Blog

  • நலம் .. நலமறிய ஆவல் (95)

    நிர்மலா ராகவன்

    நலம்-1-1-1-1

    நல்லதொரு தாம்பத்தியம் என்றால், இரு சாராரும் பிணைப்பால் நன்மை பெறுவதாக இருக்கவேண்டும்.

    நமக்கு நெருங்கியவர்கள் மகிழ்ச்சியையும், அமைதியையும் அளிப்பவர்களாக இருக்க வேண்டுவது அவசியம். மாறாக, `இப்படிச் செய்தால் அவர் என்ன சொல்வாரோ?’ என்ற பயமெழ, எந்த காரியம் செய்யுமுன்னரும் தயக்கம் ஏற்பட்டால், மன இறுக்கத்தைத் தவிர்க்க முடியாது.

    கதை

    முனைவர் பட்டம் வாங்கிய ஸாரா ஒரு மலாய் பெண். அவள் இருமுறை பத்திரிகையில் எழுதியவற்றிற்குப் நல்ல வரவேற்பு இருந்தது.

    “ஏன் அதற்குப்பின் நீங்கள் எழுதவேயில்லை?” என்று கேட்டேன்.

    “அவை வெளிவந்தபோது, பல தினங்கள் என் கணவர் என்னுடன் பேசவேயில்லை,” என்று பதிலளித்தாள். குரலில் வருத்தமில்லை. லேசான சிரிப்புடன், “ஆண்கள் அப்படித்தான்!” என்றாள்.

    ஸாராவைப் பொறுத்தவரை, குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டுமானால் கணவர் ஆத்திரப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

    அவர் அவளைக் கட்டுப்படுத்தக் கையாண்ட வழி அவளை அலட்சியப்படுத்துவது.

    `உங்களுக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, நான் எழுதிக்கொண்டுதான் இருப்பேன்!’ என்று ஆரம்பத்திலேயே ஸாரா திட்டவட்டமாகக் கூறியிருந்தால், கணவர் தொடர்ந்து எதிர்த்திருக்கமாட்டார்.

    மனைவி தன்னைவிட அதிக வளர்ச்சியடைந்தால் தன்னை மதிக்க மாட்டாளோ என்ற பொறாமை கலந்த பயத்துடன், நண்பர்கள் கேலி செய்வார்களே என்பதும் சேர்ந்து ஒரு சில ஆண்களை இப்படி ஆட்டுவிக்கிறது.

    அலட்சியம் காட்டுவது, ஆத்திரப்படுவது, மட்டம் தட்டுவது — இதெல்லாம் ஒருவரைக் கட்டுப்படுத்தும் ஆயுதங்கள். உடல் வதையைவிட உணர்ச்சிபூர்வமான வதையால்தான் பாதிப்பு அதிகம்.

    முதலில் அடங்கிப்போனால், `என்னை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம். உங்களுக்கு அந்த உரிமை இருக்கிறது!’ என்று அனுமதி கொடுத்தாற்போல் ஆகிவிடும் அபாயமுண்டு.

    கதை

    தன்னைவிட மனைவி பெரிய பதவியில் இருந்ததை ஆரம்பத்தில் பெருமையாக நினைத்த சந்திரன் தன் தொழிலில் தோல்வியுற்றதும் மாறிப்போனார். மனைவி தன்னைக் குறைத்து மதிப்பிட்டுவிடப்போகிறாளே என்றஞ்சி, தன் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்ள முயன்றார். வார்த்தைக்கு வார்த்தை, `முட்டாள்’ என்று அவளைப் பழித்தார் — பலர் முன்னிலையில்.

    தனிமையில், பேச்சாலோ, அழுகையாலோ எதிர்த்தால், “உனக்கு எதையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ளத் தெரியாது. சும்மா ஜோக்தானே!” என்றுவிடுவார், அலட்சியமாக. அவரைப் பொறுத்தவரை, அவருக்கு மட்டும்தான் உணர்ச்சிகள் உண்டு.

    அவள் அவரது வார்த்தைகள் தன் காதில் விழாததுபோல் இருக்கத் தலைப்பட்டாள். முகத்தில் எந்தவித உணர்ச்சியும் காட்ட மாட்டாள். தான் கோபித்துக் கத்தினாலோ, எதிர்த்துப் பேசினாலோ நிலவரம் இன்னும் மோசமாகிவிடும் என்று புரிந்து, அடங்கிப்போனாள். அதனால் பல வகையான உடல் உபாதைகள் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை.

    கணவர் எப்போதாவது அவளைப் புகழ்வார். பரிசுப்பொருட்கள் வாங்கியளிப்பார். இதனால் அவருக்கு அவளைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கிடையாது என்பதில்லை. தனக்குக் குற்ற உணர்ச்சி ஏற்படாது பார்த்துக்கொள்கிறார். அவ்வளவுதான். பிறருக்கும் உணர்ச்சிகள் இருக்கலாம் என்பது இவரைப் போன்றவர்களுக்குப் புரிவதில்லை.

    தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொள்ளத் தெரியாது, பிறரைக் கட்டுப்படுத்த நினைப்பவர் வீரரல்ல. இவர் பயந்தவர். ஒருக்கால் இவர் தவறு செய்தாலும், செய்யவே இல்லை என்று முதலில் சாதித்துவிட்டு, பிறகு பழியை வேறு ஒருவர்மேல் சுமத்துவார்.

    ஆணோ, பெண்ணோ, தம்பதியரில் ஒருவரை ஒருவர் கட்டுப்படுத்துதலில் வித்தியாசம் கிடையாது. யார் கை ஓங்கி இருக்கிறது, யார் அதிகமாக விட்டுக்கொடுத்துப்போவார் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

    கதை

    பத்து வயதுக்குமேல் வித்தியாசமாக இருந்த தம்பதிகளில் இளையவளான அருணா ஓயாமல் கணவரைப் பழிப்பாள். அவர் தனக்கு நிகரில்லை, வழுக்கை வேறு என்று ஏதேதோ குறைகள் அவளுக்கு.

    தன்மேல்தான் குறை என்று மனைவிக்கு விட்டுக்கொடுத்தே பழகியவருக்கு இறுதியில் பொறுக்கவே முடியாது போய்விட, உணவு உட்கொள்ளவே மறுத்தார் — மரணம்தான் தனக்கு விடுதலை அளிக்கவல்லது என்று முடிவு செய்தவர்போல.

    எல்லா ஆண்களும் இப்படி இருப்பதில்லை. பலர், `அவள் அப்படித்தான்! எல்லாவற்றிற்கும் கத்துவாள்,’ என்று அலட்சியப்படுத்திவிட்டு வெளியே போய்விடுவார்கள். நண்பர்களுடனாவது உல்லாசமாக இருக்கலாமே! இதனால் இவர்களுடைய சுதந்திரம் குறைந்து போவதில்லை.

    இவனா தலைவன்?!

    குடும்பத்தில் மட்டுமின்றி, பொது அமைப்புகளில் இருப்பவர்களும் தம்மைத்தாமே தலைவன் என்று நினைத்துக்கொள்வது வழக்கம்.

    `நான் சொல்வதுதான் சரி. ஏனெனில் நான் தலைவன்!’

    தலைவன் என்ற ஆணவம் இருப்பதால் பிறர் என்ன செய்யவேண்டும் என்பதையும் தானே நிர்ணயிக்கும் உரிமையை எடுத்துக்கொள்வார். தன் கீழ் இருக்கும் அனைவரும் தன் விருப்பப்படிதான் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார். யாராவது மறுத்தால், `தலைவரது’ கோபத்துக்கு ஆளாகத் தயாராக இருக்கவேண்டும்.

    எப்படிக் கண்டுபிடிப்பது?

    கட்டுப்படுத்துபவர்களுக்குச் சில பொதுவான குணங்கள் உண்டு.

    பிறர் பேசுவதைக் கேட்பதைவிடத் தாமே பேசுவது அதிகம். (ஆசிரியர்கள் விதிவிலக்கு!)

    கோபம், எதிலும் எதிர்மறையான அணுகுமுறை, கூசாமல் பொய்யுரைப்பது இதெல்லாம் இவர்களுக்குக் கைவந்த கலை.

    பிறரிடம் ஓயாது தப்பு கண்டுபிடிப்பார். ஆனால், அவர் செய்த தவற்றை யாரேனும் சுட்டிக் காட்டினால், அவர் தன்னை மோசமாக நடத்துவதுபோல் பாவனை செய்வார்.

    தனக்குப் பயந்து நடக்காதவர்களை, அடிமையாக இருக்க விரும்பாதவர்களை இகழ்வார். (`அவங்க ஒருமாதிரி! ராங்கி பிடிச்சவங்க!’)

    பிறருக்குத் தன்மேல் பரிதாபம் உண்டாக்க முயற்சி செய்வார். (`நான் உங்களுக்காக எவ்வளவு செய்யறேன்!’)

    இந்தத் தலைவரைச் சார்ந்திருந்தால் நமக்குத்தான் நன்மை என்று பிறரும் அவருக்குப் பிடிக்காதவர்களிடமிருந்து ஒதுங்கிவிடுவர். தனிமைப்படுத்தப்பட்டவர் பொறுக்க முடியாது, தாழ்ந்துபோவதும் உண்டு.

    தப்பிக்க வழி உண்டா?

    நம்மைப் பலகீனமாக ஆக்க பெருமுயற்சி எடுப்பவர்களுடன் மோதுவதோ, மாற்றுவதோ இயலாத காரியம். ஆனால், நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ள முடியும். நம்மை அடிமைப்படுத்த நினைக்கும் இம்மாதிரியான `விஷ ஜந்து’க்களிடமிருந்து ஒதுங்கிவிட வேண்டும். பிடிக்காததை ஏற்பானேன்!

    மகிழ்ச்சியாக இருக்கத் தெரியாதவர்கள்தாம் பிறர் மகிழ்ச்சியைப் பறிக்க நினைக்கிறார்கள். இது புரிந்தால், நாம் கோபப்பட்டு, நம்மையே வருத்திக்கொள்ளத் தேவையில்லை. அவர்கள்மேல் பரிதாபம்கூட கொள்ள முடியும். பாவம், உடல் வளர்ந்தும், சிறுபிள்ளைத்தனம் மாறாது, வளர்ச்சி குன்றிப்போய் இருக்கிறவர்கள்!

    தானும் வாழ்ந்து, பிறரையும் வாழவைத்தால் மகிழ்ச்சி இரட்டிப்பாக ஆகும் என்பது புரியாதவர்கள்!

    தொடருவோம்

    Share
  • பெரியாழ்வார் பாசுரங்களில் சடங்குகள்

     

    -முனைவா்.பா.பொன்னி

    இலக்கியம் காலத்திற்கு ஏற்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் தன்மை வாய்ந்தது. காலத்திற்கு ஏற்ற வடிவத்தில் தன்னை வெளிப்படுத்தும்போது அது தன் காலத்தையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. மனிதா்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தாலும் அவா்களின் குறிப்பிட்ட சில பண்புகளும், நம்பிக்கைகளும், சடங்குகளும் மாறாதிருப்பது கண்கூடு. பெரியாழ்வார் பாசுரங்களில் சுட்டப்படும் சிலசடங்கு முறைகள் சங்க காலம் தொட்டு இன்று வரையும் நடைமுறையில் இருப்பதனைக் காணமுடிகிறது. பண்பாட்டு மானுடவியல் அடிப்படையில் இச்சடங்குகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    மானுடவியல்

    மனித இனத்தைப் பற்றி ஆராயும் துறை மானிடவியல் ஆகும்.  Anthropology என்ற சொல்லுக்கு the study of the man என்பது பொருள். மனிதனைப் பற்றி ஆராயும் அறிவுத்துறை மானிடவியல் எனப்படுகிறது. மேலும் “மானிடவியல் என்பது மானிடத் தோற்றம், உடலியல் தோற்றம், பண்பாட்டு வளர்ச்சி, இனவகைப்பாடு, சமுதாய முறைமைகள்,  மனித நம்பிக்கைகள் எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு மரபு சார்ந்த வெளிப்பாடு என்று சொல்லலாம்” ( கழகத்தமிழ் அகராதி கழகவெளியீடு ப.108 ) என்று அகராதி விளக்கம் அளிக்கிறது.

    மேலும் “மானிடவியல் என்னும் அறிவியல் துறை, மனித இனம் அதன் பண்பாடு, சமூகங்களின் அமைப்புகள், பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள், உறவுமுறைகள், மொழிகூறுபாடுகள் ஆகியவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு முழுமனிதனை அடையாளம் காணமுயலுகின்றது” (ப.மருதநாயகம் தமிழா் மானுடவியல் ப.93 ) என்று குறிப்பிடுவா்.

    மானுடவியலின் வகைகள்

    மானுடவியலின் எல்லை பரந்து விரிந்தது. ஆகவே ஆய்வாளா்கள் ஒரு குறிப்பிட்ட பரப்பினை மட்டுமே தோ்ந்தெடுத்து ஆய்வினை மேற்கொள்கின்றனா்.இதன் அடிப்படையில் மானுடவியலை நான்கு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கின்றனா்.அவை

    1. உடல்சார் மானிடவியல்
    2. பண்பாட்டு மானிடவியல்
    3. தொல்லியல்
    4. மொழியியல்

    எனும் நான்கு வகையாகும். இவற்றுள் பண்பாட்டு மானிடவியல் அடிப்படையில் பெரியாழ்வார் பாசுரங்களில் இடம் பெறும் சடங்குகளை ஆராய இயலுகின்றது.

    பண்பாட்டு மானிடவியல்

     உலகம் முழுவதிலும் எண்ணிலடங்கா வகைகளில் பரவி வாழும் சமுதாயங்களின் பண்பாட்டை காலப் பரிமாணங்களுடன் ஆராயும் மானிடவியல் பிரிவே பண்பாட்டு மானிடவியலாகும்.

    “பண்பாட்டு மானிடவியல் என்பது பின்பற்றப்பட்ட அல்லது வளா்க்கப்பட்ட அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட சமூக ஒழுகலாறுகளை விவரிப்பதாகும்” ( இரா.முருகன் சங்கப்பாடல்களில் தொல்குடிக்கூறுகள் ப.6 ) என்பா்.

    பண்பாடு

    பண்பாடு என்பது மக்களால் மரபுவழியாகப் பின்பற்றப்பட்டு வருவது. தலைமுறை தலைமுறைகளாக மனிதா்களின் நடத்தை முறைகளைப் பற்றிக் குறிப்பிடுவது. “ பண்பாடு என்பது கற்றுக் கொள்வதற்கான ஆற்றலும் தான் கற்றதை அடுத்த சந்ததியினருக்கு எடுத்துச் செல்லம் ஆற்றலும் மனிதருக்கு இயல்பாகக் கைவரப் பெற்றவை. இந்த ஆற்றல்களின் விளைவாக அவனுக்கு ஏற்படக் கூடிய அறிவு நம்பிக்கை அவனுடைய நடவடிக்கை ஆகியவற்றின் கலவையே பண்பாடு ( அல்லது கலாச்சாரம் ) எனப்படுகிறது ” ( பிரிட்டானியா தகவல் களஞ்சியம் ப.161 ) என்று பிரிட்டானியா தகவல் களஞ்சியம் விளக்கம் தருகிறது.

    முந்தைய தலைமுறையில் பின்பற்றப்பட்ட பழக்கவழக்கம், சடங்குகள் ,நம்பிக்கைகள் போன்றவை மரபு வழியாகப் பின்பற்றப் பட்டு வருவதனைப் பண்பாடு எனலாம்.

    சடங்குகள்

    மனிதனின் வாழ்வோடு பல சடங்குகள் உள்ளன. பிறப்பு, பெயா் சூட்டுதல், காதுகுத்துதல், பூப்படைதல், திருமணம், வளைகாப்பு, இறப்பு ஆகியவற்றோடு தொடா்புடைய சடங்குகள் மக்கள் வாழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.

