Blog

  • உன்னைக் காதலிப்பது சிரமம் !

    image (2)

     

     

     

     

     

     

     

     

     

    மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

    தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

     

    மெல்ல நீயென் அருகே சென்றால்

    புல்லரிக்கும் எனக்கு ! நீ

    பெருமூச்சு விட்டால்,  

    உட்புறம் காய்ந்து போகுது !

    பட்டாம் பூச்சி போல், நெஞ்சு எனக்குப்

    பட படக்குது !

    நாணப் படுவது ஏன் நான், நீ அருகில்

    காணப் படும் போது ?

    காரணம் அதற்குக் காதலே !

    நானிப்படி

    மாறிப் போனது ஏனோ ?

    காதலால் தான் !

    கடினமாய் உள்ள தெனக்கு

    காதலிப்ப துன்னை !

    ஒவ்வோர் இரவிலும் விடாது

    நீயும் நானும்

    வாய்ப் போர் புரிதல் முறையா ?

    ஆயினும்

    உன்னை நான் தரிசித்த போது

    ஒளி வீசிடும் இரவில்,

    உன்னதப் பேரொளி !

    பெண்ணே !

    இழப்பை நிரப்ப வேண்டியது

    என் கடமை யன்றோ ?

    நேர்வ தெல்லாம் காதலால் !

    ஆயினும்

    பாரமாய் உள்ள தெனக்கு

    காதலிப்ப துன்னை !

    ஆமாம்

    பாரமாய் உள்ளது !

     

    Share
  • மரபணுச்சொந்தம் என்று நம்பப்படும் இந்திய – கொரிய உறவு வெறும் தொன்மப்புனைவா?

    பவள சங்கரி

    k

    இந்தியா-கொரியா கலாச்சார உறவு குறித்த பரவலான ஆய்வுகளும், அது தொடர்பான பல்வேறு வரலாற்றுத் தகவல்களும், புராணக் கதைகளும், அவை சார்ந்த நம்பிக்கைகளும் இன்று உலகம் முழுவதும் பல வகையில் முன்னெடுக்கப்பட்டு, அவைகளின் தொடர்பான செய்திகள் ஊடகங்கள் மூலமாக புற்றீசல் போல பரவிக்கொண்டிருக்கின்றன. அதாவது, பொருளாதார, வரலாற்று, கலாச்சார மற்றும் மொழியியல் புள்ளியிலிருந்து இந்தியா-கொரியா தொடர்பான உறவுகள் உறுதியாக மையம் கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. இதன் மூலம் இந்த இரண்டு நாடுகளுக்குமுள்ள பொருளாதாரக் கட்டுமானங்கள் வலுப்பெறக்கூடும் என்ற நம்பிக்கையையும் ஏற்படுத்துகிறது. ஆசியாவின் இந்த இரண்டு பொருளாதார சக்திகளும் ஒன்றுக்கொன்று தங்களுக்கிடையேயான செழிப்பும் ஆரோக்கியமான உறவுகளுக்கும் பாலம் அமைக்கத் தக்க தருணமாக இருக்கலாம். இன்று உலகின் மிகவும் ஆற்றல் வாய்ந்ததும் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார மண்டலமாகவும் உள்ள மாபெரும் ஆசிய நாடுகளான கொரியா மற்றும் இந்தியா என்ற இந்த இரண்டு பெரிய நாடுகளிலும், அவர்களின் வளர்ச்சியும் பின்னிப் பிணைந்து உள்ளன. இவைகளைக் கருத்தில்கொண்டு பார்க்கும்பொழுது கொரியா-இந்தியா உறவுகளின் தற்போதைய மாற்றங்கள் வெறுமனே தற்செயலான நிகழ்வுகள் அல்ல என்றும் தோன்றுகிறது. சாம்சங், ஹூண்டாய் மற்றும் எல்ஜி போன்ற கொரிய பெரிய நிறுவனங்களின் பெயர்கள் இப்போது பெரும்பாலான இந்திய குடும்பங்களில் அன்றாட புழக்கத்தில் கலந்துவிட்ட பெயர்களில் ஒன்றாக மாறிவிட்டதையும் காணமுடிகிறது. இந்திய பொருளாதாரம் மற்றும் அதன் வளர்ச்சிக்கான அடிப்படைகளில் உள்ள நம்பிக்கையின் காரணமாக கொரிய நிறுவனங்கள் பெருமளவில் தொழில் முதலீடு செய்கின்றனர்.

    இந்தியா சீனாவோடும் நெருங்கிய வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளைக் கைப்பற்றியிருந்தது. பவளப்பாறைகள், முத்துக்கள், கண்ணாடி நாளங்கள் மற்றும் மணிகள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்தும், சீனாவில் இருந்து ஜேட் மற்றும் பட்டும் இறக்குமதி செய்வதில் இந்தியா தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளது. இந்தியாவில் மகாபலிபுரம் மற்றும் தஞ்சாவூர் போன்ற பல இடங்களில் செம்பு அல்லது வெண்கலத்தால் செய்யப்பட்ட சீன நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. பண்டைய இந்தியர்கள் சீனாவைக் குறிப்பிடுகையில், கொரியா தன் சொந்த அடையாளத்தை கொண்டிருந்தாலும் கூட, சீனாவுடன் கொரியாவையும் உள்ளடக்கியதாகவே கூறப்பட்டிருக்கலாம். காரணம், சீன வம்சாவளியினருடன் அவர்கள் கொண்டிருந்த நெருங்கியத் தொடர்பாக இருக்கலாம்.

    கொரியர்கள் தங்களின் வேரைத் தேடி அறிய முற்பட்டபோது சீனர்களாலும் சப்பானியர்களாலும் எழுதப்பட்ட வரலாறுகளின் மூலம் அவர்களுக்குக் கிடைத்த தகவலின்படி கொரிய ஆய்வாளர்கள் அவர்களின் முதல் அரசி மேற்குத் திசையில் இருந்து புலம் பெயர்ந்தவர் என்ற தகவலின் அடிப்படையில் தங்கள் தேடலைத் தொடங்கினர். இந்தியா – கொரியா என இரு நாடுகளுக்குமிடையேயான வரலாற்றுத் தொடர்பான உறவுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே உள்ளன. புத்த மதம் கொரியா மற்றும் இந்தியா இடையே உறவுப்பாதையே உறுதியாக்கி வளர்த்தும் வந்துள்ளது.

    buddha

    நான்காம் நூற்றாண்டின் இடையில் கொஹுரேயோவால் புத்தம் கொரியாவுக்கு அறிமுகமானது என்றாலும் அதற்கு பல காலம் முன்பாகவே, கொரியாவின் மூன்று இராச்சியங்களின் வரலாறு மூலமாக புத்த மதம் முதன்மை பெற்றிருந்ததை அறிய முடிகிறது. ஆம் கிம் சுரோ (371-384) ஆட்சியின் போது, கொரியாவில் புத்தமதம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது. சீனாவைப் பொறுத்தவரை இந்தியாவிலிருந்து கொரியாவுக்கு புத்தமதம் வந்தது என்று கூறுகிறது.

    1910ஆம் ஆண்டில் கொரியா ஜப்பானியக் காலனி ஆட்சியில் கட்டுண்டது. 1907ஆம் ஆண்டில் யீ வம்சாவளியினரின் அரசியான இராணி மின் என்பவரை ஜப்பானியச் சேனைகள் கொன்றுவிட்டதோடு அரசன் கோஜோங் யையும் வலுக்கட்டாயமாக அரியணையை துறக்கச்செய்தனர். கொரியா ஜப்பானிய ஆதிக்கத்தினுள் சென்றது. இந்த இணைப்பு கொரியாவின் தேசிய ஒருமைப்பாட்டையும், கலாச்சார பாரம்பரியங்களையும், பொருளாதார வளங்களையும் வேரோடு பிடுங்கிப்போட்டது. இந்தச் சூழலில் கொரியாவில் பெரும் புலம்பெயர்வு நிகழ்ந்தது. மக்கள் கொரிய தீபகற்பத்தினுள்ளும், சீனா, அமெரிக்கா, மெக்சிகோ போன்ற நாடுகளுக்கும் புலம் பெயர்ந்தனர்.

    இந்த காலகட்டத்தில் கொரிய அரசு பள்ளிகளில் சொற்பமான பெண் குழந்தைகளே கல்வி பயின்றனர். பெரும்பாலான குழந்தைகள் தனி வகுப்புகளில் சீன, கொரிய இலக்கியங்கள் மட்டுமே பயின்றனர். ஜப்பானிய ஆதிக்கத்தில் ஜப்பானிய மொழியே அதிகாரப்பூர்வ அரசு மொழியாக இருந்ததால் ஜப்பானிய மொழி கற்காதவர்கள் கல்வி கற்கவும் இயலாமல் இருந்தனர். ஆண் குழந்தைகளைப் பொருத்தவரை மத்திய தர குடும்பத்தில் இருந்தவர்கள் பள்ளி கல்வி மட்டுமே கற்றனர். மேல் மட்டத்தினரில் சிலர் சியோல், ஜப்பான் போன்ற இடங்களுக்குச் சென்று கல்லூரியிலும், உயர் கல்வியும் கற்றனர்.

    காதல் திருமணம் என்ற ஒரு கோட்பாடே அறிமுகம் ஆகாத காலகட்டமாக அது இருந்தது. பெற்றோர் அல்லது நெருங்கிய உறவினர்கள் மூலமோதான் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணம் என்பது இரண்டு குடும்பங்களுக்கான ஒப்பந்தமாகவே இருந்தது. குழந்தைகளாக இருக்கும்போதே அவர்கள் சம்பந்தப்பட்ட குடும்ப உறவுகளும் உறுதி செய்யப்பட்டுவிடும் வகையிலேயே இருந்தது. பெரும்பாலும் கன்பூசியத் தத்துவங்களே கடைபிடிக்கப்பட்டு வந்துள்ளன.

    ஹூர் (ஹூ, ஹோ) குடும்பத்தின் மரபணுத் தொடர்புகள் நூலின் மூலமாக, கயாவின் மன்னன் கிம் சுரோ – அரசி ஹூ ஹ்வாங் ஓக் தம்பதியினரின் 35 வது பரம்பரையைச் சேர்ந்தவர்கள் தாங்கள் என்பதை அறிந்துகொள்கின்றனர். கி.பி. 42 – 562 காலகட்டத்தில், கொரிய தீபகற்பத்தில், கயா, சில்லா, பேக்ஜே என்ற மூன்று இராச்சியங்கள் பூசனின் வடமேற்குப் பகுதியில் 20 மைல் தொலைவில் உள்ள கிம்ஹே பகுதியில் கயா என்ற இராச்சியத்தை உருவாக்கியவன் மன்னன் கிம் சுரோ. அடுத்து வருவது சாம்குக் யுசா எனும் புராணக்கதை. ஹூர்ஹ் தனக்கு ஏற்படும் முக்கியமான சந்தேகம், மன்னன் சுரோவுடன் அந்த இளவரசி எந்த மொழியில் பேசியிருப்பார் என்பதுதான். இதற்கான விடையே இந்த கதையின் முக்கியமான முடிச்சுகளை அவிழ்க்கக்கூடிய ஒன்றாக இருக்கலாம். இந்த இடத்தில்தான் கொரிய மக்களின் மொழிகளில் கலந்துள்ள 6,000 ற்கும் மேற்பட்ட தமிழ் சொற்கள் இதன் விடையாக அமையலாம் என்பதும் சில கொரிய மொழியியலாளர்களின் அனுமானமாக உள்ளது.

    கொரிய அகழ்வாராய்ச்சியாளரான ஹூர்ஹ், தன் பாரம்பரியத்தின் வேரைக்கண்டுபிடிக்கும் முயற்சியில், சுரோ மன்னனின் அரசியாக வெளிநாட்டிலிருந்து வந்தவர் இந்திய நாட்டின் அயோத்தியைச் சேர்ந்தவர் என்ற அனுமானத்தின் அடிப்படையில் ஹூர்ஹ் தன் தேடலை துவக்குகிறார்.

    தன் பெற்றோருக்கு அளிக்கப்பட்ட அசரீரி வாக்கின்படி தங்கள் அன்பு மகளை இரண்டு மாத கடல்வழிப் பயணமாக அனுப்பி வைக்கிறார்கள். அவள் கொண்டு வரும் பரிசுப் பொருட்கள் மற்றும் பாதுகாப்பிற்கான கல் திட்டைகள் போன்றவைகள் புத்த மதச்சின்னங்களை நினைவுகூர்வதாக இருந்தது. அவள் கொண்டு வந்த மீன் சின்னம் மூலம் 157 ஆண்டுகள் வாழ்ந்து நல்ல முறையில் மக்களுக்கும் சேவை புரிந்த மகாராணி வந்த பட்டுப்பாதையைக் கண்டுபிடிக்க முனைகிறார். இதற்காகத் தன் பயணத்தைத் தொடங்குபவர், முதலில் மொகஞ்சதாரோவில் தன் தேடலைத் தொடங்கி தொடர்ந்து இந்துகுச் மலைவரைச் சென்று மீன் சின்னத்தைத் தேடுபவர், அதனைக் கண்டுபிடிக்க முடியாததால் அடுத்து பாகிசுதான் செல்கிறார். அங்கிருந்து அடுத்து பெசாவருக்குப் பயணம் செய்தவர் தாம் ஆச்சரியப்படும் வகையில் அங்கு காணும் இடமெல்லாம் இரட்டைமீன் சின்னத்தைக் காண்கிறார். அந்த சின்னம் ஏதேனும் சமயம் சார்ந்த சின்னமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் மாறாக அது ஏதேனும் சிறந்ததொரு மரபின் குறியீடாக இருக்கலாம் என்று எண்ணுகிறார். அடுத்து அயோதியா நகருக்குச் சென்றவர் அதன் புராணம் சார்ந்த பெருமைகளான, அது இராமாயனக்கால நகரம் என்று பெருமையாகப் பேசப்படுவதை அறிந்தவர் கொரிய அரசி இப்படிப்பட்ட புண்ணிய பூமியிலிருந்து வந்திருக்கலாம் என்று ஒருவித தயக்கத்துடனே முடிவெடுக்கிறார்.

    அடுத்தபடியாக கொரியாவிலும் ஆதாரங்களைத் தேட முனைந்தவர் அங்குள்ள மலை சார்ந்ததொரு பகுதியில் தன் தேடுதல் வேட்டையை மேற்கொள்கிறார். அந்த மலைக்கு மீன் கடவுள் மலை என்ற பெயர் இருப்பதோடு, அங்கிருந்த புத்த விகாரையில் புத்தரின் சிலைக்கு அடியில் இரட்டை மீன் சின்னம் இருந்ததையும் அறிந்தவர் அந்த இரட்டை மீன் சின்னம் புத்த மதக்குறியீடாக இருக்கலாம் என்றும் அனுமானம் கொள்கிறார். ஆனால் இந்த நிகழ்வுகள் அனைத்தும் 1ஆம் நூற்றாண்டில் நடந்ததாகக் கூறப்பட்டிருந்த நிலையில் கொரிய வரலாற்றில் புத்த மதம் 3ஆம் நூற்றாண்டில் நுழைந்தது என்ற தகவல் அவருடைய குழப்பத்தை அதிகப்படுத்துகிறது. முடிவில் இந்தியாவிலிருந்து கடல்வழி மற்றும் தரைவழிப் பயணமாக வணிகம் செய்யும் பொருட்டு கொரியா வந்தவர்கள் புத்த தருமங்களையும், அவருடைய கொள்கைகளையும் பரவச் செய்திருக்கலாம். அதன் பொருட்டே அங்கு இரட்டை மீன் சின்னம் நிலைபெற்றிருக்கலாம் என்றும் அனுமானம் கொள்கிறார். மேற்கொண்டு அவருடைய ஆய்வுகள் மீன் சின்னம் புத்த குறியீடா என்பதில் இருக்கிறது.

    கொரியாவில் கி.பி முதலாம் நூற்றாண்டில் தொடங்கி கி.பி 4 ஆம் நூற்றாண்டுவரை கோலோச்சிய கயா அரசு பல்லாயிரம் ஆண்டுகள் மூத்த குடியாக நற்சிந்தைகளை பரவச்செய்து பொருளாதார மேம்பாடு தொழில் நுட்ப வளர்ச்சி ஆகிய அனைத்துத் தளங்களிலும் இன்றுவரை தென் ஆசியாவில் முன்னணியில் இருக்கும் இரு நாடுகளின் இணைப்புச் சங்கிலியாக இருந்த அந்த இளவரசி ஆதாரங்களின் அடிப்படையில் தமிழகத்தைச் சேர்ந்தவரா என்று கண்டுபிடிக்கும் ஆய்வுகள் ஆய்வாளர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருப்பதும் நிதர்சனம்.

    இந்த நிலையில்,

    SOUTH KOREAN OFFICER IN KOREAN WAR WON MOO HURH, “I WIIL SHOOT THEM FROM MY LOVING HEART”

    என்ற தமது நூலில் விவாதித்துள்ள சில சுவையான பகுதிகளின் தமிழாக்கத்தைப் பார்ப்போம்:

    தங்கள் முன்னோர்களைத் தேடி ஒரு தொல்பொருள் ஆய்வாளரின் வரலாற்றுப் பயணம்

    woo
    geneஏப்ரல் 1, 2009இல் ’உய்சாங் கிம் கிளானின் , ‘உய்சாங் கிம் – சீ ஸாங்போ’ என்ற ஒரு காலாண்டு பத்திரிக்கையில் வந்த செய்தியான, ‘நாம் ஹூங்கோவின் வடக்கு பழங்குடியினரின் வாரிசுகளா’ என்ற தலைப்பிலான கட்டுரையை வாசித்தபோது எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. நானும் அந்த கிளான் குடும்பத்தைச் சார்ந்தவன் என்பதால் கிளானின் அதிகாரப்பூர்வமான பத்திரிக்கையில் இப்படியொரு அற்புதமான ஆய்வு தொடர்பான அட்டகாசமான வினாவைப் பார்த்தவுடன் வியப்பாக இருந்தது.

    இந்த நிலையில் (927- 936) சில்லா வம்சத்தின் சோக், கியோங்ஓக் அரசின் இளவரசனே கிளானின் மூதாதையர் என்று குறிப்பிட்டிருந்தார் அவர். இது பல நூற்றாண்டுகள் முன்பாக ஒற்றை இன நாடாக இருந்து பிற்காலத்தில் நவீன பன்முகக்கலாச்சாரத்தில் மாறிப்போன அரசு பற்றிய சமகால கொரியர்களின் வெளிப்பாடு என்பது தெளிவாகத் தெரிந்தது. இது கொரிய மக்களின் பன்முகக் கலாச்சார மாற்றத்தினால் நடந்தது.

    உண்மையில் 21ஆம் நூற்றாண்டிற்கு முன்பு, ஹாம் குக் கி கிவித்வா சாங்சி யின் ஆசிரியர் கிம் ஸோங்க் – ஹோ ( இயற்கையான கொரிய குடும்பப் பெயர்கள் குழுக்கள்) வின் கூற்றுப்படி சில கொரிய கிளான் உறுப்பினர்கள் மிகவும் உணர்வுப்பூர்வமாகவும், தங்கள் இனம் மற்றும் நிற அடையாளங்களை, குறிப்பாக தங்கள் முன்னோர்கள் வெளிநாட்டு பூர்வீகம் கொண்டவர்களாக இருப்பவர்கள் என்பதை அறிந்து அதை வெளியில் சொல்வதற்கு தயக்கம் காட்டினர். அந்த ஆசிரியர் ஒரு செய்தித்தாள் தொடரில் சில கொரியப் பாடல் மற்றும் பழமொழி வாயிலாக யதார்த்தமாக அவர்களுக்கு வெளிநாட்டுப் பூர்வீகம் இருப்பதை கண்டுபிடித்தபோது சில கசப்பான நினைவுகளைப் பெற வேண்டியதாயிற்று. இதற்காக அவர் மீது நான்கு அவதூறு வழக்குகள் போடப்பட்டன. ஆனாலும் இன்று வெளிநாட்டு இன பூர்வீகங்களுக்கான களங்கம் கற்பிப்பது குறைந்துள்ளதோடு வளர்ந்து வரும் கொரிய இளைஞர்கள் தங்கள் இனம் மற்றும் நிற வேர்களையும், பாரம்பரியங்கள் குறித்தும் விசாரித்து அறிவதில் ஆர்வம் காட்டுகிறார்கள். இந்த புதிய ஆர்வம் , அலெக்ஸ் ஹெய்லியின் வேர்களின் வெளியீட்டிற்குப் பிறகு ஆப்பிரிக்க, அமெரிக்கர்களிடம் ஏற்பட்ட ஆர்வத்தைப் போல் இல்லை.

    2000ற்குப் பிறகு பன்முகக் கலாச்சாரம் பொது மக்களிடம் பிரபலமான தலைப்புச் செய்தியாக ஆவதற்கு முன்னால், கிம் பியூங்க் – மோ, 1960களில் தங்களின் முன்னோர்களான கயா நாட்டின் அரசன் கிம் சுரோவின் மனைவியின் பூர்வீகம் பற்றி அறிய முற்பட்டார். இந்தப் பகுதியில், நான் கிம் பியுங்க் – மோ வின் இனப் பயணம், கொரியர்கள் தங்களின் முன்னோர்களின் வேர்கள் மற்றும் கொரியாவில் நாடுகளுக்கிடையேயான திருமண வரலாறுகளின் தேடலின் ஆர்வம் குறித்தும் விளக்குகிறேன்.

    தொடருவோம்

    Share
  • 2020 ஆண்டில் ஈரோப்பிய விண்சுற்றி, தளவுளவி செவ்வாய்க் கோளுக்குத் தூக்கிச் செல்லப் போகும் ரஷ்ய ராக்கெட்

    Posted on October 14, 2017
     Proton -M Rocket

     

    A Russian Proton-M rocket carrying the European-Russian ExoMars 2016 spacecraft blasts off from the launch pad at Baikonur cosmodrome

    [Prototype Testing]

    சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா

    Image result for erxomars mission 2020 with russia proton-m rocket

    Exo-Mars Mission Path

    செவ்வாய்க் கோள் செல்ல ஈசாவின் திட்டம்

    2020 ஆண்டில் செவ்வாய்க் கோள் செல்லும் ஐரோப்பியத் திட்டம்

    2020 ஜூலை 24 ஆம் தேதி ஈரோப்பிய தளவுளவியைச் சுமந்து கொண்டு ரஷ்ய ராக்கெட் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் என்று ரஷ்ய விண்வெளி ஆய்வு விஞ்ஞான ஆணையகத்தின் தலைவர், டானியல் ரோடியோனாவ் 2017 அக்டோபர் 10 இல் அறிவித்தார்.   சுமந்து செல்லும் ஈரோப் தயாரித்த செவ்வாய்த் தளவுளவியும் [Mars Rover], ரஷ்யாவின் இறங்கு தளப்பீடமும் [Landing Platform] 2020 மே மாதம் ரஷ்யன் ஏவுகணைத் தளத்தில் வந்து இறங்கும் என்று கூறினார்.  அத்திட்டம் செவ்வாய்க் கோளில் செம்மண் அடிப்பைத் [Dust Storm] தவிர்க்க 2018 ஆண்டிலிருந்து 2020 ஆண்டுக்குத் தள்ளி வைக்கப் பட்டது என்றும் குறிப்பிட்டார்.

