Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . (264)

    சக்தி சக்திதாசன்

     

    அன்பினியவர்களே

     

    அன்பான வணக்கங்களுடன் இந்த வார மடலிலே உங்களுடன் உறவாடுவதில் மகிழ்வடைகிறேன். காலம் யாருக்கும் காத்திராமல் அவசரமாக தனது பயணத்தை மேற்கொண்டு கொண்டிருக்கிறது. இக்காலத்தின் ஓட்டம் என்றும் ஒரே வேகத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் வித்தியாசமான காலக் கண்ணாடிகளுக்குள்ளாகப் பார்க்கும் போது எதோ சமீபகாலத்தில் காலம் மிகவும் விரைவாகக் கடந்து போய்விடுகிறது போலத் தோற்றமளிக்கிறது. இது ஒருவருக்கு மட்டுமல்ல, பலருக்கும் இதே உணர்வுதான் தோன்றுகிறது. எந்தவொருவருடனும் உரையாடும் போதும் “அப்பப்பா, நாட்கள் எத்தனை விரைவாக ஓடுகின்றன” என்பதுவே தவறாமல் இடம்பெறுகின்ற ஒரு உரையாடல்.

    நூற்றாண்டுகள் 16,17,18,19,20,21 என்று நூற்றாண்டுகள் ஒவ்வொன்றாய் கடந்து ஓடிப்போய்விட்டன. ஆனால் அவை ஒவ்வொன்றும் தம்மோடு கொண்டு வந்து அகிலத்தில் விதைத்து விட்டுப் போன மாற்றங்கள் எத்தனையோ ! அம்மாற்றங்களின் மூலம் கிடைக்கப்பெற்ற நன்மைகளும், தீமைகளும் பலவே. இம்மாற்றங்களிலே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாககவும், மனிதர்களின் அன்றாடத் தேவைகளிலும், பழக்க வழக்கங்களிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியது விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகாது. மனித வாழ்க்கையின் பல அம்சங்களை மிகவும் இலகுவாக்கியதோடு மட்டுமல்லாமல் மனித வாழ்க்கையின் தேவைகளை அதிகரிக்கப் பண்ணி அத்தேவைகளுக்காக ஓயாத தேடல்களில் மனிதரை ஈடுபடுத்தியதும் விஞ்ஞானமே !

    நான் இங்கிலாந்துக்கு வந்த காலங்களில்(1970களின் நடுப்பகுதியில்) இங்குள்ள பி.பி.ஸி தொலைக்காட்சியில் விஞ்ஞானத்தை அடிப்படையாக வைத்து நடத்தப்பட்ட”நாளைய உலகம்(Tomorrows world) “ எனும் ஒரு நிகழ்ச்சி வாராவாரம் நடைபெறுவதுண்டு. இந்நிகழ்ச்சியில் விஞ்ஞானத்தின் வளர்ச்சியின் புதிய கண்டுபிடிப்புகளையும், இக்கண்டுபிடிப்புகள் மக்களின் அன்றாட வாழ்க்கையில் கொண்டுவரப்போகும் மாற்றங்களைப் பற்றியும் காண்பிப்பதுண்டு. அத்தகைய நிகழ்ச்சி ஒன்றில் கணணியின் வளர்ச்சி பற்ரிப் பேசும் போது , இனிவரும் காலங்களில் கணணியின் தானியங்கும் வளர்ச்சியினால் இன்று மனிதர்கள் ஆற்றும் பணிகள் பல கணணிகளால் ஆற்றப்படும் சாத்தியமுள்ளது என்று கூறினார்கள். இக்கூற்றின் வெளிப்பாடாக , இதனால் மக்கள் மத்தியில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்காதா? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு இல்லை இவ்வளர்ச்சியினால் பொருளாதாரம் மேலும் விரிவடையும், மக்களின் வாழ்க்கை வசதிகள் பெருகும் எனவும், வாரத்தில் 5 நாட்கள் பணிபுரிவோர் மூன்று நாட்கள் பணிபுரிந்து 5நாட்களுக்குரிய ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளும் அளவுக்கு பொருளாதரத்தில் நாடு முன்னேற்றமடையும் என்றும் விளக்கம் கொடுக்கப்பட்டது.

    அப்படியான ஒரு சூழலில் மனிதர்கள் அதிக ஓய்வினைப் பெறக்கூடிய வசதி உருவாகும் என்றும் கூறப்பட்டது. இன்றைய சூழலை அதன் பின்னனியில் எடுத்துப் பார்க்கிறேன். கணணியின் தாக்கம் மக்களின் வாழ்வில் இன்று எத்தனையோ மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அன்று அவர்கள் குறிப்பிட்ட அந்த வசதிப் பெருக்கம் மக்கள் வாழ்வினில் ஏற்படவில்லை. அதாவது 5 நாட்களுக்குப் பதில் மூன்று நாட்கள் வேலை செய்து அதிக ஓய்வு நேரம் கிடைக்கும் எனும் வாதம் மெய்ப்படவில்லை. பதிலாக வளரும் வசதிகளின் வாய்ப்புக்காக மனிதர்கள் இயந்திரங்கள் போல கிடைக்கும் நேரத்தையெல்லாம் பணியில் செலவு செய்து தீராத தேடல்களுடன் வாழ்வெல்லாம் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்தச் சூழலில் தான் இங்கிலாந்து அரச போக்குவரத்து திணைக்களம் ஒரு புதிய சிக்கலை எதிர்நோக்குகிறது. லண்டன் பேரூந்து மற்றும் புகையிரதச்சேவை, பாதாள ரெயில்சேவை என்பவற்றினை லண்டன் மேயரின் கீழியங்கும் டி.எவ்.எல் (T.F.L) எனும் அமைப்பே நிர்வகித்து வருகிறது. கடந்த சில வருடங்களாக நாட்டின் பொருளாதாரச் சிக்கலின் நிமித்தம் மக்களின் ஊதிய உயர்வு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் பஸ், மற்றும் ரெயில் சேவைகளின் கட்டணமோ வருடா வருடம் சம்பள உயர்வுக்கு எவ்வகையிலும் ஒப்புமை இல்லாமல் உயர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது. இதனால் மக்கள் அனைவரும் கட்டண உயர்வு, ஜன நெருக்கடி போன்ற இடர்பாடுகளினால் அல்லல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.

    இந்நிலையிலே தான் இங்கிலாந்து அரசின் போக்குவரத்துத் திணைக்களத்துக்கு தலையிடியைக் கொடுக்கும் வகையில் ஒரு புதிய சிக்கல் தோன்றியுள்ளது. சமீபத்திய ஆய்வு ஒன்று தொடர்ந்து இரண்டு வருடங்களாக லண்டன் பஸ்,இரெயில் மற்றும் பாதாள ரெயில் ஆகியவற்றை உபயோகிக்கும் மக்களின் தொகை கணிசமான அளவில் வீழ்ச்சியடைந்து வருவதாகத் தெரிவிக்கிறது. தமது சேவைகளின் மீது சுமத்தப்பட்ட இடநெருக்கடியைத் தீர்ப்பதற்காக பல புதிய இரெயில் வண்டிகளை கொள்வனவு செய்ய நடவடிக்கைகள் எடுத்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இத்தகைய பாவனையாளைர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி மிகப்பெரிய சிக்கலைத் தோற்றுவித்துள்ளது.

    மக்களின் இத்தகைய நடவடிக்கைக்கான காரணிகளாக பின்வரும் சிலவற்றைக் குறிப்பிடுகிறார்கள். முக்கியமாக இன்றைய விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இணையதள பாவனையின் வேகமான வளர்ச்சியால் பலர் இன்று தமது இல்லங்களில் இருந்தே பணிபுரியும் வசதிகளைப் பெற்றிருக்கிறார்கள். அடுத்து இதுவரை காலமும் நல்ல ஊதியம் கிடைக்கக்கூடிய பெரிய பதவிகள் லண்டனில் தான் கிடைக்கும் எனும் நிலைமாறி லண்டனை அண்மித்த பகுதிகளில் பல முன்னனி வியாபார ஸ்தலங்களும், நிறுவனங்களும் இயங்குவாதல் பலர் தாம் வசிக்கும் நகரங்களிலேயே நன்றாக உழைக்கக்கூடிய நல்ல பதவிகளைப் பெறக்கூடியதாக இருக்கிறது. அடுத்து இன்று மக்கள் தமது உடல்நலனில் அதிக அக்கறை கொண்டுள்ளார்கள். இவ்வுடல்நலனின் மீதான அக்கறையோடு, இயற்கைச் சூழல் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டு பலர் இன்று சைக்கிள்கள் மூலம் பணியிடங்களுக்குச் செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

    இந்தக் காரணிகளின் கூட்டுச் சேர்க்கையே தற்போதைய பொது போகுவரத்துச் சேவைகளை உபயோகிப்போரின் எண்ணிக்கையின் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறார்கள்

    விஞ்ஞானம் அதுபாட்டுக்கு வளர்ந்து கொண்டு போகிறது அதன் வளர்ச்சியால் ஏற்படும் புதிய தேவைகளின் தேடல்களுக்காக மனிதர்கள் தம்மது உழைக்கும் திறனைக் கூட்டிக் கொண்டே போவார்கள். இந்த ஓட்டத்தை நிறுத்தி ஓய்வினை எடுக்கக்கூடிய ஒரு நிலையை மனிதர்களுக்கு விஞ்ஞான வளர்ச்சி எமது வாழ்க்கைக் காலத்தில் கொடுக்குமா? என்பது சந்தேகமே !

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”இந்திரன் குன்றுக்காய், இந்திரன்சேய் கீதைக்காய்,
    தொந்திரவு மாமேகம்(சரணாகதி) தாமுவுக்கே(தாமோதரர்க்கே) -வந்துறவு
    கொண்டாடும் கன்றுக்கு கீதையா சொல்வது!
    திண்டாடும் சேய்க்கேகீ தை”….கிரேசி மோகன் ….!

    Share
  • தன்வந்திரி பீடத்தில் அமாவாசையில் சூலினி துர்கா ஹோமம்

     

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, கீழ்புதுப்பேட்டையில் அமைந்துள்ள, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 17.03.2018 சனிக்கிழமை அமாவாசை திதியை முன்னிட்டு காலை 10.30 மணிளவில், பீடாதிபதி மற்றும் ஸ்தாபகர் கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி சூலினி துர்கா ஹோமம் நடைபெற உள்ளது.

    ஜோதிட சாஸ்திர, வான நட்சத்திர மண்டல விஞ்ஞானத்தின்படி சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு கிரகங்கள் சுழற்சி முறையில் ஒரே ராசியில் சேர்வதே ‘அமாவாசை’ ஆகும். இந்நாளில் முன்னோர்கள், மூத்தோர்கள், இறந்த தாய், தந்தையரை நினைத்து வழிபாடு நடத்துவது இந்துக்களின் வழக்கம். இந்நாளில் நம் முன்னோர்களை நினைத்து நாம் செய்கிற பூஜை வழிபாடு, தர்ப்பணம், அன்னதானம் போன்றவற்றை ஏற்றுக்கொள்வதற்காக அவர்கள் பித்ரு லோகத்தில் இருந்து பூமிக்கு வருவதாக ஐதீகமும், நம்பிக்கையும் உள்ளது.

    அமாவாசையில் நடைபெறும் பூஜைகள் மற்றும் ஹோமத்தில் பங்கு கொள்வதால் சந்ததியினர் தோஷமில்லாமல் நலமுடன் வாழ வழி செய்கிறது. பித்ருக்களை நினைவுகூர்ந்து நாம் செய்யும் வழிபாடுகள், தர்ம காரியங்கள் ஆகியவை அந்த ஆத்மாக்களுக்கு மகிழ்வளிக்கும் செயலாகும். இதனால்,அவர்களது பரிபூரண ஆசி நமக்கும் நம் சந்ததிக்கும் கிடைக்கும். துர்மரணம், விபத்து, அகால மரணம் அடைந்தவர்கள் ஆத்மா சாந்தியடைந்து முக்தி கிடைக்கப் பெறுவர்கள்.

    உலகத்தில் இன்றைக்கு இருக்கிற மோசமான வியாதிகளுள் ‘திருஷ்டி’ எனப்படும் வியாதி மிக கொடூரமான ஒன்று. இந்த திருஷ்டியினால் தனிப்பட்ட நபரின் முன்னேற்றம் பாதித்தல், குடும்பத்தில் சச்சரவு ஏற்படுதல், தாம்பத்திய உறவில் விரிசல், நல்ல வேலையை இழத்தல், ஓரடி எடுத்து வைத்தால் இரண்டடி சறுக்குதல் உட்பட ஏராளமான பாதிப்புகள் விளைகின்றன. எனவே, ஒவ்வொருவரும் தங்களுக்குள்ள திருஷ்டியை அமாவாசையில், தன்வந்திரி பீடத்தில் நடைபெறும் சூலினி துர்கா ஹோமம், ஸ்ரீ ப்ரித்யங்கிரா ஹோமம், சரப ஹோமம், திருஷ்டி துர்கா ஹோமம் போன்ற ஹோமங்களில் கலந்துகொண்டு ஏற்படும் திருஷ்டிகளை அவ்வப்போது கழித்துக் கட்டுவது நல்லது.

