Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180408 Yashoda’s Universe- lr A4

    ”கண்ணிக்கு காட்டினார் கண்டங்கள் ஈரேழை
    அன்னிக்கு மாற்றாந்தாய் அன்னையின் -சென்னைக்கு(தாய் வீடு)
    சேயாய் மடிவாழ்ந்தார் , சந்திர வம்ஸசிசு
    தாயார் குடல்விளக்கம் தாமு’’(தாயார் குடல்விளக்கம் செய்த தாமோதரர்)’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்தியாவில் நுண்துகள் நியூடிரினோ ஆய்வுக் கூடம் அமைக்க தமிழ்நாட்டு போடி மலைப்பீடம் தேர்ந்தெடுப்பு

     

    Posted on 

    இந்திய நியூடிரினோ ஆய்வுகூடம், தேனி 

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    +++++++++++++++++++

    அற்பச் சிறு நியூடிரினோ பிரபஞ்சத்தின்
    சிற்பச் செங்கல் !
    புவிக்கோள் துளைத்திடும்
    நுண்துகள் !
    பெரு வெடிப்பில் உதிர்ந்த
    கோடான கோடி
    அக்கினிப் பூக்கள் !
    சுயவொளிப் பரிதிகளின்
    வயிற்றில் உண்டானவை !
    வலை போட்டுப் பிடிக்க முடியாத
    வையகக் குஞ்சுகள் !
    ஒளிவேகத்தில் விரையும் மின்மினிகள் !
    கண்ணுக்கும் தெரியா !
    கருவிக்கும் புரியா !
    எதனுடனும் இணையா !
    முன்னூறுக்கு மேற்பட்ட
    நுண்ணணுக்கள்
    விண்வெளியில் விளையாடும் !
    பிரபஞ்சத்தின்
    சீரமைப்பு முரணுக்குக்
    காரணம்
    நியூட்டிரி னோவா ?
    பிரபஞ்ச மூலச் சிசுவைப் படம்
    பிடிக்கும் ஆய்வகம் !

    ++++++++++++++++++

    மக்கள் ஐயங்களைப் போக்க, நாங்கள் மாதிரி நியூடிரினோ ஆய்வு மையத்தை  மதுரை நாகமலையில் அமைக்கப் போகிறோம்.  அம்பரப்பர் மலை அடிவாரத்தில், பூமியைத் தோண்டாமல், 2.0 கி.மீ. தூரத்தில் மலையைக் குடைந்த மைப்போம்.   கொங்கன் ரயில்வே திட்டத்திற்காக மலையைக் குடைந்ததை விட, எங்கள் திட்டத்தில் சிக்கல் குறைவு.  பாறைகளைத் தகர்க்கும் போது, ஏற்படும் நில அதிர்வுகளை நாங்கள் உணர்வதே கடினம்.  ரஷ்யாவிலே பைக்கால் ஏரியின் அடியில் நியூடிரினோ ஆய்வகம் அமைத்துள்ளார்.  எங்கள் திட்டம் ஐந்தாண்டுகள் தான் எடுக்கும்.  அதுவரைத் தண்ணீர் தேவைப்படும்.  மேலும்  வேண்டிய நீருக்கு  இருக்கும் நீரை மறுசுழற்சி செய்து பயன்படுத்திக் கொள்வோம்.  ஆய்வகம் தயாரானதும், மக்கள் தொடர்ந்து பார்க்க வரலாம்.

    பேரா ஸ்டீஃபன் ராஜ்குமார், நியூடிரினோ திட்ட உறுப்பினர்,  அமெரிக்கன் கல்லூரி மதுரை .


     

    இந்திய நியூடிரினோ ஆய்வகக் கூடம்  – போடி மலைப்பீடம்

    வட துருவச் சூழ்வெளியில் தோன்றிய நியூட்டிரினோக்கள் பொதுவாக முவான் நியூட்டிரினோக்கள் [Muon Neutrinos]. அவை பூமி விட்டத்தைக் [13,000 கி.மீ / 8000 மைல்] கடந்து தென் துருவத்தை நெருங்கும் போது, குவாண்டம் துடிப்புகளில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ [Tau] நியூட்டிரினோக்களாக மாறிப் பனிப்பேழைக் கருவியால் பதிவு செய்யப் படுகின்றன. இவ்விதம் ஆழ்ந்து உளவு செய்ய பனிப்பேழைத் திட்டம் எங்களுக்கு உதவி செய்கிறது.

    ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம்]

    மிதவேக நியூடிரினோ பிடிக்கும் பேழை 

    நியூடிரினோ புது ஆய்வு நிகழ்ச்சி அணுப்பிணைவு சக்தி ஆக்கத்திற்குப் பாதை வகுக்கும்.

    2015 பௌதிக நோபெல் பரிசை ஜப்பான் விஞ்ஞானி தகாக்கி கஜிதாவுடன் பகிர்ந்து கொண்ட கனடா விஞ்ஞானி ஆர்தர் மக்டொனால்டு, தன் புதிய நியூடிரினோ ஆய்வு நிகழ்ச்சி பாதுகாப்பான அணுப்பிணைவு சக்திக்குப் பாதை வகுக்கும் என்று அறிவித்துள்ளார். எதிர்காலத்தில் வரப் போகும் அணுப்பிணைவு சக்தியில் கதிரியக்கம் எழுவதில்லை. மேலும் அணுப் பிணைவு சக்தியை எளிதாக, மலிவாக, மிகுதியாக மின்சக்தி உற்பத்தி செய்யப் பெற முடியும். இன்னும் 20 -25 ஆண்டுகளில் கதிரியக்கமுள்ள தற்போதைய அணுப்பிளவு மின்சக்தி நிலையங்கள் மெதுவாக நிறுத்த மடையும். இப்போது செய்து காட்டிய நியூடிரினோ ஆய்வு நிகழ்ச்சி அணுப்பிணைவு சக்தியைத் துல்லியமாக அளப்பாடு செய்யப் பயன்படும் என்று தெளிவாகத் தெரிகிறது. அதுபோல் சூரியனின் அணுப்பிணைவு சக்தியைத் துல்லியமாக அளக்க உதவும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.

    நியூடிரினோ துகள் பௌதிகத்தில் நான் செய்த ஆய்வுகள் பரிதியை இயக்கிவரும் அணுப்பிணைவு [Nuclear Fusion Reactions that Power the Sun] இயக்கங்களை அளக்க உதவும். சூரியனின் இயக்க அளப்பாடுகளைத் துல்லியமாக அறிய முடிவது, பூமியில் செய்யப்படும் ஆய்வுகளைப் புரிந்து கொள்ளப் பேரளவு உதவுகிறது. கதிரியக்கமுள்ள அணுப்பிளவு சக்திக்கு மாறாக, அணுப்பிணைவு சக்தி மலிவானது, மிகையானது, எளிதாய்க் கிடைப்பது. பாதுகாப்பானது. இந்த அரிய நிகழ்ச்சி கனடாவின் ஸட்பரி நியூடிரினோ ஆய்வகத்தில் [SNOLAB] நேர்ந்தது, மாணவருக்கு ஓர் மெய்யான சாதனைத் தருணமாகும்.

    ஆர்தர் மெக்டானல்டு [பேராசிரியர், குயின் பல்கலைக் கழகம், கிங்ஸ்டன், அண்டாரியோ, கனடா]

    Arthur Mcdonald

    Neutrinos from Sun

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.youtube.com/channel/UCqhypTo6SWmi5bbVBmUf9NA

    https://www.youtube.com/watch?v=aMnGWqoDaAA

    https://www.youtube.com/watch?v=iv-Rz3-s4BM

    http://www.telegraph.co.uk/news/worldnews/antarctica/10466476/Neutrinos-from-outer-space-found-in-Antarctic.html

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=yjodNwu2r8s

    http://www.nsf.gov/news/special_reports/science_nation/icecube.jsp

    ++++++++++++++

     

    Icecube Project

    பனிப்பேழைத் திட்டத்தில் தூர விண்வெளி அரங்குகளிலிருந்து வரக் கூடிய 35 நியூட்டிரினோக்களைப் பதிவு செய்தோம்.  அவை மிக்க உயர் சக்தி உடையவை.  ஏனெனில் அவை வெகுதூரப் பயணத்தில் இயங்கி எவற்றுடனும் ஈடுபடாமல், பிரபஞ்சத் தகவல் கொண்டு வருபவை. மேலும் பூமியில் தோன்றும் நியூட்டிரினோக்களின் பண்பாடுகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்.

    ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம், நீல்ஸ் போர்க் ஆய்வுக்கூடம், கோபன்ஹேகன் பல்கலைக் கழகம்]

    வட துருவச் சூழ்வெளியில் தோன்றிய நியூட்டிரினோக்கள் பொதுவாக மிவான் நியூட்டிரினோக்கள் [Muon Neutrinos].  அவை பூமி விட்டத்தைக் [13,000 கி.மீ / 8000 மைல்] கடந்து தென் துருவத்தை நெருங்கும் போது, குவாண்டம் துடிப்புகளில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ [Tau] நியூட்டிரினோக்களாக மாறிப் பனிப்பேழைக் கருவியால் பதிவு செய்யப் படுகின்றன.  இவ்விதம் ஆழ்ந்து உளவு செய்ய பனிப்பேழைத் திட்டம் எங்களுக்கு உதவி செய்கிறது.

    ஜேஸன் காஸ்கினென் [துணைப் பேராசிரியர், தென்துருவ பனிப் பேழைத் திட்டம்]

    தென் துருவத்தில் நியூட்டிரினோ பற்றிய பனிப்பேழை ஆராய்ச்சிகள்

    2010 டிசம்பரில் தயாரிக்கப்பட்ட தென்துருவப் பனிப்பேழை [Icecube] நியூட்டிரினோ ஆராய்ச்சித் திட்டம் 12 உலக நாடுகளின் 44 ஆய்வுக் கூடங்கள் பங்கெடுத்துப் பிரபஞ்ச மர்மமான நியூட்டிரினோக்களைப் பற்றி ஆழ்ந்து உளவு செய்ய உருவாக்கப் பட்டது.

    Fig 3 Catching High Energy Cosmic Rays

    பனிப்பேழை மாபெரும் ஒரு துகள் கண்டுபிடிப்புச் சாதனம்.  அதில் 86 வடங்கள், ஒவ்வொன்றிலும் 60 டிஜிட்டல் ஒளிப்பதிவு அமைப்பைக் [86 cables each with 60 Digital Optical Modules ] கொண்டுள்ளன. பனிப்பேழை அமைப்பு பூமிக்குக் கீழே 1.5 கி.மீ. ஆரம்பித்து 2.5 கி.மீ. வரை முடிவது. ஒவ்வொரு வடமும் வெந்நீரில் தோண்டிய துளையில் 2.5 கி.மீ. தூரம் நுழைக்கப் பட்டுள்ளது.  நியூட்டிரினோ பனித்திரட்சியில் மிக அபூர்வமாக பிண்டத்துடன் பின்னி இயங்குகிறது.  அப்படி மோதி இயங்கும் போது கதிர் வீசும் மின்னேற்றத் துகள்  [Charged Particle] ஒன்று தோன்றுகிறது. அதைத் தான் டிஜிட்டல் ஒளிப்பதிவுக் கருவி கண்டுபிடிக்கிறது.

    கடந்த 3 ஆண்டுகளாக [2011 – 2013] 5200 ஈடுபாடுகள் பதிவாகியுள்ளன. மூன்று வித நியூட்டிரினோக்கள்  இருப்பதாக நம்பப் படுகின்றன. அவை : எலெக்டிரான், மூவான், டௌ [Electron, Muon, Tau Neutrinos].  அவற்றைப் பற்றி பனிப்பேழைத் திட்ட துணைப் பேராசிரியர் ஜேஸன் கோசினென் கூறுகிறார்: “நாங்கள் கண்டுபிடித்து முடிவு செய்தது,  நியூட்டிரினோக்கள் [மூவான்கள்] உயர் சக்தி நிலையில் குவாண்டம் துடிப்பியக்  கத்தில் [Quantum Fluctuations] ஈடுபட்டு டௌ நியூட்டிரின்களாக மாறுகின்றன. பிரபஞ்சத் தூதாகக் [Messengers from the Universe] கருதப்படும் நியூட்டிரினோ பற்றி விஞ்ஞானிகள் இன்னும் பூரணமாக அறியவில்லை.  இந்த பனிப் பேழை ஆராய்ச்சிகள் அவற்றைப் பற்றி ஓரளவு தெரிந்து கொள்ள மட்டும் உதவுகின்றன.”

