Blog

  • காச நோய் …

    பவள சங்கரி 

     

     

    காச நோயை முற்றிலுமாக குணப்படுத்தக்கூடிய விலை அதிகமான வெளிநாட்டு மருந்துகள் நமது அரசிடம் 1000 பேருக்கு மட்டுமே உள்ள நிலையில் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 1,30,000 பேர் (நோய் முற்றிய நிலையில் உள்ளவர்கள்) இந்த மருந்துகளை இந்தியாவிலேயே தயாரிப்பதற்கு அந்த நிறுவனங்கள் அனுமதி தர மறுக்கின்றனவாம். இந்தியாவில் இந்த மருந்தை தயாரிப்பது மட்டுமே விலை குறைவாகக் கிடைப்பதற்குரிய தீர்வாக அமையும். மத்திய அரசு பன்னாட்டு நிறுவனங்களின் மற்ற தயாரிப்புகளின் மீது கட்டுப்பாடு விதித்தாவது அல்லது உலக சுகாதார மையம் மூலமாகவாவது தக்க நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட நோயாளிகளைக் காப்பாற்ற வேண்டும்…. 🙁

    Share
  • ராமகிருஷ்ண பரமஹம்சர்….!

     

    படமும், பாடலும்….!
    —————————————————-

    ராமகிருஷ்ண பரமஹம்சர் வெண்பா….!
    ————————————————————————————


    நெற்றியில் தொட்டு நரேனுக்குள்(விவேகானந்தர்) ஞானத்தை
    பற்றிட வைத்த பரமஹம்ஸா -வெற்றிடமென்
    நெஞ்சில் எழுந்தருளி அஞ்சற்க என்றிடுவீர்
    தஞ்சமென்றும் நின்னிரு தாள்….கிரேசி மோகன்….!

     

    Share
  • ருண – ரோக – சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம் எனும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்

     

    மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் அகலவும் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 06.03.2018 செவ்வாய் கிழமை ருண – ரோக – சத்ரு தொல்லை நீக்கும் சுவாதி ஹோமம் எனும் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம்.

    வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி உலக நலன் கருதி வருகிற 06.03.2018 செவ்வாய் கிழமை காலை 10.00 மணி முதல் 12.00 மணி வரை, மாசி சுவாதி நக்ஷத்திரம் மற்றும் பஞ்சமி திதியை முன்னிட்டு ஸ்வாதி ஹோமம் என்கிற ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் ஹோமம் நடைபெறவுள்ளது. இதனை தொடர்ந்து, ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் பிரதிஷ்டை செய்துள்ள ஸ்ரீ கூர்ம லட்சுமி நரசிம்மருக்கு நவ கலச திருமஞ்சனமும் நடைபெறுகிறது.

    இதனை தொடர்ந்து மன நோய் நீங்கவும், மாந்திரீக தொல்லைகளில் இருந்து விடுபடவும், புத்தி சுவாதீனம் தெளியவும், சித்தப்ரம்மை விலகவும், கடன் பிரச்சனைகளுக்கு தீர்வு பெறவும், எதிரிகள் பயம் அகலவும், போன்ற பல்வேறு தோஷங்களுக்காக, மேற்கண்ட யாகங்களிலும் பூஜைகளிலும் பங்கேற்க்கும் பக்தர்களுக்கு ஸ்ரீ தன்வந்திரி பகவான், ஸ்ரீ சக்கிரத்தாழ்வார் சன்னதிகளில் வைத்து பூஜித்த விசேஷ பிரசாதம் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் வழங்கி ஆசீர்வதிக்க உள்ளார். ருண ரோக சத்ரு நாசினியான

    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரின் சிறப்பு:

    வேதங்கள், உபநிஷதங்கள், யாகங்கள் முதலியவைகளுக்கு தலைவரும், ப்ரம்மா, ருத்ரன் முதலியவர்களால் வணங்கப்பட்டவரும், உக்ரமும் கோரமும் உடைய கிரஹங்களால் பீடிக்கப்பட்ட பக்தர்களுக்கு அபயம் அளிப்பவரும், பக்தனான ப்ரஹலாதனுக்கு அனுக்ரஹம் செய்தவரும், மஹாலக்ஷ்மியுடன் கூடியவரும், அரக்கர் தலைவனான ஹிரண்யகசிபுவை சம்ஹரித்தவரும், மிக பயங்கரமான சிம்ஹத்தின் கர்ஜனையால் எட்டுத் திசையிலும் உள்ள திக்கஜங்களுக்கும் பயத்தை போக்கடிப்பவரும் ஹிரண்யகசிபுவின் குடலை மாலையாக அணிந்தவரும், சங்கம், சக்ரம், தாமரை, ஆயுதம் இவைகளை கைகளில் தாங்கியவரும் மகாலக்ஷ்மியை இடப்பாகத்தில் அணைத்துக் கொண்டு, தன்னை வழிபடும் பக்தர்களுக்கு விரும்பிய வரங்களைத் தருபவரும், தேவதைகளின் காரியத்தை ஸாதிப்பதற்காக ஹிரண்யகசிபுவின் சபையில் தூணிலிருந்து வெளிப்பட்டவரும், மஹாவீரருமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்ஹரை வணங்கி அருள்பெற மேற்கண்ட ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் யாகமும் சிறப்பு வழிபாடும் புஷ்பார்ச்சனையும் சிறப்பாக நடைபெற உள்ளது. இந்த தகவலை தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    தொடர்புக்கு:
    ஸ்ரீமுரளிதர ஸ்வாமிகள்,
    ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்,
    அனந்தலை மதுரா, கீழ்புதுப்பேட்டை,
    வாலாஜாபேட்டை – 632 513. வேலூர் மாவட்டம்.
    போன்: 04172 & 230033, மொபைல்: 94433 30203,
    Web : www.danvantritemple.org | www.danvantripeedam.blogspot.in
    E-Mail: danvantripeedam@gmail.com

    Share
  • படமும் பாடலும்

     

    படமும் பாடலும்(படம் கல்லூரி நாளில் வரைந்தது)
    —————————————————————————————————

     

    ’’ராதே உனக்கு ராகத் துவேஷம்
    ஆகாதடி அய்யா அடியேனுன் -காதலினால்
    கட்டி அணைத்திடும், கையை விலக்குதல்
    குட்டி உனக்கழகோ கூறு’’….கிரேசி மோகன்….!

    Share
  • மார்ச் 3 சனிக்கிழமை மாலை 6 மணி..

    மார்ச் 3 சனிக்கிழமை மாலை 6 மணி..
    இடம்: ராகசுதா அரங்கம், சென்னை மயிலாப்பூர் லஸ். ( நாகேஸ்வரராவ் பூங்கா பின்புறம்.)
    திருப்பூர் கிருஷ்ணன் பேருரை
    தலைப்பு : தேசிய இயக்கத்தின் தமிழ் மூவர்
    ( சுப்ரமண்ய சிவா, வ,வே,சு, ஐயர், வ,உ,சி,)
    அனைவரும் வருக!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ”கீதாவைச் சொன்னவரைக் கன்றோடு கங்கை
    பாதாதி கேசம் பணிய-சீதாவின்
    நாயகர் பின்வந்த நந்தசேய் நாட்டமோ
    தாயக ஆச்சியின்பக் தி’’….கிரேசி மோகன்….!

    Share
  • கவிதை என்னும் அழகியல் : வாசிப்புச் சமூகத்தை முன்வைத்து

    பிரதீப் குமார்.பி. முனைவர் பட்ட ஆய்வாளர் (தமிழ்), தமிழ்த்துறை, அரசுக் கல்லூரி சித்தூர்.

    நெறியாளர் : ப.முருகன்

    நவீன கவிதை என்னும் சொல்லாடல் கொண்டிருக்கும் பொருள் உண்மையில் கவிதையில் சொல்லிய முறையை மையமிட்ட ஒன்றானதாகவே இதுவரை கருதப்பட்டு வருகிறது. அது யாரை நோக்கிச் சொல்லப்படுகின்றது என்பதைப் பற்றியோ, வாசகன் என்ற ஒரு வெளி குறித்த அறிவுப் பரம்பரையைப் பற்றியோ ஆன விவாதங்கள் முற்காலங்களில் நிகழவில்லை. ஆனால் தொல்காப்பியம், கூற்றுக் கோட்பாடும், கேட்போன் பயில்வோன் என்ற தன்மைகளைப் பற்றிய வாசக மையைச் சிந்தனையும் ஆங்காங்கே குறித்துச் செல்கிறது. இந்நிலையில் புரிந்து கொள்ளுதல் என்ற தன்மையைக் கொண்டும் கவிதையை அணுக வேண்டும் என்ற முன்னறிவோடு, வாசக ஏற்பியல் கோட்பாடு (Reader Reception Theory) எங்ஙனம் கவிதைக்கான அழகியலைத் தீர்மானிக்கின்றது என்பதைப் பற்றிய உரையாடலை இக்கட்டுரை மேற்கொள்கிறது. காரணம் கவிதை என்ற ஒழுங்கியல் தான் புழங்குகின்ற தளத்தைச் சுற்றிலும் புதுமாதிரியான அர்த்தப்படுத்தல்களை தரவல்லது. விளக்குமுறையும், வைப்பு முறையும் இதற்கு சான்றுகள். அதேவேளை கருத்தாக்கம் பெறும் புதிய ஊடாட்டங்கள், குறிப்பாக பெண் கவிஞர்களின் எழுச்சி, கவிதை எனும் அரங்கு உலகமயமாக்கப்பட்டதின் விளைவு, குறியீடுகளைக் கடந்து மேலெழுந்து வந்த பின்னோக்க சமுதாய மக்களின் ஆக்ரோஷமான பதிவுகள், மொழியின் இலகு தன்மை போன்றவை கவிதை என்னும் இயல்பு உணர்ச்சியை மொழியைக் கடந்த பரவுதலுக்கு காரணமாக்கியது.

    நவீன கவிதையின் இயங்குமுகம் அழகியல் என்ற சூழலியல் தத்துவத்தையோ, மேற்கு உலகத்தின் அமைப்பியல்வாதம் முதலியவற்றையோ முற்றிலும் நிராகரிக்கவும் இல்லை; தனதாக்கிக் கொள்ளவும் இல்லை. கவிதை தன் மையத்திலிருந்து புதிய புதிய பொருண்மை சார்ந்த அடையாளங்களையோ, ஏன் மற்றுமொரு கவிதையையோ தான் தர முயற்சிக்கிறது; தந்திருக்கிறது. ஒவ்வொரு பிரதியும் படைப்பாக்கம் பெறும்போதே மற்றொரு பனுவலை தன்னோடு ஒட்டுண்ணியாய் கொண்டிருப்பது போல ஒவ்வொரு கவிதையும் வாசிப்பு மற்றும் ரசனைச் சமூகத்தைப் பொறுத்து மறுகட்டமைக்கப்படுகிறது அல்லது அதோடு நிறுத்தப்படுகிறது.

