Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (261)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள்.

    இதோ அடுத்தொரு வாரம். அடுத்தொரு மடல். அன்புடை வல்லமை வாசகர் மத்தியில் வலம் வரும் வாய்ப்பு. சில வாரங்கள் காணாமல் போயிருந்த என் மடல் மீண்டும் உங்கள் முன்னே துளிர்த்து விழுகிறது. எனது வருடாந்த சென்னை விஜயத்தை முடித்துக் கொண்டு கடந்த சனிக்கிழமையே திரும்பவும் லண்டனை வந்தடைந்ததுவே தாமதத்துக்குக் காரணம். மாசிப்பனியோடு கலந்த ஒரு மெல்லிய சூட்டினை அனுபவித்து விட்டு உறைநிலையைத் தாண்டுவதற்கு போராடும் லண்டன் குளிருக்குள் மீண்டும் வந்து சிக்கிக்கொண்ட வேளை.

    ஒருமாத கால இடைவெளியில் லண்டனில் அப்படி ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்குமோ என்று பார்த்தால் இல்லை என்பதுவே பதிலாகப் படுகிறது.எதிர்பார்த்த குளிர், எதிர்பார்த்தபடியே “பிரெக்ஸிட்” பற்றிய பலகோணச் சர்ச்சைகள் என ஏமாற்றமில்லாமல் என்னை வரவேற்றது லண்டன்.

    பணிபுரியும் மக்கள் தாம் பெறும் ஊதியத்துக்கேற்ப வரிப்பணத்தை அரசுக்குச் செலுத்துகிறார்கள். தாம் செலுத்தும் வரிப்பணத்தைக் கொண்டு தாம் வாழும் சமுதாயத்துக்குத் தேவையான அத்தியாவசிய சேவைகளைப் பாரபட்சமின்றி அரசாங்கம் வழங்கும் எனும் ஒரு நம்பிக்கையே ஜனநாயகம் எனும் கோட்பாட்டினை இன்னும் பல நாடுகளில் நடைமுறையில் வைத்திருக்க உதவுகிறது. ஆனால் இந்த நம்பிக்கை தகர்க்கப்படுமானால் மக்களுக்கு அரசின் மீதும் , அரச நிர்வாகத்தினை நடத்துபவர் மீதும் அவநம்பிக்கை ஏற்பட ஆரம்பிக்கிறது. இந்த அவநம்பிக்கையின் விளைவாகத் தீவிரவாதக் கொள்கைகளை அதிரடியாக முன்வைப்பவர் மக்களின் வாக்குகளைப் பெறும் நிலை ஏற்படுகிறது.

    இத்தகைய ஒரு நிலைப்பாட்டின் வெளிப்பாடே இன்று இங்கிலாந்து அரசாங்கத்துக்கு மக்கள் கொடுத்த ஐரோப்பிய யூனியனிலிருந்து வெளியேறக் கோரும் “ப்ரெக்ஸிட்” எனும் கோரிக்கை. இக்கோரிக்கை வெறும் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா வெளியேறுவது எனும் தீர்மானத்தை மட்டும் முடுக்கி விடவில்லை, இங்கிலாந்து நாட்டில் வாழும் பலவேறு இன மக்களிடையே நிலவி வந்த புரிந்துணர்வில் கூட சிறு விரிசலை ஏற்படுத்தியிருக்கிறது என்பதுவே உண்மை. இந்த ஒரு நிலையில் தான் நான் கடந்த சில நாட்களின் முன்னே வானொலியில் கேட்க விழைந்த ஒரு செய்தி என்னைச் சிந்திக்கத் தூண்டியது. இங்கிலாந்தில் லண்டனின் முக்கியப் பகுதிகளில் ஒன்று “வெஸ்ட் மினிஸ்டர்” பகுதியாகும். இப்பகுதியின் நகரசபை சமீபத்தில் தமது எல்லைக்குள் வாழும் மக்களனைவருக்கும் ஒரு பொதுவான கடிதத்தை அனுப்பியுள்ளதாம். அக்கடிதத்தில் “எமது நகர எல்லைக்குள் வாழ்பவர்களில் செல்வம் கொண்ட மக்கள் தாமாகவே அந்நகர மக்களின் வாழ்வாதாரத்துக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்குத் “தன்னார்வ” (Voluntary)அடிப்படையிலுதவும் வகையில் பண உதவி செய்யக் கோரியிருந்தார்கள். அதைப்பார்த்த மக்கள் அதிர்ச்சியடைந்ததில் ஆச்சரியமில்லை. இங்கிலாந்து உலகத்தில் பொருளாதாரத்தில் முன்னணியில் இருக்கும் நாடுகளில் ஐந்தாவது இடத்தை வகிக்கிறது. அத்தகைய நாட்டின் ஒரு கேந்திர பகுதி அங்கு வசிக்கும் மக்களுக்கான அத்தியாவசியத் தேவைகளை முன்னெடுப்பதற்கு மக்களின் கைகளை எதிர்பார்க்கிறார்கள் எனும் செய்தி ஆச்சரியமளிப்பதில் என்ன தவறு.

    ஆச்சரியம் மட்டுமல்ல ஆத்திரம் கூட அடைகிறார்கள் உழைக்கும் பணத்தில் 20%  தொடக்கம் 40% வரையில் தாம் உழைக்கும் ஊதியத்துக்கேற்ப அரசாங்கத்துக்கு அளிக்கும் வரிப்பணம், தாம் வாழும் தமது இல்லங்களின் பெறுமதியைப் பொறுத்து தாம் வாழும் பகுதியின் நகரசபைகளுக்கு அளிக்கும் “நகரசபை வரி அல்லது கவுண்சில் டக்ஸ்” , அத்தோடு உபயோகிக்கும் நீருக்கான வரி எனப் பலவிதமான வரிகளை மக்கள் அளிக்கும் நோக்கம், தாமளிக்கும் வரிகளைச் சரியான வகையில் கையாண்டுச் சமுதாயத்தின் அத்தியாவசியச் சேவைகளை அனைவருக்கும் பாரபட்சமின்றி அளிப்பார்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே என்றால் அது மிகையாகாது. ஆனால் இன்றோ அந்நம்பிக்கையை அசைத்துப் பார்க்கும் வகையில் நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. மாறி மாறி வரும் அரசாங்கங்களின் மூலம் தமது அல்லல்கள் தீரும் என எதிர்பார்க்கும் மக்கள் ஏமாற்றத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுவது தீவிரவாதக் கொள்கைகளை முன்னேடுக்கும் கட்ச்சிகளுக்கான ஆதரவை அதிகரிக்கும் என்பதுவே உண்மை.

    தேசியவாதம் எனும் கோஷம் மெதுவாக இனத்துவேஷம் எனும் எல்லையை நோக்கி நகர்ந்து செல்வதை உணர முடிகிறது. சமுதாய முற்போக்குச் சிந்தனை கொண்ட கட்சிகள் என்று தம்மைத் தாமே விமர்சித்துக் கொள்ளும் முக்கிய அரசியல் கட்சிகள் இந்நகர்வின் நிகழ்வினைச் சரியாக எடைபோடத் தவறி விடுவார்களோ? எனும் அச்சம் பல கோணங்களில் தலைதூக்குகிறது. ஒரு தேசத்தின் அரசியல் [அயணம் என்பது பல முக்கியப் பாதைகளினூடாக பயணிப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால் அப்பயணங்கள் மிக முக்கியமான சந்திகளை வந்தடையும் போது எந்தத் திருப்பத்தைத் தெரிவு செய்யப் போகிறார்கள் :என்பது மிகவும் முக்கியமான கேள்வியாகும். இங்கிலாந்தின் அரசுக் கட்டிலில் மாறி மாறி ஏறிக் கோலோச்சும் இவ்வரசியல் கட்சிகள் சரியான பாதையைச் சரியான நேரத்தில் தேர்ந்தெடுப்பார்களா? என்பதற்கான விடையைக் காலம் தான் எமக்கு அளிக்குமோ?

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • வஞ்சம் செய்வாரோடு..!

     

    imgonline-com

     

    வஞ்சகிகூனியும் வஞ்சகசகுனியும் செய்ததாகப் பல..

    …….தந்திரமதைச் சொல்கிறது ராமகாதையும் மாபாரதமும்.!

    வஞ்சகத்திற் கெப்போது மிப்போதும் குறைவில்லை..

    …….வாகாகயதைக் கையாளத் தெரிந்தால் துன்பமில்லை.!

    பஞ்ச பாண்டவருக்கு துரோகமிழைத்த துரியோதனன்..

    …….பாரதப்போரிலே படுதோல்வி யடைந்தது எதனாலே.!

    அஞ்சாநெஞ்சம் கொண்ட சிங்கமாமந்த கர்ணனை..

    …….ஆட்டிவைத்து அழவைத்ததும் வஞ்சச் செயல்தானே.!

     

     

    லஞ்சமென்ப தெங்குமெதிலும் தலை விரித்தாடுமதில்..

    …….லாவகமாய்ச் சதித்திட்டம் பலவுமங்கே அரங்கேறும்.!

    கஞ்சியோ கூழோ நீராகாரமோ உண்டுவாழ்பவரைக்..

    …….கூடவாழ்விலே கெடவைக்கும் செயலாகும் வஞ்சமாம்.!

    பிஞ்சிலே பழுத்தகாதல் மஞ்சத்தில் முடியாதுபோவதும்..

    …….பாஞ்சாலங்குறிச்சி மன்னனைத் தூக்கிலிட்டது மதுவே.!

    கிஞ்சித்தும் யோசியாது வஞ்சம் செய்வோரவரே..

    …….கொஞ்சமும் யோசிக்கார்!துரோகமெனவும் நினையார்.!

     

     

     

    நெஞ்சத்தினிலே இதயத்தினிலே எத்துணை நாள்நாம்..

    …….நீதியநீதியைப் பிரித்துப் பார்க்கக் காக்கவேண்டும்.!

    வஞ்சகமில்லாத மனிதராகயினி மறுபிறப் பிலாவது..

    …….வாழ சண்டாளர்துணை நீங்கயிறையருள் வேண்டும்.!

    துஞ்சாத மனநிலையைத் தந்தருளயென் முன்வினைச்..

    …….செய்ததீச்செயல் யாவுமகற்ற உன்துணை வேண்டும்.!

    பஞ்சம்பசி பட்டினியின்றி நெஞ்சிற் கருணையொடு..

    …….பாருலகைப் படைக்க உன்னைத் தஞ்சமடைகிறேன்.!

    =============================================================

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு::01-02-2018

     

    நன்றி:: கூகிள் இமேஜ்

    Share
  • ஆன்மா ஒன்று ஓலமிடுகிறது

    நிர்மலா ராகவன்

    “நான் எடுக்கலே!” திரும்பத் திரும்பச் சொன்னேன். ஆரம்பத்தில் மறுப்பாக ஒலித்த குரல் போகப் போக ஈனஸ்வரமாக ஆகியது. குரல் அடைத்துவிட்டது.

    “எந்தத் திருடன்தான், `ஆமா. நான்தான் எடுத்தேன்,’னு ஒத்துக்குவான்!” டீச்சர் கருணாவின் ஏளனக்குரல். (அவளுடைய கணவனின் பெயர் கருணாகரனாம். மிஸஸ் கருணா நாளடைவில் வெறும் கருணாவாகிப்போனது).

    “என்ன கருணா?” இன்னொரு டீச்சரின் குரல். நேரத்துடன் வகுப்புக்குப் போகாமலிருக்க ஏதோ வம்பில் பங்கு எடுத்துக்கொள்வது ஒரு சாக்கு.

    “என்னோட பார்க்கர் பேனாவை இந்தப் பொண்ணு எடுத்துட்டா. நல்லத்தனமா கேட்டா..,” என்று ஏதோ ஆரம்பித்தாள்.

    “இவளா! இவளுக்குத்தான் எழுதவே தெரியாதே? பேருதான் கலைவாணி!”

    எத்தனை பேருக்குப் பெயர் பொருத்தமாக இருக்கிறது! கருணைக்கு அர்த்தம் என்னவென்றே தெரியாத இவளுக்கெல்லாம்..! சிரிப்பு வந்தது.

    “செய்யறதையும் செஞ்சுட்டு, சிரிப்பைப் பாரு!” டீச்சர் கன்னத்தில் அறைந்தாள்.

    இந்தக் கருணா டீச்சரிடம் அடி வாங்குவது ஒன்றும் எனக்குப் புதிதல்ல. `எழுது, எழுது!’ என்று என் வலது கை விரல்களை ஒரு பருமனான கட்டையால் எத்தனை தடவை நசுக்கி இருக்கிறாள்!

    நானும் எவ்வளவோ முயன்று பார்த்தேன். ஒவ்வொரு எழுத்தும் ஏதோ நடனம் ஆடுவதுபோல் தெரியும். எப்படி அதைப் படிப்பது, என்ன எழுதுவது என்றெல்லாம் எனக்குப் புரியத்தானில்லை. ஒவ்வொரு வகுப்பிலும் நான்தான் கடைசி மாணவி.

    நான் தினமும் பள்ளிக்கூடத்தில் அடியும் திட்டும் வாங்குகிறேன் என்று தெரிந்தால் துடித்துப் போய்விடுவார். நான் சொன்னதேயில்லை. பாவம், அவராவது நிம்மதியாக இருக்கட்டும்!

    “இப்படியெல்லாம் கேட்டா ஒத்துக்கமாட்டா, கருணா!”

    அதற்குப்பின் நடந்ததெல்லாம் யாருக்கோ நடந்ததைப்போல் இருக்கிறது. வேதியல் ஆய்வகத்தை ஒட்டியிருந்த அறையில் என்னைத் தள்ளி, கதவை வெளியில் பூட்டுகிறார்கள்.

    ஒரே இருட்டு. ஜன்னல் இல்லாததால் மூச்சு முட்டுகிறது. எத்தனை நேரம் அங்கு இருந்தேனோ! கண்விழித்துப் பார்த்தபோது, அப்பாவும் பாட்டியும் கவலையுடன் என்னையே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

    “கலை! என்னம்மா ஆச்சு? நீ ஸ்கூல்ல மயக்கம் போட்டுட்டியாம்!” என்றார் அப்பா, கவலையுடன். “அந்த நல்ல டீச்சர்தான் ஒன்னை வீட்டிலே கொண்டு விட்டுட்டுப் போறாங்க!” என்றாள் பாட்டி.

    நடந்தது எல்லாம் என் நினைவில் எழுந்தது. “நான் எடுக்கலேப்பா,” என்றேன். அழுகை வந்தது.

    “எதையோ பாத்து பயந்து போயிருக்கு,” என்று பாட்டி அனுமானம் செய்தாள். “மொதல்லே சூடா மைலோ குடி. எழுந்திரு!”

    “இப்போ ஒண்ணும் வேணாம், பாட்டி. நான் தூங்கறேன்,” என்று எழுந்தவள், அப்பாவையும், பாட்டியையும் இறுக அணைக்கிறேன்.

    “கலை! கலை! என்னம்மா?” அப்பா பதறினார். வயதுக்கு வந்த இந்த இரண்டு வருஷங்களாக நான் அப்பாவைத் தொட்டதே கிடையாது.

    “எனக்கு ஒங்க ரெண்டு பேரையும் ரொம்ப பிடிக்கும்பா!” என் துக்கத்தை மறைத்து, சிரிக்க முயல்கிறேன். பிறகு என் அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டுக்கொள்கிறேன்.

    மீண்டும் இருள். என்னைச் சுற்றி நான்கு பக்கங்களிலும் கருமையான, கெட்டிச் சுவர்! எந்தப் பக்கம் போக முயன்றாலும் இடிக்கிறது.

    மிரண்டுபோய், “என்னைக் காப்பாத்துங்களேன்!” என்று கத்துகிறேன்.

    “நீயும் தற்கொலைக் கேசா?” ஒரு குரல், லேசான சிரிப்புடன் ஒலிக்கிறது.

    தற்கொலையா? நான் செத்துவிட்டேனா! ஐயோ! அப்பா துடித்துப்போவாரே!

    எங்கள் வீட்டைப் பார்க்க முயல்கிறேன். முடியவில்லை. பயங்கரமான அந்த இருளிலேயே அடைபட்டுக் கிடந்தேன்.

    என் ஆத்மா சாந்தியடைய பூசை செய்கிறார்கள். எனக்கும் அந்த இருளிலிருந்து விடுதலை கிடைக்கிறது.

    வீட்டு வாசலில் நாளிதழ் கிடக்கிறது. முதல் பக்கத்திலேயே என் போட்டோ! இப்போதும் படிக்க முடியவில்லைதான். ஆனால், என்ன எழுதியிருக்கும் என்று ஊகிக்க முடிகிறது.

    “ஆசிரியையால் திருட்டுப்பட்டம் சுமத்தப்பட்ட மாணவி தூக்கு போட்டுக்கொண்டு இறந்துபோனாள்!”

    அப்பா கதறிக் கொண்டிருந்தார்: “கண்ணு! கலைக்கண்ணு! ஏம்மா இப்படி ஒரு காரியம் செய்துட்டே? நீ நல்ல பொண்ணுன்னு எனக்குத் தெரியாதா! எடுக்கலேன்னு நீ வேற தனியா சொல்லணுமா? நீ சொன்னப்போ புரியாம போச்சே!”

    கருணா டீச்சர் மட்டும் நிம்மதியாக இருக்கலாமா? நினைத்த மாத்திரத்தில் அவள் வீட்டுக்குள் நுழைந்தேன். பீரோவில் அடுக்கி வைத்திருந்த புடவைகளுக்கிடையே இருந்தது அது — என் உயிரைப் பறித்த அந்த சிவப்பு நிற பார்க்கர் பேனா.

    என்னைப்போலவே கருணாவும் அதிர்ச்சி அடைந்தது தெளிவாகத் தெரிந்தது. சுற்றுமுற்றும் பார்த்தவள், அதை ஒரு புடவைகளுக்குள் செருகி, நன்றாக மறைத்துவைத்தாள்.

    இவள் செய்த கொடுமையால், அதனால் அடைந்த பயத்தால், என்ன செய்கிறோம் என்று சரியாகப் புரியாமலேயே என் உயிரை மாய்த்துக்கொண்டேனே!

    அந்த நிலையிலும் ஒரு சிறு திருப்தி பிறந்தது. உயிருடன் இருக்கும்போது செய்ய முடியாததையெல்லாம் இப்போது சாதிக்கலாம். நான் தொடாமலேயே, பொருட்களை இடம் மாற்றி வைக்க முடியுமே!

    சற்றுப் பொறுத்து, புடவைகளின் பின்னால் கையைவிட்டுத் துழாவினாள் கருணா.

    பதட்டத்துடன், சமையலறைக்குள் நுழைந்தவள், அங்கிருந்த மேசைமேல் கிடந்த பேனாவைப் பார்த்தாள். மூச்சை உள்ளே இழுத்துக்கொண்டது எனக்கு நன்றாகவே கேட்டது.

    வேண்டும். நன்றாக வேண்டும். பயம் என்றால் என்னவென்று இவளுக்கு மட்டும் தெரிய வேண்டாமா?

    தணலைத் தொடுவதுபோல் அதை ஒரு விரலால் தொட்டாள், தான் காண்பது நிசம்தானா என்று உறுதிப்படுத்திக்கொள்ள நினைப்பவளாக.

    அப்பேனாவை எடுத்து டிராயரில் வைத்துப் பூட்டினாள். தான்தான் கைமறதியாக அதை அங்கு வைத்திருக்க வேண்டும் என்று நினைத்திருப்பாள். முட்டாள்!

    மறுநாள் காலை கருணா அந்த டிராயரைத் திறந்து பார்த்தபோது அவள் முகத்தில் தோன்றிய கலக்கத்தை ரசித்தேன். `இன்று பூராவும் தேடட்டும்!’ என்று ஆக்ரோஷமாக முதலில் எழுந்த யோசனையைக் கைவிட்டேன்.

    எங்கெங்கோ தேடிவிட்டு, பள்ளிக்கூடத்திற்குப் புறப்பட்டாள் கருணா.

    “ஆ!”

    இதற்குத்தானே காத்துக்கொண்டிருந்தேன்!

    பூட்டி வைத்த பேனா எப்படி தன் செருப்புக்குள் புகுந்தது என்று நன்றாகக் குழம்பட்டும்!

