Blog

  • கசக்கி பிழியப்படுகிறார்களா மக்கள் ?

    பவள சங்கரி

    தலையங்கம்

    திரையரங்குகளுக்கு வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணத்தை 25% ஆக உயர்த்திக்கொள்ள அனுமதித்து தமிழக அரசாணை வெளியிட்டுள்ளது. இதற்கு மேல் ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரிகளும் சேர்த்து வசூலிக்கப்படும். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே திரைப்படத்திற்கு திரையரங்குகளுக்குத் தகுந்தாற்போல் கட்டண நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதுதான். குளிர்சாதன வசதி இல்லாத அரங்கிற்கு ஒரு கட்டணம், குளிர்சாதன வசதி இருக்கும் அரங்கிற்கு ஒரு கட்டணம், மல்டிபிளக்ஸ் அரங்குகளுக்கு ஒரு கட்டணம். இது மட்டுமன்றி திரையரங்கு நகராட்சி பகுதிகளில் இருந்தால் ஒரு கட்டணம், மாநகராட்சி பகுதியில் இருந்தால் அதிக கட்டணம். இதன் மூலமாக திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு நாளைக்கு ஒரு இலட்சம் உரூபாய் வரை கொள்ளையடித்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் போதாமல் திரையரங்கை மூடி வேலை நிறுத்தம் செய்யப்போகிறார்களாம். திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்களுடைய வருமானத்தில் 25% குறைத்துக்கொள்ள மாட்டார்கள். பல கோடிகள் சம்பளமாகப் பெறும் நடிகர்கள் தங்கள் சம்பளத்தில் 25% குறைத்துக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் மக்களிடம் அதிகமாகக் கொள்ளையடித்து இந்த ஒரு சில நூறு பேர்களை வாழவைக்கவேண்டும் என்று முடிவெடுத்திருக்கின்றனர். இதில் புதிய திரைப்படங்களை வெளியிடமாட்டோம் என்ற அறிவிப்பு வேறு. உண்மையிலேயே திரைப்படங்கள் வெளியிடப்படாவிட்டால் பொது மக்களுக்கு பெரிய பாதிப்பு என்பதெல்லாம் இல்லை. பாதிப்புகள் ஏகப்பட்ட இலாபம் பார்க்கும் திரைத்துறையினருக்குத்தான் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அந்த வகையில் திரையரங்கக் கட்டணங்களை மிக அதிகப்படுத்துவதால் திரைத்துறை நலிவடைந்து அழியும் அபாயத்திற்கு உள்ளாகும் என்பதே நிதர்சனம்.

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (12)

     

    மீ.விசுவநாதன்

    பகுதி: 12

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2

    காலையில் நதிக்கரையில்

    மங்கையரில் சிறந்தவளாம் கோசலையுன் அன்னை
    மடிபெற்ற புண்ணியத்தால் வந்துதித்த ராமா,
    செங்கதிரால் கோலமிட்டுச் சீர்கொண்டு உன்னை
    தெய்வீக ராகத்தில் எழுப்புகிறான் சூர்யன் !
    செங்கரும்பும் மஞ்சளுமாய் சேர்ந்தயிக் காட்டில்
    சிறகடிக்கும் பறவையெலாம் செயல்மறந்து உன்றன்
    செங்கமலப் பாதத்தை சிற்றலகால் தொட்டு
    ஸ்ரீராமன் நீவிழிக்கக் கீர்த்தனைகள் பாடும் ! (1)

    உதயகாலத்தில் கதிரவனை வணங்கினர்

    சந்தியிது காலத்தில் தவநீரை வார்த்து
    தர்மத்தை நிலைநாட்ட ஸ்ரீராம னோடு
    வந்திருக்கும் இலக்குவனும் மதியொன்றி நின்று
    மந்திரங்கள் சொல்லிப்பின் மாமுனியின் பாத
    வந்தனைகள் செய்தங்கு கைகட்டி நின்றார் !
    வழிகாட்டும் முனிவருடன் வழிநடந்து போக
    வந்தடைந்தார் அக்”காமா சிர”மத்தின் பக்கம் !
    மகத்தான முனிக்கூட்டம் வாசமிடும் கூடம் ! (2)

    காமாசிரமம் வந்தடைதல்

    ஆசார்யர் முகம்பார்த்து “அய்யனேநீர் சொல்வீர்
    அழகாமிவ் வாசிரமம் யாருடைய” தென்று
    லேசான தென்றல்போல் ஸ்ரீராமன் கேட்டார் !
    “சிவனொருநாள் இங்குவந்து தவம்செய்யும் வேளை
    பேசாமல் அவர்மீது ஏவிவிட்டான் அம்பை
    பிரியமுள காமனெனும் சிற்றின்பத் தேவன் !
    கூசாமல் விழித்தீயால் கொன்றிட்டார் காமக்
    கொற்றவனை மாதேவன் ஓர்நொடியி லங்கே ! (3)

    காமனை எரித்த இடம்

    உடலற்ற அனங்கனென உருமாறிப் போனான்
    உலகத்தில் காமத்தீ மூட்டுகிற தேவன் !
    இடமிதையே உய(ர்)”அங்க தேச”மென்று சொல்வர் !
    இன்றிரவு மட்டும்நாம் இங்குதங்கிப் போவோம்”
    தடையேதும் இங்கில்லை தவத்தோர்கள் சேர்க்கை
    சரியான பாதைக்கே சத்தியமாய்ச் சேர்க்கும்
    விடையிதுதான் என்றுவிசு வாமித்ரர் சொல்ல
    விநயமுடன் கேட்டார்கள் சீடரிரு வர்கள் ! (4)

     

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 23ம் பகுதி நிறைந்தது)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171007 -Govinda Pattabhishekam -lr

    ’’சனிக்கிழமை ஆவின் சுரத்தலை ஏற்று
    மணிக்கணக்கில் நின்றார் மாலர், -தணிக்கை
    ஏதுமின்றி, ஏழுமலை ஃபாதர்க்கு(FATHERக்கு) கோமாதா
    கீதகோ விந்தக் கறப்பு’’….!

    “அந்தணர், மந்திரம், ஆடம் பரமின்றி,
    சந்திர வம்சத்து ஸ்ரீரங்கன்,-நந்தனின்,
    வீட்டுச்சேய் பால்வெளியில், வேந்தனாய் ஆவதைக்,
    காட்டிய கேசவ் கவி”….!

    “ராம கிரணமாய் ,ராத்திரி வந்தவனுக்கு,
    நாம கரணம் நடக்கும்முன், -காமதேனு,
    பால்சுரக்கப் போச்சு, பழையரா மாயண
    மால்ஏழ் மலையப்பர் மார்”….கிரேசி மோகன்….!

    Share
  • பிரமிக்கத் தக்க பிரமிடுகள் எப்படி நிறுவப்பட்டன என்னும் மர்மத்தைத் தீர்க்க, தொல்பொருள் ஆய்வாளரின் புதிய கண்டுபிடிப்புகள்

    Posted on October 6, 2017
    Pyramid
    unnamed

    (The Great Pyramids of Egypt)

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா

    +++++++++++

    நைல் நதி நாகரீகக் கற்கோபுரம்

    ஐயாயிர  ஆண்டுக் காலப் பீடகம்

    வெய்யில் எரிக்கா உன்னதக் கூம்பகம்

    சதுரப் பீடம்மேல் எழுப்பிய சாய்வகம்!

    புரவலர் உடலைப் புதைத்த பெட்டகம்!

    சிற்பம், சின்னம் வரலாறுக் களஞ்சியம்!

    கற்பாறை அடுக்கிக் கட்டிய அற்புதம்!

    பூர்வீக வரலாற்றுப் பொற்காலக் கட்டடம்!

