Blog

  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    நாதா திருவரங்க நாதா தரணிகுரு
    நாதா ரமாப்பிராண நாதாவி -னோதா
    துயறருக்கும் பாதாம் புயம்மறந்தேன் தீதாம்
    மயர்வறுக்க நீர்தான் மருந்து….!

    ஆழ்ந்து படித்தென்ன ஆராய்ந்து பார்த்தென்ன
    வீழ்ந்து கிடப்போர்க்கே விஷ்ணுபதம் -தாழ்ந்த
    சபரியெச்சில் ஏற்ற சமத்துவத்தின் மூலம்
    அபரி மிதமான அன்பு….!

    கொடுப்பதில் கர்ணன் எடுப்பதில் கள்ளன்
    அடித்துத் திருத்தலில் அன்னை -மிடுக்குடன்
    ஆசை தொலைத்தவன் ஆட்டத் துணையாக
    வேஷம் கலைத்திடும் விஷ்ணு….!

    விஷ்ணுவின் நாமங்கள் வேண்டும் பலனளிக்கும்
    உஷ்ண வினையை உருக்கிடும் -கஷ்டதசை
    துஷ்டன், நமைக்கண்டு தூர ஒதுங்கிடும்
    நிஷ்டைக்(கு) இழுத்திடும் நூல்….கிரேசி மோகன்….!

    Share
  • SRI AUROBINDO or The adventure of consciousness -Satprem…..!

     

    ‘’Adventure of consciousness, by SRI AUROBINDO in ALIPURE jail’’….!
    ———————————————————————————————————————–
    ’’அலிப்பூர் சிறையில் அரவிந்தர் அனுபூதி -வாசுதேவ குடும்பம்’’….!
    —————————————————————————————————————————-

    I looked at the jail that secluded Me from men and it was no longer by its high walls that I was imprisoned : no it was VASUDEVA….
    I looked at the bars of my cell, thevery grating that did duty for a door and again I saw VASUDEVA….it was NARAYANA who was gaurding and
    standing sentry over Me….!
    I looked and it was not the magistrate whom I saw ,it was VASUDEVA; it was NARAYANA who was sitting on the bench….!
    I looked at the prosecuting council; it was SRI KRISHNA, who sat there and smiled ”now do you fear!”….
    HE said ”I am in all men over rules their actions and their words”….!
    GOD is not outside HIS world….!HE has ”not” created this world….!
    HE has become the world, says the Upanishad….! SRI AUROBINDO…..!

    “வாசுதேவ் (சூழ்மதில் ஆனார்)வாலானார் (wall ஆனார்)!, வாசுதேவ் வெஞ்சிறை!-
    வாசுதேவ் வார்டன் ,விடுதலை !-ஈசரயன்-
    ஏசுஅல்லா சக்தியெலி(சக்தி எலி), ஏறுமயில் வாகனர்கள்!-
    வாசுதேவ் ஃபேமிலிதெய் வம்!”….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (264)

    இந்த வார வல்லமையாளராக சூப்பர்ஸ்டார் என மக்களால் அன்புடன் அழைக்கபடும் நடிகர் ரஜினிகாந்த் அவர்களை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    கர்நாடகாவில் பிறந்த மராட்டியர். வசிப்பது சென்னையில், மணமுடித்தது தமிழச்சியை. இப்படி மாநில எல்லைகளை தாண்டி மக்களால் சொந்தம் கொண்டாடப்படும் நடிகர் ரஜினி. இந்தியாவெங்கும் படங்களின் வெற்றி, தோல்வியை தாண்டி தன் நடிப்புக்காக ரசிக்கபடுபவர். கண்டக்டர் வேலையில் இருந்து சூப்பர்ஸ்டார் ஆக உயர்ந்தவர். அத்துடன் நிறுத்திக்கொண்டிருந்தாலே அது வாழ்நாள் சாதனையாக அமையும். ஆனால் அதையும் தாண்டி 1996ல் அரசியல் திருப்புமுனையை ஏற்படுத்தியவர். அதன்பின் தற்போது அரசியலிலும் நுழைந்துவிட்டார். இவ்வாரம் இவரது காலா டீசர் வெளியாகி, இவரது அரசியல் நுழைவின் முதல் அடியும் எடுத்து வைக்கபட்டிருப்பதால் செய்திகளில் முதலிடம் பிடித்துள்ளார்.

    திரையுலகில் சூப்பர்ஸ்டாராக மட்டுமே இவரை இன்றைய தலைமுறை அறியும் என்றாலும் இவரது நடிப்பாற்றலை எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபதுவரை, அவள் அப்படித்தான் போன்ற படங்களில் நாம் கண்டோம். முரட்டுக்காளையில் தனக்கென ஒரு தனிப்பாதை அமைத்து மேலேறியவர் அதன்பின் அடுத்த 30 ஆண்டுகளில் அதை ராஜபாட்டையாக அமைத்து சூப்பர்ஸ்டாராக பரிணமித்தார். கபாலியில் அந்த பழைய ரஜினியை மீண்டும் கண்டோம். அதே ரஜினியை மீண்டும் காலாவில் காண இருக்கிறோம். அத்துடன் அரசியல்வாதி எனும் அவரது புதிய பரிணாமத்தையும் காண இருக்கிறோம்.

    அவரது அரசியலுக்கு நாம் அளிக்கும் அங்கீகாரம் அல்ல இது. ஆனால் அவரது வாழ்க்கை சரிதத்தை எழுதுகையில் இதை குறிப்பிடாமல் எழுத முடியாது அல்லவா?

    எம்ஜிஆர், சாவித்திரி, சிவாஜிக்கு பின் திரிசூலங்களாக தமிழ் திரையுலகிற்கு கிடைத்தவர்கள் ரஜினி, கமல் மற்றும் ஸ்ரீதேவி ஆகிய மூவர். மூவரும் நடிப்பில் புகழின் உச்சியை எட்டிய நிலையில் அதன் அடுத்தகட்டமாக கமலும், ரஜினியும் அரசியலில் புகுந்துள்ளனர். எம்ஜிஆர், சிவாஜி என இதற்கு முந்தைய தலைமுறையின் இரு சூப்பர்ஸ்டார்களும் ஒரே சமயத்தில் அரசியலில் இருந்தும் அதில் எம்ஜிஆர் மட்டுமே ஜொலிக்க முடிந்தது. இம்முறையும் அதுவே நிகழுமா அல்லது இருவருமே ஜொலிக்காமல் போவது நிகழுமா என்பது வழக்கம் போல மக்களின் கையில் தான் உள்ளது.

    நம்மளவில் தன் நடிப்புலக வாழ்வின் உச்சத்தையும், அரசியல்வாழ்வின் முதல்படியிலும் அடியெடுத்து வைத்திருக்கும் ரஜினியை வருங்கால தலைமுறைக்கு ஆதர்சமாக இருப்பவர் எனும் நோக்கில் பாராட்டி வல்லமையாளர் விருதை வழங்குவதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

    Share
  • படக்கவிதைப் போட்டி 150-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி 

    படக்கவிதைப் போட்டி 150ஆவது வாரத்தைத் தொட்டு வெற்றிநடை போட்டுவருகின்றது. இதனைச் சாத்தியமாக்கிய நண்பர்கள் அனைவருக்கும் வல்லமையின் நெஞ்சார்ந்த நன்றி.

    உணவூட்டி மகிழும் காகங்களை அழகாய்ப் படம்பிடித்து வந்திருக்கின்றார் திருமிகு. ராமலக்ஷ்மி. படக்கவிதை போட்டிக்கு இதனைத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். ஆற்றல்மிகு இவ்விரு மகளிரும் என் நன்றிக்கும் பாராட்டுக்கும் உரியோர்.

    காகத்தின் சிறப்பியல்புகளாகச் சுட்டப்பெறுபவை இரண்டு. ஒன்று இனத்தைக் கூவியழைத்துப் பகுத்துண்ணும் அவற்றின் உயர்பண்பு.

    இதனை,

    ”காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும்
    அன்னநீ ரார்க்கே உள” என்பார் வள்ளுவப் பேரறிஞர்.

    மற்றொன்று, வீட்டுக்கு விருந்தினர் வரப்போவதை முன்கூட்டியே அறிந்து அறிவிக்கும் ஆற்றல் அவற்றிற்குண்டு எனும் நம்மவரின் நம்பிக்கை.

    ”…….பல்லா பயந்த நெய்யில் தொண்டி
    முழுதுடன்
    விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
    எழுகலத்
    தேந்தினுஞ் சிறிதென் தோழி
    பெருந்தோள் நெகிழ்த்த
    செல்லற்கு
    விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.” (குறுந்: 210

    என்ற குறுந்தொகைப்பாடல் காகம் கரைந்தவாறே பொருள்தேடச் சென்றிருந்த தலைவன் மீண்டமையால் அதற்கு ஏழு கிண்ணங்களில் நெய்பெய்த வெண்ணெல்லரிசிச் சோற்றைப் பலியாக இடுவதும் சிறிதே என்று தோழி கூறுவதைப் பதிவுசெய்திருக்கின்றது. இப்பாடலில் காக்கையைப் புகழ்ந்துபாடிய நச்செள்ளையார் எனும் பெண்பாற்புலவர்க்குக் ’காக்கைபாடினியார்’ எனும் சிறப்புப்பெயரே கிடைத்துவிட்டமை அறிந்து மகிழத்தக்கது.

    இனி, நம் புலவர்கள் காக்கையின் புகழ்பாடும் நேரம்…

    ”அள்ளிக்கொடுக்கும் மனமிருந்தால் துள்ளிவந்திடும் மனமகிழ்ச்சி; வள்ளல் குணத்தையும் தாய்ப்பாசத்தையும் கற்றுத்தரும் பள்ளிக்கூடமாய்த் திகழ்கின்றன இந்தக் காக்கைகள்” என்கிறார் திரு. ஏ.ஆர். முருகன், மயிலம்பாடி.

    பகிர்வதே அமிர்தம்!!

    காக்கா காட்டுது தாய்பாசம்_அவை
    கத்துக்கொடுக்கிறபள்ளிக்கூடம்!!
    சோக்காவாழ்கிற பாலபாடம்_அதை
    சொல்லிக்கொடுக்கிறகுருபீடம்!!
    இயற்கைஇடர் வந்த நேரம்
    இன்னல் நீக்க இணைந்தோம்!
    அதனால் அதிலே மீண்டோம்
    ஆறுதல் நாமே ஆனோம்!!!
    இன்னும் இருக்குது ஏழ்மை
    இருப்போர்இதயம் கூர்மை
    அன்பில் விலகும் வறுமை
    அப்படி வாழ்ந்தால் பெருமை!!
    கோடிகோடியாச்சம்பாதிச்சுட்டு
    கொட்டிவச்சுட்டு செத்துட்டாலும்
    கொண்டுபோறது ஒன்னுமில்ல!!
    கொடுத்துச்சிவப்பவர்மரிப்பதில்ல!!
    பாவம்செய்கிற மனிதருக்கும்
    பலனைத்ததருவது செய்தருமம்!
    பண்ணிடும்புண்ணியம்கூடவரும்
    முன்னையவினைகளும்ஓடிவிடும்!
    அள்ளிக்கொடுக்கும் மனமிருந்தால்
    துள்ளிவந்திடும் மனமகிழ்ச்சி!!
    சல்லிக்காசில் ஆனந்தமில்லை
    வள்ளல்களுக்கு வானமேஎல்லை!!

    *****

    ”கடமைகளைக் கேள்விகளால் சிதைக்காத, தலைமுறை காக்கும் அன்பெனும் அருங்குணத்தைச் சிறிய பறவைகள் சிறப்பாய் நம் சிந்தையில் புகுத்துகின்றனவே” என்று வியக்கிறார் திரு. சக்தி சக்திதாசன்.