    சடங்கு என்பது சாஸ்திர விதி பற்றியும் வழக்கம் பற்றியும் அனுஷ்டிக்கும் கிரியை ” ( தமிழ் பேரகராதி ப.24 ) என்பா். பொதுவாக சடங்குகள் என்பன மனிதனோடும் இனக்குழுவோடும் தொடர்புடையனவாக அமைவன. இதனையே “குறிப்பிட்ட நிகழ்ச்சிகள் தொடா்ந்து மக்களால் கைக்கொள்ளப் படுமாயின் அவை சடங்குகள் எனப் பெயா்பெறுகின்றன ”( சு.சண்முக சுந்தரம் நாட்டுப்புற இயல் ஆய்வு ப. 123 ) என்பா். பெரும்பான்மையான சடங்குகள் அச்சத்தின் விளைவாகவே மேற்கொள்ளப்படுவதாக அமைகின்றன. பெரியாழ்வார் பாசுரங்களில்  காப்பிடுதல், ஐம்படைத்தாலி அணிவித்தல், காதுகுத்துதல் போன்ற சடங்கு முறைகளைக் காணமுடிகிறது.

    காப்பிடுதல்

    யசோதனை பாவனை ஏற்றுப் பாடும் பெரியாழ்வார் யசோதையாகவே மாறி கண்ணனுக்குக் கண்ணேறு வராதபடிக் காப்பிட எண்ணுகிறார். நடைமுறை வாழ்விலும் குழந்தைகளுக்குக் கண்ணேறு கழிப்புச் செய்வதுண்டு. சில கண்களுக்குத் தீமை விளைவிக்கும் சக்தி உண்டு. எனவே அத்தகையோரது கண்பட்டால் குழந்தைக்கு நோய்நொடி வரும் என்று நம்புகின்றனா். எனவே தான் கல்லடி பட்டாலும் கண்ணடி படக் கூடாது என்பா்.( சு.சக்தி வேல் நாட்டுப்புற இயல் ஆய்வு ப 12 ) கண்ணனுக்குக் கண்ணேறு பாடாமல் இருப்பதற்காகவும் அந்திப்பொழுதில் தீய சக்திகள் அவனை நெருங்காமல் இருப்பதற்காகவும் யசோதை கண்ணனைக் காப்பிட்டுக் கொள்ள அழைப்பதாகப் பெரியாழ்வார் பாடியுள்ளார். 

    ”மன்றில்நில் லேலந்திப் போது மதில்திரு வெள்ளறை நி்ன்றாய்
    நன்றுகண் டாயென்றன் சொல்லு நானுன்னைக் காப்பிட வாராய்” ( பெரியாழ்வார் திருமொழி 2 – 8   2 ) என்ற அடிகளில் அந்தி வேளையில் கெட்ட தேவதைகள் நாற்சந்தியில் நிற்கும் என்ற நம்பிக்கை வழிப்பட்ட சடங்கினை அறியமுடிகிறது.

    இருக்கு வேதம் கூறிக்கொண்டு நல்ல நீரினை சங்கிலே கொண்டு வந்து பிராமணா்கள் இரட்சையிட வந்துள்ளார்கள். இரட்சையிட அந்தி விளக்கை ஏற்றுவேன் என்று யசோதை கூறுகிறாள்.

    இருக்கொடு நீர்ச்சங்கிற் கொண்டிட்
    டெழில்மறை யோர்வந்து நின்றார்
    தருக்கேல்நம் பிசந்தி நின்று
    தாள்சொல்லுக் கொள்ளாய் சிலநாள்
    திருக்காப்பு நானுன்னைச் சாத்தத்
    தேசுடை வெள்ளறை நின்றாய்
    உருக்காட்டு மந்தி விளக்கின்
    றொளிகொள்ள ஏற்றுகேன் வாராய் (பெரியாழ்வார் திருமொழி 2  – 8  9 )

    என்ற பாசுரத்தால் அந்தணா்கள் அந்திப்பொழுதில் விளக்கேற்றி சங்கிலே நீர்கொண்டு மந்திரம் கூறிக்காப்பிடுவா்  என்பதனை அறியலாகின்றது.குழந்தைகளுக்கு கண்ணேறு பட்டு விடக் கூடாது என்ற அச்சத்தின் விளைவாக காப்பிடப்படுவதனை இதன் வழி அறியலாகின்றது. இன்றும் கண்ணேறு படக் கூடாது என்பதற்காகக் கோவில்களில் கயறு வாங்கிக் கட்டும் பழக்கம் இருப்பதனைக் காணலாம். 

    ஐம்படைத்தாலி அணிவித்தல்

    குழந்தைகளுக்கு பயம் இல்லாமல் இருப்பதற்காகத் தாயத்து கட்டும் பழக்கம் இன்றும் மக்களிடையே நிலவுகின்றது. அரையிலோ கழுத்திலோ இதனைக் கட்டுகின்றனா். சங்க காலத்தில் சிறுவா்க்குப் புலிப்பல்லைக் கோர்த்து பொன்னால் ஆன தாலியை அணிவித்தமையை,

    ………………………….. பொன்னோடு
    புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி ( அகம் 7  17 – 18 )

    என்ற பாடலடிகளின் வழி அறியமுடிகிறது.“பழங்காலத்தில் புலிப்பல் தாலி அணிந்தமையே காலப்போக்கில் ஐம்படைத்தாலியாக மாற்றம் பெற்றதாக உறுதி செய்யலாம்.மேலும் இது சிறுவா்க்குரிய காப்பணியாகக் கருதப்பட்டதையே  இலக்கியங்கள் சுட்டுகின்றன”( க.காந்தி தமிழா் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் ப .12 ) என்பா். கண்ணன் கழுத்தில் ஆமைத்தாலி இருந்தமையை,

    அக்கு வடமுடுத் தாமைத் தாலி பூண்ட அனந்த சயனன்
    ( பெரியாழ்வார் திருமொழி 1 – 8  2 ) என்பதாலும்,

    தாலிக்கொ ழுந்தைத் தடங்கழுத் தில்பூண்டு ( பெரியாழ்வார் திருமொழி 2 – 6  1 )என்பதாலும்,

    எழிலார் திருமார்வுக் கேற்கு மிவையென்று
    அழகிய ஐம்படையும் ஆரமுங் கொண்டு
    வழுவில் கொடையான் வயிச்சி ரவணன்
    தொழுதுவ னாய் நின்றான் தாலேலோ                ( பெரியாழ்வார் திருமொழி  1 – 4  5 )

    என்பதாலும் அறியலாம். ஐம்படைத்தாலி என்பது காத்தற்கடவுளான திருமாலின் சங்கு, சக்கரம், கதை, வில், வாள் என்னும் ஆயுதங்கள் போலே பொன்னால் செய்யப்படுவது. திருமாலின் ஆயுதங்களையே காப்பாகக் குழந்தைக் கண்ணனுக்கு யசோதை அணிவிக்கிறாள்.கண்ணனின் மார்பில் ஐம்படைத்தாலி இருந்தமையை,

    மங்கல வைம்படையும் தோன்வளை யும்குழையும்
                    ( பெரியாழ்வார் திருமொழி  1 – 6   10 )

    என்பதாலும் தெரியலாம். ஐம்படைத்தாலி அணிதல் என்னும் வழக்கம் சங்ககாலம் தொட்டு இன்று வரை நடைமுறையில் இருப்பதையும் அறியலாகின்றது.

    காதுகுத்துதல்

    ஆண்குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் காதுகுத்தும் மரபு தமிழா்களிடையே தொன்றுதொட்டு நிலவி வருகிறது. “குழந்தைக்குச் சிறுகாயம் ஏற்படாவிட்டால் எமன் குழந்தையைத் தூக்கிச் சென்று விடுவான் என்ற நம்பிக்கையின் காரணமாகக் காதுகுத்தும் வழக்கம் தமிழகத்தில் தோன்றி இருக்க வேண்டும். காதுகுத்தும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமின்றி ஆசியா, எகிப்து போன்ற நாடுகளிலும் காணப்படுகின்றது. காதுகுத்தும்போது ஏதேனும் உலோகத்தையும் அணிவிப்பா். தீமை தரும் ஆவிகள் தலை, வாய், மூக்கு, காது ஆகிய உறுப்புகள் வழியாக எளிதில் புகுந்து விடும் என்ற நம்பிக்கையில் காதில் துளையிட்டுத் தீய ஆவிகளை விரட்டும் சக்தியாக ஏதேனும் ஓா் உலோகத்தை அணிவித்தால் காது வழியாகத் தீய ஆவி நுழைவதைத் தடுத்து விடலாம் என்ற நம்பிக்கையில் இப்பழக்கம் ஏற்பட்டு இருக்கலாம். காது குத்தும் சடங்கிற்கு இத்தகைய நம்பிக்கைகள் அடிப்படைக் காரணமாக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.”( சு.சக்திவேல் நாட்டுப்புற இயல் ஆய்வு ப -.195 )

    பெரியாழ்வார் பாசுரங்களிலும் பெரியாழ்வார் யசோதையாக மாறி கண்ணனைக் காதுகுத்த அழைக்கும் பாசுரங்களைக் காணமுடிகிறது.

    போய்ப்பா டுடையநின் தந்தையும் தாழ்த்தான்
    பொருதிறல் கஞ்சன் கடியன்
    காப்பாரு மில்லை கடல்வண்ணா உன்னைத்
    தனியேபோ யெங்கும் திரிதி
    பேய்ப்பால் முலையுண்ட பித்தனே கேசவ
    நம்பீஉன் னைக்காது குத்த
    ஆய்ப்பாலா் பெண்டுக ளெல்லாரும் வந்தார்
    அடைக்காய் திருத்திநான் வைத்தேன்                           ( பெரியாழ்வார் திருமொழி 2 – 3  1 )

    என்ற பாசுரத்தில் பெரியாழ்வார் பேய் முதலான தீயசக்திகள் கண்ணனை நெருங்கக் கூடாது என்பதற்காகவும் தனியே விளையாடச் செல்வதால் ஏற்படும் கேடுகளில் இருந்து காப்பதற்காகவும் காதுகுத்த வேண்டியதன் முதன்மையை விளக்கிச் செல்கிறார்.காதுகுத்தும் போது வெற்றிலை, பாக்கு வைப்பதனையும் குறிப்பிடுகிறார்.

    ”தலைநிலாப் போதேஉன் காதைப் பெருக்காதே
    விட்டிட்டேன் குற்றமே யன்றே”    (பெரியாழ்வார் திருமொழி  2 – 3   7 )

    என்ற பாசுர அடிகளில் குழந்தைகளுக்கு தலை நிற்பதன் முன்னமே காதுகுத்துவது வழக்கம் என்பதனை அறியலாகின்றது.

    குழந்தைகளுக்கு தீய சக்திகளால் ஏற்படும் தீங்கினைத் தவிர்க்க மாலைவேளைகளில் வழிபாடு செய்வதும் கோவில்களில் சென்று காப்பு வாங்கிக் கட்டுவதும் இன்றும் நாம் நடைமுறை வாழ்வில் காணக் கூடிய ஒன்றாகும். கழுத்தில் தாயத்து அணிவிப்பது, காது குத்துவது ஆகியவை இன்றும் நம்மிடையே காணப்படுகின்றன.சங்க காலத்தில் காதுகுத்துவது பழக்கமாக இல்லாவிட்டாலும் அழகிற்காக சங்ககால மக்கள் மலா்களைக் காதில் அணிகலன் போல சூடியுள்ளனா். தற்காலத்தில் மருத்துவ பயன் கருதி காதுகுத்தும் வழக்கம் மேற்கொள்ளப்படுகின்றது. எவ்வாறாயினும் மனித மனங்களின் அடிப்படையில் ஏற்படக் கூடிய பயத்தின் விளைவாகவே சடங்கு முறைகள் வளா்ச்சி அடைகின்றன என்றால் அது மிகையாகாது. பெரியாழ்வார் பாசுரங்களிலும் அச்சத்தின் விளைவாக மேற்கொள்ளக் கூடிய சடங்குமுறைகளே குறிப்பிடப்பட்டிருப்பதனை இதன்வழி அறியலாகின்றது.

    *****

    துணைநூற்பட்டியல்

    1. காந்தி க தமிழா்கள்பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும் – உலக தமிழாராய்ச்சி நிறுவனம்
      சென்னை 2003.
    2. சக்திவேல் சு – நாட்டுப்புறஇயல் ஆய்வு
      மணிவாசகா் பதிப்பகம், சென்னை.
    3. மருதநாயகம் ப – தமிழா் மானிடவியல், மெய்யப்பன் தமிழாய்வகம், சிதம்பரம்,2002.
    4. முருகன் இரா – சங்கப் பாடல்களில் தொல்குடி கூறுகள், அறிவொளி பதிப்பகம், பாண்டிச்சேரி.
    5. கதிரைவேற் பிள்ளை – மதுரை தமிழ்ப் பேரகராதி,கோபால கிருஷ்ணகோன் வெளியீடு, மதுரை,1956.
    6. கழகத்தமிழ் அகராதி – கழகவெளியீடு
      திருநெல்வேலி, 1968.
    7. பிரிட்டானியா தகவல் களஞ்சியம் – என்சைக்ளோ பீடியா, பிரிட்டானிகா பிரைவேட் லிமிடெட், சென்னை

    *****

    கட்டுரையாளர்
    உதவிப்பேராசிரியா் மற்றும் துறைத்தலைவர்
    தி ஸ்டாண்டா்டு ஃபயா் ஒா்க்ஸ் இராசரத்தினம் மகளிர் கல்லூரி (தன்னாட்சி)
    சிவகாசி.

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே -8

    க. பாலசுப்பிரமணியன்

    வாழ்க்கைப் பயணமும் சவால்களும்

    வாழ்ந்து-பார்க்கலாமே

    ஒரு முறை ஒரு இளைஞன் தன்னுடைய வாழக்கையில் ஏற்பட்ட பல சோதனைகளைக் கண்டு துயருற்று இறைவனிடம் சென்று முறையிடுகின்றான். “இறைவா.. ஏன் இந்த ஒர வஞ்சனை? எனக்கு மட்டும் ஏன் இவ்வளவு துயர் கொடுக்கின்றாய்? ஒரு நாள் கூட நான் மகிழ்ச்சியை அறிந்ததில்லையே? என்னுடை உறவினரைப் பார். அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கின்றனர். என்னுடைய நண்பன் கூட எப்பொழுதும் சிரித்துக்கொண்டும் ஆடிக்கொண்டும் இருக்கின்றான். அவன் முகத்தில் துயரத்தின் நிழல் கூடத் தெரியவில்லையே . துயரத்தை மட்டும் சுமப்பதற்கு  என்னைப் படைத்தாயா? இது நியாயமா? உனக்கு இது தகுமா? இது தான் உன்னுடைய நடுநிலைப்பாடா?”

    இளைஞனின் துயரக்குரல் இறைவனையே சற்று அசைத்து விடுகின்றது. இறைவனும் இளைஞன் முன் தோன்றி :”மகனே. ஒரு வேலை செய். இன்று மாலை நான் இந்த ஊரில் இருக்கிற எல்லா இளைஞர்களையும் அவர்களுடைய துயரத்தை ஒரு மூட்டையில் கட்டி இந்தக் கோவில் மண்டபத்தில் வந்து வைத்துவிடச் சொல்கின்றேன். அதற்குப்பின் நீ வந்து உனக்கு எந்த மூட்டை வேண்டுமோ எதில் சுமை குறைவாக இருக்கின்றதோ அதை எடுத்துக்கொள்ளலாம்” எனக் கூறி மறைகின்றார்.

    அந்த இளைஞனும் அன்று மாலை சொன்ன நேரத்தில் தன்னுடைய துயரச் சுமைமூட்டையைத் தூக்கிச் சென்று அந்தக் கோவில் வளாகத்தில் வைத்துவிடுகின்றான். அவனைப் போலவே மற்றவரும் அங்கே வந்து தங்கள் சுமைகளை இறக்கி வைக்கின்றனர். சிறிது நேரம் கழித்து, இறைவன் கூறிய நேரத்தில் அவன் அங்கே சென்று தனக்கு வேண்டிய மூட்டையைத் தேடுகின்றான். அவனுக்கு ஒரே ஆச்சரியமாக இருக்கின்றது. எல்லா மூட்டைகளையும் விட அவனது மூட்டைதான் மிகவும் சிறிதாகவும் எளிதில் தூக்கக்கூடியதாகவும் இருக்கின்றது.

    வாழ்க்கையின் உண்மையே இதுதான். பல நேரங்களில் நாம் வாழ்க்கையில் நமக்குத்தான் அதிகப் பிரச்சனைகளும் அதிகத் துயரங்களும் வந்து சேருகின்றது என்று நினைக்கின்றோம். உண்மையில் அது நம் மனதிற்கு நாம் கொடுக்கும் ஒரு எண்ணமே. ஒரு உருவகமே. இந்த மாதிரியான நினைப்புக்கள், கருத்துக்கள் பல நேரங்களில் நம்மை வெற்றிப்பாதையிலிருந்து கீழே விழுவதற்கும் தன்னம்பிக்கையை இழந்துவிடுவதற்கும் துணை போகின்றன. வாழ்க்கையில் சவால்களைச் சந்திக்கும் பொழுதுதான் முன்னேற்றப்பாதையில் செல்ல தைரியமும் துணிச்சலும் கிடைக்கின்றது.

    பல நாட்களுக்கு முன்னே படித்த ஒரு கதை நினைவுக்கு வருகின்றது. ஒரு தோட்டக்காரன் தன்னுடைய நிலத்திலே சில விதைகளைத் தூவிச்  செல்லுகின்றான். இரண்டு விதைகள் அருகில் விழுகின்றன. இவற்றில் ஒன்று தன்னுடைய மேலுறையைக் கிழித்துக்கொண்டு எட்டிப் பார்க்கிறது.

    உடனே பக்கத்திலிருந்த விதையோ  “ஏய், என்ன முட்டாள்தனம் செய்கின்றாய். உள்ளேயே அடங்கிக் கிட. நீ வெளியே வந்தால் இந்த மண்ணோடு உறவாட வேண்டியிருக்கும். மேலும் வெய்யில், மழை காற்று போன்ற பல இடர்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். அமைதியாக இருக்கும் இடத்திலேயே இரு. சுகமாக இருக்கலாம்.”

    ஆனால் இந்த விதையோ  அதைக் காதில் வாங்கி கொள்ளாமல் இன்னும் கொஞ்சம் மேலே நோக்கியது. “அடேடே ! இதுதான் வெளிச்சமா?” விதைக்கு ஆச்சரியமாக இருந்தது. இன்னும் கொஞ்சம் தலையை வெளியே நீட்டியது.

    “ஐயோ! உந்தன் முடிவை நீயே தேடிக்கொள்கின்றாய் நீ மேலே சென்றால் காற்றும் மழையும் உன்னைத் தாக்கும்”இந்த விதையோ கேட்கவில்லை. இன்னும் கொஞ்சம் மேலே — காற்று, மழை, வெய்யில் போன்ற பல இடர்களைத் தொடர்ந்து எதிர்கொண்டது. ஒரு நாள் அது ஒரு பெரிய மரமாகிக்  காய்கனிகளுடன் நின்றது.

    “நான் அப்பொழுதே சொன்னேன் கேட்டாயா? எத்தனை பாரத்தைச் சுமந்து கொண்டு நிற்கின்றாய்.” என்று அந்த விதை இதை ஏளனம் செய்தது.

    அந்த நேரத்தில் பக்கத்தில் சென்ற பறவை ஒன்று கீழே இறங்கி உணவைத் தேடும் பொழுது இந்த விதையைப் பார்த்து ஒரே கணத்தில் அதை உண்டு ஜீரணித்தது.

    வாழ்க்கையும் அது போலத்தான். உழைத்து ஓடாவதா அல்லது துருப்பிடித்துத் தேய்வதா?  முடிவு நம் கைகளின் தான். போராட்டங்களுக்கும், சவால்களுக்கும் பயந்து நின்றால் வாழ்க்கையில் நம்மால் முன்னேற முடியாது. வெய்யிலில் காய்வதும், மழையில் நனைவதும், புயல் காற்றை எதிர்கொள்வதும் இயற்கை  நமக்குக் கற்றுக் கொடுக்கும் பாடம். துணிவே துணை என்று முதல் படியில் இருப்பவர்களுக்கு மீதிப்படிகள் இசைந்து விடும்.

    ஒரு தத்துவ மேதை கூறுகின்றார் “உன்னுள் இருக்கும் சக்தி உன்னைத் தாக்கும் சக்திகளை விட மிக வலிமையானது என்ற நம்பிக்கை உனக்கு இருக்க வேண்டும்.” ஒரு கப்பல் கடலில் செல்லும் பொழுது அடிக்கடி உயர்ந்து எழும் அலைகளையும் அசாதாரணமான  வானிலையையும் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் நங்கூரம் போடப்பட்ட கப்பலுக்கோ கவலை இல்லை.

    “துறைமுகத்தில் கப்பல்கள் பாதுக்காப்பாக இருக்கும். ஆனால் அவைகள் அதற்காகக் கட்டப்படுவதில்லை ” என்பது உண்மையான கருத்து. வாழ்க்கைக் கடலில்  நமது வாழ்வு என்ற கப்பல் செல்லும் பொழுது எதிர்பாராத சவால்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் பயணத்தைக் தொடங்கிவிட்டால் அது ஒரு இனிய பயணமாகத்தான் இருக்கும். ஒரு வினோதமான பயணமாகத்தான் இருக்கும். துணிந்து செல்பவனுக்கு வெற்றி முன்னாலேயே நிச்சயிக்கப்படுகின்றது. முயற்சி செய்யலாமே!

    வாழ்ந்து பார்க்கலாமே !

    Share
  • பூமியின் மையத்தில் உள்ளதாய்க் கருதப்படும் உலோகத் திரட்சி உட்கரு இருக்க வாய்ப்பில்லை என்று அறிவிக்கிறது புதிய கோட்பாடு

     

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா

    http://video.pbs.org/video/1790621534/

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=mCF2p5TvlQ4

    https://www.youtube.com/watch?feature=player_embedded&v=YTRP_lyBk7A

     

    சூரிய குடும்ப ஈர்ப்புப் பிணைப்பில்
    சுழல் கோள்கள்
    சுற்றிடும் விந்தை யென்ன ?
    ஒன்பது கோள்களில்  பூமி மட்டும்
    நீர்க் கோளான தென்ன ?
    நீள் வட்ட வீதியில் அண்டங்கள்
    மீள் சுற்றும் நியதி என்ன ?
    பூமியில் மட்டும்
    புல்லும், புழுவும், புறாவும், பசுவும்
    ஆறறிவு மானிடமும்
    பேரளவில் பெருகிய தென்ன ?
    பூமியின் உட்கரு திரவமா ?
    உலோகத் திரட்சியா ?  
    அணு உலை இயங்குவ தென்ன ?
    யுரேனஸ் கோள் அச்சும்
    சரிந்து போய்ச் சாய்ந்த தென்ன ?
    பரிதி மண்டலத்தில்
    வக்கிரமாய்ச் சுழன்று
    சுக்கிரன் மட்டும்
    திக்குமாறிப்
    போன தென்ன ?
    தன்னச்சில் சுழாமல் வெண்ணிலா
    முன்னழகைக் காட்டிப்
    பின்னழகை
    மறைப்ப தென்ன ?

    +++++++++++++++++

    பூமியின் உட்கரு பற்றிப் புதியதோர் கோட்பாடு

    4.2 பில்லியன் ஆண்டுகட்கு முன்பு விருத்தியான நமது பூமியின் உட்கரு இப்போது விஞ்ஞானிகள் நினைத்துள்ளது போல், பௌதிக விதிப்படி உலோகத் திடவ உட்கருவாய் [Solid Metallic Core] இருக்க வாய்ப்பில்லை என்று புதியதோர் கோட்பாடு “பூமி அண்டக் கோள் விஞ்ஞான வெளியீடில்”  [Earth and Planetary Science Letters Journal]  2018 பிப்ரவரி 9 தேதி  வெளிவந்துள்ளது.  அதாவது ஒரு பில்லியன் ஆண்டுகட்கு முன்பு ஒருநாள் பூமியின் உட்கருவுக்கு திடீர் அதிர்ச்சி நேர்ந்தது.  திரவ நிலையில் கோள வடிவில் இருந்த உலோக உட்கரு, உஷ்ணம் தணிர்ந்து, 760 மைல் [1220 கி.மீ] விட்ட உருண்டையாக, வெகு விரைவில் இப்போதுள்ளதுபோல் திரட்சிப் படிவமானது [Crystallized Rapidly].  இதுதான் இப்போது  உலகக் குழு விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொள்ளப் பட்டுள்ள கோட்பாடு.

    ஆனால் இப்போது புதிய கோட்பாடில் அமெரிக்க விஞ்ஞானி ஜேம்ஸ் வான் ஓர்மன் [Case Western Reserve University, Cleveland, OHIO, USA] கூறுவது என்னவென்றால், பிறந்த பேபி பூமியின் உட்கரு முழுதும் தூய ஓரினத் திரவம் இருந்திருக்குமாயின், அது திடவ வடிவு உருண்டையில் திரட்சியாகக் குளிர்ந்து போக  உஷ்ணத் தணிப்பாக்கம் புரிய ஒரு சாதனம் இல்லை.  கடந்த நெடுங்கால மாய். பூமியின் உட்கரு உலோகம் முழுக்க முழுக்க திரவ நிலையில்தான்  இருந்து வந்துள்ளது.  சில பூதளவியல் வாதிகள் கூறுவதுபோல் உட்கரு உலோகத் திரட்சியைச் சுற்றிலும் , இரண்டு, மூன்று அடுக்கு இரும்பும், எளிய மூலகங்கள் [Iron & Lighter Elements] கொண்ட  போர்வைகள் இருந்தன என்பதும் தவறே என்று சொல்கிறார் ஜேம்ஸ் ஓர்மன்.

    பூமியின் உட்கரு திடீரெனக் குளிரத் துவங்கி , வெப்பசக்தி இழந்து, பூகாந்த தளம் மெலிந்தது.  உட்கரு முற்றிலும் தணிந்து திடப்பொருளாய் ஆனதும், பூகாந்த சக்தி ஆற்றல் பெற்று, சூரியப் புயலிலிருந்தும், அகிலக் கதிர்களிலிருந்தும், பூகோளச் சூழ்வெளி பாதுகாக்கப் பட்டது. இந்த நிகழ்ச்சி பூமி தோன்றி ஆரம்ப காலத்தில் நேர்ந்திருக்க வேண்டும் என்று பெரும் பான்மையான விஞ்ஞானிகள் நம்பி இருக்க வேண்டும் என்று ஜேம்ஸ் ஓர்மன் கூறுகிறார்.  ஆனால் ஆராய்ச்சியாளர் அழுத்தமாய் அறிவிப்பது :  ஆரம்பத்தில் கூறப்பட்ட பூமியின் நிலைப்பகத் தோற்ற மாடலில் [The Standard Model of Earth] உட்கரு உலோகம் எப்படித் திடீரெனக் குளிர்ந்து படிவமானது [Crystallized], உட்கருவின் பூத அழுத்தத்தில், பேரளவு பளுவுக்கு உஷ்ணத் தணிவு எதனால் உண்டாக்க முடியும்  என்று கேள்வி எழுப்புகிறார்.  இந்த விளக்கம் இல்லாததால் இப்போது விஞ்ஞானம் சொல்வது, பூமியின் உட்கரு உலோக உருண்டை யாக இருக்க வாய்ப்பில்லை என்பதே.

    இத்தகைய  பூதக் குளிர்ச்சி [Super Cooling Event] பூமியின் உட்கரு அழுத்தத்தில் தூய நிலையில் 1000 டிகிரி கெல்வின் [726 டிகிரி C (1340 டிகிரி F] மேலாகக் கொண்ட மூலச்சாதன நுழைவு  இல்லாமல் தானாக நிகழ முடியாது என்று ஜேம்ஸ் ஓர்மன் கூறுகிறார்.  அந்த சாதனம் சுமார் 12 மைல் [20 கி.மீ] விட்டமுடன் உள்ள துளியாக [Droplet to be released into the Core] இருக்கவேண்டும். இந்த புதிய கோட்பாட்டை  மற்ற உலகக் குழு விஞ்ஞானிகள், தாங்களும் ஆராய்ந்து உடன்பாடு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்.

    பூமி உட்கருவின் ஆழம் : 5100  கி,மீ  [

    பூமி உட்கரு உஷ்ணம் :  5000 C

    பூமி உட்கரு அழுத்தம் : 364 GPa

    Image result for earth core depth, pressure temperature

     

    Oigins of Solar System

     

    எறிகற்கள் [Meteors] தாக்கிக் கோள்கள் உருவாயின என்பது மெய்யான முத்திரை அறிவிப் பில்லை.  அந்த சிறு துணுக்குகள் கோள்களின் வடிவ விளைவால் உண்டான உதிரியே தவிர, அவை கோள்களை உருவாக்கிய செங்கற்கள் [Building Blocks] அல்ல.  தற்போதைய இப்புதிய கோட்பாடு சூரியக் கோள்கள் தோன்றியதாக  முன்னர் கருதப் பட்ட கொள்கையைத் திருத்தி விடும்.   அதாவது பூர்வீக சூரிய தோற்ற ஏற்பாடு நாம் எதிர்பார்த்ததை விடப் பெரும் மோதல் கொந்தளிப்பில் உண்டானதாகத் தெரிய வருகிறது.

    பிரான்டன் ஜான்சன் [Post doctorate, MIT Dept of Earth]

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் கருவிகள் இன்னும் சீராகப் பணியாற்றிச் சூரியப் புயல், அகிலக் கதிர்கள், சக்தி வாய்ந்த துகள்கள், சூரிய காந்த அரங்கம் பற்றிய தகவலைத் தொடர்ந்து அனுப்பி வருகின்றன. . . . ஏவிய நாளிலிருந்து (அக்டோபர் 1990) எந்தக் கருவியும் இதுவரைப் பழுதாகவில்லை !

    ரிச்சர்டு மார்ஸ்டன், யுலிஸிஸ் சூரிய விண்ணுளவித் திட்ட மேற்பார்வை விஞ்ஞானி (European Space Agency)  [ஏப்ரல் 15, 2008]

     

    Meteorite impacts on Planets

    பூர்வச் சூரியக் கோள்கள் தோற்றத்தின் மாறுபட்ட கோட்பாடு

    பூர்வீகச் சூரியக் கோள்கள் தோன்றியதால் உண்டான எச்சத் துணுக்குகளே முரண் கோள்கள் [Asteroids]  என்னும் கோட்பாடு இப்போது [2015 ஜனவரி 15] இயற்கை விஞ்ஞான நூல் வெளியீட்டின் அறிவிப்புப்படி உறுதியாகி வருகிறது.  முரண் கோள்கள்  சூரியக் கோள்களின் உருவாக்கத் தோற்றத்துக்கு  மூலப் பொருட்கள் அல்ல. சூரியக் கோள்கள் தோன்றத் தேவை யான மூலச் செங்கற்கள் [Building Blocks] நாமறிந்த முரண் கோள்கள் அல்ல என்பதே புதிய முடிவு;   அமெரிக்காவின் பர்டே [Purdue] பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர், பிரான்டன் ஜான்சன் கூறுவது,  ” நான்கு பில்லியன் ஆண்டுக்கு முன்பே பூர்வச் சூரியக் கோள் பிறப்புக் கருவில் [Planetary Embryos]  ஆரம்பத்திலே வித்துகள் இருந்தன,” என்று.

    Hypergiant Star with disks of dust.

    முரண் கோள் முறிவுகள் பூமியில் விழும்போது எறிகற்களாய்ச் [Meteorites] சிதறுகின்றன. கடந்த 100 ஆண்டுகளாய் உறைந்த திரவ உருண்டையான கோலிப் பாறைகள்  [Beads like Chondrules]  எறிகற்களில் காணப்பட்டன.  அவை  இருப்பதற்குக் காரணம் தெரியாமல் இதுவரை மர்மமாகவே இருந்தது.  இப்போது விளைவுகளைத் தாக்கல் மாடலில் [Computer Impact Model] இட்டுப் பார்த்தால் செம்மையாகப் பொருந்துகின்றன.

    முடிவுகள் இவைதான் :

    1.  முரண் கோள்கள் [Asteroids] பரிதிக் கோள்கள் உருவாக்கத்தில் விளந்த கிளைப் பொருட்கள்.   அவை கோள்கள் வடிக்கத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

    2.  உண்டையான கோலிகள் [chondrules] மோதலில் தோன்றிய பளிங்குகளே.  சூரியக் கோள் வடிவாக அவை தேவைப்படா.  அவையும்  கோள்கள் உருவாகத் தேவையான மூலச் செங்கற்கள் அல்ல.

     

    நமது சூரிய மண்டலம் எப்போது தோன்றியது ?

    வானியல் விஞ்ஞானிகளும், பூதளவாதிகளும் (Astronomers & Geologists) பூமியின் வயதைக் கணித்து அதிலிருந்து பரிதி மண்டலத்தின் தோற்ற வயதை அறியப் பல்வேறு முறைகளைக் கையாள்கிறார்.  நாமறிந்த பூமிப் பாறைகளின் கதிரியக்கத் தேய்வு வீதங்களைப் “பாறைக் கதிரளப்புக் காலக் கணிப்பு” மூலம் (Radiometric Dating of Rocks) கணக்கிட்டுச் சூரிய குடும்பம் சுமார் 4.6 பில்லியன் ஆண்டுக்கு முன்பு தோன்றியிருக்கலாம் என்று கருதுகிறார்கள்.  பூமியின் பூர்வீகப் பாறை வயது கதிரியக்கத் தேய்வு வீதக் கணிப்பில் 3.9 பில்லியன் ஆண்டுகள் என்பது தெரிய வருகிறது !  பூதளத் தட்டு நகர்ச்சிகள் (Plate Tectonics) தூண்டி பூமியில் எழும் பூகம்ப எரிமலை நிகழ்ச்சிகளால் பூர்வீகப் பாறைகள் நிலைமாறி அவற்றைக் காண முடியாமல் சிதைத்து விடுகின்றன !

    பூமியின் பூர்வீகப் பாறைகளைத் தவிர விண்வெளிக் கற்கள், எரிகற்கள், நிலவிலிருந்து அல்லது செவ்வாய்க் கோளிலிருந்து வீழும் விண்கற்கள் மிகத் துல்லியமாகப் பரிதி மண்டல வயதுக் காலத்தை நிர்ணயம் செய்ய உதவுகின்றன.  அந்த மாதிரிகளின் கதிரியக்கத் தேய்வு வீதத்தைக் கணித்ததில் அவை 4.6 பில்லியன் ஆண்டு வயதைக் கொண்டவை என்று அறியப்பட்டு, பரிதி மண்டலம் அந்த வயதை ஒட்டி உண்டாகி இருக்க வேண்டும் என்று யூகிக்கப்படுகிறது.

    நமது சூரிய மண்டலம் எப்படி உண்டானது ?

    விஞ்ஞான வரலாற்றில் எத்தனையோ கருத்துக்கள் மாறிப் போனாலும், பரிதி மண்டலம் எப்படி உண்டானது என்னும் கருத்து கடந்த 250 ஆண்டு காலமாக மாறவில்லை.  1755 ஆம் ஆண்டில் ஜெர்மன் வேதாந்தி இம்மானுவெல் கென்ட் (Immanuel Kant) (1724-1804) முதன்முதலில் தனது நிபுளா கோட்பாடைக் (Nebular Hypothesis) கூறினார்:  அதன்படி பேரளவு வாயு முகில் கொண்ட ஆதிச்சூரிய நிபுளா, பரிதி மண்டலத்தின் சூரியனாகவும், மற்ற அண்டக் கோள்களாகவும் உண்டாக மூலாதாரப் பொருளானது !  1796 இல் பிரெஞ்ச வானியல் நிபுணர் பியர் சைமன் லாப்பிலாஸ் (Pierre Simon Laplace) (1749-1827) அதே மாதிரிக் கோட்பாடை எடுத்துக் கூறினார்.  ஆனால் ஆழ்ந்த விண்வெளியை நோக்கி அவரால் அதற்குச் சான்றுகளை எடுத்துக் காட்ட முடியவில்லை !

    இம்மானுவெல் கென்ட் விளக்கிய நிபுளா கோட்பாடில் இருப்பது இதுதான் : பேரளவுக் கொள்ளளவு வாயு நிறையும் தூசி துணுக்குகளும் திணிவு ஈர்ப்பு (Mass Gravity) விசையால் சேர்ந்து சுற்ற ஆரம்பித்தன.  திணிவு நிறை பெருகப் பெருக ஈர்ப்பு சக்தி மிகையாகி வாயுத் திணிவை இறுக்கிச் சுருக்கி (Gravitational Contraction) வாயுக் கோள்களாகவும், திடக்கோள்களாகவும் உருவாயின.

    இப்போது வானியல் விஞ்ஞானிகள் அவற்றை விபரமாகச் சொல்ல முடிகிறது.  அதாவது முதலில் சூரிய மண்டலத்தின் வாயு முகில் மூலக்கூறு (Molecular Gas Cloud) முறிந்த போது அதன் விரிவு 100 AU (Astronomical Unit) [1 AU = Average distance between Sun & Earth (93 மில்லியன் மைல் /150 மில்லியன் கி.மீ.)] ஆகவும், திணிவு நிறை பரிதியைப் போல் 2 அல்லது 3 மடங்கு இருந்ததாகவும் யூகிக்கிறார்கள்.  அத்தகைய வாயு முகில் ஈர்ப்பு முறிவைத் (Cloud’s Gravitational Collapse) தூண்டி விட்டிருப்பது அருகில் இருந்த சூப்பர்நோவாவின் (Supernova) மின்னல் வெடிப்பில் நேர்ந்த அழுத்த அலையாக இருக்க வேண்டும் என்று கருதப்படுகிறது.  வாயு முகில் குவிந்து விழுந்த பிறகு பலமுறைகளில் திணிவு சேர்ப்பு விரைவானது.  முகில் திணிவின் உஷ்ணம் அதிகரித்து அது சுழலத் தொடங்கியது.  வாயுப் பிண்டம் தங்கி அது வட்டத் தட்டு வடிவாக மட்டமானது.  மிகையான ஈர்ப்பு சேமிப்புச் சக்தி (Gravitational Potential Energy) வெப்பமாக மாறி வாயு முகில் அடர்த்தி (Density) அதிகமானது.  அதுவே கோள்களின் உட்கரு உலோகமாகப் பின்னால் திரட்சி யானது.

    பரிதியின் அண்டக் கோள்கள் உண்டான தெப்படி ?

    வட்டவியல் திணிவு நெம்பு நிலைப்புப்படி (Conservation of Angular Momentum) வடிவம் சிறுகச் சிறுகச் சுழலும் மட்டமான தட்டின் வேகம் மிகையானது.  மென்மேலும் விழுந்து சேரும் வாயுவும், தூசி துணுக்குகளும் சேர்ந்து கொண்டு முன்னோடிக் கோள் தட்டு (Proto-Planetary Disk) மையம் தடித்து ஓரம் மெலிவாகித் தமிழகத்தின் “ஆப்பம்” போல் (Pancake) உருவாகியது.  நடுவில் மகா ஈர்ப்புச்சக்தி வாய்ந்த உட்கரு எழுவதும் அப்பால் விளிம்பு நோக்கிச் செல்லச்செல்ல வலுகுன்றிய கோள்கள் உருவாவதும் எப்படி என்று விளக்கிச் சொல்லலாம் ?  பேரளவு வாயுப் பிண்டம் செழித்த நிபுளாவைச் சுற்றிலும் அதன் பூத ஈர்ப்பு மண்டலம் காந்த சக்தியால் சூடாக உள்ளது !  அந்த ஈர்ப்பு வாயுத் துணுக்குகளுக்கு சுழற்சியை உண்டாக்கித் தன் பூத ஈர்ப்புக் குழியில் சுற்றத் தூண்டுகிறது.  அவ்விதம் சிறுகச் சிறுக்கச் சேர்ந்துதான் சுழலும் கிருஷ்ணச் சக்கிரம் போல் அசுர வடிவாகி வட அமெரிக்க வேனிற்தள ஹர்ரிக்கேன் (Tropical Hurricanes) சூறாவளிகள் உருவாகின்றன !

    பேரளவு இயக்கம் மையத்தில் உண்டாகி முன்னோடிச் சேய் விண்மீன் (Infant Proto-Star) விரைவாக வாயுத் திணிவைத் திரட்டி சூரியனாகியது.  அதன் பிறகு 50 மில்லியன் ஆண்டுகளாக பரிதி போதுமான வாயு நிறையைச் சுருட்டிப் பூரண எரிநிலை அடைந்து பிணைவு சக்தி தூண்டப் பட்டு சுயவொளி விண்மீனாக மாறியது.  தட்டின் விளிம்புகளில் மேலும் வாயுத் துணுக்குகள் சேமிப்பாகி அங்குமிங்கும் கண்ட இடங்களில் சிறிதும் பெரிதுமாக வாயுவிலும் திடப் பிண்டத்திலும் கோள்கள் உண்டாயின.

    பரிதி வெப்ப அணுக்கரு சக்தியால் தூண்டப் பட்டதும் அது அசுரப் புயலை எழுப்பித் தூசிகளையும் துணுக்குகளையும் தட்டிலிருந்து வெளியேற்றியது.  அப்போது பூத வாயுக் கோள்கள் மென்மேலும் பெருக்க இயலாது போயின.  தட்டில் தங்கிய மீத வாயுக்கள் பேரளவு வெப்பத்தாலும், ஈர்ப்பு விசையாலும் மூலகமாற்றம் நிகழ்ந்து குளிர்ந்து திரண்டு சிலிகேட்களும், உலோகங்களும் (Silicates & Metals) உண்டாயின.  துணுக்குகளும், தூசிப் பனிகளும் மற்ற கோள்களின் முன்னோடிகளைக் கட்டி மென்மேலும் பெருக்க வைத்துப் பேரளவு அண்டங்களாக்கின.

    பரிதி மண்டலத்தின் புறக் கோள்கள் பனி அண்டங்களாய்க் கட்டுமான மாகின.  வாயுக் கோள்களின் உட்கரு அடர்த்தியாகி வாயு முகில்கள் அவற்றை இறுகிப் போர்த்திக் கொண்டன.  புறக்கோள்களைச் சுற்றிலும் பல துணைக்கோள்கள் உண்டாகிச் சுற்றத் தொடங்கின.  வாயு முகில்கள் வீசி எறியப்பட்டு வால்மீன்களாக “ஓர்ட் முகில்” மந்தையில் (Oort Cloud of Comets) சிக்கின.  ஓர் அசுரப் பிண்டம் பூமியை மோதி நிலவு உண்டானது.  செவ்வாய்க் கோளுக்குச் சந்திரன்கள் ஏற்பட்டுச் சுற்ற ஆரம்பித்தன.  இவை அனைத்தும் இம்மானுவெல் கான்ட் 250 ஆண்டுகளுக்கு முன்பு கூறிய நிபுளாக் கோட்பாடைத்தான் முற்றிலும் மெய்ப்பிக்கின்றன.

    பரிதி மண்டலப் படைப்பில் காணும் சில புதிர்கள் !

    அண்டக் கோள்கள் ஏன் பரிதியை ஒரே தளமட்டத்தில் நீள்வட்ட வீதிகளில் சுற்றுகின்றன ?  அவற்றின் சீரொழுக்க இயக்க முறைக்கு என்ன காரணம் உள்ளது ?  அகக்கோள்களும், புறக்கோள்களும் சூரியனை ஏன் எதிர்க் கடிகார முறையில் சுற்றி வருகின்றன ? சூரியனையும் மற்ற கோள்கள் போலின்றித் தன்னச்சில் சுக்கிரன் மட்டும் ஏன் நேர்க் கடிகார வக்கிர திசையில் சுற்றி வருகிறது ? பூமியின் நிலவு தன்னச்சில் சுழாது ஏன் ஒரே முகத்தைக் காட்டிக் கொண்டு புது மாதிரிச் சுற்றி வருகிறது ? தன்னச்சில் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுழல்வது ஓர் விந்தைதான்.  கோள்களின் துணைக் கோள்களும் எதிர்க் கடிகாரச் சுழற்சியில் சுற்றுவதும் ஒரு விந்தைதான்.  இந்த விந்தைகள் அனைத்தும் நிபுளாக் கோட்பாடு கூறும் “சுழற்தட்டு அமைப்பு” விதியைப் பெரும்பாலும் நிரூபிக்கின்றன.

    யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியின் பணி தொடர்கிறது !

    ஏப்ரல் 15, 2008 ஆம் தேதி அண்டவெளித் தேடல் விஞ்ஞானிகள் 1990 ஆண்டு முதல் பதினேழு ஆண்டுகளாய்ப் பரிதியைச் சுற்றி ஆராய்ந்து வரும் “யுலிஸிஸ் சூரிய விண்ணுளவியைப்” (Ulysses Solar Probe) பூமி ஆட்சி அரங்கிலிருந்து தளர்த்தி ஓய்வாக இருக்கவிட்டு 2013 ஆண்டில் மீண்டும் ஆய்வு செய்ய மாற்றியுள்ளார் !  அப்போதுதான் மறுபடியும் பரிதியின் அடுத்த உச்சநிலைக் கதிராட்டம் தொடங்கும் !  அதுவரை விண்ணுளவியின் ராக்கெட் உந்தல் எரிசக்தியை வீணாக்காமல் சேமித்து வைத்து சில இயக்கங்களையும் முடக்கி உளவி ஓய்வெடுத்துக் கொள்ள ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது !  பரிதியிலிருந்து 125 மில்லியன் மைல் தூரத்தில் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றிவரும் நீள் வட்ட வீதியில் (Helio Centric Orbit) உறங்கி வரும் கருவிகளைச் சூரிய கனல் வெப்பமே எழுப்பிவிடும் தகுதி பெற்றது.  இப்போது ஓய்வெடுக்கும் உளவி பரிதியை விட்டு அப்பால் நகன்று 250 மில்லியன் தொலைவை 2010 ஆண்டில் அடைந்து விடும்.

    [தொடரும்]

    தகவல்:

    Picture Credits: NASA, JPL; National Geographic; Time Magazine, Astronomy Magazine.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)
    2. 50 Greatest Mysteries of the Universe – How did the Solar System form ? (Aug 21, 2007)
    3. Astronomy Facts File Dictionary (1986)
    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)
    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]
    6. Cosmos By Carl Sagan (1980)
    7. Dictionary of Science – Webster’s New world [1998]
    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)
    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)
    10 National Geographic Picture of Our Universe By Roy Gallant: (1986)
    11 Universe Sixth Edition By: Roger Freedman & William Kaufmann III (2002)
    12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)
    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)
    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)
    15 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40206291&format=html[சூரியன்]
    16 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40804101&format=html(What will Happen to the Sun ?)
    17 Solar System Formation By Jeff Scott (October 16, 2005)
    18. Spaceflight Now -Breaking News. Controllers Working to Keep “Ulysses Sun Orbiter Alive” By :Stephen Clark (www.spaceflightnow.com/news/n0804/15ulysses) [April 18, 2008]

    19.  http://www.spacedaily.com/reports/A_twist_on_planetary_origins_999.html  [January 15, 2015]

    20. http://www.spacedaily.com/reports/Meteorite_material_born_in_molten_spray_as_embryo_planets_collided_999.html  [January 15, 2015]

    21. https://www.reference.com/science/temperature-change-depth-earth-f512bcda03abccce

    22.   https://en.wikipedia.org/wiki/Geothermal_gradient  [February 1, 2018]

    23.  https://www.livescience.com/61715-earth-inner-core-paradox.html  [February 9, 2018]

    24.  http://earth-chronicles.com/science/the-inner-core-of-the-earth-should-not-exist.html  [February 12, 2018]

    25.  https://en.wikipedia.org/wiki/Inner_core  [February 17, 2018]

    ******************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com] February 18, 2018 [R-1]

    Attachments area
    Preview YouTube video Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Ray Jayawardhana – “Rocks, Ice and Penguins: Searching for Clues to Planetary Origins in Antarctica”

    Preview YouTube video The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been

    The origin of mankind, ufos, planetary travel, venus, mars, where we have been
    Share
  • சிலம்புக் கனாவில் பெண்ணிய நோக்கும் நாடகப் பாங்கும்

    -முனைவர் பா. மனோன்மணி

    “மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”1  என்றார் பாரதி, “மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா”2 என்றார் கவிமணி. “பெண்ணடிமை தீருமட்டும் பேசுந் திருநாட்டு மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே”3  என்றார் பாவேந்தர். இவ்வாறு பெண்மைக்குச் சிறப்புச் சேர்ப்பவையாகக் கருதப்படும் இவ்வடிகள் யாவும் ஆண் மையக் கருத்தாக்க ஆதரவுக் குரல்கள் அவ்வளவே. ஆனால் இளங்கோவடிகள் கொடுத்தது ஆதரவுக் குரல் அன்று. பெண்மைக்கான குரலை அவளே எழுப்ப வேண்டும் என்ற படி நிலை வளர்ச்சியில் அவளது உயர்வை, அவளுக்கான ஊக்கத்தை அவளிடமிருந்தே வளர்த்துச் செல்ல வேண்டும் என்ற உயரிய நோக்கை எடுத்துரைப்பதாக அமைகிறது. இக்கருத்தினையே இக்கட்டுரை காப்பிய அகச் சான்றுகளோடு ஆய்ந்துரைக்க முயல்கிறது.