    ++++++++++++++

    https://youtu.be/T4cA6oGwzvk

    https://youtu.be/Jt6ZdheNyek

    https://youtu.be/xo2f4IVhuPs

    http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

    +++++++++++++++++

    Pyramid 10

    பூர்வீகப் பிரமிடுகள் எப்படி நிறுவகமாயின  என்று ஆராயத்  தொல்பொருளாரின் புதிய  கண்டுபிடிப்புகள்.

    நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னர் கட்டிய பிரமிக்கத் தக்க பிரமிடுகள் பற்றிய புதிய ஆராய்ச்சிகள் திடுக்கிடும் அரிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டியுள்ளன.  பூர்வீக நைல் நதிச் செடி “பாபிரஸ்” [Papyrus Plant] பற்றிய விளக்கம்,  “மேன்மையான நீர்ப்பயணக் கடத்தி ஏற்பாடு” [An ingenious System of Waterworks], 4500 ஆண்டு வயது “மரபுப் படகு” [Ceremonial Boat] ஆகிய மூன்றும், பிரமிடுகள் மெய்யாக எவ்விதம் கட்டப் பட்டன என்ற பல்லாயிர ஆண்டு கால மர்மத்தைத் தீர்த்து வைக்கும் கண்டுபிடிப்புகளாக 2017 செப்டம்பர் 24 இல் பிரிட்டனின் தொல்பொருளாரின் புதிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.

    3,800-year-old relief carving in Egypt depicts over 100 boats. Credit: Josef Wegner.

    3,800-year-old relief carving in Egypt depicts over 100 boats. Credit: Josef Wegner.

    கீஸா பிரமிடுகளைப் [Pyramids of Giza] பற்றிய பல நூற்றாண்டு ஆராய்ச்சிகள் இருப்பினும், இதுவரைப் பூர்வீக எகிப்தியர் கனமான [சராசரி 2.3 டன்] பெரும்பாறைகளை எவ்விதம் வெட்டினார், பல மைல் தூரம் தூக்கி வந்தார், மேலே தூக்கிச் சீராக அடுக்கினார் என்று தெளிவாகக் கூற முடியவில்லை.

    எப்படிப் பெரும்பாறைத் துணுக்குகள் கடத்தப் பட்டன ?

    கிஸாவுக்கு எட்டு மைல் தூரத்தில் உள்ள தூரா [Tura] வென்னும் தளத்திலிருந்து லைம்கற்கள் [Limestone] கொண்டு வந்தது உறுதி செய்யப் பட்டுள்ளது.  பெரிய பிரமிட் உட்பகுதியில் உள்ள பாறைத் துணுக்குகள் [Granite] 533 மைல் தூரத்தில் இருக்கும் அஸ்வான் பகுதியிலிருந்து கொண்டுவரப் பட்டன.   ஆயினும் தொல்பொருளார் தொடர்ந்து ஏராளமான, கனமான பாறைத் துணுக்குகளை எப்படிக் கடத்தி  குஃபு பிரமிடைக் கட்டினார் என்று  அறிந்து கொள்ள முடியவில்லை.   மண்ணை ஈரமாக்கிப் பெரும்பாறைகளை நகர்த்தினார் என்று 2014 ஏப்ரலில் ஒரு புதிர் விடுவிக்கப் பட்டது.  ஆனால் கடந்த சில ஆண்டுகளில் நடந்த மூன்று ஆராய்ச்சி முடிவுகளில் வேறு வித உறுதி நிகழ்ச்சிகள் இப்போது வெளியாகியுள்ளன.

       

    An Ancient Egyptian Boat. Credit: Canadian Museum of History

    பெரிய  படகுகள் மூலம்  பெரும்பாறைத் துணுக்குகள் நதிப் போக்குவரத்தில் கடத்தப் பட்டன என்று புதிய சான்று.

    வாடி இல் ஜார்ஃப்   [Wadi el-Jarf]  என்னும் பூர்வீகச் செங்கடல் துறைமுகத்தில், புராதன பாபிரஸ் செடி [Papyrus Plant] கீஸா பீடபூமிக்கு  அடியில், ஒரு குகையில் காணாமல் போன ஓர் ஆற்றுப் போக்குவரத்து  [Waterway] ஒரு மரபுப் படகுடன் [Ceremonial Boat] காணப்பட்டது.   அதிலிருந்து ஆயிரக் கணக்கான வேலையாட்கள் 170,000 டன் லைம்கற்களை மரப் படகுகள் மூலமாய் நைல் நதி வழியாகக் கடத்தி வந்துள்ளது உறுதி செய்யப் பட்டுள்ளது.

    பூர்வீகக் கால்வாய்ப் போக்குவரத்தின் மிச்சத் தோற்றம் இன்னும் உள்ளதா ?  ஆம்.  கீஸா பீடபூமிக்குக் கீழ் காணாமல் போன கால்வாய்த் தடம் இருப்பதை மார்க் லேனர் [Mark Lehner] இப்போது காட்டியுள்ளார்.  பாறைக் கற்கள் ஏற்றப்படும் கால்வாய்ப் பகுதியையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

    ++++++++++++++++++++++++++++++++

    The Osirion at Abydos showing sophisticated stone construction. Photo by Hugh Newman.

    The Osirion at Abydos showing sophisticated stone construction.

    Photo by Hugh Newman.

    Remnants of an Ancient System of Canals

    If this account is accurate, where are the canals that Merer speaks of? Until recently, there was little evidence of such a system of waterworks that could have been used to transport the giant blocks. However, archaeologist Mark Lehner has now revealed the discovery of a lost waterway beneath the Giza plateau. “We’ve outlined the central canal basin which we think was the primary delivery area to the foot of the Giza Plateau,” he told Mail Online

    ++++++++++++++++++++++++++++++++

    4500 ஆண்டு வயது பாபிரஸ் செடியை வாடி இல் ஜார்ஃப் துறைமுகத்தில்  கண்டது, பிரமிட் கட்டமைப்புப் புதிர்களில் ஒன்றை விடுவித்துள்ளது  மேலும் ஃபாரோ குஃபு [Pharaoh Kufu] காலத்தில் வாழ்ந்த ஒரு கட்டட மேலாளர் மேரர் [Supervisor Merer] கைப்பிரதி கிடைத்துள்ளது.  அதில் மேரர் பிரமிட் எப்படிக் கட்டப் பட்டுள்ளது என்று விளக்கமாக எழுதியுள்ளார்.

    குஃபு பிரமிட் அருகே ஏழு படகுகள் தங்கும்  கால்வாய்ப் பிரிவுகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.  மேலும் சில மரபுப் படகுகளும் எப்படிக் கப்பல்கள் கட்டப் பட்டுள்ளன என்று காட்டியுள்ளன.  வித விதமான கப்பல் சிற்பங்கள் கண்டு பிடிக்கப் பட்டுள்ளன.

    +++++++++++++++++++++++++++++++++++++

     Pyramid Arts

    Transport Vessels Found

    Seven boat pits have been found in the area around Khufu’s pyramid, two on the south side, two on the east side, two in between the queens’ pyramids and one located beside the mortuary temple and causeway. In addition, archaeologists have found ceremonial boats, which reveal in detail how the ships were constructed, and detailed relief carvings of hundreds of transport vessels.

    The Diary of a Pyramid Builder

    The 4,500-year-old papyrus found at Wadi el-Jarf offers a significant insight into the construction of the pyramids. Written by Merer, an overseer in charge of a large team of elite workers, the ancient logbook from the 27th year of the reign of the pharaoh Khufu, described in detail the construction of the Great Pyramid.

    “The hieroglyphic letters … detailed over the course of several months the construction operations for the Great Pyramid, which was nearing completion, and the work at the limestone quarries at Tura on the opposite bank of the Nile River,” reports History.com. “Merer’s logbook, written in a two-column daily timetable, reports on the daily lives of the construction workers and notes that the limestone blocks exhumed at Tura, which were used to cover the pyramid’s exterior, were transported by boat along the Nile River and a system of canals to the construction site, a journey that took between two and three days.”