    Icecube Neutrino Project

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=sZPLcv-ASwc

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=6P9fEhuyx50

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gssq7Kngyow

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=gX7jxnDMSHw

    https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=o-y4m6c2h8o

    “அதனுடைய திணிவு நிறை எலெக்டிரானை விட மிகச் சிறியது ! ஃபெர்மி அந்த நுண்ணணு வுக்கு “நியூட்டிரினோ” என்று பெயரிட்டார் ! அவற்றின் சுழற்சி 1/2 (Spin 1/2) என்று இருக்கலாம் என்பது எனது யூகம். அவை மற்ற பிண்டத் துகளுடனும், ஒளித்திரளுடனும் இணைப்பாடு இல்லை. (No Interactions with Matter or Photons)”

    நோபெல் பரிசு விஞ்ஞானி : உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) (1930)

    “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன்களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூடிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல்வாதிகள் (Cosmologists). நியூட்டிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”

    ஜான் லேனர்டு விஞ்ஞானி ஹவாயி பல்ககைக் கழகம்

    Ice-cube observatory -2

    புதிரான கருமைச் சக்தியின் மர்மான நுண்ணணுக்கள் !

    பிரமாண்டமான பிரபஞ்சத்தில் முக்கால் திணிவுப் பகுதியான கருமைச் சக்தி (Dark Energy) மனிதக் கண்ணுக்குப் புலப்படாமலும் என்னவென்று விளக்க முடியாமலும் “அகிலப் புதிராக” (Heavenly Mystery) இன்னும் இருந்து வருகிறது ! அதைப் போன்று அடுத்து மர்மமானது பிரபஞ்சத்தின் கால் பகுதியாக இருக்கும் “கருமைப் பிண்டம்” (Dark Matter) ! புதிருக்குள் புதிரான நியூட்டிரினோ துகள்கள் பிரபஞ்சப் பிண்டத்தின் மூலத்துக்கு அடிப்படை என்று நிரூபிக்க உதவலாம் ! அகிலவெளிப் புதிர்களை ஆழ்ந்து ஆராய விஞ்ஞானிகள் நுண்ணணு விரைவாக்கி கள் (Particle Accelerators), தொலைநோக்கிகள், துணைக்கோள்கள் ஆகியவற்றைத் தற்போது பயன்படுத்தி வருகிறார்.

    சில உயர்ச் சீரமைப்பு நுண்ணணுக்கள் (Super Symmetric Particles) மிகப் பலவீனமாக உடனியங்கும் துகள்களின் பிரதானக் குடிகள் (Prime Candidates for the very weakly interacting Particles) என்று ஜப்பானிய விஞ்ஞானி முராயமா கருதுகிறார். விரைவாக்கி கள் நுண்ணணுக்கள் எவ்விதம் தம்முள் உடனியங்குகின்றன என்று உளவவும், அவற்றின் திணிவு நிறையை (Mass) அளக்கவும் உதவுகின்றன. அம்முறையில் “நியூடிரினோ பௌதிகம்” (Neutrino Particle Physics) ஓர் மகத்தான இடத்தைப் பிடித்துக் கொண்டுள்ளது ! 1995 ஆம் ஆண்டில் அமெரிக்க விஞ்ஞானிகள் லாஸ் அலமாஸ் தேசீய ஆய்வகத்தில் நியூட்டிரினோ வின் திணிவு நிறையை 5 eV (5 Electron Volt) (Mass of Neutrino is 1/100,000 of the Mass of Electron) என்று கண்டுபிடித்தது விண்வெளித் தேடலில் முக்கியத்துவம் பெறுகிறது !

    பிரபஞ்சப் பெரு வெடிப்பிலிருந்து கோடானகோடி நியூட்டிரினோ நுண்ணணுக்கள் சிதறி விண்வெளி எங்கும் பில்லியன் ஆண்டுகளாய்ப் பொழிந்து வந்துள்ளன. சூரியனைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் நியூட்டிரினோக்களை உற்பத்தி செய்கின்றன. வெடித்துச் சிதையும் சூப்பர்நோவாக்கள் நியூட்டிரினோக்களை வெளியாக்கி வருகின்றன ! எலெக்டிரானுக்கும் சிறிதான நியூட்டிரினோவுக்கு முதலில் நிறையில்லை என்றுதான் விஞ்ஞானிகள் கருதி வந்தனர். மேலும் நியூட்டிரினோ எலெக்டிரான் நியூடிரினோ, மியூவான் நியூட்டிரினோ, டௌ நியூட்டிரினோ (Electron Neutrino, Muon Neutrino & Tau Neutrino) என்று மூன்று வகையில் மிகச் சிறிதாக இருப்பதாலும், அவற்றைப் பிடித்துப் பரிமாணம், பண்பாடுகளைக் காண முடியாது. நியூட்டிரினோவின் நிறையை விரைவாக்கிகளில் கணிக்க முடியாது. கனடாவில் பூமிக்கடியில் பல மைல் ஆழத்தில் இருக்கும் ஸட்பரி சுரங்கத்தில் அமைக்கப் பட்டுள்ள “ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககத்தில்” (Sudbury Neutrino Observatory SNO) பரிதியின் நியூட்டிரினோக் களைக் கனநீரில் பிடித்துப் பண்பாடுகளைக் காண முடிகிறது. அதுபோல் ஜப்பானில் நியூட்டிரினோவை நோக்க “உயர் காமியோகந்தே” (Super_Kamiokande) என்னும் பிரமாண்டமான விஞ்ஞானச் சாதனம் ஒன்று உள்ளது !

    நியூட்டிரினோவைக் கண்டுபிடித்த உலக விஞ்ஞானிகள் !

    13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய பிரபஞ்சத்தில் நியூட்டிரினோப் பொழிவுகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன. பிரபஞ்சம் கனலில் கொதித்து விரிந்து, விரிந்து மெதுவாகக் குளிர்ந்து அகிலப் பின்புலக் கதிர்வீச்சு (Cosmic Background Radiation) உஷ்ணம் தற்போது 1.9 டிகிரி கெல்வின் (-217 டிகிரி செல்ஸியஸ்) ஆக உள்ளது. ஆனால் நியூடிரினோவின் இருப்பு முதன் முதலில் 1930 ஆம் ஆண்டில் ஆஸ்டிரிய விஞ்ஞானி உல்ஃப்காங் பாலி (Wolfgang Pauli) [1900-1958] என்பரால் அறிமுகமானது. அணுக்கருப் பீட்டாத் தேய்வில் சக்தியின் அழிவின்மைக் கோட்பாட்டை விளக்க வரும் போது புதுத் துகள் ஒன்றின் நிழல்தடம் அவருக்குத் தெரிந்தது. அதன் நிறை எலெக்டிரான் நிறையை விடக் குறைவானது ! அதற்கு எந்த மின்னேற்றமும் இல்லை (No Electrical Charge) ! ஏறக்குறைய புலப்படாத நுண்துகள் (Almost Invisible Particle) ! மற்ற துகள்களுடன் உடன்சேர்ப்பில்லை (No Interaction with Other Particles).

    இத்தாலிய விஞ்ஞானி என்ரிகோ ஃபெர்மி (Enrico Fermi) (1901-1954) அந்தத் துகளுக்கு “நியூட்டிரினோ” (Little Neutral One) என்று பெயரிட்டார். ஆனால் 1956 இல் ஃபிரெடிரிக் ரையின்ஸ் & கிளைடு கோவன் (Fred Reines & Clyde Cowan) இருவரும் முதன்முதலில் அணு உலையில் நியூட்டிரினோ உடனியக்கங்களை நிகழ்த்திக் காட்டினர். நியூடிரினோவின் நிறை எலெக்டிரான் நிறையை விடச் சிறியது என்று 1933 இல் எடுத்துக் காட்டியவர் எஃப். பெர்ரின் (F. Perrin). 1934 இல் ஹான்ஸ் பெத்தே & ரூடால்ஃப் பையர்ஸ் (Hans Bethe & Rudolf Peiers) இருவரும் நியூட்டிரினோவின் “குறுக்குப் பரப்பு” (Cross Section means Probability of Interaction) எலெக்டிரானின் குறுக்குப் பரப்பை விட மில்லியன் மடங்கு சிறியது என்று நிரூபித்தனர்.

    Fig 1B Neutrino Production

    அகிலக் கதிர்கள், சூரியன் போன்ற சுயவொளி விண்மீன்கள், அணு உலைகள், பூமிக்குள் நிகழும் கதிரியக்கத் தேய்வுகள் (Cosmic Rays, Sun Like Stars & Nuclear Reactors, Radioactive Decay within the Earth) ஆகிய நான்கு முறைகளையும் சேர்த்துப் பல்வேறு முறைகளில் மூன்றுவித நியூட்டிரினோக்களும் உண்டாக்கப் படுகின்றன ! வலுவில்லாத நுண்ணணு நியூட்டிரினோ விழுங்கப் படாமல் 600 டிரில்லியன் மைல் (மில்லியன் மில்லியன் மைல்) தடிப்புள்ள ஈயத்தைக் கூட ஊடுருவும் வல்லமை பெற்றது ! பரிதியிலிருந்து வினாடிக்குச் சுமார் 10 மில்லியன் நியூட்டிரினோக்கள் வெளியாகி ஒளிவேகத்தில் நம்மை ஊடுருவிச் செல்கின்றன ! எந்தப் பிண்டத் துகளுடன் இணையாத நியூட்டிரினோ அண்டக் கோள்களைத் துளைத்துச் செல்பவை ! சூரியன், சந்திரன், பூமி அனைத்தையும் ஊடுருவிச் செல்பவை ! சூரியன் மட்டும் ஒவ்வொரு வினாடியும் 200 டிரில்லியன், டிரில்லியன், டிரில்லியன் நியூட்டிரினோக் களை உற்பத்தி செய்கிறது ! வெடித்துச் சிதையும் ஒரு சூப்பர்நோவா சூரியனை விட 1000 மடங்கு மிகையான நியூட்டிரினோக்களை வெளியாக்கும் ! சுமார் 65 பில்லியன் நியூட்டிரினோக்கள் பரிதியிலிருந்து ஒவ்வொரு வினாடியும் 1 சதுர மீடர் பூமியின் சதுரத்தில் பாய்ந்து விழுகின்றன !

    கனடாவின் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNOLAB)

    அமெரிக்காவின் புருக்ஹேவன் தேசீய ஆய்வகத்தின் கூட்டுறவுடன் அண்டாரியோ, கனடாவில் ஸட்பரி நியூட்டிரினோ நோக்ககம் (SNO) 1996 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு 1999 அக்டோபர் முதல் இயங்கத் துவங்கியது. அந்த ஆய்வகம் 6800 அடி ஆழத்தில் குடையப்பட்ட ஒரு சுரங்கத்தில் (Sudbury, Ontario Creighton Mine) அமைக்கப் பட்டுள்ளது. உளவும் பிளாஸ்டிக் கலத்தில் சுமார் 1000 டன் பூரணத் தூயக் கனநீர் (1000 Ton Ultra Pure Heavywater in Acrylic Plastic Container) கொண்டது. அந்த பூதக் கலமானது 7000 டன் தூய சாதா நீர் சுற்றியுள்ள கவசப் பானையில் வைக்கப் பட்டுள்ளது. அதில் பயன்படும் 300 மில்லியன் டாலர் மதிப்புள்ள 1000 டன் கனநீரைக் கனடா வாடகைக்குக் கொடுத்துள்ளது. அந்த சாதா நீர்ப் பானையில் 9500 அடுக்குப் படம் நோக்குக் கருவிகள் மூலம் (Photomultiplier Tubes PMT) நியூட்டிரினோக்கள் கனநீரில் உண்டாக்கும் நீல நிறச் “செராங்கோவ் கதிர்வீச்சைப்” (Blue Glow – Cerenkov Radiation) படம் எடுக்கலாம்.

    அறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கருமைப் பிண்டத்துக்கு மூலமாகுமா ?