    கவிதைக்கான ஏற்றுக்கொள்ளபடுதலின் அழகியல் (Aesthetics Reception) அதன் திறனாய்வுக் களமென்றாலும் கூட அறிவுப் புலத்தைத் தாண்டிய ஒரு உளவியல் இணைப்பும் இதோடு காணப்படுகிறது. கவிஞன் செயல்படுத்த நினைக்கின்ற அல்லது சொல்லத் தயாரெடுக்கின்ற காட்சிப் படிமம், அதன் யதார்த்தங்களையும் கடந்து வாசகனின் அறிவுப் பாரம்பரியத்தோடு கொள்ளும் வாதப் பிரதிவாதங்களில் மற்றுமொரு பிரதியை மீள்கண்டுபிடிப்பு செய்கிறது. இந்தச் சூழமைவில் செயல்படுகின்ற வாசக உளவியல், கவி உளவியலையும் தாண்டிய பிம்பங்களை பனுவலின் (பிரதி) மீது கட்டமைக்க முனைகிறது. ஆக திறனாய்வு என்னும் அளவுகோல் வாசக உளவியலையும், படைப்பாக்க உளவியலையும் முன்னிறுத்திக் கொண்டே செயல்பட வேண்டியது அவசியமாகிறது.

    கவிதையோடு மறைந்திருக்கின்ற படைப்பாக்க உளவியலின் இடையிட்டுரைத்தலானது (Interpellation) வாசகத் தளத்தில் நிகழும் வாசிப்பு முறை, பொருள் எடுத்தாளும் முறை, மீள் உருவாக்கம் (Re-Productive) முதலியவற்றில் வாசக உளவியலோடு சரிவிகித அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. ஒருவகையில் கூறினால் மேலாதிக்கம் செய்யும் தலைமையில் (Hegemony) படைப்பாக்க உளவியல் செயல்படுகிறது எனலாம். உலக இலக்கியங்களில் கவிதைக்கு மனித நாகரீகத்தின் அளவிற்கான காலப்பழக்கம் உண்டு. இருப்பினும் நீண்ட வரலாறு கொண்ட ஓர் இலக்கிய வகைமை (Literary Genre) இத்தனை ஆண்டுகால பரிணாமங்களில் சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறதா என்ற கேள்வியை முன்வைத்தால், கவிதை வெறும் ரசனைக்கான பண்டமாகவே நுகரப்பட்டிருக்கிறது என்பதைத் தான் பதிலாகத் தர வேண்டியிருக்கும். கவிதை இதுவரையிலும் அதன் படைப்பாளியை முன்னிறுத்தியே தான் விமர்சிக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனால் இன்றைய பின்நவீனத்துவச் சூழலில், கவிதையின் அர்த்தத் தாண்டுதலுக்குத் தன் மரபார்ந்த கட்டமைப்புகளை மீறி, வாசகப் புரிதலின் இயங்கியலோடு கொண்டிருக்கின்ற உறவை தெளிவுபடுத்த வேண்டியிருக்கிறது. அதற்கு முக்கிய வெளியாக இருப்பது, வாசக அறிவுப் புலமே.

    பல்கோணத் தன்மை : புரிதலும் – முரண்களும்

    கவிதை மனித உழைப்பின் பிறிதொரு விளைவான மொழியினை மூலப் பொருளாகக் கொண்டு விளைந்த ஒரு செயல்பாடாகும். ஆதலால் ‘கவிதை மனித உழைப்பிலிருந்து விளைந்தது’ என்கிறார் ஜார்ஸ் தாம்சன். மனித உடலானது தான் பரிச்சயப்படுத்திக் கொண்ட பொருட்களைக் குறியிட்டு, பெயரிடுவதன் மூலம், பொருட்களின் மீதான விரிவான அதிகாரக் களத்தைக் கட்டமைத்துக் கொள்கிறது. இந்நிகழ்வின் உடனிகழ்வாக மொழியும் மொழி சார்ந்த சொல்லாடல்களும் மனித இருப்பை நிர்ணயம் செய்வதற்கான ஒரு வெளியை (Space) உற்பத்தி செய்து கொள்கிறது. இந்நிலையில் பொருட்களின் ‘தானேயான அம்சம்’ இருப்பழிந்து ‘அங்கீகரிக்கப்பட்ட அம்சம்’ – பெயர் அல்லது குறியீடு மட்டுமே எஞ்சுகிறது. சான்றாக, ‘மரம்’ என்ற பொருளைக் குறிக்க உருவான ‘மரம்’ என்ற சொல், ‘ம-ர-ம்’ என்ற ஒலி குறிப்பதே மரம் என்ற பொருளை குறிக்கும் சொல்லாக மாற்றியமைக்கப்படுகிறது. அதேவேளை, ‘மரம்’ என்ற ஒலிக்குறிப்பு இல்லாதவிடத்தும் ‘மரம்’ என்ற பொருண்மை இருக்கும். ஆனால் ‘மரம்’ என்பது பற்றியான கருத்துகள், அதன் இருப்பு போன்றவை மனிதப் பிரபஞ்சத்திற்குள் இருக்காது. அதனால் மரம் குறித்த புனைவுகள், அறிவுகள் உருவாகி இருக்காது. ஆக ஒரு பொருண்மை இருந்த போதும், அது குறித்த பொதுக்கருத்து (Concept) இல்லாத போது அப்பொருண்மை மனித உடலின் வெளியே இயக்கமற்ற, இருத்தலற்ற ஒன்றாகவே கருதப்படும். எனவே இங்கு பொருளின் மீதான அதிகாரக் களம், அறிவுருவாக்கத்தின் மூலம் கருத்துகளின் அதிகாரக் களமாக விரிவடைகிறது.

    படைப்பு மனம் உருவாக்கித் தருகின்ற மொழி அல்லது சொல்லுருவங்கள் அதற்கேயான புழங்குதள அரசியலை தன் பின்னணியில் கொண்டிருக்கின்றது. இதைப் புரிந்து கொள்ளும் படியான பிரதி சார்ந்த உரையாடல்களும் விமர்சனங்களும் அதிகாரத்தின் மற்றொரு கருத்து நிலையை வாசிப்பின் ஊடே கண்டடைகிறது. “மனம் சார்ந்தும் X உடல் சார்ந்தும் பிளவுண்ட மொழியானது உடல் X மனம் என்கிற முரணை முன்னுக்குக் கொண்டு வந்து மனதை, உடல் மீது ஆதிக்கம் செய்யும் தொழில் நுட்பமாகக் கட்டமைத்த மூலகங்களின் ஒன்றாகவே கவிதையின் செயல்பாட்டை அறிய முடிகிறது” (ஜமலான்:ப.62). ஸ்விஸ் மொழியியல் அறிஞரான ஃபெர்டினன்ட் சசூர், மொழி என்பது வேறுபாடுகளின் அமைப்புமுறை என்கிறார். அதுமட்டுமல்லாது மொழிக்குறி பற்றி, ‘அதன் மிகத் துல்லியமான சிறப்புப் பண்பு என்பது, மற்றவை எப்படி இல்லையோ அப்படி இருப்பது தான்’ என்கிறார். இந்தக் கோட்பாடு வாசகப் புரிதலுக்கும் பொருந்தும். ஆனால் இந்த வேறுபாட்டை வாசனும், படைப்பாளனும் தனித்தனி அலகுகளைக் கொண்டு பரிச்சயப்படுத்திக் கொள்கிறார்கள். அவ்வளவே. இதன் விளைவாகக் கவிதை என்னும் பனுவல் பல்கோணத் தன்மை அடைகிறது.

    கவிதைக்கான நுகர்வின் வீச்சைப் பற்றிப் புரிந்து கொள்ள, வாசகனின் மனம் கவிதையின் மனத்தோடு பிணைக்கப்படுவதால் ஏற்படும் உணர்வெழுச்சிகளைக் கொண்டு கவிதை அளந்தறியப்பட்டது. இதனூடே இரசனை முறை என்கிற நாகரீகம் சார்ந்த கருத்துப் புனைவு, பின்னப்படுத்தப்பட்டு; வளர்த்தெடுக்கப்பட்டு, அதனைப் பொதுமைப்படுத்துவதன் மூலமாக அழகியல் போன்ற சமூக ஒழுங்குமுறை சார்ந்த வன்முறைக் கருவிகள் கட்டமைக்கப்படுகிறது. இதுவே கலாச்சாரம், நாகரீகம் என்பதாக பிற்பாடு அமைப்பாக்கம் பெறுகிறது. மதம் எவ்வாறு அறவியலைத் தன் நனவிலி தள ஒழுங்கமைவாகக் கொண்டிருக்கிறதோ அதுபோல கவிதை, ‘அழகியலை’க் கொண்டிருக்கிறது.

    சமூக அனுபவத்தை தனிமனிதன் என்னும் ஒழுங்கமைப்பைக் கொண்டு அளந்து, அர்த்தப்படுத்துவதே கவிதை அழகியல் கோட்பாடாகும். தனக்கான அனுபவக் கிடங்காக கவிதை பற்றிய மதிப்பீடுகள் உருவாவதில் இதுபோன்ற ஒழுங்கமைவின் சாரங்கள் மிகுந்துள்ளதை மறுக்க இயலாது. மேலும் இது மனதின் சுய அனுபவமென்னும் அதிகாரத்தின் நிகழ் தகவுக்கு உட்பட்டு தேர்ந்து கொள்ளக் கூடிய ஒன்றாக உள்ளது. கவித்துவம் என்று சொல்லப்படும் ஒரு புனைவு வெளியை இது கட்டமைக்கின்றது. இவ்வெளியுடன் தன்னை இணைத்துக் கொள்ளும் படைப்பாக்க மனது, ஒரு கற்பனாவயப்பட்ட உன்மத்த நிலையை அடைகிறது. மனித அக உணர்வுகளை இந்த உன்மத்த நிலையிலிருந்து கொண்டு பிரதியாக்கம் நிகழ்த்துகையில் மொழியின் இலகு தன்மை நெகிழ்வுறுகிறது. இது சில வேளைகளில் ஆகச்சிறந்த (Masterpiece) படைப்பாக மாறவும் செய்கிறது.