    ++++++++++++++++++++++++++++++++++++

    The Great Pyramid of Giza. Credit: BigStockPhoto

    5000 ஆண்டுகளுக்கு முன்பே எகிப்து, மெஸோபொடாமியா, இந்தியா, சைனா போன்ற நாடுகளின் பூர்வீக நாகரீகங்கள் செழிப்பான நைல் நதி, டைகிரிஸ் நதி, யுஃபிராடிஸ் நதி, சிந்து நதி, மஞ்சள் நதிக்கரைகளில் சீராகத் தலைதூக்கி விருத்தியாகி வந்துள்ளன. இங்குமங்கும் சிதறிய இனக்குழுக்கள் ஆடு, மாடு, கோழிகளை வளர்த்து, வேளாண்மை செய்து பயிரினங்களை விதைத்துத் தளிர்க்க வைத்துச் சிற்றூர் ஆட்சி முறை நிலைபெற்றுப் பல இடங்களில் சிற்றரசர்களும், சில தளங்களில் பேரரசர்களும் சிறப்பாக ஆண்டு வந்திருக்கிறார்கள். நூற்றுக் கணக்காக கிராமங்களும், நகரங்களும் பெருகி, மக்கள் அறிவு வளர்ச்சி அடைந்து சிற்பக்கலை, ஓவியக்கலை, கட்டடக்கலை, காவியம், நாடகம், நாட்டியக் கலைகளும் தழைத்தன. நகரங்களில் மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்து, அவரிடையே ஏற்றத் தாழ்வுகள் உண்டாயின! இனவாரிச் சமூகங்களில் அவரவர் புரியும் தொழில்களுக்கு ஏற்பவும், செல்வச் செழிப்புகளுக்கு ஒப்பவும் வகுப்புவாரிப் பிரிவினைகள் கிளைவிட்டு, விழுதுகள் பெருகின! அரச பரம்பரை, செல்வந்தர், படைவீரர், மதவாதிகள், வர்த்தகர், தொழிலாளிகள், அடிமைகள் என்று பகுப்புகள் நிலை பெற்றன! நகரங்களில் ஆட்சி வர்க்கத்தார் அரச மாளிகைகளை எழுப்பி, எதிரிகள் புகாவண்ணம் பாதுகாப்பு அரண்களைச் சுற்றிலும் கட்டினர்.

    Upper Cover

    புரட்சிகரமான அந்தப் புதிய நாகரீகம், கற்காலத்திற்குப் பிறகு குப்பென தோகை விரித்தது. வலுப் பெற்ற வல்லரசுகள், பலமற்ற மெல்லரசுகளை நசுக்கி அவரது நாடுகளை ஆக்கிரமிப்பு செய்து கொண்டன! போர்வாள் இட்ட விதிகளே சட்டங்களாய் நிலவி வந்தன. ஆரம்ப நாகரீக வரலாறு களில் சமயவாதிகளும், ஜோதிட வானியல் ஞானிகளும், திறமைசாலி களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கலைஞர்களும் தோன்றினர். எழுத்துத் திறம் சிறப்புற்று எகிப்து, கிரேக்க [மெஸோபொடமியா] எழுத்தாள ஞானிகள் தமது நாகரீக வரலாறுகளை எழுதிப் பதிவு செய்து வைத்துள்ளது பண்டைய இனங்களின் வரலாறுகளை அறிய உதவி நமக்கு செய்கின்றன.

    சிற்பிகள் தமது சிற்பங்கள் மூலமாக, ஓவியர் தமது ஓவியங்கள் மூலமாக, எழுத்தாளர் பேச்சாளர் தமது கல்வெட்டுகள் மூலமாக, கட்டடக் கலைஞர் தாம் கட்டிய மாளிகைகள், அரண்கள், கோயில்கள், கோபுரங்கள், பிரமிட்கள், கலைத் தூண்கள் மூலமாக பூர்வீக நாகரீக வரலாறுகளைப் பதிவு செய்து வைத்துள்ளார்கள். உலக அற்புதங்களில் ஒன்றானது, பிரம்மாண்டமான கூஃபூ பிரமிட் [Khufu Pyramid]. எகிப்தில் கட்டிய பிரமிட்களில் எல்லாவற்றிலும் பெரியதான காஸாவில் உள்ள கூஃபூ பிரமிட் 480 அடி உயரம், 750 அடிச் சதுர பீடத்தில், 2,300,000 பாறைத் துண்டுகள் கூம்பு வடிவில் அடுக்கப் பட்டது! தற்காலப் பொறியல் துறை, கட்டடக் கலை நிபுணர்கள், நவீன யந்திர சாதனங்களால் அத்தகைய பூதக் கற்கோபுரத்தைக் கட்ட முடியமா என்பது ஐயப்பாடே!

    எகிப்தின் பொற்காலப் பூர்வீக நாகரீகம்

    2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முதல் கிரேக்க வரலாற்று ஞானி, ஹெரொடோடஸ் [Herodotus] எகிப்தை ‘நைல் நதியின் கொடை ‘ [The Gift of Nile] என்று வாழ்த்தி எழுதி யிருக்கிறார். உலகப் பெரும் நதிகளிலே எல்லாவற்றையும் விட மிகவும் நீண்டதாகக் கருதப்படும், நைல் நதி 4160 மைல் தூரம் தளத்தில் ஓடி பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர் வளத்தையும், மனிதர் தரத்தையும் உன்னத மாக்கியது. கெய்ரோவுக்கு அருகில் உள்ள சிறப்பான கிஸா பிரமிட்கள் நைல் நதிக்கு அருகே எழுந்தவை. நைல் நதியில் ஆண்டு தோறும் வெள்ளம் வந்து, நிலங்கள் மூழ்கிடும் சமயம் விவசாயிகள் வேலை யில்லாமல் இருந்த போது, அவர்கள் பிரமிட் கட்டும் பணியில் கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. நீர் வடிந்து நிலங்கள் தயாரான போது அவர்கள் மீண்டும் வேளாண்மையில் முனைந்திருக்கிறார்கள்.

    பிரமிட்கள் கட்டி 2700 ஆண்டுகள் கழித்து நேரடியாகக் காண வந்த ஹெரொடோடஸ் எழுதியுள்ள குறிப்புகளின்படி கூஃபூ பிரமிட் [Khufu Pyramid] கட்டுவதற்கு 100,000 மேற்பட்ட நபர்கள் பங்கேற்றிருக்க வேண்டும் என்று அறியப்படுகிறது. நவீன எகிப்தின் கட்டடக் கலைஞர் [Egyptologists] கணிப்பு விவரப்படி, பங்கு பெற்றோர் எண்ணிக்ககை சுமார் 20,000 நபர்களாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. கிஸா பீட பூமியில் 2,300,000 பாறைத் துண்டுகள் கொண்ட மாபெரும் பிரமிட் ஒன்றைக் கடவுளாகக் கருதப்பட்ட ஃபாரோ [Pharaoh] மன்னருக்குக் கட்டி யிருக்கிறார்கள். அவற்றில் பயன்படுத்தப் பட்ட பெரும் பாறைத் துண்டுகள் சில 15 டன் எடை கொண்டிருந்தன. அதை மட்டும் கட்ட 20 ஆண்டுகள் எடுத்துள்ளதாக அறியப்படுகிறது! தொல்பொருள் உளவாளர் மார்க் லேனர், ஸஹி ஹவாஸ் [Archaeologists: Mark Lehner & Zahi Hawass] இருவரும் பணிபுரிந்த 20,000-30,000 பணியாட்கள் எங்கே தங்கி யிருந்தார்கள் என்னும் புதிரை விடுவிக்க முயன்றார்கள்.