    சிலப்பதிகாரம்

    முத்தமிழ்க் காப்பியம், உரையிடை இட்ட பாட்டுடைச் செய்யுள், மூவேந்தர் காப்பியம் என்றெல்லாம் பேசப்படும் சிலப்பதிகாரப் பிரதியே முழுமையான பெண்ணியக் குரலுக்கான முதல் பிரதி என்று கூறின் மிகையாகாது. அரசனை எதிர்த்து ‘வண்ணச்சீரடி மண்மகளும்’ அறியாத வகையில் வளர்க்கப்பட்ட ஒரு பெண் சொற்போர் தொடுத்து வெற்றி கண்டதைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கிறது. புரட்சி என்பது எளிதில் தோன்றுவது அன்று. முப்பது என்று சொன்னால் அஞ்சிவிடுவாளோ என்று எண்ணி ‘ஈரைங்காதம்’ என்று தேற்றிப் பக்குவமாகக் கண்ணகி கணவனால் அழைத்துச் செல்லப்படுகிறாள். அவளே பின்னர்த் தேற்றுவார் இன்றிக் கோவலன் இருக்கும் இடத்திற்கு, ‘தெய்வமும் உண்டு கொல்’,  ‘சான்றோரும் உண்டு கொல்’, ‘பெண்டிரும் உண்டு கொல்’ என்று நாடே அறிய ஊரே அறியத் தன் பிரச்சனைப் பிரச்சாரத்தினைத் தானே முன் நடத்திச் செல்கிறாள். ‘இவள் பேயோ’, ‘தெய்வமோ’ என்றெல்லாம் தொடக்கத்தில் கண்டோர் மருளும் வகையில் அவள் புலம்பல் ஊரெங்கும் ஒலிக்கிறது. அவளின் புலம்பலைக் கண்டு அஞ்சிய நாட்டு மக்கள் உண்மையில் ஏதோ நிகழவிருக்கிறது என்பதை உணர்கின்றனர். இந்நிலையில் தொடர் வளர்ச்சிப்படி நிலையில் கண்ணகி ஒரு புரட்சிப் பெண்ணாக வளரும் கருத்தோட்டத்தோடு ஒன்றச் செய்து பயணிக்கும் வகையில் இளங்கோ படைத்துச் செல்கிறார்.

    நாடகப் பாங்கு

    சிலப்பதிகாரம் நாடகத் தமிழையும் உள்ளடக்கியது என்பதற்குப் படைப்பின் ஒரு கூறாக இடம்பெற்றுள்ள கனவுப் பகுதிகளும் சான்று பகரும். கனவு மனத்தில் விரியும் காட்சி. நாடகம் காட்சியாக விரிக்கப்படும் நனவு. அவ்வகையில் இக்காப்பியத்தில் படைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கனவும் காட்சியாக விவரிக்கப்படுவதில்லை. கூற்றாக நிகழ்த்தப்படுகிறது. கண்ணகி கனவு காண்பவளாகப் படைக்கப்படவில்லை; கோவலன் கனவு காண்பவனாகப் படைக்கப்படவில்லை; அரசமா தேவி கனவு காண்பவளாகப் படைக்கப்படவில்லை. மூவரின் கனவுகளுமே கூற்றுகளாக இடம்பெறுகின்றன.

    கண்ணகி தேவந்தியிடம் தன் கனவினைக் கூறும்பொழுது கனவு விவரிக்கப்படுகிறது. தேவந்தி ‘பெறுக கணவனோடு’ என்றதும் கண்ணகி தான் கண்ட கனவினை எடுத்துரைக்கிறாள்.

    “……………………………………………பெறுகேன்
    கடுக்குமென் நெஞ்சம் கனவினால் என்கை
    பிடித்தனன் போயோர் பெரும்பதியுள் பட்டேம்
    பட்ட பதியில் படாதது ஒரு வார்த்தை
    இட்டனர் ஊரார் இடுதேளிட் டென்தன்மேல்
    கோவலற்கு உற்றதோர் தீங்கென் றதுகேட்டுக்
    காவலன் முன்னர்யான் கட்டுரைத்தேன் காவலனோடு
    ஊர்க்குற்ற தீங்குமொன் றுண்டால் உரையாடேன்
    தீக்குற்றம் போலும் செறிதொடீஇ தீக்குற்றம்
    உற்றேனொடு உற்ற உறுவனோடு  யானுற்ற
    நற்றிறம் கேட்கின் நகையாகும் பொற்றொடீஇ”  (கனா.தி.உ.9:44-54)

    சிலப்பதிகாரத்தின் அடைக்கலக் காதையைத் தெ.பொ.மீ ‘செம்பாதியாக நிற்கும் அடைக்கலக் காதை’ என்பார். இக்காதையில் கோவலன் மாடல மறையோனால் கருணை மறவன், செல்லாச் செல்வன், இல்லோர் செம்மல் என்று புகழப்படுகின்றான். அப்பொழுதுக் கோவலன் தன் கனவினை மாடலன் மற்றும் கவுந்தியடிகளிடம் கூறுவதாக விவரிக்கப்படுகிறது.

    “ ….…………….. குறுமகன் தன்னால்
    காவல் வேந்தன் கடிநகர் தன்னில்
    நாறுஐங் கூந்தல் நடுங்குதுயர் எய்தக்
    கூறைக்கோட் பட்டுக் கோட்டுமா ஊறவும்
    அணித்தகு புரிகுழல் ஆயிழை தன்னொடும்
    பிணிப்பற்றுத் தேர்தம் பெற்றி எய்தவும்
    மாமலர் வாளி வறுநிலத்து எறிந்து
    காமக் கடவுள் கையற் றேங்க
    அணிதிகழ் போதி அறவோன் தன்முன்
    மணிமேகலையை மாதவி அளிப்பவும்
    நனவு போல நள்ளிருள் யாமத்துக்
    கனவு கண்டேன் கடிதீங்கு உறுமென” (அடை.கா.15:95-106)

    அரசமாதேவி தான் கண்ட கனவினைத் தன் தோழிகளிடம் விளக்கிக் கூறுகிறாள்.

    “ஆங்குக்
    குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
    கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
    திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
    கதிரை இருள்விழுங்க காண்பென்காண் எல்லா!

    விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
    கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா!”(வழ.கா.20: 1-7)

    “செங்கோலும் வெண்குடையும்
    செறிநிலத்து மறிந்துவீதரும்
    நங்கோன்தன் கொற்றவாயில்
    மணி நடுங்க நடுங்கும் உள்ளம்
    இரவுவில்லிடும் பகல்மீன்விழும்
    இரு நான்கு திசையும் அதிர்ந்திடும்
    வருவதோர் துன்பமுண்டு
    மன்னவற்குயாம் உரைத்துமென” (வ.கா.20:8-11)

    மூவரின் கனவுகள் மட்டுமன்றி நான்காவதாக ஒரு கனவும் சிலம்பில் உண்டு. அது அஃறிணையின் கனவினைச் சுட்டுவதாகும். மலர் ஒன்றின் கனவினை இளங்கோவடிகள் கானல் வரியில் பதிவு செய்கிறார். அதுவும் கூற்றாக அமைவதாகும். சிலம்புக் கனவு நாடகப் பாங்கில் அமைந்துள்ளது என்பதற்கு இதுவும் கூடுதல் சிறப்பு. இளங்கோவடிகள், கழிபரப்பில் கண்போல் மலர்ந்த நெய்தல் மலரின் மாலை நேர இயல்பான  குவிதலைக் காண்கிறார். அதன் மீது தலைவியின் இரங்கலை ஏற்றுமிடத்து அதன் இயல்பான குவிதலின்மீது உறக்கத்தையும், உறக்கம் வந்தால் கனவு வரும் என்பதையும் ஏற்றியுரைக்கிறார். இதில் கண் துயிலாததால் உறக்கம் கொள்ளாத தலைவி நெய்தல் மலரிடம் நீ காணும் கனவில் கானலில் வந்து செல்லும் தலைவனைக் ‘கண்டறிதியோ’ என்று அம்மலரிடம் இறைஞ்சி நிற்பதாக அமைக்கிறார்.

    “புன்கண்கூர் மாலைப் புலம்பு மென் கண்ணே போல்
    துன்பம் உளவாய் துயிலப் பெறுதியால்
    இன்கள்வாய் நெய்தால் நீ எய்தும் கனவினுள்
    வன்கணார் கானல் வரக் கண்ட றிதியோ!”(சிலம்பு. கானல் வரி.7:33)

    ஆகக் கனவுகள் என்பவை உயர்திணை, அஃறிணை என்ற இரண்டு தன்மையானும் கூற்றுகளாக நிகழ்த்தப்படுபவை என்பது தெளிவு. அரசமாதேவி தான் கண்ட கனவினை அரசவைக்கு வந்து சொல்லும் பொழுது பாண்டிய மன்னன் சிங்கம் போல் வீற்றிருந்தான் என்று இளங்கோவடிகள் காட்சிப்படுத்துகிறார்.

    “கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப
    அரிமான் ஏந்திய அமளிமிசை இருந்தனன்
    திருவீழ் மார்பின் தென்னவர் கோவே” (வ.கா.20: 21-23)

    என்பன அவ்வடிகள். இக்காட்சியும் கூற்றுக்கான பதிவு என்பது பயிலும் தோறும் புலனாகும். மேலும்,

    “செய்தவம் இல்லாதேன் தீக்கனாக் கேட்ட நாள்
    எய்த வுணரா திருந்தேன்மற் றென்செய்தேன்
    மொய்குழல் மங்கை முலைப்பூசல் கேட்டநாள்
    அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ
    அம்மாமி தன்வீவும் கேட்டாயோ தோழீ” (வஞ்சிக் காண்டம்,வாழ்த்துக் காதை.29:5)

    என்று கண்ணகி கோயிலின் முன் தேவந்தி அவள் உரைத்த கனவினை நினைத்துப் புலம்புமிடத்தும் கூற்றாக இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. ‘முன் செய்த நல்ல தவம் இல்லாதேன் யான்! நீ கண்ட தீக் கனாவைக் கூறிய அந்நாளில் அதைப் பற்றிச் சிறிதும் ஆராய்ந்து பாராதொழிந்தேன். ஐயோ என்ன காரியம் செய்தேன்!’ என்பது அதற்கான விளக்கம் ஆகும்.

    கண்ணகிக் கனவு 

    கண்ணகியின் இயங்கு நிலைகள் யாவும் அவள் மனத்திலிருந்து உதித்தவை. யாரும் சொல்லி அவள் செயல்படவில்லை என்பதைக் கனவு உத்தியின் வழி இளங்கோ ஆழமாக முன்வைக்கிறார். அவள் மனம் அவள் கனவு என்ற நிலையில் அவளை அவளது கனவு நெறிப்படுத்துகிறது. கணவன் இறந்து கிடக்கிறான்; என்ன செய்வது என்று அறியாத அவளுக்கு(கண்ணகிக்கு) அவளது கனவே வழிகாட்டுகிறது. இதனை,

    “என்றாள் எழுந்தாள் இடர்உற்ற தீக்கனா
    நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல்கண் நீர்சோர
    நின்றாள் நினைந்தாள் நெடுங்கயல் நீர்த்துடையாச்
    சென்றாள் அரசன் செழுங்கோயில் வாயில்முன்” (வழ.கா.19:72-75)

    என்ற அடிகள் எடுத்துரைக்கும். கனவு ஒரு பெண்ணை வழி நடத்துகிறது. இங்குக் கவனிக்க வேண்டியது யாருடைய பலனையும் எதிர்பார்க்காது யாருடைய உருவடிப்பும் இல்லாத அப்பழுக்கற்ற தன்னிலையின் அதாவது பெண்ணின் சுய சிந்தனை வெளிப்பாட்டின் செயல்பாடு என்பதை இப்பதிவு தூண்டி நிற்கிறது. ஏனெனில் கண்ணகி தான் கண்ட கனவினைத்  தேவந்தியிடம் உரைத்தபோது அவள் உரைத்த பரிகாரங்களையும் விலக்கியவள் அவள் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமன்றிக் “கோவலன் கனவு காண்பதற்கு முன்பே கண்ணகி கனவு கண்டாள். அக்கனவைத் தேவந்தியிடம் கூறினாள். ஆனால் அதனைக் கணவனைக் கண்டவுடன் மறந்தே போயினாள். கணவன் வானவர் குழாத்துள் புகுந்த பின்னர் தான் அதனை நினைத்துக் கொண்டாள். கனவினை மறந்த நிலை அவள் கற்பின் பெருந்திறம். கோவலன் தன் கனவினை மறவாது நினைத்திருந்த நிலை தன் மனமாற்றத்தின் பயனாகத் தன் வாழ்வின் விளைவினை மன உறுதியோடு எதிர்பார்த்து வரவேற்று நிற்கிற அவன் உயர்வின் பெருஞ் சிறப்பாகும்”4 என்று தெ.பொ.மீ. குறிப்பிடுவார்.

    பின்வருவதை முன்னர் உணர்த்துதற்காக நிமித்தம், அசரீரி உள்ளிட்ட இன்ன பிற நம்பிக்கை சார் கூறுகளைக் காட்டிலும் கனவு உத்தியினைக் கையாண்டுள்ளது ஆசிரியரின் தனிச்சிறப்பைப் புலப்படுத்துகிறது. காரணம் கனவு ஒன்றே தனி மனித மனம் சார்ந்த சுதந்திர வெளிப்பாட்டிற்கான வெளியாக உள்ளமையாகும். கண்ணகியின் சுய சிந்தனை வெளிப்பாடு, கோவலனின் சுய சிந்தனை வெளிப்பாடு, அரசமாதேவியின் சுய சிந்தனை வெளிப்பாடு என்ற நிலைகளில் கனவினைப் பொருள் கொள்ளுதல் காப்பியப் போக்கிற்கும் பாத்திர அறக்கட்டமைப்பின் தன்மைக்கும் பொருந்துவதாகும்.

    உரைசால் பத்தினியின் உயர்வுக்கான கண்ணகியின் கனவும்: ஊழ்வினை கவ்வக் காத்துக் கொண்டிருக்கும் கோவலனின் கனவும்; அரசியல் பிழைக்கக் காரணமான பாண்டியனைக் கூற்றுவன் பற்றக் காத்துக்கிடக்கும் பாண்டிமாதேவியின் கனவும் எனச் சிலம்பின் மையக்கருத்துக்கள் கனவுக் காட்சிகளிலும் இணைத்துச் செல்லும் மாண்பு இலக்கியக் கட்டமைப்பின் உட்கூறுகளிலும் விரவிக்கிடக்கிறது. இது இளங்கோவடிகளுக்கே அன்றி வேறு எப்படைப்பாளருக்கும் இல்லாத தனிச்சிறப்பாகும்.