    பரிதியைப் போன்ற சுயவொளி விண்மீன்கள் அணுப்பிணைவு சக்தியில் கனல் வீசினாலும் நியூட்டிரினோ நுண்ணணு எவ்விதம் வெளியாகிறது என்பது அறியப்படாமல் பிரபஞ்சப் புதிராகவே இருந்து வருகிறது ! வானியல் விஞ்ஞானிகள் கண்ணுக்குப் புலப்படும் ஒளிமயத்தைத் தவிர பிரபஞ்சத்தில் இன்னும் ஏராளமான பிண்டம் (Matter) இருப்பதாகக் கணிக்கிறார்கள். ஏனெனில் காலாக்ஸி ஒளிமந்தைகளை ஏதோ கண்ணுக்குத் தெரியாத பிண்டங்களின் கவர்ச்சி நகர்த்திச் செல்கிறது. அந்தப் பிண்டம் ஒளியைத் தடுத்து மறைப்ப தில்லை ! மேலும் அந்தப் பிண்டம் ஒளியை உமிழ்வதுமில்லை ! ஆகவேதான் கண்ணுக்குத் தெரியாத அந்தப் பிண்டம் “கருமைப் பிண்டம்” (Dark Energy) என்று அழைக்கப் படுகிறது !

    இப்போது விஞ்ஞானிகள் மனதில் எழும் வினாக்கள் இவைதான் ! இதுவரை அறியப்படாத சில வித நியூட்டிரினோக்கள் கண்ணுக்குப் புலப்படாமல் கணிக்கப் பட்ட கருமைப் பிண்டத்துக்கு அடிப்படை ஆகுமா ? இன்னும் புலப்படாமல் இருக்கும் புதிய நியூட்டிரினோக்கள் பிரபஞ்ச வெளியில் விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கக் காத்துக் கொண்டுள்ளனவா ? அந்தக் கேள்விகளுக்கு “ஆம்” என்று பதில் அளிப்பவர் : ஹவாயி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஜான் லேனர்டு (John Learned) என்னும் வானியல் விஞ்ஞானி ! “இரவு வானத்தில் ஒளிவீசித் தெரியும் விண்மீன் களின் கொள்ளளவுப் பிண்டங்களை விட நியூட்டிரினோக்களின் திணிவு நிறைப் பேரளவு மிஞ்சி இருப்பதாக நாம் அறிவோம். விண்மீன்களை விட மிக்கப் பரிமாணம் கொண்டவையாக நியூட்டிரினோக்கள் இருக்கலாம். அதனால் (கருமைப் பிண்டத்தைப் பற்றிக் கணிக்கும் போது) அகிலவியல் வாதிகள் (Cosmologists).” நியூடிரினோக்களைக் கணக்கில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.” என்று கூறுகிறார் ஜான் லேனர்டு.

    பிரபஞ்சத்தில் பேரளவு பிண்டம் எவ்விதம் ஆதியில் உண்டானது ? நியூட்டிரினோக்களைத் தவிர்த்துக் கருமைப் பிண்டத்தில் இன்னும் புலப்படாமல் இருக்கும் நுண்ணணுக்கள் பங்கேற்றிருக்கலாம் ! பிண்டம் எப்படித் தோன்றியது என்று அவை விஞ்ஞானிகளுக்குப் புதிய பாடத்தைப் போதிக்கலாம் ! பிரபஞ்சப் பெருவெடிப்பு நேர்ந்த போது பிண்டமும், எதிர்ப் பிண்டமும் (Matter & Antimatter like Electron & Positron) சமப் பரிமாணத்தில் படைக்கப் பட்டிருக்க வேண்டும் ! ஆனால் பிண்டமும் எதிர்ப் பிண்டமும் சேரும் போது அவை இணைந்து அழிகின்றன ! அப்படிச் சம அளவில் படைக்கப் பட்டிருந்தால் அவை அழிந்து வெறும் கதிர்வீச்சு மட்டும் (Radiation Energy) பிரபஞ்சத்தில் நிரம்பி யிருக்கும் ! ஏராளமாக ஏன் பிரபஞ்சத்தில் பேரளவு ஈர்ப்பாற்றல் கொண்ட பிண்டம் கொட்டிக் கிடக்கிறது ?  ஒரு வேளை நியூட்டிரினோக் கள் பிரபஞ்சத்தின் ஆரம்ப காலச் “சீரமைப்பு முரணுக்குப்” (Early Asymmetry of the Universe) பங்கேற்றி யிருக்கலாம் ! அது மெய்யானால் நமது உயிர்வாழ்வுக்கும் நியூட்டிரினோக்களே மூல காரணமாக இருக்கும் !

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – Do Neutrios Hold Secrets to the Cosmos ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 Hyperspace By : Michio kaku (1994)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)
    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)
    17 The Geographical Atlas of the World, University of London (1993).
    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)
    19 South Pole Neutrino Detector Could Yield Evidences of String Theory (www.physorg.com/)
    20 Where Cosmology & Particle Physics Meet By : Paul Preuss – Science@berkeley Lab (Jan 30, 2006)
    21 Fermi Lab – MINOS Experiment Sheds Light on Mystery of Neutrino Disappearance (Mar 30, 2006)
    22 The Birth of Neutrinos (1930-1934)

    23 Dept of Energy USA, Solar Neutrinos & Sudbury (Canada) Neutrino Observatory (SNO) By : Richard Halm, Minfang Yeh, Keith Rowley, Zheng Chang & Alexander Garnov (July 27, 2004)

    1.  http://www.ps.uci.edu/~superk/neutrino.html  [1998]
    2.  http://en.wikipedia.org/wiki/IceCube_Neutrino_Observatory  [February 21, 2015]
    3.  https://icecube.wisc.edu/masterclass  [March 18, 2015]
    4.  http://phys.org/news/2013-05-icecube-neutrino-observatory-evidence-extraterrestrial.html  [My 16, 2015]
    5.  http://en.wikipedia.org/wiki/Neutrino [May 19, 2015]
    6. http://en.wikipedia.org/wiki/Neutrino_detector  [May 20, 2015]
    7.  https://icecube.wisc.edu/outreach/neutrinos
    8. http://www.ino.tifr.res.in/ino/index.php
    9. http://www.ino.tifr.res.in/ino/about.php
    10. http://www.ino.tifr.res.in/ino/inofaq/inofaqtntamil1.pdf

    ******************
    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  April 8, 2018 [R-1]

    Attachments area
    Preview YouTube video IceCube Neutrino Observatory – Animated Overview

    Preview YouTube video Neutrino, measuring the unexpected–IceCube

    Preview YouTube video A Day at SNOLAB

    Preview YouTube video inside snolab

    Preview YouTube video Public Lecture—Neutrinos Get Under Your Skin

    Preview YouTube video Segre Lecture: Understanding Neutrinos Using Deep Dark Scien

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180406 Trivikrama -graphite -A4 -lr

    ஆன்மாவாய் வந்தது அங்குஷ்ட வாமனம்
    வான்மேவும் விக்கிரமன், வாசனைகள் -நான்மேவ
    மூவாசை மண்களை மேலும்கீழ் போய்த்தாண்டி
    ஆவேச நானை அழிப்பு’’….கிரேசி மோகன்….!

    கள்ளா குருவாயூர் பிள்ளாய் வருவாயே
    உள்ளம் நிறைவாக என்முன்னே – தெள்ளிய
    மாமுனிக்கு விக்கிரமா, காமினிக்கு சுக்கிரனே(அதிர்ஷ்ட காதலர்)
    யாமினிக்க வாமனா வா….!

    உக்கிரமாய் வாமனன் ஓர்புல்லால் குத்திட
    சுக்கிரன் கண்ணிழக்க, சொட்டியது -அர்க்கியநீர்.
    விக்கிரமன் ஆகி விசுவரூபம் காட்டிநின்றான்
    அக்கணம் வாமனன் அங்கு….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    140420 -China Krishna -Gita charama shloka-watercolour 18x24cms

    ”காசிக்குப் போயும் குறட்டை விடுமிந்த
    கிரேசியின் வாய்வழியாய் கச்சேரி: -ஆசையாய்
    பீஜிங்கே போனாலும் பத்பநாபர் பாதத்தில்
    ஆஜர் அவதார ‘ஆ’(கண்ணனுடன் அவதரிக்கும் காமதேனு)….!கிரேசி மோகன்….!

    ‘சிரிச்சு சிரிச்சுவந்தார் சீனா விலேடோய்,
    கரிச்சான்குஞ்(சு) ஆவுக்காய் ,காலை -விரிச்சான்
    விரிச்சாண்காண் கண்ணனவர் வாத்ஸல்யம் காட்டும்
    அரிஜாண்சேய் ஆனாலும் ஆண்(புருஷோத்தமர்)’’….கிரேசி மோகன்….!

    ஈறடியால் மண்விண்ணை ஏற்றதிரு விக்கிரமன்
    சீரடியால் மூன்றென சென்னிவைத்து -பாரடி(பார் அடி)
    பாதாளம் செல்ல பலியை அழுத்திட,
    பாதார விந்தம் பசு….!

    Share
  • குளிர்ச்சியின் கொழுந்து நான்; நெருப்பன்று!

    கவியோகி வேதம்

     

     

    குளிர்ச்சியின் கொழுந்தை உறிஞ்சிட என்றன்
    கொடிய மனமும் தாபமுறும்;.
    தளிரின் மென்மையைக் கவிச்சொல்லில் புகுத்திடத்
    தவிக்கும் நெஞ்சமும் வேகமுறும்;.
    நெளியும் பாம்புகள், நிமிரும் விதைகள்-என் 
    நேசம் கலந்த நுண்உயிர்கள்;
    களிப்பைச் செய்யும் ப்ரம்மனின் கைகள்-என்
    காவல் மந்திரம் உணருங்கள்!.

    வெட்ட வெளியினில் கொட்டிக் கிடக்கும்
    விந்தையும் நரம்பினில் உள்ளதடீ!
    கட்டப் படுமுன் பட்டிடும் ஓலமும்
    கர்வ மனத்துள் அடங்குதடீ!
    கொட்டும் மழையும் வெட்டும் அலையும்
    கொஞ்சமும் வெளியில் இல்லையடீ!
    நிட்டை வரணுமா? சட்டென மனக்கண்
     நிச்சயம் அதனில் ஒடுங்குதடீ!

    கள்ள மனஎண்ணம் என்முன் நிற்கையில்
    கருப்பாய்ப் பொடிந்தே பொசுங்குமடீ!
    வெள்ளம் எனஒரு வேதனை பிறக்கையில்
    விரல்கள் தடவிட மறையுமடீ!
    சள்ளைக் குமுறலும் தடுக்கும் புலம்பலும்
    சட்டெனக் கண்முன் நசுங்குமடீ!
    கொள்ளை கொள்ளையாய்த் துர்க்கை சிரிக்கிறாள்!
    குலவத் தொல்லைகள் வருமோடீ?
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    Share
  • நன்மையும் தீமையும்!

    -மேகலா இராமமூர்த்தி

    இந்நிலவுலகில் எத்தனையோ பெருஞ்சான்றோர்கள் தோன்றி மக்களுக்கு அறவுரை பகர்ந்திருக்கின்றார்கள்! எத்தனை எத்தனையோ நன்னெறிகள் அவர்களால் பரப்பப்பட்டிருக்கின்றன! வாழ்வியலை வகுத்துரைக்கும் எத்தனையோ அறநூல்கள் அவர்களால் இயற்றப்பட்டிருக்கின்றன. அவற்றால் ஆய பயன் என்ன?

    நன்மையை வளர்க்க அம்மாமனிதர்கள் எவ்வளவோ பாடுபட்டபோதினும், இங்கே வளர்ந்த தீமைகளும் கெடுதல்களுமே அதிகம். இதில் வேதனை என்னவென்றால்…பேரறஞ் சொன்ன அப்பெரியோர்கள் பலரும் வரலாற்றில் தீயவர்களால் இரக்கமின்றிக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான்!

    ஆம், சாக்ரடீஸ் எனும் சிந்தனையாளனுக்கு விஷத்தையும், ஏசுநாதருக்குச் சிலுவையையும், நபிகள் நாயகத்துக்குக் கல்லடியையும், அகிம்சையே தன்வழி என்று வாழ்ந்த நம் தேசத் தந்தை காந்தியடிகளுக்குத் துப்பாக்கிக் குண்டையும் பரிசளித்து, அவர்களைச் சிறப்பித்த அற்புத உலகமல்லவா இது!

