Blog

  • மாசுற்ற தாமரைக் குளத்தின் வாசனை

    ஒரு பெண்ணின் அழகை வைத்துத்தான் காலம் காலமாக உலகெங்கும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒரு பெண்ணினது அக உணர்வுகளை விடவும் அழகுதான் அவளது இருப்பையும், நடைமுறை வாழ்க்கையையும், வாழ்வு மீதான புறத் தாக்கங்களையும் தீர்மானிக்கின்றன. அவளது புறச்சூழலில் அவளைத் தாண்டிய எல்லைகளுக்குள் அடங்கும் சமூகத்தின் கோட்பாடுகள் மிகவும் வலிய கரங்களைக் கொண்டு அவள் மீதான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விடுகின்றன. அழகுடன் கூடிய பெண்ணினது மன உணர்வுகள், அவளது எண்ண வெளிப்பாடுகள், சமூகம் அவளுக்கிட்டிருக்கும் வேலிகள் எனப் பல்வேறான காரணிகள் அவளது வாழ்வைத் தீர்மானிக்கும் கூறுகளாக அமைகின்றன.

    18108_1556627777960174_3715045860138984916_n

    இவ்வாறாகப் பழக்கப்பட்டிருக்கும் சமூகத்தில் ஒரு பெண் அழகற்றவளாகப் பிறந்துவிட்டால் என்ன செய்வாள்? அதிலும் குறிப்பாக அவள் வறிய நிலைமையில் உள்ளவளாக இருப்பின் அவளது வாழ்வின் மீதான தாக்கங்கள் எவை? அவள் சமூகத்தில் எதிர்நோக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் அவளை என்னென்ன நிலைமைகளுக்குள் செலுத்திப் பார்க்கின்றன என்பதைக் குறித்துத்தான் இலங்கையின் திரைப்பட இயக்குனர்களில் ஒருவரான சத்யஜித் மாஇடிபேயின் முதல் திரைப்படமான ‘பொர திய பொகுன (மாசுற்ற நீர்த் தடாகம்)’ திரைப்படம் பேசுகிறது.

    சர்வதேச ரீதியில் கறுப்பாக உள்ளவர்கள் மீது பிரயோகிக்கப்படும் வன்முறைகள் அனைத்தும் அவர்கள் குற்றமிழைத்தவர்கள் என்பதற்காகவல்லாது, அவர்களது நிறத்தினைக் குறித்தே பிரயோகிக்கப்படுகின்றன என்பது நிதர்சனம். அவர்கள் நிரபராதிகளாக உள்ளபோதிலும், அவர்களது நிறமும் அவலட்சணமான தோற்றமும் அவர்கள் மேல் சந்தேகங்களைக் கிளப்பிவிடப் போதுமாக உள்ளன.

    21984_1563934943896124_3421116455876624922_n

    கௌதமி ஒரு ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் ஒரு யுவதி. அவள் தனது சக தோழிகள் இருவருடனும் ஒரு வீட்டின் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருக்கிறாள். சக தோழிகளில் ஒருத்தி மிகவும் அழகானவள் என்பதோடு அவளுக்கு ஒரு காதலனும் இருக்கிறான். கௌதமியின் அவலட்சணமான தோற்றம் அவளை, இலங்கை கடற்படையில் பணிபுரியும் அழகி மங்களாவின் காதலனுக்கு தூது கொண்டு செல்லுமொருத்தியாக மாற்றி விட்டிருக்கிறது. பொதுவாக படையினர் தங்கியிருக்கும் இராணுவ முகாம்களுக்கு இளம்பெண்கள் தனியே செல்ல அச்சப்படும் நிலையில் கௌதமி எவ்வித அச்சமுமின்றி எந் நேரத்திலும் சென்று வரக் கூடியவளாக இருக்கிறாள். மங்களாவின் காதலன் உயரமாகவும் கட்டுமஸ்தானவனாகவும் அழகி மீது பேரன்பு கொண்டவனாகவும் இருப்பதனால் அவன் மீது கௌதமிக்கு ஒருதலையாக காதல் ஏற்படுகிறது.

    தனது சக தோழிக்கும் அவளது காதலுக்கும் துரோகமிழைக்கும் கௌதமி, அவளது காதலனுடன் பலவந்தமாக இணைவதன் மூலமாக ஒரு குழந்தைக்குத் தாயாகிறாள். மிகுந்த குற்றவுணர்ச்சிக்குள்ளாகும் அழகியின் காதலன் தற்கொலைக்கு முயல்கிறான். அவனது கவலையுணர்ந்த சக படையினர் கௌதமியைக் கடத்திச் சென்று கருவைக் கலைத்துவிடும்படி மிரட்டுகிறார்கள். மீண்டு வரும் கௌதமி, இலங்கையில் வறள் பிரதேசக் காடொன்றுக்குள் வசிக்கும் தனது தூரத்து உறவினரைத் தேடிச் சென்று, மாதக் கணக்கில் அவர்களுடன் தங்கி சேனை விவசாயம் செய்து குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். அங்கிருந்து தனது ஊருக்கு வரும் வழியில் குழந்தையை புகையிரத நிலையத்தில் விட்டு வருகிறாள். தனது ஊருக்கு வந்தவள் பணிப்பெண் வேலைக்காக வெளிநாடு செல்கிறாள். ஆறு வருடங்களின் பின்னர் இலங்கை வரும் அவள் இன்னுமொருவரைத் திருமணம் செய்து வாழ்கிறாள். இவர்களது வாழ்வில் திரும்பவும் மங்களாவும் அவளது காதலனும் நுழைகிறார்கள். காதலன் தனது குழந்தையைக் கேட்டு கௌதமியிடம் வந்து நிற்கிறான். இதன் பிறகு என்னவாயிற்று என்பதைத்தான் திரைப்படம் சொல்கிறது.

    15355803_1831488703807412_8690262300183438553_n

    சாதாரணமாக தெருவில் செல்லும் எந்த இளைஞர்களுமே திரும்பிக் கூடப் பார்க்காத கௌதமிக்குள்ளும் உள்ள காதல் உணர்வுகள் மிகவும் நுட்பமாக திரைப்படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றன. பொதுவாக திரைப்படங்களில் கதாநாயகி எனப்படுபவள் மிகவும் தூய்மையானவளாகவும், தீய எண்ணங்கள் எதுவுமற்றவளாகவும், மிக மிக நல்லவளாகவும், வானத்திலிருந்து குதித்த தேவதை போலவும் சித்தரிக்கப்படுகையில் அவை எல்லாவற்றுக்கும் நேர்மாறான ஒரு கதாநாயகியை இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது முதல் படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறார். தனது அவலட்சணமான தோற்றத்தின் காரணமாக எழும் சக சமூகத்தின் நடைமுறைகளால் தாழ்வு மனப்பான்மைக்கும், உள்மனக் குமைச்சலுக்கும் ஆளாகும் கௌதமி மிக இரகசியமாகச் செய்யும் குற்றங்கள் எளிதில் மன்னிக்க முடியாதவையாக இருப்பினும், பார்வையாளர்களிடத்தில் அவை ஒரு நியாயத்தையும் சொல்பவையாக அமைந்திருக்கின்றன என்பதுதான் சிறப்பு.

    இலங்கையில் பெரும்பான்மையான சமூகத்தினால் பின்பற்றப்படும் பௌத்த மதத்தின் அடிப்படைக் கொள்கைகளை மூன்று பெண்களைக் கொண்டு கேள்விக்குட்படுத்தியிருக்கிறார் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே. பாசம், காமம், வன்மம் ஆகிய மூன்று உணர்வுகளும் பெண்களிடத்திலும் ஆண்களிடத்திலும் வேறுபடும் புள்ளி எதுவென திரைப்படத்தின் மூலமாகக் காண முயற்சித்திருக்கிறார்.

    இதனாலேயே 2003 ஆம் ஆண்டு திரையிடலுக்கான அனைத்து வேலைகளும் முடிந்த நிலையிலும், ஒரு தசாப்தம் கடந்த நிலையில் 2015 வரையும் இத் திரைப்படத்தினை இலங்கையில் திரையிட அரசு அனுமதிக்கவில்லை. பன்னிரண்டு வருடங்களாக தனது படைப்பினை வெளிப்படுத்த இயலாது பிரசவ வேதனையை ஒத்த வலியை சுமந்தலையும் இயக்குனரின் வலி மிகவும் வலியது. அது ஏனைய திரைப்படங்களை இயக்க இன்றுவரையும் அவருக்கு தடையாக அமைந்திருக்கிறது.

    திரைப்படத்தின் பிரதான கதாபாத்திரமான கௌதமியின் கதாபாத்திரத்தை எந்தப் பிரதான நடிகையுமே ஏற்று நடிக்கத் தயங்குவர் என்பதில் சந்தேகமில்லை. எனினும் கதையினைக் கேட்ட மாத்திரத்திலேயே அக் கதாபாத்திரத்தை ஏற்றுக் கொண்டு, திரைக்கதை எழுதுவதில் பங்குகொண்டு அதனைச் செம்மைப்படுத்தி, மிகவும் நேர்த்தியான நடிப்பை வழங்கியிருக்கிறார் பல விருதுகளை வென்ற நடிகை கௌசல்யா பெர்ணாண்டோ. இந்தத் திரைப்படத்தில் நடித்தமைக்காக இலங்கையின் ‘சிறந்த நடிகைக்கான விருது’ இவருக்குக் கிடைத்தது. அவ்வாறே 2016 ஆம் ஆண்டுக்கான ’SAARC’ சர்வதேச திரைப்பட விழாவிலும் இந்தத் திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக ‘சிறந்த நடிகை விருது’ இவருக்குக் கிடைத்தது. தற்பொழுது பல்கலைப்பழக பேராசிரியராகக் கடமையாற்றி வரும் இவர் சர்வதேச ரீதியில் விருதுகள் பல வென்ற திரைப்படங்களிலும், மேடை நாடகங்களிலும் தனது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

    மங்களா எனும் அழகியின் கதாபாத்திரத்தை பிரபல நடிகை டிலானி அபேவர்தனவும் அவளது காதலன் கதாபாத்திரத்தை இலங்கை ரக்பி அணியின் விளையாட்டு வீரர் துமிந்த டி சில்வாவும் ஏற்று நடித்திருக்கின்றனர். அத்தோடு திரைப்படத்தின் சிறிய கதாபாத்திரங்களிலும் கூட சிங்களத் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், நடிகையர்களான தர்மசிறி பண்டாரநாயக்க, ஐராங்கனி சேரசிங்க, வீணா ஜயகொடி, சாந்தனி செனவிரத்ன, ப்ரியங்கா சமரவீர, சந்திரா களுஆரச்சி, லியோனி கொத்தலாவல போன்றோர் ஏற்று நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    இலங்கையில் பௌத்த சமூகத்திலுள்ள இளைய சமுதாயத்தினரின் அக, புறச் சிக்கல்களைப் பேசும் இத் திரைப்படமானது 2003 ஆம் ஆண்டு ஜனவரி 21 முதல் பெப்ரவரி 02 ஆம் திகதி வரை நடைபெற்ற 33 ஆவது ரொட்டர்டம் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, அது அங்கிருந்த பல்வேறு தேசங்களையும் சேர்ந்த திரையுலக முக்கியஸ்தர்களது கவனத்தை ஈர்த்திருக்கிறது. அத்தோடு விழாவின் கௌரவ விருதான டைகர் விருதிற்கும் இத் திரைப்படம் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது.

    திரைப்படத்தின் பின்னணியானது இலங்கையின் கிராமப்புறங்களிலிருந்து வந்து சுதந்திர வர்த்தக வலயங்களில் பணிபுரியும் பெண்களது காதல், காமம், திருமணம் ஆகிய நிகழ்வுகளை பல சந்தர்ப்ப சூழ்நிலைச் சிக்கல்களோடு பொருத்தி, அரசியல், சமூகக் கோட்பாடுகளின் உண்மையான முகத்தைக் காட்டியிருக்கிறது. சமூகம், அரசியல் என இரு மட்டங்களிலும் வகைப்படுத்தக் கூடுமான இத் திரைப்படத்தின் அத்திவாரம் பௌத்தவியலாக அமைந்திருக்கிறது.

    பௌத்த நீதிக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு, அவற்றைக் கேள்விக்குட்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இத் திரைப்படமானது 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘HONOLULU’ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த புனைவுத் திரைப்படத்துக்கான விருதினை வென்றது. இலங்கை அரசை ஒரு தசாப்த காலத்திற்கும் மேலாக அச்சுருத்திக் கொண்டிருக்கும்படியாக, பல இன்னல்களுக்கு மத்தியில் ஒரு திரைப்படத்தையெடுத்து, அதனைத் தான் பிறந்த மண்ணில் திரையிட்டுக் காட்டமுடியாத மனவேதனையை அகத்தில் புதைத்தபடி பல்கலைக்கழகங்களில் வருகைதரு பேராசியராகக் கடமை புரியும் இயக்குனர் சத்யஜித் மாஇடிபே தனது திரைப்படம் குறித்து இவ்வாறு கூறுகிறார்.

    ‘தமது காதல் வாழ்க்கை நொறுங்கிப் போனதன் காரணமாக தீய வழியில் செல்லும் இளைஞர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்களது கனவுலகம் சிதைந்த பின்னர் நிஜ வாழ்க்கையைச் சந்திக்கும் தைரியம் அவர்களிடமில்லை. ஒருவகையில் இத் திரைப்படம் அவர்களது நடைமுறை வாழ்க்கையையே பிரதிபலிக்கிறது. வாழ்க்கையானது எவ்வளவுதான் இன்னல்களுக்குள் உள்ளபோதிலும், எல்லாவற்றையும் விட மிகவும் பெறுமதியானது வாழ்வதுதான் என நான் இத் திரைப்படத்தின் மூலம் கூற விரும்புகிறேன்’.

    – எம்.ரிஷான் ஷெரீப்
    mrishanshareef@gmail.com

    Share
  • விருந்து – அன்றும் இன்றும்

    -பேராசிரியர் முனைவர் க.துரையரசன்

    “விருந்தோம்பலில்
    தன்னினத்தைக்
    கூவியழைக்கும்
    காகம் போலிரு

    எள்ளென்றாலும்
    எட்டாகப் பகிர்ந்து உண்
    சந்ததி தழைக்கும்” என்பது இக்காலக் கவிஞரின் உள்ள வெளிப்பாடு. ‘விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு’ என்பது முன்னோர் மொழி.

    தொல்காப்பியம்:

    ‘விருந்தேதானும் புதுவது புனைந்த யாப்பின் மேற்றே’ என்பது தொல்காப்பியம் (செய்யுளியல் 231). புதிய யாப்பில் பாப் புனைதல் விருந்து என்பது இதன் பொருளாகும். எனவே, விருந்து என்பது புதுமை என்ற பொருளில் தொல்காப்பியத்தில் பதிவாகியுள்ளது என்பது அறிஞர்களின் கருத்தாகும். அவ்வடிப்படையில் நம் வீட்டுக்கு வரும் முன்பின் தெரியாத ஒருவர் – இதுவரை வராத ஒருவர் விருந்தினர் எனப் பொருள்கொள்ள வேண்டும். நம் வீட்டுக்கு ஏற்கனவே வந்தவர்கள் அல்லது உறவினர்கள் விருந்தினராகக் கருதப்பட மாட்டார்கள்.

    இதனடிப்படையில் தொல்காப்பியர் காலத்தில் விருந்தினர் என்பது நம் வீட்டுக்கு முதன்முதலில் வருவோர்; இன்று உறவினர்கள், நண்பர்கள் விருந்தினராகக் கருதப்படுகிறார்கள்.

    திருக்குறள்:

    இருந்தோம்பி இல்வாழ்வது எல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.  (81)

    என்பது திருக்குறள். இல்வாழ்க்கை என்பது தம் வீட்டுக்கு வரும் விருந்தினரை வரவேற்று விருந்துண்பித்து வாழ்வதே ஆகும் என்று வள்ளுவர் ஆணித்தரமாக உரைக்கிறார்.