    அவள் சற்றும் எதிர்பாராத இடங்களில் அப்பேனா முளைத்தது. அரிசிமாவு சம்புடத்தைத் திறந்தபோது, அது சிவப்பாக ஒளிர்ந்தது. மிளகாய்ப்பொடி டப்பாவில் சிவப்போடு சிவப்பாக! எவ்வளவுதான் பத்திரப்படுத்தினாலும், அதற்குக் கால் முளைத்தது.

    கருணாவுக்குப் புதிய கவலை பிறந்தது. பள்ளிக்கூடத்தில் இருக்கையில், கைப்பைக்குள் வந்துவிட்டால்? அப்போது வெளியே வந்து விழுந்து, தன்னைக் காட்டிக்கொடுக்காது என்று என்ன நிச்சயம்?

    நடுங்கும் கரங்களுடன் அடிக்கடி பையைத் திறந்து சோதனை போட்டாள். நிம்மதி போயிற்று.

    “இந்த வீட்டிலே பேய் இருக்குங்க. வீடு மாத்திடலாம்,” என்று படபடப்புடன் அவள் கூறியதைக் கேட்டுச் சிரித்தான் மிஸ்டர் கருணா.

    நடந்ததை அவள் சொல்லக் கேட்டு, “பேனா கிடைச்ச விஷயம் வெளியில தெரியக்கூடாது. நீ மாட்டிப்பே!” என்று எச்சரித்தான். “அதைத் தூக்கிக் குப்பையில போடு!”

    அந்தப் பாழாய்ப்போன பேனாவுக்காக என் உயிரை வாங்கியவள், “நல்ல பார்க்கர் பேனா! எவ்வளவு ஆசையா வாங்கினது!” என்று தயங்கினாள்.

    “அப்போ, கொலைக் குத்தத்துக்காக ஜெயிலுக்குப் போறியா?” என்று கத்தியவன், “எங்கே அந்த சனியன்? குடு. நெருப்பில போட்டுடறேன்,” என்று மேலும் குரலை உயர்த்தினான்.

    அவ்வளவு சீக்கிரம் அவளைத் தப்பிக்க விடுவேனா!

    “இங்கதானே வெச்சேன்!” என்று குழப்பத்துடன் அவள் மேசையைத் தடவினாள்.

    என்னால் எழுதவோ, படிக்கவோ இயலாமல் போனது பிறவியிலேயே என் மூளையிலிருந்த ஏதோ கோளாறினால் என்பதுகூடத் தெரிந்திராத இவளெல்லாம் ஆசிரியத் தொழிலுக்கே இழுக்கு! நான் பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த பயமும் துக்கமும் வெறுப்பாக மாறின.

    மாதக்கணக்கில் நான், பேனா, கருணா மூவரும் விளையாடிய இந்த விளையாட்டின் இறுதியில் நான்தான் வென்றேன்.

    `மன நிலை சரியாக இல்லை,’ என்ற காரணத்துடன் உத்தியோகத்திலிருந்து விலக்கப்பட்டாள்.

    வெறித்த பார்வையுடன் ஒரே இடத்தில் உட்கார்ந்திருந்தவளை விவாகரத்து செய்துவிட்டு, இன்னொரு கல்யாணம் செய்துகொண்டான் மிஸ்டர் கருணா.

    எனக்கு இனிமேல் அங்கு என்ன வேலை? அப்பாவைப் பார்க்க வேண்டும்போல இருந்தது. விரைந்தேன்.

    மாலை போட்டிருந்த என் படத்தின்முன் நிலைகுலைந்து உட்கார்ந்திருந்தார் அப்பா.

    `நம்புங்கப்பா. நான் எடுக்கலே!’ என்றேன் கெஞ்சலாக.

    ஆனால் அவருக்கு என் ஓலம் கேட்கவில்லை. அழுதபடியே இருந்தார்.

    கதாசிரியரின் குறிப்பு: இளம் பருவத்தில் திடீர் மரணம் அடைந்தவர்கள் பொருட்களை இடம் மாற்றி வைப்பார்கள். சில சமயம் விளையாட்டாக.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171213 b - Universal Krishna -raw
    171213 b – Universal Krishna -raw

    ”டால்ஃபினில் ஏறி தரங்கம்(கடல்) புகுந்தந்த
    மால்பின்னர் மச்சமாய் மாறினார் -நூல்களாம்
    ஆரணம்(வேதங்கள்) காக்க அசுரனைக் கொன்றவர்:
    பூரணர் கண்ண பிரான்’’….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4263

    ”மாலோலன் பாடுகிறார் மாடை மடிதாங்கி,
    தாலேலோ வாத்ஸல்ய தாலாட்டு: -காலேல(காலையில்)
    கேசவ் அனுப்ப கலிதீர்ந்து போனது
    வாசனையாய்(பிராரப்தம்,ஆகாமி….!) என்வெண்பா வாய்”….கிரேசி மோகன்….

    Share
  • பாலஸ்தீனத்தில் மோதி எதைச் சாதிக்கப் போகிறார்?

    நாகேஸ்வரி அண்ணாமலை

    சென்ற மாதம் இஸ்ரேல் பிரதம மந்திரி இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது வழக்கத்திற்கு மாறாக இந்தியப் பிரதமர் விமானநிலையத்திற்கே சென்று நேதன்யாஹுவை வரவேற்றார்.  அதன் பிறகும் இந்தியாவின் பல இடங்களுக்கும் அவரைக் கூட்டிச் சென்று, அவர் இந்தியாவில் இருந்த அத்தனை நாட்களும் அவர் கூடவே இருந்து அவர் தன்னுடைய soul-mate என்று கூறாமல் கூறினார்.  இஸ்ரேலின் தொழிலதிபர்களிடமிருந்து பல முதலீடுகளைப் பெற்ற்றதாகப் பீற்றிக்கொண்டார்.  இஸ்ரேலிடமிருந்து பல தொழில் நுட்பங்களை இந்தியா பெற்றிருப்பதாகவும் கூறினார்.

    1948-இஸ்ரேல் உருவாக்கப்பட்டுப் பல வருடங்கள் ஆன பிறகும் இந்தியா இஸ்ரேலை ஆதரிக்கவில்லை; இஸ்ரேலோடு தூதரக உறவுகள்கூட வைத்துக்கொள்ளவில்லை.  இந்தியர்கள் இஸ்ரேலுக்குப் போவதற்கே தடை விதிக்கப்பட்டிருந்தது.  1992-இல்தான் இந்தியா இஸ்ரேலோடு தூதரகத் தொடர்புகளை ஆரம்பித்தது.  அதெல்லாம் பழங்கதையாகவே இருக்கட்டும்.  இப்போது இஸ்ரேலோடு உறவு வைத்துக்கொள்வதால் இந்தியாவிற்கு நன்மைகள் கிடைக்குமென்றால் அதைச் செய்வதில் தவறு ஏதுமில்லை.

    ஆனால் இப்போது மோதி பாலஸ்தீனத் தலைநகர் ராமல்லாவிற்குச் சென்று பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அப்பாஸையும் சந்தித்திருக்கிறார். அதற்கு மேல் சுதந்திர பாலஸ்தீனம் பிறக்கும் என்ற நம்பிக்கையையும் தெரிவித்திருக்கிறார்.  எந்த ஆதாரத்தில் இந்த நம்பிக்கையை பாலஸ்தீனர்களுக்குக் கொடுத்திருக்கிறார் என்று தெரியவில்லை.

    யூதர்களுக்கென்று ஒரு தனி நாடு வேண்டும், அதுவும் அந்த நாடு யூதர்களின் புண்ணிய பூமியான பாலஸ்தீனமாக இருக்க வேண்டும் என்று ஹெர்ஸல் என்ற யூதரொருவர் அறைகூவியதின் விளைவக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலேயே யூதர்கள் பல ஐரோப்பிய நாடுகளிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேற ஆரம்பித்தனர்.  அங்கு வாழ்ந்துவந்த அரேபியர்களின் நிலங்களை அதிக விலைகொடுத்து வாங்கித் தங்கள் உடைமை ஆக்கிக்கொண்டனர்.  வெளியிலிருந்து தாங்கள் கொண்டுவந்த பணபலம், தொழில்நுட்பம் ஆகியவற்றால் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனத்தின் பெரும்பகுதியைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொண்டனர்.  அப்பாவி அரேபியர்கள் விழித்துக்கொண்டு இதை நிறுத்துவதற்குள் யூதர்கள் பாலஸ்தீனத்தில் தங்கள் பலத்தைப் பெருக்கிக்கொண்டு தங்களை அங்கு நிலைநாட்டிக்கொண்டனர்.  தங்களது மண்ணில் யூதர்கள் பலம் பெறுவதை உணர்ந்த பாலஸ்தீனர்கள் யூதர்களோடு மோதத் தொடங்கினர்.

    முதல் உலக யுத்தம் முடிந்து ஆட்டோமான் பேரரசு தோல்வியடைந்ததால் அது பல நாடுகளாகப் பிரிக்கப்பட்டது.  ஆட்டோமான் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய பாலஸ்தீனம் போரில் வெற்றிபெற்ற நாடுகளில் ஒன்றான பிரிட்டனின் ஆளுகையின் கீழ் வந்தது.  அப்போதுதான் வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கும் (யூதர்கள் தங்கள் புண்ணிய பூமி என்று சொந்தம் கொண்டாடிய) பாலஸ்தீனத்திலேயே பதின்மூன்று நூற்றாண்டுகள் வாழ்ந்துவந்த அரேபியர்களுக்கும் இடையே நடந்த மோதல்களால் பாலஸ்தீனத்தை யூதர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையே பிரிக்க பிரிட்டனின் முடிவுசெய்தது.  வெளியிலிருந்து வந்த யூதர்களுக்கு பிரிட்டனின் இந்த முடிவை ஏற்றுக்கொள்வது எளிதாக இருந்தது.  ஏனெனில் அவர்கள் கையில் இருந்த நிலமெல்லாம் அரேபியர்களிடமிருந்து வாங்கியது.  அரேபியர்களுக்கோ தங்கள் நிலங்களை பிரிட்டன் யூதர்களுக்குக் பங்கு போட்டுக் கொடுக்கிறதே என்று கோபம்.  அப்போதைக்கு பிரிட்டனின் இந்தத் திட்டம் நிறைவேற்றப்படாவிட்டாலும் பாலஸ்தீனத்தைப் பிரிக்கும் திட்டத்தைப் பத்து வருடங்களுக்குப் பிறகு – பிரிட்டன் பாலஸ்தீனப் பொறுப்பை ஐ.நா.விடம் ஒப்படைக்க முடிவுசெய்ததும் – ஐ.நா. நிறைவேற்ற முடிவுசெய்தது.  பிரிட்டன் யூதர்களுக்குக் கொடுப்பதாக இருந்த நிலப்பகுதியைவிட ஐ.நா. அதிக இடப்பகுதியை யூதர்களுக்குக் கொடுக்க முடிவுசெய்தது.  இந்த முடிவை வெகுவாக ஆதரித்த யூதர்கள் தங்களுக்கு ஐ.நா. கொடுத்த இடங்களை இஸ்ரேல் என்று பிரகடனம் செய்துகொண்டு இஸ்ரெலை உருவாக்கியது.  ஐ.நா.வின் இந்த முடிவை ஏற்காத அரேபியர்கள் ஐ.நா.வால் பாலஸ்தீனத்தில் தங்களுக்கென்று கொடுக்கப்பட்ட இடத்தில் தங்களுடைய நாட்டை உருவாக்கிக்கொள்ளாமல் ஐ.நா.வின் அந்த முடிவை எதிர்க்கத் திட்டமிட்டனர்.