    கவிதை ‘அனுபவம்’ என்கிற சுதந்திரமற்ற இருப்பையே பேசுபொருளாகக் கொண்டு இயங்குகிறது. இதன் வழி உருப்பெறும் ‘தனிமனிதன்’ என்கிற பிம்பமானது ஒப்பிடற்கரிய நிலையை அடைகிறது. சமூக வரையறைகளுக்கு அப்பால் இருக்கும் இத்தனிமனிதன் – தனது இருப்பை காத்துக் கொள்ள வேண்டி உருவாக்கும் துணை பிம்பங்களின் ஊடாக அது பேசப்படும் கவிதையை சாகாத்தன்மையான ஒன்றாக மாற்றுகிறது. “இன்றைய அகவுணர்வு சார்ந்த கவிதைகளில் ‘தனி மனிதன்’ என்பவனின் சுயம், பிரக்ஞை பற்றிய ஒருவகை அதீத, நுட்பமான சித்தரிப்புகளைக் காணலாம். இவை பேசும் மனிதத் தன்னிலையானது ‘நுண்ணுணர்வு’ பிரக்ஞை, உள்ளுணர்வு, பொறி போன்ற நுட்பமான கருத்திய மொழிகளால் பின்னப்படுவையே.” (ஜமாலன்:பக்.64-65)

    கவிதையின் அறிதல் (Familiarization) ஏற்படுத்தும் புதிய உணர்வுகள் கவிதையின் புதிய சொல்லாக்கங்களினால் ஏற்படுகிறது. நமக்கு ஏற்கனவே அறிமுகமான, அர்த்தப்படுத்தப்பட்டுவிட்ட ஒரு பொருளின் மீது புதிய வகை உணர்வு ஆக்கங்களை உள்ளடக்கியபடி எழுதப்படும் கவிதையானது இதுவரை பரிச்சயமான ஒரு பொருண்மையை மற்றொரு பரிணாமத்திலிருந்து பார்க்க வகை செய்கிறது. இந்தப் புதிய நுவல் முறையால் கிளர்ந்தெழும் வாசகன், புதிய அனுபவத்தால் ஈர்க்கப்படுகிறான். ஆனால் ஏற்கனவே தனக்கான அணுகுமுறைகளுடன் / தன்னிலை இயல்புடன் ஒரு கவிதையை வாசகன் அணுகுகையில் முரண்களின் மோதல் களமாக வாசகத் திறனாய்வு அமைகிறது.

    “பிரதியின் அர்த்தம் பற்றிய எந்த விவாதமும் கேட்பது / படிப்பது என்ற செயற்பாங்கினால் தான் சாத்தியம் ஆகிறது. ஏனெனில் ஒரே பிரதி பலவிதமாகப் படிக்கப்பட முடியும். ஆனால் உண்மையில் இந்தச் செயலைப் புரிபவன் வாசகன் தான். பிரதியின் மொழி ஒழுங்கமைவில் புகுந்து பிரதியின் அர்த்தத்தை இருப்பு நிலைக்குக் கொண்டு வருபவன் வாசகனே. அவன் அர்த்தத்தை வெளியே கொண்டு வராவிட்டால் அர்த்தம் பிரதிக்கு உள்ளே மறைந்து தான் இருக்கும் என்பது குறிப்பு” (கோபிசந்த் நாரங்: ப.272). ஆக பிரதிக்குள் காலியாக இருக்கும் சில இடங்களை வாசகன் தான் இட்டு நிரப்ப முடியும் என்பது முடிவாகிறது. வெற்றிடங்களை நிரப்ப வாசகன் தேர்ந்தெடுக்கும் பதிலீடுகள் எவை என்பது குறித்த விவாதங்களின் வழி வாசக விமர்சனக் கோட்பாடு உருவாகிறது. ஆனால் சட்டதிட்டமான ஒரு வகுப்பினுள் இதை அடக்க இயலாது. ஏனெனில் இந்த விமர்சனத்தில் பல்திறப்பட்ட மனப்பான்மைகள் செயல்புரிவதால் இந்தச் சிக்கல் ஏற்படுகிறது.

    கவிதைக்களம் : வாசிப்பின் ஊடுபாவுகள்

    உலகின் எந்த மொழியாயினும் அது சொல்லினது பொருள் மாறுபாடுகளின் (Differences) அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பது அமைப்பியல்வாதிகளின் கருத்து. மனிதர்கள் மொழிக்குள் வாழ்கிறார்கள். அவர்களது மொழி என்னவாக இருக்கிறதோ அதுவாக அவர்கள் ஆகிறார்கள். இதன் பொருள் உலக யதார்த்தங்கள் (Reality) மொழியின் மூலமாகத்தான் அவர்களுக்குள் கலக்கின்றன என்பதுதான். தான் இயங்குகின்ற தளத்தோடு சேர்ந்த இணைவுகளோடு வாழப் பழகிக் கொண்ட ஒரு மனிதன் தன்னுடைய முன் அனுபவங்களின் வாயிலாக தனக்கு முன் வருகின்ற கருத்துக்களை எதிர்கொள்கிறான். ஆனால் மொழியோ எந்த விதிகளுக்குள்ளும் அடக்க முடியாதபடி காட்டு விலங்காய் மனிதர்கள் உலகில் வினைபுரிகிறது. இதன் விளைவாக வரலாறு, பண்பாடு எல்லாமே மனிதர்களின் அறிவால் புரிந்து கொள்ள முடியாத புதிர்களாய் நின்று, அவர்களுக்குள் வலியையும் பயத்தையும் பெருக்குகின்றன. இந்த வலிகளையும் பயங்களையும் எதிர்கொள்ளுகிற தளத்தில் தான் மனிதர்களுக்கான இலக்கிய உற்பத்தி நடந்திருக்கிறது. யதார்த்தங்களை மீறீய பதிவுகளை இலக்கிய ஆக்கங்களின் உள்ளீடாகப் நிறுத்துவதின் வழி வாழ்வியலுக்கும் மொழியின் அடைவுகளுக்குமான இணக்க நிலை என்றும் சரிவிகிதமின்றியே இருந்து வந்திருக்கிறது. இந்தப் பின்புலத்தில், ஒரு பிரதியை அணுகும் வாசகனுக்கு ஏற்படுகின்ற முரணியக்கங்கள் மற்றுமொரு பிரதியை உருவாக்குகின்றது. இந்தப் பிரதி மூலப் பிரதியின் வாசிப்பினை ஒத்திருக்க வேண்டிய ஒரு அவசியமுமில்லை.

    மொழி காலந்தோறும் தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டே வந்திருக்கிறது. அவ்வகையில் தொண்ணூறுகளில் தமிழ்க் கவிதைகளில் இடம்பிடித்த தலித்தயம் சார்ந்த பார்வைகள், மாற்றுச் சாதியம் என்ற தளம் நோக்கி நகர்ந்தது. ஈ.வே.ரா. பெரியாரின் மாற்றுச் சிந்தனை, இதற்கு அடிப்படையாகியது. தனித் திராவிடக் கருத்துநிலைகளிலிருந்து விலகி நின்று ஒட்டுமொத்தச் சமூக இணைவிற்கான தனிமனிதச் சிந்தனை மாற்றம், அதன் வழியான சமச்சீரான சமூக உருவாக்கம் என்பவற்றைப் பதிவு செய்ய முயலுகின்ற நிலை தோற்றம் கொண்டது. கணையாழி, புதிய பார்வை, சுபமங்களா போன்ற சிற்றிதழ்கள் இதனைக் கையெடுத்தன. வர்க்க மற்றும் மனுதர்ம சாஸ்திரங்கள், கோட்பாடுகளாக்கப்பட்ட ஆதிக்க மேலாண்மைகள் ஆகியவற்றினால் விலங்கிடப்பட்ட மனித இனம் குறித்தும் (இதனுள் பால்பேதம் இல்லை என்பது இங்கு நினைவு கொள்ள வேண்டும்); அதன் இருப்பு குறித்தும் தொண்ணூறுகளின் கவிதைகள் பேசின. பிற்பாடான தமிழ் சிற்றிதழ் வளர்ச்சி இந்த உரையாடலை மேலை நாட்டுக் கோட்பாடுகளோடு இணைத்துக் காண முயன்றதன் விளைவாக சில பின்நவீன உணர்வுநிலைக் கவிதைகள் உருவாகின. மேற்கத்தியக் கோட்பாடுகள் முன் வைக்கின்ற கட்டுடைப்பு மற்றும் மையம் தகர்த்தல் ஆகிய கருத்தாக்கங்களைப் பேச முயலுகின்ற கவிதைத் தளங்கள் உருவாக்கப்பட்டன; உருவாயின. “மற்றெந்த இந்திய மொழிகளைவிடவும் தமிழில் நவீனத்துவத்தின் தடத்திலான பாதிப்பு அதிகமானது. யதார்த்தவியல் சார்ந்த எழுத்துகளுக்கும் மொழி ரீதியாக இறுக்கமான படைப்புகளுக்குமாக பழகிப் போனது நம் வாசிப்பு” (க.மோகனரங்கன்: ப.63). கட்டிதட்டிப் போன வாசிப்பு நிலைகளிலிருந்து கொண்டு கவிதையின் வேறொரு பரிணாமத்தை அடையாளப்படுத்தும் உரையாடல் களங்களும் / வாசகனை மையமிட்ட திறனாய்வு அணுகுமுறைகளும் தமிழ் சூழலில் அன்று உருவாக்கப்பட்டது.

    நவீனம் தாண்டிய கவிதை, படைப்பாளியின் சட்டகத்தை மீறி படைப்பாளி, படைப்பு, வாசகன் என முப்பரிமாண நிலைப்பாட்டில் உயிர்ப்புமிக்க மொழியின் செயல்பாடாக மாறுகிறது. ஒற்றை அர்த்தம் என்பதைத் தாண்டி வாசகனின் அர்த்தப்படுத்தல்களில் மிக அதிக கவனத்தை குவிக்கிறது. நுகர்விய சந்தைப் பொருளாக மட்கிப்போகாமல், பயன்பாட்டுக்கு பின்பும், புதுப்புது உலகங்களை அவனிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. பிரதியின் பின்னணியில் கவிதையின் மேற்பரப்புத்தளம் ஆழ்நிலைத் தளத்தோடு, இருதள இயக்கமாகவும், பிரதியின் சூழல் பின்னணியில் பல்வித அர்த்தப் பரிமாணங்களோடு பன்னொலிமப் பண்பினையும் சொல்வெளியில் அது படைக்கிறது. ஆதலால் இங்கு ஒற்றைப் பிரதிகூட பல்விதக் குரல்களுடன் வெவ்வேறு அலகுகளின் ஊடிழைப்பனுவலாக மாறிவிடுகிறது.

