Blog

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல். . . (246 )

    அன்பினியவர்களே!

    அன்பான இனிமை பூத்த வணக்கங்களுடன் அடுத்தொரு மடலில் உங்களுடன் இணைவதில் மகிழ்கிறேன் காலம் எவருக்காகவும் காத்திருப்பதில்லை. மாரி, வசந்தம், கோடை , இல்லையுதிர் காலம் என இயற்கை யார் எதில் தவறினாலும் தான் தனது கடமையில் தவறாமல் ஓடிக் கொண்டேயிருக்கிறது. இலைகள் உதிர்ந்து மீண்டும் மரத்தில் துளிர்க்கிறது மாரி மாறி வசந்தமாகிறது ஆனால் நாம் மட்டும் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு வயது முதிர்ந்தவர்களாகிறோம். நாம் மீண்டும் துளிர்ப்பதில்லை; நாம் எப்போது சருகாகி விழுகிறோம் என்பதும் எமது கைகளில்லை. ஆதவன் கிழக்கில் உதிப்பதும் பின் மேற்கு எனும் பள்ளத்துள் விழுந்து மறைவதும் எதுவித இடையூறுமின்றி நடந்துகொண்டு இருக்கிறது. மனித வாழ்வில் மட்டும் உறவு எப்போது வருகிறது பின் பிரிவு எப்போது வருகிறது என்று மட்டும் தெரிவதில்லை.

    இந்த மனித வாழ்க்கை என்பது அனைவருக்கும் கிடைத்திருக்கும் வரப்பிரசாதம் என்பது மறுக்கப்பட முடியாத உண்மையாகும். வாழ்வில் தாங்க முடியாத துயரத்திலோ அன்றி மீளமுடியாத கஷ்டத்திலோ வாழ்பவர்கள் இதனை ஏற்க முடியாதிருக்கலாம் ஆனால் வாழ்வில் அனைவரும் அனுபவிக்கும் அப்போதைய நிலைகள் தற்காலிகமானவைகளே ! காலம் மாறும் அவரவர் நிலைகளும் மாறும். இன்றிருப்போர் நாளை இருப்பது நிச்சயமில்லை எனும் ஒரு நிலையிலே நாம் எம்மோடு தக்க வைத்திருக்கும் இப்போதைய நிலைகள் மட்டும் எப்படி நிரந்தரமானவையாக இருக்கலாம்? இத்தகைய ஒரு நிலையற்ற வாழ்விலே நாம் எம்மை அடையாளப்படுத்திக் கொள்ள எம்மீது பல கலாசார அணிகலன்களைப் பூட்டிக் கொள்கிறோம். இவற்றிற்கு மதச்சாயத்தைப் பூசிக் கொள்கிறோம். நாம் எந்த மதத்தில் எந்த குலத்தில் பிறக்கிறோம் என்பது எமது கைகளில்லை. ஆனால் எங்குப் பிறக்கிறோமோ அங்கு எமக்கு மதச்சாயம் பூசப்பட்டு விடுகிறது.

    மத நம்பிக்கை அல்லது இறை நம்பிக்கை என்பதற்கு நான் எப்போதும் எதிரானவனில்லை. மதமும், இறை நம்பிக்கையும் மனிதர்களது ஆன்மீக பலத்தை அதிகப்படுத்தி ஒவ்வொருவருடைய மனதிலும் மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதற்காகவே அமைந்துள்ளது என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது. ஆனால் ஒவ்வொருவருடைய மனத்திலும் தாம் கொண்டிருக்கும் ஒவ்வொரு நம்பிக்கைக்கும் ஒரு எல்லைக்கோடு இருக்கிறது.அந்த எல்லைக்கோட்டைத்தாண்டும்போது எது ஏற்றுக் கொள்ளக்கூடிய ஜீரணிக்கப்படக்கூடிய நியாயமான நம்பிக்கையாக இருந்ததோ அது கொஞ்சம் கொஞ்சமாக நியாயமற்ற வெறியாக மாறத் தலைப்படுகிறது. இங்கேதான் மத நம்பிக்கை மனிதாபிமானத்தை விட்டு அகலத் தொடங்குகிறது இதுவே மக்கள் மனங்களில் இத்தகைய நம்பிக்கைகளை நோக்கி விசனப் பார்வைகளைத் தூண்டுகிறது. உலகில் இன்று பேணப்படும் அத்தனை மதங்களின் அடிப்படியும் மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்துக்கு மதிப்பளிப்பவைகளாகவே இருக்கின்றன. ஆனால் அம்மத நம்பிக்கைகளையும், அதனை மூர்க்கத்தனமாக எவ்வித கேள்விகளுமின்றிப் பின் தொடர்பவைகளையும் தமது இலட்சியம் எனும் போர்வையிலடங்கிய வெறிக்கு உபயோகப்படுத்திக் கொள்வதற்காக இம்மதங்களின் காவலர்கள் என்று தமக்குத் தாமே முடிசூட்டிக் கொண்டவர்கள் இம்மதக் கோட்பாடுகளை மனிதம் எனும் இலட்சியத்திலிருந்து வேறுபடுத்தி விளக்கமளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    எதற்காக இந்த முன்னெடுப்பு என்று பார்க்கும்போது சமீபத்தில் இங்கிலாந்து நீதிமன்றம் ஒன்றில் நடத்தப்பட்ட வழக்கும் அதையடுத்த தீர்ப்பும் என்பதுமே காரணமாகிறது. ஒரு கிறீஸ்தவ மதப் பின்னணியைக் கொண்ட குழந்தை அதனுடைய தாயிடமிருந்து கடந்த மார்ச் மாதம் காவற்படையினரால் எடுத்துச் செல்லப்பட்டு அரச சமூகநலத் துறையினரிடம் கையளிக்கப்பட்டிருக்கிறது. காரணம் அக்குழந்தையைத் தாயார் சரியான முறையில் பராமரிக்கவில்லை என்பதுவே. இது நடந்தது இங்கிலாந்தின் கிழக்கு இலண்டனின் பகுதியான “டவர் ஹம்லெட் (Tower Hamlet) எனும் பகுதியிலேயாகும். இப்பகுதி ஆசியர்கள் பெரும்பான்மையாக அதுவும் இஸ்லாமிய மதத்தினைப் பின்னணியாகக் கொண்டோர் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியாகும். அரசு நடைமுறைப்படி இப்படி பெற்றோரிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த வளர்ப்புப் பெற்றோர் யாரெனத் தெரிந்து அவர்களிடம் வளர்ப்புப் பொறுப்பை கையளிப்பதேயாகும். இப்படியான வளர்ப்புப் பெற்றோர்கள் அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்டிருப்பவர்களாக இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. அப்படியான அதே கலாசாரப் பின்னணி கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் இல்லாத நிலையில் மற்றைய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர்கள் முன்வருவாராகில் அவர்களிடம் கையளிப்பார்கள்.

    நான் மேற்குறிப்பிட்ட அக்குழந்தையின் கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோர் அப்பகுதியில் கிடைக்காத காரணத்தினால் கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்ட அக்குழந்தை இஸ்லாமிய கலாசாரப் பின்னணியைக் கொண்ட வளர்ப்புப் பெற்றோரிடம் கையளிக்கப்பட்டது. அங்கேதான் சிக்கல் உருவானது. அக்குழந்தை அதனது வளர்ப்புப் பெற்றோரினால் இஸ்லாமிய மதக் கோட்பாடுகளைப் பின்பற்றும்படியாக வற்புறுத்தப்பட்டது என்பதே குற்றச்சாட்டாக முன்வைக்கப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதி அக்குற்றச்சாட்டுக்களை பரிசீலனையின் பின்னால் ஏற்றுக்கொண்டு அக்குழந்தை அதனது பாட்டியுடன் வாழும்படி தீர்ப்பளித்துள்ளார். இக்குற்றச்சாட்டுகள் சரியான வகையில் பரிசீலிக்கப்பட்டு நிரூபணமாகியது எனில் இங்குப் பல கேள்விகள் எழுகிறது. சந்தர்ப்ப சூழலினால் தான் வாழும் கலாசாரப் பின்னணியில் இருந்து பிரியும் ஒரு குழந்தை தானே தனது எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாத நிலையில் நிர்ப்பந்தமாக தனக்குப் பரிச்சயமில்லாத கலாசாரச் சூழலுக்குள் தள்ளப்படுவது நியாயமானது தானா ? தனது உரிமைத்தாயிடமிருந்து சட்டத்தின் கரங்களினால் பிரிக்கப்பட்ட ஒரு குழந்தையைப் பராமரிக்க முன்வரும் மனிதர்கள் போற்றப்பட வேண்டியவர்களே! ஆயினும் அக்குழந்தையின் இயற்கையான கலாசாரப் பின்னணியில் இருந்து அதனை முழுமையாக தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்ற முயல்வது அக்குழந்தையின் தன்னுரிமையைப் பறித்தெடுப்பதாகாதா?அன்றி அக்குழந்தைக்கும் தமது சொந்தக் குழந்தைகளுக்கும் எதுவித பேதங்களும் இருக்கக்கூடாது எனும் தூயநோக்கில் அக்குழந்தையையும் தமது கலாசாரப் பின்னணிக்கு மாற்றுவது என்பதில் எதுவிதமான தவறுமில்லை என்பதுதான் உண்மையாகுமா? இவைகள் பல முனைகளில் இருந்து கிளம்பும் யதார்த்தமான கேள்விகளே!

    அதேநேரம் பல வேற்றுமதக் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் கிறீஸ்தவ மத வளர்ப்புப் பெற்றோர்கள் மீது இத்தகைய நுணுக்கமான பார்வையோ அன்றி அவர்கள் மதத்தின் மீது ஒரு தீவிரக் காட்டம் நிறைந்த பார்வையோ நடத்தப்படுவதில்லையே! ஏன் எம்மீது மட்டும் இப்படி என்று வேதனையடையும் சில இஸ்லாமிய மதத்தினரின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ஆனால் நீதித் தராசு என்பது இன, மத, மொழி, நிற வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதை நாம் நம்பும் வரைதான் சட்டமும், ஒழுங்கும் உள்ளத்தில் முதன்மை நிலைபெறும் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

    மிகத் துரதிர்ஷ்டவசமான நிகழ்வு என்ன என்கிறீர்களா?

    ஒரு குழந்தையின் இக்கட்டான நிகழ்வு இங்கிலாந்தில் இன்று இஸ்லாமிய மதத்தின் மீதான ஒரு நுணுக்கமான கண்ணோட்டத்தை அம்மதத்துக்கு எதிராகத் திருப்பும் வகையில் பிரசாரம் மேற்கொள்ளும் சில தீவிர வலதுசாரப் பத்திரிகைகளின் இப்பிரச்சார வேட்கைக்குத் தீனிபோடும் நிலையாக உருவெடுத்திருப்பதே !

    கவியரசரின் வரிகளில் “மதம் என்பது ஒரு மனிதனுக்கு அணிகலனேயன்றி ஆடையல்ல!”

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    Share
  • குற்றமும், குறையும்

      ரா.பார்த்தசாரதி

     

    குற்றம்  சொல்லவும், குறைகளை பேசவும் முற்றம் தேவையில்லை

    வென்றவனை கண்டால் அதிர்ஷ்டம்  என்று அலட்டிக்  கொள்வர்

    தோற்றவனை  கண்டால் இது தேவைதானா என எகத்தாளம் பேசுவர்

    உள்ளவனை  கண்டால் கொள்ளை அடித்த பணம் என குற்றம் சொல்வர்

     

    குற்றம் சொல்பவன் என்றும் தன்குறையினை நினைக்க மாட்டார்

    கட்டின   வீட்டிற்கு நம் முன்னே குறை சொல்பபவர்கள் இருப்பர்

    வென்றவனை கண்டால்  அதிர்ஷ்டம் என்று அலட்டிக் கொள்வர்

    இல்லாதவனை கண்டால் பிழைக்கத் தெரியாதவன்  எனக் கூறுவர் !

     

    தப்பு செய்தவன்  தண்டனை பெற்றால், சட்டம் சரியில்லை என்பர்

    தப்பு செய்யாதவன் தண்டனை பெற்றால் சரியான நீதி  என்பர்

    பிழைப்பு தேடி பிற நாட்டிற்கு சென்றால் பேராசைக்காரன் என்பர்

    உழைப்பைத் தேடி உள் நாட்டில்  உலாவினால் ஊர் சுற்றி என்பர் !

     

    ஊருக்கு உதவினால்,  ஊர் கழுதை   என்று  பட்டம் சூட்டுவர்

    சும்மா இருந்தால் சோம்பேறி என்று  முத்திரை   குத்துவர்

    பிறர் குறை காண்பவன், தன் குற்றம்,குறைகளை உணர மாட்டார்

    இறைவனே புலவன் பாட்டில் குற்றம் கண்டுபிடித்தார் என்பர் !

     

    குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என  யாவரும் நினைப்பதில்லை

    குற்றம் கடிதலை பற்றி வள்ளுவன் கூறுவதை செவிசாய்ப்பதில்லை

    இறுமாப்பு, சீற்றம், இழிந்தகுணம் இவை குற்றத்தின் தூண்டிலாகும்

    குற்றங்களுக்கு  அஞ்சி நடப்பவன் மனமே மாணிக்க கோவிலாகும் !

     

     

     

    Share
  • கண்ணால் காண்பதும..!

    பெருவை பார்த்தசாரதி

     

    BRight-sunlight-nature-autumn

     

     

     

     

     

     

     

     

    அண்டஞ் சூழேழுலகை அற்புதமாய்ப் படைத்தாங்கே..

    ……….அரியயுயிர் வகையனைத்தையு முயிர்ப்பித்தாய்…அதை

    உண்டாயுன் வாயினால் பிரளயமெனும் செயலால்.!