    Image result for erxomars mission 2020 with russia proton-m rocket

    ரஷ்ய புரோட்டான் -M  ராக்கெட் கட்டமைப்பு

    Orbiter, Lander Module, Rover

     

    ஈசாவின் விண்சுற்றி & தளவுளவி

    செவ்வாய்த் தளவுளவி சுமார் 8 அல்லது 10 மாதங்கள் திட்டமிட்ட பணிகளைப் புரியும்.  முக்கியப் பணி செவ்வாய்த் தளத்தில் 2 மீடர் [7 அடி] துளைகளைத் தோண்டி, உயிரின மூலவிகள் ஒரு காலத்தில் இருந்தனவா என்று சோதிக்கும்.  சோதிக்கும் இரண்டு கருவிகள் : லாரா & ஹாபிட் [LARA & HABIT].  கருவிகளைத் தயார் செய்தவை : ஐரோப்பிய நாடுகள். இத்திட்டம் ஈரோப் விண்வெளி ஆணையகம், ரஷ்யன் ராஸ்கோமாஸ் விண்வெளி ஆணையகம் [ESA – Euroean Space Agency & Russian Roscosmos Space Corporation] ஆகிய இரண்டின் கூட்டு முயற்சியே.  திட்டத்தின் முக்கிய குறிக்கோள் செவ்வாய்ச் சூழ்வெளியில் மீதேன் இருப்பது,  ஒரு காலத்தில் உயிரின மூலவிகள் தோன்றக் காரணமானது என்பதை எடுத்துக் காட்டத்தான்.

    Lander Module -5

    Lander Module -6

     

     

    2017 ஆண்டு ஆரம்பத்தில் முதன்முறை செய்த ஏவுகணைக் கட்டமைப்புப் பயண முயற்சி, செவ்வாய்க் கோள் அருகில் சென்றவுடன் தவறுகள் நேர்ந்து தோல்வியுற்றது.  2017 மார்ச் 14 ஆம் தேதி பைகோனூர் விண்வெளி ஏவுதளத்தி லிருந்து முதலில் ஏவப்பட்ட செவ்வாய் விண்சுற்றியும், தளவுளவி இறக்கியும் [Mars Orbiter & Landing Modules] ஏதோ சாதனப் பழுதாகி, 2017 அக்டோபர் 16 இல் செவ்வாய்க் கோளை அடையாது வழி தவறி விட்டன.  ஈசா தளவுளவி செவ்வாயில் விழுந்து முறிந்ததாக உறுதி செய்தது.

    Image result for erxomars mission 2020 with russia proton-m rocket

    ஈசா செவ்வாய்த் தளவுளவி & இறங்கு தளப்பீடம்

    ++++++++++++++++++++

    olympus-mons-volcano-5

    செவ்வாய்க் கோளில் எழுந்த பூர்வீகப் பூத எரிமலை

    mars-volcano-olympus-mons

    அது போன்ற மிகப்பெரும் எரிமலையை நாங்கள் பூமியில் கண்டதில்லை. இதுவரை உலகளாவிச் சேமித்த 100 விண்கற்கள் [Meteorites] செவ்வாய்க் கோள் விண்கற்களாய்த் தீர்மானிக்கப்பட்டுள்ளன.  விண்வெளித் தீரர் இதுவரைச் செவ்வாய்க் கோளில் தடம் வைக்க விட்டாலும், இந்த 100 விண்கற்கள்  அவற்றின் எறிகற்களாய்க் கருதப்பட்டு ஆராயப்படுகின்றன. இந்த மாதிரி எறிகற்கள் [Meteorites] வடமேற்கு ஆஃபிரிக்கா [North West Africa (NWA) 7635] எனப் பெயரிடப்பட்டு, செவ்வாய்க் கோள் மாதிரிகளாக அறியப் படுகின்றன.  NWA 7635 எறிகற்கள் 1.1 மில்லியன் ஆண்டுகள் அகிலக் கதிர்களால் [Cosmic Rays] தாக்கப்பட்டுச் செவ்வாய்க் கோளிலிருந்து வீழ்ந்தவை என்று ஆராயப்பட்டுள்ளன.  எறிகற்கள் 500 மில்லியன் ஆண்டு கட்கு முற்பட்டவை என்று அறிந்தோம்.  அதாவது செவ்வாய்க் கோளில் 2 பில்லியன் ஆண்டுகளாக தொடர்ந்து எரிமலைப் பாறைக் குழம்பு [Magma] ஒரே தளத்திலிருந்து வெளியேறி வந்திருக்கிறது.  அதுபோல் பூமியில் எங்கும் எரிமலையில் நிகழ்ந்ததில்லை.

    மார்க்  காஃப்ஃபி [Marc Caffee, Professor of Astronomy, Purdue University, USA]

    olympus-mons-volcano-8

    olympus-mons-volcano-10

    செவ்வாய்க் கோளிலிருந்த வீழ்ந்த ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலைக் கற்கள்

    2012 ஆண்டில் அல்ஜீரியா நாட்டில் ஓர் அபூர்வ விண்கல் [Meteorite] கண்டு எடுக்கப்பட்டது.  அந்த எறிகல்தான் செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகள் இருந்திருப்பதை விஞ்ஞானிகளுக்கு உறுதி செய்துள்ளது. அந்த மாதிரி விண்கல் இதுவரைப் பூமியில் காணப்பட வில்லை.  6.9 அவுன்ஸ் எடையுள்ள அந்த எறிகல்லை அகில உலக விஞ்ஞானிகள் ஆராய்ந்த போது, செவ்வாய்க் கோளில் ஒரு பூத எரிமலை 2 பில்லியன் ஆண்டுகளுக்கு மேலாய் தொடர்ந்து பொங்கி எழுந்துள்ள நிகழ்ச்சி தெரிய வருகிறது.

    ஓவ்வோர் ஆண்டும் 1000 மேற்பட்ட எறிகற்கள் அண்டார்க்டிகா, மற்றும் பாலைவனங்களில் செவ்வாய்க் கோளிலிருந்தோ , நிலவிலிருந்தோ விழுகின்றன.  அவற்றில் சாதாரண மாதிரி விண்கற்கள் ஆய்வுக்காக ஸ்மித்சோனியன் ஆய்வுக் கூடத்துக்கும், அபூர்வமானவை நாசா விண்வெளி ஆணையகத்துக்கும் அனுப்பப் படுகின்றன.  அவற்றில் 100 எறிகற்கள் செவ்வாய்க் கோளிலிருந்து விழுந்துள்ளதாக அறியப் பட்டுள்ளன.  அவற்றுக்கு வடமேற்கு ஆஃபிரிக்க [North West Africa NWA 7635] மாதிரிகள் என்று பெயர் இட்டுள்ளார்.  2012 இல் கண்டு பிடிக்கப்பட்ட அந்த 11 எறிகற்கள் ஒரே மாதிரி இரசாயனத் தாதுக்கள் பெற்று செர்கோட்டைட் [Shergottite] என்னும் எரிமலைப் பாறையைச் சேர்ந்தவை என்று அறியப்பட்டது.

    olympus-mons-volcano-4

    ஒலிம்பிக் மான்ஸ் எரிமலை வாய்

    செவ்வாய்க் கோளின் ஈர்ப்பு விசை மிகவும் தணிவானது.  அத்துடன் அதன் மேற்தளத்து மெல்லிய வாயுச் சூழ்வெளியால், கோள் மீது தாக்கி எறியப்படும், துண்டு துணுக்குகள் வெகு எளிதில் வெளியேற ஏதுவாகிறது. மேலும் அந்த எறிகற்கள் நேரடியாகப் பூமிமேல் பாய்ந்து விழுவதில்லை. செவ்வாய்க் கோளின் எறிகற்கள் விண்வெளியில் பல மில்லியன் ஆண்டு களாய்ப் பாதைகளில் சுற்றிவந்து, ஏதோ ஒரு மாற்றத்தில் நம் பூமி மீது பாய்ந்து விழுந்துள்ளன.

    olympus-mons-meteorite

    விஞ்ஞானி மார்க் காஃப்ஃபி காணப்பட்ட 100 எறிகற்களில் 30 மாதிரிகளை பர்தேவ் அரிய ஏகமூலப் பரிமாண ஆய்வுக்கூட  [Purdue Rare Isotope Measurement Laboratory] [PRIME LAB] ஆய்வுக்காகக் கொண்டுவந்தார். அவை செவ்வாய்க் கோளில் நேர்ந்த பூர்வீக நிகழ்ச்சிகளால் எறியப் பட்டவை என்று முடிவில் தீர்மானித்தார்.  அவற்றில் 11 மாதிரிகள் ஒரே சமயத்தில் செவ்வாய்க் கோளிலிருந்து எறியப்பட்டவை என்றும் தெரிந்து கொண்டார். அவற்றில் 10 மாதிரிகள் சுமார் 500 மில்லியன் முன்பு, எரிமலைக் குழம்பு [Magma] வெப்பம் தணிந்து வீழ்ந்தவை என்று ஆய்வில் கண்டுபிடித்தார். அவை செவ்வாய்க் கோளில் காணப்பட்ட எரிமலையின் [NWA 7635] எறிகற்கள் என்றும், எரிமலை 2.4 பில்லியன் ஆண்டுக்கு முற்பட்டவை என்றும் ஆய்வில் கண்டு தெரிவித்தார்.

    அமெரிக்க ஹூஸ்டன் பல்கலைக் கழகத்தின் பூதளவியல் பேராசியர் டாம் லேபன் [ Tom Lapen] 2017 பிப்ரவரி முதல் தேதி விஞ்ஞான முன்னேற்ற வெளியீட்டில்  [Journal Science Advances] செவ்வாய்க் கோளில் எரிமலைப் பொழிவுகளின் வரலாற்றை ஆழ்ந்து ஆராய்ந்து, எவ்விதம் கோளானது தோன்றியது என்று புதிய கருத்துக்களைக் கூறுகிறார்.

    olympus-mons-volcano

    நமது சூரிய மண்டலத்தில் செவ்வாய்க் கோளில் மட்டும்தான் மகத்தான பெருநிறை எரிமலைகள் இருந்திருப்பதாக அறியப்படுகின்றன.  காரணம் செவ்வாய்க் கோளில் பூமிபோல் அடித்தட்டு நகர்ச்சிகள் [Tectonic Activities] இல்லை. ஈர்ப்பு விசை தணிவானதால், செவ்வாய்க் கோளில் எரிமலைக் குழம்பு ஓட்டம் நெடுங்காலம் நீடித்துள்ளது.  எல்லாவற்றிலும் மிகப் பெரியது“ஒலிம்பஸ் மான்ஸ்” [Olympus Mons] என்னும் பூத எரிமலை.  அது ஒரு “கவச எரிமலை”  [Shield Volcano] என்று அழைக்கப்படுகிறது. ஒலிம்பஸ் மான்ஸ் எரிமலை 16 மைல் [25 கி.மீ.] உயரம் உள்ளது. பீட  விட்டம் 374 மைல் [624 கி.மீ.].  அமெரிக்காவின் அரிசோனா மாநிலப் பரப்பளவு உள்ளது.  ஏறக்குறைய பிரான்ஸ் பரப்பளவுக்கு ஒப்பானது.  அது 4 மைல் [6 கி.மீ.] உயரப் பட்டை [Rim] கொண்டது. சிகரத்தில் எரிமலை வாய் [Caldera] 50 மைல் [80 கி.மீ.]  அகண்டது.  பூமியில் ஹாவாயித் தீவுகளில் ஒன்றான “மௌனா லோவா” [Mauna Loa] மலையை விட 100 மடங்கு பெரியது.

    olympus-mons-volcano-9

    Ocean of Mars

    செவ்வாய்க் கோளில் பரந்த வடபுறத்துச் சமவெளிகளில் தென்படும் பெரும் பாறைகள் அவ்விடங்களில் தள்ளப்பட்டு இருப்பதற்குக் காரணம் பயங்கர நீரோட்டச் சரிவுகள் என்பது என் கருத்து.  அதாவது அவ்விடங்களில் பூர்வீகக் கடல் சூழ்ந்து இருந்ததற்கு அவை ஆதாரமாய் நிற்கின்றன என்று நான் கூறுகிறேன்..

    கடலடி நிலச்சரிவுகள் ஒரு வீட்டைப் போல் பேரளவுப் பெரும்பாறைகளைக் கூடப் பல நூறு கி.மீடர் தூரத்துக்கு, ஆழத்திலே கடத்தி நகர்த்தும் என்பது எங்களுக்குத் தெரியும்.

    விண்கற்கள் விழுந்து ஒருவேளை குழி பறித்திருந்தாலும், இத்தனை பரந்த அளவில் பல்லாயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பில் பெரும்பாறைகள் கிடப்பதற்குக் காரணம், கடல் வெள்ளச் சரிவைத் தவிர வேறென்ன  இருக்க முடியும்?  மேலும் பெரிதளவு குழிகளும் [Craters] பாறைகளின் அருகில் காணப் படவில்லை.

    லொரினா மஸ்கார்டெல்லி [பூதள நிபுணர், ஆஸ்டின், டெக்ஸஸ் பல்கலைக் கழகம்]

    Mars Ocean

    நாசாவின் செவ்வாய்க் கோள் விஞ்ஞான ஆய்வகத் தளவுளவி [Mars Science Laboratory Rover] குறிப்பணியாகச் செவ்வாய்த் தளத்தில் பூர்வீக நீரோட்டம் இருந்ததற்கு உறுதியாக உலர்ந்த சிற்றாற்றுக் கூழாங் கற்களைப் படமெடுத்துச் சான்றாகக் காட்டியுள்ளது.  அந்தப் பன்முகக் கலவைப் படிவுகள் [Sedimentary Conglomerates] பூமியில்  உள்ளது போல் மற்றோர் அண்டக்கோளில்  இருப்பதை முதன்முறையாக நாசாவின் தளவுளவி கண்டுபிடித்துள்ளது.

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ் [அண்டக்கோள் விஞ்ஞான மூத்த விஞ்ஞானி]

    செவ்வாய்க் கோளில் உள்ள இவ்விதப் பாறைத் தோற்றங்கள், கடந்த காலத்தில் வெப்பச் சூழ்நிலை இருந்து, தளத்தின் ஈரடிப்புப் பகுதிகள் நெடுந்தூரம் ஓடும் நீரோட்டத் தகுதியை ஏற்படுத்தி யுள்ளன.   இவ்விதம் பூர்வீக ஆற்றுப் படிவுகளைக் கண்டு பிடித்தது, செவ்வாய்க் கோள் தளத்தில் நெடுந்தூரம் ஓடி நீடித்த நீரோட்டம் நிலவி, உயிரின விருத்திக்கு வசதி அளித்திருக்க முடியும் என்று நாம் கருத இடமளிக்கிறது.

    லிண்டா கா [Linda Kah, Associate Professor of Earth & Planetary Science, University of Tennessee, Knoxville]

    Clues for water in Mars

    1980 ஆண்டுகளில் வைக்கிங் விண்வெளிச் சுற்றி [NASA’ S Viking Orbiter] செவ்வாய்க் கோளை ஆய்வு செய்யத் துவங்கிக் கடந்த 20 ஆண்டுகளாக விஞ்ஞானிகளின் சூடான தர்க்கத்துக்குள் விவாதிக்கப் படுவது இந்தப் பாறைகள் கண்டுபிடிப்புதான் : அதாவது செவ்வாய்க் கோளின் துருவப் பகுதிகளில் பூர்வீகக் கடற்கரைகள் தென்பட்டன ! முதலில் சரியான விளக்கம் தரப்படா விடினும், தற்போது ஆங்கே பூர்வீகக் கடல் ஒன்று [பொரியாலிஸ் கடல் — Oceanus Borealis] இருந்திருக்க வேண்டும் என்று ஓர் புது விளக்கம் அளிக்கப் படுகிறது !

    தற்போதைய விண்ணுளவித் தகவல் படங்களில், வட பகுதிச் சமவெளித் தளங்களில் பெரும் பாறைகள் பல ஆயிரம் சதுரக் கிலோ மீடர் பரப்பளவில் காணப் படுகின்றன. இவற்றைப் படமெடுத்து அனுப்பிய நாசாவின் விண்ணுளவி : செவ்வாய்க் கோள் விண்ணுளவுச் சுற்றி [Mars Reconnaissance Orbiter]. இது ஒன்றும் புதிய கண்டு பிடிப்பில்லை. பழைய கண்டு பிடிப்புக்கு அளிக்கப் படும் ஒரு புது விளக்கமே இந்த கடல் இருப்புக் கோட்பாடு.

    Water flow in Mars -1

    சிற்றாறு நீரோட்டத்தின் வேகம் சுமாராக மனித நடை அளவே என்பதுதான் எங்களுடைய ஊகிப்பு.   இவற்றை மீளியக்க முறையில் செய்து காட்ட முடியாது.   ஒரு கண்ணோட்ட ஒப்பளவில்தான் நாங்கள் குறைந்த அளவாகச் சொல்ல முடியும்.

    பேராசிரியர் சஞ்சீவ் குப்தா [லண்டன் இம்பீரியல் கல்லூரி, இங்கிலாந்து]

    நெடுந்தூர, நீண்டகால நீரோட்டத் தேய்வு இருந்தால்தான் அத்ததைய உருண்டைக் கூழாங்கற்கள்  உருவாக ஏதுவாகும்.  அதாவது ஏற்புடைய காலநிலைத் தகுதி முறைகளே திரவ நீரோட்டத்தைச் செவ்வாய்க் கோள் தளத்தில் நீடித்திருக்க முடியும்.  பன்முகக் கலவை நீரோட்டப் படிவு பூமியில் பொதுவாக இருப்பது.   இப்போது நாங்கள் அதைச் செவ்வாய்க் கோளிலும் காண்கிறோம்.  அவற்றின்   அறிகுறிகளை வைத்து, பூதளவியல் நிபுணர்கள் நீரோட்டத்தின் கொள்ளளவு, நீரின் ஆழம், ஓடும் வேகத் தையும் கணித்துக் கொள்கிறார்.   தற்போது உறுதிப் படுத்தப் பட்ட சிற்றாறின் நீரோட்ட வேகம் குறைந்த அளவு : [விநாடிக்கு ஒரு மீடர்] [விநாடிக்கு 3 அடி தூரம்], [நீரோட்டம் முழங்கால் ஆழம் அல்லது இடுப்பளவு உயரம்.]

    டாக்டர் ரிபெக்கா வில்லியம்ஸ்.

    Pebbles in Mars

    நீரோட்டக் கூழாங்கற்கள் கண்டுபிடிப்பு  செவ்வாய்க் கோள் பூர்வீக காலத்தில் நீர்வளமாய் இருந்ததை நிரூபிக்கிறது

    ஜூன் மாதம் 4 ஆம் தேதி விஞ்ஞான அறிவிப்பில் நாசாவின் செவ்வாய்த் தளவுளவி [MSL Curiosity Rover] [MSL : Mars Science Laboratory]  150 கி.மீ. அகண்ட  (90 மைல்) கேல் பள்ளத்தாக்கில் [Gale Crater] ஓடி உலர்ந்த சிற்றாறும்,  அதனில் உருண்டையான கூழாங்கற்கள் பற்கலவைப் படிவுகளில் [Rounded Pebbles within Sedimentary Conglomerate] இருந்ததை முதன்முறை காட்டிச் செவ்வாய்க் கோள் தளம் பூர்வ காலத்தில் நீர் வளமாய் இருந்திருப்பதை நிரூபிக்கிறது.  கேல் பள்ளத் தாக்கு 2012 செப்டம்பரில் கண்டுபிடிக்கப் பட்டது. உலர்ந்த இந்தப் புழுதிப் படிவில் கிடக்கும் கற்களின் அளவு, வடிவு, படிமப் பதிவுகளைப் பார்த்தால் கால்ஃப் [Golf] பந்தளவில் சப்பையாக உருண்டு, திரண்டு நீரோட்டம் உருவாக்கியது போல் தெரிகின்றன.   கற்களின் நெளிவு, சுழிவுகள் நீரோட்டம் பன்முறை மோதிச் செதுக்கிய வடிவில் உருண்டது போல் காட்சி தருகின்றன.   அண்டக்கோள் விஞ்ஞான ஆய்வகத்தின் மூத்த விஞ்ஞானி ஐலீன் இங்ஸ்ட் [Aileen Yingst]  தற்போது கண்டுள்ள கூழாங்கற்கள் முன்பு கண்டவற்றை விட உருட்டி இருந்ததாக அறிவித்தார்.   இந்த வியப்பான விளைவுத் தகவல் தளவுளவி 275 மீடர் [900 அடி தூரம்] பயணம் செய்து, மூன்று படிமப் பாறைகளைச் சோதித்ததின் பலாபலனே.

    Martian water

    செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் படும் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுகிறது.   தூசிப் புயலை மின்னியல் தாக்கும் போது வெளிவரும் மின்னிகள் [Dischargesச்] கரியமில வாயுவையும் [CO2] நீரையும் அயனிகளாக்கி அவற்றின் விளைவாக செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு உற்பத்தியாகிறது.

    ஆர்டுரோ ரொபிலிடோ மார்டின்ஸ் [Arturo Robledo-Martinez, Mexican Geo-physical Team]

    “செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளைக் கொண்டுள்ளது.”

    டக்ளஸ் மெக்குயிஸ்டியான் (Douglas McCuistion, Director of Mars Exploration Program NASA Headquarters)

    “நமக்குத் தெரியாமல் ஒளிந்திருக்கும் வானியல் புதிர்களை ஊடுருவிக் கண்டுபிடிக்கச் செவ்வாய்க் கோள்தான் விண்வெளி விஞ்ஞானிகளுக்கு உதவி புரியக் கூடியது”.

    ஜொஹானஸ் கெப்ளர் (German Astronomer Johannes Kepler) (1571-1630)

    Water flow in Mars -2

    தளவூர்தி இறங்கும் கேல் ஆழ்பள்ளத்தின் அடுக்குத் தளப் பாறைகள் (Gale Crater) சூரிய மண்டலத்திலே மிக அடர்த்தியாய்த் திரண்ட படிமானப் பாறைகள்  (Sediment Rocks).   அந்த பாறை அடுக்குகள் 4 பில்லியன் ஆண்டு களுக்கு முன் தோன்றிய பழைய மண் மாதிரிகளைக் கொண்டவையாய் இருக்கும்.     எப்போது, எத்தனை காலம், செவ்வாய்க் கோளில் உயிரினம் வாழ்ந்திருக்கக் கூடும் என்ற வரலாற்றைக் கூறலாம்.

    ஜாய் கிரிஸ்ப் (Mars Science Lab Dy Project Scientist NASA)

    (2012  ஆகஸ்டு முதல் வாரத்தில் )  செவ்வாய்த் தளவுளவி இறங்கப்ப போகும் மையக் கேல் ஆழ்பள்ளப் பீடம்  (Mound at the center of Gale Crater) MFF  உருவாக்கக் காட்சியை   (Medusae Fossae Formation  Exposure) ஒத்தது.   (MFF on Mars is an intensely eroded deposit ..)  அமெரிக்க கிராண்ட் கெனியன் (Grand Canyon) பீடத்தொடர் போன்றவை.   முதலில் தளவாகன உளவி அவை எப்படி தோன்றின என்று ஆராய்வதற்கு விபரங்கள் தரும்.   இதுவரை எந்த விண்ணுளவியும்  MFF உதிரிப் பொருள்களை ஆராய வில்லை.  அவை செவ்வாய்க் கோளின் மண் மாதிரிகளை ஆராய்ந்து செவ்வாய்க் கோளின் தோற்றத்தை விளக்கும்.