    இருப்பின் (Existence) குரலை, ஒற்றைப்போக்காக அல்லாமல் பன்மைத்துவ அடையாளமாக அணுகுதல் அதன் சூழல் சார்ந்த படைப்பின் அடையாள அரசியலாக கருதலாம். இதுவே அடையாளம் ததும்பும் புதுவெளிகளை கவிதைப் படைப்புலகில் பல மட்டங்களில் உருவாக்கிக் காட்டுகிறது. உயர்குடி மனோபாவமும், நகர்புற நடுத்தர வர்க்கத்தின் முணுமுணுப்புகளும் விலக்கப்பட்டு அடித்தள மக்கள் மொழியும் தொன்ம, வழக்காறுகளும், குறிமப் பண்புகளோடு நவீன கவிதையில் விகசிக்கிறது. நவீனத்துவத்தில் மிகத் தீவிரமாக ஒலித்த தனிமனித பிரக்ஞை நவீனம் தாண்டிய கவிதைவெளியில் கூட்டுமனப் பிரக்ஞையாக முகிழ்க்கிறது. இந்த மீள்பரிணாமம் (Transformation) வாசிப்பின் ஊடே பிரதி கடந்து செல்கையில் நிகழ்கிறது.

    படைப்பாளியின் ஆதிக்கத்தை நிராகரிக்கும் வாசக மைய விமர்சனம் (Reader oriented criticism) பன்முகத் தன்மை கொண்ட விளக்கங்களுடன் பிரதியின் வாசிப்பில் வாசகனைத் தனது பங்காளியாக்கிக் கொள்கிறது. அதுமட்டுமல்ல, வாசிப்பின் சில கணங்களில் படைப்பாளிக்கு மாற்றாக வாசகனை ஆளுமை மிக்க பதிலியாக முன்வைக்கிறது. அதாவது நிரந்தரமான ஆளுமையாக, அதீதமான அர்த்தத்தின் பிறப்பிடமாக வாசகனை நிலைநாட்டுகிறது.

    “வால்டர் ஜே.ஸ்லாடோஃப், With Respect to Readers என்ற நூலில் இவ்வாறு எழுதுகிறார் : வரலாற்றின் வெவ்வேறு காலங்களில் வாசகர்கள் எவ்வாறு பிரதியை வாசிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடும் கொண்டு வர முடியாது. பிரதியின் உருவம் சார்ந்த சிறப்புத் தன்மைகள், தம்மீதான எதிர்வினைகள் இவ்வாறு தான் இருக்கும் அல்லது விளக்கங்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு உத்திரவாதம் அளிக்க முடியாது. ஏனெனில் வாசகனுக்கு அதன் அர்த்தத்தை தன் போக்கில் கிரகித்துக் கொள்ள உரிமை உண்டு. ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னுடையதான இயல்பு, அனுபவம், பயிற்சி, முற்சார்புகள் மற்றும் மதிப்பு சார்ந்த முன்னுரிமைகள் உண்டு.” (கோபிசந்த நாரங்க்: ப.266) சரியாகச் சொன்னால் புரிதலின் செயல்பாடு பார்வையாளன் (இங்கு வாசகன்) பார்க்கிற கோணத்தைப் பொறுத்தது. பார்க்கும் கோணம் மாறுவதால் புரிதலின் அர்த்தமும் மாறுகிறது.

    கவிதை முதலில் தன் வடிவத்துடன் புற உலகோடு தொடர்பு கொள்கிறது. தனது வகைமை இத்தகையது என்ற வியாக்கியானத்தோடு தன்னை வெளிப்படுத்தத் தயாராகிறது. தன்னை நிறுவிக் கொள்கிறது. கவிஞன் அல்லது வாசகன் அல்லது உலகம் பற்றிய மற்ற பொருள்களுடனான உறவு பிறகு தான் ஏற்படும். “கவிதை பிற இலக்கிய வகைமைகளிலிருந்து தன்னை மையப்படுத்துவதில் அதன் வடிவம் மிக முக்கியமானதாக அமைகிறது. உரை நடையோடு ஒப்பு நோக்குகையில் கவிதை காலம் சார்ந்தும் இயல்பூக்கம் பெறுவதற்கு இதுவே காரணமாகிறது. காலத்திற்கொத்த வடிவம் கவிதையின் இருப்பை தக்கவைத்துக் கொள்ளவதில் காரணியாகிறது.” (ஆனந்த்: பக். 10)

    முடிவுரை

    கோட்பாடுகள் என்ற சொல்லாடலும் அதைச் சுற்றிய விவாத விமர்சனங்களும் அய்ரோப்பிய இலக்கியங்களின் பரிச்சயத்தாலே தான் தமிழகச் சூழலில் அறிமுகமானது. குறிப்பாக 80களுக்குப் பிறகு. நவீனத்துவத்தின் இயலாமைகளைக் கேள்விக்குள்ளாக்கும் பின் நவீனத்துவ சிந்தனைகள் இங்கு விவாதங்களுக்கு ஆளானதும் மேற்சொன்ன அறிமுகத்திற்குப் பிற்பாடான இலக்கியச் சூழலில்தான் எனலாம். இதன் வழி, கவிதை என்ற இலக்கிய வகைமை தனக்கு முந்தைய மரபிலிருந்தும் யாப்பு முறையிலிருந்தும் தன்னை விடுவித்துக் கொண்டது. இலக்கியங்கள் மேலார்ந்த வாழ்வியலைப் பேசுவன என்ற பொதுவான கருத்து நிலையிலிருந்து விலகி, இலக்கியம் ஒதுக்கி வைத்திருப்பவற்றைப் பேசுவதற்கான களத்தை பின்நவீனத்துவக் கோட்பாடுகள் ஏற்பாடு செய்தன. ஒழுங்கான இலக்கியத்திலிருந்தே ஒழுக்கமற்றவைகளைக் கண்டுபிடித்தது இவ்வகையான விமர்சனப் போக்குகள் என்பதே அதன் முரண்.

    தமிழ்கவிதைச் சூழலில், ‘சமூகவெளி’ பரவலான பொது அனுபவ வெளியைச் சார்ந்து இயங்கியது. நேரடிப் பிரகடனம், ஒற்றைத் தள புரிதல், வாழ்வியலின் புறப்பிரச்சனைப்பாடுகளை மையப்படுத்துதல், புனைவியல் சொல்லடுக்குகளை உற்பத்தி பண்ணுதல், நிறுவனம் சார் அரசின் ஒடுக்குமுறை மீது எதிர்ப்புணர்வை காட்டுதல் என்பதான வெவ்வேறு வகைப்பட்ட தளங்களில் இதன் போக்குகள் வெளிப்பட்டன. மற்றுமொரு முக்கியப்போக்காக வெளிப்பட்ட ‘தன் அனுபவவெளி’ பிறருக்கு தட்டுப்படாத தனித்த மாறுபட்ட படைப்புலகமாகத் தென்பட்டது. பிரபஞ்சம் சார்ந்த எல்லா உயிர்களிடத்தோடும், பொருட்களோடும் உறவாடும் மர்மத்தன்மை பொருந்திய நுண் அனுபவங்கள் படைப்பில் பிரதியாக்கம் செய்யப்பட்டன. குழந்தைகளின் உலகத்தோடும், காதலோடும், தாய்மையின் பரிதவிப்போடும், தொலை தூரமாகிவிட்ட உறவுகளின் சிதைவுகளோடும் உரையாடலை நிகழ்த்தின.

    காட்சிப்பதிவுகளின் ஊடே தன் உள்ளக்கிடக்கையை பதிவு செய்தல் தான் கவிதையின் இயல்பு. கவிதை செயல்படுகின்ற காட்சித் தளத்தில் நிறுத்தப்படுகின்ற காட்சிப் படிவங்கள், கவிதைப் பொருள் மீறின ஒன்றை அடையாளப்படுத்துகையில் வாசகனுக்குத் தகுந்தபடி மீள் பொருண்மைகள் பகிர்ந்து அளிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலகட்டத்திலும் எப்படிப்பட்ட சொல்லாடல்கள் உருவாக்கப்படுகின்றன என்பதே அச்சூழலின் படைப்புச் சக்திக்கான அடையாளமாக இருக்கிறது. கவிதையில் வாசகர் இயங்கிக்கொண்டிருக்கும் போது இது போன்ற பல மாறுபட்ட தளங்கள் வந்து கொண்டேயிருக்கும். உதாரணமாக வாசகர், ‘அலை’ என்ற சொல்லை தேர்வு செய்யும் போது குறிப்பானுக்கும் குறியீடுக்கும் வேறுபாடிருக்கும் என்பதன் அடிப்படையில் கவிதை இயங்கத் துவங்குகிறது.

    நவீனம் தாண்டிய கவிதை, படைப்பாளியின் சட்டகத்தை மீறி படைப்பாளி, படைப்பு, வாசகன் என முப்பரிமாண நிலைப்பாட்டில் உயிர்ப்புமிக்க மொழியின் செயல்பாடாக மாறுகிறது. ஒற்றை அர்த்தம் தாண்டி வாசகனின் அர்த்தப்படுத்தல்களில் மிக அதிக கவனத்தை குவிக்கிறது. நுகர்விய சந்தைப் பொருளாக மட்கிப்போகாமல், பயன்பாட்டுக்கு பின்பும், புதுப்புது உலகங்களைக் கொண்டு வந்து சேர்க்கிறது. பிரதியின் பின்னணியில் கவிதையின் மேற்பரப்புத்தளம் ஆழ்நிலைத்தளத்தோடு, இருதள இயக்கமாகவும், பிரதியின் சூழல் பின்னணியில் பல்வித அர்த்தப் பரிமாணங்களோடு பன்னொலிமப் பண்பினையும் சொல்வெளியில் படைக்கிறது. இங்கு ஒற்றைப் பிரதிகூட பல்விதக்குரல்கள் வெவ்வேறு அலகுகளின் ஊடிழைப்பனுவலாக மாறிவிடுகிறது. பிரதி கட்டமைக்கின்ற படைப்பாளி – வாசகன் இருவருக்குமிடையேயான பொருந்தாமையின் வெற்றிடம் (Vacuum of Dissonance) தான் ஒவ்வொரு பிரதியினுடையவும் / பனுவலினுடையவும் யதார்த்தமான அகமி எனலாம்.

    படைப்புகளின் வழி நின்று தோற்றம் கொள்ளுகின்ற சமீபகால ஆய்வுகள் காலங்காலமாக படைப்பு நோக்கில் செயல்படவில்லை. மாற்றாக அது படைப்பாளனை குருபிம்பமாக்கும் செயல்பாட்டின் ஊடுவிளைவாக இயங்குகிறது. இதிலிருந்து விலகி, பிரதியின் மீதான வாசிப்பும் அதன் அடுத்த கட்டமான திறனாய்வும் பிரதி உருவாக்குகின்ற யதார்த்த பிரதியினை அடையாளம் காட்ட முனைந்தால் மட்டுமே வாசக ரசனைச் சுழற்சி முழுமையடையும்.

