Blog

  • அந்நாளே திருநாள்!

    -பெருவை பார்த்தசாரதி

    எண்ணும் நல்மனத்தினுள் நற் சிந்தனையும்
    ……..எழுவது நின்று அழுக்காற்றால் சீர்கெட்டது..!
    உண்ணும் உணவில் கலப்படம் மிகுந்ததால்
    ……..உண்ட நம்முடலும் நோயால் கெட்டழிகிறது..!
    கொண்ட வாழ்வில் பேராசையால் குறிதவறிய
    ……..குறிக்கோளை மீட்டெடுப்பது எந் நாளோ..?
    மண்ணியல் வளம் மறைந்ததெலாம் மீண்டும்
    ……..மாறும்நிலை நமக்கு..அந்நாளே திருநாளாம்..!

    பாயும் ஏவுகணை கொண்டு பயமுறுத்துவார்
    ……..பக்கத்து நாடாயிருந்தும் பகையே கொள்வார்..!
    யுதமேந்திய கப்பலைக் கடலில் நிறுத்துவார்
    ……..அண்டை நாடுகளைக் குலைநடுங்க வைப்பார்..!
    தாயும் குழந்தையும் தவித்திருக்கும் போதில்
    ……..தன்கை யெறிகுண்டை வீசிக்கலகம் செய்வார்..!
    வாயும்முகமும் துணியால் மூடிய கயவரின்தீய
    ……..வெண்ணம்..! மாறும் அந்நாளே திருநாளாம்..!

    நடமாடும் தெய்வமாம் ஞானியரும் தேவரும்
    ……..நாளும் தவமிருந்தாரன்று பொதுநலம் கருதி..!
    உடலாலும் உள்ளத்தாலும் நாட்டுநலன் மீது
    ……..உறுதிபூண்ட நல்லோரும் பின்னர் தோன்றினர்..!
    இடவசதி பொருள்வசதி இல்லாத ஏழைக்கு
    ……..ஈயும் செயலையே எந்நாளும் செய்தனரவர்..!
    கடவுளாக இச்செயலனைத்தும் தன் மனத்துளே
    ……..காணும் அன்பர்க்கு அந்நாளே திருநாளாம்..!

    *****
    நன்றி:: தினமணி கவிதைமணி:: 17-02-18
    நன்றி:: கூகிள் இமேஜ்

     

    Share
  • அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான மெய்ப்பாடுகளும் அகநானூறும் – உரையாசிரியர்களின் உரைகளை முன்வைத்து ஓர் ஆய்வு – 1

    -பீ.பெரியசாமி

    1.0 – முன்னுரை

    எண்வகை மெய்ப்பாடுகளையும் அதன் விரிகளையும் periyasamiமுதலில் கூறிய தொல்காப்பியர், அதனைத் தொடர்ந்து அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவான, உடைமை, இன்புறல், நடுவுநிலை, அருளல், தன்மை, அடக்கம், வரைதல், அன்பு, கைம்மிகல், நலிதல், சூழ்ச்சி, வாழ்த்தல், நாணுதல், துஞ்சல், அரற்று, கனவு, முனிதல், நினைதல், வெரூஉதல், மடிமை, கருதல், ஆராய்ச்சி, விரைவு, உயிர்ப்பு, கையாறு, இடுக்கண், பொச்சாப்பு, பொறாமை, வியர்த்தல், ஐயம், மிகை, நடுக்கம் எனும் மெய்ப்பாடுகளைக் கூறியுள்ளார். ( தொல். மெய்-12)   இவ்வியலில் தொல்காப்பியர் கூறியுள்ள இம்மெய்ப்பாடுகளும் அகநானூற்றுப் பாடல்களும் உரையாசிரியர்களின் வழிநின்று ஆராயப்படவுள்ளன.

    1:1. அகத்திற்கும் புறத்திற்குமுரிய நிலைகளன்கள்

    மேலே கூறப்பட்ட எண்வகை மெய்ப்பாடுகளும் அதனைத் தொடர்ந்து கூறப்படும் முப்பத்திரண்டும் அகத்திற்கும் புறத்திற்குமான நிலைக்களன்களாகும் இதனை, “இவை முப்பத்திரண்டும் மேற்கூறிய முப்பத்திரண்டும் போல அகத்திற்கும் புறத்திற்கும் பொதுவாகி நிகழும் மெய்ப்பாடெனக் கொள்க” (பேரா, மெய்.12) என பேராசிரியர் கூறியுள்ளார்.

    1:1:1. உடைமை

    உடைமையென்பது “யாதானு மொருபொருளை உடையனாயினால் வருதலாகும் மனநிகழ்ச்சி” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “உடைமையென்பது, செல்வம்; செல்வநுகர்ச்சியாயின் உவகைப் பொருளாம்; இஃது அன்னதன்றி நுகராதே அச்செல்வந்தன்னை நினைந்தின்புறுதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம்; அஃதாவது நிதிமேனின்ற மரம்போலச் செல்வமுடைமையான்வரும் மெய்வேறுபாடு” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “மேற்கூறிய துய்க்கப்படும் செல்வத்தின் வேறுபட்டுப் பிறவாக வரும் கிழமைப் பொருள்களாம். இஃது உவகை என்னும் மெய்ப்பாட்டிற்குப் பொருளாக அமையும்” (பாலசுந், மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர்.  உடைமை என்பது யாதானும் ஒரு பொருளுக்கு உரிமை கொண்டவழி மனத்தில் தோன்றும் மனவியல்பாகும். இதனை விளக்க இளம்பூரணரும், பாலசுந்தரரும், புறம்.72-ஆம் பாடலையும்; மேலும், பாலசுந்தரம் புறம்.188-ஆம் பாடலையும்;  தாசன், புறம்.2ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:2. இன்புறல்

    இன்புறலாவது, “நாட்டாராகிப் பிரிந்து வந்தோரைக் கண்டவழி வருவதோர் மன நிகழ்ச்சி போல்வது” (இளம்., மெய்.12) எனவும், “அவ்வுடைமையை நினையுந்தோறும் இடையிட்டுப் பிறக்கும் மனநிகழ்ச்சி” (பேரா., மெய்.12) எனவும், “அக்கிழமையுணர்வால் விளையுமகிழ்வாகும்.” (பாரதி, மெய்.12) எனவும், “தமது உடைமைகளையும் செயல்களையும் பற்றித் தாமே எண்ணி மகிழ்தல் இதுவும் உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்.மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர். இன்புறலென்பது தனக்கு உரிமையுடைய நபரையும் உடைமைகளையும் செயல்களையும் எண்ணி தாமே தமக்குள் மகிழும் மனவியல்பாகும். இதனை விளக்க இளம்பூரணர், நற்.182, 3  – ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம் குறள். 66, 228 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:3. நடுவுநிலைமை

    நடுவுநிலையாவது, “ஒருமருங்கு ஓடாது நிகழும் மனநிகழ்ச்சி” (இளம், தாசன், ராசா., மெய்.12) எனவும், “ஒன்பது சுவையுள் ஒன்றென நாடகநிலையுள் வேண்டப்படுஞ் சமநிலை; அஃதாவது “செஞ்சாந் தெறியினுஞ் செத்தினும் போழினு நெஞ்சோர்ந்தோடா நிலைமை” அது காம வெகுளி மயக்க நீங்கினோர் கண்ணே நிகழ்வது; இது சிறு வரவிற்றாகலான் அவற்றோடு கூறினான்.” (பேரா.குழந்தை., மெய்.12) எனவும், “தமரெனக் கோல் கோடாது பிறரெனக் குணங் கொல்லாது நிற்கும் நயனுடைமையாகிய தகவு. இதனை வடமொழி நாடக நூலார் கூறும் சாந்தம் என்னும் சுவையாகக் கருதி விளக்குவர் உரையாசிரியன்மார். சாந்தம் வேறு; நடுவுநிலை வேறு என அறிக.”( பாலசுந்., மெய்.12) எனவும், “காதலும் கடனும் மோதக்  கோடா மனச் செப்பம்; விழைவுக்கடிமையாகாது அறமறவாக் காதற் செவ்வி. நடுவுநிலை ஈண்டுச் சமநிலை எனும் சுவை சுட்டாது, தனை மறக்கும் கற்புக் காதலின் உணார்வையே  குறிக்கும்” (பாரதி., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். நடுவுநிலையென்பது எவற்றின் மீதும் பற்றில்லாத உணர்வுநிலை. இதனை சமநிலை என பேராசிரியரும் குழந்தையும் கூறுமிடத்து; பாலசுந்தரமும் பாரதியும் இதனை மறுத்துரைக்கின்றனர். இவர்களின் கருத்துப்படி, நடுவுநிலையென்பது அறநெறிதவறாமை. இதுவே சரியானது. ஏனெனில் நடுநிலைமை எனும் திருக்குறள் அதிகாரத்தை விளக்கும் பரிமேலழகர், “பகை, நொதுமல், நண்பு என்னும் மூன்று பகுதியினும் அறத்தின் வழுவாது ஒப்ப நிற்கும் நிலைமை.” (திருக்குறள், பரிமேலழகார்  உரை., ப.46) என்கிறார். ஆகவே, சமநிலையும், நடுவுநிலைமையும் வெற்வெறானவை.  இதனை விளக்க இளம்பூரணர், பாலசுந்தரம், தாசன் ஆகியோர் குறள்.118-ஐ எடுத்தாண்டுள்ளனர். மேலும், பாலசுந்தரம் புறம்.192-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளார். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:4. அருளல்

    அருளலென்பது “எல்லாவுயிர்க்கும் அளிசெய்தல்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “தவறுணரா அன்பின் பெருக்கம்.”( பேரா.குழந்தை, மெய்.12) எனவும், “எல்லா உயிர்களிடத்தும் அன்பின் முதிர்ச்சியாகிய கனிவுள்ளத்தாற் புரியும் செயல். இஃது உவகைக்குப் பொருளாக அமையும். வடநூலார் கூறும் கருணையை ஒப்புடை ஒக்கும். இரக்கம் வேறு; இவ்வருள் வேறு என அறிக.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். எல்லாவுயிர்களிடத்தும் அன்பு செலுத்துதலே அருள் எனப்படும். இது வடநூலார் கூறும் கருணையின் பாற்படும். இதனை விளக்க இளம்பூரணர், பேராசிரியர், தாசன் ஆகியோர் கலி.11-ஆம் பாடலையும்; பாலசுந்தரம் புறம்.141-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:5. தன்மை

    தன்மையென்பது, “சாதியியல்பு” (இளம், தாசன், இராசா, மெய்.12) எனவும், “பார்ப்பாராயிற் குந்திமிதித்துக் குறுநடைகொண்டு வந்து தோன்றலும், அரசராயின் எடுத்த கழுத்தொடும் அடுத்த மார்பொடும் நடந்து சேறலும், இடையராயிற் கோற்கையுங் கொடுமடியையும் விளித்த வீளையும் வெண்பல்லுமாகித் தோன்றலுமென்று இன்னோரன்ன வழக்கு நோக்கிக் கொள்க.” (பேரா., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொண்டுள்ளனர். ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்வழிப்படும் எனக்கொள்க. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், புறம்.13, 315, கலி.108 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.152, 154, முருகு.50-51, முருகு.126-137 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:6. அடக்கம்

    அடக்கமென்பது, “மனமொழிமெய்யினடங்குதல். அது பணிந்தமொழியும் தானை மடக்கலும் வாய்புதைத்தலும் போல்வன.” (இளம், பேரா, குழந்தை, தாசன், இராசா, மெய்.12) எனவும், “தன் தலைமை நிலை மறந்து காதலால் மனமொழி மெய்யாற் பணிதல். “ஞாட்பினு ணண்ணாரும் உட்குமென்பீடு ஒண்ணுதற் கோஒ உடைந்தது” எனவும், “நாணொடு நல்லாண்மை காதலுக்கு முன் பண்டுடையேன்” எனவும் வருவனவற்றால் அன்பு அடக்கம் தருதலறிக. இனி, அடக்கம் மறை பிறரறியாமற் காக்கும் நிறையைக் குறிக்குமெனினும் அமையும்.” (பாரதி., மெய்.12) எனவும், “செல்வமும் ஒளியும் மிகினும், இகலும் இகழ்ச்சியும் நேரினும் பொங்காது நிற்கும் பொறையும் உயர்ந்தோர் மாட்டுப் பணிந்தொழுகும் ஒழுக்கமுமாம். இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அடக்கமென்பது ஐம்புலன்களை அடக்குதலும், தன்னுடைய குறைகளைப் பிறர் அறியாதவாறு காத்தலும்; செல்வம் போன்றன மிகுந்தாலும் குறைந்தாலும் தன் நிலையிலிருந்து மாறாத இயல்பும்;  பெரியோரை மதித்து நடத்தலுமாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.124, 126, 127 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், புறம்.191, 216 ஆகியவற்றையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:7. வரைதல்

    வரைதலென்பது “காப்பன காத்து கடிவன கடிந்தொழுகும் ஒழுக்கம்; அவை: பார்ப்பாராயினும் முத்தீ வேட்டலும் புரவுங்கள்ளும் முதலாயின கடிதலுமென்று இன்னோரன்ன கொள்க வரைதலென்பது தொழிலாதலான் இது தன்மையெனப்படாது.” (பேரா., மெய்.12)  என பேராசிரியர் கூறியுள்ளார். இளம்பூரணர், குழந்தை, இராசா, பாலசுந்தரம், தாசன் ஆகியோரின் உரையும் இதன்வழிப்படும். மேலும் பாரதி, “நாணுவரை யிறந்துமுன் உவந்த பலவும் வெறுத்து விலக்கும் மனநிலை; இது காதலினெழுவது.” (பாரதி, மெய்.12) என கூறியுள்ளார். வரைதலென்பது நாணம் ஏற்படும்வரை மகிழ்ந்த பலவும் நாணம் வந்தவழி விலகும் மனநிலை எனவும்; காதலுக்குரியது எனவும்; செய்யத்தகுவனவும் செய்யதகாதனவும் உணர்ந்து ஒழுக்கத்தோடு வாழும் நிலையெனவும் இருவேறு கருத்துக்களை முன் வைக்கின்றனர் உரையாசிரியர்கள். இவற்றுள், வரைவு என்பது திருமணத்தை உணார்த்துவது எனவே வரைதலென்பது காதலுக்குரிய ஒழுக்கமாகக் கொள்வதே பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், திரிகடுகம்.29-ஆம் பாடலை எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:8. அன்பு

    அன்பென்பது, “பயின்றார் மாட்டுச் செல்லுங் காதல்” (இளம், தாசன், இராசா, மெய்.12) எனவும், “அருட்கு முதலாகி மனத்தினிகழு நேயம்; அஃதுடையார்க்குப் பிறர் கட்டுன்பங் கண்டவழிக் கண்ணீர் விழுமாகலின் அவ்வருளானே அன்புடைமை விளங்குமென்பது. இவையெல்லாந் தத்த மனத்தினிகழ்ச்சியை வெளிப்படுவனவாகலின் மெய்ப்பாடெனப்பட்டன. இனி வருகின்றவற்றிற்கும் இஃதொக்கும்.” (பேரா, பாரதி, குழந்தை, மெய்.12) எனவும், “தொடார்புடையார் மாட்டும், நட்டார் மாட்டும் தம் விருப்புடைய பொருள்கள் மாட்டும் செலுத்தும் கைம்மாறு கருதாத நேயம் இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அன்பென்பது தான் அறிந்தவர்களிடமும், உறவுகளிடமும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் தன்னிடம் வெளிப்படும் ஓர் மனிதநேய உணார்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.79-ஐயும்; பாலசுந்தரம் புறம்.91, குறுந்.181 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:9. கைம்மிகல்

    கைம்மிகலென்பது, “குற்றமாயினும் குணமாயினும் அளவில் மிகுதல்” (இளம், இராசா, தாசன், பாலசுந்., மெய்.12) எனவும், “ஒழுக்கக்கேடு; அது சாதித்தருமத்தினை நீங்கினமை தன்னுள்ள நிகழ்ச்சியானே பிறர் அறியுமாற்றால் ஒழுகுதல்.” (பேரா., குழந்தை, மெய்.12) எனவும், “அடங்காக் காதற்பெருக்கு.  “நோய் மவி நெஞ்சமொடு இணையல் தோழி” என்பதும், “ஆற்றார் காதல் நோயட இவளணி வாட” என்பதும் போல வருவன காண்க. “காதல் கைம்மிகல்” எனக் களவியலிலும் சூ.116 முன் இவ்வியலிலும் சூ-23 சுட்டுவதானுமுணர்க.” (பாரதி., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கைம்மிகலென்பது, அளவில் மிகுதல் அது காதலாயினும் கடமையாயினும் பொருந்தும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், மெய்.23, குறள்.868 ஆகியவற்றையும்; பாலசுந்தரம், புறம்.44, குறள்.567, குறள்.539 ஆகியபாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:10. நலிதல்

    நலிதல் என்பது, “பிறரை நெருக்குதல்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “பிறர்க்கின்னா செய்து நெருங்குதல்; அது தீவினைமாக்கட்கண் நிகழும். அவரைக் கண்டு அச்சம் எழுந்ததாயின் அஃது அச்சத்தின்கண் அடங்குமாகலின் அஃதன்று இஃதென்பது.” (பேரா., மெய்.12) எனவும், “இடுக்கணுறுதலும் உறுத்தலுமாம். இஃது தன்வினைக்கும் பிறவினைக்கும் பொதுவாய சொல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். நலிதலென்பது பிறரை துன்புறுத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், நெடுநல்.இறுதிவெண்பாவும், பாலசுந்தரம், புறம்.19, 276 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:11. சூழ்ச்சி

    சூழ்ச்சி என்பது, “எண்ணம்” (இளம், இராசா, தாசன், மெய்.12) எனவும், “சுழற்சி, சூழ்வருவானைச் சுழல்வருமென்பவாகலின்; அது வெளிப்படுவதோர் குறிப்பின் அவன்கட் டோன்றின் அதுவும் மெய்ப்பாடு; அஃதாவது மனத்தடுமாற்றம்.” (பேரா, குழந்தை, மெய்.12)எனவும் “நேராக் கூட்டம் நிகழவழியாராய்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “புறநிகழ்ச்சிகளைப் பற்றி ஆழ்ந்து எண்ணுதல். இஃது அச்சத்திற்குரிய பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். சூழ்ச்சி என்பது மனதில் உதிக்கும் ஆழ்ந்த சிந்தனை. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.445 -ஐயும்; பாலசுந்தரம், புறம்.246, குறள்.639 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:12. வாழ்த்தல்

    வாழ்த்தலென்பது, “பிறனை வாழ்த்துதல்” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “பிறரால் வாழ்த்தப்படுதல்” (பேரா, குழந்தை, மெய்.12) எனவும், “இது பிறவினையன்றோவெனின், ஒருவனை நீடுவாழ்க என்று வாழ்த்தல் பிறவினையாயினும் அவன் வாழ்விக்கப்படுதலின் அவன் அவ்வாறு கூறல் அமையுமென்பது” (பேரா., மெய்.12) எனவும், “காதலால் நெஞ்சையும் பிறவற்றையும் வாழ்த்துதல் “வாழி என்னெஞ்சே”, “நீ வாழிபொழுது”, “வாழிஅனிச்சமே”, “காதலை வாழிமதி”, “புண்கண்ணை வாழி மருண்மாலை” என வருவன காண்க”  (பாரதி, மெய்.12) எனவும், “உலகநலங் கருதி இறையையும் தெய்வ முதலியவற்றையும் போற்றுதல் இஃது உவகைக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். இவற்றுள் பிறனை வாழ்த்துதல் – பிறரால் வாழ்த்தப்படுதல் – தெய்வம் போற்றுதல் எனும் மூன்று வேறுபட்ட கருத்துக்கள் உரையாசிரியர்களிடையே காணப்படுகிறது. இவை மூன்றுமே வாழ்த்துதலின் பாற்படும். ஏனெனில், தான் பிறரை வாழ்த்துதலும், பிறர் தன்னை வாழ்த்தினாலும், தெய்வத்தை மக்கள் போற்றினாலும் அது வாழ்த்துதலின் பாற்படும். வாழ்த்து என்பதற்கு கழகத் தமிழராதி “ஆசி; துதி; மங்களம்” (க.த.அ.,ப.840) என பொருள் கூறியுள்ள வழி இதனை அறியலாம். இம்மெய்ப்பாட்டினை விளக்க இளம்பூரணர், ஐங்குறு.6-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், ஐங்குறு.1, சிலம்பு.கடவுள் வாழ்த்து பாடல்களையும்; தாசன் ஐங்குறு.1, புறம்.9 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:13. நாணல்

    நாணலென்பது, “தமக்குப் பழி வருவன செய்யாமை” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “நாணுள்ளம் பிறர்க்கு வெளிப்பட நிகழும் நிகழ்ச்சி” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “வெண்குதல், காமமும்; நாணும் உயிர்க்காவாத் தூங்கும் என்நோனா உடம்பினகத்து எனவும், “பல்லோர்கூற யாம் நாணுதுஞ்சிறிதே” எனவும், “யானோக்குங் காலை நிலனோக்கும்” எனவும், “கொண்க னுர்ந்த கொடிஞ்சி நெடுந்தேர்…………………… காணவந்த நாணப்பெயரும்” எனவும் வருவன காண்க.”( பாரதி., மெய்.12) எனவும், “சான்றோர் பழிப்பனவற்றை ஏலாமையும் புரியாமையுமாம். தன்புகழ் கேட்டவழி எய்தும் மென்மையும் இதன்கண் அடங்கும். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். நாணலென்பது பழிவருவன செய்யாமை. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1015, 1017 ஆகிய குறள்களையும்; பாலசுந்தரம், புறம்.65, 394, 43, கலி.119 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:14. துஞ்சல்

    துஞ்சலென்பது, “உறக்கம் உறங்காமை போலாமையின் மெய்ப்பாடாயிற்று.” (இளம்., மெய்.12) ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். துஞ்சலென்பது உறக்கம். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.6-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், புறம்.2, 159 – ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:15. அரற்று

    அரற்றென்பது, “உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு அதுவும் ஏனைச் சொல்லின் வேறுபடுதலின் அரற்றென ஒரு மெய்ப்பாடாயிற்று. முன் உறக்கம் வைத்தலானும் பின் கனவு வைத்தலானும் இப்பொருள் உரைக்கப்பட்டது.” (இளம்., இராசா, தாசன், மெய்.12) எனவும், “அழுகையன்றிப் பலவுஞ்சொல்லித் தன்குறை கூறுதல்; அது காடுகெழு செல்விக்கும் பேய்கூறும் அல்லல்போல வழக்கினுள்ளோர் கூறுவன.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “அறிவொடுபடாது வெருவுதலும் உறக்கத்தின்கண் வாய் சோர்தலுமாம். இது மருட்கைக்கும் உவகைக்கும் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12)  எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். அரற்று என்பது உறக்கத்தின்கண் வரும் வாய்ச்சோர்வு ஆகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், கலி.24ஆம் பாடலையும்; பாலசுந்தரம் புறம்.198 -ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை

    1:1:16. கனவு

    கனவென்பது, “நனவுபோலாமையின் மெய்ப்பாடாயிற்று” (இளம்., மெய்.12) எனவும், “வாய்வெருவுதல்; அதனானும் அவனுள்ளத்து நிகழ்கின்ற தொன்று உண்டென்டறறியப்படும்.”(பேரா, குழந்தை, தாசன், மெய்.12)  எனவும், “தூக்கத்திற்றோற்றுவது இதுவும் காதலில் கனிவது”(பாரதி., மெய்.12)  எனவும், “உறக்கத்தில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. இது பெரும்பாண்மை உவகைக்கும் சிறுபான்மை மருட்கைக்கும் ஏனையவற்றிற்கும் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். கனவென்பது உறக்கத்தின்போது நனவுபோல வெளிப்படுவதோர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1215-ஐயும்; பாரதி குறுந்.147-ஐயும்; பாலசுந்தரம்       கலி.49-ஆம் பாடல் மற்றும்,

    கடற்சிறு காக்கை காமர் பெடையொடு
    கோட்டுமீன் வழங்கும் வேட்டமடி பரப்பின்
    வெள்ளிறாக் கனவும் நள்ளென் யாமத்து” (அகம்-170)

    எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், தாழையின் தாழ்ந்த கிளையில் கடல்காக்கைத் தன் பெடையோடு பசிக்கு ஒன்றும் பெறாமல் சோர்வாய் அமர்ந்திருக்கும். அப்போது கடலில் பரதவர் வேட்டையாடாத இடத்தில் சுறாமீனைத் தான் பிடித்துத் தின்பதாகக் கனவுக் காணும் என தலைவி நண்டிடம் கூறியுள்ளாள். இதில் கனவு எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது. “காக்கை பெடையோடு யாமத்து இறாக் கனவும் என்பதால், தலைவி தலைவனுடன் கூடி, முன்பு, பெற்ற இன்பத்தை நினைத்து வருந்துகிறாள் என்னும் பொருள் குறிப்பாகப் புலப்படுகிறது.” (நா.மீனவன், அகநானூறு,(மணிமிடைபவளம்), ப.11) என நா.மீனவன் கூறியுள்ளார்.

