Blog

  • வாழ்ந்து பார்க்கலாமே-11

    க. பாலசுப்பிரமணியம்

     

    முயலும் வெல்லும் ஆமையும் வெல்லும்

    “முயலும் வெல்லும், ஆமையும் வெல்லும்; முயலாமை என்றும் வெல்லாது”- எனது கார் அண்ணா சாலையில் நிறுத்தப்பட்டிருந்தபொழுது சுவற்றில் எழுதப்பட்ட இந்த வாசகத்தைப் படித்தேன். திரும்பத் திரும்பப் படித்தேன். எத்தனை உண்மையான வார்த்தைகள்! முயலும் தன்னுடைய இலக்கை நோக்கிச் செல்லுகின்றது. ஆமையும் தன் இலக்கை நோக்கிச் செல்லுகின்றது. அந்த இலக்கை அடைவதில் அவர்களுக்கிடையே உள்ள வித்தியாசம் – கொஞ்ச நேரமே ! ஒன்றின் வேகத்தில் இன்னொன்றால் செல்ல முடியாது. ஏனெனில் இயற்கையில் அவைகளின் உருவகமும் உடல்  பாங்கும் வேறுபட்டுள்ளன. தங்கள் உடல் பாங்குகளுக்கேற்றவாறும் தங்களுடைய இயற்கை வாழ்விற்கேற்றவாறும் அவைகள் பயணித்தால் எந்தப் பிரச்சனையும் இல்லை. இந்தக் கருத்து நமக்கும் பொருந்தும். இயற்கையில் நம்முடைய உடல் பாங்குகள், சக்தி நிலைகள், உணர்வு நிலைகள் மற்றும் உடலில் ஏற்படும் சீதோஷ்ண மாற்றங்கள் வேறுபட்டவை. எனவே நாம் ஒருவேரோடு ஒருவர் போட்டி போடுதல் மிக்க தவறான செயல். நாம் நம்முடைய இயற்கைக்குத் தகுந்தவாறு வாழக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    ஆனால் வெற்றி பெறுவதற்கு முயலும் முயற்சிக்க வேண்டும், ஆமையும் முயற்சிக்க வேண்டும். அதே போல் நாம் எந்த நிலையில் இருந்தாலும் சரி, வாழ்க்கையில் சாதனைகள் செய்ய, வெற்றிபெற, சிகரங்களைத் தொட முயற்சி செய்தல் மிகவும் அவசியம். அறிவையும், திறமையும் மட்டும் வைத்துக்கொண்டு முயற்சி செய்யாமல் இருந்தால் வெற்றிப் படிகளில் நிற்க முடியாது, சில நேரங்களில் முயற்சியே செய்யாமல் இறைவனின் திருவருளை மட்டும் நம்பி பலர் வாழ்வில் காத்திருக்கின்றனர். இவர்களில் சிலபேருக்கு வேறு சில காரணங்களால் ஓரளவு வெற்றி கிடைக்கின்றது. ஆனால் அனைவருக்கும் வெற்றிக்கு முயற்சிதான் வழி. முயற்சி செய்யும்பொழுது அதற்கான கூலி நிச்சயம் கிடைத்துவிடும் என்று வள்ளுவர் மிக அழகாக உரைக்கின்றார்.

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்

    மெய்வருத்தக் கூலி தரும்

    முயற்சி என்பது சரியான திசையில் சரியான அளவில் சரியான நேரத்தில் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் அது விழலுக்கிறைத்த நீராகிவிடும். முயற்சி வெற்றி பெற ஒரு மனிதனுக்கு என்னென்ன தேவைப்படுகின்றது?

    1. தன்னம்பிக்கை (Self-confidence)
    2. ஆர்வம் ( curiosit)
    3. நோக்கத்தில் தெளிவு ( Clarity of vision)
    4. துணிவு (courage)
    5. செயல் திறன் (Skill)
    6. வளங்கள் (Resources)
    7. உழைப்பு (Hard work)
    8. பொறுமை (Patience)
    9. சவால்களை சந்திக்கும் திறன் ( Ability to face challenges)
    10. கால நிர்வாகத் திறன் (Time Management )

    மேரி கியூரி என்ற போலந்து நாட்டு விஞ்ஞானி வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்தவர்.  தன்னுடைய ஆராய்ச்சிக்காக தன்னுடை கையிருப்பிக்களை எல்லாம் இழந்து, ஆறிச்சிக்குத் தேவையான உபகாணங்களைக் கூட வாங்க முடியாமல், வீட்டு வாடகை கொடுக்க முடியாமல் ஒரு மாட்டுத் தொழுவத்தில் தன் வாழ்க்கையை நடத்தியவர். போட்டி காரணமாக அவருக்குத் தேவையான அறிவியல் மூலதனைகளைக் கூட அவரால் பெற முடியவில்லை. அந்த ஏழ்மையான நிலையிலும் இரவு பகலாக வேலை செய்து ‘ரேடியம்” என்ற பொருளைக் கண்டுபிடித்தார். இவருடைய இந்தக் கண்டுபிடுப்புத்தான் பின்பு  எக்ஸ் -ரே கதிர்வீச்சுக்கள் மூலமாக பல நோய்களை கண்டறிய உதவியாக இருந்தது. இவருடைய கண்டுபிடிப்புக்காக பின்பு இவருக்கு நோபல் பரிசு கிடைத்தது. உலகிலேயே முதல் முதலாக நோபல் பரிசு பெற்ற பெண்மணி என்பது மட்டுமல்லாமல் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற பெண்மணியாக இவர் விளங்கினார்.

    தொடர்ந்து இருந்த சவாலான சூழ்நிலைகளிலும் தன்னுடைய முயற்சியை விட்டுவிடாமல் இயலாமை என்ற சொல்லுக்குத் தலைவணங்காமல் சாதனை படைத்த இந்தப் பெண்மணி என்ன கூறுகின்றார்?

    ” வாழ்க்கையில் எதையும் கண்டு பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. அவைகளை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இது புரிந்துகொள்வதற்கான நேரம், பயப்படுவதற்கானது அல்ல. ”

    “நாமெல்லாம் வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்திருக்கிறோம் என்ற உணர்வு நம் அனைவருக்கும் இருக்கவேண்டும். இதை நாம் எந்த விதத்திலாவது சாதித்தே ஆகவேண்டும்.”

    சிறிய வயதிலிருந்தே குழந்தைகளுக்கு இந்த ஆக்கப்பூர்வமான உணர்வினை ஊட்டி விட வேண்டும். அவர்களுடைய கனவுகளின் உயரம் சிகரத்தை தொடுவதாக இருக்க வேண்டும். மிகப் பெரிய கனவுகளைக் கண்டு அதற்கான முயற்சிகள் செய்து சிறிதளவு அதில் தோல்வி அடைந்தவர்கள் பலர் உண்டு. அவர்கள் சரித்திரம் படைத்தவர்களாக ஆகின்றார்கள். சிறிய கனவுகளைக் கண்டு அவற்றை உடனேயே அடைந்தவர்கள் கடலில் கரைந்த உப்பாகக் காணாமல் போகின்றார்கள்.

    பெரிய கனவுகளைக் காணலாமே.. அதற்கான தெளிவான நோக்குடனும் உறுதியுடனும் தைரியத்துடனும் முயற்சி செய்து பார்க்கலாமே.

    வாழ்க்கை என்பதே நம் கனவுகளுக்கு ஒரு உருவகம் கொடுப்பதுதானே !

    வாழ்ந்து பார்க்கலாமே !

    தொடருவோம்

    Share
  • குறளின் கதிர்களாய்…(206)

     

     

     

    சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ                                                                  

    நன்றின்பா லுய்ப்ப தறிவு.

           -திருக்குறள் -422(அறிவுடைமை)

     

    புதுக் கவிதையில்…

     

    செல்லும் தீய பாதையில்

    மனதைச்

    செல்லவிடாமல் தடுத்து,

    நல்ல பாதையில்

    செலுத்துதல்தான் அறிவு…!

     

    குறும்பாவில்…

     

    தீய பாதையில் செல்லும் மனத்தைத் 

    தடுத்து தீமையகற்றி தூயபாதை 

    செலுத்துதலே அறிவு…!

     

    மரபுக் கவிதையில்

     

    கட்டுப் பாடுகள் ஏதுமின்றிக்

         கடந்தே செல்லும் மனத்தினையே,

    கட்டுப் படுத்தித் தடைசெய்து

         கெட்ட வழியில் செல்லாமல்,

    திட்ட மிட்டே நல்வழியில்

         தீயன அகற்றிச் செலவிடுதல்

    மட்டும் தானிவ் வுலகதிலே

         மகிமை மிக்க அறிவாமே…!

     

    லிமரைக்கூ..

     

    செலவிடாதே மனததன்வழி யதுவே, 

    செலுத்ததை தீமையகற்றி நல்லவழியிலே,  

    செம்மை அறிவென்பதுதான் இதுவே…!

     

    கிராமிய பாணியில்…

     

    அறிவுயில்ல அறிவுயில்ல- இது

    அறிவுயில்ல அறிவேயில்ல,

    அதுபோக்கில மனசப் போகவிட்டா

    அதுக்கபேரு அறிவில்ல..

     

    அடங்காமப்போற மனச அடக்கி

    அது கெட்டவழியில போகாம

    நல்லவழியில அனுப்புனா,

    அதுக்கப்பேருதான் அறிவு..

     

    அதால

    அறிவுயில்ல அறிவுயில்ல- இது

    அறிவுயில்ல அறிவேயில்ல,

    அதுபோக்கில மனசப் போகவிட்டா

    அதுக்கபேரு அறிவில்ல…!

     

    -செண்பக ஜெகதீசன்…

    Share
  • வஞ்சகர்…!!

    -ஆ. செந்தில் குமார்

     

    கருத்திருப்பர்! வெளுத்திருப்பர்!
    கனிவான பேச்சில் இனித்திருப்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    உறவென்பர்! உயிரென்பர்!
    உயிரில் கலந்த உணர்வென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    மதமென்பர்! இனமென்பர்!
    இனத்தின் மொழியென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    கண்னென்பர்! மணியென்பர்!
    கனவில் பூத்த மலரென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    அமுதென்பர்! தேனென்பர்!
    தேனில் ஊறிய சுளையென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    அறிவென்பர்! அழகென்பர்!
    அனைத்துமே நீயென்பர்!
    உள்ளத்தில் கடுத்திருப்பர்! – எனினும்
    உடல் மொழியதை உணர்த்தாது!

    ~~~~~~~~~~~~

    Share
  • பிள்ளைத்தமிழ் இலக்கியங்களில் ஐவகை நிலங்கள்

     

    மீனாட்சி க., முனைவர் பட்ட ஆய்வாளர் (பகுதி நேரம்)

    நெறியாளர்- முனைவர் ப. தமிழரசி., பேராசிரியர் மற்றும் தலைவர்,

    தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர்- 21.

     

    முன்னுரை:

     

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழின் பலசுவைகளையும் இலக்கியநயங்களையும் கொண்டமைந்து படிப்போருக்கு இன்பமூட்டுகின்றன. இவற்றுள் ஒன்றே ஐவகை நிலங்களின் செழிப்பினை விளக்குவது. பாட்டுடைத்தலைவன் அல்லது தலைவியின் நாட்டின் வளப்பத்தைக் கூறுங்கால் ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகுற உவமைநயங்களுடன் பாடுவது புலவர்களின் வழக்கம். பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் இவை பாடும் புலவரின் கற்பனைக்கேற்ப எப்பருவத்தில் வேண்டுமாயினும் அமையும்.

    தொல்காப்பியம் மாயோனாகிய திருமால், சேயோன் எனப்படும் முருகன், வேந்தன் எனப்படும் இந்திரன், வருணன் ஆகியோரை நானிலத் தெய்வங்களாகக் காட்டுகின்றது.

    ‘மாயோன் மேய காடுறை உலகமும்

    சேயோன் மேய மைவரை உலகமும்,

    வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

    வருணன் மேய பெருமணல் உலகமும்

    முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல்’ 1

    கருத்து விளக்கம்:

    பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள் தமிழுக்கே உரிய ஐவகை நிலங்களின் செழிப்பையும் அழகையும் புகழ்ந்து இயற்றப்பட்ட பல பாடல்களை அனைத்துப் பருவங்களிலும் இயற்றிய புலவர்களின் கற்பனைக்கேற்பக் கொண்டமைந்து விளங்குகின்றன. இலக்கியச் சுவையையும் மேம்படுத்துகின்றன. பாட்டுடைத்தலைவன் / தலைவியின் நாட்டின் வளம் இந்த ஐவகை நிலங்களின் செழிப்பாலும் உணரப்படும்.

    முருகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்ட பிள்ளைத்தமிழ் நூல்களில் குறிஞ்சிநிலம் பற்றிய செய்திகள் பெரிதளவில் பேசப்பட்டுள்ளன. பாட்டுடைத்தலைவன், தலைவியின் நாட்டு வளத்தைப் போற்றிவரும் பாடல்களில் வயல்சூழ்ந்த மருதநிலம், கடற்புறமான முத்துக்கள் விளையும் நெய்தல்நிலம் ஆகியன மிக விரிவாக விளக்கப்படுகின்றன. முல்லை, பாலை நிலங்கள் தொடர்பான செய்திகள் மட்டும் மிகவும் அரிதாகவே காணப்படுகின்றன. முல்லைநிலக் கடவுளான திருமால் பற்றிய பிள்ளைத்தமிழ் நூல்களிலும் அந்நிலம் பற்றிய வருணனைகளும் பாடல்களும் காணப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    குறிஞ்சிநிலம் பற்றிய பாடல்:

    குறிஞ்சிநிலத்தின் கடவுள் சேயோனான குமரப்பெருமான். அவன் மீதான பகழிக்கூத்தனாரின் திருச்செந்தூர் பிள்ளைத்தமிழின் செங்கீரைப்பருவப் பாடலொன்று ‘மலையும் மலைசார்ந்த இடமு’மான குறிஞ்சிமலைப்புறத்தின் அச்சமூட்டும் பேரழகை விவரிக்கின்றது. குறிஞ்சிநிலம் பற்றிய நயங்களும் மிகச்சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.

    நெடிய மரங்கள் கொடிகளுடன் பின்னிப்பிணைந்து அடர்ந்து வளர்ந்துள்ளமையால் பகல்போதிலும் இருள் சூழ்ந்திருக்கும் அச்சம்தரும் மலைப்பிரதேசம். அந்த இருளை நீக்கவும் இயற்கையே வழிசெய்கிறது. அங்குள்ளதான கொடிய நஞ்சினை உடைய ஒரு பாம்பு தன் வாயை அகலத்திறந்து மாணிக்கக் கல்லை உமிழ்கின்றது; அந்த மாணிக்கக்கல் ஊழிக்கால இருள்போன்ற கொடிய இருளை நீக்குகின்றதாம்.

    மலையில் வாழும் குறவர்கள் உணவுக்காகத் தினை பயிரிடுவர். அதுவே அவர்களின் முக்கிய உணவாகும். அதற்கு எருவாக அவர்கள் பயன்படுத்துவது கவரிமானின் முலையிலிருந்து பெருக்கெடுத்தோடும் பால். அது, சூரியஒளியினால் காய்ந்து, பாறைகள்மீது படர்ந்துள்ளது; சூரிய ஒளியில் அது வெள்ளித்தகடு போன்று பளபளவென்று ஒளிவீசுகின்றது. மலைவாழ் குறவர்கள் அதனை எடுத்துத் தங்களது தினைப்பயிருக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்களாம்.

    இக்குறிஞ்சி நிலத்தில் வாழும் கருநிறம் கொண்ட குறமகளிரின் இன்றியமையாத வேலை, தினைப்பயிரைத் தின்னவரும் கிளிகளையும் மற்ற பறவைகளையும், ‘ஆலோலம்’ எனக்கூறி கவண் எறிந்து ஓட்டுவதாகும். சிலபொழுது அவர்களின் கவனம் பறவைகளை விரட்டுவதில் ஈடுபடுகிறது; இன்னும் சிலபொழுது தங்கள் குலமகளான வள்ளியின் உள்ளம் கவர்ந்த குமரனையும் அவன் திருவுருவையும் எண்ணி நெகிழ்ந்து கனிகின்றது. இவ்வாறு இருவிதமான எண்ணங்களும் மாறி மாறி அவர்களுடைய உள்ளங்களில் ஊசலாடுகின்றன.

    இவ்வாறெல்லாம் குறிஞ்சி நிலவளம் கூறிப் பின்பு குறமகளிரின் செம்மைபாய்ந்த கண்களைக் கொள்ளைகொண்ட முருகப்பெருமானைத் தலையசைத்து, திருவாய் திறந்து சில சொற்களைக்கூறிச் செங்கீரையாட வேண்டுகிறார் பகழிக்கூத்தனார்.

    ‘வெங்காள கூடவிட மொழுகுபற் பகுவாய்

    ………………………………….

    மங்காம லிரசதத் தகடெனச் சுடர்விட

    மலைக்குறவர் கண்டெடுத்து

    வண்டினைக் கெருவிடுஞ் சாரலிற் கரியகுற

    மகளிருள மூசலாட…….’ 2

    முல்லைநிலம் பற்றிய பாடல்:

    சிதம்பர அடிகளார் இயற்றியுள்ள முருகப்பிரானைப் பாட்டுடைத்தலைவனாகக் கொண்ட திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழின் சிறுபறைப் பருவப் பாடலொன்று முல்லைநிலங்கள் செறிந்த திருப்போரூரின்கண் உள்ள பலவிதமான முல்லைநிலக் காட்சிகளைக் கூறி கருத்துக்கு விருந்து படைக்கின்றது.

    அழகான திருப்போரூர், முல்லைநிலங்கள் செறிந்தவூர். முல்லைநிலக்கடவுள் மாயோன் எனப்படும் திருமாலாவான். இவ்வூரின்கண் பலவிதமான ஒலிகள் எப்போதும் எழுந்த வண்ணமாக உள்ளன. தயிரின் முடைநாற்றம் கமழும் மெல்லிய உருவம் கொண்ட இடைப்பெண்களின் மத்துக்கள், அவர்கள் தயிர் கடையும் கலங்களில் முழக்கும் ஒலி ஒருபுறம் கேட்கிறது; பசுக்கூட்டங்கள் தம் கன்றுகளை நினைத்தமட்டிலேயே அழகான குடம்போலும் மடித்தலத்திலுள்ள பாலைச் சுரந்து கன்றுகளை எண்ணிக் கத்தும் முழக்கமும் மிகுதியாகக் கேட்கின்றது.

    இசையமைந்த துளைகளினூடே விரல்களைப் பொருத்திப்பிடித்து தொறுவர்கள் எனப்படும் இடையர்கள் ஊதும் புல்லாங்குழலோசையும் கேட்கின்றது. பலவிதமான நிறங்கள் கொண்ட காட்டுக்கோழிகள் முறைமுறையாக நின்று நெருங்கிக் கூவும் ஓசையும் எழுந்தவண்ணம் உள்ளது.

    செழித்து விளைந்து மலர்ந்த செம்முல்லை மலர்களில் வண்டுகள் அமர்ந்து விளரிப்பண்ணை இசைக்கும் அழகிய இனிய முழக்கமும் கேட்கின்றது. காலை விடியற்போதில் எழும் கடலின் ஒலியைப்போல இந்தப் பலவகை முழக்கங்களும் மிகுதியாக எழுகின்ற தன்மை கொண்டது இப்போரூரின் முல்லைநிலங்கள்.

    அம்முல்லை நிலத்தில் வாழ்பவனும் குளமலி கண்ணனாகிய சிவன் தந்தருளியவனுமான முருகப்பெருமானை, “முருகா, நீ சிறுபறை கொட்டுக! முத்தமிழினை மெத்த வளர்த்தவனே! சிறுபறை கொட்டுக!”- என்பது பாடற்பொருள்.

    ஒருவரைப் பற்றிக் கூறும்போது அவர் புகழ்வாய்ந்த குடும்பப் பின்னணி உடையவராயின் அவர் பெற்றோர், மற்ற உறவுமுறைகளைக்கூறி அவரைப் பெருமைப்படுத்துவது வழக்கம். அதுபோன்றே இப்பாடலில் முருகனின் தந்தையாகிய சிவபிரானின் புகழையும் விளக்கியுள்ளார். குலம்- குடிப்பெருமை கூற ‘குளமலி கண்ணன் தரும் இறை’ எனச் சிலசொற்களையே கூறுகிறார். குளம் = நெற்றி; அலிகம்- நெற்றி. நெற்றிக்கண்ணனாகிய சிவபெருமான் தந்தருளும் முருகக்கடவுள் என்கிறார். வேறென்ன பெருமை வேண்டும் முருகனுக்கு? தனது பெற்றோரைப்போல் அவனும் தன் பங்கிற்கு முத்தமிழையும் வளர்த்து அருளுபவன் அல்லவா?