    விருந்தினர் வந்திருக்கும் பொழுது கிடைத்தற்கரிய அரிய பொருளாயினும் – பண்டமாயினும் – இந்திர உலகத்து அமிழ்தமாயினும் – சாவா மருந்தாயினும் அதனைத் தனித்து உண்ணார் தமிழர். இதனை,

    விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
    மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.   (82) என்று திருக்குறளும்,

    ‘உண்டாலம்ம இவ்வுலகம்
    இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும்
    இனிதெனத் தமியர் உண்டலும் இலரே’ (புறம். 182) என்று சங்கப் பாடலும் பகர்கின்றன.

    மேலும் வருகின்ற விருந்தினரை நன்கு உபசரித்து வேண்டுவன அருகிருந்து செய்து, அவர் செல்ல விரும்பும்பொழுது அவரை மகிழ்வுடன் அனுப்பி வைக்கும் இல்வாழ்வான் ஒருவன் ஆர்வத்துடன் அடுத்த  விருந்தினரை எதிர்நோக்கிக் காத்திருக்க வேண்டும் என்பதனை,

    செல்விருந்தி ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
    நல்விருந்து வானத் தவர்க்கு.     (86)

    என்ற திருக்குறள் அழகுற எடுத்துரைக்கிறது. ஒருவேளை விருந்தினரை அகமும் முகமும் மலர வரவேற்று உபசரிக்கவில்லையாயின் விருந்தினர் மிகவும் மனம் வருந்துவர் என்பதை,

    மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து.      (90)

    என்ற குறள் எச்சரிக்கை செய்கிறது. மேற்கண்ட எடுத்துக்காட்டுகளால் வள்ளுவர் காலத்து விருந்து நிலை தெற்றெனப் புலப்படுகிறது.

    சிலம்பும் ராமாயணமும்:

    சிலப்பதிகரத் தலைவி கண்ணகி,

    ”அறவோர்க்களித்தலும் அந்தணரோம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
    விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை…”  (கொலைக்களம்: 71-73)

    என்று வருத்தமுற்று நிற்பதைக் காணமுடிகிறது. அதுபோலச் சீதையும்கூட அசோகவனத்தில் இருந்தபொழுது வீட்டுக்கு விருந்தினர் வந்தால் தனியோர் ஆடவனாக இருந்து இராமன் என்ன செய்வானோ என்று வருந்தினாள்.

    இங்ஙனம் இருபெரும் காப்பியத்தலைவிகள் கணவனைப் பிரிந்து வருத்தமுற்றதைக் காட்டிலும் விருந்தோம்பல் மேற்கொள்ள முடியாமல் போயிற்றே என்று வருந்தியமையைக் காணமுடிகிறது. கணவனும் மனைவியும் கூடிநின்றுதான் விருந்து படைக்க இயலும் என்பது தமிழர் நியதி. இந்நியதியைப் பெரியபுராணம் தெற்றென காட்டுகிறது.

    பெரியபுராணம்:

    சிறுத்தொண்டர் புராணம், இளையான்குடி மாறநாயனார் புராணம், அப்பூதியடிகள் புராணம் என இன்னும் பல அடியவர்களின் புராணங்களும் கூட கணவனும் மனைவியுமாய் சேர்ந்து திருவமுது படைத்த பாங்கைப் பகர்கின்றன. குறிப்பாகச் சிறுத்தொண்டர் இல்லம் சென்ற பைரவ வேடந்தாங்கிய சிவபெருமான் இல்லின்கண் சிறுத்தொண்டர் இல்லை என்பதை அறிந்து வீட்டைவிட்டுப் புறப்பட முயலும் வேளையில், சிறுத்தொண்டரின் மனைவி அடியாரை இல்லிலிருக்குமாறு வேண்ட ஆடவர் இல்லாத இல்லில் தானிருத்தல் முறையாகாது என்றுகூறிச் சென்று விடுகிறார். அதன்பின் வீடு வந்தடைந்த சிறுத்தொண்டர் நடந்ததைக் கேட்டறிந்து அடியவரை இல்லிற்கு அழைத்து வந்து விருந்து படைத்தார் என்பது புராணம்.

    விருந்தோம்பும் முறைகள்:

    வீட்டிற்கு வந்த விருந்தினரைத் தக்க முறையில் ஓம்பும் ஒன்பது முறைகளை ஒரு தனிப்பாடல் வற்புறுத்திக் கூறியுள்ளது. அப்பாடல்:

    விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
    வியத்த, நன்மொழி இனிது உரைத்தல்,
    திருந்துற நோக்கல், வருக என உரைத்தல்,
    எழுதல், முன் மகிழ்வன செப்பல்,
    பொருந்துமற்று அவன்தன் அருகுற இருத்தல்,
    போம் எனில் பின் செல்வதாதல்,
    பரிந்து நன்முகன் வழங்கல், இவ்வொன்பான்
    ஒழுக்கமும் வழிபடும் பண்பே.

    (1) வீட்டிற்கு வரும் விருந்தினரை எதிர்கொண்டு அழைத்தல், (2) இனிய சொற்கள் கூறுதல், (3) அன்புடன் நோக்கல், (4) வருக என்று வரவேற்றல், (5) எழுந்து நிற்றல், (6) மகிழுமாறு சில செய்திகள் கூறுதல், (7) பொருந்தும் வகையில் அவர் அருகில் அமர்தல், (8) அவரைப் பின்தொடர்ந்து சென்று வழியனுப்பி வைத்தல், (9) பல்வகை உணவு, பழம், வெற்றிலை, பாக்கு முதலியன அளித்தல் ஆகிய ஒன்பது முறைகளை மேற்காட்டிய பாடல் வற்புறுத்துகிறது.

    இன்றைய நிலை:

    இதுகாறும் கூறிய செய்திகளின் வழி விருந்தோம்பல் என்பது பழந்தமிழரின் பண்பாட்டு முறை என்பதும் அது தொன்றுதொட்டுப் பாதுகாக்கப்பட்டு வந்ததையும் அண்மைக்காலம் வரைகூடக் கண்ணாரக் காணமுடிந்தது. ஆனால் கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறையிலிருந்து தனிக்குடித்தன வாழ்க்கை முறைக்கு இத்தலைமுறையினர் என்று மாறத்தொடங்கினார்களோ அன்றே விருந்தோம்பும் தமிழ்ப்பண்பும் அருகிப் போய்விட்டதை வருத்தத்துடன் கூற வேண்டியுள்ளது.

    விடாக்கண்டனும் கொடாக்கண்டனும்:

    ஒருவர் வீட்டிற்கு விருந்தினர் வந்தார். அவர் வரும்பொழுது பகல் 2.30 மணி. அப்பொழுது கணவன், மனைவி, விருந்தினர் ஆகிய மூவரும் பின்வருமாறு பேசிக்கொண்டனர்.

    கணவன்: வாங்க, மதியம் சாப்பாட்டு வேளை முடிஞ்சு வந்திருக்கீங்க. அநேகமாக கடையில் சாப்பிட்டு வந்திருப்பீங்க. இருந்தாலும் எங்க வீட்டில கொஞ்சம் சாப்பிடுங்க.

    மனைவி: ஏங்க, உங்களுக்கு எப்ப என்ன பேசுறதுன்னு தெரியாதுங்க. மணி என்ன ஆவுது. அவுங்களே சக்கரை வியாதிக்காரங்க. இவ்வளவு நேரம் சாப்பிடாமலா வந்திருப்பாங்க. இருந்தாலும் நம்ம வீட்டில கொஞ்சமா சாப்பிடுங்க.

    விருந்தினர்: நான் சாப்பிட்டுவிட்டு வந்தாலும், சாப்பிடாம நீங்க விடமாட்டிங்கன்னு எனக்குத் தெரியாதா? அதனால நான் சாப்பிடாமத்தான் வந்திருக்கேன்.

    இன்னொரு சம்பவம். ஒரு வீட்டிற்கு விருந்தினர் வருகிறார். அவரைக் கணவனும் மனைவியும் ஒப்புக்காக (முக தாட்சண்யத்திற்காக) வரவேற்கின்றனர். சற்று நேரத்தில் விருந்தினர் முன்பாக கணவனும் மனைவியும் கடும் சண்டையில் ஈடுபடுகிறார்கள். இதனைப் பார்த்த விருந்தினர் வீட்டைவிட்டுச் சென்று விட்டார். அப்பொழுது கணவன் மனைவியிடம், ஏண்டி, நான் எப்படிப் பண்ணுனேன் பார்த்தியா? என்று கேட்க, மனைவியும் அதற்குப் பதிலாக நான் எப்படி உங்களுக்கேற்றாற்போல நடிச்சேன் பார்த்தீர்களா என்று மகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது வீட்டை விட்டுச்சென்ற விருந்தினர் உள்ளே புகுந்து நானும் போனதுபோல போக்குக் காட்டிவிட்டு வந்து விட்டேன் பார்த்தீர்களா?  உங்களுக்கேற்றாற்போல் நானும் நடித்தேன் பார்த்தீர்களா? என்றாராம்.

    இந்நிகழ்வுகளை விளையாட்டாகக் கூறுவர். இது விளையாட்டல்ல, விபரீதம். பல வீடுகளுக்குச் செல்லும் விருந்தினர்களின் பரிதாப நிலை இப்படித்தான் இருக்கிறது.

    ஔவையார்:

    விருந்தோம்பல் பற்றிய ஔவையாரின் பாடல் ஒன்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியதாக உள்ளது. விருந்தினர் வருகை பற்றிக் கணவன் மனைவியிடம் தெரிவிக்கக் கருதுகிறான். அதனால் அவன் மனைவியிடம் அன்பாகப் பேசுகிறான்; முகத்தைத் தடவிக் கொடுக்கிறான்; அவள் தலையில் பேன் பார்த்துக்கொண்டே விருந்தினர் வந்திருக்கிறார் என்ற செய்தியை மனைவியிடம் தெரிவிக்கிறான். மனைவி கேட்டதுதான் தாமதம். அவள் ஆடிய ஆட்டம், பாடிய பாட்டு, கணவனுக்குக் கொடுத்த வசைகள், இவை போதாதென்று கணவனைப் பிய்ந்துபோன பழைய முறத்தால் ஓடி ஓடி அடித்து விரட்டினாள். புலியை முறத்தால் அடித்து விரட்டிய வீரமங்கை வாழ்ந்த தமிழ்நாட்டில் விருந்தினர் வந்திருக்கிறார் என்று சொன்னதற்காகக் கணவனை முறத்தால் அடித்து விரட்டினாள் மனைவி. இதனை வெளிப்படுத்தும் பாடல்:

    இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன் வாங்கி
    விருந்து வந்தது என்று விளம்ப – வருந்தி
    ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்
    சாடினாள் ஓடோடித்தான்.         (தனிப்பாடல்)

    விருந்து உண்ணலாமா:

    இத்தகைய இல்லாள் இட்ட உணவை உண்ணலாமா? இத்தகைய இடர்ப்பாடு ஒரு விருந்தினனுக்கு ஏற்பட்டுள்ளது. அவனது பரிதாப நிலையைப் பாருங்கள்:

    காணக் கண் கூசுதே
    கை எடுக்க நாணுதே – மாண் ஒக்க
    வாய் திறக்க மாட்டாதே – வீணுக்கென்
    என்பெல்லாம் பற்றி எரிகின்றது – ஐயையோ
    அன்பிலாள் இட்ட அமுது.              (தனிப்பாடல்)

    அன்பில்லாத இல்லாள் (மனைவியாக இருந்தாலுங்கூட) படைத்த உணவைக் காணக் கண்ணோ கூசுகின்றது; உணவை எடுக்கக் கையோ வெட்கப்படுகிறது; வாயோ திறக்க மறுக்கிறது; எலும்பெல்லாம் பற்றி எரிகிறது என்று பரிதவிக்கிறான் ஒரு விருந்தினன் என்பதை ஔவையார் மேற்கண்ட பாடலில் படம்பிடித்துக் காட்டி உள்ளார்.

    எனவே தமிழரின் தலையாயப் பண்பாடான விருந்தோம்பல் என்பது அக்காலத்தில் சிறப்புடன் பின்பற்றப்பட்டுள்ளது. ஆனால் இன்றைய அவசர காலத்தில் – தனிக்குடித்தன வாழ்க்கையில் – பணம் சேர்ப்பதையே குறிக்கோளாகக் கொண்ட வாழ்க்கையில் விருந்து மருந்தாகி விட்டது; அதுவும் கசப்பு மருந்தாகி விட்டது. இளைய தலைமுறையினருக்கு இத்தலையாயப் பண்பாடு தெரியாமலே போய்விடும் அவலநிலையை நோக்கித் தமிழகம் வேகமாகச் சென்று கொண்டிருக்கிறது என்பதை வருத்தத்துடன் இங்கே பதிவு செய்கிறேன்.

     

     

     

    Share
  • புலமையிலக்கணம்  கூறும்  தவறியல்பு

    -முனைவர் சு.சத்தியா

    sathiyaதமிழ் இலக்கணம்   மிகத்   தொன்மையானது. காலந்தோறும் இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்தது போலவே இலக்கணங்களும்  வளர்ச்சி அடைந்தன. தொல்காப்பியர்  காலத்தில் எழுத்து, சொல், பொருள் என்று  தொடங்கி இன்று பல்வேறு நிலையில் வளர்ச்சி அடைந்து எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமை என வளர்ந்து தற்பொழுது அறுவகை இலக்கணம் என்ற நிலையில் தமிழ் இலக்கணத்தின் வளர்ச்சி நிலையைக் காணமுடிகிறது. அவ்வகையில் ஆறாவது இலக்கணமான புலமையிலக்கணம் கூறும் தவறியல்பினை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

    புலமையிலக்கணம்

    தமிழ் இலக்கண வரலாற்றில் புதியதொரு சகாப்தத்தை ஏற்படுத்தியவர் வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள். இவர் இயற்றிய அறுவகை இலக்கணம் எனும் நூலில் இலக்கணம் ஆறு வகைப்படும் அவை எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி, புலமையிலக்கணம் எனக் கூறியுள்ளார். இப்புலமையிலக்கணமாவது மேற்கூறிய ஐந்து இலக்கணங்களையும் கற்பவர் எவ்வகைப் புலமையோடு இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இயற்றப்பட்டுள்ளது. போற்றுதற்குரியதாகும். புலமை என்பதற்கு,

    ”அறியும் தன்மையைப் புலமை ஆம்எனப்
    பற்பல பெரியோர் பகர்ந்தனர் அன்றே” என்று ஐம்புலனாலும் ஒரு பொருளை அறிதலே புலமையெனச் சுட்டியுள்ளார். இப்புலமையிலக்கணம் தேற்றவியல்பு, தவறியல்பு, மரபியல்பு, செயல்வகை இயல்பு என்னும் நான்கு பிரிவுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் தவறியல்பின் சிறப்பினை இக்கட்டுரை எடுத்தியம்புகிறது.

    தவறியல்பு

    இந்நூலாசிரியர் தமிழ் மாணவர்களிடமும் புலவர்களிடமும் இருக்கக் கூடாத பண்புகளையே தவறியல்பாகச் சுட்டுவதோடு அப்பண்பினை உடையவர் முழுவதும் மனமாற்றம் பெறவேண்டும் என்கிறார்.  இதனைப் பின்வரும் பண்புகள்  வழி அறியலாம்.

    புலமைக்காய்ச்சல்

    நன்கு கற்றறிந்த புலவர்களிடம் தற்பெருமை, புலமைக்காய்ச்சல் எனும் பொறாமை போன்ற தீயபண்புகள் இயல்பாகவே இருக்கும். இவை அறவே இருக்கக் கூடாது என்பதைத் தவறியல்பின் முதல் நூற்பா கீழ்வருமாறு உரைக்கிறது.

    சாராது ஒழிப்பரன் தவறுஇயல்பு உரைக்குதும்
    பேரா நலம்எனப்   பிணங்கவொண் ணாதே.                                                         (அறுவகை.புலமையி.34)

    புலமைச்செருக்கு

    நமது வாழ்க்கையில் எந்தச் சூழ்நிலையிலும் நான் எனும் செருக்குக் கொண்ட எண்ணம் எவருக்கும் ஏற்படக்கூடாது. குறிப்பாகக் கல்வி அறிவினைப் பெற விரும்புபவருக்கு எள்ளளவும் கூடாது என்பதை,

    எள்ளிடைப் புலமை இசையும் முன்னம்
    நெல்லிடை யாண்மை நிலவல்ஓர் தவறே. (அறுவகை.புலமையி.37 )

    எள்ளளவும் கல்வியறிவு பெறுவதற்கு முன் நெல்லளவும் செருக்கடைவது தவிர்க்கப்பட வேண்டுமெனக் கூறுகிறது. இதனையே ‘கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு’ என நம் தமிழ் மூதாட்டி கூறியுள்ளது இங்கு ஒப்புநோக்குவதாகும். இதனை மாணவர்கள் நன்கு உணரவேண்டும். தானெனும் செருக்கு இருப்பவருக்கு கல்வியில் ஆர்வம் ஏற்படாததோடு எவ்வித அறிவு வளர்ச்சியுமிராது. கல்வியில் உண்மையான ஈடுபாடு கொண்டவர் துளியும் செருக்கின்றி வாழ்வர்.