    1:1:17. முனிதல்

    முனிதலென்பது, “வெறுத்தல்” (இளம், பேரா, குழந்தை, இராசா, தாசன், மெய்.12) எனவும், “அஃது அருளுஞ் சினமுமின்றி இடைநிகர்த்தாதல். ‘வாழ்க்கை முனிந்தா’ எனவும், “உறையுண் முனியுமவன் செல்லுமூரே” எனவுஞ் சொல்லுபவாகலின்” (பேரா., மெய்.12) எனவும், “உளம் கொள்ளாவழியும் மாறுபட்ட வழியும் எய்தும் வெறுப்பு. இஃது வெகுளிக்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரைகொள்வர். முனிதலென்பது ஒன்றனை வெறுத்தலாகும். இதனை விளக்க இளம்பூரணர், குறுந்.45-ஆம் பாடலையும், பேராசிரியர், புறம்.96-ஆம் பாடலையும்; பாலசுந்தரம், புறம்.208, 176 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:18. நினைத்தல்

    நினைத்தலென்பது, “கழிந்ததனை நினைத்தல் அது மறந்தாங்கு மறவாது பின்புந் தோன்றுதலின் மெய்ப்படாயிற்று” (இளம், தாசன், மெய்.12) எனவும், “விருப்புற்று நினைத்தல், நின்னை மிகவும், நினைத்தேனென்பது, வழக்காதலின்; அந்நினைவுள்ளம் பிறர்க்குப் புலனாதலின் மெய்ப்பாடாயிற்று”( பேரா., மெய்.12) எனவும், “ஒன்றனது பயனை விரும்பி அதனை இடைவிடாது எண்ணுதல் கழிந்ததனை மீள எண்ணுதலுமாம். இஃது உவகைக்கும் சிறுபான்மை அச்சத்திற்கும் பொருளாக அமையும்”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் உரை கொள்வர் ஏனைய உரையாசிரியர்களின் உரையும் இதன்பாற்படும். நினைத்தலென்பது நீங்கிய நினைவுகளை மீள நினைக்கும்போது ஏற்படும் உணர்வாகும். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1203-ஐயும்; பாரதி, குறுந்.102, 99, நற்.253 ஆகிய பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:19. வெரூஉதல்

    வெரூஉதலென்பது, “அச்சம் போல நீடுநில்லாது  கதுமெனத் தோன்றி மாய்வதோர் குறிப்பு. அதனைத் துணுக்கு என்றானென்பது.” (இளம்., தாசன், மெய்.12) எனவும், “விலங்கும் புள்ளும் போல வெருவி நிகழும் உள்ள நிகழ்ச்சி; அஃது அஞ்ச வேண்டாதன கண்டவழியும் கடிதிற் பிறந்து மாறுவதோர் வெறி.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “பிரிவும் ஊறும் அஞ்சுதல்”( பாரதி., மெய்.12) எனவும், “விரும்பத்தகாதன கண்டுழியும் நிகழ்வழியும் எய்தும் விதிர்ப்பு. இஃது அச்சத்திற்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். வெரூஉதல் என்பது பிரிவின் கண்ணும், துன்பத்தின் கண்ணும் அச்சம் போல தோன்றி திடிரென மறையும் ஓர் உணர்வு. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும்,           கலி.87-ஆம் பாடலையும்; பாரதி, குறுந்.117, 300, 217, நற்.253 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம்,

    காடுகவர் பெருந்தீ ஓடுவயின் ஓடலின்
    அதற்கெடுத் தலறிய சாத்தொடு ஓராங்கு
    மதர்புலி வெரீஇய மையல் வேழத்து
    இனந்தலை மயங்கிய நனந்தலைப்” (அகம்-39)

    எனும் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேற்கூறிய அகப்பாடலில், உன்னை மறக்கவில்லை என்பதற்கு ஒரு சான்று தருகிறேன் கேள். காட்டுவழியில் மூங்கில்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து தேய்வதால் மூங்கில் சொரியும் தீப்பொறிகள் அங்கு கீழே விழுந்துள்ள சறுகுகள் மறையும்படி தீப்பற்றி எழுந்து ஊகம் புல்லின் பகுதிகளையும் எரியில் உண்டாக்கிக் காற்று பரவும் இடமெல்லாம் பறந்து எரிந்தது. அதைக்கண்டு அலறி அழும் வணிகக் கூட்டம் பயந்து ஓடியது. அதோடு செருக்கை உடைய புலியைக் கண்டு யானைக் கூட்டம் பல இடங்களுக்கும் சென்றது. அந்நிலையில் கதிரவன் மறைந்தான் என தலைவன் தலைமகளிடம் கூறினான். இதில் வெரூஉதல் எனும் மெய்ப்பாடு வெளிப்பட்டுள்ளது.

    1:1:20. மடிமை

    மடிமையென்பது, “சோம்புதல்” (இளம், பேரா, குழந்தை, தாசன், மெய்.12) எனவும், “ஆற்றாமையின் அயர்வு” (பாரதி., மெய்.12) எனவும், “செய்தற்குரியவற்றைச் செய்யாது சோர்ந்திருத்தல். அஃதாவது முயற்சியின்றிக் கிடத்தல். இஃது இளிவரலுக்குப் பொருளாக அமையும்”( பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். மடிமையென்பது செய்ய வேண்டிய செயலை செய்யாது சோம்பி கிடத்தல். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறுந்.608-ஐயும்; பாரதி, குறுந்.396, 316 ஆகிய பாடல்களையும்;  பாலசுந்தரம்,

    அறந்தலைப் பிரியா தொழுகலும் சிறந்த
    கேளிர் கேடுபல ஊன்றலும் நாளும்
    வருந்தா உள்ளமொடு இருந்தோர்க்கில்”  ( அகம்.173)

    எனும் அகப் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். மேலே கூறப்பட்ட அகப்பாடலில், இல்வாழ்வை முறைப்படி நடத்துதல், சுற்றத்தாரின் துன்பம் நீக்குதல் ஆகிய இரண்டும் முயற்சி இன்றி ஊக்கமின்றி இருந்தவர்க்கு இல்லை என்று கருதி நம் தலைவர் பொருள் ஈட்டும் முயற்சியை மேற்கொண்டார் எனத் தோழி தலைமகளுக்குக் கூறியது. இதில் மடிமையினால் என்ன நேரும் என்பது வெளிப்பட்டுள்ளது.

    1:1:21. கருதல்

    கருதலென்பது, “குறிப்பு” (இளம், பாரதி, இராசா, தாசன்., மெய்.12) எனவும், “மறந்ததனை நினைத்தல்” (பேரா, குழந்தை., மெய்.12) எனவும், “ஒன்றைச்சுட்டி ஆழ்ந்து எண்ணுதல். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். கருதலென்பது, குறிப்பு  – ‘மனக்குறிப்பு’ ஆகும். மனதில் தோன்றும் ஆழ்ந்த சிந்தனையே மனக்குறிப்பு எனவே இவைகள் இங்கே பொருத்தமுடையன. ஆனால், பேராசிரியரும் குழந்தையும் ‘மறந்ததனை நினைத்தல்’ என பொருள் கொள்வர். ஏற்கனவே நினைத்தல் என்பதற்கு இவ்வாறு பாடம் கொண்டுள்ளதால் இங்கு இது பொருந்தாது. இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.1095-ஐயும்; பாரதி, குறள்.1097, குறுந்.298 ஆகிய பாடல்களையும்; பாலசுந்தரம், புறம்.236-ஆம் பாடலையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    1:1:22. ஆராய்ச்சி

    ஆராய்ச்சியென்பது, “ஒரு பொருளைக் குறித்த அதன் இயல்பு எத்தன்மைத்தென வாராய்தல்” (இளம், இராசா, தாசன்., மெய்.12) எனவும், “ஒரு பொருளை நன்று தீதென்று ஆராய்தல்.” (பேரா., குழந்தை., மெய்.12) எனவும், “காதலரன்பு கனி வழிசூழ்தல்” (பாரதி., மெய்.12) எனவும், “ஒன்றனது நலந்தீங்குகளை நடுவுநின்று நோக்கியறிதல். இது பெருமிதத்திற்குப் பொருளாக அமையும்.” (பாலசுந்., மெய்.12) எனவும் உரையாசிரியர்கள் பொருள் கொள்வர். ஆராய்ச்சி என்பது ஒரு செயலினால் பின்விளையும் நன்மை, தீமைகளை ஆராய்ந்து முடிவெடுத்தல். இதனை விளக்க இளம்பூரணரும் தாசனும், குறள்.73 ஆம் பாடலையும்; பாலசுந்தரம் நற்.276, கலி.84 ஆகியப் பாடல்களையும் எடுத்தாண்டுள்ளனர். இம்மெய்ப்பாட்டினை விளக்க உரையாசிரியர்கள் அகநானூற்றுப் பாடல் எதையும் எடுத்தாளவில்லை.

    (தொடரும்)

    *****

    கட்டுரையாளர்
    தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    விளாப்பாக்கம், ஆற்காடு

     

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (96)

    நிர்மலா ராகவன்

    கோபம் பொல்லாத வியாதியா?

    நலம்

    பிறருக்கு என்ன துன்பம் வந்தபோதிலும், அதைக் கண்டும் காணாமல் அசட்டை செய்வது பயந்தவர்களின் சுபாவம். இவர்கள், `நான் பிறர் வழிக்கே போகமாட்டேன்!’ என்று பெருமையாகப் பேசிக்கொள்வர்.

    `எதுக்கு வீண் வம்பு! நீ உண்டு, உன் வேலை உண்டுன்னு இரு!’ என்று பிறர்க்கும் அறிவுரை வழங்குவார்கள்.

    இன்னொரு சாரார் தர்மத்துக்குப் புறம்பான நடப்புகளைக் கண்டு பொங்கி எழுவார். இத்தகையவர்கள் பாராட்டும், புகழும் எதிர்பார்ப்பதில்லை. இவர்களுக்கு வன்முறை இல்லாத ஆக்ககரமான செய்கைதான் முக்கியம். மகாத்மா காந்தியும் நெல்சன் மண்டேலாவும் கத்தியையா தூக்கினார்கள்? இவர்களுடையது தார்மீக கோபம்.

    தார்மீக கோபமா, என்ன அது?

    பிறர் படும் அவதிக்கு, துயரத்திற்காக நாம் அடைவது.

    சாத்வீக குணம்தான் சிறந்தது என்று மதங்கள் போதிக்கலாம். ஆனால் மற்றவருக்கு அநீதி இழுக்கப்படும்போது வாளாவிருக்கலாமா? பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் நம்மை வைத்துப் பார்த்தால் அவர்களின் துன்பம் புரியும். `பிறர் என்ன சொல்வார்களோ!’ என்ற பயமோ, தயக்கமோ எழாது.

    “அவன் சொன்னதைக் கேட்டு, எனக்குச் சரியான கோபம்!”

    “எனக்குக் கெட்ட கோபம் வந்தது!” என்றெல்லாம் கேட்டிருக்கிறோம்.

    கோபத்தில் எது நல்லது, எது கெட்டது?

    கதை

    கடந்த ஜனவரி மாதம் பினாங்குத் தீவருகே இருக்கும் Nibong Tebal (நிபோங் தெபால்) என்ற ஊரில் நடந்த சம்பவம் மலேசிய நாட்டையே உலுக்கியது.

    பதினான்கு வயதான வசந்தப்ரியா என்ற அழகிய பெண் தன் கைத்தொலைபேசியைத் திருடிவிட்டாள் என்று ஆசிரியை ரெமாலா ராமன் பழி சுமத்தி, ஐந்து மணி நேரம் அம்மாணவியை ஓர் அறையில் வைத்துப் பூட்டியிருக்கிறாள். (அதற்கு இரு தினங்களுக்குமுன்தான் அந்த ஆசிரியையின் பிறந்த நாளுக்காக சகமாணவிகளிடமிருந்து பணம் வசூல் செய்து, விருந்து வைத்திருக்கிறாள் அம்மாணவி).

    தான் அப்பொருளை எடுக்கவில்லை என்று எழுதிவைத்துவிட்டு, தன் அறையில் தூக்கு மாட்டிக்கொண்டாள் சிறுமி. சில தினங்கள் கோமா நிலையில் இருந்தவள் நினைவு திரும்பாமலேயே இறந்துபோனாள்.

    சம்பந்தப்பட்ட ஆசிரியையோ, மேசையில் உட்கார்ந்து செய்யும் வேறு வேலைக்கு மாற்றப்பட்டாள். அவ்வளவுதான்.

    பதின்ம வயதினர் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்கள். அதுகூடப் புரியாது, பல மணி நேரம் அவளை வதைத்தது என்ன நியாயம்?

    அற்பப் பொருள் ஒன்றுக்காக ஓர் உயிர் போயிருப்பது அநியாயம். இந்த அநியாயத்தைக் கண்டு பொங்கியெழுவது தார்மீக கோபம். சமூகம் சிறப்பாக நடக்க அவசியமானதும்கூட.

    எது சரி, எது தவறு என்று பிரித்துப் பார்க்கும் திறமையை நாம் வளர்த்துக்கொண்டால் இது சாத்தியமாகும்.

    கோபம் எழுந்தால், ஒருவரது ரத்த அழுத்தம் அதிகரிக்கும். மன இறுக்கம், தலைவலி என்று பல்வித உடல் உபாதைகளும் ஏற்படலாம். நம் கோபம் தகுந்த நேரத்தில் வெளிப்பட வேண்டும். தகுந்த காரணத்துக்காக வெளிப்பட வேண்டும். அதற்குப் பலன் இருக்க வேண்டும். அப்போதுதான் கோபப்படுபவர் உடல் ரீதியில் பெரிதளவில் பாதிக்கப்படுவதில்லை.

    `எங்கேயோ, யாரோ, எப்படியோ இறந்துபோனால் நமக்கென்ன!’ என்று இருந்தால், இம்மாதிரியான கொடுமைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும்.

    பிறருக்கு விளைவிக்கப்படும் அநீதியால் கோபம் வந்தால், அது நாம் பிற உயிர்களிடம் செலுத்தும் அன்பைக் காட்டுகிறது. தார்மீக கோபம் உள்ளவர்கள் தமது கோபம் தணிந்தபின் செயலில் ஈடுபடுவதால் இங்கு வன்முறை கிடையாது.

    சிலருக்கு இத்தகைய கோபம் புரிவதில்லை.

    `எழுதினால் உங்களுக்கு என்ன கிடைக்கிறது?’ இப்படிக் கேட்பவர்கள் தம் குடும்பம் நன்றாக இருந்தால் போதும் என்று திருப்தி அடைபவர்கள். தமக்கு ஏதாவது சிறு துன்பம் நேர்ந்தாலும் இவர்களால் தாங்க முடியாது.

    `உங்கள் எழுத்தால் ஏதாவது மாறப்போகிறதா, என்ன?’ என்று அலட்சியத்துடன் கேட்பார் இன்னொரு சாரார்.

    கதை

    சில வருடங்களுக்குமுன், கணவரால் உடல் ரீதியில் வதைபட்ட பெண்கள் இருக்கும் ஒரு சமூகநல இல்லத்திற்குப் போனேன். இருபத்தேழு ஆண்டுகள் வதைபட்டும் பொறுமை காத்த குமுதா கூறினாள், “அவர் மாறிடுவார்னு நம்பிக்கையா இருந்தேங்க!” அவள் உடலில் பல எலும்புகள் நொறுங்கி இருந்தன.

    (`படித்தவர்கள் இப்படியெல்லாம் செய்வதில்லை!’ என்பவர்களுக்கு: குமுதாவின் கணவர் அரசாங்க நிறுவனம் ஒன்றில் இரண்டாவது இடம் வகித்த பெரிய அதிகாரி).

    அந்த இல்லத்தில் தங்கியிருந்த பல பெண்களுடன் பேசியதில், தம் அனுபவித்த இன்னல்களை, அதனால் எழுந்த துயரத்தை, வெளிப்படுத்தும் நிலையில் அவர்கள் இல்லை என்று புரிந்தது. சிலர் காலை விந்தி, விந்தி நடந்தார்கள். பற்களை இழந்தவர்கள் பலர். எல்லாம் கணவன்மார்களின் உபயம். (என் அதிர்ச்சியும், துயரமும் நீங்க இரு தினங்களாகின). அவர்கள் சார்பில், நான் அவர்களைப்பற்றி எழுதினேன்.

    நிறைய எழுதினேன், `கணவனே கண்கண்ட தெய்வம்’ என்று நம்பும் பெண்களின் மடமையைப்பற்றி. நமக்குச் சிறுவயதிலிருந்து போதிக்கப்பட்ட அகல்யா, அருந்ததி போன்ற `பத்தினித் தெய்வங்களின்’ தாக்கம் நம் பெண்களை எங்கு கொண்டு விட்டிருக்கிறதென்று. நான் எழுதியதை மேற்கோள் காட்டி, அதிர்ச்சியுடன் பல பெண்களும் தொடர்ந்து எழுதினார்கள்.

    இறுதியில், கணவன் மனைவியை அடித்தால் தண்டனை என்று சட்டம் விதிக்கப்பட்டது. கத்தியைவிட பேனாவால் நிறையவே சாதிக்க முடியும்.

    கோபத்திற்கும் சரியான இலக்கு இருத்தல் அவசியம்.

    சமீபத்தில், எவனோ ஒருவன் தற்கொலை செய்துகொண்ட பெண் படித்த பள்ளிக்கூடத்தில் பெரிய கற்களைத் தூக்கி எறிந்திருக்கிறான். அவ்வளவு ஆத்திரமாம்!

    இதனால் யாருக்கு என்ன பயன்?

    பிடிபட்டால், அவன்தானே சட்டத்தால் தண்டிக்கப்படுவான்?

    இம்மாதிரிதான் வெளிநாடுகளில் பணி புரிவோர் தம்மில் ஒருவருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், ஒன்று திரண்டு தம் எதிர்ப்பை வன்முறையால் வெளிப்படுத்துவார்கள். இன்னொரு முட்டாள்தனம்.

    கதை

    சிங்கப்பூரில் இருக்கும் அந்த இடத்திற்குப் பெயர் லிட்டில் இண்டியா. இந்தியர்களும், பங்களாதேஷிகளும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெருவாரியாக இங்கு காணப்படுவார்கள். அவர்கள் திரள பிற காரணங்கள்: கோயிலைத் தவிர, மதுபானக் கடைகளும் உண்டு.

    டிசம்பர் 2013-ல் அந்த இடம் வேண்டாத பெருமை பெற்றது. திடீரென்று ஒருவன் தெருவின் குறுக்கே வர, அவன்மேல் தனியார் பேருந்து ஏற, அவன் தலத்திலேயே மாண்டு போனான். (அவன் குடிபோதையில் இருந்தான் என்று அப்போது வெளியிட்டிருந்தார்கள்).

    அங்கிருந்த 400 தொழிலாளிகளுக்க ஆத்திரம். சிங்கப்பூரில் நாற்பது வருடங்களாகக் காணாத கலவரம் அவர்களால் மூண்டது. பத்து காவல்துறையினர் காயமடைந்தனர். காவல்துறை வாகனங்கள், பேருந்து, ஆம்புலன்ஸ் என்று எல்லாவற்றின்மேலும் கற்களை எறியப்பட பெருஞ்சேதம் உண்டாகியது.

    பிடிபட்டவர்களில் 22 பேருக்கு சிறைத்தண்டனை. 57 பேர் தாய்நாட்டுக்கே திருப்பி அனுப்பப்பட்டனர்.

    இந்த கோபத்தினால் அவர்கள் சாதித்தது என்ன? இந்திய கீழ்மட்டத் தொழிலாளிகளை ஏற்க ஒரு நாடே அஞ்சிவிட்டதுதான் கண்ட பலன்.

    `சிங்கப்பூரிலேதான் எங்களை விட மாட்டேங்கிறாங்களே!’ என்று அண்மையில் ஒரு தையல்காரர் என்னிடம் புலம்பினார். அங்கு கூடுதல் சம்பளம் கிடைத்திருக்கும். சிலரது அவசர நடத்தையால் பலரது கனவுகள் பாழாகிவிட்டன. தம் செயலால் எழக்கூடும் விளைவை கலகக்காரர்கள் எக்காலத்திலும் எண்ணிப் பார்ப்பதில்லை.

    கோபம் அடங்காமலே, ஆத்திரத்துடன் ஒருவர் செயல்பட்டால், அவரிடம்தான் ஏதோ கோளாறு. அவரது செயலால் எந்த பலனும் விளையப்போவதில்லை.

    கோபத்தை அறவே தணிப்பதென்பது இயலாத காரியம். ஆனால் கோபம் வரும்போது, ஆழ்ந்த மூச்சு, உலாவப்போதல், உடற்பயிற்சி போன்றவற்றால் அதை ஆறப்போடலாம். ஆக்ககரமாக என்ன செய்வது என்ற தெளிவு தானே பிறக்கும்.

    தொடரும்

    Share
  • ஒப்பீட்டு நோக்கில் சிலப்பதிகாரமும் கம்பராமாயணமும்(நிமித்தம், கனவுப் பகுதிகளை முன்வைத்து)

    -முனைவர் பா.மனோன்மணி

    தமிழின் முதல் காப்பியம் சிலப்பதிகாரம். மொழியாக்க இலக்கியத்தின் தலை சிறந்த காப்பியம் கம்பராமாயணம். இவ்விரு காப்பியங்களும் நிமித்தம், கனவு ஆகிய இரண்டையும் காப்பியக் கட்டமைப்புக் கூறுகளுள் சிலவாகக் கையாண்டுள்ளன. அவ்வகையில் இவை கையாளப்பட்டுள்ள திறத்தில் இவ்விரு காப்பியங்களும் எங்ஙனம் ஒன்றுபட்டும் வேறுபட்டும் நிற்கின்றன என்பதை ஒப்பீட்டு நோக்கில் இக்கட்டுரை ஆராய்கிறது. ‘தனக்கு முன்பு தோன்றிய காப்பியங்களின் அமைப்பு நெறிகளை மனத்தில் வாங்கித் தம் புலமைத்திறம் விளங்கக் காப்பிய அமைப்பைப் புதுக்கி அமைத்தவர் கம்பர்’ என்று அ. பாண்டுரங்கன் குறிப்பிடுவார். இவர்தம் கூற்றுக்கிணங்கக் கம்பன் தம் காப்பியத்தில் கனவு நிமித்தங்களைக் கையாளுமிடங்களில் சிலப்பதிகாரத்தையே துணையாகக் கொண்டுள்ளார் என்பதற்குப் பல அகச் சான்றுகள் கிடைக்கின்றன. அவற்றை முன்னிறுத்தி இக்கட்டுரை அமைகின்றது.

    கண் துடித்தல்

    பழந்தமிழரின் தலைமை நிமித்தக் குறியீடுகளுள் கண் துடித்தலும் ஒன்றாக இருந்துவந்துள்ளது. ‘கண் துடித்தல்’ என்பது நன்நிமித்தத்தையும் தீநிமித்தத்தையும் அறிவுறுத்துவதாகும். பொதுவாக இடக்கண் துடிப்பது பெண்ணுக்கு நன்நிமித்தமாகவும் ஆணுக்குத் தீநிமித்தமாகவும் சுட்டப்படுகின்றன. அதுபோல் வலக்கண் துடிப்பது ஆணுக்கு நன்நிமித்தத்தையும் பெண்ணுக்குத் தீநிமித்தத்தையும் உணர்த்துவதாகப் பழந்தமிழ்க் காலம் முதல் இன்று வரையிலும் நம்பப்பட்டு வருகின்றன. இவ்வகை நிமித்தக் குறியீடு இரு காப்பியங்களிலும் பயின்று வருகின்றன. இரண்டிலும் பெண்ணுக்கான நிலையிலேயே இவ்வகை நிமித்தம் பொருத்தப்பட்டுள்ளது.

    மாதவியை விட்டுக் கோவலன் பிரியப்போகிறான் என்பதை இளங்கோவடிகள் ‘இந்திர விழவு ஊரெடுத்த காதையில்’ கண்ணகிக்கு இடக்கண்ணும் மாதவிக்கு வலக்கண்ணும் துடிப்பது கொண்டு வருவதுரைக்கிறார்.

    உள்ளகம் நறுந்தாமு உறைப்ப மீது அழிந்து
    கள் உக நடுங்கும் கழுநீர் போலக்
    கண்ணகி கருங்கணும் மாதவி செங்கணும்
    உள்நிறை கரந்து அகத்து ஒளிர்த்து நீர் உகுத்தன
    எண்ணுமுறை இடத்தினும் வலத்தினும் துடித்தன
    விண்ணவர் கோமான் விழவுநாள் அகத்துஎன’ (சிலம்பு.இந்.விழ.ஊர் : 235-240)

    இங்குக் காப்பியத் தலைவியான கண்ணகிக்கு நன்மையும் கணிகையர் குல  மங்கையான மாதவிக்குத் தீமையும் நேரப்போவதைக் ‘கண் துடித்தல்’ எனும் நிமித்தத்தின் வழி இளங்கோவடிகள் படைத்துச் செல்கிறார். இது போன்று அதிகப் பாடல்களால் காப்பியம் புனைந்த கம்பரும்,

    புருவம் கண் நுதல் வலம் துடிக்கின்றில: வருவது ஓர்கிலேன்’

    (கம்.சுந்தர காண்டம்,பா-360) என்று அசோகவனத்தில் தனக்குத் துணையான திரிசடையிடம் இடக்கண் துடித்தமை பற்றிச் சீதை குறிப்பிடுகிறாள். இதனைத் தொடர்ந்து வரும் அடுத்த இரு பாடல்களும் கூடச் சீதை பல இடங்களில் கண் துடித்ததால் அடைந்த நன்மை தீமைகளைப் பற்றித் திரிசடையிடம் விவரிப்பதாகக் கம்பரால் படைக்கப்பட்டுள்ளன. அதாவது விசுவாமித்திரர் மிதிலைக்கு வந்த போது துடித்ததைப் போன்றே புருவம், தோள், கண் ஆகியவை இடப்பக்கம் துடிக்கின்றன. அயோத்தியை விட்டு வனம் புகுந்த நாளில் என் வலப்பக்கம் துடித்தது. இராவணன் தண்டகாரணியத்தில் வஞ்சனை செய்ய வந்த நாளிலும் எனக்கு வலப்பக்கமே துடித்தது. இப்பொழுது இடப்பக்கம் துடிக்கிறது எனவே இப்பொழுது இந்நிமித்தம் உணர்த்தும் பொருண்மையை உணர்ந்து ‘அஞ்சாமல் நடக்கப்போவது யாது என’க் கூறுவாயாக என்று திரிசடையிடம் சீதை வினவுகிறாள். இங்குச் சீதை வினவும் திறம் நன்நிமித்தத்தை உள்ளடக்கியே என்பது வெளிப்படை.