    ஊட்டி விடும் அழகு
    அன்றிலிருந்து இன்றுவரை
    நாகரீகம் எனும் சொல்லுக்கு
    விலை போகாத அன்பு
    காலம் காலமாய் தமக்குள்ள
    கடமையை கேள்விகள் எனும்
    பெயரில் சிதைத்திடாமல்
    தலைமுறையைக் காத்திடும் பண்பு
    இயற்கை எனும் இறை உலகில்
    ஈந்தது அனைவர்க்கும் ஒன்றே
    மனிதர் எனும் இனம் மட்டும்
    அறிவால் உணர்ந்து விட்டோம் எனும்
    ஆணவத்தால் தம் அடிப்படைப்
    பண்புகளை ஆழமாய்ப் புதைத்து விட்டு
    கொக்கரித்து நிற்கும் வேளையில்
    சிறிய இந்தப் பறவைகள் எமக்கு
    சிந்தையில் புகுத்துவது ஏனோ
    முள் போல் தைக்கிறது

    *****

    ”காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அற்புதக் காட்சி; பாசத்தின் மேன்மைக்குச் சிறந்ததோர் சாட்சி! குயிலின் முட்டையையும் அடைகாக்கும் காகம்; உயிர்தந்த பெற்றோரையும் புறக்கணிக்கும் மாந்த இனம். கண்ணியமாய் வாழ்வதெப்படி எனக் காக்கையிடம் கற்றுக்கொள்ளுங்கள் மானிடரே!” என்று ஆலோசனை சொல்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    பொது நலப் பறவை

    காக்கை தன் குஞ்சுக்கு ஊட்டும் அற்புதக் காட்சி!
    பாசத்தின் மேன்மைக்கு இதுவே சாட்சி!
    உணவைப் பார்த்ததும்! அனைத்தும் மறந்து போகும் மனிதனுக்கு!
    உணவைப் பார்த்ததும்! சுற்றம் நினைவு வரும் காகத்துக்கு!
    தனித்துண்ணும் மனிதனைப் பார்ப்பது வழக்கமான காட்சி !
    பகிர்ந்துண்ணும் காக்கை கூட்டத்தைப் பார்ப்பது!
    கண் கொள்ளாக் காட்சி!
    குயிலின் முட்டையை அடை காப்பது காகத்தின் வழக்கம்!
    பெற்றோரைக் கைவிடுவது பிள்ளைகள் பழக்கம்!
    காகம் ஒன்று மரணித்தால், காக்கைகள் ஒன்று கூடி
    ஓலமிடும்!
    மனிதன் ஒருவன் மரணித்தால் மனித இனம்
    வேடிக்கை பார்த்து நிற்கும்!
    இயற்கை இடரை இனம் கண்டு, மனிதருக்கு,
    எச்சரிக்கை ஒலி எழுப்பும் காக்கை இனம்!
    காக்கையை கொன்றழித்து!
    கறி விருந்து, தின்றிருக்கும் மனித இனம்!
    காரியம் முடிப்பதற்கு, பொய்யாய் புகழுரைக்கும் செய்கை தனை!
    காக்காய் பிடிப்பதாய் உரைப்பது முறையாமோ!
    சுயநலச் செயலுக்கு! பொது நல காக்கை தனை!
    ஈடாய் சொல்வது சரியாமோ!
    காக்கை வாழ்க்கையை அடி ஒற்றி மனிதன் நடந்திட்டால்!
    பொது நல சமுதாயம் நிச்சயம் உருவாகும்!

    *****

    ”மைவண்ணக் காக்கை, தன் கைவண்ணத்தால் உருவாக்கிய கூட்டில் முட்டையிட்டு, அடைகாத்து, குஞ்சு பொறித்து, இரையூட்டும் காட்சி கண்ணுக்கும் கருத்துக்கும் அளிக்குதே மாட்சி” என்று காகத்தின் தாய்மைப் பண்பைத் தீந்தமிழில் விதந்தோதியிருக்கின்றார் திரு. ஆ. செந்தில்குமார்.

    பகுத்தறிவுக்கும் அப்பாற்பட்ட தாய்மைப் பண்பு

    மைவண்ணம் கொண்ட அக்காக்கை தன்
    கைவண்ணம் கொண்டொரு கூட்டைக் கட்டி யாரும்
    இலாவண்ணம் பார்த்து தன்னிணையோடு சேர்ந்து
    நிலாவண்ணம் கொண்டநல் முட்டைகளை இட்டு
    நிலைவண்ணம் கொண்டதை அடைகாத்துப் பேணி
    கலைவண்ணம் கொண்டதன் குஞ்சொன்றை பொறித்தது!

    கண்ணைக் காக்கின்ற இமைகளைப் போன்று
    விண்முட்டும் அளவுக்கு பேரன்பைக் கொண்டு
    எண்ணத்தில் தன்குஞ்சின் பசிப்போக்க உன்னி
    மண்முழுதும் பறந்தோடி உழன்று தான்
    உண்ணாது கொணர்ந்த இரையை தன்குஞ்சின்
    தொண்டைக்குள் திணித்து அன்பைச் சொரிந்தது!

    கண்ணுக்கு இனிதாகி விளங்கும் இக்காட்சி
    விண்போற்றும் தாய்மைக்கு சிறந்ததோர் அடையாளம்
    எண்ணத்திற்கும் அப்பாற்பட்டது தாயின் அன்பு
    மண்ணுலகில் இருக்கின்ற அனைத்துயிர்க்கும் தாய்மை
    உணர்வென்பது இயல்பான ஒன்று பகுத்தறிவும்
    உணரஇயலாது தாய்மை யெனும் பண்பு!

    *****

    ”பள்ளியில் பாடம் பயிலாத காகத்திடம் ஒற்றுமை எனும் உயர்பண்பு ஒளிர்கிறது; தாய்மை எனும் தனிப்பண்பு மிளிர்கிறது” என்று உளம் பூரிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    உதாரணமாய்…

    குயிலதன் முட்டையும் சேர்த்தேதான்
    கூட்டில் வைத்தே அடைகாக்கும்,
    பயில வில்லைப் பண்பிதனைப்
    பள்ளி யெதிலும் சேர்ந்தேதான்,
    செயலில் ஒற்றுமை காட்டுமினம்
    சேயைப் பேணிடும் சிறப்பைப்பார்,
    உயர்ந்த தாய்மைச் சிறப்பினுக்கே
    உதாரணம் என்றும் காக்கையாமே…!

    *****

    ”அன்பெனும் ஊற்று பெருக்கெடுக்க, தன் குஞ்சுகளுக்குக் கவளம் ஊட்டிக் காத்துநிற்கின்றது காக பட்சி. நம் மக்களோ வீடுகளில் பிள்ளைகளுக்கு ஊட்டலை நிறுத்தி, ஓட்டல்களுக்குப் படையெடுக்கத் தொடங்கிவிட்டதால் தாய்மைப் பண்பு நலிந்து உடலில் நோய்மை மலிந்துவிட்டது. ஆதலால், பட்சியைப்போல் நற்பெற்றோராய் வாழ்ந்து பிள்ளை போற்றுங்கள்” என்று வேண்டுகின்றார் திருமிகு. அவ்வைமகள்.

    பட்சி போற்றுதும்! பிள்ளை போற்றுதும் ! நற்பெற்றோரெனவே நீடு வாழுதும்!

    பட்சி பறக்கா பசி பறக்க, புசிக்க பரக்காய் அலகெடுக்க
    தட்சி நெருங்கி புயம் நெருக்கி நல்லுடல் நெளிய நின்றிருக்க
    புட்சி ரசொக்க, கவளம் தர, ரசமும் ருசியும் செரிசொரிக்க
    தீட்சி கொடுக்கும் காட்சிமையில் அன்பெனுமூற்று பெருக்கெடுக்க
    கட்சி கரத்தொரு கருத்துயர பசிப்பிணியென்னும் பாவமற
    குட்சி நிறைக்க அமுது கொடை நற்கருமங்கள் நாளுமெழ
    முட்சி குறைக்க ஊட்டமிடும் சத்துச் சோற்றில் கவனமுற
    நீட்சி விளைக்கும் மாட்சியொடு, ஈலாக்குழவி முகங்கண்டிரங்கும்
    தேட்சி பெருக்கும் பிதாமகரும் ஈங்காயிரமாய் அறச்சாலையொடு
    ஆட்சி மேவினர், காகம் போற்றினர், காக்கை சூத்திரம் கற்று தேறினர்
    வீட்சி காணா பெருவரலாறும் அவனியில் ஆங்கே அவரெழுப்பினர்!
    தாட்சி வந்தது, தளர்ச்சி மிகுந்தது, அன்னைதந்தையர் பலரும் இல்லமொழிந்தனர்
    பிட்சி மலிந்தது அவலமிகுந்தது ஊட்டும் கதைக்கும் முறையும் ஒழிந்தது
    உட்சி கோதி உள்ளம் கலக்க பெற்றோர் இல்லா முறைமை வளர்ந்தது
    காட்சிப் பொருளாய் கடைப் பொருளாய்ப் பிள்ளைகள் பேணும் இழிவுமிகுந்தது
    திட்சி கழித்து நல்லடிசிலிட்டு பார்த்துப் பரிமாறாக் கேடும் வந்தது
    மாட்சிமை மறத்தல் வாடிக்கையென்றே மானுடப்பாதை மாறலானது!
    வெட்சி மலராம் எம்மக்கள் ஊட்டல் துறந்தனர் ஓட்டல் புகுந்தனர்!
    காட்சி காட்டும் அனைத்துணவும் திணிந்தன அவர்தம் இரைப்பைதனில்
    நெட்சி நிகழுது, மானுடம் வீழுது! உண்டியும் திண்டியும் நாசம் செய்யுது!
    இரட்சி போற்றுதல் ஈங்கிலையென்றால் முழுதாய் அழிவு நேருதல் உறுதி!

    வேட்சி வேண்டும் அவா மீதுறவேண்டும் மக்கட்ச்செல்வம் நாம் பேணுதல் வேண்டும்!
    மீட்சி நிறுத்தும் வேகமெழ ஞானக் கமண்டலமிங்கே உருண்டுருள காகப்
    பட்சி போற்றுதும்! பிள்ளை போற்றுதும் ! நற்பெற்றோரெனவே நீடு வாழுதும்!

    *****

    ”நிறம் கறுப்பாக இருந்தாலும் காக்கைக்குத் தன் குஞ்சு பொன்குஞ்சே!” அண்டவெளி கறுப்பு; காலைப்பொழுது உருவாவதோ காரிருளின் கருப்பத்தில்” என்று கறுப்பின் சிறப்பைப் பேசுகின்றார் அறிவியல் கவிஞர் திரு. ஜெயபாரதன்.

    கறுத்த நிறமாயினும், காண
    வெறுப்பளிப்பினும்,
    வாயில் முத்தமிட மனம்
    மறுப்பினும்,
    பஞ்ச வர்ணக் கிளிபோல்
    பிஞ்சு பிறக்காத போதினும்,
    காக்கைக்கும்
    தன்குஞ்சு பொன்குஞ்சே !
    அண்டவெளி நோக்கின்
    அதுவும் கறுப்பு !
    கருந்துளை ஒன்றில்
    பிரபஞ்சம் உருவானது !
    காரிருள்
    கர்ப்பத்தில் உதயம் ஆவது
    காலைப் பொழுது !
    கதிரோன் கண்மூடினால்
    காரிருள் திறக்கும் !
    காரிருள் இல்லாத தாரணியில்
    பேரொளிக்குப்
    பிழைப்பில்லை ! சிறப்பில்லை !
    என் புதல்வியின் நிறம்
    அடுப்புக் கரி!
    பிறந்த என் பேத்தியோ
    பொன்னிலா!

