குறுந்தொகை நறுந்தேன் – 6
-மேகலா இராமமூர்த்தி
காதலுக்காகத் தலைவன் சந்திக்கும் சங்கடங்களையெல்லாம் சங்க இலக்கியம் வாயிலாய் அறியும்போது, போர்க்களத்தில் செய்யும் வீரசாகசங்களைவிடக் காதற்களத்தில்தான் நம் ஆடவர் அதிகமாய்ச் சாகசங்களைச் செய்திருக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
பகற்குறிக்கண் காதலர் பொதுமக்கள் கண்ணிற்படும் அபாயத்தை யறிந்து பயந்தே தோழி இரவுக்குறி நயந்தாள். ஆனால் இரவுக்குறியோ மக்களால் நேரும் ஆபத்துக்களேயன்றி விலங்குகளாலும் அச்சந்தரு அடர்காட்டு வழிகளாலும் பகற்குறியினும் பலவாய ஆபத்துக்களைத் தருவதாயிற்று. இவைகுறித்துத் தலைவன் அஞ்சவில்லை என்றபோதும் தோழியும் தலைவியும் பெரிதும் அஞ்சத் தொடங்கினர்.
இரவில் தன்னைச் சந்திக்கவரும் தலைவனுக்கு ஏதேனும் ஏதம் நேர்ந்துவிடுமோ என்று ஒவ்வொரு நாளும் அஞ்சிய தலைவி தோழியை நோக்கி,
”குன்றத்துக் கூகை (ஆந்தை) தன் பேடையைக் கூவியழைப்பினும், பலாமரத்தின் பெருங்கொம்பில் முசுக்கலை பாய்ந்து விளையாடினும் முன்பு அஞ்சுவதை வழக்கமாய்க் கொண்டிருந்தது என்னுள்ளம்; அது கழிந்தது! இப்போதோ நள்ளிரவில் நமை நாடிவரும் தலைவனின் நீண்ட வழிச்செலவு குறித்தும் அதிலுள்ள இன்னல்கள் குறித்துமே என் நெஞ்சு பெரிதும் அஞ்சி நிற்கின்றது” என்று ஆற்றாமையோடு புலம்பினாள்.
குன்றக் கூகை குழறினும் முன்றிற்
பலவின் இருஞ்சினைக் கலைபாய்ந் துகளினும்
அஞ்சுமன் அளித்தென் நெஞ்சம் இனியே
ஆரிருட் கங்குல் அவர்வயிற்
சாரல் நீளிடைச் செலவா னாதே. (153 – கபிலர்)
எப்படியேனும் தலைவனின் இரவுக்குறிக்கு(ம்) முற்றுப்புள்ளி வைத்துவிடுவதே நல்லது எனும் தலைவியின் உளவியலை இப்பாடல் மறைமுகமாய் உறைத்து நிற்கின்றது. தோழியின் எண்ணமும் அதுவேயாதலால், அடுத்தமுறை தலைவன் தலைவியைச் சந்திக்க இரவில் வரும்போது இதுகுறித்து அவனிடம் தீர்மானமாகப் பேசிவிடுவது எனும் முடிவுக்கு வந்தாள்.
அவ்வாறே இரவில் தலைவியைக் காணவந்த தலைவனிடம் ஒருநாள், ”கரிய கண்களும், தாவுதலில் திறனுமுடைய ஆண்குரங்கு (கலை) இறந்துபட்டதென்று அறிந்த பெண்குரங்கானது (மந்தி), கணவனையிழந்து கைம்மையுற்று வாழவிரும்பாது, மரமேறுதல், தாவுதல் முதலிய தம்மினத்துக்குரிய தொழில்களை இன்னும் பழகாத பறழை (குரங்குக்குட்டி) தம் சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு ஓங்குமலையிற் பாய்ந்து உயிரை மாய்த்துக்கொள்ளும் மலைச்சாரலையுடைய நாட்டுக்குத் தலைவ! நீர் வரும்வழியில் உமக்கு நேரும் ஏதங்களை எண்ணியெண்ணித் தலைவியும் நானும் பெரிதும் வருந்துகின்றோம். ஆதலால் தலைவியைச் சந்திக்க இனி நள்ளிரவில் வாரற்க!” என்றாள்.
இப்பாடலில் பயின்றுவரும் ’கருங்கண் தாக்கலை’ எனும் தொடருக்குக் கருங்கண்களையுடைய தாவிய கலை என்று உரையாசிரியர் சிலரும், கரிய இருளின்கண் தாவிய கலை என்றும் வேறுசிலரும் பொருளுரைக்கின்றனர். தாவிய கலை இறந்துபோனதை நோக்குகையில் இருளில் தாவிய கலை என்பதே சாலப் பொருத்தமாய்ப் படுகின்றது.
கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றேனக்
கைம்மை உய்யாக் காமர் மந்தி
கல்லா வன்பறழ் கிளைமுதற் சேர்த்தி
ஓங்குவரை அடுக்கத்துப் பாய்ந்துயிர் செகுக்கும்
சாரல் நாட நடுநாள்
வாரல் வாழியோ வருந்துதும் யாமே. (குறுந்: 69 – கடுந்தோட் கரவீரனார்)
தலைவன் உயிருக்கு ஊறு நேருமாயின் தலைவியும் உயிர்தரித்திருக்க மாட்டாள் என்பதனை விலங்குகளின் செயல் வாயிலாகத் தோழி விளக்குந் திறன் அவளின் நுண்மாண் நுழைபுலத்துக்குக் கட்டியம் கூறுகின்றது. நேரடியாகக் கூறவியலாத அமங்கலச் செய்திகளை இன்னொரு நிகழ்வின்மூலம் உள்ளுறையாகவும், இறைச்சியாகவும் ஏற்றிக்கூறுவதில் நம் சங்கப் புலவோர் சமர்த்தர்களாகவே இருந்திருக்கின்றனர் என்பதை இப்பாடலும் மெய்ப்பிக்கின்றது.