    ஒரே வீட்டில் இருவருக்கு இராகு தசை அல்லது கேது தசை நடப்பவர்களுக்கு ஏற்படும் சங்கடங்கள் தீரவும், நாக தோஷம், சர்ப்ப தோஷம், செய்வினைக் கோளாறுகள் நீங்கவும், பில்லி சூன்யம் போன்ற தோஷங்கள் அகலவும், திருமணம் கைகூடவும், சந்தான பிராப்தம் கிடைக்கவும், தொழில்களில் ஏற்படக் கூடிய தடைகள் அகலவும், பணப் பிரச்னை, கடன் பிரச்னை தீரவும், எதிரிகள் தொல்லை அகலவும், மரண பயம் நீங்கவும்,அகால மரணம் நிகழாமல் இருக்கவும், மாங்கல்ய தோஷம் அகலவும், நல்ல தொழிலாளர்கள் கிடைத்து தொழில் நல்ல முன்னேற்றம் அடையவும், மண் வளம், மழை வளம் பெருகி இயற்கை வளம் பெறவும், பஞ்ச பூதங்களினால் ஏற்படும் இன்னல்கள் அகலவும் மேற்கண்ட ஹோமங்கள் ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடக்கவிருக்கிறது. இதில் அனைவரும் பங்கு கொண்டு பித்ருக்களின் ஆசிகளையும், ஸ்ரீ துர்கா தே

    வியின் அருளையும் பெற்று, பெரு வாழ்வு வாழலாம் என்று ஸ்தாபகர் டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் தெரிவிக்கிறார்.

    Share
  • ’’கண்ணாடி ‘’

     

    ’’கண்ணாடி ‘’ பற்றிய பகிர்வு டாப் -கிளாஸ் ராம்னாத்….!

    ‘’வாளால் வகிர்ந்தாலும், வாளா(து) இருந்தாலும்,
    நாளாம்நா ளாம்திருநாள் நம்பிக்கை, -ஜூலாவோய்(ஜூலா ஓய்)!;
    கண்ணாடி போல்பிறர் முன்னாடி பேசிடு
    பின்னாடி பாதரஸப் பூச்சு!’’….கிரேசி மோகன்….!

    ஓவியர் & இயக்குனர் ‘’பாப்புவின்’’ ஸ்கெட்ச் பார்த்து வரைந்தது….!கண்ணாடி காரிகை….!

    Share
  • கடவுளும், ஸ்டீஃபன் ஹாக்கிங்கும்

    கடவுளை நம்பியவனும், கடவுளை நம்பாதவனும் சதா கடவுளைத்தான் நினைத்துக் கொண்டிருக்கிறான். ஒரு நாணயத்தை முன்னால் பார்த்தால் என்ன ? பின்னால் பார்த்தால் என்ன ? இருபுறம் கொண்டது, ஒரு நாணயம். கண்ணின் திரையில் விழும் பிம்பம் தலை கீழாய்ப் பதிவதை மூளை நேராக்கிக் கொள்கிறது. அதுபோல் நம்பினாலும், நம்பாவிட்டாலும், கடவுளை ஒருவன் சதா நினைத்துக் கொண்டிருக்கிறான்.

    கடவுள், நம்பியவனை தழுவிக் கொள்வதும் இல்லை. நம்பாதவனை விலக்குவதும் இல்லை. ஹாக்கிங் எப்போதும் கடவுள் இல்லை என்றும், கடவுளுக்கு வேலை இல்லை என்றும் கடவுளை ஆழமாகத் தெரிந்தவர்போல் காட்டிக் கொள்வார். இளவயதிலேயே சீக்கிரம் மரிப்பார் என்று மருத்துவர் முன்னறிவித்தார். மாறாக அவர் 76 வயது வரை அவர் ஆயூள் எப்படி நீடித்தது ? துன்பத்தில் உழன்றாலும், கடவுள் திட்டமிட்டபடி, அவர் ஆயுள் நீண்டு காலவெளியில் கருந்துளை, பெருவெடிப்பு பற்றி பல புதிய விளக்கங்கள் தந்தார்.

    சி. ஜெயபாரதன்

    Share
  • எனது போராட்டமும் ஸ்டீபன் ஹாக்கிங்கும்

    முதலில் நேரம் கிடைக்கும்போது இந்தக் காணொளியை எனக்காகப் பார்க்கவும். டச்சு மொழிதான், ஆனால் ஆங்கிலத்தில் சப்டைட்டிலுடன் பார்ப்பது சிரமமிருக்காது. பிறகு எனது இந்தக் கட்டுரையை வாசிக்கவும்.

    இனி இந்தக் கட்டுரையில் நான் எழுதி இருப்பது – என்னைப் பற்றியும், இந்தக் காணொளியில் வரும் பெண்மணியைப் பற்றியும், எங்கள் இருவரின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பற்றியும்.  

    ‘கேபி ஓல்ட்ஹவுஸ்’ என்கிற நெதர்லாந்தைச் சேர்ந்த இந்தப் பெண்மணி ‘டின்னிட்டஸ்’ (Tinnitus) பிரச்சினையால் பாதிக்கப்பட்டவர். டின்னிட்டஸ் பற்றிய விழிப்புணர்வு நம்மிடையே அவ்வளவாக இல்லை. நான் முதன்முறையாக இந்தப் பிரச்சினையைப் பற்றி என்னுடைய நண்பர்களிடம் கூறிய போது, ஒரு சிலரைத் தவிர யாரும் அதைப்  பெரிதாகவே எடுத்துக்கொள்ளவில்லை. பிரச்சினையின் தன்மை புரியாததாலும், நான் அவர்களுக்கு விளக்கிய விதங்களாலும், ஒரு சிலர் அதை சிரித்துக்கொண்டே கேட்கவும் செய்தார்கள். உறவினர்களிடம் கூறிய போது அவர்கள் பதில்கூட பேசவில்லை. பாவம் அவர்களுக்குப் புரியவில்லை என்று நினைக்கிறேன். அவ்வளவு ஏன். இந்தக் கட்டுரையுமேகூட மிக எளிதாகக் கடந்து செல்லப்பட்டு விடும். அந்த அளவில்தான் டின்னிட்டஸ் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. இருபத்து நான்கு மணிநேரமும் கூடவே வரும் கொடுமையான அந்தச் சத்தங்களைத் தாங்கிக்கொள்ள முடியாமல் அந்தப் பெண் இறுதியில் சாகவே தீர்மானித்துவிட்டார். அவருக்கு இரண்டு குழந்தைகள். தான் ஏன் இறந்தே தீரவேண்டும் என்று அந்தக் குழந்தைகளுக்கு விளக்கிவிட்டு, அவர்களின் அனுமதி பெற்றுக்கொண்டு, மடிந்திருக்கிறார். அந்தப் பெண்மணியின் வலியை என்னைத் தவிர வேறு யாரும் புரிந்துகொள்ள முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. ஒரே வித்தியாசம். அவர் சாவைத் தேர்ந்தெடுத்து விட்டார். நான் வாழ்வைத் தேர்ந்தெடுத்துக்கொண்டு விட்டேன்.

    டின்னிட்டஸ் பிரச்சினையின் கொடூரத்தையும், என்னுடைய போராட்டத்தையும் புரிந்துகொள்ள விரும்புபவர்கள் இந்தக் காணொளியைப் பார்த்தாலே போதும். இந்த நேர்காணலை அந்தப் பெண்மணி Euthanasia (=கருணைக்கொலை என்கிற வார்த்தை பொருத்தமாக இருப்பதாகத் தெரியவில்லை) செய்து கொள்வதற்கு சில வாரங்களுக்கு முன்புதான் எடுத்துள்ளார்கள். இந்த ஆவணப்படம் வெளிவருவதற்கு முன்பே அவர் இறந்துவிட்டார். நான் வாழும் பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளில் யுதனேசியாவை சட்டம் அனுமதிக்கிறது.

    ஒரு விழிப்புணர்வுக்காக இதைப் பற்றி வெளிப்படையாக உங்களிடம் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதால் எழுதினேன். ‘பேய்க்கும் நோய்க்கும் ராத்திரி என்றாலே கொண்டாட்டம்’ என்று ‘அன்பே வா’ திரைப்படத்தில் நாகேஷ் போகிற போக்கில் ஒரு வசனம் பேசியிருப்பார். எனக்குப் பேய் பற்றிய பயமெல்லாம் இல்லை. ஆனால் இந்த டின்னிட்டஸ் விஷயத்தில் இது முழுக்க முழுக்க உண்மை. அப்படிப் பல இரவுகள் என் தலைக்குள் கொண்டாடித் திரிந்த மாபெரும் அரக்கன் இந்த டின்னிட்டஸ். அதனுடனான என் அனுபவங்களை இன்னும் விவரமாகவும் விரிவாகவும் எழுத இருக்கிறேன்.

    தூக்கம் வரும்போது தூங்க முடியாது என்பது போன்ற கொடுமை வேறு எதுவுமே இருக்க முடியாது. எனக்கு கேன்சரோடு போராடுவது என்பது எத்தகையது என்று தெரியாது. பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் பேசித் தெரிந்துகொண்டதோடு சரி. அதை ‘முடி’ சிறுகதையிலும் பதிவு செய்திருக்கிறேன். டின்னிட்டஸ் கேன்சர் போல் உயிரைக் கொல்லும் அளவுக்கு ஆபத்தானதல்ல. ஆனால், நிச்சயம் வாழ விடாமல் செய்யும் அளவுக்கு மோசமானது. அந்த அளவில், இதுவுமே உயிர்கொல்லிதான். இந்தச் சத்தங்களோடு போடும் யுத்தத்தை விட கொடுமையான துன்பம் வேறொன்று இருக்கமுடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. என்னுடைய சிறுகதை ஒன்றுக்கு ‘அமைதியின் சத்தம்’ என்று தலைப்பு வைத்திருந்தேன். அந்தக் கதை டின்னிட்டஸோடு தொடர்புடையது அல்ல. ஆனாலும் அமைதியின் சத்தம் எவ்வளவு துன்பகரமானது என்பது எல்லோருக்கும் புரிய வாய்ப்பில்லை.

    எப்படியோ இந்த டின்னிட்டஸ் எனக்கு ஏற்படுத்திய கொடுங்கனவில் இருந்து என்னை மீட்டு வெளியே கொண்டுவந்து விட்டேன். டின்னிட்டஸுக்குப் பல காரணங்கள் உண்டு. எனக்கு வந்திருப்பதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டுபிடிக்க காது, மூளை என்று பலமுறை MRI ஸ்கேன்கள் எடுத்தாகிவிட்டது. எதையெதையோவெல்லாம் முயன்று பார்த்து விட்டார்கள் இங்குள்ள மருத்துவர்கள். எல்லாம் இயல்பாகவே இருக்கிறது; நலமுடன் இருக்கிறேன் என்கிறார்கள். இங்கிருக்கும் மருத்துவ வசதிகளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. நம்மூரில் எல்லாம் என்னைப் போன்ற சாதாரணனுக்கு இலவசமாக இத்தகைய வசதிகள் எல்லாம் கிடைக்க வாய்ப்பே இல்லை. வசதி இருப்பவர்களுக்கும் வாய்ப்பில்லை. ஆனால், இங்குள்ள மருத்துவர்கள் மீது எனக்கு நிறைய விமர்சனங்கள் இருக்கிறது. திறன்மிகுந்தவர்கள். அதில் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால், பல சமயம் எந்திரங்களைப் போன்று செயல்படுகிறார்கள். மருத்துவர்கள் மட்டுமல்ல, பெரும்பாலான மற்றவர்களும் அப்படித்தான். ஐரோப்பியர்களிடமிருந்து நாம் கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், நம்மிடமிருந்து இவர்கள் கற்றுக்கொள்வதற்கு அதைவிட மிக அதிகமாகவே இருக்கிறது என்பதுவும் உண்மை. Especially, on human aspects.

    டின்னிட்டஸ் பிரச்சினையில் உழன்று கொண்டிருந்த போது, இந்தியாவிலுள்ள என்னுடைய குடும்ப மருத்துவரை அழைத்தேன். அவரோ, ‘அதெல்லாம் ஒன்னுமில்லடா..’ என்று கூறிய போதே என் பிரச்சினையில் பாதி தீர்ந்துவிட்டது போல் இருந்தது. சிறுவயதில் பலமுறை அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு உடம்பு சரியாகியிருக்கிறது. எதிர்மறையாக அவருக்குப் பேசவே வராது. என் தந்தையாரும் அப்படியே. அவர் ஒரு ஆசிரியர் மட்டுமல்ல; யோகா தெரபிஸ்ட்டும் என்பதால், அவரோடு சேர்ந்து ஸ்கைப் மூலம் தொடர்ந்து ஒரு சில யோக முறைகளை பயிற்சி செய்து வந்தேன். தீவிர உணவுக் கட்டுப்பாடு. எனக்கு மிகவும் பிடித்த டீ குடிப்பதையே நிறுத்தி விட்டு, கிரீன் டீக்கு மாறினேன். எப்போதும் எதிலாவது என்னை ஈடுபடுத்திக்கொண்டு சுறுசுறுப்பாக இருப்பது என்று முடிவுசெய்தேன். சோம்பேறித்தனத்தை ‘டின்னிட்டஸ் அரக்கன்’ தனக்குச் சாதகமாக்கிக் கொள்வான் என்பதை அறிவேன். எந்தப் பிரச்சினையையும் தலைக்குள் எடுத்துக்கொள்ளக்கூடாது. அதனால் ஏற்படும் தனிமையும் அவனுக்குச் சாதகமானதுதான். வாழ்க்கையைக் கொண்டாடுவதால் மட்டுமே அவனைத் துரத்த முடியும். எதைத் தின்றால் பித்தம் தீரும் என்கிற கதையாக எதையெதையோ செய்து கொண்டிருந்த என்னை, நான் செய்வதையெல்லாம் செய்ய விட்டு, அதீத அமைதியுடனும் பொறுப்புடனும் என்னை கவனித்துக்கொண்ட என் மனைவியும், என் தந்தையும், என் மருத்துவரும் இல்லையென்றால் நான் இப்போது இருக்கும் கொண்டாட்ட மனநிலைக்கு அவ்வளவு சீக்கிரம் வந்திருக்க முடியாது.