    அளைகடை முடைகது வியதளிர் வடிவத்

    தாய்ச்சியர் மத்தொலியும்

    அங்குட மடிமுலை விம்மிக் கன்றுளி

    ஆன்நிரை கத்தொலியும்

    ……………………………………

    …………………………முல்லைக்

    குளமலி கண்ணன் தருபோ ரூரிறை

    கொட்டுக சிறுபறையே.’ 3

    முல்லைநிலத்திற்கான பண் ‘விளரிப்பண்’ என்பது இதிலிருந்து பெறப்படுகின்றது. ஆனால் தமிழிசை மரபுப்படி விளரிப்பண்ணானது மருதநிலத்துக்கு உரிய பண்ணாகும். வண்டுகளின் ஒலியே விளரிப்பண் என அறியப்படுகின்றது. இவ்வாறு திணைமயங்கி வருவதும் ஒரு இலக்கிய உத்தியாகக் கருதப்படுகிறது.

    புல்லாங்குழலை இடையர்கள் வாசிக்கும் முறை நுட்பமாகக் கூறப்பட்டுள்ளது. மூங்கிற்குழலில் அமைக்கப்பட்ட துளைகளில் (இசைக்கேற்ப) விரல்களை மாற்றிமாற்றிப் பொருத்தி (அவற்றை மூடியும் திறந்தும்) இசைக்கிறார்கள் என விளக்கமாகக் கூறியுள்ளமுறை நயக்கத்தக்கது.

    மருதநிலம் பற்றிய பாடல்:

    குமரகுருபரனார் மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழின் காப்புப் பருவத்து முதல் பாட்டிலேயே மருதநிலத்துச் செய்தியைக் கூறுகிறார். காக்கும் தெய்வமான திருமாலின் பெருமையைக் கூறும்போது வயல்கள் சூழ்ந்த மருதநிலத்து வனப்பை விவரிக்கிறார். மருதநிலத்துக் கடவுள் வேந்தன் எனப்படும் இந்திரனாவான். மேலும் அலைமகளையும் கலைமகளையும் மருதநிலத்தில் வாழ்பவர்களாகச் சித்தரிப்பது வழக்கு. ஏனெனில் இருவரும் தாமரையில் உறைபவர்கள். தாமரை மலரானது மருதநிலத்துக்குரிய மலராகும். இதில் செந்தாமரையில் அலைமகளெனும் இலக்குமியும், வெண்தாமரை மலரில் கலைமகளாம் சரசுவதியும் உறைகின்றனர்.

    திருமால் தமிழ்மீது கொண்ட காதலால் தமிழ்பாடும் புலவனின் பின்னால் தனது பைந்நாகப்பாயைச் சுருட்டிக்கொண்டு விரைவதனை அழகுற விவரிக்கிறார். காதல்மனையாளை விட்டுப்பிரியத் திருமாலுக்கு மனமில்லை. ஆகவே வயலில் பூத்து நிற்கும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் அவளை அந்த வழுக்கும் சேறுநிறைந்த வயலில் தனது கையால் அணைத்தபடி அவள் விழுந்துவிடாமல் பற்றிக்கொண்டு உடனழைத்தவாறு தமிழ்ப்புலவரின்பின் விரைகிறான். மிக அழகான கற்பனை!

    கணிகொண்ட தண்துழாய்க்காடலைத் தோடுதேம்

    கலுழிபாய்ந் தளறுசெய்யக்

    கழனிபடு நடவையில் கமலத்தணங்கரசொர்

    கையணை முகந்துசெல்லப்

    பணிகொண்ட முடவுப் படப்பாய்ச்சுருட்டுப்

    பணைத்தோள் எருத்தலைப்பப்

    பழமறைகள் முறையிடப்பைந்தமிழ்ப் பின்சென்ற

    பச்சைப் பசுங்கொண்டலே.’ 4

    ‘கையணை முகந்து செல்ல,’ எனும் சொற்கள் மிகவும் நயமாக, ‘கையால் அணைகொடுத்து, அவளை அன்போடு தழுவி அணைத்து நடத்திச் செல்ல,’ எனும் பொருள்படும். மிக நுட்பமான உய்த்தறிதலின் ஆளுமை நிரம்பிய கவிதையிதுவாகும்.

    நெய்தல்நிலம் பற்றிய பாடல்:

    திருச்செந்தூர் தலம் கடற்கரையில் அமைந்துள்ளது. ஆகவே, பகழிக்கூத்தனார் தாமியற்றிய பிள்ளைத்தமிழில் கடல்சார்ந்ததாகிய நெய்தல் நிலத்தினைப் பலவிதமாகப் போற்றியுள்ளார். நெய்தலின் கடவுள் வருணனாவான்.

    ‘திரையெறியு மலைவாய்’ – அலைகளை வீசி எறியும் திருச்செந்தூர் (திருச்சீரலைவாய் என்பது இதன் பெயர்),

    ‘வெள்வளை தரும் தண்தரள மலைகொண்டு கொட்டு நகராதிபா’- வெண்மையான சங்குகள் ஈனும் குளிர்ச்சி பொருந்திய முத்துக்களை மலைபோல கடலலைகள் கொண்டு கொட்டும் நகருக்கு அதிபனே!’,

    ‘குரைகட லலையெறி திருநக ரதிபதி’- ஓசையிடும் கடல் அலைகளை வீசியெறியும் திருநகருக்கு அதிபதி,

    ‘அலையாழிசூழ் திருச்செந்தூர் வடிவேலன்.’

    ‘கழிதொறும் கயல்குதிக்கத் திரைவாய் முழங்கும் திருச்செந்தில் வேலவனே!’ (கழி- உப்பங்கழி- நெய்தலின் அடையாளம்) என்பன சில உதாரணங்கள்.

    முத்தப்பருவத்துப் பாடலில் கூறுகிறார்: “குமரனே! உனது அலைவாய் எனப்படும் திருச்செந்தூரில் கடலலைகள் முத்துக்களை வாரி வாரி வீசும். அலைகள் விடாது ஒலியெழுப்பும். கடலிலும், கடற்கரையிலுள்ள உப்பங்கழிகளிலும், அவற்றில் மலர்ந்துள்ள கழுநீர் மலர்களிலும், அக்கழிகளில் உண்டாகும் நீர்ச்சுழிகளிலும், கடற்கரையில் வளர்ந்துள்ள அடர்ந்த தாழைப் புதர்களிலும், இன்னும் பல இடங்களிலும் சங்குகள் வருந்திப்பெற்ற கோடிக்கணக்கான முத்துக்களைக் காணலாம். அத்தகைய வளமுடைய திருச்செந்தூரில் குடிகொண்டிருக்கும் பெருமானே! எமக்கொரு முத்தம் தந்தருளுக,” எனத் தாய் வேண்டுவதாக அமைந்த ஒரு இனிய பாடல்.

    கத்துங் கடலி னெடும்படவிற்

    கழியிற் கழுநீ ரிற்சுழியிற்

    கானற் கரையிற் கரைதிகழும்

    கைதைப் பொதும்பிற் ………

    …………………………………….

    முத்தம் சொரியும் கடலலை’வாய்

    முதல்வா முத்தம் தருகவே’5

    பாலைநிலம் பற்றிய பாடல்:

    திருவிரிஞ்சை முருகன் பி. த. நூலில் ஒரு சப்பாணிப் பருவப்பாடல், ‘பொய்யாமொழிப்புலவர் மதுரையில் சங்கம் புரக்கச் சென்றபோது நடந்த நிகழ்ச்சியைக் கூறுகின்றது. பாலைநிலத்துத் தெய்வம் கொற்றவை ஆவாள்.

    துறையூரைச் சேர்ந்த தமிழ்ப்புலவர் பொய்யாமொழியார்; இவர் பராசக்தி அன்னையையே பாடுபவர்; வேறு தெய்வங்களைப் பாடமாட்டார். முருகன் இவரிடம் தன்மீதும் தமிழ்க்கவிபாடும்படி கேட்க, “பெட்டையையும் பாடி முட்டையையும் பாடுவேனோ?” எனக்கூறி மறுத்துவிட்டார். இப்புலவர் ஒருமுறை மதுரைத் தமிழ்ச்சங்கத்தினைக் காக்கவேண்டிப் புறப்பட்டு மதுரை நோக்கிச் சென்றார். இப்படிப்பட்ட வாய்ப்பிற்காகக் காத்திருந்த முருகன், அவர் செல்லும் காட்டுவழியில் ஒரு வேடச்சிறுவனாக உருக்கொண்டு புலவரை வழிமறித்தான். “நானொரு புலவன்,” எனப் பயந்தவண்ணம் கூறிய புலவரிடம், ஒரு கவிதை பாட வேண்டினான் கள்ளச்சிறுவன். ‘நமது உயிருக்கு இவனால் ஆபத்தில்லை; தமிழின் அருமை உணர்ந்த கள்ளன் போலும்!’ என மகிழ்ந்த புலவரிடம், “என்மீது சுரம்போக்காக ஒரு கவி பாடுக,” என்றான் வேட்டுவச் சிறுவன். “உன் பெயரென்ன அப்பா?” எனக்கேட்ட புலவரிடம், முன்பு அவர் கூறியதனை நினைவில் கொண்டு, “என் பெயர் முட்டை,” என்றான் குமரன். புரிந்துகொள்ளவில்லை புலவர் பெருமகனார்!

    சுரம்போக்குத் துறையாக ஒரு பாடலைப் பாடினார்.

    ‘பொன்போலும் கள்ளிப் பொறிபறக்குங் கானலிலே

    என்பேதை செல்லற் கிசைந்தனளே- மின்போலு

    மானவேள் முட்டைக்கு மாறாய தெவ்வர்போங்

    கானவேள் முட்டைக்குங் காடு.’ 6

    வேடச்சிறுவனாக வந்த முருகன் இதில் பொருட்குற்றம் உள்ளதெனக் கூறினான். வெட்டிப்போட்டாலும் காயாத வேலமுள் நாள்பட்டுக் காய்ந்துவிடும் இயல்பு கொண்டது. அப்படிப்பட்ட முள் கள்ளி வெந்து பொறியாகப் பறக்கும் பாலையில், பச்சையாக வேகாமல் இருந்து காலில் தைக்கும் எனக்கூறுவது பொருந்துமோ? (காய்ந்து உலர்ந்து வெந்தமுள் குத்தவியலாது) இப்படிப்பட்ட பொருட்குற்றம் உடைய பாடலைப் புலவராகிய நீர் பாடலாகுமோ? என்றான் வேடச்சிறுவன். பொய்யாமொழியார் பேச்சற்றுத் திகைத்து நின்றார்.

    வரகவி மார்க்கசகாயதேவர் தாமியற்றிய திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் நூலில் இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார்.

    முருகன் தானொரு பாடலைப் பொய்யாமொழியார் மீது பாடி, பெட்டை- முட்டை பற்றிய நினைவினைப் புலவருக்கு வரச்செய்தான்.

    புலவர் ‘நீ யார்?’ என வினவ, தன் அழகுத் திருவுருவைக் காட்டி, புலவரின் நாவில் தன் வேல்கொண்டு பொறித்து மறைந்த “முருகப்பெருமானே! அறிவிற் சிறந்த சதுரனே!” என முருகப்பிரானை வாழ்த்தி அவனைச் சப்பாணிகொட்ட வேண்டுகிறார் புலவனார்.

    ‘பொய்யா மொழிப்புலவர் மதுரையிற் சங்கம்

    புரக்கவெழு நாள்மறவனாய்

    புறவற வளைத்தெனது பெயர்முட்டை பாடெனப்

    பொன்போலு மென்றுபாட

    வெய்யான பாலைக்கி தேலாது நும்பெயர்வி

    ளம்பென…’7

    முடிவுரை:

    இவ்வாறு நுணுக்கமான பல தமிழ்நயங்களை பிள்ளைத்தமிழ்க் கவிஞர்கள் தாமியற்றியுள்ள பாடல்களிலும் நூல்களிலும் ஆங்காங்கே பொருத்திப் பாடியுள்ளமை நயந்து நோக்கத்தக்கது.

    ______________________________________

    ஆய்வுக்கட்டுரைக்கு உதவிய நூல்கள்:

    1. தொல்காப்பியம்- அகத்திணையியல் – பொருளதிகாரம்

    2. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்

    3. திருப்போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் – சிதம்பர அடிகள்

    4. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் – பகழிக்கூத்தர்

    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் – குமரகுருபரர்

    6. தனிப்பாடல்- பொய்யாமொழிப்புலவர்

    7. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் – வரகவி மார்க்கசகாயதேவர்

    ************

    Share
  • கல்வித்துறை

    பவள சங்கரி

     

    தலையங்கம்

     

    தலைநகர் தில்லியில் ஆக்கப்பூர்வமான ஒரு புதிய முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது பாராட்டிற்குரியது. புற்றீசல் போல பெருகியுள்ள பள்ளிகள் மத்தியில் தில்லியில் உள்ள மூன்று மாநகராட்சிப் பள்ளிகளில் வாரத்திற்கு ஒரு நாள் புத்தகச் சுமை இல்லாத நாளாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. அன்று ஒரு நாள் குழந்தைகள் பள்ளிகளுக்கு புத்தகம் ஏதும் கொண்டு வரவேண்டியதில்லை. இது குழந்தைகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. (smart education) பொலிவுறு கல்வித் திட்டத்தின் கீழ் இதை அறிமுகப்படுத்தியுள்ளனர். மேலை நாடுகளில் 10 ஆண்டுகளுக்கு முன்பே இத்திட்டங்கள் முழுமையாக செயல்படுத்தப்பட்டு +2 வரை படிக்கும் மாணவர்கள் பள்ளிகளுக்கு புத்தகங்கள் கொண்டு செல்ல வேண்டியதில்லை. ஆனால் அவர்களின் அறிவுத்திறன் பன்மடங்கு பெருகும் வகையில் கல்வித் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. வகுப்பில் நடைபெறும் கற்பித்தலும் வீட்டில் அதைப் பயிற்சி கொடுத்தலும், மாணவர்களின் கல்வித்தரம் குறித்த செய்திகளை பெற்றோருக்குத் தெரிவித்தலும் அனைத்தும் கணினி மூலமாகவே நடைபெறுகின்றன. மாணவர்கள் வீட்டுப்பாடங்கள் செய்வதற்கு மடிக்கணினியையே பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர்.. இப்போதுதான் நம் கல்வித் திட்டத்தில் அதுவும் தலைநகரில் உள்ள 3 மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும், வாரத்தில் 1 நாள் மட்டும் இத்திட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்தியா முழுமைக்கும் இத்திட்டம் விரைவில் செயல்படுத்துதல் நலம். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் படி பயிற்றுவிக்கும் பள்ளிகளில் கணினி மூலமாகப் பயிற்றுவிக்கும் இந்த முறை அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்கும்படி செய்வதே சிறந்த கல்வித் திட்டமாகும். தட்டச்சு பயிலும்போது 10 ஆம் வகுப்பு மாணவன் ஆரம்ப நிலையில் ஆரம்பித்து வார்த்தைகள் வந்து சேர்வதற்கே 2 ஆண்டுகள் ஆகிவிடுகின்றன. ஆனால் மேலை நாடுகளில் பயிற்றுவிக்கும் திட்டங்களின்படி மூன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒரு நிமிடத்திற்கு 120 முதல் 140 வரை வார்த்தைகளைப் பதிவிடுவதாகக் கூறப்படுகின்றது. அறிவில் சிறந்த நமது மாணவர்கள் இந்த வளர்ச்சியை அடைவதற்கு ஏற்ப நம் கல்வித் திட்டங்களை வகுக்க வேண்டியது அவசியம். தமிழறிஞர்களின் கல்வியாளர்களின் பங்களிப்பைப் பெற்று நம் மாணவர்களின் தரத்தை உயர்த்த அரசு ஆவண செய்யவேண்டும். பொதுவாக 10 வயதிற்குள் குழந்தைகள் வளர்ந்தவர்களின் அறிவுத் திறனில் 60 விழுக்காட்டிற்கும் மேல் அறிவினைப் பெற்றுவிடுகிறார்கள். அந்த வகையில் குழந்தைகளுக்கு பாரபட்சமில்லாத முறையான கல்வி வளர்ச்சியே, இந்தியாவின் வளர்ச்சி.

     

    Share
  • பிரபஞ்சத்தில்  பெரு வெடிப்புக்கு முன்பு என்ன நேர்ந்தது என்பது பற்றிப் புதிய யூகிப்பு

     

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    ++++++++++++++++

    ஒவ்வொரு பிரபஞ்சத் தோற்ற கோட்பாடும் ஒருவேளை மெய்யாக இருக்கலாம் என்று விஞ்ஞானத் தேடலில் யூகித்து எழுதுவதைத் தவிர நமக்கு எதுவும் உறுதியாகத் தெரியவில்லை என்பதே என் நிலைப்பாடு.

    கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ்

    ஒற்றைத்திரட்டு / ஒற்றைத்திணிவு  [Singularity] ன்பதிலிருந்து வேதாளங்கள் [Dragons] பறந்து வந்திருக்கலாம் என்று எல்லா பௌதிக விஞ்ஞானிகளுக்கும் தெரியும். மேல்நிலைப் பரிமாண விண்மீன் சிதைவில் [Collapsing Higher-Dimensional Star] எழும் பெரு வெடிப்புக் கோட்பாடு  ஒரு புனைவு [Mirage] யூகிப்பே.  உள் விரிவுக் கோட்பாடு [Inflation Theory] சரியே என்று பிளாங்க் முடிவு செய்தாலும், உள் விரிவு எப்படி நேர்ந்திருக்கும் என்னும் வினா எழுகிறது.

    நியாயேஷ் ஆஃப்ஷோர்டி [Niayesh Afshordi, Astrophysicist, Premeter Institute for Theoretical Physics, Waterloo, Ontario, Canada]

    [youtube https://www.youtube.com/watch?v=ScVLrPVnk_E?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=G-fjEY2PRls?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    [youtube https://www.youtube.com/watch?v=rfs1BAn7gI0?version=3&rel=1&fs=1&autohide=2&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&wmode=transparent]

    See the source image

    பெருவெடிப்புத் தோற்றம்

    ++++++++++++++++

    புனித வேத நூல்களில் நாம் காணும் மேன்மையான நியதிகளை நிலைநாட்டி மெய்ப்பிக்கவே, மனித முயற்சிகள் விஞ்ஞானத்தில் மேற்கொள்ளப் பட்டன என்று எனக்குத் தோன்றுகிறது.

    விஞ்ஞான மேதை ஜான் ஹெர்ச்செல் [1792-1871]

    விரியும் பிரபஞ்சத்தைப் பற்றி அறிய ஒரு பிறவிக் காலம் முழுதும் அர்ப்பணித்தாலும் போதாது! மறைந்து கிடக்கும் அகிலத்தின் மர்மங்கள் சிறிது சிறிதாகவே மலர்கின்றன! அநேக புதிய புதிர்களை வரப் போகும் எதிர்கால யுகங்களுக்காக, இயற்கை தனியாக வைத்துள்ளது! எல்லா மர்மங்களையும் ஒரே காலத்தில் விடுவிக்க, இயற்கை ஒருபோதும் நம்மை விடுவதில்லை!

    ஸெனேகா (முதல் நூற்றாண்டு ஞானி)

    பெருவெடிப்புக்கு முன்பு பிரபஞ்ச வெளியில் நேர்ந்தது என்ன?

    பிரபஞ்ச துவக்கத்தின் ஆரம்ப காலத்தில் என்ன இருந்தது என்று இன்னும் விஞ்ஞானிகள் உறுதியாகக் கூற முடியவில்லை.  ரஷ்ய விஞ்ஞானி ஜார்ஜ் காமா யூகித்த பெருவெடிப்பு நியதியைப் பலர் ஏற்றுக் கொண்டிருந்தாலும், துவக்க நிலையில் என்ன இருந்தது, பெருவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பதில் உலக விஞ்ஞானிகள் பல்வேறு கருத்துக்களைக் கொண்டிருந்தார்.   அவை எதுவுமே காரண-விளைவு கோட்பாடுக்கு ஏற்றதாக விளக்கப்பட வில்லை.  பிரபஞ்ச வெளியில் எல்லாம் தோன்றும் முன்பு என்ன இருந்தது ?  2018 மார்ச்சு மாதம் 4 ஆம் தேதி, இந்த மூலாதாரக் கேள்வியை விஞ்ஞானி நீல் திகிராஸ்ஸி டைசன் [Neil deGrasse Tyson] விஞ்ஞான மேதை டாக்டர் ஸ்டீஃபன் ஹாக்கிங்கைக் கேட்ட பொழுது, ஒரு புதிய விளக்கத்தைக் கூறினார்.

    Hawking and Tyson

    அந்தக் கேள்விக்குப் பதில் ஹாக்கிங் கூறும் போது, தான் நம்பும்  பிரபஞ்ச விளிம்பற்ற புதிய கருத்துரைக் [No Boundary Proposal] கோட்பாடை எடுத்துரைத்தார்.  பிரபஞ்சத்தின் விளிம்பு நிபந்தனை  [The Boundary Condition of the Universe]  என்பது,  நமது  பிரபஞ்சம் விளிம்பு வரையறை இல்லாதது [Universe has No Boundary] என்று யூகிப்பதாகும்.  இந்தக் கோட்பாடைப்  புரிந்து கொள்ள, பிரபஞ்ச தொலையியக்கி [Remote Control] எடுத்து “மீள்சுற்று” [Rewind]  விசையைத் தட்டினால், காலம் பின்னோக்கிச் சென்று, பிரபஞ்சம் சுருங்கிக் கொண்டுவரும்.  13.8 பில்லியன் ஆண்டுகள் பின்சென்று, பிரபஞ்சம் ஓர் புள்ளி அணுவாகச் சுருங்கும்.