    ……….உருவாக்கும் அழிக்கும்காக்கு மனைத்துமுன் செயலே

    அண்டமுழுதும் அற்புதங்கள் நிகழ்த்தி ஆச்சரியமிகு..

    ……….அரியதிரு விளையாடலால் வியனுலகை இயக்குகிறாய்.!

    கண்ணுக்குத் தெரியாத கருப்பொருளே.! அற்புதமே.!

    ……….கடவுளுனைக் கண்ணால் காண்பதும் முடியுமா..?

     

     

    கண்ணில் தெரியும் காட்சிகளுலவும் புவியில்யாவும்..

    ……….கடவுள் படைத்ததனைத்தும் மெய்யெனும் அதிசயமே.!

    கண்ணையும் மனதையும் கவருகின்ற மலையருவி..

    ……….கடந்துவரும் நடையழகில் கடல்சேர்வதும் அற்புதமே.!

    வண்ண வண்ணக் கோலம்கொண்ட மயில்தன்தோகை..

    ……….விரித்து கருமேகம் கண்டவுடனாடுவதும் ஆச்சரியமே.!

    எண்ண எண்ண இனிக்கும் இறைவனின் ஆலயமென..

    ……….எதுவும்கண்ணால் காண்பதும் கவிதையாகும் கவிநெஞ்சில்.!

     

     

    பாக்கும்கமுகும் தேக்கும் தென்னையும் நிறைந்த..

    ……….பசுமைமிகு தோட்டமதின் மேல்வளைந்த வானவில்லும்..

    நாக்கில் தேனைச்சேகரிக்க நாடிடும் வண்டினத்தின்

    ……….நல்லதொரு கூட்டமங்கே ஓரிடத்தில் அழகாய்க்கூட..

    பூக்கும்பூமலர்த் தோட்டத்தில் வீசும்பூமண ஈர்ப்பால்

    ……….புலவர்கள் கவிஞர்கள் கூட்டமங்கே நிரம்பி வழியும்..

    பாக்கள் புனைய தகுமிடம்தானது…பாவலர் களங்கே

    ……….பார்க்கும் கண்ணால் காண்பதனைத்தும் கவிதையாகும்.!

     

    ===================

     

    நன்றி:: தினமணி கவிதைமணி வெளியீடு:: 27-08-17

     

    நன்றி:: கூகிள் இமேஜ் பிக்ஸாபே

     

     

    Share
  • மின்மினி இதழ் ஆசிரியர் தில்லை சிதம்பரப்பிள்ளை

    முனைவர் மு.இளங்கோவன்

    Thillai_Mu.E.

         இணையத்தின் தொடர்பில் இருப்பவர்களுக்கு மின்மினி இதழ் அறிமுகமாகியிருக்க வாய்ப்பு உண்டு. சுவிட்சர்லாந்திலிருந்து கால் நூற்றாண்டு காலமாக வெளிவரும் மின்மினி இதழ் இலவச இதழாகும். விளம்பரம் உட்பட அனைத்தும் இலவசமாக அமைவது இதன் தனிச்சிறப்பு. தில்லை சிதம்பரப்பிள்ளை இதன் ஆசிரியர். 25/04/1945 இல் பிறந்த இவர், இலங்கை யாழ்ப்பாணம் நாவற்குழியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் பெயர் சங்கரப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை – சரஸ்வதி என்பதாகும். இவர் உயர்தரக் கல்வியை வண்ணை வைத்தீஸ்வராக் கல்லூரியில் பயின்றவர். இலங்கைப் பல்கலைக் கழகம் பேராதனையில் பயின்று 1969இல் இளங்கலைப் பட்டம் பெற்றவர்.

         தில்லை சிதம்பரப்பிள்ளைக்குக் கல்லூரியில் கற்கும் நாள்களில் கல்வி சாராத பல நூல்களைப் படிப்பதற்குரிய வாய்ப்புகள் அதிகமாகக் கிடைத்தன. எனவே இவரின் உள்ளம் நூல்களைப் படைக்க வேண்டும் என்று ஆவல் கொண்டது. எனவே, அவ்வப்போது நாடகங்கள் சிலவற்றை எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த நாடகங்கள் சில இலங்கை வானொலியில் ஒலிபரப்பப்பட்டன என்பதை இங்குக் குறிப்பிடுதல் வேண்டும்.

        தில்லை சிதம்பரப்பிள்ளை கல்லூரியில் பயின்று, பட்டம் பெற்றுத் தகுந்த வேலை கிடைக்கும் வரை 2 ஆண்டுகள் இலங்கை வீரகேசரிப் பத்திரிகையில் செய்தியாளராகவும், கட்டுரையாளராகவும், சிரித்திரன் பத்திரிகையில் நகைச்சுவை எழுதுபவராகவும் பணியாற்றியவர்.

    Minmini printஇவர் எழுதிய கட்டுரைகள்  வீரகேசரியில் வெளிவந்ததோடு நின்றுவிடாமல்  அக் கட்டுரைகளில் சில அன்றைய ஆட்சியாளர்களிடம் மொழிபெயர்ப்புடன் இவரால் சமர்ப்பிக்கப்பட்டு அவை நடைமுறைக்கு வந்தனவும் உண்டு.

         எடுத்துக்காட்டாக அரசு பனை அபிவிருத்திக் கூட்டுத்தாபனம் அமைக்க அப்போதைய இலங்கைப் பல்கலைக்கழகப் புவியியற் பீடத்தலைவர் பேராசிரியர் க. குலரத்தினம் அவர்களுக்கு உதவியாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதைக் குறிப்பிடலாம். பல ஆண்டுகளாகப் பெருந்தொகையான பட்டதாரிகள் வேலை எதனையும் பெற வாய்ப்பின்றி இருந்த காரணத்தினை ஆய்வுசெய்தபோது  பட்டதாரிகளுக்கு வேலைப் பயிற்சித் திட்ட முக்கியத்துவம் பற்றிக் கட்டுரை எழுதினார். அதனை அப்போதைய ஆட்சியாளர்களிடம் கையளித்து நடைமுறைப்படுத்துவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தினார். இதனால் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் – சிங்களப்  பட்டதாரிகள் பயிற்சி பெற்றதுடன் தகுந்த வேலையிலும் அமர்த்தப்பட்டனர்.

         இலங்கை அரசாங்கக் கூட்டுத்தாபனம் ஒன்றில் 15 ஆண்டுகள் நிர்வாக உத்தியோகத்தவராகவும், தொடர்ந்து உதவி முகாமையாளராகவும் கடமையாற்றியவர். அக்காலத்தில் தேவைக்கேற்ற சிறந்த கட்டுரைகள் எழுதுவதில் ஈடுபாட்டுடன் செயல்பட்டவர். இக்கட்டுரைகள் பத்திரிகைகளுக்கும், கடமையாற்றிய அரச நிறுவனத்தின் வளர்ச்சிக்கும்  உதவியுள்ளன. தாம் பணிபுரிந்த நிறுவனத்தின் கருத்தரங்கம், மேடைப் பேச்சுக்களில் பேச்சாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார். வவுனியா, மட்டக்களப்பு, திரிகோணமலை மற்றும் கொழும்பு மாவட்டங்களில் பணிபுரிந்துள்ளார்.

           1985 முதல் இலங்கைத் தமிழர்கள் சுவிட்சர்லாந்தில் குறிப்பிடத்தக்க அளவில் குடியேறினர். சுவிசில் வழக்கில் இருந்த பிரெஞ்சு, ஜெர்மன், இத்தாலி  மொழி இவற்றில் ஒன்றை இருப்பிடத்திற்கேற்ப கற்கவேண்டிய சூழ்நிலை  ஈழத்தமிழர்களுக்கு அப்பொழுது ஏற்பட்டது. அம்மொழிகளைக் கற்றுத் தேர்வதற்குக் கால அவகாசம் தேவைப்பட்டது  இக்காலப் பகுதியில் இங்குவாழ்ந்த தமிழ் மக்கள் உள்ளுர் மொழிபற்றி அதிகம் அறியவில்லை. எனவே  இந்த நாட்டின் நடைமுறைகளையும், சிறார்களின் கல்வி முறைகளையும் அறிவதற்கு இதழின் முக்கியத்துவம் உணர்ந்து, மின்மினி என்ற இதழைத் தொடங்கினார். தங்கள் தங்கள் சமய, கலை பண்பாடுகளைப் பேணிக்காக்க உதவும் வகையில் தமிழ் மொழி அறிவைத் தமிழ்ச் சிறார்களுக்கு ஊட்டவும் சில முக்கியச் செய்திகளை அறியச் செய்யவும் மின்மினி இதழ் வெளியிடப்பட்டது.

         1993 புரட்டாசி மாதம் சுவிட்சர்லாந்து  வோ மாநிலத்தில் முதன்முதலாக  மின்மினி இதழ் உதயமானது, முதலில்  மாநில அளவில் இங்கு வாழும் தமிழ்மக்களைச் சென்றடைந்தது. மின்மினி இதழ் நேரடியாக அவரவர் வீட்டுக்கு அஞ்சல் பெட்டியில் இலவசமாகவே கிடைக்கும்படியாக அனுப்பப்பட்டது. பின் படிப்படியாகத் தமிழ்மக்கள் வாழும் எல்லா மாநிலங்களுக்கும் இதன் சேவை பரவியது.  அங்குள்ள வியாபார நிலையங்கள் வழியாகவும் மின்மினி விநியோகிக்கப்பட்டது. பிற்காலத்தில் வெளிநாடுகளுக்கு மின்னஞ்சல் மூலமாகவும் விநியோகிக்கப்படுகின்றது.

                    ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகளுக்கு அந்த அந்த நாடுகளின் செய்திகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுத்  தனித்தனியாகப் பதிப்புகள் சில வருடங்கள் வெளியிடப்பட்டன.

                    தில்லை சிதம்பரப்பிள்ளை 1985ஆம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்தில் ஆரம்பத்தில் சேவை மனப்பான்மையுடன் ஆங்கில, தமிழ் உரையாடல்களை மொழிபெயர்த்தும் சில அரச சார்புடைய ஆவண நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தும் வழங்கியவர்.  தனியார் தமிழ் ஆவணங்களைப் பிரெஞ்சு மொழிக்கு மொழிபெயர்த்தல், வரியிறுப்புப் பத்திரங்களை நிறைவுசெய்வதற்கு உதவுதல், கணினி, இணையம் ஆகியவற்றில் வேண்டியோர்க்கு உறுதுணை அளித்தல் போன்றவற்றில் ஆர்வமாகச் செயல்பட்டவர்.

         தில்லை சிதம்பரப்பிள்ளை மின்மினி என்ற தமிழ்ச் சஞ்சிகையை அன்றைய தேவைகருதி ஆரம்பித்து 24 வருடங்களாகத் தொடர்ந்து வெளியிட்டு, அதன் ஆசிரியராகவும் கடமையாற்றிவருகின்றார். அயல்நாட்டு எழுத்தாளர்களுடன் நல்ல தொடர்பில் உள்ளார்.

                    2013ஆம் ஆண்டில் இருந்து மின்மினி இதழின் வழியாக மாநாடுகள் நடத்துவோர்க்கும், ஆய்வுக்கட்டுரைகள் வழங்கும் ஆய்வாளர்களுக்கும் தொடர்புப் பாலமாக சேவைமனப்பான்மையுடன் கடமையாற்றி வருவதைக் குறிப்பிட்டுச் சொல்லுதல் வேண்டும். 2014இல் நடைபெற்ற 2 வது முருகபக்தி மாநாடு, 2014இல் சிட்னியில் நடைபெற்ற சிட்னி முருகன் சைவநெறி மாநாடு, புதுச்சேரி அருள்மிகு திருப்புகழ் மன்ற வெள்ளிவிழா மாநாடு 2014, 2015இல் நடைபெற்ற 9 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, மற்றும் ஐரோப்பியத் தமிழ் ஆய்வியல் மாநாடு 2015, 2016 மற்றும் உலகத் தமிழ் இணைய மாநாடு  ஆகியவற்றின் செய்திகளை உலக அளவில் தெரியப்படுத்தி, கல்வியாளர்களுக்கு உதவியுள்ளார்.

                    தமிழ் மொழி இந்தப் பூமிப்பந்தில் தொடர்ந்து  வாழ வழிதேடும் வகையில் மேற்கொள்ளவேண்டிய பொறிமுறைகளைப் பல ஆய்வாளர்களிடமிருந்து பெற்று, அக்கரையில் பச்சை என்ற கட்டுரைத் தொகுப்பு நூலினை வெளியிட உழைத்துவருகின்றார். இந்த நூல் நூல் வடிவிலும், மின்னூல் வடிவிலும் தமிழ்கூறும் நல்லுலகத்திற்கு இலவசமாகவே சென்றடையவேண்டுமென்ற நோக்கில் முயற்சிகள் இவரால்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

       மின்மினி இதழில் வெளியிடப்படும் இவரின் கட்டுரைகள் தமிழ் மக்களின் கல்வி சமய வேறுபாடின்றிக் கலை கலாசாரங்களைப் பேணிப் பாதுகாப்பதாக அமைவனவாகும்.