    டின்னிட்டஸால் பாதிக்கப்பட்ட நண்பர்களிடம் இருக்கும் பிரச்சினையே அவர்கள் இதற்கான தீர்வை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். பழைய அமைதி வேண்டுமென்கிறார்கள். அதிலும் ஐரோப்பியர்கள்  சும்மாவே அமைதி விரும்பிகள் ஆயிற்றே. அர்த்தமற்ற அமைதியின் மீது அவர்களுக்கு அப்படி என்னதான் காதலோ? ஆனால் டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டால் அவர்கள் வேண்டுகின்ற அமைதிக்கு நிச்சயம் சாத்தியமே இல்லை என்பதே வலிமிகுந்த உண்மை. எனவேதான் அந்தச் சத்தத்தையே எனக்கு சாதகமாக்கிக்கொண்டேன். நண்பனாக்கிக் கொண்டேன். அதை ரசிக்க ஆரம்பித்து விட்டேன். அதன் மீதே தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன். அதைக் கேட்காமலாக்கிவிட்டேன். அது இருக்கிறது. ஆனால் இல்லை. 🙂 ஏனெனில் நான் அதைக் கண்டுகொள்வதில்லை. போராடுவதற்கு மனதை வலிமையாக்கிக் கொள்வது மட்டுமே ஒரே வழி.

    ஆனாலும் மனவலிமை அற்ற இவர்களுக்கு இதையெல்லாம் புரிய வைப்பதில் சற்று திணறிக்கொண்டிருக்கிறேன். இருந்த மனவலிமையையும் டின்னிட்டஸ் அரக்கன் தின்றிருப்பான் என்பது எனக்குத் தெரியும். அதனால் தற்கொலை செய்துகொள்வதைத் தவிர வேறு வழியே இல்லை என்று சொல்லிக்கொண்டிருக்கும் என் பெல்கிய நண்பன் ஒருவனை ‘ஒருமுறையாவது இந்தியாவிலுள்ள ஏதேனும் ஒரு நகருக்குச் சென்று வா’ என்று தீர்வு சொன்னேன். இந்திய நகரங்களின் உள்ளமைந்த இரைச்சல் ஒருவேளை இதற்கு ஒரு தீர்வாக அமையக்கூடும் அல்லவா? ஆனால் அதற்கும் ஆபத்து வந்துவிட்டது. எனது நண்பனின் சகோதரி டெல்லி மாநகரிலேயே இந்தப் பிரச்சினையில் உழன்று கொண்டிருக்கிறார். இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்தப் பெண்ணிடம் ஒரு மணிநேரம் பேசிக்கொண்டிருந்தேன். அழுதுவிட்டாள். இங்கிருக்கும் இரண்டு நண்பர்களும் அப்படித்தான். நான் அதிலிருந்து மீண்டு வெளியே வந்துவிட்டதால் என்னை இவர்கள் ஒரு கடவுளாகவே பார்க்கிறார்கள். என்னால் முடிந்த அளவுக்கு அவர்களுக்கு உதவி செய்து வருகிறேன். அதிலும் ஒரு நண்பருக்கு இரண்டு காதுகளிலும் டின்னிடஸ். யாரோ ஒருவர் 24 மணிநேரமும் மரம் வெட்டிக்கொண்டே இருப்பது போன்ற சத்தம் கேட்கிறதாம்.

    ஒருபுறம் சாகாத் துடிக்கும் நண்பர். இன்னொருபுறம் அவரது முடிவு சரி என்று ஊக்கப்படுத்தும் வகையில் வந்திருக்கும் கேபியின் யுதனேசியா முடிவைப் பற்றிய இந்தக் காணொளி. உண்மையில் யுதனேசியா பற்றிய என்னுடைய பார்வையே இந்த ஆவணப்படத்தைப் பார்த்தவுடன் மாறிவிட்டது. ஒருவேளை நான் கேபியிடம் பேசி இருக்கலாமோ? அது அவருக்கு உதவியிருக்குமோ? அவரை வாழ வைத்திருக்க முடியுமோ? என்றெல்லாம் ஏதேதோ எண்ணங்கள் வந்து விழுகிறது. இந்தக் காணொளியைப் பார்த்த அன்று இரவு எனக்குத் உறக்கமே வரவில்லை.

    எல்லோரிடமும் கூறி வருகிறேன். டின்னிடஸால் பாதிக்கப்பட்ட நண்பர்கள் யாரேனும் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளச் சொல்லுங்கள் என்று எல்லோரிடமும் வேண்டிக்கொள்கிறேன். உங்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

    இயற்பியலாளர் ‘ஸ்டீபன் ஹாக்கிங்’ பற்றி பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்கும். அவருடைய இருபத்தோரு வயதில் அவருக்கு ‘Motor Neurone Disease’ வந்து உடல் முழுவதும் செயலிழந்து போனது. “இன்னும் இரண்டு வருடங்கள்தான் அவர் உயிரோடு இருப்பார்” என்று கூறி மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனராம். ஆனால்,  ஸ்டிபன் ஹாக்கிங் ஒரு நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது என்னிடம் கேட்டால், தயங்காமல் அவருடைய வாழ்க்கையைத்தான் காட்டுவேன். தன்னுடைய எழுபத்தி ஆறு வயதில் நேற்று காலமான அவரால் பேச முடியாது, நடக்க முடியாது – எதற்கு இப்படி விவரித்துக்கொண்டு – அவரால் அவரது உடலைக்கொண்டு எதையும் செய்ய முடியாது. அவரது வலது பக்க கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டும் சற்று செயல்படும். அதன் மூலமாக அவர் தட்டச்சு செய்வதை, அவருக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறி மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவருக்குப் பிடித்தமான குரலை  அவரே தெரிவு செய்துள்ளார். இந்தக் குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு.

    ஒருமுறை அவரிடம், “எப்படி இத்தனை வருடங்கள் இதுபோன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்?” என்று கேட்ட போது அவர் கூறியது, “While there is life, there is hope”. அவருடைய இந்த வாசகம்தான் ஒரு காலகட்டத்தில் எனக்கு எல்லாமாயும் இருந்திருக்கிறது. நம் உடலில் உயிர் ஒட்டிக்கொண்டு இருக்கும் வரை நமது நம்பிக்கையை மட்டும் தூக்கி எறிந்துவிடக்கூடாது. ஹாக்கிங்கால் தன்னுடைய இருபத்தோரு வயதிலிருந்து வாழ்வின் இறுதி வரை போராட்டத்துடன் வாழ முடிந்திருக்கிறது. அதுவும் சாதாரணமாக அல்ல. உலகின் தலைசிறந்த இயற்பியலாளராக.  நானும் இப்போது டின்னிடஸ் நண்பனுடன் கொண்டாட்டமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இப்படி இருக்க இந்த யுதனேசியா எல்லாம் எதற்கு என்கிற கேள்வி எனக்குள் எழுகிறது.

    இறந்தால் இன்னொரு பிறவி இருக்கிறது என்கிற மூடத்தனத்தை ஒழித்தாலாவது கைவசம் இருக்கிற ஒரே ஒரு வாழ்க்கையின் மீது மனிதர்களுக்குப் பற்று வருமா? அப்போதுதாவது வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதைக் கொண்டாட ஆரம்பிக்கவேண்டும் என்று தோன்றுமா? ஓருடல். ஒரு பிறவி. காயமே இது மெய்யடா. மெய்யே மெய். அதில் எத்தனை பிரச்சினை இருப்பினும்.

    பிரச்சினைகளை தலைக்குள் ஏற்றிக்கொள்ளாதீர்கள். அவற்றைத் தொலைத்துவிடுங்கள். டின்னிடஸ் என்பதே ஒரு பிரச்சினைதான். ஆயினும் உங்கள் பிரச்சினைகளை எனக்கிருக்கும் டின்னிட்டஸாகப் பாருங்கள். அதை உங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளுங்கள். நண்பனாக்கிக் கொள்ளுங்கள். ரசிக்க ஆரம்பியுங்கள். அதன் மீதே தியானம் செய்யத் தொடங்குங்கள். இறுதியில் ஒருநாள் அவை தொலைந்து போகும். அவை இருக்கும். ஆனால் இருக்காது. ஏனெனில் நீங்கள் அவற்றை கண்டுகொள்வதில்லை. பிறகென்ன, வாழ்க்கை கொண்டாட்டமாக இருக்கும்.

    எல்லோருக்குமே தற்கொலை செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணம் ஒரு கட்டத்தில் கண்டிப்பாக  உதித்திருக்கும். உலகத்தில் உள்ள பிரச்சினைகள் கொஞ்சமல்லவே. ‘செத்துத் தொலைப்பதற்கு பதிலாக வாழ்ந்துத் தொலைக்கலாம்’ என்கிற வரி நினைவுக்கு வருகிறது. அநேகமாக வண்ணதாசன் எழுதியது என்று நினைக்கிறேன். சரியாகத் தெரியவில்லை. வண்ணதாசன் நம்பிக்கைவாதிதான். ஆனால், எனக்கு இந்த வரிகள்கூட எதிர்மறையாகவே தெரிகிறது. அது என்ன தொலைப்பது? கொண்டாட்டத்துடனே வாழலாமே? நானும்கூட பல சமயங்களில் தவறான காரணங்களுக்காக, அற்ப விஷயங்களுக்காக ‘என்ன வாழ்க்கை இது. செத்துப்போகலாம்’ என்று நினைத்திருக்கிறேன். ஆனால் இப்போது ஒரு சரியான காரணத்துக்காக வாழ விரும்புகிறேன். பெல்ஜியத்தின் சுகாதாரத் துறைக்கும், இந்தக் காணொளியை எடுத்த செய்தி நிறுவனத்துக்கும் கடிதம் எழுதியிருக்கிறேன். எனக்கு ஒரு ஸ்டீபன் ஹாக்கிங் நம்பிக்கைத் தந்தது போல, டின்னிட்டஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் ஒரு நம்பிக்கைத் தர விரும்புகிறேன். அதற்கேனும் இன்னுமொரு ஐம்பது ஆண்டுகள் வாழ விரும்புகிறேன். சாதாரணமாக அல்ல. பெரும் குதூகலத்துடன்.  அதற்கான நம்பிக்கையை ஸ்டீபன் ஹாக்கிங் என்னுள் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார்.

    “While there is life, there is hope” – Steven Hawking.

    I’m sorry. You are wrong, Mr.Hawking!  

    Of course, we have lost a wonderful life, but not “HOPE”. You continue to give hope with the way you lived your life. I am living my life happily & peacefully because of the hope you have planted in me. You are with me always in the form of “hope”, Mr.Hawking! So, you are wrong. There is hope – ALWAYS, whether there is life or not. So, why should I bid you adieu?

    -0-0-0-
    Share
  • ’’காரடையான் நோன்பு’’….!

     

    ”ஆயிரம் பேருடையான் ,ஆண்டாளின் தாருடையான(மாலை)
    பாயிரம் நாலா யிரமுடையான் -ஆயினன்
    சீரடைவு கொண்டு சுமங்கலியாய் வாழ்ந்திட
    காரடையான் நோன்பில்கால் கட்டு”….

    ”பாம்பில் படுத்தவனைப், பத்த வதாரனை,
    சாம்பலான் பத்தினி சோதரனை, -நோம்பன்று,
    கண்ணனை நெஞ்சில் கருதி மணிக்கட்டில்
    கண்ணிநுண் தாம்பாகக் கட்டு’’….கிரேசி மோகன்…..!

    Share
  • ”SWEET LITTLE MOTHER”….!

     

    I HAVE A SWEET LITTLE MOTHER
    WHO LIVES IN MY HEART
    WE ARE SO HAPPY TOGETHER
    WE SHALL NEVER PART….மொழிபெயர்ப்பு
    ————————————————————

     

    என்னுள் இருக்கின்றாள் சின்னக் குழந்தையாய்
    அன்னை அவரென்(று) அறிந்துணர்ந்தேன் -பின்னிப்
    பிணைந்தோம் எமக்குள் பிரிவில்லை என்றும்
    இணைந்தோம் இதயத்தில் இன்(இனிய)….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”நெஞ்சுரம் பெற்றான் நவனீதர் கீதையால்
    அஞ்சிலே மத்யமர் அர்ஜுனன் -வெஞ்சமர்
    வீதியில் தேரினை விட்டிடு அச்சுதா!
    நீதிநிலை நாட்டுவேன் நான்’’….கிரேசி மோகன்….!