    சுருங்கக் கூறின் கண்ணகியின் காதல் வெளியாக, கோவலனின் பெருமையை வெளிக் கொணர்வதற்கான தளமாகக் கனவு பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தலைப்புப் பொருத்தப்பாட்டில் கனா

     “கனாத்திறம் உரைத்த காதை” எனும் தலைப்பு, கோவலன் கண்ட கனாக் காதைக்கு வைக்கப்படவில்லை. அரசமாதேவி கண்ட கனாக் காதைக்கு வைக்கப்படவில்லை. கண்ணகி கண்ட கனாவிற்கே தலைப்பாய் வைக்கப்படுகிறது. காரணம் அங்கு தான் புலவனின் இலட்சியம் வெளிப்பட்டு நிற்கிறது. கனாத்திறம் என்பது வெற்றியை நோக்கியதாக இருக்க வேண்டும். கண்ணகி கண்ட கனா வெற்றியில் முடிகிறது.

    “தற்காத்துத் தற்கொண்டான் பேணி தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்”5 என்ற குறள் மொழிக்கு ஏற்பத் தன்னைக் காத்துக்கொள்ள கணவன் வருகையை எதிர்நோக்கி நிற்கிறாள். தற்கொண்டானைப் பேணச் சிலம்பினைக் கொடுக்கிறாள். தகைசான்று சொற்காக்கக் குற்றமற்றவன் என்பதை நிறுவ அரசன் முன் சென்று கட்டுரைகிறாள். அதுமட்டுமன்றிச் சோர்வற்ற நிலையில் சேரநாடு வரை தனியே சென்று நிறைவாக வானுலகையும் அடைகிறாள். வானுலகு என்பது இங்குப் புகழுலகு என்பதாகப் பதிவுசெய்யப்படுகிறது. ஆகக் கோவலன் கனவும் அரசமாதேவியின் கனவும் அழிவை நோக்கிப் பயணிப்பவை. கண்ணகியின் கனவே புதுமைக்கான ஆக்கத்தை நோக்கிப் பயணிக்கக் கூடியது என்பது தெளிவு. அதுமட்டுமன்றிக் கனவின் திறம் அடுத்தக்கட்டத்தை நகர்த்திச் செல்வதாக இருக்கும் பண்புடையது. அவ்வகையில் பொருள் கொண்டதனால் என்னவோ கண்ணகி கனா எடுத்துரைக்கும் காதைக்குக் “கனாத் திறம் உரைத்த காதை” என்கிறார். இப்பொருத்தப்பாட்டை ஏனைய இரண்டு கனவுகள் இடம்பெற்ற காதைகளிலும் பார்க்க முடியும்.

    ஒன்று அடைக்கலக் காதை. இக்காதை கண்ணகி கோவலன் இருவரும் மாதரியிடம் அடைக்கலமாகக் கொடுக்கப்படுவதனால் மட்டும் பொருத்தப்பட்டது அன்று. மணிமேகலை என்னும் மங்கை நல்லாளை மாதவி புத்ததேவனிடம் அடைக்கலம் ஆக்கியமைக்காகக் கண்ட கோவலனின் கனவும் காரணமாகிறது. அது போல் அரசமாதேவி வழக்குரைக்க வரும் இடத்தில் அரசுக்கட்டிலில் அமர்ந்து கனவினை எடுத்துரைக்கிறாள். இது பிரச்சனை ஒன்றை விடைதேடி வழக்காடு மன்றத்திற்குக் கொண்டுவந்து தீர்த்துக் கொள்வதற்கு இணையானதாகும். அரசமாதேவி அந்தப்புரத்தில் கணவனோடு கனவினைப் பற்றிப் பகிர்ந்துகொள்ள இல்லை. அரசுக் கட்டிலில் சிங்கம் போன்று வீற்றிருக்க அத்தருணத்திலேயே சொல்லப்பட்டதாகப் படைக்கப்படுகிறது. எனவே சூழலுக்குத்தகக்  காதைகளுக்குப் பெயர் சூட்டக் கனவுக் கூறுகளும் அடிப்படைகளாக அமைந்திருப்பதைப் பெறமுடிகிறது.

    பெண்ணியத்தின் வளர்ச்சிப்படி நிலையில் பெண்மை

    என்றைக்கும் பெண் குழந்தைகளின் மீது பெற்றோர் தனிக் கவனம் செலுத்துவதுண்டு. அவ்வகையில் வளர்க்கப்பட்ட முன்னோர்களின் அடையாளப் பாத்திரம்தான் கண்ணகி. இதற்கு இன்றைய சூழல் விலக்குடையதன்று. ஒரு படிநிலை வளர்ச்சியில்தான் அறிவு, தொழில், முன்னேற்றம், கல்வி, புரட்சி என யாவும் வளர்ச்சியுறும். அவ்வகையில் கண்ணகி என்ற தனி மனிதப் பெண்ணின் முன்னேற்றமும் அத்தகையதான படிநிலை வளர்ச்சியில் வளர்ந்ததையே இளங்கோ உணர்த்தி நிற்கிறார். மண்மகள் அறியாதவள்; கணவனையன்றி வேறு ஒன்றையும் தொழாதவள்; பிற கோட்பாடுகளைப் பகுத்து ஆராய்ந்து ‘பீடு அன்று’ என்று கூறும் தெளிவுடையவள்; கோவலனின் வாட்டம் அறிந்து ‘சிலம்பு உள கொண்ம்’ என்று கூறும் உரிமை உடையவள்; உடன் வா என்றதும் மறுக்காது செல்லும் பண்பாட்டை அறிந்தவள்; கணவனுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைத்தபோது சமைத்து உடன் அமர்ந்து உணவு பரிமாறி மகிழ்ச்சி கொண்டவள்; ‘முது நரியாகுக’ என்று கவுந்தி சபித்தப் போது கருணை காட்டக் கூடிய தெளிவு மிக்கவள்; எல்லாவற்றுக்கும் மேலாகத் தனது உரிமைக் கணவனை இழந்தப் போது உரிமைக்காக நீதிக்காகப் போராடும் துணிவு கொண்டவள். இத்தகைய துணிவு அவளுக்கு வரக் காரணங்கள் இயல்பாகவே அவள் கொண்டிருந்த நம்பிக்கையும் அவள் கண்ட கனவும் ஆகும்.

    புரட்சி என்பதும் பெண்ணியம் என்பதும் கூட்டம் கூடி மேடை ஏறிப் பேசுவதற்கான விடயம் மட்டுமன்று. அது நெஞ்சில் ஊன்றிச் செயலில் நிகழும் உணர்வு வெளிப்பாடு. அத்தகைய வெளிப்பாட்டினையே கண்ணகி கண்ட சிலம்புக் கனாவின் வழி இளங்கோவடிகள் ஊக்கிச் செல்கிறார். பெண்களுக்கான உரிமையைப் பெண்ணே பெறப் போர்க் கொடிதூக்க வேண்டும் என்பது இன்றைய சூழல். அப்படி இருக்க ஆண் படைப்பாளரான இளங்கோவடிகள் உருவாக்கிய பெண் படைப்பு எங்ஙனம் புரட்சிக்கு வித்திடுவதாகும் என்று கேள்வி எழுப்பின், கற்பு என்ற கட்டமைப்பை உருவாக்கியது ஆண் மையம் தானே. அம் மையம் தான் கற்பினை அழிக்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. எனவே அதற்கான எதிர்க் குரலும் அங்கிருந்து வருவதுதானே பொருத்தமுடையது என்ற அடிப்படையில் தொடக்கக் காலகட்டத்தின் இம்முயற்சி என்றும் நிலைபெறுடைய நிலையில் ஏற்கத்தக்கதாகவும் எதார்த்தமானதாகவும் அமைகிறது.

    அடிக்குறிப்புகள்:

    1. பாரதியார் கவிதைகள் “விடுதலை” பா.2.
    2. கவிமணி கவிதைகள் “பெண்களின் உரிமைகள்” – tamilvu.org பா.730.
    3. பாரதிதாசன் கவிதைகள் “சஞ்சீவி பர்வதத்தின் சாரல்” – ப.3.
    4. தெ.பொ.மீ. களஞ்சியம் சிலப்பதிகாரம்: குடிமக்கள் காப்பியம், காவ்யா வெளியீடு, சென்னை, இரண்டாம் பதிப்பு – 2011, பக்.80-81.
    5. திருக்குறள் – குறள்:56.

    *****

    கட்டுரையாளர்
    இணைப் பேராசிரியர், தாகூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
    குரோம்பேட்டை, சென்னை – 45

     

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 108

    கசாப்புக்கடை அருங்காட்சியகம், போப்லிங்கன், ஜெர்மனி

    முனைவர் சுபாஷிணி

    என்ன..? கசாப்புக்கடைக்கு ஒரு அருங்காட்சியகமா என ஆச்சரியமாக இருக்கின்றதா? ஆம். கசாப்புக் கடைக்கென்றே பிரத்தியேகமாக அமைந்துள்ள ஒரு அருங்காட்சியகத்தைப் பற்றியது தான் இந்தப் பதிவு.

    Humoristische Bildpostkarte der Lithographischen Kunstanstalt Junginger, erschienen aus Anlass der "Großen Deutschen Fachausstellung für Fleischerei, Kochkunst und verwandte Gewerbe", die vom 13. bis 29. Juli 1902 in der städtischen Gewerbehalle stattfand und von der Stuttgarter Fleischer-Innung organisiert wurde.
    Humoristische Bildpostkarte der Lithographischen Kunstanstalt Junginger, erschienen aus Anlass der “Großen Deutschen Fachausstellung für Fleischerei, Kochkunst und verwandte Gewerbe”, die vom 13. bis 29. Juli 1902 in der städtischen Gewerbehalle stattfand und von der Stuttgarter Fleischer-Innung organisiert wurde.

    ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில் இறைச்சி உணவு பற்றி விவரிக்கும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட அருங்காட்சியகங்கள் உள்ளன. ஜெர்மனியில் மட்டுமே மூன்றுக்கும் மேற்பட்ட ஊர்களில் கசாப்புக் கடை பற்றிய தகவல்கள் சொல்லும் அருங்காட்சியகங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் பாடன் ஊர்ட்டெம்பெர்க் மாநிலத்தில், ஒரு 16ம் நூற்றாண்டு அழகிய மரவேலைப்பாட்டு கட்டிடத்தில் அமைந்திருக்கும் இந்தக் கசாப்புக்கடை அருங்காட்சியகம்.

    unnamed (2)

    பொதுவாகவே ஐரோப்பிய நாடுகளில் இறைச்சி உணவே மக்களின் முக்கிய உணவாக அமைகின்றது. தென் அமெரிக்காவிற்கான கடல்வழிப்பயணங்கள் 14ம், 15ம் நூற்றாண்டு வாக்கில் அதிகரிக்கத் தொடங்கிய பின்னர்தான் ஐரோப்பாவில் உருளைக்கிழங்கும், தக்காளியும், குடை மிளகாயும், பிற ஏனைய காய்கறிகளும் அறிமுகமாகின. அதற்கு முன்னர் கோதுமை, சோளம், பயிர்கள், குறிப்பிடத்தக்க முட்டைகோஸ் வகை காய்கறிகளும், பழங்களும், ஓரிரண்டு வகை தாவரங்களும் மட்டுமே மரக்கறி உணவு வகையில் சாப்பிடப்படுவனவாக இருந்தன. இவற்றை விட ஐரோப்பிய மக்களின் மிக முக்கியமான உணவாக அமைந்தது இறைச்சி உணவு தான். அதிலும் ஜெர்மானியர்களை எடுத்துக் கொண்டால், பண்டைய ஜெர்மானிய மக்களின் உணவு கலாச்சாரத்தில் பன்றி இறைச்சி, மாட்டிறைச்சி, மான்கள், காட்டுப்பன்றி, பைசன் போன்றவை வேட்டையாடி விரும்பிச் சாப்பிடப்பட்ட உணவாக அமைந்தன.

    கோதுமை, சோளம் போன்ற தானியங்களைக் கொண்டு ரொட்டி தயாரிப்பது பண்டைய காலம் தொட்டு ஐரோப்பா முழுமைக்கும் வழக்கில் இருந்தது. பயிர்களும், காய்களும் பழங்களும் கோடைக்காலத்தில் விளைவதால் அவற்றைக் குளிர்காலத்திலும் இளவேனிர் காலத்திலும் பயன்படுத்தும் வகையில் இவற்றைப் பாடம் செய்து வைக்கும் கலையை பெருவாரியாக வளர்த்தனர். இதில் இறைச்சியைப் பாடம் செய்து பத்திரப்படுத்தும் வகை, உப்புக் கண்டம் போட்டுக் காய வைத்துப் பாதுகாக்கும் முறை, அரைத்து வெவ்வேறு பொருட்களுடன் கலந்து அவற்றைப் பதனிட்டு பாதுகாத்து ஆண்டு முழுமைக்கும் தேவைப்படும் உணவுத்தேவைக்குப் பயன்படுத்தும் முறை என இம்மக்கள் பெருவாரியாக ஆராய்ந்து இக்கலையை வளர்த்தனர்.

    unnamed (3)
    இன்றைய காலகட்டத்தில் உலகின் பல நாடுகளுக்கான தொடர்புகள் எல்லா நாடுகளுக்கும் ஏற்பட்டுள்ள மாற்றம் என்பது மக்களின் கலாச்சாரத்திலும் ஊடுருவத் தொடங்கிவிட்டன. சீனர்கள், கொரியர்கள், இலங்கையர்கள், இந்தியர்கள், தாய்லாந்துக்காரர்கள், வியட்நாமியர்கள், தென் அமெரிக்கர்கள், ஆப்பிரிக்கர்கள், மத்திய கிழக்காசிய மக்கள் எனப்பல கலாச்சாரப் பின்னணிக் கொண்டவர்கள் ஐரோப்பாவிற்குப் புலம்பெயர்ந்து உள்ளூர் மக்களுடன் வாழ்கின்றனர். வந்து விட்டுச் செல்லும் விருந்தாளிகளாக இல்லாமல் ஐரோப்பாவையேத் தங்கள் வாழ்விடமாக இந்த மக்கள் ஏற்றுக் கொண்டனர் என்றாலும் கூட தங்கள் தாயகத்தின் உணவு முறைகளை இத்தகைய மக்கள் தொடர்ந்து இந்தப் புதிய நிலத்திலும் கடைப்பிடிப்பதால் ஐரோப்பாவின் பல மூலை முடுக்குகளிலும் ஆப்பிரிக்க உணவு, சீன உணவு, தாய்லாந்து உணவு, மெக்சிகன் உணவு, இந்திய உணவு, அரேபிய உணவு என்பவை பரவி விட்டதை இங்குக் காணப்படும் உணவகங்களைப் பார்த்தே அறிந்து கொள்ளலாம். இப்படி நிலமை மாற்றம் கண்டிருக்கும் இவ்வேளையிலும் கூட இறைச்சி உணவையே பிரதான உணவாக ஐரோப்பியர்கள் தொடர்கின்றனர் என்பதை இங்குள்ள பெருவாரியான உணவகங்களும் அங்காடிக் கடைகளும் கசாப்புக் கடைகளும் நமக்கு வெளிப்படுத்துகின்றன.

    unnamed (4)

    ஜெர்மனியைப் பொருத்தவரை இறைச்சி விற்பனை என்பது நான்கு வகையில் மேற்கொள்ளப்படுகின்றது. பெருவாரியான சூப்பர்மார்க்கெட்டுகளில் பாக்கெட் செய்யப்பட்ட இறைச்சிகள், வாரச் சந்தையில் கசாப்புக் கடைக்காரர் விற்கும் இறைச்சி, பதப்படுத்தி சோசேஜ் வகையில் விற்கப்படும் இறைச்சி, கிராமப்பகுதிகளில் விவசாயிகள் தங்கள் வீட்டோடு அண்டிய வகையில் உருவாக்கியிருக்கும் கடைகளில் விற்கப்படும் இறைச்சி எனப் பிரிக்கலாம். ஜெர்மனியில் வாழும் துருக்கியரும் தங்கள் கடைகளில் மாடு, கோழி, வாத்து, போன்ற இறைச்சி வகைகளை விற்கின்றனர். இறைச்சி வகையோடு மீன்களும் கடல் உணவுகளும் இதே ரீதியில் விற்கப்படுகின்றன.

