பெருவை பார்த்தசாரதி

காந்தி

 

 

 

 

 

 

 

 

தந்தையாய் ஆசானாய் ஈடில்லாத் தலைவனாயிருந்து

வந்தனை செய்யும்படி வையமுழுதும் அறிந்தோனே.!

 

நிந்தனை செய்தவர்கூட நிழல்போலுமைத் தொடர்ந்து

சிந்தனையில் தெளிவுற்றடிமை வாழ்வினைத் துறந்தார்.!

 

வாள்பிடித்து வெற்றிகண்ட மன்னர் பலருக்கிடையே

தாள்பணிந்து அகிம்சையை தரணிக் குணர்த்தியவனே.!

 

எழுபது ஆண்டுகள்பல ஆனபின்னும் இன்னுமேனோ

எழவில்லை எம்நாட்டுப் பற்றெனுமரிய சுயசிந்தனை.!

 

அகத்தினில் தீயவஞ்சகம் கொண்டோர் நாளும்பெருகி

ஜகத்தினில் பெற்றசுதந்திரத்தைத் தாழ்வுறச் செய்கிறார்.!

 

இப்பாரிலெவரும் எவர்க்கும் அடிமையிலை என்பதை

தப்பாக விடுதலையைப் தவறாகப் புரிந்துகொண்டார்.!

 

சுகங்கள் பலவாம் சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாலென

அகத்தில் தெளிவுற்றன்றே அறப்போரில் ஈடுபட்டோம்.!

 

மண்ணில்பல வளமுண்டிதை அயலார் அபகரிக்காமல்

திண்ணிய எண்ணமுடன் ஒன்றாகத்தான் போரிட்டோம்.!

 

வானிலெழும் ஏவுகணைபோல் அன்றாடப் பொருட்கள்

நானிலத்தில் விலையெகிறி விண்ணிலுயரப் பறக்குது.!

 

பெருகிவிட்ட பெருமக்களால் பாரிலின்று பேதமுண்டு

பருகும்நீர் விளையும்நிலம் எல்லைபேரமென ஏராளம்.!

 

இயலாத ஒன்றுக்கும்…எளிதேகிட்டாத பலவற்றுக்கும்

எழுந்த ஆசையினால் அடிமையின்னும் அகலவில்லை.!

 

நல்லோரும் நாட்டுப் பற்றுடையோரும் நலிவுற்றதாலே

நயவஞ்சகமெனும் கொடியநஞ்சு மீண்டும் உருவாகிறது.!

 

உள்நாட்டில் கூடிவாழ்வோரிடம் குழப்பம் செய்வதை

உள்ளத்தில் விஷமிடும் தொழிலாய் கொண்டோர்பலர்.!

 

விண்ணிலிலுலவும் அண்ணலெனும் காந்தி அடிகளே

விடுதலைக்காக விருதுவென்ற வியன்மிகு தலைவனே.!

 

அவனியிலின்று நடந்தேறிக் கொண்டிருக்கும் அனைத்து

அவலங்களையும் எழுதிவிட்டேன்.!ஏற்பீர்.!அண்ணலே.!

 

நொந்திடும் இந்நிலைகள் முற்றிலுமடியோடு மாற..நீயும்

வந்திங்கே பிறக்கவேணும்..மீண்டுமதே மஹாத்மாவாக.!

=============

நன்றி தினமணி கவிதைமணி வெளியீடு::08-10-17

நன்றி படம்:: கூகிள் இமேஜ்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *