(காதலின் புதியதொரு பரிமாணம்)
மூலம்: வங்கமொழி: ரவீந்திரநாத் தாகூர்;
ஆங்கில வடிவின் தமிழாக்கம்: மீனாட்சி பாலகணேஷ்
*****************

தொடர்ச்சி: காட்சி- 8

Chithra-4
அர்ஜுனன்: ஒரு கொள்ளைக்காரர்கள் கூட்டம் சமவெளியை வந்தடைந்துள்ளது என அறிகிறேன். என் ஆயுதங்களை எடுத்துக்கொண்டு சென்று பயந்திருக்கும் கிராமமக்களை நான் காக்க வேண்டும்.

சித்ரா: நீங்கள் அவர்களைப்பற்றிப் பயப்பட வேண்டாம். தீர்த்த யாத்திரைக்குச் செல்லும்முன் இளவரசி சித்ரா வலிமைவாய்ந்த காவலர்களை நாட்டின் எல்லைப்புறத்து வழிகளில் நிறுத்திவிட்டே சென்றுள்ளாள்.

அர்ஜுனன்: இருப்பினும் ஒரு சிறு பொழுதிற்காவது நான் எனது க்ஷத்திரியனுடைய கடமையைச் செய்ய அனுமதிப்பாயாக. வீணே இருக்கும் என் கைகளைச் சேரும் புதுப் புகழுடன் நான் அதனை உனக்குத் தகுதியான ஒரு தலையணையாக ஆக்குவேன்.

சித்ரா: என் கரங்களில் சிறைப்படுத்திவைத்து நான் உங்களைச் செல்ல அனுமதிக்காவிட்டால்? நீங்கள் முரட்டுத்தனமாக என்னிடமிருந்து உங்களை விடுவித்துக் கொண்டு செல்வீர்களா? அப்படியானால் செல்லுங்கள்! ஆனால் ஒருமுறை இரண்டாக முறிந்த கொடி திரும்பச் சேராது என்பதைத் தாங்கள் அறியவேண்டும். உங்களுடைய தாகம் தணிந்துவிட்டதெனில் செல்லுங்கள். இல்லையென்றால், மகிழ்ச்சி எனும் தேவதை சலனபுத்தியுள்ளவள், யாருக்காகவும் காத்திருக்க மாட்டாள் எனத் தெரிந்து கொள்ளுங்கள். சிறிது நேரம் அமருங்கள், என் தலைவா! தங்களை அலைக்கழிக்கும் எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்கள் எண்ணத்தை யார் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளது? அவள் சித்ராவா?

அர்ஜுனன்: ஆம். சித்ரா தான். எந்தவொரு வேண்டுதல் நிறைவேறுவதற்காக அவள் தீர்த்தயாத்திரை சென்றுள்ளாள் என வியக்கிறேன். அவளுக்குத் தேவையானது என்னவாக இருக்கும்?

சித்ரா: அவளுடைய தேவைகளா? ஏன்? அதிர்ஷ்டமற்ற அவளிடம் எப்போது, என்னதான் இருந்தது? அவளுடைய பெண் உள்ளத்தை சிறு அறையில் அடைத்திடும் அவளுடைய குணங்கள் அனைத்துமே அவளுக்குச் சிறைக்கதவுகளாகும். அவள் அறியப்படாதவள். நிறைவை அடையாதவள். அவளுடைய பெண்மையுள்ளத்துக் காதல் கிழிந்த ஆடைகளால்தான் போர்த்தப்பட்டுள்ளது. அழகு அவளுக்கு மறுக்கப்பட்டது. உற்சாகமற்ற காலைப்பொழுதினைப்போல், வெளிச்சமெல்லாம் கருமேகங்களால் மறைக்கப்பட்டு, கருங்கல் மலையின்மீது அமர்ந்திருக்கும் உருவைப்போன்றவள் அவள். அவள் வாழ்க்கையைப் பற்றி என்னிடம் கேளாதீர்கள். உங்கள் செவிகளுக்கு அது இனிமையாக இராது.