    5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆண்ட எகிப்தின் நான்காம் அரசப் பரம்பரையினர் மிக்க நாகரீகத்தில் வாழ்ந்ததாக அறியப்படுகிறது. அவரது வம்சத்தில் வந்த வலுவாற்றல் பெற்ற ஃபாரோ சக்கரவர்த்திகள் பலர் எகிப்தை ஆண்டு வந்திருக்கிறார்கள். அந்தப் புராதன வேந்தர்கள் முற்போக்கான நாகரீகத்தில் வாழ்ந்து வந்ததின் அடையாளச் சின்னங்கள் யாவும் 5000 ஆண்டுகளாய் மகத்தான பிரமிட் கோபுரங்களில் புதைத்து வைக்கப் பட்டுள்ளன! கடவுளுக்கு இணையாகக் கருதப்பட்ட அந்த மாபெரும் அரசர்கள் இறந்த பின்பு தங்களைப் பின்னால் புதைப்பதற்கு தாங்களே பிரமிக்கத் தக்க பிரமிட்களைக் கட்டியுள்ளார்கள்! எகிப்திய மக்கள் ஃபாரோ சக்கரவர்த்திகளைக் கடவுளாக மதித்து வந்ததைப் பிரமிட் என்னும் அவர்களின் அடக்கக் மாளிகைகளே இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பறைசாற்றப் போகின்றன! ‘பெரும் மாளிகை ‘ என்று அர்த்தம் கொண்ட ஃபாரோ என்னும் சொல், பின்னால் பேரரசர் என்னும் பொருளில் நிலவியது.

    Pyramid -1

    பிரமிட் கோபுரங்கள் கட்டப்பட்டதின் காரணங்கள் என்ன ?

    எகிப்தின் முதல் கரடுமுரடான ‘படிக்கட்டுப் பிரமிட் ‘ [Step Pyramid] கி.மு.2750 ஆம் ஆண்டில் சாக்காரா [Saqqara] என்னும் இடத்தில் ஸோசர் அரசரால் [King Zoser] கட்டப் பட்டது. அடுத்து சதுரப் பீடத்தின் மீது வழவழப்பான சமகோணச் சாய்வு முக்கோணப் பிரமிட், கூஃபூ மன்னனின் தந்தைக்கு வட தர்ஹூர் [Dahrhur] என்னும் இடத்தில் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளுக்குப் பிறகு கீஸாவில் கட்டுமானமாகிய பிரமிட்கள்தான் எல்லாவற்றிலும் மிகச் சிறப்பானவை! அவை பிரம்மாண்டமானவை! பார்ப்போரைத் திகைப்பிலும், வியப்பிலும் ஆழ்த்துபவை! கூஃபூ பேரரசர் [King Khufu] காலத்தில் கட்டப்பட்ட ‘மகா பிரமிட்டுக்கு ‘ [The Great Pyramid] அவரே திறப்பு விழாவைக் கொண்டாடினார். உலகப் புகழ் பெற்றது அதுதான். ஏழு அற்புதங்களில் ஒன்றானதும் அதுதான்!

    பிரமிட்கள் யாவும் கடவுளாகக் கருதப்பட்ட எகிப்த் பேரரசர்களுக்குக் கட்டிய சமாதி மாளிகைக் கோபுரங்கள். பூர்வீக எகிப்திய மாந்தர் மரணத்துக்குப் பிறகு பிரியும் ஆன்மா தொடர்ந்து வாழ்கிறது என்று நம்பினார்கள். இறப்புக்குப் பின் தொடரும் வாழ்வில் கிடைக்கும் முழுப்பயனை அடைய, அவர்கள் மிகவும் சிரமம் எடுத்து வழி செய்தார்கள். நகரில் முக்கியத்துவம் பெற்ற நபர்கள் மிக்க மதிப்பு அளிக்கப்பட்டனர். அதிலும் கடவுளாகக் கருதப்பட்ட நாட்டு வேந்தர்கள் எல்லோரையும் விட உன்னத நிலையில் வைக்கப் பட்டனர்! பிரமிட் அடக்க மாளிகைகள் அவ்விதப் பேரரசர்களுக்கே கட்டப் பட்டவை. ஃபாரோ வேந்தர்களின் உடல்கள் பிரமிட் உட்புற அரண்களில் வெகு பாதுகாப்பாக அடக்க மாகியுள்ளன.

    Pyramid 11

    ஃபாரோ மன்னனின் முதற்பணி தனக்காகக் கட்டப் பட்டிருக்கும் பிரமிட் மாளிகைக்குத் திறப்பு விழா புரிவது! பேரரசர் தான் அடங்கப் போகும் பிரமிட் மாளிகையைக் கட்ட அவரே ஆரம்ப விழா நடத்திய பின், அவர் சாகும் வரையில் நிபுணர்களால் அது அலங்கரிக்கப் படுகிறது! பேரரசர் இறந்தவுடன் சிங்காரிப்பு வேலைகள் அப்படியே முடிக்கப் படாமல் நிறுத்தம் ஆகின்றன! பிறகு அரசனின் உடலைப் பேழையில் இறுக்கமாய் மூடிப் புதைக்க, பிரமிட்டின் உட்புற அடக்க மாளிகை மட்டும் தயாரிக்கப் படுகிறது. பிரமிட்டின் அடக்க மாளிகை மதில்களில் எல்லாம் ஓவியப் படங்கள் வரையப்பட்டு அந்த அரசர் பரம்பரையின் வரலாறுகள் சொல்லப் படுகின்றன.

    பிரமிடைப் பேரரசருக்காகக் கட்டிய நிபுணர் குழுவினர் பெயர்கள் சுவர்களில் எழுதப் பட்டுள்ளன. இறந்த பேரரசரின் செல்வக் களஞ்சியங்கள், தங்க ஆபரணங்கள், அலங்கார ஆசனங்கள் ஆகியவை யாவும் அவருடன் புதைக்கப் பட்டன. அரசர், அரசிகளுக்குப் பணி செய்த பணியாளிகள் இறந்த பின் அவரது சடலங்களும், அரச தம்பதிகளின் அடக்க அறைகளுக்கு அருகே புதைக்கப் பட்டுள்ளன. அரச தம்பதிகளின் உறவினர், அரசாங்க அவையைச் சேர்ந்தவர், பிரமிடைச் சுற்றியுள்ள புறவெளி இடத்தில் புதைக்கப் பட்டிருக்கிறார்கள்.

    Paintings

    (தொடரும்)

    தகவல்

    1. Guide to Places of the World Egypt By: Reader ‘s Digest (1987)

    2. Atlas of the World History By: Harper Collins (1998)

    3. The Ancient World, Quest for the Past (1984)

    4. How in The World By: Reader ‘s Digest (1990)

    5. Age of the Pyramids, Egypt ‘s Old Kingdom By: National Geographic (January 1995)

    6. Finding A Pharaoh ‘s Funeral Bark & Riddle of the Pyramid Boats By: National Geographic (April 1988)

    7. The History of Art for Young People By: H.W. Janson.

    8. Ancient Egypt, Who Built the Pyramids, How old Are the Pyramids, PBS & WGBH Web Site (1997)

    9. Secrets of the Great Pyramid By : Peter Tompkins (1971) & (1978)

    10.  http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

    11.  https://en.wikipedia.org/wiki/Pyramid_(geometry)  February 7, 2016

    12.  http://science.nationalgeographic.com/science/archaeology/giza-pyramids/

    13.  https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramids  [March 1, 2016]

    14.  https://en.wikipedia.org/wiki/Great_Pyramid_of_Giza  [March 23, 2016]

    15. http://www.ancient-origins.net/unexplained-phenomena/giants-ancient-egypt-part-ii-physical-evidence-giant-characters-008745 [September 6, 2017]

    16.  https://www.ancient.eu/pyramid/  [September 2, 2009]

    17. http://www.history.com/topics/ancient-history/the-egyptian-pyramids

    18. https://en.wikipedia.org/wiki/Great_Pyramid_of_Giza [September 15, 2017]

    19. http://www.ancient-origins.net/news-history-archaeology/archaeologists-announce-new-discoveries-solve-mystery-how-great-pyramid-was-021628?nopaging=1 [September 24, 2017]

    20. https://en.wikipedia.org/wiki/Egyptian_pyramids  [October 3, 2017]

    ********************

    S. Jayabarathan [jayabarathans@gmail.com]  October 7, 2017 [R-1]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    ஓவியப் பிதாமகர் திரு.கோபுலு சார் நமது கேசவ்ஜிக்கு ‘’கிருஷ்ணப் பிரேமி’’ என்ற பட்டத்தை அளித்துள்ளார் என்பதை சந்தோஷத்துடன் பகிர்ந்து கொள்கிறேன்….(கேசவ் வெகு கூச்சத்துடன் என்னிடம் இந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டது அடியேன் செய்த பாக்கியமே)….