    See the source image

    அந்தக் அணுக்கடுகுதான் ஒற்றைத்திரட்சி [Singularity]   அல்லது ஒற்றைத்திணிவு நிலை எனப்படுவது.  பூதநிறை உள்ள மிகச் சிறு திரட்சியே  ஏராளமான வெப்பமும், சக்தியும் கொண்டது. அந்த ஒற்றைத் திணிவு நிலையில் நாமறிந்த பௌதிக நியதிகள், காலம் [The Laws of Physics and Time] இயங்கா !  சொல்லப் போனால் காலம் இல்லாது போய்விடுகிறது.  அதாவது பிரபஞ்சம் என்னும் காலவெளி, காலமின்றி, வெறும் வெளிமட்டும் மிஞ்சும்.  பிரபஞ்சம் சுருங்கச் சுருங்க, காலமும் சுருங்கித் தடமின்றி மறைந்து விடுகிறது.  அதாவது பெருவெடிப்புக்கு முன்பு நிகழ்ந்தவற்றை விளக்க முடியாது.  ஏனெனில் அப்போது என்ன நேர்ந்தது என்று அளக்க வழியேதுமில்லை.  பெருவெடிப்புக்கு முன்பு துவக்கத்தில் நிகழ்ந்தவற்றை யூகிக்க முடியாது.  காலமே பெருவெடிப்பில்தான் ஆரம்பமாகிறது.  பிரபஞ்சம் சுருங்கிய துவக்க நிலையில் காலம் தடமின்றிப் போகிறது.

    இந்த விளிம்பற்ற பிரபஞ்சக் கோட்பாடு ஹார்டில்–ஹாக்கிங் நிலை [Hartle – Hawking state]  என்று குறிப்பிடப் படுகிறது.

    இந்திய விஞ்ஞானி ஏற்றுக் கொள்ளாத பெருவெடிப்பு நியதி

    இந்திய விஞ்ஞானி டாக்டர் ஜெயந்த் நர்லிகர் அகிலவியல் துறையில் ஆய்வுகள் புரியும் ஓர் ஆராய்ச்சி விஞ்ஞானி [Cosmology Researcher].  அகிலவியல் ஆய்வு பிரபஞ்சத்தின் பிரம்மாண்டமான அமைப்பைப் பற்றியது.  பிரபஞ்சம் எத்துணை அளவு பெருத்த உடம்பை உடையது ?  அது எத்தகைய உபரிப் பண்டங்களால் ஆக்கப்பட்டது?  ஒரு பெரும் பிரளயத்தில் இந்தப் பிரபஞ்சம் உண்டானதா ?  அந்த முதல் நிகழ்ச்சிக்குப் பிறகு நேர்ந்த தொடர் விளைவுகள் யாவை ?  அண்ட வெளியில் உயிர்ஜீவிகள் எவ்விதம், எங்கே தோன்றின ?  பிரபஞ்சத்தின் இறுதி முடிவுதான் என்ன ?  அகிலாண்டத்தின் மர்மமான, புதிரான, நூதனமான, விந்தையான இந்த வினாக்களுக்குப் பதில் தேடிய முற்கால விஞ்ஞானிகள், தேடிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான தற்கால விஞ்ஞானிகளின் வரிசையில் வருபவர், ஜெயந்த் நர்லிகர்!

    பிரிட்டிஷ் மேதை ஃபிரெட் ஹாயிலுடன் நர்லிகர் செய்த ஆராய்ச்சிகள்

    பிரபஞ்சத்தின் தோற்றத்தை விளக்கிய பிரிட்டனின் உன்னத விஞ்ஞானி டாக்டர் ஃபிரெட் ஹாயில்தான் [Dr. Fred Hoyle (1915-2001)] “பொதுநிலை அமைப்புப் பிரபஞ்ச பெரு வெடிப்பு நியதி” [Standard Theory of the Origin of Universe (The Big Bang Theory)] என்னும் பதங்களை முதலில் பறைசாற்றியவர்! ஆனால் அந்த நியதியை ஏற்றுக் கொள்ளாது ஹாயில் புறக்கணித்தார்!  அதற்கு மாறாக ஃபிரெட் ஹாயில் தனது “நிரந்தர நிலை அமைப்புப் பிரபஞ்சத்தை” [Steady State Theory of the Universe] பிரகடனம் செய்தார்!  ஆனால் தற்போது ஹாயிலின் கோட்பாடை நம்புவோர் எண்ணிக்கை சிறிது சிறிதாய்க் குறிந்து கொண்டே வருகிறது ! பெரு வெடிப்பு நியதியே பலராலும் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கிறது.

    பிரபஞ்சப் பெரு வெடிப்பை விளக்கிய ரஷிய விஞ்ஞானி

    பிரபஞ்சத்தின் பிறப்புக் கோட்பாடுகளில் ஒன்றான ‘பெரு வெடிப்பு நியதியை ‘ [Big Bang Theory] உறுதியாக நம்பி அதை விருத்தி செய்த முன்னோடிகளான, ரஷ்ய விஞ்ஞானி அலெக்ஸாண்டர் பிரைடுமான் [Alexander Friedmann], அமெரிக்க விஞ்ஞானி எட்வின் ஹப்பிள் [Edwin Hubble], பிரிட்டிஷ் விஞ்ஞானி பிரெட் ஹாயில் [Fred Hoyle] ஆகியோருள் முக்கியமானவர் ரஷ்ய விஞ்ஞானி, ஜார்ஜ் காமாவ்.

    பிரபஞ்சத்தின் முழுத் தோற்றத்தைப் புரிந்து கொள்ள வேண்டு மானால் அதன் மூலமான நுண்ணிய பரமாணுக்களையும், விரிந்து குமிழி போல் உப்பும் அதன் பிரமாண்ட வடிவத்தையும் பற்றிய எல்லாக் கருத்துக்களைத் தனித்தனியாக அறிய வேண்டும்! பிரபஞ்சத்தின் முதல் தோற்றம் ஒரு மாபெரும் வெடிப்பில் [Big Bang Theory] உண்டானது என்பதற்கு முதன் முதல் நிரூபணத்தைக் காட்டியவர் ஜார்க் காமாவ்! அதாவது பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு ஓர் பேரளவு வெடிப்பு நிகழ்ச்சியில் [Colossal Explosion] பிரபஞ்சம் தோன்றி விரிவடைந்து வந்துள்ளது என்ற ஒரு கருத்தை ஆதரித்து, அதற்கு விளக்கம் அளித்து மெய்ப்பித்தவர்களில் முதல்வர், ஜார்ஜ் காமாவ்! பெரு வெடிப்புக்குப் பின்பு பிரபஞ்சம், பின்புல நுண்ணலைக் கதிர்வீச்சை [Background Microwave Radiation] உண்டாக்கி யிருக்க வேண்டும் என்று உறுதியாகக் கூறி, அதையும் நிரூபித்தும் காட்டினார்!

    பெருவெடிப்பு வளர்ச்சி

    1936 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜார்ஜ் காமாவின் மிக்க விஞ்ஞானச் சாதனைகள் பிரபஞ்சத்தின் தோற்றம் பற்றியும், விண்மீன்களின் பிறப்பு, வளர்ச்சியைப் பற்றியும் சார்ந்திருந்தன. 1939 இல் விரியும் பிரபஞ்சத்தின் மாதிரிக் [Model of the Expanding Universe] கோட்பாட்டை ஆதரித்து அதை அபிவிருத்தி செய்தார். அத்துடன் நெபுளாக்க ளின் பிறப்பு [Origin of Nebulae], ராட்சதச் செம்மீன்கள் [Red Giant Stars] சக்தியை உற்பத்தி செய்யும் முறைகள் ஆகியவற்றை ஆராய்ந்தார். விண்மீன்கள் வெடிக்கும் போது, அவற்றிலிருந்து நியூட்ரினோ துகள்கள் [Neutrino Particles] வெளியேறுவதை 1940 இல் ஆய்வு செய்து, தான் ஆக்கிய பூதநோவாவின் நியூட்ரினோ நியதியை [Neutrino Theory of Supernova] வெளியீடு செய்தார்.

    ஜார்ஜ் காமாவின் விஞ்ஞானச் சாதனைகள்

    1948 இல் விஞ்ஞானி ரால்·ப் ஆல்·பருடன் [Ralph Alpher] காமாவும் சேர்ந்து, யூகிப்பட்ட பெரு வெடிப்புக்கு [Postulated Big Bang] நிகழ்ச்சிக்கு முன்பு, பிரபஞ்சத்தின் நிலைமை என்ன என்று ஆராய்ந்ததில் எஞ்சிய நுண்ணலை வெப்பவீச்சு [Residual Microwave Radiation] இருப்பதைக் கண்டார்கள்! அவர்களது அவ்வரிய கண்டுபிடிப்பு மெய்யானது என்று 1965 இல் பிரின்ஸ்டன் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், தாமும் கண்டு உறுதிப்படுத்தினர்!

    எட்வின் ஹப்பிள் விண்ணோக்கி

    விண்வெளியை வில்லாய் வளைக்க முடியுமா ? பிரபஞ்சத்தின் முடிவுக்கும் ஒழுங்கீனக் கோட்பாடு எனப்படும் ‘என்ட்ராப்பி நியதிக்கும் ‘ [Theory of Entropy] என்ன தொடர்பு ? அண்ட வெளியில் ஊடுறுவிச் செல்லும் ராக்கெட் ஏன் சுருங்குகிறது ? விண்மீன்கள் வெடிப்பதற்கு ஆதி அடிப்படையும், அவற்றுக்குக் காரணங்கள் என்னவென்று நாம் அறிந்து கொண்டதின் விளைவென்ன ? சந்ததியின் மூலவிகள் [Genes] புரியும் விந்தைப் புதிர்களைப் பற்றி நவீன விஞ்ஞானம் கண்டு பிடித்தவை என்ன ? உலகத்தைப் பற்றி நாம் அறிந்ததை, ‘இலக்கங்களின் விதிப் பிரச்சனைகள் ‘ [Problems in Laws of Numbers] எவ்விதத்தில் பாதிக்கின்றன ? இத்தனை வினாக்களையும் தான் எழுதிய ‘ஒன்று, இரண்டு, மூன்று.. முடிவின்மை ‘ [One, Two, Three…Infinity] என்னும் நூலில் எழுப்பியவர், ரஷ்ய அமெரிக்க விஞ்ஞானி ஜார்ஜ் காமாவ் [George Gamow]! ரஷ்யாவிலே பிறந்து அமெரிக்கக் குடியினராகிய ஜார்ஜ் காமாவ் அணுக்கரு பெளதிகம் [Nuclear Physics], பிரபஞ்சவியல் [Cosmology] பெளதிகம், மூலக்கூறு உயிரியல் ரசாயனம் [Molecular Biochemistry] ஆகிய முப்பெரும் பெரு வெடிப்பு நியதியின்படி, பிரபஞ்சம் முதற் சில இம்மி வினாடிகளில் [microseconds] அதி விரைவாக விரிந்து விட்டது! ஒரே ஓர் உச்சவிசை [Force] மட்டும் முதலில் இருந்து, பிரபஞ்சம் விரிந்து போய்க் குளிர்ந்ததும் அந்த ஒற்றை விசையே, பின்னால் நாமறிந்த ஈர்ப்பியல் விசை [Gravitational Fprce], மின் காந்த விசை [Electromagnetic Force], அணுக்கரு வலுத்த விசை [Strong Nuclear Force], அணுக்கரு நலிந்த விசை [Weak Nuclear Force] ஆகிய நான்கு பிரிவுகளாய் மாறியது!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் பிரபஞ்சம்

    விஞ்ஞானிகள் ஒளித்துகள் யந்திரவியலையும் [Quantum Mechanics], ஈர்ப்பியலையும் ஒருங்கே பிணைக்கும் ஒரு பொது நியதியைத் தேடி வருகிறார்கள்! இதுவரை யாரும் அதைக் கண்டு பிடிக்க முடிய வில்லை! புதிதான ‘இழை நியதி ‘ [String Theory]. அவ்விரண்டையும் பிணைக்கும் என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். ஈர்ப்பியல் விசையை மற்ற மூன்று வித விசைகளுடன் பிணைத்துக் கொள்ள ‘இழை நியதி ‘ முயல்கிறது! ஆனால் பெளதிக விஞ்ஞானிகள் இப்போது இந்த நான்கு வித விசைகளையும் ஒருங்கே பிணைத்து விளக்கும் ‘மகா ஐக்கிய நியதி ‘ [Grand Unified Theory, GUT] ஒன்றைத் துருவிக் கண்டு பிடிக்க முற்பட்டு வருகிறார்கள்!

    சோப்புக் குமிழிபோல் உப்பிடும் [Inflationary Model] பிரபஞ்சம், அந்நிலை முடிந்ததும் மெதுவாகவே விரிகிறது! கோளமாய் விரியும் பிரபஞ்சத்தின் விளிம்பு திறந்த வெளிக்கும், மூடிய வெளிக்கும் இடையே அமைகிறது! பிரபஞ்சம் திறந்த வெளியாக இருந்தால், எப்போதும் அது விரிந்து, விரிந்து, விரிந்து போய்க் கொண்டே யிருக்கும்! மூடிய விளிம்பாகப் பிரபஞ்சம் இருந்தால், அதன் விரிவு நிலை ஒரு காலத்தில் நின்று விடும்! பிறகு அது சுருங்க ஆரம்பித்து, திணிவு அடர்த்தி மிகுந்து, இறுதியில் வெடித்துச் சிதறிவிடும்! பிரபஞ்சம் மூடிய கோளமா அல்லது திறந்த வெளியா என்பது அதன் திணிவு [Density], அன்றி பளு அடர்த்தியைச் [Concentration of Mass] சார்ந்தது! பிரபஞ்சம் அடர்த்தி மிகுந்த பளுவைக் கொண்டிருந்தால், அதனை மூடிய கோளம் என்று கூறலாம்!

    உப்பி விரியும் பிரபஞ்சம்

    பிரபஞ்சத்தின் பெரு வெடிப்பு நிகழ்ச்சிக்கு முன்பு எந்த நிலை இருந்தது என்று, ஸ்டா·பன் ஹாக்கிங் [Stephen Hawking] போன்ற விஞ்ஞான மேதைகள் கேள்வி எழுப்பி யிருக்கிறார்கள்! பெரு வெடிப்பு நியதியில் பிரபஞ்சத்தின் முற்கால நிலை பற்றி எந்த விளக்கமும் இல்லை! காலக் கடிகாரமே பெரு வெடிப்பிற்கு பின்பு ஓட ஆரம்பித்திருக்கலாம்! ஆகவே பெரு வெடிப்புக்கு முன்பு என்ன இருந்திருக்கும் என்று எழும் கேள்விகளுக்கு ஒருகாலத்தில் பதில் கிடைக்கலாம் !

    பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தும் நிகழ்ச்சிகள்

    பிரபஞ்சம் பெரு வெடிப்பிற்குப் பிறகு விரிந்து கொண்டே குளிர்ந்து போகிறது. பெரு வெடிப்பிற்கு ஓரு வினாடி கழித்துப் புரோட்டான்கள் உண்டாயின. முதல் மூன்று நிமிடங்களில் புரோட்டான், நியூட்ரான்களும் பிணைந்து, ஹைடிரஜனுடைய ஏகமூலமான [Isotope] டியூடிரியம் [Deuterium], அடுத்து எளிய மூலகங்களான ஹீலியம், லிதியம், பெரிலியம், போரான் [Helium, Lithium, Beryllium, Boron] ஆகியவை உண்டாயின! விண்வெளியில் மித மிஞ்சிய அளவு ஹீலியம் இருப்பது, பெரு வெடிப்பு நியதியை மெய்ப்படுத்தி உறுதிப் படுத்துகிறது. டியூடிரியம் பிரபஞ்சத்தில் பேரளவில் பரவி யிருப்பது, அகிலத்தின் அண்டத் திணிவைக் [Density of Matter] கணிக்க அனுகூலமாய் இருக்கிறது!

    பிரபஞ்சப் பின்புலக் காட்சி

    பெரு வெடிப்பு ஏற்பட்டு ஒரு மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபஞ்சத்தின் உஷ்ணம் 3000 டிகிரி C அளவுக்குக் குறைந்தது! அப்போது புரோட்டான்களும் எலக்டிரான்களும் சேர்ந்து ¨†டிரஜன் அணுக்கள் உண்டாயின. ஹைடிரஜன் அணுக்கள் ஒளியின் குறிப்பிட்ட சில அலை நீளங்கள், நிறங்கள் ஆகியவற்றை எழுப்பவோ அன்றி விழுங்கவோ செய்யும்! அவ்வாறு உண்டான அணுக்கள், தனித்த எலக்டிரான்ளுக்கு இடையூறு செய்யும், ஒளியின் மற்ற அலை நீளங்களை வெகு தூரத்திற்கு அப்பால் தள்ளி விடுகின்றன. இந்த மாறுதல் வெப்பவீச்சை விடுவித்து இன்று நாம் காணும்படிச் செய்கிறது! பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு குளிர்ந்த அந்த ‘அகிலவியல் பின்புல வெப்பவீச்சு ‘ [Cosmic Background Radiation] சுமார் 3 டிகிரி Kelvin [3 K (-273 C/-454 F)]. 1964 இல் முதன் முதல் அகிலவியல் பின்புல வெப்பவீச்சைத் தேடிக் கண்டு பிடித்த அமெரிக்க வானியல் மேதைகள் இருவர்: ஆர்னோ பென்ஸையாஸ், ராபர்ட் வில்ஸன் [Arno Penzias & Robert Wilson].

    நான்கு வித அகில உந்து விசைகள்

    பெரு வெடிப்புக்குப் பிறகு பின்புல வெப்ப வீச்சு

    1989-1993 ஆண்டுகளில் தேசிய வானியல் விண்வெளி ஆணையகம், நாசா [NASA, National Aeronautics & Space Administration] ‘அகிலப் பின்புல உளவி ‘ [Cosmic Background Explorer, COBE] என்னும் விண்வெளிச் சிமிழை [Spacecraft] ஏவி, அண்ட வெளியில் அகிலப் பின்புல வெப்பவீச்சைத் தளப்பதிவு [Mapping] செய்தது. அந்த தளப்பதிவு ‘பெரு வெடிப்பு நியதி ‘ முன்னறிவித்தபடி மிகத் துள்ளியமாக பின்புல வெப்ப வீச்சு அடர்த்தியை [Intensity of the Background Radiation] உறுதிப் படுத்தியது! அத்துடன் அகிலவியல் பின்புல வெப்பவீச்சு சீராக நிலவாது [Not Uniform], சிறிது மாறுபட்டுக் காணப் பட்டது! அந்த மாறுதல்கள் பிரபஞ்சத்தில் காலக்ஸிகள் [Galaxies], மற்ற அமைப்பாடுகளின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்க் கருதப் படுகின்றன!

    பின்புல வெப்பவீச்சு பிரபஞ்சப் பெரு வெடிப்பிற்குப் பிறகு எஞ்சிய நீண்ட கால விளைவு! ஜெர்மன் விஞ்ஞானி மாக்ஸ் பிளான்க் [Max Planck (1858-1947)] கருங்கோளக் கதிர்வீச்சை [Black Body Radiation] ஆராய்ந்து எழுதிய, ‘பிளான்க் கதிர்வீச்சுக் கணிப்பாடு [Planck ‘s Radiation Formula] மூலம் உட்சிவப்பு, நுண்ணலை, வானலை [Infrared, Microwave, Radio Waves] ஆகியவற்றின் அலை நீளங்களைத் தனியே கணக்கிட்டு விடலாம்! அவற்றின் கூட்டமைப்பே பின்புலக் கதிர்வீச்சுகளின் அடர்த்தியாகக் [Intensity of Background Radiation] காணப் படுகிறது. ‘ஓர் குறித்த உஷ்ண நிலையில் கதிர்வீச்சு அடர்த்திக்கும், அதன் அலை நீளத்திற்கும் உள்ள ஓர் ஒப்பான உறவை ‘ மாக்ஸ் பிளான்க் வளைகோடு முன்னறிவிக்கிறது. பெரு வெடிப்பின் பின் தங்கிய பின்புலக் கதிர்வீச்சு 3 டிகிரி K [-270 C/-450 F] உஷ்ண நிலையில், மாக்ஸ் பிளான்க் முன்னறிவித்த வளைகோட்டை வியக்கத் தக்கவாறு ஒத்துள்ளது! ஏறக்குறைய பின்புலக் கதிர்வீச்சு பிரபஞ்சத்தில் எத்திசையிலும் ‘சம வெப்பநிலை ‘ [Isotropic State] கொண்டுள்ளதாக அறியப் படுகிறது.