         சுவிட்சர்லாந்தில் மருத்துவக் காப்பீட்டுக் கட்டணம்  வருடாவருடம் அதிகரித்து வருகின்றது.  அதனைக் கட்டுப்படுத்தப் பலதிட்டங்கள் தீட்டப்பட்டும் அதனை மக்கள் ஆதரிக்கவில்லை என்பதால் அமல்படுத்தப்படவில்லை. மின்மினியில் இது தொடர்பான தீர்வுக்குப் பல கட்டுரைகள் வெளியிடப்பட்டன. மேலும் அதன் மொழிபெயர்ப்பைச் சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அவ்வப்போது அனுப்பியதால் பயன் ஏற்பட்டுள்ளது.  மாநிலங்கள் அளவிலான மின்மினி ஆசிரியரது தீர்வுத்திட்டம் ஒன்று மேல்மட்டத்தில் ஆராயப்பட்டுத் தற்போது நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்வதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

         புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தில்லை சிதம்பரப்பிள்ளை அவர்கள் தமிழுக்கும், மக்களுக்கும் பயன்படும் அரிய செயல்களைத் தொடர்ந்துசெய்துவருகின்றார். கால்நூற்றாண்டாக மின்மினி இதழ்வழியாக உலகத் தமிழர்களின் உள்ளத்தில் இடம்பெற்றிருக்கும் இவர்தம் தொண்டு தொடர்வதாகுக! நீடு நிலைபெறுவதாகுக!

    Share
  • எது அந்தரங்கம்?

    – நிலவளம் கு.கதிரவன்

         முத்தலாக் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் பரபரப்புத் தீர்ப்பினைத் தொடர்ந்து, சமீபத்தில் அனைவராலும் விவாதிக்கப்பட்ட, தனி நபர் அந்தரங்கம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியாக தனிநபர் அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

         இத்தகைய தீர்ப்பிற்கான தேவை ஏன் தற்போது எழுந்தது என்றால் சற்றே பின்னோக்கிச் செல்ல வேண்டும்.  ஆதார் அடையாள அட்டை தொடர்பான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு கொண்டுவந்த சட்டத்தை எதிர்த்து கர்நாடக உயர்நீதி மன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கே.எஸ்.புட்டாசாமி அவர்கள் தொடுத்திருந்த வழக்குதான் தனி மனித அந்தரங்கத்துக்கு அரசியல் சட்டப் பாதுகாப்பு உண்டா என்ற விவாதத்திற்கு வழி வகுத்தது.

         நமது இந்திய அரசியல் சட்டமானது நமக்கு சில அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளது.  சமத்துவ உரிமை, சுதந்திர உரிமை, சுரண்டலுக்கு எதிரான உரிமை, சமய சுதந்திர உரிமை, பண்பாடு மற்றும் கல்வி உரிமை, மற்றும் அரசியலமைப்பிற்கு தீர்வுகாணும் உரிமை போன்ற உரிமைகள் சட்டப் பிரிவு 14 முதல் 32 வரையிலான பகுதியின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

     ஆனால் அந்தரங்கம் என்று சொல்லப்படுகின்ற தனியுரிமை சார்ந்த சட்ட விளக்கம் எந்த அகராதியிலும் இல்லை. எனினும் அடிப்படை உரிமை சார்ந்த விளக்கங்களை நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 19 மற்றும் 21வரையறுத்துக் கூறியுள்ளது.  இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3-வது பிரிவு ஒருவரைப் பற்றிய தனிப்பட்ட அந்தரங்கம் தொடர்பான தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதைத் தடைசெய்துள்ளது. தனிநபர் அந்தரங்கம் தொடர்பான வழக்கில் 1954இல் 8 நீதிபதிகள் கொண்ட அமர்வும், 1962இல் 6 நீதிபதிகள் கொண்ட அமர்வும் தனி நபர் அந்தரங்கம் அடிப்படை உரிமை அன்று எனத் தீர்ப்புரை வழங்கியது.  தற்பொழுது இதில் சிக்கல் ஏற்படவே, மத்திய அரசு கேட்டுக் கொண்டபடி 9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் வழியே விவாதித்து அந்தரங்கம் என்பது அடிப்படை உரிமைதான் எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.

        உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி அனைவராலும் இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு தீர்ப்பு என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  அரசாங்கம் உரிமைகளை உருவாக்குவதில்லை. அவற்றை அனுபவிக்கக் கூடிய சூழலையே ஏற்படுத்திக் கொடுக்கிறது.  இதுதான் உரிமையின் இயல்பு.

    ஆரம்பகாலத்தில் நமது உரிமைகளைக் கட்டுப்பாடற்ற முழுமையோடு அனுபவித்து வந்த நாம், நாகரிகச் சமூக வளர்ச்சியின் காரணமாகவும், மக்கள் தொகைப் பெருக்கத்தின் விளைவாகவும்  இதற்கொரு தீர்வாக அரசாங்கம் சட்ட வரையறை செய்தது.

      இது தொடர்பில் மேற்படி பட்டியலிடப்பட்ட உரிமைகளை அனுபவிக்க நமக்கு வழிவகை செய்தது.  அரசியலமைப்பு ஏற்பட்ட காலத்தில் உள்ள சூழ்நிலையில் உரிமை சம்பந்தமாகத் தற்பொழுது ஏற்பட்டுள்ள ஐயங்கள் ஏற்படவில்லை.  கால மாற்றத்தில், நாகரிகச் சமுதாயமாக மேம்பட்ட சமூகத்தில் ஏற்பட்ட மாற்றத்தில் சில மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் பாதுகாப்புக் கருதி ஏற்படுத்த வேண்டியது அவசியமாகிறது.

         அந்தரங்கம் என்பது பல்வேறு பரிமாணங்களைக் கொண்டது.  அது உடல் சார்ந்ததாக இருக்கலாம்; அல்லது தனியரின் தகவல் சார்ந்ததாக இருக்கலாம்.  உடல் சார்ந்த அந்தரங்கம் என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை.  ஆனால் தனியரின் தகவல் சார்ந்தது என்பது மக்கள்தொகைப் பெருக்கம், தேசப் பாதுகாப்பு போன்ற அம்சங்களில் தரவுகள் அரசாங்கத்திடம் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியமாகிறது.

         இப் பிரச்சினையின் மையப் புள்ளியான ஆதார் தொடர்பான விபரங்கள் அனைத்து பயன்பாடுகளுக்கும் அவசியம் என மத்தியஅரசு கேட்பதுதான். இதில் எந்தத் தவறும் இல்லை.  ஆனால் அரசிடம் அளிக்கின்ற தகவல்கள் பொதுவெளியில் பரவாமல் காப்பது அரசின் கடமை எனக் கேட்பதில் நியாயம் உள்ளது.  இன்றைய எண்ம உலகத்தில் நாம் தெரிந்தோ தெரியாமலோ சமூக ஊடகங்கள், இணைய தளங்கள், மற்றும் திறன்பேசி வழியாக நமது பொது தகவல்களைத் தினமும் அளித்துக்கொண்டு வருகிறோம்.  இதன் வழியே உருவாகும் சாதக பாதகங்களை நாம் எண்ணிப் பார்ப்பதும் இல்லை.  இது தொடர்பில் அரசிடம் முறையிடுவதுமில்லை.

        சமூக ஊடகங்கள், இணையதளங்கள், மற்றும் திறன்பேசி வழியாக நாம் செயல்படுவது தினமும் கண்காணிக்கப்பட்டுதான் வருகிறது.   அது அரசு வழியாகவோ அல்லது மேற்கண்ட வசதிகளை நமக்கு வழங்கும் நிறுவனங்கள் மூலமாகவோ.  இதில் எல்லாம் நமக்கு எவ்வித அக்கறையும் இல்லை.  ஆனால் அரசாங்கம் பாதுகாப்புக் கருதிக் கேட்கும்போது அடிப்படை உரிமை நம் கண்முன் வந்துவிடுகிறது.

         அந்தரங்கம் அடிப்படை உரிமை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.  ஆனால் எது அந்தரங்கம் என்பதில்தான் பிரச்சினையே.  முதலில் இதில் தெளிவு வேண்டும்.  உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் வழியாக ஆதார் தொடர்பான வழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தலாம்;  என்றாலும் மக்கள் வழங்கும் தகவல்கள் பொதுவெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என அரசை கேட்டுக் கொள்வதுதான் நமது முதன்மையான கடமையாக இருக்க வேண்டும்.  தேசப் பாதுகாப்பு, குற்றவியல் நடவடிக்கைகள் மற்றும் புலனாய்வுகளுக்கு ஒவ்வோர் இந்தியக் குடிமகனும் தமது தரவுகளை அளிப்பது மிகவும் அவசியமாகும்.

         அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கேட்கும் நாம் ஓட்டுரிமை, சொத்துரிமை போன்றவற்றில் கண்டும் காணாமல் வாளாவிருக்கிறோம்.  தனி நபர் உரிமை சம்பந்தமான இவ்வழக்கு விசாரணையில் இரண்டு நீதிபதிகள், சொத்துரிமை என்பது அடிப்படை உரிமையாக இருந்திருக்க வேண்டும் என்றும், ஓட்டுரிமை என்பது சட்ட உரிமையாகத்தான் உள்ளது என்றும் இவ்விரண்டு உரிமைகளும் அடிப்படை உரிமையாக்கப்பட வேண்டும் என்று கூறியதையும் நாம் கவனித்தில் கொள்ள வேண்டும்.  சொத்துரிமை சம்பந்தமாக மத்தியஅரசு விளக்கம் அளிக்கும்போது, விவசாயச் சீர்திருத்தம் மேற்கொள்ளவும், பொதுப் பணிக்காக, எந்தச் சொத்தையும் அரசு ஆர்ஜிதம் செய்யவும், நஷ்ட ஈடு என்ற பெயரில் அல்லாமல் ஒரு தொகையை அளிக்கவும் 1978ஆம் ஆண்டு கொண்டு வந்த சட்டத்திருத்தம் வழிவகை செய்கிறது என விளக்கம் அளிக்கப்பட்டது.  ஆனால் உச்ச நீதிமன்றம் மேற்கண்ட விளக்கத்தை ஏற்காமல், இதனால் பாதிக்கப்படுவது சிறிய அளவிலான விவசாயிகள்தாம் எனக் கூறிச் சொத்துரிமையையும் அடிப்படை உரிமையில் சேர்க்க வேண்டும் எனக் கூறியது.

        எனவே இதுபோன்ற தனி மனிதரின் பிற உரிமைகளையும் அடிப்படை உரிமையாகப் பெற நமக்கு விழிப்புணர்வு வரவேண்டும்.  உச்ச நீதி மன்றத்தின் இத்தகைய தீர்ப்பின் வழியாக இனிவரும் வழக்கு விசாரணையின்கீழ் அளிக்கின்ற தீர்ப்பிலும் இது எதிரொலிக்கும் என நம்பலாம்.  இதில் நமக்குள்ள முக்கியக் கடமை எதுவென்றால் நாம் அளிக்கின்ற பொதுத் தகவல்களின் நம்பகத் தன்மையைக் காப்பது, பொது வெளியில் கசியாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என மத்திய அரசை கேட்பதாகத்தான் இருக்க வேண்டும்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    170831 -Radha Krishna -lr
    ஆலிங் கனித்தராதை தோளிங்க நர்த்தனத்தால்
    காளிங்கக் காட்சி கவனத்தில் – மாலிங்கு
    காதல்கூத் தாடுகிறான், காண்டீ பனைமறந்து:
    கீதையா! ராதையா! கூறு!’’….!

    நாமடைதல் சிற்றின்பம் நாமாதல் பேரின்பம்
    நாமாதல் நாமடைய நாடுவீர் -நாமா
    வளிசொல்லி வேணு விட்டலனை வாழ்த்தி
    களிகொள் அடியார்தம் கூட்டு….

    நாவல் நிறத்தனே நாலாயிரம் போற்றிடும்
    காவலில் தோன்றிய கண்ணனே -ஆவலால்
    விட்டகன்றாய் அத்வைதம் வந்தாய் விசிஷ்டனாய்
    வெட்டுநீ துண்டிரெண்டா வோம்….

    ஊதா நிறத்தவன் ஊதிக் களைத்தனன்
    ராதை கழுத்தென்னும் சங்கை – போதை
    தலைக்கேற கண்ணனவன் தோளைத் தழுவி
    வளைக்கரத்தால் தூதுவிட்டாள் WAR….!

    பார்த்தோர் பசுமையாய் பாராதோர் பூதமாய்
    சேர்த்தணைக்கும் பெட்டைக்கு சேவலாய் -ஆர்த்தொலிக்கும்
    சங்கில் மவுனமாய் சக்கரத்தில் சீற்றமாய்
    எங்கும் திகழ்வோனை ஏத்து….கிரேசி மோகன்….!

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    FullSizeRender
    ’’பூம்பூம்பூம் மாட்டுக்காரன் பாற்கடல் ஓரத்தில்
    ஜாம்ஜாம்னு வந்தான் ஜனித்திட-ஓம்ஓம்ஓம்
    நாரணன் பேரு , நவநீதம் உண்டதை
    ஜீரணிக்க விட்டெழுந்தான் சேச்சு(சேடன்)’’….!

     
    ‘சந்தேகம் யார்க்கென்று சற்றேனும் சந்தேகி!
    வந்தேகிச் செல்லும் விளையாடி -உன்தேகம்
    பொய்யென்(று) உணர்ந்து புகலடை யாதவன்கால்
    மெய்யுணர் மானுட மாடு’’….கிரேசி மோகன்….

    தொட்டகுறை ஆத்திகம் விட்டகுறை நாத்திகம்
    நட்டவிதை உள்ளிருக்கும் தெய்வீகம் -எட்டஅதை
    சுட்ட பழமாகி சுடாத பழங்களில்
    பட்டும் படாமல் பருகு….!

    அமுதா! அளவினை விஞ்சுகின்ற நஞ்சாம்
    எமதாசை நெஞ்சினை ஏற்று -குமுதவாய்
    பேய்ச்சி முலைப்பாலை உண்டதுபோல் எம்மனச்
    சூழ்ச்சியைக் கொள்வாய் சரண்….கிரேசி மோகன்….!