    யூதர்கள் இஸ்ரேலை ஸ்தாபித்துக்கொண்டது மட்டுமன்றி ஐ.நா.வால் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட நிலங்களையும் இன்றுவரை தங்கள் பணபலத்தாலும் படைபலத்தாலும் கைப்பற்றி வருகின்றனர்.  அமெரிக்கா இஸ்ரேலுக்கு அளிக்கும் ராணுவ, பொருளாதார உதவிகளே இஸ்ரேல் இந்தக் காரியங்களைச் செய்வதற்கு உதவிபுரிகின்றன.  அதுமட்டுமின்றி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுடைய இடங்களில் வெளியிலிருந்து வரும் யூதர்களுக்குத் தங்குவதற்கு குடியிருப்புகளை அமைத்துக் கொடுக்கிறார்கள்.  பாலஸ்தீனர்களுக்காகக் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் இம்மாதிரி இடங்களை எடுத்துக்கொண்டே போவதால் பாலஸ்தீனர்களுக்கு இப்போது வெஸ்ட் பேங்கில் தொடர்ச்சியாக நிலங்கள் இல்லை.

    2015-இல் நடைபெற்ற இஸ்ரேல் தேர்தலில் போட்டியிட்ட நேதன்யாஹு தேர்தலுக்கு சில தினங்கள் முன்பு அவருக்கு வாக்காளர்களிடையே ஆதரவு குறைந்துவருவது தெரிந்தவுடன் தான் பிரதம மந்திரியாகத் தேர்தெடுக்கப்பட்டால் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு மட்டும்தான் இருக்கும் என்றும் பாலஸ்தீனத்தில் இரு நாடுகள் என்ற திட்டம் கைவிடப்பட்டது என்றும் கூற ஆரம்பித்தார்.  உடனே அவருக்கு ஆதரவு அதிகரித்து அவர் தேர்தலிலும் ஜெயித்து இஸ்ரேல் பிரதம மந்திரியானார்.  தேர்தல் முடிந்து சில மாதங்கள் ஆன பிறகு உலக நாடுகளின் நெருக்கடியால் மறுபடி பாலஸ்தீனத்தில் இரு நாடுகள் என்ற பேச்சை ஆரம்பித்திருக்கிறார்.  நேரத்திற்குத் தகுந்த மாதிரி பேசும் நேதன்யாஹுவை எப்படி நம்புவது?

    1995-இல் ஏற்பட்ட ஆஸ்லோ ஒப்பந்தப்படி கிழக்கு ஜெருசலேம் பாலஸ்தீனர்களின் தலைநகரமாகவும் வெஸ்ட் பேங்க், காஸா ஆகிய பகுதிகள் பலஸ்தீனத்தின் பகுதிகளாகவும் விளங்கும் என்றும் முடிவாகியது.  இப்போது ஆஸ்லோ ஒப்பந்தத்தை நிறைவேற்றும் எந்த சாத்தியக்கூறுகளும் இருப்பதாகத் தெரியவில்லை.  மத்தியஸ்தம் செய்வதாகக் கூறிக்கொண்டுவந்த அமெரிக்காவின் ஜனாதிபதி ட்ரம்ப் திடீரென்று ஜெருசலேம் இஸ்ரேலுக்குச் சொந்தம் என்பதைக் குறிக்க அமெரிக்கத் தூதரகத்தை டெல்விவிலிருந்து ஜெருசலேமிற்கு மாற்றப் போவதாக அறிவித்திருக்கிறார். அப்படியானால் பாலஸ்தீனர்களுக்குச் சேர வேண்டிய கிழக்கு ஜெருசலேம் என்னவாயிற்று?

    பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட வெஸ்ட் பேங்கில் இஸ்ரேல் யூதர்களுக்காகக் குடியிருப்புகள் அமைத்த பிறகு இங்கொன்றும் அங்கொன்றும்மாக நிலங்கள் இருக்கின்றன.  அவற்றையும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குக் கொடுப்பதாக இல்லை.  சொந்த இடங்களில் பாலஸ்தீன நாடு என்ற ஒன்று உருவானாலும் ராணுவம் இல்லாத நாடாக இருக்கும் என்று ஒரு முறை நேதன்யாஹு கூறினார்.  ராணுவம் இல்லாத, துண்டு துண்டாக இருக்கும் நிலங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்று உதட்டளவில் நேதன்யாஹு கூறிவருகிறார்.  இந்நிலையில் சுதந்திர பாலஸ்தீன நாடு உருவாகும் என்று எந்த அடிப்படையில் மோதி பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் முகம்மது அப்பாஸுக்கு

    உறுதி கூறிவிட்டு வந்திருக்கிறார்?

    பல அமெரிக்க ஜனாதிபதிகள், அரசியல் வல்லுநர்கள் இஸ்ரேல்-பாலஸ்தீனப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுபிடிக்க – பாலஸ்தீனர்களின் நன்மையைக் கருதி இவர்கள் இந்த செயலில் ஈடுபடவில்லை;  சரித்திரத்தில் இடம் பிடிக்கலாம் என்ற நப்பாசையில்தான் இவ்வாறு முயன்றார்கள் – முடியாமல் திணறிய இந்தப் பிரச்சினைக்கு மோதியால தீர்வு கண்டுபிடித்துவிட முடியுமா?  கண்டுபிடித்துவிடுவதாகக் கூறும் இவர் எப்படி அதைச் செய்யப் போகிறார் என்று கூறவில்லை.  மோதி செய்யும் மோடிமஸ்தான் வேலைகள் இந்தியாவில் வேண்டுமானால் எடுபடலாம்.  ஆனால் சர்வதேச அரங்கில் எடுபடாது.

    நாகேஸ்வரி அண்ணாமலை

      https://www.facebook.com/a.nageswari

      https://twitter.com/a_nageswari

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 107

    கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம், கரூர், இந்தியா

    முனைவர் சுபாஷிணி

    கருவூர், கரூர், வஞ்சி என அழைக்கப்படும் கரூர் நகரம் கரூர் மாவட்டத்தில் உள்ளது. கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம், கடவூர், மண்மங்கலம் ஆகிய ஆறு வட்டங்களை உள்ளடக்கிய ஒரு மாவட்டமாக கரூர் மாவட்டம் அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் இணைக்கப்பட்டிருந்த கரூர் 1995ம் ஆண்டு முதல் தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்டது.

    தமிழர்களின் வரலாற்றில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் சிறப்பினைக் கொண்ட நகரங்களில் கரூர் நகரமும் ஒன்று. கடந்த நூறாண்டில் கரூர் மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் ஆய்வுகளும், அமராவதி நதிக்கரையில் கிடைத்த தொல்லியல் சான்றுகளும் தமிழகத்தின் பழம் பெரும் நாகரிகத்தை உலகுக்கு எடுத்துக் காட்டும் கண்டுபிடிப்புகளாக அமைந்துள்ளன. அது மட்டுமன்றி, தமிழகத்தோடு அன்றைய கிரேக்க, ரோமானியப் பேரரசு கொண்டிருந்த வணிகத் தொடர்புகளைத் துல்லியமாகச் சான்றுகளுடன் எடுத்துக் காட்டும் வகையிலும் இந்த ஆய்வின் கண்டுபிடிப்புகள் அமைந்துள்ளன. இப்பகுதி இன்றளவும் முழுமையாக தொல்லியல் ஆய்வுக்கு உட்படுத்தப்படாத நிலைத் தொடர்கிற அதே வேளை, இதுவரை கிடைத்திருக்கும் தொல்லியல் சான்றுகள் அளித்திருக்கும் தகவல்கள் தரும் செய்திகளான சங்ககாலம், மற்றும் அதன் தொடர்ச்சியான காலத்து வரலாற்றினை, நாம் புரிந்து கொள்ள உதவும் முக்கிய அளவு கோலாக இந்த ஆய்வு முடிவுகள் திகழ்வதை நாம் அறிந்து கொள்ள வேண்டியதும் அவசியமாகின்றது.

    1
    கரூர் நகரின் மையத்தில் ஒரு சாலையின் ஒரு பக்கத்தில் வரிசையாகக் கடைகள் அமைந்திருக்கும் பகுதியில் உள்ள ஒரு பழமையான கட்டிடத்தில் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தின் உள்ளே நுழையும் போது நமக்கு ஏற்படும் உணர்வு ஒரு கிராமத்துப் பலசரக்குக் கடைக்குள் நுழைவது போன்ற உணர்வினைத் தருவதாக இருக்கின்றது. அருங்காட்சியகத்தின் உள்ளே பாதுகாக்கப்படுகின்ற அரும்பொருட்களோ தமிழகத்தின் வரலாற்றில் மிக முக்கிய வரலாற்று நிகழ்வுகளுக்கானச் சான்றுகளாக அமைந்து நம்மை வியக்க வைப்பதாக இருக்கின்றன. வரிசை வரிசையாகக் கண்ணாடி அலமாரிகளுக்குள் வைத்துப் பாதுகாக்கப்படும் சங்க காலத்தைய ரோமானியர்கள் தொடர்பினை வெளிப்படுத்தும் காசுகள், கரூரின் வீரர் மரபை வெளிப்படுத்தும் புலிக்குத்திக்கல் நடுகற்கள், பண்டைய தமிழர் மரபில் ஈமக்கிரியைச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்ட முதுமக்கள் தாழி, ஓலைச்சுவடி நூல்கள் ஆகியன இங்குக் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

    2

    தொல்லியல் அகழ்வாராய்ச்சியாளர்களுக்குக் கரூர் பகுதியின் மீது கவனம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்தது அமராவதி நதிக்கரையில் 1806ம் ஆண்டு வாக்கில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தில் அமைந்த பண்டைய ரோமானிய காசுகள் எனலாம். கிடைத்த குறுகிய காலத்திலேயே அவற்றில் பல காணாமல் போயின. அவற்றுள் ஒரு சில நாணயங்கள் மட்டும் அருங்காட்சியக அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டு அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டன. இப்படி சேகரித்துப் பாதுகாக்கப்பட்ட காசுகளை அறிஞர்கள் ஆராயத்தொடங்கியமைதான் இப்பகுதியில் சங்க காலத்தில் பண்டைய ரோமானிய அரசு கடல் வழி வணிகத்தை மேற்கொண்டிருந்தமையும், ரோமானியர்கள் இப்பகுதிக்கு வந்து தங்கியிருந்து வர்த்தக முயற்சிகளை மேற் கொண்ட செய்திகளையும் வெளிப்படுத்திய ஆரம்பப்புள்ளியாக அமைந்தது. தொடர்ச்சியாக கரூர் பகுதியில் பண்டைய ஆபரணங்களும் புராதனச் சின்னங்களும் மேலும் கிடைக்கவே, இப்பகுதி தொல்லியல் அறிஞர்களின் கவனத்தை வெகுவாக ஈர்க்கும் ஒரு பகுதியாக மாறியது. உலக வரைபடத்தில் இடம்பெறும் ஒரு முக்கிய நகரமாகவும் கரூர் நகரின் புகழ் உயர்ந்தது.

    தொடர்ச்சியாக நிகழ்ந்த ஆய்வுகள் கரூர் நகரின் பண்டைய முக்கியத்துவம் பற்றிய ஆய்வுகளை ஆராய்வதாக அமைந்தன. சேர மன்னர்களின் செயல்பாடுகள், சங்க இலக்கிய நூல்கள் குறிப்பிடும் இலக்கியச் செய்திகள் ஆகியன கரூர் நகரம் சேரப் பேரரசின் ஆட்சி காலத்தில் மிக முக்கியப் பங்கு வகித்த ஒரு நகரமாகத் திகழ்ந்தமையை உறுதி செய்வதாக அமைந்தது. படிப்படியாக நிகழ்ந்த இலக்கிய, தொல்லியல்,புராதனச் சின்னங்களின் ஆய்வுகள் கரூர் நகரமே பண்டைய சோழப் பேரரசின் தலைநகரமாக ‘வஞ்சி’ என்ற பெயருடன் திகழ்ந்த நகரமே இந்தக் கரூர் என்ற செய்தியையும் உலகத்திற்கு வழங்கியது. வஞ்சி எனச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடும் நகரம் தாம் கரூர் என்பதில் ஆய்வாளர்களிடையே இன்னமும் கருத்து வேறுபாடுகள் நிலவுவது தொடர்கின்றது. ஆயினும், கரூர் சேர பேரரசு புகழோடு இருந்த காலத்தில் அதன் தலைநகரமாக விளங்கிய ஒரு நகரமே என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியமாகின்றது.

    3
    கல்வெட்டு ஆய்வாளர் திரு.ஐராவதம் மகாதேவன் அவர்கள் புகழூர் கல்வெட்டினை வாசித்து ஆய்வு செய்து அதனை வெளியிட்டார். சங்க காலத்தின் மூன்று கட்டங்களிலான சேரப் பேரரசு பற்றிய விளக்கங்களில் கரூர் என ஆவணங்களில் குறிப்பிடப்படும் பகுதி புகழூரிலிருந்து ஏறக்குறைய பத்து கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஒரு பகுதியே என்றும், சேரர்களின் தலைநகரம் கரூர் நகரமே என்றும் உறுதி படுத்துவதாக அமைந்தன அவரது ஆய்வு முடிவுகள். இது மட்டுமன்றி அன்றைய தமிழக தொல்லியல் துறையினரால் இப்பகுதியில் அகழ்வாய்வுகள் நிகழ்த்தப்பட்டு, கரூரின் வரலாற்று முக்கியத்துவத்தினை உலகுக்குச் சொல்லும் பல அரும்பொருட்கள் இந்த ஆய்வுகளின் போது அகழ்ந்தெடுக்கப்பட்டன. டாக்டர். நாகசாமியின் தலைமையில் 1974ம் ஆண்டில் நிகழ்த்தப்பட்ட தொல்லியல் அகழ்வாய்வில், சேரப் பேரரசின் சின்னமும் ‘கொல்லிரும்புறை’ என்ற எழுத்தும் பொறித்த காசு கண்டெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாணயவியல் ஆய்வாளர் தினமலர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கண்டெடுக்கப்பட்ட பல காசுகளில் மேலும் இரண்டு காசுகளில் முறையே ”மாக்கோட்டை”, ”கூட்டுவன் கோட்டை” என்ற தமிழ்ச்சொற்கள் பொறிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சேரப் பேரரசுகள் வெளியிட்ட காசுகள் இவை என்பதும் உறுதி செய்யப்பட்டது.

    இந்தக் கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் மகுடம் வைப்பது போல அமைந்தது கரூர் நகரில் ஆய்வாளர் திரு. ஐராவதம் மகாதேவன் அவர்களின் கண்டுபிடிப்பான ஒரு மோதிரம். இந்த மோதிரம் 1991ம் ஆண்டு அமராவதி ஆற்றுப் படுகையில் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்பும் அதனைத் தொடர்ந்து டாக்டர். நாகசாமியின் இந்த மோதிரம் பற்றிய விரிவான ஆய்வுக்கட்டுரையும் அன்று வெளியிடப்பட்டபோது தொல்லியல் அகழ்வாய்வில் மட்டுமன்றி பெருமளவில் தமிழ் ஆய்வாளர்களால் பெரிதும் வரவேற்கப்பட்ட வரலாற்றுச் செய்தியாக இது அமைந்தது. 15.6 கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் அது. முகப்புப் பகுதி 5.5 மிமீட்டர் அளவுடன் அமைந்தது. அந்த மோதிரத்தின் முகப்புப் பகுதியில் கலை அழகின் உச்சம் என வர்ணிக்கத்தக்க வகையில் அமைந்த மிதுனச் சின்னம், அதாவது ஒரு ஆணும்-பெண்ணும் அன்புடன் நளினமாக நிற்கும் வகையில் அமைந்த சின்னம் ஒன்று பொறிக்கப்பட்ட வகையில் இந்த மோதிரம் அமைக்கப்பட்டிருந்தது. அச்சிறிய மோதிரத்தில் இத்தகைய ஒரு நளினம் மேலோங்கிய படைப்பினைப் படைத்த தமிழக பொற்கொல்லர்களின் நுணுக்கமான கலைத்திறனுக்கு உதாரணமாக பாராட்டுக்களுக்குரிய வகையில் இந்த மோதிரம் உருவாக்கப்பட்டிருந்தது. ஐயத்திற்கு இடமின்றி கி.பி.1 நூற்றாண்டின் சேரப் பேரரசின் அதிகாரப்பூர்வ அரச மோதிரம் இது என உறுதி செய்யப்பட்டது .

    4

    இந்த மோதிரத்தின் மேலுள்ள சங்க கால வாழ்வியலின் அடிப்படையான காதல் அன்பினைக் குறிக்கும் இந்தச் சின்னமே தமிழ் மரபு அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ சின்னமாக இந்த அமைப்பு உருவான 2001ம் ஆண்டு முதல் திகழ்கின்றது. அன்பினை வலியுறுத்தும் மாண்பினை வாழ்வியல் நெறியாகக் கொண்டிருந்த பண்டைய தமிழரின் மரபினையும் மாண்பினையும் பிரதிநிதிக்க இச்சின்னத்தை விட வேறெதுவும் பொருந்தாது என்பது அன்று எனக்கும் பேரா.நா.கன்ணன் அவர்களுக்கும் மனதில் எழுந்த எண்ணமாக அமைந்ததன் விளைவே இந்த முத்திரை தமிழ் மரபு அறக்கட்டளையின் சின்னமாக அமையக் காரணமாகியது.

    தமிழகத்தின் பல பகுதிகளில் வீரர்களின் வீரச்செயலைப் பிரதிபலிக்கும் நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதை அவ்வப்போது ஊடகங்களின் வழி அறிகின்றோம். கரூர் நகரில் கண்டெடுக்கப்பட்ட, கரூருக்குப் புகழ்ச்சேர்க்கும் நடுகற்கள் கண்டெடுக்கப்பட்டு, அவை இந்தக் கருவூர் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்றன. கரூரில் கண்டுபிடிக்கப்பட்ட, கி.பி.8ம் 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாக ஆய்வாளர்களால் அடையாளம் காணப்பட்ட இரண்டு நடுகற்களில் ஒரு நடுகல் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டும், ஒரு நடுகல் வட்டெழுத்துப் பொறித்த வகையிலும் காணப்படுகின்றன. இந்தக் கல்வெட்டுக்களே கரூர் நகரம் வஞ்சி என்றும் கி.பி.9ம் நூற்றாண்டு வாக்கில் அழைக்கப்பட்டது என்பதை உறுதிசெய்வதாகவும் அமைகின்றன.