அர்ஜுனன்: அவளைப்பற்றிய அனைத்தையும் அறிந்துகொள்ள நான் ஆவலாக இருக்கிறேன். ஒரு வினோதமான நகருக்கு இரவுநேரத்தில் வந்திருக்கும் வழிப்போக்கனைப்போல உணர்கிறேன். மாடங்கள், கோபுரங்கள், மரத்தோப்புகள் முதலியன புரியாத நிழல்போலக் காட்சியளிக்கின்றன; உறக்கத்தின் அமைதியிடையே கடலின் மெல்லிய புலம்பல் கேட்கிறது. இந்த வழிப்போக்கனும் ஆச்சரியமான அதிசயங்களைக் காட்டும் விடியலுக்காகக் காத்திருக்கிறான். ஓ! எனக்கு அவளுடைய கதையைக் கூறுவாய்!

சித்ரா: கூறுவதற்கு இன்னும் என்ன இருக்கிறது?

அர்ஜுனன்: நான் என் மனக்கண்ணில் அவளைக் காண்கிறேன்- ஒரு வெண்ணிறப் புரவியின் மீதமர்ந்து, பெருமிதத்துடன் தனது இடதுகையில் அதன் கடிவாளங்களைப் பிடித்துக்கொண்டும், வலதுகரத்தில் வில்லினை ஏந்தியபடியும், வெற்றிதேவதை ஒருத்தி தன்னைச் சுற்றிலும் நம்பிக்கையைப் பரப்பிச் செல்வதனைக் காண்கிறேன். மிகுந்த கவனத்துடன் உள்ள தாய்ச்சிங்கத்தைப்போல அவள் தனது குட்டிகளைக் கொடூரமான அன்பினால் பாதுகாக்கிறாள். அணிகளால் அலங்கரிக்கப்படாத பெண்ணின் கரங்கள், தளைகளற்ற பலத்துடன் இருப்பின் அதுவே அவளுக்கு அழகாகும். நீண்ட குளிர்காலத்து உறக்கத்திலிருந்து விழித்தெழும் பாம்பினைப்போல் எனது உள்ளம் அமைதியற்று இருக்கின்றது. வா, இரட்டை ஒளிவளையங்கள் விண்வெளியில் பறந்துசெல்வது போல அருகருகே நாமிருவரும் விரையும் புரவிகளில் அமர்ந்து வேகமாகச் செல்லலாம். இந்த மயக்கமான பசும் சிறையிலிருந்து, குளிர்ந்த, உற்சாகமற்ற, அடர்ந்த, வாசமிகுந்த, மூச்சையடைக்கும் தன்மைகொண்ட இவ்விடத்திலிருந்து சென்றுவிடலாம்.

சித்ரா: அர்ஜுனா, உண்மையாகச் சொல்லுங்கள், இப்போது எனது இந்தக் காமமூட்டும் மென்மையை நான் ஏதோவொரு மாயத்தால் உதறித்தள்ளிவிட்டு, உலகத்தின் கரடுமுரடான ஆரோக்கியமான பிடியிலிருந்து சுருங்கும் சிறியமலர் போல வாடி உதிர்ந்து, கடன்வாங்கிய ஆடைகளைப்போல எனது உடலிலிருந்து (மென்மையான இப்பெண்மையை) கழற்றி எறிந்துவிட்டாலும், உங்களால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியுமா? நான் இயலாமையை வெளிப்படுத்தும் செய்கைகளை நிராகரித்து நேராகவும் வலிமையான உள்ளத்துடனும் நிமிர்ந்து, எனது சிரத்தை மலைமீதுள்ள ஒரு நெடுமரம் போல உயர்த்திக்கொண்டு நின்றும், ஒரு மெல்லிய கொடியைப்போல புழுதியில் தவழாமலும் இருந்தால், ஒரு ஆணின் கண்களுக்கு நான் விருப்பமுள்ளவளாக இருப்பேனா? இல்லை, இல்லை, உங்களால் அதனைத் தாங்கிக்கொள்ள முடியாது. நான் என்னை இந்த நளினமான பெண்மை விரும்பும் நிலையற்ற இளமையின் பொருட்களால் சூழ்ந்துகொண்டு உங்களுக்காகப் பொறுமையாகக் காத்திருப்பேன். உங்கள் விருப்பப்படி நீங்கள் திரும்ப வரும்போது, இந்த எனது அழகிய உடல் எனும் கோப்பையில் புன்னகை ததும்ப இன்பம் எனும் மதுவை நிரப்பித் தங்களுக்கு வழங்குவேன். இந்த மது தங்களுக்கு நிறைவைத்தந்து சலிப்பினையும் தரும்போது தாங்கள் விளையாடவோ, வேலை செய்யவோ வெளியே செல்லலாம். நான் முதுமையை அடைந்து தளர்ச்சியுறும்போது, நன்றியறிதலுடன் எனக்கு அளிக்கப்படும் வாழ்வினை ஏற்றுக்கொண்டு எனக்காக ஒதுக்கப்பட்ட ஒரு ஓரமாக ஒதுங்குவேன். இரவின் காதல்துணை பகலில் தங்களுக்கு உதவியாளாக இருந்தால் உங்களுடைய வீர உள்ளத்திற்கு அது மகிழ்ச்சியைத் தருமா? இடதுகையானது பெருமைவாய்ந்த வலதுகரத்தின் சுமையைப் பகிர்ந்துகொள்ளப் பழகிக்கொண்டால் அது உங்களுக்கு சம்மதமா?