    Share
  • தமிழிசைப்பண்கள்

    சிறீசிறீஸ்கந்தராஜா

    **************************************************
    உலகின் முதல் இசை
    தமிழிசையே!!
    ***********************************************
    இசைத்தமிழின் தொன்மை – 77
    ***********************************************
     
    பழந்தமிழிசையில் பண்கள்
    **********************************

    அறிவனார் – “பஞ்சமரபு”
    **********************************

    PNACHA MARAPU - 1
    பண்ணோர் பதினேழாம் பண்ணியல் பத்தேழாம்
    எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப – நண்ணிய
    நாலாந் திறத்திற மோர் நான்கு முளப்படப்
    பாலாய பண் நூற்றுமூன்று.

    பஞ்சமரபு நூலின் ஆசிரியர் அறிவனார்
    இந்த விளக்கத்தை ஒரு வெண்பாவில் தருகிறார்.

    சங்க இலக்கியங்களில் பண்கள் பற்றிய குறிப்புகள்
    காணப் பெறுகின்றன.

    ஆம்பல் பண், காஞ்சிப் பண், குறிஞ்சிப் பண், நைவளம்
    போன்ற பண்களைப் பற்றியகுறிப்புகள் உள்ளன.

    நூற்று மூன்று  வகைகள்  இருந்ததாக
    சில குறிப்புகள் சொல்கின்றன.

    மிகப் பழைய நூலான பஞ்சமரபு என்ற நூலில்
    தமிழ் பண்களின் வகைகள் மிகவும் அற்புதமாக
    ஒரு வெண்பா வடிவில் சொல்லப் பட்டிருக்கிறது.

    பண்ணோர் பதினேழாம் (17)
    பண்ணியல் பத்தேழாம்(70)
    எண்ணுந் திறமிரண்டும் பத்தென்ப (12)  – நண்ணிய
    நாலாந் திறத்திற மோர் நான்கு (4)
    முளப்படப்
    பாலாய பண் நூற்று மூன்று (103)

    சம்பூர்ண  இராகங்கள் – 17
    ஷாடவ இராகங்கள் – 70 
    திறங்கள் – 12
    திறத்திறங்கள் – 4
    சேர்ந்து 103 ஆக இருந்தன.

    பஞ்சமரபு என்னும் இந்த நூல் வெண்பாக்களால்
    அமைந்த ஓர் இசைத்தமிழ் நூலாகும்.

    இவ்வெண்பாக்களை சேறை அறிவனார் என்னும் புலவர் இயற்றினார்.

    இந்நூல் அடியார்க்கு நல்லார் உரையில் கூறப்பட்டிருந்த
    ஒரு இசை மற்றும் நாட்டிய இலக்கண நூல் எனலாம்.

    இவரது காலம் பற்றியும், ஊர் பற்றியும் அறிஞர்களிடையே கருத்துவேறுபாடுகள் உண்டு.

    சேறை அறிவனார் இந்நூலுக்கு இட்டபெயர் “ஐந்தொகை” என்பதாகும்.

    சேறையறிவனார் செய்தமைத்த ஐந்தொகை எனும்
    பாயிர வரி இதனை மெய்ப்பிக்கும்.

    இந்நூலின் காலப்பழைமையினால் பல இடைச்செருகல்
    பாடல்கள் உள்ளதாகவும் அறிஞர்கள் கருதுகின்றனர்.

    நூலின் அமைப்பு

    1. இசை மரபு
    2. வாக்கிய மரபு
    3. தாள மரபு
    4. நிருத்த மரபு
    5. அவிநய மரபு
    என ஐந்து மரபுகளைக் கூறுவதால்,
    இது பஞ்ச மரபு எனப் பெயர் பெற்றது.

    இந்நூல் 241 வெண்பாக்களால் உருவாக்கப்பட்டுள்ளது.

    நூற்சிறப்புகள்
    மரபு என்ற சொல்லின் மூலம், இதில் கூறப்பட்டவை
    மிகத் தொன்று தொட்டு வழக்கில் இருக்கும்
    நடைமுறைகள் எனவும் அறிய முடிகிறது.

    தமிழில் தோன்றிய முத்தமிழ்க் காப்பியமாகிய சிலப்பதிகாரம் தமிழர்களின் கலைக்கருவூலமாக விளங்குகிறது.

    இந்நூலில் பொதிந்துள்ள இசை, நாடகச் செய்திகளின்
    நுட்பங்களை அறிய அரும்பதவுரை, அடியார்க்கு நல்லாரின்
    உரை பெரிதும் துணைசெய்கின்றன.

    இவ்விரு சான்றோர் பெருமக்களின் உரையின்வழி
    அக்காலத்தில் வழக்கில் இருந்த பல நூல்களைப் பற்றி அறியமுடிகின்றது.

    அவர்கள் மேற்கோளாகக் காட்டும் நூல்களுள்
    பஞ்சமரபு என்பது குறிப்பிடத் தக்கது.

    பஞ்சமரபு நூலின் வெண்பாக்கள் சிலப்பதிகார நூலின்
    விளக்கத்திற்குப் பெரிதும் உதவியுள்ளன.

    பஞ்சமரபு வெண்பாக்களின் செய்தியும்,
    சிலப்பதிகாரச் செய்தியும் மிகுதியும் ஒத்துள்ளன.

    பஞ்சமரபு நூல் தமிழகம் முழுவதும் வழக்கில் இருந்துள்ளது.
    பகுதி, பகுதியாக மக்கள் இதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

    தெய்வசிகாமணி கவுண்டர் என்பவர் முதன்முதல் பஞ்சமரபு நூலின் ஒரு பகுதியை (1973) வெளியிட்டார்.

    பின்பு குடந்தை ப. சுந்தரேசனாருடன் இணைந்து (1975) உரையுடன் வெளியிட்டார்.

    1991 இல் இசைமேதை வீ. ப. கா. சுந்தரம் அவர்களின் ஆய்வுரையுடனும் விளக்கத்துடனும் பஞ்சமரபு வெளிவந்தது.

    கிடைக்காத நூல்களின் பட்டியலில் இருந்து வந்த பஞ்சமரபு நூலாக்கம் பெற்றதும் சிலப்பதிகார உரைகள் தெளிவுபெற்றன.

    இசை உண்மைகள், குன்றின் மேலிட்ட விளக்காகத் தெரிந்தன. சிலப்பதிகார இசையாய்வு புதுப் பாதையைக் கண்டது.

    சிலப்பதிகாரத்தை வெளியிட்ட உ. வே. சாமிநாதையர்
    பஞ்சமரபைப் பெயராளவில் மட்டும்அறிந்திருந்தார்.

    சிலம்பின் ஒன்பதாம் பதிப்பில் பேராசிரியர் மு. அருணாசலம் அவர்கள் 24 பஞ்சமரபு வெண்பாக்களைத் தொகுத்துப் பின்னிணைப்பாக வழங்கினார்.

    பேராசிரியர் வீ.ப.கா. சுந்தரம் 30ற்கும் மேற்பட்ட பஞ்சமரபு வெண்பாக்கள் சிலப்பதிகார உரையில் உள்ளதைக் குறிப்பிடுகிறார்.

    நுட்பமாக ஆராயும் பொழுது இந்த எண்ணிக்கை மிக வாய்ப்புள்ளது.

    சிலம்பில் இடம்பெறும்
    பஞ்சமரபு வெண்பாக்கள்

    சிலப்பதிகார உரையாசிரியர் அரும்பதவுரைகாரர்
    பஞ்சமரபு வெண்பாக்களை முழுமையாகக் கையாளாமல்
    முதலும், முடிவும் காட்டும் போக்கினராக உள்ளார்.

    அடியார்க்கு நல்லார் முழுமையாகக் காட்டுகிறார்.
    ஆனால் இப்பாடல் எந்தநூல் என்பதை உய்த்துணர்ந்தே
    அறிஞர்கள் வந்தனர்.

    பஞ்சமரபு நூல் வெளிப்பட்ட பிறகே உலகிற்கு
    உண்மைதெரியவந்தது.

    சிலப்பதிகாரக் காலத்திற்கும், உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் காலத்திற்கும் இடைவெளி ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளாகும்.

    எனவே அடியார்க்கு நல்லார் சிலம்பின் இசையுண்மைகளை
    அறியப் பஞ்சமரபே துணை செய்துள்ளது.

    அடியார்க்கு நல்லார் உரை சிலம்பின் சில பகுதிகளுக்குக் கிடைக்காமல் போய்விட்டது.

    குறிப்பாக இசையுண்மைகள் மண்டிக்கிடக்கும்
    கானல்வரிக்குக் கிடைக்காமல் போனதால்
    பஞ்சமரபினை அடியார்க்கு நல்லார் எந்த அளவிற்குப் பயன்படுத்தியுள்ளார் என்பதைத் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை.

    அரங்கேற்று காதை உரையிலும் ஆய்ச்சியர் குரவை உரையிலும் அடியார்க்கு நல்லார் மிகுதியான பஞ்சமரபு வெண்பாக்களைப் பயன்படுத்தியுள்ளார்.

    இவ்வெண்பாக்கள்தான் சிலப்பதிகார இசையுண்மைகளை
    விளக்கிக் காட்டுகின்றன.

    புரிந்துகொள்ளத் துணை செய்கின்றன.

    இவற்றுள் அரங்கேற்று காதையில் 23 வெண்பாக்களையும்,
    ஆய்ச்சியர் குரவையில் ஏறத்தாழ 11 வெண்பாக்களையும்
    பயன் படுத்திக்கொண்டுள்ளார்.

    அடியார்க்கு நல்லார் சிலப்பதிகார உரையில்
    பஞ்சமரபின் ஒரே வெண்பாவை வேறுவேறு இடங்களிலும் பயன்படுத்துகிறார்.

    1. ஓங்கிய மூங்கில் ……(3 : 26 , 17 : .20)
    2. சொல்லுமதிற்களவு…(3 : 26, 27 : 20)
    3. இருவிரல்கள் நீக்கி….(3 : 26, 17 : 20)
    4. வளைவாயரு………..(3 : 26, 17 : 20)
    ஆகிய வெண்பாக்கள் இதற்குச் சான்றாகும்.

    வெண்பாக்கள் உணர்த்தும் செய்திகள்
    யாழ்
    ***********
    யாழ் நான்கு வகைப்படும்.

    பேரியாழ்
    மகரயாழ்
    சகோடயாழ்
    செங்கோட்டுயாழ்

    நால்வகை யாழுக்குரிய நரம்புகளின் எண்ணிக்கை

    பேரியாழ் 21 நரம்புகள்
    மகரயாழ் 19 நரம்புகள்
    சகோடயாழ் 14 நரம்புகள்
    செங்கோட்டியாழ் 7 நரம்புகள்

    துளைக்கருவி
    *********************************

    வங்கியம் (துளைக்கருவி) செய்வதற்குரிய மரங்கள்
    மூங்கில்
    சந்தனம்
    செங்காலி
    கருங்காலி
    உலோகம் (வெண்கலம்)

    துளைக்கருவி (புல்லாங்குழல்) செய்யும் மரம்
    தேர்ந்தெடுத்தல்.

    துளைக்கருவியின் அளவு (புல்லாங்குழல்)

    குழலின் முழுநீளம் 4+5=20 விரலம்.
    குழல்வாயின் சுற்றளவு 4-1/2 விரலம்.
    துளைவாயின் துளையளவு-நெல்லரிசியளவு
    மூடிதுளையிலிருந்து வாய்த்துளை-2 விரலம்
    முதலிய செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

    துளைக்கருவியின் பகுப்பு

    தும்பு முகப்பக்கம், வளைவாய்ப் பகுதியிலிருந்து
    முறையே 2,2 அங்குலம் (மொத்தம் 4- அங்குலம்) நீக்கி
    எஞ்சியுள்ள 16-விரல் நீளத்தில் துளையிடுக.

    இதில் வாய்த்துளையிலிருந்து ஒரு விரல்நீக்கி,
    மீதியுள்ள ஒன்பது விரல் நீளத்தில் 8-துளைகள் இடவேண்டும்.

    ஒருவிரலம் என்பது 3/4 அங்குலம்)

    ஏழு துளைகளுக்கு உரிய ஏழு விரல்கள்.

    இடக்கையின் ஆள்காட்டி விரல் (ம1) மெல்லுழைக்கு
    இடநடுவிரல் வன்துத்தத்திற்கு(ரி2)
    இட மோதிர விரல் குரலுக்கு (ச)
    வலக்கையின் ஆள்காட்டி விரல் மென்துரத்திற்கு(நி1)
    வலக்கையின் நடுவிரல் வன் விளரிக்கு (த2)
    வலக்கையின் மோதிரவிரல் இளிக்கு (ப)

    இசை பற்றிய மேலும் பல செய்திகள்
    ***************************************************************

    ஒலியின் தோற்றம் பற்றியும் வெண்பாவில் செய்திகள் உள்ளன.

    இசைக்கு ஐம்பூதங்களின் இன்றியமையாமை.

    காற்றின் வகைகள்
    பத்து நாடிகள்
    பூதங்களின் பரிணாமம்.

    ஆளத்தி பற்றிய செய்திகள் (ஆலாபணை).
    பண் என்பதற்கான காரணங்களின் விளக்கம்.
    வட்டப்பாலைக்கு மண்டிலம் அமைத்தல்.
    பன்னிரண்டு இராசி வீடு பற்றிய செய்திகள் உள்ளன.

    செம்பாலைக்கு நேர்பாலையான கோடிப்பாலை
    (கரகரப்பிரியா) பற்றிய செய்திகள் உள்ளன.

    செம்பாலையின் நரம்புகளுக்கு மாத்திரை கூறல்.