    Share
  • பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – பகுதி 2

    -பேரா. பீ.பெரியசாமி

     1:1:12. மெய்யே என்றல்

    மெய்யே என்றலென்பது, “உரைத்த மாற்றத்தை மெய்யேயெனக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22)., எனவும், “பொய்யை மெய்யென்று துணிதல்” (பேரா.,மெய்.22). எனவும், “இது முன்னதற்கு மாறாகப் பொய்ப்பினும் தலைவன் சொல் மெய்யெனத் துணியும் தலைவியியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவன் தன்னிடம் சொன்ன பொய்யை மெய்யாகக் கருதல். இது பெரும்பாலும் தலைவன் வாயில் வேண்டி நிற்கையில் அவன் சொல்லும் பொய்ம்மொழிகளின் மேல்வரும் மெய்ப்பாடு.” இராசா,மெய்.22) எனவும், “தலைவன் மாட்டுப் பொய்ம்மை நிகழினும் தன் காதன் மிகுதியான் அதனை மெய்ம்மையாகக் கருதிக் கொள்ளுதல்.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். முன்னர் தலைவன் கூறும் மெய்ம்மைகளைப் பொய்யெனக் கொண்ட தலைவி. இங்ஙனம் பொய்ம்மையை மெய்யே என்று காதல் மிகுதியால் கொள்ளுதலே மெய்யே என்றலாகும். இதனை விளக்க இளம்பூரணர், குறுந்.121 ஆம் பாடலும்; பாலசுந்தரம், குறுந்.21 ஆம் பாடலும்;  தாசன், குறுந்.121, 21 ஆகிய பாடல்களையும்;  பாரதி, குறுந்.21, 288 ஆகிய பாடல்களும்; மேலும் பேராசிரியர், பாரதி, குழந்தை ஆகியோர்,

    கழங்கா டாயத் தன்றுநம் மருளிய
    பழங்கண்
    ணோட்டமு னலிய
    வழுங்கின
    னல்லனோ வயர்ந்ததன் மணனே.” (அகம்.66)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், கழங்காடலை ஆடும் நம்மாயத்தார் நடுவே அன்று நமக்கு அருளிய பழங்கண்ணோட்டம் தன்னை வருத்தலால், செய்த தன்மணத்தைச் சிறிது தவிர்த்தானல்லனோ என பொய்யை மெய்யாகக் கொண்டாள் தலைவி. இதனை, “இன்பத்தை வெறுத்தல் என்னுஞ் சூத்திரத்து, ‘மெய்யே யென்றல்’  என்பதற்குப் பொய்யை மெய்யென்று கூறுதல் என்று பொருள்கூறி அது, ‘கழங்கடாயத்து …………………………………………. அயர்ந்தனன் மணனே’; என்பது: தானே தன் மகனை வாயில் கொண்டு புக்கானாயினும், அதனைப் பழங்கண்ணோட்டமும் நலிதரப் பொய்யே புகுந்தானென்று மெய்யாகத் துணிந்து கோடலால் அப்பெயர்த்தாயிற்று என்றார் பேரா.” (ந.மு.வேங்கடசாமி, அகநானூறு, களிற்றியானை நிறை, ப.159) என ந.மு.வேங்கடசாமி தமது அகநானூற்று உரையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

    1:1:13 ஐயஞ் செய்தல்

    ஐயஞ் செய்தலென்பது, “தலைவன் குறிப்புக் கண்டு ஐயப்படுதல்.” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “இது, காதல் மிகையாற் கடுக்குமியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும், “நம்மை வரையாது விடுவாரோ என வாளாதே ஐயம் செய்தல். வரையாது – மணக்காது. வாளா – சும்மா.” (குழந்தை, மெய்.22). எனவும், “ ‘நம்மை இம்மைப் பிறப்பினுள் துறப்பார் கொல்’ எனத் தலைவி காரணமின்றி ஐயங் கொள்ளுதல்.” (இராசா, மெய்.22).எனவும், “தலைவன் சொல்லையும் செயலையும் ஐயுற்றுக் கருதுதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். ஐயஞ் செய்தலென்பது தலைவனின் செயலைக் கண்டு அவன் தன்னை மணக்காது போய்விடுவானோ? என ஐயுறுதலாகும். இதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர் கலி.4 – ஆம் பாடலையும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.33 ஆம் பாடலையும்; பாரதி கலி.4, 24 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:14. அவன்தமர் உவத்தல்

    அவன்தமர் உவத்தலாவது, “தலைவன் தமரைக் கண்டவழி உவத்தல்.” (இளம்.,மெய்.22). எனவும், “அவன் தமரைக் கண்டு உவந்தது. இது முனிவெனப் படாவோவெனின், அது தலைமகனைப் புலந்தாற்போல்வதோர் முனிவாயினல்லாது பகைப்பட நிகழாக்குறிப்பெனப்படும்; அல்லாக்கால், அது பெண்டண்மையன்றாமாகலின்.” (பேரா.,மெய்.22). எனவும், “தலைவனுடைய தமரான பாணன் முதலியோரைக் கண்டு மகிழ்தல். தமர்-சுற்றம்.” (குழந்தை, மெய்.22). எனவும், “தலைவனைச் சார்ந்தாரைக் கண்டுழியும் அவர் சொற்கேட்டுழியும் உளம் மகிழ்தல். (எ-டு) வந்துழிக் கண்டுகொள்க. அவன் தமரேயன்றி அவன் நாட்டுப்பொருள் முதலியவற்றை உவத்தலையும் இதன்கண் அடக்கிக் கொள்க.” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அவன்தமர் உவத்தலென்பது, தலைவனின் உறவினர்களையும் அவன் நாட்டுப் பொருளையும் கண்டவழி மகிழ்தலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.83-ஆம் பாடலையும்; பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம் ஆகியோர், குறுந்.361 – ஆம் பாடலையும்;  பாரதி கலி.82 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

     1:1:15. அறனழித்துரைத்தல்

    அறனழித்துரைத்தலென்பது, “அறத்தினையழித்துக் கூறுதல்” (இளம்., தாசன், மெய்.22). எனவும், “அறனழிய வெறுப்பது போல வெறுத்துக் கூறல்.” (பாரதி.,மெய்.22) எனவும்,  “பிரிவுத் துன்பத்தான்  உளம்நொந்த தலைவி தலைவன் முதலானோரிடத்து அறமில்லை என வெறுத்துப் பேசுதல்.” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி, பாலசுந்தரம் ஆகியோர் இம்மெய்ப்பாட்டினை அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். அறனளித்துரைத்தலென்பது, “அறக்கிழவனை அன்பு செய்தல்.” (பேரா.,மெய்.22) எனவும், “அறத்தினை அன்பு செய்து பரவுதல். அறன் –ஞாயிறு, திங்கள் முதலியனவும், பல்லி சொல்லல், காக்கை கரைதல் முதலியனவுமாம். தலைவி, ஞாயிறு திங்கள் முதலியனவற்றைத் தலைவன் வரும் வழியை இனிது செய்யும்படி வேண்டுதலும், தனது ஆற்றாமையால் தலைவன் விரைவில் வரவேண்டும், எனப் பல்லியைச் சொல்லும்படியும், காக்கையைக் கரையும்படியும் வேண்டுதலுமாம். அளி- அன்பு. அன்புடன் பரவுதலாம்.” (குழந்தை, மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இங்கு அறனழிந்துரைத்தலென்பது தனது நிலையினை உணராமல் பிரிந்துச் சென்ற தலைவனிடம் அறனில்லை என வெறுத்துக் கூறுதலாகும். இங்கே அறன் அளித்துரைத்தல் என்பது அறத்திற்கு அன்பு செய்தலாகும். இதனை, “அறனளிந் துரைத்தல் எனப் பாடங்கொண்டு அதற்கேற்ப விளக்கந்தருவார் பேரா. அது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்.”(பால. பதிப்பு.83. பக்.315) “நெஞ்சு அழிந்த வழியே அறன் அழிந்துரைத்தல் நிகழுமாதலின் அறனளித்துரைத்தல் என்ற பாடமே சிறக்கும் என்று தோன்றுகிறது.” (தி.வெ.கோ. மேலது, xxxi)” (கே.எம். வேங்கடராமையா, தொல்காப்பிய மூலம் பாடவேறுபாடுகள் – ஆழ்நோக்காய்வு, ப.281.) என வேங்கடராமையா கூறியுள்ளார். இவற்றுள் அறனளிந் துரைத்தல்  பொருந்தாமையைப் பேராசிரியரே ஆங்கு நெஞ்சழிதலில் கூறியுள்ளமையின் அறனழிந்துரைத்தலென்பதே இங்குப் பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும் குறள்.1209.ஐயும்; பாரதி, குறுந்.191; 25, 262, ஐங்குறு.385, குறள்.1154, 1209 ஆகியவற்றையும்;  பாலசுந்தரம், கலி.143, 144 குறுந்.262 ஆகிய பாடல்களையும்; பேராசிரியரும் குழந்தையும்,

    பாங்கர்ப் பல்லி படுதொறும் பரவிக்
    கன்றுபுகு
    மாலை நின்றோ ளெய்தி” (அகம்.9)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில், பக்கத்தே பல்லி சொல்லுந்தோறும் கடவுளை வணங்கி கன்றுகள் மன்றிற்புகும் மாலைக் காலத்தே நின்றோளையடைந்து வணங்கி நின்றோளையெய்தி என்க என்பதில் அறனளித்துரைத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

    1:1:16 ஆங்கு நெஞ்சழிதல்

    ஆங்கு நெஞ்சழிதலென்பது, “அறனழிந்துரைக்குமிடத்து நெஞ்சழிந்து கூறுதல்” (இளம்.,மெய்.22) எனவும், “அங்ஙனம் உரைக்குங்கால் நெஞ்சழிந்துரைத்தல்;  எனவே, அறனளிந்துரைத்தல் அழிவின்றொன்றாமென்பது சொல்லினானாம்.” (பேரா.,மெய்.22). எனவும், “சொல்லளவில் அறனழிவது போலக் கூறிய தலைவி பின் அவ்வளவிற்கு உளம் உளைந்து வருந்துதல்” (பாரதி.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். அறனழிந்து உரைக்கும்போது தன் நெஞ்சினையும் யழித்துக் கூறுதல் ஆங்கு நெஞ்சழிதலெனப்படும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1295-ஐயும்; பேராசிரியரும் குழந்தையும், கலி.143-ஆம் பாடலையும்; பாரதி, கலி.143, குறுந்.93 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், கலி.144, 114 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:17 எம்மெய்யாயினும் ஒப்புமை கோடல்

    எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது, “யாதானுமோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் என்றவாறு.” (இளம்.,மெய்.22) எனவும், “யாதானும் ஒரு பொருள் கண்டவிடத்துத் தலைமகனோடொப்புமை கோடல்.” (பேரா.,மெய்.22). எனவும், “இதுகாணும் பொருள் எதுவும் தலைவன் வடிவுவண்ணம் பண்பு வினைகளுள் ஒன்றுக்கு ஒப்பெனக் கருதும் காதலியல்பு.” (பாரதி.,மெய்.22) எனவும் “பிரிவாற்றாது புலந்த தலைவி நெஞ்சழிந்த நிலையில் தான் காணும் பொருள் எல்லாம் தன்னைப் போலத் துன்புறுவதாகக் கருதிக்கோடல். மெய் என்றது பொருளை உருவப்பொருளும் அருவப் பொருளும் அடங்க “எம்மெய்யாயினும்” என்றார்.” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். எம்மெய்யாயினும் ஒப்புமை கோடலென்பது காதல் மிகுதியால் தான் காணும் பொருட்களிலெல்லாம் தன் காதலரின் ஒப்புமையைத் தேடலாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1222.ஐயும்;  பேராசிரியரும் குழந்தையும் கலி.20ஆம் பாடலையும்; பாரதி, குறள்.1111, 1112, 1116, கம்ப.மிதிலை.செய்.56, 57 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், கலி.129, 55, குறள்.1116 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:18 ஒப்புவழி உவத்தல்

    ஒப்புவழி யுவத்தலென்பது, “தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல்” (இளம்., தாசன்,மெய்.22). எனவும், “ஒப்புமை யுண்டாகிய வழியே உவமைகொண்டு அதனானே உவகை தோன்றுவது. எனவே, முன்னது ஒப்பின்றி ஒப்புமை கொண்டதாயிற்று;  என்னை? எம்மெய்யாயினு மென்றமையின்.” (பேரா., குழந்தை,மெய்.22). எனவும்,  “இஃது அவ்வாறு ஒப்புமை கண்டவழி மகிழும் காதலியல்பாம்.” (பாரதி., இராசா,மெய்.22). எனவும், “தம் நிலைமைக்கேற்ப ஒப்ப நிற்கும் பொருள் கண்டவழி உவப்புறுதல்” (பாலசுந்.,மெய்.22). எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். தலைவனோடு ஒப்பன கண்டு மகிழ்தல் ஒப்புவழி உவத்தலாகும். இதனை விளக்கப் பேராசிரியர் கலி.80, 86 ஆகிய பாடல்களையும்;  பாரதி கலி.86 ஆம் பாடலையும்; குழந்தை கலி.80 ஆம் பாடலையும், பாலசுந்தரம் குறுந்.315, 162, கலி.86 ஆகிய பாடல்களையும்; இளம்பூரணர்,

    யாவருங்……………… …………….
    …………. …………………… …………………….
    …………………. ………………………..
    காணுநர் இன்மையிற், செத்தனள் பேணி,” (அகம்.16)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இதில், யாரும் பார்க்காததை அறிந்து அவன் அருகே சென்று அவனைத் தூக்கித் தன் தலைவன் போன்று இருக்கின்றதை எண்ணி இளமார்பையுடைய பொன் அணிகள் அணிந்த பெண், வருக என் உயிரே என அன்போடு அழைத்து மகிழ்ந்து தூக்கிக் கொஞ்சியதை, நான் பார்த்தேன் என்பதில் தலைமகனோடு ஒப்புடைய மகனைப் பரத்தை கொஞ்சியது வெளிப்பட்டுள்ளமையால், இஃது ஒப்புவழி யுவத்தலாயிற்று.

    1:1:19 உறுபெயர் கேட்டல்

    உறுபெயர் கேட்டலென்பது, “தலைவன் பெயர்கேட்டு மகிழ்தல்” (இளம்.,தாசன்,மெய்.22). எனவும், “தலைமகன் பெரும்புகழ் கேட்டு மகிழ்தல்” (பேரா., குழந்தை, இராசா,மெய்.22). எனவும், “இது தலைவன் பீடார் பெரும்புகழ் பிறர்வாய்க்கேட்டு மகிழ்தல்” (பாரதி.,மெய்.22) எனவும், “தலைவனது பெருமை பற்றிய புகழினைத் தலைவி விரும்பிக் கேட்டல்” (பாலசுந்.,மெய்.22) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். தலைமகன் பெயரையும் புகழையும் கேட்டு உவத்தல் உறுபெயர் கேட்டலாகும். இதனை விளக்க, இளம்பூரணரும் தாசனும், குறள்.1199.ஐயும்;  பேராசிரியரும் பாலசுந்தரம், கலி.41, 142 ஆகிய பாடல்களையும்;  பாரதி, குறள்.1199, கலி.142, கம்ப.பால.கார்முகப்.செய். 59, 60, 62 ஆகியவற்றையும்; குழந்தை, கலி.142-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:20  கலக்கம்

    கலக்கமென்பது, “மனங்கலங்குதல். மேற் ‘கலங்கி மொழிதல்’ என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இது மனங்கலங்கி நிற்கும் நிலை.” (இளம்.,மெய்.22) எனவும், “சொல்லத்தகாதன சொல்லுதல். ‘கலக்கமு நலத்தக நாடி னதுவே’ (270) என்னாது கலக்க மென்பதை வேறுபெயர்த்து வைத்ததென்னையெனின் இக்காலத்து அதனினூங்கு நிகழும் மெய்ப்பாட்டுக் குறிப்புளவல்ல தலைமகட்கென்பது அறிவித்தற்கென்பது. இன்னும் அதனானே தலைமகற்காயின் அதினினூங்கு வருவதோர் கலக்கமும் உளதாமென்றது; அவை, மடலூர்தலே வரைபாய்தலே என்றற்றொடக்கத்தக்கன.” (பேரா.,மெய்.22) எனவும், “நன்றாகத் தகுதிநோக்கி யாராயின் மயக்கமென்பதும் மேலது போலவே காதற்றிணை நிமித்தமாகும் மெய்ப்பாடேயாம் முன் குறித்த 19ஆம் அமையாவழியே, அவற்றினிறுதியில் கலக்கம் எழும் என்னும் அதன் சிறப்பியல் குறித்தற்கு அது இறுதியில் வேறு பிரித்துக் கூறப்பட்டது.” (பாரதி.,மெய்.22) எனவும் “ஆற்றாமையான் மதிதிரிந்து சொல்லுதற்காகாதன சொல்லுதலும் செய்தற்கொவ்வாதன செய்தலுமாம்” (பாலசுந்.,மெய்.22)எனவும், உரையாசிரியர்கள் உரை கொள்வர். காதலர் மனங்கலக்க முறுவதால் செய்யத்தகாதன செய்தலும்; சொல்லுதலும் கலக்கமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் பேராசிரியரும், கலி.142, 144 ஆகிய பாடல்களையும், பாரதி, குறுந்.152 ஆம் பாடலையும்; குழந்தை, கலி.142, குறுந்.17 ஆகிய பாடல்களையும், பாலசுந்தரமும் இராசாவும் கலி.142ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:2  பேராசிரியருரையில் சுட்டப்படும் புறநடைகள்

    சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும் இதனை விளக்க பேராசிரியர் குறுந்.17 ஆம் பாடலையும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும் என்பதனை விளக்க குறுந்.19ஆம் பாடலையும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும் என்பதனை விளக்க,

    அந்தீங் கிளவி யாயிழை மடந்தை
    கொடுங்குழைக்
    கமர்த்த நோக்க
    நெடுஞ்சே
    ணாரிடை விலங்கு ஞான்றே” (அகம்.3.)

    எனும் அகப்பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இதில் அக்கானகத்தைக் கடந்து பொருள்தேட முன்பொரு காலத்தில் சென்றபோது சிவந்த வாயினையும் இனியமொழியையும் அழகிய அணிகலன்களையும் உடைய தலைவியின் பார்வையானது சிந்தையில் தோன்றிக் கானகத்தைக் கடந்து செல்லாதவாறு தடுத்ததன்றோ! ஆதலால் பொருளுக்குப் புரியவேண்டும் என்று கூறும் நெஞ்சே; உன் உண்மை போன்ற பொய்ம் மொழியை நம்பி நான் மீண்டும் சென்றால் முந்தைய துன்பந்தானே வரும். எனவே இத்துன்பம் போக வழியாது? எனத் தன் நெஞ்சிடம் தலைவன் கூறினானெப்பது முன்பு நடந்ததை பின்பு கூறிச் செல்கின்றான் இதுவும் எதிர்பெய்து பரிதலாகும்.

    1:3. முடிவுரை

    1. இன்பத்தை வெறுத்தலென்பதை விளக்க, பேராசிரியர், குழந்தை, பாலசுந்தரம், இராசா ஆகியோர், அகம்.74 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் கண்துயில் மறுத்தல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளதே யொழிய, இன்பத்தை வெறுத்தல் என்பது வெளிப்படவில்லை எனவே இஃது பொருந்தாது.
    2. உண்டியிற் குறைதலெனும் மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணரும் தாசனும் அகம்.48 ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இதில் “பாலும் உண்ணாள்” என கூறுவதால் பசியட நிற்றலின் பாற்படும். மேலும், பேராசிரியரும் பாலசுந்தரமும் இலக்கண விளக்க பாடல் 527 ஐ எடுத்தாண்டுள்ளனர். இது உணவு உண்ணாமையே உணர்த்துகிறது. எனவே இதுவும் பசியட நிற்றலின் பாற்படும். இங்கு உண்டியிற் குறைதலென்பது சிறிதுண்ணல் எனவே இம்மெய்ப்பாட்டிற்கு இவை பொருந்தாது.
    3. இளம்பூரணர், தாசன், இராசா, பாரதி பாலசுந்தரம் ஆகியோர் அறனழித்துரைத்தல் எனவும், பேராசிரியர், குழந்தை ஆகியோர் அறனளித்துரைத்தல் எனவும் பொருள் கொள்வர். இவற்றுள் அறனளித்துரைத்தல் என்பது பொருந்தாமையை ஆங்கு நெஞ்சழிதல் எனப் பின்வருதலான் அறியலாம்.
    4. சாதல் எல்லையாகக் கூறுதலும் கலக்கத்தின் பாற்படும்; தானே துன்புறுமாறு உரைத்தலும் துன்பத்துப் புலம்பலாகும்; முற்காலத்து எதிர்ப்பட்டமை, பிற்காலத்துச் சொல்லுதலும் எதிர்பெய்து பரிதலாகும்.
    5. இவ்வியலில் கூறப்பட்டுள்ள பெருந்திணைக்குரிய மெய்ப்பாடுகள் இருபதில், இன்பத்தை வெறுத்தல், துன்பத்துப் புலம்பல், ஏதமாய்தல், பசியட நிற்றல், உண்டியிற் குறைதல், கண்துயில் மறுத்தல், கனவொடு மயங்கல், பொய்யாக்கோடல், மெய்யே என்றல், அறனழிந்துரைத்தல், ஒப்புவழி உவத்தல் எனும் பதினோரு மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாண்டுள்ளனர். ஏனைய ஒன்பது மெய்ப்பாடுகளை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை மேற்கோளாக எடுத்தாளவில்லை.

    *****

    கட்டுரையாசிரியர்
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    விளாப்பாக்கம், ஆற்காடு.

     

    Share
  • தமிழ் இலக்கியங்களில் பன்முகச் சிந்தனைகள்

    பவள சங்கரி

     

    ஒரு நாட்டின் ஒளிமயமான எதிர்காலம் என்பது அந்நாட்டின் சிறார்கள், இளைஞர்கள், பெரியவர்கள் என அனைத்துத் தரப்பினரின் நற்சிந்தைகளையும் ஊக்குவிக்கக்கூடிய சிறந்த ஆக்கங்களின் அடிப்படையில் அமைந்திருக்கும். அந்த வகையில் இலக்கியம் என்பது ஒரு காலத்தின் கண்ணாடி எனலாம். அந்த இலக்கியம் உருவாக்கப்பட்ட காலத்தின் மொழி, பண்பாடு, கலை, வாழ்வியல் கூறுகள் போன்ற அனைத்தையும் வெளிப்படுத்தும் ஒரு களமாகச் செயல்படக்கூடியது.
    இலக்கியங்கள் என்பது காலத்தின் கண்ணாடி. அதுமட்டுமன்றி இலக்கியங்கள் சம்பந்தப்பட்ட மொழியின் இனத்தின் பண்பாட்டுக் கூறுகளை பகுத்தாய்வுச் செய்யக்கூடிய களமாகவும் விளங்கக்கூடியது.

    மொழி என்பது மனிதருக்கிடையில் கருத்துப் பரிமாற்றங்களுக்கான ஒரு கருவி எனக்கொள்ளலாம். மொழியைப் பேசுகின்ற அந்த இனத்தின் கலை, வரலாறு, சமூகநிலை, பழக்கவழக்கங்கள், ஒழுக்கநெறிகள், அரசியல், சிந்தைகள் போன்ற பல வாழ்வியல் கூறுகள், பண்பாட்டு நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் வெளிப்படை விளக்கமாக இருப்பதாகும்.

    வரலாற்றின் பல்வேறு கால கட்டங்களில் அரசியல், பண்பாட்டு, வணிகத் தொடர்பிலான சூழ்நிலைகளால் ஒரு மொழி பிறமொழிகளுடன் தொடர்பு கொள்ள நேரிடுவதால் அதன் வழக்காற்றில் பல பிறமொழிச் சொற்களும் இணைந்துவிடுகின்றன. இது மொழி வரலாற்றில் சுவையானதொரு பிரிவாகவும் அமையும். இயற் சொற்களிலும் பிற மொழிச் சொற்களிலும் தொடர்ச்சியான பொருள் மாற்றங்களும் நிகழ்ந்துள்ளன. சமுதாயத்தில் காலத்திற்குக் காலம் ஏற்படும் மாற்றங்களை எதிரொலிக்கும் வகையில் ஒருசொல் தன் பொருள் எல்லையிலிருந்து வேறொரு எல்லைக்கு மாறும் நிலையில் அந்தப் பொருள் அமைப்பில் ஒரு மாற்றத்தை உணர்த்துகின்றது. அதே வேளையில் மாற்றத்திற்கு உட்படாமல் இருக்கும் மொழி இறந்தமொழி எனப்படும். எந்த ஒரு மொழி தொடர்ந்து காலத்திற்கேற்ற வகையில் தனக்குள் மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறதோ அம்மொழி வாழும் மொழியாகக் கருதப்படும்.

    ஏதேனும் ஒரு மொழி குறித்து பேசும்போதெல்லாம் அம்மொழியின் இலக்கியம் குறித்து பேசுவதும் இயல்பாகிறது. அதாவது இலக்கியம் குறித்து பேசாத மொழியின் உரையாடலிலும் சுவை இருப்பதில்லை என்பதோடு அவை முழுமையடைவதுமில்லை என்பதே நிதர்சனம். இலக்கியம் என்பது அத்தனை அவசியமானதா என்ற வினாவும் எழாமல் இல்லை. பள்ளிப் பாடத்திட்டங்களிலும் இலக்கியத்திற்கு அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படும் காரணமும் இதுதான். ஆகவே இலக்கியத்தின் வழியாக மட்டுமே ஒரு மொழியை நாம் செம்மையாகக் கற்கவும், புரிந்து கொள்ளவும் முடிகிறது என்பதும் உண்மை.

    ஆக, மொழியின் வரலாற்றுக்கான அடிப்படைச் சான்றுகளுக்கு இலக்கியங்களையே முதன்மையாகக் கொள்ளப்பட வேண்டியதாகிறது. அந்த வகையில் இந்த இடத்தில் இலக்கியம் பற்றி குறிப்பிடும்பொழுது அதிகத்தரம் வாய்ந்த நூல்கள் என்ற வரையறைக்கு உட்படுத்தாது அனைத்துப் பொருட்களையும் சுட்டும் உரைநடை அல்லது செய்யுள் வடிவில் உள்ள நூல்களையும் குறிப்பதாகக் கொள்ள வேண்டும்.

    பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்திற்குப் பின்னரே எளிய மனிதரும் புரிந்துகொள்ளும் வகையில், நொண்டிச்சிந்து, கட்டபொம்மன் கும்மி, ராமப்பையன் அம்மானை போன்ற இலக்கியங்கள் தோன்றி வளர்ந்து வந்துள்ளதை அறியமுடிகின்றது. பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில், பாமர மக்களின் பேச்சுவழக்குகள் கொண்ட நாடகங்கள், புதினங்கள் ஆகியவற்றைக் காண்கிறோம். இவை பேச்சு வழக்கினை ஆராய்வதற்கு இன்றியமையாதன எனலாம். பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டுகளில் எல்லீஸ், கால்டுவெல் போன்றோர் எழுதிய சிறந்த நூல்களும் உள்ளன.

    வரலாறு என்பதும் காலத்தின் கண்ணாடி தான் என்றபோதும், இலக்கியத்தின் பரிமாணங்கள் அந்த வரலாற்றையே மாற்றக் கூடியதாகத் திகழ்கின்றது. அந்த இலக்கியம் பிரதிபலிக்கும், வாய்மொழி இலக்கியம், ஏட்டு இலக்கியம் என்று பல்வேறு முகங்கள் பன்முகச் சிந்தைகளை வெளிப்படுத்தும் ஆளுமைகளாகவும் அமைகின்றன.

    பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், தொல்காப்பியம், சிலப்பதிகாரம், மணிமேகலை, முத்தொள்ளாயிரம், இறையனார் களவியல், நாலாயிரத் திவ்யப் பிரபந்தம், பன்னிரு திருமுறைகள் போன்ற இலக்கியங்கள் இத்தகைய ஆளுமைகளைத் தெள்ளத்தெளிவாக எடுத்துரைக்கின்றன. மேற்குறிப்பிட்ட சங்க இலக்கிய நூல்களில், தமிழர்களுக்கு மட்டுமன்றி உலக மாந்தர் அனைவருக்குமான வாழ்வியல் நெறிகள் என்ற அறக்கோட்பாடுகளே தலையாய நோக்காக உள்ளது.
    குவலயக் குடும்பம் (Global Family) என்று இன்று உலகம் முழுவதும் பேசப்படுகிற உலகமயமாதல் தொடர்பான அணுகுமுறைகள் குறித்து நம் தமிழர்கள், பல நூற்றாண்டுகளுக்கும் முன்பாகவே,

    “யாதும் ஊரே யாவரும் கேளீர்”

    என்ற மாபெரும் தத்துவத்தைச் சொல்லிச் சென்றுள்ளனர். மிகப்பெரிய உயரிய வாழ்வியலை உணர்த்தக்கூடிய இத்தகைய அறநெறி உலகிற்கெல்லாம் பொதுவானதொன்றல்லவா.