    171006 -Rajagopala -wm

    ’’யாரென் றுதெரியுதா! , யாதவன் தானிவன்மன்
    னார்குடி கோபுலு(கோகுல) நாயகர்- சாரே!(மலையாள ‘’சாரே’’)
    கிருஷ்ணனை டெய்லி தருகின்ற கேசவ்,
    ‘’கிருஷ்ணப் பிரேமி கரெக்ட்’’….!

    ’’கோபா லபுரத்தில் கோயில்கொண் டுள்ளராஜ
    கோபாலா கோலோக கோவிந்தா: -லாபாதி,
    நஷ்டங்கள் நம்மை நமஸ்கரித்(து) ஓடிடும்
    அஷ்டமி கண்ணன் அரண்(காப்பு)’’….கிரேசி மோகன்….!

    ”குண்டு பஸவப்ப(பழைய சினிமா பாட்டு), கண்ண கரியப்பா(மேஜர் ஜெனரல்)
    தெண்டமிட்டேன் உந்தன் திருவடியில் -மண்டென(மண்டு எனை)
    ராஜகோ பாலரே ரட்ஷித்து அருள்புரிவீர்:
    தேஜஸாய் அமர்ந்த தேவு’’….!

    “விண்ணார்வம் வேண்டேன்,! வியனுலகும் வேண்டேனே,!
    கண்ணாவுன் ஆர்வமதைக் கொண்டேனே, -மன்னார்
    குடிராஜ கோபாலா கேசவ் அகத்தில்
    குடிபோன கோகுலனே காப்பு”….கிரேசி மோகன்….

    Share
  • முகநூல் மோகம்?

    பவள சங்கரி

    உலக அளவில் முகநூல், சிட்டுரை போன்ற இணைய தளங்களை அதிக அளவில் பயன்படுத்துவோர்  இந்தியர்களே! இதில் பெண்களே மிக அதிகமாக  பங்கேற்கிறார்களாம். பத்திற்கு எட்டு பெண்களுக்கு இதன் மூலமாக பல்வேறு விதமான தொல்லைகள் ஏற்படுகிறதாம். குறிப்பாக நட்பு வட்டத்தில் இருப்பவர்களாலேயே அத்தகைய பல பிரச்சனைகள் வருவதாகவும் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது…  எந்தவொரு புதிய கண்டுபிடிப்புகளாலும் நன்மை, தீமை இரண்டும் சம அளவிலேயே இருக்கின்றன. அதை உணர்ந்து எச்சரிக்கையுடன், விழிப்புணர்வுடன் பயன்படுத்துவது அவரவர் கையில்தான் உள்ளது என்பதை விளங்கச் செய்கிறது..

    Share
  • தம்படம் மோகம்!

    பவள சங்கரி

    எச்சரிக்கை! தம்படம் (செல்ஃபி) 4 முறைகளுக்கும் மேல் எடுப்பவர்கள் மனநிலை பாதிக்கப்படுகிறார்களாம்.. அதன் பிறகு தன்னிலை மறந்து ஓடும் ரயில், மலை முகடுகள், அதள பாதாளம், பொங்கி வரும் அலைகள் போன்ற எதைக்கண்டும் அஞ்சாமல், இயற்கையின் இயல்பைக்கூட உணரமுடியாமல் உயிரிழக்கிறார்கள். இந்த ஆண்டில் இதுவரை 400 பேர் இதனால உயிரிழந்திருப்பது அதிர்ச்சியான தகவல்.. விழித்துக்கொள்ள வேண்டிய தருணம் 🙁 தம்படம் எடுக்கும் உபரி உபகரணங்கள் (செல்ஃபி ஸ்டிக்) பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் வியாபாரத்தை பெருக்குவதற்காக விதவிதமாக விளம்பரம் செய்து குறிப்பாக இளைஞர்களை விட்டில் பூச்சிகளாக விழவைப்பது கண்டிக்கத்தக்கது!

    Share
  • “அவன், அது , ஆத்மா” (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 50

    கவிமாமணி கு. தேவநாராயணன் அவர்களை சைதாப்பேட்டையில் கவிமாமணி ஐயாரப்பன் இல்லத்தில் ஒரு ஞாயிறு அன்று நடைபெற்ற பாரதி கலைக்கழகக் கவியரங்கத்தில் சந்தித்தான். அன்று அவர் பாரதி இரா. சுராஜ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மஹாகவி பாரதியாரின் “மங்கியதோர் நிலவினிலே” கவிதையை உள்ளம் உருகும்படிப் பாடி அவையோர் அனைவரின் உள்ளத்திலும் இடம்பிடித்தார். அப்படித்தான் அவனது உள்ளத்திலும் அன்று அவர் புகுந்தார். அவரது வெண்மையான கதர் சட்டையும், வேஷ்டியும், வெண்கலக்குரலில் அவர் பாடிய இனிமையும், மெல்லிய புன்னகை தவழும் முகமும் அவனை அவரின் பக்கம் செல்லத் தூண்டியது. கவியரங்கம் முடிந்து அவரிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டான். “அடடே..உனக்கும் கல்லிடைக்குறிச்சியா?..எனக்கும் அதுதான் பூர்வீகம். தொந்திவிளாகம் தெருவில்தான் இருந்தேன்.” என்று சொல்லி அவனைக் கட்டிக் கொண்டு, “நீ வாசித்த கவிதை நன்னா இருந்தது. தொடர்ந்து கவியரங்கத்துக்கு வா. நான் மந்தவெளிலதான் இருக்கேன். ஆத்துக்கு வா” என்று அழைத்தார். அதிலிருந்து அவருடன் அவனுக்கு நெருக்கம் அதிகமானது. அவர் ஒரு கடுமையான உழைப்பாளி. திரைப்படத்திற்கும், தொலைக்காட்சித் தொடருக்கும் வசனமும், பாடல்களும் எழுதிக் கொண்டிருந்தார்.

    அவனுக்கு அப்பாவின் சதாபிஷேகம் 20.04.2008 அன்று அவனது சென்னை இல்லத்தில் வைத்து நடைபெற்றது. அதற்கு அவரை அவன் அழைத்திருந்தான். அன்று அவருக்கு வேலை இருந்ததால் அவர் அவனிடம், ” விஸ்வநாதா….நான் சதாபிஷேகத்திற்கு முன்தினம் வந்து கலந்து கொள்கிறேன்” என்றார். ” ரொம்ப சந்தோஷம் மாமா. அன்று மாலை நீங்கள் உங்களுக்குப் பிடித்த தலைப்பில் உரையாற்ற வேண்டும். உங்களின் உரைக்கு முன்னால் கொல்கத்தா சகோதரிகள் “கலா-சித்ரா” (அவனுக்கு மனைவி சீதாலட்சுமியின் சகோதரிகள்) பாரதியாரின் பாடல்களை ஒரு மணிநேரம் பாடுவார்கள்” என்று அவன் சொன்னதுமே, ஒரு தனி குஷியுடன், “பலே..பலே” என்று சொன்னார்.