    ஹப்பிள் தொலைநோக்கு ஆழ்நீட்சி

    ஆழ்வெளியில் ஒளிவீசும் பால்மய காலக்ஸி, நெபுளாக்கள்

    ஆதியின் முதல் பிரளயமாய்த் தோன்றிய பெரு வெடிப்பின் [Big Bang] விளைவாய் 10 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பிறந்தவையாக காலக்ஸிகள் கருதப் படுகின்றன! பிரபஞ்ச வெளியில் விண்மீன் மந்தைகள் கொண்ட காலக்ஸிகள் சீரான அமைப்புத் தீவுகளாய் உண்டாக வில்லை! அகிலத்தின் ஆக்கிரமிப்பு விசையான ஈர்ப்பியல் [Gravitation] பண்பு இழுத்து இணைத்துக் கொண்ட தீவுக் கூட்டங்களாய் அவை தென்படுகின்றன! ஒரு பில்லியன் ஒளிமயத் தீவுகள் அல்லது விண்மீன் பூத மந்தைகள் [Giant Clusters of Stars] பிரபஞ்சத்தில் உள்ளதாக ஊகிக்கப் படுகிறது. அந்த ஒளிமயத் தீவுகளே காலக்ஸிகள் [Galaxies] என்று விஞ்ஞானிகளால் அழைக்கப்படுபவை.

    ஒவ்வொரு காலக்ஸியிலும் 100 பில்லியன் விண்மீன்கள் கூடி யுள்ளன என்று கணிக்கப் பட்டுள்ளது! அத்தகைய ஒரு சுய ஒளிமீனே நமக்குச் சுடர்தரும் பரிதி! நமது சூரிய மண்டலம் நகரும் காலக்ஸியைக் கொண்ட பால்மய வெளியில் [Milky Way] ஏராளமான மற்ற காலக்ஸிகளும் இருக்கின்றன! காலக்ஸிகளின் இடைவெளிகள் நினைத்துப் பார்க்க முடியாத தொலைவு தூரம்! நமது பால்மய வீதிக்கு நெருங்கிய காலக்ஸி 1.9 மில்லியன் ஒளியாண்டு தூரத்தில் உள்ளது! [Light Years -Distance light covers in a year at the rate of 18600 miles/sec]. காலக்ஸித் தீவுகள் நீள்வட்ட உருவத்திலோ அல்லது சுருள் வடிவத்திலோதான் [Elliptical or Spiral Shape] தோன்றும்! ஒருவித ஒழுங்கு வடிவமும் இல்லாத காலக்ஸிகள், பிரபஞ்சத்தில் மிக மிகக் குறைவு.

    பல்வேறு ஒளிமந்தைத் தோற்றம்

    பிரபஞ்ச விரிவு பற்றி மாறான ஐன்ஸ்டைன் கருத்து.

    1915 ஆம் ஆண்டில் ஒப்பியல் நியதியை ஆக்கிய ஆரம்ப சமயத்தில் ஐன்ஸ்டைன் பிரபஞ்சம் நிலையானது என்று நம்பினார்! பெரு வெடிப்பு நியதி வெளியாகி, பிரபஞ்சம் சோப்புக் குமிழிபோல் உப்பி விரிகிறது என்னும் கருத்தை முதலில் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொள்ளத் தயங்கினார்! அவரது பொது ஒப்பியல் நியதித் தளவியல் சமன்பாடுகளின் தீர்வுகளிலிருந்து பெரு வெடிப்பு நியதி தோன்ற ஓர் கூட்டமைப்பு [Framework] உருவானது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் இன்றும் ஒப்பியல் நியதியின் பல விபரங்கள் மாற்றப் பட்டு வருகின்றன! நியதிச் சமன்பாட்டில் பிரபஞ்சம் விரிகிறதா அல்லது சுருங்குகிறதா என்பதை விளக்க வந்த இடத்தில், ஐன்ஸ்டைன் ஓர் நிலை யிலக்கத்தைச் [Constant] சேர்த்ததால், விரிவும் சுருக்கமும் கழிவு பட்டுப் போயின! பின்னால் பிரபஞ்சம் விரிகிறது என்ற கருத்துக்கள் உறுதியான போது, அகில நிலை யிலக்கத்தைச் [Cosmological Contant] இடையில் நுழைத்தது, ‘தனது மாபெரும் தவறு ‘ என்று ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் ஒப்புக் கொண்டார்!

    Big bang

    Click to view large image

    Big Bang Events

     

    (தொடரும்)

    *********************

    தகவல் :

    Picture Credit : 1. Astronomy (August 21, 2007) 2. Universe 6th Edition (2002) 3. National Geographic Encyclopedia of Space (2005) 5. 50 Years of Space (2004)

    1. Astronomy Magazine : 50 Greatest Mysteries of the Universe (Aug 21, 2007)

    2. Universe By Roger Freedman & William Kaufmann III (2002)

    3. National Geographic Encyclopedia of Space By Linda Glover.

    4. The World Book Atlas By World Book Encyclopedia Inc (1984)

    5. Scientific Impact of WMAP Space Probe Results (May 15, 2007)

    6. BBC News – Hubble Obtains Deepest Space View By Dr. David Whitehouse, Science Editor (Jan 16, 2004)

    7. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40301192&format=html(பிரபஞ்ச விரிவை நோக்கிய எட்வின் ஹப்பிள்)

    8. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40310231&format=html(ஜான் ஹெர்ச்செல் கண்டுபிடித்த பால்மய வீதி காலக்ஸி, நெபுளாக்கள்!

    9. http://www.thinnai.com/?module=displaystory&story_id=40211102&format=html(பிரபஞ்சப் பிறப்பை விளக்கிய ஜார்ஜ் காமாவ் (George Gamow1904-1968)

    10. https://en.wikipedia.org/wiki/Big_Bang  [May 9, 2016]

    11.  https://www.space.com/37114-neil-tyson-receives-hawking-medal.html [June 7, 2017]

    12. https://www.nextbigfuture.com/2018/03/hawking-talks-about-no-clear-big-bang-and-no-boundary-to-space-time.html  [March 2, 2018]

    13.  https://www.popsci.com/stephen-hawking-neil-degrasse-tyson-big-bang [March 2, 2018]

    14.  stephen hawking says he knows what happened before the big bang

    15. https://www.mirror.co.uk/science/professor-stephen-hawking-says-knows-12128613  [March 6, 2018]

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com) March 10, 2018  [R-2]

    Share
  • கேசவ் வண்ணம் கிரேசி எண்ணம்

    ’’பள்ள மதைநோக்கிப் பாய்கின்ற வெள்ளமென
    கொள்ளிடத் தானிருகால் கொள்கையாய் -உள்ளமே
    கள்ளமில்லா நம்பிக்கை கண்மூடக் கும்பிடு
    வள்ளல் பெரும்பசுவாய் வாழ்வு’’….!

    ” எதற்கென்ற கேள்வி முதற்கொண்டு மாயை
    உதிக்கின்ற ஞானமே எல்லாம் -மதித்துத்
    துதிக்கின்ற நானும் விதிக்கின்ற நீயும்
    நதிக்கரை நாணல்நீர் நட்பு”…கிரேசி மோகன்….

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஆர்பரித்து பார்த்தனே, மேற்புரத்தில் ஆடுநீ!
    பார்ப்பவர் கண்ணுக்குப் பற்றுதல்போல், -நீர்பரப்பாய்
    அஞ்சின் அலைகளற்ற நெஞ்சிருக்க, வைக்கலாம்
    பஞ்சுக்(கு) அருகில் பிழம்பு….!

    இல்லாத ஒன்றை இருப்பதாய்க் காட்டிடும்
    பொல்லாத நெஞ்சமொரு போக்கிரி -வில்லாளி
    ஆகவே ஆடாதே மோகவாய் ஆட்டத்தை!
    யோகமாம் கீதை எடு….கிரேசி மோகன்….!

    Share
  • உறவுகள் மேம்பட…!

    – ஆ. செந்தில் குமார்

    உதிர்க்கின்ற கடுஞ்சொல்லால்
    உறவு நிலைக்குமா?
    காண்கின்ற குற்றத்தால்
    சுற்றம் நிலைக்குமா?

    கடுகடுத்த முகத்தைக் கண்டால்
    குடும்பம் மகிழுமா?
    சிடுசிடுக்கும் பேச்சாலே
    சிந்தை குளிருமா?

    முணுமுணுக்கும் வார்த்தைகளால்
    முகங்கள் மலருமா?
    பசப்பு மொழி பேசினாலே
    பாசம் கிடைக்குமா?

    தந்திரங்கள் கையாண்டால்
    தந்தை மகிழ்வாரா?
    தறிகெட்டுத் திரிந்தாலே
    தாய் மகிழ்வாரா?

    நயவஞ்சகம் கொண்டிருந்தால்
    நட்பு நிலைக்குமா?
    நீதி நேர்மை இல்லையென்றால்
    நண்பன் கிடைப்பானா?

    செருக்கு கொண்ட கணவனாலே
    வாழ்வு இனிக்குமா?
    அகந்தை கொண்ட மனைவியாலே
    அமைதி கிடைக்குமா?

    அன்பு என்ற ஆணி வேரை
    உறுதிப் படுத்துவோம்!
    உறவு என்ற ஆலமரத்தை
    தழைக்கச் செய்குவோம்!

     

    Share
  • சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்

    சர்வாதிகாரத்தை நோக்கி நகரும் உலகம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    உலகில் மிகவும் தாழ்ந்து போயிருந்த அமெரிக்காவின் படிமத்தை உயர்த்த வேண்டும் என்று விரும்பி அதையே தன் தேர்தல் வாக்குறுதியாக வைத்துத் தேர்தல் பிரச்சாரம் செய்த ஒபாமா தேர்தலில் ஜெயித்து ஜனாதிபதி ஆன பிறகு தன் விருப்பத்தில் ஓரளவு வெற்றியும் பெற்றார் என்று கூறலாம். சில நாடுகளுடனான அமெரிக்காவின் உறவைப் பலப்படுத்தினார்; அமெரிக்கா பல காலமாக வன்மம் பாராட்டிவந்த கியூவுடனான உறவையும் சீர்படுத்த நிறைய முயற்சிகள் செய்தார். அமெரிக்கா ஈடுபட்டிருந்த போர்களில் ராணுவத்தின் அளவைக் குறைத்தார். மொத்தத்தில் அமெரிக்கா உலக நாடுகளின் போலீஸ்காரன் அல்ல என்று மற்ற நாடுகள் உணரும்படி செய்ய முயற்சிகள் பல செய்தார்.

    ஆனால் ஒபாமாவிற்குப் பின் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற ட்ரம்ப் ஒபாமா உள்நாட்டிலும் அகில உலக அளவிலும் செய்த எல்லாச் சீர்திருத்தங்களையும் ஒவ்வொன்றாக ஒழித்து வருகிறார். அமெரிக்காவின் சட்டாம்பிள்ளைத் தனத்தை திரும்பக் கொண்டுவர முயன்று வருகிறார். இவர் பதவியை விட்டு விலகும் முன் அமெரிக்காவின் படிமத்தை உலக நாடுகளிடையே வெகுவாகக் குறைத்துவிடுவார்போல் தெரிகிறது. அடாவடித்தனமாக இவர் காரியங்கள் செய்தாலும் இன்னும் இவருக்கென்று நிறைய ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் என்று அறியும்போது மிகவும் பயமாக இருக்கிறது.

    உலக அரங்கில் இப்போது நிறைய சர்வாதிகாரிகள் இருக்கிறார்கள்; அந்த எண்ணிக்கை இப்போது கூடிக்கொண்டு போவதுபோல் தெரிகிறது. ஏற்கனவே சர்வாதிகாரிகளாக இருந்த ரஷ்யாவின் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜான் அர்ன் ஆகியோரோடு துருக்கியின் எர்டோவன், எகிப்தின் ஸிஸி என்று இன்னும் பலர் உருவாகி வருகிறார்கள்.

    சீனா கம்யூனிஸ்ட் நாடு என்று தன்னைக் கூறிக்கொண்டாலும் அங்கும் ஒரு வகையான சர்வாதிகார ஆட்சிதான் நடந்துகொண்டிருக்கிறது. ஆனால் இதுவரை பத்து வருடங்களுக்கொரு முறையாவது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதுத் தலைவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வார். இப்போது அந்த ஏற்பாட்டையும் தகர்த்தெறிவதுபோல் சீனாவின் ஜனாதிபதி ஷி ஜின் பிங், சீன ஜனாதிபதிகள் இரண்டு முறை மட்டுமே பதவியில் இருக்க முடியும் என்ற அரசியல் சட்டத்தை மாற்றப் போவதாகச் செய்தி வந்திருக்கிறது. அப்படியென்றால் அவர் ஆயுள் முழுவதும் ஜனாதிபதியாக நீடிப்பார் என்பது உறுதியாகிறது. இது சீனாவுக்கும் மற்ற நாடுகளுக்கும் எவ்வளவு பெரிய ஆபத்தை விளைவிக்கலாம் என்று உலகத் தலைவர்கள் பலர் அஞ்சுகிறார்கள். சீன மக்கள் இப்போது அவர்களுக்குள்ள ஒரு சில மனித உரிமைகளையும் இழக்கலாம் என்ற அச்சமும் சீனாவிலும் சீனாவிற்கு வெளியிலும் பரவி வருகிறது.

    இப்படிப் பலர் அஞ்சினாலும் சீனாவுடனான வர்த்தகம் பாதிக்கப்படலாம் என்று அஞ்சிப் பல நாட்டுத் தலைவர்கள் அது பற்றி எந்தக் கருத்தும் கூறவில்லை. சென்ற ஜனவரி மாதம் பிரான்ஸ் தலைவர் மேக்ரான் சீனாவுக்கு விஜயம் செய்தபோது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் தன் வர்த்தக உறவுகளை சீனா பலப்படுத்திக்கொள்வதின் அபாயத்தைப் பற்றி எச்சரித்தாலும் சீன அரசு தன் மக்களை நடத்தும் முறை பற்றிச் சாதுர்யமாக எதுவும் சொல்லவில்லை. ஜப்பானுக்கும் சீனாவுக்கும் இப்போதைக்கு உறவு அவ்வளவு சுமுகமாக இல்லையென்றாலும் ஜப்பான் கூட ஷி ஜின் பெங்கின் ஆட்சி அவருடைய ஆயுள் முழுவதும் இருக்கும் என்பது பற்றி எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. சீனா ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவது பற்றி ஆஸ்திரேலியா குறை சொன்னபோது சீனா திருப்பிப் பதிலடி கொடுத்ததால் இப்போது சீனாவில் வரக்கூடிய அரசியல் மாற்றம் பற்றி எதுவும் கூற ஆஸ்திரேலியா தயாராக இல்லை. இதற்குக் காரணம் சீனாவுடனான வர்த்தக உறவுகள்தான். (இந்தியா எப்படி சீனாவின் சர்வதிகாரம் நோக்கி நகரும் இந்த மாற்றத்திற்கு எதிர்வினை ஆற்றியது என்று தெரியவில்லை. மோதியின் கருத்து என்னவென்று தெரியவில்லை.)

    மற்ற நாடுகள் இம்மாதிரி நடந்துகொள்ளும் வேளையில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அது பற்றிக் கருத்துக் கூறியிருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. நண்பர்களுடன் தனிப்பட்ட சந்திப்பின்போது ட்ரம்ப், ‘ஷி கின் பிங் ஆயுளுக்கும் சீனாவின் ஜனாதிபதி ஆகலாம். கேட்கவே நன்றாக இருக்கிறது. ஒரு நாள் அமெரிக்காவும் இதை முயன்று பார்க்கலாம்” என்று கூறியிருக்கிறார். தனிக் கூட்டத்தில் இப்படி ட்ரம்ப் கூறியிருந்தாலும் அது எப்படியோ வெளியே வந்துவிட்டது. அமெரிக்கா சுமார் முன்னூற்று ஐம்பது வருடங்களுக்கு முன்புதான் நாடாக உருவானது. அப்போது அவர்கள் எழுதிய அரசியல் சாசனத்தின்படி அமெரிக்காவில் ஒருபோதும் சர்வாதிகார ஆட்சி ஏற்படாது என்று உறுதிப்படுத்திக்கொண்டார்கள். மேலும் அமெரிக்கா உலகம் முழுவதிலும் ஜனநாயகத்தின் ஒளிவிளக்கு என்று பெயர் வாங்கியிருக்கிறது. இந்த நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றிருக்கும் ட்ரம்பின் மனதில் இப்படி ஒரு ஆசை ஏற்பட்டிருக்கிறதே என்று நினைத்தால் எவ்வளவு கீழ்த்தரமான சிந்தனை உள்ள மனிதர் ட்ரம்ப் என்றுதான் எண்ண வேண்டியிருக்கிறது. சென்ற நவம்பர் மாதம் சீனாவுக்குச் சென்றிருந்த ட்ரம்ப்பிற்கு வெகு விமரிசையாக வரவேற்பு அளிக்கப்பட்டது அதில் உச்சிகுளிர்ந்த ட்ரம்ப் ஷி ஜின் பிங்கை இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அவரைப் புகழ்ந்து தள்ளியிருக்கிறார். மற்ற நாடுகள் வர்த்தக உறவுகளுக்காகச் சீனாவை எதிர்க்க முடியாமல் இருக்க, ட் ரம்ப்போ சீனாவின் ஷி ஜின் பிங்கை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். இவரை ஜனாதிபதியாக தேர்ந்தெடுத்த அமெரிக்க மக்களை என்னவென்று சொல்வது. இவரைப் போன்றவர்களிடமிருந்தும் மற்ற சர்வாதிகாரிகளிடமிருந்தும் இறைவன் உலகைக் காக்கட்டும்.

    நாகேஸ்வரி அண்ணாமலை

    https://www.facebook.com/a.nageswari

    https://twitter.com/a_nageswari

    Share
  • கவனம் பெறாத உ.வே.சா. வின் பாடத்திட்ட விளக்கவுரை

    கவனம் பெறாத உ.வே.சா.வின் பாடத்திட்ட விளக்கவுரை

    முனைவர் இரா.வெங்கடேசன் , இணைப்பேராசிரியர், இந்திய மொழிகள் மற்றும்  ஒப்பிலக்கியப் பள்ளி , தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர் – 10.

    1937 ஆம் ஆண்டு சென்னையில் நடந்த பாரதீய சாகித்திய பரிஷத்தின் மாநாட்டில் மகாத்மா காந்தி அவர்கள் தலைமை வகித்தபோது உ.வே.சாமிநாதையர் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள் தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. அந்த வாய்ப்பு எப்போது கிடைக்குமோ என்று சொன்னாராம். தமிழ் படித்த கற்றோரையும் மற்றோரையும் ஈர்த்தவர் உ.வே.சாமிநாதையர் அவர்கள். சங்க இலக்கியப் பதிப்பு முன்னோடியான இவர் அந்தக் காலத்தில் பி.ஏ. படித்த மாணவர்களுக்குப் பாடமாக இருந்த தமிழ்ப் பாட நூல்களுக்கு விளக்கவுரை எழுதியிருக்கிறார். புறநானூறு முதலான பாடத்திட்டப் பகுதிகளுக்கு மிக உன்னதமான விளக்கவுரை எழுதியிருக்கிறார். இதுவரை கவனம் பெறாத புறநானூறு பாடத்திட்ட விளக்கவுரை குறித்து இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    I

    இந்தியாவில் ஐரோப்பியர்களின் வருகைக்குப் பின்னர் அச்சுக்கலை தோன்றலாயிற்று. இதன்வழிப் பழம்பெருமை பொருந்திய இலக்கியங்கள் அச்சேறத் தொடங்கின. அச்சுக்கலை வந்தபிறகே நம் இலக்கிய வளம் நமக்குத் தெரியலாயிற்று.