    அறம் சார்ந்த வாழ்வியல் நெறிகளில் வாய்மை, பொய்யாமை, செய்நன்றி அறிதல், நடுவு நிலைமை, அடக்கம் உடைமை, ஒழுக்கம் உடைமை, பிறன் இல் விழையாமை, புறங்கூறாமை, பயன்இல சொல்லாமை, புலால் மறுத்தல், ஈகை, கள்ளாமை, இன்னாசெய்யாமை, கொல்லாமை போன்ற அனைத்து சிறப்புக் குறிப்புகளும் பதினெண் கீழ்கணக்கு நூல்களில் ஒன்றான திருக்குறளில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் சுட்டியுள்ள வாழ்வியல் அறநெறிகள் ஆகும். இதுமட்டுமன்றி குறுந்தொகை, புறநானூறு போன்ற பாடல்களில் அரசியல், சமூக நலம் சார்ந்த பல அறநெறிகளும் சுட்டப்பட்டுள்ளன.

    நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே” – புறத்திணை பாடல் – 312

    ஒரு தனிமனிதர் தம் வாழ்வில் அமைதிபெற, பிறரிடம் வேண்டும் அனைத்துப் பண்புகளையும் தானும் பெற்றிருக்கவேண்டும் என எண்ணி வாழ்வதே அவர்தம் சிறந்த வாழ்வியல் அறநெறிகளாகின்றன. அந்த வகையில் சமூகத்தில் முழுமையும் மகிழ்ச்சியும், அன்பும், பண்பும், அமைதியும் நிலவ வேண்டுமெனில் ஒவ்வொரு தனிமனிதனும் தனக்கென்று சில கடமைகளையும் கட்டுப்பாடுகளையும், ஒழுக்க நெறிகளையும் விதித்துக்கொண்டு அதை முழுமையாகப் பின்பற்றவும் வேண்டும். அதுவே எதிர்கால சமூகத்தின் அமைதிக்கும், ஆரோக்கியத்திற்கும் நாம் இன்று சரியான பாதையில் எடுத்து வைக்கக்கூடிய அடியாகவும் இருக்கும்.

    இதுபோன்ற கருத்தரங்கங்கள் மூலமாக இளைஞர்கள் மத்தியில் நற்சிந்தைகளுக்கான விதைகளை ஊன்றுவது சமுதாயத்திற்கும் செய்யும் சிறப்பான சேவை என்றே கொள்ளக்கூடும் என்பதால் இக்கருத்தரங்கம் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற உளமார வாழ்த்துகிறோம்.

    பி.கு. “தமிழ் இலக்கியங்களில் பன்முகச் சிந்தனை” என்ற தலைப்பில் நாமக்கல், செல்வம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிப்ரவரி 27, 2018, நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் என் வாழ்த்துரை.

    Share
  • நீடிக்காத காதல்!

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    உனது நாள் ஓடுது,
    உன் மனது வாடுது,
    நீ தேவை இல்லை என்பதால்!
    வஞ்சியின்  கனிவு மொழிகள் எனது
    நெஞ்சினில் ஊன்றிப் போனது!
    காலை எழும் மங்கை
    கழிப்பது தன் பொழுதை
    வாழ்வு விரைவது அறியாமல் போனாள்.
    தேவை யில்லை நீ யெனத்
    தெரிய வில்லை அவள் விழிகளில்!
    காதல் அடையாளம் எதுவும்
    காண வில்லை நானும்! 

    கண்ணீர்த் துளிகள் யாரை
    எண்ணி அழுதிடும்?
    நீ அவளை விரும்புவ துண்மை;
    அவளும் உனக்குத் தேவையே!
    தன் காதல் செத்த விட்ட
    தென்றவள் விலகிப் போயினும்,
    நம்ப வில்லை நீதான்!
    ஆயினும் நீ நினைத்துக் கொள்வது,
    அவள் உனைத் தேடுவதாய்! 

    ஆயினும் அவள் கண்ணுக்குள்
    நீயில்லை  தெரியுதா?
    நீடித் திருந்த காதல் உணர்வு
    ஓடிப் போனது புரியுதா?
    வீட்டுக் குள்ளே நீ!
    வெளியே செல்வது அவள்!
    அவள் சொல்வது,
    தனக் கொருவன் இருப்பதாய்!
    உனது நாள் ஓடுது!
    உன் மனது வாடுது!

     

     

     

    Share
  • Nature

    -Niveditha

    Caves dotted every inch of the land
    Filling its thirst with dew drops
    Flowers bloom with fragrance
    Attracting me from every view
    Green grass soft under my feet
    Crushing down with every step
    I wouldn’t mind if it rained
    I wouldn’t mind if it snowed
    At least I’m here in this place
    And that’s all I need
    For it fills my heart with joy

     

    Share
  • தமிழ்நாட்டு அரசியலில் ஒரு விடிவெள்ளி

     

    நாகேஸ்வரி அண்ணாமலை

     

    இந்தியா சுதந்திரம் வாங்கிய நாளிலிருந்து அரசியலில் ஊழல் நுழைந்துவிட்டது என்று சொன்னால் அது பெரிய தவறான பிரகடனமாக இருக்க முடியாது.  தேசத் தந்தை காந்திஜியோடு சேர்ந்து சுதந்திரப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்களே ஊழல் புரிந்தார்கள் என்பது வேதனையன விஷயம்தான்.  புதிதாகச் சுதந்திரம் பெற்ற, வளர்ந்துவரும் ஜனநாயக நாடுகளில் இது தவிர்க்க முடியாதது என்று கூறுவோரும் உண்டு.  ஆனாலும் இந்தியா சுதந்திரம் அடைந்து எழுபது ஆண்டுகள் ஆகியும் ஊழல் ஒழியாதது மட்டுமல்ல, மிகவும் அதிகரித்திருக்கிறது என்பது வேதனையான விஷயம் மட்டுமல்ல இந்தியர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விஷயமும் கூட.

     

    எல்லா மாநிலங்களிலும் ஊழல் இருக்கிறது என்று சொல்லப்படுகிறது.  ஆனால் அதைப் பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியாது.  ஆனாலும் தமிழ்நாட்டில் இருக்குமளவு வேறு எங்கும் இல்லை என்பது என்னுடைய கணிப்பு.  (வேண்டுமானால் பீகாரில் லாலு காலத்தில் தமிழ்நாட்டில் இருக்குமளவு இருந்தது என்று சொல்லலாமோ என்னவோ!)  நாங்கள் கடந்த நாற்பத்தைந்து வருடங்களாகக் கர்நாடகாவில் வாழ்ந்துவந்தாலும் கர்நாடக அரசியல் பற்றித் தெரிந்தது தமிழ்நாட்டின் அரசியலைப் பற்றித் தெரிந்ததைவிட குறைவுதான்.  ஒரு முறை கர்நாடக முதல்வராக எடியூரப்பா இருந்தபோது கர்நாடக அன்பர் ஒருவரிடம் ‘எடியூரப்பா பெரிய ஊழல் பேர்வழி இல்லை, அல்லவா?’ என்று கேட்டேன். உடனே அவர் விழுந்து விழுந்து சிரித்தார்.  பின் எடியூரப்பா பற்றி நிறையத் தெரிந்துகொண்டபோது அவர் எவ்வளவு பெரிய ஊழல்வாதி என்று தெரிந்துகொண்டேன்.  இருப்பினும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை யாராலும் மிஞ்ச முடியாது என்பதுதான் என்னுடைய இப்போதைய நிலைப்பாடு.

     

    தமிழ்நாட்டில் காங்கிரஸ் காலத்திலிருந்தே வேண்டியவர்களுக்குச் சலுகைகள் அளிப்பது என்பது இருந்துவந்திருக்கிறது.  தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியின் கடைசிக் காலத்தில் ஊழல் தலையெடுக்கத் துவங்கிவிட்டது என்று சிலர் சொல்கிறார்கள்.  ஆனால் அது  ஆரம்பம்தான்.  ஊழலை உரம் போட்டு வளர்த்தது திராவிடக் கட்சிகள்தான்.  அண்ணாதுரை உயிரோடு இருந்து தமிழ்நாட்டு அரசியலை வழிநடத்தியிருந்தால் இந்த அளவு ஊழல் வளர்ந்திருக்காது என்பது என் ஊகம்.  அவருக்குப் பிறகு முதலமைச்சராகப் பதவியேற்ற கருணாநிதியின் காலத்தில் ஊழல் என்னும் செடி உரம் பெற்று செழிக்கத் தொடங்கியது.  பின் மரமாகி முழு வளர்ச்சி அடைந்தது பின்னால் வந்த ஆட்சிகளின்போதுதான்.  இப்போது இந்தியாவிலுள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு எதில் சிறந்து விளங்குகிறதோ இல்லையோ ஊழலில் கண்டிப்பாக முதல் இடம் வகிக்கிறது.  இந்தப் பெருமையை நமக்கு ஈட்டிக் கொடுத்தவர்கள் கடந்த ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டை ஆண்டுவந்தவர்கள்.   ஊழல் செய்த அரசியல்வாதிகளைத் ‘தெய்வமாக’ ஏற்றுக்கொண்டவர்கள் நம் தமிழ் மக்கள் மட்டும்தான்.  இதில் யாருக்கும் எந்தவித சந்தேகமும் இருக்க முடியாது.  ஒரு சில அப்பாவி மக்களால் தெய்வமாக மதிக்கப்பட்ட ஒரு அரசியல் தலைவர் மறைந்ததும் தமிழ்நாட்டில் ஒரு வெற்றிடம் பிறந்தது என்று பலர் நினைக்கிறார்கள்.  ஊழல் செய்ய வெற்றிடமா என்று தெரியவில்லை!

     

    இப்போது அரசியலுக்கு நடிகர்கள் உட்படப் பலர் வந்திருக்கின்றனர்.  இவர்களில் கமலஹாஸன் குறிப்பிடத் தகுந்தவராக விளங்குகிறார்.  இது நாள்வரை அவர் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற குற்றச்சாட்டு அவர்மீது இருந்தபோதிலும் இப்போதாவது வந்திருக்கிறாரே என்று சந்தோஷப்படலாம்.  ‘உங்கள் கட்சியின் கொள்கை என்னவென்று?’ ரஜினியிடம் கேட்கப்பட்டபோது அவருக்குத் தலை சுற்றிவிட்டதாம்.  கட்சியின் கொள்கைகூட என்னவென்று இதுவரை சிந்திக்காதவரிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டால்  அப்படி என்ன சாதித்துவிடப் போகிறார்?  கமலஹாஸன் அப்படியில்லை.  நன்றாகச் சிந்தித்துத் தன் கட்சியின் கொள்கை என்ன என்று தயார் நிலையில் வந்திருக்கிறார்.

     

    இலவசங்களால்தான் தமிழ்நாடு இப்படிச் சீரழிந்திருக்கிறது என்பதை உணர்ந்து இலவசங்கள் கொடுப்பதைவிட பிறருக்கு இலவசங்கள் கொடுக்கும் அளவுக்கு மக்களைத் தயார்ப்படுத்துவேன் என்கிறார்.  அவர் செய்யப் போகும் காரியங்களில் முதன்மையாகக் குறிப்பிட்டது மக்களுக்கு நல்ல கல்வி கொடுப்பது.  எல்லோரும் நல்ல கல்வி கற்று அறிவு தெளிந்தால் ஊழலிலே ஊறிப்போன அரசியல்வாதிகளை ‘தெய்வம்’ என்று யாரும் குறிப்பிட மாட்டார்கள்.  ஒரு சமூகம் ஜனநாயக சமூகமாக விளங்க வேண்டுமென்றால் முதலில் எல்லோருக்கும் ஜனநாயகத்தைப் பற்றிய கல்வியைப் புகட்டிய பிறகுதான், எல்லோரிடையேயும் சிந்திக்கும் திறனை வளர்த்த பிறகுதான் ஜனநாயகத்தைப் புகுத்த வேண்டும் என்கிறார் சிந்தனையாளர் சாக்ரடீஸ்.  சாக்ரடீஸின் இந்த அறிவுரையைக் கமலஹாஸன் நன்றாகப் புரிந்துவைத்திருப்பதுபோல் தெரிகிறது.  தான் எல்லோருக்கும் தலைவன் என்பதைவிட எல்லோருக்கும் சேவை செய்யப் போகும்  ஊழியன் என்கிறார்.  மதுரையில் கட்சியைத் துவக்கிவைத்தபோது ஆர்.கே.நகர். தேர்தலை மனதில் கொண்டு மக்களைப் பார்த்து, ‘நீங்கள் உங்கள் வாக்கின் மதிப்புத் தெரியாமல் அதை விலைக்கு விற்றுவிட்டீர்கள்.  வாக்கு உங்களுடைய நலனைக் காக்கும் உங்களுடைய உரிமை.  அதை நீங்கள் விற்றால் ஜனநாயகம் குலைந்துவிடும்’ என்றார்.  என்னுடைய கட்சி உங்கள் வாக்குக்காக ஒரு பைசாவும் கொடுக்காது என்றார்.  இது ஜனநாயகக் கல்வியின் ஒரு பகுதி.