    புலவரைப் புலவர் மதியாத நிலை

    மனிதனை மனிதன் மதித்து வாழ்வதே மனிதநேயமாகும். இருந்தும் புலவர் ஒருவர் மற்ற புலவர்களை மதிப்பதில்லை. இது மிகவும் தவறாகும் என்பதை,

    காகப் புள்என இனத்தொடு கவ்வாது
    ஞாளிபோற் பகைக்கும் நாவலர் பலரே. (அறுவகை.புலமையி.38)

    என்று காகத்தின் ஒற்றுமையுணர்வினைச் சுட்டி, இதுபோல் வாழாது நாயினது வேற்றுமை குணத்தையே தனது குணமாக்கி வாழும் புலவர் பலராவர். இப்பண்பு அவர்கள் கற்ற கல்வியினால் வந்த மமதையாகும் என்பதோடு அவ்வாறு இருப்பது தவறு என்றும் ‘உவப்பத் தலைக்கூடி உள்ளப்பிரிதலே புலவர் தொழிலாக’ வேண்டுமெனவும் கூறுகிறது.

    நிலையற்ற நட்பு

    தமிழின் சிறப்பை உணர்ந்த புலவர்களின் நிலையான நட்பைப் பார்க்கிலும் பொருட்செல்வத்தை மட்டுமே பெற்றிருக்கும் அரசர், அமைச்சர், பெருஞ்செல்வந்தரின் நிலையற்ற நட்பே சிறப்புடையதெனக் கருதுபவர் சிறந்த நூலாசிரியராகத் திகழ்ந்தாலும் அவர் புலவரிலும் இழிந்தவராவார் என்பதை,

    தமிழ்அறி புலவோர் தங்கள் உறவினும்
    பொருளுடை மன்னர் ஆதியர் பொய்உறவு
    உயர்வுஎனக் காண்பான் ஒள்ளிய பனுவற்
    காரன் எனினும் கடைப்படும் அன்றே. (அறுவகை.புலமையி.39)

    இன்றைய உலகில் அறிவுடன் கூடிய நட்பினைப் பார்க்கிலும் செல்வத்துடன் கூடிய நட்பையே எங்கும் காணமுடிகிறது. இத்தகைய நட்பினை இழிவென உரைக்கிறது இந்நூல்.

    பெரும்புலவர் இளம்புலவரைச் சோர்வடையச் செய்தல்:

    அறிவில் முதிர்ந்த பெரும்புலவர்கள் வளர்ந்து வரும் இளம் புலவர்களை இழிவுபடுத்தும் நிலையினை நாம் இன்றும் காணமுடிகிறது. இதனைத்தான்,

    தேறாப் புலவனைச் சிந்தை நோவப்
    படுத்தும் பாவலர் பதர்அனை யாரே. (அறுவகை.புலமையி.40)

    என்று பகர்வதோடு அத்தகையவர் உள்ளீடற்ற வெற்றுத்தானியம் போன்று பயனில்லாதவராவர் என்பதோடு குறிப்பாக அறிவில் தம்மைவிடக் கீழ்நிலையில் உள்ளவர்களைத் துன்புறுத்தவே கூடாது என்றும் வலியுறுத்துகிறது.

    சொல் திருடல்

    சிறந்த புலவர்களின் சொற்றொடர்களை அவர்கள் எழுதியவாறே எழுதித் தான் எழுதியது எனக் கூறும் புலவர்களின் செயல் பெருந்தவறாகும். இதனையே,

    சீரிய புலவர்தம் செஞ்சொல் திருடிப்
    பாழ்த்த புன்கவி பகர்வோர் பலரே. (அறுவகை.புலமையி.41)

    என்றுரைக்கிறது. பிறருடைய சொல்லையும் கருத்தையும் தன்னுடையதெனப் பொய்யாக மொழியும் இலக்கியத் திருட்டு கூடாதென்பதையே முன்வைக்கிறது.

    அகந்தை

    இன்று மட்டும் அல்ல காலந்தோறும் ஆற்றல் பெற்ற பெரும்புலவர்களில் சிலர் தானெனும் அகந்தையுடன் தனக்குப் பின்வரும் இளம்புலவர்களிடம் நடந்துகொள்வதைக் காணமுடிகிறது.அப்படிப்பட்டவர்களின் ஆணவத்தைத் தக்க முறையில் சான்றுடன் நிரூபித்து மூளியாக்க வேண்டும் என்பதை,

    “முறைப்படி வென்று மூளி ஆக்கான்” (அறுவகை.புலமையி.42)

    என்கிறது. சான்றாக, பாண்டியமன்னன் உக்கிரப் பெருவழுதி மதுரையில் சங்கம் அமைத்து தமிழ் வளர்த்த காலம். சங்கத்துப் புலவர்களெல்லாம் மதுரையில் கூடியிருந்தனர். தமிழ்ப் புலமையில், தங்களைவிட எவருமிலர் என்று அகந்தையுடனிருக்கையில் ஔவையார் அச்சங்கப்புலவர்களின் செருக்கினை அடக்க முனைந்து புலவர்கள் சூழ்ந்த அவையில், சைகையால் குறிப்புணர்த்தித் தம்முடைய ஐந்து விரல்களையும் மடக்கி மூடி சைகை காட்டினார். பின்னர் கையைக் கொஞ்சம் திறந்துக் காட்டினார். அதன்பிறகு சுட்டுவிரலை மாத்திரம் நீட்டிக் காட்டினார். பின் அதற்கு விளக்கம் கேட்டார். பதிலுக்குப் புலவரிலொருவர்,

    இவ்வளவு கண்ணுடையாள்
    இவ்வளவு சிற்றிடையாள்
    இவ்வளவு போன்ற
    இளமுலையாள்? இவ்வளவா
    நைந்த உடலாள்
    நலமேவு மன்மதன் தன்
    ஐந்து கணையால் வாடினாள்!
    என்று பாடினார். அதனைக் கேட்டு மனம் புழுங்கிய ஔவையார் அப்புலவர்களின் ஆணவத்தை அடக்கத் தமது குறிப்பினை உணர்த்தும் கீழ்வரும் பாடலைப் பாடலானார்.

    ஐயம் இடுமின்!
    அறநெறியைக் கைப்பிடிமின்!
    இவ்வளவேனும் அன்னம்
    இட்டு உண்மின்! தெய்வம்
    ஒருவனே என்று
    உணர வல்லீரேல்
    அருவினைகள் ஐந்தும் அறும்! (தனிப்பாடல்-2)

    எனப்பாடி புலவர்களின் செருக்கினை அடக்கினார்.  இது இங்கு ஒப்புநோக்கத்தக்கதாகும். ஒருவருக்கு கல்வியினால் பெரும்பயன் கருணையே அதுவே நாவலர்க்கு இறையாகும் என்பதை உணர்ந்து வாழ வேண்டும்.

    பொறுமை

    ‘பொறுத்தார் பூமி ஆள்வார்’, பொறுமை கடலினும் பெரிது’ என்பது ஆன்றோர் முதுமொழி. இதனை,

    முற்றும் பொறுத்தலும் மூக்கிற் கோபம்
    வைத்துத் திரிதலும் வண்டமிழ்ப் புலவர்க்கு
    ஆய தன்மைஎன்று அறையஒண் ணாதே.

    இவ்வாறு புலவர்கள் தனது கோபத்தை இடம், பொருள், ஏவல் அறிந்து காட்ட வேண்டும்.அதுவே சான்றாண்மையுமாகும் என்றுரைக்கிறது. அதற்காக அனைத்தையும் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது இல்லை. சூழ்நிலைக்கேற்றவாறு ஒழுகுதல் நன்று என்றே கூறுகிறது.

    காமச்சுவை

    காமக் கடலே கதிஎனக் கருதிப்
    போவார் புலமையிற் புண்ணியம் இன்றே. (அறுவகை.புலமையி.45)

    தமிழ்ப் புலமையை வெளிக்காட்ட வேண்டும் என்பதற்காக ஆபாசமான நாகரிகமற்ற பண்பாட்டைச் சீர்க்குலைக்கும் சொற்றொடர்களைக் கூறுவதால் எவ்விதப் பயனுமில்லை. இதனை உணர்ந்து புலவர்கள்  தமிழின் சிறப்பினை உயர்த்தும் வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். தமிழின் பெருமையை சீர்கெடச்செய்யும் விதமாகத் தமிழரின் அகவாழ்க்கையைக் கொச்சைப்படுத்தக் கூடாது என்பதையே வலியுறுத்துகிறது. மகாகவி பாரதியாரும் தன் சின்னச் சங்கரன் கதையில் இவ்வவல நிலையைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

    புரிந்துகொள்ளாத நாவலர்கள்

    கற்றோர்க்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பர். குறிப்பாகத் தமிழ்க்கல்வி அறம், பொருள், இன்பம், வீடுபேறு எனும் நான்கு உறுதிப்பொருள்களை அளிக்கும் சாதனமாகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த நம் தாய்மொழிக்கல்வியால் பொருளீட்டவும் அதனால் இன்பம் அடைவதை மாத்திரமே குறிக்கோளாகக் கொண்டவர் புல்லியர் ஆவார். இதனை,

    தெய்வம் புகழும் சிறப்பும் செந்தமிழ்
    பொருந்தும்என்று உணராப் புலவர்புல் லியரே. (அறுவகை.புலமையி.46)

    என்று கூறுகிறது.பொருளுக்காகவும் அதனால் பெறும் இன்பத்துக்காகவும் தமிழ்க் கல்வியைப் பெறுதல் கூடாது என்பது தெள்ளிதின் புலனாகிறது.

    இரக்கம் இல்லாத புலவர்கள்

    அனைத்து உயிர்களிடமும் அன்புகாட்ட வேண்டும். எவ்விடத்தில் உண்மையான அன்பு மேலோங்கி நிற்கிறதோ அங்கே தெய்வ அருளினைக் காணலாம். இரக்கம் என்பது ஐந்தறிவு உயிரினங்களிடமும் அன்பு காட்டுவதாகும். உயிர்களைக் கொன்று உணவு சமைப்பவர்களின் இழிந்த செயல்களைப் போற்றிப் பாடுகின்ற இரக்கம் இல்லாத புலவர்களை மேலோர் பேய்க்குணம் வாய்த்தவரெனப் பழிப்பர் என்று கூறுவதோடு நூல் படைப்பதன் தலையாய நோக்கம் மக்களுக்கு நன்னெறி காட்டுவதற்கே என்றும் கூறுகிறது. அதைவிடுத்து உயிர்களைக் கொலைசெய்தல் கூடாதென்பதற்கு,

    கொல்லல்ஊன் சமைத்தல் ஆகிய விரித்துக்
    கழறுந் துணிவுடைக் கவிப்புல வோரைப்
    பேயர்என்று உலகம் பெரிதுஇகழ்ந் திடுமே. (அறுவகை.புலமையி.48) என்றுரைக்கிறது.

    புலமையை விலை பேசுதல்

    அரியநூலை இயற்றி அதனைப் பணத்திற்கு விலைபேசுதல் சிறப்பாகாது எனவே ஒருவரது புலமைத்திறன் விலைமதிப்பற்றது என்பதறிந்து அதனால் அதை விலைபேசுதல் தவறாகும் என்பதை உணர்ந்து தமிழ்த் தொண்டாற்ற வேண்டுமென்பதை,

    புகலரும் பனுவல் பொற்பணம் கருதி
    விற்கத் துணிவது மேம்பாடு அன்றே. (அறுவகை.புலமையி.49) எனவும் கூறுகிறது.

    கல்வியின் சிறப்பறியாதார்

    கல்வியின் சிறப்பையும் அதனைக் கசடறக் கற்றவரின் புலமைத்திறனையும் அறியாத ஒரு செல்வர் முன்சென்று தம் பெருமைகளைக் கூறி அவரை பாராட்டிப் பரிசில் வழங்குவார் என எதிர்ப்பார்ப்பது தவறாகும் என்பதை,

    அருமை அறியான் அவையிடைப் புகுந்து
    பெருமை பாராட்டலும் ஏனையும் பிழையே. (அறுவகை.புலமையி.50)

    என்பதோடு அவர்களிடம் கைநீட்டிப் பரிசில் பெறுவதை இழிவெனவும் கூறுகிறது.

    காரணம் காரியம் காணாப் புலமை

    எந்தவொரு நிகழ்வுக்கும் காரண காரியம் உண்டென்பதை உணர்ந்து கற்பவரே கற்றலில் முழுமை நிலையைப் பெறுவர். அவ்வாறு இல்லாதவரின் கல்வியாற்றலை முழுமைப் பெற்றதாகக் கூறமுடியாது என்பதோடு இவ்வுலக நிலையாமையை உணர்ந்து வாழ்பவரின் புலமையே நிலையானதாகும். இதனை உணர்ந்தவராய் வாழவேண்டும் என்றும் கூறுகிறது.

    தவறில்லாது தெளிவுற உரைத்தல்

    ”தோன்றின் புகழோடு தோன்றுக அஃதிலார்
    தோன்றலின் தோன்றாமை நன்று” எனும் வள்ளுவரின் குறளுக்கேற்ப தாம் பாடத்தொடங்கிய துறையில் தவறாகப் பாடுவாராகில் இவ்வுலகில் எவரும் அவரை மதிக்கமாட்டார். இப்படிப்பட்டவரை,

    கொண்ட துறையினைக் கோதுபடக் கூறின்
    மண்டலத் தாரும் மதியார் அன்றே. (அறுவகை.புலமையி.53) என உரைக்கிறது.

    அறிவு மயக்கத்தின் செருக்கு

    ‘அருட்பே ராளருக்கு அஞ்சாப் புலமை’
    இறை அருளின் மேன்மையைப் பெற்ற பெரியவர்களிடம் புலமைச் செருக்குடன் இருத்தல் கூடாது. அவர்களிடம் பணிவுடன் நடத்தல் வேண்டும். அதாவது பயப்பக்தியுடன் கூடிய மரியாதையுணர்வுடன் பேசவேண்டும் என்பதையே கூறுகிறது.

    புலவர்களின் அடிமைநிலை

    ஒரு புலவர் ஒரு செல்வந்தருக்கோ அல்லது தலைவருக்கோ அடிமையாய் இருத்தலைவிட வணிகனாக இருக்கலாம் என்கிறது. மேலும் ஒருவரது புலமையை அடிமையாக்குவது அல்லது விற்பது பெரும் தவறாகுமெனவும் சாடுகிறது.

    அறிவுடைமைக்குப் பொருந்தாதவை

    எவரேனும் ஒருவர் இயற்றிய நூலில் அல்லது பாடலில் ஏதாவதோரிடத்தில் தவறு இருப்பது தெரிந்து அந்நூல் முழுமையும் அல்லது அப்பாடல் முழுமையும் தவறெனக் கூறுவது அறிவுடையாருக்கு ஏற்ற செயலாகாது. இதனை,

    பலவகை நயங்களும் பாராது ஒருவிதக்
    குற்றம் கருதிக் குதிப்பதும் புலமைக்கு
    இழிந்த பான்மைஎன்று இயம்பிடல் இசைவே. (அறுவகை.புலமையி.62)

    என்பதோடு இழிவான செயலெனவும் கூறுகிறது.