    ஜேம்ஸ் ஸிம்பல்மன் (பூதளவியல் நிபுணர்  National Air & Space Museum)

    http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=BudlaGh1A0o  

    [Mars Science Laboratory (Curiosity Rover) Mission Animation]

    “நீரைத் தேடிச் செல்” என்பது கடந்த பத்தாண்டுகளாய் சொல்லப்படும் நாசாவின் செவ்வாய் மந்திரம்.  செவ்வாய்க் கோளின் எதிர்காலத் தேடல் திட்டங்களுக்கு ஃபீனிக்ஸ் பயணம் முதற்படித் தடவைப்பு. “ஃபீனிக்ஸ் திட்டக் குறிப்பணியில் தளவுளவி செவ்வாய்க் கோளின் வடதுருவப் பனித் தளத்தில் புதியதோர் பகுதியை ஆராயத் தேர்தெடுத்து இறங்கியுள்ளது.  உண்மையாக நாங்கள் கண்டறியப் போவது அந்த பனித்தள நீர் உருகிய சமயம், மண்ணில் கலந்து அந்தக் கலவையில் உயிர் ஜந்துகள் வளரத் தகுதி இருக்கிறதா என்று கண்டறிவது.  ஏனெனில் உயிரின விருத்திக்குத் தேவை திரவ நீர், நமது உடம்பில் உள்ள புரோடீன் அமினோ அமிலம் போன்ற சிக்கலான கார்பன் அடிப்படை ஆர்கானிக் மூலக்கூறுகளே,”

    பீடர் ஸ்மித், ஃபீனிக்ஸ் பிரதம ஆய்வாளர், அரிஸோனா பல்கலைக் கழகம்.

    unnamed

    “ரோவர் ஊர்திகளின் ஆயுட் காலம் நீடிப்பாகி ஈராண்டுகளாய்ச் செவ்வாய்த் தளத்தை உளவி வருகின்றன. ஒவ்வொரு நாளாய் அவை பூமியிலிருந்து தூண்டப் பட்டு, செப்பணிடப் பட்டு மகத்தான பணிகளைப் புரிந்து வருகின்றன!”

    ஸ்டாவன் ஸ்குயர்ஸ், செவ்வாய்க் குறிப்பணி பிரதம ஆய்வாளி, கார்நெல் பல்கலைக் கழகம்.

    “ஆர்க்டிக் கடலில் உள்ள ஸ்வால்பார்டு தீவில் [Svalbard Island] காணப்படும் நீலப் பனிக்கட்டியின் இயற்கைத் துளைகளில் ‘நுணுக்க உயிரியல் ஊறணி ‘ [Microbiological Oasis] ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அசாத்தியமான அந்த உச்சக் குளிர்ப் பகுதிகளில் அவ்வித உயிரியல் ஆதாரங்கள் கிடத்திருப்பதை நாங்கள் எதிர்பார்க்க வில்லை. 1996 ஆம் ஆண்டு அண்டார்க்டிக்கில் கண்டெடுத்த செவ்வாய்க் கோளின் விண்கல்லைப் [Meteorite] போன்று, அந்த ஒரே தீவின் எரிமலையில் தோண்டி எடுத்த காந்த உலோகப் பாறைப் பளிங்கு [Magnetite Crystals] மாதிரிகள் உள்ளன.”

    ஹான்ஸ் அமுட்ஸன், ஆய்வாள அதிபதி, ஆஸ்லோ பல்கலைக் கழகம்

    “பாறை அடுக்குகள் செவ்வாய்க் கோளின் வரலாற்றைக் கூறும் பட்டைக் குறிப்பதிப்புகள் [Barcodes]. புதிதாய்க் காணும் ஒவ்வோர் அடுக்கும் மற்றுமோர் புதிரை விடுவிக்கும் பிணைப்புத் துண்டாக உள்ளது.

    ‘ ஜான் கிராட்ஸிங்கர் [John Grotzinger, Science Team Member நாசா M.I.T.]

    செவ்வாய்க் கோளில் இம்மி உயிர்கள் வாழ மீதேன் வாயு இருக்கிறதா ? 

    கடந்த பத்தாண்டு செய்த செவ்வாய்க் கோள் தள ஆராய்ச்சிகள் மூலம் மிகச் சிறு கால வேளையில் மீதேன் முகில் கோடை காலத்தில் செவ்வாய்ச் சூழ்வெளியில் தோன்றுகிறது என்பது தெரிய வருகிறது.    விந்தையான இந்த மீதேன் நிகழ்ச்சி வானியல் விஞ்ஞானிகளை பெரு வியப்பில் ஆழ்த்தி உள்ளது.    இந்தப் புதிர் செவ்வாய்க் கோளின் எந்த வித சூழ்வெளி மாடலுக்கும் ஒத்து வரவில்லை.   முதலாண்டு நோக்கிச் செவ்வாய்க் கோள் சூழ்நிலை ஆய்வு செய்த விளைவுகளில் ஏற்பட்ட தர்க்க வினாக்களுக்கு நாசாவின் கியூரியாசிட்டி தளவுளவி பதில் அளிக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.   உற்பத்தியாகும் மீதேன் வாயு சில நாட்கள் அல்லது வாரங்கள் நீடிக்க வேண்டும்.   2010 டிசம்பர் வெளியீட்டில் நாசா அமெஸ் ஆய்வு மைய விஞ்ஞானி கெவின் ஸாநெல் [Kevin Zajnle] செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு இருப்பது பற்றி மிகவும் ஐயப்பாடு தெரிவித்தார். ஆனால் அதே சமயத்தில் எதிர்பாரத விதமாக மெக்ஸிகோ ஆய்வாளர்கள் வேறோர் நியதியுடன் செவ்வாய்க் கோளில் மீதேன் உற்பத்திக்கு விளக்கம் அளித்துள்ளார்.

    Methane Detection in Mars

    அதாவது செந்நிறக் கோளில் நிகழும் “தூசிப் புயல்களே ” [Dust Storms & Dust Devilsச்] மீதேன் உருவாகக் காரணமாகி வருபவை.   மெக்ஸிகோ ஆய்வுக் குழுவினர் மீதேன் உண்டாவதற்கு ஒரு புது முறையை வகுத்துக் காட்டினர்.   செவ்வாய்க் கோளில் உள்ள பனிப்பாறைகளின் மேற் தளங்களில் மின்னியல் தாக்கலால் [Electrical Discharges over Mars Iced Surfaces] மீதேன்  வாயு தோன்றுவதாகக் கூறினர்.   ஆய்வுக் கூடத்தில் நிரூபித்துக் காட்ட பனிக்கட்டி மீது மின்னியல் தாக்கல் செய்து, போலி இயக்கத்தைப் [Laboratory Simulation] புரிந்த போது மீதேன் மூலக்கூறுகள் [1.41 x 1016 molecule of Methane per joule] தோன்றின.  40 ஆண்டுகளாக  செவ்வாய்க் கோளில் மீதேன் சிறிதளவு இருப்பது பற்றிப் பேசப் பட்ட வருகிறது.  மீதேன் இருப்பு உயிரின ஜீவிகள் வாழ்வுக்கு உத்திரவாதம் அளிக்கும்.   நமது பூமியில் உள்ள உயிரின ஜீவிகளே பெரும்பான்மை மீதேன் வாயு உண்டாகக் காரணமாகின்றன. நாசாவின் செவ்வாய்த் தளவுளவி “கியூரியாசிட்டி” செவ்வாய்க் கோள் எப்படித் தன் வாயுச் சூழ்வெளி   இழந்தது என்பதை அறியத் திட்டமிடப் பட்டுள்ளது.   தற்போதைய செவ்வாய்க் கோள் சூழ்வெளி அழுத்தம் பூமியை விட [100 இல் 1 ஆக] நலிவாக உள்ளது.

    Kasei Valles Maps of Mars

    நாசாவின் செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி தேர்ந்தெடுப்பு

    2014 ஆம் ஆண்டில் செவ்வாய்க் கோளில் சூழ்வெளிக் காலநிலை வரலாற்றை விளக்கமாகப் பதிவு செய்ய இறக்கப் போகும் “மேவன்” காலநிலை அறிவிப்பு விண்ணுளவியை (Mars Climate Mission -2) ஏவுதற்கு அனுமதி கிடைத்து விட்டது என்று நாசா முதன்முறையாக அறிவித்தது !  அந்த செவ்வாய் விண்ணுளவி எட்டுக் கருவிகளை ஏற்றிக் கொண்டு தணிந்த உயரத்தில் (90 – 3870) மைல் நீள்வட்ட வீதியில் சுற்றி வந்து சூழ்வெளி வாயு மண்டலத்தை ஆராயும்.  மூன்று ஆண்டுகள் விண்ணுளவி புரியும் அந்தக் குறிப்பணித் திட்டத்துக்கு ஆகும் நிதிச் செலவு 485 மில்லியன் டாலர் (2009 நாணய மதிப்பு) என்று மதிப்பீடு செய்யப் பட்டுள்ளது.  நாசாவின் மிதச் செலவுத் திட்டங்களில் ஒன்றாகக் கருதப் படுகிறது “மேவன்” (Maven – Mars Atmosphere & Volatile Environment Probe) விண்வெளி ஆய்வுத் திட்டம்.  1998 ஆம் ஆண்டில் 327 மில்லியன் டாலர் செலவில் முதன்முதல் காலநிலை உளவ ஏவப்பட்ட விண்ணுளவி -1 (Mars Climate Orbiter -1) செவ்வாய்க் கோளை நெருங்கினாலும், மனிதத் தவறால் (மெட்டிரிக் அளவியலைப் பயன்படுத்தாது பிரிட்டீஷ் அளவியலைப் புகுத்தியதால்) உந்துசக்தி மிகையாகிச் செவ்வாய்க் கோளில் முறிந்து விழுந்து விட்டது !

    fig-1b-maven-spacecraft-instruments

    செவ்வாய்க் கோளின் வாயுச் சூழ்வெளி இழப்பு தொடர்ந்து வினா எழுப்பும் ஒரு புதிராக இருந்து வருகிறது. மேவன் திட்டம் அப்புதிரை விடுவிக்க உதவி புரியும். மேவன் திட்டப்பணி முதன்முதல் செவ்வாய்க் கோளின் தோற்ற விருத்தியைப் பற்றிய விஞ்ஞானக் கேள்விகளுக்குப் பதில் கூறும் நேரடி உளவுக் கருவிகளின் பதிவுகளை வெளிப்படுத்தும்,  இப்போது விஞ்ஞானிகள் காணும் செவ்வாய்க் கோள் பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய செவ்வாய்க் கோளைப் போல் இருக்கவில்லை !  ஆரம்பத்தில் செவ்வாய்க் கோள் அடர்ந்த வாயுச் சூழ்வெளியைக் கொண்டிருந்த தென்றும், அந்த பாதுக்காப்புக் குடைத் தளத்திலே நீரைத் திரவமாக வைத்திருந்த தென்றும் ஊகிக்கப் படுகிறது.  திடீரென ஒரு திரிபு ஏற்பட்டுக் காலநிலை மாறுபட்டுப் பெரும்பான் மையான வாயு மண்டலம் மறைந்து போய் நீர் வளம் எல்லாம் பாலைவனம் போல் வெறுமையானது ! பல அண்டக் கோள் விஞ்ஞானிகள் செவ்வாய்க் கோளின் பூர்வீக காந்தக் களம் மறைந்து போனது மிக முக்கிய மாறுதல் என்று நம்புகிறார்கள்.  மேவன் விண்ணுளவி பரிதி உமிழ்ந்திடும் மின்னேறிய துகள்களின் (Solar Charged Particles) பாதிப்புச் செவ்வாய்க் கோளின் தற்போதைய வாயு மண்டலக் கசிவுக்குக் காரணமாக இருக்குமா என்று ஆய்ந்து கண்டுபிடிக்கும்.  செவ்வாய்க் கோளின் சக்தி வாய்ந்த காந்தத் தள இழப்பால் பரிதியின் தீவிரப் புயல் (Solar Wind) வாயு மண்டலத்தைத் தாக்கி விடுவிப்பு செய்திருக்கலாம் என்று  ஊகிக்கிறார்கள் !

    fig-1c-climate-orbiter-equipment

    மேவன் விண்ணுளவியின் திட்டப்பணிகள் என்ன ?

    2013 ஆம் ஆண்டில் பயணம் செய்யப் போகும் மேவன் விண்ணுளவி மூன்றாண்டுகள் செவ்வாய்க் கோளைச் சுற்றி வரும்.  மேவன் விண்ணுளவி செவ்வாயின் வாயு மண்டலம், காலநிலை வரலாறு,  உயிரின வளர்ச்சிக்கு ஏதுவான அமைப்பு போன்ற விஞ்ஞான விளக்கங்களைத் தெளிவாகக் கண்டறியும்.  மேலும்

    1.  செவ்வாய்ச் சூழ்வெளியிலிருந்து விண்வெளிக்கு வெளியேறிய “ஆவிக் கிளம்பிகள்” (Volatiles) இழப்பால் நேர்ந்த கால நெடுப் பாதிப்புகள்.  அது செவ்வாயின் சூழ்வெளி வரலாற் றையும், காலநிலை, திரவ நீர், கோளின் குடிவசிப்புத் தன்மை (Planetary Habitability) ஆகியவற்றை விளக்கமாக அறிவது.

    2. செவ்வாய்க் கோளின் மேல் மண்டல வாயுச் சூழ்வெளியின் (Upper Atmosphere) தற்போதைய நிலமை, மின்னியல் கோளம் (Ionosphere), மற்றும் பரிதிப் புயலுடன் அவற்றின் இயக்கப்பாட்டு மோதல் விளைவு களை (Interactions with Solar Wind) உளவிக் காண்பது.

    3. விண்வெளிக்குக் கசியும் அயனிகள் (Ions) மற்றும் முடக்குகள் (Neutrals) ஆகியவை தப்பிச் செல்வதைக் கண்டறிவது. 4. கால நெடுவே இழப்பு வரலாற்றைச் சொல்லும் வாயுக்களின் நிலையான ஏகமூலங்களின் வீதத்தைக் (Ratio of Stable Isotopes) காண்பது.

    மேவன் விண்ணுளவியில் அமைப்பாகும் தொடர்புத் தகுதிகள்

    செவ்வாய்க் கோளை அண்டிய மேவன் விண்ணுளவி தனது உந்துக் கணைகளை (Thruster Boosters) இயக்கிச் செவ்வாயின் ஈர்ப்பு மண்டலத்தில் சிக்கி முதலில் நீள்வட்ட வீதியில் சுற்ற ஆரம்பிக்கும்.  அவ்விதம் சுற்றும் போது நீள்வட்ட ஆரங்கள் 90 மைல் (குட்டை ஆரம்) 3870 மைல் (நெட்டை ஆரம்) அளவில் கட்டுபாடாகி ஆய்வுத் திட்டங் களை நிகழ்த்த ஆரம்பிக்கும். (வட்ட வீதியில் நெட்டை ஆரமும், குட்டை ஆரமும் சமமானவை).  அப்போது மேவன் விண்ணுளவி செவ்வாய்த் தளத்துக்கு 80 மைல் உயரத்தில் தணிந்து சுற்றி மேற்தள வாய் மாதிரிகளைச் சோதிக்கும்.  அத்துடன் செவ்வாய்த் தளத்தில் ஊர்ந்து செல்லும் தள வாகங்களுடன் தொடர்பு கொள்ளவும் வசதி செய்யப் படும். நாசா முன்னேவிய இரண்டு விண்ணுளவிகள் (Mars Reconnaissance Orbiter & Mars Odyssey Spacecraft) தொடர்ந்து சுற்றி வருகின்றன !  அவை இரண்டும் இன்னும் தொடர்ந்து பணி செய்து செந்நிறக் கோளின் “தளவியல் இரசாயனத்தை” (Geochemistry) ஆராய்ந்து கொண்டு வருகின்றன.  தளங்களில் ஊர்ந்து செல்லும் வயதான இரண்டு “தளவுளவிகள்” மற்றும் சமீபத்தில் இறங்கிய ·பீனிக்ஸ் தளவுளவி (Land Rovers : Spirit & Opportunity, Later Phoenix Lander) ஆக மூன்று தளச் சாதனங்கள் பணிபுரிந்து வருகின்றன.

    Flood waters on Mars -1

    புதியதாக “செவ்வாய் விஞ்ஞானத் தள ஆய்வி” (Mars Science Laboratory MSL) எனப்படும் அடுத்தொரு தளவுளவி இதுவரை இல்லாத பத்து மடங்கு நுட்பக் கருவிகளுடன் உலவிடப் போகிறது !  அவற்றில் செவ்வாய்க் கோளில் நுண்ணுயிர் ஜந்துகள் வாழத் தகுதியுள்ள  சூழ்வெளி நிலை இன்னும் இருக்கிறதா வென்று ஆழமாய் உளவும் கருவிகளும் அமைக்கப் படும்.  அத்துடன் மேவன் விண்ணுளவி அடுத்து ஈசா அனுப்பப் போகும் “எக்ஸோ-மார்ஸ் வாகனத்துடன்” (ExoMars Rover) தொடர்பு கொள்ளும் வசதியும் பெற்றிருக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள கருவிகள்

    மேவன் செவ்வாய்க் கோளின் மேற்தள வாயுச் சூழ்நிலை பற்றியும் பரிதிம் வீசும் புயல் அதனைத் தாக்கும் பாதிப்புகளையும் ஆராயும்.  அதன் கருவிகள் செவ்வாயின் வாயு மண்டலத்தின் வாயுக்கள், பரிதியின் புயல் வீச்சு, அயனிக் கோளம் (Ionosphere) ஆகியவற்றை அளந்தறிவிக்கும்.

    மேவன் விண்ணுளவியில் உள்ள முக்கிய கருவிகள் :

    1. (Particles & Field Package PAF) – துகள்கள், காந்தத் தளம் அளப்பது.

    2. (Solar Wind Electron Analyser SWEA) – பரிதியின் புயல் அயனிக் கோளம் எலெக்டிரான்களை அளப்பது.

    Kasei Valles of Mars

    3. (Solar Wind Ion Analyser SWIA) – பரிதியின் புயல், காந்தத் தளக் கவசம், அயான்களின் திரட்சி, வேகத்தை அளப்பது.

    4. (Suprathermal & Thermal Ion Composition STATIC) – தப்பிச் செல்லும் மித சக்தி வெப்ப சக்தி அயான்களை அளப்பது.

    5. (Solar Energetic Particle SEP) – பரிதியின் தீவிர சக்தித் துகள்கள் செவ்வாய்க் கோள் மேற்தள வாயு மண்டலத்தைத் தாக்கி விளையும் பாதிப்புக்களை அளப்பது.

    6. (Lagmuir Probe & Waves LPW) – அயனிக் கோளத்தின் பண்பாட்டைத் தீர்மானிக்கும்.  தப்பிச் செல்லும் அயனிகளின் அலைச் சூடாக்கம், வாயு மண்டலத்தில் பரிதியின் தீவிர புறவூதா திணிப்பு.  (Solar EUV Input to Atmosphere)

    7. (Magetometer MAG) – அகிலாண்டப் பரிதிப் புயல் & அயனிக் கோள காந்தத் தளத்தை அளப்பது.

    8. (Remote Sensing Package RS) – தொலை உணர்வுக் கருவித் தொகுப்பு.

    9. (Imaging Ultraviolet Spectrometer IUVS) – மேற்தள & அயனிக் கோள பொதுப் பண்பாடு அளப்பது.

    10. (Natural Gas & Ion Mass Spectrometer NGIMS) – அயனிகள், வெப்ப முடக்கிகள் ஆகியற்றின் ஏகமூங்கள் மற்றும் அவற்றின் உள்ளடக்கத் தனிமங்களை அளப்பது. (Measures the Composition & Isotopes of Thermal Neutrals & Ions).

    fig-1g-climate-orbiter-details

    முதன்முதல் செவ்வாய்க் கோளின் காலநிலை அறிவிப்பு !

    ஃபீனிக்ஸ் தளவுளவியில் அமைக்கப்பட்டுள்ள கனடாவின் காலநிலை அறிவிக்கும் சாதனம் தனது முதல் அறிவிப்பை வெளியிட்டது.  தளவுளவி தடம்வைத்த ஒரு மணி நேரத்திற்குள் அந்த உபகரணங்கள் இயங்க பூமியின் விண்கப்பல் ஆட்சி அரங்கி லிருந்து ஆணை அனுப்பப்பட்டது.  தற்போது தொடர்ந்து காலநிலை அறிவிப்புகள் பதிவாகி வருகின்றன.  முதல் 18 மணி நேரக் காலத்தின் அறிவிப்பில் :

    . . . வானம் வெறுமையாக இருந்தது.  அடுத்துக் காற்று நீர்மை (Humidity) சோதிக்கபடும்.

    . . . குறைந்த நிலை உஷ்ணம் : -80 டிகிரி செல்ஸியஸ் (-112 F)

    . . . பகல் தாண்டி உச்ச நிலை உஷ்ணம் : -30 டிகிரி செல்ஸியஸ் (-22 F)

    . . . சராசரி வாயு அழுத்தம் 8.55 மில்லிபார். (பூமியின் கடற்தள அழுத்தத்தில் 100 இல் 1 பாகம்)

    . . . காற்று வேகம் : 13 mph (20 km/h) வட மேற்குத் திசைநோக்கி.

    fig-2-mars-earth-atmospheres

    ஃபீனிக்ஸ் செவ்வாய்ப் பயணம் ஒரு மீள் எழுச்சித் திட்டம் !

    செவ்வாய்க் கோளில் விண்ணுளவிகளை நுணுக்கமாக இறக்குவது என்பது இமாலயச் சிரமங்கள் அளிப்பது !  இதற்கு முன்பு அனுப்பிய பல செவ்வாய் விண்ணுளவிகள் பயணத்தின் இடையிலே பழுதாகித் திட்டங்கள் நாசாவுக்கு பெருத்த நிதி விரையத்தை ஏற்படுத்தின ! 1960 இல் ரஷ்யா முதன்முதல் துவக்கி மற்றும் நாசா தொடர்ந்த செவ்வாய்க் கோள் பயணங்கள் 50% தோல்வி முறிவில் (50% Failure Rate) பாதிக்கப் பட்டிருக்கின்றன.  துல்லியமாகச் சொன்னால் 15 செவ்வாய்க் கோள் பயணத் திட்டங்களில் 5 திட்டங்களே இதுவரை வெற்றி அடைந்துள்ளன !  தற்போதைய வெற்றிகரமான ஃபீனிக்ஸ் தளவுளவித் திட்டம் இதற்கு முன்பு ஏற்பட்ட இரண்டு தோல்விகளி லிருந்து மீண்டெழுந்து புத்துயிர் பெற்ற பழைய திட்டமே !1999 ஆம் ஆண்டில் அடியெடுத்த “செவ்வாய்க் காலநிலை விண்ணுளவி” (Mars Climate Orbiter) பொறியியக்குநர் ஆங்கில/மெட்ரிக் அளவைகளில் குழப்பமாகி விண்கப்பல் நகர்ச்சி ஏற்பாட்டுப் பிழையால் (Spaceship Navigational Error due to British-Metric Units Mix up) செவ்வாய்க் கோளில் மோதி முறிந்து போனது ! அடுத்துச் சில மாதங்களில் அனுப்பிய “செவ்வாய்த் துருவ உளவி” (Mars Polar Lander) செவ்வாய்க் கோளின் தென் துருவத்தில் காணாமல் போனது !  அடுத்த அனுப்பத் தயாராக இருந்த “செவ்வாய் 2001 தளவுளவித்” (Mars Surveyor 2001 Lander) திட்டம் முன்பு ஏற்பட்ட முறிவுகளால் கைவிடப் பட்டது !  இப்போது செவ்வாய்க் கோளில் தடம் வைத்துள்ள ·பீனிக்ஸ் தளவுளவி முன்பு இழந்து போன செவ்வாய்த் துருவ உளவியை ஒத்த இரட்டை விண்ணுளவியின் சாதனங் களையும், நிறுத்தப்பட்ட செவ்வாய் 2001 தளவுளவிச் சாதனங்களையும் பயன்படுத்தி இப்போது இயங்குகிறது.  அவ்விதம் முந்தி முடக்கிய சாதனங்களை மீண்டும் அமைத்து உண்டாக்கப் பட்டத்தால் “·பீனிக்ஸ்” (Phoenix) என்று இத்திட்டம் பெயரிடப்பட்டது !

