குறளின் கதிர்களாய்…(187)
-செண்பக ஜெகதீசன்
உண்ணாது நோற்பார் பெரியர் பிறர்சொல்லும்
இன்னாச்சொல் நோற்பாரின் பின். (திருக்குறள் -160: பொறையுடைமை)
புதுக் கவிதையில்…
உடலை வருத்தி
உண்ணா நோன்பிருப்போர்
உயர்ந்தோரே…
அவரிலும் பெரியோர்
அடுத்தவர் சொல்லும்
கொடுஞ்சொல் கேட்டும்,
பொங்கிடாது
பொறுமை கொள்வோரே…!
குறும்பாவில்…
பிறர் சொல்லும் இன்னாச்சொல் கேட்டும்
பொறுமை மேற்கொள்வோர்,
உண்ணா நோன்பிருப்போரைவிடப் பெரியோரே…!
மரபுக் கவிதையில்…
உரிய நேரம் உண்ணாமல்
-உடலை வருத்தி நோன்பிருப்போர்,
பெரியோ ரென்றே புவனமிதில்
-பெருமை வந்து சேர்ந்திடுமே,
தெரிந்தே கொடுஞ்சொல் பேசிவரும்
-தீயோர் முன்னும் பொறுமைகாக்கும்
அரிய மாந்தர் இவர்கள்தான்
-அவரிலும் மேலாம் பெரியோரே…!
லிமரைக்கூ…
பெரியோராவர் நோன்பிருப்போர் உண்ணாமல்,
இவரினும் பெரியோரே பொறுமைகாப்போர்
பிறரின் கொடுஞ்சொல்லை எண்ணாமல்…!
கிராமிய பாணியில்…
பொறும காக்கணும் பொறும காக்கணும்
பெரும தரும் பொறும காக்கணும்…
வாயக்கெட்டி வயித்தக்கெட்டி
பட்டினிகெடந்து நோம்பிருந்தா
பெரியவருண்ணு பேருவரும்…
அடுத்தவஞ் சொல்லும் கொடுஞ்சொல்லக்
கேட்டபின்னும் கோவப்படாம
பொறும காக்கிறவங்கதான்
அவரமிஞ்சுன பெரியவங்க…
அதால,
பொறும காக்கணும் பொறும காக்கணும்
பெரும தரும் பொறும காக்கணும்…!