அர்ஜுனன்: நான் உன்னைச் சரியாகப் புரிந்துகொள்ள இயலாதவனாக இருக்கிறேன். ஒரு தங்கச்சிலைக்குள் ஒளிந்திருக்கும் தேவதைபோல நீ இருக்கிறாய். என்னால் உன்னைத்தொடவோ, உனது விலைமதிப்பற்ற பரிசுகளுக்கு ஈடுசெய்யவோ முடியவில்லை. ஆகவே எனது காதல் முழுமையடையாமல் உள்ளது. சில பொழுதுகளில் புரிந்துகொள்ள முடியாத உனது சோகமான பார்வை, உன்னை நீயே பரிகசித்துக் கொள்ளும் விளையாட்டுத்தனமான சொற்கள், இவை எனக்கு நீ உனது மென்மையான தேகத்தைப் பிளந்து வெளிப்பட முயல்வதனையும் உன்னைத்தகிக்கும் ஒரு புனிதமான நெருப்பெனும் வலியிலிருந்து புன்னகையோடு நீ விடுபட முயல்வதனையும் கீற்றுகளான காட்சிகளாக எனக்கு அறிவிக்கின்றன. உண்மையின் முதல் தோற்றம் மாயைதான். அவள், அந்த மாயை, தனது காதலனை நோக்கிப் பொய்த்தோற்றத்தோடு செல்கிறாள். ஆனால் சரியான சமயம் வாய்க்கும்போது தனது அணிமணிகளையும், முகத்திரையையும் களைந்தெறிந்து விட்டு நிர்வாணமான பெருந்தன்மையில் காட்சியளிக்கிறாள். உண்மையின் எளிய வடிவமான முடிவான உன்னை அடைய நான் தேடுகிறேன். ஏன் இந்தக் கண்ணீர், என்னுயிரே? முகத்தை ஏன் கரங்களால் மூடிக்கொள்கிறாய்? நான் உன்னை வருத்தப்படுத்தி விட்டேனா, என் அன்பே? நான் கூறியதனையெல்லாம் மறந்துவிடு. இப்போதைய பொழுதில் நான் திருப்தியாக இருப்பேன். ஒரு மர்மமான பறவை இருளிலுள்ள தன் கூட்டிலிருந்து இனிய இசையுடன் புறப்பட்டு வருவதனைப்போல் ஒவ்வொரு அழகிய பொழுதும் என்னிடம் வரட்டும். எப்பொழுதும் இதனை உணர்ந்து கொள்ளும் எல்லையில் நான் இருந்துகொண்டு எனது நாட்களை முடிவுக்குக் கொண்டுவருவேன்.

காட்சி- 9

சித்ரா:

(போர்த்து மூடியவண்ணம்) அன்பரே, கோப்பையின் கடைசித்துளிவரை பருகிவிட்டீர்களா? இதுதான், உண்மையாக, முடிவா? இல்லை, எல்லாம் முடிந்துவிட்டாலும் எதாவது மிச்சமிருக்கும்; அதுவே நான் தங்கள் காலடியில் சமர்ப்பிக்கும் கடைசி அர்ப்பணம்.