    காந்தியாரின் கொடூர மரணத்தை அறிந்த மேனாட்டறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா,

    ”It shows how dangerous it is to be too good!” (”அளவுக்கு மீறி நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது!!”) என்றார் வெறுத்துப்போய்!

    கால எந்திரத்தைக் கொஞ்சம் பின்னோக்கித் திருப்பிச் சங்ககாலத்தை நோக்கி நம் பார்வையைப் பதித்தால், முல்லைக்கொடி ஒன்று பற்றிப்படரக் கொழுகொம்பில்லாமல் காற்றில் தவிக்கிறதே என்று வருந்தித் தன் தேரையே அதற்குப் பற்றுக்கோடாக விட்டுச்சென்ற பறம்புமலைத் தலைவன் பாரி நம் கண்ணில்படுகிறான்.

    பெருவள்ளலான பாரி தன்னை நாடிவந்த இரவலர்க்கெல்லாம் வாரி வாரி வழங்கியே கரங்கள் சிவந்தவன். அதுமட்டுமா? தன்னிடமிருந்த முந்நூறு ஊர்களையும் இரவலர்க்குப் பரிசிலாகத் தந்துவிட்ட அவனுடைய ஈடு இணையற்ற வள்ளன்மையை வாயூறிப் பாடுகின்றார் அவனுடைய ஆருயிர் நண்பரான சங்கப் பெரும்புலவர் கபிலர்.

    …முந்நூ றூர்த்தே தண்பறம்பு நன்னாடு
    முந்நூ றூரும் பரிசிலர் பெற்றனர்…(புறம்: 110 – கபிலர்)

    தன் வள்ளன்மையாலும் இணையற்ற வீரத்தாலும் பாரி பெரும்புகழ் பெற்றதுகண்டு பொறாமை கொண்ட மூவேந்தரும், அந்த மாவீரனை நேர்நின்று வெல்லும் துணிவோ திறனோ இன்றி, கூத்தர்போல் வேடமிட்டுச் சென்று வஞ்சனையால் அவனைக் கொன்றுவிட்டு வெட்கமில்லாமல் வெற்றிமுரசு கொட்டினர்.

    அன்புத் தந்தையை இழந்து அவலம் எய்திய அவனுடைய அருமைப் புதல்வியர் இருவரும் (பாரிமகளிர்) தாங்கொணாத் துயர்கொண்டனர். தம் அளவிறந்த வேதனையை, தந்தையை இழந்து சூனியமாகிவிட்ட தம் வள வாழ்வினை, கல்லும் கசிந்துருகும் சொல்லெடுத்துக் கண்ணீர்க் கவிதை வடித்தனர்.

    அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
    எந்தையும் உடையேம் எம்குன்றும் பிறர்கொளார்
    இற்றைத் திங்கள் இவ்வெண்ணி லவில்
    வென்றெறி முரசின் வேந்தர்எம்
    குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே” (புறம்: 112) 

    ”அன்று வெண்ணிலா விண்ணில் உலாவந்த வேளையில், எமதருமைத் தந்தையும் எம்மோடு இருந்தார்; எம்குன்றும் எம் வசம் இருந்தது. நிலவெரிக்கும் இன்றைய இரவிலோ…வெற்றி முரசுகொட்டும் வேந்தர்கள், எம் குன்றையும் கொண்டார்; யாம் எந்தையையும் இழந்தோம்!” என்று அவர்கள் கதறியழுத காட்சி நம் மனக்கண்ணில் தோன்றி நெஞ்சைப் பிழிகின்றது.

    இந்த நல்லவர்களெல்லாம் அநியாயமாய்க் கொல்லப்பட்டது ஏன்? இவர்கள் செய்த தவறென்ன?

    பொறாமையும் தீயகுணமும் கொண்டோர் ஆக்கத்தோடு வாழ்வதும், நற்சிந்தனையும் செயல்களும் கொண்டோர் கேடடைவதும் எதனால் என்ற வினா நம்முள் எழுந்து நம்மைத் திகைக்க வைக்கின்றது.

    நமக்கு மட்டுமல்ல…இதே வினா குறளாசான் வள்ளுவரின் உள்ளத்தும் அன்றே எழுந்திருக்கின்றது. வாழ்வைச் செம்மையாக நடத்துவது எப்படி என்று நமக்கு வழிகாட்டிய அந்தப் பேரறிஞரே இதுகுறித்துச் சிந்தித்துப் பார்த்து, விடை ஒன்றும் புலப்படாமல், ”இதனை ஆராயவேண்டும்” என்று கூறிவிட்டார்! 

    அவ்விய நெஞ்சத்தான் ஆக்கமும் செவ்வியான்
    கேடும் நினைக்கப் படும். (குறள்: 169 – அழுக்காறாமை)
     

    பிறர்க்குத் தீமைசெய்வோர் சிலர் நன்றாக வாழ்வதை நாம் கண்ணாற் கண்டாலும், அதுகண்டு குழப்பமடைந்தாலும் அதற்காக…”மாந்தர்காள்! நீங்கள் அனைவருக்கும் தீமையே செய்யுங்கள்; அப்போதுதான் நன்மை அடைவீர்கள்” என்றா அறிவுரை கூறமுடியும்? அப்படிக் கூறுவதுதான் முறையாகுமா?

    எங்கும் பரந்திருக்கும் காரிருள் சூரியனின் ஒளிக்கதிர் பட்டதும் நில்லாமல் விலகி ஓடுவதுபோல், மனித மனத்தை ஆக்கிரமித்திருக்கும் தீய எண்ணங்கள் என்னும் அக இருளை நல்லறிவென்னும் ஒளியால் விரட்டி, மனத்தை நற்சிந்தனைகளாலும், நல்லெண்ணங்களாலும் நிரப்பவேண்டும்; அவ்வாறு செய்வோரே உயர்ந்த மனிதராவர்.

    மனத்தை நல்ல எண்ணங்களால் நிரப்பினால் மட்டும் போதாது! அதனையும் தாண்டி, நமக்குத் தீமை செய்வோரையும் வெறுக்காது – ஒறுக்காது, பொறுத்து வாழும் மனப்பக்குவத்தையும் நாம் பெறவேண்டும். அதுவே அறிவிற் சிறந்த அறிவாகும் என்பதுவே வான்புகழ் வள்ளுவர் நமக்குக் கற்றுத்தரும் வாழ்வியல் நெறி. 

    அறிவினுள் எல்லாந் தலையென்ப தீய
    செறுவார்க்கும் செய்யா விடல்.  (குறள்: 203 – தீவினையச்சம்)

    பகைவனுக்கும் அருளும் நன்னெஞ்சு கொண்டோராய் வாழ்வோம்! இயலுமானால் பகையே இல்லாமல் வாழ்வோம்! மானுடப் பிறவியை மாண்புறச் செய்வோம்!

     

     

    Share
  • பெரிய மரம்

    பாஸ்கர்

     

    எவ்வளவு பெரிய மரம்அது ?

    கோடாலி கொண்டு வெட்டவே வாரம் ரெண்டாகும்

    கனிகள் பொறுக்க கால் நோவும்

    சருகு இலையை எரித்தால் பகல் இருட்டாகும்

    கிளைகள் தூக்க யானை கூலி கேட்கும்

    கூழ் செய்தால் காகிதம் சரியாய் மூன்று டன்

    கூடு கட்டிய பறவைகளுக்கு பதில் சொல்ல வேண்டாம்

    காற்று ஏன் இல்லையென கோபித்து கொள்ளலாம்

    நிழல் வேண்டுவோர் வெளியே வராதீர்.

    மரம் என்ன திட்டவா செய்யும்?

    இல்லை கை நீட்டி காயம் செய்யுமா?

    தினம் ஒரு மரம் வெட்டுவோம்

    வெட்டிய பின் ஓய்வெடுக்க எந்த மரம் செல்வது ?

    Share
  • சில வரிகள்

    திருமதி ராதா விஸ்வநாதன்
     

    1, என் அன்பை

    நீ புரிந்து கொண்டால்

    ஆயிரம் முறை பிறப்பேன்

    உனக்காக

     

    2,உனக்காக

    வரும் வார்த்தைகள்

    கவிதையாகவே

    பிரசவிக்கிறது

     

    3 மன்னிக்கவும்

    மறக்கவும் வந்து விட்டால்

    தாயாகிவிடுகிறான்

    ஒவ்வொரு ஆணும்

     

    4,கருவில்

    உன் உதைப்பு

    இனிப்பாகவே

    இருந்தது

     

    உருவாகி உடலான பின்

    உனது உதைப்பு 

    இன்று

    இதயதம் தனது

    இருப்பை

    இழந்து விட்டது

    Share
  • பாரம்பரியமும் புதுமோகமும்

    இராதாவிஜயன்

     

    சிந்தைக்கு ஒவ்வா சத்தினை

    சித்தமிழந்து ஏற்றதனைப் பல

    சாத்தியங்களை சீரழித்தோம்

    சுவைக்கடிமை சித்தமானதால்,

    சுண்டைக்காயும் சீனியவரையும்

    கண்டங்கத்திரியும் கருப்பட்டியும்

    சமுத்திரம் கடக்க சாதித்தோம்,

    சக்தியிழந்து நாண்டிடப் பல

    சீவன்கள் செயலிழந்து கலங்கிடக்

    காலணாபயனற்ற பண்டமதை

    கத்தியின்றி இரத்தமின்றி போர்முனையில்

    சத்தமின்றி சுவைபடுத்த வந்தனவே,

    மதிகெட்டு மூடரானோம்,

    சக்தியுள்ள சிலசீவன் சிலிர்த்தெழ,

    சித்திக்குமே நம் சாதனை,

    சோதித்துத் தேடியும் காணா சித்தமிது,

    பாரோரும் வியந்திட ஆராயும் சிந்தையிது

    காந்தமாய்க் கவர்ந்திடும் யாவும்

    கந்தலாய் மாற்றிடவே என்றுணர்!!

    கஞ்சியும் கம்பங்கூழும், கேழ்வரகும்,

    கமர்கட்டும், சவ்வுமிட்டாயும்,

    குழிப்பணியாரமும், கொழுக்கட்டையும்,இடியாப்பமும்,

    பழையசோறும் பச்சைமிளகாயும்,

    சின்னவெங்காயமும்,

    சிறுதானியமும்,

    சீர்வகுத்து சத்தமின்றி யுத்தமிட

    சிதைவதுகாண் போர்முனையில்,

    சீனத்து சித்துவிளையாட்டு!!

    பழம்பெருமைசமைத்திட

    சில இறையன்புகள்

    சிங்காரவலம் வர சிந்திப்போம்

    சிறையிடுவோம் சித்துவிளையாடல்களை!!

    Share
  • மரம்

    பாஸ்கர்

     

    ஓய்வான ஓர் நாளில் நெடிதாய் ஒரு மரம் செய்தேன் .

    சாய்வாக அதை நோக்கி வண்ணங்கள் அப்பி வைத்தேன்

    திடமான அதன் உடலில் அரை கருப்பாய் ஓர் நிறம்

    இடையிடயே வளைகோட்டில் குறை வெள்ளை ஓர் வண்ணம்

    உயிர்ப்போடு நிற்பதுவாய் எண்திசையும் கிளை மரங்கள் .

    பச்சை வண்ண இலைகளுக்கு உடல் மேலே நீர்த்திவலை .

    அதன் ரேகை சென்ற இடமெல்லாம் இயல்போடே ஒர்வண்ணம்

    சுற்றியுள்ள நிலம் மீது செம்மண்ணாய் ஓர் நிறம்

    தொங்குவதை பறிப்பதாய் அழகு கொஞ்சும் பல கனிகள் .

    இலைகளுக்கு தோதுவாய் அதே நிறத்தில் பல பறவை

    அதன் ஆசை குஞ்சுக்கு பல இடத்தில பல கூடு .