    மேற்சுட்டப்பட்ட இரு காப்பிங்களிலும் ‘கண் துடித்தல்’ என்னும் நிமித்தம் காப்பியத் தலைவிகளுக்கு விளையப்போகும் நன்மையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிமித்தம் சுட்டும் முறையால் இவ்விரு காப்பியங்களும் ஒன்றுபடுகின்றன. அதே நிலையில் சிலப்பதிகாரத்தில் கண் துடித்தமையை எடுத்துரைப்பது புலவர் கூற்றாகவும், கம்பராமாயணத்தில் பாத்திரத்தின் கூற்றாகவும் (சீதை கூற்று) பயின்றுவந்துக் ‘கூற்று’ ஆளுமை வகையான் வேறுபட்டு நிற்கின்றன.

    கண்ணுறங்காமை

    மலர் ஒன்றின் மீதான புனைக் கனவினை இளங்கோவடிகள் ‘கானல் வரி’யில் படைக்கிறார். கழிபரப்பில் கண்போல் மலர்ந்த நெய்தல் மலரின் மாலை நேர இயல்பான  குவிதலைத் தலைவி ஒருத்தி காண்கிறாள். அதன் மீது தலைவி தன் இரங்கலை ஏற்றியுரைக்கிறாள். நெய்தல் மலரின் இயல்பான குவிதலின்மீது உறக்கமும், உறக்கம் வந்தால் கனவு வரும் என்பதும் இதில் பதிவு செய்யப்படுகின்றன. இதில் கண் துயிலாததால் உறக்கம் கொள்ளாத தலைவி நெய்தல் மலரின் குவிதல் பண்பால் நீ காணும் கனவில் கானலில் வந்து செல்லும் தலைவனைக் ‘கண்டறிதியோ’ என்று அம்மலரிடம் இறைஞ்சி வினவுகிறாள். இதனை,

    புன்கண்கூர் மாலைப் புலம்பு மென் கண்ணே போல்
    துன்பம் உளவாய் துயிலப் பெறுதியால்
    இன்கள்வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள்
    வன்கணார் கானல் வரக் கண்ட றிதியோ!’  (சிலம்பு. கானல் வரி.7:33-36)

    என்ற அடிகள் எடுத்துரைக்கும். இதுபோன்றதொரு காட்சிப் பதிவினைக் கம்பனின் பாத்திரப்படைப்பிலும் காணமுடியும். இராமனைப் பிரிந்த சீதைக்கு உறக்கம் வாராமையால் அவள் காண வேண்டிய கனவைத் திரிசடை கண்டதாகக் கம்பர் படைக்கிறார். சீதைக்குத் துயில் வாராமையை,

    துயில் எனக் கண்கள் இமைத்தலும் மகிழ்த்தலும் துறந்தாள்:’ (கம்.சுந்தர காண்டம்,பா:332)

    எனும் அடி எடுத்துரைக்கும். அதோடு சீதை துயில் கொள்ளாத நிலையில் ‘உனக்குத் தோன்றாத கனா எனக்குத் தோன்றிற்று’ எனக் கூறுவதாய்த் திரிசடை தான் கண்ட கனவினை முன்னிறுத்துகிறாள். ஆக, தலைவனைப் பிரிந்த தலைவியர் பிரிவுச் சூழலில் கண்ணுறக்கம் கொள்ளார் என்பது இரு காப்பியங்களிலும் பொதுப்பட நிற்கும் கருத்தாகிறது. பெண்மையின் கற்பொழுக்கக் கூறுகளுள் ஒன்றாகத் தலைவனைப் பிரிந்த காலத்தே பெண்கள் கண்ணுறக்கம் கொள்ளார்  என்பது இளங்கோவடிகள் நெய்தல் தலைவியின் மீதும் கம்பர் சீதையின் மீதும் ஏற்றியுரைத்துள்ளனர். இது பெண்மையின் கற்புருவாக்கம் என்ற அடிப்படையில் இருவரும் ஒன்றுபடும் தன்மையைக் காட்டுகிறது.

    கனவில் நம்பிக்கை

    இரு காப்பியங்களும் கனவு மீதான நம்பிக்கையைத் திடமாக வெளிப்படுத்துகின்றன. இதற்குச் சிலம்பின் கனவு நாயகி கண்ணகியும், கம்பரின் கனவு நாயகி திரிடையுமே சான்று. அதாவது, கண்ணகி ‘கனாத்திறம் உரைத்த காதை’யில் தான் கண்டதாகச் சுட்டிய கனாவினை, ‘கொலைக்களக் காதை’யில் நினைவு கூர்ந்து செயல்படுகிறாள். இதனை,

    என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா
    நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண்நீர்சோரா
    நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் கண் நீர் துடையாச்
    சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்’ (சிலம்பு.கொலைக்களக் காதை: 72-75) என்ற அடிகள் எடுத்துரைக்கும். இது போல், திரிசடையும் ‘காட்சிப் படலத்தில்’ தாம்  கண்டுரைத்த கனாவினை, ‘நிந்தனைப் படலத்தில்’ நினைவு கூர்ந்து ஆறுதல் மொழியுரைக்கிறாள்.

    இன்னோரன்ன வெய்திய காலத்திடை நின்றாள்
    முன்னே சொன்னேன் கண்ட  கனாவின் முடிவு, அம்மா!
    பின்னே,வாளா பேதுறு வீரேல், பிழை’ என்றாள்:’ (கம்.நிந்தனைப்படலம், பா:486)

    கண்ணகி, திரிசடை இருவரும் நினைவு கூர்ந்து செயல்படல், மாறா நம்பிக்கையினர் என்ற தன்மையில் ஒத்த பண்புடையராய்ப் படைக்கப்பட்டுள்ளமை நோக்கற்குரியது.

    கனவின் நம்பகத் தன்மை

    கனவின் நம்பகத் தன்மை என்பது கனவு கண்டோரான கண்ணகி, திரிசடை ஆகியோரின் மொழி வழி முன்னிறுத்தப்பட்டுள்ளது. காட்சிப்படலத்தில், 

    பயில் வன பழுதல்: பழுதுஇ நாடு என,
    வெயிலினும் மெய்யென உரைத்தல் மேயினாள்’ (கம்.சுந்தர.கா.பா:367)

    என்று கூறித் திரிசடை கனவுக் காட்சிகளை எடுத்துரைக்கத் தொடங்குவதாகக் கம்பர் படைக்கிறார். இது திரிடை, கனவின் மீது கொண்டிருந்த நம்பிக்கையைப் புலப்படுத்தும் சொல்லாடலாக அமைகிறது. அதாவது ”குற்றங்கள் மலிந்துள்ள இந்நாட்டில் கனா முதலிய தோற்றங்கள் பழுதுபடுதல் இல்லை (நன்கு பலிக்கும்)’ என்று சொல்லி, சூரியனைக் காட்டிலும் தவறாதனவாகிய சொற்களைச் சொல்லத் தொடங்கினாள்’ என்று கனவின் மீதான நம்பிக்கையை முன்வைத்தே திரிசடை கனவினை விவரிக்கத் தொடங்கினாள் என்பது கம்பர் படைப்பு.

    கண்ணகியும் தன் கனவினைக் கூறத் தொடங்கும் முன் தேவந்தி, தன்னைப் போல் கணவனைப் பிரிந்து வாடும் இவளுக்கு வருத்தம் தீர்க்க ‘அறுகு சிறு பூளை நெல்லொடு தூஉய்ச் சென்று, பெறுக கணவனோடு’ (சிலம்பு. கனா.தி.உ: 43-44) என்று வாழ்த்து மொழி கூறுகின்றாள். உடனே கண்ணகி மறுமொழியாகப் ‘பெறுகேன் கடுக்கும் என் நெஞ்சம் கனவினால்’ (சிலம்பு.கனா.தி.உ:44-45) என்கிறாள். இதனால் ‘பெறுவேன் என்ற நம்பிக்கையில்லை’ காரணம் நான் கண்ட கனவு அப்படிப்பட்டது என்பதாகும். இவ்வாறு கூறுவதன் மூலம் கனவின் மீதான கண்ணகியின் நம்பிக்கை வழி இளங்கோவின் மனமும் திரிசடையின் வழி கம்பனின் மனமும் ஒன்றிணைவதைக் காணமுடிகிறது.

    உரையாடல் தன்மை

    கம்பராமாயணத்தில் தீக்கனா அறிகுறிகள் சீதை திரிசடை ஆகியோரிடையே மகிழ்ச்சியோடு பகர்ந்து கொள்ளப்படுகின்றன. சீதை திரிசடை கண்ட கனவினைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள்; கண்ட கனவைக் கண்டவிதம் சொல்லி முடித்த திரிசடை கனவு முடிவதற்கு முன் சீதை எழுப்பியதையும் சுட்டுகிறாள். உடனே,

    அன்னையே யதன் குறை காணென்றாயிழை
    இன்னமும் துயில்கென விருகை கூப்பினாள்’  (கம்.சுந்தர.கா: 382)

    என்று சீதையைக் கம்பன் படைத்துள்ளதன் திறம் திரிசடை கூறும் கனவின் மீது  கொண்ட நம்பிக்கையும் அவள் மீதான அன்பையும் புலப்படுத்துகிறது.

    சிலப்பதிகாரத்திலோ தேவந்தி உறுவது அறியமுடியாத பேதையாகிறாள். பரிகாரம் கூறுகிறாள். சோமகுண்டம் சூரியகுண்டத்தில் மூழ்குமாறு உரைக்கிறாள். அதற்கு ‘பீடு அன்று’ என்று கூறிக் கண்ணகி மறுக்கிறாள். இந்நிலையில் இவ்விருவருக்கிடையே கனவுப் பகிர்வு ஓர் அறியாமை நிலையினதாகவும் முரண்பட்ட வாதங்களுக்குள் கொண்டுவிடுவதாகவும் அமைகிறது. தேவந்தி தன் அறியாமை நிலையை வாழ்த்துக்காதையில் பின்வருமாறு சுட்டிப்புலம்புவது இதற்குச் சான்றாகிறது. 

    செய்தவ தில்லாதேன் தீக்கனாக் கேட்டநாள்
    எய்த வுணராதிருந்தேன் மற்றென்செய்தேன்’ (சிலம்பு.வாழ்.கா: 5-6)

    இங்குக் கம்பனின் கதைத் தலைவி சீதையும் இளங்கோவின் கதைத் தலைவி கண்ணகியும் கனவுக்குத் தரும் முக்கியத்துவத்தில் ஒன்றுபடுவது குறிப்பிடத்தக்கது. சீதை ‘துயின்று தொடர் உம், கனவை’ என்கிறாள். கண்ணகி ‘ பீடு அன்று’ என்று கூறி வருவதை எதிர் கொள்ளத் தயாராகிறாள்.

    தீக்கனா அறிகுறிகள்

    கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய சிலப்பதிகாரத்தில் கையாளப்பட்டுள்ள தீய அறிகுறிகள் பலவும் கி.பி.பன்னிரண்டாம் நூற்றாண்டில் தோன்றிய கம்பராமாயணத்திலும் காணக்கிடைக்கின்றன. அவை முறையே பின்வருமாறு,

    1. இடுதேள் இட்ட வார்த்தை.
    2. கோவலற்கு உற்றது ஒரு தீங்கு.
    3. காவலன் முன் கட்டுரைத்தல்.
    4. ஊர்க்குத் தீங்கு உண்டாதல்.

    என்பன கண்ணகி சுட்டும் தீக்கனா அறிகுறிகளாகும்.

    1. வெண் கொற்றக் குடையும் செங்கோலும் முறிந்து கீழே வீழல்.
    2. வாயிலில் இடைவிடாது அசையும் மணியின் ஓசை கேட்டல்.
    3. எட்டு திசைகளும் அதிரல்.
    4. இரவு நேரத்தில் வானவில் தோன்றல்.
    5. நண்பகலில் விண்மீன் எரி கொள்ளிகளாகக் கீழே விழல்.

    என்பன அரசமாதேவி சுட்டும் தீக்கனா அறிகுறிகளாகும்.

    1. ஒரு கீழ்மகனால் நடுநடுங்கத் துயர் அடைதல்.
    2. உடுத்த ஆடை பிறரால் கொள்ளப்படுதல்.
    3. கொம்பினையுடைய எருமைக்கடா மீது ஏறி செல்லுதல்.
    4. மலர் அம்புகளை வெற்று நிலத்தில் வீசி மன்மதன் செயலற்று ஏங்கல்.
    5. அழகு விளங்கும் போதி மாதவனிடத்தில் மணிமேகலையை மாதவி அளித்தல்.

    என்பன கோவலன் சுட்டும் தீக்கனா அறிகுறிகளாகும். மகளான மணிமேகலையைப் புத்ததேவனுக்கு அளித்தல் என்பது துறவியாக்கல் என்ற மனநிலையையே தந்தையாகிய  கோவலனுக்கு உணர்த்துவதால் வம்சவளர்ச்சிக்குத் தடையாகிறது. எனவே, அதுவும் இக்காப்பியத்தைப் பொறுத்தவரை தீநிமித்தமாகவே அமைகிறது. மேற்சுட்டப்பட்ட மூவரின் கனவுகளில் இருவரின் கனவுகள் ‘மேலுலகம் செல்லல்’ என்ற அடிப்படையில் வெளிப்படையான குறியீட்டுத் தன்மையில் நன்நிமித்தங்களாகப் பயின்று வந்துள்ளன. ‘கணவனோடு வானுலகம் செல்லல்’ என்பது கண்ணகி கனவில் வந்த நன்நிமித்தமாகவும் ‘பற்றற்றோர் பெறும் பேற்றினைப் பெற்றோம்’ என்பது கோவலன் கனவில் வந்த நன்நிமித்தமாகவும் அமைகின்றன. பெரும்பான்மை சிலப்பதிகாரத்தில் பயின்றுவந்த கனவுக் குறியீடுகள் தீ நிமித்தங்கள் பற்றியவை என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இதுபோல் கம்பராமாயணத்தில் இடம்பெற்றுள்ள பெரும்பான்மைக் குறியீடுகள் தீநிமித்தம் பற்றியவைகளேயாகும். அவை பின்வருமாறு:

    1. (இராவணன்) தன் பத்து தலைகளிலும் எண்ணெய் தேய்த்தல்.
    2. கழுதைகள் பேய்கள் பூட்டப்பட்ட தேரில் (இராவணன்) செல்லல்
    3. சிவந்த ஆடை உடுத்தல்.
    4. தென் திசை நோக்கிச் செல்லல்.;
    5. (இராவணன்) வளர்க்கும் ஓமத்தீகள் அவிதல்.
    6. மாளிகைகள் வானத்திலிருந்து விழுந்து பேரிடியால் இடியுண்டாதல்.
    7. இராவணனின் பிள்ளைகள், சுற்றத்தார், அரக்கர் கூட்டத்தினர் அவன் சென்ற தென்திசையிலே செல்லுதல். சென்றவர்கள் மீண்டு வராமை.
    8. பெண்யானைகளுக்கு மத நீர் ஒழுகப்பெறுதல்.
    9. அடிப்போர் இன்றியே முரச வாத்தியங்கள் முழங்குதல்.
    10. மேகக் கூட்டங்கள் இல்லாமலேயே இடிஇடித்தல்.
    11. வானின் நட்சத்திரக் கூட்டங்கள் யாவும் தானே உதிர்ந்து விழுதல்.
    12. இரவு நேரத்திலே சூரியன் பாதியாக விளங்கி மீதி பாதி எரிந்தது போல விளங்குதல்.
    13. அரக்க வீரர்களின் கற்பக மலர்மாலை நறுமணம் வீசுதற்குப் பதிலாகப் புலால் நாற்றம் வீசுதல்.
    14. இலங்கை மாநகரமும் அதனைச் சூழ்ந்துள்ள மதில்களும் நெருப்பால் பற்றி எரிதல்.
    15. விண்ணுலகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட கற்பகச் சோலைகள் கரிந்து தீதல்.
    16. மங்கல அடையாளமான பூரண கலசங்கள் வாய் விரிந்து உடைதல்.
    17. இருளானது ஒளியை மறைத்துக்கொண்டு ஒளிவீசாதவாறு மறைத்தல்.
    18. தோரணங்கள் முறிந்து துண்டுபடல்.
    19. யானைகளின் தந்தங்கள் ஒடிந்து விழுதல்.
    20. வேத அந்தணர்கள் நிறுவிய பூரண கும்பங்களின் புனித நீர் நாற்றமெடுத்து கள்ளாகப் பொங்கி வழிதல்.
    21. வானத்து சந்திரனைப் பிளந்து கொண்டு நட்சத்திரங்கள் வெளிப்படல்
    22. திரண்ட மேகங்கள் மழைக்குப் பதிலாகப் புண்ணிலிருந்து வழியும் குருதியைச் சொரிதல்.
    23. தண்டாயுதம், சக்கரம், வில் முதலானவை தமக்குள் தாமே சண்டையிட்டுக் கொள்ளல்.
    24. மகளிர் தம் மங்கல நாண் அறுப்பார் இன்றியே அற்று அவரவர் மார்பகங்களின் மேல் வீழ்தல்.
    25. மண்தோதரியின் கூந்தலின் பின்னல் அவிழ்ந்து பிரிந்து வீழ்தல்.
    26. மண்தோதரியின் மயிர்கள் அருகில் இருந்த பெரிய விளக்கின் ஒளியில் பற்றிச் சுறுசுறு என எரிதல்.’

    மேற்சுட்டப்பட்டவை யாவும் திரிசடை தான் கண்ட கனவாகச் சீதையிடம்  விவரித்துக் கூறிய தீக்கனா அறிகுறிகளாகும். நன்நிமித்தங்கள் சிலவற்றையும் கம்பன் படைத்துள்ளார். அவற்றுள் ஒன்று திருமகள் அரக்கர் அரண்மனையிலிருந்து வீடணன் அரண்மனைக்குச் செல்லல் என்பதாகும். இது கோவலன், கண்ணகி பற்றுள்ள இவ்வுலக வாழ்வை விடுத்துப் பற்றற்ற வானுலகு செல்வதைச் சுட்டும் அறிகுறியை ஒத்ததாகும். இவ்வாறு பல கூறுகளும் இவ்விரு காப்பியங்களுக்கிடையே ஒத்து நிற்கின்றன.

    சிலம்பில் கோவலன் எருமைக்கடா மீது ஏறிச் செல்கிறான். இராவணன் கழுதை, பேய்கள் பூட்டப்பட்ட தேரில் ஏறிச் செல்கிறான். சிலம்பில் உடுத்த ஆடை பிறரால் கொள்ளப்படுகிறது. கம்பராமாயணத்தில் சிவந்த ஆடை உடுத்தப்படுகிறது. திசை, விண்மீன், எரிமீன், செங்கோல் குறித்த செய்திகளும் இதுபோன்று பொது நிலையில் இருகாப்பியங்களிலும் தீநிமித்தக் குறிகளாய் இடம்பெறுகின்றன.

    சுருங்கக் கூறின், கண் துடித்தல், கண்ணுறங்காமை, கனவின் மீதான பாத்திரங்களின் நம்பிக்கை, கனவின் நம்பகத்தன்மை, நிமித்தங்களைக் கையாளுதல் போன்ற பல கூறுகளில் சிலப்பதிகாரத்தையும் கம்பராமாயணத்தையும் ஒப்பு நோக்கும் போது சிலம்பின் தாக்கம் கம்பனில் அதிகம் உள்ளதாகக் கருதப்படுகிறது. இத்தகைய ஒப்பீட்டுத் தன்மையை, சிலம்பின் தாக்கத்தை பிறதமிழ் காப்பியங்களில் காண்பது அரிதான ஒன்றாகும். ஆக, கம்பன் தம் காப்பியப் படைப்புப் பின்னணிக்கு நிமித்தம் கனவுகளைக் கையாளுமிடங்களில் சிலம்பினைத் துணையாகக் கொண்டிருக்க வாய்ப்புண்டு என்பது பெறப்படுகிறது.

    *****

    கட்டுரையாளர்
    இணைப் பேராசிரியர்,
    தாகூர் கலை மற்றும் அறிவியல்
    கல்லூரி,
    குரோம்பேட்டை, சென்னை.

     

     

    Share
  • எல்லோரும் விரும்பி நிற்போம்!

    -எம். ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    நரையொடு மூப்பு நமைவந்துசேரும்
    நாள் அதை எண்ணிடாமல்
    நாளுமே நல்லதை மனமதிலிருத்தியே
    நாமுமே வாழ்ந்து பார்ப்போம்

    தினமெலாம் புதிதென சிந்தனைபுகுத்தியே
    நினைவதில் கொண்டு வாழ்வோம்
    வருவது அனைத்தையும் மகிழ்வுடனேற்றுமே
    வாழ்ந்திட  எண்ணி  நிற்போம்!

    மற்றவர் வாழ்வினை மதிப்பிடும்வேலையை
    வாழ்க்கையில் தவிர்த்து நிற்போம்
    குற்றமே கண்டிடும் குணமதை நாளுமே
    வெட்டியே எறிந்து நிற்போம்

    பற்றுடன் நல்லதைப் பற்றியேநின்றிடும்
    பக்குவம் பெற்று  நிற்போம்
    உற்றவர் மற்றவர் உவப்புடனிருந்திட
    உறுதுணை ஆகி  நிற்போம்!

    வளமுடன் வாழ்ந்திட வகையினை நாளுமே
    மனதினில் இருத்தி வைப்போம்
    உளமதில் கருணையை ஊறிடச்செய்திட
    இறைவனை நினைந்து  நிற்போம்

    அளவிலா ஆசையை மனதிலிருந்துமே
    அகற்றிட முயன்று நிற்போம்
    இணையிலா வாழ்வினை என்றுமே வாழ்ந்திட
    எல்லோரும் விரும்பி நிற்போம்!

     

     

    Share
  • அகநானூற்றில் வரைவுக்கு வழிவகுக்கும் மெய்ப்பாடுகள்

    -பேரா.பீ. பெரியசாமி

    முன்னுரை

    களவுக் காலத்துத் தலைவனோடு ஒருங்கிணைந்து ஒழுகிய தலைவியின் உள்ளத்தில் வரைவு வேட்கை எழுகின்றது.  உள்ளத்து வரைவு வேட்கையை மெய்ப்பாடுகளாகத் தலைவனுக்கு உணர்த்துகின்றாள்.  வரைவு நீட்டிக்கும் தலைவனுக்கு எதிரான குறிப்புகளை உணர்த்தும் வண்ணம் மெய்ப்பாடுகளாக இவை நிகழும்.  இம்மெய்ப்பாடு தலைவனுக்குக் கடமை உணர்வை உணர்த்தும். இது ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்ட பின்பு ஒருவர் விருப்பத்தை இன்னொருவர் புரிந்து கொள்ளுதல் அவசியம் என்பதை சுட்டிக்காட்டுகின்றது.  இம்மெய்ப்பாடுகளைத் தலைவன் உணர்ந்து வரைவுக்கு முற்பட வேண்டும் என்பதால் இவை தலைவியிடம் நிகழ்கின்றன. இதனை, 

    முட்டுவயிற் கழறல் முனிவுமெய்ந் நிறுத்தல்
    அச்சத்தின்
    அகறல் அவன்புணர்வு மறுத்தல்
    தூதுமுனி வின்மை துஞ்சிச் சேர்தல்
    காதல் கைம்மிகல் கட்டுரை யின்மையென்
    றாயிறு நான்கே அழிவில் கூட்டம்.”(நூ.23) எனத் தொல்காப்பியர் கூறியுள்ளார்.

    முட்டுவயிற்கழறல்

    வரைவு நீட்டிப்பால் உண்டாகும் தடைகளையெல்லாம் வரைவு வேட்கையை உட்கொண்ட தலைவி, தலைவனிடம் கழறுகின்றாள். இதனை, “களவொழுக்கத்திற்கு முட்டுப்பாடுகள் வந்த பொழுது இவ்வாறு இருந்ததெனக் கழறியுரைத்தல் முட்டுவயிற்கழறல் என்னும் மெய்ப்பாடாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.185.) என்பர்.

    நொச்சி வேலித் தித்தன் உறந்தைக்
    கல்முதிர்
    புறங்காட்டு அன்ன,
    பல்முட் டின்றால் தோழி! நம் களவே.”   (அகம்.122(21-23))

    எனும் அகநானூற்று பாடலில் ‘நம் களவானது தித்தனின் வேலி நிறைந்த, கற்பாறைகள் நிறைந்த, காவல் மிகுந்த உறந்தை எனும் ஊரை அடைவதைப் போன்ற பல்வேறு இடையூறுகளைக் கொண்டது.’ எனுமிடத்தும், 20(11-16), 72(17-22), 112(1-8), 147(1-10), 288(17) எனும் பாடலடிகளும் முட்டுவயின்கழறல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

    முனிவு மெய்ந்நிறுத்தல்

    திருமணத்தில் நாட்டம் இல்லாமல் காலத்தை நீட்டிக்கும் தலைவனுக்குத் தலைவி தன் உள்ளத்து வெறுப்பை மெய்ப்பாட்டுக் குறிப்பால் உணர்த்துவது இம்மெய்ப்பாடாகும். இதனை உளவியலார், “பிற மனிதர் மேலுள்ள வெறுப்பைத் தன் முகமாய்த் திருப்பிக் கொள்ளல் என்பது தன்முகத் திருப்பம்.” (Elements of Psychopathology, p.87)  என்பர்.

    இன்னுயிர் கழிவது ஆயினும், நின்மகள்
    ஆய் மலர் உண்கண் பசலை,
    காம நோய் எனச் செப்பாதீமே.”(அகம்52(13-15))

    எனும் அகநானூற்று பாடலில் ‘என்னுடைய இனிய உயிரானது என்னை விட்டுப் பிரிவதாக இருந்தாலும், நும் மகளினது  அழகிய மலரினை ஒத்த  மையுண்ட கண்களில்  படர்ந்துள்ள பசலை நோய்க்கு  தலைவன் பால் கொண்ட காமநோயே காரணம் என விளக்க உரையாதே’ எனுமிடத்தும், 50(13-14) எனும் பாலடியும் முனிவு மெய்ந்நிறுத்தல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளன.