    (தொடரும்)Mars Exploration

    ++++++++++++++++++++++++++

    தகவல்:

    Picture Credits: ESA, NASA, JPL; National Geographic; Time Magazine, Discovery, Scientific American & Astronomy Magazines. Wikipedia & Earth Science & the Environmental Book.

    1. Our Universe – National Geographic Picture Atlas By: Roy A. Gallant (1986)

    2. 50 Greatest Mysteries of the Universe – Why Did Mars Dry out ? (Aug 21, 2007)

    3. Astronomy Facts File Dictionary (1986)

    4. The Practical Astronomer By Brian Jones & Stephen Edberg (1990)

    5. Sky & Telescope – Why Did Venus Lose Water ? [April 2008]

    6. Cosmos By Carl Sagan (1980)

    7. Dictionary of Science – Webster’s New world [1998]

    8. The Universe Story By : Brian Swimme & Thomas Berry (1992)

    9. Atlas of the Skies – An Astronomy Reference Book (2005)

    10 Hyperspace  By : Michio kaku (1994)

    11 Universe Sixth Edition -Exploring the Early Universe By: Roger Freedman & William Kaufmann III (2002) 12 Physics for the Rest of Us By : Roger Jones (1992)

    13 National Geographic – Frontiers of Scince – The Family of the Sun (1982)

    14 National Geographic – Living with a Stormy Star – The Sun (July 2004)

    15 The World Book of Atlas : Anatomy of Earth & Atmosphere (1984)

    16 Earth Science & Environment By : Dr. Graham Thompson & Dr. Jonathan Turk (1993)

    17 The Geographical Atlas of the World, University of London (1993).

    18 Hutchinson Encyclopedia of Earth Edited By : Peter Smith (1985)

    19 A Pocket Guide to the Stars & Planets By: Duncan John (2006)

    20 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html(Mars Probe Spacecrafts) 20 (A) http://www.thinnai.com/?module=displaystory&story_id=40803131&format=html (செவ்வாய்க் கோளில் நீர் வரண்டது எப்போது ?)

    21 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602032&format=html(செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    22 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40602101&format=html(செவ்வாய்க் கோள் விண்ணுளவித் தேடல்கள்-1)

    23 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40703221&format=html(செவ்வாய்த் துருவப் பனித் தொப்பிகள்)

    24 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40708091&format=html(செவ்வாய்க் கோளுக்கு ஃபீனிக்ஸ் தளவுளவி)

    25 http://www.thinnai.com/?module=displaystory&story_id=40903261&format=html(செவ்வாய்க் கோளில் மீதேன் வாயு, பெர்குலரேட் உப்பு கண்டுபிடிப்பு)

    26 NASA’s Reconnaissance Orbiter [May 15, 2008]

    27 BBC News : NASA Selects Mars Climate Mission -(2) (September 16, 2008)

    28 Mars Climate Orbiter -(1) Update By Wikipedia (March 22, 2009)

    29 Space Flight Now : Mars Story Spawns Kudos & Controversy By Craig Covault (Mar 24, 2009)

    30 BBC News : Q & A Liquid Water on Mars (Mar 22, 2009)

    31 BBC News : New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    32 BBC News : Briny Pools May Exist on Mars By Paul Rincon (March 24, 2009)

    33 The Mars Climate Orbiter Mission (Internet Sources)

    34 BBC News – NASA Selects Mars Climate Mission (Sep 16, 2008)

    35 BBC News New Light on Mars Methane Mystery (Jan 15, 2009)

    36 FoxNews.com Space Center – NASA Space Probe Projects Cost Overruns (Apr 10, 2009)

    37 The Future of Things – Maven New NASA (Climate) Mission to Mars By : Shalhevet Bar-Asher [Oct 13, 2008]

    38 Wikimedia Source – Maven Mars Program Overview (Jan 29, 2009)

    39. https://jayabarathan.wordpress.com/2012/08/10/curiosity-2/ NASA’s Land Probe -Curiosity [August 2012]

    40. Daily galaxy : Mar’s Methane Debate – A Sign of Life or a Mirage ? [September 11, 2012]

    41. Wired Science : Life on Mars ? Non-Detection of Methane Suggests No Modern-Day Microbes. [November 2, 2012]

    42. NASA Land Probe Curiosity Close to Solving Mystery of Mars’ Missing Atmosphere [November 2, 2012]

    43.  http://news.nationalgeographic.com/news/2012/09/120927-nasa-mars-science-laboratory-curiosity-rover-water-life-jpl/ [September 27, 2012]

    44.  http://www.nasa.gov/mission_pages/msl/news/msl20120927.html   [September 27, 2012]

    45.   http://www.utk.edu/tntoday/2013/05/30/mars-curiosity-rover-strong-evidence-flowing-water/ [May 30, 2013]

    46.  http://www.thehindu.com/sci-tech/science/rounded-pebbles-on-mars-point-to-water-flow/article4769911.ece  [June 1, 2013]

    47.http://www.naturalnews.com/040610_water_on_Mars_pebbles_space_exploration.html [June 4, 2013]

    48.http://www.esa.int/Our_Activities/Space_Science/Mars_Express/The_floodwaters_of_Mars[June 6, 2013]

    49.  http://en.wikipedia.org/wiki/Viking_program  [February 2, 2014]

    50. www.dailygalaxy.com/my_weblog/2014/02/image-of-the-day-clues-found-that-liquid-water-may-exist-on-mars-today-.html  [February 12, 2014]

    51.  www.dailygalaxy.com/my_weblog/2014/02/a-vast-oceanus-borealis-may-have-once-covered-13-of-mars.html  [February 17, 2014]

    52. http://www.space.com/20133-olympus-mons-giant-mountain-of-mars.html  [March 8, 2013]

    53.  https://en.wikipedia.org/wiki/Olympus_Mons  [January 29, 2017]

    54. http://marsprogram.jpl.nasa.gov/gallery/atlas/olympus-mons.html

    55. http://www.marsdaily.com/reports/UH_research_finds_evidence_of_2_billion_years_of_volcanic_activity_on_Mars_999.html?mc_cid=ecba864f25&mc_eid=bb33fe70f4  [February 3, 2017]

    56. http://www.dailygalaxy.com/my_weblog/2017/02/-monster-mars-volcano-erupted-continuously-for-two-billion-years-unlike-anything-ever-seen-on-earth.html  [February 6, 2017]

    57.  https://www.universetoday.com/128689/exomars-rover-postponed/ [may 3, 2016]

    58. http://www.marsdaily.com/reports/Russian_Space_Research_Institute_Announces_July_2020_Date_for_Mission_to_Mars_999.html  [October 10, 2017]

    ++++++++++++

    S. Jayabarathan (jayabarathans@gmail.com)  October 14, 2017  [R-2]

    https://jayabarathan.wordpress.com/

    Share
  • “ஸ்ரீராம தர்ம சரிதம்” (13)

    மீ.விசுவநாதன்
    பகுதி: 13

    பாலகாண்டம்

    ஸ்ரீராம-தர்ம-சரிதம்-2-1

    தாடகவனத்தை அடைதல்

     

    காலையிலே எழுந்தவுடன் கதிரவனை வேண்டி
    காகுத்தன் இலக்குவனும் கடமைகளைச் செய்து
    வேலைகளை முடித்தவுடன், வேள்விதனைச் செய்யும்
    மேலான முனிவர்கள் முகமலர்ச்சி யோடு
    ஓலமிடும் கங்கையினை உடன்கடந்து செல்ல
    ஓடமொன்று தந்ததிலே உடனமரச் சொல்லி
    ஞாலமதில் தர்மமென்றும் நன்றாக வாழ
    நாகுளிர ஆசிதர நகர்ந்ததுவே ஓடம் ! (1)

    “மானசரோவர் எரியும் சரையூ நதியும்”

    கங்கையிலே செல்கையிலே காகுத்தன், “இந்தக்
    கடல்பேசும் பேரோசைக் காரணம்தான் என்ன?
    எங்களுக்குக் கூறிடுக” எனப்பணிவாய்க் கேட்க,
    “பிரும்மா”தன் மனத்தாலே பெரியதொரு ஏரி
    பொங்கிடவே செய்ததினால் புகழயோத்தி சுற்றிப்
    பூரித்துப் பாய்ந்தோடி “சரயு”வெனும் பேரால்
    கங்கையிலே கலக்கின்ற கடும்சத்தம் ” என்றார்
    களங்கமிலா மாமுனிதான் காகுத்தன் பார்த்து. (2)

    “மலாதம், கரூசம்” என்ற நாடுகள்”

    கரைவந்து சேர்ந்தவுடன் காட்டிற்குள் போகக்
    கவனமுடன் நடந்தார்கள் ! கணக்கில்லா புட்கள்,
    இரைதேடும் புலிக்கூட்டம், மிகநடுங்கும் மான்கள்
    இயல்பாக இருக்கின்ற இடமென்று காட்டி
    இறைதேடும் முனிவர்க்கும் இதுதானே சொர்க்கம்
    இதன்கதையைச் சொல்கின்றேன் ஸ்ரீராமா கேட்பாய் !
    கறைபட்ட இக்காட்டின் இந்தநிலை மாற்றக்
    கடமையுனக் குண்டென்று காரணமும் சொன்னார் ! (3)

    இந்திரனால் “விருத்திரா சுரன்”மாண்டான்! அந்த
    இறப்பிற்காம் தோஷங்கள் இந்திரனும் கொண்டான்!
    மந்திரங்கள் மூலமதை மாற்றிட்ட பின்பு
    வளமாச்சு “கரூசமும், மலாத”வள நாடும்
    இந்திரனின் நல்லாசி இதற்கிருந்த தாலே
    எப்போதும் முனிவர்கள் இங்கிருக்கும் போது
    அந்திபகல் எல்லாமே அவர்மனத்தில் சாந்தி
    அதுவாக அமைந்திட்ட அருட்குகையாய் ஆச்சு ! (4)

    “யட்சப் பெண் தாடகை”

    இந்தஒரு காலத்தில் இடறொன்று “யட்சப்
    பெண்ணுருவாய்” வந்ததனால் பெரியதொரு துன்பம்
    வந்ததென்பேன் ! “சுந்தனின்” மனைவியென ஆனாள்
    மகனாக “மாரீசன்” மடிமீது கொண்டாள் !
    இந்தவழிக் காட்டினிலே இருக்கின்றாள் அந்த
    இளவரக்கி தாடகையாய் எதிர்வந்து நிற்பாள் !
    எந்தஒரு தயக்கமுமே நெஞ்சினிலே வேண்டாம்
    இப்போதே கொன்றுவிடு என்றாரே ஞானி ! (5)

    (தர்ம சரிதம் வளரும்)
    (ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் பாலகாண்டத்தில் 24ம் பகுதி நிறைந்தது)

    Share
  • மகாபாரதம் திருக்குறள்: அறம் தழுவா நிலைக்களம்

    சு.விமல்ராஜ்,
    உதவிப்பேராசிரியர்,
    ஏ.வி.சி.கல்லூரி,
    மன்னன்பந்தல்
    மயிலாடுதுறை

    முன்னுரை:

    அறம் என்பது மனிதன் மனிதனை நசுக்காமல் என்பதோடு மட்டுமல்லாது, ஏனைய உயிரிணங்கள் மீதும் வன்மை கொள்ளாதிருத்தல் எனப்படும்.   மகாபாரதமும் திருகுறளும் அறச்சிந்தனைகளை போதிப்பதாக சான்றோர்கள் பகர்வர். அவ்வகையில் இவ்விரு இலக்கியப்படைப்புகளில் வெளிப்படும் அறச்சிந்தனைகளை நோக்கிப் பயணிக்கிறது இக்கட்டுரை. இப்பெரும் படைப்புகளை ஆய்வுக்களமாக எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல்கள் எவை எவை என்றும்,  அந்த சிக்கல்களுக்கான தீர்வுகள் எது என்றும் ஆராய்வது மிக முக்கியம். எடுத்துக்கொண்ட ஆய்வுக்கான மூலங்கள் மிகப்பெரியவை. இரண்டும் அதனதன் பணிகளில் அதன் உச்சத்தை எட்டியவை என்று கூறலாம். மகாபாரதமும் திருக்குறளும் மிக எளியப்படைப்புகள் இல்லை. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை மட்டுமல்லாது வரலாறு படைத்த இலக்கியங்களாகும். சிக்கல்கள்  என்பது எது?

    இப்பெரும்படைப்புகளை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஏற்படும் சிக்கல் எதுவாக இருக்கும் என்றால் இவ்விரண்டும் சமகாலத்து இலக்கியப்படைப்புகளா? என்பதுதான். ஒப்பிலக்கிய ஆய்வு நிகழ்த்த சம கால இலக்கியங்களை எடுத்துக்கொள்வது தான் வழக்கம். மாறாக இரு வெவ்வேறு காலகட்டத்து இலக்கியங்களை எடுத்துக்கொண்டு ஒப்பாய்வு நிகழ்த்தும்போது அதில் பொருந்துவதையும் பொருந்தாத தையும் வேறுபடுத்தி எடுத்துக்காட்டுவது மிகக்கடினம். ஆய்வு என்பதே சிக்கல்களை அவிழ்ப்பதுதான். ஆனால்  இதில் இருக்கும் சிக்கல் என்பது வேறு. ஒப்பாய்வுக்கு என்ற நிலைப்பாட்டிலிருந்து சற்று விலகி மிகக்கடினமான ஒரு ஆய்வுப்போக்குக்கு உட்பட்டதே இந்த மகாபாரத திருக்குறள் ஒப்பாய்வு சிக்கல்கள்.

    மகாபாரத கட்டமைப்பு

    காப்பியங்கள்:

    உலகம் முழுவதும் பல்வேறுபட்ட செம்மொழிகளில் காப்பியங்கள் பல உள்ளன. அந்தந்த காப்பியங்கள் அந்த நாட்டு பழமையான வரலாற்றை உணர்த்துவனவாக உள்ளன. காப்பியத்திற்கென்று பொதுமையான வடிவம் ஏதும் இல்லை. காப்பிய வகையை அக்காலத்து  புலவர்கள் ஆங்காங்கே அவர்களின் நுட்ப உணர்வுக்கு ஏற்ப பல வடிவங்களில் படைத்திருந்தாலும்,காப்பியங்களில்  மக்கள் வாழ்வை, வரலாற்றை கொஞ்சம் கற்பனை கலந்து அளித்துள்ளனர். கற்பனை முற்றிலும் இல்லாததா? இல்லை கற்பனை ஓரளவு உள்ளதா? என்பது ஆய்வுக்குரியதாகவே உள்ளது.

    ”இதிகாசம் என்ற சொல்லை இதி-ஹ-ஆச என்று பிரித்து இப்படி ஒருவன் இருந்தான் அல்லவா? என்று பொருள் கொள்வர்” (வியாசர் அருளிய மகாபாரதம்.அ.லெ. நடராஜர்.அருணா பப்ளிகேசன்.சென்னை.1961.பக்கம்.3)

    “அறம்,பொருள்,இன்பம்,வீடு என்னும் நான்கனுள் ஒன்றும் பலவும் குறைந்து வருவது. இருவகை காப்பியங்களும் ஒரு வகை செய்யுளாளும் பலவகை செய்யுளாளும் உரை பரவியும் மொழி விரவியும் வரும்”(அபிதான சிந்தாமணி ஆ.சிங்காரவேலு முதலியார்.சாரதா பதிப்பகம்.சென்னை.2001.பக்கம்.407)

    வியாசர் பாரதம்:

    மகாபாரதக் கதையின் மூலவடிவத்தை வியாசர் கதை கேட்ககேட்க சொல்லும் அமைப்பில் படைத்துள்ளார். கதை சொல்லும் வடிவத்திலும் நாடக உருவமைப்பிலும் அமையத்தக்கதாய் இதை உணரலாம்.

    சனமேசயன் என்னும் பாத்திரம் கதையை கேட்க வைசம்பாயனார் என்னும் பாத்திரம் கதையைச் சொல்லுவதுபோல் அமைத்துள்ளார். இடையில் இவ்விரு பாத்திரங்களும் உரையாடல் மேற்கொள்வது போல் அமைந்துள்ளது.

    மகாபாரதத்தின் பெரும்பிரிவுக்கு பருவம் என்று பெயரிட்டு வியாசர் சிறு பிரிவுக்கும் அதே பெயரையே வைத்துள்ளார்.

    பருவங்கள் 18:

    1.ஆதி பருவம்

    2.சபா பருவம்

    3.ஆரணிய பருவம்

    4.விராட பருவம்

    5.உத்தியோக பருவம்

    6.வீடும பருவம்

    7.துரோண பருவம்

    8.கண்ண பருவம்

    9.சல்லிய பருவம்

    10.செளப்திக பருவம்

    11.ஷ்திரி பருவம்

    12.சாந்தி பருவம்

    13.அறுசானிக பருவம்

    14.அசுவமேத பருவம்

    15.ஆசிரமவாசிக பருவம்

    16.மெளசல பருவம்

    17.மகப்பிரதானி பருவம்

    18.சொர்க்கரோகன பருவம்

    மனிதர்கள் கூடிவாழும் வாழ்க்கை, அவர்களுக்குள் நிகழும் மன உணர்ச்சி, செயல்பாடு இதை பிரதிபலிப்பதாய் இந்த இதிகாசம் அமைந்துள்ளது.

    திருக்குறள் கட்டமைப்பு

    பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாக கருதப்படும் திருக்குறள் நீதிக்கருத்துகளின் பெட்டகம் என்று எண்ணப்படுகிறது. அறம்,பொருள், இன்பம் என்னும் மூன்று உறுதிப்பொருள்களை எடுத்துச்சொல்வது. இது திருவள்ளுவ நாயனாரால் எழுதப்பட்டது என்பர். இது 7 இயல்களைக் கொண்டது.  இந்த நூலுக்கு தருமர்,மணக்குடவர்,தாமத்தர், நச்சர்,பரிதி,பரிமேல் அழகர்,திருமலையர்,மல்லர், கவிப்பெருமால், காலிங்கர் ஆகியோர் உரை எழுதியுள்ளனர். இந்த உரைகளுள் பரிமேல் அழகரின் உரையை சிறந்த உரை என்பர்.

    திருக்குறளுக்கு முப்பால் நூல், உத்தரவேதம்,தெய்வ நூல், திருவள்ளுவம், பொய்யாமொழி, வாயுறை வாழ்த்து, தமிழ்மறை,பொதுமறை எனப்பல பெயருண்டு.(அபிதான சிந்தாமணி.ஆ.சிங்காரவேலு முதலியார்.சாரதா பதிப்பகம்.சென்னை.2001.பக்கம்.829.

    கீழ்க்கணக்கு நூல்கள்:

    1.திருக்குறள்

    2.நாலடியார்

    3.நாண்மணிக்கடிகை

    4.திரிகடுகம்

    5.சிறுபஞ்சமூலம்

    6.ஆசாரக்கோவை

    7.ஏலாதி

    8.இன்னா நாற்பது

    9.இனியவை நாற்பது

    10.முதுமொழி

    11.திணை மாலை நூற்றைம்பது

    12.ஐந்திணை எழுபது

    13.ஐந்திணை ஐம்பது

    14.திணைமொழி ஐம்பது

    15.கைந்நிலை

    16.கார் நாற்பது

    17.களவழி நாற்பது

    18.பழமொழி

    திருக்குறள் இயல் அமைப்பு:

    நூற் பிரிவுகள்

    திருக்குறள் அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று பால்களும் கொண்டமையால் “முப்பால்” எனப் பெயர் பெற்றது. முப்பால்களாகிய இவை ஒவ்வொன்றும் “இயல்” என்னும் பகுதிகளாக மேலும் பகுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு இயலும் சில குறிப்பிட்ட எண்ணிக்கையான அதிகாரங்களைக் கொண்டதாக விளங்குகின்றது. ஒவ்வொரு அதிகாரமும் பத்து பாடல்களைத் தன்னுள் அடக்கியது. ஆனால், குறளின் அதிகாரங்கள் ஏன் 10 குறள்களைக் கொண்டுள்ளன என்பதற்கான விளக்கத்தினை இன்றைய ஆய்வாளர்கள் அறியவில்லை.

    அறத்துப்பால்

    திருக்குறளின் அறத்துப்பாலில் பாயிரவியலைத் தொடர்ந்து முதலாவதாக 20 அதிகாரங்களுடன் “இல்லறவியல்” அடுத்து 13 அதிகாரங்கள்  கொண்ட துறவறவியல் இறுதியில் “ஊழ்” என்னும் ஒரே அதிகாரம் கொண்ட “ஊழியல்” என வகைபடுத்தப் பட்டுள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் “ஊழியல்” மட்டுமே. முதற்பாலாகிய அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள்.

    பொருட்பால்

    அடுத்து வரும் பொருட்பாலில் அரசு இயல், அமைச்சு இயல், ஒழிபு இயல் ஆகிய இயல்கள் இருக்கின்றன. அரசு இயலில் 25 அதிகாரங்கள் உள்ளன. அமைச்சு இயலில் 32 அதிகாரங்களும், ஒழிபு இயலில் 13 அதிகாரங்களுமாக மொத்தம் 70 அதிகாரங்கள் உள்ளன.

    இன்பத்துப்பால்

    கடைசிப்பாலாகிய “இன்பத்துப்பால்” அல்லது “காமத்துப்பாலில்” களவியல் மற்றும் கற்பியல் என இரண்டு இயல்கள். களவியலில் 7 அதிகாரங்களும், கற்பியலில் 18 அதிகாரங்களுமாக மொத்தம் 25 அதிகாரங்கள் உள்ளன. ஆகமொத்தம் 9 இயல்கள்; 133 அதிகாரங்கள்; 1330 பாடல்கள். திருக்குறளை மொத்தம் 12000 சொற்களில் திருவள்ளுவர் பாடியுள்ளார்.

    திருக்குறள் நூலமைப்பைப் பொறுத்தமட்டில், அது மூன்று பெரும் பிரிவுகளைக் கொண்டுள்ளது. பாயிரத்தில் வைக்கப்பட்டுள்ள நான்கு அதிகாரங்களுள் கடவுள் வாழ்த்து, அறன் வலியுறுத்தல், நீத்தார் பெருமை என்பவை மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு உட்பட்டதாகவும், வான் சிறப்பு மட்டும் மக்களின் முழு கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டதாகவும் உள்ளது.

    ஒப்பாய்வு வரையறை:

    ஒப்பாய்வு நிகழ்த்தும்போது ஆய்வு நிகழ்த்தும் இலக்கியப்படைப்புகளின் களமானது பெரும்பாலும் வடிவத்தால் ஒன்றுபட்டதாக இருக்கும். சான்றாக திருக்குறளை எடுத்துக்கொண்டால் அத்திருக்குறல் போல்

    தமிழிலுள்ள வேறு ஒரு அற நூல் அல்லது இந்தியமொழிகளிலுள்ள ஏதேனும் ஒரு அறக்கருத்தை எடுத்துரைக்கும் நூல் அல்லது உலகமொழிகள் ஏதேனும் ஒன்றிலுள்ள அறநூல் இவற்றை எடுத்துக்கொண்டு ஆய்வு செய்ய வேண்டும். வடிவம் ஒன்றுபட வேண்டும்.

    பக்தி இலக்கியம் ஒன்றை எடுத்துக்கொண்டு அதனோடு ஒப்பிலக்கிய ஆய்வு செய்யவேண்டும் என்றால் அதே நிலைப்பாடுடைய பக்தி இலக்கியத்தை எடுக்கவேண்டும். அவ்வாறு ஆய்வு செய்யும்போது தான் கடவுள்,கடவுள்மீது மக்கள் காட்டும் அன்பு,கடவுளை அணுகும் முறைகள்,வழிபாட்டுமுறை ஆகியவற்றில் உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை தெளிவாக எடுத்துக்காட்டமுடியும். தமிழிலுள்ள ஒரு இலக்கிய வடிவ நூலை எடுத்துக்கொண்டு அதே சமகால கிரேக்கம் அல்லது லத்தீன் மொழியிலுள்ள நூலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு ஆய்வு நிகழ்த்தும்போது தான் சமகாலத்து கவிஞர்களின்  ஒற்றுமை வேற்றுமைகளை எளிதாக எடுத்துக் காட்டமுடியும்.   ஒப்பாய்வுக்கு வடிவமும்,காலமும்,பாடுபொருளும் மிகமுக்கியம்.