    வில்லாய் கதிர் பாய இலை இடையே வெளிச்ச கோடு

    உயிர்ப்போடு தான் நிற்கும் அழகான மரம் இதுவே

    ஆனாலும் ஓர் குறை மரம் அளவில் மனதினுள்ளே -அதன்

    உடல் அசைக்க யாது செய்வேன் தூரிகைக்கா வலி தெரியும்

    Share
  • எனை ஆளும் தாயே

    இராதா விஜயன்
     

     

    உன் காலடி கிட்டின்

    முன்னம் பிறவிகளும்

    மொத்தமாய் விழைவேன்

    மொத்தமாய்ப் புண்ணியம் புரிகின்

    அம்மையே மொத்தமாய்க்

    கைகொள்வேன்

    இம்மைக்கும் மறுமைக்கும்

    கசிந்துருக விழைவேன்

    மாண்பும் அன்பும்

    பிணைந்திட உன்

    மார்சுரக்கும் பாற்சுவைக்காய்

    பசித்திருப்பேன்

    தண்குடையே தண்ணிலவே

    தீமைக்கோர் தீதாவாய்

    தகித்திடும் கால்வயிற்றுக்கோர்

    தகைசார் மருந்தாவாய்

    என் அம்மையே!

    நீ போதும் இப்பிறவிக்கு!

    Share
  • சங்க இலக்கியத்தில் ஒளவையார் வர்ணித்திருக்கும் “குரீஇயினம்”

    -சற்குணா பாக்கியராஜ் 

                  “————————————பாரி பறம்பின்
    நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி,
    முடங்கு புறச் செந்நெல் தரீஇயர், ஓராங்கு
    இரை தேர் கொட்பின ஆகி, பொழுது படப்
    படர் கொள் மாலை படர்தந்தாங்கு (ஒளவையார், அகநானூறு: 303: 10-15)

    இந்தப் பாடலில் ஒளவையார், “பாரியின் பறம்பு மலையிலிருந்து காலை நேரத்தில் குருவிக்கூட்டம் வரிசையாகப் பறந்து, மடிந்திருக்கும் பின்பகுதியை உடைய செந்நெல்லைக் கொண்டுவருவதற்காக இரைதேடி ஒன்று சேர்ந்து இங்கும் அங்குமாகச் சுற்றி, வருத்தம் கொள்ளும் மாலை நேரத்தில், திரும்பிவந்து படர்ந்து நிற்கின்றன” என்கிறார்.

    மேற்கண்ட பாடலில் புலவர் பறவைகள் இரைதேடும் முறையை மட்டும் வர்ணித்துள்ளார். பறவைகளின் பெயர், தோற்றம், நிறம், அலகு, அல்லது கால்களைப் பற்றிய வர்ணனைகள் கொடுக்கவில்லை. ஆகவே படிப்பவர்களின் மனத்தில் இந்தக் குருவிகள் எதுவாக இருக்கலாமென்ற கேள்விகள் எழலாம்.

    இந்தப் பாடலின் விளக்கவுரையில் திரு. ந.மு. வேங்கடசாமி நாட்டார் (அகநானூறு: நித்திலக்கோவை, p,12) “குரீஇ இனம்- கிளிகளின் கூட்டம்” என்று குறித்துள்ளார். ஆனால், சங்க இலக்கியத்தை ஆராயும் போது புலவர்கள் கிளிகளைக் குரீஇக்கள் என்று குறிப்பிட்டுள்ளதாகக் காணப்படவில்லை.

    திரு. பி. எல். சாமி, “சங்க இலக்கியத்தில் புள்ளின விளக்கம்” (1976, p, 273) என்ற நூலில், “கிளியினத்தைப் பற்றித் தெளிவாகச் சங்க நூல்கள் கூறுவதால் குருவி என்பது கிளியன்று” என்றும், சங்க நூல்களில் வர்ணிக்கப் பட்டுள்ள தினை கவரும் குருவியும், நெல் கவரும் குருவியும் முனியாக் குருவிகளே” என்கிறார். மேலும் அகநானூறு, 303- ஆம் பாடலில் குறிப்பிட்டுள்ள நெல் கவரும் குருவிகளை, “The Spotted  or  the Black Headed Munia” (புள்ளி முனியா அல்லது கருப்புத் தலை முனியா)  என்று கொள்ள வேண்டுமென்கிறார்.

    சங்க இலக்கியத்தில் புலவர்கள் சிட்டுக் குருவியை “மனையுறை குரீஇ” (குறுந்தொகை: 46) “உள்இறைக் குரீஇ “(நற்றிணை:181) உள்ளூர்க் குரீஇ” (குறுந்தொகை: 85) என்றும், தூக்கணாங் குருவியை “முதுக்குறை குரீஇ” (நற்றிணை: 366), “தூங்கணம் குருவி” (குறுந்தொகை:374,  புறம்:225), என்றும், “Alpine Swift” என்னும் குருவியைக் “குன்றத் திருத்த குரீஇ” ( புறம்: 19) என்றும்  குருவிகளை வேறுபடுத்தி வர்ணித்துள்ளனர். வேறு குருவிகளைப் பற்றிய வர்ணனைகள் காணப்படவில்லை.

    கிளிகளைச் சங்க இலக்கியத்தில் சிறு கிளி ( ஐங்குறுநூறு : 282, 283, 285), செந்தார்க்கிளி (அகம்:242), மடக் கிளி (அகம்:38), செவ்வாய்ப் பைங்கிளி (ஐங்குறுநூறு :284, நற்றிணை: 317), என்று வர்ணித்துள்ளனர். ஐங்குறுநூற்றில் கபிலர்  குறிஞ்சித் திணையில் ( பாடல்கள் 281-290) “கிள்ளைப் பத்து” என்ற பகுதியில் மலைச் சாரல்களில் விதைக்கப்பட்ட தினையின் கதிர்களைக் கிளிகள் கவரச் செல்லும் து இளம் பெண்கள் அவைகள விரட்டினர் என்று வர்ணித்துள்ளார்.

    திரு. பி. எல். சாமியின் கருத்துப்படி ஒளவையார் வர்ணித்திருக்கும்  “குரீஇயினம்” முனியாக் குருவிகளே, கிளிகள் அல்ல என்றால்  முனியாக் குருவிகள் எவை, கிளிகள் எவை, அவைகளின் வாழுமிடங்கள், உணவு, உணவு தேடும் முறைகளை பறவையியல் மூலமாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

     பறவையியலில் முனியாக் குருவிகள் ( Munia-Lonchura):

    முனியாக் குருவிகளைத் தமிழகத்தில் “சில்லை” அல்லது “ராட்டினம்” என்றும், ஆங்கிலத்தில் முனியாக்கள் என்றும் அழைக்கின்றனர். திரு. பி. எல். சாமி, தன்னுடைய நூலில், “நாட்டுமக்கள் சில முனியாக் குருவிகளைக் கருப்புவரையன் சிட்டு, கருடவரிச்சிட்டு, ஆழ்வார்சிட்டு என்றும் அழைப்பர்” என்கிறார்.

     முனைவர் சலீம் அலி, தன்னுடைய “The Birds of India, ( Salim Ali, 1996, pp. 304-307) என்ற நூலில் “கருப்புத் தலை முனியா, புள்ளி முனியா, வெண்தொண்டை முனியா, வெள்ளை முதுகு முனியாக் குருவிகளை தமிழகத்திலும் இலங்கையிலும் நெல்லுக் குருவிகள், தினைக் குருவிகள் என்று அழைக்கின்றனர்” என்று குறித்துள்ளார்.

    முனியாக் குருவிகள் சிட்டுக் குருவிகளை விட உருவத்தில் சற்று சிறியவை.  உலகம் முழுவதிலும் நாற்பத்தியொரு வகை முனியாக் குருவிகள் உள்ளன என்று அறியப்படுகிறது.  இவை ஆசியா, சீனா, மேற்கு ஆப்பிரிக்கா முதல் அரேபியன் பெனின்சுலா, நியூ கினியா, ஆஸ்திரேலியா, பங்களா தேசம், இலங்கை, பாகிஸ்தான், போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.  இந்தியாவில் காணப்படும் ஏழுவகை முனியாக் குருவிகளில், ஐந்து அல்லது ஆறு வகைகள் தமிழகத்தில் காணப்படுகின்றன.  இவை கருப்புத்  தலை முனியா (Black-headed Munia), கருப்புக் தொண்டை முனியா (Rufousbellied Munia or Chestnut Munia), புள்ளி முனியா (Spotted Munia), சிவப்பு முனியா (Red Munia), வெண் தொண்டை முனியா (White-thorated Munia), வெள்ளை முதுகு முனியா (White-backed Munia) என்பவையாகும்.

    வாழும் இடங்கள்:

    முனியாக் குருவிகள்  வறண்ட சவானா, மலைப் பகுதிகள், பரந்த புல்வெளிகள், அறுவடை முடிந்த வயல்கள், நெல், கேழ்வரகு விளையும் நிலங்கள், மூங்கில் புதர்கள், கரும்பு விளையும் நிலங்கள் போன்ற இடங்களில் காணப்படுகின்றன. கருப்புத் தொண்டை முனியாக் குருவிகள், கிழக்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் வாழ்கின்றன, வெண் தொண்டை முனியாக் குருவிகள் வறண்ட திறந்த புல்வெளிகளை விரும்புகின்றன.

    உணவும்,  உண்ணும் முறையும்: 

    முனியாக் குருவிகளின் முக்கிய உணவு தானியங்களாகும் ( granivorous). புல் விதைகள், நெல், தினை போன்ற தானியங்களை விரும்பி உண்கின்றன. முனியாக் குருவிகள் முக்கியமாகத் தினை, நெல் பால் கட்டும் பருவத்திலிருந்து  தானியங்கள் முற்றும் வரை உண்ணுகின்றன.

    முனைவர் தாமஸ், கேரள நாட்டில் நெல் விளையும் வயல்களில் முனியாக் குருவிகள்  உணவு உண்ணும் முறைகளை ஆராய்ந்தபோது “முக்கியமாகப் புள்ளி முனியாவும், வெண் முதுகு முனியாவும் அதிகமாகக் காணப்படுகின்றன, இவை நெற்கதிர்களில் அமர்ந்து நெல்லைத் தனித்தனியாகக் கொத்தி, தோலை நீக்கி உண்கின்றன. சில நிமிட நேரங்கள் உண்ட பின் வயலருகேயுள்ள வாழைத் தோட்டங்களிலும் மூங்கில் புதர்களிலும் அடைந்து சிறிது  நேரத்திற்குப் பின் நெல்லை உண்ண வயலுக்குத் திரும்பிப் பலமுறை வந்து போகின்றன. அருகில் அடைய மரமோ, புதிர்களோ இல்லையென்றால் திரும்பி வருவதில்லை” என்று கண்டுள்ளார் ( தாமஸ், S.T, 2006 ).

    இனப்பெருக்கம் செய்யாத காலங்களில், முனியாக் குருவிகள் இரைதேடும் நேரங்களிலும், அடையும் நேரங்களிலும்  ஐந்து அல்லது ஆறு குருவிகள்அடங்கிய சிறு கூட்டமாகவோ அல்லது நூறு அல்லது இருநூறு குருவிகள் அடங்கிய பெருங் கூட்டமாகவோ  காணப்படுகின்றன. இரவில் மரக்கிளைகளில் அடைகின்றன. மேற்கு ஆஸாமில் நெற் பயிர்களுக்குக் கேடு விளைவிக்கும் தூக்கணாங் குருவிகளைப் பற்றிய தகவல்களை ஆய்வாளர்கள் சேகரித்தபோது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருப்புத் தலை முனியாக் குருவிகளையும் புள்ளி முனியாக் குருவிகளையும்  பயிர் விளையும் இடத்தில் கண்டதாகப் குறித்துள்ளனர் (B. C. Saha and A. K. Mukherjee, JBN HIST, VOL. 75, pp 221-223).

    முனியாக் குருவிகள் கூட்டமாக இருக்கும் போது சிறு சலனம் ஏற்பட்டாலும் அலையலையாகப் பறக்கின்றன (“undulating rabble” by ornithologists).  இவை ஒரே வரிசையாகப் பறப்பதில்லை.

    செந்தார்க் கிளி ( Roseringed Parakeet ): 

    பறவையியலில் இவை Roseringed parakeets ( Psittacila krameri) என்று அழைக்கப்படுகின்றன. இவை உருவத்தில் மைனாவை ஒத்திருக்கின்றன. ஆண் பறவையின் கழுத்தில் சிவப்பு- கறுப்பு நிறத்தில் வளையம்காணப்படும். பெண் கிளிக்கு இந்த வளையம் கிடையாது.  H. Whistler (ornithologist) தன்னுடைய நூலில் (“Popular Handbook of Indian Birds”, 1963), இந்தவகைக் கிளிகள் ( Roseringed Parakeets) மிகவும் வேகமாகப் பறக்கக் கூடியவை. மாலை நேரங்களில் கூட்டங்களாகப் பறந்து மரங்களில் அடையும் என்று குறிப்பிட்டுள்ளார்.