    துணை நின்றவை :

    1. ஜமாலன், மொழியும் நிலமும்,
    2. க.மோகனரங்கன், சொல் பொருள் மௌனம், யுனைட்டெட் ரைட்டர்ஸ், சென்னை.
    3. கோபிசந்த நாரங்க்,அமைப்பு மைய வாதம் மற்றும் கீழைக்காவிய இயல், சாகித்ய அகாதமி, சென்னை.
    4. ஆனந்த், கவிதை எனும் வாள்வீச்சு, காலச்சுவடு, சென்னை.
    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (8)

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)
    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    வருடங்கள் வந்து மறைந்தன. மைக்கேல், சைமன் வீட்டிற்கு வந்து ஆறு வருடங்களாகி விட்டன. மைக்கேலின் வாழ்க்கையில் ஒரு மாற்றமும் இல்லை. அவசியத்திற்கு மாத்திரம் பேசினான். இந்த ஆறு வருடங்களில் இரண்டு முறைதான் புன்னகைத்திருந்தான். முதல் முறை மெட்ரீனா உணவு கொடுத்த போதும், இரண்டாவது செல்வந்தர் பூட்ஸ் தைக்க வந்த போதும்தான். சைமன் மைக்கேலிடம் எங்கிருந்து வந்தாயென்று கேட்பதேயில்லை. அவன் தன் வீட்டிலிருந்து போய் விடக்கூடாதே என்றுதான் கவலைப்பட்டான்.

    ஒரு நாள் காலை, என்றும் போல் மைக்கேலும் சைமனும் சன்னல் அருகிலிருந்து செருப்புத் தைத்துக் கொண்டிருந்தனர். சைமனின் பிள்ளைகளும் அருகேயிருந்து விளையாடிக் கொண்டிருந்தனர். தீடிரென்று ஒரு மகன், விளையாடுவதை நிறுத்தி விட்டு, மைக்கேலை அணுகி, “மாமா, கொஞ்சம் வெளியே பாருங்கள். ஒரு அம்மா இரண்டு சிறுமிகளைக் கூட்டிக் கொண்டு நம் வீட்டை நோக்கி வருகிறார்கள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு வருகிறாள்”, என்றான். உடனே மைக்கேல் செய்து கொண்டிருந்த வேலையை விட்டு விட்டுச் சன்னல் வழியாகத் தெருவைப் பார்த்தான். சைமனுக்கு ஒரே ஆச்சரியம். இத்தனை ஆண்டுகளும் மைக்கேல் தெருவைப் பார்த்ததில்லை. சைமனும் தெருவைப் பார்த்தான். ஒரு பெண்மணி இரண்டு சிறுமிகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு அவர்களின் வீட்டை நோக்கி வந்து கொண்டிருந்தாள். ஒரு சிறுமி நொண்டிக் கொண்டு நடந்ததைத் தவிர இரண்டு பேரும் பார்வைக்கு ஒன்று போலிருந்தனர். இரண்டு சிறுமிகளும் உரோமக் கோட்டுகளும் சால்வைகளும் அணிந்திருந்தனர்.

    அந்தப் பெண்மணி, இரண்டு சிறுமிகளோடு சைமனின் குடிசைக்குள் நுழைந்து, மேசை அருகில் உட்கார்ந்தாள். இரண்டு சிறுமிகளும் புதிய மனிதர்களைக் கண்டு பயந்து அந்தப் பெண்மணியின் முழங்கால்களின் அருகே நின்று கொண்டனர். சைமன் அந்தப் பெண்மணியை வாழ்த்தி விட்டு “நான் உங்களுக்கு என்ன உதவி செய்ய வேண்டும்?” என்று கேட்டான்.

    “இந்தச் சிறுமிகளுக்கு வசந்தக் காலத்திற்கு அணியச் சப்பாத்துகள் வேண்டும்” என்றாள்.

    “நாங்கள் இதுவரையிலும் இவ்வளவு சிறிய சப்பாத்துகள் தைத்ததில்லை. ஆனால் தைக்க முடியும். எனக்கு உதவி செய்யும் மைக்கேல் இந்தச் சிறுமிகளின் சப்பாத்துகளைத் தைப்பானென்று கூறி விட்டு மைக்கேலைத் திரும்பிப் பார்த்தான். மைக்கேல் அந்தச் சிறுமிகளையே பார்த்துக் கொண்டிருந்தான். இரண்டு சிறுமிகளும் அழகாகவும் ஆரோக்கியமாகவும் காணப்பட்டார்கள். ஆனால் அவன் அந்தச் சிறுமிகளைப் பார்த்துக் கொண்டிருந்த விதம் அவர்களை அவனுக்கு முன்பே தெரிந்திருக்கக் கூடும் போலிருந்தது. சைமனுக்குப் புதிராக இருந்தது. அவன் அதை வெளிக்காட்டாமல் அந்தப் பெண்மணியிடம் சிறுமிகளின் காலளவு எடுக்க வேண்டுமென்றான். அவள் ஊனமுற்ற சிறுமியை மடியில் இருத்தி, இவளுடைய கால்களின் அளவுகள் போதும். ஒரு அளவு ஊனமுற்ற காலுக்கும், மற்ற கால் அளவில் மூன்று சப்பாத்துகள் தைக்கலாம். ஏனென்றால் இவர்கள் இரட்டைக் குழந்தைகள். இரண்டு பேருடைய காலளவுகளும் ஒன்றுதான் என்றாள். சைமனும் காலளவுகளை எடுத்துக் கொண்டு “இந்த அழகிய சிறுமி பிறக்கும் போதே இப்படித்தான் பிறந்தாளா?”என்று கேட்டான்.

    “இல்லை, இவள் தாய் காலை நசுக்கி விட்டாள்”.

    இதுவரையிலும் அமைதியாக இருந்த மெட்ரீனா “அப்படியானால் இவர்கள் உன்னுடைய குழந்தைகளில்லையா?” என்று கேட்டாள்.

    “நான் இவர்களின் தாய் அல்ல, சொந்தமுமல்ல”, நான் இவர்களைத் தத்து
    எடுத்திருக்கிறேன்”.

    “அப்படியா, நீ இந்தக் குழந்தைகளிடம் இத்தனைப் பிரியம் வைத்திருக்கிறாயே!”, என்றாள் மெட்ரீனா.

    “எப்படி அன்பு வைக்காமல் இருக்க முடியும்? நான்தான் இவர்களுக்குப் பாலூட்டி வளர்த்தேன். எனக்கு ஒரு மகன் இருந்தான். அவன் இறந்து விட்டான். என் மகனை விட நான் இவர்களை நேசிக்கிறேன்”.

    “அப்படியானால் இவர்கள் யாருடைய குழந்தைகள்?”

    தொடரும்

    Share
  • நான்காமவத்தையும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு

    -பேரா. பீ.பெரியசாமி

    1:0. முன்னுரை

    நான்காமவத்தையாவன, பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல் ஈரமில் கூற்றம், ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் எனும் நான்குமென தொல்காப்பியர் கூறியுள்ளார். (தொல்.மெய்.16) இதனை விளக்க உரையாசிரியர்களின் உரையும் அகநானூற்றுப் பாடல்களும் குறித்து இப்பகுதி ஆரயவுள்ளது.

    1:1 பாராட்டெடுத்தலும் அகநானூறும்

    பாராட்டெடுத்தலாவது, தலைமகள் நின்றநிலையுங் கூறிய கூற்றையும் தனித்த வழியும் எடுத்துமொழிதல்”. (இளம். மெய்.16) எனவும், புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தலைமகனை இயற்பட நினைவுங் குறிப்பும்இது பாராட்டென்னாது எடுத்தலென்றதனால் அதனை உள்ளமெடுத்தன் மேற்கொள்க. இது தலைமகற்கும் ஒக்கும்.”( பேரா. மெய்.15) எனவும், புணர்ந்த பின் தலைமக்கள் ஒருவர் மற்றவரின் நல்லியல்பினை வியப்பதாகும்.”( பாரதி. மெய்.16) எனவும், புணர்ச்சி நிகழ்ந்த பின்னர்த் தனது ஆராக்காதலுணர்வு மாறாமை விளங்கத் தலைவியின் நலம் முதலியவற்றையும் தலைவியின் பண்பு முதலியவற்றைப் புனைந்து தனது மீளா வேட்கையைத் தலைவன் விதந்து கூறலின் பாராட்டல் என்னாது பாராட்டு எடுத்தல் என்றார். இஃது இருவர்க்கும் ஒக்குமாயினும், “காமத் திணையிற் கண்ணின்று வழுஉம் நாணு மடணும் பெண்மைய வாகலின் குறிப்பினும் இடத்தினும் அல்லது வேட்கை நெறிப்பட வாரா அவள்வயி னான” (கள.18) என்பது மரபு பற்றிய விதியாகலின் தலைவி பாராட்டுதல் அவள் உள்ளத்தே நிகழுமென அறிக. தலைவன் பாராட்டுதல் வெளிப்படையாக நிகழும் என்க.” (பாலசுந். மெய்.16)எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    பாராட்டெடுத்தலென்பது, இயற்கைப் புணர்ச்சி நடந்தபின் தலைவனைத் தலைவியும் தலைவியைத் தலைவனும் பாராட்டுதல் இயல்பு. தலைமக்களின் அழகு, அறிவு, செய்கை, இயல்பு என ஒருவருக்கொருவர் பாராட்டிக் கொள்ளுதல் அவர்களின் காதல் பரிமாற்றத்தில் ஒன்று. இது காதல் அன்பைப் புலப்படுத்துவது. இதனை விளக்க பாரதி குறுந்.3, 193, குறள்.1130 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம், குறுந்.2, 3 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை. 