    “ஓலைச்சுவடிகளிலிருந்து நூல்களைப் பெயர்த்தெழுதி காகிதத்தில் அச்சிடும் அச்சுக்கலைப் பயிற்சி அயல்நாட்டவரின் தொடர்பில் நம் நாட்டிலும் ஏற்பட்டது. மரக்கட்டைகளில் எழுத்தைச் செதுக்கி அச்சிட்டதன் பின்னர் உலோகங்களில் வார்க்கப்பட்ட தனித்தனி எழுத்துக்களை அமைத்து அடுக்கி அச்சிடும் கலையும் இங்கு வளர்ச்சியுற்றது. எழுதாமல் பதிப்பிக்கும் இவ்வெழுத்தை ‘எழுதா எழுத்து’ என்றும் ‘தீட்டுதலிலா எழுத்து’ என்றும் நம் முன்னோர் குறித்தனர்” (இரா.மாதவன் 2000:69)

    மேலை நாட்டாரின் வருகையினால் தோன்றிய அச்சியந்திர வசதிகளும் கல்வி மறுமலர்ச்சியும் புதிய நூலாக்கங்களுக்கு வழிவகுத்தன. இந்தக் காலக்கட்டத்தில் திருநெல்வேலி அம்பலவாண கவிராயர், அ.முத்துச்சாமிப்பிள்ளை, எல்லிஸ் துரை, புதுவை நயனப்ப முதலியார், முகவை இராமானுஜக்கவிராயர், களத்தூர் வேதகிரி முதலியார், மழவை மகாலிங்கர், தாண்டவ முதலியார், திருத்தணிகை சரவண பெருமாளையர், வேங்கடாசல முதலியார், சந்திரசேகர கவிராச பண்டிதர், திரிசிரபுரம் வி.கோவிந்தபிள்ளை, கொட்டையூர் சிவக்கொழுந்து, சி.எஸ்.சபாபதி முதலியார், யாழ்ப்பாணம் கோப்பாய் அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் வட்டுக்காட்டு அம்பலவாண நாவலர், யாழ்ப்பாணம் மன்னிப்பாய் அருணாசல சதாசிவம் பிள்ளை, இராசநல்லூர் இராமச்சந்திர கவிராயர், மகாவித்துவான் சி.மீனாட்சி சுந்தரம்பிள்ளை, நல்லூர் க. ஆறுமுகநாவலர், இராமலிங்க அடிகளார், எச்.ஏ.கிருஷ்ணபிள்ளை, சோடாவதானம் வ.சுப்பராய செட்டியார், கோமளபுரம் இராசகோபாலபிள்ளை, கு.கதிரைவேற்பிள்ளை, புதுவை சவராயலு நாயகர், பொன்னம்பல சுவாமிகள், தொழுவூர் செ.வேலாயுதமுதலியார், காயல்பட்டினம் செய்து அப்துல் காதிறு நயினார் லெப்பை ஆலிம், யாழ்ப்பாணம் புலோலியூர் நா.கதிரைவேற்பிள்ளை, சபாபதி நாவலர், குமாரசுவாமிப்புலவர், வயித்தியலிங்கம்பிள்ளை, முத்துப்பிள்ளைப் புலவர், த.கனகசுந்தரம்பிள்ளை, திருமயிலை சண்முகம்பிள்ளை, அ.நாராயண அய்யங்கார், பின்னத்தூர் நாராயணசாமி ஐயர், நாகலிங்க முனிவர், சோழவந்தான் அரசஞ்சண்முகனார், இரா.இராகவையங்கார், மு.சி.பூர்ணலிங்கம்பிள்ளை, வை.தாமோதரம்பிள்ளை, ச.பவானந்தம்பிள்ளை, நமச்சிவாய முதலியார் போன்ற பலரும் உ.வே.சாவிற்கு முன்பாகவே பல தமிழ் நூல்களைப் பதிப்பித்துள்ளனர். 1918க்குள் சங்க இலக்கியங்கள் முழுமையாகப் பதிப்பிக்கப்பட்டன.

    1851 திருமுருகாற்றுப்படை ஆறுமுகநாவலர்
    1887 கலித்தொகை சி.வை.தாமோதரம்பிள்ளை
    1889 பத்துப்பாட்டு உ.வே.சாமிநாதையர்
    1894 புறநானூறு உ.வே.சாமிநாதையர்
    1903 ஐங்குறுநூறு உ.வே.சாமிநாதையர்
    1903 முல்லைப்பாட்டு மறைமலையடிகள்
    1904 பதிற்றுப்பத்து உ.வே.சாமிநாதையர்
    1904 பட்டினப்பாலை மறைமலையடிகள்
    1907 பொருநராற்றுப்படை வா.மகாதேவமுதலியார்
    1915 குறுந்தொகை சௌரிப்பெருமாள் அரங்கனார்
    1915 நற்றிணை பின்னத்தூர் நாராயண அய்யர்
    1918 பரிபாடல் உ.வே.சாமிநாதையர்
    1918 அகநானூறு ரா.இராகவையங்கார்

    “இவற்றைத் தொடர்ந்து சங்க இலக்கியங்களுக்குப் பல்வேறு வகையில் நூல்கள் எழுந்தன. பழைய உரைகளைப் பதிப்பித்தனர். புத்துரைகளும் விளக்கவுரைகளும் எளிய உரைகளும் எனப் பொதுமக்கள் எளிதில் படித்துணர்ந்து கொள்ளுமாறு பல பதிப்பு வகைகள் தோன்றின. ஒவ்வொரு நூலுக்கும் திறனாய்வு நோக்கிலும் பல நூல்கள் எழுந்தன. அறிஞர்கள் எளிமையான விளக்கங்களுடன் சங்க இலக்கியத்தை மக்கட்கு அறிமுகம் செய்தமை பெரிதும் குறிப்பிடத்தக்கது” (இ.சுந்தரமூர்த்தி, 2005:70)

    உ.வே.சாமிநாதர் அவர்களால் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பத்துப்பாட்டின் முதற்பதிப்பும் (1889) புறநானூற்றின் முதற்பதிப்பும் (1894) கொண்டுவரப்பட்டது. இவற்றைத் தொடர்ந்து இருபதாம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டிலேயே ஐங்குறுநூற்றின் முதல் பதிப்பும் (1903) பதிற்றுப்பத்தின் முதற்பதிப்பும் (1904) பதிப்புப்பெற்று நூல் உருவம் பெற்றன. பதினேழு ஆண்டுகளில் பத்துப்பாட்டையும் எட்டுத்தொகை நூல்களில் மூன்றையும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பதிப்பித்துள்ளார்.

    “கால வரிசைப்படி உ.வே.சாமிநாதையர் அவர்களின் பதிப்புகளை ஒழுங்குபடுத்தும் போது பதிப்புகளின் முறை இவ்வாறு அமைகிறது.

    பத்துப்பாட்டு 1889 (1918, 1931, 1950, 1956, 1961, 1974)

    புறநானூறு 1894 (1923, 1935, 1950, 1956, 1963, 1971)

    ஐங்குறுநூறு 1903 (1920, 1944, 1949, 1957)

    பதிற்றுப்பத்து 1904 (1920, 1944, 1945, 1949)

    பரிபாடல் 1918 (1935)

    குறுந்தொகை 1937 (1947, 1955, 1962)” (குளோரியா சுந்தரமதி, 1984:8)

    உ.வே.சாமிநாதையர் பழந்தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்ட காலகட்டத்தில் மூன்று வகைகளாக பதிப்பு நெறிமுறைகளைக் கையாண்டார். 1. பழைய உரைகளோடு குறிப்புக்களைப் பதிப்பிப்பது. 2. புதிய உரையோடு பதிப்பிப்பது. 3. உரை இல்லாமல் மூலம் மட்டும் பதிப்பிப்பது. இந்த மூன்று பதிப்பு நெறிமுறைகள் அவரின் காலத்தில் இருந்தது. மூன்று நெறிமுறைகளைக் கையாண்ட பெருமை உ.வே.சாமிநாதையர் அவர்களையே சாரும். இக்காலக்கட்டத்தில் பல நூல்கள் மறுபதிப்புக் கண்டன. உ.வே.சாமிநாதையர் அவர்களும் தாம் பதிப்பித்த நூல்களைச் செம்மையுற மறுபதிப்பு செய்கிறார்.

    புறநானூற்றின் இரண்டாம் பாடலின் மூலம் திணைக்குறிப்பு, பாடினோர், பாடப்பெற்றோர் பெயர்கள் இவற்றைத் திருத்தமுற அமைத்த முறையைக் குறிப்பிடுகிறார். மேலும் ஒப்புமைப்பகுதிகள் மேற்கோள் விளக்கங்கள் தேவையான குறிப்புரைகள் இணைவுற்றதையும் எடுத்துரைக்கிறார்.

    “உ.வே.சா. அவர்களைப் பொறுத்த அளவில் ஒரு நூலின் அடுத்த என்பது திருந்திய பதிப்பு. பதிப்புக்கலையின் நுட்பங்கள் முன்னைப் பதிப்பிலும் செறிவுற்றமையும் பதிப்பு” (சொல் விளங்கும் பெருமாள், 1981)

     எனவே மறுபதிப்பு செய்கின்ற வேளையில் தீவிரத்தன்மையுடன் கூடிய பதிப்புநெறிகளைக் கையாண்டு பதிப்பித்தார் உ.வே.சா.

    II

    நூல்களுக்கு உரை எழுதாமல் வாயால் விளக்கிச் செவியால் அறிந்து கொள்ளும் காலக்கட்டம் இருந்தது. பலமுறை வாய்மொழி வழியாக வழங்கிவந்த உரைகளே பிற்காலத்தில் உரைகளாக எழுந்தன. உரையின் வளர்ச்சி என்பது.

    “மூலபாடம் சொல்லல், கருத்துரைத்தல், சொல் வருவித்தல், சொற்பொருள் உரைத்தல், பொழிப்புரைத்தல், உதாரணங்காட்டல், விரிவுகாட்டல், அதிகார வரவு காட்டல், பணிவுகூறல், பயனொடெடுத்தல், ஆசிரிய வசனம் காட்டல் என்று பல வகைகளாக விரிந்தது என்பதை மயிலைநாதர் உரையால் அறியமுடிகிறது.” (இ.சுந்தரமூர்த்தி 2005:74)

    சங்க இலக்கியங்களைப் பதிப்பிக்கத் தொடங்கியவர்கள் மூலத்தோடு சொந்தமாக எழுதிய உரையைப் பதிப்பித்தனர். ஆனால் உ.வே.சாமிநாதையர் அவர்கள் பழைய உரைகளோடு பெரும்பாலும் சங்க இலக்கியத்தைப் பதிப்பித்தார். ஐங்குறுநூற்றின் இரண்டாம் பதிப்பில் பழைய உரை குறித்தும் தமது உரை முயற்சி குறித்தும் குறிப்பிடும்போது ‘பழைய உரையில்லாத செய்யுள்களுக்கு உள்ளுறையுவமம் முதலியவற்றைப் புலப்படுத்தி ஏதோ ஒரு வகையாக உரை எழுதி இத்துடன் பதிப்பிக்கலாம் என்ற விருப்பம் சில சமயம் எனக்கு நிகழ்ந்ததுண்டு. நிகழ்ந்தும் இந்நூலையும் இவ்வுரையையும் உற்று நோக்க அவ்விருப்பம் அடியோடே மாறிவிட்டது. இந்நூல் முழுமைக்கும் நான் எழுதி வைத்த அரும்பதிவுரையை இத்துடன் பதியாமைக்கு காரணம் இதுவே எனக் குறிப்பிட்டுள்ளார்.’

    “இப்பகுதி பழைய நூல் உரைகள் குறித்து உ.வே.சா. அவர்கள் கொண்டிருந்த பெருமதிப்பையும் தாமாக உரை எழுதும் வன்மை பெற்றிருந்தும் தன்னடக்கம் காரணமாக தன் நிறை காணாது குறையையே எண்ணும் தகைமையையும் காட்டுகின்றது. உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த சங்கத் தொகை நூல்களில் இத்தகைய பழைய உரை எதனையும் பெறாது அமைந்த நூல் குறுந்தொகை ஒன்றே. சங்க இலக்கியப் பதிப்பு வரிசையில் இறுதியாக அமையும் இந்நூலுக்கு மட்டுமே உ.வே.சா. அவர்கள் பதவுரை, விசேடஉரை, மேற்கோள் விளக்கம், ஒப்புமைப்பகுதி ஆகியவற்றை வழங்கியுள்ளார். பிறவற்றிற்குக் குறிப்புரை மட்டுமே பொருந்துகின்றது.” (குளோரியா சுந்தரமதி, 1984:34)

    பாடநூலாய்ப் புறநானூறு (பா.101-125) அன்றைய காலத்தில் (1911) பி.ஏ. மாணவர்களுக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்தப் பாடல்களுக்குப் பதவுரையும் விளக்கவுரையும் ஒப்புமைப் பகுதியும் உ.வே.சாமிநாதையர் அவர்கள் எழுதியுள்ளார். இது புதுமையானதாகும். டாக்டர் உ.வே.சாமிநாதையர் அவர்கள் புறநானூற்றைப் பதிப்பித்தது அதாவது முதல் பதிப்பு 1894. இரண்டாம் பதிப்பு 1923 அதனைத் தொடர்ந்து பல பதிப்புகள் வருகின்றன. இந்தப் புறநானூற்றுப் பதிப்பிற்குக் குறிப்புரை மட்டுமே தருகிறார். புறநானூறின் முதல் பதிப்பிற்கும் (1834) இரண்டாம் பதிப்பிற்கும் (1923) இடையே பி.ஏ. மாணவர்களுக்குப் பாடமாக (1911) இருந்த புறநானூறு 101 முதல் 125 பாடல்களுக்குச் சிறந்ததொரு பதவுரையும் விளக்கவுரையும் தருகிறார். இந்த உரை குறித்து யாரும் பேசவில்லை.

    இந்நூலில் முகவுரை, பாடினோர் வரலாறு, பாடப்பட்டோர் வரலாறு, புறநானூறு மூலம் உரையும் [க0க – கஉரு] திணை விளக்கம், துறை விளக்கம், பிரயோக விளக்கம் போன்றவற்றைத் தந்துள்ளார். மேலும் சொல் பிரிப்பு, பதவுரை, விசேடவுரை, சொற்பொருள நிரை, சொற்பொருள் மயக்கம் தவிர்த்தல், ஒருசொல்லுக்குப் பல பொருள் பயிலும் நிலையை எடுத்துரைத்தல், உரையாசிரியர்கள் வழிநின்று சொற்பொருள் வரையறுத்தல், உரையாசிரியர் தரும் பொருள் விளக்கங்களை எடுத்துரைத்தல், சொற்களின் வடிவம் பற்றிய சிந்தனை, சொல்தேர்ச்சி, இலக்கணம், பிரதிபேதங்கள், விசேட உரையும் குறிப்புரையும், ஒப்புமைப் பகுதி போன்றவறறைத் தருகின்றார்.

    உ.வே.சாமிநாதையர் பாடலின் உரையை நான்கு பகுதிகளில் வகைப்படுத்தித் தருகிறார். அவை 1. பதவுரை 2. முடிவு 3. கருத்து 4. விசேடவுரை என்பனவாகும்.

    பதவுரை என்பது பாடலின் கட்டுக்கோப்பில் சொற்களையும் தொடர்களையும் நிறுத்திக்கொண்டு பொருள் காண்பது. இது கவிதை மொழியின் செறிவமைப்பை இனங்காட்டி நிற்கும். புறநானூறு 102 ஆம் பாடல்

    “எருதே யிளைய நுகமுண ராவே

    சகடம் பண்டம் பெரிதுபெய் தன்றே

    யவலிழியினு மிசை யேறினு

    மவண தறியுநர் யாரென வுமணர்

    கீழ்மரத் தியாத்த சேமவச் சன்ன

    விசைவிளங்கு கவிகை நெடியோய் திங்க

    ணாணிறை மதியத் தனையையிருள்

    யாவண தோநின் னிழல்வாழ் வோர்க்கே”

    பதவுரை

    இளைய எருது நுகம் உணரா – இளைய எருதுகளானவை நுகம்பூணுதலை மதியா; சகடம் பண்டம் பெரிது பெய்தன்றே – வண்டியானது உப்பாகிய பண்டம் பெரிதாக இடப்பட்டது; ஆதலால் அவல் இழியினும் – அவ்வண்டி பள்ளத்தே இறங்கினாலும்; மிசை ஏறினும் – மேட்டிலே ஏறினாலும்; அவணது அறியுநர்யார் என – அவ்விடத்து வரும் இடையூற்றை அறிவார் யார்தா னென்று நினைத்து, உமணர் கீழ்மரத்து யாத்த – உப்பு வணிகர் அச்சுமரத்தின் கண்ணே அடுத்துக் கட்டப்பட்ட; சேம அச்சு அன்ன – சேமவச்சுப்போன்ற; இசை விளங்கு கவிகை நெடியோய் – புகழ் விளங்கிய இடக்கவிந்த கையையுடைய உயர்ந்தோய்! திங்கள் நாள் நிறை மதியத்து அனையை – நீ திங்களாகிய நாள் நிறைந்த மதியத்தை யொப்பை; ஆகலின், நின் நிழல் வாழ்வோர்க்கு இருள் யாவணது – நின்னிழற்கண் வாழுமவர்களுக்குத் துன்பமாகிய இருள் எவ்விடத்துள்ளது.

    இந்தப் பாடல் அமைப்பில் முன்னும் பின்னும் இடம்பெயர்ந்து அமையும் தொடரைப் பொருள் கொள்வதற்கு வாய்ப்பாக உரை அமைப்பில் இரண்டு இடங்களை ஒழுங்குபடுத்தியுள்ளார்.

    வாக்கிய நிலையிலும் தொடர்நிலையிலும் அமையும் இடமாற்றங்கள் ஒழுங்குபடுத்தப்பெற்றுப் பாடல் தொடரைப் பொருள் கொள்ள வசதியாக அமைத்துக்கொள்ளுதலைப் பதவுரையின் முதல்படிநிலையாகக் கொள்ளலாம்.

    அடுத்த படிநிலைகளாகச் சொற்களைத் தனித்தனியாக எளிதில் புரிந்து கொள்ளும்படி பிரித்துக்கொள்ளும் உயிரும் உயிரும், மெய்யும் உயிரும் உற்ற சந்திமாற்றங்கள் அல்லது திரிபுகள் நீக்கப்பட்டுச் சொற்கள் தனிப்படுத்தப்படுகின்றன. இதன்விளைவாக

    “ஒருதலைப் பதலை தூங்க வொருதலைத்

    தூம்பாகச் சிறுமுழாத் தூங்கத் தூக்கித்”

    என்ற செய்யுளடிகள்

    “ஒருதலை பதலை தூங்க ஒருதலை

    தூம்பு அகம் சிறுமுழா தூங்க தூக்கி” (க0ங.1-2)

    என்ற சொற்களின் தொகுதியாக மாற்றப்படுகின்றன.‘

    இசைநிறைக்காக அமைந்த பொருளுள்ள சொற்கள் (அசைகள்) விடப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக வாழ்கவன்தாளே (ஏ), (க0ங) என்பதில் அமைந்த ஏகாரம் பதவுரையில் இடம்பெறவில்லை.

    முடிவும் கருத்தும்

    முடிவு என்ற பகுதியில் உ.வே.சாமிநாதையர் அவர்கள் வழங்குவது பாடலின் வினைமுடிவு. பாடலில் பொருந்தும் அடிப்படையான தொடரமைப்பு. கருத்து என்ற பகுதியில் அவர் வழங்குவது பாடலின் கருத்து. பாடலில் பொருந்தும் தொடர் அமைப்பும் அதன் கருத்தும் இரண்டு எல்லைகள்.

    “சங்கப் பாடல்களைப் புரிந்துகொள்வதற்கு-பயிலுவதற்கும் பயிற்றுவிப்பதற்கும் பாடலிற் செறிந்தமைந்த அடைகளைக் கோத்துச் செல்லும் பாடலின் அடிப்படையான தொடரை உணர்ந்து கொள்வது முதற்படி. பாடலின் அடிப்படைத் தொடரை எடுத்து வழங்கும் நிலை பழைய உரையாசிரியர்களிடம் அமைந்த உரைநெறிகளில் ஒன்று. இதனையே உ.வே.சாமிநாதையர் அவர்கள் தமது முடிவு என்ற பகுதியில் அமைத்துள்ளார்.” (குளோரியா சுந்தரமதி, 1984:44)

    புறநானூறு க0ங பாடலில் பதலையென்பது – ஒருதலையுடையதொரு தோற்கருவி. பகைப்புலத்தோனென்ற கருத்து. பகைவர்பால் திறைகொண்ட பொருளுடையனாதலின் நீவேண்டியவெல்லாந்தருதல். அவனுக்கு எளிதென்பதாம். சேணோனல்லனென்பதற்கு – பரிசில் நீட்டிப்பானல்லனென்று உரைப்பினுமமையும் என்று கூறியுள்ளார்.

    விசேடவுரை

    உ.வே.சாமிநாதையர் அவர்கள் விசேடவுரையில் சொற்பொருள் நிலை, சொற்பொருள் மயக்கம் தவிர்த்தல், உரையாசிரியர் வழிநின்று சொற்பொருள் வரையறுத்தல், உரையாசிரியர் தரும் பொருள் விளக்கங்களைத் தருதல், சொற்களின் வடிவம் பற்றிய சிந்தனை, அளபெடை, உவமை முதலிய அணிகள் எனப் பலவற்றைத் தருகிறார். எடுத்துக்காட்டாக“கா-தேற்சுமை, ஒருதலை-ஒருபக்கம், தூங்க – தொங்க, அகம் – உள், முழா – மத்தளம், பரிசு – விதம், மண்டை – ஏற்கும் பாத்திரம், மலர்த்தல் – வாய் மேலாகப் பிடிக்கச் செய்தல், விறலி – விளிப்பெயர் – விறல் படப்பாடியாடுபவளென்பது பொருள். சேய்மை – தொலைவு, முனைப்புலம் – பகைவருறையுமிடம். (ங)

    இதற்கடுத்த நிலையில் பல செய்திகளைப் எழுதியுள்ளார். இந்தப் படிநிலையில் வரிசையில் ஒவ்வொரு பாடலையும் அமைத்துள்ளார்.

    நூலின் இறுதியில் இந்தப் பகுதியில் (பாடப்பகுதி புறம்.101-125) வந்துள்ள துறைகளுக்குச் சுருக்கமான விளக்கத்தைத் தருகிறார். அரசவாகை, இயல்மொழி, கையறுநிலை, பரிசில்கடாநிலை, பொருண்மொழிக்காஞ்சி, மகண்மறுத்தல், விறலியாற்றுப்படை. இதற்கடுத்த நிலையில் இப்புறநானூற்றுப்பபாடல்கள் இலக்கிய-இலக்கண நூல்களில் இடம்பெற்றுள்ள இடங்களைக் குறிப்பிடுகிறார்.