    “The flight is very swift and straight and these birds have the habit of an evening roosting flight flock after flock hurrying in succession along the same line to some patch of trees where they roost in company with flocks of Crows and Mynahs”. 

    காணப்படும் இடங்கள்: 

    இந்தக் கிளிகள் பங்களாதேசம், பாகிஸ்தான், இலங்கை, மியன்மார் போன்ற நாடுகளிலும் இந்தியாவில் உயர்ந்த மலைப் பகுதிகளையும் அடர்ந்த காடுகளையும் தவிர மற்ற எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. 

    உணவும் உண்ணும் முறையும்:

     தினை, நெல் போன்ற தானியங்கள், அவரைக்காய் வகை, பழ வகைகள் முக்கிய உணவாகும். இரைதேடும் நேரங்களில் கூட்டமாகச் சென்று விளைந்த பயிர்கள், பழங்களைத் தேவைக்கு மேல் கொத்தியும், கடித்தும் வீணாக்கிப் பெருத்த சேதம் விளைவிக்கின்றன. கிளிகள்  நெல் பயிர்செய்யப்படும் இடங்களில் சிறு கூட்டங்களாக வந்து முதிர்ந்த கதிர்களை அலகினால் கொய்து, அருகிலுள்ள மரங்களுக்கு எடுத்துச் சென்று ஒவ்வொரு விதையையும் அலகினால் எடுத்துத் தோலை நீக்கி உண்கின்றன. கதிரிலுள்ள எல்லா தானியத்தையும் உண்ணாமல் அடுத்தடுத்துப் புதிய கதிர்களைக் கொய்து வீணாக்குகின்றன ( தாமஸ், S.T,2006 ).

    முடிவு:

    ஒளவையார் வர்ணிக்கும் “குரீஇயினம்” கிளிகளா? முனியாக் குருவிகளா? பறவையியலையும் சங்க இலக்கியத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது பறவையியலில் கிளிகளும், முனியாக் குருவிவிகளும் இரைதேடும் நேரங்களிலும் அடையும் நேரங்களிலும் கூட்டமாகக் காணப்படுகின்றன. இவைகளை மலைச்சாரல்களில் காண முடியும். இரண்டு வகைப் பறவைகளும் நெல், தினை போன்ற  தானியங்களை உணவாகக் கொள்கின்றன.

     இந்தப் பறவைகளில் முக்கியமான வேறுபாடு என்னவெனில், முனியாக் குருவிகள் கதிர்களில் அமர்ந்து உண்கின்றன, கிளிகள் கதிர்களைக் கவர்ந்து கொண்டு பறந்து செல்கின்றன.

    புள்ளி முனியா, கருப்புத் தலை முனியா, வெண் முதுகு முனியாக்கள் நெல், தினை போன்ற தானியங்களை உண்பதால் இவைகளை நெல் குருவிகள், தினைக் குருவிகள் என்று அழைக்கின்றனர். ஆனால் இந்தக் குருவிகள் தானியக் கதிர்களைக் கவர்ந்து பறந்து செல்லாததால், அகநானூறூ 303-ஆம் பாடலில் வர்ணிக்கப்பட்டுள்ள குரீஇயினம், திரு. பி. எல். சாமியின் கருத்துப்படிக் கிளிகள் அல்ல, முனியாக் குருவிகளே என்பது கேள்விக் குறியாகவுள்ளது.

    சங்க இலக்கியத்தில்  குரீஇ என்னும் சொல் சிறு குருவிகளைக் குறிப்பதாகக் கருதப்படுகிறது. அகநானூறு: 303 ஆம் பாடலில் புலவர் எந்தச் சிறு குருவியைக் குறிப்பிடுகிறார் என்பதைப் படிப்பவர்கள் ஊகிக்க வேண்டியுள்ளது. கிளிகள் நெல்லைக் கவர்ந்து செல்கின்றன ஆனால் இவை சிறு குருவிகளல்ல.முனியாக் குருவிகள் கதிர்களைக் கவர்ந்து பறந்து செல்வதில்லை.

    இந்தத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஒளவையார் வர்ணித்த குரீஇயினம் கிளிகளா அல்லது முனியாக் குருவிகளா என்று உறுதியாக வரையறுப்பது கடினம்.

    References:

    அகநானூறு: நித்திலக்கோவை, உரை, ந.மு. வேங்கடசாமி நாட்டார், கழக வெளியீடு, 2008

    Picture:  https://www.inditales.com  “SUNDAY SHOT: ROSE RINGED PARAKEET IN FLIGHT – BIRDING INGO”2014, by Anuradha Goyal Saha, B. C., and A. K. Mukherjee. 1978. Notes on the food of black-headed munia and the spotted munia in South Kamrup District, Western Assam (India). J. Bombay, Nat. Hist. Soc. 75:221·224.

    The Book of Indian Birds (Ornithologist, Dr. Salim Ali, Twelfth Revised and Enlarged Centenary Revised Edition, 1997)

    Thomas. A.T “Ecological studies on certain species of granivorous birds in Malabar” Thesis. Department of Zoology, University of Calicut, 200

    கருப்புத் தலை முனியாக் குருவிகள், புதுக் கோட்டை, La Paz Group, நன்றி, கூகிள்

    புள்ளி முனியா (Spotted Munia- Lonchura  punctulata)

    கருப்புத் தலை முனியா (Lonchura Malacca)  (நன்றி கூகிள்)

    Parrot carrying rice stalk from a paddy field in Goa,

    https://www.inditales.com With kind permission from the photographer Ms. Goyal

    இலங்கையில் நெல்கவரும் கிளிகள், நன்றி கூகிள்

     

     

    Share
  • ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகத்தில் பா வகைகள்

    -பி.மேனகா

    முன்னுரை             

    எழுவகைத் தாதுக்களாகிய தோல், குருதி, தசை, நரம்பு, எலும்பு, மச்சை, நீர் போன்றவற்றால் ஆனது உடம்பு. அதைப் போன்றே எழுத்து முதல் தொடை ஈறாக அமைந்த உறுப்புகளால் செய்யப்படுவது செய்யுள். அச்செய்யுள் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா என்னும் நால்வகைப் பாக்களாலும், தாழிசை, துறை, விருத்தம் என்னும் மூன்று இனங்களாலும் பாகுபடுத்தப்பட்டுள்ளது. அவற்றின் இயல்புகளையெல்லாம் தொகுத்துக் கூறுவதால் இதனை செய்யுளியல் என்று கூறுகின்றோம்.

    இதனடிப்படையில் இலக்கியங்களிலும், பாக்களின் ஆட்சி சிறப்புற்றிருந்தது. குறிப்பாக பக்தி இலக்கியங்களான திருமுறைகளிலும், திவ்யப் பிரபந்தங்களிலும், பாவும், பாவினமும் சிறப்புற்றிருந்ததைக் காண முடிகின்றது. ஆளுடையப் பிள்ளையார் திருக்கலம்பகத்தில் வெண்பாவின் வகைகளுள் நேரிசை வெண்பாவும், இன்னிசை வெண்பாவும், ஆசிரியப்பாவில் நேரிசை ஆசிரியப்பாவும்,  கலிப்பாவில் கட்டளைக் கலிப்பாவும், மருட்பாவில் கைக்கிளை மருட்பாவும் பயின்றுவந்துள்ள முறையினை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

    பா இலக்கண வளர்ச்சி

    தமிழில் பா இலக்கண வரலாறு மிகத் தொன்மையுடையதாகவும், தொடர்ந்து வளர்ச்சியுடையதாகவும் விளங்குகின்றது. பா இலக்கணத்தைப் பற்றி நமக்குக் கிடைத்திருப்பது தொன்மையான தொல்காப்பியமே ஆகும். ‘பா” என்பது தொல்காப்பியர் காலம் வரை செய்யுளின் ஓசை குறித்து வந்ததென்பதை,

    ‘பா என்பது சேட்புலத் திருந்த காலத்தும் ஒருவன் எழுத்தும் சொல்லும் தெரியாமல் பாடமோதுங்கால் அவன் சொல்லுகின்ற செய்யுளை விகற்பித்து இன்ன செய்யுள் என்று உணர்தற்கேதுவாகிப் பரந்துபட்டுச் செல்வதோர் ஓசை”1 என்கிறார் பேராசிரியர். இதனையே நச்சினார்க்கினியரும் ‘பாவென்றது இவ்வுறுப்புக்களையுடைத்தாய்ச் சேட்புலத்திருந்து சொல்லும், பொருளுந் தெரியாமல் ஒருவன் கூறிய வழியும், இஃது என்ன செய்யுளென்றறிவதற்கு ஏதுவாகிப் பரந்துபடச் செய்வதோரோசையை”2 என்று கூறியுள்ளார். பாக்களின் வகையை,

    ‘ஆசிரியம் வஞ்சி வெண்பாக் கலியென
     நாலியற் றென்ப பாவகை விரியே”       (தொல்.செய்.நூ.101)

    என்னும் நூற்பாவில் பா வகைகள் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா எனக் கூறிய தொல்காப்பியர் வஞ்சியும், கலிப்பாவும் ஆசிரியம் வெண்பாவிற்குள் அடங்குமென்பதை,

    ‘பாவிரி மருங்கினைப் பண்புறத் தொகுப்பின்
    ஆசிரி யப்பா வெண்பா என்றாங்
    காயிரு பாவினுள் அடங்கும் என்ப”    (தொல்.செய்.நூ.103)

    என்னும் நூற்பாவில் கூறியிருப்பதையும் அறிய முடிகின்றது. அதாவது ஆசிரியப்பாவின் நடையை உடையது வஞ்சியென்றும் வெண்பாவின் நடையை உடையது கலிப்பா என்றும் அவர் கூறியுள்ளதை,

    ‘ஆசிரிய நடைத்தே வஞ்சி ஏனை
     வெண்பா நடைத்தே கலியென மொழிப”    (தொல்.செய்.நூ.104)

    என்னும் நூற்பாவில் அறியலாம். இவ்வாறு பா இலக்கணம் வளர்ச்சி பெற்றே வந்துள்ளது.

    வெண்பாவின் பொது இலக்கணம்

    ‘முதற்பா” ‘வன்பா” என்று தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி நூலும்”6 ‘வெள்ளைப்பா, அந்தணர்பா என்று யாப்பருங்கலக் காரிகையும்”7 வெண்பாவிற்கு வேறுபெயர்கள் கூறுகின்றன. பல பெயர்கள் கொண்ட வெண்பாவானது பாக்களில் ஆதியாகவும், தலைமையாகவும் உள்ளது. யாப்பருங்கலம் கூறுவதாவது,

    ”செப்பல் இசையன வெண்பா மற்றவை
    அந்தடி சிந்தடி ஆகலும் அவ்வடி
    அந்தம் அசைச்சீர் ஆகலும் பெறுமே” (யா.க.57)

    வெண்பா செப்பலோசை பெற்று ஈற்றடி முச்சீராய் ஏனைய அடி நாற்சீராய் வரும். தேமா முதலான இயற்சீர் நான்கையும், தேமாங்காய் முதலான வெண்சீர் நான்கையும் சீராகப் பெற்று வரும். வெண்சீர் வெண்டளை, இயற்சீர் வெண்டளை என்ற இரு தளைகளை மட்டுமே பெற்று வரும் (காய்முன் நேர், மாமுன்நிரை விளமுன் நிரை) நாள், மலர், காசு, பிறப்பு என்னும் நான்கு வகையான வாய்பாடுகளுள் ஏதேனும் ஒன்றைக் கொண்டு முடியும். வெண்பாவின் வகை ஐந்தாகும். அவை,

    1. குறள் வெண்பா
    2. சிந்தியல் வெண்பா
    3. நேரிசை வெண்பா
    4. இன்னிசை வெண்பா
    5. பஃறொடை வெண்பா

    இதில் நேரிசை வெண்பாவும், இன்னிசை வெண்பாவும் ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் இடம்பெற்றுள்ளன.