    கரூரில் இதுவரை அடையாளம் காணப்பட்ட வரலாற்று அரும்பொருட்கள் கூறும் தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகள் ஏராளம். இதுவரை கண்டெடுக்கப்படாமல் கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் காணப்படும் தொல்லியல் புராதனச் சின்னங்களோ ஏராளம் ஏராளம். இவற்றை எப்போது நாம் அடையாளம் காணப்போகின்றோம்? இவற்றைக் கண்டெடுத்து எப்போது நாம் அவற்றை ஆய்வுக்குட்படுத்தி தமிழர் பண்டைய வரலாற்றுச் செய்திகளையும் வாழ்வியலையும் உலகுக்கு எடுத்துரைக்கப் போகின்றோம்? இவற்றிற்கும் மேலாக, இன்று கரூர் நகரில் இருக்கும் கருவூர் சேரர் தொல்லியல் அகழ்வைப்பகத்தைப் புதுப்பித்து அதில் பாதுகாக்கப்படும் அரும்பொருட்களை மிகச் சிறப்பான முறையில் உலகுக்குக் காட்சிப்படுத்தி பெருமை கொள்ளப் போகின்றோம்?

    5

    இவையெல்லாம் இன்று நம் முன் நிற்கும் மிக முக்கியமான கேள்விகள் அல்லவா?

    ​துணை நூல்:
    “Roman Karur”, Dr.R.Nagasamy, 1995​

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 48

    க.பாலசுப்பிரமணியன்

    அறம் சார்ந்த வாழ்க்கை

    திருமூலர்-1-1-2

    மனத்துணையாகவும் வழித்துணையாகவும் இறைவனை ஏற்றுக்கொண்டு வாழ்க்கைப் பயணத்தை தொடரும்போது வாழ்வில் அமைதியும் ஆனந்தமும் நிச்சயமாகக் கிடைக்கின்றது. ஆனால் புற உலகின் சூழ்நிலைகள், தாக்கங்கள் நம்முடைய ஆசாபாசங்களைத் தூண்டிவிடும் பொழுது மனம் சஞ்சலப் படுகின்றது. மேலும் இக வாழ்விற்கு செல்வத்தைத் தேடி அலைபாய்கின்றது. இதைத் தவிர்ப்பதும் வாழ்வில் முடியாததாக அமைந்துள்ளது. ஆனால் செல்வத்தை மட்டும் சேகரிக்க வெறித்தனமாக மனம் அலையும் பொழுது அது துயரக்கடலில் வீழ்கின்றது. “இன்னும் வேண்டும், இன்னும் வேண்டும்” என்ற மாயையில் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் இழந்து தவிக்கின்றது. இதிலிருந்து மீள்வது எப்படி?

    பட்டினத்தார் மிக அழகாக பதில் அளிக்கின்றார்

    பிறக்கும் பொழுது கொடுவந்த தில்லை பிறந்துமண்மேல்

    இறக்கும் பொழுது கொடுபோவ தில்லை யிடைநடுவிற்

    குறிக்குமிச் செல்வஞ் சிவன்தந்த தென்று கொடுக்கறியா

    திறக்குங் குலாமருக் கென்சொல்லு வென்கச்சி யேகம்பனே

    அதிக அளவில் செல்வத்தைச் சேர்த்து உள்ளே பூட்டி வைத்தால் அதனால் யாருக்கு என்ன பயன்? நலிந்தோருக்கும் வாழ்க்கையில் துயருற்றோக்கும் அது பயனளிக்காத போது அது வீணாகின்றது. இதனால்தான் வள்ளுவப் பெருந்தகை கூறினார்

    ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்

    பேரறி வாளன் திரு.

    இந்தக் கருத்தை எளிதாக விளக்கும் வண்ணம் அமைந்துள்ளது திருமூலரின் இந்தப் பாடல்

    யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை

    யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை

    யாவர்க்கு மாம்உண்ணும் போதோரு கைப்பிடி

    யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே.

    மனிதனைப் போல் எத்துணை உயிரினங்கள் தமக்குள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து உண்ணுகின்றன. உதாரணத்திற்கு காக்கை ஒன்று போதாதோ? எப்பொழுதும் உணவை தம் இனத்தோடு பகிர்ந்து உண்ணுகின்றதே. திருமூலர் பாடுகின்றார்

    ஆர்க்கும் இடுமின் அவரவர் என்னன்மின்

    பார்த்திருந் துண்மின் பழம்பொருள் போற்றன்மின்

    வேட்கை யுடையீர் விரைந்தொல்லை உண்ணன்மின்

    காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே.

    இறைவனின் அருளுக்காக ஏங்கி தன் குறைகளை எடுத்துச் சொல்லும் வள்ளலாரோ எவ்வாறு உருகுகின்றார் தெரியுமா ?

    தந்தபொரு ளிலையென்றே னோ

    தானென்று கெர்வித்துக் கொலைகளவு செய்தேனா

    ……

    ஈயாத லோபி யென் றேபெய றெடுத்தேனோ? ..

    இந்த அடியார்களின் கருத்தெல்லாம் செல்வத்தை அறவழியில் மற்றவர்களுக்காக செலவிடுவதின் பயனை செவ்வனே விளக்குகின்றது.

    அறநெறியுடன் வாழ்வதற்கும் அறம் செய்து வாழ்வதற்கும் நாம் செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இருப்பதை பகிர்ந்து இல்லாதவர்க்கு ஈந்து வாழ்வது அற வாழ்விற்கு அடையாளமாகும். இதனால்தான் இளம் பிராயத்திலேயே நமக்கு தமிழ் மூதாட்டி அவ்வையார் “அறம் செய்ய விரும்பு” என்ற பாடத்தை முதல் பாடமாகப் புகட்டினார். செல்வம் இருந்தும் அறம் செய்யாமல் இருப்பவர்கள் ஏழைகளாகவே இருப்பர்.

    திருமூலர் கூறுகின்றார்

    அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்

    தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்

    விழித்திருந் தென்செய்வீர் வெம்மை பரந்து

    விழிக்கவன் றென்செய்வீர் ஏழை நெஞ்சீரே

    அறம் சார்ந்த இந்த அருள்ஞானம் தேடியே மனித உயிர்கள் அலையும் பொழுது அடியார்களின் தேடல்களை எடுத்தா சொல்லவேண்டும். பத்திரகிரியார் பாடுகின்றார்

    அஞ்ஞானம் விட்டே யருள்ஞானத் தெல்லைதொட்டு

    மெய்ஞ்ஞான வீடுபேற்று வெளிப்படுவ தெக்காலம்?

    (தொடருவோம்)

    Share
  • பூம்புகாரின் வசந்த விழா

    – ஆ.செந்தில்  குமார்

    வாரிதியில் செங்கதிரோன் ஒளி வீசிப்பரப்பிட
    வாழை மஞ்சள் கமுகும் கட்டிட
    வீதிகள் தோறும் தோரணம் தொங்கிட
    வருடந்தோறும் மாமழை பொழிந்திட்ட
    வானத்துறையும் இந்திரன்  தனக்கு
    வாழை இலைகளில் பெரும் படையலிட்டு
    வாழ்த்தும் நன்றியும் சொல்லும் விழா!

    பறையொலி முழங்க ஒருவன் கட்டியங்கூறிட
    பார்ப்பவர் எல்லாம் வாழ்த்தொலி முழங்கிட
    பணிப்பெண் இருவர் சாமரம் வீசிட
    பட்டொளி வீசிப் புலிக்கொடி பறந்திட
    பட்டத்தரசி பக்கத்தில் இருந்திட
    பட்டத்தானை மீதில் அமர்ந்து
    பட்டத்தரசனின் வீதி உலா!

    சிற்றோடை ஒன்றில் அன்றில் நீந்திட
    சித்திரை முழுநிலா தண்ணொளி வீசிட
    சித்திரைப் பூக்கள் பூத்துக் குலுங்கிட
    சிறுமியர் எல்லாம் சிற்றில் செய்திட – அதைச்
    சிறுவர் கூடிச் சிதைத்து மகிழ்ந்திட
    சிறுவர் சிறுமியர் ஒன்றிணைந்து
    சிறுசோறாக்கிக் களித்து மகிழ்ந்தார்!

    கண்கவர் அழகில் மங்கையர் திகழ்ந்திட – அவர்தம்
    கருத்தை ஈர்க்க விடலையர் முயன்றிட
    காதலர் தனியே கொஞ்சி மகிழ்ந்திட
    காளையர் மற்போர் செய்து பழகிட
    கன்னியர் எல்லாம் அதைக் கண்டுமகிழ்ந்திட
    கொல்லர் உலைக்களம் செம்பொறி பறந்திட
    கொடிய பல்லாயுதங்கள் குவிந்து கிடந்தன!

    பெரு மாளிகையெல்லாம் விளக்கொளி மின்னிட
    பெரும்பெரும் பாண்டத்தில் சோறு வெந்திட
    பல்வகை இறைச்சிகள் மானும் மீனும்
    பக்குவத்துடனே நெய்யில் வதங்கிட
    பனங்கள் மதுவகை ஆறாய் ஓடிட
    பெருந்திரள் மக்கள் ஒன்று சேர்ந்து
    பெருவிருந்தாக்கி உண்டு மகிழ்ந்தனர்!

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_7003

    ’கந்தரும்,கணபதியும் கைக்கெட்டும் தூரத்தில்,
    நந்திமேல் நாயகர், நாயகியோ -குந்தினள்
    சிம்மா சனத்திலே சும்மா இருந்திடாது
    அம்மாதை வாமம் அணைப்பு’’….!கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர் (261)

    டிராபிக் ராமசாமி (அகவை 82) (கே. ஆர். ராமசாமி) ஒரு புகழ்பெற்ற இந்தியப் பொதுநலச்சேவகர். சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே களம் புகுந்து போக்குவரத்தைச் சீர்படுத்துவது இவரது வழக்கம். இதனால்தான் இவருக்கு டிராபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது. பொதுமக்கள் நலன் கருதி, பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து பல நல்ல செயல்களுக்கு வித்திட்டவர். அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடுவது என்கிற நடைமுறையைக் கடைப்பிடிக்கிறார்.