    முடிவுரை

    இந்தப் பாடத்திட்ட உரையில் ஏராளமான நுட்பமான விளக்கங்களைத் தந்துள்ளார். மேற்கோள் நூல்கள் பலவற்றை எடுத்துத் தருவதோடு, உரையாசிரியர்கள் கருத்துக்களையும் தந்து செல்கிறார். உ.வே.சாமிநாதையர் அவர்கள் தாம் உரை வகுத்த குறுந்தொகைக்கு மட்டுமே விசேடவுரை வழங்கியுள்ளார். ஏனைய நூல்களுக்குப் பழைய உரை அமைந்துள்ளமையால் குறிப்புரை மட்டுமே வழங்கியுள்ளார். இக்குறிப்புரையின் வளர்ச்சிநிலையே இப்பாடலுக்கான மேற்கோள் காட்டித் தன் புலமையை வெளிப்படுத்துகிறார். பழைய நூல்களை எவ்வாறு அணுகுவது என்பதனை இவ்வுரையின்வழித் தெளியமுடிகிறது. பாடநூலாக இருக்கும் நூலுக்கு எதையாவது சொல்லிவிடலாம் என்று இல்லாமல் தெளிவாகப் பதவுரை, விளக்கவுரை, இலக்கண விளக்கம், ஒப்புமைப் பகுதி, மேற்கோள் விளக்கம், பிரதிபாடம், பாடினோர், பாடப்பட்டோர் வரலாறு, உவமை நயம் போன்ற பலவற்றை மிகச்சிறப்பாக எடுத்தியம்புகிறார். இரண்டு விசயங்களை நாம் கவனிக்கவேண்டியது 1.ஆங்கிலேயர்கள் தமிழ்ப்பாட நூல்களுக்குக் கொடுத்த முக்கியத்துவம். மற்றொன்று ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் இருந்த பாடத்திட்ட அமைப்பு முறை குறித்தானது. இது குறித்துத் தனியே ஆராய வேண்டும்.

    குறிப்புகள்

    1. இரா.மாதவன், 2000, சுவடிப்பதிப்பியல், பாவை வெளியீட்டகம், தஞ்சாவூர் – 5
    2. சுந்தரமூர்த்தி, 2005, பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், சென்னை
    3. குளோரியா சுந்தரமதி, 1934, டாக்டர் உ.வே.சா. சங்க இலக்கியப் பதிப்புகம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை
    4. பூ. சொல் விளங்கும் பெருமாள், டாக்டர் உ.வே.சா. பதிப்புப் பணி ஓராய்வு, மதுரை
    5. இ.சுந்தரமூர்த்தி, 2005, பதிப்பியல் சிந்தனைகள், சேகர் பதிப்பகம், சென்னை
    Share
  • திருச்சதகத்தில் மணிவாசகர்

     திருச்சதகத்தில் மணிவாசகர்

    முனைவர் இரா. மதன் குமார். உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, கற்பகம் உயர்கல்வி கலைக்கழகம், கோயம்புத்தூர் – 21.

    முன்னுரை

    தொல்லை இரும்பிறவிப் பிணி தீர்க்கின்ற அருமருந்தென விளங்குவது, ‘திருவாசகம்’. அதன் ஐந்தாம் திருப்பாடல் தொகுப்பாக இடம்பெறுவது, நூறு திருப்பாடல்களைக்கொண்ட திருச்சதகமாகும். மெய்யுணர்தல் முதலாக, ஆனந்தாதீதம் ஈறாகிய பத்துத் தலைப்புகளின் கீழுள்ள,   ஒவ்வொரு திருப்பாடலின் சொல்லும் பொருளும், மணிவாசகரின் சிவானுபவப் பதிவுகளாக உள்ளன. அத்திருப்பாடல்கள், தாயைத் தேடி அலைகின்ற குழந்தையின் ஆராத தவிப்பாக, கண்ணொளி பெற்று அதனை மீண்டும் இழந்தானின் தீராத ஆற்றாமையாக, உலக வாழ்க்கையை ஆற்றாது, சிவத்தைச் சேர மணிவாசகர் கொண்ட ஞானத்தவிப்பின் பதிவுகளாக விளங்குகின்றன. அவ்வகையில், திருச்சதகத் திருப்பாடல்களில் புலனாகும், மணிவாசகரின் பக்தி அனுபவத்தை இக்கட்டுரை எடுத்துரைக்கிறது.

    ஞானநாடகம்

    ‘உலகும், உடம்பும், இளமையும், செல்வமும் நிலையில்லாதன’ என உணர்தலும், ‘சிவமே மெய்ப்பொருள்’ என்று தெளிதலுமே, மெய்யுணர்தலாகும். ஏதேனும் ஒன்றைப் பற்றி நிற்பதே உயிரின் இயல்பாகும். உயிரானது, பொய்ப்பொருளைப் பற்றி நிற்கின்ற அறியாமை மயக்கிலிருந்து தெளிகின்றபோது, மெய்ப்பொருளாகிய சிவத்தைச் சார்கின்ற பேரறிவு வாய்க்கின்றது. அப்பேரறிவானது, பற்றற்றவனாகிய பரத்தையே நாளும் பற்றுகின்ற மெய்யுணர்வை மேன்மேலும் உயிரிடத்தில் விளங்கச்செய்கிறது. மணிவாசகர், திருப்பெருந்துறையில் இறைவன் தமக்கு ஞானகுருவாக வந்தருளிய நொடிமுதலாக, சித்தத்தைச் சிவன்பாலே வைக்கின்ற மெய்யுணர்வில் முழுமையாக ஆழ்ந்தார். பெருமான் அவர்பொருட்டு, நரியைக் குதிரைகளாக்கியும், பிட்டுக்கு மண் சுமந்தும் நிகழ்த்திய விளையாடல்களின் வழியே அவர்தம் அருள்சிறப்பினைத் தென்னவன் உணர்ந்தான். அவன், தனது ஆட்சிப்பொறுப்பை அடிகளிடம் தந்து, தம்மையும் மக்களையும் உய்விக்க வேண்டினான். அடிகள், தமது ஞானத்தெளிவாகிய மெய்யுணர்வால், நாடாளுகின்ற பேற்றினையும் தாழ்வென ஒதுக்கினார். ‘தம்மை ஆள்கின்ற நாதன் பாதம் பணிவதே, உயிர்க்கு உறுதி’ என்ற மெய்யுணர்வில் நிலைகொண்டார். நிலையில்லா உலகியல் இன்பங்களின் மீதான மயக்கம் தீர்தலும், திருவடியில் கண்ணீர்ப் பெருக்குதலும், அன்பை மறவாத பற்றுறுதியுமாகிய மணிவாசகரின் மெய்யுணர்வு அனுபவங்கள், திருச்சதகத்தில், ‘மெய்யுணர்தல்’ என்னும் தலைப்பின்கீழ் உரைக்கப்பெற்றுள்ளன.

    ‘மெய்தான் அரும்பி விதிர்விதிர்த் துன்விரை யார்கழற்கென்

    கைதான் தலைவைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பியுள்ளம்

    பொய்தான் தவிர்ந்துன்னைப் போற்றி சயசய போற்றியென்னும்

    கைதான் நெகிழ விடேன்உடை யாயென்னைனைக் கண்டுகொள்ளே’ (திருச்சதகம்:1)

    என்றமைந்த பாடலின் இறுதி அடியிலுள்ள, ‘கை’ என்பது, ‘ஒழுக்கம்’ எனப் பொருள்படும். ‘நெகிழவிடேன்’ என்பது, ‘கைவிடேன்’ என்னும் பற்றுறுதியைக் குறிக்கும். ’பெருமானைப் பணிவதே பணி’ என மணிவாசகர் பெற்ற மெய்யுணர்வின் வெளிப்பாடாக இத்திருப்பாடல் அமைந்திலங்குகிறது.

    அறிவுறுத்தல்

    உலகியல் வாழ்வில் உயிர்கள், ‘யானே அனைத்தையும் செய்கின்றேன்’ என்ற அகப்பற்றுடனும், ‘எல்லாம் எனது உடமை’ என்னும் புறப்பற்றுடனும் அறியாமைக் கூத்தாடி, அன்றாடம் வாழ்நாளை வீணே கழிக்கின்றன. பயனற்ற அறியாமைக்கூத்தின் அவலத்தை உயிர்க்கு அறிவுறுத்தி மீட்டருள வேண்டியே பெருமான், அம்பலத்தின்கண் ஓயாது ஆனந்தக்கூத்தாடுகின்றான். ‘அம்பலமாகிய அண்டக்கூத்தே, பிண்டத்திலும் விளங்குகிறது; அனைத்து உயிரினுள்ளும் இருந்து பெருமானே அனைத்தையும் இயக்குகின்றான்’; அவனே உள்ளிருந்து, தன்னையும் இயக்குகின்றான்’ என்னும் மெய்யுணர்வு பாழாகாதவகையில், பெருமானை இடையறாது தொழுது பக்தியில் ஆழ்வதே நன்னெறியாகும்’ என மணிவாசகர் நெஞ்சுக்கு அறிவுறுத்துகின்றார்.

    ‘வாழ்கின்றாய் வாழாத நெஞ்சமே வல்வினைப்பட்டு

    ஆழ்கின்றாய் ஆழாமற் காப்பானை ஏத்தாதே

    சூழ்கின்றாய் கேடுனக்குச் சொல்கின்றேன்

    வீழ்கின்றாய் நீஅவலக் கடலாய வெள்ளத்தே’          (திருச்சதகம்: 20)

    சுட்டறுத்தல்

    பொறி முதலிய கருவிகளின் துணையால், குறித்த ஒன்றினைச் சுட்டி நம் சிற்றறிவுக்கு எட்டியவாறு உணர்தல், சுட்டறிவாகும். ஆனால், ‘பெருமான், அத்தகைய பசுஞானத்தால் உணர வல்லவன் அல்லன்’. அதனைப் பெருமானே உயிர்க்கு அறிவுறுத்தித் தெளியச்செய்தலே சுட்டறுத்தலாகும் (சிற்றறிவு அகற்றல்). ’ஊனக்கண் பாசம் உணராப் பதியை ஞானக்கண்ணினில் சிந்தை நாடுக’ என்பது சிவஞானபோதம். அவனருளையே கண்ணாகக் கொண்டு காணமுற்பட்டால் மட்டுமே, இறைவன் அனைத்து பொருள்களின் குண குணியாகவும், அவற்றைக் கடந்த அரும்பொருளாகவும் விளங்குகின்ற பரத்துவத்தை உணரலாம். திருவருளே கண்ணாக இருந்து, உயிர்க்குப் பெருமானை உணர்த்துகிறது. ‘காண வல்லார்க்குக் கண்ணின் மணி’ என்பது திருமந்திரம் (பாடல்: 2823).

    ‘இனையன்நான் என்றுன்னை அறிவித் தென்னை

    ஆட்கொண்டெம் பிரான் ஆனாய்’                 (திருச்சதகம்: 22)

    என்னும் தொடர்கள், ‘தகுதிநோக்காது பெருமான், தானே எளியனாக எழுந்தருளி, இன்ன தன்மையன் என்பதைக் காட்டியருளினன்’ என்று, மணிவாசகரின் அருளனுபவத்தைச் சுட்டுகின்றன.

    ‘யான்’ ; ‘எனது’ என்னும் பற்றற்ற உயிர், தன்னை மறந்து, தன்னைச் சிறுபொருளாக உணர்ந்து, தன்னிலும் மேலான பெரும்பொருளை அறிதற்கு ஞானப்பேராவல் கொள்கிறது. தன்னை உணர்ந்த மெய்யணர்வு நிலையே, உயிர்க்கு, அன்பென்னும் அகக்கண்ணையும், அருளென்னும் வழித்துணையையும் தந்து, பெருமானுடன் பிரிவரியாத திருவருளுறவுக்கு வகைசெய்கிறது. ‘தனது அறிவென்னும் குறையுணர்வால், பெருமானைக் குறைவுற உணர்கின்ற அவலம் நேராதவகையில், பெருமானே தமக்கு குருவாகிவந்து, திருவருளையே கண்ணாகத் தந்தருளி, ஞானநிலையினை உணர்த்தியருளிய பெருங்கருணைக்கு நன்றியுடையவராக மணிவாசகர், தம்மை, ‘நாய்’ என்று குறித்தருளியுள்ளார்.

    ‘நாட்டார்கள் விழித்திருப்ப ஞாலத் துள்ளே

    நாயினுக்குத் தவிசிட்டு நாயி னேற்கே

    காட்டா தனவெல்லாங் காட்டிப் பின்னுங்

    கேளா தனவெல்லாங் கேட்பித் தென்னை

    மீட்டேயும் பிறவாமற் காத்தாட் கொண்டான்

    எம்பெருமான் செய்திட்ட விச்சை தானே’                 (திருச்சதகம்: 28)

    சுட்டறிவின் வழியல்லாது, அவனருளால் அவனைக் காணும்படியான வித்தையினைப் பெருமான் செய்தருளிய கருணையின் பெருமிதத்தை மணிவாசகர்,

    ‘சிந்தனைநின் தனக்காக்கி நாயி னேன்தன்

    கண்ணினைநின் திருப்பாதப் போதுக் காக்கி

    வந்தனையும் அம்மலர்க்கே யாக்கி வாக்குன்

    மணிவார்த்தைக் காக்கிஐம் புலன்க ளார

    வந்தனை ஆட்கொண்டுள்ளே புகுந்த விச்சை’                 (திருச்சதகம்: 26)

    என்று குறித்தருளியுள்ளார். இப்பாடலில், ‘வாக்கு உன் மணிவார்த்தைக்கு ஆக்கி’ என்றமைந்த தொடர், பெருமானின் திருவடியில் அன்புபெருக்கி, மணிவாசகங்களால், திருவாசகத்தை அருளிச் செய்கின்றவகையில், பெருமான் தம்மிடத்தில் கீழான சுட்டறிவை மாய்த்துச் சிவஞானத்தை விளங்கச்செய்ததனைக் குறிப்பதாகும்.

    ஆத்துமசுத்தி

    சுட்டறிவாகிய சிற்றறிவுநிலை அகன்று, மனம், மொழி, மெய் ஆகிய முக்கரணங்களாலும் உயிர் தூய்மைபெற்று விளங்குவதே ‘ஆத்துமசுத்தி’ (ஆன்மத்தூய்மை) என்பதாகும். அத்தகைய தூய்மைநிலை, ‘மெய்யன்பு’ எனப்பெறும்; மெய்யன்பாகிய தூய்மைநிலை, தன்னை மறந்து, உலகியலை முற்றிலும் துறந்து, ஆன்மநாயகனாகிய பெருமானை உள்ளும் புறமும் இடையறாது தேடித் திரிகின்ற ஆன்மவிழிப்பைத் தருகிறது; இமைப்பொழுதும் பெருமானைப் பிரியாது, அன்பு மிகுந்து, ஆடுதலும், பாடுதலும், தேடுதலும், திகைத்தலும், தெளிதலுமாகிய அருளனுபவங்கள் உயிர்க்கு வாய்க்கிறது. அத்தகு அருளனுபவங்களுக்கு இடையூறு நேருங்கால், உடல் தாங்கி வாழவும் அவ்வுயிர் பொறுப்பதில்லை. அவ்வகையில் மணிவாசகரும் ஆத்துமசுத்தியுடன், பெருமானை அணுப்பொழுதும் பிரிந்திருக்க ஆற்றாமல், தீயில் வீழவும், மலையிலிருந்து பாயவும், பெருங்கடலில் வீழவும் துடிக்கின்றார்.

    ‘தாயி லாகிய இன்னருள் புரிந்தஎன் தலைவனை நனிகாணேன்

    தீயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன் செழுங்கடல் புகுவனே’   (திருச்சதகம்: 39)

     கைம்மாறு கொடுத்தல்

    கைம்மாறு கொடுத்தலாவது, பிறர் செய்த உதவிக்கு நன்றியாக நாம் அவர்கட்கு மீள உதவுதல். ‘கருணையே உருவமாகி, அனைத்து உயிர்க்கும் இரங்குதலே இறைவன், உயிர்கட்குப் புரிகின்ற பேருதவியாகும்; தாயைப் பிரிந்த கன்றெனப் பெருமானை இடையறாது தேடுதலே, நாம் அவனுக்குச் செய்கின்ற கைம்மாறாகும். அடிகளுக்கு அருளவேண்டி பெருமான், திருப்பெருந்துறையில் அருமையில் எளிய அழகனாக வந்தான். அதுகாறும் தாம், ‘அறிவீனன்’ என்னும் நிலையிலேயே இருந்ததாகவும், பெருமானே அருங்கருணையால் அடியவனாக ஆட்கொண்டு, அவனை முற்றும் அறிகின்ற சிவஞானத்தையும் தந்தருளினான்’ என்றும், அதனால் அவனிடத்தில் உண்மையான பக்தி செலுத்துதலே அதற்குரிய மேலான கைம்மாறு என்றும் மணிவாசகர் அறிவிக்கின்றார்.

    ‘அறிவ னேயமு தேயடிநாயினேன்

    அறிவ னாகக்கொண் டோஎனை ஆண்டது

    அறிவி லாமையன் றேகண்ட தாண்டநாள்

    அறிவனோவல்ல னோஅரு ளீசனே’                 (திருச்சதகம்: 50)

    என்றமைந்த பாடலில், ‘தாம் அறிவுடையவரா? அன்றி அறிவற்றவரா?’ என்று அடிகள் பெருமானிடத்தில் ஞானவினா எழுப்புகின்றார். அவ்வினா, அடிகள் தம்மை உணர்ந்த ஞானத்தெளிவின் வெளிப்பாடாகும்.

    அநுபோகசுத்தி

    செயல்கள், உயிர்க்கு வினைத்தொடர்பை ஊட்டுகின்றன. வினைத்தொடர்பால் உயிர் மேலும் பல பிறவிகளில் பிறந்திளைக்க நேரிடுகிறது. பிறவிகளை வாய்ப்பாகக்கொண்டு, ஆணவம், கன்மம், மாயையாகிய மும்மலங்களும், சார்ந்ததன் வண்ணமாக விளங்கவல்ல உயிரைக் கீழ்நிலைகளில் செலுத்தி, அதன் தூய்மையினைச் சிதைக்கின்றன. ஆனால், தன்னை உணர்ந்து, திருவருள் தொடர்பில் ஆழ்கின்ற சிவஞானிகளிடத்தில், ஆணவமலம் மெலிகிறது. மாயையின் மயக்கமும் நீங்குகிறது. அவர்களது கருவி கரணங்கள், சிவகரணங்களாகவும், சிந்தை, சிவச்சார்பிலேயே ஆழ்ந்தும், செயல், சிவனது அருள்விளையாடல்களாகவும் மேம்படுகின்றன. அவ்வுயர்நிலையினைச் சீவன்முத்தநிலை என்பர். அந்நிலையில், சிவத்துடன் பிரிப்பின்றிக் கலந்திருந்து, அழுந்தி அறிதலாகிய பேறு உயிர்க்கு வாய்க்கிறது. சீவன்முத்தரெனச் சித்தத்தைச் சிவன்பாலே வைத்த உறைப்பினாலேயே திருஞானசம்பந்தர், ‘எனதுரை தனதுரையாக’ என்று பாடியருளினார். மணிவாசகரும் அத்தகைய அருளுறுநிலைக்குத் தடையாக உள்ள உடம்பைச் சுமக்க ஆற்றாமல் புலம்புகின்றார். சீவன்முத்தர்களாகிய உண்மையடியார்கள் சிவச்சார்பில் உறுதிஉடையவர்கள்; அவர்கள், பெருமானது திருக்குறிப்பையே திருவருளாணையாக ஏற்றுப் பணிபவர்கள்; வினைத்தொடர்பினை ஒழித்த அவர்களது உயர்வு, திருப்பெருந்துறையில் அவர்கள், பெருமானின் கழல் அடைந்துய்ய வகைசெய்தது. ஆனால், தான்மட்டும், வினைத்தொடர்பை மேன்மேலும் பெறுகின்றகின்றவாறு உடம்பைப் பேணுகின்ற தாழ்வு கொண்டுள்ளதாகக் குறித்துள்ளார்.