    தொல்காப்பியர் குறிப்பிடும் நான்கு நிலத்திற்கும் உரிய பெரும்பண்களுக்கு உரிய இன்றைய இராகங்களைக் கூறுகிறது.

    வலமுறையில் அலகு பிரித்தலைச் சில வெண்பா உணர்த்துகின்றது.

    இவ்வாறாகச் சிலப்பதிகாரத்தை மிகவும் நுட்பமாக
    அறிந்துகொள்ள உரையாசிரியர்களின் பங்களிப்பும்,
    பஞ்சமரபு வெண்பாக்களின் பங்களிப்பும் பெரிதும்
    துணை நிற்கின்றன எனலாம்.

    சிலம்பின் பலஅடிப்படை இசையுண்மைகளைப்
    பஞ்சமரபு வெண்பாக்கள் தாங்கியுள்ளன.

    பல செய்திகளை இவ்வெண்பாக்கள் தன்பால்
    கொண்டுள்ளன எனலாம்.

    ***********************************************

    நன்றி:
    முனைவர் மு இளங்கோவன்
    இணையம்
    ***********************************************
    சிறீ சிறீஸ்கந்தராஜா
    30/08/2017

    Share
  • வெட்கக்கேடு

    நாகேஸ்வரி அண்ணாமலை

    wrapper_-_Pope_-_002-1

    கத்தோலிக்கத் தலைவர் போப் பிரான்சிஸைப் பற்றி இரண்டு முறை வல்லமைக்கு 2013, 2014 ஆண்டுகளில் ‘இதுவல்லவோ ஒரு மதத்தலைவருக்கு அழகு’, ‘இவரல்லவோ ஒரு மதத்தலைவர்’ என்ற தலைப்புகளில் எழுதியிருக்கிறேன்.  இன்னும் சில தினங்களில் அவரைப் பற்றி நான் எழுதியிருக்கும் ‘போப் பிரான்சிஸ் – நம்பிக்கையின் புதிய பரிமாணம்’ என்னும் நூல் வெளிவரவிருக்கிறது.  (செப்டம்பரில் நடக்கும் மதுரை புத்தகக் கண்காட்சியில் இது கிடைக்கலாம்.)  அதில் பல மதத்தலைவர்கள், இந்து மதத்தலைவர்களும்,  என்னென்ன அட்டகாசங்கள் புரிந்திருக்கிறார்கள், புரிந்துவருகிறார்கள் என்று கோடிகாட்டியிருக்கிறேன்.  அவர்களோடு ஒப்பிடும்போது போப் பிரான்சிஸ் எப்படிப்பட்ட மதத்தலைவர், எவ்வாறு மதத்திற்கு அப்பால் நின்று உலகிற்கே வழிகாட்டுகிறார் என்றும் கூறியிருக்கிறேன்.  நான் இந்து மதம் உட்பட எந்த மதத்தையும்பின்  பின்பற்றுபவள் இல்லையென்றாலும் கத்தோலிக்க மதத்தலைவர் தன் சிறப்புகளால் எப்படி என்னைக் கவர்ந்தார் என்றும் எழுதியிருக்கிறேன்.

    சென்ற 25-ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த குர்தீப் ராம் ரஹீம் சிங் என்ற மதகுரு மீது கடந்த பதினைந்து ஆண்டுகளாக நடந்த வழக்கில் (நம் நாட்டின் நீதித்துறையின் ஆமை வேகத்துக்கு ஒரு உதாரணம்) குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு 28-ஆம் தேதி இருபது ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறார்.  இவன் மீது இன்னும் சில கொலை வழக்குகள் இருக்கின்றன.  அவற்றிற்கும் சேர்த்து இன்னும் எத்தனை ஆண்டுகள் சிறையில் இருக்கப் போகிறாரோ?  பெரிய பாரம்பரியம் மிக்க நாடு, பாரினில் சிறந்த நாடு என்று நாம் பீற்றிக்கொள்ளும் இந்தியாவில் இப்படி ஒரு மதகுரு நடந்திருக்கிறார். ஒரு நீதிமன்றத்தால் அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதுதான் இந்தியா பற்றிக் கொஞ்சம் நம்பிக்கையை உண்டாக்குகிறது.

    இருந்தாலும் இந்த நம்பிக்கையை மீறி இந்த ஆன்மீக வேஷதாரிக்குப் பல லட்சம் பக்தர்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியும் இவர் தண்டிக்கப்பட்டதும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பெரிய அளவில் வன்முறை நடந்து, அதில் 38 பேர் இறந்தனர், இன்னும் பலர் காயமடைந்தனர் என்ற செய்தியும் மனதில் பெரிய வேதனையை ஏற்படுத்தின.  மதத்தலைவர்கள் செய்யும் வெட்கக்கேடான செயல்கள் பற்றி அவ்வப்போது செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.  இருப்பினும் இந்த வழக்கு பற்றிய சில விபரங்கள் இந்தியா இவ்வளவு தூரம் தாழ்ந்துவிட்டதா, உலக அரங்கில் இந்தியாவின் படிமம் எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பன போன்ற கசப்பான சில உண்மைகளை நம் முன் வைக்கின்றன.

    ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கையில் ஒரு ஆதரவு தேவைப்படுகிறது, இம்மையிலும் மறுமையிலும் தன்னைப் பாதுகாக்க ஒரு சக்தி தேவைப்படுகிறது.  இது எல்லாச் சமூகங்களுக்கும் பொருந்தும்.  அதனால்தான் மனிதன் மதங்களைப் படைத்திருக்கிறான்.  இறைவனின் செயல்களுக்குக் காரணம் புரியவில்லை என்றாலும் விடாது இறைப்பற்றுக் கொண்டிருக்கிறான்.  மிருகத்தைவிடக் கேவலமான ஒரு மதகுருவை இத்தனை ஜனங்கள் வழிபடுவதும் அவன்மீது இத்தனை குற்றங்கள் சுமத்தப்பட்டு வழக்கு நடந்து நீதிமன்றம் அவரைக் குற்றவாளி என்றதும் இத்தனை லட்சம் சிந்திக்கும் திறனற்றவர்கள் அதை எதிர்த்து வன்முறையில் ஈடுபடுவதும் இந்தியாவில் மட்டுந்தானோ?  அதை நினைத்தால்தான் வேதனை இன்னும் அதிமாகிறது.

    இதைவிட இன்னொரு உண்மை இன்னும் அதிகமாகச் சுடுகிறது.  இந்த மதகுருவோடு பல அரசியல்வாதிகள் தொடர்பு வைத்திருக்கிறார்கள்.  அரியானா முதலமைச்சருக்கு இவரோடு நெருக்கம் உண்டு.  குர்மீத் சிங் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்புக் கூறியதும் வன்முறைகள் வெடிக்கலாம் என்று எதிர்பார்த்து முன்னெச்சரிக்கையாகப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை.  அரியானா மாநில அரசு குர்மீத் சிங்கின் ஆசிரமத்திற்கு நிறைய பணம் கொடுத்து உதவியிருக்கிறது.  இந்தத் தீர்ப்பிற்குப் பிறகு வன்முறையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த இவர் பதவியிலிருந்து விலகியிருக்க வேண்டும். குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை தூண்டப்பட்டபோது பார்த்துக்கொண்டிருந்த அம்மாநில முதல்வர் மோதி பதவி விலகினாரா என்ன?

    குர்மீத் சிங் மீது 2002-இல் வழக்கு பதிவுசெய்யப்பட்டது.  அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து, அதாவது பன்னிரெண்டு ஆண்டுகள் ஆன பிறகு,  நம் பாரதப் பிரதமர் ‘தூய இந்தியாவை உருவாக்குவோம்’ என்னும் நிகழ்ச்சியில் குர்மீத் சிங்கோடு கலந்துகொண்டதுமல்லாமல் பெரிதாகப் புகழ்ந்து வேறு பேசியிருக்கிறார்.  குர்மீத் சிங் மீது வழக்கு நடக்கிறது என்பது இவருக்குத் தெரியாமல் போக வாய்ப்பில்லை.  இப்போதும் ‘குர்மீத் சிங்கைத் தான் மதித்ததற்கு மாறாக இப்படி நடந்துகொண்டிருக்கிறானே’ என்று ஒரு வார்த்தை கூறவில்லை.  ‘என் மனது வேதனைப்படுகிறது’ என்றுமட்டும் சொல்லியிருக்கிறார்.  எதற்காக வேதனைப்படுகிறார்?  இப்படிப்பட்ட ஒரு மதகுரு இருக்கும் நாட்டின் தலைவராக இருப்பதாலா?  இந்த மதகுருவிற்கு மனதைப் பறிகொடுத்த இத்தனை பக்தர்கள் இருக்கிறார்கள் என்ற உணர்வாலா?

    இந்த வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதிக்கு எத்தனையோ மிரட்டல்கள் வந்திருக்கும்; ஆசை காட்டப்பட்டிருக்கும். தமிழக முதல்வர் சொத்துக் குவிப்பு வழக்கைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். அரசியல் அதிகாரத்திற்கு, பண ஆசைக்குப் பணியாத நீதிபதிகள் இன்னும் இந்தியாவில் இருக்கிறார்கள் என்ற உண்மைதான் ஒரேயொரு ஆறுதல்.

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    IMG_3467
    கரதூ ஷணர்கள் பரலோகம் செல்ல

    நரவேஷம் இட்டாய்கண் ணர்முன் -வரவர்ஷம்(வர மழை)

    அண்டர்கோன்(இந்திரன்) கர்வமாய், ஆவினம் காத்திட

    சுண்டுவிரல் கொண்டாய்கல்(கல் -கோவர்த்தன கிரி)….!

    KEY -SOLYUTION….!

     

    கொட்டும் மழைக்குக் குடையாகக் குன்றினைச்

    சுட்டு விரலால் சுமந்தவா -திட்டம்

    உனக்குண்டோ என்னை உருப்படியாய் ஆக்க

    குணக்குன்றே கொள்ளுந்தன் கீழ்….

     

    ‘போலெ’ன்(று) உவமை புகல முடியாது

    மாலென் றனரோ மகாகவிகள் -கேளொன்று

    சிந்தனை தேவையா சித்திரத்திற்(கு) ஓவியா

    எந்தனை வேறுவடி வாக்கு….

     

    பிறந்து புவியில் பிருந்தா வனத்து

    விருந்தைப் பறிமாற வாராய் -மறந்துபோய்

    எங்குநீ தோன்றினும் ஏழைநான் ஏங்கிடும்

    மந்தை வெளியிலிரு வந்து….!

     

     

     
    Share
  • பிள்ளையார் வெண்பாக்கள்

    -கிரேஸி மோகன்

    ganesha
    சோமன்த னைச்சென்னி சூடும் சிவகுடும்ப
    சீமந்த மைந்தன் சதுர்த்தியின்றுமாமன்தன்
    சக்கரத்தை உண்டுமிழ்ந்த சித்தி வினாயகனை
    வக்கிர துண்டனை வாழ்த்து….(1)

     தம்பிக்குக் காதல் துணைசென்ற தந்தியே
    தும்பிக்கை வேழமே, தேவர்கள்ஸ்தம்பிக்க
    ஆட்சி கயிலாயத்தை அவ்வைக்(கு) அளித்தவா
    காட்சிக்(கு) இனியபிள்ளாய் காப்பு….(2)

    தொந்தி குலுங்கிட தந்தி ஜொலித்திட
    முந்தி முழுமுதல் மோதகன்முச்சந்தி
    அரசடியில் வீற்று அருள்பாலிக் கின்றான்
    முரசடித்தேன் தந்திக்கு முந்து….(3)

    ஆனைக்கா அம்மையும் ஊனைக்கொள் ஊர்த்தவர்க்கும்
    சேனைக்கா வேலன் சகோதரனாய் தீனர்க்காய்
    தோன்றிய பிள்ளாய், தமிழாக அவ்வைக்கோல்
    ஊன்றிய வேழா உதவு….(4)

    அக்கினிக்கு முப்புரத்தை ஆட்படுத்தத் தேரேறி
    உக்கிரமாய் சென்ற உருத்திரர்க்கேவிக்கினமாய்
    அச்சொடித்து உன்னிருப்பை எச்சரிக்கை செய்தவரை
    உச்சரிக்க வைத்தாய் ஒழுங்கு….(5)

    கணபதி ராயா மனிதச காயா
    பனிபதி கைலாசப் பையாதனபதி
    மாலின் மருகோனே மயிலோனின் மூத்தோனே
    கோல வினாயகனே காப்பு….(6)

    கயிலாய சீதனம் கற்பகச் செல்லம்
    மயிலாப்பூர் தோழன் மகோதரன்பயிலோரும்
    பள்ளிப் பரிட்சையில் பெற்றிட வெற்றியை
    அள்ளித் தருவான் அவன்….(7)

    அறுகம்புல் தேங்காய் எருக்கம்பூ, மாலின்
    மருகன்பால் வைக்க மகிழ்ந்துஒருகொம்பால்
    நான்முகன் நம்தலையில் நட்ட விதையினை
    ஆனைமுகம் ஆக்கும் அரசு….(8)

    cowசுகள் பேணிடும் கண்ணன் மருகோனே
    mouse
    யிக வாகனா மோதகா – houseனுள்
    வாராய் வினாயகா வேளை சதுர்த்தியில்
    தாராய் அறிவில் தெளிவு….(9)

    மூஷிக வாகனனை தோஷ விநாசகனை
    பாஷைகள் போற்றும் ப்ரணவனைவேஷமாய்
    வேழத்தோல் போர்த்திய தோழக் கடவுளை
    ஏழைகள் ஈசனை ஏத்து….(10)

    அரச மரத்தடியில் ஆகாசம் பார்த்து
    உரசும் எலியோடு ஒண்டிப்பெருசாய்
    எதிர்பார்ப்பு ஏதுமின்றி ஏழெட்டு தேங்காய்
    சதிராக யாதுமருள் வான்….(11)

    கமர்கட் கடலையுண்டை குச்சிஐஸ் மூன்றும்
    சமர்ப்பிப்பேன் நானுனக்கு என்றும்அமர்ந்திட்டு
    செங்கழுநீர்ப் பிள்ளையாரே சாப்பிட்டு த்ருப்தியாய்
    சங்கத் தமிழ்மூன்றும் தா….(12)

     

     

     

     

    Share
  • திருமந்திரத்தில் சில சிந்தனைத் துளிகள் 24

    இரண்டறக் கலந்த நிலை

    தன்னுள் இறைவனையும் இறைவனுள் தன்னையும் காண்பது அறிவின் மிக உயர்ந்த நிலை. ஆயின் இந்த இரண்டையும் ஒன்றாக அறிகின்ற நிலை எப்போது வரும்? நம்மைச் சுற்றி இருக்கின்ற மாயையை விலக்கியபின் தானே இந்த நிலைக்குச் செல்ல தானமாகவோ முடியும்? இந்த நுண்ணிய அறிவு நினைத்தவுடன் கிடைத்து விடுமா? இதை எங்காவது சென்ற வாங்கவோ அல்லது தானமாகவோ பெற முடியுமா? அல்லது இந்த அறிவு நமக்கு கிடைத்தபின் நாம் எந்த நிலையை அடைகின்றோம்? அதற்குப் பிறகு நாம் எதைத் தேடி அலைகின்றோம்? இப்படி பல கேள்விகள் நமது மனத்திலே அடிக்கடி தோன்ற வாய்ப்புண்டு. இவைகளுக்கு பதில் தேடித்தேடி நாம் அலுத்திருக்கின்றோம்.. இந்த நிலையைப் பற்றி திருமூலர் என்ன சொல்லுகின்றார்?