    அச்சத்தின் அகறல்

    தலைவனோடு தாம் கொண்டுள்ள களவொழுக்கம் ஊராருக்கும் ஏனையோருக்கும் தெரிந்து அலராகுமோ? அல்லது இற்செறிக்கப்படுவோமோ? தலைவன் வரும் வழியில் அவனுக்கு ஏதேனும் கொடிய விலங்குகளினாலும் பிறவற்றானும் தீங்கு நேருமோ எனும் அச்சத்தின் காரணமாகவும் தலைவனை விட்டு அகன்றிருத்தல் இம்மெய்ப்பாடாகும். இதனை, “தலைவனின் களவொழுக்கத்தால் தலைவி, ஊரார் அலருக்கு அஞ்சுவதாக் கூறலும், தலைவன் வரும் வழியில் ஏதங்களால் தீங்கு நேருமோ என அஞ்சுவதாகக் கூறலும் அச்சத்தின் அகறல் என்னும் மெய்ப்பாடாகும். தலைவனை வரைந்து கொள்ளத் தூண்டலே இம்மெய்ப்பாட்டின் நோக்கமும் பயனுமாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், பக்.187-188.) என்பர்.

     “உள்அவன் அறிதல் அஞ்சி உள் இல்,”(அகம்.32(11))

    எனும் அகநானூற்று பாடலில் ‘என் உள்ளத்து நிலையினை அவன் அறிந்துக் கொள்வதை நினைத்து யான் அஞ்சினேன்’ எனுமிடத்தும், 128(1-15), 118(6) எனும் பாலடிகளிலும் அச்சத்தின் அகறல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    அவன் புணர்வு மறுத்தல்

    தலைவனும் தலைவியும் தங்கள் களவொழுக்க இன்பத்தை அனுபவிக்கக் கருதி இரவிலும் பகலிலும் கூடுவர். இக்கூட்டத்தினை குறியிடம் என்பர். அவ்வாறு கூடி மகிழ்ந்த தலைவி, தோழியிடம் களவு நீட்டிப்பதைப் பற்றிக் கூறுவாள். அதனை உணர்ந்த தோழி இரவில் வருவானைப் பகலில் வாவென்றும், பகலில் வருவானை இரவில் வாவென்றும் அலைக்கழிப்பாள். சில நேரங்களில் இருகுறியும் மறுத்துரைத்தலும் உண்டு. இதற்குக் காரணம் அவன் விரைவில் தலைவியை வரைந்து கொள்ளல் வேண்டும் என்பதுவே ஆகும். இதனையே தொல்காப்பியர் ‘அவன் புணர்வு மறுத்தல்’ எனும் மெய்ப்பாடாக அமைத்துள்ளார். இது வரைவு வேட்கையின் வெளிப்பாடு.

    நல் வரை நாட! நீ வரின்
    மெல்லியல்
    ஓரும் தான் வாழலளே”   (அகம்.12(13-14))

    எனும் அகநானூற்று பாடலில் ‘நீ இரவுக் குறிக்கண் வருவாயாயின் மெல்லிய தன்மையுடைய இத்தலைவி உயிர் வாழமாட்டாள்’ எனுமிடத்தும், மேலும் 25(12-18), 47(16-19), 58(11-12), 88(7-15), 59(3-9), 92(1-13), 148(11-14), 160(16-19), 182(12-13), 194(16-19), 196(13), 240(9-15), 270(13-16), 308(7-16), 369(10-19) எனும் பாடலடிகளிலும் அவன் புணர்வு மறுத்தல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    தூது முனிவின்மை

    திருமணத்தின் மீதான வேட்கை அதிகரிக்கத் தலைவி தன் நிலையைத் தலைவனுக்கு எடுத்துரைக்க நினைந்து மேகம், நிலவு, பறவை, விலங்கு  போல்வனவற்றிடம் என்னை விரைந்து மணந்து கொள்ளுமாறு தலைவனிடம் கூறுங்கள் எனத் தூதுவிடுதல் தூது முனிவின்மை என்னும் மெய்ப்பாடாகும். இம்மெய்ப்பாட்டினை உளவியலார், “மனத்தில் அழுந்திக் கிடக்கும் சிக்கல்களை மறுபடியும் வெளிக்கொணர்ந்து அவற்றை மறுபடியும் நினைவின் மூலமாக அனுபவிக்கும்படி செய்துவிட்டால் அந்தச் சிக்கலினால் ஏற்படும் கோளாறுகள நீங்கிவிடுகின்றன.”; (அடிமனம்,ப.16.) என்றும், “துன்பம் மிக்க நேரங்களில் பேசினால் புரிந்துகொள்ள ஆகாத பொருள்களை விளிக்கவும் செய்கின்றனர். அஃறிணைப் பொருள்களிடமேனும் பேசி வெளிப்படுத்துதலால் உணர்ச்சியின் எழுச்சி அடங்குகின்றது. உள்ளத்தின் அழுத்தம் தளர்கிறது. உள்ளத்தின் செறிவைச் சொற்களில் கூறிச் செயல்படுத்தி விடுவதால் இத்தளர்ச்சி நேர்கின்றது.” (சங்க இலக்கியத்தில் உளவியல், ப.186.) என்றும் கூறுவர். இதனை வ.சுப. மாணிக்கம், “………. இன்ப வெள்ளத்தால் துன்பப் புயலால் நெஞ்சு அலையும்போது, அவற்றைப் பிறரிடம் பேசினால் ஆறுதல் உண்டாகும்.” (தமிழ்க்காதல், ப.53.)   என்பதாலே தலைவி தூதுவிடுகின்றாள் எனக் கூறியுள்ளார். இதனை,

     “தூதும் சென்றன தோளும் செற்றும்”  (அகம்.251.(1))

    எனும் அகநானூற்று பாடலில் ‘நாமும் தலைவர்பால் தூதுவர்களை அனுப்பியுள்ளோம்; செறிவாக அணியப் பெற்ற அணிகள் நெகிழ்ந்து வீழப்பெற்றுத் தலைவனைப் பற்றிய நினைவுத் துன்பத்தால் வருந்தி இருக்கும் நம் நிலையை அவர்களும் எடுத்துக் கூறுவார்கள்’ எனுமிடத்தும், 170(1-8), 244(11), 255(17-19), 333(17-22), 338(15-16) எனும் பாடலடிகளிலும் தூது முனிவின்மை எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    துஞ்சிச் சேர்தல்

    துஞ்சிச் சேர்தல் என்பது மனையகத்துப் பொய்த் துயிலோடு மடிந்து வைகுதல். அஃதாவது, வரைவு நீட்டுந் தலைவன் கூட்டம் மகிழாது தலைவி மனமாய்தல். வேண்டியவாறு  கூட்டம் நிகழப் பெறாமையின் தலைமகனோடு புலந்தாள் மடிந் தொன்றும் என்பதாகும். இதனை, “என்ன செய்வது என்று தெரியாத இயக்கமற்ற நிலையே சோர்வு ஆகும். தீவிரமான துன்பம் வளர்ந்து பாதிக்கப்பட்ட நிலையே உள்ளச் சோர்வு.” (A Study of Psychology, p.49.) என்பர் உளவியலார். மேலும், “வரைவு நீட்டித்து ஒழுகுந் தலைவன் வரவால் தலைவி மகிழாது மனமாழ்கித் தன் உள்ளத்து வருத்தத்தை வெளிப்படுத்துதல் துஞ்சிச் சேர்தல் என்னும் மெய்ப்பாடாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.194.) என்பர்.

     “துஞ்சு ஊர் யாமத்து முயங்கினள் பெயர் வோய்”  (அகம்.198(11))

    எனும் அகநானூற்று பாடலில் ‘ஊர் உறங்கும் நேரத்தில்  (நள்ளிரவில்) நம்மைத் தழுவி மகிழ்ந்து மீண்டு போயினள்’ எனுமிடத்தும், 26(4-5) எனும் பாடலடியிலும் துஞ்சிச் சேர்தல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    காதல் கைம்மிகல்

    தலைவி, தலைவனது வரைவு நீட்டிப்பால் காதல் மிகப் பெற்று உள்ளம் வருந்துவாள்.  தன் காதல் மிகுதியைக் கூறவும் செய்வாள்.  இதுவே காதல் கைம்மிகல் என்னும் மெய்ப்பாடாகும். இதனை, “வலிமை மிகுந்த பாலின உந்தானது (Sex Drive) குலைக்கப்படும் போது மனவெழுச்சி விரிப்புகள் தோன்றுகின்றன. சமூக அங்கீகரிப்புள்ள முறைகளில் இவைகளைச் செலுத்தப் போதுமான மாற்றுவழிகள் இல்லாத நிலையில், இவை ஆளுமையைப் பாதிக்கும்.” (இளையோர் உளவியல், தொகுதி -1, ப.76.) என்பர் உளவியலார். இதனை, மு.பொன்னுசாமி, “பிரிந்த தலைவன் தன்னைத் துறந்துவிட்டான் என்ற நிலையில் தோன்றுவனவே தலைவியின் காம மிக்க கழிபடர் கிளவிகள். இவற்றில் வரைவு நீட்டிப்பால் காதல் கைம்மிகப் பெற்ற தலைவியின் வருத்தம் இழையோடியிருக்கும். காதல் கையிகந்த நிலையில் வரைவு வேட்கையை உட்கொண்டு கூறவும் செய்வாள், கூறாமலே மெய்ப்படு குறிப்புகளால் உணர்த்தி ஒழுகவும் முற்படுவாள்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், பக்.194-195.) என்பர்.

     “நிறுத்த நில்லா நெஞ்சமொடு  நின்மாட்டு”   (அகம்.2(12))

    எனும் அகநானூற்று பாடலில் ‘இவளும் தடுத்து நிறுத்தவும் அவ்வளவில் நில்லாது ஓடும் நெஞ்சினை உடையவளாய் நின்னிடத்து இத்தகைய காதல் மிகுதியும் உடையவளாயினள்’ எனுமிடத்தும், 266(8-9),128(3-5;14-15), 135(14), 258(14-15), 273(13-14), 276(7-15), 285(12-15), 322(3), 340(1-5), 367(14-16) எனும் பாலடிகளிலும் அவன் காதல் கைம்மிகல் எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    கட்டுரையின்மை

    தனது திருமண ஆசையினை நேரடியாகத் தலைவனிடம் சொல்லும் மரபு அக்காலத்தில் தலைவிக்கு இல்லை. அவ்வாறு இருக்கத் தன்னுடைய அவாவினை தன் உடற்குறிப்பினால் உணர்த்துவது இம்மெய்ப்பாடாகும். இதனை, “சொல்லாகா நிலையில் சொல்லாது நிற்றல் ஒரு மென்மையும் எளிமையுமான துறப்பமைவு நடத்தை” (சங்க இலக்கியத்தில் உளவியல்,ப.65.) என்பர் உளவியலார். இதனை, மு.பொன்னுசாமி, “அச்சம், நாணம், மடம் என்னும் அரும் பண்புகள் காரணமாகத் தலைவி தலைவனிடம் ஒருபோதும் தன் வரைவு வேட்கையினை வாய்விட்டுக் கூறமாட்டாள். களவொழுக்கம் நீட்டிக்கும் தலைவனிடம் உடனுறை வாழ்க்கையை விழையும் தலைவி, “என்னை வரைவுகொள்” என வெளிப்பட உரைக்க மாட்டாள். தலைவி தன் உள்ளக் கருத்தினை உரையாது வரைவு தூண்டல் கட்டுரையின்மை என்னும் மெய்ப்பாடாகும்.” (சங்க இலக்கியத்தில் காதல் மெய்ப்பாடுகள், ப.197.) என கூறியுள்ளார்.

     “நீங்குக என்று யான் யாங்கனம் மொழிகோ!”  (அகம்.90(8))

    எனும் அகநானூற்று பாடலில் ‘இக்களவொழுக்கத்தில் இருந்து நீங்குக என்று யான் எவ்வாறு உரைப்பேன்’ எனுமிடத்து கட்டுரையின்மை எனும் மெய்ப்பாடு அமைய பெற்றுள்ளது.

    முடிவுரை

    வரைவு வேட்கை உணர்ச்சியே இம்மெய்ப்பாடுகள் பிறக்கக் காரணமாகின்றது.  இம்மெய்ப்பாடுகள் தலைவியிடம் தோன்றுகின்றன.  இவை “ஒன்றித் தோன்றும் தோழிமேன” என்பதற்கிணங்கத் தோழியிடமும் நிகழ்கின்றன. வரைவு கடாவும் நோக்கிலேயே இம்மெய்ப்பாடுகள் அமைந்துள்ளன.  தலைவனுக்குக் கடமையுணர்வை உணர்த்தி, மணம் புரிந்து வாழும் உடனுறை இன்ப வாழ்விற்கு இம்மெய்ப்பாடுகள் வழிவகுக்கின்றன. காதல் வயப்பட்ட ஆணும், பெண்ணும் தனித்திருந்த தங்கள் காதலை வெளிப்படுத்துகின்ற தருணத்தில் பெண் தன்னுடைய வேட்கையைத் தன் காதலனிடம் கூறமாட்டாள். காதலியின் அக உணர்வைப் புரிந்துகொண்ட காதலன் அவளிடம் கேட்கும் பொழுதுகூட அதைத் தன்வார்த்தைகளால் கூறாது புதுமண்கலத்தில் ஊற்றப்பட்ட நீரானது புறத்தே கசிவது போல தன் குறிப்பால் வெளிப்படுத்துவாள் என்கின்றார். தனித்திருக்கும் வேளையிலும் தன் புலன்களை அடக்கும் ஆளுமைப் பண்பு கொண்ட அறிவுசால் பெண்ணின் தலைமை இல்லறத்தை இனிது நடத்தும் என்பதை தொல்காப்பியர் புலப்படுத்துகிறார். காதல் வயப்பட்ட பெண் வரம்புக் கடக்காதவளாக இருத்தல் நலம் என்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

    *****

    கட்டுரையாளர்,
    தமிழ்த்துறைத்தலைவர்
    D.L.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி
    அழைக்க: 9159577065

                                       

     

    Share
  • விரைவில் நாசா மனிதர் இயக்கும் விண்ணூர்தி நிலவுக்கும், அதற்கு அப்பாலும் பயணம் செய்யத் திட்டமிடுகிறது

    unnamed

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    https://www.nasa.gov/exploration/systems/orion/index.html

    http://www.esa.int/spaceinvideos/Videos/2016/02/ESA_Euronews_Moon_Village

    https://www.nasa.gov/exploration/systems/orion/videos

    +++++++++++++++++++

    https://youtu.be/XcPtQYalkcs

     

    நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலவில்
    கால் வைத்து
    நாற்பத் தெட்டு ஆண்டுகள் கடந்து
    நாசா மீண்டும்
    விண்ணுளவுப் பயணம் துவங்குது
    வெண்ணிலவில் குடியேற !
    நுண்ணிய ஏழு கருவிகள்
    மண்தளப் பரப்பை விரிவாய்ப்
    பதிவு செய்யும்.
    துருவப் பகுதியில்
    ராக்கெட் ஒன்றை நிலவுமேல்
    தாக்கிடச் செய்து
    தளத்தில் குழி பறித்து
    தண்ணீர் உள்ளதா எனக் கருவிகள்
    மண்ணுளவு செய்யும் !
    வெண்ணிலவில் புலம்பெயரத்
    திட்டமிட்டுள்ளது ரஷ்யா  !
    நிலவில் தங்கி
    நிரந்தர ஆய்வுகள் புரியும் !
    செவ்வாய்க் கோளில் விமானிகள்
    ஓய்வெடுக்கவும், விஞ்ஞான
    ஆய்வு  நிலையம் அமைக்கவும்
    மீண்டும் நாசா தொடங்குது
    நீண்ட காலத் திட்டம் !

    ++++++++++++

     

    ஓரியன் விண்வெளித் திட்டம் வெகு வேகமாக நிறைவேறி வருகிறது.  ஃபிளாரிடா கட்டுமானக் கூடத்தில் இப்போது EM-1 ஓரியன் விண்ணூர்தி இணைப்பு முடியும் தருவாயில் உள்ளது.  அதே சமயத்தில் முதல் குழுவினரைச் சுமந்து போகும் விண்சிமிழும் தயாராகி வருகிறது.

    மைக்கேல்  ஹாவ்ஸ் [துணை அதிபர், லாக்கீடு மார்டின் ஓரியன் திட்டம்] 

    நாசாவின் நிலவுக்கு அப்பால் செல்லும் புதிய திட்டம்

    மீண்டும் நிலவுக்குச் செல்லும் நாசாவின் புதிய திட்டத்துக்குக் கட்டுமான விண்கப்பல் சாதன வேலைகள் 2018 பிப்ரவரியிலே தொடங்கி விட்டதென்று அறிவிக்கப் பட்டுள்ளது.  லாக்கீடு மார்டின் [Lockheed Martin] தொழிற்துறை நிபுணர், நியூ ஆர்லீன்ஸ் நாசா விண்கப்பல் கட்டுமானக் கூடத்தில், ஓரியன் குழுச் சட்ட விண்சிமிழ்ச் சாதனங்களை, இரண்டாம் விண்வெளித் தேடல் திட்டத்துக்கு [Exploration Mission -2(EM-2)] இணைக்கத் துவங்கி யுள்ளார்.

    நாசாவின் அடுத்த பூதக்கணை ஓரியன் விண்வெளித் தேடல் விண்கப்பலின் திட்டம் -2 [EM-2]  விமானிகளைச் செந்நிறக் கோளுக்கும், மற்ற சூரியக் கோளுக்கும் தூக்கிச் செல்வதுடன் அப்பாலும் பயணம் செய்யும் குறிக்கோள் கொண்டது.  அந்த பூத ராக்கெட் பெயர் : அண்டவெளிப் பயண ஏற்பாடு [Space Launch System (SLS)].  முடிவாய்ச் செவ்வாய்க் கோளில், விமானிகள் போக்குவரத்துக்கும், நிரந்தர வசிப்புக்கும் புதிய குடியேற்றக் கூடம் அமைப்பது.

    தயாராகும் இந்த ஓரியன் விண்கப்பலே இதுவரை இயங்கிய ஏவுகணைச் சாதனங்களை விடத் திறமை மிக்கது; 80% பளுச் சாதனங்கள் குறைந்தது.  30% பளு நிறை குன்றியது.  சூரியக் கதிர்கள் தாக்கி முறிந்து போகாது.  பாதுகாப்பான அழுத்தச் சிமிழ் [Pressure Vessel].  வாயுக் கசிவு நேராதது.  2018 செப்டம்பரில் விண்சிமிழ் தயாராகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  அதன் பிறகு அது ஃபிளாரிடா, கென்னடி ஏவுதளத்துக்கு ராக்கெட்டில் இணைக்க அனுப்பப்படும்.

    பல்கலைக் கழக மாணவருக்கு விண்வெளித் தொழில் நுணுக்க ஆய்வு வாய்ப்புகள்

    2019 ஆண்டில் நிகழப் போகும் ஓரியன் விண்வெளித் தேடல் குறிப்பணிக்கு தொழில்நுணுக்க ஆக்கவினைகள் புரிய, நாசா அமெரிக்கக் கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களுக்கு பேரளவில் வாய்ப்பளிக்க அழைப்பு விடுவித்துள்ளது.  அதற்கு  தேசீய விண்வெளி அறக்கட்டளைக் கொடை [National Space Grant Foundation] நிறுவி, தேர்ந்தெடுத்த ஆய்வுகளுக்கு டாலர் 15,000 முதல் 50,000 வரை அளிக்க முன்வந்துள்ளது.  கீழ்வரும் விண்வெளி ஆய்வுக் குறிப்பணிகளுக்கு நிதி ஒதுக்கி வைக்கப் பட்டுள்ளது.

    1.  விண்வெளிக் கப்பல் விண்சிமிழ் உட்கவசம் / விமானி கவச ஆடை: தரைச் சோதனைக்குத் தேவையான தணிவு அழுத்த கவசம், கசிவற்றது.  காற்று செலுத்துவது.
    2. விண்கப்பல் சாதன இணைப்புத் தொழில் நுணுக்கம் [Fabrication Process]
    3. அண்டவெளியில் உணவுப் பண்டங்களைச் சேமித்து வைக்க, குளிர்ச் சூழ்நிலையைப் பயன்படுத்தி குளிர்ச்சாதன ஏற்பாடு.
    4. பிற கோள்களில் [நிலவு, செவ்வாய்] ஏற்படும் பிணி, நோய் நொடிகளுக்கு மருத்துவக் கூட அமைப்பு.
    5. விண்வெளியில் பணிபுரிய சுய இயக்கு நகர்ச்சி வாகன அமைப்புகள்.
    6. கணினி போலி மாடல் தயாரிப்பு : விண்கப்பலுக்கு உஷ்ண ஏற்ற – இறக்க வாயு அழுத்த யந்திரம் [Spacecraft Temperature Swing Compressor]
    7. கார்பன்டையாக்சைடு உறிஞ்சும் சாதனம்.

    +++++++++++++++

    esa-moon-village-1

     

    esa-moon-village-4

    நமக்கு நிலவு ஓர் ஆய்வுக்கூடம்.  சூரிய குடும்ப வரலாற்றின் தொகுப்பகம்; விண் எரிகற்கள், வால்மீன்கள் தாக்கம், பரிதிப் புயலடிப்பு யாவும் அதன் மண் தளத்தில் எழுதப்பட்டுள்ளன.  ஒரு நிலவுச் சிற்றூர் [Moon Village] அமைப்பு விஞ்ஞானிகளுக்கு அதன் கோள் பண்பாடுகளைத் தேடி அறியவும், பூர்வீகப் பூமித் தோற்றம் அறியவும்  உதவி செய்யும்.

    ஈசாவின் குறிக்கோள் : நிலவுப் பயண நிலையம் திறந்த அகில நாட்டுப் பயன்பாடாய்ச் சிறிது சிறிதாய்ப் பெரிதாக வேண்டும் என்பதே.  வரும் நாட்களில் மனிதருக்குத் தேவையான தொழில்நுட்ப அமைப்புகள் கட்டப் பட்டு, அவர் பாதுகாப்பாய்ச் சூரிய  மண்டலத்துக்கும் அப்பால் செல்லும் பயிற்சியைப் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    யான் வொர்னர் [Jan Worner, Director, European Space Agency (ESA)]

    esa-moon-village-5

    நிலவிலே பயண  நிலையம் அமைத்தபின் என்ன செய்வது ?  ஒன்று மனித விண்வெளித் தேடல் நிறுத்தப் பட்டு எதுவும் நிகழாதிருப்பது.  அல்லது அடுத்தோர் நிலையம் அமைப்பது.  அதை நினைத்துப் பார்ப்பதே கடினம். அல்லது வேறெங்காவது போவது.  நான் உறுதியாக நம்புவது : நிலவே நமது அடுத்த ஆய்வு உலகம்.

    நாம் வேறெந்த தூரக் கோளுக்கோ, அல்லது செவ்வாய்க் கோளுக்கோ போகத் துணிவதற்கு முன்னால், மனிதர் தூசித் தளத்தில், பரிதிக் கதிர்வீச்சு மிக்கச் சூழ்வெளியில் மீண்டெழும் பயிற்சியைப் பெறவேண்டும். செவ்வாய்க் கோளுக்கு மனிதரை அனுப்புவதற்கு விண்வெளிப் பயணப் பொறிநுணுக்கத்தில்  மன ஊக்கம் அடைய வேண்டும்.  நிலவுக்குச் சென்று மீள்வதும் ஆபத்தானதுதான்.  ஒரு நிறைபாடு என்ன வென்றால், நிலவுப் பயணத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால், மனிதரை மீட்டுக் கொண்டு வர முடியும்.  மூன்று நாள் பயணத் தூரத்தில்தான் நிலவு உள்ளது.  பாதுகாப்பு மீட்சி முறைகள் எல்லாம் கைவசம் உள்ளன.

    இயான் கிராஃபோர்டு [Professor, Planetary Science, University of London]

    esa-moon-village-3

    செவ்வாய்க் கோளைத் தேடிச் செல்லும் நமது ஆர்வத்தைத் திருப்புவதற்கு அல்ல, நிலவுப் பயண நிலையம்.  1960-1973 ஆண்டுகளில் அமெரிக்க புரிந்த அப்பொல்லோ மனிதப் பயணங்கள், நிலவைத் தொட்டும் தொடாமல் ஒரு சில  நாட்களில் முடிந்து பரபரப்பூட்டியவை;  பற்பல விஞ்ஞானப் பயன்கள் அளித்தவை. ஆனால் அண்டவெளி உலகிலே, நீண்ட நாட்கள் பயிற்சி அனுபவம் பெற வாய்ப்புக்கள் கிடைக்க வில்லை.

    காத்ரீன் ஜாய் [Lunar Scientist, Manchester University]

    அடுத்த நிலவுப் பயண நிலைய அமைப்பு பற்றி ஈசா ஆளுநர்

    ஐரோப்பிய விண்வெளிப் பயண ஆணையகத்தின் புதிய ஆளுநர் யான் வொர்னர் [Jan Worner], 150 பில்லியன் டாலர் அகில நாட்டு விண்வெளி நிலையம் முறிந்து, தீப்பற்றிப் பசிபிக் கடலில் வீழ்ந்து, விண்வெளி விமானிகளைத் தனியே தவிக்க விட்ட பிறகு,  அடுத்த துணிவு முயற்சி நிலவுப் பயண நிலைய அமைப்பு என்று நினைக்கிறார்.

    esa-moon-village-6

    ‘கார்டியன்’ செய்தித்தாள் நிருபரிடம், பொதுத்துறை, தனித்துறைத் தொழில்நுணுக்க அதிபர்கள் முன்பாக, யான் வொர்னர் நிலவுச் சிற்றூர் [Moon Village] பற்றிப் பேசினார். “அகில நாட்டு குழு ஒன்று நிலவின் மறுபுறத்தில், பூவியின் மின்காந்த அடிப்புத் தாக்காதவாறு, ஒருபெரும் தொலைநோக்கிக் கூடத்தைக் கட்ட வேண்டும்.