    1:2 மடந்தபவுரைத்தலும் அகநானூறும்

    மடந்தபவுரைத்தலென்பது, பெண்டிரது இயல்பாகிய மடப்பங்கெடச் சில கூறுதல். அது தலைமகன் கூற்று நிகழும் வழியதற்கு மாற்றங் கொடுத்தலன்றித் தன் வேட்கை தோன்றக் கூறுஞ் சொல்” (இளம். மெய்.16) எனவும், விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமட நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிதளவு தோன்றுதலும்உரைத்த லென்றதனால் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்றுமொழி கூறவும் பெறுமென்பது கொள்க. அவை மேலை யோத்துக்களுட் கூறப்பட்டன. மடந்தபவுரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும்.” (பேரா. மெய்.16) எனவும், பேதைமை யொழியப் பேசுதல் முன் காமஞ்சாலாக் காலமெல்லாம் களவறியாத் தலைவி களவிற் றலைவனை மணந்தபின் முன்னைய குழவி நீர்மை கழிய தேர்ந்துரையாடத் தேறுதலியல்பு. அந்நிலைதான் மடம் தபுதல் (மடம்=கள்ளமற்ற பிள்ளைத் தன்மை. தபுதல் =கெடுதல், நீங்குதல்) அவ்வறிமடநிலையிற் றேர்த் துரையாடலே மடம்தப உரைத்தலெனக் குறிக்கப்பட்டது.” (பாரதி. மெய்.16) எனவும். உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    தலைவி புணர்ச்சிக்குமுன் இருந்த நிலையிலிருந்து மாறிப் பேச்சில் ஒரு முதிர்ச்சி வெளிப்படல்; அவளுடைய மடப்பம் கெடச் சிலவற்றை வெளிப்படுத்துதல். அதாவது தன்னுடைய புணர்ச்சி வேட்கையைத் தலைவனிடம் தன் மடங்கெடக் கூறுதலே மடந்தபவுரைத்தலாகும். இதனை விளக்க பாலசுந்தரம், ஐங்.20, 144 ஆகிய பாடல்களை எடுத்தாண்டுள்ளார். இதனை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடல் எதனையும் எடுத்தாளவில்லை. 

    1:3  ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலும் அகநானூறும்

    ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணலென்பது, ஊராருஞ் சேரியாருங் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அவர் ஆயிற்றென நாணுதல்.”( இளம். மெய்.16) எனவும், அங்ஙனம் அறிமடங்கெடச் சொற்பிறந்தவழி இன்றளவுந் தமராற் கூறப்படாத கடுஞ்சொல் உளவாமன்றே, அவற்றை முனியாது ஏற்றுக்கொண்டு புறத்தார்க்கு இது புலனாங்கொலென்று நாணுதலும்.” (பேரா. மெய்.16) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.

    களவுக்காலத்தின்போது தலைவியின் ஒழுக்கம் குறித்து ஊராரும் சேரியாரும் அருளில்லாத வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டு நாணமடையும் தலைவியின் நிலையினை எடுத்துக் கூறுவதே ‘ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல்’. இதனை விளக்க பாரதியும் பாலசுந்தரமும் குறுந்.97ஆம் பாடலையும்;  மேலும், பாலசுந்தரம்,

    கௌவை தூற்றும் வெவ்வாய்ச் சேரி
    அம்பல் மூதூர் அலர்நமக் கொழியச்
    சென்றனர் ஆயினும் செய்வினை யவர்க்கே
    வாய்க்கதில் வாழி தோழி…… ” (அகம்.347)

    எனும் அகப்பாடலை எடுத்தாண்டுள்ளார். இதில், நம் ஊரிலுள்ள கொடிய வாயுடைய பெண்களது பழிச்சொல்லும் நமக்கு உண்டாக்கச் செய்துவிட்டு அவர் நம்மைப் பிரிந்து சென்றார். இருப்பினும் அவர் மேற்கொண்ட செயல் கைகூடுக எனத் தலைவி தோழிக்குச் சொல்லினாள், என்பதில் இம்மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

    1:4 கொடுப்பவை கோடலும் அகநானூறும்

    கொடுப்பவை கோடலென்பது, கண்ணியாயினுந் தழையாயினும் பிறவாயினும் தலைமகன் கொடுத்தவற்றைக் கோடல். மனத்தினான் உரிமை பூண்டாலல்லது பிறன்பொருள் வாங்காமையின் இதுவுமோர் மெய்ப்பாடாக தப்பட்டது.”( இளம். மெய்.16)  எனவும், தலைமகனாற் கொடுக்கப்பட்ட தழையுங் கோதையுங் தாரும் கண்ணியுந் தோண் மாலையு முதலாயின கொண்டு கையுறை பாராட்டுதல்” (பேரா. மெய்.16) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர்.

    கொடுப்பவை கோடலென்பது தலைமகன் தலைமகள்பால் தனக்குள்ள அன்பினைப் காதலினைப் புலப்படுத்தும் நோக்கோடு தலைவிக்குக் கொடுக்கும் கண்ணி, தழை, தார், கோதை முதலியவற்றை மறுக்காமல் ஏற்றுக்கொள்ளுதல். இதனை விளக்க பாரதி, குறுந்.214ஆம் பாடலையும்; பாலசுந்தரம் நற்.80 ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடலை எடுத்தாளவில்லை. 

    1:5  கையுறை மறுதல்

    நான்காம் அவத்தையினை விளக்கப் பேராசிரியரும் குழந்தையும்,

    ஒருநாள் வந்து பலநாள் வருத்து
    நின்னையே போலுநின் றழையே யென்வயின்
    னிற்பா ராட்டியுஞ் சொற்கொள லின்றியும்
    யாயெதிர் கழறலிற் போலர் நாணியு
    மயல்கூர் மாதர்க்குத் துயர்மருந் தாயினு
    நோய்செய் தன்றாற் றானே
    நீதொடக் கரிதலி னோரிடத் தானே(இ.வி.ப.௫௩௩)

    இது கையுறை மறுத்தது. இதனுள் ‘நிற்பாராட்டி’ என்பது பாராட்டெடுத்தல்,  ‘சொற்கொளலின்றி’ என்பது மடந்தபவுரைத்தல்; என்னை? கொளுத்தக் கொள்ளாதுவிடின் அது மடனாகாமையின்.  ‘யாயெதிர் கழறலிற் பேரலற் நாணி’ என்பது ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல், ‘துயர்மருந்தாயினும்’  என்பது கொடுப்பவை கோடல். இத்தழை நின்கைப்பட்டவழிக் கரிந்து காட்டி நின்மெய்வெப்பங் கூறுதலின் இதனை அவள் காணின் ஆற்றாளாமெனப் பின்னொடுகாலத்து மறுத்தாளென்பது.”(பேரா. குழந்தை, மெய்.16)

    இதில், ஒருநாள் போலப் பலநாளும் வந்து வருத்தும், நின்னை யொக்கும் நினது தழையும் என்னிடத்து நின்னைப் பாராட்டியும் யான் சொல்லுஞ் சொல்லை ஏற்றுக் கொள்ளாதும் தாய் எதிரே கழறி யுரைத்தலினாலே பெரிய அலருக்கு நாணியும் மயக்கமடைகின்ற மாதினுக்கு அவள் துயரை நீக்கும் மருந்தாயினும்; ஓரிடத்து நீ தொடக்கரிதலினாலே (அவளுக்கு) நோயைச் செய்தற்கேதுவாயது. நோய் செய்தது அதனால் நின்றழையும் நின்னையொக்கும் என முடிக்க என்பதில் கையுறை மறுத்தல் வெளிப்படுள்ளது. 

    1:6. முடிவுரை

    நான்காமவத்தையாவன, பாராட்டெடுத்தல், மடந்தபவுரைத்தல், ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல், கொடுப்பவை கோடல் எனும் நான்குமாகும். இவற்றுள் ஈரமில் கூற்றம் ஏற்றலர் நாணல் என்பதனை விளக்க மட்டும் உரையாசிரியர்கள் அகநானூற்றுப்பாடலை எடுத்தாண்டுள்ளனர். இது சரியாகப் பொருத்தியாளப்பட்டது. ஏனையவற்றை விளக்க உரையாசிரியர்களால் அகநானூற்றுப் பாடல் எடுத்தாளப்படவில்லை.

    *****

    கட்டுரையாசிரியர்,
    தமிழ்த்துறைத்தலைவர்,
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம், ஆற்காடு

     

     

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . ( 262 )

    அன்பினியவர்களே!

    அன்பின் இனிய வணக்கங்கள். இதோ அடுத்த மடலுடன் உங்களுடன் உறவாட முனைகிறேன். நாம் விரும்பியோ விரும்பாமலோ எமது வாழ்க்கை ஓடிக் கொண்டேயிருக்கிறது. ஓடும் வேகத்தை எமது வசதிக்கு ஏற்ப குறைக்கவோ அன்றி கூட்டவோ எம்மால் முடிகிறதா? தானே தன்வழிக்கு ஓடிக் கொண்டிருக்கும் வாழ்வினை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது போன்ற ஒரு பிரமையில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். ஓடிக்கொண்டிருக்கும் ஆற்றுக்கு எதிர்த்திசையில் நடந்து அடுத்த கரைக்குப் போவது மிகவும் சிரமமானது அதேபோல ஆறு ஓடும் திசையிலே அதன் போக்கிலே போய் அடுத்தகரைக்குப் போவது இலகுவானதும் எம்மால் அனுபவித்து பயணிக்கக் கூடியதுமாகும். அதுபோல ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கையின் திசையில் அதற்கேற்ப எமது இலட்சியங்களை வகுத்துக் கொண்டு வாழ்வது எமது வாழ்க்கைப் பயணத்தை இலகுவாக்குகிறது.

    எனது இவ்வார மடல் எதற்காக இத்தகைய பாதையினூடு தனது பயணத்தை ஆரம்பிக்கிறது எனும் ஐயம் ஏற்படுவது இயற்கையே! இன்றைய வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் பலரும் தம் வாழ்வின் நிலைபற்றிச் சலித்துக் கொள்பவர்களாக இருக்கிறார்களேயன்றி வாழ்வினை எண்ணி மகிழ்வுடன் அதைப்பற்றிப் பிரஸ்தாபிப்பவர்கள் மிகவும் சொற்பமானவர்களே! எதிர்பார்ப்பவை எல்லாம் எதிர்பார்க்கும் வேளையில் எதிர்பார்க்கும் வகையில் நடந்து விட்டால் இன்றைய உலகு இத்தகைய ஒரு வளர்ச்சியைக் கண்டிருக்குமா என்பது சந்தேகமே! எத்தனையோ விஞ்ஞானிகளும், அவர்களின் கண்டுபிடிப்புகளும் எதிர்பாராத வகையிலேயே நிகழ்ந்திருக்கின்றன. பாடசாலையிலிருந்து நீக்கப்பட்ட ரிச்சார்ட் பிரான்சன் இன்று வெர்ஜின் எனப்படும் பல்துறை நிறுவனத்தின் முகவராகவும், ப்ரித்தானிய தொழிலதிபர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பதுவும் அவரால் திட்டமிட்டு நிறைவேற்றப்பட்டதொன்றல்ல. இன்றைய முன்னணி சப்ட்வெயர் கம்பெனியான மைக்ரோசாப்ட் பற்றி “Accidental Empire ஆக்ஸிடென்டல் எம்பயர் ” எனும் நூலே வெளிவந்துள்ளது.

    எமது கண்முன்னாலேயே இத்தகைய சலிப்பான வாழ்வாகத் தொடங்கிப் பின்னர் மாபெரும் வெற்றிக்கதைகளை உருவாக்கியவர்களை பார்த்துக் கொண்டிருக்கிறோம். இத்தகைய நிலையில்தான் இன்று நான் வாழும் இந்த இங்கிலாந்து நாட்டிலும் பலரின் பேச்சுக்களிலும் ஒரு சலிப்புணர்வு தட்டுப்படுகிறது. “ப்ரெக்ஸிட்” என்று பிரித்தானிய மக்களால் எடுக்கட்ட முடிவின் மீதான முன்னுக்குப்பின்னான, முரணான வாதங்கள் ஓய்ந்த பாடில்லாமல் ஊடகங்களில் அலைமோதிக் கொண்டிருப்பதே மக்களை இத்தகைய ஒரு சலிப்பினை நோக்கித் தள்ளிவிடுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேற வேண்டுமா எனும் சர்வஜன வாக்கெடுப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா நிலைத்திருக்க வேண்டும் என்றே வாக்களித்தவர்களில் நானும் ஒருவன். என் போன்றவர்களுக்கு அச்சர்வஜனவாக்கெடுப்பின் முடிவு ஒரு மாபெரும் ஏமாற்றமாக இருந்தது என்பது உண்மையே. இவ்வேமாற்றம் கொஞ்ச காலத்துக்கு ஒரு கசப்புணர்வாக இருந்ததும் உண்மையே! ஆனால் ஜனநாயக முறையில் மக்கள் எடுத்த பெரும்பான்மை முடிவுக்குக் கட்டுப்படுவதே ஒவ்வொரு நல்ல குடிமக்களின் கடமையாகும். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து 2019ஆம் ஆண்டு மே மாதம் வெளியேறுவது தவிர்க்கப்பட முடியாத உண்மை.

    இதை ஒரு பகுதியினருக்கு மற்றைய பகுதியினரின் மீதான வெற்றி என்று கூச்சலிடுவதையோ அன்றி நாம் தோற்று விட்டோம் எனும் வகையில் ஒதுங்கிக் கொள்வதையோ விடுத்து எமது நாடு தனது அடுத்த தலைமுறையின் எதிர்காலத்தை நோக்கி எடுக்க வேண்டிய ஒரு முக்கியமான முடிவினைச் சரியான வகையில் எடுக்க நாமனைவரும் எவ்விதம் எம்மாலான முழுப் பங்களிப்பையும் செய்வது எனும் வகையில் ஆக்கபூர்வமாகச் சிந்தித்துச் செயல்படுவதே இன்றைய காலகட்டத்தின் முக்கிய தேவையாகிறது. எடுக்கும் முடிவு சரியானதாக இருக்க எமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைக்க வேண்டியது எத்தனை முக்கியமோ, அரசு எதிர்நோக்கும் இடர்களை தீவிரப்படுத்துவதன் மூலம் இவ்வரசைக் கவிழ்த்து மீண்டும் ஒரு தேர்தலை உருவாக்கி நாம் பதவிக்கு வரவேண்டும் எனும் நோக்கில் எதிர்க்கட்சிகள் செயற்படுவது எமது நாட்டு முன்னேற்றத்துக்கு குந்தகம் விளைவிப்பதாகவே அமையும்.

    ஒரு தேர்தல் ஏற்பட்டு எதிர்க்கட்சியாக இருக்கும் லேபர் கட்சி ஆட்சியைக் கைப்பற்றுகிறது என்று ஒரு பேச்சுக்கு எடுத்துக் கொள்வோம். அதுவும் இந்த “ப்ரெக்ஸிட்” எனும் சிக்கலான தீர்வுக்கு விடைகாண வேண்டிய நிலையையே எதிர்நோக்கும். மக்களின் ஆணையை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயம் ஜனநாயக அரசியலை முன்னெடுக்கும் அனைத்துக் கட்சிகளினதும் கடமையாகும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுமுன் அதிர்ச்சிகரமான தாக்கத்தின் விளைவை எவ்வகையில் மிகவும் குறைந்த அளவுக்கு எதிர்கொள்ளலாம் என்தற்கான ஆலோசனைகளை ஆக்கபூர்வமாக வழங்குவதே இன்றைய எதிர்க்கட்சிகளின் புத்திசாலித்தனமான முன்னெடுப்புகளாக இருக்கும். இன்றும் இந்த இருபக்க வாதங்களிலும் மிகவும் தீவிரவாதப் போக்குகளைப் பிரஸ்தாபிக்கும் அரசியல்வாதிகளும், அரசியல் விமர்சகர்களும் இருக்கிறார்கள். இத்தகையோர் தமது சுயவிளம்பரத்துக்காகவும், தமது கொள்கைமீதான முரட்டு ஆதரவினாலும் சமுதாயத்தில் ஒன்றிணைந்து வாழும் பல்லின மக்களுக்கிடையிலான பேதங்களை விரிவாக்குகிறார்கள், விரிவான பேதங்களை மீண்டும் ஓர் இணைவான கோட்டிற்குக் கொண்டுவருவது எத்தனை சிரமம் என்பதனை இவர்களுக்கு வரலாறு எடுத்துக்காட்டும் துரதிர்ஷ்ட நிலை வந்து விடக்கூடாது.

    ஆற்று வெள்ளத்தின் திசைக்கு எதிர்த்திசையில் அல்லல்பட்டு அடுத்தகரையை நோக்கி நடக்கப் போகிறோமா? அன்றி வெள்ளத்தின் போக்கோடு போய் எமது பயணத்தை இலகுவாக்கப் போகிறோமா? என்பதைத் தீர்மானிக்க வேண்டியது துரதிர்ஷ்டவசமாக அரசியல்வாதிகள் கைகளிலே . . .

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

     

    Share
  • எங்கும் எதிலும்!

    -பெருவை பார்த்தசாரதி

    எந்திரசக்தி அறிந்திராத அந்தக் காலத்திலேயே
    …….எழும்பி நின்ற விண்ணைமுட்டும் கோபுரமுண்டு..!
    மந்திரசக்தியால் நல்மழையும் காற்றும் பெற்று
    …….மண்நீர்வளம் காத்ததாகவும் சரித்திரமும் உண்டு..!
    தந்திரசக்தி ஏதுமின்றியே விண்ணும் மண்ணும்
    …….தரும் கொடைக்குத்தான் காரணம் ஏதுமுண்டா..?
    இந்திரிய மைந்தையடக்கி வாழ்நாளை நீட்டிக்கும்
    …….எங்கும் எதிலும் ஓர்சக்தியிருப்பதை உணர்வீரா.!

    அண்டத்தில் அனைவரிடமும் மறைந் திருக்கும்
    …….அற்புத சக்தியறிய இறையருளும் வேண்டும்..!
    கண்டம்விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணையை
    …….கருத்தாகக் கணபதியை வழிபட் டெழச்செய்வர்.!
    கொண்டவற்றை வைத்துக் கொண்டு குவலயமே
    …….கொண்டாடும் சாதனை ஆக்குமோர் சக்திதான்.!
    உண்டதெலாம் இரைப்பையுனுள் செல்வது முதல்
    …….எங்கும் எதிலுமோர் உந்துசக்தி ஒளிந்திருக்கும்..!

    ஆயகலைகள் அறுபத்து நான்கையும் அறிகின்ற
    …….ஆவி பொருள் தேகமூன்றும் கொடுத்தவனவனே.!
    மாயசக்தியாய்த் தாயின் கருப்பையில் கருவாகும்
    …….மகத்தான உயிருக்கு உருக் கொடுப்பவனவனே.!
    நாயகனாய் நின்றிவ் வையத்து வாழுமுயிர்களின்
    …….நெஞ்சத்தினுள் நண்ணுகின்ற நின்னருள் வடிவே.!
    மாயவனாக மறைந்து மண்தலமும் விண்தலமும்
    …….எங்கும் எதிலும் நிறைகின்ற மறைப் பொருளே.!

    *****

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::25-02-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

     

     

    Share
  • ’’பெருமாள் புகழ்’’….!

     

    அடியேன் ஃபேவரைட் திருமிழிஸை பிரானின் ‘’திருச் சந்த விருத்தம்’’….கல்லூரி நாட்களில் எழுதியது ‘’பெருமாள் புகழ்’’…உங்கள் மேலான பார்வைக்கு….!

     

    பெருமாள் புகழ்
    ——————–

    பொன்மகள் அமர்ந்து பாத பங்கயம் பிடித்திட
    பொன்னிசூழ் அரங்கில் ஆதி சேடனார் படுக்கையில்
    தென்னிலங்கை வென்ற சோர்வில் கண்துயின்றவன் புகழ்
    பண் சிறக்க பாரதம் வடித்த வாரணம் சரண்….(1)

    கயல் ஆமை பன்றியோடு கோர சிம்ம வாமனம்
    புயல் பரசுராம ராம பலராமக் கண்ணனாய்
    அயக்ரீவ கல்கியென அவதரித்து அதர்மநாள்
    துயர் துடைக்கும் நாரணன் தூய தேசு பூரணன்….(2)

    பஞ்ச பூத சேர்க்கையில் பிரபஞ்சமாய் விரிந்தவன்
    செஞ்சரண் பணிந்த அன்பர் நெஞ்சகம் நிறைந்தவன்
    அஞ்சு புலன் ஆண்டவர்க்கு ஆத்மஞான தேசிகன்
    மஞ்சு வண்ண முழுமுதற்ப் பொருள் அனாதி கேசவன்….(3)

    சொல்லவன் சொலப்படும் சொல் அருத்தமானவன்
    அல்லுபகல் அந்திமாலை அர்த்த சாமமானவன்
    புல்லவன் கல்லவன் பல்லுயிர் புகுந்துவாழ்
    தொல்பொருள் தொடர்ச்சியாய் துலங்கு தாமோதரன்….(4)

    உண்ட அன்னமாகி அதை உதரமிருந்து உண்பவன்
    உண்டை செரித்து உபரி ஒதுக்கும் உந்திகனலவன்
    மண்டையேறி ஐம்புலன் ஆடுமாடு மேய்ப்பவன்
    அண்டவாணர் பண்டைமுனிகள் அடியுறைகொள் அச்சுதன்….(5)

    விழியிரெண்டின் ஜோதிகண்டு வெட்கும்சோம சூரியன்
    பொழியும்தேன் மலரோவென மதுகரம்மருள் பதயுகம்
    மொழிவாணியை மெளனமாக்கும் மதுரமான சொல்அதரம்
    தொழில்தவம் அரன்தழுவு எழில்வடிவ மோகனன்….(6)

    ஈவிரக்கமற்ற கம்சன் காவலுற்ற தாய்வசு
    தேவகிக்குடல் விளக்க ஆவாகனித்து ஓர்
    ரேவதியில் அட்டமிநாள் ராத்திரியில் உதித்தபின்
    ஆவலோடு ஆயர்பாடி அசோதைபால் புகுந்தவன்….(7)