    என்னை யறிந்திலேன் இத்தனை காலமும்

    என்னை அறிந்தபின் ஏதும் அறிந்திலேன்

    என்னை அறிந்திட்டு இருத்தலுங் கைவிடாது

    என்னையிட் டென்னை உசாவுகின் றானே

    தன்னுள் தன்னைத் தேடி அதன் மூலமாக எங்கும் உள்ள இறைவனைக் கண்டு ஆனந்திக்கின்ற உயிருக்கு பேச்சு எப்படி எழும்? அது வெறும் பேரானந்த நிலையன்றோ?

    இந்த ஆனந்தத்தை தரும் அறிவு நிலைக்கு நம்மால் எப்படிச் செல்ல முடியும்? இந்தப் பயணத்தை தொடங்கி வைப்பவனும் இறைவனே. அதை நடத்துபவனையும் இறைவனே. அந்த அனுபவ நிலையில் நம்மை நிறுத்தி நம்மை ஆட்கொள்ளுபவனும் அவனே, அவனுடைய இந்த நாடகத்தை நாம் ரசிக்க வேண்டாமா? இந்தக் கருத்தை வலியுறுத்தும் வகையில் மாணிக்கவாசகர் திருவாசகத்தில் பாடுகின்றார் :

    வான நாடாரும் அறி ஓணாத நீ

    மறையில் ஈறும் முன் தொடர் ஓணாத நீ

    ஏனை நாடரும் தேறி ஓணாத நீ

    என்னை இனிதாய் ஆண்டுகொண்டவா

    ஊனை நாடகம் ஆடுவித்தவா

    உருகி நான் உனைப் பருக வைத்தவா

    ஞான  நாடகம் ஆடுவித்தவா

    நைய வையகத்துடையா விச்சையே.

    சிந்தையில் இறைவனை நிறுத்தி அறிவால் மட்டுமே உணரக்குடிய நிலையில் நம்மையும் அவனையும் இரண்டற நிறுத்திப் பார்க்கின்ற நிலை மிக அரிதே.

    உள்ளத்தின் உள்ளே அமர்ந்துவிட்ட இறைவனின் அனுபவம் நமக்கு கிடைக்கும்பொழுது புறத்திலே நாம் இறைவனின் எந்த வடிவைத்த தேட முடியும்? இறைவனின் மற்ற எந்த உருவம் தான் நமக்கு இனிக்கும்?

    பட்டினத்தாரோ உள்ளத்தின் உள்ளே உனைக் கண்டபின் வேறெங்கும் உன்னைக் காண  மனமில்லை என்ற கருத்தை அழகாக முன் வைக்கின்றார்:

    உளியிட்ட கல்லையு மொப்பிட்ட சாந்தையு மூற்றையறப்

    புளியிட்ட செம்பையும் போற்றுகி லெனுயர் பொன்னவனே

    ஒளியிட்ட தாளிரண் டுள்ளே யிருத்துவ துண்மையென்று

    வெளியிட் டடைத்துவைத் தேனினி மேலொன்றும் வேண்டிலனே.

    ஆகவே இறைவனை இலக்கை நோக்கி நாம் செல்லும் பயணத்திற்கு முதல் படியாகின்றது. கண்கள் கொண்டு பார்ப்பதை விட்டு அகக்கண்கள் கொண்டு பார்த்தல் அவசியமாகின்றது. அதனால்தான் திருமூலர் எளிதில் புரியும் வகையில் நமக்கு உணர்த்துகின்றார்

    முகத்திற் கண்கொண்டு காண்கின்ற மூடர்காள்

    அகத்திற் கண்கொண்டு காண்பதே ஆனந்தம்

    இவ்வாறு அகக்கண்கள் கொண்டும் பார்க்கும் பொழுது நமக்கு எவ்வளவு அறியாமை இருக்கின்றது என்று எளிதில் புலப்படும் அது மட்டுமல்ல, எதை நாம் அறிவு என்று நினைத்துக்கொண்டும் நம்பிக்கொண்டும் இருக்கின்றோமோ அதுவே நமது அறியாமையின் ஆணிவேராகவும் சின்னமாகவும் ஆகிவிடுகின்றது. ஆனால் இந்த அறியாமையை அறிவதே அறிவின் இலக்கை நோக்கி நாம் செல்லும் பயணத்திற்கு முதல் படியாகின்றது. திருமூலரின் கீழ்கண்ட பாடல் இந்தக் கருத்தை வலியுறுத்தும் வண்ணம் அமைந்துள்ளது மட்டுமின்றி, திருமூலரின் ஆழ்ந்த சிந்தனைக்கு ஒரு முன்னுறையாக அமைகின்றது.

    அறிவறி  வென்றெங் கரற்றும் உலகம்

    அறிவறி யாமை யாரும் அறியார்

    அறிவறி யாமை கடந்தறி வானால்

    அறிவறி யாமை யழகிய வாறே.

    (தொடரும்)

    Share
  • கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

    -கிரேசி மோகன் 

    krishna

    இடைப்பிள்ளை உந்தன் இசையில் மயங்கி
    மடிப்பால் நிலத்தில் மணக்ககடைக்காலை
    கன்றென எண்ணிக் கறவைகள் சுற்றிட,
    நின்றிடென் நெஞ்சில் நிலைத்து….!

    எழில்நீல வண்ணம் , பொழில்வேணு கானம் ,
    தொழில்காதல், தாமரைத் தொப்புள்சுழியில்
    உலகெலாம் உண்டு, அலைகடல் நீந்தும்
    அலகிலாக் கண்ணன் அழகு….!

    வேணு இசைக்கையில் வெண்ணெய் புசிக்கையில்
    வானில் வரைதூக்கி நிற்கையில்ஊணும்
    ஒருகால் உதவ , மறுகால் தயாராய்
    ஒருகால் குரல்வருமுன் கேட்டு…. 

     

     

     

    Share
  • படக்கவிதைப் போட்டி 125-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    ஊ(ஞ்)சலில் ஆடும் குழந்தையின் குதூகலத்தைத் தன் புகைப்படக் கருவியில் சிறப்பாய்ப் பதிவுசெய்திருக்கின்றார் திரு. பிரேம்நாத் திருமலைசாமி.

    child playing swing

    கவியெழுதப் பொருத்தமான காட்சியிது என்றிதனைப் படக்கவிதைப் போட்டிக்குத் தேர்வுசெய்து தந்திருக்கின்றார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவரும் நம் நன்றிக்குரியோர்!

    இந்தப் படத்தைப் பார்க்கும்போது,

    ”ஆடிவா ஆடிவா ஆடிவா!
    (ஊசல்)ஆடப் பிறந்தவளே ஆடிவா!
    புகழ்தேடப் பிறந்தவளே பாடிவா” என்று உல்லாசமாய்ப் பாடத் தோன்றுகிறது.

    கவிகள் காத்திருக்கிறார்கள்! அவர்களின் கவிமழையில் நனையப் புறப்படுவோம் விரைவாய்!

    ”காலமிது காலமிது ஊஞ்சலாடு கண்ணே! காலமிதைத் தவறவிட்டால் பின் (விளையாட) வாய்ப்பில்லை பெண்ணே!” என்கிறது திரு. செண்பக ஜெகதீசனின் கவிதை.

    ஆடிவிடு இப்போதே

    சின்னப் பெண்ணே ஊஞ்சலாடு
    சிரித்து மகிழ்ந்தே ஊஞ்சலாடு,
    அன்னை ஆடிய ஆட்டமிது
    அப்பா கட்டிய ஊஞ்சலிது,
    பின்னை நாளில் கிடைக்காது
    பொழுதும் அதற்கே இருக்காது,
    உன்னலம் பேண முடியாது
    உழைத்திடும் அன்னையாய் ஆனபின்னே…!

    *****

    ”ஆனந்தக் கூத்தாடும் அரும்பு அறிவதில்லை அளவோடு நலங்காணும் சுகம்” என்று விளம்பும் திரு. சுரேஜமீ, புதுவுலகம் படைத்திடப் புறப்படுவாய்; தோல்விகண்டு துவளாமல் வெல்வாய்! என ஊஞ்சலாடும் குழந்தைக்கு ஊக்கமளிக்கின்றார்.

    ஆனந்தக் கூத்தாடும் அரும்பிற்குத் தெரியாது
    அளவோடு
    நலம்காணும் நிலையென்றும் மகிழ்வென்று
    ஆசைகள் வார்த்தெடுக்கும் புதுமைகள் புரியாது
    அனுபவத்தால்
    வரும்வரையில் அதற்கென்ன எனுமனத்தால்
    கருப்புவெள்ளைக் காலமென்றால் களித்திடலாம்
    தினந்தோறும்
    உருமாறும் போதுதான் உள்ளவையே வெளிப்படும்பார்
    துருப்பென்று ஏதுமிலா வேட்டைக்குச் செல்வதுபோல்
    வருங்காலம்
    வந்துநிற்கும் வாசலது தெரியாமல்!

    தெரியாமல் வந்ததுகாண் இதுவென்று வெதும்பாமல்
    தெள்ளிய
    மனத்தோடு வளர்ந்து வரவேண்டும்
    புரியாத புதிரெல்லாம் அறிவோடு வென்றிட்டுப்
    புதுவுலகம்
    படைத்திடவே பூண்டிடுவாய் உறுதியையும்
    நிலவொன்று வானில்காண் தேய்ந்தென்றும் வளர்வதுபோல்
    தோல்விகண்டு
    துவளாமல் நீயென்றும் நடைபோட
    நீரென்றும் விலகாது நிலத்தோடு காய்வதுபோல்
    உலகிலுந்தன்
    புகழிணைய யானுன்னை வாழ்த்துகிறேன்!

    *****

    ”பெண்ணே! அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு ஆடிய ஊஞ்சல்; பூங்காவில் பாங்காய் விளையாடிய ஊஞ்சல் என நீ ஊஞ்சலாடிய இடங்கள்தாம் எத்தனை! ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததே இம்மானுட வாழ்க்கை என்பதை இந்த ஊஞ்சல் விளையாட்டு உன்னதமாய் விளக்குகின்றதோ!” என வியக்கிறார் திரு. ரா. பார்த்தசாரதி.

    இளம் பெண்ணே! உன் இளமையை ஊஞ்சலாக்கி விளையாடு,
    உன் எண்ணச் சிறகினை விரித்து மகிழ்வுடன் விளையாடு
    ஊஞ்சல் ஆடும்போது உனது உடலும், கூந்தலும் ஆடுதே
    உனது எண்ணமும், உள்ளமும், சிரிப்பினை வெளிப்படுத்துதே!
    சிறு வயதில் அன்னையின் கழுத்தை கட்டிக்கொண்டு ஆடிய ஊஞ்சல்
    வளர்ந்தவுடன், பூங்காவில் நண்பர்களுடன் விளையாடிய ஊஞ்சல்
    வீட்டின் முற்றத்தில் விளையாடிய சங்கிலியால்ஆன ஊஞ்சல்
    உனது தலைமுறை காலம்காலமாக வீட்டினுள்ளே ஆடிய ஊஞ்சல்!
    திருமணத்தின்போது, கைபிடித்தவுடன் சேர்ந்து ஆடும் ஊஞ்சல்
    வாழ்வின் ஏற்ற இறக்கங்களை காட்டுவதே ஊஞ்சலின் நோக்கம்
    பின் நாளில் உனக்கு இந்தச் சந்தர்ப்பம் கிடைக்குமா என்ற ஏக்கம்
    உன் ஏக்கம் தீரத் திறந்த வெளியில் மரக்கிளையில் ஊஞ்சலாடுகிறாயா!