    டிராபிக் ராமசாமி ஏராளமான பொதுநலவழக்குகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார். 2002ல் சென்னையில் அதிக எடை ஏற்றிக் கொண்டு கட்டுப்பாடில்லாமல் ஓடிய மீன் ஏற்றும் வண்டிகளுக்கு எதிராக நீதிமன்றத்தடை பெற்றவர் இவரே. சென்னையில் அனுமதி இல்லாமல் பல அடுக்குமாடிக் கட்டிடங்களைக் கட்டிய பெருமுதலாளிகளுக்கு எதிராக பல வழக்குகள் போட்டு பல கட்டிடங்களை இடிக்க வைத்தார். பல கட்டிடங்களை செயலிழக்கச் செய்தார். கட்டிடங்கள் கட்டுவதில் ஒரு முறைமை உருவாக இது வழி வகுத்தது. சென்னையில் கட்டப்படும் எல்லா கட்டிடங்களும் வாகனங்கள் நிறுத்தும் வசதிகளுடன் மட்டுமே கட்டப்படவேண்டும் என்ற நீதிமன்ற ஆணையினையும் இவர்தான் பெற்றார். இது இன்று தமிழகம் முழுவதும் பரவலாக அமல் செய்யப்படுகிறது. அரசு நிதி வீணடிக்கப்படுவது, முறைகேடான அரசுச் செயல்பாடுகள் ஆகியவற்றுக்கு எதிராகத் தொடர்ச்சியாக நீதிமன்றத்துக்குச் சென்றபடியே இருக்கிறார் ராமசாமி.

    1

    ராமசாமி தொடர்ந்த வழக்குகளால் கோபம் கொண்ட எதிர்த்தரப்பினரால் பலமுறை தாக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது பணிகளை அவர் கைவிட்டதில்லை. 2000 ஆம் ஆண்டில் இவர் வழக்கறிஞர்களுக்கு எதிராகப் போட்ட வழக்குக்காக வழக்கறிஞர்களால் தாக்கப்பட்டார்.
    2002 ல் மீன் விற்பனையாளர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்..இவர் மீது பல்வேறு பொய்வேறு வழக்குகள் காவல்துறையினரால் போடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். ராமசாமிக்கு ஆயுதப் படை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் அவருக்குத் துப்பாக்கி ஏந்திய காவல்துறைப் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    10 மார்ச் 2015ஆம் நாளன்று, சென்னை, புரசைவாக்கம் டாக்டர் அழகப்பா சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டிருந்த பேனர்கள் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு சாலை அருகே நின்று பேட்டி அளிக்கும் போது, வேப்பேரியை சேர்ந்த வீரமணி என்பவருக்கும், டிராபிக் ராமசாமிக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து வேப்பேரி காவல் நிலையத்தில் வீரமணி கொடுத்த புகாரின்பேரில், காவல்துறையினர் டிராபிக் ராமசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர்

    வயது முதிர்வு காரணமாக தற்போது இவர் குழப்பமான மனநிலையில் சில போரட்டங்களை அறிவித்து விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். சில சமயம் எல்லை மீறி போராட்டங்களை அறிவிப்பதும் உண்டு. ஆனால் “எங்கே எவனுக்கு எது நடந்தால் எனக்கென்ன” என்ற சமூக அக்கறையற்ற சமுதாயத்தில் இவரை போன்ற மக்கள் நலத்தொண்டர்கள் அவசியம் எனும் நோக்கில் இந்த பெரியவருக்கு இவ்வார வல்லமையாளர் விருதை அளிப்பதில் வல்லமை உவகை கொள்கிறது

    (தகவல் உதவி: நன்றி தமிழ் விக்கிபிடியா)

    (இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 )

     

    Share
  • சிந்தையில் நிறைந்த  சிவமே

    க.பாலசுப்பிரமணியன்

    download

    கைகளில் உடுக்கை கழுத்தினில் அரவம்

    கண்களில் நெருப்பு கருணையின் சிரிப்பு 

    சிகையினில் கங்கை சிறிதொரு பிறையே 

    சிந்தையில் நிறைந்த  சிவமே !

     

    சுட்டிடும்  நெருப்போ சூட்சும அறிவோ

    சுடர்விடும் ஒளியோ சோதியின் வடிவோ

    சாம்பலைப் பூசிய சமத்துவத் தத்துவம்

    சிந்தையில் நிறைந்த சிவமே !

     

    அருவம் உருவம் ஆனந்தப் பெட்டகம் 

    சத்துவ பூரணம் நித்திய நாட்டியம்

    சத்தினில் சித்தினில் வித்தென வந்தே

    சிந்தையில் நிறைந்த சிவமே !

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 147-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    flower merchant

    மலர்களை விற்பனைக்குக் கொட்டிவைத்துவிட்டுக் கடைக்காரர் வேறேதோ கற்பனையில் இருப்பதை அவர் முகக்குறிப்பு அறிவிக்கின்றது. திருமிகு ஷாமினியின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட இப்படத்தைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் என் நன்றி மலர்களைக் காணிக்கையாக்குகின்றேன்.

    மனங்கவரும்வண்ணம் மணம் பரப்புபவை மலர்கள். எனினும் அவற்றை விற்பனை செய்யும் தொழிலாளரின் வாழ்வு மணத்தோடும், அவரை நம்பியிருக்கும் குடும்பம் வாழ்க்கை நடத்தத் தேவையான பணத்தோடும் இருக்கின்றதா என்பது கேள்விக்குறியே!

    மலரும் மனிதரும் இணைந்திருக்கும் இக்காட்சிக்கு மலர்ச்சியாய்க் கவிதையெழுத கவிஞர்களை அழைக்கின்றேன். (நண்பர்களே… இனிவரும் வாரங்களில் நீங்கள் எழுதும் கவிதைகள் 24 அடிகளுக்கு மிகாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.)

    *****

    ”புதிதாய் மணம்புரிந்த இந்த இளைஞர், மணம்வீசும் மலர்களை விரைந்து விற்றுவிட்டுக் காதல் மனையாளோடு மகிழ்ந்திருக்க எண்ணுகின்றார் என்பதே இவரின் முகம் உணர்த்தும் அகக்குறிப்பு” என்கிறார் திரு. ஏ.ஆர்.முருகன்.

     பூவாக வாழ..பூவையைத்தாங்கு!! 
    #விற்பனைக்குக்காத்திருக்கும்
    விடுமலர்கள்!! _ தொடுக்காமல்
    விற்றுவிட்டால் சரமாக்க இரவு
    விழித்திருக்கத்தேவையில்லை!
    #நூலெடுத்து வேலைக்கு எத்தனித்தால்
    நூலிடையாள் ஞாபகம்! _ கட்டி வந்து
    நூறுநாள் தாண்டவில்லை.. உள்ளத்தில்
    நூலிலையாய்ப்பின்னிபுதுமணப்பெண்!!
    #இரண்டொருநாள் தாண்டிவிட்டால்
    இதழ் அழுகும்!! _ தாம்பத்தியம்
    இல்லறத்தின் அழகு..நல்லறமாய் ஆக
    இல்லாளை எந்நாளும் நேசிக்கணும்!!
    #முன்வருவதைவிட மிகச்சிறப்பு
    பின்வருவதே _ காதல்
    பண்ணுவது மனைவியெனில்
    மின்னும் இல்வாழ்வு!!!
    #உதிரம்நனைந்த வெள்ளைரோஜா
    உருவாகும்சிவப்பு _ கிளிக்காதல்
    உவமானமல்ல ஈருயிர்பந்தத்தின்
    உண்மையான பாசப் பரிணமிப்பு!!
    #வியாபாரம் செழிக்கத்துணையாக
    வீட்டுக்காரி வரவேணும் _ மாலைகட்டி
    விரைவிலே முடித்து,இல்லம்திரும்பி
    விரும்பும்தம்பதியாய்வாழவேண்டும்!!!

    *****

    ”அரும்பு நனை முகை மொக்கு என்று ஒவ்வொரு பருவத்தையும் கடந்துவரும் மலர், வீயாகி விழுமுன் வாடிக்கையாளர் வாங்கிவிட்டால் மனையாள் மகிழ்வாள்” என்று பூக்களின் பருவங்களையும், வணிகரின் மனவோட்டத்தையும் தன் பாவில் சுவைபடப் பட்டியலிட்டுள்ளார் திரு. ஆ. செந்தில்குமார்.

    மலர் வணிகனின்  மனவோட்டம்
    அரும்பாகி…
    அதுமுற்றி நனையாகி…
    முகையாகி… மொக்காகி…
    முகிழாகி… மொட்டாகி…
    மலராகி… பூவாகி…
    விற்பனைக்கு கடையடைந்து…
    வீயாகி… உதிர்ந்து வீழுமுன்னே…
    விற்றுத் தீர்ந்துவிட்டால்…
    வீட்டில் காத்திருக்கும்
    பொறுப்பான மனையாளும்
    பொதும்பராகி மகிழ்வாளே…
    பொம்மலாகி… செம்மலாகி…
    வீணில் போகுமுன்னே…
    வாடிக்கையாளர் எவரேனும்
    வந்து வாங்கிவிட்டால் – என்
    வாடும் மனம் மலர்ந்திடுமே…!

    *****

    ”இறைவனிடம் சேர்ந்தால் திருமாலை, அரசியல்வாதியிடம் சேர்ந்தால் மலர்மாலை. ஆனால்… என்று கூடும் எனக்கு மணமாலை?” என்று மலர் வணிகர் தம் மனத்துள் மருகுவதைப் பாமாலை ஆக்கியிருக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அவன் கவலை…
    மலர்கள் விற்கிறான் உதிரியாக
    மாலை யாகிடும் உறுதியாக,
    பலவகைப் பயன்கள் அதற்குண்டு
    பள்ளியில் சேர்த்திடும் மணமாலை,
    சிலையில் இறைவன் திருமாலை
    சீரிலா அரசியல் பூமாலை,
    நிலவிடும் அவனிடம் ஒருகவலை
    நம்மிடம் வருமா மணமாலையே…!

    *****

    மனித வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வோடும் மலர்கள் பின்னிப் பிணைந்திருக்கும் மாண்பை அழகாய் வகைப்படுத்தி, கண்ணுக்கு மட்டுமன்று கவிதைக்கும் கருவாய்த் திகழ்பவை இவை என்று பூக்களைப் புகழ்ந்திருக்கின்றார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    பூவே உன்னைப் புகழ-வா..!

    பூவென்றாலே அதனுடன் மணமும் சேர்ந்ததுதானே..
    ……….பூவோடு சேர்ந்தநாரும் கூடமணக்கும் என்பார்கள்.!
    பூவெல்லாம் ஒன்றுசேர்ந்து மணக்கின்ற இடத்தில்..
    ……….புதிதாயங்கே மலருமாமொரு விழாவோ நிகழ்ச்சியோ.!
    ஆவென்றே அதிசயிக்கும் ஆளுயரப் பூமாலையென..
    ……….அன்பிற்கே அடையாளமாய் திகழுமிந்தப் பூக்களாம்.!
    வாவென் அன்பேயென அழைக்கவும் ஓவென்றழவும்..
    ……….வாங்குகின்ற ஒருபொருளாகத் தானுனைப் பார்ப்பார்.!
    பெண்ணவள் மலரும் தன்மைக்கு வந்துவிட்டாளென..