    ‘மானேர் நோக்கி உமையாள் பங்கா வந்திங் காட்கொண்ட

    தேனே அமுதே கரும்பின் தெளிவே சிவனே தென்தில்லைக்

    கோனே உன்தன் திருக்குறிப்புக் கூடு வார்நின் கழல்கூட

    ஊனார் புழுக்கூ டிதுகாத்திங் கிருப்ப தானேன் உடையானே’     (திருச்சதகம்: 55)

    காருணியத்திரங்கல்

    தாம் இடையறாமல் திருவருள் திளைப்பில் களிப்பினும், அடிகளின் அன்புள்ளம், தில்லையில் பெருமானைச் சேர்கின்ற பேராவலில் ஓயாமல் தவித்தது. திருப்பெருந்துறையில் ஞானகுருவாக வந்த பெருமானுடன் வந்த அடியார்களும் சிவசோதியில் கலந்து மறைந்தனர். ‘நீர் மட்டும் மண்ணுலகில் சிலகாலம் தங்கியிருந்து, தில்லையை வந்தடைந்து எம்மைச் சேர்க!’ என்று அடிகளுக்குப் பெருமானால் அருளாணை அருளப்பெற்றது. அவர் அருளியவாறு, ‘தில்லைக்கூத்தனைச் சேர்கின்ற கருணைப்பேறு எந்நாளில் வாய்க்கும்?’ என்பதே அடிகளின் தீராத பேராவலாக இருந்தது. அதற்கென, தில்லைப் பெருமானை வேண்டி,

    ‘வருகவென் றென்னை நின்பால் வாங்கிட வேண்டும் போற்றி’    (திருச்சதகம்: 68)

    என்று பாடி, பெருமானின் கருணைக்கு ஏங்குகிறார்.

    ஆனந்தத்து அழுந்தல்

    சமயக்குரவர் முதலாயினோரின் மண்ணுலக இருப்பானது, மக்கள்தம் நல்வாழ்வின் பொருட்டு இறைவனால் அருளிச்செய்யப்பட்டதாகும். பிள்ளையாரும், அரசுகளும், நம்பிகளும் மண்ணுலகில் வாழ்ந்த பெரும்பேறே, சைவப்பெருஉலகின் தேவாரத் திருச்செல்வமாகத் திகழ்கிறது. அவ்வாறே, அடிகளின் மண்ணுலக வாழ்வும் நம்மைத் திருவாசகமென வாழ்விக்கிறது. அடிகள், திருவருள் திளைப்பில் ஆழ்ந்து, மண்ணுலகில் சீவன்முத்தரென வாழ்ந்தநாளில், தில்லை நகரடைந்து, அம்பலவனைக் கூடுவதே அவரின் பெருவிருப்பாக நிலைத்திருந்தது.

    அடிகள், தில்லையை அடைதலும், அங்கு பலநாள் தங்கியிருத்தலும், பௌத்தரை வாதில் வெல்லுதலும், திருக்கோவை பாடுதலும், பெருமானே திருவாசகத்தைப் படியெடுக்க வரவிருத்தலுமாகிய திருவிளையாடல்கள் தில்லையின்கண் நிகழ்தற்கு உரியகாலம் வாய்க்கின்றவரையில், அடிகள் தில்லையை அடைதற்குப் பெருமான் திருவருளாணை அருளவில்லை. ‘வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ; வேண்டும் பரிசு ஒன்று உண்டென்னில், அதுவும் உன்தன் விருப்பன்றே’ என்ற ஞானத்தெளிவு கொண்ட அடிகள்,

    ‘உண்மையடியார்கள் அன்று உம்முடன் வர அருளி, என்னை மட்டிலும் மண்ணுலகில் விடுத்துச் சென்றீர்; ‘அவர்களது உண்மையான பூசனைப்பயனே அவர்கட்கு உம்மைப் பெற்றுத்தந்தது. அவ்வகையில் யானும் உம்மைப் பெறுதற்குக் கருவியாக, ‘பூசனைப்பேற்றினைத் தந்தருள்க!’ என பெருமானிடத்தில் வேண்டுகிறார். சிவானந்தத்தில் அழுந்தியிருக்கக் கருவியாகிய மெய்யன்பை விளைவிக்கின்ற பூசனைப் பேற்றை வேண்டுபவராக,

    ‘புணர்ப்ப தாக அன்றி தாக அன்பு நின்க ழற்கணே

    புணர்ப்ப தாக அங்க ணாள புங்க மான போகமே’ (திருச்சதகம்: 71)

    என்று பாடியுள்ளார். இத்தொடர்களில், ‘புங்கமான போகம்’ என்பது, மேலான பேறு என்பதாகும்.

    பூசனையே மேலான பேறாகும். ‘ஏடுடைய மலரால் முனைநாள் பணிந்தேத்த அருள்செய்த’ என்பது, பிள்ளையார் தேவாரம். அதனாலேயே அம்மையும் அப்பனை அடைவதற்குரிய பேறாகப் பூசனையை வேண்டினாள். அப்பனும் அவளது பூசனைக்கு உகந்து,  ‘நின் பூசனை என்றும் எம்பால் முடிவதில்லை’ என்று அருளியுள்ளான். அடிகளும் அத்தகைய அருள்பேற்றினைப் பெற விழைகின்றார். வழிபாடாகிய இன்பத்தில் இடையறாது திளைக்கின்ற வேட்கையைச் சுட்டுவதால் இத்திருப்பதிகத் தொகுதிக்கு, ‘ஆனந்தத்து அழுந்தல்’ என்னும் பெயர் பொருத்தமுடையதாகும்.

     ஆனந்த பரவசம்

    ‘இறைவனுடன் கூடியிருத்தலே, ‘சிவானந்தம்’. அத்தகைய பேற்றுக்கு மெய்யன்பே கருவியாகும்’ என்று தெளிந்த மணிவாசகர், தமது தாழ்நிலையினை உணர்ந்து கழிவிரக்கம் கொண்டார். ‘பெருமானை அடைந்து உய்வுற்ற அடியார்கள் அனைவரும், ‘உண்மையடியார்கள்’ என்னும் பக்குவநிலையும், ‘பழவடியார்’ என்னும் தகுதிநிலையும் பெற்றவர்கள். ஆனால், தமது தகுதியோ, அவர்களினும் குறைந்ததாக இருக்க, அவர்களைப்போலவே சிவனடி கூடிடக் காலம் தாழ்வதற்குக் கவலை கொள்வதில் பொருளில்லை’ என ஆற்றாமையால் தம்மைத்தாமே தேற்றிக்கொள்கின்றார். ‘நல்லபசுக்கள் இடையனைக் கண்டு அன்பின் பெருக்கில் கனைக்க, இடையனைக் காணக் கண்ணற்ற குருட்டுப் பசுவும், பிற பசுக்களுடன் கலந்து கனைக்கின்ற அறியாமையைப் போன்றதே தனது முயற்சியும்’ என்பது மணிவாசகரின் சிந்தனை.

    ‘தாராய் உடையாய் அடியேற் குன்தா ளிணையன்பு

    பேரா உலகம் புக்கா ரடியார் புறமே போந்தேன்யான்

    ஊரா மிலைக்கக் குருட்டா மிலைத்திங் குன்தா ளிணையன்புக்கு

    ஆரா அடியேன் அயலே மயல்கொண் டழுகேனே’ (திருச்சதகம்: 87)

     

    என்று பாடிய அடிகள், மெய்யன்பர்கள், தீ சேர் மெழுகாக உள்ளம் உருகிக் கரைந்ததே அவர்களின் தனித்தகுதியாக அமைந்ததனை உணர்ந்தார். தாமும் அவ்வகையையே பின்பற்றி, பெரும்பற்றப் புலியூரானைக் கூட எண்ணி,

    ‘ அழுகேன் நின்பால் அன்பாம் மனமாய் அழல்சேர்ந்த

    மெழுகே அன்னார் மின்னார் பொன்னார் கழல் கண்டு

    தொழுதே உன்னைத் தொடர்ந்தா ரோடுந் தொடராதே

    பழுதே பிறந்தேன் என்கொண் டுன்னைப் பணிகேனே’      (திருச்சதகம்: 88)

     

    என்று தெளிந்தார். சிவானந்தத்தைப் பெறுதற்குரிய பெருநெறியாக, அன்பென்னும் ஆறு கரையது புரள, கண்ணீர்ப் பெருவெள்ளம் பெருக அழுதலாகிய சிவானந்தப் பரவசத்தில் ஆழ்ந்தார்.

    ‘யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்

    ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’       (திருச்சதகம்: 90)

    ஆனந்தாதீதம்

    அடிகளுக்குப் பெருமான் இடையறாத மெய்யன்பினை வழங்கிப் பித்தனாக்கினான்; அவன் அன்பருக்கும் அன்பனாக்கி அருளினான்; திருக்கோயில் தொறும், அழுது அரற்றி, அவனைத் தேடித் திரியும்படியும் செய்தருளினான். ‘தாம் வளர்த்த நச்சுமரத்தையும் வெட்டத்துணியாத பெரியோர் போல, தகுதியில்லாமையை அறிந்திருந்தும் பெருமான் தம்மை ஒதுக்காமல், பேரின்பப்பேற்றுக்குக் கருவியாகிய மெய்யன்பு மேன்மேலும் வளரும்படி அருளிய அருந்திறத்தை எண்ணியெண்ணி அடிகள், அளவிறந்த ஆனந்தவெள்ளத்தில் திளைத்தார். பெருமான், பக்தி என்னும் வயலுள், ‘மெய்ம்மை’ என்னும் வித்தின்றியே, ‘சிவானந்தம்’ என்னும் பெரும்பயிரை வளர்த்ததாகக் குறித்தருள் கின்றார். தமக்கு அருளிய பேற்றினை நினைந்த அடிகள்,

    ‘விச்ச தின்றியே விளைவு செய்குவாய்’            (திருச்சதகம்: 96)

    ‘நச்சு மாமர மாயி னுங்கொலார்

    நானும் அங்ஙனே உடைய நாதனே’     (மேலது பாடல்)

    எத்தகைய பிழை செய்தாலும், தம்மை அரவணைத்துக் காக்கின்ற பெருமான், திருவடிப்பேற்றுக்குத் தம்மைத் தகுதியுடையவனாக ஆக்கியதும், கல்லை மென்கனியாக்கிய வித்தை’ என்று வியக்கின்றார்.

    ‘கல்லை மென்கனி யாக்கும் விச்சைகொண்

    டென்னை நின்கழற் கன்ப னாக்கினாய்’    (திருச்சதகம்: 94)

    முடிவுரை

    அடிகளின் அருளனுபவப் பிழிவாக உள்ள திருச்சதகம், நமக்குப் பெருமானையே பெற்றுத்தர வல்லது; பக்தியின் பெயரால், அவனடியார் போல நடிக்கின்ற பொய்மையை நீக்கவல்லது; உயிரறிவாகிய சுட்டறிவை நீக்கி, பேரறிவால் பெருமானைத் தேட வழிகாட்டுவது; ‘ஞானம் ஈசன்பால் அன்பே’ என்னும் ஆன்மதூய்மையினை வலியுறுத்துவது; ‘நீங்காத அடிமைத்திறமே’ பெருமானுக்கு, நமது கைம்மாறு என நிறுவுவது. சிவானந்தத்துக்குத் திருவருளே கருவியாவதை விளங்கச்செய்வது; சிவானந்தத்தில் அழுந்தவும், மேன்மேலும் பரவசத்தில் திளைக்கவும், மெய்யன்பே மேன்மேலும் வகைசெய்யும் என்று விளக்குவது; தன்னை மறந்து, உள்ளம் உருகிக் கண்ணீர் சிந்துதலே, ‘உண்மையான பக்தி’ என்று உணர்த்தவல்லது.

    திருச்சதகத்தின் தெளிபொருளைச் சான்றோர், ‘பக்தி வைராக்கிய விசித்திரம்’ என்று வரையறுப்பர். பக்தியாவது, பெருமான்பால், அடிகள் கொண்ட நிலையான பேரன்பு; வைராக்கியமாவது, அவர்தம் பேரின்பப் பற்றுறுதி; விசித்திரமாவது, வியப்புணர்வு. பெருமானின் எளிவந்த கருணையினை எண்ணுந்தொறும், தகுதியின்மையினைப் பொருட்படுத்தாமல் பெருமான், தனக்கு இரங்குகின்றமையினை எண்ணுந்தொறும் எழுகின்ற பெருவியப்பு. இத்தகைய அருளனுபவப் பதிவுகள், ‘யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’ எனப் பக்திநெறி காட்டவல்லன.

    துணைநூல்கள்:

    1. திருவாசகம் (மூலம்), சைவசித்தாந்தப் பெருமன்றம், சென்னை வெளியீடு, ஆண்டு: 1999.
    2. திருவாசகம்-திருச்சதகம் (பண்டிதமணி உரை), மேலைச்சிவபுரி சன்மார்க்கசபை வெளியீடு, ஆண்டு: 1985
    Share
  • இந்துமத நூல்கள் பாடிய இசுலாமியப் புலவர்கள்

    -முனைவர் இரா.வெங்கடேசன்

    இந்திய வரலாறு என்பதே கட்டமைக்கப்பட்டதாகும். திட்டமிட்டே இங்கே வரலாறு தொகுக்கப்பட்டிருக்கிறது. ஒருநாட்டின் மேலாண்மை, சமூக அமைப்பு, பண்பாடு, பொருளியல் சார்ந்த நிகழ்வுகளின் தொகுப்பாக உள்ள வரலாறு ஒருபக்கச் சார்பு அடையாங்களைத் தாங்கியே நிற்கின்றது. இந்திய வரலாறு என்பது வட இந்திய வரலாற்றையும் தமிழக வரலாறு என்பது உயர்நிலையில் இருப்போரின் வரலாற்றையும் மட்டுமே பேசுவதாகக் கட்டமைக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கிய வரலாற்றை நூற்றாண்டு வாரியாக எழுதிய மு. அருணாசலம் பிள்ளை, சமண நூல்களைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘குண்டலகேசி, நீலகேசி கதைகளும் பின்னால் வந்த யசோதர காவியக் கதைகளும் கதைகள் என்ற அளவில் மட்டரகமான கதைகள். குண்டலகேசி ஒரு பெரிய பிசாசாவாள் என்று கூறியுள்ளார். தமிழில் மறுக்கமுடியாத ஆய்வாளராக இருக்கக்கூடிய மு.அருணாசலம். பிறமத நூல்களை (சமண, பௌத்த) இழிவாகக் கூறியதனை நாம் எவ்வாறு ஒப்புக்கொள்வது.

    இதே போன்ற பல சிக்கல்கள் தமிழ் இலக்கிய வரலாறு முழுவதும் காணப்படுகிறது. குறிப்பாகச் சைவம், வைணவம், கிறித்துவம் சார்ந்த நூல்களைப் பேசிய அளவு இசுலாம் இலக்கியங்களைப் பற்றிப் பேசுவதை இலக்கிய வரலாற்று நூல்கள் தவிர்த்திருக்கின்றன. குறிப்பாக இசுலாம் மதத்தைச் சார்ந்த புலவர்கள் இந்து மத விடயங்கள் குறித்துப் பாடிய நூல்களைப் புறந்தள்ளியுள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றைக் கட்டமைத்தவர்களால் திட்டமிட்டே இது நிகழ்ந்திருக்கிறது.

    இந்திய மண்ணில் இசுலாம் குறித்த புரிதல்கள் மிகக் குறைவே. எந்தவொரு மதமும் தனிமனிதரால் உருவாக்கப்படவில்லை. திடீரென்று தோன்றிவிடுவதுமில்லை. சமூகச் சிந்தனையின் ஒட்டுமொத்த விளைபொருளாகவே மதங்கள் தோன்றியுள்ளன. இசுலாமும் அப்படியாகவே தோற்றம்பெற்றது. அராபிய தேசமெங்கும் மக்கள் தாராளச் சிந்தனை கொண்டிருந்தனர். பழமையான மதத்தை நம்பியிருந்த அவர்கள் புதிய விடியலுக்காகக் காத்திருந்தனர். முகமது நபி (ஸல்) புதிய மதத்தைத் தோற்றுவிப்பதற்கு முன்பே அராபியர்கள் இசுலாம் சாராம்சம் அரபு மக்களின் ஆன்மீக உணர்வுகளில் கலந்திருந்தது.

    “சமூகச் சிதைவு ஆன்மீக அவநம்பிக்கை ஆகியவற்றின் கடுமையான இருளில் அவதிப்பட்டு வந்த மக்களுக்கு, அராபிய இறைத்தூதரின் நற்செய்தியானது நம்பிக்கை தரும் ஒரு விளக்காகக் காட்சியளித்தது. இம்மை, மறுமை குறித்து புதிய மதம் கூறிவந்த கருத்துக்கள் சாமான்ய மக்களின் சிந்தனையைக் கவர்ந்தன. இம்மண்ணுலக வாழ்க்கைக்கான போராட்டத்தில் தோல்வியுற்று எந்தப் பிடிப்புமின்றி கடவுளின் இருப்பு என்ற மூடநம்பிக்கையில் தங்களை ஈடுபடுத்தியிருந்த விரக்தி கொண்ட மக்களின் ஆன்மாக்களை இசுலாத்தின் வெற்றி முரசொலி விழிப்படையச் செய்தது.” (எம்.என்.ராய், 1999:40) 

    விரக்தியின் விளிம்பிலிருந்த மக்களின் முன்னால் இசுலாம் புதிய நம்பிக்கைக்கான பாதையைத் திறந்து காட்டியது. கடுந்துறவறம் என்ற நிலையைக் கடந்த இசுலாம் சிந்தனை மக்களுக்கு புதிய வெளிச்சத்தைத் தந்தது.

    “கி.பி.ஏழாம் நூற்றாண்டில் அரேபியாவிலேயே ஒரு புது வித ஞான ஒளி தோன்றியது. மறம் போக்கி அறம் புகுத்த முகமது நபிகள் (ஸல்) தோன்றினார். அவரின் அன்பாலும் திருநெறியாலும் அரேபியர்கள் ஈர்க்கப்பட்டனர். புத்துணர்ச்சி பெற்றார்கள். (அப்துல் ரஹீம்:1957:13).”

    இசுலாம் மதம் மக்களின் மனங்களில் நிரம்பியது. வாழ்க்கையைக் காட்டிய மதத்தை மக்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டனர். கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டளவில் எகிப்தில் வாழ்ந்து வந்த சில அரேபியக் குடும்பங்கள் ஹஜ்ஜாஜ் இப்னு யூசுபின் கொடுங்கோல் ஆட்சிக்கு அஞ்சிக் கடல்வழியாகப் பாண்டிய நாட்டிற்கு வந்தனர். தமிழ்நாட்டிற்கு 1923ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட திமிஷ்கைச் சேர்ந்த அபுல்பிதா இசுலாமியர்களும் தமிழர்களும் ஒற்றுமையோடு வாழ்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.

    “கி.பி.13ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் முகம்மது இப்னு கலாவூனின் கொடுமை தாங்க முடியாமல் சில அரேபியக் குடும்பங்கள் வைசயித் ஜமாலுத்தின் அவர்களின் தலைமையில் காயல்பட்டினத்தில் வந்து குடியேறினர்.” (அப்துல் ரஹீம்:1957)

    தமிழகத்தில் வாழத் தொடங்கிய இசுலாமியர்கள் அமைச்சர்களாக, போர்வீரர்களாக, நகரப் பாதுகாப்பாளர்களாக, பொற்காசு செய்து தருவோராக, வணிகர்களாக விளங்கினர். மக்கள் இவர்களை மரக்காயர், லெப்பை, இராவுத்தர், சாகிபு என்ற பல பெயர்களால் அழைத்தனர். இசுலாமியர்களை மன்னர்கள் ஏற்றுக்கொண்டதால் மக்களும் அவர்களை ஏற்றுக்கொண்டனர். இசுலாம் மதம் இந்து மதத்தை அழிக்க வந்த மதமாக இந்துக்கள் கருதவில்லை. அதனால் சாமானியர்களான இந்துக்களுக்குள்ளும் இசுலாமியர்களுக்குள்ளும் நல்ல உறவு ஏற்பட்டது. இதைத்தாண்டிய இரு சமூகத்திற்குமிடையிலான வணிக உறவென்பது முக்கியமானது. இயற்கையாகவே வணிக நோக்குடைய இசுலாமியர்கள் இந்துக்களோடு கலக்கும்போது புதிய வெளிகள் வணிகத்தில் உருவாக்கப்படுகிறது. இடைவெளியை இருசமூகமும் அனுமதிக்காததால் புரிந்துணர்வு என்பது முக்கிய இடம்பெறுகிறது.

    “அரேபியாவின் குதிரைகளைத் தமிழ் மன்னர்கள் பெரிதும் விரும்பினர். தமிழகத்திற்கு அரபு நாடுகளிலிருந்து குதிரைகள் கொண்டு வரப்பட்டன. இந்தக் குதிரை வணிகம் இருநாடுகளிடையே பெரும் நட்புறவை ஏற்படுத்தியது. இந்த உறவு தமிழகத்திற்கு அரபு வணிகர் வந்து தங்கும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அரேபியக் குதிரைகளைப் பராமரிக்கவும் உணவு கொடுத்துப் பேணி வளர்க்கவும் பயிற்சி பெற்றோர் அந்நாளில் தமிழகத்தில் அரிதாகவே இருந்தனர். எனவே இந்தப் பணிகளைச் செய்ய அரபு நாடுகளிலிருந்தும் ஆட்கள் வரவழைக்கப்பட்டனர். இவர்களில் பலர் இங்கேயே தங்கியிருந்து தமிழ் மக்களோடு ஒன்றிணைந்து மண உறவு கொண்டு வாழ்ந்து வரலாயினர்.” (எஸ்.ஏ.முகம்மது இபுராகிம் 2009:41)

    இந்துக்களோடு வாழ்ந்து வரக்கூடிய இசுலாமியர்களைத் தமிழ்ப் புலவர்கள் செய்த படைப்புக்களோடு இசுலாமியர்கள் செய்த படைப்புக்களை ஒப்பிட்டுப் பார்க்கும் முயற்சி இங்கே பெரிதாக மேற்கொள்ளப்படவில்லை. இசுலாமியப் புலவர்கள் இசுலாம் மார்க்கம் குறித்து மட்டுமே பாடியுள்ளனர் என்ற மைய நீரோட்டத்திலிருந்து விலகிப்பார்த்தால் இசுலாம் புலவர்கள் இந்து மதம் குறித்துப் பாடியுள்ளனர். இந்துக்களுக்கும் இசுலாமியர்களுக்கும் இடையே சமூக உறவு மட்டுமல்லாது இலக்கிய உறவு மேம்பட்டிருந்தது. இந்துப் புலவர்கள் இசுலாம் மதத்தை உயர்வாகப் பேசுவதும் இசுலாம் புலவர்கள் இந்துப் பண்பாட்டை உயர்வாகப் பேசுவதும் இலக்கியரீதியாகத் தமிழில் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனால் இது குறித்து ஆவணப்படுத்தல் மிகக் குறைவாக நடைபெற்றுள்ளது.