    நற்புலமைக்கு ஆகாதன

    அரசியல், ஆதாயம், பொருள் வருவாய், எளிய வழியில் செல்வாக்கடைதல் போன்றவற்றைப் பெறவேண்டி தமிழ்ப்பற்றை மிகைப்படுத்திக் காட்டிக்கொள்ளும் காரியவாதியாக இருத்தல் தவறாகும். புலமைபெற்றவர்கள் தனது புலமைக்கு ஆகாதன எவையெவை என்பதை அறிந்து நற்புலமையையே கைக்கொள்ளவேண்டும். இவ்வாறு புலமையில் களைய வேண்டிய தவறுகளை 34 நூற்பாக்கள் வழியாக அறுவகையிலக்கணம் தவறியல்பாக எடுத்துரைக்கிறது.

    *****

    பார்வை நூல்கள்

    1.அறுவகை இலக்கணம், புலவர்.ப.வெ.நாகராசன்
    2.தனிப்பாடல் திரட்டு (ஔவையார்)

     

     

     

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171010-The Archer-DWA -lr

    ”எங்கிருந்(து) ஆரம்பம், எங்கெதில் சங்கமம்,
    இங்கணம் இவ்வுயிரை நன்குணர்ந்தோர் -இங்கிலர்:
    ஆதலால் பாண்டவா, வேதனை வேண்டாம்வல்,
    சூதினைக் கொல்லல் சிறப்பு”….கிரேசி மோகன்….!

    ”ARCHER அருச்சுனா TORTUREநீ பண்ணாதே,
    PREACHERஎன் சொற்படி(கீதை)போப் பாண்டவா, -ஓர்ச்சரம்(ஒற்றை அம்பினால்)
    கொண்டந்த நூறைக் குலைநடுங்கச் செய்திடுவாய்,
    உண்டந்த சொர்கம் உனக்கு’’….கிரேசி மோகன்

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    171009 - Dialogue with Arjuna -lr

    ”வில்லவர், அம்பினை வீசுபவர், நூறினைக்
    கொல்பவர், சொல்லியவர் கீதையை , -தொல்லவர்(பழமையானவர்)
    ஆதிசேடன் விட்டு அசுவரதம் ஓட்டியவர்
    பாதிவிஷ்ணு மீதியவர் பாண்டு’’….கிரேசி மோகன்….!

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (243)

    செல்வன்

    இவ்வார வல்லமையாளாராக சவுமியா சாமிநாதன் அவர்களை மகிழ்ச்சியுடன் தேர்ந்தெடுக்கிறோம். இப்பரிந்துரையை அளித்தவர் வல்லமை நிறுவனர் திரு அண்ணா கண்ணன் அவர்கள் ஆவார்கள்.

    சவும்யா ஒரு குழந்தைகள் நல மருத்துவர். இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தை என அறியப்படும் எம்.எஸ் சாமிநாதனின் மகள். 30 ஆண்டுகள் மருத்துவத்துறையில் பணியாற்றி இந்திய மெடிக்கல் கவுன்சிலின் தலைவராக பணீயாற்றுகிறார். சுகாதாரதுறையின் ஆய்வுத்துறை செக்ரட்டரியாகவும் பணியாற்றுகிறார்.

    இதன்மூலம் உலக சுகாதார மையத்தின் பல அமைப்புகளில் பணிபுரிந்தார். டிபி. எச்.ஐ.வி ஆகிய நோய்களின் தடுப்பில் முக்கிய பணீயாற்றினார். யுனிசெப், உலகவங்கி ஆகியவற்றின் பல கமிட்டிகளில் பணீபுரிந்தார்

    இவ்வாரம் அவர் உலகசுகாதார மையத்தின் திட்டங்களுக்கான துணை இயக்குனர் ஆக நியமிக்கபட்டுள்ளார்.

    “தனக்கு கிடைத்த இவ்வாய்ப்பு இந்தியாவுக்கு அளிக்கபட்ட கவுரமாக” கருதி செயல்படுவதாக சவும்யா பேட்டி அளித்தார்

    இந்தியாவின் புகழையும், இந்திய மருத்துவர்களின் திறமையையும் ஹைலைட் செய்யவும், சேவை பணியில் அனைவரையும் ஈடுபட வைக்கவும் வேண்டிய ஊக்கத்தை சவும்யாவின் தேர்வு அளிக்கும் என வல்லமை நம்பி அவரை வல்லமையாளராக அறிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது

    வல்லமையாளர் சவும்யா சாமிநாதனுக்கு நல்வாழ்த்துகள்.

    இந்த வார வல்லமையாளராக தங்கள் கவனத்தைக் கவருபவர் எத்துறையைச் சார்ந்தவராக இருப்பினும் நம் வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், vallamaiselva@gmail.comvallamaieditor@gmail.com ஆகிய முகவரிகளில் தங்கள் பரிந்துரைகளை அனுப்பி வைக்கலாம். மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179 ]

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

     

    171007 -Ananda -lr

     

    ”அவ்வையை கைலாஸம் ஆனை முகன்சேர்த்தார்,
    COWவ்வுக்கு வைகுண்டம், கண்ணபிரான் -செவ்வாயர்,
    உண்டென்று ஓங்கி உலகளக்கும் உத்தமர்,
    பண்டமாற் றாய்கீதை பார்க்கு(உலகுக்கு)’’….கிரேசி மோகன்….!

    Share
  • சித்ரா-5 ( கடைசி பாகம்)

    (காதலின் புதியதொரு பரிமாணம்)
    மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;
    ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்
    *****************

    தொடர்ச்சி: காட்சி- 8

    Chithra-4
    அர்ஜுனன்: ஒரு கொள்ளைக்காரர்கள் கூட்டம் சமவெளியை வந்தடைந்துள்ளது என அறிகிறேன். என் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சென்று பயந்திருக்கும் கிராமமக்களை நான் காக்க வேண்டும்.

    சித்ரா: நீங்கள் அவர்களைப்பற்றிப் பயப்பட வேண்டாம். தீர்த்த யாத்திரைக்குச் செல்லும்முன் இளவரசி சித்ரா வலிமைவாய்ந்த காவலர்களை நாட்டின் எல்லைப்புறத்து வழிகளில் நிறுத்திவிட்டே சென்றுள்ளாள்.

    அர்ஜுனன்: இருப்பினும் ஒரு சிறு பொழுதிற்காவது நான் எனது க்ஷத்திரியனுடைய கடமையைச் செய்ய அனுமதிப்பாயாக. வீணே இருக்கும் என் கைகளைச் சேரும் புதுப் புகழுடன் நான் அதனை உனக்குத் தகுதியான ஒரு தலையணையாக ஆக்குவேன்.

    சித்ரா: என் கரங்களில் சிறைப்படுத்திவைத்து நான் உங்களைச் செல்ல அனுமதிக்காவிட்டால்? நீங்கள் முரட்டுத்தனமாக என்னிடமிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு செல்வீர்களா? அப்படியானால் செல்லுங்கள்! ஆனால் ஒருமுறை இரண்டாக முறிந்த கொடி திரும்பச் சேராது என்பதைத் தாங்கள் அறியவேண்டும். உங்களுடைய தாகம் தணிந்துவிட்டதெனில் செல்லுங்கள். இல்லையென்றால், மகிழ்ச்சி எனும் தேவதை சலனபுத்தியுள்ளவள், யாருக்காகவும் காத்திருக்க மாட்டாள் எனத் தெரிந்து கொள்ளுங்கள். சிறிது நேரம் அமருங்கள், என் தலைவா! தங்களை அலைக்கழிக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் எண்ணத்தை யார் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது? அவள் சித்ராவா?

    அர்ஜுனன்: ஆம். சித்ரா தான். எந்தவொரு வேண்டுதல் நிறைவேறுவதற்காக அவள் தீர்த்தயாத்திரை சென்றுள்ளாள் என வியக்கிறேன். அவளுக்குத் தேவையானது என்னவாக இருக்கும்?

    சித்ரா: அவளுடைய தேவைகளா? ஏன்? அதிர்ஷ்டமற்ற அவளிடம் எப்போது, என்னதான் இருந்தது? அவளுடைய பெண் உள்ளத்தை சிறு அறையில் அடைத்திடும் அவளுடைய குணங்கள் அனைத்துமே அவளுக்குச் சிறைக்கதவுகளாகும். அவள் அறியப்படாதவள். நிறைவை அடையாதவள். அவளுடைய பெண்மையுள்ளத்துக் காதல் கிழிந்த ஆடைகளால்தான் போர்த்தப்பட்டுள்ளது. அழகு அவளுக்கு மறுக்கப்பட்டது. உற்சாகமற்ற காலைப்பொழுதினைப்போல், வெளிச்சமெல்லாம் கருமேகங்களால் மறைக்கப்பட்டு, கருங்கல் மலையின்மீது அமர்ந்திருக்கும் உருவைப்போன்றவள் அவள். அவள் வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கேளாதீர்கள். உங்கள் செவிகளுக்கு அது இனிமையாக இராது.

    அர்ஜுனன்: அவளைப்பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். ஒரு வினோதமான நகருக்கு இரவுநேரத்தில் வந்திருக்கும் வழிப்போக்கனைப்போல உணர்கிறேன். மாடங்கள், கோபுரங்கள், மரத்தோப்புகள் முதலியன புரியாத நிழல்போலக் காட்சியளிக்கின்றன; உறக்கத்தின் அமைதியிடையே கடலின் மெல்லிய புலம்பல் கேட்கிறது. இந்த வழிப்போக்கனும் ஆச்சரியமான அதிசயங்களைக் காட்டும் விடியலுக்காகக் காத்திருக்கிறான். ஓ! எனக்கு அவளுடைய கதையைக் கூறுவாய்!

    சித்ரா: கூறுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது?

    அர்ஜுனன்: நான் என் மனக்கண்ணில் அவளைக் காண்கிறேன்- ஒரு வெண்ணிறப் புரவியின் மீதமர்ந்து, பெருமிதத்துடன் தனது இடதுகையில் அதன் கடிவாளங்களைப் பிடித்துக்கொண்டும், வலதுகரத்தில் வில்லினை ஏந்தியபடியும், வெற்றிதேவதை ஒருத்தி தன்னைச் சுற்றிலும் நம்பிக்கையைப் பரப்பிச் செல்வதனைக் காண்கிறேன். மிகுந்த கவனத்துடன் உள்ள தாய்ச்சிங்கத்தைப்போல அவள் தனது குட்டிகளைக் கொடூரமான அன்பினால் பாதுகாக்கிறாள். அணிகளால் அலங்கரிக்கப்படாத பெண்ணின் கரங்கள், தளைகளற்ற பலத்துடன் இருப்பின் அதுவே அவளுக்கு அழகாகும். நீண்ட குளிர்காலத்து உறக்கத்திலிருந்து விழித்தெழும் பாம்பினைப்போல் எனது உள்ளம் அமைதியற்று இருக்கின்றது. வா, இரட்டை ஒளிவளையங்கள் விண்வெளியில் பறந்துசெல்வது போல அருகருகே நாமிருவரும் விரையும் புரவிகளில் அமர்ந்து வேகமாகச் செல்லலாம். இந்த மயக்கமான பசும் சிறையிலிருந்து, குளிர்ந்த, உற்சாகமற்ற, அடர்ந்த, வாசமிகுந்த, மூச்சையடைக்கும் தன்மைகொண்ட இவ்விடத்திலிருந்து சென்றுவிடலாம்.

    சித்ரா: அர்ஜுனா, உண்மையாகச் சொல்லுங்கள், இப்போது எனது இந்தக் காமமூட்டும் மென்மையை நான் ஏதோவொரு மாயத்தால் உதறித்தள்ளிவிட்டு, உலகத்தின் கரடுமுரடான ஆரோக்கியமான பிடியிலிருந்து சுருங்கும் சிறியமலர் போல வாடி உதிர்ந்து, கடன்வாங்கிய ஆடைகளைப்போல எனது உடலிலிருந்து (மென்மையான இப்பெண்மையை) கழற்றி எறிந்துவிட்டாலும், உங்களால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியுமா? நான் இயலாமையை வெளிப்படுத்தும் செய்கைகளை நிராகரித்து நேராகவும் வலிமையான உள்ளத்துடனும் நிமிர்ந்து, எனது சிரத்தை மலைமீதுள்ள ஒரு நெடுமரம் போல உயர்த்திக்கொண்டு நின்றும், ஒரு மெல்லிய கொடியைப்போல புழுதியில் தவழாமலும் இருந்தால், ஒரு ஆணின் கண்களுக்கு நான் விருப்பமுள்ளவளாக இருப்பேனா? இல்லை, இல்லை, உங்களால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது. நான் என்னை இந்த நளினமான பெண்மை விரும்பும் நிலையற்ற இளமையின் பொருட்களால் சூழ்ந்துகொண்டு உங்களுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் திரும்ப வரும்போது, இந்த எனது அழகிய உடல் எனும் கோப்பையில் புன்னகை ததும்ப இன்பம் எனும் மதுவை நிரப்பித் தங்களுக்கு வழங்குவேன். இந்த மது தங்களுக்கு நிறைவைத்தந்து சலிப்பினையும் தரும்போது தாங்கள் விளையாடவோ, வேலை செய்யவோ வெளியே செல்லலாம். நான் முதுமையை அடைந்து தளர்ச்சியுறும்போது, நன்றியறிதலுடன் எனக்கு அளிக்கப்படும் வாழ்வினை ஏற்றுக்கொண்டு எனக்காக ஒதுக்கப்பட்ட ஒரு ஓரமாக ஒதுங்குவேன். இரவின் காதல்துணை பகலில் தங்களுக்கு உதவியாளாக இருந்தால் உங்களுடைய வீர உள்ளத்திற்கு அது மகிழ்ச்சியைத் தருமா? இடதுகையானது பெருமைவாய்ந்த வலதுகரத்தின் சுமையைப் பகிர்ந்துகொள்ளப் பழகிக்கொண்டால் அது உங்களுக்கு சம்மதமா?

    அர்ஜுனன்: நான் உன்னைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாதவனாக இருக்கிறேன். ஒரு தங்கச்சிலைக்குள் ஒளிந்திருக்கும் தேவதைபோல நீ இருக்கிறாய். என்னால் உன்னைத்தொடவோ, உனது விலைமதிப்பற்ற பரிசுகளுக்கு ஈடுசெய்யவோ முடியவில்லை. ஆகவே எனது காதல் முழுமையடையாமல் உள்ளது. சில பொழுதுகளில் புரிந்துகொள்ள முடியாத உனது சோகமான பார்வை, உன்னை நீயே பரிகசித்துக் கொள்ளும் விளையாட்டுத்தனமான சொற்கள், இவை எனக்கு நீ உனது மென்மையான தேகத்தைப் பிளந்து வெளிப்பட முயல்வதனையும் உன்னைத்தகிக்கும் ஒரு புனிதமான நெருப்பெனும் வலியிலிருந்து புன்னகையோடு நீ விடுபட முயல்வதனையும் கீற்றுகளான காட்சிகளாக எனக்கு அறிவிக்கின்றன. உண்மையின் முதல் தோற்றம் மாயைதான். அவள், அந்த மாயை, தனது காதலனை நோக்கிப் பொய்த்தோற்றத்தோடு செல்கிறாள். ஆனால் சரியான சமயம் வாய்க்கும்போது தனது அணிமணிகளையும், முகத்திரையையும் களைந்தெறிந்து விட்டு நிர்வாணமான பெருந்தன்மையில் காட்சியளிக்கிறாள். உண்மையின் எளிய வடிவமான முடிவான உன்னை அடைய நான் தேடுகிறேன். ஏன் இந்தக் கண்ணீர், என்னுயிரே? முகத்தை ஏன் கரங்களால் மூடிக்கொள்கிறாய்? நான் உன்னை வருத்தப்படுத்தி விட்டேனா, என் அன்பே? நான் கூறியதனையெல்லாம் மறந்துவிடு. இப்போதைய பொழுதில் நான் திருப்தியாக இருப்பேன். ஒரு மர்மமான பறவை இருளிலுள்ள தன் கூட்டிலிருந்து இனிய இசையுடன் புறப்பட்டு வருவதனைப்போல் ஒவ்வொரு அழகிய பொழுதும் என்னிடம் வரட்டும். எப்பொழுதும் இதனை உணர்ந்து கொள்ளும் எல்லையில் நான் இருந்துகொண்டு எனது நாட்களை முடிவுக்குக் கொண்டுவருவேன்.