என் இதயத் தெய்வமான உங்களை வழிபட சுவர்க்கத்தின் பூந்தோட்டத்திலிருந்து ஈடிணையற்ற அழகுடைய மலர்களைக் கொண்டுவந்தேன். சடங்குகள் முடிவுற்றதெனில், மலர்கள் வாடி விட்டால், அவற்றைக் கோவிலிலிருந்து வெளியே எறிந்து விடுகிறேன். (போர்வையை விலக்கி அவளுடைய உண்மையான ஆணின் உடையில் காட்சியளிக்கிறாள்.) இப்போது உங்களுடைய பக்தனைக் கருணை நிறைந்த கண்களால் காணுங்கள்.

நான் உங்களை வழிபட்ட மலர்களைப்போன்று நிறைவான அழகு உடையவளல்ல. என்னிடம் பலவிதமான குறைகள் உள்ளன. உலகப்பாதையில் நான் ஒரு தேசாந்திரி, எனது உடைகள் அழுக்கானவை, எனது பாதங்கள் முள்தைத்து ரத்தம் கசிகின்றன. சில பொழுதுக்கே உண்டான பூவைப்போன்ற அழகை நான் எங்கிருந்து பெறுவேன். நான் பெருமையுடன் தங்களுக்குக் கொடுக்க வந்துள்ளது ஒரு பெண்ணின் இதயத்தினை மட்டுமே! இதில் ஒரு சாமானியப்பெண்ணின் வலிகளும், இன்பங்களும் சேர்க்கப்பட்டுள்ளன; நம்பிக்கையும், பயங்களும், அவமானங்களும் இணைந்துள்ளன; இங்குதான் காதல் பீறிட்டெழுந்து தடுமாறிக்கொண்டு நித்தியமான வாழ்க்கையை நோக்கிச் செல்கிறது. இதனுள் தான் கௌரவமான உயர்வான பூரணமற்ற தன்மை இருக்கிறது. பூவாலாகிய பூசனை முடிந்துவிட்டால், என் தலைவனே, இனி வரப்போகும் நாட்களுக்கு என்னைத் தங்கள் அடிமையாகக் கொள்ளுங்கள்.

நான்தான் சித்ரா, அரசமகள். ஒருநாள் சிவனின் கோவிலுக்கு ஒரு பெண் அணிமணிகளால் தன்னை அலங்கரித்துக்கொண்டு உங்களிடம் வந்தது ஒருவேளை உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த நாணம்கெட்ட பெண் உங்களிடன் ஒரு ஆணைப்போல் காதல்புரிய வந்தாள். நீங்கள் அவளை மறுத்தீர்கள்; நீங்கள் செய்தது நன்றே. என் தலைவா, நானே அந்தப்பெண். அவள் என்னைப்போல வேடம் தரித்தவள். பின் கடவுள்களின் வரத்தால் நான் ஓராண்டிற்கு ஒரு மானிட வடிவு பெறக்கூடிய பிரகாசமான வடிவைப் பெற்று, என் தலைவனின் உள்ளத்தை அந்தப் பொய்ம்மையின் கனத்தால் களைப்படையச் செய்தேன். நிச்சயமாக நான் அந்தப் பெண்ணல்ல.

நானே சித்ரா. வழிபட வேண்டிய தேவதையல்ல, இருப்பினும் பரிதாபப்பட்டு ஒதுக்க வேண்டிய ஒரு பூச்சியைப் போன்ற பொருளுமல்ல. நீங்கள் என்னை அபாயமும் வீரமும் நிறைந்த உங்கள் பயணத்திலும் துணையாகக் கொள்வீர்களாயின், என்னைத் தங்களுடைய பெரும் கடமைகளில் பங்கெடுக்க அனுமதிப்பீர்களாயின், அப்போது எனது உண்மை வடிவினை அறிந்து கொள்வீர்கள். எனது கருவில் வளர்ந்து கொண்டிருக்கும் உங்கள் குழந்தை, மகனாகப் பிறந்தால், நானே அவனை இரண்டாவது அர்ஜுனனாக வளர்ப்பேன்; காலம் வரும்போது உங்களிடம் அனுப்பி வைப்பேன்; கடைசியில் நீங்கள் என்னை உண்மையாக அறிந்து கொள்வீர்கள். இன்று நான் தங்களுக்குத் தரக்கூடியது அரசனின் மகளான சித்ராவை மட்டுமே!

அர்ஜுனன்: அன்பே, எனது வாழ்க்கை முழுமை அடைந்தது.

{நிறைந்தது}

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.