    ஒரு தனிப்பட்ட குழு சூரியக் கதிர்வீச்சு பாதிக்கா நிலவுக் குடியகங்களைச் [Moon Habitats] தூரத்தில் தூண்டிச் சுயமாய் இயங்கும் யந்திரங்கள் [Robots] அமைக்க முடியுமா வென்று பார்க்கலாம்.  மற்றொரு தொழில்நுணுக்க அமைப்பகம் துருவப் பகுதியிலிருந்து பனிநீர் உருக்கி, ஹைடிரஜன், ஆக்சிஜென் ஆகிய வாயுக்களைப் பிரித்து ராக்கெட் எரிசக்தி ஆக்க முடியுமா வென்று பார்க்கலாம்.  அடுத்தொன்று நிலாச் சுற்றுப் பயண  வசதிகளை ஏற்படுத்தலாம்.

    Moon Russian Colony

    2030 இல் ரஷ்யா நிலவில் குடியேற விண்வெளிப் பயண ஏற்பாடுகள் தொடங்கப் போகிறது.  நிலவின் இயல்வளம், தனிமக் கனிவளம் தேடிச் சேமிக்க அது ஏதுவாகும்.  மேலும் புவியை நெருங்கிய தணிவுச் சுற்று வீதியில் உளவவும்,  நிலவில் குடியேற்ற வசதி அமைக்கவும், அங்கிருந்து செவ்வாய்க் கோள், மற்றும் சூரிய குடும்பத்தின் பிறக்கோள்களுக்குப்  பயண முயற்சி செய்யவும்,  நிரந்தரமாய் ஆய்வுகள் நடத்தவும் திட்டங்கள் இத்துடன் இணைக்கப் பட்டுள்ளன.

    டெமிட்ரி  ரோகோஸின்,  ரஷ்யத் துணைப் பிரதம அமைச்சர்.  [ஏப்ரல் 11, 2014]

    அண்டவெளித் தேடலின் நிரந்தர முதற் படிவைப்பு இந்த நிலவுக் குடியேற்ற அமைப்பு [Moon Colony].   ஆதலால் அந்தக் கூடாரமே எதிர் காலத்தில் வரப் போகும் அண்டவெளிப் பயணங்களுக்குத் தங்கும் ஒரு விண்வெளித் துறைமுகம் [Spaceport] என்று உறுதியாக்கப் படுகிறது.  ஆயினும் அங்கு தோண்டி எதிர்பார்க்கும் வைரங்கள், புவிக்கு எடுத்து வரப்பட்டால் அவற்றின் விலை மலிவாக இருக்காது.  நிலவில் பல்வேறு இரசாயனக் கலவைகளில் கிடைக்கும் ஆக்ஸிஜனை முதலில் ஆய்வு செய்யத் தொடங்கலாம்.

    ஐவன்  மோய்செயவ் [Chief Scientist, Institute of Space Policy]

    Moon Colony Extension

    Moon Research Colony

    நிலவுக் குடியேற்றம் போன்ற பூதப் பெரும் விண்வெளித் திட்டங்களைத் தனியார்  கூட்டு நிறுவகப் பங்கேற்பின்றி வெறும் மாநிலத் திட்ட நிதித் தொகையிலிருந்து மட்டும் நிறைவேற்ற இயலாது.   அது போல் செவ்வாய்க் கோள் குடியேற்றம், முரண்கோள்களில் [Asteroids] தாதுக்கள் தேடல் போன்ற பல்வேறு எதிர்காலத் திட்டங்கள்  தனியார் கூட்டுமுறையில் அமைக்கப் படுகின்றன.

    ஆன்ரே  லொலின் [Russian Academy of Cosmonautics Member]  

    நிலவில் குடியேறத் திட்டமிட்ட விண்வெளி நிபுணர்கள் 

    1957 இல் சோவியத் ரஷ்யாவின் ஸ்புட்னிக் பூமியைச் சுற்றி வந்து  அண்டவெளியுகம் புலர்ந்ததற்கு முன்பே சந்திரக் குடியேற்றம் பற்றி மனிதர் கனவுகளும் புனைகதைகளும் பல்லாண்டுகளாக இருந்து வந்துள்ளன.  1638 இல் பிஸப் ஜான் வில்கின்ஸ்  என்பவர் தன்னூல் “ஒரு புதிய உலகம், மற்றோர் அண்டக்கோள் பற்றிய பேருரை”   [A Discourse Concerning A New World & Another Planet] ஒன்றில் “நிலவில் மனித இனம் அமைக்கும் ஒரு குடியேற்றம்” பற்றிக் கூறுகிறார்.  ரஷ்ய நிபுணர் கான்ஸ்டன்டின் ஸியல்கோவிஸ்கி [1857 – 1935] அதுபோல் நிலவில் ஓரமைப்பை ஏற்படுத்த ஆலோசனையாகக் கூறியிருக்கிறார்.

    Moon Camp ground

     

    இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப் பட்ட ஜெர்மன் பூத ராக்கெட் பொறிநுணுக்கம் விருத்தியாகி,  1950 ஆண்டு முதலாகப் பல விஞ்ஞானிகள், பொறியியல் வல்லுநர், நிலவுப் பயணங்கள், குடியமைப்பு மாடல்களை பற்றிச் சொல்லி யிருக்கிறார்.  1954 இல் விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளர் ஆர்தர் கிளார்க் [Arthur C. Clarke] காற்று ஊதி அமைத்த ஓர் நிலவுக் குடிமேடையைப் பற்றி எழுதியுள்ளார். அக்குடி மேடைக்கு நிலவுப் புழுதி கணப்புக் கவசமாகப் பூசப் படுகிறது.   அவை எஸ்கிமோக்களின் பனிக்கூடம் போல் [Igloo Type Models] உள்ளன.   பூமியிலிருந்து விமானிகள் விண்கப்பலில் பயணம் செய்து, நிலவை அடைந்து, எஸ்கிமோ மாடல் குடில்களை அமைப்ப தாகப் புனைகதை வடித்துள்ளார்.  ஜான் ரெயின்ஹார்ட் என்பவர் 1959 இல் நிலவுத் தூசியில் மிதக்கும் ஒரு பாதுகாப்பான நிலவுக் குடிலைப் பற்றி ஆலோசனை கூறியுள்ளார்.  1961 இல் அமெரிக்க ஜனாதிபதி ஜான் கென்னடி அமெரிக்க விண்வெளித் தீரர் நிலவில் தடம் வைத்து மீள முதன்முதல் வழிவகுத்து, 1969 இல் மனிதர் உலவ வரலாறு படைத்தார்.

     

    Moon Colony Model -1

    Moon Control centre

     

    நிலவு நோக்கிச் செய்த முதல் சோவியத் மனிதப் பயணத் திட்டங்கள் பல தோல்வி அடைந்தன.  1972 ஆண்டுடன் நிலவு நோக்கிச் செல்லும் நாசாவின் மனிதப் பயணங்கள் முடிவடைந்தன.  2004 ஆண்டில் ஜார்ஜ் புஷ், இளையவர், அமெரிக்கா 2020 ஆண்டுகளில் மீண்டும் நிலவுப் பயணம் துவங்கி, 2024 இல் நிலவிலே தங்கு தளமொன்று நிறுவத் திட்டமிட்டார்.   அதுபோல் ஐரோப்பிய விண்வெளிப் பேரவை [European Space Agency] 2025 இல் நிலவிலே ஓர் நிரந்தரக் குடிலை அமைக்கத் தயாராகி வருகிறது.   ஜப்பானும், இந்தியாவும் அதுபோல் 2030 ஆண்டுகளில் தமக்கொரு நிலவுக் குடிலை அமைக்கத் திட்டமிட்டுள்ளன.

    “நிலவைப் படைத்த நியதி இயக்கங்களே பூமியையும் மற்ற பரிதி மண்டலக் கோள்களையும் ஆக்கியுள்ளன.  ஆதலால் நிலவைப் பற்றி ஆராய்வது எல்லாப் பாறைக் கோள்களைப் பற்றி அறியும் பலகணியாக உள்ளது.  நிலவின் தளப்பரப்பை உளவித் தேவையான மூல வளங்கள் (Useable Resources Like Water & Hydrogen) உள்ளனவா என்று தேடிச் செல்லும் ஆய்வில் பயன்களை எதிர்நோக்கி யுள்ளோம்.”

    டாட் மே (Todd May, Manager Lunar Presursor Robotic Program)

    Fig 1 Lunar Reconaissancs Mission

     

    “நாசாவின் இந்த இரண்டு விண்ணுளவுக் குறிப்பணிகளும் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) நமது அண்டைக் கோளான நிலவைப் பற்றிக் கிளர்ச்சி யூட்டும் புதிய தகவலை அளிக்கப் போகின்றன.  தேவையான தளக் காட்சிப் படப் பதிவுகள் (Images), பாதாள தளச் சரிவுகள் (Lunar Landscapes) ஒரு மீடர் துல்லிமத்தில் நோக்கப்படும்.  அவ்விதத் தகவல் அடுத்து நாசா குறிவைக்கும் தளங்களுக்கு விபரங்கள் தரும்.  அந்த இரண்டு விண்ணுளவிகளைத் தயாரித்த குழுவினர் உன்னத டிசைன் செய்து சாதனங்களைப் படைத்துள்ளனர்.
    டக்ளஸ் குக் (Douglas Cooke, Associate Administrator of NASA’s Exploration Systems)

    “நிலவு தள ஆய்வு விண்கப்பல் (LRO) நுணுக்கமான ஓர் உன்னத விண்ணுளவி.  அந்த ஏழு கருவிகளின் விண்சிமிழ் நிலவின் தள மண்டலத்தில் எமக்குப் பல்லாண்டுகள் தேவைப்பட்ட தகவலைத் தொடர்ந்து அனுப்பி வரும்.”

    கிரெய்க் டூலி (Craig Tooley, LRO Project Manager at NASA)

     

    Fig 1A Atlas Rocket Launch“நிலவின் குழிகளை நோக்கி உளவும் “லகிராஸ்” துணைக்கோள் (LCROSS) நிலவைக் கோலாகலமாக நெருங்கப் போகும் (அக்டோபர் 2009) காட்சியையும், அதன் அடித்தளத்திலே நீர் உள்ளதா என்று முதன்முதல் ஆராயப் போவதையும் உலகப் பொதுமக்கள் கண்டு களிக்க எதிர்நோக்கி யுள்ளோம்.”

    டானியல் ஆன்டிரூஸ் (Daniel Andrews LCROSS Project Manager NASA)

    “நிலவின் தளத்திலே புதைபட்ட பூர்வச் சுவடுகளின் [Fossils] கண்டுபிடிப்பே ஓர் பரபரப்பான, மகிழ்ச்சியான நிகழ்ச்சியாக இருக்கப் போகிறது !  ஒருவேளை ஆதியில் உண்டான உயிரினத் தோற்றங்களின் ஆர்கானிக் துணுக்குகளும் அங்கே இருக்கலாம். ஆனால் அவை யாவும் அபூர்வமாகவே இருக்கும் என்றுதான் எதிர்பார்க்கிறோம்.”

    குயிலர்மோ கன்ஸாஸ், பௌதிகத் துணைப் பேராசிரியர் [Guillermo Gonzalez, Iowa State University]

    நிலவை நோக்கி மீண்டும் நாசாவின் பயணம்

    2009 ஜூன் மாதம் 17 ஆம் தேதி நாசா பிளாரிடா கனாவரல் முனை (Cape Canaveral) விமானப்படை ஏவு தளத்திலிருந்து மனிதரற்ற இரண்டு துணைக்கோள்களை அட்லாஸ்-5 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக நிலவை நோக்கி அனுப்பியுள்ளது.  அவற்றின் முக்கிய குறிக்கோள்கள் : 2020 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் தடம் வைக்கப் போகும் நாசா விண்வெளி விமானிகள் தங்கும் ஓய்வுக் கூடத்துக்கு இடம் தேடுவது, நிலவின் அடித்தளத்தில் நீர் உள்ளதா, எரிசக்திக்கு ஹைடிரஜன் வாயு இருக்கிறதா என்று ஆய்வுகள் செய்வது.  நாசாவின் இரட்டைத் துணைக்கோள்கள் (LRO -Lunar Reconnaissance Orbiter & LCROSS -Lunar Crater Observation & Sensing Satellite) அவற்றை இன்னும் ஓராண்டில் கண்டுபிடிக்கும்.  அந்த இரண்டு துணைக்கோள்களும் ராக்கெட் ஏவிய 45 நிமிடங்கள் கழித்துப் பிரிந்து சென்றன.  நிலாவின் விண்வெளிச் சுற்றித் துணைக்கோள் LRO இப்போது நிலவின் ஈர்ப்பாற்றலில் சிக்கி 50 கி.மீடர் (30 மைல்) உயரத்தில் வட்டவீதியில் சுற்றி வருகிறது.  இரண்டாவது கட்ட சென்டார் ராக்கெட்டில் (Centaur Rocket) செல்லும் துணைக்கோள் LCROSS நான்கு மாதங்கள் கழித்து (அக்டோபர் 2009) நிலவை நெருங்கித் துருவப் பகுதிகளில் சுற்றி இரு கணைகளால் தளத்தைத் தாக்கித் துளையிட்டு நீருள்ளதா என்று ஆராயும்.  முதன்முதல் புரியும் இந்த அற்புத இரட்டைச் சோதனைக்கு ஆகும் நிதிச் செலவு சுமார் 583 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) !

    Fig 1B Second Stage Centaur Rocket

    சூரிய சக்தி பயன்படும் LRO துணைக்கோள் பயணம் செய்து நாலரை நாட்களில் நிலவின் ஈர்ப்பு மண்டத்தில் சிக்கியது.  பிறகு அது நிலவின் துருவப் பகுதிகளில் 2 மணிக்கு ஒருதரம் 30 மைல் (50 கி.மீ) உயரத்தில் சுற்றி வந்தது.  நாசாவின் இந்த விண்வெளிப் பயணம் இரண்டு அவசியமான தகவலை அறிந்து கொள்ள உதவும்,  ஒன்று நிலவின் துருவத்தில் ஆழ்குழி பறித்து அடித்தளத்தில் நீருள்ளதா என்று கண்டுபிடிப்பது;  இரண்டாவது எரிசக்தி அளிக்கும் ஹைடிரஜன் வாயு நிலவில் உள்ளதா என்று ஆய்வு செய்வது.  விண்வெளித் தேடற் பயணங்களில் சந்திரனுக்கு ஒரு பவுண்டு எடைப் பொருளைத் தூக்கிச் செல்ல நாசாவுக்கு 50,000 டாலர் செலவாகிறது.  ஆகவே விண்வெளி விமானிகளுக்குப் பேரளவில் நீர் கொண்டு செல்வதோ, ராக்கெட்டுக்கு எரிசக்தித் திரவத்தை ஏற்றிச் செல்வதோ பெரும் நிதிச் செலவை உண்டாக்கும் தேவைகளாக இருக்கின்றன.

    புதிய நிலவுத் தேடலில் கதிர்வீச்சு, ஹைடிரஜன் வாயு ஆராய்தல்

    1969 ஆம் ஆண்டில் முதன்முதல் நீல் ஆர்ம்ஸ்டிராங் நிலாவில் தடம் வைத்த பிறகு 1972 ஆண்டு வரை நாசா மொத்தம் 12 விண்வெளி விமானிகளை நிலவில் உலவிடச் செய்துள்ளது.  1959 ஆண்டு முதல் 2009 வரை ஐம்பது ஆண்டுகளாக உலக நாடுகள் (ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் கூட்டு, ஜப்பான், சைனா, இந்தியா) நிலவை நோக்கி 17 பயணங்களைச் செய்திருக்கின்றன.  ஆனால் நிலவில் இதுவரைத் தடம் வைத்த எல்லா விண்வெளி விமானிகளும் அமெரிக்கர் ஒருவரே ! அவ்விதம் அமெரிக்க விண்வெளி விமானிகள் இதுவரைக் கால்வைத்த இடங்கள் ஆறு. அந்தத் தளங்கள் யாவும் விமானிகளால் பகலில் மட்டுமே வாகனங்கள் மூலம் தேடப் பட்டன !  2020 ஆண்டில் மறுபடியும் நாசா தனது விமானிகளை நிலவுக்கு அனுப்ப இதுவரைத் தேடாத இடங்களை இப்போது நிலவில் ஆராயத் திட்டமிட்டுள்ளது.

    Fig 1E NASA Lunar Satellite

    LRO துணைக்கோள் ஓராண்டு நிலவைச் சுற்றி வந்து 50 குறிப்பிட்ட தளங்களின் தகுதியை எதிர்காலப் பயணங்களுக்கு ஒப்புநோக்கும்.  “LRO துணைக்கோள் அனுப்பும் உயர் நுணுக்கத் தளப் படங்கள் (High Resolution Maps) எதிர்கால நிலவுப் பயணத்திற்கு ஒரு வழிகாட்டியாக இருக்கும்” என்று LRO திட்ட விஞ்ஞானி ரிச்சர்டு வான்டிராக் (Richard Vondrak) கூறுகிறார்.  நிலவுக்குச் செல்லும் எதிர்கால விண்வெளி விமானிகளைத் தாக்கும் கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் கருவிகளும், சாதனங்களும் அதில் அடங்கி யுள்ளன,  மேலும் ஹைடிரஜன் வாயுச் சேமிப்பு மிக்க பகுதிகளைத் தேடும் கருவிகளும் அமைக்கப் பட்டிருக்கின்றன.  LRO துணைக்கோள் (50 கி.மீ.) 30 மைல் உயரத்தில் ஓராண்டு சுற்றி வந்து நிலவின் தளப் பண்புகளையும் சூழ்வெளியையும் தொடர்ந்து ஆராய்ந்து வரும்.

    LCROSS துணைக்கோள் நீர் இருப்பை ஆராய்தல்

    LRO துணைக்கோள் துரித உந்துகணைகள் மூலம் நிலவை நெருங்க நாலரை நாட்கள் கடந்தன. ஆனால் இரண்டாவது துணைக்கோளான LCROSS மெதுவாக நகர்ந்து நிலவை நெருங்க நான்கு மாதங்கள் எடுக்கும்.  LCROSS துணைக்கோளில் இரண்டு தனித்தனிப் பாகங்கள் உள்ளன. ஒன்று 41 அடி நீளமுள்ள பளுவான இரண்டாம் கட்ட சென்டார் ராக்கெட் (Second Stage Centaur Rocket).  அடுத்தது அத்துடன் இணைக்கப் பட்ட சிறு துணைக் கோள் (Shepherding Spacecraft).  2009 அக்டோபர் மாதம் முதலில் சென்டார் ராக்கெட் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும்.  முதல் ராக்கெட் தாக்குதல் நிகழ்ந்து 4 நிமிடங்கள் கழிந்து சிறு துணைக்கோளும் நிலவை நோக்கித் தாக்க அனுப்பப்படும்.  அவை உண்டாக்கும் குழிகள் நிலவின் அடித்தளத்தின் தன்மைகளைக் காட்டுவதோடு அடியில் நீர் உள்ளதா என்பதையும் கருவிகள் கண்டுபிடிக்கும்.

    Fig 2 LCROSS to Impact on Moon

    சென்டார் ராக்கெட் தாக்குவதற்கு முன்னால் அது நிலவுக்கு மேல் 54,000 மைல் (87,000 கி.மீ.) உயரத்தில் சுற்றிக் கொண்டிருக்கும்.  அது நிலவைத் தாக்கும் போது அதன் பளு குறைந்தது 4958 பவுண்டு (2249 கி.கிராம்) முதல் உச்சம் 5216 பவுண்டு (2366 கி.கிராம்) வரை இருக்கும்.  சிறு துணைக்கோள் 1369 பவுண்டு (621 கி.கிராம்) முதல் 1909 பவுண்டு (866 கி.கிராம்) வரை இருக்கும்.  சென்டார் தாக்குதல் நிலவின் தளத்தில் 66 அடி நீளம், 13 அடி விட்டமுள்ள(20 மீடர் நீளம், 4 மீடர் விட்டம்) பள்ளத்தை உண்டாக்கும்.  அது போல் சிறு துணைக்கோள் உண்டாக்கும் துளை : 46 அடி நீளம் 6 அடி விட்டமுள்ள (14 மீடர் நீளம், 2 மீடர் விட்டம்) குழி.  முதல்முதல் இவ்விதம் இரட்டைத் தாக்குதல் செய்து நிலவில் நிகழும் அதிர்ச்சிக் காட்சிகளை நாசாவின் LRO துணைக்கோள், ஹப்பிள் தொலைநோக்கி மற்றமுள்ள துணைக்கோள்களும் தொலைநோக்கிகளும் படமெடுத்து உலக மக்களுக்கு அறிவிக்கும்.

    நிலவுத் தளப்பதிவு துணைக்கோளில் உள்ள ஏழு நுட்பக் கருவிகள்

    LRO துணைக்கோளில் ஏழு நுட்பக் கருவிகள் அமைக்கப் பட்டுள்ளன :

    1.  (CRATER) (Cosmic Ray Telescope for the Effcts of Radiation) :  கதிர்வீச்சுப் பாதிப்புகளை அறியும் அகிலக்கதிர் தொலைநோக்கி.

    விண்வெளி விமானிகள் சந்திர தளத்தில் நடமாடும் போது அவருக்கு ஏதேனும் கதிர்வீச்சுப் பாதிப்புகள் விளையுமா என்பதை அறியும் சாதனம்.  மனிதத் தசை போன்ற பிளாஸ்டிக் மற்றும் கவசங்கள் கதிர்வீச்சால் தாக்கப்பட்டால் என்ன நேரும் என்பதைக் காணும் சாதனங்களையும் கொண்டது.  அதன் மூலம் சிறந்த கவசங்கள் தயாரிக்க நாசாவுக்குத் தகவல் கிடைக்கும்.

    2.  (DLRE) (Diviner Lunar Radiometer Experiment) : வெப்ப எதிரொளிப்புச் சோதனைக் கருவி

     

    Fig 6 LRO Instruments

     

    நிலவின் தள வெப்பம், அடித்தள வெப்பம் ஆகியவற்றை சுற்றுவீதியிலிருந்து அறியும் கருவி.

    இது குளிர்ந்த பிரதேசங்களில் உள்ள பனிப்படிவு (Ice Deposits) கரடு முரடான கற்பகுதி, பாறைப் பகுதிகளை அறியும்.  இவை எதிர்கால நிலவுத் தேர் (Lunar Landing Module) இறங்கும் இடங்களைத் தேர்தெடுக்க உதவும்.

    3.  (LAMP) (Lyman Alpha Mapping Project) லைமன் ஆல்·பா தளப்பதிப்புத் திட்டம்.

    புறவூதா ஒளிப்பட்டைக்குக் கடந்த (In the Far Ultraviolet Spectrum) நிலையில் நிலவின் தளம் முழுவதும் நோக்கிப் பதிவு செய்யும் கருவி.  துருவப் பகுதிகளில் பனிப்படிவு, பனிப் படர்ச்சியும் (Ice & Frost) காணும் கருவி.  நிரந்தரமாய் பரிதி ஒளிவிழாத நிழலில் இருந்து பிறக் கோள் வெளிச்சம், வாயு ஒளிகள் எதிரொளிக்கும் பகுதிகளைப் படமெடுக்கும்.

    4.  (LEND) (Lunar Exploration Neutron Detector) : நிலவுத் தேடலில் நியூட்ரான் உளவும் கருவி.

    நிலவுச் சூழ்வெளியில் ஹைடிரஜன் பரவியுள்ளதைப் பதிவு செய்வது.  சந்திரனில் உணரப்படும் கதிர்வீச்சு அரங்குகளில் நியூட்ரான் பரமாணுக்களை அறியும் கருவி.  இதன் மூலம் சந்திர தளத்தில் நீர்ப்பனி இருப்பைக் கண்டு கொள்ளலாம்.

    5.  (LOLA) (Lunar Orbiter Laser Altimeter) : நிலவுத் தேர் இறங்கும் பகுதிகளின் சரிவை (Landing Site Slopes) அளக்கும் கருவி.

    தளத்தின் கரடுமுரடான தன்மைகளையும் அறியும்.  நிரந்தரமாய் வெளிச்சமுள்ள வெளிச்சமில்லா பகுதிகளையும் அடையாளம் காணும் தளக்கருவி.  எதிர்கால நிலவுத் தேர் இறங்கும் இடங்களைத் தேர்ந்தெடுக்க இந்தத் தகவல் உதவும்.

    6.  (LROC) (Lunar Reconnaissance Orbiter Cameras) :  நிலவுத் தளப் பரப்பு உளவியின் மூன்று காமிராக்கள்.

    ஒரு மீடர் துல்லிமத்தில் கறுப்பு-வெள்ளைப் படமெடுக்கும் இரு நுட்பக் குறுங்கோணக் காமிராக்கள் (Two Narrow-angle High Resolution Cameras) அமைக்கப் பட்டுள்ளன.. 100 மீடர் துல்லிமத்தில் விரிவு கோணக் காமிரா ஒன்று. (One Wide-anglle Camera)

    7.  (Mini-RF) (Miniature Radio Frequency) (Technology Demonstration)  சிறு வடிவு ரேடியோ அதிர்வலைக் காமிரா.

    துருவப் பகுதிகளில் நீர்ப்பனி அமைப்பைப் படமெடுக்கும்.  பிறகு இது பூமியில் உள்ள துணைக் கோள் கட்டுப்பாடு அரங்குகளுடனும் தொடர்பு கொள்ள வசதி அளிக்கும்.

