குறளின் கதிர்களாய்…(206)
சென்ற விடத்தாற் செலவிடா தீதொரீஇ
நன்றின்பா லுய்ப்ப தறிவு.
-திருக்குறள் -422(அறிவுடைமை)
புதுக் கவிதையில்…
செல்லும் தீய பாதையில்
மனதைச்
செல்லவிடாமல் தடுத்து,
நல்ல பாதையில்
செலுத்துதல்தான் அறிவு…!
குறும்பாவில்…
தீய பாதையில் செல்லும் மனத்தைத்
தடுத்து தீமையகற்றி தூயபாதை
செலுத்துதலே அறிவு…!
மரபுக் கவிதையில்
கட்டுப் பாடுகள் ஏதுமின்றிக்
கடந்தே செல்லும் மனத்தினையே,
கட்டுப் படுத்தித் தடைசெய்து
கெட்ட வழியில் செல்லாமல்,
திட்ட மிட்டே நல்வழியில்
தீயன அகற்றிச் செலவிடுதல்
மட்டும் தானிவ் வுலகதிலே
மகிமை மிக்க அறிவாமே…!
லிமரைக்கூ..
செலவிடாதே மனததன்வழி யதுவே,
செலுத்ததை தீமையகற்றி நல்லவழியிலே,
செம்மை அறிவென்பதுதான் இதுவே…!
கிராமிய பாணியில்…
அறிவுயில்ல அறிவுயில்ல- இது
அறிவுயில்ல அறிவேயில்ல,
அதுபோக்கில மனசப் போகவிட்டா
அதுக்கபேரு அறிவில்ல..
அடங்காமப்போற மனச அடக்கி
அது கெட்டவழியில போகாம
நல்லவழியில அனுப்புனா,
அதுக்கப்பேருதான் அறிவு..
அதால
அறிவுயில்ல அறிவுயில்ல- இது
அறிவுயில்ல அறிவேயில்ல,
அதுபோக்கில மனசப் போகவிட்டா
அதுக்கபேரு அறிவில்ல…!
-செண்பக ஜெகதீசன்…