     தற்காலத்தில் ஒப்பாய்வுத்துறை மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. நவீன காலத்து அறிஞர்கள்,புதிய சிந்தனையாளர்கள் இத்துறையை நல்ல வளர்ச்சி நிலைக்கு எடுத்துச்சென்றுள்ளனர். சமகாலம் அல்லாத படைப்புகளையும் இரு வெவ்வேறு வடிவ இலக்கியங்களையும் எடுத்துக்கொண்டும் ஆய்வு செய்கின்றனர்.

    மூல நூல்களின் ஆசிரியர்களின் நோக்கத்தை தெளிவாக எடுத்துக்காட்டிவிடுகின்றனர்.

    ஒப்பாய்வின்உண்மைத்தன்மை:

    1.ஒரே இலக்கிய வகை

    2.ஒரே இலக்கிய வடிவம்

    3.ஒரே பாடுபொருள்

    வெவ்வேறு மொழியாக இருந்தாலும் அந்த படைப்பின் வடிவம்,பாடுபொருள் ஒன்றாக இருக்கலாம். அப்படி இருக்கும் நிலையில் அதை ஒப்பாய்வுக்கு உட்படுத்தினால் சரியாக  அதன் ஒப்புமைப்பொருளை வெளிக்கொண்டுவர முடியும்.

    மகாபாரதஉண்மைத்தன்மை:

    பாரதம் அது தன் காலகட்டத்தில் மக்களிடத்தில் இருந்த நான்குவகை பிரிவுகளைஎடுத்துக்காட்டுகிறது. அது வேதகாலத்து நடைமுறை. அந்த பழம்பெரும் பாரத நாட்டில் அந்த காலகட்டத்தில்  நிகழ்ந்த நிகழ்வுகளை செவிவழியாக மக்கள் கதை வடிவில் சொல்லிவந்தனர்.

     இவ்வாறு மக்களின் செவிவழி செய்தியை இலக்கியமாக படைக்கப்பெற்றதுதான் மகாபாரதம். மகாபாரதத்தின்  காலம் இன்னும் ஆய்வுக்கு உட்பட்டதே. இன்றைக்கும் அறிஞர்கள் ஆராய்ந்து கொண்டே  இருக்கிறார்கள்.

    திருக்குறள் உண்மைதன்மை :

    சங்கம் மருவிய காலத்தில் நீதியானது மறைந்து மக்களிடத்தில் குற்றங்கள் பல நிகழ்ந்தபோது மக்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்று  அறக்கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் நோக்கில் எழுதப்பட்டதுதான் திருக்குறள். திருக்குறளின் காலமும் இன்னும் அறிஞர்களால்  ஆராயப்பட்டுக் கொண்டிருக்கிறது.

    அற இலக்கியங்கள்

    அற இலக்கியங்கள் உருவாகுவதற்கு ஒரு சரியான காரணம் உண்டு. உலகத்தில் தீமைகள் பெருகும்போது அறிஞர்கள்  மக்களை நல்வழிப்படுத்த அற இலக்கியங்களை பாடுவதாகக்  குறிப்பிடுவர். இது உலகத்தில் உள்ள எல்லா மொழிக்கும் பொருந்தும். மகாபாரதம்-திருக்குறள் இவற்றில் உள்ள அறக்கருத்துகளை ஆய்வு செய்வதால் அறம் என்ற சொல் குறித்தும் ஆய்வு செய்ய வேண்டும்.

    (Ethiks) எனும் ரஷிய புத்தகம்:

    1989ல் ரஷிய மொழியிலிருந்து நடாலியா பேல்ஷ்கயா என்பவரால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட எதிக்ஷ் என்னும் நூலில் இருந்து இதன் தொடர்பான சில செய்திகள்.

    1.எதிக்ஷ் எனும் ஆங்கிலச் சொல் எதோஷ் எனும் கிரேக்கச் சொல்லில் இருந்து வந்ததாகும். கிரேக்கக் கவிஞர் ஹோமர் இலியட் எனும் இதிகாசத்தில் மக்கள் கூட்டமாக கூடி இருக்கும் இடத்தை இச்சொல்லால் குறிப்பிடுகிறார்.

    2.எதிக்ஷ் எனும் தலைப்பிலான  தனி இயல் கி.மு.4ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. அரிஸ்டாட்டில்  இச்சொல்லை இப்பொருளில் முதன் முதலில் கையாண்டார்.

    3.பண்டைய ரோம் நகரில் இலத்தின் மொழியில் மொராலீஷ்  இச்சொல்லை கி.பி.4ஆம் நூற்றாண்டு அளவில் இப்பொருளில் கையாண்டனர். மாரல்,மாரலிட்டி எனும் சொல்கள் இலத்தினிலிருந்து ஆங்கிலத்தில் வரவழைக்கப்பட்டவை ஆகும்.

    4.மார்க்சிய கருத்துப்படி ஆளும் வர்க்கம் அறக்கருத்துக்களையும் கொள்கைகளையும் உழைப்பாளி வர்க்கத்தின் மேல் திணிக்கிறது.

    5.அறம் என்பது இனத்திற்கு இனம்,இடத்திற்கு இடம், காலத்திற்கு காலம் வேறுபடுகிறது. சரியான வரையறைக்கு உட்பட்டதாக இல்லை. மிக பழமையான காலத்தில் வாழ்ந்த பழங்குடிகள் தங்களுடைய பகைவர்களையும் தங்கள் குழுவைச் சேர்ந்த முதியவர்களையும் நோயாளிகளையும் கொன்று தின்னும் பழக்கமுடையவர்களாக இருந்தனர். சார்லசுடார்வின்  “தியாரா டேல்ஃபியுகோ” என்ற இடத்தில் உள்ள பழங்குடி மக்களை பார்வையிட்ட போது, அந்த மக்கள் கொடும் பனியாலும், உணவே கிடைக்காத பஞ்சத்தாலும் வாடி,வதங்கி கொண்டிருந்தனர். அந்த நேரங்களில் தங்கள் குழுவை சேர்ந்த முதுமை அடைந்த பெண்களை கொன்று தின்றனர். வேட்டை நாய்களுக்கு அவர்களையே உணவாகக் கொடுத்தனர். ஏன் என்று அவர்களிடம் கேட்ட பொழுது அவர்கள் வேட்டை நாய்கள் நாங்கள் உண்பதற்கு புதிய உணவை வேட்டையாடி தரும். இந்தக் கிழப்பெண்கள் தருவார்களா? என்றார்களாம்.

    6.இரத்த உறவு,அன்பு உறவு என்பதெல்லாம் பழங்குடிகளிடம் இல்லை. பிற்காலத்தில்தான் அது உருவாகியிருக்கிறது.

    7.அறம்,அறம் அல்லாதன என்பன, காரணம் தேவை ஆகிய அடிப்படையில் உருவாகின்றன. அறத்தை நல்லது என்கிறோம். அதன் பொருள் உண்மையாக பயன் அளிக்கக்கூடியது என்றே தொடக்கத்தில் இருந்திருக்க வேண்டும்.

    8.மனித குலத்தில் அறவாழ்க்கை என்பது படிப்படியாக உணவுப் போராட்டம், உடைப் போராட்டம், கால்நடை வளர்ப்பு,வேளாண்மை, பானை செய்தல்,இரும்பை உருக்குதல், நெசவு நெய்தல் போன்றவை கண்டுபிடிக்கப் பட்டபொழுது படிப்படியாக உருவாகியிருக்க வேண்டும்.

    9.தொடக்க காலத்தில் நல்லவை என்பது உடல் பலம்,உறுதி கிடைக்கும் நல்ல பயன் ஆகியவற்றோடு தொடர்பு உடையதாக இருந்தது. நல்லது,அழகு, சரியானது ஆகிய சொல்கள் ஒரு காலத்தில் ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையதாக வழங்கப்பட்டன.

    10.பழங்குடி மக்களிடம் வெளிப்படையான மோதல்கள் இல்லை. அம்மக்களை அவர்கள் தலைமுறை தலைமுறையாக பின்பற்றி வந்த பழக்க வழக்கங்கள் ஒருங்கிணைத்திருந்தன. அவர்களிடம் என்னுடைய,எங்களுடைய என்பன நல்லனவற்றையும்,பழக்கமானவற்றையும்,சரியானவற்றையும் குறித்தன. அவனுடைய,அவர்களுடைய என்பன அபாயகரமானதையும்,பகைமை உடையதையும் கொடியவற்றையும் குறித்தன.

    11.பழங்குடி மக்களின் ஒழுங்கை அவர்களுடைய பழக்க வழக்கங்கள்,மரபுகள், கூடாதவை என்று ஒதுக்கின.வேலைக்குரிய சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகியனவே அமைத்துக் கொடுத்தன.

    12.பழங்குடி மக்களின் கூட்டமைப்பு, திருட்டு, கற்பழிப்பு, ஏமாற்று, துரோகம் ஆகியவற்றால் சிதறத்தொடங்கியது.

    13.மேல்,நடு,கடை என்னும் அமைப்பில் சமுதாயம் பிரிவு வகையாக பிரியத் தொடங்கும் போதுதான் அறநெறிப் பிழை தொடங்கியது.

    14.கிரேக்க,ரோம சமுதாயத்தில் பிரபுக்கள்,போர்வீரர்கள்,அடிமைகள் என வகுப்பு பிரிவுகள் தோன்றத்தொடங்கின. இந்தப் பிரிவுகள் தோன்றத் தோடங்கிய பிறகே வகுப்பிற்கு ஏற்ற அறமுறைகள் வகுக்கப் பட்டன.

    15.கிரேக்க,ரோம அடிமைகளிடம் அவர்களின் எஜமானர்களுக்கே அவர்கள் சொந்தமான அடிமைகள் என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டனர். ரோமர்களிடம் எஜமானர்களை வணங்கும் பழக்கம் வளர்ந்தது.

    16.அடிமைகளிடையே போற்றப்பட்ட அறஒழுங்குகள் பின்னாளில் உருவான அறஇலக்கியங்களிலும் நீதி இலக்கியங்களிலும் எதிரொலித்தன.

    17.ஒரு வித தந்தைக் கோட்பாடு திட்டமிட்டு நிலவுடைமை சமுதாயத்தில் வளர்க்கப்பட்டது.வேளாண் உழவர்கள், நிலக்கிழாரின் குழந்தைகள் போன்றவர்கள் தந்தைக்கு நிகரானவர்கள் என்றும்,அரசர், எல்லாருக்கும்  தந்தை போன்றவர் என்றும் ஒரு கருத்து உருவாக்கப்பட்டது. இதன் விரிவாக்கமே கிருத்துவத்தில் கடவுளே தந்தை என்றும் மக்கள் எல்லாம் அவரின் குழந்தை என்றும் ஒரு கருத்து வளர்க்கப்பட்டது.

    18.ஃப்ரன்சில் நிலக்கிழார்கள் ஏழு திறமைகளை உடையவராக இருக்க வேண்டும். ஈட்டி எறிய தெரிந்தவராக, காப்பு வேலி அமைக்க தெரிந்தவராக, வேட்டையாடுபவராக, குதிரை ஓட்டுபவராக,  நீச்சல் தெரிந்தவராக ,சூதாடதெரிந்தவராக, செய்யுள் இயற்ற தெரிந்தவராக.

    19.எஜமானர் தந்தைக்கு நிகரானவர். அவர் இறந்துவிட்டால் அவருக்கு கீழ் வேலை செய்வோர் இறந்துவிடுதல் உயர்ந்த குணமாக கருதப்பட்டது. ஜப்பானில் சாமுரே அரசர்களுக்காக தற்கொலை செய்துகொள்ளும் படையினர் ஆவர்.

    20.பாதிரியார் கால்வின் கருத்துப்படி கிருத்துவத்தில் ஒருவர் வணிகத்தில் வெற்றி பெற்றுவிட்டால் அது கடவுளின் கருணை என்று கருதப்பட்டது. மாறாக ஏழ்மை, கடவுளால் கைவிடப்பட்ட பாவம் செய்தவர்களின் நிலைமை என்று கருதப்பட்டது.

    21.தனி மனித வாதம் என்பது மனிதத்திற்கு எதிரானது.

    22.At the time of the French Revolution, Maximilien Robespourem demanded that honour be replaced by honesty, the rule of fashion by the rule of reason,conventions by responsibilities, and good form by good people.(p.83)

    தமிழில் அற இலக்கியம் உருவான பின்புலம்:

    சங்க காலத்தில் சேர,சோழ,பாண்டியர்கள் தமிழகத்தை ஆண்டனர். கி.பி. 3ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.575 வரை களப்பிரர்கள் தமிழகத்தை ஆண்டனர். களப்பிரர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று இன்றும் ஆய்வு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆனாலும் அவர்களை ஜைனர்கள், பெளத்தர்கள் என்னும் கூற்று உண்டு. களப்பிரர் வருகையால் ஜைனமும்,பெளத்தமும் தமிழகத்திற்கு வந்தன. தமிழர்களின் மொழி பண்பாடு ஆகியன சீர்குலைந்தன என்பர். இவற்றை மீட்கவே சான்றோர்கள் பலர் நீதி செய்யுள்களை எழுதினர் என்பர். சங்ககால தமிழர்களிடம் காணப்பட்ட கொலை,ஊன் உண்ணுதல்,கள் உண்ணுதல், விபச்சாரப் பெண்கள், ஆறலைக்களவு ஆகியன களப்பிரர் கால அற புத்தகங்களில் கண்டித்து எழுதப்பட்டன. சீர்கெட்ட ஒழுக்கங்களை இக்கால அற நூல்கள் சரிசெய்ய முயற்சி செய்தது. அசோகரின் கலிங்கப் போருக்குப் பிறகு பெளத்த துறவிகளின் தலையீட்டால் போர் குறைக்கப் பட்டது. பெளத்த மதத்தின் செல்வாக்கால் போர் செய்யும் உணர்வு குறைக்கப் பட்டது. சங்ககால பாடல்கள் போர் உணர்ச்சியை தூண்டும் தன்மை உடையது. ஆனால் சங்கம் மறுவிய கால பாடல்கள் போரை வெறுக்கும் பாடல்களை கொண்டது.

    சங்ககாலத்து மூவேந்தரும்,வேளிரும்,குறுநில மன்னர்களும், ஓயாது போர் நிகழ்த்திக் கொண்டிருக்கின்றனர். இதன் எதிரொலியை புறநானூற்றிலும், பதிற்றுப்பத்திலும், மதுரைக்காஞ்சியிலும், பட்டினப்பாலை நெடுநல்வாடையிலும் காணலாம். சங்ககாலம் முடிவுற்று களப்பிரர் ஆட்சி தமிழகத்திற்கு வந்தது. களப்பிரர், சைன, பெளத்த மதத்தினர். எனவே, போர் உணர்ச்சிக்கு எதிரான கொல்லாமையும்,புலால் உண்ணாமையும் போதித்தனர். இப்போதனையின் பதிவுகளைப் பதினென் கீழ்க்கணக்கு அற நூல்களில் பார்க்கிறோம். இந்த அற நூல்களில் திருவள்ளுவர் சொன்ன படைமாட்சி(77), படைச்செருக்கு(78), படைத்திறன்(88) ஆகியன வற்புறுத்தப் பெறவில்லை. மாறாக, மென்மை பண்புகள் வற்புறுத்தப் பெறுகின்றன.

     இவற்றில் இருந்து உணரவேண்டியவை:

    1.களப்பிரர் காலம் சங்ககாலத்தைப் போல் போர்க்காலமாக இல்லை. போர் முடிந்த அமைதிக் காலமாகப் பேணப் பெற்றது. இந்த அமைதிக்காலம் பல படைப்புகளுக்கு வித்திட்டது. சான்று, பதினென்கீழ்க்கணக்கு நூல்கள், சிலம்பு, மணிமேகலை முதலானவை.ஏனைய

    2.ஜைன, பெளத்த மதச் செல்வாக்கால் போர் உணர்ச்சி தவிர்க்கப்பெற்றது. அற நெறிக்கே முதலிடம் அளிக்கப் பெற்றது. எனவே, சங்கால தமிழரால் பின்பற்றப் பட்ட தீயொழுக்கங்களை கண்டித்து, தமிழரை நல்வழிப்படுத்த வேண்டி அற இலக்கியங்கள் படைக்கப்பெற்றன.

    ஆகவே, போர் அற்ற அமைதிக் காலத்திலேயே அற நூல்கள் பலவாகப் படைக்கப்பெற்றன. கி.பி.14 ஆம் நூற்றாண்டில் நாயக்கர், தமிழகத்தை ஆளத்தொடங்கினர். பாண்டியர், இசுலாமியர், போர்க்காலம் முடிவுற்று கிட்டத்தட்ட 200 ஆண்டுக்காலம் மிகுந்த போர்கள் இல்லாது இருந்தது. விளைவாக ஒளவையாரால் ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி ஆகியனவும் அதிவீரராம பாண்டியரால் வெற்றி வேற்கையும், தினகரரால் தினகர வெண்பாவும்,பெயர் தெரியாத ஆசிரியரால் நீதி வெண்பாவும், உலக நாத பண்டிதரால் உலக நீதியும் குமரகுருபரரால் நீதிநெறி விளக்கமும், சிவப்பிரகாசரால் நன்னெறியும், முனைப்பாடியாரால் அறநெறிச் சாரமும், அடுத்து அடுத்துப் படக்கப்பெற்றன. அரசியல் அமைதிக்கும், அற நூல் எழுச்சிக்கும் தொடர்புகள் இருக்கின்றன.

    அற இலக்கியங்கள் தமிழரால் பின்பற்றப்படாமல்  போனதற்கான காரணங்கள்:

    அற இலக்கியங்கள் அறிவுறுத்திய அறிவுரைகளை தமிழகம் பின்பற்ற வில்லை என்பது வெளிப்படையான உண்மை. அவற்றிற்குரிய காரணங்களுல் இன்னொன்று சுட்டத்தக்கது. அற இலக்கியங்களைச் செவி நிறைய தமிழர்கள் கேட்டுக்கொண்டனர். ஆனால், கேட்டபடி பின்பற்றவில்லை.  காரணம் ரசனை உணர்வு, கண்ணால் பார்ப்பவற்றை ரசிக்கும், காதால் கேட்பவற்றை ரசிக்கும், ஆனால் கருத்துள்ள காட்சிகளையோ,கேள்விகளையோ நெஞ்சில் வாங்கி செரித்துக்கொள்ளாது. மென்று தின்னாமல் அப்படியே விழுங்கிவிட்ட சத்துணவு உடம்பிலும் இரத்ததிலும் சேராமல் கழிவாக வெளியேறிவிடுதல் போல கருத்துள்ள காட்சிகளையும், கேள்வி ஞானங்களையும் இவர்கள் ரசித்த அளவில் புறக்கணித்து விடுகிறார்கள்.

    திரை இசையில் வரும் தத்துவப் பாடல்களை கேட்டு, பல வீர உணர்ச்சி மிக்க காட்சிகளை பார்த்து அத்தோடு மறந்துவிடுகின்றனர். அதற்கு மாறாக அவர்கள் தீயோரை எதிர்ப்பதில்லை. சூட்டில் பால் பொங்கி வழியும், பின்பு சூடு ஆறியவுடன் அது அடங்கிவிடுவது போல இவர்களும் அடங்கிவிடுகிறார்கள்.

    செய்யுளில் உள்ள கற்பனை, உவமை, வீர உணர்வு ஆகியவற்றை இரசிக்கிறார்கள், பாராட்டுகிறார்கள். ஆனால் பின்பற்ற வில்லை. பின்பற்றுதல் என்பது ஒரு புதிய பழக்கத்திற்கு தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்வதும் ஆளாக்குவதும் ஆகும். பொய் பேசுவதில்லை என்னும் கருத்தை கேட்ட அளவில் இனி பொய்யே பேசுவதில்லை என்று தன்னை தயார்செய்து கொள்ள வேண்டும். அதனைப் பின்பற்றுவதன் மூலம் ஆளாக்கிக்கொள்ள வேண்டும். அதிக காலங்கள் பொய் பேசி பழக்கப்பட்டவன் தன் வயதான காலத்தில் பொய் பேசாத நிலைக்கு தன்னை மாற்றிக்கொள்வது அவ்வளவு எளிதன்று. நெடுங்காலம் கெட்டப்பழக்கங்களுக்கு அடிமையாகிவிட்ட சமுதாயத்திற்கு இந்த விதி பொருந்தும். தமிழில் படைக்கப்பெற்ற திருக்குறள், நாலடியார், பழமொழி ஆகிய அற இலக்கியங்கள் கற்றறிந்து வளர்ந்த வயதில் அவர்களால் அந்த இலக்கியங்களை படிக்க முடியும், கேட்க முடியும், இரசிக்க முடியும், பின்பற்றுதல் எல்லார்க்கும் எளிதானது அல்ல. மிகச்சிலரே அதைப் பின்பற்றி வாழ முடியும். பாரதத்தில் மக்களை நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்ட நிலை உள்ளது.

     அது

     1.பிரமணர்கள் 2.சத்ரியர்கள் 3.வைசியர்கல். 4.சூத்திரர்கள் என்பதே ஆகும். மகாபாரதம் இந்த நான்கு வகையான பிரிவினையுடைய மக்களுக்கு அறம் என்ற ஒன்றை வகுத்து வைத்திருக்கிறது. ஒவ்வொருவருக்கும் ஒரு அறம் உண்டு .மனிதர்கள் எல்லோருக்கும் ஒரே அறம் என்று கிடையாது. இந்த நான்கு பிரிவு மக்களுக்கும் தனித்தனியே அறம் என்பது மாறுபடும். இந்த நான்கு வகையினரையும் நாம் தனித்தனியே விரிவாக காணலாம்.

    1.பிரமணர்கள்.

    பிரமணர்கள் என்பவர்கள் கற்றல் என்னும் அறத்தை உடையவர்கள். இவர்களின் வேலை அல்லது கடமை கற்றல் அதை வைத்துக்கொண்டு தான் கற்றதை பிறருக்கு கற்பித்தல். இந்த அறத்திலிருந்து இவர்கள் மாறவே கூடாது. அவர்களின் கடமை கற்றல் கற்பித்தல். உலகத்தில் உள்ள எல்லா வகையான அறிவையும் கற்றுக்கொள்ள வேண்டும். அதை பிறருக்கு கற்பிக்கவேண்டும். இதுதான் அவர்களின் கடமை.யார் யாருக்கு கல்வியை கற்பிக்கவேண்டும் என்ற ஒரு அறத்தையும் இவர்கள் பின்பற்றினர். கற்ற கல்வியையும் ஒரு சிலருக்குத்தான் சொல்லிக்கொடுப்பார். அதிலும் சில அறமுண்டு.

    2.சத்ரியர்கள்.

    சத்ரியர்கள் நாட்டைக் காக்கவேண்டும்.சத்ரியன் வீரமுடையவன்.அவன் அந்த வீரத்தின் மூலம் இந்த நாட்டைக் காக்கவேண்டும். அன்னியர்களிடமிருந்தும் விலங்குகளிடமிருந்தும் நாட்டு மக்களை அவன் காக்கவேண்டும். சத்ரியர்களின் அறம் நாட்டைக் காப்பதே. அவர்களின் தொழில் அல்லது கடமை நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பதே ஆகும். அதை தவிர வேறு ஒருவரின் அறத்தில் இவர்கள் தலையிடக்கூடாது. அவரவர்கள்  அவரவர்களின் தர்மத்தை மட்டுமே கடைபிடிக்கவேண்டும்.