    Fig 3 LRO & LCROSS Together

    நாசா சந்திரனை மீண்டும் தேடிச் செல்லக் காரணம் என்ன ?

    முதல் மனிதன் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கடந்த பிறகு நாசா மறுபடியும் அங்கே போவதற்குக் காரணம் செவ்வாய்க் கோளுக்கு 2020 இல் தடமிடப் பயணம் செய்யும் போது இடையே ஓய்வெடுக்கத் தற்போது தங்கு நிலையம் ஒன்றைச் சந்திரனில் அமைப்பதற்கே ! அத்துடன் பூமிக்கும் நிலவுக்கும் இடையே விமானிகள் ஓய்வெடுக்கத் தற்போது புவியைச் சுற்றிக் கொண்டிருக்கும் “அகில நாட்டு விண்வெளி நிலையமும்” (International Space Station) தயாராகப் போகிறது.  ஏற்கனவே பன்னாட்டு விமானிகள் செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் நீண்ட காலப் பயணத்துக்குப் பயிற்சி பெற்று வருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான பொருட்களை ரஷ்யாவும் அமெரிக்காவும் தமது விண்வெளி வாகனங்களில் அனுப்பி அளித்து வருகின்றன. குறிப்பாக 2010 ஆண்டில் நாசா பயன்படுத்தும் “விண்வெளி மீள்கப்பல்கள்” (Space Shuttles) நிரந்தர ஓய்வு எடுக்கும் என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது..

    ஆதலால் நாசாவின் முதல்பணி விண்வெளி மீள்கப்பலுக்கு இணையான விண்கப்பல் ஒன்றைத் தயாரித்து அகில நாட்டு விண்வெளி நிலையத்துக்குச் சாதனங்களை அனுப்பிப் பயிற்சிகளைத் தொடர்வது. இரண்டாவது சந்திரனில் விமானிகள் ஓய்வெடுக்கத் தக்க தளத்தைத் தேர்ந்தெடுத்து அங்கே தங்குமிடம் ஒன்றை அமைப்பது. மூன்றாவது செவ்வாய்க் கோளுக்கு மனிதர் பயணம் செய்யத் தகுந்த விண்கப்பல் ஒன்றைத் தயாரிப்பது. இம்மூன்று முக்கியப் பணிகளை நிறைவேற்றத்தான் நாசாவின் “ஓரியன் விண்வெளித் திட்டம்” இப்போது மும்முரமாய்த் தயாராகி வருகிறது.

     

    Fig 4 LRO & LCROSS in Lunar Orbits

    நிலவிலிருந்து செவ்வாயிக்குத் தாவும் முயற்சிகள்!

    ஒவ்வோர் ஆண்டிலும் இரண்டு முறைகள் நிலவை நோக்கிச் சென்றுவர நிரந்தர நிலவுக் கூடாரத்தை விரைவில் அமைக்கப் போகிறார்கள்.  பூமியிலிருந்து நிலவுக்குப் போகும் காலம், நாலரை நாட்கள்!  நிலவுப் பயணக் குழுவினர் நீண்ட காலம் தங்கிச் சந்திர தளத்தில் கிடக்கும் புதைக் களஞ்சியங்களை ஆராய்வார்கள்.  நிலவுக்குப் பளு ஏற்றிச் செல்லும் பார வாகனம், பண்டங்களை இறக்கிய பிறகு திரும்பி பூமிக்கு வந்துவிடும்.  நிலவில் ஆய்வுகள் நடத்தி வரும் ஆராய்ச்சிக் குழுவினர் ஆறாறு மாதங்களுக்கு ஒருமுறை மாற்றம் அடைவர்.  நாசா நிலவின் தென் துருவத்தில் ஹைடிரஜன் எரிவாயு கிடைக்கும் நீர்ப்பனிப் பாறைகளை எதிர்பார்க்கிறது.  நிலவில் பரிதியின் ஒளி வெப்பத்தைப் பயன்படுத்திப் பேரளவு மின்சக்தி பெற விமானிகளுக்கு வாய்ப்புள்ளது.  அதைக் கொண்டு நிலவுக் கூடாரத்தை ஒளிமயமாக்க முடியும். பனிப்பாறைகளை உருக்கி நீர் பெற்றுக் கொள்ள முடியும்.  நீரைப் பிரித்து ஹைடிரஜன், ஆக்ஸிஜென் வாயுக்களைச் சேமித்துக் கொள்ள முடியும்.  நிரந்தர நிலவுக் கூடார அமைப்பின் முக்கிய காரணம், செவ்வாய் கோளுக்கு 2020 ஆம் ஆண்டுக்குள் மனிதர் பயணம் செய்து கால் தடம் வைத்து மீள்வது.  பிறகு செவ்வாய்க் கோளில் நிரந்தரக் கூடாரம் அமைத்து செவ்வாய்க் கோளை ஆராய்வது.  அதற்குத் தேவையான அசுர உந்து சாதனங்கள், விண்வெளி விமானிகளுக்கு வேண்டிய பயிற்சிகள் யாவும் நாசாவிடம் தயாராக உள்ளன.

    21 ஆம் நூற்றாண்டில் சந்திரனுக்கு மீண்டும் பயணம் போகும் நாசா !

    1969 ஆம் ஆண்டில் விண்வெளித் தீரர் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் முதன்முதலில் நிலவில் பாதம் வைத்துப் பாதுகாப்பாய்ப் பூமிக்குத் திரும்பிய பிறகு அமெரிக்கா மேலும் ஐந்து தடவைகள் சந்திரனில் தடம் வைத்தது. 240,000 மைல் தூரத்தில் பூமிக்கு அருகில் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கைத் துணைக் கோள் நிலவு ஒன்றுதான். அநேக முறை 20 ஆம் நூற்றாண்டில் சந்திரனை வெற்றிகரமாய்ச் சுற்றிய நாசா மீண்டும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் நிலவுப் பயணத்தை மீண்டும் துவக்கி இருக்கிறது என்பது வியப்பாக இருக்கிறதல்லவா ? பல மில்லியன் டாலர் செலவில் பழைய சாதனங்களைப் புதுப்பித்துக் கொண்டு மறுபடியும் நாசா சந்திரனுக்குப் போவதின் காரணம் என்ன ? சோவியத் ரஷ்யாவின் சந்திரத் தளவுளவி இறங்கி நிலவின் மாதிரி மண்ணை அள்ளி வந்தாலும், ரஷ்ய அகிலவெளித் தீரர்கள் நிலவின் தளத்தில் இதுவரைத் தடம் வைக்க வில்லை. ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பியக் குழுவின் ஈசா, ஜப்பான், சைனா, இந்தியா ஆகிய ஆறு நாடுகள் சந்திரனைத் தேடிச் சென்று தகவலைச் சேமித்தாலும், அமெரிக்கா ஏன் மறுபடியும் ஏராளமான நிதியைச் செலவழித்து மனிதப் பயணத்தை துவங்குகிறது என்ற கேள்வி எல்லாருக்கும் எழுகிறது !

     

    LCROSS Impacting the Moon

    ************************

    http://www.bbc.com/future/story/20150712-should-we-build-a-village-on-the-moon  [July 13, 2015]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; Time Magazine.

    1. Returning to the Moon By: Jeffrey Kluger Time Magazine [March 20, 2006]
    2. Apollo Missions (11-17) First Man on the Moon [www.panoramas.dk/]
    3. (a) http://www.thinnai.com/science/sc0505022.html [Authors Article on First Moon Landing (May 5, 2002)]
    4. Return to the Moon Frequently Asked Questions [www.space-frontier.org/projects/moon]
    5. NASA How We will Get Back to the Moon [www.nasa.gov./mission_pages/exploration/spacecraft/]
    6. BBC Science News: Space Agencies Take New Look at Moon [July 27, 2002]
    7. The Space Review- Return to the Moon By: Anthony Young [Jan 3 2006]
    8. Moon -Astronomical Data [www.amastro.org/at/mo/mod.html] [May 15, 2001]
    9 Space & Earth Explorations : NASA Details Plans for Lunar Exploration Robotic Missions (May 22, 2009)
    10 Rocket Launches NEW U.S. Moon Probes By Tariq Malik (June 18, 2009)
    11 BBC News – Lift off for NASA’s Lunar Probes By Paul Rincon (June 18, 2009)
    12 NASA Lunar Reconnaissance Orbiter Fact Sheets LRO & LCROSS Space Probes (2009)
    13 U.S. Lunar Probes Lift off on Mission to Scout Water, Landing Sites (June 22, 2009)

    14 http://en.wikipedia.org/wiki/Colonization_of_the_Moon [May 6, 2014]

    15. http://www.bbc.com/future/story/20150712-should-we-build-a-village-on-the-moon  [July 13, 2015]

    16.http://www.moondaily.com/reports/Russia_to_begin_Moon_colonization_in_2030_999.html [May 12, 2014]

    17. http://www.space.com/32375-international-moon-village-is-way-to-go-according-to-european-space-agency-video.html

    18. http://player.ooyala.com/iframe.js#pbid=91ac0f6dcbdf466c84659dbc54039487&ec=9yYzljMjE68_r5ghjcAQDsQh3aXKR-Ue

    19. http://www.news.com.au/technology/science/space/europe-to-build-moon-town-by-2030-in-bid-to-discover-alien-life/news-story/fe74f5e1f00c6730c0c5a4dcb5946395  [January 4, 2016]

    20. http://www.space.com/32695-moon-colony-european-space-agency.html  [April 24, 2016]

    21.  http://www.sciencealert.com/europe-plans-to-build-a-moon-village-by-2030-space-agency-announces [January 5, 2016]

    22.  http://www.spacedaily.com/reports/NASA_JAXA_Joint_Statement_on_Space_Exploration_999.html  [January 30, 2018]

    23. http://www.spacedaily.com/reports/Soon_humans_will_travel_out_beyond_the_Moon_999.html  [February 2, 2018]

    24. http://aero-news.net/index.cfm?do=main.textpost&id=cafe83d3-1124-43a5-9b63-7332bee73d06  [February 2, 2018]

    25.  http://www.spacedaily.com/reports/NASA_Wants_Ideas_from_University_Teams_for_Future_Human_Space_Missions_999.html  [February 22, 2018]

    26.  http://www.esa.int/Our_Activities/Human_Spaceflight/Orion/Exploration_Mission_2

    ******************

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  February 24, 2018 [R-3]

    Attachments area
    Preview YouTube video NASA | Exploration Mission-1 – Pushing Farther Into Deep Space

    NASA | Exploration Mission-1 – Pushing Farther Into Deep Space
    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_5592

     

    கண்ணா நலம்தானா கன்று நலம்தானா
    அண்ணா பலராமன் நலம்தானா -பின்னால்
    இதுபோ லெனைநீ இங்கிதமாய்க் கேட்டு
    பதிலொன்(று) எழுதிப் போடு….!

    கண்ணா நலம்தானா கன்று நலம்தானா
    அண்ணா பலராமன், ஏரார்ந்த -கண்ணி
    யசோதையாள் நந்தகோபன் யாதவரைக் கேட்டு
    விசாரித் ததாக விளம்பு….!

    ”தூணிருந்த பல்லியின் துண்டித்த வாலாக
    வீணகந்தை யால்வீழ்ந்து வாடுகின்றாய் -நீநெகிழ்ந்து
    அண்ணனாய் தம்பியாய் ஆன பலராமக்
    கண்ணனை நெஞ்சே கருது”….கிரேசி மோகன்….!

    நீராடை பூண்ட நிலத்தை உழுதன்று
    ஓரா லிலையில் உறங்கிய -சீராளன்
    போரானை கொம்பொசித்து நூறோர் கதைமுடித்த
    நாரா யணனே நெறி….கிரேசி மோகன்….!

    Share
  • உயர்தனிச் செம்மொழி!

    -மேகலா இராமமூர்த்தி

    வங்க தேசத்திலிருந்து பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள வான்கூவர் நகரில் குடியேறிய திரு. ரக்பி சாலமன் என்பவர் 1998-இல், உலகில் பேசப்படும் பல்வேறு மொழிகளைப் போற்றும் வகையிலும், அவற்றை அழியாமல் பேணிக்காக்கும் வகையிலும் ’உலகத் தாய்மொழி நாள்’ என்றவொன்றைக் கொண்டாட வேண்டும் எனும் வேண்டுகோளை  ஐ.நா.வுக்கு விடுத்தார். அவருடைய கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு 1999 பிப்ரவரி 21-ஆம் நாளை உலகத் தாய்மொழி நாளாக  (International Mother Language Day) ஐ.நா.வின் யுனெஸ்கோ அமைப்பு அறிவித்தது. 2000-ஆவது ஆண்டு பிப்ரவரி 21-ஆம் தேதிமுதல் இந்நாள் அனைத்துல நாடுகளாலும் உலகத் தாய்மொழி நாளாகக் கொண்டாடப்பட்டுவருகின்றது.

    ஒவ்வொருவருக்கும் அவரவருடைய தாய் எப்படி உயர்ந்தவளோ அதுபோலவே அவரவர் தாய்மொழியும் உயர்ந்தது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அவ்வகையில் தமிழரான நமக்கு நம் தாய்மொழியான தமிழ் மிகவும் உயர்வானது.

    உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழின் தோற்றம் அறுதியிட்டுக் கூறவியலாத தொன்மை வாய்ந்தது. அதனால்தான்,

    ”தொன்று நிகழ்ந்த தனைத்தும் உணர்ந்திடு
    சூழ்கலை வாணர்களும் – இவள்
    என்று பிறந்தவள் என்றுண ராத
    இயல்பினாளாம் எங்கள் தாய்” என்றான் மகாகவி பாரதி.

    தமிழ் என்ற சொல்லுக்கு இனிமை என்றொரு பொருளும் உண்டு! இதனைப் பண்டை இலக்கியங்களும் உறுதி செய்கின்றன.    

    அழகிய பெண்களின் இனிய சாயலை,

    தமிழ் தழீஇய சாயலவர் (சீவக சிந்தாமணி 2026) என்று புக(ல்)ழ்கின்றது சிந்தாமணி.

    தாமரைகளின் மகரந்தத்தில் தங்கி ரீங்காரமிடும் வண்டுகளின் இன்னோசையைத் ’தமிழ்ப்பாட்டு’ என்கிறார் கம்பர். 

    பொன்பால் பொருவும் விரை அல்லி
    புல்லிப்
    பொலிந்த பொலந் தாது
    தன்பால் தழுவும் குழல் வண்டு,
    தமிழ்ப்பாட் டிசைக்கும் தாமரையே….”  (கம்பன் – பம்பை வாவிப் படலம்)

    20ஆம் நூற்றாண்டுக் கவிஞரான பாவேந்தரோ,

    ”தமிழுக்கும் அமுதென்று பேர்” என்று புகன்று, தமிழின் சிறப்பை மேலும் கூட்டுகின்றார்; சுவையூட்டுகின்றார்!

    இத்துணை இனிமையும் தொன்மையும் உடைய தமிழ்த்தாயின் சிறப்பை இடையில் சிலகாலம் அவளின் தனயர்கள் மறந்திருந்தனர். காரணம் அக்காலகட்டத்தில் தமிழகம் ஆற்காட்டு நவாபுகளின் படையெடுப்பு, தெலுங்கு மற்றும் மராட்டிய மன்னர்களின் ஆட்சி என்று தமிழரல்லாதோரின் பிடியில் கட்டுண்டிருந்ததுவே எனலாம். அவற்றைத் தொடர்ந்து வந்ததோ ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட அயலவரான வெள்ளைப் பரங்கியரின் நெடிய ஆட்சி. எனவே தமிழன்னை தன் சொந்தப் பிள்ளைகளுக்கே அந்நியமாகிப் போனாள்.

    இவ்வாறு சிலகாலம் சென்றது.

    19-ஆம் நூற்றாண்டில் திருநெல்வேலியிலுள்ள இடையன்குடி எனும் கிராமத்திற்குக் கிறித்தவ சமயத்தைப் பரப்பவந்த இராபர்ட் கால்டுவெல் (Bishop Robert Caldwell) எனும் மொழியியல் அறிஞர், தென்னிந்திய மொழிகளையும் வடமொழியான சமஸ்கிருதத்தையும் ஒப்பிட்டு ஆராய்ந்தார்.

    ”ஆரிய மொழிகளின் இலக்கணம் வேறு; திராவிட மொழிகளின் இலக்கணம் வேறு. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளுக்கும் அடிப்படை இலக்கணம் ஒன்றே; இவையனைத்தினும் மூத்தமொழி தமிழேஎன்பதையெல்லாம் தம் ஆராய்ச்சிகளின் பயனாய்க் கண்டுணர்ந்த அவர், அவற்றையெல்லாம் ’திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்’ (A Comparative Grammar of the Dravidian or South-Indian family of languages) எனும் தன்னுடைய நூலில் விரிவாகவும் விளக்கமாகவும் பதிவுசெய்தார்.

    அதுவரை, வடமொழியே தமிழுக்கு மூத்த மொழி; தமிழைத் தோற்றுவித்த மொழி என்று நம்பிக்கொண்டிருந்த/நம்பவைக்கப்பட்டிருந்த தமிழர் பலரின் அறிவுக்கண்களை அந்த ஆய்வுநூல் திறந்தது; அவர்கட்கு மொழிகள் குறித்த தெளிவு பிறந்தது.

    நம் தாய்மொழியான தமிழே தென்னகத்தின் பிறமொழிகளைத் தோற்றுவித்த தாய் என்பதை ’மனோன்மணீயம்’ ஆசிரியரான சுந்தரம் பிள்ளை அவர்களும் தன்னுடைய ’தமிழ்த் தெய்வ வணக்கத்தில்’ உறுதிசெய்கின்றார்.

    கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமுந் துளுவும்
    உன்உதரத்து உதித்தெழுந்தே ஒன்றுபல வாயிடினும்
    ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
    (மனோன்மணீயம் – தமிழ்த்தெய்வ வணக்கம்)

    சங்கம் வைத்துத் தமிழ்வளர்த்த மதுரையில் தோன்றிய வி.கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் எனும் தமிழறிஞர் தன் இயற்பெயரைத் தனித்தமிழ்மீது கொண்ட தணியாக் காதலால் பரிதிமாற் கலைஞர் என்று மாற்றிக்கொண்டார்.

    தனித்தமிழ் இயக்கத்துக்குத் தோற்றுவாய் செய்த மாமனிதரான அவர், ’தமிழ் ஓர் உயர்தனிச் செம்மொழி’ என்பதனைத் தன்னுடைய ’தமிழ் மொழியின் வரலாறு’ எனும் நூலில் சான்றுகளோடு மெய்ப்பித்திருக்கின்றார்.

    உயர் தனிச் செம்மொழி எனும் தொடரிலுள்ள ஒவ்வொரு சொல்லையும் அவர் விளக்கி அதனைத் தமிழோடு பொருத்திக் காட்டியுள்ள பாங்கு வியந்துபோற்றத்தக்கது. அதனைக் காண்போம்.

    உயர்மொழி என்பது யாது?

    ”தான் வழங்கும் நாட்டின்கண் உள்ள
     பலமொழிகளினும் தலைமையுடையதும்
    அவற்றினும் மிக்க தகவுடையதுமான ஓர் மொழியே
    உயர்மொழியாகும். இவ்விலக்கணங்கொண்டு
    ஆராயுமிடத்து, தெலுங்கு உள்ளிட்ட
    மொழிகளுக்கெல்லாம் தலைமையுடையதும்
    அவற்றினும் மேதகவுடையதுமாகிய ’நந்தமிழ் ஓர்
    உயர்மொழியாகும்” என்றார் அவர்.

    தனிமொழிக்கான இலக்கணம் என்ன?

    ”தான் வழங்கும் நாட்டில் பயின்றுவரும்
    பிறமொழிகளின் உதவியின்றித் தனித்தியங்கும்
    தன்மையுடைய மொழியே தனிமொழி எனும்
    தகுதியுடைத்து. தான் பிறமொழிகளுக்குச் செய்யும்
    உதவி மிகுந்தும், தனக்குப் பிறமொழிகள் செய்யும்
    உதவி குறைந்துமிருத்தலே வழக்காறு. அவ்வாறு நோக்கின், தமிழின்உதவியின்றித் தெலுங்கு முதலிய மொழிகள் இயங்கமாட்டா. ஆனால் அவற்றின் உதவியின்றித் தமிழ் தனித்தியங்கும் பெற்றியது. ஆதலின் நந்தமிழ் ஓர் தனிமொழியே!” என்று திட்டவட்டமாக அறிவித்தார்.

    இனிச் செம்மொழிக்கான தகுதி யாது?

    ”திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய
    தூய்மொழி புகல் செம்மொழியாம்” என்பது இலக்கணம்.

    இம்மொழிநூல் இலக்கணத்திற்குச்
    சாலப் பொருத்தமுடையது தமிழ்மொழி. பிறமொழிச்
    சொற்களன்றித் தன்மொழிச் சொற்கள்
    மிகுந்திருத்தலே தூய்மொழியாகும். அவ்வகையில்
    தமிழ் தூய்மொழியுமாகும். அவ்வாறே தமிழில்
    ஆளப்படும் சொற்கள் நம் மக்களின் பண்பாலும்
    நாகரிகத்தாலும் செழுமையுற்றவை. எனவே
    தமிழ்மொழி ’செம்மொழி’என்பது திண்ணம்” என்றறைந்தார் அப்பெருமகனார்.

    நம் தமிழுக்கான செம்மொழித் தகுதியைக் குன்றிலிட்ட விளக்காய் ஒளிரச்செய்பவை பண்டைத் தமிழிலக்கண இலக்கிய நூல்கள் அல்லவா?

    உலகின் பிறமொழி இலக்கண நூல்களெல்லாம் எழுத்துக்கும் சொல்லுக்கும் மட்டும் இலக்கணம் வகுத்துவிட்டு நின்றுவிட, ’பொருளதிகாரம்’ எனும் தலைப்பில் மக்களின் அகவாழ்வையும் புறவாழ்வையும் திணை, துறை வகுத்து விரித்தோதியது, ஒல்காப் பெரும்புகழ்த் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியம் எனும் தமிழிலக்கண நூலொன்றே!

    நம் இலக்கியங்களோ,

    யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்று உலக சகோதரத்துவத்தையும்,

    பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று உயிர்களின் சமத்துவத்தையும்,

    ”…ஒன்றன் கூறாடை உடுப்பவரே ஆயினும்
    ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை” என்று மனமொத்த இல்லற வாழ்வின் பெற்றியையும் ஈராயிரம் ஆண்டுகட்கு முன்பே உலகுக்கு உணர்த்திய உன்னத நூல்கள்!

    இத்துணைச் சிறப்பு வாய்ந்த உயர்தனிச் செம்மொழியான தமிழைத் தாய்மொழியாகப் பெற்றநாம் பேறுபெற்றோர்!

    ஆதலால், அமுதனைய தமிழைப் போற்றிக் கொண்டாடுவோம்!
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்வோம்!

     

     

     

     

    Share
  • குறுந்தொகை வழி அறியலாகும் தமிழரின் வானிலை நுண்ணறிவு  

    -முனைவர் இரா.சுதமதி

    முன்னுரை

    பழந்தமிழரின் வானிலை அறிவுநுட்பத்தை எடுத்துரைக்கும்நூல்களுள் ஒன்று குறுந்தொகை. இயற்கையோடு இயைந்த வாழ்வியல் இன்பத்தை அகப்பாடல்கள் வழி எடுத்துரைக்கும் குறுந்தொகைப் புலவர்கள் அவற்றில் தம் அறிவியல் நுண்ணறிவையும் பதிவுசெய்தனர்.  தாம் வாழும் உலகத்தின் சூழல்களையும் இயற்கை நிகழ்வுகளையும் எந்தவிதத் தொழில் நுட்பக் கருவிகளும் இன்றித் தம் கண்களாலும் அனுபவத்தாலும் உணர்ந்து அவற்றைத் தகுந்த தமிழ்ச்சொற்களால் வெளிப்படுத்தியிருக்கும் அவர்தம்அறிவு நுட்பம் வியந்து போற்றற்குரியது. இக்கட்டுரை பழந்தமிழரின் வானிலை அறிவியல் அறிவைக் குறுந்தொகைப் பாடல்கள் வழி ஆராய முற்படுகிறது.

    வானிலைஅறிவியல்

    இன்று வளர்ந்து வரும் அறிவியல் துறைகளுள் ஒன்று Meterology எனப்படும் வானிலை அறிவியல் ஆகும். வானிலையும் காலநிலையும் இன்று மனிதர்கள் அன்றாடம் அறிந்து கொள்ள வேண்டிய அவசியத் தேவையாக மாறியுள்ள சூழலில் வானிலை அறிவியல் முக்கியமான துறையாகக் கருதப்படுகிறது. இன்றைய வானிலை அறிவியல் குறித்த செய்திகளோடு குறுந்தொகைச் செய்திகளும் ஒப்பிட்டு நோக்கப்பட்டு இங்கே விவரிக்கப்படுகின்றன.

    குறுந்தொகையில் மேகம், இடி, மின்னல், மழை போன்ற வானிலை தொடர்பான பல குறிப்புகள் பரவலாகக் காணப்படுகின்றன.

    மேகங்கள்

    தற்கால வானிலை அறிவியல் மேகங்களைப் பலவகைகளாகப் பிரிக்கிறது. அவை,1. கீற்றுமுகில் (Cirrus), 2. கார்முகில் (Nimbo stratus), 3. படர்முகில் (Alto stratus), 4. திரள்முகில் (Cumulus) என்பனவாகும். குறுந்தொகைப் பாடல் வருணனைகளில் இத்தகைய மேகங்கள் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.

    வெண்மையான தோற்றத்தைக் கொண்டவையும் மிக உயரமான மலைப்பகுதிகளில் உருவாகி ʻஉயர்மேகங்கள்’ (high clouds)  என்று கூறப்படுபவையும் ஆகிய கீற்றுமுகில்கள்  ʻஉறையறு மை’ (339) என்று மழைத்துளிகளற்ற வெண்மையான  மேகங்களாகக் குறுந்தொகையில் கூறப்படுகின்றன.அதிக அடர்த்தியோடும் கறுத்த சாம்பல் நிறத்தோடும் எப்போதும் மழை பெய்து கொண்டிருக்கும் கார்முகில்களைப் பற்றி,

    ʻகறிவளர் அடுக்கத்து இரவில் முழங்கிய
    மங்குல் மாமழை வீழ்ந்தென’    (90)
                

    என்று கூறுகிறது குறுந்தொகை. இலேசான மழைத் துளிகளைப் பெய்து கொண்டிருக்கும் நீர்த் திவலைகளால் ஆன படர்முகில்கள் ʻதளி தரு தண்கார்’  (65) என்றும், புயல், இடி, பெருமழையை உருவாக்கும் திரள்முகில்கள்,

    ʻசேய் உயர் விசும்பின் நீர் உறு கமஞ்சூல்
    தண்குரல் எழிலி ஒண்சுடர் இமைப்பப்
    பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலை’   (314)

    என்றும் குறுந்தொகைப் புலவர்களால் குறிக்கப்பட்டுள்ளமையைக் காணலாம். தமிழகம் வெப்ப மண்டல நாடாகும். எனவே, பிற பருவங்களில் காணப்படும் மேகங்களை விட மிகுந்த மழையைத் தரும் கார்காலத்தின் திரள்முகில் இனங்களே குறுந்தொகைப் புலவர்களால் பெரிதும் விரும்பி அதிகமாகப் பாடப்பட்டுள்ளன.

    ʻகழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
    புதுநீர் கொளீஇய உகுத்தரும்
    நொதுமல் வானத்து முழங்கு குரல்  கேட்டே  (251)           என்னும் இடைக்காடனாரின் பாடல் நீர்மேலாண்மைக்கு மிகச் சிறந்த சான்றாகும். ʻநீர் சுமந்த மேகங்கள் மழையாகப் பொழிந்தால் மட்டுமே மீண்டும் கடல்நீரை முகந்து நீர் சுமந்து மழையாகப் பொழிய முடியும்’ என்னும் செய்தி அறிவியல் நுட்பத்தோடும் வாழ்வியல் சிறப்போடும் கூறப்பட்டிருப்பது ஆய்ந்து உணரத்தக்கது.

    இடி

    ʻவெடி ஒலி உரும் கோ விண்ணேறு அசனி
    செல் இகுளி இடியேறு மடங்கலும் ஆகும்

    என்று இடியின் பல்வேறு பெயர்களைப் பிங்கல நிகண்டு பட்டியலிடுகிறது. குறுந்தொகைப் பாடல்களில் இடியின் தன்மை குறித்துப் பாடும் செய்திகள் நுட்பமானவை. இடியின் வேகத்தைக் கணக்கிட்டு வருணிக்கும் திறம் இன்றைய வானிலை ஆய்வுக்கு இடம் தருவதாகும்.

    குறுந்தொகைப் பாடல்கள் வழி இடியின் தன்மைகளை 1. ஆரவாரத்தை உடைய இடி, 2.முரசு போல் முழங்கும் இடி, 3. பாம்பைத் துணிக்கும் இடி என மூன்றாகப் பிரிக்கலாம்.

    ஆரவாரத்தை உடைய இடியைக் குறுந்தொகை ʻஇடியேறு’ என்றும் ʻஆர்கலி ஏறு’ என்றும் குறிப்பிடுகிறது. மிகப் பெரிய மின்னலுக்குப் பிறகோ, மேகங்களிலும் மலைத்தொடர்களிலும் பட்டு எதிரொலிப்பதாலோ தொடர்ந்து நெடுநேரம்ʻகிடுகிடு’வெனக் கேட்கும் இடியோசையைக் குறுந்தொகை ஆரவாரிக்கும் இடியோசையாகக் குறிப்பிடுகிறது. 

    ʻகருவி மாமழைச் சிலை தரும் குரலே’         (94)

    ʻஆர்கலி ஏற்றொடு கார் தலைமணந்த    (186)                      

    என்று குறிப்பிடும் குறுந்தொகை, முரசு போல் முழங்கும் இடியை,

    ʻவென்று எறி முரசின் நன் பல முழங்கி
    பெயல் ஆனாதே  வானம்     (380)

    எனக் கூறுகிறது. இவ்விரு இடிகளின் தன்மையுடன் மேலும் கடுமையாக முழங்கும் இடியைப் ʻபாம்பைத் துணிக்கும் இடி’ என்று குறுந்தொகை கூறுவது சிறப்பிற்குரியது. இத்தகைய இடி பற்றி நான்கு பாடல்கள் நூலில் உள்ளன.

    ʻநெடு விசை மருங்கின் பாம்புபட இடிக்கும்
    கடுவிசை உரும்’                                                                 (158)

    ʻவெஞ்சின அரவின் பைந்தலை துமிய
    நரை உரும் உரரும்’                                                                          (190)

    ʻ……………………………பாம்பின்
    பையுடை இருந்தலை துமிக்கும் ஏறு’                          (268)

    என்று கூறுவது நோக்கத்தக்கது. சங்கப் புலவர்கள் வானிலைச் செயல்பாடுகளை உற்று நோக்கி அவற்றின் தன்மையைத் தம்மால் இயன்றவரையில் பாடல்களில் பதிவு செய்துள்ளமை வியப்பிற்குரியதாகும்.

    மின்னல்

    மின்னலுடனும் இடியுடனும் பெய்யும் மழையைக் குறுந்தொகை ʻகருவி மாமழை’ என்று  குறிப்பிடுகிறது.

    ……………………..மாமழை
    இன்னும் பெய்யும் முழங்கி
    மின்னும் தோழி’                     (216)

    என்னும் காஞ்சிக் கொற்றனின் குறுந்தொகைப் பாடல் ‘தோழி! கரிய பெரிய மேகங்கள் இன்னும் மழையைப் பெய்ய மேலும் முழங்கி மின்னுகின்றன’ என்னும் வானிலை முன்னறிவிப்பை எடுத்துரைக்கின்றது எனலாம்.

    மழை

    பழங்காலத்தில் மழை பற்றிய அறிவியல் உணர்வு தமிழர்களிடம் இருந்ததைப் போல பிற நாட்டாரிடம் இல்லை எனலாம். பிற நாட்டினர் மழையைக் கண்டு அஞ்சி அதனைக் கடவுள் தந்த தண்டனையாகக் கருதிய காலகட்டத்திற்கு முன்னரே பழந்தமிழர் மழை எவ்வாறு பெய்கிறது என்பது பற்றிய அறிவியல் உண்மையை உணர்ந்திருந்தனர்.

    குறுந்தொகைப் பாடல்கள் வழி பழந்தமிழர் மழையை,1.தூறல் மழை, 2.விடாமழை, 3.புயல்மழை, 4.பெருமழை என்று பகுத்துணர்ந்த அறிவு நுட்பத்தை அறியலாம். இவற்றுடன் ‘வம்பமாரி’ என்ற ஒன்றையும் பதிவு செய்தனர்.

    வானம் மங்கலாக இருக்கும் போதும், மூடுபனி இருக்கும் போதும் பூமியில் மிகச் சிறு திவலைகளாக விழும் தூறல் மழையை,

    ʻஊதை தூற்றும் கூதிர் யாமத்து                                         (86)
    ʻவந்த வாடைச் சில் பெயல் கடைநாள்’                      (332)                      

    என்னும் குறுந்தொகை வரிகள் எடுத்துரைக்கின்றன.

    ʻபெரும்பெயல்’, ʻமாமழை’,ʻபடுமழை’,ʻகலிமழை’ என்னும் அடைமொழிகளால் பெருமழையைக் குறுந்தொகைப் புலவர்கள் குறிப்பிட்டு மகிழ்ந்தனர். பழந்தமிழர் நீர்வளம் நிரம்பப் பெற்று வாழ்க்கை நடத்தியவர்கள் ஆவர். அதனால் பெருமழை பொழியும் கார்காலத்தைப் புனைந்து பாடுவதில் புலவர்கள் பெரும் விருப்பம் கொண்டிருந்தனர்.  

    ʻபெரும் பெயல் உழந்த இரும்பிணர்த் துறுகல்   (13)
    ʻபடுமழை பொழிந்த சாரல்’                         (249)
    ʻகலிமழை கெழீஇய கான்யாற்று இடுகரை’     (264)    

    என்பன போன்ற பாடல் வரிகள் குறுந்தொகையுள் மிகுதி.

    பெருங்காற்றோடு பெய்த பெருமழையைப் புயல்மழை என்று குறுந்தொகையில் பதிவு செய்கிறார் பெண்பாற் புலவரான ஔவையார்.

    ʻநெடுவரை மருங்கின் பாம்புபட இடிக்கும்
    கடுவிசை உருமின் கழறுகுரல் அளைஇக்
    காலொடு வந்த கமஞ்சூல் மாமழை!
    ஆர் அளி இலையோ நீயே? பேரிசை
    இமயமும் துளக்கும் பண்பினை!’                      (158)

    என்ற பாடல் இமயமலையையும் அசைக்கும் ஆற்றலுடைய காற்றோடு வரும் பெருமழை குறித்த செய்தியைக் கூறுகிறது. வானிலை ஆய்வாளர்களின் கருத்தோடு ஒப்பிட்டால் இதனைப் புயல் மழையாகக் கருதலாம்.

    இடைவிடாது பெய்யும் அடைமழையைக் குறுந்தொகை,

    ʻபொழுதும் எல்லின்று பெயலும் ஓவாது
    கழுது கண்பனிப்ப வீசும்              (161)
    ʻபெயல் ஆனாதே வானம்           (380)                           

    என்று குறிப்பிடுகிறது. குறுந்தொகையுள் காணப்படும் பாடல் ஒன்று கோடைமழை பற்றிக் கூறுகிறது.

    ʻஉவரி ஒருத்தல் உழாஅது மடியப்
    புகரி புழுங்கிய புயல் நீங்கு புறவில்
    கடிது இடி உருமின் பாம்பு பை அவிய
    இடியொடு மயங்கி இனிது வீழ்ந்தன்றே’   (391)

    ʻபசுக்களும் மான்களும் வெம்மையால் புழுங்கி துன்புறும்படியாக, மேகம் மழைபெய்தலை நீங்கிய காட்டில் கடுமையாக இடிக்கும் இடியினால் பாம்புகள் படம் அடங்கிக் கிடந்தன. கரிய மேகங்கள், பெய்யும் பருவமறியாது இடியோடு கலந்து இனிதாகத் தாழ்ந்தன’ என்னும் செய்தி கோடை மழையைக் குறிப்பதாகும்.

    பழந்தமிழரின் வானிலை அறிவு நுட்பத்துக்கு,  அவர்கள் காலமழைக்குச் சூட்டிய பெயர்களே சான்றாகும். உரிய பருவத்தில் பெய்யும் மழையைக் ʻகாலமாரி’ என்னும் பெயராலும் காலமல்லாத காலத்தில் பெய்த மழையை ʻவம்பமாரி’ என்னும் பெயராலும் அழைத்த அறிவு நுட்பம் வியந்து போற்றற்குரியது.

    ʻகாலமாரி மாலை மாமழை’                                                  (200)
    ʻகாலமாரி பெய்தென’                                                                     (251)

     

    எனப் பெய்ய வேண்டிய நேரத்தில் பெய்யும் மழையைக் குறுந்தொகை குறிப்பிடுகிறது.

    ʻவம்பமாரி’ என்னும் சொற்றொடர் பழந்தமிழரின் அறிவுக்கூர்மைக்கும் அறிவியல் நுட்பத்துக்கும் சொல்லாட்சித் திறனுக்கும் தக்க சான்றாகும்.

    ʻ வம்பு நிலையின்மை’                 (தொல்.உரி.31)

    என்று வம்பு என்னும் சொல்லுக்குப் பொருள் கூறுகிறது தொல்காப்பியம். பருவமல்லாத காலத்தில் பெய்து பின் மாறி விடுகின்ற நிலையில்லாத மழையே வம்பமாரியாகும்.

    ʻபருவம் வாரா அளவை நெரிதரக்
    கொம்பு சேர் கொடியிணர் ஊழ்த்த
    வம்பமாரியைக் காரென மதித்தே’                                              (66)
    ʻவம்பு பெய்யுமால் மழையே வம்பன்று
    காரிது பருவம் ஆயின்
    வாராரே நம் காதலரே!’ 

    கார்காலம் வந்தும் தலைவன் வராததால் வருந்தியிருக்கும் தலைவியை ஆற்றுவிக்கும் பொருட்டுத் தோழி ʻஇது காலமாரி அன்று, வம்பமாரி’  என்று கூறுவதாக அமைந்த சங்க இலக்கியப் பாடல்கள் மிகுதி. இச்செய்திகள் காலம் தவறிப் பெய்யும் மழை குறித்தும் அம்மழையைப் பொருள் மாறாது அழகிய சொல்லால் குறித்த தமிழர்களின் வானிலை நுட்பத்தையும் வெளிப்படுத்துவனவாக உள்ளன.

    முடிவுரை

    தற்கால வானிலை ஆய்வாளர்களால் பகுத்துரைக்கப்படும் பல செய்திகளைச் சங்க இலக்கியங்கள் அன்றே பதிவு செய்து வைத்துள்ளமைக்குக் குறுந்தொகை மிகச் சிறந்த சான்று நூலாகும். குறுந்தொகையுள் கூறப்படும் திரள்முகில் இனங்களும் பாம்பையும் துண்டிக்கும் இடிகளும் பெருமழையும் வம்பமாரியும் தமிழர் தம் கூர்த்த நுண்ணறிவைப் புலப்படுத்துவன. இதனால் தொழில்நுட்பக் கருவிகள் ஏதுமில்லாமலேயே பழந்தமிழர் வானிலை அறிவியலில் சிறந்து விளங்கியமையை அறியலாம்.

    *****

    கட்டுரையாளர்
    உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை
    ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி
    திருநெல்வேலி-627008

     

     

    Share
  • எழுவகைப் பெண்கள்: 12

    ரேணுகா ராஜசேகரன்

    உடல்நலம் காக்கும் புடவையும் இரவிக்கையும்

    மூலாதாரத்தின் மூண்டெழுகனலைக் காலால் எழுப்பும் கருத்து எம் பெண்களின் நடையிலும் உடையிலும், தினசரிப் பழக்க வழக்கங்களிலும் பிணைக்கப்பட்டது என்றேன் அல்லவா?.

    விரிந்து சுருங்கும் துருத்தியாம் பெரினியத்தை இரு கால்களால் இயக்குவதும், அவ்வியக்கத்தால் மூலாதாரத்தில் மூண்டெழும் கனலை உடல் பூராவும் பரப்புவதுமான வித்தை என்பது தமிழ்ப்பெண்கள் வாழ்வில் நித்தியக்கட்டளையாக்கப்பட்டது என்றால் அதற்கு பெண்களுக்காகத் தெரிவு செய்யப்பட ஆடை முதற் காரணமாகும் என்று அந்த அமெரிக்க இராணுவ அதிகாரியிடம் என் உரையாடலைத் தொடர்ந்தேன்.
    எங்கள் பெண்களின் ஆடைகளின் வடிவமைப்பு ஒரு மிகப்பெரிய விஞ்ஞான அதிசயம் என்று ஆரம்பித்தேன்.
    எப்படி? என்று வினவினார்.
    அதற்கு, எளிமையான நான்கு காரணங்களை முன்வைக்கிறேன் என்று அவற்றைச் சொன்னேன்: (1) எங்கள் பாரம்பரிய இடுப்பணி பெண்ணாடைகள் கீழ்ப்புறம் திறந்திருக்கும். இரண்டு கால்களுக்கிடையே வெகு தாராளமாய்க் காற்று நுழையுமாறு செய்த ஏற்பாடு இது. அதுமட்டுமல்ல எங்களது ஆடைகள் விசாலமாய் விரியும்; இதனால், நடக்கும்போது, இந்த ஆடைகள் வெளிக்காற்றை வாகாய் சேகரித்துத் தொடர்ச்சியாய் தொடைகளுக்கிடையே விசையுடன் வீசிவிடும், இதனால் நடக்கும்போது தொடைஇடுக்குகளின் ஊடே உள்செல்லும் காற்று, விரிந்து சுருங்கும் பெரினியத்தின் வழி உள்ளீடாய்ச் செல்லும். (2) பெண்ணுறுப்பும் கருக்குழியும் எப்போதும் காற்றோட்டத்துடன் இருக்கவேண்டும் என்பது எங்கள் உடையின் நியதி; எனவே எங்கள் பெண்கள் “பாண்டீஸ்” அல்லது “ஜட்டி” எனப்படும் அடி -உள் ஆடைகளை அணியாமல் இருப்பது நெடுங்காலப் பழக்கமாகவே இருந்து வந்திருக்கிறது. (3) எங்கள் பெண்களின் – வயிற்றில், மார்பில், மற்றும் மார்பகங்ளுக்கு நடுவில் – சூடு சேர்மானம் அடையாமல் – உடனுக்குடன் அச்சூடு உடம்பை விட்டு வெளியேறுமாறு எங்கள் மேலாடைகளும் கூட வடிவமைக்கப்பட்டிருக்கும்.

    அப்படியென்ன உடை அதன் பெயர் என்ன? என்றார்

    வயதுக்கு ஏற்றார் போல் கொஞ்சம் உடைத்தோற்றம் மாறுபடும் அதன் பெயரும் கொஞ்சம் மாறுபடும்.
    மிகச்சிறு பெண் என்றால் – பாடிப்பாவாடை
    சிறு பெண் என்றால் : பாவாடை – மேற்சட்டை
    பருவ வயதுப்பெண் என்றால் – பாவாடை – தாவணி – ரவிக்கை
    இளம்பெண்களிலிருந்து மூத்த பெண்கள் வரை – உள்பாவாடை – புடவை- ரவிக்கை
    இவற்றில் பாவாடை – ரவிக்கை ஆகியன தைத்த உடுப்புக்கள்; தாவணி, புடவை ஆகியன தைக்காத உடுப்புக்கள். தேவைப்பட்டால் தாவணி, புடவை இரண்டிற்கும் ஓரம் அடிப்போம். பல சமயங்களில் சேலையின் ஒரு ஓரமும் தாவணியில் இரு ஓரங்களும் பின்னல் முடிப்போடோ அல்லது குஞ்சத்தோடோ அல்லது பின்னலும் குஞ்சமும் சேர்ந்த வகையிலோ வெகு ஜோராக முடிக்கப்பட்டிருக்கும். அவற்றிற்கு ஓரம் அடிக்கும் வேலை மிச்சம்.

    உள்பாவாடையை – தைத்த உடுப்பாக அணியாமல் அதற்குண்டான துணியைப் புடவையிலேயே சேர்த்து – உள்பாவாடையைத் தவிர்க்கும் புடவைகளும் உண்டு என்று தொடர்ந்தேன்.

    எங்கள் உடைகளைத் தயாரிக்கும்போது அவ்வுடைகளில் நாங்கள் உடைக்கேற்ற படி குறிப்பிட்ட வகையிலே குறிப்பிட்ட டிசைனில் pleats அதாவது கொசுவங்கள் வைத்துத் தைக்கிறோம். இந்த கொசுவங்கள் எங்களுக்கு மிகுந்த முக்கியமானவை. தைத்ததுணியாலான உடுப்புகளாகட்டும் ஆடையாய்த் துணியை அப்படியே உடுத்தும் உடுப்புகள் ஆகட்டும் கொசுவங்களின் பால் நாங்கள் மிகுந்த கவனம் செலுத்தி, கொசுவ மடிப்புகளை ஒழுங்காய் ஒருங்கே உருவாக்கி அணிவோம் என்றேன்.

    ஓ அப்படியா? இங்கே தான் நீங்களே பார்க்கிறீர்களே நாங்கள் சில கொசுவம் வைத்த உடைகளை முக்கிய விழாக்கள் – திருமண நிகழ்ச்சிகள் போன்றவற்றுக்கு மட்டுமே உடுத்துகிறோம். ஏன் – உடுத்தமுடிகிறது என்று தான் சொல்லவேண்டும். தினம் தினம் அணிவது சாத்தியமே இல்லை – அவ்வுடுப்புக்கள் யாவும் மிகமிக விலை அதிகம். நீங்கள் எப்போதுமே அங்கு உயர்மரியாதை உடையிலே இருக்கிறீர்கள்! எனக்கு உங்களைப் பார்த்துக் கொஞ்சம் பொறாமையாகவே இருக்கிறது என்றார் சிரித்த்துக்கொண்டே.

    மிகச்சரியாகச்சொன்னீர்கள் எஙகளுக்கு உடுப்பு என்பது மிக மிக உயர்வானது – அதுவும் அதனைச் சரியாய் உடுத்தவேண்டும் – முறையாய் உடுத்த வேண்டும் – அழகாய் உடுத்தவேண்டும் என்று மிகவும் பிரயாசைப்படுவோம் – உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. சொல்லப்போனால் இங்கு கிடைக்கும் அந்த சில உயர்மரியாதை ஆடைகள் கூட பெரும்பாலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வை தானே!எனச்சொல்லிவிட்டுத் தொடர்ந்தேன.

    உடையில் மதிப்பு என்பது ஒருபுறம் இருக்க உடையின் உடல்நலப் பயன்பாடுதான் எங்களது முக்கிய குறிக்கோள். கொசுவங்களை வைத்து நாங்கள் உருவாக்கும் பெண்களுக்கான உடைகள் யாவும் அவரது உடல் நலம் பேணுவதற்காகத்தான். அழகு என்பது ஒரு உடன் விளைவு அவ்வளவே. எங்கள் பெண்களின் உடையைத் தயாரிப்பது என்பதை மிக நுட்பமான பொறியியல் திறன் என்றே சொல்லமுடியும். நாங்கள் பெண்கள் உடையில் வைக்கும் ஒவ்வொரு வகை கொசுவத்திற்கும் ஒவ்வொரு பணி உண்டு. அதாவது வைத்த கொசுவத்திற்கேற்ப எங்கள் உடை இயங்கும் – அவ்வாறு அது இயங்கும்போது – வெப்ப இயக்க வினைகள் உண்டாக்கும் – அதனால் எங்களுக்கு உடலில் நலம் சேரும். பிணிகள் – தொற்றுக்கள் அகலும் என்றேன்.

    கேட்கக்கேட்க ஆச்சரியமாய் இருக்கிறதே – உங்கள் கொசுவங்களின் டிசைன் பற்றி இன்னும் கொஞ்சம் விவிரம் தாருங்களேன் என்றார்.

    முதலாவது, உடை இடுப்பில் சேரும் சுற்றளவுக்கும், உடையின் அடிச்சுற்றளவுக்கும் குறைந்த பட்சம் ஒன்றுக்கு மூன்றரை எனும் விகிதாச்சாரம் இருக்கும். இது ஒன்றுக்கு ஐந்து என்ற விகிதாச்சரம் வரையிலும் கூடச் செல்லும். எனவே ஒரு உடுப்புக்கு நாங்கள் எடுத்துக்கொள்ளும் துணியின் அளவு அதிக தாராளமாக இருக்கும். அடுத்து, தைக்கும்போது, எங்கள் உடைகளை கோர் எனப்படும் பகுதிகளாக வெட்டி அந்த வெட்டுத்துண்டுகளை மட்டுமே இணைக்கிறோம். இந்த கோர்களை நாங்கள் பல வடிவங்களில் கத்தரித்துக்கொள்ளலாம்; எடுத்துக்காட்டாக அம்ரெல்லா கட் அதாவது குடை வடிவம். இதுபோன்றே சர்குலர் கட் எனப்படும் வட்ட வடிவம், , கோனிகல் கட் எனப்படும் கூம்பு வடிவம் ஆகிய பல வெட்டுக்கள் உள்ளன. இந்த வெட்டுக்கள் எங்கள் உடைகளின் அடிப்படை இன்ஜினியரிங் டிசைன் எனலாம்.

    அடுத்து, இந்த வெட்டுத்துண்டங்களை இணைக்கும் போது, இடுப்பு சேரும் இடத்தில் துணியைச் சுருக்கவேண்டும் அல்லவா? அங்கேதான் உடைக்கேற்றபடி பற்பல வடிவக் கொசுவங்களை உருவாக்கிச் சுருக்குகிறோம். என்ன டிசைனில் கொசுவம் உண்டாக்கப்பட்டது என்பது அந்த உடுப்பு, அதனை உடுத்துபவர், அவ்வுடுப்பை உடுத்திக்கொண்டு நடக்கும்போது எப்படி விரியும் எப்படிச்சுருங்கும் என்பதை முடிவு செய்யும். அது விரிந்து சுருங்கும் தன்மைக்கேற்ப கால்களுக்கிடையில் காற்று உள் வீசப்படும். இவ்வாறு வீசப்படும் காற்று பெண்ணின் மறையுறுப்பை வருடி ஒத்தடம் தந்து அங்குள்ள ஈரம், உப்புப்படிவு, இறந்த செல்கள், மற்றும், இன்னபிற அழுக்குகளைக் களையும். அதன் ஒரு பகுதி அங்கே வாழும் நன்மை தரும் நுண்ணுயிர்களுக்கு ஊட்டச்சத்தாகும், இன்னொரு சிறுபகுதி பெண்ணுறுப்புக்குள்ளே உறிஞ்சப்படும். இதுதான் சாராம்சம்.

    ஆக, ஆடைகளின் கொசுவம் தான் விசிறி போல செயல்படுகிறது என்கிறீர்கள் அல்லவா?

    ஆம்! எனத் தொடர்ந்தேன். ஆடைகளில் கத்திக் கொசுவம், பெட்டிக்கொசுவம், இரட்டைபெட்டிக்கொசுவம், அடுக்குக்கொசுவம் ஆகிய டிசைன்களை உபயோகிக்கிறோம்.
    சட்டை மற்றும் ரவிக்கைகளின் கையில் கார்ட்ரிட்ஜ் கொசுவத்தை வைத்து கஃப் கை, மிளகாய்க் கை என உண்டாக்குவர் அல்லது ஆணின் சட்டைபோல தளர்வாய் மூக்கு வைத்து, கை அமைப்பர். பாவாடைமேல் அணியும் சட்டைகளின் கழுத்தில் “வாட்டியோ” வகைக் கொசுவங்களை வைப்பர்.