    *****

    காகத்தின் சிறப்பைத் திறம்படத் தம் கவிதைகளில் பதிவுசெய்திருக்கின்றார்கள்  கவிஞர் பெருமக்கள். அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதை அடுத்து…

    காக்கைக்குத் தன்குஞ்சு பொன்குஞ்சு..!
    ^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

    கடைச் சங்ககாலப் பெண்புலவரும் “விருந்துவரக்
    ……….கரைந்த காக்கையது பலி’யெனப் புகழ்ந்துரைத்தார்.!
    உடனொத்த பொய்யாமொழிப் புலவன் மிகையாக
    ……….இதனைக் ‘கரவா கரைந்துண்ணும்’ குணமென்றான்.!
    ‘நடப்பதுவே நிற்பதுவே’ எனப்பாடிய மகாகவியோ
    ……….நந்த லாலாவைக் கண்டான் ‘காக்கைச் சிறகினிலே’.!
    படத்தினிலேநான் காணுகிறேன்!பகுத்தறிவுளக் கரிய
    ……….பகிர்ந்துண்ணும் ஜீவியாக! பகவானின் வாகனமாக.!

    பாட்டி வடைசுட்ட காக்காக் கதையும் காலத்துக்கும்
    ……….பகன்றுரைத்த பாடம்தானந்த “காகத்தின் தந்திரம்”.!
    கொட்டிக் கிடக்கும் பணமிருந்தும் ‘எச்சிற்கையால்
    ……….காக்கா ஓட்டாதார்’ எனச்சிலருக்குப் பெயருண்டு.!
    வேட்டியை மடித்துக்கட்டி அரசியல் சூழ்ச்சிசெயும்
    ……….வித்தகரை ‘காக்கா பிடித்து’ முன்னேரியவரென்பார்.!
    வேட்டையாடி உண்ணும் ‘கருத்த மனமுடையோர்’
    ……….விட்டு வைக்கவில்லை குணமுடைய காக்கையும்.!

    அண்டத்தில் பறைவையினம் ஆயிரமாம்! அதிலே
    ……….அருங் குணமுளது காக்கையினம்!அதனால்தானோ.!
    அண்டங்காக்கை பரிமளம் மணிக்காக்கை எனப்பல
    ……….உருவமதில் வடிவம் கொண்டாராம் காகபுஜண்டர்.!
    அண்டமுழுதும் பரந்துதிரிந்து கொண்ட ஞானத்தால்
    ……….அழியாத்தமிழில் உபநிடத மொன்றைப் படைத்தார்.!
    அண்டத்தின் தேவையறிந்த மகேஸ்வரனும் அதை
    ……….ஆதாரத் தத்துவமாக்க அவருக்கருள் செய்தானே.!

    காகத்துக்கு விருந்துவைக்க எண்ணிய சங்ககாலத் தோழி தொடங்கி, காகத்தில் நந்தலாலாவைக் கண்டுகளித்த பாரதிவரை காகம் குறித்த அரிய தகவல்கள் பலவற்றையும் தன் கவிதையில் பாங்குற அறியத் தந்திருக்கும் பெருவை திரு. பார்த்தசாரதி இவ்வாரத்தின் சிறந்த கவிஞர் எனும் சிறப்புக்குரியவராகின்றார். அவருக்கு என் பாராட்டும் வாழ்த்தும்!

     

     

    Share
  • நடிக்கப் பிறந்தவள்

    நிர்மலா ராகவன்

     

    `அம்மா’ என்றாலே கதாநாயகிக்குப் பின்னால், இருபது, முப்பது பேருடன் ஏதோ ஒரு மூலையில் நடனமாடுபவள்தான் என் நினைவுக்கு வரும். அப்போதெல்லாம் நான் சூப்பிக்கொண்டிருந்த கட்டைவிரலை எடுத்துவிட்டு, கதாநாயகி செய்வதையெல்லாம் செய்துபார்ப்பேன்.

    சிரிப்புடன், `இது நடிக்கவே பிறந்திருக்கு! பெரிய நடிகையா வரும்!’ என்று அங்கிருந்தவர்கள் சிலாகிப்பார்கள். அம்மாவுக்கு அதுதான் டானிக். தன்னைத்தான் நடிகை என்று யாருக்கும் தெரியாமலே போய்விட்டது, மகளுக்கும் அதே நிலைமை வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தாள்.

    அவர்கள் வாக்கு பலித்தது. எல்லாருக்கும் அபிமானமான குழந்தை நட்சத்திரமாக ஒளிர்ந்தேன்.

    ஒன்பது வயதில் நான் வயதுக்கு மீறி உயர்ந்தபோது, எனக்குப் பெருமையாக இருந்தது. கலங்கியவள் அம்மாதான். போட்டி போட்டுக்கொண்டு என்னை ஒப்பந்தம் செய்ய வந்த திரைப்பட இயக்குனர்கள், `குழந்தைப் பாத்திரத்துக்குப் பொருந்தாது. பெரியவளாக இருக்கிறாளே!’ என்று ஒதுங்கிப்போனார்கள். அம்மாவின் கெஞ்சலுக்கு அவர்களில் யாரும் மசியவில்லை.

    மகளால் இனி குழந்தையாகத்தான் நடிக்க முடியாது, ஆனால் வளர்ந்த மங்கையாக நடிக்க முடியுமே என்று அம்மாவின் புத்தி குறுக்கு வழியில் போயிற்று.

    அரும்பாக இருந்த என் மார்புக்குள் எதையோ வைத்தார் மருத்துவர். எனக்கு மகிழ்ச்சி தாங்கவில்லை. சிறு வயதிலிருந்தே, ` ஏம்மா எனக்கு மட்டும் உன்னைப்போல மார்பு பெரிசா இல்லை?’ என்று கேட்டவளாயிற்றே!

    அப்போது எனக்குத் தெரியவில்லை, நான் அம்மாவின் கைப்பாவையாய், நிரந்தரமாக மனதளவில் குழந்தையாகவே இருப்பேன் என்று. ஒரு குழந்தையைப் பருவ மங்கையின் உடலில் அடைத்தார்கள் என்பது புரியும் வயதா அது!

    பருந்தாக அலைந்த இயக்குனர்களின் கண்களுக்கு என் வளர்ச்சி தப்பவில்லை. அதிக சிரமமில்லாது என்னை நடிக்க வைக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரிந்த விஷயம். ஒரு காட்சியை விளக்கினால், அதை ஐந்து விதமாக நடித்துக் காட்டி, `உங்களுக்கு எது வேண்டும்?’ என்று கேட்கும் புத்திசாலி என்று பெயர் வாங்கியிருந்தேனே!

    `மரப்பாச்சிக்குப் புடவை சுத்தினாப்போல இருக்கு!’ என்று சில மாமிகள் முணுமுணுத்தாலும், திரைப்பட ரசிகர்கள் என்னை, என் சுட்டித்தனத்தை, அடிக்கடி மாறும் முகபாவங்களை முழுமனதாக ஏற்றுக்கொண்டார்கள். (இதெல்லாம் விமரிசகர்கள் எழுதியிருந்தார்கள் என்று அம்மா பெருமையுடன் படித்துக் காட்டியது).

    ஒரு நாளைக்கு இரண்டு ஷிஃப்ட். ஆனால், காமராவுக்கு முன்தான் நான் நானாக இருந்தேன். ஒவ்வொரு காட்சியிலும் வண்ண வண்ண ஆடைகளாக உடுத்தியபோது, எதையோ சாதித்த நிறைவு ஏற்பட்டது. (சிறு வயதில்கூட நான் பொம்மைகள் வைத்து விளையாடியதில்லை. `கடைக்குப் போகலாம், வரியா?’ என்று அம்மா என்னை எங்கும் அழைத்துப் போனதில்லை. பட்டும், பீதாம்பரமும் வாங்கித் தந்து, என்னை அழகு பார்க்கவில்லை. அதற்கெல்லாம் எங்கே நேரம்!)

    `முகத்தில் அவ்வளவாக முதிர்ச்சி இல்லையே!’ என்று பெரிய தயாரிப்பாளர்கள் தயங்கினார்களாம். அம்மா பயந்து, என் முகத்தில் எந்தெந்த பாகத்தை செப்பனிட முடியுமோ, அதையெல்லாம் சீர்படுத்தச் செய்தாள். கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் வாய்ப்புகள் வரும்போது, லட்சங்களைப்பற்றி யாராவது யோசிப்பார்களா!

    அம்மாவிற்கு லாபம் அளித்த ஒரே முதலீடு என் முகமாற்றம்தான். ஒன்றைப் பத்தாக்கலாம் என்று யாராவது ஆசை காட்டினால், உடனே நம்பி, மோசம் போகும் வர்க்கம் அம்மா. பொன்முட்டை இடும் வாத்தாக இருந்த நான் சம்பாதித்த கறுப்புப் பணமெல்லாம் அம்மாவின் பேராசையால் அழிந்துபோயிற்று.

    `இரவு பகலாக நான் உழைத்துச் சம்பாதித்த பணத்தை என்ன செய்கிறாய்?’ என்று கேட்கும் அறிவோ, துணிச்சலோ, நேரமோ எனக்கு இருக்கவில்லை. அம்மாதான் சகலமும்.

    `பத்திரிகைக்காரங்க எப்போ கல்யாணம்னு கேப்பாங்க. கலைத்துறைக்கே என்னை அர்ப்பணிச்சுட்டேன் அப்படின்னு சொல்லிடு!’ என்று அம்மா சொல்லிக்கொடுத்தாள். யார் யாரோ என் உடலைப் பயன்படுத்திக்கொண்டார்கள். அதையெல்லாம் வெளியில் சொல்ல முடியுமா, என்ன!

    என் வாய்ப்புகள் அதிகரித்தன. ஆனால், என் உடலில் இருந்த செயற்கையான பாகங்கள் அப்படியே மாறாது இருக்கவில்லை. முன்பு இருந்ததைவிட மோசமாக மாறின. மீண்டும் மீண்டும் அறுவைச் சிகிச்சை. வலி ஒருபுறமிருக்க, கண்ணாடியில் பார்த்துக்கொண்டபோது, எனக்கே என்னை அடையாளம் தெரியவில்லை.

    இப்படியே நாற்பத்தைந்து வயதை எட்டிவிட்டேன். என் இடத்தைப் பிடித்துக்கொள்ள சில அப்பாவிக் குழந்தைகள் விரைவாக பருவம் அடையும் வழிகளைத் தேடினர். எனக்கோ அக்காள், அம்மா போன்ற வேடங்கள்தான் கிடைத்தன. அதையும் சிறப்பாகத்தான் செய்தேன் என்று பத்திரிகைகள் பாராட்டின. என் கையிலிருக்கும் குழந்தையை என் கருவில் உருவாகி, அரைகுறையாக வெளியேற்றப்பட்டதாகவே பாவித்துக்கொண்டு, அன்பைப் பொழிவேன். ஆனாலும், படத்தின் பெரும்பகுதியை ஆக்கிரமித்துக்கொண்டிருந்தவள் சில நிமிடங்களே தலைகாட்ட முடிந்தது அவமானமாக, வேதனையாக இருந்தது.