    முந்தியதினம் மாலை நான்கு மணிக்கே அவனுடைய இல்லத்திற்கு வந்து, அவனுக்கு அப்பா மற்றும் உறவினர்களுடன் தனது இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். ” விஸ்வநாதா…இதுக்குத்தான் இன்னிக்கு நான் சீக்கிரமே வந்தேன். நம்ம மனுஷாளப் பார்த்துப் பேசணும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருந்தது” என்று சொல்லி மகிழ்ந்தார். அன்று அவர் இரவு எட்டு மணிமுதல் ஒன்பதரை மணிவரை உரையாற்றினார். தன் வாழ்வில் ஏற்பட்ட இறக்கம், மாற்றம், ஏற்றம் என்று மிகவும் அருமையாகப் பேசியும் பாடியும் அனைவரின் கவனத்தையும் தன்பக்கமே வைத்திருந்தார். தான் எம்.ஆர்.ராதாவைச் சந்தித்தது பற்றியும், தன்னிடம் இராமாயணக் கதையைச் சொல்ல அரைமணி நேரமே அவர் முதலில் ஒதுக்கியதாகவும், தான் கதை சொல்லிய விதத்தில் சுமார் மூன்று மணிநேரம் கேட்டு விட்டு,” தேவநாராயணன்…இப்படி ஒருத்தர் எனக்கு முன்பே கதை சொல்லி இருந்தால் நான் ஏன் நாத்திகனாகப் போகிறேன்” என்று பாராட்டியதாகவும் சொன்னார். காந்தியின் மீதும், நம் தேசத்தின் மீதும், மகாகவி பாரதியார் மீதும் தான் கொண்டிருந்த பக்தியினை மிகவும் உருக்கமாகப் பகிர்ந்து கொண்டார். உரையின் முடிவில் அவர் மகாகவி பாரதியார் பற்றி எழுதிய,

    “பாரதியே ஒரு பாரதம் – அவன்
    பாட்டெல்லாம் தமிழ் மாருதம்
    பாரத மண்ணின் காவிய வளம்தான்
    பாரதி தோன்றக் காரணம்”

    என்ற கவிதையைத் தன் தேன்கலந்த குரலில் பாடி அனைவரையும் சொக்கவைத்தார். அந்தப் பாடலில் வரும் “ஏட்டில் எழுத்தில் இனிவரப்போகும், எழுச்சிகள் எல்லாம் பாரதி” என்ற வரிகள் அவனுக்கு மிகவும் பிடிக்கும். எத்துணை பக்தி அவருக்கு பாரதியாரின் மீது என்று அவன் அவரைப் பற்றிப் பெருமிதங் கொள்வான்.

    பாரதி கலைகழகம் சார்பாக பாரதியாரின் “பாஞ்சாலி சபதம்” கவிதை நாடகத்தைப் பேராசிரியர் தி.வேணுகோபாலன் (நாகநந்தி) அவர்கள் எழுதி இயக்கினார்கள். அதில் சகுனியின் வேடத்தில் தேவநாராயணன்தான் நடித்தார். அந்த நாடகத்தில் பங்குபெற்ற அத்தனை பேர்களுமே கவிஞர்கள். ஓரிருவரைத் தவிர மற்றவர்களுக்கு நடிப்புப் பயிற்சியை பேராசிரியர் சொல்லித்தரும் பொழுது,” தேவநாராயணன் சார் இந்த ஒத்திகைக்கு வல்லைன்னு கவலைப்பட வேண்டாம். அவர் நடிகர் சகஸ்ரநாமத்தின் நாடகக்குழு நடத்திய பாஞ்சாலி சபதத்தில் சகுனியாக நடித்துப் பழக்கப் பட்டவர். வசனமெல்லாம் அவருக்கு மனப்பாடம். மேடைல அவர் கைதட்டு வாங்கிண்டு போயிடுவார்” என்று பெருமையாகச் சொல்லுவார். அதேபோல நாடக அரங்கேற்றத்திற்கு முன்பு நடந்த இரண்டு மூன்று ஒத்திகைகளுக்குத்தான் அவருக்குக் கலந்துகொள்ள நேரம் இருந்தது. அனால் ஒத்திகைகளிலும் சிறப்பாக நடித்து, மேடையிலும் அமர்க்களம் செய்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தேவநாராயணன் அவர்களின் குரலினிமையைப் பற்றி பேராசிரியர் நாகநந்தி அவர்கள்,” தினமணியின் தலையங்கத்தைக் கொடுத்து இதை இசையமைத்துப் பாடுங்களேன் என்றால் கூட அற்புதமாகப் பாடக் கூடிய திறமை பெற்றவர்கள் எம்.எஸ்.விஸ்வநாதனும், தேவநாராயணனும்” என்று சொல்லுவார்.

    ஒருமுறை அவர் அவனை அவரது மயிலாப்பூர் இல்லத்திற்கு அழைத்தார். தான் எழுதிக் கொண்டிருக்கும் சுயசரிதையை அவனுக்கு வாசித்துக் காட்டினார். “இத ஏன் ஓங்கிட்டப் படிச்சுக் காட்டறேன் தெரியுமா? ஒனக்கு என்னோடு குடும்பச் சூழல் தெரியும். அதனால் ஓங்கிட்டப் படிச்சுக் காட்டுறதுல எனக்கு ஒரு சந்தோஷம்” என்றார். அப்பொழுது அவர் ஒரு மூன்று அத்தியாயங்கள் எழுதி இருந்தார். அதற்குள் அவர் உடல்நலம் குன்றி நோயின் வாயில் விழுந்து விட்டார். அப்பொழுது அவரைப் பார்க்க அவரது இல்லம் சென்றிருந்தான். அவரது இளைய மகன் “ரவி” உடன் இருந்தார். அவரால் அதிகம் பேச முடியவில்லை. எண்பது வயதிற்கு மேலாக வாழ்ந்த அந்த அன்புக் கவிமாமணி கு. தேவநாராயணன் 07.09.2009 அன்று இறைவனுடன் கலந்துவிட்டார். செய்தி அறிந்து அவன் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வந்தான்.

    அவரது படைப்புகளான, “அகல்யை”, “கைகேயின் கண்மணி ஸ்ரீராமன்”, “அமுதன் விரும்பிய ஸ்ரீராம பாதுகை” போன்ற கட்டுரைகளையும், கவிதைத் தொகுப்பையும் L.K.M. பதிப்பகத்தார் வெளியிட்டிருக்கிறார்கள்.

    பாரதி கலைக்கழகத் தலைவர் திரு.பாரதி இரா.சுராஜ் அவர்கள் கவிமாமணி தேவநாராயணன் அவர்களைக் கவியரங்கங்களில் கவிதைகளைப் பாடச் சொல்லிக் கேட்டு மகிழ்வார். அப்படி அவர் பாடும் பல கவிதைகள் அவனுக்குப் பிடிக்கும் என்றாலும் “இந்தியா எனது நாடு, இந்தியா எனது வீடு” என்ற கவிதையும்,

    “உழைக்கத் தெரிந்த என்னை ஒருநாள்
    உலகம் உணருமடா
    ஒவ்வொரு கல்லாய் அடுக்கி வைப்பேன்
    என்மாளிகை உயருமடா”

    என்ற அமர வரிகளைக் கொண்ட கவிதையும் என்றும் அவன் உள்ளத்தில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.

    அவர் நிறைய மெல்லிசைப் பாடல்களும் எழுதி இருக்கிறார். இந்தப் பாடலும் அதன் வரிகளும், இசையும் அவனுக்கு ரொம்பவும் பிடிக்கும்.

    “ஸ்ரீராமன் கதையே ராமாயணம்
    சீதையின் பெருமை ராமாயணம்
    ராமாயணம் தினம் பாராயணம்
    ராமனின் நாமமே ஷேமம்தரும்”

    கவிமாமணி கு.தேவநாராயணன் நல்ல கவிஞர் மாத்திரம் அல்ல, அன்பு நிறைந்த சிறந்த மனிதரும் கூட.