    புடவை என்பது துணி – தைத்த உடுப்பல்ல என்றேனல்லவா? இதை உடலில் கட்டிக்கொள்ளவேண்டும். அவ்வாறு கட்டிக்கொள்ளும்போது, புடவையில் எங்கள் பெண்கள் வைக்கும் கொசுவத்திற்கு ஈடு இணையே இல்லை என்பேன். 5.5 மீட்டர் நீளமும் ஏறக்குறைய 1.5 மீட்டர் உயரமும் கொண்ட துணை தான் புடவை என்றேன்.

    அடேங்கப்பா! அது அத்தனைப்பெரிசா? சாரி என்பார்களே அதுபோன்றதா உங்கள் புடவை என்றார்.

    சரிதான். மிகச்சரியாய் பிடித்தீர்கள் சாரியை; சாரியைத்தான் தமிழில் சேலை என்கிறோம் அது மருவிவந்த பெயர். புடவை என்பது தமிழில் நிஜப்பெயர்.

    புடவை, இரவிக்கை இரண்டுமே காரணப் பெயர்கள் – வினையாலணைந்த பெயர்கள் – Action nouns
    புடம் என்றால் கனல் அல்லது தணல் (Ember); அவி என்றால் இரு பொருட்கள் உண்டு: சூட்டை அணைத்தல் அல்லது சூட்டை உபயோகித்துச் சமைத்தல். அதனால், புடவை என்றால் நெருப்பை அவிக்கும் ஆடை என்பது பொருத்தமாய் இருக்கும் என்றேன்.
    இரவி என்றால் சூரியன்; கை என்பது பொதுவாக மேற்கையைக் குறிக்கும் ஏனெனில் கையின் பிற பாகங்களுக்கு தனித்தனியே பெயர்கள் உள்ளன. சூரியனை உடல் தாக்காதவாறு மறைக்கும் கையுடைய உடுப்பு என்பதே இரவிக்கை என்பது என்றேன்.
    பொதுவாக, இரவிக்கைகளுக்கு வைக்கும் கழுத்தின் அகலமானது, தோள்பட்டை, விலாஎலும்பு, மேல்முதுகு ஆகியவற்றைக் காட்டக்கூடாது எனவும், அது, முன்புறம் மார்பகப் பிளவு தெரியும்படியாக வெகு தாழ்வாக இருக்கக்கூடாதென்றும் என்பது பொது விதி. இப்பாகங்களில் வெயில் பட்டால் தோல் புற்று நோய் வரும் என்பது இன்று அனைவரும் அறிந்த உண்மை. எனவே வெய்யிலை மறைக்கவேண்டிய இடங்களில் கட்டாயம் மறைக்கும் கைகள் இரவிக்கைக்கு வைக்கப்பட்டன.

    உங்களுக்கெல்லாம் நிறையவே முன்யோசனை இருந்திருக்கிறது! கொசுவங்களைப்பேசுங்களேன்! என்று தொடர்ச்சி தந்தார்.

    அவர் ஆர்வம் என்னை மேலும் உற்சாகப்படுத்தியது. புடவையில் இரு இடங்களில் கொசுவம் வரும்; இடுப்பில் மற்றும் தோளில் என. எங்கள் பெண்கள், புடவைகளில் விதம் விதமான பாணிகளில் இவ்விரண்டு கொசுவங்களையும் வைப்பர். உடுத்தும் திசைகளும் மாறும் – இடமிருந்து வலம் அல்லது வலமிருந்து இடம். அரிஅரியாய்க் சிறு கத்திக் கொசுவம் வைப்பர் அல்லது ஜாணகலம் பெட்டிக் கொசுவம் வைப்பர்; நான்கு விரற்கிடை ரெட்டைப் பெட்டிக் கொசுவம் வைப்பர் அல்லது மாற்றெதிர்க்கொசுவம் என ஒருதிசையில் கொசுவி எதிர்த்திசையில் திருப்பி அதன்பின் இடுப்பில் செருகுவர். இடுப்பில் செருகும்போது, கொசுவம் முன்னே வரும்; பின்னே வரும்; பக்கவாட்டில் வரும் என வகை என்றால் வகையோ வகை என படு அட்டகாசமாயிருக்கும்!

    உள்பாவாடை எனப்படும் உடுப்பு தைக்கப்படுவது; இது கொசுவம் இல்லாதது அதிக விஸ்தாரம் இல்லாதது. அதனால் இதனை அப்படியே ஏனோதானோவென்று தைத்துவிடமுடியாது. இதற்கும் கோர் வேண்டும் – குறைந்த பட்சம் நான்கு கோர்களிலிருந்து பத்து கோர்கள் வரை கூம்புப் பகுதிகளாக வெட்டி, அப்பகுதிகளை இணைக்கவேண்டும். சிலநேரம் குறைவான கோர் உடைய உள் பாவாடைகளில் சிறுசிறு கத்திக் கொசுவம் வைக்கப்பட்டிருக்கும்; குறைந்த கோரை ஈடுசெய்யும் ஏற்பாடு இது. உள்பாவாடை என்பது உடையின் ஒரு தொடக்கம் அவ்வளவுதான். இதன்மேல் உடுக்கப்படும் புடவையை நெறிப்படுத்தும் பொறியியல் சிறப்பு கொண்ட பொறுப்பான ஒரிழை (single layer) உடை இது. இரண்டுகால்களை வீசி நடக்கும்போது கால்களைத் தடுக்காதபடியான விஸ்தாரதத்துடன் மட்டுமே இருக்கும் உள்பாவாடையின் இடுப்பிலே நாடா கோர்க்கப்பட்டிருக்கும். தன் இடையின் அகலபருமனுக்கு ஏற்ப, உடுத்தும் பெண், நாடாவாவை இறுக்கி உள்பாவாடையை அணியவேண்டும். அணிந்துவிட்டால் இடுப்பின் அசைவுக்கு ஏற்ப, நாடா அந்த இடுப்பின் அசைவை ஒரு விசையாக பாவாடையின் கூம்பு கோர்களின் குறுகிய மேல் நுனியில் செலுத்துகிறது. கூம்பு கோர்களின் அகலம் கீழ்வாகில் அதிகமாவதால், இப்போது மேலிருந்து விசை கீழே கிடுக்கிவெனப்பரவ, பாவாடையின் அடி, வட்டமாய் விரியலாகும் ஆனால் நடக்கும் காலோ விரியும் பாவாடையின் அடிவட்டத்தை, ஒரு தூளியை அசைப்பதுபோல் கிடைமட்ட நேர்க்கோட்டில் முன்னும்பின்னுமாய் வெகு விசையுடன் வெகுநேர்த்தியாய் மாற்றி மாற்றி அசைக்கிறது எனவே அதியற்புதமானதொரு பொரிவிசைச் சங்கமம் அங்கே ஏற்பட்டு பாவாடைக்குள்ளே கூம்புச்சுழலாய் காற்று உள்புகுகிறது. ஆக, புடவை என்பது சொற்பதம்கடந்த மிகப்பிரமாதமானதொரு பொறியியல் கண்டுபிடிப்பு என்பதே பொருத்தமானது.

    உள்பாவாடை இல்லாத புடவைகள் எப்படி இருக்கும்? என்றார்.

    உள்பாவாடை இல்லாத புடவைகள் இருவகைப்படும்: எட்டு கஜம் மற்றும் ஒன்பது கஜம். எட்டுகஜம் புடவைகள் கொஞ்சம் எளிதானவை. உள்பாவாடைக்கான இரண்டு கஜம் பகுதியை இடுப்பில் ஒருமுடிச்சு போட்டுக் கட்டிக்கொண்டுவிடுவார்கள், அதற்கு மேலே மிச்சம் உள்ள துணியை, புடவையாய் உடுத்திக்கொள்வார்கள். ஒன்பது கஜம் புடவைகளில், உடுத்தும் பாணி பலபடிநிலைகளைக் கொண்டது; சிக்கலானது; உடுத்திக் கொண்டுவிட்டாலோ இயங்க வெகுவசதியாக இருக்கும். சிலகுலத்தினர் ஒன்பது கஜம் புடவைகளை தினசரி உடுத்துவர்; சிலர் அதனை விசேஷ நாட்களில் மட்டுமே உடுத்துவர்.

    எவ்வகைப்புடவையாயினும், பொதுவாக, புடவை கட்டிக்கொள்வது என்பதே பலபடிநிலைகளைக் கொண்ட செயலாகும். புடவை உடுத்த சிரத்தை வேண்டும்; உரிய கால அவகாசம் எடுத்துக்கொண்டுதான் புடவையை உடுத்திக்கொள்ளமுடியும். புடவை கட்டிக்கொள்வது என்பது முதலில் பழகும்போது பலவித சவால்களை உள்ளடக்கிய மாபெரும் வீரவிளையாட்டில் ஜெயிப்பதுபோல் தெரியும். பழகப்பழக அது கைவந்த கலையாகும். குறைந்த நேரத்தில், நேர்த்தியாய்ப்புடவை உடுத்த விரைவாகவே கற்றுக்கொள்ளமுடியும்.

    மொத்தத்தில், ஆபாசமில்லாமல், கவுரவத்தோடு, அழகும், உடல் நலமும் கொடுக்கும் ஆடை புடவை எனலாம்.

    அப்படியென்றால் உங்கள் பிரதான உடை “புடவை “என்று கொள்ளலாமா? என்றார்.

    ஆம்! குழந்தை வயது மற்றும் பருவ வயது ஆகியன விரைவாக நகர, எங்கள் பெண் தன் முக்கால் வாசி வாழ்நாட்களையும் புடவையிலேயே வாழ்கிறாள். எனவே எங்கள் பெண்களுக்கு, புடவை என்றால் வெகு பிரியம். அதுமட்டுமல்ல – மானம் காப்பது உடை என்பார்கள் அல்லவா? அதற்கும் ஒருபடி போய் மானத்தோடு, மகிழ்வையும், அழகையும், உடல்நலத்தையும் ஒரு சேர அளிக்கும் ஒரே உடை என்பதால் புடவை என்பது எங்கள் ஊனுக்கும் உயிருக்கும் மேலானது; மற்ற பெண்களுக்கு, புடவையும் இரவிக்கையும் வாங்கித்தருவது என்பது எங்களுக்கு பழக்கம். உறவினர் என்றல்லாது, நண்பர்கள், தெரிந்தவர் தெரியாதவர் என எவருக்குமே புடவை-இரவிக்கை வாங்கித்தருவோம். எங்கள் திருக்கோயில்களில் அம்மனுக்குப் புடவை வாங்கி சாத்துவோம். இது எங்கள் மண்ணின் உயரிய பண்பாடு. புடவையை, கோடி என்றும் எங்களில் சிலர் அழைக்கிறார்கள்; கோடி என்பது ஒரு இந்தியப் பண அளவை; கோடி என்பது யு எஸ் டாலரில் ஏறக்குறைய 160,000 டாலர்கள். அத்தனைப் பெரிய பணமதிப்பு அது. ஒரு புடவையைப் பிறருக்குத் தருவது அல்லது பிறர் தர அதனைப் பெற்றுக்கொள்ளுவது என்பது கோடி பணம் பெறுவதைப்போன்றது என்பது பொருள்.

    எது எப்படியாகினும், எங்கள் பெண்களுக்காக எங்கள் மூதாதையர்கள் தெரிந்தெடுத்துத்தந்த ஆடைகள் அல்லது உடுப்புக்களின் ஒரே நோக்கம் உடலில் காற்றோட்டத்தைத் தொடர்ந்து ஏற்படுத்துவதே.

    அப்படிஎன்றால் காற்றோட்டத்தின் மூலம் பெண்ணுக்குள்ளே விளையும் நெருப்பை ஆக்க சக்தியாக மாற்றுவதற்கான கருவிகளே உங்கள் பெண்ணுடைகள் எனலாமா என்றார்.

    நன்று சொன்னீர்கள்! ஏற்கனவே உங்களுக்குச் சொல்லியிருந்தது நினைவிருக்கலாம். பெண்ணின் மறையுறுப்புக்குள்ளே பெரினியக்குழியில் வெப்பம் உண்டாகிறது. அவ்வாறு உண்டாகும் உஷ்ணத்தைப் புடமாக்கி, அதன்மூலம் அவளது கருவறை முழுவதையும் தூய்மைப்படுத்தி, அங்கே ஜீவாதார நிகழ்வுகள் ஒழுங்காய் நடக்குமாறு அங்கு ஏற்படும் வேதிவினைகளைச் கவனமாய்ச் சரி செய்யக் காற்று தேவை. அது போன்றே நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் வளரவும் – தீமை செய்யும் பாக்டீரியாக்கள் ஒழியவும் காற்று தேவை!

    ஜீவாதார நிகழ்வுகளை விளக்குங்களேன் என்றார்

    மாதவிடாய் முறையே நிகழ்தல், முட்டை உண்டாகுதல், முட்டை வெளியேறுதல், தாம்பத்ய உறவு கொள்ளாத நிலை அல்லது தாம்பத்ய உறவு கொள்ளுதல், கருத்தரித்தல், கரு வளருதல், பிரசவம் நிகழுதல் , பிரசவத்துக்குப்பின் கழிவு வெளியேறுதல், தசைகள் சுருங்குதல், மாதவிடாய் இறுதியில் நின்று போவதற்கு முன் பெரும்பாடாக மாறும்போது, கோளாறு ஏற்படாது மாதவிடாயை முடிவுக்குக் கொண்டுவருதல், ஆகிய யாவற்றையும் ஜீவாதார நிகழ்வுகள் எனலாம்.

    மேலும், பெண்ணின் கருவறை மண்டலம் மற்றும் அங்கு உருவாகும் சிசு ஆகிய இவை இரண்டிற்கும் ஒத்தாசை செய்யும் நுண்ணுயிர்கள் உண்டு. அவை அங்கே இருந்தால் தான் பெண்ணாலும் பெண்ணும் உருவாகும் சிசுவாலும் நலமாய் ஜீவிக்கமுடியும். ஆண் -பெண் தாம்பதிய உறவுக்கும் இந்த நுண்ணுயிர்கள் தோதானவை. அவற்றுக்கு உயிர் வார்த்து வளர்த்து அவற்றை பெண்ணின் மறையுருப்பில் நிலைநிறுத்தவேண்டுமென்றால் அவற்றிற்குக் காற்று தேவை; இலேசான இள வெளிச்சம் தேவை. ஏனெனில் அவை காற்று விரும்பிகள்; லேசான இள வெளிச்ச விரும்பிகள்; காற்று இல்லையென்றால் இந்த நுண்ணுயிர் நண்பர்கள் மறைந்தொழிந்துவிடுவார்கள்.

    மாறாக, காற்று இல்லையேல், தீமை செய்யும் நுண்ணுயிர்கள் மற்றும் காளான்கள் அங்கே ஏராளமாக முளைத்து நிரந்தரக் குடியுரிமை பெறுவார்கள். இந்தத் துன்பம் செய்யும் நுண்ணுயிர்களுக்கும் காளான்களும் பெண்ணுறுப்பில் மிகச்சட்டென்று வளர்ந்துவிடுவன – ஏனெனில் பெண்ணின் மறையுறுப்பு ஒரு விளைநிலம்போன்றது. ஈரப்பதமும், உப்பும், வெப்பமும், இறுக்கமும், இருட்டும், இன்னபிற எருக்களுமாக அங்கே தீமை நுண்ணுயிர்களுக்கும் காளான்களுக்கும் போஷாக்கான சூழல். ஆனால், அவற்றிற்குக் காற்று எமன். ஆகவே, பெண்ணின் மறையுறுப்பு காற்றை சுவாசிக்கவில்லையென்றால் – அதற்கு நாம் காற்றை ஊட்டவில்லயென்றால் – மானுடத்தின் அழிவு அங்கேயே துவங்கத் தடையேதுமில்லை என்றேன்.

    நீங்கள் சொல்வது உண்மையா ? இங்கே எங்கள் பெண்கள் பெரும்பாலும் இறுக்க உடைகளைத் தானே அணிகிறார்கள் . அப்படியென்றால் எங்கள் பெண்களின் உடல் நிலை ஆரோக்கியமாய் இல்லை என்கிறீர்களா என்றார் .

    உங்கள் பெண்கள் மட்டுமல்ல எங்கள் பெண்களும் கூட இறுக்க உடைகள் உடுத்தத் தொடங்கி யாயிற்று . 1993யிலேயே உங்கள் நாட்டில் இறுக்க உடைகளால் உடல்நலக்கோளாறு விளைவதை மருத்துவ உலகம் வெளியிட்டது. அதற்கு , “Tight Pant Syndrome” என்று பெயர் வைத்தது. மறையுறுப்பு சம்பந்தமான பிரச்சனைகளோடு மருத்துவரிடம் வரும் பெண்களின் எண்ணிக்கை உங்கள் நாட்டில் கடந்த 25 ஆண்டுகளில் மிக அதிகமாக அதிகரித்திருக்கிறது. எங்கள் நாட்டில் அது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலோர் இளம்பெண்களே. மறையுறுப்பு சம்பந்தமான பிரச்சனைகளோடு வரும் பெண்களில் இன்று 96% வெள்ளைப் படுதலுடன் வருகிறார்கள் (முன்பெல்லாம் வெள்ளைப்படுதல் என்று அழைத்தது இப்போது மஞ்சள் படுதல் பச்சைப்படுதல் என்று சொல்லுமளவுக்கு , கொஞ்சம் காட்டமான தொற்று காணப்படுவதாக அறிகிறோம்); இவர்களில் 17% பெண்களுக்கு மறையுறுப்பில் நமைச்சலும் எரிச்சலும் உள்ளது; இவர்களில் 5% பெண்கள் மிகுந்த துர்வாடையோடு வருகிறார்கள்; 3% பெண்கள் அடிவயிற்றில் வலியோடு வருகிறார்கள் ; 2% பெண்கள் சிறுநீர் கழிக்கும்போது தாங்கொணா வலியோடு வருகிறார்கள் எனப்பார்க்கிறோம் . மேலும் கருத்தரிக்க இயலாத பிரச்சனை இன்று உலக அளவில் அதிகரித்து வருகிறது.

    அவருடன் நான் தொடர்ந்து பேசியது பற்றி மேலும் பேசுவோம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    Single Line….Super Keshav….!
    ———————————————–

    180223 - eka rekha lr 24x32 cms
    180223 – eka rekha lr 24×32 cms

    ” சிங்கமாய் வந்தவர் ஸிங்கிலாய் வந்துளார்,
    அங்கமோர் லைனில்(LION) அமைந்துளார்-செங்கண்மால்
    பூமத்ய(அவதாரக் கண்ணன்) ரேகையில் போட்டெடுத்து, ஏகாக்ர
    சூமந்த்ர காளி, சுகம்”….!
    (OR)
    சித்திரம் கேசவ்ஜி சூப்பரும்(சூப்பர் உம்) கைவண்ண,
    பத்திரக் காளி பிரதர்(Brother-கண்ணன்)’’….கிரேசி மொகன்

    Share
  • ரமணம்

     

    ”உள்ளம் உருகுதய்யா’’….மெட்டில்….!
    ——————————————————————————–

     

     

    “அருணை முன்னாடி உள் -கந்தன்
    கருணைக் கண்ணாடி யுள்
    நானாறு முகம் தோன்றும் -நடேசக்
    கோனாரு மகன் போன்று
    எருமையில் மரணம் செல்லும் -ரமண
    மரணம் முடிவில் வெல்லும்

    அயனரி அரன் போற்றும் -முருகர்
    தயரத ராம் மருகர்
    சுந்தரம் பிள்ளையைப்(ரமணர் அப்பா) போல் -வேறு
    மந்திரம் இல்லையடா (தொடரலாமா….!)….!கிரேசி மோகன்….!

    உள்ளம் உருகுதய்யா -ரமணர்
    உள்ளது நாற்பதய்யா
    அகந்தை பனைமரக் கள்ளு -ஆன்மச்
    சுகம் ‘’தைதையெனத்’’ துள்ளு…..!

    நானார் விசாரிப்பு -சாப்பிடும்
    ஐயாறு அரிசி உப்பு….
    பிணம்சுடு கழியினைப்போல் -உந்தன்
    மனம்சுடு வழியினைப்பார்….கிரேசி மோகன்…..!
    ’’அஷரமணமாலைத் தந்தவர்
    இஷணம் வந்திடுவார்
    பஷணம் ஆன்மாவைத் -குரு
    தஷிணை ‘’நானார்தான்’’….கிரேசி மோகன்….!

    அன்னைக்கு ஒரு கோயில் -லஷ்மி(பசு)
    ஆவிற்க்கு ஒரு கோயில்…..
    கட்டிய ரமண முனி -காலைக்
    கட்டிடக் கையில் கனி(ஆன்மக் கனி)….கிரேசி மோகன்….!

     

    Share
  • தலைநிமிர்ந்து நின்றிடுவாய்!

    -எம் . ஜெயராமசர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

    அம்மாவைப்   பிடிக்காதார்
    அகிலத்தில்  ஆருமுண்டோ?
    அம்மாவின் அணைப்பினிலே
    அகமகிழ்வார் அனைவருமே
    அம்மாவின் பாலோடு
    கலந்ததுவே அன்னைமொழி
    ஆதலால் காதலுடன்
    அகம்நிறைப்போம் அன்னைமொழி!

    தாய்மொழியைப்  பழிப்பாரை
    சந்ததியே மதிக்காது
    தாய்கூட   அவர்க்கெல்லாம்
    தயைகூடக்  காட்டாரே
    தாயொதுக்கி  நின்றுவிடின்
    தயைபுரிவார் யாருளரோ
    தாய்மொழியைப்  புறந்தள்ளி
    வாழ்ந்துவிடல்  முறையாமோ!

    மொழிகாக்கப்   பலபோர்கள்
    முழுவீச்சாய்  நடக்கிறது
    மொழிக்காகப் பலபேரும்
    ஈந்தளித்தார் இன்னுயிரை
    மொழிவீழின் கலாசாரம்
    முழுவதுமே வீழ்ந்துவிடும்
    மொழிதன்னை விழிபோலக்
    காத்திடுவோம் வாருங்கள்!

    தாய்மொழியில்  பேசுவதைத்
    தலைகுனிவு எனநினைக்கும்
    தாழ்வுமனப்  பான்மைதனைத்
    தகர்த்தெறியச் செய்திடுவோம்
    தாய்தன்னைப் பழித்திடுவார்
    தரமிழந்தே போயிடுவார்
    தாய்மொழியும்  தாய்போலத்
    தானெமக்கு இருக்கிறதே!

    அடிபட்ட   வுடனேநாம்
    அம்மா  வென்றலறுகிறோம்
    அன்னைமொழி அகமதிலே
    அமர்ந்தேயே இருக்கிறது
    அடிமைத்தனம் அகமுறைவோர்
    அன்னைமொழி தனைவெறுப்பார்
    ஆனந்தம் வேண்டுமெனில்
    அன்னைமொழி அரவணைப்போம்!

    தாய்மொழியில்  பேசிப்பார்
    சந்தோசம் நிறைந்துவிடும்
    தாய்மொழியில் எழுதிப்பார்
    சர்வமுமே உனக்குள்வரும்
    தாய்மொழியை வாழ்வெல்லாம்
    தாங்கிநின்று  நீபாரு
    தலைநிமிர்ந்து  இவ்வுலகில்
    தான்நீயும் நின்றிடுவாய்!

     

     

     

    Share
  • முரண்பாடு….!

     

    ஆ. செந்தில் குமார்

     

     

    அணுவின் உருவம் மிகச்சிறிது
    அதில் பொதிந்துள ஆற்றல் அளப்பரிது!
    அழகாய் தோன்றும் கடல்தனிலே
    ஆழிப் பேரலை மறைந்துளதே!

    அருவெறுப்பான சேற்றினிலே
    அழகாய்த் தாமரை மலர்கிறதே!
    அழகே உருவான பாம்பிடமோ
    ஆளைக் கொல்லும் நஞ்சுளதே!

    கரியென்றொதுக்கும் பொருள்தனிலே
    கட்டி வைரங்கள் விளைகிறதே!
    குயிலின் நிறமே கருப்பாரும்
    குரலின் வளமே அதன் சிறப்பாகும்!

    சில்லென்றிருக்கும் தென்றலுமே
    சீற்றம் கொண்டால் புயலாகும்!
    பொருமையின் உருவே பூமிப்பந்து – அதில்
    பூகம்பம் என்பது புதைந்துளதே!

    உன்னத உறவே வாழ்க்கைத்துணை – அதில்
    உலுக்கும் போராட்டம் ஏராளம்!
    என்னே என்னே விந்தையிது
    எங்கும் நிறைந்தவன் படைப்பினிலே!

    அழகில் ஆபத்து நிறைந்துளது
    அருவெறுப்பில் அழகும் கலந்துளது!
    பெருமையில் இருக்கும் சிறுமைத்தனம்
    சிறுமையில் இருக்கும் பெருமை குணம்!

    ஏனோ இந்த முரண்பாடு – என்பதை
    எண்ணி வியக்கின்றேன்!
    இன்பம் துன்பம் எல்லாமே
    இரண்டறக் கலந்ததே வாழ்கையன்றோ!

    தோற்றப் பொருட்கள் எல்லாமே
    மாற்றம் நோக்கிச் செல்வதற்கே!
    இந்த உடலே நாளை மண்ணாகும்
    அந்த மண்ணும் மறுபடி உயிர் பெறுமே!

    மறை பொருளாம் இறைநிலையே
    மானிடர் நமக்கு உரைக்கின்ற
    உலகியற்கை இதுவன்றோ! – இதை
    உணர்ந்தே நாமும் வாழ்ந்திடுவோம்!

    Share