    நேரிசை வெண்பாவின் இலக்கணம்

    நான்கு அடிகளைக் கொண்டு இரண்டாம் அடியின் இறுதியில் தனிச்சொல் பெற்றுவரும். நான்கடிகளும் ஓரெதுகை பெற்றுவரும். முன்னிரண்டு அடிகளில் ஓரெதுகையும், பின்னிரண்டு அடிகளில் மற்றோர் எதுகையும் பெற்று வருவதும் நேரிசை வெண்பாவாகும். முதலிரு அடிகளில் அமையும் எதுகைக்கேற்பவே தனிச்சொல்லின் எதுகை அமையும். இதனை,

    ”ஈரடி வெண்பாக் குறள்குறட் பாவிரண் டாயிடைக்கட்
    சீரிய வான்றனிச் சொல்லடி மூய்ச்செப்ப லோசைக்குன்றா
    தோரிரண் டாயு மொருவிகற் பாயும் வருவதுண்டேல்
    நேரிசை யாகு நெறிசுரி பூங்குழ னேரிழையே”    (யா.கா.23) என்று யாப்பருங்கலக்காரிகைக் கூறுகின்றது.

    எ.கா.

    ”எனவே இடர்அகலும் இன்பமே எய்தும்
    நனவே அரன்அருளை நாடும் – புனல்மேய
    செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
    கொங்கமலத் தண்காழிக் கோ” (11:38:2)

    இப்பாடலில் முன்னிரு அடிகளில் ‘னகரம்” ஒரு விகற்பமாகவும், பின்னிரு அடிகளில் ‘ஙகரம்” ஒரு விகற்பமாகவும் உள்ளன. தனிச்சொல் எதுகை முன்னிரு அடிகளின் எதுகையை ஒத்திருக்கின்றன. இயற்சீர் வெண்டளையும், வெண்சீர் வெண்டளையும் பெற்றுள்ளன. ஆதலால் இப்பாடல் இருவிகற்ப நேரிசை வெண்பாவாக ஓசை நலத்திலும் சிறந்துள்ளது.

    இன்னிசை வெண்பாவின் இலக்கணம்

    ”ஒன்றும் பலவும் விகற்பொடு நான்கடியாய்த் தனிச்சொல்
    இன்றி நடப்பினஃது இன்னிசை துன்னும்” (யா.கா.24)

    ஒரு விகற்பத்தையோ பல விகற்பத்தையோ பெற்று நான்கடியால் அமைந்து தனிச்சொல்லின்றி நடப்பது இன்னிசை வெண்பாவாகும். தனிச்சொல் பெற்றுவருதலும் உண்டு என்பதனை உரையின்வழி அறியமுடியும் என்று யாப்பருங்கலக்காரிகை கூறுகின்றது. அடிதோறும் ஒரூஉத் தொடை பெற்று வரும்.

    எ.கா:

    ”யாரேஎம் போல அருளுடையார் இன்கமலத்
    தாரேயுஞ் சென்னி தமிழ்விரகன் – சீரேயும்
    கொச்சை வயன்தன் குரைகழற்கே மெச்சி
    அடிமைசெயப் பெற்றேன் அறிந்து”  (11:38:44)

    இப்பாடலில் பல விகற்பமும், தனிச்சொல்லும் பயின்றுவந்துள்ளன. அதாவது முன்னிரு அடிகளில் ‘ரே” என்னுஞ்சொல் ஓரெதுகையாகவும், மூன்றாம் அடியில் ‘சகரம்” ஓர் எதுகையாகவும், நான்காம் அடியில் ‘டி” என்பது ஓர் எதுகையாகவும் பயின்று வந்துள்ளன. ஈற்றடியின் ஈற்றுச் சீர் ‘பிறப்பு” என்னும் வாய்பாட்டால் அமைந்திருப்பதால் இஃது இன்னிசை வெண்பாவாகும்.

    ஆசிரியப்பாவின் பொதுவிலக்கணம்

    அகவலோசைப் பெற்று நான்கு சீர்களைக் கொண்ட அளவடியால் அமையும். தேமா முதலான ஈரசைச் சீர்கள் நான்கையும் மிகுதியாகப் பெற்றுவரும். காய்ச்சீர்களைக் குறைவாகப் பெற்றுவரும். கருவிளங்கனி, கூவிளங்கனி ஆகிய வஞ்சியுரிச்சீர் வஞ்சித்தளையும் ஆசிரியப்பாவில் இடம் பெறாது. ஆசிரியப்பாவின் வகைகளுள் ஒன்றான நேரிசை ஆசிரியப்பா வகையே ஆளுடையபிள்ளையார் திருக்கலம்பகத்தில் இடம் பெற்றுள்ளது.

    ”அகவல் இசையன அகவல் மற்றவை
    ஏஓ ஈஆய் என்ஐயென் றிறுமே”    (யா.க.69)

    என்று யாப்பருங்கலம் பழைய விருத்தியுரை எடுத்துக்கூறுகின்றது.

    நேரிசை ஆசிரியப்பாவின் இலக்கணம்

    ”அந்த அடியின் அயலடி சிந்தடி
    வந்தன நேரிசை ஆசிரி யம்மே”             (யா.க.71)

    ஆசிரியப்பாவிற்குரிய பொதுவிலக்கணத்தைப் பெற்று ஈற்றயலடி மூன்று சீர்களைக் கொண்ட சிந்தடியாகவும், பிற அடிகள் அளவடியாகவும் அமைவது நேரிசை ஆசிரியப்பாவாகும்.

    எ.கா.

    ”கருமங் கேண்மதி கருமங் கேண்மதி
    துருமதிப் பாண கருமங் கேண்மதி
    நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்
    ………………………………………………………….
    குறைவறுத் துள்கி நிறைகடை குறுகி
    நாப்பொலி நல்லிசை பாட
    மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே”     (11:38:37)

    இப்பாடலில் ஈற்றயலடி முச்சீராகவும், ஈற்றடியின் ஈற்றுச்சீர் ‘ஏ” என்றும், அசைச்சொல் பெற்றும் வந்துள்ளதால் இது நேரிசை ஆசிரியப்பாவாகும்.

    மருட்பாவின் இலக்கணம்

    ”வெள்ளை முதலா ஆசிரியம் இறுதி
    கொள்ளத் தொடுப்பது மருட்பா வாகும்”      

    என்று காக்கைபாடினியார் கூறியுள்ளார். வெண்பாவும், ஆசிரியப்பாவும் கலந்து ஒரு பாவாக அமைந்து வருதல் மருட்பா. மருள் என்னுஞ் சொல்லுக்கு மயக்கம் என்பது பொருள். மருட்பா நான்கினை,

    ”பண்பார் புறநிலை பாங்குடைக் கைக்கிளை வாயுறைவாழ்த்
    தொண்பாச் செவியறி வென்றிப் பொருண்மிசை யூனமில்லா
    வெண்பா முதல்வந் தகவல்பின் னாக விளையுமென்றால்
    வண்பான் மொழிமட வாய்மருட் பாவெனும் வையகமே”  (யா.கா.35)

    என்று யாப்பருங்கலக்காரிகை சுட்டுகின்றது. இவற்றுள் கைக்கிளை மருட்பாவே ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பத்தில் இடம்பெற்றுள்ளது. கைக்கிளை என்பது ஒத்தத் தலைவனும், தலைவியும் இயற்கைப் புணர்ச்சிக்கு முன் சந்திக்கும்பொழுது ஒருவரை மற்றொருவர் காண்பதுண்டு. அத்தருணத்தில் ஒருவர் மீது மற்றொருவருக்கு வேட்கை தோன்றுவதாகும்.

    எ.கா.

    ”அம்புந்து கண்ணிமைக்கும் ஆன நுதல்வியர்க்கும்
    வம்புந்து கோதை மலர்வாடும் – சம்பந்தன்
    காமரு கழுமலம் அனையாள்
    ஆமிவள் அணங்கலள் அடிநிலத் தனவே”        (11:38:42)

    இப்பாடலில் முன்னிரு அடிகளில் வெண்பாவும், பின்னிரு அடிகளில் ஆசிரியப்பாவும் வந்துள்ளன. ஈற்றடியின் ‘ஏகார” அசைச்சொல் பெற்று நிலத்தனவே என்று வந்திருப்பதால் இஃது கைக்கிளை மருட்பாவாகும்.

    முடிவுரை

    பாவிற்கும் பாவின வடிவங்களுக்கும் களனாகவும் தோற்றுவாயாகவும் திகழ்வது பக்தியிலக்கியங்களே. பனினோராந் திருமுறையைத் தொகுத்த நம்பியாண்டார் நம்பியின் ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகத்தில் வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, மருட்பா ஆகியன பயின்று வந்திருப்பதனையும், பா இலக்கணம் வளர்ச்சி பெற்று வந்ததை பேராசரிரியர், நச்சினார்க்கினியர், தொல்காப்பியர் போன்றோர் எடுத்துக் கூறியிருப்பதனையும் அறிய முடிகின்றது.

    துணைநின்ற நூல்கள்

    1. பதினோராந் திருமுறை – மு.சுப்பிரமணியன் (ப.ஆ)
    2. தொல்காப்பியம் செய்யுளியல் உரைவளம் – க.வெள்ளைவாரணன்
    3. தொல்காப்பியம் பொருளதிகாரம் – இளம்பூரணனார் உரை (உ.ஆ)
    4. தமிழில் யாப்பிலக்கண வளர்ச்சி – ய.மணிகண்டன்
    5. யாப்பருங்கலக்காரிகை – ச.திருஞானசம்பந்தம்
    6. யாப்பருங்கலம் (பழைய விருத்தியுரையுடன்) – மே.வீ.வேணுகோபாலபிள்ளை

    *****

    கட்டுரையாளர்
    முனைவர்பட்ட ஆய்வாளர்
    தமிழ்த்துறை
    தியாகராசர் கல்லூரி
    மதுரை-625009
    தொடர்பு எண்-9943229070

     

     

    Share
  • கவியரசர் படைப்புகள் – ஆன்மீகக் கோணம் 1

    சக்திசக்திதாசன்

     

    கண்ணதாசன் எனும் பெயர் சினிமா உலகில், இலக்கிய உலகில், அரசியல் உலகில் ஏற்படுத்தி விட்டுப்போன நினைவுத் தடங்கள் அழிக்கப் படமுடியாதவை. எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் கவியரசரின் தாக்கங்கள் ஏதோ ஒரு வடிவில் இருந்து கொண்டுதானிருக்கின்றன.

    கவியரசரின் திரைகானங்கள் அதுவும் பொதுவாக காதல் வரிகளைக் கொண்ட பாடல்களின் மூலம் தமிழின் பால் ஈர்க்கப்பட்ட நான் இன்று அவரது பாடல்களில் உள்ள ஆன்மீக உணர்வுகளை அலசிப் பார்க்கும் நிலைக்கு வந்திருக்கிறேன் என்றால் அது வாழ்வின் அனுபவங்களும், அந்த அனுபவங்களுக்கு கவியரசரின் பாடல்களும், பல்வேறு கட்டுரைகளும் கொடுத்த அர்த்தங்களுமே ஆகும்.

    ஆன்மீகம் என்றால் என்ன? அது சாதாரண மனித வாழ்க்கைக்கு அப்பாற்பட்டதா? எனும் பல கேள்விகள் எமது மனங்களிலே எழுவது இயற்கை.

    இல்லை என்கிறார் கவியரசர். மானிடரின் வாழ்க்கையில் அவர்கள் எத்தகைய விகிதாசாரத்தில் மனிதர்களாக வாழுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அவர்களின் மனதின் ஆன்மீக உணர்வுகளுக்கு விழிப்பு ஏற்படுகிறது என்கிறார் கவியரசர்.

    இதை நான் எனது வாழ்க்கையிலேயே கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். தாய் தந்தையரின் அரவணைப்பிலிருந்த காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறை கொடுத்த அனுபவங்களின் படி ஆண்டவனின் நம்பிக்கையை எதுவித கேள்விகளுமின்றி ஏற்றுக் கொண்ட நான், புலம் பெயர்ந்து என் கால்களில் நிற்கக்கூடிய வேளையில் வாலிபத்துக்கேயுரிய மிடுக்குடன், ஒரு ஆணவச் செருக்குடன் இறைநம்பிக்கையை இடைவிடாது வினாக்கள் மூலம் வினவினேன்.