    ……….பூக்கள்பலச் சூடித்தான் சூசகமாகத் தெரிவிப்பாரன்று.!
    பெண்ணுக்கும் மலருக்கும் அதிகத் தொடர்புண்டாம்..
    ……….பூச்சூட்டலெனும் நிகழ்ச்சியே அதற்குத் தகும்சான்று.!
    எண்ணெய் வைத்துக் குளிப்பாட்டிய பாவைக்கு..
    ……….எண்ணற்ற வளையலும் பூக்களும் பரிசளிப்பாரன்று.!
    கண்ணான மருமகளின் தலையில் மொட்டுப்பூச்சூடும்..
    ……….காட்சியாக மாமியாரே மருமகளுக்குச் சூட்டுவாராம்.!
    பெண்களை மலரென்பார் கவிஞரும் பாவலரும்..
    ……….போற்றும் குண மிருவருக்கும் உண்டென்பதாலோ.!
    பெண்ணைத் தெய்வமாக மதிக்க வேண்டுமெனவே..
    ……….பெண்தெய்வம் விழாக் கொண்டது பூச்சொரிதலாலே.!
    ஆண்டகையொருவன் போரில் வெற்றி பெற்றால்..
    ……….அந்நாளில் அவன்தலையில் பூவால் வாகைசூடுவார்.!
    கண்ணுக்கு விருந்தாகும்!..கவிதைக்குக் கருவாகும்!..
    ……….காதலர்களுக்குப் பரிசாகும்!.வண்ணமிகு பூக்களாம்.!

    *****

    மலர்களின் அரசியாய்த் திகழும் ரோஜாவின் சிறப்பையும், வாழும்வரைப் பிறர்க்குப் பயன்தரும் அதன் உயர்பண்பையும் சிறப்பாய்ச் சொல்லியிருக்கிறார் திரு. பழ.செல்வமாணிக்கம். 

    புண்ணியப் பூக்கள்:
    ரோஜாப் பூவே நீ தானே பூக்களுக்கெல்லாம் அரசி!
    ஒற்றை ரோஜாவாய் நீ வந்தாலே மனதிலே மகிழ்ச்சி!

    கூட்டமாய் கூடையில் கொலுவிருப்பது!
    கண் கொள்ளாக் காட்சி!
    மென்மை எனும் வார்த்தைக்கு நீ தானே அத்தாட்சி!
    நீ முள்ளோடு வளர்ந்தாலும் மென்மையாய் இருப்பது
    உன் தனிச் சிறப்பு!
    பிறருக்கென வாழ்வதால், நீ இறைவனின்!
    அற்புதப் படைப்பு!
    முருகு என்றால் அழகு என்பதாம் தமிழ் மொழியில்!
    ரோஜா என்றாலும் அழகு என்பதாம் புது மொழியில்!
    அரும்பிலும் நீ அழகு!
    மொட்டிலும் நீ அழகு!
    மலரிலும் நீ அழகு!
    ஆண்டவன் படைப்பிலே நீ தான் பேரழகு!
    இப்புவியில் நீ வாழ்வது சில காலம்!
    உன்னால் விளையும் பயன்கள் பலவாகும்!
    வண்டிற்குத் தேனை நீ தருவாய்!
    மங்கையின் கூந்தலில் வீற்றிருப்பாய்!
    தெய்வத்தோடு கொலுவிருப்பாய்!
    மணமக்கள் கழுத்தை அலங்கரிப்பாய்!
    காதல் தூதாய் நீ இருப்பாய்!
    இறுதி யாத்திரையிலும் துணை வருவாய்!
    ரோஜா மலராய் நாம் இருப்போம்!
    இயன்ற வரையில் பயன் தருவோம்!

    *****

    கடையில் குவிந்திருக்கும் இவ்வண்ண மலர்கள் கோரிக்கையற்றுக் கிடப்பதுபோல், மணம்புரிந்து மணம்பரப்ப வழியின்றி வரதட்சணை எனும் தீயில் கருகும் பெண்மலர்கள், மலர்சூடி மங்கலவாழ்வு காண்பது எந்நாளோ?” எனும் ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றது திரு. சி. ஜெயபாரதனின் கவிதை.

    சூடா மலர்கள்!
    கொட்டிக் கிடக்குது தரையில்
    கோடிப் பூக்கள் !
    வாடிக் கிடக்கும் வாசனைப் பூக்களைச்
    சூடிக் கொள்ள
    மங்கையர் இல்லை!
    சூடிக் கொடுத்த பூமகள்
    சுடர்க் கொடியின்
    துகிலை உரித்து அவைதனில்
    மகிழ்ந்தோரை மறித்து
    புடவை அளிக்க,
    கண்ணபிரான் வந்திலன் !

    வாடாமல், வதங்காமல் இன்னும்
    வனப்பு மங்காது
    சூடாமலர்கள் வீடுகளில்
    தொடுப்பா ரற்று,
    திருப்பாவை
    பாடிக் கொண்டுள்ளன !
    வாடி உதிரும் முன் மாலையாய்ச்
    சூட வந்த ஆடவன்
    வாரான் மீண்டும்,
    காரணம்
    கறுப்பி மங்கை அப்பன்
    தர முடிய வில்லை
    வரதட்சணை !

    *****

    பூக்களையும், பூவிற்பவரையும் பின்னணியாகக் கொண்டு பொருள்செறிந்த பாக்களை அள்ளித் தந்திருக்கின்ற கவிஞர் குழாத்துக்குப் பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வு பெற்றிருப்பது அடுத்து… 

    பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!

    பறித்தெடுத்த செம் பூக்க பரவிக் கிடக்கையிலே
    வெறித்தவொரு பார்வையுடன் வீற்றிருக்கும் தம்பி
    போணி நல்லா ஆகலியோ பொறுமை காத்து இருக்கீங்க
    காணி நிலமெடுக்கக் கடைய விட்டு வாரிகளா
    பொழைக்கலாமெண்ணு பூ விக்க வந்தீகளே
    உழைப்பெதுவும் சேராம உட்காந்திருக்கிகளோ!
    பொம்பளைய்ங்க எல்லோரும் போலிப் பூ சூடிக்கிட்டு
    எம்புட்டுக் காலத்துக்கும் இதழுதிர்ந்து வாடாம
    கலியாணம் கச்சேரி கடவுளுங்க கோயிலென்று
    மலிவான பூச் சூடி வருவதனைக் காணலியோ
    நாய்வித்த காசு கொலைக்காது எம்பாங்க
    பூ வித்த காசு பூத்துக் குலுங்கிடுமோ!
    காஞ்ச பூப் போக, கட்டவிழ்ந்த மொட்டுதிர
    பாஞ்சு பொறுக்கி பழையபடி கோத்தெடுத்தா
    வாறவுக எல்லாரும் வகைபிரிச்சுப் பார்ப்பாக.
    ஆஞ்செடுத்ததா மரத்(து) அடியில் பொறுக்கியதா,
    பூமியில விழுந்திருந்தா பூச்சூடக் கூடாது
    சாமி குத்தமெம்பாக தரங்குறைச்சிப் பார்ப்பாக
    என்ன விலையெம்பாக ஏற்ற விலை குடுக்காக
    சொன்ன விலைக்கு வித்துச் சொகம் பெறவே முடியாது
    ஏற்ற விலை கொடுக்க எவர் வருவார் இக்காலம்.
    காற்றுதிர்த்த பூவுக்குக் கனக்க விலை தேறாது
    கல்லா நெறையாமக் கடைய இழுத்து மூடிப்பிட்டு
    பொல்லாத யாவாரம் போதுமிண்ணு போறதிண்ணா
    நல்ல தொழிலிருக்கு நாட்டில் வளமிருக்கு
    பொல்லாத இத்தொழில பொமபளய்ங்க கைகுடுத்து
    காணி நிலமெடுங்க களனி விளைஞ்சிடட்டும்!

    போலிப் பூக்களைப் பூவையர் சுமந்துதிரிவது பரவலாகிவிட்ட இந்நாளில், உண்மைப் பூக்கள் தம் மதிப்பை இழந்துவிட்டன. அப்படியும் தப்பித்தவறிக் கடைக்குப் பூவாங்க வருவோரோ, பூக்களை வகைப்பிரிப்பது, கசக்குவது என்று ஆயிரம் விஷமத்தனங்களில் ஈடுபடுகின்றனர். எனவே பூ வித்த காசு வியாபாரியின் வாழ்வைப் பூத்துக் குலுங்க வைக்குமா? குலுங்கி அழ வைக்குமா? என்று யோசிக்கவேண்டி இருக்கின்றது.

    ”விலைபோகாப் பூக்களுடன் மலைத்துப்போய் அமர்ந்திருப்பதினும், காணிநிலம் வாங்கி விவரமாய் விவசாயம் செய்தால் இல்லாமை நில்லாது ஓடும்; வாழ்விலே இனிமை கூடும்” என்று பூ வணிகருக்கு யோசனை சொல்லும் இந்தப் பாடலின் ஆசிரியர் திரு. எஸ். கருணானந்தராஜாவை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய் அறிவித்துப் பாராட்டுகின்றேன்.  

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_4261
    பார்த்தோர் பசுமையாய், பாராதோர் பூதமாய்,
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய், -ஆர்த்தொலிக்கும்,
    சங்கில் மவுனமாய், சக்கரத்தில் சீற்றமாய்,
    எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்….!

    ” ஆத்திலொரு காலாக, சேத்திலொரு காலாக,
    காத்திருக்கேன் கேள்விக் குறியாக! -பூத்திருவை,
    மார்பினில் சூடிய மாதவா, நேருக்கு
    நேர்பதில் கூறுவதென் நாள்”….கிரேசி மோகன்….!

    Share
  • படக்கவிதைப் போட்டி (148)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    27591778_1549687218418805_1882047159_n

    ஆய்மன் பின் முபாரக் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள், நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (17.02.2018) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share