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • எழுத்து- 4

    14212124_605045806324274_6346503443436024746_n

     

    நூல் படிக்க எழுத்து கற்கிறோம்
    மேலுலகு செல்லு முன்னர் கற்றிடுங்கள்!
    நாலெழுத்து வாசிக்கும் இன்பக் கவர்ச்சியால்
    நூலும் விரும்பியவர் வாசிக்கும் விலைமகளே
    இறக்காத விடயங்களில் எழுத்தும் ஒன்று.
    நிற்காத தொடர் வண்டி போல
    உறங்காத நயகரா நீர் வீழ்ச்சியாக
    இறங்குவது எழுத்துச் சாரல் தொடர்ச்சியாக

    சுந்தரக் கடல் எழுத்து தந்திரமோ
    மந்திரமோ அல்ல மன விதைகள்
    முந்திய வள்ளுவன் வாழ்வின் குறளும்
    அந்தக் கம்பன் தமிழும் எம்
    நிரந்தர சிறகாக்கிப் பறந்திட ஆசை.
    நினைத்திடு எழுத்து ஒரு சூரியன்!
    நிரந்தர ஏர் சமூகத்தை உழுதிட!
    பரந்த பிறப்பிற்கு உயிர் தருவது.

    நல்ல எழுத்தை அலட்சியமின்றிப் பாராட்டலாம்
    வெல்லும் கொலுசுச் சத்தம் அது
    புல்லரிக்கும் மனதில் எண்ணும் தோறும்
    வெல்லும் வரிகள் மின்னும் வைரங்கள்
    புலன்களை ஊடுருவிப் பிறக்கும் முத்துகள்
    வலமிடமின்றி எழுத்துக் கருவியால் குதிக்கும்.
    கடற்கரை மணல் சிறு நண்டோவியப்
    படமாக ஊர்ந்து ஊர்ந்து சிலிர்க்கும்.

    ஆக்கம்:- பா வானதி வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க். 5-10-2017
    _______________

    Share
  • வெளியேற டிக்கட் வாங்கி விட்டாள் !

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

    ++++++++++++++

     unnamed

    கவலைப் படுறேன் நானின்று

    காதலி என்னைப் பித்தனாக்கி விட்டாள் !

    வெளியேறப் போகிறாள் !

    டிக்கட் வாங்கி விட்டாள் !

    அவள் வெளியேறப் போகும் டிக்கட் !

    கவலைப் படவில்லை அவள் !

    என்னோடு வாழ்வது அவளுக்கு

    இன்னல் கொடுக்குதாம் !

    அடைபட்டுக் கிடக்கும் அவளுக்கு

    விடுதலை இல்லையாம்,

    நானவளைச் சுற்றி நின்றால் !

    டிக்கட் எடுத்து விட்டாள்,

    என்னிட மிருந்து வெளியேற !

    எனக்குப் புரிய வில்லை

    ஏனவள் பறக்கப் போறாள் என்று !

    விடைபெறும் முன்பவள்

    சிந்திக்க வேண்டும் இருமுறை !

    நியாயமாய்த் தெரிய வில்லை எனக்கு !

    கவலைப் படுவது நான் !

    கவலைப் படவில்லை அவள் !

    பித்தனாய் ஆக்கி விட்டாள் என்னை !

     

    ++++++++++++++++

    Share
  • குளிர் வெப்பம்!

    -ராஜகவி ராகில்

    கோடை நிலமழை
    உன் வருகை

    மலர்கள் பார்த்துப் பேசுகிறேன்
    உன்னோடு உரையாடிய திருப்தியாதலால்

    அருகில் இருக்கின்ற இலைகள் கூட
    வாசமாகி நேசிக்கின்றன உன்னை

    காற்றைப் பிடித்துப் பிடித்து பார்க்கிறேன்
    உன் சொற்கள் இருக்கின்றனவா என்று

    மழைத் துளிகளை விடக் குளிர்கின்றன
    உன் வார்த்தைகள்

    கிளியிடம் உன் பெயர் சொன்னேன்
    அது திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தது
    கனிகள் மறந்து

    உன்னைக் கண்ட
    நேற்றுக் கூட இன்றாகத்தான் இருக்கும்
    என்றுமே எனக்கு

    உன்னைப் பற்றிச் சொல்ல வேண்டும் என
    எழுத்துக்களெல்லாம்
    வரிசையாக வந்து நின்று அடம் பிடிக்கின்றன
    ஆசையுடன்

    கடலில் குளி நீ
    காலடியில் முத்துச் சிப்பிகள் நிரம்ப
    ஐஸ் மழை சிவப்பாகியது
    உன் மேனியில் விழுந்து

    பனிக்கட்டிகள்
    உனக்காகக் காத்திருக்கின்றன
    அழகான வெயிலாக
    குளிரான வெப்பமாக நீ வருவாய் என்று!

     

     

    Share
  • பாரதியின் பெண்மை வெல்க!

    -முனைவர் க.ஆனந்தி

    இன்று நாம் அனைவரும் ஒரு பெண்ணாய் பிறந்ததற்கு பெருமை கொள்வோம். சங்ககாலம் முதல் இன்று வரை என் இந்திய தேசத்தில் அதிலும் குறிப்பாகத் தமிழகத்தில் பல வீரமங்கைகள் வாழ்ந்ததற்கான சான்றுகளை இலக்கியங்களில்தான் நான் படித்துத் தெரிந்து கொண்டேன். ஆனால் இன்று என் கண்முன்னே தன்னை வளர்த்துக்கொண்டு, என் தாய்த்திரு நாட்டையும் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று எல்லோர் மனத்திலும் நிறைந்து காணப்பட்ட ஒரு பெண்ணைக் கண்டேன்.

    எத்தனை எத்தனை ஆண்சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றைப் பெண்சிங்கமாய் உள்ளே நுழைந்து தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக ராஜதர்பார் செய்து தமிழகத்தின் முதல்வராக அரியணை ஏறியவர் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள். அவர் இன்று நம்மோடு இல்லை.

    பள்ளிப் படிப்பை முடித்து தங்கப் பதக்கத்தை வென்றவர். கல்லூரிப் படிப்பை தொடர இயலாது போனாலும், ஆறு மொழிகளை அழகுற பேசக்கூடியவர். விருப்பமில்லாமல் வந்தாலும் கலையைக் கடவுளுக்கு நிகராக நேசித்தவர். இன்றும் கலைத்துறையினரால் மதிக்கப்பட்டும், போற்றப்பட்டும் வாழ்ந்த கலையரசி.

    தான் எடுத்துக் கொண்ட எந்த ஒரு செயலிலும் முழுமூச்சாய் ஈடுபட்டுச் செயல்படுபவர். அவரின் வெற்றிக்கு இதுவும் ஒரு காரணம். எடுத்த காரியத்தை முடிக்க வேண்டும்; முன்வைத்த காலைப் பின்வைக்கக் கூடாது என்று எத்தனை எத்தனையோ இடையூறுகளும், இன்னல்களும், வலிகளும், வேதனைகளும் எதிர்நின்றபோது சலிக்காது நேர் கொண்டு முன்னேறியவர்.

    தமிழகத்தை நீண்டநாள் ஆண்ட தலைவர்களுள் ஆறுமுறைத் தமிழக முதல்வராகப் பதவி வகித்தவர். நெருப்பாற்றில் நீந்திவந்த இவரின் துணிவு, புவியில் யாருக்கும் அஞ்சாத செருக்கு, அனைத்துத் துறைகளிலும் தேர்ந்த ஞானம், அனைவரையும் வியக்க வைத்தது. ஆகச்சிறந்த பெண்மணி என்றால் அது மிகையாகாது.

    ஒரு பெண் பல தோல்விகளையும், பல விமர்சனங்களையும் கண்டு பயங்கொள்ளாது தன்னிச்சையாகத் தான் எடுக்கும் முடிவு பலருக்கு நன்மையாகும்போது வெற்றியடைகின்றாள். அதுதான் இவரிடமும் நடந்தது.