    என்னைப் பிஞ்சிலேயே பழுக்க வைத்ததன் விளைவுகள் விரைவிலேயே தெரிந்தன. என் குரலிலும் தோற்றத்திலும் அகாலமான முதுமை! பற்கள் ஆட ஆரம்பித்தன. சற்றே வளைந்த முதுகு. குரலிலும் நடுக்கம். வாய்ப்புகள் அறவே நின்றன. பத்து வயதிலிருந்தே என்னை அரவணைக்கக் காத்திருந்தவர்கள் ஒதுங்கிப்போனார்கள்.

    அதுவரை மிரட்டலாகவும், கொஞ்சலாகவும் என்னைத் தன்வழி நடத்திச்சென்ற அம்மாவும் மாறிப்போனாள். `கண்ணு’ என்றழைத்த நாக்கு இப்போது `சனியனே!’ என்றது.

    இதற்கா சின்னஞ்சிறு வயதிலிருந்தே அவ்வளவு கஷ்டப்பட்டேன்?

    நான் இழந்த குழந்தைப்பருவத்தை புகழும் பணமும் ஈடு செய்ய முடியவில்லையே! காலங்கடந்து வருத்தம் ஏற்பட்டது.

    மாரடைப்பை உண்டுபண்ணி, ஆனாலும் அதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஏதேனும் வழி இருக்கிறதா என்று ஆராய்ந்து, அதைச் செயலிலும் காட்டினேன்.

    அம்மாவின் மரணம் என்னை எவ்வளவு தூரம் பாதித்துவிட்டது என்று காட்டிக்கொள்ள அன்ன ஆகாரமில்லாமல் மூன்று நாட்கள். நான் கடைசியாக நடித்தது அப்போதுதான்.

    ஆனால், நான் எதிர்பார்த்தபடி, எனக்கு நிறைவு கிட்டவில்லையே, ஏன்?

    எதிர்காலத்தை நினைக்கவே பயமாக இருந்தது. இனி யார் என்னை ஒவ்வொரு நிமிடமும், `இதை இப்படிச் செய், இந்தக் கேள்விக்கு இப்படிப் பதில் சொல்லு!’ என்று வழிகாட்டப்போகிறார்கள்?

    அடுத்த நாள்.

    `முன்னாள் கதாநாயகி … தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு உறுதுணையாக இருந்த தாயின் மரணத்தைத் தாங்கமுடியாமல் போனதுதான் காரணம் என்று நம்பப்படுகிறது!’ என்ற இரண்டே வாக்கியங்கள் தினசரி ஒன்றின் நான்காம் பக்கத்தின் ஒரு மூலையில் இடம்பெற்றிருந்தது.

    பலரும் அதைப் படிக்காது அசுவாரசியமாகப் பக்கங்களைப் புரட்டினாலும், சில மாமிகள், `இந்தப் பொண்ணுக்குத்தான் அம்மாமேல என்ன பாசம்!’ என்று பிரமித்து, `எனக்கும் வந்து பிறந்திருக்கே — வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசிண்டு!’ என்று தலையில் அடித்துக்கொண்டார்கள்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171030 – Karuna sagara -lr

    சாந்த வதனமும் சரப சயனமும்
    நீந்தும் சரோருக நாபியும் -ஏந்தும்
    கரங்கள் நான்கும் கருத்த வடிவும்
    வரங்க(ள்) அளித்திடும் வஸ்து….!

    களைப்போடு வீடணன் கைகால் கழுவுகையில்
    மலைக்கோட்டைப் பிள்ளை குறும்பால் -நிலைப்பாடாய்
    கொள்ளிடத் தீவில் கிடக்கும் அயோத்தியின்
    பள்ளிகொண்ட ரங்கனைப் பாடு….!

    அராப்பள்ளி சாய்ந்து அரங்கத்தை ஆளும்
    பராத்பரா, பார்த்தன்தேர் பாகா -”மரா”சொல்லி
    கானகத்து வேடன் கவியானான், நின்னருளால்
    நானதற்(கு) இணையாக நல்கு….!

    கையே தலையணையாய் பைந்நாகம் பாய்விரிப்பாய்
    செய்யும் தொழில்யோக சிந்தையாய் -செய்ய
    குமுதத்தாள் தாங்க, குமுதத்தாள் நீட்டி
    அமுதத்தன் தூங்கும் அழகு….!

    நீல பத்பநாபன் விஷ்ணு-புரம் நாவலை
    இரா.முருகன் படிக்கத் தந்தபோது….

    கேசம் திருவல்லா கால்கள் திருவாப்பூர்
    சேஷ சயனத்தில் ஸ்ரீநிதி -வாசா
    பதினெட்டு மைலாய் படுத்தோய் எனக்கு
    விதியெட்டா வாழ்வை வழங்கு….!

    தங்கத்தில் திருவனந்தன் சயன கோலத்தை கணினியில் கண்டு….
    ————————————————————————-

    பணம்தனில் தூங்கும் அனந்த சயனர்
    கணங்களின் காவலுற்ற காசை -நினைந்திடும்
    வேதாளங்கள் கையில் விலங்கிட வைத்திடும்
    பாதாளம் பாய்ந்த பணம்….!

    அடையார் அனந்த பத்பனாப ஸ்வாமி கோயிலில் எழுதியது
    —————————————————————————

    கடலேழில் தூங்கி களைப்புற்றாய் போலும்
    அடையாற்றில் பள்ளி அடைந்தோய் -மடல்வாழை
    தென்னை மரம்சூழ் திருவனந்தா, ஐம்புலக்
    கண்ணைப் பறித்தெனைக் காண்….கிரேசி மோகன்….!

     

    Share
  • படக்கவிதைப் போட்டி (151)

     

    பவள சங்கரி

     

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    சாந்தி மாரியப்பன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனைக் கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (10.03.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • பழந்தமிழக வரலாறு -1

    கணியன்பாலன்

     

            சங்க இலக்கியமும் பழந்தமிழக  வரலாறும்

     

    கி.மு. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மதுரை மருதனிள நாகனார் என்கிற சங்ககாலப்புலவர் பொருள் தேடி ஆழ் கடலில், மிகப்பெருங்கப்பலில் நீண்ட பயணம் செய்த சங்க காலத்தலைவன் குறித்துப்பாடிய அகம் 255ஆம் பாடல், “உலகுகிளர்ந்தன்ன உருகெழுவங்கம்” எனத்தொடங்கி “வருவர் மன்னால்-தோழி!” என முடிகிறது. இப்பாடலில்,

    ‘புலால் மணமுடைய கடலின் அலைகளில், உலகமே பெயர்ந்து வந்தது போன்று அச்சம்தரும் மிகப்பெரிய கப்பலை, இயற்கையான பருவக் காற்று வீசி, இரவு பகல் பாராது, எங்கும் நிற்காது, வேகமாக அதனைக் கொண்டு செல்ல, அப்பெருங்கப்பலை இயக்குபவனாகிய நீகான், கடற்கரைத் துறை முகத்தில் இருக்கும் உயர்ந்த கட்டிடத்தின் மீதுள்ள கலங்கரை விளக்கத்தின் ஒளிகண்டு திசை அறிந்து அதனைச் செலுத்த, பொருள் ஈட்டும் பணி காரண மாக அக்கப்பலில் நெடு நாட்களுக்கு முன்சென்ற நமது தலைவர் மேலும் அதிக நாட்கள் அங்கு தங்காது, நமது துன்பம் நீங்குமாறு விரைவில் திரும்பி வருவார்’ எனத் தனது தோழியிடம் கூறி ஆறுதல் பெறுகிறாள் ஒரு சங்ககாலத் தலைவி. தலைவனின் இப்பிரிவு கடலிடைப் பிரிவு என்றே சொல்லப்பட்டுள்ளது. இப்பாடல் அன்று தமிழர்கள் மிகப்பெருங் கப்பல்களில் வெளிநாடுகள் சென்று வணிகம் புரிந்து பொருள் ஈட்டினர் என்பதை மிகச் சிறப்பாக வெளிப்படுத்துகிறது.

    இறங்கு குடிக் குன்ற நாடன் என்கிற புலவர், வட நாட்டுக்குப் போர்ப் பயணம் செய்த ஒரு தமிழ்த்தலைவன் குறித்து தனது அகம் 215ஆம் பாடலில் பாடியுள்ளார். அதில், ‘உயர்ந்த குறுக்கிடும் இமயம் போன்ற பெரிய மலை உச்சிகளைத் தாண்டி உள்ள, பலமொழி பேசுகிற நாடுகளுக்கு, விரும்பிய செயலைச் செய்வதற்காக, உறுதியும் வலிமையும் மிக்க நெஞ்சமோடு, சிறந்த வேலினை ஏந்தி போருக்குச் செல்கிற, மாட்சிமை மிகுந்த தலைவனை வெற்றி பெற வாழ்த்தி விடை தருதல் தான் நன்று’ எனச் சங்ககாலத்துத்தலைவி ஒருத்தி தனதுதோழியிடம் கூறுவதாகச் சொல்கிறார். வேந்துவினை இயற்கை என்கிற வேந்தன் தன் பகைவன் நாட்டைக் கைப்பற்றச்செல்கிற பொருளியல் சூத்திர உரையில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் தமிழக வேந்தன் ஒருவன் பெரிய மலை உச்சிகளைத் தாண்டி உள்ள பலமொழி பேசுகிற வடநாட்டைக் கைப்பற்றச் சென்ற போது அவனுடன் போருக்குச் சென்ற படைத்தலைவன் அல்லது குறுநில மன்னன் ஒருவன் குறித்துப் பாடிய பாடலாகத் தோன்றுகிறது. இந்த மலைஉச்சிகள் விந்திய, சாத்பூரா மலை உச்சிகள் ஆகும். தமிழ் வேந்தர்கள் வட நாட்டுக்கு படையெடுத்துச் சென்றார்கள் என்பதற்கு இப்பாடல் ஒரு உறுதியான சான்றாக இருக்கிறது எனலாம்.

    புறம் 400ஆம் பாடலில் தமிழர்களின் சங்ககாலத்துக் கடல்வணிகம் குறித்தும், அதனால் தமிழரசுகள் பெற்ற வருமானம் குறித்தும், “ஆற்று நீர் கடலில் கலக்கும் துறைகளைச் செம்மை செய்து உருவாக்கப் பட்டிருக்கும் கடற்கரைத் துறைமுகநகர் தோறும் கடலில் செல்லும் வங்கம் எனப்படும் பெருங் கப்பல்கள் மூலம் சென்று வணிகம் செய்யும் நல்ல ஊர்களையும் வணிகத்தையும் உடையவன் சோழன் நலங்கிள்ளி. இவன் நாடு அக்கடல் வணிகம் மூலம் கிடைக்கும் வருவாயை உடையது” எனக் கூறுகிறார் கோவூர்கிழார். அதாவது கடலோரமாக இருக்கும் நகர்களில் எல்லாம் இவனது நாட்டுப்பெருங்கப்பல்கள் மூலம் வணிகம் நடைபெறுகிறது எனவும் அதனால் கிடைக்கும் வருவாயை உடையவன் இந்தச் சோழன் நலங்கிள்ளி எனவும் கூறுகிறார் கோவூர்கிழார் என்கிற கி.மு. 2ஆம், 1ஆம் நூற்றாண்டு சங்ககாலப் புலவர். இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் கங்கைமுதல் தென்கிழக்காசிய நாடுகள் முழுவதும், மேற்கே பாரசீகவளைகுடா உட்பட செங்கடல் வரையிலும் இவனுடைய பெரும் கப்பல்கள் சென்று வணிகம் புரிந்து வந்தன. இவன் பெரும் கடற் படைகொண்டு இவ்வணிகத்தைப் பாதுகாத்து வந்தான். இவன் வடக்கே உச்சயினிவரையிலும், கிழக்கே ஈழத்தின் மீதும் படையெடுத்து வெற்றி பெற்றவன் என்கிறது முத்தொள்ளாயிரம்.