அத்தோடு அன்றைய சமூகத்தில் கணவனை இழந்த மகளிர் பலர் இறந்த கணவனோடு தாமும் உடன்கட்டை ஏறுதலையே சிறந்த கற்பாக எண்ணியிருந்தமையும் இதன்வாயிலாய்ப் புலனாகின்றது. பாண்டிய மன்னன் பூதப்பாண்டியன் இறந்தபோது அவனுடைய மனைவியும் அறிவிற்சிறந்த அரசியுமான பெருங்கோப்பெண்டு, கணவனை இழந்து கைம்மை நோன்பு மேற்கொண்டு வாழவிரும்பாது, “என் தலைவன் போனபின்னே வள்ளிதழ் விரிந்த தாமரையையுடைய நள்ளிரும் பொய்கையும், தீயும் தனக்கு ஒத்த தன்மையனவே” என்றுகூறித் தீப்பாய்ந்தமை ஈண்டு நினைவுகூரத்தக்கது.
இச்சங்க மகளிரை இருபத்தோராம் நூற்றாண்டின் ’பகுத்தறிவு’ப் பார்வையோடு நாம் அணுகுதலும், விமரிசித்தலும் பொருத்தப்பாடுடையதன்று. அற்றை நாளைய வழக்கத்தை அவர்கள் கடைப்பிடித்தனர்; அவ்வளவே! இன்று அக்கொடிய வழக்கம் நடைமுறையில் இல்லை என்பதையறிந்து மகிழ்வோம்.
மீண்டும் நம் பார்வையை நல்ல குறுந்தொகையில் பதிப்போம்…
இரவுக்குறி மறுக்கப்பட்ட தலைவன், “அப்படியாயின் இனி நான் தலைவியைச் சந்திக்கவே வழியில்லையா? என்றான் ஏக்கத்தோடு.
அவனை நோக்கி வருத்தப் புன்னகை புரிந்த தோழி, ”ஐய!
இதுகுறித்து நீர் படும் வேதனையைவிடத் தலைவியின் மனவேதனை நனிபெரிது. மூங்கிலை வேலியாக உடைய, வேரில் பலாக்குலைகளையுடைய மலை நாட! நின் சாரற்கண்ணே பலாவின் சிறுகொம்பில் பெரிய கனி பற்றுக்கோடு ஏதுமின்றிப் பரு(ழு)த்துத் தொங்குவதுபோல், எம் தலைவியின் உயிராகிய சிறிய கொம்பில் காமம் எனும் பெரிய கனி தொங்கிக்கொண்டிருக்கின்றது. இக்கனியை இன்னும் முதிரவிட்டால் அது கீழேவீழ்ந்து சிதைந்தழியும். அவ்வாறு நிகழாமுன்னர் அதன் செவ்வியறிந்து சுவைப்பதுதானே அறிவுடைமை! ஆகவே, தலைவியை விரைந்து வரைந்து கொள்க!” (வரைவு – திருமணம்) என்று கூறி நிறுத்தினாள்.
பலாவில் வேர்ப்பலா, கிளைப் பலா என இருவகைகள் இருப்பதை இப்பாடல்வழி அறிகிறோம். ஒரேபாடலில் எத்தனைச் செய்திகளைப் பலாச்சுளைபோல் பக்குவமாய்ப் பொதிந்து வைத்துள்ளார் கபிலர்!
வேரல் வேலி வேர்க்கோட் பலவின்
சாரல் நாட செவ்வியை ஆகுமதி
யாரஃ தறிந்திசி னோரே சாரல்
சிறுகோட்டுப் பெரும்பழந் தூங்கி யாங்கிவள்
உயிர்தவச் சிறிது காமமோ பெரிதே. (குறுந்: 18 – கபிலர்)
’பெரிதே காமம் உயிர்தவச் சிறிதே’ எனும் கலித்தொகை வரிகள் (கலி – 137) இதனோடு ஒப்புநோக்கத்தக்கவை.
செவ்வியறிந்து காமத்தைத் துய்க்கவேண்டும் என்று (தோழி கூற்றாய்) கபிலர் இப்பாடலில் உரைப்பதுபோலவே நம் குறளாசானும்,
மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப்படு வார் (1289) என்று கூறிக் கபிலரின் கருத்துக்கு அரண் சேர்க்கிறார்.
தலைவியை விரைவாய் மணந்துகொள்வது ஒன்றே அவளைப் பிரியாதிருப்பதற்கான நிரந்தர வழி என்ற தோழியின் மொழிகேட்ட தலைவன் அதுகுறித்துத் தீவிரமாய்ச் சிந்திக்கலானான்.
அவன் எண்ணத்தை அறிந்துகொள்ளும் ஆவலில் தலைவியும் தோழியும் காத்திருந்தனர்; அவன்முகம் பார்த்திருந்தனர்!
[தொடரும்]