    இன்று சமுதாயத்தில் பெண்கள் அப்படி அல்லர்! தன் குடும்பத்தாரோடும், கணவனோடும் சிறு சிறு பிரச்சனைகள் என்றாலே உடைந்து போகின்றனர். உள்ளம் சிதைந்துபோகின்றனர். தன்னை மாய்த்துக் கொள்ள துணிந்து விடுகின்றனர். இப்படிப்பட்ட பெண்களுக்கு மத்தியில் கடைசிவரை யுத்தகளத்தில் நின்று, வென்றாலும் வீழ்ந்தாலும் மீண்டும் மீண்டும் எழுந்து நடந்து எல்லோரையும் அதிரவைத்த தைரியத்தை, தன்னம்பிக்கையை ஒவ்வொரு பெண்ணும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று தன் வாழ்க்கையை ஒரு திறந்த புத்தகமாகவே வாழ்ந்து காட்டியவர்.

    இலக்கியம், அறிவியல், வேளாண்மை, சட்டம் என்று எல்லாத் துறையினராலும் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர். 3 வயதில் தந்தையை இழந்தவர். 22 வயதில் தாயை இழந்தவர். உறவுகள் இன்றி தனியொரு மனுசியாய் வாழ்ந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.

    எத்துணைப் போர்க்குணம் இருந்திருந்தால் இன்று எல்லோரும் அவரை இரும்புப் பெண்மணி, வீரமங்கை, பெண்சிங்கம் என்றெல்லாம் அழைத்திருப்பார்கள். தமிழகம் இழந்தது ஒரு பெண்சிங்கத்தைத்தான். இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும் இவரைப் போன்ற ஒரு இரும்புப் பெண்மணி உருவாக என்று கேள்விகள் எழும்புகின்றன.

    ஒரு பெண் இவ்வளவு ஆளுமையோடும், கம்பீரத்தோடும், உலக அறிவோடும், மொழித்திறனோடும், தைரியத்தோடும், திமிரோடும் வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?

    ஒரு பெண், பெண் என்ற கர்வத்தோடு திமிரோடு, நடைபோட அவள் நடந்து வருகையில் அரங்கமே எழுந்து நின்று கைகூப்பி வணங்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகும்?

    சமுதாயத்தில் நிகழும் பல்வேறு கேடுகளுக்கு மத்தியில் ஒரு பெண்ணை அனுமதியில்லாமல் எதிர்க்கும் எவராலும், அவளின் விரல் நகத்தைக் கூடத் தீண்டமுடியாமல் போகும் நிலை வருவதற்கு இன்னும் எத்தனை நூற்றாண்டுகளாகும்?  என்ற இந்தக் கேள்விகளுக்கெல்லாம் நமது தமிழக முதல்வர் வாழ்ந்து காட்டியுள்ளார்.

    எந்த நூற்றாண்டில் இப்படி ஒரு பெண் வரப்போகிறார் என்று எதிர்பார்க்காமல் நாம் ஒவ்வொருவரும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று கற்றுக் கொடுத்து விட்டு சென்றிருக்கிறார் புரட்சித் தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்கள்.

    அவரின் கொள்கைகளைக் கைக்கொண்டு நாம் வாழ்ந்து காட்டுவோம். ஒரு பெண்ணாக நாம் பெருமைப்படுவோம். தோல்வியிலும் வெற்றி கண்டவர் அவர். எல்லாவற்றிலும் வெற்றி கண்டவர் எமனிடம் தோற்றுப் போனதால் மண்ணுலகை ஆண்ட மங்கை விண்ணுலகை ஆளச் சென்றிருக்கின்றார்.

    அந்தத் தங்கத் தாரகைக்கு, பொன்மனச் செல்விக்கு, புரட்சித் தலைவிக்கு, போர்க் குணம் நிறைந்தவருக்கு ஆன்மா அமைதி பெற இறைவனை வேண்டிக் கொள்வோம். நாமும் ஒரு பெண் என்ற கர்வத்தோடு இவ்வுலகில் வலம் வருவோம். பாரதியின் பெண்மை வெல்க!

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_3909
    ’‘என்றும் புதியது, ஏகன் புதியது,
    கன்றும் புதியது , கேசவ்ஜி- நன்றிதை
    ஊரறியச் செய்திடும் உம்கை புதியது,
    FOR-EVER கண்ணன்காப் பார்’’….கிரேசி மோகன்….!

    லவ்லி கேசவ்….மாஸ்டர் ஃபீஸ்….
    ————————————————————————————————————————————–
    மருமகன் வேலனோ தகப்பன்சாமி,
    தாய்மாமன் மாலனோ தாய்ச்சாமி….குழந்தைகளிடமிருந்து INSPIRATION….!
    கண்ணனுக்குப் பிடித மடிகள் ரெண்டு….1) தாய் மடி 2) தாய்ப்பசு மடி ….!
    கண்ணன் புதியது, கன்று புதியது….குழந்தைகள் என்றும் புதியது….!
    ‘’தகப்பன் சுவாமி, தணிகை முருகன்,
    அகப்பட்டு அன்னை அணைப்பு, -சுகம்பெற்றான்:
    வெஞ்சிறை விட்டு, வெளிவந்(து) எசோதையின்,
    மஞ்சம் துயின்றதாய்சா மி’’….கிரேசி மோகன்…

     

     

    Share
  • ஸ்ரீ வள்ளளார் அவதார தினம்

    ஸ்ரீ வள்ளளார் 195 ஆவது ஆண்டு அவதார தின விழாவும்
    உலக ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியும் நடைபெறவுள்ளது.

    வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, ஸ்ரீ தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் ஸ்தாபகர் மற்றும் பீடாதிபதி கயிலை ஞானகுரு டாக்டர் ஸ்ரீ முரளிதர ஸ்வாமிகள் ஆக்ஞைப்படி வருகிற 05.10.2017 வியாழக்கிழமை பௌர்ணமி அன்று உலக நலன் கருதி ஸ்ரீ வள்ளளார் அவர்களின் 195 ஆவது அவதார தின விழாவும் உலக ஒருமைப்பாட்டு தின உறுதி மொழியும் காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது.

    “ அருட்பெருஞ்ஜோதி, அருட்பெருஞ்ஜோதி,
    தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜோதி “

    என்ற வாசகத்தை அருளியவர் ஸ்ரீ வள்ளளார் பெருமான். புலால் உண்ணாமையையும், ஜோதி வழிபாட்டினையும் வழியுருத்தி வந்த வடலூர் வள்ளளார் என்ற இராமலிங்க அடிகளார். கடலூர் மாவட்டம் மருதூர் கிராமத்தில் 1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி பிறந்தார். இவர் சுத்த சன்மார்க சங்கம் என்ற அமைப்பை தொடங்கி அதன் கொள்கைகளை பரப்பி வந்தார். ‘ வாடிய பயிரை கண்டப்போதெல்லாம் வாடினேன்” என்று கூறியவர்.

    பசியால் வருபவர்கள் உணவருந்திச் செல்வதற்காக வடலூரில் சத்திய ஞானசபை, தருமசாலை போன்ற அமைப்புகளைத் தொடங்கினார்.

    அங்கு அணையா அடுப்பு மூலம் உணவு தயாரிக்கப்பட்டு சபைக்கு வருவோருக்கும், ஆதரவற்றோருக்கும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.
    இவரது பிறந்த 195-ஆவது அவதாரத் தினம் ஸ்ரீ தன்வந்திரி பீடத்தில் வருகிற 05.10.2017 வியாழக்கிழமை சிறப்பு பூஜைகளும், அன்னதானமும், நலதிட்ட உதவிகளும் உலக ஒருமைப்பாட்டு உறுதிமொழி நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. இந்த தகவலை ஸ்ரீ தன்வந்திரி குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    Share