    3.வைசியர்கள்

    வைசியர்கள் என்பவர்கள் வணிகத்தில் ஈடுபடுபவர்கள். வைசியர்களின் தொழில் அல்லது கடமை எது என்றால் வாணிகத்தில் ஈடுபட்டு பொருள் ஈட்டுவது.நாட்டையும் நாட்டு மக்களையும் வளமாக்க வேண்டும். வைசியர்கள் அவர்களின் அறத்தில் இருந்து மாறாமல் அதை அவர்கள் ஒழுங்காக செய்யவேண்டும். வணிகத்தின் மூலம் நாட்டை வளப்படுத்துவதே அவர்களின் கடமை.

    4சூத்திரர்கள்.

    சூத்திரர்கள் என்பவர்கள் மூன்று பிரிவினரும் செய்யாத கடைநிலை தொழில் அல்லது வேலைகளை செய்யவேண்டும். மக்கள் பிரிவில் இவர்கள் கடைசியில் உள்ளவர்கள். இவர்களும் இந்த அறத்தை மீறக்கூடாது. சூத்திரர்களின் அறம் எதுவோ அதை மட்டும்தான் செய்யவேண்டும்.

    இதுதான் மகாபாரதம் கூறும் அறம். மகாபாரதத்தில் இந்த அறம்தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த அறத்தைதான் கூறுகிறது. இந்த உலகத்தில் உயர்ந்த வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்று கருதப்படுபவர்கள் தவம் செய்வதால், நீதியை நிலை நாட்டுவதால், ஆண்மையால், குற்றம் இல்லாத நல்ல செயல்களால் வாழ்பவர்களே கருதப்படுவார்கள். இவ்வாறு வாழ்பவர்களே இந்த மண் உலகை பல ஆண்டுகள் ஆட்சி செய்து விண் உலகையும் ஆள்வார்கள். இது உறுதியானது என்பதாகும்.

    இல்வாழ்க்கை-விருந்து:

    பரதன் குரு நாட்டை ஆட்சிப்பொருப்பு ஏற்று நடத்திவரும் காலத்தில் அவனது இல்லறத்தின் சிறப்பை கூற வரும் கவிஞர்,

    “இறந்தவர்கள் எதிர்காலத்தில் வருவோர்கள் என்று எல்லோருக்கும் தன்னுடைய பெயர் புகழோடு தெரியும்படி சிறப்பாக விளங்கியவன் என்கிறார்.

    திருக்குறள் விருந்து முடித்து போவோரை சிறப்பாக வழி நடத்தி, வருகின்ற விருந்தினருக்காக காத்திருப்பான் என்கிறது.

    அகத்தியர் உலோபமுத்திரையை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பிள்ளைகள் எதற்கு என்று எல்லோரும் கேள்வி எழுப்பினர். அகத்தியருக்கும் உலோப முத்திரைக்கும் பிள்ளைகள் பிறந்து என்ன செய்ய போகிறார்கள் என்பது கேள்வி. அதற்கு தெற்கே உள்ளவர்களுக்கு உதவி செய்வதற்கும், சூரிய குலத்தைச் சார்ந்தவர்களுக்கு யாகத்தின் பயனைக் கொடுப்பதற்கும், மண்ணின் உரிமையாளர்களுக்கு உணவு வழங்குவதற்கும் எங்கள் குலத்தில் பிள்ளை வேண்டும் என்கிறாள்.

    கௌசிகருக்கு தன்னுடைய இயல்பை கூற்கின்ற வியாதன் தன்னுடைய வருமானத்தை பகுத்து உண்ணும் முறையை எடுத்துக் கூறுகிறான். அதாவது, அந்தணர்கள், ஆசிரியர்கள், தாய்தந்தையர்கள், புதியதாக வந்த விருந்தினர்கள் கடவுள் முதலியவர்களுக்கு உண்ணக்கொடுத்துவிட்டு பிறகு மீதி இருக்கும் உணவை உண்ணுவேன் என்கிறான். இந்தக்கருத்தை அறிவிக்கும் பாடல் ஆரண்ய காண்டம்.கௌசிகசருக்கம்.39

    திருவள்ளுவர் துறவு மேற்கொள்வதை விட இல்லறம் சிறந்தது என்கிறார். வரலாற்று அமைப்புப்படி துறந்த அரசனை மீண்டும் ஆட்சி பொருப்பில் அமர்த்தும் நோக்கத்தில் பாரதம் கூறுகிறது. ஆனாலும் அரசாட்சி என்பது இல்லறத்தை கடைபிடிப்பவன் செய்ய வேண்டியது. ஆகவே இல்லறத்தை விட்டுவிட்டு துறவுக்கு செல்லாதீர்கள் என்று சொல்லும் குறளின் கருத்தோடு ஒத்து உள்ளது.

    மனைவிக்கான நல்ல குணங்களைப் பெற்றவள்

    மனைவி இல்லறத்திற்கு தேவையான நல்ல குணங்களைப் பெற்றிருக்க வேண்டும் என்பது திருக்குறள் கருத்து. கணவனுக்கு தேவையானவற்றை செய்து முடிக்கும் தன்மை உடையவளாக இருக்க வேண்டும் என்று திருக்குறள் எடுத்துக்கூறுகிறது.  இந்தக் கருத்தை ஒத்திருக்கும் பல இடங்கள் நல்லாப்பிள்ளை பாரததத்தில் இடம்பெற்றுள்ளது.

    பூருவின் மனைவியாகிய கௌசலையை மனைவியின் மான்பு உடைய கௌசலை என்று சிறப்பிக்கின்றார்.

    கௌசிக முனிவருக்கு மனைவியின் கற்பு நிலையை உணர்த்தும்போது கடவுளைப்போற்றியவள் இல்லை. இவள் கனவனைப் போற்றியவள் என்று கூறுகிறார்.(கௌசிக சருக்கம்.23)

    உயிர் பெற்ற சத்தியவான் சாவித்திரியை புகழ்வதாக வரும் சாவித்திரி கதை சருக்கம் 77 திருக்குறளில் 53வது குறளை ஒத்து உள்ளது.

    பல ஒழுக்கங்களும் படிக்கும் புத்தகங்களால் பயன் அடைவதும் அதனால் கிடைக்கக்கூடிய ஒளியும் வெற்றியும் புகழும் இன்பமும் கற்பு உடைய மனைவியால் கணவன்  பெறலாம் என்று நாடு கரந்துரை சருக்கத்தில் 67 வது பாடலில் கூறப்பெற்றுள்ளது.

    கற்பு என்பது திருமணம் நடப்பதற்கு முன்பு தாயும் தந்தையும் சொல்லிக்கொடுத்ததன் வழியாகக் நடப்பதும் அல்லது நடைமுறைப்படுத்துவதும், திருமணத்திற்கு பிறகு கனவனின் சொல்லை கேட்டு அதன்படி நடப்பதும், பிறகு மக்கள் சிறந்த ஒழுக்கம் என்று கருதுவதை பின்பற்றுவதும் பெண்ணின் கடமை என்று அற புத்தகங்கள் சொல்லும் அந்த கருத்தை திருவள்ளுவர் 54வது குறளில் கூறியிருக்கிறார்.

    இந்தக்கருத்தை ஆசிரியர் கணவனின் சொற்படி நடப்பது மனைவிக்கு அணி, நெறி இவற்றை அளிக்கும் என்கிறார்.

    தன்னை நினைத்து அழைத்த திருதராட்டிரனை நோக்கி வியாசன் கூறுகிறான் ”கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு அருமையானது ஒன்றும் உலகில் இல்லை; எளிதில் கிடைக்கும்” என்கின்றான்.

    இதனை விளக்குவது,

    மாதவன் கமல மங்கை கேள்வனரி

    வாசுதேவன் முகில் வண்ணன்

    பாத பங்கயம் உளங்கொள்வோர்க்கு அரிது

    பாரில் இல்லை (சஞயன் தூது.234)

    திருக்குறளில்,

    வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தாருக்கு

    யாண்டும் இடும்பை இல

    என்று உள்ளது.

    யாயாதி சருக்கத்தில் கடவுள் வாழ்த்தில் கண்ணனை,

    இணை இல்லாதவன் இறப்போடு பிறப்பென்னும் கடலுக்கோர்

    புணையும் ஆனவன் புனிதர்கள் மனத்துறை புனிதன் (யாயாதிசருக்கம் 1)

    என்று பாராட்டுகிறார். இவற்றுள், இணையில்லாதவன் என்பது தனக்கு உவமை இல்லாதவன் என்பதுடன், இறப்போடு பிறப்பென்னும் கடலுக்கோர் புணையும் ஆனவன் என்பது பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் என்கிறார் வள்ளூவர்.

    முடிவுரை:

     வள்ளுவர் ஒரு போதும் தனி மனிதனுக்கென்று அறத்தைச் சொல்லவில்லை.

    ஒருவன் செய்வதை பாராட்டியும் மற்றாவர்கள் செய்வதை தாழ்த்தியும் பேசவில்லை.

    குற்றத்தை உயர்ந்தவர்கள் செய்யலாம் என்ற சிந்தனை இல்லை.

    தவறு யார் செய்தாலும் தவறு.

    மனிதர்கள் பிறப்பால் உயர்ந்தவர்கள் இல்லை.

    மனிதன் செயலால்தான் உயர முடியும்.

    வர்க்க பேதங்கள் அறவே இல்லை.

    மனிதர்களுக்குள் வேறுபாடு  ஏற்புடையதன்று.

    வள்ளுவரின் அறச்சிந்தனைகள் பொதுமைப்பண்புடையது.

    மகாபாரதச் சிந்தனைகள் அவ்வாறின்றி அதன் எதிர் சிந்தனையில் பயணம் செய்கிறது.

    Share
  • தீபாவளி பலகாரம்!

    பவள சங்கரி

    தீபாவளி நெருங்குகிறது.  கடைகளில் பலகாரம் வாங்குவோர் கவனம்! டெங்கு, விசக்காய்ச்சல்கள் என நோய்கள் தீவிரமாகியுள்ள இந்த சூழ்நிலையில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம்!

    பதிவு பெற்ற நிறுவனங்களிடமிருந்து மட்டுமே இனிப்பு வகைகள் வாங்கவேண்டும் என்று உணவு பாதுகாப்புத் துறை அறிவுரை! தரமான மூலப்பொருட்களைக்கொண்டு சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும். கலப்பட பொருட்கள், அதிகமான நிறமிகள் உபயோகிக்கக்கூடாது. பெயர், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியாகும் தேதி, தயாரிப்பாளர் பெயர் போன்றவைகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். தயாரிக்கும் இடம், விற்கும் இடம் சுத்தமாக ஈ, கொசு, பூச்சிகள் வராமல் காக்கப்பட வேண்டும். இது பற்றி புகார் இருந்தால் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் அல்லது மாநில உணவு பாதுகாப்புத் துறை அலுவலகத்திற்கோ புகார் அளிக்கலாம்.

    Share
  • மக்கள் தொலைக்காட்சியில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா ஒளிபரப்பு!

    அன்புடையீர், வணக்கம்

    விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா அண்மையில் புதுச்சேரியில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்கள் இந்த விழாவில் ஆற்றிய உரையின் முதன்மைப்பகுதிகளும், ஆவணப்படத்தின் முதன்மைக் காட்சிகளும் வரும் 14.10.2017 சனிக்கிழமை (இந்திய நேரம்) காலை 8.30 மணிமுதல் 9 மணி வரை மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழார்வலர்கள் இந்த நிகழ்ச்சியைத் தொலைக்காட்சியிலும், இணையத்திலும் பார்க்க இயலும். தாங்கள் கண்டு மகிழ்வதுடன் தங்கள் நண்பர்களுக்கும் இந்தச் செய்தியைத் தெரிவித்துப் பார்க்கச் செய்யுங்கள்.

    இணையமுகவரி:

    Home

    இடைக்கட்டு மு.இளங்கோவன்

    Dr.Mu.Elangovan
    Assistant Professor of Tamil
    K. M. Centre for Postgraduate Studies,
    Government of Puducherry,
    Puducherry-605 008, India

    E.Mail : muelangovan@gmail.com
    blog: http://muelangovan.blogspot.com
    cell: +91 9442029053

    Share
  • தமிழர் திருநாள்

      முனைவர் .ஆனந்தி

     

    சுழன்றும் ர்ப்பின்னது

    உலகம் என்றான்

    வள்ளுவன்!

     

    ர் கையால் பிடித்து

    அகம் புறம் அறிந்து

    வேண்டாதவைகளைக்

    கலைந்துஅதனையே

    உரமாக்கி நல்ல

    விதைகளை விதைத்து

    வியர்வையை நீராக்கி

    மும்மாரி பொழிந்ததில்

    மூன்று போகம்

    பயிர் செய்தவன்

    என் சங்கத் தமிழன்!

     

    வயலில் விளைந்த

    வெள்ளாமை

    வீட்டுக்கு வருகையில்

    மண்பானை வனைந்து

    அதன் கழுத்தில்

    மஞ்சள் இஞ்சி புனைந்து

    மண்மணம் கமழ

    அடுப்பமைத்து

    மாக்கோலம் அதிலிட்டு

    மங்கையவள்

    மகிழ்ந்திட்டாள்!

     

    பசும்பாலும் பச்சரிசியும்

    பானையில் கலந்திருக்க

    பொங்கி வரும்

    அழகைக் கண்டு

    புதுவெல்லம் ஏலம்

    உடனிட்டாள்!

     

     

    கன்னலும் கதலியும்

    பக்கத்தில் இருக்க

    கதிரவனுக்கு பொங்கலிட்டாள்!

    மகிழ்ச்சி பொங்கியது

    மக்கள் மனதும்

    பொங்கியது!

    காளையர்கள்

    காளைகளைத் தழுவினர்!

    தாவணியில் தவழ்ந்த

    என் தமிழச்சியை

    மணம்முடிக்க

     

    என் தலைமுறைக் காணாத

    ஒன்றை தமிழன்

    திருவிழாவாக நடத்தினான்

     

    இன்று….

    உழைப்பை மட்டுமே

    அறிந்தவனுக்கு

    உழுது பயிரி

    நிலம் இல்லை

    மாதம் மும்மாரி

    பெய்த மழை

    மனிதனின் மாற்றத்தால்

    பருவம் தவறியது!

    நிலமின்றி தவித்தவன்

    இப்போது

    நீரும் இன்றி தவிக்கிறான்!…

    ஏறு தழுவி மணம் முடித்தவன்

    இன்று ஏறு தழுவுதலுக்கே

    மனு போட்டுக்

    கொண்டிருக்கிறான்!

     

    காவிரி நீரெடுத்து

    கழனியெல்லாம் வெதவெதச்சு

    காத்திருந்த கையேர் உழவனுக்கு

    வானம் பொய்த்தது

    வைகையும் பொய்த்தது

    கனத்த இதயத்தோடு இருந்தவன்

    இருமுழம் கயிற்றுக்கு உறவானான்.

     

    தமிழர் திருநாள்

    விடுமுறை கழிக்க அல்ல

    தன் மானத்தை

    இளம் நெஞ்சில் விதைக்க

    விவசாயம் நம்

    வாழ்வாதாரம் என்று

    சொல்லிக் கொடுக்க

    விவசாயி நம்

    மன்னர்கள்

    என்றுரைக்க

    அறிவியலை கடைந்தெடுக்கும்

    தமிழனே

    உழவனுக்காய்

    ஒரு சிந்தனை

    உதிக்க வில்லையா?

     

    விவசாயத்திற்கு

    ர் புரட்சி

    வாராதா?…

    இந்த நூற்றாண்டில்

    என் தந்தை ர் விவசாயி

    என்பதை விட

    நான் ர் விவசாயி

    என்பதில்

    பெருமைக் கொள்ளச்

    செய்வோம்!

     

    மீண்டும் மலரும்

    தமிழர் திருநாள்

    கன்னலும் கதலியும்

    உடனிருக்க

    பொங்கலிடுவாள்

    இல்லாள்…..!

     

     

    Share
  • அழகான வாழ்வு !

     

          ( எம் . ஜெயராமசர்மா …… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

     

     

    கனவினிலும் பெரியோரைக் காணவேண்டும்

    நினைவினிலும் பெரியோரை நிறுத்தவேண்டும்

    உணர்வெல்லாம் உயர்வாக இருக்கவேண்டும்

    உள்ளமதில் கள்ளமதை ஒழிக்கவேண்டும்

    தனிமையிலே இன்பமதைக் காணவேண்டும்

    தறிகெட்டு ஓடுவதை நிறுத்தவேண்டும்

    புவிமீது உள்ளார்கள் இவற்றைச்செய்யின்

    புனிதமுடை வாழ்வெமக்குக் கிடைக்குமன்றோ !

     

    சமையமதைத்  துணையாக கொள்ளவேண்டும்

    சன்மார்க்க வழியினிலே நடக்கவேண்டும்

    சினமென்னும்  நெருப்பதனை அணைக்கவேண்டும்

    தீங்குசெய்யும்  மக்கள்தமை  ஒதுக்கவேண்டும்

    ஆண்டவனை தினமும்மனம் நாடவேண்டும்

    ஆசையெனும் தீயினைநாம் அகற்றவேண்டும்

    வேண்டிடுவார்க் குதவிதனைச் செய்தல்வேண்டும்

    விருப்புடனே யாவரையும் பார்த்தல்நன்றே !

     

     

    மற்றவரைக் குறைசொல்லல் தவிர்த்தல்வேண்டும்

    வம்புபேசி நிற்பதையும் நிறுத்தல்வேண்டும்

    எப்பவுமே எதிர்வாதம் குறைத்தல்வேண்டும்

    ஏளனமாய் நோக்குவதை விலக்கல்வேண்டும்

    தப்புச்செய்வார் மனந்திருந்த நடத்தல்வேண்டும்

    தாராளம் எம்மனத்தில் இருத்தல்வேண்டும்

    முப்பொழுதும் முகமலர்ச்சி கொள்ளல்வேண்டும்

    முழுமையுடன் வாழ்வதற்கு முயல்தல்நன்றே !

     

    மூத்தோரின் வார்த்தையினை மதித்தல்வேண்டும்

    மூர்க்கருடன் பழகுவதைத் தவிர்த்தல்வேண்டும்

    சாத்தானாய்  வருவோரை ஒதுக்கல்வேண்டும்

    சாந்தியினை மனமெங்கும் நிறைத்தல்வேண்டும்

    வார்த்தையினை அளந்தளந்து பேசல்வேண்டும்

    வருவாயை மனமிருத்தி வாழ்தல்வேண்டும்

    ஆர்ப்பரிக்கும் குணமதனை அகற்றிநின்றால்

    அழகான வாழ்வெமக்கு அமையுமன்றோ !

     

     

     

     

    Share
  • அமெரிக்காவில் நீதித்துறையிலும் இனதுவேஷம்!

    -நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்கா என்ற நாடு உருவானதிலிருந்தே இனத்துவேஷம் அங்கு இருக்கிறது.  அமெரிக்கர்கள் ஆப்பிரிக்காவிலிருந்து அவர்கள் விருப்பத்திற்கு மாறாகக் கொண்டுவந்த ஆப்பிரிக்கர்களை அடிமைகளாக வைத்திருந்தனர். பின்னால் உள்நாட்டுப் போருக்குப் பிறகு அவர்கள் அடிமைத்தளையிலிருந்து விடுவிக்கப்பட்டு சுதந்திரம் வழங்கப்பட்டுக் குடிமையுரிமைகளும் பெற்றனர்.  ஆயினும் இன்றுவரை அமெரிக்காவில் கருப்பர்கள் இரண்டாம்தரக் குடிமக்கள்போல்தான் நடத்தப்படுகின்றனர்.  கருப்பர்கள் பலர் காவல்துறை அதிகாரிகளால் எவ்வித முகாந்திரமும் இன்றிச் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள்.  ஒரு வெள்ளை இனப் பெண்மணியைக் காரில் சென்றுகொண்டிருந்தபோது காவல்துறை அதிகாரி ஒருவர் நிறுத்தியிருக்கிறார்.  அந்தப் பெண்மணி பயந்துகொண்டே காரிலிருந்து இறங்கியிருக்கிறார்.  அதைப் பார்த்து அந்த அதிகாரி, ‘நீ கருப்பினத்தைச் சேர்ந்தவள் இல்லையே.  பின் ஏன் இப்படிப் பயந்து நடுங்குகிறாய்?’ என்று கேட்டாராம்! கருப்பர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்று தெரிந்துகொள்வதற்கு இது ஒன்றே போதும்.

    நீதித்துறையும் கருப்பர்களுக்கு எதிராகச் செயல்படுகிறது என்பதற்கு இன்னொரு சோகக் கதை.  ஜான் தாம்ஸன் 1984இல் செய்யாத ஒரு கொலைக்குற்றத்திற்குத் மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பதினான்கு ஆண்டுகளைச் சிறையில் கழித்தார்.  அது மட்டுமல்ல, அந்தப் பதினான்கு ஆண்டுகளில் ஆறு முறை இவர் தூக்கிலிடப்படுவதற்காக நாள் குறிக்கப்பட்டது. ஏழாவது முறை நாள் குறிப்பதற்குச் சில வாரங்களுக்கு முன்னால் இவருடைய வழக்கறிஞரால் நியமிக்கப்பட்ட ஒரு துப்பறியும் நிபுணர் அதுவரை அரசு வழக்கறிஞர்களால் மறைக்கப்பட்ட, புலனாய்வுக் கூடம் செய்த ஆய்வின் முடிவைக் கண்டுபிடித்தார். குற்றம் நடந்த இடத்தில் சிந்தியிருந்த ரத்தம் தாம்ஸனுடையது அல்ல என்பதே இந்த முடிவு.  இது அரசு வழக்கறிஞர்களுக்குத் தெரிந்திருந்தாலும் நீதிமன்றத்திற்குத் தெரியாமல் மறைத்துவிட்டார்கள்.  வழக்கில் ஒரு திருப்பத்தை இது ஏற்படுத்தி மறுவிசாரணையில் தாம்ஸன் விடுவிக்கப்பட்டார்.  இந்த முறை முப்பத்தைந்தே நிமிடங்களில் தாம்ஸன் குற்றமற்றவர் என்று ஜூரிகள் முடிவுசெய்தனர். 

    குற்றம் புரியாத தன்னை இத்தனை நாட்கள் சிறையில் வைத்திருந்ததால் மிகவும் கோபமுற்ற தாம்ஸன் லூஸியானா மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் மீது அந்த அலுவலகத்திற்குக் கீழ் இயங்கும்  அரசு வழக்கறிஞர்களுக்கு  அந்த அலுவலகம் சரியான பயிற்சி கொடுக்கவில்லை என்று வழக்குப் போட்டார்.  குற்றம் சுமத்தப்பட்டவர்களை விடுவிப்பதற்குரிய சான்றுகளையும்  நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்னும் அரசியல் சாசனச் சட்டத்தின் பகுதியை அவர்களுக்குக் கற்பிக்கவில்லை என்றும் தன் வழக்கில் கூறியிருந்தார்.  இந்த வழக்கில் லூஸியானா மாநில உச்சநீதிமன்றம் தாம்ஸனுக்கு சாதகமாகத் தீர்ப்பளித்து அவருக்கு ஒன்றரைக் கோடி டாலர் பணம் பெற்றுத் தந்தது.