    பக்குடுக்கை நன்கணியார் என்கிற சங்ககாலப்புலவர், தனது புறம் 194ஆம் பாடலில்இந்த உலகைப் படைத்த இறைவன் சிறிதும் பண்பில்லாதவன் எனக் குற்றம் சாட்டுகிறார். அப்பாடல் “இனிய காண்க, இதனியல்புணர்ந் தோரே” என முடிகிறது. அப்பாடலில் அவர், “ஒரு வீட்டில் சாவு; இன்னொரு வீட்டில் மணவிழா; சாவு வீட்டில் துக்கம்; மணவீட்டிலோ மகிழ்ச்சி. இவ்வாறு இன்பமும் துன்பமும் கொண்டது தான் வாழ்க்கை. இதனைப் படைத்தவன் பண்பில்லாதவனே! எனினும் வாழ்க்கையின் இந்த இயல்பை உணர்ந்தவரே அதில் இனிமையைக் காணமுடியும்” எனக் கூறுகிறார் இவர் இந்திய அளவில், தொல்கபிலர் உருவாக்கிய ‘எண்ணியம்’ என்கிற சாங்கியக் கோட்பாட்டின் தலைவராக கி.மு. 6ஆம் நூற்றாண்டில் இருந்தவர். இந்திய மொழிகளில் எண்ணியத்தின் கடவுள் மறுப்பிற்கும், ஆசிவகத்தின் கடவுள் மறுப்பிற்கும் எடுத்துக்காட்டாகக் காட்டப்படுவது இவரின் இந்தப் புறம் 194ஆம் பாடலே என்பது வியப்பூட்டும் விடயமாகும். பொருள்முதல்வாத மெய்யியல் தமிழகத்தில் மிக ஆழமாக வேரூன்றி இருந்தது என்பதற்கு இவர் போன்றவர்களே காரணமாவர்.

    கி.மு. முதல் நூற்றாண்டுக்கு முன் வாழ்ந்த பாண்டியன் ஏனாதி நெடுங் கண்ணன் என்கிற பாண்டியர் தலைவன் குறுந்தொகையில் பாடிய தனது 156ஆம் பாடலில், “பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! இதுதான் காதல் பிரிவால் ஏற்படும் பெரும் மனச்சோர்வு என்பதோ? முள் முருங்கை மரத்தில் கிளைகளைக் களைந்து செய்த சிறு தடியோடு, பிச்சைப் பாத்திரத்தையும், விரத உணவையும் உடைய பார்ப்பன மகனே! எழுத்தில் எழுதப்படாத, வாய்மொழிமூலம் கற்பிக்கப் படக்கூடிய உனது வேதத்தில் பிரிந்துவிட்ட காதலர்களை ஒன்று சேர்க்கும் மருந்து ஏதாவது உண்டா? சொல்!” எனப்பொருள் படும் சங்ககாலப்பாடலைப் பாடியுள்ளான். காதலுக்காக, பார்ப்பனர்கள் புனித நூலாகக் கருதும் வேதத்தைக் கேள்விக்கும், கேலிக்கும் உள்ளாக்குகிறான் ஒரு பாண்டியர் தலைவன். இதுதான் அன்றைய சங்ககால வாழ்வில் பார்ப்பனர்களுக்கும் வேதத்திற்கும் இருந்த நிலை. ஆனால் இந்நிலை கி.மு. வுக்குப்பின் மாறிவிடுகிறது.

    கி.மு. 3ம் நூற்றாண்டைச் சேர்ந்த படுமரத்து மோசிகீரனார் என்கிற சங்ககாலப் புலவர் தனது 75ஆம் குறுந்தொகைப்பாடலில்

    “நீ கண்டனையோ? கண்டார்க் கேட்டனையோ?

    ஒன்று தெளிய நசை யினம்: மொழிமோ!

    வெண்கோட்டு யானை சோணை படியும்

    பொன்மலி பாடலி பெறீஇயர் –

    யார்வாய்க் கேட்டனை, காதலர் வரவே?” எனப் பாடியுள்ளார்.

    பாணன் ஒருவன் தலைவன் வந்து கொண்டுள்ளான் எனத் தலைவியிடம் கூறிய போது அதனால் மகிழ்ந்த தலைவி, “என் காதலர் வரவை நீ பார்த்தாயோ, பார்த்தவர் சொல்லிக் கேட்டனையோ, என் அன்புக்குரிய அவர் வரவைப்பற்றித் தெளிவாகச் சொல்!, எனது காதலர் வரவு குறித்து யார் யார் சொல்லி நீ அதனைக் கேட்டாய்! வெண்மையான தந்தங்களை உடைய யானைகள் நிறைய உலவும் சோனை ஆற்றின் கரையிலிருக்கும் பொன்போன்ற பாடலிபுத்திர நகரையே உனக்குப் பரிசாகத் தருகிறேன்!” என அவனிடம் கூறுகிறாள். தனது காதலன் வரவைச் சொன்னதற்காக, அன்றைய உலகின் மிகப்பெரும் நகரங்களில் ஒன்றான பாடலிபுத்திர நகரையே பரிசாகத் தருவதாகக் கூறுகிறாள் நமது சங்ககாலத்தலைவி. சோணை ஆறு கங்கை ஆற்றின் கிளை நதியாகும். பெரும்பாலோருக்குப் பாடலிபுத்திர நகர் கங்கை நதியின் கரையில் இருப்பதாகவே தெரியும். ஆனால் கி.மு. 3ஆம் நூற்றாண்டு வாக்கிலேயே அந்நகர் கங்கையின் கிளைநதியான சோணை ஆற்றின் கரையில் இருப்பதை அறிந்து இந்தத் தமிழ்ப்புலவர் பாடியுள்ளார். தமிழர்கள் பாடலிபுத்திரம்வரை சென்று வணிகம் புரிந்தனர் என்பதற்கு இப்பாடல் ஒரு சான்றாக உள்ளது எனலாம். சங்கப்பாடல்கள் பெருமித உணர்வைத் தூண்டும் வல்லமை கொண்டன என்பதற்கும் மிகச்சிறந்த தரவுகளைக்கொண்டன என்பதற்கும் இப்பாடல் ஒரு சான்றாகும்.

    இப்பாடல்கள் சங்கஇலக்கியம் என்பது மிகச்சிறந்த தரவுகளைக் கொண்ட ஒரு தங்கச்சுரங்கம் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இந்தச் சங்க இலக்கியத்தை அடித்தளமாகக் கொண்டுதான், “பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூல் கட்டமைக்கப்பட்டது. அந்நூல் ஆறு பகுதிகளைக்கொண்டது. அதில் 3 – 5 வரையான பகுதிகளில் உள்ள தமிழக வரலாற்றின் முக்கிய விடயங்கள் இங்கு சுருக்கித்தரப்பட உள்ளன என்பதோடு ஒரு சில புதிய விடயங்களும் சேர்க்கப்பட உள்ளன.

    ஒவ்வொரு சமூகத்துக்கும், ஒவ்வொரு தேசிய இனத்துக்கும் வரலாற்றுப்பெருமிதம் வேண்டும். ஜெர்மன் தேசியஇனம் குறித்தப் பெருமிதம்  மார்க்சு அவர்களிடம் ஆழமாகவே இருந்தது. முதலாளித்துவ வளர்ச்சிக் கட்டத்தில் இந்தச் சிந்தனை இருக்கவே செய்யும். நமது தமிழ் தேசிய இனம் உண்மையாகவே ஒரு நெடிய பாரம்பரியத்தையும்,  மிக நீண்ட வரலாற்றையும், சீர்மிகு மரபையும், தனக்கேயான தனித்துவத்தையும் கொண்ட ஒரு சிறப்புமிக்க தேசிய இனமாகும். அதன் மொழியான தமிழ் மொழியோ, பழமையும் சிறப்பும் மிக்க ஒரு செவ்வியல்மொழியாகும். ஆகவே தமிழர்களாகிய நாம், நமது தமிழ்தேசிய இனம் குறித்து, வரலாற்றுப் பெருமிதம் கொள்வதற்கு  வேறு எந்த தேசிய இனத்தைக் காட்டிலும் பேரளவான காரணங்கள் இருக்கின்றன. ஆனால் நமது தமிழ்தேசிய இனம் குறித்த வரலாற்றுப்பெருமிதம் நம்மிடம் இல்லை.  அதற்கு, நமது தமிழ் தேசிய இனத்தின் வரலாற்றை அதன் வரலாற்றுப் பெருமிதங்களை அடையாளம் காட்டக்கூடிய அறிவியல் அடிப்படையிலான, மறுக்க முடியாத சான்றுகளைக்கொண்ட ஒரு முழுமையான வரலாறு நம்மிடம் இல்லை என்பது ஒரு பெருங்குறையாகும். அப்பெருங்குறையைப் போக்குவதற்கான தொடக்கக் கட்ட ஒரு சிறு முயற்சிதான் “பழந்தமிழ்ச்சமுதாயமும் வரலாறும்” என்ற எனது நூலாகும். அந்நூலில் உள்ள சங்க இலக்கியம், கல்வெட்டுகள், நாணயங்கள், தொல்லியல் ஆதாரங்கள், வெளிநாட்டு அறிஞர்களின் குறிப்புகள் போன்றனவற்றை அடிப்படையாகக் கொண்டு உருவான பழந்தமிழக வரலாற்று ஆய்வு விடயங்களின்  சுருக்கமே இங்கு தொடர் கட்டுரைகளாகத் தரப்பட உள்ளன.

    ஆதார நூல்: பழந்தமிழ்ச் சமுதாயமும் வரலாறும், கணியன்பாலன், எதிர் வெளியீடு, சூன்-2016. பக்: 37-47.

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 10

    க. பாலசுப்பிரமணியன்

     

    பொறுத்தார் பூமி ஆள்வார்

    “அவசரப் படாதீர்கள். நிதானமாகச் செயல்படுங்கள்” என்று நாம் சொல்லும்பொழுது “ என்ன சொல்கின்றீர்கள் அய்யா. நாமெல்லாம் ஒரு அவசரமான உலகத்தில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடித்தால்  நாம் பின்னுக்குத் தள்ளப்படமாட்டோமா”  என்று பலர் முணுமுணுப்பது காதில் விழுகின்றது. ஒன்றை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். வேகம் வேறு, அவசரம் வேறு. சில நேரங்களில் ஒரு செயலைக்  குறிப்பிட்ட நேரத்தில் முடிப்பதற்காகவோ அல்லது செயல்படுத்துவதற்காகவோ நாம் வேகமாகச் செயல்பட முனைகின்றோம். ஆனால் வேகமாகச் செயல்படும்பொழுதும் நாம் நிதானத்தைக் கடைப்பிடிக்கவேண்டும். நிதானமில்லாத செயல் தவறுகளுக்கும் குழப்பதிற்கும் வழிவகுக்கும்.

    வேகம், அவசரம், நிதானம் போன்ற அனைத்தையும் கட்டுப்படுத்துவது நமது மனமே. நமது விருப்பு வெறுப்பு மற்றும் தேவைகளுக்குத் தகுந்தவாறு மனம் செயல்பட்டு அதனால் ஏற்படும் உந்துதல்களால் உணர்வுகள் பாதிக்கப்பட்டு நமது மூளைக்கு அனுப்பப்படும் தாக்கங்கள் நம்முடைய செயல்களின் வடிவங்களை நிர்ணயிக்கின்றன. உடல்-மூளை இவற்றின் இணைந்த செயல்களைப் பற்றி செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இதற்கு அழகான விளக்கம் அளிக்கின்றன.

