 62.

    30.இலங்கையில் தமிழர்-கா. இந்திரபாலா, குமரன் புத்தக இல்லம், அக்டோபர் 2006, பக்:120.

    31, 32.அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் அ. இராமசாமி, தொன்மைத்தமிழர் நாகரிக வரலாறு, டிசம்பர் 2013, பக்:11-22.

     

     

    Share
  • தன்வந்திரி பீடத்தில் ஆண்/பெண் திருமணத்தடை நீங்கவும் குழந்தை பாக்யம் பெறவும் பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு ஹோமங்கள்

     

    (கந்தர்வ ராஜ ஹோமம், சுயம்வர கலாபார்வதி யாகம், சந்தான கோபால யாகம் )

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில், ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ

    முரளிதர ஸ்வாமிகளின் ஆக்ஞைப்படி உலக மக்களின் நலன் கருதி வருகிற 31.03.2018 சனிக்கிழமை பௌர்ணமியை முன்னிட்டு ஆண்கள் திருமணத்தடை நீங்க கந்தர்வ ராஜ ஹோமம், பெண்கள் திருமணத்தடை நீங்க சுயம்வரகலா பார்வதி யாகம் மற்றும் தம்பதிகள் குழந்தை பாக்யம் பெற சந்தான கோபால ஹோமம் ஆகிய மூன்று ஹோமங்கள் காலை 10.00 மணியளவில் நடைபெற உள்ளது.

    கந்தர்வ ராஜ ஹோமம்

    திருமணத்தடைகள் உள்ள ஆண்களுக்கு சகல தோஷங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டி கந்தர்வ ராஜ ஹோமம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் பங்குபெறுபவர்களுக்கு ஜாதக ரீதியாக உள்ள தோஷங்களும், கிரக ரீதியாக உள்ள தோஷங்களும், நவக்கிரக தோஷங்களும், பித்ரு தோஷங்களும், மூதாதையர் சாபங்களும் நீங்கி விரைவில் திருமணம் நடக்க வழிவகை செய்கிறது. மேலும் பீடத்தில் சென்ற 13 ஆண்டுகளில் ஏறக்குறைய சுமார் 2500க்கும் மேற்பட்ட கந்தர்வராஜ ஹோமங்கள் நடைபெற்று எண்ணற்ற ஆண்கள் பங்கு பெற்று பயனடைந்துள்ளார்கள்.

    சுயம்வர கலாபார்வதி யாகம்

    திருமணத்தடைகள் உள்ள பெண்கள் திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடைபெற வேண்டிசுயம்வரகலா பார்வதி யாகம் நடைபெற உள்ளது. இந்த ஹோமத்தில் முதலில் கணபதி பூஜை, கிரகதோஷங்கள் நீங்குவதற்காக நவகிரக ஹோமம் நடத்தப்பட்டு பின்னர் சுயம்வரகலா பார்வதி ஹோமம் நடத்தப்பட உள்ளது. இந்த சுயம்வரகலா பார்வதி ஹோமம் செய்வதின் பலன்கள் ஏராளம். திருமணத் தடைகளும் நீங்கி உடனே திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழலாம், மனைவிக்கு ஏற்ற கணவர் அமைவார்கள். மேலும் அவர்களுக்கு இடையேயான இல்லற வாழ்வு மிகவும் அன்பாகவும், மகிழ்ச்சியாகவும், ஒற்றுமையாகவும் இருக்கும்.

    சந்தான கோபால யாகம்

    பெண்களின் பிரசவத்திற்கு பல வகையான உபாயங்கள் உள்ளன. மஹா சந்தான கோபாலானை வழிப்பட்டால் மகப்பேறு கிடைக்கும் என்று நம்பிக்கை. ஸ்ரீ சந்தான கோபால ஹோமம் செய்வதன் மூலம் சுகமாக எத்தடையுமின்றி குழந்தையை பெற்றெடுக்கலாம்.

    மேலும் அறிவு வாய்ந்த திறனுடையவர்களாக திகழ்வார். சந்தானகோபால ஹோமம் கர்ப்ப சிக்கல்கள்கட்டுப்படுத்த கிருஷ்ணர்

    ஆசிகள் பெறுவதற்கான ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஹோமம் ஒரு ஆரோக்கியமான நிலையில் குழந்தை கருவுறும் முறைகள் வழங்குகிறது. இன்னும் பல நன்மைகளை பெற இந்த ஹோமத்தில் பங்குபெறலாம்.. மேலும், பெண் கருத்தடையும் பிரச்சனைகளை நீக்கும் எந்த பிரச்சனையும் இல்லாமல், ஒரு குழந்தை பிறக்க, நாகதோஷம் மற்றும் கர்ம பிரச்சினைகள் இருந்து மீட்க விரும்புவோர் இந்த ஹோமம் செய்யலாம். சந்தான கோபால ஹோமம் சாத்தியமில்லாத கர்ப்ப பிரச்சினைகளை சமாளிக்க ஜாதகத்தில் கிரகங்கள் எதிர்மறை விளைவுகளை அகற்ற செய்கிறது. கர்ப்பிணி பெண்களுக்கு குழந்தை பெற்றெடுக்கும் போது ஏற்படக் கூடிய அபாயத்தைக் குறைக்கும். மேலும், அது சாத்தியமான அச்சுறுத்தல்கள் இருந்து ஒரு குழந்தை பாதுகாக்க உடலில் சக்தி வாய்ந்த ஆற்றலை அனுபவிக்க உதவுகிறது. நன்மை குணங்களும், ஒரு குழந்தைக்கு வரம் அளிக்கிறது. பெற்றோர் குழந்தைகள் திறமைகளை மேம்படுத்த இந்த ஹோமம் நடைபெறுகிறது.

    மேலும் இந்த ஹோமங்களில் பங்கேற்க்கும் நபர்களுக்கு ஸ்தாபகர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆசீர்வதித்து அன்னதானமும் வழங்கப்படும். இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு

    ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடம்

    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை, வாலாஜாபேட்டை – 632 513.

    வேலூர் மாவட்டம். தொலைபேசி : 04172 – 230033, செல் – 9443330203

    Web: www.danvantritemple.org, www.danvantripeedam.blogspot.in

    Email: danvantripeedam@gmail.com

    Share
  • ஈகோவை விட….!

     

    ’ஈகோவை விட்டு இரைந்து சிரித்திடப்
    போகோவைப்(TV) பார்பேரன் பேத்தியொடு, -ஆகாகா!
    சாகா வரம்பெற்ற சோட்டாபீம் கார்டூனால்,
    தேகாபி மானம் தொலைப்பு’’….கிரேசி மோகன்….!

     

    Share