    கசாப்புக் கடைக்காரர்கள் மெட்ஸ்கர் (Metzger) என்ற ஜெர்மானியச் சொல்லால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இது தொழில் பெயர். பண்டைய காலத்தில் இது குலத்தொழிலாக இருந்தது. இவ்வகை குலத்தொழில் பண்பாடு என்பது ஜெர்மனியில் கடந்த ஐந்நூறு அறுநூறு ஆண்டுக்கால கட்டத்தில் இல்லாது மறைந்து விட்டது. இன்று மெட்ஸ்கர் என்ற குடும்பப்பெயரை வைத்திருப்பவர்கள் மருத்துவராகவும், கால்பந்து விளையாட்டாளராகவும். ஆசிரியராகவும், பஸ் ஓட்டுநராகவும், பொறியியலாளராகவும் எனப் பல்வேறு தொழிலைப் புரிவோராக உள்ளனர். இதேபோன்ற நிலைதான் ஏனைய குலத்தொழில்களுக்கும் ஏற்பட்டுள்ளன.

    இறைச்சி உணவினைத் தயாரித்தலில் பயன்படுத்தப்படும் கருவிகள் பற்றிய தகவல்களைப் பொது மக்களுக்குத் தெரியப்படுத்தவும், பண்டைய காலம் தொட்டு இன்று வரை கசாப்புக் கடைத் தொழிலாளர்களின் தொழில் வாழ்க்கை எப்படி அமைகின்றது என்பதை விவரிக்கும் வகையிலும் இந்த அருங்காட்சியகத்தை அமைத்துள்ளனர். ஏனைய அருங்காட்சியகங்களைப் போல இவை காலை முதல் மாலை வரை திறக்கப்படுவதில்லை. மாறாக நண்பகல் 12க்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு இந்த அருங்காட்சியகம் மூடப்படுகின்றது. பொது மக்களின் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையில் அருங்காட்சியகத்தின் ஒரு பகுதியில் ஒரு விவசாயி வாழ்க்கையை விளக்கும் வகையில் காய்கறிகள், முட்டைகள், இறைச்சி போன்றவற்றை சந்தையிலிருந்து கொண்டு வந்து காட்சிப்படுத்தியும் வைக்கின்றனர்.

    unnamed (5)

    போப்லிங்கன் நகரின் பழைய கிராமத்தின் மையப்பகுதியிலேயே பழமையான ஒரு அழகிய கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. மாறுபட்ட கோணத்தில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகத்தை இங்கு வருபவர்கள் கண்டு செல்வது இறைச்சி பதனிடும் முறைகளைப் பற்றியும் கசாப்புக் கடைக்காரர்களைப் பற்றிய அறிமுகத்தை வழங்குவதாகவும் நிச்சயம் அமையும்.

    இந்த அருங்காட்சியகத்தின் முகவரி:

    Address: Fleischer Museum Boeblingen, Marktpl. 27, 71032 Böblingen
    Phone: 07031 6691691

    அடுத்த பதிவில் மற்றுமொரு அருங்காட்சியகத்திற்குச் செல்வோமா?

    Share
  • வங்கி முறைகேடுகள்!

    பவள சங்கரி

    தலையங்கம்

    பஞ்சாப் தேசிய வங்கியில் ஒரே கிளையில் இத்தனை பெரிய முறைகேடு நடந்திருப்பது அதிர்ச்சியளிக்கக் கூடியது. முற்றிலும் நிர்வாகச் சீர்கேடுகளையே வெளிப்படுத்தும் நிகழ்வு இது. பாராளுமன்றத்தின் கேள்வி பதில் பகுதியில் எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்ட பதில் மூலமாக அனைத்துப் பெரிய வங்கிகளிலும் பல்வேறு காலகட்டங்களில் தொடர்ச்சியாக பல ஆயிரம் கோடிகளுக்கு முறைகேடுகள் நடந்து வந்துள்ளது தெரிய வந்துள்ளது. பொருளாதார வல்லுனர்களால் 25,000 கோடி வரையில் முறைகேடுகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டபோதும் அது உதாசீனப்படுத்தப்பட்டுள்ளதால் பஞ்சாப் தேசிய வங்கியில் இந்த முறைகேடு நடந்துள்ளது. சம்பந்தப்பட்ட நீரா மோடி இங்கிருந்து தப்பி அமெரிக்காவில் சொகுசு விடுதியில் தங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க அரசு ஆவண செய்யவேண்டும். சமீபத்தில் ரிசர்வ் வங்கி அறிவித்த கணக்கின்படி 4 மணி நேரங்களுக்கு ஒரு முறை ஏதோ ஒரு வங்கியில் ஒரு முறைகேடு நடந்துகொண்டிருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கம்போல இந்த முறையும் இந்தியன் வங்கி அதிக அளவில் பஞ்சாப் தேசிய வங்கி மூலமாக நீரா மோடிக்கு பணம் அளித்துள்ளது. திரு கோபாலகிருட்டிணன் மூலமாக ஏற்பட்ட சரிவிற்குப் பிறகு இந்தியன் வங்கியின் மற்றுமொரு பின்னடைவு இது. பஞ்சாப் தேசிய வங்கியின் அத்தாட்சிக் கடிதத்தின் பேரில் பணம் கொடுக்கப்பட்டிருந்தாலும் அந்த வங்கிகளுக்கு அந்தப் பணம் எப்போது திரும்பக் கிடைக்கும் என்பது தெரியாது. நீரா மோடியின் மோசடி விவகாரம் அதிகபட்சமாக 2017 இல்தான் நடைபெற்றுள்ளது. வங்கிகளின் தணிக்கைக் குழுவினர் 2013 இலிருந்து இந்த மோசடிகளை வெளிக்கொண்டுவராமல் விட்டதற்கு என்ன காரணம். மத்திய அரசின் தலைமை கணக்காய்வாளர் இதைப்பற்றி இதுவரை எந்தக் கருத்தும் சொல்லாமல் இருப்பது ஏன் அல்லது அவருடைய கருத்துகள் நிராகரிக்கப்பட்டனவா என்றும் தெரியவில்லை. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 13,000 கோடி உரூபாய் வாராக்கடனாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை நிவர்த்தி செய்வதற்கான வழி முறைகள் மத்திய அரசால் இதுவரை ஏதும் அறிவிக்கப்படாத நிலையில் மக்களின் வரிப்பணத்திலிருந்து 2.25 இலட்சம் கோடி பங்கு மூலதனமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது வேதனைக்குரியதாக உள்ளது. இதில் ஆச்சரியப்படத்தக்க ஒரு விசயம் தனியார் வங்கியில் ஒன்றுகூட இந்த முறைகேடுகளில் சிக்கி பணத்தை இழக்கவில்லை என்பது ஆறுதலான செய்தி. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி அவர்களால் மக்கள் நலனுக்காகவே தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தற்போது பெரும் சரிவுகளைச் சந்திக்கின்றன. பஞ்சாப் தேசிய வங்கி உட்பட அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும் ஏன் தனியார்மயமாக்கப்படக்கூடாது. அப்படி தனியார்மயமாக்கப்பட்டால் அதனால் வரக்கூடிய தொகை அரசுக்குக் கிடைக்கும் என்பதோடு பங்கு மூலதனமாக ஒரு பெருந்தொகையும் அளிக்க வேண்டியதில்லை. குறைந்தபட்சம் பஞ்சாப் தேசிய வங்கியும், இந்தியன் வங்கியும் உடனடியாக தனியார் மயமாக்கப்படவேண்டியது அவசியமாகிறது.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180218 -Akasha ganga -govinda pattabhishekam -24x32 watercolour -lr
    180218 -Akasha ganga -govinda pattabhishekam -24×32 watercolour -lr

    ’’அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    மந்தா கினியாக மாடு்பால் -தந்திட:
    மாட்டினார் மன்னராய், மாடுகள் மேய்ப்பவர்,
    காட்டிய கேசவ் கவி”….!

    மந்தாகினி -ஆகாஸகங்கை….!

    “பாலா பிஷேகமே பட்டா பிஷேகமாய்
    கோலோ கலமாகக் கொண்டாடும் -மாலோலர்;
    ஆவிந்தன் பாலில் அபிஷேக நீராடி
    கோவிந்தன் கொண்டார் குளிப்பு”….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_5665

     

    எந்தவேலை ஆனாலும், எந்தவேளை ஆனாலும்,
    நந்தலாலா நிந்தன் நினைவாக -அந்தரங்க
    ஸோல்மேடே கண்ணனே, டோல்கேட்டாம் வைகுண்ட
    கால்மாட்டில் பால்மாட்டாய்க் கொள்’’….கிரேசி மோகன்….!

    Share
  • ஒளிரும் ஒற்றை நட்சத்திரம்!

    -மேகலா இராமமூர்த்தி

    சில நட்சத்திரங்கள் புகழ்வானில் அதிக ஒளியோடு பிரகாசிக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஈடான ஏன்…அவற்றினும் மேம்பட்ட திறனுடைய பிற நட்சத்திரங்கள் ஒளிமங்கிப் போய்விடுகின்றன. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஆங்கில நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியரை shakeஇதற்குச் சான்றாகக் கூறலாம். அவர் திறமையானவர் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை; அவர் திறமையைக் குறைத்து மதிப்பிடுவதும் நம் நோக்கமில்லை. எனினும் அவர் ஒருவரே அக்காலகட்டத்தின் தலைசிறந்த நாடக ஆசிரியர் (Playwright), படைப்பாக்கமெனும் பால்வெளியில் (Galaxy) மின்னும் தகுதிபெற்ற ஒற்றை நட்சத்திரம் என்று சொல்லுவதற்கில்லை. எழுத்துவன்மையும் படைப்பாற்றலும் மிக்க அவரின் சமகாலப் படைப்பாளிகள் பலர் அவரளவுக்கு ஒளிராமல் போய்விட்டார்கள் எனும் தன்னுடைய வருத்தத்தை 1989-ஆம் ஆண்டில் தான் வெளியிட்ட ’Shakespeare Reinvented’ என்ற நூலில் துணிச்சலாகப் பதிவுசெய்திருக்கின்றார் அதன் ஆசிரியரும், புளோரிடா மாகாணப் பல்கலைக் கழகத்தின் ஆங்கிலப் பேராசிரியருமான கேரி டெய்லர் (Gary Taylor, Florida State University.)

    ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவரும் அவரைப் போன்றே நாடகங்கள் எழுதுவதில் பெயர்பெற்றவருமான மார்லோ (Christopher Marlowe), ஷேக்ஸ்பியரின் நாடகமான ஹென்றி VI-இன் முதல் மூன்று பாகங்களில் ஷேக்ஸ்பியரோடு இணைந்து பணியாற்றியிருக்கின்றார். மார்லோவைப் போலவே, தாமஸ் நாஷ் (Thomas Nashe), ஜார்ஜ் பீல் (George Peele), தாமஸ் ஹேவுட் (Thomas Heywood), பென் ஜான்சன் (Ben Jonson), ஜார்ஜ் வில்கின்ஸ் (George Wilkins), தாமஸ் மிடில்டன் (Thomas Middleton), மற்றும் ஜான் ஃப்ளெட்சர் (John Fletcher) போன்ற பல படைப்பாளிகள் ஷேக்ஸ்பியரின் இதர 14 நாடகங்களில் அவரோடு இணைந்து பணியாற்றி அந்நாடகங்களைச் செம்மைப்படுத்தியிருக்கின்றனர் எனும் உண்மையைச் சில ஆண்டுகளுக்குமுன் வெளியிட்டார், கடந்த 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஷேக்ஸ்பியரின் நாடகங்களை ஆய்வுசெய்து வரும், பேராசிரியர் டெய்லர்.

    இச்செய்தி கேட்டுத் திகைக்கவோ திடுக்கிடவோ வேண்டியதில்லை. காரணம் அன்று எழுதப்பட்ட நாடகங்கள் ஒவ்வொன்றுமே பலரின் பங்களிப்போடு உருவானவையே. ஆம், அன்றைய மேடை நாடகங்களை இன்றைய திரைக்கதைகளோடு நாம் ஒப்பிடலாம். நாடகத்தின் கரு ஒருவருடையதாக இருக்கும். ஆனால் மேடையேற்றுவதற்குமுன் அதனை அழகாய் உருவேற்றுவதிலும், திருத்தங்கள் செய்து மெருகேற்றுவதிலும் பல எழுத்தாளர்களின் பங்களிப்பு இருந்திருக்கின்றது என்பதை அறிந்துகொண்டால் நாம் திகைக்க மாட்டோம்.

    1590-இல் மார்லோ எழுதிய ’மால்டா நகர யூதன்’ (The Jew of Malta) எனும் நாடகத்தைப் பெரிதும் ஒத்திருக்கின்றது,marlowe 1596வாக்கில் ஷேக்ஸ்பியரால் படைக்கப்பட்ட ’வெனிஸ் நகர வணிகன்’ (“The Merchant of Venice)  எனும் புகழ்பெற்ற நாடகம் என்பது திறனாய்வாளர்களின் கருத்து. கிறித்தவர்களை வெறுக்கும் மால்டா நகரத்தைச் சேர்ந்த யூதனான பராபஸ் (Barabas) பாத்திரப் படைப்பின் பிரதிபலிப்பை வெனிஸ் நகர யூத வணிகனான ஷைலக்கிடம் (Shylock) நாம் காணமுடிகின்றது. அதுபோலவே ஷேக்ஸ்பியரின் வரலாற்று நாடகங்களை முன்மாதிரியாகக் கொண்டே மார்லோ ’Edward II’ நாடகத்தை எழுதினார் என்ற கருத்தும் உண்டு.

    இணைந்து சில நாடகங்களில் பணியாற்றிய ஷேக்ஸ்பியரும் மார்லோவும் பின்னர் பகைவர்களாகிப் போனார்கள் என்று சொல்லப்படுகின்றது. ஆனால் இதனை நிரூபிப்பதற்குச் சான்றுகள் இல்லை.

    ஷேக்ஸ்பியருக்கு இணையான திறனும் படைப்பூக்கமும் பெற்றவரான  மார்லோ, தன்னுடைய 29ஆவது வயதிலேயே மர்மமான முறையில் குத்திக்கொல்லப்பட்டார் எனும் செய்தி அதிர்ச்சியளிப்பதாய் இருக்கின்றது. அரசாங்கத்துக்கு எதிரான அவருடைய சுதந்தரச் சிந்தனைகள் அதற்குக் காரணமாயிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. (அரசாங்கத்துக்கு எதிரான சிந்தனைகளும் செயற்பாடுகளும் கொண்ட படைப்பாளிகள் கொடூரமாய்க் கொல்லப்படுவது எல்லாக் காலத்திலும் நிகழும் கொடுமைதான் போலிருக்கின்றது!)

    சமகாலத்தைச் சேர்ந்த இரு சிறந்த படைப்பாளிகள் மார்லோவும் ஷேக்ஸ்பியரும். இதில் ஒருவர் புகழின் உச்சத்தைத் தொட, மற்றொருவர் புகழ்வெளிச்சம் படாமலே காணாமற்போனதற்கு அவருடைய இளவயது அகால மரணமும் முக்கியக் காரணம் எனலாம். மார்லோ மட்டும் இன்னுமோர் இருபதாண்டு காலம் கூடுதலாக வாழ்ந்திருந்தால் அவருடைய படைப்புக்களும் வரலாற்றில் அழிக்கவியலாத் தடம்பதித்து, மக்கள் மனத்தில் அகற்றவொண்ணா இடத்தைப் பெற்றிருக்கக்கூடும் என்றே எண்ணத் தோன்றுகின்றது.  