    காட்சி- 9

    சித்ரா:

    (போர்த்து மூடியவண்ணம்) அன்பரே, கோப்பையின் கடைசித்துளிவரை பருகிவிட்டீர்களா? இதுதான், உண்மையாக, முடிவா? இல்லை, எல்லாம் முடிந்துவிட்டாலும் எதாவது மிச்சமிருக்கும்; அதுவே நான் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கும் கடைசி அர்ப்பணம்.

    என் இதயத் தெய்வமான உங்களை வழிபட சுவர்க்கத்தின் பூந்தோட்டத்திலிருந்து ஈடிணையற்ற அழகுடைய மலர்களைக் கொண்டுவந்தேன். சடங்குகள் முடிவுற்றதெனில், மலர்கள் வாடி விட்டால், அவற்றைக் கோவிலிலிருந்து வெளியே எறிந்து விடுகிறேன். (போர்வையை விலக்கி அவளுடைய உண்மையான ஆணின் உடையில் காட்சியளிக்கிறாள்.) இப்போது உங்களுடைய பக்தனைக் கருணை நிறைந்த கண்களால் காணுங்கள்.

    நான் உங்களை வழிபட்ட மலர்களைப்போன்று நிறைவான அழகு உடையவளல்ல. என்னிடம் பலவிதமான குறைகள் உள்ளன. உலகப்பாதையில் நான் ஒரு தேசாந்திரி, எனது உடைகள் அழுக்கானவை, எனது பாதங்கள் முள்தைத்து ரத்தம் கசிகின்றன. சில பொழுதுக்கே உண்டான பூவைப்போன்ற அழகை நான் எங்கிருந்து பெறுவேன். நான் பெருமையுடன் தங்களுக்குக் கொடுக்க வந்துள்ளது ஒரு பெண்ணின் இதயத்தினை மட்டுமே! இதில் ஒரு சாமானியப்பெண்ணின் வலிகளும், இன்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன; நம்பிக்கையும், பயங்களும், அவமானங்களும் இணைந்துள்ளன; இங்குதான் காதல் பீறிட்டெழுந்து தடுமாறிக்கொண்டு நித்தியமான வாழ்க்கையை நோக்கிச் செல்கிறது. இதனுள் தான் கௌரவமான உயர்வான பூரணமற்ற தன்மை இருக்கிறது. பூவாலாகிய பூசனை முடிந்துவிட்டால், என் தலைவனே, இனி வரப்போகும் நாட்களுக்கு என்னைத் தங்கள் அடிமையாகக் கொள்ளுங்கள்.

    நான்தான் சித்ரா, அரசமகள். ஒருநாள் சிவனின் கோவிலுக்கு ஒரு பெண் அணிமணிகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு உங்களிடம் வந்தது ஒருவேளை உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த நாணம்கெட்ட பெண் உங்களிடன் ஒரு ஆணைப்போல் காதல்புரிய வந்தாள். நீங்கள் அவளை மறுத்தீர்கள்; நீங்கள் செய்தது நன்றே. என் தலைவா, நானே அந்தப்பெண். அவள் என்னைப்போல வேடம் தரித்தவள். பின் கடவுள்களின் வரத்தால் நான் ஓராண்டிற்கு ஒரு மானிட வடிவு பெறக்கூடிய பிரகாசமான வடிவைப் பெற்று, என் தலைவனின் உள்ளத்தை அந்தப் பொய்ம்மையின் கனத்தால் களைப்படையச் செய்தேன். நிச்சயமாக நான் அந்தப் பெண்ணல்ல.

    நானே சித்ரா. வழிபட வேண்டிய தேவதையல்ல, இருப்பினும் பரிதாபப்பட்டு ஒதுக்க வேண்டிய ஒரு பூச்சியைப் போன்ற பொருளுமல்ல. நீங்கள் என்னை அபாயமும் வீரமும் நிறைந்த உங்கள் பயணத்திலும் துணையாகக் கொள்வீர்களாயின், என்னைத் தங்களுடைய பெரும் கடமைகளில் பங்கெடுக்க அனுமதிப்பீர்களாயின், அப்போது எனது உண்மை வடிவினை அறிந்து கொள்வீர்கள். எனது கருவில் வளர்ந்து கொண்டிருக்கும் உங்கள் குழந்தை, மகனாகப் பிறந்தால், நானே அவனை இரண்டாவது அர்ஜுனனாக வளர்ப்பேன்; காலம் வரும்போது உங்களிடம் அனுப்பி வைப்பேன்; கடைசியில் நீங்கள் என்னை உண்மையாக அறிந்து கொள்வீர்கள். இன்று நான் தங்களுக்குத் தரக்கூடியது அரசனின் மகளான சித்ராவை மட்டுமே!

    அர்ஜுனன்: அன்பே, எனது வாழ்க்கை முழுமை அடைந்தது.

    {நிறைந்தது}

    Share
  • படக்கவிதைப் போட்டி (130)

    பவள சங்கரி

    அன்பிற்கினிய நண்பர்களே!

    வணக்கம். கண்ணையும் கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?

    22386294_1449648895089305_585560320_n
    ராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

    இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (14.10.2017) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர்குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான திருமதி மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.

    ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.

    போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் (76)

    கலையால் இணைவோம்

    நலம்-2-1-1

    பாரம்பரிய இசை, நாட்டியம் எல்லாம் பக்தி மார்க்கமாக இருந்தவை. பிறர் பாராட்ட வேண்டும், பெரும்பொருள் ஈட்ட வேண்டும் என்று ஏதேதோ காரணங்களுக்காக இவைகளைக் கற்க நினைத்தால் ஓரளவுதான் வெற்றி பெற முடியும்.

    சுயநலம் கொண்ட பெற்றோர்

    எழுபது வயதுக்கு மேலான ஒரு பரதநாட்டிய ஆசிரியை என்னிடம் கூறினார்: “அந்தப் பெண் நன்றாக ஆடுவாள். ஆனால் அவளுடைய தாய் அவளையே நான் கவனித்துக்கொண்டிருக்க வேண்டும், பொது இடங்களில் ஆட அவளுக்குத்தான் நிறைய வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தினார். `இனி வராதே!’ என்று நான் அவளை நிறுத்திவிட்டேன்”. சொல்லும்போதே அவர் முகத்தில் அப்படி ஒரு கோபம்.

    இதனால் பாதிப்படைந்தவர்கள் பலர். முன்னுக்கு வரவேண்டிய மாணவியை இழந்த ஆசிரியை, கலையார்வம் பாதியிலேயே நிறுத்தப்பட்டுவிட்டதால் ஏமாற்றமடைந்த மாணவி. போதாத குறைக்கு, தாயின் கனவுகளும் பேராசையால் நொறுங்கிவிட்டன.

    எத்தனை பாட்டுகள் தெரியும் என்று விரல்விட்டுக் கணக்குப் போடுவதைவிட, கற்ற சிலவற்றை ஒருவர் எவ்வளவு முழுமையாகக் கற்றிருக்கிறார் என்பதுதான் முக்கியம்.

    திறமையைக் காட்ட அவசரம்

    ஒரு முறை நான் மேடையில் பாடி முடிந்ததும், “சங்கீதம் படிச்சுக் குடுப்பீங்களா? எத்தனை மாசத்திலே மேடை ஏத்துவீங்க?” என்று தாய்மார்கள் கேட்டபோது திகைத்துப்போனேன்.

    இவர்களைப்போன்ற பெற்றோர் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கிறோம், அதனால் அவர்கள் நாம் சொல்வதையெல்லாம் கேட்டாக வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    இவர்களுக்கு இணங்கி சொல்லிக்கொடுத்தால், பாட்டுகூட ஏதோ பாடத்தை ஒப்பிப்பதுபோல் இருக்கும். அனுபவித்துப் பாடுவதுபோல் இருக்குமா? பாவம் எப்படி வரும்?

    இப்படிச் செய்வது தவறான முறை என்று ஆசிரியர்களுக்குப் புரியாமல் இல்லை. ஆனாலும், வேறு வாத்தியார்களை நாடிப் போய்விட்டால், நம் வருமானத்திற்கு என்ன வழி?’ என்று, வாரத்துக்கு ஓர் உருப்படி என்று பெயருக்குச் சொல்லிக் கொடுப்பார்கள். அதனால் சொல்லிக் கொடுப்பவருக்கோ, கற்பவருக்கோ கிஞ்சித்தும் மனநிறைவு கிடைக்காது.

    குழுவாகப் பங்கேற்பது

    ஒன்றிற்கு மேற்பட்டவர்கள் நுண்கலை சம்பந்தப்பட்ட ஒரு காரியத்தில் ஈடுபடுகையில், போட்டி மனப்பான்மை எழக்கூடும். `பார்ப்பவர்கள் என்னையே பாராட்ட வேண்டும்!’ என்ற எண்ணத்துடன் செய்வார்கள். அவர்கள் எதிர்பார்த்த பாராட்டு பிறருக்குக் கிடைத்துவிட்டாலோ, ஆத்திரமும் பொறாமையும் கொள்வார்கள்.

    இதைத் தவிர்க்க, ஆசிரியர் ஒரு மாணவன்மீது கூடுதலான அன்பையோ, கவனத்தையோ காட்டாமல் இருப்பது அவசியம். ஓர் அமைப்பின்கீழ் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கையில், பங்கு பெறுபவர்களின் பெயர்கள் தனித்தனியாகக் குறிப்பிடாமல் இருக்கும்போது, `நாம் எல்லாரும் இணைந்து இயங்கினால்தான் நிகழ்ச்சி வெற்றி பெற முடியும்!’ என்ற மனப்பக்குவம் அவர்களுக்கு வருகிறது. போட்டியோ, கர்வமோ எழ வாய்ப்பில்லை.

    சமீபத்தில் இப்படி ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்குச் சென்றிருந்தேன். பத்து மாணவிகள் ஒருவருக்கொருவர் ஒப்பனை செய்து, பிறர் ஏவாமலேயே மண்டபத்தை அலங்கரிப்பதிலிருந்து நாற்காலிகளைக் கொண்டுவந்து போடுவதுவரை எல்லா வேலைகளையும் தாமே முன்னின்று செய்தார்கள். `கடினமான வேலை’ என்று அஞ்சி நழுவாது, பார்த்துப் பார்த்து ஒவ்வொன்றையும் செய்கிறார்களே என்று ஆச்சரியமாக இருந்தது. இவர்கள்தாம் தலைமைப் பதவிக்கு ஏற்றவர்கள் என்று தோன்றிப்போயிற்று.

    `பிற வகுப்புகளைச் சார்ந்த மாணவிகள் ஆடும்போது, கேலியாகச் சிரிக்கவோ, பேசவோ கூடாது,’ என்ற நியதியைப் பின்பற்றுகிறார்கள் இவர்கள். அப்படிச் செய்தால்தான், `நான்தான் உயர்த்தி!’ என்ற தலைக்கனம் கூடுகிறது. ஒருவரது திறமையும் ஆட்டங்கண்டு போகிறது.

    இம்மாணவிகளின் குடும்பத்தினர் ஆசிரியையிடம் தம் பெண்களை ஒப்படைத்துவிட்டதைப்போன்று நடந்துகொண்டனர். குறுக்கே வரவில்லை. தாங்களும் சேர்ந்து உழைத்தார்கள். இவர்களுக்குள் மொழி வேறுபாடு இருந்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    பிறரது பார்வையில்

    ஒரு பரதநாட்டிய நிகழ்ச்சியின்போது, தமிழரல்லாத ஒருவர் என்னைக் கேட்டார், “உங்கள் நாட்டியத்தில் ஒவ்வொரு விரலசைவுக்கும் அர்த்தம் இருக்கிறது போலிருக்கிறதே?” என்று.

    “ஒவ்வாமைக்கும், அசுரனுக்கும் ஒரே முத்திரைதான்,” என்று நான் ஆரம்பித்து, சிலவற்றை விளக்கச் சிரித்தார்.

    அவர் மேலும் துளைத்தார்: “யோகாசனம் செய்வது போல் சில சமயம் வருகிறதே!”

    யோகா பயின்றால் நாட்டியம் ஆடுவது எளிது. குனியும்போது மூச்சை வெளிவிட வேண்டும், நிமிர்கையில் மூச்சை உள்ளுக்கிழுக்க வேண்டும். ஒரே காலில் நீண்ட காலம் நிற்க இவர்களால் முடியும். இந்த மாணவிகள் ஒவ்வொரு வகுப்பும் தொடங்குமுன் சில யோகாசனப் பயிற்சிகள் செய்கிறார்களாம்.

    பாட்டில் உணர்ச்சி வேண்டாமா?

    வாய்ப்புகள் அதிகமாக வேண்டும் என்ற எண்ணத்துடன், ஊடகத்தைச் சேர்ந்த புகைப்படக்காரர் இருந்தால், ஒரு கலைஞர் வலியப்போய் அவருடன் நட்பு கொண்டவர்போல் நடிப்பது பயனளிக்கலாம். ஆனால், அவர்தான் திறமை மிக்கவர் என்று எல்லாரும் ஒப்புக்கொள்வார்களா என்பது சந்தேகம்தான்.

    நானே சகலம்(?)

    தியாகராஜ ஆராதனையின்போது, நூற்றுக்கணக்கான இசை வல்லுனர்கள் தம் பக்தியைச் செலுத்த வருவதாகப் பெயர். ஆனால், ஒரு பாடகி முதல் வரிசையில் அமர்ந்துகொண்டு, தன்முன் மூன்று ஒலிபெருக்குகளை வைத்துக்கொண்டு பாடியதையும், முன்பொருமுறை ஒரு புகைப்படக்காரரைப் பார்த்து புன்னகை பூத்து, அச்சமயம் பாடாமல் இருந்ததையும் தொலைகாட்சியில் கண்டபோது மனம் நொந்தேன். தன்னையே நினைத்துக் கொண்டிருந்தால் பக்தி எப்படி வரும்? பாட்டிலும் உயிர் இருக்காது.

    நல்ல வேளை, `இசையே இறைவனைத் துதிக்கும் வழி!’ என நம்பி வாழ்ந்த வாக்கேயக்கார்கள் இப்போது உயிருடன் இல்லை!

    மேடைக் கச்சேரிகளின்போது, பாடகரும், வாத்தியக்காரர்களும் ஒருவரது திறமையை மற்றவர் `பேஷ்!, `பலே!’ என்று வாயாரப் பாராட்டினால் கச்சேரியும் சிறக்கும், இரு தரப்பினர் இடையே ஆழ்ந்த நட்பும் உண்டாகும்.

    பல ஆண்டுகளுக்குமுன் பார்த்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. பார்வையற்ற ஒரு வாத்தியக்காரரை சபையோர்கள் கைதட்டி உற்சாகப்படுத்தியபோது பாடகர் முகத்தில் ஆத்திரம் கொப்புளித்தது.

    ரசிகர்கள் தலையாட்டினால் அது அவருக்குத் தெரியும் என்று நினைத்து அவர்கள் வாத்திய இசையை மெச்சும்வண்ணமாக அப்படி ஆரவாரம் செய்தார்கள் என்பது அவருக்குப் புரியவில்லை!

    அவர் முன்னணியில் இருந்த பாடகர். ஆனால், எல்லோருடைய கவனமும், `அவர் முகத்தில் எத்தனை கோபம், பாரேன்!’ என்று அவர் முகத்தில்தான் இருந்தது. இசையில் நிலைக்கவில்லை.

    மனிதன் தீவா?

    தீவுதான் தனியாக இருக்கும். எப்போதாவது, எதற்காகவாவது நாம் பிறரை நாடாமல் இருக்கிறோமா?

    `இவரால் நம் காரியம் ஆகவேண்டும்,’ என்ற முன்யோசனையில்லாது பிறருடன் பழகுவதுகூட நன்மையைத்தான் விளைவிக்கும்.

    அண்மையில் ஒரு கலைநிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். ஆங்கில இசையுடன் கூடிய `கோரஸ்’, குழுவாக வயலின், பியானோ, பரதநாட்டியம் என்று சகலமும் இருந்தன. அக்கலைஞர்களை ஒருங்கிணைத்தது இசை, வறுமை.

    வசதி குறைந்த இளைஞர்கள் பல ஆசிய நாடுகளிலிருந்து வந்திருந்தனர். அவர்களுக்குப் போதிப்பவர்கள் பணம் சம்பாதிப்பதைப் பெரிதாகக் கருதாது, தாம் கற்றுத் தேர்ந்த கலைகளைப் பரப்புவதன்மூலம் சமூக சேவை செய்பவர்கள்.