    மனம் போன போக்கில் போகக்கூடாது என்று பல அறிஞர்களும் சமயத் தலைவர்களும் மன இயல் நிபுணர்களும் வலியுறுத்தியிருக்கின்றார்கள். மனத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான செயல். அது நினைத்தவுடன் நடக்கக்கூடிய செயல் அல்ல. சிறிது சிறிதாகப் பழக்கத்தின் மூலமாகத் தான் அதை நாம் செயல்படுத்த முடியும்.

    ஒரு மனிதனுடைய சொர்கத்தையும் நரகத்தையும் நிர்ணயிப்பது அவன் மனமே, என ஆங்கிலத்தின் மிகப்பெரிய கவியாக விளங்கிய மில்டன் தனது காப்பியத்தில் கூறுகின்றார். “நீ உன் மனத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள் இல்லாவிடில் நீ அதன் கட்டுப்பாட்டில் வாழ நேரிடும்’ என்ற மனித மேம்பாடு மற்றும் வள இயலில் மேதையாக விளங்கும் நெப்போலியன் ஹில் என்பவர் கூறுகின்றார்.

    வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்களில் பலர் வாழ்க்கையில் பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்தவர்கள். உலகின் மிகப்பெரிய அறிவியல் மேதையாகவும் கண்டுபிடிப்பாளராகவும் விளங்கிய ஐசக் நியூட்டன் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சி. -“ஒரு நாள் அவர் தன்னுடைய கண்டுபிடிப்புக்களின் குறிப்புக்களைத் தன்னுடைய மேசையின் மீது வைத்துவிட்டு சற்று வெளியே சென்றிருந்தார் . அங்கே வெளிச்சத்திற்காக ஒரு மெழுகுவர்த்தி வைக்கப்பட்டு அது ஒளிர்விட்டுக்கொண்டிருந்தது. அந்த நேரத்தில் அவர் செல்லமாக வளர்த்த அவருடைய பூனை மேசையின் மீது தாவிட அதிர்வில் மெழுகுவர்த்தி கீழே விழுந்திட அந்தக் குறிப்புக்கள் தீக்கிரையாகின. திரும்பி வந்த நியூட்டன் தன்னுடைய இவ்வளவு கடினமான உழைப்பின் குறிப்புக்கள் தீக்கிரையானதைக் கண்டும் சிறிதும் அதிர்ச்சி அடையாமலும் தன் உணர்வுகளை வெளிப்படுத்தாமலும் அந்தப் பூனையை அன்புடன் தடவிக் கொடுத்தார். இது அவர் தன் உணர்வுகள் மீதும் மனதின் மீதும் கொண்டுள்ள கட்டுப்பாட்டை தெளிவாக விளக்குகின்றது.

    நம்முடைய மனத்தைக் கட்டுப்படுத்தப் பழகிக்கொண்டால் நாம் செய்யும் வேலைகளில் நிதானத்தையும் பொறுமையையும் முன்வைத்து அந்தச் செயலை விவேகத்துடனும் அழகாகவும் சரியான முறையிலும் செய்யமுடியும்.

    பொறுமையும் நிதானமும் ஒரு மனிதனின் தயக்கத்திற்கு அறிகுறி அல்ல. பொறுமையும் நிதானமும் ஒரு மனிதனின் அறியாமைக்கோ அல்லது இயலாமைக்கோ அறிகுறி அல்ல. பொறுமையும் நிதானமும் ஒரு மனிதனின் கவனக்குறைவின் அறிகுறி அல்ல.

    பல நேரங்களில் பொறுமையும் நிதானமும் தெளிவான சிந்தனைக்கும் சரியான முடிவுகள் எடுப்பதற்கும் வழித்துணையாக அமைகின்றது. அவசர புத்தியும் நிதானமின்மையும் கொண்டவர்கள் பல நேரங்களில் தவறுகள் செய்வது மட்டுமின்றி நேரத்தையும் , வளங்களையும், ஆதாரங்களையும் தொலைத்து நிற்கின்றனர்.

    “இமயத்தின் முனிவர்கள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட ஒரு புத்தகத்தில் நான் படித்த கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு அனுபவமும் முதிர்ச்சியும் வாய்ந்த முனிவருக்கு சில சீடர்கள் இருக்கின்றார்கள். இதில் ஒரு சீடனுக்குத் தன்னுடைய குருவின் மீது கோபமும் ஆத்திரமும் வருகின்றது. அவர் தமக்குத் தெரிந்த வித்தைகளையும் திறன்கள் அனைத்தையும் நமக்கு ஏன் உடனே கற்றுத் தரமாட்டேன் என்கிறார் என்ற கோபம். விரக்தி அடைந்த அந்தச் சீடன் இவரை விட்டு நீங்கி இன்னொரு குருவைத் தேடிச் செல்ல விழைகின்றான். இவனுடைய குருவும் சிரித்துக்கொண்டே அவனுக்கு ஆசி வழங்கி வழியனுப்புகின்றார்.

    சுமார் இருபது ஆண்டுகள் கழித்து அந்தச் சீடன் பல திறன்களைக் கற்றுக்கொண்டு இந்த குருவிடம் வந்து தன் திறன்களை வெளிக்காட்ட நினைத்து மிக கர்வத்துடன் வருகின்றான். அவனை வரவேற்ற குருவிடம் தன பெருமைகளை எடுத்துச் சொல்ல அவர் ” நீ அறிந்த திறன்களில் மிகவும் சிறப்பானதான ஒன்றைச் சொல்” எனக் கேட்கின்றார். அவனும் பெருமையுடன் ” குருவே, நான் என் வாயைத் திறந்தவுடன் என்னுடைய நாக்கிலிருந்து நெருப்பை வரவழைக்க முடியும்” என்று சொல்கின்றான்.

    உடனே அந்த குருவும்  ” அற்புதம்! பாராட்டுக்கள் ! பெருமைப்படுகின்றேன்.  ஆனால் இந்தத் திறனைப் பெற உனக்கு எத்தனை காலம் ஆனது? ” என்று கேட்கின்றார். அதற்கு  அவனும்  ” இதைக் கற்றுக்கொள்ள எனக்கு இருபது ஆண்டுகள் ஆனது. மிகவும் கடினமானப் பயிற்சி” என்றான்

    குரு  சிரித்துக்கொண்டே சொன்னார்  “அட முட்டாளே, ஒரு சிறிய தீக்குச்சியால் உரசினால் சில வினாடிகளில் கிடைத்துவிடும் நெருப்புக்கு உன்னுடைய வாழ்க்கையின் இருப்பது ஆண்டுகளை வீணடித்துவிட்டாயே ”

    ஒரு செயலில் நாம் ஈடுபடுவதற்கு முன்னால் நன்கு யோசிக்க வேண்டும். பொறுமையுடனும்  நிதானத்துடனும் தெளிவுடனும் அலசி ஆராய்ந்து அதில் ஈடுபடவேண்டும்.

    வாழ்க்கையில் சற்று பொறுமையையும் நிதானத்தையும் கடைபிடித்துப் பார்க்கலாமே !

     

    (தொடரும்)

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (97)

     

    நிர்மலா ராகவன்

     

    மூக்கை நுழைக்கலாமா?

    “உங்கள் கணவர் எதுவரை படித்திருக்கிறார்?” நேர்முகத் தேர்வில் ஒரு இளம்பெண்ணைக் கேட்டார்கள்.

    “அதற்கும் நீங்கள் விளம்பரம் செய்திருக்கும் வேலைக்கும் என்ன சம்பந்தம்?” என்று எதிர்க்கேள்வி கேட்டவளுக்கு வேலை கிடைக்கவில்லை. ஆனால் அவள் செய்தது சரியென்றே தோன்றுகிறது.

    பிறர் என்ன செய்கிறார்கள் என்றறியும் வேண்டாத ஆர்வம் உடையவர்கள்தாம் அத்தகைய கேள்விகளைக் கேட்பார்கள். இவர்களுக்கு யாராவது நிம்மதியாகவோ, மகிழ்ச்சியாகவோ இருந்தால் பிடிக்காது. எப்போதும் அவர்களது அதிகாரமே ஓங்கியிருக்க வேண்டும். தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என்ற வித்தியாசமெல்லாம் கிடையாது இவர்களுக்கு.

    கதை

    ராஜன் ஒரு படித்த முட்டாள். நாம் குடித்துவிட்டு, வெகு நேரம் கழித்து வீட்டுக்குப் போனோமே, நம்முடன் இருந்த நண்பனும் அப்படித்தானே வீட்டில் `பாட்டு’ வாங்கிக் கட்டிக்கொண்டிருப்பான்?’ என்று அறியும் நப்பாசை அவனுக்கு.

    தொலைபேசியில் நண்பனின் வீட்டை அழைத்து, “நேற்றிரவு உன் அப்பா எத்தனை மணிக்கு வீட்டுக்கு வந்தார்?” என்று நண்பனின் மகளைக் கேட்டான் – மிக முக்கியம்போல்! “ஐந்து மணிக்கு என்று என்னிடம் சொல்கிறார். பொய்தானே?”

    “உங்களிடம் அப்பா சொல்வதை நம்பாமல், என்னிடம் கேட்கிறீர்களா? நல்ல நண்பர் நீங்கள்!” என்று சாடி, தந்தையின் கௌரவத்தைக் காப்பாற்றினாள் மகள்.

    சரிதான், வேறு திசையில் தன் கைவரிசையைக் காட்டலாம் என்று முடிவெடுத்தான் ராஜன்.

    “என் மனைவி உன் மனைவியைவிட கண்டிப்பானவள்!’ என்று பெருமை பேச ஆரம்பித்தான் நண்பனிடம். “நான் குடித்துவிட்டு வந்தால், எப்படிக் கத்துவாள், தெரியுமா?”

    பிறரது வாழ்க்கையில் குழப்பத்தை உண்டாக்கவே சிலர் இம்மாதிரி பேசுகிறார்கள் என்பது புரிந்தால், அலட்சியப்படுத்தலாம்.

    ஏன் அப்படிச் செய்கிறார்கள்?

    ராஜனைப்போல் பிறரது விவகாரங்களில் அநாவசியமாக மூக்கை நுழைப்பவர்கள் தம் பிரச்னைகளை நினைக்கவும் விரும்பாதவர்கள் . ஏதோ காரணத்தால் நிம்மதி குலைந்து போயிருக்கலாம். பிறர் நன்றாக இருந்தால் மட்டும் எப்படிப் பொறுப்பார்கள்? தாம் உற்ற நண்பர்தான் என்று நம்பவைப்பதுபோல், சாமர்த்தியமாக அவ்வப்போது வீட்டுக்கு வந்து, பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் தவறுவதில்லை இவர்கள்!

    இத்தகைய சிலர் நண்பர்களின் துணைவியரையும் விட்டு வைப்பதில்லை. வேடிக்கை என்றெண்ணி, சீண்டிப் பார்ப்பர். `நேற்று உங்கள் கணவர் இரண்டு, மூன்று பெண்களுடன் காரில் போவதைப் பார்த்தேனே!’

    வாகன வசதி இல்லாதவர்களுக்கு உதவியாகப் போயிருக்கலாம். அல்லது, அவர்களில் ஒருத்திக்கு உடல்நலக் குறைவாக இருக்கலாம்.

    பிறரது குடும்ப விவகாரத்தில் தலையிடும் இதுபோன்ற நபர்களின் பேச்சை அலட்சியம் செய்வது நல்லது. அதைவிட்டு, கணவரிடம் அதுபற்றி சந்தேகத்துடனோ, கோபத்துடனோ பேசினால் ஒன்றுமில்லாத சமாசாரம் பூதாகாரமாக வெடிக்கும்.