    *****

    ”அருமைப் பெண்ணே! ஊஞ்சலாடிப் பார்; உனக்குள் துணிவு வரும்; உள்ளம் உறுதிபெறும்; உடலும் வலிவுபெறும்!” என்று தன் கவிதையில் தன்னம்பிக்கை விதைக்கிறார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    ஆடுது பெண்ணூஞ்சல்: ஊஞ்சலாடும் சின்னப் பெண்ணே!
    உன்னதக் காலமிது என் கண்ணே!
    ஆடும் வரை ஆடி விடு அழகுப் பொன்னே!
    நீ வளர்ந்த பின்,உன்னை ஆட விடாது,
    இவ்வுலகம் என் அருமைப் பெண்ணே!
    ஆடும் உரிமை ஆணுக்கு மட்டும் என்று
    அம்பலத்தான் சொல்லியதாய்!
    கதை ஒன்று சொல்லிடுவார்!
    பெண்ணை அடக்கி வைத்திடுவார்!
    அடக்கம் என்னும் பெயர் சூட்டி
    பெண்கள் வளராமல் செய்திடுவார்!
    பெண்ணே ஊஞ்சலில் ஆடிப் பார்!
    உனக்குள் துணிவு வரும்!
    உள்ளம் உறுதி பெறும்!
    உடலும் வலிமை பெறும்!
    உயர்வுற வழி தோன்றும்!
    வானம் தொட்டுவிடும் தூரம்
    எனும் உண்மை புரிந்து விடும்!
    ஊஞ்சலாட உடனே வருவாய்
    என் அருமைப் பெண்ணே!

    *****

    ”வஞ்சகரின் சூழ்ச்சியை வெல்! நெஞ்சுரம் கொள்! அஞ்சுதல் ஒழி! சஞ்சலம் அழி!”  என ஊஞ்சலாடும் பெண் குழந்தைக்கோர் ’புதிய ஆத்திசூடி’ படைத்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி. 

    ஊஞ்சலாடும் பெண்ணே உஷார்..!

    இங்கும் அங்குமாக ஆடியசைந்தாடும் ஊஞ்சல்தானது..
    ……….
    ஓய்ந்திடும்போது உதைத்தாடுவதினால் இன்பம் தரும்.!
    மங்காதபுகழுடன் வாழத்தான் நானிலத்தில் மாந்தர்கள்..
    ……….
    மன்றாடி வாழ்க்கையிலுயர ஊஞ்சல்போல ஆடுவர்.!
    தொங்கும் சங்கிலியே ஆடுமூஞ்சலுக்கு ஆதாரமதுபோல..
    ……….
    தொடருமுமின்ப துன்பபிணைப்பே நமக்குப் பிடிமானம்.!
    தங்குமுலகில் முன்னேற தடைகற்கள் பலவுண்டாமதை..
    ……….
    தக்கசமயம் வரும்போது தாண்டிவரப் பழகவேண்டும் .!
    பிஞ்சும்பூவும் காயும்கனியும் நிழல்தரும் மரத்தினிலே..
    ……….
    பிஞ்சு மனதுடன் ஆடிக்களிக்கும் வயதுதானெனினும்..
    ஊஞ்சலாடும் உல்லாசச்சிறுமியே உலகை மறந்தாடும்..
    ……….
    உனக்கொரு உபதேசம் சொல்லவந்தேன் கேட்பாயா..?
    நஞ்சில்லாப் பாம்புபோல் நட்புலகில் நடிப்போருண்டு..
    ……….
    நட்பாகப் பழகினாலும் யாரையுமெளிதில் நம்பிவிடாதே.!
    வஞ்சகமாந்தர்கள் செய்யும் சூழ்ச்சிவலையு மிருக்குமதில்..
    ……….
    வீழ்ந்திடாமல் போராடவும் தெரியவேண்டும் பாப்பா..!
    அஞ்சுதல் ஆருக்கும் கூடாதாம்..அறிமுகமில்லாநபரை..
    ……….
    அருகில்சேர்க்கா விலகியிருக்க வாழ்வில்நீ கற்றுக்கொள்.!
    சஞ்சலமென்பதும் வாழ்க்கையில் எப்போதும் வேண்டாம்..
    ……….
    சபலபுத்தி கொண்டோரை சற்றும்கிட்ட நெருங்கவிடாதே.!
    நெஞ்சை நிமிர்த்திநேரான பார்வையொடு கூர்ந்துநோக்கி..
    ……….
    நட்பெனும் போர்வையோடுவரும் நஞ்சைநீயறியவேணும்.!
    அஞ்சாமல் அவர்களைநீ எதிர்த்தாடப் பழகவெண்டும்..
    ……….
    அந்தகனை அடையாளம் கண்டொதுக்க வேண்டும்.!

    *****

    ”உலகெனும் ஊஞ்சலில் அம்மானை ஆடுகிறாள் அன்னை பராசக்தி. குழந்தாய்…! நீயும் அதுபோல் ஓடி விளையாடு; ஓய்ந்திருக்கலாகாது; வீட்டுக்குப் பெருமை சேர்; நாட்டுக்கு நலம்புரி!” என்று நவீன பாரதியாய் மாறி அருமையானதொரு ’பாப்பாப் பாட்டு’ பாடியிருக்கின்றார் திரு. ஜெயபாரதன்.

    உலகென்னும் ஊஞ்சல்.

    உலகென்னும் ஊஞ்சலில்
    பலயுக மாய் ஆடி,
    பந்துகளை
    அம்மானை ஆடுகிறாள் அன்னை !
    நில்லாமல் ஆடுகிறாள்,
    நம்மோடு,
    பல்லாங் குழிகளில்
    பளிங்கு களை இட்டு !
    ஊஞ்சல் ஆட்டம் நின்றால்
    உலகே ஓடிவிடும்
    அண்டவெளி நோக்கி !
    பல்லாங் குழி ஆட்டம்
    நின்றால்
    படைப்பு வேலை
    நிறுத்தம் அடையும் !
    உன்னை ஊஞ்சலில் ஆட்ட
    அன்னையைக்
    கூப்பிடு !
    பல்லாங் குழி விளையாட
    பக்கத்து வீட்டுப்
    பாவையை அழைத்திடு !
    ஓடி விளையாடு
    பாப்பா ! நீ
    ஓய்திருக்க லாகாது
    பாப்பா !
    கூடி விளையாடு
    பாப்பா !
    காலை எழுந்ததுடன்
    படிப்பு ! பிறகு
    கனிவு கொடுக்கும் நல்ல
    தோழியர் நட்பு !
    செய்யும் தொழிலால்
    நாட்டுக்கு
    நலம் புரியச் செல் !
    பெற்றோர் ஈன்ற பொழுதினும்
    பெரிது மகிழச் செய் !

    *****

    மாசில் பெண்மகவை ஊசலில் கண்டதும் தேசுமிகு கவிதைகளை பாசத்தோடு பொழிந்திருக்கின்றனர் கவிவலவர்கள். அவர்கட்கு என் மனங்கனிந்த பாராட்டு!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையாய்த் தேர்வுபெற்றிருப்பது அடுத்து…

    ஊஞ்சல்

    பண்பட்ட கலையா பண்பாட்டுக் கலையா
    வீரம் சொல்லும் மண்ணில்
    விவேகம் தரும் விளையாட்டு
    விஞ்ஞானம் கூறுகிறது முதுகுக் தண்டு பலம்பெறுமாம்
    வித்தைகள் புரியாமலே
    பிள்ளைத் தமிழின் பத்தாம் பருவமதில்
    விளையாடினோம் ஊசலாய்,
    கண்ணாமூச்சி விளையாடி
    கைகோத்தாடி கதைத்த காலமெல்லாம் நிழலாடும் மனத்தில்
    தீராத தாகமாய் நினைவரிசை
    பட்டாம் பூச்சியாக வலம்வரும் பருவம்
    நினைவில் கடிவாளம் போட மறுக்கும் கனவு
    மின்னல் பொழுதாய்ப் பருவம் கடந்தேன்
    இம்மண்ணில் இருக்கும் ஈர்ப்பால்
    இப்பெண்ணில் புதையும் நினைவை
    வானவில் கொடியில் உலர்த்தி வண்ணமேற்றும் மனது
    ஊஞ்சலில் குதித்தாடி
    உலகம் மறந்த பொழுதுகளை ஊரறியப் பேசுகிறேன்
    ஆலவிழுதுகளில் விளையாடினோம்
    குழந்தைப் பருவமதில்
    தாயின் சேலையே ஊஞ்சலாய்
    தாய் மணம் நுகர்ந்து தொட்டிலாடினோம்
    கயிற்றூஞ்சல் காற்றில் நலம் கேட்க
    கன்னிப் பருவமதில் கனவில் களித்திட்டோம்
    இறையவன்இறைவி களித்திட்ட பொன்னூஞ்சல்
    இல்லறச் சடங்கிலும் இணைபிரியாமலே
    கன்னியவள் கரம் பிடித்த காளையுடன்
    கவினுறவே ஊஞ்சலாடினோம்
    பாரம்பரிய ஊஞ்சல் பாங்குடனே பல பொருளில்
    இந்நூற்றாண்டில்….
    வாகனச் சக்கரமதில் வாகாய் வளைந்தாட

    பொன்னூஞ்சல் ஆடுமகளே!
    காலமிது காலம் கண்மணியே!
    சிறுவர் பெரியவர் பேதமின்றி
    நல்லவர் கெட்டவர் பேதமின்றி
    ஆட்டுவிக்கும் ஊஞ்சலில் நாளும் விளையாடு
    பேதைமை மறந்து சமத்துவ வானில் ஊஞ்சலாடு
    பிறர் ஊக்க முன்னேறு கண்ணே!
    உன்முயற்சியும் வேண்டுமடி பெண்ணே!
    ஊஞ்சல் சொல்லும் பாடம் அதுவே
    நிமர்ந்தாடு கண்ணே நெகிழ்ந்தாடு கண்ணே!
    விளையாட்டுக் காலமிது விரைந்தாடு கண்ணே!
    வரவேற்பறையைப் பிடித்திட்ட ஊஞ்சல்
    வரவேற்பாரற்றுப் பரணில் …..
    காரணத்தைக் கவனமதில் கொள்ள வேண்டும் காரிகையே!
    கணிப்பொறி விளையாட்டில் மூழ்கிய பிஞ்சுகளை
    கரம்பிடித்து நடத்துவோம் உடலியக்க விளையாட்டிற்கு

    பண்டைத் தமிழ்மண்ணில் முகிழ்த்த பெண்டிர் விளையாட்டுக்களில் ஒன்று ஊசல். பெண்பாற்பிள்ளைத் தமிழின் பத்தாவது பருவமாய்த் திகழ்வது ஊசல்.

    அன்று வீட்டின் வரவேற்பறையில் கம்பீரமாய்த் திகழ்ந்த ஊசல், இன்று கவனிப்பாரற்றுப் பரணேறிவிட்டதே எனும் தன் வருத்தத்தை, இளமையில் ஊசலாடிய இனிய நினைவுகளோடு பொருத்தமாய் இணைத்துத் தந்திருக்கின்றார் திருமிகு. மா. பத்ம பிரியா. அவரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவிப்பதில் மகிழ்கின்றேன்.

    Share
  • இந்த வார வல்லமையாளர்! (237)

    இவ்வார வல்லமையாளராக எழுத்தாளர் பாலகுமாரன் அவர்களை தேர்ந்தெடுத்து அறிவிப்பதில் வல்லமை பெருமை கொள்கிறது.

    பாலகுமாரன் அறிமுகம் தேவையற்ற எழுத்தாளர். ஆனால் இவ்வாரம் சிகரெட்டின் தீமைகள் குறித்து அவர் எழுதிய கட்டுரை தமிழ்சமூகத்திற்கு மிக விழிப்புணர்வு தருவதாக அமைந்துள்ளது. அதை கீழே காணலாம்

    1

    “இந்த சிகரெட்தான் என்னை குனிய வைத்து சுருள வைத்து இடையறாது இரும வைத்து மூச்சு திணற வைத்து மரணத் தறுவாயில் இருக்கும் பிராணியை போல மாற்றும் என்று அப்போது தெரியவில்லை.

    சிகரெட்டில் நிகோடின் என்ற நஞ்சு இருக்கிறது.. அந்த நஞ்சு நரம்புகளில் பாய்ந்து நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும் என்று பத்திரிகை வாயிலாக தெரிந்தபோது, எனக்கெல்லாம் அது நடக்காது என்று முட்டாள்தனமாக நினைத்துக் கொண்டேன்.

    நாலைந்து சிகரெட்டில் நரம்பு மண்டலம் என்ன ஆகிவிடும் என்ற அலட்சியமும் இருந்தது. நாலைந்து சிகரெட் மெல்ல மெல்ல பெருகி ஒரு பாக்கெட் என்றாகி பத்து இருபது என்றாகி ஒரு நாளைக்கு நூற்றியிருபது சிகரெட்டுகளாக மாறிவிட்டால் வேறென்ன நடக்கும்?

    நிகோடின் என்பது வெறும் புகையல்ல. அதுவொரு போதையான ரசாயனம். அது என்ன செய்யும்?

    கன்னக் கதுப்புகளில், உதடுகளில், ஈறுகளில் அந்த ரசாயனம் தாக்கும்போது ஒரு விறுவிறுப்பு ஏற்படுகிறது. ஒரு குணமாற்றம் ஏற்படுகிறது. சிகரெட் புகையை இழுத்து நுரையீரலில் தேக்கும்போது அங்கிருந்து உடம்பிலுள்ள எல்லா ரத்த அணுக்களுக்கும் பரவி எல்லா இடங்களிலும் ஒரு அமைதி படர்கிறது. கண் கிறக்கமான ஒரு நிலைமை ஏற்படுகிறது.

    இது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

    உதவியும் செய்தது. என்ன உதவி?

