குறளின் கதிர்களாய்…(205)
-செண்பக ஜெகதீசன்
முதலிலார்க் கூதிய மில்லை மதலையாஞ்
சார்பிலார்க் கில்லை நிலை. (திருக்குறள் -449:பெரியாரைத் துணைக்கோடல்)
புதுக் கவிதையில்…
முதல் போடாதவர்க்கு
அதனால் வரும்
ஊதியமில்லை…
தூணாய்த் தாங்கிடும்
பெரியோர் துணையில்லாதவர்க்கு
உறுதிப்பாடில்லை…!
குறும்பாவில்…
ஊதியம் எதுவும் கிடைப்பதில்லை
உற்ற முதல் இல்லாதவர்க்கு,
தாங்கும் துணையிலார்க்கு நிலையில்லை…!
மரபுக் கவிதையில்…
வருவாய் எதுவும் வருவதில்லை
-வலுவாய் முதலது இலாதார்க்கே,
அரியணை யமர்ந்திடும் மன்னவர்க்கே
-அருகே தாங்கிடும் தூணெனவே
பெரியோர் துணையது தந்தருளும்
-பேணிடும் அறிவுரை யில்லையெனில்,
உருவில் பெரிய நாட்டரசும்
-உறுதி யின்றி வீழ்ந்திடுமே…!
லிமரைக்கூ…
ஊதியம்பெற, வேண்டும் முதலே,
தாங்கிடும் தக்கதுணை இல்லார்க்கு
நிலையில்லை அரசாட்சி யதிலே…!
கிராமிய பாணியில்…
தொணவேணும் தொணவேணும்
பெரியவுங்க தொணவேணும்…
வராது ஊதியமெல்லாம்
மொதலு இல்லாதவனுக்கே…
அதுபோல
தூணுபோலத் தாங்கிப்புடிக்கும்
பெரியவங்க தொணயில்லாத ராசாவும்
உறுதியா நெலைக்கமாட்டானே…
அதால
தொணவேணும் தொணவேணும்
பெரியவுங்க தொணவேணும்…!