    ஒன்று மட்டும் நிச்சயம்! புகழ்பெறுவதற்குத் திறமை மட்டும் போதாது; கூடவே ஆகூழும் நீண்ட ஆயுளும் இருக்கவேண்டும்.

    *****

    References:

    https://www.newyorker.com/books/page-turner/the-radical-argument-of-the-new-oxford-shakespeare

    https://www.theguardian.com/culture/2016/oct/23/christopher-marlowe-credited-as-one-of-shakespeares-co-writers

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180216 - Tvameva -lr
    180216 – Tvameva -lr

    ’’சகாதேவன் கட்டினான்,ய சோதை பிணைத்தனள்
    சுகதேவர் சொல்லுற்ற(பாகவத) சேயோ, -அகமில்லா
    அன்பால் அடைபடும் ஆனந்தக் கண்ணன்,ஆ
    வின்பால் யசகாதே வர்’’….கிரேசி மோகன்….!

    Share
  • தமிழ் இயக்கம் கலந்துரையாடல் கூட்டம்!

    பவள சங்கரி

    27752433_1633929133362372_2120386166329894145_n

    தமிழ் இயக்கம் அமைப்பு உருவாக்க கலந்துரையாடல் கூட்டம் 14-02-2018 புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விஐடி பல்கலைக்கழக வேந்தர் கல்விக்கோ.முனைவர்.கோ.விசுவநாதன் தலைமையில், ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. தலைமை உரை ஆற்றிய வேந்தர் அவர்கள் நமது தமிழ் மொழியை சீரும் சிறப்புமாக எடுத்துச் செல்லும் வகையில் பல கருத்துகளைக் கூறினார். இது போன்ற இயக்கங்களில் இளைய தலைமுறையினரும், குறிப்பாகப் பெண்களும் பங்கேற்கும் வகையில் செயல்படவேண்டும் என்று வலியுறுத்தினார். குழந்தைகளுக்குப் பெயர் வைப்பதில், இந்தக் காலத்தில் பெண்கள் சோதிடம் பார்த்து பெயர் வைப்பதாகக்கூறி பெரும்பாலும் வாயில் நுழையாத வடமொழி எழுத்துகளைக்கொண்ட பெயர்களையேச் சூட்டுகிறார்கள். நம் தமிழ் மொழியின் தொன்மையையும், பெருமையையும் அவர்கள் உணரும் வண்ணம் இந்தத் தமிழ் இயக்கம் முன்னெடுக்கப்படும். இது குறித்த தங்கள் ஆக்கப்பூர்வமானக் கருத்துகளையும் அனைவரும் பகிர்ந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. புலவர் பதுமனார், கவிஞர் அப்துல்காதர், திரு.சுகுமாரன் திருப்பூர் முத்தமிழ் சங்கத் தலைவர் கே.பி.கே.செல்வராஜ், திரு ஸ்டாலின் குணசேகரன், திரு.முத்துக்குமாரசாமி, ஈரோடு தங்க. விசுவநாதன் மற்றும் திரு செ.ரா. சுப்பிரமணியம் ஆகியோரும் கலந்துகொண்டு சிறந்த கருத்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.

    28056150_1633924556696163_8269825700195174179_n

    கல்வெட்டறிஞர் துரை சுந்தரம்

    தமிழ் இயக்கத்தின் கலந்துரையாடலும், கருத்துக் கேட்புமான நிகழ்ச்சியும் பவளசங்கரி அவர்களின் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியும் இணைந்து நடைபெற்ற விழாவில் நானும் கலந்துகொண்டேன். வி.ஐ.டி. பல்கலையின் வேந்தர் கோ.விசுவநாதன், தமிழறிஞர் அப்துல் காதர், வ.உ.சி.யின் பேரன் முத்துக்குமாரசாமி, புலவர் பதுமனார், மதுரை சிதம்பர பாரதி, ஈரோடு ஸ்டாலின் குணசேகரன் மற்றும் பலர் விழாவைச் சிறப்பித்தனர். பலரும் தமிழின் இன்றைய நிலை குறித்துக் கவலை கொண்டனர். நாம் பேசுவது தமிங்கிலம் ஆகிவிட்டதே. நல்ல தமிழில் எழுத மறந்தோமே. குழந்தைகளுக்கு நல்ல தமிழ்ப்பெயர் சூட்ட மறந்து “ஸ்”, “ஷ்” என்று பெயர் முடியும் வண்ணம் பாம்பு சீறும் நிலைக்குத் தமிழைத் தள்ளிவிட்டோம். வேந்தர் கோ.வி. அவர்கள் தம் உரையில் குறிப்பிட்டார்கள்: தொன்மையும் தொடர்ச்சியும் கொண்டு மாறாமல் இருக்கும் மொழி தமிழ் ஒன்றுதான். நம் இன்றைய நிலை என்ன? பெயர் வைப்பதிலே வடமொழி. பேசுவதிலே ஆங்கிலக் கலப்பு. ஒரு நாளிதழிலே இரண்டு பக்கக் கட்டுரையில் 130 ஆங்கிலச் சொற்கள் இருந்தன. தமிழ் நாளிதழ்களிலே, ஒருமை, பன்மைப் பிழைகள். இவற்றைச் சுட்டிக்காட்ட யாரும் இல்லை. ஆனால், ஆங்கிலத்தில் பிழையாக எழுதினால் சட்டென்று சுட்டுவதற்கு ஆட்கள் இருக்கின்றனர். தென்னாப்பிரிக்கா டர்பன் நகரில் ஏழு இலட்சம் தமிழர்கள். குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் இடுகிறார்கள். ஆனால் தமிழில் பேச இயலாது. இந்தோனேசியாவில் தமிழர்க்கு அங்கீகாரமில்லை. ஏன், இந்தியா முழுதும் பல மாநிலங்களில் வாழும் தமிழருக்குத் தமிழ் படிக்க வாய்ப்பில்லை. தமிழ் கற்பித்தல் பற்றிக் கலந்து ஆலோசனை செய்யவேண்டியுள்ளது. உலகத் தமிழர்கள் ஒன்று கூடவேண்டும்.

    27751917_1633922643363021_884898010828583650_n

    பேராசிரியர் அப்துல் காதர் அவர்கள் பகிர்ந்து கொண்டவை: வீண் விளம்பரங்களாலே தமிழன் வீழ்ந்து கொண்டிருக்கிறான். ஈழத்தில் நடந்தது என்ன? ஒரே நாளில் குண்டுகளின் பொழிவில் 50,000 குழந்தைகளும், ஒன்றரை இலட்சம் பெரியவர்களும் கொல்லப்பட்டனர். 2009-இல் தமிழரைப் புதைக்க 1200 வெட்டியான்களைப் பணியில் அமர்த்தியது ஈழ அரசு.பணியில் தொய்வு நேராதிருக்க ஈழ அரசு வெட்டியான்களுக்கு 24 மணி நேரமும் சாராயத்தை ஊற்றிக்கொடுத்துக்கொண்டே இருந்தது. உடல்களை அள்ளி அள்ளிப் போடுகையில், ஒரு கர்ப்பிணிப்பெண்ணின் உடலிலே லேசான அசைவு தெரிந்தது. தூக்கிப் போட்ட வேகத்தில் குழந்தை பிறந்தது. ஈமச்சடங்கின்போது நீர்க்குடம் உடைப்பது நம் மரபு. அந்தக்குழந்தையும் தன் பனிக்குடத்தை உடைத்துத் தன் ஈமக்கடனை நிறைவேற்றியது. ஈழத்தில் இனி மிஞ்சப்போவது அம்மா என்று குரல் கொடுக்கும் மாடும், அக்கா என்று குரல் தரும் கிளியும்தான். திருவண்ணாமலைக் கோயிலுக்குள் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அண்ணாமலைக் கோயிலில் அப்துல் காதரா? கேள்வி எழுந்தது. அதற்கு இடம் கொடுத்தது தமிழ்தானே! தமிழால் ஒன்று சேர்வோம். தமிழகம் எங்கும் பெருமாளின் கல்யாணக் கோலமாகிய கிடந்தகோலம் காணலாம். ஆனால், வடவேங்கடம் தமிழகத்தின் எல்லையல்லவா? அங்கு தமிழ் நிற்பதைக் குறிக்கப் பெருமாளும் நின்ற கோலம்! 1965-இல் மதுரை தியாகராசர் கல்லூரியில் படித்தபோது, தினமணி நாளிதழில் இரண்டு பக்கக் கட்டுரையில் 130 வடமொழிச் சொற்கள். நாங்கள் மாணவர்கள் போராடித் தமிழை மீட்டெடுத்தோம். அதன்பின், தினமணியில், ஸ்ரீ , ’திரு’ என்றாயிற்று. மண்ணைப் பார்க்கவேண்டுமென்றால், தலை குனிந்துதான் ஆகவேண்டும். ஆனால், ஈரோட்டு மண் தமிழரைத் தலை நிமிரச் செய்யும் மண்! தமிழால் ஒன்று சேர்வோம்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    180216 - Tvameva -lr
    180216 – Tvameva -lr

    ’’தலை’’வன் ஆடும்போது வால் ஆடக்கூடாது…..!
    சரணாகதி ‘’ஆ’’….!

    நீயின்றி நானில்லை! ‘’நான்’’இன்றி நீயில்லை,
    தீயின்றி தீபமது தானுண்டோ! -நீயின்று
    மாடோடு ஆடுகின்றாய் , மாலே மணிவண்ணா:
    ஆடா(து) அசங்காதே ‘’ஆ’’….கிரேசி மோகன்….!

    Share
  • மனிதர்கள் எதனால் வாழ்கிறார்கள்?—(What Men Live By) (6)

    லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

    தமிழாக்கம்- சற்குணா பாக்கியராஜ்

    மைக்கேல், சைமனின் வீட்டிற்கு வந்து ஒரு வருடமாகி விட்டது. மைக்கேல் காலை முதல் மாலை வரை செருப்புகள் தைத்தான். வேலை இல்லாத போது மெளனமாகக் கூரையைப் பார்த்துக் கொண்டிருப்பான். வீட்டை விட்டு வெளியே போவதோ பிறரிடம் பேசுவதோ கிடையாது. சைமன் வீட்டிற்கு வந்த முதல் இரவு மெட்டரீனா உணவு கொடுத்த போது அவன் புன்னகை செய்தது போல் மறுபடி ஒரு தடவையும் புன்னகை புரியவில்லை.

    ஒரு நாள் காலை சைமனும் மைக்கேலும் செருப்புத் தைத்துக் கொண்டிருந்தனர். வெளியில் மூன்று குதிரைகள் பூட்டிய ஒரு அழகிய வண்டி வந்து அவர்கள் வீட்டின் முன் நின்றது. வண்டியின் முன் பகுதியிலிருந்து ஒரு பணியாள் இறங்கி வண்டியின் கதவைத் திறந்த போது, விலையுயர்ந்த உரோமக் கோட்டு அணிந்திருந்த ஒரு செல்வந்தர் சைமனுடைய வீட்டை நோக்கி வந்தார். மெட்ரீனா இருக்கையிலிருந்து எழுந்து, கதவை விரிவாகத் திறந்து வைத்தாள். வந்தவர் மிகவும் உயரமாக இருந்ததால், நிலைக் கதவு தலையில் இடிக்காமலிருக்க குனிந்து நுழைய வேண்டியிருந்தது. அவர் அறையினுள் நுழைந்து தலை நிமிர்ந்த போது தலை, கூரையைத் தொட்டு விடுவது போல் இருந்தது.

    வந்தவர், கோட்டைக் கழற்றி விட்டுப் பெஞ்சில் அமர்ந்து “உங்களில் யார் எசமான்?” என்று கேட்டார்.

    சைமன் பணிவுடன். “நான்தான் ஐயா’ என்றான்.

    அந்தச் செல்வந்தர் தன் பணிவிடையாளை அழைத்து, தான் கொண்டு வந்திருந்த விலை உயர்ந்த தோலை மேசை மேல் விரிக்கச் சொன்னார். பின் சைமனை நோக்கி “இது மிகவும் விலை உயர்ந்த தோல், ஜெர்மனியிலிருந்து வரவழைக்கப்பட்டது. இதன் விலை இருபது ரூபிள்கள். நீ எனக்கு ஒரு சோடி பூட்ஸ்கள் தைக்க வேண்டும், பூட்ஸ்கள் குறைந்தது ஒரு ஆண்டு உழைக்க வேண்டும். அதற்கு முன்னால் தையல் பிரிந்து விட்டாலோ அல்லது பூட்ஸின் வடிவம் குலைந்து விட்டாலோ உன்னைச் சிறைச்சாலைக்கு அனுப்பிவிடுவேன். பூட்ஸ் வடிவம் மாறாமலும், தையல் பிரியாமலும் இருந்தால் பத்து ரூபிள்கள் கொடுப்பேன்” என்றார்.

    சைமன், மிகவும் மெல்லிய குரலில், ”இந்த வேலையை எடுக்கலாமா?” என்று மைக்கேலைக் கேட்டான். அதற்கு மைக்கேல் மெளனமாகத் தலையை அசைத்துச் சம்மதம் தெரிவித்தான்.

    சைமனும் அந்தச் செல்வந்தர் இட்ட கட்டுப்பாடுகளுக்கு இணங்கி பூட்ஸ்த் தைக்க ஒப்புக் கொண்டு, அவருடைய கால் அளவுகளை வரைந்து கொண்டான். அவர் மைக்கேலைப் பார்த்து “இவன் யாரென்று” கேட்டார். அதற்கு சைமன், ”இவன் என்னுடன் செருப்புத் தைப்பவன். இவன்தான் உங்கள் பூட்ஸ்களைத் தைப்பான்” என்றான்.

    அவர் மைக்கேலைப் பார்த்து “நான் சொன்னதை நினைவில் வைத்துக் கொள், பூட்ஸ் ஒரு வருடத்திற்குக் குறையாமல் உழைக்க வேண்டும்” என்றார். மைக்கேல் அவருக்குப் பதில் கொடுக்காமல் அவருடைய முதுகின் பின்னால், அறையின் மூலையில் யாரையோ பார்ப்பது போல் ஊன்றிக் கவனித்துக் கொண்டிருந்தவன், திடீரெனப் புன்னகை பூத்த போது அவன் முகம் பிரகாசமடைந்தது. அதைக் கவனித்த செல்வந்தர், “முட்டாள், ஏன் சிரிக்கிறாய், பூட்ஸ்களை ஒழுங்காகத் தைத்துக் குறித்த நேரத்தில் கொடுக்க வேண்டும்* என்றார். அதற்கு மைக்கேல் தகுந்த நேரத்தில் தைத்துக் கொடுக்க ஒப்புக் கொண்டான்.

    அந்தச் செல்வந்தர் பெஞ்சிலிருந்து எழும்பி தன்னுடைய பூட்ஸ்களை அணிந்து கொண்டு உரோமக் கோட்டையும் போர்த்திக் கொண்டு வெளியே செல்லும் போது கதவருகே குனிந்து செல்ல மறந்து விட்டதால் தலை பலமாகக் கதவில் அடிபட்டு விட்டது. அவர் கோபத்துடன் தலையைத் தடவிக் கொண்டே வண்டியிலேறிச் சென்று விட்டார்.

    சைமன் இவ்வளவு திடகாத்திரமான மனிதரை இதுவரையும் பார்த்ததில்லை. ஆதலால் அவர் போன பின், “அவர் எப்படி வாட்ட சாட்டமாக இருக்கிறார், மரச்சுத்தியால் அடித்தாலும் கொல்ல முடியாது. தலை கதவில் இடித்த போது கூட ஒன்றும் ஆகவில்லை” என்று வியந்தான். “அவர் போல் செல்வந்தராக வாழ்ந்தால், ஏன் பலசாலியாக இருக்க முடியாது? “மலை போல் இருக்கும் போது, மரணம் கூடத் தொடமுடியாது” என்று மெட்ரீனாவும் ஆச்சரியப்பட்டாள்.

    தொடரும்

    Share