    சுற்றுப்புறம் எவ்வளவு மோசமாக இருந்தாலும் எத்தனை இரைச்சல் இருந்தாலும் உள்ளடங்கி ஆழ்மனதில் அமிழ்ந்து சிந்திக்க சிகரெட் உதவி செய்வதாக நினைத்துக் கொண்டேன். அப்படி சிந்திப்பதால்தான் கதை எழுதுகிறேன் என்று நினைத்துக் கொண்டேன்.

    காலை, மாலை, இரவு என்று எல்லா நேரங்களிலும் சிகரெட் வேண்டியிருந்தது. சிகரெட் பிடிப்பதற்காகவே பலமணி நேரம் கூட்டங்களில் உட்காருவதை தவிர்த்தேன். அரை மணிக்குமேல் யாரோடும் அமர்ந்து அமைதியாக பேச முடியவில்லை.

    வெகு விரைவாக சாப்பிட்டு விடுவேன். குழம்பு சாதம் நாலு கவளம், தயிர் சாதம் நாலு கவளம் மடமடவென்று சாப்பிட்டுவிட்டு வயிறு நிறைந்ததும் வெளியே யோய் ஒரு சிகரெட் பற்ற வைத்து புகை இழுத்தால்தான் சாப்பிடதன் நிறைவு பூர்த்தியாகும்.

    இது மிகமிக கேவலமான நிலைமை. ஆரோக்ய குறைவான சிந்தனை. உடம்பிலுள்ள நரம்பு மண்டலத்தை அறுத்தெறிகின்ற மிகப்பெரிய காரியம்.

    பத்தொன்பது வயதில் தொடங்கிய சிகரெட் பழக்கம் மெல்ல மெல்ல வளர்ந்து நாற்பத்தைந்தாவது வயதில் உச்சகட்டத்தை அடைந்தது. இழுத்து இழுத்து புகையை உள்வாங்கியதால் புகை நுரையீரலுக்கு மட்டுமல்லாது இரைப்பைக்கும் போயிற்று. இரைப்பையில் புகை தங்கி மேல் வயிறு பெரிதானது. மேல் வயிறு பெரிதாக இருந்ததால் நடக்கும்போது மூச்சு வாங்கியது. மாடிப்படி ஏறும்போது சிரமமாக இருந்தது.
    எது பற்றியும் கவலைப்படாமல் இடையறாமல் சிகரெட் பிடித்தபடி இருந்தேன். என் வீட்டிலுள்ளவர்கள் ‘இவனை மாற்ற முடியாது’ என்று கைகழுவி என் போக்கிலேயே விட்டார்கள். �நிச்சயம் ஒருநாள் நீங்களாக விட்டுவிடுவீர்கள்� என்றும் சொன்னார்கள்.

    அது நேர்ந்தது.

    திருமணத்திற்காக ஒரு மகள் இருக்கிறாள். வளர்ந்து படிக்க வேண்டிய ஒரு மகன் இருக்கிறான். இருந்தும் கவலையின்றி இத்தனை செலவு செய்கிறோமே, உடம்பு பாழாகிறதே என்று கவலைப்பட்டு என் குருநாதரை மனமுருக வேண்டி இந்த சிகரெட்தான் கடைசி� என்று சொல்லி ஒரு பாக்கெட் சிகரெட் முழுவதும் வீட்டு வாசலில் நின்றே அமைதியாக பிடித்து முடித்த பிறகு அந்த பெட்டியை கசக்கி குப்பைத் தொட்டியில் எறிந்தேன்.

    மறுநாளிலிருந்து சிகரெட் பிடிக்கவில்லை.

    முதல் ஒரு மணி நேரம் தவிப்பாக இருந்தது. பல் கடித்து பொறுத்துக் கொண்டேன். இன்னும் அரை மணி… இன்னும் அரைமணி… என்று தள்ளிப் போட்டேன். அரை நாள் சிகரெட் பிடிக்காமல் இருந்தது ஆரோக்யமாக தெரிந்தது.

    அன்று முழுவதும் பிடிக்காமல் இருந்தால் என்ன என்று நினைத்தேன். இருந்தேன். நெஞ்சு விசாலமானது. அதற்கு பிறகு இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் சிகரெட் பிடிக்கவில்லை.
    நான்காவது நாள் சிகரெட் தேவைப்படவில்லை.

    நடுவே ஒரு சிகரெட் பிடித்திருந்தாலும் கால் இடறி மறுபடியும் புகைக்குழியில் விழுந்திருப்பேன். முற்றிலும் மாறுபட்ட மனிதனாக & நன்கு சுவாசிக்கிறவனாக & மற்றவர்கள் சிகரெட் பிடித்தால் மூக்கை பொத்திக் கொள்பவனாக மாறினேன்.

    ஆனால் என்ன, செய்த பாவங்கள் விடுமா?

    சிகரெட்டை விட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு இதயத்தை பலமாக தாக்கியது. அடைப்புகள் ஏற்பட்டன. இரண்டாயிரத்தில் பைபாஸ் ஆபரேஷன் செய்து கொண்டேன்.
    அப்போதும் சிகரெட் பிடிப்பவனாக இருந்தால் மரணம் அன்றே குறிக்கப்பட்டிருக்கும். சிகரெட்டை நிறுத்தி ஆரோக்யத்தை அதிகப்படுத்தியதால் அந்த ஆபரேஷனை சமாளிக்க முடிந்தது.

    பிறகு பத்து வருடங்கள் எந்தவித இம்சையும் இல்லாமல் அழகாக வாழ்க்கை ஓடியது.

    இரண்டாயிரத்து பதினொன்றில் நீரிழிவு காரணமாக ரத்தக்கொதிப்பின் காரணமாக மறுபடியும் அடைப்பு ஏற்பட, இரண்டாம் முறை பைபாஸ் செய்து கொண்டேன்.
    சுவாச பயிற்சி செய்திருந்ததால், மூச்சு பற்றிய ஞானம் இருந்ததால், தினந்தோறும் காலையும் மாலையும் வேகமாக நடந்ததால், மெல்லிய உடற்பயிற்சிகள் செய்ததால் இரண்டாவது பைபாஸையும் தாண்டிவர முடிந்தது.

    ஆனால், இரண்டாயிரத்து பன்னிரெண்டில் அடுத்த சோதனை. பத்தொன்பது வயதில் பிடித்த சிகரெட்டுகள் அறுபத்தாறு வயதில் தன் விஷத்தன்மையை காட்டியது. தன் வக்கிரத்தை நிரூபித்தது.
    நுரையீரலின் அடிப்பக்கம் முழுவதும் நிகோடினால் ஏற்பட்ட சளி அடைப்புகள். நுரையீரல் முழு திறனோடு வேலை செய்யவில்லை. அதற்கான திறனை மெல்ல மெல்ல இழந்தது. அதோடு சளி அடைப்பும் சேர்ந்து பழிவாங்கியது. மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

    ஒருபிடி சாதத்திற்கு அவஸ்தை படும் நிலைமை. முகம் முழுவதும் மூடி ஆக்சிஜனை வேகமாக செலுத்தினால்தான் உயிரோடு இருப்பேன் என்கிற நிலைமை. என்.ஐ.வி என்கிற அந்த விஷயத்தோடுதான் இரவு தூங்க முடியும் என்ற நிலைமை. பிராங்கோஸ்கோபி என்று மூச்சுக்குழலுக்குள் கருவியை விட்டு சோதனை செய்து அங்கே அடி நுரையீரலில் அடர்த்தியாக அசைக்க முடியாதபடிக்கு கெட்டியாக சளி இருப்பதை தெரிந்துகொண்டார்கள்.

    இதை எப்படி சரி செய்வது?

    வலியை பொறுத்துக் கொள்ளலாம். வேறு ஏதேனும் பத்தியமாக இருந்தால் அவ்விதமே நடந்து கொள்ளலாம். மூச்சு இழுத்து பிராணவாயு உள்ளே போய் வெளியே வருவதே கடினமானால் எப்படி சமாளிப்பது? தினசரி மரண போராட்டமாக மாறிவிட்டது.

    மூச்சு வேகமாக இழுத்து இழுத்து இன்னும் சில நிமிடங்களில் பாலகுமாரன் செத்து விடுவான் என்ற எண்ணத்தை மற்றவருக்கு ஏற்படுத்தியது.

    வீடு தவித்தது. வீட்டிற்குள் மூன்று நான்கு ஆக்சிஜன் சிலிண்டர்கள் வைக்கும்படி நேரிட்டது. வேகமாக காற்றை செலுத்தக்கூடிய கருவி தனியாக இருந்தது. ஆஸ்பத்திரியிலிருந்து வீடு வந்தவுடன் வீடு ஆஸ்பத்திரியாக மாறியது. எப்பொழுதும் மூக்கில் ஆக்சிஜன் இருக்கும்படி ஒரு அவஸ்தை.

    ஸ்கூட்டர் எடுத்துக்கொண்டு மயிலாப்பூர் முழுவதும் சுற்றித் திரிந்தவனுக்கு சிறைத் தண்டனை போல வீட்டில் அதே அறையில் இருக்கும்படி நேரிட்டது. மிகப்பெரிய வலியில்லை. ஜூரம் இல்லை. ஆனால், ஆக்சிஜன் குழாயை எடுத்துவிட்டால் மூச்சுத்திணற ஆரம்பிக்கும். அது இல்லாமல் நடக்க முடியாது, பேச முடியாது, உண்ண முடியாது, எதுவும் செய்ய முடியாது. காலில் சங்கிலி கட்டி கையில் இரும்பு குண்டை கொடுத்ததுபோன்ற மிகப்பெரிய தண்டனை. வேறு எந்த வழியும் இல்லாமல் அமைதியாக உட்கார்ந்து கொண்டேன்.

    ஒருநாளைக்கு நூற்றியிருபது சிகரெட் பிடிக்க வேண்டும் என்கிற நிலையில் இருந்ததை நினைத்து சிரித்துக்கொண்டேன். அப்படி புகைத்தால்தான் கதை எழுத வரும் என்று முட்டாள்தனமாக நம்பியதை நொந்து கொண்டேன்.

    மரணம் எல்லோருக்கும் வரும். எப்பொழுது வேண்டுமானாலும் வரும். எந்த ரூபத்தில் வேண்டுமானாலும் வரும். ஆனால், மூச்சு திணறி இதோ… இதோ… என்று பயம் காட்டுகின்ற ஒரு நிலைமை யாருக்கும் வரக்கூடாது.

    �நெஞ்சு வலித்தது. ஐந்து நிமிடம் துடித்தார். உயிர் நீங்கியது என்பது பரவாயில்லை.

    மூச்சு விட முடியாமல் உள்ளுக்குள் போன மூச்சை வெளியே செலுத்த முடியாமல், வெளியே இருக்கின்ற பிராண வாயுவை உள்ளே இழுக்க முடியாமல் திணறி கதறுகின்ற வேதனை யாருக்கும் வரக்கூடாது. சிகரெட் பிடிக்கலாம் என்கிற ஆசையுள்ளவர்கள் தயவு செய்து அந்த எண்ணத்தை அழித்து விடுங்கள்.

    சிகரெட் பிடிப்பவர்கள் உடனடியாக அந்த பழக்கத்தை கைவிடுங்கள்.

    சிகரெட் உங்களை இன்றல்ல… பிற்பாடு ஒருநாள் மிக நிதானமாக கொல்லுகின்ற ஒரு விஷயம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

    இந்த இருமல், இந்த முதுகு குனியல், இந்த தளர்வு, இந்த வேதனையெல்லாம் சிகரெட் பிடிப்பதால் விரைவாக ஒரு மனிதனுக்கு வரும். நல்லபடியாக சுவாசம் செய்து கொண்டிருந்தால் எழுபத்தைந்து வயது வரை ஆரோக்யமாக நிச்சயம் இருக்கலாம். அறுபத்தாறு வயதில் தள்ளாடுகின்ற நிலைமை & எழுத முடியாத நிலைமை & பேச முடியாத நிலைமை & ஒரு மனிதனுக்கு வருகிறதென்றால் அது வேதனைக்குரியது.

    அது தவிர எந்நேரமும் நம்மைச் சுற்றி தாங்கும்படியாக நம் உறவினர்களுக்கு நாம் சுமையாக இருக்கிறோம் என்பது இன்னும் இம்சையான விஷயம்.

    வீட்டிலுள்ள முக்கியமான ஒரு நபர் நோய்வாய்ப்பட்டால் அந்த வீடே நோய்வாய்ப்படும். எனவே எது விஷமோ, எது மிக கொடூரமாக நம்மை தாக்குமோ அதிலிருந்து நாம் விலகி நிற்க வேண்டும்.
    புகை பிடித்தல் உடல்நலத்திற்கு தீங்கானது அல்ல, உங்கள் குடும்பத்திற்கு தீங்கானது. உங்கள் வாழ்க்கையை சிதறடிக்கப் போவது. உங்கள் வளர்ச்சியை அறுத்தெறியப் போவது. உங்கள் ஞானத்தை பொசுக்கப்
    போவது. எனவே, சிகரெட்டை மனதாலும் நினையாமல் நன்கு மூச்சு இழுத்து வெளியே விடுகின்ற பிராணாயாமம் கற்றுக் கொள்ளுங்கள். சிகரெட் ஆசையே வராது.

    நான் விட்ட பிறகும்

    அது விடவில்லை.

    சிகரெட் குறித்த விழிப்புணர்வை தன்னையே உதாரணமாக்கி அளித்த பாலகுமாரனுக்கு அளிக்கபடும் இவ்விருது இக்கொடிய வழக்கத்தை துறக்க தமிழ் சமூகத்திற்கு உதவும் என வல்லமை நம்புகிறது

    வல்லமையாளர் பாலகுமாரனுக்கு நம் நல்வாழ்த்துகள்

    [இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –http://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் http://www.vallamai.com/?p=43179  ]

    Share