    ஏன் இதை ஒருவித இளமை நாகரீகம் என்று கூட நான் கருதிய காலங்கள் இருக்கின்றன. வாழ்வில் எம்மால் முடியும் என்னும் இறுமாப்பில் நாம் எடுக்கும் பாதையின் பயணங்கள் எமது கட்டுப்பாடின்றி, எமக்குப் புரியாத வகையில் திசை திருப்பப்படும் சம்பவங்கள் பல நிகழ்கின்றன. இவை அனைத்துமே எம்மை நோக்கி எமக்கு மேலே இருக்கும் ஒரு சக்தி எமக்குக் கொடுக்கும் நினைவுறுத்தல்கள் என்பதைப் புரியமுடியாவிட்டால் இவைகளைக் கடந்து சென்று விடுகிறோம்.

    ஆனால் வாழ்க்கையின் ஒரு சந்தியில் இதைப் புரிந்து கொள்ளும் பக்குவத்தை எமது மனம் அடைந்து விடும்போது அனைத்துக்கும் ஒரு விளக்கம் கிடைக்கிறது. எமக்குள்ளே ஆழப்புதைந்துக் கிடக்கும் ஆத்மீக உணர்வுகள் விழித்துக் கொள்கின்றன.

    கவியரசரின் பாடல்கள் ஒவ்வொன்றிலும் உள்ளூரத் துலங்கும் உன்னதக் கருத்துக்களின் கனம் எம் மனதில் உறைக்கத் தொடங்குகின்றன.

    அப்படியாக நான் என் மனதில் அவர் பாடல்கள் எழுப்பிய தாக்கங்களின் அடிப்படையில் அவரது பாடல்கள் சிலவற்றை உங்களுடன் சேர்ந்து அலசுவதே இத்தொடரின் நோக்கம்.

    யார் இந்த சக்தி சக்திதாசன்? பெரிய ஆன்மீகவாதி எனும் நினைப்பில் அலசுகிறாரோ ? என்று எண்ணாதீர்கள். கவியரசரின் பாடல்களை மிகவும் ஆழமாக அலசிய அறிஞர்களின் முன்னே நான் வெறும் கற்றுக்குட்டி தான்.

    அவர்களின் முன்னே நுனிப்புல் மேயும் மாடாகத்தான் நான் தெரிவேன். ஆனால் பாமரனின் பார்வையில் கவியரசரின் பாடல்களில் கலந்திருந்த ஆன்மீக உணர்வுகள் எப்படி இருந்தது ? என்பதற்குச் சான்றாகவே எனது தொடர் அமைகிறது.

    சரி இந்த வார அலசலுக்கு வருவோம்,

    ஆன்மீக உணர்வுகளுக்கு வித்து அனைத்துக்கும் மேலான அனைவர்க்கும் பொதுவான அந்த ஆண்டவன் தானே ! அந்த ஆண்டவன் எங்கே வாழ்கிறான்? அவன் கள்ளமில்லா நெஞ்சினில் வாழ்கிறான், மற்றவர்க்கு தீங்கு எண்ணா உள்ளங்களில் கோயில் கொள்கிறான்.

    அத்தகைய உள்ளங்களுக்குச் சொந்தக்காரர் யார்? கள்ளமில்லா வெள்ளை உள்ளங்களின் சொந்தக்காரர்களான குழந்தைகள் தானே !

    அக்குழந்தைகளுக்கு மதம், இனம், ஜாதி எனும் பிரிவினை உண்டா இல்லையே ! அத்தகைய ஒரு குழந்தையை நோக்கிப் பாடுவதாக அமைந்த இந்தப் பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றவர் கவியரசர்.

    “குழந்தைக்காக” எனும் திரைப்படத்தில் ஒலித்த பாடல்,

    ராமன் என்பது கங்கை நதி

    அல்லா என்பது சிந்து நதி

    இயேசு என்பது பொன்னி நதி

    நதிகள் பிறக்குமிடம் பலவாகும்

    அவை எல்லாம் கலக்குமிடம் கடலாகும்

    அனைத்து மதங்களும் ஒன்றே, அனைத்துக் கடவுள்களும் ஒன்றே. நெஞ்சத்தில் தோன்றும் இறையுணர்வுக்கு பாகுபாடு கிடையாது. ஆன்மீக உணர்வு அனைவர்க்கும் பொதுவானதே ! ஆன்மீக உணர்வின் அடிப்படை மனிதாபிமானமே என்பதைத் துல்லியமாக, அழகாக , எளிமையாகக் கவியரசர் எடுத்துச் சொன்ன விதம் அற்புதம்.

    தேவன் வந்தான் , தேவன் வந்தான்

    குழந்தை வடிவிலே – என்னைத்

    தேடித் தேடிக் காவல் கொண்டான்

    மழலை மொழியிலே !

    ஆமாம் இறைவன் எங்கே? எங்கே? என்று மனிதன் தேடியலைந்து கொண்டிருக்க இறைவனோ கள்ளமில்லா குழந்தை இதயத்தினுளல்லவா குடி கொண்டிருக்கிறான் ! அது மட்டுமா? ஓடிக் கொண்டிருக்கும் மனிதனை இறைவன் தேடித் தேடி வருகின்றானாம் அதை மனிதன் தான் புரிந்து கொள்ளவில்லை போலும்.

    இறைவன் பேசுவானா? எழும் கேள்விக்கு அழகாய் விளக்கம் தருகிறார் கவியரசர் . எப்படி? மழலை மொழியில் அவன் எம்மோடு உரையாடுகிறான்.

    பாப்பா தெய்வப் பாப்பா

    பாசம் கொஞ்சும் பாப்பா

    அன்னை மேரி தெய்வ பாலன்

    எங்கள் யேசு தேவதூதன்

    ராஜசபை ஜோதி கண்டேன்

    ஞானக்கோயில் தீபம் கண்டேன்

    இயேசு காவியம் எழுதிய வித்தகர் அல்லவா கவியரசர் ? அன்னை மேரி மாதாவின் மடியில் தவழ்ந்த தெய்வக்குழந்தையை, தேவதூதனை, எங்கே காண்கிறானாம் அம்மனிதன், அக்குழந்தையின் கண்களில் காண்கிறானாம். அது மட்டுமா பிரகாசிக்கும் அவ்விழிகளில் தேவாலயத்தில் ஒளிரும் ஞானதீபங்களையல்லவா காண்கிறான் அம்மனிதன்.

    பாப்பா தெய்வப் பாப்பா

    பாசம் கொஞ்சும் பாப்பா

    அல்லாஹோ அக்பர் என்றான்

    ஆண்டவனே அடிமை என்றான்

    பிள்ளை ஒன்றைப் பேசச் சொன்னான்

    எல்லாமும் இதுவே என்றான்

    இஸ்லாமிய அன்பர்களின் இறையின் மகத்துவத்தை இதைவிட அழகாய் யாரால் கூறிவிட முடியும்? குழந்தையின் மனதில் இருக்கும் தெய்வத்தன்மைக்கு அந்த ஆண்டவனே தன்னை அடிமையாக்கிக் கொள்வான் என்கிறார் கவியரசர். அதுமட்டுமா? பிள்ளைப் பேச்சில், மழலையின் கொஞ்சலில் அனைத்தும் அடங்கி விட்டது என்று விட்டார் கவியரசர்.

    பாப்பா தெய்வப் பாப்பா

    பாசம் கொஞ்சும் பாப்பா

    வேணுகான ஓசை கேட்டேன்

    விஜயன் கேட்ட கீதை கேட்டேன்

    நேரில் வந்த கண்ணன் கண்டேன்

    கண்ணன் என்னும் ராமன் கண்டேன்

    பாப்பா தெய்வப் பாப்பா

    பாசம் கொஞ்சும் பாப்பா

    பகவத்கீதை எனும் அரிய நூலை வில்லுக்கு வீரனான விஜயனுக்கும் கண்ணபிரான் அருளியபோது இருந்த தெய்வீகச் சூழலையொத்தது மழலையின் பேச்சு என்கிறாரோ ? எங்கள் கவியரசர்.

    அக்குழந்தையின் வடிவில் கண்ணனுக்கே தாசனான எம் கவியரசர் நேரிலே கண்ணனைக் கண்டது போல் உள்ளது என்கிறார் போலும். தர்மத்தை நிலைநாட்ட எடுத்த மறுஅவதாரம் ராமன் கூட அக்குழந்தையின் வடிவில் காட்சியளிக்கிறார் என்னும் கவியரசரின் அற்புத வர்ணனை எம்மை ஆன்மீக உணர்வின் உச்சத்திற்கு அழைத்துச் செல்கிறது.

    அன்பினிய வாசகர்களே ! கவியரசர் தன் பாடல் வரிகளுக்குள் புதைத்து வைத்த பொக்கிஷங்கள் பல. அவைகளை எந்தெந்த அர்த்தத்தில் எந்தெந்த வேளையில் படைத்தார் என்பதை அவரன்றி யாரும் அறிய முடியாது. ஆனால் அவற்றைச் செவிமடுக்கும் அவரது ரசிகர்களின் உள்ளத்தில் அவை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று மட்டும் உறுதியாக நம்பினார்.

    இப்பாமரன் தன் இதயத்தில் அவர் ஆன்மீக வரிகள் ஏற்படுத்திய தாக்கத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டேன்.

    சக்தி சக்திதாசன்

    லண்டன்

    04.03.2018

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) 12

     லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    அவன் பேசி முடித்த போது அவன் உடல் மாறி வெளிச்சத்தால் நிரம்பியது. அவனுடைய குரல் வானிலிருந்து வருவதைப் போல் உரத்த சத்தத்தோடு கேட்டது. “எல்லா மனிதர்களும் தங்கள் தேவைகளைத் தாங்கள் பூர்த்தி செய்து கொள்வதால் மட்டும் வாழ்வதில்லை, அன்பினால் வாழ்கிறார்கள் என்பதைப் புரிந்து கொண்டேன்.
    “அந்தச் சிறுமிகளின் தாய்க்குத் தன் குழந்தைகளுக்கு எது தேவை என்பது தெரிவிக்கப் படவில்லை. அது போல் அந்தச் செல்வந்தனுக்கும் எது தேவை என்று அறிய முடியவில்லை. ஒருவருக்கும் மாலை வரும் போது தனக்கு அணியப் பூட்ஸ் அவசியமா அல்லது தன் சடலத்திற்குச் செருப்புகள் தேவையா என்று பகுத்தறிய வாய்ப்பு அருளப்படவில்லை”.

    “நான் மனிதனாக இருந்த போது உயிரோடு இருந்ததின் காரணம் ஒரு வழிப்போக்கனும் அவன் மனைவியும் காட்டிய இரக்கத்தாலும் அன்பினாலுமேயன்றி என்னுடைய முயற்சியினால் அல்ல. அந்த அனாதைச் சிறுமிகள் இப்போது உயிரோடு இருப்பது அவர்களின் தாயின் வளர்ப்பல்ல. ஒரு அந்நியப் பெண்ணின் கருணையினாலும் அன்பினாலும் தான்.

    எல்லா மனிதர்களும் வாழ்வதின் காரணம் மனிதனில் காணப்படும் அன்பினால்தான். ஒருவருடைய தனி முயற்சியால் அல்ல. இறைவன் மனிதர்களுக்கு எது தேவை என்று வெளிப்படுத்தவில்லை. மனிதர்கள் தனித்து வாழ்வதை அவர் விரும்பாமல் அன்பினால் ஒன்று சேர்ந்திருப்பதை விரும்புகிறார். அன்பாயிருப்பவனிடத்தில் இறைவன் குடியிருக்கிறார். ஏனெனில் தேவன் அன்பாக இருக்கிறார்”.

    இவைகளைக் கூறி முடித்த பின் அவன் இறைவனைத் துதித்தான். அவனுடைய குரலால் அந்தக் குடிசை நடுங்கியது. கூரை திறந்து அக்னி ஜூவாலை வானை நோக்கி எழும்பியது. தேவ தூதனுக்குச் சிறகுகள் தோன்றி பரலோகம் சென்றான். சைமனும், மனைவியும் குழந்தைகளும் கீழ் விழுந்து அவனை வணங்கினர்.
    சைமன் தன்னிலைக்கு வந்தபோது அந்தக் குடிசை எப்போதும் போலிருந்தது. அவனும் குடும்பத்தினரையும் தவிர்த்து வேறு ஒருவரும் அங்கு இல்லை.

    முற்றும்

    Share