    ஆனால் அரசு வழக்கறிஞர்கள் இந்த வழக்கை அமெரிக்க உச்ச நீதிமன்றம்வரை கொண்டுசென்றனர்.  அங்கு ஐந்து நீதிபதிகள் இந்த வழக்கில் தாம்ஸன் அரசு வழக்கறிஞர்களுக்குச் சரியான பயிற்சி கொடுக்கப்படவில்லை என்பதைச் சரியாக நிரூபிக்கவில்லை என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தனர்.  தாம்ஸனுக்கு நஷ்ட ஈடு கிடைக்காமலே போயிற்று.  இந்த வழக்கில் தாம்ஸனுடைய வாதத்தை உச்சநீதிமன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும் தவறாகத் தண்டிக்கப்பட்டு சிறையில் பதினான்கு வருடங்கள் இருந்ததற்காகவாவது நஷ்ட ஈடு வழங்கியிருக்கலாம்.  தாம்ஸனுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கிய நான்கு நீதிபதிகளில் ஒருவர் (அமெரிக்க உச்சநீதிமன்றத்தில் ஒன்பது நீதிபதிகள் இருக்கிறார்கள்) ‘இந்த வழக்கு நடைபெற்ற சமயம் இதில் பணிபுரிந்த ஐந்து அரசு வழக்கறிஞர்களும் நீதியை நிலைநாட்டத் தங்களுக்குக் கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டுவிட்டார்கள்’ என்று  தன் தீர்ப்பில் கூறியிருந்தார்.

    லூஸியானா மாநில அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞருக்கு ஜனாதிபதி ட்ரம்ப் சென்ற மாதம் மத்திய நீதிமன்றம் ஒன்றில் நீதிபதி பதவி கொடுத்திருக்கிறார்.  இவர் அமெரிக்கப் பாராளுமன்ற செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட்டால்  (ஜனாதிபதியால் மத்திய முறையீடு நீதிமன்றங்களுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதிகள் செனட்டர்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்)  அந்தச் செய்தியைத் தெரிந்துகொண்டு நெஞ்சில் வேதனையைச் சுமக்க தாம்ஸன் இன்று உயிரோடு இல்லை.  2017 அக்டோபர் மாதம்  ஐந்தாம் தேதி அவர் தன்னுடைய 55வது வயதில் மாரடைப்பால் இறந்துபோனார்.         

    2011இல் நியுயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தாம்ஸன் எழுதிய கட்டுரையில் தனக்கு நஷ்ட ஈடு கிடைக்காதது பற்றித் தான் கவலைப்படவில்லை என்றும் தன்னையும் மற்றும் சிலரையும் தவறாகச் சிறைக்கு அனுப்பிவைத்த அரசு வழக்கறிஞரைத் தண்டிக்க வேண்டும் என்பதுதான் தன்னுடைய எண்ணம் என்றும் எழுதியிருந்தார்.  சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட பிறகு தாம்ஸன் நீதித்துறையின் மீதிருந்த தன் கோபத்தையெல்லாம் இவரை மாதிரிப் பொய்யாகக்  குற்றம் சுமத்தப்பட்டுப் பின்னால் விடுவிக்கப்பட்டவர்களுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதன் மூலம் தீர்த்துக்கொண்டார்.  கொடையாகக் கிடைத்த கொஞ்சம் பணத்தைக்கொண்டு ஒரு எளிமையான வீட்டை வாங்கி வஞ்சிக்கப்பட்ட பலரை அதில் தங்கவைத்து அவர்களுக்கு நியாயம் கிடைக்கப் பாடுபட்டார். இதில் கொஞ்சம் அமைதி கிடைத்தது.

    இருப்பினும் பல முறை தூக்குமேடைக்குப் போக நேர்ந்த அனுபவத்தில் உடலும்  உள்ளமும் வெகுவாகப் பாதிக்கப்பட்டு இளம் வயதிலேயே இறந்துபோனார்.

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . .(251)

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். மடலோடு உங்களுடன் கலந்துரையாட விரைந்து வரும் வேளையிது. இருந்தால் இருப்போம், மடிந்தால் மடிவோம் இதுதான் உலக வாழ்க்கையின் நியதி. காலங்கள் எத்தனையோ மாறினாலும், விஞ்ஞானம் கரைபுரண்டோடினாலும் அன்றும், இன்றும் இவ்வகிலத்தில் நாமறிந்த மாற முடியாத, எம் ஒருவராலும் மாற்ற இயலாத உண்மை இதுவேயாகும். இவ்வுண்மை தினமும் எமக்குள் உறைந்திருந்தாலும் சமயங்களில் அனைத்தையும்விட நாம் தேடும் விடயங்கள் எமக்கு வாழ்வினில் முக்கியமானவைகளாக மாறிவிடுகின்றன. நிலையற்ற வாழ்வில் நாம் தேடும் பொருள்கள் மட்டும் ஏனோ நிலையானவை போலத் தென்படுகிறது. இதுதான் மனத்தின் மாயை என்று கூறப்பட்டதோ எனும் எண்ணம் மனதில் எழாமலில்லை..

    எங்கெங்கோ பிறந்தவர்கள் இன்று எங்கெங்கோ இடம் பெயர்ந்து வேறெங்கோ தம் வாழ்வினை அமைத்து வாழும் நிலை காண்கிறோம். காலக் காற்றில் அகப்பட்ட சருகினைப் போல வாழ்வின் தேவைகள் எனும் திசையில் நாம் அடித்துச் செல்லப்படுகிறோம். ஆனால் அப்படியான பிரயாணம் கூட சில கட்டுப்பாடுகள், சில கட்டுக்கோப்புகள், சில நியதிகளுக்குள் தான் நடந்தேற வேண்டுமென்ற நியதி இவ்வுலகில் விதிக்கப்பட்டிருக்கிறது. இவ்விதிகளை, இந்நியதிகளை வெவ்வேறு நாடுகளில் அந்த நாடுகளின் கலாசாரத்துக்கு ஏற்ற வகையில் முன்னோர்கள் வகுத்து வைத்திருந்தார்கள். மன்னராட்சி என்று தொடங்கி இன்று மக்களாட்சி எனும் வகை ஜனநாயகம் எனும் பெயரில் பல நாடுகளில் காட்சிகளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வேறு சில நாடுகளிலோ தனிமனித அதிகாரங்கள் சர்வாதிகாரமாக மக்களின் மீது திணிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இவ்விருவகையிலான அமைப்புக்களின் தாக்கங்கள் அந்த நாடுகளில் வாழும் சாதாரண பிரஜைகளின் மீதே தெறிக்கின்றன. தமது முறையில் நியாங்களை முன்வைப்பதையே ஊடகப் பிரசாரங்கள் மூலம் அந்த நாடுகளின் அதிகார வர்க்கங்கள் இயம்பிக் கொண்டிருக்கின்றன.

    உண்மைக்குப் புறம்பான விடயங்கள், உண்மையே அல்லாத விடயங்கள் ஊடகங்களின் மூலம் நியாயப்படுத்தப்படும்போது அங்கே உண்மையின் சாட்சியங்கள் வாயடைத்துப்போய் மெளனிகளாகி விடுகின்றன.

    என்ன எதை நோக்கி எனது இவ்வார மடல் பயணிக்கிறது? எனும் கேள்வி எழுகிறதா ? சற்றுப்பொறுங்கள்… விளக்கத்துக்கு வருகிறேன்.

    இன்றைய இங்கிலாந்தின் சரித்திரம் இன்று ஒரு முக்கியமான சந்தியில் நிற்கின்றது . இது முச்சந்தியோ அன்றி நாற்சந்தியோ அல்ல; வெறும் இரண்டே இரண்டு தெருக்களைக் கொண்ட ஒரு சந்தியே. இச்சந்தியில் எந்தப் பாதையில் போவது என்பதை மக்களே நீங்களே தீர்மானியுங்கள் என்று எமது முன்னால் பிரதமர் டேவிட் கமரன் மக்களின் முடிவுக்கு 2016ஆம் ஆண்டு விட்டார். ஆனால் எந்தப் பாதையில் போகக்கூடாது என்று தான் நம்புகிறேன் என்பதையும் கூறினார். விளைவு மக்கள் தேர்ந்தெடுத்த பாதை அவர் சிபாரிசு செய்த பாதைக்கு முற்றிலும் முரணானது. இன்று அவர் பிரதம மந்திரியாகக் கூட அல்ல அரசியலை விட்டே ஒதுங்கி விட்டார். இன்றைய இங்கிலாந்து மக்களின் முன்னால் இருக்கும் கேள்வி அவரைப் பற்றியதல்ல. அவர்கள் தேர்ந்தெடுத்த பாதையை தேர்ந்தெடுக்கும்படி செய்யப்பட்ட பிரசார கர்த்தாக்கள் உண்மைகளை உண்மையாக அவர்களுக்கு புடம் போட்டுக் காட்டினார்களா? அன்றி உண்மைகளின் தோற்றத்துக்கு மெருகேற்றி அவைகளை மிகைப்படுத்தப்பட்ட உண்மைகளாகக் காட்டினார்களா ?என்பதுவே ! ஒருவர் அரசியலுக்குள் நுழைவதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உண்டு.

    1. ஒரு கொள்கை மீது கொண்ட தீவிரமான பிடிப்பு
    2. மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் எனும் உன்னத நோக்கம்
    3. தம் தேசத்தின் மீது கொண்ட பற்று

    இங்கு எது முக்கியத்துவம் பெறுகிறது என்பதைப் பொறுத்தே அவர்களின் அரசியல் பிரவேசத்தின் உண்மையான பரிணாமம் விளங்கப் பெறுகிறது. நாடும், மக்களும் எக்கேடு கெட்டுப் போனாலும் நான் கொண்ட கொள்கை வெற்றி பெற்றால் அதுவே என் வெற்றி என்று நினைப்பவர் ஒரு புறம், மக்களின் நன்மைக்காக, எனது தேசத்தின் சுபிட்சத்துக்காக எனது கொள்கை குறுக்கே வரும்போது அதைக் கொஞ்சம் மாறுதலுக்குள்ளாக்கி ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை கொண்டவர்கள் மறுபக்கம் நின்று மக்களுக்காக, மக்களையே குழப்பும் ஒரு நிலைக்கு இன்றைய இங்கிலாந்து மக்கள் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றொரு உணர்வு எழுகிறது.

    ஒரு தொண்டனுக்குக் கொள்கையும், கட்சியும் முக்கியம் என்பது மறுக்கப்பட முடியாதது. ஆனால் நாடு சீரழியப் போகிறது எனும் ஒரு நிலை வரும்போது தமது கட்சி பேதங்களை ஒருபுறம் தள்ளி ஒருமைப்பட்ட குரலில் , தமது வலுவினைக் காட்டி தமது நாட்டிற்கான தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளும் மன தைரியம் இன்றைய இங்கிலாந்து முக்கியக் கட்சிகளின் தலைவர்களுக்கு உண்டா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.

    “ப்ரெக்ஸிட்” எனும் பாதையில் இங்கிலாந்தின் எதிர்காலப் பயணம் அமையப்போகிறது என்பதை மக்கள் தீர்மானித்த பின்னர் இப்பாதையில் பயணிப்பதற்கு அதன் கரடு முரடான பாதையின் குலுக்கல்களைச் சந்திப்பதற்கு பயணப்படும் வாகனம் எத்தகையதாக இருக்க வேண்டும் என்பதைத் தீர்மானிப்பதற்கு நடத்தப்படும் பேச்சுக்களில் இங்கிலாந்து ஒரு வலுவற்ற நிலையில் கலந்து கொள்ளுமேயாகில் அப்பேச்சுக்களினால் விளையப் போகும் முடிவுகள் பயணத்தை இலகுவாக்க உதவாது. இன்று இங்கிலாந்துப் பிரதமர் தெரேசா மே அவர்களைக் கவிழ்க்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் இறங்குவது எதிர்பார்க்கக்கூடிய விடயமென்றாலும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்களே தமது சுயலாபங்களுக்காக அவரது முதுகில் குத்தும் முயற்சியில் இறங்குவது நடுத்தரமான நிலையில் நாட்டின் பொருளாதார நிலையை நோக்கி கவலைப்படுவோரை கலங்க வைக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று. எமது படையை வழிநடத்தும் தளபதியை நாமே காயப்படுத்தி விட்டு எதிரணியில் இருப்பவர்களுடன் வலுவான நிலையில் எதிர்ப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பது மூடத்தனமான செயல்.

    இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகித் தனியான பயணத்தை மேற்கொள்ள வேண்டிய காலக்கெடுவின் இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. எமது எதிர்காலச் சந்ததியின் வாழ்க்கை ஒரு நிலையான அடித்தளத்தில் உருவாக்கப்பட வேண்டுமென்றால் இன்று எம்முன்னே இருக்கும் கடமை தெளிவானது. கட்சி பேதங்களை மறந்து எமது பிரதமருடன் ஆரோக்கியமான வாதங்களை முன்வைத்து அவருடைய ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சு வார்த்தைகளின் வெற்றிக்கு எமது பக்கபலத்தை அளிப்பது முக்கியமானது. எமது பிரதமர் முதலில் எமது ஆதரவுடன் எம்மால் எதிர்பார்க்கப்பட்ட வகையில் இப்பேச்சுகளை வெற்றியாக முடித்து எம்மை சரியான பாதையில் பயணிக்க வைக்கட்டும். அதன் பின்னால் நாம் எமது உள்நாட்டு அரசியல் சகோதரச் சண்டைகளை வாக்குப் பெட்டிகளின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

    “நாடென்ன செய்தது நமக்கு எனக் கேள்விகள் கேட்பது எதற்கு?
    நாமென்ன செய்தோம் அதற்கு என நினைத்தால் நன்மை எமக்கு!
     

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    Share
  • அவன், அது , ஆத்மா” (ஒரு எளிய மனிதனின் சுயசரிதை 51)

    மீ.விசுவநாதன்

    அத்யாயம்: 51

    கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்

    கொங்குத் தமிழால் கொஞ்சும் கவிதைகளை எழுதி அதை அப்படியே கேட்போர் மனத்துள் அப்பிவிடும் ஆற்றல் படைத்த பெருமகனார் கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலம் அவர்கள். சிறந்த மரபுக் கவிஞர். அவனுக்கு அவரது இசைகலந்த குரலில் அவரது கவிதையைக் கேட்க ஒரு தனி விருப்பம் உண்டு. பொதுவுடைமைக் கொள்கையையும், மனித நேயத்தையும் உட்கருத்தாகக் கொண்டிருக்கும் கவிதைகளைப் படைப்பவர் அவர். தும்பைப் பூப்போல வெள்ளை வெளேர் என்ற கதர் வேட்டியும், ஜிப்பாவும் போலவே அவரது மனமும் சுத்தமானது என்பது அவருடன் பழகியோர்களுக்கு நிச்சயம் புரியும். அவனுக்கு அந்தக் கவிஞருடன் பழகும் வாய்ப்பு அமைந்திருந்தது. “பாதை தெரியுது பார்” என்ற திரைப்படத்தில் அவர் எழுதி, எம்.பி. ஸ்ரீநிவாசன் இசையமைத்து மிகவும் பிரபலமடைந்த பாடல்தான்,

    சின்னச் சின்ன மூக்குத்தியாம்
    சிகப்புக் கல்லு மூக்குத்தியாம்
    கன்னிப் பெண்ணே உன் ஒய்யாரம் கண்டு
    கண்ணைச் சிமிட்டுற மூக்குத்தியாம்”

    இந்தப் பாடலை அவன் இப்பொழுதும் விரும்பிக் கேட்டுக் கொண்டிருப்பான்.

    கவிதை என் கைவாள் என்று சொன்னவரின் கவிதைத் தொகுப்பு “பாட்டு வராத குயில்”. நமது சமுதாயம் நல்ல முறையில் இருக்க வேண்டும் என்ற அவரது நியாயமான எண்ணத்தை வெளிப்படுத்தும் கவிதைகளின் தொகுப்பு அது. உதாரணத்திற்கு ஒரு கவிதையை இங்கு தருகிறேன்.

    “சாதிவேறு பாடுகள்கூறி

    சண்டை நடக்கிறது – உங்கள்

    மண்டை உடைகிறது.

    சமய ஞானிகள் பேரைச் சொல்லி

    தலைகள் உருள்கிறது – நூறு

    கொலைகள் விழுகிறது”

    “நமக்குண்ணே ஒரு

    பொழுது விடியணும் – அது

    நம்மாலேதான் நடந்து முடியணும்

    சூரியன் கழுத்தில் துண்டைப் போட்டு

    சுண்டி யிழுக் கோணும்

    சும்மா நின்னா புண்ணியம் இல்லை இதை

    கண்டு நடக்கோணும்”

    1990ம் வருடம் செப்டம்பர் மாதத்தில், சென்னை தேனாம்பேட்டைப் பகுதியில் இருக்கும் ஸ்ரீனிவாச காந்தி நிலையத்தில் ஒரு கவியரங்கம். கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்தான் தலைமை. சுமார் ஒரு பதினைந்து கவிஞர்கள் கலந்து கொண்டார்கள். அவன் உட்பட கவிமாமணி வ.வே.சு., கவிதாயினி நிர்மலா சுரேஷ் ஆகியோர்களும் இருந்தனர்.

    “கிணறு தோண்டுவோம் வா –தரையில்
    கீரல் வெடிப்பினில் ஒருநாள் தண்ணீர்
    பீறிட் டெழுவது திண்ணம் நம்பு
    கிணறு தோண்டுவோம் வா “

    என்ற கவிதையை வ.வே.சு. படித்தது இன்றும் அவரது குரலிலேயே அவனது செவிகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அன்று அந்தக் கவிதைக்கு முதல் பரிசு கிடைத்தது.

    1982ம் ஆண்டு கன்யாகுமரி மாவட்டத்தில் இருக்கும் மண்டைக்காடு என்ற பகுதியில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையில் பகவதி அம்மன் கோவில் வழிபாட்டு விழாவின் போது நடந்த சண்டையில் ஏராளமானவர்கள் கொல்லப் பட்டனர். அந்தச் செய்தியை மறுநாள் இந்தியன் எக்ஸ்பிரஸ் முதல் பக்கத்தில் படங்களுடன் வெளியிட்டிருந்தது. அதைப் பார்த்து அவன் உறைந்து போனான். அப்பொழுது அவனுள் எழுந்த உணர்வின் வெளிப்பாடுதான் “மனித நேயம்” என்ற கவிதை. அதைத்தான் அவன் அன்றும் படித்தான்.

    “ஏசு நாதரும் விசுவ நாதரும்
    நேசம் வைத்தநம் நெஞ்சின் சிலைகள்தான்
    கன்னி மேரியோ கன்யா குமரியோ
    தன்னை உணர்ந்தவர் கண்ணில் ஒன்றுதான்
    பொய்யை மட்டுமே போற்றும் வாழ்க்கையில்
    தெய்வ உண்மைகள் தெரிவ தில்லைதான்
    மண்டைக் காட்டிலே மனித சக்திகள்
    சண்டை போடவா சமயம் வந்தது ?
    பெண்டு பிள்ளைகள் துண்டம் துண்டமாய்க்
    கொண்டு போகவா கோவில் வைத்தது?
    மதவ ளர்ச்சியா மனித நேயமா
    எதுஉ யர்ச்சியாய் இவர்க்குப் பட்டது?”

    இதை அவன் “மதவெறி ஏன்?” என்ற தலைப்பிட்டு 1982ம் ஆண்டே பாரதி கலைக்கழகக் கவியரங்கில் படித்தான். அவன் கவிதையைப் படித்து முடித்து அமர்ந்ததும் கவிமாமணி நா.சீ.வரதராஜன் அவர்கள் அவன் முதுகில் தட்டிக் கொடுத்து,” ரொம்ப நல்ல கவிதை விசு…” என்று பாராட்டி, இதன் தலைப்பை “மனித நேயம்” என்று மாற்றிக் கொள்” என்றார். அந்தக் கவிதையின் கருப்பொருள் இன்னும் மாறாது இருக்கும் வலியில்தான் எட்டு வருடங்கள் சென்ற பின்பும் அதை மீண்டும் அந்த அரங்கில் அவனைப் படிக்கத் தூண்டியது

    சிறுகதை எழுதத் தூண்டிய கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம்

    அந்தக் கவியரங்கம் முடிந்தவுடன்,” தம்பி…உங்களது கவிதை என்னை உலுக்கி விட்டது. இதற்குள் ஒரு சமூகக் கதையே இருக்கிறது. நீங்கள் கவிதையும் எழுதுங்கள். அத்துடன் சிறுகதைகளும் எழுதுங்கள்” என்றார் கே.சி.எஸ். “எனக்கு சிறுகதை எழுதிப் பழக்க மில்லையே” என்றான். ” இல்லை தம்பி…உங்களால் நல்ல கதைகள் எழுத முடியும். நீங்கள் நாளையே ஒரு சிறுகதை எழுதி “தாமரை”க்குத் தாருங்கள்” என்று ஊக்கப் படுத்தினார். வீட்டிற்கு வரும் வழியில் அது பற்றியே அவன் சிந்தனை செய்து வந்தான். ஒரு பொறிதட்டியது. இரவில் பத்து மணிக்குமேல் அதை ஒரு சிறுகதையாக எழுதினான். “சிலேட்டு” என்று அதற்குத் தலைப்புத் தந்தான். மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து சில திருத்தங்கள் செய்து அந்தக் கதையை பிரதி எடுத்தான். இதைச் செய்து முடிக்கும் பொழுது இரவு இரண்டு மணியானது. தூக்கம் வராமல் படுத்தபடியே விடியலுக்காகக் காத்திருந்தான். காலையில் ஆறுமணிக்கு அந்தச் சிறுகதையை அவனுக்கு அப்பாவிடம் காட்டி,’ அப்பா இந்தக் கதையை இரவில் எழுதினேன். நீங்கள் படித்துப் பாருங்கள்” என்றான். அவருக்கு நல்ல வாசிப்புப் பழக்கம் இருந்தது. அப்பாவின் அருகிலேயே அவன் உட்கார்ந்து கொண்டான். கதையைப் படித்து முடித்தார். “நன்னா இருக்கு. இத “சீதா”விடமும் காட்டு” என்றார். அவன் அவனுக்கு மனைவியிடம் அந்தக் கதையைப் படிக்கக் கொடுத்தான். ” கதையின் கருவும், நடையும் நல்லாருக்கு” என்று அவனுக்கு மனைவி சீதாலக்ஷ்மியும் சொன்னாள். ஒரு இனம் புரியாத இன்பத்தில் அவன் திளைத்தான். அலுவலகம் சென்று அங்குள்ள தன் நண்பர்களுக்கு அதைப் படிக்கக் கொடுத்து அவர்களது கருத்தையும் கேட்டறிந்தான். அவர்கள் பாராட்டினார்கள் அவனது சிறுகதை முயற்சியை. அவன் அந்தக் கதையை எடுத்துக் கொண்டு தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் (இப்பொழுது அதன் பெயர் செவாலியே சிவாஜி கணேசன் சாலை) இருக்கும் “வலது கம்யூனிஸ்ட் கட்சியின்” அலுவலகமான “பாலன்” இல்லத்திற்கு அன்று மதியம் இரண்டு மணிக்குச் சென்றான். அங்குதான் “தாமரை” மாத இதழின் அலுவலகமும் இருந்தது.