    வாழ்க்கைத் துணைவரையோ, பெற்றோரையோ, உற்றவரையோ அவமரியாதையாகப் பேசுபவரின் உறவைத் துண்டித்துக்கொண்டால்தான் நிம்மதி நிலைக்கும். இல்லாவிட்டால், சிறுகச் சிறுக நம்மை அவர் பக்கம் சாய்க்கப் பார்ப்பார்.

    தம்பதியரின் பிணைப்பு

    இருவருக்குள் மட்டுமே இருக்க வேண்டியது தாம்பத்திய உறவு. பலருடனும் தமது உறவை, அதன் குறைகளைப்பற்றிப் பேசுபவர் தன்னையும் அறியாது பிறரது குறுக்கீட்டை வரவேற்று, நிலைமையை இன்னும் மோசமாக்குகிறார். பிறரின் குறுக்கீடு எப்போதும் நன்மையை விளைவிப்பதாக இருக்காது.

    `மகனுக்குத் தன்மேல் இருந்த அன்பில் பங்கு கேட்க வந்துவிட்டாளே!’ என்ற பொருமலுடன், மருமகள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் குறுக்கிடும் மாமியாரும், “எல்லாரும் உன்னைப்போல் பெண்டாட்டிதாசனாக இருப்பார்களா!’ என்று கேலி செய்யும் நாத்தனாரும் ஒரு குடும்பம் இன்பமாக வாழவிடாது தடுக்கும் எதிரிகள்.

    இவர்கள் ஏன் அப்படி நடக்கிறார்கள் என்று தம்பதியர் அமைதியாக ஆராயும்போது, அவர்கள் உறவு பலப்படுகிறது. பொறுக்க முடியாது போய்விட்டால், நம்பகமான ஒருவருடன் பகிர்ந்து, தீர்வைத் தேடலாம்.

    மூக்கை நுழைப்பதால் நன்மையா?

    சில சமயங்களில், குறுக்கீடுகூட நன்மை விளைவிப்பதாக இருக்கிறது.

    கதை

    எங்கள் பக்கத்து வீட்டில் குடியிருந்த ஏலியம்மாவின் வாசற்கதவு எப்போதும் தாளிடப்பட்டிருக்கும். அக்கம்பக்கத்தில் யாருடனும் பேச்சு வைத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை.

    ஒவ்வொரு இரவும், பத்து மணிக்குமேல் தன் மூன்று வயதுக் குழந்தையை அடிப்பாள் ஏலியம்மா. குழந்தை, எமிலி, `அம்மா! அம்மா!’ என்று கதறும்.

    என்னால் பொறுக்கவே முடியவில்லை. பகலிலும் வாய் ஓயாது எமிலியைத் திட்டுவாள்.

    எந்தத் தாயாவது இப்படிச் செய்வாளா?

    யார், எப்படி குறுக்கிடுவது?

    ஒரு முறை, அவளுடைய கணவரின் குரல் கேட்டது: ”ஏய்! சும்மாச் சும்மா பிள்ளையை விரட்டாதே!” (எமிலி தந்தையின் சாயல்).

    “பால் குடிக்காம தூங்குதுங்க! எப்படிச் சும்மா விடறது?” என்ற ஆத்திரக்குரல் கேட்டது, இரவின் நிசப்தத்தில்.

    அந்தக் குழந்தையோ இளைத்துக்கொண்டே போயிற்று.

    ஒரு சாயந்திர வேளை, எங்கள் வீட்டின் இன்னொரு பக்கத்தில் இருந்த இளம்பெண்ணிடம் இதுபற்றி பேசினேன்.

    “எனக்கும் கேட்டிருக்கிறது, அயர்ந்து தூங்கிக்கொண்டிருக்கும்போது, அந்தக் குழந்தையின் பரிதாபமான குரல் கேட்கும்,” என்று அவள் கலக்கத்துடன் ஆமோதித்தாள்.

    குடும்ப விவகாரம், நாம் என்ன செய்வது என்று எங்கள் கையாலாகாத்தனத்தை எண்ணி வருந்தினோம்.

    அன்றிரவு. “Hey, next door lady!” என்று என்னைக் கூவி அழைத்தாள் ஏலியம்மா. `நான் உன்னுடன் பேச வேண்டும்,’ என்றாள், அதிகாரமாக. தமிழச்சிதான். ஆனாலும், ஆங்கிலத்தில் கத்தினாள்.

    “உனக்குப் பேச வேண்டுமானால், நீ இங்கே வா!” என்றேன், அலட்சியமாக.

    அவள் வரவில்லை. நான் ஏன் அவள் குடும்ப விஷயத்தில் தலையிட வேண்டும், பிறருடன் அவளைப்பற்றிக் கண்டபடி பேசுகிறேன் என்றெல்லாம் கத்திக்கொண்டே இருந்தாள்.

    என்னை மிரட்ட முடியவில்லையே என்று மறுநாள் என் மூன்று வயது மகளை ஒரேயடியாகத் திட்ட, பயத்தில் அவளுக்குக் காய்ச்சல் வந்துவிட்டது.

    என் கணவர் அவள் வீட்டுக்குப் போய், “என் குழந்தைக்கு ஏதாவது ஆனால், உன்னைச் சும்மா விடமாட்டேன்!” என்று திட்டிவிட்டு வந்தார்.

    “உங்கள் மனைவி மிக நல்லவள் என்று நீங்கள் நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்! அவளோ..!” என்று அவள் கத்தியது என் காதில் விழுவதற்காகவே என்று எனக்குப் புரிந்தது.

    “எனக்கு என் மனைவியை நன்றாகத் தெரியும்!” என்று சொல்லிவிட்டு வந்தாராம். (பிறர்முன் தம்பதியர் ஒருவரையொருவர் விட்டுக்கொடுக்காமல் இருந்தால், அவர்கள் பிணைப்பு இறுகும்).

    மறுநாளிலிருந்து ஒரு நல்ல திருப்பம். அதற்குமுன் எப்போதும் கிழிந்த ஆடைகளில் காணப்பட்ட குழந்தை எமிலி பட்டுப்பாவாடையில் மிளிர்ந்தாள். தினமும், என் குழந்தைகளுக்கு எங்கள் வீட்டில் பூத்த டிசம்பர் பூவைத் தொடுத்து தலையில் சூட்டுவேன். ஏலியம்மாயும் தேடிப் பிடித்து அதே மலர்களை வாங்கி, தன் குழந்தையின் தலைகொள்ளாமல் வைப்பாள்! அன்பாக நடத்துகிறாளாம்!

    ஏலியம்மா மகப்பேறில்லாதவள், மைத்துனரின் குழந்தையை தத்து எடுத்துக்கொண்டிருக்கிறாள் என்று பிறகு கேள்விப்பட்டேன்.

    பொதுவாக, பிறரது விஷயங்களில் குறுக்கிடுவது நல்லதல்லதான். இதனால் சண்டை மூளும். நிம்மதியும், அமைதியும் சிறிது காலம் பறிபோகும். இவைகளைத் தவிர்க்கவே பலரும் தம் காரியத்தைப் பார்த்துக்கொண்டு போகிறார்கள் என்றே தோன்றுகிறது.

    ஆனால், நன்மை விளையுமானால், துணியலாம். யாரும் குறுக்கிடாவிட்டால், நிலைமை இன்னும் மோசமாகுமே!

    (மலேசியாவில், சில வருடங்களுக்குமுன் இதேபோல், அடுக்குமாடி வீடொன்றில் ஒரு குழந்தை இரவு பகலாக ஓயாது அழ, அக்கம்பக்கத்தினர் அதைக் கேட்டும் கேளாததுபோல் இருந்துவிட்டார்கள். அந்தச் சிறுவன் உடலெல்லாம் தீயால் சுட்ட காயத்தால் இறந்ததும் அவர்கள் குற்ற உணர்வால் துடித்துப்போயினர். அதன்பின்னர் குழந்தை வதை செய்பவர்களைத் தண்டிக்க சட்டம் அமலுக்கு வந்தது).

    அடுத்த வீட்டு விவகாரத்தில் நான் செய்ததில் எனக்கு வருத்தமோ, அவமானமோ கிடையாது. எப்போதாவது அந்தக் குழந்தை எமிலியின் நினைவு வரும். தாய் தனக்கு இழைத்த கொடுமை மாறி, எப்படித் தன்மீது இப்படி (போலியாகவாவது) அன்பைப் பொழிகிறாள் என்று அதற்குத் தெரிந்திருக்காது. அதற்காக எனக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது ஒரு சிறு சிரிப்பு எழும்.

    தொடரும்

    Share
  • தமிழ் ஆய்வின் இன்றைய தேவை

    கணியன்பாலன்

     

    உலகின் மிகத் தொன்மையான மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியும், தமிழ்ச் சமூகமும் மிகச்சிறந்த விழுமியங்களை, மிகச்சிறந்த பண்பாட்டு மரபுகளை, மிகச்சிறந்த தத்துவ, அறிவியல், கலை, இலக்கியக் கருவூலங்களை கிரேக்க மொழியும் அதன் சமூகமும் போன்றே உலகிற்கு வழங்கியுள்ளது. ஆனால் இன்றைய உலகம் அதனை அறியாதுள்ளது. அவைகளை உலகம் அறியச் செய்வதற்கேற்ற ஆழமான விரிவான ஆய்வுகளைச்செய்வது நமது முதல் கடமையாகிறது. நவீன அறிவியலில் இடம், காலம் ஆகிய இரண்டும் அனைத்திற்கும் அடித்தளமாகக் கருதப்படுகிறது. பழந்தமிழ்ச் சமூகம் இடம், காலம் ஆகிய இரண்டையும் அறிவியலுக்கு மட்டுமல்ல, இலக்கணத்திற்கும் அடித்தளமாகக் கொண்டிருந்தது என்பதை தொல்காப்பியம் உறுதிப்படுத்துகிறது. தமிழ் மொழி குறித்த ஆய்வுகள் போன்றே தமிழ்ச் சமூகம் குறித்த விரிவான ஆழமான ஆய்வுகள் மிக மிகத் தேவையாகவுள்ளது. அவ்வாய்வுக்கு தமிழ் மொழியின், தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய கருவூலமாக விளங்கும் சங்க இலக்கியத்தின் காலத்தைத் துல்லியமாக அறிவது மிகமிகத்தேவை. மொழியியல், சமூகவியல் அறிஞர்கள் பலர் காலம் குறித்த புரிதல் இன்றியே ஆய்வு செய்கின்றனர். அவ்வாய்வு முழுமையாகாது. இந்தியாவின் காலம் குறித்த ஆய்வு 200 ஆண்டுகளுக்குப் பின்பே ஓரளவு துல்லியமாக ஆகியது. தமிழகக் காலம் குறித்த ஆய்வுக்குச் சில பத்தாண்டுகளாவது தேவைப்படும். சங்க இலக்கிய காலம் குறித்த ஆய்வு தமிழ் மொழி, தமிழ்ச் சமூகம் குறித்த  அனைத்து ஆய்வுகளுக்கும் அடிப்படையாகும்.

