க. பாலசுப்பிரமணியன்

தான் மறையும் நேரம் …

திருமூலர்-1-3

ஒரு முறை ஒரு நாட்டின் அரசன் தவத்தில் சிறந்த ஒரு முனிவரிடம் தீட்சை பெற வேண்டும் என்று விரும்பி தன் விருப்பத்தைத் தெரிவித்தான். முனிவரும் அதற்கிணங்கி அவனைத் தன்னுடைய ஆசிரமத்திற்கு வருமாறு சொல்லி அனுப்பினார். அரசன் தன் படை சூழ பல பரிசுகளை எடுத்துக்கொண்டு அவரைச் சந்திக்கச் சென்றான். அந்தக் குடிலின் வாயிலில் இருந்த ஒரு சீடனிடம் “முனிவரிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” என்று சொல்லி அனுப்பினான். உள்ளிருந்த முனிவரோ “அவர் இன்னும் வரவில்லை. திரும்பிப் போகலாம் என்று சொல்” எனச் சொல்லி திருப்பி அனுப்பி விட்டார். சினமடைந்த அரசனும் திரும்பிச் சென்றுவிட்டு மீண்டும் சில நாட்கள் கழித்து வந்து அதே போல் “முனிவரிடம் நான் வந்திருக்கிறேன் என்று சொல்” எனச் சொன்னான். இந்த சமயத்திலும் முனிவர் :”அவர் இன்னும் வரவில்லை என்று சொல்” எனச் சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார். மீண்டும் மீண்டும் அரசன் முயற்சித்தும் அவரைச் சந்திக்க முடியாத நிலையில் தன்னுடைய மந்திரியை அழைத்து ஆலோசனை செய்தான். மந்திரி அரசனிடம் “அரசே, நீங்கள் முனிவருக்கு என்ன செய்தி அனுப்பினீர்கள்?” எனக் கேட்டார். அரசனும் “நான் வந்திருக்கிறேன் முனிவரிடம் சொல்” என்று தான் சொன்னேன், என்கிறார். மந்திரி சிரித்துக்கொண்டே “அரசே, நீங்கள் அவரைப் பார்க்கச் செல்லும் பொழுது “நான்” வந்திருக்கின்றேன் என்று உங்கள் ‘அகந்தை’யை முன் வைத்தீர்கள் அதனால்தான் முனிவரும் உங்கள் அகந்தைக்கு பதில் கொடுக்கும் வகையில் உங்களைத் திருப்பி அனுப்பித்துள்ளார். நீங்கள் இன்னும் சற்று பணிவுடன் சென்றால் எப்படி இருக்கும்? :” என்று சொல்ல, அடுத்த முறை அரசன் முனிவருடைய குடில் வாசலில் இருந்த சீடனிடம் “முனிவரிடம் தீட்சை பெற்றுக்கொள்ளுவதற்காக ஒரு சீடன் வந்திருக்கின்றேன் என்று சொல்” எனச் சொல்லியனுப்பினார். முனிவர் உள்ளிருந்து “எனது புதிய சீடனை மரியாதையுடன் அழைத்து வா” என்று சொன்னார்.

இறைவனிடம் அருள்நாடிச் செல்லுகின்ற நம்மில் பலரும் இதே நிலையில் தான் இருக்கின்றோம். ஏதோ நம்மால் தான் இதைச் செய்ய முடிந்தது. இதை என்னையன்றி வேறு யாரால் செய்திருக்க முடியும்?  என் திறமைக்கு அறிவுக்கும் நான் செய்த செயலெல்லாம் மிகச் சாதாரணமானது தான் என்றெல்லாம் எண்ணிச்  செல்லுகின்றோம். இறைவனிடமும் ஏதோ விருப்பமிருந்தால் கொடுங்கள் என்றோ அல்லது இதை இறைவன் நமக்குக் கொடுத்தால் இறைவனுக்கே பெருமை என்பதுபோல் நாம் எண்ணுகின்றோம். “நான்” என்ற அகந்தை உள்ளவரை இறைவனை நம்மால் அணுக முடியாது. இதை விளக்கும் வகையில் கபீர் தனது ஒரு பாடலில் கூறுகின்றார். “நான் இருக்கும் வரை அவன் இல்லை, அவன் வந்த பின்பு அங்கே நான் இல்லை”