    தோழர் ஆர். நல்லகண்ணு

    தாமரை இதழ் அலுவலகத்தில் இருந்த ஒரு ஊழியரிடம் அவன் ஆசிரியர் கவிஞர் கே.சி.எஸ். அருணாசலம் இருக்கிறாரா ? என்று விசாரித்தான். அந்த ஊழியர் ஒரு கதர் வேட்டியும், சட்டை அணியாத திறந்த மார்புடன் தோளில் ஒரு துண்டையும் மடித்துப் போட்டிருந்தார். அவரைப் பார்க்க அவனது கிராமத்து ஒரு எளிய விவசாயியைப் போல இருந்தார். அவர் அவனிடம்,” என்ன விஷயமா அவரைப் பார்க்க வந்தீங்க?” என்றார். ” தாமரை இதழுக்காக ஒரு சிறுகதை கேட்டிருந்தார். அதை அவரிடம் கொடுக்க வேண்டும்” என்றான். ” என்னிடம் கொடுங்கள். இந்தக் கதையை தோழர் கே.சி.எஸ். வந்தவுடன் கொடுக்கிறேன்” என்றார். அவன் கொஞ்சம் தயங்கிய படியே நின்றான். “தம்பி..கவலைப் படடாதீர்கள். நான் அவரிடம் சேர்த்து விடுவேன். கதையை என்னிடம் தாருங்கள்” என்று வாங்கிக் கொண்டு, அங்கிருக்கும் ஒரு மரபெஞ்சைக் காட்டி ,” கொஞ்ச நேரம் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் வந்துவிடுகிறேன்” என்று உள்ளே சென்று விட்டார் அந்த எளிய மனிதர். இவர் யார் என்று தெரியாமலேயே கதையைக் கொடுத்து விட்டோமே என்ற நினைப்பில் அவன் அங்கே அமர்ந்திருந்தான். ஒரு பதினைந்து நிமிடங்கள் சென்ற பிறகு அந்த மனிதர் தன் கையில் அந்தச் சிறுகதையை வைத்துக் கொண்டு வெளியில் வந்து ,” தம்பி…இந்தக் கதை மிக நன்றாக இருக்கிறது. தொடர்ந்து நீங்கள் தாமரைக்கு உங்கள் படைப்புகளைத் தாருங்கள். ஆசிரியரிடம் இதைச் சேர்த்து விடுகிறேன்” என்று சொன்னார். அவன் மகிழ்ந்து போனான். அவரைப் பார்த்து,”ஐயா…நீங்கள் யார்?” என்று கேட்க, அவர் ,” தம்பி என்பெயர் ஆர்.நல்லகண்ணு” என்றார் ஒரு மெல்லிய புன்னகையோடு. அப்படிதான் அந்த எளிய மனிதர் அவனுக்கு அறிமுக மானார். அவனது முதல் சிறுகதை 1990ம் ஆண்டு அக்டோபர் மாத “தாமரை” இதழில் வெளியாகி அதன் ஒரு பிரதி அவனது வீட்டு முகவரிக்கே வந்து சேர்ந்தது.

    இதழைப் பிரித்து அவன் எழுதிய கதையைப் படிக்கும் பொழுதே ஒரு பரவசம் அவனுக்குள் பரவியிருந்தது. தொடர்ந்து நல்ல படைப்புகளைத் தரவேண்டும் என்ற உந்துதல் அவனுக்குள் பிரகாசமாகத் தெரிந்தது.

    13.10.2017

    அவன் மீண்டும் அடுத்தவாரம் வருவான்………..

    Share
  • காந்திக்கு ஒரு கடிதம்..!

    பெருவை பார்த்தசாரதி

    காந்தி

     

     

     

     

     

     

     

     

    தந்தையாய் ஆசானாய் ஈடில்லாத் தலைவனாயிருந்து

    வந்தனை செய்யும்படி வையமுழுதும் அறிந்தோனே.!

     

    நிந்தனை செய்தவர்கூட நிழல்போலுமைத் தொடர்ந்து

    சிந்தனையில் தெளிவுற்றடிமை வாழ்வினைத் துறந்தார்.!

     

    வாள்பிடித்து வெற்றிகண்ட மன்னர் பலருக்கிடையே

    தாள்பணிந்து அகிம்சையை தரணிக் குணர்த்தியவனே.!

     

    எழுபது ஆண்டுகள்பல ஆனபின்னும் இன்னுமேனோ

    எழவில்லை எம்நாட்டுப் பற்றெனுமரிய சுயசிந்தனை.!

     

    அகத்தினில் தீயவஞ்சகம் கொண்டோர் நாளும்பெருகி

    ஜகத்தினில் பெற்றசுதந்திரத்தைத் தாழ்வுறச் செய்கிறார்.!

     

    இப்பாரிலெவரும் எவர்க்கும் அடிமையிலை என்பதை

    தப்பாக விடுதலையைப் தவறாகப் புரிந்துகொண்டார்.!

     

    சுகங்கள் பலவாம் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாலென

    அகத்தில் தெளிவுற்றன்றே அறப்போரில் ஈடுபட்டோம்.!

     

    மண்ணில்பல வளமுண்டிதை அயலார் அபகரிக்காமல்

    திண்ணிய எண்ணமுடன் ஒன்றாகத்தான் போரிட்டோம்.!

     

    வானிலெழும் ஏவுகணைபோல் அன்றாடப் பொருட்கள்

    நானிலத்தில் விலையெகிறி விண்ணிலுயரப் பறக்குது.!

     

    பெருகிவிட்ட பெருமக்களால் பாரிலின்று பேதமுண்டு

    பருகும்நீர் விளையும்நிலம் எல்லைபேரமென ஏராளம்.!

     

    இயலாத ஒன்றுக்கும்…எளிதேகிட்டாத பலவற்றுக்கும்

    எழுந்த ஆசையினால் அடிமையின்னும் அகலவில்லை.!

     

    நல்லோரும் நாட்டுப் பற்றுடையோரும் நலிவுற்றதாலே

    நயவஞ்சகமெனும் கொடியநஞ்சு மீண்டும் உருவாகிறது.!

     

    உள்நாட்டில் கூடிவாழ்வோரிடம் குழப்பம் செய்வதை

    உள்ளத்தில் விஷமிடும் தொழிலாய் கொண்டோர்பலர்.!

     

    விண்ணிலிலுலவும் அண்ணலெனும் காந்தி அடிகளே

    விடுதலைக்காக விருதுவென்ற வியன்மிகு தலைவனே.!

     

    அவனியிலின்று நடந்தேறிக் கொண்டிருக்கும் அனைத்து

    அவலங்களையும் எழுதிவிட்டேன்.!ஏற்பீர்.!அண்ணலே.!

     

    நொந்திடும் இந்நிலைகள் முற்றிலுமடியோடு மாற..நீயும்

    வந்திங்கே பிறக்கவேணும்..மீண்டுமதே மஹாத்மாவாக.!

    =============

    நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::08-10-17

    நன்றி படம்:: கூகிள் இமேஜ்

    Share
  • குறுந்தொகை நறுந்தேன் – 6

    -மேகலா இராமமூர்த்தி

    காதலுக்காகத் தலைவன் சந்திக்கும் சங்கடங்களையெல்லாம் சங்க இலக்கியம் வாயிலாய் அறியும்போது, போர்க்களத்தில் செய்யும் வீரசாகசங்களைவிடக் காதற்களத்தில்தான் நம் ஆடவர் அதிகமாய்ச் சாகசங்களைச் செய்திருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

    பகற்குறிக்கண் காதலர் பொதுமக்கள் கண்ணிற்படும் அபாயத்தை யறிந்து பயந்தே தோழி இரவுக்குறி நயந்தாள். ஆனால் இரவுக்குறியோ மக்களால் நேரும் ஆபத்துக்களேயன்றி விலங்குகளாலும் அச்சந்தரு அடர்காட்டு வழிகளாலும் பகற்குறியினும் பலவாய ஆபத்துக்களைத் தருவதாயிற்று. இவைகுறித்துத் தலைவன் அஞ்சவில்லை என்றபோதும் தோழியும் தலைவியும் பெரிதும் அஞ்சத் தொடங்கினர்.

    இரவில் தன்னைச் சந்திக்கவரும் தலைவனுக்கு ஏதேனும் ஏதம் நேர்ந்துவிடுமோ என்று ஒவ்வொரு நாளும் அஞ்சிய தலைவி தோழியை நோக்கி,

    ”குன்றத்துக் கூகை (ஆந்தை) தன் பேடையைக் கூவியழைப்பினும், பலாமரத்தின் பெருங்கொம்பில் முசுக்கலை பாய்ந்து விளையாடினும் முன்பு அஞ்சுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தது என்னுள்ளம்; அது கழிந்தது! இப்போதோ நள்ளிரவில் நமை நாடிவரும் தலைவனின் நீண்ட வழிச்செலவு குறித்தும் அதிலுள்ள இன்னல்கள் குறித்துமே என் நெஞ்சு பெரிதும் அஞ்சி நிற்கின்றது” என்று ஆற்றாமையோடு புலம்பினாள்.

    குன்றக்  கூகை  குழறினும்  முன்றிற்
    பலவின்  இருஞ்சினைக்  கலைபாய்ந்  துகளினும்
    அஞ்சுமன்  அளித்தென்  நெஞ்சம்  இனியே
    ஆரிருட்  கங்குல்  அவர்வயிற்
    சாரல்  நீளிடைச்  செலவா  னாதே. (153 – கபிலர்)

    எப்படியேனும் தலைவனின் இரவுக்குறிக்கு(ம்) முற்றுப்புள்ளி வைத்துவிடுவதே நல்லது எனும் தலைவியின் உளவியலை இப்பாடல் மறைமுகமாய் உறைத்து நிற்கின்றது. தோழியின் எண்ணமும் அதுவேயாதலால், அடுத்தமுறை தலைவன் தலைவியைச் சந்திக்க இரவில் வரும்போது இதுகுறித்து அவனிடம் தீர்மானமாகப் பேசிவிடுவது எனும் முடிவுக்கு வந்தாள்.

    அவ்வாறே இரவில் தலைவியைக் காணவந்த தலைவனிடம் ஒருநாள்,  ”கரிய கண்களும், தாவுதலில் Monkeyதிறனுமுடைய ஆண்குரங்கு (கலை) இறந்துபட்டதென்று அறிந்த பெண்குரங்கானது (மந்தி), கணவனையிழந்து கைம்மையுற்று வாழவிரும்பாது, மரமேறுதல், தாவுதல் முதலிய தம்மினத்துக்குரிய தொழில்களை இன்னும் பழகாத பறழை (குரங்குக்குட்டி) தம் சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்குமலையிற் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மலைச்சாரலையுடைய நாட்டுக்குத் தலைவ! நீர் வரும்வழியில் உமக்கு நேரும் ஏதங்களை எண்ணியெண்ணித் தலைவியும் நானும் பெரிதும் வருந்துகின்றோம். ஆதலால் தலைவியைச் சந்திக்க இனி நள்ளிரவில் வாரற்க!” என்றாள்.

    இப்பாடலில் பயின்றுவரும் ’கருங்கண் தாக்கலை’ எனும் தொடருக்குக் கருங்கண்களையுடைய தாவிய கலை என்று உரையாசிரியர் சிலரும், கரிய இருளின்கண் தாவிய கலை என்றும் வேறுசிலரும் பொருளுரைக்கின்றனர். தாவிய கலை இறந்துபோனதை நோக்குகையில் இருளில் தாவிய கலை என்பதே சாலப் பொருத்தமாய்ப் படுகின்றது.

    கருங்கண்  தாக்கலை  பெரும்பிறிது  உற்றேனக்
    கைம்மை
     உய்யாக்  காமர்  மந்தி
    கல்லா
     வன்பறழ்  கிளைமுதற்  சேர்த்தி
    ஓங்குவரை
     அடுக்கத்துப்  பாய்ந்துயிர்  செகுக்கும்
    சாரல்
     நாட  நடுநாள்
    வாரல்
     வாழியோ  வருந்துதும்  யாமே.  (குறுந்: 69 – கடுந்தோட் கரவீரனார்)

    தலைவன் உயிருக்கு ஊறு நேருமாயின் தலைவியும் உயிர்தரித்திருக்க மாட்டாள் என்பதனை விலங்குகளின் செயல் வாயிலாகத் தோழி விளக்குந் திறன் அவளின் நுண்மாண் நுழைபுலத்துக்குக் கட்டியம் கூறுகின்றது. நேரடியாகக் கூறவியலாத அமங்கலச் செய்திகளை இன்னொரு நிகழ்வின்மூலம் உள்ளுறையாகவும், இறைச்சியாகவும் ஏற்றிக்கூறுவதில் நம் சங்கப் புலவோர் சமர்த்தர்களாகவே இருந்திருக்கின்றனர் என்பதை இப்பாடலும் மெய்ப்பிக்கின்றது.

    அத்தோடு அன்றைய சமூகத்தில் கணவனை இழந்த மகளிர் பலர் இறந்த கணவனோடு தாமும் உடன்கட்டை ஏறுதலையே சிறந்த கற்பாக எண்ணியிருந்தமையும் இதன்வாயிலாய்ப் புலனாகின்றது. பாண்டிய மன்னன் பூதப்பாண்டியன் இறந்தபோது அவனுடைய மனைவியும் அறிவிற்சிறந்த அரசியுமான பெருங்கோப்பெண்டு, கணவனை இழந்து கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழவிரும்பாது, “என் தலைவன் போனபின்னே வள்ளிதழ் விரிந்த தாமரையையுடைய நள்ளிரும் பொய்கையும், தீயும் தனக்கு ஒத்த தன்மையனவே” என்றுகூறித் தீப்பாய்ந்தமை ஈண்டு நினைவுகூரத்தக்கது.

    இச்சங்க மகளிரை இருபத்தோராம் நூற்றாண்டின் ’பகுத்தறிவு’ப் பார்வையோடு நாம் அணுகுதலும், விமரிசித்தலும் பொருத்தப்பாடுடையதன்று. அற்றை நாளைய வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தனர்; அவ்வளவே! இன்று அக்கொடிய வழக்கம் நடைமுறையில் இல்லை என்பதையறிந்து மகிழ்வோம்.

    மீண்டும் நம் பார்வையை நல்ல குறுந்தொகையில் பதிப்போம்…

    இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன், “அப்படியாயின் இனி நான் தலைவியைச் சந்திக்கவே வழியில்லையா? என்றான் ஏக்கத்தோடு.

    அவனை நோக்கி வருத்தப் புன்னகை புரிந்த தோழி, ”ஐய!
    இதுகுறித்து நீர் படும் வேதனையைவிடத் தலைவியின் மனவேதனை நனிபெரிது. மூங்கிலை வேலியாக உடைய, Jackfruit1வேரில் பலாக்குலைகளையுடைய மலை நாட! நின் சாரற்கண்ணே பலாவின் சிறுகொம்பில் பெரிய கனி பற்றுக்கோடு ஏதுமின்றிப் பரு(ழு)த்துத் தொங்குவதுபோல், எம் தலைவியின் உயிராகிய சிறிய கொம்பில் காமம் எனும் பெரிய கனி தொங்கிக்கொண்டிருக்கின்றது. இக்கனியை இன்னும் முதிரவிட்டால் அது கீழேவீழ்ந்து சிதைந்தழியும். அவ்வாறு நிகழாமுன்னர் அதன் செவ்வியறிந்து சுவைப்பதுதானே அறிவுடைமை! ஆகவே, தலைவியை விரைந்து வரைந்து கொள்க!” (வரைவு – திருமணம்) என்று கூறி நிறுத்தினாள்.

    பலாவில் வேர்ப்பலா, கிளைப் பலா என இருவகைகள் இருப்பதை இப்பாடல்வழி அறிகிறோம். ஒரேபாடலில் எத்தனைச் செய்திகளைப் பலாச்சுளைபோல் பக்குவமாய்ப் பொதிந்து வைத்துள்ளார் கபிலர்!

    வேரல்  வேலி  வேர்க்கோட்  பலவின்
    சாரல்  நாட  செவ்வியை  ஆகுமதி
    யாரஃ  தறிந்திசி  னோரே  சாரல்
    சிறுகோட்டுப்  பெரும்பழந்  தூங்கி  யாங்கிவள்
    உயிர்தவச்  சிறிது  காமமோ  பெரிதே.    (குறுந்: 18 – கபிலர்)
     

    ’பெரிதே காமம் உயிர்தவச் சிறிதே’ எனும் கலித்தொகை வரிகள்  (கலி – 137) இதனோடு ஒப்புநோக்கத்தக்கவை. 

    செவ்வியறிந்து காமத்தைத் துய்க்கவேண்டும் என்று (தோழி கூற்றாய்) கபிலர் இப்பாடலில் உரைப்பதுபோலவே நம் குறளாசானும்,

    மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
    செவ்வி தலைப்படு வார்
    (1289) என்று கூறிக் கபிலரின் கருத்துக்கு அரண் சேர்க்கிறார்.

    தலைவியை விரைவாய் மணந்துகொள்வது ஒன்றே அவளைப் பிரியாதிருப்பதற்கான நிரந்தர வழி என்ற தோழியின் மொழிகேட்ட தலைவன் அதுகுறித்துத் தீவிரமாய்ச் சிந்திக்கலானான்.

    அவன் எண்ணத்தை அறிந்துகொள்ளும் ஆவலில் தலைவியும் தோழியும் காத்திருந்தனர்; அவன்முகம் பார்த்திருந்தனர்!

    [தொடரும்]

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (30)

    க. பாலசுப்பிரமணியன்

    தான் மறையும் நேரம் …

    திருமூலர்-1-3

    ஒரு முறை ஒரு நாட்டின் அரசன் தவத்தில் சிறந்த ஒரு முனிவரிடம் தீட்சை பெற வேண்டும் என்று விரும்பி தன் விருப்பத்தைத் தெரிவித்தான். முனிவரும் அதற்கிணங்கி அவனைத் தன்னுடைய ஆசிரமத்திற்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அரசன் தன் படை சூழ பல பரிசுகளை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றான். அந்தக் குடிலின் வாயிலில் இருந்த ஒரு சீடனிடம் “முனிவரிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” என்று சொல்லி அனுப்பினான். உள்ளிருந்த முனிவரோ “அவர் இன்னும் வரவில்லை. திரும்பிப் போகலாம் என்று சொல்” எனச் சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். சினமடைந்த அரசனும் திரும்பிச் சென்றுவிட்டு மீண்டும் சில நாட்கள் கழித்து வந்து அதே போல் “முனிவரிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” எனச் சொன்னான். இந்த சமயத்திலும் முனிவர் :”அவர் இன்னும் வரவில்லை என்று சொல்” எனச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். மீண்டும் மீண்டும் அரசன் முயற்சித்தும் அவரைச் சந்திக்க முடியாத நிலையில் தன்னுடைய மந்திரியை அழைத்து ஆலோசனை செய்தான். மந்திரி அரசனிடம் “அரசே, நீங்கள் முனிவருக்கு என்ன செய்தி அனுப்பினீர்கள்?” எனக் கேட்டார். அரசனும் “நான் வந்திருக்கிறேன் முனிவரிடம் சொல்” என்று தான் சொன்னேன், என்கிறார். மந்திரி சிரித்துக்கொண்டே “அரசே, நீங்கள் அவரைப் பார்க்கச் செல்லும் பொழுது “நான்” வந்திருக்கின்றேன் என்று உங்கள் ‘அகந்தை’யை முன் வைத்தீர்கள் அதனால்தான் முனிவரும் உங்கள் அகந்தைக்கு பதில் கொடுக்கும் வகையில் உங்களைத் திருப்பி அனுப்பித்துள்ளார். நீங்கள் இன்னும் சற்று பணிவுடன் சென்றால் எப்படி இருக்கும்? :” என்று சொல்ல, அடுத்த முறை அரசன் முனிவருடைய குடில் வாசலில் இருந்த சீடனிடம் “முனிவரிடம் தீட்சை பெற்றுக்கொள்ளுவதற்காக ஒரு சீடன் வந்திருக்கின்றேன் என்று சொல்” எனச் சொல்லியனுப்பினார். முனிவர் உள்ளிருந்து “எனது புதிய சீடனை மரியாதையுடன் அழைத்து வா” என்று சொன்னார்.

    இறைவனிடம் அருள்நாடிச் செல்லுகின்ற நம்மில் பலரும் இதே நிலையில் தான் இருக்கின்றோம். ஏதோ நம்மால் தான் இதைச் செய்ய முடிந்தது. இதை என்னையன்றி வேறு யாரால் செய்திருக்க முடியும்?  என் திறமைக்கு அறிவுக்கும் நான் செய்த செயலெல்லாம் மிகச் சாதாரணமானது தான் என்றெல்லாம் எண்ணிச்  செல்லுகின்றோம். இறைவனிடமும் ஏதோ விருப்பமிருந்தால் கொடுங்கள் என்றோ அல்லது இதை இறைவன் நமக்குக் கொடுத்தால் இறைவனுக்கே பெருமை என்பதுபோல் நாம் எண்ணுகின்றோம். “நான்” என்ற அகந்தை உள்ளவரை இறைவனை நம்மால் அணுக முடியாது. இதை விளக்கும் வகையில் கபீர் தனது ஒரு பாடலில் கூறுகின்றார். “நான் இருக்கும் வரை அவன் இல்லை, அவன் வந்த பின்பு அங்கே நான் இல்லை”

    இந்தக் கருத்தை இன்னும் அழகாக திருமந்திரத்தில் நாம் பார்க்கின்றோம் :

    தானும் அழிந்து தனமும் அழிந்துநீ

    டூனும் அழிந்து உயிரும் அழிந்துடன்

    வானும் அழிந்து மனமும் அழிந்தபின்

    நானும் அழிந்தமை நானறி யேன்றே

    ஆகவே நான். எனது, எனக்கு என்ற எண்ணங்களையெல்லாம் ஒழித்துவிட்டு இந்த உலகத்தில் உள்ள பொருள் எல்லாம் நிலையற்றவை என்பதை உணர்ந்து அவன் பாதங்களை நாடினால் அவன் தானாகவே வந்து நம்மை ஏற்றுக்கொள்வான். இந்த அறிவு நமக்கு எப்போது கிட்டும்? மறைகளும் மற்ற சாத்திரங்களையும் வேதங்களையும் நன்றாகப் படித்து விட்டால் கிட்டுமா? அல்ல, எப்போது நாம் இந்த உலகைச் சார்ந்த வேட்கைகளையெல்லாம் விட்டு விடுகின்றோமோ அப்போது தான் நமக்கு அந்த அறிவு கிட்டும். திருமூலர்

    இந்தக் கருத்தை விளக்கும் வண்ணம் கூறுகின்றார்:

    வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்

    வேதாந்தங் கேட்டும்தம் வேட்கை ஒழிந்திலர்

    வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்

    வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டார்

    வேட்கையை விட்டவர்க்கு வேத அறிவுகளில் மேலாண்மை தேவையில்லை. இறைவனே தம்மை ஆட்கொண்டவன் என்ற எண்ணம் மனதில் தோன்றிய நிலையில் அவன் தானே வந்து நம்மை ஆட்கொள்வான்.

    திருமூலரின் அனுபவம் என்ன சொல்லுகின்றது ?

    நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்

    நானென்றும் தானென்றும் இரண்டில்லை யென்பது

    நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

    நானென்று நானும் நினைப்பொழிந் தேனே

    நான் என்ற ஆணவ மாயையில் சிக்கி அன்பே வடிவமாய் உள்ளே அமர்ந்திருக்கும் ஆண்டவனின் அருளை அறியாமல் தவிக்கின்ற மனங்கள் தான் எத்தனை! எத்தனை! அதில் பத்திரகிரியாரும் ஒருவர். எனவே தான் அவர் வேண்டுகின்றார் :

    அஞ்ஞானம் விட்டே யருள்ஞானத் தெல்லைத்தொட்டு

    மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம் ?

    எண்ணாத தூரமெல்லா ,மெண்ணியெண்ணிப் பாராமல்

    கண்ணாடிக் குள்லொளிபோற் கண்டறிவ  தெக்காலம்?

    நான், தான், எனது என்ற அகந்தை நிலை எப்பொழுது நீங்கும்? உண்மையில் தான் யார் என்ற உண்மை அறிவு ஏற்படும்பொழுது ‘தான்” விலகி தன்னைப் பற்றிய உண்மை அறிவு வெளிப்படும். இதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் இந்தக் கருத்துள்ள பாடல்”

    தான் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்

    தாம் அறிவார் அறந்தாங்கி நின்றார் அவர்

    தாம் அறிவார் சில தத்துவராவார்கள்

    தாம் அறிவார்க்குத் தமர்ப்பர னாமே”

    நம்மை அறிந்துகொள்ள நாமும் முயற்சி செய்வோமா ?

    தொடருவோம்..

    Share