    கிரேக்க மாவீரன் அலெக்சாண்டர் காலத்தை, கி.பி முதல் நூற்றாண்டு அல்லது கி.மு. 6ஆம் நூற்றாண்டு எனக் கொண்டால் கிரேக்க மொழி ஆய்வும், அதன் சமூக ஆய்வும் எப்படி இருக்கும்? அதுபோன்றுதான் தமிழ் மொழி, அதன் சமூகம் குறித்த ஆய்வுகள் குழப்பமும், முரண்களும் கொண்டதாக தற்பொழுது இருந்து வருகிறது. பழந்தமிழக நாணயங்கள், அதன் கல்வெட்டுகள், அகழாய்வுகள், எழுத்துப்பொறிப்புகள் அதன் இன்னபிற தரவுகள் சங்ககாலத்தை கி.மு. 500க்கு முன் கொண்டு செல்கின்றன. சிலர் அதன் காலத்தை கி.பி. க்குப்பின் எனக் கணிக்கின்றனர். ஆகவே சங்க இலக்கியக் காலம் குறித்த ஆய்வு முதன்மை பெறவேண்டியது மிக முக்கியமாகிறது. அவை குறிப்பிடும் வேந்தர்கள், வேளிர்கள், தலைவர்கள், புலவர்கள் குறித்த காலத்தை அறிவதும், பாடல்கள் ஒவ்வொன்றின் காலத்தையும் அறிவதும் இங்கு முக்கியமாகிறது. தமிழ் மொழியின்,  தமிழ்ச் சமூகத்தின் தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப, கலை, இலக்கிய, வரலாற்று விடயங்களை முழுமையாகவும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வது இன்றைய தேவை. இலக்கியம் குறித்த ஆய்வுகள் மட்டுமே தற்பொழுது நடந்து வருகிறது. அவ்வாய்வும் காலம் குறித்த புரிதல் இன்றியே நடைபெறுகிறது. பிற சமூகங்களோடும் பிற மொழிகளோடும் செய்யும் ஒப்பீட்டு ஆய்வு என்பது காலம் குறித்த புரிதல் இன்றி முழுமையடையாது. ஆகவே நமது இன்றைய கடமை என்பது,

    1.தமிழ் மொழியின், தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய கருவூலமாக விளங்கும் சங்க இலக்கியத்தின் காலத்தைத் துல்லியமாக அறிவது.

    2.தமிழ் மொழியின், தமிழ்ச் சமூகத்தின் தத்துவார்த்த, அறிவியல், தொழில்நுட்ப, கலை, இலக்கிய, வரலாற்று விடயங்களை முழுமையாகவும், விரிவாகவும், ஆழமாகவும் ஆய்வு செய்வது

    3.தமிழ் மொழியும், தமிழ்ச் சமூகமும் உலகிற்கு வழங்கியுள்ள மிகச்சிறந்த விழுமியங்களை, மிகச்சிறந்த பண்பாட்டு மரபுகளை, மிகச்சிறந்த தத்துவ, அறிவியல், கலை, இலக்கியக் கருவூலங்களை உலகிற்கு வெளிப்படுத்துவது.

     

     

     

     

     

     

     

    Share
  • குறளின் கதிர்களாய்…(205)

    -செண்பக ஜெகதீசன் 

    முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
    சார்பிலார்க் கில்லை நிலை. (திருக்குறள் -449:பெரியாரைத் துணைக்கோடல்) 

    புதுக் கவிதையில்… 

    முதல் போடாதவர்க்கு
    அதனால் வரும்
    ஊதியமில்லை…
    தூணாய்த் தாங்கிடும்
    பெரியோர் துணையில்லாதவர்க்கு
    உறுதிப்பாடில்லை…! 

    குறும்பாவில்… 

    ஊதியம் எதுவும் கிடைப்பதில்லை
    உற்ற முதல் இல்லாதவர்க்கு,
    தாங்கும் துணையிலார்க்கு நிலையில்லை…! 

    மரபுக் கவிதையில்… 

    வருவாய் எதுவும் வருவதில்லை
    -வலுவாய் முதலது இலாதார்க்கே,
    அரியணை யமர்ந்திடும் மன்னவர்க்கே
    -அருகே தாங்கிடும் தூணெனவே
    பெரியோர் துணையது தந்தருளும்
    -பேணிடும் அறிவுரை யில்லையெனில்,
    உருவில் பெரிய நாட்டரசும்
    -உறுதி யின்றி வீழ்ந்திடுமே…! 

    லிமரைக்கூ… 

    ஊதியம்பெற, வேண்டும் முதலே,
    தாங்கிடும் தக்கதுணை இல்லார்க்கு
    நிலையில்லை அரசாட்சி யதிலே…! 

    கிராமிய பாணியில்… 

    தொணவேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்…

    வராது ஊதியமெல்லாம்
    மொதலு இல்லாதவனுக்கே…

    அதுபோல
    தூணுபோலத் தாங்கிப்புடிக்கும்
    பெரியவங்க தொணயில்லாத ராசாவும்
    உறுதியா நெலைக்கமாட்டானே…

    அதால
    தொணவேணும் தொணவேணும்
    பெரியவுங்க தொணவேணும்…!

     

     

    Share
  • கடலுள் ஒரு மொக்கு விரியும்போது!

    -கவியோகி வேதம்

    நான்இதோ வந்தேன் என்று
    நறுவிசாய் மலர்ந்து பொங்கி
    தேன்‘கொணர்’ என்றே  மொட்டைத்
    தேர்ந்துபின்  நிமிர்த்தும் காலை!

    ஒளித்தது நேற்று கடலென்
    றொப்புதல் வாக்கு செய்து
    களிப்புடன் கதிரோன்  சிரிக்கக்
    கால்களைப் பரப்பும் காலை!

    வண்டுகள் முனகிப் பாயும்!
    வாசமது நுகர்ந்து  தோயும்!
    தண்டைகள் குலுங்கப் பெண்ணும்
    தளுக்கியே மினுக்கும் காலை! .

    குருவிகள் விழித்துச்  சிலிர்க்க,
    குடங்களில் ஒலிநீர்ச் சந்தப்
    பெருமையில் துள்ளும் காலை!
    பீறிடும் கவிதை மாலை!

    சிறுமிகள் தந்தை யார்க்கே
    சின்னஇ டைகு லுங்க
    கறுத்தஓர் கலயம் தன்னில்
    கஞ்சியைச் சுமக்கும் காலை!

    உழவனும் சூச்சூ என்றே
    உயர்ந்தநல் மாட்டை ஓட்டி
    உழுதலில் நாட்டம் கொள்ள
    உயர்ந்தமண் நெகிழும் காலை!

    தேன்நிறைப் பூக்கள் எல்லாம்
    தேனியின் எச்சில் படுமுன்
    மானமோ டிறையை நாட
    வணங்கியே பதறும் காலை!

    கிளையினில் விழித்த  குயிலும்
    கிழக்கினில் எழும்வி ளக்கே
    சுளையெனப்  ‘பறக்கும்’ – உணவைச்
    சொன்னதாய்ப் பாட்டுப் பாடும்!

    மருட்சியாய்ப் புல்லை மேயும்
    மான்களும் துள்ளும் காலை!
    திரட்சியாய்க் கண்ணீர்  தோயத்
    தேவனை  வணங்கும் காலை!

     

    Share
  • வாழ்த்தியே மகிழ்ந்திடுவோம்!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண்,  அவுஸ்திரேலியா

    நிலவென்போம்  மலரென்போம்  நீதானே  உலகென்போம்
    அழகெல்லாம்  உன்னிடத்தே  ஆரம்பம்  ஆகுதென்போம்
    வரமாக  வந்திருக்கும்  வாழ்வென்று  கூறிநின்று
    வையத்தில்  மகளிர்தமை  வாழ்த்தியே  மகிழ்ந்திடுவோம்!

    பொன்னென்போம்  புகழென்போம்  பொறுமைக்கு  நிகரென்போம்
    மண்ணினையும்  பெண்ணென்போம்  மதிப்புடனே வணங்கிடுவோம்
    ஓடுகின்ற  நதியினுக்கும்  பெண்பெயரைச்  சூட்டிநின்று
    உலகினிலே  பெண்மைதனை  உயர்வென்றே  வாழ்த்திநிற்போம்!

    மனிதனது  வாழ்க்கையிலே  மகளிர்நிலை உயர்வாகும்
    மகளிர்நிலை  தாழ்வுற்றால்   மனிதவாழ்வு  கீழாகும்
    ஒழுக்கமுடை  மகளிர்தாம்  உன்னதத்தின் இருப்பிடமே
    ஒழுக்கமது  குலைந்துவிடின்  உலகவாழ்வே  சீரிழக்கும்!

    நாடுயர  வீடுயர  நல்மகளிர்  தேவையன்றோ
    நல்லொழுக்கப்  பிறப்பிடமே  நல்மகளிர்  பிறப்பாகும்
    தீயொழுக்கம்   மகளிரிடம்  குடிகொண்டு விட்டுவிட்டால்
    திறலுடைய  சமுதாயம்   சிறப்பிழந்து போகுமன்றோ!

    அடக்கு  முறைக்குள் அடங்கிநின்றார்  மகளிர்கள்
    அவர்வாழ்வில்   சோதனைகள்  அலையலையாய்  வந்தனவே
    இலக்கியத்தில்  உயர்வாக  வலம்வந்த  மகளிர்கள்
    இவ்வுலகில்  இடர்ப்பட்டு  ஏக்கமுற்று  இருந்தனரே!

    பாரதியின்  பாட்டாலே  பலமகளிர்  துடித்தெழுந்தார்
    பட்டதுன்பம்  எடுத்தெறிய  பாய்ச்சலுடன்  வந்தார்கள்
    எட்டய  புரத்தாரின்  வழிவந்த  பலபுலவர்
    கொட்டிநின்ற  வார்த்தைகளால்  கொடிபிடித்தார்  மகளிரெலாம்!

    மகளிர்தொடா துறைகளிப்போ  மாநிலத்தில்  இல்லையன்றோ?
    மண்தொட்டு  விண்வரைக்கும்   மகளிர்தமைக் கண்டிடலாம்
    பட்டம்பல  பெற்றுவிட்டார்  திட்டம்பல  தீட்டுகிறார்
    பாருலகில்  மகளிரிப்போ  பகலவன்போல் வந்துவிட்டார்!

     

     

     

    Share
  • இங்கும், அங்கும், எங்கும் !

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    +++++++++++

    நல்வாழ்வு நீடித்து நடத்தி வர

    என் காதலி எனக்கிங்கு அவசியம் !

    இங்குதான் தேவை !

    ஆண்டு பூராவும், என் வாழ்க்கை

    நாளுக்கு நாள் மாற வேண்டும் அவளது

    கூட்டுறவில் !

    அதில்தான் ஓர் உன்னதம் உள்ளது,

    எவரும் மறுக்க இயலாது !

    அவள் கூந்தலை

    எனது விரல்களால் நீவி விடுவது

    இருவருக்கும்

    பெரு மகிழ்ச்சி ஊட்டும்

    எவன் உரைத்தாலும்

    அவன் இருப்பது தெரியாது.

    என்னிச்சை

    எல்லா இடங்களிலும் அவள்

    தென்படுவது அவசியம்.

    எனதருகில் அவள் இருந்தால்

    தனிமை, கவலை நேராது !

    எங்கு நான் சென்றாலும்

    அங்கு அவளைச் சந்தித்துப் பேசல்

    மங்கா காதலின் தேவை.

    காதல் என்பது

    நம்மை நாம் பகிர்ந்து கொள்வது;

    காதல் ஒருபோதும் அழியாது,

    அவ்விதம் நம்புகிறோம் !

    உன்னிரண்டு

    கண்ணுக்குள் நான் இருப்பதாய்

    எண்ணிக் கொள்வேன்.

    இங்கும், அங்கும்,

    எங்கும் அவள் இருப்பாளா ?

    என்னருகில் அவள் இருந்து விட்டால்

    தனிமை எனக்கில்லை.

    கவலை எனக்கில்லை !

    அவள் எனக்கு இருக்க வேண்டும்.

    இங்கும், அங்கும், எங்கும் !

    ++++++++++++++++++

    Share