     

    தான் எந்த ‘இஸத்’தையும் பின்பற்றப் போவதில்லை என்றும் மக்களின் நலன்களே தன் குறிக்கோள் என்றும் கூறுகிறார்.  அதனால்தான் தன் கட்சிக்கு ‘மக்கள் நீதி மையம்’ என்று பெயர் கொடுத்திருக்கிறார்.  படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டாலும் பல பட்டங்கள் பெற்றவர்களுக்கு நிகராக அறிவை வளர்த்துக்கொண்டிருக்கிறார்.  எம்.ஜி.ஆர்.போல் முதல் மந்திரியாகப் பதவியேற்றாலும் இரவில் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லவில்லை.  (அவராலும் அப்படிச் செய்ய முடியவில்லை என்பது இன்னொரு விஷயம்.)  இனி மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல அரசியல்வாதியாக மட்டுமே இருப்பேன் என்கிறார்.  இவர் தலைமையில் தமிழ் மக்களின் நலன்கள் மத்திய அரசால் சூறையாடப்படாது என்று உறுதியாகச் சொல்லலாம்.

     

    இந்தியாவில் வடக்கில் ஒரு கெஜ்ரிவால் தோன்றியிருப்பதுபோல் தெற்கில் ஒரு கமலஹாஸன் தோன்றியிருக்கிறார் என்று மகிழ்ச்சி கொள்வோம்.  தமிழ்நாட்டில் ஒரு நல்ல ஆட்சியைக் கொடுத்து இந்தியாவுக்கே ஒரு மாடலாகத் தமிழகம் விளங்கும் என்று நம்புவோம்.  தமிழ்நாட்டில் ஒரு விடிவெள்ளி முளைத்திருக்கிறது என்று பெருமிதம் கொள்வோம்.

     

     

    Share
  • தனிப்பட்டவர்கள் உண்டாக்கிய குறியீட்டு முறைகள்

    -பேரா. முனைவர். வெ.இராமன்

    கணினியில் தமிழ்  தோன்றியது  1980  காலப்பகுதியில்தான். இக்காலப் பகுதியில் தான்  தனி மேசைக் கணினிகள் அல்லது தனியாள் மேசைக்கணினிகள் (personal desktop computers) விற்பனைக்கு விடப்பட்டன. பல தொழில் நிறுவனங்கள் இப்படிப்பட்ட பல கணினிகளைத்  தயாரித்து வெளியிட்டுச் சந்தைக்கு முந்த முயன்று கொண்டிருந்தன. இவைகளும் தத்தமக்கெனத் தனியான  இயக்கு தளங்களை  (Operating system) கொண்டிருந்தன. பின்னர்  மக் ஓ.எஸ். (Mac OS), மைக்ரோசாப்ட் டாஸ் (Microsoft DOS), ஓ.எஸ்.2 (OS2) வகை இயங்கு தளமுடைய கணினிகள் கிட்டத்தட்ட ஒரு பொதுக் கருவியாக உருவெடுக்கத் தொடங்கின. இவ்வகைக் கணினிகள் மேசைக் கணினிகளாக விற்பனைக்கு வந்தது கிட்டத்தட்ட 1983-84 அளவில்1. இவை வெளிவந்து கொண்டிருக்கும் போது  தமிழ்க்  கணினி வல்லுநர்கள், தமிழைக் கணினியில் கொண்டு வரும் முயற்சிகளைத் தொடங்கினர்.

    கணினிகள் பெரும்பாலும்  ஆங்கிலத்திலேயே  இயக்கக் கட்டளைகளையும் (operation commands) மறுமொழிகளையும் கொண்டிருந்தன. அத்துடன் ஆவணங்கள், வரைதல்கள், கணக்கு வழக்குக் கோவைகள் என்று பலதரப்பட்ட சிறப்புப் பயன் பொருட்களும் கணினியின் திறமையைப் பயன்படுத்திச் சிறப்பாக இயங்குமாறு ஆங்கில மூல மென்பொருள்கள் பக்கச் சேர்ப்பாக உருவாக்கம் பெற்றன. இம்மென்பொருள்கள் மக்களின் பல தேவைகளை மிக எளிதாகச் செய்து முடிக்கப் பெரும் உதவியாக அமைந்தன.

    தமிழில் முதல் மென்பொருள்

    ஆங்கில மென்பொருள்களின் பயன்களைத் தமிழிலும் பெற முயன்றனர் தமிழ்க் கணினி வல்லுநர்கள். இம் முயற்சிகளின் பயனாக முதலில் தோன்றிய  மென்பொருள்களில்  ஆவணங்கள் எழுதும்  ஆதமி (Adami) என்பதும் ஒன்றாகும்2. இது  1984- இல் கனடாவில்  வாழும் முனைவர்  ஸ்ரீநிவாசன்  என்பவரால் உருவாக்கப்பட்டது3. இதன்மூலம் தமிழில் எழுதி அவற்றை அச்சுப் பதிவு செய்து கொள்ளவும் முடியும். இது அக்காலத்தைய  IBM DOS 2.x  இயங்குதளங்களில் இயங்கக் கூடியது. இந்த மென்பொருளின் தொடர்ச்சியாக “ஆதவின்” என்ற மென்பொருளும்  MS Windows இயங்குதளத்தில் பயன்படக் கூடியதாகப் பின்னாளில் உருவாக்கம் பெற்றது. இம் மென்பொருட்கள் அந்நாளில் தமிழ்க் கணினிப் பயனாளர்களிடம் பிரபலமாக இருந்தன. இதே நேரத்தில் தோன்றிய இன்னொரு மென்பொருள் பாரதி என்பதாகும். இது சிங்கப்பூர்,  மலேசியா  ஆகிய நாடுகளில் பிரபலமாக இருந்தன.

    தமிழ் எழுத்துருக்கள் அறிமுகம்

    80களின் பிற்பகுதியில் திரு. அர்த்தனாரி (Mr. T. S. Arthanari) ஒரு தமிழ் எழுத்துருவை உருவாக்கியதாக அறியப்படுகிறது; ஆனால் மேலதிக விபரங்கள் பெற முடியவில்லை. 1990களின் முற்பகுதியில் “மக்கின்டாஸ்” கணினியில் தமிழ் எழுத்துரு (Tamil Fonts) அறிமுகப் படுத்தப்பட்டது4. ஆதமி (1984) உருவாகும் முன்னர்ப் பேராசிரியர் ஜியார்ஜ் ஹார்ட் அவர்கள் ஆப்பிள் கணினியில் தமிழ் எழுத்துருக்களை அறிமுகப்படுத்தியிருந்தார். இதே நேரத்தில் யூனிக்சு (UNIX) இயங்கு தளத்திலும் முதன்முதலாக முனைவர் பால சுவாமிநாதன் அவர்களும் அவர்தம் உடன்பிறந்தார் முனைவர் ஞானசேகர் அவர்களும் யூனிக்சில் தமிழுருக்கள் ஆக்கினர். அத்தோடு  LaTex  எழுதியில் உபயோகிக்க  wntamil  என்னும் எழுத்துரு முறை அறிமுகப்படுத்தப்பட்டது.  ஐ-ட்ரான்ஸ் (iTrans) என்ற நிறுவனமும் யூனிக்சில் தமிழில் எழுத வசதியாக எழுத்துருக்களையும், உதவிகளையும் வழங்கியிருந்தது5. இந்த எழுத்துருக்களைக் கணினியில் அடிக்க எழுத்துப்பெயர்ப்பு (transliteration) முறையே உபயோகிக்கப்பட்டது. அதாவது அம்மா என்பதை  ammaa  என்று கணினியின் விசைப்பலகையில் அடிக்க வேண்டும்6. எழுத்துருக்கள் உருவாக்கமும் எழுதும் முறையும் இலகுவாக இருக்க, கணினிகளில் மேலதிக மென்பொருள் தேவையின்றியே தமிழில் எழுதமுடிந்தது. இக்காலகட்டத்தில் பல எழுத்துருக்களைப் பல வல்லுநர்கள் உருவாக்கத் தொடங்கினர். இதன் பயனாகப் பல எழுத்துருக்கள் கணினிகளில் உபயோகத்திற்கு வந்து கொண்டிருந்தன.

    இவ்வெழுத்துருக்களில்  கனடாவில்  வாழும் முனைவர் விஜயகுமார் அவர்கள் ஆக்கிய நூற்றுக்கணக்கான எழுத்துருக்கள் குறிப்பிடத்தக்கன. இவ்வெழுத்துருக்களுக்குக் கருநாடக இசை  இராகங்களின்  பெயர்களை இட்டிருந்தார். முனைவர் பெ குப்புசாமி அவர்கள் ஆக்கிய கல்வி என்னும் பயன் மென்பொருள்களுக்குப் பயன்படுத்திய எழுத்துருக்களும், முனைவர் கல்யாணசுந்தரம் அவர்கள் ஆக்கிய மயிலையும் (Mylai)7, பாமினி (Bamini) 8போன்றவையும் பரவலாகப் பயன்பாட்டிற்கு வந்தன. இந்த எழுத்துருக்களின் தோற்றங்களால் பல நன்மைகள் ஏற்படலாயின. எழுத்துருக்களை வைத்துக் கொண்டு, ஏற்கனவே ஆங்கில மூலம் கிடைக்கும் எழுத்துக்கோர்ப்பு, கணிக்கும் அட்டவணை ஆக்கி (Word, Excel) ஆகிய மென்பொருட்களைத் தமிழில் உபயோகிக்க முடிந்தது. ஆதமி போல ஒரு தமிழ் மென்பொருள் உருவாகத்திற்கான தேவைகள் குறைந்தன. 

    பொதுத் தரம் இல்லா எழுத்துருக்கள்

    இப்படி உருவான எழுத்துருக்களினால் இன்னொரு சிக்கலும் இருந்தது. அதாவது, எழுத்துரு உருவாக்குபவர்கள் எந்த ஒரு  தரத்தையும்  (standards) கடைப்பிடிக்கவில்லை9. தரங்கள் ஏதும் வகுக்கப்படவில்லை. வெவ்வேறு எழுத்துருக்கள் வெவ்வேறு தனி முறைகளைக் கொண்டிருந்தன. இதனால், இந்த எழுத்துருக்கள் எல்லா வகையான ஆங்கிலமூல மென்பொருட்களிலும் நூறு விழுக்காடு சரியாக ஒத்தியங்கவில்லை.

    சில சமயங்களில், சில மென்பொருள்களிலும் தொல்லைகள் இருந்தன. ஆனாலும் அடிப்படைப் பயன்பாடுகளான எழுதி, கணக்குப் பதிவுகள் போன்ற தேவைகள் அப்போது தமிழில் நிறைவேற்றக் கூடியதாக இருந்தன.

    வலைக் கணினியில் (இணையத்தில்) தமிழில் மின்னஞ்சல்

    தொழில்நுட்பம் வளரும்போது, தனித்தனியாகத் தன் தன் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த கணினிகள்  வலை வேலைப்பாட்டால் இணைக்கப்பட்டன. இணைக்கப்பட்ட கணினிகளும் அவற்றின் செலுத்துகைகளும் மனிதனின் தேவைகளை மேலும் செம்மையாக நிறைவு செய்யத்தொடங்கின. வலையில் இணைக்கப்பட்ட கணினிகள், இந்தக் காலகட்டத்தில் (90களில்)  தொடர்பாடல்  துணைக்கருவியாக நறுமணம்வீசத் தொடங்கின.  மின்னஞ்சல்  பயன்பாடு பெரும்புகழாகத் தொடங்கியது.

    யூனிக்சு (UNIX)  இயங்குதள  (operating system) கணினிகளில் மின்னஞ்சல் தொடர்புகள் முன்னரே இருந்தும்கூட, தனிக் கணினிகளில் (Personal Computers) மின்னஞ்சல் தொடர்பாடல் பரவலாகத் தொடங்கும்போது தான் தமிழைத் தொடர்பாடலில் பயன்படுத்தும் தேவை எழுந்தது. தனிப்பட்டவரின் எழுத்துருக்கள் சீர்தரம் இல்லாச் சிக்கல்களால் இந்த இடத்தில் கொஞ்சம் இடரத் தொடங்கின.

    தமிழ் மின்னஞ்சல் இடர்கள்

    தனித் தனியான எழுத்துருக்களை ஒவ்வொருவரும் தத்தம் விருப்பத்திற்கேற்பப் பயன்பாட்டில் வைத்திருந்ததால், ஒருவர், தமிழில், தன்னிடமிருக்கும் எழுத்துருவில் எழுதி அனுப்பும் மின்னஞ்சல் மற்றவரைப் போய்ச் சேரும்போது, அதைப் பெற்றுக் கொண்டவர் வாசிப்பதற்கு அனுப்பியவரின் எழுத்துரு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அனுப்புபவர் அஞ்சலுடன் சேர்த்துத் தன் எழுத்துருவையும் அனுப்ப வேண்டும். அனுப்புபவர், பெறுநர் இருவரிடமும் ஒரே எழுத்துரு இருந்த வேளைகளிலும் அஞ்சல் தொடர்பு என்பது இலகான செயலாக இருக்கவில்லை. மின்னஞ்சல் மென்பொருளிலேயே தமிழில் அனுப்பப்படும் அஞ்சலை வாசிக்க முடியாது. வேறு செயலிக்கு வெட்டி ஒட்ட (cut and paste) வேண்டும்.

    அனுப்பப்பட்ட அஞ்சல், வலைக் கணினிகளிடையே பயணிக்கும் போது அந்தக் கணினிகள் ஏதாவது காரணத்தால் மடல் சரியாகப் போகிறதா எனச் சோதித்துப் பார்க்கும்போது அறிமுகமில்லாத எழுத்துருக்களைக் குப்பையெனக் கருதி எறிந்து விடக்கூடும் அல்லது சிக்கலைப் பெரிதாக்கக் கூடும். ஆக, ஒட்டுமொத்தத்தில் தமிழில் மின்னஞ்சல் தொடர்பு என்பது கடினமாகவே இருந்தது.