    “1868இல் பீர்காதர் ஒலி ராவுத்தர் திருவாசகத்தைப் பதிப்பிக்கின்றார். 1835ஆம் ஆண்டிலிருந்தே சுமார் ஆறு ஏழு பதிப்புக்கள் ராவுத்தர் பதிப்பிற்கு முன்னரே வெளிவந்திருக்கின்றன. ஆனால் திருவாசகத்தின் தொடக்கமாக உள்ள சிவபுராணம் என்ற பகுதி முன் பதிப்புக்களில் எல்லாம் சிவபுராணத்து அகவல் என்று குறிப்பிடப்பட்டிருக்கின்றது. அப்படி அதனை அகவல் என்று குறிப்பிடுவது தமிழ் இலக்கண மரபின்படி பிழையானது என்பதையும் உண்மையில் அது கலிவெண்பா என்பதை யாப்பருங்கலம், தொல்காப்பியம் நூற்பாக்களின் வழியாக நிரூபித்து அந்தச் செய்யுள் வெண்தளையால் அமைந்த கலிவெண்பா என்று சரியாகக் குறிப்பிடுகின்றார். பின்னர் இன்று வரை வந்த பதிப்புக்கள் அனைத்தும் ராவுத்தர் பதிப்பை அடியொற்றி அமைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.” (பொ.வேல்சாமி, 2014:30).

    இத்தகைய சிறப்புக்கள் நிறைந்த பலரைப் பற்றிய பதிவுகள் இதுவரை வெளிவந்துள்ள தமிழ் இலக்கிய வரலாறுகளிலும் இசுலாம் இலக்கிய வரலாறுகளிலும் பதிவாகவில்லை. அவ்வாறு புறக்கணிப்புக்கு உள்ளானவர்களின் சாந்தாதி அசுவகம் (மகாபாரதம்) மகாபாரத அம்மானை பாடிய சையது முகம்மது அண்ணாவியார், பாம்பன் பாலசுப்ரமணிய சுவாமிமீது கும்பாபிஷேக வழிநடைச்சிந்து பாடிய அப்துல்காதிறு ராவுத்தர் போன்றோர் முக்கியமானோர். இவர்கள் பிறப்பால் இசுலாம் மதத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சமூக நல்லிணக்கத்தைக் கொண்டவர்கள். மானுட சமூகத்தின் மீதான சமத்துவத்தையும் மதிப்பையும் கொண்டவர்கள். அதனால் மதங்கள் அனைத்தும் சமமே என்ற கொள்கையோடு இவர்கள் வாழ முடிந்தது.

    18 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செய்யிது முகமது அண்ணாவியார் பாண்டி நாட்டினர். பிறருக்குப் பாடம் சொல்லிக்கொடுத்து அதன்வழி மொழியையும் சமயத்தையும் வளர்க்கும் அண்ணாவியார் எனும் குடும்பத்தினர். அண்ணாவி என்பது கிராமத்து ஆசிரியர்களைக் குறிக்கும் சொல்லாகும். கவி பாடுவதிலும் பெருங்காப்பியங்கள் செய்வதிலும் இனிமையைக் கண்டவராதலால் இவரை மக்கள் அமிர்தகவி என அழைத்தனர். சமயப் பொறை கொண்ட இவர் தமிழ்ப்புராணங்கள் வடமொழிப் புராணங்கள் சிலவற்றைக் காவியமாக்கினார். இவர்தம் கவிதை முருகனைக் காட்டிய வரலாறு கொண்டது. யமகம், திரிபு, அந்தாதி, மாலைமாற்று முதலான அரிய பாடல்களை விரைந்து பாடும் ஆற்றல் கொண்டவர். நாகூரில் சில காலம் கல்வி கற்பித்தார். பிற்காலத்தில் ஜவ்வாது புலவர் என்று பாராட்டப் பெற்ற பீர்ஜவ்வாது இவரிடம் கல்வி கற்றவர்.

    சையிது முகம்மது அண்ணாவியார் நாகூரில் இருந்தபோது ஷைரு வஹாபுதீன் என்ற ஆன்மீகப் பெரியோரின் நட்பு கிடைத்தது. அவரால் தீட்சை பெற்றார் அண்ணாவியார். பின்னர் ஐயம்பேட்டையில் உள்ள பள்ளியில் ஆசிரியராக இருந்தார். அதிரையில் திண்ணைப் பள்ளியில் கதிர்வேலு உபாத்தியாயர் தம்மிடம் இருந்த மந்திரக் கலையைக் காட்டி மக்களை அச்சுறுத்தி வாழ்ந்து வந்தார். அச்சம் கொண்ட மக்கள் கதிர்வேலு உபாத்தியாயரை அடக்க மாந்திரீகக் கலையில் வல்லவரான அண்ணாவியாரை லெப்பைத் தம்பிமரக்காயர் என்னும் பெருவள்ளல் ஒத்துழைப்போடு அழைத்து வந்தனர். அண்ணாவியார் அதிரைக்கு வந்தவுடன் மக்கள் அச்சமின்றி நடமாடினர். இதனைக் கண்ட கதிர்வேலு உபாத்தியாயர் நட்போடு பழகுவதுபோல் அண்ணாவியாரிடம் நடித்தார். ஒருமுறை காவடி எடுக்கப் பழனிக்குச் செல்கிறேன் என்று உபாத்தியாயர் கூற முருகனைக் காணப் பழனி ஏன் செல்ல வேண்டும் இங்கேயே முருகன் வருவான் எனக் கூறுகிறார் அண்ணாவியார்.

    “நாளும் இடமும் குறிக்கப்பட்டன. செழியன் குளத்தருகே பந்தல் போடப்பட்டது. மக்கள் வெள்ளம் கரைகட்டி நின்றது. அண்ணாவியாரும் உபாத்தியாயரும் எதிரும் புதிருமாய் அமர்ந்தனர். சையிது முகம்மது அண்ணாவியார் முன்னரே தாம் பாடி வைத்திருந்த ஏட்டை எடுத்தார். கதிர்வேலு கையில் கொடுத்தார். ‘ஏட்டிலிருக்கும் மந்திரக் கவிகளை உரக்கப்படியும் உமது வேதம் காட்சி நல்கும் என்றார். கதிர்வேலு படித்தார். பதினான்கு கவிதைகள் (சுப்பிரமணியர் பிரசன்ன பதிகம்) வரை உரக்கப் படித்தார். என்ன விந்தை! கதிர்வேலு தம் கந்தவேளைக் கண்ணாரக் கண்டு கொண்டார். அண்ணாவியாரின் ஆற்றலை அறிந்துகொண்டார். அண்ணாவியார் இவ்விடத்தில் காட்டியது ‘தொலை உணர்தல்’ (டெலிபதி) எனும் தொலைக்காட்சியாகும்.” (தா.கோ.பரமசிவம், 2004:சு)

    அண்ணாவியார் பத்துப்புராணங்களை இயற்றியுள்ளார். நூர்நாமா, அலிநாமா, சாந்தாதி அசுவமகம், பாரத அம்மானை போன்றவை குறிப்பிடத்தக்கவை. சையது முகம்மது அண்ணாவியார் சுப்பிரமண்யரை வரவழைத்த செய்யுட்கள் அடங்கிய சிறுநூல் ‘சுப்பிரமணியர் பிரசன்னப் பதிகம்’ என்ற பெயருடன் மூன்று பதிப்புகள் வெளிவந்துள்ளன. அதற்குப் பல இந்தத் தலைவர்களே சாற்றுக்கவிகள் பாடியுள்ளனர். மேலும் அண்ணாவியார் பாடிய மகாபாரத அம்மானையின் பதிப்புகளால் அஷ்டாவதானம் இராமசாமிப்பிள்ளை அப்பதிகம் பத்தாவது செய்யுள் பாடிய தருணம் அங்ஙனம் சூழ்ந்த சர்வவீரர்களும் மயிர்க்கூச்சலிட்டு நின்றனர். இது ஒரு நிகழ்வே போதும். இந்து சமயத்தின் மீதான அண்ணாவியார் கொண்டிருந்த பற்றுதலைச் சொல்வதற்கு. அண்ணாவியார் அலிநாமா நூலை அரங்கேற்றியபோது லெப்பை தம்பி மரக்காயர் அவருக்குச் சரியாசனம் வழங்கிக் கனகமாரி பொழிந்தார் என்பது வரலாறாகும்.

    மகாபாரதத்தின் ஒரு சிறிய பருவத்தை 4100 பாடல்களில் பாடிய இப்புலவர் பாரதக்கதை முழுவதையும் பாடியிருந்தால் அது ஒரு லட்சம் கவிதைகளையும் தாண்டியிருக்கும் அதிராம்பட்டினத்தில் பள்ளிவாசலின் அருகே அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. அண்ணாவியாரின் மகனார் சையிது மீராலெப்பை தந்தை இறந்தபிறகு அவரது மீது சமரகவி பாடினார். ஜீவரத்னகவி என்ற சிறப்புப் பெயருடன் விளங்கினார். மனை அலங்காரம், மதீனக்கலம்பகம், வாள்விருத்தம், பரிவிருத்தம், யானை விருத்தம் போன்றவை பாடியுள்ளார்.

    அண்ணாவியார் எடுத்தாண்ட உவமைகளும் உருவகங்களும் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் அமைந்துள்ளது. சீவகசிந்தாமணி, பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற காப்பியங்களில் காணப்பெறும் இலக்கிய மரபுகளை முற்றிலும் அடியொற்றிய கவிகளைப் பாடியுள்ளார்.

    “காவெலாம் மலரின் கூட்டம் கனியெலாம் தேனின் கூட்டம்
    பூவெல்லாம் மிஞிறின் கூட்டம் பொருப்பியக் கோட்டின் கூட்டம்
    மாவெலாம் குயிலின் கூட்டம் வரம்பெலாம் வாழைக்கூட்டம்
    நாவெலாம் பாவின் கூட்டம் நாடெலாம் செல்வக் கூட்டம்”

    என்று குருநாட்டின் வளத்தைக் காட்டுமிடத்துக் கம்பன் அயோத்தி வளத்தை காட்டுவதைப் போல் காட்டியுள்ளார். அண்ணாவியாரின் சமயப்பொறை வியப்புக்கும் பாராட்டுக்கும் உரிய நிலையில் காணப்படுகிறது.

    எடுத்துக்கொண்ட கதை பாரதக்கதை. பாரதக்கதையின் மூலவேர் கண்ணன் எனவே கண்ணனை அவர் வாழ்த்திப்பாடுகின்ற பாடல்கள் ஆழ்வார் ஒருவர் பாடும் உருக்கத்துக்கு இணையானவை எனில் அது மிகையாகாது.

    “கருதரிய பெரும்சலதிச் சலசவனப்
    புதுமை சொல்லக் கடவர் யாரோ?
    அரவில் நடித்ததும் மருது சகடை உதைத்
    ததும் சிலைபெண் ஆக்கி கங்கை
    விரவ அரன் முடிதரிக்க உதவுபதத்
    தின்பெருமை வினாவப் பொன்னின்
    நிருதனைச் சென்று அருமறையை வெளிக்கொணர்ந்த
    பெரும் பொருளை நேசிப்போமே”                   (சாந்தாதி. சயிந்தவ.1)

    இப்பாடலில் திருமாலின் அவதாரங்கள் அடுக்கப்பெற்று வாழ்த்தப்பெறுகின்றன. நிரல் நிரையில் அவதாரங்கள் பின்னிலிருந்து முன்னர்க் கூறப்பட்டுள்ளன.

    அண்ணாவியாரின் சாந்தாதி அசுவமகம் கவனம் பெறாமல் போனது போலவே M.K.M. அப்துல் காதிறு ராவுத்தர் அவர்கள் இயற்றிய பாம்பன் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து நூலும் கவனம் பெறாமல் போனது வரலாற்றுப்பிழையாகும். இந்நூல் மதுரை ஸ்ரீ மீனாம்பிகை பிரசில் பதிக்கப்பெற்று 1904ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. இச்சிந்து நூல் 30 கண்ணிகள் கொண்டது. இந்நூலில்,

    “இது சிவகங்கை வக்கீலும், இந்திரகுல ராஜவம்ச அகம்படியார் டிஸ்டிரிக் ட்டுசலைப் பிரஸிடெண்டும் தமிழபிமானியும், சீமானும், சிவநேசச் செல்வரும் ஆகிய மகா – ஸ்ரீ எஸ். சீனமுருகுபிள்ளையவர்கள் நடாத்தும் பாம்பன் பாலசுப்பிரமணியர் கோவில் கும்பாபிஷேக தரிசனைக்குச் செல்வார் பலருள் ஒரு தலைவன் தனது ஆருயிர்க்காதலிக்கு அச்சிவகங்கையிலிருந்து பாம்பன் நகர் வரையுமுள்ள மார்க்க விஷேடங்களையும் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷகப் பெருமை பலவற்றையும் எடுத்துக் கூறுந்தன்மையில் விளங்கி நிற்பது.” (M.K.M. அப்துல்காதிறு ராவுத்தர், 1904:முகவுரை). 

    என்று முகவுரையில் கூறியுள்ளார். காப்புச் செய்யுளில் முருகனுக்கும் சரஸ்வதிக்கும் துதி பாடியுள்ளார். தன் காதலிக்கு வழி காண்பித்துச் செல்லும் கவிகள் இன்பச் சுவைகளைத் தரக்கூடியவை.

    “தாலுகாக் கச்சேரி யீதே அது
    தானேதெப் பக்குளம் மாதே அருள்
    தங்கும் கௌரி விநாயகர் கோவில் ரா
    ஜாக்கள் அரண்மனை பாராய் இனித்
    தான்கடை வீதியும் நேராய் இதில்
    தக்கவியாபாரம் சீராய் செயும்
    சாமர்த்தியத்தைநீ தேராய் விலை
    தந்தாலெது வுந்தாமத
    மின்றாயுட னின்றீகுவர்
    சற்புத்தியில் வெர்மிஞ்சுவர்
    ஒப்பற்றவ ணிகதந்திரர்
    சரசத்திலி தம்பற்பல
    சொலிமிக்கத னம்பெற்றவர்
    தருமத்திலும் நினைவுற்றவர்
    இனிமற்றுள தெதிர்நிற்பது” (பத்மினி)

    என இவ்வாறு வழியைக் காட்டிக்கொண்டு செல்லும்போதே முருகனின் பெருமைகளை விரிவாகப் பேசியுள்ளார். இந்நூலை இசுலாமியப் புலவர் ஒருவர் பாடுவதாக நாம் நினைக்க முடியாது. அருணகிரியார் பாடுவதைப் போலப் பாடியுள்ளார்.

    அண்ணாவியாரின் சாந்தாதி அசுவமகம் M.K.M, அப்துல்காதிறு ராவுத்தரின் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து இரண்டு நூல்களும் பதிப்பு நெறிப்படி பதிப்பிக்கப்பட்டுள்ளது. செய்யுள் முதற்குறிப்பு அகராதி, நூலைப் புரிந்து கொள்வதற்கான முன்னுரை, ஏடு கிடைத்த முறை போன்றவை தரப்பட்டுள்ளன. ஆனால் இரண்டு நூல்களிலும் உரை இல்லை. தமிழில் நல்லிணக்கண  நூல்களாக உள்ள இந்நூல்கள் உரையுடன் வெளிவரவேண்டும். சமயப்பொறையை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்ல இந்நூல்களின் வழியை நாடலாம்.

    உசாத்துணை நூல்கள் 

    1. கோவிந்தசாமி (தமிழாக்கம்) எம்.என்.ராய் 1999இ இசுலாமின் வரலாற்றுப் பாத்திரம், விடியல் பதிப்பகம்.
    2. அப்துல் ரஹீம் 195இ முஸ்லீம் தமிழ்ப் புலவர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ் சென்னை
    3. எஸ்.ஏ. முகம்மது இபுறாகிம் 2009 கடையநல்லூர் முஸ்லிம்கள் வரலாறு, சிராஜும் முனீர் நற்பணி மன்றம் கடையநல்லூர்.
    4. பொ.வேல்சாமி 2014 வரலாறு என்பது கற்பிதம், முகம் வெளியீடு, கோவை – 5.
    5. எம்.கே. எம். அப்துல்காதிறு ராவுத்தர் 1904 பாம்பன் பாலசுப்பிரமணியசுவாமி கோவில் கும்பாபிஷேக வழிநடைச்சிந்து, மீனாம்பிகை பிரஸ் மதுரை.

    *****

    கட்டுரையாளர்,
    இணைப்பேராசிரியர்,
    இந்தியமொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப்பள்ளி,
    தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

     

    Share
  • கொஞ்சி விளையாடும் கோபம்!

    -பெருவை பார்த்தசாரதி

    மனதில் நினைவிலாத கனவுகள் நூறாயிரமதில்
    ……….மங்காத கனவாக மனதில் நீங்காததொன்றாம்!
    எனதருமைக் காதலியைக் காண்ப தென்னாள்
    ……….என்புருகிப் போனேன்! எண்ணூறு இரவாயின!
    உனதருமைக் கொஞ்சலால்..காரிகை உன்மேல்
    ……….உன்மத்தம் பிடிக்கும்! நடுநிசியில் நீவருவாய்!
    எனத்துடித்தே எழுவேன்! இன்புறு மென்மேல்
    ……….எங்கேயுன்? கொஞ்சி விளையாடும் கோபம்!

    மஞ்சள்பூசி மதிமயக்கு முன்முக வசீகரத்தால்
    ……….முழுமதியும் வெட்கி வெளிச்சம் தரமறுக்கும்!
    மஞ்சத்தில் கிடக்கும் கடிமலரும் வாடிவிடும்
    ……….மனமாறும் நிலையில் மறுபடிநீ ஏமாற்றாதே!
    வஞ்சி வருவாளென வருந்தியயென் விழிகள்
    ……….வஞ்சியாமல் அவள் விழியை எதிர்நோக்கும்!
    நெஞ்சம் கனக்கிறது! ஏலா இருளில் உந்தன்
    …….கொஞ்சி விளையாடும் கோபமதை லேசாக்கும்!

    சேவலும் குயிலும்கூடக் கூக்குரலில் கூவியது
    ……….காவலனும் தாழிட்ட கதவைத் தட்டுகின்றான்!
    ஆவலில்லை! அவசரத்தில் எழும் மனமில்லை
    ……….அவளின்று கனவில் வடிவெடுத்து வரவில்லை!
    பாவமில்லை! பரிதாபமில்லை!…பஞ்சணை கூட
    ……….‘பூவுலகப் பெண்டிரே இப்படித்தான்’ வினவியது!
    சாவகாசமாய் எழுந்தேன்! சாதகமில்லை..அவள்
    ……….கொஞ்சி விளையாடும் கோபத்தை ரசிப்பதற்கு!

    *****
    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::04-03-18

     

     

    Share
  • படமும், பாடலும் … !

     

    படமும், பாடலும்(படம் கல்லூரி நாளில் வரைந்தது, பாடல் இப்போது எழுதியது)


    ———————————-

    ”மண்ணுண்ட வாயை மகன் திறந்திட,
    அன்னை யவள்கண்டாள் ஆச்சரியம்,-தன்னை
    மறந்தவள் வாயைத் திறந்திட, மாயை
    பிறந்ததவள் வாயுள் விழி’’….கிரேசி மோகன்….!

    எந்தக் குழந்தையும் கண்ணன்தான்….!
    ——————————————————————————

    பையன் மண்ணைத் தின்றால்….!
    வையாதே…..!
    வாய்க்குள் பார்….!
    வையம் தெரியாவிட்டால்….!
    ஐயமே இல்லை….!நீ
    யசோதை அல்ல….!கிரேசி மோகன்….!

    ”எந்தக் குழந்தையும் மண்ணின் குழந்தைதான்….!
    மண்ணைத் தின்கையிலே…..!
    அவன் -கண்ணனாய் ஆவதும், கம்ஸனாய் ஆவதும்….!
    அன்னை தன்கையிலே….!’’கிரேசி மோகன்….!

    Share