    தன்னையே மறந்துநாளும் தவமியற்றும் நாரதாதி
    புண்ணியர்கள் பார்த்திராத ப்ரபஞ்சமாய தத்துவம்
    இன்னதென்ற உண்மையை இடைச்சி அன்னைமட்டும் காண
    மண்னையுண்ட செம்பவளச் சின்னவாய் திறந்தவன்….(8)

    நஞ்சு காளியன் சிரத்தில் பிஞ்சுகால் பதித்தவன்
    தஞ்சமென் றுஒடுங்க ஒயில் தாண்டவம் புரிந்தவன்
    வஞ்சபேய் முலைச்சி தந்த நஞ்சு பாலினோடவள்
    சஞ்சலங்கள் ஏதுமின்றி நெஞ்சுயிர் சுவைத்தவன்….(9)

    சூறைவாயு போலவந்த சகடரக்கன் அச்சிலே
    பாறையாய் அமர்ந்துஅவன் ஆரவாரம் அடக்கிவான்
    கூரைதாண்டி கொண்டுபோய் குப்பையாய் எறிந்தவன்
    நூறைஐந்து வென்றுஆள பாரதம் வகுத்தவன்….(10)

    அங்கைநான்கில் ஆழிசங்கு அபயவரம் மாரில்பார்
    நங்கையும் நறுந்துழாய் நலிந்தநாதர் செங்கண்மால்
    இங்குளான் என்றுஈன் றதையிகழ் இரண்யன்முன்
    அங்குஉள்ள தூண்பிளந்து சிங்கமாய் குதித்தவன்….(11)

    அங்கைநான்கில் ஆழிசங்கு அபயவரம் மாரில்பார்
    நங்கையும் நறுந்துழாய் நலிந்தநாதர் செங்கண்மால்
    இங்குளான் என்றஈன் றதைஇகழ் இரண்யன்முன்
    அங்குஉள்ள தூண்பிளந்து சிங்கமாய் குதித்தவன்….(11)

    பரந்தமார் தனில்துழாய் பூவிருந்த கோமளை
    சிரங்கள்நான்கு கொண்டஅயன் சிவந்தநாபி தாமரை
    இருந்தவாறு பாற்கடல் அனந்தன்மேல் கிடந்துநீள்
    அருந்தவம் புரிந்திடும் நிரந்தரப் பரம்பொருள்….(12)

    இராம வென்றிறைஞ்சி வந்த இராக்கதன் விபீடணன்
    தராதரம் விசாரியாது அவர்க்கடைக் கலத்தையும்
    இராவணன் தொலைத்திலங்கை ஆட்சியும் அளித்தவன்
    அண்ட சராசரங்கள் ஆள்பவன்….(13)

    மூவடிக்கு மண்நயத்த மாணிக் குறளன்தனை
    தேவுஎன்று அறியாமல் ஆவலோடு தாரைவார்
    மாவலி விதிர்க்க மூ உலகளந்த விக்ரமன்
    சேவடி கோன் சென்னிவைத்து சிரஞ்சீவி ஆக்கினன்….(14)

    கரிராஜன் கஜேந்திரன் கால்கராம் வயப்பட
    ”அரிமுகுந்த அச்சுதா” அபயம்என்று பிளிறிட
    துரிதமாய்ப் பருந்திலே தடாகம் ஏகிகாத்தவன்
    பரிமுகத்து தேசிகன் பரிவில்தாய் நிகர்த்தவன்….(15)

    வேதம்நாலும் வேதியர் ஆகமங்கள் சாத்திரம்
    பூதமைந்தும் ஆதிசங் கரர்அமைத்த ஷண்மதம்
    தீதுகொல் தீர்த்தமேழும் தகவுசேர் யோகமெட்டும்
    ஓதுயாகம் ஒன்பதும் பாதம்கொள் பவித்திரன்….(16)

    போர்களம் புகமறுத்து பார்த்தனன்று வேர்த்ததும்
    தேர்தளம் அமர்ந்துதிவ்ய கீதைசொல்லி தேற்றிபின்
    ஆர்ப்பு பாஞ்சசைன்யம் ஊதிஅகைப்பு செய்தபாரதம்
    நேர்த்தியாய் நடத்திநல் தர்மம்வெல்ல வைத்தவன்….(17)

    திரிதராட்டினன் போல பெரிய பாட்டனார்களும்
    துரியோதனன் செயலை தூசனித்து விழிமூட
    அரிவை பாஞ்சாலி துகிலை உரித்த துச்சாதனன்
    சரியசோர்வில் சேலைபெய்து தையல்மானம் காத்தவன்….(18)

    துருவனுக்கு வானமும், துரோபதைக்கு மானமும்
    தருமனுக்கு ஆட்சியும், கர்ணனுக்கு காட்சியும்
    திருவை சுதாமனுக்கும் தோழமையை மாருதிக்கும்
    சிறுமைக்கும் பெருமைசேர கருமைகாயம் கொண்டமால்….(19)

    வனிதைபொன் மடந்தையும் வையகத்து மங்கையும்
    புனிததுயில் அணங்கையும் பரமபதம் கொண்டுவாழ்
    வினதைமகன் வாகனன் விண்ணளந்த வாமனன்
    மனிதஜென்மம் எடுத்து மனுதர்மம் நாட்டும்மாதவன்….(20)

    ஊழிதோறும் பாலனகி உலகனைத்தும் உண்டுஅலை
    ஆழிமேல் ஆலிருந்து ஏழ்பிறப்பு லோகசிருஷ்டி
    நாழிகைப் பொழுதிலே நினைப்பிலே படைப்பவன்
    ஆழிசங்கு ஏந்துகின்ற ஆழிவண்ண ஊழியன்….(21)

    சோவென்று இடிமின்னலோடு தேவேந்திர மாரிபெய்ய
    கோவர்த்தன குடைபிடித்து கோகுலஇடர் தீர்த்தவன்
    நாவனர்த்த சிசுபாலன் உவலைநகுதல் நூறுமீற
    கோவமுற்று அவன்சிரத்தை சீவதிகிரி விடுத்தவன்….(22)

    விருப்புடை உருப்பினிக் கரம்பிடித்து ஊர்தியில்,
    இருத்திவாயு வல்லைகொள்ள துரத்திவந்த தமையனார்
    உருப்பனை விரட்டிஊர் திருத்தலம் துவாரையில்
    வரித்தவள் கழுத்தினில் தெரியலிட்ட திண்புயன்….(23)

    கலநேமி வக்கிரன் கேசிகம்ச பவுண்டிரன்
    மாலிகன் கரன்முரன் மதுகைடப தேனுகன்
    கேலிசெய்த இரணியன் கோதைகள்வ ராவணன்
    காலனோடு கூடவைத்து ஞாலஇடர் தீர்த்தவன்….(24)

    கூடுகவிச் சேனையோடு கடல்கடந்து ராவணன்
    நாடிலங்கை யோடவனை நசித்தசோக வனத்தினில்
    வாடு சீதையோடு கூடி வான ஊர்தி வாயிலாய்
    ஆடுவாகை சூடிசீர் அயோத்திபுக்கு ரகுவரன்….(25)

    கேசவன் நாராயண மாதவன் குறள் இருடீ
    கேசவன் சீதரன் குறையிலா கோவிந்தன்
    வாசபத்ம நாபவிஷ்ணு விண்ணளந்த விக்கிரமன்
    பாசதா மோதரன் மாசிலா மதுசூதனன்….(26)

    தாதைவாக்கு மந்த்ரமென்ற தொன்மைசொல் தழைத்திட
    சீதையோ டிலக்குவன் சேரதண்ட காவனம்
    பாதம் நோகபுக்க மூலராம சந்த்ரமூர்த்தியே
    வேதம்வந்து எதிரொலிக்கும் வடவேங்கட கீர்த்தியே….(27)

    ஒருவனுக்கு ஒருத்தியென்ற நெறிதனைப் புகட்டினாய்
    திருமுகத்து ஜனகமகள் அரவணைத்திண் புயத்தினாய்
    கருநிறத்து அண்ணலே கவிமாருதி நண்பனே
    வருபவர்க்கு அன்பனே வடவேங்கட இன்பமே….(28)

    ஆசையோ டளித்தது அழுகலாய் இருப்பினும்
    கூசமின்றி அமுதமாய் கொள்ளல்தகவு சொல்லவே
    பாசமோடு சபரியுண்ட பழமிச்சம் உண்டவா
    வீசுதென்றல் தேசுபாடும் வடவேங்கட ஈசனே….(29)

    நிராயுதன் நசித்தல்போர் நீதியல்ல என்றுணர்த்த
    இராவணா இன்றுபோய் நாளைஇகல் வாஇயம்பு
    இராமனே இறைவனே இரவிகுலத் தோன்றலே
    முராரியே முகுந்தனே மலைவேங்கட மாலனே….(30)

    இரவிசோம சந்தியில் இடைகழி படிவாயிலில்
    நரசிங்க உருவினில் நின்றதூண் பிளந்துஅயில்
    கரநகமால் இரணியன் குடலுரித்து மாலையாய்
    உரமார் பகமணிந்து உம்பரிடர் தீர்த்தவா….(31)….கிரேசி மோகன்….!
    ———————————————————————-

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180301 – Holi Krishna -lr watercolour -24×32 cms

    ”மாலி குழலுற்ற, HOLY முகுந்தர்க்கு
    ஜாலி சகோதரிகள் சொம்பிலே -ஹோலிநீர்
    வண்ணத்தைக் கொட்டி விரஜமண்ணே கொண்டாட்டம்:
    கண்ணனுக் கேவண்ணம் காண்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180228 – Kamsa -fear – lr 24×32 cms (The krishna within) Krishna leela series

     

    பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
    மயமான கம்ஸ மனமே -அயலாம்
    இவைதவிர்த்து ஆழ இதயத்தில் கண்ணன்,
    சுவைசுகித்து வாழ சுகம்….கிரேசி மோகன்….!

    எல்லோர் நெஞ்சிலும் கண்ணன் உள்ளான்….குசேலர் நெஞ்சில் குபேரன் கண்ணன் பக்தி அவலுக்கு அளித்தார் செல்வம்….!
    ———————————————————————————————————————————————————————————————————————————————
    ’’கஞ்சனின் நெஞ்சில் குபேரனாய்க் குந்தினோய்
    அஞ்சலென்(று) அறிவித்தும் அச்சத்தால் -மஞ்செழில்
    வண்ணனை வாள்கொண்டு வெட்டும் வெகுளியே!(கோபிஷ்டா)
    கண்ணனை நெஞ்சால் கருது’’….

    Share