    நிகழ்ச்சி ஏற்பாட்டார்களுடைய குழந்தைகள் வசதி நிறைந்தவர்கள் ஆனாலும், தம்மைப்போல் இல்லாதவர்களுடன் கலந்து பழகி, அதனால் நன்மை பெற்றவர்கள். இவர்களுக்கு இயல்பான தாராள மனப்பான்மை வசதியற்றவர்களுக்கும் பழகிப்போக, அவர்களும் பிறருக்கு உதவி செய்வதிலும், தமக்குத் தெரிந்தவற்றைப் பகிர்ந்துகொள்வதிலும் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோடீஸ்வரரின் புதல்வியான ஒரு சீனப்பெண் புடவையும் பொட்டும் அணிந்து, அறிவிப்புகள் செய்தாள். அவளுக்குப் புடவை அணிவித்தது வசதியற்ற தமிழ்ப்பெண். ஆனால், கலைகளில் சிறந்தவள். பரோபகாரத்தால் இருவருக்குமிடையே நல்லுறவு ஏற்பட்டது.

    செல்வச்செழிப்பு ஒருத்தியை கர்வியாகவும் ஆக்கவில்லை, `அப்படி நாமும் இல்லையே!’ என்ற ஏக்கமோ, பொறாமையோ இன்னொருத்திக்கு எழவுமில்லை. கலையிலிருந்த ஆர்வத்தால் இருவரும் ஒன்றாகிப்போனார்கள்.

    கலை பேதங்களை விலக்கும் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்!

    சுயநலத்தையே பெரிதாகக் கருதி ஈடுபட்டால், நாமும் வளரமாட்டோம், நம் கலையும் வளராது.

    தொடரும்

    Share
  • தமிழிசைப் பண்கள் – முத்துத்தாண்டவர்

    -சிறீ சிறீஸ்கந்தராஜா

    தமிழிசைப்பண்கள்
    **********************

    இசைத்தமிழின் தொன்மை – 80
    பழந்தமிழிசையில் பண்கள் 

    தமிழ் மும்மூர்த்திகள்
    *************************

    முத்துத் தாண்டவர் (1525-1625)
    அருணாசலக் கவிராயர் (1711-1779)
    மாரிமுத்துப் பிள்ளை (1712-1787)

    முத்துத் தாண்டவர் (1525-1625)

    muthuமுத்துத் தாண்டவர் (1525-1625) என்பார் சீர்காழியிலே வாழ்ந்து கருநாடக இசையில் பல இசைப்பாட்டுக்கள் இயற்றியும் பாடியும் பெரும்புகழ் பரப்பிய இசை முன்னோடி ஆவார். ஆதி மும்மூர்த்திகளில் ஒருவர் ஆவார். இவர் இயற்றிய பாடல்கள் தமிழில் உள்ளன.

    ஆதி மும்மூர்த்திகள் எனப்படுபவர்கள்:

    அருணாசலக் கவிராயர் (1712-1779),
    மாரிமுத்தாப் பிள்ளை (1717-1787),
    முத்துத் தாண்டவர்(1525-1625) ஆவர்.

    தமிழிசையில் பாடல்கள் பண் உருவிலிருந்து இருந்து கிருதி வடிவத்திற்கு மாறிய காலகட்டத்தில் முத்துத்தாண்டவர் இருந்ததால், இந்த முன்னேற்றத்தில் அவருக்கும் பெரும் பங்கு உண்டெனச் சொல்லலாம். 

    அநுபல்லவியை இணைத்து, பல்லவி – அநுபல்லவி – சரணம் என்ற திரிதாது (திரி-மூன்று) முப்பிரிவு முறையை, தாளத்துக்கும் கதிக்கும் பொருந்தி முழுமைப்படுத்திக் கொடுத்தவர் முத்துத் தாண்டவரே ஆவார். 

    பின் வந்தோர் அனைவருமே இதனை ஏற்றுக் கொண்டதால், கீர்த்தனை மரபின் பிதாமகர் என்றே கருதப்படுகின்றார். 

    இன்றைய கர்நாடக சங்கீதத்தின் நிறுவனராகவே முத்துத்தாண்டவரை மு.அருணாசலம் என்னும் இசை அறிஞர் சொல்கிறார். 

    பல்லவி-அநுபல்லவி-சரணம் என்னும் வடிவத்தில், ஜதி தாளக்கட்டுடன் இயற்றப்பட்ட பாடல்களை முத்துத்தாண்டவர் இயற்றிட அதுவே பிற்காலத்தில் வழக்காக மாறியது.

     இவரின் பாடல்கள் பல பதம் என்கிற வகையினைச் சாரும். இவை பெரிதும் நாட்டியத்திற்காகப் பயன்படுத்தப்படும் பாடல்கள் ஆகும். 

    மேலோட்டமாக சிருங்கார ரசமும், ஆழமாகப் பார்த்தால் தெய்வீக பக்தியைத் தரும் பதங்கள் அந்தக் காலகட்டத்தில் பிரபலம். அவற்றை உள் வாங்கிக்கொண்டு தமிழிசையில் அழகாக தந்துள்ளார். 

    முத்துத் தாண்டவர் மாணிக்கவாசகரைப் போல் தில்லைப் பெருவெளியில் மறைந்தருளினார் என்று சொல்லப்படுகின்றது. இவர் ஏராளமான இசைப் பாடல்களை இயற்றியுள்ளார். 

    இயற்றிப் பாடிவந்த பாடல்களில் சில: 

    பூலோககயி லாசகிரி சிதம்பரம்மல்லாற்,
    புவனத்தில் வேறுமுண்டோ.

    இராகம் கல்யாணி, தாளம்ஜம்பை தாளம்

     ஈனமொருஸ்தல மின்னமொருகோயி, லின்னமொரு
    தெய்வ மிப்படியுண்டோ.

    இராகம் – தோடி, தாளம் – ஏக தாளம்

     சேவிக்க வேண்டுமையா – சிதம்பரம், சேவிக்க வேண்டுமையா. இராகம் -ஆந்தோளிகா, தாளம் ஆதி தாளம். 

    சிற்சபைதனிலே கண்டு கொண்டேனென்றும்.
    இராகம் – நீலாம்பரி, தாளம் – திரிபுடை தாளம் 

    நடனங்கண்ட போதேயென்றன் சடலஞ்செய், பாக்கியமையா. இராகம் – ஆகிரி, தாளம் – ஆதி தாளம் 

    இவரது இயற்பெயர் தாண்டவர். இசை வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்தவர். தில்லை ஆண்டவரை நினைத்து, தாண்டவம் ஆடுபவரான அவருடைய அழகை எண்ணி, அந்தப்பெயரையே பிள்ளைக்கும் வைத்தார்கள். 

    தாண்டவரை வாலிபப் பிராயத்தில் திடீரென என்னவென்றே அறியமுடியாத நோய் ஒன்று தாக்கியது. தொழுநோய் என்று ஒதுக்கி வைக்கப்பட்ட அவர், ஆதரவுக்காய் ஏங்கித் தவிக்கையில், சிவபாக்யம் என்ற தேவதாசிக் குலத்தில் பிறந்த பெண்ணின் பரிச்சயம் அவருக்குக் கிட்டியது. 

    சிவபெருமானின் புகழைப் பாடல்களாய்ப் பாடிய சிவபாக்யத்தின் குரலின் இனிமை அவரது துக்கத்தைப் பெரிதும் தணித்தது. நாளடைவில், சிவபாக்யத்தின் வீட்டிற்கு செல்வது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அவரது குடும்பத்தினர் எத்தனையோ எடுத்துக் கூறியும், தாண்டவர் தன் பழக்கத்தை விடுவதாக இல்லை. இதனால் கோபமுற்ற அவர் குடும்பத்தினர், அவருக்கு உணவு அளிக்கக் கூட மறுத்தனர். 

    அப்பொழுது, ஒரு வேளைமட்டும் சிவன் கோயில் பிரசாதத்தை உண்டு விட்டு, மற்ற நேரங்களில் பட்டினியாகவே கிடந்தார். இதனால் ஏற்கெனெவே நலிவுற்றிருந்த அவர் உடல் மேலும் மோசமடைந்தது. 

    ஒரு நாள், சீர்காழி கோயிலில், சிவனை வழிபட்டுத் திரும்புகையில், உடல் தளர்ந்து, சிவபெருமானின் வாகனங்கள் வைத்திருந்த அறைக்கு அருகில் தள்ளாடி விழுந்தார். மெல்ல அந்த அறைக்குள் தவழ்ந்து சென்றவர் சற்றைக்கெல்லாம் நினைவிழந்தார். 

    இவர் மயங்கிக் கிடப்பதை கவனியாமல், விளக்கை அணைத்துவிட்டு கோயில் குருக்கள் கதவைப் பூட்டிக் கொண்டு சென்றுவிட்டார். கொஞ்ச நேரம் கழித்து அறிவுற்ற தாண்டவர், தன் நிலையை உணர்ந்து கலங்கினார். உள்ளே கொலுவிருந்த பிரும்மபுரீஸ்வரரை நோக்கிக் கதறினார். தனக்கு ஆதரவளிக்கும்படி இறைஞ்சினார். 

    அழுது அழுது சோர்ந்து படுத்தவரை, சற்றைக்கெல்லாம் ஒரு சிறுமி வந்து எழுப்பினாள். விழித்துப் பார்த்த தாண்டவர், அவள் குருக்களின் மகள் என்பதைக் கண்டு கொண்டார். 

    தன் கையில் இருந்த பாத்திரத்தில் கொணர்ந்த உணவை தாண்டவருக்கு அளித்து, அவர் உண்டு முடித்ததும், அவருக்கு என்ன குறை என்று வினவினாள். தன் குறையைச் சொல்லி அழுத தாண்டவரைத் தேற்றி, சிதம்பரத்துக்குச் சென்று, அங்கு வீற்றிருந்த நடராஜப் பெருமானை நோக்கி, ஒவ்வொரு நாளும் ஒரு பாடல் புனையுமாறு பணித்தாள். 

    தனக்கு பாட்டேதும் புனையத் தெரியாதெனச் சொன்ன தாண்டவருக்கு, கோயிலில் தினமும் அவர் பார்க்கும் முதல் பக்தர் வாயில் இருந்து வரும் வார்த்தையைத் தொடக்கமாகக் கொண்டு பாடல் புனையுமாறு ஆலோசனை கூறி மாயமாய் மறைந்துவிட்டாள் அச்சிறுமி. 

    முத்துத்தாண்டவர், சிதம்பரத்தை நோக்கிப் பயணமானார். சிதம்பரத்தை அடைந்ததும் அவர் காதில், ‘பூலோக கைலாயகிரி சிதம்பரம்’ என்ற சொற்கள் விழுந்தது. அதையே தொடக்கமாக வைத்து ஒரு பாடலைப் புனைந்தார். அவர் முழுப்பாடலை பாடி முடித்ததும் ஐந்து பொற்காசுகள், அவர் நின்றிருந்த படிக்கருகில் தோன்றின. 

    ஈசன் மனம் கனிந்து அளித்ததை சந்தோஷமாக ஏற்றுக் கொண்டு, ஒவ்வொரு நாளும் அவர் காதில் விழுந்த முதல் வார்த்தையைக் கொண்டு பாடலொன்றைப் புனைந்தவாறு காலம் தள்ளினார் முத்துத்தாண்டவர். 

    நாள்தோறும் சீகாழியிலிருந்து சிதம்பரம் வரும் தாண்டவர், சந்நிதியில், முதலில் அவர் காதில் விழும் வார்த்தையைக் கொண்டே அன்றையப் பாடலப் பாடுவதை வழக்கமாக்கிக் கொண்டார். 

    ஒவ்வொரு நாளும் பாடி முடித்ததும் பஞ்சாட்சரப்படியில் பொற்காசுகளைப் பெறுவதும் தொடர்ந்தது. ஒருமுறை கோயிலுக்குச் செல்கையில், பாம்பு ஒன்று அவரைத் தீண்டியது. “அருமருந்தொன்று தனிமருந்து அம்பலத்தே கண்டேனே” என்று தில்லை ஈசனை நோக்கிப் பாட, விஷம் இருந்த இடம் தெரியாதபடி உடலை விட்டு நீங்கியது. 

    ஒருநாள் கொள்ளிடத்தில் வெள்ளம் கரை புரண்டோட, சிதம்பரம் செல்ல முடியாமல் தவித்துப் போனார். “காணாமல் வீணிலே காலம் கழித்தோமே” என்று மனமுருகப் பாடியதைக் கேட்டு மனமிரங்கி, ஆறு அவருக்கு இரண்டாகப் பிளந்து வழிவிட்டது. சிதம்பரம் செல்ல வழி பிறந்ததும், ‘தரிசனம் செய்வேனே” என்ற பாடலைப் பாட ஆரம்பித்தார். 

    1640-ஆம் வருடம், ஆவணிப் பூச நாளில், “மாணிக்க வாசகர் பேறு எனக்குத் தரவல்லாயோ அறியேன்” என்று நடராஜரை நோக்கிப் பாடவும் உடனே ஒரு பெரிய ஜோதிப்பிழம்பு வந்து அவரை ஆட்கொண்டது.

     

     

     

    Share
  • கற்றல் ஒரு ஆற்றல் 98

    க. பாலசுப்பிரமணியன்

    இயற்கைசார் நுண்ணறிவு (Naturalistic Intelligence)

    education-1-1-1

    ஹோவர்ட் கார்ட்னர் (Howard Gardner)  அவர்களின் பல்முனை நுண்ணறிவுகளில் (Multiple Intelligences) எட்டாவதாக இடம் பெற்றுள்ள நுண்ணறிவு இயற்கைசார் நுண்ணறிவு. இந்த நுண்ணறிவு பல்லாயிரம் காலம் தொட்டு மனிதஇன மேம்பாட்டில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. இந்த அகண்ட பூகோளத்தையும் அதைச் சார்ந்த நீர், நிலம், காற்று, செடி கொடிகள், மிருகங்கள் மற்றும் இயற்கை வளங்களைக் காப்பதற்கு இந்த நுண்ணறிவு மிகவும் தேவையானதாகக் கருதப்படுகின்றது. இன்று உலக அளவில் நாம் சந்திக்கும் பல பருவநிலை மாற்றங்கள் . நீர், நிலம், காற்று ஆகியவை மாசடைந்த நிலையில் நம்முடைய மனித இனத்தின் வாழ்வாதாரங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களைச் சந்திப்பதற்கு இந்த நுண்ணறிவைப் பற்றிய கல்வி, பயிற்சி மற்றும் திறன்கள் மிக அத்தியாவசியமாகக் கருதப்படுகின்றன.

    பொதுவாக இந்த நுண்ணறிவு உள்ளவர்களின் கவனம், ஆர்வம், ஈடுபாடு ஆகியவை இயற்கை நலன்களைப் போற்றுதல், காத்தல், பேணுதல், ஆகியவற்றில் அதிகமாக இருக்கும். இந்தத் திறனில் மேம்பட்டவர்கள் கீழ்கண்ட தொழில்களில் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பார்கள்

    1. விவசாயம் (Agriculture)
    2. தோட்டக்கலை (Horticulture)
    3. மீன் மற்றும் நீர் வளம் (Fisheries and Marine Development)
    4. வானிலை (Meterology)
    5. வானியல் (Astronomy)
    6. நிலவியல் (Geography))
    7. தாவர இயல் (Botany)
    8. தொல்லியல் (Archeology)
    9. புவியியல் (Earth Sciences)(
    10. சூழலியல் (Ecology)
    11. மானிடவியல் (Anthropology)
    12. புதைப்படிமவியல் (Paleontolohy)
    13. பறவையியல் (Ornithology)

    இந்த நுண்ணறிவில் சிறந்தவர்களிடம் இருக்கக்கூடிய வெளிப்படையான திறன்கள் ஆர்வங்கள் :

    1. செடிகள்-மரங்கள் நடுதல் (Growing of plants/Trees)
    2. விலங்கினங்கள் வளர்த்தல் (care of Pet animals)
    3. தொட்டிகளில் மீன்கள் வளர்த்தல் (maintenance of aquarium)
    4. சுற்றுப் புறச் சூழ்நிலைகள் பற்றிய ஆரய்ச்சிகள் செய்தல் (Environmental Research)
    5. முகாமிடுதல், நடைப்பயணம் செய்தல் (Camping, Hiking)
    6. மலையேறுதல் (Mountaineering)
    7. இயற்கை வளங்கள், கனிமங்கள் சேர்த்தல் (collection of natural and mineral specciments)
    8. இயற்கை சார்ந்த புகைப்படங்கள் எடுத்தல் (Nature Photography)
    9. சுற்றலாக்கள் மேற்கொள்ளுதல் (Toursim)
    10. டிஸ்கவரி சேனல் போன்ற இயற்கைசார் படங்கள் பார்த்தல் (Visuals and serials relating to Nature)

    இயற்கைசார் நுண்ணறிவு உள்ளவர்களை NATURE SMART என்று பொதுவாக அழைக்கின்றனர்.