    தமிழில் மின்னஞ்சல் தீர்வுகள்

    மதுரை

    இப்படியான சிக்கல்களில் அகப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் ஒரு மென்பொருள் தோன்றியது. அது தான்  மதுரை (Madurai) என்றழைக்கப்பட்ட அந்த மென்பொருள் ஒரு வேறுபாடான வேலையைச் செய்தது. அதாவது ஒரு  கோப்பில் தமிழ் ஆக்கங்களைத் தமிழ் ஒலிப்பை  இலத்தீன் (ஆங்கில) எழுத்துப்படி (எழுத்துப்பெயர்ப்பில்) எழுதிச் சேமித்து வைத்துக் கொண்டு  மதுரை  கட்டளையை (command) அந்தக் கோப்பின் மேல் செலுத்தினால் மறுமொழியாகத் தமிழ் எழுத்து வடிவம் திரையில் தோன்றும். இது பெருமளவில் பயன்பாட்டுக்கு வரவில்லை, ஆனால் எளிதாகச் சின்னச் சின்னச் சொற்களைத் தமிழ்ப்படுத்த இது மிகவும் பயனுடையதாக இருந்தது.

    அத்துடன் ஒரு முக்கியக் குறிப்பு என்னவென்றால்,  மதுரையிலிருந்து கிடைத்த தமிழ் எழுத்து வடிவம் எந்தவொரு தமிழ் எழுத்துருவிலும் தங்கியிருக்கவில்லை. அவை  அஸ்கி  (ASCII) அமைப்பிலமைந்தவை. ஆங்கிலத் தட்டச்சிலிருக்கும் கோடுகள், புள்ளிகள் மற்றும் சில எழுத்துகளின் உதவியால் பெறப்பட்டவையே இந்தத் தமிழ் எழுத்துகள். ஆதலால் இவ்வெழுத்து வடிவில், தமிழில் மின்னஞ்சல் அனுப்புவது 1990 களின் முற்பகுதியில் செயல்படத் தொடங்கி இருந்தது. இந்த மென்பொருளை ஆக்கியவர்  முனைவர் பாலா சுவாமிநாதன்  அவர்கள்.

    இதன் மூலம் கிடைக்கும் எழுத்துகள் கிட்டத்தட்ட இப்படித்தான் தெரியும்.

                |_| L |_| L |T

    படபடா என எழுதுவது கிட்டத்தட்ட இப்படியாக இருக்கும்.
    இதிலிருந்த பெரிய குறை. எழுத்துகள் பெரிதும் சின்னதுமாக ஆங்கிலமும் தமிழும் கலந்திருப்பது போன்ற தோற்றத்தில் இருந்ததுதான். அதனால் இந்த மென்பொருள் மக்கள் பயன்பாட்டில் பெரிதாக இடம்பெற முடியாமல் போய்விட்டது.

    தனித் தீர்வு நோக்கி – முரசு அஞ்சல்

    “தமிழ் மூலம் மின்னஞ்சல்” சிக்கல்களுக்குத் தீர்வு முயற்சிகளும், ஆராய்ச்சிகளும் சிங்கப்பூர், மலேசியா, தமிழகம் போன்ற பகுதிகளிலும் நடைபெறத் தொடங்கின. 1986ஆம் ஆண்டில் மலேசியாவைச் சேர்ந்த திரு. முத்து நெடுமாறன், முரசு என்ற மென்பொருள் நிறுவனத்தினால்  முரசு அஞ்சல் என்ற தயாரிப்பை அறிமுகப்படுத்தினார். இதில் எழுத்துரு (font), எழுதி (editor), மின்னஞ்சல் செயலி (e-mail application), விசைப்பலகை (keyboard) என்பனவும் வேறு சில பிரயோகங்களும் இடம்பெற்றிருந்தன. இதன் மூலம், இந்தச் செயலியை நிறுவியுள்ள கணினிகளின் பயனர்களிடையே மின்னஞ்சல் தொடர்பாடல் இப்பொழுது இலகுவாக்கப்பட்டது.

    இந்தச் செயலியில் முக்கியமான கூறு விசைப்பலகை. இந்த மென்பொருளைத் தொடங்கிவிட்டு, ஆங்கில விசைப் பலகையினூடாகவே தமிழ்-ஆங்கில  எழுத்து பெயர்ப்பு  மூலம் தமிழை எழுத முடிந்தது. அத்தோடு இந்த விசைப்பலகையில் தமிழ்த் தட்டச்சும் முறையும் இருந்தது. இப்பொழுது, தமிழ்த் தட்டச்சு தெரிந்தவர்களும் தெரியாதவர்களும் இலகுவாகத் தமிழை எழுதத் தொடங்கினர். அது மட்டுமல்ல, தமிழை எழுத, வாசிக்கத் தெரியாத தமிழ் படிக்காத மேதைகள் கூட (ஆங்கிலம் தெரிந்திருந்தவர்கள்) எழுத்துப்பெயர்ப்பைப் பயன்படுத்தித் தமிழில் எழுத முடிந்தது. அதை அவர்கள் வாசித்துப் பிழைதிருத்த முடியாதென்பது குறிப்பிடத்தக்கது.

    முரசு அஞ்சல் வெளிவந்த மிக விரைவிலேயே,  யூடோரா (Eudora) என்ற மின்னஞ்சல் செயலி தமிழ் போன்ற பிற மொழி எழுத்துருக்களை உள்வாங்கி மின்னஞ்சல்களை எழுதி அனுப்பவும், படிக்கவும் கூடிய வசதிகளுடன் வெளிவந்து மின்னஞ்சல் தமிழை மேம்படுத்தியது.

    முரசு அஞ்சல் (Murasu Anjal), இணைமதி (Inaimathi)  மயிலை  (Mylai),  ஆவரங்கால் (Avarangkal) போன்ற எழுத்துருக்கள் இதில் முக்கியப் பங்காற்றின. இந்த எழுத்துருக்களும் கூட எந்தவொரு பொது ஒழுங்கையும் கடைப்பிடித்திருக்கவில்லை. இந்நேரத்தில்,  யுனிக்ஸில் அகரம் (akarm) என்ற செயலியும்,  மக்கிண்டாசில்  சில்க்கி  (SILKey) என்ற செயலியும் தமிழைக் கணினியில் ஏற்ற உருவாகிவிட்டிருந்தன.

    இது தவிர நளினம் (செல்லையா), கம்பன் (வாசுதேவன்), அணங்கு (குப்புசாமி), துணைவன் (ரவி) போன்றோரின் எழுத்துரு செயலிகளில் புழக்கத்தில் வரத்துவங்கின.

    இணைய யுகம் – வைய விரி வலை

    மின்னஞ்சல் தொடர்பாடல் (Communication) தமிழில் கைகூடலாகி வரும் நேரத்தில் இன்னொரு புரட்சிகரமான மாற்றம் கணினி உலகில் ஏற்படத் தொடங்கியது. இது ஒரு புது யுகத்திற்கும் வித்திட்டது. அது தான்  இணைய  யுகம். (Internet era) இணையத்தில், வைய விரி வலை  (world wide web) 1990 நடுப் பகுதியில்  கோபர் (Gopher),  மொசையிக் (Mosaic) என்ற வடிவங்களில் தகவல் பரிமாறும் தளங்கள் உருவாகி வலைக் கணினிகளின் பாவனையை ஒரு படி உயர்த்தத் தொடங்கியிருந்தன. மிக விரைவாகவே இது ஆக்கம் அடைந்து  மீயுரைக்  (HTML) குறியுடன் “நெட்ஸ்கேப்” (Netscape) உலாவிகளில் இணைய உலா முழு வடிவம் பெற்று இணைய யுகமே தொடக்கமாகியது.

    சில இணைய தளங்களும் தமிழும் ஆங்கிலமும் கலந்த நிலையில் உருவாக்கம் பெறத் தொடங்கின. தமிழர் தாயகங்களிலிருந்து தனிப்பட்ட எழுத்துருக்களிலும் பல இணைய தளங்கள் பெரும்புகழாகத் தொடங்கின.  தினமலர், ஆனந்த விகடன்,  குமுதம்,  வீரகேசரி  மற்றும் பல ஏடுகள், பருவஇதழ்கள் இணையத்தில் கால்பதித்துக் கொண்டன. ஒரு தடவை அவர்களின் எழுத்துருவைத் தனிக் கணினிகளில் இறக்கம் செய்து வைத்திருந்தால் போதும் அந்த இணைய தளங்களை எப்பொழுதும் வாசிக்க முடியும்.

    இணையத் தமிழ் முன்னோடி – நா. கோவிந்தசாமி

    முதலில் தமிழை இணையத்தில் ஏற்றிவைத்தவர் சிங்கப்பூரைச் சேர்ந்த  நா. கோவிந்தசாமி. 1995ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் சிங்கப்பூர் அதிபர் மேன்மை மிகு. ஓங் டாங் சாங் துவக்கி வைத்த Journey: Words, Home and Nation – Anthology of Singapore Poetry (1984-1995) என்கிற நான்கு தேசிய மொழிக் கவிதைகளுக்கான வலையகத்தில்தான் முதன்முதலில் தமிழ் இணையத்தில் அடி எடுத்து வைத்தது.

    இயங்கு எழுத்துரு

    90 இறுதியளவில், பிற மொழி இணைய தளங்களைக் கருத்தில் கொண்டு, இயங்கு எழுத்துரு (dynamic font) என்ற எழுத்துரு பயன்பாட்டிற்கு வந்தது. இதைப் பிட்ஸ்ட்ரீம் (bit stream) என்ற ஒரு தனியார் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதன்மூலம் இணைய தளங்கள் தங்கள் எழுத்துருவையும் சேர்த்தே பார்வையாளர்களுக்கு அவ்வப்பொழுது வழங்கி வந்தன. இதன் அடிப்படையில், உபயோகிப்பாளர் எந்தவொரு எழுத்துருவையும் இறக்கம் செய்யாமலேயே இணைய தளங்களைப் பார்வையிட முடிந்தது.

    இந்த இயங்கு எழுத்துருவைப் பயன்படுத்திப் பல தமிழ் மொழி இணையத் தளங்கள் அழகாக உருவாகத் தொடங்கின. ஒரு கட்டத்தில்,  மைக்ரோசாப்ட்  நிறுவனமும் இயங்கு எழுத்துருவுக்குக் கருவிகளை வழங்கியிருந்தது. காலப்போக்கில் இது நடைமுறை இழந்து வருவது தெரிகிறது. இப்படிப் பல துறைகளில் எழுத்துருக்கள் உருவாக்கம், பிற மொழியாளர்களை அவர்கள் மொழியில் கணினியில் பயன்படுத்த உருப்பெற்ற வண்ணமிருந்தன.

    தமிழ்.நெட்

    இணையப் பயனும் தமிழில் மின்னஞ்சல் கைகூடலான சூழலும் பல் வேறு நாடுகளிலுமிருந்த பல தமிழர்களைக் கணினியில் தமிழில் தொடர்பாட வைத்தன.

    இந்நிலையில்,  1995  அளவில்,  ஆஸ்திரேலியாவில்  இருக்கும் திரு. பாலா பிள்ளை  என்பவர் ஒரு மடலாடற் குழுவைத் தமிழில் தொடங்க வேண்டும் என்ற ஈடுபாட்டில் தமிழ்.நெட் (tamil.net) என்ற இணைய தளத்தைத் தொடங்கி அதன் மூலம் ஒரு மடலாடற் குழுவையும் ஏற்படுத்தினார். தமிழார்வமுள்ள பலர் அதில் இணைந்து கொண்டு தமிழைப் பற்றியும், தமிழ்க் கணினி பற்றியும் மிகவும் ஈடுபாட்டுடன் கலந்துரையாடினர். தமிழும் தமிழர் சார்ந்த எல்லாச் செய்திகளுமே அங்கே அலசப்பட்டன. பல அறிஞர்களையும், வித்துவான்களையும் சந்திக்க வைத்து அவர்களுக்கு ஒரு வடிகாலாக அமைந்த தமிழ்.நெட் பெருமைக்குரியது. முரசு அஞ்சல் எழுத்துருவை ஒழுங்காகக் கொண்டு எல்லோரும் கலந்துரையாடுவது சிக்கலின்றிச் செவ்வனே நடந்து கொண்டிருந்தது. இவ்வாறு பல்வகையான தனியாளர்களின் பங்களிப்புடன் தமிழ் எழுத்துருக்கள் கணினியில் வலம் வரத்தொடங்கின.

    *****

    குறிப்புகள்

    1. https://en.wikipedia.org/wiki/Personal_computer

    2. http://www.sivalingam.in/computer/basics/kaaladithadam.htm

    3. Ibid

    4.http://www.mypno.com/index.php?view=article&catid=49%3Aeduart&id=7495%3A2013-09-11-08-30-15&tmpl=component&print=1&page=&option=com_content&Itemid=95

    5. Ibid

    6. http://www.vallamai.com/?p=57199

    7. http://manikandanvanathi.blogspot.in/2012/04/blog-post.html

    8. Ibid

    9. கணினியில் தமிழ் நிகழ்வுகள் அமைப்பதில் உள்ள சிக்கல்கள், பக். 876 – 878

    10. “கணினியில் தமிழ் எழுத்துருக்களும், குறியீட்டு முறைகளும்” வெ.இராமன் (2016) மதுரை காமராசர் பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வேடு.

    *****

    கட்டுரையாசிரியர்
    முதன்மையர், இரத்தினம் கலை அறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர் – 641021
    மின்னஞ்சல்: raman600@gmail.com

    Share