இந்தக் கருத்தை இன்னும் அழகாக திருமந்திரத்தில் நாம் பார்க்கின்றோம் :

தானும் அழிந்து தனமும் அழிந்துநீ

டூனும் அழிந்து உயிரும் அழிந்துடன்

வானும் அழிந்து மனமும் அழிந்தபின்

நானும் அழிந்தமை நானறி யேன்றே

ஆகவே நான். எனது, எனக்கு என்ற எண்ணங்களையெல்லாம் ஒழித்துவிட்டு இந்த உலகத்தில் உள்ள பொருள் எல்லாம் நிலையற்றவை என்பதை உணர்ந்து அவன் பாதங்களை நாடினால் அவன் தானாகவே வந்து நம்மை ஏற்றுக்கொள்வான். இந்த அறிவு நமக்கு எப்போது கிட்டும்? மறைகளும் மற்ற சாத்திரங்களையும் வேதங்களையும் நன்றாகப் படித்து விட்டால் கிட்டுமா? அல்ல, எப்போது நாம் இந்த உலகைச் சார்ந்த வேட்கைகளையெல்லாம் விட்டு விடுகின்றோமோ அப்போது தான் நமக்கு அந்த அறிவு கிட்டும். திருமூலர்

இந்தக் கருத்தை விளக்கும் வண்ணம் கூறுகின்றார்:

வேதாந்தங் கேட்க விரும்பிய வேதியர்

வேதாந்தங் கேட்டும்தம் வேட்கை ஒழிந்திலர்

வேதாந்த மாவது வேட்கை ஒழிந்திடம்

வேதாந்தங் கேட்டவர் வேட்கை விட்டார்

வேட்கையை விட்டவர்க்கு வேத அறிவுகளில் மேலாண்மை தேவையில்லை. இறைவனே தம்மை ஆட்கொண்டவன் என்ற எண்ணம் மனதில் தோன்றிய நிலையில் அவன் தானே வந்து நம்மை ஆட்கொள்வான்.

திருமூலரின் அனுபவம் என்ன சொல்லுகின்றது ?

நானென்றும் தானென்றும் நாடினேன் நாடலும்

நானென்றும் தானென்றும் இரண்டில்லை யென்பது

நானென்ற ஞான முதல்வனே நல்கினான்

நானென்று நானும் நினைப்பொழிந் தேனே

நான் என்ற ஆணவ மாயையில் சிக்கி அன்பே வடிவமாய் உள்ளே அமர்ந்திருக்கும் ஆண்டவனின் அருளை அறியாமல் தவிக்கின்ற மனங்கள் தான் எத்தனை! எத்தனை! அதில் பத்திரகிரியாரும் ஒருவர். எனவே தான் அவர் வேண்டுகின்றார் :

அஞ்ஞானம் விட்டே யருள்ஞானத் தெல்லைத்தொட்டு

மெய்ஞ்ஞான வீடுபெற்று வெளிப்படுவ தெக்காலம் ?

எண்ணாத தூரமெல்லா ,மெண்ணியெண்ணிப் பாராமல்

கண்ணாடிக் குள்லொளிபோற் கண்டறிவ  தெக்காலம்?

நான், தான், எனது என்ற அகந்தை நிலை எப்பொழுது நீங்கும்? உண்மையில் தான் யார் என்ற உண்மை அறிவு ஏற்படும்பொழுது ‘தான்” விலகி தன்னைப் பற்றிய உண்மை அறிவு வெளிப்படும். இதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது திருமூலரின் இந்தக் கருத்துள்ள பாடல்”

தான் அறிவார் அண்ணல்தாள் பணிவார் அவர்

தாம் அறிவார் அறந்தாங்கி நின்றார் அவர்

தாம் அறிவார் சில தத்துவராவார்கள்

தாம் அறிவார்க்குத் தமர்ப்பர னாமே”

நம்மை அறிந்துகொள்ள நாமும் முயற்சி செய்வோமா ?

தொடருவோம்..

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் (30)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.