    இந்த இயற்கை சார்ந்த நுண்ணறிவு மற்ற சில நுண்ணறிவுகளுடன் இணைந்து வேலை செய்யும் பொழுது மிகச் சிறப்படைகின்றது. அப்பொழுது இயற்கை சார்ந்த உள்ளுணர்வுகள் வெவ்வேறு விதத்தில் வெளிப்படுகின்றது. உதாரணமாக ஒரு கவிஞனாக இயற்கை பற்றிய கவிதைகள் இயற்றுதல், ஒரு சமூக ஆர்வலனாக சுற்றச் சூழல் பற்றிய கருத்துக்களுக்களை வலுப்படுத்துதல், ஒரு விஞ்ஞானியாக விவசாயம் அல்லது விலங்கினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்தல், ஒரு வனப் பாதுகாப்பு ஊழியராக வேலை செய்தல், ஒரு புகைப்பட நிபுணராக இயற்கை சார்ந்த படங்களை எடுத்தல் போன்ற பல தொழில்களில் ஈடுபாடுகொள்ள வாய்ப்புக்கள் உண்டு. இந்த வகையில் நாம் கீழ்கண்ட சிலரின் வாழ்க்கை வரலாறுகளை முன்னுதாரணமாகக் கொள்ளலாம்

    1. ரபீந்திரநாத் தாகூர் (Rabindranath Tagore)
    2. எம். எஸ். ஸ்வாமிநாதன் (M. S. Swaminathan)
    3. சார்லஸ் டார்வின் (Charles Darwin)
    4. வோர்ட்ஸ்வொர்த் (Wordsworth)
    5. அலெக்சாண்டர் ஹம்போல்ட் )Alexander Humboldt)

    சிறிய வயது முதற்கொண்டே இயற்கை சார்ந்த ஆர்வங்கள் பலருக்கும் இருக்க வாய்ப்புண்டு. முன்காலத்தில் நம்முடைய நாட்டில் பலர் இயற்கையைச் சார்ந்த வாழ்க்கையையே வாழ்ந்து வந்தனர். நிழல்களை பார்த்து நேரங்கள் அறிதல், மண், பருவங்கள் பார்த்து பயிர்களை நடுதல், இயற்கையோடு இணைந்த உணவு முறைகள், வாழ்க்கை முறைகள்   இயற்கை மருத்துவங்கள் ஏற்றுக்கொள்ளுதல், நீர் நிலைகளை பராமரித்தல் போன்ற பல வாழ்க்கையோடு இணைந்து இருந்தன. இந்த அறிவு, குடும்பத்தில் மூத்தவர்கள் மூலமாகவும்,  சமுதாய நண்பர்கள் மூலமாகவும், நேர்முகமாகவும் மறைமுகமாகவும் கிடைத்து வந்தன. காலப் போக்கில் சமுதாய வளர்ச்சிக்காக பல இயற்கை சார்ந்த செயல்கள் கைவிடப்பட்டது மட்டுமின்றி அதற்கு எதிர்மறையான கற்றலிலும் செயல்களிலும் நம்முடைய கற்றல் மற்றும் செயல் போக்குகள் மாறிவிட்டன. அதனுடைய பலனை நாம் அனுபவிக்க ஆரம்பித்து விட்டோம்.

    தற்போதைய கல்வி முறையில் கற்றலில் போதுமான அளவிற்கு இயற்கையைப் பற்றிய சிந்தனை இல்லை என்பதைக் கருத்தில் கொண்டும் அதிவேகமாக அழிந்துவரும் இயற்கை சாதனங்களை பாதுகாக்க வேண்டிய நிலையை கருத்தில் கொண்டும் உச்ச நீதிமன்றம் கல்வி நிலையங்களில் உள்ள பாடத் திட்டங்களில் சுற்றுப்புற சூழல் பற்றிய கல்விக்கு கட்டாயமாகவும் நிரந்தரமாகவும் இடம் தர வேண்டும் என்று ஒரு ஆணை பிறப்பித்தது. இந்த உணர்வுகள் பள்ளியின் ஆரம்ப காலம் தொட்டு கல்லூரி பாடத் திட்டங்கள் வரை இணைக்கப்பட வேண்டும் என்றும் அறிவித்தது. இதைக் கருத்தில் கொண்டு இந்த உணர்வுகளைப் பற்றிய கருத்துக்கள் நேர்முகமாகவும் மற்ற கருத்துக்களோடு ஒருங்கிணைந்த வகையிலும்  திட்டங்கள் மேற்கொள்ளப் பட்டன. ஆயினும் நமது கல்வி முறையில் முதல் வகுப்பு முதல் கல்லூரி வரை தேர்வுகளில் வெற்றி பெற வேண்டும் என்ற ஒரு கருத்தும் அதில் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற கருத்தும் மேலோங்கி நிற்பதால் சரியான அளவில் இந்தக் கருத்துக்கள் நடைமுறைப் படுத்தப்பட வில்லை. மேலும் இதற்கான வழிமுறைகள் தகவல்களை அதிகமாகப் பரிமாறிக் கொள்ளுவதில்   கவனம் காட்டுவதால் நடைமுறையில் அவற்றின் தாக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக அளவில் வெற்றி பெற வில்லை. இது ஒரு வேதனைக்குரிய நிலை. இதில் மாற்றங்கள் ஏற்படுத்தி பள்ளி கல்லூரிகளில்; மட்டுமல்லாது பொதுவாக சமுதாய அளவில் இயற்கைசார் நுண்ணறிவை வளர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளவேண்டுய காலக்கட்டத்தில் நாம் இருக்கின்றோம்.

    (தொடரும்)

    Share
  • குறளின் கதிர்களாய்…(187)

    -செண்பக ஜெகதீசன் 

    உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
    இன்னாச்சொல் நோற்பாரின் பின். (திருக்குறள் -160: பொறையுடைமை) 

    புதுக் கவிதையில்… 

    உடலை வருத்தி
    உண்ணா நோன்பிருப்போர்
    உயர்ந்தோரே…

    அவரிலும் பெரியோர்
    அடுத்தவர் சொல்லும்

    கொடுஞ்சொல் கேட்டும்,
    பொங்கிடாது
    பொறுமை கொள்வோரே…! 

    குறும்பாவில்… 

    பிறர் சொல்லும் இன்னாச்சொல் கேட்டும்
    பொறுமை மேற்கொள்வோர்,
    உண்ணா நோன்பிருப்போரைவிடப் பெரியோரே…!      

    மரபுக் கவிதையில்… 

    உரிய நேரம் உண்ணாமல்
    -உடலை வருத்தி நோன்பிருப்போர்,
    பெரியோ ரென்றே புவனமிதில்
    -பெருமை வந்து சேர்ந்திடுமே,
    தெரிந்தே கொடுஞ்சொல் பேசிவரும்
    -தீயோர் முன்னும் பொறுமைகாக்கும்
    அரிய மாந்தர் இவர்கள்தான்
    -அவரிலும் மேலாம் பெரியோரே…! 

    லிமரைக்கூ… 

    பெரியோராவர் நோன்பிருப்போர் உண்ணாமல்,
    இவரினும் பெரியோரே பொறுமைகாப்போர்
    பிறரின் கொடுஞ்சொல்லை எண்ணாமல்…! 

    கிராமிய பாணியில்… 

    பொறும காக்கணும் பொறும காக்கணும்
    பெரும தரும் பொறும காக்கணும்…

    வாயக்கெட்டி வயித்தக்கெட்டி
    பட்டினிகெடந்து நோம்பிருந்தா
    பெரியவருண்ணு பேருவரும்…

    அடுத்தவஞ் சொல்லும் கொடுஞ்சொல்லக்
    கேட்டபின்னும் கோவப்படாம
    பொறும காக்கிறவங்கதான்
    அவரமிஞ்சுன பெரியவங்க…

    அதால,
    பொறும காக்கணும் பொறும காக்கணும்
    பெரும தரும் பொறும காக்கணும்…!

     

     

    Share
  • கைப்பேசியினால் இழந்தவை

    -முனைவர் க. முத்தழகி

    muthazhagiசமூகம் சிறப்புற மனிதன் அமைதியுடனும், மகிழ்வுடனும் வாழவேண்டும். அவ்வாறு மனிதர்கள் வாழ்வதாக நினைத்துக்கொண்டு இருக்கிறார்களே தவிர உண்மையான மகிழ்வு அவர்களிடம் இல்லை. மனித மனங்களில் இன்று மனிதநேயம் குறைந்துகொண்டே வருகிறது. மனிதர்கள் இன்று உறவுகளைத் தேடுவதைவிட ஊதியம் தேடுவதை நோக்கமாகவே வாழ்ந்து கொண்டுள்ளனர். இயந்திரமயமான இன்றைய வாழ்க்கையில் மனிதர் ஒருவருக்கு ஒருவர் உரையாடி மகிழ்வது என்பது கடினமான செயலாக இருக்கிறது. அதனையும்விட மனித மனங்கள் சுயநலப்போக்கில் செல்கிறது. சாலையில் நடந்துசெல்லும் பொழுது சிறு விபத்து நிகழ்ந்தால்கூட நின்று பார்க்க முடியாத அளவிற்கு மனிதநேயம் பெருகிக்கொண்டு வருகிறது. இதனையும்விட நமக்கு ஏன் தேவையில்லா பிரச்சனைகள் என தம்மைத் தாமே முடக்கிக் கொள்பவர்களே அதிமாக இருக்கிறார்கள். அவ்வாறு தம்மைத் தாமே முடக்கிக் கொள்பவர்கள் இன்றைய நிலையில் கைப்பேசிக்கும், தொலைக்காட்சிக்கும், இணையத்திற்க்கும் தங்களை அடிமைப்படுத்தி வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். இவைகளுள் கைப்பேசியினால் இச்சமூகத்தில் நிகழும் அவலங்களை எடுத்துரைப்பதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    கைப்பேசி என்பது நமக்கு மிகவும் பயனுள்ளதாகவும், தகவல் பரிமாற்றத்திற்கு இன்றியமையாத ஒன்று என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. அதன் பயன் நமக்கு எவ்வகையில் இருக்கிறதோ அதே அளவில் அதில் தீமையும் உள்ளது என்பதையும் நாம்

    தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்றாகும். இவற்றுள் கைப்பேசியினால் இழந்து கொண்டிருப்பவைகளே அதிகமாக உள்ளது. 

    குழந்தைகள்

    குழந்தைகளின் பேச்சு, சிரிப்பு நம்மை ஈர்க்கக் கூடியது. அத்தகைய மழலை செல்வங்களின் மனனத் தன்மையை அதிகரிக்கக் கூடியது தாலாட்டுப் பாடல்கள். அத்தகைய தாலாட்டுப் பாடல்களை தாய் பாடும்பொழுது குழந்தையின் மீது கொண்டுள்ள அன்பு முழுமையாக வெளிப்படுவதுடன், உறவுமுறைகளையும் கூறிப் பாடுவதால் குழந்தைக்கு உறவு முறைகளையும் தன் குழந்தைக்குச் சுட்டிக்காட்டுகிறாள். இன்று குழந்தைகளுக்கு இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கைப்பேசியினை தொட்டிலின் கீழ்வைத்துக் குழந்தையை தூங்க வைக்கின்றனர். இதில் தாயின் உணர்வு, அன்பு குழந்தைக்கு கிடைக்காமல் போய்விடுகிறது.

    பாரதியார் குழந்தைகளை ஓடிவிளையாட வேண்டும் என்றார்.

    ஓடிவிளையாடு பாப்பா
    ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
    கூடிவிளையாடு பாப்பா
    ஒரு குழந்தையை வையாதே பாப்பா
    காலை எழுந்தவுடன் படிப்பு – பின்பு
    கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு
    மாலை முழுவதும் விளையாட்டு
    என வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பார்.

    ஆனால் இன்றைய குழந்தைகளே ஓடியாடி விளையாடுவதையே விரும்புவதே இல்லை.

    கைப்பேசியினை கொண்டு
    காலையில் எழுந்தவுடன்
    முதல் வணக்க அலைபேசியில்
    அயல்நாட்டில் உள்ள அப்பாவுக்கு
    மாலை வந்தவுடன் மயக்கம்
    கைப்பேசியில் விளையாடுவதில்

    இதனால் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும்  பாதிப்பு அடைகிறார்கள். மற்றவர்களுடன் பேசிப்பழக விரும்புவதும் இல்லை, மற்றவர்களிடம் விட்டுக்கொடுத்து வாழவும் தெரிவது இல்லை. இவர்களிடம் வாழ்க்கை தத்துவத்தை எடுத்துச்செல்ல வேண்டும். நாம் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்;. ஆனால் அவர்கள் வயதினை கருத்தில்கொண்டு வெற்றி, தோல்வி மற்றும் சரி, தவறு நான்கையும் பிள்ளைகளுக்கு அனுபவபூர்வமாக உணர்த்தவேண்டும். வாழ்க்கைப் பாடத்தைப் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கப் போதுமான சுதந்திரத்தையும், வழிகாட்டுதலையும் பெற்றவர்கள் அறிவுறுத்த வேண்டும். சமூக வலைதளங்கள் மூலம் குழந்தைகளுக்கு எவ்விதமான ஆபத்து ஏற்பட்டுள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும். மேலும் சமூக வலைதளங்களில் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை நாம் கண்காணிக்க வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

    தம்படம் (selfi) எடுத்தல்:

    இன்று கைப்பேசியில் புகைப்படம் எடுத்தல் என்பது எளிமையான ஒன்றாகும். இதில் இளமை முதல் முதுமை வரை ஆர்வம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. காலையில் இருக்கும் பரபரப்பில் தயக்கமின்றிப் புகைப்படம் எடுக்க மறப்பதில்லை. மகிழ்ச்சியாகத் தான் இருக்கிறது. ஆனாலும் அதில் உள்ள ஆபத்தையும் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியமான ஒன்றாகும். சுற்றுலாச் செல்லும் மாணவர்கள் தம்படம் எடுக்கும் ஆர்வத்தில் தாம் என்ன செய்கிறோம், எங்கு இருக்கிறோம் என்ற நிலையை மறந்து தன்னுடைய உயிரையும் இழக்கிறார்கள்.

    ஒரு கல்லூரியின் மாணவர்கள் சுற்றுலாச் சென்றபொழுது அங்கு நீராடச் சென்றுள்ளனர். நீராடிக்  கொண்டிருக்கையில் ஒருவருக்கு ஒருவர் தம்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது தன்னுடன் வந்த நண்பன் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தமையைப் பார்க்கவில்லை. பின்பு அவர்கள் எடுத்த தம்படத்தை காணும் பொழுதுதான் அவர்களுக்குத் தெரிந்தது. தம்படம் எடுப்பதில் ஏற்படும் ஆபத்தினை குறித்து இன்றைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த வேண்டியது அவசியமான ஒன்றாகும்.

    அலுவலகங்களில்

    அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் கைப்பேசியை வைத்துக் கொண்டு மற்றவர்களின் நேரங்களைச் சுரண்டிக் கொண்டிருப்பதை உணர மறுக்கின்றனர். மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களைப் பெற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமென உயர் அதிகாரிகள் கூறினர். ஆனால் ஒரு சில அலுவலர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் தங்களது கைப்பேசியில் புலனம் (வாட்ஸ் அப்) பார்ப்பதும், முகநூல் (பேஸ் புக்) பார்ப்பதும், தகவல்களைப் பரிமாறிக் கொண்டும் இருந்தனர். இதனைக் கண்ட பொதுமக்கள் இப்படிக் கைப்பேசியுடன் அலுவலர்கள் வாழ்ந்துக் கொண்டிருந்தால் எங்களின் குறைகளைத் தீர்ப்பது எப்படி எனப் பொதுமக்கள் புலம்பியவாறு சென்றனர்.

    மருத்துவர் ஒருவர் கைப்பேசியில் பேசிக்கொண்டே நோயாளிக்கு ஊசி போட்டுள்ளார். அது முன்பே ஒருவருக்கு போடப்பட்ட ஊசி என்பதை பார்க்காமல் கைப்பேசியில் உரையாடிக் கொண்டு நோயாளிக்கு ஊசி போட்டமையால், அந்த நோயாளிக்கு எய்ட்ஸ் பரவியது. மருத்துவர்கள் மக்களின் உயிரைக் காக்கக் கூடிய இறைவனாக மதிக்கப்படக் கூடியவர்கள். அவர்கள் செய்த கவனக்குறைவால் ஒருவரின் வாழ்கையே சீரழிந்துவிட்டது. நாட்டுப்பண் பாடும்பொழுது ஒரு மருத்துவர் கைப்பேசியில் பேசிக்கொண்டிருந்தார் என்பதற்காகத் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார். ஆகவே அலுவலர்கள் தங்கள் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயல் படவேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

    விபத்துக்கள் நிகழ்வதற்கான காரணங்கள்:

    இன்று விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளே அதிகமாக இருக்கிறது. இதற்கு முதன்மையான காரணம் கைப்பேசியினால் ஏற்படுவதே என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. வாகனம் ஓட்டும் பொழுது கைப்பேசியில் பேசிக்கொண்டு சென்றால் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர் என்று கூறினாலும் அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மறுக்கிறார்கள். நம் அரசு பேருந்துகளில் திருக்குறள் எழுதப்பட்டு இருப்பது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றே, ஆனால் இன்று ஒரு குழந்தையின் போட்டோ போட்டு,

    “அப்பா பிளிஸ்
    கைப்பேசியில் பேசிக்கொண்டே
    வாகனம் ஓட்டாதீர்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இந்த வாசகம் ஓட்டுநரிடம் உம்மை நம்பி உமது குடும்பம் உள்ளது என்பதையும், வாகனத்தின் உள்ளே நம்மைப்போன்ற பல குழந்தைகளின் குடும்பங்களும் உள்ளன என்பதும் உணர்வுப்பூர்வமாக ஓட்டுநருக்கு உணர்த்தப்படுகிறது. தலைக்கவசம் அணியப்பட்டு வாகனம் ஓட்டுவதன் மூலம் விபத்துக்களினால் ஏற்படும் உயிரிழப்பைத் தவிர்ப்பதற்கே. ஆனால் வாகன ஓட்டிகளோ அந்த தலைக்கவசத்திற்குள் கைப்பேசியை வைத்துப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தனது உயிருக்கே ஆபத்து என்பதை தெரிந்துக் கொண்டே தங்கள் உயிருடனே விளையாடுகிறார்கள். ஒரு நிமிடம் வாகனத்தை நிறுத்திவிட்டுப் பேசுவதினால் யாருக்கும் எந்த விதமான இழப்பும் ஏற்படப் போவதில்லை. இதனை உயிர்ச் சிந்தனையாக வாகன ஓட்டிகள் மனத்தில் கொள்ளவேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது.

    இக்கட்டுரையில் கைப்பேசியினால் குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய இழப்புகள் பற்றியும், தம்படம் எடுக்கும் ஆர்வத்தினால் ஏற்படும் இழப்புப் பற்றியும், அலுவலகத்தில் இருப்பவர்களின் கவனச்சிதைவினால் ஏற்படக் கூடிய இன்னல்கள் குறித்தும், வாகனங்கள் ஓட்டும் பொழுது கைப்பேசியினை பயன்படுத்துவதனால் ஏற்படும் இழப்புகள் குறித்தும், ஒரு சில கருத்துக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

     

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 129-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

     

    bull fight

    காளையும் காளையரும் ஒருவரையொருவர் எதிர்த்துநிற்கும் வேளையில் எடுத்த படம் இதுவென நினைக்கிறேன். புகைப்படம் எடுத்த திரு. யெஸ்ஸெம்கேவுக்கும், இதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தெரிவுசெய்த திருமதி. சாந்தி மாரியப்பனுக்கும் என் நன்றி உரித்தாகின்றது.

    பகட்டோடு (காளை) தமிழர்க்குள்ள உறவு தலைமுறைகள் பலகடந்தும் தெவிட்டாது தொடர்ந்துவருவது. உழவுக்குடிகளாய் நம் மக்கள் வாழ்ந்திருந்த காலத்தில் வீட்டுக்கொரு பசுவும் காளையுமேனும் இருந்துவந்தன. அவர்களின் மாடாய் (செல்வம்) இருந்தவை இந்த மாடுகளே!

    இன்றோ உழவுத்தொழில் விரைந்து அழிந்துவரும் நிலையில் கால்நடைகளைப் பேணுவோரும் அருகிவிட்டனர். தமிழகத்தின் ஒரோவிடங்களில் ஏறுதழுவும் விளையாட்டில் பயன்படுத்துதற்கென்று சில நாட்டுக் காளையினங்கள் மட்டுமே மிஞ்சியிருக்கின்றன. இக்காளைகளை நாம் காலத்தே பாதுகாக்கத் தவறினால் நாட்டு மாட்டினமே தமிழ்நாட்டில் இராது. அப்புறம் நாட்டுக் காளைகளை நாம் ஏட்டில்மட்டுமே காணும் அவலநிலை வாய்த்துவிடும்.

    இனி, படக்கவிதைப் போட்டிக்கு வருவோம்.

    காளையும் காளையரும் இணைந்திருக்கும் இப் புகைப்படத்தைக் காணும் நம் கவிஞர்கள் மண்மணம் கமழும் கவிதைகளை ஏந்திவருவர் என்ற எதிர்பார்ப்போடு அவர்களை வாழ்த்தி வரவேற்கிறேன்.

    *****

    ”வீரவிளையாட்டாம் ஏறுதழுவுதலை விவேகத்தோடு விளையாடுங்கள்; உயிர் விரயத்தைத் தவிருங்கள்!” என்று காளையர்க்கு அறிவுரைகூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

    காளைகளே…

    துள்ளிவரும் காளையைத்
    துடுக்கடக்கக்
    காத்திருக்கும் காளையர்-
    எள்ளளவும் பயமின்றி..

    காளையரே,
    வீர விளையாட்டு இதில்
    விவேகமும் சேர்ந்திருக்கட்டும்..

    விளையாடுங்கள் விளையாடுங்கள்
    வீரம்காண விளையாடுங்கள்-
    விரயம் வராமலே…!

    *****

    ”புகைப்படத்தில் ஒயிலாய் ‘போஸ்’ கொடுக்கும் இந்தக் காளை, சிராவயல் மஞ்சுவிரட்டில் சீறிப்பாய்ந்தது; அரளிப்பாறை இளைஞரை அலறவைத்தது; அலங்காநல்லூர் காளையரைக் கலங்கவைத்தது” என்று காளையின் பெருமையைக் கடைவிரிக்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    எங்க ஊர் காளை:

    அஞ்சாது அனைவரையும் எதிர்த்து நிற்கும் காளை!
    ஆயிரம் பேர் வந்தாலும் அஞ்சாத காளை!
    சிராவயல் மஞ்சு விரட்டில் சீறிப் பாய்ந்த காளை!
    அரளிப் பாறை மஞ்சு விரட்டில் அஞ்ச வைத்த காளை!
    அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் செயித்து வந்த காளை!
    மேல் பாய்ச்சல், கீழ்ப் பாய்ச்சல் பழகி வந்த காளை!
    வெற்றி மேல்வெற்றிகளைக் குவித்து வந்த காளை!
    காளையரைக் கதிகலங்க வைத்த எங்க ஊர் காளை!
    துணிச்சலிலே தமிழருக்கு இணை இந்தக் காளை!
    அன்புக்கு மட்டும் அடி பணியும் காளை!
    அடக்க நினைப்பவர்க்குக் காலனாகும் காளை!

    *****

    புழுதிப் பொடியாடி நிற்கும் இந்தக் காளை, அருகிருக்கும் காளையர்க்கு நன்றி நவில்கிறதோ என்று ஐயுறும் திரு. கா. முருகேசன், ”காளையே நீ எமக்கு நன்றி சொல்ல வேண்டா! எம் வீட்டையும் நாட்டையும் வளப்படுத்தும் உனக்கும் பசுவுக்கும் நாங்களல்லவோ எம் நன்றியறியதலைப் புலப்படுத்தவேண்டும்” என்று நெகிழ்கின்றார்.

    காளையும் – மனிதனும்

    காளை – காளையர்
    எங்கிருந்து வந்தது இந்தப் பெயர் பொருத்தம்!

    காளையை அடக்குபவனும்,
    கல்லைத் தூக்குபவனும்,
    கன்னியின் கழுத்தில் மாலையிடலாம்
    எங்கிருந்து வந்தது இந்த எழுத்து ஒற்றுமை!

    இது என்ன மரபா? இல்லை வழக்கமா?

    உலகிற்கே சொன்னோம் உணவு முறையை
    ஏர் பிடித்து!
    இன்று ஆள் இல்லை ஏர் பிடித்து உழ,
    ஆனால்,
    காளைகள் உண்டு!
    காகிதத்தில், அழியும் இனம் என்று!

    நாட்டுப் பூக்கள் உண்டு!
    நாட்டுப் புலிகள் உண்டு ….!
    என ஏராளம் உண்டு!
    எல்லா இடத்திலும், ஆனால்,
    நாட்டுப் காளை இனம் இங்கு மட்டுமே உண்டு,
    என்பதனை மறந்தனரோ!

    எத்தனைக் கூட்டம் இருந்தாலும்,
    வாலிபன் இரத்தம் சொட்டினாலும்,
    எந்தப் பக்கம் திரும்புமோ!
    என் வீரத்தைச் சோதிக்க, என்றெண்ணினாலும்!
    நிற்க இடம் தேடிக் காணுவோம்
    உன் நிமிர்ந்த முகத்தையும்,
    உன் அழகிய திமிலையும்!

    இப்பொழுது தோன்றுகிறது நீ
    எங்களுக்கு நன்றி சொல்வது போல்!

    என்னையும்,
    என் பளுவையும்,விட்டுக் கொடுக்காது,
    ஒற்றைக் கோட்டில் நின்ற உங்களுக்கு,
    நன்றி சொல்லி நிற்கின்றேன்,
    அதே நிமிர்ந்த நடையில்!

    இத்தனையும் போட்டிக்காகவா?
    இல்லை, நம் கலாசாரத்திற்காக,
    நமக்கும், காளைக்கும், கோ-விற்கும்
    இடைப்பட்ட பந்தத்திற்காக.

    அன்பினால் அஞ்சுகிறோம்
    உன் முன்பு
    நன்றி வேண்டாம்
    வேண்டிக்கொள்கிறோம் உங்களிடம் நாங்கள்!
    வீடு செழிக்கும், கோ -வின் கால் பட்டால்!
    பூமி செழிக்கும் காளையின் கால் பட்டால்!

    மறந்து விடாதீர்கள்!
    யாரையும் மறக்கவும் விடாதீர்கள்!
    நீங்கள் இந்த பூமியின்…………..!

    *****

    ”கொல்லேற்றைத் தழுவி வெல்லும் காளையையே புல்லுவாள் ஆயமகள்” என்று சொல்லுகிறது இலக்கியம். சிந்துவெளி நாகரிகம் தொடங்கித் தொடர்ந்துவரும் அவ்வீர மரபை அழியாது காப்பதே தமிழர் கடன்” என்று பொருத்தமாய்ப் பொருளுரை பகர்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா.

    ஏறுதழுவ வாருங்கள் இளைஞர்களே!

    கால்நடையின் வளத்தை கட்டிக்காத்த தமிழினம்
    கண்ணியமாக நிகழ்த்தியது காளைப்போர்
    எங்கே சென்றது நம் மானமரபு
    பேணமறந்தீரோ?
    முல்லைநிலத்தில் ஆயர்களின் வீரத்தை
    காளையின் நேரெதிரில் கண்டோமே!
    கொல்லேறு தழுவா ஆண்மையை
    கனவிலும் தழுவா பெண்மை
    திமில் பற்றி திடம் காட்டிய வீரம்
    குடரோடு குருதியோடிய நேரம்
    குரவைக்கூத்தாடி குதூகலித்த மானம்
    கட்டுக்குலைந்து கலைந்து போன மாயம்

    மஞ்சுவிரட்டு சல்லிக்கட்டென
    மங்கையின் முன் சாகசம் காட்டும் பேரம்
    போலியான பாவனையில் பண்பாட்டுச் சோரம்
    நாகரிக மாற்றத்தில் மரபணுமாற்றமாக
    நாட்டுப்பசு நாட்டுக்காளை நலமொழிந்து….
    சிதிலமடைந்த சின்னமதை சிறப்பாக்க
    சிந்தனை செய் மனமே!
    சிந்துவெளி நாகரிகத்தில் புதையுண்ட மரபு
    செப்பம் செய்வதே பண்பாட்டின் நல்வரவு

    *****

    சிந்தனைவளம் செறிந்த பாக்களை அள்ளித்தந்திருக்கும் கவிஞர் குழாத்துக்கு என் நன்றி!

    அடுத்து இவ்வாரத்தின் சிறந்த கவிதை…

    காளையின் பெருமை..!

    காளையரைக் கண்டால் ஜல்லிக் கட்டுக்
    ……….காளையும் தன்காலை யுதைத்துத் திமிரும்!
    பாளைமடல் போன்றதன் கொம்பால் மணற்
    ……….பாங்கான இடத்தில் முட்டி முறுக்கேற்றும்!
    தோளான அதன்திமில் கர்வ மிகுதியாலது
    ……….தொய்ந்துயரச் சற்றேபக்க வாட்டில் சாயும்!
    வேளை வரும்போது வீரத்தை நிரூபிக்க
    ……….வாடிவாசல் திறக்கும் வரைக் காத்திருக்கும்!

    முட்டிச் சாய்ப்பதற்கென்றே வாழப் பழகிடும்
    ……….மூர்க்கத்தனமாய் வாய்பிளந்து குரலெழுப்பும்!
    கட்டான இளைஞர்களைக் கண்டு விட்டால்
    ……….கட்டுக் கடங்காமல் கூட்டத்துள் சீறிப்பாயும்!
    கிட்ட யாரையும் நெருங்கவிடாமல் துரத்தும்
    ……….கிட்டாத பெருமையெலாமதற்கு வந்து சேரும்!
    போட்டியென வந்துவிட்டால் போதும் அது
    ……….மாட்டு வண்டியாயினும் மகிழ்ந்தே இழுக்கும்!

    வாசுதேவனுனை மேய்த்த அருஞ் செயலால்
    ……….வண்டி யிழுக்கும் உனக்குப் பெருமையுண்டு!
    ஈசனும் விரும்பியுனை வாகன மாக்கியதால்
    ……….பூசைக்குமுன் உனக்குத்தான் முதல் மரியாதை!
    பாசமுடனுனை அரவணைத்துப் பழகி விட்டால்
    ……….பகுத்தறி வென்பதுனக்குத் தானாக வந்துவிடும்!
    நேசிக்கும் உழவனுக்கே உயர் நண்பனானதோடு
    ……….நெஞ்சுரத்துக்கு நீயேயோர் சிறந்த உதாரணம்!

    ”உழவனின் உயர்நண்பனாய்த் திகழும் காளை, போட்டியென்று வந்துவிட்டால் சிங்கமாய் சீறிப் பாய்ந்து மானுடக் காளைகளை மிரளவைக்கும்; அரளவைக்கும். திமிர்கொண்ட காளையரைத் திமில்கொண்ட காளை தன் கொம்பிலே குத்தித் தூக்கும்; கடுமையாய்ப் பாய்ந்து தாக்கும்” என்று சல்லிக்கட்டுப் போரில் காளை நிகழ்த்தும் வீரசாகசங்களை நம் கண்முன் அழகாய் வி(வ)ரிக்கும் இக்கவிதையின் ஆசிரியர் பெருவை திரு. பார்த்தசாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

     

    Share